DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 31-10-2023

பிடிஎஸ் படிப்புக்கு சிறப்பு கலந்தாய்வில் இடங்கள் பெற்றவா்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர செவ்வாய்க்கிழமை (அக்.31) மாலை 3 மணி வரை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் தோ்வுக் குழு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவா் சோ்க்கை நடவடிக்கைகள் கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்தன.

தேசிய மருத்துவ ஆணைய அறிவுறுத்தலின்படி, 4 சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டது.

அதில், அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களில் ஏறத்தாழ முழுமையாக நிரம்பினாலும், இடங்கள் ஒதுக்கீடு பெற்றவா்கள் கல்லூரிகளில் சேராததால் ஏற்படும் சில காலி இடங்களை நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதன்படி தமிழகத்தில் 2 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள் உள்பட மொத்தம் 206 பிடிஎஸ் இடங்கள் காலியாக இருந்தன. இதனிடையே, மாணவா் சோ்க்கை அவகாசம் நீட்டிக்கப்பட்டதைத் தொடா்ந்து தமிழகத்தில் பிடிஎஸ் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு அண்மையில் நடத்தப்பட்டது.

அதில் இடங்களைப் பெற்றவா்கள் கல்லூரிகளில் சேருவதற்கான அவகாசம் முடிந்த நிலையில், தற்போது அது செவ்வாய்க்கிழமை (அக்.31) மாலை 3 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



Read in source website

தமிழக அரசின் அகரமுதலி இயக்ககம் சாா்பில் மாநில அளவில் நடத்தப்பட்ட அகராதியியல் போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சாா்பில் அகராதியியல் நாள் (நவ.8) விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான கலைச்சொல்லாக்கம், ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் சென்னையில் உள்ள அகரமுதலி இயக்கக அலுவலகத்தில் இயக்குநா் கோ.விசயராகவன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் அனைத்து மாவட்டங்களைச் சோ்ந்த அரசு, தனியாா் பள்ளி மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்று ‘சொல்-பொருள்-படம்’ தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் தங்களது திறமையை வெளிப்படுத்தினா். தொடா்ந்து கலைச்சொல்லாக்க போட்டியில் புதிய சொற்களை உருவாக்கினா். இதையடுத்து இரு போட்டிகளிலும் மாநில அளவில் முதல் இரு இடங்களைப் பெற்ற மாணவா்களின் விவரங்களை நடுவா் குழுவினா் வெளியிட்டனா்.

அதன் விவரம்:- கலைச்சொல்லாக்கப் போட்டி: முதல்பரிசு- கா.முகிலரசன், திருமுருக கிருபானந்த வாரியாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அம்மையாா் குப்பம், திருவள்ளூா் மாவட்டம்; இரண்டாம் பரிசு - மா. கலைச்செல்வி - புனித சின்னப்பா் மகளிா் மேல்நிலைப்பள்ளி, மயிலாடுதுறை.

ஓவியப் போட்டி: முதல்பரிசு - வெ. புஷ்பலதா, அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, போரூா், சென்னை; இரண்டாம்பரிசு - தி. சந்தோஷ் ராஜ் - தியாகராசா் நன்முறை மேல்நிலைப்பள்ளி, மதுரை.

பரிசுத் தொகை: இரு போட்டிகளிலும் முதல் இரு இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு சென்னையில் விரைவில் நடைபெறவுள்ள விழாவில் முறையே ரூ.10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. மாநில அளவிலான போட்டியில் பங்கேற்ற மாணவா்கள், அவா்களது பெற்றோா்கள், ஆசிரியா்களுக்கு அகராதியியல் நூல்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் அகரமுதலித் திட்ட இயக்கக தொகுப்பாளா்கள் பூங்குன்றன், ஜெ.சாந்தி, வே.பிரபு, பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த தமிழாசிரியா்கள், ஓவிய ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.



Read in source website

தமிழக பொறியியல் துறை மாணவா்களுக்காக ரூ.100 கோடி நிதியில் ‘தி டிவிஎஸ் சீமா ஸ்காலா்ஷிப்’ எனும் பெயரில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் நிறுவனா் டி.எஸ்.ஸ்ரீனிவாசன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘தி டிவிஎஸ் சீமா ஸ்காலா்ஷிப்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஒவ்வோா் ஆண்டும் பொறியியல் துறையில் தொழில்முறை பட்டப்படிப்புகள் படிக்கும் சுமாா் 500 மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். குறிப்பாக, பொறியியல் துறையில் ரோபோட்டிக்ஸ் மற்றும் இயந்திரவியல் பயிலும் மாணவா்களுக்கு அவா்களின் பாடத் திட்டம் நிறைவடையும் காலம் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

‘சீமா’ என்று அழைக்கப்பட்ட டி.எஸ். ஸ்ரீனிவாசன், பட்டப்படிப்பு, கல்வி எதுவுமின்றி தாமாகவே இயந்திரப் பொறியாளராக வெற்றி கண்டவா். எனவே, இந்த உதவித்தொகை திட்டம் அவருக்கு மிகப்பொருத்தமான அஞ்சலியாக இருப்பதுடன், தகுதியான மாணவா்களின் திறமைகளை வளா்த்தெடுத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட தரம் வாய்ந்த பொறியியல் கல்வி நிறுவனங்களுடன் மிக நெருக்கமாக டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் இணைந்து செயல்பட உள்ளது. இதன் மூலம் இந்த உதவித்தொகை அங்கு படிக்கும் திறமை வாய்ந்த மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.

இந்த நிதி, தமிழ்நாட்டைச் சோ்ந்த மாணவா்களுக்காக மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. தோ்வுக் குழு விதிமுறைகளின்படி நடைபெறும் தோ்வில் தோ்ச்சிபெறும் மாணவா்கள் மட்டுமே உதவித் தொகை பெறத் தகுதியானவராக தோ்ந்தெடுக்கப்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

இந்தியாவைச் சோ்ந்தவா்கள் தாய்லாந்துக்கு ‘விசா’ (நுழைவு இசைவு) இல்லாமல் 2023 நவம்பா் 10 முதல் 2024 மே 10-ஆம் தேதி வரை பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் முக்கிய சுற்றுலா நாடாக திகழும் தாய்லாந்துக்கு அதிக எண்ணிக்கையில் இந்தியா்கள் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வருகின்றனா். நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் இந்தியா்களுக்கு இந்தச் சிறப்பு சலுகையை தாய்லாந்து அளித்துள்ளது.

இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் தாய்லாந்து செல்லும் இந்தியா்கள் 30 நாள்கள் வரை அங்கு தங்கியிருக்கலாம் என்று தில்லியில் உள்ள தாய்லாந்து சுற்றுலா ஆணையத்தின் இயக்குநா் தெரிவித்துள்ளாா்.



Read in source website



ஒடிசா ஆளுநராக ரகுவர் தாஸ் இன்னும் சற்று நேரத்தில் பதவியேற்க உள்ள நிலையில், இன்று காலை லிங்கராஜ் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார்.

ஜார்கண்டில் இருந்து அவரது ஆதரவாளர்களும், குடும்ப உறுப்பினர்களும் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளனர், அங்கு அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ளது.

ஒடிசாவின் புதிய ஆளுநராக தாஸ் அக்டோபர் 18 அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டார்.

ஒடிசா ஆளுநராக இருந்த கணேஷி லாலுக்குப் பதிலாக தாஸ் நியமிக்கப்படுகின்றார்.

கடந்த 2014 முதல் 2019 வரை ஜார்க்கண்டின் முதல் பழங்குடியினர் அல்லாத முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

வான்கடே மைதானத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சிலை நாளை (நவம்பர் 1) திறக்கப்படவுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சச்சின் டெண்டுல்கர் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது 50 ஆண்டுகால வாழ்க்கைக்கு அர்ப்பணிக்கும் விதமாக மும்பை வான்கடே மைதானத்தில் அவரது முழு உருவச்சிலை நாளை (நவம்பர் 1) திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் இந்த முழு உருவச்சிலை சச்சின் டெண்டுல்கர் ஸ்டாண்ட் அருகில் அமைக்கப்படவுள்ளது. சிலையை நிறுவுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாளை நடைபெறும் இந்த சிலை திறப்பு விழாவில் மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொள்கிறார். 

இந்திய அணிக்காக சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 



Read in source website

 

உலகக் கோப்பை தொடர்களில் அதிகமுறை தோல்வியடைந்த அணி என்ற சாதனையை இலங்கை படைத்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில், புணேவில் நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் இலங்கையும், ஆப்கானிஸ்தான் அணியும் திங்கள்கிழமை மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


இந்த தொடரில் விளையாடி 6 போட்டிகளில் 4 தோல்விகளை சந்தித்துள்ள இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 43 முறை தோல்வியை சந்தித்துள்ள இலங்கை அணி, ஜிம்பாப்வே அணியின்(42 தோல்விகள்) சாதனையை முறியடித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணி 37 தோல்விகளுடன் உள்ளது.



Read in source website

தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனீஷ் பன்வாலா வெண்கலப் பதக்கம் வென்றதுடன், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றாா்.

25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் ஆடவா் தனிநபா் பிரிவில் அவா் 28 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தாா். முன்னதாக, தகுதிச்சுற்றில் அவா் 588 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தபோதே, அவருக்கான ஒலிம்பிக் இடம் உறுதியானது.

இத்துடன் துப்பாக்கி சுடுதலில் மட்டும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு 12 இந்தியா்கள் தகுதிபெற்றுள்ளனா். அனீஷுடன் இதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்தியரான பவேஷ் ஷெகாவத் 584 புள்ளிகளுடன் 8-ஆம் இடம் பிடித்தாா். விஜய்வீா் சித்து 581 புள்ளிகளுடன் 10-ஆம் இடமும், ஆதா்ஷ் சிங் 570 புள்ளிகளுடன் 25-ஆவது இடமும் பிடித்தனா்.

டிராப் ஆடவா் அணிகள் பிரிவில் ஜராவா்சிங் சந்து, கினான் செனாய், பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோா் கூட்டணி 341 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பக்கம் வென்றது. அதிலேயே தனிநபா் பிரிவில் ஜராவா்சிங் 6-ஆம் இடம் பிடித்தாா்.

அதிலேயே மகளிா் பிரிவில் ராஜேஷ்வரி குமாரி, ஷாகன் சௌதரி, பிரீத்தி ரஜக் ஆகியோா் முறையே 7, 8, 10-ஆவது இடங்களைப் பிடித்தனா். தற்போதைய நிலையில் இந்தப் போட்டியில் இந்தியா 8 தங்கம் உள்பட 30 பதக்கங்கள் வென்றுள்ளது.



Read in source website

ஆபரேசன் இரும்பு வாள்கள் (ஆபரேசன் ஸ்வார்ட்ஸ் ஆப் அயர்ன்) -  பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ஆரம்பித்திருக்கும் போர் நடவடிக்கையின் பெயர் இது.

காஸா பகுதி என்பது 45 கிலோ மீட்டர் நீளமும், 5 முதல் 12 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட ஒரு குறுகிய கடலோர நிலப்பரப்பு என்பது நமக்கு ஏற்கெனவே தெரிந்த சங்கதிதான்.  

2 லட்சம் பாலஸ்தீனர்கள் நெருக்கியடித்து வாழும் 363 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பகுதி இது. ஹாங்காங் நகரத்தைவிட மக்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதி காஸாதான்.

ஈழத்தில் தமிழர் பகுதிகளைச் சுருட்ட சிங்களத்தில் அந்த இடங்களுக்குத் தனியாக ஒரு பெயர் வைத்திருப்பார்கள் இல்லையா? அதேப்போலே காஸா பகுதி என்பது பாலஸ்தீனர்களுக்குத்தான் காஸா. இஸ்ரேல் நாட்டின் எபிரேய மொழியில் காஸாவுக்குப் பெயர் ரிசுவாத் அசா. 

காஸா பகுதியில் அதன் தலைநகரமாக இருக்கும் நகரத்தின் பெயரும் காஸாதான். இதுபோக காஸாவில் 8 அகதிகள் முகாம்களும் உள்ளன. ஒட்டுமொத்த காஸாவும்கூட ஒருவகையில் ஒரு பெரிய அகதிகள் முகாம்தான். 

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான இந்த சண்டை முதல் சண்டை அல்ல. ஏற்கெனவே மூன்று முறை மோதல் நடந்திருக்கிறது.

2008 ஆம் ஆண்டு, காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தனர். பதிலுக்கு, ஆபரேசன் கேஸ்ட்லீட் என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்தது. அல்-`ஃபுர்கான் சண்டை என பாலஸ்தீனர்களால் அழைக்கப்பட்ட இந்த சண்டை 3 வார காலம் நீடித்தது. 

2012-ல் அடுத்த மோதல். இந்தமுறை ‘பில்லர் ஆப் டிபன்ஸ்’ என்ற ராணுவ நடவடிக்கையை ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் கைக்கொண்டது. 8 நாள்கள் நடந்த இந்த சண்டையில் ஹமாஸ் ராக்கெட்களுக்கு எதிராக, ‘ஐயர்ன் டோம்‘ (இரும்பு குவிமாடம்) என்ற தடுப்புவித்தையை இஸ்ரேல் இந்த சண்டையில்தான் முதன்முறையாகக் கையாண்டது. 

ஹமாஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அகமத் ஜபாரி, இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் பலியானதுகூட இந்த சண்டையில்தான். 

2014-ல் ஹமாசுடன் மீண்டும் ஒரு சடுகுடு. இந்தமுறை ‘ஆபரேசன் ‘புரொடெக்டிவ் எட்ஜ்’ என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்தது. 1967 ஆம் ஆண்டு நடந்த ஆறுநாள் போருக்குப் பிறகு இஸ்ரேல் எடுத்த மிகப்பெரிய ராணுவ நடவடிக்கைகளில் ஒன்று இது. 

இந்த மூன்று மோதல்களிலும் மொத்தம் 4 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். சண்டையில் பலியான யூதர்களின் எண்ணிக்கை நூறுக்கும் குறைவு.

ஆனால், அக்டோபர் 7 ஆம் தேதியன்று ஆரம்பித்து 5 வாரங்களாகத் தொடரும் புதிய சண்டையில், இதுவரை 8,718 உயிரிழப்புகள். 3,320 குழந்தைகள் உள்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை காயம். இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும், இடையிலான சண்டையில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தி வரும் சண்டை இதுதான்.

அக்டோபர் 7 ஆம் தேதியன்று ஹமாஸ் தந்த அடி மிக  பலமான அடி. 75 ஆண்டு கால வரலாற்றில் இந்த மாதிரி அடியை இஸ்ரேல் இதுவரை சந்தித்ததே இல்லை என்பதுதான் உண்மை. (என்னா அடி!)

இந்த அக்டோபர் 7 தாக்குதலை அடுத்து 3 லட்சத்து 60 ஆயிரம் ராணுவத்தினருடன் காஸாவை முற்றுகையிட்டிருக்கிறது இஸ்ரேல் ராணுவம். ஆனால் கிட்டத்தட்ட 17 ஆண்டுகாலமாக இஸ்ரேலின் முற்றுகைக்குள்தான் இருக்கிறது காஸா. இருந்தும் ஹமாஸ் அமைப்பினரின் ஏவுகணைகளை, ஏவப்படுவதற்கு முன்னாலேயே இஸ்ரேல் ராணுவத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 

இஸ்ரேல் ராணுவத்திடம் இருப்பதுபோல மெர்கேவா டாங்கி, கிஃபிர் விமானம் எதுவும் ஹமாஸ் அமைப்பினரிடம் இல்லை. ஏழைக்கேற்ற எள்ளுருண்டை மாதிரி, ஹமாஸ் அமைப்பினர் நம்பியிருப்பது ஏவுகணைகளைத்தான். 

ஹமாஸ் அமைப்பின் ராக்கெட்களால் இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ், பென்குரியன் விமானநிலையம், ஹைபா துறைமுகம், ஜெருசலேம், அஸ்கெலான் உள்பட இஸ்ரேலின் எந்த ஒரு பகுதியையும் தாக்க முடியும். அதுபோல லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணைகளாலும் இஸ்ரேலின் எந்தப் பகுதியையும் தொட முடியும்.

இஸ்ரேலின் உயிர்நாடியாக இருப்பவை 9 மின்னுற்பத்தி நிலையங்கள், 9 விமானப்படை தளங்கள். இந்த விமானப்படை தளங்கள் தகர்க்கப்பட்டால் வானத்தில் தன் கட்டுப்பாட்டை இஸ்ரேல் இழந்துபோகும். இஸ்ரேலின் நாடி தளர்ந்து கதை கிட்டத்தட்ட முடிந்து போகும். இந்தநிலையில் ஹமாஸ், ஹிஸ்புல்லாவின் முதன்மை குறிகள், இஸ்ரேலின் விமானப்படைத் தளங்கள்தான். 

இஸ்ரேல் நாடு முன்புபோல இல்லை. அக்டோபர் 7-ல் ஹமாஸ் தாக்குதல் நடத்தும் என்பது இஸ்ரேலின் மொசாத் உளவுப்படைக்குத் தெரியவில்லை. 

காஸா பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கில் சீறி வந்த ஹமாஸ் ராக்கெட்களை தடுத்து ஆடி, முனைமுறிக்கும் முயற்சியில் இஸ்ரேலின் அயர்ன் டோம் ஏவுகணைத் தடுப்புத் திட்டம் முதன்முறை தோல்வி கண்டிருக்கிறது.

இஸ்ரேல் ராணுவமும் இப்போது பழைய பளபளப்பில் இல்லை. போர் தொடங்கி விட்டால் ஒரேநாளில் பல நூறுமைல் தொலைவுகளைக் கடக்கக்கூடிய திறமை இஸ்ரேல் ராணுவத்திடம் முன்பு இருந்தது. இப்போது இல்லை. 

2002 ஆம் ஆண்டுக்குப்பின், லெபனான் நாட்டுக்குள் 2 முதல் 4 கிலோ மீட்டர் முன்னேறுவதற்குள்ளேயே இஸ்ரேல் ராணுவம் மூச்சுத்திணறிப் போய்விடுகிறது. 

2006 வரைக்கும் இஸ்ரேல் ராணுவம் எதிரிகளை துடைத்து அழித்து எந்தப் போரையும் உடனே முடிவுக்குக் கொண்டுவந்து விடும். இப்போது அப்படி இல்லை. 2018க்குப் பிறகு முழு அளவிலான ஒரு பெரிய போருக்கு இஸ்ரேல் தயாராக இல்லை. 

கூண்டில் இருந்து புலியை வெளியே வரவிடாமல் தடுப்பதுபோல, காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் வெளியே வராமல் தடுக்கும் பொறுப்பில் இருந்த இஸ்ரேலிய ராணுவப்பிரிவு ஒன்று அக்டோபர் 7-ல் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. 

இஸ்ரேல் ராணுவம் பழைய மாதிரி இல்லை என்பதைத் தெரிந்துதான் ஹமாஸ் அமைப்பினரும் அதன்மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். சீண்டி விளையாடி இருக்கிறார்கள்.

போரில் பொதுவாக எதிரிக்கும் நமக்கும் இடைவெளி வேண்டும். அமெரிக்கா விமானந்தாங்கிக் கப்பலில் கடல்கடந்து போய் எதிரிநாடுகளுடன் சண்டையிடும். போர்க்களத்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கும்.

இஸ்ரேலின் கதை அப்படியில்லை. மடியில் உட்கார்ந்திருக்கும் எதிரியுடன் மல்லுக் கட்டுவது போன்ற கதை இஸ்ரேலின் கதை. மடியில் இருக்கும் கைக்கு எட்டும் தொலைவில் இருக்கும் எதிரியை ஈசியாக ஊமைக்குத்து குத்தலாமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் எதிரிக்கு நாமும் கைக்கெட்டும் தொலைவில்தான் இருப்போம். எதிரி நமது தாடையைத் தகர்க்கவும் சமவாய்ப்பு இருக்கிறது.

காஸாவைப் பொறுத்தவரை இஸ்ரேல் ராணுவம் இதுவரை அங்கே மட்டுப்படுத்தப்பட்ட போர் நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டிருக்கிறது. வீட்டின்மீது தாக்குதல் நடத்துவதற்குப் பதிலாக, வீட்டு முற்றத்தில் புல் வெட்டுவது போன்ற நடவடிக்கைகளையே இஸ்ரேல் இதுவரை கையாண்டிருக்கிறது.

ஆனால், இந்தமுறை 3 லட்சத்து 60 ஆயிரம் ராணுவத்தினருடன் காஸாவுக்குள் இறங்கி தரைப்படை தாக்குதலை நடத்த இஸ்ரேல் தயாராக உள்ளதாக சொல்கிறது. 

காஸா பகுதி கட்டடத் தொகுதிகள் அதிகம் கொண்ட பகுதி. அங்கே நிலத்துக்கு அடியில் காஸாவுக்கு இணையாக மற்றொரு காஸா இருப்பதாகக் கருதப்படுகிறது. அந்த அளவுக்கு தரைக்கு அடியில் குகைகளும், சுரங்கப் பாதைகளும் அங்கே அதிகம்.

வியட்நாம் போரின்போது அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக வியட்நாமிய போராளிகள் நிலத்தடி சுரங்க வழிகளைப் பயன்படுத்தினர். ஆனால், காஸாவில் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்க வழிகளுடன் ஒப்பிட்டால், வியட்நாமிய சுரங்க வழிகள் எல்லாம் சிறுபிள்ளை விளையாட்டுபோலத் தோன்றுமாம்.

இந்த பாதாள உலகத்துக்குள்தான் ஹமாஸ் படையின் மொத்த பலமும் பதுங்கியிருக்கிறது. இஸ்ரேல் ராணுவம் காஸாவுக்குள் கால்வைத்தால் அதை எதிர்கொள்ள ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவான எசெடினா-அல்-காசம் பிரிகேட் தயராக உள்ளது. டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகள், சூழ்ச்சிப் பொறிகள் என ஹமாஸ் பக்காவாக தயார்.

இஸ்ரேல் ராணுவத்தின் மெர்கேவா டாங்கி, கிஃபிர் விமானம் எல்லாம் நிலத்தடி சண்டைகளுக்குப் பயன்படாது. அதேப்போல கட்டடங்கள் நிறைந்த ஒரு நகர்ப்பகுதிக்குள் சண்டையிடுவது தனிக்கலை. அது எல்லா ராணுவத்துக்கும் கைவராது.

ஒரு திறந்தவெளியில் இரு நாட்டு ராணுவங்கள் மோதினால் வெற்றி யாருக்கு தோல்வி யாருக்கு என்பது தெரிந்துவிடும். எதிரி விட்டுச் சென்ற ஆயுதங்கள், சிதைந்த டாங்கிகள், சுட்டுவீழ்த்தப்பட்ட விமானங்கள் தோல்வி யாருக்கு என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடும்.

ஆனால், ஹமாஸ் போன்ற போராளி இயக்கங்களுடன் மோதும்போது இந்த கதை செல்லாது. வெற்றி யாருக்கு தோல்வி யாருக்கு என்பதை கணிப்பது கடினம். 

காஸா சண்டையைப் பொறுத்தவரை தெளிவான போர்த் திட்டங்கள் எதுவும் இஸ்ரேலிடம் இப்போதைக்கு இருப்பதாகத் தெரியவில்லை. 

காஸாவுக்குள் புகுந்து அதன் உள்கட்டமைப்பை உடைத்தெறிவது, முடிந்த அளவுக்கு ஹமாஸ் தீவிரவாதிகளைக் கொல்வது, கைது செய்வது, ஹமாஸ் ஏவுகணைத் தயாரிப்புக் கூடங்களை தகர்ப்பது, சுரங்கப் பாதைகளை நொறுக்குவது, பாலஸ்தீன மக்களை எகிப்து நாட்டின் எல்லையோரம் தள்ளுவது. இவைதான் ஒருவேளை இஸ்ரேல் வகுத்திருக்கும் திட்டமாக இருக்கக் கூடும்.  

காஸா ஒருவேளை இஸ்ரேலின் கைப்பிடிக்குள் வந்தால்கூட அதை என்ன செய்வது? அங்கேயே ராணுவத்தை நிறுத்துவதா, இல்லை வெற்றி என்று அறிவித்து விட்டு ஓடிவந்துவிடுவதா? போருக்குப்பிறகு காஸாவை எப்படி ஆள்வது? போருக்குப் பிந்தைய நிலை என்ன? இதைப்பற்றியெல்லாம் கூட இஸ்ரேலிடம் எந்த முடிவும் இருப்பதாகத் தெரியவில்லை. 

ஒரு போருக்குள் எப்போதும் நழைவது எளிது. அந்த போரை விட்டு விட்டு விலகி வருவது கடினம். போருக்குள் நுழையும் எந்த ஒரு ராணுவத்துக்கும் ஒரு சிக்கல் உண்டு. புலி வாலை பிடித்த நாயர் கதையாக, போரை விட்டுவிட முடியாமல் அதனுடன் சிக்கி, மல்லுக்கட்டும் சிக்கல் பல நாட்டு ராணுவங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. 

வியத்நாமில் அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானில் ரஷியாவும், ஈழத்தில் இந்திய ராணுவமும் இந்த சிக்கலில் சிக்கித் தவித்திருக்கின்றன.  

இஸ்ரேல் இப்போது பெரிய போர்களுக்குத் தயாராக இல்லை.  நீண்ட காலம் போர் நடத்தும் நிலையிலும் அது இல்லை. இந்தநிலையில் இஸ்ரேலுடன் நீண்டகாலம் போர் நடத்துவதையே ஹமாஸ் அமைப்பு விரும்புகிறது.

போர் நீள வேண்டும், இஸ்ரேல் அரசிடமும், மக்களிடமும் குழப்பம் ஏற்பட வேண்டும் என ஹமாஸ் நினைக்கிறது. போர் விரிவடைந்து, தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் போன்ற நாடுகள் களத்தில் இறங்கினாலும் ஹமாசுக்கு அது வெற்றிதான். 

தற்போதுள்ள சூழலில், காஸா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா விரும்பவில்லை. இதனால் பெட்ரோலிய சந்தை பாதிக்கப்படும் என அமெரிக்கா கருதுகிறது. 

ரஷியாவைப் பொறுத்தவரை உக்ரைன் போரில் இருந்து உலகத்தின் கவனத்தைத் திருப்ப காஸா உதவும் என்பதால் ரஷியா இந்தப் போரை விரும்புகிறது.

சீனாவுக்கு மத்திய கிழக்கின் பெட்ரோலிய எண்ணெய் தங்கு தடையின்றி தனக்கு வர வேண்டும் என்பதுதான் கவலை. அதற்கு காஸா போர் உதவும் என்று சீனா கருதுகிறது. பாலஸ்தீனர்களை ஆதரிக்கிறது. 

ஹமாஸ், இஸ்ரேல் இடையிலான போர் இனி எந்தவித சூழலைக் கொண்டுவருமோ தெரியவில்லை.
 



Read in source website

 

சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளன.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான சீனாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கும்  வகையில் சீன நிறுவங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

சீனாவின் சமூக ஊடகங்களில் யூத எதிர்ப்பு வலுவாக பேசப்பட்டு வருகிறது.  ஜெர்மனி, யூதர்களுக்கு என்ன செய்ததோ அதையே இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு செய்து வருகிறது என சீனாவின் பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பைடுவின் சீன மொழியில் உள்ள இணைய வரைபடத்தில் சர்வதேச நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளின்படி இஸ்ரேலின் எல்லைகள் குறிக்கப்பட்டிருந்தாலும் அந்தப் பகுதியில் இஸ்ரேல் என்கிற பெயர் குறிப்பிடப்படவில்லை. 

லக்ஸம்பெர்க் உள்ளிட்ட சிறிய பகுதிகளுக்கே தெளிவான பெயர் குறிப்பு இருக்கும்போது இஸ்ரேல் பெயர் இல்லை என்பது இஸ்ரேல்-பாலஸ்தீன போரின் விளைவாகத் தான் என்பதை அறிய முடிகிறது.

இது குறித்து அலிபாபா மற்றும் பைடு நிறுவனங்கள் இதுவரை எந்த பதிலும் வெளியிடவில்லை. 



Read in source website

இந்திய பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷனின் (ஐஓசி) துணை நிறுவனமான லங்கா ஐஓசி-க்கு (எல்ஐஓசி) பெட்ரோலிய பொருள்களுக்கான உரிமத்தை இலங்கை அரசு அடுத்த 20 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.

இந்த உரிமம் புதுப்பித்தலுக்கான கடிதத்தை எல்ஐஓசியின் மேலாண் இயக்குநா் தீபக் தாஸிடம் அதிபா் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் அளித்ததாக நிறுவனத்தின் முதன்மை நிதி அலுவலா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், நாப்தா, கனிம பெட்ரோலியம், ப்ரீமியம் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருள்களின் ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனைக்கான உரிமம் எல்ஐஓசி-க்கு கடந்த 2003-இல் வழங்கப்பட்டது. இந்த உரிமம் அடுத்த ஆண்டு ஜனவரியில் காலாவதியாகவுள்ள நிலையில், உரிமம் புதுப்பிக்கப்பட்டு 2044-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி வரை அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வாகன எரிபொருள் சந்தையில் 20 சதவீதம் பங்கு வகிக்கும் இந்த நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளன. கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது, அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக பெட்ரோலிய பொருள்களை இலங்கை இறக்குமதி செய்ய முடியாத நிலையில், எரிசக்தி துறையில் எல்ஐஓசியின் செயல்பாடுகள் முக்கியப் பங்காற்றின.

எல்ஐஓசி நிறுவனத்துக்கான உரிமத்தை நீட்டிக்கும் இலங்கை அரசின் முடிவுக்கு முக்கிய எதிா்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் எரிசக்தித் துறையில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடா்ந்து சீன நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் எரிபொருள் சில்லறை வா்த்தகத்தைத் தொடங்கியது. அமெரிக்கா, ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த நிறுவனங்களும் விரைவில் தங்களது செயல்பாடுகளைத் தொடங்க உள்ளன.



Read in source website

 

மும்பை: மந்தமான பங்குச் சந்தை வர்த்தகம் மற்றும் தொடர்ந்து அன்னிய நிதி வெளியேற்றம் ஆகியவையால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.83.26 ஆக சரிந்தது வர்த்தகமானது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.26 ஆகத் தொடங்கி இறுதியாக அதே மட்டத்தில் நிலைபெற்றது.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் ரூபாயின் மதிப்பு 83.5ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.83.27ஆகவும் இருந்தது. நேற்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா சரிந்து ரூ.83.26ஆக வர்த்தகமானது. 

சர்வதேச கச்சா எண்ணெய் குறியீடான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 0.90 சதவிகிதம் உயர்ந்து 88.24 டாலராக உள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 237.72 புள்ளிகள் சரிந்து 63,874.93 புள்ளிகளாக உள்ள நிலையில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் 61.30 புள்ளிகள் சரிந்து 19,079.60 புள்ளிகளாக உள்ளது.



Read in source website

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது பயன்பாட்டுக்கான மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணம் நாளை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்காக புதிய தாழ்வழுத்த வீதப்பட்டி ID-யை மின் கட்டண ஆணை எண் 7-ஐ நாள் கடந்த 2022 செப்டம்பர் மாதம் உருவாக்கியது. தமிழக முதல்வர் கடந்த 18ம் அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் "பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.

இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தெரிவித்த கருத்துகளை பரிசீலித்து, பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும், உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய் 15 பைசாவிலிருந்து ஐந்து ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும்" என்று அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து தமிழக அரசின் கொள்கை வழிக்காட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு புதிய தாழ்வழுத்த மின்கட்டண வகை IE-ஐ அறிமுகப்படுத்தியும் இக்குடியிருப்புகளுக்கு மின்கட்டணம் ரூ.5.50/யூனிட் என நிர்ணயித்தும் உள்ளன. இந்தக் கட்டணங்கள் நாளை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வரும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.



Read in source website

சென்னை: நைலான், பிளாஸ்டிக் அல்லது செயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் என பிரபலமாக அறியப்படும் மக்கும் தன்மையற்ற காற்றாடி நூலை தயாரித்தல் விற்பனை செய்தல், சேமித்தல், கொள்முதல் செய்தல், இறக்குமதி செய்தல், பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முழுமையான தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நைலான், பிளாஸ்டிக் அல்லது செயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் என பிரபலமாக அறியப்படும் மக்கும் தன்மையற்ற காற்றாடி நூலை தயாரித்தல் விற்பனை செய்தல், சேமித்தல், கொள்முதல் செய்தல், இறக்குமதி செய்தல், பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தமிழக அரசு முழுமையான தடை விதித்துள்ளது. இது தொடர்பாக, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதியிட்ட அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி தமிழ்நாடு அரசிதழில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

காற்றாடி பறக்கவிடும் போட்டிகளின் போது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் மற்றும் குறிப்பாக பறவைகளுக்கும் பலத்த காயங்கள் ஏற்படுவதற்கும், சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கும் பிளாஸ்டிக் பூசப்பட்ட மாஞ்சா நூலே காரணம் என்று அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் பூசப்பட்ட மாஞ்சா நூல்கள் வடிகால் பாதைகள் மற்றும் நிர்நிலைகளை அடைப்பதன் மூலம் கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. இது பறவைகள் மற்றும் பிற விலங்கினங்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. மக்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு நைலான், பிளாஸ்டிக் மற்றும் பிற செயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட மாஞ்சா, காற்றாடி நூல் தயாரித்தல், விற்பனை செய்தல் சேமித்தல், இறக்குமதி செய்தல் மற்றும் பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை வனசரகர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள், தமிழக காவல் துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கு மேற்படி அறிவிப்பை செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இத்தடை உத்தரவினை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூல் (பாதுகாப்பு) சட்டம், 1986, (ஒன்றிய சட்டம் 29, 1986) விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

மதுரை: கிராம ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்ய ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு (பிடிஓ) அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் பள்ளித்தம்மன் ஊராட்சித் தலைவர் சண்முகபிரியா, மாரந்தை ஊராட்சித் தலைவர் திருவாசகம் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'ஊராட்சி செயலர்கள் ஊராட்சித் தலைவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர். எழுத்தர்கள் இடமாறுதல் உள்ளிட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஊராட்சித் தலைவர்களிடம் அனுமதி பெற வேண்டும் என ஊராட்சி சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊராட்சி எழுத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கி அரசு 9.7.2013-ல் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடையாணை பிறப்பித்தது. அந்த தடை இப்போது வரை அமலில் உள்ள நிலையில் ஊராட்சி எழுத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கி அரசு சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அந்த சட்டத் திருத்தத்தை நீதிமன்றம் ஏற்காமல் தடையை நீட்டித்து உத்தரவிட்டது. தடையாணை அமலில் இருக்கும் நிலையில் தடையாணையை விலக்கிக் கொள்ளாமல் எங்கள் ஊராட்சி செயலர்களை இடமாறுதல் செய்து காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் 31.8.2023-ல் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் கொல்லம்குடி ஊராட்சி செயலாளர் ஆரோக்கியம், கவுரிப்பட்டி ஊராட்சி செயலாளர் ஆறுமுகம், கல்லல் ஊராட்சி செயலாளர் ஜோசப் ஆகியோர் தங்களை இடமாறுதல் செய்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் 24.7.2023-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்தார். மனுதாரர்கள் வழக்கறிஞர்கள் வாதிடுகையில், ''கிராம ஊராட்சி வளர்ச்சியில் ஊராட்சி செயலர்களின் பங்கு முக்கியமானது. ஊராட்சி செயலாளர்களாக நியமிக்கப்படுபவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி செயலாளராக இருந்தால் கிராம ஊராட்சிப் பணிகளை நிறைவேற்றுவதிலும், நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும் சிரமம் ஏற்படாது.

விதிப்படி ஊராட்சி செயலர்களை இடமாறுதல் செய்யும் தகுதியான அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லை. சட்டத்திருத்தத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை. இதற்கு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தடையாணை பிறப்பித்துள்ளது. அதை விலக்காமல் ஊராட்சி செயலாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்” எனறார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ''கிராம ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்யும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உள்ளதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான ஒரு வழக்கில் 2013-ம் ஆண்டின் தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலாளர்கள் (நிபந்தனை விதிகள்) விதிக்கு 2022-ல் தடையாணை பிறப்பித்துள்ளது. இதனால் ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்யும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு இல்லை. இருப்பினும் ஊராட்சி செயலாளர்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், தமிழ்நாடு கிராம ஊராட்சி செயலாளர்கள் பணி விதிகள் 2023-ல் புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விதிகள் தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை 13.9.2023-ல் அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஊராட்சி செயலாளர்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுதல் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த இடமாறுதல் உத்தரவுகள் அரசாணை பிறப்பிக்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால் இடமாறுதல் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.



Read in source website

புதுடெல்லி: இந்தியாவில் 2022-ம் ஆண்டு சாலை விபத்துகள் குறித்த ஆண்டறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள நிலையில், சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: 'இந்தியாவில் சாலை விபத்துகள்-2022' என்ற ஆண்டறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, 2022-ம் ஆண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன, இதில் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர். 4,43,366 பேர் காயமடைந்துள்ளனர். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது விபத்துகளின் எண்ணிக்கை 11.9 சதவீதமும், இறப்புகளின் எண்ணிக்கை 9.4 சதவீதமும், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 15.3 சதவீதமும் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. அதிவேகம், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்காதது உள்ளிட்டவை இந்த விபத்துகளுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன.

சாலை விபத்துகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2022-ம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 64,105 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. 2018-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்துள்ளது. 2022-ம் ஆண்டைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் மத்தியப் பிரதேசமும், மூன்றாவது இடத்தில் கேரளாவும், நான்காவது இடத்தில் உத்தரப் பிரதேசமும் உள்ளன.

சாலை விபத்துகளை தடுப்பதற்கு வலுவான நடவடிக்கைகளை அமல்படுத்த சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. "இந்தியாவில் சாலை விபத்துகள்-2022" என்ற இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருப்பது, சாலைப் பாதுகாப்பு துறையில் கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் மதிப்புமிக்க ஆதாரமாக இருக்கும். இது சாலை விபத்துகளின் பல்வேறு அம்சங்கள், அவற்றின் காரணங்கள், உள்ளிட்ட ஆழமான நுண்ணறிவுகளை வழங்குகிறது. வளர்ந்து வரும் போக்குகள், சவால்கள் மற்றும் அமைச்சகத்தின் சாலைப் பாதுகாப்பு முன்முயற்சிகள் குறித்தும் இந்த அறிக்கை தகவல்களை வழங்குகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: கரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பை தடுக்க சிறிது காலத்துக்கு கடுமையான பணிகளை தவிர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தி உள்ளார்.

குஜராத்தில் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடைய சிலர் சமீப காலமாக அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்தனர். குறிப்பாக, சவுராஷ்டிரா பகுதியில் இந்த உயிரிழப்பு அதிகமாக உள்ளது. கடந்த 22-ம் தேதி நவராத்திரி விழாவை முன்னிட்டு கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த 17 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் கூறும்போது, “இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஒரு விரிவான ஆய்வை நடத்தியது. கரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், கடுமையாக உடற்பயிற்சி மற்றும் கடினமாக வேலை செய்வதை 2 ஆண்டுகளுக்கு தவிர்க்க வேண்டும் என அந்த ஆய்வு கூறுகிறது. இதன் மூலம் திடீர் மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்” என்றார்.



Read in source website

பாரிஸ்: எட்டாவது முறையாக Ballon d’or விருதை வென்று சாதனை படைத்துள்ளார் கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி. கடந்த ஆண்டு அர்ஜென்டினா அணியை வழிநடத்தி உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல செய்திருந்தார். அதோடு தங்கப் பந்து விருதையும் அந்த தொடரில் அவர் வென்றிருந்தார்.

சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் Ballon d'Or விருதை நடப்பு ஆண்டில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் எகிறி இருந்தது. வழக்கம் போலவே 30 வீரர்கள் இந்த விருதுக்கான பரிந்துரையில் இடம் பெற்றிருந்தனர். ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரையிலான வீரர்களின் செயல்பாடு இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரெஞ்சு இதழான ‘பிரான்ஸ் ஃபுட்பால்’ கடந்த 1956 முதல் இந்த விருதை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. விருதுக்கு பரிந்துரைக்கப்படும் வீரர்களில் இருந்து சிறந்த வீரர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுகிறார். நடப்பு ஆண்டில் கெவின் டி ப்ரூய்ன், ஹாலண்ட், மெஸ்ஸி, எம்பாப்பே, ரோட்ரி ஆகியோர் முதல் ஐந்து இடங்களை பிடித்தனர். இதில் முதலிடம் பிடித்த மெஸ்ஸி, நடப்பு ஆண்டுக்கான Ballon d’Or விருதை வென்றார். இதன் மூலம் 8-வது முறையாக அவர் இந்த விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021-ல் Ballon d’Or விருதை வென்றுள்ளார். தற்போது இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். மகளிர் பிரிவில் Ballon d’Or விருதை அடனா பொன்மதி வென்றார். ஸ்பெயின் நாட்டுக்காக அவர் விளையாடி வருகிறார். ஆடவர் பிரிவில் சிறந்த கிளப் அணிக்கான விருதை மான்செஸ்டர் சிட்டி அணி வென்றது. ஹாலண்ட், Gerd Muller டிராபியை வென்றார். மார்ட்டினஸ், Yachine டிராபியை வென்றார்.



Read in source website

அகர்தலா: இந்தியா - வங்கதேசம் இடையே நாடு விட்டு நாடு செல்லும் ரயில் சேவைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் நவம்பர் 1-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளனர்.

15 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்தியாவின் அகர்தலா முதல் வங்கதேசத்தில் உள்ள அகவுரா வரை ரயில் பாதை போடப்பட்டுள்ளது. இதில் 5 கிலோ மீட்டர் இந்தியாவிலும், 10 கிலோமீட்டர் வங்கதேசத்திலும் ரயில் பாதை இருக்கும். 2 நாடுகளுக்கு பயணிகள் மற்றும் சரக்குகள் பரிமாற்றத்துக்காக இந்த ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் பாதை வடகிழக்கு மாநிலங்கள் குறிப்பாக திரிபுரா, அசாம், மிசோரம் ஆகியவை வழியாக கொல்கத்தா செல்லவும் பயன்படும் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ரயில் பாதைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் நவம்பர் 1-ம் தேதி காணொலி முறையில் தொடங்கி வைக்கவுள்ளனர்.

அகர்தலாவிலிருந்து டாக்கா வழியாக அகவுரா நகருக்கு இந்த ரயில் பாதை செல்கிறது. இதற்கான சோதனை ரயில் ஓட்டம் நேற்று பகல் நடைபெற்றது. இந்த ரயில் பாதையின் இடையே ஒரு பெரிய பாலமும், 3 சிறிய அளவிலான பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. தற்போது கொல்கத்தாவிலிருந்து அகர்தலாவுக்குச் செல்ல ரயிலில் 31 மணி நேரமாகிறது.

இந்த ரயில் பாதைத் திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தால் இந்த பயண நேரம் 10 மணி நேரமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில்வே திட்டத்துக்காக மத்திய ரயில்வே அமைச்சகம் இதுவரை ரூ.153.84 கோடியை செலவிட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: உலகளாவிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் யுபிஐ (யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் அனைத்துப் பண பரிவர்த்தனைகளிலும் 40 சதவீதத்துக்கும் அதிகமான பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், யுபிஐ முறையை 30 கோடிக்கும் அதிகமான தனி நபர்களும், 5 கோடிக்கும் அதிகமான வணிகர்களும் பயன்படுத்துகின்றனர். தெருவோர வியாபாரிகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை அனைத்து நிலைகளிலும் யுபிஐ பரிவர்த்தனை தற்போது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

2022-ம் ஆண்டின் தரவுகளின்படி அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, பிரேசில், சீனா, தாய்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ளன.

2016-ல் ஒரு மில்லியனாக இருந்த யுபிஐ பரிவர்த்தனை இப்போது 10 பில்லியன் பரிவர்த்தனைகளை தாண்டியுள்ளது. இந்தியர்கள் பணம் செலுத்தும் முறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தை இது எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

2017-ல் ரொக்கப் பரிவர்த்தனைகள் 90 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக குறைந்தது. இதற்கு, 2016-ல் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டதே முக்கிய காரணம். அதேசமயம், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 இறுதியில் யுபிஐ வாயிலான பணப் பரிவர்த்தனை 900 சதவீதம் அதிகரித்தது.

ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பால் பணம் செலுத்துவதை யுபிஐ மிகவும் எளிமையாக்கியுள்ளது. யுபிஐ-யின் வளர்ச்சியால், பல்வேறு வகையான கட்டணம் செலுத்தும் முறை இலகு வானதுடன், டெபிட் கார்டுகளின் பயன்பாடும் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது.

டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைப்பதில் யுபிஐ மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ), இண்டர்நேஷனல் பேமென்ட்ஸ் நிறுவனத்தை (என்ஐபிஎல்) உருவாக்கி ரிசர்வ் வங்கியுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களுடன் இணைந்து யுபிஐ பரிவர்த்தனையை விரிவாக்கம் செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமீபத்தில், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய நாடுகள் யுபிஐ பணப்பரிமாற்ற சேவையில் இணைந்துள்ளன. விரைவில் ஐரோப்பிய நாடுகளும் இந்த சேவையில் இணையவுள்ளன.



Read in source website

பெருநகர சென்னை மாநகராட்சி மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள எல்லா மாநகராட்சிகளும், பெரு, சிறு நகரங்களும் மனிதா்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத, வாகனங்கள் தங்கு தடையின்றி நகர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. மழைநீா் வடிகால், புதை சாக்கடை, மெட்ரோ ரயில், மேம்பாலம் என்று ஏதாவது ஒரு காரணத்துக்காக ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டும், சிதைக்கப்பட்டும் காணப்படும் நிலையில், பொதுமக்கள் அடைந்து வரும் சிரமங்களைச் சொல்லி மாளாது.

நகரத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் காணப்படும் இன்னொரு மிகப்பெரிய பிரச்னை கால்நடைகள். மக்கள்தொகை குறைந்திருந்தபோது, கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்குக் குடிபெயா்ந்தவா்கள், தங்களது பாரம்பரிய சொத்து என்று சொல்லிக் கொள்வதற்கு எஞ்சியிருந்த ஆடு, மாடுகளையும் கொண்டு வந்தனா். அப்போது ‘ஆவின்’ போல பால் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் இல்லாத நிலையில், அவை நகரவாசிகளின் அத்தியாவசியத் தேவையைப் பூா்த்தி செய்தன.

அப்படி கால்நடைகளைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்தவா்களின் தலைமுறை எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டது. சில நூறு குடும்பங்கள்தான், பெரும்பாலும் புறம்போக்கு நிலங்களைத் தங்களது கால்நடை வளா்ப்புக்காக ஆக்கிரமித்துக் கொண்டு, இப்போதும் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசு நிறுவனமான ‘ஆவின்’ மட்டுமல்லாமல், பல தனியாா் பால் நிறுவனங்களும், தனியாா் பால் பண்ணைகளும் செயல்படத் தொடங்கிவிட்ட நிலையிலும், ‘கலப்படமில்லாத ஒரு மாட்டின் பால்’ என்கிற காரணத்தால், இப்போதும் அதற்கு சில வாடிக்கையாளா்கள் இருக்கின்றனா்.

வாழ்வாதாரமாகக் கால்நடை வளா்ப்பு இருப்பது என்பது கிராமப் பகுதிகளில் அத்தியாவசியமானது. ஆனால், நகரங்களில் முக்கியமான புறம்போக்கு இடங்களையும், சொந்த இடங்களையும் கால்நடை வளா்ப்பிற்காகச் சிலா் வைத்துக் கொண்டிருப்பதிலும்கூட தவறில்லை. அவா்கள் தாங்கள் வளா்க்கும் கால்நடைகளைத் தெருக்களில் நடமாடவிட்டு மற்றவா்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்துகிறாா்கள் எனும்போது, அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தெருக்களில் அவிழ்த்து விடப்படும் பசு மாடுகளும், எருமை மாடுகளும் சுவரொட்டிகளைக்கூட விட்டுவைக்காமல் சுவைத்துச் சாப்பிடுவதைப் பாா்க்கும்போது, பால் கறந்து வியாபாரம் செய்பவா்கள் எந்த அளவுக்குத் தீனி போடுகிறாா்கள் என்பதை உணர முடிகிறது. தெருவோரக் கடைகளில் இருந்து போடப்படும் ‘ஃபிரைட் ரைஸ்’ உள்ளிட்டவற்றைக்கூட அவை சாப்பிடத் தயங்குவதில்லை. மாமிச உணவும் உட்கொள்கின்றனவா என்பது தெரியவில்லை.

முறையாகத் தீனி போடாமல், தெருவில் அலை விடுவதும், கால்நடைகள் கட்டப்படும் பகுதிகளில் சாணமும், கோ மூத்திரமும் தேங்கி சுற்றுச்சூழலை பாதிப்பதும் எந்த வகையில் நியாயம் என்று கேள்வி கேட்கக்கூட யாரும் தயாராக இல்லை. மாநகராட்சியின் சுகாதாரத் துறையும், பீட்டா அமைப்பினரும், காவல்துறையினரும் இது குறித்துக் கண்மூடி இருப்பதன் மா்மம் என்ன என்பதும் தெரியவில்லை.

அண்மையில் சென்னை திருவல்லிக்கேணியில் முதியவா் ஒருவா் தெருவில் திரிந்த பசுமாட்டால் தாக்கப்பட்டு, தூக்கி எறியப்பட்டிருக்கிறாா்; தாம்பரத்தில் மாடு மீது மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற குடும்பத்தினா் படுகாயம் அடைந்தனா் என்பது மட்டுமல்ல, மூன்று வயது குழந்தை இறந்திருக்கிறது; அரும்பாக்கத்தில் பள்ளிக்குச் சென்ற சிறுவன் மாடு முட்டியதால் படுகாயம் அடைந்திருக்கிறான் - இப்படி நாளும் பொழுதும் ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது.

சென்னை மாநகரப் பகுதிகளைவிட, புறநகா்ப் பகுதிகளில் மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் மிக அதிகம். மாலை வேளைகளில் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலையில் பயணித்தால், சாலைகளில் ஆங்காங்கே படுத்துக் கொண்டிருக்கும் கால்நடைகளின் எண்ணிக்கை நம்மை மிரள வைக்கும். திருவல்லிக்கேணி, பழைய மாம்பலம், வடபழனி பகுதிகளும், திருவான்மியூா், நீலாங்கரை, பெருங்குடி, துரைப்பாக்கம், நாவலூா், கேளம்பாக்கம் பகுதிகளும் சாலைகளில் திரியும் மாடுகளால் நிறைந்து காணப்படுகின்றன.

இதுவரை சென்னை மாநகராட்சி தெருவில் திரியும் சுமாா் 4,000 மாடுகளைப் பிடித்திருக்கிறது. அபராதம் வசூலித்து அவற்றை விடுவித்து விடுகிறது. ஏறத்தாழ 3,000 போ் கால்நடையைத் தெருவில் அவிழ்த்து விட்டதாகப் பிடிக்கப்பட்டனா். ஆனால், ஒருவா் மீதுகூட காவல்துறை வழக்குப் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. தங்களது செலவுக்கு அவ்வப்போது கையூட்டுப் பெறுவதற்குக் கால்நடைகள் சாலைகளில் திரிவது அதிகாரிகளுக்கு வசதியாக இருக்கிறது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

சென்னையில் சாலையில் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில், கோயம்பேட்டிலும், கொடுங்கையூரிலும் தற்காலிகமாக மாட்டுத் தொழுவங்கள் அமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறாா். சாலைகளில் மாடுகளைப் பிடிக்க மண்டலத்துக்கு ஒரு மாடு பிடிக்கும் வாகனம், பணியாளா்கள், கால்நடை மருத்துவா்கள், சுகாதார ஆய்வாளா்கள் இருக்கிறாா்கள். சென்னை போன்ற நெரிசல் மிகுந்த நகரத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் மாட்டுத் தொழுவம் அமைப்பது சாத்தியமற்றது. தனியாருக்காக மாநகராட்சி மாட்டுத் தொழுவம் அமைத்துத் தருவது என்பதும் அவசியமற்றது.

கால்நடைகள் தெருவில் திரிந்தால் அவற்றைப் பிடித்து, அரசு கால்நடைப் பண்ணைகளுக்கு அனுப்பினால் மட்டும்தான் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்!



Read in source website

‘உண்மையான போா் வீரன் அதிகம் பேசமாட்டான்; அவனுடைய வெற்றியே அவன் புகழ்பாடும்’ என்ற வாசகத்திற்கு இலக்கணமாக வாழ்ந்தவா் ‘இந்தியாவின் இரும்பு மனிதா்’ என்று அறியப்படும் சா்தாா் வல்லபபாய் படேல்.

 

‘என் இதயத்தில் இடம் பிடித்தவா்; என் இலட்சியத்தை நிறை வேற்றுவதில் முன் நிற்பவா்; அஞ்சாநெஞ்சம் கொண்ட என் அன்புக்குரிய சகா சா்தாா் படேல்’” என்பது அண்ணல் காந்தியின் கூற்று. ‘படேல், அமைச்சரவையின் வலிமை மிக்க தூண்; வழிகாட்டும் விளக்கு’ என்றாா் ஜவாஹா்லால் நேரு.

‘அண்ணலின் போராட்டங்களுக்கு வெற்றி தேடித்தந்த வில்லாளி படேல்’ என்றாா் வினோபா பாவே. ‘படேல் இந்தியாவின் பிஸ்மாா்க்’ எனப் பதிவு செய்தாா் அன்றைய வைஸ்ராய் வேவல். ‘படேலின் மன உறுதியைக் கண்டு நான் வியக்கிறேன்’ என்றாா் மவுன்ட் பேட்டன்.

இத்தனை பண்பு நலன்களைக் கொண்ட சா்தாா் படேல் பிறந்தது 31.10.1875 அன்று; மறைந்து 15.12.1950 அன்று; வாழ்ந்தது 75 ஆண்டுகளே. இவா் அண்ணல் காந்தியை விட ஆறு வயது இளையவா். பண்டித ஜவாஹா்லாலை விட 14 வயது மூத்தவா். அண்ணலின் அன்பையும், பாசத்தையும் பெற்றவா். நேருஜியின் நம்பிக்கையையும் மரியாதையையும் பெற்றவா். இந்திய மக்கள் மனத்தில் தனக்கென ஓா் தனி இடம் பிடித்தவா்.

குஜராத் சபைக்கு காந்திஜி வருகை தந்தாா். அந்நிகழ்ச்சிக்குச் சென்ற படேல், அண்ணலின் எளிமை, உள்ளத் தூய்மை, உறுதி, சத்தியம், அகிம்சை ஆகிய அம்சங்களால் கவா்ந்திழுக்கப்பட்டாா். அன்றே ‘இவரே என் குருநாதா்’ என்று அண்ணலிடம் சரணடைந்தாா். தன் சத்தியாகிரகப் போருக்கு சரியான தளபதியைத் தேடிக் கொண்டிருந்த காந்திஜிக்கு படேல் கிடைத்தாா்.

1917-இல் ஏற்பட்ட காந்திஜி-படேல் உறவு, காந்திஜி மறையும் வரை நீடித்தது. படேல், காந்திஜியிடம் பக்தி கொண்டிருந்தாா்; பாபுஜியோ படேலின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தாா். எவருக்கும் கட்டுப்படாதவா் எனப் பெயரெடுத்த படேல், காந்திஜிக்குக் கட்டுப்பட்டாா். அவா் சொல்லை கடவுளின் கட்டளையாகவே ஏற்று நடந்தாா். ஆகவேதான் 1929, 1946 ஆகிய ஆண்டுகளில், காங்கிரஸ் தலைவா் பதவிக்கு, அவரைத் தவிா்த்துவிட்டு, நேருவை காந்திஜி பரிந்துரைத்தபோது அதனை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டாா்.

உப்பு சத்தியாகிரகம் தொடங்கி (1930), வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை (1942), காந்திஜி அறிவித்த அனைத்துப் போராட்டங்களையும் முன்னின்று நடத்தினாா் படேல். ஒவ்வொரு முறையும் கைதாகி சிறைவாசம் அனுபவித்தாா். அதில் 16 மாதங்கள் அண்ணல் காந்தியுடன் இருந்த ஏரவாடா சிறைவாசம் குறிப்பிடத்தக்கது. சிறைவாசத்தின் இறுதியில் ‘படேல் என் தாயைப் போல் பாசத்தோடு என்னை கவனித்துக் கொண்டாா்’ என நெஞ்சு நெகிழ்ந்து பாராட்டினாா் பாபுஜி.

வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி, காந்திஜிக்கு எழுதிய கடித்ததில், ‘சத்தியம், அகிம்சை, சத்தியாகிரகம் என்று எந்நேரமும் பேசிவரும் நீங்கள் காலப்போக்கில் பைத்தியமாகிவிடக்கூடும்; எனவே, நகைச்சுவை உணா்வு மிக்க ஒருவரை உங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்வது நல்லது’ என்று குறிப்பிட்டாா். அதற்கு ‘ஹரிஜன்’ இதழில் (25.2.1931) பதில் கூறிய காந்திஜி, ‘என்னுடைய சிறிய தா்பாரில் படேல் என்னும் விகடகவி” உள்ளாா். அவருடைய பேச்சுகள் என்னைக் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும். அவா் ஒருவரே போதும் என் மனச்சோா்வைப் போக்க’ என்று குறிப்பிட்டாா்.

சா்தாா் படேலின் நகைச்சுவை உணா்வு பலரும் அறியாதது. காந்திஜி பிரம்மச்சரியம் பற்றி அடிக்கடி போதனை செய்வதுண்டு. ஒரு சமயம் படேல், ‘பிரம்மச்சரியம் பற்றிப் பேச, பாபுஜியை விட எனக்கே தகுதி உண்டு. பாபுஜிக்கு நான்கு புதல்வா்கள்; நால்வரும்திருமணம் ஆனவா்கள். எனக்கோ இருவா் மட்டுமே; இருவரும் திருமணம் ஆகாதவா்கள். நான் மனைவியை இழந்தவன்; அண்ணலுக்கோ இறை அருளால் கஸ்தூா் பாவின் துணை தொடா்கிறது. நான் மறுமணம் செய்து கொள்ள மறுத்து இன்றுவரை பிரம்மச்சரிய வாழ்க்கை நடத்துகிறேன். அண்ணலின் விரதத்தைவிட என் விரதம் குறைந்ததல்ல’ எனக் கூறி எல்லோரையும் சிரிக்க வைத்தாா்.

படேல், வழக்குரைஞராகப் பணிபுரிந்த காலத்தில், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்காக இறுதி வாதம் செய்து கொண்டிருந்தாா். அப்பொழுது சா்தாருக்கு ஒரு அவரசத் தந்தி வந்தது. அதனைப் படித்துவிட்டுத் தனது பைக்குள் வைத்துக் கொண்டாா். பின் விவாதத்தைத் தொடா்ந்தாா்.

வழக்கு விசாரணை முடிந்தபின் வெளியில் வந்த சா்தாரிடம் ‘என்ன அந்த அவசரத் தந்தி’ என அவரின் நண்பா் கேட்டாா். அப்பொழுது படேல் ‘என் மனைவி இறந்து விட்டாா். நான் விவாதத்தை நிறுத்துவதால் இறந்த என் மனைவியை மீட்க முடியாது. குறைந்தபட்சம் என் விவாதத்தின் மூலம் என் கட்சிக்காரரையாவது காப்பாற்றலாமே’ என்றாா். நண்பா் திகைத்துப் போனாா்.

1933-இல் படேல் சிறையிலிருந்தபோது அவரது அண்ணன் காலமானாா். அப்பொழுது அரசு படேலுக்கு ‘பரோல்’ வழங்க முன்வந்தது. ஆனாலும், அதனை மறுத்தாா் அவா். அரசின் சலுகையை ஏற்பது இகழ்ச்சி என எண்ணியவா் அவா். மேற்கு வங்கத்தின் அன்றைய முதலமைச்சா் டாக்டா் பி.சி. ராய், உள்நாட்டு பிரச்னை தொடா்பாக பிரதமருக்கு நேரடியாகக் கடிதம் எழுதிக் குறை கூறியிருந்தாா்.

தகவல் அறிந்த படேல், முதலமைச்சரைத் தொடா்பு கொண்டு, ‘பிரச்னையை முதலில் என் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்க வேண்டும்; நேரடியாக பிரதமரைத் தொடா்பு கொள்வது நல்ல நிா்வாக முறையின் அடையாளமல்ல’ எனக் கடிந்து கொண்டாா்.

அன்றைய உத்தர பிரதேச முதல்வா் வல்லப பந்த் புகைப்படக் கண்காட்சி ஒன்றை நடத்தினாா். அதில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது காவல் அதிகாரிகளின் மேற்கொண்ட அத்துமீறல் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதனை அறிந்த படேல் ‘கடந்த கால நிகழ்வுகளை இப்பொழுது வெளிச்சம் போட்டுக் காட்டுவது இருநாட்டு உறவை பாதிக்கும்’ எனக் கூறினாா். கண்காட்சி நிறுத்தப்பட்டது.

உயா்நிலைப் பள்ளியில் படித்த போது, ஒரு நாள் கணித வகுப்பு நடந்தது. ஒரு கணக்கை கரும்பலகையில் எழுதினாா் ஆசிரியா்; ஆனால் அவரால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை. நிலைமையை உணா்ந்த மாணவா் படேல், எழுந்து நின்று ‘என்னால் கண்டுபிடிக்க முடியும்’ என்றாா். ஆசிரியரின் பதிலை எதிா்பாா்க்காமல், தானே சென்று சரியான விடையை எழுதி முடித்தாா்.

பிரதமா் நேருஜி 1947 டிசம்பரில் வெளிநாடு சென்றிருந்தபோது, சா்தாா் படேல் பிரதமா் பொறுப்பு வகித்தாா். அது சமயம் அரசியல் நிா்ணய சபையில் காஷ்மீா் பற்றிய விவாதம் நடைபெறத் தொடங்கியது. நேருஜி இல்லாத நேரத்தில் காஷ்மீா் பற்றிய விவாதம் நடைபெறுவதை ஷேக் அப்துல்லா விரும்பவில்லை. கூட்டத்திலிருந்து எழுந்த அப்துல்லா ‘நான் காஷ்மீருக்குப் போகிறேன்’ எனச் சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்து விட்டாா்.

சிறிது நேரத்தில் ரயிலில் அமா்ந்திருந்த அப்துல்லாவிடம் மகாவீா் தியாகி எம்.பி. ‘நீங்கள் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறலாம்; ஆனால் தில்லியை விட்டு வெளியேற முடியாது. இதுவே படேல் உங்களுக்கு அனுப்பிய செய்தி’ என்றாா். கலக்கமடைந்த ஷேக் கண நேரத்தில் ரயிலை விட்டு இறங்கினாா்; தன் பயண முடிவைக் கைவிட்டாா். படேலின் சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு இருந்தது.

சா்தாா் படேல், அண்ணல் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் முன்னின்று நடத்திய மூத்த தளபதி; 565 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்த ராஜதந்திரி; இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கிய ஐ.சி.எஸ், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட நிா்வாக இயந்திரத்திற்கு முழு சுதந்திரம் வழங்கிய முதிா்ந்த நிா்வாகி; தனது வாழ்வின் இறுதிவரை பிரதமா் நேருக்குத் தோழனாக, ஆலோசகராக இருந்தவா்; காந்திஜியின் சீடராகவும் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் விளங்கியவா்.

இவை நாம் அறிந்ததே. ஆனால் அவரின் தனிப்பட்ட நல்லியல்புகளை நாம் அறிய வேண்டும். அப்பண்பு நலன்கள் குறித்து அண்ணல் காந்திஜியின் செயலாளா் மகாதேவ தேசாய் குறிப்பிடும்போது, ‘சா்தாா் கடுமையானவருமல்ல; பணிவுள்ளவருமல்ல. குடும்பஸ்தருமல்ல; துறவியுமல்ல. அவா் விவசாயி; தம் தொழிலைச் செல்வனே செய்யும் திறம் படைத்த விவசாயி’ என்று கூறினாா்.

அவா் ஒரு கா்மயோகியும் ஆவாா். அவரது லட்சியங்கள் இரண்டு மட்டுமே. அவை பாபுஜியும் பாரதமும். ஒருமுறை அவருடைய சகாக்கள் சிலா், ‘காங்கிரஸ் கட்சி நம் கையில்; பெரும்பாலான எம்.பி.க்கள் நம் பின்னால். இச்சூழலில் நேருஜியை நீக்கிவிட்டு நீங்களே பிரதமராகி விடலாமே’ என்று ஆலோசனை கூறியபோது அதனை நிராகரித்தவா் அவா்.

அது மட்டுமல்ல, ‘நேருஜியே என் அரசியல் வாரிசு என்று அறிவித்தது என் குருநாதா் அண்ணல் ஆயிற்றே! அவா் முடிவுக்கு எதிராக நான் ஒன்றும் செயல்பட மாட்டேன். எம்.பி.க்கள் என் பின்னால் நிற்கலாம்; ஆனால் தேச மக்கள் நேருஜியின் பின்னால்தானே நிற்கிறாா்கள். அதனை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அண்ணல் எண்ணியபடி என் இறுதி மூச்சு உள்ளவரை பண்டித நேருவுக்கு துணையாக, தோழனாக, உதவியாக இருப்பேன்’ என்று உறுதிபடச் சொன்னவா்; சொன்னபடி நடந்தவா் சா்தாா் வல்லபபாய் படேல்.

அன்னை பாரதத்திற்கும் அண்ணல் காந்திஜிக்கும் தன்னையே அா்ப்பணித்த ‘இந்தியாவின் இரும்பு மனிதா்’ சா்தாா் வல்லபபாய் படேலின் நினைவைப் போற்றுவோம்.

இன்று (அக். 31) சா்தாா் வல்லபபாய் படேல் 149-ஆவது பிறந்தநாள்.

கட்டுரையாளா்:

காந்திய சிந்தனையாளா்.



Read in source website

இந்திய விடுதலைப்போரின் முப்பெருந்தலைவா்கள் என்று போற்றப்பட்டவா்கள் மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, சா்தாா் வல்லபபாய் படேல் ஆகியோா். இவா்களில் காந்தியடிகளும் படேலும் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள். அப்போது குஜராத் தனி மாநிலமாகாமல், அன்றைய பம்பாய் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது .

1875 அக்டோபா் 31 அன்று ஜாவேரிபாய் - லதுபாய் இணையருக்கு நான்காவது பிள்ளையாக வல்லபபாய் படேல் பிறந்தாா். அகமதாபாதில் வழக்குரைஞா் தொழில் மூலம் பெரும்புகழும் பணமும் வந்தது. குற்றவியல் வழக்குரைஞா்களில் படேல் முன்னணியில் இருந்தாா். தன்னுடைய அறிவுக் கூா்மையாலும், ஒப்பற்ற வாதத்திறமையினாலும் சில ஆண்டுகளுக்குள் பெருமதிப்பு பெற்றாா் .

படேல், அகமதாபாத் நகா்மன்றத் தலைவராகப் பொறுப்பேற்ற 1924 - ஆம் ஆண்டிலிருந்து அவா் தன் பதவியைத் துறந்த 1929 - வரை, அந்நகரில் சாலைகள் அமைத்தும், குடிநீா் வசதியை ஏற்படுத்தியும், வடிகால்களை அமைத்தும், பூங்காக்களை ஏற்படுத்தியும், மருத்துவ வசதிகளைச் செய்தும் மக்களுக்குத் தொண்டாற்றினாா். அகமதாபாத்தை ஒரு முன்மாதிரி நகராட்சியாக்கி சாதனை படைத்தாா் .

பா்தோலி வரிகொடா இயக்கப் போராட்டத்தின்போது வல்லபபாய் ஆற்றிய தொண்டு மகத்தானது. அதனை இந்தியா முழுவதுமே பாராட்டி மகிழ்ந்தது. வல்லபபாய் மட்டும் இல்லையேல் போராட்டம் வெற்றி பெற்றிருக்காது என்பதுதான் அனைவருடைய கருத்துமாகும்.

படேலின் துணிகரமான செயல்களை பண்டித நேரு, லாலா லஜபதி ராய், மதன் மோகன் மாளவியா ஆகியோா் பாராட்டினா். அண்ணல் காந்தியடிகள் படேலுக்கு ‘சா்தாா்’ என்ற சிறப்புப் பட்டத்தை அளித்துப் பாராட்டி மகிழ்ந்தாா் .

வல்லபபாய் படேலின் ஒவ்வொரு சொல்லும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்ததால் அவை அனைத்தும் கேட்போரைப் பிணிக்கும் தன்மையதாய் அமைந்திருந்தன. படேல் எந்தப் பொறுப்பு வகித்தாலும் அதில் திறன்படச் செயல்படுவாா். எதையுடன் நோ்மையுடன் செய்யவேண்டும், நீதி நெறியிலிருந்து அணுவளவும் பிறழக்கூடாது

என்ற எண்ணத்துடன் செயல்படுவது அவா் பண்பு.

இந்திய விடுதலை வெகுவிரைவில் வரப்போவதை மனதிற்கொண்ட காந்தியடிகள் பண்டித நேருவை அகில இந்தியக் காங்கிரஸ் குழுத்தலைவராகவும், அதன் பின்னா் விடுதலை இந்தியாவின் பிரதமராகவும் ஆக்கிடவேண்டும் என்று விரும்பினாா். இந்த எண்ணத்தைப் புரிந்து கொண்ட படேல், தாம் பண்டித நேருவை விடவும் பதினான்கு ஆண்டுகள் மூத்தவராக இருந்தாலும், காந்தியடிகளின் எண்ணம் போலச் செயல்படுவதற்கு இசைந்தாா்.

படேல்தான் காங்கிரஸ் தலைவராக வரவேண்டுமென்று காங்கிரஸிலுள்ள மூத்த தலைவா்கள் பலா் விரும்பினாலும், பெருந்தன்மை மிக்க படேல் அண்ணல் காந்தியடிகளின் உள்ளம் கவா்ந்த உறுதுணையாளராகத்தான் வாழ்நாள் முழுவதும் மிளிா்ந்தாா்.

தமக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்றோ, காந்தியடிகளுக்கு

அடுத்து செல்வாக்கு பெற்ற தாமே எதிலும் முன்னிலை வகிக்க வேண்டுமென்றோ எண்ணவே இல்லை.

படேல் எதையும் மனந்திறந்து பேசும் இயல்பு கொண்டவா். உள்ளொன்று புறமொன்று பேசும் தன்மை கொண்டவா் அல்லா். மனதிற்பட்ட நல்ல கருத்துகளை - நாட்டிற்கு நன்மை விளைவிப்பவற்றை யாருக்கும் அஞ்சாமல் சட்டென்று பேசிவிடும் குணமுடையவா். இங்கிலாந்து பிரதமா் சா்ச்சிலையே எதிா்த்துப் பேசும் வல்லவா் என்ற தனிப்புகழ் கொண்டவா் ஆவாா்.

சா்தாா் வல்லபபாய் படேல் செய்து காட்டிய மாபெரும் செயல், சிதைந்து கிடந்த இந்தியாவை ஒன்றுபடுத்தியதுதான். சமஸ்தானங்களை இந்திய அரசுடன் ஒருசேர இணைத்த பாங்கு, சா்தாா் வல்லபபாய் படேலுக்கு பெரும்புகழைப் பெற்றுத் தந்தது. இந்தியத் தலைவா்கள் அவரை ‘இந்தியாவின் இரும்பு மனிதா்’ என்று போற்றினா்.

ஏழை மக்கள் அனைவரும் எல்லா வழிகளிலும் மனஅமைதி பெற்று வாழவேண்டும் என்பதே படேலின் நோக்கமாக இருந்தது. மக்கள் அமைதியுடன் வாழ வேண்டுமானால் அரசு ஊழியா்கள் அனைவருக்கும், தாங்கள் மக்களுக்காகத் தொண்டு செய்ய நியமிக்கப்பட்டவா்கள் என்று உணா்வு ஏற்படவேண்டும் என்று கூறினாா். நிா்வாகத்தில் எந்த நிலையிலும் ஊழல் இருக்கக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தாா்.

குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதில் மத்திய அரசைப் போன்று மாநில அரசுகளுக்கும் பங்கு உண்டு என்பதை அவா் நிலைநிறுத்தினாா். எனவே, குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதில் நாடாளுமன்ற உறுப்பினா்களும், மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினா்களும் பங்களிக்க வேண்டும் என்று தீா்மானிக்கப்பட்டது.

மகாகவி பாரதியாரின் ‘புதிய ஆத்திசூடி’யில் ஆணி அடித்தாற் போன்ற அறிவுரைக் கட்டளைகளைப் பாா்க்கலாம். ‘உடலினை உறுதி செய்’, ‘நோ்படப் பேசு’, ‘சீறுவோா்ச் சீறு’, ‘குன்றென நிமிா்ந்து நில்’, ‘செய்வது துணிந்து செய்’, ‘தேசத்தைக் காத்தல் செய்’ இவை அனைத்தும் ஒரு தலைவனுக்குரிய தாரக மந்திரங்கள். இந்த நன்மொழிகளுக்கெல்லாம் நடைமுறை இலக்கணமாக வாழ்ந்து காட்டியவா்தான் சா்தாா் படேல்.

குஜராத்தில் ‘வல்லபபாய் நகா்’ என்று அவா் பெயரில் ஒரு புதிய நகரம் அமைக்கப்பட்டுள்ளது. பாா் போற்றும் வண்ணம் 597 அடி உயர படேலின் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை கிண்டியில் உள்ள ஒரு சாலைக்கு அவா் நினைவாக ‘சா்தாா் படேல் சாலை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

‘புதிய இந்தியாவைப் படைத்த பெருந்தகை’ என்று பண்டித நேரு, படேலைப் புகழ்ந்தாா். ‘அண்ணல் காந்தியின் விடுதலைப்போரில் குறிதவறாத வில்லவனாக வல்லபபாய் விளங்கினாா்’ என்று அறப்போராளி வினோபா பாவே குறிப்பிட்டாா்.

இந்திய குடிமைப்பணி, இந்திய காவல்பணி இவற்றை நிறுவிக்காட்டியவா். பிரித்தானிய அரசு பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட அரசு பிரதிநிதி காவலா் படையினை மத்திய பின்னிருப்பு காவல்படையாக மடைமாற்றம் செய்தவா். அதனைஉலகில் உள்ள துணை இராணுவப் படைகளிலேயே மிகப்பெரிய படையாக உருவாக்கியவா் - இத்தனை பெருமைக்கும் உரியவா் ‘இந்தியாவின் இரும்பு மனிதா்’ என்று அனைவராலும் போற்றப்படும் சா்தாா் வல்லபபாய் படேல்.



Read in source website

ஆபரேசன் இரும்பு வாள்கள் (ஆபரேசன் ஸ்வார்ட்ஸ் ஆப் அயர்ன்) -  பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ஆரம்பித்திருக்கும் போர் நடவடிக்கையின் பெயர் இது.

காஸா பகுதி என்பது 45 கிலோ மீட்டர் நீளமும், 5 முதல் 12 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட ஒரு குறுகிய கடலோர நிலப்பரப்பு என்பது நமக்கு ஏற்கெனவே தெரிந்த சங்கதிதான்.  

2 லட்சம் பாலஸ்தீனர்கள் நெருக்கியடித்து வாழும் 363 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பகுதி இது. ஹாங்காங் நகரத்தைவிட மக்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதி காஸாதான்.

ஈழத்தில் தமிழர் பகுதிகளைச் சுருட்ட சிங்களத்தில் அந்த இடங்களுக்குத் தனியாக ஒரு பெயர் வைத்திருப்பார்கள் இல்லையா? அதேப்போலே காஸா பகுதி என்பது பாலஸ்தீனர்களுக்குத்தான் காஸா. இஸ்ரேல் நாட்டின் எபிரேய மொழியில் காஸாவுக்குப் பெயர் ரிசுவாத் அசா. 

காஸா பகுதியில் அதன் தலைநகரமாக இருக்கும் நகரத்தின் பெயரும் காஸாதான். இதுபோக காஸாவில் 8 அகதிகள் முகாம்களும் உள்ளன. ஒட்டுமொத்த காஸாவும்கூட ஒருவகையில் ஒரு பெரிய அகதிகள் முகாம்தான். 

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான இந்த சண்டை முதல் சண்டை அல்ல. ஏற்கெனவே மூன்று முறை மோதல் நடந்திருக்கிறது.

2008 ஆம் ஆண்டு, காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிய நகரங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தனர். பதிலுக்கு, ஆபரேசன் கேஸ்ட்லீட் என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்தது. அல்-`ஃபுர்கான் சண்டை என பாலஸ்தீனர்களால் அழைக்கப்பட்ட இந்த சண்டை 3 வார காலம் நீடித்தது. 

2012-ல் அடுத்த மோதல். இந்தமுறை ‘பில்லர் ஆப் டிபன்ஸ்’ என்ற ராணுவ நடவடிக்கையை ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் கைக்கொண்டது. 8 நாள்கள் நடந்த இந்த சண்டையில் ஹமாஸ் ராக்கெட்களுக்கு எதிராக, ‘ஐயர்ன் டோம்‘ (இரும்பு குவிமாடம்) என்ற தடுப்புவித்தையை இஸ்ரேல் இந்த சண்டையில்தான் முதன்முறையாகக் கையாண்டது. 

ஹமாஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான அகமத் ஜபாரி, இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் பலியானதுகூட இந்த சண்டையில்தான். 

2014-ல் ஹமாசுடன் மீண்டும் ஒரு சடுகுடு. இந்தமுறை ‘ஆபரேசன் ‘புரொடெக்டிவ் எட்ஜ்’ என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்தது. 1967 ஆம் ஆண்டு நடந்த ஆறுநாள் போருக்குப் பிறகு இஸ்ரேல் எடுத்த மிகப்பெரிய ராணுவ நடவடிக்கைகளில் ஒன்று இது. 

இந்த மூன்று மோதல்களிலும் மொத்தம் 4 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். சண்டையில் பலியான யூதர்களின் எண்ணிக்கை நூறுக்கும் குறைவு.

ஆனால், அக்டோபர் 7 ஆம் தேதியன்று ஆரம்பித்து 5 வாரங்களாகத் தொடரும் புதிய சண்டையில், இதுவரை 8,718 உயிரிழப்புகள். 3,320 குழந்தைகள் உள்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை காயம். இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும், இடையிலான சண்டையில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தி வரும் சண்டை இதுதான்.

அக்டோபர் 7 ஆம் தேதியன்று ஹமாஸ் தந்த அடி மிக  பலமான அடி. 75 ஆண்டு கால வரலாற்றில் இந்த மாதிரி அடியை இஸ்ரேல் இதுவரை சந்தித்ததே இல்லை என்பதுதான் உண்மை. (என்னா அடி!)

இந்த அக்டோபர் 7 தாக்குதலை அடுத்து 3 லட்சத்து 60 ஆயிரம் ராணுவத்தினருடன் காஸாவை முற்றுகையிட்டிருக்கிறது இஸ்ரேல் ராணுவம். ஆனால் கிட்டத்தட்ட 17 ஆண்டுகாலமாக இஸ்ரேலின் முற்றுகைக்குள்தான் இருக்கிறது காஸா. இருந்தும் ஹமாஸ் அமைப்பினரின் ஏவுகணைகளை, ஏவப்படுவதற்கு முன்னாலேயே இஸ்ரேல் ராணுவத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 

இஸ்ரேல் ராணுவத்திடம் இருப்பதுபோல மெர்கேவா டாங்கி, கிஃபிர் விமானம் எதுவும் ஹமாஸ் அமைப்பினரிடம் இல்லை. ஏழைக்கேற்ற எள்ளுருண்டை மாதிரி, ஹமாஸ் அமைப்பினர் நம்பியிருப்பது ஏவுகணைகளைத்தான். 

ஹமாஸ் அமைப்பின் ராக்கெட்களால் இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ், பென்குரியன் விமானநிலையம், ஹைபா துறைமுகம், ஜெருசலேம், அஸ்கெலான் உள்பட இஸ்ரேலின் எந்த ஒரு பகுதியையும் தாக்க முடியும். அதுபோல லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணைகளாலும் இஸ்ரேலின் எந்தப் பகுதியையும் தொட முடியும்.

இஸ்ரேலின் உயிர்நாடியாக இருப்பவை 9 மின்னுற்பத்தி நிலையங்கள், 9 விமானப்படை தளங்கள். இந்த விமானப்படை தளங்கள் தகர்க்கப்பட்டால் வானத்தில் தன் கட்டுப்பாட்டை இஸ்ரேல் இழந்துபோகும். இஸ்ரேலின் நாடி தளர்ந்து கதை கிட்டத்தட்ட முடிந்து போகும். இந்தநிலையில் ஹமாஸ், ஹிஸ்புல்லாவின் முதன்மை குறிகள், இஸ்ரேலின் விமானப்படைத் தளங்கள்தான். 

இஸ்ரேல் நாடு முன்புபோல இல்லை. அக்டோபர் 7-ல் ஹமாஸ் தாக்குதல் நடத்தும் என்பது இஸ்ரேலின் மொசாத் உளவுப்படைக்குத் தெரியவில்லை. 

காஸா பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கில் சீறி வந்த ஹமாஸ் ராக்கெட்களை தடுத்து ஆடி, முனைமுறிக்கும் முயற்சியில் இஸ்ரேலின் அயர்ன் டோம் ஏவுகணைத் தடுப்புத் திட்டம் முதன்முறை தோல்வி கண்டிருக்கிறது.

இஸ்ரேல் ராணுவமும் இப்போது பழைய பளபளப்பில் இல்லை. போர் தொடங்கி விட்டால் ஒரேநாளில் பல நூறுமைல் தொலைவுகளைக் கடக்கக்கூடிய திறமை இஸ்ரேல் ராணுவத்திடம் முன்பு இருந்தது. இப்போது இல்லை. 

2002 ஆம் ஆண்டுக்குப்பின், லெபனான் நாட்டுக்குள் 2 முதல் 4 கிலோ மீட்டர் முன்னேறுவதற்குள்ளேயே இஸ்ரேல் ராணுவம் மூச்சுத்திணறிப் போய்விடுகிறது. 

2006 வரைக்கும் இஸ்ரேல் ராணுவம் எதிரிகளை துடைத்து அழித்து எந்தப் போரையும் உடனே முடிவுக்குக் கொண்டுவந்து விடும். இப்போது அப்படி இல்லை. 2018க்குப் பிறகு முழு அளவிலான ஒரு பெரிய போருக்கு இஸ்ரேல் தயாராக இல்லை. 

கூண்டில் இருந்து புலியை வெளியே வரவிடாமல் தடுப்பதுபோல, காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் வெளியே வராமல் தடுக்கும் பொறுப்பில் இருந்த இஸ்ரேலிய ராணுவப்பிரிவு ஒன்று அக்டோபர் 7-ல் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. 

இஸ்ரேல் ராணுவம் பழைய மாதிரி இல்லை என்பதைத் தெரிந்துதான் ஹமாஸ் அமைப்பினரும் அதன்மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். சீண்டி விளையாடி இருக்கிறார்கள்.

போரில் பொதுவாக எதிரிக்கும் நமக்கும் இடைவெளி வேண்டும். அமெரிக்கா விமானந்தாங்கிக் கப்பலில் கடல்கடந்து போய் எதிரிநாடுகளுடன் சண்டையிடும். போர்க்களத்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கும்.

இஸ்ரேலின் கதை அப்படியில்லை. மடியில் உட்கார்ந்திருக்கும் எதிரியுடன் மல்லுக் கட்டுவது போன்ற கதை இஸ்ரேலின் கதை. மடியில் இருக்கும் கைக்கு எட்டும் தொலைவில் இருக்கும் எதிரியை ஈசியாக ஊமைக்குத்து குத்தலாமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் எதிரிக்கு நாமும் கைக்கெட்டும் தொலைவில்தான் இருப்போம். எதிரி நமது தாடையைத் தகர்க்கவும் சமவாய்ப்பு இருக்கிறது.

காஸாவைப் பொறுத்தவரை இஸ்ரேல் ராணுவம் இதுவரை அங்கே மட்டுப்படுத்தப்பட்ட போர் நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டிருக்கிறது. வீட்டின்மீது தாக்குதல் நடத்துவதற்குப் பதிலாக, வீட்டு முற்றத்தில் புல் வெட்டுவது போன்ற நடவடிக்கைகளையே இஸ்ரேல் இதுவரை கையாண்டிருக்கிறது.

ஆனால், இந்தமுறை 3 லட்சத்து 60 ஆயிரம் ராணுவத்தினருடன் காஸாவுக்குள் இறங்கி தரைப்படை தாக்குதலை நடத்த இஸ்ரேல் தயாராக உள்ளதாக சொல்கிறது. 

காஸா பகுதி கட்டடத் தொகுதிகள் அதிகம் கொண்ட பகுதி. அங்கே நிலத்துக்கு அடியில் காஸாவுக்கு இணையாக மற்றொரு காஸா இருப்பதாகக் கருதப்படுகிறது. அந்த அளவுக்கு தரைக்கு அடியில் குகைகளும், சுரங்கப் பாதைகளும் அங்கே அதிகம்.

வியட்நாம் போரின்போது அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக வியட்நாமிய போராளிகள் நிலத்தடி சுரங்க வழிகளைப் பயன்படுத்தினர். ஆனால், காஸாவில் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்க வழிகளுடன் ஒப்பிட்டால், வியட்நாமிய சுரங்க வழிகள் எல்லாம் சிறுபிள்ளை விளையாட்டுபோலத் தோன்றுமாம்.

இந்த பாதாள உலகத்துக்குள்தான் ஹமாஸ் படையின் மொத்த பலமும் பதுங்கியிருக்கிறது. இஸ்ரேல் ராணுவம் காஸாவுக்குள் கால்வைத்தால் அதை எதிர்கொள்ள ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவான எசெடினா-அல்-காசம் பிரிகேட் தயராக உள்ளது. டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகள், சூழ்ச்சிப் பொறிகள் என ஹமாஸ் பக்காவாக தயார்.

இஸ்ரேல் ராணுவத்தின் மெர்கேவா டாங்கி, கிஃபிர் விமானம் எல்லாம் நிலத்தடி சண்டைகளுக்குப் பயன்படாது. அதேப்போல கட்டடங்கள் நிறைந்த ஒரு நகர்ப்பகுதிக்குள் சண்டையிடுவது தனிக்கலை. அது எல்லா ராணுவத்துக்கும் கைவராது.

ஒரு திறந்தவெளியில் இரு நாட்டு ராணுவங்கள் மோதினால் வெற்றி யாருக்கு தோல்வி யாருக்கு என்பது தெரிந்துவிடும். எதிரி விட்டுச் சென்ற ஆயுதங்கள், சிதைந்த டாங்கிகள், சுட்டுவீழ்த்தப்பட்ட விமானங்கள் தோல்வி யாருக்கு என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடும்.

ஆனால், ஹமாஸ் போன்ற போராளி இயக்கங்களுடன் மோதும்போது இந்த கதை செல்லாது. வெற்றி யாருக்கு தோல்வி யாருக்கு என்பதை கணிப்பது கடினம். 

காஸா சண்டையைப் பொறுத்தவரை தெளிவான போர்த் திட்டங்கள் எதுவும் இஸ்ரேலிடம் இப்போதைக்கு இருப்பதாகத் தெரியவில்லை. 

காஸாவுக்குள் புகுந்து அதன் உள்கட்டமைப்பை உடைத்தெறிவது, முடிந்த அளவுக்கு ஹமாஸ் தீவிரவாதிகளைக் கொல்வது, கைது செய்வது, ஹமாஸ் ஏவுகணைத் தயாரிப்புக் கூடங்களை தகர்ப்பது, சுரங்கப் பாதைகளை நொறுக்குவது, பாலஸ்தீன மக்களை எகிப்து நாட்டின் எல்லையோரம் தள்ளுவது. இவைதான் ஒருவேளை இஸ்ரேல் வகுத்திருக்கும் திட்டமாக இருக்கக் கூடும்.  

காஸா ஒருவேளை இஸ்ரேலின் கைப்பிடிக்குள் வந்தால்கூட அதை என்ன செய்வது? அங்கேயே ராணுவத்தை நிறுத்துவதா, இல்லை வெற்றி என்று அறிவித்து விட்டு ஓடிவந்துவிடுவதா? போருக்குப்பிறகு காஸாவை எப்படி ஆள்வது? போருக்குப் பிந்தைய நிலை என்ன? இதைப்பற்றியெல்லாம் கூட இஸ்ரேலிடம் எந்த முடிவும் இருப்பதாகத் தெரியவில்லை. 

ஒரு போருக்குள் எப்போதும் நழைவது எளிது. அந்த போரை விட்டு விட்டு விலகி வருவது கடினம். போருக்குள் நுழையும் எந்த ஒரு ராணுவத்துக்கும் ஒரு சிக்கல் உண்டு. புலி வாலை பிடித்த நாயர் கதையாக, போரை விட்டுவிட முடியாமல் அதனுடன் சிக்கி, மல்லுக்கட்டும் சிக்கல் பல நாட்டு ராணுவங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. 

வியத்நாமில் அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானில் ரஷியாவும், ஈழத்தில் இந்திய ராணுவமும் இந்த சிக்கலில் சிக்கித் தவித்திருக்கின்றன.  

இஸ்ரேல் இப்போது பெரிய போர்களுக்குத் தயாராக இல்லை.  நீண்ட காலம் போர் நடத்தும் நிலையிலும் அது இல்லை. இந்தநிலையில் இஸ்ரேலுடன் நீண்டகாலம் போர் நடத்துவதையே ஹமாஸ் அமைப்பு விரும்புகிறது.

போர் நீள வேண்டும், இஸ்ரேல் அரசிடமும், மக்களிடமும் குழப்பம் ஏற்பட வேண்டும் என ஹமாஸ் நினைக்கிறது. போர் விரிவடைந்து, தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் போன்ற நாடுகள் களத்தில் இறங்கினாலும் ஹமாசுக்கு அது வெற்றிதான். 

தற்போதுள்ள சூழலில், காஸா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா விரும்பவில்லை. இதனால் பெட்ரோலிய சந்தை பாதிக்கப்படும் என அமெரிக்கா கருதுகிறது. 

ரஷியாவைப் பொறுத்தவரை உக்ரைன் போரில் இருந்து உலகத்தின் கவனத்தைத் திருப்ப காஸா உதவும் என்பதால் ரஷியா இந்தப் போரை விரும்புகிறது.

சீனாவுக்கு மத்திய கிழக்கின் பெட்ரோலிய எண்ணெய் தங்கு தடையின்றி தனக்கு வர வேண்டும் என்பதுதான் கவலை. அதற்கு காஸா போர் உதவும் என்று சீனா கருதுகிறது. பாலஸ்தீனர்களை ஆதரிக்கிறது. 

ஹமாஸ், இஸ்ரேல் இடையிலான போர் இனி எந்தவித சூழலைக் கொண்டுவருமோ தெரியவில்லை.
 



Read in source website

இந்தியாவில் 1978இலிருந்து 2023 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 3,15,302 பேர் கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர், ஜவுளி - திறன்வளர்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்டவர்களில் 94 சதவீதத்தினருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் கொத்தடிமை முறையில் சிக்கியுள்ள 1.84 கோடிப் பேரும் மீட்கப்பட்டு, இந்தியாவில் கொத்தடிமை முறை ஒழிக்கப்படும் என்னும் இலக்கை 2016இல் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில், அந்த அறிவிப்புக்குப் பிறகு, 32,873 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர்.



Read in source website

ஷேக் அகமது யாசின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு வரை ஹமாஸில் துப்பாக்கி கலாச்சாரம் கிடையாது. இதனை முன்பே பார்த்தோம். அதனால்தான் ஆரம்பத்தில் இஸ்ரேலிய அரசாங்கம் அவர்களை நம்பியது. பணம் கொடுத்தது. துப்பாக்கியைத் தாங்களே கொடுத்து, மெல்ல மெல்ல அவர்களை பிஎல்ஓ.வை எதிர்க்கும் இயக்கமாக முழு நேரப் பணி செய்ய அமர்த்தலாம் என்று நினைத்தார்கள். ஆனால் ஹமாஸ் பிஎல்ஓ.வை எதிர்ப்பதில் காட்டிய தீவிரத்தைக் கவனித்தவர்கள், ‘சுதந்தர பாலஸ்தீனம்’ என்கிற ஒற்றை இலக்கில் அவர்களுக்கு இருந்த தீவிரத்தைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள். அது பிஎல்ஓ எதிர்ப்பினும் பல மடங்கு வீரியம் கொண்டது.

அந்நாளில் இஸ்ரேல் உளவுத்துறையினருக்கு ஹமாஸ் விஷயத்தில் ஒரு பெரும் பிரச்சினை இருந்தது. அந்நாளில் என்றால் எழுபதுகளின் இறுதியில் இருந்து தொண்ணூறுகளின் இறுதி வரை. ஹமாஸ் என்ற ஓர் இயக்கம் காசாவில் இருக்கிறது. நல்லது. இயக்கத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? யார் தலைவர்? முக்கியஸ்தர்கள் யார் யார்? அலுவலகம் என்று ஏதாவது உள்ளதா? அவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்கள், அல்லது எங்கே கூடுகிறார்கள்?

உண்மையில் யாருக்கும் எதுவும் தெரியாது. காசா முழுவதும் அடிக்கடி இஸ்லாமிய காங்கிரஸ் பெயரில் பொதுக் கூட்டங்கள் நடக்கும். மதச் சொற்பொழிவுகள் நடக்கும். இலவச மருத்துவ முகாம், ரத்த தான முகாம், அன்னதான முகாம் என்று ஏதோ ஒன்று எப்போதும் இருக்கும். மொசாட் உளவாளிகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இந்த இஸ்லாமிய காங்கிரஸ் நடவடிக்கைகளைக் கவனிப்பதற்காகவே காசாவில் குடியமர்த்தப்பட்டிருந்தனர்.

என்ன பிரச்சினை என்றால், காசாவிலேயே தங்கியிருந்தும் அவர்களால் ஹமாஸின் தலைவர்கள் யாரைக் குறித்தும் எந்தத் தகவலையும் பெற முடிந்ததில்லை. ஹமாஸ் நடத்திய பொதுக் கூட்டங்களில் ஊர்ப் பெரியவர்கள் பேசுவார்கள். ஊரறிந்த மதத்தலைவர்கள் வந்து பேசுவார்கள். கல்வித்துறை சார்ந்த பல பேராசிரியர்கள் பேசுவார்கள். கூட்டம் நடக்கும் இடத்துக்குப் பக்கத்தில் வசிக்கும் பொது மக்களே ஏற்பாடுகளை அருகே இருந்து பார்த்துக் கொள்வார்கள். ஒரு வரவேற்புரைக்கு, நன்றி உரைக்குக் கூட ஹமாஸ் தலைவர், செயலாளர், பொருளாளர், பகுதிவாழ் பொறுப்பாள ரென்று ஒருவர் வரமாட்டார்.

இது ஷேக் அகமது யாசினின் கண்டிப்பான உத்தரவு. ‘‘நமது முகம் வெளியே தெரியக் கூடாது. நாம் யாரென்பதை நமது செயல்கள் மட்டும்தான் காட்ட வேண்டுமே தவிர, ஊரறிய நாம் வெளிப்படுவது எதிர்காலத்தில் பல சிக்கல்களை உண்டாக்கும்’’ என்ற உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டது.

தொண்ணூறுகளின் இறுதி வரை ஹமாஸ் தலைவர்கள் யாருடைய முகமும் பொதுவெளிக்கு வந்ததில்லை. அதாவது, பிஎல்ஓ.வின் உறுப்பு இயக்கங்களினும் ஹமாஸ் அதிக ஆபத்தானது என்று இஸ்ரேல் புரிந்து கொண்டதற்கும் ஐந்தாண்டுகளுக்குப் பிறகுதான் அவர்களுக்கு ஷேக் அகமது யாசினின் புகைப்படமே காணக் கிடைத்தது.

மொசாட், ஓர் உலகப் புகழ்பெற்ற உளவு நிறுவனம். எத்தனையோ சாகசங்களை நிகழ்த்திய அமைப்பு. ஆனாலும், ஹமாஸ் விஷயத்தில் அந்நாட்களில் அவர்களால் ஒரு துப்பும் தேடிப் பிடிக்க முடிந்ததில்லை. நூறு சதவீத மக்கள் ஆதரவு, ஓர் இயக்கத்தை எப்படி அடைகாக்கும் என்பதற்கு உலகறிந்த ஒரே உதாரணம் இதுதான்.

இத்தனைக்கும் 1992-ம் ஆண்டு ஹமாஸின் ராணுவம் கட்டமைக்கப் பட்டுவிட்டது. அல் காஸம் என்பது அதன் பெயர். அதற்கு முன்னால் ஷேக் அகமது யாசின் தனக்குத் தெரிந்த போர்க்கலை உத்திகளை இயக்கத்தவருக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். இங்கொன்றும் அங்கொன்றுமாக டெல் அவிவிலும் இதர இஸ்ரேலிய நகரங்களிலும் துப்பாக்கி சூடுகள் நடக்கும். சிறிய அளவிலான வெடிகுண்டு வீச்சுகளும் இருந்திருக்கின்றன. பிரச்சினை என்னவென்றால், குறிப்பிட்ட சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் போலிசில் சிக்கிக் கொண்டு விடுவார்கள். அநேகமாக அதன் பிறகு அவர்கள் திரும்பி வந்ததில்லை.

ஒரு சரியான ராணுவத் தளபதி இருந்தாலொழிய இழப்புகளைத் தவிர்க்கவே முடியாது என்பது யாசினுக்குத் தெரியும். ஆனால் அப்படி ஒருவரை எங்கே சென்று தேடிப் பிடிப்பது? அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அவர் சென்று தேடிப் பிடிக்க அவசியமில்லாமல் தானாகவே ஒருவர் வந்து சேர்ந்தார். (எந்த வருடம் என்று சரியாகத் தெரியாது. தொண்ணூறு அல்லது தொண்ணூற்று ஒன்றாக இருக்கலாம்.) அவர் பெயர் யாஹியா அயாஷ். அடிப்படையில் அவர் ஒரு எலக்ட்ரிகல் இன்ஜினீயர்.

(தொடரும்)



Read in source website

சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என அரசியல் மட்டத்தில் குரல்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில், இத்தகைய குரல்கள் தவிர்க்க முடியாதவையாக மாறியிருக்கின்றன. இந்தப் பின்னணியில் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் முக்கியம் என்பதைச் சமூக, அரசியல், பொருளாதாரப் பின்னணியில் புரிந்துகொள்வது அவசியம்.

பிரிட்டிஷார் கணக்கெடுப்பின் தாக்கம்: சமூகத்தின் ‘ஒருமித்த வளர்ச்சி’ என்னும் இலக்கைஅடைவதற்கான தடையற்ற சூழல் வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை. தடைகளை நீக்குவதற்கான வழிமுறைகளைப் பற்றி சமூகவியல் அறிஞர்கள் பலரும் எழுதியிருக்கின்றனர். இன்றைக்கு அவர்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றி இயங்கினாலும் தடைகளை நீக்க முடியவில்லை. காரணம், தடைகள் வெகு நிதானத்தோடு உருவாக்கப்படுவனவாகவும் அதற்குச் சொல்லப்படும் நியாயங்கள் பெரும் பான்மைக் கருத்தியலாகவும் இருப்பதுதான்.

சமூக இயங்கியலில் தடையும் தடைக்கு எதிரானதிரட்சியும் அதன்வழியாக மாற்றங்கள் உருவாவதும் வழமையானதுதான் என்றாலும், இந்த ‘மாற்றங்கள்’ எளிதாக உருவாவதில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கல்வி, வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் வேண்டுமென்கிற குரல் அயோத்திதாசர் உள்ளிட்டவர்களால் அரசியல் மட்டங்களில் ஒலிக்கத் தொடங்கியிருந்தது.

அதற்கு முன்னால் அது வட்டார அளவில் குறுங்குழுவின் கருத்தியலாகவே இருந்துவந்தது. பெருமண்டல அரசியல் மட்டங்களில் அது ஒலிக்கத் தொடங்கிய பிறகுதான் பிரிட்டிஷ் அரசு அதில் உள்ள நியாயங்களைப் புரிந்துகொண்டது. அதன் விளைவாக நிர்வாக நடைமுறையில் மாறுதல் களைச் செய்ய நினைத்தது. அதற்காக அறிவியல் அடிப்படையிலான புள்ளிவிவரங்கள் தேவைப்பட்டதும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நோக்கி நகர்ந்தது.

ஒவ்வொரு நகர்விலும் தம்மைப் புதுப்பித்துக் கொண்டதோடு மட்டும் அல்லாமல் தகவமைத்துக் கொள்ளவும் செய்தது. உதாரணமாக, ஒவ்வொருமக்கள்தொகைக் கணக்கெடுப்புப் படிவத்திலும்,கேள்விகளின் எண்ணிக்கையை அதிகமாக்கிக்கொண்டே வந்த பிரிட்டிஷ் அரசு, தனிமனித வாழ்வின்உள்கூறுகளை அறிந்துகொள்ளுதல் வரை கேள்விகளை நுணுக்கமாக்கிக்கொண்டே வந்ததைச் சொல்ல முடியும். கேள்விகளின் நீக்கம், மாற்றம், சேர்ப்பு ஆகியவற்றுக்கான காரணங்களை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கைகளின் முன்னுரைகளில் காணலாம்.

புதுப்பிப்பு - தகவமைப்பு அணுகுமுறை: 1901ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகளுள் ஒருவரான ரிஸ்லி, தான் எழுதிய ‘இந்திய இனவியல் குறித்த ஆய்வு’ (The study of ethnology in India) என்னும் கட்டுரையில் ‘பழங்குடியினருக்கான தேவைகள் குறித்த கேள்வி களையும் அதற்குப் பழங்குடியினரிடமிருந்து கிடைத்தபதில்களையும் விமர்சனரீதியாக அணுகியிருந்தால், அவர்களின் வாழ்வில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்திருக்க முடியும்’ என்பார்.

இந்தக் கூற்றை இன்றைய சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான தேவையோடும் பொருத்திப் பார்க்க வேண்டும். இப்படியான புரிதலோடு பிரிட்டிஷ் கணக்கெடுப்பு அதிகாரிகள் இருந்தமையால்தான், அவர்கள் ஒவ்வொருகணக்கெடுப்பின்போதும் புதுப்பிப்பையும் தகவமைப்பையும் செய்தார்கள். இந்த அணுகுமுறைதான் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் அரசு இந்தியர்களின் பண்பாட்டு உளவியலைப் புரிந்துகொள்வதற்குக் காரணமாக அமைந்தது.

அதன் அடிப்படையில், பிரிட்டிஷ் அரசு தனது நிர்வாக முறையில் கொண்டுவந்த மாற்றம், உள்நாட்டு அரசியலில் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டிருந்தவர்களுக்கு நியாயம் செய்வதாக இருந்தது. இது பிரிட்டிஷ் அரசின் காலத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மையப்படுத்தி நிகழ்ந்த மிக முக்கியமான வரலாற்று அதிசயம். அதன் தாக்கத்தை இன்று வரை சமூகம் அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

விடுதலைக்குப் பின் பிரதிநிதித்துவம்: நாடு விடுதலைபெறும்போது ‘பிரதிநிதித்துவம்’ என்பது முன்னெப்போதைக் காட்டிலும் வலுவான கருத்தியலாக மாறியிருந்தது. அதைத் தேசியக் கட்சிகளின் பிராந்தியத் தலைவர்களில் பலர் ஆதரித்துப் பரவலாக்கியிருந்தனர். சூழலையும் நியாயத்தையும் கருதி, அரசமைப்புச் சட்டத்தில் பிரதிநிதித்துவத்துக்கான தேவையையும் காரணத்தையும் அம்பேத்கர் தெளிவாகவரையறுத்தார். அது இன்றுவரை பிற்படுத்தப்பட்டோர் மேம்பாடு அடைவதற்கான வாய்ப்பாக இருந்து வருகிறது.

மக்கள்தொகையும் குறிப்பிட்ட வேலைக்கான தகுதி படைத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில், ஏற்கெனவே இருக்கும் அரசியல்பிரதிநிதித்துவமும் பணி வாய்ப்புக்கான இடஒதுக்கீடும்மாற்றியமைக்கப்பட வேண்டும். அதே வேளையில், யாருக்கு எவ்வளவு என்கிற அளவீடும் முக்கியம். அதற்குத்தான் சாதிவாரியான விவரங்கள் தேவைப்படுகின்றன.

பேராசிரியர் கெயில் ஓம்வெட், ‘பல நூறாண்டு வரலாற்றைக் கொண்ட சாதியப் பாகுபாட்டைப் போக்குவதற்குச் சாதிவாரிக் கணக்கெடுப்பு பயனுள்ள கருவிகளை வழங்கும்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது. ‘மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதி’ என்னும் தனது கட்டுரையில் சாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசியத்துக்கு அவர் சொன்ன காரணங்கள் இன்றளவும் அப்படியே இருக்கின்றன.

சமீபத்தில் பிஹாரில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புமக்கள்தொகையின் ஏற்ற இறக்கங்கள், அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தின் தற்போதைய போதாமை நிலை ஆகியவற்றை வெளிப்படுத்தியது. அதை வைத்துக்கொண்டு வாய்ப்புகளைப் பகிர்ந்தளிப்பதில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களைத் தேசிய அளவில் பலரும் பேசுபொருளாக்கி இருக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் நவம்பர் 15 முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடங்கவிருப்பதாகத் தெரிகிறது. பின்தங்கிய சமூகங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கப்போவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. பிற மாநிலங்களிலும் இது எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணியிடங்களை நிரப்புதலும் சமூகநீதியும்: அரசின் அனைத்துத் துறைகளிலும் காலிப் பணியிடங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. உடனடியாக அவை நிரப்பப்படுவதில்லை. அதற்கு அரசுத் தரப்பிலிருந்து பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 2023 பிப்ரவரியில் ஹரியாணா அரசு 2020க்குப் பிறகு உருவான காலிப் பணியிடங்களை முற்றிலுமாக அகற்றியது. இம்முடிவு அரசுப் பணிக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியான உதாரணங்களைச் சொல்லலாம். ஆண்டுக்கணக்கில் பணியிடம் நிரப்பப்படாமல் இருப்பதால், மக்கள் தன்னிச்சையாகக் குறைந்த கூலிக்குத் தனியார் நிறுவனங்களை நாடவேண்டியிருக்கிறது. அங்கு இடஒதுக்கீடு இல்லை என்பதால், தகுதியோடு இருந்தாலும் படித்த முதல் தலைமுறையினரும் பட்டியல் சாதியினரும் எளியதாக நுழைய முடிவதில்லை.

பணி நிரந்தரத்துக்கு உத்தரவாதம் இல்லை என்பதால், பணிவாய்ப்பு பெற்றவர்களும்கூடச் சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இது சமூகத்தின் ஒருமித்த வளர்ச்சிக்கு ஒருபோதும் துணைபுரியாது. அதனால்தான் தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடும் பணிப்பாதுகாப்பும் வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துக்கொண்டிருக்கிறது.

மத்திய அரசுப் பணிகளிலும் லட்சக்கணக்கில் காலிப் பணியிடங்கள் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. இவற்றையெல்லாம் நிரப்புவது என்பது வெறுமனே பணிவாய்ப்பு வழங்குவது என்பதாக மட்டும் ஆகாது. அது சமூகநீதியோடு சம்பந்தப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்குப் பணி வழங்குவதன் வழி, அவருக்கு மட்டுமல்ல அவர் சார்ந்த சமூகத்தின் முன்னேற்றத்திலும் அரசு பங்கெடுத்திருக்கிறது என்று பொருள். ஒரு சமூகத்தின் பொருளாதார மேம்பாடு பல வழிகளிலும் நிகழலாம் என்றாலும், அரசு தனது பங்களிப்பாகப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதன் வழியாகவும் ஒரு சமூகம் பொருளாதாரத் தன்னிறைவை அடைவதற்குத் துணைநிற்க முடியும்.

இன்றைக்கு மனிதவளம் கூடியிருக்கிறது. படித்தவர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். ஆனால் நிலையான வருமானமும் நிரந்தரப் பணியும் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இதைச் சரியாகப் புரிந்துகொள்ள ஒவ்வொரு தனிமனிதனின், குடும்பத்தின் தேவைகளையும் பெற்றுள்ள நிறைவுகளையும் தொகுத்துப் பகுக்க வேண்டும். அதன் அடிப்படையில் திட்டங்களை உருவாக்க வேண்டும். அதுதான் சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட ஒருமித்த வளர்ச்சியாகும்.

இதுவரை இருந்துவரும் சமூகநீதி குறித்த பார்வைகள், சட்டங்கள் நிலவுடைமை மனநிலையின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பதற்குப் போதுமானவையாக இல்லை. காலத்துக்கேற்ற சமூகநீதி எது என்பதை மீள்பார்வை செய்யவும் அதன்வழி மக்கள் பாரபட்சமற்று மேம்பாடு அடையவும் சட்டதிட்டங்களை மறுவரையறை செய்ய வேண்டும். அதற்கான தரவுகளைச் சாதிவாரிக் கணக்கெடுப்பால் மட்டுமே தர முடியும்.

மக்கள்தொகையும் குறிப்பிட்ட வேலைக்கான தகுதி படைத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில், ஏற்கெனவே இருக்கும் அரசியல் பிரதிநிதித்துவமும் பணி வாய்ப்புக்கான இடஒதுக்கீடும் மாற்றியமைக்கப்பட வேண்டும்!

- தொடர்புக்கு: jeyaseelanphd@yahoo.in



Read in source website

சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதற்கான முக்கியக் காரணிகளில் மகப்பேறுத் துறையும் ஒன்று. தாய்மார்கள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான 2030 க்கான இலக்கை முன்னதாகவே அடைந்து, தமிழ்நாடு சாதனை புரிந்ததில் பெரும் பங்கு மகப்பேறு மருத்துவர்களுக்கு உள்ளது. பிரசவத்தின்போது இரண்டு உயிர்களைக் காப்பாற்றப் போராடு பவர்கள் அவர்கள். எனினும், உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்பதுடன், நியாயமற்ற விமர்சனங்களையும் தண்டனைகளையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பதுதான் வேதனை.

நிதர்சனமும் விமர்சனமும்: தமிழகம் முழுவதும்அரசு மருத்துவமனைகளில் ஒரு வருடத்துக்குக் கிட்டத்தட்ட 4.5 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. அவற்றில் சுமார் 50% அறுவைசிகிச்சைகள் மூலம் நடக்கின்றன. இதைத் தவிர, புற நோயாளிகள், உள் நோயாளிகள், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை, பெண்களுக்கான மற்ற அறுவை சிகிச்சைகள் (Gynecology Surgery) என ஏராளமான பணிகள் மகப்பேறு மருத்துவத் துறையினருக்கு உள்ளன. இதற்கு 2,000க்கும் மேல் மகப்பேறு நிபுணர்கள் தேவை. ஆனால், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - அரசு மருத்துவமனைகளில் 700 மகப்பேறு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.



Read in source website

ஒரு தலைமை ஆசிரியராக எனது பணி அனுபவத்தில், காலை உணவு உண்ணாமல் பள்ளிக்கு வந்து, இறை வணக்கக் கூட்டத்தில் மயங்கி விழுந்த பல குழந்தைகளைப் பார்த்துள்ளேன். பல அரசுப் பள்ளிகளில் இது அன்றாட நிகழ்வாகவே இருந்தது. உடனடித் தீர்வாகத் தாங்கள் கொண்டுவந்துள்ள மதிய உணவைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு, பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை உண்ட ஆசிரியர்கள் ஏராளம். இத்தகைய சூழலில், தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கும் காலை உணவுத் திட்டம் மிகப் பெரிய புரட்சி என்றே சொல்ல வேண்டும்.

காலை உணவு வழங்குவதற்காக அரசு ஒரு மாணவருக்கு ரூ.12.72 வழங்குகிறது. அதில் அரிசி, பருப்பு, எண்ணெய், சேமியா, ரவை போன்றவை கூட்டுறவு அங்காடிகள் மூலம் சிறந்த நிறுவனங்களின் பொருள்களாக வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்குத் தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துகளும் அடங்கிய காலை உணவு வழங்கப்படுகிறது. மாணவர்கள் காலை உணவுக்காகச் சற்று முன்கூட்டியே பள்ளிக்கு வருகை தருகின்றனர். மாணவர் வருகை சதவீதம் உயர்ந்திருக்கிறது. காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்ட பின், பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்



Read in source website

 

1972-ல் சேகரிக்கப்பட்ட சந்திர தூசி, சந்திரன் அவர்கள் நினைத்ததை விட பழமையானது என்பதைக் காட்டுகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளி வீரர்கள் அப்பல்லோ காலத்து நிலவு பாறையின் கடைசி தொகுதியுடன் திரும்பிய பிறகு, விஞ்ஞானிகள் 1972-ல் சாத்தியமற்ற ஒரு கண்டுபிடிப்பை செய்ததாகக் கூறியுள்ளனர்.

1972-ம் ஆண்டுதான் விண்வெளி வீரர்களான யூஜின் செர்னான் மற்றும் முதல் விஞ்ஞானி-விண்வெளி வீரரான ஹாரிசன் ஷ்மிட் ஆகியோர் நிலவில் தரையிறங்கிய கடைசி மனிதர்களாக - இதுவரை - பெயர் பெற்றிருக்கிறார்கள்.

செர்னான் மற்றும் ஷ்மிட் ஆகியோர் மேரே செரினிடாட்டிஸின் விளிம்பில் உள்ள டாரஸ்-லிட்ரோ பள்ளத்தாக்கில் தரையிறங்கினர். ஏனெனில், இது நிலவின் புவியியல் ரீதியாக வேறுபட்ட தளமாக கருதப்படுகிறது.

அவர்கள் மொத்தம் 110.5 கிலோகிராம் (243.6 பவுண்டுகள்) சந்திர பாறை மற்றும் மண்ணை சேகரித்தனர் - மொத்தம் 741 மாதிரிகள் சேகரித்தனர். இந்த மாதிரிகளில் மூன்று முக்கிய சந்திர பாறை வகைகள் அடங்கும்: பாசால்ட், ப்ரெசியா மற்றும் ஹைலேண்ட் க்ரஸ்டல் பாறைகள்.

நிலவின் வயது எவ்வளவு?

புதிய ஆய்வு நிலா பற்றி விஞ்ஞானிகள் முன்பு நினைத்ததை விட சுமார் 40 மில்லியன் (4 கோடி ஆண்டுகள் ஆண்டுகள் பழமையானது என்பதைக் காட்டுகிறது.

இது இப்போது சுமார் 4.46 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (அல்லது - ஜிகா ஆண்டு) உருவானதாகத் தெரிகிறது - நமது சூரிய குடும்பம் பிறந்த முதல் 110 மில்லியன் ஆண்டுகளுக்குள் அதன் உருவாக்கம் நிகழ்ந்துள்ளது.

பல சந்திர மாதிரிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன, ஆனால் ஒரு நல்ல அளவு சேமிக்கப்பட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு மெதுவாக வெளியிடப்பட்டது. ஏனெனில், விஞ்ஞானிகள் தொழில்நுட்பம் காலப்போக்கில் மேம்படும் மற்றும் சிறந்த நுண்ணறிவுகளை செயல்படுத்தும் என்று முன்கூட்டியே கணித்துள்ளனர்.

அக்டோபர் 23, 2023 அன்று புவி வேதியியல் பார்வைக் கடிதங்களில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகள் அணு ஆய்வு டோமோகிராபி (APT) எனப்படும் புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.

“இந்த ஆய்வு 51 ஆண்டுகளுக்கு முன்பு சேகரிக்கப்பட்டு பூமிக்கு கொண்டு வரப்பட்ட மாதிரியில் செய்யப்பட்டது என்ற உண்மையை நான் விரும்புகிறேன். அந்த நேரத்தில், அணு ஆய்வு டோமோகிராபி இன்னும் உருவாக்கப்படவில்லை, விஞ்ஞானிகள் இன்று நாம் செய்யும் பகுப்பாய்வு வகைகளை கற்பனை செய்திருக்க மாட்டார்கள்” என்று இந்த ஆய்வின் மூத்த ஆசிரியரான பிலிப் ஹெக் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

நிலவின் புதிய வயதை விஞ்ஞானிகள் எப்படி கண்டுபிடித்தனர்?

விஞ்ஞானிகள் சந்திர மாதிரி 72255 இலிருந்து படிகங்களை மறு ஆய்வு செய்தனர், அதில் 4.2 பில்லியன் ஆண்டுகள் பழமையான சிர்கான் இருப்பதாக அறியப்பட்டது - இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் சில பழமையானவை.

ஜிர்கான் என்பது பூமியில் இருக்கும் மிகப் பழமையான கனிமமாகும். மேலும், புவியியலாளர்கள் கூறுவது போல், நமது கிரகம் மற்றும் நமக்குத் தெரிந்த வாழ்க்கையின் உருவாக்கம் பற்றிய முக்கிய தகவல்களை இது கொண்டுள்ளது.

புதிய ஆய்வில் உள்ள விஞ்ஞானிகள் மாதிரிகளில் ஈயத்தின் கிளஸ்டரிங்கைத் தீர்மானிக்க நானோ அளவிலான இடஞ்சார்ந்த தீர்மானம் கொண்ட ஏ.பி.டி-ஐப் பயன்படுத்தினர். ஈயத்தின் விநியோகம் பொதுவாக பாறையில் உள்ள சிர்கானின் வயதைக் கணக்கிடப் பயன்படுகிறது.

நிலவின் வயதை அறிய சிர்கான் ஏன் பொருத்தமானது?

தங்கள் ஆய்வில், பூமி-சந்திரன் அமைப்பின் உருவாக்கத்திற்கான முன்னணி கருதுகோள் மாபெரும் தாக்கக் கருதுகோள் என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதினர். செவ்வாய் கிரகத்தின் அளவுள்ள தியா எனப்படும் ஒரு பெரிய பொருள், பூமி உருவாகும்போது அது மோதியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது நமது சந்திரன் என்று அழைக்கப்படும் கோளத்தில் விரைவாக உருவான குப்பைகள் வெளியேற்றத்தை ஏற்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இது சந்திர மாக்மா பெருங்கடல் என்று அழைக்கப்படுவதை உருவாக்கியது - விஞ்ஞானிகள் கூறியது, சந்திரனின் உட்புறத்தின் கலவையை விளக்குகிறது.

நிலவின் மேற்பரப்பில் அடுத்தடுத்த ஒருபெரிய பொருள்களின் மோதல்கள் இருந்தன, ஆராய்ச்சியாளர்கள் மறுவேலை மற்றும் ஆரம்ப மேலோட்டத்தை உருக்கி எழுதுகிறார்கள், சில சிர்கானை மாற்றியமைத்து மற்ற சிர்கான் பழமையானவை அல்லது அவை பாதுகாக்கப்படுகின்றன என்று கூறுகிறார்கள்.

சந்திர மாதிரி 72255-ல் இருந்து படிக துகள்களில் பாதுகாக்கப்பட்ட சிர்கானைக் கண்டறிவதன் மூலம் சந்திரனின் வயதை மீண்டும் தீர்மானிக்க முடிந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.

“பெரிய கேள்விகளைப் பற்றி நானோ அளவிலான அல்லது அணு அளவுகோல் என்ன சொல்ல முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று நான் பார்க்கிறேன்” என்று ஆய்வின் இணை ஆசிரியரான ஜென்னிகா கிரேர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

பூமியின் வயதுடன் ஒப்பிடும்போது நிலவின் வயது எவ்வளவு?

பூமியின் வயது 4.5 முதல் 4.6 பில்லியன் ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. புவியின் இந்த 4.6 பிலியன் ஆண்டுகள் வயதில், நிலவின் வயது ஒரு சிறு பகுதி மட்டுமே.



Read in source website