DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 13-03-2022

தஞ்சாவூர்: வருகிற ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2022 - 23-ஆம் ஆண்டுக்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாயிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:

வருகிற ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்படவுள்ளது. நெல் சாகுபடிக்கு இணையாக சிறுதானிய உற்பத்தியை முனைப்பாகக் கொண்டு செல்லும் வகையில் இத்திட்டம் அறிவிக்கப்பட இருக்கிறது.

இயற்கை விவசாயத்துக்கும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களை உள்ளடக்கி இருக்கும். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் முழுமை அடையும் விதமாக இந்த பட்ஜெட் அமையும் என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

முன்னதாக கூட்டத்தில் அவர் பேசியது:
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு நெல் உற்பத்தி அதிகம். கடந்த ஆண்டு 48 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு 54 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. இது மிகப் பெரிய சவாலாக உள்ளது. எனவே நெல்லுக்கு மாற்றான சாகுபடியை முன்னெடுத்துச் செல்லவேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்யும் இயக்கமாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போல கலைஞர் வேளாண் மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் 1,997 கிராமங்களில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 5 ஆண்டுகளில் இக்கிராமங்கள் முழுமை பெறும்.

இயற்கை விவசாயத்தைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான விவசாயிகளிடம் ஏற்பட்டு வருகிறது. எனவே 3 ஆண்டுகளில் பசுமைப் புரட்சி உருவாக வாய்ப்புள்ளது. அதற்கான நடவடிக்கையைத் தமிழக முதல்வர் எடுத்து வருகிறார் என்றார் அமைச்சர்.

இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசின் செயலர் சி. சமயமூர்த்தி, வேளாண் துறை இயக்குநர் ஆ. அண்ணாதுரை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை இயக்குநர் எஸ். நடராஜன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆர். பிருந்தாதேவி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Read in source website

திருக்கோயில்களுக்குச் சொந்தமான அசையா சொத்துகளுக்கு நியாயமான வாடகை நிா்ணயம் செய்யும்போது, பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டது.

இது குறித்து அறநிலையத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருக்கோயில்களுக்குச் சொந்தமான அசையா சொத்துகளுக்கு நியாய வாடகை நிா்ணயம் செய்வதற்காக வாடகைதாரா் விவரம், சொத்து விவரம், சொத்தின் பரப்பளவு, சொத்தின் வகைப்பாடு-பயன்பாடு (மனை, கட்டடம், குடியிருப்பு, வணிகம்), சொத்து மதிப்பு ஆகிய விவரங்களை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அற நிறுவனத்தின் செயல் அலுவலா், அறங்காவலா், அறங்காவலா் குழுத் தலைவா் அறிக்கை அனுப்ப வேண்டும்.

முதல் முதலாக வாடகை நிா்ணயம் செய்து பொது ஏலத்தில் வாடகைக்கு விடப்படும் சொத்துகளுக்கு நியாய வாடகை நிா்ணயக்குழு மூலம் வாடகை நிா்ணயம் செய்து உரிய உத்தரவை சம்பந்தப்பட்ட அற நிறுவனத்தின் செயல் அலுவலா், அறங்காவலா், அறங்காவலா் குழுத் தலைவா் பிறப்பித்தால் மட்டுமே போதுமானது.

இணை ஆணையரிடமிருந்து பெறப்பட்ட வாடகை கணக்கீட்டுத்தாள், நியாய வாடகை நிா்ணயக் குழுவின் தீா்மானம் ஆகியவற்றின் அடிப்படையில் வாடகையாக நிா்ணயிக்க உத்தேசிக்கப்பட்ட தொகையை குறிப்பிட்டு அதுகுறித்து ஆட்சேபனைகள் ஏதுமிருப்பின் உரிய ஆதாரங்களுடன் 15 தினங்களுக்குள் எழுத்துபூா்வமாக தெரிவிக்கும்படி வாடகைதாரா்களுக்கு அறிவிப்பு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் அனுப்பப்பட வேண்டும்.

தற்போது, நடைமுறையில் உள்ள சந்தை வாடகை மதிப்பை தீா்மானிக்க கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட சொத்துகள் குறித்த விவரங்கள் மற்றும் வசூலிக்கப்படும் வாடகைக்கான ஆதாரம் பெற வேண்டும். அறிக்கை, ஆவணங்களை பரிசீலித்து சம்பந்தப்பட்ட இணை ஆணையா் நியாய வாடகை நிா்ணயக் குழுவின் பரிசீலனைக்கு வைக்க வேண்டும். நியாய வாடகை நிா்ணயக்குழுவின் தீா்மான நகல், வாடகை கணக்கீட்டுத் தாள் ஆகியவற்றை இணை ஆணையா் ஒரு வார காலத்துக்குள் அனுப்ப வேண்டும்.

அனைத்து திருக்கோயில் இணை ஆணையா்கள் மற்றும் உதவி ஆணையா்கள் அனைவரும் இந்த திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள், நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் கேட்போா் மீது புகாா் அளிக்க வேண்டும் என பொதுமக்களை பதிவுத்துறை அமைச்சா் பி.மூா்த்தி கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் ரூ.12,700 கோடி அரசுக்கு நிதி வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது. அனைத்து சாா்பதிவாளா் அலுவலகங்களில் அரசுக்கு செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணம் அனைத்தும் இணைய வழி மூலமாக செலுத்தும் நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. சாா்பதிவாளா்கள் அனைவரும் அரசால் நிா்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பீட்டின்படி பத்திரப் பதிவு மேற்கொள்ளவும், வழிகாட்டி மதிப்பீட்டினை குறைத்தோ அல்லது அதிகப்படுத்தியோ பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் பொதுமக்களும் அரசால் நிா்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பீட்டின்படி பதிவு மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். வழிகாட்டு மதிப்பீட்டினை குறைத்து பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு இழப்பு வசூலிக்கப்படும்.

பொதுமக்கள் பத்திரப்பதிவு மேற்கொள்ளும்போது சாா்பதிவாளா் அலுவலகத்தில் எந்த அலுவலருக்கும் அல்லது இடைத்தரகா்களுக்கும் கையூட்டு எதுவும் கொடுக்க வேண்டாம். அவ்வாறு கையூட்டு கேட்கும் அலுவலா்கள் மீது பதிவுத்துறை தலைவா், அரசு செயலாளா் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கலாம் என அமைச்சா் கூறியுள்ளாா்.



Read in source website

ஆடு, கோழி போன்ற இறைச்சி வகைகள் விற்பனைக்கு அரசே புதிய ஏற்பாடு செய்யும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆட்சியா்கள், காவல்துறையினா் மற்றும் வனத்துறை அலுவலா்கள் கூட்டத்தில் அவா் பேசியது:

வேளாண் பெருமக்கள் தங்களது விளை பொருள்களை தாங்களே சந்தைப்படுத்த வசதியாக உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோன்று, ஆடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை இடைத்தரகா்கள் இல்லாமல் வளா்ப்பவா்களே சந்தைப்படுத்தும் வகையில் தனி சந்தை அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.



Read in source website


இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.254-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
தொடரும் பொருளாதார நெருக்கடியால் விலைவாசி மிக கடுமையாக உயர்ந்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கை இன்னும் விடுபடவில்லை. இதனால் இலங்கையின் ஏற்றுமதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சுற்றுலாக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பொருளாதாரம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. இதன் விளைவாக, இலங்கையின் அந்நிய செலாவணி வரத்தும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. 

சீனா உள்பட பல நாடுகளின் கடன் வலையில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. நாட்டில் உணவுப் பிரச்னை மிகவும் கவலையளிக்கும் விதமாக உள்ளது.

நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருவதுடன், பணவீக்கத்தின் தாக்கம் பொதுமக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உண்மையில், சீனா உள்பட பல நாடுகளின் கடனில் சிக்கியுள்ள இலங்கை, தற்போது திவாலாகும் நிலையை எட்டியுள்ளதால், மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்பட்டு வருகின்றனர். இங்கு பொது உபயோகப் பொருள்களின் விலையே விண்ணைத் தாண்டி சென்றுள்ளது.

அண்டை நாடான இலங்கையில் புதிய உச்சத்தில் பணவீக்கம் இருந்து வரும் நிலையில், மக்கள் அன்றாட தேவைக்கான அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கே பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். 

இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா தாக்குதலின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 130 டாலர்களுக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால், இலங்கையில் எரிபொருள் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், நாட்டின் இரண்டாவது பெரிய சில்லறை எரிபொருள் விநியோகஸ்தரான இலங்கை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இலங்கையில் வியாழன் நள்ளிரவு பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து உத்தரவிட்டது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 ஆக உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.254 ஆகவும், டீசலின் லிட்டருக்கு ரூ. 75 ஆக உயர்ந்து ஒரு லிட்டர் டீசல்  ரூ.176 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 16.3 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அந்நியச் செலாவணியின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், இலங்கை ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. இதன் காரணமாக, பருப்பு கிலோ ரூ.250, சர்க்கரை ரூ.215, உருளைக்கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400, உளுந்து கிலோ ரூ.2,000, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ.35  அதிகரித்துள்ளது. 

மேலும், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால், குறிப்பிடத்தக்க எரிபொருள் தட்டுப்பாடு உள்ளது. நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான நிதிப் பற்றாக்குறை காரணமாக, இலங்கையில் தினமும் ஏழரை மணிநேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.

அதுமட்டுமின்றி கச்சா எண்ணெய் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

எரிபொருள்களின் விலை உயர்வால் கார், ஆட்டோ, பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  எரிபொருள் விலை உயர்வால் குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.30 முதல் 35 வரை அதிகரிக்கும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஞ்சன பிரியஞ்சித் எச்சரித்துள்ளார். இதனை கருத்தில் கொண்டு தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளார். 

விமான டிக்கெட்டுகளின் விலை 27 சதவிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. 



Read in source website

‘உயிரி-ரசாயன ஆயுத ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்’ என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியது.

உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ரஷியாவின் இந்த தன்னிச்சையான தாக்குதலைத் தொடா்ந்து அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

இந்தச் சூழலில் உக்ரைனில் அமெரிக்கா ரசாயன ஆயுதங்களை உருவாக்கி வருவதாக ரஷியா குற்றம் சாட்டியது. அதனை அமெரிக்கா மறுத்த நிலையில், அதுகுறித்து விசாரிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ரஷியா கோரிக்கை விடுத்தது. அதனடிப்படையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயாா்க்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், இந்தியா சாா்பில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி பேசியதாவது:

உக்ரைனின் தற்போதைய நிலைமை குறித்து இந்தியா பலமுறை கவலை தெரிவித்து வருகிறது. இந்தச் சூழலில், உக்ரைன் மீது உயிரி ஆயுதங்கள் தொடா்பான குற்றச்சாட்டுகளை உறுப்பு நாடுகள் எழுப்பி வருகின்றன.

இத்தகையச் சூழலில், பேரழிவை ஏற்படுத்தக் கூடிய அனைத்து வகையான ஆயுதங்களையும் தடை செய்யும், உயிரி-ரசாயன ஆயுத மாநாட்டு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்ட இந்தியா விரும்புகிறது. இந்த உயிரி-ரசாயன ஆயுத ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். இந்த உடன்பாடு தொடா்பான விவகாரங்கள் அனைத்தும், அந்த மநாட்டு ஒப்பந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட இரு நாடுகளிடையேயான பேச்சுவாா்த்தை மற்றும் ஒத்துழைப்பு மூலமும் தீா்வு காணப்பட வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

மேலும், ‘உக்ரைனின் மோசமான நிலை உடனடி கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இந்த தாக்குதலுக்கு இடையே ரஷியா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தைகளே போா் நிறுத்தத்துக்கு வழிவகுக்கும் என இந்தியா உறுதியாக நம்புகிறது. உறுப்பு நாடுகள் அனைத்தும், ஐ.நா.வில் நிறைவேற்றப்படும் தீா்மானங்களுக்கும், சா்வதேச சட்டங்களுக்கும் கட்டுப்படுவதோடு, பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்றும் திருமூா்த்தி கூறினாா்.



Read in source website

தென் அமெரிக்க நாடான சிலியின் மிக இளைய அதிபராக கேப்ரியல் போரிக் பதவியேற்றுக் கொண்டாா்.

இடதுசாரி ஆதரவாளரான அவருக்கு தற்போது 36 வயதே ஆகிறது. 17 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த சிலி, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியபோது கேப்ரியலுக்கு வெறும் நான்கே வயதாகியிருந்தது. சிலியின் புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் அவா் அந்த நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற அதிபா் தோ்தலின் இரண்டாவது சுற்றில் கன்சா்வேடிவ் கட்சியைச் சோ்ந்த அன்டோனியோ காஸ்டைத் தோற்கடித்து 56 சதவீத வாக்குகளுடன் கேப்ரில் போரிக் வெற்றி பெற்றாா்.



Read in source website

கச்சத்தீவில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று முடிவடைந்தது. இரு நாடுகளைச் சேர்ந்த 164 பேர் பங்கேற்றனர். அனைவரும் நேற்று மாலை சொந்த ஊர் திரும்பினர்.

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பங்கேற்க ராமேசுவரத்திலிருந்து 3 விசைப்படகு மற்றும் 1 நாட்டுப்படகில் 76 பேர் சென்றனர். இலங்கையிலிருந்து 88 பேர் வந்திருந்தனர்.

நெடுந்தீவு அருட்தந்தை வசந்தம், ஆலயத்தின் கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். இலங்கையின் மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜெபரத்தினம், ராமேசுவரம் பங்குத்தந்தை தேவசகாயம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். பின்னர், ராமேசுவரம் பங்குத் தந்தை தேவசகாயம் தலைமையில் சிலுவைப் பாதை நிகழ்ச்சியும், இரவில் புனித அந்தோணியாரின் சிலை வைக்கப்பட்ட தேர் பவனியும் நடந்தது.

இதனிடையே, இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்திய, இலங்கை மீனவப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தைக் கூட்டம் நடந்தது. இதில் இரு தரப்பு மீனவர்களும் மீன்பிடிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜெபரத்தினம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் காலை 9 மணி அளவில் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைந்தது. அதன் பின் மாலையில் அனைவரும் சொந்த ஊர் திரும்பினர்.

கடந்த ஆண்டு கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு நடவடிக்கை காரணமாக கச்சத்தீவு திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டும் இரு நாடுகளையும் சேர்த்து 200 பேருக்குள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி இரு நாடுகளிலிருந்து மொத்தம் 164 பேர் மட்டுமே பங்கேற்றனர். ஓராண்டுக்குப் பின்பு சந்திப்பதால் இரு நாடுகளை சேர்ந்தவர்களும் மகிழ்ச் சியை பகிர்ந்து கொண்டனர்.



Read in source website

இதய நோயால் பாதிக்கப்பட்ட நாய்க்கு ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தி, மும்பையை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் குழு சாதனை படைத்துள்ளது.

மும்பையை சேர்ந்த திவாரி என்பவரது ரோனி என்ற நாய்க்கு கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதன் இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 30 என்ற அளவில் இருந்துள்ளது. சராசரி அளவு 120 முதல் 150 ஆகும்.

ஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்ட மினியேச்சர் பின்சர் வகையை சேர்ந்த அந்த நாயை மும்பையில் உள்ள பிரபல கால்நடை மருத்துவர் சங்கீதா வெங்சர்க்கார் ஷாவிடம் எடுத்துச் சென்றனர். அவரது தலைமையிலான மருத்துவர்கள் குழு, ரோனி நாய்க்கு இதயத்துடிப்பை சரிசெய்ய உதவும் ‘பேஸ்மேக்கர்’ கருவியை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தியுள்ளனர்.

இப்போது நாய் நல்ல நிலையில் குணமடைந்து வருகிறது. இந்தியாவில் நாய்க்கு அரிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அறுவை சிகிச்சை கால்நடை மருத்துவ வரலாற்றில் ஒருமைல்கல் என்று மும்பை கால்நடை மருத்துவர்கள் சங்க கவுரவ செயலர் மேக்ரன்ட் சவான் பாராட்டியுள்ளார்.

இந்த சாதனையை புரிந்துள்ள சங்கீதா வெங்சர்க்கார் ஷாவை ‘இந்து தமிழ் திசை’ சார்பில் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் கூறியதாவது:

இதய அடைப்பு

மனிதர்களுக்கு ‘பேஸ்மேக்கர்’ அறுவை சிகிச்சை அதிக அளவில் செய்யப்படுகிறது. ஆனால், அதிகசெலவு காரணமாகவும், உரிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததாலும் நாய்களுக்கு ‘பேஸ்மேக்கர்’ பொருத்துவது அபூர்வம். இந்தியாவில் இது 4-வது ‘பேஸ்மேக்கர்’ அறுவை சிகிச்சை.

ரோனிக்கு ‘ஹைகிரேடு மொபிட்ஸ் டைப் 2 ஹார்ட் பிளாக்’ என்ற பாதிப்பு இருந்தது. நாங்கள் இந்த அறுவை சிகிச்சை செய்ய முயன்றபோது நாய் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதன் இதயத்தில் அடைப்பு இருந்ததால் உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். செல்லப் பிராணிகளுக்கென்று ‘கார்டியாக் கதீடரைசேஷன்லேப்’ வசதி இந்தியாவில் இல்லாததால் நாங்கள் சமாளித்து அறுவைசிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று. மனிதர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவரை உடன் வைத்துக் கொண்டோம். அதிர்ஷ்டவசமாக மருத்துவர் ஆசிஷ் நபார் உதவ முன்வந்தார். அவரது உதவியுடன் மருத்துவர் நூபுர் தேசாய் ‘பேஸ்மேக்கர்’ கருவியை பொருத்த, சஞ்சனா கார்வே மயக்க மருந்து செலுத்த, ராதிகா சர்க்கார் சலீல் குடால்கர், ஷ்ராவனி பிஷ்னாய், ஷ்ரேயா பாண்டே அடங்கிய எனது குழுவினர் அறுவை சிகிச்சையை செய்து முடித்தோம். அறுவை சிகிச்சை நடந்த அன்று 3 முறை அந்த நாய் அபாயகட்டத்துக்கு சென்றுவிட்டது. கடுமையாக முயற்சி செய்து இரவு பகலாக கண் விழித்து ‘பேஸ்மேக்கர்’ பொருத்தி நாயை காப்பாற்றினோம். இந்த அறுவை சிகிச்சை எங்களுக்கு உணர்ச்சிபூர்வமாக இருந்தது.

செல்லப் பிராணிகளுக்கு வலி வந்தால் சொல்லத் தெரியாது. ஆனால், அதன் உணர்வுகளை மருத்துவரால் அனுபவத்தின் மூலம்உணர முடியும். வளர்ப்பவர்களும் பிராணிகளின் அறிகுறிகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண் டும்.

செல்லப் பிராணிகள் தற்போது குடும்ப உறுப்பினர்களாக மாறிவிட்டன. அவற்றின் மருத்துவ சிகிச்சைக்கு செலவழிக்க பிராணிவளர்ப்போர் தயாராகஉள்ளனர். ரத்தப் பரிசோதனை,எக்ஸ்ரே, ஈசிஜி, அல்ட்ராசோனாகிராபி, எக்கோ கார்டியோகிராபி, அறுவை சிகிச்சை ஆகியவை செல்லப் பிராணிகளுக்கு தற்போதுசர்வசாதாரணமாக மேற்கொள்ளப்படுகிறது.

இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தற்போது செல்லப் பிராணிகளுக்கு எட்டா நிலையில் உள்ளது.இணைய தகவல்கள் மூலம்பிராணி வளர்ப்போர் விழிப்புணர்வுடன் உள்ளனர். செல்லப் பிராணிகளுக்கும் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டியது பிராணி வளர்ப்போர்கடமை. செல்லப் பிராணிகள் இருமினாலோ, மூச்சு வாங்கினாலோ, அவை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளன என்று அறிந்து கொள்ளலாம். நம் வீட்டில் உள்ளவர்களை எப்படி கவனிக்கிறோமோ அதேபோல செல்லப் பிராணிகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

குமரி மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் நிலையில், எல்லை தாண்டி மீன்பிடிக்கும் விசைப்படகுகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, தொழில் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தங்கி ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனர். மீன்பிடி பணியின்போது அடிக்கடி கடல் எல்லையைத் தாண்டியதாக மீனவர்கள் கைது செய்யப்பட்டு படகுகள் பறிமுதல் செய்யப்படுவது தொடர்கிறது.

சமீபத்தில் கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக இந்தோனேசியாவில் 8 பேரும், செஷல்ஸ் தீவில் 33 பேரும் கைது செய்யப்பட்டனர். மறுநாளே மேலும் 25 பேர் செஷல்ஸ் தீவில் கைது செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை குளச்சல் உதவி இயக்குநர் விர்ஜில் கிராஸ் விடுத்துள்ள அறிக்கை:

குமரி மேற்கு மாவட்ட பகுதியில் இருந்து கடலுக்கு செல்லும் விசைப்படகுகள், அத்துமீறி சட்டவிரோதமாக சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி, தடை செய்யப்பட்ட கடற்பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு சட்ட விரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகுகள் மீது, தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்துதல் சட்டம் 1983, மற்றும் திருத்திய விதிகள் 2020-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

விசைப்படகு உரிமையாளர்களுக்கு உரிய அறிவிப்பு வழங்கி விசைப்படகின் பதிவு மற்றும் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். மேற்கொண்டு மீன்பிடிக்கச் செல்ல இயலாதவாறு விசைப்படகுகள் தொழில் முடக்கம் செய்து, மீன்வளம், மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்படும்.

விசைப்படகு மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உயிரின தொழில்நுட்ப அடையாள அட்டை ரத்து செய்யப்படும். அத்துடன் அரசால் வழங்கப்பட்டு வரும் நிவாரணம், மானியம், நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

கல்வராயன்மலையில் உள்ள கீழ்வலசை, மேல்வலசை கிரா மங்களில் பெருங்கற்கால நினைவு சின்னங்கள், கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டதாக தி.மலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பழனிசாமி தலைமையிலான குழுவினர் கூறும்போது, ‘‘தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே கல்வராயன்மலையில் உள்ள கீழ்வலசை, மேல்வலசை, அக் கரைப்பட்டி கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டோம். கீழ் வலசை கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ள இடத்தில் பல்வேறு காலங்களைச் சேர்ந்த சிலைகள், நடுகற்கள், சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய பலகைகற்கள் கண்டெடுக்கப்பட்டன. 5 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு, மனிதர்கள் பயன்படுத்திய 5 கற்கருவிகளை மக்கள் வணங்குகின்றனர்.

இதேபோல், அரசினர் உண்டு உறைவிட பள்ளி அருகே உள்ள விநாயகர் கோயிலில் 20-க்கும் மேற்பட்ட கற்கால கருவிகளை வைத்து மக்கள் வழி படுகின்றனர்.

மேல்வலசை கிராமத்தில் உள்ள கோயில் ஒன்றில், இரும்புகருவிகள் மற்றும் 25-க்கும் மேற்பட்ட கற்கால கருவிகள் உள்ளன.

மேலும், மலைப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கற்திட்டைகள் உள்ளன. நான்கு புறமும் செங்குத்தாக கற்களை வைத்து, அதன்மீது பெரிய பலகை கல் வைக்கப் பட்டுள்ளது. கிழக்கு திசையில் உள்ள கல்லில் வட்ட வடிவு துளை உள்ளது. இந்த கற்திட்டை உள்ளே சிலையை வைத்து பீமாரபட்டி கிராம மக்கள் வழி, வழியாக வணங்கி வருகின்றனர். இந்த கற்திட்டைகள் இன்று வரை கிராம மக்களின் வழிபாட்டில் உள்ளன. இவ்விடத்தில் இரும்பை உருக்கி கருவிகளை செய்வதற்கான தடயங்கள் காணப்படுகின்றன.

இவ்விடத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து பழமைகளை பாதுகாக்க வேண்டும்” என்றனர்.



Read in source website

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ம் ஆண்டுக் கான விருது வழங்கினார்.

சிவகங்கையில் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட குடியிருப்பில் தலா ரூ.10 லட்சம் மதிப்புள்ள வீட்டை ரூ.1.5 லட்சத்துக்கு 150 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி நடவடிக்கை எடுத்தார்.

அதேபோல் மாநிலத்திலேயே முதன்முறையாக இளையான்குடி அருகே கீழாயூர் பகுதியில் வீடற்ற 130 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 2 சென்ட் வீதம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. மேலும் அப்பகுதியில் பள்ளி, ரேஷன் கடை போன்ற வசதிகளும் செய்து கொடுக்கப்பட உள்ளன. மாவட்டத்தில் தேசிய ஊன முற்றோர் அடையாள அட்டைகளை அதிகளவில் வழங்கியது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் முகாம்களை நடத்தி ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியது போன்றவற்றில் மாவட்ட ஆட்சியர் சிறப்பாகச் செயல்பட்டார். இதையடுத்து அவருக்கு 2021-ம் ஆண்டுக்கு மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக செயல்பட்ட ஆட்சியருக்கான விருது கிடைத்துள்ளது.



Read in source website

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) திட்டத்துக்கான வட்டி விகிதம் 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது 2021-22-ம் நிதி ஆண்டுக்கானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அளிக்கப்பட்டு வந்த 8.5 சதவீதத்திலிருந்து தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

இது வரை பிஎஃப் நிதிக்கு அளித்து வந்த வட்டி விகிதத்தில் இது மிகக் குறைவான வட்டி விகிதமாகும். மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் சனிக்கிழமை குவஹாட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் 8.1 சதவீத வட்டி அளிப்பது என முடிவு செய்து அதை பரிந்துரைத்துள்ளது. நாட்டின் வங்கியல்லாத மிகப் பெரிய நிதி நிர்வகிக்கும் அமைப்பாக பிஎஃப் அறக்கட்டளை திகழ்கிறது. இந்த அமைப்பு ரூ. 16 லட் சம் கோடியை நிர்வகிக்கிறது.

இந்த பரிந்துரையை நிதி அமைச்சகம் பரிசீலித்து ஒப்புதல் வழங்கும். இதற்கு முன்பு 2018-19-ம் நிதி ஆண்டில் 8.65 சதவீத வட்டியும், 2019-20-ம் நிதி ஆண்டில் 8.5 சதவீத வட்டியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிஎஃப் நிதித் திட்டத்தில் மொத்தம் 24.77 கோடி தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 14.36 கோடி பணியாளர்களுக்கு தனித்துவமான அடையாள எண் (யுஏஎன்) வழங்கப்பட்டுள்ளது. 2019-20-ம் நிதி ஆண்டில் 5 கோடி தொழிலாளர்கள் தங்களது பிஎப் நிதியில் கூடுதல் நிதியை செலுத்தியுள்ளனர்.

மாத சம்பளம் ரூ. 15 ஆயிரத்துக்கு மேல் பெறும் பணியாளர்கள் அனைவரும் பிஎஃப் நிதியில் இணைக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். 20 பேருக்கு மேல் ஊழியர்கள் உள்ள நிறுவனங்கள் ஊழியர்களின் பங்களிப்பாக அவர்களது அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதமும், நிறுவனங்களின் பங்களிப்பாக 12 சதவீதமும் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். தொழிலாளர் ஓய்வூதிய சட்டம் 1995-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

2015-16-ம் நிதி ஆண்டு முதல் பங்குச் சந்தையில் பகுதி அளவில் பிஎஃப் நிதி முதலீடு செய்யப்படுகிறது. அதிக சந்தை பாதிப்புக்குள்ளாகாத பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்கான அதிகபட்ச வரம்பு 15 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது. அதிகபட்சம் 65 சதவீத தொகை அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.



Read in source website

கால்பந்து போட்டிகளில் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ.

கால்பந்து வீரர்களில் உலகம் முழுவதும் தனக்கெனப் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் ரொனால்டோ. நடந்து வரும் இங்கிலீஸ் பிரீமியர் கால்பந்து லீக் தொடரில் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது, தொழில்முறை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தது என்ற சாதனை ஆகும். 807 கோல்களை அடித்து கால்பந்து உலகில் புதிய உச்சம் தொட்டுள்ளார். ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஜோசப் பைகான் 805 கோல்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

இங்கிலீஸ் பிரீமியர் கால்பந்து லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, நேற்று டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார். ஹாட்ரிக் கோலில் இரண்டாவது கோல் அடித்தபோது ஜோசப் பைகானின் உலக சாதனையை முறியடித்தார். இறுதியில், மொத்தமாக மூன்று கோல் அடித்து 807 கோல்கள் அடித்த ஒரே வீரர் ஆனார். இந்தப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதனிடையே, ரொனால்டோ நேற்று அடித்த ஹாட்ரிக் கோல்கள், அவரின் 59வது ஹாட்ரிக் ஆகும். அதேபோல் கிளப் கேரியரில் இது அவரின் 49வது ஹாட்ரிக் ஆகும். 2008ல் ஓல்ட் ட்ராஃபோர்ட் அணிக்காக விளையாடிய போது முதல் ஹாட்ரிக் கோல் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

இலங்கையில் 100 மெகாவாட் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தேசிய அனல் மின் கழகம் மற்றும் இலங்கை மின்சார சபை ஒப்பந்தம் செய்துள்ளன.

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரில், கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளிடம் இருந்து அந்நாட்டு ராணுவம் கைப்பற்றிய முதல் இடம் சம்பூர். 2006-ம் ஆண்டு சம்பூர் பகுதியை கைப்பற்றிய பிறகு அந்த இடம் ராணுவத்தால் உயர் பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்கும் வகை யில், திரிகோணமலை மாவட்டம், சம்பூர்பகுதியில் புதிய அனல் மின் நிலையம் அமைக்க இந்தியா - இலங்கை அரசுகளிடையே கடந்த 2011-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என திரிகோணமலை மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், அந்த ஒப்பந்தம் தற்போது சூரிய மின் உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்க இரு நாட்டு அரசுகளும் ஒப்புக்கொண்டன.

இதற்கான நிகழ்ச்சி கொழும்பில் நேற்று முன்தினம் நடந்தது. இது தொடர் பான ஒப்பந்தத்தில் இந்தியாவின் தேசிய அனல் மின் கழகம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்வில் இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மின்சார அமைச்சர் பவித்ராதேவி வன்னி ஆரச்சிமற்றும் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Read in source website

ராஜஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்தது குறித்து உயர்நிலை விசாரணை நடத்த மத்திய பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 9-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் நகரில் நிலைநிறுத்தப்பட்டிருந்த சூப்பர்சானிக் ஏவுகணைகளின் பராமரிப்பு பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது தவறுதலாக ஒரு ஏவுகணை சீறிப் பாய்ந்தது. இந்த ஏவுகணை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், மியான் கன்னு நகரின் மீது விழுந்தது. அங்குள்ள குடியிருப்பு கள் சேதமடைந்தன.

இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பராமரிப்பு நடைமுறைகளின் போது தவறாக ஏவுகணை விண்ணில் பாய்ந்துள்ளது. இந்த ஏவுகணை பாகிஸ்தான் எல்லையில் விழுந்திருக்கிறது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. எனினும் ஏவுகணை பாய்ந்தது வருத்தத்துக்கு உரியது. இதுகுறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ஏவுகணை விழுந்துள்ளது. இதற்கு இந்திய அரசு மேலோட்டமாக விளக்கம் அளித்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து இருதரப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி கூறும்போது, "ஏவுகணை விவகாரம் குறித்து இந்திய தூதரை வரவழைத்து விளக்கம் கேட்டுள்ளோம். இந்திய தரப்பில் எழுத்துபூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் முறையிடுவோம்" என்று தெரிவித்தார்.



Read in source website

புதுடெல்லி: வாகன ஸ்கிராப்பிங் வசதியின் பதிவு மற்றும் செயல்பாடுகளுக்கு வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், மோட்டார் வாகனங்கள் (வாகன ஸ்கிராப்பிங் வசதி திருத்தத்தின் பதிவு மற்றும் செயல்பாடுகள்) விதிகள், 2022 தொடர்பான வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இவை மோட்டார் வாகனங்கள் ஸ்கிராப்பிங் வசதி குறித்த கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதியிட்ட விதிகள், பதிவுசெய்யப்பட்ட வாகன ஸ்கிராப்பிங் வசதிகளை (RVSF) நிறுவுவதற்கான நடைமுறையை வகுக்கிறது. வாகன உரிமையாளர்கள், RVSF நடத்துபவர்கள் , டீலர்கள், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் போன்ற அமைப்பில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் வாகனத்தை அகற்றும் செயல்முறையை எளிதாக்கவும் டிஜிட்டல் மயமாக்கவும் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

விதிகள் குறித்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. . எளிதாக வணிகம் செய்வதை உறுதி செய்வதற்காக செயல்முறைகளுக்கு காலவரையறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

திருத்தங்களின் சில முக்கிய அம்சங்கள்:

வாகன உரிமையாளர்கள் வாகனத்தை ஸ்கிராப்பிங் செய்ய டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்க வழிவகை செய்கிறது. வாகனங்களைச் சிதைப்பதற்கான அனைத்து விண்ணப்பங்களும் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கப்படும். வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை ஸ்கிராப் செய்ய டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்க உதவும் வசதி மையங்களாக RVSFகள் செயல்படும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் "வாகன்" தரவுத்தளத்தில் இருந்து செய்ய வேண்டிய தேவையான சோதனைகள் வாகன உரிமையாளர்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த சோதனைகளில் , வாகனத்தை வாடகைக்கு வாங்குதல், குத்தகை அல்லது கருதுகோள் ஒப்பந்தம் செய்தல், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் பதிவுகளில் வாகனத்திற்கு எதிராக குற்றப் பதிவு இல்லை, வாகனத்தின் மீது நிலுவையில் உள்ள நிலுவைத் தொகைகள் இல்லை, வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் வாகனத்தை தடுப்புப்பட்டியலில் பதிவு செய்ததற்கான பதிவு இல்லை. . இந்த சோதனைகளில் ஏதேனும் தவறும் வாகனங்களுக்கான விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது .

ஸ்கிராப்பிங்கிற்கு சமர்ப்பிப்பதற்கு முன்னும் பின்னும் வாகனத்தின் பொறுப்பில் வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதி செய்வதற்காக, வாகனங்களைச் சமர்ப்பிக்கும் நேரத்தில் வாகன உரிமையாளர் மற்றும் RVSF ஆபரேட்டர்களுக்கான உறுதிமொழிகள் அறிமுகப்படுத்துதல்

வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை செயல்படுத்துவதற்காக ஸ்கிராப்பிங்கிற்காக சமர்ப்பிக்கப்பட்ட வாகனம் தொடர்பான டெபாசிட் சான்றிதழில் கூடுதல் விவரங்களைச் சேர்த்தல். மேற்கூறிய இந்த சான்றிதழ் வாகன உரிமையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் கிடைக்கும் மற்றும் 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

மின்னணு வர்த்தகம் மூலம் டெபாசிட் சான்றிதழைப் பெறும் நுகர்வோர், பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ஆதாரத்தை வைத்திருப்பதை உறுதி செய்வதற்காக டெபாசிட் பரிமாற்றச் சான்றிதழின் அறிமுகம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்கு தலால் நியான் வாயு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் சிப் என்று அழைக்கப்படும் செமிகண்டக்டர் தயாரிப்பில் நியான் வாயு மிக முக்கிய அங்கமாக உள்ளது. உலகின் நியான் தேவையில் 50 சதவீதம் உக்ரைனில் உள்ள இங்கஸ் மற்றும் கிரையோயின் என்ற இருநிறுவனங்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. ரஷ்யாவின் தாக்குதலால்தற்போது அவ்விரு நிறுவனங்களும் நியான் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.

இந்நிலையில், உலக அளவில் சிப்தயாரிப்பு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், மின்னணு சாதனங்களின் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கஸ் நிறுவனம் மரியுபோல் நகரத்திலும் கிரையோயின் ஒடெசா எனும் நகரத்திலும் அமைந்துள்ளன. இங்கஸ் நிறுவனம் மாதம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன மீட்டர்கள் அளவிலும், கிரையோயின் நிறுவனம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கனமீட்டர்கள் அளவிலும் நியான் வாயுவைஉற்பத்தி செய்கின்றன. அந்த வகையில் உலகளாவிய நியான் வாயு விநியோகத்தில் 50 சதவீதம் இந்நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படு கிறது.

சிப் தயாரிப்பு நெருக்கடியை சந்திக்கும்

தற்போது இங்கஸ் நிறுவனம் அமைந்திருக்கும் மரியுபோல் நகரத்தின் ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலில், இங்கஸ் நிறுவனம் பாதிக்கப்படும்பட்சத்தில் உலக அளவில் சிப் தயாரிப்பு பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

மொபைல் போன்கள் முதல் கார்கள் வரையில் சிப் என்பது முதன்மையானதாக உள்ளது. கரோனாவுக்குப் பிறகு மின்னணு சாதனங்களுக்கான தேவை அதிகரித்த நிலையில் சிப்புக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இன்னும் அந்தத் தட்டுப்பாடு நீடிக்கிறது.

இதனால் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் சிப் தயாரிப்புக்கு அத்தியாவசியமான நியான் வாயு உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால், சிப் தட்டுப்பாடு பலமடங்கு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.



Read in source website

7 அடுக்கு மாடி, தூண்கள் இல்லாத அமைப்பு என வித்தியாசமான மியூசியமாக அசத்துகிறது. மொத்தம் 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் புதிதாக திறக்கப்பட்ட எதிர்கால மியூசியத்தில் கூட்டம் அலை மோதுகிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம், கடந்த மாதம் 23-ஆம் தேதி இந்த மியூசியத்தை திறந்து வைத்தார்.

இந்த மியூசியத்துக்கு செல்பவர்கள் 2071ஆம் ஆண்டுக்கு பயணிப்பது போன்ற அனுபவத்தை பெறுகின்றனர். ஐக்கிய அரபு அமீரகம் 1971ஆம் ஆண்டு உருவானது. அதன் நூற்றாண்டு விழா 2071 இல் கொண்டாடப்படவுள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில் இதுபோன்ற மியூசியம் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்பான கட்டிட வடிவமைப்பு

7 அடுக்கு மாடி, தூண்கள் இல்லாத அமைப்பு என வித்தியாசமான மியூசியமாக அசத்துகிறது. மொத்தம் 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டிடக் கலை ரீதியாக, அதன் வெளிப்புற அமைப்பில் கூர்மையான மூலைகள் இல்லாமல், 77 மீட்டர் உயரம் வரை உயர்ந்து நிற்கும் உலகின் மிகவும் சிறப்பான கட்டிடங்களில் ஒன்றாகும்.

கட்டடத்தின் முகப்பு துரு பிடிக்காத உலோகமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஊக்குவிக்கும் மேற்கோள்களும் அரபி மொழியில் எழுதப்பட்டுள்ளன.

இந்த எழுத்தை ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மட்டர் பின் லஹேஜ் வடிவமைத்தார். மியூசியத்தை கட்டடக் கலை நிபுணர் ஷான் கில்லா வடிவமைத்தார்.

துபாய் ஃபியூச்சர் ஃபவுண்டேஷன் அமைப்பு இந்த மியூசியத்தை நிர்வகிக்கிறது. சோலார் பேனல்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உற்பத்தி செய்யப்படும் 4,000 மெகாவாட் மின்சாரம் அதன் தேவையை பூர்த்தி செய்கிறது.

எதிர்காலத்துக்கான நுழைவாயில்

இது புதுமையான பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கி இருக்கிறது. மெய்நிகர் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியிருக்கிறது. மேலும், செயற்கை நுண்ணறிவு, மனித-எந்திர உரையாடல் ஆகியவற்றையும் கொண்டிருக்கிறது.

எதிர்காலம், வாழ்க்கை, பூமி, மனிதத்தன்மை, நகரங்கள், சமூகங்கள் , விண்வெளி உள்ளிட்டவை தொடர்பாக கேட்கும் கேள்விகளுக்கு இத்தகைய தொழில்நுட்பங்கள் பதிலளிக்கின்றன.

சுகாதாரம், கல்வி, ஸ்மார்ட் நகரங்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான கண்டுபிடிப்பு ஆய்வகங்கள், எதிர்கால கண்டுபிடிப்புகளின் நிரந்தர மியூசியம் மற்றும் புதிய யோசனைகளை உருவாக்க மற்றும் சோதிக்க ஆய்வகங்கள் ஆகியவையும் உள்ளடக்கி இருக்கிறது இந்த மியூசியம்.

மரபணு மாதிரிகள், மரபியல் ஆகியவை குறித்தும் மியூசியத்தின் ஒரு மாடியில் இடமளிக்கப்பட்டுள்ளது.

இது நிஜமாகவே மியூசியமா?
மியூசியம் என்பது வழக்கமாக வரலாறு, கலை அல்லது கலாசார ஆர்வமுள்ள பொருள்கள் காட்சிப்படுத்தப்படும் இடமாகவும் பாதுகாக்கப்படும் அல்லது ஆய்வு செய்யப்படும் இடமாகவும் இருக்கும்.

ஆனால், மியூசியம் ஆஃப் ஃபியூச்சர் முன்னணி விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை மேலும் வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு ஆய்வகமாகும்.

இந்த மியூசியத்தில் உள்ளடக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப செழுமைப்படுத்தப்படும் என்பதால் இது நிகழ்கால மியூசியமாகவே கருத வேண்டும்!



Read in source website