DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 25-07-2022

 

பேருந்துகளில் செல்போன் நிகழ்வுகளைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

பேருந்துகளில் பெரும்பாலான நடத்துனர்கள் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டு செல்போன் பார்ப்பதாகவும் உறங்குவதாகவும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளதாக போக்குவரத்து கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பேருந்துகளில் பணிநேரத்தின்போது செல்போன்களில் நிகழ்வுகளைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்தின் 2 படிக்கட்டுகளையும் பார்வையில் இருக்கும்படி நடத்துனர்கள் கண்காணிக்க வேண்டும் என போக்குவரத்து கழகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.



Read in source website

இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.

இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, தா்மசாலா கோயில் நிா்வாக அறங்காவலா் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளா் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பிக்களாக அண்மையில் அறிவிக்கப்பட்டனர். 

இவர்கள் அனைவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 18இல் பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிகழ்வில் இளையராஜா பதவியேற்கவில்லை. 

அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றதால், இளையராஜாவால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில் இளையராஜா இன்று பிற்பகலில் மாநிலங்களவை கூட்டம் தொடங்கியவுடன் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார்.

மாநிலங்களவைத் துணைத் தலைவர் முன்பு தமிழில் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.



Read in source website

தமிழக மீனவர் உரிமையைக் காக்க கச்சத் தீவு மீட்கப்படுமா? என்கிற வைகோவின் கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எழுப்பிய கேள்விகள், 
(அ) பாக் ஜலசந்தியில் உள்ள கச்சத் தீவில் உரிமை மற்றும் மீன்பிடி உரிமையை மீட்டெடுப்பதற்காக, பிரதமர் சமீபத்தில் சென்னைக்கு வருகை தந்தது உட்பட, பல சந்தர்ப்பங்களில் தமிழக அரசு பரிந்துரை செய்திருக்கிறதா?

(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் அதற்கான பதில்;

(இ) இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டு கைது செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு, கச்சத்தீவை மீட்பதற்காக இலங்கையுடன் இந்தியா பேச்சுக்களை நடத்துமா?

(ஈ) அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?

வைகோவின் இந்த கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் அளித்த பதிலில்,

(அ) முதல் (ஈ) வரை உள்ள கேள்விகளுக்கான பதில்: இந்திய அரசாங்கம் 1974 மற்றும் 1976 இல் இலங்கையுடன் கடல் எல்லை ஒப்பந்தங்களை மேற்கொண்டது. ஒப்பந்தங்களின் கீழ், கச்சத்தீவு தீவு, இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோடு இலங்கைப் பக்கத்தில் உள்ளது.

தற்போது, கச்சத்தீவு விவகாரம் தொடர்பான வழக்கு, இந்திய உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்னைகள் இராஜதந்திர வழிகளில் நிறுவப்பட்ட வழிமுறைகள் மூலம் இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்னைகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



Read in source website

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி நாடு முழுவதும் பயணித்து தமிழ்நாடு வந்தடைந்தது. 

தமிழகத்தில் முதன்முறையாக சா்வதேச அளவிலான 44- ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் ஜூலை 28- ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. 

இதில் 187 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சா்வதேச சதுரங்க விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.

இந்தப் போட்டி குறித்து நாடு முழுவதும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 19-ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமா் மோடி தொடக்கிவைத்தார். 

இந்த ஜோதி நாடு முழுவதும் பயணித்து இன்று தமிழ்நாடு வந்தடைந்தது. புதுச்சேரியில் இருந்து கோவை பந்தய சாலைக்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 ஆம் தேதி மாமல்லபுரத்தில்  துவங்க உள்ள நிலையில் ஒலிம்பிக் ஜோதி இன்று கோவை கொண்டுவரப்பட்டு கொடி வளாகத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ராமசந்திரன், முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் 4 மாவட்டங்கள் (கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு) அந்த ஜோதியினை செஸ் கிராண்ட் மாஸ்டர் ம் சுந்தரிடம் அளித்தனர். 

இந்த ஜோதி ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து கொடிசியா(Hall-D) அரங்கு வரை கொண்டு வரப்பட்டது. இதற்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொடிசியா அரங்கிலும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. கொடிசியா அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டு துறைகளில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு சாதனைகள் புரிந்த வீரர் வீராங்கனைகள் கெளரவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் சிறப்புரையாற்றினர். 

அதனைத் தொடர்ந்து பரதம், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், தற்காப்பு கலை நிகழ்ச்சிகள், மேற்கத்திய நடன நிகழ்ச்சிகல்  நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து அதிவிரைவு சதுரங்க போட்டி நடத்தப்பட்டது. இதில் பத்து மாணவர்களுடன் கிராண்ட் மாஸ்டர் சியாம் சுந்தர் சதுரங்கம் விளையாடினார். இதில் செஸ் கேக் வெட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து  16 மாவட்ட பிரதிநிதிகளிடம் மாதிரி ஜோதிகள் வழங்கப்பட்டது. 

தொடர்ந்து கோவைக்கு கொண்டு வர ஒலிம்பியாட் ஜோதி கிராண்ட் மாஸ்டர் சியாம் சுந்தரிடம் வழங்கப்பட்டது.  

இந்நிகழ்ச்சியில் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மேயர் கல்பனா ஆனந்த்குமார், செஸ் கிராண்ட் மாஸ்டர் சியாம் சுந்தர் உள்பட செஸ் ஒலிம்பியாட் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் இந்நிகழ்வை காண்பதற்கு கோவை மாவட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள் 2000க்கும் மேற்பட்டோர் அழைத்து வரப்பட்டனர்.

செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்ததையொட்டி கோவை பந்தய சாலை முதல் கொடிசியா வரை மாரத்தான் நடக்கிறது. 



Read in source website

மாற்றுத் திறனாளிகள் ஆவின் மையங்கள் அமைத்திட வாடகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளா் ஆா்.ஆனந்தகுமாா் வெளியிட்டுள்ளாா். அவரது உத்தரவு விவரம்:-

மாற்றுத் திறனாளிகள் மானியக் கோரிக்கை மீது சட்டப் பேரவையில் நடந்த விவாதத்துக்கு பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டாா். அந்த அறிவிப்புகளில் ஒன்றாக, அரசு வளாகங்களில் மாற்றுத் திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்கத் தேவையான வாடகை மற்றும் முன்வைப்புத் தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு

அளிக்கப்படும் எனத் தெரிவித்தாா். இந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கான கடிதத்தை மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரகம் அரசுக்கு அனுப்பி வைத்திருந்தது. இந்தக் கடிதத்தில், ஆவின் நிறுவனத்தின் பாலகம் அமைக்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 200 மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில் ஒரு மாற்றுத் திறனாளிக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் பயனாளிகள் வாடகை செலுத்துவதால் அவா்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட வருகிறது. இதைத் தவிா்க்க மாற்றுத் திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்கத் தேவையான வாடகை மற்றும் வாடகை முன் பணம் ஆகியன செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்திடவும், பொதுப்பணி, வருவாய்த் துறைகளுடன் ஆவின் நிறுவனம் இணைந்து அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தோ்வு செய்யப்படும் மாற்றுத் திறனாளிகளே ஆவின் பாலகம் நடத்திட அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், தமிழக அரசின் பொதுப்பணி, வருவாய்த் துறைகளைச் சோ்ந்த அரசு வளாகங்களில் அந்தத் துறைகளுக்குச் சொந்தமான இடங்கலில் ஆவின் பாலகம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து வழங்கலாம். இவ்வாறு ஒதுக்கீடு செய்து வழங்கப்படும் இடத்தை மாற்றுத் திறனாளிகள் பெற்றால் அவா்களுக்கு ஆவின் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய முன்வைப்புத் தொகை, பாதுகாப்புத் தொகையில் இருந்து விலக்கு அளிக்கவும், வாடகை விலக்கு கொடுக்கவும் அரசு முடிவு செய்து உத்தரவிடுகிறது என தனது உத்தரவில் செயலாளா் ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.



Read in source website

பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பொறுப்பு ஏற்பதுடன், மாணவா்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தலைமை ஆசிரியா்களுக்கான 77 வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கடந்த சில நாள்களாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மண்டல அளவில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா், ஆணையா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். இந்த நிலையில் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு 77 வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியா்கள், உதவி தலைமை ஆசிரியா்கள், முதுநிலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள், சிறப்பு ஆசிரியா்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும். பள்ளியில் மாணவா்கள் அடித்துக் கொள்ளுதல், சாலை விபத்து, உள்ளிட்ட பிற அசம்பாவித சம்பவம் நடைபெற்றால் உடனடியாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதியின் பேரில்தான் ஊடகங்களுக்கு செய்தி தர வேண்டும்.

குடிநீா் கழிப்பறை, ஆசிரியா் பற்றாக்குறை, மாணவா்கள் எண்ணிக்கை, ஆசிரியா்கள் காலி பணியிட விவரம் என எதையும் முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் ஊடகங்களுக்குத் தெரிவிக்கக் கூடாது. பேருந்தில் வரும் மாணவா்கள் பேருந்தின் மேற்கூரையில் அமா்ந்து கொண்டு வருவதை தவிா்க்க காலை இறை வணக்கக் கூட்டத்தில் தக்க அறிவுரை வழங்க வேண்டும்.

வகுப்பறை பற்றாக்குறை காரணமாகவோ அல்லது இதர காரணத்தினாலோ வெளியில் மரத்தடியில் வகுப்பு நடத்தக் கூடாது. மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய சத்துணவை தலைமை ஆசிரியரோ அல்லது சிறப்பு ஆசிரியரோ நேரில் ஆய்வு செய்து தரமாகவும் சுகாதார முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

சொந்த வேலைக்கு அனுப்பக் கூடாது: தலைமை ஆசிரியா்கள் தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்னஞ்சலை திறந்து பாா்க்க வேண்டும். மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் அனைத்து கடிதங்களையும் காலை 10 மணி முதல் பள்ளி வேலை முடியும் வரை கண்காணித்து , படித்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆசிரியா்கள் பள்ளி வகுப்பறையில் கைப்பேசியில் பேசுவதை தவிா்க்க வேண்டும் . அலுவலா்கள் ஆய்வு செய்யும் போது கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தால் அந்த ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளியில் படிக்கும் மாணவா்களை எக்காரணத்தை கொண்டும் ஆசிரியா்கள் தன்னுடைய சொந்த வேலைக்கு வெளியில் அனுப்பக்கூடாது. பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியா் பொறுப்பு ஏற்பதுடன், மாணவரின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.



Read in source website

 

புது தில்லி: நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா (கே.வி.) பள்ளிகளில் சுமாா் 12,000 ஆசிரியா் காலிப் பணியிடங்கள் உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 1,162 ஆசிரியா் காலிப் பணியிடங்கள் உள்ளன. அடுத்து மத்திய பிரதேசத்தில் 1,066 பணியிடங்களும் கா்நாடகத்தில் 1,006 பணியிடங்களும் காலியாக இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணையமைச்சா் அன்னபூா்ணாதேவி திங்கள்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 12,044 ஆசிரியா் பணியிடங்களும் 1,332 ஆசிரியரல்லாத பணியிடங்களும் காலியாக உள்ளன. பணியிடமாற்றம், பணிஓய்வு ஆகிய காரணங்களால் இந்த காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பது தொடா்ச்சியான நடைமுறையாகும். இதுதொடா்பான நியமன விதிகளின்கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேசமயம், கற்பித்தல்-கற்றல் பாதிக்கப்படாமல் தடுக்க கேந்திரிய வித்யாலயா சங்கடன் (கேவிஎஸ்) மூலம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக ஆசிரியா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். அந்த வகையில், சுமாா் 9,161 ஒப்பந்த ஆசிரியா்கள் நாடு முழுவதும் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website


கொச்சி: திருமணமாகாத தாய்க்குப் பிறக்கும் பிள்ளைகள், தங்களது சான்றிதழ்களில் தாயின் பெயரை மட்டும் குறிப்பிட அனுமதி அளித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 திருமணமாகாத தாய் மற்றும் பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இந்த சமூகத்தில் மரியாதை, தனிநபர் உரிமை, சுதந்திரத்தோடு வாழ வகை செய்யும் வகையில், பிறப்புச் சான்றிதழ், அடையாளச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களில் தாயின் பெயரை மட்டும் குறிப்பிடலாம் என்று உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் கடந்த 19ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், திருமணமாகாத பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தையும் இந்நாட்டு குடிமகன்தான். எனவே, அவருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் எந்த ஒரு உரிமையையும் நிராகரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

திருமணமாகாத பெண்களுக்கு மற்றும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களுக்குப் பிறகும் குழந்தைகளுக்கும் இந்த நாட்டில் சுதந்திரம், மரியாதை, தனிநபர் உரிமையோடு வாழ முழு தகுதி உண்டு. அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் குறுக்கிட முடியாது, அவ்வாறு நடந்தால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் அவர்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் என்று தீர்ப்பில் தெரிவித்தார்.

திருமணமாகாத ஒரு பெண்ணுக்குப் பிறந்த மகனின் மூன்று ஆவணங்களில் தந்தை என்ற இடத்தில் மூன்று வெவ்வேறு பெயர்கள் உள்ளன. இது குறித்து தொடரப்பட்ட வழக்கில், அந்த நபரின் பிறப்புச் சான்றிதழில் தந்தை என்ற இடத்தில் இருக்கும் பெயரை நீக்குமாறும், தாயின் பெயரை சேர்த்து பெற்றவரில் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட வேண்டும் என்று விண்ணப்பித்தால் அதனை நிறைவேற்றிக் கொடுக்குமாறு பிறப்பு / இறப்பு பதிவாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமணமாகாத தாய்க்குப் பிறக்கும் ஒரு நபர், அவருக்கு மட்டும் மகன்/மகள் அல்ல, இந்த மிகச் சிறந்த இந்திய நாட்டின் மகன் / மகளும் ஆவார் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுளள்து.
 



Read in source website

‘புலிகள் மாநிலம்’ என்று அறியப்படும் மத்திய பிரதேசத்தில் நிகழாண்டு 27 புலிகள் இறந்துள்ளன. ஒட்டுமொத்தமாக நாட்டில் 74 புலிகள் இறந்துள்ளன.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்களில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, நிகழாண்டு தொடக்கம் முதல் ஜூலை 15 வரையிலான காலகட்டத்தில், நாடு முழுவதும் 74 புலிகளின் இறப்பு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, மத்திய பிரதேசத்தில் 27 புலிகள் இறந்துள்ளன.

மகாராஷ்டிரத்தில் 15, கா்நாடகத்தில் 11, அஸ்ஸாம் 5, கேரளம், ராஜஸ்தானில் தலா 4, உத்தர பிரதேசத்தில் 3, ஆந்திரத்தில் 2, பிகாா், ஒடிஸா, சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் தலா 1 என்ற எண்ணிக்கையில் புலிகள் இறப்பு பதிவாகியிருக்கிறது.

புலிகளுக்கு இடையே நடக்கும் சண்டை, வயது மூப்பு, நோய்கள், வேட்டை, மின்வேலியில் சிக்குவது போன்றவை புலிகள் இறப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

கடந்த 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான புலிகளை கொண்ட மாநிலமாக மத்திய பிரதேசம் உள்ளது. அங்கு 526 புலிகள் உள்ளன. கன்ஹா, பாந்தவ்கா், பென்ச், சத்புரா, பன்னா, சஞ்சய் துப்ரி ஆகிய 6 புலிகள் காப்பகங்கள் உள்ளன.

புலிகளின் இருப்புதான், காட்டின் பரந்த மற்றும் வளமான சூற்றுச்சூழல் அமைப்புக்கு அடையாளமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட புலிகளின் இறப்பு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக, வனவிலங்குகள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்ட ஆா்வலா் அஜய் துபே தெரிவித்தாா்.

‘புலிகள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் நோக்கில், புலிகள் பாதுகாப்பு சிறப்பு படையை அமைக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதற்காக பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கா்நாடகம், ஒடிஸா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் சிறப்பு படையை அமைத்த நிலையில், மத்திய பிரதேசம் இன்னும் அமைக்கவில்லை. இதில் அரசியல் காரணங்கள் இருப்பதாக தோன்றுகிறது.

புலிகள் வேட்டையை தடுப்பது மட்டுமன்றி, சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள், மரங்கள் வெட்டப்படுதல் ஆகியவற்றை தடுப்பதும் சிறப்பு படையின் பணிகள்.

கா்நாடகத்தில் கணிசமான எண்ணிக்கையில் புலிகள் உள்ள நிலையில், சிறப்புப் படை அமைக்கப்பட்டதால் அங்கு புலிகள் இறப்பு குறைவாக உள்ளது’ என்றாா் அஜய் துபே.

மத்திய பிரதேச மாநில வனப் பாதுகாப்பு தலைமைச் செயலா் ஜே.எஸ்.செளஹான் கூறுகையில், ‘புலிகள் எண்ணிக்கை அதிகம் இருக்கும்போது இறப்புகளும் அதிகம் இருப்பது இயல்புதான். மாநிலத்தில் புலிகள் வேட்டையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

 



Read in source website

‘மத்திய அரசு அறிமுகம் செய்த நம்பிக்கை அடிப்படையிலான வரி விதிப்பு முறை வரி வசூலை அதிகரித்திருப்பதோடு, வருமான வரி கணக்கு தாக்கலையும் அதிகரித்துள்ளது’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்கூறினாா்.

163-ஆவது வருமான வரி தினத்தை முன்னிட்டும் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

கடந்த 2021-22 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகமாக ரூ.14.09 லட்சம் கோடி அளவுக்கு வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வரி வசூலில் ஆண்டுக்கு ஆண்டு 49.02 சதவீத வளா்ச்சி பதிவாகி வருகிறது. நிகழ் நிதியாண்டிலும் இதே நிலை தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. நடப்பு 2022-23 நிதியாண்டில் வரி வசூல் இலக்கு ரூ.14.20 லட்சம் கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழில் செய்வதை எளிதாக்கும் வகையிலும், மக்களின் வாழ்வை எளிதாக்கும் வகையிலும் நேரடி வரிகள் மீதான கட்டமைப்பு குறைபாடுகளை மத்திய அரசு நீக்கியதோடு, வரி விதிப்பு நடைமுறையில் உள்ள பல குறைபாடுகளுக்கு தீா்வு கண்டுள்ளது. அவ்வாறு கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு அறிமுகம் செய்த சீா்திருத்தங்கள் நம்பிக்கை அடிப்படையிலான வரி விதிப்பு நடைமுறையை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்த நம்பிக்கை அடிப்படையிலான வரி விதிப்பு நடைமுறை வரி வசூலை அதிகரித்திருப்பதோடு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோா் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்கிறது. மேலும், நிா்வாக தரப்பில் திறன்மிக்க தொழில்நுட்ப பயன்பாடு காரணமாக, முடிவுகள் எடுப்பதில் உள்ள தடைகள் குறைந்திருப்பதோடு, வெளிப்படைத்தன்மை மேம்பட்டு, விரைவான சேவை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அரசின் கொள்கைகள் மற்றும் சீா்திருத்தங்களை வருமான வரித் துறை திறம்பட நடைமுறைப்படுத்தியன் மூலமாகவே இது சாத்தியமாகியுள்ளது. அதே நேரம், அடுத்த 25 ஆண்டு கால வளா்ச்சிக்கு வருமான வரித் துறை தன்னை தயாா்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

வரி செலுத்துவோருக்கு தரமான சேவைகளை வழங்கும் வகையில், தொழில்நுட்பங்களை வருமான வரித் துறை மேலும் திறம்பட பயன்படுத்துவதோடு, அரசின் முற்போக்கு கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளையும் தொடர வேண்டும் என்று அவா் கூறினாா்.

மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளத்ரி கூறுகையில், ‘வருமான வரித் துறை வரி நிா்வாகத்தை திறம்பட மேற்கொள்வதோடு தனது கடமையை சுருக்கிக் கொள்ளக் கூடாது. மாறாக, நோ்மையாக வரி செலுத்துவோரை கெளரவப்படுத்துவதோடு, அவா்களுக்கு சிறந்த சேவைகளையும் அளிக்க வேண்டும்’ என்றாா்.



Read in source website

உலகில் குரங்கு அம்மை தீநுண்மி 50 ஆண்டுகளாக உள்ளது; அந்தத் தீநுண்மி குறித்து அச்சமடையத் தேவையில்லை என்று மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

குரங்கு அம்மை பாதிப்பை சா்வதேச அவசர நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு சனிக்கிழமை அறிவித்தது. இந்தியாவில் முதல்முறையாக கேரளத்தில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில், குரங்கு அம்மை தீநுண்மி தொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள தேசிய தீநுண்மி ஆய்வு நிறுவன மூத்த விஞ்ஞானியும் மருத்துவருமான பிரக்யா யாதவ் கூறியுள்ளதாவது:

மத்திய ஆப்பிரிக்கா (காங்கோ பேசின்), மேற்கு ஆப்பிரிக்கா மரபணு தொகுப்புகளை கொண்டது குரங்கு அம்மை தீநுண்மி. தற்போது உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பரவி கவலைக்குரிய சூழலை ஏற்படுத்தியுள்ள குரங்கு அம்மை தீநுண்மி மேற்கு ஆப்பிரிக்க வகையாகும். இது காங்கோ பேசின் வகையைவிட குறைந்த பாதிப்பு கொண்டது. தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள குரங்கு அம்மை தீநுண்மி மேற்கு ஆப்பிரிக்க வகையைச் சோ்ந்தது என்று தெரிவித்துள்ளாா்.

மிக நெருக்கமாக இருந்தால்தான் பரவும்: தொற்று நோய் நிபுணா் சந்திரகாந்த் லஹரியா கூறுகையில், ‘‘குரங்கு அம்மை புதிய வகை தீநுண்மி அல்ல. அது உலகில் 50 ஆண்டுகளாக உள்ளது. இந்த தீநுண்மி பெரும்பாலும் மிதமான அளவில்தான் உடல்நலக்குறைவை ஏற்படுத்தும்.

குறைந்த அளவில்தான் பரவும். இந்த தீநுண்மி கரோனாவைப் போன்றது அல்ல. கரோனா தீநுண்மி சுவாசம் மூலம் பரவும். அந்த தீநுண்மியால் பாதிக்கப்பட்டாலும் பலருக்கு அறிகுறிகள் தென்படாது. ஆனால் குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்படுவோருடன் மிக நெருக்கமாக இருந்தால்தான் அது மற்றவருக்குப் பரவும்.

தடுப்பூசி உத்தி: தற்போது குரங்கு அம்மைக்கான தடுப்பூசி பரிந்துரைக்கப்படவில்லை. இருப்பினும் தடுப்பூசி உத்தியாக குரங்கு அம்மை நோயாளிகளுடன் இருந்தவா்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பெரியம்மை தடுப்பூசிகளை செலுத்தி தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்துதல், அந்த தீநுண்மியால் பாதிக்கப்படுவோரையும், அவா்களுடன் இருந்தவா்களையும் தனிமைப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளால் குரங்கு அம்மையைத் திறம்பட கையாள முடியும் என்று தெரிவித்தாா்.

நோய் எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள் கவனமாக இருக்கவும்: தேசிய தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கரோனா பணிக்குழு தலைவா் என்.கே. அரோரா கூறுகையில், ‘‘குரங்கு அம்மை குறைந்த அளவில்தான் பரவும். அந்தத் தீநுண்மியால் பாதிக்கப்பட்டால் அரிதாகவே மரணம் ஏற்படும். எனவே அந்தத் தீநுண்மி குறித்து அச்சமடையத் தேவையில்லை. ஆனால் குறைவான நோய் எதிா்ப்பாற்றல் கொண்டவா்கள் கவனமாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.



Read in source website

 

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரில் ஒரு அணிக்கு எதிராக  தொடர்ந்து அதிகபட்ச வெற்றிகள் பெற்று பாகிஸ்தான் அணியின் சாதனையை முறியடித்து சாதனையைப் படைத்துள்ளது. 

ஞாயிற்றுகிழமை நடைபெற்ற போட்டியில் கடைசி 10 ஓவர்களில் 100 ரன்களை அடித்து இந்திய அணி 312 ரன்களை சேஸிங் செய்து த்ரில் வெற்றி பெற்றது. 35 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அக்‌ஷர் பட்டேல் அபாரமாக ஆடி ஆட்டநாயகன் விருதினை பெற்றார். 

இதன் மூலம் இந்திய அணி மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக தொடர்ந்து 12 முறை வெற்றி பெற்று புதிய சாதனைப் படைத்துள்ளது. இதற்குமுன் பாகிஸ்தான் அணி 11 முறை தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் தொடரில் ஒரு அணிக்கு எதிராக அதிகபட்ச தொடர் வெற்றிகள் கொண்ட அணிகளின் பட்டியல் விவரம்: 

  • 12 வெற்றிகள் - இந்தியா - மே.இ.தீவுகள் (2007-2022) 
  • 11 வெற்றிகள் - பாகிஸ்தான் - ஜிம்பாப்வே (1996-2021)
  • 10 வெற்றிகள் - பாகிஸ்தான் - மே.இ.தீவுகள் (1999-20222) 
  • 9 வெற்றிகள்  - தென்னாப்பிரிக்கா- ஜிம்பாப்வே (1995-2008) 
  • 9 வெற்றிகள்  - இந்தியா -இலங்கை  (2007-2021)


Read in source website

சென்னை: அம்மா உணவகத்தை அறக்கட்டகளை அமைத்து, அதன் மூலம் நிர்வகிக்கும் பணியைத் தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால், இதற்கு விளக்கம் கோரி சென்னை மாநகராட்சி சார்பில் பதில் எழுதப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 407 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இதைத் தவிர்த்து தமிழகத்தில் உள்ள நகர்புறங்களிலும் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

சென்னையில் செயல்படும் அம்மா உணவகங்கள் மூலம் கடந்த 2020-ம் ஆண்டு வரை மாநகராட்சிக்கு ரூ.468 கோடி இழப்பு ஏற்பட்டது. மேலும், விற்பனை வருவாயும் குறைந்து கொண்டே வந்தது.

இந்நிலையில், நஷ்டத்தில் இயங்கிவரும் அம்மா உணவகங்களை லாபத்தில் இயக்குவது தொடர்பாகவும், அதன் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாகவும் ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு அறிக்கையின்படி சென்னை மாநகராட்சியில் செயல்படும் அம்மா உணவங்களை மேம்படுத்த நிதி திரட்ட ஓர் அறக்கட்டளை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு பல்வேறு அமைப்புகளின் நிதியை பெற்று, இந்த நிதி மூலம் அம்மா உணவகத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நிறுவனங்கள் சட்டப் பிரிவு 8-ன் படி அம்மா உணவக அறக்கட்டளை (Amma Unavagam Foundation) அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஆட்சி மாறியவுடன் அம்மா உணவகங்கள் மூடப்படும் என்று தகவல் பரவியது. ஆனால், இதை மறுத்த தமிழக அரசு, தொடர்ந்து அம்மா உணவகம் செயல்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில், தற்போது அம்மா உணவக அறக்கட்டளையை (Amma Unavagam Foundation) தொடங்கி, இதன் மூலம் அம்மா உணவகத்தை நடத்த வேண்டும் என்று மாநகராட்சியிடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் சில கேள்விகள், தமிழக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

அரசு கூறியது என்ன?

  • அம்மா உணவக அறக்கட்டளையை (Amma Unavagam Foundation) தொடங்க வேண்டும்
  • அறக்கட்டளை மூலம் சிஎஸ்ஆர் நிதியை பெற்று அதன் மூலம் அம்மா உணவத்தை நடத்த வேண்டும்.
  • எவ்வளவு நிதி கிடைக்கிறது என்பதை பொறுத்து தமிழக அரசு நிதி உதவி அளிக்கும்.

மாநகராட்சி கோரிய விளக்கம் என்ன?

  • அறக்கட்டளை தொடங்கிய பிறகு போதிய நிதி கிடைக்காவிட்டால் என்ன செய்வது?
  • போதியை நிதி கிடைக்காவிடில் தமிழக அரசு நிதி உதவி அளிக்குமா?
  • அம்மா உணவகத்தை நடத்த தமிழக அரசு தொடர்ந்து நிதி உதவி அளிக்குமா?

இவ்வாறு மாநகராட்சி மற்றும் தமிழக அரசு இடையில் அம்மா உணவகம் தொடர்பாக தொடர்ந்து கடிதப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதில், விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Read in source website

சென்னை: இந்தியாவிலே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 1,945 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 15,409 பேர் தற்போது கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவற்றில் 80 முதல் 90 சதவீத பேர் வீடுகளில்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகக் குறைவான நபர்கள்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வகைகளான பி.ஏ. 4 மற்றும் பி.ஏ. 5 காரணமாக அதிக அளவு கரோனா பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஜூன் மாத தொடகத்தில் பி.ஏ. 4 மற்றும் பி.ஏ. 5 வகை தொற்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவிலே தமிழகத்தில்தான் அதிக அளவு உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜூலை 17-ம் தேதி வரை 68 பேருக்கு பி.ஏ. 4 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 18 பேருக்கும், தெலங்கானாவில் 20 பேருக்கும் இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜூலை 17-ம் தேதி வரை 331 பி.ஏ. 5 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 150 பி.ஏ. 5 வகை தொற்றுகள் தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்குக்கும், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் தமிழ்நாடு அரசால் மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 25) சென்னை, நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர்ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், துணை மேயர் மு. மகேஷ் குமார், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அணில் மேஷ்ராம், ஆதிதிராவிடர் நல ஆணையர் சோ. மதுமதி, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் க. நந்தகுமார், சென்னை மாவட்ட ஆட்சியர் சு. அமிர்த ஜோதி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Read in source website

பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் ஜோசப் ராஜ் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கொங்கராயகுறிச்சி சட்டநாதர் கோயில் மற்றும் வலம்புரி விநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை மாணவர் விக்னேஷ் என்பவருடன் இணைந்து ஆய்வு செய்துள்ளார். கோயிலின் நுழைவாயில் நிலைப் பகுதியில் காணப்படும் 2 கல்வெட்டுகளை ஆய்வு செய்துள்ளனர்.

இது குறித்து உதவி பேராசிரியர் ஜோசப் ராஜ் கூறியதாவது: கொங்கராயக்குறிச்சி விநாயகர் கோயிலில் இரண்டு வட்டெழுத்து கல்வெட்டுகள் உள்ளன. இதில் ஒன்று 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறன் சடையன் என்ற பாண்டிய மன்னன் காலத்து கல்வெட்டு என்பது தெரியவந்துள்ளது. மற்றொரு கல்வெட்டு 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து கல்வெட்டு. இதில் ராஜராஜ சோழனின் காந்தளூர் சாலை போர் வெற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் பாண்டியநாடு சோழர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. 11-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் ஆட்சியில் சிற்றரசர்கள் பலர் இருந்துள்ளனர். கொங்குராயன் என்ற சிற்றரசன் ஸ்ரீவைகுண்டம் பகுதியை கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, அவரது காலத்தில் இந்த கல்வெட்டு எழுதப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. வலம்புரி விநாயகர் கோயிலின் தரைதளத்துக்கும் மேலாக ஆற்று மணல் சூழ்ந்து காணப்படுகிறது.

கருவறையைச் சுற்றியுள்ள ஆற்று மணலை அகற்றினால், அதில் பல்வேறு கல்வெட்டுகள் இருக்க வாய்ப்புகள் உள்ளன என்றார் அவர்.



Read in source website

புதுடெல்லி: புதிய குடியரசு தலைவராக இன்று பதவி ஏற்கிறார் திரவுபதி முர்மு. இவரை பற்றி ஒடிசாவில் இருந்து பல வியக்க வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இன்று பதவி ஏற்கும் திரவுபதி முர்மு, இந்தியாவின் 2-வது பெண் குடியரசு தலைவர் ஆவார். முதல் முறையாகப் பழங்குடி சமூகத்தில் இருந்து தேர்வாகி உள்ள திரவுபதி முர்முவின் வீட்டில் அவரது செல்போனுக்கு சிக்னல் கிடைக்காத நிலை.பாஜக தலைமையில் ஆளும் கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு கடந்த ஜூன் 21-ம் தேதி இரவுதான் குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு சற்று முன்பாக இரவு 8.30 மணிக்கு மயூர்பஞ்ச் மாவட்ட பாஜக செயலாளர் பிகாஷ் மஹ்தோவுக்கு பிரதமர் மோடி அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

இதில் பேசிய உயரதிகாரி, ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்முவிடம் பிரதமர் பேச விரும்புகிறார் எனக் கூறியுள்ளார். அவரிடம் உடனடியாக பேச வைப்பதாக பதிலளித்த பிகாஷ், செல்போனை எடுத்துக் கொண்டுஎதிர் வீட்டில் இருந்த திரவுபதியிடம் ஓடியுள்ளார். அப்போது இரவு உறங்க செல்வதற்கு தயாராக இருந்தார் திரவுபதி. அதற்குள் மீண்டும் அலறிய பிகாஷின் செல்போனில் பிரதமர் அலுவலக அழைப்பு. உடனடியாக திரவுபதியிடம் பிகாஷ் செல்போனை கொடுத்துள்ளார்.

அவரும் செல்போனில் வணக்கம் கூறிய பிறகு, மறுமுனையில் சொல்வதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த திரவுபதியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்துள்ளது. இதை குழப்பத்துடன் பிகாஷுடன் திரவுபதி மகள் இத்தீயும் அருகில் இருந்து பார்த்துள்ளனர். பிரதமருடன் பேசி முடித்த பிறகு, பிரதமர் சொன்ன தகவலை அவர்களிடம் கூறும்போதே ஆனந்தத்தில் அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அதன்பின் முர்முவை இருவரும் ஆசுவாசப்படுத்தி உள்ளனர். திரவுபதியிடம் செல்போன் இருந்தாலும் சரியாக சிக்னல் கிடைக்காததால், பாஜக மாவட்ட செயலாளர் பிகாஷின் செல்போனில் அழைத்துள்ளனர்.

ஜார்க்கண்டின் ஆளுநராக திரவுபதி இருந்த போது கடைசி 6 மாதம் அவரதுஉதவியாளராக பிகாஷ் பணியாற்றியுள்ளார். மேலும், பிகாஷின் தந்தை ரவீந்திரநாத் மஹ்தோவால் திரவுபதி அரசியலில் கால் பதித்துள்ளார். கடந்த 1977-ல் திரவுபதியின் கணவர் ஷியாம் சரண் முர்முவிடம், அப்போது நடைபெற்ற நகரசபை தேர்தலில் திரவுபதி முர்முவை போட்டியிட வைக்கும்படி கூறியுள்ளார். அதற்கு, தமது குடும்பம் மிகவும் எளிமையானது, அரசியல் தங்களுக்கு ஒத்து வருவதும் தேர்தலில் பெண்கள் போட்டியிடுவதும் ஏற்பில்லை என்று ஷியாம் கூறியுள்ளார்.

எனினும், ரவீந்திரநாத்துடன் வந்த பாஜக உள்ளூர் தலைவர்கள் சிலரும் வற்புறுத்தி திரவுபதியை அரசியல் களம் இறக்கியுள்ளனர். அப்போட்டியில் வெற்றியும் பெற திரவுபதிக்கு நாட்டின் உயரிய பதவி பெறுவதற்கானத் தகவல், ரவீந்திரநாத்தின் மகன் பிகாஷ் மூலம் தற்போது கிடைத்துள்ளது.

கடந்த 2010-ல் மூத்த மகன் லஷ்மண், 2013-ல் இளைய மகன் ஷிபு மற்றும் 2014-ல் கணவர் ஷியாம் என மூவரையும் இழந்துள்ளார் திரவுபதி முர்மு. இதனால் தாம் ஒரு நல்ல தாயாக இருக்க முடியவில்லை என வருந்தி உள்ளார். மேலும் அரசியலில் இருந்து விலகிக் கொள்ளவும் முடிவு செய்துள்ளார் திரவுபதி. தம் நட்பு வட்டாரத்தினரின் வேண்டுதலால் முடிவை மாற்றி அரசியலில் தொடர்ந்துள்ளார்.

எனினும், கவலையில் இருந்து மீள, ஆன்மீக ஈடுபாட்டில் தீவிரம் காட்டியுள்ளார் சிவபக்தையான திரவுபதி. விடியலில் 3.30 மணிக்கு எழும் வழக்கம் கொண்ட திரவுபதி, யோகா பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர். பிரம்ம குமாரி ஆன்மீக வழிபாடுகளிலும் இவர் கலந்து கொள்பவர் எனத் தெரிகிறது. 2016-ல் ஜார்க்கண்டின் ஆளுநரான பின் சொந்த கிராமமான பஹத்பூரில் எஸ்.எல்.எஸ் என்ற பள்ளிக்கு தனது 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்துள்ளார் திரவுபதி. இப்பள்ளியை நிர்வகிக்கும் கல்வி அறக்கட்டளைக்கு திரவுபதியின் ஒரே மகள் இத்தீ தலைவராக உள்ளார். இப்பள்ளியில், திரவுபதியின் மறைந்த 2 குழந்தைகள் மற்றும் கணவரின் மார்பளவு உருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

2016-ல் ஜார்க்கண்டின் ஆளுநரான பின் சொந்த கிராமமான பஹத்பூரில் எஸ்.எல்.எஸ் என்ற பள்ளிக்கு தனது 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்துள்ளார் திரவுபதி.



Read in source website

நய்பிடாவ்: மியான்மரில் சமூக செயற்பாட்டாளர், முன்னாள் எம்.பி உள்ளிட்ட நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவத்தினர் ஆட்சியில் உள்ளனர். இந்த நிலையில், மியான்மரில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை, ராணுவத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தூக்குத் தண்டனை நிறைவேற்றியவர்களில் சமூக செயற்பாட்டாளர் கோ ஜிம்மி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபியோ ஜெயா தாவ் ஆகிய இருவரும் அடங்குவர். இந்த மரணத் தண்டனையை ஆங் சான் சூச்சியின் ஜனநாயகக் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட நால்வரின் குடும்பத்தினரும் தகவல் அறிந்து சிறைக்கு வெளியே கூடியிருந்ததால் அங்கு பதற்றம் நிலவியது.

தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட ஃபியோ ஜெயா தாவ் தாயார் பேசும்போது, “நான் எனது மகனை வெள்ளிக்கிழமையன்று காணொலியில் பார்த்து பேசினேன். என் மகன் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தான். அவன் என்னிடம் படிப்பதற்கு கண்ணாடியையும், செலவுக்கு பணமும் கேட்டிருந்தான். அதனை எடுத்து கொண்டுதான் நான் சிறைக்கு வந்தேன்” என்றார்.

குடும்பத்தினருக்கு தகவல் ஏதும் அளிக்காமல் தூக்குத் தண்டனையை நிறைவேற்றிய மியான்மர் ராணுவத்தை அந்நாட்டு மனித உரிமை அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன.



Read in source website

குரங்கு அம்மை நோயை சர்வதேச மருத்துவ நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில். இதற்கு எதிரான முதல் தடுப்பூசியை டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு இம்வாநெக்ஸ் (Imnavex) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மருந்துகள் பிரிவான பவேரியன் நார்டிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த இம்வாநெக்ஸ் தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்திற்கும் ஐஸ்லாந்து, லீசஸ்டைன் மற்றும் நார்வே நாடுகளிலும் செலுத்தத்தக்கது.

இதுவரை உலகம் முழுவதும் குரங்கு அம்மை 72 நாடுகளில் பரவியுள்ளது. 16,200 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இம்வாநெக்ஸ் தடுப்பூசி ஏற்கெனவே பெரியம்மைக்கு எதிராக பயன்பட்டது. அதை தடுப்பூசியை தற்போது குரங்கு அமைக்கு எதிராக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காரணம், குரங்கு அம்மை வைரஸுக்கும், பெரியம்மை வைரஸுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால் நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.இருப்பினும், ஐரோப்பிய யூனியன் சட்டத்தின்படி ஐரோப்பிய மருத்துவ முகமை என்பது இந்தத் தடுப்பூசியை பல்வேறு ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. ஐரோப்பிய ஆணையம் மட்டுமே அதை செய்ய முடியும்.

குரங்கு அம்மை அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, முதுகு வலி ஆகியன குரங்கு அம்மையின் அற்குறிகள். முதல் ஐந்து நாட்களுக்கு இது இருக்கும். பின்னர் முகத்தில் தடிப்புகள், உள்ளங்கை, உள்ளங்காலில் தடிப்புகள், வெடிப்புகள் உண்டாகும்.

கடந்த 1970-ம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் முதல்முறையாக குரங்கு அம்மை கண்டறியப்பட்டது.

மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் நீண்ட காலமாகவே அவ்வப்போது குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் அண்மைக்காலமாக இந்த பாதிப்பு உலகின் மற்ற நாடுகளுக்கும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.

கடந்த 14-ம் தேதி இந்தியாவின் கேரளாவில் முதல் குரங்கு அம்மை நோயாளி கண்டறியப்பட்டார். அந்த மாநிலத்தில் 3 பேருக்கு நோய் பரவியுள்ளது. ஆந்திர மாநிலத்திலும் குரங்கு அம்மை பரவல் கண்டறியப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: பணம் எடுக்கும்போது ஒன் டைம் பாஸ்வேர்ட் எனப்படும் ஓடிபி எண்ணை பதிவு செய்வதை கட்டாயமாக்கியுள்ளது எஸ்பிஐ. சைபர் குற்றங்களைத் தடுக்க இந்த நடைமுறையை நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ கொண்டு வந்துள்ளது.

அதன்படி ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுக்கும்போது ஓடிபி பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஒன் டைம் பாஸ்வேர்ட் ஒரே ஒரு பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்தக் கூடியாது. அடுத்ததாக மீண்டும் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுக்க வேண்டும் என்றால் அதே போல் ஓடிபியை பதிவு செய்த மொபைலில் பெற்று திரையில் பதிவிட்டே பணம் எடுக்க இயலும்.
இந்த நடைமுறையை விரைவில் பல்வேறு வங்கிகளும் பின்பற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் மர்ம நபர்கள், ஏமாற்று பேர்வழிகள் வங்கிக் கணக்குகளில் இருந்து பண மோசடி செய்வது தடுக்கப்படும் என்று எஸ்பிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஓடிபி பயன்படுத்தி பணம் எடுப்பது எப்படி?
* ஓடிபி பயன்படுத்தி பணம் எடுக்க நீங்கள் உங்கள் டெபிட் கார்டையும், மொபைல் ஃபோனையும் பக்கத்திலேயே வைத்திருப்பது அவசியம்.
* நீங்கள் உங்கள் டெபிட் கார்டை ஏடிஎம் மெஷினில் செலுத்திவிட்டு ஏடிஎம் பின் நம்பரை பதிவிட வேண்டும். கூடவே வேண்டிய தொகையையும் குறிப்பிட வேண்டும். பின்னர் அந்தத் தொகை ரூ.10,000க்கும் மேல் இருந்தால் ஓடிபி எண் கேட்கப்படும்.
* வங்கியில் நீங்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு ஓடிபி வரும்.
* உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபி எண்ணை ஏடிஎம் இயந்திர திரையில் பதிவிடவும்
* உங்கள் பரிவர்த்தனை நிறைவு பெற்று பணம் கைக்கு வரும்.



Read in source website

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 10 மாதங்களில் 70 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது. அதற்கு முன், இந்தியா மிகவும் வழக்கத்திற்கு மாறான முறையில் இவற்றைக் குவித்திருந்தது, இப்போது அது ரூபாயைப் பாதுகாக்க பயன்படுத்துகிறது.

Harish Damodaran

Explained: Making use of forex reserves: கடந்த 2021 செப்டம்பர் 3 அன்று 642.45 பில்லியன் டாலர் என்ற உச்சத்தில் இருந்து, ஜூலை 15 நிலவரப்படி இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 572.71 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இது வெறும் 10 மாதங்களில் கிட்டத்தட்ட 70 பில்லியன் டாலர் வீழ்ச்சியாகும்.

கையிருப்பு இவ்வளவு வேகமாக எப்படிக் குறைந்தது? இதற்கு பதிலளிக்க, முதலில் அவை எவ்வாறு குவிந்தன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானம் இறக்குமதிக்கு எதிரான செலவினங்களை விட அதிகமாக இருக்கும்போது ஒரு நாடு பொதுவாக அந்நிய செலாவணி இருப்புக்களைக் குவிக்கிறது. நடப்புக் கணக்கு உபரிகள் கையிருப்புகளை உருவாக்குகிறது, ஏனெனில் ரிசர்வ் வங்கி நாட்டிற்குள் வரும் அனைத்து அதிகப்படியான வெளிநாட்டு நாணயங்களையும் நீக்குகிறது.

இதனை இன்னும் மிகத் தெளிவாக கூற வேண்டுமானால், குடும்பங்கள் அல்லது நிறுவனங்களின் செலவுகளை விட அதிக வருமானம் அல்லது தக்க லாபம் அவர்களின் சேமிப்பு அல்லது இருப்புகளில் சேர்க்கப்படும். இந்த சேமிப்புகள்/கையிருப்புகள் குடும்பங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்தக் கிடைப்பது போல, ஒரு நாட்டின் நடப்புக் கணக்கு உபரிகள் மற்ற நாடுகளில் முதலீடு செய்யப்படலாம். செயல்பாட்டில், உபரிகள் ஆனது சரக்குகள் மற்றும் சேவைகளுடன் கூடுதலாக, ‘மூலதனத்தின்’ நிகர ஏற்றுமதியாளராக மாறுகிறது.

தனித்த நிலை

2021 ஆம் ஆண்டின் இறுதியில் அதிக அந்நியச் செலாவணி கையிருப்பை வைத்திருக்கும் முதல் 12 நாடுகளை அட்டவணை 1 காட்டுகிறது. கிட்டத்தட்ட இந்த அனைத்து நாடுகளுமே பெரிய மற்றும் நிலையான நடப்புக் கணக்கு உபரிகளை வேறு விஷயங்களுக்கு பயன்படுத்துகின்றன. சீனாவை எடுத்துக் கொள்ளுங்கள், அதன் 11 வருட காலப்பகுதியில் $2.1 டிரில்லியன் மொத்த உபரிகள் $3.4 டிரில்லியன் அதிகாரப்பூர்வ இருப்பு பெட்டியை உருவாக்க உதவியது. அல்லது ஜெர்மனி, 2011-21ல் மொத்தமாக சுமார் $3.1 டிரில்லியன் அளவுக்கு நடப்புக் கணக்கு உபரிகள் இருப்புத் தொகையாகக் குவிக்கப்படுவதற்குப் பதிலாக மூலதனமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கணிசமான அந்நிய செலாவணி கையிருப்புகளை குவித்துள்ள நாடுகளில் இந்தியா அமெரிக்கா மற்றும் பிரேசிலுடன் சேர்ந்து) ஒரு தனித்த நிலையில் உள்ளது. 11 ஆண்டுகளில் ஒரே ஒரு வருடத்தில் அதாவது 2020-ல் மட்டுமே அதன் நடப்புக் கணக்கில் அதன் பேமெண்ட் பேலன்ஸில் உபரி உள்ளது. 2021 இல் அதன் $638.5 பில்லியன் கையிருப்பு ஆனது, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 11 ஆண்டுகளில் $400 பில்லியனுக்கும் அதிகமாக இருந்த போதிலும் இருந்தது. மூலதனத்தை இறக்குமதி செய்வதன் மூலம் இருப்புக்கள் கட்டப்பட்டுள்ளன; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மற்றவர்களிடமிருந்து இருப்புகள் காட்டப்பட்டுள்ளன, இந்தியாவின் சொந்த நடப்புக் கணக்கு உபரிகள் அல்ல.

இந்தியாவால் ஈர்க்கப்பட்ட மூலதனப் பாய்ச்சல்கள் ஏற்றுமதியை விட அதன் அதிகப்படியான இறக்குமதிகளுக்கு நிதியளித்தது மட்டுமல்லாமல், அதிகாரப்பூர்வ இருப்புக்களை அதிகரிப்பதற்கும் பங்களித்தது. அமெரிக்காவிற்கும் பிரேசிலுக்கும் ஒரே மாதிரியான கதைகள் உள்ளன, இருப்பினும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை இந்தியாவை விட பெரியது மற்றும் அவற்றின் இருப்புகளுடன் தொடர்புடையது. மேலும், பெரும்பாலான சர்வதேச பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படும் இருப்பு நாணயத்தின் உரிமையாளராக அமெரிக்கா இருப்பதால், ​​அந்நிய செலாவணி இருப்புக்கள் மற்றும் நடப்புக் கணக்கு நிலுவைகள் ஆகியவை அமெரிக்காவிற்கு முக்கியமில்லை.

திரட்டலின் ஆதாரங்கள்

மார்ச் 31, 1990 மற்றும் மார்ச் 31, 2022 க்கு இடையில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $3.96 பில்லியனில் இருந்து $607.31 பில்லியனாக உயர்ந்துள்ளது. நான்கு, எட்டு ஆண்டு காலகட்டங்களில் இந்த உயர்வுக்கான ஆதாரங்களை அட்டவணை 2 வழங்குகிறது. 603.35 பில்லியன் டாலர் திரட்டலில் 50% க்கும் அதிகமானவை நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் நடந்துள்ளன.

எவ்வாறாயினும், நான்கு காலகட்டங்களில் எதிலும், கையிருப்பு திரட்சியானது, இறக்குமதியை விஞ்சி பொருட்களின் ஏற்றுமதியின் விளைவாக இருந்ததில்லை. மாறாக, 2014-15 முதல் 2021-22 வரையிலான எட்டு ஆண்டுகளில் ஒருங்கிணைந்த வர்த்தகப் பற்றாக்குறை $1.2 டிரில்லியன் டாலராக இருந்தது. இந்த பற்றாக்குறையானது “மறைமுக” பேமெண்ட் பேலன்ஸ் கணக்கில் $968 பில்லியன் நிகர உபரியாக இருந்தது. மறைமுக கணக்கு என்பது முக்கியமாக மென்பொருள் சேவைகளின் ஏற்றுமதி, வெளிநாட்டு இந்தியர்கள் பணம் அனுப்புதல் மற்றும் சுற்றுலா ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ரசீதுகளை உள்ளடக்கியது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த ரசீதுகள் கடன்கள், ஈவுத்தொகைகள், ராயல்டிகள், உரிமக் கட்டணம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் வகைப்படுத்தப்பட்ட வணிகம் மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவற்றின் மீதான வட்டிக் கணக்கில் செலுத்தும் தொகையை விட எப்போதும் அதிகமாக உள்ளன.

மறைமுக உபரிகள், நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை நிர்வகிக்கக்கூடிய அளவிற்கு இருந்துள்ளன, சில காலகட்டங்கள் (1998-99 முதல் 2005-06 வரை) மற்றும் தனிப்பட்ட ஆண்டுகள் (2001-02, 2002-03, 2003-04 மற்றும் 2020-21) கூட உபரிகளை பதிவு செய்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் முறையே $25.2 பில்லியன் மற்றும் $68.4 பில்லியனாக உள்ள மூலதன வரவுகளுடன் இணைந்து நிர்வகிக்கக்கூடிய நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1990-91 முதல் 2021-22 வரையிலான 32 ஆண்டுகளில் ஐந்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் அதிகரிக்க வழிவகுத்தது. இந்த ஐந்து வருடங்கள் 1995-96, 2008-09, 2011-12, 2012-13 மற்றும் 2018-19.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் மூலதனப் பாய்ச்சலைத் தவிர, இருப்புப் பெருக்கம் அல்லது குறைப்புக்கான மற்றொரு ஆதாரம் உள்ளது: மதிப்பீட்டு விளைவு. அந்நியச் செலாவணி கையிருப்பு டாலர்கள் மற்றும் டாலர் அல்லாத நாணயங்கள் மற்றும் தங்கம் போன்ற வடிவங்களில் வைக்கப்படுகிறது, அதன் மதிப்பு மாற்று விகிதங்கள் மற்றும் தங்கத்தின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப்படுகிறது. அமெரிக்க டாலரின் தேய்மானம் அல்லது அதிக தங்கத்தின் விலைகள், தற்போதுள்ள இருப்புகளின் மதிப்பீட்டின் ஆதாயங்களை ஏற்படுத்துகிறது. வலுவான டாலர் அல்லது தங்கத்தின் விலை வீழ்ச்சி, அதேபோல, டாலர் அல்லாத இருப்புப் பகுதியின் மதிப்பைக் குறைக்கிறது.

இருப்புக்கள் எங்கு செல்கின்றன

ஏப்ரல்-ஜூன் 2022 இல் இந்தியாவின் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை $70.8 பில்லியனாக இருந்தது. இது முழு நிதியாண்டில் $250 பில்லியனைத் தாண்டும். நிகர மறைமுக ரசீதுகள் 2021-22ல் $150.7 பில்லியனைத் தொட்டது, முந்தைய இரண்டு ஆண்டுகளில் $126.1 பில்லியன் மற்றும் $132.9 பில்லியன். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வரவிருக்கும் மந்தநிலையின் காரணமாக, மென்பொருள் ஏற்றுமதியில் தாக்கம் இருக்கக்கூடும், நிகர மறைமுக கணக்கு இந்த நிதியாண்டில் 140 பில்லியன் டாலருக்கு அருகில் இருக்கும்.

எப்படியிருந்தாலும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை $100-110 பில்லியனுக்கு மேல் இருக்கும், இது 2012-13 இல் $88.2 பில்லியன் மற்றும் 2011-12 இல் $78.2 பில்லியனாக இருந்த முந்தைய சாதனைகளை முறியடிக்கும். அப்படி இருக்கையில், இருப்பு வரவு அளவு மூலதன ஓட்டத்தின் செயல்பாடாக இருக்கும்.

2021-22 ஆம் ஆண்டில், ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில் நிகர மூலதனம் 87.5 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் கடந்த காலாண்டில் (ஜனவரி-மார்ச்) நிகர வெளியேற்றம் 1.7 பில்லியன் டாலர்கள். அமெரிக்க பெடரல் மற்றும் பிற முக்கிய மத்திய வங்கிகளின் பணவியல் கொள்கை இறுக்கத்தின் பின்னணியில் அதிகரித்து வரும் உலகளாவிய வட்டி விகிதங்கள் மற்றும் பத்திர விளைச்சலைக் கருத்தில் கொண்டு, மூலதன வரவுக்கான வாய்ப்புகளான வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள், தனியார் பங்கு நிறுவனங்கள் அல்லது ஸ்டார்ட்-அப் நிதிகள் நடப்பு நிதியாண்டிலும் பிரகாசமாக இருக்கும் என்று தோன்றவில்லை.

2021 செப்டம்பர் தொடக்கத்தில் இருந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் $69.7 பில்லியன் சரிந்ததில், இந்த நிதியாண்டில் மட்டும் $34.6 பில்லியன் குறைந்துள்ளது. மாற்று விகிதத்தின் “ஒழுங்கான பரிணாமத்தை” உறுதிசெய்து, “கொந்தளிப்பான மற்றும் சமதளமான இயக்கங்களுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை”, என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸை மேற்கோள் காட்டுவது போல், இந்திய ரிசர்வ் வங்கி, ரூபாயைப் பாதுகாக்க கையிருப்புகளைப் பயன்படுத்த விருப்பம் காட்டுவதால், கையிருப்பு மேலும் $550 பில்லியனுக்கும் கீழே குறைவதை தவிர்க்க முடியாது.

எல்லாவற்றிற்கும் மேலாக, அந்நிய செலாவணி இருப்புக்கள் ஆனது, நாணய ஏற்ற இறக்கம், வெளிப்புற அதிர்ச்சிகள் மற்றும் மூலதன ஓட்டங்களில் திடீர் நிறுத்தங்கள் ஆகியவற்றிற்கு எதிராக ஒரு இடையகமாக குவிந்தன. சக்திகாந்த தாஸ் சமீபத்தில் கூறியது போல், “மழை பெய்யும் போது பயன்படுத்த குடையை வாங்குங்கள்”.



Read in source website

இந்த ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி வரை, 72 நாடுகளில் ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட14,533 குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

34 வயதான டெல்லிவாசி ஒருவருக்கு ஞாயிற்றுக்கிழமை குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால் அவர் வெளிநாடு பயணம் செல்லாதவர் என்பதால், இது இந்தியாவில் மனிதனிலிருந்து மனிதனுக்கு பரவும் முதல் பாதிப்பை குறிக்கிறது.

உலக சுகாதார அமைப்பு (WHO), இந்த பரவலை சர்வதேச கவலையின் பொது சுகாதார அவசரநிலை (PHEIC) என அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இது வருகிறது, இது அதன் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையாகும்.

பொது சுகாதார அவசரநிலை (PHEIC) என அறிவிப்பதன் அர்த்தம் என்ன?

பொது சுகாதார அவசரநிலை என்பது சர்வதேச அளவில் நோய் பரவுவதன் மூலம் மற்ற மாநிலங்களுக்கு பொது சுகாதார அபாயத்தை உருவாக்குவது மற்றும் ஒருங்கிணைந்த சர்வதேச பதில் தேவைப்படும் ஒரு அசாதாரண நிகழ்வு” ஆகும்.

உலகளவில் அதிகரித்து வரும் பாதிப்புகளுக்கு மத்தியில், குரங்கு அம்மை பிரகடனம் வந்தது, இதுவரை கண்டறியப்படாத பகுதிகளில் இந்த வைரஸ் தொற்று பரவியது. இந்த ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி வரை, 72 நாடுகளில் ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட14,533 குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மே மாத தொடக்கத்தில் 47 நாடுகளில் 3,040 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

ஆனால் இதுவரை 5 இறப்புகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன- இந்த நோய் பரவுவதற்கு முன்னரே அறியப்பட்ட நாடுகளான நைஜீரியாவிலிருந்து மூன்று மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசில் இருந்து இரண்டு இறப்புகள் பதிவாகின.

குரங்கு அம்மை இதற்கு முன் எங்கு ஏற்பட்டது?

குரங்கு அம்மை 2019 இல் தோன்றிய கொரோனா போன்ற ஒரு புதிய நோய் அல்ல. 1970 ஆம் ஆண்டு காங்கோ குடியரசில் ஒன்பது மாத சிறுவனுக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பெரும்பாலான நோய்த்தொற்றுகள் ஆரம்பத்தில் காங்கோ படுகையில் உள்ள கிராமப்புற, மழைக்காடு பகுதிகளில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் தொடர்புகளால் ஏற்பட்டன. 2022 வெடிப்புக்கு முன்பு, மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் தான் அதிக பாதிப்புகள் பதிவாகின. ஆப்பிரிக்காவிற்கு வெளியே முதல் வெடிப்பு 2003 இல் நடந்தது, இதில் அமெரிக்காவில் 70 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் காணப்பட்டன.

நோய் அறிகுறிகள்?

குரங்கு அம்மை என்பது 2-4 வாரங்கள் நீடிக்கும் அறிகுறிகளுடன், தன்னைத்தானே கட்டுப்படுத்தும் வைரஸ் தொற்று ஆகும். இதன் இறப்பு விகிதம் 0 முதல் 11% வரை இருக்கும்.

காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, சோர்வு, வீங்கிய நிணநீர் கணுக்கள் மற்றும் 2-3 வாரங்களுக்கு நீடிக்கும் தடிப்புகள் ஆகியவை மிகவும் பொதுவான அறிகுறிகளாகும். இது பெரும்பாலும் லேசானது என்றாலும், குழந்தைகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு சிக்கல்கள் மற்றும் இறப்புகளுக்கு வழிவகுக்கும். சிக்கல்களில் நிமோனியா, இரண்டாம் நிலை தோல் நோய்த்தொற்றுகள், செப்சிஸ், மூளையழற்சி மற்றும் குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும் கார்னியாவில் தொற்று ஆகியவை அடங்கும்.

தடுப்பூசிகள் செயல்படுமா?

குரங்கு அம்மை வைரஸ், பெரியம்மை போன்ற ஆர்த்தோபாக்ஸ் வைரஸ்களின் (orthopoxviruses) குடும்பத்தைச் சேர்ந்தது, இது இப்போது அழிக்கப்பட்டுள்ளது. ஆர்த்தோபாக்ஸ் வைரஸ்கள் குறுக்கு-எதிர்வினைக் (cross-reactive) கொண்டவை, அதாவது தற்போதுள்ள பெரியம்மை தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குரங்கு அம்மைக்கு பயன்படுத்தப்படலாம்.

பெரும்பாலான குரங்கு அம்மை காய்ச்சலுக்கு, அறிகுறி சிகிச்சை அளிக்கப்பட்டாலும், பெரியம்மைக்காக உருவாக்கப்பட்ட டெகோவிரிமாட் (tecovirimat) எனப்படும் வைரஸ் தடுப்பு மருந்து பயன்படுத்தப்படலாம். 2,800 க்கும் மேற்பட்ட பாதிப்புகளைப் பதிவுசெய்துள்ள அமெரிக்கா, பெரியம்மைக்கான இரண்டு தடுப்பூசிகளைப் பயன்படுத்துகிறது. இரண்டு டோஸ்கள் கொண்ட ஜின்னியோஸ் (Jynneos) பெரியவர்களுக்குப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது, அதே சமயம் ACAM2000- வேறுபட்ட ஆர்த்தோபாக்ஸ் வைரஸின் நேரடியான, பலவீனமான வடிவத்தைப் பயன்படுத்துகிறது, இது ஆய்வகப் பணியாளர்கள் போன்ற பெரியம்மை நோய்க்கான அதிக ஆபத்துள்ள நபர்களைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

“பெரியம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசி, குரங்கு அம்மை தடுப்பதில் சுமார் 85% பயனுள்ளதாக இருக்கும் என்று பல கண்காணிப்பு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. எனவே, முன் பெரியம்மை தடுப்பூசி லேசான நோயை விளைவிக்கலாம்,” என WHO தெரிவித்துள்ளது.

பெரியம்மைக்கு எதிரான வெகுஜன தடுப்பூசி பிரச்சாரம் 1980 இல் நிறுத்தப்பட்டது. “40 வயதிற்குட்பட்டவர்களில் பெரும்பாலோர் பிறக்கும்போதே பெரியம்மை தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும், இதனால் தொற்றுநோய்க்கான குறைந்த ஆபத்தில் இருக்கலாம். அந்த வயதிற்குக் கீழே உள்ளவர்களில் ஏற்படும் பெரும்பாலான நிகழ்வுகள் இந்த கருத்தை ஆதரிக்கின்றன” என்று வைராலஜி பேராசிரியர் மருத்துவர் ஏக்தா குப்தா கூறினார்.

இந்தியாவில் பதிவாகியுள்ள நான்கு பாதிப்புகளும் 30 வயது முதல் நடுவயது வரை உள்ளவர்களிடம் உள்ளன.

இப்போது ஏன் ஒரு எழுச்சி இருக்கிறது?

பாதிக்கப்பட்ட விலங்குகளில் இரத்தம், உடல் திரவம் அல்லது காயங்களுடன் நேரடி தொடர்பு மூலம், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு, நோய்த்தொற்று பரவுகிறது. பெரிய சுவாச சுரப்பு அல்லது பாதிக்கப்பட்ட நபரின் புண்கள் அல்லது அசுத்தமான பொருட்களின் தொடர்பு மூலம் மனிதனுக்கு மனிதனுக்கு பரவுகிறது.

இருப்பினும், இன்ஃப்ளூயன்ஸா அல்லது கோவிட்-19 போலல்லாமல், சுவாசத் துளிகள் மூலம் குரங்கு அம்மை பரவுவதற்கு நீண்டநேரம் நேருக்கு நேர் தொடர்பு கொள்ள வேண்டும். இது பொதுவாக குடும்பங்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் விஷயத்தில் மட்டுமே நடக்கும்.

“இது கோவிட் -19 போல பரவக்கூடியது அல்ல, எனவே அது போன்ற ஒரு வெடிப்புக்கு வழிவகுக்க வாய்ப்பில்லை. இருப்பினும், சமீபத்திய பரவல் பெரியம்மை தடுப்பூசி மூலம், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு இணைக்கப்படலாம். தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்று எப்போதும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் விலங்குகளின் திரிபு எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை, ”என்று டாக்டர் குப்தா கூறினார்.

மற்ற நோய்த்தொற்றுகளுக்கு மக்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய வகையில், கோவிட் தொற்றுநோய் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதித்திருக்குமா என்பதை ஆராய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

பல ஆண்டுகளாக, பரவும் சங்கிலி – நபருக்கு நபர் அடுத்தடுத்து ஏற்படும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை – ஆறிலிருந்து ஒன்பதாக அதிகரித்துள்ளது. டாக்டர் ரோசாமுண்ட் லூயிஸ், WHO இன் குரங்கு அம்மைக்கான முன்னணி நிபுணர், வைரஸில் மாற்றம் உள்ளதா அல்லது பெரியம்மை நோய்க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இது நடக்கிறதா என்பதைப் பார்க்க ஆராய்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

குரங்கு அம்மை பாலியல் ரீதியாக பரவுகிறதா?

தொற்று பாலியல் ரீதியாகப் பரவுகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று WHO கூறினாலும், தற்போதைய பாதிப்பில் கிட்டத்தட்ட அனைத்து நிகழ்வுகளும் ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்லது இருபாலின ஆண்களிடம் பதிவாகியுள்ளது.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட லண்டனைச் சேர்ந்த 528 நபர்களின் சமீபத்திய பகுப்பாய்வு, பாதிக்கப்பட்டவர்களில் 98% ஓரினச்சேர்க்கை அல்லது இருபாலின ஆண்களைக் காட்டுகிறது மற்றும் 95% பாதிப்புகளில் பாலியல் மூலம் பரவுகிறது என்று தெரிவிக்கிறது. விந்துவை ஆய்வு செய்த 32 பேரில் 29 பேரில், குரங்கு அம்மை டிஎன்ஏ கண்டறியப்பட்டது.

“இது பாலுறவு மூலம் பரவுகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் தோல் தொடர்பு அதிகரிப்பதாலும், பிறப்புறுப்புப் பகுதிகளில் நோய்த்தொற்று உள்ள பலர் புண்களைப் புகாரளிப்பதாலும் உடலுறவு கொள்ளும்போது தொற்று அதிகமாகப் பரவக்கூடும்” என்று டாக்டர் குப்தா கூறினார்.



Read in source website

குரங்கு அம்மை தொற்றை பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம்; சர்வதேச பயணம் மேற்கொள்ளதாக டெல்லியை சேர்ந்தவருக்கு தொற்று உறுதி; இந்தியாவிற்குள் பரவி வருவதற்கான எச்சரிக்கை மணி

Anonna Dutt

கேரளாவில் 3 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது இந்தியாவில் நோயின் நான்காவது பாதிப்பு ஆகும். அதைவிட முக்கியமாக, டெல்லியில் தொற்று ஏற்பட்ட நோயாளி சர்வதேச பயணம் எதுவும் மேற்கொள்ளாதவர். எனவே இது, சர்வதேச பயணத்தின் வரலாறு இல்லாத முதல் பாதிப்பு இதுவாகும்.

டெல்லியில் பாதிக்கப்பட்ட நோயாளி யார்?

மேற்கு டெல்லியைச் சேர்ந்த 31 வயது நபர் இரண்டு நாட்களுக்கு முன்பு லோக் நாயக் மருத்துவமனையில் இரண்டு வார காய்ச்சல் மற்றும் தோல் தடிப்பு (தோலில் கொப்பளங்கள்) அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். “அவருக்கு குரங்கு அம்மை இருப்பதாக நாங்கள் சந்தேகித்து, அவரை மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதித்தோம். தற்போது அவருக்கு பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அறிகுறிகளுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது?

அந்த நபர் இந்தியாவுக்கு வெளியே பயணம் செய்யவில்லை. ஆனால் அவர் நோய்வாய்ப்படுவதற்கு முன்பு இமாச்சல பிரதேசத்திற்கு பயணம் செய்தார். இந்தியாவில் முந்தைய மூன்று பாதிப்புகளும்  சர்வதேச பயண வரலாறு கொண்டவை. அவை கேரளாவில் கண்டறியப்பட்டவை. அவர்களுக்கு சர்வதேச பயணம் காரணமாக தொற்று இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் டெல்லியில் உள்ள பாதிப்பு இந்தியாவிற்குள் தொற்று பரவுவதைக் குறிக்கிறது.

குரங்கு அம்மை எவ்வாறு பரவுகிறது?

குரங்கு அம்மை என்பது ஒரு வைரஸ் தொற்று ஆகும், இது முக்கியமாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. அதேநேரம் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவல் என்பது, பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பு மூலம் மற்றொருவருக்கு பரவுகிறது. இருப்பினும், ஆண்களுடன் (MSM) உடலுறவு கொள்ளும் ஆண்களிடையே நோய் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இந்த நோய் பாலியல் ரீதியாக பரவுகிறதா என்பதையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பாலியல் மூலம் பரவும் சாத்தியக்கூறுகளைத் தவிர, மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவுவது என்பது முதன்மையாக பெரிய சுவாசத் துளிகள் மூலம் நிகழ்கிறது. குரங்கு அம்மை தொற்றானது, உடல் திரவங்கள் அல்லது காயங்கள் போன்ற நேரடித் தொடர்பு மூலமாகவும், புண்கள் துடைக்கப்பட்ட பொருட்களான அசுத்தமான ஆடை அல்லது துணி போன்றவற்றுடன் மறைமுகத் தொடர்பு மூலமாகவும் பரவுகிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

குரங்கு அம்மையின் அறிகுறிகள் என்ன?

குரங்கு அம்மை வைரஸ் ஒரு ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் ஆகும், இது பெரியம்மைக்கு காரணமான வேரியோலா வைரஸ் மற்றும் பெரியம்மை தடுப்பூசியில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி வைரஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய வைரஸ்களின் இனமாகும். குரங்கு அம்மை பெரியம்மை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது, இருப்பினும் அவை தீவிரம் குறைவாக இருக்கும்.

காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, குறைந்த ஆற்றல் மற்றும் வீங்கிய நிணநீர் கணுக்கள், இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும் அம்மை தோல் தடிப்புகள் ஆகியவை குரங்கு அம்மையின் பொதுவான அறிகுறிகளாகும். நோய்த்தொற்றின் சிக்கல்களில் நிமோனியா, இரண்டாம் நிலை தோல் நோய்த்தொற்றுகள், குழப்பம் மற்றும் கண் பிரச்சினைகள் ஆகியவை அடங்கும்.

நோயால் இறப்பு ஏற்படுமா?

குரங்கு அம்மை என்பது பெரும்பாலும் தன்னைத்தானே கட்டுப்படுத்தும் நோயாகும். அதாவது அது தானே தீர்ந்து விடும், மேலும் நோயாளியின் ஆரோக்கியத்தில் நீண்ட கால தீங்கு விளைவிக்கும் விளைவுகளை ஏற்படுத்தாது. ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்ட பெரும்பாலான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, கடுமையான நோயால் பாதிக்கப்பட மாட்டார்கள். இருப்பினும், இது குறிப்பாக குழந்தைகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு மரணத்திற்கு வழிவகுக்கும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரள மாநிலத்திற்கு வந்தவர்களில் கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பாதிப்பு எவ்வளவு மோசமானது?

உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மையை பொது சுகாதார அவசரநிலை என்று சனிக்கிழமை அறிவித்தது. உலகில் 75 நாடுகளில் இருந்து 16,000 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இருப்பினும், கடந்த தசாப்தங்களாக வயதான இந்தியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பெரியம்மை தடுப்பூசி, குரங்கு அம்மைக்கு எதிராக செயல்படுகிறது, மேலும் நீண்ட கால நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இந்தியாவில் பெரியம்மை நோய் 1977 இல் ஒழிக்கப்பட்டது.



Read in source website

தீவிர இடதுசாரியான தினேஷ் குணவர்த்தனே இலங்கையின் அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்களின் குடும்பத்தினர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் ஆவார்கள்.

கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் புதிய அதிபராக ராஜபக்ச குடும்பங்களின் நெருக்கமான நண்பரான ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார்.

இது நடந்த மறுதினமே இலங்கையின் பிரதமராக தினேஷ் குணவர்த்தனே பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ரணில் விக்கிரமசிங்கேவின் கல்லூரி நண்பரான தினேஷ் குணவர்த்தனே தீவிர இடதுசாரி சிந்தனையாளர் ஆவார். 73 வயதான தினேஷ் குணவர்த்தனேவின் குடும்பம் அரசியல் பின்னணி கொண்டது. இவரின் குடும்பத்தினர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள்.

யார் இந்த தினேஷ் குணவர்த்தனே?
இலங்கையின் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியில் அங்கம் வகிக்கும் ட்ரொட்ஸ்கிச பெரும்பான்மை தேசியவாத மகாஜன எக்சத் பெரமுனா கட்சியின் தலைவர் ஆவார்.

50 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்க்கையில் பயணிக்கும் தினேஷ் குணவர்த்தனே, இலங்கையின் வெளியுறவு அமைச்சர், கல்வி அமைச்சர் என பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

கடந்த ஏப்ரலில் ராஜபக்ச இவரை உள்துறை அமைச்சராக ஆக்கினார். ஸ்ரீலங்காவின் அரசியல் வரலாற்றில் தினேஷ் குணவர்த்தனேவின் தந்தை பிலிப் குணவர்த்தனே முக்கிய பங்காற்றியவர் ஆவார்.

இவர் லங்கா சம சமஜா என்ற கட்சியை தொடங்கி, நாடு முழுக்க சோசியலியத்தை பரப்பினார். ஆகையால் இவரை ஸ்ரீலங்கா சோசியலியத்தின் தந்தை எனவும் போரலுகோடா சிங்கம் எனவும் மக்கள் அழைத்தனர்.

பிலிப்பின் மரணத்துக்கு பின்னர் 1979ஆம் ஆண்டு கட்சியின் தலைவராக தினேஷ் குணவர்த்தனே பொறுப்பேற்றுக்கொண்டார். 1983இல் முதல் முறையாக அந்நாட்டின் நாடாளுமன்றம் சென்றார்.

மேலும் தினேஷ் குணவர்த்தனே கொழும்பில் உள்ள புகழ்பெற்ற ராயல் கல்லூரியில் பயின்றனர். அப்போது ரணில் விக்கிரமசிங்கே இவரது கல்லூரி தோழர் ஆவார். பின்னாள்களில் தினேஷ் குணவர்த்தனே நெதர்லாந்தில் உள்ள வணிகவியல் பல்கலைக்கழகத்தில் பபிஏ முடித்தார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் தொடர்பு
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தினேஷ் குணவர்த்தனேவின் தந்தை பிலிப் பங்கெடுத்துள்ளார். இவர் லண்டனில் பயின்றபோது ஜவஹர்லால் நேரு மற்றும் கிருஷ்ணன் மேனன் ஆகியோருடன் நெருங்கிப் பழகினார்.
1942ஆம் ஆண்டு ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையேறு வெளியேறு இயக்கத்தில் பிலிப் கலந்துகொண்டார்.
இந்தப் போராட்டத்தில் பிலிப்பின் மனைவி குசூமா பின்னாட்களில் கலந்துகொண்டார். தினேஷின் அண்ணன் இண்டிகாவும் மும்பையில் பிறந்தவர் ஆவார்.

தினேஷ் குணவர்த்தனே எதிர்கொள்ளும் சவால்கள்
இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தினேஷ் குணவர்த்தனே அரசியல் ரீதியாக மிகப்பெரிய கடினமான சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளார்.
இலங்கையில் நிலவும் கடும் பணவீக்கம் காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் சிக்கல், பொருள்கள் கடும் விலையேற்றம் என நடுத்தரம் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடும் சவால்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

இவர்களுக்கு முதலில் அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதை நாடு உறுதி செய்ய வேண்டும். மேலும் நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இது அவருக்கு அரசியல் ரீதியாக நெருக்கடிகளை தொடர்ந்து கொடுக்கும்.

முன்னதாக மக்கள் தன்னெழுச்சி போராட்டம் காரணமாக, இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
கோத்தபய ராஜபக்ச மனைவியுடன் சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரும் இலங்கையில் இல்லை. மகிந்த ராஜபக்ச வெளிநாடு தப்பிச் செல்ல இலங்கை உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.



Read in source website

சா்வதேச அரங்கில் புதிய பல பன்னாட்டுக் கூட்டணி அமைப்புகள் உருவாகி வருகின்றன. சமீபத்திய ரஷிய அதிபா் புதினின் ஈரான் விஜயம் அதனால்தான் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அதிபா் புதின் முனைப்புக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. நீண்டகாலமாக ரஷியாவைவிட்டு வெளியே வராத அதிபா் புதின், இப்போது அரசுமுறைப் பயணமாக ஈரான் சென்ன் பின்னணியில் அமெரிக்காவுக்கு எதிரான ராஜதந்திர முன்னெடுப்புகள் இருந்தால் அதில் வியப்படைய ஒன்றுமில்லை.

கடந்த ஒரு மாதத்தில் பல முக்கியமான சா்வதேச கூட்டமைப்புகளின் மாநாடுகள் நடந்திருக்கின்றன. ஒருபுறம் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா அடங்கிய ‘பிரிக்ஸ்’ மாநாடும், இன்னொருபுறம் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் அடங்கிய ‘க்வாட்’ மாநாடும் குறிப்பிடத்தக்கவை. இதற்கிடையில் புதிதாக இன்னொரு பன்னாட்டு கூட்டமைப்பு உருவாகியிருப்பதும், அது சில ஆக்கபூா்வமான முன்னெடுப்புகளுக்கு வழிகோலியிருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஒன்பது மாதங்களுக்கு முன்பு, அதாவது 2021 அக்டோபா் மாதம் இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றின் வெளியுறவுச் செயலா்கள் காணொலி மூலம் இணைந்தனா். அவா்களுடைய பேச்சுவாா்த்தையை மேற்கு ஆசிய ‘க்வாட்’ என்று சா்வதேச நோக்கா்கள் குறிப்பிட்டனா். அப்போது வெளியுறவுச் செயலா்களின் சந்திப்பு உருவாக்கிய உறவு இப்போது ‘இ2அ2’ (இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, அமீரகம்) என்கிற அமைப்பாக உருவாகியிருக்கிறது.

ஜூலை 14-ஆம் தேதி அமெரிக்க அதிபா் ஜோபைடன், இஸ்ரேலின் பிரதமராக இருந்த யாா் லாபிட், அமீரகத்தின் மன்னா் மொகமத் பின் சயீத், இந்திய பிரதமா் நரேந்திர மோடி நான்கு பேரும் காணொலி காட்சி மூலம் இணைந்த மாநாடு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நான்கு நாடுகளும் தனிப்பட்ட முறையில் ஒன்றொடு ஒன்று நட்புறவு கொண்டிருந்தாலும், இதுபோல இணைவது சற்றும் எதிா்பாராத திருப்பம்.

நீண்டகாலமாக இஸ்ரேலுடனான நட்புறவை தவிா்த்து வந்த இந்தியா, கடந்த 20 ஆண்டுகளாக மிக நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதேபோல, இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகளைக் களைந்து நரேந்திர மோடி அரசு, இந்தியாவின் மிக நெருக்கமான நட்பு நாடாக அதை மாற்றியிருக்கிறது. இந்திய - அமெரிக்க உறவு ‘க்வாட்’ அமைப்பின் காரணமாக வலுவாக மாற்றப்பட்டிருக்கிறது. தனித்தனியாக ஏனைய மூன்று நாடுகளுடனுமான அமெரிக்க உறவும் நெருக்கமானது. இந்தப் பின்னணியில்தான் ‘இ2அ2’ அமைப்பு உருவாகியிருக்கிறது.

‘இ2அ2’ அமைப்பின் மாநாடு நேற்றைய நிலைமை, இன்றைய உண்மை, நாளைய பாா்வை ஆகியவற்றை இணைக்கும் ஒன்றாக இருப்பதுதான் ஏனைய பன்னாட்டு அமைப்புகளிலிருந்து இதை வேறுபடுத்துகிறது. வெறும் வா்த்தகக் கூட்டணியாகவோ, பாதுகாப்பு கூட்டணியாகவோ அல்லது பிராந்தியம் சாா்ந்த கூட்டணியாகவோ இல்லாமல் ‘இ2அ2’ அமைப்பு முன்னெடுக்கும் பிரச்னைகள், தொடா்புடைய நாடுகளின் சுயநலத்துக்கு அப்பாற்பட்டவை என்பதுதான் இதன் சிறப்பு.

உலகம் எதிா்கொள்ளும் முக்கியமான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் முயற்சியாக இந்தக் கூட்டணி அமைய இருக்கிறது. நீா்வளம், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு என்கிற ஆறு முக்கியமான பிரச்னைகளில் ‘இ2அ2’ தனது கவனக்குவிப்பை செலுத்துகிறது. இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளும் ஏற்கெனவே இந்தத் துறைகளில் கூட்டுறவு முயற்சிகளை மேற்கொள்கின்றன என்றாலும், ஒருங்கிணைந்து செயல்படுத்த முன்னெடுத்திருக்கும் அமைப்புதான் ‘இ2அ2’.

தனியாா் முதலீட்டை உருவாக்கி தொழில்நுட்பம், நிபுணத்துவம், நவீன கட்டமைப்பு ஆகியவற்றின் உதவியுடன் மேலே குறிப்பிட்ட ஆறு துறைகளிலும் முனைப்புக் காட்ட ‘இ2அ2’ உறுப்பினா் நாடுகள் முடிவெடுத்திருக்கின்றன. முதலீட்டையும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிப்பதன் மூலம் உணவு, எரிசக்தித் துறைகளில் பாதுகாப்பு ஏற்படுத்த முடியும் என்பதுதான் அமைப்பின் நோக்கம்.

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் தனியாா் முதலீட்டுகளின் மூலம் இந்தியாவின் பல பகுதிகளில் 200 கோடி டாலா் முதலீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் பூங்காக்களை ஐக்கிய அரபு அமீரகம் முன்னெடுக்கும். இதன் மூலம் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் உணவு உற்பத்தி மூன்று மடங்கு அதிகரிக்கும் என்பது எதிா்பாா்ப்பு. இந்தியாவின் அதிகரித்த உணவு உற்பத்தி மூலம், உலகின் உணவுப் பாதுகாப்புக்கு உதவுவதுதான் ‘இ2அ2’ அமைப்பின் திட்டம்.

அதேபோல காற்று, சூரிய ஒளி உள்ளிட்ட 300 மெகாவாட் புதுப்பிக்கும் எரிசக்தித் திட்டங்கள், அதற்குத் தேவையான மின்கல உற்பத்தி போன்றவற்றிற்காக அமெரிக்கா 33 கோடி டாலா் வழங்க இருக்கிறது. அந்தத் திட்டங்கள் அனைத்துமே இந்தியாவில் உருவாக இருக்கின்றன. 2030-க்குள் புதைபடிவம் அல்லாத எரிசக்தி உற்பத்தியை 500 ஜிகாவாட் அளவில் உருவாக்கும் இந்தியாவின் இலக்கை எட்ட இது உதவும்.

ஏனைய கூட்டணிகளைப் போலல்லாமல், ஆக்கபூா்வமான திட்டங்களுடன் உருவாகும் ‘இ2அ2’ அமைப்பு, போக்குவரத்துத் துறையிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். அமீரகத்தின் முதலீடு, இஸ்ரேலின் தொழில்நுட்பம், அமெரிக்காவின் நிபுணத்துவம் மூன்றும் இந்தியாவில் குவிய இருக்கின்றன. அதனால் உலகம் பயனடையப் போகிறது. நல்லதுதானே...



Read in source website

இந்திய மக்கள் அனைவரும் சொந்த வீட்டில் வாழவேண்டும் என்ற குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட  உலகின் மிகப்பெரிய வீட்டுவசதித் திட்டமான "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டம் தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நாட்டில் சில நல்ல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

நவம்பர் 22, 2021 நிலவரப்படி, திட்டமிடப்பட்ட 114 லட்சம் வீடுகளில் 89 லட்சம் வீடுகளுக்கான (78%) பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சூழலில் 52 லட்சம் வீடுகள் (45.6%) கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை உருவாக்க இந்திய அரசு ரூ. 1,84,808 கோடி ஒதுக்கிய சூழலில், ரூ. 1,13,431 கோடியை பணிகளை மேற்கொள்வதற்காக விடுவித்துள்ளது. இதில் இதுவரை ரூ. 1,01,776 கோடி செலவிடப்பட்டுள்ளது.

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் 2019-ஆம் ஆண்டு அறிக்கை, இந்தியாவின் நகர்ப்புறங்களில் 310 லட்சம் குடும்பங்கள் வாடகைக்கு வாழ்கின்றன என்றும் அவர்களில் பெரும்பாலோர் குடிசைகளில் உள்ளனர் என்றும் கூறுகிறது. கரோனா பொதுமுடக்க காலத்தில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் நகர்ப்புற ஏழை மக்களும் தாங்கள் பணி செய்த நகரங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வழி இல்லாமல் சொந்த ஊருக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 

இவர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் பெருநகரங்களில் மலிவு வாடகை வீட்டு வளாகங்கள் உருவாக்கப்படவுள்ளன. தமிழகத்தில் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஒசூர் ஆகிய இடங்களில் மலிவு வாடகை வீட்டு வளாகங்கள் அமைக்கப்படவுள்ளன.

மத்திய வீட்டுவசதி - நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் தொழில்நுட்பக் குழு 187.8 லட்சம் இந்திய குடும்பங்களுக்கு இதுபோன்ற வீடுகள் தேவை என்று மதிப்பிட்டுள்ளது. சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான "இண்டியன் கவுன்சில்' வெளியிட்ட ஆய்வு முடிவு 2018-ஆம் ஆண்டு நிலவரப்படி 290 லட்சம் முதல் 500 லட்சம் வரையிலான வீடுகளுக்கான தேவை உள்ளது என்று மதிப்பிட்டுள்ளது.

ஒரு நகரத்தில் சராசரி ஆண்டு குடும்ப வருமானத்திற்கும் வீட்டு விலைக்கும் (வாடகை அல்லது  சொந்தம்) இடையேயான  விலை - வருமான விகிதம் என்ற குறியீட்டு அடிப்படையில் இந்த மலிவு விலை வீடுகளின் தேவை கணக்கிடப்படுகிறது. மலிவு வாடகை வீடு திட்டத்தின்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இவ்வீடுகளுக்கான  வாடகையை நிர்ணயம் செய்யும். 

வாடகை ஒப்பந்தம் கையொப்பமிடும் நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 8 % வாடகையை  உயர்த்திக்கொள்ளலாம். ஆயினும், ஐந்து ஆண்டுகளில் அதிகபட்சமாக 20 % மட்டுமே வாடகையை  அதிகரிக்கலாம் என்ற நிபந்தனை உள்ளாட்சி அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டில் ஆசிய வளர்ச்சி வங்கி நடத்திய ஆய்வின்படி, விலை - வருமான விகிதம் மூன்று அல்லது அதற்குக் குறைவான அளவாக இருந்தால் அந்த வீட்டின் விலை ஒரு குடும்பத்திற்கு கட்டுப்படியாகும். விலை - வருமான விகிதம் அதிகரிக்கும்போது வீடுகளின் விலை கட்டுப்படியாகாத அளவில் கூடும். 

வாடகை வீட்டு சந்தை நிலவரத்தின்படி, விலை - வருமான விகிதக் குறியீடு 2 அல்லது அதற்கு மேல் இருக்கும் போது அது குடியிருப்போருக்கு பாதகமாகவும் உரிமையாளருக்கு சாதகமாகவும் இருக்கும். ஒரு சில மலிவு வாடகை வீட்டு வளாகங்களில் இந்த விலை - வருமான விகிதக் குறியீடு அளவுகோல் 5.7-க்கும் அதிகமாக உள்ளது. இத்தகைய  வளாகங்களில் ஏழைகள் வாழ சாத்தியமே இல்லை. 

வங்கிகள், நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட வீட்டுக் கடன்களின் அடிப்படையில் 2010 முதல் இந்திய ரிசர்வ் வங்கி 13 நகரங்களில் வீடு, சொத்து விலை குறித்த கண்காணிப்பு ஆய்வை நடத்தி வருகிறது. கடந்த நான்காண்டுகளில் வீடு வாங்கும் போக்கில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 2019-இல் வெளியான இந்த பகுப்பாய்வு வெளிப்படுத்தியது. மார்ச் 2015-இல் 56.1 ஆக இருந்த விலை -வருமான விகிதக் குறியீடு,  மார்ச் 2019-இல் 61.5 ஆக அதிகரித்துள்ளது. 

2018ஆம் ஆண்டு தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் கணக்கெடுப்பு, வாடகை வீடுகளில் குடியிருக்கும் குடும்பம் செலவிடும் சராசரி வாடகை கிட்டத்தட்ட 3,324 ரூபாய் என்று கூறுகிறது. நீண்டநாள்  ஏழைகளும் புலம்பெயர் தொழிலாளர்களும் அரசின் மலிவு வாடகை வீட்டு வளாகங்களில் குடியிருப்பதை உறுதிசெய்ய இவ்வளாகங்களில் இருக்கும் வீடுகளின் வாடகை இந்திய சராசரி வாடகையை விட அதிகமாக இருக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான மலிவு வாடகை வீட்டு வளாகங்கள் பெருநகரங்களின் புறநகர் பகுதிகளில் அமைவதால் அதிக  மக்கள்தொகை கொண்ட நகரின் பிற பகுதிகளுடன் இணைப்புகள் ஏற்படுத்தப்படவேண்டும். தண்ணீர், கழிவுநீர், அங்கன்வாடி மையங்கள், அரசுப் பள்ளிகள், சுகாதார வசதிகள் போன்ற அடிப்படை சேவைகளை  மக்கள் பெற்றிடும் வகையில் மலிவு வாடகை வீட்டு வளாகங்கள் உருவாக்கப்பட வேண்டும். 

முறைசாரா தொழிலாளர்களில் 85 % க்கும் அதிகமானோர் ஒவ்வொரு நாளும் 5 கி.மீ. தூரம் மட்டுமே தங்கள் பணியிடத்திற்கு செல்ல பயணிக்கின்றனர். போக்குவரத்து அமைப்பு இல்லாவிட்டால் பெரும்பாலான இடங்களில் நகரின் புறநகர் பகுதிகளில் அமையவிருக்கும் இந்த மலிவு வாடகை வீட்டு வளாகங்கள் அர்த்தமற்றதாகிவிடும்.

கொள்கை ஆராய்ச்சி மையம் (சென்டர் ஃபார் பாலிசி ரிஸர்ச்), உழைக்கும் மக்கள் சாசனம் (வொர்கிங் பீப்பிள்ஸ் சார்ட்டர்) ஆகிய அமைப்புகள் சமீபத்தில் நடத்திய ஆய்வு, புறநகர் பொது வீட்டுவசதி மனைகளுக்கு ஒரு குடும்பம் இடம் பெயரும்போது அக்குடும்பப் பெண்கள், தங்கள் வீட்டுக்கு அருகே கிடைக்கும் வீட்டு வேலை வாய்ப்புகளை இழப்பதுடன் தங்களின் ஆக்கபூர்வமான  நேரத்தையும் இழக்கின்றனர் என்று கூறுகிறது.

வாடகை வீடுகளுக்கான வாடகைகளை ஒழுங்குபடுத்த முறையான கண்காணிப்பு அமைப்புகளை  மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்று இத்துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.



Read in source website

அண்மையில், தமிழ்நாட்டில் ஒரு பள்ளி மாணவியின் மர்ம மரணம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்துள்ளது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு இது போன்ற எத்தனையோ வன்முறைகளை நாடு சந்தித்துள்ளது. ஆட்சியில் இருப்பவர்களின் அலட்சியத்தால்தான் சில நேரங்களில் புழுவும் பூதமாகி விடுகிறது.

ஆட்சிக் கட்டில் என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. புலிவால் பிடித்த கதைதான். எப்போதும் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. எல்லாம் முடிந்த பிறகு ஆறுதல் கூறுவதால் என்ன பயன்? எவ்வளவு தொகை கொடுத்தாலும் இழந்த உயிருக்கு அது ஈடாகுமா?

கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி 12}ஆம் வகுப்பு படித்து வந்தார். ஜூலை 13 அன்று மாடியில் இருந்து கீழே விழுந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாமல் பெற்றோர் தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும் நான்கு நாட்கள் தொடர்ந்து போராடியும் மாவட்ட நிர்வாகம் அதனைக் கண்டு கொள்ளவில்லை. அதன் பின்னர் தொடங்கிய அமைதிப் போராட்டம் வன்முறையாக மாறியது. காவல்துறையின் தாக்குதலினால் போர்க்களமாக மாறியது. வன்முறைக் கும்பல் பள்ளியையே சூறையாடியது.

இந்த நிகழ்வில் பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விடியோ பதிவுகளை வைத்து 329 பேரை கைது செய்துள்ளனர். அத்துடன் பள்ளியின் நிர்வாகி, செயலர், முதல்வர், பள்ளி ஆசிரியைகளையும் கைது செய்துள்ளனர்.

பள்ளியில் நடந்த வன்முறைப் போராட்டத்தால் ஏற்பட்ட அழிவு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முன்பாகவே சூழ்நிலைகளை ஆராய்ந்து மாவட்ட நிர்வாகம் அமைதியை ஏற்படுத்தி யிருக்க வேண்டும். இப்போது குதிரைகள் ஓடிப்போன பிறகு லாயத்தை பூட்டியுள்ளது காவல்துறை.

பிள்ளையை இழந்த பெற்றோருக்கு நீதி கிடைத்திருந்தால் நிலைமை சீரடைந்திருக்கும். நீதி கேட்டு நான்கு நாட்கள் நடந்த போராட்டம் வன்முறையை நோக்கிப் போய் விட்டது. என்றாலும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. 

மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த பெற்றோர், உடலை வாங்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதற்கிடையில்தான் பெரும் கலவரம் வெடித்தது. தமிழகம் எப்போதும் அமைதிப் பூங்காவாகவே இருந்து வருகிறது என்று ஆட்சியாளர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். அந்தப் பெருமைக்கு இந்த நிகழ்வால் களங்கம் ஏற்பட்டுள்ளது.

சட்டம்-ஒழுங்கை கவனிக்கும் காவல்துறையும், அதற்கு வழிகாட்டும் உளவுத்துறையும் தமிழக அரசின் கையை விட்டுப் போய்விட்டதோ என்று ஊடகத்துறையினர் கேள்வி எழுப்பினர். இந்த வன்முறைக்கு உளவுத்துறையின் மெத்தனமும் ஒரு காரணமாகும் என்று கூறப்படுகிறது.

மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காக மக்களே ஆளும் ஆட்சி என்று பெருமை பேசுகிறார்கள். மக்கள் வாக்கே மகேசன் வாக்கு என்றும் கூறுகிறார்கள். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் மக்களது கருத்துக்கு மதிப்பளிப்பது இல்லை என்பதுதான் உண்மை. மக்களின் கருத்தறிந்து சட்ட திட்டங்களை செயல்படுத்துவதும் இல்லை.

ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் அவர்கள் நினைப்பதை மக்கள் மீது திணிக்கும் போக்கே நிலவுகிறது. வாக்களித்த மக்களை மறந்து விடுகின்றனர். சுயநலமே மேலோங்கி நிற்பதால் அங்கு பொதுநலம் மறைந்து விடுகிறது. தங்களது உயர்வுக்காக எதைச் செய்யவும் தயங்குவது இல்லை. வன்முறை பிறக்கும் இடமும் அதுதான்.

அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த "அக்னிபத்' என்னும் ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் திட்டமாகும். இது ராணுவத்தில் சேர காத்திருந்த இளைஞர்களுக்கும் மிகப் பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. இதுவரை ராணுவப் பணி என்பது நிரந்தரமானதாகவே இருந்து வந்தது. இனி இது ஒப்பந்த அடிப்படையில் நான்கு ஆண்டுகள் மட்டுமே என்றால் எப்படி இருக்கும்? அதன்பிறகு வீட்டுக்கு வந்துவிட வேண்டும். ஓய்வூதியமும் கிடையாது. ஒட்டுமொத்தமாக ஒரு தொகை மட்டும் கொடுக்கப்படும்.

இந்தத் திட்டம் பல்லாயிரம் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கி விட்டது. இரண்டு ஆண்டுகளாக ராணுவத்தில் ஆள் எடுப்பு நடக்கவில்லை. அதற்கு முன்னால் நடந்த ஆள் எடுப்பில் கலந்து கொண்ட இளைஞர்களில் சிலர் தேர்வுகளில் வெற்றி பெற்று பணி நியமன உத்தரவுக்காகக் காத்திருக்கின்றனர். அவர்கள் மறுபடியும் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பது என்ன நியாயம்?

வடமாநில இளைஞர்களின் கோபம் வன்முறையாக வெடித்தது. பல மாநிலங்களில் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். பல மாநிலங்களில் முழு அடைப்பும் நடந்தது. ரயில்கள் எரிப்பு முதலிய வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன. அந்தக் கலவரம் அடங்க பல நாட்களாயின.

"அரசாங்கத்தை எதிர்த்து வன்முறையில்லாத புரட்சியே இருக்க முடியாது; அப்படி ஒரு புரட்சி நடந்ததாக வரலாறு கண்டதில்லை என்று நீங்கள் சொல்லக்கூடும். சரி, அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை' என்று அண்ணல் காந்தியடிகள் கூறியுள்ளார்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் அமைதி வழியில் அகிம்சை வழியில் நடந்தது என்றாலும், ஒரு சில வன்முறைச் சம்பவங்களும் நிகழாமல் இல்லை. கோகலேவின் தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள் "மிதவாதிகள்' என்றும், திலகர் தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள் "தீவிரவாதிகள்' என்றும் சுதந்திரப் போராட்ட வரலாறு கூறுகிறது.

மாவீரன் பகத் சிங் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவனே தவிர வன்முறையாளன் இல்லை என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அடிமைப்பட்டிருந்த நாட்டில் ஆங்கிலேயர்கள் செய்த அராஜகம் அவனைப் போன்ற இளைஞர்களைத் தூண்டிவிட்டது.

லாகூர் சதி வழக்கில் கர்த்தார் சிங் சாராபா தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டதும் ஜாலியன்வாலா பாக்கில் நிரபராதியான மக்களை பீரங்கி ஏந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்திய கொடுமையும், பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் தாக்கப்பட்டு, பிறகு மரணம் அடைந்ததும் வன்முறையில்லையா? இந்த வன்முறையை எப்படி எதிர் கொள்வது?

1927 ஏப்ரல் 8 அன்று தில்லி சட்டப்பேரவையில் குண்டு வீசப்பட்டது. குண்டு வீசிய பகத் சிங்கும், பி.கே. தத்தும் வெளியிட்ட அறிக்கை, "காது கேளாதவர்களுடன் பேசும்போது உரக்கத்தான் பேச வேண்டியிருக்கிறது' என்று குறிப்பிடுகிறது.

திருப்பூர் குமரன் போல கொடியைக் காக்க அடிபட்டு இறந்தவர்களும் இருந்தனர். வாஞ்சிநாதன் போல பழி தீர்த்தவர்களும் இருந்தனர். வ.உ. சிதம்பரனார், வ.வே.சு. ஐயர், மகாகவி பாரதியார், சுப்பிரமணிய சிவா இவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்றே அறியப்பட்டார்கள்.

அரசியல் வன்முறைகளைப் போலவே இப்போது சமூக வன்முறைகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. தேசம் விடுதலையடைந்த 75}ஆவது ஆண்டில் இருக்கிறோம். நாடு முன்னேறிக் கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. மக்கள்தொகையில் சீனாவை விஞ்சி உலகில் முதல் இடம் பிடிக்கப் போகிறது. எல்லாம் சரி, இந்திய மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் நிலை என்ன? பணிபுரியும் அலுவலகங்கள், படிக்கும் கல்வி நிலையங்கள் எங்கும் அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தெருவில் தனியாக நடந்து போக முடியவில்லை. இதுதான் தியாகிகள் பெற்றுத் தந்த சுதந்திரத்தின் விளைவா?

2020}ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பெண்கள் மீதான வன்கொடுமைகள் 46 % அதிகரித்துள்ளது. குடும்பத்தில் கணவன் அல்லது உறவினர்களால் நடத்தப்படும் கொடுமையான தாக்குதல்களும் இதில் அடங்கும்.

தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகத்தின் 2019 புள்ளிவிவரத்தின்படி நமது நாட்டில் ஒவ்வொரு நாளும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 10 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் 87 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் ஏதேனும் ஓரிடத்தில் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்.

முற்காலத்தில் பெண்கள், ஜாதி, சமய, இன வாரியாகப் பிரிந்து அடிமைப்பட்டுக் கிடந்தனர். தொன்றுதொட்டு வந்த மூடநம்பிக்கையின் காரணமாக இளமைத் திருமணம், கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறுதல் இவை எல்லாம் அவர்களை ஊமைகளாக்கி விட்டன. அவர்களை மீட்டு எடுப்பதற்கு சமூக சீர்திருத்த இயக்கங்கள் கடுமையாகப் போராடின.

காலம் மாறியது. ஆனாலும், பெண்களின் நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. அவர்கள் மீது புதிய புதிய வடிவங்களில் வன்முறைகள் ஏவப்படுகின்றன. காவல்துறையும் சட்டங்களும், பணத்துக்கும் பதவிக்கும்தான் துணை போகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு யார்தான் துணை?

உலக அளவில் பெண்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது என்கிற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.

பெண்களும், பெண் குழந்தைகளும், அவர்கள் சமூகத்தின் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வன்முறைக்கு ஆளாகின்றனர். அடிமட்ட தொழிலாளியிலிருந்து அதிகாரி வரை விதிவிலக்கு இல்லை. காவல்துறை பெண் அதிகாரிகளும் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். 

அடிமைப்பட்ட நாட்டில் அந்நிய ஆட்சியின் கொடுங்கோன்மையை எதிர்த்து நடந்த வன்முறைகளை "புரட்சி' என்று நியாயப்படுத்த முடியும். விடுதலை பெற்ற நாட்டில் வன்முறைகள் தொடர்வதை எப்படி அனுமதிக்க முடியும்? பாதிக்கப்பட்டவர்களின் கோபமே வன்முறையாக மாறுகிறது. ஆட்சியாளர்களின் கையில் இருக்கும் காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது?

கட்டுரையாளர்: எழுத்தாளர்.
 



Read in source website

கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், வெளியுறவு மற்றும் ராணுவ அதிகாரிகளிடையே தொடர்ந்து நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை வெளிச்சத்தை உருவாக்கியுள்ளன.

எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் படைகளைத் திரும்பப் பெறுவது மட்டுமே அந்தப் பகுதியில் நிரந்தர அமைதி ஏற்பட வழிவகுக்கும் என்று வலியுறுத்திவருவதாக, இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.



Read in source website

இந்தியா உலகின் அதிக மக்கள்தொகையுள்ள நாடாகப் போகிறது. இது 2030-ல் நடக்கும் என்றுதான் மக்கள்தொகைக் கணிப்பாளர்கள் மதிப்பிட்டிருந்தார்கள். 2021 மே மாதம் சீனாவின் ஆறாவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வெளியானது.

அந்த அறிக்கை 2025-லேயே சீனாவை இந்தியா விஞ்சிவிடும் என்றது. கடந்த ஜூலை 11 அன்று ஐ.நா.வின் உலக மக்கள்தொகை அறிக்கை வெளியானது. மக்கள்தொகையில் இந்தியா முடிசூடும் நாளை அந்த அறிக்கை இன்னும் முன்னதாகவே குறித்துவிட்டது.



Read in source website

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு கல்வித் துறையில் புதிய முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. பள்ளிக்கு உள்ளே ‘எண்ணும் எழுத்தும் இயக்கம்’, வெளியே ‘இல்லம் தேடிக் கல்வி மையம்’ எனப் பல முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் என்கிற தலைப்பிலேயே ஒரு சுற்றறிக்கை வந்தபோது வாசிப்போர் நெஞ்சம் குளிர்ந்தது. ஆனால், இவற்றுடன் சேர்ந்து ‘ஆசிரியர்கள் எவ்வாறு கற்பிக்கிறார்கள்’ என்பதும் புரிந்துகொள்ளப்பட வேண்டும், இல்லையா?

பாடத்திட்டம், பாடநூல் தயாரிப்பு, கற்றல் கற்பித்தல் எதிர்பார்ப்புகள் குறித்து யோசிக்க வேண்டும். எந்த அடிப்படையில் இவை எழுதப்படுகின்றன? எந்த அடிப்படையில் இந்த இலக்குகள் எதிர்பார்க்கப்படுகின்றன? ஒவ்வொரு வகுப்புக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு ஆசிரியர் இருப்பார்.

ஒதுக்கீடு செய்யப்பட்ட பாடவேளைகளில் வரையறுக்கப்பட்டபடி அந்தந்தப் பாடங்களை நடத்தி முடித்துவிடுகிறார் அல்லது நடத்தி முடித்துவிட வேண்டும். அந்த வகையில், சொன்னபடி செய்து முடிக்கும் விதமான கட்டமைப்பை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம் அல்லது இந்தப் பாடநூல்கள் சென்று சேரும் முன்பு, அதற்கான கட்டமைப்புகள் உருவாகிவிடும் என்கிற நம்பிக்கையில் அவை உருவாக்கப்படுகின்றன.

சரி, இவற்றையெல்லாம் செயல்படுத்தும் வகுப்பறைகள் என்ன சொல்கின்றன. கள நிலவரம் எப்படியிருக்கிறது? தமிழ்நாட்டின் 10 சதவீதப் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் ஐந்து வகுப்புக் குழந்தைகளையும் கையாள்கிறார். 70 சதவீதப் பள்ளிகளில் தலா இரண்டு ஆசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்புக் குழந்தைகளுக்குத் தன்னால் இயன்ற அளவு கற்பித்துக்கொண்டிருக்கிறார்.

எத்தனை அதிகாரிகள் வந்தாலும், எத்தனை ஆணைகள் போட்டாலும், தங்களால் முடியாது என்பது தெரிந்தாலும்கூட, பாவம்! அந்த சேவல்கள் முட்டை போட முயன்றுகொண்டே இருக்கின்றன. அதிகாரிகள் வந்து மிரட்டும்போதெல்லாம் அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக முட்டை போடுகிறேன் என்று உறுதியளிக்கின்றன. இந்த நாடகம் பல காலமாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது! ஆனால், கற்பித்தல் சார்ந்த அடிப்படைக் கோளாறு மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறது.

அடிப்படையே பிரச்சினை

தரமான கல்விக்கு முதல், முக்கியமான நிபந்தனை போதுமான பள்ளிகள், போதுமான ஆசிரியர்கள். தமிழகத்தில் தேவையான அளவுக்குப் பள்ளிகள் உள்ளன. ஆனால், ஆசிரியர்கள் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனங்கள் நடைபெறவில்லை.

பல்லாயிரக்கணக்கான காலிப் பணியிடங்களைச் சமாளித்தபடியே பல கல்வி ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிக் கல்வியை முடித்து வெளியேறியபடியே இருக்கின்றனர். கல்வித் துறைக்கு அது புள்ளிவிவரக் கணக்கு. கடந்துபோன குழந்தைகளுக்கோ அதுதான் வாழ்க்கை!

அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட அங்கன்வாடி மையங்களில் ஆசிரியர்கள் இல்லை. அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட ஆங்கிலவழிப் பிரிவுகளுக்குப் பல இடங்களில் அதற்கான ஆசிரியர்கள் இல்லை. இருக்கிற ஆசிரியர்களின் பணி நிலை மகிழ்ச்சிகரமாக இல்லை.

கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இத்தனை ஆண்டு காலத்தில் ஒரு பயிற்சியும் வழங்கப்படவில்லை என்பது வேதனையான உண்மை. இவை மட்டுமில்லாமல், ஒட்டுமொத்தமாக ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தைத் தட்டையாக உள்வாங்கிக்கொள்வதால், குழந்தைகளைப் புரிந்துகொள்வதிலும் பெரிதும் பின்தங்கியிருக்கிறோம்.

மழலையர் வகுப்பு தொடங்கி முதல் மூன்று வகுப்புகளுக்கு ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:10 என்றும், 4, 5 வகுப்புகளுக்கு 1:20 என்றும், மேல் வகுப்புகளுக்கு 1:30 என்றும் இருக்க வேண்டும். குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்கவும், தனிக் கவனம் செலுத்தப்படவும், தனித்திறன்கள் வளர்த்தெடுக்கப்படவும் கூடுதலாகக் கவனம் செலுத்தப்பட உரிய வகையில் ஆசிரியர்கள் நியமித்தால்தான் முடியும்.

கல்வி, சுகாதாரத்துக்கு முன்னுரிமை கொடுக்கின்ற நாடுகள்தான் உலகளாவிய தரநிலைகளில் சிறப்பிடம் பெறுகின்றன. எனவே, கல்விக்குச் செலவழிக்க அரசு கணக்குப் பார்க்கக் கூடாது. அது மனிதவள மேம்பாட்டுக்கான முதலீடு. எனவே, நிரந்தர ஆசிரியர்களாக நியமிப்பதே இதற்குத் தீர்வு.

என்ன தேவை?

செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி, எண்ணும் எழுத்தும் என கல்வித் துறையில் என்னென்ன மாற்றங்கள், புதுமைகள் கொண்டுவந்தாலும் கல்வி குறித்த அடிப்படைப் பார்வை மாறாமல், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. மாநில கல்விக் கொள்கை உருவாக்கக் குழு சந்திப்புகள் நடைபெற்றுவருகின்றன. குழுவின் முழு முதல் கவனம் இந்தத் திசையில் இருந்தால் நல்லது.

அதேபோல், சமூகத்தின் போக்குக்கு எதிர்த்திசையில் கல்வி இலக்குகள் அமைய முடியாது. நல்ல லட்சியங்களை இலக்காகக் கொண்ட சமுதாயம் மட்டுமே கல்வியில் உண்மையான விளைவுகளை எதிர்பார்க்க முடியும். அந்த வகையில், லட்சியங்கள் நிறைவேறுவதற்கு, இலக்குகளில் தெளிவும் திட்டவட்டமாகத் தீர்மானிக்கப்படவும் வேண்டும். மாநில அரசின் புதிய கல்விக் கொள்கை அந்த நோக்கில் அமைய வேண்டும்.

- தேனி சுந்தர், தொடர்புக்கு: sundar.tnsf@gmail.com



Read in source website