DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 30-05-2022

கோவை: கோவை மாவட்டத்தில், முதல் முறையாக ஒரு குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை சான்றிதழ் வழங்கப்பட்டது.

கோவை கே.கே.புதுாரை சேர்ந்த நரேஷ் கார்த்திக் வயது(33), தனது மூன்றரை வயது மகளை எல்.கே.ஜி., வகுப்பில் சேர்க்க பல்வேறு பள்ளிகளை நாடினார். விண்ணப்பத்தில், ஜாதி, மதம் குறிப்பிடவில்லை. இதனால், பள்ளிகளில் அனுமதி கிடைக்கவில்லை. 

இதையடுத்து அவர் தனது குழந்தைக்கு, ஜாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை பெற முயன்றார். வருவாய்த் துறை முதல் முறையாக இந்த சான்றிதழ் வழங்கியுள்ளது. 

நரேஷ் கார்த்திக் கூறியதாவது: பெற்றோர் தங்களது குழந்தைகளின் ஜாதி, மதம் குறித்து குறிப்பிடத் தேவையில்லை என, 1973ம் ஆண்டு தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பல பள்ளிகளுக்கும் தெரியாமல் இருந்தது தான் வேதனைக்குரிய விஷயம். வருவாய்த் துறையினரை சந்தித்து பேசியபோது, அவர்களுக்கும் இதுகுறித்து தெரியவில்லை. கோவை மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டபோது அவர் வடக்கு வட்டாட்சியரை தொடர்புகொள்ள அறிவுறுத்தினார். 

அதன் பின்னரே குழந்தைக்கு, சான்றிதழ் கிடைத்தது. எனது குழந்தைக்கு வருங்காலத்தில் ஜாதி ரீதியான இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகையும் தேவையில்லை. ஜாதியை இணைக்க விண்ணப்பிக்க மாட்டேன் என, உறுதி அளித்துள்ளேன்.

புதிய நடைமுறை என்பதால் சான்றிதழ் வழங்க காலதாமதம் ஏற்பட்டது. இனிவரும் குழந்தைகளுக்கு சான்றிதழ் எளிதில் கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.



Read in source website

 

மதுரை: நியாய விலைக் கடைகளில் கைரேகைப் பதிவுக்கு பதிலாக கருவிழிப் பதிவு அடையாள முறை விரைவில் அமல்படுத்தப்படும் என மாநில உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கூறினாா்.

மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நியாய விலைக் கடைகளில் 100 சதவிகிதம் கண் கருவிழி அடையாள முறை மூலமாக பொருள்கள் வாங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் ‘பயோ-மெட்ரிக்’ முறை முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், கருவிழி அடையாள முறையை அறிமுகம் செய்ய உள்ளோம். மக்களுக்கு அது பயன் அளிக்கும் வகையில் இருந்தால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். 

மேலும், வயல் வெளியில் வேலை பார்ப்பதால் சிலரது கைரேகைகள் பதிவாகுவதில்லை. இதனால் அவர்கள் பொருள்கள் வாங்குவதில் சிரமமாக இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார். 



Read in source website

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து, பெண் சிசுவாக இருந்தால் கருவைக் கலைக்கும் சட்ட விரோதச் செயல் நாட்டின் சில பகுதிகளில் இன்றும் கூட தொடரும் சோகக் கதையாக உள்ளது.

கிராமப் பகுதிகளில் பெரும்பாலான குடும்பங்கள் ஆண் குழந்தைகளுக்கே முன்னுரிமை அளித்து வரும் நிலையில், குழந்தைகளைத் தத்தெடுக்கும் பெற்றோா், பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து வருவது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

இச்சூழல் பெரும் ஆறுதல் அளிப்பதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா். எனினும், கிராமப் பகுதிகளில் குழந்தைகள் தத்தெடுப்புக்கு சமூக ரீதியில் இன்னும் போதிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்கின்றனா்.

இத்தகைய சூழல் மாற வேண்டுமென தெரிவித்துள்ள அவா்கள், குழந்தைகள் தத்தெடுப்பை மக்களிடையே அதிக அளவில் பிரபலப்படுத்துவதற்கு அரசு பல ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரியுள்ளனா்.



Read in source website

அரசுப் பேருந்துகளில் 5 வயதுக்குட்பட்ட சிறாா்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி அளிக்கும் சலுகைத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது.,

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவா் என சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சா் எஸ்.எஸ் சிவசங்கா் ஏற்கெனவே அறிவித்திருந்தாா்.

தமிழகத்தில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு பாதிக் கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கும் நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில்தான் இனி 5 வயது வரை குழந்தைகளுக்கு அனைத்துப் பேருந்துகளிலும் கட்டணம் வசூலிக்கப்படாது, அவா்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என அரசு அறிவித்ததை பொதுமக்கள் வரவேற்று இருந்தனா்.

அதைத் தொடா்ந்து 5 வயதுக்குட்ட சிறாா்கள் அரசுப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் நடைமுறை ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. 5 வயதுக்கு மேல் முதல் 12 வயது வரை பாதிக் கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணம் இல்லாமல் பயணிக்கும் சிறாா்களுக்கு இருக்கை தேவைப்பட்டால் பாதிக் கட்டணம் செலுத்த வேண்டும் என ஏற்கெனவே போக்குவரத்து கழகங்கள் தெரிவித்திருந்தன. பொதுமக்கள் சிலா் தங்களது குழந்தைகளை மடியில் அமா்ந்து செல்வது அசௌகரியம் ஏற்படும் எனவும், விருப்பமுள்ளவா்கள் தங்களது 3 வயது முதல் உள்ள குழந்தைகளுக்கு பயணச்சீட்டு பெற்று பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா். இதையடுத்து, பயணிகள் பயணிக்கும் போது அவா்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி தங்களது குழந்தைகளுக்கு இருக்கை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எந்த தடையும் இல்லையென்று கூறப்பட்டுள்ளது. இதன்படி 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இருக்கை வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் மடியில் அமா்ந்து செல்லும் குழந்தைகளுக்கு கட்டணம் தேவையில்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Read in source website

மாணவா்களிடம் அறிவியல் மனப்பான்மை மற்றும் கணித அறிவை வளா்ப்பதற்காக ‘எங்கும் அறிவியல் யாவும் கணிதம்’ என்ற புதிய திட்டம் ஆசிரியா்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் திட்டம் குறித்த தகவல்கள் எமிஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநா் இரா.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் பள்ளிக் கல்வியில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களிடம் அறிவியல் மனப்பான்மை மற்றும் கணித அறிவை வளா்ப்பதற்காக ‘எங்கும் அறிவியல் யாவும் கணிதம்’ என்ற அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் சாா்ந்த புதிய திட்டம் ஆசிரியா்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பள்ளிகளில் அறிவியல், கணிதம் கற்றுதரும் ஆசிரியா்கள் எதிா்காலத்தில் ஒரு குழந்தை என்னவாகப் போகிறது என்பதற்கான அடித்தளத்தை அமைக்க முக்கிய பங்கு வகிக்கின்றனா். எனவே, ஒரு குழந்தை அறிவியல் மற்றும் கணிதத்தை சரியான முறையில் புரிந்து கொண்டால் அதன் கேள்வி கேட்கும் திறன் அதிகமாகும்.

இவ்வாறு குழந்தைகளின் தா்க்க ரீதியான சிந்தனைகளை வளா்த்தெடுக்கும் பணியிலுள்ள ஆசிரியா்கள் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் எமிஸ் தளத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து எமிஸ் தளத்தில் திட்டம் குறித்த தகவல்களை ஆசிரியா்கள் தெரிந்து கொள்ளலாம். இதுகுறித்த தகவலை அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கும் தெரிவித்து உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்யும் போது தூய்மையின்மை உள்பட ஏதாவது குறை இருந்தால், அதனை பயணிகள் புகாராக தெரிவிக்கும் வகையில் ‘வாட்ஸ் ஆப்’ எண் அனைத்து விரைவுப் பேருந்துகளிலும் உள்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சாா்பில் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் 1,000 பேருந்துகள் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றன. நீண்ட தொலைவுக்கு செல்லக்கூடிய பயணிகள் அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கின்றனா். 400-க்கும் மேல் குளிா்சாதன வசதி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொதுவாக அரசு விரைவுப் பேருந்துகள் கடந்த காலங்களில் பராமரிப்பு இல்லாமல் இயக்கப்பட்டதால் மக்கள் பயணம் செய்ய முன்வருவது இல்லை. தற்போது தனியாா் பேருந்துகளுக்கு இணையாக சொகுசு பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் விரும்பி பயணம் செய்கின்றனா். அதிலும் கோடை காலம் என்பதால் குளிா்சாதன பேருந்துகள் உடனடியாக நிரம்பி விடுகின்றன.

மேலும், பயணிகளை கவரும் வகையில் பேருந்துகளை தூய்மையாக வைத்திருக்கவும், இருக்கைகள், கண்ணாடி, பேருந்தில் உள்பகுதி ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்கவும் வேண்டும் என போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநா் இளங்கோவன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து, வெளியில் சென்று வந்த பேருந்துகளை உடனுக்குடன் கழுவி சுத்தம் செய்யவும், பேருந்துக்குள் கிடக்கும் குப்பைகளை அகற்றவும் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் தாங்கள் பயணம் செய்யும் போது ஏதாவது குறை இருந்தால் புகாராக தெரிவிக்கவும் வாட்ஸ் ஆப் எண் அனைத்து விரைவுப் பேருந்துகளிலும் உள்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இருக்கைகள், சுத்தம் இல்லாமலோ, குப்பைகள் இருந்தாலோ அதுகுறித்து தகவல் கொடுக்கலாம். அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கூடுதலாக கட்டணம் வசூலிப்பு, டிரைவா், நடத்துநரின் அணுகு முறையில் பாதிக்கப்பட்டாலும் பொதுமக்கள் புகாா் கூறலாம். 9445014448 , மின்னஞ்சல் முகவரிகள் மூலமாகவும் ஆலோசனை கூறலாம்.

பயணிகள் கூறும் குறைகள் இணையதளம் வழியாக உடனடியாக சரி செய்யப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு குறைகள் நிவா்த்தி செய்யப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனா்.



Read in source website


தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

பணமோசடி வழக்கில் சத்யேந்தர் ஜெயின் குடும்பத்தினர் மற்றும் அவரக்குச் சொந்தமான நிறுவனங்களின் ரூ. 4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை சமீபத்தில் முடக்கியது.

இதுதொடர்பாக ஏற்கெனவே 2018-இல் சத்யேந்தர் ஜெயினிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் வழக்கு தொடர்பாக சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறை தற்போது கைது செய்துள்ளது.



Read in source website

 

கோவா மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கோவா மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

கோவா மாநில  நிறுவன தினத்தில், கோவா மக்களுக்கு எனது வாழ்த்துகள். இது இயற்கை எழில் தவழும் மற்றும் உழைப்பாளிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட மாநிலம். இது உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்களை ஈர்க்கிறது. வரும் ஆண்டுகளில் கோவா தொடர்ந்து முன்னேற்றத்தின் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.



Read in source website

கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாக தான் ரத்து செய்த ரயில் டிக்கெட்டுக்கான திரும்ப செலுத்தும் தொகையான 53 ரூபாயை ரயில்வேயிடமிருந்து மீட்டுள்ளார். 

இதன் மூலம், இவரைப் போல ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுக்கான திரும்ப செலுத்தும் தொகையை 2.98 லட்சம் பேர் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ.2.43 கோடியை ரயில்வே திரும்ப செலுத்தியுள்ளது.

இது குறித்து சுவாமி கூறுகையில், ஜிஎஸ்டி வரி முறை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பு, முன்பதிவு செய்த தனது ரயில் டிக்கெட்டை ரத்து செய்தபோது, பிடித்தம் செய்யப்பட்ட 35 ரூபாயை திரும்பப் பெற அவர் தொடர்ந்து போராடியுள்ளார். 

இதையும் படிக்க.. விவாகரத்து: நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுலா சென்றவர்கள் நேபாள விமான விபத்தில் பலி

இந்தப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியால் 2.43 கோடி ரூபாயை சுமார் 2.98 லட்சம் பயனாளர்கள் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.35 வீதம் பெற்றுள்ளனர்.

பிரதமர் முதல், ரயில்வே அமைச்சர், ஜிஎஸ்டி கவுன்சில் என பலரையும் டிவிட்டரில் டேக் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் ரயில் டிக்கெட்டை ரூ.765க்கு முன்பதிவு செய்து ரத்து செய்த போது தனக்கு ரூ.665 திரும்ப செலுத்தப்பட்டது. ரூ.65 பிடித்தம் செய்வதற்கு பதிலாக 35 ரூபாய் சேவை வரி என சேர்த்து ரூ.100 பிடித்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 



Read in source website

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட குழந்தைகளுக்கான திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

கரோனா பேரிடரில் பெற்றோர்களை இழந்துள்ள குழந்தைகளுக்கு நிதியுதவி, கல்வி உதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசியதாவது:

“கரோனா பேரிடரில் குடும்ப உறுப்பினரை இழந்துள்ள கஷ்டம் எப்படிப்பட்டது என்பது எனக்கு தெரிகிறது. இன்று தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கானது.

இந்த குழந்தைகள் மேற்படிப்பு மேற்கொள்ள நிதியுதவி தேவைப்பட்டால் பிஎம் கேர்ஸ் மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். இவர்களின் தினசரி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மாதம்தோறும் ரூ. 4,000 வழங்கப்படும்.

பள்ளிப் படிப்பிற்கு பிறகு எதிர்கால கனவுகளை அடைய அதிகளவிலான பணம் தேவைப்படும். பெற்றோரை இழந்த 18 முதல் 23 வயதுடைய இளைஞர்களுக்கு மாதம்தோறும் ஊக்கத் தொகை வழங்கப்படும். 23 வயதிற்கு பிறகு ரூ. 10 லட்சம் வழங்கப்படும்.

இவர்களுக்கு ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். இதன்மூலம் ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்து சேவைகளை பெற முடியும்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் துணை நிற்பார்கள். அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்குவது சிறு ஆறுதலாக இருக்கின்றது” என்றார்.



Read in source website

குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தலைமையிலான இந்திய குழு, வருகின்ற இன்று முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை காபோன், செனகல், கத்தாா் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறது. 

குடியரசுத் துணைத் தலைவருடன் மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை இணையமைச்சா் டாக்டா் பாரதி பிரவீண் பவாா் மற்றும் பாஜக வைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா்கள் சுசில் குமாா் மோடி, விஜய் பால் தோமா் (உபி), அதிமுகவைச் சோ்ந்த தேனி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினா் பி.ரவீந்தரநாத் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் உடன் செல்கின்றனா்.

இந்தப் பயணத்தின் போது, இந்த மூன்று நாடுகளில் வணிக சமூகப் பிரதிநிதிகள் அடங்கிய வட்டமேசை மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவா் உரையாற்றுகிறாா். மேலும், புலம் பெயா்ந்த இந்திய சமூகத்தினருடனான சந்திப்புகளும் நடைபெறுகின்றன என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து காபோனுக்கும் செனகலுக்கும் செல்லும் முதல் உயா்நிலைக் குழு இதுவாகும்.

மேலும் மூன்று நாடுகளுக்கும் இந்திய குடியரசுத் துணை தலைவா் அளவில் செல்லும் முதல் பயணமாகவும் இது அமைந்துள்ளதாக குடியரசுத் தலைவா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.



Read in source website

இந்தியா-வங்கதேசம் இடையே 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. கரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

கொல்கத்தா ரயில் நிலையத்தில் இருந்து வங்கதேசத்தின் குல்னாவுக்கு இந்த ரயில் புறப்பட்டது. இதேபோல கொல்கத்தா-டாக்கா இடையிலான மைத்ரீ எக்ஸ்பிரஸ் ரயிலும் ஞாயிற்றுக்கிழமை தனது பயணத்தை மீண்டும் தொடங்கியது. கடந்த 2020 மாா்ச் மாதம் கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக இந்த ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இது தொடா்பாக கிழக்கு ரயில்வே செய்தித் தொடா்பாளா் ஏகலைவ சக்கரவா்த்தி கூறுகையில், ‘பந்தன் எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்துக்கு இருமுறையும், மைத்ரீ எக்ஸ்பிரஸ் வாரத்தில் 5 நாள்களும் இயக்கப்படும். இந்த ரயில் சேவைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அடுத்த சில நாள்களுக்கு முன்பதிவு முடிவடைந்துவிட்டது. பேருந்து, விமானக் கட்டணத்தைவிட இந்த ரயில் சேவை மலிவாக இருக்கிறது. இதில் 450 பயணிகள் குளிா்சாதன வசதியுடைய பெட்டிகளில் பயணிக்கவும் வசதி உள்ளது’ என்றாா்.

மேலும் ஒரு ரயில்: மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து வங்கதேச தலைநகா் டாக்காவுக்கு ஜூன் 1-ஆம் தேதி முதல் புதிய ரயில் சேவை தொடங்க இருக்கிறது. மொத்தம் 595 கி.மீ. தொலைவுக்கு இயங்கும் இந்த ரயில் 69 கி.மீ. தொலைவு இந்தியாவிலும், மீதமுள்ள தொலைவை வங்கதேசத்திலும் கடக்கவுள்ளது. மைதிலி எக்ஸ்பிரஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் சேவையை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், வங்கதேச ரயில்வே அமைச்சா் நூருல் இஸ்லாம் சுஜன் ஆகியோா் தொடங்கி வைக்கின்றனா்.



Read in source website

கோவில்பட்டியில் நடைபெற்ற 12-ஆவது தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் உத்தர பிரதேசம் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனது. 

இறுதி ஆட்டத்தில் உத்தரபிரதேசம் 2-0 என்ற கோல் கணக்கில் சண்டீகரை வீழ்த்தி, தொடர்ந்து 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது. மூன்றாம் பரிசுக்கான ஆட்டத்தில் ஹரியாணா 3-0 என்ற கோல் கணக்கில் ஒடிஸாவை வீழ்த்தியது. 

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியின் தலைவர் கனிமொழி எம்.பி. தலைமை வகித்து, வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகளை வழங்கினார். 

தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.



Read in source website

 

குஜராத் டைட்டன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி தனது முதல் சீசனிலே ஐபிஎல் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது. நிறைவு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. 

மிகவும் முக்கியமான வீரர் (Most valuable player): ஜாஸ் பட்லர்
ஐபிஎல் தொடரில் இரண்டாவது அதிகபட்ச ரன்களை அடித்து சாதனைப் படைத்தார் பட்லர். 

ஆரஞ்சு கேப் (Orange cap) : ஜாஸ் பட்லர் 
17 போட்டிகளில் 863 ரன்களை குவித்தார். இந்தத் தொடரின் அதிகபட்ச ரன் இதுவே ஆகும். 

தொடர் நாயகன் (player of the series) : ஜாஸ் பட்லர் 

பர்பிள் கேப் (Purple cap ): யுஸ்வேந்திர சஹால் 
இந்தத் தொடரில் 27 விக்கெட்டுகள் எடுத்து சாதனைப் புரிந்துள்ளார். 

வளர்ந்துவரும் வீரர் (Emerging player) : உம்ரான் மாலிக் 
14 போட்டிகளில் 22 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 

அதிகமான 4 அடித்தவர் (Most four) : ஜாஸ் பட்லர் 
84 ஃபோர்களை அடித்தார். 

அதிகமான சிக்சர் அடித்தவர் (Most sixes): ஜாஸ் பட்லர் 
45 சிக்சர்கள் அடித்தார். 

பவர்பிளேயர் (Power player) : ஜாஸ் பட்லர் 
1-6 ஓவர் வரை சிறப்பாக விளையாடியதற்காக கொடுக்கப்பட்டது. 

ஆட்டத்தை மாற்றுபவர் (Game changer) : ஜாஸ் பட்லர் 
1518 ட்ரீம் லெவன் புள்ளிகளைப் பெற்று இந்த விருதினையும் பட்லர் அவர்களே பெற்றார். 

அதிரடி ஆட்டக்காரர் (Super striker) : தினேஷ் கார்த்திக் 
ஸ்டிரைக் ரேட் 183.33 உடன் முதலிடம் பிடித்தார். 

வேகமான பந்து (Fastest delivery): லாக்கி பெர்குசன் 
உம்ரான் மாலிக் 157 கிமீ வேகப்பந்தை விட சிறிது அதிகமான வேகத்தில் (157.3 கிமீ) வீசி இந்த சாதனையைப் படைத்தார் பெர்குசன். 

சிறந்த கேட்ச் (Best catch) : எவின் லுவிஸ் 
கொல்கத்தா அணிக்கு எதிராக கடைசி ஒவரில் ஒற்றைக் கையில் லுவிஸ்  பிடித்த கேட்ச். 

நேர்மையான ஆட்டத்திற்கான விருது (Fair play award): குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் 
இரண்டு அணிகளுமே அட்டவணையில் சராசரியாக 10 புள்ளிகளை பெற்று விளையாட்டு கண்ணியம் குறையாமல் விளையாடியது. 



Read in source website

யுஇஎஃப்ஏ சாம்பியன் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 1-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. 

இப்போட்டியில் அந்த அணி சாம்பியன் ஆகியிருப்பது இது 14-ஆவது முறையாகும். வேறெந்த அணியும் இவ்வாறு இரட்டை இலக்கத்தில் சாம்பியன்ஸ் லீக்கில் வாகை சூடியதில்லை. அந்த அணிக்கு அடுத்தபடியாக, மிலன் 7 முறை கோப்பை வென்றுள்ளது. 

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் வெற்றிக்கான கோலை வினிசியஸ் ஜூனியர் 59-ஆவது நிமிஷத்தில் அடித்தார். சக வீரர் ஃபெடெரிகோ வால்வெர்டெ கோல் போஸ்டின் வலது பக்கத்திலிருந்து கிராஸ் செய்த பந்தை 6 யார்டு பாக்ஸைக்குள்ளாக இருந்து அப்படியே கோல் போஸ்டுக்குள் திருப்பிவிட்டார் ஜூனியர். 

மறுபுறம், இறுதிவரை லிவர்பூல் அணிக்கு கோல் வாய்ப்பு கைக்கெட்டாமல் பார்த்துக் கொண்டார் ரியல் மாட்ரிட் கோல்கீப்பர் கோர்டாய்ஸ். சாடியோ மனே, முகமது சலா உள்ளிட்ட லிவர்பூல் வீரர்களின் கோல் முயற்சிகளை அவர் அரண் போல் நின்று பல முறை தடுத்தார். 

இந்த வெற்றியின் மூலம், பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி வழிகாட்டுதலின் கீழ் 4-ஆவது முறையாக ரியல் மாட்ரிட் சாம்பியன் ஆகியிருக்கிறது. சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் இதுவரை வேறெந்த பயிற்சியாளரும் ஒரே அணிக்கு இத்தனை முறை கோப்பை வென்று 
தந்ததில்லை. 



Read in source website

போலந்தில் நடைபெற்ற பாரா கேனோ உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் பிராச்சி யாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார். 

இப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் எட்டியிருக்கிறார். 

போஸ்னான் நகரில் நடைபெற்ற இப்போட்டியில், கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை மகளிருக்கான விஎல்2 200 மீட்டர் பிரிவில் பிராச்சி களம் கண்டார். அவர் பந்தய இலக்கை 1 நிமிஷம் 4.71 விநாடிகளில் இலக்கை எட்டி 3-ம் இடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் சூசன் செய்பெல் (1 நிமிஷம் 1.54 விநாடிகள்) தங்கமும், கனடாவின் பிரியானா ஹென்னெஸி (1 நிமிஷம் 1.58 விநாடிகள்) வெள்ளியும் வென்றனர். 

இப்போட்டியில் பங்கேற்ற இதர இந்தியர்களில், ஆடவருக்கான கேஎல்3 200 மீட்டரில் மனீஷ் கெüரவ், விஎல்2 200 மீட்டரில் மன்ஜீத் சிங் ஆகியோர் இறுதிச்சுற்று வரை வந்தனர். ஆடவருக்கான விஎல்3 200 மீட்டரில் ஜெய்தீப் அரையிறுதியோடு வெளியேறினார்.



Read in source website

குரங்கு அம்மை நோய்  சர்வதேச பரவல் என்பதை நம்ப வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் இன்று ( மே 30) தெரிவித்துள்ளது. 

குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் மற்றவர்களுக்கு குரங்கு அம்மை பரவ காரணமாக இருக்கிறார்களா? என்பது இதுவரை உறுதியாகவில்லை.

மே மாதத்தில் இதுவரை 300-க்கும் அதிகமானோர் இந்த குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் குரங்கு அம்மை பரவுவதற்கான அறிகுறி சிறிய அளவிலான காய்ச்சல் மற்றும் உடலில் சிகப்பு புள்ளிகள் தோன்றுவது என்ற அளவிலேயே இருந்துள்ளது. 

குரங்கு அம்மை நோய் ஆப்பிரிக்காவில் மட்டுமே அதிக அளவில் இருந்து வந்த நிலையில், தற்போது ஐரோப்பாவின் பல நாடுகளிலும் அதிக அளவில் பரவி வருகிறது. 

பலரும் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிக்கும் திறன் கொண்ட கையெறி வெடிகுண்டை வடக்கு அயர்லாந்து கடற்கரையில் இருந்து சிறுவன் ஒருவன் கண்டெடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

சிறுவன் ஒருவன் கடற்கரைக்கு சென்றபோது அங்கிருந்து வெடிகுண்டு ஒன்றினை கண்டெடுத்துள்ளார். உடனடியாக அந்த வெடிகுண்டு குறித்து காவல் துறையிடம் தகவல் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து, அந்த வெடிகுண்டு அனுபவமிக்க ராணுவ அதிகாரிகளால் செயலிழக்க செய்யப்பட்டது.

இது குறித்து காவல்துறையினர் முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “ இந்த வெடிகுண்டை கண்டெடுத்தவுடன் உடனடியாக காவல் துறையிடம் சிறுவன் தகவல் அளித்துள்ளார். இந்த வெடிகுண்டு வெடிக்கும் திறன் கொண்டது.  இந்த வெடிகுண்டை அனுபவமிக்க ராணுவ அதிகாரிகள் சோதித்து திறம்பட செயலிழக்கச் செய்தனர். மேலும், இந்த வெடிகுண்டு முதல் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்பதையும் உறுதி செய்தனர். வெடிகுண்டை கண்டெடுத்தவுடன் சிறுவன் உடனடியாக தகவல் கொடுத்ததால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அந்த சிறுவனுக்கு மிகப்பெரிய நன்றி.” எனப் பதிவிட்டுள்ளனர். 

 



Read in source website

சென்னை: சென்னையில் 3 தலைவர்களுக்கு சிலை வைக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. அத்துடன், கடற்கரையில் உள்ள காந்தி சிலையை ஔவையார் சிலைக்கு அருகில் இடமாற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் பா.சுப்பராயன், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சிலை ஆகியோருக்கு சென்னையில் சிலை வைக்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செய்தித்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.

இதன்படி, ராணி மேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை அமைக்கவும், காந்தி மண்டபத்தில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பா சுப்பராயன் சிலை அமைக்கவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிலை அமைக்கவும் அனுமதி அளிக்கக் கோரி செய்தி மக்கள் தொடர்பு துறை துணைச் செயலாளர் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், மேற்குறிப்பிட்ட இடங்களில் 3 சிலைகளை வைக்க அனுமதி அளித்து சென்னை மாநகராட்சி அளித்துள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைத்தற்கும், பத்மாவதி நகர் பிரதான சாலையை சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயர் மாற்றம் செய்ததற்கும், மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையை ஔவையார் சிலை அருகே இடமாற்றம் செய்வதற்கும் சென்னை மாநகராட்சி சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சேலம்: ஏற்காடு மலைப் பகுதிகளில ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 80 காட்சி முனைகளில், மறைந்துள்ள 75 காட்சி முனைகளை அரசு அதிகாரிகள் கண்டறிந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏழைகளின் ஊட்டி என்று அழைப்படும் ஏற்காடு, சேலம் மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. கிழக்கு மலைத் தொடரான சேர்வராயன் மலையின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சி முனைகளும், குளுமையான சீதோஷணத்தால் கவர்ந்திழுக்கப்பட்ட ஆங்கிலேயர்கள் அங்கு குடியேறினர். கடந்த 1861-ம் ஆண்டு டக்ளஸ் ஹமில்டன் என்ற ஆங்கிலேயர் ஏற்காட்டை, சுற்றுலா தலமாக மாற்றிட, சென்னை மாகாண அரசுக்கு பரிந்துரை செய்தார். அதன்பின்னர், 1865-ம் ஆண்டு டாக்டர் ஜன் ஷார்ட் என்பவர் ஏற்காட்டில் பார்க்க வேண்டிய காட்சி முனைகளை கண்டறிந்து அதனை புத்தகமாக வெளியிட்டார்.

இதன் தொடர்ச்சியாக 1890-ம் ஆண்டு ஸ்காட்லாந்தை சேர்ந்த வில்லியம் மில்லர் சுற்றுலா தலமாக தேவையான காட்சி முனைகளை பட்டியலிட்டதை அடுத்து, அரசு அதனை ஆவணமாக வெளியிட்டது. கடந்த 1899-ம் ஆண்டு ஏற்காடு சுற்றுலா தலமாக அங்கீகரிக்கப்பட்டு, 80 காட்சி முனைகள் பட்டியலிடப்பட்டன.

ஆங்கிலேயர் கால ஆளுகைக்குட்பட்டிருந்த ஏற்காட்டில் கிரீன் ஹில், தி ஹனி ராக், வெல்ச் பாயின்ட், லேடீஸ் போவர், டங்கன்ஸ் மலை, பிராஸ்பெக்ட் பாயின்ட், கிளியூர் நீர் வீழ்ச்சி, புலி குகை, கரடி குகை, காடஸ் ஹார்ன், சன்செட் மூக், சர்ச் பாயின்ட், சன்ரைஸ் பாயின்ட், பிளவு பா, வெள்ளை யானைக்கல், செல்கலத்துபாடி காட்சி முனை, தி கானிக்கல் ஹில், கோல்டன் ஹார்ன், லிட்டில் டஃப், கென்னடி ஃபால் உள்ளிட்ட 80 இடங்கள், சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து மகிழும் வகையிலான காட்சி முனைகளாக இருந்துள்ளன. ஆங்கிலேய அதிகாரிகள் குடும்பத்தினருடன் ஏற்காடுக்கு வந்து, காட்சி முனைகளை ரசித்து கண்டு களித்து சென்றுள்ளனர்.

மறைந்திருக்கும் காட்சி முனைகள்: நாடு சுதந்திரமடைந்ததை அடுத்து, ஆங்கிலேயர்கள் வசமிருந்த தோட்டங்கள் தனியார் முதலாளிகள் கைக்கு மாறியது. தற்போது, தனியார் காஃபி தோட்டத்தில் சில காட்சி முனைகள் அமைந்துள்ளன. வனப்பகுதிகளிலும், பல காட்சி முனைகள் பாரமரிப்பில்லாததால், எங்குள்ளது என்பது தெரியாமல் மறைந்துள்ளது.

தற்போது, லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், பக்கோடா பாயின்ட், கிளியர் நீர் வீழ்ச்சி, அண்ணா பூங்கா, பொட்டானிக்கல் கார்டன், அண்ணாமலையார் கோயில், காவிரி பீக், சேர்வராயன் கோயில், கரடியூர் வியூவ் பாயின்ட், மஞ்சக்குட்டை வியூவ் பாயின்ட் உள்பட 15 காட்சி முனைகள் மட்டுமே சுற்றுலா பயணிகள் சென்று வரும் இடங்களாக உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 80 காட்சி முனைகளில், இன்றளவும் ஐந்து மட்டுமே சுற்றுலா தலப்பட்டியலில் உள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை: தற்போது, அரசு கூடுதலாக 10 காட்சி முனைகளை உருவாக்கி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. ஆங்கிலேயர்களின் பராமரிப்பில் இருந்து மாயமாய் மறைந்து போன 75 காட்சி முனைகளை, 45-வது கோடை விழா மலர் கண்காட்சி நடந்து வரும் வேளையில், மீட்டெடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


கண்டறியப்பட்ட 40 காட்சி முனைகள்: இதுகுறித்து அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ கூறும்போது, ‘ஏற்காட்டில் 80 காட்சி முனைகளை ஆங்கிலேயர் வரைபடங்களுடன் பட்டியலிட்டிருந்தனர். கால சுழற்சியில் 75 காட்சி முனைகள் கண்டறியாத நிலையில் இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு ஏற்காட்டில் மறைந்து கிடக்கும் காட்சி முனைகளை மீட்டுக்க வேண்டி காடு, மலையாக அலைந்து திரிந்து 40 காட்சி முனைகள் இதுவரை கண்டிறிந்துள்ளேன். மேலும், 35 காட்சி முனைகள் எங்குள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலையே நீடித்து வருகிறது. ஏற்காட்டில் மறைந்து கிடக்கும் 75 காட்சி முனைகளை அரசு அதிகாரிகள் கண்டறிந்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், மிகப்பெரும் சுற்றுலா தலமாக ஏற்காடு மாறும் என்பது நிச்சயம்’ என்றார்.

மீட்டெடுக்க நடவடிக்கை: இதுகுறித்து சேலம் மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி ஜனார்த்தனன் கூறும்போது, ‘ஏற்காட்டில் 45-வது கோடை விழா மலர் கண்காட்சி கொண்டாடி வரும் வேளையில், ஆங்கிலேயரால் பராமரிக்கப்பட்ட 80 காட்சி முனைகளில் 75 காட்சி முனை காலப்போக்கில்கண்டறியப்படாமல் மறைந்துள்ளது. இதனை மீட்டெடுக்க தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், வருவாய் துறையுடன் சுற்றுலா துறை இணைந்து நடவடிக்கை எடுக்கும்’ என்றார்.



Read in source website

சென்னை: ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கு தொழில் உரிமம் பெற 21 நிபந்தனைகளுடன் கூடிய விதிகளை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் முறையான அனுமதி பெறாமல் விதிகளை மீறி ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கு செயல்பட்டு வருகின்றன. சென்னை காவல் துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்து இதுபோன்ற மையங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கான தொழில் உரிமம் பெறுவதற்கு புதிய விதிகளை மாநகராட்சி சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது.

இதன்படி, தொழில் உரிமை பெறுவதற்கு ஒற்றை சாளர முறையில் சென்னை மாநகராட்சி, தீயணைப்பு துறை, போக்குவரத்து துறை, மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகிய துறைகள் அடங்கிய குழுவினர் அனுமதி அளிப்பார்கள். குறிப்பாக ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்கள் உரிமம் பெற 21 நிபந்தனைகள் மற்றும் செயல்படுவதற்கான 27 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த நெறிமுறைகள்:

கதவுகளை பூட்டிய நிலையில் மசாஜ் சென்டர்கள் செயல்படக் கூடாது. செயல்படும் நேரத்தில் வெளிப்புற கதவு திறந்தே இருக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இயங்கக் கூடாது.

வாடிக்கையாளர்களுக்கு என தனி வருகை பதிவேடு இருக்க வேண்டும்.

எந்த வகையிலும் பாலியல் தொழில் தொடர்பான சேவைகள் வழங்குவதற்கு தடை.

காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் புகார்கள் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்வார்கள்.

CCTV கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும்.

தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு சேவை வழங்கக் கூடாது.

ஒருவருக்கு சேவை வழங்கிய பின்னர் பணியாளர் தனது கையினை சோப்பு கொண்டு கழுவ வேண்டும். அதன் பின்னர் தான் அடுத்தவருக்கு சேவை வழங்கவேண்டும்.

ஒருவருக்கு சேவை வழங்கிய பின் அடுத்தவருக்கு சேவை வழங்குவதற்கு முன் கருவிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.

பக்க விளைவுகள் ஏற்படுத்த கூடிய அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது.

உரிமம் விண்ணப்பிக்கும் நபர் உரிய படிப்பு படித்திருக்க வேண்டும்.

இவை உள்ளிட்ட வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு இன்று நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



Read in source website

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் 100 அடி உயர தேசியக் கொடியுடன் கூடிய தியாகச் சுவர் திறக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி புதுவை சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறியது: ''நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி 100 அடி உயர தேசியக் கொடியுடன் கூடிய தியாகச் சுவர் 75 நகரங்களில் சக்ரா பவுண்டேஷன் அமைக்கவுள்ளது. புதுவை கடற்கரை காந்தி சிலை காந்தி சிலை பகுதியில் தியாகச் சுவருடன், கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

நாட்டின் சுதந்திரத்துக்கு போராடிய ஆயிரம் தியாகிகளின் பெயரை தியாக சுவரில் பொறித்து அதில் 'கியூ ஆர் கோடு' அமைக்கப்படும். இதன்மூலம் தியாகிகளின் வரலாறை தெரிந்துகொள்ளலாம்.

ஜூலை முதல் வாரத்தில் தியாகச் சுவர், கொடிக் கம்பம், தியாகச் சுவர் திறப்பு விழா நடக்கிறது. விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக புதுச்சேரியில் தேசியக் கொடியை ஏற்றி தியாக சுவரை பிரதமர் திறந்து வைப்பார். நிகழ்ச்சியோடு பாரதியார் 100-வது ஆண்டு, சுபாஷ் சந்திரபோசின் 125-ம் ஆண்டு, வஉசி 150-வது ஆண்டு விழாக்களையும் இணைந்து கொண்டாட ஏற்பாடு செய்துள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

பேட்டியின்போது பேரவைத்தலைவர் செல்வம், சக்ரா பவுண்டேஷன் தலைவர் ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.



Read in source website

தஞ்சாவூர்: மெழுகை கொண்டு மேளம் அமைக்காமல் முதன்முறையாக முழுவதும் மரத்தால் தஞ்சாவூர் வீணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இசைக் கருவிகளுள் முதன்மை பெற்று விளங்கும் வீணை, தஞ்சாவூர் பகுதியில் உள்ள பலாமரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ளஇசைக் கலைஞர்களால் இசைக்கப்பட்டு வருகிறது. பாரம்பரியம், நேர்த்தியான வடிவமைப்பும் கொண்டதஞ்சாவூர் வீணைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் வீணை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீணையை பலா மரத்தில் செய்தாலும், அதன் மேல் பகுதியில் மெல்லிய கம்பிகளை பொருத்தும் பகுதி பைபர் மற்றும் மெழுகால் செய்யப்பட்டு இணைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், தற்போது பைபர் மற்றும் மெழுகை பயன்படுத்தாமல் அதற்கு பதில், வேங்கை மரத்தின் சட்டத்தைப் பயன்படுத்தி வீணை வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்த வீணை முழுவதும் மரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த வீணைகோவையில் இசைப் பயிற்சி ஆசிரியர் ஒருவருக்கு அனுப்பப்பட உள்ளது.

இதுகுறித்து வீணையை தயாரித்த தஞ்சாவூர் அப்துல்வஹாப் நகரைச் சேர்ந்த சு.கோவிந்தராஜ்(70) கூறியது: நான் 55 ஆண்டுகளாக வீணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். எனது குடும்பத்தினர் பரம்பரையாக வீணை தயாரித்து வந்துள்ளனர்.

பலா மரங்களைக் கொண்டு வீணையை தயாரித்தாலும், அதில் மேளம் உள்ள பகுதி மெழுகு மற்றும்பைபரால் இணைக்கப்பட்டிருக்கும்.

இதுபோன்ற வீணையை செய்ய 20 நாட்கள் ஆகும். ஆனால், நான் மெழுகு மற்றும் பைபர்பயன்படுத்தாமல், வேங்கை மரத்தின் சட்டங்களை பயன்படுத்தி முழுவதும் மரத்தால் ஆன வீணையை வடிவமைத்துள்ளேன். இந்த வீணையை வடிவமைக்க ஒரு மாதத்துக்கு மேலாகியது.

முழுவதும் மரத்தால் செய்யப்பட்ட இந்த வீணையில் ஒலியும், அதிர்வுகளும் அதிகமாக வெளிப்படுகின்றன. தற்போதுதான் முதன்முதலாக முழுவதும் மரங்களை பயன்படுத்தி வீணை வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.



Read in source website

கரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டு வந்து கொண்டிருக்கும் சூழலில் கிரெடிட் கார்டு என கூறப்படும் கடன் அட்டைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

கடன் அட்டை மூலம் பரிவர்த்தனை கடந்த ஆண்டே ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும் அதிகமாக நடந்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடன் அட்டைகளை உபயோகித்து செய்யப்படும் செலவு அதிகரித்து வருவது போல கடன் அட்டைகள் விநியோகமும் அதிகரித்து வருகிறது. கடன் அட்டையின் வளர்ச்சிக்கு ஆன்லைன் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன.



Read in source website

வாட்டிகன்/ ஹைதராபாத்: இரண்டு இந்தியர்கள் உள்பட 21 புதிய கார்டினல்களின் பெயரை போப் பிரான்சிஸ் அறிவித்தார். இத்தாலியில் உள்ள வாட்டிகன் நகரில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் போப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தத் தேர்தல் ஆகஸ்ட் 28, 29 தேதிகளில் நடைபெறும் என்றும் போப் பிரான்சிஸ் அறிவித்தார்.

கார்டினல்களாக தேர்வாகியுள்ள இரு இந்தியர்களில் ஒருவர் கோவா மற்றும் டாமன் கத்தோலிக்க திருச்சபைகள் பங்கைச் சேர்ந்த பேராயர் பிலிப் நெரி ஆண்டோனியோ செபாஸ்டினோ டி ரொசாரியா ஃபெராவ். மற்றொருவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த பேராயர் ஆண்டனி பூலா.

புதிதாக தேர்வு செய்யப்படப்போகும் 21 கார்டினல்களில் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் 6 பேர். 8 பேர் ஐரோப்பாவை சேர்ந்தவர்கள். 2 பேர் ஆப்பிரிக்காவையும், ஒருவர் வட அமெரிக்காவையும், 4 பேர் மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்தியாவின் முதல் பட்டியலின கார்டினல்: ஆண்டனி பூலாவுக்கு இப்போது 60 வயதாகிறது. இவர் முதன்முதலில் கடந்த 1992 ஆம் ஆண்டு பாதிரியாராக நியமிக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு பிப்ரவரில் கர்ணூல் பேராயராக அவர் நியமிக்கப்பட்டார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஹைதராபாத் தலைமை பேராயராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்தியாவிலிருந்து கார்டினல் அந்தஸ்து பெரும் முதல் பட்டியலினத்தவர் என்ற பெருமையை பெறுகிறார் ஆண்டனி பூலா.
இது குறித்து தெலுங்கு கத்தோலிக்க பேராயர் கவுன்சிலின் துணைச் செயலாளர் ஜோசப் அர்லகடா அளித்த பேட்டியில், "ஆண்டனி பூலாவை கார்டினலாக தேர்வு செய்துள்ளது பெருமையளிக்கிறது. கடவுளின் கிருபையால் இது நடந்துள்ளது. தேவாலயப் பணிகளில் ஆண்டனி காட்டிய அர்ப்பணிப்பும் இதற்குக் காரணம். அவருக்கு தேவாலயம் பற்றி ஆழ்ந்த சிந்தனைகள் உண்டு. அவர் கடின உழைப்பாளி. ஆந்திரா, தெலங்கானாவைச் சேர்ந்த கத்தோலிக்க மக்கள் அனைவரும் இதனைக் கொண்டாடுகின்றனர்" என்று கூறியுள்ளார்.

கோவா பேராயருக்கு முதல்வர் பாராட்டு: கோவா மாநிலத்திலிருந்து கார்டினலாக தேர்வு செய்யப்பட்டுள்ள பேராயர் ஃபிலிப் நெரி ஃபெராரோவுக்கு அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



Read in source website

பாட்னா: இந்திய தொல்லியல் துறை ஆய்வின்படி, பிஹாரின் ஜமுய் மாவட்டத்தில் மட்டும் 222.88 மில்லியன் டன் தங்கம் பூமிக்குள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதில் 37.60 டன் அளவுக்கு உயர்ந்த தங்கதாதுமண் இருக்கிறது என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிஹார் கனிம வள கூடுதல் தலைமை செயலர் ஹர்ஜோத் கவுர் பாம்ரா கூறும்போது “இந்திய தொல்லியல் துறை, தேசிய கனிம வள மேம்பாட்டு கழகம் ஆகியவற்று டன் ஜமுய் மாவட்டத்தில் தங்கத்தை தோண்டி எடுப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. ஜமுய் மாவட்டத்தில் கர்மாதியா, ஜாஜா, சோனோ ஆகிய இடங்களில் அதிக தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. தங்கத்தை வெட்டி எடுப்பது தொடர்பாக மத்திய கனிம வள அமைப்புகள், ஜி-3 நிறுவனங் களுடன் ஒப்பந்தம் செய்யப்படும்.

பிஹாரின் ஜமுய் பகுதியில் அதிக அளவு தங்கத் தாது கிடைப்பதாக கடந்த ஆண்டு மத்திய சுரங்கத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மக்களவையில் தெரிவித்திருந்தார். நாட்டிலேயே அதிகமான தங்க கனிம வளம் பிஹாரில்தான் இருக்கிறது. பிஹாரில் மட்டும் 222.88 மில்லியன் டன் தங்கம் இருப்பு இருக்கிறது. இது நாட்டின் ஒட்டுமொத்த தங்க இருப்பில் 44 சதவீதமாகும்.



Read in source website

குண்டூர்: தமிழகத்தில் அம்மா உணவகத்தைப் போன்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடைபெற்றபோது, ஆந்திராவிலும் அண்ணா கேன்டீன் தொடங்கப்பட்டது.

தேர்தலுக்கு சுமார் 6 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த கேன்டீன்கள், குறிப்பாக ஏழை, எளியவர்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருந்தது. ஆனால், தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வி அடைந்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அண்ணா கேன்டீனும் மூடுவிழா கண்டது. இதேபோன்று தெலுங்கு தேசம் சார்பில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன.

தற்போது, மறைந்த முதல்வர் என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தெலுங்கு தேசம் கட்சி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்ததால், கட்சி மாநாடும் ஓங்கோலில் சிறப்பாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, குண்டூரில் நேற்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் புதிய அண்ணா கேன்டீன் தொடங்கப்பட்டது.

இதனை என். டி. ராமாராவின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறும்போது, "மக்களுக்கு தேவையான பல திட்டங்களை ஜெகன் அரசு ரத்து செய்து விட்டது. இறுதியில் குப்பைக்கு கூட ஆந்திராவில் மக்கள் வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். நிச்சயம் மாறும்” என்றார்.



Read in source website

அகமதாபாத்: முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. கோலாகலமாக நடைபெற்ற இந்த தொடர் நிறைவு பெற்றுள்ளது. இதில் ஆரஞ்சு கேப், பர்பிள் கேப் உட்பட முக்கிய விருதுகளை வென்ற வீரர்களின் விவரத்தை விரிவாக பார்ப்போம்.

கடந்த மார்ச் 26-ஆம் தேதி மும்பையில் தொடங்கியது ஐபிஎல் 2022. 15-வது ஐபிஎல் சீசனான இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் என வெவ்வேறு இடங்களில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற்றன. இதில் பிளே-ஆஃப் போட்டிகள் கொல்கத்தா மற்றும் அகமதாபாத் நகரில் நடைபெற்றது. சுமார் 237-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடினர். அனைவரும் இணைந்து ஆயிரம் சிக்ஸர்களுக்கு மேல் நடப்பு சீசனில் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சீசனில் தங்களது அபார திறனை வெளிப்படுத்தி, அதற்கான விருதையும் வென்ற வீரர்கள் குறித்து பார்ப்போம்.

பட்லர் - ராஜஸ்தான் ராயல்ஸ்: அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு கேப் விருதை வென்றுள்ளார் பட்லர். மொத்தம் 863 ரன்கள் அவர் இந்த சீசனில் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக ரன்கள் சேர்த்த வீரரின் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார் அவர். இதோடு நடப்பு சீசனின் மோஸ்ட் Valuable வீரர், அதிக சிக்ஸர் (45), அதிக பவுண்டரி (83), பவர் பிளேயர் ஆஃப் தி சீசன், கேம் சேஞ்சர் ஆஃப் தி சீசன், தொடர் நாயகன் உள்ளிட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

சாஹல் - ராஜஸ்தான் ராயல்ஸ்: அதிக விக்கெட்களை கைப்பற்றிய பவுலர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் சுழற்பந்து வீச்சாளரான சாஹல். மொத்தம் 27 விக்கெட்களை அவர் இந்த சீசனில் வீழ்த்தியுள்ளார்.

உம்ரான் மாலிக் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 22 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்றுள்ளார். மொத்தம் 22 விக்கெட்களை அவர் கைப்பற்றியுள்ளார். விரைவில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற உள்ள டி20 தொடரில் இந்திய அணிக்காக அவர் விளையாட உள்ளார்.

எவின் லூயிஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: நடப்பு சீசனில் சிறந்த கேட்ச் பிடித்த வீரருக்கான விருதை எவின் லூயிஸ் வென்றுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக ஒற்றைக் கையால் ஒரு கேட்ச் பிடித்து அசத்தி இருந்தார் அவர்.

தினேஷ் கார்த்திக் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: நடப்பு சீசனில் சிறந்த பேட்டிங் ஸ்டிரைக் கொண்ட வீரருக்கான விருதை டிகே வென்றுள்ளார். அவரது பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 183.33. அதே போல நடப்பு சீசனில் அதிவேகமாக பந்து வீசிய வீரருக்கான விருதை வென்ற குஜராத் வீரர் ஃபெர்குசன் வென்றுள்ளார்.



Read in source website

டெக்சாஸ் மாகாணத்தின் உவால்டேயில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை அடுத்து பள்ளி ஆசிரியர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று அரசியல்வாதிகள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பள்ளி மாணவர்களை பாதுகாப்பதற்கு, ஆசிரியர்களின் கைகளில் துப்பாக்கிகளை ஒப்படைப்பது குறித்து ஒரிகான் பல்கலைகழக பேராசிரியர்களான ஐமி ஹஃப் மற்றும் மைக்கேல் பார்ன்ஹார்ட் ஆகிய இருவரும் பொதுமக்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். பெரும் விவாதத்துக்குரிய இந்த விவகாரம் தொடர்பான ஆய்வின் முடிவுகள் இதோ...



Read in source website

ரூர்கேலா: கே பாப் இசை உலகில் முதல் முறையாக ஒடிசாவை சேர்ந்த ஸ்ரேயா லங்கா (18) இடம் பிடித்துள்ளார்.

பாப், ராப், ஜாஸ், டிஸ்கோ, ராக் என உலகம் முழுவதும் பல்வேறு வகையான இசைகள் பிரபலமாக உள்ளன. அந்த வகையில் தென்கொரியாவில் கே பாப் என்ற இசை கோலோச்சி வருகிறது. ஆசியா, லத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடு கள், மேற்கத்திய நாடுகளிலும் கே பாப் இசை பிரபலமாக உள்ளது. இந்தியாவில் கே பாப் இசைக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது.

இந்த இசையை மையமாக கொண்டு தென்கொரியாவில் பல்வேறு இசைக் குழுக்கள் செயல்படுகின்றன. அவற்றில் பிளாக் ஸ்வான் என்ற இசைக் குழுவும் ஒன்று. இந்த குழுவில் 5 இளம்பெண்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் ஹைமி என்ற பாடகி, ஒரு ரசிகரை ஏமாற்றி பணம் பறித்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டில் பிளாக் ஸ்வான் குழுவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

அவருக்கு பதிலாக புதிய பாடகியை குழுவில் இணைக்க சர்வதேச அளவில் தேர்வு நடத்தப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து 4,000-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 23 பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இறுதியில் இந்தியாவின் ஒடிசா மாநிலம், ரூர்கேலா பகுதியைச் சேர்ந்த ஸ்ரேயா லங்கா, பிரேசிலை சேர்ந்த கேப்ரியேலா டால்சின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, இருவரும் பிளாக் ஸ்வான் இசைக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். கே பாப் இசை உலகில் முதல் முறையாக இந்திய பெண் ஒருவர் இடம்பெற்றிருக்கிறார்.

சிறுவயதில் இந்துஸ்தானி இசையில் புலமை பெற்ற ஸ்ரேயா, மேற்கத்திய இசையையும் முழு மையாக கற்றுக் கொண்டார். பாரம் பரிய ஒடிசி நடனம், மேற்கத்திய பாணி நடனம் ஆடுவதில் வல்லவர். இதுரை 30-க்கும் மேற்பட்ட தேசிய, பிராந்திய நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

இதுகுறித்து ஸ்ரேயா லங்கா கூறும்போது, “யோகா, ஒடிசி மற்றும் இந்துஸ்தானி இசையில் தினமும் பயிற்சி மேற்கொள்வேன். அதோடு மேற்கத்திய நடனம், இசையிலும் அதிக கவனம் செலுத்தினேன். இந்திய, மேற்கத்திய கலைகளை இணைத்து இறுதிச் சுற்றில் எனது திறமையை வெளிப்படுத்தினேன். இதன் காரணமாகவே பிளாக் ஸ்வான் இசைக் குழுவில் இடம் கிடைத்திருக்கிறது” என்றார்.

தற்போது தென்கொரியாவில் முகாமிட்டுள்ள ஸ்ரேயா லங்கா, கொரிய மொழியை கற்று வருகிறார். அதோடு கடினமான நடனப் பயிற்சியிலும் இசை பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஸ்ரேயா லங்காவின் தந்தை அவினாஷ் லங்கா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தாய் பிரியா குடும்பத்தை கவனித்து வருகிறார். நடுத்தர குடும்ப சூழலில், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மகளின் விருப்பத்துக்கு முன்னுரிமை அளித்து அவருக்கு இசை, நடனத்தில் சிறப்பு பயிற்சி அளிக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர். அவர்களின் தியாகத்துக்குப் பலனாக சர்வதேச அளவில் ஸ்ரேயா லங்கா பிரபலமடைந்து உள்ளார்.



Read in source website

இந்தியாவில் எல்லா வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் என்பது கட்டாயம். இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி இந்த இன்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாலையில் வாகனங்களில் செல்லும் போது அது விபத்தில் சிக்கும் ஆபத்து இருப்பதால் அந்த வாகனம் விபத்தில் சிக்கும்போது பாதிப்புகளை ஈடு செய்யவும், உரிய இழப்பீடு கிடைக்கவுமே மோட்டர் இன்சூரன்ஸ் என்பது கட்டாயமாக உள்ளது. ஒவ்வொரு வாகனமும் கட்டாயம் இன்சூரன்ஸ் வைத்திருக்க வேண்டும்.

மூன்றாம் நபர் காப்பீடு: இந்தியாவில் மோட்டார் இன்சூரன்ஸை பொருத்தவரை முதலில் வருவது மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் ஆகும். இதில் வாகனம் விபத்தை ஏற்படுத்தினால் அதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் சேதாரத்தை இந்த இன்சூரன்ஸ் ஈடுசெய்யும். மூன்றாம் நபர் பாலிசி என்பது ஒவ்வொரு வாகன உரிமையாளரும் சட்டப்படி, கட்டாயமாக எடுத்தே தீர வேண்டிய இன்சூரன்ஸ் ஆகும்.

அடுத்தாக சாலைகளில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கும் என்ற நிலை இருப்பதால் மூன்றாம் நபர் காப்பீடு மட்டுமே போதாது. கட்டாயம் சொந்தக் காப்பீடும் அவசியமாகிறது. விபத்து ஏற்பட்டால் வண்டிக்கான இன்சூரன்ஸ், தனிநபர் விபத்து இன்சூரன்ஸ் செய்துகொள்ள முடியும்.

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தவிர மற்ற இன்சூரன்ஸ்கள் எல்லாம் வாகன ஓட்டிகளின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். மற்ற இன்சூரன்ஸ் எடுக்கும் போதும் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் சேர்ந்தே வரும். காப்பீடு செய்திருப்பவருக்கு ஏற்படும் தனிநபர் சேதம், காப்பீடு செய்யப்பட்டுள்ள வாகனத்திற்கு ஏற்படும் சேதம். இது தவிர அனைத்து இழப்புகளையும் ஈடு செய்யும் விரிவான காப்பீடு வைத்திருப்பது அவசியம்.

சரியான மோட்டார் இன்ஷூரன்ஸை தேர்ந்தெடுப்பது அவசியம் என்பதால் காப்பீடு எடுக்கும்போது முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். பலவித நிறுவனங்கள், பலவிதமான காப்பீட்டுத்தொகை என்ற குழுப்பம் ஏற்படுவதால் மோட்டார் இன்சூரன்ஸ் வாங்கும்போது கவனத்துடன் ஒப்பிட்டு வாங்க வேண்டும். சில முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை:

  • வாகன காப்பீடு செய்ததுடன் இழப்பீட்டை எப்போது பெறுவது எப்படி பெறுவது என்பது குறித்த விவரங்களையும் அறிந்து வைத்திருத்தல் அவசியம்.
  • வாகனம் சம்பந்தப்பட்ட விபத்துகளில் மூன்றாம் தரப்புக்கான இழப்பீட்டை பெற விரும்பினால் உடனே காவல் துறைக்கும், காப்பீட்டு நிறுவனத்திற்கும் தெரியப்படுத்துதல் அவசியம்.
  • வேறு ஒருவரின் வாகனம் சம்பந்தப்பட்ட விபத்துகளில் பாதிக்கப்பட்டவர் நீங்களாக இருந்தால் காப்பீடு சம்பந்தப்பட்ட விவரங்களை வாகன உரிமையாளரிடம் இருந்து பெற்று காப்பீடு நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
  • வாகன விபத்து குறித்த இழப்பீடு கோரும்போது அது குறித்த விவரங்களை காவல் துறையிடமும், காப்பீட்டு நிறுவனத்தினிடமும் தெரிவித்தல் அவசியம்.
  • திருட்டு போனதற்கான இழப்பீடு கோருவதற்கு வாகனத்தின் மாற்று சாவிகளை காப்பீடு நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.
  • நம்முடைய வாகனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு. வாகனம் திருட்டுப்போனாலோ விபத்துக்கு உள்ளாகி சேதாரமானாலோ நம்மால் அதிகபட்சம் பெற முடிகிற தொகை ஆகும்.
  • இந்த மதிப்பு என்பது வாகனத்தின் உற்பத்தியாளர் பட்டியலிட்டுள்ள விற்பனை விலையிலிருந்து வாகனத்தின் சேதாரத்தைக் கழித்த பிறகு வரும் தொகையாகும். வாகனம் பழையதாக இருந்தால் அதன் ஆண்டை பொறுத்து மதிப்பு குறையும்.


Read in source website

உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வரும் சூழலில் கிரிப்ட்டோகரன்சி என்பது டிஜிட்டல் நாணயமாக இன்று இளைய தலைமுறையினரிடம் பெருமளவு பிரபலமாகி வருகிறது. குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்க்கும் ஆசை பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இதைப் பயன்படுத்தி கிரிப்டோகரன்சி வெளியிடுபவர்கள் லாபம் பார்க்கின்றனர். கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு லட்சத்தில் இருந்தாலும், அதில் ரூ.100 கூட முதலீடு செய்ய முடியும் என்பதால் அதில் சிறுசிறு முதலீட்டாளர்களும் கூட முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் முதலீடு செய்து லாபம் பார்க்கிறார்களா? அல்லது பணத்தை இழக்கிறார்களா? என்னதான் நடக்கிறது கிரிப்டோ சந்தையில் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. ஆனால் இவை எதுவும் விடை தேட முடியாத கேள்விகள். காரணம் அதன் தொழில்நுட்பம் அப்படி.

கிரிப்டோகரன்சி என்றால் என்ன?

கிரிப்டோகரன்சி என்றால் டிஜிட்டல் நாணயங்கள் ஆகும். கிரிப்டோகரன்சிகளை போலியாக உருவாக்க முடியாது. பிளாக்செயின் நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் கிரிப்டோகரன்சிகள் உருவாக்கப்படுகின்றன. எந்தவொரு அரசின் தலையீடும் கிரிப்டோகரன்சிகளில் செய்ய முடியாது. கிரிப்டோகரன்சிகளுக்கு எல்லைகளும் கிடையாது. சுருக்கமாக கூறினால் யாருடைய கட்டுப்பாட்டிற்குள்ளும் வராது.

யார் செய்கிறார்கள், எப்படி செய்கிறார்கள் என்ற விவரமும் வெளியே தெரியாது. ஒவ்வொரு கிரிப்டோகரன்சிக்கும் குறிப்பிட்ட மதிப்பு உண்டு. மார்க்கெட்டுக்கு ஏற்ப ஒவ்வொரு நாணயத்தின் மதிப்பும் ஏறி இறங்கும்.

கிரிப்டோகரன்சிகளை பயன்படுத்தி பொருட்கள் அல்லது சேவைகளையும் வாங்கிக்கொள்ளலாம். கிரிப்டோகரன்சிகள் மையப்படுத்தப்படாதவை. அதாவது, கிரிப்டோ காயின்களை எந்தவொரு நிறுவனமும் கட்டுப்படுத்துவதில்லை.

பிட்காயின் மட்டும் தானா?

பிட்காயின் மட்டும்தான் கிரிப்டோகரன்சி என பலரும் கருதுகிறார்கள். அதுபோல நூற்றுக்கணக்கான காயின்கள் இருக்கின்றன. முதலில் உருவான பிட்காயினை தொடர்ந்து எத்ரியம் காயின் பிரபலமானது. இது இரண்டுக்கும் தான் நீண்டகாலமாக போட்டியாக இருந்தது. தற்போது டோஜ் காயின் என பலவித கிரிப்ட்டோகரன்சிகள் வந்துவிட்டன.

மோசடியா?

கிரிப்டோகரன்சிகளில் முறைகேடான பணத்தை முதலீடு செய்யவும் முடியும். இது கறுப்புப் பணத்தை புழக்கத்தில் கொண்டுவரும் வழிகளில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. வங்கிகள் மூலமான பரிவர்த்தனைகளில் முறைகேடான, சட்ட விரோதமான பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது என்பதால் இதுபோன்ற வழிகள் மூலம் அவற்றை செயல்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவும் இதற்கு தடை விதிக்க அரசுகள் விரும்புகின்றன.

கடுமையாக எதிர்க்கும் இந்தியா

இந்தியாவும் கிரிப்டோகரன்சிகளை கடுமையாக எதிர்க்கிறது. காரணம் டிஜிட்டல் கரன்சியின் ஆதிக்கம் அதிகரித்தால் அதனால் நாட்டின் நாணய மதிப்பும் நாணயத்துக்கான அவசியமும் கேள்விக்குறியாகும். இது இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கும் உள்ள தயக்கம் தான். கிரிப்டோகரன்சியை வரன்முறைபடுத்த அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா 2021 என்ற பெயரில் இந்த மசோதா இந்தியாவில் உருவாக்கப்படுகிறது.

எதிர்காலம் என்னவாகும்?

கிரிப்டோகரன்சிகளின் விலை ஏற்றம் இறக்கம் எல்லாம் மிக வேகமாக நிகழும். ஒரு முதலீட்டாளரைப் பொறுத்தவரை எவ்வளவு விரைவில் பணம் ஈட்ட முடியும் என்ற ஆசை உள்ளதோ அதே அளவுக்கு பணத்தை இழக்கவும் தயாராக இருக்க வேண்டும். இதுமட்டுமின்றி செய்த முதலீட்டை பாதுகாப்பாக பெறுவதும் கேள்விக்குரியாகவே உள்ளது. இதனால் கிரிப்ட்டோகரன்சி என்பது விடை தெரியாத புதிராகவே தொடர்கிறது.



Read in source website

வரிமான வரி செலுத்துவதின் ஆரம்பப் புள்ளி வருமானம் குறித்த தகவல்களைத் தாக்கல் செய்வதிலும், பின்னர் அதனை மதிப்பீடு செய்வதில் இருந்தும் தொடங்குகிறது. நிதியாண்டு முடிந்து வருமான வரி தாக்கல் செய்ய மூன்று மாதங்கள் அவகாசம் என்பதால் ஜூலை மாதம் வரி செலுத்துபவர்கள் மிகவும் பரபரப்பாக இருப்பார்கள். அந்த மாதத்தில் சிறப்பு கவுன்டர்கள் எல்லாம் திறக்கப்படும். இந்த சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இப்போது ஆன்லைனில் வருமான வரித் தாக்கல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல வருமான வரி மதிப்பீட்டிலும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய முறையில் வருமான வரி தொடர்பான விஷயங்களுக்கு, வரி செலுத்துபவர் வருமான வரி அலுவலரை நேரடியாக இனி சந்திக்க வேண்டிய தேவை இல்லை. அதனால் இதற்கு முகமில்லா மதிப்பீட்டு முறை என அழைப்பப்படுகிறது. அது என்ன முகமில்லா மதிப்பீட்டு முறை? இந்த புதிய நடைமுறை ஏன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது? இதன் சாதக, பாதகங்களை என்னென்ன? - இவை குறித்து விவரிக்கிறார் நிதி ஆலோசகர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி...



Read in source website

வெஸ்ட் நைல் வைரஸ் என்றால் என்ன, எப்படி பரவுகிறது, அறிகுறிகள், தவிர்க்கும் முறைகளை இங்கே காணலாம்.

கேரளாவில் திருச்சூரை சேர்ந்த 47 வயதான நபர், வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதார துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

முன்னதாக 2019 ஆம் ஆண்டில், மலப்புரம் மாவட்டத்தில் ஆறு வயது சிறுவன் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தான். இந்த வைரஸ் முதன்முதலாக 2006 இல் ஆழப்புழாவில் பதிவானது. பின்னர், 2011இல் எர்ணாகுளத்தில் பதிவானது. வெஸ்ட் நைல் வைரஸ் என்றால் என்ன? அது பரவும் முறையை இங்கே காணலாம்.

வெஸ்ட் நைல் வைரஸ்

வெஸ்ட் நைல் வைரஸ் என்பது கியூலெக்ஸ் கொசுக்களால் பரவும் நோய். WHO கூற்றுப்படி, இது “ஃபிளவிவைரஸ் இனத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ் பறவைகளிலிருந்து கொசுக்களுக்கும், பிறகு கொசுக்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. அதே நேரம் இது மனிதர்களிடமிருந்து மனிதர்களை தாக்குவதில்லை.

பாதிக்கப்பட்ட பறவையை கொசு கடிக்கும் போது, இந்த வைரஸ் கொசு பாதிக்கப்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் வைரஸ், கொசுவின் உமிழ்நீர் சுரப்பிகளில் நுழைகிறது.தொடர்ந்து பாதிக்கப்பட்ட கொசு மனிதர் அல்லது பிற விலங்குகளை கடிக்கும் போது, வைரஸ் அவர்கள் உடலுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த வைரஸ் ரத்தமாற்றம் மூலமாக பரவக்கூடும். பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து அவரது குழந்தைக்கும் அல்லது ஆய்வகங்களில் வைரஸின் வெளிப்பாடு மூலமாகவும் பரவலாம். பாதிக்கப்பட்ட மனிதர்கள் அல்லது விலங்குகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுவதாக ஆதாரங்கள் தெரிவிக்கவில்லை.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய கூற்றுப்படி, பறவைகள் உட்பட பாதிக்கப்பட்ட விலங்குகளை சாப்பிடுவதன் மூலம் இந்த நோய் பரவாது. ஆனால், இறைச்சியை முறையாக சமைத்து சாப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள்

இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் மக்களில் 80% பேருக்கு அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. எஞ்சியிருக்கும் 20 சதவீத பேருக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி, சரும பாதிப்புகள், உடல் வலி, வீங்கிய நிணநீர் சுரப்பிகள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கடுமையான நோய்தொற்றுக்கு ஆளாகும்போது மூளை அழற்சி, மூளைக்காய்ச்சல், பக்கவாதம் மட்டுமின்றி மரணம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட 150 பேரில் ஒருவர், கடுமையான நோய் பாதிப்பை சந்திக்கின்றனர். அதிலிருந்து மீண்டு வர அவர்களுக்கு பல வாரங்களும் மாதங்களும் ஆகக்கூடும். மத்திய நரம்பு மண்டலத்தில் சில பாதிப்புகள் நிரந்தரமாக இருக்கலாம் என சிடிசி கூறுகிறது. பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.

நைல் வைரஸ் கண்டறிந்தது எப்படி

1937இல், இந்த வைரஸ் உகாண்டா நாட்டின் வெஸ்ட் நைல் மாவட்டத்தில் ஒரு பெண்ணிடம் தான் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், 1953 ஆம் ஆண்டு நைல் டெல்டா பகுதியில் உள்ள பறவைகளில் ( காகங்கள் மற்றும் கொலும்பிஃபார்ம் ) அடையாளம் காணப்பட்டது.

இது 1997 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை பறவைகளை தாக்கும் நோய்க்கிருமியாக கருதப்படவில்லை. ஆனால் அப்போது இஸ்ரேலில் தீவிரமான திரிபு மூளையழற்சி மற்றும் பக்கவாதத்தின் அறிகுறிகளை வழங்கும் பல்வேறு பறவை இனங்களின் இறப்பை உண்டாக்கியது.

WHO இன் கூற்றுப்படி, இந்த வைரஸ் காரணமாக மனித நோய்த்தொற்றுகள் 50 ஆண்டுகள் மேலாக உலகின் பல நாடுகளில் பதிவாகியுள்ளன. குறிப்பாக, பறவைகள் இடம்பெயர்ந்த பாதைகளில் வைரஸ் பாதிப்பு காணப்படுகிறது.

இன்று, இந்த வைரஸ் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் காணப்படுகிறது.

தடுக்கும் முறைகள்

கொசுக்கள் மூலமாகத்தான் இந்த வைரஸ் பரவுகிறது. முதலில் கொசுக்கள் வராமல் நடவடிக்கை எடுப்பது அவசியம். வீடுகளில் ஜன்னல்களில் கொசுவலை பயன்படுத்துவது அவசியம்.வீடுகளுக்கு அருகே தண்ணீர் தேங்க விட வேண்டாம். கொசு கடிக்க முடியாத அளவு, நீண்ட சட்டைகள் பேண்ட் அணிந்துகொள்ள வேண்டும்.வீடு வளாகங்களில் குப்பைகள் சேர்வதை தடுக்க வேண்டும்.



Read in source website

ஒரு ஜோடி தஞ்சாவூர் ‘தலையாட்டி பொம்மையை’ அனுப்பி வைத்த தஞ்சை தாரகை மகளிர் சுய உதவிக் குழுவிற்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில்  நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் 89-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் நேற்று (மே-29) பேசிய பிரதமர் மோடி தமக்கு ஒரு ஜோடி தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை பரிசளித்துள்ள தஞ்சையைச் சேர்ந்த தாரகைகள் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு  நன்றியும் பாராட்டும்  தெரிவித்தார்.

தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே சுய உதவிக்குழுவினரால் தயாரிக்கப்பட்ட கைவினைப்  பொருட்களை விற்பனை செய்யும் பிரத்யேக விற்பனை அங்காடியை  நடத்திவரும் தாரகை மகளிர் சுய உதவிக் குழுவினர் ஒரு ஜோடி ‘நடன பொம்மைகளை’ பிரதமர் நரேந்திர மோடிக்கு  தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில், வானொலியில் தனது 89-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தாரகைகள் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு  நன்றியும் பாராட்டும்  தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் பேசியதாவது:

சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் எனக்கு ஒரு பரிசை அனுப்பினர். அது ஒரு சிறப்பான தஞ்சாவூர் பொம்மை. புவிசார் குறியீடு பெற்ற அந்த பரிசை எனக்கு அனுப்பிய தஞ்சாவூர் சுயஉதவிக் குழுவினருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தஞ்சாவூர் சுய உதவிக் குழுவினர் தங்கள் தயாரிப்புகளை விற்க அங்குள்ள முக்கிய பகுதிகளில் ஒரு அங்காடியையும்இ சிறு கடைகளையும் திறந்திருக்கிறார்கள். அதற்கு ‘தாரகைகள் கைவினைப் பொருட்கள் அங்காடி’ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

இதில் சிறப்பு என்னவென்றால் இந்த முயற்சியில் 22 சுய உதவிக் குழுக்கள் இணைந்திருக்கின்றன. இவர்கள் தஞ்சாவூர் பொம்மைஇ வெண்கல விளக்கு போன்ற புவிசார் குறியீட்டுப் பொருட்களைத் தவிரஇ பிற பொம்மைகள்இ தரை விரிப்புகள்இ செயற்கை நகைகள் ஆகியவற்றையும் தயாரிக்கின்றனர். இதன் காரணமாக கைவினைஞர்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களின் வருவாயும் அதிகரிப்பதால் அவர்களுக்கு அதிகாரப் பகிர்வும் கிடைக்கிறது.

மக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் செயல்படும் சுய உதவிக் குழுக்களைக் கண்டறிந்து அவர்களின் தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். இதனால் சுய உதவிக் குழுவினரின்; வருவாய் அதிகரிப்பதுடன் சுயசார்பு இந்தியா பிரச்சாரத்துக்கு ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.



Read in source website

how to download masked aadhaar id in tamil and know how to use it: மாஸ்க்டு ஆதார் என்பது, ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்களை “xxxx-xxxx” போன்ற சில எழுத்துகளுடன் மாற்றுவதைக் குறிக்கிறது. அதே நேரத்தில் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் மட்டுமே தெரியும்.

The Unique Identification Authority of India (UIDAI) has a special Aadhaar version called a masked Aadhaar that can be used by resident citizens in order to avoid Aadhaar being abused by the wrong hands: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) 12-இலக்க தனித்துவ ஐடியான ஆதார், வங்கிக் கணக்கைத் திறப்பது முதல் அரசாங்கத் திட்டத்தில் முதலீடு செய்வது வரை என பல செயல்பாடுகளை மேற்கொள்ள, இப்போது நாடு முழுவதும் முக்கிய ஆவணமாகப் பயன்படுத்தப்படுகிறது.

தனிப்பட்ட குறியீடு எவ்வளவு எளிது என்றாலும், இதை வைத்து மோசடிகள் மற்றும் தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு எப்போதும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக UIDAI Masked Aadhaar எனும் மாஸ்க்டு ஆதார் கார்டை அறிமுகம் செய்து வழங்கி வருகிறது.

மாஸ்க்டு ஆதார் – What is Masked aadhaar:

ஆதார் வழங்கும் ஆணைய (யுஐடிஏஐ) இணையதளத்தின்படி, “மாஸ்க்டு ஆதார் என்பது, நீங்கள் பதிவிறக்கிய டிஜிட்டல் ஆதாரில் உங்கள் ஆதார் எண்ணை மறைக்க அனுமதிக்கிறது. இது ஆதார் எண்ணின் முதல் 8 இலக்கங்களை “xxxx-xxxx” போன்ற சில எழுத்துகளுடன் மாற்றுவதைக் குறிக்கிறது. அதே நேரத்தில் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் மட்டுமே தெரியும்.” என்று தெரிவித்துள்ளது.

மாஸ்க்டு ஆதாரைப் பதிவிறக்கம் செய்வது என்பது எளிது. அதற்கு நீங்கள் அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

மாஸ்க்டு ஆதாரை பதிவிறக்கம் செய்வது எப்படி – How to download masked Aadhaar

படி 1: முதலில் myaadhaar.uidai.gov.in க்குச் செல்லவும்

படி 2: பின்னர், மாஸ்க்டு ஆதார் அட்டையைப் பதிவிறக்க உள்நுழையவும். உள்நுழைவு விருப்பத்தை கிளிக் செய்யவும்.
படி 3: பிறகு உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
படி 4: கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
படி 5: பிறகு, ‘செண்ட் OTP’ என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 6: உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட பத்து இலக்க மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
படி 7: தேவையான இடத்தில் OTP ஐ உள்ளிட்டு திரையில் காட்டப்படும் Login விருப்பத்தை கிளிக் செய்யவும்
படி 8: ‘சேவைகள்’ பகுதிக்குச் சென்று, ‘ஆதாரைப் பதிவிறக்கு’ என்பதைக் கிளிக் செய்யவும்
படி 9: ‘உங்கள் மக்கள்தொகைத் தரவை மதிப்பாய்வு செய்யவும்’ பகுதிக்குச் செல்லவும்
படி 10: ‘உங்களுக்கு மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் வேண்டுமா?’ விருப்பத்தை கிளிக் செய்து, முகமூடி செய்யப்பட்ட ஆதாரை பதிவிறக்கவும்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, யுஐடிஏஐ ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் மக்கள் தங்கள் ஆதார் அட்டையை தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்பதால் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியது. அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பிறகு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Meity) பின்னர் அறிக்கையை திரும்பப் பெறுவதற்கான மற்றொரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. “ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட ஆதார் அட்டையை தவறாகப் பயன்படுத்த முயற்சித்த பின்னணியில் இது அவர்களால் வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது. மக்கள் தங்கள் ஆதாரின் புகைப்பட நகலை எந்த நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம், ஏனெனில் அது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று வெளியீடு அறிவுறுத்துகிறது. மாற்றாக, ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை மட்டுமே காண்பிக்கும் முகமூடி அணிந்த ஆதாரைப் பயன்படுத்தலாம், ”என்று குறிப்பிட்டது.

மேலும், “யுஐடிஏஐ வழங்கிய ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் யுஐடிஏஐ ஆதார் எண்களைப் பயன்படுத்துவதிலும் பகிர்வதிலும் சாதாரண விவேகத்துடன் மட்டுமே செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று மெய்ட்டி கூறினார். “ஆதார் அடையாள அங்கீகார சுற்றுச்சூழல் அமைப்பு ஆதார் வைத்திருப்பவரின் அடையாளம் மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும் பாதுகாப்பதற்கும் போதுமான அம்சங்களை வழங்கியுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.



Read in source website

பல முன்மாதிரி முயற்சிகளுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறது தலைநகா் தில்லி. சென்ற வாரத்தில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் 150 மின்சாரப் பேருந்துகளை மாநகரப் பொதுப் போக்குவரத்திற்காக தொடங்கி வைத்தாா். குளிா்சாதன வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்துகள் தில்லியின் மாநகரப் போக்குவரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

தில்லி அரசு புதிதாக இயக்கும் 150 மின்சாரப் பேருந்துகள் அதிநவீன தொழில்நுட்பத்துடனும், அம்சங்களுடனும் திகழ்பவை. சிசிடிவி கேமராக்கள், அபாய அறிவிப்புக்கான பொத்தான்கள், ஜிபிஎஸ் கருவி ஆகியவை அந்த பேருந்துகளில் பொருத்தப்பட்டிருக்கின்றன. மக்கள் மத்தியில் மின்சாரப் பேருந்துகளில் பயணிப்பதை பிரபலப்படுத்த மூன்று நாள் இலவசப் பயணம் அனுமதிக்கப்பட்டது.

தற்போது 150 மின்சாரப் பேருந்துகளை இயக்கத் தொடங்கி இன்னும் ஒரு மாதத்தில் அதை 300 பேருந்துகளாக அதிகரிக்கப் போகிறது தில்லி போக்குவரத்துத் துறை. அடுத்த ஓராண்டுக்குள் 2,000 மின்சாரப் பேருந்துகளை இயக்குவது இலக்கு. இதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 1,862 கோடி ஒதுக்கப்பட இருக்கிறது. மத்திய அரசு ஏற்கெனவே ரூ. 150 கோடி இந்தத் திட்டத்திற்காக தில்லி அரசுக்கு உதவியிருக்கிறது.

மின்சாரப் பேருந்துகள் இயங்குவதைத் தொடா்ந்து, ரூ. 150 கோடி செலவில் மூன்று புதிய மின்னேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இதுபோல புதிதாகப் பல மின்னேற்று நிலையங்கள் அமைய இருப்பதாக முதல்வா் தெரிவித்தாா். நடப்பாண்டு இறுதிக்குள் தில்லி போக்குவரத்துக் கழகம் 1,500 மின்சாரப் பேருந்துகளை இயக்க இருக்கிறது. அதற்காக 12 மின்சாரப் பேருந்துப் பணிமனைகளும் திட்டமிடப்பட்டு விரைவாக கட்டுமுடிக்கப்படும் என்று தில்லி அரசு தெரிவித்திருக்கிறது.

உலகில் காற்று மாசு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் நகரங்களில் தில்லியும் ஒன்று. தில்லியின் காற்று மாசு அளவைக் குறைப்பதற்காகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் திட்டம் தில்லியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு சிஎன்ஜி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டதும் தில்லியில்தான்.

தலைநகா் தில்லியில் அனைத்து பொதுப் போக்குவரத்து ஊா்திகளும் சிஎன்ஜி எனப்படும் பெட்ரோலிய எரிவாயுவில்தான் இயங்க வேண்டும் என்று சட்டம் இயற்றியது மிகப் பெரிய திருப்புமுனை. அரசு, தனியாா் பேருந்துகள், வாடகைக் காா்கள் உள்ளிட்ட எல்லாவித பொதுப் போக்குவரத்து வாகனங்களும் சிஎன்ஜி பொருத்தப்பட்டவையாக மாறியபோது தில்லியின் காற்று மாசு கணிசமாகக் குறைந்தது என்பது அனுபவபூா்வ உண்மை.

தில்லியின் முன்மாதிரியை ஏனைய பெருநகரங்கள் எவையும் பின்பற்றாமல் போனது மிகப் பெரிய சோகம். போக்குவரத்து மாநில அரசின் அதிகார வரம்புக்குள் இருப்பதால் மத்திய அரசால் கட்டாயப்படுத்த முடியவில்லை.

நமது சென்னையையே எடுத்துக்கொண்டால், மாநகரப் பேருந்துகள் 1,100 மட்டுமல்லாமல், பல்வேறு கல்லூரி, பள்ளிகள் ஆகியவற்றின் பேருந்துகளும், சிற்றுந்துகளும் ஆயிரக்கணக்கில் இயங்குகின்றன. தலைநகா் தில்லி போல சென்னை நகரில் இயங்கும் அரசுப் பேருந்துகள் உள்பட அனைத்து பேருந்துகளும் சிஎன்ஜி-யில் மட்டுமே இயங்க வேண்டும் என்கிற விதிமுறை அமலுக்கு வந்தால், சென்னையின் காற்று மாசு பாதிக்குப்பாதி குறைந்துவிடும். ஆனால், அரசியல்வாதிகள் பெரும்பாலான கல்வி நிலையங்களுடன் தொடா்புடையவா்கள் என்பதால் ஆட்சிகள் மாறினாலும், துணிந்து அதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக 2,000 பேருந்துகளும், பேட்டரியில் இயங்கும் 500 மின்சாரப் பேருந்துகளும் வாங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனிமேல் தமிழகத்திலும் நகரப் பேருந்துகள் அனைத்துமே மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாக, தலைநகா் தில்லியைப்போல இலக்கு நிா்ணயித்து மாற்றப்பட வேண்டும்.

சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.8-ம், டீசலுக்கு ரூ.6-ம் அவற்றின் மீதான கூடுதல் வரியைக் குறைத்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கிறது என்பதில் ஒருபுறம் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், இன்னொருபுறம் அதன் மூலம் அவற்றின் பயன்பாடு அதிகரிக்கும் என்கிற கவலையும் எழுகிறது. புதைபடிவ எரிசக்தியிலிருந்து முற்றிலுமாக விடுபட வேண்டும் என்கிற இலக்கை நிா்ணயித்துவிட்டு, அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க முற்படுவது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியல்ல.

சரக்கு லாரிகள், தொலைதூரப் பேருந்துகள் ஆகியவற்றின் டீசல் பயன்பாட்டை உடனடியாக குறைத்துவிட முடியாது. ஆனால், நகரப் பேருந்துகளும், தனியாா் வாகனங்களும் மின்சார வாகனங்களாக மாறுவது என்பது இயலாததல்ல.

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 50% போக்குவரத்துத் துறையால் பயன்படுத்தப்படுகிறது. 70% டீசலும், 99.6% பெட்ரோலும் போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படுகின்றன எனும் நிலையில், அதற்கு மாற்றாக மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படுவது வரவேற்புக்குரியது மட்டுமல்ல, காலத்தின் கட்டாயமும்கூட.

நிறைந்த வசதிகளுடன் குறைந்த கட்டணத்தில் மெட்ரோ ரயில்கள், மின்சாரப் பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதுதான் புதைபடிவ எரிசக்திப் பொருள்கள் மீதான சாா்பையும், இறக்குமதிக்கான அந்நியச் செலாவணி செலவையும், காற்று மாசையும் ஒருசேர எதிா்கொள்ளும் ஆக்கப்பூா்வ முனைப்பாக இருக்கும்.



Read in source website

எகிப்தின் நைல் நதிக்கு நிகராக அமைந்தது காவிரி வடிநிலம். 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, வளம் சார் வண்டல் சுமந்து வந்த காவிரி, தஞ்சை மக்களுக்கு அமைத்துக் கொடுத்த நெற்களஞ்சியம்தான் இந்த வடிநிலம்.

இதற்கு ஏற்புடையதாக அமைந்த மக்கள் வாழ்க்கை முறை வளநாடுகள் என்ற ஆட்சிமுறையையும் கொண்டிருந்தது. இந்த நாடுகள் மன்னனுக்கு படைவீரர்களைத் திரட்டித்தருவதற்கும்,  நிலவரிகளைத் திரட்டித் தருவதற்குமான பொறுப்பை ஏற்றிருந்தன. 

மன்னர்கள் நேரடியாக கிராமத்தில் வீரர்களைத் திரட்டும் உரிமையையும், நிலவரி திரட்டும் அதிகாரத்தையும் பெற்றிருக்கவில்லை. இதனை ஒருவிதமான குடிமை சமூகம் என்றுதான் கூற முடியும். சுயமரியாதையோடு வாழ்ந்த இந்த மக்களிடம் சுயகௌரவம் சார்ந்த ஒருவிதமான முரட்டுத்தனமும் இருந்தது. 

வியாபாரம் செய்ய வந்த அந்நியரின் வருகைக்குப் பின்னர் நெல்லும் நெல் விளைந்த வயல்களும் தனது நூற்றாண்டு கால கெüரவத்தை இழந்தன. கடல் வணிகம் செய்யும் வியாபாரிகளும், வட்டித் தொழில் செய்பவர்களும் மட்டுமே செழிப்புற்றனர். பின்னர், ஏற்றுமதி வியாபாரமும் தொழில் துறையும் வளர்ச்சி அடைந்தன. 

இங்கிருந்த விவசாயிகளில் பலரும் ஆங்கில அரசுக்கு நிலவரிகட்ட முடியாமல் திண்டாடிப் போனார்கள். விவசாயிகளின் வீட்டுக் கதவுகளையும், உழவு மாடுகளையும் வருவாய் அதிகாரிகள் கவர்ந்து செல்ல, விவசாயிகளின் வைராக்கிய தற்கொலைகள் கூடுதலாயின.

இந்த நிலையில், கல்வியை தவிர வேறு எதனாலும் இந்த மக்களைக் காப்பாற்ற முடியாது என்று சிலர் கருதினர்.  நாடு விடுதலையடைந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 1956இல் காமராஜரால் வழிகாட்டப்பட்டு ஐயா வீரையாவால் உருவாக்கப் பட்டதுதான் பூண்டி புட்பம் கல்லூரி. 1971 ஆண்டு துளசி ஐயா கல்லூரியின் பொறுப்பை ஏற்ற பின்னர், அரசுக் கட்டணத்தை தவிர கூடுதல் கட்டணம் எதுவும் பெறுவதில்லை என்ற உறுதியை நிர்வாகம் ஏற்றது. ஜாதி மதம் பாராமல் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

"நான் பள்ளிப் படிப்பை முடித்து விட்டேன். எனக்கு கல்லூரியில் படிக்க ஆசை' என்று எந்த எளிய மாணவன் கல்லூரியில் வாசலில் நின்றாலும் அவனுக்கு அங்கு ஒரு இடம் காத்திருந்தது. வயலில் வேலை செய்து விட்டு சேறு படிந்த கால்களுடன் மாணவர்கள் இங்கு வந்து சேர்ந்தனர். வெயிலில் உழுது உழுது கருகிப் போன அந்த கறுப்பு இளம் தலைமுறையை கைப்பற்றி அழைத்து செல்ல அந்த வெண்ணிற கதராடை அங்கேயே நாற்காலி போட்டு அமர்ந்து காத்திருந்தது. 

கிராம வாழ்வை மட்டுமே அறிந்திருந்த மாணவர்கள் கல்லூரிக்கு வந்து உலக வரலாற்றுப் பக்கங்களைப் படிக்கத் தொடங்கினர். 

தமிழ்நாட்டிலேயே தஞ்சை மண்ணில்தான் நிலக்குவியல் முறை கூடுதலாக இருந்தது. பெரும் நிலக்கிழார்களின் எண்ணிக்கையும் அதிகம். இதற்கு பல காரணங்கள் உண்டு. ஆயினும் அவர்களில் பலர் இருந்த இடம் எதுவென்று தெரியாமலேயே போய்விட்டது. கல்விப் பணியால் பூண்டியின் பெயர் நிலைத்து நிற்கிறது. அதிலும் துளசி ஐயாவின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.

ஒரு கட்டத்தில் கல்வி நிலையங்களில் கட்டாய நன்கொடை ஆட்சி செய்யத் தொடங்கியது. சுதந்திரத்தை ஒட்டிய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அர்ப்பணிப்பு மிக்க கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அவை, மறுக்கப்பட்ட மக்களின் கல்விக்கு ஆற்றிய பணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. 

அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்றவை சுதந்திரத்திற்கு முன்னரே தொடங்கப்பட்டு விட்டன. புதிய சூழலில் இதைப் போன்ற பல புகழ் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் தங்களின் கொள்கையை மாற்றிக் கொண்டு கட்டாய கட்டணத்தைப் பெற்றன. இது நாள் வரை "கல்விக்கு கட்டாயக் கட்டணம் இல்லை' என்ற கொள்கையை பூண்டி புட்பம் கல்லூரி மாற்றிக்கொள்ளவில்லை. இதனால் தான் துளசி ஐயா கல்வித் தந்தை என்று போற்றப்படுகிறார்.  

வடஅமெரிக்க தமிழ்ச் சங்க மாநாட்டில் கலந்து கொள்ள கனடா, அமெரிக்கா முதலான நாடுகளுக்கு நான் சென்றபோது, பூண்டி கல்லூரியில் படித்த பலரை சந்தித்தேன். அவர்கள் அங்கு எல்லாத் துறைகளிலும் தலைமைப் பொறுப்பில் இருந்தார்கள். இவர்கள் அனைவரும் பூண்டி துளசி ஐயாவை நன்றியோடு நினைவுகூர்ந்தார்கள். பூண்டி எனும் சின்னஞ்சிறு கிராமத்தின் கோடுகள் உலக வரைபடம் முழுவதும் பரவி நிற்பதைப் பார்த்து வியந்து போனேன். 

துளசி ஐயாவை அறிந்து கொள்ளல் இன்றைய இளைய தலைமுறைக்கு அவசியமான ஒன்றாகும். மாளிகைக்குள் வாழ்ந்த எளிமை அவர். உண்மையான காந்தியவாதி. எல்லாம் இருந்தாலும் தனது குறைந்தபட்ச தேவைக்கு மட்டும் எடுத்துக் கொள்ளும் குணத்தை அவர் கற்றிருந்தார். "அதற்கு மேல் எதையாவது நீ எடுத்துக் கொண்டால் அதன் பெயர் ஆடம்பரம்' என்றார். 

நேர்மை தவறாத உயர் வாழ்க்கை வாழ்ந்து காட்டியவர் துளசி ஐயா. தூய காற்றை போல, தூய நீரைப் போல வேறுபாடுகள் எதுவுமின்றி பிறருக்கு உதவ வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர். 

ஐயாவின் முதுமைக் காலத்தில் அவருடன் மேடையில் பங்கேற்கும் வாய்ப்பு ஒன்று எனக்குக் கிடைத்தது. எளிமைக்கு உதாரணமான தோழர் ஜீவா குறித்து ஐயா பேசினார். பேசி முடித்தவுடன் ஐயாவிடம் "எங்கள் தலைவர் ஜீவாவின் எளிமையைப் பற்றி சொன்னது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது' என்றேன். அதற்கு அவர் "பெருந்தலைவர் காமராஜரிடம் நான்கு வேட்டிகள் இருந்தன. ஒரு வேட்டிக்கு மாற்று வேட்டி வேண்டாம் என்று பொது வாழ்வில் ஈடுபட்ட தலைவர் ஜீவாதானே' என்று கூறியது என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது.  

"கட்டணமில்லா கல்வி' என்று அறிவித்து, அதை முழுமையாக முதலில் செயல்படுத்திய நாடு சோஷலிச ரஷியாதான். இன்றும் எந்த சோஷலிச நாடும் கல்வியை விலைக்கு விற்பதில்லை. இதைப் போலவே ஜனநாயக நாடுகளும் கல்வியை விலைக்கு விற்கக் கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் நடைமுறையில் அது செயல்படுத்தப்படுவதில்லை. 

இந்தச் சூழலில் கல்வியை வணிகம் ஆக்கக் கூடாது என்பதை தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்த ஐயாவை நாம் நினைவுகூர வேண்டியது அவசியம். கடந்த ஆண்டு பெருந்தொற்று காலத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த ஐயாவின் அரிய பணியை, அவர் விட்ட இடத்திலிருந்து தொடர்வதுதான் நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

கட்டுரையாளர்:
தேசிய செயற்குழு உறுப்பினர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.



Read in source website

மக்களாட்சி என்பது வெறும் வார்த்தை அல்ல; ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்ட ஓர் வரையறை. அந்த வரையறையும் தன் செயல்பாட்டில் எல்லையற்று விரியும்போது நுணுக்க வரையறையாக மாறும் நிலையில்தான் அறிஞர்கள் மக்களாட்சியை முடிந்த முடிவாக வரையறை செய்வது கடினம் என்று கூறுகின்றனர். அந்த அளவுக்கு பரந்து விரிந்து செயல்பட்டுக் கொண்டுள்ளது மக்களாட்சி. ஆகையால்தான் அறிஞர்கள் இது வரையறைக்கு உட்படாத சொல் என்கின்றனர். 

பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்ற நிலையை போராடி அடைந்த பல நாடுகள், இதற்கான மேம்பட்ட விளக்கங்களை தந்து, மக்களாட்சிக்கு காப்புரிமை கேட்பதுபோல் தங்களை பாராளுமன்றத்தின் தாய் எனவும் தந்தை எனவும், பாராளுமன்றத்தை உலகத்துக்கு எடுத்துச் செல்லும் தூதுவர் என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டன. அது மட்டுமல்ல, உலகத்தில் மக்களாட்சிக்கு குறை ஏற்பட்டு விடாமல் பாதுகாப்பதுதான் தங்களுடைய தலையாய பணி என்று பிரகடனப்படுத்திக்கொண்ட நாடுகளும் உண்டு. இந்த நாடுகளெல்லாம் தங்கள் அயல்நாட்டுக் கொள்கையில் "மக்களாட்சி விரிவாக்கம்' என்பதை ஒரு முக்கியப் பகுதியாகவே வைத்து நிதி ஒதுக்கி மனித உரிமை செயல்பாட்டாளர்களை ஊக்குவித்தன. 

அதே நேரத்தில், மக்களாட்சி உதாசீனப்படுத்தப்படுவதைத் தடுத்து பல நாடுகள் மக்களாட்சியில் சீர்திருத்தங்கள் செய்து செயல்படுவதையும் கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம். 

உலகத்தில் மக்களாட்சிக்குக் கிடைத்தது போல், வேறு எந்த ஒரு ஆட்சிமுறைக்கும் இவ்வளவு மக்கள் ஆதரவு கிடைத்தது கிடையாது. காரணம், மக்களாட்சியை நன்கு புரிந்து கொண்டு மக்களாட்சி வேண்டும் என்று மக்கள் கேட்கவில்லை. ஒற்றைப் புள்ளியில் மக்களாட்சியை அவர்கள் ஆதரிக்கின்றனர். அதுதான் அந்த ஒரு விரல் புரட்சி. வாக்கின் மூலம் ஓர் ஆட்சியை அகற்றிவிடலாம் என்பது மட்டும் அனைவருக்கும் புரிந்திருக்கிறது. 

மக்களாட்சி பற்றி கருத்துத் தெரிவித்த வின்ஸ்டன் சர்ச்சில், "இன்று நாம் கடைப்பிடித்து வருகின்ற மக்களாட்சி முறை என்பது இதுவரை இருந்த ஆட்சி முறைகளைவிட சிறந்ததுதான். ஆனாலும் இதனை குறையற்ற ஆட்சிமுறை என்று கூறமுடியாது. இந்தக் குறைகளையெல்லாம் களையக்கூடிய ஒரு அமைப்பு வரும்வரை, அதாவது இன்றைய மக்களாட்சி முறையை விட மேன்மையுடைய ஓர் அமைப்பு வருகின்ற வரை எவ்வளவு குறை இருந்தாலும் இதுதான் சிறப்புடையது' என்றார். 

மக்களாட்சியில் சீர்திருத்தம் பற்றி எழுதிய தலைசிறந்த ஆராய்ச்சியாளர் பெர்னாடு கிரிக், "மக்களாட்சியைக் கைக்கொள்ளும் நாடுகள், வேகமாக மாறிவரும் சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப மக்களாட்சியை சீர்திருத்திக் கொண்டே வந்தால், மக்களாட்சி மேன்மையடைவதோடு, அது சமூகத்தையும் மேன்மைப்படுத்திவிடும்.

அதற்கு மக்களாட்சியின் செயல்பாடுகளை தொடர்ந்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் புதுமைகளை புகுத்தி மக்களாட்சி அமைப்பு முறைகளை செம்மைப்படுத்த வேண்டும். இந்த செயல்பாடு ஒரு தொடர் நிகழ்வு. இதற்கு அரசியல் தளத்தில் கடப்பாடும், அறிவாற்றலும் நிறைந்த தலைமைத்துவம் தேவை' என்றார். 

இவர்கள் மேற்கூறிய கருத்துக்களை முன் மொழிந்த காலம், இரண்டாவது உலகப்போர் முடிந்து பல காலனியாதிக்க நாடுகள் விடுதலை பெற்று மக்களாட்சியைக் கைக்கொண்டு செயல்படத் தொடங்கிய காலம். அந்தக் காலகட்டத்தில் அரசாங்கம் என்பது பெரும் சக்தியாக விளங்கியது. 
அன்று மக்களும், வணிகர்களும் அரசாங்கத்தின் ஆளுகையின் கீழ் இருந்தனர்.

அன்றைய அரசாங்கத்திற்கு அரசியல்சாசனம் மட்டும் பின்புலத்தில் இருக்கவில்லை. அரசாங்கத்தை நடத்தியவர்களின் ஆளுமையும் அரசாங்கத்தை பலப்படுத்திக் கொண்டேயிருந்தது. அன்று அரசாங்கம்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் உயர் சக்தியாக விளங்கியது. மக்களும் அரசின் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். இன்று அந்த நிலை உலகம் முழுதும் மாறிவிட்டது. அரசு, சந்தை, சமூகம் (மக்கள்) என்ற மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்தும், சில நேரம் முரண்பட்டும் செயல்பட்டு வருகின்றன. 

அடிப்படையில் அரசும் சந்தையும் மக்களுக்கானது என்பது, கடந்த 30 ஆண்டு காலத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றம் கண்டுவிட்டது. அரசு, தன் சக்தியை இழந்து சந்தையின் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டு விட்டது. சந்தை என்பது அரசாங்கத்தை வழிநடத்தும் சக்தியாக தன்னை மாற்றிக்கொண்டு விட்டது. அதே போல் சமூகம் சிந்திக்க விடாமல், தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களால் மக்களை ஒரு மயக்கத்தில் ஆழ்த்தி இயங்க வைத்து விட்டது இந்த சந்தை. இது எல்லாத் தரப்பு மக்களையும் கவர்ந்து வைத்துக் கொண்டுள்ளது. 

பொருளாதாரம் வளர்ச்சி அடைகின்றபோது அந்த நாட்டில் உள்ள அரசு, அந்த பொருளாதார வளர்ச்சியை முறையாகப் பாதுகாத்து சமூக மேம்பாட்டுக்காக செயல்பட வேண்டும். "அரசு மக்கள் மேல் எப்படி வரிவிதிப்பது என்பதை அறிந்து விதித்து, விதித்த வரியை முறையுடன் வசூல் செய்து, வசூலித்த வரியை முறையாகப் பாதுகாத்து, பாதுகாத்த நிதியை முறையாக தேவையின் அடிப்படையில் பங்கிட்டு செலவழித்து மக்களுக்கு மேம்பாடு கொண்டு வருவதுதான் முறையான அரசு' என்றார் திருவள்ளுவர் (குறள்: 385). 
பொருளாதாரம் உலகம் வியக்கும் வண்ணம் வளர்ந்தபோது இந்தியாவில் அந்த வளர்ச்சி முழுமையாக மக்களைச் சென்றடையாமல் ஒரு குறிப்பிட்ட வர்க்கம் பயன்களை அடைந்ததால்தான் மக்கள் உலகமய பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு எதிராக இருக்கின்றனர். 

இதனை, உலக வங்கியில் பணிபுரிந்த ஜோசப் ஸ்டிக்லிஸ் என்ற பொருளாதார வல்லுனர் சுட்டிக்காட்டி, "அரசாங்கம் முயன்றால் உலகமய பொருளாதாரச் செயல்பாடுகளை ஏழைகளுக்கு நன்மை பயக்கும் வண்ணம் செய்ய முடியும்' என்று கூறியதோடு, தன் கருத்துகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டார். அப்புத்தகம் லட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்தது.

ஆனால் பல நாடுகளில் இதற்கு எதிர் திசையில் அரசாங்கங்கள் பயணிக்க ஆரம்பித்தன. நம் நாட்டில் அந்த நேரத்தில்தான் ஆளும் கட்சியாக இருந்த கட்சிகள் பெருமளவில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கின. அது மட்டுமல்ல, அந்த நேரத்தில்தான் கட்சிகள் அனைத்தும் தங்களை வளப்படுத்திக் கொண்டன. அந்த வளமான பொருளாதாரச் சூழல்தான் அரசியல் கட்சிகளை நிறுவனங்கள் போல் செயல்பட வைத்து வாக்குகளைச் சந்தைப்படுத்த வைத்தது. வாக்குகளை சந்தைப்படுத்தியதுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் சந்தைப்படுத்தப்பட்டனர். 

இதற்கான மூலதனங்கள் கட்சிகளுக்கு வந்தது சந்தையிலிருந்துதான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இதன் விளைவு, கட்சிகள், நிறுவனங்கள்போல் உருமாறி செயல்பட ஆரம்பித்தன. அரசியல் கட்சிகள் பொதுமக்களை நம்பி செயல்பட்ட காலத்தில், எளிமையாக, மக்களுடன் இணைந்து செயல்பட்டன. கட்சிக்காரர்கள் கட்சிக்காக உழைத்தனர். இந்த நிலை மாற்றப்பட்டு அனைத்து கட்சிப் பணிகளுக்கும் ஊதியம் என பிரகடனப்படுத்தப்பட்டது.

அரசியல் கட்சியின் செயல்பாடுகள்,  தொழிற்சாலை செயல்பாடுகள்போல் ஆகிவிட்டன. கட்சிக்காரர்கள் கட்சியிலிருந்து அந்நியப்பட்டுப் போனார்கள். இதன் விளைவுதான், இன்று அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அந்தக் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு வருவதற்கே பணம் கொடுக்க வேண்டியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, வாக்குகளுக்கும் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. 
அரசியல் கட்சிகளை நிறுவனத்தை நடத்துவதுபோல் கட்சித் தலைவர்கள் நடத்த ஆரம்பித்தனர். அது மட்டுமல்ல, கட்சிகள் இயங்க நிறுவன அணுகுமுறையைப் பின்பற்றினர்.

இன்று, கட்சி அரசியல் என்பது தங்கள் நிறுவனங்களை, அதன் சொத்துகளைக் காப்பதற்காக நடத்தப்படும் ஒன்றாக மாறி வருகிறது. இதற்கு மிக முக்கியக் காரணம் நம் நமது மக்களாட்சியை, தேர்தலை விட்டு வேறு எந்த செயல்பாட்டிற்கும் விரிவாக்கம் செய்யாது, குறுக்கியே வைத்து செயல்பட்டதுதான். இதனால் கட்சி அரசியல் என்பது தேக்கமடைந்து விட்டது. கட்சிகள் தொழில் நிறுவனங்களாக செழித்து வளர்ந்தன. 

தொண்டர்களுடன் கட்சிகள் உணர்வுபூர்வ தொடர்பில் இல்லை. மாறாக, கட்சியால் லாபம் அடைவோருடன் தொடர்பில் இருக்கின்றன. என்றைக்கு கட்சிகள் வாக்குக்கு பணம் தர ஆரம்பித்ததோ அன்றே அவை மக்களுடனான அரசியல் தொடர்பை முறித்துக்கொண்டுவிட்டன. கட்சிகள் இன்று மக்களிடம் வணிகத் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு செயல்படுகின்றன. இதன் விளைவுதான் கட்சிகள் அரசியல் விளம்பரதாரக் கம்பெனிகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தது. இன்று ஒரு தனி மனிதர் அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கி லாபம் ஈட்டி வணிகம் செய்கிறார். 

அவர் இன்று கட்சிகளை ஆட்சிக்குக் கொண்டுவரும் வித்தைக்காரராக மாறி அரசியல் கட்சிகளை கீழ் நிலைக்குக் கொண்டு சென்று விட்டார். கட்சிகளில் தலைவர்கள் இருந்தால் வித்தைக்காரர்களைத் தேடமாட்டார்கள். தன் மீதும் தன் கட்சிக்காரர்கள் மீதும் கட்சித் தலைவர்கள் நம்பிக்கையற்று இருப்பதால்தான், இந்த நிறுவனங்களுக்கு பெருவாழ்வு வந்துவிட்டது. இதன் விளைவாக, கட்சி அரசியல் என்பது கொள்கை சார்ந்தோ, தத்துவம் சார்ந்தோ இல்லாமல் சந்தை சார்ந்து இயங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவேதான் கட்சி அரசியலைத் தாண்டி புதிய அரசியலை கட்டமைக்க முடியாத சூழலில் மக்களாட்சி சிதிலமடைந்து வருகின்றது. 
இந்தச் சூழலை மாற்ற நாம் சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நாம் கட்சி அரசியலிருந்து வேறு ஒரு அரசியலை கட்டமைக்க முயல வேண்டும். அது ஒரு அறிவுசால் முயற்சி. புதிய அரசியலை நோக்கிச் செல்ல நாம் தயாராக வேண்டும்.



Read in source website

மூளையில் துர்நாற்றம் எவ்வாறு உணரப்படுகிறது என்பதை நம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.‌ நறுமணத்தைவிட துர்நாற்றம் நமது மூளையில் மிக விரைவாக செயலாக்கப்படுவதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த தகவல், டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டு 2022, மே மாதம், 27ம் நாள் வெளியிடப்பட்டது. 

வாசனை அறியும் மூளை 

பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வாசனையை விநியோகிக்கும் சாதனம், உணர்வுகளை பதிவுசெய்ய எலெக்ட்ரோ என்செபலோகிராம்(Electro Encephalogram) இயந்திரக் கற்றல் அடிப்படையிலான பகுப்பாய்வுகள், மூளையில் நாற்றங்கள் எப்போது எங்கே செயலாக்கப்படுகின்றன என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியது.

ஆய்வில், உணர்தல் ஏற்பட்டபோது, நல்ல நாற்றங்களைவிட விரும்பத்தகாத துர்நாற்றங்கள் விரைவாக அறியப்பட்டு செயலாக்கப்பட்டதை அறிந்தனர். துர்நாற்றத்தைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல்கள் நரம்பியல் கடத்தல் நோய்களின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். எனவே, வாசனை என்பதன் அறிவியல், உணர்வின் நரம்பியல் தளங்களைக் கண்டுபிடிப்பது எதிர்காலத்தில் அந்த பகுதி தொடர்பான நோய்களைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள உதவும்.

ஆய்வும் முடிவும் 

உங்களின் அடுத்த அறையில் ஒரு சூடான காபி கொண்டு வரப்படுகிறது. அந்த காபியின் வாசனை உங்களை அதனை நோக்கி இழுக்கும். ஒரு சூடான காபியின் வாசனை உங்கள் நாளை சரியான வழியில் தொடங்க உதவுமா? அல்லது வலிமையான, பிரச்னையான தாங்கமுடியாத வாசனையை உங்களால் தாங்க முடியவில்லையா?

புதிய ஆராய்ச்சியின்படி, வாசனையை உங்கள் மூளை எவ்வளவு விரைவாகச் செயலாக்குகிறது என்பது அந்த வாசனை இனிமையானதா இல்லையா என்பதைப் பொருத்து இருக்கலாம். டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு குழு, துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் 10 மாறுபட்ட வாசனைகளை வழங்கக்கூடிய ஒரு சிறப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளது.

இதில், மூளைக்குள் சிக்னல்களைப் பதிவு செய்யும் எலக்ட்ரோ என்செபலோகிராம் (Electro Encephalogram -EEG) சாதனத்தை அணிந்திருக்கும்போது பங்கேற்பாளர்கள் வாசனையை நுகர அறிவுறுத்தப்பட்டனர். இப்போது அவர்களின் உணர்வுகள் மதிப்பிடப்பட்டது. 

இயந்திரக் கற்றல் அடிப்படையிலான கணினி பகுப்பாய்வைப் பயன்படுத்தி EEG தரவின் அடிப்படையில் மூளையில் நாற்றங்களின் வரம்பு எப்போது, ​​​​எங்கு செயலாக்கப்பட்டது என்பதைக் காண முடிந்தது.

துர்நாற்றங்கள் நறுமணத்தைவிட விரைவில்  அறிதல்

துர்நாற்ற வாசனை செலுத்தப்பட்டு 100 மில்லி விநாடிகளில் உணரப்பட்டது கண்டு விஞ்ஞானிகள் வியந்துபோனார்கள். இது மூளையில் வாசனைத் தகவல்களின் பிரதிநிதித்துவம் மிக விரைவாக நிகழும் என்றும் தெரிவிக்கிறது என வேளாண் பட்டதாரி பள்ளியின் முனைவர் மாணவர் முகிஹிகோ காடோ கூறினார். இவர் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் வாழ்க்கை அறிவியல் துறையைச் சேர்ந்தவர்.

பங்கேற்பாளர் உணர்வுப்பூர்வமாக உணரப்படுவதற்கு முன்பே மூளை துர்நாற்றத்தை உணர்ந்தது கண்டறியப்பட்டது. 

சுமாரான அல்லது இனிமையான நாற்றங்களிலிருந்து 300 மில்லி விநாடிகளுக்கு முன்பே துர்நாற்றத்தை மூளை உணர்கிறது. 

மனித இனம் உயிர் வாழ்தலுக்கு வாசனை அறிதல் அவசியம்

மனித இனம் உருவானபோதும்/மனிதக் கருவிலும் முதன்முதல் உருவானது வாசனை உணர்வே. இதுதான் நமது உயிர் வாழ்தலை உறுதிப்படுத்தியது. அழுகிப்போய், கிருமிகள் உள்ள உணவை உண்டால் மனிதன் இறந்து போவான். உணவு கெட்ட வாசனையா, நல்ல வாசனையா என்று அறிந்தே ஆதி மனிதன் உணவு உட்கொண்டான். எனவே, தான் உணவு  வைத்ததும் அனைத்து விலங்குகளும் உணவை முகர்ந்து பார்க்கின்றன.

சோதனையின்போது, நல்ல இனிமையான வாசனைகள் (மலர் மற்றும் பழ வாசனைகள் போன்றவற்றை 500 மில்லி விநாடிகள் வரை மூளையில் உணரப்படவில்லை. அதேநேரத்தில் தரம் குறைந்த வாசனைகள், குறிப்பிடப்பட்ட நேரத்தில் துர்நாற்றம் தொடங்கிய 600-850 மில்லி விநாடிகளில் உணரப்பட்டுள்ளன.

துர்நாற்ற உணர்வு ஆபத்தின் எச்சரிக்கை

எனினும் விரும்பத்தகாத நாற்றங்கள் பற்றிய முந்தைய கருத்து என்பது சாத்தியமான ஆபத்துகளுக்கு எதிரான ஒரு ஆரம்ப எச்சரிக்கையாகக்கூட இருக்கலாம். 

நமது மூளை எவ்வாறு நாற்றங்களைச் செயலாக்குகிறது என்பதற்கான சோதனைகள், எதிர்காலத்தில் உயர் டெம்போரல் ரெசல்யூஷன் இமேஜிங் எதிர்காலத்தில் பார்கின்சன் மற்றும் அல்சைமர் நோய்கள் (Parkinson's and Alzheimer's diseases)போன்ற நரம்பியக் கடத்தல் நோய்களின் வழிமுறைகளை நன்கு புரிந்துகொள்வதற்கான ஒரு துவக்கப் புள்ளியாகக்கூட இருக்கலாம்,

இதில் வாசனை உணர்வில் செயலிழப்பு என்பது ஒரு ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாகும். மேலும் பல ஆராய்ச்சி வழிகளை ஆராய்வதில் குழு ஆர்வமாக உள்ளது. மேலும் ஒவ்வொரு உணர்வும் மற்றொன்றின் உணர்வை பாதிக்கிறது என்று காடோ கூறுகிறார்.

தற்போதைய ஆய்வில் வாசனை உணர்வுத் தூண்டுதல்களை மட்டும் வழங்கியிருந்தாலும், நாற்றங்களை வழங்குவது போன்ற இயற்கையான நிலைமைகளின் கீழ் மூளையின் செயல்பாட்டை பகுப்பாய்வு செய்வது முக்கியம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 



Read in source website

பெருந்தொற்றுக்குப் பிறகான உலகு தழுவியப் பொருளாதாரப் பாதிப்புகள், ரஷ்ய - உக்ரைன் போர்ச்சூழல் இவற்றுக்கு நடுவே சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்து முடிந்துள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் (டபிள்யூஇஎஃப்) வருடாந்திர மாநாடு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. கட்டற்ற வணிகத்தைக் காட்டிலும் சுதந்திரம் முதன்மையானது, தொழில் லாபங்களைக் காட்டிலும் விழுமியங்கள் முக்கியமானவை என்று இம்மாநாடு வலியுறுத்தியுள்ளது. போரினால் உருக்குலைந்து கிடக்கும் உக்ரைனை மறுநிர்மாணம் செய்யச் சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கவும் இம்மாநாடு முடிவெடுத்துள்ளது. 5 நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் உலகெங்குமிருந்து தலைவர்கள், அரசப் பிரதிநிதிகள், பொருளாதார வல்லுநர்கள் என்று 3,000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஏறத்தாழ 450 அமர்வுகளாக உலகப் பொருளாதார நிலை குறித்து வெவ்வேறு கோணங்களில் விவாதங்கள் நடந்து முடிந்துள்ளன.



Read in source website

தேசத்தின் முதல் காவல் அரணாக விளங்குபவர்கள், கடலோர மக்கள் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்தியா போன்ற தீபகற்ப நாட்டில், கடலோர மீனவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட்டு, தொழில் முயற்சிகள் ஊக்குவிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட வேண்டியது ஆட்சியாளர்களின் தலையாய கடமை. தற்போது நிலவிவரும் புவிசார் அரசியலில், கடலோர வாழ்க்கைக்கான பாதுகாப்பு என்பது, மேம்போக்கான நிர்வாகம் சார்ந்ததாக இல்லாமல், தீர்க்கமான சிந்தனையோடு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே கடலோர மக்களின் எதிர்பார்ப்பு.

கடலோர வாழ்க்கை என்றால் என்னவென்றே புரிந்துகொள்ளாத ஆட்சியாளர்களால் தொடர்ந்து இந்த மக்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், கடலோரத்தின் எல்லை சாமிகளாய் நித்தமும் நின்று தேசத்தைப் பாதுகாக்கிறார்கள் மீனவர்கள். கடந்த காலங்களில் நடந்து முடிந்த போர்களிலும், பயங்கரவாதத் தாக்குதல்களிலும் முதலில் பலியானவர்கள் கடலோர எல்லைகளில் வாழ்ந்த மீனவர்களே என்பது நாம் அறியாததல்ல. பொது விவாதங்களுக்கோ புரிதலுக்கோ எட்டாத மீனவர்களின் இப்படியான உயிர்த் தியாகங்கள், முப்படைகளின் தியாகங்களுக்கு இணையானவை என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?

இயற்கையின் சவால்களை நாளும் எதிர்கொள்ளும் இந்த மக்களின் வாழ்க்கையைச் சமவெளி சமூகம் புரிந்துகொள்ள மறுக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து, ஊர்ப் பஞ்சாயத்துகள் வரை உள்நோக்கத்தோடு, நிர்வாக எல்லைகள் பிரித்தாளப்பட்டு, கடலோரச் சமூகங்களிலிருந்து ஆட்சி அதிகாரத்துக்கான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாமல் முடிந்தவரை பார்த்துக்கொள்கிறது சமவெளி அரசியல்.

தப்பித் தவறி ஒருசில இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலோரப் பஞ்சாயத்துத் தலைவர்கள்கூட, செயல்பட முடியாமல் திணறுகிறார்கள். அரசின் எந்த நலத்திட்டமும், இந்தச் சிறு தலைவர்கள் மூலம்கூடச் செயலாக்கத்துக்கு வந்துவிடக் கூடாது என வரிந்துகட்டிக்கொண்டு நிற்கிறார்கள் சமவெளியின் அரசியலர்கள். விளைவு, கடற்கரையில் செயல்படுத்தப்படும் எந்தத் திட்டமும் கடலோடிகளுக்கானதாக இல்லை.

எந்த அரசியல் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. சமீபத்தில் நடந்த ராமேஸ்வரம், வடகாடு மீனவப் பெண் கொலை நெஞ்சைப் பதற வைக்கிறது. குற்றங்களுக்குப் பிந்தைய காலங்களில், சமவெளிச் சமூகங்களுக்குக் கிடைக்கும் ஊடக வெளிச்சமோ, அதனால் விளையும் பொதுஜனப் புரிதலோ, நிர்ப்பந்திக்கப்படும் அரசு அமைப்புகளால் வாக்குவங்கி அரசியலுக்காகவாவது அறிவிக்கப்படும் நிவாரணங்களோ கடலோர மக்களுக்கு என்றுமே இல்லை என்பதுதானே உறுத்தும் உண்மை.

புறக்கணித்தலின் அரசியலால், மீனவர்களின் தியாக வாழ்வு புரிந்துகொள்ளப்படவில்லை என்பது ஒருபுறமென்றால், முன்னேற்றம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்களாலும், மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. அரிய கனிமங்களைக் கடற்கரை மணலிலிருந்து பிரித்தெடுத்து, ஏற்றுமதி செய்து பொருளாதாரச் செழுமைக்கு வழிசெய்கிறோம் என்று வந்தவர்களால், தென்பகுதியின் கடலோரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. குரலற்ற சமூகமாய் ஒடுங்கிவிட்ட நிலையிலும், இயற்கையின் இடர்ப்பாடுகள், சமவெளி அரசியல், அண்டை நாட்டு அச்சுறுத்தல் போன்ற பல்முனைத் தாக்குதல்கள் இருந்தபோதிலும் அவற்றைப் புறந்தள்ளி ஏற்றுமதிப் பொருளாதாரப் பங்களிப்பில் முனைப்போடு மீனவர்கள் செயலாற்றுவது ஆட்சியாளர்களை வியக்கச் செய்திருக்கிறது.

கப்பலோட்டமும் மீன்பிடித்தலும் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்தும், தட்டிக்கொடுத்தும் ஒருசேர வளர வேண்டிய துறைகள். கடல்வழி வணிகத்தின் தன்மையை அறியாத ஆட்சியாளர்களால் இரு துறைகளும் ஒன்றுக்கொன்று எதிரானதுபோல் சித்தரிக்கப்பட்டுவிட்டன. வளர்ச்சிக்கான துறைமுக அமைவுத் திட்டங்கள் செயலாக்கத்துக்கு வரும்போது, அத்திட்டச் செலவீனத்தில் பாதிப்புக்குள்ளாகப்போகும் கடலோர வாழ்வுக்கான புனரமைப்புச் செலவினங்கள் அக்கறையோடு சேர்க்கப்பட்டு நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். துறைமுக அமைவால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகி, அவர்கள் தங்கள் வாழிடம் விட்டுப் புலம்பெயரும் சூழல் வந்தால், அது நாட்டின் இயற்கையான பாதுகாப்பில் ஏற்படும் ஓட்டை என்ற புரிதல் ஆட்சியாளர்களுக்கு இருப்பதாய்த் தெரியவில்லை.

சமீபத்திய களஆய்வு ஒன்றில், அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாததே தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதற்கான காரணம் என மீனவர்கள் குமுறியிருக்கிறார்கள். அவர்களின் குமுறலிலும் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. அரசியலில் பிரபலமாக இருக்கும் சமவெளி அரசியலர்களின் திட்டமிட்ட சதியால், தொகுதிப் பிரிப்பால் கடலோர மக்கள் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என உறுதிபடச் சொல்கிறார்கள் மீனவர்கள். தேசத்தின் பூர்விகப் பழங்குடியான மீனவர்கள், இன்னும் அந்தத் தகுதியை அரசிடமிருந்து பெறவில்லை, கடலோரத் தொழில்களிலும் வேலைவாய்ப்புகளிலும், அரசு மற்றும் தனியார் நிர்வாகப் பணிகளிலும், சமவெளி மக்களின் ஆதிக்கமே எப்போதும் இருக்கிறது என்பதுதானே உண்மை.

தேசத்தின் ஏனைய குடிகளுக்கு இருக்கும் அங்கீகாரமும், தொழில் வேலைவாய்ப்பும் எம் தலைமுறைக்கும் கிடைக்க வேண்டுமானால் பழங்குடிகளாக நாங்கள் அங்கீகரிக்கப்பட்டு, எமது குரல் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும். நேர்மையான, நேரடியான அந்தக் குரலே எங்களுக்கான நியாயத்தை வழங்கி, நிகழ்காலத்தை வளப்படுத்தி, எதிர்காலத்தை உறுதிசெய்யும் என உறுதிபடச் சொல்கிறார்கள் மீனவர்கள்.

எல்லைச் சாமிகளான கடலோர மக்களின் குரல் கவனிக்கப்பட்டு, ஆவன செய்யப்பட வேண்டியது தற்காலத்தின் தவிர்க்க முடியாத தேவை.

- ஆர்.என்.ஜோ டி குருஸ், ‘கொற்கை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com



Read in source website

பள்ளி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது இன்று பேசுபொருளாகியிருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்து அந்தப் பள்ளியில் படித்த மாணவன், ஒன்பதாம் வகுப்பில் வன்முறையில் ஈடுபடுகிறான். அவனை உருவாக்கியதில் பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பங்கும் பொறுப்பும் இல்லையா? இது நம் சமுதாயத்தின், நமது காலகட்டத்தின் மிகப் பெரிய சோகம்; நமக்கெல்லாம் ஒரு பெரிய சவால்; இளைஞர்கள் நம் சமுதாயத்தில், பெரியவர்களிடம் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்பதன் குறியீடு.

வளரிளம் பருவத்தில்தான் (adolescence) மாணவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த மாணவப் பருவம் அனைத்து உலக நாடுகளிலும் சவாலான காலகட்டமாகத்தான் பார்க்கப்படுகிறது. இக்கட்டத்தில் மாணவர்கள், பாலினப் பாகுபாடின்றி, பெருமளவில் மன உளைச்சலுக்குள்ளாவது உண்மை. வளரிளம் பருவம் அன்புக்காக, புரிதலுக்காக, அரவணைப்புக்காக, உதவிக்காகத் தவிக்கும் பருவம். சில கட்டுப்பாடுகளால், கலாச்சாரக் காரணங்களால், நம் சமுதாயத்தில் பெண் குழந்தைகள் வன்முறைகளில் அதிகமாக ஈடுபடாவிட்டாலும், அவர்களுக்கும் இதுபோன்ற உளவியல் சிக்கல்கள் ஏராளமாக இருக்கின்றன. வன்முறைகளில் ஈடுபடும் அல்லது அதில் தள்ளப்படும் குழந்தைகளின் சூழலைப் புரிந்துகொள்ளும் நிலை பள்ளிகளில் இல்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், பள்ளிகள் சமுதாயத்திலிருந்து முழுக்க விலகிக் கிடக்கின்றன; அந்நியப்பட்டுக் கிடக்கின்றன. அரசுப் பள்ளி மாணவர்கள்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று சொன்னால், அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தகைய சமூக, பொருளாதாரப் பின்னணியிலிருந்து வருகிறார்கள்? ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, வறுமையில் வாடும் குடும்பங்களிலிருந்துதான் அரசுப் பள்ளிக்கு வருகின்றனர். அப்படி என்றால், ஏழைக் குழந்தைகள்தான் இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுகிறார்களா? வசதி படைத்த மாணவர்கள் ஈடுபடுவது இல்லையா?



Read in source website

இந்தியக் கல்வி அமைச்சகம் சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. நாடெங்கும் 1,18,274 பள்ளிகளில் 5,26,824 ஆசிரியர்கள், 34,01,158 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் வெளிவந்துள்ள உண்மைகள் பேரதிர்ச்சி தருகின்றன.

பள்ளி மாணவர்களிடையே கற்றல்‘நெருக்கடி’ அதிகரித்து உள்ளது. தமதுபாடங்களைச் சரியாக முழுமையாககற்க புரிந்துகொள்ள நமது பிள்ளைகள் திணறு கிறார்கள்.

அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என்கிற பாகுபாடு இல்லாமல், கிராமம் – நகரம் என்கிற வித்தியாசம் இன்றி, மொழிப்பாடம், கணிதம், அறிவியல், மொழி அறிவியல் என்று அநேகமாக எல்லாப் பாடங்களிலும் இந்தக் கற்றல் குறைபாடு தெரிகிறது.

‘சராசரி கற்றல்’ உள்ளவர்களின் எண்ணிக்கை 3-ம் வகுப்பு தொடங்கி 10-ம் வகுப்பு வரையில் குறைந்து கொண்டே வருகிறது.

மொழிப் பாடத்தில் ஏறத்தாழ 50% பேர் சராசரி நிலையைத் தொடுகிறார்கள். கணிதம், அறிவியல் பாடங்களில் 40%க்கும் குறைவானவர்களே சராசரி நிலைக்கு மேலே இருக்கிறார்கள்.

இந்தக் குறைபாட்டுக்கு என்ன காரணம்..? எப்படிச் சரி செய்யலாம்..?

பெருந்தொற்று காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகளாக, நேரடி வகுப்புகள் இல்லாமற் போனது பிள்ளைகளின் கற்றல் ஆர்வத்தைப் பாதித்து இருக்கிறது. என்னதான் ‘வசதி’ ஏற்படுத்தித் தந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் நமதுபிள்ளைகளைப் பெரிதாக ஈர்க்கவில்லை. பாரம்பரிய, நேரடி வகுப்புகள் ஏற்படுத்தும் தாக்கம், ஆன்லைன், அஞ்சல் வழி உள்ளிட்ட வேறு எந்த வடிவிலும் கிடைப்பதில்லை.

நாடெங்கும் சுமார் 96% பிள்ளைகள், பள்ளிக்கு வர விரும்புகிறாகள்; 94%பேர் பள்ளியில் பாதுகாப்பாக உணர்கிறார்கள். 91% பேர் வகுப்பில் ஆசிரியரிடம் கேள்வி கேட்கிறார்கள். இத்துடன், பிள்ளைகளின் ‘பின்புலம்’ முக்கிய கவனம் பெறுகிறது.

அன்னையர்களில் 25%பேர் பள்ளிப் படிப்பு இல்லாதவர்கள்; பிள்ளைகளில் 48% பேர் பள்ளிக்கு நாள்தோறும் நடந்தே வருகிறார்கள். 9% பேர், பொதுப் போக்குவரத்து பயன்படுத்துகிறார்கள்.

பள்ளிப் பிள்ளைகளின் கற்றல் திறனில் தமிழகம், தேசிய சராசரியை விடவும் 4 புள்ளிகள் குறைவு - நம்ப முடியாததாக இருக்கிறது. இங்கே பல குடும்பங்களில் பெற்றோர் கல்வியறிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள். இருந்தும் ஏன் இப்படி...?

பெற்றோர் என்னதான் படித்து இருந்தாலும், நாள்தோறும் தவறாது பாடங்களைச் சொல்லித் தந்தாலும், அம்மா, அப்பாவைப் பிள்ளைகள் தமது ஆசிரியராக ஏற்றுக் கொள்ளவில்லை! அம்மா - அம்மாதான்; ஆசிரியர் - ஆசியர்தான். அவரவர் பங்கு, அவரவர் பாத்திரம்– அவரவருக்கே பொருந்தி வரும்.

ஆசிரியரின் கண்டிப்பு, சக மாணவர்களின் இருப்பு, வகுப்புச் சூழல், பள்ளி நேரம் ஆகியன ஒருவரின் கல்வியில் மிக நிச்சயம் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த அமைப்பு முறைக்கு வெளியே ‘கற்றல் – கற்பித்தல்’ நடைமுறை, திறம்பட செயல்பட சாத்தியமே இல்லை.

கேளிக்கைகளில் அதீத ஆர்வம் – கற்றல் குறைபாட்டுக்கு ஒரு நேரடி காரணி. பள்ளிக்குச் செல்லாத இரண்டு ஆண்டுக் காலத்தில், பல்லாயிரக் கணக்கான பிள்ளைகளை, சமூக ஊடகங்கள், திரைப்படங்கள், வீடியோ விளையாட்டுகள் முழுதாகத் திசை திருப்பி விட்டன.

பிள்ளைகளின் கவனச் சிதறலைத் தடுத்து, ஆக்கபூர்வமான வழிகளில் அவர்களின் கவனத்தைத் திருப்புகிற ஆற்றல் எல்லாப் பெற்றோருக்கும் இல்லை; அத்தகைய மனநிலையை ஏற்படுத்துகிற சமூகச் சூழலும் இல்லை. ‘அறிவுரை’ மூலம் மட்டுமே இளம் மனங்களை மாற்றி விட இயலாது.

கற்றல் குறைபாடு வேரூன்ற, வேகமாகப் பரவ, கேளிக்கைச் செயலிகளுக்கு மாற்றாக, அனைவரும் ‘தேடிச் சென்று’ பயன்படுத்துகிற, அறிவார்ந்த தளம் எதுவும் இல்லாததும் மிக முக்கிய காரணம். இத்தகைய செயலிகளை உருவாக்குவதில் பரவலாக்குவதில் நாம் முழுத் தோல்வி அடைந்து விட்டோம். அந்த வகையில் நியாயமாக, கற்றல் நெருக்கடிக்கு நாம் எல்லாருமே பொறுப்பேற்க வேண்டும்.

கடுமையான உடற்பயிற்சி, திட்டமிட்ட சரிவிகித சத்தான உணவு, புதியசிந்தனைகளை ஊக்குவிக்கும் புதுமையான கற்றல் செயலிகள், தேவைக்கு ஏற்றபடி தம்மை மாற்றிக் கொண்டு சூழலுக்கு ஏற்ப மாணவர்களை ஆன்லைன் மூலம் வழி நடத்துவதில் ஆசிரியருக்கு இருக்கும் பணித்திறன்... இவை எல்லாம் இணைந்து ஒரே நேர் கோட்டில் பயணித்தால் மட்டுமே பிள்ளைகளின் கற்றல் திறனைத் தக்க வைக்க முடியும். இது சாத்தியம் ஆகவில்லை.

மாணவர் – ஆசிரியர் இடையே உள்ளவயது வித்தியாசம் குறித்து யாருமே பெரிதாக ஆலோசிப்பது இல்லை. 10 வயது மாணவருக்கு 50-ஐ கடந்த ஆசிரியர் வகுப்பு எடுக்கிறார். 40 ஆண்டு கால இடைவெளி! இருவரும் இரு வெவ்வேறு தளங்களில் நிற்பவர்கள்.

உலகளாவிய நவீனத் தொழில் நுட்பத்தைக் கைப்பிடியில் கொண்டுள்ள குழந்தைகளுக்கு, இன்னமும் அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிந்தனைக் களத்தில் இயங்கும் ஒருவரால் கற்பித்தலில் என்ன ஆர்வத்தைக் கொண்டுவர முடியும்..?

‘கற்போர் – கற்பிப்போர்’ இடையேஉள்ள இந்த வயது வேறுபாட்டை கவனத்தில் கொண்டு இந்த சமன்பாட்டை மாற்றிஅமைக்க முயற்சித்தல் வேண்டும்.சேர்ந்து படித்தல், கூட்டுப் பயிற்சி, பரிசோதனைகள், திறன் போட்டிகள் குழந்தைகளின் அறிவு மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவும். இயன்றவரை நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடக்கா மல் ‘வெளி உலகில்’ கற்றலுக்கான வாய்ப்புகள் வழங்கும் போது பிள்ளைகளின் ஆர்வம், அறிவு பெருகும்.

புதிய உபகரணங்கள், புதிய யுக்திகள், புதிய வழிமுறைகளைப் பயன்படுத்த ஆசிரியர்களை ஊக்குவிக்க வேண்டும்.

பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பி வைப்பதில் கடந்த தலைமுறை பட்டபாடு சொல்லி மாளாது. இதில் இருந்து நாம்நல்லபடியாக, வெற்றிகரமாக வெளி வந்து விட்டோம். இப்போது..? பள்ளிக்குச்செல்லுதல் மட்டுமே கல்வியின் அடையாளம் ஆகாது; பாடங்களை புரிந்துகற்றல் வேண்டும். இதிலே சமீப காலத்தில் பெரும்சரிவு தெரிகிறது.

பள்ளிக்கு வருகிற பிள்ளைகளுக்குப் பாடங்களைக் கற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குப் புரிகிற விதத்தில், அவர்களுக்குப் பிடித்தமான வழியில் கல்வியைக் கொண்டு சேர்க்கிற பொறுப்பு அரசுக்கு, கல்வியாளர்களுக்கு, ஆசிரியர்களுக்கு உண்டு.

நமது பிள்ளைகள் அறிவார்ந்த பொறுப்பான மக்கள்தாம். அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதில், நமது உடனடி கவனம் தேவைப்படுகிறது. சற்று தாமதித்தாலும் சற்று சுணக்கம் காட்டினாலும், சென்ற தலைமுறையினர் பட்ட பாடுகள், கண்ட கனவுகள்.. வீணாகிவிடும். என்ன செய்யப் போகிறோம்..?



Read in source website