DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 19-12-2022

பயிர் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு உழவர் நலன் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு உடனடியாக தெரிவிக்கும் வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறை பல்வேறு வேளாண் விரிவாக்க சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது அனைத்து விவசாயிகளிடமும் கைபேசி உள்ளதால், வேளாண்மை தொடர்பான பல்வேறு தகவல்களை கைபேசி மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது தான் உழவன் செயலி.

உழவன் செயலியின் நோக்கம் :
பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு,
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மானிய திட்டங்கள், விளைச்சல் அதிகரிக்கும்
தொழில்நுட்பங்கள் போன்று பல்வேறு இடங்களுக்கு சென்று தெரிந்துகொள்ள
வேண்டிய தகவல்களையும் விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைப்பதற்கான வழிமுறைகளையும் விவசாயிகளின் கைபேசி மூலமாக வழங்குவதே உழவன் செயலியின் முக்கிய நோக்கமாகும்.

உழவன் செயலியின் சிறப்பம்சங்கள் :

கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் 9 முக்கிய சேவைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலி புதுப்பிக்கப்பட்டு, தற்போது 22 வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இச்செயலியில் உள்ள சேவைகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடையே பிரபலமாகிவரும் உழவன் செயலியினை இதுவரை, சுமார் 12,70,000 பயனாளிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

உழவன் செயலி மூலம் வழங்கப்படும் சேவைகள்

1. மானியத் திட்டங்கள்: வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் பற்றிய தகவல்கள்.

2.இடுபொருள் முன்பதிவு: வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான இடுபொருட்களையும் பெறுவதற்கு பதிவு செய்திடலாம்.

3. பயிர் காப்பீடு விபரம்: அறிவிக்கப்பட்ட (Notified) கிராமங்களுக்கு பயிர் வாரியான காப்பீட்டுக் கட்டணம், காப்பீடு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள், அணுக வேண்டிய இடங்கள் மற்றும் பயிர்க்காப்பீட்டின் தற்போதைய நிலை பற்றிய தகவல்கள்.

4. உரங்கள் இருப்பு நிலை: தனியார், கூட்டுறவு விற்பனை நிலையங்களில் உள்ள இரசாயன உரங்களின் இருப்பு, விலை பற்றிய விவரங்கள்.

5. விதை இருப்பு நிலை: வேளாண்மை, தோட்டக்கலைத் துறைகளில் உங்கள் அருகில் உள்ள கிடங்கில் தினசரி விதை இருப்பு மற்றும் கன்றுகள் இருப்பு.

6. வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு: வேளாண் பொறியியல் துறை மற்றும் விவசாயிகளிடம் வாடகைக்கு உள்ள இயந்திரங்கள், வாடகை, வாடகை முன் பதிவு பற்றிய விவரங்கள்.

7. சந்தை விலை நிலவரம்: ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், உழவர் சந்தைகளில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் காய்கறிகளின் தினசரி சந்தை விலை.
8. வானிலை அறிவுரைகள்: மாவட்ட வாரியாக தினசரி வானிலை முன்னறிவிப்பு மற்றும் தமிழ் மொழியில் உள்ளூர் வானிலையாளர் அன்றாடம் வழங்கும் வானிலை முன்னறிவிப்பு.

9. உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்: உங்கள் கிராமங்களுக்கு வருகை தரும் உதவி வேளாண்மை/தோட்டக்கலை அலுவலர்களின் பெயர், கைபேசி எண், போன்ற விவரங்கள்.

10. அணை நீர்மட்டம்: தமிழகத்தின் முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் மேட்டூர்
நீர்த்தேக்கத்திற்க்கு ஆதாரமாய் விளங்கும் கர்நாடகாவின் உள்ள நான்கு முக்கிய அணைகளின் தினசரி நீர் அளவு.

11. வேளாண் செய்திகள்: வேளாண்மை தொடர்பான அறிவிப்புகள், துறையின் பத்திரிக்கை வெளியீடு, தொழில்நுட்பங்கள், விலை முன்னறிவிப்புகள்.

12. கருத்துக்கள்: திட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

13. என் பண்ணை வழிகாட்டி: வேளாண், தோட்டக்கலை பயிர்களுக்கு விதைப்பு முதல் அறுவடை வரை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள்.

14. இயற்கை பண்ணை பொருட்கள்: அங்கக முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் சான்றளிப்பு முகமைகள் பற்றிய விவரங்கள்.

15. FPO தயாரிப்புகள்: உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் விவரங்கள், அவர்களின்

தயாரிப்புகள் பற்றிய தகவல்கள்.

16. பூச்சி/நோய் கண்காணிப்பு/ பரிந்துரை: பூச்சி, நோய் மேலாண்மைக்கு தேவையான பரிந்துரைகள்.

17. ATMA பயிற்சி மற்றும் செயல்விளக்கம்: அட்மாத் திட்டத்தில் வேளாண் செயல்விளக்கம், கல்விச் சுற்றுலா போன்ற வேளாண் தொழில்நுட்ப பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு.

18. உழவன் இ-சந்தை: விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மற்றும் தேவை விவரங்கள்.

19. பட்டுப்புழு வளர்ப்புத் துறை: பட்டுக்கூடு கிடைக்கும் இடம், சந்தை விலை மற்றும் பட்டு வளர்ப்புத் துறை தொடர்பான திட்ட விவரங்கள்.

20. வேளாண் பட்ஜெட் 2022-23: வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் தொடர்பான விபரங்கள்.

21. கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்: விவசாயிகள் தங்கள் தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்ற பதிவு செய்து கொள்வதற்கான வழி வகை.

22. கால்நடை மருத்துவர்: தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தகவல்கள்

உழவன் செயலியினை ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐபோன் (iPhone) ஆகிய இரண்டு கைபேசியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், https://www.tnagrisnet.tn.gov.in அல்லது https://tnhorticulture.tn.gov.in அல்லது https://aed.tn.gov.in இணையதளம் மூலமாகவும் திட்டம் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

வேளாண் பெருமக்களுக்கு வேண்டிய விபரங்களை விரைவாக வழங்கி, விவசாயிகளின் தினசரி வாழ்க்கையினை மிகவும் எளிதாக்கி, விவசாயிகள் அதிக வருமானம் ஈட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள உழவன் செயலியினை இதுவரை பதிவிறக்கம் செய்யாத விவசாயிகள், வியாபாரிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உள்ளிட்ட வேளாண்மையில் ஈடுபட்டுள்ள அனைவரும் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் .எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.



Read in source website

புலம்பெயர் தமிழர் நல வாரியத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்திடவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, ‘வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம்’ 2011-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் நாள் கருணாநிதி தலைமையிலான அரசால் இயற்றப்பட்டது.  அதோடு, "புலம்பெயர் தமிழர் நலவாரியம்" ஒன்று உருவாக்கப்பட்டு, அவர்களுக்கென நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அப்போது அறிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, முந்தைய ஆட்சியாளர்கள் அதனை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.   

இந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சி அமைந்தபிறகு, 'வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியம்' அமைக்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டார்.  இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும்விதமாக, கீழ்க்காணும் தலைவர், அரசுசார் அலுவலர்கள் மற்றும் அயலகத் தமிழர் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்டு புலம்பெயர் தமிழர் நல வாரியத்தினை அமைத்திட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, புலம்பெயர் தமிழர் நலவாரியத்தின் தலைவராக திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதி நியமிக்கப்படுகிறார்.

மேலும், மொரிஷியஸ் நாட்டில் வசிக்கும் ஆறுமுகம் பரசுராமன், லண்டனில் வசிக்கும் முஹம்மது பைசல், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சித்திக் சையது மீரான், வடஅமெரிக்காவில் வசிக்கும் கால்டுவெல் வேள்நம்பி, சிங்கப்பூரில் வசிக்கும் ஜி.வி.ராம் என்கிற கோபாலகிருஷ்ணன் வெங்கடரமணன், மும்பையில் வசிக்கும் அ. மீரான் மற்றும் சென்னையில் வசிக்கும் வழக்கறிஞர் புகழ்காந்தி ஆகியோர் அரசு சாரா உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

அரசு சார்ந்த உறுப்பினர்களாக பொதுத் துறைச் செயலாளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர், வெளிநாடுவாழ் தமிழர் தொடர்பான பணிகளைக் கவனித்து வரும் அரசு சிறப்புச் செயலாளர்/அரசு இணைச் செயலாளர்/அரசு துணைச் செயலாளர், பொதுத் துறை; மேலாண்மை இயக்குநர், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தின் ஆணையர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாரியத்தில் நியமிக்கப்படும் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம், ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும்.

இவ்வாரியம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான நலத் திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்திட ஏதுவாக, 5 கோடி ரூபாய் “வெளிநாடுவாழ் தமிழர் நலநிதி” என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும். அதோடு மட்டுமல்லாமல், மூலதனச் செலவினமாக 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் மற்றும் தொடர் செலவினமாக, நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

இவ்வாரியத்தின் வாயிலாகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களின் விவரங்களைச் சேகரிப்பது அவசியமாதலால், அவர்கள் குறித்த தரவு தளம் ஒன்று ஏற்படுத்தப்படும்.  இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம், மருத்துவக் காப்பீடு திட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும்.  வெளிநாட்டிற்குச் செல்லும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள், அங்கு பணியின்போது இறக்க நேரிடின், அவர்களது குடும்பத்தைப் பாதுகாக்கும் நோக்குடன், அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படும்.



Read in source website

ஆதார் அட்டை, பான் அட்டை வாகனம் ஓட்டுபவராக இருந்தால் ஓட்டுநர் உரிமம் என மிக முக்கியமான ஆவணங்களை எப்போதும் நாம் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஒரு வேளை, ஆதார் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கையில் வைத்துக் கொள்வது சிரமமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் டிஜிட்டல் லாக்கர் முறையை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

டிஜிட்டல் லாக்கர் முறையைப் பயன்படுத்துவதோடு, ஒவ்வொருவரும் நமது ஆதார் எண் மற்றும் பான் எண்களை மனப்பாடமாக வைத்துக் கொள்வது இன்னும் சிறந்தது.

சரி ஒருவர் பான் அட்டை வாங்கினால் அதனைப் புதுப்பிக்க வேண்டுமா என்று கேட்கலாம். இல்லை. ஒருவருக்கு ஒரு முறைதான் பான் அட்டை வழங்கப்படும். ஒரு வேளை ஏதேனும் தேவைக்காக, அல்லது அந்த பான் அட்டையில் இருக்கும் முகவரியை மாற்றுவதற்காக வேண்டுமானால் பான் அட்டையில் இருக்கும் முகவரியை திருத்தி புதிய அட்டைப் பெற்றுக் கொள்ளலாமே தவிர, ஒரு முறை பான் அட்டை பெற்றுவிட்டால் அதனை புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு வேளை, பான் அட்டை தொலைந்துவிட்டால் அதற்காக பயப்பட வேண்டாம். பான் அட்டை தொலைந்துவிட்டால் புதிய பான் அட்டை பெற்றுக்கொள்ள மத்திய அரசு வழிவகை செய்திருக்கிறது. அதேவேளையில், முறைகேடு ஏதேனும் நடக்கக் கூடாது என்பதற்காக பான் அட்டை தொலைந்துவிட்டால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

ஒரு வேளை பான் அட்டை தொலைந்துவிட்டால்.. நேரடியாக அலுவலகம் சென்று விண்ணப்பிப்பது எப்படி?

பான் அட்டை மையம் அல்லது என்எஸ்டிஎல்-டிஐஎன் சேவை மையத்துக்குச் செல்லுங்கள்.

அங்கு பான் அட்டை தொலைந்துவிட்டதாகக் கூறி, மற்றொரு அட்டைப் பெறுவதற்கான விண்ணப்பத்தைக் கேட்டுப் பெறுங்கள்.
அதில் உங்கள் தகவல்களை பதிவு செய்யுங்கள்,  பான் அட்டை காணாமல் போய்விட்டதாகக் காவல்நிலையத்தில் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல் மற்றும் உங்கள் புகைப்படத்தை இணையுங்கள்.
உங்கள் இருப்பிடத்துக்கே வந்து சேரும் வகையில் பான் அட்டையை பெற இடத்துக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டியது வரும்.
அந்தக் கட்டணத்துக்கான டிடியுடன் சீலிட்ட உறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சேவை மையத்தில் அளியுங்கள். அஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க..
டிஐஎன்-என்எஸ்டிஎல் இணையதளமான protean இணையதளத்துக்குச் செல்லவும். (https://www.protean-tinpan.com/)
சேவை என்பதில் பான் என்ற வாய்ப்பைக் கிளிக் செய்யவும்.
ரீபிரிண்ட் ஆஃப் பான் அட்டை என்பதை தேர்வு செய்யவும்.
அங்கு இருக்கும் விவரங்களை சரியாக படித்துவிட்டு, தேவையான ஆவணங்களை தயார் செய்யவும்.
பிறகு இங்கே என்று இருக்கும் இணைப்பை சொடுக்கவும்.
அங்கே உங்கள் பான் அட்டை, ஆதார் எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை சரியாக பதிவிடவும்.
சப்மிட் செய்ததும் டோக்கன் எண் வழங்கப்படும். அதனை குறித்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு கன்டின்யூ வித் பான் அப்ளிகேஷன் பார்ம் என்பதை சொடுக்கவும்.
பிறகு பர்சனல் டீடெயில் என்று வரும். அதனை தேர்வு செய்யும்.
அதில் மூன்று  வாயப்புகள் இருக்கும்.
1. எண்ம (டிஜிட்டல்) முறையில் இ- கையெழுத்து மற்றும் இ-கேஒய்சி யை சமர்ப்பிக்க.
2. ஸ்கேன் செய்த புகைப்படமாக இ-கையெழுத்தை சமர்ப்பிக்க.
3. நேரடியாக கையெழுத்திட்டு ஆவணங்களை சமர்ப்பிக்க

இதில் உங்களுக்கு ஏற்ற வாய்ப்பை பதிவு செய்யவும்.
பிறகு உங்கள் தகவல்களை அளித்து சப்மிட் செய்யவும்.
பிறகு டாக்குமெண்ட் டீடெயில் பிரிவுக்குச் செல்லவும்.

ஆவணங்கள்
ஆதார் அட்டையை டிஜிட்டல் முறையில் இணைக்க வேண்டும்.
பிறகு அனைத்து விவரங்களும் உண்மைதான் என்பதை உறுதி செய்து உங்கள் பெயர், இடம், தேதியை பதிவு செய்ய வேண்டும்.
பிறகு அனைத்தையும் சரி பார்த்துக் கொண்டு சப்மிட் கொடுக்கவும்.
பிறகு பேமெண்ட் பக்கம் வரும். அதில் குறிப்பிட்ட கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும். பிறகு 15 இலக்க எண் கிடைக்கும். இந்த எண்ணைக் கொண்டு உங்கள் பான் அட்டையின் நிலவரத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இரண்டு அல்லது மூன்று வாரங்களில் உங்களுக்கு புதிய பான் அட்டை கிடைக்கும்.
 



Read in source website

ஓய்வூதியம் பெற இனி கூட்டு வங்கிக் கணக்கு தொடங்க வற்புறுத்த வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையாளா் கே.விஜயேந்திர பாண்டியன் வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:-

ஓய்வூதியதாரா்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு தனி வங்கிக் கணக்கு இல்லாமல் கூட்டு வங்கிக் கணக்கு மூலம் பெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்த வழிகாட்டுதல்கள் கருவூல அதிகாரிகள், உதவி கருவூல அதிகாரிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தது.

ஓய்வூதியம் பெறுவோரின் துணையுடன் இணைந்த கூட்டு வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது. இந்த நிலையில், கூட்டு வங்கிக் கணக்கு மூலமாக மாத ஓய்வூதியத்தைப் பெறுவதில் சில சிக்கல்கள் இருப்பதாக ஓய்வூதியதாரா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது கணினிமயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி, கணவன் மற்றும் மனைவி இருவரும் ஓய்வூதியதாரா்களாக இருந்தால் அவா்களுக்கு ஓய்வூதியத்தை ஒரே கணக்கில் அளிப்பதிலும் சிரமம் இருக்கிறது. இதுபோன்ற காரணிகளால் ஓய்வூதியத்துக்கு கூட்டு வங்கிக் கணக்கு தேவை என்ற அறிவுறுத்தல்கள் ரத்து செய்யப்படுகின்றன.

ஓய்வூதியம் பெறுவதற்கு ஒற்றை வங்கிக் கணக்கு இருந்தாலே போதும். இதனை ஓய்வூதியதாரா்களுக்கு கருவூல அதிகாரிகளும், உதவி கருவூல அதிகாரிகளும், ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளும் தெரிவிக்க வேண்டும் என தனது உத்தரவில் விஜயேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

கருவூலத் துறையின் பழைய உத்தரவு காரணமாக, ஒற்றை வங்கிக் கணக்கை வைத்திருந்த ஓய்வூதியதாரா்கள், கூட்டு வங்கிக் கணக்குக்கு மாறிக் கொண்டிருந்தாா்கள்.

இப்போது உத்தரவு காரணமாக, ஒற்றை வங்கிக் கணக்கிலேயே ஓய்வூதியதாரா்கள் தங்களது ஓய்வூதியத்தைப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரே வங்கிக் கணக்கில் கணவனும், மனைவியும் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருந்தால் அவா்களுக்கு தொடா்ந்து ஒரே கணக்கில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

 

போன் பே, கூகுள் பே(ஜிபே) போன்ற யுபிஐ செயலிகளில் பணபரிவர்த்தனை செய்வதில் விரைவில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவுள்ளது பயனாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

உலக அளவில் பணத்தை வைத்து பெரும்பாலான பரிமாற்றங்கள் செய்து வந்த நிலையில், அதற்கு மாற்றாக டிஜிட்டல் பணபரிவர்த்தனை சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது.

மெல்ல மெல்ல பல தரப்பட்ட மக்கள் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளுக்கு மாறி வந்த நிலையில், கரோனா பேரிடருக்கு பிறகு டீ கடை முதல் நகைக் கடை வரை பணமில்லா எண்ம (டிஜிட்டல்) பரிவர்த்தனையை மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர்.

தேசிய கட்டணக் கழகத்தின்(என்பிசிஐ) தரவுகளின்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 11 லட்சம் கோடி அளவிற்கு போன்பே, ஜிபே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் என்பிசிஐ-யின் நடத்திய ஆலோசனையில் யுபிஐ செயலிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவெடுத்துள்ளது.

ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு பணம் அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாட்டை டிசம்பர் இறுதிக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் கட்டுப்பாடாக, ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ. ஒரு லட்சம் வரை மட்டுமே யுபிஐ செயலிகள் மூலம் பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். அதிலும், கனரா வங்கி போன்ற சிறிய வங்கிகள் ரூ. 25,000 வரை மட்டுமே அனுமதிக்கும். வங்கிகளின் கொள்கைகள்  பொறுத்து பணபரித்தனையின் உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்படும்.

இரண்டாவதாக, ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக 20 முறைகள் மட்டுமே போன்பே, பேடிஎம், ஜிபே போன்ற செயலிகள் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

மேலும், எத்தனை முறை பரிவரித்தனை, அதிகபட்சம் எவ்வளவு ரூபாய் பரிவரித்தனை செய்யலாம் என்பது வங்கிகளை பொறுத்தும், செயலிகளை பொறுத்தும்  மாறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், யுபிஐ செயலிகளில் பரிவர்த்தனைகள் மேற்கொள்பவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

 



Read in source website


நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1.64 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்துகொண்டவர்கள், அனைவரும் வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்ட மனச்சுமை காரணமாக உயிரிழக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள மத்திய அரசு அறிக்கையில், தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2021-ஆம் ஆண்டில் 18 ஆயிரத்து 925 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

கூகுள் விரைவில் மருத்துவரின் கையால் எழுதப்பட்ட மருந்துச் சீட்டை மொழிபெயர்க்க உதவும் வசதியை உருவாக்க உள்ளது.

கூகுள் திங்களன்று செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) மாதிரியை அறிவித்தது. இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு  கடினமான மருத்துவர் கையால் எழுதப்பட்ட மருந்து சீட்டில் உள்ள எழுத்துகளை அடையாளம் காண முடியும்.

கடினமான கையால் எழுதப்பட்ட மருந்து சீட்டில் உள்ள மருத்துவக் குறிப்புகளை டீகோட் செய்யக்கூடிய AI கருவி கூகுள் லென்ஸில் உருவாக்கப்படும்.

கூகுல் நிறுவனம் தனது 'AI for India' நிகழ்வின் போது இந்த திட்டத்தை காட்சிப்படுத்தியது.

பொருட்களை (தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்றவை) கண்டறிய மற்றும் மொழிகளை மொழிபெயர்க்க கூகுல் லென்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் விவசாய நிலப்பரப்பைப் பற்றிய முழுமையான புரிதலை உருவாக்க, ரிமோட் சென்சிங் தொழில்நுட்பத்துடன் மேம்பட்ட AI மற்றும் ML திறன்களைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளையும் கூகுல் நிறுவனம் அறிவித்தது.

இந்த திட்டம் பண்ணை நிலப்பரப்பு மற்றும் பண்ணை எல்லைகளை அடையாளம் காண உதவும், மேலும் ஒவ்வொரு வயலில் விளையும் பயிர்களையும் அடையாளம் காண முடியும்.
 



Read in source website

 

12ஆம் வகுப்பில் மாணவர்கள் 75 சதவிகித மதிப்பெண்களுக்கு மேல் பெரும் மாணவர்களின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்துள்ளார். 

பொறியியல், மருத்துவம், சட்டம் என எந்தத் துறை சார்ந்து படித்தாலும், அவர்களின் கல்லூரி கட்டண செலவை அரசே ஏற்கும் என உறுதி அளித்துள்ளார். 

மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், மத்தியப் பிரதேசத்தில் பயிலும் பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பில் 75 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்தால், அவர்களின் கல்லூரி செலவை அரசே ஏற்கும். பொறியியல், மருத்துவம், சட்டம் என எந்தத் துறை சார்ந்து படித்தாலும், கல்லூரி கட்டண செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என உறுதி அளித்தார். 

மத்தியப் பிரதேசத்தில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி ஏற்கெனவே இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது உயர் கல்வியும் இலவசமாக்கப்பட்டுள்ளது. 

2023ஆம் ஆண்டு ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வுக்கும் பள்ளியில் பெறும் மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதாவது, பள்ளியில் 75 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 



Read in source website

ராஜஸ்தானில் ஏப்ரல் 1 முதல் ரூ.500க்கு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கும், உஜ்வாலா திட்டத்தில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கும் ரூ.500-க்கு சமையல் எரிவாயு உருளை வழங்க உள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் முதல்வர் அசோக் கெலாட் இன்று அறிவித்துள்ளார்.

"அடுத்த மாத பட்ஜெட்டுக்கு தயாராகி வருகிறேன். இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். உஜ்வாலா திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி ஏழைகளுக்கு எல்பிஜி இணைப்புகள் மற்றும் எரிவாயு அடுப்புகளை வழங்குகிறார். ஆனால் சமையல் எரிவாயு உருளை காலியாக உள்ளது. 

ஏனெனில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் இப்போது  ரூ.400 முதல் ரூ.1,040 வரை உள்ளன" என்று அசோக் கெலாட்  கூறினார்.

ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

நாட்டில் உள்ள ஒட்டுமொத்த விமான நிலையங்களில் இதுவரை 25 விமான நிலையங்கள், 2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை குத்தகைக்கு விடப்பட்டிருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றதில் தெரிவித்துள்ளது.

தேசிய பணமாக்கக் கொள்கையின் அடிப்படையல், இந்திய விமான நிலையக் கழகத்துக்குச் சொந்தமான சென்னை, திருச்சி, திருப்பதி, வாராணசி, போபால், சூரத், மதுரை, பாட்னா, நாக்பூர் உள்ளிட்ட 25 விமான நிலையங்கள் 2022 - 25ஆம் ஆண்டு வரை குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் இன்று விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். 

இது தவிர, இந்திய விமான நிலையக் கழகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் உள்பட  8 விமான நிலையங்களை பொதுத் துறை - தனியார் கூட்டமைப்பில் மேலாண்மை மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை நீண்டகாலத்துக்கு மேற்கொள்ளும் வகையிலான குத்தகையில் இயக்கி வருகிறது.

விமான நிலையங்களைக் குத்தகைக்கு விடுவதன் மூலம் வரும் வருவாயை, மத்திய அரசு நாடு முழுவதும் விமான நிலையங்களின் உள்கட்டமைப்புகளுக்காக செலவிட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 



Read in source website

கருத்தரிக்க முடியாதவர்கள் மெடிட்டரேனியன் டயட் முறையை மேற்கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மெடிட்டரேனியன் டயட்.. உணவு உட்கொள்ளுதலில் இன்று பலவகையான முறைகளும் அதற்கு பெயர்களும் வந்துவிட்டன. மாறிவரும் உலகத்தில் உணவு முறைகளிலும் வெகுவான மாற்றங்கள் ஏற்பாட்டுக் கொண்டிருக்கின்றன. இதனாலே நோய்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன.

அந்த வகையில் உடல்நலன் கருதி இன்று டயட் முறைகளும் வெகுவாகப் பேசப்படுகின்றன. உடல் எடையைக் குறைக்க, கூட்டுவதற்கு, உடல்நிலையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு என்று டயட் முறைகள் வகுக்கப்படுகின்றன. 

அதில் ஒன்றுதான் மெடிட்டரேனியன் டயட். காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், பீன்ஸ், தானியங்கள், நட்ஸ் வகைகள், மீன், இறைச்சி, பன்னீர் உள்ளிட்ட சில பால் பொருள்கள் உள்ளிட்டவை சேர்ந்ததே இந்த மெடிட்டரேனியன் டயட். 

மெடிட்டரேனியன் டயட் மேற்கொள்பவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள், பக்கவாதம் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. 

இந்த புரோட்டீன், இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துகள் அதிகமிருப்பதால் உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து ஆரோக்கியமாக வைக்கின்றன. இதனால் உடலில் உள்ள பிரச்னைகள் குறைகிறது. 

இந்நிலையில், மெடிட்டரேனியன் டயட் மேற்கொள்பவர்களுக்கு கருத்தரித்தல் எளிதாக நடைபெறும் என்றும் கருத்தரிக்க முடியாதவர்கள் மெடிட்டரேனியன் டயட் முறையை மேற்கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு சாப்பிடுவது கருவுறுத்தலுக்கான சிகிச்சைகளிலும் உதவும் என்று தெரிவிக்கின்றனர்.

மோனாஷ் பல்கலைக்கழகம், சன்ஷைன் கோஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இந்த டயட் உணவுகள் ஆணின் விந்தணுக்களின் தரம், கருவுறுதல் மற்றும் செயற்கை கருத்தரித்தலுக்கு உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

கருவுறாமை என்பது தற்போது உலகளாவிய பிரச்னையாக மாறியுள்ள இந்த சூழ்நிலையில் இந்த ஆய்வு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.



Read in source website

சாலை விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்கு முதல் 24 மணி நேரம் இலவச சிகிச்சை அளிக்கும் அரசுத் திட்டத்தை சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம்(எஸ்ஜிபிஜிஐஎம்எஸ்) அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் ராஜேஷ் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், 

விபத்துக்குள்ளானவர்களின் உயிரைக் காப்பாற்ற இந்த வசதி உதவும்.

மோகன்லால்கஞ்ச் நகரில் வசிக்கும் ராகுல் சிங், லாரி ஓட்டுநராக உள்ளார். அவர் சனிக்கிழமை காலை சாலை விபத்தில் சிக்கினார். கையில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த இளைஞருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது அவரது உயிரைக் காப்பாற்றியது. அவரிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

முதல் 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது. பெரும்பாலும் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களைத் தொடர்புகொள்வதற்கும், அவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கும் அதிக நேரம் எடுக்கும். 

சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் வெகுதொலைவில் இருக்கும். இந்த நிலையில், உறவினர்களுக்காக காத்திருக்காமல் சிகிச்சையைத் தொடங்க இந்த இலவச சிகிச்சை முறை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக அவர் கூறினார். 



Read in source website

போன் பே, கூகுள் பே(ஜிபே) போன்ற யுபிஐ செயலிகளில் பணபரிவர்த்தனை செய்வதில் விரைவில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவுள்ளது பயனாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

உலக அளவில் பணத்தை வைத்து பெரும்பாலான பரிமாற்றங்கள் செய்து வந்த நிலையில், அதற்கு மாற்றாக டிஜிட்டல் பணபரிவர்த்தனை சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது.

மெல்ல மெல்ல பல தரப்பட்ட மக்கள் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளுக்கு மாறி வந்த நிலையில், கரோனா பேரிடருக்கு பிறகு டீ கடை முதல் நகைக் கடை வரை பணமில்லா எண்ம (டிஜிட்டல்) பரிவர்த்தனையை மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர்.

தேசிய கட்டணக் கழகத்தின்(என்பிசிஐ) தரவுகளின்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 11 லட்சம் கோடி அளவிற்கு போன்பே, ஜிபே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் என்பிசிஐ-யின் நடத்திய ஆலோசனையில் யுபிஐ செயலிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவெடுத்துள்ளது.

ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு பணம் அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாட்டை டிசம்பர் இறுதிக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் கட்டுப்பாடாக, ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக ரூ. ஒரு லட்சம் வரை மட்டுமே யுபிஐ செயலிகள் மூலம் பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். அதிலும், கனரா வங்கி போன்ற சிறிய வங்கிகள் ரூ. 25,000 வரை மட்டுமே அனுமதிக்கும். வங்கிகளின் கொள்கைகள்  பொறுத்து பணபரித்தனையின் உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்படும்.

இரண்டாவதாக, ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சமாக 20 முறைகள் மட்டுமே போன்பே, பேடிஎம், ஜிபே போன்ற செயலிகள் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

மேலும், எத்தனை முறை பரிவரித்தனை, அதிகபட்சம் எவ்வளவு ரூபாய் பரிவரித்தனை செய்யலாம் என்பது வங்கிகளை பொறுத்தும், செயலிகளை பொறுத்தும்  மாறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், யுபிஐ செயலிகளில் பரிவர்த்தனைகள் மேற்கொள்பவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

 



Read in source website

‘காவல் அதிகாரிகள் நன்னெறிப் பாதுகாவலா்களாக நடந்துகொள்ளத் தேவையில்லை; அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி உடல் ரீதியாகத அல்லது பொருள் ரீதியாக ஆதாயத்தை கோரக் கூடாது’ என்று உச்ச நீதின்றம் உத்தரவிட்டது.

தவறான நடத்தை காரணமாக மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) காவலரை பணி நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி பிறப்பித்த உத்தரவு சரியானதே என்று தீா்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்தக் கருத்தைத் தெரிவித்தது.

சந்தோஷ்குமாா் பாண்டே என்ற சிஐஎஸ்எஃப் காவலா், கடந்த 2001-ஆம் ஆண்டு அக்டோபா் 26-ஆம் தேதி இரவில் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஐபிசிஎஸ் குடியிருப்புப் பகுதியில் காவல் பணியில் பணியமா்த்தப்பட்டிருந்தாா். அப்போது அந்த வழியாக தனக்கு நிச்சயிக்கப்பட்ட வருங்கால மனைவியுடன் வந்த செளத்ரி என்பவரைத் தடுத்து நிறுத்திய பாண்டே, அவா்களிடம் விசாரணை நடத்தியுள்ளாா்.

பின்னா், செளத்ரியின் வருங்கால மனைவியுடன் தனிமையில் சிறிது நேரம் செலவிட வேண்டும் என பாண்டே மிரட்டியுள்ளாா். அதற்கு செளத்ரி மறுக்கவே, கையூட்டு கொடுத்துவிட்டு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளாா். அதனைத் தொடா்ந்து, தான் அணிந்திருந்த கைக் கடிகாரத்தை செளத்ரி கழற்றிக்கொடுத்துவிட்டு, அங்கிருந்து வருங்கால மனைவியுடன் சென்றுள்ளாா்.

அடுத்த நாள், இந்த சம்பவம் தொடா்பாக செளத்ரி அளித்த புகாரின் அடிப்படையில், சந்தோஷ் குமாா் பாண்டேவை பணி நீக்கம் செய்து சிஐஎஸ்எஃப் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி நடவடிக்கை எடுத்தாா்.

இதனை எதிா்த்து பாண்டே சாா்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த குஜராத் உயா் நீதிமன்றம், ‘பணி நீக்க உத்தரவை ரத்து செய்ததோடு, பாண்டேவை மீண்டும் பணியில் சோ்க்கவும், நீக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டு 50 சதவீத ஊதியம் வழங்கவும் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 16-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து சிஐஎஸ்எஃப் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஷ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீா்ப்பில் கூறியதாவது;

இந்த வழக்கின் விவரங்கள் திகைப்பையும் வேதனையையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளன. குற்றச்சாட்டுக்கு உள்ளான சந்தோஷ்குமாா் பாண்டே காவல் அதிகாரி கிடையாது. அப்படியே அவா் காவல் அதிகாரியாக இருந்தாலும், நன்னெறிப் பாதுகாவராக அவா் நடந்துகொண்டிருக்கத் தேவையில்லை; அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி உடல் ரீதியாக அல்லது பொருள் ரீதியாக ஆதாயத்தை கோரக் கூடாது.

இந்த வழக்கின் சட்ட நிலை மற்றும் ஆதார உண்மைகளின் அடிப்படையில் சிஐஎஸ்எஃப் மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. குஜராத் உயா் நீதிமன்ற தீா்ப்பு ரத்து செய்யப்படுகிறது. அந்த வகையில், உயா் நீதிமன்றத்தில் சந்தோஷ் குமாா் பாண்டே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவே கருதப்படும். அவரை பணி நீக்கம் செய்து சிஐஎஸ்எஃப் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி பிறப்பித்த உத்தரவு சரியானதே என நிலைநாட்டப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.



Read in source website

திவாலான நிறுவனங்களின் சொத்துகளை மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் திவால் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

திவால் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு இயற்றியது. திவாலான நிறுவனங்களின் சொத்துகளை மீட்பதற்கான காலஅவகாசம் 330 நாள்கள் எனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சொத்துகளை மீட்பதில் தொடா்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

திவாலான நிறுவனங்களுடைய சொத்துகளின் மதிப்பு காலப்போக்கில் குறைவது வழக்கம். அதன் காரணமாக சொத்து மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. கால தாமதம் அதிகமானால் இழப்பும் அதிகரிக்கும்.

திவாலான நிறுவனங்களின் சொத்துகளை மீட்பதற்காக அரசுத் தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்படுவது உள்ளிட்டவை அந்நடவடிக்கைகளுக்குத் தாமதம் ஏற்படுத்தி வருகின்றன. அதைக் கருத்தில்கொண்டு சொத்துகளை மீட்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் திவால் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாகப் பொருளாதார நிபுணா்கள், வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து சில தினங்களில் இறுதி செய்யப்படும் என அதிகாரிகள் சிலா் தெரிவித்தனா். அதையடுத்து திவால் திருத்த மசோதாவை அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்த தகவல்படி, கடந்த செப்டம்பா் வரை 553 விவகாரங்களுக்கு திவால் சட்டத்தின் கீழ் தீா்வு காணப்பட்டுள்ளது. தீா்வு காண்பதற்கான சராசரி காலஅளவு 473 நாள்களாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் 57 விவகாரங்களுக்கு சராசரியாக 679 நாள்களில் தீா்வு காணப்பட்டுள்ளது.



Read in source website

பெய்ஜிங்: தலைநகர் பெய்ஜிங்கில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் மரணம் அடைந்ததாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை அறிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கரோனா அலை மீண்டும் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பல வாரங்களுக்குப் பிறகு, கரோனாவுக்கு இரண்டு பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 4ஆம் தேதிக்குப் பிறகு சீனாவில் கரோனாவுக்கு யாரும் பலியானதாக சுகாதாரத் துறை அறிவிக்கவில்லை. ஒரு பக்கம் நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து, அதனைத் தடுக்க நாடு பல கட்டுப்பாடுகளை அறிவித்து. அதற்கெதிராக நாட்டு மக்கள் கிளர்த்தெழுந்த நிலையில், கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டன.

கரோனா பரிசோதனைகள் குறைக்கப்பட்டதால், நாட்டில் உண்மையான கரோனா பாதிப்பு நிலவரம் தெரியவராமல் போனது. பல இடங்களில் கரோனாவுக்கு பலியானோரின் உடல்கள் தகன மையங்களுக்கு வந்து கொண்டிருப்பதாக புகைப்படங்கள் பகிரப்பட்டாலும், கடந்த சில வாரங்களாக சீனத்தில் கரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை என்பதே அந்நாட்டு அரசின் தகவல்.

மற்ற நாடுகளைக் காட்டிலும் சீனத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இதுவரைக் காட்டப்பட்டுள்ளது. இதுவரை சீனாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3.80 லட்சம், மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 5,237 ஆகக் கூறப்படுகிறது.

ஆண்டு இறுதியில், குறிப்பாக நவம்பர் மாதத்தில் சீனாவில் கரோனா அலை அதிகரிக்கத் தொடங்கியிருப்பது, மீண்டும் உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு பரவத் தொடங்குமோ என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
 



Read in source website

கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆனது. கூடுதல் நேரத்துக்குப் பிறகு இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன. 

1978, 1986-க்குப் பிறகு ஆர்ஜென்டீனா அணி வென்ற 3-வது உலகக் கோப்பை இது. மெஸ்ஸி முதல்முறையாக உலகக் கோப்பையை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது. 1962-க்குப் பிறகு அடுத்தடுத்து உலகக் கோப்பைகளை வென்ற அணி என்கிற பெருமையைப் பெறுவதற்காக பிரான்ஸ் கடுமையாக முயன்றது. இறுதியில் பெனால்டியில் தோற்றுப் போனது. உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஹாட்ரிக் கோல்களை அடித்த 2-வது வீரர் என்கிற பெருமையை அடைந்தார் பிரான்ஸின் எம்பாப்பே. பரிசளிப்பு விழாவில் தங்கக் காலணி விருது எம்பாப்பேவுக்கு வழங்கப்பட்டது. போட்டியின் சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வானார்.

உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளும் முக்கியமான புள்ளிவிவரங்களும்


* உலகக் கோப்பைப் போட்டியில் அதிக கோல்கள் அடிக்கப்பட்டது இம்முறைதான். 1998, 2014 உலகக் கோப்பைகளில் தலா 171 கோல்கள் அடிக்கப்பட்டன. இம்முறை 172 கோல்கள்.

* ஒருமுறைக்கு மேல் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் மெஸ்ஸி வென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டு போட்டியில் (Coupe de France) மட்டும் ஒருமுறை பங்கேற்று அவரால் வெல்ல முடியாமல் போனது. 

* 1966-ல் இங்கிலாந்தின் ஜெஃப் ஹர்ஸ்ட் உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் ஹாட்ரிக் கோல்கள் அடித்தார். அதற்கடுத்ததாக பிரான்ஸின் எம்பாப்பே ஹாட்ரிக் கோல்களை அடித்துள்ளார்.

* 8-வது முறையாக உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றுள்ளது. கடந்த 7 ஆட்டங்களில் 2 ஆட்டங்கள் மட்டுமே பெனால்டிக்குச் சென்றுள்ளது. இந்த நூற்றாண்டில் 2006, 2010, 2014, 2022 என நான்கு முறை இறுதிச்சுற்று ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றுள்ளது.    

* பிரான்ஸின் எம்பாப்பே 1 நிமிடம் 37 விநாடிகள் இடைவெளியில் இரு கோல்களை அடித்தார். இதுபோல உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் அடுத்தடுத்த நிமிடங்களில் கோல் அடிக்கப்பட்டது இதுவே முதல்முறை. 

* தொடர்ச்சியாக இரு உலகக் கோப்பைப் போட்டி இறுதிச்சுற்றுகளில் கோல்கள் அடித்த 2-வது வீரர் என்கிற பெருமையையும் எம்பாப்பே பெற்றுள்ளார். 

* கடைசி 20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றுகளில் முதலில் கோல் அடித்த அணிகளில், 12 அணிகள் உலகக் கோப்பையை வென்றுள்ளன. 1954 இறுதிச்சுற்றில் மட்டும் மேற்கு ஜெர்மனிக்கு எதிராக ஹங்கேரி அணி முதலில் இரு கோல்கள் அடித்தும் கடைசியில் 2-3 எனத் தோற்றது. 

* உலகக் கோப்பையில் சிறந்த வீரருக்கான விருது இருமுறை வென்றுள்ளார் மெஸ்ஸி. இதற்கு முன்பு 2014-ல் ஆர்ஜென்டீனா 2-வது இடம் பிடித்தபோது இதே விருது அவருக்கு வழங்கப்பட்டது.

* உலகக் கோப்பையில் குரூப் நிலை, காலிறுதிக்கு முந்தைய சுற்று, காலிறுதி, அரையிறுதி, இறுதிச்சுற்று என ஒரு போட்டியில் அனைத்து கட்டங்களிலும் கோலடித்த ஒரே வீரர் மெஸ்ஸி. 

* ஒரு உலகக் கோப்பையில் 5+ கோல்கள் அடித்து, கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளை 20+ முறை உருவாக்கிய இரு வீரர்கள், 1986-ல் மரடோனா, 2022-ல் மெஸ்ஸி. 

* ஒரு உலகக் கோப்பையில் 5 முறை சிறந்த வீரர் விருதை வென்ற ஒரே வீரர் மெஸ்ஸி. 

* 13 கோல்களுடன் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் பிரான்ஸின் ஜஸ்ட் ஃபோன்டைனுடன் இணைந்து 4-வது இடத்தில் உள்ளார் மெஸ்ஸி.

* ஆர்ஜென்டீனாவுக்காக உலகக் கோப்பை, கோபா அமெரிக்கா ஆகிய முக்கியமான போட்டிகளில் 26 கோல்கள் அடித்துள்ளார் மெஸ்ஸி. தென் அமெரிக்க வீரர்களில் யாரும் இவ்விரு போட்டிகளிலும் இத்தனை கோல்கள் அடித்ததில்லை. 

* உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ஆட்டங்களில் விளையாடியவர் மெஸ்ஸி - 26 ஆட்டங்கள். 

* உலகக் கோப்பையில் முதல் ஆட்டத்தில் தோற்று பிறகு உலகக் கோப்பையை வென்ற 2-வது அணி, ஆர்ஜென்டீனா. 2010-ல் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி, முதல் ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்திடம் வீழ்ந்தது. 

* ஒரு உலகக் கோப்பையில் 23 வயதுக்குட்பட்ட வீரர்களில் அதிக கோல்கள் அடித்தவர் பிரான்ஸின் எம்பாப்பே. 8 கோல்கள். பீலே உள்ளிட்ட மூவர் தலா 6 கோல்கள் அடித்துள்ளார்கள். 

* வேறு எந்த வீரரை விடவும் உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் அதிக கோல்கள் அடித்தவர் எம்பாப்பே. 4 கோல்கள். 

* இதுவரை எந்தவொரு உலகக் கோப்பையில் 5 பெனால்டி ஷுட்அவுட்கள் நடந்ததில்லை. 



Read in source website

புதுடெல்லி: அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது சீனாவுக்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானோ அல்லது சீனாவோ அல்லது இரு தரப்புமோ ஒரே நேரத்தில் எல்லையில் பிரச்சினை தந்தாலும் துரிதமாக செயல்பட்டு முறியடிக்கும் திறனுடன் இந்திய பாதுகாப்பு படைகள் தயார் நிலையில் உள்ளன.

அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் அக்னி-5 ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவில் இருந்து பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணை 7,000 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று எதிரி இலக்கை துல்லியமாகக் தாக்கக் கூடியது. இந்த சோதனை வெற்றி பெற்றது. இதுகுறித்து மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) வட்டாரங்கள் கூறியதாவது:

அக்னி-5 ஏவுகணையில் அணுஆயுதங்களை பொருத்தி தாக்குதல் நடத்த முடியும். அக்னி ரக ஏவுகணை எடை அதிகமுடையது. அதன் காரணமாக நீண்ட தொலைவுக்கு ஏவுவதில் சிரமங்கள் ஏற்பட்டன. இதை கருத்தில் கொண்டு ஸ்டீலுக்குப் பதில் வேறு உலோகங்கள் கொண்டு அக்னி-5 ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. எடை குறைந்துள்ளதால் அதன் பயண தூரமும் அதிகரித்துள்ளது. தற்போது 7,000 கி.மீ. தூரத்துக்கு அப்பாலும் இந்த ஏவுகணை சென்று தாக்கும் வல்லமையுடன் உள்ளது. இதை எங்கு வேண்டுமானாலும் எளிதில் கொண்டு சென்று ஏவ முடியும்.

இந்த ஏவுகணை இந்தியாவின் வலிமையான ஏவுகணையாக மாறி இருக்கிறது. இதன் மூலம் சீன தலைநகர் பெய்ஜிங் உட்பட அந்த நாட்டின் வடக்கு பிராந்தியத்தின் எந்தப் பகுதியையும் இலக்கு வைத்து தாக்க முடியும். அருணாச்சல பிரதேசம் தவாங் பகுதியில் சீன வீரர்கள் ஊடுருவ முயன்ற போதுஅவர்களை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். இந்த சூழ்நிலையில், அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது, சீனாவுக்கு விடுத்த மிகப் பெரிய எச்சரிக்கையாகவே உள்ளது.

தற்போது, 7,000 கி.மீ. தூரத்துக்கு அப்பாலும் சென்று தாக்கும் வகையில் அக்னி ரக ஏவுகணைகளை மேம்படுத்த மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும். அதேநேரத்தில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் அல்லது அணுஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்தியா மீது தாக்குதல் நடத்தினால், பதில் தாக்குதல் மட்டுமே நடத்தப்படும்.

இவ்வாறு டிஆர்டிஓ வட்டாரங்கள் தெரிவித்தன.

சீனாவிடம் டாங் பெங்-41 ரக ஏவுகணைகள் உள்ளன. இந்தஏவுகணைகள் 12 ஆயிரம் முதல்15 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் சக்தி படைத்தவை. இந்தியாவின் எந்த நகரத்தையும் தாக்கும் வகையில் ஏவுகணைகளை சீனா வைத்துள்ளது. அத்துடன் ஏராளமான அணு ஆயுதங்களையும் வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில், சீனாவை எதிர்கொள்ளும் வகையில் அக்னி ரக ஏவுகணைகள் மேம்படுத்தப்படும் என்று தெரிகிறது.



Read in source website

மும்பை: ஐஎன்எஸ் மர்மகோவா போர்க் கப்பல் கடற்படையில் நேற்று இணைக்கப்பட்டது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சர்வதேச அளவில் வலிமையான கடற்படையை கொண்டுள்ள 10 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெற்றிருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி இந்திய கடற்படையில் 14 நீர்மூழ்கிகள் உட்பட 130 போர்க் கப்பல்கள் இருந்தன. சமீபத்திய புள்ளிவிவரத்தின்படி இந்திய கடற்படையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் உள்ளன. அதேநேரம் சீனாவிடம் சுமார் 350-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் உள்ளன.

சீனாவுக்கு இணையாக இந்திய கடற்படையை வலுப்படுத்த பிரதமர் மோடி முனைப்புடன் பணியாற்றி வருகிறார். அதன்படி 2027-ம் ஆண்டுக்குள் இந்திய போர்க் கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்தப்பட உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கடற்படையில் சேர்க்கப்பட்டது. அடுத்ததாக ஐஎன்எஸ் விஷால் என்ற அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பல் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வருகிறது.இது 2030-ம் ஆண்டில் கடற்படையில்இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு புராஜக்ட் 15பி, புராஜக்ட்-75, கல்வாரி நீர்மூழ்கி என்பன உள்ளிட்ட திட்டங்களின் கீழ் சுமார் 45-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் தயாரிப்பு நிலையில் உள்ளன.

புராஜக்ட் 15 பி திட்டத்தின் கீழ் மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் 4 போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க் கப்பல் 2021 நவம்பரில் கடற்படையில் இணைக்கப்பட்டது. இதே ரகத்தை சேர்ந்த 2-வது போர்க்கப்பலான ஐஎன்எஸ் மர்மகோவா கடந்த 2016-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து மும்பை கடற்படைத் தளத்தில் நேற்று நடந்த விழாவில் ஐஎன்எஸ் மர்மகோவா போர்க்கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதிய போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் மோடியின் இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப் போம் ஆகிய தொலைநோக்கு திட்டங்கள் வெற்றிகரமாக செயல் படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் வெளிநாடுகளிடம் இருந்து போர்க் கப்பல்களை வாங்கினோம். இப்போது சுயசார்புஇந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே போர்க்கப்பல்கள் தயாரிக்கப் படுகின்றன. இந்த வரிசையில் ஐஎன்எஸ் மர்மகோவா போர்க்கப்பல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு கடற்படையில் இணைக்கப் பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் நட்பு நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் போர்க்கப்பல்களை நாம் விற்பனை செய்வோம்.

நாட்டின் பாதுகாப்பில் கடல் எல்லை பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இதேபோல நாட்டின் வளர்ச்சியில் கடல்வழி போக்குவரத்து மிகவும்முக்கியமானது. நாட்டின் கடல் எல்லையைக் காவல் காத்து, பாதுகாப்பான சரக்கு போக்குவரத்தையும் இந்திய கடற்படை உறுதி செய்கிறது. இதற்காக கடற்படை வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

பாதுகாப்பான எல்லை, பாதுகாப்பான கடல் எல்லைகளால் இந்தியாவின் வெற்றிப் பயணம் ஏறுமுகத்தில் தொடர்கிறது. இதை கருத்தில் கொண்டுபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பாதுகாப்பு படைகளை வலுப்படுத்த முன்னுரிமை அளிக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் அதிநவீன ஆயுதங்கள் முப்படைகளிலும் சேர்க்கப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளும் திறனை பாதுகாப்புப் படைகள் பெற்றுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி குமார் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்

ஐஎன்எஸ் மர்மகோவா போர்க்கப்பல் 163 மீ்ட்டர் நீளம், 17 மீட்டர் அகலம், 7,400 டன் எடை கொண்டதாகும். கோவா மாநிலத்தின் மர்மகோவா நகரின் பெயர் போர்க்கப்பலுக்கு சூட்டப்பட்டிருக்கிறது. இந்த போர்க்கப்பலை ரேடாரில் கண்டுபிடிப்பது கடினம். இது மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் செல்லும். அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகள் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 450 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும்.

தரையில் இருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் பராக் -8 வகையை சேர்ந்த அதிநவீன ராக்கெட்டுகளும் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. அணு ஆயுத தாக்குதல், உயிரி ஆயுத தாக்குதல், ரசாயன தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் போர்க்கப்பலில் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 300 வீரர்கள் கப்பலில் பணியாற்றுகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் போர்க்கப்பல்களுக்கு இணையாக ஐஎன்எஸ் மர்மகோவா போர்க்கப்பல் உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன



Read in source website

கத்தார்: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி நிகழ்வில், கருப்பு நிற அங்கி ஒன்றை அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கு கத்தார் மன்னர் அணிவித்தது உலக அளவில் பேசும்பொருளானது.

ஃபிஃபா 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 36 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் அர்ஜென்டினா வாகை சூடியுள்ளது. அந்த அணி உலகக் கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். அர்ஜென்டினாவின் வெற்றியை உலக முழுவதிலும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையில், உலகக் கோப்பை வழங்கும் இறுதி நிகழ்வில், கருப்பு நிற அங்கி போன்ற ஆடையை கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு அணிவிப்பார். இந்த ஆடையை அணிந்துதான் உலகக் கோப்பையை மெஸ்ஸி பெறுவார். இந்த நிலையில், பலரும் இந்த ஆடை குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தனர். ஏன் அர்ஜென்டினா ஆடையை அணிந்து மெஸ்ஸி உலகக் கோப்பையை பெறவில்லை என்று பலரும் குழப்பி இருந்தனர்.

இந்தக் குழப்பத்துக்கு இப்போது தெளிவு கிடைத்துள்ளது. மெஸ்ஸிக்கு கத்தார் மன்னர் அணிவித்த அந்த அங்கியை அரபில் பிஷ்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆடை போருக்கு செல்லும் அரபு வீரர்கள் வெற்றிக்கு பின் அணிவார்கள் (இந்த ஆடை ஓட்டகத்தின் முடி & ஆட்டுத் தோலினால் செய்யப்படுவது) . அதன் பொருட்டே மரியாதைக்குரிய வகையில் இதனை மெஸ்ஸிக்கு கத்தார் மன்னர் அணிவித்துள்ளார். இந்த வகையான ஆடை அரபு நாடுகளின் பாரம்பரியமாக கருதப்படுகிறது.



Read in source website

ஃபிஃபா 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 36 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் அர்ஜென்டினா வாகை சூடியுள்ளது. அந்த அணி உலகக் கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். கோப்பையை வென்ற அர்ஜென்டினாவிற்கும், மெஸ்ஸிக்கும் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவற்றில் இருந்து சில...

PRABAKARAN K: ஃபார்வர்டுல, பந்த பாஸ் பண்றதுல எல்லாத்துலயும் சிறந்ததொரு கில்லியான கேம்ம கொடுத்திருக்கான்... #க்ரேட்_மெஸ்ஸி...

Hades: எத்தனை தடைகள், எவ்வளவு மட்டந்தட்டல்கள், நடக்கவே போறதில்ல, சாத்தியமே இல்லைன்னு டொர்னமென்ட் துவங்குனப்ப பேசுன எல்லா வாயவும் அடிச்சு உக்கார வெச்சிட்டான். தலைவன் வேற ரகம், என்ன ஆனாலும் ஜெயிச்சே ஆகணும்ன்னு சண்ட செய்ற ரகம். மெஸ்ஸி எனும் அரக்கன்...

மனசெல்லாம் மெஸ்சி.....
அர்ஜென்டினாவின் அதிசியம் நீ;
அரங்கை, முழுக்க அதிர வைக்கும் அற்புதம் நீ;
கால்பந்தாட்டதின் கம்பன் நீ;
மைதானத்தில் நீ வடிக்கும்
கவிதையின் ரசிகன் நான்;
பந்தில் நீ ஆடும் பரதநாட்டியம் ,
பார் முழுக்க பரவசப்படுதுதய்யா ;
கைதட்டி காத்திருக்கிறோம்
உன் கையில் உலக கோப்பை வர;
வரலாறு காத்திருக்கிறது.

BilalAliyar: ஆட்டத்தின் முதல் பாதியிலேயே உலகமே அர்ஜென்டினா தான் என உறுதியாக நம்ப தொடங்கியது. இரண்டாம் பாதியிலும் முதல் அரைமணி நேரம் உப்பு சப்பில்லாமல் போனது. இதை அர்ஜென்டினா கோச் உணர்ந்ததால்தான் ஆட்டத்தின் முக்கியமான வீரர் De Maria-வை வெளியில் அழைத்து பெஞ்சில் அமர வைக்கிறார். ஏறக்குறைய அர்ஜென்டினா கோப்பை வெல்லப் போகிறது என்ற உற்சாகம் அர்ஜென்டினா நகர வீதிகளில் கொண்டாட்டமாக மாறியதை உலக தொலைக்காட்சிகள் படம் பிடிக்கின்றன. ஒட்டுமொத்தமா இந்தப் போட்டி அர்ஜென்டினாவின் ஆதிக்கத்தை மட்டுமே காட்டும் ஒரு போட்டியாக இருக்கப்போவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்தன.

ஆட்டம் முடிய 11 நிமிடங்களே இருந்த அந்த 79-வது நிமிடம் உலக கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு மறக்கவே இயலாத ஒரு அனுபவத்தையும், வரலாற்றின் நினைவுகளில் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தப்படும் போட்டியாக மாறப்போகிறது என எவருமே, ஏன் பிரான்சின் கோச்சுமே கூட அறியவில்லை. என்னுடன் அமர்ந்து மேட்ச் பார்த்த அந்த அர்ஜென்டினாவின், மெஸ்ஸியின் தமிழ்நாட்டு காதலன் கூட (கால்பந்து உலகமே மெஸ்ஸியை காதலிப்பது வேறு விசயம்), அடேய் பாத்து விளையாடுங்கடா, ஃபவுல் வாங்கி பஞ்சாயத்த இழுத்துடாதீங்கடான்னு கவலைப்பட்ட போது, ஏற்கெனவே மேட்ச் முடிஞ்சுருச்சுங்க… ஏங்க டென்சனாகிறீங்கன்னு நானும் சொல்ல, எதிர்பாராத அந்த ஃபவுலை வாங்கியது அர்ஜென்டினா. ஃபிரான்ஸ் வீரரை தடுக்க முயன்றதால் கிடைத்த பொன்னான பெனால்டி கிக்கை Mbappe கோலாக மாற்றினார்.

அந்த நொடிக்கும், அட்டகாசமாக Mbappe போட்ட இரண்டாவது கோலுக்கும் இடையில் வெறும் 97 நொடிகளே இருந்தது தான், கால்பந்தை ஏன் கட்டிக் கொண்டு இந்த உலகம் பைத்தியமாக திரிகிறது என்பதற்கான விடை.

அப்போதிலிருந்து ஆட்டத்தை இரண்டு அணிகளும் ஒரு போராக மாற்றியது. பார்த்துக் கொண்டிருந்து எவனாலும் எதையும் சொல்ல முடியாத அளவிற்கு இரண்டு அணிகளும் தீவிரமாக விளையாடின. கூடுதல் நிமிடத்தின் இரண்டாம் பாதியில் மந்திரக்காரன் மெஸ்ஸியின் அந்த கோலை கண்டவர்கள் பாக்கியசாலிகள். மெஸ்ஸி கோல் அடித்த சில நிமிடங்களில் வசியக்காரன் Mbappe மீண்டும் ஒரு கோலடித்து நெஞ்சுவலியை வரவைத்தான். பெனால்டி சூட் அவுட் வந்தது!

இறுதியில் பெனால்டி சூட் அவுட்டில் அர்ஜென்டினா கோல் கீப்பர் மார்டினசின் அட்டகாசமான இரண்டு தடுப்பால் உக்கிரமான அந்தப் போர் முடிவுக்கு வந்தது. அழகான கோப்பையை மந்திக்காரன் தன் கைகளில் ஏந்தி தன் வாழ்நாள் கனவை தன் உலக காதலர்களுக்கு பரிசளித்தான்.

counter பெல்: அர்ஜென்டினா கப் அடிக்க முக்கிய காரணம் அவங்க கோல் கீப்பர்தான். 3-3 ன்னு இருக்கும் போது சரியா ஒரு கோல் வரவேண்டியதை தடுத்தான் அப்புறம் பெனால்டி ஷூட் அவுட் ல சொல்லவே வேணாம் சும்மா கலக்கிட்டான்

குதிரை: Football பத்தி அதிகம் தெரியாத என்னையும் இந்த மனுசன் ஜெயிச்சா போதும்ன்னு நிறைக்க வைக்குற அளவுக்கு inspiring ஆன ஒரு பயணம் இவருடையது. இன்னைக்கு அர்ஜென்டினா, மெஸ்ஸியோட பல வருச கனவு மட்டுமில்ல என்னோட ஆசையும் நிறைவேறியது!

Sunil: இன்னும் எத்தனை உலகக் கோப்பை தொடர்கள் வந்தாலும் பிரான்ஸ் - அர்ஜென்டினா; மெஸ்ஸி - எம்பாப்வே இடையிலான இந்த யுத்தம் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்...

P.S. Abdussalam: சோகத்தில் தவித்த பிரான்ஸ் வீரர் எம்பாப்பே.. இறுதிப்போட்டி France vs Argentina என்று சொல்வதைவிட Mbappe vs Argentina என்றுதான் சொல்ல வேண்டும். அர்ஜென்டினா வென்று, கோப்பையைத் தூக்கி, வியர்வை சிந்தி, வாய் கொப்பளித்தாலும், மறுபக்கம் நிச்சயம் ஒரு போராளி இருந்தார். அந்த போராளியின் பெயர் Mbappe... வயது 23. கால்பந்து வரலாறு இவரால் எழுதப்படும்... 80 நிமிடம் வரை கதை முடிந்தது என்று முடிவு செய்த அணியை கூடுதல் நேரத்துக்கும் அங்கிருந்து பெனால்டி ஷூட் அவுட்டுக்கும் அழைத்துச் சென்றவர்... கால்பந்து உலகில் மெஸ்ஸி. ரொனால்டோவுக்கு பிறகு வரலாறாக மாறப் போகிறவர்...

Tamil Subramaniam: இனி மெஸ்ஸியின் சகாப்தம் முடிந்தது. அடுத்தது எம்பாப்பே-வின் காலம். ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் இவர்களின் வரிசையில் எம்பப்பேயின் பெயர் விளங்கி நிற்கும்.

GMJ: நம்ம டெண்டுல்கர் மாதிரி பல கோப்பைகள் வாங்கினாலும் உலகக் கோப்பை என்பது மெஸ்சிக்கு கனவாகவே இருந்தது. இந்த உலக கோப்பையுடன் ஓய்வு என்ற நிலையில் மெஸ்சிக்கு வில்லனாக வந்தார் ப்ரான்ஸ் வீரர் எம்பாவே இருந்தாலும் போராடி கடைசி நிமிடத்தில் கடைசி வினாடியில் உலக கோப்பை மெஸ்சி வசமானது.



Read in source website

தோகா: பிஃபா 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்றகோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 36 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் அர்ஜெண்டினா வாகை சூடியுள்ளது. அந்த அணி உலகக் கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும்.

பிஃபா 22-வது உலகக் கோப்பைகால்பந்து தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது. 32 அணிகள் கலந்துகொண்ட இந்த பிரபஞ்ச திருவிழாவின் இறுதி ஆட்டம் நேற்று இரவுதோகாவின் லுசைல் நகரில் உள்ளலுசைல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பட்டம் வெல்வதற்காக நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் பிரான்ஸ் அணியானது, அர்ஜெண்டினாவை எதிர்கொண்டது. இந்த போட்டியை காண மைதானத்தில் 88 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே அர்ஜெண்டினா ஆதிக்கம் செலுத்தியது. 5-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் ஜூலியன் அல்வரெஸ் உதவியுடன் பந்தை பெற்ற அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் இலக்கை நோக்கி அடித்தார். இதைஇடது புறத்தில் பிரான்ஸ் கோல்கீப்பர் ஹ்யூகோ லொரிஸை தடுத்தார். 8-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் ரோட்ரிகோ டி பாலின் கோல் அடிக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. 17-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் ஏஞ்சல் டி மரியா கோல் கம்பத்துக்கு மேல் பந்தை அடித்து ஏமாற்றம் அளித்தார்.

21-வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியாவை பெனால்டி ஏரியாவில் ஃபவுல் செய்தார் பிரான்ஸ் வீரர் உஸ்மான் டெம்பளே. இதனால் அர்ஜெண்டினாவுக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதைபயன்படுத்தி மெஸ்ஸி அற்புதமாக கோல் அடித்தார். பிரான்ஸ் கோல்கீப்பர் மெஸ்ஸி தவறாக கணித்து இடதுபுறம் பாய்ந்தார். ஆனால் மெஸ்ஸி பதற்றமே இல்லாமல் நிதானமாக தனது இடது கால் பந்தை கோல் வலையின் வலது புறம்திணித்தார். இதனால் அர்ஜெண்டினா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

36-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா 2-வது கோலை அடித்தது.பிரான்ஸ் அணியின் முன்களம் பந்தை பறிகொடுக்க அர்ஜெண்டினாவின் முன்கள வீரர்களான மெஸ்ஸி, ஜூலியன் அல்வரெஸ் மின்னல் வேகத்தில் பந்தை கடத்திமேக் அலிஸ்டரிடம் எந்தவித இடையூறும் இல்லாமல் வழங்கினர். அவர்அற்புதமாக ஏஞ்சல் டி மரியாவுக்கு கிராஸ் செய்ய, அவர் கோல்கீப்பர் ஹ்யூகோ லொரிஸை கடந்து கோல்வலைக்குள் திணித்தார். இதனால் அர்ஜெண்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அர்ஜெண்டினா அணி முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என முன்னிலை வகித்தது. 2-வது பாதியின் தொடக்கத்திலும் அர்ஜெண்டினா கடும் அச்சுறுத்தல் கொடுத்தது. 49-வது நிமிடத்தில் ரோட்ரிகோ டி பால் இலக்கை நோக்கி அடித்த ஷாட் தடுக்கப்பட்டது. இதேபோன்று 59-வது நிமிடத்தில் ஜூலியன் அல்வரெஸ் அடித்த ஷாட்டும் தடுக்கப்பட்டது. 60-வது நிமிடத்தில் இலக்குக்கு நெருக்கமாக மெஸ்ஸி அடித்தஷாட் வலது புறம் விலகிச் சென்றது.

68-வது நிமிடத்தில் பிரான்ஸின் அன்டோனி கிரீஸ்மான் உதவியுடன் பந்தை பெற்ற கோலோ முவானி, பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த ஷாட் இடது புறம் விலகிச் சென்றது. 71-வது நிமிடத்தில் கிளியான் பாப்பே அடித்த ஷாட் கோல்கம்பத்துக்கு மேலாக சென்று ஏமாற்றம் அளித்தது. 72-வது நிமிடத்தில் மெஸ்ஸி உதவியுடன் பந்தை பெற்ற என்சோ பெர்னாண்டஸ் இலக்கை நோக்கி வலுவாக அடித்தார். ஆனால் அதை பிரான்ஸ் கோல்கீப்பர் தடுத்தார்.

80-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கோலோ முவானியை பாக்ஸ் பகுதிக்குள் அர்ஜெண்டினா வீரர் நிக்கோலஸ் ஓட்டமெண்டி ஃபவுல் செய்தார். இதனால் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதில் கிளியான் பாப்பே கோல் அடித்தார். இந்த கோல் அடித்த 90 விநாடிகளில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு மீண்டும் ஒரு கோலை அடித்து மிரளச் செய்தார் கிளியான் பாப்பே. இந்த கோலை மார்கஸ் துராமுடன் கூட்டணி அமைத்து அற்புதமாக அடித்தார் பாப்பே. இதனால் அர்ஜெண்டினா அணி அதிர்ச்சியில் உறைந்தது. பாப்பேவின் இரு கோல்களால் ஆட்டத்தை 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தது பிரான்ஸ் அணி.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத்தில் 7-வது நிமிடத்தில் மெஸ்ஸி இலக்கை நோக்கி வலுவாக அடித்த பந்தை பிரான்ஸ் கோல்கீப்பர் அற்புதமாக துள்ளியவாறு மேல் நோக்கி தட்டிவிட்டார். இதனால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது.

கூடுதல் நேரத்தில் முதல் பகுதியில் அர்ஜெண்டினா கடும் அச்சுறுத்தல் கொடுத்தது. 105-வது நிமிடத்திலும் அடுத்த நொடியிலும் என இரு முறை அர்ஜெண்டினாவின் கோல் அடிக்கும் முயற்சிகளை அபாரமாக தடுத்தனர் பிரான்ஸ் டிபண்டர்கள். 109-வது நிமிடத்தில் கோல் கம்பத்துக்கு நெருக்கமாக அர்ஜெண்டினாவின் மார்ட்டினெஸ் இலக்கை நோக்கி அடித்த ஷாட்டை பிரான்ஸ் கோல் கீப்பர் லொரிஸ்தடுத்தார். அவர் மீது பட்டு திரும்பிவந்த பந்தை மெஸ்ஸி கோலாக்கினார். இதனால் அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

போட்டி முடிவடைய 4 நிமிடங்களே இருந்த நிலையில் அர்ஜெண்டினாவின் மோன்டில் கையில் பந்து பட்டது. இதனால் பிரான்ஸூக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையும் கிளியான் பாப்பேகோலாக மாற்றினார். இதனால் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தது. கூடுதல்நேரத்தின் கடைசி நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் கோலோ முவானியின் கோல் அடிக்கும் முயற்சியை அற்புதமாக தடுத்தார் அர்ஜெண்டினார் கோல் கீப்பர் எமிலியோனோ மார்டினெஸ். அடுத்த நொடியில் அர்ஜெண்டினாவின் லாட்டாரோ மார்டினெஸ் தலையால் முட்டிய பந்து விலகிச் சென்றது.

கூடுதல் நேரத்தின் முடிவில் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் முடிவை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் பிரான்ஸ் அணியின் முதல்வாய்ப்பில் பாப்பேவும், அர்ஜெண்டினாவின் முதல் வாய்ப்பில் மெஸ்ஸியும் கோல் அடித்தனர். பிரான்ஸின் 2-வது வாய்ப்பில் கோமன் அடித்த ஷாட்டை அர்ஜெண்டினா கோல் கீப்பர் எமிலியானோ அற்புதமாக பாய்ந்து தடுத்தார். அர்ஜெண்டினாவின் 2-வது வாய்ப்பில் டைபலா கோல் அடித்தார். பிரான்ஸ் அணியின் 3வது வாய்ப்பில் சவுமேனி கோல் கம்பத்துக்கு வெளியே அடித்தார்.

அர்ஜெண்டினாவின் அடுத்த வாய்ப்பில் பரடேஸ் கோல் அடிக்க அர்ஜெண்டினா 3-1 என முன்னிலை பெற்றது. 4-வது வாய்ப்பில் பிரான்ஸி கோலோ முவானி கோல் அடித்தார். அதேவேளையில் அர்ஜெண்டினா தரப்பில் மோன்டில் கோல் அடித்து அசத்தினார். இதனால் அர்ஜெண்டினா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அர்ஜெண்டினா அணி உலகக் கோப்பையில் பட்டம் வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 1978,1986-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்தது.

கடந்த 36 வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் அர்ஜெண்டினா வாகை சூடியுள்ளது. தனது 5-வது உலகக்கோப்பையில் விளையாடிய லயோனல் மெஸ்ஸி முதன்முறையாக அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்துள்ளார். அரை இறுதிப் போட்டி முடிவடைந்ததுமே கத்தார் உலகக் கோப்பையுடன் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெஸ்ஸி சாதனை..

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பெனால்டி வாய்ப்பில் அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி கோல் அடித்தார். இதன் மூலம் ஒரே உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று, கால் இறுதி சுற்று, அரை இறுதி சுற்று, இறுதிப் போட்டி என அனைத்திலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் மெஸ்ஸி.

உலகக் கோப்பை தொடரில் இரண்டு முறை ‘கோல்டன் பால்’ (தங்கப் பந்து) விருதை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் மெஸ்ஸி. 2014 மற்றும் 2022 உலகக் கோப்பை தொடர்களில் அவர் இந்த விருதை வென்றுள்ளார். தொடரின் சிறந்த வீரருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.



Read in source website

லுசைல்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. இந்த தொடரில் அதிக கோல்களை பதிவு செய்த வீரரான பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே, தங்கக் காலணி விருதை வென்றுள்ளார்.

32 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்று வாகை சூடியுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் நடைபெற்ற 64 போட்டிகளில் 172 கோல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு போட்டிக்கு சராசரியாக 2.69 கோல் வீதம் பதிவாகி உள்ளது.

இதில் மொத்தமாக 8 கோல்களை பதிவு செய்த எம்பாப்பே, தங்கக் காலணி விருதை வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் மட்டும் அவர் முத்தான 3 கோல்களை பதிவு செய்து அசத்தி இருந்தார். தொடரில் அதிக கோல்களை பதிவு செய்யும் வீரருக்கு வழங்கப்படும் விருது இது.

மெஸ்ஸி 7 கோல்கள் பதிவு செய்துள்ளார். அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வரஸ் மற்றும் பிரான்ஸின் ஜூரூ தலா 4 கோல்களை பதிவு செய்துள்ளனர்.



Read in source website

கலிபோர்னியா: கடந்த 25 ஆண்டுகால கூகுள் தேடலில் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை 2022 தொடரின் இறுதிப் போட்டி குறித்த தேடல்தான் டாப் என தெரிவித்துள்ளார் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை.

கத்தார் நாட்டின் லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா. அந்த அணிக்கு ஒட்டுமொத்த உலகமும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன.

இந்தச் சூழலில் கூகுள் தேடலில் இந்தப் போட்டி குறித்த தேடல்தான் டாப் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இன்றைய டிஜிட்டல் உலக பயனர்கள் தங்களுக்கு தேவையானவற்றை கூகுள் வழியே தேடி தெரிந்துக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிதான் ஒட்டுமொத்த உலகமும் கூகுளில் தேடிய ஒரே விஷயமாக இருந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கூகுள் தேடலில் அதிகமான டிராஃபிக்கை இந்தப் போட்டி பதிவு செய்துள்ளது” என அவர் ட்வீட் செய்துள்ளார்.



Read in source website

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய வர்த்தக தரவு, ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்துள்ளதாக காட்டுகிறது; நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது என்ன?

Udit Misra 

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய வர்த்தக தரவு, நவம்பர் 2022 இல் இந்தியா கிட்டத்தட்ட $32 பில்லியன் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது, அதே நேரத்தில் இந்தியாவின் இறக்குமதிகள் கிட்டத்தட்ட $56 பில்லியனாக இருந்தது என வெளிப்படுத்துகிறது. 2021 நவம்பரை விட ஏற்றுமதி 0.6 சதவீதம் வளர்ச்சியடைந்திருந்த நிலையில், அதே சமயம் கடந்த ஆண்டு இதே மாதத்தை விட இறக்குமதி 5.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் ஏற்றுமதிகள் அக்டோபரில் 12 சதவிகிதத்திற்கும் மேலாக (அக்டோபர் 2021 க்கு மேல்) விரிவடைந்ததை விட சிறப்பாக இருந்தது.

இதையும் படியுங்கள்: ரிசர்வ் வங்கி தங்க பத்திரம் வெளியீடு: முதலீட்டுக்கு உகந்ததா?

நடப்பு நிதியாண்டில் (2022-23 அல்லது FY23) ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 295 பில்லியன் டாலராக இருந்தது, இது ஏப்ரல்-நவம்பர் 2021 இல் 266 பில்லியன் டாலராக இருந்தது. ஏப்ரல்-நவம்பர் 2022 காலகட்டத்தில் இந்தியாவின் சரக்கு இறக்குமதிகள் 494 பில்லியன் டாலராக இருந்தது, இது ஏப்ரல்-நவம்பர் 2021 இல் 381 பில்லியன் டாலராக இருந்தது.

வர்த்தக தரவுகளில் எதைப் பார்க்க வேண்டும்?

மூன்று முக்கிய மாறிகள் உள்ளன, அவை ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வர்த்தக பற்றாக்குறை. பற்றாக்குறை என்பது ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் உள்ள வித்தியாசத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை. பொதுவாக, இந்தியா ஒவ்வொரு ஆண்டும் வர்த்தகப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது, ஏனெனில் அது ஏற்றுமதி செய்வதை விட அதிகமாக இறக்குமதி செய்கிறது (மதிப்பு அடிப்படையில், $ டாலரில் அளவிடப்படுகிறது).

வர்த்தகப் பற்றாக்குறை என்பது, வர்த்தகம் செட்டில் செய்வதற்கு உலகின் மற்ற நாடுகளுக்கு ரூபாய் தேவைப்படுவதை விட, இந்தியர்களுக்கு டாலர்கள் அதிகம் தேவை என்பதைக் குறிக்கிறது. எனவே, வர்த்தகப் பற்றாக்குறை டாலருக்கு எதிரான ரூபாயின் மாற்று விகிதத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது (அனைத்து இறக்குமதிகளுக்கும் அமெரிக்க டாலரில் பணம் செலுத்த வேண்டும் என்று அனுமானித்துக் கொள்ளுங்கள்). தொடர்ந்து அதிகரித்து வரும் வர்த்தகப் பற்றாக்குறை, ரூபாயின் மாற்று விகிதத்தை பலவீனப்படுத்துகிறது.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் போக்கிற்குள், ஏற்றுமதிகள் (மற்றும் இறக்குமதிகள்) வளர்ச்சியடைகிறதா அல்லது சுருங்குகிறதா என்பதைத் தெரிந்துகொள்வதைத் தவிர, வர்த்தகம் செய்யப்படும் பொருட்களின் மொத்த அளவு மாற்றத்தின் காரணமாக அல்லது வர்த்தகம் செய்யப்படும் பொருட்களின் விலைகள் மாறுவதால் வளர்ச்சி (அல்லது சுருக்கம்) அதிகமாக நடக்கிறதா என்பதும் முக்கியமானது.

உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட பொருளின் மதிப்பு அடிப்படையில் ($ மதிப்பில்) இந்தியாவின் ஏற்றுமதி இரட்டிப்பாகிறது என்பது சாத்தியம், எடுத்துக்காட்டாக வாழைப்பழம், இந்தியா அதிக வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதால் அல்ல, மாறாக சர்வதேச சந்தையில் வாழைப்பழத்தின் விலை இரட்டிப்பாகிவிட்டதால். அதேபோல், வாழைப்பழத்தின் விலை பாதியாகக் குறைந்துள்ளதால், மதிப்பு அடிப்படையில் ஏற்றுமதியில் எந்த வளர்ச்சியையும் பதிவு செய்யாமல், ஏற்றுமதி செய்யப்படும் வாழைப்பழங்களின் அளவை இரட்டிப்பாக்க முடியும்.

அக்டோபர் மாதச் சுருக்கத்தில் இருந்து ஏற்றுமதி மீண்டு வந்ததா?

இந்தியாவின் ஏற்றுமதி வேகம் பலவீனமாக இருப்பதாக பெரும்பாலான பார்வையாளர்கள் நம்புகின்றனர். ஒன்று, நவம்பர் மாத வளர்ச்சி வெறும் 0.6 சதவீதம் மட்டுமே. இது, செப்டம்பரில் 5 சதவீதம் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 11 சதவீதம் போன்ற சமீபத்திய மாதங்களில் வளர்ச்சியைக் காட்டிலும் குறைவாகும்.

மேலும், நோமுரா ஆராய்ச்சியின் பொருளாதார வல்லுனர்களின் சமீபத்திய ஆய்வுக் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளபடி, “நவம்பரில் ஏற்றுமதி வளர்ச்சி மேம்பட்டது, ஆனால் இந்த மீள் எழுச்சியானது குறைவான வேலை நாட்களின் விளைவுகளின் தலைகீழ் மாற்றத்தை பிரதிபலிக்கிறது (கடந்த ஆண்டு நவம்பரில் இருந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபரில் தீபாவளி வந்ததன் காரணமாக)”.

எளிமையாகச் சொன்னால், வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு கணக்கிடப்படுவதால் அல்லது கடந்த ஆண்டு இதே மாதத்தின் செயல்திறனை ஒப்பிடுவதன் மூலம், இந்த நவம்பரின் செயல்திறன் சிறப்பாகத் தெரிகிறது, ஏனெனில் கடந்த ஆண்டு தீபாவளி நவம்பரில் இருந்தது, இதன் விளைவாக குறைவான வேலை நாட்கள் மற்றும் அதன் விளைவாக குறைந்த ஏற்றுமதி. அந்த சிறிய அடிப்படை மதிப்பிற்கு மேல் தான் ஏற்றுமதி ஒரு சதவீத புள்ளிக்கும் குறைவாக வளர்ந்துள்ளது.

அதனால்தான் ஏற்றுமதியில் மீள் எழுச்சி ஒரு வலுவானதாக இல்லை. உதாரணமாக, இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரி ஏற்றுமதி வளர்ச்சியைக் கணக்கிட்டு, கடந்த ஆண்டு இதே இரண்டு மாதங்களில் இருந்ததை ஒப்பிட்டுப் பார்த்தால், ஏற்றுமதி கிட்டத்தட்ட 6 சதவிகிதம் வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.

ஏற்றுமதி வளர்ச்சி குறைவதற்கு என்ன காரணம்?

நோமுரா ஆராய்ச்சியில் இருந்து பெறப்பட்ட விளக்கப்படம், ஏற்றுமதி வளர்ச்சி விகிதத்தின் பாதையை மட்டும் காட்டாமல், அளவு மற்றும் விலைக் கூறுகளால் அதை பிரித்து காண்பிக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதியின் அடிப்படைப் போக்கைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்வதற்காக இது எண்ணெய் ஏற்றுமதியை நீக்குகிறது.

இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தின் பெரும்பகுதி சரிவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அளவுகளின் வீழ்ச்சியே காரணம் என்று பகுப்பாய்வு காட்டுகிறது. உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்கள், குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரங்கள் மந்தநிலையில் உள்ளன அல்லது வளர போராடுகின்றன என்பது புரிந்துகொள்ளத்தக்கது. இது, பலவீனமான ஏற்றுமதி வளர்ச்சியில் பிரதிபலிக்கும் இந்தியப் பொருட்களுக்கான தேவை வீழ்ச்சியைக் குறிக்கிறது.

இந்தியாவின் இறக்குமதி பற்றி என்ன?

இதேபோன்ற இறக்குமதி அட்டவணையில் காட்டப்பட்டுள்ளபடி, இறக்குமதி வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவு, அளவு மற்றும் விலைகளின் சரிவுகளின் சமநிலையான விளைவு ஆகும். ஒட்டுமொத்தமாக, நவம்பர் மாதத்தில் இறக்குமதி வெறும் 5.4 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது மற்றும் கடந்த சில மாதங்களில் இறக்குமதி வளர்ச்சி கடுமையாக சரிந்தது. ஆகஸ்டில், இறக்குமதி கிட்டத்தட்ட 42 சதவீதம் வளர்ந்தது; அதன் பின்னர் அவை செப்டம்பரில் 15 சதவீதமாகவும், அக்டோபரில் 10 சதவீதமாகவும், நவம்பரில் 5.4 சதவீதமாகவும் குறைந்துள்ளன.

இறக்குமதி வளர்ச்சியின் வீழ்ச்சி, இந்தியாவின் உள்நாட்டுத் தேவை ஒரு இறுக்கமான பணவியல் கொள்கையின் விளைவு, அதாவது, அதிக வட்டி விகிதங்கள் மற்றும் ஒட்டுமொத்த நுகர்வு மற்றும் முதலீட்டுத் தேவையின் மீதான குறைவு காரணமாக பலவீனமடைந்து வருவதாகக் கூறுகிறது.

வர்த்தக பற்றாக்குறை பற்றி என்ன?

ஏப்ரலில் நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் வர்த்தக பற்றாக்குறையில் ஏற்ற இறக்கத்தை அட்டவணையில் உள்ள ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வரிகளுக்கு இடையே உள்ள இடைவெளி காட்டுகிறது.

வெளியில் பார்த்தால், நவம்பரில் வர்த்தக பற்றாக்குறை குறைந்தது. ஆனால் தரவு காட்டுவது போல், இந்தியாவின் ஏற்றுமதியை விட இந்தியாவின் இறக்குமதியில் வேக இழப்பு அதிகமாக இருந்ததால் இந்த குறுகலானது நடந்துள்ளது. வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான மிகவும் விரும்பத்தக்க வழி, இறக்குமதியை விட ஒப்பீட்டளவில் ஏற்றுமதி வேகமாக வளர்ச்சியடைவதை அதிகரிப்பதாகும்.

ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 196 பில்லியன் டாலராக இருந்தது. விளக்கப்படம் காட்டுவது போல், இது கடந்த 10 ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் வர்த்தகப் பற்றாக்குறையை விட கணிசமாக அதிகமாகும். FY23 செயல்திறனை FY22 மற்றும் FY20 இல் ஒப்பிடுவது மிகவும் முக்கியமானது, ஏனெனில் அவை சமீபத்திய மற்றும் ஒப்பிடக்கூடிய ஆண்டுகள்; தொற்றுநோயைத் தொடர்ந்து உலகளாவிய வர்த்தகத்தின் முறிவின் விளைவாக FY21 ஒரு தெளிவான மாறுபாடு ஆகும்.

அதிக வர்த்தகப் பற்றாக்குறை இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை (பொருட்கள் மற்றும் சேவைகளின் வர்த்தகத்தையும் உள்ளடக்கியது) அதிகரிப்பது மட்டுமல்லாமல், ரூபாயின் மாற்று விகிதத்தில் அழுத்தத்தை உருவாக்கி மேலும் வலுவிழக்கச் செய்யும்.



Read in source website

எல்லா காலத்திலும் சிறந்த வீரர் (G.O.A.T) என்ற விவாதம் என்பது கால்பந்தின் மிகவும் போட்டியிட்ட உரையாடலாக இருந்து வருகிறது. இது வலுவான கருத்துக்களையும் பல கருத்து வேறுபாடுகளையும் வெளிப்படுத்துகிறது.

மெஸ்ஸி தனது முழு வாழ்க்கையிலும் அவரைத் தவிர்க்கும் மிகப்பெரிய பரிசை வென்று அசத்தியுள்ளார். பல ரசிகர்களுக்கு, அவர் G.O.A.T (எல்லா காலத்திலும் சிறந்தது) என்ற விவாதத்திற்கு மீண்டும் ஒருமுறை முற்றுப்புள்ளி வைத்து, தான் எப்போதுமே அசத்தியா வீரர் தான் என்பதை நிரூபித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, சந்தேகத்திற்கு இடமின்றி இதுவரை விளையாடியதில் மிகச் சிறந்தவர்களில் ஒருவர். ஃபிஃபா உலகக் கோப்பை தான் அவரது அலமாரியை அலங்கரிக்காமல் இருந்த கோப்பை என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், அது இனி இல்லை. அவரது முன்னோடியான டியாகோ மரடோனாவைப் போலவே, மெஸ்ஸியும் தனது கால்பந்து பற்று கொண்ட நாட்டை உலக விளையாட்டின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

எல்லா காலத்திலும் சிறந்த வீரர் (G.O.A.T) என்ற விவாதம் என்பது கால்பந்தின் மிகவும் போட்டியிட்ட உரையாடலாக இருந்து வருகிறது. இது வலுவான கருத்துக்களையும் பல கருத்து வேறுபாடுகளையும் வெளிப்படுத்துகிறது. அதாவது, ஒரு வீரரைக் குறைத்து மதிப்பிடவும், மற்றொரு வீரரை உயாத்தி மதிப்பிடவும் செய்கிறது. மேலும், இது பெரும்பாலும், ரசிகர்களின் தீர பற்று அல்லது வெறியின் காரணமாக, இந்த விவாதம் அவர்களை தீவிர நிலைகளுக்குத் தள்ளுகிறது. உண்மையில், அறிய அனைத்து தலைமுறை வீரர்கள் மற்றும் சூழ்நிலைகளில் பரவியிருக்கும் ‘சிறந்த வீரர்’ என்பதை ஒப்பிடுவதற்கு சரியான அளவீடு எதுவும் இல்லை.

அவ்வகையில், எல்லா காலத்திலும் சிறந்த வீரர் (G.O.A.T) என்ற விவாதம் மற்றும் உரையாடலில் அடிக்கடி குறிப்பிடப்படும் சில வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

பீலே, ஒரிஜினல் G.O.A.T

கால்பந்தின் முதல் உலகளாவிய சூப்பர் ஸ்டார் பீலே. அவரது சகாப்தத்தில் (1956-77) சிறந்த ஊதியம் பெறும் விளையாட்டு வீரராக இருந்தார். அவர் தனது முழு வாழ்க்கையிலும் ஒரு விளையாட்டின் சராசரியாக ஒரு கோலைப் பதிவு செய்துள்ளார். அதாவது, 831 அதிகாரப்பூர்வ விளையாட்டுகளில் 757 கோல்களை அடித்துள்ளார். அவர் தனது உலகக் கோப்பை வாழ்க்கையில் 8 உதவிகள் செய்து சாதனை படைத்த ஒரு குறைத்து மதிப்பிடப்பட்ட படைப்பாளியாகவும் இருந்தார். இன்றுவரை, உலகக் கோப்பையை மூன்று முறை (1958, 1962, 1970) நான்கு முயற்சிகளில் வென்ற ஒரே வீரராகவும் அவர் உள்ளார்.

எல்லா காலத்திலும் சிறந்த வீரர் விவாதத்தில் பீலே, எவ்வளவு காலத்திற்கு முன்பு விளையாடினார் என்பதன் மூலம் உதவியது மற்றும் தடைப்பட்டது. ஒருபுறம், பீலேவுக்கு புராண நிலையை இணைக்கிறது என்ற ஏக்கம். அதன் புராணக்கதை காலப்போக்கில் வளர்ந்துள்ளது. அதே நேரத்தில், பல நவீன ரசிகர்கள் அவர் விளையாடிய சூழல் பற்றி கேள்விகளை எழுப்புகின்றனர். குறிப்பாக, அவர் எதிர்கொள்ளும் போட்டியின் நிலை, நிறைய விளையாட்டுகளின் காட்சிகள் இல்லாமல் இருப்பது, பீலேவின் மகத்துவம் எப்போதுமே கடுமையான விவாதத்திற்குரிய விஷயமாக இருக்கும். இதனால், அதன் மீது எழும் பிரச்சினையை திட்டவட்டமாக தீர்க்க வழிகள் இல்லை.

ஆனால் ஒன்று நிச்சயம், அவர் இம்மண்ணில் பிறக்கவில்லை என்றால் கால்பந்து விளையாட்டு இன்னும் மோசமானதாக இருந்திருக்கும்.

டியாகோ மரடோனா, கால்பந்தை ரொமாண்டிக்

பீலே அழகான விளையாட்டின் தூய்மையின் அடையாளமாக இருந்தால், மரடோனா அதில் வீழ்ந்த தேவதை. அவரது போஹேமியன் வாழ்க்கை முறைக்கு, மரடோனா ஒரு வழிகெட்ட மேதையின் வரையறை. தர்க்கத்தை மீறும் திறமையும், அதனுடன் செல்லும் இதயமும் அவரிடம் இருந்தது. எதிரிகளால் விதிப்படி அவரைத் தடுக்க முடியாதபோது, ​​​​அவர்கள் அவரை தரையில் உதைப்பார்கள், ஒரு நடைமுறை நடுவர்கள் நாள் முழுவதும் மிகவும் மென்மையாக இருந்தனர். இருப்பினும், மரடோனா எப்போதும் மீண்டும் எழுந்து எதுவும் நடக்காதது போல் விளையாடினார்.

இந்த பட்டியலில் உள்ள மற்ற சில வீரர்களுடன் ஒப்பிடுகையில் அவரது உண்மையான வெளியீடு சுமாரானது மற்றும் அவரது தொழில் வாழ்க்கையின் உச்சம் குறுகிய காலமாக இருந்தபோதிலும், மரடோனா G.O.A.T ஆக இருப்பது அவர் எவ்வளவு திறமையானவர் மற்றும் அவரைப் பார்த்த அனைவரையும் எப்படி உணரச் செய்தார் என்பதை அடிப்படையாகக் கொண்டது. முக்கியமாக, 1986 உலகக் கோப்பையில் அவர் செய்த சுரண்டல்களுடன், அவர் எப்போதுமே சந்தர்ப்பத்திற்கு உயர்ந்தவராக இருந்தார்.

கால்பந்து ரொமாண்டிக்கான இறுதி வீரர், மரடோனா அவர் விளையாடிய எல்லா இடங்களிலும், நபோலி முதல் பியூனஸ் அயர்ஸ் வரை வணங்கப்படுகிறார்.

ஜோஹன் க்ரூஃப், கால்பந்து தத்துவவாதி

ஜோஹன் க்ரூஃப் போன்று கால்பந்து விளையாட்டில் சில வீரர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு தொழில்நுட்ப மேஸ்ட்ரோ, க்ரூஃப் தனது உடல் வரம்புகளை சுத்த கால்பந்து மேதை மற்றும் விருப்பத்தின் வலிமையால் சமாளித்தார். பயிற்சியாளர் ரினஸ் மைக்கேல்ஸுடன் இணைந்து “மொத்த கால்பந்தின்” முன்னோடி, அவரது விளையாட்டு அவரது நிலைப் பன்முகத்தன்மை மற்றும் தந்திரோபாய நோஸ் மூலம் வரையறுக்கப்படும். அவர் 1999 ஆம் ஆண்டு வாக்கெடுப்பில் நூற்றாண்டின் சிறந்த ஐரோப்பிய வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார், உலகில் சிறந்த வீரர் வாக்கெடுப்பில் பீலேவுக்கு அடுத்தபடியாக வந்தார்.

G.O.A.T விவாதத்தில் க்ரூஃப், அவரது விளையாட்டு பாணி மற்றும் கால்பந்து தத்துவம் எவ்வளவு மாற்றியமைத்துள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டது. அவரது செல்வாக்குதான் ஆடுகளத்தில் வெவ்வேறு சூழல்களில் இடத்தை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளித்து, நவீன நிலை விளையாட்டுக்கான அடித்தளத்தை அமைத்தது. 2000களின் பிற்பகுதியிலும் 2010களின் முற்பகுதியிலும் பெப் கார்டியோலாவின் ஒப்பற்ற பார்சிலோனா அணியிலிருந்து 2010 உலகக் கோப்பை வென்ற ஸ்பானிய அணி வரை, க்ரூஃப்பின் மரபு நவீன கால்பந்தைத் தொட்டது. வேறு எந்த வீரரைப் போலல்லாமல், அவரது காலணிகளைத் தொங்கவிட்ட பிறகு, க்ரூஃப் மிகவும் வெற்றிகரமான நிர்வாக வாழ்க்கையை வாழ்ந்தார்.

ஜினெடின் ஜிதேன், முழுமையான மிட்ஃபீல்டர்

ஜிசோ என அவர் அன்புடன் அழைக்கப்பட்டபடி, மிட்ஃபீல்ட் சிறப்பிற்கான தங்கத் தரமாக இருக்கிறார். சுமார் 17 ஆண்டுகால விளையாட்டு வாழ்க்கையில், அவர் 1998ல் உலகக் கோப்பை உட்பட, ஒவ்வொரு தனி நபர் மற்றும் குழு பாராட்டுகளையும் வென்றார். இது பிரான்ஸ் வென்ற முதல் உலகக்கோப்பை ஆகும். ஒரு முழுமையான பிளேமேக்கர், அவர் தனது நேர்த்தி, பார்வை, பாஸிங், பந்து கட்டுப்பாடு மற்றும் நுட்பத்திற்காக புகழ் பெற்றார். ஜிடேன் அவருக்கு ஒரு மேவரிக் ஸ்ட்ரீக் இருந்தது, இது அவரது புராண அந்தஸ்துக்கு மட்டுமே சேர்க்கும்.

ஜிடானின் G.O.A.T அந்தஸ்து அவரது கேமில் இருந்த சுத்த வரம்பின் அடிப்படையிலானது, மேலும் அவர் தனித்து விளையாடும் திறன் கற்பனைக்கு எட்டாத வகையில் அவரது அணியை வெற்றிபெறச் செய்யும். 1998 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஜிடேன் ஆட்ட நாயகன் ஆனார், இரண்டு தலை கோல்களை அடித்தார், ஹெட்டிங் அவர் கடைசியாக அறியப்பட்ட திறமையாக இருக்கலாம். இன்னும் ஜிடானின் புத்திசாலித்தனம் அவர் ஒரு முழுமையான கால்பந்து வீரர் என்பதில் உள்ளது.

இன்றும் கூட, ஜிடேன் மிட்ஃபீல்ட் சிறந்து விளங்குவதற்கான அளவுகோலாக இருக்கிறார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ, கோல் அடிப்பதை முழுமையான உச்சத்திற்கு கொண்டு சென்றவர்

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உச்சக்கட்ட கோல் அவுட்புட்டால் கால்பந்து ரசிகர்கள் கெட்டுப் போயுள்ளனர். ஒரு ஆடம்பரமான மற்றும் எப்போதும் திறமையான விங்கராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, கிறிஸ்டியானோ தனது உச்ச ஆண்டுகளில் கோல் அடிக்கும் இயந்திரமாக மாற்றினார். ஒரு குறைபாடற்ற உடல் மாதிரி, கிறிஸ்டியானோ தனது கால்கள், உடல் அல்லது தலையில் முடிக்கும் கலையை முழுமையாக்கினார். அவரது வாழ்க்கையில், அவர் 2016 யூரோவில் ஒரு சாத்தியமற்ற வெற்றி உட்பட, தன்னால் முடிந்த ஒவ்வொரு தனிப்பட்ட மற்றும் கிளப் பாராட்டுகளையும் வென்றுள்ளார்.

G.O.A.T விவாதத்தில் இருக்கும் கிறிஸ்டியானோ, இதுவரை கேள்விப்படாத கோல்-ஸ்கோரிங் எண்களைத் தக்கவைத்து, மெஸ்ஸியுடன் ஒரு பழம்பெரும் போட்டியை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டது. அவரது கிளப் வாழ்க்கையில், அவர் 651 ஆட்டங்களில் 636 கோல்களுக்கு பங்களித்துள்ளார், மேலும் 118 கோல்களை போர்ச்சுகலுக்கு அடித்துள்ளார். அவரது முழுமையான உச்சத்தில், அவர் ஒரு சீசனில் சுமார் 40 கிளப் கோல்கள் மற்றும் 10 அசிஸ்ட்களை சராசரியாகப் பெற்றார்.

கிறிஸ்டியானோவின் மகத்துவம் அவர் நீண்ட காலமாக கோல் அடிப்பதை இயல்பாக்கிய விதத்தில் உள்ளது.

ரொனால்டோ நசாரியோ, இடைக்கால நட்சத்திரம்

பலருக்கு பிரேசிலின் ரொனால்டோ அவரது தலைமுறையின் மிகவும் திறமையான வீரர் ஆவார். அவரது வாழ்க்கை காயங்களால் கடுமையாக துண்டிக்கப்பட்டது. 2வது ஃபெனோமினோ (Il Fenomeno) என அவர் அன்புடன் அழைக்கப்பட்டபடி, ஒரு வேகமான வேகம் மற்றும் பொருத்தமாக முடிவெடுக்கும் திறனைக் கொண்டிருந்தார். என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே வீரர்களை வீழ்த்தினார். அவரது ஆரம்ப ஆண்டுகளில் அவர் வெவ்வேறு அமைப்புகளில் வீடியோ கேம் எண்களை வைத்தார். உதாரணமாக, 1996-97ல் பார்சிலோனாவுக்கான ஒரே சீசனில், அவர் 51 போட்டிகளில் 47 முறை அடித்தார்.

இருப்பினும், நூற்றாண்டின் தொடக்கத்தில் முழங்காலில் ஏற்பட்ட காயங்கள், 2007 வரை அவர் மேல் மட்டத்தில் விளையாடியிருந்தாலும், அவரது சில ஆரம்பகால மாயாஜாலங்களைப் பறித்துக்கொண்டது. இந்த பட்டியலில் உள்ள பலரை விட ஃபெனோமினோ மிகக் குறைவான வாழ்க்கையையும், மிகக் குறைவான உச்சத்தையும் கொண்டிருந்தார். ஆயினும்கூட, அவரது G.O.A.T கூற்று, அவரது வாழ்க்கை காயங்களால் ஆடுவதற்கு முந்தைய காலகட்டத்தில், அவரது விளையாட்டு மற்றும் தயாரிப்பு கால்பந்து வரலாற்றில் இணையற்றதாக இருந்தது.

2002 இல் காயத்திலிருந்து பிரேசில் அணிக்குத் திரும்பியது மற்றும் வெற்றிகரமான உலகக் கோப்பை பிரச்சாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பாளராக ஆனது அவரது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும்.

சிறந்து விளங்கும் லியோனல் மெஸ்ஸி

லியோ மெஸ்ஸி, மரடோனாவின் மாயாஜாலத்தை இணையற்ற தயாரிப்பில் இணைத்துள்ளார். அவரது வாழ்க்கையில், அவர் 592 கோல்களை அடித்தார் (கிளப் பிளஸ் சர்வதேச விளையாட்டுகள்) மேலும் 350 முறை உதவினார். வழியில், அவர் தனது உன்னதமான திறமை, பார்வை மற்றும் துணிச்சலுடன் கற்பனை செய்ய முடியாததை முயற்சிக்கும் வீரர்களையும் ரசிகர்களையும் ஒரே மாதிரியாகக் கவர்ந்துள்ளார். ஒரு வீரர் விளையாட்டின் அனைத்து அம்சங்களையும், முன்பு தவறவிட்ட அனைத்து சிறிய போக்குகளையும் எதிரிகளுக்குத் தெரிந்துகொள்ள மேம்பட்ட பகுப்பாய்வு மற்றும் வீடியோ காட்சிகள் உதவும் நவீன காலத்திலும் இவை அனைத்தையும் அவர் செய்தார்.

மெஸ்ஸியின் G.O.A.T விவாதம் எளிமையானது. நீடித்த சிறப்பு. முன்னதாக, அவரது விளையாட்டு வீரர்கள் குறுகிய உமிழும் சிகரங்களைக் கொண்டிருந்தனர், ஆனால் காயங்கள், அலட்சியம் அல்லது வெறுமனே “கண்டுபிடிக்கப்படுதல்” காரணமாக மங்கிவிட்டார். மெஸ்ஸியின் சொந்த சிலையான டியாகோ மரடோனா சிறந்த உதாரணம். மெஸ்ஸி தனது மாயாஜாலத்தை இவ்வளவு நீண்ட காலத்திற்கு உயிர்ப்புடன் வைத்திருப்பது அவரது மகத்துவத்திற்கு இறுதிச் சான்றாகும்.

இந்த உலகக் கோப்பை வெற்றி ஒரு பழம்பெரும் வாழ்க்கைக்கு ஒரு கதைப்புத்தகம். அவரது கோப்பை கேபினட் இப்போது நிறைவடைந்துள்ளது, மேலும் அவர் விளையாட்டை விளையாடுவதில் மிகச்சிறந்தவராக இருக்க வேண்டும். இனி அவரால் ஒன்றும் செய்ய முடியாது.



Read in source website

ரிசர்வ் வங்கி 2022-23-ஆம் ஆண்டுக்கான இறையாண்மை தங்கப் பத்திரத் திட்டத்தை அறிவித்துள்ளது. இது டிசம்பர் 19 முதல் டிசம்பர் 23 வரை கிடைக்கும்.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 2022-23-ஆம் ஆண்டுக்கான தொடர் III இறையாண்மை தங்கப் பத்திரத் திட்டத்தை அறிவித்துள்ளது. இது 2022 டிசம்பர் 19 முதல் 23ஆம் தேதிவரை சந்தாவுக்குத் திறக்கப்படும்.

இதில், முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தங்கத்தின் அளவு பாதுகாக்கப்படுகிறது. ஆகவே முதலீட்டாளர் முன்கூட்டிய மீட்பின் போது தற்போதைய சந்தை விலையைப் பெறுகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தங்கப் பத்திரங்களில் பணத்தைப் போட்ட முதலீட்டாளர்கள் இப்போது 45 சதவீத லாபத்தில் அமர்ந்துள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 89 சதவீத மதிப்பீட்டில் லாபம் ஈட்டியுள்ளனர்.

சலுகை

இந்தியா புல்லியன் அண்ட் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் லிமிடெட் (IBJA) வெளியிட்ட எளிய சராசரி இறுதி விலையின் அடிப்படையிலான பத்திரத்தின் பெயரளவு மதிப்பு இருக்கும்.
இதற்கு சந்தா காலத்திற்கு முந்தைய வாரத்தின் கடைசி மூன்று வேலை நாட்களில் 999 தூய்மையான தங்கம் டிசம்பர் 14, 15 மற்றும் 16 ஆகிய தினங்களில் கிடைக்கும்.

இதன் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,409 ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு பெயரளவு மதிப்பை விட கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி உள்ளது.
மேலும், விண்ணப்பத்திற்கு எதிரான கட்டணம் டிஜிட்டல் முறையில் செய்யப்படுகிறது.

ரிட்டன்

2017 டிசம்பரில் ஒரு கிராம் ரூ.2,890க்கு வெளியிடப்பட்ட தங்கப் பத்திரங்கள் (சீரிஸ் XII) டிசம்பர் 17-ஆம் தேதி கிராமுக்கு ரூ.5,409-க்கு 89.16 சதவீதம் மதிப்பில் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை கூறியது.
நவம்பர் 2021 இல் தங்கப் பத்திரங்களை ஒரு கிராமுக்கு ரூ. 4,791 என்ற விகிதத்தில் ரிசர்வ் வங்கி வழங்கியது. இது தற்போது ரூ. 5,409 ஆக உயர்ந்துள்ளது, இது 12.89 சதவீதம் உயர்வாகும்.

ரிசர்வ் வங்கி வழங்கும் 2.50 சதவீத வட்டி விகிதத்தையும் சேர்த்து, முதலீட்டாளர்களுக்கான வருமானம் ஒரு வருட காலத்தில் 15.39 சதவீதமாகும்.

2019 நவம்பரில் தங்கப் பத்திரங்களில் கிராம் ஒன்றுக்கு ரூ. 3,795 என்ற அளவில் பணத்தைப் போட்ட முதலீட்டாளர்கள் இப்போது தற்போதைய சந்தை விலையில் 42.52 சதவீதம் லாபத்தில் அமர்ந்துள்ளனர். 2.50 சதவீத வட்டி விகிதத்தையும் சேர்த்து மொத்த லாபம் 45 சதவீதம்.

வங்கிகள் ஓராண்டு கால வைப்புத்தொகைக்கு 6.70-7 சதவீத வட்டியை வழங்கும்போது, தங்கப் பத்திரங்கள் ஆரம்ப முதலீட்டின் தொகைக்கு ஆண்டுக்கு 2.50 சதவீதம் (நிலையான விகிதம்) வட்டி அளிக்கின்றன. முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் அரையாண்டுக்கு வட்டி வரவு வைக்கப்படும் மற்றும் கடைசி வட்டி முதிர்வின்போது அசல் தொகையுடன் செலுத்தப்படும்.

இருப்பினும், முதிர்ச்சியின் போது, தங்கப் பத்திரங்கள் இந்திய ரூபாயில் கொடுக்கப்படும். இது திருப்பிச் செலுத்தும் தேதியிலிருந்து முந்தைய மூன்று வணிக நாட்களின் 999 தூய்மையான தங்கத்தின் இறுதி விலையின் எளிய சராசரியை அடிப்படையாகக் கொண்டது.

இதுவரை வெளியீடு

2016-17 முதல் 61 வெளியீடுகளில் 96,283 கிலோ (96.28 டன்) தங்கப் பத்திரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது, இது தற்போதைய சந்தை விலையின்படி ரூ.52,080 கோடியாகும். முதலீட்டாளர்கள் இதுவரை 876 கிலோ தங்கப் பத்திரங்களை முன்கூட்டியே மீட்டெடுத்துள்ளனர்.

தங்கப் பத்திரங்கள் என்றால் என்ன?

தங்கப் பத்திரங்கள் என்பது கிராம் தங்கத்தில் குறிப்பிடப்படும் அரசுப் பத்திரங்கள் ஆகும். அவை நேரடி தங்கத்தை வைத்திருப்பதற்கு மாற்றாக உள்ளன.
முதலீட்டாளர்கள் வெளியீட்டு விலையை ரொக்கமாக செலுத்த வேண்டும். பத்திரங்கள் முதிர்வின் போது பணமாக மீட்டெடுக்கப்படும். இந்த பத்திரத்தை அரசு சார்பில் ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.

இந்தப் பத்திரங்கள் தங்கத்தை நேரடி வடிவத்தில் வைத்திருப்பதற்கு சிறந்த மாற்றீட்டை வழங்குகின்றன. சேமிப்பின் அபாயங்கள் மற்றும் செலவுகள் நீக்கப்படும். முதலீட்டாளர்கள் முதிர்வு மற்றும் குறிப்பிட்ட கால வட்டியின் போது தங்கத்தின் சந்தை மதிப்பை உறுதி செய்கிறார்கள்.

நகை வடிவில் தங்கத்தின் விஷயத்தில் கட்டணம் மற்றும் தூய்மை போன்ற சிக்கல்களிலிருந்து இது இலவசம். பத்திரங்கள் ரிசர்வ் வங்கியின் புத்தகங்களில் அல்லது டிமேட் வடிவில் நஷ்ட ஆபத்தை நீக்கும். பத்திரங்களின் காலம் எட்டு ஆண்டுகள் என்றாலும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதை திருப்பிக் கொள்ளலாம்.



Read in source website

நாட்டில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட 1.58 கோடி சிறார்கள் பல்வேறு வகையான போதைப் பொருள்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் 2016-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வை அடுத்து மத்திய அரசு தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.

"10 முதல் 75 வயதுக்குட்பட்டவர்களில் 14.6 % பேர் (16 கோடி பேர்) மது அருந்துகின்றனர். அப்படி மது அருந்துவோரில் 17 ஆண்களுக்கு ஒரு பெண் (1.6 %) என்ற விகிதத்தில் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். மதுவுக்கு அடுத்ததாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. "பாங்' என்ற வகை கஞ்சாவை 2.2 கோடி பேரும், சட்ட விரோத கஞ்சா பொருள்களை 1.3 கோடி பேரும் பயன்படுத்துகின்றனர்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பொதுவாக புள்ளிவிவரங்கள் முழு உண்மையை வெளிப்படுத்துவதில்லை. இப்போது மத்திய அரசு தெரிவித்ததைவிட பல மடங்கு அதிகம் பேர் இவற்றுக்கு அடிமையாகி இருக்க வாய்ப்புள்ளது. மது அருந்தினால் அதன் வாசனை எளிதில் காட்டிக் கொடுத்துவிடும். அதனால், இப்போது பெரும்பாலான இளைஞர்கள் மது தவிர மற்ற போதைப் பொருள்களை நாடுகின்றனர்.

தென்காசி அருகே பாவூர்சத்திரத்தில் ஒரு சிறுவனுக்கு "கூலிப்' என்ற பாக்கு போன்ற, நாக்கின் அடியில் வைத்துக் கொள்ளக்கூடிய போதைப் பொருளை 16 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்கள் கொடுத்து அதை விடியோ எடுத்து வெளியிட்டதால் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து சாக்லெட் வடிவிலும் போதைப் பொருள் விற்பனை செய்வது இப்போது அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே 16 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளுடன் இளைஞர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுவிலக்கு அமலில் உள்ள பிகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் சரண் மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் 30 பேர் இறந்துவிட்டதாக மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால், அங்கு 60-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அண்டை மாவட்டமான 

சிவானில் 6 பேர் இறந்துள்ளனர். அத்துடன் பலர் பார்வை இழந்துள்ளனர். இது குறித்த முழுவிவரம் இனிதான் தெரியவரும்.இங்கே குறிப்பிட்ட சம்பவங்கள் பெரிய மலை முகட்டின் நுனி போன்றவைதான் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. இதுபோன்று போதைக்கு அடிமையாவது ஏதோ அவர்களோடு முடிந்துவிடக் கூடிய விஷயம் அல்ல.

இது மிகப் பெரும் சமூகப் பிரச்னையாக எதிர்காலத்தில் உருவெடுக்கும். மதுவுக்கு அடிமையாகி உள்ள 16 கோடி பேரில் 5.7 கோடி பேரும், போதை மாத்திரைகள் பயன்படுத்தும் 2.26 கோடி பேரில் 77 லட்சம் பேரும் கடும் உடல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

உடல் ரீதியான பிரச்னைகள் ஒருபுறம் இருக்க, இதனால் குடும்ப அங்கத்தினர்களிடையே அடிக்கடி தகராறு, அமைதியின்மை, கணவன் - மனைவி பரஸ்பரம் விவாகரத்து கோருதல், போதைக்கு அடிமையானவர்களின் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுதல் போன்றவை அதிகரிக்கின்றன. இவற்றை எல்லாம், எந்தக் கணக்கெடுப்பிலும் அறிந்துகொள்ள முடியாது.

கோவையில் நடைபெற்ற ஒரு கல்லூரி விழாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "போதைப் பொருள் பழக்கத்துக்கு ஒரு சிலர் அடிமையாவது கவலையாக உள்ளது. ஒரு மாணவன் போதைக்கு அடிமையாவது என்பது அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல, மாநிலத்தின் வளர்ச்சிக்கே தடையாக உள்ளது' என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருள்களைத் தடுக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கஞ்சா வேட்டை - 1, கஞ்சா வேட்டை - 2 என்ற பெயரில் பெரிய அளவில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 22,852 கிலோ கஞ்சா பிடிபட்டது. 11,964 பேர் கைது செய்யப்பட்டனர். 6,323 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. 482 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கடந்த சில நாள்களாக "ஆபரேஷன் கஞ்சா வேட்டை -3' நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. போதைப் பொருள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்குப் பரிசு அளிக்கப்படும் எனவும் தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) சி.சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் என்ற இடத்தில் ரூ.160 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி கைப்பற்றினர். சென்னை முதல் ராமநாதபுரம் வரை அத்தனை சோதனைச் சாவடிகளையும் கடந்து போதைப் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டது எப்படி என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எழுப்பி இருக்கும் கேள்வி சிந்தனைக்குரியது.

தேசிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத் திட்டத்தில் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துகள் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. போதைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபடும் பெரும் புள்ளிகள் அடையாளம் காணப்பட்டு முடக்கப்படுவதுடன், போதைப் பொருள்கள் உள்ளே நுழையும் எல்லா வழிகளும் அடைக்கப்பட வேண்டும். மாணவர்களும், இளைஞர்களும் போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதில் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது.



Read in source website

ஒரு மொழியின் தூய்மையும், பண்பாடும், வளர்ச்சியும் அந்த மொழி சார்ந்த நிலத்தையும், அம்மொழி பேசும் மக்களையும் பொறுத்தே அமையும். அதாவது, மொழியின் நிலைத்த வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் மக்கள் வழக்குப் பேச்சு இன்றியமையாதது. 

காலத்திற்கு ஒவ்வாத சில வரையறைகளைக் காலச்சூழலுக்கேற்ப மாற்றி, சீர்திருத்திக் கொள்ள வேண்டியது மொழியில் வளர்ச்சிக்கு அவசியமாகிறது. படிப்பறிவும், பட்டறிவும் கலந்து, அறிஞர் உலகமும், பாமர மக்கள் உலகமும் ஒன்றுக்கொன்று முரண்பாடின்றி பேசக்கூடிய நிலை உருவாகும்போதுதான் மொழியில் முன்னேற்றம் ஏற்பட முடியும். 

அந்த வகையில், ஆக்ஸ்ஃபோர்டு அகராதி அமைப்பு ஆண்டுதோறும், அந்த வருடத்தில் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்ட, அதிக முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைக்கு "இந்த ஆண்டிற்கான வார்த்தை' என்ற அங்கீகாரத்தை வழங்கி கெüரவித்து வருகிறது. ஆக்ஸ்ஃபோர்டு அகராதி நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும்  சிறந்த வார்த்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக இணையதள வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.  

ஒரு ஆண்டிற்கான சிறந்த சொல்லை, முந்தைய 12 மாதங்களில் மக்களின் சமுதாயப் பண்பின் அடிப்படைக் கூறுகளையும், குறிப்பிட்ட சமயத்தில் ஒருவரிடம் காணப்படும் மனநிலையையும், எண்ணங்களையும் பிரதிபலிக்கும் நோக்கத்தை மையமாக வைத்துத் தேர்ந்தெடுத்து மக்களின் வழக்குச் சொல்லாக ஆக்ஸ்ஃபோர்டு அகராதி அறிவித்து வருகிறது. 2013-இல் "செல்ஃபி', 2017-இல் "யூத்குவாக்', 2018-இல் "டாக்சிக்', 2019-இல் "க்ளைமேட் சேஞ்ச்', 2021-இல் "வாக்ஸ்' ஆகிய வார்த்தைகளை மக்களின் வழக்குச் சொல்லாக அறிவித்தது.  2020-இல் எந்த வார்த்தையையும் அறிவிக்கவில்லை. 

இந்த ஆண்டு "மெட்டாவெர்ஸ்', "ஐ ஸ்டாண்ட் வித்', "கோப்லின் மோட்' ஆகிய மூன்று வார்த்தைகள் மக்களின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. கடந்த நவம்பர், 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை இணையதளம்வழி வாக்கெடுப்பு நடந்தது.   

இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக "கோப்லின் மோட்' என்ற வார்த்தையை ஆக்ஸ்ஃபோர்டு அகராதி அமைப்பு  தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது. இந்த "கோப்லின் மோட்' என்ற வார்த்தை சுமார் 3,18,956 லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற வார்த்தையாக ஆக்ஸ்ஃபோர்டு அகராதி அமைப்பு அறிவித்துள்ளது. 93 சதவீதம் பேர் இதனைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதே சமயத்தில் "மெட்டாவெர்ஸ்' 4,484 வாக்குகளும், "ஐ ஸ்டாண்ட் வித்' என்ற வார்த்தை 8,638 வாக்குகளும் பெற்று முறையே இரண்டாமிடத்தையும், மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.   

"கோப்லின் மோட்' என்றால் பொதுவாக உள்ள சமூகத்திற்கென இருக்கும் விதிகள், கட்டுப்பாடுகள், எதிர்பார்புகள் ஆகியவற்றையெல்லாம் நிராகரித்து, பொருட்படுத்தாமல் தனிநபர் அவரவருக்கு எது எது விருப்பமானதோ அதையெல்லாம் செய்தல், சுய விருப்பத்துடன் தன் நலன் சார்ந்தே சிந்தித்தல், குற்றவுணர்வு ஏதுமில்லாமல் சோம்பேறிதனமாக, பேராசையுடன் வெட்கமின்றி  நடந்து கொள்ளுதல் இவை அனைத்தும் இந்த வார்த்தையில் அடங்கியுள்ளன. அதாவது, இந்த வார்த்தை குறிப்பாக வீட்டை சுத்தப்படுத்தாமல் அலங்கோலமாக்கி, சோம்பேறித்தமான கற்பனை உலகில் இருப்பவர்களின் மனநிலையை எடுத்துக் காட்டுகிறது. 

"மெட்டாவெர்ஸ்' என்பது ஒரு விரிந்த பொருள்தரும் சொல். இதைப் பற்றி ஒரே வார்த்தையில் விளக்கிட முடியாது. நிஜ உலகத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு எண்ம உலகம் (டிஜிட்டல் வேர்ல்டு) இது. அதாவது, மெய்ந்நிகர் வடிவங்களுக்கான தளத்தை முகநூல் (மெட்டா) போன்ற நிறுவனங்கள் வழங்கினால், அதுதான் மெட்டாவெர்ஸ். மெட்டாவெர்ஸ் என்ற வார்த்தை ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் 1992-ஆம் ஆண்டு இடம் பெற்றுள்ளது. மேலும், இவ்வார்த்தை நீல் ஸ்டீஃபன்சன் எழுதிய  "ஸ்னோ கிராஷ்' எனும் நாவலிலும் இடம் பெற்றுள்ளது. 

"ஐ ஸ்டாண்ட் வித்' எனும் வார்த்தை 14-ஆம் நூற்றாண்டிலிருந்தே அறியப்பட்டாலும், 2009-ஆம் ஆண்டில்தான் பிரபலமானது. ஆனாலும், 21-ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக, தனி நபரோ, குழுவோ  ஒருவருக்குத் துணையாக நின்றி அவரை ஆதரிப்பது "ஹேஷ்டேக்' ஆனது. உக்ரைன் மீதான ரஷிய நாட்டின் படையெடுப்பைத் தொடர்ந்து மார்ச் 2022-இல் இவ்வார்த்தை மிகவும் பிரபலமானது. 

தொற்று நோய் வேகமாகப் பரவும் காலத்திலும், உலக நாடுகளிடையே போர் நடைபெறும் காலத்திலும் மக்கள் அச்சம் காரணமாக தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருப்பார்கள்.  உதாரணமாக, கரோனா தீநுண்மி பரவிய  காலத்தில் அனேகமாக அனைவருமே தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்தார்கள்.

 அவ்வாறு, மக்கள் அனைவரும் மனதளவில் சோம்பேறியாகி "கோப்லின் மோடில்' இருந்ததால், "கோப்லின் மோட்' என்ற வார்த்தை மீண்டும் இந்த ஆண்டு டிவிட்டரில்  பிரபலமான வார்த்தையாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆக்ஸ்ஃபோர்டு நிறுவனத்தின் மொழிகள் பிரிவின் தலைவர் காஸ்பர் கிராத்வோல் இது குறித்துக் கூறுகையில், "தங்களுடைய  அனுபவத்தில் கிடைத்த வார்த்தையானதால் "கோப்லின் மோட்' என்பதை இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்' என்று கூறினார். 

எனவே, காலங்காலமாக குறையாத பயிற்சியும், நிறைவான வழக்கும் பெற்றே மொழி பண்படுகிறது. நாட்டில் இயற்கையால் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள், அதனால் ஏற்படும் சூழ்நிலைகள், தொழில்நுட்ப மேம்பாடு, மக்களின் பண்பாட்டு வளர்ச்சி ஆகியவை கூட மொழியின் ஆற்றலுக்கும், சொல் வளத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும்,  முன்னேற்றத்திற்கும் காரணமாக அமைந்து விடுகின்றன. இதைத்தான் ஆக்ஸ்ஃபோர்டு அகராதி அமைப்பின் மொழியியல் ஆய்வு சொல்கிறது.



Read in source website

இந்தியாவிற்கான காவல் சட்டத்தை இயற்றிய ஆங்கிலேயரின் லண்டன் பெருநகரக் காவல்துறையை உலுக்கி, தலைகுனியச் செய்த குற்ற நிகழ்வு ஒன்று அண்மையில் நிகழ்ந்துள்ளது. 

கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருந்த 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு மாலை பொழுதில் தெற்கு லண்டன் சாலை ஒன்றில் விற்பனை நிர்வாகியாகப் பணியாற்றிவந்த இளம்பெண் ஒருவர் தனது வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். 

அந்த நேரத்தில் அலுவல் முடித்து, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த லண்டன் பெருநகர காவல்துறையைச் சேர்ந்த ஆண் அதிகாரி ஒருவர் அந்த பெண்ணை வழிமறித்தார். தனது அடையாள அட்டையை அந்த பெண்ணிடம் காட்டி, பொய்யான குற்றச்செயல் ஒன்றிற்காக அவரை கைது செய்வதாகக் கூறி, அவரின் கைகளில் விலங்கு மாட்டி, அவரைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு, லண்டன் புறநகர் பகுதியில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்தார் அந்த காவல் அதிகாரி. இறந்துபோன பெண்ணின் பிரேத்தின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த அந்த காவல் அதிகாரி, அந்தப் பெண்ணின் கைப்பேசியையும், உடைமைகளையும் அருகிலுள்ள நீரோடையில் போட்டு, தான் செய்த குற்றச் செயலுக்கான ஆதாரங்களை மறைத்துள்ளார்.

கண்காணிப்பு கேமராவின் பதிவுகள், கைப்பேசி மூலம் பெறப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் லண்டன் பெருநகர காவல்துறை புலன்விசாரணையைத் தொடங்கியது. "பெண் காணவில்லை' எனப் பதிவான அந்த வழக்கில் துரிதமாக புலன் விசாரணை மேற்கொண்ட லண்டன் காவல்துறை, அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்று, பாலியல் வன்முறை செய்து, கொலை செய்த காவல் அதிகாரியை கைது செய்து, சிறையில் அடைத்தது.

அந்த காவல் அதிகாரி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை, லண்டன் மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர், 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம், தண்டனை காலத்தில் குற்றவாளிக்கு "பரோல்' வழங்காமல், வாழ்நாள் முழுவதும் அவர் சிறையில் கழிக்க வேண்டுமென்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

குற்றம் நிகழ்ந்த ஏழு மாதத்திற்குள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் வகையில் புலன் விசாரணை மேற்கொண்ட காவல்துறையின் துரித செயல்பாடுகள் குறித்து பாராட்டுகளோ, இளம்பெண்ணை இழந்து தவிக்கும் அப்பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோ பிரிட்டனில் எழவில்லை.

மாறாக, "நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய காவல்துறையினர் பெண் சமூகத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடக் காரணம் என்ன' என்ற கேள்வியே பிரிட்டனில் எழுந்தது. 

"லண்டன் நகர சாலைகளில் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் பாதுகாப்பில்லை' என்று கூறி லண்டன் மேயர் தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார். "பொதுமக்களிடத்தில் நம்பிக்கையை இழந்துவரும் நெருக்கடியான சூழலை லண்டன் பெருநகர காவல்துறை உணர்ந்துகொண்டதற்கான அறிகுறியைக் காணமுடியவில்லை' என பிரிட்டனில் இருந்து வெளிவரும் "தி கார்டியன்' நாளிதழ் தலையங்கம் எழுதியது. 

இந்த குற்ற நிகழ்வு நடைபெற்ற காலகட்டத்தில் லண்டன் பெருநகர காவல் ஆணையர் பொறுப்பில் இருந்த பெண் காவல் உயரதிகாரி இச்சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

2018-ஆம் ஆண்டில் லண்டன் பெருநகர காவல்துறையில் பணி நியமனம் செய்யப்பட்டபோது, இந்த குற்றவாளியின் குற்றப் பின்னணி குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளாததும், காவல்துறையில் பணியிலிருந்தபோது செய்த சில குற்றச் செயல்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காததும், காவல் பணியில் இரண்டாம் ஆண்டின் இறுதியில் அவரது தகுதி குறித்து ஆய்வு மேற்கொள்ளாமல், அவரைத் தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கி, முக்கியத்துவம் வாய்ந்த பணிக்கு நியமனம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளன.

லண்டன் பெருநகர காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து சமூக செயற்பாட்டாளர்கள் மேற்கொண்ட கள ஆய்வின் அறிக்கை, லண்டன் செய்தி ஊடகங்களில் கடந்த நவம்பர் மாதத்தில் வெளியாகியுள்ளது.  

காவல்துறையில் பணி நியமனம் செய்யப்பட்ட சிலரின் குற்றப் பின்னணி குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பதும், பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பில் இருப்பதும் சமூக செயற்பாட்டாளர்களின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது. 

காவல்துறையில் ஒரே சமயத்தில் அதிக எண்ணிக்கையில் ஆள் சேர்ப்பு நடைபெறுவதால், தேர்வு செய்யப்பட்டவர்களின் குற்றப் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்படுவதில்லை என்பதும் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுமக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் லண்டன் பெருநகர காவல்துறையில் தேவையான மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நாட்டு மக்களுக்கு பிரிட்டன் உள்துறை செயலர் உறுதியளித்துள்ளார்.

1829-ஆம் ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட "மெட்ரோபாலிடன் காவல் சட்ட'த்தின் அடிப்படையில் செயல்பட்டுவரும் லண்டன் பெருநகர காவல் அமைப்பு,  உலக நாடுகள் பலவற்றில் அமைக்கப்பட்டுள்ள காவல் அமைப்புகளுக்கு முன்னோடியாக விளங்குகிறது.

இருநூறு ஆண்டுகளாகத் திறம்படச் செயல்பட்டுவந்த லண்டன் பெருநகரக் காவல் அமைப்பு, தற்போது பிரிட்டன் மக்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, லண்டன் பெருநகர காவல் அமைப்பில் உரிய மாற்றங்கள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1861-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட இந்திய காவல் சட்டத்தை அடித்தளமாகக் கொண்டு நம்நாட்டில் காவல்துறை இயங்கிவருகிறது. இந்திய விடுதலைக்குப் பின்னர், இந்திய காவல் சட்டத்தில் அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் வேலியே பயிரை மேய்வது போன்று காவல்துறையில் பணிபுரியும் ஒருசிலர் கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் நம்நாட்டில் தொடர்ந்து நிகழ்கின்றன.

நள்ளிரவில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து, பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக ரோந்து காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டதும், வர்த்தகர் ஒருவரைக் கடத்திச் சென்ற குற்றச் செயலுக்காக காவல் ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதும் கடந்த ஓராண்டு காலத்தில் நம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளன.

13 வயதுடைய சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தத் துணைபுரிந்தது மட்டுமின்றி, அச்சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றச் செயலுக்காக "போக்சோ' சட்டத்தின்படி காவல் ஆய்வாளர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமும் சில மாதங்களுக்கு முன்பு சென்னை நகரில் நிகழ்ந்துள்ளது.

காவல்துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரியும் பெண்கள் சிலர், காவல்துறையிலுள்ள சில ஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது. இம்மாதிரியான பிரச்னைகளுக்கு "விசாகா வழிகாட்டுதல்கள்' தீர்வாக அமையாத சூழலைக் காணமுடிகிறது.

பாலியல் துன்புறுத்தல், போதைப் பொருள் விற்பனைக்குத் துணை போவது போன்ற குற்றங்களில் ஈடுபடும் காவல்துறையினரை கைது செய்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு மட்டும் காவல்துறையின் கடமை முடிந்துவிடுவதில்லை. சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவல்துறையினர் குற்றச்செயல்களில் ஈடுபடக் காரணம் என்ன என்பது குறித்த ஆய்வும் இன்றைய சூழலில் அவசியமானதாகும்.

களப்பணியாற்றும் காவல்துறையினரிடம் குவிந்துள்ள அதிகாரம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்த உயரதிகாரிகளின் கண்காணிப்பும், வழிகாட்டுதலும் குறைந்து வருகின்ற நிலை நிலவுகிறது. அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்களைக் கண்டித்து, முறைப்படுத்துவதற்கு மாறாக, அவர்கள் செய்யும் முறைகேடுகளைப் புறந்தள்ளிவிடும் மனநிலை உயரதிகாரிகள் சிலரிடம் வெளிப்படுகிறது. 

காவல்துறையில் செல்வாக்கு மிகுந்த பணியிடங்களைப் பெறுவதில் காவல் அதிகாரிகளிடையே போட்டி நிலவுவதும், சிரமப்பட்டு வாங்கிய பதவியைத் தக்க வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவதும் காவல்துறையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் பணியின்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு உயரதிகாரிகளின் கவனக்குறைவான திட்டமிடல் காரணமாக இருந்தாலும், களப்பணியாற்றும் காவல்துறையினர் மீது பழி சுமத்துகின்ற நடைமுறை காவல்துறையின் செயல்திறனை இழக்கச் செய்கிறது. 

காவல்துறையில் பல நிலைகளில் பணியில் சேர்பவர்களின் பணித்திறனை ஆண்டுதோறும் மதிப்பீடு செய்யும் முறை சம்பிரதாயத்திற்காகச் செய்யப்படுவதால், தங்களின் பணித்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு காவல்துறையினருக்கு ஏற்படுவதில்லை.

உயரதிகாரிகளுக்குத் தெரியாமல் கையூட்டு பெற்றுவந்த நிலை மாறி, வெளிப்படையாக கையூட்டைக் கேட்டுப் பெறும் நிலையை நோக்கி காவல்துறை நகர்ந்து செல்லும் துர்பாக்கிய நிலையை சீர்படுத்த வேண்டியது மிகவும் இன்றியமையாதது ஆகும்.

கட்டுரையாளர்:
காவல்துறை உயர் அதிகாரி (ஓய்வு).



Read in source website

ஆபத்தான ஆறு பூச்சிக்கொல்லிகளுக்குத் தமிழக அரசு தற்காலிகமாகத் தடைவிதித்திருக்கிறது. கடைகளில் எளிதாகக் கிடைக்கும் பூச்சிக்கொல்லிகளை அருந்தித் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதில் இன்னும் பல படிகள் முன்னேற வேண்டிய அவசியமும் இருக்கிறது.

2017-18 காலகட்டத்தில், தமிழகத்தில் இந்த ஆறு பூச்சிக்கொல்லிகளை அருந்தி விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொண்டதாக வேளாண் துறை இயக்குநர் வெளியிட்ட புள்ளிவிவரம் கூறுகிறது. இந்தச் சூழலில், இது தற்கொலையைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கை எனச் சொல்லப்பட்டாலும் வேளாண் துறையில் செய்யப்பட வேண்டிய முக்கிய மாற்றத்துக்கான முதல் புள்ளியாகவும் இதைக் கருத இடமிருக்கிறது.



Read in source website

அண்ணாவின் கணிப்பு பொய்யாக வில்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குத் தன்னைப் பேச அழைத்த அந்த இரண்டு மாணவத் தோழர்களைப் பற்றி இடைப்பட்ட காலத்தில் அவர் வேறுவிதமாகவும் எண்ணியிருந்தார். அண்ணா தம் தம்பியர்க்கு 1955இல் எழுதிய கடிதம் ஒன்றில் இருவரைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.

‘அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலேதான் நான் நெடுஞ்செழியனைக் கண்டது… அப்போது, தோழர் அன்பழகன் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றிவருபவர் - தோழர் நெடுஞ்செழியன் தானுண்டு தன் படிப்புண்டு என்று இருக்கும் போக்கினராகத் தோற்றமளித்துவந்தார்.

நான் அப்போது தோழர் அன்பழகன், கல்லூரியிலிருந்து வெளியேறியதும் கழகத்தில் வந்து சேருவார்; தோழர் நெடுஞ்செழியன் எங்காவது கல்லூரியில் கம்பனின் கவித்திறமை பற்றி (கட்டாயத்தாலும்) இளங்கோ அடிகள் பற்றி (விருப்பத்துடனும்) எடுத்துரைத்துக்கொண்டு, தமிழின் எழிலைக் கண்டும் காட்டியும் பணியாற்றிவருவார் என்றே எண்ணிக்கொண்டேன்.’

அண்ணாவின் கணிப்புக்கு மாறாக, கல்லூரிப் பேராசிரியராகிவிட்ட அன்பழகனும் விரைவில் தன்னை முழுமையாக அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டுவிட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அந்த இரு மாணவத் தோழர்களும் அரசியல் களத்தில் தங்களது முத்திரைகளை அழுத்தமாகவே பதித்துச்சென்றுள்ளனர்.

அண்ணாமலை நாட்கள்: அன்பழகனையும் நெடுஞ்செழியனையும் பேசும்தோறும் அவர்களது அரசியல் பங்களிப்புகளைக் காட்டிலும் அண்ணாமலை நாட்கள் எப்போதுமே முதன்மைப்படுத்திப் பேசத்தக்கவையாக அமைந்துவிட்டன. 1942இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு அண்ணாபேசச் சென்றிருந்தபோது, மாணவர்களில் பெரும் பகுதியினர் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர். மாணவர் மன்றச் செயலாளர் என்ற முறையில் அந்த எதிர்ப்பை மீறி அண்ணாவை அங்கு பேசவைத்தவர் அன்பழகன்.

அன்று அண்ணாவோடு அன்பழகனும் நெடுஞ்செழியனும் கூட்டத்தில் பேசினார்கள். கூட்டம் முடிந்தது. எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மாணவர்கள் அண்ணாவின் நிரந்தரத் தம்பிகளாகிவிட்டனர். எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் அன்று அன்பழகன் விதைத்த விதைதான் பின்பு திராவிட மாணவர் இயக்கத்தின் ஆலமரமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை மாற்றியது.

‘பல்கலைப் புலவர்’ என்றும் ‘தமிழ்க்காசு’ என்றும் போற்றப்படும் கா.சுப்பிரமணியனாரிடம் அந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்றவர் அன்பழகன். நீதிக் கட்சியின் ஆதரவாளரான கா.சு., எங்கு உரையாற்றச் சென்றாலும் கூடவே ஒரு மாணவத் துணையாக அன்பழகன் பயணித்தார். கா.சு., பேசும் கூட்டங்களில் இவரும் பேசினார். திராவிட இயக்கத்துக்கும் தமிழ் இயக்கத்துக்குமான பேசப்படாத பிணைப்புக் கண்ணிகளில் இதுவும் ஒன்று.

நீங்காத நெற்றிக்கண்: அண்ணா மட்டுமல்ல, அவருக்குப் பின் திமுகவின் கட்சித் தலைமையை ஏற்ற மு.கருணாநிதியும் அன்பழகனின் மீது அதே மதிப்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ‘எனக்குப் புராணத்திலே நம்பிக்கை கிடையாது. ஆனால், தி.மு.கழகம் என்னும் சிவனுக்கு நானும், நாவலரும் முறையே வலது கண், இடது கண் என்றால் - நெற்றிக்கண்தான் பேராசிரியர். தீமைகளைச் சுட்டெரிக்கக்கூடிய நெற்றிக்கண்தான் பேராசிரியர்’ என்று 1974இல் சென்னையில் 50,000 பேர் கலந்துகொண்ட அன்பழகனின் பிறந்தநாள் விழாவில் பேசினார் கருணாநிதி. வெகுவிரைவில், எம்ஜிஆருடன் நாவலர் சென்றுவிட, கடைசிவரையிலும் கருணாநிதியைவிட்டு நீங்காத நெற்றிக்கண்ணாக நின்றவர் அன்பழகன். கல்லூரிப் பேராசிரியராகவே தொடர்ந்திருந்தாலும் தனக்கென்று ஒரு தனிப்புகழைப் பெற்றிருப்பார் அன்பழகன்.

அரசியலாளராக அவர் தமிழ்நாட்டுக்கு வாய்த்தது பரபரப்பான அரசியல் மேடைகள், இலக்கியச் சொற்பொழிவு அரங்குகளாகவும் மாறுவதற்கான காரணங்களில் ஒன்றாயிற்று. அண்ணா தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றிருந்தபோது, எதிர்க்கட்சியான காங்கிரஸின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசிய அன்பழகன், ‘கிளியின் வண்ணத்தைக் காகமா பழிப்பது?’ என்று அந்நிலையை வர்ணித்தார். அன்று அது தலைப்புச் செய்தியும் ஆயிற்று. இப்படி அவரது சொற்பொழிவுகள் தோறும் வர்ணனைகளும் ஒப்பீடுகளும் நிறைந்திருக்கும். வார்த்தை அலங்காரங்கள் மட்டுமல்ல, பல்துறை அறிஞர்களின் நுண்ணிய பார்வையும் அவரது பேச்சில் தோய்ந்திருக்கும்.

முரண்படாத கொள்கைப் பயணம்: அரசியல் தலைவர்களின் பேச்சையும் எழுத்தையும் ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு படித்தாலே ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்பதைப் புரிந்துகொள்ள முடியும். அன்பழகனின் பேச்சில் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது: ‘தி.மு.கழகம் பிறந்த நாள் முதல் அதற்கு முன்பு திராவிடர் கழகம் தோன்றிய நாள் முதல் அவைகளுடன் ஒன்றிவந்தவன் நான்.

மாணவனாக இருந்த காலத்திலும் சரி, ஆசிரியனாக இருந்த காலத்திலும் சரி, சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் சரி, நாடாளுமன்றம் சென்ற இந்தக் காலத்திலும் சரி, தி.மு.கழகத்தின் கொள்கைகள் என் உயிரோடும் உணர்ச்சியோடும் கலந்திருக்கின்றன. (முரசொலி, சென்னை 16.4.1968). பின்பு, அவர் தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தபோதும் அந்த உணர்ச்சியை விட்டுவிடவில்லை.

பெரியாரில் தொடங்கியது அன்பழகனின் அரசியல் பயணம். அவரது நூற்றாண்டு விழா தொடக்கத்தைத் திமுகவைக் காட்டிலும் திராவிடர் கழகம் உற்சாகமாகக் கொண்டாடியது. 1944 சேலம் மாநாட்டில், ‘சண்டே அப்சர்வர்’ பாலசுப்பிரமணியத்தின் பேச்சை மொழிபெயர்த்த அன்பழகனின் சமயோசிதம், திராவிட இயக்க வரலாற்றின் திருப்புமுனைத் தருணமாக மாறியதை கி.வீரமணி நன்றியோடு நினைவுகூர்ந்தார்.

அண்ணாவோடு இணைந்து பயணித்த திமுகவின் முன்னோடித் தலைவர்களில் கடைசிவரைக்கும் கருணாநிதியோடு கரம்கோத்து நின்றவர் அன்பழகன். இன்றைய முதல்வர் ஸ்டாலின் மீதும் அதே அளவுக்கு அன்பு செலுத்தியவர். இப்போது அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி, பேராசிரியரின் ஒளிப்படத்துக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார். அன்பழகன் உயிரோடு இருந்திருந்தால், உதயநிதியையும் அதே விசுவாச உணர்வோடு வாழ்த்தியிருப்பார்.

மக்கள் மன்றத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மன்றத்திலும் மாற்றுக் கருத்துகளுக்கு விளக்கங்கள் கூறியும் கட்சியின் நிலைப்பாட்டுக்கு வலுசேர்த்தும் அவற்றின் வாயிலாக, தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் மீதான பற்றுறுதியை வெளிப்படுத்தியும் அன்பழகன் எழுதியும் பேசியுமிருப்பவை பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் வரும்; மக்கள் நல்வாழ்வு, கல்வி, நிதி என தான் அமைச்சராகப் பொறுப்பேற்ற துறைகளின் சார்பாக அவர் பேசியவையும் அப்படிப்பட்டவையே. அவைஅனைத்தும் ஆவணமாக்கப்பட வேண்டும். அது திராவிட இயக்க வரலாற்றின் மாபெரும் களஞ்சியமாக அமையும். டிசம்பர் 19: க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு - ம.இரா.மேகநாதன், தொடர்புக்கு: editpage@hindutamil.co.in



Read in source website

இந்திய நாட்டின் அடிப்படை அலகுகள், இந்தியக் கிராமங்களே என காந்தியடிகள் கருதினார். அதன் அடிப்படையில், அதிகாரங்கள் கிராமங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் ஆர்வம் காட்டிவந்தார். அவரது ராமராஜ்ஜியக் கனவு, கிராமங்களையே மையமாகக் கொண்டிருந்தது. அவரது கனவான கிராம சுயராஜ்ஜியமும் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்கிற அவரது முழக்கமும் இன்று எவ்வாறு நடைமுறையில் உள்ளன? இதற்கு விடை காண, இந்த ஆண்டில் வெளியான மூன்று செய்திகள் துணைபுரிகின்றன.

முதல் செய்தி: தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலினப் பிரிவுச் சிறார்கள் சிலர் மிட்டாய் வாங்கச் சென்றார்கள். “ஊர்க் கட்டுப்பாடு, உங்களுக்கு விற்க மாட்டோம்” எனக் கடைக்காரர் மறுக்கிறார். இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் காணொளியாகப் பரவியது. இது உண்மைதான் என அரசு அதிகாரிகளாலும் ஊடகங்களாலும் உறுதிசெய்யப்பட்டது.



Read in source website

தமிழக அரசியல் களத்தில், மிகப் பெரிய திருப்புமுனைகளை 2022 தந்துவிடவில்லை. ஆனால், நடக்கவிருக்கும் பல மாற்றங்களுக்கான அச்சாரம் இட்டிருக்கிறது?

ஆளுங்கட்சியான திமுகவைப் பொறுத்தவரை, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. எனினும், நீட் தேர்வை ரத்துசெய்வதாக வாக்குறுதி அளித்திருந்த அக்கட்சி, இந்த ஆண்டும் தொடர்ந்த நீட் மரணங்களால் கடும் நெருக்கடிக்குள்ளானது. மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, ஆதார் கட்டாயம், பரந்தூர் விமான நிலையம் தொடர்பான சர்ச்சை எனத் திமுக அரசு தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளானது.



Read in source website