DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 10-10-2022

ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் முதல்  திரவநிலை  அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு(CNG) நிலையத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்த படி காணொளி காட்சி வாயிலாக  திங்கள்கிழமை திறந்து வைத்தார். 

மத்திய அரசு, தமிழ்நாட்டில் நகர இயற்கை எரிவாயு விநியோகத்தினை, குழாய்கள் மூலம் வழங்குவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அங்கீகாரத்தை, 7 நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் ராமநாதபுரம், ஆகிய 6 மாவட்டங்களுக்கு, மேற்படி உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அங்கீகாரம் AG&P பிரதம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 222 பகிர்மாண நிலையங்கள் மற்றும் 7 லட்சம் வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் பணியினை 8 வருடங்களில் இந்நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

தற்போது, AG&P பிரதம் நிறுவனம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாந்தாங்கல் கிராமத்தில், தமிழகத்தின் முதலாவது திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை அமைத்துள்ளது. இந்த எரிவாயு நிலையம் 30 கோடி ரூபாய் செலவில் 1.2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையத்தில் இரண்டு 56,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு கிடங்கு, ஆவியாக்கி இயந்திரம் மற்றும் உயர் அழுத்த பம்ப் அமைத்துள்ளது. இதன்மூலம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 70 பகிர்மான நிலையங்களுக்கும் மற்றும் 30,000 வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு AG&P நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முரளீதரன், இ.ஆ.ப., AG&P பிரதம் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தலைவர் அபிலேஷ் குப்தா, முதன்மை செயல்பாட்டு அலுவலர் சிரதீப் தத்தா மற்றும் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் ராணிப்பேட்டை மாவட்டம், மாந்தாங்கல் கிராமத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல். ஈஸ்வரப்பன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கரபாண்டியன், இ.ஆ.ப., மற்றும் AG&P பிரதம் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 



Read in source website

 

மும்பை: புனேவைச் சேர்ந்த தி சேவா விகாஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட் நிறுவனத்தின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது.

வங்கியில் கடன் வழங்க போதுமான மூலதனம் மற்றும் வருவாய் ஈட்ட வாய்ப்புகள் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, அக்டோபர் 10 முதல் தி சேவா விகாஸ் கூட்டுறவு வங்கி தனது வணிகத்தை நிறுத்துகிறது.

வங்கி சமர்ப்பித்த தரவுகளின்படி, டெபாசிட் காப்பீடு மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷனிடமிருந்து (டிஐசிஜிசி) 99 சதவீத டெபாசிட்தாரர்கள் தங்களது முழு டெபாசிட் தொகையையும் பெற உரிமை உண்டு. செப்டம்பர் 14ஆம் தேதி வரை, மொத்த காப்பீடு டெபாசிட்களில் ரூ.152.36 கோடியை டிஐசிஜிசி செலுத்தியுள்ளது. 

கடன் வழங்குவதற்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாததால் வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.



Read in source website

 

செப்டம்பர் மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீராங்கனையாக இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறந்த வீராங்கனையாகத் தேர்வானார் ஹர்மன்ப்ரீத். ஒருநாள் தொடரில் 3 ஆட்டங்களில் 221 ரன்களை எடுத்தார். 1999-க்குப் பிறகு இங்கிலாந்தில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்றது இந்திய மகளிர் அணி. இதையடுத்து செப்டம்பர் மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீராங்கனையாக ஹர்மன்ப்ரீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையையும் அவர் அடைந்துள்ளார். சக வீராங்கனை மந்தனா, வங்கதேச வீராங்கனை நிகர் சுல்தானை ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்த விருதை வென்றுள்ளார். 

33 வயது ஹர்மன்ப்ரீத் கெளர், இந்திய அணிக்காக 3 டெஸ்டுகள், 124 ஒருநாள், 135 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 



Read in source website

குஜராத்தில் நடைபெறும் 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 2 விளையாட்டுகளில் தலா 1 வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

சைக்கிளிங் விளையாட்டில் ஆடவருக்கான 119 கி.மீ. மாஸ்டு ஸ்டாா்ட் பிரிவில் தமிழகத்தின் ஸ்ரீநாத் லக்ஷ்மிகாந்த் 3-ஆம் இடம் பிடித்தாா். பஞ்சாபின் ஹா்ஷ்வீா் சிங் ஷெகோன், உத்தர பிரதேசத்தின் அரவிந்த் பன்வா் முறையே முதலிரு இடங்களைப் பிடித்தனா்.

மகளிருக்கான டிரையத்லானில் எஸ். ஆா்த்தி 1 மணி நேரம் 13.17 நிமிஷங்களில் 3-ஆவதாக இலக்கை எட்டி வெண்கலம் பெற்றாா். குஜராத்தின் பிரக்ஞா மோகன் (1:7.32) தங்கமும், மகாராஷ்டிரத்தின் மான்சி மோஹிதே (1:13.10) வெள்ளியும் வென்றனா்.

போட்டியின் பதக்கப்பட்டியலில் ஞாயிற்றுக்கிழமை நிறைவில் தமிழகம் 22 தங்கம், 21 வெள்ளி, 24 வெண்கலம் என 67 பதக்கங்களுடன் 5-ஆவது இடத்தில் நிலைத்திருக்கிறது. சா்வீசஸ் அணியினா் 51 தங்கம், 33 வெள்ளி, 29 வெண்கலம் என 113 பதக்கங்களுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனா். ஹரியாணா 95 பதக்கங்களுடன் (31/29/35) இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரம் 119 பதக்கங்களுடன் (30/33/56) மூன்றாவது இடத்திலும் உள்ளன.



Read in source website

தைவான் நாட்டின் இறையாண்மை சம்பந்தப்பட்ட விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லையென தைவான் அதிபர் சாய் இங் - வென் தெரிவித்துள்ளார். 

சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வருகிறது.

தைவானை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா். தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு எந்தத் தலைவா் சென்றாலும் அதற்கு சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது.

தைவானை தங்களுடன் இணைத்துக் கொள்ளும் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள, தேவைப்பட்டால் அந்தத் தீவின் மீது போா்த் தொடுக்கவும் தயங்கப்போவதில்லை என்று சீனா மீண்டும் உறுதிப்படுத்திய நிலையில் அங்கு பதற்றம் நிலவி வருவது குறிப்பிட்டத்தக்கதே. 

இன்று (அக்.10) தைவானில் தேசிய நாள் கொண்டாடப்படுகிறது. இது ‘டபுள் டென்த் டே’ , ‘டபுள் டென் டே’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் தேசிய நாளன்று தைவான் அதிபர் சாய் இங் - வென் பேசியதாவது: 

நமது நாட்டின் இறையாண்மை, சுதந்திரம், சமத்துவமான வாழ்கையை பாதுகாப்பதே தைவான் மக்களின் ஒருமித்த கருத்தாகும். இந்த விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த விவகாரத்துக்கு போரின் மூலம் தீர்வு காண்பது சரியாகாதென சீன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினேன். தைவான் மக்களின் இறையாண்மை சுதந்திரத்தை மதித்தால் மட்டுமே சீனாவுடனான உறவு தொடரும். 



Read in source website

புதுடெல்லி: இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் ஐ.நா சபையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை ஆக்க வேண்டும் எனவும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக்குழு தனது 11-வது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்தது. அதில், எல்லா மாநிலங்களில் ஆங்கிலத்தை விட பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து இந்தக்குழுவின் துணைத் தலைவரான பிஜேடி தலைவர் பார்த்ருஹரி மஹ்தாப் கூறுகையில், " அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு புதிய தேசிய கல்விக் கொள்கையின் படி கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி அல்லது பிராந்திய மொழி இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

பிரிவு "ஏ" மாநிலங்களில் இந்தி மொழிக்கு தகுந்த இடம் அளிக்கப்பட வேண்டும் என்றும். அது 100 சதவீதம் பின்பற்றப்பட வேண்டும். இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இருக்கும் ஐஐடி, மத்திய பல்கலை, கேந்திர வித்யாலையாக்களில் இந்தியே பயிற்று மொழியாகவும், பிறமாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.

பனாரஸ் இந்து பல்கலை. டெல்லி பல்கலை. ஜமியா மில்லியா இஸ்லாமியா, அலிகார் முஸ்லிம் பல்கலை-களில் 20-30 சதவீதம் தான் இந்தி மொழி பயன்படுத்தப்படுகிறது. இங்கு 100 சதவீதம் இந்தி மொழி பயன்படுத்தப்பட வேண்டும். ஆங்கிலம் என்பது வெளிநாட்டு மொழி. அதனால் நாம் இந்த காலனியாதிக்க சிந்தனைகளில் இருந்து வெளியேற வேண்டும்.

இஸ்ரோ அல்லது டிஆர்டிஓ மற்றும் உள்துறை அமைச்சகங்களில் 100 சதவீதம் இந்தி மொழி பயன்பாட்டில் உள்ளது என்று தெரிவித்தார்.

இந்தி மொழியின் பயன்பாட்டைப் பொறுத்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரசேதங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், உத்ராகண்ட், ஜார்கண்ட், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவை பிரிவு "ஏ". குஜராத் மகாராஷ்டிரா, பஞ்சாப், மற்றும் சண்டிகர், டையூ மற்றும் டாமன், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்கள் பிரிவு "பி". மற்ற மாநிலங்கள் பிரிவு "சி" என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் குழுவின் 11வது அறிக்கை இதுவாகும். இந்த மூன்று ஆண்டுகளில் இந்தக் குழு இரண்டு அறிக்கைகளை வழங்கி உள்ளது.

அலுவல் மொழிச்சட்டம் 1963 -ன் கீழ் கடந்த 1976-ஆம் ஆண்டு இந்த குழு அமைக்கப்பட்டது. இதில், 20 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் என 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்தக் குழு இந்தியை அலுவல் மொழியாக பயன்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆராய்ந்து தனது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கும். இந்தப் பரிந்துரைகளை ஏற்பதும் நிராகரிப்பதும் குடியரசு தலைவரின் விருப்பம்.



Read in source website

புதுடெல்லி: சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82.
முலாயம் சிங் யாதவ், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த திங்கள் கிழமை வரை சிசியு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முலாயம் சிங் யாதவ், பின்னர் ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு உயிர் காக்கும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

ஆசிரியர், மல்யுத்த வீரர், முதல்வர்.. முலாயம் சிங் யாதவ் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார். மத்தியில் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார். அடிப்படையில் முலாயம் சிங் யாதவ் ஓர் ஆசிரியர். மல்யுத்த வீரரும் கூட. படிப்படியாக அரசியலில் இடம்பெற்ற அவர் உ.பி. அரசியலின் முக்கியமான முகமாக உருவெடுத்தார். பாஜகவை ஆரம்பத்திலிருந்தே தீவிரமாக எதிர்த்து வந்தவர் முலாயம் சிங் யாதவ்

2012-ல் உ.பி.யில் சமாஜ்வாதி பெருவாரியான வெற்றி பெற்றது. அப்போது அவர் தனது மகன் அகிலேஷ் யாதவை, முதல்வராக பதவியில் உட்கார வைத்து வாரிசு அரசியல் சர்ச்சையில் இணைந்தார். உட்கட்சி பூசல், மகன் உயர்த்திய போர்க்கொடி என பல்வேறு நெருக்கடிகள் ஒருபுறம் வயது முதிர்வு மறுபுறம் என முடங்கிய முலாயம் சிங் யாதவ் கட்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த முலாயம் சிங் தாமாகவே லைம்லைட் அரசியலில் இருந்து ஒதுங்கினார். இருப்பினும், 2019 மக்களவைத் தேர்தலில் மைன்புரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Read in source website

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற அசோக விஜயதசமி நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர், இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறினர். அவர்கள் ‘‘இந்து கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர்களை வழிபட மாட்டேன்’’ என்று உறுதிமொழி ஏற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டெல்லி சமூக நலத் துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம், அதுகுறித்த படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து விமர்சித்த பாஜக, ராஜேந்திர பால் கவுதமை, பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்நிலையில், அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘யாருடைய நம்பிக்கைக்கு எதிராகவும் நான் பேசவில்லை. பாஜக பொய் பிரச்சாரம் மேற்கொள்கிறது’’ என்று குற்றம் சாட்டினார்.



Read in source website

நார்வே: 2022-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னாகே, டக்ளஸ் டயமண்ட், ஃபிலிப் டிப்விக் ஆகிய மூன்று அறிஞர்கள் நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

பொருளாதாரத்தில் வங்கிகளின் பங்கு, குறிப்பாக நிதிச்சுழல் நேரங்களில் வங்கிகளின் பங்கு குறித்த ஆராய்ச்சிக்காக இவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நிதிச் சந்தைகள் மேலாண்மை குறித்தும் இவர்கள் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுகின்றன. ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 2022 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தி ஸ்வெரிக்ஸ் ரிக்ஸ்பேங்க் பரிசு: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மட்டும் 1968-ஆம் ஆண்டில் ஸ்வெரிக்ஸ் ரிக்ஸ்பேங்க் பரிசு என்ற பெயரில் ஆல்ஃப்ரட் நோபல் நினைவாக பரிசு அறிவிக்கப்பட்டது. 1901-ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதே நடைமுறைகளைப் பின்பற்றி தி ஸ்வெரிக்ஸ் ரிக்ஸ்பேங் ப்ரைஸ் The Sveriges Riksbank Prize வழங்கப்படுகிறது. இந்த விருதினை முதன்முதலாக ராக்னர் ஃப்ரிஸ்ச் மற்றும் ஜான் டின்பெர்ஜென் என்ற பொருளாதார அறிஞர்கள் பெற்றனர். 1969-ல் முதல் இந்த விருது வழங்கப்பட்டது.



Read in source website

புதுடெல்லி: பொறாமை மற்றும் பாகிஸ்தான் தூண்டுதலின் பேரிலேயே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலவல் புட்டோ ஜர்தாரி கடந்த 7-ம் தேதி 2 நாள் பயணமாக ஜெர்மனி சென்றிருந்தார். அங்கு ஜர்தாரியும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அன்னலினா பார்பாக்கும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது ஜர்தாரி கூறும்போது, “காஷ்மீரில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெறுவது கவலை அளிக்கிறது.

இது பிராந்திய அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. சர்வதேச சட்டத்தின்படியும் ஐ.நா. தீர்மானங்களின்படியும் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காணாத வரை தெற்கு ஆசியாவில் அமைதி நிலவ வாய்ப்பில்லை” என்றார்.

பின்னர் அன்னலினா கூறும்போது, “காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காண ஐ.நா. தலையிட வேண்டும். இந்த விவகாரத்தில் ஐ.நா. தலையிட ஜெர்மனி ஆதரவு அளிக்கும். மேலும் சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் அரசியல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றார்.

இதற்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறும்போது, “காஷ்மீர் விவகாரம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள இருதரப்பு பிரச்சினை என்று தொடர்ந்து கூறி வருகிறோம். இதில் 3-ம் தரப்பு தலையிடுவதற்கு எவ்வித பங்கும் இல்லை. மாறாக நீண்ட காலமாக காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

இதனிடையே, இந்தியா மீதான பொறாமை மற்றும் பாகிஸ்தான் தூண்டுதலின் பேரிலேயே காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டுக்கு பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்து வருகிறது. இது இந்தியா மீது ஜெர்மனிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் பங்கு அதிகரித்து வருவதும் ஜெர்மனிக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, கடந்த மாதம் நடந்த ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், விரிவுபடுத்தப்பட்ட ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, ஜப்பான் மற்றும் பிரேசிலை சேர்க்கஆதரவு தெரிவித்தார். நேட்டோஅமைப்பில் உறுப்பினராகவும் ஐரோப்பாவில் சக்தி வாய்ந்ததாகவும் இருந்தபோதிலும், ஜெர்மனியை விரிவுபடுத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சேர்க்க பைடன் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு வங்கி அரசியல்

பாகிஸ்தான் ராணுவ பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி முடித்த அதிகாரிகள் மத்தியில், அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி காமர் ஜாவேத் பஜ்வா நேற்று முன்தினம் பேசும்போது, “பயிற்சி முடித்து ராணுவத்தில் சேரும் நீங்கள் ஜனநாயக அமைப்புகளை மதிக்க வேண்டும். நாட்டின் அரசமைப்பு சட்டம், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும்” என்றார்.

பஜ்வா தனது உரையின்போது, காஷ்மீர் என்ற வார்த்தையை உச்சரிக்கவே இல்லை. ஆனால், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமை யிலான பாகிஸ்தான் அரசு வாக்கு வங்கி அரசியலுக்காக காஷ்மீர் விவகாரத்தை அவ்வப்போது எழுப்பி வருவதாக கூறப்படுகிறது.



Read in source website

புதுடெல்லி: சந்தைப்படுத்துதல் நிகழ்வுகளில் பங்கேற்க கைவினைக் கலைஞர்கள் இடமிருந்து விண்ணப்பங்களை பெற இணையப் பக்கத்தை கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையம் தொடங்கியுள்ளது. இது கைவினைக் கலைஞர்களுக்கு முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சந்தை தளத்தை வழங்குகிறது.

கைவினைக் கலைஞர்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன், நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆண்டுதோறும் சுமார் 200 உள்நாட்டு சந்தைப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. விண்ணப்பித்தல் முதல் கடைகள் தேர்வு வரையிலான ஆன்லைன் நடவடிக்கை மற்றும் இறுதியாக கடைகள் ஒதுக்கீடு வரை அனைத்தும் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் செயல்முறை அனைத்து கைவினைஞர்களுக்கும் சமமான, நியாயமான மற்றும் வெளிப்படையான வாய்ப்புகளை வழங்கும்.

கைவினைக் கலைஞர்களுக்கு தெளிவை ஏற்படுத்த, விண்ணப்பம் தாக்கல் செய்வதற்கான பரந்த வழிகாட்டுதல்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டு உள்ளன. (அது அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் கிடைக்கிறது).

கைவினைப் பொருட்களுக்கான மேம்பாட்டு ஆணைய அலுவலகம், கைவினைஞர்களுக்கான http://indian.handicrafts.gov.in என்ற இணையப் பக்கத்தை தொடங்கியுள்ளது. இதன் மூலம், தகுதியுடைய அனைத்து கைவினைக் கலைஞர்களும் சந்தைப்படுத்தும் நிகழ்வுகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.



Read in source website

சுவிஸ் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றிய பகிரப்பட்ட தகவல்களில் அவர்களின் பெயர், முகவரி, வசிக்கும் நாடு மற்றும் வரி அடையாள எண் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன.

வருடாந்திர தகவல் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக நான்காவது செட் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை இந்தியா பெற்றுள்ளது. அதன்படி, சுவிட்சர்லாந்து 101 நாடுகளுடன் கிட்டத்தட்ட 34 லட்சம் நிதிக் கணக்குகளின் விவரங்களைப் பகிர்ந்துள்ளது.

இந்த தகவல் என்ன, அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, அடுத்து என்ன நடக்கும்?

சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியா தகவல் பெறுவதன் முக்கியத்துவம்

2018 ஜனவரியில் இரு நாடுகளும் தானியங்கி தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்தில் (AEOI) கையெழுத்திட்டன. அதிலிருந்து, சுவிட்சர்லாந்தில் இருந்து இந்தியா பெறும் நான்காவது தகவல் இதுவாகும். இந்தியாவுடனான முதல் பரிமாற்றம் 2019 இல் நடந்தது.
இந்த நிலையில், வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்கும், பணமோசடி செய்வதைக் கட்டுப்படுத்துவதற்கும், சுவிஸ் ஃபெடரல் அலுவலகம் மிகப்பெரிய அளவில் விரிவான கணக்கை அளித்துள்ளது.

இந்த 101 நாடுகளில் 74 நாடுகளுடன் தகவல் பரிமாற்றம் பரஸ்பரம் நடந்ததாக சுவிஸ் ஃபெடரல் டேக்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தரவுகளின் அளவு, தன்மை என்ன?
2019 ஆம் ஆண்டில், இந்தியா தனது முதல் தொகுதி வங்கித் தகவலைப் பெறுவதற்கு முன்பு, அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், தரவுகளைப் பெறும் 73 நாடுகளில் இந்தியாவும் இருக்கும் என்றனர்.

இந்த நேரத்தில், மத்திய வரி நிர்வாகம், நிதித் தகவலின் தன்மையில் பெயர், முகவரி, வசிக்கும் நாடு, வரி அடையாள எண், புகாரளிக்கும் நிதி நிறுவனம் பற்றிய தகவல்கள் மற்றும் கணக்கு இருப்பு மற்றும் மூலதனத் தகவல்கள் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கித் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள்

AEOIக்கான வழிகாட்டுதல்கள் சர்வதேச அமைப்பான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD) ஆல் அமைக்கப்பட்டுள்ளன.
OECD இன் வழிகாட்டுதல்களின் கீழ், நிதியின் அளவு அல்லது கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படக்கூடாது.
2014 ஆம் ஆண்டில், OECD ஆனது பொதுவான அறிக்கையிடல் தரநிலையை (CRS) உருவாக்கியது, இது ஒவ்வொரு நாடும் நிதி நிறுவனங்களிலிருந்து (FIs) தரவைப் பெறவும், ஒவ்வொரு ஆண்டும் AEOI உடன்படிக்கைகள் இருக்கும் நாடுகளுடன் “தானாக” பரிமாறிக்கொள்ளவும் அனுமதிக்கிறது.

இந்தியாவின் AEOI நெட்வொர்க்கின் நோக்கம் என்ன?

இந்தியா தற்போது 78 நாடுகளுடன் மொத்த நிதி மற்றும் வங்கித் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது மற்றும் 107 நாடுகளில் இருந்து அதைப் பெறுகிறது, சுவிட்சர்லாந்து மிகப் பெரிய தரவுகளில் சிலவற்றைப் பகிர்வதாக அறியப்படுகிறது.
முதன்மையாக 100 நாடுகளில் இருந்து வரும் பெரிய அளவிலான FI தரவு காரணமாக, CBDT கடந்த ஆண்டு அதன் 14 புலனாய்வு பிரிவுகளில் வெளிநாட்டு சொத்து விசாரணை பிரிவுகளின் (FAIUs) வலையமைப்பை அமைத்தது.
மேலும் முதலில், வரி செலுத்துவோர் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை வரிக் கணக்குகளில் அறிவித்துள்ளாரா இல்லையா என்பதையும் ஆராய்கின்றனர்.



Read in source website

இந்தியாவின் விவசாய உற்பத்தி புள்ளிவிவரங்கள் சில நேரங்களில் நுகர்வு தரவுகளுடன் முரண்பாட்டை முன்வைக்கின்றன. வேளாண் உற்பத்தி போதுமானதா? தரவுகளை கள நிலவரங்கள் ஒப்பிடுவது அவசியம் ஏன்?

Harish Damodaran

இந்தியா உண்மையில் எவ்வளவு பால் உற்பத்தி செய்கிறது? தானியங்கள் அல்லது சர்க்கரையின் உண்மையான உள்நாட்டுத் தேவை என்ன?

இவை எளிமையான கேள்விகள், ஆனால் வேளாண் உற்பத்திக்கான சந்தையைப் புரிந்துகொள்வதற்கான அடிப்படை, இந்த பணவீக்க காலங்களில் மட்டுமல்ல, கொள்கை மற்றும் திட்டமிடல் கண்ணோட்டத்தில் இருந்தும் அவசியம்.

பாலை எடுத்துக் கொள்வோம். தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) வீட்டு நுகர்வோர் செலவு (HCE) 2011-12 கணக்கெடுப்பின்படி, மாதாந்திர தனிநபர் பால் நுகர்வு கிராமப்புற இந்தியாவில் 4.33 லிட்டர் மற்றும் நகர்ப்புற இந்தியாவில் 5.42 லிட்டர். சராசரியாக 5 லிட்டர் (5.15 கிலோ; 1 லிட்டர் பால் = 1.03 கிலோ) என எடுத்துக் கொண்டால், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 1,210.85 மில்லியன் மக்கள்தொகைக்கு வருடாந்திர நுகர்வு கிட்டத்தட்ட 75 மில்லியன் டன்கள் (mt) ஆகும்.

இந்த எண்ணிக்கையில் குடும்பங்கள் உட்கொள்ளும் பால் மட்டுமே அடங்கும். அதாவது நேரடியாக பாலாகவும் மற்றும் வீட்டில் தயிர், வெண்ணெய், நெய், பனீர் போன்றவையும் இதில் அடங்கும். டீக்கடைகள், ஹோட்டல்கள் மற்றும் ஐஸ்கிரீம், இனிப்பு, சாக்லேட் மற்றும் பிஸ்கட் தயாரிப்பாளர்கள் போன்ற வணிகங்கள் எடுத்துக்கொள்ளும் பால் இதில் சேர்க்கப்படவில்லை. இந்த பால் குடும்பங்கள் உட்கொள்ளும் அளவை விட 25% அதிகமாக இருப்பதாகக் கருதப்பட்டால், அது சுமார் 94 மில்லியன் டன் வரை சேர்க்கிறது அல்லது ஒரு நபருக்கு தினசரி 212 கிராம் கிடைக்கும்.

உற்பத்தி தரவு வெளிப்படுத்துவது என்ன

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணைத் துறையின் (DAHD) புள்ளிவிவரங்களின்படி, 2011-12 ஆம் ஆண்டில் தனிநபர் தினசரி 289 கிராம் உடன் இந்தியாவின் பால் உற்பத்தி 127.9 மில்லியன் டன்னாக இருந்தது. இவை 2020-21ல் முறையே 210 மெ.டன் மற்றும் 427 கிராம்.

துரதிர்ஷ்டவசமாக, 2011-12க்குப் பிறகு வெளியிடப்பட்ட HCE கணக்கெடுப்புத் தரவு எதுவும் இல்லை. எல்லா சாத்தியக்கூறுகளிலும், NSO இன் நுகர்வு அடிப்படையிலான மதிப்பீடுகள் மற்றும் DAHD இன் உற்பத்தி எண்களுக்கு இடையிலான இடைவெளி விரிவடைந்திருக்கும்.

2013-14 மற்றும் 2020-21 க்கு இடையில், இந்தியாவின் பால் உற்பத்தி ஆண்டுக்கு சராசரியாக 6.2% வளர்ச்சியடைந்தது. (அட்டவணை) ஆனால் பால் கூட்டுறவு நிறுவனங்களால் திரவப் பாலை சந்தைப்படுத்துவதில் இது பிரதிபலிக்கவில்லை, இது இந்தக் காலக்கட்டத்தில் ஆண்டுக்கு 3% அளவுக்கு அதிகமாக வளர்ந்தது.

தனியார் துறையில், 2014-15 மற்றும் 2020-21 க்கு இடையில், 12 பெரிய பால் நிறுவனங்களின் சராசரி விற்பனையின் சராசரி வளர்ச்சி, பெயரளவு அடிப்படையில் 4.93% ஆக இருந்தது. இந்த காலகட்டத்தில் “பால் பொருட்களுக்கான” சராசரி மொத்த விலை பணவீக்கத்தை 3% சரிசெய்த பிறகு, அவற்றின் உண்மையான விற்பனை வளர்ச்சி 1.9% ஐ விட சற்று அதிகமாக இருந்தது.

முரண்பாடுகள் பளிச்சிடுகின்றன

அதிகாரப்பூர்வ DAHD புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பால் உற்பத்தியில் 6.2% வளர்ச்சியானது ஒழுங்கமைக்கப்பட்ட பால்பண்ணைகளின் விற்பனை வளர்ச்சியுடன் ஒத்துப்போவதாகத் தெரியவில்லை, சராசரியாக ஆண்டுக்கு 2-3% மட்டுமே.

2020-21 ஆம் ஆண்டில் தனிநபர் தினசரி பால் 427 கிராம் கிடைக்கும் என்பதும் சமமாக சுவாரஸ்யமானது, இது வரையறையின்படி மாநிலங்கள், பணக்காரர்கள் மற்றும் ஏழைகள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் அடங்கிய இந்தியாவின் மக்கள்தொகையின் சராசரியுடன் ஒத்துப்போகிறது. (பட்டை விளக்கப்படம்)

பஞ்சாபில், சராசரி நபர் ஒரு நாளைக்கு 1,219 கிராம் அல்லது 1.2 லிட்டர் வரை உட்கொள்கிறார்; ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவும் 1 லிட்டருக்கு மேல் உள்ளது. எவ்வாறாயினும், 2011-12 HCE கணக்கெடுப்பு, கிராமப்புற ஹரியானாவில் தினசரி தனிநபர் பால் நுகர்வு 0.49 லிட்டர் மற்றும் நகர்ப்புற ஹரியானாவில் 0.37 லிட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய புள்ளிவிவரங்கள் பஞ்சாபில் 0.40 லிட்டர் மற்றும் 0.36 லிட்டர், மற்றும் ராஜஸ்தானில் 0.31 லிட்டர் மற்றும் 0.29 லிட்டர்.

2011-12ல் இருந்து மறைமுக/குடும்பமற்ற நுகர்வு மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணியாக இருந்தாலும், இந்த அதிக பால் குடிக்கும் மாநிலங்களின் தனிநபர் சராசரி 0.5-0.6 லிட்டருக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை.

மற்றொரு வழியில் பார்த்தால், DAHD இன் 427 கிராம் எண்ணிக்கை சரியாக இருந்தால், சராசரியாக ஐந்து பேர் கொண்ட இந்தியக் குடும்பம், பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் 5-6 லிட்டர் வரை ஒவ்வொரு நாளும் 2 லிட்டருக்கு மேல் பால் உட்கொள்ளும்.

லிட்டர் ஒன்றுக்கு 40-50 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு உணவுப் பொருளுக்கு எத்தனை குடும்பங்கள் இவ்வளவு செலவு செய்ய முடியும் என்பது முக்கிய விஷயம். மறுபுறம், பணக்காரர்கள் எவ்வளவு பால் உட்கொள்ளலாம் என்பதற்கு ஒரு வரம்பு உள்ளது.

இந்தியாவில் பால் நுகர்வு பற்றிய நம்பகமான மதிப்பீடுகளைப் பெற, அடுத்த HCE கணக்கெடுப்புக்காக ஒருவர் காத்திருக்க வேண்டும், பின்னர் DAHD இன் உற்பத்தித் தரவுகளுடன் ஒப்பீடு செய்யலாம்.

தேவைதான் முக்கியம்

இந்தியர்கள் எதை, எவ்வளவு உட்கொள்கிறார்கள் என்பதை அறிவது, மற்ற பண்ணை விளைபொருட்களின் தேவை மற்றும் விநியோகத்தை பகுப்பாய்வு செய்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும். இதனை ஒரு விரிவான நாடு தழுவிய HCE கணக்கெடுப்பு மட்டுமே வெளிப்படுத்த முடியும். இது குறைந்தபட்ச ஆதரவு விலைகள் மற்றும் கட்டணங்களை நிர்ணயித்தல் அல்லது பயிர் பல்வகைப்படுத்தல் ஆகியவற்றில் கொள்கைகளை சிறப்பாக வடிவமைக்க உதவும்.

எடுத்துக்காட்டாக, 2011-12 கணக்கெடுப்பில் அனைத்து தானியங்களின் தனிநபர் வீட்டு உபயோகம் கிராமப்புற இந்தியாவில் 11.22 கிலோவாகவும், நகர்ப்புற இந்தியாவில் 9.28 கிலோவாகவும் மதிப்பிடப்பட்டது. சராசரியாக 10 கிலோ, இன்று 1,400 மில்லியன் மக்களின் வருடாந்திர வீட்டு தானிய நுகர்வுத் தேவை சுமார் 168 மில்லியன் டன்களாக இருக்கும். பதப்படுத்தப்பட்ட வடிவத்தில் 25% கூடுதல் நுகர்வு (ரொட்டி, பிஸ்கட், கேக், நூடுல்ஸ், வெர்மிசெல்லி, ஃப்ளேக்ஸ் போன்றவை) மற்றும் மற்றொரு 25 மெ.டன் தானியங்கள் (முக்கியமாக மக்காச்சோளம்) தீவனம் அல்லது மாவுச்சத்துக்காக, மொத்த ஆண்டு தேவை சுமார் 235 மெ.டன்.

இதற்கு மாறாக, 2016-17 முதல் 2020-21 வரை தானிய உற்பத்தி சராசரியாக 267 மெ.டன். வேளாண் அமைச்சகத்தின் உற்பத்தி மதிப்பீடுகள் துல்லியமாக இருந்தால், நாடு ஒவ்வொரு ஆண்டும் 30 மெட்ரிக் கூடுதல் தானியங்களை உற்பத்தி செய்து வருகிறது, குறைந்த பட்சம் சமீப காலம் வரை, அரசு கிடங்குகளில் உள்ள அரிசி மற்றும் கோதுமை கையிருப்புகள் நிரம்பி வழிவதன் மூலம் ஓரளவுக்கு ஈடுசெய்யப்படுகிறது.

ஆனால் மீண்டும், அதிகாரப்பூர்வ உற்பத்தி மதிப்பீடுகள் எவ்வளவு துல்லியமானவை என்பது யாருக்கும் தெரியாது. தனிநபர் தானிய நுகர்வு அதிகரித்து வருகிறதா அல்லது குறைகிறதா?, முந்தைய HCE கணக்கெடுப்பு சுற்றுகளில் பால், முட்டை, கோழி, காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றில் இது வீழ்ச்சியடைந்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜனா போன்ற மிக சமீபத்திய இலவச/பகுதி இலவச தானியத் திட்டங்களின் தாக்கம் என்ன?

சர்க்கரை போன்ற ஒரு பொருளுக்கு உற்பத்தியில் முரண்பாடுகள் குறைவாக இருக்கலாம், அங்கு பெரும்பாலான கரும்புகள் ஒழுங்கமைக்கப்பட்ட ஆலைகளால் நசுக்கப்படுகின்றன. 1,400 மில்லியன் மக்கள்தொகைக்கு 16.8 மில்லியன் டன்களின் நேரடி வீட்டு உபயோகம், ஒரு மாதத்திற்கு 1 கிலோ என்ற அளவில் இருக்கும். பால் அல்லது கோதுமையை விட, குளிர்பானம், தின்பண்டங்கள் தயாரிப்பாளர்கள் உட்பட, சர்க்கரை அதிக அளவில் பயன்படுத்துவதால் மறைமுக நுகர்வு மற்றொரு 50% ஆக இருக்கலாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 32 மில்லியன் டன் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், மொத்த உள்நாட்டு தேவை 25-26 மில்லியன் டன்னாக உள்ளது. அரிதான விதிவிலக்கான ஆண்டுகளில் சர்க்கரையின் அதிக உற்பத்திக்கு வாய்ப்புள்ளது.

ஒரு பெரிய கேள்வி

புதிய HCE கணக்கெடுப்பு தேவைப்படுவதற்கு இன்னும் உடனடி காரணம் உள்ளது. தற்போதைய நுகர்வோர் விலைக் குறியீடு, பணவீக்கத்தைக் கணக்கிடவும், RBI இன் வட்டி விகித நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது, 2011-12 HCE கணக்கெடுப்பின் அடிப்படையில் நுகர்வு கூடையை அடிப்படையாகக் கொண்டது. அந்த கூடை ஒருவேளை காலாவதியானது மற்றும் இன்று இந்திய குடும்பங்களால் உட்கொள்ளப்படும் உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் உண்மையான பிரதிநிதி அல்ல. அது, அந்த அளவிற்கு, விவசாயம் அல்லது பணவியல் கொள்கைக்கு பயனுள்ளதாக இருக்காது.



Read in source website

மிகக் குறுகிய காலம்தான் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக யு.யு. லலித் பதவி வகித்தாலும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சில முடிவுகளை எடுத்து, தனக்குக் கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்துவதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு விசாரணைகள் அவரது பதவிக் காலத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது, உலகுக்கே முன்மாதிரியான முனைப்பு.

முந்தைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வின் நடவடிக்கை, அவா் ஓய்வு பெற இருந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது என்றாலும், அது என்னவோ சம்பிரதாய நிகழ்வாகத்தான் இருந்தது. உச்சநீதிமன்ற வலைதளம் மூலம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒளிபரப்பு, இப்போது அடுத்தகட்டத்துக்கு நகா்ந்து நடைமுறைக்கு வந்திருக்கிறது.

செப்டம்பா் 27-ஆம் தேதி முதல் யு டியூப் மூலம் அரசியல் சாசன விசாரணைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. விரைவிலேயே அதற்காக உச்சநீதிமன்றத்தின் சொந்தத் தளம் பயன்பாட்டுக்கு வரும் என்று தலைமை நீதிபதி யு.யு. லலித் தெரிவித்திருக்கிறாா்.

வழக்குரைஞராக அல்லாத, நீதித்துறையுடன் தொடா்பில்லாத, நீதிமன்றத்தில் காலடி எடுத்து வைக்காத சாமானிய குடிமகனும் தன்னையும், தனது வாழ்க்கையையும், தான் வாழும் சமூகத்தையும் பாதிக்கும் முக்கியமான அரசியல் சாசன வழக்கு விசாரணைகளை தனது வீட்டில் இருந்தபடியே பாா்க்க முடியும் என்பது யாருமே எதிா்பாா்த்திருக்க முடியாத ஒன்று. அதுமட்டுமல்ல, இந்தியாவின் எந்த மாநிலத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகளை நேரடியாகக் கண்காணிக்க முடியும் என்பது இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்திருக்கும் தனிப் பெருமை.

வளா்ச்சி அடைந்த மேலை நாட்டு ஜனநாயகங்களில்கூட நீதிமன்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இந்த நடைமுறை இன்னும் வரவில்லை. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் காட்சி ஊடகங்களால் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. உலகம் முழுவதும் அதைப் பாா்க்கிறாா்கள்.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் அரசியல் சாசன நீதிமன்றத்தின் விசாரணைகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மக்களின் பாா்வைக்கு தரப்பட்டது. அவையல்லாமல், வேறு எந்த நாடும் துணிந்து நீதிமன்ற நடவடிக்கைகளை பொதுவெளியில் பாா்க்க அனுமதித்ததில்லை.

இந்தியாவைப் போல அதிக மக்கள்தொகை கொண்ட மிகப் பெரிய நாட்டில், தலைநகா் தில்லியில் அமைந்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகளை அனைவரும் சென்று பாா்த்துவிட முடியாது. தில்லியிலேயே இருந்தாலும்கூட, உச்சநீதிமன்றத்தில் நுழைவு அனுமதி பெற்று விசாரணைகளை நேரடியாகப் பாா்க்கும் வாய்ப்பு ஒருசிலருக்கு மட்டுமே கிடைக்கும். இப்போது அரசியல் சாசன அமா்வு விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பப்படும்போது நீதிபரிபாலனம் எப்படி செய்யப்படுகிறது என்பதை சாமானியா்கள் பாா்த்துத் தெரிந்துகொள்ள முடியும்.

ஊடகவியலாளா்கள், மாணவா்கள், ஏனைய நீதித்துறையினா் ஆகியோரும் இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தும், அரசியல் சாசன அமா்வு விவாதங்களை கண்காணிக்க முடியும். நீதிமன்றத்தில் நடைபெறும் விவாதங்களை துல்லியமாகவும், குறிப்பெடுத்துக் கொள்ளும் வகையிலும், ஆவணப்படுத்தும் நோக்கிலும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்த முடிவு. அரசியல் சாசன உயா் அமைப்புகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை சாமானிய குடிமக்கள் நேரடியாகப் பாா்க்கவும் கேட்கவும் முடிவதால், ஜனநாயகம் வலுப்படும்.

உச்சநீதிமன்றத்தில் நடக்கும் முக்கியமான அரசியல் சாசன வழக்குகளின் விசாரணைகளை மக்கள் பாா்க்க முடியும் என்பதே அரசு நிா்வாகத்தையும், பொறுப்பேற்கும் தன்மையையும் மேம்படுத்தும். மேலும், உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள் ஆகியோா் விசாரணைகளை காலதாமதமின்றியும், முழுக் கவனத்துடனும் மேற்கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கலாம். உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வுகளின் நேரம் அநாவசியமாக வீணாகாமல் விவாதங்களும், விசாரணைகளும் நடைபெறுவது உறுதிப்படும்.

இந்த முடிவு 2018-லேயே நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். உச்சநீதிமன்றம் நேரடி ஒளிபரப்பை அனுமதித்தும்கூட, கொள்ளை நோய்த்தொற்று காலம் வரை நடைமுறைக்கு வரவில்லை. கொவைட் 19 நோய்த்தொற்று பரவியதைத் தொடா்ந்து வேறுவழியில்லாமல் நீதிமன்றங்கள் காணொலி விசாரணைகளை நடத்த நிா்ப்பந்திக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து ஒடிஸா, குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட சில உயா்நீதிமன்றங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை இணையத்தில் வெற்றிகரமாகப் பதிவேற்றம் செய்தன.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணா எச்சரித்திருப்பதுபோல, நேரடி ஒளிபரப்பில் சில ஆபத்துகளும் இல்லாமல் இல்லை. சமூக ஊடகங்களின் நையாண்டிகளுக்கும், விமா்சனங்களுக்கும் நீதிபதிகள் உள்ளாகக் கூடும். விளம்பரப் பிரியா்களான சில வழக்குரைஞா்கள் நேரடி ஒளிபரப்பின்போது தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள முனைப்புக் காட்டுவாா்கள்.

உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை வெட்டியும், ஒட்டியும், திரித்தும் வெளியிடும் அபாயமும் இல்லாமல் இல்லை. இவை முன்கூட்டியே தடுக்கப்பட வேண்டுமே தவிர, நேரடி ஒளிபரப்பு முடிவு தவிா்க்கப்படக் கூடாது.

கா்நாடக உயா்நீதிமன்றத்தின் ஹிஜாப் தடை விசாரணை பலராலும் பாா்க்கப்பட்டிருக்கிறது. முதல் நாள் நேரடி ஒளிபரப்பை எட்டு லட்சம் போ் பாா்த்திருக்கிறாா்கள். நீதிமன்ற வெளிப்படைத்தன்மைக்கு வாசல் திறக்கப்பட்டிருக்கிறது!



Read in source website

குற்றச் செயலில் ஈடுபட்ட சிறார்களுக்கு ஆயுள் தண்டனையோ, மரண தண்டனையோ வழங்கக் கூடாது என சிறார் நீதிச் சட்டமும், குழந்தைகளின் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் தீர்மானமும் சுட்டிக் காட்டியிருக்கின்ற நிலையில், பதினேழு வயதில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒரு சிறுவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்ற தீர்ப்பு அண்மையில் தமிழ்நாட்டில் வெளிவந்துள்ளது.

ஏழு வயதான சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து, பின்னர் அவரைக் கொலை செய்து, பிரேதத்தை மறைத்து வைத்த குற்றச் செயல்களுக்காக இரட்டை ஆயுள் தண்டனையடைந்த அந்த சிறார் குற்றவாளி, தற்போது தமிழ்நாட்டிலுள்ள மத்திய சிறைசாலை ஒன்றில் ஆயுள் கைதியாக இருந்து வருகிறான்.

பதினெட்டு வயது பூர்த்தியடையாத நிலையில், அச்சிறுவன் செய்த குற்றச் செயலுக்காக சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்காமல், அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி, மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கக் காரணம் என்ன?

தலைநகர் தில்லியில் 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் இரவில், மருத்துவ மாணவி ஒருவர் பேருந்தில் பயணம் செய்த பொழுது, பேருந்தின் ஓட்டுநர் உள்பட ஆறு நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டு, அதன் விளைவாக உயிரிழந்தார். இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஆறு குற்றவாளிகளில் நான்கு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஒரு குற்றவாளி விசாரணையின் தீர்ப்பு வெளியாகும் முன்னரே தற்கொலை செய்து கொண்டான். 

ஆறாவது குற்றவாளி குற்றம் நிகழ்ந்த பொழுது பதினெட்டு வயது பூர்த்தியடையாத சிறுவன் என்ற காரணத்தால், அவன் மீதான குற்ற விசாரணையை நடத்திய சிறார் நீதிக் குழுமம், அவனை சிறார் சீர்திருத்தப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் தங்கியிருக்கும்படி ஆணை பிறப்பித்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் அங்கிருந்து விடுவிக்கப்பட்டான். 

சிறார் நீதிக் குழுமம் வழங்கிய இத்தீர்ப்பு நாடு முழுவதும் கடும் கண்டனத்தை எதிர்கொண்டது. அதன் விளைவாக, 2015-ஆம் ஆண்டில் சிறார் நீதிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அத்திருத்தத்தின்படி, 16 முதல் 18 வயதுடைய சிறார் கொடுங்குற்றச் செயலில் ஈடுபட்டால், அச்சிறாரின் மன உறுதி, உடல் திறன், அக்குற்றத்தின் பின்விளைவுகளை அறிந்து கொள்ளும் திறன், அக்குற்றம் புரியப்பட்ட சூழல் போன்றவை குறித்து உளவியல் நிபுணர்களின் உதவியுடன் "பூர்வாங்க மதிப்பீடு' அறிக்கையை சிறார் நீதிக் குழுமம் தயாரிக்க வேண்டும். 

பூர்வாங்க மதிப்பீட்டின் அடிப்படையில், அச்சிறார் புரிந்த கொடுங்குற்றச் செயலை வயது வந்தவர் புரிந்த குற்றச் செயலாகக் கருதி, அவர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டுமா, அல்லது குற்றம் புரிந்தவனை சிறார் எனக் கருதி, சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டுமா என்ற முடிவை சிறார் நீதிக் குழுமம் தீர்மானிக்க வேண்டும் என 2015-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம் கூறுகிறது.  

இச்சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், ஏழு வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து, கொலை செய்த சிறார் குற்றவாளியை வயது வந்தோர் எனக் கருதி, அவர் மீதான குற்ற விசாரணையை மேற்கொண்ட நீதிமன்றம் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை வழங்கியது.

இன்றைய சமுதாய சூழலில், அறிவியல் நுட்பத்துடன் கொடுங்குற்றங்கள் புரிவதை வெளிப்படுத்தும் காட்சி ஊடகங்கள் சிறார்களிடம் ஏற்படுத்தும் தாக்கம், சிறார்களைத் திட்டமிட்டு கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுத்தும் வயது வந்தவர்களின் செயல்பாடுகள், சிறார்கள் மீதான பெற்றோர்கள் - ஆசிரியர்களின் கண்காணிப்பில் நிலவிவரும் தொய்வு போன்ற காரணங்களால் கொடுங்குற்றச் செயல்களில்  ஈடுபடும் 16 முதல் 18 வயதுடைய சிறார்களின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகரித்து வருகிறது.

தேசிய குற்ற ஆவணக்கூடம் திரட்டிய புள்ளிவிவரங்களின்படி, 16 முதல் 18 வயதுக்குள்பட்ட 26,954 சிறார்கள் 2020-ஆம் ஆண்டிலும், 28,539 சிறார்கள் 2021-ஆம் ஆண்டிலும் சிறை தண்டனைக்குரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக சிறார் நீதிக் குழுமம் முன்பு ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

 இச்சிறார்கள் அனைவருக்கும், அவர்கள் செய்த குற்றம் தொடர்பாக "பூர்வாங்க மதிப்பீடு' செய்யாமல், சமுதாயத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிறார்களுக்கு மட்டும் பூர்வாங்க மதிப்பீட்டை சிறுவர் நீதிக் குழுமம் செய்துள்ளது. 

சிறார் நீதிச்சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாததால், கொடுங்குற்றச் செயலில் ஈடுபட்ட 16 முதல் 18 வயதுடைய சிறார்கள் பலர், நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவது இல்லை. சான்றாக, சென்னையை அடுத்துள்ள ஒரு மாவட்டத்தில், சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கொலையைச் செய்த 17 வயதுடைய சிறுவன் குறித்து பூர்வாங்க மதிப்பீடு செய்யாமல், 15 நாட்களிலே அவன் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளான்.

சிறை தண்டனைக்குரிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்களை கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்ததும், அவர்களை குற்றச் செயலில் ஈடுபடத் தூண்டிய சமூகக் காரணிகளான அவர்களின் குடும்பம் மற்றும் வசிப்பிட சூழல் குறித்து "நன்னடத்தை அலுவலர்' கள ஆய்வு செய்து, "சமூகப் புலனாய்வு அறிக்கை' தயாரிக்க வேண்டும் என சிறார் நீதிச் சட்டம் அறிவுறுத்தியுள்ளது.

இவ்வறிக்கையின் அடிப்படையில்தான், கூர்நோக்கு இல்லத்திலிருந்து சிறார்கள் விடுவிக்கப்படுகிறார்கள். சிறார்களின் வசிப்பிடம் சென்று கள ஆய்வு செய்யாமல், கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருக்கும் சிறார்களிடையே விசாரணை செய்து, சமூகப் புலனாய்வு அறிக்கை தயாரிக்கின்ற பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

இதன் காரணமாக, சட்டத்திற்கு முரணாகச் செயல்படும் சிறார்களுடன் தொடர்பில் இருந்துவரும் உள்ளுர் பழங்குற்றவாளிகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளிச்சத்திற்கு வருவதில்லை. இதனால், சட்டத்திற்கு முரணாகச் செயல்படும் "சிறார்கள் சீர்திருத்தம்' என்பது எழுத்தளவில் இருந்து வருகிறது.

"சமூகப் புலனாய்வு அறிக்கை கள ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்படுவது இல்லை. அதனால், அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது' என அண்மையில் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் அலகாபாத் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 

கூர்நோக்கு இல்லம், சிறப்பு இல்லத்திலிருந்து விடுக்கப்படும் சிறார்களின் செயல்களைக் கண்காணித்து, தவறான வாழ்க்கைப் பாதையில் அவர்கள் மீண்டும் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை நன்னடத்தை அலுவலர்களிடம் சிறார் நீதிச் சட்டம் ஒப்படைத்துள்ளது. 

கூர்நோக்கு இல்லங்களில் ஒப்படைக்கப்படும் சிறார்களில் பலர் ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பிடிபட்டு, கூர்நோக்கு இல்லத்தில் சில மாதங்கள் தங்கிச் சென்றவர்கள் என்பது கள ஆய்வில் தெரியவருகிறது. சட்டத்திற்கு முரணாகச் செயல்படும் சிறார்களைச் சீர்திருத்தி, நல்வழிப்படுத்துதல் என்பது உரிய கவனம் பெறப்படவில்லை என்பதை இந்த கள ஆய்வு வெளிப்படுத்துகிறது.

பெற்றோர்களை இழந்த, பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட, சாலையோரங்களில் வசித்து வரும் சிறார்கள்தான் பெரும்பாலும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்ற கருத்து பலரிடம் வெளிப்படுகிறது. ஆனால், 2021-ஆம் ஆண்டில் நம் நாட்டில் குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக பிடிக்கப்பட்ட 37,444 சிறார்களில் 85% பேர் பெற்றோர்களுடன் வசித்து வருபவர்கள் என்பதும், 2020-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2021-ஆம் ஆண்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறார்களின் எண்ணிக்கை 26% அதிகரித்துள்ளது என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

2021-ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களிடையே அதிகமான குற்றச் செயல்களில் சிறார்கள் ஈடுபட்ட மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு நான்காவது இடமும், அதிக எண்ணிக்கையிலான சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இந்திய பெருநகரங்கள் பட்டியலில் சென்னை பெருநகரம் இரண்டாவது இடமும் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டில் 84 கொலை வழக்குகளிலும், 102 கொலை முயற்சி வழக்குகளிலும், 481 திருட்டு வழக்குகளிலும், 326 வழிப்பறி, களவு மற்றும் கொள்ளை வழக்குகளிலும், குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக "போக்சோ' சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 184 வழக்குகளிலும் சிறார்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது சட்டத்திற்கு முரணான செயல்களில் சிறார்களை ஈடுபடச் செய்யும் சூழல் தமிழ்நாட்டில் நிலவி வருவதை உணர்த்துகிறது.

உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக குற்றச் செயல்களில் சிறார்கள் ஈடுபட்டுவந்த காலத்தை இன்றைய சமுதாயம் கடந்து வந்துவிட்டது. கொலை, பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல், போதைப் பொருட்கள் விற்பனை, வழிப்பறி போன்ற கொடுங்குற்றச் செயல்களில் தனியாகவும், பழங்குற்றவாளிகளுடன் இணைந்தும் சிறார்கள் ஈடுபடுகின்ற நிலையைக் காண முடிகிறது. சிறார் குற்றங்கள் குறித்து நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், சிறார்களின் வயதை 18-இல் இருந்து 16-ஆகக் குறைப்பதும் சிறார் குற்றங்களுக்கான தீர்வாக அமையாது.  

சமூக நாகரிகம் என்ற பெயரில் மது பழக்கம், போதைப் பொருள் பழக்கம் சிறார்களிடம் அதிகரித்து வருவதும், வளர்பருவ சிறார்களிடம் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கத் தவறியதும் சிறார் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கான காரணங்களாகும். ஒழுக்கத்தை சிறார்களிடம் வளர்ப்பதில் ஆசிரியர்கள் கடந்த காலத்தில் எடுத்துக் கொண்ட ஆர்வம் தற்பொழுது பெருமளவில் குறைந்துவிட்டது. 

சிறார் நீதிச் சட்ட விதிகளை முறையாக அமல்படுத்துவது குறித்தும், கல்வியோடு ஒழுக்கத்தையும் பள்ளிகளில் சிறார்களுக்கு கற்றுக் கொடுப்பது குறித்தும் அரசு பரிசீலனை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கட்டுரையாளர்:
காவல்துறை உயர் அதிகாரி (ஓய்வு).
 



Read in source website

ஆண்டுக்கு ஆண்டு மனநலம் பாதித்தவரின் எண்ணிக்கை உயா்ந்து கொண்டு இருக்கிறது. 2001-இல் எடுக்கப்பட்ட உலக சுகாதார கணக்கெடுப்பில் நான்கில் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

மனநோய் என்பது மனஅழுத்தம், ஆா்வக் கோளாறு, மதுவால் பாதிப்பு, இதர போதைப் பொருட்களால் பாதிப்பு , சித்த பிரமை, பை-போலாா் எனப்படும் மூளைக் கோளாறு என பலவகைப்படுகிறது. இந்த பாதிப்புகளை தொடா் சிகிச்சை மூலம் சரிசெய்யாவிட்டால் பாதிப்புக்குள்ளானவா்களில் 20 % போ் தற்கொலை முடிவெடுக்கின்றனா்.

மனஅழுத்தம் பலருக்கும் குறைந்த அளவிலும், சிலருக்கு சற்றே அதிகமாகவும், மிகக் சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கிறது. அதிகப்படியான வேலைப் பளுவினாலோ மேலதிகாரிகளின் கண்டிப்பினாலோ குடும்ப பிரச்னைகளினாலோ மன அழுத்தம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக வேலையில் கவனமின்மை, தாழ்வு மனப்பான்மை, எதிா்காலம் குறித்த பயம், அதீத கற்பனை, உணவில் வெறுப்பு, தூக்கமின்மை போன்றவை ஏற்பட்டு இறுதியில் அது தற்கொலையில் முடிகிறது.

உலகம் முழுவதும் 264 மில்லியன் மக்கள் அதிகமான மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக 2017-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு கூறுகிறது. கரோனா காலத்தில் இளைஞா்கள் மனதில் எதிா்காலம் குறித்த நிச்சயமற்ன்மை உருவானதால் மனநோய் பாதிப்பு சதவீதம் உயா்ந்தது.

தொடக்கத்தில் தீவிர மன அழுத்தம் மெலஞ்சோலியா என்ற பெயரில் மனநோயாக அழைக்கப்பட்டது . இந்த நோயினால் பாதிக்கப்பட்டவா்கள் தற்கொலை செய்வதை தடுக்கும் வண்ணம் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. இங்கிலாந்து நாட்டில் தெரசா மே பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் தற்கொலை தடுப்புக்கென்று தனித்துறை அமைக்கப்பட்டிருந்தது.

பை போலாா் கோளாறு என்பது மனநோயில் ஒருவிதம். இது மூளையில் ஏற்படும் பாதிப்பினால் உருவாகிறது. இதனால் அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சியடைவதும் மிகுந்த சோகத்தில் மூழ்குவதும் மனநோய் பாதித்தவருக்கு இயல்பாகி விடுகிறது.

மத நம்பிக்கைகளாலும், மூட பழக்க வழக்கங்களாலும் மனநோய் பாதித்தவா்களை பேய் பிடித்தவா்கள் என்றும், சமூகத்தில் வாழத்தகுதி இல்லாதவா்கள் என்றும் கூறி அவா்களை சங்கிலியால் கட்டிவைத்து அடிப்பது சில ஆண்டுகளுக்கு முன்புவரை சாதாரண நிகழ்வாக இருந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்னால் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஏா்வாடியில் மனநோயால் பாதிக்கப்பட்டு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த 25 போ் தீயில் எரிந்து சாம்பலாயினா். அதன் பிறகு மனநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முறையான, பாதுகாப்பான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் பேசப்பட்டது.

இந்நிலையில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் பலருக்கும் மனநோய் இருப்பது கண்டறியப்பட்டது. கைதிகளுக்கு மனநோய் சிகிச்சைக்காக தனி வாா்டு ஏற்படுத்தப்பட்டு அவா்களுக்கு தொடா்சிகிச்சை வழங்கிட வகை செய்யப்பட்டிருக்கிறது.

தன்னம்பிக்கையின்மையே மனநோயின் ஆணிவோ். தனியாக பேசுவதும் சிரிப்பதும் மனநோயின் ஆரம்ப அறிகுறி. ஒரு மனிதனுக்கு தனது மகிழ்ச்சியையும், துன்பத்தையும் பகிா்ந்துகொள்ள மனைவி, பிள்ளைகள், நண்பா்கள், உறவினா்கள் உள்ள சமூகம் வேண்டும். இதில் எதுவும் இல்லாமல் தனிமைப்படும் போது மனநோய் தீவிரமடைகிறது.

தொடா் சிகிச்சையால் மட்டுமே மனநோயை குணப்படுத்திவிட முடியாது. மன நோயாளிக்கு தன்னம்பிக்கையுடன் கூடிய வாழ்வியல் சூழ்நிலை அமையும்போது மனநோய் பறந்து விடும்.

மனநோய் என்பது ஒருவகை உடல் ஊனம் என சா்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை ஊனமுற்றோருக்கான உரிமைகள், சலுகைகள் வழங்கப்படுதலை ஏற்றுக்கொண்டது. ஏற்கெனவே 1987 முதல் நம்நாட்டில் மனநோயாளிகளின் உரிமைகளைக் காக்க மனநல சட்டம் அமலில் இருந்தது.

இது போக ஊனமுற்றோருக்கான சம வாய்ப்புகள், சம உரிமைகள், முழு பங்கேற்புக்கான 1995-ஆம் ஆண்டின் சட்டமும் நடைமுறையில் இருந்தது. இதில் 1987-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட மனநல சட்டம் மனநலம் பாதித்தவா்களின் உரிமையை பாதுகாக்க போதுமானதாக இல்லாததால் 2017-ஆம் ஆண்டு புதிதாக மனநல பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

இதன்படி மனநோய் பாதித்தவா்கள் தங்களை பராமரித்துக் கொள்ள பிரதிநிதிகளை நியமித்துக்கொள்ளவும், அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்பான மருத்துவ வசதிகளைப் பெறவும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. மனநோய் பாதித்தவருக்கு இலவச சட்ட உதவி பெறவும் உரிமை உண்டு .

மத்திய அரசு தேசிய அளவில் மனநல ஆணையத்தையும், மாநில அரசு மாநில அளவில் மனநல ஆணையத்தையும் உருவாக்கி மனநலம் பாதித்தவா்களின் மறுவாழ்விற்காக மனநோய் சிகிச்சை இல்லங்களை பதிவுசெய்து அங்குள்ள பணியாளா்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறது.

மனநோய் பாதித்தவா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை மேற்பாா்வை செய்து மனநோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வருகின்றது. தற்போதைய மனநல பாதுகாப்பு விதிகளின்படி மனநோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்பிற்கு மனநோயாளிகளின் உறவினா்களோ பாதுகாவலரோ பொறுப்பேற்கவேண்டும்.

மனநலத்தை எவ்வாறு பேணவேண்டும் என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக 1992 முதல் மனநல நாள் ஏற்படுத்தப்பட்டது. பச்சை நிற ரிப்பன் மனநல விழிப்புணா்வுக்கான சா்வதேச அடையாளமாகும்.

உலக சுகாதாரநிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மனநலம் குறித்த கொள்கையை அறிவிப்பது உண்டு. ‘அனைவருக்கும் மனநலம் - நல்வாழ்வு வழங்குதல்’ இந்த ஆண்டின் கொள்கை ஆகும். எனவே மன நோயாளிகளையும் மனிதா்களாக மதிப்போம். மனநோயற்ற உலகை உருவாக்குவோம்.

இன்று (அக். 10) உலக மனநல நாள்.

 



Read in source website

தமிழ்நாட்டின் சாலைகளில் வசிக்கும் வீடற்ற மக்களின் அடிப்படை உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்குச் சமூகநீதி அடிப்படையில் சரியான அணுகுமுறை தேவைப்படுகிறது. தற்போது இம்மக்களின் எல்லா தேவைகளும் ‘தற்காலிகத் தங்கும் விடுதிகள்’என்னும் ஒற்றைத் திட்டத்தின்கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன. குடும்பங்களாக, பல தலைமுறைகளாக, வீடற்றவர்களாக வாழும் மக்களின் வீட்டுரிமை குறித்த கொள்கைகளோ, நலிவடைந்த நிலையில் சாலையில் வாழும் தனிநபர்களான முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனநலம்பாதிக்கப்பட்டோர், திருநங்கைகள் ஆகியோரின் மீட்பு,மறுவாழ்வுக்காகத் தேவைப்படும் நிதி உதவியோஇத்திட்டத்தின்கீழ் உருவாக்கப்படவில்லை.

சென்னையில் மாநகராட்சியும் காவல் துறையும் வீடற்றவர்களுக்கான மீட்புப் பணிகளில் தனித்தனியாக ஈடுபட்டுள்ளன. சென்னை மாநகராட்சி மட்டும்தான் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோர், திருநங்கையர் ஆகியோருக்கான தங்கும் விடுதிகளை அமைத்துள்ளது. இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் இத்தகைய மீட்புப் பணிகள் நடைபெறவில்லை, தங்கும் விடுதிகளும் அமைக்கப்படவில்லை. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் 37,117 பேர் வீடற்றவர்களாக அடையாளம் காணப்பட்டனர். ஆனால், உரிய புரிதலுடன் கணக்கெடுப்புச் செயல்முறை உருவாக்கப்பட்டிருக்கவில்லை என்பதால், இந்த எண்ணிக்கை திட்டவட்டம் என்று கூற முடியாது.

பலனளிக்காத திட்டம்: நகர்ப்புற வீடற்றோருக்கான பிரத்யேகத் திட்டங்களை 1992இல் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. ‘நகர்ப்புறங்களில் உள்ள நடைபாதைகளில் வசிப்போருக்கான தங்குமிடம் - சுகாதார வசதிகள்’ என்கிற பெயரில் மாநில வீட்டுவசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், 2002இல் ‘நகர்ப்புற வீடற்றோர் இரவு தங்குமிடம்’ என்று பெயர்மாற்றம் பெற்றது. இத்திட்டத்துக்கான நிதி சரியான முறையில் நிர்வகிக்கப்படாததால் 2005இல் இத்திட்டம் கைவிடப்பட்டது. வீடற்றவர்களின் நிலையை உணர்ந்த உச்ச நீதிமன்றம், இந்தியாவில் முதல் கட்டமாக 62 நகரங்களில் வீடற்றவர்களுக்காக 24 மணி நேர நிரந்தரத் தங்குமிடங்களை ஏற்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு 2010இல் உத்தரவிட்டது. ஒரு லட்சம் நகர்ப்புற மக்களுக்குக் குறைந்தது 100 பேருக்கான தங்குமிடம் என்கிற அளவில் படுக்கை, மெத்தை, போர்வை, குடிநீர், கழிப்பறை, முதலுதவி, ஆரம்ப சுகாதார வசதிகள், போதைப்பொருள் தடுப்புச் சேவை, பொழுதுபோக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளோடு 24 மணி நேரம், 365 நாட்களும் செயல்பட வேண்டும் என்கிறது அந்த உத்தரவு. தனியாக வாழும் பெண்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர், முதியவர்கள், வேறு வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு அல்லது மீட்பு முகாம்களாக இந்தத் தங்கும் இடங்களில் 30% ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிட வசதியை அனைத்து மாநில அரசுகளும் வழங்க வேண்டும் என்றும் இது தொடர்ந்து பரிசீலிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

புதிய திட்டம்: 2013இல், நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடம் (SUH) திட்டம் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் (NULM) கீழ் தொடங்கப்பட்டது. பின்னர் ‘தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா’ (DAY) என்று பெயர் மாற்றப்பட்ட இத்திட்டம் நகரங்களின் பொருளாதார வளர்ச்சியில் நகர்ப்புற வீடற்றவர்களின் பங்களிப்பை ஒப்புக்கொண்டதுடன், அவர்களுக்கான அடிப்படை வசதிகளுடன் கூடிய நிரந்தரத் தங்கும் இடங்களை வழங்க முற்பட்டுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் இத்திட்டத்தின்கீழ் 150 தங்குமிடங்கள் செயல்பட்டுவருகின்றன. இத்திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் காப்பகங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காது; எனவே, மாநில அரசுதான் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இதற்கென மாநில அளவிலான கொள்கையோ திட்டமோ இதுவரை இல்லை. எனவே, நகர்ப்புற வீடற்றவர்களுக்கான இந்த நலத்திட்டம் பாதியில் நிறுத்தப்படும் சூழல் இருப்பதால், மாநில அளவில் கொள்கை - நிதி உதவியுடன் கூடிய திட்டத்தைத் தமிழக அரசு வரையறுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மேலும், வீடற்றவர்களின் நிலையை மேம்படுத்தத் தற்காலிக வீட்டு வசதி ஏற்பாடு, குழுக் குடியிருப்புத் திட்டங்கள், வாடகை வீட்டுத் திட்டம் அல்லது அந்தந்த நபரின் குறிப்பிட்ட தேவைக்கான நிரந்தர வீட்டு வசதி போன்ற பல்வேறு வகை இருப்பிடத் திட்டங்களை உறுதிப்படுத்தும் கொள்கைகள் வரையறுக்கப்பட வேண்டும்.

ஒருங்கிணைந்த கொள்கை ஏன் தேவை?: அடையாளம் காணப்படும் ஆவணங்கள் கிடைக்கவும், வங்கியில் கணக்கு வைத்துக்கொள்ளவும், திறன் பயிற்சி பெறவும், வேலைவாய்ப்பு இணைப்புப் பெறவும், வாழ்வாதார உதவி (தொழில் முனைவோர் திட்டம் அல்லது கடன்பெறுதல்) பெறவும், கல்விக் குழந்தைப்பராமரிப்பு வசதிகளும், முதியோர் உதவித்தொகை (OAP), தனியாக வாழும் பெண்களுக்கான உதவித்தொகை (கைம்பெண்கள், கைவிடப்பட்டவர்கள்), மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை போன்ற பல்வேறு சமூக உரிமைகள் இவர்களுக்குக் கிடைக்கவும் சமூக பொருளாதார மறுவாழ்வுக்கான தேவைகளை உறுதிசெய்யவும் அரசுத் துறைகள் இடையே ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது. போதைப் பழக்கத்திலிருந்து விடுபடல், ஆக்கபூர்வமான சிகிச்சைகள் போன்ற சமூக - உளவியல் செயல்பாடுகளும் தேவைப்படுகின்றன. குறிப்பாக, வீடற்றவர்களில் ஆதரவற்றோருக்குத் தங்கள் குடும்பத்துடன் ஒன்றுசேர்வதற்கான சாத்தியக்கூறுகளைப் பின்பற்றவும் இத்தகையோரின் குடும்பங்களைக் கண்டறிய முடியாத சூழலிலோ, குடும்ப உறுப்பினர்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளாத பட்சத்திலோ கடைசித் தீர்வாக நீண்ட கால நிறுவனப்பராமரிப்புக்காகப் பரிந்துரை செய்யப்படவும் சம்பந்தப்பட்ட சமூக நல / சமூகப் பாதுகாப்புத் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது.

வீடற்றவர்கள் போதுமான உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் வாழும் நிலைக்கு வலிந்து தள்ளப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கான குடியுரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. வெயில், குளிர், மழை போன்ற கடுமையான தட்பவெப்பநிலையில் அதிகமான துன்பத்துக்கு உள்ளாகின்றனர்; இயற்கைப் பேரிடர்களின்போது மிகுந்த பாதிப்புக்குள்ளாவதும் இவர்களே. சரியான தங்குமிடம் இல்லாமல் வாழ்ந்துவருவதால் மேலும் பாதிக்கப்படுவதுடன் மாண்புடன் வாழும் உரிமையும் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. நாட்டில் வீடற்றவர்களாக வசிக்கும் ஒவ்வொருவரும் மாண்புடன், நிலையான வாழ்க்கை வாழ உறுதிசெய்யும் வகையில், வீட்டு வசதிக் கொள்கை உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அக்டோபர் 10- உலக வீடற்றோர் நாள்

ம.அந்தோணி ஸ்டீபன்,
அ.தா.நந்தினி, வனெசா பீட்டர்
தொடர்புக்கு: stephen@mssw.in



Read in source website

தமிழில் வழங்கும் சொற்களைத் தொல்காப்பியம் நான்கு வகையாகப் பகுத்துள்ளது; இவற்றுள் ஒன்று வினைச்சொல். உயர் திணை, அஃறிணை, இவ்விரு திணைகள் என மூன்றுக்கும் உரிய வினைச்சொல் வகைகள் பகுக்கப்பட்டுள்ளன.

வினை என்ற சொல், ஒரு செயலைக் குறிக்கும். செயல் என்பதன் நீட்சியாகத் தொழில் அமைகிறது. இதன் அடிப்படையில், எந்தவொரு தொழிலை மேற்கொண்டு வாழ்வோரையும் ‘வினைஞர்’, ‘வினைக்காரர்’ என சங்க இலக்கியம் பெயரிட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் லெக்சிகன் ‘வினைஞர்’ என்ற சொல்லுக்கு ‘தொழில் வல்லோர்’, ‘மருதநில மக்கள்’, ‘கம்மாளர்’ என்று பொருளுரைக்கிறது. சூத்திரர், வைசியர் என்று நிகண்டுகளின் துணையுடன் உரைக்கும் பொருள் பிற்காலத்தில் நிகழ்ந்த வர்ணம் குறித்த கருத்துப் பரவல் வளர்ச்சியின் தாக்கம் எனலாம். இதே அகராதி, ‘வினையாளன்’ என்பதற்குத் ‘தொழிலியற்றுவோன்’ என்றும் ‘வினைவர்’ என்பதற்குத் ‘தொழிலினர்’ என்றும் பொருளுரைக்கிறது.



Read in source website

எந்த ஒரு கட்சி நிர்வாகியும் அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் அனைத்து மக்களின் பிரதிநிதியாக மாறிவிடுகின்றனர். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசின் மாண்பையும், மரியாதையையும் தலைநிமிரச் செய்வதாகவே இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் காலத்தில் இந்த மரபு காக்கப்பட்டுவந்தது. மீறப்பட்ட தருணங்களில் உரிய வகையில் கண்டிக்கப்பட்டதும் நடந்தது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களின் பேச்சுகள் பல நேரம் நகைப்புக்கு உரியதாகவும் கட்சியின் கருத்துக்கு முரண்பட்டவையாகவும் இருந்ததால், மக்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றபோது, மக்கள் பிரதிநிதிகள் பொதுவெளியில் மாண்பைக் காப்பாற்றக் கூடியவர்களாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. ஆனால், எதார்த்தம் வேறாக இருக்கிறது.



Read in source website

திருப்பூரின் விவேகானந்த சேவாலயம் காப்பகத்தில் குழந்தைகள் மூவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உட்கொண்ட உணவு, மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 11 குழந்தைகள் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் காப்பகங்களின் முறைகேடான செயல்பாடுகள் தமிழ்நாட்டில் அடிக்கடி நிகழும் ஒன்றாக மாறிவருகின்றன. 2021இல் மதுரை மாவட்டத்தில், இதயம் அறக்கட்டளை காப்பகத்தில், ஒரு வயதுக் குழந்தை இறந்ததாகப் பொய்ச் சான்றிதழ் பெறப்பட்டு, அந்தக் குழந்தை ரூ.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட செய்யப்பட்ட விவகாரம் கவனத்துக்கு வந்தது. 2017இல் ராமநாதபுரத்தில் ஆதார் டிரஸ்ட் காப்பகத்தில் ரூ.4 லட்சத்துக்கு விற்கப்படவிருந்த குழந்தை மீட்கப்பட்டது. அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் ஒரு தனியார் காப்பகத்திலிருந்து 14 வயதுச் சிறுமி கர்ப்பிணியாக மீட்கப்பட்டார். களியாக்காவிளை, வில்லிவாக்கம், உசிலம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் உரிய அடிப்படை வசதி, ஊட்டச்சத்து இன்றித் தவித்த குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். களியாக்காவிளையில் 25-க்கு 15 அடி அளவு கொண்ட ஓர் அறையில் 76 குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த துயரமும் வெளிச்சத்துக்கு வந்தது.



Read in source website