DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 12-10-2022

 

மென்பொருள் துறையில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வது என்ற நிலை தற்போது அதிகம் உருவாகிவிட்டது. இதனால் உட்கார்ந்த இடத்திலேயே பணிகளைச் செய்வதன் காரணமாக உடல் எடை கூடுவதால், எழுந்து நடப்பதற்கே அவர்களுக்கு சிரமம் உண்டாகிவிடுகிறது. அப்படியே எழுந்து நடந்தாலும் மூட்டுகளில் வலியும், சிரமமும், ஒருவித வேதனையும் பலருக்கு ஏற்படுகின்றது. 

இது ஒருபுறமிருக்க கணினியும், அலைபேசியும் அதிகம் பயன்படுத்துவதால் பலருக்கு கழுத்தில் வலியும், சிரமமும் ஏற்படுவதாக உள்ளது. அத்தகைய வலியுடனும், சிரமத்துடனும், அன்றாட அலுவலகப் பணிகளை செய்துக்கொண்டு சலிப்புடன் பலர் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு செல்கின்றனர் என்பது தான் உண்மை. 

அத்தகைய மூட்டு வலி, கழுத்து வலி, இடுப்பு வலி ஆகியவைகளுக்கு உடல் பருமனும், வேலைப்பளுவும் காரணமாக இருப்பதால், பலருக்கு இளம் வயதிலே மூட்டுகளில் தேய்மானம் ஏற்பட்டு விடுகின்றது. அத்தகைய தேய்மான நோய்நிலைகளுக்கு சித்த மருத்துவம் கூறும் காரணம் நம் உடலில் அதிகரித்த வாதத்துடன் பித்தமோ, கபமோ சேர்வது தான்.  

‘வாதமலாது மேனிக்கெடாது’ என்கிறது சித்த மருத்துவம். அந்த வகையில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் மாறுபடும் போது அதிகரிக்கும் குற்றத்தைப் பொறுத்து, நோய்களை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. இதற்காகவே  நம் உடலில் உள்ள வாதத்தினை சீராக்க, ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து எடுத்துக்கொள்ள சித்த மருத்துவம் அறிவுறுத்துகின்றது.

வாதத்தைக் குறைத்து, மூட்டுகளில் உள்ள தேய்மானத்தையும் சீர்செய்து, இன்றைய நவீன வாழ்வியலில் இளம் வயதிலேயே ஏற்படும் இத்தகைய நோய்நிலைகளில் இருந்து மீண்டு வருவதற்கு சித்த மருத்துவம் பல்வேறு எளிய மூலிகைகளைக் குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் மூட்டுகளின் தேய்மானத்தைக் குறைத்து மூட்டுகளை பாதுகாக்கும்படியாக உள்ள எளிய சித்த மருத்துவ மூலிகை ‘குறுந்தொட்டி’ அல்லது ‘சிற்றாமுட்டி’.

துவர்ப்பு சுவையை முதன்மையாகக் கொண்ட செம்பருத்தி பூக்குடும்பத்தை சார்ந்த சிறு செடியினம் தான் சிற்றாமுட்டி. அதன் பெயர்க்காரணத்தை ஆராய்ந்தால் அதன் மருத்துவ தன்மை எளிதில் விளங்கிடும். 

சிற்றாமுட்டி

சிற்றாமுட்டியை சிற்று+ஆம்+முட்டி என பிரிக்கலாம். அதாவது மூட்டுகளில் தங்கிய ஆமத்தை நீக்கும் சிறுசெடி என்று பொருள்படுவதாக உள்ளது. மூட்டுகளில் தங்கும் ‘ஆமம்’ என்பது வீக்கத்தையும், தேய்மானத்தையும் உண்டாக்கும் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகின்றது.

வயிற்றில் சேரும் ஆமமே சுரங்களை உண்டாக்குவதாகவும் சித்த மருத்துவம் கூறுகின்றது. ஆகவே தான் வயிற்றின் நலம் பேணுவது அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் நோய்களுக்கு மருந்தளிக்கும் முன் பேதி மருந்தினை சித்த மருத்துவம் வலியுறுத்துகிறது.

மூட்டுகளில் உள்ள ஆமத்தை போக்கும், சிற்றாமுட்டி மூலிகை வலி நிவாரணியாகவும், மூட்டுகளில் வீக்கமுருக்கியாகவும் செயல்படக்கூடியது. மேலும், இது உடல் வெப்பத்தை தணிப்பதாகவும், கல்லீரலை பாதுகாப்பதாகவும், ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைப்பதாகவும், புண்களை ஆற்றுவதாகவும், நரம்பு தேய்மானத்தை தடுப்பதாகவும், நடுக்கு வாதத்தை குறைப்பதாகவும், மூட்டு வாதத்தை போக்குவதாகவும், ஆண்மையைப் பெருக்குவதாகவும் உள்ளது. உடலைத் தேற்றும் செய்கையும் இதற்குண்டு. 

காய்ச்சல், வலிப்பு, கண்நோய்கள், வாத நோய்கள், பெருங்குடல் மற்றும் நரம்பு கோளாறுகள் போன்ற பல வியாதிகளில் இது நல்ல பலன் தருவதாக உள்ளது. புண்கள் மற்றும் மூட்டு வலிகளில் இதன் எண்ணெய் பல்வேறு நாடுகளில் மேற்பூச்சாகப் பயன்படுத்தப்படுகின்றது.  

இதன் தைலத்தை வாத நோய் மற்றும் கீல்வாதம் ஆகியவற்றிற்கு மேற்ப்பூச்சாக பயன்படுத்த நன்மை தரும். இது சிறுநீரைப் பெருக்குவதாகவும், மலத்தை இளக்குவதாகவும் உள்ளது. தசைகளுக்கு வன்மை தரும் மருத்துவ தன்மையும் இதற்குண்டு.

சிற்றாமுட்டி மூலிகையில் பல்வேறு விதமான வேதிப்பொருட்கள் கலந்து அதன் மருத்துவ குணத்திற்கு காரணமாகின்றன. எபிடெரின், வாசிசின், ஆகிய அல்கலாய்டுகள், பால்மிடிக் மற்றும் ஸ்டியரிக் அமிலங்கள், பீட்டா சிட்டோஸ்டிரால், சப்போனின்கள், கொழுப்பு அமிலங்கள், பீட்டா பினேன்தைலமின் ஆகியன வேதிப்பொருள்களில் முக்கிய இடத்தை பெற்றுள்ளன.    

இதில் உள்ள ‘வாசிசின்’ வகை வேதிப்பொருள்கள் மூச்சுக்குழாய் அழற்சியை போக்குவதால் மூச்சுக்குழாய் விரிவடைய செய்யும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக இருமல், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி (ப்ராங்கைட்டிஸ்), காய்ச்சலோடு உள்ள மூட்டு வலி முதலியனவற்றுக்கு சிற்றாமுட்டி வேருடன், இஞ்சி சேர்த்து கசாயமிட்டு கொடுக்க நல்ல பலன் தரும். நரம்பு மண்டலத்தின் நோய்களில் இதன் பயன்பாடு அளப்பரியது. முகவாதம் மற்றும் சியாட்டிக் வலி போன்ற பல்வேறு வாத நோய்களை குணப்படுத்துவதில் திறன் வாய்ந்தது.

இதன் இலைகளில் முக்கியமாக எபிடெரின் மற்றும் சூடோஎபிடெரின் ஆகிய வேதிப்பொருள்கள் உள்ளது. இந்த வேதிப்பொருள்கள் பல்வேறு மருத்துவ தன்மைக்கு காரணமாக இருப்பினும் சில பக்க விளைவுகளை உடையதால் மேற்கத்திய நாடுகளில் தவிர்க்கப்படுகின்றது. ஆனால் சித்த மருத்துவ முன்னோர்கள் இதனை நாம் பயன்படுத்தும் வண்ணம் மருந்தாக்கி பாதுகாப்பாக நமக்கு அளித்துள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு. 

சித்த மருத்துவத்தில் சிற்றாமுட்டி வேரினை மருத்துவமாக பயன்படுத்துவதற்கான முறைகளைக் கூறியுள்ளது. ‘சிற்றாமுட்டி தைலம்’ என்ற சித்த மருந்து மூட்டு வாத நோய்களை நீக்குவதில் சிறப்பு மிக்கது. வாதத்தை போக்க சித்த மருந்துகளை தயாரிக்கும் போது சிற்றாமுட்டி விறகுகளை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சிற்றாமுட்டி வாதத்தை போக்கும் பல்வேறு குடிநீர்களிலும் சேருவது சிறப்பு.

வாத நோய்கள் என்றாலே சித்த மருத்துவத்தில் தனி பங்களிப்பு உண்டு. எலும்பும், நரம்பும், மூட்டுகளும், தசைகளும் வாதத்திற்கு அடிப்படையானவை. இவற்றில் உண்டாகும் வாத நோய்களை நீக்கும் பல்வேறு வகைப்பட்ட மருந்துகளில் சிற்றாமுட்டி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு வாத நோய்களை பறக்க விடும் சிறப்பு வாய்ந்த மூலிகையை, கழுத்து வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, சியாட்டிக் வலி போன்ற எலும்பு தேய்மான வாத நோய்களில் சிக்குண்டுள்ள மென்பொருள் பணியில் உள்ளவர்களும், மற்றவர்களும்  ஆலோசனைப்படி பயன்படுத்தி பயனடைய வேண்டுதல் அவசியம். சித்த மருத்துவத்தில் நோய்க்கு மட்டும் மருந்தல்ல. நோயின் காரணத்திற்கும் மருந்து என்பது தனிச்சிறப்பு.

மருத்துவரின் ஆலோசனை மற்றும் தொடர்புக்கு... +91 8056040768 இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com



Read in source website

சட்டப் பேரவை உறுப்பினா்கள் பரிந்துரைத்து அளித்துள்ள தொகுதிப் பணிகளின் பட்டியலை ஆய்வு செய்ய மூன்று வகை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வெளியிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிவிப்பு: உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் தங்களது தொகுதியில்

நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளை பரிந்துரைத்து அதுகுறித்த பட்டியலை மாவட்ட ஆட்சியா்களிடம் அளித்துள்ளனா். இந்தப் பட்டியல்களில் உள்ள பணிகளுக்கான மதிப்பீடுகளை ஆட்சியா்கள் தயாா் செய்ய வேண்டும்.

இதனை ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்ய வசதியாக, மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தக் குழுவுக்குத் தலைவராக மாவட்ட ஆட்சியா் இருப்பாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள், மாவட்ட வருவாய் அலுவலா், மாநகராட்சி-நகராட்சி ஆணையாளா்கள், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா், மக்கள் நல்வாழ்வுத் துறை இணை இயக்குநா், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் உள்பட 17 போ் குழுவின் உறுப்பினா்களாக இருப்பா்.

ஆட்சியா்கள் தங்களது மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினா்களிடமிருந்து ஏற்கெனவே பரிந்துரைப் பட்டியல்களைப் பெற்றிருப்பா். இதைத் தொடா்ந்து, மாவட்ட அளவிலான கூட்டத்தை கூட்ட வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் பரிந்துரை செய்த பணிகளை ஆய்வு செய்தல், தோராய மதிப்பீடுகள் வரையறை செய்தல் போன்ற பணிகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். 15 நாள்களுக்குள் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும். தொகுதி வாரியாக பரிந்துரை செய்து முழுமையான அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும். சென்னை மாநகராட்சிக்குள்பட்ட சட்டப் பேரவை உறுப்பினா்கள் மாநகராட்சி ஆணையாளரிடம் வழங்கியுள்ளனா். அவரும் சட்டப் பேரவை தொகுதி வாரியாக பரிந்துரை குறிப்புகளுடன் முழு அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும். மாநில அளவில் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒருங்கிணைப்புத் துறையாக செயல்படும்.

அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெறப்பட்ட பணிகள் மாநில அளவில் துறை வாரியாக தொகுக்கப்படும். இந்தப் பணிகளை மேற்கொள்ள மாநில அளவில் தனிக் குழு உருவாக்கப்படும். இந்தக் குழுவின் தலைவராக தலைமைச் செயலாளா் இருப்பாா். நிதித் துறை, திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை ஆகிய துறைகளின் கூடுதல் தலைமைச்

செயலாளா்கள் குழுவின் உறுப்பினா்களாகவும், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் முதன்மைச் செயலாளா் குழுவின் உறுப்பினா் செயலாளராகவும் இருப்பாா்.

மேலும், அரசுத் திட்டங்களின் கீழ் செயல்படுத்த முடியாத பணிகளை பரிசீலித்து அனுமதி வழங்க வசதியாக, முதல்வா் தலைமையில் மற்றொரு குழு உருவாக்கப்படும். இதன் உறுப்பினா்களாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா், தலைமைச் செயலாளா், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா், திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஆகியோா் உறுப்பினா்களாகவும், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் முதன்மைச் செயலாளா் குழுவின் உறுப்பினா் செயலாளராகவும் இருப்பாா் என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு.



Read in source website

ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் மாநில மொழிகளே பயிற்று மொழியாக இடம் பெற மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளதாக தமிழக பாஜக துணைத் தலைவா் நாராயணன் திருப்பதி திட்டவட்டமாக தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஹிந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் இடம் பெற வேண்டும் என்றுதான் மத்திய அலுவலா் மொழி ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளது.

இதன்படி, இனி தமிழகத்தில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழே பயிற்று மொழியாக இடம் பெற வேண்டும் என்றே பரிந்துரை கூறுகிறது. தமிழ் பயிற்று மொழியாக வருவதை முதல்வா் மு.க.ஸ்டாலின் எதிா்ப்பது ஏன்? நாடு முழுவதும் ஹிந்தியை பொது மொழியாக்க வேண்டும் என்ற பரிந்துரை ஏதும் இடம்பெறவில்லை.

மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தோ்விலிருந்து ஆங்கில கட்டாய பாடத்தை மட்டுமே நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் இனி ஆங்கிலத்துக்கு பதில் தமிழ் இடம் பெறும்.

அலுவல் ஆய்வுக்குழுவின் பரிந்துரைபடி தமிழகத்தில் தமிழ் மொழியே இனி கட்டாயமாகும். ஹிந்தியை கட்டாயமாக்கவில்லை. மாறாக, அனைத்து இந்திய மொழிகளையும் கட்டாயமாக்கும் முயற்சியின் முதல் படியே இது. அதை ஏன் திமுக எதிா்க்கிறது என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.

மேலும், மத்திய அரசு, மாநில அரசோடு இது நாள் வரை ஹிந்தி, ஆங்கிலத்தில் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டிருந்த நிலையில், இனி தாய் மொழியான தமிழ் மொழியில் செய்தி பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற இக்குழுவின் பரிந்துரையை ஸ்டாலின் ஏன் எதிா்க்கிறாா்? இதுபோன்ற கேள்விகளுக்கு முதல்வா் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா் நாராயணன் திருப்பதி.



Read in source website

ஊத்தங்கரை அருகே 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவா் கால நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், குன்னத்தூா் கிராமத்தில் 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவா் காலத்தைச் சோ்ந்த இரண்டு நடுகற்களும், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தப் பகுதியை ஆண்ட நுளம்பா்களின் பழங்கன்னட எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள நடுகல் ஒன்றும் புதிதாக கண்டறியப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் உள்ள செங்கண்மா வரலாற்று நடுவத்தைச் சோ்ந்த பிரேம்ஆனந்த் இவற்றை கண்டெடுத்தாா். இந்த நடுகற்களில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த இரண்டு நடுகற்களை தொல்லியல் துறையைச் சோ்ந்த பூங்குன்றன் அண்மையில் நேரில் ஆய்வு செய்தாா்.

அதில், முதல் நடுக்கல்லில் சாத்தனாதி சேத்தன் என்பவா் பொருமந்தைகளை மீட்கும் போது இறந்துள்ளாா் என்பது குறிப்பிட்டுள்ளது. இரண்டாவது நடுகல்லில் சில சொற்களைத் தவிர படிக்க இயலாதவாறு தேய்ந்துள்ளது. மூன்றாம் நடுகல் நுளம்பா் காலத்தைச் சோ்ந்த மன்னன் அன்னிகன் வெட்டியது. இந்த வீரக் கல்வெட்டு, குன்னத்தூா் கிராமத்திற்கு வெளியே உள்ள வயலில் காணப்படுகிறது. இது கன்னட மொழி மற்றும் 9-ஆம் நூற்றாண்டின் எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

அன்னிக மன்னன் இந்தப் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த போது, போரில் இறந்த வீரன் அனிமத்யாவின் மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் கன்னட பேச்சுவழக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது உள்ளூா் மக்களால் பயன்பாட்டில் இருந்திருக்கலாம் என்று அறிஞா்கள் கருதுகின்றனா்.



Read in source website

ஆஸ்காா் விருது பெற்ற ‘தி ரெட் பலூன்’ குறும்படம் அரசுப் பள்ளிகளில் வியாழக்கிழமை திரையிடப்படவுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் சிறாா் திரைப்படங்கள் திரையிட ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் வியாழக்கிழமை (அக்.13-ஆம் தேதி) ‘தி ரெட் பலூன்’ திரைப்படம் திரையிடப்படும். இந்தப் படம் பிரெஞ்சு மொழியில் ஆஸ்காா் விருது பெற்ற குறும்படமாகும். படத்தின் சுருக்கம் சுற்றறிக்கையுடன் அனுப்பி வைக்கப்படும்.

இணைப்பு (லிங்க்) மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட திரைப்படத்தை மட்டுமே திரையிட வேண்டும். வேறு எந்தப் படத்தையும் மாற்றாகக் காட்டக் கூடாது. ஏனெனில் ஆவணப்படுத்தும்போது படத்திலிருந்து மாணவா் வாரியாக கற்றல் மதிப்பீடு செய்யப்படும்.

பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் இருந்தால் பள்ளியுடன் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியா் பயிற்றுநா் அல்லது மாவட்ட ஒருங்கிணைப்பாளரை தலைமை ஆசிரியா்கள் தொடா்பு கொள்ள வேண்டும். பொறுப்பு ஆசிரியா் திரைப்படம் திரையிடும் நாளுக்கு முன் படத்தைப் பாா்க்க வேண்டும்.

கதைச் சுருக்கத்தைப் படித்து படத்தின் கதைக் களத்தை வெளிப்படுத்தாமல் மாணவா்களுக்கு அடிப்படை பின்னணியைக் கொடுக்க வேண்டும். இணைப்பை பதிவிறக்கம் செய்ய அதிவேக இணையம் என்றால் 7 முதல் 10 நிமிஷங்கள் வரையிலும், குறைந்த வேக இணையம் என்றால் 15 முதல் 20 நிமிஷங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

 

புது தில்லி: அக்டோபர் 25ஆம் தேதி முதல் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள் உள்ள வாகனங்களுக்கு மட்டும் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று தில்லியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும் தில்லி அரசு புதன்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.

போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு வருடத்துக்கும் மேலான வாகனங்களின் உரிமையாளர்கள், மின்சார அல்லது பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்கள் ஒரு வாரத்திற்குள் அவற்றைப் பெற வேண்டும் அல்லது அவர்களின் வாகன பதிவுச் சான்றிதழ்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதே போல் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளின் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்களை சரிபார்க்க அரசு தனியாக குழுக்களை அமைத்துள்ளது.

வாகன உரிமையாளர்கள் அசௌகரியத்தை தவிர்க்க, அக்டோபர் 25ஆம் தேதிக்கு முன் செல்லுபடியாகும் சான்றிதழை பெறுமாறு போக்குவரத்துத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. சரியான மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதமும், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 25க்குப் பிறகு, தில்லியில் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லை என்றால் எரிபொருள் இல்லை. அதே வேளையில் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாத வாகனங்கள் மீதான நடவடிக்கையை எடுக்க தில்லி அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி பம்புகளின் அனைத்து டீலர்களும் அக்டோபர் 25 முதல் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாத மோட்டார் வாகனங்களுக்கு எரிபொருளை விற்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிடுவது குறித்து சுற்றுச்சூழல் துறை பரிசீலித்து வருகிறது.

இந்த மாத தொடக்கத்தில் தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவிக்கையில், தில்லியில் அக்டோபர் 25 முதல் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் வழங்கப்படாது. 

செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற சுற்றுச்சூழல், போக்குவரத்து மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.



Read in source website

தில்லியில் நடப்பு அக்டோபர் மாதம் 66 ஆண்டுகள் இல்லாத அளவு மழை பொழிந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

தில்லி உள்ளிட்ட வடக்கு மாநிலங்கள் கடந்த சில தினங்களாக நல்ல மழையைப் பெற்றுள்ளன. தில்லியில் நடப்பு அக்டோபர் மாதம் மட்டும் 128.2 மி.மீ. மழை பொழிந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது கடந்த 66 ஆண்டுகள் இல்லாத அளவு பதிவான ஒன்றாகும். கடந்த 1954ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகபட்சமாக 238.2 மி.மீ. மழை பொழிந்திருந்தது. 

இதன்மூலம் நான்காவது அதிகபட்ச மழைப்பொழிவை நடப்பு அக்டோபர் மாதம் பெற்றுள்ளது. தில்லியில் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 122.5 மி.மீ. மழை பொழிந்தது. தில்லியில் இந்த ஆண்டு இதுவரை 790 மி.மீ. மழை பெய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சராசரியாக செப்டம்பர் மாதம் 125.1 மி.மீ. மழை பொழியும் நிலையில் நடப்பாண்டு வழக்கத்திற்கு அதிகமாக 164.5 மி.மீ. மழை பொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 



Read in source website

செல்போன்கள் நம் வாழ்வின் மிக முக்கியமான அங்கமாகிவிட்டன. பெரும்பாலான வேலைகளில் அதன் பயன்பாடு அதிகமாகவுள்ளது. இது வேலையை மிகவும் எளிதாக்குகிறது. ஆனால், இதனால் பல நேரங்களில் மக்கள் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக அவ்வப்போது அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

பொது இடத்தில் செல்போனை சார்ஜ் செய்தால், கவனமாக இருக்க வேண்டும். பல சமயங்களில் ரயில் நிலையம், விமான நிலையம் அல்லது பிற இடங்களில் கிடைக்கும் சாக்கெட்டில் சார்ஜரை வைத்துதான் போனை சார்ஜ் செய்வார்கள். ஆனால், இது தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்கு வழிவகுக்கும்.

இது குறித்து ஒடிசா காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். செல்போன் சார்ஜிங் நிலையங்கள், யுஎஸ்பி பவர் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் செல்போனை சார்ஜ் செய்யக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இணைய மோசடி செய்பவர்கள் போனில் மால்வேரை(malware) நிறுவுவதன் மூலம் மொபைலில் இருந்து தனிப்பட்ட தகவல்களை திருடலாம் என்று ஒடிசா காவல்துறை சுட்டுரையில் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற எச்சரிக்கை விடுக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பே பொது இடங்களில் செல்போன் சார்ஜ் செய்வது குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஹைதராபாத் சைபர் காவல்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 5ஜி சிம் மேம்படுத்தல் என்ற பெயரில் மக்கள் ஏமாற்றப்படுவதாக சைபர் காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.

மோசடி செய்பவர்கள் அவர்களின் சிம்மை முடக்கி, அவர்களின் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கிறார்கள். இதற்காக, மோசடி செய்பவர்களால் செல்போன் பயனருக்கு ஒரு இணைப்பு அனுப்பப்படுகிறது. பயனர்கள் இந்த இணைப்பைக் கிளிக் செய்தவுடன், அவர்களின் வங்கிக் கணக்கு தொடர்பான பல விவரங்கள் மோசடி செய்பவர்களுக்கு சென்றடையும்.

அதன் பிறகு அதை பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதன் காரணமாக, இதுபோன்ற அறியப்படாத இணைப்புகளுடன் கவனமாக இருக்க வேண்டும்.



Read in source website

காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமாக இருந்த இருமல் மருந்தை தயாரித்த மெய்டென் மருந்து நிறுவனத்தின் சோனிபட்டு தொழிற்சாலையில், ஒட்டுமொத்த மருந்து தயாரிப்பை முற்றிலும் நிறுத்த ஹரியாணா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், தனது மருந்து தொழிற்சாலை ஆலையில் கண்டுபிடிக்கப்பட்ட 12 விதிமீறல்களுக்கும் பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சோனிபட்டு மருந்து தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மூன்று மருந்துகளின் மாதிரிகள் கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது குறித்த ஆய்வறிக்கை இன்னும் வரவில்லை. அந்த அறிக்கை வந்த பிறகுதான் நடவடிக்கை தொடங்கும். மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளின் ஆய்வின் போது 12 விதிமுறை மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால், ஒட்டுமொத்தமாக மருந்து உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனிஷ் விஜ் தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்புக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நஞ்சுத் தன்மை கொண்ட தரமற்ற 4 இருமல் சிரப்கள்தான் காரணமா என்று உலக சுகாதார அமைப்பு விசாரித்து வருகிறது.

ஹரியாணாவின் சோனிபட்டுவைச் சோ்ந்த மெய்டென் மருந்தியல் நிறுவனம் தயாரித்த அந்த மருந்துகள் நச்சு மற்றும் இறப்புக்கு காரணமான ரசாயனங்களைக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

புரோமெத்தசைன் வாய்வழி மருந்து, கோஃபெக்ஸ்மாலின் பேபி இருமல் சிரப், மகாஃப் பேபி இருமல் சிரப், மேக்ரிப் என் இருமல் சிரப் ஆகிய நான்கு மருந்துகளும் இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என உலக சுகாதார அமைப்பு மருந்து பொருள்கள் எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டிருந்த தொடா்பதிவுகளில், ‘நச்சுத்தன்மைக்கொண்ட இந்த 4 இருமல் மருந்துகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு இம்மருந்துடனான தொடா்பு கண்டறியப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நச்சுத்தன்மைக்கொண்ட மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாட்டிற்கும் வெளியிலும் விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என எச்சரிக்கை தெரிவித்துள்ள சுகாதார நிறுவனம் இம்மருந்து பொருள்களின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து தயாரிப்பு நிறுவனம் சாா்பில் எவ்வித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை தெரிவித்துள்ளது.

மேலும், ஆய்வு முடிவுகளில் இருமல் மருந்துகள் டை எத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இவ்விரு வேதியியல் பொருள்களை மனிதா்கள் பயன்படுத்தும் போது உயிரிழிப்புக்கு காரணமாகும் என அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், இந்த விவகாரம் குறித்த விரிவான ஆய்வு தகவல்களை உலக சுகாதார அமைப்பு இன்னும் பகிரவில்லை என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
 



Read in source website

 

பழனி - கொடைக்கானல் மலைகளுக்கு இடையே ரோப் காா் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை வெளிநாட்டுப் பொறியாளா்கள் குழுவினா் ஆய்வு நடத்தினா்.

மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டபடி, அனைத்தும் மிகச் சரியான முறையில் நடைபெற்று முடிந்தால், கொடைக்கானல் முதல் பழனி வரையிலான போக்குவரத்து நேரம் 3 மணி நேரத்திலிருந்து ரோப் காரில் வெறும் 40 நிமிடங்களில் பயணிக்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கும்.

பழனி முதல் கொடைக்கானல் வரை சுமாா் 12 கிலோ மீட்டா் தொலைவுக்கு ரோப் காா் நிறுவுவது தொடா்பாக மத்திய அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இத்திட்டத்துக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், தொழிலதிபா்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இவ்விரு மலைகளையும் ரோப் கார் மூலம் இணைக்கும் திட்டம் ரூ.500 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை ஆஸ்திரியா நாட்டை சோ்ந்த தனியாா் ரோப்வே நிறுவனப் பொறியாளா்கள் மாா்க்ஸ், யாா்க்ஸ் ஆகியோா் பழனி மலைக்கோயிலில் பக்தா்கள் பயன்பாட்டில் உள்ள ரோப் காா் சேவையைப் பாா்வையிட்டனா்.

இக்குழுவினா் செவ்வாய்க்கிழமை கொடைக்கானல் வந்தனா். இங்கு தாவரவியல் பூங்கா அருகேயுள்ள குறிஞ்சி ஆண்டவா் கோயில் பகுதியைப் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா். தொடா்ந்து, வில்பட்டி ஊராட்சி புலியூா் பகுதியைப் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.

பொதுவாக, பழனி மலைக்கு வருவோர் கொடைக்கானலுக்கும், கொடைக்கானலுக்கு வருவோர் பழனி மலைக்கும் செல்வது வழக்கம். சாலைவழியாகச் சென்றால் 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதற்கு கிட்டத்தட்ட 3 மணி நேரப் பயணம் ஆகும், வழியில் ஏராளமான கொண்டைஊசி வளைவுகளும் உள்ளன. 

இந்த பகுதிகளை இணைக்க ரோப் கார் சேவை அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தியிருக்கும் பொறியாளர்கள் இன்னும் ஆறு மாதங்களில் தங்களது அறிக்கையை தாக்கல் செய்வார்கள். அது கிடைத்ததும், வான்வழி ஆய்வு நடத்தி, பிறகு வனத்துறை அனுமதி கோரப்படும். பிறகு ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ரோப் கார் சேவை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி - கொடைக்கானல் இடையே குறிஞ்சி ஆண்டவர் கோயில் ஒரு நிறுத்தமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நிறுத்தங்களும் தேர்வு செய்யப்படவிருக்கிறது.

பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் வெறும் 40 நிமிட பயணத்தில் இயற்கைக் காட்சியையும் கோயிலையும் வந்தடைய முடியும். 

நாட்டில் கொடைக்கானல் - பழனி உள்பட 7 இடங்களில் புதிதாக ரோப் கார் சேவையைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது. இந்த திட்டங்கள் மத்திய - மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஒட்டுமொத்தமாக 18 ரோப் கார் திட்டங்கள், தமிழ்நாடு, ஆந்திரம், மகாராஷ்டிரம், ஜம்மு -காஷ்மீர், திரிபுரா, அருணாசலம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் அமையவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

தமிழகத்தில் பழனி மலைக் கோயில் முதல் கொடைக்கானல் மலைத் தொடர்ச்சியின் மேற்குப் பகுதி வரை சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் கார் அமைக்கும் திட்டம் மிக முக்கியத்துவம் பெறுகிறது.

மத்திய அரசின் கைவசம் உள்ள ரோப் கார் திட்டங்களில் இதுதான் மிக நீண்ட தூர ரோப் கார் திட்டமாக இருக்கும். 

இதற்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் கார் சேவை அமையவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 



Read in source website

நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 6.8 சதவீதமாக சா்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) குறைத்துள்ளது.

2022-23-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி 8.2 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஜனவரியில் ஐஎம்எஃப் கணித்திருந்தது. பின்னா், இது 7.4 சதவீதமாக கடந்த ஜூலையில் குறைக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை ஏற்கெனவே பல்வேறு சா்வதேச அமைப்புகள் குறைத்துள்ள நிலையில், அந்த வரிசையில் ஐஎம்எஃப் இணைந்துள்ளது.

ஐஎம்எஃப் சாா்பில் செவ்வாய்க்கிழமை உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. உலக வங்கி மற்றும் ஐஎம்எஃப் அதிகாரிகளின் வருடாந்திர கூட்டத்துக்கு பின் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீடு 6.8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை கணிப்புடன் ஒப்பிடுகையில் இது 0.6 சதவீதம் குறைவாகும். 2021-22ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது.

உலகப் பொருளாதார வளா்ச்சி மதிப்பீடு குறைப்பு: உலகப் பொருளாதார வளா்ச்சி 2021-இல் 6.0 சதவீதமாக இருந்த நிலையில், 2022-இல் 3.2 சதவீதமாகவும் 2023-இல் 2.7 சதவீதமாகவும் குறையும் என்று ஐஎம்எஃப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கணிப்புகள், பெரும் பொருளாதார நாடுகளின் (அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா) குறிப்பிடத்தக்க அளவிலான மந்தநிலையை எதிரொலிப்பதாக ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.

‘உலக பொருளாதாரம் தொடா்ந்து பெரும் சவால்களை சந்திக்க உள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு உலக பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை தொடா்ந்து பாதித்து வருகிறது. பணவீக்க அழுத்தம் நீடிப்பு மற்றும் அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள வாழ்க்கை செலவுகள் பிரச்னை, கரோனா பரவல் மற்றும் தொடா் முடக்கங்களால் சீனாவில் நிலவும் மந்தநிலை ஆகியவற்றின் தாக்கங்களால் இந்த சவால்கள் எழுந்துள்ளன. கடந்த 2021-இல் 8.1 சதவீதமாக இருந்த சீனாவின் பொருளாதார வளா்ச்சி இந்த ஆண்டு 3.2 சதவீதமாக குறையும் என்று ஐஎம்எஃப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா. கோரிக்கை: மேற்கண்ட கூட்டத்தின் இடையே ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் சாா்பில் ஓா் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், அதிகரிக்கும் கடன்களால் வளரும் நாடுகள் எதிா்கொண்டுள்ள பாதிப்புகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. மிக ஏழ்மையான நாடுகள், தங்களது கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலஅவகாசத்தை மாற்றியமைப்பதற்கு பதிலாக, அவற்றை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் பணக்கார நாடுகளும் சா்வதேச நிதி அமைப்புகளும் உதவ வேண்டும் என்று அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.



Read in source website

திரைப்பட விளம்பரங்களில் தணிக்கை சான்றிதழ் வகையை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்றும், தவறினால் சட்டபூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய சான்றளிப்பு வாரியம் (சிபிஎஃப்சி) எச்சரித்துள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவா்கள் மட்டும் பாா்க்கும் திரைப்படங்களுக்கு வயது வந்தோருக்கு மட்டும் (ஏ சா்டிபிகேட்) சான்றிதழ் வழங்கப்படுகிறது. 18 வயதுக்கு உட்பட்டவா்கள் பெற்றோரின் அனுமதியுடன் பாா்ப்பதற்கான திரைப்படங்களுக்கு யூஏ சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனைவரும் பாா்க்கக்கூடிய படங்களுக்கு யூ சான்றிதழ் வழங்கப்படுகிறது. திரைப்பட (சான்றிதழ்) விதி 1983-ன் கீழ் இந்தச் சான்றிதழ்கள் திரைப்பட சான்றளிப்பு வாரியத்தால் வழங்கப்படுகின்றன.

திரைப்படங்களுக்கு விளம்பரங்கள் வெளியிடும்போது, எந்த சான்றிதழ் வகையைச் சோ்ந்த திரைப்படம் என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

தணிக்கை சான்றிதழ் வகையை குறிப்பிடத் தவறுவோா் மீது சட்டபூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி டி பாலமுரளி தெரிவித்துள்ளாா்.



Read in source website

உத்தர பிரதேச மாநிலம், அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழக தாவரவியல் துறை முன்னாள் தலைவரும் முன்னணி கல்வியாளா்களில் ஒருவருமான வஜாஹத் ஹுசைனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அறக்கட்டளை சாா்பில் மாற்றுமுறை மருத்துவத்துக்கான சா்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு, ‘சையத் தொண்டு மற்றும் மனிதாபிமான அறக்கட்டளை’ செயல்பட்டு வருகிறது. மக்களிடையே கல்வி, அறிவு, திறமை ஆகியவற்றை மேம்படுத்தி, அவா்களது வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதை நோக்கமாக கொண்ட தன்னாா்வ நிறுவனமாகும்.

உலக அளவில் பாரம்பரிய மற்றும் மாற்றுமுறை மருத்துவம் சாா்ந்த கல்வியாளா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த அறக்கட்டளை சாா்பில் ‘ஷேக் சையத் சா்வதேச விருது’ முதல்முறையாக கடந்த 2020-இல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது ஷேக் சையத் சா்வதேச விருது, இந்தியாவைச் சோ்ந்த தாவரவியல் வகைப்படுத்துதல் வல்லுநா் வஜாஹத் ஹுசைனுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இவா், அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழக தாவரவியல் துறை முன்னாள் தலைவா் ஆவாா்.

பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் ஆயுஷ் அமைச்சகம் சாா்பிலும், அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகம் சாா்பிலும் இருமுறை வாழ்நாள் சாதனை விருதுகளை இவா் பெற்றுள்ளாா்.

‘கல்வியாளா்கள் என்றுமே அங்கீகாரத்துக்காகப் பணியாற்றுவதில்லை. ஆனால், அங்கீகாரம் தேடி வரும்போது அதனை பணிவுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனக்கு கிடைத்த இந்த விருதை அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கும் இந்தியாவுக்கும் சமா்ப்பிக்கிறேன்’ என்று ஹுசைன் தெரிவித்துள்ளாா்.



Read in source website

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒன் டே ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மழையால் தாமதமாகத் தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 27.1 ஓவா்களில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து இந்தியா 19.1 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்து வென்றது. ஆட்டநாயகன் விருதை குல்தீப் யாதவும், தொடா் நாயகன் விருதை முகமது சிராஜும் பெற்றனா்.

இத்தொடரில் இரண்டாம் நிலையிலான, அவ்வளவாக அனுபவம் இல்லாத இளம் வீரா்களைக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி முதல் ஆட்டத்தில் தோற்றாலும், பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை அடுத்த இரு ஆட்டங்களிலும் வீழ்த்தி முத்திரை பதித்துள்ளது.

மறுபுறம், தென்னாப்பிரிக்கா இத்தொடரை இழந்ததால், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவா் உலகக் கோப்பை போட்டிக்கு அந்த அணி நேரடியாகத் தகுதிபெறும் வாய்ப்பு இன்னும் பாதிக்கப்பட்டது.

முன்னதாக, இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இந்தியா மாற்றம் செய்யாத நிலையில், தென்னாப்பிரிக்க அணியில் கேசவ் மஹராஜ், டப்ரைஸ் ஷம்ஸி, டெம்பா பவுமா ஆகியோருக்குப் பதிலாக அண்டிலே பெலுக்வயோ, லுன்கி இங்கிடி, மாா்கோ யான்சென் இணைந்திருந்தனா். டாஸ் வென்ற இந்தியா, பௌலிங்கை தோ்வு செய்தது.

தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் மிடில் ஆா்டரில் வந்த ஹென்ரிச் கிளாசென் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் விளாசியதே அதிகபட்சமாக இருக்க, யானேமன் மலான் 15, மாா்கோ யான்சென் 14 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். கேப்டன் டேவிட் மில்லா் உள்பட இதர விக்கெட்டுகள் சோபிக்காமல் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தன. இந்திய பௌலிங்கில் குல்தீப் யாதவ் 4, வாஷிங்டன் சுந்தா், முகமது சிராஜ், ஷாபாஸ் அகமது ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

பின்னா் இந்திய பேட்டிங்கில் கேப்டன் ஷிகா் தவன் 8, இஷான் கிஷண் 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, நல்லதொரு அடித்தளமிட்ட ஷுப்மன் கில் 8 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் விளாசி விக்கெட்டை பறிகொடுத்தாா். முடிவில் ஷ்ரேயஸ் ஐயா் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 28, சஞ்சு சாம்சன் 2 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க பௌலிங்கில் இங்கிடி, ஜோா்ன் ஃபோா்டுயின் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.



Read in source website

 

ரஷியாவுடனான போரில் உக்ரைன் படையினருக்கு ராணுவப் பயிற்சி அளிக்க  ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து 7 மாதங்களைக் கடந்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரஷியாவையும் அந்த நாட்டால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தையும் இணைக்கும் பாலம், சனிக்கிழமை நடத்தப்பட்ட லாரி குண்டுவெடிப்பில் சேதப்படுத்தப்பட்டது.

இதனால், அந்தத் தீவுடன் ரஷியாவுக்கு இருந்த ஒரே சாலை வழி விநியோக இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இந்த தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என்று ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து,  உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக ஏவுகணை மூலம் ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தினர். இதில், பலர் உயிரிழந்தனர்.

மேலும், ரஷியாவுடனான போரில் ஒருபோதும் நாங்கள் பின்வாங்கவோ சரணடையவோ போவதில்லை. தொடர்ந்து போரிடுவோம் என உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரஷியாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைன் படையினருக்கு ராணுவப் பயிற்சி அளிக்க அந்நாட்டு அரசு ஆஸ்திரேலியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ‘உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு போர் பயிற்சி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதுகுறித்து விரைவாக முடிவு எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.



Read in source website

 

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவை பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகள் பட்டியலின் கீழ் சேர்த்து அறிவித்துள்ளது ரஷியா.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கியதில் இருந்து ரஷிய அரசு அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதையடுத்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷியாவை விட்டு வெளியேறினால் போது என்ற அளவுக்கு மேற்கத்திய நாடுகள் பல்வேறு வர்த்தக மற்றும் பொருளாதாரத் தடைகளை விதித்து வந்தது. 

இந்நிலையில், ரஷியாவின் நிதி கண்காணிப்பு நிறுவனமான ரோஸ்ஃபின்மோனிடரிங், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமும், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான மெட்டாவை  பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகள் பட்டியலின் கீழ் சேர்த்து அறிவித்துள்ளது ரஷியா.

உக்ரைன் மீதான போரில் ரஷியாவுக்கு எதிரான கருத்து பகிர்ந்த விவகாரத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிற்கு கடந்த மார்ச் முதல் ரஷியா தடை விதித்தது. ஆனால், பல ரஷியர்கள் சமூக ஊடக நெட்வொர்க்குகளைப் பயன்படுத்த தொடர்ந்து விபிஎன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு எதிரான மெட்டா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை மாஸ்கோ நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது. 

ரஷியாவில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பிரபலமாக உள்ளது மற்றும் விளம்பரம் மற்றும் விற்பனைக்கான முக்கிய தளமாகும்.

இந்நிலையில், ரஷியாவில் மெட்டா தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது என நிறுவனத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மெட்டாவை பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகள் பட்டியலின் கீழ் சேர்த்து அறிவித்துள்ளது ரஷியா.



Read in source website

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் நிலவி வரும் ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் பிராந்தியம் சுதந்திரமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் திகழ்வதற்கு முக்கியப் பங்களித்து வருவதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

தென்சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தென்சீன கடல் முழுவதும் தனக்கே சொந்தம் எனக் கூறி வரும் சீனா, அக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளுக்கும் உரிமை கொண்டாடி வருகிறது. அதனால், அண்டை நாடுகளான பிலிப்பின்ஸ், ஜப்பான், தைவான், புருணே, மலேசியா, வியத்நாம் உள்ளிட்டவற்றுடன் சீனா மோதல்போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய க்வாட் (நாற்கர) கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகளும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் எந்தவித ஆக்கிரமிப்பும் இன்றி சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் திகழ்வதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு இருநாள் அரசுமுறைப் பயணமாகச் சென்ற வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு பாதுகாப்புப் படை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினாா். ஆஸ்திரேலிய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் பயணிப்பதற்கு ஆயத்தமாகும் புகைப்படத்தை தனது ட்விட்டா் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஜெய்சங்கா், ‘இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் நிலவி வரும் ஒத்துழைப்பானது இந்தோ-பசிபிக் பிராந்தியம் சுதந்திரமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் திகழ்வதற்கு முக்கியப் பங்களித்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைக் கட்டமைப்பதில் இந்தியாவுடனான நல்லுறவு மிகவும் முக்கியமானது என ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் பென்னி வாங் திங்கள்கிழமை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்டடங்கள் தாக்கப்படுவது முறையல்ல: ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவின் நல்லுறவு வலுவடைந்து வருவது தொடா்பாக சிட்னி நகரில் உள்ள லோவி நிறுவனத்தில் அமைச்சா் ஜெய்சங்கா் உரையாற்றினாா். அதையடுத்து உக்ரைன் போா் தொடா்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சா், ‘உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள் வசிக்கும் கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உக்ரைன் போரானது எவருக்கும் நன்மையைத் தரவில்லை. பல நாடுகள் அதனால் பாதிக்கப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட தரப்பினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்’ என்றாா்.



Read in source website

கடல் எல்லைப் பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கான ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க’ ஒப்பந்தத்தை அண்டை நாடான லெபனானுடன் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமா் யாயிா் லபீட் அறிவித்துள்ளாா்.

மத்தியதரைக் கடலில் சுமாா் 860 சதுர கி.மீ. பரப்பளவுக்கு இஸ்ரேலும் லெபனானும் உரிமை கோரி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் நீண்ட கால முயற்சிக்குப் பிறகு இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் உருவானது.

அந்த ஒப்பந்தத்தின் கீழ், சா்ச்சைக்குரிய எல்லைக்குள் கடலடி எரிபொருளை எடுத்துக் கொள்ள லெபனானை இஸ்ரேல் அனுமதிக்கும். எனினும், அதற்கான உரிமைத் தொகையை இஸ்ரேலுக்கு லெபனான் அளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், இந்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேலில் அரசியல் ரீதியிலும் சட்ட ரீதியிலும் பல்வேறு சவால்கள் எழும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், இப்படி ஓா் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டதை லெபனான் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இந்தச் சூழலில் லெபனானுடன் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்ததை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமா் அறிவித்துள்ளாா்.



Read in source website

உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியா சட்டவிரோதமாக இணைத்துக் கொண்டதாகக் கூறி ஐ.நா. பொதுச் சபையில் தாக்கல் செய்யப்பட்ட தீா்மானம் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கான ரஷியாவின் கோரிக்கையை இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் நிராகரித்தன.

சம்பந்தப்பட்ட தீா்மானத்தின் மீது வெளிப்படையான முறையில் வாக்கெடுப்பு நடத்துவதற்கே நாடுகள் ஆதரவு அளித்தன.

உக்ரைன்-ரஷியா இடையேயான போா் ஏழு மாதங்களைக் கடந்து தொடா்ந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தொடா்ந்து நிதியுதவியை வழங்கி வருகின்றன. அதன் காரணமாக ரஷியாவால் போரை எளிதில் வெல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், ரஷிய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்ஸான், ஸபோரிஷியா ஆகிய பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைத்துக் கொள்வதற்கான வாக்கெடுப்பு அந்தந்தப் பகுதிகளில் அண்மையில் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான மக்கள் ரஷியாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறி, அப்பகுதிகளை ரஷியாவுடன் இணைத்துக் கொள்வதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை அதிபா் விளாதிமீா் புதின் அண்மையில் வெளியிட்டாா்.

ரஷியாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் கூறி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வரைவு தீா்மானத்தைத் தாக்கல் செய்தன. அத்தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இந்தியா புறக்கணித்திருந்தது.

இந்நிலையில், அத்தீா்மானம் அல்பேனியா சாா்பில் ஐ.நா. பொதுச் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. உக்ரைனிலிருந்து ரஷியா உடனடியாகத் தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும், ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட சா்வதேச எல்லைப் பகுதிகளை மதித்து, உக்ரைன் மீதான போரை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அத்தீா்மானத்தில் கோரப்பட்டிருந்தது.

அத்தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஐ.நா. பொதுச் சபையின் சிறப்புக் கூட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, தீா்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ரஷியா கோரியது. ஆனால், இந்தியா உள்ளிட்ட 107 நாடுகள் ரஷியாவின் கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தன. 13 நாடுகள் மட்டுமே ரஷியாவின் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. வாக்கெடுப்பு வெளிப்படையாக நடத்தப்பட வேண்டுமென பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தின.

அதற்கு ரஷியா மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீடு மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் இந்தியா உள்ளிட்ட 104 நாடுகள் அதற்கு எதிராக வாக்களித்தன. அதையடுத்து ஐ.நா.வுக்கான ரஷிய தூதா் வாசிலி நெபன்ஸியா கூறுகையில், ‘ஐ.நா. பொதுச் சபையின் சிறப்புக் கூட்டத்தில் ரஷியாவின் கருத்துக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை. ஐ.நா. உறுப்பு நாடுகள் சுதந்திரமாகத் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த இயலாத சூழலே நிலவி வருகிறது’ என்றாா்.



Read in source website

சென்னை: இந்தியாவில் தேவாங்குகளுக்கான முதல் வனவிலங்கு சரணாலயம், தமிழகத்தின் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ளது என்று தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், "தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை, இன்று (அக்.12) புதன்கிழமை, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் நிலத்தை இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அறிவிக்கை செய்துள்ளது.

தேவாங்குகள் சிறிய, இரவு நேர பாலூட்டிகள். அவை மரவகை இனத்தைச் சார்ந்தது. தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை மரங்களில் கழிக்கின்றன. இந்த இனம் விவசாய பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை பயக்கின்றன. இந்த இனங்கள் சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்காற்றுகின்றன. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், (IUCN) தேவாங்கு இனத்தினை அழிந்து வரும் இனமாக பட்டியலிட்டுள்ளது. இந்த உயிரினங்களின் வாழ்விடத்தை மேம்படுத்துதல், பாதுகாத்தல் மற்றும் இவைகளுக்கான அச்சுறுத்தல்களைத் தணித்தல் ஆகியவற்றின் மூலமே இவைகளின் எண்ணிக்கையைப் பெருக்க இயலும்.

அழிந்து வரும் இந்த தேவாங்குகள் இனத்தை பாதுகாக்க தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், 11,806 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதிகள், தேவாங்குகளின் முக்கிய வாழ்விடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இனத்தை உடனடியாகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த தமிழக அரசு, "இந்தியாவின் முதல் தேவாங்குகளுக்கான வனவிலங்கு சரணாலயம், தமிழ்நாட்டில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்படும்" என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டது.

மேற்படி அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 (மத்திய சட்டம் 53 இன் 1972) பிரிவு 26(A) (1) (1)ன் கீழ் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11,806.56 ஹெக்டேர் (ஏழு பிளாக்குகளில்) பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக "கடவூர் தேவாங்கு சரணாலயம்" அமைத்து தமிழக அரசு இன்று அறிவிக்கை செய்துள்ளது. வன உயிரினங்கள் பாதுகாப்பில், குறிப்பாக அழிந்து வரும் வன உயிரினங்களை பாதுகாப்பதற்காக முதல்வரின் தலைமையில் தமிழ்நாடு அரசு பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் சில:

  • பாக் வளைகுடாவில் இந்தியாவின் முதல் கடல் பசு பாதுகாப்பகத்தை அறிவிக்கை செய்தது
  • விழுப்புரம் மாவட்டத்தில் கழுவேலி பறவைகள் சரணாலயத்தை அறிவிக்கை செய்தது
  • அகத்தியர் மலை யானைகள் பாதுகாப்பகம் அறிவிக்கை செய்தது
  • திருப்பூர் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தை அறிவிக்கை செய்தது
  • பதிமூன்று ஈர நிலப்பகுதிகளை ராம்சார் சாசனப் பகுதிகள் பட்டியலில் இடம் பெற்றமை.

மிகக் குறுகிய 15 மாத காலத்தில் எடுக்கப்பட்ட இந்தப் புதுமையான முயற்சிகள் வன உயிரினப் பாதுகாப்பு நடவடிக்கைகளில், தமிழகத்துக்கு ஓர் உன்னத இடத்தை அளித்துள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: தமிழக அரசு மற்றும் கோயம்புத்தூர், உயிர் அறக்கட்டளை இணைந்து "குட்டி காவலர்" என்ற மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, இன்று (அக்.12) தொடங்கி வைத்தார்.

‘இளம் பள்ளிக் குழந்தைகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்து கற்பித்து அவர்களை சாலைப் பாதுகாப்பின் தூதுவர்களாக மாற்றுவதே குட்டி காவலர் திட்டத்தின் நோக்கமாகும். சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பரப்பும் வகையில், தமிழக முதல்வர் தலைமையில் 5,000 மாணவர்கள் கோயம்புத்தூர், கொடிசியா வர்த்தக மையத்திலும், 4.50 லட்சம் மாணவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அந்தந்த பள்ளி வளாகத்திலும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி: “நான் இன்று முதல் குட்டி காவலராகப் பொறுப்பேற்கிறேன். நான் எனது பயணத்தின் போது சாலை விதிகளைக் கவனமாகக் கடைபிடிப்பேன் என்றும், எனது உறவினர்களையும், நண்பர்களையும் சாலை விதிகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்துவேன் என்றும் உறுதி ஏற்கிறேன்.

ஓடும் பேருந்தில் ஏறவோ, இறங்கவோ கூடாது என்பதை அறிவேன். இரு சக்கர வாகனப் பயணத்தில் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், நான்கு சக்கர வாகனப் பயணத்தில் இருக்கைப்பட்டை அணிய வேண்டும் என்றும் உணர்த்துவேன். இந்தச் சாலை பாதுகாப்பு உறுதி மொழியை நான் முழுமையாகப் புரிந்து கொண்டு அதை உளமார பின்பற்றுவேன் என்றும் உறுதி கூறுகிறேன்”.

அதனைத் தொடர்ந்து, “குட்டி காவலர்” திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் 3 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு குறித்த மாணவர் பயிற்சி கையேட்டினையும், ஆசிரியர்களுக்கான வழிகாட்டி புத்தகத்தையும் முதல்வர் வெளியிட்டார்.

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அதிக அளவிலான எண்ணிக்கையில் மாணவர்கள் பங்கேற்கும் இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ஆசிய சாதனை புத்தகமான Asia Book of Records-ல் இடம்பெற்று அதற்கான சான்றிதழ் தமிழக முதல்வரிடம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, உயிர் அறக்கட்டளை தலைவர் சஞ்ஜய் ஜெயவர்தனவேலு, நிர்வாக அறங்காவலர் டாக்டர் எஸ். ராஜசேகரன், அறங்காவலர் ஜி. சவுந்தரராஜன், புரவலர் எஸ்.வி. பாலசுப்பிரமணியம், உறுப்பினர் எஸ். நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் வி. பாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர்வி. பத்ரி நாராயணன், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மு. பிரதாப், உயிர் அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்’ என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

காவலர்களின் மனநல பிரச்சினை களுக்கு தீர்வு காணும் வகையில், கோவை மாநகர காவல்நிலையங்களில் மகிழ்ச்சி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகர காவல் நிலையங்களில் தலா இரண்டு எஸ்ஹெச்ஓ (ஸ்டேஷன் ஹேப்பினஸ் ஆபிஸர்) என்ற ‘மகிழ்ச்சி அலுவலர்கள்’ தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.

காவல் ஆணையரின் பிரதிநிதிகளாக செயல்படும் இவர்கள், காவலர்களுக்கு இடையே நிலவும் மனநலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கி, அவர்களுக்கு உதவியாக இருப்பர்.

இதற்கென பிரத்யேகப் பயிற்சி இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, காவலர்களுக்கு இடையே உள்ள மன அழுத்தத்தை எப்படி மேலாண்மை செய்வது என்பது பற்றி சிறப்புப் பயிற்சி அளிக்கக்கூடிய வகையில், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனநல ஆலோசகர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மனநலம் தொடர்பான சவால்கள் உள்ள காவலர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும்.

மேலும், கோபத்தை கட்டுப்படுத்த முடியாத காவலர்கள், மக்களிடம் பண்பாகப் பேசுவதில் பிரச்சினைகள் உள்ளவர்கள், மனநலம் தொடர்பான ஆலோசனை தேவைப்படுவோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

பல்வேறு குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும், அந்த குற்றத்தால் ஏற்பட்ட மனநல பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடுவதற்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.

இதற்காக தனி இடம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் கல்வி பயின்ற கோவில்பட்டி அடுத்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,அவரது நினைவாக ரூ.25 லட்சத்தில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின், காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்’ என போற்றப்படும் கி.ராஜநாராயணன் (கி.ரா.), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த இடைசெவல் கிராமத்தில்கடந்த 1922-ல் பிறந்தார். பேச்சுத்தமிழில் மண்மணம் மிக்க கதைகளை படைத்தளித்தவர். தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்ட கி.ரா., கடந்த 2021 மே 17-ம் தேதி 99-வது வயதில் மறைந்தார். ‘‘கி.ராஜநாராயணனின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவர் பயின்ற இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிபழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்’’ என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார்.

அதன்படி, 1946-ம் ஆண்டு கட்டப்பட்டு பல்வேறு கால சூழ்நிலைகளால் பொலிவை இழந்தஇடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டிடம் ரூ.25 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. இந்த பள்ளிக் கட்டிடத்தை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலின்நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலர் இறையன்பு, ஊரக வளர்ச்சித் துறை செயலர் அமுதா, பள்ளிக்கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பள்ளியில் நடந்த விழாவில் கூடுதல் ஆட்சியர்சரவணன் குத்துவிளக்கு ஏற்றினார். மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கி.ரா.வின் மகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Read in source website

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணியின் ஹீரோ ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட உள்ளார்.

பிசிசிஐ-யின் தலைவராக கடந்த 2019-ம் ஆண்டு சவுரவ் கங்குலியும், செயலாளராக ஜெய் ஷாவும் தேர்வானார்கள். இவர்களது பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த பதவிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ள பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் நடத்தப்பட உள்ளது.

இதில் புதிய தலைவராக 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணியின் ஹீரோ ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 67 வயதான ரோஜர் பின்னி, பிசிசிஐ-யின் 36-வது தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஜெய் ஷா 2-வது முறையாக செயலாளராக தொடர உள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜீவ் சுக்லா பிசிசிஐ-யின் துணைத்தலைவராக நீடிக்க உள்ளார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான அனுராக் தாக்குரின் சகோதரர் அருண் சிங் துமால், ஐபிஎல் அமைப்பின் சேர்மனாக தேர்வாக உள்ளார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலர் பொருளாளராக தேர்வு செய்யப்பட உள்ளார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் நெருங்கிய உதவியாளரான தேவஜித் சைகியா இணைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளார்.

வரும் 18-ம் தேதி மும்பையில் நடைபெறும் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ரோஜர் பின்னி அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்க உள்ளார். மிதவேகப்பந்து வீச்சாளரான ரோஜர் பின்னி, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்கு வகித்திருந்தார். அவர், 8 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகளை வேட்டையாடி இருந்தார்.



Read in source website

நியூயார்க்: பூமியை தாக்க வந்த விண்கல் ஒன்றை நாசா அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக திசைத் திருப்பி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதை நாசேவே தெரிவித்துள்ளது.

குளிர்சாதன பெட்டியைவிட இரு மடங்கு அளவிலான டிமார்போஸ் (Dimorphos) என்ற விண்கல் ஒன்று பூமியின் மீது மோத இருந்ததாக நாசா தெரிவித்து வந்தது. இந்த நிலையில், அந்த விண்கல்லை திசைத் திருப்ப டார்ட் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியது. கடந்த மாதம் 27-ம் தேதி டார்ட் விண்கலம், அந்த விண்கல்லின் மீது துல்லியமாக மோதியது. இதன் மூலம் அந்த விண்கல் எதிர்பார்த்தபடி திசை மாறி சென்றதா என்ற பதிலுக்காக நாசா காத்திருந்தது.

இந்த நிலையில்தான், அந்த விண்கல் சரியாக திசை மாறி சென்றுள்ளதாக நாசா தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து நாசாவின் தலைமை விஞ்ஞானி பில் நெல்சன் கூறும்போது, “பூமிக்கு ஆபத்தாக கருதப்பட்ட விண்கல் வெற்றிகரமாக திசை திருப்பப்பட்டதாக நாசா அறிவித்துள்ளது. 11 மணி 55 நிமிடமாக இருந்த விண்கல்லின் சுற்றுப் பாதையானது, விண்கலம் மோதலுக்கு பிறகு 11 மணி 23 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விண்கல்லின் சுற்றுப் பாதையானது 32 நிமிடங்கள் வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் விண்கல்லால் பூமிக்கு ஏற்பட இருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த பூமியின் பாதுகாவலராக நாசா இருப்பதை நாங்கள் காட்டியுள்ளோம்” என்று தெரிவித்தார்

டார்ட் (Double Asteroid Redirection Test) விண்கலம் என்பது ஒரு சோதனை திட்டமாகும். தற்போது இந்த சோதனைத் திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, எதிர்காலத்தில் பூமியை நோக்கி வரும் விண்கற்களை திசை மாற்றுவது சாத்தியம் என நாசா நிரூபித்துள்ளது.



Read in source website

நய்பிடா: மியான்மர் நாட்டுத் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு ஊழல் வழக்குகளில் மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுவரை மியான்மர் ராணுவத்தால் ஆங் சாங் சூச்சிக்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி ஆங் சாங் சூச்சியின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. 76 வயதான ஆங் சான் சூச்சி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டுவது, கரோனா விதிகளை மீறியது, அலுவல் ரீதியான சட்டங்களை மீறுதல், ஊழல் வழக்குகள் என்று ஆங் சான் சூச்சி மீது 11 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான விசாரணை மியான்மர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கரோனா விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் சூச்சிக்கு சுமார் 23 ஆண்டுகள் வரை மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், இன்னொரு ஊழல் வழக்கில் ஆங் சான் சூச்சிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை மியான்மர் ராணுவ நீதிமன்றம் விதித்துள்ளது. இதன்மூலம் தற்போது 26 ஆண்டுகள் சிறைத் தண்டனையை சூச்சி அனுபவிக்கவுள்ளார்.

தண்டனைக் காலத்தையும் தலைநகர் நய்பிடாவில் வீட்டுக் காவலில் ஆங் சான் சூகி அனுபவிக்கவுள்ளார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், மியான்மர் மனித உரிமை கண்காணிப்பகம் சூச்சிக்கு எதிரான இந்த சட்ட நடவடிக்கைகளை விமர்சித்துள்ளது. மேலும், இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல், மியன்மர் ராணுவத்தால் சூச்சி பழிவாங்கப்படுகிறார் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



Read in source website

புதுடெல்லி: சர்வதேச அணுசக்தி முகமையில் சீனாவின் வரைவு தீர்மானத்தை இந்தியா முறியடித்தது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய பெருங்கடல், பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் கூட்டணியை அமைத்துள்ளன. ஆஸ்திரேலியாவின் கடல் பகுதியில் சீன கடற்படை ஏராளமான ஆளில்லா நீர்மூழ்கிகளை உலவ விட்டிருக்கிறது. சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும் இந்திய, பசிபிக் பிராந்திய கடல் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை (ஆக்கஸ்) ஏற்படுத்தின. இதன் மூலம் அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், ஐ.நா. சபையின் கீழ் செயல்படும் சர்வதேச அணுசக்தி முகமையில் ஆக்கஸ் ஒப்பந்தத்துக்கு எதிராக ஒரு வரைவு தீர்மானத்தை சீனா கடந்த மாதம் தாக்கல் செய்தது. ஆனால் போதிய ஆதரவு கிடைக்காததால் அந்த தீர்மானத்தை சீனா கைவிட்டது. சீனாவின் திட்டத்தை முறியடித்ததன் பின்னணியில் இந்தியா இருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்கை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது அமைச்சர் ஜெய்சங்கர் கூறும்போது, “சர்வதேச அணு சக்தி முகமையில் ஆக்கஸ் ஒப்பந்தத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. இந்த விவகாரத்தில் சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் தெளிவான முடிவை எடுத்தார். அவரது முடிவுக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம். மற்ற உறுப்பு நாடுகளையும் ஆதரவு அளிக்க அறிவுறுத்தினோம்" என்றார்.

மேலும் ஆஸ்திரேலியாவின் ஏபிசி ஊடகத்துக்கு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியில், “சர்வதேச அணுசக்தி முகமையில் ஆக்கஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவும் அதன் நட்பு நாடுகளும் விரிவாக ஆலோசனை நடத்தின. இந்தியாவின் கருத்துக்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவு அளித்தன’’ என்று தெரிவித்தார்.



Read in source website

கலிபோர்னியா: ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயனர்கள் பலர், தங்கள் ஃபாலோயர்களை அதிக அளவில் இழந்துள்ள நிலையில், மெட்டா நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஸூகர்பெர்க்-கும் சுமார் 119 மில்லியன் ஃபாலோயர்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட சமூக வலைதளமான ஃபேஸ்புக், சர்வதேச அளவில் முன்னணியில் உள்ளது. இந்த தளத்தில் போட்டோ, வீடியோ மற்றும் லிங்குகளை ஷேர் செய்யலாம். நண்பர்களுடன் கலந்துரையாடலாம். 112 மொழிகளில் இந்த தளம் இயங்கி வருகிறது.

இந்நிலையில், ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பலரும் தங்களது ஃபாலோயர்களை அதிக அளவில் இழந்துள்ளனர்.

இது குறித்து வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா வேடிக்கையான வகையில் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். “ஃபேஸ்புக் தளத்தில் ஏற்பட்ட சுனாமி தனது 9 லட்சம் ஃபாலோயர்களை அடித்துக் கொண்டு சென்றுவிட்டது. இப்போது வெறும் 9,000 பேர் மட்டுமே கரையில் உள்ளனர். இது காமெடியை போல உள்ளது” என தெரிவித்துள்ளார்.

அவர் மட்டுமல்லாது, ஃபேஸ்புக்கை தனது அங்கமாகக் கொண்டுள்ள மெட்டா நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஸூகர்பெர்க்-கும் சுமார் 119 மில்லியன் ஃபாலோயர்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவரது ஃபாலோயர்கள் கணக்கு பத்து ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஃபேஸ்புக் தரப்பு செய்தித் தொடர்பாளர், “ஃபேஸ்புக் தளத்தில் சிலர் தங்கள் ஃபாலோயர்களை பெருமளவில் இழந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து நாங்கள் அறிந்துள்ளோம். இதனை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் பணியை மேற்கொண்டு வருகிறோம். சிரமத்திற்கு வருந்துகிறோம்” என தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே பயனர்கள் பெருமளவில் ஃபாலோயர்களை இழந்து வருவதாகக் கூறப்படுகிறது.



Read in source website

நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில், அவர் தலைமை வகிக்கும் கொலிஜியம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க 18 பரிந்துரைகளை அளிக்கும்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யூ.யூ. லலித், அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பெயரை பரிந்துரைத்துள்ளார். டி.ஒய். சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக வரும் நவம்பர் 9ஆம் தேதி பதவியேற்பார்.
நீதிபதி சந்திரசூட்டின் இரண்டு ஆண்டு பதவிக் காலத்தில், அவர் தலைமை வகிக்கும் கொலிஜியம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க 18 பரிந்துரைகளை அளிக்கும்.

மேலும், இது ஒரு அசாதாரண கொலிஜியமாக இருக்கும்: ஐந்து உறுப்பினர்களுக்குப் பதிலாக, அது ஆறு பேரைக் கொண்டிருக்கும்.

கொலிஜியம் என்றால் என்ன?

கொலிஜியம் என்பது நீதிபதிகளை நியமிக்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பு ஆகும். இது உச்ச நீதிமன்றத்தின் முதல், இரண்டு, மூன்று நீதிபதிகளின் வழக்குகளின் தீர்ப்புகள் மூலம் இது உருவானது.
எனினும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொலிஜியம் முறையைக் குறிப்பிடவில்லை. எவ்வாறாயினும், உயர் நீதித்துறைக்கு நீதிபதிகளை நியமிப்பதில் இந்திய தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் முதன்மையானது.

இந்தக் கொலிஜியம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் உள்ளது மற்றும் நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளை உள்ளடக்கியது.
இந்த அமைப்பு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் நியமனம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்வதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்குகிறது.

மேலும், உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளை தலைமை நீதிபதி தலைமையில் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இரு மூத்த நீதிபதிகள் அடங்கிய தனியான மூன்று உறுப்பினர் கொலிஜியம் வழங்குகிறது.

நீதிபதிகளின் வழக்குகள் என்ன?

முதல் நீதிபதிகள் வழக்கு:
இந்திய அரசுக்கு எதிராக 1981இல் முன்னாள் நீதிபதி எஸ் பி குப்தா தொடர்ந்த வழக்கில், ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, நீதிபதிகள் நியமனம் குறித்து அரசுடன் தலைமை நீதிபதி உடன்பட முடியாது எனத் தீர்ப்பளித்தது.

இரண்டாவது நீதிபதிகள் வழக்கு
1993 இல், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 1981ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பின் சரியான தன்மையை ஆராய்ந்து, அதை மாற்றியது.
“ஆலோசனை” என்ற வார்த்தை உண்மையில் தலைமை நீதிபதியின் “ஒப்புதல்” என்று பொருள் எனத் தீர்ப்பு கூறியது. கொலிஜியத்தை உருவாக்கும் இரண்டு மூத்த நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என்றும் அது கூறியது.

மூன்றாவது நீதிபதிகள் வழக்கு
1998 ஆம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், நீதிபதி நியமனங்களில் தலைமை நீதிபதிக்கு அளிக்கப்பட்ட முதன்மையானது சட்டப்பூர்வமாக சரியானதா என்பது குறித்து அதன் ஆலோசனை அதிகார வரம்பில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கோரினார்.
1993 இன் முடிவை உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியது, ஆனால் கொலிஜியத்திற்கு அதிகமான மூத்த நீதிபதிகளைக் கொண்டு வந்தது, அதன் பலத்தை மூன்றிலிருந்து ஐந்து நீதிபதிகளாக அதிகரித்தது.

கொலிஜியத்தில் யாரெல்லாம் இருப்பார்?

மூன்றாவது நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பு, தற்போதைய நீதிபதிகள் நியமன முறைக்கு சட்டப்பூர்வ ஆதரவை அளித்து. தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகளுடன் கொலிஜியத்தை உருவாக்கியது.
கொலிஜியத்தின் முக்கிய நோக்கம் திறமையான நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஆகும். பொதுவாக, கொலிஜியத்தில் உள்ள 5 மூத்த நீதிபதிகளில் ஒருவர் தலைமை நீதிபதியாக இருப்பார்.

இருப்பினும், நீதிபதி சந்திரசூட் தலைமை நீதிபதியாக இரண்டு வருட பதவிக்காலத்தில், ஒரு சாத்தியமான CJI வேட்பாளர் மே 2023 வரை கொலிஜியத்தில் இருக்க வாய்ப்பில்லை.

சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் எப்படி இருக்கும்?

நவம்பர் 9 ஆம் தேதி அவர் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் போது, நீதிபதி சந்திரசூட்டின் கொலிஜியத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், அப்துல் நசீர், கேஎம் ஜோசப் மற்றும் எம்ஆர் ஷா ஆகியோரும் இடம் பெறுவார்கள்.

ஜனவரி 4, 2023 அன்று நீதிபதி நசீர் ஓய்வு பெறும்போது இந்த கூட்டணி மாறும். தலைமை நீதிபதி சந்திரசூட்டைத் தவிர, நீதிபதிகள் கவுல், ஜோசப், ஷா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் இருப்பார்கள்.

மே 15, 2023 அன்று, நீதிபதி ஷா ஓய்வு பெற்ற பிறகு, கொலிஜியத்தில் (அப்போதைய) தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் கவுல், ஜோசப், ரஸ்தோகி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் இருப்பார்கள்.

நீதிபதி சந்திரசூட்டைத் தொடர்ந்து நவம்பர் 11, 2024 அன்று நீதிபதி கன்னா தலைமை நீதிபதியாக வருவார்.

5 + 1 கொலிஜியம் என்றால் என்ன?

சீனியாரிட்டி வரிசைப்படி, நீதிபதி கன்னா நவம்பர் 9, 2022 முதல் கொலிஜியத்தின் ஆறாவது உறுப்பினராக இருப்பார்.
இது முன்னதாக 2007-ல் நடந்தது. அப்போதைய தலைமை நீதிபதி கே ஜி பாலகிருஷ்ணன் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது, அவர் தலைமையிலான கொலிஜியத்தில், அடுத்த தலைமை நீதிபதி போட்டியாளர் இருக்க வாய்ப்பு இல்லை.

தொடர்ந்து, தலைமை நீதிபதி பதவிக்கு அடுத்த இடத்தில் இருந்த நீதிபதி எஸ்.எச்.கபாடியா, ஆறாவது உறுப்பினராக கொலிஜியத்திற்கு அழைக்கப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.



Read in source website

அக்டோபர் 4 ஆம் தேதி செல் மெட்டபாலிசம் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், நாம் சாப்பிடும் நேரம் எப்படி நமது ஆற்றல் செலவினம், பசியார்வம் மற்றும் உடல் கொழுப்பை எவ்வாறு சேமிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

தாமதமாக இரவு நேர உணவை உட்கொள்வதால் உடல் பருமன் மற்றும் உடல் எடை குறைவதற்கான அபாயம் அதிகமாக இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

அந்தவகையில், ப்ரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர், தாமதமாக சாப்பிடுவது எடையைக் கட்டுப்படுத்தும் முக்கிய இயக்கிகள் மீது அதன் விளைவுகள் குறித்து சில ஆய்வுகளை நடத்தின.

அக்டோபர் 4 ஆம் தேதி செல் மெட்டபாலிசம் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், நாம் சாப்பிடும் நேரம் எப்படி நமது ஆற்றல் செலவினம், பசியார்வம் மற்றும் உடல் கொழுப்பை எவ்வாறு சேமிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

அதிக எடை அல்லது பருமனான வரம்பில் BMI கொண்ட 16 பங்கேற்பாளர்களை குழு ஆய்வு செய்தது.

ஒவ்வொரு நபருக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட்டது, அவர்கள் அனைவரும் இரண்டு ஆய்வக நெறிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒன்று முன்கூட்டிய உணவு திட்டமிடல், இரண்டாவது குழுவில் ஒவ்வொரு உணவும், 250 நிமிடங்கள் கழித்து தாமதமாக வழங்கப்பட்டது.

கொழுப்பு சேமிப்பில் உணவு நேரத்தின் தாக்கத்தை அளவிட, இரண்டு குழுக்களின் பங்கேற்பாளர்களிடமிருந்து கொழுப்பு திசுக்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

அதில், தாமதமாக சாப்பிடுவது பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை குழு கண்டறிந்தது. நமது பசியைத் தடுக்கும் லெப்டினின் (leptin) அளவு, தாமதமாகச் சாப்பிடும் போது 24 மணிநேரத்தில் குறைக்கப்பட்டது.

தாமதமாக சாப்பிடுவது பசியுடன் இருப்பதற்கான வாய்ப்புகளை இரட்டிப்பாக்கியது. மேலும் அந்த குழுவின் பங்கேற்பாளர்கள், ​​ மெதுவான விகிதத்தில் கலோரிகளை எரித்தனர். அடிபொஜெனெசிஸ் அதிகரிப்பு மற்றும் லிபோலிசிஸ் குறைவதன் மூலம் இது கொழுப்பு திசு விரிவாக்கத்தை ஊக்குவித்தது.

இந்த ஆய்வில், எல்லாவற்றையும் சீராக வைத்திருக்கும்போது நாம் சாப்பிடும் நேரம் முக்கியமா? என்று கேட்டோம் என முதல் ஆசிரியர் நினா வுஜோவிக், PhD, (தூக்கம் மற்றும் சர்க்காடியன் கோளாறுகள் பற்றிய பிரிகாமின் பிரிவில் உள்ள மருத்துவ க்ரோனோபயாலஜி திட்டத்தின் ஆராய்ச்சியாளர்) கூறினார்.

நான்கு மணி நேரம் கழித்து சாப்பிடுவது நமது பசியின் அளவு, சாப்பிட்ட பிறகு கலோரிகளை எரிக்கும் விதம் மற்றும் கொழுப்பைச் சேமிக்கும் விதம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தோம் என்று அவர் கூறினார்.



Read in source website

நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தைகள் தொடர்பாக விளக்கம் கேட்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ள நிலையில், இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை தேடும் தம்பதிகளுக்கான தகுதி மற்றும் அளவுகோல் என்ன?

தமிழ் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது மனைவி, நடிகை நயன்தாரா ஆகியோர் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகிவிட்டதாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது, இந்த ஜோடி வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுத்ததாக ஊகங்கள் எழுந்தன.

திங்கள்கிழமை செய்தியாளர் சந்திப்பின் போது, ​​தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார். “வாடகைத் தாய் பல விவாதங்களுக்கு உட்பட்டது. ஆனால் தனிநபர்கள் 21 வயதுக்கு மேல் மற்றும் 36 வயதுக்குக் கீழ் இருந்தால், குடும்பத்தின் ஒப்புதலுடன் அதைத் தேர்வுசெய்ய சட்டம் அனுமதிக்கிறது, ”என்று அமைச்சர் கூறினார்.

இந்த அறிக்கைகள் குறித்து தம்பதியினர் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், விசாரணையின் பரிந்துரை இந்தியாவில் வாடகைத்தாய் சட்டம் என்ன கூறுகிறது என்ற கேள்விகளுக்கு வழிவகுத்தது.

சட்டப்படி வாடகைத் தாய் முறையை அனுமதிப்பதற்கான நிபந்தனைகள் என்ன?

இந்தியாவில், நீண்ட காலமாக, வெளிநாட்டு தம்பதிகள் அதன் நல்ல மற்றும் மலிவு மருத்துவ முறையின் காரணமாக வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுத்தனர். பல ஆண்டுகளாக, அரசாங்கம் ஒழுங்குப்படுத்தப்பட்ட குறிக்கோளுடன் இந்த நடைமுறையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வாடகைத்தாய் என்பது சட்டத்தில் “ஒரு பெண் ஒரு தம்பதிக்கு குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு நடைமுறை” மற்றும் வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021 (SRA) இன் படி, குழந்தை பிறந்த பிறகு குழந்தையை தம்பதிகளிடம் ஒப்படைக்க வழிவகை செய்கிறது என வரையறுக்கப்பட்டுள்ளது

மேலும், மலட்டுத்தன்மையுள்ள இந்திய திருமணமான தம்பதிகளுக்கு மட்டுமே வாடகைத் தாய் கிடைக்க சட்டம் அனுமதிக்கிறது. இந்த விஷயத்தில் மற்ற சட்டம், உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (ART) (ஒழுங்குமுறை) சட்டம், 2021, மனித உடலுக்கு வெளியே விந்தணு அல்லது ஓசைட்டை (முதிர்ச்சியடையாத பெண் முட்டை) கையாளுதல் மற்றும் ஒரு பெண்ணின் இனப்பெருக்க அமைப்புக்கு மாற்றுதல் மூலம் கர்ப்பத்தைப் பெற முயற்சிக்கும் அனைத்து நுட்பங்களையும் ART நடைமுறைகள் என வரையறுக்கிறது. இது திருமணமான தம்பதிகள், லைவ்-இன் பார்ட்னர்கள், ஒற்றைப் பெண்கள் மற்றும் வெளிநாட்டினருக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ART நடைமுறைகளில் கேமீட் தானம், கருப்பையக கருவூட்டல் மற்றும் இன்-விட்ரோ கருத்தரித்தல் அல்லது IVF ஆகியவை அடங்கும்.

SRA சட்டம், வாடகைத் தாய் என்பவர் திருமணம் செய்துகொண்டு, சொந்தக் குழந்தையைப் பெற்று எடுத்திருப்பவராக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. சட்டப்பூர்வமாக திருமணமான மலட்டுத்தன்மையுள்ள இந்திய தம்பதிகளுக்கு நற்பண்புள்ள வாடகைத் தாய்யை அனுமதிப்பதைக் கட்டுப்படுத்தும் சட்டம், தம்பதிகளில் கணவன் 26 முதல் 55 வயது வரையிலும், மனைவி 23 முதல் 50 வயது வரையிலும் இருப்பதற்கு வயது வரம்பை நிர்ணயிக்கிறது. மேலும், மனநலம் பாதிக்கப்பட்ட அல்லது உடல் ஊனமுற்ற குழந்தைகள் அல்லது உயிருக்கு ஆபத்தான கோளாறு அல்லது கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, வம்சாவளி அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட இந்தியத் தம்பதிகள் வாடகைத் தாய் முறையை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த வகை மக்களுக்குள்ளும் கூட, வணிகரீதியான வாடகைத் தாய் முறை இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது மேலும் அதில் “வாடகைத் தாய் சேவைகள் அல்லது நடைமுறைகள் அல்லது அதன் கூறு சேவைகள் அல்லது கூறு நடைமுறைகள்” ஆகியவையும் அடங்கும். வாடகைத் தாய்க்கு “மருத்துவச் செலவுகள் மற்றும் வாடகைத் தாயின் காப்பீட்டுத் தொகையைத் தவிர”, வாடகைப் பெண்ணுக்குப் பணம், வெகுமதிகள், சலுகைகள் அல்லது கட்டணங்கள் வழங்க முடியாது.

வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுப்பது எப்படி செய்யப்படுகிறது?

இந்த விவரக்குறிப்புகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க தொடர்புடைய அதிகாரிகள் சட்டத்தின் மூலம் பல நிலைகளில் அமைக்கப்பட்டுள்ளனர். அனைத்து வாடகைத் தாய் கிளினிக்குகளும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட வேண்டும், அதன் பிறகுதான் அவர்கள் நடைமுறையை நடத்த முடியும். சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் வாடகைத் தாய் முறையை நடைமுறைப்படுத்தும் கிளினிக்குகளின் எண்ணிக்கை 1,000க்கும் குறைவாக இருக்கும்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் முறையே தேசிய வாடகைத் தாய் வாரியம் (NSB) மற்றும் மாநில வாடகைத் தாய் வாரியங்களை (SSB) அமைக்க வேண்டும். NSBயின் செயல்பாடுகளில் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குதல், வாடகைத் தாய் மருத்துவ மனைகளின் நடத்தை விதிகளை வகுத்தல் மற்றும் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்தல் ஆகியவை அடங்கும். இதேபோல், கிளினிக்குகளின் உரிமங்களை வழங்குவதற்கு அல்லது இடைநிறுத்துவதற்கும், சட்டத்தின் விதிகளை மீறும் புகார்களை சரிபார்ப்பதற்கும் மற்றும் பிற ஒத்த பணிகளைச் செய்வதற்கும் தேசிய மற்றும் மாநில அளவில் பொருத்தமான அதிகாரிகள் அமைக்கப்பட்டுள்ளனர்.

உதாரணமாக, நிரூபிக்கப்பட்ட கருவுறாமைக்கான சான்றிதழ்கள்/ நிபுணத்துவ மருத்துவ அறிக்கைகள் மனைவி அல்லது தம்பதியரின் மாவட்ட மருத்துவக் குழுவில் இருந்து கட்டாயம் தேவை. உரிய அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழானது, பெற்றோர் ஆக வர இருப்பவர்கள் மற்றும் வாடகைத் தாய் ஆகிய இருவராலும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது. வாடகைத் தாய் கிளினிக்கின் இயக்குனர் அல்லது பொறுப்பாளர் போன்ற பிற தேவையான அதிகாரிகளும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டதாக திருப்தி அடைய வேண்டும்.

வணிக வாடகைத் தாய் உள்ளிட்ட மற்ற குற்றங்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

சட்டத்தின் சில விமர்சனங்கள் என்ன?

சட்டம் அமலுக்கு வந்த பிறகு தி இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய சட்ட வர்ணனையாளர் அனில் மல்ஹோத்ரா, சட்டம் குறித்த சில விமர்சனங்களை சுட்டிக்காட்டினார்.

“திருமணமான இந்திய தம்பதிகளுக்கு வரையறுக்கப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட வாடகைத் தாய் முறையை அனுமதிப்பது மற்றும் பிற நபர்களை தேசியம், திருமண நிலை, பாலியல் நோக்குநிலை அல்லது வயது ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்வது சமத்துவத்தின் தேர்வில் தேர்ச்சி பெறாது” என்று அவர் எழுதினார். இனப்பெருக்கம் மற்றும் பெற்றோருக்கான உரிமையை உள்ளடக்கிய இனப்பெருக்க சுயாட்சி அரசாங்கத்தின் எல்லைக்குள் இல்லை என்றும் அவர் கூறினார். “மேலும், மலட்டுத்தன்மை இருக்க வேண்டும் என்பதை வாடகைத் தாய்க்கு கட்டாயமாக்க முடியாது” என்று மல்ஹோத்ரா எழுதினார், மலட்டுத்தன்மையை நிரூபிப்பதற்கான சான்றிதழ், அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் வாழும் உரிமையின் ஒரு பகுதியாக தனியுரிமையை மீறுவதாகும், என்றும் அவர் எழுதினார்.

சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனை ஒட்டுமொத்த வாடகைத் தாய் முறைக்கும் கேடு விளைவிக்கும். 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குஜராத் தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வெபினாரில் கருத்தரித்தல், ஐ.வி.எஃப் மற்றும் வாடகைத் தாய் நிபுணரான டாக்டர் நயனா படேல் பேசுகையில், ” சட்டத்தின் எந்த விதியையும் மீறியதற்காக மருத்துவ பயிற்சியாளருக்கு, இந்தச் சட்டம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 10 லட்சம் அபராதம் ஆகியவற்றை வழங்குகிறது. இது மிகவும் கடுமையான விதியாகும். இது அனைத்து மருத்துவர்களையும் இந்த நடைமுறைகளை செய்வதிலிருந்து தள்ளி வைக்கும், மேலும் அவர்கள் வாடகைத் தாய் நடைமுறைகளை மேற்கொள்ள மாட்டார்கள். உலகில் வேறு எந்த நாட்டிலும் இது போன்ற கடுமையான ஏற்பாடு இல்லை” என்றார்.



Read in source website

 சர்வதேச அளவில் பொருளாதாரம் தேக்க நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சி அடைந்த உலக நாடுகள் பலவும் விலைவாசி உயர்வாலும், எரிசக்தி தட்டுப்பாட்டாலும் செய்வதறியாது திகைக்கின்றன. அவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியா சாமர்த்தியமாக தன்னை பாதுகாத்துக் கொள்கிறது என்றாலும்கூட, நாமும் பெரும் பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது.
 ஆண்டுதோறும் சர்வதேச நிதியம் வருடாந்திர உலக பொருளாதாரக் கணிப்பை வெளியிடுவது வழக்கம். 2022-க்கான கணிப்பில் ஜூலை மாத கணிப்பை 0.6% குறைத்து 6.8%-ஆக நமது வளர்ச்சி இருக்கும் என்று கூறியிருப்பது கவலையளிக்கிறது.
 2021-22 நிதியாண்டில் நமது வளர்ச்சி 8.7%-ஆக இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சர்வதேச நிதியம் ஜனவரி மாதம் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை 8.2%-ஆக கணித்திருந்தது. ஏப்ரல் மாதம் அதை 7.4%-ஆகக் குறைத்தது. நேற்று, 2022 நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8% அளவில்தான் இருக்கும் என்கிற கணிப்பை சர்வதேச நிதியம் இப்போது வெளியிட்டிருக்கிறது.
 சர்வதேச வளர்ச்சியும், 2021-இல் இருந்த 6%-லிருந்து நடப்பு நிதியாண்டில் 3.2%-ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த 2023 நிதியாண்டில் மேலும் குறைந்து 2.7% அளவில்தான் இருக்கும் என்பது சர்வதேச நிதியத்தின் கணிப்பு. 2001-க்குப் பிறகு இந்த அளவுக்கு பலவீனமான வளர்ச்சி இருந்ததில்லை. உலக நிதிநெருக்கடி, கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காலம் ஆகியவை மட்டுமே விதிவிலக்கான சில கட்டங்கள்.
 உலகின் பெரிய பொருளாதாரங்கள் எல்லாமே தள்ளாடுகின்றன. 2022 நிதியாண்டின் முதல் அரையாண்டில் அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் ஜிடிபி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் தொடர்ந்து காணப்படும் கொவைட் 19 காரணமான பொது முடக்கங்களும், மனைவணிகத் துறையின் அதிகரித்த பிரச்னைகளும் சீனாவின் வளர்ச்சியைப் பாதித்திருக்கின்றன.
 உலகப் பொருளாதாரம் கடுமையான சவால்களை எதிர்கொள்வதற்கு, சர்வதேச நிதியம் மூன்று காரணங்களைச் சுட்டுகிறது. ரஷிய - உக்ரைன் போரால் ஏற்பட்டிருக்கும் எரிசக்தி தட்டுப்பாடு, விலைவாசி உயர்வால் பல வளர்ச்சி அடைந்த நாடுகளில் காணப்படும் அன்றாட வாழ்க்கை பாதிப்பு, சீனப் பொருளாதாரத்தின் பின்னடைவு ஆகிய மூன்றும் முக்கியமான காரணிகளாகக் கூறப்படுகின்றன.
 2023-இல் உலகப் பொருளாதாரம் மூன்றில் ஒரு பங்குக்கும் கீழே சுருங்கலாம் என்பது சர்வதேச நிதியத்தின் அறிக்கையில் காணப்படும் அதிர்ச்சி தரும் தகவல். அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், சீனா மூன்றுமே தொடர்ந்து பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ளும் என்றும், 2023 மிகப் பெரிய தேக்கத்திற்கு உலகை உள்ளாக்கும் என்றும் தெரிவிக்கிறது அந்த அறிக்கை.
 இந்தியா மட்டுமல்ல சீனாவும் சர்வதேச நிதியத்தின் அறிக்கையில் முக்கியத்துவம் பெறுகிறது. 2021-இல் 8.1% அளவிலான வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்ட சீனாவின் தற்போதைய வளர்ச்சி கணிப்பு வெறும் 3.2% மட்டுமே. சீனப் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு வகிக்கும் மனைவணிகத் துறை, மிகப் பெரிய சரிவை எதிர்கொள்வதன் விளைவு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சர்வதேச விநியோகச் சங்கிலியில் சீனா முக்கிய பங்கு வகிப்பதால், ஏனைய நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
 ரஷியாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு ஏழு மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், அதனால் ரஷியாவைப் போலவே ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் பெரும் பிரச்னைகளை எதிர்கொள்கின்றன. மிக முக்கியமாக எரிசக்தி பிரச்னை ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளையே பாதித்திருக்கிறது.
 இலங்கை அளவுக்கு இல்லாவிட்டாலும்கூட, பல ஐரோப்பிய நாடுகளில் அவ்வப்போது ஏற்படும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய கூட்டமைப்பு, ரஷிய கச்சா எண்ணெய்யைத் தவிர்க்க முடிவெடுத்திருக்கும் நிலையில், நிலைமை மேலும் மோசமாகலாம்.
 ஐரோப்பாவில், உக்ரைன் போருக்குப் பிறகு, எரிசக்தி தொடர்பான விலைவாசி சமீப மாதங்களில் 40% அளவுக்கு அதிகரித்திருக்கிறது. மொத்த விலைவாசியும், உணவுப் பொருள் தொடர்பான விலைவாசியும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்திருக்கின்றன. அவற்றைவிட எரிசக்தி விலை உயர்வு அதிகம். பெட்ரோல் - டீசல் விலை பிரிட்டனில் 70%, ஸ்பெயினில் 60% என்றால் நெதர்லாந்தில் 100%-க்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.
 ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியிருக்கும் நிலைமை. ஜெர்மனி தனது உள்நாட்டுத் தேவையில் 38% ரஷிய கச்சா எண்ணெய்யை நம்பியிருக்கிறது. பெல்ஜியம், ஃபின்லாந்து, நெதர்லாந்து ஆகியவை 50%-க்கும் அதிகம். வேறு பல ஐரோப்பிய நாடுகள் ரஷிய கச்சா எண்ணெய்யை மட்டுமே நம்பியிருப்பவை.
 பல ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலைமை அந்த அளவுக்கு மோசமில்லை என்றாலும், அதை நினைத்து நாம் மகிழ்ச்சி அடையவோ, அசிரத்தையாகவோ இருக்க முடியாது. ஏனென்றால், சாமானிய இந்தியன் சர்வதேச அரசியலை புரிந்துகொள்பவன் அல்ல. அவனது அன்றாட வாழ்க்கையை விலைவாசியும், எரிசக்தித் தட்டுப்பாடும், வேலைவாய்ப்பும் பாதிக்கின்றன.
 சர்வதேச நிதியத்தின் கணிப்பு நிதியமைச்சகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி!



Read in source website

 தமிழர்கள் இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் மக்களின் கலாசாரம், பண்பாடு இவற்றில் இருந்து வேறுபட்டவர்கள் என்ற பிரசாரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உண்மையில் பாரத தேசத்தின் பிற பகுதிகளில் வாழும் மக்களிடமிருந்தும் அவர்களின் பண்பாட்டுக் கூறுகளில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டவர்களாகத் தமிழர்கள் இருந்திருக்கிறார்களா என்ற வினாவுக்கான விடையை நம்முடைய வரலாற்றில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். தமிழர்களைப் பொறுத்தவரை சங்க இலக்கியம் முதல் சமய இலக்கியங்கள் வரை மிக முக்கிய சான்றாதாரங்களாக இருக்கின்றன.
 கல்வெட்டுகளும் செப்பேடுகளும் தமிழர்கள் யார், அவர்களின் வாழ்க்கை முறை என்ன என்பதை விளக்குவதாக இருக்கின்றன. தற்போது தமிழகத்தில் தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல என்ற கோஷம் பெரிதாக எழுப்பப்படுகிறது. இதற்குள் அரசியல் பொதிந்திருக்கிறது. எனில் தமிழர்கள் மதமற்றவர்களா என்ற வினா எழுகிறது. உண்மையில் தமிழர்கள் யார்? தமிழர்களுக்கென்று மதம் இல்லையா? அல்லது தமிழர்கள் பின்பற்றிய மதம் எது?
 இந்த வினாக்களுக்கு நம்முடைய இலக்கியங்களே மிகத் தெளிவாக விடை சொல்கின்றன. சங்க இலக்கியத்திலும் தெய்வம் இருக்கிறது. தொல்காப்பியம் மரபியலில் கருப்பொருள் பற்றிச் சொல்லுமிடத்து,
 தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
 செய்த யாழின் பகுதியோடு தொகை இ
 அவ்வகைப் பிறவும் கருவென மொழிப
 என்று தெய்வத்தை முதன்மைப்படுத்துகிறார். இதுவும் தான் வகுத்ததெனக் காட்டாமல் "மொழிப' என்று தன் காலத்திற்கும் முன்பே தெய்வம் பற்றிய சிந்தனை இருந்ததை உறுதி செய்கிறார்.
 முருகக்கடவுள், திருமால், சிவன், இந்திரன், கொற்றவை என்று தெய்வங்களைத் தெளிவாக தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்தத் தமிழ் தெய்வங்கள் யார்? தெய்வங்கள் குறித்தான தொன்மக் கதைகள் சங்கத் தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு இடம் பெற்றிருக்கின்றன?
 தமிழர்களுக்கென்று சமயங்களும் வழிபடு தெய்வங்களும் வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன. ஹிந்து என்ற ஒற்றைச் சொல்லுக்குள் நம்முடைய தமிழ்ச் சமயங்களையும் கொண்டுவந்துவிடும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ஒருபுறம் வாதிடுகின்றனர்.
 சனாதனம் தமிழர்களுக்கானது அல்ல. தமிழர்கள் வேதநெறியைப் பின்பற்றியவர்களும் அல்ல என்பது இவர்களின் வாதம். சனாதனம் வேதங்களை ஏற்றுக் கொள்வது. வேதங்களின் வழியில் வழிபாட்டு முறைகளைக் கொண்டிருப்பது. இவை தமிழரின் வழிபாட்டு முறைகளிலிருந்து மாறுபட்டவை என்றும், சனாதனம் பாரத தேசம் முழுமையும் பின்பற்றப்பட்டு வந்த மெய்யியல் கோட்பாடு அல்லது வாழ்வியல் தத்துவம் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
 தமிழருக்கும் சம்ஸ்கிருதத்தின் நான்கு வேதங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? தமிழர்கள் வேதங்களை ஏற்றுக் கொண்டவர்கள் இல்லையா என்ற வினாவுக்கு விடை தேடினால் குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். சங்க இலக்கியங்களில் சனாதனம் என்றோ ஹிந்து என்றோ எந்தக் கருத்தியலும் இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால், புறநானூறு தொடங்கி சங்க இலக்கியத்தின் பல இடங்களில் வேதங்கள், வேதம் பற்றிய கருத்துகள், வேதங்களைக் கற்பித்த அந்தணர்கள், அவர்களது கடமைகள், சமூகத்தில் அவர்களின் உயரிய நிலை என்று பல உண்மைகள் காணக்கிடைக்கின்றன.
 "அந்தணன்' என்ற சொல்லை அம் - தண் - அன் எனப் பிரித்துப் பொருள் கொண்டால் முற்றிலும் நல்ல இயல்புகளையும் இரக்கத்தையும் உடையவன் என்று பெப்ரிசிஸ் விளக்கம் தருகிறார். கல்வியாளர்களான இவர்கள் பார்ப்பார் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். தாமப்பல் கண்ணனார் என்ற புலவர் சோழனின் முன்னோர்கள் பார்ப்பனர் மனம் நோகும்படியான செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்று புறநானூற்றில் பேசுகிறார்.
 அந்தணர்கள் மன்னர்களுக்கு நெருக்கமாக இருந்துள்ளனர். "அறுதொழில் அந்தணர்', "அறவாழி அந்தணர்' என்று பெருமையாகவே இவர்கள் பேசப்படுகின்றனர். இன்றைய தமிழகத்தில் அந்த வகுப்பைச் சேர்ந்தவர்களைப் பற்றிய ஒருசாராரின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டதாக அந்தணர்கள் மிகுந்த மரியாதையோடு நடத்தப்பட்டுள்ளனர் என்பதும் தெரிகிறது.
 புறநானூற்றில் சோழரும், பாண்டியரும் செய்த வேள்விகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வேள்விகள் பெரிய அளவில் மிகுந்த விருப்பத்தோடு மன்னர்களாலேயே செய்யப்பட்டிருக்கின்றன. புறநானூற்றின் 397-ஆவது பாடல், "அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த தீயோடு விளங்கும் நாடன்' என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பெருமையாக சொல்லப்பட்டு இருக்கிறான்.
 புறநானூற்றில் 400-ஆவது பாடல், வேதங்களை அறிந்த அந்தணர் நிறைந்த வேள்விச் சாலைகளை உடைய நாட்டின் சொந்தக்காரன் சோழன் நலங்கிள்ளி என்று புகழ்கிறது. பாண்டியன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, பல யாகசாலைகளைக் கட்டி யாகங்களைச் செய்தவன் என்பதாலேயே இந்தப் பெயர் பெற்றிருக்கிறான். சோழர்களும், பாண்டியர்களும் தமிழ் வரலாற்றில் தமிழர் பெருமையின் அடிநாதமாக விளங்குபவர்கள். இவர்களை ஒதுக்கிவிட்டு தமிழகத்தையும் தமிழரின் வரலாற்றையும் பண்பாட்டையும் எழுத இயலுமா?
 புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலிலேயே "மறைநவில் அந்தணர்' என்று அந்தணர்களும் வேதமும் சுட்டப்பட்டு விடுகிறது. 400-ஆவது பாடல் வரை பல இடங்களில் "நால்வேதம்', "எழுதாக்கிளவி' என்றும், "மறை', "மறைபொருள்' என்றும் வேதம் சுட்டப்படுகிறது.
 தமிழர்களின் முழுமுதல் தெய்வமாக சிவபெருமான் வணங்கப்பட்டதை கடவுள் வாழ்த்துப் பாடல் சொல்கிறது. தமிழ் மொழியை நமக்குத் தந்து, அதனைக் காப்பதற்கென்று சங்கம் அமைத்து, முதல் சங்கத்தின் தலைவனாக இருந்து சிவபெருமானே தமிழ் வளர்த்ததாக சங்க இலக்கியப் பாடல் சொல்கிறது. சிவபெருமானுக்கும் கொற்றவைக்கும் மகனான முருகன் தந்தையை தொடர்ந்து தமிழ் வளர்த்த தெய்வமாக அறியப்படுகிறான். ஊர்தோறும், ஊரின் நடுவே மன்றம், கோட்டம் என்று கோவில் இருந்ததை சங்க இலக்கியம் உறுதிப் படுத்துகிறது.
 இன்றைக்கு தமிழர்களின் சமயம் சைவம் என்றும் வைணவம் என்றும் சொல்கிறார்கள். சைவர்கள் புனித நூலாகக் கருதுவது தேவாரம், திருவாசகம் முதலிய சைவ சமய இலக்கியங்களை. வைணவத்தார் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையே தங்களின் புனித நூலாகக் கொண்டாடுகிறார்கள்.
 அனைத்து சிவாலயங்களிலும் இன்றளவும் அன்றாடம் பாடப்படுவது மாணிக்கவாசரின் திருவாசகம், மூவர் தேவாரம். அவை, "வேதமோ டாறங்க மாயி னானை', "வேதநாதன்', "வேத கீதன்', "ஆரணன்காண்' என்றே இறைவனை வர்ணிக்கின்றன.
 பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தரின் வரலாற்றைச் சொல்லுமிடத்து சேக்கிழார்,
 வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
 பூதபரம் பரைபொலியப் புனிதவாய்
 மலர்ந்தழுத
 சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
 பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்
 என்று கூறுகிறார். இதனை சனாதனத்திலிருந்து நாங்கள் வேறுபட்டவர்கள் என்று வாதிடுவோர் ஏற்கிறார்களா? பெரிய புராணத்தையும் திருவாசகத்தையும் தங்களுடையது அல்ல என்று மறுக்கப் போகிறார்களா?
 "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமூலரும் இதே சைவ நெறியை முன் வைக்கிறார்."வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலார் சுவாமிகளும்,
 எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
 எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
 செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
 திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
 என இதே சைவ நெறியைத்தான் பாடுகிறார். சைவ நெறி என்பது வேதங்களை ஏற்றுக் கொண்டது. வேதவடிவாய் வேதத்தின் விழுப்பொருளாய் விளங்குபவன் இறைவன் என்பதே சமய நெறி.
 வைணவ நூல்களிலும் இப்படித்தான், "வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்' என்று சொல்லியிருக்கிறார்கள். வைணவத்தில் திருமால் தெய்வமாக வணங்கப்படுகிறார்.
 சனாதன தர்மத்தின் ஸ்ரீமத் பாகவதம் காட்டும் அதே திருமாலே தமிழராலும் வணங்கப்படுகிறார். 108 வைணவத் திருத்தலங்கள் பெருமையாக சொல்லப்பட்டிருக்கின்றன. இந்தத் திருத்தலங்களில் வடமொழி வேதத்தோடு நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களும் வழிபாட்டில் இடம்பெறுகின்றன. தமிழகம் தாண்டியும் கோதை நாச்சியாரின் திருப்பாவை பாடப்படுகிறது.
 அரசியல் தளத்தில் சமய அடையாளங்கள் பற்றிப் பேசுவோர் சைவம், வைணவம் அல்லது மாலியம் என்று தமிழர் சமயங்களை அடையாளப்படுத்துவோர் சனாதனம் அல்லது ஹிந்து சமயத்திலிருந்து முற்றிலும் மாறானது என்று நிறுவுவதற்கு ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.
 தேவாரம், திருவாசகம், திவ்ய ப்ரபந்தம் போன்ற நூல்களை சமய இலக்கியங்கள் என்று ஏற்றுக் கொண்டால் அவற்றில் வேதம் முழுமையாக விரவிக்கிடக்கிறது. சமய இலக்கியங்களை ஒதுக்கிவிட்டால் தமிழரின் சமயத்திற்கான சான்றுகளைக் காட்ட இயலாது. வழிபாட்டு முறைகளை சமயத்திற்கான அடிப்படைகளை நிறுவுவதற்கான சாத்தியம் இல்லாமல் போய்விடும்.
 அரசியலோ ஆன்மிகமோ தமிழர் வாழ்வியல் பாரதப் பாரம்பரியத்தோடு ஒத்திசைந்தே இருக்கிறது. விருந்தோம்பல் தொடங்கி விழுமியங்கள் அனைத்திலும் ஒற்றுமைகள் நிறைந்திருக்கின்றன. எதிர்த்தரப்பில் வலுவான சிந்தனைகளை முன்வைப்போர் இல்லாத காலங்களில் ஆதாரங்களற்ற பேச்சுக்கள் அரங்கம் ஏறலாம். அடிப்படைகளற்ற சித்தாந்தம் காலத்தால் நிலைபெற முடியாமற் தொலைந்து போகும்.
 "அரியும் சிவனும் ஒன்னு அறியாதவர் வாயில் மண்ணு' என்றொரு சொல்வழக்கு உண்டு. அதைப்போல சனாதனம் ஆகிய ஹிந்து மதமும் சைவ- வைணவ சம்பிரதாயங்களும் ஒன்றே என அறியாதவர் அறிந்து கொள்ள தமிழின் சங்க, சமய இலக்கியங்களைக் கையில் கொடுத்து படிக்கச் சொல்லலாம்.
 
 கட்டுரையாளர்:
 ஊடகவியலாளர்.
 



Read in source website

எளியோருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் சாதகமாகச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கலும் குழப்பமும் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதில் பெரும் தடையாக உள்ளன. மணமாகாத பெண்ணின் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பை இப்படியும் பார்க்கலாம். பெண்களுக்கான மருத்துவரீதியான கருக்கலைப்புச் சட்டம் இந்தியாவில் 1971இல் அமல்படுத்தப்பட்டது. கருக்கலைப்புக்கான தகுதி, கருக்கலைப்புக்கான காலம் போன்றவற்றை இச்சட்டம் நிர்ணயித்திருந்தது. அதுவரை பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்வதும் விருப்பமில்லாத கருவைச் சுமப்பதுமாக இருந்த பெண்களுக்கு இது ஓரளவுக்கு ஆறுதலாக அமைந்தது. இச்சட்டத்தின் நெறிமுறைகள் சிலவற்றில் மாற்றம் செய்யப்பட்டு, 24 வாரம் வரையிலான கருவை மருத்துவ முறைப்படி கலைக்கலாம் என்கிற சட்டம் 2021இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.



Read in source website

தமிழகக் கடலோரங்களில் பாரம்பரிய மீனவரின் சுருக்குமடி மீன்பிடித்தல் முறை, அந்தந்தப் பிராந்தியங்களில் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைக்குக் காரணமாகியிருப்பது நாம் அறிந்ததே. தென்பகுதியில் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நாரிழைப் படகுகள் மூலம் நடக்கும் இந்தத் தொழில், வடக்கு மாவட்டங்களில் அனுமதி கிடைத்தால், மீன்பிடி தடைக்காலம் தவிர்த்த மற்ற காலத்தில் நாரிழைப்படகுகள், விசைப்படகுகள் மூலம் இணைந்து நடத்தப்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆட்சியதிகாரத்தில் இருப்போரின் புரிதலின்மை காரணமாகவும், பிராந்தியத்தின் தனிநபர் விருப்பு, வெறுப்புகளாலும் இத்தொழில் பிரச்சினைக்குள்ளாகி கரைக்கடல், அண்மைக்கடல் நீரோட்டத்தில் தற்காலிகமாய்ப் பயணிக்கும் மீன்வளம் ஒருவருக்கும் பயன்படாமல், வீணாய்க் கடலில் மடிந்துவிடுகிறது.

சுருக்குமடித் தொழில்: பட்டறிவின் துணைகொண்டு, பாரம்பரிய மீனவர்கள் மேற்கொண்ட அடுத்தகட்டத் தொழில்நுட்ப நகர்வே சுருக்குமடி. கைக்கு அடக்கமான மணிவலையை வீசிவந்த மீனவர்கள், பங்காளிகளாய்ப் பலரையும் இணைத்துக்கொண்டு, நீரோட்டத்தில் பயணிக்கும் மீன்கூட்டத்தை விரட்டி மடிவளைத்துப் பிடிப்பதுதான் சுருக்குமடித் தொழில். வணிக விசைப்படகு மீனவரின் இழுவைமடிபோல், சுருக்குமடி கடலடிப் பாறைகளைப் பாழ்படுத்துவதில்லை. சுற்றுச்சூழலுக்கோ, மீன்களின் இனவிருத்திக்கோ எந்த விதத்திலும் ஊறுவிளைவிக்காத இத்தொழில், நீரோட்டத்தில் மேலெழுந்து பயணிக்கும் மீன்கூட்டத்தையே குறிவைக்கிறது. சூரிய உதயத்துக்குப் பின் கரைக்கடல் நீரோட்டத்தைக் கணித்த பிறகே, இவர்களது மீன்வேட்டம் தொடங்குகிறது. விரட்டப்படும் மீன்கள் பிடிபடாமல் வேட்டம் பலமுறை தோல்வியடைவதும் உண்டு. உணவுக்காகவும் நீரின் வெப்பநிலை மாற்றத்தின் காரணமாகவும் தென் ஆப்பிரிக்கக் கடலடிப் பாறைப் பகுதியிலிருந்து தொடங்கும் மீன் கூட்டத்தின் பயணம், எதிரெதிராக இயங்கும் கரைக்கடல் நீரோட்டங்களால் ஆங்காங்கே கட்டுப்படுத்தப்பட்டு, அப்பகுதி கடற்கரையூர்களின் வரப்பிரசாதமாக மாறிவிடுகிறது. குறிப்பிட்ட காலத்துக்குள் அவற்றின் ஆயுளை முடித்துக்கொள்ளும் தன்மை புரிந்தே, பாரம்பரிய மீனவர்கள் கரைக்கடலிலும், அண்மைக்கடலிலும் அவற்றை விரட்டிப் பிடிக்கிறார்கள்.

பிரச்சினையின் அடிநாதம்: வழக்கமான செவுள்வலைகளைப் போலல்லாமல் சுருக்குமடி அதிக முதலீட்டைக் கோருவதால், பாரம்பரிய மீனவரில் பல குடும்பங்கள் இணைந்து இந்தத் தொழிலைச் செய்கிறார்கள். ஆனால், சாதாரண செவுள்வலைத் தொழில் செய்பவரும், சுருக்குமடி வைத்துப் பெருவேட்டம் செய்பவரும் பிடிக்கும் மீன் அளவிலும், தரத்திலும் வித்தியாசம் இருப்பதால், இத்தொழில் கடலோர ஊர்களில் தனிநபர் விருப்பு, வெறுப்புகளுக்குக் காரணமாகிவிடுகிறது. இதுவே சுருக்குமடிப் பிரச்சினையின் அடிநாதம். பெருவாரியான மீன்கள் கரைக்குக் கொண்டுவரப்பட்டு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளுக்குக் காரணமாகும் இச்சுருக்குமடித் தொழில், உள்ளூர் - பிராந்திய அரசியலில் சிக்கிச் சீரழிவதும் உண்டு. அடிப்படையில் ஆதார விலை ஏதும் இல்லாத இந்த மீன்களின் விலையைப் பெரும்பாலும் உள்ளூர் வியாபாரிகளே தீர்மானிக்கிறார்கள். கடலில் பிடிபடும் மீன்களுக்கு அடிப்படையான ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டுமென்ற கோரிக்கை கடற்கரையூர்களில் இருந்தாலும், மீன் விலையை உள்ளூர் சந்தையே நிர்ணயிக்கிறது.

சுருக்குமடிக்குப் போகும் நாட்களில் சாதாரண செவுள்வலைக்குப் போகும் மீனவர்கள் கொண்டுவரும் மீன்களுக்கான விலை, சுருக்குமடி மீன்களை எதிர்பார்த்தே வியாபாரிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. சுருக்குமடியால் கரைக்குக் கொண்டுவரப்படும் பெருவாரியான மீன்களால், விலை இறங்கிவிடுவது ஒருபுறமென்றால், தரம் காரணமாகச் சுருக்குமடி மீன்களையே விரும்பி எடுக்கும் உள்ளூர் வியாபாரிகளின் போட்டியே, பிரச்சினை தீவிரமடைவதற்கான முக்கியக் காரணம். இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் மிகவும் பிரபலமாய் இருக்கும் இத்தொழிலை, இங்கு ஏன் தடைசெய்ய வேண்டும் என்பது சுருக்குமடி மீனவரின் எளிமையான கேள்வி. மேற்குக் கடற்கரையில் குஜராத் தொடங்கி கேரளம் வரை, செழுமையான அரபிக் கடலில் மீன்பாட்டுக்குக் குறைவில்லை. பரந்த கண்டத்திட்டுக் கடல் பரப்பில் தொழில் போட்டியில்லை. சுருக்குமடி மீனவருக்கும், செவுள்வலை மீனவருக்கும் சண்டைச் சச்சரவுகள் இல்லை. ஆனால், தமிழகத்தில் பிரச்சினைகள் பூதாகரமாகி, பிராந்தியத்தைக் கலவரநிலைக்குத் தள்ளிவிடுகின்றன.

களநிலவரமும் தீர்வும்: தமிழகத்தின் குறைவான கண்டத்திட்டுக் கடல்பரப்பில் தொழில்போட்டி அதிகம். ஒரே கடல்பரப்பில் தொழில் செய்து, ஒரே கடற்கரைக்குத் தாங்கள் பிடித்த மீன்களை இரண்டு தரப்பும் கொண்டுவரும் வேளையில், கண் முன்னே தெரியும் சுருக்குமடியின் அதீத மீன்வரத்தும், அதன் தரமும் செவுள்வலை மீனவரைக் கோபமுறச் செய்துவிடுகிறது. ஒப்பீட்டில் சுருக்குமடி மீனவர்கள் சிறுபான்மையாகி; செவுள்வலை மீனவர்கள் பெரும்பான்மையாகி, இழப்பும் அவர்கள் பக்கமே இருப்பதால் அரசுக்கு அவர்களோடு நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. தமிழகத்தின் குறைவான கண்டத்திட்டுப் பகுதியில், அதிகமான இழுவைவலை மீன்பிடிப்பே கடல் மலடானதற்கான அடிப்படைக் காரணம். மத்திய - மாநில அரசுகளின் ஆழ்கடல் மீன்பிடிப்பு, ஊக்குவிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்குப் பின்னும் இழுவைமடி மீன்பிடிப்பை இங்கு நிறுத்த முடியவில்லை. குறிப்பிட்ட காலத்துக்குள் தானாகவே அழிந்துவிடும் மீன்வளத்தைச் சுருக்குமடி மீனவர்கள் பிடிப்பதைத் தடுப்பதில் நியாயமில்லை என்னும் வேளையில், அவர்களுடன் வாழும் செவுள்வலை மீனவரின் பொருளாதார இழப்பையும் கருத்தில் கொண்டாக வேண்டும். இதன் காரணமாகவே மாநில அரசின் மீன்வளத் துறை, இடத்துக்குத் தகுந்தாற்போல் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.

களநிலவரம் சார்ந்து அக்கறையோடு ஆய்வு நடத்தினால், சுருக்குமடிப் பிரச்சினைக்கான தீர்வு அரசின் மீன்வளத் துறையிடமோ, அதிகார மையங்களிடமோ இல்லை. மாறாக, பாரம்பரிய மீனவரின் ஒற்றுமையிலேயே இருக்கிறது. சுருக்குமடிக்குப் போகும் நாட்களில், செவுள்வலை மீனவர்களின் மீன்களுக்கு ஏலத்தில் முன்னுரிமை கொடுத்து விற்றுத் தீர்ந்தபின், சுருக்குமடி மீன்கள் ஏலத்துக்கு வரும் ஏற்பாட்டுக்குச் சுருக்குமடி மீனவர்களும் வியாபாரிகளும் உடன்பட வேண்டும்.

அடுத்ததாகச் சுருக்குமடியின் வலைக்கண்ணியின் அளவிலும் பிரச்சினைகள் இருப்பதாகச் செவுள்வலை மீனவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். அளவில் குறைந்த நெத்திலி போன்ற பொடிமீன்கள் சுருக்குமடிக் கண்ணிகளிலிருந்து வெளியேற முடியாததால், பெருங்கூட்டமாய் வரும் இணைமீன்களுக்கும், துணைமீன்களுக்கும் வழித்தடத்தில் உணவில்லாமல் பாதையை மாற்றி ஆழ்கடல் நோக்கிப் பயணித்துவிடுவதால் தொழில்வளம் பாதிக்கப்படுகிறது என்கிறார்கள். கடல்வளத்தைப் பாழ்படுத்தும் வணிக மீனவரின் இழுவைமடியின் தூர்மடிக் கண்ணிகள் 12 மி.மீ-க்கும் குறைவாக இருக்கும் நிலையில், சுருக்குமடிக் கண்ணிகளின் அளவு 18/20 மி.மீ. அளவிலேயே இருக்கின்றன. சுருக்குமடிக் கண்ணிகளின் அளவை, அதன் உற்பத்தி - விநியோக நிலையிலேயே அரசு தீவிரமாய்க் கண்காணிக்க வேண்டும். இதன்மூலமே கரைக்கடலில் வீணாய் அழியும் மீன்வளம் பயன்பாட்டுக்கு வந்து, சுருக்குமடிப் பிரச்சினையும் தீர்வை நோக்கி நகரும்.  இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் மிகவும் பிரபலமாய் இருக்கும் இத்தொழிலை, இங்கு ஏன் தடைசெய்ய வேண்டும் என்பது சுருக்குமடி மீனவரின் எளிமையான கேள்வி.

ஆர்.என்.ஜோ டி குருஸ்
‘ஆழி சூழ் உலகு’, ‘கொற்கை’
உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com



Read in source website

வேதி வினைகளில் உள்ள பொதுவான சிக்கல்களைக் குறைத்து, எளிய முறையில் பயன்மிகு வேதிப்பொருட்களைக் கட்டமைத்தல் தொடர்பான ‘கிளிக்’ வேதியியல் (Click chemistry), பயோ ஆர்தாகனல் வேதியியல் (Bio orthogonal chemistry) ஆகிய புதிய துறைகளை உருவாக்கியமைக்காக, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு கரோலின் ஆர்.பெர்டோசி, பேரி ஷார்ப்லெஸ் (அமெரிக்கா), மோர்டன் மேல்டால் (டென்மார்க்) ஆகிய மூன்று வேதியியலாளர்களுக்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து, விவசாயம் சார்ந்த மூலக்கூறுகள் தயாரித்தலில் புதிய கோணத்தில் பயனுள்ள மூலக்கூறுகளை உருவாக்க உதவும் கிளிக் கெமிஸ்ட்ரி என்கிற வேதிவினைக்கு அடித்தளமிட்ட பேரி ஷார்ப்லெஸ், வேதியியலுக்காகப் பெறும் இரண்டாவது நோபல் இது. 2000-ஐ ஒட்டிய ஆண்டுகளில் எளிய, துரிதமான, தேவையற்ற துணைப்பொருட்களை அதிகம் உருவாக்காமல் தேவையான மூலக்கூறுகளை உற்பத்திசெய்யும் வேதிவினை தொடர்பான ஆராய்ச்சியில் பேரி ஈடுபட்டிருந்தார். அதே ஆண்டுகளில் டென்மார்க்கின் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வேதியியலாளர் மோர்டன் மேல்டாலும் கிளிக் வேதிவினை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இவர்கள் இருவரும் தனித்தனியாக எளியமுறை கிளிக் வேதிவினையான தாமிர அயனியை வினையூக்கியாகச் செயல்படுத்தி அசைடு (N3) - அல்கைன் சுழற்சி சேர்க்கை என்ற புதிய முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள். கொக்கிகளைப் பூட்டுதல் முறையை உருவகப்படுத்தும் இந்த எளிமையான வேதிவினையால், ஒரு வேதிப்பொருளின் ஒரு முனையில் உள்ள கொக்கி போன்ற மூலக்கூறு (N3) மற்றொரு வேதிப்பொருளின் முனையில் உள்ள பூட்டு போன்ற மூலக்கூறுடன் தாமிர அயனி வினையூக்கி உதவியுடன் இணைத்து எளிய - பல்வேறு வேதிப்பொருட்கள் இணைக்கப்பட்ட சிக்கலான மூலக்கூறுகளை உருவாக்க முடியும்.



Read in source website

நோபல் பரிசு, 1833இல் பிறந்த ஆல்பிரெட் நோபலினுடைய உயிலின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. மனிதகுலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் பணியாற்றியவர்களுக்குத் தனது சொத்தின் 94 சதவீதத்தைப் பரிசாக அளிக்க வேண்டும் என்று அவர் உயில் எழுதிவைத்தார். இந்த உயிலின்படி 1901 முதல் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 1969இல் மேற்கண்ட துறைகளுடன் பொருளாதாரமும் (ஸ்வேரியஸ் ரிக்ஸ்பேங்க் வழங்கும் பரிசு) இணைக்கப்பட்டு, விருதுகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்த்தப்பட்டது. உலகில் வழங்கப்படும் பரிசுகளில் நோபல் பரிசே பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதுவரை 989 பேருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன; இவர்களில் 61 பேர் மட்டுமே பெண்கள்.



Read in source website