DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 28-02-2022

வாஷிங்டன்: உக்ரைன் மீதான படையெடுப்பின் எதிரொலியாக, சா்வதேச பணப் பரிவா்த்தனைக்கு மிகவும் அவசியமான ‘சொசைட்டி ஃபாா் வோ்ல்டுவைட் இன்டா்பேங் ஃபைனான்சியல் டெலகம்யூனிகேஷன்’ (ஸ்விஃப்ட்) தொடா்பிலிருந்து தடை செய்யப்பட்டுள்ள ரஷிய வங்கிகளை விலக்க அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் முடிவு செய்துள்ளன.

இது ரஷியப் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது. ரஷியாவுடன் வா்த்தகம் புரிந்துவரும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஒரு சில குறிப்பிட்ட ரஷிய வங்கிகள் மட்டுமே ஸ்விஃப்ட் தொடா்பிலிருந்து விலக்கிவைக்கப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 



Read in source website


சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகள் மற்றும் விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கக் கூடாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாக வாரியம் பரிந்துரைத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா 5-வது நாளாக தீவிர ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சர்வதேச நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

இதையும் படிக்கரஷியா - உக்ரைன் இடையே முதல்கட்டப் பேச்சு: போரை நிறுத்தக் கோரிக்கை

இந்த நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் ரஷியா மற்றும் உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக நிற்கும் பெலாரஸ் மீது நடவடிக்கைளை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"உலகளவிலுள்ள சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது அதிகாரத்துக்குள்பட்டு ரஷியா அல்லது பெலாரஸ் நாட்டிலிருந்து விளையாட்டு வீரர் அல்லது விளையாடு அதிகாரி எவரும் ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டுப் பிரதிநிகளாகப் பங்கேற்பதை அனுமதிக்கக் கூடாது. ரஷியா அல்லது பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த தனி நபரோ அல்லது அணியோ அவர்களை நாடற்ற வீரர் அல்லது நாடற்ற அணியாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசிய சின்னமோ, நிறமோ, கொடியோ அல்லது கீதமோ காட்சிப்படுத்தக் கூடாது."



Read in source website

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.ஆ.பிரபு தலைமையிலான ஆய்வு மாணவர்கள் சரவணன், சந்தோஷ், ஸ்ரீமன் உள்ளிட்டோர் ஜவ்வாதுமலையடிவாரத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அதில், 700 ஆண்டுகளுக்கு முந்தைய விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்த நடுகற்களை அவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

இது குறித்து முனைவர்.ஆ.பிரபு கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை அடிவாரத்தில் எங்கள் ஆய்வுக்குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குரும்பேரி பகுதியில் பெரியவர்கள் கோயில் என்ற இடத்தில் 4 நடுகற்கள் இருப்பதை நாங்கள் கண்டோம்.

இதில், 3 சிற்பங்கள் கோயில் உள்ளேயும், ஒரு சிற்பம் கோயிலுக்கு வெளியே 100 மீட்டர் தொலைவில் உள்ள மரத்தடியில் இருந்தது. இந்த நடுகற்களில் உள்ள வீரர்களின் உருவங்கள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. வீரர்களது வலது கரத்தில் போர் வாளும், இடது கரத்தில் வில்லும் ஏந்திய நிலையில் வீரர்கள் காணப்படுகின்றனர். அவர்களின் முதுகில் அம்புகள் நிறைந்த கூடு ஒன்று காணப்படுகிறது.

காதுகளில் குண்டலமும், கழுத்தில் ஆபரணங்களும் இடுப்பில் குறுவாளும் காணப்படுகிறது. வீரர்கள் இறந்த உடன் அவரவர் மனைவியர் உடன்கட்டை ஏறியதை குறிப்பதாக வீரர்கள் உடன் அதற்கு கீழே அவர்களது மனைவியரின் உருவமும் இடம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் இயற்கை வழிபாட்டுக்கு அடுத்ததாக முன்னோர்களை வழிபடும் மரபு இருந்தது. அதற்கான சான்றுகளே நடுகற்களாகும். நடுகற்களை தமிழர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழிப்பட்டு வருவதை சங்க இலக்கியங்கள் எடுத்துக்கூறுகின்றன.

அதன் தொடர்ச்சியாக சிறு தெய்வ வழிபாட்டு மரபுகள் இன்று வரை மக்களிடையே நிலவுகிறது. இதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக குரும்பேரி கிராமத்தில் உள்ள இந்த நடுகற்கள் விளங்குகின்றன. இந்த நடுகற்கள் பெரியவர்கள் கோயில் என அழைப்பது முன்னோர் வழிப்பாட்டினை நமக்கு எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

நடுகற்கள் இப்பகுதியில் நடைபெற்ற பூசலில் உயிர் துறந்து வீரர்களுக்காக எடுக்கப்பட்டவையாகும். வீரர்கள் இறந்த நிலையில் அவர்களது மனைவியரும் உடன் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டதால் அவர்களது செயலை போற்றும் விதமாக அவர்களது உருவங்களையும் இணைத்து நடுகற்கள் வடிக்கப்பட்டுள்ளன. சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ள அமைப்பினை வீரர்கள் அணிந்துள்ள ஆபரணங்களையும் அடிப்படையாக கொண்டு இந்த நடுகற்கள் விஜயநகர மன்னர் காலம் அதாவது, 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்ககக் கூடும் என தெரிகிறது.

இக்கோயில் குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது முந்தைய காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் அருகாமையில் உள்ள ஜவ்வாதுமலைப்பகுதிக்கு பயணம் சென்ற போது மலைப்பகுதியில் மறைந்திருந்த கள்வர்கள் இவர்களை தாக்கி உடமைகளை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனை கண்ட மலைவாழ் மக்கள் இருளர் இனத்தைச் சேர்ந்த ஒரு வீரன் மன்னருக்கு ஆதரவதாக போரிட்டுள்ளார். இந்த சண்டையில் இருளர் இன வீரர் இறந்து போகிறார். இறுதியில் மன்னரும் உயிரிழக்க நேர்கிறது. மன்னர் இறப்பதற்கு முன்பாக போரில் தம்மை உதவிய இருளருக்கும் நடுகல் எடுத்து வழிபட வேண்டும் என்றும், அவரை வழிப்பட்ட பிறகே தம்மை வழிப்பட வேண்டும் என கட்டளையிட்டதாக கூறுகின்றனர்.

மரத்தடியில் இருந்த நடுகல்லை இப்பகுதி மக்கள் இன்றளவும் ‘இருளர் கல்’ என்றே அழைக்கின்றனர். தை மாதம் காணும் பொங்கல் தினத்தன்று இக்கோயிலில் வழிபாடு நடத்துகின்றனர்.

இருளர் கல்லினை வழிப்பட்ட பிறகே பெரியவர் கல்லினை வழிபாடுகிறார்கள். இந்த நடுகற்கள் குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பொருத்தமானதாகவும் அமைகிறது. வரலாற்று சிறப்பு மிக்கி இந்த நடுகற்கள் திருப்பத்தூர் மாவட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நடுகற்களாக அமைந்துள்ளது. இதை தொல்லியல் துறையினர் ஆவணப்படுத்த வேண்டும்’’ என்றார்.



Read in source website

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை சென்னையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் தனதுவாழ்க்கை வரலாற்று நூலை எழுதி வருகிறார். இதன் முதல் பாகம் இம்மாதஇறுதியில் வெளியிடப்படும் என்று சமீபத்தில் நடந்த சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவில் அறிவித்திருந்தார். இந்த நூலில் அவரின் 23 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தின் சுவடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இளமைக்காலம், பள்ளிப் படிப்பு, கல்லூரி காலம், அரசியல் ஆர்வம், முதலில் நடத்தியகூட்டம், அதில் முதல் பேச்சு, திரையுலகம், திருமணம், மிசாகாலத்தின் தொடக்கம் வரையிலான பதிவுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 1976 வரைநடந்துள்ள நிகழ்வுகள் முதல்பாகமாக வெளியிடப்படுகிறது.

‘உங்களில் ஒருவன்’ முதல் பாகம் நூல் வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தலைமை ஏற்கிறார். பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகிக்கிறார். மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி வரவேற்புரை ஆற்றுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நூலை வெளியிடுகிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர்அப்துல்லா, பிஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்றுகிறார். விழாவில் பங்கேற்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விழா தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதிய மடலில், ‘நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனைவரையும் அழைக்க முடியாத ஏக்கம் உள்ளது.நேரலை வாயிலாக அந்தவிழா நிகழ்வுகள் ஒளிபரப்பாக இருக்கின்றன. அவரவர் இடத்தில் இருந்தும், ஆங்காங்கு உள்ள திமுக அலுவலகங்களில் கூடியும் இந்தநிகழ்வை கண்டுகளிக்கலாம். புத்தகத்தை வாங்கிப்படித்து, உங்கள் கருத்துகளை தெரிவித்து, அடுத்த பாகத்தை எழுத எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.



Read in source website

இந்தியாவில் இருந்து திராட்சை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2020-21-ம் நிதியாண்டில் திராட்சை ஏற்றுமதியின் மதிப்பு 314 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவின் பழங்கள் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. பழங்கள் பிரிவில் திராட்சை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2020-21-ம் ஆண்டில் திராட்சை ஏற்றுமதியின் மதிப்பு 314 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இதர பழங்களின் ஏற்றுமதி மதிப்பு 302 மில்லியன் அமெரிக்க டாலராகவும், மாம்பழங்களின் ஏற்றுமதி 36 மில்லியன் டாலராக உள்ளது.

கடந்த 2013ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் கொய்யா ஏற்றுமதி 260 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2013-14ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி 0.58 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த கொய்யா ஏற்றுமதி, 2021-22ம் ஆண்டில் 2.09 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

கடந்த 2020-21ம் ஆண்டில் வங்கதேசத்துக்கு 126.6 மில்லியன் டாலர், நெதர்லாந்துக்கு 117.56 மில்லியன் டாலர், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 100.68 மில்லியன் டாலர், நேபாளத்துக்கு 33.15 மில்லியன் டாலர், ஈரானுக்கு 32.5 மில்லியன் டாலர், ரஷ்யாவுக்கு 32.2 மில்லியன் டாலர், சவுதி அரேபியாவுக்கு 24.79 மில்லியன் டாலர் மற்றும் கத்தாருக்கு 22. 31 மில்லியன் டாலர் மதிப்பில் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

முதல் 10 இடங்களில் உள்ள இந்த நாடுகளுக்கு, கடந்த 2020-21ம் ஆண்டில், இந்தியாவின் பழங்கள் ஏற்றுமதியில் 82 சதவீதம் சென்றுள்ளது. யோகர்ட் மற்றும் பனீர் ஏற்றுமதியும் கடந்த 2013-14ம் ஆண்டிலிருந்து 200 சதவீதம் அதிகரித்து 2021-22ம் ஆண்டில் 30 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

பால் பொருட்களின் ஏற்றுமதி கடந்த 5 ஆண்டுகளில் 10.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2021-22ம் ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை 181.75 மில்லியன் டாலர் அளவுக்கு பால் பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில், இந்த மதிப்பு கடந்த ஆண்டின் ஏற்றுமதியை விட அதிகரிக்கவுள்ளது.

கடந்த 2020-21ம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 39.34 மில்லியன் டாலருக்கும், வங்கதேசத்துக்கு 24.13 மில்லியன் டாலருக்கும், அமெரிக்காவுக்கு 22.8 மில்லியன் டாலருக்கும், பூட்டானுக்கு 22.52 மில்லியன் டாலருக்கும், சிங்கப்பூருக்கு 15.27 மில்லியன் டாலருக்கும், சவுதி அரேபியாவுக்கு 11.47 மில்லியன் டாலருக்கும், மலேசியாவுக்கு 8.67 மில்லியன் டாலருக்கும், கத்தாருக்கு 8.49 மில்லியன் டாலருக்கும், ஓமனுக்கு 7.46 மில்லியன் டாலருக்கும், இந்தோனேஷியாவுக்கு 1.06 மில்லியன் டாலருக்கும் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

முதல் 10 இடங்களில் உள்ள இந்த நாடுகளுக்கு, இந்தியாவின் கடந்த 2020-21ம் ஆண்டு பால் பொருட்கள் ஏற்றுமதியில் 61 சதவீதம் சென்றுள்ளன. வெற்றிலை மற்றும் பாக்குகளின் ஏற்றுமதி 19 மில்லியன் டாலராகவும் உள்ளது.



Read in source website

தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை  திடீரென உயரத் தொடங்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இது அனைத்து நாடுகளுக்கும் பெரும் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதனால், ஆளும் அரசுகள் பெரும் கவலையை எதிர்நோக்குகின்றன. ஆனால், உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. அதே நேரத்தில், பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்ட், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வோர் உற்சாகம் பெற்றுள்ளனர்.
இவை எல்லாவற்றுக்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான். 
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் நடவடிக்கை. உக்ரைன் - ரஷியா இடையேயான போர் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தைக் கண்டிப்பாகப் பாதிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், நிதிச் சந்தைகள் திடீரென சரிவைச் சந்தித்து, முதலீடுகளை மேற்கொள்வதற்கு முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல தருணமாகவும் இருக்கும் என்கின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களாக மோசமடைந்து வரும் உக்ரைனின்  நிலை, மேலும் அதிகரித்து வருகிறது. அதன் நெருக்கடி உலகளாவிய பங்குச் சந்தைகளை நிலையற்ற தன்மைக்கு தள்ளியுள்ளது. ஏற்கெனவே பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் உயர்வு, உலக அளவில் பங்குச் சந்தைக்கு கவலைக்குரிய நிலையை ஏற்படுத்தியுள்ளன. எரிபொருள்களின் விலையும் அதிகரித்து வருகிறது. 2014-க்குப் பிறகு முதல் முறையாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் 100 டாலரை நெருங்கியது. முன்பேர வர்த்தகத்தில் ஜனவரி 28 அன்று 1,791 டாலராக (சுமார் ரூ.1,34,460) இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம், உக்ரைன் மீதான  போர் பதற்றத்தால் பிப்ரவரி 23 அன்று 1,907 டாலராக (சுமார் ரூ.1,43,168) உயர்ந்தது. இந்தியாவைப் பொருத்தவரை, பிப்ரவரி 17-இல் ரூ.49,970-ஆக இருந்த 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை, ஒரே வாரத்தில் அதாவது, பிப்ரவரி 24 அன்று ரூ.51,550-ஆக உயர்ந்தது.
ஒருபுறம் புவிசார் அரசியல், பதற்றம் மற்றும் பணவீக்க அபாயத்தை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் உலகளாவிய பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கத்துக்கு வழிவகுத்துள்ளது. 
மறுபுறம் உயர்ந்த புவிசார் அரசியல், பதற்றங்கள் மற்றும்  அவற்றின் சாத்தியமான தாக்கம் உலகளாவிய வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும் அபாயம் தோன்றியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், ரஷியா மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன. இவை அனைத்தும் நிதிச் சந்தைக்கு தற்போது ஆறுதல் அளிக்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் உலக அளவில் ரஷியா - உக்ரைன் போர் நெருக்கடி பற்றிய செய்தி ஓட்டத்தை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். 
இதற்கிடையே, மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவையானது, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை 7%-லிருந்து 9.5%-ஆக உயர்த்தியுள்ளது. கரோனாவால் 2020-இல் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம், எதிர்பார்ப்பையும்விட வேகமாகவும், வலுவாகவும் மீட்சி பெறும் என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.
ஆனால், உக்ரைன் மீதான ரஷியப் போரைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இதன் தாக்கம் பங்குச் சந்தை, நிதிச் சந்தைகளில் நேரடியாக எதிரொலிக்கிறது. இதனால், முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம், நீண்ட கால அடிப்படையில் முதலீடுகளை மேற்கோள்வோர் குறைவான விலையில் நல்ல வலுவான அடிப்படைகளைக் கொண்ட பங்குகளை வாங்குவதற்கும், மியூச்சுவல் பண்ட், கடன்பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடுகளை மேற்கொள்ளவும் நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
போர்ச் சூழல், அரசியல் தாக்கம், பொருளாதாரப் பின்னடைவு உள்ளிட்ட பல்வேறு தருணங்களில் இந்திய பங்குச் சந்தைகள் சராசரியாக 16.5% வரை சரிவைச் சந்தித்துள்ளன. அதே சமயம், அதற்குப் பிறகு மூன்று மாத காலங்களில் 23%, 6 மாதங்களில் 34%-மும் ஏற்றம் கண்டுள்ளன. இதேபோன்று அமெரிக்காவின் டோவ் ஜோன்ஸ் வரலாற்றை எடுத்துப் பார்த்தாலும் இதைத்தான் காண முடியும். 2011 தாக்குதலின்போது டோவ் ஜோன்ஸ் 16% சரிந்தது. ஆனால், அடுத்த மூன்று மாதங்களில் 25%, 6 மாதங்களில் 30% உயர்ந்தது. இதன் அடிப்படையில்தான் இந்தத் தருணம் முதலீட்டுக்கு உகந்ததாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.
உக்ரைன் மீதான ரஷியப் போர் தொடரும் நிலையில், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்துக்கு அதிக மவுசு ஏற்படும். அதே சமயம் எரிபொருள்கள், தானியங்கள் மற்றும் உலோகங்கள் விலை நிலையற்ற தன்மையில் இருப்பதற்கு அதிக வாய்ப்பும் உள்ளது. ஆனால், முதலீடுகளை மேற்கொள்வோருக்கு ஒரு பொற்காலமாக அமையும் வாய்ப்பும் உள்ளது.
எவ்வாறாயினும், உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை, முதலீட்டாளர்களுக்கு முதலீடுகளை வேகமாகவும், விரைவாகவும் செய்வதற்கான ஒரு நல்ல தருணமாகும்...!



Read in source website

ஆண்டுக்கு ஒருநாள் மக்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாட ஆண்டு முழுவதும் உயிரைக் கையில் பிடித்தபடி பட்டாசுத் தொழிலாளர்கள் வேலை செய்துதான் ஆக வேண்டுமா? பட்டாசு ஆலைகளில் நடக்கும் தொடர் விபத்துகளைப் பார்க்கும் போது இப்படி ஒரு கேள்வி எழுகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கே உரிய அடையாளங்களாக பட்டாசுத் தயாரிப்பு, தீப்பெட்டித் தயாரிப்பு, அச்சுத்தொழில் ஆகியவை உள்ளன. இதில் அச்சுத்தொழில்,  தீப்பெட்டி தொழில் ஆகியவற்றால் மனித உயிர்களுக்கு ஆபத்து இல்லை. ஆனால், பட்டாசுத் தொழிலில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்கள் பலியாவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அண்மையில் மதுரை அருகே மேலூரில் பிரதான சாலையோர மண்டபத்தில் நிகழ்ந்த காதணி விழாவை பார்க்க நேரிட்டது. மண்டபத்துக்கு சற்று தொலைவிலிருந்து உறவினர்கள் சீர் வரிசை கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு முன்பு மேள வாத்தியக் குழுவினர் செல்கின்றனர். அதற்கு முன்பாக சிலர் பட்டாசு அதிர்வேட்டுகளை வெடித்துக்கொண்டே செல்கின்றனர். அந்த இடம் பேருந்துகள் செல்லும் பிரதான சாலைப்பகுதியாகும். 
அதைப்பற்றியெல்லாம் பட்டாசு வெடித்தவர்கள் கவலைப்படவில்லை. சரவெடிகளையும் அதிர்வேட்டுகளையும் வெடித்துத் தள்ளி அந்தப் பகுதியையே போர்க்களம்போல் மாற்றிக்கொண்டிருந்தனர். அவ்வழியே சென்ற பேருந்தில் தீ பற்றியிருந்தால் பயணிகளில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும். அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பு? இப்படி வெடி பொருள்களை பொது இடங்களில் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.
எந்த ஒரு பாரம்பரிய கலாசார நிகழ்வாக இருந்தாலும், வீட்டு விஷேசங்களாக இருந்தாலும் மங்கள வாத்திய ஒலி, சடங்கு, சம்பிரதாயங்கள், கலை நிகழ்ச்சிகள்தான் முக்கிய அம்சங்களாக இருக்கும். உறவுகளை அழைத்து விருந்து பரிமாறுவார்கள். இதில் ஒளி, ஒலி அம்சங்கள் காலப்போக்கில் முக்கிய அம்சங்களாக இணைந்துவிட்டன. இன்றைய காலகட்டத்தில் வாண வேடிக்கைகள் இல்லாமல் தீபாவளியோ, திருவிழாவோ, திருமணமோ, ஏன் இறுதி ஊர்வலமோகூட இல்லை என்றாகிவிட்டது. 
இன்றைக்கு நாட்டில் அதிக பட்டாசுகளை உற்பத்தி செய்யும் கேந்திரமாக சிவகாசி மாறிவிட்டது. புது தில்லியில் ஏற்பட்ட காற்று மாசு பிரச்னையால் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், பட்டாசு வெடிக்க நேரத்தை நிர்ணயித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவால் பட்டாசு உற்பத்தியில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்; காற்று மாசு குறையக்கூடும். ஆனால், பட்டாசு ஆலை வெடிவிபத்துகளால் உயிர்கள் பலியாவது குறைந்துவிடுமா? வெடிவிபத்து செய்திகள் வரும்போதெல்லாம் பட்டாசுகளே தேவையா என்ற கேள்விதான் எழுகிறது. 
தொழில் நேர்மை என்பதே இல்லாமல் குறுகிய கால இடைவெளியில் அதிக பட்டாசுகளை உற்பத்தி செய்ய முயல்வது, குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு வேலை செய்வது, அனுமதி பெறாமல் ஆலைகளை நடத்துவது போன்ற விதிமீறல்களால் ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்படுகின்றன என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், அரசு அதிகாரிகள் ஆகிய மூன்று தரப்பினருமே வெடி விபத்துகளைத் தடுக்க முயற்சி செய்யவில்லை என்பதே வருத்தமளிக்கும் உண்மை.  
உரிமையாளர்கள் தரப்புக்கு வருமானம் மட்டுமே பிரதானம்; தொழிலாளர் தரப்புக்கு அன்றாட வருமானமே பிழைப்புக்கு ஆதாரம்; இவர்களுக்கு தொழில்தான் முக்கியம். ஆனால் அரசு அதிகாரிகளின் பங்கு என்னவென்று பார்த்தால் பெரிய குறைபாடு இருப்பதாகவே தெரிகிறது. இதனால் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலைகள் போன்று தான் பட்டாசு ஆலைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. 
பட்டாசுகள் விண்ணில் வெடித்துச் சிதறி நட்சத்திரங்களாக மின்னுவது நம்மைப் பரவசமடைய வைக்கிறது. அந்த கண நேரத்தில், பட்டாசுகள் வெளிப்படுத்தும் நைட்ரஸ், சல்பர் ஆக்ûஸடுகள், கார்பன் மோனாக்ûஸடு வேதிப்பொருள்கள் காற்றில் கலந்து மாசு ஏற்படுத்துகின்றன; மனிதர்களின் உடலிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதை உற்பத்திசெய்யும் தொழிலாளர்களும் பட்டாசுகளுக்கே இரையாகின்றனர் என்பதை மறந்துவிடுகிறோம். அதிர்வேட்டு சப்தம் முதியவர்களையும் இருதய நோயாளிகளையும், ஏன், வீட்டு விலங்குகளையும் பறவைகளையும்கூட பாதிக்கின்றன என்பது தெரிந்தும் தெரியாததுபோல் இருந்துவிடுகிறோம்.
சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் கடந்த ஜனவரி முதல் வாரத்தில் இரு இடங்களில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு 10 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த 2018 முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் மொத்தம் 32 வெடி விபத்துகள் நேரிட்டுள்ளன. அதில் 54 பேர் பலியாகியுள்ளனர்; 70 பேர் காயமடைந்துள்ளனர். 
ஒவ்வொரு முறை விபத்து நேரிடும்போது அரசு சார்பிலும், ஆலை சார்பிலும் இழப்பீடும், நிவாரணமும் வழங்குகின்றனர். ஆனால் வெடிவிபத்துகள் நிகழாமல் தடுக்க நிரந்தரத் திட்டம் எதையும் அரசு  உருவாக்கவில்லை. மீண்டும் மீண்டும் வெடி விபத்து, உயிரிழப்பு, நிவாரணம் இவைதான் நடந்துகொண்டிருக்கின்றன. 
விருதுநகர் மாவட்டம் கரிசல் மண் நிறைந்த பகுதியாக இருப்பதால் அதன் தட்பவெப்பச் சூழல் பட்டாசுத் தொழிலுக்கு ஏற்றதாக இருக்கலாம். அதற்காக தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற தொழிலை அவர்கள் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. பட்டாசுத் தொழிலில் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்றாலும் அதைவிட பெரிது மனித உயிர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 
வேடந்தாங்கல் போன்ற பறவைகள் சரணாலயங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் பட்டாசுகளை வெடிப்பதில்லை. பறவைகள் அங்கு மட்டுமல்ல, ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் உள்ளன. ஏன், வீடுகளிலேயே கூடுகட்டியும் வாழ்கின்றன. பறவைகள் இல்லாத இடம் என்பதே இல்லை எனும்போது எல்லா இடமும் வேடந்தாங்கல் என ஏன் நினைக்கக்கூடாது? அப்படி நினைக்கும் நாள் வந்தால்தான் பட்டாசுத் தொழிற்சாலை விபத்துகளும், உயிர்ப் பலிகளும் முடிவுக்கு வரும்.



Read in source website

உலகம் முழுவதும் மக்களாட்சிச் செயல்பாடுகள் தாழ்நிலையை நோக்கிச் செல்கின்றன என்ற கருத்து முன் வைக்கப்பட்டு அது குறித்த விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்த விவாதங்களை முன்னெடுப்பவர்கள் உலக அளவில் தலைசிறந்த மக்களாட்சி குறித்த ஆராய்ச்சி அறிஞர்கள். இப்படிப்பட்ட விவாதங்கள் பொதுவெளியில் வரும்போதெல்லாம் இந்தியாவின் நிலை என்ன என்று தரவுகளைப் பார்க்க வேண்டியது அவசியம். 
இப்படிப்பட்ட ஆய்வுகளை நடத்த பெருமளவு நிதி ஆதாரம் தேவை. சிறிய நிறுவனங்களோ, பல்கலைக்கழகங்களோ இவற்றைச் செய்ய இயலாது. இதற்கான நிதி உதவியை அரசும் வழங்கிடாது. இருந்தும் மக்களாட்சியை ஊக்கப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிதி நிறுவனங்கள் தரும் நிதியில் தொடர்ந்து ஆய்வுகள் இந்தியாவிலும் நடைபெற்று வருகின்றன. 
இந்த ஆய்வுகள் தரும் தரவுகளிலிருந்து ஒரு நாட்டில் எப்படிப்பட்ட மக்களாட்சி செயல்பட்டு வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். எப்பொழுதெல்லாம் இப்படிப்பட்ட ஆய்வு நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் பல ஆய்வாளர்கள் மக்களிடம் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை வைத்து அலசி ஆராய்ந்து மக்களாட்சியின் போக்கினை அறிக்கைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் விவரிப்பார்கள். அந்த விளக்கங்கள் நாம் மக்களாட்சி அமைப்புகளை சரிசெய்து கொள்வதற்குப் பேருதவியாக இருக்கும்.
தற்போது உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரக் களத்தில் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதாவது ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அதிக அளவில் குற்றப் பின்னணியுடையவர்களே வேட்பாளர்களாக இடம்பெற்றுள்ளனர் என்பதுதான் அக்கருத்து. இந்தப் போக்கைத்தான் அறிவுஜீவிகள், மக்களாட்சியின் வீழ்ச்சி என்றும், மக்களாட்சியை தகர்க்கும் பணியை நம் அரசியல் கட்சிகளே செய்கின்றன என்றும் கூறுகின்றனர். ஏனென்றால் மக்களாட்சி நடைபெறும் ஒரு நாட்டில் மக்களாட்சியை வலுப்படுத்தும் பணிகளைச் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு அரசியல் கட்சிகளிடம்தான் உள்ளது. 
ஒரு நாட்டில் மக்களாட்சி வலுப்படுவது தேர்தல் நடத்துவதால் மட்டுமல்ல. பொதுமக்களின் நம்பிக்கையை அரசு எந்திரங்களும் அரசியல் அமைப்புக்களும் பெற்றிருக்கும்போது மட்டும்தான். இந்தப் புரிதலுடன் அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும். மக்களாட்சிமுறை வளர்ந்து, இன்று தேர்தலும், கட்சி அரசியலும் பிரதான இடத்தை அடைந்துள்ளன. 
இந்த முறைகளில் உள்ள சிக்கல்களுக்கான தீர்வினை நோக்கி நம் அரசியல் நகராத நிலையில், மக்கள் நம்பிக்கையை அரசு அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் பெற்றிருப்பது மிகவும் இன்றியமையாததாகும். எந்த அளவுக்கு மக்களின் நம்பிக்கையை அரசு எந்திரமும், அரசியல் கட்சிகளும் பெற்றிருக்கின்றனவோ அந்த அளவுக்கு மக்களாட்சி அந்த நாட்டில் வலுப்பெற்று இருப்பதாக நாம் கணிக்க முடியும். மக்களின் நம்பிக்கையை அரசு எந்திரம் எந்த அளவுக்குப் பெற்றுள்ளது என்பதை அறிய கள ஆய்வு நடத்தப்படுவது உண்டு. 
மேற்கத்திய நாடுகளில் அது மிக எளிது. ஏனென்றால் அங்கெல்லாம மக்கள்தொகை குறைவு; எல்லைப் பரப்பும் சிறிது. ஆனால் இந்தியாவில் ஆய்வு நடத்துவது என்பது சவால் நிறைந்த பணி. இருந்தும் இந்தியாவிலும் பெருமளவு நிதியினை செலவு செய்து அப்படிப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையை தெரிவித்து வருகின்றன ஆராய்ச்சி நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள்தான், இந்திய மக்களாட்சி எப்படிச் செயல்படுகிறது, எந்த அடித்தளத்தில் செயல்பாடுகள் மையப்படுத்தப்பட்டுள்ளன என்பதை வெளி உலகுக்குக் காட்டுகின்றன. 
இந்த மக்கள் கருத்தறியும் கள ஆய்வுகள் இந்தியாவில் நான்கு முறை நடைபெற்று அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் சுற்று ஆய்வினை புது தில்லியில் உள்ள சி.எஸ்.டி.எஸ். என்ற நிறுவனம் 1971 மற்றும் 1996 ஆண்டுகளில் நடத்தின. இந்த இரண்டு ஆய்வுக்கும் இடைவெளி 25 வருடங்கள். அடுத்த சுற்று கள ஆய்வினை என்.சி.இ.ஏ.ஆர். என்ற நிறுவனம் 2005 மற்றும் 2012 ஆண்டுகளில் நடத்தின. இந்த இரண்டு ஆய்வுக்கும் இடைவெளி 7 ஆண்டுகள்தான். இந்த நான்கு முறை நடந்த கள ஆய்வு சொல்லும் செய்தியை கூர்ந்து கவனித்தால் மக்களாட்சியில் நாம் எங்குள்ளோம் என்பது நமக்குத் தெரிந்துவிடும். 
1971-இல் 48% மக்கள்தான் தங்களால் அரசியலை மாற்ற முடியும் என்று கூறினார்கள். ஆனால் 1996-இல் 60% மக்கள் தங்கள் வாக்குகளால் ஆட்சியை மாற்றிடமுடியும் என்று கூறினார்கள். அதேபோல் 60% மக்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் செயல்பாடுகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை தெரிவித்தனர். 61% மக்கள் அரசியல் கட்சிகள் மிக முக்கியமான பங்களிப்பை மக்களாட்சியில் செய்கின்றன என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். இதில் மிக முக்கியமான செய்தி, இந்த 61 சதவிகிதத்தில் பெரும்பான்மை மக்கள் ஏழைகள். ஏழைகளுக்குத்தான் இந்த மக்களாட்சியில் அதிக நம்பிக்கை இருக்கிறது என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியது. 
இந்தக் கருத்துகள் மக்களாட்சிக்கு வலுச்சேர்ப்பதாக இருந்தன. அதே நேரத்தில் 63% மக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஏழைகளின் பிரச்னைகளில் ஆழ்ந்து செயல்படுவதில்லை என கருத்தினை முன்வைத்தனர். 22% மக்கள் மட்டுமே மக்கள் பிரதிநிதிகள் முறையாகச் செயல்படுகின்றனர் என்று தெரிவித்தனர். மக்களின் இந்தக் கருத்துகளை நாம் சாதாரணமாக கடந்துவிட முடியாது. 1971-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி 27% மக்கள் தங்கள் பிரதிநிதிகளின் மேல் நம்பிக்கை கொண்டிருந்தனர். 
அந்த எண்ணிக்கை 27% லிருந்து குறைந்து 1996 ஆம் ஆண்டு 23% வந்ததுதான் அதிர்ச்சித் தகவல். 57% மக்கள் காவல்துறையின்மீது நம்பிக்கை இல்லையென கருத்துத் தெரிவித்துள்ளனர். அடுத்து 42% மக்கள் அரசு அதிகாரிகளின் மீது நம்பிக்கை இல்லையென கருத்துத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 75% மக்கள், நிதித்துறையையும், தேர்தல் ஆணையத்தையும் நம்புவதாகக் கருத்துத் தெரிவித்திருந்தனர். 73% மக்கள் நாட்டுக்கு ஒரு வலுவான தலைவர் தேவை எனக் கூறியுள்ளனர்.  
2005 மற்றும் 2012-இல் நடத்தப்பட்ட ஆய்வுகள் தரும் செய்திகள், இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து உச்சம் தொட்டபோதும் மக்களின் நம்பிக்கையை அரசு எந்திரங்கள் இழந்துவிட்டதைக் காட்டுகின்றன. ஏழை மக்களின் நம்பிக்கை குறைவதற்குக் காரணம், அரசால் அவர்கள் வாழ்க்கையில் பெரிய அளவில் மேம்பாட்டை ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான். அதே நேரத்தில் அரசாங்கத்தால் பலன் பெற்றவர்கள் அரசு எந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானது. 
அரசு எந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றவர்களிடம் காரணம் கேட்டபோது, அவர்கள், இன்றைய அரசியலில் எந்த கொள்கையும் கிடையாது; எங்கும் ஊழல் தாண்டவம் ஆடுகிறது; பணக்காரர்களுடன் அரசியல் கட்சிகள் உறவாடி அவர்களுக்கு சாதகமாகச் செயல்படுகின்றன; குற்றவாளிகளை மக்கள் பிரதிநிதிகளாக்க கட்சிக்குள் கொண்டு வந்துவிட்டனர் என்று கூறியுள்ளனர். 2005-ஆம் ஆண்டு அரசியல்வாதிகளிடம் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் 2012-ஆம் ஆண்டு அந்த நம்பிக்கையை இழந்துள்ளனர்.  
யார் யாரெல்லாம் அரசியல்வாதிகளால் மேல் வருமானம் பெற்றார்களோ அவர்கள் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளனர். படித்த மத்தியதர வர்க்கத்தினர் அரசியல்வாதிகளின் மேல் நம்பிக்கை இழந்துள்ளனர். 2004-இல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 24% பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். 2009-இல் அது வளர்ந்து 30% ஆனது. 2014-இல் அந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து 34% ஆனது. 
2019-ஆம் ஆண்டு அது 43 சதவிகிதமாக மாறி உச்சத்தைத் தொட்டது. கொடிய குற்றங்கள் செய்வோர் பாதுகாப்பு தேடி அரசியலுக்கு வந்து,  அரசியலையே குற்றப்பின்னணி கொண்டதாக மாற்றி இருக்கிறார்கள் என்பதைத்தான் மக்கள் கருத்துகள் பிரதிபலிக்கின்றன.  
தேர்தலில் வெற்றி பெற்ற 29% மக்கள் பிரதிநிதிகள் கொடிய குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பதை மக்களாட்சிக்கான சீர்திருத்த அமைப்புக்களை நடத்துபவர்கள் குறிப்பிட்டு, அரசியல் கட்சிகளை எச்சரித்திருக்கின்றனர்.  தேர்தல் நடக்கலாம், வெற்றி பெறலாம், ஆட்சி அமைக்கலாம். ஆனால், அரசு இயந்திரத்தின் மீதும், அரசியல் அமைப்புகளின் மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்துகொண்டே உள்ளனர் என்பதைக் கணக்கில் கொள்ளாமல் செயல்படுவோமேயானால் மோசமான விளைவுகளை நம் எதிர்கால சந்ததியினர் சந்திக்க வேண்டியிருக்கும். 
குற்றப்பின்னணி கொண்டவர்களையும், ஊழல் பேர்வழிகளையும் வைத்து அரசியல் நடத்தும்போது அரசு எந்திரம் மக்கள் நம்பிக்கையை இழப்பது மட்டுமல்ல, மக்களாட்சியே தாழ்நிலைக்குச் சென்றுவிடும் என்பதுதான் நாம் பார்க்கும் இன்றைய மக்களாட்சியின் எதார்த்த நிலை. இந்த மங்கிய சூழலில்தான் நம் மக்களாட்சி நடைபெற்று வருகிறது என்பதை இந்த ஆய்வுத் தரவுகள் கொண்டு வந்து தந்துள்ளன. 
இதனைப் புரிந்து நம் அரசியல் கட்சிகளும் அரசு எந்திரமும் செயல்பட வேண்டும். இல்லையேல் நம் மக்களாட்சி நீர்த்துப் போய்விடும் என்பதை புரிந்து நாம் அனைவரும் செயல்பட்டாக வேண்டும். அதற்கான விவாதம் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது; அதுதான் இன்றைய தேவையும்கூட. 

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).



Read in source website

உலகின் எந்தப் பகுதியில் போர் நடந்தாலும், அது எல்லா நாடுகளின் அரசியல் உறவுகளில் மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கையிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல்களால், கச்சா எண்ணெய் கடுமையான விலை உயர்வைச் சந்தித்திருக்கிறது. போர் நடக்கக்கூடும் என்ற பதற்றம் உருவானபோதே, கச்சா எண்ணெயின் விலையும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இது இந்தியா போன்ற ஒரு வளரும் நாட்டின் பொருளாதாரத்தில் பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட நீண்ட கால அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80%-ஐ இறக்குமதியின் வாயிலாகவே ஈடுசெய்துவருகிறது. இந்தியாவின் மொத்த இறக்குமதி மதிப்பில், கச்சா எண்ணெய் மட்டுமே சுமார் 25% வகிக்கிறது. இந்தியாவுக்கு சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா, உக்ரைன் இரண்டும் முதன்மையானவை. எனவே, சூரியகாந்தி எண்ணெய் விலையும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, உக்ரைனில் நீடித்துவந்த போர்ப் பதற்றத்தின் காரணமாக, இந்த ஆண்டின் முதலிரு மாதங்களில் மட்டுமே இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்ட அந்நிய முதலீடுகள் பெருமளவில் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

உக்ரைன் போரால் இந்தியா சந்தித்துள்ள நேரடியான உடனடிப் பாதிப்பு, அங்கு உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் பாதுகாப்புதான். ஏறக்குறைய 20,000 இந்திய மாணவர்கள் உக்ரைனில் தங்கிப் படித்துவருகின்றனர். அவர்களது பெற்றோர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து மட்டும் சுமார் 5,000 மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் படித்துவருகின்றனர். அவர்களைச் சாலை மார்க்கமாக ருமேனியா அழைத்துவந்து, அங்கிருந்து இந்தியாவுக்கு விமானத்தில் அனுப்பும் முயற்சிகள் நடந்துவருகின்றன.

இப்படியொரு பதற்றச் சூழலில், தமிழ்நாட்டு மாணவர்களுக்கான விமானச் செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்குத் தேவையான உதவிகளையும் தகவல்களையும் பெறுவதற்காக சென்னையில் அவசரக் கட்டுப்பாட்டு மையம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.

உக்ரைன் செல்லும் இந்திய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவப் படிப்புக்காகவே செல்கின்றனர். மருத்துவப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணங்களை வரைமுறைப்படுத்தும் நோக்கத்திலேயே நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகும்கூட இந்தியாவைக் காட்டிலும் கல்விக் கட்டணங்கள் குறைவாக இருக்கின்றன என்பதாலேயே இந்திய மாணவர்கள் உக்ரைனுக்கு மருத்துவம் படிக்கச் செல்கின்றனர்.

இந்திய மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் உள்ள பேராசிரியர்களைக் கொண்டு ஆண்டுதோறும் மேலும் கூடுதலான மாணவர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளைக் குறித்து ஏற்கெனவே விவாதிக்கப்பட்டுவருகிறது. உக்ரைன் போர் விளைவித்துள்ள உயிரச்சத்தைக் கருத்தில்கொண்டு, இனிமேலாவது மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைகளைக் குறித்து பரிசீலிக்க வேண்டும்.



Read in source website

ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ரஷ்யப் பேரரசு கிரீமியா தீபகற்பத்தைத் தன்னோடு இணைத்துக்கொண்டது. ரஷ்யப் பேரரசில் உக்ரைன் இணைந்ததன் 300-ம் ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில், 1954-ல் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் அதிபர் நிகிதா குருஷேவ் கிரீமியாவை உக்ரைனுக்குப் பரிசாக வழங்கினார். 40 ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் தகர்ந்துவிடும் என்று அவர் அன்று நினைத்திருக்க வாய்ப்பில்லை.

சோவியத் ஒன்றியம் 1991-ல் உடைந்தபோது, சோவியத்தின் அணு ஆயுதக் கிடங்குகளில் மூன்றில் ஒரு பகுதி உக்ரைனில் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் அது உலகின் மூன்றாவது பெரிய அணு ஆயுதக் கிடங்கு என்று கூறலாம். இதிலிருந்தே முன்பு நிலவிய உக்ரைன்-ரஷ்ய பரஸ்பர உறவைப் புரிந்துகொள்ள முடியும். பின்பு, இந்த அணு ஆயுதங்கள் அனைத்தும் சோவியத்திலிருந்து பிரிந்து சென்ற சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பின் கண்காணிப்பில் இருந்தன. உக்ரைன் 1994-ல் ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட்ட பின்பு, தன்னிடம் இருக்கிற அனைத்து அணு ஆயுதங்களையும் 1996-ல் ரஷ்யாவிடம் ஒப்படைத்தது.

1991-ல் சோவியத் ஒன்றியம் சிதறுண்டதோடு பனிப்போர் முடிவுக்கு வந்தது. ஆனால், தன்னுடன் எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ள முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளின் உள்நாட்டு அரசியல் மாற்றங்கள் ரஷ்யாவுக்குப் புதிய பாதுகாப்பு சவால்களைத் தோற்றுவித்துள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மேற்கத்திய நாடுகளால் தூண்டப்படுகின்றன. குறிப்பாக, ஐரோப்பியக் கூட்டமைப்பு, அமெரிக்கா ஆகியவற்றின் வழிகாட்டுதலில் உள்ள வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (நேட்டோ) உக்ரைன் சேர்வதற்கான முயற்சிகளைத் தனது பாதுகாப்புக்கான பெரும் அச்சுறுத்தல் என்று ரஷ்யா கருதுகிறது. உக்ரைன் மக்களில் ஒருசாராரிடம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் ஆர்வம் இருக்கிறது. சோவியத் ஆட்சிமுறையில் கட்டுப்பாடுகளை அனுபவித்த அம்மக்கள், ஐரோப்பிய சுதந்திர ஜனநாயகத்தைப் பெரிதும் விரும்புகின்றனர். இதனால், உக்ரைன் அதிபர் தேர்தல்களில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்வதற்கு முன்மொழியும் தலைவருக்கே கூடுதல் ஆதரவு கிடைத்தது. அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான சாத்தியங்கள் இன்னும் அங்கு உருவாகவில்லை. குறிப்பாக, அதன் வளர்ச்சி பெறாத பொருளாதாரம், வலுப்பெறாத ஜனநாயக அமைப்பு, அரசுக்கு எதிராக நடக்கும் தொடர் ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

மாஸ்கோவின் சுற்றுப்பாதையிலிருந்து கீவ் விலகி மேற்கத்திய சித்தாந்தத்தை நோக்கிய மாற்று வழியில் பயணிக்கத் தடைக்கல்லாக உக்ரைன் முன்னாள் அதிபர் விக்டர் யெனுகோவேய்க் இருந்தார். அவர் ஒரு ரஷ்ய ஆதரவாளர். 2010-ல் அவருடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பெண் வேட்பாளர் டைமோஷென்ஸ்கோ இருமுறை பிரதமராகப் பதவி வகித்தவர். இவர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் அங்கம் வகிக்க வேண்டும், அவ்வாறு இணைந்தால் உக்ரைன் செழிப்படையும் என்று வெளிப்படையாக ஆதரவு திரட்டியவர். உக்ரைனின் பாதுகாப்புக்கு நேட்டோவுடன் இணைவது முக்கியம் என்ற கருத்தைக் கொண்டவர். அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த அவர், அரசியல் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தன் மருத்துவச் சிகிச்சைகளுக்காக ஜெர்மனி செல்லவும், உக்ரைனில் அரசியல் பதற்றம் தணியவும் உக்ரைன் நாடாளுமன்றத்தில் நவம்பர் 2013-ல் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பேரலையைப் போல அங்கு போராட்டங்கள் வெடித்தன.

அதிபர் விக்டர் யெனுகோவேய்க் தலைமையிலான அரசு, ஐரோப்பிய ஒன்றியத்துடனான அனைத்துப் பேச்சுவார்த்தைகளையும் முடித்துக்கொண்டு, ரஷ்யாவுடன் கைகோக்கத் தயாரானது. இதன் காரணமாக, ஏற்கெனவே நடந்துகொண்டிருந்த போராட்டங்கள் மேலும் வலுப்பெற்றன. இந்தப் போராட்டங்களில் 18 காவல் துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 130 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே, எதிர்க் கட்சியினருக்கும் அதிபர் விக்டர் யெனுகோவேய்க்குக்கும் இடையே ஒருங்கிணைந்த ஒரு அரசை நிறுவுவதற்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கும் ஒரு இடைக்கால ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில் விக்டர் யெனுகோவேய்க் அதிபர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாக நாடாளுமன்றம் பிரகடனப்படுத்தியது. அதற்கு முன்பே அவர் ரஷ்யாவின் உதவியை நாடி, அங்கு தப்பி ஓடினார். இதன் தொடர்ச்சியாக ரஷ்ய ஆதரவாளர்களுக்கும் ஐரோப்பிய ஆதரவாளர்களுக்கும் இடையே பெரும் மோதல்கள், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பிராந்தியங்களில் தோன்றின. பூர்விக ரஷ்யர்கள் பெருமளவில் வாழும் கிரீமியாவில் கீவுக்கு எதிராகவும் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் வெடித்தன. ரஷ்ய ஆதரவாளர்கள் கிரீமியாவில் உள்ள அரசாங்கக் கட்டிடங்களையும் விமான நிலையங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக உக்ரைன் முன்வைத்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்தது. மேலும், உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ராணுவத்தை அனுப்பவும் மார்ச், 2014-ல் ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். கிரீமியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு ஒன்றும் நடந்தது. பெரும்பான்மையினர் ரஷ்யாவுடன் இணைய வாக்களித்தனர். இதை எதிர்பார்த்துக் காத்திருந்த ரஷ்யாவும் கிரீமியாவை ரஷ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து, ரஷ்யாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்தது. பனிப்போர் காலகட்டத்துக்குப் பிறகு ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு கடுமையான பாதிப்புக்குள்ளாகியது. உக்ரைனுடனான ரஷ்யாவின் உறவும் தீர்க்கவியலாத சிக்கலுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான அதிகாரப் போட்டியில், உக்ரைன் சிக்குண்டு தன்னுடைய நிலப்பரப்பை ரஷ்யாவிடம் இழந்தது, சர்வதேசச் சட்டங்களுக்கு ஒரு சவாலாக அமைந்துவிட்டது. உக்ரைனின் எல்லையோரப் பிராந்தியமான டான்பாஸில் ரஷ்ய ஆதரவுப் படையினருக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2021-லிருந்தே மோதல்கள் தொடங்கிவிட்டன. அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன், ‘நோட்டோ’வுடன் உக்ரைன் சேர்வதற்கு ஊக்கமளித்தார். ஜோ பைடனுடனான காணோளிப் பேச்சுவார்த்தையின்போது, இந்த முயற்சிகள் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன என்று புதின் தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தார். அதற்கு பைடனின் பதில், ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்பதாகவே இருந்தது.

இதற்கிடையில், உக்ரைன் எல்லையில் படை குவிப்புக்கு புதின் உத்தரவிட்டார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உக்ரைன் எல்லையை நோக்கி விரைந்தனர். கூடுதலாகத் தனது நேசநாடான பெலாரஸில் அணு ஆயுதப் போர்ப் பயிற்சியிலும் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டுவந்தது. உக்ரைன் மீது முப்படைகளின் மூலமும் முழுத் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார் புதின். தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே செர்னோபில் அணுமின் உலை இயங்கிய பகுதியை ரஷ்யா கைப்பற்றிவிட்டது. இந்நடவடிக்கை உக்ரைன் அரசை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பிய எல்லையில் இரு நாடுகள் மோதிக்கொள்வது இதுவே முதல்முறை.

- சி.ஆன்றணி விஜிலியஸ், ‘மாடர்ன் டிப்ளமஸி’ இதழின் மூத்த ஆசிரியர். தொடர்புக்கு: casvvigilious@gmail.com



Read in source website

உலகின் மிகப்பெரிய விமானம் நிறுத்தப்பட்டிருந்த ஹோஸ்டோமலில் உள்ள உக்ரைன் விமானத் தளத்திற்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைந்ததால் விமானம் பெருமளவில் சேதமடைந்தது. சேதத்தின் அளவு உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பழம்பெரும் விமானத்தை மீண்டும் கட்டுவதாக உக்ரைன் கூறியுள்ளது.

உக்ரைன் அதிகாரிகளின் கருத்துப்படி, விமானம் நிறுத்தப்பட்டிருந்த ஹோஸ்டோமலில் உள்ள உக்ரைன் விமானத் தளத்திற்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைந்ததால் விமானம் பெருமளவில் சேதமடைந்தது. சேதத்தின் அளவை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பழம்பெரும் விமானத்தை மீண்டும் கட்டுவதாக உக்ரைன் கூறியுள்ளது.

உக்ரைன் மீதான மாஸ்கோவின் தாக்குதலுக்கு மத்தியில், உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான ஆண்டனோவ் ஏ.என்.-225 (Antonov AN-225) அல்லது மிரியா (Mriya) கீவ் அருகிலுள்ள விமான நிலையத்தில் தாக்குதலின் போது ரஷ்ய துருப்புக்களால் அழிக்கப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் திங்கள்கிழமை அறிவித்தனர்.

உக்ரைன் அதிகாரிகளின் கருத்துப்படி, விமானம் நிறுத்தப்பட்டிருந்த ஹோஸ்டோமலில் உள்ள உக்ரைன் விமானத் தளத்திற்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைந்ததால் விமானம் பெருமளவில் சேதமடைந்தது. சேதத்தின் அளவை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அந்த பழம்பெரும் விமானத்தை மீண்டும் கட்டுவதாக உக்ரைன் கூறியுள்ளது.

“ஏ.என்.-225 மிரியா (AN-225 Mriya) விமானம் (உக்ரைன் மொழியில் கனவு என்று பொருள்) உலகின் மிகப்பெரிய விமானம். ரஷ்யா நமது ‘மிரியா’வை அழித்திருக்கலாம். ஆனால், வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக ஐரோப்பிய அரசு என்ற நமது கனவை அவர்களால் ஒருபோதும் அழிக்க முடியாது. நாம் வெற்றி பெறுவோம்” என்று உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறினார்.

ஆண்டனோவ் ஏ.என்.-225 (Antonov AN-225) விமானம் பற்றி தெரிந்த தகவல்கள்

290-அடிக்கும் அதிகமான நீளம் இறக்கைகளைக் கொண்ட, தனித்துவமான ஆண்டனோவ் ஏ.என்.-225 (Antonov AN-225) விமானமானது 1980-களில் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே ஒரு பதட்டமான போட்டிக்கு மத்தியில், சோவியத் ஒன்றியத்தில் உக்ரைனில் வடிவமைக்கப்பட்டது. உக்ரைன் மொழியில் ‘மிரியா’ அல்லது ‘கனவு’ என்று செல்லப்பெயர் சூட்டப்பட்ட இந்த விமானம், விமானப் போக்குவரத்து வட்டாரங்களில் மிகவும் பிரபலமானது, மேலும், உலகம் முழுவதும் நடைபெறும் விமானக் கண்காட்சிகளில் இந்த விமானம் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த விமானம் என்று அறியப்படுகிறது.

இது ஆரம்பத்தில் சோவியத் வானூர்தி திட்டத்தின் ஒரு பகுதியாக புரானை எடுத்துச் செல்ல வடிவமைக்கப்பட்டது, இது அமெரிக்காவின் விண்வெளி விண்கலத்தின் சோவியத் பதிப்பாகும். 1991 இல் சோவியத் யூனியனின் சரிவுக்குப் பிறகு, புரான் திட்டம் ரத்து செய்யப்பட்டபோது, ​​அதற்குப் பதிலாக பாரிய சரக்குகளை ஏற்றிச் செல்ல விமானம் பயன்படுத்தப்பட்டது.

இந்த விமானம் ஆரம்பத்தில் சோவியத் வானூர்தி திட்டத்தின் ஒரு பகுதியாக புரான் திட்டத்தை எடுத்துச் செல்ல வடிவமைக்கப்பட்டது. இது அமெரிக்காவின் விண்வெளி விண்கலத்தின் சோவியத்தின் தயாரிப்பாகும். 1991-ல் சோவியத் யூனியனின் சரிவுக்குப் பிறகு, புரான் திட்டம் ரத்து செய்யப்பட்டபோது, ​​அதற்குப் பதிலாக பாரிய சரக்குகளை ஏற்றிச் செல்ல விமானம் பயன்படுத்தப்பட்டது.

AN-225 விமானம் மட்டுமே இதுவரை விமானத்தை வடிவமைத்த பாதுகாப்பு உற்பத்தியாளர்களான கீவ்-வைச் சேர்ந்த தளமாகக் கொண்ட ஆண்டனோவ் நிறுவனத்தால் கட்டப்பட்டது. இது அடிப்படையில் அன்டோனாக் நிறுவனத்தின் மற்றொரு வடிவமைப்பின் பெரிய தயாரிப்பு ஆகும். ரஷ்ய விமானப் படையால் நான்கு-இயந்திரம் கொண்ட An-124 ‘கான்டர்’ பயன்படுத்தப்படுகிறது.

இந்த விமானம் முதன்முதலில் 1988 இல் பறந்தது மற்றும் அன்றிலிருந்து பயன்பாட்டில் உள்ளது. சமீப காலங்களில், அண்டை நாடுகளில் ஏற்படும் பேரிடர்களின் போது நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு இது பயன்படுத்தப்பட்டது. கோவிட் தொற்றுநோயின் தொடக்கத்தில், பாதிக்கப்பட்ட நாடுகளில் மருத்துவப் பொருட்களை வழங்க இது பயன்படுத்தப்பட்டது.

விமானத்திற்கு என்ன ஆனது?

நான்கு நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியதில் இருந்து, ரஷ்யா விமானநிலையங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து வருகிறது. AN-225 விமானம் பழுதுபார்க்கப்பட்ட ஹோஸ்டோமல் விமான நிலையத்தை வெள்ளிக்கிழமை கைப்பற்றியதாக ரஷ்யா கூறியது.

உக்ரைனின் விமானப் போக்குவரத்துத் திறன்களின் அடையாளமான மிரியாவை ரஷ்யா தாக்கியுள்ளது என்று ஆண்டனோவ் நிறுவனத்தை நிர்வகிக்கும் உக்ரைனின் அரசு நடத்தும் பாதுகாப்பு உற்பத்தியாளர் உக்ரோபோரோன்ப்ரோம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

சி.என்.என் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திப்படி, விமானம் அமைந்துள்ள ஹேங்கரில் கணிசமான சேதத்தை வான்வெளி செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. ஞாயிற்றுக்கிழமை காலை 11:13 மணியளவில் விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக நாசாவின் தீ தகவல் மேலாண்மை சிஸ்டம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஆண்டனோவ் நிறுவனம், ஒரு அறிக்கையில், விமானத்தின் தொழில்நுட்ப நிலை குறித்து இன்னும் தெரிவிக்க முடியாது என்று கூறியது.

ஆண்டனோவ் ஏ.என் -225 விமானத்துக்கு அடுத்த பெரிய விமானம் எது?

3 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ரஷ்யாவின் செலவில் விமானம் மீட்டமைக்கப்படும் என்று உக்ரோபோரோன்ப்ரோம் (Ukroboronprom) நிறுவனம் அறிவித்துள்ளது. “மறுசீரமைப்பு 3 பில்லியன் டாலர் செலவும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காலம் எடுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது” என்று அந்த நிறுவனம் கூறியது.

உக்ரைனின் விமானப் போக்குவரத்து மற்றும் விமான சரக்கு துறைக்கு வேண்டுமென்றே சேதத்தை ஏற்படுத்திய ரஷ்ய கூட்டமைப்பு இந்த செலவுகளை ஈடுகட்டுவதை உறுதி செய்வதே எங்கள் பணி என்று உக்ரோபோரோன்ப்ரோம் நிறுவனம் கூறியுள்ளது.



Read in source website

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, ஸ்வீடனும் பின்லாந்தும் நேட்டோவில் உறுப்பினர்களாக இருந்திருந்தால், இந்த நடவடிக்கை தீவிரமான ராணுவ மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

உக்ரைன்-ரஷ்யா நெருக்கடியில், நோர்டிக் ஐரோப்பாவில் நடந்துகொண்டிருக்கும் முன்னேற்றங்கள், படையெடுப்புடன் தொடர்புடையதாகவும் அதற்கு பதிலளிக்கும் விதமாகவும், பிராந்தியத்தில் மேலும் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும்.

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, ஸ்வீடனும் பின்லாந்தும் நேட்டோவில் உறுப்பினர்களாக இருந்திருந்தால், இந்த நடவடிக்கை தீவிரமான ராணுவ மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

உக்ரைனின் நிலைமை தொடர்பாக காணொலி வழியாக நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து ரஷ்யாவின் இந்த பதில் வந்தது. இதில் பெரிய வரலாற்றுப் பின்னணி செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. இது தற்போதைய நெருக்கடியின் அடிப்படையில் பெரிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.

பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் நேட்டோ உறுப்பினர் பதவியை ரஷ்யா ஏன் எதிர்க்கிறது?

ஆஸ்திரியா, அயர்லாந்து, சைப்ரஸ் மற்றும் மால்டா ஆகிய நாடுகளின் வரிசையில், பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய இரண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இன்னும் நேட்டோவில் உறுப்பினர்களாக இல்லை. இரண்டாம் உலகப் போரின் முடிவில் இரு நாடுகளும் ராணுவ ரீதியாக நடுநிலை வகித்தன.

இரு நாடுகளும் 1990-களில் அரசியல் ரீதியாக நடுநிலை வகித்தன. ஆனால், 1995-ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தபோது அந்த நிலைப்பாடு மாறியது. இது அவர்களின் ராணுவ அணிசேராக் கொள்கைகளின் ஒரு பகுதி காரணமாகும். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்தது. ரஷ்ய ஆக்கிரமிப்பு என்று கருதும் இரு நாடுகளின் பார்வையால் நேட்டோ உறுப்பினர் பற்றிய விவாதங்களைத் தூண்டியது.

ஜகரோவா வெளியிட்ட ஒரு அறிக்கையில், “பின்லாந்து மற்றும் ஸ்வீடன் உட்பட அனைத்து ஓஸ் (All OSCE) உறுப்பு நாடுகளும் அவற்றின் தேசியத் திறனில் ஒரு நாட்டின் பாதுகாப்பை மற்ற நாடுகளின் பாதுகாப்பு இழப்பில் கட்டியெழுப்ப முடியாது என்ற கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.” என்று கூறினார்.

ஓஸ் (OSCE) அல்லது ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையில் பார்வையாளர் அந்தஸ்தைக் கொண்ட உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு சார்ந்த அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். “வெளிப்படையாக, ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் நேட்டோவுடன் இணைவது, முதன்மையாக ஒரு இராணுவக் கூட்டணி என்று புரிந்துகொள்ளப்பட்டது. இது கடுமையான ராணுவ மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும். இதில் நமது நாடு பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று ஜகரோவா கூறினார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு ஸ்வீடன் மற்றும் பின்லாந்து எவ்வாறு பதிலளித்தன?

உக்ரைன் படையெடுப்பிற்கு எதிராக பின்லாந்து ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. நாட்டின் பல உயர் அதிகாரிகள் மாஸ்கோவின் ஆக்கிரமிப்பை வெளிப்படையாகக் கண்டித்துள்ளனர். ஸ்வீடனும் இதைப் பின்பற்றியது.

இந்த ஆண்டு படையெடுப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, பின்லாந்து அதிபர் உக்ரைனை ரஷ்யாவின் தற்போதைய அணுகுமுறையை சோவியத் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் 1939-ல் படையெடுப்பதற்கு முன்பு தனது நாட்டை அச்சுறுத்தி பிளவுபடுத்தும் முயற்சியுடன் ஒப்பிட்டார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மியூனிச்சில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில், அதிபர் சவுலி நினிஸ்டோ, “உக்ரைனில் நடக்கும் அனைத்தும், மேற்கத்திய உலகில் நடக்கும் அனைத்தும், பின்லாந்தில் என்ன நடந்தது என்பதை எனக்கு நினைவூட்டுகிறது….” ஸ்டாலின் நாட்டைப் பிளவுபடுத்துவார் என்று நினைத்தேன். பின்லாந்தைச் சென்று ஆக்கிரமிப்பது எளிது. முற்றிலும் எதிராக நடந்தது. மக்கள் ஒன்றுபட்டனர், உக்ரைனிலும் அதையே நாங்கள் காண்கிறோம்.” என்று கூறினார்.

ஸ்வீடன் ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், பிராந்தியத்தில் அதன் இருப்பிடம் மற்றும் மோதலின் பரவல் அதன் நலன்களை பாதிக்கலாம். ஸ்வீடனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு குறிப்பிட்ட விவாதமாக பால்டிக் கடலில் உள்ள கோட்லாண்ட் தீவு உள்ளது. இது பெரும்பாலும் மாஸ்கோவின் ராணுவ நடவடிக்கைக்கு இலக்காகிறது.

ஸ்வீடன் பிரதமர் மாக்டலேனா ஆண்டர்சன் பிப்ரவரி 22ம் தேதி ரஷ்ய ஆக்கிரமிப்பை படையெடுப்பு என்று முத்திரை குத்துவதை நிறுத்தினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் ட்வீட் செய்தபோது அது மாறியது: “உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான படையெடுப்பை ஸ்வீடன் கடுமையாக கண்டிக்கிறது. ரஷ்யாவின் நடவடிக்கைகள் ஐரோப்பிய பாதுகாப்பு உத்தரவின் மீதான தாக்குதலாகவும் உள்ளது. உக்ரைனுடன் ஒற்றுமையுடன் ஒரு ஐக்கியமான மற்றும் வலுவான பதிலளிப்பால் அது சந்திக்கப்படும். மனித துன்பங்களுக்கு ரஷ்யா மட்டுமே காரணம்” என்று கூறியது.

பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய இரு நாடுகளும் உக்ரைனுக்கு பல்வேறு வகையான உதவிகளை வழங்கியுள்ளன. படையெடுப்பு தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பின்லாந்து சார்பாக 50 மில்லியன் அமெரிக்க டாலர் உதவியை வழங்கிய அதிபர் நினிஸ்டோவுடன் பேசினார்.

பின்லாந்தின் வெளியுறவு அமைச்சகம் உக்ரைனுக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்த இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளின் 30வது ஆண்டு நிறைவை பயன்படுத்தியது. “இன்று நாம் பின்லாந்து மற்றும் உக்ரைன் இடையே 30 ஆண்டுகால ராஜதந்திர உறவுகளை கொண்டாடுகிறோம். உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு பின்லாந்தின் ஆதரவு உறுதியானது. இந்த கடினமான நேரத்தில் உக்ரைன் தலைவர்களுக்கும் மக்களுக்கும் தைரியமும் வலிமையும் பெற்றிருக்க விரும்புகிறொம்” என்று பின்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் ட்வீட் செய்தது.

வரலாற்றுச் சூழல் என்ன?

பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய இரண்டு நாடுகளும் ரஷ்யாவுடன் ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளைக் கொண்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 1917-ல் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, பின்லாந்து இப்போது ஸ்வீடன் மற்றும் ரஷ்யாவின் பிரதேசங்களின் ஒரு பகுதியாக இருந்தது.

1809 வரை, கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கு, பின்லாந்து ஸ்வீடனின் ஒரு பகுதியாக இருந்தது. 1809 பின்லாந்திய போரைத் தொடர்ந்து, பின்லாந்து ரஷ்யப் பேரரசின் தன்னாட்சிப் பகுதியாக மாறியது. வில்சன் மையத்திற்கான அறிக்கையில் ராபின் ஃபோர்ஸ்பெர்க் & ஜேசன் சி. மோயர் எழுதியுள்ளனர்.

ஆனால், இரண்டு போர்களும் – 1939 குளிர்காலப் போர் மற்றும் 1941-1944 -ன் தொடர்ச்சியான போர் – பின்லாந்து மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு இடையிலான உறவுகளை மாற்றியது. அதிபர் பாசிகிவி மற்றும் அதிபர் கெக்கோனன் ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளியுறவுக் கொள்கை அணுகுமுறை, பாசிகிவி-கெக்கோனன் கோட்பாடு, பனிப்போரின்போது பின்லாந்தை ஒரு நடுநிலை நாடாக நிலைநிறுத்தியது, அதே நேரத்தில் கிழக்கில் அதன் அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேணியது என்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.

இந்த ஒப்பந்தம் 1948 முதல் 1992 வரையிலான பின்லாந்து-சோவியத் உறவுகளில் முக்கிய கருவியாகச் செயல்பட்டது. ஃபார்ஸ்பெர்க்-மோயர் அறிக்கை, ஒப்பந்தத்தை மதிக்கவும் சோவியத் யூனியனைத் தூண்டிவிடாமல் இருக்கவும், பின்லாந்தும் மார்ஷல் திட்டத்தில் இருந்து நிதியை மறுத்துவிட்டது.

“சோவியத் யூனியனின் அழுத்தத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று பரவலாகக் கருதப்படுகிறது. ஆனால், அது பின்லாந்து ஒரு வளமான ஜனநாயகமாக மாற போதுமான சுதந்திரத்தை வழங்கியது” என்று இந்த அறிக்கை கூறுகிறது. ரஷ்யாவுடனான கடினமான வரலாறு இருந்தபோதிலும், பின்லாந்து மேற்கு பாதுகாப்பு கூட்டணியில் சேரவில்லை.

வில்சன் நடுநிலை அறிக்கை, ரஷ்யாவுடனான ஸ்வீடனின் வரலாற்று உறவுகளைப் பற்றிய சில சுவாரஸ்யமான நுண்ணறிவைக் கொண்டுள்ளது: “ஸ்வீடன் 1814 முதல் ஒரு ராணுவக் கூட்டணியில் சேரவில்லை அல்லது எந்தப் போரிலும் பங்கேற்கவில்லை. 200 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதி நிலவுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மரபான சக்திகள் வீழ்ச்சியடைந்து புதிய சக்திகள் எழுந்ததால், ஸ்வீடன் அதன் பாதுகாப்புக் கொள்கையில் இலக்கற்று இருந்தது. பனிப்போரின்போது அமெரிக்காவின் பக்கத்தில் சேருவதற்குப் பதிலாக, சோவியத் யூனியனுடன் இணைவதில் ஆர்வம் காட்டாமல், ஸ்வீடன் தனது பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த மூன்றாவது வழியைத் தேடியது.” என்று கூறுகிறது.

1948 ஆம் ஆண்டில், நார்வே மற்றும் டென்மார்க் நேட்டோவுடன் இணைந்து ஒரு நடுநிலையான ஸ்காண்டிநேவிய பாதுகாப்புக் கூட்டணியை உருவாக்க ஸ்வீடனின் முயற்சிகள் தோல்வியடைந்தபோது, ​​அதன் நடுநிலைக் கொள்கைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நவீன அரசியல் சூழல் என்ன?

2018 இல், எஸ்டோனியாவின் முன்னாள் ஜனாதிபதி டூமாஸ் ஹென்ட்ரிக் ஐவ்ஸ் பின்லாந்திய-நேட்டோ உறுப்பினர் குறித்து ஒரு கட்டுரை எழுதினார். ஹென்ட்ரிக்கின் எழுத்துக்கள் அதிகம் உள்நாட்டைச் சார்ந்துள்ளது என்பதையும், அரசியல் வட்டாரங்களைவிட அந்த நாடுகளின் குடிமக்கள் அந்த உறுப்பினரை எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. 2018 இல் கட்டுரை வெளியிடப்பட்டபோது, ​​ஹென்ட்ரிக் எழுதினார், “பின்லாந்தில், பிரபலமான கருத்து (உறுப்பினருக்கு எதிரானது); ஸ்வீடனில் இது (இப்போது வரை) சாதகமாக உள்ளது. ஆனால், போதுமானதாக இல்லை.” என்று குறிப்பிட்டார்.

ஹென்ட்ரிக் கட்டுரை எழுதும் போது, ​​ “அந்த நேரத்தில் நேட்டோவில் ஸ்வீடனிய/பின்லாந்திய உறுப்பினர்களை எதிர்த்தவர்கள் மத்தியில், விஷயங்கள் தீவிரமானால் நாங்கள் சேருவோம் என்ற கருத்து இருந்தது. 2018-ல், ஹென்ட்ரிக், பாதுகாப்புச் சூழல் நேட்டோவில் சேர அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், நிலைமை மாறினால், இரு நாடுகளும் இணையும் என்ற உணர்வு இருந்தது” என்று விளக்கினார்.

இந்த ஆண்டு ஜனவரியில், பின்லாந்து பிரதமர் சன்னா மரின் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “எதிர்காலத்தில் நேட்டோவில் இணைவதற்கு பின்லாந்து திட்டமிடவில்லை என்றும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்து அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் மற்றும் அமெரிக்காவுடன் நிற்க தயாராக இருப்பதாகவும் கூறினார். “இது மிகவும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பொருளாதாரத் தடைகள் மிகவும் கடுமையானதாக இருக்கும்” என்று மரின் கூறினார்.

அதே நேரத்தில், எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் நேட்டோவில் இணைவதற்கு பின்லாந்து நாட்டிற்கு உரிமை உண்டு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் என்றும் மரின் கூறியிருந்தார். யாரும் எங்களை பாதிக்க முடியாது, அமெரிக்காவை அல்ல, ரஷ்யாவை அல்ல, வேறு யாரையும் அல்ல” என்று மரின் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

பின்லாந்து & ஸ்வீடன் நிலைப்பாட்டுக்கு உள்நாட்டு ஆதரவு உள்ளதா?

நேட்டோ உறுப்பினர் உரிமையைப் பெறுவதற்கு, இந்த நடவடிக்கைக்கு நாடுகள் கணிசமான பொது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும்.

பின்லாந்தின் மிகப்பெரிய நாளிதழான ஹெல்சிங்கின் சனோமட் சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில், பதிலளித்தவர்களில் சுமார் 28% பேர் பின்லாந்து நேட்டோவில் சேர விரும்பினர், 42% பேர் எதிராக இருந்தனர்/ மீதமுள்ளவர்கள் உறுதியாக தெரியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2019 -ல் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இருந்து ஆதரவாக இருப்பவர்களின் எண்ணிக்கையில் 8 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்வீடன் உள்ளூர் ஊடகங்களின் செய்திப்படி, நாடு கடந்த சில ஆண்டுகளாக நேட்டோவில் சேருவதற்கான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. 2020 டிசம்பரில், நேட்டோவில் இணைவதற்கான ஆயத்தத்திற்கு ஆதரவாக ஸ்வீடன் நாடாளுமன்ற பெரும்பான்மை உறுப்பினர்களிடம் முதல் முறையாக பாதுகாப்புக் கொள்கை விருப்பம் வெளிப்பட்டது என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், ஸ்வீடன் அரசாங்கம் அத்தகைய நடவடிக்கையை எதிர்த்தது. அப்போது, ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சர் ஆன் லிண்டே, அரசாங்கத்திடம் அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார். “மிகவும் பலவீனமான பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்ட இந்த வகையான திடீர் மாற்றங்கள் நல்லதல்ல. இது ஸ்வீடிஷ் பாதுகாப்புக் கொள்கையின் நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்துகிறது” என்று லிண்டே கூறியிருந்தார்.



Read in source website