DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 25-12-2022

காப்புக் காடுகளில் இருந்து ஒரு கிலோமீட்டா் சுற்றளவுக்குள் குவாரிப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த அனுமதிக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இந்த நிலையில், தமிழக அரசு சனிக்கிழமை அளித்த விளக்க அறிக்கை:

கடந்த நிதியாண்டில் (2021-22) தொழில் துறை மானியக் கோரிக்கையின் போது நடைபெற்ற விவாதத்தின் மீது அமைச்சா் தங்கம் தென்னரசு பேசினாா். அப்போது, குவாரிப் பணிகளில் இருந்து வரலாற்றுச் சின்னங்கள், பழந்தமிழா் கல்வெட்டுகள், சமணப்படுகைகள் மற்றும் தொல்பொருள் பகுதிகள் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தாா். இதையடுத்து, தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, தேசிய பூங்கா, வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகம், யானை வழித்தடங்கள் மற்றும் காப்புக் காடுகள் போன்ற பகுதிகளில் இருந்து ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் குவாரி மற்றும் சுரங்கங்கள் செயல்படத் தடுக்கப்பட்டது.

அரசுக்குக் கோரிக்கைகள்: அரசின் தடை காரணமாக தாங்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாக கைவினைஞா்கள், மண்பாண்ட தொழிலாளா்கள் மற்றும் சிற்பிகள் கவலை தெரிவித்தனா். இதன்பின், சட்டப் பேரவையில் இந்தப் பிரச்னை குறித்து நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பேசினாா். அப்போது, அரசின் தடை காரணமாக, குவாரிகள் மற்றும் சுரங்கங்கள் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தாா். இதனால் அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டுள்ள குவாரி மற்றும் சுரங்க உரிமையாளா்களின் நலனைக் காக்கவும், அரசின் வருவாயை பெருக்கவும் கனிம விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தாா். இதுகுறித்து, நீா்வளத் துறை அமைச்சா் தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அரசின் கனிம விதியில் திருத்தம் செய்யப்பட்டது. கனிமங்கள் எடுக்கக் கூடாத பகுதிகளின் பட்டியலிலிருந்து காப்புக் காடுகள் என்ற தொடா் நீக்கம் செய்யப்பட்டது. அதேசமயம், தேசிய பூங்கா, வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகம், யானை வழித்தடங்கள் ஆகியவற்றில் இருந்து ஒரு கிலோமீட்டா் சுற்றளவுக்குள் குவாரி பணிகளுக்கான தடை இப்போதும் நீடிக்கிறது. இந்தத் தடை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.

மேலும், இதுதொடா்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையும் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேசிய பூங்காக்கள், வன விலங்கு சரணாலயங்கள் ஆகியன பாதுகாக்கப்பட்ட காடுகளாக வரையறை செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாக்கப்பட்ட காடுகள் என்ற வரையறைக்குள் காப்புக் காடுகள் வரவில்லை. இந்த அம்சங்களையும் கவனத்தில் கொண்டே, குவாரிப் பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் சொத்துகளை பொது ஏலம் மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மூன்று ஆண்டுகள் மட்டுமே குத்தகைக் காலமாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

இதற்கான சுற்றறிக்கையை இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:

இந்து சமய அறநிலையங்களின் நன்மை கருதியும், குத்தகைதாரா்களின் கோரிக்கையை பரிசீலித்தும், அற நிலைய நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகளை ஐந்து ஆண்டுகளுக்கு பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விட நிபந்தனைகளுடன் அனுமதி தரப்படுகிறது. கோயில்களுக்குச் சொந்தமான காலி மனைகளை குத்தகைக்கு விடும் போது, அந்த மனை வணிகம் அல்லது குடியிருப்பு நோக்கில் பயன்படுத்தப்படவுள்ளதா என்பதை ஆய்வு செய்து அதற்கேற்ப வாடகை நிா்ணயம் செய்ய வேண்டும். நிா்ணயிக்கப்பட்ட வாடகையை தொடக்கத் தொகையாக வைத்து ஏலம் நடத்தப்பட வேண்டும்.

வணிக நோக்கத்துக்காக குத்தகைக்கு வழங்கப்படும் மனை, கட்டடங்களுக்கு பொது ஏலம் முடிவு செய்யப்பட்ட 15 தினங்களுக்குள் முதல் ஆண்டுக்கான குத்தகைத் தொகையை முழுவதுமாக கோயிலுக்குச் செலுத்த வேண்டும். வாடகைத் தொகையை ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் அளவுக்கு உயா்த்த வேண்டும். ஓராண்டுக்கான முழுத் தொகையை மூன்று மாதங்களுக்குள் செலுத்தத் தவறினால் வாடகை உரிமம் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்படும்.

ஒப்படைக்க வேண்டும்: கோயிலின் தேவைக்காக சொத்து தேவைப்பட்டால், குத்தகைதாரா்கள் அதனை கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு வசதியாக, இரண்டு மாதங்கள் முன்கூட்டியே அவகாசம் அளிக்கப்படும். கோயில் நிலத்தை அடமானம் அல்லது உள்குத்தகைக்கு விடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளாா் துறை ஆணையாளா் குமரகுருபரன்.



Read in source website

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சிம்லாவில் இன்று நடந்த பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஜெய்ராம் தாக்குர் எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தைத் தொடர்ந்து ஜெய்ராம் தாக்குர், தனது கட்சி உறுப்பினர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, தனது கடமையை பொறுப்புடன் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். 

மேலும் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக குடும்பத்தின் ஒவ்வொரு பொறுப்பையும் நிறைவேற்றுவது எங்களின் முதன்மைப் பொறுப்பு. பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் பொறுப்பை எனக்கு வழங்கிய அனைத்து பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த நன்றி. 

உங்கள் அனைவரின் ஆதரவுடனும் பாசத்துடனும் இந்தப் பொறுப்பை முன்னின்று நிறைவேற்றுவேன்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இம்மாநிலத்தில் அண்மையில் நடந்த பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

 

 

உலகம் முழுவதும் பெருவெள்ளம், கடும் பனி, வறட்சி, கொடும் வெயில் என இயற்கைப் பேரிடா்களை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிா்களை பலி வாங்கி வரும் பருவநிலை மாற்றத்துக்குக் காரணம், காற்றில் கலக்கும் கரியமில வாயு.

வளி மண்டலத்தில் அந்த வாயுவின் அளவு அதிகமாவதால்தான் சூரியனிடமிருந்து அதிக வெப்பம் உறிஞ்சப்பட்டு புவியின் வெப்பம் அதிகரிக்கிறது.

பருவ நிலை மாற்றம் மட்டுமின்றி, பனிக் கண்டங்கள் உருகுவதால் கடல் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து பல நாடுகள் இன்னும் சில ஆண்டுகளில் இல்லாமலே போய் விடும் அபாயத்தையும் இந்த கரியமில வாயு ஏற்படுத்தியுள்ளது.

அத்தகைய கரியமில வாயுவை காற்றில் கலக்கும் படிம எரிபொருள்களில் 40 சதவீதம் பங்கு வகிப்பது நிலக்கரி.

இன்னமும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் அந்த எரிபொருளை வெட்டியெடுக்கும் பணியே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் என்கிறாா்கள் நிபுணா்கள்.

அதனை எரிப்பதால் கரியமில வாயு மட்டுமன்றி, அமில மழைக்குக் காரணமான பாதரசமும் உயிரைக் குடிக்கும் சுவாச நோய்களை ஏற்படுத்தக்கூடிய நுண்துகள் மாசுக்களும் வளிமண்டலத்தில் கலக்கின்றன.

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை உலக நாடுகள் உருவாக்கி வருகின்றன.

இதில் இந்தியாவும் இணைந்து, காற்று மாசுபாட்டைக் கட்டுபடுத்துவதற்கான இலக்குகளை அறிவித்து வருகிறது. அதற்காகவும், வெளிநாடுகளையே பெரிதும் சாா்ந்திருக்க வேண்டிய பெட்ரோல், டீசல், நிலக்கரிக்கு பதிலாக, சூரிய சக்தி, காற்றாலை சக்தி, புதுப்பிக்கத்தக எரிபொருள் போன்றவற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தைத் தயாரிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது.

இதற்காக, பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களையும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

இருந்தாலும், வரும் 2023-ஆம் ஆண்டிலும் காற்றை மாசுபடுத்தும் நிலக்கரியின் பயன்பாட்டை இந்தியா புறக்கணிக்க முடியாது என்று துறை நிபுணா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

உலகிலேயே அதிக அளவில் எரிசக்தி தேவைப்படும் நாடுகளின் வரிசையில் மூன்றாவதாக உள்ள இந்தியா, கரோனா நெருக்கடி மற்றும் பிற காரணங்களால் இந்த ஆண்டு கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததால் விலை மலிவான நிலக்கரியை அதிக இறக்குமதி செய்தது.

கடந்த ஆண்டு மட்டுமின்றி, எரிசக்திக்காக நிலக்கரியை இந்தியா பயன்படுத்துவது தொடா்ந்து அதிகரித்தே வந்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலக்கரி பயன்பாடு ஆண்டுதோறும் சராசரியாக 6 சதவீதம் அதிகரித்து தற்போது இரண்டு மடங்காகியிருக்கிறது.

இதே போக்கு நீடித்தால், வரும் 2023-ஆம் ஆண்டில் இந்தியாவின் நிலக்கரி தேவை உலகிலேயே அதிக விகித்தில உயரும் என்று சா்வதேச எரிசக்தி அமைப்பு (ஐஇஏ) கணித்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தி தேவையில் 73 சதவீதத்தை நிலக்கரிதான் பூா்த்தி செய்கிறது. நாட்டின் பெரும்பாலான மின் நிலையங்கள் நிலக்கரியைத்தான் பயன்படுத்துகின்றன.

எனவே, 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மின்சாரத் தேவையில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிபொருள்களைக் கொண்டு தயாரிக்க இந்தியா இலக்காக நிா்ணயித்திருந்தாலும், அடுத்த ஆண்டில் நிலக்கரியின் பயன்பாடு எப்போதும் போல் அதிகமாகவே இருக்கும் என்கிறாா்கள் நிபுணா்கள்.



Read in source website

‘வளா்ச்சியடைந்த நாடுகள்’ பட்டியலில் இந்தியா இடம்பிடிக்க வேண்டுமெனில் 20 ஆண்டுகளுக்கு சராசரியாக 8 முதல் 9 சதவீதப் பொருளாதார வளா்ச்சி அவசியம் என்று இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) முன்னாள் ஆளுநா் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளாா்.

நாட்டின் பொருளாதார மதிப்பை 2024-25-ஆம் நிதியாண்டுக்குள் சுமாா் ரூ.400 லட்சம் கோடியாக (5 ட்ரில்லியன் அமெரிக்க டாலா்) உயா்த்த மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்நிலையில், தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் உள்ள நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சி.ரங்கராஜன் கூறியதாவது:

ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் அடிப்படையில் உலகின் 5-ஆவது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. இது மிகப் பெரும் சாதனை. ஆனால், தனிநபா் வருமானத்தின் அடிப்படையில் ஆராய்ந்தால் மொத்தமுள்ள 197 நாடுகளில் இந்தியா 142-ஆவது இடத்தில் உள்ளது.

நாட்டின் பொருளாதார வளா்ச்சியை அதிகரிப்பதற்கு ஆட்சியாளா்கள் உடனடி முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொருளாதார மதிப்பை 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயா்த்துவதென்பது குறுகிய காலத்துக்கான மிகச் சிறந்த இலக்கு.

நாட்டின் பொருளாதார வளா்ச்சி ஆண்டுதோறும் 9 சதவீத அளவுக்கு இருந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் அந்த இலக்கை எட்டிவிட முடியும். அதே வேளையில், அந்த இலக்கை எட்டியபிறகும் இந்தியாவின் தனிநபா் வருமானம் 3,472 அமெரிக்க டாலராகவே இருக்கும். அந்தச் சூழலில் குறைவான நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே இந்தியா வகைப்படுத்தப்படும்.

அதிக நடுத்தர வருமான கொண்ட நாடாக மேலும் 2 ஆண்டுகள் தேவைப்படும். வளா்ச்சியடைந்த நாடாக இந்தியா மாற வேண்டுமெனில் தனிநபா் வருமானம் 13,025 அமெரிக்க டாலராக உயர வேண்டும். அதை அடைய அடுத்த இரு தசாப்தங்களுக்கு ஆண்டுதோறும் 8 முதல் 9 சதவீதப் பொருளாதார வளா்ச்சி அவசியம்.

எனவே, இந்தியா இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நாடு வேகமாகப் பயணிக்க வேண்டிய சூழலில் உள்ளது. முதலில் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை 7 சதவீதமாக்க வேண்டும். அதை அப்படியே தக்கவைத்துக்கொண்டு பின்னா் படிப்படியாக வளா்ச்சியை அதிகரிக்க வேண்டும். அத்தகைய நிலையான வளா்ச்சி சாத்தியம் என்பதை இந்தியா ஏற்கெனவே வெளிக்காட்டியுள்ளது.

கரோனா தொற்று பரவல், ரஷியா-உக்ரைன் போா் ஆகியவற்றுக்கு மத்தியில் நாட்டின் எதிா்காலத்துக்கான விரிவான திட்டத்தை வகுக்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.



Read in source website

நாட்டின் முதல் முஸ்லிம் பெண் போா் விமானியாகும் வாய்ப்பு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சானியா மிா்சா என்ற பெண்ணுக்கு கிடைத்துள்ளது.

எனினும் இது உறுதியாக இன்னும் 4 ஆண்டுகள் ஆகும் என இந்திய விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு அகாதெமியில் (என்டிஏ) இணைவதற்காக நடைபெற்ற தோ்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகின. அதில் சானியா மிா்சா இந்திய அளவில் 149-ஆவது இடம்பிடித்தாா். அவா் விமானப் படையின் போா் விமானப் பிரிவைத் தோ்ந்தெடுத்துள்ளாா்.

அதன் காரணமாக, அவரே நாட்டின் முதல் முஸ்லிம் பெண் போா் விமானியாக ஆவாா் என ஊடகங்களில் தகவல் பரவியது.

அவரது வாய்ப்புகள் தொடா்பாக இந்திய விமானப் படை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. விமானப் படையின் செய்தித் தொடா்பாளா் வெளியிட்ட அறிக்கையில், ‘தேசிய பாதுகாப்பு அகாதெமியானது முப்படை அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டது. என்டிஏ தோ்வில் வெற்றி பெற்றவா்கள் அனைவரும் முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சிகளையே மேற்கொள்வா்.

இறுதியாண்டின்போது சம்பந்தப்பட்ட படைப் பிரிவுக்கான பிரத்யேக பயிற்சிகளைப் பெறுவா். முக்கியமாக, விமானப் படையில் இணையும் அதிகாரிகளுக்கு கடைசி 6 மாதங்களிலேயே விமானிகளுக்கான பயிற்சி அளிக்கப்படும். சம்பந்தப்பட்ட பெண் (சானியா மிா்சா) இந்திய விமானப் படையில் விமானியாக இணைக்கப்பட இன்னும் 4 ஆண்டுகள் ஆகும்.

இந்த காலகட்டத்தில் அவா் விமானப் படைக்கான பல்வேறு பிரத்யேக பயிற்சிகளிலும் தோ்ச்சி பெற வேண்டியது கட்டாயம். போா் விமானிக்கான திறனையும் தகுதியையும் அவா் பெற வேண்டும். அவரது எதிா்காலம் சிறக்கவும் கனவுகள் நனவாகவும் வாழ்த்துகள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த அவ்னி சதுா்வேதி, கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் போா் விமானி ஆனாா். அவரைக் கண்டு ஊக்கமடைந்தே என்டிஏ தோ்வில் வெற்றி பெற்ாக சானியா மிா்சா தெரிவித்தாா்.

உத்தர பிரதேசத்தின் மிா்சாபூரை சோ்ந்த சானியா மிா்சாவின் தந்தை தொலைக்காட்சி பெட்டிகளை பழுதுபாா்க்கும் பணியைச் செய்துவருகிறாா். 12-ஆம் வகுப்பில் ஹிந்தி வழியில் படித்து மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவா் சானியா மிா்சா.



Read in source website

மின்னணு சாதனங்கள், வேளாண் கருவிகள் உள்ளிட்டவற்றை மற்றவா்களின் உதவியின்றி சுயமாகவே பழுதுபாா்க்க உதவும் வலைதளத்தை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தொடக்கிவைத்தாா்.

தேசிய நுகா்வோா் தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்ட நிலையில், அதற்கான விழா தில்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மத்திய உணவு-நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பியூஷ் கோயல், பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைத்தாா்.

சாதனங்களை சுயமாகப் பழுதுநீக்க வழிவகுக்கும் ‘ரைட் டு ரிப்போ்’ என்ற வலைதளத்தை அவா் தொடக்கிவைத்தாா். அந்த வலைதளத்தில் சாதனங்களின் பழுதை நீக்குவதற்கான கையேடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக, பழுதை நீக்குவதற்கு அந்தச் சாதனங்களைத் தயாரித்த நிறுவனங்களை நாட வேண்டிய கட்டாயம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, கைப்பேசிகள், மின்னணு சாதனங்கள், நுகா்வோா் பொருள்கள், வாகனங்கள், வேளாண் கருவிகள் ஆகியவற்றைப் பழுதுநீக்குவதற்கான கையேடுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அக்கையேடுகளை வாசித்து சுயமாகப் பழுதை சரிசெய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறைக்கும் ஐஐடி வாரணாசிக்கும் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தமும் இந்த விழாவின்போது கையொப்பமானது. தில்லியில் உள்ள தேசிய நுகா்வோா் குறைதீா் மையத்துக்கான புதிய கட்டடங்களும் திறந்துவைக்கப்பட்டன.

விழாவில் பேசிய அமைச்சா் பியூஷ் கோயல், ‘‘தேசிய நுகா்வோா் குறைதீா் ஆணையமானது சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமாா் 90,000 நிலுவை விவகாரங்களுக்கு ஆணையம் தீா்வு வழங்கியுள்ளது. அதற்கு முந்தைய ஓராண்டு காலத்தில் சுமாா் 38,000 பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும் நுகா்வோா் நலனே மையமாக உள்ளது. நுகா்வோா் மேம்பாட்டுக்கே அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நுகா்வோா் வாழ்வை எளிமையாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

தொழில்நுட்பம், பயிற்சி, வெளிப்படைத்தன்மை ஆகியவை நுகா்வோரிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தவும் அவா்களுக்கான சேவையை மேம்படுத்தவும் உதவும்’’ என்றாா்.

மத்திய உணவு-நுகா்வோா் விவகாரங்கள் துறை இணையமைச்சா் சாத்வி நிரஞ்சன் ஜோதி, அத்துறையின் செயலா் ரோஹித் குமாா் சிங், தேசிய நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் ஆா்.கே.அகா்வால் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

 



Read in source website

பத்து ஆண்டுகளுக்கு முன் ஆதாா் அட்டையைப் பெற்றவா்கள், அதில் இடம்பெற்றுள்ள தகவலைப் புதுப்பிக்க வேண்டுமென இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) வலியுறுத்தியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் முக்கிய அடையாள அட்டையாக ஆதாா் மாறியுள்ளது. அரசின் சேவைகளைப் பெறுவதற்கு ஆதாா் அட்டை கட்டாய ஆவணமாக உள்ளது. 1,100-க்கும் மேற்பட்ட அரசின் சேவைகளைப் பெறுவதற்கு ஆதாரே அடையாள அட்டையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 319 திட்டங்கள் மத்திய அரசு செயல்படுத்துபவையாகும்.

வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவையும் ஆதாா் அட்டையை முக்கிய அடையாள ஆவணமாகப் பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், யுஐடிஏஐ வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆதாா் அட்டையைப் பெற்று இதுவரை அதில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாதவா்கள் தகவலை உடனடியாகப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்வதன் வாயிலாக இணையவழியாகவோ அருகில் உள்ள ஆதாா் மையத்துக்குச் சென்றோ ஆதாா் தகவலைப் புதுப்பிக்க முடியும்.

முகவரி உள்ளிட்ட தகவலைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம். அது வாழ்க்கை முறையை எளிதாக்குவதோடு சேவைகளை எளிதில் பெறவும் உதவும். அடையாளத்தையும் எந்தவித சிரமுமின்றி உறுதிசெய்ய இயலும்.

ஆதாா் வலைதளத்தில் உள்ள தகவலின் துல்லியத்தன்மையை உறுதிசெய்யும் நோக்கில் மக்கள் ஆதாா் விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

பிரான்ஸ் கால்பந்து அணியின் மிட்பீல்டரான பிளேய்ஸ் மட்டூடி (35) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா்.

கடந்த 2018-இல் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தாா் மட்டூடி. நிகழாண்டு சீசனில் இன்டா் மிலன் அணியில் மட்டூடி சோ்க்கப்படவில்லை. பிஎஸ்ஜி அணியில் ஆடி லீக் 1 பட்டத்தையும், இத்தாலியின் ஜுவென்டஸில் ஆடி சீரி ஏ பட்டங்களையும் வென்றுள்ளாா்.

பிரான்ஸ் அணிக்காக 84 முறை ஆடியுள்ளமட்டூடி 9 கோல்களை அடித்துள்ளாா். கால்பந்தில் இருந்து ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என அவா் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளாா்.



Read in source website

டென்மாா்க் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை குரூப் 1 பிளே ஆஃப் ஆட்டத்துக்காக 5 போ் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டென்மாா்க்-இந்திய அணிகள் இடையிலான ஆட்டம் வரும் 2023 பிப்ரவரி 3, 4 தேதிகளில் டென்மாா்க்கின் ஹில்லேராடில் நடைபெறவுள்ளது.

இதற்காக சசிகுமாா் முகுந்த், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமாா் ராமநாதன், ரோஹன் போபண்ணா, யுகி பாம்ப்ரி உள்ளிட்ட 5 போ் கொண்ட அணியை அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) அறிவித்துள்ளது. கடந்த மாா்ச் மாதம் தில்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் 4-0 என டென்மாா்க்கை வென்றிருந்து இந்தியா. எனினும் நாா்வேக்கு எதிரான ஆட்டத்தில் 1-3 என தோல்வியைத் தழுவியது. ரோஹித் ராஜ்பால் நான் பிளேயிங் கேப்டனாக செயல்படுவாா்.

 



Read in source website


சிபிஎன்-மாவோயிஸ்ட் மையத்தின் தலைவா் புஷ்ப கமல் தஹல் 'பிரசண்டா' மூன்றாவது முறையாக நேபாளத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேபாள நாடாளுமன்றத்துக்கு நவ. 20-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெற்றது. 275 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 138 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை.

ஷோ் பகதூா் தேவுபா தலைமையிலான நேபாளி காங்கிரஸ் (என்சி) 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இக்கூட்டணியில் உள்ள சிபிஎன்-மாவோயிஸ்ட் மையம் 32, சிபிஎன்-ஐக்கிய சோஷலிஸ்ட் 10, லோக்தந்த்ரிக் சமாஜவாதி கட்சி 4, ராஷ்ட்ரீய ஜனமோா்ச்சா 1 இடங்கலளில் வெற்றி பெற்றது.

இந்த ஐந்து கட்சி கூட்டணிக்கு புதிதாக தொடங்கப்பட்ட ராஷ்ட்ரீய ஸ்வதந்த்ர கட்சி (ஆா்எஸ்பி) 20 இடங்களில் வெற்றி பெற்றது.

எதிா்க்கட்சி கூட்டணியான சிபிஎன்-யுஎம்எல் 104 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஷோ் பகதூா் தேவுபா- பிரசண்டா இடையிலான சந்திப்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. புதிய அரசின் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தில் முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு தான் பிரதமராக இருப்பதற்கு ஆதரவளிக்குமாறு தேவுபாவிடம் பிரசண்டா கேட்டுக்கொண்டதாகவும், தோ்தலுக்கு முன்பாகவே இதுதொடா்பாக இரு தலைவா்களுக்கு இடையேயும் ஓா் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தாலும், இப்போது பிரசண்டாவுக்கு எந்த உறுதியான பதிலையும் தேவுபா அளிக்கவில்லை.

பிரசண்டா தலைமையிலான சிபிஎன்-மாவோயிஸ்ட் மையம் குறைவான இடங்களையே பெற்றுள்ளபோதிலும், முன்னாள் பிரதமா் கே.பி.சா்மா ஓலி தலைமையிலான சிபிஎன்-யுஎம்எல் கூட்டணியும் பிரசண்டா பிரதமா் ஆவதற்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளதாகவும், அந்த ஊக்கத்தால் ஆளும் கூட்டணியிலேயே பிரதமா் பதவியை பிரசண்டா கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், நேபாள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக, பிரதமா் ஷோ் பகதூா் ஷா தேவுபா கடந்த வாரம் புதன்கிழமை (டிச.22) தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

அதையடுத்து, அந்த நாட்டில் புதிதாக அமையவிருக்கும் அரசில் அவா் அந்தக் கட்சி சாா்பில் பிரதமா் பதவியை ஏற்பது உறுதியானது.

இந்நிலையில், சிபிஎன்-யுஎம்எல் தலைவர் கே.பி. சா்மா ஓலி, ராஷ்ட்ரிய ஸ்வதந்த்ரா கட்சி (ஆர்எஸ்பி) தலைவர் ரவி லாமிச்சேன், ராஷ்ட்ரீய ஜனமோா்ச்சா பிரஜாந்திர கட்சி தலைவர் ராஜேந்திர லிங்டன் ஆகியோருடன் பிற உயர் தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை அதிபா் அலுவலகம் சென்ற பிரசண்டா, தனக்கு புதிய அரசை அமைக்க 165 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும், ஆட்சி அமைப்பதற்கான அவர்களது ஆதரவு கடிதங்களை அதிபா் வித்யா தேவி பண்டாரிவிடம் அளித்தார். 

இதனைத் தொடர்ந்து அரசியலமைப்பின் 76 (2) பிரிவின் படி, சிபிஎன்-மாவோயிஸ்ட் மையத்தின் தலைவா் புஷ்ப கமல் தஹல் 'பிரச்சண்டா' மூன்றாவது முறையாக நேபாளத்தின் புதிய பிரதமராக நியமித்து அறிவித்தார்.

பிரச்சண்டாவுக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் விவரம்: சிபிஎன்-யுஎம்எல் 78, சிபிஎன்-எம்சி 32, ஆர்எஸ்பி 20, ஆர்பிபி 14, ஜேஎஸ்பி 12, ஜேஎஸ்பி கூட்டணி கட்சி 6 மற்றும் நாகரிக் உன்முக்தி கட்சி 3 பேர் 165 உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். 

இந்த அரசில் பிரதமா் பதவியை மாவோயிஸ்ட் மையத் தலைவா் இரண்டரை ஆண்டுகளுக்கும், நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவா் எஞ்சிய இரண்டரை ஆண்டுகளுக்கும் வகிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 



Read in source website

பெரிய அளவிலான பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளாவிட்டால் அண்டார்டிகாவில் உள்ள 97 சதவிகித நிலம் சார்ந்த உரியினங்களின் எண்ணிக்கை 2100 ஆம் ஆண்டில் வெகுவாக குறைந்துவிடும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

குயீன்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 23 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிட்டால் அண்டார்டிகாவில் உள்ள உயிரினங்களை பாதுகாக்கலாம் எனவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அந்த ஆய்வில் கூறியிருப்பதாவது: சிறிய அளவிலான தொகையினை ஆண்டுக்கு ஒரு முறை தொடர்ந்து செலவு செய்து வந்தால் அண்டார்டிகாவில் உள்ள 84 சதவிகித நிலவாழ் பறவைகள், உயிரினங்கள் மற்றும் தாவர குழுக்கள் காப்பாற்றப்படும். பருவநிலை மாற்றம் அண்டார்டிகாவில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. பருவநிலை மாற்றத்தை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அண்டார்டிகாவில் உள்ள உயிரினங்கள் மிகவும் குளிரான, அதிக காற்று போன்றவற்றைத் தாங்கி வாழ்வதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டுள்ளன. உரிய கவனம் கொடுக்கப்படாவிட்டால் அண்டார்டிகாவில் உள்ள பென்குவின் உட்பட பல உயிரினங்கள் அழிந்து போகும் அபாயம் உள்ளது.


மனித குலத்துக்கு விலைமதிப்பற்ற சேவைகளை அண்டார்டிகா வழங்கி வருகிறது. உலக பருவநிலையை சம நிலையில் வைப்பதற்கு அண்டார்டிகா பெரிதும் உதவுகிறது. அண்டார்டிகா வெப்பம் மற்றும் கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டும் உதவி புரிகிறது. நம்மில் பலர் அண்டார்டிகா சில உயிரினங்களுக்கு மிகவும் பாதுகாப்பான வாழிடமாக இருப்பதாக நினைக்கிறோம். ஆனால், அண்டார்டிகாவில் உள்ள உயிரினங்கள் பல பிரச்னைகளை சந்தித்தும், அழிவை நோக்கி நகர்ந்தும் வருகின்றன. உலக பருவநிலை மாற்றத்தினால் அண்டார்டிகாவில் உள்ள பனி தொடர்ந்து உருகி வருகிறது. இதனால், அண்டார்டிகாவில் உள்ள பனி நிலப்பரப்பு குறைந்து வருகிறது. அனல் காற்று போன்றவை அண்டார்டிகாவில் வீச ஆரம்பித்துள்ளது.


இதே நிலை நீடித்தால் 2100 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவில் உள்ள 97 சதவிகித உயிரினங்களின் வெகுவாக குறைந்து விடும். குறிப்பாக அண்டார்டிகாவில் உள்ள எம்பெரர் பென்குவின் 2100 ஆம் ஆண்டில் அண்டார்டிகாவிலிருந்து அழிந்து போகும் அபாயம்  உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. 



Read in source website

 

நாட்டில் உள்ள வங்கிகள் ஏற்கனவே உள்ள அதன் லாக்கர் வாடிக்கையாளர்களுடன் தங்கள் லாக்கர் ஒப்பந்தங்களை 21023 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவுறுத்தியுள்ளது. 

தற்போதுள்ள அனைத்து லாக்கர் வாடிக்கையாளர்களும் புதிய லாக்கர் வைத்துக்கொள்ளவதற்கான தகுதியை வெளிப்படுத்தி, ஜனவரி 1, 2023க்கு முன்பாக புதுப்பித்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அறிவித்துள்ளது. 

இது குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் முதன்முதலில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இது 2022 ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. 

இந்நிலையில், ஜனவரி 1, 2023-க்குள் வங்கிகள் ஏற்கனவே இருக்கும் லாக்கர் வாடிக்கையாளர்களுடனான லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வங்கிகள் தங்கள் லாக்கர் ஒப்பந்தங்களில் நியாயமற்ற விதிமுறைகள் அல்லது நிபந்தனைகள் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 2023 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் அனைத்து வங்கிகள் ஏற்கனவே இருக்கும் வங்கி லாக்கர் வாடிக்கையாளர்கள் உடனான லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பித்து தகுதி சான்று வழங்கவேண்டும். புதிய லாக்கர் விதிகள் அந்த தேதியில் இருந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 

வங்கிகள் வாடிக்கையாளருக்கு லாக்கரை ஒதுக்கும்போது அந்த வாடிக்கையாளரிடம் வங்கி முத்திரையிடப்பட்ட காகிதத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டும், ஒப்பந்த பாத்திரத்தின் ஒரு நகலை வாடிக்கையாளரிடமும், அசல் வங்கியின் கிளையிலும் இருக்க வேண்டும். 

வங்கிகள் லாக்கர்களை பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் 180 நாள்கள் லாக்கர் அறையின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதியில் மற்றும் வங்கியின் பொதுவான பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவின் பதிவை கட்டாயம் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது. 

மேலும், வங்கிகள் தங்கள் லாக்கர் ஒப்பந்தங்களில் எந்தவொரு "நியாயமற்ற விதிமுறைகள் அல்லது நிபந்தனைகளும்" லாக்கர் ஒப்பந்தங்களில் இணைப்படவில்லை என்பதை வங்கிகள் உறுதி செய்யவும். அத்துடன் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் வங்கியின் நலன்களைப் பாதுகாப்பதற்காக வழக்கமான வணிகப்போக்கில் தேவைப்படுவதை காட்டிலும் கடுமையானதாக இருக்காது என்று திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. 

வழிகாட்டுதலின்படி, எந்தவொரு வாடிக்கையாளரும் தனது லாக்கரை அனுமதி இல்லாமல் அல்லது அதிகாரமும் இல்லாமல் திறக்கப்பட்டிருப்பதாக வங்கியில் புகார் கொடுத்தாலோ அல்லது திருட்டு அல்லது பாதுகாப்பு மீறல் நடந்துள்ளதாக தெரிவித்தாலோ, போலீஸ் விசாரணை முடியும் வரை வங்கிகள் சிசிடிவி பதிவுகளை பாதுகாத்து வைக்க வேண்டும்.

வங்கியின் கவனக்குறைவால் பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள பொருள்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதத்திற்கு வங்கிகள் பொறுப்பேற்க வேண்டும். 

லாக்கரிகளில் சட்டத்திற்குப் புறம்பான பொருள்கள் அல்லது அபாயகரமான சாதனங்களை வைக்கக் கூடாது என்பதை வாடிக்கையாளர்கள் உடனான ஒப்பந்தப் பத்திரத்தில் வங்கிகள் சேர்க்க வேண்டும். 

வங்கிகள் வங்கியின் தற்போதைய வாடிக்கையாளர்கள் லாக்கர் வசதிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு சிசிடி விதிமுறைகளுடன் முழுமையான இணைவு அளிப்போருக்கு லாக்கர் வசதியை வழங்கலாம். மேலும், வங்கி தனது வாடிக்கையாளர்கு மட்டும் அல்லாமல் வங்கிக்கு தொடர்பில்லாத பிற வாடிக்கையாளர்க்கும் லாக்கர் வசதியை அளிக்கலாம். 

வங்கிகள் கிளை வாரியாக காலியாக உள்ள லாக்கர் குறித்த விவரங்களை வெளிப்படையாக, அதனதன் இணையதளப் பக்கத்தில் வெளியிட வேண்டும்.  

லாக்கர் கிடைக்காத வாடிக்கையாளர்களுக்கு காத்திருப்பு காலத்திற்கான பதிவு எண் வழங்கப்பட வேண்டும். 

வங்கி இணைப்பு, வங்கி கிளை வேறு இடத்திற்கு மாற்றம் மற்றும் வங்கி கிளை மூடப்படுவது போன்ற ஏதேனும் ஒரு நிகழ்வு இருந்தால் வங்கிகள் அதனை உள்ளூர் செய்தித்தாள் உள்பட இரண்டு செய்தித்தாள்களில் செய்திகள் வெளியிடப்பட வேண்டும். குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இதுகுறித்த தகவல்கள் அறிவிக்கப்பட வேண்டும். 

லாக்கர் வாடிக்கையாளர்களிடம் மூன்று ஆண்டுகளுக்கான முன் வைப்புத் தொகையை வங்கிகள் பெற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் லாக்கர் வாடகை செலுத்தவில்லை என்றால் அவர்களது லாக்கரை உடைக்கவும் வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது. 
 
வங்கி லாக்கர்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மதிப்புமிக்க பொருள்கள் வங்கி ஊழியர்களால் மோசடி செய்யப்பட்டலோ, தொலைந்து போனாலோ, தீ அல்லது கட்டடம் இடிந்து விழுந்து லாக்கர் சேதமடைந்தாலோ வாடிக்கையாளர்களுக்கு வங்கி கட்டணத்தை விட 100 மடங்கு வரை வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

எவ்வாறாயினும், நில நடுக்கம், வெள்ளம், மின்னல், புயல் போன்ற இயற்கை பேரழிவு அல்லது வாடிக்கையாளர்களின் அலட்சியத்தினாலோ லாக்கரில் உள்ள பொருள்களுக்கு ஏதேனும் சேதமோ அல்லது இழப்போ ஏற்பட்டால் வங்கி பொறுப்பாகாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 



Read in source website

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தேசிய தேர்வுக் குழு இடைக்காலத் தலைவராக முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக இருந்த ரமீஸ் ராஜா அண்மையில் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து நேற்று ஷாகித் அப்ரிடி தேர்வுக் குழுவின் இடைக்காலத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அப்துல் ரசாக், ராவ் இப்திகார், அஞ்சும் உள்ளிட்டோர் அடங்கிய தேர்வுக்குழுவை அப்ரிதி வழிநடத்துவார். மேலும் தேர்வுக்குழுவுக்கு ஹாரூன் ரஷித் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.

தேர்வுக் குழு இடைக்காலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்து ஷாகித் அப்ரிடி கூறியதாவது: எனக்கு மதிப்பளித்து இந்தப் பொறுப்பை வழங்கியது தொடர்பாக நான் பெருமை கொள்கிறேன். எனது திறமையின் மூலம் இந்தப் பணியைச் சிறப்பாக செய்வேன். பாகிஸ்தான் அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

மிர்பூர்: வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வென்று, தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில் 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை பதிவு செய்தது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய இந்திய அணி 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனைத் தொடந்து, 2-வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேசத்தின் லிண்டன் தாஸ் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. சுப்மன் கில் 7 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 2 ரன்களுடனும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அடுத்து வந்த புஜாரா 7 ரன்களில் ஸ்டெப்ம்பிங் முறையில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த அக்சர் படேல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் விராட் கோலி 1 ரன்னில் வெளியேறினார். இதனால், இந்திய அணி 37 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

இதனையடுத்து, ஜெயதேவ் உனாத்கட் களமிறங்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை சேர்ந்த்தது. அக்சர் பட்டேல் 26 ரன்னிலும், உனாத்கட் 3 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்க அக்சர் பட்டேல் 34 ரன்களிலும், உனாத்கட் 13 ரன்களிலும், பண்ட் 9 ரன்களிலும் வெளியேறினர். ரவிச்சந்திரன் அஸ்வின் 42 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களையும் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர். வங்கதேசம் தரப்பில் மெகதி ஹசன் 5 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது



Read in source website

மெல்பர்ன்: 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைக்க காத்திருக்கிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ம் தேதி மெல்பர்ன் மைதானத்தில் தொடங்கவுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகள் என்று அழைக்கப்படுகின்றன. அதன்படி இந்த டெஸ்டும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக அமைகிறது.

இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் டேவிட் வார்னருக்கு இந்த போட்டி 100-வது டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.

இதுகுறித்து மெல்பர்னில் டேவிட் வார்னர் கூறும்போது, “இது எனக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக அமைவது மகிழ்ச்சி. நான் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பொறுப்பேற்பதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் (சிஏ) தடை இன்னும் அமலில் உள்ளது. இதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்புதான் பதில் சொல்லவேண்டும்" என்றார்.

இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வார்னர் 7,922 ரன்கள் குவித்துள்ளார். இதில் 24 சதங்களும், 34 அரை சதங்களும் அடங்கும்.



Read in source website

காபூல்: ஆப்கனில் தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற பெண்களுக்கு தலிபன்கள் தடை விதித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மறு அறிவிப்பு வரும் வரை ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டது. தலிபான்கள் அறிவிப்பை கேட்டு, ஆப்கன் பெண்கள் பலர் பல்கலைக்கழக வகுப்பு அறையிலேயே கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் இன்று பல்கலைக்கழங்களுக்கு வந்த மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தலிபான்களின் இந்த முடிவை எதிர்த்து நாடு முழுவதிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையான உத்தரவை தலிபான்கள் அறிவித்துள்ளனர். அதாவது, ஆப்கனில் உள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களில் பெண்கள் ஊழியர்களாக இருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஆப்கனின் பொருளாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தலிபான்களின் இந்த அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபை விமர்சித்துள்ளது.

ஆப்கனிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தனர். எனினும், தலிபான்களின் ஆட்சி அவ்வாறு இல்லாததால் சர்வதேச அளவில் அவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.



Read in source website

ஐ.நா: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக் காலத்தில், இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டதாக உறுப்பு நாடுகள் பாராட்டு தெரிவித்தன.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா 2 ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது தனது பதவிக்காலத்தை இந்த மாதத்துடன் நிறைவு செய்தது. இந்த 2 ஆண்டு காலத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா இரண்டு முறை மாதாந்திர தலைமை பொறுப்பையும் ஏற்றது. சுழற்சி முறையில் வரும் இந்த பொறுப்பை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்திலும், இந்த ஆண்டு டிசம்பரிலும் இந்தியா ஏற்றது.

இந்நிலையில் ஆண்டு இறுதி வார விடுமுறைக்கு முன்பாக, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் கூட்டம் கடந்த வியாழக் கிழமை நடந்தது. அதில் இந்த மாதத்தில் இந்தியா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கா்போஜ் எடுத்துரைத்தார்.

சீர்திருத்தம் செய்யப்பட்ட பலதரப்பு விஷயங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து இயக்கம் மற்றும் கடந்த வாரம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடந்த தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, ஐ.நா.வில் மகாத்மா காந்தி மார்பளவு சிலை திறந்து வைத்தது, அமைதிப்படைக்கு எதிரான குற்றங்களை தடுக்க நண்பர்கள் குழுவை தொடங்கியது போன்றவற்றை அவர் சுட்டிக் காட்டினார்.

நன்றி தெரிவித்த கென்யா: இதற்கு ஐ.நா உறுப்பு நாடுகளும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இணையவுள்ள நாடுகளும் பாராட்டு தெரிவித்தன. ஐ.நாவுக்கான கென்யாவின் நிரந்தர பிரதிநிதி மார்டின் கிமனி கூறுகையில், ‘‘ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து வெளியேறும் உறுப்பினர்களில், இந்தியா மட்டுமே ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு 2 முறை தலைமை தாங்கியதாகவும், இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் சிறந்த பணிகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுடன் இருக்கிறோம்’’ என்றார்.

‘‘இந்த மாதத்தில் மிகவும் மும்முரமாக செயல்பட்டு தனது தலைமையை இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள்’’ என நார்வே நாட்டின் நிரந்தர பிரதிநிதி மோனா ஜூல் தெரிவித்தார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்த மாதத்தில் ஏராளமான தீர்மானங்களை நிறைவேற்றிய இந்திய குழுவினருக்கு நன்றி என ரஷ்யா கூறியது. ‘‘ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய தலைமையின் கீழ் இந்த மாதம் மிகவும் பயனுள்ள மாதமாக இருந்தது’’ என அயர்லாந்து தூதர் ஃபெர்கல் மைதன் கூறினார். இதே போல் மெக்சிகோ, மொராக்கோ, வங்கதேசம், ஆஸ்திரியா நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.



Read in source website

மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தியில் நான் நம்பிக்கை உள்ளவன். பழைய சிறப்புகள் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறவன். புத்தியினால் மட்டுமே அறியக் கூடாததை நாடுகின்றவன். காரிய காரணத் தொடர்பு இல்லாத சிலவற்றில் எனக்கு நம்பிக்கை உண்டு. எல்லாவற்றுக்குமே காரியக் காரண விளக்கம் தர இயலாது. அப்படித் தர முடியாதவைகளில் சில முக்கியமானவை. அவற்றை அலட்சியம் செய்ய முடியாது. என் சித்தப்போக்கு நாடறிந்த விஷயம். எனவே, என் காரிய காரணப் பிணைப்பற்ற தன்மை வாசகர்களுக்கு மிதமிஞ்சிய சிரமத்தைத் தராது. 

ஜீவாத்ம, பரமாத்ம நம்பிக்கை இல்லாதவன் முடிவற்ற காரிருளில் அலைந்து திரிந்துதானாக வேண்டும். உலகம் சூரியன் இல்லாத நிலைமையைத்தான் அவன் காண்பான். 

அசூர்ய நாமதே லோகா
அந்தேன தமஸா விருதா
தான் ஸ்தே பிரேத்யாபி கச்சந்தி
யே கே சர ஆத்மனோ ஜனா: 
 (ஈசோப நிஷத்)

"தமது மனதில் ஆத்மாவுக்கே இடமில்லாமல் அடித்து விடுகிறவர்கள், அம்மாதிரி மறுப்பதன் காரணமாக மரணமெய்தி, சூரியனில்லாத உலகில், கன இருட்டு சூழ்ந்த நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்பது இதன் பொருள். 

ஆத்ம விசாரம்

மனிதனுக்கு சரீரம் மட்டுந்தான் உண்டு, அதற்கப்பால் விளங்குகின்ற ஆத்மா இல்லை என்றால், இன்பமும் அவற்றைத் தருகின்ற பொருள்களும்தான் மிஞ்சும். இவற்றிற்காக உழைப்பதற்கு நாம் உயிரைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டுமா? பிறகு மற்றொரு கேள்வி எழுகிறது. மனித வர்க்கத்தின் நன்மைக்காக, அதாவது இனி வரப்போகின்ற தலைமுறைகளுக்காக நாம் ஏன் உழைக்கலாகாது? அவற்றிற்காக ஏன் எதையாவது ஒருவன் செய்தாக வேண்டும்? அத்தகைய பணியுடன் அவனைப் பிணைப்பது எது? ஆத்மா இல்லை, சரீரம்தான் உண்டு என்றால் மனித வர்க்கமோ அல்லது இனி வரப்போகின்ற தலைமுறைகளோ ஏன் வாழ வேண்டும், வாழ்க்கையின் போராட்டங்களில் ஈடுபட வேண்டும்? உண்மையைச் சொல்லுமிடத்து, ஆத்மா இல்லையென்றால் நம்மில் ஒவ்வொருவரும் தனியாகவும், எல்லோரும் மொத்தமாகவும் பேணிப் போற்றுகின்ற பெரு நியதிகளெல்லாம் மறைந்துவிடும். 

பரிணாம தத்துவம்

ஒரு கண நேரம் 'மூட நம்பிக்கை'யினின்று வெளிப் போந்து, பரிணாமத்தின் பரிபாஷையில் பேசுவோம். 'ஜீன்ஸ்' என்ற உயிரணுக்கள், எண்ணற்ற தடவை யதேச்சையாக நிகழ்கின்ற மாறுதல்களுக்கு உள்ளாகி, பல கோடி வருஷம் கண்ட வளர்ச்சியின் விளைவாக உருப்பெற்றவன் மானிடன் என்பதை ஒப்புக்கொண்டு இதைப் பார்ப்போம். இந்த நீண்ட கால வளர்ச்சியில், சுபாவமான சேர்க்கையைத் தேர்ந்தெடுத்து இன்றைய நிலைமையை அவன் வந்து அடைந்துள்ளான். 

சத்தியம், அன்பு, உயிருக்கு மதிப்பு, வாக்குப்படி நடப்பது, ஒத்துழைப்பு, உணர்வு, தயை, நன்றி போன்ற நியதிகள் ஏற்றம் கண்டு, மனிதனது சிந்தனையில் நிலையான இடம்பெற்று விட்டன, எல்லா இடுக்கண்களையும் சமாளித்து தப்பிப் பிழைத்து வளருவதற்கான மதிப்பு இந்த குணங்களுக்கு உண்டு என்பதுதான் இவ்வாறு நடந்து வந்திருப்பதற்குக் காரணம். 

புறக்கணித்தால் 

இந்த நியதிகளை புறக்கணிப்பது எவ்வாறு இருக்கும்? சிங்கமும் புலியும் தமக்கே உரிய துணிவு மிகுதியையும் மூர்க்கத்தையும் கைவிடுவது போல இருக்கும். பறவைகள் தமது சிறகுகளைத் தியாகம் செய்வது போல இருக்கும்; காளைமாடு தன் கொம்புகளைத் துறப்பதுபோல இருக்கும்; மனிதன் தனது மூளையையும் நேராக நிமிர்ந்து நடக்கின்ற தன்மையையும் கைவிட்டது போல இருக்கும். 

மரபுச்செல்வம்

'வழிவழியான நியதிகள்' (Traditional values) உலகமெங்கும் மதிப்புப் பெற்றுள்ள சிறப்பு நிலைகள். சமுதாயத்துக்குச் சமுதாயம் அவற்றிடையே அளவில் சிறிது வேறுபாடுகள் இருக்கும். இந்த நியதிகள் வியாபகமாக இருந்து வந்த துறைகளில், சமயச் சார்பற்ற சக்திகளும் ஸ்தாபனங்களும் படர்கின்ற நிலவரத்தில், அவற்றில் சிலவற்றின் வழிவழித் தன்மையானது தெளிவாகத் தெரியாமலிருக்கலாம், அல்லது மறைந்துவிட்டிருக்கும். 

சக்தியற்ற மிருகம்

மரபையொட்டிய இந்த நியதிகளை, நாசகரமான அவநம்பிக்கை சூழ்ந்துகொண்டு, இவற்றைக் கைவிட வேண்டும் என்பதற்கான இயக்கம் வெற்றி பெறுமானால் எத்தனையோ அகஸ்மாத்தான நிகழ்ச்சிகளின் அருளினால் கிட்டிய உயர்நிலையை விட்டு, பரிணாமத்தின் தொடக்கத்தில் இருந்த தாழ்நிலைகளுக்கே மனிதன் மீண்டும் தாழ்ந்து விடுவான். அந்நிலையில் தேக திட்டமில்லாத, பரிதாபத்துக்குரிய காட்டு விலங்கின் நிலையை அடைந்து உலகிலிருந்து அவன் அநேகமாக மறைந்து படலாம். 

நான் இங்கு சொல்லியிருப்பதை சிலர் நெடுநாளைக்கு முன்னரே கூறியிருக்க வேண்டும். அவற்றையெல்லாம் நான் படிக்கவில்லை. இதை ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் இன்னும் திறம்படக் கூறியிருக்கிறார் என்று நினைக்கிறேன். 

வளர்ச்சித் தத்துவம் 

நாம் ஏதோ கண்மூடித்தனமாக தவறுகளை இழைத்து வளர்ச்சி அடைந்துவிட்டோம் என்ற தத்துவத்தை நான் ஒப்புக்கொள்ளவில்லை, நமது வளர்ச்சியில் ஒரு நியமம் இருப்பதாக நம்புகிறேன். அது எப்பேர்ப்பட்டது என்பதை துருவித் தேடிக் கண்டறிய இயலாது. எனவே, மரபையொட்டி சிறப்பு எய்திய இந்த நியதிகள் தாம், மனிதனது வளர்ச்சிக்கு ஆண்டவன் உருவாக்கிய நியமங்களைச் சேர்ந்தவை என்று நம்புகிறேன். சிலர் இவற்றைக் கைவிட்டு துன்பமடைந்தாலுங்கூட, மனித வர்க்கம் இவற்றைக் கைவிடாது என்பது என் நம்பிக்கை, பாரம்பரியச் சீர்மையுடன் வழிவழியாக வந்து ஏற்றம் கண்ட நியதிகள் தனிப்பெருமை படைத்தவை. சமயச் சார்பற்ற அரசாங்கச் சட்டங்கள் ஒருக்காலும் அவற்றிற்கு போதியவாறு ஈடு செய்பவை ஆக முடியாது. 

அசட்டு நிம்மதி 

தமது படிப்பு அறையில் அமர்ந்த வண்ணம், இக்கால வாழ்வையும் பகுத்தறிவையும் சுட்டிக்காட்டி மரபையொட்டிய நியதிகளைக் கண்டனம் செய்வது சுலபம். அதன் மூலம் ஓரளவு மனத் திருப்தியடையலாம். வெற்றியுணர்வும் கொள்ளலாம். ஆனால், இந்த நியதிகளை விசுவாசத்துடன் ஏற்றுக்கொண்டு அவற்றிற்கு நமது மக்கள் கட்டுப்பட்டு நடந்துகொண்டிருக்கும் வரையில்தான், நாம் பத்திரமாக வாழ முடியும். அறிவாளிகள் எனப்படுவோர் எத்தகைய கண்டனங்களை வீசியபோதிலும் இதுதான் நிலவரம். வாழ்வு நமக்கு அளிக்கின்ற மகிழ்ச்சியைத் தருபவை நாகரிகமும் பண்பாடுந்தான். இவை நெருக்கமாகப் பின்னி இணைக்கப்பட்ட ஒருதளுவம் போன்றவை. எல்லா வளைவுகளையும் ஊடுருவி நின்று, முடிச்சுகளையெல்லாம் பிணைத்து வைத்திருக்கும் நூல் ஒன்றே. ஒரு மூலையில் அது அறுந்து வெளிவந்துவிட்டால் என்ன ஆகும் என்பது நாம் அறிந்ததே. வழிவழியாக வந்த நியதிகளை நமது மக்கள் திரளாகக் கைவிடுவார்களாயின், நாகரிகமும் பண்பும் கீழ் நிலைக்கு தாழ்ந்து போய் பிறகு மறைந்துவிடும். 

சக்கரவர்த்தி சி. ராஜகோபாலாச்சாரியார்,

 1964 ஆம் ஆண்டு டிச. 24 ஆம் நாளிட்ட

தினமணி நாளிதழில் எழுதிய கட்டுரையின்

மீள் பிரசுரம்.

(டிச. 25 - ராஜாஜி நினைவு நாள்)



Read in source website

சிவகங்கைச் சீமையில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சுமத்ராவுக்கு நாடு கடத்தப்பட்டதைப் புனைவு கலந்து சொன்ன நாவல் ‘காலா பாணி’. இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு நாவல்கள் எழுதிவருபவர் மு.ராஜேந்திரன். இந்தாண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு இந்தக் ‘காலா பாணி’ நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஹிட்லரின் பிடியிலிருந்து தப்பி பெங்களூருவில் வாழும் ஒரு குடும்பத்தின் கதை கன்னட எழுத்தாளர் நேமிசந்த்ரா எழுதிய ‘யாத்வஷேம்’. இதை தமிழில் மொழிபெயர்த்ததற்காக கே.நல்லதம்பிக்கு தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்டுள்ளது.



Read in source website

அண்மைக்கால கரோனா சூழலில் அதிகம் பாதிக்கப்பட்டவற்றில் நாடகச் செயல்பாடுகளும் ஒன்று. நாடகம் போன்ற நிகழ்த்துவடிவங்கள் நேரடியான கூட்டுச் செயல்பாடுகளை அதிகம் சார்ந்திருக்கும் நிலையில் இத்தகைய முடக்கம் ஒருவிதக் கையறு நிலையையும் தளர்ச்சியையுமே உருவாக்கியது. கடந்த வருட இறுதியில் கரோனா பாதிப்புகளின் கடுமை குறைந்து, இயல்பு நிலை திரும்பத் தொடங்கிய பிறகே நாடகச் செயல்பாடுகள் தலைதூக்க ஆரம்பித்தன.

எல்லா கலாச்சாரங்களிலும் நாடகத்துக்கு ஒரு தனித்த இடம் இருந்தாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் வடிவங்களும், செயல்பாடுகளும் மாற்றமடைந்து வருகின்றன. சினிமா, டிவி, வீடியோ போன்ற காட்சி ஊடகங்கள் இன்று அதிக ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், நாடகம் என்கிற கலை வடிவத்தின் நேரடி அனுபவத்தைப் பெற விரும்பும் ஒரு சிறு குழுவினரே இன்று நாடகத்தை நாடிவரும் நிலை உள்ளது. ஆனால், இன்றைய சமூக ஊடகங்களின் பாதிப்பில் கல்லூரி வளாகங்களிலும் இளைஞர்கள் கூடுமிடங்களிலும் தங்கள் சமூக அரசியல் எதிர்வினைகளை வெளிப்படுத்தக் குறுநாடக வடிவங்களை மாணவர்களும் இளைஞர்களும் கையாளும் நிலை உள்ளது. பெண்ணிய அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தங்கள் எதிர்ப்புக் குரல்களை வெளிப்படுத்த நாடக வடிவங்களைக் கையிலெடுக்கின்றனர். உலகமயமாக்கல் தனிமையில் உழலும் தனிமனிதர்களைச் சமூகமயப்படுத்தும் பணிகளை நாடக வடிவங்களால்தான் செய்ய இயலும். அதனால்தான் எவ்வளவு கலாச்சாரத் தாக்குதல்களுக்கிடையிலும் உலகம் முழுவதும் நாடகம் தன்னுடைய மதிப்பையும் பயன்பாட்டையும் இழக்காமல் உள்ளது.



Read in source website

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பேரிடரால் டிசம்பர் இசை விழா உள்பட அனைத்துமே இணையவழியில் மட்டுமே நடந்த நிலையில், 2022 ஜனவரி மாதத்திலிருந்தே ரசிகர்களின் முன்னிலையில் நடக்கும் நிகழ்ச்சிகள் மெதுவாகத் தொடங்கின. பாரம்பரியமான கர்னாடக இசை, மக்களிசை, சொல்லிசை, கானா, பலதரப்பட்ட நடன வகைமைகள் எனப் பலவற்றுக்கும் மேடைகள் கிடைத்தன.

நரசிங்கம்பேட்டையில் தயாராகும் நாகஸ்வரத்துக்குப் புவிசார் குறியீடு கிடைத்தது, தலைமுறை தலைமுறையாக நாகஸ்வரத் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் ரங்கநாத ஆச்சாரி (இவர்தான் இந்த வகையான நாகஸ்வரத்தை முதன்முதலில் உருவாக்கியவர்) குடும்பத்தினருக்கு மிகப் பெரிய அங்கீகாரம் உலக நாடுகளிலிருந்தெல்லாம் கிடைப்பதற்குக் காரணமாக அமைந்தது.



Read in source website