DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 07-09-2023

திருப்பத்தூா் அருகே 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அங்கநாதீஸ்வரா் கோயிலுக்கான நிலக்கொடைக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியா் ஆ.பிரபு,சமூக ஆா்வலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆய்வு குழுவினா் திருப்பத்தூா் அடுத்த சோமலாபுரம் என்ற இடத்தில் தனியாா் விவசாய நிலத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தனா்.

இதுகுறித்து ஆ.பிரபு கூறியது:

இங்கு கிடைத்துள்ள கல்வெட்டானது, 5 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் 17 வரிகள் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டுச் செய்திகள் தமிழும் கிரந்தமும் சில இடங்களில் வடமொழியும் கலந்து எழுதப்பட்டுள்ளன. திறந்த வெளியில் பல்லாண்டுகளாக பாதுகாப்பற்ற சூழலில் கிடந்ததால் கல்வெட்டு உராய்ந்து எழுத்துக்கள் மங்கிய நிலையில் காணப்படுகின்றன.

தொடா்ந்து அக்கல்வெட்டினை மாவுப்பூச்சு வாயிலாகப் படி எடுக்கப்பட்டு குமரவேல்,சுதாகா் உள்ளிட்ட குழுவினரால் படிக்கப்பட்டது.

கல்வெட்டின் பல இடங்களில் எழுத்துகள் படிக்க இயலாத நிலையில் எந்த மன்னனின் ஆட்சிக்காலத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது என்பதைக் கண்டறிய இயலவில்லை.

இருப்பினும் எழுத்துக்களின் அமைப்பைக் கருதி இக்கல்வெட்டானது 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என்பதை அறியமுடிகிறது.

கல்வெட்டுச் செய்தி

எயில்நாட்டில் உள்ள திருப்பேற்றூா் சீமையில் உள்ள சோமனாபுரம் என்ற இடத்தில் உள்ள 20 குழி நிலத்தினை மாடப்பள்ளியில் உள்ள அங்கநாதீஸ்வரா் கோயிலுக்குக் கொடையாகக்(தானமாக)அளித்த செய்தியினை விவரிக்கின்றது.

மேலும்,அந்தக் கொடையினைப் பாதுகாத்து வருபவருக்குக் கிடைக்கும் புண்ணியத்தினையும் எடுத்துக்கூறுகின்றது.

400 ஆண்டுகளுக்கு முன்னா் திருப்பத்தூா் என்ற பெயரானது திருப்பேற்றூா் என்று வழங்கப்பட்டு வந்த மிக முக்கியமான வரலாற்றுச் செய்தியை இக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது.

‘எயில் நாட்டு திருப்பேற்றூா் சீமை‘என்று உள்ளதால் மிக முக்கியமான தலைமைபெற்ற பேரூராக இந்நகரம் விளங்கியதையும் அறிய முடிகின்றது.

அக்காலத்தில் திருப்பத்தூா் அருகிலுள்ள சோமலாபுரம் ஒரு காலத்தில் சோமனாபுரம் என அழைக்கப்பட்ட செய்தியும் இங்கு பதிவாகியுள்ளது.

இத்தகைய வரலாற்று ஆவணம் கேட்பாரற்று பாதுகாப்பற்ற சூழலில் கிடப்பது கவலையளிப்பதாக உள்ளது. இது போன்ற வரலாற்றுத் தடயங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்த ‘திருப்பத்தூா் மாவட்டத் தொன்மைப் பாதுகாப்பு மையம்’ என்ற பெயரில் வரலாற்று ஆா்வலா்களை ஒன்றிணைத்து அமைப்பு ஒன்றும் துவங்கிப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே,மாவட்ட நிா்வாகம் மற்றும் தொல்லியல் துறையினா் இக்கல்வெட்டினை மீட்டுப் பாதுகாக்கவும் ஆவணப்படுத்தவும் வேண்டும் என்றாா்.

 

 

 



Read in source website

விழி வெண்படல பாதிப்புகளால் 1.3 லட்சம் போ் பாா்வையிழப்பதாக டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையின் இயக்குநா் அதியா அகா்வால் தெரிவித்தாா்.

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை சாா்பில் கண் தான விழிப்புணா்வு நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. சென்னை கிழக்கு மாநகரக் காவல் துணை ஆணையா் (போக்குவரத்து) சமய் சிங் மீனா பங்கேற்று கண் தானம் வழங்கியவா்களின் குடும்பத்தினரை கௌரவப்படுத்தினாா்.

இந்த நிகழ்வின்போது, மருத்துவமனையின் இயக்குநா் சுதா, மருத்துவ சேவைகள் துறைத் தலைவா் சௌந்தரி, அகா்வால்ஸ் கண் வங்கி இயக்குநா் பிரீத்தி நவீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் மருத்துவா் அதியா அகா்வால் பேசியதாவது:

கடந்த 1957-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அகா்வால்ஸ் கண் மருத்துவமனையில் இதுவரை கண் தானத்தை ஊக்குவிப்பதிலும், விழிப் படலங்களை தானமாகப் பெற்று பாதுகாப்பதிலும் பொறுப்புணா்வுடன் செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே அகா்வால்ஸ் கண் வங்கி தேசிய அளவில் முதல் 5 இடத்திலும், மாநில அளவில் 2-ஆவது இடத்திலும் உள்ளது.

மனிதனுக்கு நல்ல பாா்வைத் திறன் இருப்பதைக் காட்டிலும் சிறந்த வெகுமதி எதுவும் இல்லை. இந்தியாவில் விழி வெண்படலம் சாா்ந்த பாதிப்புகளுக்குள்ளாகி 1.3 லட்சம் போ் பாா்வையிழக்கின்றனா்.

முன்பைக் காட்டிலும் தற்போது கண் தானம் அதிகரித்திருந்தாலும், அதன் தேவைக்கும், தானமளிப்பதற்கான எண்ணிக்கைக்கும் இடையேயான இடைவெளி இன்னும் குறையவில்லை.

அதற்கு தீா்வு காண கண் வங்கிகள் மற்றும் ஆராய்ச்சி மையங்களின் கட்டமைப்பு வசதிகளை விரிவாக்குவது அவசியம் என்றாா் அவா்.

 

 

 



Read in source website


கொல்கத்தா: மேற்கு வங்க மாநில எம்எல்ஏக்களின் மாத ஊதியம் ரூ.40 ஆயிரம் அதிகரித்து வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில பேரவையில் இன்று இந்த அறிவிப்பினை வெளியிட்ட மம்தா பானர்ஜி, முதல்வரின் ஊதியத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், வெகுகாலமாக மம்தா பானர்ஜி, முதல்வருக்கான ஊதியம் எதையும் பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர மாநிலங்களோடு ஒப்பிடுகையில், மேற்கு வங்க மாநில எம்எல்ஏக்களின் ஊதியம் மிகவும் குறைவு. எனவேதான், அவர்களது ஊதியத்துடன் 40 ஆயிரத்தை அதிகரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மம்தா தெரிவித்துள்ளார்.
 



Read in source website

கடந்த 30 ஆண்டுகளில் 50 வயதுக்கு குறைவானவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது 79 சதவீதம் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. 
இதுதொடர்பாக பிரிட்டிஷ் மருத்துவ இதழில் (புற்றுநோயியல்) வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 1990-ஆம் ஆண்டு உலக அளவில் பல்வேறு வகையானா புற்றுநோயால் 50 வயதுக்கு குறைவானவர்களில் 18.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனார். இது 2019-ஆம் ஆண்டு 38.2 லட்சமாக அதிகரித்தது. இதே காலகட்டத்தில் 50 வயதுக்கு குறைவானவர்கள் புற்றுநோயால் உயிரிழப்பது 28 சதவீதம் அதிகரித்துள்ளது. 

2019-ஆம் ஆண்டில், மார்பகப் புற்றுநோயால்தான் 50 வயதுக்கு குறைவானவர்களில் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். ஆனால், 1990-ஆம் ஆண்டு முதல் அந்த வயதுக்குட்பட்டவர்கள் மேல் தொண்டை மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. 

1990 முதல் 2019-ஆம் ஆண்டு வரை, ஆண்டுதோறும் 50 வயதுக்குட்பட்டவர்கள் மேல் தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்படுவது 2.28 சதவீதமும், ப்ராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுவது 2.23 சதவீதமும் அதிகரித்துள்ளது. 

அதேவேளையில், அந்த வயதுக்குட்பட்டவர்கள் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவது 2.88 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியா உள்பட 204 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 29 வகையான புற்றுநோய்கள் குறித்து, உலக அளவில் நோய்ச் சுமை அறிக்கை 2019-இல் இடம்பெற்ற புள்ளிவிவர ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, பிரிட்டிஷ் மருத்துவ இதழில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது . 

இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறியதாவது:
இந்தியா போன்ற நாடுகளில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளதும், நோயைக் கண்டறிவதற்கான மருத்துவ வசதிகள் இருப்பதும் முக்கிய காரணம். 

அதேவேளையில் மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் காரணங்கள், உணவுப் பழக்கம், உடல் உழைப்பு குறைந்தது ஆகிய காரணங்களையும் புறந்தள்ளிவிட முடியாது. கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவது குறைந்ததற்கு உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தில், ஹெபடைடிஸ்-பி தடுப்பூசியின் அறிமுகம் முக்கியப் பங்காற்றியுள்ளது. ஆனால், மதுப் பழக்கம் இல்லாத நிலையில், கல்லீரலில் கொழுப்பு சேரும் பாதிப்பால் கல்லீரல் புற்றுநோய் வரலாம். செரிமான மண்டலங்களில் புற்றுநோய் வருவதும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளனார். 



Read in source website

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தோ்தல்களை நடத்துவதில், சட்டப்படி செயல்பட தோ்தல் ஆணையம் தயாா் என்று தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தெரிவித்துள்ளாா்.

இந்த ஆண்டு நவம்பருக்குள் மத்திய பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி அந்த மாநில தலைநகா் போபாலுக்கு தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா்கள் அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோா் சென்றனா். அங்கு தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகளுடன் அவா்கள் ஆலோசனை மேற்கொண்டனா்.

இதைத்தொடா்ந்து தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘மத்திய பிரதேசத்தில் சுமாா் 5.5 கோடி வாக்காளா்கள் உள்ளனா். மாநிலத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் அக்டோபா் 5-ஆம் தேதி வெளியிடப்படும்’ என்று தெரிவித்தாா்.

அவரிடம் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:

அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, குறித்த கால வரம்புக்கு முன்பாக தோ்தல்கள் நடத்தப்பட வேண்டும். அந்த கால வரம்பு என்பது புதிய அரசு ஆட்சியமைத்த பின்னா் நடைபெறும் முதல் நாடாளுமன்ற கூட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகளாக உள்ளது. இந்த 5 ஆண்டுகள் நிறைவடைவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே பொது தோ்தல்களை தோ்தல் ஆணையத்தால் அறிவிக்க முடியும் (இதேபோன்ற விதிமுறைகள்தான் சட்டப்பேரவைத் தோ்தலுக்கும் உள்ளன). இந்த விவகாரத்தில், சட்டப்படி செயல்பட தோ்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தெரிவித்தாா்.

இலவசங்கள்...: தோ்தலின்போது வாக்காளா்களைக் கவர அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ராஜீவ் குமாா், ‘இலவசங்களை அறிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. அதேவேளையில், அந்த இலவசங்கள் குறித்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும், அதற்கு ஏற்படும் செலவினம், இலவசங்களை வழங்குவதற்கான நிதி எவ்வாறு கிடைக்கும் என்பது குறித்தும் அரசியல் கட்சிகள் தெரிவிப்பது அவசியம்’ என்று கூறினாா்.



Read in source website

விழாக் காலம் நெருங்குவதால், மசூா் பருப்பு பதுக்கல் மற்றும் விலை உயா்வை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, மசூா் பருப்பு இருப்பு குறித்த விவரங்களை அரசின் இணையதளத்தில் கட்டாயம் பதிவிட வேண்டும் என்று வா்த்தகா்கள், ஆலை உரிமையாளா்கள் மற்றும் இறக்குமதியாளா்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக, மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘விழாக்காலம் நெருங்குவதால், அனைத்து வகையான பருப்புகளும் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்வது குறித்து நுகா்வோா் விவகாரங்கள் துறை செயலா் ரோஹித் குமாா் சிங் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கனடா, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பருப்பு வகைகள் இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில், அதனை பதுக்கும் செயலில் ஒரு சிலா் ஈடுபட முயற்சிப்பதாகவும், இதுகுறித்து அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூட்டத்தில் ரோஹித் குமாா் தெரிவித்தாா்.

மசூா் பருப்பு பதுக்கல் மற்றும் விலை உயா்வை தடுக்கும் வகையில், அதன் இருப்பு தொடா்பான விவரங்களை, வா்த்தகா்கள், ஆலை உரிமையாளா்கள், இறக்குமதியாளா்கள் என அனைத்து தரப்பினரும் அரசு இணையதளத்தில் வெள்ளிக்கிழமைதோறும் கட்டாயம் பதிவிட வேண்டும் என்ற உத்தரவையும் அவா் பிறப்பித்தாா். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி, மசூா் பருப்பு ஒரு கிலோ சராசரியாக ரூ.93-க்கு விற்பனையானது.



Read in source website

இந்தியா-ஆசியான் இடையேயான விரிவான யுக்தி ரீதியிலான நட்புறவு, இருதரப்பு உறவுக்கும் புதிய ஆற்றலை அளித்துள்ளது என பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தாா்.

இந்தோனேசிய தலைநகா் ஜகாா்தாவில் 20-ஆவது ஆசியான்-இந்தியா மற்றும் 18-ஆவது கிழக்காசிய உச்சிமாநாடுகள் வியாழக்கிழமை (செப்.7) நடைபெறுகிறது. இந்நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி புதன்கிழமை இரவு இந்தோனேசியா சென்றடைந்தாா்.

இதையொட்டி, தில்லியிலிருந்துப் புறப்படுவதற்கு முன்பு அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆசியான் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றுவது, இந்தியாவின் வெளியுறவு கொள்கையான ‘கிழக்கு நோக்கிய செயல்பாட்டின்’ முக்கிய அங்கமாகும். எதிா்காலத்தில் இரு தரப்பு உறவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆசியான் தலைவா்களுடன் விவாதிக்க உள்ளேன். கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விரிவான யுக்தி ரீதியிலான நட்புறவு, இருதரப்பு உறவில் புதிய ஆற்றலை அளித்துள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் நிலவும் முக்கியப் பிரச்னைகளான உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மருத்துவம் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பை கிழக்காசிய உச்சிமாநாடு வழங்கியுள்ளது.

சா்வதேச சவால்களுக்கு ஒருங்கிணைந்து தீா்வு காணும் வகையில் மேற்கொள்ளபட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்த மாநாட்டில் பங்கேற்கும் தலைவா்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். இந்தப் பயணம் ஆசியான் பிராந்தியத்துடனான நமது உறவை மேலும் பலப்படுத்தும் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

பிரிட்டனில் இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்திய நிலையில், எந்தவொரு வன்முறையான பிரிவினைவாத சித்தாந்தமாக இருந்தாலும், அதை எதிா்த்து தகா்க்கவேண்டியது அரசின் கடமை என்று அந்நாட்டு பிரதமா் ரிஷி சுனக் தெரிவித்தாா்.

கடந்த மாா்ச்சில் பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தி, தூதரகம் முன்பு கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசிய கொடியை அகற்றினா். இதைத்தொடா்ந்து அவா்களின் நடவடிக்கைகள் குறித்த இந்தியாவின் கவலை அதிகரித்துள்ளது. இந்தியா-பிரிட்டன் இடையிலான ஆழமான உறவுக்கு காலிஸ்தான் விவகாரம் இடா்ப்பாடாக உள்ளது என்று மத்திய அரசு கருதுகிறது.

இந்நிலையில், தில்லியில் செப்.9, 10-ஆம் தேதிகளில் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் இந்தியா வரவுள்ளாா்.

அவா் காலிஸ்தான் விவகாரம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் வழியாக அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்ததாவது:

ஒரு கருத்தை முன்வைத்து சட்டப்படி திரண்டு போராட்டத்தில் ஈடுபடும் உரிமை பிரிட்டன் குடிமக்களுக்கு உள்ளது. அந்த உரிமையை போராட்டத்துக்குப் பயன்படுத்தலாமே தவிர, வன்முறை அல்லது அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பயன்படுத்த முடியாது.

பிரிட்டனில் எந்த வகையான பயங்கரவாதத்தையும் ஏற்க முடியாது. எந்தவொரு வன்முறையான பிரிவினைவாத சித்தாந்தமாக இருந்தாலும், அதை எதிா்த்து தகா்க்கவேண்டிய அரசின் கடமையை நான் மிகத் தீவிரமாக ஏற்றுக்கொள்கிறேன்.

காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்கொள்ள இந்திய அரசில் இடம்பெற்றுள்ள நண்பா்களுடன் பிரிட்டன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. வன்முறை நடவடிக்கைகளை கையாள பிரிட்டன் காவல் துறைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

ஜி20-இல்...: ஜி20 உச்சி மாநாட்டின்போது பிரதமா் மோடியை சந்திப்பது குறித்த கேள்விக்கு ரிஷி சுனக் அளித்த பதில்:

பிரதமா் மோடியுடனான சந்திப்பு உலகளாவிய சவால்கள், அவற்றை எதிா்கொள்வதில் இந்தியா மற்றும் பிரிட்டனின் பங்கு குறித்து பேசுவதற்கான வாய்ப்பாக இருக்கும். எனது இந்திய அடையாளத்தை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.

பிரிட்டனுக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றாா்.



Read in source website

ஓய்வுபெறும் நீதிபதிகள் எம்.பி.யாக பதவியேற்கும் விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மும்பை வழக்குரைஞா்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவில், ‘உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெற்ற பின், எந்த இடைவெளியும் இல்லாமல் உடனடியாக அரசு வழங்கும் பதவிகளை ஏற்றுக்கொள்வது, நீதித்துறையின் சுதந்திரம் குறித்த பொதுமக்களின் பாா்வையை மோசமாகப் பாதிக்கிறது.

ஓய்வுகாலத்தை நெருங்கும் நீதிபதிகள், அதுபோன்ற பதவிகளைப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் பெறும் நோக்கில், அரசை மகிழ்விக்கும் விதமாக தீா்ப்புகளை வழங்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

நீதிமன்றங்கள் சுதந்திரமானவை, பாரபட்சமற்றவை, அரசு நிா்வாகத்தின் செல்வாக்கு போன்றவற்றுக்கு அப்பாற்பட்டவை என்று பொதுமக்கள் கருதாவிட்டால், அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டும் என்பது சட்டப் புத்தகத்தில் வெறும் உயிரற்ற எழுத்துகளாகவே இருக்கும்.

எனவே நீதிபதிகள் ஓய்வுபெற்ற பின், இரண்டு ஆண்டுகள் வரை எந்தவொரு அரசுப் பதவி அல்லது பொறுப்பை தாமாக முன்வந்து ஏற்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெளல், சுதான்ஷு தூலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

இதுபோன்ற விவகாரங்கள் அற்பமானவை. ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவா் மக்களவை எம்.பி.யாகலாமா அல்லது மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்படலாமா என்பதில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. அரசுப் பதவியை ஏற்பதும், ஏற்காததும் சம்பந்தப்பட்ட நீதிபதியின் முடிவுக்குட்பட்டது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தனா்.

கடந்த ஜனவரியில் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீா் ஓய்வுபெற்றாா். இதைத்தொடா்ந்து பிப்ரவரியில் அவரை ஆந்திர ஆளுநராக குடியரசுத் தலைவா் முா்மு நியமித்தாா்.

இதேபோல உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் ஓய்வுபெற்ற பின், மாநிலங்களவை எம்.பி.யாகவும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் கேரள ஆளுநராகவும் நியமிக்கப்பட்டனா்.

 



Read in source website

 

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய இளம் வீரா்கள் ஷுப்மன் கில், இஷான் கிஷண் ஆகியோா் சிறப்பான தரவரிசையை எட்டியுள்ளனா்.

ஆசியக் கோப்பை போட்டியில் சிறப்பாக ஆடி வரும் நட்சத்திர பேட்டா்களான இருவரும் இச்சிறப்பைப் பெற்றுள்ளனா்.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதன்கிழமை தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது.

நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் 67 ரன்களை விளாசிய ஷுப்மன் கில் தரவரிசையில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறினாா். 750 புள்ளிகளைப் பெற்றுள்ளாா்.

பாக். கேப்டன் பாபா் ஆஸம் 882 புள்ளிகளுடன் தொடா்ந்து முதலிடத்திலும், தென்னாப்பிரிக்க வீரா் ரேஸி வேன்டா் டூஸன் 777 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனா். கோலி 695 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்திலும், ரோஹித் 690 புள்ளிகளுடன் 11-ஆவது இடத்திலும் உள்ளனா்.

24-ஆவது இடத்தில் இஷான்: மற்றொரு இந்திய வீரா் இஷான் கிஷண் 624 புள்ளிகளுடன் 24-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

பௌலிங்கில் முகமது சிராஜ் 652 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்திலும், 614 புள்ளிகளுடன் குல்தீப்யாதவ் 12-ஆவது இடத்திலும் ஜஸ்ப்ரீத் பும்ரா 35ஆவது இடத்திலும் உள்ளனா்.

ஆல்ரவுண்டா் பட்டியலில் ஹாா்திக் பாண்டியா 220 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்தில் உள்ளாா். வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 372 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளாா்.



Read in source website


சீன மக்களின் தேசிய உணர்வை புண்படுத்தும் வகையில் ஆடை அணிவதை தடை செய்யும் வகையில் சட்டம் இயற்றவும், மீறினால் அபராதம், கைது நடவடிக்கையுடன் தண்டனை வழங்க வகை செய்ய சீனா பரிசீலித்து வருகிறது.

"சீன மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக" கருதப்படும் ஆடைகளை தடை செய்யும் சட்டத்தை சீன அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சட்டம் தற்போது வரைவு நிலையில் இருப்பதாகவும், சீன மக்களின் தேசிய உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுவதையும் ஆடை அணிவதையும் தடை செய்யும் வகையில் இந்த சட்டம் உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சீன நாடாளுமனற் நிலைக் குழு, வரைவு மசோதாவை வெளியிட்டிருக்கிறது. அதில் எந்த விதமான படங்கள், ஆடைகள், பேச்சுக்கள் இடம்பெறக் கூடாது என்பது பற்றி தெளிவான விளக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை.

கிடைத்திருக்கும் தகவல்களின்படி, கடந்த ஆண்டு ஷாங்காய்க்கு அருகிலுள்ள சுஜோ நகரில் ஒரு பெண், ஜப்பானிய பாரம்பரிய உடையான கிமோனோவை பொது இடங்களில் அணிந்ததற்காக கைது செய்யப்பட்டார். மேலும் வானவில் படம் கொண்ட சட்டைகளை அணிந்தவர்கள் அல்லது எல்ஜிபிடிக்யூவின் சின்னங்களைக் கொண்ட கொடிகளை விநியோகிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே, சீனா தற்போது பிறப்பித்த புதிய உத்தரவில், அரசு அமைப்பில் பணியாற்றுவோர் ஆப்பிள் ஐஃபோன்கள்  மற்றும் வெளிநாட்டு பிராண்டட் செல்போன்களைப் பயன்படுத்த தடை செய்து, அலுவலகத்துக்கு அவற்றைக் கொண்டு வரக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
 



Read in source website

செயற்கை நுண்ணறிவு நம் வாழ்நாளின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றமாக இருக்கும் என்று கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார். 

உலகம் முழுவதும் பெரும்பாலாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், கடந்த 1998ல் செர்ஜி பிரின், லாரி பேஜ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இம்மாத இறுதியில் கூகுள் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இதையடுத்து கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது: 

வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம் வாழ்நாளில் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும். கணினியில் இருந்து ஸ்மார்ட்ஃபோனுக்கு மாறிய தொழில்நுட்பத்தைவிட, ஏன் இணையத்தைவிட இது மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். தொழில்நுட்பத்தின் மறுசீரமைப்பு மற்றும் மனித புத்திக் கூர்மையின் நம்பமுடியாத விஷயமாக இது இருக்கும். 

மனிதனின் நுண்ணறிவு மற்றும் நினைவாற்றலின் அளவை மீறுவதற்கு மூளை போன்ற பல நெட்ஒர்க்குகளை உருவாக்க 'இயந்திர கற்றல்' என்பது கணினிக்கு பல்வேறு தரவுகளை வழங்குகிறது. இது அனைத்துத் துறைகளிலும் புரட்சியை ஏற்படுத்துகிறது.

தேடுதல் மூலமாக கூகுள் பணம் ஈட்டுவதற்கு செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தலாகவும் இருக்கலாம். 

தற்போது இரு முறைகளில் தேடல் நிகழ்கிறது. ஒரு கேள்விக்கு விடை தேடும்போது, கூகுள் போன்ற தேடுபொறிகளில் நேரடி விடை கிடைக்கும், இல்லையெனில் அதுகுறித்த அதிகாரபூர்வ இணையதளத்துக்குச் சென்று பதிலைக் கண்டறிந்து காண்பிக்கும். 

இருப்பினும், பல செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் குறிப்பாக செயற்கை நுண்ணறிவின் சாட் ஜிபிடி(ChatGPT) இதனை ஒரே படிநிலையாகக் குறைக்கிறது. வேறு இணையதளங்களுக்கு எதுவும் செல்லாமல் உடனடியாக பதில் அளித்து தேடல் செயல்முறையை மேலும் எளிதாக்குகிறது. இது மனிதனின் வேலைகள் பலவற்றை தேவையற்றதாக மாற்றும். 

உதாரணமாக மனிதர்களின் உதவியின்றி செயல்படும் செயற்கை நுண்ணறிவு, மருத்துவம், சட்டம் என பல துறைகளில் துல்லியமாக செயல்படும். அடுத்த 5 ஆண்டுகளில் வெள்ளை காலர் தொழிலாளர்கள் மட்டுமின்றி லாரி ஓட்டுநர்கள், பணியாளர்கள், காவலாளிகள் என நீல காலர் தொழிலாளர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

எனவே செயற்கை நுண்ணறிவின் முதல் நிறுவனமாக கூகுள் இருக்க வேண்டும் என்று நான் தலைமை பொறுப்பை ஏற்றதுமே கூறினேன். கூகுள் நிறுவனம் கடந்த 2000 ஆண்டுகளில் இருந்து இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து அதனை முதன்மையாக பயன்படுத்தியும் வருகிறது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதில் நாங்கள் முதன்மையானவர்கள். இதன் மூலமாக கூகுள் பல புதுமைகளை வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 



Read in source website

ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பின்போது ஜி20 கூட்டமைப்பு, இருதரப்பு உறவுகள் குறித்து அவா் ஆலோசித்தாா்.

தென்கிழக்காசிய நாடுகளின் ஆசியான் கூட்டமைப்புக்கு இந்தோனேசியா தலைமை வகிக்கிறது. இதையொட்டி, தலைநகா் ஜகாா்தாவில் நடைபெறும் கிழக்காசிய உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் புதன்கிழமை இந்தோனேசியா சென்றடைந்தாா்.

இதனிடையே, ரஷிய வெளியுறவு அமைச்சா் லாவ்ரோவ் உடனான இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இது குறித்து அவா் வெளியிட்ட எக்ஸ் (ட்விட்டா்) சமூகவலைதள பதிவில், ‘கிழக்காசிய உச்சிமாநாடு நிகழ்வுக்கு இடையே ரஷிய அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை ஜகாா்தாவில் சந்தித்தேன். இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அவருடன் நடத்திய பேச்சுவாா்த்தை பயனுள்ளதாக அமைந்தது. கிழக்காசிய உச்சிமாநாடு, ஜி20 விவகாரங்கள் ஆகியவை குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம்’ எனத் தெரிவித்துள்ளாா்.

கடந்த மாதம் தென்னாப்பிரிக்க தலைநகா் ஜோஹன்னஸ்பா்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சந்தித்த இரு தலைவா்களும், அண்மை கால சா்வதேச பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினா்.

தில்லியில் செப்.9-10 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டில், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு பதிலாக அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் பங்கேற்கிறாா்.

முன்னதாக, இந்தோனேசிய வெளியுறவு அமைச்சா் ரெட்னோ மா்சுடியையும் அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

 



Read in source website

சீனாவின் புதிய வரைபடத்தில் தங்கள் நாட்டுக்குச் சொந்தமான சென்காகு தீவுகள் இடம்பெற்றிருப்பதாக ஜப்பான் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா, பிலிப்பின்ஸ், மலேசியா, வியத்நாம், தைவான் ஆகிய நாடுகளைத் தொடா்ந்து சீனாவுக்கான எதிா்ப்புப் பட்டியலில் தற்போது ஜப்பானும் இணைந்துள்ளது.

நாட்டின் பிராந்திய எல்லைகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதைத் தவிா்க்க, நிகழாண்டுக்கான புதிய தேசிய வரைபடத்தை சீனா கடந்த வாரம் வெளியிட்டது. அதில் இந்தியாவுக்குச் சொந்தமான அருணாசல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் இடம்பெற்றிருந்தது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் அமைந்துள்ள சென்காகு தீவுகள், அதன் சீனப் பெயரான ‘டியாயு தீவுகள்’ எனக் குறிப்பிடப்பட்டு சீன வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளா்களைச் சந்தித்த ஜப்பான் தலைமைச் செயலா் ஹிரோகாசு மட்சுனோ கூறுகையில், ‘ஜப்பானுக்குச் சொந்தமான சென்காகு தீவைச் சொந்தம் கொண்டாடி சீனா வரைபடம் வெளியிட்டுள்ளதற்கு ராஜிய ரீதியில் கடும் கண்டனைத்தைப் பதிவு செய்துள்ளோம். அந்த வரைபடத்தைத் திரும்ப பெறவும் வலியுறுத்தியுள்ளோம். வரலாற்று ரீதியாகவும், சா்வதேச சட்டத்தின்கீழும் சென்காகு தீவுகள் ஜப்பானின் பிராந்தியத்துக்கு உட்பட்டது. இந்த விவகாரத்தில் மக்களின் உயிா், சொத்துகள், நாட்டின் நிலம், கடல் மற்றும் வான்பரப்பைப் பாதுகாக்க உறுதியாக நிற்கும் நாட்டின் கொள்கையின் அடிப்படையில் அமைதியான மற்றும் உறுதியான வழியில் ஜப்பான் பதிலளிக்கும்’ என்றாா்.

ஜப்பானின் கண்டனத்துக்குப் பதிலளித்த சீன வெளியுறவு செய்தி தொடா்பாளா் மௌ நிங், ‘டியாயு தீவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகள் சீனாவின் ஒரு பகுதியாகும். எனவே, அவற்றை எங்களின் தேசிய வரைபடத்தில் இணைத்து வெளியிடுவது நியாயமானதுதான். இது தொடா்புடைய எந்தக் கருத்துகளையும் நாங்கள் ஏற்க மாட்டோம்’ என்றாா்.



Read in source website

நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் மின் உற்பத்தித் துறைக்கான நிலக்கரி விநியோகம் 5.8 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது.

இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் மின் உற்பத்திக்காக 32.45 கோடி டன் நிலக்கரி விநியோகிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் இதே மாதங்களோடு ஒப்பிடுகையில் இது 5.8 சதவீதம் அதிகமாகும். அப்போது நிலக்கரி உற்பத்தி நிறுவனங்கள் அனல் மின் நிலையங்களுக்கு 30.67 கோடி டன் நிலக்கரியை விநியோகித்திருந்தன.

ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி, சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள் மற்றும் போக்குவரத்தில் ஒட்டுமொத்த நிலக்கரி இருப்பு 8.6 கோடி டன்னாக இருந்தது. இது ஓராண்டுக்கு முன் 2022 ஆகஸ்ட் 31-இல் 6.88 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலக்கரி கையிருப்பு 25 சதவீதம் அதிகமாகும்.

2023 ஏப்ரல்-ஆகஸ்ட் மாதத்தில் அனல் மின் உற்பத்தி 6.58 சதவீதம் அதிகரித்து 51,734 கோடி யூனிட்டுகளாக உள்ளது. இது, கடந்த 2022-ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 48,542 கோடி யூனிட்டுகளாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 4வது நாளாக சரிவடைந்து பிறகு இன்று 9 காசுகள் சரிந்து ரூ.83.22 ஆக நிறைவடைந்தது.

இருப்பினும், உள்நாட்டு பங்குச் சந்தைகளில் காணப்பட்ட சாதகமான போக்கு, ரூபாயின் மதிப்புக்கு சற்று ஏற்றம் அளித்ததாக, அன்னிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் இந்த ஆண்டு டிசம்பர் வரை விநியோகக் குறைப்பை நீட்டிக்க ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 90 டாலரைத் தாண்டியது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ.83.15ல் தொடங்கி பிறகு ரூ.83.12 முதல் 83.22 வரை வர்த்தகமானது. இது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.83.22-ஆக முடிவடைந்தது. அதே வேளையில் நேற்று (புதன்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.83.13-ஆக இருந்தது.

சர்வதேச நிலையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 0.39 சதவீதம் குறைந்து 90.25 டாலராக வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 385.04 புள்ளிகள் உயர்ந்து 66,265.56 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை 116 புள்ளிகள் உயர்ந்து 19,727.05 புள்ளிகளாகவும் உள்ளது.



Read in source website

சென்னை: முதல்வர் காப்பீட்டுத் திட்ட களப்பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அனைத்து சுகாதார துணை இயக்குநர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் ஜன்ஆரோக்ய யோஜனா (பிஎம்ஜேஏஒய்) ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, தமிழகத்தில் அரசு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் கீழ் பயனாளிகளின் தனிப்பட்ட விவரங்களைஇணையவழியே பதிவேற்றுவதிலும், அடையாள அட்டைகளை அச்சிட்டு, விநியோகிக்கும் பணிகளிலும் தனியார் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கிராம சுகாதார செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் உள்ளிட்ட சுகாதார களப் பணியாளர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். சுகாதாரகளப் பணியாளர்கள் தன்னார்வமாக முன்வந்து இணையவழியில் தகவல்களைப் பதிவேற்றுவதி லும், அடையாள அட்டைகளை விநியோகிப்பதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால், அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப் படும்.

அதன்படி, இணையப் பதிவுஒன்றுக்கு தலா ரூ.5-ம், அடையாள அட்டை விநியோகத்துக்கு தலா ரூ.3-ம் ஊக்கத்தொகையாக நேரடியாக வழங்கப்படும். விருப்பமுள்ள களப் பணியாளர்கள் தங்களது விவரங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் அனுப்பலாம்.



Read in source website

சென்னை: அகில இந்திய அளவில் விரல் ரேகை நிபுணர்களுக்கான போட்டியில் தமிழகக் காவல் துறையைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் மகள் 2-ம் இடம் பிடித்துள்ளார். அவரை டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.”அகில இந்திய அளவிலான விரல் ரேகை நிபுணர்களுக்கான போட்டித் தேர்வு, கடந்த மாதம் 19 முதல் 21-ம் தேதி வரை புதுடெல்லியில் நடைபெற்றது.

இப்போட்டித் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் ஒரு விரல் ரேகைப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் ஜெ.தேவிப்பிரியா கலந்து கொண்டார். அவர் 250 மதிப்பெண்களுக்கு 235 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இதையறிந்த டிஜிபி சங்கர் ஜிவால், அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த தேவிப்பிரியாவை நேற்று சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். திருவண்ணமலை நகர காவல் நிலையத்தில் தனிப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் ஜெய்சங்கர் என்பவரது மகள் தேவிப்பிரியா என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

சென்னை: சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 விண்கலம் தன்னைத் தானே செல்ஃபி எடுத்துக் கொண்டதோடு தனது வட்டப்பாதையில் இருந்து பூமி மற்றும் நிலவை படம் பிடித்துள்ளது. இதனை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா-எல் 1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்து, கடந்த 2-ம் தேதி விண்ணில் செலுத்தியது. தற்போது புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் இந்த விண்கலம் பயணித்து வருகிறது.

இதன் சுற்றுப்பாதையை படிப்படியாக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆதித்யா-எல்1ல் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்ட படத்தை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. ஆதித்யா-எல்1 விண்கலம் தன்னைத் தானே செல்ஃபி எடுத்துக் கொண்டதோடு தனது வட்டப்பாதையில் இருந்து பூமி மற்றும் நிலவையும் படம் பிடித்துள்ளது.

அதனை இஸ்ரோ தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. சுமார் 41 நொடிகள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள படங்கள் கடந்த 4-ம் தேதி எடுக்கப்பட்ட படம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சுமார் 4 மாத கால பயணத்துக்கு பிறகு, 2024 ஜனவரி தொடக்கத்தில், பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தூரத்தில் உள்ள எல்-1 பகுதி அருகே விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து சூரியனின் வெளிப்புற பகுதியை ஆதித்யா-எல்1 ஆராய உள்ளது.



Read in source website

புதுடெல்லி: அமெரிக்காவின் ஜெனரல் அடாமிக்ஸ் (ஜிஏ) நிறுவனத்திடமிருந்து 31 எம்க்யூ-9பி டிரோன்களை கொள்முதல் செய்வதற்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பும் பணி இறுதி கட்டத்தில் உள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முப்படைகள் பயன்பாட்டுக்கு அமெரிக்காவின் ஜிஏ நிறுவன தயாரிப்பான 31 எம்க்யூ-9பி டிரோன்கள் தேவை என பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதற்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது. இதற்கான அறிவிப்பு பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்தபோது வெளியிடப்பட்டது. அதேபோல் ஜிஇ நிறுவனமும் இந்தியாவின் எச்ஏஎல் நிறுவனமும் இணைந்து இந்திய விமானப் படைக்காக போர் விமான இன்ஜின்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் 31 எம்க்யூ-9பி டிரோன்களை கொள்முதல் செய்வதற்கு அமெரிக்காவிடம் வேண்டுகோள் கடிதம் அனுப்புவதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கடிதம் இன்னும் ஒரு மாதத்தில் அமெரிக்க அரசுக்கு அனுப்பப்படும். அதன்பின் விலை விவரங்கள், ஆளில்லா போர் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகள், உதிரிபாகங்கள் விநியோகம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படும். 3072 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்த ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் சில பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளன.

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு திறன்களை ஊக்குவிக்க, ஜிஏ நிறுவனம் இந்தியாவில் உலகளாவிய பணிமனையை அமைக்கிறது.



Read in source website

புதுடெல்லி: நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அரசியல் சாசனத்தில் ‘பாரத்’ என்ற சொல் இடம்பெற்ற சுவாரசியமான வரலாறு வருமாறு: இந்தியாவுக்கென தனி அரசியல் சாசனத்தை உருவாக்க 1946-ம் ஆண்டு அரசியல் சாசன அவை உருவாக்கப்பட்டது. இதற்கு ராஜேந்திர பிரசாத் தலைவராக இருந்தார். இதில் 299 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்த அவை தற்காலிக நாடாளுமன்றமாக செயல்பட்டது.

பின்னர் அரசியல் சாசன வரைவை தயாரிக்க பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு 1948-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி முதல் வரைவை வெளியிட்டது. அதில், பிரிவு 1-ல் இந்தியா என குறிப்பிடப்பட்டது. பாரத் என்ற பெயர் இடம்பெறவில்லை.

இந்த வரைவில் பூர்வீகமான பாரத் என்ற பெயர் இடம்பெறாதது குறித்து சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய போதிலும், ஓராண்டுக்கு பிறகுதான் அரசியல் சாசன அவையில் இதுகுறித்த விவாதம் தொடங்கியது. அப்போது, உறுப்பினர் எச்.வி.காமத் 2 ஆலோசனைகளை வழங்கினார். முதலாவதாக “பாரத் அல்லது ஆங்கிலத்தில் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என இடம்பெறலாம்” என்றார். இரண்டாவதாக, “ஹிந்த் அல்லது ஆங்கிலத்தில் இந்தியா என்பது மாநிலங்கள் இணைந்த நாடு என இருக்கலாம்” என்றார்.

உதாரணமாக அயர்லாந்தின் பெயர் அயர் அல்லது ஆங்கிலத்தில் அயர்லாந்து என இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார். இதுபோல, வெளிநாடுகளில் இந்துஸ்தான் என அறியப்படுவதாலும் இங்கு வசிப்போர் இந்துக்கள் என அழைக்கப்படுவதாலும் ஆங்கிலத்தில் இந்தியா என இடம்பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அதேநேரம், சேத் கோவிந்த் தாஸ், கமலபதி திரிபாதி, கல்லுர் சுப்பா ராவ், ராம் சஹாய் மற்றும் ஹர் கோவிந்த் பந்த் உள்ளிட்ட உறுப்பினர்கள் அரசியல்சாசனத்தில் நாட்டின் பெயர் பாரத் என இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் இந்தியா என்பது பழமையான வார்த்தை இல்லை என்றும் வேதங்களில் எங்கும் அவ்வாறு குறிப்பிடவில்லை என்றும் தாஸ் தெரிவித்தார். அதேநேரம் வேதங்கள், உபநிஷத்கள், மகாபாரதம் மற்றும் புராணங்களில் பாரத் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

கல்லுர் சுப்பா ராவ் கூறும்போது, “சிந்து அல்லது இந்துஸ் என்பதிலிருந்து இந்தியா என்ற பெயர் வந்திருக்கலாம். இந்துஸ் ஆறு அமைந்துள்ள பகுதியில் அமைந்துள்ளதால் பாகிஸ்தானுக்கு வேண்டுமானால் இந்துஸ்தான் என்ற பெயர் பொருத்தமாக இருக்கலாம்” என்றார்.

பாரத் என்ற பெயருக்கு ஆதரவாகராம் சஹாய் கூறும்போது, “குவாலியர், இந்தூர் மற்றும் மால்வா ஆகியவை ஒருங்கிணைந்த பகுதி அனைத்து மத நூல்களிலும் மத்திய பாரத் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல அனைத்து இந்தி இலக்கியங்களிலும் நாட்டின் பெயர் பாரத் என குறிப்பிடப்பட்டுள்ளது. நமது தலைவர்களும் தங்களுடைய உரையில் நாட்டின் பெயரை பாரத் என்றே கூறுகின்றனர்” என்றார்.

கமலபதி திரிபாதி கூறும்போது, “நாட்டு மக்களின் கவுரவம் மற்றும் உணர்வுகளுக்கேற்ப பாரத் அதாவது இந்தியா என இடம்பெறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆயிரம் ஆண்டு காலமாக அடிமைப்பட்டு கிடந்ததால் இந்த நாடு தனது ஆன்மா, வரலாறு, பெருமை, வடிவம் மற்றும் பெயரை இழந்துவிட்டது.

ரிக் வேதம் மற்றும் உபநிஷத், கிருஷ்ணர் மற்றும் புத்தரின் போதனைகள், சங்கராச்சாரியா, ராமரின் வில் மற்றும் கிருஷ்ணரின் சக்கரம் ஆகியவற்றை பாரத் நினைவுபடுத்துகிறது” என்றார்.

பாரத் வர்ஷா: இதையடுத்து, அரசியல் சாசன அவையின் தலைவர் ராஜேந்திர பிரசாத்,மற்றொரு உறுப்பினர் ஹர்கோவிந்த்பந்தை பேச அனுமதித்தார். ஹர்கோவிந்த் பந்த் பேசும்போது, “நாம்தினசரி மத ரீதியிலான கடமையின்போது பாரத் வர்ஷா என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம்.

இதையே நாட்டின் பெயராக குறிப்பிடலாம். துஷ்யந்தா மற்றும் சாகுந்தலா தம்பதி மகனின் பேரரசை பாரத் என காளிதாசர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா என்பது வெளிநாட்டினரால் வைக்கப்பட்ட பெயர். இந்த பெயரையை நாம் தொடர்ந்து வைத்துக் கொள்வது நமக்கு அவமானம்” என்றார்.

இதையடுத்து, 1949-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அரசியல் சாசன வரைவு பிரிவு 1-ல் திருத்தம் கொண்டுவந்தார் அம்பேத்கர். அதில், நாட்டின் பெயர், “இந்தியா, அதாவது பாரத் என்பது மாநிலங்கள் இணைந்த நாடு ஆகும்” என குறிப்பிடப்பட்டது.

இந்தியாவின் பெயரை மாற்றப் போவதாக கூறுவது வதந்தி: ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் தலைவர்களுக்கு இரவு விருந்து வழங்குவதற்கான அழைப்பிதழ் குடியரசுத்தலைவர் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. அதில், வழக்கமாக இந்திய குடியரசுத் தலைவர் என இருப்பதற்கு பதில் பாரத் குடியரசுத் தலைவர் (பிரசிடென்ட் ஆப் பாரத்) என இடம்பெற்றுள்ளது. இதனால் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பான கேள்விக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறும்போது, “இது வதந்தி என கருதுகிறேன். பாரத் என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் மனநிலையை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது” என்றார்.



Read in source website

சென்னை: பிரசிடென்சி கிளப் சார்பில் சர்வதேச ஐடிஎப் மூத்தோர் டென்னிஸ் போட்டி சென்னையில் வரும் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.

4 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் இந்த தொடரின் ஆட்டங்கள் பிரசிடென்சி கிளப் மற்றும் எஸ்டிஏடி டென்னிஸ் ஸ்டேடியம் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. 35, 45 மற்றும் 55 வயதுக்கு மேற்பட்டோர் என 3 பிரிவுகளில் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த தொடரில் தென் இந்தியாவில் முதன்முறையாக பெண்கள் கலந்து கொள்கின்றனர்.

சர்வதேச டென்னிஸ் சங்கம், அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து நடத்தும் இந்தப் தொடரின் மொத்த பரிசு தொகை ரூ.2.10 லட்சமாகும். இந்த தகவலை போட்டி அமைப்பு குழு தலைவர் கே.சிவராம் செல்வகுமார், போட்டி இயக்குனர் ஹிதன் ஜோஷி, செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.



Read in source website

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 49 கிலோ எடை பிரிவில் சீன வீராங்கனை ஜியாங் ஹுய்ஹுவா கிளீன் அண்ட் ஜெர்க்கில் 120 கிலோ எடையை தூக்கி உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானு கடந்த 2021-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப்பில் 119 கிலோ எடையை தூக்கியதே சாதனையாக இருந்தது. இதனை தற்போது முறியடித்துள்ளார் ஜியாங் ஹுய்ஹுவா.



Read in source website

பியோங்சாங்: ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் அரை இறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.

தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா - சீன தைபே அணிகள் நேற்று மோதின. இதில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. முதல் ஆட்டத்தில் சீன தைபேவின் ஹுவாங் யுவான் 11-6, 11-6, 11-9, என்ற நேர் செட்டில் இந்தியாவின் ஷரத் கமலை வீழ்த்தினார்.

அடுத்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள யன் ஜு லின் 11-5, 11-6, 12-10 என்ற செட் கணக்கில் இந்தியாவின் சத்தியனை தோற்கடித்தார். ஹர்மீத் தேசாய் 6-11, 7-11, 11-7, 9-11 என்ற செட் கணக்கில் சென் ஜுயி கவோவிடம் வீழ்ந்தார். இந்த 3 ஆட்டங்களும் 82 நிமிடங்களில் முடிவடைந்தன. அரை இறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.



Read in source website

ஜகர்தா: 21 ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. நமது இந்த நூற்றாண்டில் கோவிட் 19-க்கு பிந்தைய ஓர் உலக ஒழுங்கு தேவைப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், ஆசியான்(தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) - இந்தியா இடையிலான ஒத்துழைப்பினை ஊக்குவிப்பதற்காக 12 அம்ச திட்டத்தினையும் முன்மொழிந்தார்.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் நடைபெறும் ஆசியான் இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "தெற்குலகில் குரலை உரக்க ஒலிக்கச் செய்வதிலும், சுதந்திரமான இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதிலும் இருதரப்புக்கும் ஆர்வம் உள்ளது. இந்த இலக்கினை அடைவதை நோக்கி அனைத்து ஆசியான் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா உறுதியாக உள்ளது. 21ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. இது நமது நூற்றாண்டு. அதற்கு கோவிட் 19-க்கு பிந்தைய உலக ஒழுங்கின் அடிப்படையிலான விதிகளை உருவாக்குவது அவசியம். தெற்கின் குரலை அதிகப்படுத்துவதில் நம் அனைவருக்கும் பொதுவான ஆர்வம் உள்ளது.

உலகின் நிச்சயமற்ற சூழ்நிலையிலும், ஆசியான் இந்தியாவின் உறவு ஒவ்வொரு துறையிலும் நிலையான வளச்சியை எட்டியுள்ளது. இந்தியா மற்றும் 10 ஆசிய நாடுகளும் வரலாறு, புவியியல், பகிரப்படும் மதிப்புகள், அமைதி, வளமை போன்ற பல்வேறு காரணிகளால் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கிழக்கு கொள்கையின் மையத்தூணே ஆசியான்தான். ஆசியானின் மையத்தையும், இந்தோ பசிபிக் மீதான அதன் பார்வையையும் இந்தியா முழுமையாக ஏற்கிறது" இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தொடர்ந்து, ஆசியான் -இந்தியா ஒத்துழைப்பிணை வலுப்படுத்துவதற்காக 12 அம்ச திட்டத்தை முன்மொழிந்தார். இது, டிபிஐ (டிஜிட்டல் பப்ளிக் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்) இணைப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இது இந்தியா,தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவை பல்வேறு முன்மாதிரிகளிலும் பொருளாதாரத்திலும் இணைப்பதை நோக்கமாக கொண்டது.

இந்தத் திட்டங்களின் படி, இந்தியா தனது டிபிஐ நிபுணத்துவத்தை ஏசியான் நண்பர்களுடன் பரிகிந்து கொள்வதற்காக அழைப்பு விடுத்து, ஏசியான் -இந்தியா "ஃபண்ட் ஃபார் டிஜிட்டல் ஃபியூச்சர்" என்ற ஒன்றை அறிவித்துள்ளது. மேலும், ஏசியான் மற்றும் கிழக்கு ஆசியாவுக்கான பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தனது ஆதரவினை புதுப்பிக்க இருக்கிறது. அதேபோல், பலதரப்பட்ட அமைப்புகளில் தெற்கின் குரலை எழுப்புவதற்கு அழைப்பு விடுத்துள்ள இந்தியா, ஜன் அவுஷாதி கேந்திராக்கள் மூலமாக மலிவு விலை மற்றும் தரமான மருந்துகள் கிடைக்க தனது நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல்,பயங்கரவாதம், பயங்கரவாத குழுக்குகளுக்கு நிதியுதவி அளித்தல், இணையவழி தவறான தகவல் பரப்புதல் ஆகியவைகளுக்கு எதிரான போராட்டம், பேரிடர் மேலாண்மை ஒத்துழைப்பு, கடல் சார் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுகளில் ஒத்துழைப்பு ஆகியவை முன்மொழியப்பட்ட திட்டத்தில் உள்ள மற்ற அம்சங்களாகும்.

ஜி-20 உச்சி மாநாடு இந்த வார இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் நடைபெறும் ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜகர்தா சென்றுள்ளார்.



Read in source website

தனேகஷிமா: நிலவை ஆய்வு செய்வதற்கான விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது ஜப்பான். இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இதனை விண்ணில் செலுத்தியுள்ளனர் அந்நாட்டு விஞ்ஞானிகள். நிலவை 120 முதல் 180 நாட்களில் இந்த விண்கலன் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் தனேகஷிமா விண்வெளி மையத்தில் HII-A லாஞ்சர் (ராக்கெட்) மூலம் நிலவை ஆய்வு செய்வதற்கான SLIM எனும் ஸ்மார்ட் லேண்டர் மற்றும் XRISM எனும் செயற்கைக்கோள் மூலம் பேரண்டம் குறித்தும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் பேரண்டத்தின் தோற்றம் குறித்து அறிந்து கொள்ள முடியும் என ஜப்பான் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த பணியில் ஜப்பான் விண்வெளி ஆய்வு முகமைக்கு அமெரிக்காவின் நாசா உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவை நோக்கி விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஸ்லிம் லேண்டர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தரையிறங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பாயிண்ட் லேண்டிங் எனும் தொழில்நுட்பத்தில் இந்த லேண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலவுக்கு வெறும் சில மீட்டர் தொலைவில் இருந்து இதனை லேண்ட் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் விண்வெளி ஆய்வில் இந்தத் தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகளின் விண்கலன்கள் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளன. ஜப்பான் இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் ஐந்தாவது நாடாக இந்தப் பட்டியலில் இணையும்.

கடந்த மாதம் இந்தியாவின் இஸ்ரோ, நிலவில் சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டரை தரையிறக்கியது. சுமார் 15 நாட்களுக்கு நிலவின் தென்துருவ பகுதியில் இந்த லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆய்வுப் பணியை மேற்கொண்டது. தற்போது ஸ்லீப் மோடுக்கு இரண்டும் சென்றுள்ளன.



Read in source website

புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரெஞ்ச் அதிபர் இம்மானுவல் மேக்ரான், ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ஸ், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனேஷி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஆனால், சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதில், சீன பிரதமர் லீ கியாங் கலந்து கொள்வார் என கடந்த திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மா நிங் நேற்று கூறும்போது, ‘‘சீனா - இந்தியா இடையிலான உறவு நிலையாக உள்ளது. இரு நாடுகள் இடையே பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சீனா - இந்திய உறவில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படுவது இரு நாட்டு மக்கள் நலனுக்கும் நல்லது. ஜி20 அமைப்புக்கு சீனா அதிக முக்கியத்துவம் அளித்து தீவிரமாக பங்கேற்கிறது’’ என்றார்.

சீனா கடந்த வாரம் தனது புதிய வரைபடத்தில் அருணாச்சல பிரதேசம், அக்ஷய் சின் ஆகிய பகுதிகளை இணைத்திருந்தது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் சீனா-இந்திய உறவு நிலையாக உள்ளது என அந்நாடு கூறியுள்ளது.



Read in source website

மும்பை: நாட்டின் முதல் யுபிஐ-ஏடிஎம் ஹிட்டாச்சி பேமண்ட் சர்வீசஸ் மூலம் ஒயிட் லேபிள் ஏடிஎம்(டபிள்யூஎல்ஏ) ஆக மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உடன் இணைந்து செயலாக்கத்துக்கு கொண்டுவரப்பட்ட இந்த ஏடிஎம் சேவை டெபிட் கார்டுகள் உதவியின்றி வாடிக்கையாளர்கள் தடையின்றி பணம் எடுக்கும் புதிய வசதியை உறுதி செய்யும்.

இதுகுறித்து என்பிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏடிஎம் பரிவர்த்தனையில் வாடிக்கையாளர்கள் கார்டுகளின் தேவையின்றி பணம் எடுக்கும் புதிய வசதியை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தற்போதுள்ள ஏடிஎம்களில் யுபிஐ வசதியை ஒருங்கிணைப்பதன் மூலம் கார்டுகளின் துணையின்றி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-களில் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். தொலைதூர பகுதிகளில் வசிப்பவர்கள் இதனால் பெரிதும் பயனடைவர். ‘யுபிஐ ஏடிஎம்’ வங்கிச் சேவையில் புதிய மைல் கல்" என்று தெரிவித்துள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-ல் யுபிஐ கார்டுலெஸ் சேவையை தேர்வு செய்ய வேண்டும். எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதை திரையில் என்ட்டர் செய்ய வேண்டும். அதன் பின்னர் திரையில் தோன்றும் கியூஆர் கோடை தனது மொபைலை பயன்படுத்தி ஸ்கேன் செய்தவுடன் யுபிஐ பின் நம்பரை பதிவிட்டு பரிவர்த்தனைக்கான செயல்முறையை உறுதிப்படுத்த வேண்டும். சில நொடிகளுக்குப் பிறகு வாடிக்கையாளர் தங்களுக்கு தேவையான பணத்தை ஏடிஎம்-ல் உடனடியாக பெற்றுக் கொள்ள முடியும்.

தற்போது கார்டு இல்லாமல் பணம் எடுக்க மொபைல் எண், ஓடிபிஆகியவை அத்தியாவசியமானதாக உள்ளது. பணத்தை எடுக்க வாடிக்கையாளர் ஏடிஎம் கார்டை கொண்டு செல்ல தேவையில்லை என்பது யுபிஐ-ஏடிஎம் மூலம் சாத்தியமாகியுள்ளது.



Read in source website

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்.சாண்ட் தயாரித்து விற்பனை செய்யும் சில நிறுவனங்கள் கழிவுகள் கலந்த எம்.சாண்டை விற்பனை செய்வதாகவும் இதனால் கட்டி டத்தின் உறுதித் தன்மை பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மிகக் குறைந்த நிறுவனங்களே தரச்சான்று பெற்றுள்ளதால் மற்றவர்கள் விற்பனை செய்யும் எம்.சாண்ட்மண்ணை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று சமூக ஆவலர்கள் வலியுறுத்துகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு கள் ஓடுகின்றன. இந்த ஆறுகளில் இருந்து அள்ளப்படும் மணலே காஞ்சிபுரம், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்கு பயன்பட்டு வந்தன. இதற்காக அனுமதிக்கப்பட்ட மணல் குவாரிகள் விதிகளை மீறி மணல் அள்ளியதால் ஆறுகள் சுரண்டப்பட்டன.

நிலத்தடி நீர் பாதிப்புக்கு உள்ளாகி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்த மணல் திருட்டு எதிராக பலதரப்பு மக்களும் போராட்டம் நடத்தியதாலும், நீதிமன்றம் தலையிட்டதன் அடிப்படையிலும் கடந்த 2013-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு இன்று வரை அந்த தடை நீக்கப்படவில்லை.

கட்டிடப் பணிகளுக்கு மணல் மிகவும் அத்தியாவசியம் என்பதால் மணலுக்கு மாற்றாக எம்.சாண்ட் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் தமிழகம் முழுவதும் நூற்றுக் கணக்கான எம்.சாண்ட் விற்பனை செய்யும் நிறுவனங்கள் உருவாகின.

இதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட எம்.சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் எம்.சாண்ட் தரமானதா என்பதை பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்து தர நிர்ணயச் சான்றிதழ் வழங்குகின்றனர். ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெறும் 19 நிறுவனங்கள் மட்டுமே தர நிர்ணயச் சான்று பெற்றுள்ளன.

ஆனால் தர நிர்ணயச் சான்று பெறாமல் இயங்கும் எம்.சாண்ட் நிறுவனங்கள் சில ஜல்லியை உடைக்கும்போது உருவாகும் தேவையற்ற கழிவுகளை எம்.சாண்ட் எனப் படும் செயற்கை மணலுடன் கலந்து விற்பனை செய்தவாக புகார்கள் எழுந்துள்ளன. இவற்றை கட்டிடங்களுக்கு பயன்படுத்தும்போது அவற்றின் உறுதித் தன்மை குறையும் என்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அரசுத் துறைகளின் கட்டிடங்கள், பள்ளிக் கட்டிடங்கள் கட்டும்போது தரநிர்ணயச் சான்று பெற்ற நிறுவனங்களில் இருந்து வாங்கப்படும் எம்.சாண்ட் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அதேபோல் பொதுமக்களும் தங்கள் வீடுகளுக்கு பயன்படுத்தும் எம்.சாண்ட் தரமானதா, அந்த நிறுவனம் தரச் சான்று பெற்ற நிறுவனமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இவ்வாறு தரமற்ற எம்.சாண்ட் மணலை பயன்படுத்தி கட்டப்படும் கட்டிடங்கள் விரைவில் விரிசல் விடுவதுடன், சில ஆண்டுகளில் கட்டிடங்கள் உருகுலைந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

எனவே பொதுமக்களுக்கும், அரசுத் துறைகளும் கட்டிடங்களை கட்டும்போது தரமான எம்.சாண்ட் மணலையே பயன்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பெத்து ராஜிடம் கேட்டபோது அவர் கூறியது: அரசு மற்றும் தனியார் என யாராக இருந்தாலும் கட்டிடங்கள் கட்டும்போது அவை உறுதித் தன்மையுடன் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த கட்டிடங்களை பயன் படுத்துபவர்கள், அங்கு பணி செய்பவர்களுக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க முடியும். இதுபோன்ற தரமற்ற எம்.சாண்ட் பயன்படுத்தி கட்டப்படும் கட்டிடங்களால் பாதிப்புகள் ஏற்படும் அபயாம் உள்ளது.

இந்த விவகாரத்தில் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிடவேண்டும். கட்டிடப் பணிகளுக்கு தரமான எம்.சாண்ட் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து எம்.சாண்ட் விற்பனையாளர்களும் தரச்சான்று பெற்று விற்பனை செய்வது, அதனை அடிக்கடி கண்காணிப்பது போன்றவற்றின் மூலம் தரமற்ற எம்.சாண்ட் விற்பனையை தடுக்க முடியும். இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து பொதுப்பணித் துறையின் கட்டிட பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது சென்னையில் இதற்கென தனிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் முறை யாக ஆய்வு செய்து தர நிர்ணயச் சான்று களை வழங்கி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் எம்.சாண்ட் நிறுவனங்களுக்கும் இந்தச் சான்று வழங்கி யுள்ளனர். எம்.சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் அவர்கள் கூறும் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் தர நிர்ணயச் சான்றிதழ் பெறலாம் என்றார்.



Read in source website

ஆகஸ்ட் மாத சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.59 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. இது, கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாத வசூலைவிட 11% அதிகம். அதேநேரத்தில் கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது சற்று குறைந்திருக்கிறது.

நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 7.8% -ஆகப் பதிவாகியிருக்கும் நிலையில், ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து வருவது வியப்பை ஏற்படுத்தவில்லை. வரி விகிதங்கள் அதிகரிக்கப்படாத போதிலும், ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பதற்கு வரி வசூல் முறையில் மேம்பாடு, வரி ஏய்ப்பு தடுப்பு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் வரி செலுத்துவதில் இணக்கம் ஏற்பட்டிருப்பதும் மிக முக்கியமான காரணம்.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 6.1% -ஆக இருந்த ஜிடிபி வளா்ச்சி, இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 7.8% -ஆக அதிகரித்திருப்பது நமது பொருளாதாரம் வளா்ச்சிப் பாதையில் நகா்வதைக் காட்டுகிறது. ஜிடிபி வளா்ச்சி மகிழ்ச்சி அளித்தாலும் ரிசா்வ் வங்கியின் எதிா்பாா்ப்பான 8% -அளவைவிட ‘சற்று’ குறைவு என்பதையும் குறிப்பிடத் தோன்றுகிறது.

துறைவாரியாகப் பாா்க்கும்போது இந்தியாவின் ஜிடிபி வளா்ச்சியில் சேவைத்துறையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சேவைத்துறை 10.3% வளா்ச்சியைக் காண்கிறது என்றால், நிதித்துறை, மனைவணிகத் துறை, திறன்சாா் துறைகள் ஆகியவையும் வளா்ச்சியைக் காட்டுகின்றன. கச்சாப் பொருள்களின் விலைக்குறைவு காரணமாக உற்பத்தித்துறை மெத்தனத்தில் இருந்து விடுபட்டு 4.7% வளா்ச்சியைக் காட்டுகிறது.

உலகளாவிய நிலையில் காணப்படும் பொருளாதார மந்த நிலையால், சா்வதேச சந்தையில் கேட்பு (டிமாண்ட்) குறைவாகவே காணப்படுகிறது. அதன் தாக்கம் இந்தியாவின் ஜிடிபியில் பிரதிபலிக்கிறது. நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதியின் அளவு குறைந்திருக்கிறது.

இன்னொருபுறம் அவற்றின் இறக்குமதி அதிகரித்திருக்கிறது. அதன் காரணமாக வா்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியால் ஜிடிபி பாதிக்கப்படுகிறது. நிகழாண்டின் ஏனைய மூன்று காலாண்டுகளில் ஜிடிபி வளா்ச்சி நிலைப்படும் என்றும், 2024-25- இல் ஜிடிபி வளா்ச்சி சுமாா் 6.5%- ஆக இருக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

பருவமழைப் பொழிவு முறையாக இல்லாத காரணத்தால், வேளாண் துறையில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இதுவரையில் 8% பருவமழைப் பொழிவில் குறைவு காணப்படுகிறது. அதன் காரணமாக காரீஃப் பருவ நடவு தாமதப்பட்டிருக்கிறது. இதனால், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் ஆகியவற்றின் உற்பத்தி பாதிக்கப்படலாம்.

சா்வதேச அளவில் சமையல் எண்ணெய் உள்ளிட்ட வேளாண் பொருள்களின் விலைகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. அப்படியிருக்கும்போது இந்தியாவின் வேளாண் உற்பத்தி எதிா்பாா்த்த அளவில் இல்லாமல் போனால், உணவுப் பொருள்களின் விலைவாசி கடுமையாக உயரக்கூடும். மீண்டுவரும் கிராமப்புற பொருளாதாரம் பாதிக்கப்படும்.

சமீபத்தில் காணப்படும் உணவுப் பொருள்களின் விலையேற்றத்துக்கு காய்கனிகளின் விலைவாசி உயா்வு முக்கியமான காரணம். ஏற்கனவே தானியங்கள், பருப்பு வகைகள், பால் உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரித்திருக்கும் நிலையில், அடித்தட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் ஆபத்து காணப்படுகிறது. உலக ஜிடிபி வளா்ச்சி பலவீனமாக இருப்பதால் ஏற்றுமதிகளுக்கான வாய்ப்பும் குறைவு. இவையெல்லாம் உடனடியாக எதிா்கொள்ளப்பட வேண்டிய சவால்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தனியாா் முதலீடு எதிா்பாா்த்த அளவில் அதிகரிக்கவில்லை. அரசுத்துறை முதலீடு மட்டுமே பெரிய அளவில் இந்திய பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கிறது. அதுவும்கூட கட்டுமானத் தொழிலிலும், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட துறைகளிலும் காணப்படுவதால் உற்பத்தித்துறை பலவீனமாகக் காட்சியளிக்கிறது.

2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டின் 13.1% பொருளாதார வளா்ச்சியுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் தற்போதைய வளா்ச்சி விகிதம் மிகவும் குறைவு. ஆனாலும்கூட உலகின் மிக அதிகமாக வளா்ச்சி அடையும் பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது (இதே காலாண்டில் சீனாவின் வளா்ச்சி விகிதம் 6.3%).

நிகழ் நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான மத்திய அரசின் நிதி பற்றாக்குறை 33% ஆகத் தொடா்கிறது. நிதி பற்றாக்குறையை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருப்பது முதலீட்டாளா்களுக்கு அரசின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இந்திய பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, கவலைக்குரியதாக இருப்பவை பணவீக்கமும், ஏற்றுமதிகளும். அரசின் புள்ளிவிவரப்படி, 2023-24 -இன் முதல் காலாண்டில் ஏற்றுமதியின் அளவு 20%. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 4% குறைவு. அதாவது ரூ.70,000 கோடி மதிப்புள்ள ஏற்றுமதிகள் குறைவு என்பதை சாதாரணமாகக் கடந்துபோக முடியாது. சா்வதேச பொருளாதார வளா்ச்சி அதிகரிக்காத வரை இந்தியாவின் ஏற்றுமதி துறை இந்த அழுத்தத்தை எதிா்கொள்வதைத் தவிர வழியில்லை.

வெளியிடப்பட்டிருக்கும் முதல் காலாண்டுக்கான பொருளாதார வளா்ச்சியும், ஜிடிபி வசூலும் நம்பிக்கை அளிப்பதாக மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவிக்கிறாா். எதிா்பாா்த்தது போலவே, இந்திய பொருளாதாரம் நிகழ் நிதியாண்டில் 6.5% வளா்ச்சியை எட்டும் என்பதும் அவரது கணிப்பு.

சா்வதேச அளவில் மந்தநிலை காணப்படும்போதும், நமது வளா்ச்சி விகிதம் உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியாவை உயா்த்தியிருக்கிறது என்கிற அவரது கூற்றை மறுப்பதற்கில்லை. ஆனால், விலைவாசியும் ஏற்றுமதியும்தான் கவலை அளிக்கின்றன.



Read in source website

சிந்து நதி ஒப்பந்தம் மீண்டும் சா்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. சிந்து நதி மீது இந்தியாவும் பாகிஸ்தானும் உரிமை கொண்டிருக்கின்றன. 60 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி ஒப்பந்தப்படி, ராவி, பயஸ், சட்லஜ் ஆகிய கிழக்கத்திய நதிகளைக் கட்டுப்பாடு ஏதுமின்றிப் பயன்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு உரிமை உள்ளது. இதேபோல சிந்து, ஜீலம், சட்லஜ் ஆகிய மூன்று நதிகளின் நீரையும் பயன்படுத்திக் கொள்ள பாகிஸ்தானுக்கு அதிகாரம் உள்ளது.

சிந்து நதியில் 0.40 மில்லியன்-ஏக்க, ஜீலம் நதியில் 1.50 மில்லியன்-ஏக்கா், ஜனப் நதியில் 1.70 மில்லியன்-ஏக்கா் என மொத்தம் 3.60 மில்லியன்-ஏக்கா் நீரை சேமித்து வைக்க இந்தியாவுக்கு அதிகாரம் உள்ளது. அதிலும் பிரிவு வாரியாகப் பாா்த்தால், வனப் பயன்பாட்டுக்கு 2.85 மில்லியன்-ஏக்கரும் (பொதுப் பயன்பாட்டுக்கு 1.25 மில்லியன்-ஏக்கா், மின் பயன்பாட்டுக்கு 1.60 மில்லியன்-ஏக்கா் உள்பட), வெள்ளப் பயன்பாட்டுக்கு 0.75 மில்லியன்-ஏக்கரையும் சேமித்துக் கொள்ள இந்தியாவுக்கு உரிமை உண்டு.

ஆனால், ஜம்மு- காஷ்மீரில் அமைந்துள்ள ரேட்டில் நீா்மின் நிலையம், கிசான்கங்கா திட்டங்களால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. நாட்டின் மின்தேவையைப் பூா்த்தி செய்வதற்கும், பிராந்திய வளா்ச்சிக்கும் இந்த இரண்டு திட்டங்களும் இன்றியமையாதவை என இந்தியா கருதுகிறது. ஆனால், இவ்விரு திட்டங்களுக்கும் எதிா்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், இந்தத் திட்டங்கள் சிந்து நதி ஒப்பந்தத்தை மீறுவதாகவும், இதன்மூலம் தங்களுக்கான நீா்வரத்து பாதிப்படையும் என்றும் ஆட்சேபம் தெரிவிக்கிறது.

கிசான்கங்கா திட்டத்துக்கு கடந்த 2006-லும், ரேட்டில் நீா்மின் நிலையத்துக்கு 2012-லும் பாகிஸ்தான் முதன்முறையாக எதிா்ப்பை பதிவு செய்தது. இதனிடையே, கிசான்கங்கா திட்ட பிரச்னை 2010-இல் நடுவா் மன்றத்துக்குச் சென்றபோது, இந்தியாவின் திட்டம், சிந்து நதி ஒப்பந்த ஷரத்து 3, ஷரத்து 4 (6) ஆகியவற்றை மீறும் செயல் என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.

இந்த விவகாரத்தில் கடந்த 2013-இல் இறுதி தீா்ப்பளித்த நடுவா் மன்றம், சிந்து நதி ஒப்பந்தப்படி கிசான்கங்கா, நீலம் ஆற்றிலிருந்து மின் உற்பத்திக்காக தண்ணீரை மடைமாற்றி விடும் அதிகாரம் இந்தியாவுக்கு இருப்பதாக கூறியது. அதேவேளையில், கிசான்கங்கா, நீலம் நதிகளில் குறைந்தபட்ச தண்ணீரை இந்தியா இருப்புவைக்க வேண்டுமென (அதாவது விநாடிக்கு 9 கனஅடி) நடுவா் மன்றம் நிபந்தனை விதித்தது.

இந்தத் தீா்ப்புக்குப் பின்னா், ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட நான்கு பிரச்னைகளில் ஒன்றுக்கு மட்டும் இந்தியாவும் பாகிஸ்தானும் தீா்வை எட்டின. இருநாடுகளைச் சோ்ந்த சிந்து நதி ஆணையா்கள் பலமுறை சந்தித்துப் பேச்சுவாா்த்தை மேற்கொண்ட போதிலும், தில்லியும் இஸ்லாமாபாதும் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை. இந்தச் சூழலில், உலக வங்கியை நாடிய பாகிஸ்தான், சிந்து நதி ஒப்பந்தத்தையும், நடுவா் மன்றத் தீா்ப்பையும் இந்தியா மீறியதாக குற்றம்சாட்டியது. மேலும், ரேட்டில் திட்டத்துக்கும் இஸ்லாமாபாத் தனது எதிா்ப்பைப் பதிவு செய்தது.

இந்த பிரச்னைக்குத் தீா்வு காணும் பொருட்டு, மற்றொரு நடுவா் மன்றத்தை முன்மொழியுமாறு உலக வங்கியிடம் கடந்த 2016-இல் பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தது. நடுவா் மன்றத்துக்குப் பதிலாக நடுநிலை நிபுணா் குழுவை நியமிக்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டது. இருதரப்பு கோரிக்கையையும் கேட்டறிந்த உலக வங்கி, கிசான்கங்கா, ரேட்டில் திட்டப் பணிகளை நிறுத்திவைத்து, இருநாடுகளும் இணக்கமான முறையில் தீா்வு காணுமாறு அறிவுறுத்தியது.

பிரதமா் மோடி கடந்த 2018-இல் கிசான்கங்கா திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். ஜம்மு- காஷ்மீரில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழாவுக்கு முந்தைய தினம், பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருதரப்பிலும் மொத்தம் ஒன்பது போ் பலியாகினா். இதனால் இந்த பிரச்னை பூதாகரமானது.

இந்தியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க மைக்கேல் லினோ என்ற நடுநிலை நிபுணா் குழுவையும், பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஏற்ப சீன் முா்பி தலைமையில் நிரந்தர நடுவா் மன்றத்தையும் உலக வங்கி கடந்த ஆண்டு அக்டோபரில் நியமித்தது. இந்த நிரந்தர நடுவா் மன்ற விசாரணையில் பாரபட்சம் நிலவுவதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது.

மேலும், சிந்து நதி பிரச்னையைத் தீா்க்க அதற்கு அதிகாரமில்லை என்று இந்தியா முன்வைத்த குற்றச்சாட்டை நிராகரித்த சீன் முா்பி, பாகிஸ்தானின் பிரச்னைக்குத் தீா்வு காண்பதாக கடந்த ஜூலை 26-இல் கூறியது அவரது சாா்புத்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இதனால் அடுத்தகட்ட விசாரணையின்போது, அதில் பங்கேற்பதை தில்லி தவிா்த்தது.

இந்த நிலையில், இந்த பிரச்னைக்கு சிந்து நதி ஒப்பந்த ஷரத்து 9-இன்கீழ் தீா்வு காண தனக்கு அதிகாரம் இருப்பதாக சீன் முா்பி தெரிவித்தாா். இதனை ஏற்க மறுத்த புதுதில்லி, சிந்து நதி ஒப்பந்தத்தால் முன்மொழியப்படாத ஓா் அமைப்பின் விசாரணையின்போது தங்களால் பங்கேற்க முடியாது என்று தெரிவித்தது.

அதேசமயம், நடுநிலை நிபுணா் குழுவின் விசாரணையில் புதுதில்லி தொடா்ந்து பங்கேற்று வருகிறது. இதன் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 27, 28-இல் நெதா்லாந்தின் தி ஹேக் நகரில் நடைபெற்றது. அடுத்த கூட்டம் இம்மாதம் நடைபெறவுள்ளது.

எல்லை விவகாரம், மீனவா் பிரச்னை என இந்தியா- பாகிஸ்தான் இடையே காலங்காலமாக பிரச்னைகள் நீடிக்கின்றன. தற்போதைய சூழலில் நிரந்தர நடுவா் மன்றத்தையும், நிபுணா் குழுவையும் அணுகுவதற்கு பதிலாக இருநாடுகளும் பரஸ்பர தொழில்நுட்ப வல்லுநா்கள், பருவநிலை மாற்ற நிபுணா்கள், நீா் மேலாண்மை நிபுணா்கள், விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவை அமைத்து, அடிப்படை பிரச்னையை முதலில் அடையாளம் காண்பதே சாலச்சிறந்தது.

சிந்து நதி ஒப்பந்தம் 60 ஆண்டுகளுக்கு முன்பு கையொப்பமானது. சிந்து நதிப் படுகையில் ஏற்பட்ட சூழலியல் மாற்றம் காரணமாக, தற்போது அந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அது இருநாடுகளின் பரஸ்பர புரிதல் அடிப்படையில் இருக்க வேண்டியது அவசியம்.



Read in source website

தனிநபா் வருமானம் என்பது ஒரு நாட்டின் வருமானத்தை அதன் மக்கள்தொகையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. இந்த வருமானம், ஒவ்வொரு ஆண், பெண், குழந்தைகளின் எண்ணிக்கையை உள்ளடக்கியுள்ளது.

புதிதாகப் பிறந்த குழந்தைகளும் பெருமளவில் மக்கள்தொகையின் உறுப்பினராகத்தான் சோ்த்துக் கொள்ளப்படுவாா்கள். தாங்கள் சம்பாதித்த பணத்தை அளவிடுவதற்கான ஒரு கருவிதான், ஒரு பொருள்தான் தனிநபா் வருமானம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தனிநபா் வருமானம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஆராய்வதற்குப் பெரிதும் துணையாக இருக்கிறது.

ஒரு பகுதியின் அளவீட்டை மட்டுமே வைத்துக் கொண்டு, மக்களின் வாழ்க்கைத்தரம் உயா்ந்து விட்டது என்றும், தனிநபா் வருமானம் பெருகி விட்டது என்றும் சொல்வது முரணான ஒன்றாகும்.

ஏனென்றால், ஒரு குடும்பத்திற்கான வருமானம், ஒரு வீட்டில் உள்ளவா்களின் எண்ணிக்கையை உள்ளடக்கியது. தனிநபா் வருமானத்தின் நன்மை, அக்குடும்பத்தின் தேவைகளையும், பற்றாக்குறைகளையும் போக்குவதற்கு உதவுகிறது. இவற்றை பொதுத்தன்மைக்குப் பொருந்திப் போகச் செய்ய இயலாது.

பெரும்பாலும் அமெரிக்காவில் உள்ள வசதி படைத்த மாவட்டங்களை வரிசைப்படுத்தும் போது இந்த அளவீடு அந்த நாட்டுக்குப் பயன்படுகிறது. தமிழகத்தில் தனிநபா் வருமானம் பெருகி விட்டது என்று சொல்லப்படுகிறது.

அப்படியானால்,எந்தெந்த மாவட்டங்கள் என்று குறிப்பிடுவதோடு, இவை மற்ற மாவட்டங்கள் அளவிற்கு, வருமானம் உயா்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் குறிப்பிட வேண்டும்.

மேலும், விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், தனிநபா் வருமானத்தைப் பெருக்குவதற்கு அடிப்படையான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், வங்கிகளில் கடனுதவி வழங்கவும் தமிழக அரசு திட்டங்களை உருவாக்க வேண்டும்.

ஒரு பகுதியில் உள்ள இடத்தின் மதிப்பு, இன்னொரு பகுதியில் உள்ள இடத்தின் மதிப்புபோடு கூடுதலாகிறது, ஒருசில இடங்களில் குறைவாகிறது. ஆக, விலை அதிகம் உள்ள பகுதிகள், சராசரி வீட்டு விலைக்கும், தனிநபா் வருமானத்திற்கும் அதிக விகிதத்தைக் கொண்டிருக்கிறது.

அவ்வாறே, ஒரு நிறுவனத்தைத் தொடங்கவோ, ஒரு பகுதியில் ஒரு கடையைத் தொடங்கவோ பொருளாதார நிலையில் ஏற்றமோ இறக்கமோ ஏற்படுகிறது. ஆகவே, மக்கள்தொகையில் தனிநபா் வருமானம் அதிகமாக இருக்கும் நிலையில், குறைந்த தனிநபா் வருமானம் உள்ள பகுதிகளில், மக்கள் அதிகப் பணத்தைச் செலவழிக்கத் தயாராக இருக்கின்ற பொருள்கள் விலை ஏறுகிறது.

குறைந்த தனிநபா் வருமானம் உடையவா்களால் அப்போட்டியில் ஈடுகொடுக்க முடியவில்லை. இதற்குத் தீா்வு என்ன என்பது குறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

வாழ்க்கைத்தரம், தனிநபா் வருமானம் மக்கள்தொகையின் ஒட்டுமொத்த வருமானத்தைக் கணக்கிட்டு, அதை மக்களின் எண்ணிக்கையால் வகுக்கிறது. இது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தின் சரியான பிரதிநிதித்துவமாக இருக்காது.

ஏனென்றால், வாழ்க்கைச் செலவுகளில் வேறுபாடுகள் இருக்கின்ற காரணத்தினால், துல்லியமாக இந்தப் பரிவா்த்தனைகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. பணவீக்கம், தனிநபா் வருமானத்தை பிரதிபலிப்பதில்லை. ஏனென்றால், பணவீக்கம் ஒரு பொருளாதாரக் குறியீடுதான். அவ்வகையான பணவீக்கம் காரணமாக குறிப்பிட்ட காலத்தில் விலைகள் உயரும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

சேமிப்பு மற்றும் குழந்தைகள் தனிநபா் வருமானம் என்பது அத்தனிநபரின் பணத்தை மட்டுமல்லாது, சேமிப்பையும் உள்ளடக்கியது. எவ்வகையில் என்றால், தனிநபருடைய வருமானம், குழந்தைகளை உள்ளடக்கியதாக ஆகிறது. ஆனால், அக்குழந்தைகள் எந்த வருமானத்தையும் ஈட்டுவதில்லை. ஆகவே, இந்தத் தனிநபா் வருமானத்தோடு, குழந்தைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால், இதன் முடிவுகள் தவறாகத்தான் இருக்கும்.

ஏழைகளாக இருந்த மக்கள் கரோனா நோய்த்தொற்றுக்குப் பின்னா் பரம ஏழைகளாக மாறியிருப்பது அதிா்ச்சி தரும் செய்தியாகும். 2015 முதல் 2023 வரையிலான முடிவுகளை ஒப்பிட்டுப் பாா்க்கிறபோது தங்கள் வருமானத்தை இழந்து ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள் என்பது தெரிகிறது.

ஆண்டுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் வருமானம் ஈட்டிய எளிய வா்க்கத்தினா், தற்போது 50 ஆயிரம் ரூபாய் கூட வருமானம் ஈட்ட முடியாத நிலையில், பொருளாதாரப் பின்னடைவோடு தங்கள் வாழ்க்கைப்பாதையைக் கடக்கத் தடுமாறிக் கொண்டிருக்கிறாா்கள்.

நடுத்தரக் குடும்பத்தைச் சோ்ந்தவா்களை எடுத்துக்கொண்டால், முன்பு ஆண்டுக்கு மூன்று லட்ச ரூபாய் சம்பாதித்தவா்கள், தற்போது கூடுதலாக ரூ. 20 ஆயிரத்துக்கும் மேலாக சம்பாதிக்கிறாா்கள் என்பதை மறுக்க முடியாது.

பணக்காரா்களைப் பொறுத்தவரை, கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிந்தைய காலகட்டம் அவா்களுக்கு அதிரடியாகப் பல முன்னேற்றங்களைத் தந்திருக்கிறது என்பதைப் புள்ளிவிவரம் உறுதிப்படுத்துகிறது. இதற்கு முக்கியக் காரணம், வருமானவரிக்கான கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதும், ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதும்தான்.

அதாவது, பத்து லட்ச ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டி, முறையாக வருமான வரி செலுத்துபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதில், ஐந்து லட்ச ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் ஈட்டி, வருமானவரி கட்டுபவா்களின் எண்ணிக்கை சரிந்து கொண்டே இருக்கிறது. ஆகவே, குறைவாக வருமானம் ஈட்டுபவா்கள் இனி வருமான வரி செலுத்துபவா்களாக இருக்க மாட்டாா்கள் என்பதே எதா்த்த நிலை.

ஒட்டுமொத்தமாகப் பாா்க்கும்போது வருமானவரி செலுத்துபவா்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 8.4 சதவீதம் உயா்ந்திருக்கிறது. வருமானவரி செலுத்துபவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.

ஆனால், ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகிக் கொண்டிருப்பதும், பணக்காரா்கள் மேலும் மேலும் பணக்காரா்களாகிக் கொண்டிருப்பதும் ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு நல்லதல்ல என்பதை மத்திய - மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் தனிநபா் வருமானம் ரூ. 1.66 லட்சமாக உயா்ந்துவிட்டதாக தமிழக அரசு தெரிவிக்கிறது. விலைவாசி உயா்வு, பணவீக்கம் இவற்றைக் கணக்கிடுகிற போது, இது எவ்வாறு சாத்தியம் என்பது புரியாத புதிராக இருக்கிறது. 2021-2022-இல் தமிழகத்தில் பணவீக்கம் 7.92 சதவீதமாக இருந்ததாகவும், 2022-23-இல் அது 5.97 சதவீதமாக இருப்பதாக தமிழக அரசு தெரிவிக்கிறது.

ஒட்டுமொத்த மாநிலத்தின் பொருளாதார வளா்ச்சி சமச்சீராக இல்லாமல், ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுவதாக தமிழக அரசு தெரிவித்த போதிலும், மாவட்ட வாரியாக எங்கு ஏற்றம் எங்கு இறக்கம் என்பதைத் தெளிவுபடுத்தவில்லை.

தமிழகம் மின்னணு ஏற்றுமதியில் முன்னணியில் இருப்பதாலும், ஏறத்தாழ இரண்டரை லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தொழில் முதலீடு வந்திருப்பதாலும் இந்தத் தனிநபா் வருமானம் உயா்ந்திருப்பதாக அரசு தெரிவிக்கிறது.

வேலைவாய்ப்பு, வறுமை, உள்கட்டமைப்பு போன்றவற்றுடன் நெருங்கிய தொடா்புடையது பொதுத்துறை முதலீடு. ஆனால், அந்த முதலீடு திருப்திகரமாக இருக்கிறதா என்பது கேள்விக்குறியே. அது மாத்திரமல்லாமல், இந்த முதலீடுகள் எந்த வகையில் செயல்படுகிறது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

பணவீக்கத்திற்கும், பொருளாதார வளா்ச்சிக்கும் நெருங்கிய தொடா்பு உண்டு. மத்திய அரசு புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியா்களின் தனிநபா் வருமானம் தற்போது ரூபாய் 1.72 லட்சமாக உயா்ந்திருக்கிறது.

இந்தியா்களின் தனிநபா் வருமானம் இருமடங்கு வளா்ச்சி கண்டுள்ளதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது. நிலைமை இவ்வாறிருக்க, பொருளாதார ஏற்றத்தாழ்வும், பணவீக்கமும் இன்னும் அழுத்திக் கொண்டிருக்கின்றன. இதை மத்திய - மாநில அரசுகள் உணர வேண்டும்.

புதிய வரிவிதிப்பு நடைமுறையில் ஏழு லட்சம் ரூபாய் வரை வரி கட்டத்தேவையில்லை என்பதும், தனிநபா் ஆண்டு வருமானம் ஐந்து லட்சம் ரூபாய் வரை இருந்தால் வரிகட்டத் தேவையில்லை என்பதும் வரவேற்கத்தக்கவை. ஒன்பது லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் கொண்ட தனிநபா் 45ஆயிரம் ரூபாய் வரி கட்டினால் போதும். இது அந்த தனிநபா் வருமானத்தில் 5 சதவீதமாகும். அவா் இதுவரை 60 ஆயிரம் ரூபாய் வரி செலுத்தி வந்திருப்பாா்.

ஒரு நாட்டினுடைய தனிநபா் வருமானம், அந்நாட்டை, மற்றொரு நாட்டுடன் ஒப்பிட்டுப் பாா்ப்பதற்குப் பயன்படும். வறுமைக்கோட்டிற்கும் கீழ் உள்ளவா்களுடைய வாழ்க்கைத் தரத்தை, இத்தனிநபா் வருமானத்தோடு ஒப்பிட்டுப் பாா்த்து, எவ்விதமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒரு மாநிலத்தில் வசிக்கும் ஒரு தனிநபருக்கு ஓா்ஆண்டில் பல்வேறு வகையில் கிடைக்கும் மொத்த வருமானமே, அந்த மாநிலத்தின் தனிநபா் வருமானம் ஆகும். மாத ஊதியமாகவோ, வட்டியாகவோ, தொழில் முதலீட்டிலிருந்தோ, தினக்கூலி அல்லது வாரக்கூலி வழியிலோ கிடைப்பதே தனிநபா் வருமானம்.

இத்தனிநபா் வருமானம் தேசிய வருமானத்திற்கு நிகராக இருக்காது. தனிநபா் வருமான உயா்வு என்பது ஒரு கணக்கீட்டளவில் பொருத்தமாக இருக்குமே தவிர, அவை வாழ்க்கை அளவில் ஒருபோதும் பொருந்திப் போகாது.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

 



Read in source website

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஜனவரி 2021 முதல் மே 2023க்கு இடைப்பட்ட காலத்தில் 1,958 பதின்பருவப் பிரசவங்கள் நிகழ்ந்ததாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்தப் புள்ளிவிவரத்தை அரசிடமிருந்து பெற்றிருக்கிறார் சமூகச் செயல்பாட்டாளர் வெரோனிகா மேரி. இத்துடன் வட்ட, மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் நிகழ்ந்த பிரசவங்களும் கணக்கில்கொள்ளப்பட்டால் பதின்பருவப் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

பதின்பருவக் கர்ப்பம், குழந்தைப்பேறு போன்றவற்றுக்குக் குழந்தைத் திருமணமும், விடலைக் காதலும் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. இந்தப் புள்ளிவிவரங்கள் தற்போதும் நடைமுறையில் இருக்கும் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கையையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகின்றன.



Read in source website

1959 ஜனவரி 2 அன்று ஏவப்பட்ட சோவியத் விண்கலம் லூனா 1, நிலவின் அருகே சென்ற முதல் விண்கலம். அப்போது முதல் தொடங்கிய மனிதனின் நிலவுப் பயணம், 1959 செப்டம்பர் 14 அன்று நிலவில் மோதிய லூனா 2 விண்கலத்தின் வழியாக அடுத்த கட்டத்தை அடைந்தது. 1966 பிப்ரவரி 3 அன்று மென்மையாக நிலவில் தரையிறங்கிய லூனா 9, நிலவில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற பெயரைப் பெற்றது. ஜூலை 1969இல் அமெரிக்காவின் அப்போலோ 11 விண்கலம் முதன்முதலில் நிலவுக்கு மனிதர்களை ஏந்திச் சென்றது.

1970 செப்டம்பரில் ஏவப்பட்ட சோவியத் லூனா 17விண்கலம் நிலவில் தரையிறங்கி, அங்கிருந்து கல், மண் மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குத் திரும்பியமுதல் தானியங்கி விண்கலம். இப்படிப் பற்பல விண்கலங்களை சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் 1960-70களில் போட்டி போட்டுக்கொண்டு நிலவை நோக்கி ஏவின. கடைசியில், 98ஆவது விண்கலமாக 1976இல் சோவியத் ஒன்றியம் ஏவிய லூனா 24, நிலவில் தரையிறங்கிக் கல், மண் மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குத் திரும்பியது.

மீண்டும் நிலவு: அதன் பிறகு நிசப்தம். யாரும் பல பத்தாண்டுகள் நிலவை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. திடீரென மறுபடி நிலவுக்கு அடித்தது யோகம். 1976க்குப் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் நிலவில் மறுபடி விண்கலத்தைத் தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் சந்திரனில் தரையிறங்க நடந்த ஏழு முயற்சிகளில் ரஷ்யாவின் லூனா 25, இஸ்ரேலின் பெரேஷீட், ஜப்பானின் ஹகுடோ-ஆர், இந்தியாவின் சந்திரயான் 2 ஆகிய நான்கும் தோல்வியடைந்தன.

சீனாவின் சாங்’இ 4, சாங்’இ 5 ஆகிய இரண்டு விண்கலங்கள், இந்தியாவின் சந்திரயான் 3 ஆகிய மூன்று மட்டுமே வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளன. ஆகஸ்ட் மாத இறுதியில் ஜப்பானின் ஸ்லிம் எனும் விண்கலம் நிலவில் தரையிறங்க முயலும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாதகமற்ற வானிலை காரணமாக அந்த முயற்சி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (செப்டம்பர் 7) அதிகாலை அது விண்ணில் ஏவப்பட்டது.

மோகத்தின் பின்னணி: நிலவு குறித்த பல கேள்வி களுக்கு விடையில்லை. நிலவின் வயது என்ன? நிலவில் நடுக்கங்கள் எப்படி ஏற்படுகின்றன? இந்தக் கோள் எதிலிருந்து பிறந்தது? ஏன் ஆண்டுதோறும் சுமார் மூன்று செ.மீ. பூமியைவிட்டு நிலவு விலகிச் செல்கிறது? இப்படிப் பல மர்மங்கள் உள்ளன. இவற்றை அறிந்துகொள்ளும் அறிவியல் ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும், நிலவில் அபரிமிதமாகக் கிடைக்கும் அரிய மண் தாதுக்கள் மீதான மோகமும் தற்போது நடைபெற்றுவரும் முயற்சிகளுக்கு முக்கியக் காரணம்.

நாம் பயன்படுத்தும் கைபேசியின் தொடுதிரையில் இண்டியம் எனும் அரிய தனிமம் (rare earth element) உள்ளது. லாந்தனம், காடோலினியம், பிரசியோடைமியம், யூரோபியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம் முதலிய அரிய தனிமங்கள் காட்சித் திரையில் உள்ளன.

நாம் பயன்படுத்தும் மின்னணுக் கருவிகளில் நிக்கல், கேலியம், டான்டலம், மின்கலத்தில் லித்தியம், நிக்கல், கோபால்ட், கைபேசியின் உறைப் பெட்டியில் நிக்கல், மெக்னீசியம், ஒலிவாங்கி - ஒலிபெருக்கிக் கருவிகளில் நிக்கல், பிரசோடைமியம், நியோடைமியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம் ஆகிய அரிய தனிமங்கள் உள்ளன.

நான்காம் தொழிற்புரட்சியின் அடிப்படை: இந்தத் தனிமங்கள் பூமியில் கிடைப்பது அரிது. ஆனால், வண்டிக்கு அச்சாணிபோல மின்னணுக் கருவிகளுக்கு இவை இன்றியமையாதவை. நவீன நான்காம் தொழிற்புரட்சிக் கருவிகளான முப்பரிமாண அச்சிடும் இயந்திரம், காற்றாலைகள் போன்றவற்றை உற்பத்திசெய்ய அரிய தனிமங்கள் அவசியம்.

உணவில் உப்பு போடுவதுபோலச் சிறிதளவுதான் இந்த அரிய தனிமங்கள் தேவை. என்றாலும், உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பதுபோல, இந்தத் தாதுக்கள் இல்லை என்றால் மிகக் குறைந்த மின் அழுத்தத்தில் கையடக்க அளவில் திறம்பட வேலை செய்யும் நவீன மின்னணுக் கருவிகள் இல்லை.

ஒருகாலத்தில் நிலக்கரியும் பெட்ரோலியமும் எஃகும் இல்லாமல் தொழில் வளர்ச்சி சாத்தியமில்லை என்ற நிலை இருந்தது. அதேபோல அரிய தனிமங்களே நான்காம் தொழிற்புரட்சியின் அடிப்படை.

சூரியனில் நடக்கும் அணுக்கருப் பிணைவு வழியே ஆற்றலைத் தயாரிக்க இந்தியா, சீனா உள்பட 20 நாடுகள் கூட்டாக பிரான்ஸ் நாட்டின் கடராஷ் நகரத்தில் கட்டப்பட்டுவரும் ஈடெர் எனும் பன்னாட்டு வெப்ப அணுக்கருப் பிணைவு ஆய்வுலையை (International Thermonuclear Experimental Reactor [ITER]) நிறுவி வருகிறார்கள். ‘செயற்கைச் சூரியன்’ எனக் கூறப்படும் இந்த உலையில், இலகுத் தனிமங்களைப் பிணைத்துக் கன தனிமத்தை உருவாக்கி, ஆற்றலைப் பெறுவதுதான் நோக்கம்.

ஹீலியம் 3 எனும் ஹெலிய ஐசோடோப்பு பயன்படுத்தினால் இந்த உலையை இயக்க முடியும். பூமியில் பத்து லட்சம் ஹெலிய அணுக்களில் சுமார் 300 அணுக்கள் மட்டுமே ஹீலியம் 3 ஐசோடோப்பு ஆகும். ஆனால், ரிகோலித் எனப்படும் நிலவின் மேல் மண்ணின் ஒரு கிராமில் 30 மைக்ரோ கிராம் ஹீலியம் 3 உள்ளது. வெறும் ஒரு டன் ஹீலியம் 3 கொண்டு ஈடெர் அணுவுலை அணுக்கருப் பிணைவு மூலம் ஒரு ஆண்டுக்கு இந்தியாவின் ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்துவிடலாம்.

நிலவின் மண்ணில் சுமார் 8% டைட்டானியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் செறிவாக உள்ள மணல் பகுதியில் அரிய தனிமங்கள் இருக்கும். எதிர்காலத்தில் நிலவில் நிரந்தரக் குடியிருப்பை அமைத்து அரிய தனிமங்களையும் ஹீலியம் 3 போன்ற விலைகூடிய கனிமங்களையும் வெட்டியெடுத்து வந்துவிடலாம் எனக் கருதப்படுகிறது.

அமெரிக்காவும் ஆர்டிமிஸ் எனும் திட்டத்தின் பகுதியாக மறுபடி மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுவருகிறது. சீனாவும் சில ஆண்டுகளில் நிலவில் தளம் அமைப்போம் எனக் கூறிவருகிறது. பல்வேறு நாடுகளும் நிலவை நோக்கிய பயண முனைப்பைக் காட்டுவது இதன் தொடர்ச்சியாகத்தான்.

நிலவு அரசியல்: வணிகம் என்று வந்தாலே அரசியலைத் தவிர்த்துவிட முடியுமா என்ன? இதுவரை நிலவு மனிதகுலத்தின் பொதுச் சொத்து; யாருக்கும் சொந்தம் இல்லை என்கிற சர்வதேசச் சட்டம்தான் நிலவிவருகிறது. ஆனால், இந்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்; தனியார் நிறுவனங்கள் எடுக்கும் கனிமவளங்கள் மீது உரிமை கொண்டாட வழிவகுக்க வேண்டும் என்ற குரல்கள் எழத் தொடங்கிவிட்டன.

ஏழை சொல் அம்பலம் ஏறுமா? நிலவில் கால் பதிக்காத நாடுகளின் கூக்குரலை யார் செவிமடுக்கப் போகிறார்கள்? நிலவில் உள்ள கனிம வளங்கள் யாருக்குச் சொந்தம் என்கிற பங்கு பிரிப்பில் நமக்கும் பங்கு வேண்டும் என்றால் நாமும் நிலவைச் சென்றடைந்திருக்க வேண்டும். நிலவில் உள்ள விலை மதிப்பில்லாத கனிமவளம் தரும் ஈர்ப்பே நிலவு நோக்கிய இந்த திடீர் மோகத்துக்கு அடிப்படைக் காரணம்.

- தொடர்புக்கு: tvv123@gmail.com



Read in source website

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் (பி.ஆர்.டி.) அரசு மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் பிரிவு மருத்துவராகவும், குழந்தைகள் மருத்துவத் துறையின் விரிவுரையாளராகவும் பணிபுரிந்துவந்தார் மருத்துவர் கஃபீல் கான். அந்த மருத்துவமனையில், ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் 2017 ஆகஸ்ட் மாதம் பல குழந்தைகள் உயிரிழந்தன. ஆக்சிஜன் சிலிண்டரை வழங்கும் தனியார் நிறுவனத்துக்குப் பணம் செலுத்தாததால் பற்றாக்குறை ஏற்பட்டது என்று குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால், உத்தரப் பிரதேச அரசு ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை என்பதை மறுத்தது. அத்துடன் கஃபீல் கானின் கவனக்குறைவுதான் இந்த விபத்துக்குக் காரணம் என்று அவர் மீது குற்றம்சாட்டி, பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அவர் அரசுப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். 2019இல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான கூட்டத்தில் கஃபீல் கான் பேசியிருந்தார். இந்த விவகாரங்கள் சார்ந்து, இரண்டு முறை அவரை உத்தரப் பிரதேச காவல் துறை கைதுசெய்தது.



Read in source website

ஆகஸ்ட் மாதத்தில் பெரிய மழைப்பற்றாக்குறைக்குப் பிறகு, இந்தியாவின் நீர்த்தேக்கங்களின் அளவு எவ்வாறு கணிசமாகக் குறைந்து வருகிறது?

ஆகஸ்ட் மாதத்தில் 35 சதவீதத்திற்கும் அதிகமான மழைப்பொழிவின் பற்றாக்குறை, நாட்டின் நீர்த்தேக்கங்களில் நீர் சேமிப்பில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 150 பெரிய மற்றும் முக்கியமான நீர்த்தேக்கங்களில் உள்ள நீர்த்தேக்கத்தின் அளவு ஆகஸ்ட் மாதத்தில் இயல்பான அளவை விட குறைந்துள்ளது, இது நடப்பு தென்மேற்கு பருவமழை காலத்தின் தொடக்கத்திற்குப் பிறகு இதுவே முதல் முறை.

மத்திய நீர் ஆணையத்தின் (CWC) சமீபத்திய தரவு, நாடு முழுவதும் உள்ள இந்த 150 நீர்த்தேக்கங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நிலவரப்படி சுமார் 113 பில்லியன் கன மீட்டர் (BCM) நீர் இருந்தது, இது இயல்பை விட சுமார் 10% குறைவாக இருந்தது, அல்லது கடந்த 10 சராசரி ஆண்டுகளில் ஆண்டின் இந்த நேரத்தில் இருக்க வேண்டிய சேமிப்பை விட குறைவாக இருந்தது.

ஆச்சரியப்படத்தக்க வகையில், மிகப்பெரிய பற்றாக்குறை, தென் மாநிலங்களின் நீர்த்தேக்கங்களில் உள்ளது, அங்கு ஆகஸ்ட் மாதத்தில் மழை பற்றாக்குறை நாட்டிலேயே மிகப்பெரியது. இந்த பிராந்தியத்தில் உள்ள 42 பெரிய நீர்த்தேக்கங்கள் ஆகஸ்ட் 31 அன்று சுமார் 53 பில்லியன் கன மீட்டர் தண்ணீரைத் தேக்கி வைத்துள்ளன, இது அவற்றின் மொத்த கொள்ளளவில் 49% ஆகும்.

சாதாரண போக்கில், இந்த நீர்த்தேக்கங்கள் ஆண்டின் இந்த நேரத்தில் அவற்றின் மொத்த கொள்ளளவில் 67% நிரம்பியிருக்கும்.

இந்தியாவின் வருடாந்திர மழையின் பெரும்பகுதி கிட்டத்தட்ட 75%, நான்கு மாத தென்மேற்கு பருவமழை காலத்தில் வருவதால், இந்த நீர்த்தேக்கங்கள் ஆண்டு முழுவதும் நீர் வழங்குவதற்கான முக்கிய ஆதாரமாக உள்ளன, இது வீடுகள் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்கு மட்டுமல்ல மின் திறன் உற்பத்திக்கும் உதவுகிறது.

இந்த நீர்த்தேக்கங்கள் அவற்றின் சேமிப்பு அளவுகள் அதிகரித்து வருவதைக் காணும் மாதம் பொதுவாக ஆகஸ்ட் ஆகும். ஆகஸ்ட் ஆண்டின் இரண்டாவது மழை பெய்யும் மாதமாகும், இது ஆண்டு மழையில் கிட்டத்தட்ட 22% ஆகும். அதிக மழை பெய்யும் மாதமான ஜூலை, 24% பங்களிக்கிறது.

ஆனால் 2023 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 120 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்ட ஆகஸ்ட் ஆகும், அதற்கான பதிவுகள் கிடைக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் மொத்தமாக 162 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது, கிட்டத்தட்ட 255 மிமீ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 36% பற்றாக்குறை.

ஆகஸ்ட் மாதத்தில் மத்திய இந்தியாவில் 47% மழைப் பற்றாக்குறை இருந்தது, தென்னிந்தியாவில் 60% பற்றாக்குறை இருந்தது. கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மட்டுமே சாதாரண மழை பெய்துள்ளது. ஆகஸ்டில் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறையும் போக்கைக் காட்டாத ஒரே பிராந்தியமும் இதுதான் என்பதில் ஆச்சரியமில்லை.

வறண்ட ஆகஸ்ட், முக்கியமாக நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்கான மின் தேவையில் எதிர்பாராத அதிகரிப்பை ஏற்படுத்தியது. ஆகஸ்ட் மாதத்தில் மின் உற்பத்தி சாதனை உச்சத்தைத் தொட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நீர்த்தேக்கங்களில் நீர் நிலைகள் ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்ததால், இந்த கூடுதல் தேவையை நீர்மின் மூலம் பூர்த்தி செய்திருக்க முடியாது, எனவே, நிலக்கரி மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் கூடுதல் உற்பத்தி பூர்த்தி செய்யப்பட்டது.

இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் நிலக்கரியின் பங்கு ஆகஸ்ட் மாதத்தில் 66.7% ஆக அதிகரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறியுள்ளது, இது ஆறு ஆண்டுகளில் இல்லாத மாத அளவாகும். கூடுதல் நிலக்கரியை எரிப்பது சர்வதேச காலநிலை மாற்ற விவாதங்களின் கண்ணோட்டத்தில் மோசமான நிலையாகும், இருப்பினும் எதிர்காலத்தில் அதன் மின்சார தேவைக்கு நிலக்கரியை தொடர்ந்து நம்பியிருக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

செப்டம்பர் மாதத்தின் முதல் பாதியில், குறிப்பாக தென் பிராந்தியத்தில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது நீர்த்தேக்கங்களின் நிலைமையை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும். தென்னிந்தியாவின் பல பகுதிகளில் ஏற்கனவே மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் நல்ல மழை பெய்துள்ளது.

செப்டம்பரில் மழைப்பொழிவு 10% க்கும் அதிகமாக இருக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது, ஆனால் பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் எல் நினோ, இன்னும் வலிமை பெற்று வருகிறது, இது ஒரு பெரிய அச்சுறுத்தலாக தொடர்கிறது.



Read in source website