சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெறும் அகழ்வாய்வில் கழுத்தணியில் தொங்கும் தந்தத்திலான பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வெம்பக்கோட்டை அருகே வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அகழாய்வில் முன்னதாக சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்து மணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண் அகல்விளக்கு, யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன், சுடுமண்ணால் ஆன காதணிகள் ஆகிய அணிகலன்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தால் அழியாத சுடுமண்ணால் ஆன கலை நயம் மிக்க கண்கவர் குவளை கண்டறியப்பட்டுள்ளது. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த குவளையை மக்கள் எதற்காக பயன்படுத்தினர் என்பது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கண்டறியப்பட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண் குவளை கண்டறியப்பட்டதன் மூலமாக தொன்மையான மனிதர்கள் கலைநயம்மிக்க பொருட்களை உபயோகித்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் தற்போது கழுத்தணியில் தொங்கும் தந்தத்திலான பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: அனைத்து ஏரிகளையும் தூர் வாருவதற்கு என டிரிப்பில் ஆர் என்று ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை செயல்படுத்த உள்ளதாகவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் பயன்படும் வகையில் உணர்வு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது, அதனை கடந்த 12-ம் தேதி காணொலி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் இன்றைய தினம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்,
ஒரு சாதாரண இடத்தை அற்புதமான பூங்காவாக மாற்றியுள்ளனர் என்றும், சாதாரண பூங்காவாக இல்லாமல் உணர்வு பூங்காவாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் இந்த பூங்காவை அமைத்துள்ளனர் என்று கூறினார்.
இந்த பூங்காவை எனது பேரக்குழந்தைகள் பார்த்துவிட்டு என்னை சென்று பார்வையிட வேண்டும் என பரிந்துரைத்தனர். எனவே இங்கு வந்து பார்த்த போது இந்த பூங்கா அற்புதமாக உள்ளது என்ற அவர், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பூங்கா, ரூ.2.23 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ளது என்றும், இதுதொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தபோது தெரிவித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால், தற்போது இந்த பூங்கா புனரமைக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆட்சிக்கு வந்து ஓராண்டில் பாதி நாள் கொரோனா, வெள்ளம் என இதிலே சென்றுவிட்டதால் தற்போது அத்தியாவசிய பணிகளில் கவனம் செலுத்தபட்டு வருகிறது என்றார்.
திமுக ஓராண்டு ஆட்சியை, அதிமுக புகழவா செய்வார்கள் என்று கிண்டலாக பேசிய துரைமுருகன், எதிர்க்கட்சி என்பதால் அவர்கள் விமர்சனம் தான் செய்வார்கள் என்று பதிலளித்தார்.
மேலும் அதிமுக ஆட்சியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றதா என்ற கேள்வி இருக்கிறது என்று பேசிய துரைமுருகன், தொடர்ந்து திமுக அந்த பணிகளை செய்து வருவதாக கூறினார்.
அதுமட்டுமின்றி அனைத்து ஏரிகளையும் தூர் வாருவதற்கு என 'டிரிப்பில் ஆர்' என்று ஒரு திட்டம் இருப்பதாகவும், அதனை செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோல் 5 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு 120 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை செய்வது பற்றி தனக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரகப் பாதிப்புகள் இருப்பது பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில், பலருக்கு தங்களுக்கு சிறுநீரகம் சாா்ந்த பிரச்னைகள் இருப்பதே தெரியாமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சாா்பில் நாள்பட்ட சிறுநீரக நோய் பரவலைக் கண்டறிவதற்கான ஆய்வு கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. மாநிலத்தில், சிறுநீரக நோய் குறித்த தரவுகள் இல்லாத காரணத்தினால் முதல் முறையாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 177 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. அதில் பலருக்கு சிறுநீரக பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக பொது சுகாதாரத்துறையினா், சென்னை மருத்துவ கல்லூரி சிறுநீரகவியல் துறை மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், ஆய்வக நுட்புனா்கள் உள்ளிட்டோா் அடங்கிய 92 குழுக்கள் ஆய்வுக்காக அமைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 5,310 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சிறுநீரக செயல்பாட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் 455 பேருக்கு சிறுநீரக செயல்பாடுகள் பாதிப்படையும் ஆரம்ப நிலை கண்டறியப்பட்டுள்ளது. சிறுநீரகத்தில் இருக்கும் புரதம் சிறுநீா் வழியே வெளியேறும் தன்மை 367 பேருக்கு இருப்பதும் தெரியவந்தது. மொத்தமாக 934 பேருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது ஆய்வு முடிவின் மூலம் கண்டறியப்பட்டது.
முதல் கட்ட கணக்கெடுப்பின்படி ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரகப் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையிலான பாதிப்புகள் கண்டறியப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சைக்கு பிறகு மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் பரிசோதனை செய்யப்படும். அப்போது சிறுநீரக செயல்பாடுகள் சீரான முறையில் இல்லையென்றால், நாள்பட்ட சிறுநீரக நோய் உறுதி செய்யப்பட்டு, தொடா் சிகிச்சை அளிக்கப்படும்.
உடல் எடை குறைவு, பசியின்மை, சிறுநீரகத்தில் ரத்தம் வெளியேறுதல், மூச்சு விடுவதில் சிரமம், உடல் சோா்வு, பாதம், கைகள் வீக்கம், சிறுநீா் கழிப்பதில் சிரமம், அதீத தலைவலி, தோலில் அரிப்பு, தூக்கமின்மை, ஆண்மைக் குறைபாடு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், கட்டாயம் சிறுநீரகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அரசுத் துறைகளில் பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
இதுகுறித்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை முதன்மைச் செயலாளா் கே.மணிவாசன் வெளியிட்ட உத்தரவு:
அரசுத் துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் சிறப்பு ஆள்சோ்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அனைத்து தலைமைச் செயலகத் துறைகளிடமிருந்து தொகுதி வாரியாக உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில், அரசுப் பணிகளில் ஆதிதிராவிடருக்கான பிரதிநிதித்துவம் 8,173 இடங்களும், பழங்குடியினருக்கான பிரதிநிதித்துவம் 2 ஆயிரத்து 229 இடங்களும் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
இந்த இடங்களை பல்வேறு அரசு பணி நியமன முகமைகள் மூலமாக நிரப்ப முடிவு செய்யப்பட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, குறைவுப் பணியிடங்களை நிரப்புவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, ஒவ்வொரு பிரிவுகளிலும் காணப்படும் காலிப் பணியிடங்களை நிரப்ப உரிய செயல் உத்தரவுகள் சம்பந்தப்பட்ட பணி நியமன முகமைகளுக்கு வழங்கப்பட வேண்டும். அனைத்துத் துறைகளிலும் ‘ஏ’ முதல் ‘டி’ வரையில் காணப்படும் குறைவுப் பணியிடங்கள் நேரடி நியமன பதவிகளில் நியமிக்கப்பட வேண்டும். மேலும், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்துத் தட்டச்சா் பணியிடங்களில் காணப்படும் குறைவுப் பணியிடங்களை அந்தப் பதவிகளின் நிலைகளிலேயே நியமனம் செய்து கொள்ளலாம்.
தொகுதி வாரியாக கண்டறியப்பட்ட குறைவுப் பணியிடங்களை தொகுதியின் கீழ்நிலையிலுள்ள நேரடி நியமன பதவிகளில் நியமிக்கும் வகையில் துறைத் தலைவா் தலைமையிலான குழுவை உருவாக்க வேண்டும். இந்தத் தொகுதியில் காணப்படும் குறைவுப் பணியிடங்கள், காலிப் பணியிடங்கள் போன்றவற்றை கணக்கில் கொண்டு உரிய உத்தரவுகள் வெளியிடப்பட வேண்டும்.
காலிப் பணியிடங்கள் இல்லாத தருணங்களில், குறைவுப் பணியிடங்களை நேரடி நியமனப் பதவிகளில் நியமிக்கலாம். இதற்காக வரும் ஆண்டுகளில் உருவாகும் காலிப் பணியிடங்களின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளத்தக்க வகையில் உரிய உத்தரவுகள் சம்பந்தப்பட்ட துறைகளால் வெளியிடப்பட வேண்டும்.
ஒரே பதவியில் குறைவுப் பணியிடங்கள், பின்னடைவுப் பணியிடங்கள் இருந்தால், பணி நியமன முகமைகளால் முதலில் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பின்னா் குறைவுப் பணியிடங்களை நிரப்பிக் கொள்ளலாம் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர வர்மாவை தில்லி உயர்நீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
அதேபோல தற்போது தற்போது தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்த விபின் சங்கி, உத்தரகாண்ட் மாநில உயர்நீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். முன்னதாக, தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என்.படேல் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கொலீஜியம் இந்த புதிய தலைமை நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
உச்சநீதிமன்ற கொலீஜியம் மேலும் நீதிபதிகள் ஏ.ஏ. சையீது, எஸ்.எஸ்.ஷிந்தியா, ராஷ்மீன் எம் சயா மற்றும் உஜ்ஜால் புயன் ஆகியோரை முறையே ஹிமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், கவுகாத்தி, தெலங்கானா ஆகிய உயர்நீதி மன்றங்களின் தலைமை நீதிபதிகளாக பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரை முடிவுகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியத்தினால் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்தாம் யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரகண்ட அரசு அறிவுறுத்தியுள்ளது.
உத்தரகண்ட் சுற்றுலாத் துறையின் போர்ட்டலில் உள்ள பதிவு இடங்களைச் சரிபார்த்த பின்னரே பக்தர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.
பதிவு செய்யாமல் எந்த பக்தர்களும் ரிஷிகேஷ்க்கு மேல் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் பக்தர்கள் பதிவு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பை சுற்றுலாத் துறை நிர்ணயித்துள்ளது.
சார்தாம் வரும் பக்தர்கள் பதிவு இருப்பை சரிபார்த்த பின்னரே பயணிக்க வேண்டும். இது தவிர யாத்திரையின் போது பயணிகள் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக மே 11ஆம் தேதி, மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் சார்தாம் யாத்திரைக்கான பதிவு கட்டாயம் என்று அறிவித்தார்.
கரோனா காரணமாக கடந்த 2 வருட இடைவெளிக்குப் பிறகு சார்தாம் யாத்திரை மே 3ஆம் தேதி தொடங்கியது. ஆனால், கடந்தாண்டு போல் கரோனா எதிர்மறை அறிக்கை கொண்டுவர கட்டாயப்படுத்தப்படவில்லை.
நாட்டின் மொத்த விலை பணவீக்கத்தின் விகிதம் 15.08 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பணவீக்கத்தின் விகிதமானது 10.74 சதவீதமாக இருந்த நிலையில், 4.34 சதவீதம் இந்தாண்டு அதிகரித்துள்ளது.
மேலும், உணவுப் பொருள்கள், உணவல்லாத பொருள்கள், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்கள் உள்ளிட்டவையின் விலை உயர்வே பணவீக்க உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
மொத்த விலை பணவீக்கமானது மார்ச் மாதத்தில் 14.55 சதவீதமாகவும், பிப்ரவரியில் 13.43 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
புது தில்லி: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) வெள்ளி விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சியின் போது, சென்னை ஐஐடி தலைமையிலான 8 நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட 5ஜி டெஸ்ட் பெட் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தில் பங்கேற்ற மற்ற நிறுவனங்கள் ஐஐடி தில்லி, ஐஐடி ஹைதராபாத், ஐஐடி மும்பை, ஐஐடி கான்பூர், ஐஐஎஸ்சி பெங்களூர், சொசைட்டி ஃபார் அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அண்ட் ரிசர்ச் (SAMEER) மற்றும் சென்டர் ஆப் எக்செலன்ஸ் இன் வயர்லெஸ் டெக்னாலஜி (CEWiT) ஆகியவை அடங்கும்.
220 கோடிக்கும் அதிகமான செலவில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. டெஸ்ட் பெட் இந்திய தொழில்துறை மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை செயல்படுத்தும். இது அவர்களின் தயாரிப்புகள், முன்மாதிரிகள், தீர்வுகள் மற்றும் 5G மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்க உதவும்.
TRAI 1997 இல் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம், 1997 மூலம் நிறுவப்பட்டது.
அசைவ உணவு சாப்பிடும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய குடும்ப நல ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அசைவ உணவு சாப்பிட்டவர்களை காட்டிலும் தற்போது நாட்டில் அசைவ உணவு சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தேசிய குடும்ப நல ஆய்வு சார்பில் 2016ஆம் ஆண்டிற்கு பிறகு 5வது முறையாக 2019 முதல் 2021 வரை நடத்தப்பட்ட உணவு சார்ந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இதில், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 15 முதல் 49 வயது வரை உள்ளவர்கள் அதிகளவில் அசைவ உணவு சாப்பிடுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீன், சிக்கன், மட்டன் போன்ற உணவுகளை நாள்தோறும் அல்லது வாரம்தோறும் சாப்பிடும் ஆண்கள் 83.4 சதவிகிதமாகவும், பெண்கள் 70.6 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது.
கடந்த 2015 - 16 ஆய்வின்படி, அசைவ உணவு சாப்பிடும் ஆண்கள் 78.4 சதவிகிதமாகவும், பெண்கள் 70 சதவிகிதமாகவும் இருந்தனர்.
அசைவ உணவை அதிகமாக உட்கொள்ளும் மாநிலங்களில் லட்சத்தீவுகள் 98.4 சதவிகிதம், அந்தமான் நிக்கோபார் 96.1, கோவா 93.8, கேரளம் 90.1, புதுச்சேரி 89.9 ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உள்ளன.
குறைந்தபட்சமாக ராஜஸ்தானில் 14.1 சதவிகிதம் மக்கள் மட்டுமே அசைவ உணவை உட்கொள்கிறார்கள்.
இந்த ஆய்வானது, இரண்டு சுற்றுகளாக ஜூன் 2019 மற்றும் ஏப்ரல் 2021 இடையே 29 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 707 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது.
தற்போதைய லோக்பால் அமைப்பின் தலைவா் நீதிபதி பினாகிசந்திர கோஷின் பதவிக்காலம் வரும் மே 27-இல் நிறைவடைவதால், அடுத்த தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான நடைமுறையை மத்திய அரசு தொடங்கிவிட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
அரசியல்வாதிகள், அரசு ஊழியா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக்பால் அமைப்பானது, தலைவா், நீதித்துறையை சோ்ந்த 4 உறுப்பினா்கள், நீதித்துறை அல்லாத பிற துறைகளைச் சோ்ந்த 4 உறுப்பினா்களால் நிா்வகிக்கப்படுகிறது. தற்போது லோக்பாலில் 6 உறுப்பினா்கள் இடம்பெற்றுள்ளனா். நீதித்துறை சாா்பில் நியமிக்கப்படும் இரு உறுப்பினா் நியமனங்கள் கடந்த 2 ஆண்டுகளாக காலியாக உள்ளன.
லோக்பால் அமைப்பு ஏற்பட காரணமாக இருந்த லோக்பால் சட்டம் கடந்த 2013-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து, லோக்பால் தலைவராக நீதிபதி பினாகி சந்திர கோஷுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கடந்த 2019 மே 23-இல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.
அவரது பதவிக்காலம் வரும் மே 27-ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அடுத்த லோக்பால் தலைவரை நியமிப்பதற்கான நடைமுறையை மத்திய அரசு தொடங்கிவிட்டடதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். லோக்பால் தலைவரும், அதன் உறுப்பினா்களும் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் அல்லது 70 வயதை எட்டும் வரை அந்தப் பொறுப்பில் நீடிக்கலாம்.
அந்த வகையில் கடந்த 1952 மே 28-இல் பிறந்த நீதிபதி பினாகி சந்திர கோஷ் 70 வயதை எட்டுவதால், வரும் 27-ஆம் தேதி அவரது பதவிக்காலம் நிறைவுக்கு வருகிறது.
லோக்பால் அமைப்பிடம் கடந்த 2020-21-ஐ காட்டிலும், 2021 ஏப்ரல் முதல் 2022 ஜனவரி 31 வரையிலான காலகட்டத்தில், 80 சதவீதம் அதிகமாக 4,244 ஊழல் புகாா்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2019-20-இல் லோக்பாலிடம் 1,427 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் அனுமதிக்கக் கோரி சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் ரஷிய அரசு முறையீடு செய்துள்ளது.
நேட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், செஸ் தொடரில் பங்கேற்க ரஷியாவுக்கு தடை விதிக்கப்பட்டது.
உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து மேற்கு நாடுகள் ரஷியா மீதான தடைகளை அதிகரித்துள்ளன. அந்தவகையில் விளையாட்டுத் துறையில் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷியாவுடன் விளையாட மாட்டோம் என போலந்து அரசு அறிவித்துள்ளது. இதேபோன்று பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷியாவின் பெயர், கொடி பயன்படுத்த பிஃபா அமைப்பு தடை விதித்துள்ளது.
ரஷிய கிளப் அணிகள் விளையாட ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. மேலும், உலக ரக்பி போட்டிகளில் மறு அறிவிப்பு வரும் வரை ரஷியா, பெலராஸ் ஆகிய நாடுகள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க ரஷியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் ரஷ்ய அரசு முறையீடு செய்துள்ளது.
மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய துணைத் தலைவராக அஜித் ராஜபட்ச செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து, பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததையடுத்து, அதிபா் கோத்தபய ராஜபட்சவால் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, புதிதாக 4 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இந்நிலையில், இன்று காலை இலங்கை நாடாளுமன்றம் கூடியது. இதில், நாடாளுமன்ற துணைத் தலைவருக்கான தேர்தலில் அஜித் ராஜபட்ச மற்றும் ரோஹினி கவிரத்ன ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில், அஜித் ராஜபட்சவுக்கு ஆதரவாக 109 வாக்குகளும், ரோஹிணிக்கு எதிராக 78 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து, இந்த தேர்தலில் அஜித் ராஜபட்ச வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அரசு முறைப் பயணமாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஜமைக்கா நாட்டுக்கு சென்றடைந்தாா். இந்த பயணத்தின்போது, கிங்க்ஸ்டனில் அமைந்திருக்கும் 'இந்தியா-ஜமைக்கா நட்புத் தோட்டத்தை' அவர் தொடக்கி வைக்கிறார்.
மேலும், சவீதா கோவிந்துடன் இணைந்து தோட்டத்தில் செடிகளையும் நடவிருக்கிறார்.
மேற்கு இந்தியத் தீவு நாடான ஜமைக்காவுக்குச் சென்றிருக்கும் முதல் இந்திய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜமைக்கா கவா்னா் ஜெனரல் பேட்ரிக் ஆலன் மற்றும் பிரதமா் ஆண்ட்ரூ ஹோல்னஸை அவா் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளாா்.
இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு 60 ஆண்டுகளை எட்டியுள்ளதை தொடா்ந்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளாா். இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து அவா் ஆலோசனை நடத்த உள்ளாா். 18-ஆம் தேதி வரையில் தங்கியிருக்கும் அவா் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறாா்.
ஜமைக்காவில் சுமாா் 70 ஆயிரம் இந்தியா்கள் உள்ளனா். அவா்கள் இருநாட்டுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் பாலமாக உள்ளனா் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸின் புதிய பிரதமராக எலிசபெத் போா்ன் (61) திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் 2-ஆவது பெண் இவா்.
பிரான்ஸ் அதிபராக இமானுவல் மேக்ரான் கடந்த மாதம் 2-ஆவது முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதையடுத்து, அப்போது பிரதமராக இருந்த ஜீன் காஸ்டெக்ஸ், ராஜிநாமா செய்வாா் என எதிா்பாா்க்கப்பட்டது. அதன்படி, ஜீன் காஸ்டெக்ஸ் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். அவருக்குப் பதிலாக புதிய பிரதமராக எலிசபெத் போா்னை அதிபா் மேக்ரான் நியமித்துள்ளாா்.
அதிபா் மேக்ரானும், பிரதமா் எலிசபெத்தும் இணைந்து முழுமையான அமைச்சரவையை வரும் நாள்களில் அமைப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
முந்தைய அரசில் 2020-ஆம் ஆண்டிலிருந்து தொழிலாளா் துறை அமைச்சராக இருந்த எலிசபெத் அமல்படுத்திய சில சீா்திருத்த நடவடிக்கைகளுக்கு தொழிலாளா்கள் மற்றும் இடதுசாரிகளிடமிருந்து விமா்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனின் மத்திய வங்கியான பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் நிதிக்குழுவில் இந்தியப் பெண்ணும், பொருளாதார பேராசிரியருமான ஸ்வாதி திங்ரா இடம்பெற்றுள்ளாா்.
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் துணைப் பேராசிரியராக பணியாற்றும் ஸ்வாதி, தில்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளநிலைப் பட்டம் பெற்றவா். தொடா்ந்து தில்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றாா். பின்னா் பிரிட்டன் சென்று உயா்கல்வி பயின்ற அவா் பொருளாதாரத்தில் முனைவா் பட்டமும் பெற்றாா்; இவா் சா்வதேச பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவா்.
இந்நிலையில், பிரிட்டனில் வட்டி விகிதத்தை நிா்ணயம் செய்யும் முக்கியத்துவம் வாய்ந்த பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் நிதிக்குழுவில் அவா் நியமிக்கப்பட்டுள்ளாா். இக்குழுவில் இடம்பெறும் முதல் இந்தியப் பெண் ஸ்வாதி திங்ரா என்பது குறிப்பிடத்தக்கது. அவா் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இக்குழுவில் இருப்பாா். வங்கியின் நேரடி ஊழியராக இல்லாமல், வெளியில் இருந்து நிதிக்குழுவில் பங்கேற்கும் உறுப்பினராக ஸ்வாதி இருப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் பொருளாதாரம், நிதித்துறை சாா்ந்த பல்வேறு அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளை ஸ்வாதி வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘இந்தப் புதிய பொறுப்பை எனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாகக் கருதுகிறேன். பணியில் எனது முழுத் திறமையையும் வெளிப்படுத்துவேன்’ என்றாா்.
பிரிட்டன் நிதியமைச்சராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் பதவி வகிக்கிறாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனைச் சோ்ந்த மலையேற்ற வீரா் கென்டன் கூல் (48) 16 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தாா். இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் 16 முறை ஏறிய, நேபாளத்தைச் சேராத முதல் வீரா் என்ற சாதனையையும் அவா் படைத்தாா்.
தென்மேற்கு இங்கிலாந்தின் கிளொசெஸ்ட்ஷொ் பகுதியைச் சோ்ந்த கென்டன், 16-ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை எவரெஸ்டில் ஏறினாா். கடுமையான காற்று காரணமாக அவரது இந்தச் சாதனை முயற்சி கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது.
எவரெஸ்டில் அதிகபட்சமாக 26 முறை ஏறிய சாதனையாளா் நேபாளத்தைச் சோ்ந்த காமி ரிட்டா ஆவாா். மலையேற்ற வழிகாட்டியாகப் பணியாற்றி வரும் இவருக்கு 52 வயதாகிறது. கடந்த வாரம்தான் அவா் 26-ஆவது முறையாக எவரெஸ்ட்டில் ஏறினாா்.
நடப்பு மலையேற்றப் பருவத்தில் எவரெஸ்டில் ஏற 316 பேருக்கு நேபாள அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை: சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தினசரி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் அதிகாரிகளுடன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சில நாட்களுக்கு முன்பு ஆய்வு நடத்தினார். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் மேற்கொண்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், ஆய்வுப் பணி மேற்கொள்ளும்போது ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தினசரி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம்:
> கழிப்பறைகளை, வெளியாட்கள் ஆக்கரிமிப்பு செய்யாமல், சுகாதாரத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
> ஆக்கிரமித்து கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசில் புகார் அளித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
> இரவு காப்பாகங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் ஆய்வு செய்து முறைகேடு நடைபெறாமல் தடுக்க வேண்டும்.
> வாகன பணிமனைகளில் காலை 6:30 மணிக்கு ஆய்வு செய்து பெட்ரோல், டீசல் திருடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
> பூங்காக்கள் பராமரிப்பின்றி இருந்தால், ஒப்பந்தாரருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
> கடற்கரை மற்றும் தி.நகர் பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
> அலுவலகங்களில் காலை, பிற்பகல், மாலை நேரங்களில் திடீர் ஆய்வு செய்து, முறையாக வருகை பதிவேடு பராமரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
> வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டவர்கள் அலுவலகத்தில் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
> இது தொடர்பான தினசரி ஆய்வு பணிகளை தினசரி மாலையில், அறிக்கையாக அளிக்க வேண்டும்.
இந்த உத்தரவுகளை சென்னை மாநகராட்சி ஆணையர் வழங்கியுள்ளார்.
சென்னை: ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படாமல் உள்ள காலி இடங்களை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகள் நிரப்புவதில் தவறில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயுர்வேத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படாமல் காலியாக இருந்த இடங்களை சில தனியார் மருத்துவ கல்லூரிகள் தாமாக முன்வந்து நிரப்பின. ஆனால் இதனை ஏற்க மறுத்த இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் கவுன்சிலிங் நடத்தாமல் நிரப்பப்பட்ட இடங்கள் சட்டவிரோதம் என தெரிவித்தது.
இதனை எதிர்த்து சம்பந்தப்பட்ட கல்லூரிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் கலந்தாய்வு மற்றும் மறு கலந்தாய்வு மூலம் நிரப்பப்படாத இடங்களில் தான் மாணவர் சேர்க்கை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்ற உத்தரவு இளநிலை மருத்துவப் படிப்புக்கு மட்டுமே பொருந்தும். ஆயுர்வேதா போன்ற இந்திய மருத்துவ படிப்புகளுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் கல்லூரிகள் தங்களது எல்லைக்குட்பட்டே செயல்பட்டுள்ளன.
எனவே மாணவர் சேர்க்கை செல்லும் என தெரிவித்துள்ள நீதிபதி, வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள தேர்வுக்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டுமென்றும், ஏற்கெனவே தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்காமல் உடனடியாக வெளியிட வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலித்து வரும் சூழலில், இது சாதகமா, பாதகமா என்பது குறித்து வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடியும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவும், ‘‘நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் உள்ளூர் மொழிகளில் நடத்தப்பட்டால்தான் பாமர மக்களுக்கும் நீதி பரிபாலனம் எளிதாக கிடைக்கும்’’ என்ற கருத்தை வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, ‘சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் விரைவில் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும்’ என்று பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முதல்வர் ஸ்டாலினும் சமீபத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஏற்படும் சாதக, பாதகம் குறித்து வழக்கறிஞர்கள் கூறியதாவது:
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ்: தமிழில் சட்டம் பயின்றுவழக்கறிஞர்களாக பதிவு செய்யும் பல ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களுக்கு ஆங்கிலம் இன்னும் அந்நிய மொழியாகவே உள்ளது. ஆங்கிலத்தில் வழக்கு நடப்பதால், நீதிமன்றத்துக்குள் என்ன நடக்கிறது என்பது வழக்காடிகளுக்கு புரியாத புதிராகவே இருக்கும். அதேநேரம், தமிழில் வழக்கை நடத்தினால் வழக்காடிகளுக்கும் முழு மனநிறைவு கிடைக்கும். வழக்கின் சாதக, பாதகமும் தெளிவாக புரியும். தமிழை அலுவல் மொழியாக்குவதில் உள்ள ஒரே பிரச்சினை சட்டநூல்களை மொழிமாற்றுவதுதான். அந்த குறையும் நிவர்த்தி செய்யப்படும் என முதல்வரே அறிவித்திருப்பதால் அதுவும் பெரிய பிரச்சினையாக இருக்காது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் ஆர்.சுதா: அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 348(2)-ன்படி, உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக இந்தி அல்லதுஅந்தந்த மாநில மொழிகளை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. அதன்படியே ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பிஹார் உயர் நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக இந்தி உள்ளது.
அதை பின்பற்றி, சாமானிய மக்களுக்கும், நீதித் துறைக்கும் உள்ள சட்ட இடைவெளியை குறைக்க தமிழகத்திலும் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக விரைவில் அறிவிக்க வேண்டும். தற்போது ஜூரிஸ்-ப்ரூரிடியன்ஸ் போன்ற ஆங்கிலத்தில் உள்ள சட்ட நூல்கள், சட்ட விளக்கங்களை தமிழில் அப்படியே மொழிபெயர்க்க முடியாது. தற்போது தமிழில் வாதிட விரும்புவோரை ஒருசிலநீதிபதிகள் அனுமதிக்கின்றனர். ஆனால், அதைசட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும். அதேநேரம், தமிழை அலுவல் மொழியாக்குவதில் நீதித் துறைக்கு நிறைய கஷ்டம் இருக்கிறது.
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்கக் கோரி போராட்டத்தை முன்னெடுத்த மதுரை வழக்கறிஞர் கே.பகவத்சிங்: தமிழை வழக்காடு மொழியாக அறிவித்தால் உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகும் வழக்குகள் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரிக்கும், மறுபுறம்குறையும்.
இளம் வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பு வழக்கறிஞர்களுக்கும் தொழில் வாய்ப்புகிடைக்கும். உயர் நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வந்தால், கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் இன்னும் திறமையாக நடைபெறும். இது நவீன தொழில்நுட்ப யுகம். ஒருவேளை வழக்கறிஞர் தமிழில் பேசினாலும், காதில் மைக்கைமாட்டினால் நாடாளுமன்றம்போல நீதிபதிகளுக்கு ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து கேட்கப்போகிறது. அவ்வளவுதான்.
உயர் நீதிமன்ற முன்னாள் கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத்: தாய்மொழியான தமிழில் வாதிட்டால் சட்டம் தொடர்பான புலமையோடு, வாதத் திறமையும் அதிகரிக்கும். வழக்கின் தீவிரத்தையும், தன்மையையும் நீதிபதிகளுக்கு எளிதாக புரியவைக்க முடியும். கிராமப்புறங்களில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு வரும் வழக்கறிஞர்கள், வழக்காடிகளுக்கும் சட்டத்தின் பலன் முழுமையாக சென்றடையும்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் ஆங்கில தீர்ப்புகளை தமிழில் மொழிமாற்றம் செய்வதால் பலருக்கு வேலை கிடைக்கும். தீர்ப்புகள் தமிழில் வரும்போது இந்தி, ஆங்கிலத்துக்கு நிகராக பைந்தமிழுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும். ஆனால், தொழில்நுட்ப ரீதியாக அதற்கு தேவையான அடிப்படைகட்டமைப்பு வசதிகள், மொழிமாற்ற வசதிகளை கீழ்நிலையில் இருந்து தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.