DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 16-05-2022

100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் தேசிய அளவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி திறன்சாரா உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுடைய வயது வந்தோரை கொண்ட குடும்பம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ஆண்டொன்றிற்கு 100 நாள்கள் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கு 1 மணி நேர உணவு இடைவெளியுடன் கூடிய 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இவ்வேலைக்கான தினசரி ஊதியம் ரூ.281/- எனவும் இம்முழு ஊதியத்தினை பெற 37 கன அடி வேலை செய்ய வேண்டும் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரவர் செய்யும் வேலையின் அளவிற்கேற்ப ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கென அரசாணை (நிலை) எண். 52, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ம.அ.தி.1) துறை,
நாள்.25.06.2012 ல் சிறப்பு ஊரக விலைப் புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மாற்றுத்திறனாளிகள் 4 மணிநேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம் என வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி பணித்தளத்தில் தொழிலாளர்களுக்கு தண்ணீர் வழங்குதல், குழந்தைகளை பராமரித்தல், முன் அளவீடு செய்ய உதவுதல் மற்றும் சிறு வேலைகளான பணித்தளத்தில் அகற்றப்பட்ட மரங்களை அப்புறப்படுத்துதல் (இலை, தழைகள் மற்றும் சிறு மரங்கள்) கரைகளை சமன்படுத்துதல், கரைகளின் சரிவுப்பகுதிகளை சீர்செய்தல் போன்ற பணிகள் மட்டுமே செய்ய வரையறுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் இத்தகைய தனித்துவமான செயல்பாட்டினை ஒன்றிய அரசு பாராட்டியுள்ளதோடு இதர பிற மாநிலங்களும் பின்பற்றி செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலை கோரும் தகுதியுடைய அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நீல நிற வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 2 கி.மீ தூரத்திற்குள் மட்டுமே வேலை வழங்கப்படுவதுடன் வேலைக்கான ஊதியம் குறிப்பிட்டுள்ள 15 நாட்களுக்குள் அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக ஈடுசெய்யப்பட்டு எவ்வித தாமதமும் ஏற்படாத வண்ணம் அலுவலர்களால் உறுதி செய்யப்படுகிறது.
 தமிழகத்தில் மாவட்டம்தோறும் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்ப்பு முகாமில் இவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதைத்தவிர இரு மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட அளவில் குறை கேட்கும் நாள் நடத்த திட்ட இயக்குநர்களுக்கும் வட்டார அளவில் மாதந்தோறும் நடத்த வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இத்திட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வேலை அட்டை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரது கையொப்பத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் முகமை கிராம ஊராட்சி ஆதலால் அதன் தலைவரது கையொப்பத்துடன் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தினை ஊராட்சி செயலர், ஊராட்சி மன்றத்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) இதில் எவரேனும் ஒருவரிடம் வழங்கலாம். இவ்வேலை அட்டையினை வழங்க எவ்வித முன் நிபந்தனைகளுமின்றி கோரும் அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டுவருகிறது. 
தினமும் இரு முறை தொழிலாளர்களது வருகையினை புகைப்படம் எடுத்தல் வேண்டும் என்பது ஒன்றிய அரசின் அறிவுறுத்தலாகும். இதனை மாற்றுத்திறனாளிகளும் சிரமமின்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே வேலை அட்டை கோரும் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நீல நிற அட்டை வழங்குவதோடு மாநில அரசின் சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி அவர்களுக்கு வேலையும் குறித்த காலத்திற்கும் அதற்கான ஊதியத்தினையும் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



Read in source website

சென்னை: வடகலை, தென்கலை பிரச்னையை ஒழுங்குபடுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

காஞ்சி வரதராஜபெருமாள் கோயில் பிரமோற்சவத்தில் வடகலை பிரிவில் வேதபாராயணம் செய்ய அறநிலையத் துறை அனுமதி மறுத்து, அறநிலையத் துறை உதவி ஆணையர் மே-14 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார் 

இந்தநிலையில் வடகலை, தென்கலை பிரச்னையை ஒழுங்குபடுத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.



Read in source website

வெம்பக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வில் சுடுமண்ணால் செய்த கலைநயமிக்க குவளை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வெம்பக்கோட்டை அடுத்த விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கா் பரப்பளவிலான தொல்லியல்மேட்டில், கடந்த மாா்ச் 16 ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் இன்று நடைபெற்ற அகழாய்வில் சுடுமண்ணால் செய்த கலைநயமிக்க குவளை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொல்லியல் துறை தங்கம் தென்னரசு தனது ட்விட்டரில், வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள, சுடுமண்ணால் ஆன, ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட, காலத்தால் அழியாத கலை நயம் மிக்க கண்கவர் குவளை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிக்க- முதல்முறையாக, வாட்ஸ்-ஆப் மூலம் விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம்

முன்னதாக, இந்த அகழாய்வில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண் அகல்விளக்கு, யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 



Read in source website

சென்னை: கோயில் தேர் திருவிழா தொடர்பான அவசர வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஞாயிறன்று வாட்ஸ்ஆப் மூலம் விசாரணை நடத்தி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற திட்டமிடப்பட்டு, அறநிலையத் துறை ஆய்வாளரால் அனுமதி மறுக்கப்பட்ட தருமபுரியில் உள்ள ஸ்ரீ அபீஷ்ட வரதராஜ சுவாமி திருக்கோயிலின் தேர்த் திருவிழாவுக்கு அனுமதி கேட்டு அவசர வழக்கு தொடரப்பட்டது. அப்போது, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நாகர்கோயில் சென்றிருந்த நிலையில், வழக்கை வாட்ஸ்ஆப் மூலம் விசாரித்தார்.

நீதிபதி நாகர்கோயிலில் இருக்க, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஓரிடத்திலும், அரசு வழக்குரைஞர் வேறொரு இடத்திலும் இருந்து வாதங்களை முன் வைத்தனர்.
 
வாதத்தின் நிறைவாக, தேர்த் திருவிழாவை நிறுத்தும் அதிகாரம் அறநிலையத் துறை ஆய்வாளருக்கு இல்லை. அவரது உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தேர்த் திருவிழாவை சுமூகமாக நடத்த வேண்டியது அரசின் கடமை. தேர்த்திருவிழாவின் போது மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
 



Read in source website

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் மூத்த தமிழறிஞர் மா.சின்னு (90). தள்ளாடும் வயதிலும் தமிழ் மீதான ஆர்வம் அவரை விட்டு விலகவில்லை. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் புத்தகங்கள் வாசித்தல், எழுதுதல், இலக்கியம் தொடர்பான ஆய்வு போன்றவற்றை இன்றளவும் மேற்கொண்டு வருகிறார்.

தன்னை ஒரு மாணவராக கருதிக் கொண்டு இலக்கியத்திலும், இலக்கணத்திலும் புதிய, புதிய அத்தியாயங்களை தேடிக் கொண்டிருக்கும் அவர் கூறியதாவது: 

தற்போது வயது 91 வயது நெருங்கி விட்டது. 1932 ஜூலை 1-ல் அரியலூர் மாவட்டம் தா.பழூர் என்ற கிராமத்தில் பிறந்தேன். தந்தை மாரிமுத்து, தாய் அலமேலு. பள்ளிப்படிப்புக்குப் பின்னர், உயர்கல்வியை திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் முடித்து 1954-ல் புலவர் பட்டம் பெற்றேன். புதுக்கோட்டை குலபதிபாலையா நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினேன்.

அதன்பின் 1955 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமத்திவேலூர்(தற்போது நாமக்கல் மாவட்டம்) சங்கர கந்தசாமிக் கண்டர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். 37 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் 1992–-இல் ஓய்வு பெற்றேன்.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதே எழுத்து மீது ஆர்வம் உண்டு. 1990 ஆம் ஆண்டு முதல் நாளிதழ், வார இதழ்களுக்கு கட்டுரைகளை அனுப்பி வந்தேன். தினமணி நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்மணி பகுதியில் கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கின. சங்கப்பலகை என்ற தலைப்பில் இந்த கட்டுரைகள் அனைத்தையும் 2005 இல் புத்தக வடிவில் வெளியிட்டேன்.

இதுவரை நாலாந்தமிழ், கம்பன் காட்டிய வளங்கள், கவிச்சக்கரவர்த்திகள், ஹோமரும் கம்பரும், பரிமேலழகரின் இலக்கண உரைத்திறன், தொல்காப்பிய நெறியில் திருக்குறளும், சிலப்பதிகாரமும், தொழுதகை மடந்தையர், தோலாமொழியின் சூளாமணி, சங்கப்பலகை, தொல்காப்பியம் (எழுத்து, சொல் தெளிவுரை, தொல்காப்பியம் பொருள், அதிகாரம் தெளிவுரை), நன்னூல் தெளிவுரை என 11 ஆய்வு நூல்களை எழுதி உள்ளேன்.

மனைவி, இரு மகள்கள் காலமாகிவிட்டனர், மகன் வேளாண்மை பொறியியல் துறையில் பணியில் உள்ளார். தனியாக இருப்பதால், இலக்கியப் பணி, புத்தக வாசிப்பு போன்றவை மூலமாகவே நாள்களை கடத்திக் கொண்டு செல்கிறேன். வயது மூப்பாலும், கண் பார்வை மங்கியதால் எழுத்துப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ளது. என்னிடம் பயின்ற மாணவ, மாணவியர் இதற்கு உதவியாக உள்ளனர். 

சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூற்றிற்குச் சரியான விளக்கவுரை எழுத வேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாள் விருப்பம். தற்போது அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளேன். கடவுள் வாழ்த்து நீங்கலாக 400 பாடல்கள் கொண்ட அகநானூறு நூல் களிற்றியானைநிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை எனும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதாகும். முதல் பிரிவான களிற்றியானை 120 பாடல்களுக்கும் உரையெழுதி முடித்து விட்டேன். இந்த நூல் உவே.சா. பதிப்பு போல் உரை, விளக்கவுரை, ஒப்புமை மேற்கோள்களுடன் வெளியாக இருக்கிறது. கடந்த 2017-ல் தமிழக அரசு தமிழ் செம்மல் விருது வழங்கி கெளரவித்தது என்றார்.

இரு முதல்வர்கள் பாராட்டிய தமிழறிஞர்

தமிழ்மொழி சார்ந்த பிரச்னைகள் எழுந்தபோது மறைந்த முதல்வர்களான மு.கருணாநதி, ஜெயலலிதா ஆகியோருக்கு தமிழறிஞர் என்ற முறையில் மா.சின்னு உதவியுள்ளார். 1995 ஆம் ஆண்டு தஞ்சையில் எட்டாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது.

அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், அறிவியல் தமிழ் 'நாலாந்தமிழ்' என்று தெரிவிக்க, அதற்கு தமிழறிஞர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். முத்தமிழ் என்பதே சரியாகும், அறிவியல் தமிழ் இயற்றமிழில் அடங்கும் என்றனர்.

தமிழகத்தில் அறிவியலை நாலாந்தமிழ் என அறிவித்தால்தான் தமிழ் வளரும் என்பதை இவர் கட்டுரைகள் வாயிலாக விளக்கினார். அதாவது இலக்கணத்தை எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம் என தொல்காப்பியர் வகைப்படுத்தியிருந்தார். பிறகு எழுத்து, சொல்,  பொருள், யாப்பு, அணி என்ற ஐந்து இலக்கணம் உருவானது.

தண்டபாணி சுவாமிகள் இயற்றிய புலமை இலக்கணம் ஆறாவது இலக்கணமாக மாறியது. இதனை புலவர்கள் உலகம் எதிர்க்கவில்லை, எனவே நாலாந்தமிழ் என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். அதற்காகவே தனது முதல் நூலுக்கு நாலாந்தமிழ் என்ற பெயரை வைத்தார்.

கடந்த 2002–ஆம் ஆண்டு கண்ணகி சிலை பிரச்னையில், சென்னை அன்பகத்தில் கண்ணகி சிலை அமைக்க மறைந்த முதல்வர் கருணாநிதி முயற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அந்த சிலையின் கையில் வளையல் இல்லாமல் இருக்கும் தகவலை அறிந்த இவர், கருணாநிதிக்கு தன் கைப்படக் கடிதம் எழுதினார். அதில், மதுரையை எரித்த பிறகுதான் கண்ணகி கொற்றவை வாயிலில் பொற்றொடி தகர்த்தாள், வழக்காடும்போது அவளது கையில் வளையல் இருந்தது என்பதை சிலப்பதிகாரம் தெளிவுபடுத்தி உள்ளது என்று கூறியிருந்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட கருணாநிதியும், மா.சின்னுவை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பாராட்டியதுடன், 'வளையலுடன் கண்ணகி சிலை' என்ற அறிக்கையை வெளியிட்டார். மேலும், கருணாநிதி எழுதிய தொல்காப்பியப் பூங்கா நூலை இவருக்கு அனுப்பி வைத்து திருத்தங்கள் செய்து தருமாறும்கோரி பெருமைப்படுத்தினார். இரு முதல்வருக்கும் தமிழ் வாயிலாக உதவியதை தனக்கு கிடைத்த பெரும்பேறு என்கிறார் மா.சின்னு. 

'பிறருக்கு கொடுப்பதே வாழ்க்கை'

தமிழறிஞர் மா.சின்னு தனது ஓய்வூதியத்தை, தன்னலம் கருதாமல் பிறருக்கு கொடுத்து உதவுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளார். கரோனா பொது முடக்கக் காலத்தில் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவு வழங்கும் பணியை முதல் ஆளாக தொடங்கி வைத்தார்.

மேலும், உயர்கல்வி பயில முடியாத ஏழை மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவி வருகிறார்.

குமணவள்ளலிடம் பரிசு பெற்று வந்த சங்கப் புலவரான பெருஞ்சித்தரனார், மனைவியை நோக்கி மனைகிழவோயே! 'முதிரமலைத்தலைவன் குமணன் நல்கிய பெருஞ்செல்வம் கொண்டு வந்துள்ளேன். நம் பசி நீங்க நெடுநாளும் கடன் கொடுத்து உதவியோர்க்கு முதலில் கொடு. விருப்பம் உள்ளவர்க்கெல்லாம் கொடு. இதனை வைத்துக் கொண்டு நெடுநாள் வளமுடன் வாழலாம் என்று நினைக்காமல் எல்லோர்க்கும் கொடு(புறநானூறு-163) என்று கூறிய அவர் புலவராக அல்லாமல் புரவலராக (வள்ளல்) மாறினார்.

ஏழ்மை கண்டு இரங்கும் இப்பண்பாடு கற்றுவல்ல அறிஞரிடையே பரவ வேண்டும் என்பதும் 'பிறரிடமிருந்து எடுப்பது வாழ்க்கை அல்ல: பிறருக்குக் கொடுப்பதே வாழ்க்கை 'என்ற மார்க்ஸிம்கார்க்கியின் பொன்மொழியை பின்பற்றி வருகிறார் இத்தமிழறிஞர். 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் மலேசியப் பல்கலைக் கழகமும் இவரது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட்டுள்ளது.

இலக்கணக் கடல் என்றழைக்கப்படும் கோபாலய்யர் இவரது ஆசிரியராவார். மேலும், கம்பராமன் (இராமராசன்) தமிழண்ணல் ஆகியோரின் நெருங்கிய நண்பராவார். தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்கும் மா.சின்னுவின் நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்பதே தமிழறிஞர்கள் பலரின் விருப்பமாகும்.



Read in source website


சென்னை: அன்னைத் தமிழில் அர்ச்சனை என்பது கட்டாயமில்லை,  விரும்புவோர் தமிழில் அர்ச்சனை செய்து கொள்ளலாம் என இந்து சமயம்  மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார். 

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது: 

திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. பக்தர்களின் வசதிக்காக வரிசையில் நிற்கும்போது வெய்யிலின் தாக்கம் தெரியாமல் இருக்க நீர்த் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், கபாலீசுவரர் கோயிலில் இரண்டு சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மோர், எலுமிச்சை பழ ரசம் வழங்க அறிவுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

மேலும், அனைத்து கோயில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தைச் செயல்படுத்துவது கடினமான காரியம் என்ற அவர், தொடர்ந்து அதற்கு முயற்சி செய்து வருகிறோம் என்றார்.

அன்னைத் தமிழில் அர்ச்சனை என்பது கட்டாயமல்ல எனவும், விரும்புவோர் தரிசனம் செய்யலாம் என கூறினார். 

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக் குழு அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் சிலை மாயமானது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. யார் தவறு செய்திருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.



Read in source website

18-ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தை தழுவிய, தமிழகத்தைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளையை புனிதராக கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் உள்ள வாடிகன் சிட்டியில் அமைந்திருக்கும் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பலி நிகழ்வில் தேவசகாயம் பிள்ளையுடன் சேர்த்து 10 பேருக்கு புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கினார்.

இதன்மூலம், இந்தியாவைச் சேர்ந்த முதல் சாதாரண மனிதருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது என்பதோடு, தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவது வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாகும்.

கன்னியாகுமரி மாவட்டம், நட்டாலம் கிராமத்தில் 1712- ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி ஹிந்து நாயர் குடும்பமான வாசுதேவன் - தேவகியம்மை தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவருடைய இயற்பெயர் நீலகண்டன். கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் மீது பற்றுகொண்ட இவருக்கு, 1745-ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதி ஞானஸ்நானம் வழங்கப்பட்டது.

கிறிஸ்தவ மத போதனைகளை ஆற்றும்போது, "அனைத்துத் தரப்பு மக்களும் ஜாதி வேறுபாடுகளைக் கடந்த சமமானவர்கள்' என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். இதனால், ஆத்திரமடைந்த சில பிரிவினர் அவரை ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் 1752-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி சுட்டுக் கொன்றனர்.

கிறிஸ்தவ மத நம்பிக்கைக்காக தனது உயிரைத் தியாகம் செய்ததால், கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் மறைசாட்சியாக தேவசகாயம் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று கன்னியாகுமர் கோட்டாறு மறை மாவட்டம் சார்பில்  கோரிக்கை விடுக்கப்பட்டது.

அந்தக் கோரிக்கையை ஏற்று, புனிதர் பட்டம் வழங்குவதற்கான முதல் நிகழ்வாக, 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி தேவசகாயம் பிள்ளை ஆசீர்வதிக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்டார்.

பின்னர், அவரை புனிதராக போப் பிரான்சிஸ் கடந்த 2014-ஆம் ஆண்டு அங்கீகரித்தார். அவருக்கு வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் புனிதர் பட்டத்தை போப் பிரான்சிஸ் வழங்கினார்.

நிகழ்வில் தமிழக பிரதிநிதிகள்: வாடிகனில் நடைபெற்ற புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வில் தமிழக அரசின் பிரதிநிதிகளாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், தேவசகாயம் பிள்ளை புனிதராக அறிவிக்கப்பட்டபோது, நிகழ்வில் பங்கேற்றிருந்த இந்திய குழுவினர் கைகளில் வைத்திருந்த மூவர்ணக் கொடியை அசைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.



Read in source website

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சாா்பில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகளில் சிறப்பிடம் பிடித்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞா்களை கண்டறிந்து அவா்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞா்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சாா்பில் நடத்தப்படுகின்றன.

குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசு ரூ. 6000, இரண்டாம் பரிசு ரூ. 4500, மூன்றாம் பரிசு ரூ. 3500 வழங்கப்பட்டது. இப்போட்டியில் முதலிடம் பெற்ற 5 இளைஞா்கள் மாநில கலைப் போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.



Read in source website

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 27 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,164 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், உயா் ரத்த அழுத்தம், வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்புக்குப் பயன்படுத்தப்படும் 27 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்ரீக்ள்ஸ்ரீா்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.



Read in source website

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 7 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வருகிறார். 

மாநிலங்களவை உறுப்பினராக, அவரது பதவிக்காலம் வருகிற ஜூன் 30 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த மாதம் கர்நாடகத்தில் 5 இடங்களுக்கு மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறுவதையடுத்து அதில் ஒரு இடத்திற்கு நிர்மலா சீதாராமனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

கடந்த சனிக்கிழமை பெங்களூருவில் நடைபெற்ற மாநில பாஜக குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கும் மாநிலங்களை உறுப்பினராக வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. 

முன்னதாக, நிர்மலா சீதாராமன் 2014 - 16ல் ஆந்திரத்தில் இருந்தும் அதன்பின்னர் 2016 முதல் கர்நாடகத்திலும் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். மேலும் 2014-17ல் மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சராகவும், 2017-19 மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்த அவர், 2019 முதல் மத்திய நிதியமைச்சராக இருக்கிறார். 



Read in source website

பொதுத் துறை வங்கிகளின் வாடிக்கையாளா்களிடம் இருந்து பண மோசடி, முறைகேடு 2021-22 நிதியாண்டில் 51% அளவுக்குக் குறைந்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விவரங்களில் தெரியவந்துள்ளது.

2020-21 நிதியாண்டில் 12 பொதுத் துறை வங்கி வாடிக்கையாளா்களிடம் ரூ.81,921.54 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுவே 2021-22-இல் ரூ.40,295.25 கோடியாகக் குறைந்துள்ளது. முறைகேடு செய்யப்படும் நிதியின் அளவு 51% குறைந்திருந்தாலும், முறைகேடுகளின் எண்ணிக்கை வேகமாகக் குறையவில்லை.

2021-22-இல் 7,940 நிதி முறைகேடுகள் பதிவாகியுள்ளன. இதுவே முந்தைய ஆண்டில் 9,933-ஆக இருந்தது. மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த தகவல் உரிமைச் சட்ட ஆா்வலா் சந்திரசேகா் கௌா், ரிசா்வ் வங்கியிடம் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டுப் பெற்ற தகவலில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

டெபிட் காா்டு விவரங்களைத் திருடி மோசடி செய்வது, தொலைபேசியில் தொடா்பு கொண்டு டெபிட் காா்டு எண், ரகசிய எண்ணைப் பெற்று வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைத் திருடுவது, மோசடி இணைய ‘லிங்க்’ அனுப்பி இணையவழியில் பணத்தைத் திருடுவது, க்யூஆா் கோட் மூலம் நடைபெறும் மோசடி, வங்கி இணையதளம் போல போலியான இணையதளத்தை உருவாக்கி வாடிக்கையாளா்கள் நிதியை முறைகேடு செய்வது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

ரிசா்வ் வங்கி அளித்துள்ள தகவலில் மேலும் கூறியிருப்பதாவது:

2021-22 நிதியாண்டில் அதிக அளவிலான நிதி முறைகேடு பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளா்களிடம் நிகழ்ந்துள்ளது. அந்த வங்கி மூலம் ரூ.9,528.95 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது. முறைகேடுகளின் எண்ணிக்கை 431-ஆக உள்ளது.

அதே நேரத்தில் முறைகேடுகளின் எண்ணிக்கை பாரத ஸ்டேட் வங்கியில் அதிகமாக இருந்தது. அந்த வங்கியில் 4,192 முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. மொத்தம் ரூ.6,932.37 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் பரோடாவில் ரூ.5,923.99 கோடி (209 மோசடிகள்), யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவில் 3,989.36 (280 மோசடிகள்), கனரா வங்கியில் ரூ.3,230.18 கோடி (90 மோசடிகள்) அளவுக்கு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.

இது தவிர இந்தியன் வங்கியில் ரூ.2,038.28 கோடி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் ரூ.1,733.80 கோடி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் ரூ.1,139.36 கோடி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் ரூ.773.37 கோடி, யூகோ வங்கியில் ரூ.611.54 கோடி, பஞ்சாப் & சிந்து வங்கியில் ரூ.455.04 கோடி அளவுக்கு வாடிக்கையாளா்களின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

புத்த பூா்ணிமாவையொட்டி பிரதமா் மோடி திங்கள்கிழமை (மே 16) நேபாளம் செல்லும் நிலையில், ‘இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான உறவு ஈடு இணையற்றது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி வெளியிட்ட அறிக்கை விவரம்: நேபாளத்துடனான நமது உறவு ஈடு இணையற்றது. இந்திய-நேபாள நாகரிக உறவும், மக்கள் தொடா்பும் நமது நெருங்கிய நட்புக்கு வலுசோ்க்கின்றன. நூற்றாண்டைக் கடந்த உறவை மேலும் வலுப்படுத்து எனது நேபாள பயணம் உதவிகரமாக இருக்கும். புத்த ஜெயந்தியையொட்டி நேபாளத்தில் மாயாதேவி கோயிலில் பிராா்த்தனை செய்ய ஆவலுடன் இருக்கிறேன்.

கடந்த மாதம் நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா இந்தியா வந்தபோது அவருடன் ஆக்கபூா்வமான ஆலோசனை மேற்கொண்டேன். தற்போதும் மீண்டும் அவரைச் சந்தித்து நீா் மின்சாரம், மேம்பாடு, இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்துவதை எதிா்நோக்கிக் காத்திருக்கிறேன்.

இதுமட்டுமன்றி லும்பினி மடாலயத்தில் பெளத்த கலாசாரம், பாரம்பரியத்துக்கான இந்திய சா்வதேச மைய அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கேற்கிறேன். நேபாள அரசு சாா்பில் நடைபெறும் புத்த ஜெயந்தியிலும் பங்கேற்கிறேன் என அதில் பிரதமா் மோடி கூறியுள்ளாா்.

தெற்கு நேபாளத்தின் தேராய் சமவெளியில் அமைந்துள்ள லும்பினி, புத்தா் பிறந்த இடம் என்பதால் பெளத்த மதத்தின் புனிதத் தலமாக கருதப்படுகிறது.



Read in source website


காத்மாண்டு: நேபாளத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கௌதம புத்தர் சர்வதேச விமான நிலையம் இன்று தொடக்கிவைக்கப்பட்டது. இது புத்தரின் பிறப்பிடமான லும்பினியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அமைந்துள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்துக்குப் பிறகு, அந்நாட்டின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக கௌதம புத்தர் சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இது சுமார் 74 ஆண்டுகளுக்குப் பின் கட்டப்பட்டுள்ளது.

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு இன்று காலை இந்த விமானம் நிலையம் தொடங்கிவைக்கப்பட்டது. திங்கள்கிழமை காலை, ஜஸீரா ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் கௌதம புத்தர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் விமானமாக குவைத்துக்குப் புறப்பட்டுச் சென்றது.

எனினும், வழக்கமான நடைமுறைகள் முடிந்து விமான நிலையம் ஜூன் 12ஆம் தேதிதான் மக்கள் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.
 



Read in source website

பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளை வறட்சி பாதித்த நாடுகளாக ஐ.நா. அறிவித்துள்ளது.

ஐ.நா. பாலைவனமாதல், வறட்சி தினம் ஜூன் 17-இல் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், பாலைவனமாதலை எதிா்கொள்வதற்கான ஐ.நா. மாநாடு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

கடந்த சில நூற்றாண்டுகளாக ஆசியாவில் தான் அதிகம் போ் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். அதிலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அங்கோலா, பிரேஸில், புா்கினா ஃபேசோ, சிலி, எத்தியோப்பியா, ஈரான், இராக், கஜகஸ்தான், கென்யா, லெசோட்டோ, மோரிடேனியா, மடகாஸ்கா், மாலாவி, மொசம்பிக், நைஜா், சோமாலியா, தெற்கு சூடான், சிரியா, அமெரிக்கா, ஜாம்பியா ஆகிய நாடுகள் வறட்சி பாதித்த நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளன.

வரும் 2050-க்குள் பரப்பளவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு நிகரான மேலும் 40 லட்சம் சதுரகிலோமீட்டா் இயற்கை பகுதிகள், வறட்சியின் பிடியில் சிக்கி, அங்கு வறட்சி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும்.

புவியின் 40 சதவீத நிலப் பரப்பு சீரழிந்து வருகிறது. இதனால் சரிபாதி மனிதகுலமும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமாா் 50 சதவீதமும் பாதிக்கப்படும். நவீன உலக வரலாற்றில் மனித இனம் இதுபோன்ற இடா்ப்பாட்டை முன்னெப்போதும் சந்தித்தது கிடையாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

ஐரோப்பிய ராணுவப் படைகள் பயன்படுத்தும் தளவாடங்களுக்கான மின்கலங்களை (பேட்டரி) பெங்களூரைச் சோ்ந்த ‘பிரவாய்க்’ நிறுவனம் வழங்கவுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் ராணுவங்களுக்கான தளவாடங்களை எம்2எம் ஃபேக்டரி, ஏஎம்ஜி புரோ ஆகிய நிறுவனங்கள் விநியோகித்து வருகின்றன. பல்வேறு வகையான தளவாடங்களை படைகளுக்கு அந்நிறுவனங்கள் தயாரித்து வழங்கி வருகின்றன.

அந்நிறுவனங்கள் தயாரிக்கும் ராணுவத் தளவாடங்களில் இடம்பெறும் மின்கலத்தை பெங்களூரைச் சோ்ந்த பிரவேய்க் ஸ்டாா்ட்-அப் நிறுவனம் வழங்கவுள்ளது. அதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையொப்பமானது.

இது தொடா்பாக பிரவேய்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சித்தாா்த்தா பக்ரி கூறுகையில், ‘‘இந்த மின்கலங்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டவை. பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு இந்த ஒப்பந்தம் முக்கியப் பங்களிக்கும். புதிய மாற்றங்களுக்கும் இது வழிவகுக்கும்.

தற்கால பாதுகாப்புப் படை வீரா்களின் செயல்பாட்டில் மின்னணு தொழில்நுட்பம் மிக முக்கிய இடம் வகிக்கிறது. வரும் காலங்களில் பாதுகாப்புப் பணிகளிலும் மின்னணு இயந்திரங்களின் பங்களிப்பு அதிகரிக்கும். அத்தகைய இயந்திரங்களுக்கு நீடித்து உழைக்கும் மின்கலங்களை வழங்க வேண்டியது அவசியம். அந்த வகையில் பிரவேய்க் தயாரிக்கும் மின்கலம் குறைந்த எடை கொண்டதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நீா் புகாமலும் இருக்கும்’’ என்றாா்.

எம்2எம் ஃபேக்டரி, ஏஎம்ஜி புரோ நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூறுகையில், ‘‘பாலைவனம், பனி சூழ்ந்த பகுதி, நகரங்கள், காட்டுப் பகுதிகள் என பல்வேறு இடங்களில் வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியுள்ளதால் தளவாடங்களின் மின்கலத்தில் பல்வேறு மாற்றங்கள் அவசியமாகின்றன. அதற்கான தீா்வை பிரவேய்க் வழங்கியுள்ளது.

பிரச்னைக்கான தீா்வை வழங்கிய 60 நாள்களுக்குள் புதிய மின்கலத்தை பிரவேய்க் தயாரித்தது. இது பாதுகாப்புத் தளவாடங்கள் துறையில் முன்னெப்போதும் கண்டிராதது. பிரவேய்க் வழங்கும் மின்கலம் ஐரோப்பாவின் மிகப் பெரிய பாதுகாப்பு கண்காட்சியான ‘யூரோசேடரி’யில் காட்சிப்படுத்தப்படும்’’ என்றனா்.



Read in source website

நேட்டோ அமைப்பில் இணைய உள்ளதாக ஃபின்லாந்து நாடு அதிகாரபூா்வமாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

ஜொ்மனி தலைநகா் பொ்லினில் நடைபெற்ற நேட்டோ கூட்டத்துக்குப் பின்னா், ஃபின்லாந்து அதிபரும் பிரதமரும் கூட்டாக இதனை அறிவித்தனா்.

ரஷியாவின் அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தது. அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது.

இந்த நிலையில், ரஷியாவின் மற்றொரு அண்டை நாடான ஃபின்லாந்தும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து வந்தது. உக்ரைனைப் போல தங்கள் மீதும் ரஷியா படையெடுப்பதைத் தடுப்பதற்காக அந்த முடிவை ஃபின்லாந்து எடுக்கலாம் என்று கூறப்பட்டது. ஃபின்லாந்தின் விருப்பத்துக்கு ரஷியா எதிா்ப்பு தெரிவித்தது.

ஆனால், அதைப் பொருட்படுத்தாமல், நேட்டோவில் இணைவதற்கான விண்ணப்பத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக சமா்ப்பிக்க வேண்டும் எனவும், அதற்கான நடைமுறைகள் உடனடியாகத் தொடங்கப்படும் எனவும் ஃபின்லாந்து அதிபா் சாவ்லி நினிஸ்டோ, பிரதமா் சனா மரீன் ஆகியோா் கடந்த வியாழக்கிழமை அறிவித்தனா்.

மேலும், இந்த விவகாரம் குறித்து ரஷிய அதிபா் புதினிடம் ஃபின்லாந்து அதிபா் சாவ்லி நினிஸ்டோ சனிக்கிழமை தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு பேசினாா்.

அதிகாரபூா்வ அறிவிப்பு: இந்நிலையில், நேட்டோவில் இணைவதற்காக விண்ணப்பம் செய்யவிருப்பதாக ஃபின்லாந்து அதிபரும் பிரதமரும் அந்நாட்டின் ஹெல்சிங்கி நகரில் கூட்டாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனா்.

இதுகுறித்து அதிபா் சாவ்லி நினிஸ்டோ கூறுகையில், ‘இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். ஒரு புதிய யுகம் தொடங்கியுள்ளது’ என்றாா்.

இந்த முடிவுக்கு ஃபின்லாந்து நாடாளுமன்றம் வரும் நாள்களில் ஒப்புதல் தரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதன்பிறகு பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ள நேட்டோ தலைமையகத்தில் ஃபின்லாந்து முறைப்படி விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்கும்.

ஃபின்லாந்தை தொடா்ந்து ஸ்வீடனும் நேட்டோவில் இணைவதற்கான நடவடிக்கையை தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

நேட்டோ கூட்டம்: இதற்கிடையே, நேட்டோ அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம் ஜொ்மனி தலைநகா் பொ்லினில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அந்தக் கூட்டத்துக்குப் பின்னா் நேட்டோ துணை பொதுச் செயலா் மிா்சியா ஜியோவானா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உக்ரைனில் ரஷியாவின் கொடூரமான ஊடுருவல் தோல்வியைச் சந்தித்து வருகிறது. உக்ரைன் மக்கள் மற்றும் ராணுவத்தின் தைரியம் மற்றும் எங்களின் உதவியுடன் உக்ரைன் இந்தப் போரில் வெற்றி பெறும் என்றாா் அவா்.

காா்கிவிலிருந்து வெளியேறியது ரஷிய படை

உக்ரைனின் 2-ஆவது பெரிய நகரமான காா்கிவிலிருந்து ரஷியா தனது படைகளைத் திரும்பப் பெற்றுள்ளதாக, உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.

‘வடகிழக்கு நகரமான காா்கிவிலிருந்து ரஷியா தனது படைகளைத் திரும்பப் பெற்றுள்ளது. கிழக்கு பிராந்தியமான டொனட்ஸ்கில் கவனத்தை செலுத்தும்பொருட்டு இந்த நடவடிக்கையை ரஷியா மேற்கொண்டிருக்கலாம் ’ என உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான போரில் ரஷியாவிடம் வீழ்ந்த முதல் பெரிய நகரம் காா்கிவ்தான். ஆனால், தலைநகா் கீவை கைப்பற்ற முடியாத நிலையில், ரஷியா-உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள டான்பாஸ் பிராந்தியத்தின் மீது ரஷியா கவனம் செலுத்தி வருகிறது.

இதற்கிடையே, உக்ரைனுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா் மிட்ச் மெக்கனல் தலைமையிலான நாடாளுமன்ற குழுவினா் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை சனிக்கிழமை சந்தித்தனா்.

 



Read in source website

சென்னை: காயங்களின்றி இறந்து கரை ஒதுங்கிய அரிய டால்பின் வகையான குளவி வேடன் மீனை வனத்துறையினர் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.

புதுச்சேரி வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் வளத்தான். இன்று மாலை வைத்திக்குப்பம் கடற்கரையில் கருமையான நிறத்தில் மீன் மிதந்து வருவதை பார்த்தார். அதை கடற்கரையில் இழுத்து போட்டபோது, அது டால்பின் வகையைச் சேர்ந்த 3.5 அடி கொண்ட குளவி வேடன் என்ற அரிய வகை மீன் என்பது தெரிந்தது. அந்த மீன் இறந்திருந்தது.

இதையடுத்து, போலீஸாருக்கு தகவல் தந்தார். அவர்கள் வனத்துறையினர் மற்றும் மீன்வளத்துறைக்கு தகவல் தந்தனர். வனத்துறையின் துணை வனக்காப்பாளர் வஞ்சனவள்ளி நேரில் வந்து ஆய்வு செய்தார்.

அதையடுத்து அவர் கூறுகையில், "இறந்து கரை ஒதுங்கிய மீன் அபூர்வமான பாலூட்டி வகையைச் சேர்ந்த பெண் இனம். உடலில் காயம் இல்லை. சுமார் 25 கிலோ எடையுள்ளது. சுமார் 3 அடிக்கு மேல் உள்ளது. இறந்தது எப்படி என தெரியவில்லை. அதனால் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு ஆய்வுக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரியும்" என்று குறிப்பிட்டார்.



Read in source website

விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குவளை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கீழடி, சிவகளை, மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் இந்த ஆண்டில் புதிதாக அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதன்படி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் அகழ்வாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை வெம்பக்கோட்டையில் நுண்கற்கருவிகள், சங்ககால மண்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள் மற்றும் செப்பேடுகள், கிளிஞ்சல்களால் ஆன வளையல்கள் யானையின் கடைவாய்ப்பல் ஆகியவை புதைபடிம வடிவில் ஆகியவைகள் கிடைத்துள்ளது.

இந்நிலையில், வெம்பக்கோட்டையில் புதிதாக 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குவளை கிடைத்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள, சுடுமண்ணால் ஆன, ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட, காலத்தால் அழியாத கலை நயம் மிக்க கண்கவர் குவளை.❤️" என்று தெரிவித்துள்ளார்.



Read in source website

தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணைவேந்தர்கள் நியமனம் குறித்துக் கொண்டுவரப்பட்டிருக்கும் சிறப்புச் சட்ட முன்வடிவு, தமிழ்நாட்டுக்கு இன்றைய சூழ்நிலையில் மிகவும் தேவையான ஒன்றாகும். இந்தச் சட்ட முன்வடிவு, மாநில அதிகாரங்களை உறுதிப்படுத்தவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமைகளை நிறைவேற்றவும் பெரிதும் பயன்படும்.

50 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை பல்கலைக்கழகமும், மதுரை பல்கலைக்கழகமும் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் வந்துவிட்டன. மாநில அரசின் கொள்கையாக மாவட்டத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் என மாநில அரசு தொடங்கும் நிலையில், ஆளுநர் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் சென்றுவர முடியுமா?

இந்த அடிப்படையில் பார்த்தால், ஆளுநர் அரசமைப்பில் சொல்லப்பட்ட அவரது கடமையை நிறைவேற்றுவதற்குப் பதிலாகப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தைப் பார்ப்பதே அவருக்குப் பெரிய பணியாக இருந்துவருகிறது. இதனால்தான் தமிழ்நாட்டின் ஆளுநர், சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில்கூடத் தன் கடமையைச் சரிவரச் செய்ய முடியாமல், அவர் பதவியின் வழி வந்துள்ள பல்கலைக்கழக நிர்வாகத்தைப் பெரிதும் தன் கையில் எடுத்துப் பணியாற்றிவருகிறார்.

பிரிட்டிஷ் காலத்தில் ஆளுநர்கள் பல்கலைக் கழகத்தின் தலைவர்களாக இருந்த காரணத்தால் வேந்தர் என்று அழைக்கப்பட்டனர். ஏனெனில், அவர்கள் பிரிட்டிஷ் ராணியின் பிரதிநிதிகளாக இங்கு பணியாற்றினார்கள். அதிகாரம் பெற்ற ஆளுநர்கள் இருந்ததால் அவர்கள் பல்கலைக்கழக வேந்தராகவும் இருந்துவந்தனர். இந்தியா விடுதலை பெற்ற 1947-க்குப் பிறகு இந்தியாவின் எந்தவொரு தனிநபருக்கும் ராஜ அதிகாரம் இல்லை. இந்தியா ஒரு பரிபூரண ஜனநாயக நாடாக விளங்கிக்கொண்டிருக்கிறது.

பல்கலைக்கழகங்களுக்கு வேந்தரோ துணைவேந்தரோ இன்றைய சூழ்நிலையில் தேவைதானா என்பதையும் மாநில அரசு சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஆகவே, பல்கலைக்கழக வேந்தரைத் தலைவர் என்றும் துணைவேந்தர்களை துணைத் தலைவர் என்றும் மாற்றம் செய்திட வேண்டும். மத்தியப் பல்கலைக்கழகங்களில் குடியரசுத் தலைவர் நோக்கராக இருப்பதைப் போல் ஆளுநரை அதிகாரமற்ற நோக்கராக நியமிக்கலாம்.

மத்திய அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களில் கல்வியாளர்களைத் தலைவராக நியமிப்பதுபோல தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் சிறப்பு பெற்ற கல்வியாளர்களைத் தலைவர்களாக நியமிக்கலாம். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமே துணைவேந்தர்களை நியமிப்பதுபோல் மாநில அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுத் துணைவேந்தர்களை நியமிக்கலாம். தற்போது கொண்டுவந்துள்ள சட்ட முன்வடிவு பெரிதும் தேவையானதாகும். இதனை ஆராய்ந்து மேற்கூறியதை ஆலோசிக்கலாம், நிறைவேற்றலாம்.

> இது, வழக்கறிஞர் வி.ஆர்.எஸ்.சம்பத் எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்



Read in source website

சிவகங்கை: சிவகங்கை அருகே பீஜப்பூர் சுல்தான் செப்புக் காசுகள் கண்டெடுக்கப்பட்டன. சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, உறுப்பினர் க.சரவணன் ஆகியோர் சிவகங்கை அருகே அரசனேரி கீழமேடு பகுதியில் 3 பீஜப்பூர் சுல்தான் செப்புக் காசுகளை கண்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்து கா.காளிராசா செய்தியாளர்களிடம் கூறியதா வது: செப்புக் காசுகள் நேர்த்தியான வட்ட வடிவில் இல்லாமல் முன்னும், பின்னுமாக உள்ளன. தஞ்சை நாணயவியல் அறிஞர் ஆறுமுகம் சீதாராமன் உதவியோடு காசுகளை ஆய்வு செய்ததில், அவை பீஜப்பூர் சுல்தான்கள் காசுகள் என்பது தெரியவந்தது.

பீஜப்பூர் சுல்தான்கள் கர்நாடக மாநிலம் பீஜப்பூரை தலைநகராகக் கொண்டு வடக்கு கர்நாடகா பகுதியையும், தெற்கு மகாராஷ்டிரா பகுதியையும் கடந்த 1490-ம் ஆண்டில் இருந்து 1686 ஆண்டு வரை சுமார்196 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர். அப்பகுதியை யூசுப் அடில் ஷா தொடங்கி 9 அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர்.

நமக்கு கிடைத்துள்ள காசுகள் செம்பால் ஆனதோடு, அதிக எடை உள்ளதாக உள்ளன. மூன்று காசுகளில் 2 காசுகள் 8 கிராம், ஒரு காசு 7 கிராம் எடை உள்ளன. ஒன்றில் தேவநாகரி எழுத்தில் ராஜா என்று எழுதப் பெற்றுள்ளது. மற்ற காசுகளில் பாரசீக எழுத்துகள் உள்ளன. பாரசீக எழுத்தில் அலி அடில் ஷா (1558-1579) என்ற பெயர் குறிப்பிட்டு இருக்கலாம். இவரது காலம் 16-ம் நூற்றாண்டு. இதே காலகட்டத்தில் காசுகள் கண்டெடுக்கப்பட்ட அரசனேரி கீழமேடு பகுதி நாயக்கர் ஆட்சியின் கீழ் பாளையங்களாக இருந்துள்ளன. அதனால் இக்காசுகள் வணிகத் தொடர்பிலோ அல்லது இறைவழி பயணத்திலோ இப்பகுதிக்கு வந்திருக்கலாம்.

பொதுவாக ஆற்றுப் பகுதிகளில்தான் பழங்கால காசுகள் கிடைப்பது வழக்கம். ஆனால் சிவகங்கை போன்ற பகுதிகளில் இவ்வாறான காசுகள் கிடைப்பது அரிதானது என்று கூறினார்.



Read in source website

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, வரும் 26-ம் தேதி சென்னை வருகிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் செயல்படுத்தப்படும் ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 12-ம் தேதி தமிழகம் வருவதாக இருந்தது. விருதுநகரில் இதற்கான நிகழ்ச்சி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக பிரதமர் வருகை தவிர்க்கப்பட்டது.

இந்தச் சூழலில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, வரும் 26-ம் தேதி தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்க உள்ளனர். தமிழக பாஜகசார்பில் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்குக்கு செல்லும் பிரதமர், அங்கு நடக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.

அதில், நேரு உள்விளையாட்டு அரங்கில் மே 26-ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில், ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். பெங்களூரு - சென்னை இடையிலான 4 வழி விரைவுச்சாலை திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் வழியாக இந்த சாலை செல்கிறது. இந்த சாலையின் 3-ம் கட்டபணிகள், ஆந்திராவின் சித்தூர்மாவட்டத்தின் ராமாபுரம் கிராமத்தில் இருந்து பெரும்புதூர் வரை106 கி.மீ. தூரத்துக்கு ரூ.3,472 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையில் அமைய உள்ள பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காவுக்கும் (multi modal logistics park) பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். சென்னை அருகில் மப்பேட்டில் 158 ஏக்கர் நிலம் இத்திட்டத்துக்காக கண்டறியப்பட்டுள்ளது. ரூ.1,200 கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த ஆண்டு கையெழுத்தானது. இதேபோல கோவை உட்பட நாடுமுழுவதும் அரசு - தனியார் பங்களிப்பில் 34 பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.

தருமபுரியில் இருந்து ஒசூருக்கு ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் சாலையில் 2-வது மற்றும் 3-வது தொகுப்பு திட்டப் பணிகளுக்கும் மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 227 திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

இவைதவிர சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் 4 திட்டங்கள், ரயில்வே, நகர்ப்புற வீட்டு வசதி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய துறைகளின் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து பேருரையாற்றுகிறார்.

இந்த திட்டங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தகவல் தெரிவிப்பதுடன், திட்டங்கள் தொடர்பான ஏற்பாடுகளையும் செய்யும்படி தலைமைச் செயலரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனிடையே, சென்னை பெரும்பாக்கத்தில் நகர்ப்புற மேம்பாட்டுவாரியத்தின் சார்பில் முதல்முறையாக, ரூ.116.37 கோடியில் முன்கட்டுமானம் (பிரீ காஸ்ட்) முறையில் தயாரித்து 12 கட்டிடத் தொகுப்புகளில் 1,152 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளை திறந்துவைத்து, பயனாளிகளுக்கு வீட்டுக்கான ஒதுக்கீட்டு ஆணையை பிரதமர் வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், மதுரை - தேனி இடையிலான அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் முடிந்துள்ள நிலையில் அதையும் பிரதமர் தொடங்கி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் தொடங்கி வைக்கவுள்ள திட்டங்களுக்கான ஏற்பாடுகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன.

கடந்த மாதம் டெல்லி சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுவை அளித்து அவற்றைநிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தினார். இந்நிலையில், சென்னை வரும் பிரதமரிடம் தமிழகம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் குறித்து மீண்டும் வலியுறுத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

குறிப்பாக, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதா சட்டப்பேரவையில் 2-வதுமுறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.

இலங்கை மக்களுக்கு தமிழகம்சார்பில் நிவாரணப் பொருட்கள் மத்திய அரசு வாயிலாக அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும், தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகள் செய்வது குறித்தும் பிரதமரிடம் முதல்வர் பேச வாய்ப்புள்ளது.

சென்னையைச் சுற்றி 5 இடங்களில் உள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை அடுத்த மாதத்துடன் நிறுத்தப்பட உள்ள நிலையில் அதை நீட்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் வழங்குவார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.



Read in source website

புதுடெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 15பி வகையைச் சேர்ந்த 'சூரத்' என்ற போர்க்கப்பலும், 17ஏ வகையைச் சேர்ந்த 'உதயகிரி' என்ற போர்க்கப்பலும் செவ்வாய்கிழமை (நாளை) அறிமுகம் செய்யப்படுகிறது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சூரத், உதயகிரி போர்க் கப்பல்கள் மே 17-ம் தேதி மும்பையின் மாஸ்காவோன் கப்பல்துறை நிறுவனத்தில் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

சூரத் ப்ராஜெக்ட் 15பி-யின் நான்காவது போர்க்கப்பலாகும். அதேபோல உதயகிரி ப்ராஜெக்ட் 17ஏ போர்க்கப்பல்களின் மூன்றாவது கப்பலாகும்.

நாட்டில் போர்க்கப்பல்களின் வடிவமைப்புப் பணியில் தலைசிறந்து விளங்கும் கடற்படை வடிவமைப்பு இயக்குனரகத்தால் இந்த இரண்டு கப்பல்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

தற்சார்பு இந்தியாவிற்கு சான்றளிக்கும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உட்பட உள்நாட்டு நிறுவனங்களின் 75 சதவீதம் கருவிகளுக்கு உற்பத்தி ஆணைகள் வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

புதுடெல்லி: காத்மாண்டு பல்கலைகழகம் - சென்னை ஐஐடி இடையே இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. பிரதமர் மோடியின் நேபாள பயணத்தின்போது இரு நாடுகள் இடையே மேலும் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக திங்கள்கிழமை நேபாளத்திற்குச் சென்றார். இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விவரம்:

> புத்தமத ஆய்வுகளுக்கான டாக்டர் அம்பேத்கர் இருக்கை அமைப்பது குறித்து லும்பினி புத்தசமய பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

> இந்திய ஆய்வுகளுக்கான ஐசிசிஆர் இருக்கையை உருவாக்குவது குறித்து சிஎன்ஏஎஸ் திரிபுவன் பல்கலைக்கழகத்திற்கும் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

> இந்திய ஆய்வுகளுக்கான ஐசிசிஆர் இருக்கையை உருவாக்குவது குறித்து காத்மாண்டு பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

> சென்னை இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம், இந்தியா - காத்மாண்டு பல்கலைக்கழகம்,நேபாளம் ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

> இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகம், சென்னை, இந்தியா - காத்மாண்டு பல்கலைக்கழகம், நேபாளம் இடையே ஒப்பந்தத்திற்கான விருப்ப கடிதம் (முதுநிலை அளவில் கூட்டு பட்டப்படிப்பு திட்டத்திற்காக).

> அருண் 4 ப்ராஜெக்ட் என்பதன் அமலாக்கம் மற்றும் மேம்பாட்டிற்காக எஸ்ஜேவிஎன் லிமிடெட் மற்றும் நேபாள மின்சார ஆணையத்திற்கும் இடையே ஒப்பந்தம்.

மாயாதேவி ஆலயத்தில் பிரதமர் மோடி...

முன்னதாக, நேபாளத்தின் லும்பினியில் உள்ள மாயாதேவி ஆலயத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அவருடன் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபாவும் அவரது மனைவி டாக்டர் அர்சு ராணா தூபாவும் சென்றிருந்தனர். கோயில் வளாகத்தின் உட்பகுதியில் உள்ள, பகவான் புத்தரின் மிகச் சரியான பிறப்பிடம் என்பதைச் சுட்டிக்காட்டும் குறியீட்டுக் கல்லுக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

புத்த சமய முறைகளின்படி நடைபெற்ற பூஜையில் பங்கேற்றனர். ஆலயத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள அசோகர் ஸ்தூபி அருகே இரு பிரதமர்களும் விளக்குகள் ஏற்றி வைத்தனர். இந்தத் தூண் கி.மு. 249-ல் அசோக சக்கரவர்த்தியால் நிறுவப்பட்டது. பகவான் புத்தரின் பிறப்பிடம் என்பதற்கான முதல் கல்வெட்டு ஆதாரமாக லும்பினியில் இது உள்ளது. இதன்பிறகு புத்தகயாவில் இருந்து கொண்டுவரப்பட்டு 2014-ல் லும்பினிக்குப் பிரதமர் மோடியால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட போதி மரக்கன்றுக்கு இரு பிரதமர்களும் நீர் வார்த்தனர். ஆலயத்தின் வருகையாளர் பதிவேட்டிலும் கையெழுத்திட்டனர்.

அதே போல, நேபாளத்தின் லும்பினியில் உள்ள சர்வதேச மாநாட்டு மையம் மற்றும் தியான மண்டபத்தில் நடைபெற்ற 2566 வது புத்த பூர்ணிமா விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவருடன் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபாவும், அவரது மனைவி டாக்டர் அர்சு ராணா தூபாவும் கலந்து கொண்டனர். விழாவில் நேபாளத்தின் கலாசாரம், சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரும், லும்பினி வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவருமான பிரேம் பகதூர் ஆலே உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் புத்த துறவிகள், புத்தமத அறிஞர்கள், சர்வதேச பங்கேற்பாளர்கள் உட்பட 2500-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடம் இரு நாட்டு பிரதமர்களும் உரையாற்றினர்.

லும்பினியில் உள்ள லும்பினி மடாலய மண்டலத்தில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான இந்திய சர்வதேச மையத்தை கட்டமைப்பதற்கான பூமி பூஜையை நேபாள பிரதமர்ஷேர் பகதூர் தூபாவுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டார்.

மார்ச் 2022 இல் சர்வதேச புத்த கூட்டமைப்பிற்கும் லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளைக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில், லும்பினி மேம்பாட்டு அறக்கட்டளை, சர்வதேச புத்த கூட்டமைப்பிற்கு ஒதுக்கியுள்ள இடத்தில், புதுடெல்லியின் சர்வதேச புத்த கூட்டமைப்பால் இந்த மையம் அமைக்கப்படும்.

தேராவாடா, மஹாயானா மற்றும் வஜ்ராயானா ஆகிய மூன்று முக்கிய புத்த பாரம்பரியங்களைச் சேர்ந்து துறவிகளால் பூமிபூஜை மேற்கொள்ளப்பட்ட பிறகு, மையத்தின் மாதிரியை இரு நாடுகளின் பிரதமர்களும் திறந்து வைத்தனர்.

புத்த ஆன்மிக அம்சங்களை உலகம் முழுவதும் உள்ள யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும் பெறுவதற்குத் தேவையான உலகத்தரம் வாய்ந்த வசதிகளை, கட்டி முடிக்கப்பட்ட பிறகு, இந்த மையம் வழங்கும். நவீன கட்டிடமாக, எரிசக்தி, தண்ணீர் மற்றும் கழிவுகளைக் கையாள்வதில் நிகர பூஜ்ஜிய தன்மை வாய்ந்ததாக விளங்குவதுடன், பிரார்த்தனை அரங்குகள், தியான மையங்கள், நூலகம், கண்காட்சி அரங்கம், உணவகம், அலுவலகம் மற்றும் இதர வசதிகளையும் இந்த மையம் உள்ளடக்கியிருக்கும்.

பார்க்க > நேபாளத்தில் பிரதமர் மோடி - சிறப்பு புகைப்படத் தொகுப்பு



Read in source website

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் ஊரக காவல் துறைக்கான பெண் காவலர் தேர்வு கடந்த 2018-ல் நடந்தது. இதில் எஸ்சி பிரிவில் பெண் ஒருவர் எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால் மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண் ணுக்கு கருப்பை இல்லை என்பதும் அவரது உடலில் ஆண், பெண் குரோமோசோம்கள் உள்ளதும் தெரிந்தது.

இதையடுத்து அந்த பெண் ணுக்கு, ‘ஆண்’ என மருத்துவ சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதனால் இவரது தேர்வு ரத்தானது. இதை எதிர்த்து அந்த பெண் மும்பை நீதிமன்றத்தில் மனு செய்தார். அதில், ‘‘உடலில் உள்ள குரோமோசோம் மாறுபாடு பற்றி நான் அறியவில்லை. நான் பிறந் தது முதல் பெண்ணாகத்தான் வளர்ந்தேன். எனது அனைத்து கல்வி சான்றிதழ்களிலும் பெண் பெயரில்தான் உள்ளன. குரோமோ சோம் மாறுபாட்டை காரணம் காட்டி வேலை வாய்ப்பை மறுக்க முடியாது’’ என கூறியிருந்தார்.

இந்த வழக்கில் மகாராஷ்டிர அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது. கருணை அடிப்படையில் இந்தப் பெண்ணை காவல் துறையில் பணியமர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் பெண் காவலராக அவர் பணியமர்த்தப்பட மாட்டார். காவல் துறையில் வேறு பணியில் ஈடுபடுத்த சிறப்பு ஐஜி, மாநில உள்துறை செயலாளருக்கு பரிந் துரை செய்வார். அவருக்கு மற்ற ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும். இவ்வாறு மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் ரேவதி மொஹிதி தேரே மற்றும் மாதவ் ஜாம்தர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘‘இது முற்றிலும் துரதிர்ஷ்டமான வழக்கு. அவர் ஆரம்பம் முதல் பெண்ணாக வளர்ந்துள்ளார். அவர் மீது எந்த தவறும் இல்லை. அவருக்கு 2 மாதத்துக்குள் பணி வழங்க வேண்டும்’’ என்று கூறினர்.



Read in source website

சென்னை: சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். சந்திரனை பூமி முழுமையாக மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் என்றும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்தால் அது பகுதி கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று(மே 16) நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி காலை 7.01 முதல் மதியம் 12.20 மணி வரை கிரகணம் நிகழும். பவுர்ணமி தினத்தைவிட கூடுதல் ஒளியுடன் ரத்த சிவப்பு நிறத்தில் சந்திரன் ஒளிர்வதால், இதை ‘ரத்த நிலா’ (பிளட் மூன்) என்று அழைக்கின்றனர். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்காவில் இது முழு கிரகணமாகவும், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் பகுதி கிரகணமாகவும் தெரியும். இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் தென்படாது.

நாசாவின் இணைய நேரலை (https://www.nasa.gov/nasalive) வழியாக கிரகணத்தை காணலாம். இந்த ஆண்டின் 2-வது சந்திர கிரகணம் நவ.8-ல் நிகழ உள்ளது என வானியல் அறிஞர்கள் கூறினர்.



Read in source website

புதுடெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலின் பாதாள அறைகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு படங்களை பகிர்ந்துள்ளது இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பு. அண்மையில் இந்த அறைகள் குறித்து விவாதம் எழுந்திருந்தது.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ளது தாஜ்மகால். வெளிநாட்டினர், உள்நாட்டு மக்கள் என தினமும் பல ஆயிரம் பேர் வந்து பார்வையிட்டு செல்லும் இடம். உலகின் முக்கியமான இடங்களில் ஒன்று. முகலாய மன்னர் ஷாஜகான், அவரது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய மகால் இது. 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டடதாக வரலாறு. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் இங்கு சென்று பார்வையிட்டு வருவது வழக்கம்.

அண்மையில் தாஜ்மகாலில் பூட்டப்பட்டுள்ள 22 ரகசிய அறைகளை திறக்க வேண்டும் என பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், நதிக்கரை ஓரம் அமைந்துள்ள இரண்டு பூட்டப்பட்ட ரகசிய அறைகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகளின் படத்தை பகிர்ந்துள்ளது இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பு.

"நதிக்கரை ஓரத்தில் உள்ள பாதாள அறைகளை மறுசீரமைக்கும் பணி நடைபெற்றது. இதில் சிதிலங்கள் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக பாரம்பரிய முறையில் சுண்ணாம்பு பூச்சு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என தனது ஜனவரி மாத செய்தி ஏட்டில் (Newsletter) தெரிவித்துள்ளது இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பு.



Read in source website

ரோம்: ஆறாவது முறையாக இத்தாலி ஓப்பன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஜோகோவிச். இது நடப்பு ஆண்டில் அவர் வென்றுள்ள முதல் சாம்பியன் பட்டமாகும்.

செர்பிய நாட்டை சேர்ந்தவர் 34 வயதான ஜோகோவிச். டென்னிஸ் உலகில் நம்பர் ஒன் வீரர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் அவர் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து சில பிரதான டென்னிஸ் தொடர்களில் அவர் விளையாடவில்லை. அதே நேரத்தில் இதற்கு முன்னதாக துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப், மாட்ரிட் ஓப்பன், செர்பிய ஓப்பன் போன்ற டென்னிஸ் தொடர்களில் விளையாடி இருந்தார்.

இந்நிலையில், இத்தாலி ஓப்பன் தொடரில் பங்கேற்று விளையாடினார் அவர். இந்த தொடரில் அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் நேர் செட் கணக்கில் ஆட்டத்தை வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் ஆறாவது முறையாக அவர் இத்தாலி ஓப்பன் பட்டத்தை வென்றுள்ளார்.

இந்த தொடரின் இறுதிப் போட்டியில் சிட்சிபாஸை 6 - 0, 7 - 6 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளார் ஜோகோவிச். முன்னதாக, அரையிறுதியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆயிரம் வெற்றிகளை பதிவு செய்த வீரர் என்ற மைல்கல்லை எட்டினார் அவர். இந்த சாதனையை படைத்துள்ள ஐந்தாவது வீரராகி உள்ளார் அவர். பிரெஞ்சு ஓப்பன் தொடருக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அவருக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி அவருக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும் என சொல்லப்படுகிறது.



Read in source website

காலநிலை மாற்றம் காரணமாக 2030-ஆம் ஆண்டுக்குள் சுமார் 9 கோடி இந்தியர்கள் பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

இது தொடர்பான ஆய்வை உலகளாவிய உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், “பருவநிலை மாற்றத்தால் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒன்பது கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் பட்டினியால் வாடுவார்கள். இந்தியாவில் தானியங்கள், இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், வேர்கள் மற்றும் கிழங்குகளின் உணவு உற்பத்தி குறியீடு காலநிலை மாற்றம் காரணமாக 1.627-ல் இருந்து 1.549 ஆக குறையலாம். அதாவது, 2030-ஆம் ஆண்டு காலத்தில் சராசரி கலோரி நுகர்வில் சிறிய சரிவு உருவாகலாம்.

அதாவது, ஒரு நபருக்கு 2,697 (கிலோ கலோரி/ ஒருநாள்)-லிருந்து 2,651 (கிலோ கலோரி/ ஒருநாள்) ஆக குறைய நேரிடலாம். 2100-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் சராசரி வெப்பநிலை 2.4 டிகிரி செல்ஸியலிருந்து 4.4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கோடை காலங்களில் வெப்ப அலைகள் 2100-ஆம் ஆண்டளவில் மூன்று மடங்கு அல்லது நான்கு மடங்காக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சரசாரி வெப்ப நிலை உயர்வால் இந்தியாவில் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். மேலும், காலநிலை மாற்றத்தால் விவசாய விளைச்சல் 2041 - 2060 காலக்கட்டத்தில் 1.8 முதல் 6.6 சதவீதமாகவும், 2061 - 2080 காலக்கட்டத்தில் 7.2 முதல் 23.6 சதவீதமாகவும் குறையக் கூடும். இதனை தவிர்க்க அரிசியிலிருந்து மற்ற பயிருக்கு மாற வேண்டிய தேவை உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் நம் கண் முன்னே அரங்கேறி வருகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான வனவிலங்குகள் அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. மனிதர்களும் அதன் தீவிரவத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்கும் என்று நம்புவோம்.



Read in source website

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரத்தப் புற்றுநோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யஅதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வும் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் உளவாளியான கிறிஸ்டோபர் ஸ்டீலி என்பவர், ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘புதினுக்கு என்ன நோய் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், அவர் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்’ என்று கூறியுள்ளார்.

இதனிடையே, புதினுக்கு நெருக்கமான ரஷ்ய தொழிலதிபர் ஒருவர் மேற்கு நாட்டைச் சேர்ந்த மற்றொரு தொழிலதிபருடன் பேசும் போது, ரத்தப் புற்றுநோயால் புதின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரி வித்துள்ளார். அந்த தொழிலதிபர் பேசும் உரையாடலின் ஒலிப் பதிவு கிடைத்துள்ளதாக அமெரிக்காவில் இருந்து வெளி யாகும் ‘நியூஸ் லைன்ஸ்’ பத் திரிகை கூறியுள்ளது. ரஷ்ய தொழிலதிபருக்குத் தெரியாமல் அவரது அனுமதி இல்லாமலே அவர் கூறிய தகவலை மேற்கு நாட்டின் தொழிலதிபர் ரகசியமாக ஒலிப்பதிவு செய்திருக்கிறார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க உத்தரவிடுவதற்கு முன்ன தாக, ரத்தப் புற்றுநோய்க்காக புதின் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் வெறிபிடித்தவர் போல நடந்து கொண்டதாகவும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அந்தப் பேச்சில் ரஷ்ய தொழிலதிபர் கூறியுள்ளதாக பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ராணுவ உயர் அதிகாரி ஒருவரும், புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உடல்,மன ரீதியாக அவர் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதிபர் புதினுடன் ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு சமீபத்தில் காணொலி காட்சி மூலம் போர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்திய காட்சிகள் வெளியானது. அந்த வீடியோவில் மேஜையை இறுகப் பிடித்துக் கொண்டிருந்த புதின் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். அந்த வீடியோ காட்சிகள் முழுமையாக வெளியிடப்படவில்லை என்றும் ‘நியூஸ் லைன்ஸ்’ பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

துபாய்: ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீத்மறைவைத் தொடர்ந்து புதிய அதிபராக ஷேக் முகமது தேர்வு செய்யப்பட்டார்.

இவர் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் தளபதியாக இருந்தவர். ராணுவத்தில் பல முக்கிய பதவிகளை இவர்வகித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமீரகத்தின் அதிபராக ஷேக் முகமது பதவி வகிப்பார். இந்நிலையில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷேக் முகமது பின் சையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஷேக் முகமது புதிய அதிபராக தேர்வு செய்யப் பட்டதற்கு இந்தியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஷேக் முகமது பின் சயீத்அதிபராக நியமிக்கப்பட்டுள்ள தால், இந்தியா-ஐக்கிய அரபு அமீரக நாடுகளிடையேயான உறவுகளுக்கு ஒரு பெரிய முக்கியத்துவம் கிடைக்கும் என்றும் இந்தியாவின் ‘‘உண்மையான நண்பராக’’ இருக்கும் ஷேக் முகமது இந்தியா மீது மிகுந்த மரியாதை கொண்டவர் என்பதாலும் 2 நாடுகளிடையேயான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் அங்கு வசிக்கும் இந்தியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஷேக் முகமது, கடந்த 2016, 2017-ம் ஆண்டுகளில் பிரதமர் மோடியை இந்தியாவில் சந்தித்துப் பேசியுள்ளார். மேலும் பிரதமர் மோடி 2015, 2018, 2019-ம் ஆண்டுகளில் துபாய் வந்தபோது பிரதமர் மோடியை, ஷேக் முகமது சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால் 2 நாடுகளிடையிலான உறவு மேலும் பலப்படும் என இந்தியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து துபாயில் உள்ள அல் தோபோவி குழும தலைவரும், இந்தியருமான சுரேந்தர் சிங் காந்தாரி கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவராக இருக்கும் ஷேக் முகமது அமீரக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி. அவர் இந்தியாவின் உண்மையான நண்பர்’’ என்று தெரிவித்தார்.



Read in source website

புதுடெல்லி: நாட்டில் விமான எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.6,188 அதிகரிக்கப்பட்டு ரூ.1,23,039 ஆக உள்ளது. இது, 5.29 சதவீத அதிகரிப்பாகும்.

விமான எரிபொருளின் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. மாதத்தின் 1 மற்றும் 16-ம் தேதிகளில் விமான எரிபொருள்களுக்கான விலை நிர்ணயம் செய்யப்படும். அதன்படி, இன்று விமான எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.6,188 அதிகரிகப்பட்டு ரூ.1,23,039 ஆக உள்ளது. இந்த ஆண்டில் 10-வது முறையாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதும், இதுவரை இல்லாத அளவிற்கு விமான எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

விமானங்களின் செலவினங்களைப் பொறுத்தவரையில் 40 சதவீதம் எரிபொருளுக்காகவே செலவிடப்படுகிறது. கடந்த ஜனவரி 1-ம் தேதி தொடங்கி இன்று வரை, ஏவியேஷன் டர்பைன் ஃபியுல் எனப்படும் ஏடிஎஃப் எரிபொருளின் விலை 55 சதவீதம் அதிகரித்துள்ளது. அதவாது, கிலோ லிட்டருக்கு ரூ.49,017 அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வால் விமானக் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் விமானப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ரூ.100-க்கு மேல் விற்கப்படும் சாதாரண பெட்ரோல் விலை 41 நாட்களாக மாற்றம் ஏதுமின்றி தொடர்வது குறிப்பிடத்தக்கது.



Read in source website

நமது வருமானத்திற்கு நாம் ஏன் அரசுக்கு வரி செலுத்த வேண்டும்? எல்லா வருமானங்களும் வரிகளுக்கு உட்பட்டவையா? யார் நமது வருமானங்களைச் சரிபார்த்து எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்று தீர்மானிப்பது? - இதுபோன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார் நிதி ஆலோசகர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி...

நேரடி, மறைமுக வரி: "ஒரு நாட்டிற்கான வருமானம் அந்நாட்டில் விதிக்கப்படும் வரிகள் மூலமாகவே கிடைக்கின்றன. அந்த வருவாய்தான் நாட்டின் உள்கட்டமைப்பை அதிகரிப்பது, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது போன்றவற்றுக்கு செலவு செய்யப்படுகின்றன. ஒரு தனிநபரோ தொழில் நிறுவனங்களோ அரசுக்கு செலுத்தும் வரி நேரடி வரி என்றும், பொருள்கள் இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை போன்றவை மறைமுக வரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.



Read in source website

ஆன்லைன் டெலிவரி எல்லாம் பழைய இ-காமர்ஸ் மேட்டர்தானே என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி இல்லையாம். இது அதன் அடுத்த கட்ட அவதாரமாம். இவ்வகை பத்து, பதினைந்துநிமிட அவசரடி ஆன்லைன் டெலிவரி சமாச்சாரத்தை ‘க்யூ காமர்ஸ்’(Q-Commerce) என்கிறார்கள். அதாவது க்விக் காமர்ஸ். தமிழில் சொன்னால் விரைவு வணிகம். இந்த க்யூ காமர்ஸ் மேட்டர் ஒரு சமீபத்திய ஜனனம். பல புதிய நிறுவனங்கள் குபீரென்று பிறக்க ஏற்கெனவே இருக்கும் ஆன்லைன் நிறுவனங்கள் சில குப்பென்று இந்த ஜோதியில் ஐக்கியமாகத் தொடங்கியுள்ளன.

ஆன்லைனில் மளிகை சாமான் வாங்குவோரிடம் செய்யப்பட்ட ஆய்வில் 49% பேர் தங்களுக்கு தேர்வு செய்ய நிறைய பொருள்கள் இருப்பதுதான் முக்கியம் என்று கூற, 37% பேர் தங்களுக்கு விலைதான் பிரதானம் என்றிருக்கிறார்கள். ‘வாம்மா மின்னலு’ என்று வேகமாக தங்களுக்கு பொருட்கள் வேண்டும் என்று கூறியவர்கள் வெறும் 8% பேர் மட்டுமே. பொதுவாகவே நம்மவர்கள் மளிகை பொருட்களை திட்டமிட்டு லிஸ்ட் போட்டு வாங்கும் பழக்கம் உள்ளவர்கள். அவசரத்திற்கு ஒரு சில பொருட்களை ஆன்லைனில் வாங்குவார்களே ஒழிய மொத்த பொருள்களையும் பத்து நிமிடத்தில் கொண்டு வந்தால்தான் உண்டு என்பார்களா? தெரியவில்லை.

அப்படியே அவசரத்திற்கு ஓரிரு பொருள்கள் வேண்டுமானால் இருக்கவே இருக்கிறது அருகில் உள்ள அண்ணாச்சி கடை. வீட்டு கதவை திறந்து கத்தினாலேஅவருக்குக் கேட்கும். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் அளவுக்கு கூட நேரம் ஆகாது. அப்படியே இந்த ஓரிரு பொருள்களை மட்டுமே டெலிவரி செய்வதால் க்யூ காமர்ஸ் நிறுவனங்களுக்கு என்ன பெரிய லாபம் வந்துவிடப் போகிறது?

அண்ணாச்சிக் கடைகள் களமிறங்க வேண்டும்: இந்த அதிரடி அர்ஜண்ட் க்யூ காமர்ஸ் நிறுவனங்கள் அண்ணாச்சிக் கடைகளுக்கு சவாலாக உருவெடுத்துள்ளன. ஆனால், அண்ணாச்சிக் கடைகளால் க்யூ காமர்ஸ் போட்டியை எளிதாக சமாளிக்க முடியும்.

ஏனென்றால், அவசர அடியாய் டெலிவரி செய்ய அளவெடுத்து செய்ததுபோல் உள்ளவர்கள் தடுக்கி விழுந்தால் இருக்கும் நம் அண்ணாச்சி கடைகள்தான். கஸ்டமர் தேவைகளை அவர்களை விட யாருக்கு தெளிவாய் தெரியும்? அவரைவிட யாரால் கடையிலிருந்து பத்தடி தூரத்தில் உள்ள வீடுகளுக்கு விரைவாய் டெலிவரி செய்ய முடியும்?

அண்ணாச்சி ஸ்டோர்களுக்கும் மளிகை கடைகளுக்கும் முதலில் தேவை ஆன்லைன் நிறுவனங்களை வெல்ல முடியும் என்ற வைராக்கியம். அடுத்து அவர்களுக்குத் தேவை நவீன தொழில்நுட்பம். பொருட்களின் இருப்பை நிர்வகிக்கவும், ஆன்லைன் ஆர்டரை எளிதாக டெலிவரி செய்ய உதவும் பல சாஃப்ட்வேர்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவை அதிக விலையும் கிடையாது. இதை வைத்துக்கொண்டு அண்ணாச்சிக் கடைகள் க்விக் காமர்ஸ் நிறுவனங்களை ஆட்டம் காண வைக்கலாம். செய்தால் அவர்கள் தொழில் தழைக்கும்.



Read in source website

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை உருக்குலைந்துள்ள நிலையில் இதே போன்ற நெருக்கடியை நோக்கி 69 நாடுகள் சென்று கொண்டிருப்பதாக உலக வங்கி, ஐ.நா. போன்றவை எச்சரித்துள்ளன. உணவுத்தட்டுப்பாடு மட்டுமின்றி கடன் சுமையும் இந்த நாடுகளை மூழ்கடித்து வருகின்றன.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் உலகளாவிய பொருளாதார சிக்கலை அதிகரித்துள்ளது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. ஏற்கெனவே பொருளாதாரம் வேகமெடுத்துள்ளதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்து வருகின்றன. சமையல் எண்ணெய் தொடங்கி கோதுமை வரை பல உணவுப்பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகளில் பொருளாதார சிக்கல் உருவாகி வருகிறது. இலங்கையை போன்றே வேறு சில நாடுகளிலும் இதேபோன்ற பொருளாதார பாதிப்பு, கடன் சுமை ஏற்பட்டுள்ளது.

பிப்ரவரி 15-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்குவதற்கு 9 நாட்களுக்கு முன்பாக உலக வங்கி மிக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 70 நாடுகள் பெரும் கடன் சுமை, அந்நியச் செலாவணி இழப்பு போன்ற சூழலில் இருப்பதாக தெரிவித்து இருந்தது. இந்த நாடுகளில் 2022-ம் ஆண்டில் இந்த நாடுகளில் பொருளாதாரம் அழியும் சூழலில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து ஐ.நா. வெளியிட்டுள்ள பொருளாதாரம் சா்ர்ந்த அறிக்கையில் 107 நாடுகளின் பொருளாதாரம் மிக மோசமான சூழலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயரும், கச்சா எண்ணெய் மற்றும் மின்சாரம் விலை அதிகரிக்கும். கடன் சுமையால் இந்த நாடுகளில் நிதிநிலை மோசமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் 170 கோடி மக்கள் இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வழியில்….

இதில் 69 நாடுகளில் இலங்கையின் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 25 நாடுகள் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவை. 25 நாடுகள் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளை சேர்ந்தவை. 19 நாடுகள் லத்தின் அமெரிக்கா நாடுகளாகும்.

இதில் முதல் நாடு எகிப்து. ஏற்கெனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் எகிப்து, உக்ரைன்- ரஷ்யா போருக்கு பிறகு பெரும் சிக்கலில் உள்ளது. உக்ரைன்- ரஷ்யாவிடம் இருந்து அதிகஅளவு கோதுமை இறக்குமதி செய்யும் நாடான எகிப்து போர் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் கோதுமைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மக்கள் உணவுக்காக தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கோதுமை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வந்தது. ஆனால் இப்போது இந்தியாவிலும் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.

அடுத்ததாக துனிஷியா. இந்த நாட்டில் வர்த்தக பற்றாக்குறை 9 மில்லியன் டாலராக உள்ளது. துனிஷியாவின் பணவீக்கம் 7 சதவீதமாக உள்ளது. இதனால் அந்த நாட்டில் உள்நாட்டு போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

கடும் நெருக்கடியில் துருக்கி

துருக்கியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு ஆண்டு பணவீக்க விகிதம் 61.14 சதவீதம் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

அங்கு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு முன்பாகவே அங்கு பொருளாதார பாதிப்பு தொடங்கி விட்டது. விநியோகச் சங்கிலித் தடை, துருக்கிய நாணயமான லிராவின் மதிப்பில் கடும் சரிவு, அதிகரித்து வரும் பணவீக்கம் போன்ற கடுமையான பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகிறது. பின்னர் கரோனா ஏற்பட்ட பிறகு பெரும் பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டு வருகிறது. தொழில், வர்த்தகம் சரிவடைந்தது.

பணவீக்கம் உயர்ந்து விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. தொழில்துறை வளர்ச்சியை முன் வைத்து வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கையை அதிபர் எர்டோகன் மேற்கொண்டார். செப்டம்பரில் மத்திய வங்கி 500 அடிப்படை புள்ளிகளை தளர்த்தி வட்டி விகிதங்களை குறைத்தது. இதனால் லிரா பலவீனமடைந்ததால் பணவீக்கம் மேலும் அதிகரித்து வருகிறது.

ரஷ்யா-உக்ரைன் மோதலால் துருக்கியில் கடுமையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் விலையும் உயர்ந்துள்ளது. துருக்கிய நாணயமான லிராவின் மதிப்பும் கடும் சரிவு கண்டு வருகிறது.

உணவுக்கு கையேந்தும் அவலம்

பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் நாடுகளில் லெபனானும் உள்ளது. பெய்ரூட்டில் நடந்த குண்டுவெடிப்பில் நாட்டின மிக முக்கிய உணவு குடோன் தகர்க்கப்பட்டது. இதனால் உணவு தானியங்கள் இல்லாமல் லெபனான் தவிப்பில் உள்ளது. கோதுமை, சமையல் எண்ணெய் என அனைத்தின் விலையும் உயர்ந்து பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. லெபனானின் உணவுப்பொருட்களின் விலை 11 மடங்கு உயர்ந்து விட்டது.

லெபனான் நாணயத்தின் மதிப்பு 90 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனையடுத்து உணவு தேவையை காரணம் காட்டி உலக வங்கியிடம் 150 மில்லியன் டாலர்கள் கடன் வாங்கியுள்ளது. அடுத்த நாடு அர்ஜென்டினா. பெரும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் அர்ஜென்டினா வாங்கிய கடனுக்கான வட்டியை திருப்பிச் செலுத்தாமல் 9 முறை தவணை தவறியுள்ளது.

இதுபோலவே எல்சால்வெடர், பெரு போன்ற நாடுகளும் இதுபோன்ற மோசமான பொருளாதார சூழலை எதிர்கொண்ட வருகிறது. இந்தநாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் மோசமான சூழல் உள்ளது.

கானா, கென்யா, தென்னாப்பிரிக்கா, எத்தியோப்பியா போன்ற நாடுகளும் கடன் சுமையால் தவித்து வருகின்றன. தென்ஆப்ரிக்காவிலும் கடனால் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

இந்த நாடுகள் அடுத்த 12 மாதங்களில் மிகப்பெரிய டெட் கிரைசிஸ் என அழைக்கப்படும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் என்றும் இதில் 10-க்கும் மேற்பட்ட நாடுகள் திவாலாகும் நிலைக்கு தள்ளப்படும் எனவும் எச்சரிக்ப்பட்டுள்ளது.

இதனை ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 60 சதவிகிதம் கடன் துயரத்தில் அல்லது அதற்கு அருகில் உள்ளன. அவர்களின் கடனை திருப்பிச் செலுத்தும் திறன் ஆபத்தான நிலையில் உள்ளது. உக்ரைன் போர் உணவு ஏற்றுமதியை சீர்குலைத்துள்ளது. உணவு பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. கடன் வாங்கியுள்ள நாடுகள் பணம் திருப்பிச் செலுத்துவதில் பெரும் சங்கடங்களை சந்தித்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

பெங்களூரு: பற்களில் உள்ள பாக்டீரியாவைக் கொல்ல நானோ பாட்களை (Nano Bot) பல் சிகிச்சைக்கு பயன்படுத்தும் முயற்சியை ஆய்வின் மூலம் இந்திய அறிவியல் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 2.0 படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சிட்டி 2.0 ரோபோ, அதன் மைக்ரோ பாட்டான சிட்டி 3.0 ரோபோவை வடிவமைத்து, பயன்படுத்தும். அது போல மருத்துவ அறிவியலில் புதிய முயற்சி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். அங்கொன்றும், இங்கொன்றுமாக சிகிச்சைக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில், இந்திய அறிவியல் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வின் மூலம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

பற்களில் உள்ள பாக்டீரியாவை அழிக்கவும், வேர் சிகிச்சை மேற்கொள்ளவும் சிறிய ரக நானோ பாட்களை பயன்படுத்துவதற்கான முயற்சிகளை ஆய்வு ரீதியாக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இது பல் சிகிச்சை முறையில் அடுத்த கட்டம் என சொல்லப்படுகிறது. இதனை ஆய்வறிக்கையாக Advanced Healthcare Materials என்ற மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளனர்.

இரும்பு முலாம் பூசப்பட்ட சிலிகான் டை ஆக்சைடுகளை கொண்டு நானோ பாட்களை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். பற்களில் செலுத்தப்படும் அந்த பாட்களை, காந்த சக்தியின் துணை கொண்டு கன்ட்ரோலர் மூலம் கட்டுப்படுத்தலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை மாதிரி பற்களுக்குள் செலுத்தி, நுண்ணோக்கி (Microscope) மூலம் கவனித்து, அதனை அவர்கள் கட்டுப்படுத்தியும் உள்ளனர். மேலும், எலிகளிலும் அதை சோதித்து பார்த்துள்ளதாக தெரிகிறது.

இதனை மருத்துவ முறைக்கு கொண்டு வரும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். அடுத்த சில ஆண்டுகளில் இது நடைமுறைக்கு வரலாம் எனவும் தெரிகிறது. அதோடு பல் சிகிச்சையின் போது நானோ பாட்களை பற்களுக்குள் சுலபமாக செலுத்தவும், அதனை கையாளவும் வாய்க்குள் பொருந்தும் வகையிலான கருவி ஒன்றை ஆரய்ச்சியாளர்கள் வடிவமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



Read in source website

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்றால் என்ன? யாரெல்லாம் தகுதியானவர்கள்? எவ்வளவு தொகை கிடைக்கும்?

Harikishan Sharma

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா –நகர்ப்புறம் (PMAY-U) என்றால் என்ன?

Explained: What is PMAY-U? Who can avail it?: 2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நிரந்தர வீடுகளை வழங்குவதற்காக, ஜூன் 25, 2015 அன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அதாவது பிரதமரின் வீடு கட்டும் திட்டம். PMAY திட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகள் திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்). இது நகர்ப்புறங்களில் கவனம் செலுத்துகிறது. மற்றொன்று PMAY-G எனப்படும் கிராமப்புறங்களுக்கான வீடு கட்டும் திட்டம். இந்த திட்டத்தில் நான்கு பிரிவுகள் உள்ளன: ” In-situ” சேரி மறுமேம்பாடு (ISSR); கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம் (CLSS); கூட்டாண்மையில் மலிவு விலை வீடுகள் (AHP) மற்றும் பயனாளிகள் தலைமையிலான தனிநபர் வீடு கட்டுமானம்/மேம்பாடுகள் (BLC),

இந்த திட்டம் மூலம் இதுவரை எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன?

PMAY-U இல் உள்ள தகவலின்படி, மே 9 2022 வரை இந்த திட்டத்தின் கீழ் 1.21 கோடி வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, அவற்றில் 58.82 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன அல்லது வழங்கப்பட்டுள்ளன. BLC (பயனாளிகள் தாங்களாகவே கட்டிக் கொள்ளுதல்) திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 28.17 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள 30.65 லட்சம் வீடுகள் ISSR, CLSS மற்றும் AHP ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் கட்டப்பட்டுள்ளன.

PMAY-U திட்டத்திற்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளது?

PMAY-U க்கு செலவிட ரூ.2.01 லட்சம் கோடியை மத்திய அரசு உறுதி செய்துள்ளது, அதில் ரூ.1.18 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டு ரூ.1.10 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.

பயனாளி தலைமையிலான தனிநபர் வீடு கட்டுமானம்/மேம்பாடுகள் (BLC) என்றால் என்ன?

BLC பிரிவின் கீழ், ஒரு பயனாளி தனது வீட்டைக் கட்டுவதற்கு அரசாங்கத்திடம் இருந்து 2.5 லட்சம் ரூபாய் நிதி உதவி பெறுகிறார். PMAY-U வழிகாட்டுதல்கள் பயனாளி குடும்பத்தை “கணவன், மனைவி மற்றும் திருமணமாகாத மகன்கள் மற்றும்/ அல்லது திருமணமாகாத மகள்கள்” அடங்கிய குடும்பமாக வரையறுக்கிறது.

மேலும், “பயனாளி குடும்பம் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அவர்/அவள் பெயரிலோ அல்லது அவரது/அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ ஒரு நிரந்தர வீடு (அனைத்து காலநிலை குடியிருப்பு அலகு) வைத்திருக்கக் கூடாது” என்று திட்ட வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

திட்ட வழிகாட்டுதல்களின் கீழ், வயது வந்தோருக்கான வருமானம் பெறும் உறுப்பினரை (திருமண நிலையைப் பொருட்படுத்தாமல்) தனி குடும்பமாக கருதலாம். இருப்பினும், இந்தத் திட்டத்தைப் பெற, அவர் அல்லது அவள் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அவர்/அவள் பெயரில் ஒரு நிரந்தர வீடு (அனைத்து காலநிலை குடியிருப்பு அலகு) வைத்திருக்கக் கூடாது.

கிராமப்புறங்களில் PMAY-G இன் கீழ், ஒரு பயனாளி தனது தற்போதைய வீட்டை மேம்படுத்துவதற்காக BLC கூறுகளைப் பெறலாம். இருப்பினும், 21 சதுர மீட்டருக்கும் குறைவான பரப்பளவைக் கொண்ட நிரந்த வீட்டைக் கொண்டவர்கள் மட்டுமே இந்த வசதியைப் பெறத் தகுதியுடையவர்கள்.

ஜியோடேகிங் என்றால் என்ன மற்றும் PMAY-U இன் கீழ் இது கட்டாயமா?

ஜியோடேகிங் என்பது புகைப்படம் எடுத்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு புவியியல் அடையாளத்தை சேர்க்கும் ஒரு செயல்முறையாகும். அதாவது உங்கள் வீடு கட்டுமானத்தின் இருப்பிட விவரம். PMAY-U வழிகாட்டுதல்களின் கீழ், திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அனைத்து வீடுகளும் புவன் HFA (அனைவருக்கும் வீடு) விண்ணப்பத்தில் ஜியோடேக் செய்யப்பட்டிருப்பதை மாநில அரசு உறுதி செய்வது கட்டாயமாகும், இது திட்டத்தை கண்காணிப்பதற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

புவன் HFA என்றால் என்ன?

புவன் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO) உருவாக்கப்பட்ட ஒரு இந்திய ஜியோ தளமாகும். இது இணைய அடிப்படையிலான பயன்பாடாகும், இது பயனர்கள் பல்வேறு வரைபடம் தொடர்பான சேவைகளை அணுக அனுமதிக்கிறது. PMAY-U இன் கீழ் கட்டப்பட்ட அல்லது கட்டப்படும் வீடுகளின் படங்களை ஜியோடேக்கிங் செய்யும் வசதியையும் இந்த அப்ளிகேஷன் வழங்குகிறது.



Read in source website

பல ஆண்டுகளாக, பல பாஜக தலைவர்கள் தாஜ்மஹால் உண்மையில் ஷாஜஹானின் ஆட்சிக்கு முன்பே கட்டப்பட்ட ஒரு இந்து கோவில் என்கிற கூற்றை முன்வைக்கின்றனர். தேஜோ மஹாலயா கோட்பாடு குறித்த விரிவான அலசலை இங்கே காணலாம்.

தாஜ்மஹால் உண்மையான வரலாற்றை கண்டறிய, அங்கு பூட்டி வைக்கப்பட்டிருக்கும் 20 அறைகள் திறக்க உத்தரவிடக்கோரி பாஜக தலைவர் ரஜ்னீஷ் சிங் மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் மே 12 அன்று தள்ளுபடி செய்தது.

அதற்கு ஒரு நாள் முன்பு, ராஜஸ்தானில் ராஜ்சமந்தின் பாஜக எம்பியும், ஜெய்ப்பூரின் முன்னாள் அரச குடும்ப உறுப்பினருமான தியா குமாரி, தாஜ்மஹால் இருக்கும் நிலம் தனது முன்னோர்களுக்குச் சொந்தமானது என்றும், அது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றம் தாக்கல் செய்ய உத்தரவிட்டால் வழங்கவோம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக, பல பாஜக தலைவர்கள் தாஜ்மஹால் உண்மையில் ஷாஜஹானின் ஆட்சிக்கு முன்பே கட்டப்பட்ட ஒரு இந்து கோயில் என்கிற கூற்றை முன்வைக்கின்றனர். 2017 ஆம் ஆண்டில், அப்போதைய பாஜக ராஜ்யசபா உறுப்பினர் வினய் கட்டியார், இந்த நினைவுச்சின்னம் உண்மையில் “தேஜோ மஹாலயா” என்று பெயரிடப்பட்ட சிவன் கோயில் என்றும், இது இந்து ஆட்சியாளரால் முதலில் கட்டப்பட்டது என்றும் கூறினார்.

தேஜோ மஹாலயா கூற்றை, முதன்முதலாக 1989 இல் வரலாற்றாசிரியர் பி என் ஓக் என்பவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் தனது கூற்றை நிலைநாட்ட பல முயற்சிகள் மேற்கொண்டார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இவ்வழக்கை 2000 ஆம் ஆண்டு விசாரித்த உச்ச நீதிமன்றம், Bee in his bonnet என கமெண்ட் செய்தது. அதாவது, ஒருவர் எதையாவது மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டே இருப்பார் என்பதே பொருள் ஆகும்.

தாஜ்மஹால்

உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மஹாலை, உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக ஐ.நா.வின் யுனெஸ்கோ பதிவு செய்திருக்கிறது. முகலாய பேரரசர் ஷாஜகானின் உத்தரவின் பேரில் 1632 மற்றும் 1648 க்கு இடையில் தாஜ்மஹால் கட்டப்பட்டது.

இது, இந்தோ-இஸ்லாமிய மற்றும் தைமுரிய கட்டிடக்கலை கலவையில் உருவானதால், டெல்லியில் உள்ள ஹுமாயூனின் கல்லறை போன்ற பழைய நினைவுச்சின்னங்களிலின் கட்டக்கலையில் இருந்து முன்னேற்றம் அடைந்திருந்தது.

பிரமாண்டமான வெள்ளை பளிங்கு கல்லறை ஒரு தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது 305 மீட்டர் மற்றும் 549 மீட்டர் அளவுள்ள சுவர்களுக்குள் சூழப்பட்ட வடிவியல் கட்டங்களின் வரிசையுடன் கட்டப்பட்ட ஒரு பெரிய வளாகத்தின் ஒரு பகுதியாகும்.

ஒரு மசூதி, விருந்தினர் மாளிகை, பிரதான நுழைவாயில்,வெளிப்புற முற்றம் போன்ற கட்டமைப்புகள் கட்டப்பட்ட பின்னர் 1653 இல் இந்த வளாகம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. தாஜ்மஹால் மொகலாயப் பேரரசர் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மஹால் இறந்த பிறகு அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். ஷாஜகானும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்

ஷாஜகானின் மும்தாஜ் மீதான காதலை விடவும், முகலாயப் பேரரசின் அதிகாரம் மற்றும் மகிமையின் பிரகடனத்தை விடவும் ஷாஜகானின் லட்சிய நினைவுச்சின்னமாக இருக்கலாம்என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

சமாதியின் வெளிப்புறம் செவ்வக பேனல்கள், பதிக்கப்பட்ட குர்ஆன் வசனங்களின் எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சமாதி நிற்கும் மேடையின் நான்கு மூலைகளிலும் மினாராக்கள் உள்ளன, கல்லறைக்கு தெற்கே உள்ள தோட்டம், நீர்வழிகளால் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மற்றும் இந்தியக் கலையின் வரலாற்றாசிரியரான கேத்தரின் ஆஷரின் கூற்றுப்படி, குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள சொர்க்கத்தின் நீரோடைகளை ஒத்திருக்கிறது. இந்த தோட்டம் முகலாயர்கள் ஏற்றுக்கொண்ட சொர்க்கத்தின் தோட்டம் என்ற பண்டைய பாரசீகக் கருத்தை முன்மாதிரியாகக் கொண்டது என கூறப்படுகிறது.

தேஜோ மஹாலயா கோட்பாடு என்ன?

இந்திய வரலாற்றை மீண்டும் எழுதுவதற்கான நிறுவனத்தின் எழுத்தாளரும் நிறுவனருமான பி என் ஓக், முஸ்லீம் ஆட்சியாளர்களின் நினைவுச்சின்னங்கள் உண்மையில் இந்து தோற்றம் கொண்டவை என்று நம்பினார்.

1976 இல், அவர் ‘லக்னோவின் இமாம்பரங்கள் இந்து அரண்மனைகள்’ என்ற புத்தகத்தையும், ‘டெல்லியின் செங்கோட்டை இந்து லால்கோட’ என்ற புத்தகத்தையும் எழுதினார். பின்னர் 1996ல் ‘இஸ்லாமிக் ஹேவோக் இன் இந்தியன் ஹிஸ்டரி’என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

இதற்கிடையில், 1989 இல் ஓக் எழுதிய ‘தாஜ்மஹால்: தி ட்ரூ ஸ்டோரி’ என்கிற புத்தகம், தற்போதைய தாஜ்மஹால் சர்ச்சையில் பின்னணியில் உள்ளது.

ஷாஜகானின் தாஜ்மஹால் உண்மையில் சிவபெருமானுக்குரிய ஒரு இந்து கோவில் என்றும், ராஜா பரமர்தி தேவ் என்பவரால் 4ஆம் நூற்றாண்டில் ஒரு அரண்மனையாகக் கட்டப்பட்டதாகவும் ஓக் கூறுகிறார்.

முகலாயர்களின் வருகைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தாஜ்மஹால் கட்டப்பட்டது மட்டுமின்றி தாஜ்மஹால் என்பது பண்டைய இந்து பெயரான தேஜோ மஹாலயாவின் தவறான உச்சரிப்பு என்பதையும் தனது ஆராய்ச்சியில் கண்டறிந்தாக கூறினார்.

12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் மீது முஹம்மது கோரியின் படையெடுப்பின் போது “தேஜோ மஹாலயா” அழிக்கப்பட்டது. அடுத்து மொகலாய பேரரசர் ஹுமாயூன் 16 ஆம் நூற்றாண்டின் மத்தியில் தோற்கடிக்கப்பட்டபோது, இந்த சொத்து ஜெய்ப்பூர் அரசு குடும்பம் வசம் சென்றது. அதனை, மூத்த முகலாய மன்சப்தார் மற்றும் அம்பர் ராஜாவாக இருந்த ஜெய் சிங் நிர்வகித்து வந்தார்.

ஓக்கின் கூற்றுப்படி, கோயிலை கையகப்படுத்திய ஷாஜகான், அதனை கல்லறையாக மாற்றி தாஜ்மஹால் என பெயரிட்டதாக கூறப்படுகிறது.

நாட்டின் உண்மை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மீண்டும் நிலைநாட்ட உச்ச நீதிமன்றத்தை ஓக் நாடினார். ஆனால், அதில் முன்னேற்றம் கிடைக்கவில்லை. பிடிஐ ரிப்போர்ட் படி, 2000 ஆம் ஆண்டு இந்த மனுவை தவறான கருத்துடையது என்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இன்றும் வாழும் ஓக்கின் கோட்பாடு

ரஜ்னீஷ் சிங் மனு தாக்கல் செய்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஓக் தாஜ்மஹாலின் “சீல் செய்யப்பட்ட அறைகளை” திறக்க வேண்டும் என்று கோரியிருந்தார்

அவர், சீல் செய்யப்பட்ட அறைகளில் அது தொடர்பான சான்றுகள் மறைக்கப்பட்டுள்ளதாக நம்பினார். அதில், சமஸ்கிருத கல்வெட்டுகள், இந்து சிலைகள், புனித நூல்கள், ஷாஜகானுக்கு முந்தைய ஆட்சியின் வரலாற்றை வெளிப்படுத்தும் நாணயங்கள் கொண்டிருக்கலாம் என கருதினார்.

உச்ச நீதிமன்றத்தில் சிங் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, கி.பி 1212 இல், ராஜா பரமர்தி தேவ் தேஜோ மஹாலயா கோவில் அரண்மனையைகட்டியதாகப் பல வரலாற்றுப் புத்தகங்களில் உள்ளது. இந்த கோவில் பின்னர் ஜெய்ப்பூரின் அப்போதைய மகாராஜா ராஜா மான் சிங்கால் பெறப்பட்டது. அவருக்குப் பிறகு ராஜா ஜெய் சிங்கால் நிர்வகிக்கப்பட்டது. ஷாஜஹான் இதனை 1632இல் பெற்று, மனைவியின் நினைவுச் சின்னமாக மாற்றி தாஜ்மஹால் என பெயரிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

2015 ஆம் ஆண்டிலும் ஆக்ராவில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றத்தில் இதேபோன்ற ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாஜ்மஹால் இந்து கோயில் என்றும், அங்கு தரிசனம், ஆரத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

ஓக்கின் கோட்பாடு எந்த வரலாற்று அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை. அதேசமயம், சில வரலாற்றாசிரியர்கள் தாஜ்மஹால் இருக்கும் நிலம் உண்மையில் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

அக்பரால் பயன்படுத்தப்பட்ட ஆக்ரா கோட்டையிலிருந்து ஆற்றின் குறுக்கே யமுனைக்கு அருகே இருந்த இந்த நிலம், ஷாஜஹானால் ஜெய் சிங்கிடம் இருந்து பெறப்பட்டது என்ற கூற்றும் உள்ளது.



Read in source website

தேவசகாயம் பிரசங்கம் செய்யும் போது, ஜாதி வேறுபாடுகள் இருந்தபோதிலும், அனைத்து மக்களுக்கும் சமத்துவத்தை வலியுறுத்தினார்’

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துவாகப் பிறந்து 18ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தேவசகாயம் பிள்ளை, புனிதராக அறிவிக்கப்பட்ட முதல் சாமானிய இந்தியர் ஆனார்.

85 வயதான போப் பிரான்சிஸ், வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்தில் நடைபெற்ற புனிதர் பட்டமளிப்பு விழாவில் தேவசகாயம் அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வாடிகனில் நடந்த முதல் புனிதர் பட்டமளிப்பு விழா இதுவாகும். தேவசகாயத்துடன் நான்கு பெண்கள் உட்பட ஒன்பது பேர் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.

தேவசகாயம் வாழ்க்கை!

தேவசகாயம் ஏப்ரல் 23, 1712 அன்று, பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம் கிராமத்தில் ஒரு இந்து நாயர் குடும்பத்தில் பிறந்தார். அவரது பெயர் நீலகண்ட பிள்ளை.

பின்னர் திருவிதாங்கூர் மார்த்தாண்ட வர்மாவின் அவையில் கருவூல அதிகாரியாக பணியாற்றினார். அப்போது டச்சு கடற்படைத் தளபதி டிலனாய் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலம் கிறிஸ்தவ மதம் குறித்து அறிந்துகொண்டார்.

கிறிஸ்தவ மதம் மீதான ஈர்ப்பின் காரணமாக 1745-ம் ஆண்டில் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவராக மாறினார். தனது பெயரை ‘லாசரஸ்’ என மாற்றிக்கொண்டார். லாசரஸ் என்பதற்கு ‘கடவுள் என்னுடைய உதவி’ என்று பொருள். அதன்பேரில் தேவசகாயம் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.

ஆனால் அவரது மதமாற்றம் அவரது சொந்த மதத்தின் தலைவர்களின் கோபத்தை தூண்டியது .

இதனால் அவர் மீது தேசத்துரோகம் மற்றும் உளவு பார்த்ததாக பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் அரச நிர்வாகத்தில் இருந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.

“பிரசங்கம் செய்யும் போது, ​​அவர் குறிப்பாக சாதி வேறுபாடுகள் இருந்தபோதிலும், அனைத்து மக்களுக்கும் சமத்துவத்தை வலியுறுத்தினார்”, இது “உயர் வகுப்பினரின் வெறுப்பைத் தூண்டியது, மேலும் அவர் 1749 இல் கைது செய்யப்பட்டார். 1749 முதல் 1752 வரை தேவசகாயம் பிள்ளை பலவிதமான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார்.

ஜனவரி 14, 1752 அன்று ஆரல்வாய்மொழி காட்டில் தேவசகாயம் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது நாகர்கோவில் கோட்டாரில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

புனிதர்

கிறிஸ்தவ மத நம்பிக்கைக்காக தனது உயிரைத் தியாகம் செய்ததால், 2004 ஆம் ஆண்டில், கோட்டார் மறைமாவட்டமும், தமிழ்நாடு பிஷப்ஸ் கவுன்சில் மற்றும் இந்திய கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டும் இணைந்து தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்க பரிந்துரைத்தது. அவர் பிறந்து 300 ஆண்டுகளுக்குப் பிறகு 2012 இல் கோட்டார் மறைமாவட்டத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்டார்.

2020-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி போப் ஆண்டவரால் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். இந்நிலையில், அவருக்கு வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டத்தை வழங்கினார்.

இந்தியாவில் இல்லற வாழ்வில் இருந்த ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவது இதுவே முதன்முறை. மேலும் தமிழ்நாட்டின் முதல் புனிதர் என்ற பெருமையையும் தேவசகாயம் பெற்றுள்ளார்.



Read in source website

Over 50% Indian employees likely to quit job in next 12 months for better pay tamil news: இந்த சர்வே 22 நாடுகள் மற்றும் 26 தொழில் துறைகளில் 1,500 க்கும் மேற்பட்ட வணிகத் தலைவர்கள் மற்றும் 17,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் அளித்துள்ள கருத்துகளை கொண்டு ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Employees across India now hold more control in the job market, with more than half of respondents saying they are likely to quit in the next 12 months driven mostly by a desire for higher total pay: சீனாவில் உருவெடுத்த கொரோனா தொற்று உலகம் முழுதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் பலர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. மேலும், பலர் சம்பள பற்றாக்குறையால் வேறு வேலைக்கு மாற வேண்டி இருந்தது. தற்போது பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று அச்சம் விலகி வரும் நிலையில், ஊழியர்கள் தங்கள் முதலாளிகள் மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றுள்ளனர் என்றும், சாத்தியமான முதலாளிகளிடமிருந்து அவர்களின் ‘விருப்பப் பட்டியல்’ மாறுகிறது என்றும் இஒய் இணையம் (EY 2022 Work Reimagined Survey நடத்திய சர்வே கூறுகிறது.

இந்த சர்வே 22 நாடுகள் மற்றும் 26 தொழில் துறைகளில் 1,500 க்கும் மேற்பட்ட வணிகத் தலைவர்கள் மற்றும் 17,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் அளித்துள்ள கருத்துகளை கொண்டு ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், 100 க்கும் மேற்பட்ட வணிகத் தலைவர்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட ஊழியர்களால் பதில்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள ஊழியர்கள் இப்போது வேலையில் அதிக கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர், பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அடுத்த 12 மாதங்களில் தங்களின் வேளைகளில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். இது அதிக மொத்த ஊதியம் பெறவும், உயர்ந்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் சிறந்த தொழில் வாய்ப்புகள் மற்றும் நெகிழ்வுத்தன்மை கொள்ளவும், சுருங்கி வரும் தொழிலாளர் சந்தை மற்றும் நெகிழ்வான வேலைகளை வழங்கும் வேலைகளின் அதிகரிக்கவும் என்று தெரிவித்துள்ளதாக அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இஒய் இந்தியா தலைவரும், தொழிலாளர் ஆலோசகருமான, அனுராக் மாலிக் கூறுகையில், கடந்த ஆண்டு தொழிலாளர் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள், அதிகார சமநிலை ஊழியர்களுக்கு சாதகமாக மாறியுள்ளது என்று கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. “அதிக நெகிழ்வான வேலை விருப்பங்களை வழங்கும் கியர்களை முதலாளிகள் மாற்றியதால், அதிக ஊதியம் மற்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பிராண்ட் கட்டிடம் ஆகியவை அடங்கும்.

கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி ஊழியர்களின் நகர்வுகளுக்கு வழிவகுக்கும் மிகப்பெரிய காரணிகளாக இருந்த நெகிழ்வான பணி ஏற்பாடுகள் இப்போது இயக்கி குறைவாக உள்ளன, ஏனெனில் பலர் ஏற்கனவே சில வடிவங்களில் நெகிழ்வுத்தன்மையை வழங்கும் நிறுவனங்களுக்கு வேலை செய்கிறார்கள்.” என்று மாலிக் கூறியுள்ளார்.

கணக்கெடுக்கப்பட்ட நாடுகளில் உள்ள பல்வேறு வயதினரைப் பார்க்கும்போது, ​​நாட்டிலுள்ள ஜெனரல் இசட் ஊழியர்கள் மற்றும் மில்லினியல்கள் இந்த ஆண்டு தங்கள் வேலையை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் (64 சதவீதம்). அதே சமயம் அனைத்துத் துறைகளிலும், தொழில்நுட்ப வன்பொருள், தொலைத்தொடர்பு மற்றும் தொழில்துறை சார்ந்தவர்கள், தயாரிப்புகள் வேலைகளை விட்டு வெளியேற மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்று சர்வே தெரிவித்துள்ளது.

இது தவிர, உலகளவில் சுமார் 84 சதவீத ஊழியர்கள் தொற்று பரவல் தொடங்கியதிலிருந்து நிறுவனத்தின் கலாச்சாரம் மேம்பட்டுள்ளதாக உணர்ந்துள்ளனர். வேலை வழங்குபவர்களில் 36 சதவீதம் பேர் வாரத்தில் ஐந்து நாட்கள் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று விரும்புவதாகவும் அந்த சர்வேயில் கண்டறியப்பட்டுள்ளது.



Read in source website

Trichy rupee note Collectors’ Association said not to worry about star symbol in rupee note Tamil News: நட்சத்திர பணத்தாள்கள் குறித்து அச்சம் தேவையில்லை என திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கதினர் தெரிவித்துள்ளனர்.

க.சண்முகவடிவேல்

star symbol in rupee note Tamil News: திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நூலகத்தில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத்தின் சார்பில் இந்திய ரிசர்வ் வங்கி நட்சத்திர வரிசை ரூபாய் பணத்தாள்கள் குறித்த சிறப்பு சோற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இந்திய ரிசர்வ் வங்கி நட்சத்திர வரிசை ரூபாய் பணத்தாள்கள் குறித்து திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவன தலைவரும், சமூக ஆர்வலருமான விஜயகுமார், நாணயவியல் மற்றும் பணத்தாள்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் ஆகியோர் இந்திய ரிசர்வ் வங்கி நட்சத்திர வரிசை ரூபாய் பணத்தாள்கள் குறித்து தெரிவித்ததாவது;

இந்திய ரிசர்வ் வங்கி நட்சத்திர வரிசை ரூபாய் பணத்தாள்களை வழக்கமான பணத்தாள்களில் பிழை மற்றும் குறைபாடு ஏற்படின் அதே எண்ணில் நட்சத்திர வரிசையுடன் வெளியிடப்படும். இவை வழக்கமான ரூபாய் பணத்தாள்களைப் போலவே இருக்கும். ஆனால் வரிசை எண்ணுக்கு முன்பு நட்சத்திரக் குறியீடு இருக்கும். அதாவது ஒரு 20 ரூபாய் நோட்டை எடுத்துக்கொள்வோம். அந்த ரூபாய் நோட்டில் பிழை ஏற்பட்டிருப்பின், அந்த ரூபாய் நோட்டின் எண் பேனலில் கூடுதல் எழுத்து, அதாவது பணத்தாள் தொடரில் உள்ள அதே எண்ணுக்கு முன்பு ஒரு நட்சத்திர குறியீடு பதிக்கப்பட்டிருக்கும்.

வழக்கமான ரூபாய் நோட்டில் எண் வரிசைகள் வழக்கம்போல் இருக்கும் அதே நேரம் ரூபாய் நோட்டில் ஏதாவது ஒரு பிழை ஏற்பட்டிருப்பின் அந்த நோட்டில் வழக்கமான எண் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும் அந்த சீரியல் முன்பு ஓர் நட்சத்திரக் குறியீடுடன் வரிசை என் இருக்கும். இந்த நட்சத்திர தொடர் எண்ணைக் கொண்ட ரூபாய் பணத்தாள்களை பலரும் ஏதோ கள்ள நோட்டு மாதிரி பார்க்கும் நிலை சிலரிடம் ஏற்பட்டிருக்கின்றது.

இந்த ரூபாய் நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டவை என்பதால் இதை சட்டப்பூர்வமாக பொதுமக்கள் பயன்படுத்தலாம். இதுகுறித்து பொதுமக்கள் எந்த அச்சமும் படத்தேவையில்லை என்றனர். முன்னதாக செயலர் குணசேகரன் வரவேற்க, கமலக்கண்ணன் நன்றி கூறினார்.



Read in source website

கொள்ளை நோய்த்தொற்று ஏற்படுத்திய ‘கடும்’ பாதிப்புகளிலிருந்து தட்டுத் தடுமாறும் பொருளாதாரத்தை மீட்டெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், உக்ரைன் - ரஷியப் போா் உலகை நிலைகுலைய வைத்திருக்கிறது. போா் தொடங்கி சுமாா் மூன்று மாதங்கள் ஆகின்றன. உக்ரைன் அடிபணிவதாக இல்லை.

‘நேட்டோ’ அமைப்பின் பொதுச்செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்கின் கணிப்பின்படி, இப்போதைக்கு உக்ரைன் - ரஷியப் போா் முடிவுக்கு வராது. பல ஆண்டுகள் தொடா்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறாா் அவா். அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், உலகப் பொருளாதாரம் நிலைகுலைந்து, கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பைவிடப் பேரழிவை நாம் எதிா்கொள்ள நேரலாம்.

சாமானியா்களால் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு விலைவாசி கட்டுக்கடங்காமல் உயரப் பறக்கிறது. உலகில் மிக அதிகமாக கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடான உக்ரைனின் ஏற்றுமதி முற்றிலுமாக தடைப்பட்டிருக்கிறது. அந்த நாட்டின் துறைமுகங்கள் அனைத்தும் ரஷியாவால் முடக்கப்பட்டிருக்கின்றன. அதனால், உலகின் பல நாடுகளில் உள்ள உணவுப் பொருள் ஏற்றுமதியாளா்கள் தங்களது கையிருப்பைப் பதுக்கி இருக்கிறாா்கள். இந்த நிலைமை இப்படியே நீடித்தால், மேலும் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பது அவா்களது எதிா்பாா்ப்பு.

அடுத்த ஓா் ஆண்டுக்கு இப்போதைய நிலைமை தொடரக்கூடும் என்பது சா்வதேச நிதியத்தின் ‘உலகப் பொருளாதார கண்ணோட்டம்’. இந்தியாவில் சில்லறை விற்பனை விலைவாசி உயா்வு 2022 - 23-இல் 6.1%-ஆக இருக்கும் என்று சா்வதேச நிதியம் கணிக்கிறது. பிரிட்டன் (7.4%), அமெரிக்கா (7.7%) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது குறைவு என்று வேண்டுமானால் நாம் ஆறுதலடையலாம், அவ்வளவே.

இந்தியக் குடும்பங்களில் சமையல் எண்ணெய் பயன்பாடு 24% குறைந்திருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கடந்த சில மாதங்களாக 67% குடும்பங்கள், முன்பைவிட அதிகமாக சமையல் எண்ணெய்க்காகச் செலவழிக்கின்றன. பலரும் விலை குறைந்த எண்ணெய்க்கு மாறி வருகின்றனா். அதன் விளைவாக, ஆரோக்கியக் கேடுகள் விளையக்கூடும் என்று எச்சரிக்கிறாா்கள், சுகாதாரத் துறையினா்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் சமையல் எண்ணெயின் விலை கடுமையான உயா்வைச் சந்தித்திருக்கிறது. உக்ரைன் போருக்குப் பிறகு, கடந்த 45 நாள்களில் சமையல் எண்ணெயின் விலையேற்றம் சா்வதேசச் சந்தையில் 25-40% அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சூரியகாந்தி, கடலை, தேங்காய், கடுகு எண்ணெய்களின் விலை கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்துக்கு முந்தைய விலையைவிட 50% முதல் 70% வரை சா்வதேசச் சந்தையில் அதிகரித்திருக்கிறது.

விலைவாசி உயா்வுக்கு உணவுப் பொருள்கள், சமையல் எண்ணெய்களின் விலை உயா்வு மட்டுமே காரணமல்ல. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையேற்றமும் மிக முக்கியமான காரணம். இந்தியாவில், கடந்த மே 1, 2020-இல் சுமாா் ரூ.581-ஆக இருந்த 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலை, இப்போது ரூ.1,000-த்தைத் தாண்டியிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 72% அதிகரித்திருக்கிறது.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை மட்டுமல்ல, மண்ணெண்ணெய் விலையும் அதேபோலக் கடுமையாக அதிகரித்திருக்கிறது. மாநிலங்களுக்கான மானியவிலை மண்ணெண்ணெய் ஒதுக்கீடும் சுமாா் 40% அளவில் குறைக்கப்பட்டிருக்கிறது. மண்ணெண்ணெய் தானே, யாா் உபயோகிக்கிறாா்கள்? எல்லோருக்கும் சமையல் எரிவாயு உருளை தரப்படுகிறதே என்று கேட்கக் கூடாது. இதனால் கடுமையாக பாதிக்கப்படுவது கடலில் மீன் பிடிக்கும் சாதாரண மீனவா்கள் என்பதை நாம் உணர வேண்டும். அவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கப் போக முடியாத நிலைமை ஏற்படும். சிறு தோணிகளில் மீன் பிடிப்பவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

கடந்த ஓராண்டில் பெட்ரோல் விலை 22% அதிகரித்திருக்கிறது என்றால் டீசல் விலை 17% அதிகரித்திருக்கிறது. அதற்கேற்றாற்போல சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் உயா்வதால், உணவுப் பொருள்களின் விலைவாசி ஏற்றம் பொதுமக்களின் தலையில்தான் இறங்கும். பேருந்து கட்டணமும், ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணமும் பெட்ரோல், டீசல் விலைகளுக்கு ஏற்றாற்போல அதிகரிக்கும்போது, குடும்ப பட்ஜெட் தடம்புரள்வது தவிா்க்க முடியாதது. அடித்தட்டு மக்கள் மட்டுமல்ல மத்தியதர வகுப்பினரும், மாத ஊதியம் பெறுவோரும் கடனாளிகளாக மாற வேண்டிய நிா்பந்தத்துக்குத் தள்ளப்படுவாா்கள்.

கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பது புத்திசாலித்தனமான முடிவு. கோதுமை, சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியை ரஷியாவும், பாமாயில் ஏற்றுமதியை இந்தோனேசியாவும், மாட்டிறைச்சி ஏற்றுமதியை ஆா்ஜென்டீனாவும் தடை செய்திருக்கின்றன. எல்லா நாடுகளுமே தங்களிடம் கையிருப்பில் உள்ள உணவுப் பொருள்களைப் பாதுகாப்பதிலும், பதுக்கல் நடைபெறாமல் தடுப்பதிலும் முனைப்புக் காட்டியாக வேண்டும் என்பதை உணா்ந்து விட்டன.

ஊதாரித்தனமாக வாக்கு வங்கி அரசியலுக்காக மத்திய - மாநில அரசுகள் தங்களது நிதியாதாரத்தை வீணாக்காமல், எரிவாயு, சமையல் எண்ணெய், உணவுப் பொருள்கள் மூன்றும் மானிய விலையில் கிடைப்பதை உறுதி செய்வதுதான் தீா்வாக இருக்கும். பெட்ரோல், டீசல் வரிக் குறைப்பை மத்திய - மாநில அரசுகள் முன்னெடுப்பது அவசியம். விலைவாசி உயா்வின் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பது அரசின் கடமை.



Read in source website

நாள்தோறும் நாளேடுகளில் கொலை, கொள்ளை பற்றிய செய்திகள் தவறாமல் இடம் பெறுவது ஒன்றும் புதிதல்ல. இருந்தாலும், அண்மையில் வந்த இரு செய்திகள் படிப்போரின் நெஞ்சைப் பிளப்பனவாக இருந்தன. முதலாவது, சென்னை மைலாப்பூர் தொழிலதிபர் மனைவியுடன் கொலை செய்யப்பட்ட செய்தி; இரண்டாவது, மதுரையில் வளர்ப்புத் தந்தை கொலை செய்யப்பட்ட செய்தி. 

இரண்டுமே  நெருங்கிப் பழகியவர்களால் விளைந்த  கொலைகள். மைலாப்பூர் கொலை, வீட்டிலே பணிபுரிந்து, பலகாலம் பழகிய பணியாளரால் செய்யப்பட்டது. மதுரையில் நடந்த கொலையோ வளர்ப்பு மகளால் நடத்தப் பட்டது. பழகியவரும் வளர்த்தவரும்  செய்த இந்தப் படுபாதகங்களை நினைக்கும்போது, யாரைத்தான் நம்புவதோ இப்பாழும் உலகில் என்று மனம் பதறுகிறது. 

இரண்டு கொலைகளுக்கும் காரணம் பணம். உடனடியாகப் பணம் சேர்க்க வேண்டும் என்ற பேராசைதான் இந்தக் கொலைகளைச் செய்யத் தூண்டியுள்ளது. கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு கொலைசெய்வது என்பது ஒன்றும் புதிதில்லை. ஆனால், நீண்ட காலமாக உடன் பழகியவர்கள் அந்த நோக்கத்தோடு கொலைசெய்ததுதான் வேதனையை உண்டாக்கி, நம்பகத்தன்மையில் ஒரு இடைவெளியை உருவாக்கி உள்ளது. எல்லார் மனத்திலும், வீட்டு வேலையாளரிடமும் சொந்த உறவினர்களிடமும் ஒரு சந்தேகப் பார்வையை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த இரு கொலைகளும் பணம் என்னும் பேய் இந்தச் சமூகத்தை எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதையும், பழக்கமும் பாசமும் வெறும் வேஷம் ஆகிவிட்டன என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறன. 

பசியைப் போக்க உணவு வேண்டும், மானம் காக்க உடை வேண்டும், உழைத்த களைப்பு நீங்க ஓய்வெடுக்க ஓர் இடம் வேண்டும். இவையெல்லாம் மனிதர்களின் இன்றியமையாத் தேவைகள். இவற்றைப் பெறுவதற்கு நிச்சயமாகப் பணம் தேவையாகிறது. காலத்தின் வளர்ச்சிக்கேற்ப தற்போது இன்னும் பல வசதிகள் மனிதனுக்கு அவசியத் தேவைகளாகி விட்டன. கல்வி பெறுவதற்கு பணம் வேண்டும். கடவுளை வழிபடவும் பணம் வேண்டும். தொழில் தொடங்க பணம் வேண்டும். ஒரு வாகனம் வாங்கிட பணம் வேண்டும். ஒரே இடத்தில் அடைந்து கிடக்காமல் ஊர் சுற்றிப் பார்க்க பணம் வேண்டும். 

இப்படி, பணம் இருந்தால்தான் இவ்வுலகில் வாழ முடியும் என்றொரு நிலை உருவாகி விட்டது. அதனால்  பணத்தின் மீது ஆசை கொள்வது மனித இயல்பாகி விட்டது. எனவே அந்தப் பணத்தைச் சம்பாதிக்க வேண்டியது மனிதனின் முக்கியக் கடமையாகி விட்டது.      

பணத்தின் மீது ஆசை கொள்வதில் தவறில்லை. அதைச் சேர்க்க வேண்டும் என்று நினைப்பதிலும் ஆட்சேபணையில்லை. அந்தப் பணம் சம்பாதிக்க வேண்டுமெனில் உழைக்க வேண்டும். இதனால்தான் "உத்தியோகம் புருஷ லட்சணம்' என்று நம் முன்னோர் குறிப்பிட்டனர். ஆனால், இப்போது உழைக்காமலே பணம் சேர்க்க வேண்டும் என்று பலர் விரும்புகின்றனர். இன்னும் சிலர் உடனடியாகப் பெரும்பணம் சேர்க்க வேண்டும் என நினைக்கின்றனர். அதற்குக் குறுக்கு வழியை நாடுகின்றனர். அது கொலை, கொள்ளையில் கொண்டு விடுகிறது. மேற்கூறிய இரண்டு சம்பவங்களும் இப்படித்தான் நடைபெற்றுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது. 

மைலாப்பூர் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர், தன் மகனை நன்கு படிக்கவைக்க வேண்டும் என்று விரும்பியதாகச் சொல்கிறார். மதுரைப் பெண்ணோ  உடனடியாக சொத்தைப் பெற வேண்டும் என்று விரும்பியதாகத் தெரிகிறது. இருவரின் ஆசையும் நியாயமானது என்று கொண்டாலும், அவர்களின் செயல் வள்ளுவரின் பார்வையில் "சான்றோர் பழிக்கும் வினை'யாகிப் போகிறது. 

அதனினும் அவர்கள் மேற்கொண்ட வழிமுறை மிக மோசமானது. வழி எதுவாக இருந்தாலும் பொருள் சேர்ப்பதே முக்கியம் என்ற அவர்களின் மனநிலையை அது காட்டுகிறது. இப்படி இருக்கக் கூடாது என்பதை உணர்ந்துதான் காந்தியடிகள், "நோக்கம் நல்லதாக இருந்தால் மட்டும் போதாது; அதனை அடையும் வழிமுறையும் நேரியதாக  இருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.  

வளர்ந்து வரும் சமூகச் சூழலில் வேலைக்கு ஆட்கள் நியமிப்பதும், குழந்தைப் பாசத்திற்காகத் தத்து எடுப்பதும் நடைமுறை ஆகிவிட்டது. இவ்விரண்டிலும் விசுவாசம் என்பது சிறிதும் இல்லாமலாகிவிட்ட அவலமான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்வதை இந்நிகழ்வுகள் காட்டுகின்றன என்பதும் எண்ணிப்பார்க்கத் தக்கது. முன்பெல்லாம், "உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்றொரு பண்பாடு நிலவியிருந்தது. இன்று அது உச்சி  மலையேறிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 

மைலாப்பூர் சம்பவத்தில் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படுபவர், "எனக்குச் சம்பளம் மட்டும்தான் தருவார். வேறு எந்த உதவியும் செய்ய மாட்டார்' என்று கூறுகிறார். கொலையுண்டவரின் மகனோ, "என் தந்தை அவரை மகனைப்போல காத்து வந்தார்' என்று கூறுகிறார். இந்தக் கூற்றுக்களிலிருந்து சில  உண்மைகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. பிழைப்புக்குக் கூலி தருகிறாரே என்ற பெருந்தன்மை அவருக்கில்லை. ஏதோ ஒரு பயன் கருதித்தான் அவர் பணியாற்றியிருக்கிறார் என்பது ஒரு உண்மை.  

அவருடைய குணத்தைப் புரிந்துகொள்ளாமல் அவருக்கு முதலாளி உதவி செய்திருக்கிறார் என்பது இன்னொரு உண்மை.  "ஒருவனுடைய தகுதி தெரியாமல் அவனுக்கு உதவி புரிவது குற்றம்' என்ற குறளின் கூற்று அவருக்குப் புரியாமல் போனதுதான் வேதனை. இந்த வேதனை மூலம் ஒரு முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது. வேலைக்கும், வளர்ப்புக்கும் தேவைப்படுவோரை  ஆய்ந்து, தெளிந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அந்த முடிவாகும். யாரைத்தான் நம்புவதோ? 



Read in source website

அண்மையில், எங்கள் கோவை நகரின் பல இடங்களில் காணப்பட்ட சுவரொட்டி விளம்பரம் ஒன்றைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பத்து மாவட்ட விவசாயிகள் கலந்து கொள்ளும் காட்டுப் பன்றி ஒழிப்பு மாநாடு குறித்த சுவரொட்டி அது.

மனிதர்களைப் படைத்த அதே கடவுள்தான் காட்டுப்பன்றிகளையும் படைத்திருக்கிறார். இவ்வுலகில் வாழ மனிதர்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை காட்டுப் பன்றிகளுக்கும் உண்டு. அப்படியிருக்க, காட்டுப் பன்றிகளை ஒழிக்க நமக்கு என்ன அதிகாரம் உள்ளது? 

சில மாநிலங்களில், குறிப்பிட்ட விலங்கினங்களை "தொந்தரவு' (வெர்மின்) என்று மாநில அரசுகளே அறிவித்து அவற்றை விவசாயிகளே சுட்டுக் கொல்ல அனுமதித்து இருப்பது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி இருக்கிறது. கேரளத்தில் மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சிலர், காட்டுப் பன்றிகளால் தங்களுக்கு அடிக்கடி பயிர்ச் சேதமும் சில சமயங்களில் உயிர்ச் சேதமும் ஏற்படுகிறது என்று கூறி, அவற்றைச் சுட்டுக் கொல்ல தங்களுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். 

2021ஜூலையில் கேரள உயர்நீதிமன்றம் காட்டுப் பன்றிகளை "தொந்தரவு' என்று அறிவித்து அவற்றை குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேட்டையாடிக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு "அப்படி அனுமதி அளித்தால் பல விபரீத விளைவுகள் ஏற்படக்கூடும்' என்று கூறி அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டது.

பல ஆண்டுகளுக்கு முன்னரே, உத்தரகண்ட், பிகார், கோவா, ஹிமாசல பிரதேசம் போன்ற மாநிலங்கள், குறிப்பிட்ட சில விலங்கினங்களை சுட்டுக் கொல்ல விவசாயிகளுக்கு அனுமதியளித்தன. "நீல்காய்' என அழைக்கப்படும் ஒரு வகை மாடுகள் விளைநிலங்களில் புகுந்து பெருமளவில் பயிர்ச் சேதத்தை உண்டாக்குகின்றன என்ற காரணத்தால் பிகாரில் மூன்றே நாட்களில்  இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட நீல்காய் மாடுகளை அரசே சுட்டுக் கொன்றது. 

இதைப் போன்றே ஹிமாசல பிரதேசத்தில் "ரீஸஸ்' வகைக் குரங்குகள் பெருமளவில் வேட்டையாடப்பட்டன. மேற்கு வங்கத்தில் யானைகளால் அதிக அளவில் உயிர்ச் சேதம் ஏற்படுகிறது என்று காரணம் கூறி, மாநில அரசு யானைகளைச் சுட்டுக் கொல்ல அனுமதி கோரியது. ஆனால், மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. இப்போது தமிழகத்துக்கு வந்திருக்கிறது சோதனை. "காட்டுப் பன்றி ஒழிப்பு மாநாடு' நடத்தி விவசாயிகள் கோரிக்கை வைக்க, மாநில வனத்துறை அமைச்சரும் அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

இவ்வாறு இந்தியா முழுவதிலும், காட்டுப்பன்றி, யானை, முள்ளம்பன்றி, காட்டெருமை, சாம்பார் மான், லங்கூர் குரங்கு, பான்னெட் குரங்கு, குரைக்கும் மான், மலபார் அணில், மயில், சருகு மான், மௌஸ் டீர் எனப்படும் சிறிய வகை மான், ஒரு வகை முயல் ஆகிய பன்னிரண்டு விலங்கினங்களை "தொந்தரவு' என வகையறுத்துச் சுட்டுக்கொல்ல அனுமதிக்கவேண்டும் எனக் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பிரச்னை வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு விதமாகக் கையாளப்படுகிறது. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வேளாண் நிலங்களைச் சுற்றி சூரிய மின்வேலிகளை அமைத்துக் கொள்வதால், காட்டுப் பன்றிகள், யானைகள் போன்ற மிருகங்கள் உள்ளே நுழைவது தடுக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். இவ்வேலிகள் "பல்ஸ் கரண்ட்' எனப்படும் "குறைந்த நேரத்தில் அதிர்வைக் கொடுக்கும் மின்சாரம்' உள்ளவை. அதனால் விலங்குகள் பயந்து ஓடக்கூடுமே தவிர உயிரிழக்க வாய்ப்பு இல்லை. ஆனால், இதுவும் பல இடங்களில்  தவறாகப் பயன்படுத்தபடுகிறது. 

வேளாண் நிலங்கள் அல்லாமல், காடுகளின் ஓரங்களில் கட்டப்படும் குடியிருப்புகள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றுக்கும் சூரிய மின்வேலிகளை அமைப்பதால் விலங்குகளுக்கான பாதைகள் தடுக்கப்படுகின்றன. இதனை நீக்கும் வகையில் தமிழக அரசு சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இனிமேல் சூரிய மின்வேலிகள் அமைப்பவர்கள் அவற்றை முறையாக பஞ்சாயத்துகளில்  பதிவு செய்ய வேண்டும் என்றும், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மின்வேலிகள், அவற்றின் திறன், அவற்றின் வகை உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அப்படிச் செய்யத் தவறினால் அவை சட்ட விரோத வேலிகளாகக் கருதப்பட்டு அப்புறப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது. 

அதே அரசின் அங்கத்தினரான ஒரு அமைச்சரோ முரண்பாடாக, "குவாரிக்காரர்களின் நலன்களைக் காத்திடவும், அரசின் வருவாயைப் பெருக்கிடவும், சரணாலயம் உள்பட காப்புக்காடுகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவு வரை குவாரி செயல்பாடுகளுக்கான தடையைப் போக்க உரிய திருத்தம் கொண்டுவரப்படும்' என்று ஒரு விபரீதமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அப்படியானால் விலங்குகளின் நலனை யார் காப்பது?   

சில வடமாநிலங்களில் பயிரைத் தேடி வரும் விலங்குகளை பயமுறுத்த குறுந்தகடுகளைக் கட்டித் தொங்கவிடுகிறார்கள். அவற்றின் மேல் பட்டுப் பிரதிபலிக்கும் ஒளியினைக் கண்டு மிருகங்கள் அச்சம் கொண்டு விலகி ஓடிவிடுவதால் பல விவசாயிகள் இந்த எளிய பாதுகாப்பு முறையைக் கையாளுகின்றனர். அஸ்ஸôம் போன்ற மாநிலங்களில் விளைநிலங்களின் ஓரத்தில் சூரிய மின்வேலிகள் அமைப்பதோடல்லாமல் தேனீப் பெட்டிகள் வைத்து தேனீக்களை வளர்க்கின்றனர்.

இத்தேனீப் பூச்சிகளின் ரீங்காரம் யானைகளை விரட்டி விடுவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். வனங்களை ஒட்டி வேளாண் நிலங்கள் இருக்கும் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் வனத்துறையே யானைகள் உள்ளே நுழையாத வண்ணம் குழிகளைஅமைக்கிறது.

இவை எல்லாவற்றையும் தாண்டி விலங்குகள் நிலங்களுக்குள்ளும் ஊர்களுக்குள்ளும் வருவது குறைந்தபாடில்லை. இருபது வருடங்களுக்கு முன் இப்படியெல்லாம் நடக்கவில்லையே, இப்போது மட்டும் ஏன் என்ற கேள்வி எழுகிறது. அப்போதெல்லாமம், மனிதன் தன் உணவுத் தேவைக்காக ஊருக்குள் அளவான இடத்தில் பயிரிட்டான்; வனவிலங்குகளுக்கும் போதிய அளவு வனங்களும் அவற்றில் பஞ்சமில்லாத அளவு உணவும் தண்ணீரும் இருந்தன.

அதனால் அவரவர் இடத்தில் அவரவர் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். மனிதன் காட்டுக்குள் நுழைந்தான்; விலங்குகள் ஊருக்குள் நுழைகின்றன அவ்வளவுதான்.    

கானுயிர் வல்லுநர்கள் இந்த பிரச்னை குறித்து ஆராய்ச்சிகள் செய்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் இந்நடவடிக்கைகளை எதிர்த்துத் தொடுக்கும் வழக்குகளினால் நீதிமன்ற உத்தரவுகள் எல்லாம் நிலுவையில் உள்ளன. இல்லையென்றால் நம் நாட்டின் காடுகளும், விலங்குகளும் பெருமளவு காணாமல் போயிருக்கும்.

இக்கானுயிர் வல்லுநர்கள் "மத்திய அரசின் வனப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் இந்திய வனங்களில் சில குறிப்பிட்ட விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால் அவற்றின் வாழ்க்கைக்குத் தேவையான வனப்பரப்பு அதிகரிக்கவில்லை. எண்ணிக்கை கூடியதால் மட்டுமே விலங்குகள் வேளாண் நிலங்களுக்குள் நுழைகின்றன என்பது சரியன்று. மனித ஊடுருவல், காடுகளின் பரப்பளவு குறைதல், உணவு, தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிற காரணங்களும் இருக்கலாம். 

குறிப்பிட்ட ஒரு விலங்கினத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றால் உணவுச் சங்கிலியில் அவ்விலங்கை இரையாகக் கொள்ளும் பிற விலங்கினங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம். உதாரணமாக, காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை கூடியுள்ளதென்றால், அங்கு சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம். அதற்குக் காரணம் என்ன என்று ஆராய வேண்டும். அதை விட்டுவிட்டு காட்டுப் பன்றிகளைச் சுட்டுக் கொன்றால், வேறு வனப் பகுதியிலிருந்து வேறு காட்டுப் பன்றிக் கூட்டம் ஒன்று இங்கு வந்து சேரும். சிறுத்தைகள் மாற்று இரையாக ஊருக்குள் இருக்கும் கால்நடைகளைத் தேடி வரும். காட்டின் உணவுச் சங்கிலி மிக மோசமாக பாதிக்கப்படும்' என்கின்றனர்.

பெரும்பாலான கானுயிர் வல்லுனர்களின் கருத்து இவ்வாறிருக்க, பிரபல சூழலியல் வல்லுநர் மாதவ் காட்கில் ஒரு  பேட்டியில் அதிர்ச்சி தரும்படியான சில கருத்துகளைக் கூறியுள்ளார். "காட்டுப் பன்றியோ யானையோ புலியோ எந்த விலங்காக இருந்தாலும், அது இயற்கை வளமாகக் கருப்பட வேண்டும். மக்கள் அவ்வளத்தை அளவாக அறுவடை செய்து பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அவ்வளத்தைக் காக்க மக்கள் முற்படுவார்கள். காட்டுப் பன்றியின் இறைச்சி சத்து நிறைந்தது எனும்போது, விவசாயிகள் அவற்றைக் கொன்று உணவாகக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே, மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு குறித்த அவரது பரிந்துரைகளை மத்திய - மாநில அரசுகள் புறக்கணித்து விட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் உணர்ச்சிவயப்பட்டுப் போராடலாம்; ஆனால் அரசு உணர்வுபூர்வமாக செயல்படக்கூடாது. எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த விலங்கினங்களின் எண்ணிக்கை கூடியுள்ளது, ஏன் கூடியுள்ளது போன்ற தகவல்களை தொழில்நுட்பத்தின் துணையோடு சேகரிக்க வேண்டும். கானுயிர் வல்லுநர்களை கலந்தாலோசித்து வன விலங்குகளின் உரிமைகளையும் பாதுகாத்து, மனிதர்களின் உரிமைகளுக்கும் சேதம் ஏற்படாத வண்ணம் நன்முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பூவுலகு நமக்கு மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுக்கும் சொந்தம். 



Read in source website

இலங்கையில் உள்ள உறவுமுறைகளின் பெயர்கள் குறித்துப் பார்க்கலாம். 

தந்தையின் உடன் பிறந்தாளை, 'அத்தை' என்று அழைக்கும் வழக்கம் யாழ்ப்பாணத்தில் மிகவும் குறைவு. 

தந்தையோடு பிறந்த பெண்களையும், தாயோடு பிறந்த ஆண்களின் மனைவியரையும், 'மாமி' என்றே அழைப்பது இவ்வூர் வழக்கம்.

பழைய தலைமுறையினர், தாயோடு பிறந்த ஆணை 'அம்மான்' என்றும், தந்தையுடன் பிறந்த பெண்ணின் கணவரை 'மாமா' என்றும் குறிப்பிட்டனர். இன்று 'அம்மான்' என்ற சொல் கைவிடப்பட்டு, 'மாமா' என்பதே இரு உறவுக்கும் பயன்படுகின்றது.

மனைவி கணவனை 'இஞ்சாருங்கோ', அல்லது 'இஞ்சாருங்கோப்பா' என்றும், கணவன் மனைவியை பெயரைச் சொல்லியோ அல்லது 'இஞ்சாருமப்பா' என்றுமோ அழைத்து வந்தனர்.

அக்காவின் கணவரை 'அத்தான்' அல்லது 'மைத்துனர்' என்றும், தங்கையின் கணவரை 'மச்சான்' என்றும், அண்ணாவின் அல்லது தம்பியின் மனைவியை 'மச்சாள்' என்றும் அழைத்தனர்.

'அண்ணி' என்ற சொல் மிக அரிதாகவே யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும், மாமா, மாமியின் மகனை 'மச்சான்' என்றும், அவர்களின் மகளை 'மச்சாள்' என்றும் அழைக்கும் வழக்கமும் இருந்து வந்தது. ஆனால், இன்றைய தலைமுறையினர் 'அண்ணி' என்று சொல்லத்தொடங்கிவிட்டார்கள்.
பெற்றோரையும் பிள்ளைகளையும் கொண்ட தனிக் குடும்பம் ஒன்றில் உள்ள உறவுகள்.

ஈழத் தமிழில் கணவன், மனைவி என்ற சொற்களுக்கு ஈடாக, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் 'புருசன், பெண்சாதி' அல்லது 'என்னவள், என்னவன்' தாய், தந்தை, ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்பவர்களாகும். இவர்களை அழைக்கப் பயன்படும் விளிச் சொற்களும், அவர்கள் பற்றிப் பிறருடன் பேசும்போது பயன்படுத்தும் குறிப்புச் சொற்களும் ஒரு பேச்சு மொழியின் அடிப்படையான சொற்களாகும்.

தற்காலத்தில் யாழ்ப்பாணத்துப் பிள்ளைகள் தந்தையை அப்பா என்றும், தாயை அம்மா என்றும் அழைக்கிறார்கள். இன்று வாழும் மூத்த தலைமுறையினரில் பலர், இவர்களை முறையே, 'அப்பு', 'ஆச்சி ' என அழைத்தனர். இடைக் காலத்தில் தந்தையை 'ஐயா' என்று அழைக்கும் வழக்கமும் இருந்தது.

அக்காலத்தில், பெற்றோரின் பெற்றோரை, 'பெத்தப்பு, பெத்தாச்சி, அம்மாச்சி, அப்பாச்சி, ஆச்சி' என்றார்கள். இன்று அவர்கள் 'அம்மம்மா, அப்பம்மா, அம்மப்பா, அப்பப்பா', சில வீடுகளில் 'தாத்தா, பாட்டி' எனவும் என அழைக்கப்படுகிறார்கள்.

இதுபோலவே பெற்றோரின் உடன் பிறந்த ஒத்தபாலாரும், சில பத்தாண்டுகளுக்கு முன்வரை, 'பெரியப்பு, சின்னப்பு, பெரியாச்சி, சின்னாச்சி, குஞ்சையா, குஞ்சம்மா என்றும் பின்னர் பெரியையா, சின்னையா' என்றும் அழைக்கப்பட்டு இன்று, 'பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா' அல்லது 'சித்தி' என்ற உறவுப்பெயரிட்டு அழைக்கப்படுகிறார்கள். 

பால் வேறுபாடின்றிப் பிள்ளைகளைக் குறிக்கும்போது, 'பிள்ளை' என்ற சொல்லே பயன்படுகின்றது. ஆண் பிள்ளையை 'ஆம்பிளைப் பிள்ளை' என்றும், பெண் பிள்ளையைப் 'பொம்பிளைப் பிள்ளை' என்றும் அழைக்கப்படும்.

உறவுச் சொற்களாக வழங்கும்போது, ஆண்பிள்ளையை 'மகன்' என்றும், பெண் பிள்ளையை 'மகள்' என்றுமே வழங்குவர். பல குடும்பங்களில், ஆண்பிள்ளையைத் 'தம்பி' என்றும், பெண்பிள்ளையை 'தங்கச்சி', அல்லது 'பிள்ளை' என்றும் அழைப்பது வழக்கம்.பிள்ளைகள் தங்களுக்குள் பயன்படுத்திக்கொள்ளும் உறவு முறைச் சொற்கள்.

'அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சி' மேற்சொன்ன உறவுகள் ஒன்றுக்கு மேற்பட இருக்கும்போது, 'பெரிய, சின்ன, இளைய, ஆசை, சீனி' போன்றவற்றில் பொருத்தமான ஒரு அடைமொழியைச் சேர்த்து, 'பெரியண்ணன், ஆசைத்தம்பி, சின்னக்கா' என்றோ, அவர்களுடைய பெயரைச் சேர்த்து, 'மறவன் அண்ணா, மதியக்கா' என்றோ வேறுபடுத்தி அழைப்பது வழக்கம்.

மேலே நான் குறிப்பிட பல உறவு முறைகள் இந்தியத் தமிழில் வேறுமாதிரி இருக்கும் என்பது என் கருத்து. எனக்கு வெளிப்படையாக அனைத்து இந்திய உறவுமுறைக்கான சொற்கள் தெரியவில்லை என்பதனால் நான் குறிப்பிடவில்லை. 

இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்தும் தமிழ் மொழியில் உள்ள வேறுபாடுகளையும் மறந்துவிட முடியாது. பொதுவாக தமிழகத்தில் பேசப்படுகின்ற தமிழ்ச் சொற்களில் இருந்து இலங்கைத் தமிழர்களின் பேச்சுத் தமிழ் வேறுபாடுகள் சில. 

சான்றாக இந்த சொற்றொடர்.'பேச்சு மொழி'

1. நான் கடைக்குப் போனேன். - 'தமிழ்நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை'

கடைக்குப் போனேன் நான். - 'இலங்கைத் தமிழர் பேசும் வகை'

2. எத்தனை நாள் உங்கள் நண்பர் வீட்டில் தங்கியிருப்பீர்கள்? - 'தமிழ்நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை'

எத்தனை நாள் உங்கள் நண்பர் வீட்டில் நிற்பீர்கள்? - 'இலங்கைத் தமிழர் பேசும் வகை'

3. நீ மகிழியிடம் பேசினாயா? - 'தமிழ்நாடு மற்றும் மலேசியா சிங்கப்பூரில் பேசப்படும் வகை'

4. நீ மகிழியிடம் கதைச்சியா? - 'இலங்கைத் தமிழர் பேசும் வகை'

இப்படியாக பல வேறுபாடுகள் இலங்கைத் தமிழர்களின் பேச்சு வழக்கில் காணமுடிகின்றது. 

இலங்கையில் பயன் பாட்டில் உள்ள சில சொற்கள்.
பேச்சுத் தமிழ் (பொருள்)

 ஆம்பிளை (ஆண்)
 இளந்தாரி (இளைஞன்)
 ஒழுங்கை (ஒடுங்கிய தெரு)
 கதிரை (நாற்காலி)
 கமம் (விவசாயம்/வயல்)
 கமக்காரன் (விவசாயி)
 காசு (பணம்)
 காணி (நிலம்)
 கொடி (பட்டம்)
 சடங்கு (விவாகம்)
 திகதி (தேதி)
 பலசரக்கு (மளிகை)
 பெட்டை (சிறுமி)
 பெடியன் (சிறுவன்)
 பேந்து/பிறகு (பின்பு)
 பொம்பிளை (பெண்)
 முடக்கு (பாதைத் திருப்பம்)
 வளவு (வீட்டு நிலம்)                                              
 வெள்ளாமை (வேளாண்மை)
 கதை (பேசு)
 பறை (பேசு)
 பாவி (பயன்படுத்து)
 பேசு (ஏசு)
 விளங்கு (புரிந்துகொள்)
 வெளிக்கிடு (புறப்படு/உடை அணிந்து தயாராகு)
 ஆறுதலா (மெதுவாக)
 கெதியா (விரைவாக)
 தேத்தண்ணி (தேநீர்)
 புதினம் - செய்தி
 கொழுவுதல் - மாட்டிவைத்தல் அல்லது இணைத்தல்.
 சத்தி - கக்குதல் 'வாந்தி'.
 தலையிடி - தலைவலி.
 அரியண்டம் - சிக்கல்.
 தேசிக்காய் - எலுமிச்சை.
 மச்சம் - இறைச்சி வகைகள்.
 துவாய் - துண்டு.
 நொடி - விடுகதை.
 பொழுதுபட - மாலை.
 அவா - அவர்கள்.                                                     
 கெலில் - ஆசை.
 கெதியா - விரைவாக, சீக்கிரமாக.
 ஆறுதலா - மெதுவாக.
 நித்திரை - தூக்கம்.
 கிட - படு.
 இனத்தாட்கள் - சொந்தக்காரர்கள்.
 வந்தவ - வந்திருக்கின்றனர்.
 சீவிக்கலாம் - வாழலாம்.
 கிட்டடியிலே - அண்மையில், சில நாட்களுக்கு முன்னர்.
 கண்டுட்டன் - பார்த்துட்டேன்.
 தமையன் - அண்ணன்.
 நாரி - முதுகு.
 திறமா - நன்றாக.
 காவிக் கொண்டு - தூக்கிக் கொண்டு.
 காணும் - போதும்.
 காணாது - பத்தாது.

- தொடரும்

 



Read in source website

நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஆண்டுதோறும் சொத்துவரியை உயர்த்த வகைசெய்யும் சட்டத் திருத்தங்கள் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருப்பது, பொதுமக்களிடம் அது குறித்த அச்சத்தையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. அவ்வப்போது மாநில அரசு அளிக்கும் அறிவுறுத்தல்களுக்கேற்ப நகர்ப்புற உள்ளாட்சிகள் வரிவிகித உயர்வு குறித்துத் தீர்மானங்களை நிறைவேற்றிக்கொள்ள இத்திருத்தங்கள் வகைசெய்கின்றன.

கடந்த ஏப்ரலில், நகர்ப்புற உள்ளாட்சிகளின் வருவாயை அதிகப்படுத்துவதற்காக சென்னையின் முக்கியப் பகுதிகளில் 50 முதல் 150% வரையிலும் மற்ற நகராட்சிகளில் 100% வரையிலும் சொத்துவரிகள் உயர்த்தப்பட்டன. ஏற்கெனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு காரணமாக, மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நிலையில், சொத்துவரியைப் படிப்படியாக உயர்த்தியிருக்கலாமே என்ற குரலைப் பொதுமக்களிடமிருந்து கேட்க முடிகிறது.



Read in source website

தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணைவேந்தர்கள் நியமனம் குறித்துக் கொண்டுவரப்பட்டிருக்கும் சிறப்புச் சட்ட முன்வடிவு, தமிழ்நாட்டுக்கு இன்றைய சூழ்நிலையில் மிகவும் தேவையான ஒன்றாகும். இந்தச் சட்ட முன்வடிவு, மாநில அதிகாரங்களை உறுதிப்படுத்தவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமைகளை நிறைவேற்றவும் பெரிதும் பயன்படும். இது குறித்து முதல்வரும், உயர் கல்வித் துறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினர்களும் கூறிய பல்வேறு செய்திகள், தொலைக்காட்சி மூலமாகவும் செய்தித்தாள்கள் மூலமாகவும் தெளிவாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லப்பட்டன.

1975-லிருந்து தொடர்ந்து பல்கலைக்கழகக் கல்வியிலும், நிர்வாக அமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. 1976-ல்தான் கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 1947-லிருந்து 1990 வரை ஒருசில மத்தியப் பல்கலைக்கழகங்களே இருந்துவந்தன. அவற்றின் நோக்கராக (Visitor) குடியரசுத் தலைவர் இருந்துவந்தார். அந்தப் பல்கலைக்கழகங்களில் தேர்வுக் குழுவால் தேர்வுசெய்யப்பட்ட மூவரில் ஒருவரை ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக நியமித்துவந்தார்.



Read in source website

கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் தக்காளிக் காய்ச்சல் எனும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் சென்ற வாரம் பரவி பலரையும் பீதியடைய வைத்தது. அது இப்போது தமிழகத்திலும் சென்னை, கோவை உள்ளிட்ட பல நகரங்களில் வேகமாகப் பரவிவருகிறது. இதுவும் கரோனா போன்றதொரு புதிய தொற்றுநோயா எனும் பதற்றம் நிறைந்த பார்வை சாமானியர்களை அச்சுறுத்துகிறது.

முதலில், தக்காளிக் காய்ச்சல் ஒரு புதிய நோயல்ல. 1957-ல் நியூசிலாந்தில் தோன்றிய ஒருவகைத் தொற்றுநோய். உலகெங்கிலும் எப்போதும் ஆங்காங்கே இருந்துகொண்டிருப்பதுதான். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இது அவ்வப்போது தோன்றுவதுண்டு. 2018-ல் மலேசியாவில் இந்த நோய் 76 ஆயிரம் குழந்தைகளை ஒரே நேரத்தில் பாதித்ததுதான் மருத்துவ வரலாற்றின் பெருந்துயரம். இப்போது கேரளத்திலும் தமிழகத்திலும் பரவலாகப் பரவிவருவதால் பேசுபொருளாகியிருக்கிறது.

‘தக்காளிக் காய்ச்சல்’ என்று பழகுதமிழில் அழைக்கப்படும் இந்த நோய்க்குக் ‘கை-கால் வாய் வைரஸ் நோய்’ (Hand, Foot and Mouth Disease - HFMD) என்பது மருத்துவப் பெயர். இது பெரும்பாலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே தாக்கும். மக்கள் நெருக்கமாக வாழும் இடங்கள், குழந்தைக் காப்பகங்கள் (Daycare centers), அசுத்தமான இருப்பிடங்கள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் ஆகிய இடங்களில் வசிக்கும் அல்லது படிக்கும் குழந்தைகளுக்கு இந்த நோய் பரவும் வாய்ப்பு அதிகம். மற்ற பருவ காலங்களைவிடக் கோடையில் இதன் பரவும் தன்மை அதிகம்

இது ‘என்டிரோ வைரஸ்’ குடும்பத்தைச் சேர்ந்த காக்ஸ்சாக்கி வைரஸ் ஏ 16 (Coxsackie virus A16) எனும் வைரஸ் வகையால் ஏற்படுகிறது. இது அவ்வளவாக ஆபத்தைத் தரும் வைரஸ் இல்லை. மிதமான பாதிப்பையே ஏற்படுத்தும். இதுவே, காக்ஸ்சாக்கி வைரஸ் ஏ 6 (Coxsackie virus A 6) அல்லது என்டிரோ வைரஸ் 71 (Entero virus 71) வகை வைரஸால் பாதிக்கப்பட்டால், பாதிப்புகள் கடுமையாக இருக்க வாய்ப்புண்டு. இப்போது பரவிவரும் தக்காளிக் காய்ச்சல் காக்ஸ்சாக்கி வைரஸ் ஏ 16 வகையால் ஏற்படுவதாகவே ஆரம்பகட்டப் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. ஆகவே, இது குறித்து பயப்படத் தேவையில்லை. அதேசமயம், இது வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்பதால், இது குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டியது அவசியம்.

என்ன அறிகுறிகள் தோன்றும்?

முதலில் குழந்தைக்குக் கடுமையான காய்ச்சல் வரும். பசிக்காது. தொண்டையில் எரிச்சல் ஏற்படும். இருமல், தும்மல், மூக்கு ஒழுகல் ஆகிய தொல்லைகள் தொடங்கும். உள்ளங்கை, உள்ளங்கால் மற்றும் வாய்ப் பகுதிகளில் சிவப்பு நிறத்தில் கொப்புளங்கள் தோன்றும். இவற்றைப் பார்த்ததும் பெற்றோர் அம்மைக் கொப்புளங்கள் என்று எண்ணி சிகிச்சை பெறாமல் இருந்துவிடுவது வழக்கம். இவை அம்மைக் கொப்புளங்கள் இல்லை. சிகிச்சை எடுக்காவிட்டால், கொப்புளங்களில் நீர் கசியும். வாய், நாக்கு மற்றும் தொண்டைக்குள் புண்கள் பெரிதாகும். குழந்தை விழுங்குவதற்குச் சிரமப்படும். ஒன்றுமே சாப்பிட முடியாமல் அழுதுகொண்டிருக்கும்.

பிறகு முகம், தொடை, தாடை, முழங்கை ஆகியவற்றில் தக்காளி நிறத்தில் சிறுசிறு திட்டுகள் உருவாகும். அங்கு அரிப்பு உண்டாகும். அதைச் சொறியும் விரல்களில் கிருமிகள் இருந்தால், கொப்புளங்களில் சீழ்பிடிக்கும். பொதுவாக, இந்த நோய் ஒரு வாரத்தில் தானாகவே குணமாகிவிடும். ஆனாலும், இது குழந்தைகளைத் தாக்குவதால், தாங்கிக்கொள்ள சிரமப்படும். முக்கியமாக, சாப்பிட முடியாமல் சிரமப்படும். ஆகவே, குழந்தைக்குக் காய்ச்சல் வந்ததும் மருத்துவச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது.

சிகிச்சை என்ன?

இந்த நோய்க்குத் தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை. என்றாலும், காய்ச்சலைக் குறைக்கவும், கொப்புளங்களில் காணப்படும் நீர்ச் சுரப்பைக் கட்டுப்படுத்தவும், அரிப்பைக் குறைக்கவும், தொண்டைப் புண் வலியை மட்டுப்படுத்தவும் மருந்துகள் தரப்படும். இவற்றின் பலனால், குழந்தைக்கு நோய்க்குறி தொல்லைகள் குறைந்து, சாப்பிடத் தொடங்கிவிடும். நோய் கண்ட குழந்தைகள் குறித்து கவலைகொள்ளும் பெற்றோருக்கு இதுவே மனச்சுமையைக் குறைத்துவிடும்.

தக்காளிக்கு என்ன தொடர்பு?

இந்த நோய்க்கு ‘தக்காளிக் காய்ச்சல்’ என்று பெயர் கொடுத்திருந்தாலும் தக்காளிக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. தக்காளி மாதிரி சிவப்பு நிறத்தில் கொப்புளங்களும் சருமத் திட்டுகளும் தோன்றுவதால்தான் இந்தப் பெயரைப் பெற்றுள்ளது. தக்காளியால் இது பரவுவதில்லை. மேலும், இது கரோனா வைரஸ் போன்றோ, நிபா வைரஸ் போன்றோ அச்சப்படக்கூடிய பாதிப்பு எதையும் ஏற்படுத்துவதில்லை.

பரவுவது எப்படி?

இந்த வைரஸ் கிருமிகள் நோய்வாய்ப்பட்ட குழந்தையின் எச்சில், தொண்டை மற்றும் மூக்குத் திரவங்களில் வசிக்கும்.குழந்தை தும்மினால், இருமினால், மூக்கைச் சிந்தினால், சளியைத் துப்பினால் கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி மற்றவர்களுக்கு நோயை உண்டாக்கும். அதோடு மூக்கு, வாய், சருமம் போன்ற வெளிப்பகுதிகளிலும் அவை ஒட்டிக்கொண்டிருக்கும். சிவப்பு நிறக் கொப்புளங்களிலும் காய்ந்ததும் உருவாகும் பொருக்குகளிலும் அவை குடியிருக்கும். அந்த இடங்களைத் தொட்டுவிட்டு, அதே விரல்களால் அடுத்தவர்களைத் தொட்டால் கிருமிகள் பரவிவிடும். குழந்தை பயன்படுத்தும் ஆடை, அணையாடை (டயாப்பர்), கைக்குட்டை, உணவுத்தட்டு, போர்வை, துண்டு, சீப்பு, தலையணை, விளையாட்டுப் பொம்மைகள், கதவுக் கைப்பிடிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால் கிருமிகள் அவர்களுக்கும் எளிதாகக் கடத்தப்படும். இவை தவிர, குழந்தையை முத்தமிட்டோலோ, அணைத்துக்கொண்டாலோ அப்போதும் கிருமிகள் பரவ வாய்ப்புண்டாகும். குழந்தையின் மலத்தின் வழியாகவும் அடுத்தவர்களுக்குப் பரவும்.

தடுப்பது எப்படி?

இந்த நோய் பரவ அசுத்தம் ஒரு முக்கியக் காரணம் என்பதால், வீட்டிலும் பள்ளிகளிலும் சுத்தம் காப்பதும் சுகாதாரம் பேணுவதும்தான் இந்த நோய்க்குப் போடப்படும் முதன்மைக் கடிவாளங்கள். குழந்தைக்குத் தினமும் சுத்தமான ஆடை அணிவிப்பது முக்கியம். நிறைய திரவ உணவுகளைக் கொடுக்க வேண்டியது கட்டாயம். அதோடு, கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் அல்லது சானிடைசரைப் பயன்படுத்தியும் கழுவலாம். முக்கியமாக, குழந்தை கழிவறைக்குச் சென்று வந்ததும், குழந்தைக்கு அணையாடையை (டயப்பர்) மாற்றியதும், குழந்தை இருமியதும் தும்மியதும் குழந்தையின் கைகளையும் முகத்தையும் நன்றாகக் கழுவிக்கொள்ளச் சொல்ல வேண்டும் அல்லது குழந்தைக்குக் கழுவி விட வேண்டும்.

பெற்றோரும் தங்கள் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தை பயன்படுத்தும் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட மற்ற பொருட்களையும் வீட்டுத் தரை மற்றும் கதவின் பிடிகளையும் அடிக்கடி கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்ட உடனேயே ஒரு வாரத்துக்குப் பள்ளிக்கு அனுப்புவது நிறுத்தப்பட வேண்டும். வெளி இடங்களுக்கும் கூட்டமாக உள்ள இடங்களுக்கும் குழந்தையை அழைத்துச் செல்லக் கூடாது. இந்தத் தடுப்பணைகள்தான் தக்காளி காய்ச்சலுக்கான முக்கியத் தற்காப்புகள்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com



Read in source website