DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 20-02-2023


மதுரை: மதுரையில் ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக பொதுமக்கள் புகாா் அளிக்கும் வகையில் இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் வெளியிட்ட செய்தி:

ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை சிலா் முறைகேடாகக் கடத்தி கள்ளச் சந்தையில் விற்று அதிக லாபம் பெறும் நோக்கில் செயல்படுகின்றனா்.

ரேஷன் அரிசி கடத்துபவா்கள் குறித்தும், ரேஷன் பொருள்களைப் பதுக்குபவா்கள் குறித்தும் மதுரை மாவட்ட பொதுமக்கள் 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவா்களின் ரகசியம் காக்கப்படும்.

ரேஷன் பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் சென்னையில் மாநில அளவில் 24 மணி நேரமும் செயல்படும் காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு காவல் துறை கூடுதல் இயக்குநரின் நேரடிக் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

திக்கெட்டும் தமிழ் பரவ பணி செய்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தமிழ்த் தாத்தா எனப் போற்றப்படும் உ.வே.சா. பிறந்த தினத்தையொட்டி, ட்விட்டரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஏடு தேடியலைந்து தமிழ்க் கருவூலங்களை அச்சிலேற்றி, காலத்தால் அழியா கொடைகளை அளித்தவா் ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சா. ஞாயிற்றுக்கிழமை (பிப்.19) அவரது பிறந்த நாள்.

அவரது நினைவைப் போற்றி, திக்கெட்டும் தமிழ் பரவ பணி செய்வோம். தமிழ் காக்கும் பணிக்கு நம்மை ஒப்படைத்துக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.



Read in source website


திருச்சூர்: கேரளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு தானம் செய்து, நாட்டிலேயே மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

கேரளம் மாநிலம் திருச்சூரில் ஹோட்டல் நடத்தி வருபவர் பிரதீஷ்(48). இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவாவில் உள்ள ராஜகிரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.  

தந்தைக்கு தகுந்த நன்கொடையாளர் கிடைக்காததால், தந்தையின் உடல்நிலை, குடும்பத்தின் வறுமை, மருத்துவச் செலவு போன்றவற்றால் பரிதவித்த மகள் தேவானந்தா(17), தனது கல்லீரலின் ஒரு பகுதியை வழங்க தானம் செய்ய முடிவு செய்தார். 

இந்நிலையில், இந்திய உடல் உறுப்பு தான சட்டத்தின்படி, 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே, உடல் உறுப்பு தானம் செய்ய முடியும் என்பதால், அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. 

இதையடுத்து தனது தந்தைக்கு உறுப்பு தானம் செய்ய விதிவிலக்குக் கோரி, கேரள உயர்மன்றத்தில் தேவானந்தா மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், பிரதீஷ் உடல்நிலையைக் கவனத்தில் கொண்டு, உடல் உறுப்பு தானம் செய்ய தேவானந்தாவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. 

இதனைத் தொடர்ந்து தேவானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில் அவருக்கு கல்லீரலில் கொழுப்பு படிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனது தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று துடித்த மகள், தனது உணவுப்பழக்கத்தை முற்றிலுமாக மாற்றினார். உள்ளூரில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்கு நாள்தோறும் சென்று மிகக் கடுமையான உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். இதன் பலனாக ஒரு மாதத்துக்குள் அவரது கல்லீரலில் படிந்திருந்த கொழுப்பு முற்றிலுமாக கரைந்தது. அவரது கல்லீரல் தானம் செய்வதற்கான சிறந்த நிலைக்கு தயாரானது. 

இதைனைத் தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி பிரதீஷ்க்கு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மகள் தேவானந்தாவின் கல்லீரலில் ஒரு பகுதியை எடுத்து அவரது தந்தைக்கு மருத்துவர்கள் பொருத்தினர். அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தந்தையும் மகளும் உடல்நலம் அடைந்து வருகின்றனர். 

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், தேவானந்தா கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கியதால் பாதிப்பு ஏற்படாது. அவருக்கு தானமாக வழங்கிய கல்லீரல் அவரது தந்தைக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. அடுத்த 6 முதல் 8 வாரங்களில் அவரது உடலில் கல்லீரல் வளர்ந்துவிடும் என தெரிவித்தனர்.  

தந்தையும், மகளும் நலமாக உள்ளதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், தேவானந்தாவின் செயலைப் பாராட்டி அறுவை சிகிச்சை செலவுக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது. 

ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கியிருந்த பிறகு, தேவானந்தா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார், மேலும், அவர் "பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருப்பதாக" கூறியுள்ளார். 

17 வயது சிறுமி தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு தானம் செய்து, நாட்டிலேயே மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

தேவானந்தாவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தபோது, எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக போராடியதற்காக சிறுமிக்கு பாராட்டு தெரிவித்தது. 

தேவானந்தாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 



Read in source website

 

நீதி ஆயோக்கின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பிவிஆர். சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தலைமை செயல் அதிகாரியாக இருந்த பரமேஸ்வரன் ஐயர் உலக வங்கியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

நீதி ஆயோக்கின் புதிய தலைமை செயல் அதிகாரியாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பிவிஆர். சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஜம்மு - காஷ்மீரின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும்போது பலரால் கவனம் பெற்றவர். 

1987ஆம் ஆண்டு ஐஏஎஸ் முடித்தார் பிவிஆர். சுப்பிரமணியம். உள் துறை பாதுகாப்பு நிர்வாகத்தில் மிகுந்த திறமை வாய்ந்தவர். ஜம்மு - காஷ்மீர் தலைமை செயலாளராக இருப்பதற்கு முன்பு, சத்தீஸ்கர் மாநில கூடுதல் தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்தவர். 



Read in source website


தில்லி - மும்பை இடையே புதிதாகத் திறக்கப்பட்ட விரைவுச் சாலையில் குறிப்பிட்ட சில வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதாவது, குறிப்பிட்ட வேகத்தில் செல்ல முடியாத, மெதுவாகச் செல்லும் திறன் கொண்ட வாகனங்களை இந்த விரைவுச்சாலையில் இயக்க முடியாது. பாதுகாப்புக் கருதியும், விபத்துகளை குறைக்கும் வகையில், குறைந்த வேகத்தில் இயக்கப்படும் வாகனங்களை இந்த சாலையில் இயக்க அனுமதி மறுத்துள்ளது மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை.

அதாவது, மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர், மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் போன்றவற்றை, இந்த விரைவுச்சாலையில் இயக்க முடியாது. இயக்கக் கூடாது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறைக் கழகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறது.

பொதுவாகவே, விரைவுச்சாலைகளில் வேகம் குறைவாக இயக்கப்படும் வாகனங்களை இயக்க அனுமதியில்லை. நாட்டின் எந்த விரைவுச்சாலைகளுக்கும் இது பொருந்தும். எனினும், விரைவுச்சாலை திறக்கப்பட்டதும், தேசிய நெடுஞ்சாலைத்துறை கழகம் சட்டப்படி, இந்த அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கிறது.

இது தொடர்பாக ஏற்கனவே தில்லி -  மீரட் உள்ளிட்ட விரைவுச்சாலை உள்ளிட்டவற்றுக்கும் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டிருந்தாலும், அதுபோன்ற வாகனங்களை சாலையில் நுழையாமல் தடுப்பதில் கடும் சவால்கள் உள்ளன.

மேலும், இந்த விரைவுச்சாலைகளில் ஒவ்வொரு குறிப்பிட்ட வாகனங்களும் குறிப்பிட்ட வேகத்தில்தான் இயக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தலை உருவாக்கி, வேகத்தைக் கண்காணிக்கும் கருவிகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த வேக விகிதிம் மணிக்கு 80 - 120 கிலோ மீட்டர் வேகத்தில் என்று அமையலாம் என்றும் கூறப்படுகிறது.

தில்லி-மும்பை இடையே விரைவுச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தில்லி-தௌசா-லால்சோட் வரையிலான விரைவுச் சாலையின் முதல்கட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்தவாரம் தொடக்கிவைத்தாா்.

விரைவுச் சாலை முழுவதும் பயன்பாட்டுக்கு வந்தால், நாட்டின் மிக நீண்ட விரைவுச் சாலை என்ற பெருமையைப் பெரும். 

ஹெலிகாப்டா் ஆம்புலன்ஸ்
விரைவுச் சாலையில் விபத்து ஏற்படும்பட்சத்தில், காயமடைந்தவா்களை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டா் ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படவுள்ளது.

விலங்குகளுக்கான வழித்தடங்கள்
விரைவுச் சாலையை விலங்குகள் எளிதில் கடப்பதற்கான வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வசதி ஆசியாவிலேயே முதல் முறையாகவும், உலகிலேயே இரண்டாவது முறையாகவும் தில்லி-மும்பை விரைவுச் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

சுரங்கச் சாலைகள்
விரைவுச் சாலையின் இரு இடங்களில் 8-வழி சுரங்கப் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. ராஜஸ்தானின் முகுந்த்ரா பல்லுயிா்க் காப்பகம், மகாராஷ்டிரத்தின் மதேரன் சூழலியல் மண்டலம் ஆகியவற்றில் சுரங்கப் பாதைகள் கட்டப்படவுள்ளன.

எரிபொருள் சேமிப்பு
விரைவுச் சாலையின் மூலமாக ஆண்டுக்கு 32 கோடி லிட்டருக்கும் அதிகமான எரிபொருளைச் சேமிக்க முடியும். வாகனங்கள் மூலமான கரியமிலவாயு வெளியேற்றத்தையும் பெருமளவில் குறைக்க முடியும்.

வேலைவாய்ப்பு
விரைவுச் சாலை மூலமாக ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வசதிகள் உருவாகும். விரைவுச் சாலையையொட்டியுள்ள கிராமங்களில் சிறப்பு விற்பனை மையங்கள் அமைக்கப்படவுள்ளன. அதன்மூலமாக அந்த கிராமங்களைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்கள் பலனடையவுள்ளனா்.

சுற்றுலா
விரைவுச் சாலையால் சுற்றுலாத் துறையும் பெரும் வளா்ச்சி காணும். ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் உள்ள தேசியப் பூங்காக்கள், தொல்லியல் சின்னங்கள், பல்லுயிா்க் காப்பகங்கள் உள்ளிட்டவற்றுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்.
 



Read in source website

அணு மின்சக்தி துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும் அமெரிக்காவும் மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு அமைச்சா் பியாட் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சா் ஜெஃப்ரி ஆா்.பியாட் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, எரிசக்தித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாக இந்திய அதிகாரிகளுடன் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘‘சா்வதேச எரிசக்தி பாதுகாப்பை ஏற்படுத்துவதில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. மரபுசாரா ஆற்றல் மூலங்கள் வாயிலாக 2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் எரிசக்தியை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிா்ணயித்துள்ளது. அந்த இலக்கை அடைவதற்குத் தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும்.

அணு மின்சக்தித் துறை பெரிய அளவில் மாற்றம் கண்டு வருகிறது. அணு மின்சக்திக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்க ஜப்பான் முடிவெடுத்துள்ளது. பருவநிலை மாற்றமும் அணு மின்சக்தி மீதான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

அத்துறையில் ஒத்துழைத்து செயல்படுவது தொடா்பாக இரு நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த 2008-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கையொப்பமான அணுசக்தி ஒப்பந்தம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எரிசக்தித் துறையில் இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியாவும் அமெரிக்காவும் கவனம் செலுத்தி வருகின்றன. அத்துறையிலும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதை அமெரிக்கா எதிா்நோக்கியுள்ளது’’ என்றாா்.



Read in source website

மராட்டிய பேரரசை நிறுவிய சத்ரபதி சிவாஜியின் பிறந்த தினத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினாா்.

பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘சத்ரபதி சிவாஜிக்கு அவரது பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன். அவருடைய வீரமும் நல்லாட்சிக்கு அவா் அளித்த முக்கியத்துவமும் நம்மை ஊக்கப்படுத்தும்’ எனத் தெரிவித்திருந்தாா்.

மக்களின் வாழ்கை எளிதாக்க பிரதமா் உறுதி:

லடாக்கில் அனைத்து காலங்களிலும் சாலை இணைப்பை உறுதி செய்யும் வகையில் 4.1கி.மீ. நீளம் கொண்ட ஷின்குன் லா சுரங்கப் பாதை கட்டுமான பணிக்கு, மத்திய அரசு ரூ.1681.51 கோடி ஒதுக்கீடு செய்தற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு லடாக் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் ட்விட்டரில் நன்றி தெரிவித்திருந்தாா்.

இது குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘லடாக் மக்களின் வாழ்க்கையை எளிதாக்க அனைத்து விதமான முயற்சிகளிலும் ஈடுபடுவோம்’ எனத் தெரிவித்திருந்தாா்.

வன உயிரினங்களின் பன்முகத்தன்மை அதிகரிப்பு:

தென் ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (சீட்டா) மத்திய பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவுக்குக் கொண்டுவரப்பட்டதை வரவேற்கும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்தா் யாதவ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தாா். இதற்கு ‘இத்தகைய மேம்பாட்டின் மூலம் இந்தியாவின் வன உயிரினங்களின் பன்முகத்தன்மை அதிகரிக்கும்’ என பிரதமா் மோடி ட்விட்டா் பதிவில் குறிப்பிட்டிருந்தாா்.



Read in source website

இந்திய மகளிர்ர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் இந்திய மகளிர் அணி அயர்லாந்து மகளிருடன் குரூப் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தப் போடியின் மூலம் ஹர்மன்ப்ரீத் புதிய சாதனையை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக போட்டிகளில் (150) விளையாடியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.இந்திய ஆடவர் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையையும் தாண்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்மிருதி மந்தனா 115 டி20 போட்டிகளில்  விளையாடியுள்ளார்.டாஸ் வென்றபோது இது குறித்து ஹர்மன்ப்ரீத், “இது மிகப் பெரியதாக உணர்கிறேன். எனது அணியில் இருந்து உணர்ச்சிகரமான வாழ்த்துகளை பெற்றேன். பிசிசிஐ, ஐசிசிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இன்னும் அதிகமான போட்டிகள் விளையாட உள்ளோம். 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்கள் விளையாடியவர்கள் பட்டியல்: 

1. ஹர்மன்ப்ரீத் - 150 போட்டிகள் 
2. ரோஹித் சர்மா- 148 போட்டிகள் 
3. சுசி பேட்ஸ் - 143 போட்டிகள் 



Read in source website

 

அதிக சர்வதேச ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 25,000 ரன்களுடன் 6-ம் இடத்தில் உள்ளார் இந்தியாவின் விராட் கோலி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது. இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டில் வெற்றி பெற்ற இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது. 

இந்த டெஸ்டில் 44, 20 என மொத்தமாக 64 ரன்கள் எடுத்தார் கோலி. இந்த டெஸ்டில் சர்வதேச கிரிக்கெட்டில் 25,000 ரன்களைக் கடந்தார் கோலி. டெஸ்டில் 8195 ரன்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 12809 ரன்களும் டி20யில் 4008 என மொத்தமாக 25,012 ரன்கள் எடுத்துள்ளார் கோலி. இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 25,000 ரன்களை வேகமாகக் கடந்த வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் கோலி. இவர் 549 இன்னிங்ஸிலும் சச்சின் 577 இன்னிங்ஸிலும் இந்த இலக்கை அடைந்துள்ளார்கள்.

அதிக சர்வதேச ரன்கள் எடுத்த பேட்டர்களின் பட்டியலில் 34,357 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் சச்சின் டெண்டுல்கர். சமகால வீரர்களில் கோலி 25,012 ரன்களும் இங்கிலாந்தின் ஜோ ரூட் 17800 ரன்களும் எடுத்துள்ளார்கள். இதனால் சச்சினின் 34,000 ரன்களைத் தொடுவது கடினம் என்று அறியப்படுகிறது. 

1989 முதல் 2013 வரை விளையாடிய சச்சின் தற்போது யாரும் தொட முடியாத உயரத்தில் உள்ளார். அப்படியே நெருங்கினாலும் கோலியால் மட்டுமே சாத்தியம். அவரும் இன்னும் எத்தனை ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவார் என்கிற கேள்வி உள்ளதால் சச்சின் சாதனையை நெருங்குவது அவ்வளவு சுலபமல்ல என்றுதான் கூறவேண்டும். 

அதிக சர்வதேச ரன்கள்

1. சச்சின் - 34357 ரன்கள்    
2. சங்கக்காரா - 28016 ரன்கள்
3. பாண்டிங் - 27483 ரன்கள்    
4. ஜெயவர்தனே - 25957 ரன்கள்    
5. காலிஸ் - 25534 ரன்கள்    
6. கோலி - 25012 ரன்கள்



Read in source website

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். 

அமெரிக்காவின் நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதன்படி, ரஷியா - உக்ரைன் இடையேயான போர் ஒரு வருடத்தை எட்டியுள்ளது.

இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல வகைகளில் உதவி வருகின்றன. 

போரின் இடையே உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, ஒருமுறை அமெரிக்கா சென்று ஜோ பைடனை நேரில் சந்தித்துப் பேசினார். 

இதையடுத்து ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். தலைநகர் கீவில், போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஜோ பைடனும் ஸெலென்ஸ்கியும் நடந்து செல்லும் விடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

ரஷியா - உக்ரைன் போர் ஓராண்டாக நீடித்து வரும் நிலையில் ஜோ பைடனின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.  



Read in source website

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சனிக்கிழமை சோதித்தது.

‘தனது அணு ஆயுதத் திறனுக்கு இந்த ஏவுகணை சோதனை மேலும் வலு சோ்த்திருப்பதாக’ அந்த நாடு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வடகொரியாவின் செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்திருப்பதாவது:

ஐசிபிஎம் வகையைச் சோ்ந்த ஹவாகாங்-15 ஏவுகணை, அதிபா் கிம் ஜோங் உன்னின் நேரடி உத்தரவில், எந்த முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக சோதித்துப் பாா்க்கப்பட்டது. நாட்டின் அணு ஆயுதப் படையின் தயாா்நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இந்த ஏவுகணை 5,770 கி.மீ. உயரத்தில், 990 கி.மீ. தொலைவுக்குப் பறந்தது. கொரிய தீபகற்பம்-ஜப்பான் கடல் பகுதியில் திட்டமிட்டிருந்த இலக்கை 67 நிமிஷத்தில் துல்லியமாகத் தாக்கியது எனத் தெரிவித்துள்ளது.

செங்குத்தான கோணத்தில் செலுத்தப்பட்ட இந்த ஏவுகணையை நிலையான பாதையில் செலுத்தினால் அமெரிக்காவின் நிலப்பரப்பை தாக்க முடியும்.

வரும் வாரங்களில் தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து தொடா் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன. அந்தப் பயிற்சிக்கு வடகொரியா எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்தக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்துப் பாா்த்துள்ளது.



Read in source website

புதுடெல்லி: சிபிஎம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான டி.கே.ரங்கராஜனுக்கு, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க உள்ளதற்கான அறிவிப்பினை பிரைம் பாயின்ட் ஃபவுண்டேஷன் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனமான பிரைம் பாயின்ட் ஃபவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் தலைவரான பிரைம் பாயின்ட் கே.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: ''பிரைம் பாயின்ட் ஃபவுண்டேஷன் மற்றும் சன்சத் ரத்னா விருதளிப்புக் குழு ஆகிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து 13 ஆண்டு காலமாக சன்சத் ரத்னா விருது வழங்கும் விழாக்களை நடத்தி வருகின்றன. நாடாளுமன்ற இரு அவைகளிலும் மிகச் சிறந்த பங்களிப்பை அனைத்துத் துறைகளிலும் வழங்கி, அதிக மதிப்பெண் புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு அகில இந்திய அளவில் 'சன்சத் ரத்னா' எனும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஆலோசனையின் பேரில் அவரைக் கொண்டே தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் 2023-ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்குரியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மிகச் சிறந்த நாடாளுமன்றவாதிகள், சான்றோர்கள் ஆகியோரின் பங்களிப்புகளைக் கொண்ட நடுவர் குழு, விருதாளர்களைத் தெரிவு செய்து அறிவித்து இருக்கிறது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் நடுவர் குழுத் தலைவராகவும், இந்தியத் தேர்தல் ஆணையரகத்தின் தலைமை ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இணைத் தலைவராகவும் இயங்கி, இந்தப் பட்டியலை தயாரித்துள்ளனர்.

அதன்படி, பொதுப் பிரிவில் ஒட்டுமொத்த செயல்பாட்டின் அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருதுக்கு பாஜக எம்.பி பரன் மகதோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜகவைச் சேர்ந்த சுகந்த மஜூம்தார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குல்தீப் ராய் ஷர்மா ஆகியோர் முதல்முறை எம்பி பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பெண்கள் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருதுக்கு பாஜகவைச் சேர்ந்த ஹீனா விஜயகுமாரும், விவாதங்களை தொடக்கிவைப்பதில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருதுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும், தனி நபர் மசோதாக்களை அதிக அளவில் கொண்டு வந்ததற்கான விருதுக்கு பாஜகவைச் சேர்ந்த கோபால் சினய்யா ஷெட்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், சிறப்பாக கேள்விகளை எழுப்பியவர்கள், ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டவர்கள் உள்ளிட்ட பிரிவுகளிலும் விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மிகச் சிறந்த நாடாளுமன்ற வாதியாகவும், பொதுவாழ்வில் நீண்ட காலம் இருக்கக்கூடியவராகவும் உள்ளவருக்கு ஆண்டுதோறும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த விருதுக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரான டி கே ரங்கராஜன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர்கள் அனைவருக்கும் விருதுகள் வழங்கும் விழா வரும் மார்ச் 25-ஆம் தேதி புதுடெல்லியில் நியூ மகாராஷ்டிரா சதன் மாளிகையில் நடைபெற உள்ளது'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகிய 2 விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் இந்தியா வசம் உள்ளன. 2021 டிசம்பரில் முழுமையான பழுது பார்ப்புக்காக, கர்நாடக மாநிலம் காவார் கடற்படை தளத்துக்கு விக்ரமாதித்யா போர்க்கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது.கடந்த 15 மாதங்களாக அக்கப்ப லில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. தற்போது மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் போர்க் கப்பல் மார்ச் முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது.

கடல் பரிசோதனை முடிந்த பிறகு மார்ச் 31 அன்று இந்தக் கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லடாக் எல்லைப் பகுதியில் சீனா பிரச்சினையில் ஈடுபட்டு வருகிற நிலையில், விக்ரமாதித்யா போர்க் கப்பல் மீண்டும் செயல்பாட்டுக்கு வருவது இந்திய ராணுவத்தின் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

இது சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்ட கப்பல் ஆகும். அப்போது இந்தக் கப்பலின் பெயர் அட்மிரல் கோர்ஷ்கோவ். இந்தப் போர்க் கப்பலை வாங்க இந்தியா 2004-ம் ஆண்டு ஒப்பந்தம்மேற்கொண்டது. மறுசீரமைப்புக்குப் பிறகு இந்தக் கப்பல் 2013-ல் இந்தியா வசம் வந்தது. இந்தியா இதற்கு ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்று பெயரிட்டது.



Read in source website

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மதிய உணவாக சிறுதானிய உணவு வகைகளை வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஐ.நா. சபை சார்பில் இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறுதானிய உணவு வகைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு கடந்த ஜன.1-ம் தேதி அறிவித்தது. இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மதிய உணவாக சிறுதானிய உணவு வகைகளை வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கு, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் சிறுதானியங்களை சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தேன். இதற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு நன்றி. இப்போது 12 மாவட்ட பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு வாரத்தில் 4 நாட்களுக்கு சோயா சிக்கிக்கு பதிலாக, சிறுதானியங்களை அடிப்படையாக கொண்ட உணவு வகைகள் பரிமாறப்படும்’ என்று பதிவிட்டுள்ளார்.



Read in source website

சென்னை: 15 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமகனான மகேரந்திர சிங் தோனி முதன்முதலில் சென்னை அணியில் இணைந்தார். முதல் சீசனுக்கான ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக தோனி அறியப்படுகிறார். அவரை சென்னை அணி அப்போது வாங்கியது.

2008-இல் இதே நாளில் தொடங்கிய இந்தப் பயணம் இத்தனை ஆண்டுகளை கடந்தும் அதே அளவில்லாத அன்புடன் நீடித்து வருகிறது. ராஞ்சி, தோனியின் தாய் வீடு என்றால் சென்னை அவரது இரண்டாவது தாய் வீடு என்று சொல்லலாம். அந்த அளவுக்கு கிரிக்கெட் மூலம் உன்னதமான உறவை இந்த மண்ணின் மக்களோடு உருவாக்கி வைத்துள்ளார்.

4 முறை ஐபிஎல் சாம்பியன், 2 சாம்பியன்ஸ் லீக், 11 ஐபிஎல் சீசனில் பிளே ஆப் சுற்று, கேப்டனாக அதிக வெற்றி, 4853 ரன்கள் குவித்துள்ளார் தோனி. சென்னை தனது இரண்டாவது தாய் வீடு என தோனியே சொல்லியுள்ளார்.

கரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சொந்த மண்ணான சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 7 போட்டிகளில் விளையாட உள்ளது. சொந்த மண்ணில் சென்னை அணி அதீத பலத்துடன் திகழும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மற்ற ஐபிஎல் அணிகளை எச்சரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தோனியின் கடைசி சீசனாக கூட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தனது கடைசி போட்டி சென்னையில்தான் இருக்கும் என அவரே முன்னர் ஒருமுறை சொல்லி இருந்தார்.



Read in source website

புதுடெல்லி: 2-ம் டெஸ்டில் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வேகமாக 25 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையைச் செய்தார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கள் 577 இன்னிங்ஸ்களில் 25 ஆயிரம் ரன்களை எடுத்தவர் என்ற சாதனையைச் செய்திருந்தார். தற்போது 549 இன்னிங்ஸ்களிலேயே 25 ஆயிரம் ரன்களை எட்டி சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.



Read in source website

பிரேசிலில் உள்ள ரியோ நிச்சயமாக பிரகாசமான கொண்டாட்டங்களில் ஒன்றைக் கொண்டிருப்பதாகத் தோன்றினாலும், திருவிழா இப்பகுதிக்கு மட்டுமே சொந்தமானது அல்ல.

வண்ணங்கள், இசை மற்றும் வாழ்வியல் நிறைந்த பிரேசிலின் ரியோ கார்னிவல் 2023 வருடாந்திர திருவிழா, பிப்ரவரி 17 அன்று தொடங்கியது. “உலகின் மிகப்பெரிய விழா” என்று விவரிக்கப்படும் இதில், உள்ளூர் அதிகாரிகளின் மதிப்பீடுகளின்படி, இந்த ஆண்டு 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவின் தோற்றம் மற்றும் அதன் ஒரு பகுதியாக என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.

கார்னிவலின் தோற்றம் மற்றும் வரலாறு

பிரேசிலில் உள்ள ரியோ நிச்சயமாக பிரகாசமான கொண்டாட்டங்களில் ஒன்றைக் கொண்டிருப்பதாகத் தோன்றினாலும், திருவிழா இப்பகுதிக்கு மட்டுமே சொந்தமானது அல்ல.

ஆன்லைன் Etymology Dictionary படி, ” Carnival என்ற வார்த்தை போர்த்துகீசிய மொழியான ‘ Carne Vale’ என்பதிலிருந்து உருவானது, இது ‘இறைச்சிக்கு விடை கொடுத்தல் என்று பொருள்படும்.”

உரத்த கொண்டாட்டங்கள் அதைக் குறிப்பிடவில்லை என்றாலும், அணிவகுப்புகள் மற்றும் நடனங்கள் உண்மையில் கிறித்தவர்களால் ‘தவக்காலம்’ என்று அழைக்கப்படும் உண்ணாநோன்பு காலத்திற்கு முன்னர் களியாட்டங்கள் மற்றும் இன்பம் நிறைந்த கடைசி கொண்டாட்டம் ஆகும். இந்த காலம் ஈஸ்டர் விடுமுறை வரை நீடிக்கும். தவக்காலம் பொதுவாக 40 நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. ரியோ கொண்டாட்டம் ‘சாம்பல் புதனுக்கு’ ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்குகிறது மற்றும் டிசம்பரில் பார்ட்டிகள் தொடங்கும்.

தவக் காலத்தின் முதல் நாள், சாம்பல் புதன் இந்த ஆண்டு பிப்ரவரி 22 அன்று ரியோவில் கார்னிவல் முடிவடையும் போது வருகிறது.

ரீடர்ஸ் டைஜஸ்ட் படி, பல தேவாலயங்கள் சாம்பல் புதன் ஆராதனையை நடத்துகின்றன, இதன் போது பாதிரியார் விரலை சாம்பலில் தோய்த்து, ஒவ்வொருவர் நெற்றியிலும் சிலுவை இடுவார்கள், நீங்கள் தூசி என்பதை நினைவில் கொள்ளுங்கள், மேலும் மண்ணுக்குத் திரும்புவீர்கள் என்று கூறுவார்கள்.

40 நாள் தவக் காலம், இயேசு கிறிஸ்து வனாந்தரத்தில் உண்ணாவிரதம் இருந்த கதையின் பிரதிபலிப்பு, அங்கு பிசாசு அவரை பலமுறை சோதித்தது. தவக்காலம் கிறிஸ்தவர்கள் சில பொருட்கள் அல்லது செயல்பாடுகளை, ஒருவேளை சாக்லேட்டுகள் அல்லது பிற ஆசைகளை கைவிடுவதையும், ஆன்மீகத்தில் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் ஒரு வகையான தனிப்பட்ட சோதனையாக பார்க்கிறது.

தி எகனாமிஸ்ட் கருத்துப்படி, ‘கார்னிவல்’ தோற்றம் முன்பே இருந்தது – எகிப்தில் உள்ள Pagans குளிர்காலத்தை வெளியேற்ற மற்றும் வசந்தத்தை வரவேற்பதற்கும் இதைக் கொண்டாடினர்.

அலெக்சாண்டர், எகிப்தைக் கைப்பற்றியவுடன், இந்த யோசனை ஐரோப்பாவிற்குச் சென்றது, அப்போதுதான் கிறிஸ்தவ சங்கங்கள் மேலெழுந்தன. தென் அமெரிக்காவின் ஐரோப்பிய காலனித்துவத்துடன், பாரம்பரியங்கள் ஒன்றிணைந்து பிரேசிலில் இன்று நாம் காணும் பிரமாண்டமான கொண்டாட்டங்களுக்கு வழிவகுத்தன.

சுமார் 50 நாடுகள் இந்த திருவிழாவை கொண்டாடுகின்றன. போர்த்துகீசியர் வருகைக்குப் பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பண்டிகை கோவாவிலும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் பாஞ்சிமில் உள்ள மண்டோவி ஆற்றின் அருகே கொண்டாட்டங்கள் நடந்தன. கோவா சுற்றுலாத் துறையின் கூற்றுப்படி, கிறிஸ்தவத்திற்கு முந்தைய காலத்தில், கார்னிவல் குளிர்காலத்தின் முடிவையும் வசந்த காலத்தின் தொடக்கத்தையும் குறித்தது.

கார்னிவல் கொண்டாட்டங்களில் என்ன இருக்கிறது?

blocos எனப்படும் தெரு பார்ட்டிகள் மற்றொரு முக்கியமான அம்சம். பின்னர் ஆப்ரோ-பிரேசிலிய மரபுகளின் கலவையான சம்பா நடனம் உள்ளது. இந்த நேரத்தில் நடனம் கற்பதற்காக பல சம்பா பள்ளிகள் தோன்றும்.

ரியோ மட்டுமே அதன் கொண்டாட்டங்களைக் கொண்ட நகரம் அல்ல, பல்வேறு பிரேசிலிய நகரங்கள் தங்கள் சொந்த அணிவகுப்புகளைக் கொண்டுள்ளன. பல லத்தீன் கார்னிவல்களில் திருவிழா அணிவகுப்பை வழிநடத்தும் பெரிய மனிதரான கிங் மோமோ முடிசூட்டுவது ஒரு சிறப்பம்சமாகும்.

கோவா சுற்றுலாத் துறையின் கூற்றுப்படி, கிங் மோமோ அல்லது ராஜா கேயாஸ், நையாண்டியின் கடவுளான கிரேக்க கடவுளான மோமுஸிடமிருந்து பெறப்பட்ட ஒரு பாத்திரம்.

கோவாவில் உள்ள கிங் மோமோவின் கோர்ட், பொதுவாக நெருப்பு சாகசம் செய்பவர்கள், நையாண்டி கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்குழுக்களால் நிரம்பி வழியும்.

கிங் மோமோவாக இருக்க விரும்பும் பெரிய உள்ளம் கொண்ட, ஜாலியான, வேடிக்கையாக விரும்பும் கோவா மக்களிடமிருந்து சுற்றுலாத் துறை விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பப் படிவம், அவர்கள் தங்களைப் பற்றி விவரித்து, அவர்கள் ஏன் கௌரவமான இடத்திற்கு மிகவும் பொருத்தமானவர்கள் என்பதைக் குறிப்பிடும்படி கேட்கிறது.

இதனிடையே கொரோனா தொற்றுநோய் காரணமாக, இதுபோன்ற பல பார்ட்டிகளும் திருவிழாக்களும் கட்டுப்பாடுகளுடன் மிகவும் அடக்கமாக இருந்தன. 2021 இல், நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன.

மற்ற இடங்களை போலவே, அதிகரித்த சுற்றுலா மற்றும் கொள்முதல் காரணமாக, பல பிரேசிலியர்கள் எதிர்பார்க்கும் பொருளாதார தாக்கம் இதில் உள்ளது, ரியோ அதன் பார்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சுமார் 1 பில்லியன் டாலர் வருவாயை எதிர்பார்க்கிறது என்று நகரின் சுற்றுலா ஏஜென்சியின் தலைவர் ரோனி கோஸ்டா AP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.



Read in source website

மனிதன் இறந்தும் உயிா்வாழ வழிகோலுகிறது உடல் உறுப்பு தானம். கண் தானத்துடன் நின்றுவிடாமல் சிறுநீரகம், ஈரல், கணையம், இதயம் உள்ளிட்ட பல்வேறு உறுப்பு தானங்களுக்கும் மருத்துவ அறிவியல் வழிகோலுகிறது. உறுப்பு மாற்று சிகிச்சை தொடா்பான விதிமுறைகளிலும், சட்டங்களிலும் மாறிவிட்ட சூழலுக்கு ஏற்றபடி மாற்றங்களைக் கொண்டுவர முற்பட்டிருக்கிறது மத்திய சுகாதார அமைச்சகம்.

முதலாவதாக, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான கோரிக்கை பலமடங்கு அதிகரித்திருக்கிறது. இரண்டாவதாக, உறுப்பு மாற்று சிகிச்சையை மேம்படுத்தி, தானம் கொடுப்பவருக்கும் பெறுபவருக்குமான பாதிப்பை கணிசமாகக் குறைத்திருக்கிறது மருத்துவ அறிவியல். அதனால், விதிமுறை மாற்றத்திற்கான தேவை அவசியமாகிறது.

அரசு புள்ளிவிவரத்தின்படி 2013-இல் 4,990 மட்டுமே இருந்ததுபோய், 2022-இல் 15,561 உறுப்பு மாற்று சிகிச்சைகள் இந்தியாவில் நடந்திருக்கின்றன. அவற்றில் பெரும்பகுதி, அதாவது 11,423 சிறுநீரக மாற்று சிகிச்சைகள். ஆண்டொன்றுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான சிறுநீரக செயலிழப்பு நிகழும் நிலையில், சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான விதிமுறைகளை மாற்றி அமைப்பது அவசியமாகிறது. இதேபோலத்தான் ஈரல், கணையம், இதய மாற்று சிகிச்சைகளின் தேவைகளும்.

ஈரல், சிறுநீரகம், நுரையீரல், இதயம், கணையம் ஆகியவற்றின் பாதிப்பால் ஆண்டுதோறும் 5 லட்சத்துக்கும் அதிகமானோா் இந்தியாவில் உயிரிழக்கிறாா்கள். கல்லீரல் மாற்றத்துக்காகக் காத்திருப்போா் 80,000 என்றால், தானமாகக் கிடைத்தது என்னவோ 3,000 மட்டும்தான். இதய மாற்று சிகிச்சைக்கு 10,000-க்கும் அதிகமான நோயாளிகள் காத்திருக்கும் நிலையில், கடந்த ஆண்டு 250 இதய மாற்று சிகிச்சைகள்தான் செய்ய முடிந்தது.

கடந்த ஆண்டு இந்தியாவில் 15,561 உறுப்பு மாற்று சிகிச்சைகள் நடந்தன என்றால், அவற்றில் 12,796 உறவினா்களோ, நண்பா்களோ தானம் செய்தவை. 2,765 பேருடைய உறுப்புகள் அவா்களது மரணத்துக்குப் பிறகு பயன்படுத்தப்பட்டவை. உறுப்பு மாற்று சிகிச்சை கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது என்றாலும், தேவைக்கான உறுப்பு தானங்கள் அதே அளவில் அதிகரிக்கவில்லை.

மக்கள் மத்தியில் காணப்படும் பல மூடநம்பிக்கைகளும், தவறான கருத்துகளும் உடல் உறுப்பு தானத்தை தடுக்கின்றன. தங்களது ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்கிற அச்சத்தால் பலரும் உறுப்பு தானம் செய்யத் தயங்குகிறாா்கள். மாநில அரசுகளும், சமூக ஆா்வலா்களும் மக்கள் மத்தியில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதன் மூலம்தான் இந்தத் தயக்கத்தை மாற்ற முடியும்.

கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ரத்த தானம் வழங்க பெரும்பாலானோா் தயங்கினாா்கள். இப்போது நாடு தழுவிய அளவில் ரத்த தான முகாம்கள் நடத்தப்படுவதும், ரத்த வங்கிகள் செயல்படுவதும் சாதாரணமாகிவிட்டது. தங்களது மரணத்துக்குப் பிறகு தங்களது கண்களை தானம் செய்யப் பலரும் பதிவு செய்வதை கடமையாகக் கருதும்போக்கு அதிகரித்து வருகிறது. இதே நிலைமை ஏனைய உறுப்பு தானங்களுக்கும் ஏற்பட விழிப்புணா்வு உருவாக்கப்படுவது அவசியம்.

உறுப்பு மாற்று சிகிச்சைக்கு வயது வரம்பு தேவையில்லை என்பது மிக முக்கியமான விதிமுறை மாற்றம். முன்பு 65 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டது. அதிகரித்த சராசரி வயதைக் கருதியும், பதிவு செய்பவா்களில் 40% நோயாளிகள் 65 வயதைக் கடந்தவா்கள் என்பதாலும் வயதுவரம்புக்கான விதிவிலக்கை அகற்றுகிறது புதிய விதிகள்.

உடல் உறுப்பை தானம் செய்வதற்கும், அதைப் பெறுவதற்கும் தேசிய அளவில் தளம் ஒன்றை உருவாக்க தீா்மானித்திருக்கிறது மத்திய சுகாதார அமைச்சகம். உறுப்பு தானம், உறுப்பு பெறுதல் ஆகியவற்றுக்கான பதிவுக்கு சில மாநிலங்கள் கட்டணம் வசூலிக்கின்றன. அதை அகற்றவும் முடிவெடுத்திருக்கிறது புதிய விதிமுறை.

உடல் உறுப்பு தானத்திலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலும் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஏனைய மாநிலங்கள் பல உறுப்பு தானம் - உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு செயல்திட்டங்களை வகுக்கின்றன.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் 80% தனியாா், காா்ப்பரேட் மருத்துவமனைகளில்தான் நடைபெறுகின்றன. சாமானியா்களுக்கும் பயன்படும் விதத்தில் அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்வதற்கு காப்பீட்டுத் திட்ட ஒதுக்கீடு இருந்தாலும்கூட, பெரும்பாலான மாநிலங்கள் அதை கேட்டுப் பெறுவதில்லை. மத்திய - மாநில காப்பீட்டுத் திட்டங்கள் ஓரளவு உதவுகின்றன என்றாலும், உறுப்புகளைப் பெறுவதற்கும், அறுவை சிகிச்சைக்குப் பிறகுள்ள தொடா் சிகிச்சைகளுக்கும் வழிகோலப்படுவதில்லை.

அரசு சுகாதாரத் துறையின் கண்காணிப்பு அமைப்புகள் முறையாகச் செயல்படுவதில்லை. உடல் உறுப்பு வணிகத்தில் ஈடுபடும் சமூக விரோத அமைப்புகள் ஏழைகளையும், உடல் உறுப்புக்காகக் காத்திருக்கும் அப்பாவி நோயாளிகளையும் ஏமாற்றி பெரும் லாபம் ஈட்டுகின்றனா். சட்ட ரீதியான உறுப்பு தானத்தை எளிமைப்படுத்தும் அதே நேரத்தில், சட்டவிரோதமான உறுப்பு தான வணிகத்தை கடுமையாக தண்டிப்பதற்கான சட்ட வழிமுறைகளையும் இணைக்க வேண்டியது மிகமிக அவசியம்.

தனியாா், காா்ப்பரேட் மருத்துவமனைகளில் நடைபெறும் உறுப்பு தான அறுவை சிகிச்சைகள் அரசின் கண்காணிப்புடன் நடத்தப்படுவதும், அரசு மருத்துவமனைகளில் உறுப்பு தான அறுவை சிகிச்சைகள் நடப்பதை அதிகப்படுத்துவதும்கூட மத்திய - மாநில அரசுகளின் முனைப்பாக இருக்க வேண்டும்.



Read in source website

உள்நாட்டிலோ, உள்ளூரிலோ தங்கள் தகுதி அல்லது தேவைக்கு ஏற்ற வேலை கிடைக்காதவர்கள் வேற்றிடங்களில் கிடைக்கின்ற வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பொருள் ஈட்டுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. சரித்திரக் காலங்களிலேயே தமிழ் மக்கள் கடல் கடந்து சென்று வணிகம் செய்து பொருள் ஈட்டியிருக்கின்றனர்.

பர்மா, இலங்கை, மலேசியா, இந்தோனேஷியா, மோரீஷஸ், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் கடந்த சில நூற்றாண்டுகளாகத் தமிழகத்தைச் சேர்ந்த பலரும் குடும்பம் குடும்பமாகச் சென்று குடியேறியதுடன் தங்களின் கடும் உழைப்பால் அந்நாடுகளின் பொருளாதாரச் செழிப்புக்கும் பங்காற்றி வருவது கண்கூடு.

கடந்த நூற்றாண்டில் அமெரிக்கா உள்ளிட்ட பிற கண்டங்களுக்கும், ஆசியாவிலுள்ள வளைகுடா நாடுகளுக்கும், சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளுக்கும் தொழில் நிமித்தமாக பல லட்சம் இந்தியர்கள் செல்லத் தொடங்கியது இன்று வரை தொடர்கின்றது.

இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் பிற மாநிலங்களூக்குச் சென்று பணிபுரிந்து பொருள் ஈட்டுவது காலம் காலமாக நடக்கின்ற ஒன்றுதான்.

ஆனால், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளிகளின் வருகை பெருமளவில் இருப்பதாகவும், அவர்களின் வரவினால், தமிழகத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறையத் தொடங்கி இருப்பதாகவும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. அச்சு ஊடகம், காட்சி ஊடகம் மட்டுமின்றி சமூக ஊடகங்களிலும் இத்தகைய செய்திகள் பெரிய அளவில் பேசப்படும் பொழுது சமூகத்தில் கொந்தளிப்பும், வெறுப்புணர்வும் கிளர்ந்தெழுவது இயல்பானது.

குறிப்பாக சென்னைக்கு ரயில் மூலம் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் வந்து இறங்குவதாகவும், அவர்களால் தமிழகத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைவது மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்பட்டதாக உலாவரும் காணொலிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. 

சமீபத்தில் திருப்பூரில் சில வடமாநிலத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தமிழர் ஒருவரைத் தாக்கியதாக வெளிவந்த செய்தி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதுடன் வட இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிரான சிந்தனையைத் தமிழகத் தொழிலாளர்களிடையே விதைக்கவும் முற்பட்டது.

அக்காணொலிச் செய்திகள் பொய்யானவை என்று மறுத்த மாவட்ட நிர்வாகம், தொழிலாளர்களிடையே அமைதியை நிலைநாட்ட முற்பட்டது வரவேற்கத்தக்கது.

மேலும், ரயிலில் பயணம் செய்யும் வடமாநிலத் தொழிலாளர்களைப் பார்த்துத் தமிழர் ஒருவர் கடுமையாக ஏசுவது போன்ற காணொலியும் சமூக ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய வெறுப்புக் காணொலியை வெளியிட்டவருக்கு எதிராக ரயில்வே பாதுகாப்புப் படை நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உணவு விடுதிகள், கட்டடத் தொழில் நடக்குமிடங்கள் போன்றவற்றில் வடமாநிலத் தொழிலாளர்களை அதிக எண்ணிக்கையில் நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் செங்கல் சூளைகள், நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள் போன்றவற்றிலும் ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது. 

வடமாநிலங்களிலிருந்து வரும் கூலித்தொழிலாளர்கள் தாங்கள் தங்குவதற்கான குறைந்தபட்ச வசதிகளுடன், குறைவான கூலியைப் பெற்றுக்கொண்டு அதிக நேரம் உழைக்கின்றார்களாம். இந்தக் காரணத்தினால் பெரும்பாலான முதலாளிகள் தமிழர்களை விட வடமாநிலத் தொழிலாளர்களையே பணியில் அமர்த்த விரும்புவதாகக் கூறப்படுகிறது. 

இந்தச் செய்தி உண்மை என்றால், குறைந்த கூலிக்கு அதிக வேலை வாங்கி உழைப்புச் சுரண்டலை மேற்கொள்ளும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப் படவேண்டுமே அல்லாமல், அத்தகைய சுரண்டலுக்கு உள்ளாகும் வடமாநிலத் தொழிலாளர்களின் மீது வெறுப்புணர்வை வளர்த்துக் கொள்வது சரியாக இருக்காது. எதிர்காலத்தில் அதே முதலாளிகள் வடமாநிலத் தொழிலாளிகளைச் சுட்டிக்காட்டித் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளிகளைச் சுரண்டவும் அனுமதிக்கக்கூடாது.

இது மட்டுமின்றி, தமிழகத்தில் செயல்படும் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பிற மாநிலங்களைச் சேர்ந்த தமிழ் பேசத் தெரியாத பணியாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் பணிபுரிவதும் அதிகரித்து வந்துள்ளது. அன்றாடம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இத்தகைய அலுவலகங்களில் உள்ளூர் மொழியாகிய தமிழில் பேசத் தெரியாதவர்கள் பணிபுரிவது பொதுமக்கள் தொடர்பில் தேவையற்ற சிக்கல்களை உண்டாக்கக் கூடும்.

இந்நிலையில், இந்தியா முழுவதிலும் பணியாற்றும் தேவை உள்ள அதிகாரிகள் நிலையில் உள்ளவர்கள் தவிர, பிற பணியாளர்களாக அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களையே  தகுதியின் அடைப்படையில் தேர்ந்தெடுத்துப் பணியமர்த்தும் வகையில் தேர்வு விதிகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும். இதனால் பல்வேறு மொழிகளைப் பேசும் இந்தியக் குடிமக்களிடையே வெறுப்புணர்வு உருவாகாமல் இருக்கும். 

உலகமே ஒரு குடும்பம் என்ற கருத்தியல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில், நமது தமிழ்மண்ணில் வடமாநிலத் தொழிலாளர்களின் வரவால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை உணர்ச்சி வசப்படாமல் ஆராய்ந்து, குறைகளைக் களைய முற்படுவதே நல்லது. 

அதனை விடுத்து, தங்களின் வாழ்வாதாரங்களைத் துறந்து, தங்கள் குடும்பங்களுடன் தமிழகத்திற்கு வந்து தங்கிப் பணிபுரிவதுடன் உழைப்புச் சுரண்டலுக்கும் ஆளாகும் வடமாநிலத் தொழிலாளர்களிடம் வெறுப்புணர்வை வளர்ப்பது, தேவையற்ற எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். 



Read in source website

இன்றைக்கு சமூக ஊடகங்கள் தகவல் களஞ்சியங்களாக இருக்கின்றன. அன்றாடம் லட்சக்கணக்கான காணொலிகள் வெளியாகின்றன. நிமிடத்திற்கு நிமிடம் புதிய தகவல்கள், செய்திகள் நமக்கு வந்து சேருகின்றன. உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்வது சாத்தியமாகி இருக்கிறது. 

ஆனால் இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் எல்லாம் நம்பத்தகுந்தனவா என்றால் இல்லை என்பதே உண்மை நிலை. கொட்டிக்கிடக்கும் தகவல்களில் எது உண்மை, எது பொய் என்பதை ஆராயப் புகுந்தால் மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதையாகவே முடியும். 

சமீபத்தில் ஒரு காணொலியைப் பார்க்க நேர்ந்தது. அதிலே ஒருவர், "இராமாயணம், மஹாபாரதம் எல்லாம் கட்டுக்கதைகள். இராமாயணத்தைத் தமிழர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான் அறிந்து கொண்டார்கள். கம்பர் எழுதும் வரை தமிழர்களுக்கு இராமாயணம் தெரியாது. இராமாயணம் கிரேக்க இலக்கியத்தைத் தழுவி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது' என்று அடுக்கிக் கொண்டே போகிறார். இது எத்தகைய பொய் அல்லது அறியாமை?

இந்தியாவைப் பொறுத்தவரை இராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரண்டு இலக்கியங்கள் மட்டுமே இதிகாசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. "இதிகாசம்' என்றால் "இப்படி நடந்தது' என்று சொல்லும் நூல். அதாவது, நடந்த வரலாற்றைப் பதிவு செய்வது. இராமாயணம் இராமரின் சரிதத்தைச் சொல்வது. அவரது சமகாலத்தில் வாழ்ந்த வால்மீகி முனிவரால் பதிவு செய்யப்பட்டது.

வால்மீகி இராமாயணத்தில் அடுக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள், மன்னர் பரம்பரை, பாரத தேசத்தின் வரைபடம், பாரதத்தின் தென்பகுதி மன்னர்கள், நகரங்கள், இடங்கள் வரை அனைத்துத் தரவுகளும் தரப்பட்டுள்ளன. கதையாக இருப்பின் இராமரின் மூதாதையர்களின் வரிசை தேவையற்றது. ஆனால், வால்மீகி மகரிஷியே இராமரின் அறுபது தலைமுறையினரையும் பட்டியலிட்டுச் சொல்கிறார்.

கபாடபுரம், சேதுக்கரை என்று தமிழகத்தின் நிலவியல் பேசப்பட்டிருக்கிறது. அயோத்தி மற்றும் உத்தர பிரதேசம், ஒடிஸô போன்ற பிரதேசங்களின் நிலவியல் அமைப்பு நதிகள், வனங்கள் என மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. காலம் பற்றிய செய்தி மிகத் துல்லியமாகத் தரப்பட்டுள்ளது. சமூக ஊடகத்தில் இராமாயணம் பற்றிய தன்னுடைய தவறான கருத்தைப் பதிவு செய்தவர் உண்மையில் இராமாயணத்தைப் படித்திருந்தால் இந்தத் தகவல்களையெல்லாம் அறிந்திருப்பார். 

அதே போல, தமிழில் இராமாயணம் பற்றி சங்க இலக்கியங்களில் எந்தக் குறிப்பும் இல்லை என்பதையும் அவர் சொல்லி வைக்கிறார். சங்க இலக்கியமோ, வரலாறோ எதையுமே தெரிந்து கொள்ளாமல் தான் நம்பும் சித்தாந்தத்திற்கு ஏற்ப கருத்துகளைத் திரித்துச் சொல்வது, உண்மைக்குப் புறம்பான செய்திகளை உண்மை என்று நம்பச் செய்வது என சமூக வலைதளங்கள் அவரவர் வசதிக்கு வளைந்து கொடுக்கின்றன. எதையும் உண்மை போலப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு, சமூக வலைதளங்களில் முழுமையாக இருக்கிறது.

அந்த உரையைக் கேட்கும்போதே நமக்குத் திருவாலங்காட்டு கல்வெட்டு நினைவுக்கு வருகின்றது. முதலாம் ராஜேந்திர சோழன் தன்னுடைய தந்தையான ராஜராஜசோழனின் பெருமையைப் பற்றிச் சொல்லுமிடத்து அவரை இராமரோடு ஒப்பிட்டுச் சொல்கிறார். பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை தமிழர்களுக்கு இராமாயணம் வந்து சேரவில்லை என்பது உண்மையாயின் அதற்கு முன் வாழ்ந்த ராஜேந்திர சோழன் இராமர் பற்றி எப்படிக் குறிப்பிட்டார்? 

ராகவர்களின் நாயகன் குரங்குகளின் உதவியோடு கடலில் அணையைக் கட்டி, மிகுந்த சிரமத்துடன் இலங்கை அரசனை கூரிய அம்புகளால் கொன்றான். ஆனால், இந்த வீரத்தளபதி கப்பல்கள் மூலம் கடலைக் கடந்து இலங்கையை எரித்தானே, இராமனைக் காட்டிலும் இவனே சிறந்தவன் என்று திருவாலங்காட்டுச் செப்பேட்டில் எழுதி வைத்துள்ளார் ராஜேந்திர சோழன்.

கம்பர் இராமாயணத்தை எழுதியதற்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தச் செப்பேடு எழுதப்பட்டுவிட்டது. 

அதோடு, ராஜேந்திர சோழனது காலத்தில் இராமர் ஆலயங்கள் இருந்ததற்கும் கல்வெட்டுச் சான்றுகள் ஏராளம் இருக்கின்றன. ராஜேந்திர சோழருக்கும் முன் அவரது தந்தையார் இராமாயணம் படிக்க நிவந்தங்கள் கொடுத்ததற்கான சான்றும் இருக்கிறது. பத்தாம் நூற்றாண்டில் இராமர் ஆலயங்களுக்கு நிவந்தங்கள் தந்த சான்றுகளும் உள்ளன. இராமாயணம் என்றால் என்னவென்றே தெரியாத காலத்திற்கு முன் வாழ்ந்த தமிழர்கள் இராமருக்கு ஆலயம் கட்டி வழிபட்டது எப்படி?

ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர், சோழ அரசன் இளஞ்சேட் சென்னி வஞ்சிப் போரில் வென்ற செய்தியைப் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்த அரசன் ஏராளமான ஆபரணங்களை அவருக்குப் பரிசாக வழங்கினான். அதனை வறுமையில் வாடிய புலவரின் குடும்பத்தார் எப்படி அணிந்து கொள்வது என்று தெரியாமல் மாற்றி மாற்றி அணிந்து கொண்ட காட்சியைப் புலவர் இராமாயணக் காட்சியோடு ஒப்பிட்டுப் பாடுகிறார்.

கடுந்தெறல் இராமன் உடன் புணர்                 சீதையை
வலித்த கை அரக்கன் வெளவிய                     ஞான்றை
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழை பொலிந்து              ஆங்கு  (புறம்: 378)  

இராமனுடன் காட்டுக்கு வந்திருந்த சீதையை இராவணன் கவர்ந்து  சென்றான். அவள் இராமனுக்கு, தான் செல்லும் வழியை உணர்த்துவதற்காக, தான் அணிந்திருந்த அணிகலன்களை ஒவ்வொன்றாக ஆங்காங்கே நிலத்தில் போட்டுக் கொண்டே சென்றாள். அவள் அணிந்திருந்ததைப் பார்த்த செங்குரங்குகள் அவற்றை எடுத்து எதனை எங்கு அணிவது என்று தெரியாமல் தாறுமாறாக அணிந்துகொண்டது போல் இருந்ததாம்.

அகநானூற்றின் எழுபதாவது பாடல், 

வென்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கு இரும் பெளவம் இரங்கும் 
            முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே 

என்று இராமரைக் கொண்டாடுகிறது.

"தலைவன் திருமணம் செய்துகொள்ள வந்துவிட்டான். அவனையும் உன்னையும் இணைத்து அலர் தூற்றிய ஊரார் வாய் அடங்கிவிட்டது' என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள். இது செய்தி. ஊர் வாய் அடங்கியதற்குக் காட்டப்படும் உவமைதான் இராமனைப் பற்றிய செய்தி. இராமன் தன் வெற்றிக்குப் பின் பாண்டியரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தனுஷ்கோடி வந்தடைந்தான். முழங்கிக்கொண்டிருக்கும் கடல் இரக்கத்தோடு காணப்பட்டது. 

அங்கு ஆறு கடலோடு கலக்கும் முன்றுறை (முன் துறை) ஓரத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. அந்த மரத்தடியில் அமர்ந்துகொண்டு இராமன் மறைகளை ஓதிக்கொண்டிருந்தார். அப்போது பல விழுதுகளை உடைய அந்த ஆலமரம் ஓயாத ஒலியை நிறுத்திக் கொண்டது. 

அதாவது ஆலமரத்துப் பறவைகள் ஒலிப்பதை மறந்து கேட்டுக்கொண்டிருந்தன. இப்படி இராமாயணக் காட்சிகளை நுட்பமான உவமையாகக் காட்டும் அளவுக்கு மக்கள் மனங்களில் இராமாயணமும் அதன் மாந்தர்களும் இடம்பெற்றிருந்துள்ளனர்.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இன்னும் தெளிவாக இராமரை திருமாலின் அவதாரம் என்றே குறிப்பிடுகிறார்.

"தாவிய சேவடி சேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த' என இலங்கையை தம்பியுடன் அழித்தவனே என்று இராமரைக் கூறுவதோடு, "நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ' என்ற வரிகளால் இராமாயணம் அனைவரும் அறிந்ததே என்றும் வெளிப்படுத்துகிறார். இந்த உண்மைகள் மறைக்கப்பட்டு சங்க இலக்கியங்களில் இதிகாசச் செய்திகளே இல்லை என்பது போலப் பேசுவது அறியாமை. அதனை உண்மை என்று பாமர மக்கள் நம்புவதற்கு இடம் இருக்கிறது.

இப்படி ஓர் உண்மையற்ற கருத்து பல லட்சம் பேரை எளிதாகச் சென்று சேர்ந்துவிடுகிறது. முன்வைக்கப்படும் கருத்துகளுக்கு ஆதாரங்களைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்ற கட்டற்ற சுதந்திரம். தணிக்கை இல்லை. 

தர்க்க சாஸ்திரம் என்றே நேருக்கு நேர் உண்மைகளை சித்தாந்தங்களைப் பேசி விவாதித்து உண்மை தெளிந்த நம் தேசத்தில் தற்பொழுது இத்தகைய பொய் பரப்புரைகள் மலிந்து காணப்படுவது வருத்தத்திற்குரியது. இத்தகைய இடர்ப்பாடுகளைக் களைய நாம் மேற்கொள்ள வேண்டியது யாது? எங்ஙனம் நம் கைகளுக்கு வந்திருக்கும் செய்தி உண்மை என்பதைத் தெரிந்து கொள்வது? யாருடைய செய்திகளை நம்புவது? எழுதப்படும் அல்லது பேசப்படும் செய்தியின் நம்பகத் தன்மைக்கு வழி என்ன? இடர் தோன்றும் பொழுதே அதற்கான தீர்வுகளும் தோன்றிவிடுகின்றன என்பதே பாரத தேசத்தில் நம்பிக்கை. 

ஆதாரங்களோடு தகவல்கள் தரப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். நாமே அதற்கான ஆதாரங்களைத் தேடி சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதை மனத்தில் இருத்தி தேவையான விஷயங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தர வேண்டும். எச்சரிக்கை அவசியம். 

இதற்கும் நம் பழந்தமிழ் இலக்கியமான நாலடியார் தெளிவாக வழி காட்டியிருக்கிறது.

கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கிற் பிணி பல தெள்ளிதின்
ஆராய்ந்த் தமைவுடைய கற்பவே 
            நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து 

அன்னப்பறவை நீரை நீக்கிப் பாலை மட்டும் அருந்துவதைப் போல தரமுடையவற்றை மட்டும் ஆராய்ந்து ஏற்று கற்றுக் கொள்ள வேண்டும். இலக்கியமும் வரலாறும் கற்பது வருமானத்திற்கல்ல, உண்மை தெளிவதற்கு என்ற புரிதலோடு அணுகினால் உண்மை கண்டு தெளிவது எளிதாகும்.

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.



Read in source website

தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு மின் வாகனக் கொள்கை 2023’-ஐ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 14 அன்று வெளியிட்டார். மின் வாகன உற்பத்தித் துறையில் ரூ.50 ஆயிரம் கோடி அளவிலான முதலீடுகளையும் 1.50 லட்சம் வேலைவாய்ப்பையும் உருவாக்குவதை இக்கொள்கை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது.

மோட்டார் வாகனங்கள், அவற்றின் உதிரி பாகங்கள் ஆகியவற்றுடன், மின் வாகன உற்பத்தியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தியாவில் அதிக வாகனங்களைக் கொண்ட மூன்றாவது பெரிய மாநிலமாக, தமிழ்நாட்டின் வாகனச் சந்தை மிகப் பெரிய சாத்தியங்களை உள்ளடக்கியிருக்கிறது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 40 ஆண்டுகளில் மாநிலத்தை மிகப் பெரிய அளவில் (சுமார் 50%) நகர்மயமாக்கியிருக்கிறது; இந்த ஆண்டுகளில் நீடித்த வாகனத் தேவை என்பது ஆண்டுதோறும் 11.64%ஆக இருந்துவந்தது. இந்நிலையைத் தக்கவைத்து மேம்படுத்தவும், மாறிவரும் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப மின் வாகன உற்பத்தித் துறையில் உள்ள சவால்களைத் திறமையுடன் எதிர்கொள்ளவும் மின் வாகனக் கொள்கை வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Read in source website

வரலாற்றுத் தடங்களைப் பின்தொடர்வது மிகுந்த சவாலானது. ஒரே நிகழ்வு குறித்து வெவ்வேறு தரவுகள் கிடைக்கும். முறையான ஒப்பீடு, நுட்பமான சரிபார்த்தலுக்குப் பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும். தென்னிந்தியாவில் சுதந்திரப் போரை வழிநடத்திய சிவகங்கைப் பிரதானி சின்ன மருதுவின் மகனான துரைசாமி குறித்த தகவல்கள் அப்படியானவைதான்.

1802இல் பினாங்குக்கு நாடுகடத்தப்பட்ட 73 பேரில் ஒருவர் துரைசாமி. நாடுகடத்தப்பட்டவர்களின் நிலைகுறித்து உறுதியான தரவுகள் கிடைக்காத நிலையில், 11 பேர் மட்டும் நாடு திரும்பி திருநெல்வேலி பகுதிக்கு வரவிருந்ததைப் பற்றி பிரிட்டிஷ் ஆவணம் ஒன்று இருக்கிறது. துரைசாமி பினாங்கிலிருந்து விடுதலை பெற்று நாடு திரும்பினாரா இல்லையா என்ற கேள்விக்குப் பல ஊகங்கள் முன்வைக்கப்பட்டன.



Read in source website

காதலும் அதற்கு எதிர்ப்பும் எப்போதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போலத் தொடர்வது வரலாறு. ஓர் ஆண் ஒரு பெண் மீது/ஒரு பெண் ஓர் ஆண் மீது கொள்ளும் தனித்த வகை அன்பைக் காதல் என்கிறோம். மூன்றாம் பாலினத்தவர் காதலும் திருமணமும் சமூக அங்கீகாரத்தைப் பெறும் சூழல் உருவாகியிருக்கிறது. பாலியல் ஈர்ப்பு என்பது இயற்கையானது. அது காப்பாற்றி வளர்க்கப்பட்டு கல்யாணம் வரைக்கும் போக வேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை. போனால் மட்டுமே அது ‘வெற்றி பெற்ற காதல்’ என்று சமூகம் மதிக்கிறது. திருமணத்தில் முடியாத எத்தனையோ காதல்கள் அமரக் காதல்களாகி பல காவியங்களால் பாடப்பெற்றுள்ளன.



Read in source website