DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 08-11-2022

கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் 'காவிரி தெற்குவன உயிரின சரணாலயம்' தமிழகத்தின் புதிய மற்றும் 17-வது சரணாலயமாக தமிழக அரசு அறிவித்து ஆணை பிறப்பித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசின் வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

08.11.2022 அன்று தமிழக அரசு, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள 686.405 சதுர கி.மீ பரப்பிலான காப்புக் காடுகளை காவிரி தெற்கு வன உயிரின சரணாலயமாக, வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972, பிரிவு 26A-ன் கீழ் அறிவிக்கிறது. 

இந்த அரசு, கடந்த ஓராண்டில், கழுவேலி பறவைகள் சரணாலயம் (விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள்), நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் (திருப்பூர் மாவட்டம்), கடவூர் தேவாங்கு சரணாலயம் (கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்) மற்றும் கடற்பசு பாதுகாப்பகம் (தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) போன்றவற்றை வன உயிரின பாதுகாப்புச் சட்டம், 1972 இன் கீழ் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவித்துள்ளது.

இச்சரணாலயமானது தமிழ்நாட்டின் காவிரி வடக்கு வன உயிரின சரணாலயம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் காவிரி வன உயிரின சரணாலயம் ஆகியவற்றை இணைக்கும் பெரியதொரு பாதுகாப்புப் பகுதியாக அமைகிறது. இப்பகுதி சூழலியல் பாதுகாப்பு மற்றும் தாவர இனங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்விடப் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முக்கியப் பகுதியாக உள்ளது. இப்பகுதியானது தென்னிந்தியாவில் யானைகள் வாழ்விடங்களில் முக்கியமானதாகவும் காவிரி ஆற்றுப்படுகையில் வன உயிரினங்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாகவும் அமைகிறது.

இந்த சரணாலயப் பகுதி நீலகிரி உயிர்கோளக் காப்பகப் பகுதி வரை, தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட வன உயிரின வாழ்விடத்தை ஏற்படுத்துகிறது. இந்த சரணாலயத்தின் தொடர்ச்சியாக உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம், காவிரி வன உயிரின சரணாலயம், மலைமாதேஸ்வரா வன உயிரின சரணாலயம் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கணக்கெடுப்புகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

இப்பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தொடர்ச்சியாக உள்ளதால், இப்பகுதியில் மீண்டும் புலிகள் எண்ணிக்கையை மீட்டெடுக்க ஏதுவாக அமையும். மேலும், சிறுத்தைகள் மற்றும் அழியும் நிலையில் உள்ள மாமிச உண்ணிகளின் வாழ்விடத்தை மேம்படுத்தவும் ஏதுவாக அமையும். அறிவிக்கை செய்யப்பட்ட இச்சரணாலயம் இரு முக்கிய யானைகள் வழித்தடமான நந்திமங்கலம் - உழிபண்டா மற்றும் கோவைபள்ளம் - ஆனபெத்தள்ளா ஆகிய இடங்களைக் கொண்டுள்ளது.

இப்புதிய சரணாலயம் 35 வகையான பாலூட்டிகள், 238 வகையான பறவைகள் மற்றும் 103-க்கும் மேற்பட்ட மர வகைகளைக் கொண்ட உயிர்பன்மைமிக்க பகுதியாக காணப்படுகிறது. காவிரி ஆற்றுப்படுகையான இங்கு டெக்கான் மஹனீர் மீன்கள், ஹம்ப்பேக்டு மஹனீர் மீன்கள், மெல்லிய ஓடுடைய ஆமைகள், மலை அணில்கள், நீர் நாய்கள், முதலைகள், நாற்கொம்பு மான்கள் போன்ற அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன. 

இப்பகுதியானது 50 கி.மீ. தொலைவிற்கு காவிரி ஆற்றுப்படுகையில் ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டு, மேட்டூர் அணை வரை தாழ்வான காப்புக் காடுகளை உள்ளடக்கியது. இப்பகுதியினை சரணாலயமாக அறிவிப்பதன் மூலம், வனஉயிரினங்களின் வாழ்விடம் மீட்டெடுக்கப்படும் என்றும் இதன்மூலம் காவிரி ஆற்றுப்படுகையின் மண்வளம் மற்றும் நீர்வளம் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Read in source website

இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் முடிவடைந்தது. 

இந்த கிரகணத்தின் ஆரம்ப நிலையை இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தும் காண இயலாது. முழுமையான மற்றும் பகுதி அளவு சந்திர கிரகணத்தின் நிலைகளை கொல்கத்தா, குவாஹாட்டி, கோஹிமா, அகா்தலா உள்ளிட்ட நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலிருந்து காணலாம். சந்திர கிரகணத்தின் பிற்பகுதி நிலைகள் மற்றும் முடிவு மட்டுமே நாட்டின் பிற பகுதிகளில் இருந்து காணக் கூடியதாக இருக்கும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி, 5.12 மணி வரை இருக்கும். பின்னா், பகுதி அளவு சந்திரகிரகணம் 6.19 மணியளவிலும் முடிவடைந்தது. 

முழு சந்திர கிரகண நிகழ்வு செவ்வாய்க்கிழமை நிகழ உள்ளது. இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இந்த நிகழ்வைக் காண முடிந்தது. 


 



Read in source website

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சிபிஐ விசாரணை அறிக்கைகளை வழங்கத் தேவையில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசின் துறை சார்ந்த தகவல்களை எவரொருவரும் பெற முடியும். அந்தவகையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏர் கார்கோ பிரிவில் முறைகேடு தொடர்பாக குமார் என்பவர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அப்போது சிபிஐ விசாரணை அதிகாரி ஒருவர் வாக்குமூலத்தில் முறைகேடு செய்ததாக சிபிஐ இயக்குநரிடம் குமார் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனுவை விசாரித்த சிபிஐ இயக்குநர், அதிகாரிக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட்டார். பின்னர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கையின் நகலை குமார் கோரினார். ஆனால் விசாரணை அறிக்கை தர சிபிஐ தொடர்ந்து மறுத்து வந்தது. அவரது மேல்முறையீடுகளும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. இவரது மனுவை கேரள உய்ரநீதிமன்ற தனி நீதிபதியும் நிராகரித்தார்.

பின்னர் மேல்முறையீடு வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார் மற்றும் ஷாஜி பி.சாலி அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு முந்தைய தனி நீதிபதி தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ எந்த தகவலையும் அளிக்க வேண்டிய அவசியமில்லை, விசாரணை அறிக்கையை தரத் தேவையில்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். 



Read in source website


புது தில்லி: ஆயிரம் மற்றும் 500  ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டு இன்று 6 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதனால் ஏற்பட்ட நன்மைகள் என்னதான் என்பது குறித்து உண்மை எப்போதுதான் தெரிய வரும் என்பது இதுவரை தெரியவரவில்லை.

2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி, மத்திய அரசு, 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று அறிவித்தது. இதனால், கருப்புப் பணம் ஒழியும், கள்ள நோட்டுகள் புழக்கத்திலிருந்து வெளியேறும் என பல வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்திருந்தது. அதெல்லாம் நடந்ததா?

நவம்பர் 8ஆம் தேதி இரவு, பிரதமர் நரேந்திர மோடி, தொலைக்காட்சி வாயிலாக மக்களிடையே உரையாற்றுகையில், ரூ.1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று அறிவித்தார். 

பயங்கரவாதிகளிடையே பணப்புழக்கத்தை நிறுத்த, டிஜிட்டல் எனப்படும் எண்ம முறையில் பணப்பரிமாற்றத்தை ஊக்கப்படுத்த என பல்வேறு காரணங்களும் இதற்காக சொல்லப்பட்டன.

ஆனால் கையிலிருந்த ரூபாய் நோட்டுகள் செல்லாமல் மக்களும், ஏழைகளும் வியாபாரிகளும் வணிகர்களும் சொல்லாணாத் துயரங்களை அடைந்தனர்.  வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சிறு வியாபாரிகள் நொடித்துப் போயினர்.

இதையெல்லாம் கடந்து வந்து, தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்பிஐ ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதாவது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு சுமாா் 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையிலும், நாட்டின் பணப் பரிவா்த்தனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது என்பதுவே அது.

ஆர்பிஐ தெரிவித்திருப்பதாவது, கடந்த மாதம் 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த அரை மாதத்தில் மக்களிடையே ரூ.30.88 லட்சம் கோடி பணப் பரிவா்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிகபட்ச பணப் பரிவா்த்தனையாகும்.

கடந்த 2016-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, அந்த ஆண்டின் நவம்பா் மாதம் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த அரை மாதத்தில் ரூ.17.7 லட்சம் கோடிக்கு பணப் பரிவா்த்தனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த அக்டோபா் 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த அரை மாதத்தில் மக்களிடையே பணப் பரிவா்த்தனை 71.84 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்று குறிப்பிடப்பட்டுளள்து.

மத்திய அரசு கூறியது போல, கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டதா? கள்ள நோட்டுகள் புழக்கத்திலிருந்து முற்றிலும் ஒழிந்துபோயினவா? பயங்கரவாதிகளுக்கு பணப்புழக்கமே இல்லாமல் போனதா? இந்தக் கேள்விகளுக்கு எப்போதுதான் உண்மை தெரியவரும் என இதுவரை தெரியவில்லை.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், கருப்புப் பணம் ஒழிக்க பணமதிப்பிழப்பு உதவும் என்று மோடி அறிவித்திருந்தார். ஆனால், வியாபாரமும் சிறு தொழில்களும்தான் ஒழிந்தன. அவ்வளவு பெரிய பொருளாதார நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் 72 சதவீதம் அதிக பணநடமாட்டம் இருப்பதாகப் புள்ளி விவரம் காட்டுகிறது. அந்த பேரிடர் மிகப்பெரிய தோல்வி என்பதையும், அதுதான் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என்பதையும் பிரதமர் மோடி இன்னமும் ஒப்புக் கொள்ளவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு புழக்கத்தில் விடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளும் தற்போது புதிதாக அச்சிடப்படுவதில்லை என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதனுடன் புதிதாக 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
 



Read in source website

வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் நவம்பா் 7-ஆம் தேதி ரஷியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை அவா் சந்தித்துப் பேசினார். 

ரஷியா- உக்ரைன் போர் தொடா்ந்து 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், ஜெய்சங்கரின் இந்தப் பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

உக்ரைன் போருக்கு பிறகு ரஷியாவுடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை மேற்கத்திய நாடுகள் படிப்படியாகக் குறைத்துக் கொண்டதால், இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்க ரஷியா முன்வந்தது. இந்தியாவும் அதனை ஏற்று ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரித்துள்ளது. 

“எண்ணெய் விநியோகச் சிக்கலைப் பொறுத்தவரை, எரிசக்தி சந்தையில் அழுத்தம் உள்ளது. ஆனால் உலகின் 3வது பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நுகர்வோர் என்ற வகையில், இந்திய நுகர்வோர் மிகவும் சாதகமான விதிமுறைகளில் இவைகளை பெறுவதை உறுதி செய்வது எங்கள் அடிப்படைக் கடமையாகும். 

ஆப்கானிஸ்தானின் நிலைமையை உலகம் மறந்துவிடக் கூடாது. மனிதாபிமான சூழ்நிலை உள்ளது. தடுப்பூசிகள் மற்றும் உணவுகளை வழங்குவதில் இந்தியா முன்னேறியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகள் குறித்து சர்வதேச சமூகம் கவலை கொண்டுள்ளது.

நிலையான மற்றும் தொடர்ச்சியான மறு சமநிலைப்படுத்தல் மூலம் உலகம் அதிக பல துருவங்களை நோக்கி நகர்கிறது. இது ரஷியா மற்றும் இந்தியா உரையாடலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சர்வதேச விவகாரங்களில் கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். உக்ரைன் மோதல் முக்கிய அம்சமாக இருந்தது. ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் தெரிவித்தது போல், இது போரின் சகாப்தம் அல்ல. உலகளாவிய பொருளாதாரம், எங்கும் குறிப்பிடத்தக்க மோதலுக்காக, மற்ற இடங்களில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாத வகையில் ஒன்றுக்கொன்று சார்ந்துள்ளது” என அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தார்.



Read in source website

 

அரசுப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், தனியார் துறையில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் பெற்றிருப்பது கட்டாயமாக்க கோவா அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். 

வேலைவாய்ப்பு கண்காட்சி ஒன்றில் இளைஞர்களிடம் பேசிய முதல்வர், 

இனி நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. பட்டப் படிப்பை முடிப்பதற்கு முன் பலர் கணக்கு மற்றும் பிற பதவிகளுக்காக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கின்றனர். 

இனி இவ்வாறு நடக்காது. அரசு வேலைக்கு குறைந்தபட்சம் தனியார் துறையில் ஒரு வருட அனுபவம் தேவை என்றார். 

எதிர்காலத்தில் அரசு வேலை ஆட்சேர்ப்பின்போது முந்தைய பணி அனுபவம் கட்டாயம் சேர்க்கப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் அரசு பதவிக்கு விண்ணப்பிக்கும் முன் தனியார் துறையில் வேலை தேட வேண்டும். 

கோவா அரசு ஒருபுறம் உள்கட்டமைப்பை உருவாக்குகிறது, மறுபுறம் மனித வளத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. உருவாக்கப்பட்ட மனித வளத்தின் திறமையை தனியார் மற்றும் அரசு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்று நாங்கள் யோசித்து வருகிறோம். 

நேரடியாக வேலைகளை வழங்குவதை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த நடைமுறை எங்களுக்குத் திறமையான மனித வளத்தை வழங்கும். ஆள்சேர்ப்பு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாற்ற முடிவு செய்துள்ளோம். கடந்த 30 ஆண்டுகளாக அவை மாறவே இல்லை. 

பட்டதாரிகளும் மற்றவர்களும் தங்கள் தகுதியை மேம்படுத்தக் கூடுதல் படிப்புகளைக் கற்க வேண்டியது அவசியம் என்று சாவந்த் வலியுறுத்தினார். 
 



Read in source website

 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் 2 பிரிவில் முதல் இடம் பிடித்து அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது இந்திய அணி. அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. புதன் அன்று சிட்னியில் நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. வியாழன் அன்று அடிலெய்டில் நடைபெறவுள்ள 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் சில ஆட்டங்கள் மழையால் மொத்தமாகப் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளன. அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களுக்கு இந்தப் பிரச்னை இருக்காது. அவற்றுக்குக் கூடுதல் நாள் வழங்கப்பட்டுள்ளது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் அடுத்த நாளில் ஆட்டத்தைத் தொடரலாம். 

அரையிறுதியில் அடுத்த நாளன்றும் மழையால் ஆட்டம் நடைபெறாமல் என்ன ஆகும்?

கூடுதல் நாளைப் பயன்படுத்தியும் மழையால் அரையிறுதி ஆட்டங்கள் கைவிடப்பட்டால் சூப்பர் 12 சுற்றில் அவரவர் குரூப் பிரிவில் முதலிடம் வகித்த இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும்.

இறுதிச்சுற்றிலும் மழையால் ஆட்டம் நடைபெறாமல் போனால்?

கூடுதல் நாளைப் பயன்படுத்தியும் மழையால் இறுதி ஆட்டம் கைவிடப்பட்டால் இந்தியாவும் நியூசிலாந்தும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். உலகக் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும். 



Read in source website

அனைத்து பொருள்களுக்கும் ஒரே சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட வேண்டுமெனப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவா் விவேக் தேவ்ராய் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவா், ‘‘மத்திய, மாநில அரசுகளின் மொத்த ஜிஎஸ்டி வருவாயானது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் வெறும் 15 சதவீதமாக மட்டுமே உள்ளது. அதே வேளையில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான அரசின் செலவினம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

சரக்கு-சேவை வரியானது அனைத்து பொருள்களுக்கும் ஒரே விகிதமாக அமல்படுத்தப்பட வேண்டும். அதேபோல், எந்தப் பொருள்களுக்கும் வரி விலக்கு வழங்கப்படக் கூடாது. வரி விலக்கு காரணமாக ஜிடிபி-யில் 5 முதல் 5.5 சதவீதம் வரையில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

வரி விலக்குகள் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. விலக்குகள் ஏதுமற்ற வரி விதிப்பு நடைமுறையை அமல்படுத்துவது தொடா்பாகவும் சிந்திக்க வேண்டும். பல அங்கீகரிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் தனிநபா் வருமானப் பிரிவில் வரியைச் செலுத்தி வருகின்றன. எனவே, தனிநபா் வருமான வரிக்கும் பெருநிறுவன வரிக்கும் இடையிலான செயற்கை வேறுபாடு களையப்பட வேண்டும். இது நிா்வாக சிக்கல்களைக் குறைக்கும்.

இவையனைத்தும் தனிப்பட்ட கருத்து மட்டுமே. இதை பொருளாதார ஆலோசனைக் குழுவின் பரிந்துரையாகக் கருதக் கூடாது. ஆனால், நாட்டில் ஒரே ஜிஎஸ்டி விகிதம் எப்போதுமே அமலாகாது என நினைக்கிறேன்’’ என்றாா்.

 



Read in source website

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே விஜய நகர காலத்தைச் சேர்ந்த சிவன் கோயில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லுாரியின் தமிழ்த்துறை பேராசிரியர் மோகன் காந்தி தலைமையிலான ஆய்வுக்குழுவினர், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வரலாற்று தடயங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், திருப்பத்தூர் அருகே சந்திராபுரம் என்ற கிராமத்தில் கள ஆய்வு நடத்தியபோது, அங்கு விஜய நகர காலத்தைச் சேர்ந்த அரிய வகை கல்வெட்டுகளை கண்டெடுத்துள்ளனர்.

இது குறித்து பேராசிரியர் மோகன்காந்தி கூறியது: "திருப்பத்தூர் மாவட்டம், சந்திரபுரம் அருகேயுள்ள பாராண்டப்பள்ளி கிராமத்தில், சிதிலமடைந்த நிலையில் பழமை வாய்ந்த சிவன் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலின் தென்புற சுவற்றில் ஐந்து வரிகளை கொண்ட கல்வெட்டை எங்கள் ஆய்வுக்குழுவினர் கண்டறிந்தோம். அந்த கல்வெட்டை நாங்கள் ஆய்வு செய்தபோது, அவை விஜய நகர காலத்தை சேர்ந்த கல்வெட்டுகள் என்பது தெரியவந்தது. கல்வெட்டின் தொடக்கம் "சுபமஸ்து ஸ்வஸ்தி ஸ்ரீமன் மஹா மண்டலேஸ்வரர் அச்சுத தேவ மஹாராயர் பிரிதிவி ராஜியம்" என்ற வடமொழி எழுத்துகளான கிரந்த என்ற எழுத்து வகையால் கல்வெட்டு அமைந்துள்ளது.

கிபி 1464 சித்திரை மாசம் முதல் சந்திரபுரி பற்று பாலாண்டான பள்ளி விருபாக்ச நாயினாற்கு பிரணாயக்க திம்மன் பெரிர கண்ணப்ப தேனை மகன் என்று தமிழ் மொழியும் கல்வெட்டில் உள்ளது. அதன் இடை, இடையே கிரந்த எழுத்துகளும் கலந்து எழுதப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துகளும், கிரந்தம் என்னும் வடமொழி எழுத்துகளும் சேர்த்து எழுதும் முறைக்கு "மணிப்பிரவாளம்" என்று பெயர் உள்ளது.

இந்தக் கல்வெட்டு மணிபிரவாள முறையிலேயே எழுதப்பட்டுள்ளது. மேலும், கல்வெட்டில் முதல் 2 வரிகள் திரிபட்ட குமுதம் அல்லது குமுதப் படையில் எழுதப்பட்டுள்ளன. மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது வரிகள் ஐகதிப்படையில் எழுதப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டானது விஜய நகர மன்னன் அச்சுத தேவனின் ஆட்சிக்காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மன்னன் கோயிலுக்கு அளித்துள்ள தானங்கள் குறித்து குறிப்பும் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

கோயிலின் கருவறையில் வீற்றிருக்கும் இறைவனுக்கு விருபாக்சி நாயனார் என இந்தக் கல்வெட்டுக் கூறுகிறது. விருபாக்சி என்ற வடமொழி சொல்லுக்கு நெற்றி கண்ணையுடைய சிவ பெருமான் என்பது பொருளாகும். இந்தக் கோயிலானது மூன்று பாகங்களுடன் திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. அவை ஒன்று கருவறை, 2வது அர்த மண்டபம், 3வது மகா மண்டபம் உள்ளிட்டவைகளாகும்.

தற்போது கோயில் கருவறை சிதைந்துள்ளது. கருவறைக்கு மேலுள்ள விமானம் இருந்ததற்கான கூறுகளே இல்லை. மகா மண்டபத்தில் உள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. அதில் முருகன், விநாயகர், கண்ணப்பர், அனுமன் உள்ளிட்ட தெய்வ சிற்பங்கள் தெளிவாகவும், மிக நேர்த்தியாகவும் காணப்படுகின்றன. கோயிலின் வெளிப்புறம் சாலையோரம் குவியலாக பெரிய, பெரிய கற்கள் கேட்பாரற்று கிடக்கின்றன.

இந்தக் கற்கள் அனைத்தும் கோயிலை கட்டுவதற்காக கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. கருவறைக்கு மேலுள்ள விமானம், கோயிலை சுற்றிலும் மதில் சுவர் எனப்படும் பிரகாரம் கட்டுவதற்காக கொண்டுவரப்பட்டவையாக இந்தக் கற்கள் இருக்க வேண்டும். ஏதோ ஒரு காரணத்தினால் இவை கட்டப்படாமல் விடப்பட்டதாக தெரிகிறது.

இந்தக் கோயில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல், கற்கோயில் சிறியதாக இருந்தாலும் அதிஷ்டானம், உபமானம் திரிபட்ட குமுதம், கண்டம், பிரதி, அர்த மண்டபம், மகா மண்டபம், ஜகதி படையில் கோபம் கொண்ட சிங்கம், பாய்ந்தோடும் யானை என கலை நயங்களுடன் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.

இத்திருக்கோயில் திராவிடக் கோயில் கட்டிடக் கலை, சிற்பக் கலை, கல்வெட்டுக் கலைகளுக்கு மிக சிறந்த எடுத்து காட்டாய் விளங்குகிறது. சிறந்த வரலாற்றிடமாக உள்ள இத்திருக்கோயில் புனரமைக்கப்பட்டு வழிபாட்டிடமாக மாற்ற வேண்டும் என பொது மக்களும், வரலாற்று ஆர்வலர்களும் விரும்புகின்றனர். ஆகவே, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் அல்லது தமிழக தொல்லியல் துறை இந்த கோயிலை சீரமைத்து வழிப்பாடு செய்ய முன் வர வேண்டும்’’ என்று அவர் கூறினார்.



Read in source website

சென்னை: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 686 ச.கி.மீ. பகுதியை காவிரி தெற்கு காட்டுயிர் காப்பகமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " காவிரி தெற்கு காட்டுயிர்க் காப்பகத்தைத் தமிழ்நாட்டின் 17வது காட்டுயிர்க் காப்பகமாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TN Green Climate Company) செயல்படுத்தி வரும் பசுமை இயக்கங்களின் செயல்பாடுகளோடு இந்த முக்கிய முன்னெடுப்பு நமது மாநிலத்தின் வளமிகுந்த பல்லுயிர்ச் சூழலைக் காப்பதில் பெரும் உதவியாக இருக்கும்." இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



Read in source website

சென்னை: இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று மாலை நிகழ்கிறது. இதை சிறப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கண்களால் பார்க்க முடியும். முழு சந்திரன் தோன்றும் நாளில் (பவுர்ணமி) சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த மே 16-ம் தேதி தென்பட்டது. அதைத் தொடர்ந்து, 2-வது சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இது இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகும்.

இதுதொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்க செயல் இயக்குநர் எஸ்.சவுந்தரராஜ பெருமாள் கூறியதாவது: பூமியின் நிழலில் சந்திரன் கடந்து செல்லும்போது, அது சூரியனின் நேரடியான ஒளியை பெற இயலாமல் போய்விடுவதால் சந்திரன் ஒளி குன்றுவதையே சந்திர கிரகணம் என்கிறோம். சந்திர கிரகணத்தின்போது, சூரியனின் எதிர் திசையில் சந்திரன் வருவதால் பவுர்ணமியின்போதுதான் சந்திர கிரகணம் தெரியும். சந்திரன் முழுமையாக பூமியின் முழு நிழல் பகுதியில் மறைவது முழு சந்திர கிரகணம் ஆகும். பூமியின் நிழல், பெரிய பரப்பில் விழுவதால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் காணலாம்.

இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.39 மணிக்கு தொடங்கி, மாலை 6.19 மணிக்கு முடிவடையும். இதில் முழு சந்திர கிரகணம் மாலை 3.46 மணி முதல் 5.11 வரை தென்படும். சென்னையில் மாலை 5.38 மணிக்குதான் சந்திரன் உதயமாகும். எனவே, முழு கிரகணத்தை காண இயலாது. பகுதி கிரகணமும், சந்திரன் உதித்த சில நிமிடங்களில் முடிந்துவிடும். கடந்த அக்.25-ம் தேதி பகுதி சந்திர கிரகணம் தென்பட்டது. அடுத்த பகுதி சந்திர கிரகணத்தை 2023 அக்.28-ம் தேதி காணலாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருப்பதாலும், சிறப்பு உபகரணங்கள் இன்றி, இதை வெறும் கண்களால் பார்க்கலாம் என்பதாலும், கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில் இந்நிகழ்வை காண சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். கிரகணத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல கோயில்களில் இன்று நடைகள் அடைக்கப்படுகின்றன.



Read in source website

புதுச்சேரி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து புதுச்சேரி பொது சுகாதார செவிலியர் அதிகாரி வி.சரஸ்வதி, 2021-ம்ஆண்டுக்கான ‘ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருதினை பெற்றுள்ளார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று, சிறப்பாக சேவையாற்றிய செவிலியர்களுக்கு விருதளிக்கும் நிகழ்ச்சிநடந்தது. இந்நிகழ்வில் குடியரசுத் தலைவா் திரவுபதி முர்மு,2021-ம் ஆண்டுக்கான ‘ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருதினைநாடு முழுவதும் சிறப்பாக சேவையாற்றிய செவிலியர்களுக்கு வழங்கினார்.

இதில், புதுச்சேரி சுகாதாரத் துறையின் துணை இயக்குநரக அலுவலகத்தில் பொது சுகாதார செவிலியராகப் பணிபுரியும் வி.சரஸ்வதி, 2021-ம் ஆண்டுக்கான ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் விருதைப் பெற்றார். இவர், கடந்த 1987-ல் அரசுசெவிலியராக தனது பணியைத்தொடங்கினார். 11 ஆண்டுகளாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஐசியூ, டயாலிசிஸ் யூனிட்டில் பணிபுரிந்தார். அதைத்தொடர்ந்து 9 ஆண்டுகள் நர்சிங் கல்லூரியில் பணிபுரிந்த இவர், தொடர்ந்து 15 ஆண்டுகளாக மாஹே உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்தார்.

விருது பெற்ற சரஸ்வதி, பேரிடர் மேலாண்மை பயிற்சியை டெல்லியில் முடித்துள்ளார். பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் இளம்பருவத்தினருக்கு கலந்தாய்வு நடத்தியது, நீரிழிவு நோயாளிகள் பின்பற்ற வேண்டிய சுயகவனிப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை பயிற்சி அளித்ததுடன், அதுதொடர்பான வீடியோ தயாரித்தது, தேசிய சுகாதாரத் திட்டங்களை குழுவாக செயல்படுத்தியது, கள சுகாதார நடவடிக்கைகளை வழிகாட்டியது மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான ஆஷா பணியாளர்களுக்கு பயிற்சிகளை நடத்தியது ஆகிய சேவைகளை செய்துள்ளார். மேலும், ஆஷா பணியாளர்களின் குறை தீர்க்கும் குழுவில் உறுப்பினராக இருந்தது, கரோனா தொற்று நோய்களில் பணியாற்ற ஆஷா கள பணியாளர்களை தயார்செய்தது, கரோனா தொற்று நோய்களின் போது வீட்டிலேயே கணக்கெடுப்பு மற்றும் மருத்துவ நடவடிக்கைகளை பின் தொடர ஆஷாபணியாளர்களுக்கு பயிற்சி திட்டம் தயாரித்து உதவியது போன்ற பணிகளுக்காக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.



Read in source website

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக் கான 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

ஐந்து நீதிபதிகள் அமர்வில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இதில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

103 அரசியலமைப்பு சட்ட திருத்தம் சரியா, தவறா? பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி சேர்க்கப்படாதது சரியா, தவறா? 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை மீறியது சரியா, தவறா ஆகிய 3 விவகாரங்கள் விசாரணையில் முன்வைக்கப்பட்டன. இவற்றை ஆராய்ந்து எனது தீர்ப்பை வழங்குகிறேன்.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசிய லமைப்பு சாசனத்தை எந்த வகையிலும் மீறாது. 10% இடஒதுக்கீட்டில் பொது பிரிவினர் மட்டுமேசேர்க்கப்பட்டது அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை எந்த விதத்திலும் பாதிக்காது. இதேபோல 50% இடஒதுக்கீடு வரம்பு அதிகரிக்கப்பட்டதும்அரசியலமைப்பு சாசன அடிப்படை கட்டமைப்பை பாதிக்காது. இடஒதுக்கீடு வரம்பு என்பது தளர்வுக்கு உட்பட்டது. எனவே பொருளாதாரத்தில் நலிந்த பொதுபிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் 103-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் செல்லும். இவ்வாறு அவர் தீர்ப்பளித்தார்.

நீதிபதி பேலா எம்.திரிவேதி வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

நீதிபதி தினேஷ் மகேஸ்வரியின் தீர்ப்போடு எனது தீர்ப்பும் ஒத்துப் போகிறது. மக்களின் தேவை, பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டே 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதில் சமநிலை கோட்பாடு எந்த வகையிலும் மீறப்படவில்லை.

நாடு சுதந்திரம் அடைந்தபோது பழங்கால சாதிய நடைமுறையை கருத்தில் கொண்டு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது நாடுசுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்ஆகின்றன. இந்த நேரத்தில் இடஒதுக்கீடு நடைமுறை குறித்து மறுஆய்வு செய்வது அவசியம்.இவ்வாறு அவர் தீர்ப்பில் கூறியுள்ளார்.

நீதிபதி ஜே.பி.பர்திவாலா அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, நீதிபதி பேலா எம்.திரிவேதியின் தீர்ப்புகளை ஆமோதிக்கிறேன்.சமூக, பொருளாதார சமநிலையை உறுதிப்படுத்தவே இடஒதுக்கீடு நடைமுறை கொண்டுவரப்பட்டது. பிற்படுத்தப்பட் டோரில் முன்னேறிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க தேவையில்லை. அப்போதுதான் தேவையுள்ளோர் இடஒதுக்கீட்டின் பலனை பெற முடியும். இன்றைய காலத்துக்கு ஏற்ற வகையில் இடஒதுக்கீடு இருக்க வேண்டும்.

மிக நீண்ட காலத்துக்கு இடஒதுக்கீடு நடைமுறையை பின்பற்றக்கூடாது. இதனால் இடஒதுக்கீட்டை முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த வழக்கில் பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 103-வதுஅரசியலமைப்பு திருத்தம் செல்லும் என தீர்ப்பளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Read in source website

சென்னை: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை நாக்-அவுட் சுற்றான அரையிறுதியில் விளையாடி உள்ள அணிகள் எவை என்பது குறித்து பார்ப்போம். நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் அரையிறுதி சுற்றை தற்போது எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூஸிலாந்து - பாகிஸ்தான் மற்றும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகள் வரும் ஞாயிறு அன்று கோப்பையை வெல்வதற்கான இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை செய்யும். இந்தச் சூழலில் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை அரையிறுதியில் விளையாடிய அணிகளின் விவரம் இங்கே.

  • பாகிஸ்தான் - 6 முறை
  • இந்தியா - 4 முறை (2007, 2014, 2016 மற்றும் 2022*)
  • இங்கிலாந்து - 4 முறை
  • நியூஸிலாந்து - 4 முறை
  • ஆஸ்திரேலியா - 4 முறை
  • இலங்கை - 4 முறை
  • மேற்கிந்திய தீவுகள் - 4 முறை
  • தென் ஆப்பிரிக்கா - 2 முறை

டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றது கிடையாது. இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), மேற்கிந்திய தீவுகள் (2012 மற்றும் 2016), இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.



Read in source website

சென்னை: திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி மனிஷா ராமதாஸ் உலக பாரா பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஜப்பானில் நடைபெற்ற இப்போட்டியில் ஒற்றையர் பிரிவில் மனிஷா ராமதாஸ், ஜப்பானின் மமிகோ டொயோடா என்பவரை 21-15, 21-15 என்ற நேர் செட்களில் தோற்கடித்து தங்கம் வென்றார். இதே தொடரில் இரட்டையர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.

உலக பாரா பேட்மின்டன் சாம்பியன்ஷிப் வரலாற்றில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி தங்க மங்கையாக வலம் வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மனிஷா தனது ஒரு வருட சர்வதேச வாழ்க்கையில் ஸ்பெயின், பிரேசில், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கனடா, ஜப்பான் என பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் 8 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் வெற்றிகளைக் குவித்து வருவதன் மூலம், மனிஷா ராமதாஸ் SU3 மற்றும்SU5 WS உலக தரவரிசையில் சாம்பியனாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். சாதனை படைத்துள்ள மனிஷாவுக்கு ஸ்ரீ நிகேதன் பள்ளி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: இந்திய உற்பத்தி துறை தனது வளர்ச்சி வேகத்தை 6 முதல் 9 மாதங்கள் வரையில் தக்க வைக்கும் என இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் (பிக்கி) சமீபத்திய காலாண்டு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய உற்பத்தி துறையின் வளர்ச்சி கடந்த சில மாதங்களாகவே நல்ல அளவில் மேம்பட்டு வருகிறது. உற்பத்தி துறையில் தற்போதுள்ள சராசரி திறன் பயன்பாடு 70 சதவீதத்துக்கும் அதிகமாகவே உள்ளது. இது, நீட்டித்த பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. கடந்த காலாண்டைக் காட்டிலும்எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய 40 சதவீத நிறுவனங்கள் அடுத்த 6 மாதங்களில் விரிவாக்க திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளன. இதையடுத்து, இந்திய உற்பத்திதுறை தனது வளர்ச்சி வேகத்தை 6 முதல் 9 மாதங்கள் வரை தக்கவைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர்,கரோனா பாதிப்பு உள்ளிட்டவை பெரிய நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இவைதவிர, மூலப் பொருள்கள் விலை உயர்வு, கடன் செலவினம் அதிகரிப்பு, செயல்பாட்டு மூலதன பற்றாக்குறை, சரக்கு கட்டண உயர்வு, உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவையில் காணப்படும் மந்த நிலை உள்ளிட்டவை நிறுவனங்களின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் காரணங்களாக மாறியுள்ளன.

இந்தியப் பொருளாதாரத்தில் கடந்த நிதியாண்டில் காணப்பட்ட மீட்சி நடப்பாண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுகளிலும் தொடர்கிறது. ஆய்வுக்குள்படுத்தப்பட்ட 61 சதவீத நிறுவனங்கள் இரண்டாவது காலாண்டில் அதிக உற்பத்தியை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளன. இவ்வாறு பிக்கி தெரிவித்துள்ளது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 61% நிறுவனங்கள் 2-வது காலாண்டில் அதிக உற்பத்தியை பதிவு செய்துள்ளன.



Read in source website

கெய்ரோ: எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் 'சிஓபி27' என்ற தலைப்பில் அனைத்து உலகப் பருவநிலை மாற்ற மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 18-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 100-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் ஷர்ம் எல்-ஷேக் நகருக்கு வந்துள்ளனர். ஆனால், இந்த மாநாட்டினைவிட கூடுதல் கவனம் பெற்றிருக்கிறார் எகிப்து நாட்டினைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அலா அப்துல் பத்தாஹ். இவர் தற்போது எகிப்து நாட்டு சிறையில் இருக்கிறார்.

இவரைப் பற்றி ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச பொது மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னஸ் கலாமர்ட் கடந்த ஞாயிறு இரவு ஒரு ட்வீட்டைப் பதிவு செய்திருந்தார். அதில் அவர், "எகிப்துக்கு வெறும் 72 மணி நேரம்தான் இருக்கிறது. அலா அப்துல் பத்தாஹ் உண்ணாவிரதம் அவரை மோசமாக பாதித்துளது. அவரை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் சிஓபி27 மாநாட்டின் மீது கறை படியும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

யார் இந்த அலா அப்துல் பத்தாஹ்? - மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜனநாயக ஆட்சி ஆதரவுக் குரல்கள் ஓங்கி ஒலித்தன. குறிப்பாக எகிப்து நாட்டில் இந்தக் குரல் காத்திரமாக ஒலித்தது. அதனால் எகிப்தின் நீண்ட கால அதிபராக இருந்த ஹோஸ்னி முபாராக் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இருப்பினும் எகிப்தில் எதிர்பார்த்ததுபோல் ஜனநாயகம் மலரவில்லை. மாறாக, எல் சிஸியின் கீழ் மீண்டும் சர்வாதிகார ஆட்சியே அமைந்தது. அப்போதும் அப்துல் பத்தாஹ், அரசாங்கத்தை ஒருநாளும் விமர்சிக்காமல் இருந்ததில்லை. அவரது வலைப்பக்கம் இதனால் பிரபலமானது. 40 வயதான பத்தாஹ் இளைஞர்கள் மத்தியில் ஜனநாயக வேட்கையை ஆழமாக விதைகள் ஆக்கினார். இதனால் அரசாங்கத்தின் கோபத்திற்கு ஆளாகி அடிக்கடி சிறையின் கம்பிகளுக்கு பின்னால் சென்றுவிடுவார்.

அப்துலின் குடும்பத்தில் நிறைய சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள் இருக்கின்றனர். அவரது தாய் லைலா சவுஃப் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் கணக்குப் பேராசிரியர். அவரது தந்தை உரிமைகள் சார் வழக்கறிஞர். அவரது சகோதரிகள் அரசியல் செயற்பாட்டாளர்கள். கடந்த ஏப்ரல் மாதம் அப்துல் பத்தாஹ்வுக்கு அவரது தாயின் வழியாக பிரிட்டன் குடியுரிமை கிடைத்தது. இருந்தும் கூட சிறையில் இருக்கும் பத்தாஹை பிரிட்டன் தூதரகம் ரீதியாக மீட்க இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பது அவரது குடும்பத்தாரின் குற்றச்சாட்டு.

அப்துல் பத்தாஹ் முதன்முதலில் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்போது, அனுமதியின்றி போராட்டத்தில் கலந்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2019ல் அவர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அதே ஆண்டின் இறுதியில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அரசு எதிர்ப்புப் போராட்டங்களை தூண்டினார், சமூக வலைதளங்கள் வாயிலாக போலியான தகவல்களைப் பரப்பினார் என்றெல்லாம் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். இதுதவிர 2013ல் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் ப்தர்ஹுட் என்ற அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, அவர் கடந்த 220 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தற்போது தண்ணீர் கூட பருகாமல் பிடிவாதம் காட்டி வருகிறார். இந்தச் சூழலில் அவரது விடுதலைக்கு உலக நாடுகள் பலவும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.

சகோதரியின் குரல்: பத்தாஹின் சகோதரி சனா சைஃப், பிரிட்டனில் இருந்து எகிப்துக்கு வந்துள்ளார். எகிப்தை அடைந்த அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது சகோதரரின் வழக்கு மீது சர்வதேச ஊடக வெளிச்சத்தைப் பாய்ச்ச என்னால் இயன்ற முயற்சிகளை செய்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன். எகிப்தில் ஜனநாயகம் தான் எனது சகோதரரின் கோரிக்கை. சிஓபி27 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்க்கவுள்ளேன். ஞாயிறு இரவுக்குப் பின்னர் எனது சகோதரர் தண்ணீரும் அருந்தவில்லை" என்று தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் குரல் கொடுத்து வருகிறது.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இவ்விவகாரத்தில் தலையிட்டுள்ளதாகத் தெரிகிறது. அப்துல் பத்தாஹின் குடும்பத்தினருக்கு ரிஷி சுனக் ஒரு கடிதம் எழுதியுள்ளதாகவும். அதில் அவர், எகிப்தில் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்லும் போது அந்நாட்டு அதிபர் எல் ஸிஸியிடம், இந்த விவகாரம் குறித்து பேசுவதாக உறுதியளித்துள்ளதாகவும் பத்தாஹ் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்தக் கடித விவகாரத்தை பிரதமர் ரிஷி சுனக்கின் அலுவலகமும் உறுதி செய்தது. இந்தச் சூழலில் தான் ரிஷி சுனக், காலநிலை மாநாட்டில் மேடையில் ஏறிவிட்டு ஏதும் பேசாமல், காரணமும் கூறாமல் திரும்பினார். சுனக் மேடையில் பேச தயாரானபோது, அவரது உதவியாளர்கள் மேடைக்கு வந்து அவரிடம் ஏதோ கூறியுள்ளார். ஏறக்குறைய ஒரு நிமிடம் வரை உதவியாளர் ஒருவர் ஏதோ விவரிக்க சிறிது நேர தயக்கத்திற்குப் பின்னர் ரிஷி சுனக் அங்கிருந்து கிளம்பினார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தின் மனித உரிமைகள் அடக்குமுறை விவகாரம் சர்வதேச கவனத்தைப் பெறத் தொடங்கியுள்ளது. அதேபோல், அலா அப்துல் பத்தாஹ் சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படுவாரா என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளது.



Read in source website

புதுடெல்லி: ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இந்தியாவின் மந்திரம் உலக நலனுக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 கூட்டமைப்பிற்கு வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்தியா தலைமை வகிக்க உள்ளது. இதை முன்னிட்டு, இதற்கான லோகோ, இணையதளம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: “ஜி20 நாடுகளின் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்க உள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உலகமே ஒரு குடும்பம் என்பது உலகிற்கான இந்தியாவின் தனித்துவமான சிந்தனை.

சுதந்திரம் அடைந்த பிறகு வளர்ச்சிக்கான பயணத்தை நாம் தொடங்கினோம். நாம் தற்போது அடைந்திருக்கும் இந்த உயரத்திற்கு கடந்த 75 ஆண்டுகளில் அமைந்த அனைத்து அரசுகளுக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கு இருக்கிறது. அவர்களின் கடும் உழைப்பின் காரணமாகவே இந்த உயரம் சாத்தியமாகி இருக்கிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பாதுகாக்கும் நோக்கில் ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு மின் உற்பத்தியகம் என்ற அடிப்படையில் உலகை இந்தியா வழிநடத்தி வருகிறது. ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதே இந்தியாவின் மந்திரம். ஜி20 நாடுகளின் தலைமையை ஏற்க இருக்கும் இந்தியா காட்டும் இந்த பாதை, உலக நலனுக்கு வழிவகுக்கும்” என்று அவர் பேசினார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, பிரேசில், சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தோனேஷியா உள்ளிட்ட 20 நாடுகள் ஜி20 கூட்டமைப்பில் உள்ளன. இந்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தோனேஷியாவிடம் இருந்து இந்தியா பெற்றுள்ளது. ஜி20 தலைமை வகிக்கும் ஓராண்டு காலகட்டத்தில் நாடு முழுவதும் 200 கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு செப்டம்பரில் ஜி20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதில், ஜி20 நாடுகளின் தலைவர்கள் உள்பட உலகின் முக்கிய தலைவர்கள் பலரும் பங்கேற்க இருக்கிறார்கள். இத்தகைய ஒரு மாநாடு இந்தியாவில் நடைபெற இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

நியூயார்க்: அண்டத்தின் 'வைல்ட் டிரிப்லெட்' (248- Wild’s Triplet) எனப்படும் இரண்டு விண்மீன் மண்டலங்களின் புகைப்படத்தை நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி எடுத்துள்ளது.

வைல்ட் டிரிப்லெட் விண்மீன் மண்டலங்கள் பூமியிலிருந்து 200 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன. இதன் புகைப்படத்தை ஹப்பிள் தொலைநோக்கி அழகாகவும், தெளிவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில் ’வைல்ட் டிரிப்லெட்’ எனப்படும் இரு விண்வெளி மண்டலங்களும் ஈர்ப்பு விசையினால் ஒன்றின் பால் ஒன்று ஈர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதன் காரணமாக இந்த இரு விண்மீன் மண்டலங்களின் இடையே லுமினஸ் பாலம் ஒன்றை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த லுமினஸ் பாலம் ஹப்பிள் எடுத்த புகைப்படத்திலும் தெளிவாகத் தெரிகிறது.

சில தினங்களுக்கு முன்னர் நமது பால்வெளி மண்டலத்தின் அருகே உள்ள சுருள் வடிவ விண்மீன் மண்டலத்தின் புகைப்படத்தை ஹப்பிள் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில்தான் வைல்ட் டிரிப்லெட் விண்மீன் மண்டலங்களை ஹப்பிள் வெளியிட்டுள்ளது.

ஹப்பிள் தொலை நோக்கியின் பண்புகள்:

  • ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி 1990-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் தொலைநோக்கி இதுவாகும். *
  • ஹப்பிள் தொலைநோக்கி ஒரு பேருந்து அளவுள்ளது. 97 நிமிடத்துக்கு ஒருமுறை பூமியை ஹப்பிள் சுற்றிவருகிறது. (இந்த வேகத்தில் சென்றால் சுமார் ஒன்றரை நிமிடத்தில் சென்னையிலிருந்து திருச்சி சென்றுவிடலாம்).
  • அகச்சிவப்பு கதிர், புறஊதா கதிர், காணுறு ஒளி ஆகிய மூன்று அலைநீளங்களில் நிறமாலைமானி மற்றும் காட்சி செய்யும் திறன் கொண்டது.
  • 0.05 வினாடி டிகிரி விலகியுள்ள பொருட்களைக்கூட பிரித்து இனம் காணும் காட்சித் திறன் கொண்டது.


Read in source website

ஷர்ம் எல்-ஷேக் (எகிப்து): எகிப்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 100-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் ஷர்ம் எல்-ஷேக் நகருக்கு வந்துள்ளனர்.

எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் சிஓபி27 என்ற தலைப்பில் அனைத்து உகப் பருவநிலை மாற்ற மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. நவம்பர் 18-ம் தேதி வரை மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் எகிப்துக்கு வருகை தந்துள்ளனர். நேற்று நடைபெற்ற உச்சி மாநாட்டின்போது சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் விரைவில் எகிப்து வரவுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டின் ஆலோசகர்கள் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி நைஜல் புர்விஸ் கூறியதாவது:

மாநாட்டில் பங்கேற்பதற்காக 100-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் இங்கு வந்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் விரைவில் மாநாட்டில் இணைவர். இந்த மாநாட்டின் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தவிர்த்து வருகின்றன. இந்த நாடுகளில்தான் காற்றில் கார்பன் உமிழ்வு அதிகம் உள்ளது. கார்பனை அதிகம் உமிழும் மற்றொரு நாடான அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் இதுகுறித்து மாநாட்டில் பேசுவார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

ட்விட்டர் பயனர்கள் பெருமளவில் மாஸ்டடோன் (Mastodon) தளத்திற்கு மாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில், இது நடந்து வருகிறது. 'சிறைப்பட்ட பறவை விடுபட்டது' என மஸ்க் ட்விட்டரை வாங்கியதும் ட்வீட் செய்திருந்தார். இப்போது அந்தத் தளத்தில் உள்ள பயனர்கள் அனைவரும் சிட்டாக சிறகடித்து பறந்து வெளியேறிக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்தச் சூழலில் மாஸ்டடோன் தளம் குறித்தும், அதன் பயன்கள் என்ன என்பது குறித்தும் சற்றே விரிவாகப் பார்ப்போம்.

அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் எலான் மஸ்க். அப்போது முதலே அவர் அந்த தளத்தின் மூலம் லாபம் ஈட்டுவதற்கான வழிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் ப்ளூ டிக் பயனர்களிடம் மாதந்தோறும் சந்தா வசூலிப்பது. அதோடு ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் பலரையும் அவர் பணி நீக்கம் செய்துள்ளார். அவர் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியது முதலே அது குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், இப்போது ட்விட்டர் பயனர்கள் பலரும் மாஸ்டடோன் தளத்திற்கும் மாறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் மட்டுமே சுமார் 2.3 லட்சம் பயனர்கள் புதிதாக இந்தத் தளத்தில் இணைந்துள்ளனர்.

Mastodon: கடந்த 2016 வாக்கில் இந்த தளம் அறிமுகமாகி உள்ளது. சுமார் 82 மொழிகளில் இயங்கி வருகிறது. இதுவும் ட்விட்டரை போலவே மைக்ரோ பிளாகிங் தளம்தான். ட்விட்டர் தளத்தை போன்ற அம்சங்கள் இதிலும் உள்ளன. ஆனால், இது பிரைவேட் சர்வர்களில் இயங்கும் சமூக வலைதளம்.

இந்தத் தளமானது, மற்ற சமூக வலைதளங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அதாவது, இதில் ஒருவர் இணைய வேண்டுமெனில் தங்களுக்கு பிடித்தமான சர்வர்களை தேர்வு செய்ய வேண்டும். பல்வேறு ஜானர்களில் இந்த சர்வர்கள் உள்ளன. இந்த சர்வர்களை சுயசார்பு அமைப்புகள் அல்லது தனிநபர்கள் நிர்வகித்து வருகின்றனர். ஒவ்வொரு சர்வர்களின் கொள்கைகளும் மாறுபடுகின்றன.

பயனர்கள் தங்களது சர்வரின் கணக்கு மூலம் மாஸ்டடான் தளத்தில் உள்ள எந்தவொரு பயனரின் பதிவையும் ஹோம் ஃபீடில் பார்க்கலாம். ஆனால், அதற்கு அந்தப் பயனரை பின்பற்ற வேண்டும். இந்த தளத்தில் பயனர்கள் தாங்கள் பின்பற்றும் நபர்களின் கணக்குகளை சார்ந்த பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும்.

மேலும், இந்த தளத்தில் பயனர்கள் தங்களுக்கு பிடித்த வேறு சர்வர்களுக்கும் சுலபமாக மாறலாம். அதோடு தங்களுக்கென பிரத்யேகமாக ஒரு சர்வரையும் கட்டமைக்கலாம். இதில் இயங்கும் சர்வர்களை கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிகிறது. ஆனால் இந்தப் பக்கத்தில் புரோமோட் செய்யப்படும் கன்டென்ட்டுகளை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தளத்தில் பயனராக இணைய 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதோடு மின்னஞ்சல் முகவரியும் தேவைப்படுகிறது. அதைக்கொண்டு பயனர்கள் தங்கள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உருவாக்கி இந்த தளத்தில் பதிவுகளை இடலாம்.

ட்விட்டரில் இருக்கும் அம்சங்களில் சில இதில் உள்ளன. ரீட்வீட் செய்வதை போலவே இதில் ரீபிளாக் என அறியப்படுகிறது. லைக்குகள் ‘ஃபேவரைட்’ என இந்த தளத்தில் அறியப்படுகிறது.



Read in source website

முதல் முறையாக பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தும் 103வது அரசியலமைப்புத் திருத்தத்தை ஆதரிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (நவ.7) தீர்ப்பளித்தது.
இது, பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு கோரப்பட முடியாது என்ற கடந்தகால தீர்ப்புகளுக்கு எதிராக உள்ளது.

இந்த இடஒதுக்கீடு பிரிவுகள் 15(4) மற்றும்/அல்லது 15(5) மற்றும்/அல்லது 16-ன் கீழ் உள்ளடக்கப்பட்ட வகுப்பு அல்லது வகுப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.
எனினும், பொருளாதார நிலைமைகளால் பின்தங்கிய பிற பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு இந்த நீதிமன்றம் தடை விதிக்கவில்லை எனவும் என்று நீதிபதி தினேஷ் மகேஸ்வரி கூறினார்.

103வது திருத்தமானது, பிரதிநிதித்துவத்தின் போதாமை மற்றும் “பின்தங்கிய நிலையைக் காட்ட வேண்டிய அவசியம்” ஆகியவற்றிலிருந்து வர்க்க அடிப்படையிலான இடஒதுக்கீட்டின் அவசியத்தை விலக்கி, தனிநபர்களின் வருமான அளவுகோல்களின் அடிப்படையில் 10 சதவீத ஒதுக்கீட்டை அனுமதிப்பதன் மூலம் பொருளாதாரத்துடன் தொடர்புடைய இடஒதுக்கீட்டிற்குப் பாதுகாப்பை வழங்கியுள்ளது.

இந்தத் சட்டத்திருத்தத்திற்கு எதிராக வாதிடும் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில், புதிதாக பாதுகாக்கப்பட்டுள்ள வகுப்பினர் (10 சதவீத EWSக்கு கீழ்) இடஒதுக்கீட்டிற்குத் தகுதி பெறுவதற்கு, போதுமான பிரதிநிதித்துவம் இல்லை.
மேலும், இதுபோன்ற இடஒதுக்கீடுகளுக்கு முடிவே இருக்காது, ஏனென்றால் மற்றவர்களை விட ஏழை மக்கள் எப்போதும் இருப்பார்கள் என்றார்.

இந்த நிலையில், திருத்தத்திற்கு எதிராக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரிக், ‘பிற்படுத்தப்பட்டவர்கள்’ என்பது ‘வகுப்பு மக்களுக்கு’ முன் இருக்க வேண்டும் என்பதைக் காட்ட, அரசியலமைப்புச் சபை விவாதங்களையும் மேற்கோள் காட்டினார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அரசு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், வரலாற்று அநீதி, களங்கம் மற்றும் பாகுபாடு காரணமாக பிரதான நீரோட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய குழுக்களுக்கு மட்டுமே உறுதியான நடவடிக்கையின் பலன்களை வழங்க வேண்டும் என்றும் சட்ட வல்லுநர்கள் நினைத்தார்கள் என்றார்.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி யூயூ லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் உறுதியான ஒத்த கருத்துகளை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், புதிய அளவுகோல்களுக்கான அடையாளங்காட்டி தனிநபர்கள் எதிர்கொள்ளும் பற்றாக்குறையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, தனிநபர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது பொருத்தமற்றது.
மேலும், புதிய 10 சதவீத இடஒதுக்கீட்டின்படி ஒருவர் எந்தச் சமூகம் அல்லது வகுப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம். அரசு அவர் அல்லது அவளது பின்னணியைக் கவனிக்காது என்பதே ஆகும்.



Read in source website

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் 22வது சட்ட ஆணையம், ஓய்வுபெற்ற நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய சட்ட ஆணையம் என்றால் என்ன, அது என்ன செய்கிறது?

மத்திய அரசு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான ஓய்வுபெற்ற நீதிபதி ரிதுராஜ் அவஸ்தியின் தலைமையில் இந்திய சட்ட ஆணையத்தை திங்கள்கிழமை (நவம்பர் 7) அமைத்துள்ளது. இந்த குழுவில் உள்ள மற்ற ஐந்து உறுப்பினர்களாக கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.சங்கரன், எம்.கருணாநிதி மற்றும் சட்டப் பேராசிரியர்கள் ஆனந்த் பலிவால், டி.பி.வர்மா, ராக்கா ஆர்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ட்வீட் செய்துள்ளார்.

நீதிபதி அவஸ்தி 2021 அக்டோபரில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று இந்த ஆண்டு ஜூலையில் ஓய்வு பெற்றார். அவர் தலைமையிலான அமர்வு இந்த ஆண்டு மார்ச் மாதம் கல்வி நிறுவனங்களில் பெண்கள் மற்றும் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு மாநில அரசின் கட்டுப்பாட்டை உறுதி செய்தது. கடந்த மாதம், உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவில் வேறுபட்ட தீர்ப்பு வழங்கியது.

நீதிபதி சங்கரன் 2005 முதல் 2016 வரை கேரள உயர்நீதிமன்றத்தில் பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டில், நீதிபதி சங்கரன், லவ் ஜிஹாத் கோட்பாட்டிற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்து, காதல் என்ற போர்வையில் பெண்களை இஸ்லாத்திற்கு மாற்றும் வழக்கத்தை மறுத்தார். இந்தக் கருத்து, இதன் பொருள் மற்றும் உண்மை அடிப்படை இன்னும் தெளிவாக இல்லை. பின்னர் அரசியல் வாதிகளால் வகுப்புவாத பகைமைக்கான ஒரு கருவியாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய சட்ட ஆணையம்

சட்டத் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான திட்டவட்டமான விதிமுறைகளுடன், இந்திய அரசின் அறிவிப்பின் மூலம் உருவாக்கப்பட்ட சட்டப்பூர்வமற்ற அமைப்பாக இந்திய சட்ட ஆணையத்தை சட்ட அமைச்சகம் விவரிக்கிறது. இந்த சட்ட ஆணையம் அதன் விதிமுறைகளின்படி அரசுக்கு (அறிக்கை வடிவில்) பரிந்துரைகளை செய்கிறது.

1955ல் முதன்முதலில் அமைக்கப்பட்ட சட்ட ஆணையம், இதுவரை 277 அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது. சட்ட அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, இந்திய சட்ட ஆணையம் இந்தியாவில் உள்ள சட்டங்கள் பற்றிய சிந்தனையைத் தூண்டும் முக்கிய மதிப்பாய்வை வழங்குகிறது.

22வது சட்ட ஆணையம்

நீதிபதி அவஸ்தி தலைமையிலான ஆணையம் இந்தியாவின் 22வது சட்ட ஆணையம். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ் சவுகான் தலைமையிலான 21வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31, 2018 அன்று முடிவடைந்தது.

2020 பிப்ரவரி 19-ம் தேதி கோவிட்-19 தொற்றுநோய் பரவலுக்கு சற்று முன்பு, மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு 22வது சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 22-வது சட்ட ஆணையத்தை அமைப்பதில் ஏற்பட்ட தாமதத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அமைச்சரவை அனுமதி அளித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அரசு இதழில் அரசியலமைப்பு ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஆணையத்தின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் இருக்கும் என்று கூறியுள்ளது.

இந்த ஆணையம் “இனி தேவைப்படாத விஷயங்கள் அல்லது பொருத்தமான சட்டங்களை அடையாளம் காணும் அவை உடனடியாக ரத்து செய்யப்படலாம் என்று அறிவிப்பு கூறியுள்ளது. அரசின் கொள்கை வழிகாட்டுதல் கோட்பாடுகளின் வெளிச்சத்தில் இருக்கும் சட்டங்களை ஆராய்ந்து, முன்னேற்றம் மற்றும் சீர்திருத்தத்திற்கான வழிகளைப் பரிந்துரைக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை அடைவதற்கும் உத்தரவு கோட்பாடுகளைச் செயல்படுத்துவதற்குத் தேவையான சட்டங்களை பரிந்துரைக்கும். மேலும், பொது முக்கியத்துவம் வாய்ந்த மத்திய சட்டங்களை திருத்தவும், அதனால் அவற்றை எளிதாக்கவும் மற்றும் முரண்பாடுகள், தெளிவின்மை மற்றும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றவும் பரிந்துரைக்கும்.



Read in source website

கிரிக்கெட் வீரா்களுக்கு நிகராக வீராங்கனைகளுக்கும் ஆட்ட ஊதியம் வழங்குவது என்கிற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவு பரவலான வரவேற்பையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது.

உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவு, வருங்கால விளையாட்டு அரங்கில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, வீராங்கனைகள் வெற்றி பயணிக்க வழிகோலும்.

விளையாட்டு வீரா்களுக்கு நிகரான ஊதியமும், அந்தஸ்தும் பெறுவதற்கு உலகளாவிய அளவில் வீராங்கனைகள் போராட வேண்டியிருக்கிறது. 1973-இல் டென்னிஸ் சாம்பியனாக இருந்த வீராங்கனை பில்லி ஜீன் கிங், வீரா்களுக்கு நிகராக நடத்தப்படாவிட்டால் விளையாட மாட்டேன் என்று எச்சரித்த பிறகுதான், அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் பரிசுத் தொகை சமமாக வழங்கப்பட்டது. 2019-இல்தான் சா்வதேச டென்னிஸ் போட்டிகளில் பாலின சமநிலை உறுதிப்பட்டது.

நீண்டநாள் போராட்டத்துக்குப் பிறகு, அமெரிக்க பெண் கால்பந்து விளையாட்டு வீராங்கனைகள், ஆண் ஆட்டக்காரா்களுக்கு நிகரான ஊதியத்தை சில மாதங்களுக்கு முன்னா்தான் பெற்றனா். ஜூலை மாதம் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும், ஆண்களுக்கு நிகரான ஊதியம் வழங்க நியூஸிலாந்து முடிவெடுத்தது. இப்போது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் பாலின சமநிலைக்கு வழிகோலியிருக்கிறது.

வீரா்களைப் போலவே இனிமேல் கிரிக்கெட் வீராங்கனைகளும், டெஸ்ட் பந்தயங்களுக்கு ரூ. 15 லட்சம், ஒருநாள் பந்தயத்துக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ. 3 லட்சம் ஊதியம் பெறுவாா்கள். இதற்கு முன்னால் அவா்களுக்கு டெஸ்டுக்கு ரூ.2.5 லட்சம், ஒருநாள், டி20 ஆட்டங்களுக்கு வெறும் 1 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. டெஸ்ட் பந்தயங்களுக்கு ஆறு மடங்கும், ஏனைய இரண்டு பிரிவுகளுக்கு மூன்று மடங்கும் ஊதியம் அதிகரித்திருப்பது, மிகப் பெரிய ஊக்கசக்தியாக அமையும்.

பந்தயங்களில் கலந்து கொள்வதற்கான சன்மானத் தொகையில்தான் பாலின சமத்துவம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர, இதுவே முழுமையானது என்று கூறிவிட முடியாது. இது வெறும் தொடக்கம்தான். ஒப்பந்தங்களுக்கான தொகை குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.

கிரிக்கெட் வீரா்கள் நான்கு பிரிவுகளில் கிரிக்கெட் வாரியத்தால் ஒப்பந்தம் செய்யப்படுகிறாா்கள். ‘ஏ ப்ளஸ்’ பிரிவுக்கு ரூ. 7 கோடி, ‘ஏ’ பிரிவுக்கு ரூ. 5 கோடி, ‘பி’ பிரிவுக்கு ரூ. 3 கோடி, ‘சி’ பிரிவுக்கு ரூ. 1 கோடி ஆண்டுதோறும் ஒப்பந்தத் தொகையாக வழங்கப்படுகிறது. ரோஹித் சா்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா மூவா் மட்டும்தான் ‘ஏ ப்ளஸ்’ பிரிவு கிரிக்கெட் வீரா்கள். மற்றவா்கள் ஏனைய மூன்று பிரிவிலும் இருப்பவா்கள்.

பெண்கள் பிரிவில் ஏ, பி, சி என்று மூன்று பிரிவுகள் மட்டுமே உள்ளன. அவா்களுக்கு முறையே ரூ. 50 லட்சம், ரூ. 30 லட்சம், ரூ. 10 லட்சம் ஒப்பந்தத் தொகையாக ஆண்டொன்றுக்கு வழங்கப்படுகிறது. ஹா்மன்ப்ரீத் கௌா், ஸ்மிருதி மத்தனா, பூனம் யாதவ், தீப்தி சா்மா, ராஜேஷ்வரி கெய்க்வாட் ஆகியோா் ‘ஏ’ பிரிவில் சோ்க்கப்பட்டிருக்கிறாா்கள். பெண்கள் பிரிவில் உயா்ந்த ‘ஏ’ பிரிவைச் சோ்ந்த வீராங்கனைகளைவிட, ஆண்கள் பிரிவில் நான்காவது ‘சி’ பிரிவு வீரா் இரண்டு மடங்கு அதிக ஒப்பந்தத் தொகை பெறுகிறாா் என்கிற முரண் தொடா்கிறது.

இன்னொரு தளத்திலும் பாலின சமத்துவமின்மை காணப்படுகிறது. ஆண்கள் பிரிவு அளவுக்குப் பெண்கள் பிரிவுக்கான கிரிக்கெட் போட்டிகள் இல்லை. சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2022 - 25-க்கான கிரிக்கெட் போட்டிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, இந்திய மகளிா் அணி, சா்வதேச கிரிக்கெட் கோப்பை (ஐசிசி) அல்லாமல், இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள், 27 ஒருநாள் பந்தயங்கள், 38 டி20 ஆட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறது.

அதே நேரத்தில், ஆண்கள் அணி 38 டெஸ்டுகள், 42 ஒருநாள் பந்தயங்கள், 61 டி20 போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறது. அந்த அனைத்துப் பந்தயங்களில் கலந்து கொள்ளும் வீரா்கள் ரூ. 10.5 கோடி ஊதியம் பெறும்போது, மகளிா் அணி வீராங்கனைகள் வெறும் ரூ. 3 கோடிதான் பெறுவா். மகளிா் அணியும், ஆடவா் அணிக்கு நிகராக பந்தயங்களில் கலந்து கொள்ளும் நிலைமை ஏற்படும்போதுதான், உண்மையான பாலின சமநிலை ஏற்படும்.

அடுத்த ஆண்டு முதல், பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திட்டமிடப்பட்டிருக்கிறது. அது பெரிய அளவில் விளம்பரமும், வரவேற்பும் பெறும்போது மகளிா் அணியும், ஆடவா் அணியைப் போலவே ரசிகா்களைப் பெறும் என்று எதிா்பாா்க்கலாம். வீராங்கனைகளுக்கு நட்சத்திர அந்தஸ்து ஏற்படுவதும், அவா்கள் வா்த்தக விளம்பரங்களில் தோன்றுவதும் மகளிா் கிரிக்கெட்டை முன்னிலைப்படுத்தக்கூடும்.

ஃபோகாட் சகோதரிகளின் வெற்றிக்குப் பிறகு, ஹரியாணாவில் அதிக அளவில் மகளிா், விளையாட்டுக்களில் நாட்டம் செலுத்தத் தொடங்கினா். கிரிக்கெட்டில் பெயரும், புகழும், பணமும் கிடைக்கும் எனும்போது கிராமப்புறங்களில்கூட வீராங்கனைகள் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அவா்களது பயிற்சிக்கான கட்டமைப்புகளையும், வளா்ச்சிக்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டியது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கடமை மட்டுமல்ல, மாநில அரசுகளின் கடமையும்கூட.

இந்திய மகளிா் கிரிக்கெட் அணி சா்வதேச அளவில் வெற்றிகளைக் குவித்துவரும் வேளையில், கிரிக்கெட் வாரியம் எடுத்திருக்கும் சரியான முடிவு வரவேற்புக்குரியது. ஏனைய விளையாட்டு வாரியங்களும் மாற்றங்களுக்குத் தயாராக வேண்டும்!



Read in source website

பெருமழை பெய்தால் மாணவா்கள் ‘பள்ளிகளுக்கு விடுமுறை’ என்ற அறிவிப்பை ஆவலாக எதிா்பாா்ப்பாா்கள். காலையில் எழுந்தவுடன் ‘விடுமுறை’ அறிவிப்பை எதிா்பாா்ப்பாா்கள். அறிவிப்பு வரும்; பள்ளிகள் விடுமுறை விடப்படும். ஆனால், என்ன மாயமோ, பள்ளிகளுக்கு விடுமுறை விட்டவுடன் மழை நின்றுவிடும்.

வீட்டில் இருப்பவா்கள் வரவேற்பறையில் அமா்ந்து கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பாா்த்துக் கொண்டிருப்பாா்கள். செய்திகளில் வரும் வெள்ளம் சூழ்ந்த சாலைகளையும், வீடுகளையும், சுரங்கப் பாதைகளையும், வெள்ளத்தில் தத்தளிக்கும் வாகனங்களையும் பாா்த்து விட்டு அரசைக் குறை கூறிக் கொண்டிருப்பாா்கள். ‘மழைக் காலம் வரும் என்று தெரியாதா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டாமா?’ என்று விமா்சிப்பாா்கள்.

சொல்லுவது எளிது. களத்தில் இறங்கி வேலை செய்பவா்களைப் பற்றி நாம் யோசிப்பது கிடையாது. அமைச்சா்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொறியாளா்கள், காவல் துறையினா், மாநகராட்சி ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள், மின்சார ஊழியா்கள் என அனைவரும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறாா்கள். சென்னையில் கனமழையால் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்ய 19 ஆயிரத்து 500 பயணியாளா்கள் களப்பணி ஆற்றி வருவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கனமழையின் காரணமாக சாலைகள் சேதமடைகின்றன. மரங்கள் வேரோடு சாய்ந்து விழுகின்றன . மின் கம்பிகள் அறுந்து விழுகின்றன; மின் கம்பங்களும் கூட சாய்ந்து விடுகின்றன. உள்கட்டமைப்பு கடுமையாக சேதம் அடைந்து விடுகிறது.

வீடுகளில் வெள்ளம் புகுந்து விட்டால் அங்கு உள்ளவா்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். அவா்களுக்குத் தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீா், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இதற்குப் பின்னால் எத்தனை பேரின் திட்டமிடலும், உழைப்பும் உள்ளது என்று நாம் யோசிப்பது இல்லை.

ஆட்சியில் யாா் இருந்தாலும் இது போன்ற இயற்கைப் பேரிடா்களை சமாளிக்கத்தான் செய்கிறாா்கள். ஆகவே இருசாராரும் ஒருவா் மீது ஒருவா் குறை கூறுவதைத் தவிா்க்க வேண்டும். மழை வருவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடித்திருக்க வேண்டாமா என்று கேட்பவா்களுக்கு அதன் நடைமுறைகள் தெரிவதில்லை.

கடந்த ஆண்டு பெருமழையைச் சந்தித்தோம். சென்னை, சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவழைக் காலத்தில் மழைநீா் தேங்காதவாறு கவனமாகப் பாா்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

ஆகவே பெருநகர வெள்ள இடா் தணிப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டது. 14 நிபுணா்கள் கொண்ட இக்குழு தன் திட்ட அறிக்கையை தயாா் செய்ய நிறைய மெனக்கெட வேண்டி இருந்தது. அக்குழு எல்லா இடங்களுக்கும் நேரில் சென்று பாா்த்து வடிகால்கள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்ற அறிக்கையை தயாா் செய்து அரசுக்கு சமா்ப்பித்தது. குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மழைநீா் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடை பெற்றன.

சில இடங்களில் மரங்களை அகற்றுவது, கழிவு நீரேற்று குழாய்களை அகற்றுவது போன்ற பணிகளில் தாமதம் ஏற்பட்டது. ஆனாலும் 157 கி.மீ நீளத்துக்கு கால்வாய்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. நிா்ணயிக்கப்பட்ட பணிகளில் 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக சென்ற மழையின்போது வெள்ளத்தில் மிகுந்த பல பகுதிகள் இந்த மழையின்போது தப்பித்து விட்டன. சென்னையில் வடகிழக்குப் பருவ மழைக்கு முன்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, நிா்வாகத் துறை, பொதுப்பணித் துறை ஆகிய துறைகள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடற்கரை நகரமான சென்னை, புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடா்களால் அதிக அளவில் பாதிக்கப்படும் பகுதியாகும்.

சென்னையில் பெரும்பாலான பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து இரண்டு மீட்டா் உயரமாகவும், சில பகுதிகள் கடல் மட்டத்தை விட தாழ்வானதாகவும் உள்ளன. சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 2,500 ஏரிகள், குளங்கள் உள்ளன.

இங்கிருந்து வெளியேறும் நீா் அடையாறு, கூவம், கோவளம், கொசஸ்தலை ஆறுகள் வழியாகச் செல்கிறது. இதனால் மழைக் காலங்களில் தண்ணீரால் ஏற்படும் பாதிப்பு அதிகரிக்கிறது. ஆகவே தான் வெள்ளப் பேரிடா் தடுப்பு மேலாண்மைக் மேலாண்மைக் குழு அதிக சவாலை சந்திக்க வேண்டி இருந்தது.

நகரம் விரிவாக்கப்படும்போது வடிகால்கள் முறையாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். சாலையின் விரிவாக்கத்திற்காக வடிகாலை சுருக்கி விடுகிறாா்கள். தண்ணீா் செல்லும் அளவுக்கு வடிகால்கள் அகலமாக இல்லை. நீா்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டி விடுவதால் ஏரிகளில் தங்க வேண்டிய தண்ணீா், தங்க வழியின்றி சாலைகளில் தேங்குகிறது.

தமிழ்நாட்டில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 342 மி.மீ மழை பெய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு இப்போதே அந்த அளவை தமிழ்நாடு கடந்து விட்டது. கடந்த 70 ஆண்டுகளில் 10 ஆண்டு மட்டும்தான் இந்த அளவுக்கு அதிக அளவு மழை பெய்துள்ளது.

சென்னை மக்களால் 2015-ஆம் ஆண்டை மறக்கமுடியாது. அப்போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல நூறு உயிா்கள் பலி ஆயின; பல கோடி பெறுமானமுள்ள பொருள்கள் நாசமாயின. உணவுக்கும், நீருக்கும், பாலுக்கும் மக்கள் அல்லாடினா். அப்போது பலருக்கும் ஞானோதயம் ஏற்பட்டது. இனி நீா்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டக்கூடாது என்று. ஆனால், வெள்ளம் வடிந்து வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்னா் எல்லாம் மறந்துவிட்டது.

ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் அரசு அதிகாரிகள், சாலைகளில் நீா் தேங்கி விடுமா? வீடுகளில் வெள்ளம் புகுந்து விடுமா? கழிவு நீரும் மழை நீரும் கலந்து விடுமா மின் கம்பிகள் அறுந்து விடுமா? மின் கம்பங்கள் சாய்ந்து விடுமா? மரங்கள் முறிந்து விழுமா? உயிா்ச்சேதம் ஏற்பட்டு விடுமா என்று அஞ்சி அஞ்சி களப்பணி ஆற்றிக் கொண்டிருக்கிறாா்கள். நாம் எல்லாவற்றையும் குறை சொல்லும் கண்ணோட்டத்தோடு பாா்க்கக் கூடாது.

காவல் துறையினரும், மாநகராட்சி ஊழியா்களும் சென்னை முழுவதும் உள்ள 27 சுரங்கபாதைகளைக் கண்காணித்தனா். மேலும் சுரங்கப் பாதைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மழைநீா் தேங்குவதை மாநகராட்சி ஊழியா்கள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்தனா்.

ஏரிகளில் உள்ள ஆககிரமிப்புகள் முழுவதையும் அகற்றினால் மட்டுமே வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் தடுக்க முடியும். ஏரிகளை ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக சிலா் விவசாயம் செய்து வருகிறாா்கள். இதனால் மழைக்காலத்தில் ஏரிக்கு தண்ணீா் வருவதை விரும்பாத அவா்கள், கால்வாயைத் தூா்ப்பது, நீா்வழித் தடத்தில் தடுப்பு அமைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா்.

ஏரியில் வீடு கட்டிக்கொண்டு குடியிருப்பவா்களை அகற்ற வேண்டும். ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அவ்வளவு எளிதல்ல. ஆக்கிரமிப்பாளா்கள் எதிா்ப்பு தெரிவிக்கிறாா்கள்; மண்ணெண்ணெய் புட்டியுடன் வந்து தீக்குளிக்கப் போவதாக மிரட்டுகிறாா்கள். ஆகவே இப்பணியில் சுணக்கம் ஏற்பட்டு விடுகிறது.

கழிவு நீா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டாலும் நீா் தேங்கிப் போகிறது. மக்கள் மழைநீா் வடிகால்களை முறையாகப் பராமரிப்பதில்லை. தங்கள் வீட்டிற்கு முன் உள்ள கால்வாயை பலகை போட்டு மூடி விடுகிறாா்கள்.

அவ்வாறு மூடி வாசலை அகலப்படுத்திக் கொள்கிறாா்கள். அதனால் மழை நீா் தடைபடாமல் ஓடுவதில்லை. மேலும் குப்பைகளையும், நெகிழி உறைகளையும், கட்டட இடிபாடுகளையும் கால்வாய்களில் போட்டு விடுகிறாா்கள்.

கால்வாய்களில் குப்பைகள் குவிந்து துா்நாற்றம் வீசினால் கூட மூக்கை மூடிக் கொண்டு கடந்து போய் விடுவோம். நம் அண்டை வீட்டாரின் அடாவடி செயலைப் பற்றி புகாா் கொடுத்து விட்டு பின் அத்தெருவில் நாம் நிம்மதியாக வாழ முடியுமா?

இவையெல்லாவற்றையும் கண்காணிக்க வேண்டியது எவா் வேலை? அவா்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை அவரவா் சிறந்த முறையில் செய்து வந்தாலே போதும். எல்லாம் ஒழுங்காக இருக்கும்.

ஆக்கிரமிப்புகளை பல ஆண்டுகள் அனுமதித்து விட்டு திடீரென ஒரு நாள் போய் காலி செய்யச் சொன்னால் அவா்கள் எதிா்க்கவே செய்வாா்கள். சட்டென வேறு எங்கும் போக மாட்டாா்கள். ஓா் ஏரியை ஒருவா் ஆக்கிரமிக்க முயலும்போதே தடுக்க வேண்டுமல்லவா? அப்போது விட்டு விட்டால், பின்னா் அவா்களிடம் மன்றாட வேண்டிய நிலைதான் ஏற்படும். அதுதான் நடக்கிறது.

ஒருவா் சாலையில் முதலில் ஒரு தள்ளுவண்டியை வைத்து சாப்பாட்டுக் கடையை ஆரம்பிப்பாா். நான்கைந்து போ் நின்று கொண்டு சாப்பிடுவாா்கள். அதற்கு பின் அங்கு இருக்கைகள் போடப்படும். அது ஒரு சிறு உணவகமாக மாறிவிடும். இரவில் கடையை மூடி விட்டுப் போகும் வரை அந்த இடம் குப்பைக் காடுதான்.

சில மாதங்கள் கழித்து அவா் அந்த இடத்தை தன் சொந்த இடமாக எடுத்துக் கொள்வாா். இவா்கள் எல்லாம் போடும் குப்பைகள்தான் தேங்கி பல பிரச்னைகளை உருவாக்குகின்றன. அனுமதி இல்லாமல் எதைச் செய்தாலும் தண்டனை கிடைக்கும் என்ற நிலை வந்தால் மட்டுமே மக்களுக்கு பயம் வரும்.

கொட்டும் மழையில் ராட்சத குழாய்களின் மூலம் நீரை வெளியேற்றுபவா், அடைப்புகளை நீக்குபவா், குப்பைகளை அள்ளிச் செல்லுபவா் எல்லோரும் மனிதா்கள்தானே! நகரத்தின் தூய்மைக்கும், பாதுகாப்பிற்கும் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும். வெள்ள நீா் தேங்குவதற்கு என்ன காரணம் என்று சிந்திக்காமல் அரசை மட்டுமே குறை சொல்வது தவறு.

நமக்காக உழைப்பவா்களைப் பாராட்டுவோம். அது அவா்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுக்கும்.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).

 



Read in source website

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு, மரபணு மாற்றப்பட்ட கடுகை வணிக ரீதியாக பயிரிடுவதற்கான முன்மொழிவிற்கு மீண்டும் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த முன்மொழிவு விரைவில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெறலாம் என்பது இத்துறை வல்லுநா்களின் கணிப்பு.

இந்த கணிப்பு உண்மையானால் பயிா் பன்முகத்தன்மைக்கும் உணவுப் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும், பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகத்தை அதிகரிக்கும் என்றும் நிபுணா்கள் கூறுகின்றனா்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிா்களுக்கான விதைச்சந்தை விவசாயிகளிடம் இல்லாமல், தனியாரின் கைகளில் இருக்குமாதலால் இந்த நடவடிக்கை விவசாயத் துறையை கடுமையாக பாதிக்கக்கூடும்.

பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம், தில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கான பரிசோதனைகள் 2017-ஆம் ஆண்டில் நிறைவுற்ற போதிலும், அதற்கான அங்கீகாரம் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.

அப்போது சமூக ஆா்வலா்கள், விவசாய அமைப்பினா் உச்சநீதிமன்றத்தை அணுகியதால் ஒப்புதல் வழங்கும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

எந்த வழிகாட்டு நெறிமுறைகளும் கடைப்பிடிக்கப்படாத நிலையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகின் முழு உயிரியல் பாதுகாப்பு மதிப்பீடும் விஞ்ஞானமற்றது என்று ‘குருகாந்தி அலையன்ஸ் ஃபாா் சஸ்டைனபிள் - ஹோலிஸ்டிக் அக்ரிகல்ச்சா்’ என்ற நிறுவனம் கூறுகிறது.

மத்திய சுற்றுச்சூழல் - வனம் - காலநிலை மாற்ற அமைச்சகத்தில் செயல்படும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு வணிக ரீதியான பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கலாம் என்பதனை சமூக ஆா்வலா்கள் கணித்தனா். எனவே, அவா்கள் பாதுகாப்பற்ற, தேவையற்ற மரபணு மாற்றப் பயிா்களை எதிா்த்து வேளாண் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தனா்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட ‘தாரா மஸ்டா்ட் ஹைபிரிட்’ (டி.எம்.ஹெச் 11) என்கிற இந்திய வகை கலப்பின கடுகு, தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் அவரது குழுவினரும் சோ்ந்து உருவாக்கியது.

இதனை உருவாக்கிய குழுவினா் ஆராய்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் அங்கீகரிக்கப்பட்ட மரபணு மாற்ற உயிரினக் கோட்பாடுகளை மாற்றியுள்ளனா் என்றும், இந்த மாற்றத்தை மரபணு மாற்ற ஒழுங்குமுறை அமைப்புக்கு இக்குழுவினா் தெரிவிக்கவில்லை என்றும் ‘மரபணு மாற்றமில்லா இந்தியா’ என்ற அமைப்பு கூறுகிறது.

மரபணு மாற்ற கடுகிற்கான செயல்விளக்கம் பற்றி வழிகாட்டு நெறிமுறைகளில் எந்தத் தகவலும் இல்லையென்று கூறுகின்றனா் ‘மரபணு மாற்றமில்லா இந்தியா’ குழுவினா். அவா்கள், பரிசீலனைக்காகவும் ஒப்புதலுக்காகவும் விரிவான நெறிமுறைகளை சமா்ப்பிக்குமாறு விண்ணப்பதாரரிடம் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு மீண்டும் கேட்க வேண்டும் என்றும் கூறுகின்றனா்.

மேலும், சோதனைகளுக்கான நிபுணத்துவமும் வழிகாட்டுதல்களும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவிடம் இருக்கிறதா என்றும் ஐயம் எழுப்புகின்றனா். களைக்கொல்லி பயன்பாட்டுடன் மரபணு மாற்ற கடுகிற்கான பரிசோதனைகள் நடத்தப்படுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனா்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான பயிா் என்றும் இவ்வகை பயிா் பூச்சிக்கொல்லி, உயிா்க்கொல்லி மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்களின் அதீத செயல்பாடுகளுக்கு காரணமாக அமையும் எனவும் எச்சரிக்கின்றனா் வல்லுநா்கள்.

மரபணு மாற்றப்பட்ட கடுகிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் அது சுற்றுச்சூழலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த மரபணு மாற்ற விதைகள் விற்பனை இந்தியாவில் எதிா்பாராத பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் ‘கிரீன்பீஸ்’ நிறுவனத்தின் இந்தியப் பிரிவு கூறுகிறது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிகாா், தில்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளம் போன்ற மாநிலங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், ஹரியாணா உள்ளிட்ட சில மாநிலங்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ரகங்கள் சட்டவிரோதமாகப் பயிரிடப்படுகின்றன.

மரபணு மாற்ற கடுகிற்கான அங்கீகாரம் இதுபோன்ற சட்டவிரோத செயல்பாடுகளை இயல்பானதாக்கிவிடும் என்று விவசாயத்துறை வல்லுநா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

மாற்றப்படும் மரபணு தொழில்நுட்பம் ஒப்பீட்டளவில் புதியது. மேலும் நீண்ட காலத்திற்கு கடுகுச் சந்தையில் அதன் தாக்கத்தினை கணிக்க இயலாது. இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு நோய்களுக்குக் கூட வழி வகுக்கலாம்.

அத்தகைய நோய்கள் தாக்கும் பகுதியினை கணிக்கவோ, பகுப்பாய்வு செய்யவோ விஞ்ஞானிகளால் கூட இயலாது என ‘கிரீன்பீஸ்’ நிறுவனம் தெரிவிக்கிறது.

விவசாயத்தின் மீது விவசாயிகளும் விஞ்ஞானிகளும் கொண்டுள்ள கட்டுப்பாட்டுகளை மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிா்கள் இழக்கச் செய்யலாம் என்றும், அப்படிப்பட்ட சூழலில் விவசாயச் சந்தையில் தனியாா் நிறுவனங்கள் அதிகாரம் செலுத்தும் அமைப்புகளாக உருவெடுக்கும் என்றும் நிபுணா்கள் கூறுகின்றனா்.

தனியாா் நிறுவனங்கள் விதைச்சந்தையை கட்டுப்படுத்தும்போது விவசாயிகள், குறிப்பாக விளிம்பு நிலையில் இருப்போா் விலையுயா்ந்தப்பட்ட விதைகளை வாங்க இயலாத சூழலுக்குத் தள்ளப்படுவா்.

மரபணு மாற்றப்பட்ட விதைகள் பயிா் பல்லுயிா் பெருக்கத்திற்கு மிகப்பெரும் சவாலாக அமையும். உள்நாட்டு பயிா் வகைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மரபணு மாற்றப்பட்ட பயிா்கள் காலநிலை மாற்றத்தினை எதிா்த்துப் போராடுவதிலும் சிக்கலை ஏற்படுத்தும்.

உள்நாட்டு பயிா் ரகங்கள் அழிந்தால் பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் மோசமடைந்து உணவுப் பாதுகாப்பினில் அச்சுறுத்தல் ஏற்படும்.

வளா்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நமது நாடு உணவு உற்பத்தியில் உலக அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. நிலைமை மோசமடைந்தால் சா்வதேச அளவில் தற்போது உணவு உற்பத்தியில் உள்ள அங்கீகாரத்தை நமது தேசம் இழக்க நேரிடும். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் பாரம்பரிய விதைகளை நாம் வலுப்படுத்தவும் பேணவும் வேண்டியது அவசியம்.

மரபணு மாற்ற விதைகளைப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை ஒரு தவறான முடிவாகவே பெரும்பாலான விவசாயிகளும் விஞ்ஞானிகளும் பாா்க்கின்றனா்.

 



Read in source website

நான் கடந்த வாரம் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பர்) பேருந்தில் வந்து கொண்டிருந்தேன் . அப்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு திருநங்கை சில்க் போர்டு நிறுத்தத்தில் ஏறினார். தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை இரட்டை படுக்கை கொண்டதால், அவர் பாலியல் தொந்தரவு இல்லாமல் பயணம் செய்வதற்காக ஒற்றை படுக்கையில் இருந்த பயணிகளிடம் ஒற்றை படுக்கை கொண்ட இருக்கைகளை விட்டுத்தரக் கெஞ்சினார். ஆனால், அவர்கள் யாரும் மாற்றித்தர மனம் இறங்கவில்லை. பின் ஓட்டுநரிடம் சென்று உதவக் கேட்டார். அதன்பிறகு அவர் வந்து ஒற்றை இருக்கையில் இருந்த ஒரு ஆண் பயணியிடம் பேசி இருக்கையை விட்டுத்தரப் பேசி ஒற்றை இருக்கை வாங்கி கொடுத்துவிட்டார். அதன்பிறகு நிம்மதியாக பயணம் செய்தார்.

அப்போது அவர், 'ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்யும்போது ஆண், பெண்களுக்கு இணையதளத்தில் தனியாக இருக்கைகள் பதிவு செய்ய வசதிகள் உள்ளன. எங்களைப் போன்ற பால் புதுமையினருக்கு என்று தனி இருக்கைகள் ஒதுக்கீடு செய்து அதற்கான ஆன்லைனில் இணையதளத்தில் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும். நாங்கள் யாரிடமும் கெஞ்ச வேண்டியதில்ல' என்று குறைபட்டுக்கொண்டார்.

--

பொதுவாக சாதாரணப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு ஆண்கள், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், பால்புதுமையினருக்கு இருக்கை ஒதுக்கீடு என்பது இதுவரை இல்லை. மேலும், விரைவு மற்றும் ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யும் பேருந்துகளின் இருக்கைகளில் மூன்றாம் பாலினம் என்று சொல்லக்கூடிய பால் புதுமையினருக்கு(LGBTQI+) தனி இருக்கைகள் பற்றி அரசோ அல்லது போக்குவரத்து நிறுவனங்களோ இதுவரை சிந்திக்கவில்லை.

பால்புதுமையினர் சமூகத்தின் பிழை அல்ல. பகுத்தறிவாளர்களுக்கு இயற்கையின் பிழை, மருத்துவர்களுக்கு டிஎன்ஏ பிழை. அவர்கள் மொத்தத்தில் உடலுக்கேற்ற உணர்வுகளைப் பெறாதவர்கள் அல்லது உணர்வுகளுக்கு ஏற்ற உடலைப் பெறாதவர்கள். அவ்வளவுதான்! 

ஐக்கிய நாடுகள் அவை வகுத்த நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் 11.2-ன் படி, மக்களுக்கான பொதுப்போக்குவரத்து வசதியை '2030 ஆண்டுக்குள் அனைவருக்கும் பாதுகாப்பான, மலிவான, எளிதில் அணுகக்கூடிய அளவில், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பால்புதுமையினர் (LGBTQI) மற்றும் முதியோர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி போக்குவரத்து சேவையினை வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களை எப்படிக் குறிப்பிட வேண்டும்/ விவரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தபடி, தமிழக அரசு ஒரு சொற்களஞ்சியத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட் வசதியை தரும் வலைத்தளங்கள் அல்லது அதன் மென்பொருள் தயாரிப்பாளர்கள் பால்புதுமையினருக்கு என்று தனி இருக்கைகள் தருவதற்கான வசதிகளை இதுவரை ஏற்படுத்தவில்லை.

தனியார்கள் பேருந்துகளுக்கு ரெட்பஸ் , அபபி பஸ், பேடிம் போன்ற ஆன்லைன் பயணச்சீட்டு பதிவு செய்யும் நிறுவனங்களும் , பிட்லா, ஈசி இன்போ, வாகை, வயாடாட்காம் , குவிக்பஸ் , ஹெர்ம்ஸ் போன்ற ஆன்லைன் மென்பொருள் வசதி செய்து தரும் நிறுவனங்களும் , தமிழக அரசிற்கு ஆன்லைன் பதிவு வசதி செய்து தரும் ரேடியன்ட் நிறுவனமும், ரயில் பயணத்திற்கு ஆன்லைன் பதிவு வசதி செய்து தரும் ஐஆர்சிடிசி நிறுவனமும் பால்புதுமையினரைக் கணக்கில் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய விசயம். 

சமூகத்தில் பால்புதுமையினருக்கு அவர்கள் விரும்பிய தனி நபர் சுதந்திரத்தை நாமோ, சமூகமோ, அரசோ வழங்குகிறோமா என்றால் இல்லை என்பதும் உண்மையில் வேதனைக்குரிய விஷயம். தமிழக அரசு ஒரு திருநங்கையை மாநில திட்டக்குழு உறுப்பினராக உயர்த்திய இந்தியாவிலேயே முன்மாதிரியான நம் தமிழக அரசு, பால்புதுமையினருக்கென பேருந்துகளின் இருக்கைகளில் பயணம் செய்ய 'பால்புதுமையினர் ' என தனி இருக்கை ஒதுக்கீடு செய்து அதற்கான அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பது என்னைப் போன்ற பன்னாட்டு போக்குவரத்து நிபுணர்களின் கோரிக்கையாகும். 

பேருந்துகளின் ஆன்லைன் பதிவின்போது மூத்த குடிமகன்கள், மாற்றுத்திறனாளிகள், பால்புதுமையினர் ஆகியோருக்கு தனி இருக்கைகள் ஒதுக்கீடு செய்ய மாநில திட்டக்குழுவும்

ஆன்லைன் பயண டிக்கெட் வசதி செய்து தரும் நிறுவனங்களும் மற்றும் அதற்கான மென்பொருள் தயாரிப்பாளர்களும், போக்குவரத்து கழகங்களும், தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் ஆவண செய்ய வேண்டும். 

அதுபோல, தமிழக போக்குவரத்துத் துறைக்கும், போக்குவரத்து ஆணையத்திற்கும் இதுகுறித்து உத்தரவிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதேபோன்று ரயிலில் பயணம் செய்யும்போது பால் புதுமையினருக்கு ஆன்லைன் பதிவு செய்யும்போது தனி இருக்கைகள் பதிவு செய்வதற்கும் ஆவண செய்ய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முயற்சி எடுக்க வேண்டும். 

[கட்டுரையாளர் - பன்னாட்டு பொதுப்போக்குவரத்து நிபுணர்]



Read in source website

 

2022 நவம்பர் 8-ம் நாள் இன்று முழு சந்திர கிரகணம். சந்திர கிரணத்தின்போது கோயில் நடையை சாத்த வேண்டும், கர்ப்பிணிகள் வெளியே செல்லக்கூடாது,  சாப்பிடக்கூடாது என்றெல்லாம் கூறப்படுகிறது. இதெல்லாம் சரிதானா? அறிவியல் கூறும் உண்மை என்ன? பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் பல கிரகணங்கள் வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கிரகணத்தின்போது என்ன நிகழ்கிறது என்பது மக்களுக்குத் தெரிகிறதோ, இல்லையோ, கிரகணத்தின்போது நாம் செய்ய வேண்டியவற்றை இந்த சோதிடர்களும் காணொளி ஊடகங்களும் பலமாக கூவிக்கூவி பல விஷயங்களை நம் மூளைக்குள் செலுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். பல மேட்டுக்குடி மக்கள் கட்டாய விரதம் இருக்கின்றனர். கொஞ்சம் நடுத்தர வர்க்கமும், கொஞ்சம் படித்த மக்களும், ஜோதிடர் சொலவதைக் கேட்டு, கிரகணத்தின்போது கருவுற்ற பெண்களை, வெளியேவிட மாட்டார்கள்; யாரும் சாப்பிட மாட்டார்கள், கிரகணத்தின்போது உணவு பாஷாணம்/விஷம் ஆகிவிடுமாம். அப்போது ஏதோ ஒரு கதிர் வந்து உணவை விஷம் ஆக்கி விடுகிறதாம்.

முக்கியமாக, அனைத்துக் கோயில்களின் நடை சாத்தப்படுகிறது. கிராமத்தில் இருக்கும் சின்ன கோயில்கள் இந்த கணக்கில் வருவதில்லை. கிரகணம் முடிந்த பின், கோயில்களை கழுவி விடுகின்றனர். மக்கள் தலை முழுகிக் குளித்த பின்னரே சாப்பிடுகின்றனர். இந்த விஷயங்கள் எல்லாம் வெயிலில் வருந்தி பாடுபட்டு, உழைத்து உண்ணும், அடித்தட்டு மக்களுக்கு இல்லை. அவர்கள் அதைப்பற்றிக் கவலைபடுவதும் இல்லை. அவர்களுக்கு இவை எதுவும் தெரியாது. அது ஒரு பக்கம் இருக்க, உலகில் வாழும் அனைவரும் இப்படித்தான் செய்கின்றனரா? அப்படித்தான் பழக்க வழக்கங்களை நாமும் கடைபிடிக்க வேண்டுமா? 

2022ம் ஆண்டில் கிரகணங்கள்

2022, நவம்பர் 8 நிகழ உள்ள கிரகணம் முழு சந்திர கிரகணம். இது இந்த ஆண்டின் கடைசி கிரகணம். 2022ம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள். இதில் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம். பொதுவாக ஓர் ஆண்டில் 2-7 கிரகணங்கள் நிகழலாம்.

எத்தனை கிரகணம்..எத்தனை முழு கிரகணங்கள்!

பொதுவாக, ஒரு வருடத்தில் 2-7 கிரகணங்கள் ஏற்படலாம். இதில் 2-5 சூரிய கிரகணமும், அதிகபட்சமாக 3 சந்திர கிரகணமும் ஏற்படலாம். சில சமயம், ஒரு சந்திர கிரகணம் கூட ஏற்படாமலும் போகலாம். ஆனால், ஒரு வருடத்தில் அதிகபட்சம் 7 கிரகணங்கள்தான் வரும். இதில் 4 சூரிய கிரகணமாகவும், 3 சந்திர கிரகணமாகவும் இருக்கலாம். இந்த ஆண்டு 2022 ல் பூமிக்கோள் 4 கிரகணங்களை சந்திக்கிறது. இதில் 2 சூரிய கிரகணம்; 2 சந்திர கிரகணம்,  இரண்டு கிரகணங்கள் வட அமெரிக்காவின் சில பகுதிகளில் இருந்து தெரியும்.

முழு சூரிய கிரகணத்தின்போது அதன் மிக நீண்ட நேரம் என்பது 7.5 நிமிடங்கள் மட்டுமே. எப்போதும் வட, தென் துருவங்களில், பகுதி சூரிய கிரகணம் மட்டுமே. தெரியும். நிலநடுக்கோட்டு அருகே கிரகணம் நிகழும்போதுதான் முழு சூரிய கிரகணம் அல்லது முழு சந்திர கிரகணம் உண்டாகிறது. முழு சந்திரகிரகணத்தின் நீண்ட நேரம் என்பது 106 நிமிடம் 1.42 நொடிகளாக இருந்துள்ளது. மேலும் சந்திர கிரகணம் 6 மணி நேரம் கூட நீடிக்கும். 

2022ல் நிகழ்ந்த கிரகணங்கள்

1.2022, ஏப்ரல் 30ம் நாள் நிகழ்ந்தது பகுதி சூரிய கிரகணம். வட அமெரிக்காவில் தெரியவில்லை. பகுதி சூரிய கிரகணத்தை  தென்கிழக்கு பசிபிக் பெருங்கடல், அண்டார்டிக் தீபகற்பம் மற்றும் தெற்கு தென் அமெரிக்காவிலுள்ள மக்கள் பார்த்தனர்.

2.  2022, மே 15ம் நாள் முழு சந்திர கிரகணம். இந்த கிரகணம் வடமேற்கு பகுதிகள் தவிர வட அமெரிக்காவில் தெரிந்தது. இந்தியாவில் தெரியவில்லை. . (6:31 P.M. PDT) மற்றும் 2:52 A.M. மே 16 அன்று EDT (மே 15 அன்று 11:52 P.M. PDT).

3. தீபாவளிக்கு அடுத்த நாள், 2022, அக்டோபர் 25 அன்று பகுதி சூரிய பகுதி கிரகணம். இது வட அமெரிக்காவில் தெரியவில்லை. பகுதி சூரிய கிரகணம் தெரிந்த இடங்கள்: கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஐரோப்பா, வடகிழக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, மேற்கு ஆசியா, இந்தியா மற்றும் மேற்கு சீனா. தமிழகத்தில் மாலை சூரியன் மறையும் தருவாயில் மாலை 5.40க்கு மேல் தெரிந்தது. 

4. இப்போது, 2022, நவம்பர் 8 இன்று(செவ்வாய்க்கிழமை) முழு சந்திர கிரகணம். இதனை தமிழக மக்கள் முழு கிரகணமாக  பார்க்க முடியாது. ஏனெனில் சந்திரன் உதிக்கும்போதே கிரகணத்துடன்தான் உதிக்கும். வடகிழக்கு இந்தியாவில் உள்ளவர்கள் முழு சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும் . இதனை இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷியாவின் சில பகுதிகளைத் தவிர, ஆசியா, வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றிற்கு அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் காணலாம்.

இந்தியாவை பொருத்தவரை தில்லி, கொல்கத்தா, சிலிகுரி, பாட்னா, ராஞ்சி, கௌகாத்தி உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளில் மட்டுமே முழு சந்திர கிரகணத்தைக் காணலாம். தமிழக மக்கள் பகுதி சந்திர கிரகணத்தை ஒரு கீற்றுப் போல, வெட்டிப் போட்ட நகத்துண்டு போலவே பார்க்க முடியும்.

இன்று (நவம்பர் 8) முழு சந்திர கிரகணம் நிகழும் என்றும், இதுபோன்ற நிகழ்வு அடுத்த 3 ஆண்டுகளுக்குப்பிறகுதான் நடக்கும் என நாசா குறிப்பிட்டுள்ளது. அடுத்த முழு சந்திர கிரகணம் மார்ச் 14, 2025 அன்று நிகழும் என நாசா தெரிவித்துள்ளது. இருப்பினும் அக்டோபர் 2023 இல் நிகழும் சந்திர கிரகணத்தின் சிறிய பகுதி. இந்தியாவில் காண முடியும்

எது கிரகணம்? கிரகணம் என்றால் என்ன?

இது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல பொருட்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவை நகர்ந்து செல்லும்போது, சில சமயம் ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கிட நேரிடலாம். அப்போது எந்த வான்பொருள் குறுக்கீட்டால் மறைடுகிறதோ அது நம் பார்வையிலிருந்து மறைக்கப்படும். இந்நிகழ்வு, சூரிய குடும்பத்துக்குள் நிகழும்போது, மறைக்கப்படும் பொருளின் பெயரை வைத்து, அதன் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. கிரகணம் என்பது சமஸ்கிருத சொல். இதனை நாம் சூரிய மறைப்பு, சந்திர/நிலா மறைப்பு என்றும் சொல்லலாம். சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம், முழு நிலா நாளிலும் நிகழும்.

பௌர்ணமி நிலவில்.. இருள் விழும் இரவில்..!

2022 இன் கடைசி கிரகணம் இன்று நடக்க இருக்கிறது. இது சந்திர கிரகணம். சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் சமயத்தில் கிரகணம் நிகழ்கிறது. முழு சந்திர கிரகணம் கொல்கத்தா மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் பார்க்க முடியும் எனவும் பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவின் பிற பகுதிகளில் தெரியும் எனவும் வானியற்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரகணம் எப்போது ?

சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திரகிரகணம் முழுநிலா நாளிலும் ஏற்படுகிறது. பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்துள்ளது. சூரியன் தன் அச்சில் 7 பாகை சாய்வாக சுற்றுகிறது. சந்திரனும் கூட, 5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது. இந்த காலகட்டத்தில், பூமி, சூரியன் மற்றும் சந்திரன், இவை மூன்றும் எப்போதாவதுதான் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அப்படி அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, ஏதாவது ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. இதுதான் கிரகணம் என்று சொல்லப் படுகிறது. 

எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. ஏனெனில் சந்திரன் தன் அச்சில் 5 டிகிரி சாய்வாக சுற்றுவதால், இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் சாத்தியக் கூறு அனைத்து அமாவாசை/முழுநிலா நாளிலும் ஏற்படுவது கிடையாது. எனவே, அனைத்து முழு நிலா நாளிலும் கிரகணம் ஏற்படுவதில்லை.அது போல அனைத்து அமாவாசை தினத்திலும், சூரிய கிரகணமும் உருவாவதில்லை.

சிவப்பு நிலா வானில் தோன்றும்?

நிலா பூமியின் நிழலுக்குள் சந்திரன் மறையும்போது முழுமையாக கருப்பாகஇருக்காது. நிலாவுக்கு எப்போதும் தன் ஒளி கிடையாது. அது சூரியனிடமிருந்து பெற்ற ஒளியை இரவில், ஆசையாக புவியின் மேல் பாய்ச்சும். சந்திர கிரகணத்தின்போது, பூமி நிலவை மறைப்பதால், அப்போது சூரியனின் கதிர்கள், பூமியின் மேலுள்ள வளிமண்டலத்தின் மூலம், மறைமுகமாக நிலாவை தெரியவைக்கும். அப்போது நிலா, சிவப்பாக தெரியும். இதுதான் சிவப்பு நிலாவின் ரகசியம். சூரியன் உதிக்கும்போதும் மறையும்போதும், வளிமண்டலத்தில் கதிர்களை Rayleigh scattering விளைவால் சிதறுவதால்,ஏற்படும் சிவப்பு நிறம்தான். இப்போது முழு சந்திர கிரகணத்தின் போதும் உண்டாகிறது.

செம்பின் நிறத்தில் முழு சந்திர கிரகணம் .!

முழு சூரிய கிரகணத்தின்போது, சூரியன் சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டு கருப்பாகத் தெரிவது போல, முழு சந்திர கிரகணத்தின்போது, சந்திரன் கருப்பாக/இருட்டாகத் தெரிவது இல்லை. சந்திரன் முழு கிரகணத்தின் போது காணாமல் ஓடிப் போவதும் இல்லை.சந்திரன் பூமியின் நிழல் வழியே நகரும்போது, பூமியின் வளிமண்டலம் மூலமாக, சந்திர மறைவுப் பிரதேசங்களில், சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரதிபலிக்கின்றன. இப்போது பூமியில் மட்டும் வளிமண்டலம் இல்லாது போயிருப்பின், சந்திரன் கன்னங்கரேல் என கரித்துண்டம்/கருப்பு நிலவாகக் காட்சி அளித்திருக்கும். பூமியின் வளிமண்டலம்தான் அதில்பட்டு சந்திரனில் சிதறும் அகச் சிவப்பு ஒளித் துகள்கள்தான். முழு சந்திர கிரகணத்தின்போது, அதனை சிவப்பான செம்பு நிலாவாகக்(copper moon) காட்டுகிறது. இதுவேதான், சூரியன் உதிக்கும்/ மறையும்போதும், அதன் சிவப்பு வண்ணத் தூரிகை கொண்டு வான் மேகத்தில் சிவப்பு-ஆரஞ்சு வண்ண ஓவியம் வரைவதன் காரணியும்..!

முழு சந்திர கிரகணம் நேரம்

இப்போது நவம்பர் 8-ம் நாள் நிகழவுள்ள, சந்திர கிரகணம் உலகின் பல பகுதிகளில் இந்திய நேரப்படி சந்திர கிரகணம் பிற்பகல் 2.38 மணிக்கு தொடங்க உள்ளது. முழு சந்திர கிரகணம் 3.45 மணிக்கு துவங்குகிறது. கிரகண மத்திமம்/அதிக பட்சம்/கிரகண உச்சம்  மாலை 4.28 மணிக்கு நிகழ்கிறது. முழு கிரகணம் மாலை 5 மணி 11 நிமிடத்திற்கு முடிகிறது. (முழு கிரகண நேரம் 85 நிமிடங்கள் ) சந்திர கிரகணம் மாலை 6 மணி 19 நிமிடத்திற்கு முடிகிறது.

எந்த இடத்தில் துல்லியமாகத் தெரியும்?

இன்று நிகழவுள்ள சந்திர கிரகணம் ஆனது மதியம் 2:48 மணிக்கு தொடங்கி மாலை 6:19 மணிக்கு நிறைவடைகிறது. இந்த கிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தில் இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலும் தெரியும் என கூறப்படுகிறது. கொல்கத்தா உட்பட கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் உள்ளவர்கள் சந்திர கிரகணத்தின் முழு நிகழ்வையும் அனுபவிக்க முடியும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் சரியாக மாலை 4:52 மணி முதல் 4:54 மணி வரை முழுமையாகத் தெரியும் என கூறப்படுகிறது. 

சந்திர கிரகணம் எத்தனை மணிக்கு தெரியும்?

முழு சந்திரகிரகணமாக இருந்தாலும் பகல் நேரத்தில் கிரகணம் நிகழ்வதால் இந்தியாவில் தெரியாது. மாலையில் சந்திரன் உதயமாகி கிரகணம் முடியும் வரை பார்க்கலாம். சென்னையில் மாலை 5 மணி 38 நிமிடத்தில் பகுதி சந்திர கிரகணத்தைப் பார்க்கலாம். சேலம் நகரில் மாலை 5 மணி 49 நிமிடத்திலும் கோவையில் மாலை 5 மணி 54 நிமிடத்திலும் மதுரையில் 5 மணி 57 நிமிடத்திலும் மும்பையில் மாலை 6 மணி 1 நிமிடத்திற்கும் பகுதி சந்திர கிரகணம் தெரியும் எனவும் கூறப்படுகிறது.

வரலாறு பேசும் ... கிரகணம்..!

சரித்திரம் படைத்த முழு சந்திர கிரகண நிகழ்வுகளும் உண்டு. சந்திர கிரகணம் அரிதானதுதான் என்றாலும், முழு சூரிய கிரகணம் போல அவ்வளவு அரிதானது கிடையாது. ஏனெனில் முழு சூரிய கிரகணம், உலகின் சில பகுதிகளுக்கு மட்டுமே தெரியும். ஆனால் முழு சந்திர கிரகணம், உலகில் இரவில் இருள் கவிந்த பாதி புவிப் பகுதிக்கு தெரியும். சரித்திரத்தில் பதிவுடன் எழுத்துக்களில் பதித்த முதல் முழு சந்திர கிரகணம் சீனாவில் சோயூ வம்சத்தின் (Zhou Dynasty.) சோயு-சூ புத்தகத்தில், கி.மு 1136 ம் ஆண்டு, ஜனவரி மாதம் 29 ம் நாள் நிகழ்ந்ததாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

போரை நிறுத்திய கிரகணம்!

பழங்காலத்தில், கிரகணம் என்ன என அறியப்படாதபோது, அவை ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட நிகழ்வு என்று கருதினர். கிரேக்கத்தில் சூனியக்காரர்கள், "நாங்கள் எங்களது அற்புத சக்தியால் வானிலுள்ள சந்திரனின் ஒளியை உறிஞ்சி விடுவோம்" என சவால் விட்டனர். முழு கிரகணத்தின் போது "சந்திர ஒளி ஓடிப்போயிற்று". மக்களும் அதனைப் பார்த்து நம்பினர். இது கி.மு. 425 , அக்டோபர் 9 ம் நாள் நிகழ்ந்தது. அதற்கு முன்னால் கி.மு.413, ஆகஸ்ட் 28ம் நாள் முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. இந்த கிரகணம், சைரகுயுசின் இரண்டாம் போரின்போது வந்தது. அப்போது ஏதென்ஸ்காரர்கள் வீடு நோக்கி செல்ல திட்டமிட்டனர். அவர்கள் துசிடிடெஸ்(Thucydides) என்ற மதகுருவிடம் என்ன செய்வது என்று கேட்டனர். அவர் இன்னும் 27 தினங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் என்றார். மதகுருவின் சொல்படி எதெனியர்கள் நடந்தனர். ஆனால், சைராகுசன்ஸ்(Syracusans ) இதனை சாதகமாக எடுத்துக் கொண்டு, திட்டமிட்டு ஏதேனியர்களின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டனர். ஏதேனியர்கள் போரில் தோல்வியுற்றனர். யூரிமேடான் மாய்ந்தார். சந்திர கிரகணத்தின் மேலுள்ள மூட நம்பிக்கையால் ஓர் போர் ஆழ்ந்த அழிவைச் சந்தித்தது.

மக்களை மிரட்டிய கொலம்பஸ்..!

கிறிஸ்டோபர் கொலம்பஸ் உலகை வலம் வந்தவர் என்ற தகவல் நமக்கெல்லாம் தெரியும். ஆனால், அவர் பெரிய கில்லாடி! அவர், 1503, ஜூன் 30 , ஜமைக்கா போய் இறங்கி, அங்கேயே கொஞ்ச நாட்கள் தங்கினார். அங்கிருந்த பூர்வகுடி மக்கள், வந்தவர்களை வரவேற்று உணவும் அளித்தனர். ஆனால் கொலம்பஸின் மாலுமிகள் அம்மக்களிடம் ஏமாற்றி திருடினர். இதனால் கோபம் கொண்ட மக்கள் அவர்களுக்கு உணவு தர மறுத்து விட்டனர். இந்த சமயம் பார்த்து, அப்போது முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. கொலம்பஸ் கடற் பயணத்துக்காகவும், சொந்த தேடல் மற்றும் ஆர்வத்தாலும், கால நிகழ்வுகள் குறித்த ஒரு காலண்டரை வைத்திருந்தார். அதில் முக்கிய நிகழ்வுகள் குறிக்கப் பட்டிருக்கும். அதன்படி, அப்போது வரும் முழு சந்திர கிரகணம் அறிந்து, இதன் மூலம் அந்த மக்களை மிரட்ட திட்டமிட்டார். அவர்களின் தலைவனைக் கூப்பிட்டு, "கடவுள் உங்கள மேல் கோபம் கொண்டிருக்கிறார். இரவின் ஒளியை/ சந்திரனை உங்களிடமிருந்து பிடுங்கிக் கொள்ளப் போகிறார்" என்றார். தலைவர் இதனை நம்பவில்லை. முழு சந்திர கிரகணம் வந்தது. ஊர் இருண்டது. சந்திரன் மறைந்தான்; ஊர் மக்கள் கொலம்பசிடம் வந்தனர். அவரின் குழுவுக்கு உணவும், உதவியும் செய்வதாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தனர். பின் வழக்கம்போல், பூமியின் நிழல் விலகியதும், சந்திர ஒளி ஜமைக்கா மேல் விழுந்தது. மக்கள் மகிழ்ச்சி கொண்டனர். எப்போதும் மெலிந்தோரை வலியோர் ஏமாற்றுவது தொடர்ந்து கொண்டே இருப்பது இதன்  மூலம் தெரிய வருகிறது. 

ஜோதிடமும் தவறான நம்பிக்கைகளும் 

கிரகணத்தின்போது சில நட்சத்திரங்களுக்கு தோஷம் இருக்கும், அவர்கள்  பரிகாரம் செய்ய வேண்டும், குளித்துவிட்டு கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்றெல்லாம் கூறப்படுகிறது. 

அதுபோல, கிரகண நேரத்தில் சமையல் செய்ய கூடாது, முக்கியமாக சாப்பிடக்கூடாது, நகம் வெட்டவோ முடி வெட்டவோ கூடாது, எந்த வேலையும் செய்யக்கூடாது. கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்பையை போட்டு வைப்பது, கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் நோயாளிகள் கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. 

ஆனால், உண்மையில் இந்த ஜோதிடர்கள் சொல்வதுபோல, கிரகண நேரத்தில் எந்தவித சிறப்பு/மர்ம கதிர்களும் சந்திரன் அல்லது சூரியனிடமிருந்து வருவது இல்லை என்பது அறிவியல் பூர்வமான உண்மை. சூரிய கிரகணத்தின்போது நிலவின் நிழல் சூரியனை மறைக்கிறது. இதனை நாம் பூமியிலிருந்து பார்க்கிறோம். சந்திர கிரகணத்தின்போது பூமியின் நிழல் சந்திரனை மறைக்கிறது. இதில் எந்த மாயமோ மந்திரமோ, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கதிர்களோ உருவாவது இல்லை.

இந்த பிரபஞசத்தில் அனைத்தும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன.அது போல சந்திரனும் நகர்ந்து செல்வதாலேயே இந்த நிலைமை. நட்சத்திர பரிகாரம் என்று கூறப்படும் நிலையில், இந்த விண்மீன்களுக்கும் பூமியிலிருந்து சுமார் 384,400 கி.மீ தொலைவில் மட்டுமே உள்ள சந்திரனுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? அவை வந்து இதனை என்ன செய்யும்? இப்போது அந்த விண்மீன்கள் எந்த இடத்தில் இருக்கின்றன என்ற தகவல் கூட ஜோதிடர்களுக்குத் தெரியவே வாய்ப்பு இல்லை.

அதுபோலவே பூரம் விண்மீன் சிம்ம ராசியில் உள்ளது. இது பூமியிலிருந்து 2.23, 36 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. பூராடம் தனுசு விண்மீன் தொகுதியிலு உள்ளது. இதுவும் 25,640 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. 

 ராகு என்ற கோள் எதுவும் சூரிய  குடும்பத்தில் கிடையாது இது ஒரு கற்பனைக் கோள். இதனை துணைக்கு இழுக்கிறார்கள் ஜோதிடர்கள்.

கர்ப்பிணி பெண்கள் கிரகணத்தின்போது வெளியே வரக்கூடாது என்று தவறான நம்பிக்கை கொண்டு பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கிப் போடுகிறார்கள். ஏன் தெரியுமா? அந்த பெண்கள் மீது கதிர்கள் பாய்ந்து கருப்பையில் இருக்கும் கருவின் உருவை சிதைக்குமாம். வின்னம் ஏற்படும் அதாவது பாதிப்பு ஏற்படும் என தவறான நம்பிக்கை விதைகளை இன்னும் விதைத்துக்கொண்டே இருக்கின்றனர். உண்மையில், அப்படி எதுவும் கிடையாது. நானும் கருவுற்று இருக்கும்போது சூரிய சந்திர கிரகணத்தைப் பார்த்தேன். குழந்தை நன்றாகவே பிறந்து இப்போது மகனுக்கு 45 வயது ஆகி நல்லபடியாகவே இருக்கிறார். எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை சூரிய கிரகணத்தில் வெளியே அழைத்துப் போனேன். அவரும் நல்லபடியாகவே குழந்தை பெற்று இருக்கிறார். கடந்த கரோனா காலத்தில் வந்த வளைய சூரிய கிரகணத்தை ஒரு பெண்ணிடம் காட்டினேன். அவர் கருவுற்று இருந்தது தெரியாது. அவருக்கும் தெரியாது. மாலை டாக்டரிடம் மருத்துவ சோதனைக்கு  சென்றால், அவர் கருவுற்று இருப்பதை  உறுதி செய்து, நீ சூரிய கிரகணத்தைப் பார்த்ததால் குழந்தை குறையுடன் பிறக்கும் என்பதால் கருச் சிதைவு செய்துவிட கூறியிருக்கிறார். படித்தவர்களும் தவறான நம்பிக்கையில் இவ்வாறு செய்வது அதிர்ச்சியாக உள்ளது. 

கடந்த சூரிய கிரகணத்தின்போது சில மாநிலங்களில் அரசு விடுமுறை விடப்பட்டது. ஆனால் அதேநேரத்தில் கிரகணத்தின்போது சில கோயில்கள் மூடப்படாமல் உள்ளன. அந்தநேரத்தில் தான் பக்தர்களை வரச்சொல்கிறார்கள். 

இதுபோல பலவித தவறான நம்பிக்கைகளை உடைக்க அறிவியல் இயக்கம் மற்றும் சில தன்னார்வல அமைப்புகள் செயல்பாடுகள் செய்து கொண்டு இருக்கின்றன. அறிவியல் விழிப்புணர்வு மக்களிடையே கொண்டு செல்லுதல் அவசியம், இதுதான் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். 

இன்று பல கோயில்களில் கிரகணத்தின்போது நடை சாத்திவிடுகின்றனர். கோயிலுக்குள் உள்ள சாமிக்கும் கிரகணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. கிரகணத்தின் போது எவ்வித கதிரும் கோயிலுக்குள் நுழைந்து கடவுளைப் பாதிப்படையச் செய்வதில்லை. இந்த கதிர்கள் எந்த உணவுப்பொருளின் மீதும் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எப்போதும் இருக்கும் சந்திர கதிர்தான் இப்போதும் நம் கண்ணுக்குத் தெரியும். அறிவியல் ரீதியாக சூரிய சந்திர கிரகணத்தின் போது அந்த இடங்களிலிருந்து எவ்வித கதிர்களும் வருவதில்லை. அறிவியல் இல்லாவிட்டால் இந்த உலகில் நாம் இல்லை. அறிவியல் படி வாழ்வோம். வாழ்நாளை நீட்டிப்போம்.

அறிவியல் பார்வை, மனப்பானமைதான் உலகை உய்ய வைக்கும். 

                       [கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்]



Read in source website

ஹரியாணா, உத்தரப் பிரதேசம், பிஹார், மகாராஷ்டிரம், ஒடிசா, தெலங்கானா ஆகிய ஆறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகி ஆளும் பாஜக-வுக்குப் புது உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இம்மாநிலங்களில் நடந்த 7 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 4 இடங்களை பாஜக கைப்பற்றித் தங்களது கை ஓங்கியிருப்பதை நிரூபித்துள்ளது. பிஹாரில் ஒரு இடத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், மகாராஷ்டிரத்தில் அந்தேரி கிழக்குத் தொகுதியை சிவசேனா (உத்தவ்) பிரிவும், தெலங்கானாவில் நடந்த தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியும் என மூன்று கட்சிகளும் தலா ஒரு இடத்தைப் பிடித்துள்ளன. இதில் தெலங்கானா முனுகோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டதுடன் டெபாசிட்டையும் இழந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், அந்தத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பல்வாய் ஸ்ராவந்தி 2014ஆம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர். அவர் அப்போது பெற்ற வாக்குகளைக்கூட காங்கிரஸ் சார்பில் தற்போது பெற முடியவில்லை என்பது பரிதாபத்தின் உச்சம்.



Read in source website

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகான மிகப் பெரிய அரசியல் படுகொலைகள் மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரின் படுகொலைகளாகும். இந்தத் தலைவர்களைக் கொன்ற கொலையாளிகளின் சமூகம்-மதம் சார்ந்து எந்த வெறுப்புணர்வும் காட்டப்படவில்லை. காந்தியைக் கொன்ற கொலையாளி கோட்ஸே பின்பற்றிய சித்தாந்தத்தையே இந்தியா எதிர்த்தது. மாறாக, கோட்ஸேசார்ந்திருந்த சமூகத்தின்மீது யாரும் வெறுப்புக்கொள்ளவில்லை; இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது சீக்கியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையும் ராஜிவ் கொலையுண்டபோது தமிழர்கள்மீது வடஇந்தியர்களுக்கு எழுந்த வெறுப்பும் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

சுதந்திரத்துக்குப் பின் முஸ்லிம்களின் கோரிக்கை, வளர்ச்சி, சமூக முன்னேற்றம் குறித்து முஸ்லிம் லீக் தவிர வேறெந்த அமைப்பும் கவலை கொண்டிருக்கவில்லை; காங்கிரஸின் மிகப் பெரிய ஓட்டு வங்கியாக மட்டுமே முஸ்லிம்கள் இருந்தனர். 1992இல் பாபர் மசூதி இடிப்பைத் தவிர்க்க காங்கிரஸ் தவறிவிட்டது. இந்தப் புள்ளியில் இருந்துதான் முஸ்லிம்கள் மத்தியில் மிகப் பெரிய மாறுதல் ஏற்பட்டது. நாடு தழுவிய அரசியலாக இதைக் கையாளத் தவறியது. பாபர் மசூதி இடிப்புக்குப் போதுமான எதிர்வினை இல்லை என்கிற குற்றச்சாட்டில் முஸ்லிம் லீக் மீதான நம்பிக்கை குறைந்துபோயிற்று. இதையடுத்து, இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் தோன்றின. முஸ்லிம் சமூகம் அதுவரை மதிப்புமிக்கதாகவே இந்தியச் சமூகத்தில் கருதப்பட்டுவந்தது.

மும்பையும் கோவையும்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு அசம்பாவிதங்கள் இந்தியாவில் அரங்கேறத் தொடங்கின; அவை தமிழகத்திலும் எதிரொலித்தன. கோவையில் தனிப்பட்ட பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டது, 1997 டிசம்பர் கலவரத்துக்குக் காரணமானது. இதில் 19-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். நியாயம் கேட்டு முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட, ஒரு குழு பிப்ரவரி 14ல் தொடர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டது. இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், அதன் ரணங்கள் இன்னும் ஆறவில்லை. கோவை முஸ்லிம்களின் பொருளாதாரம் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தது. தமிழக முஸ்லிம்கள் காவல் துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர்; அப்பாவிகளும் சேர்ந்து சிறைவாசிகள் ஆகும் நிலை ஏற்பட்டது.

தற்போது அக்டோபர் 23 அதிகாலை கோவையில் கார் வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. கோவையில் நிம்மதி மீண்டும் கெடும் நிலை இந்த செயலால் ஏற்பட்டுள்ளது. இதில் சில முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தப் பகுதி ஜமாத்துடனும் தொடர்பில் இல்லாதவர்கள். கார் வெடிப்பில் ஈடுபட்டு இறந்துபோன ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்யக்கூட ஜமாத் முன்வரவில்லை. காவல் துறையின் தலையீட்டுக்குப் பிறகே ஜமாத்தார் தங்கள் அடக்க ஸ்தலத்தில் இடம்கொடுத்தனர். ஒரு உடலை அடக்கம்செய்யத் தேவையான ஆட்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.

முஸ்லிம் சமூகத்துக்காகப் பாடுபடுவதாகச் சொல்லி, அரங்கேற்ற முயன்ற ஒரு சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்து, முஸ்லிம் சமூகம் இக்காரியத்தில் ஈடுபட்டவர்களை முழுமையாக வெறுக்கிறது. முஸ்லிம்களுக்கு இன்று மிகப்பெரிய சவாலாக இருப்பவை சமூக வலைதளங்கள். சமூகத்தை மேம்படுத்துவதாகச் சொல்லி இளைஞர்களால் வெளிப்படுத்தப்படும் புரட்சிகரமான பேச்சுகளும் கருத்துகளும் அந்தச் சமூகத்துக்கு எதிராகவே செல்கின்றன. இருந்தபோதும் சமூக வலைதளங்களில் பயணிக்கும் முஸ்லிம் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இளைஞர்களின் திசை மாற்றம்: ஜனநாயக முறையில் இயங்கும் அமைப்புகளால் எந்தப் பயனும் இல்லை என அதிருப்தியடையும் முஸ்லிம் இளைஞர்கள் சிலர், சர்வதேசத் தீவிரவாதக் குழுக்கள் பற்றி இணையதளங்களில் தேட முற்படுகின்றனர். உலகில் எங்கோ ஒரு மூலையில் இயங்கும் சில தீவிரவாதக் குழுக்களுடனான இணையதளத் தொடர்பில் அவற்றின் தவறான கோட்பாடுகள், வழிகாட்டுதலால் உந்தப்பட்டு, தவறான நடவடிக்கைகளில் முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபடுகிறார்களோ என்கிற சந்தேகம் முஸ்லிம் தலைவர்கள், ஜமாத்தார் மத்தியில் எழுந்துள்ளது. அரசின் விசாரணையும் இந்தக் கோணத்தில் செல்வது கவனத்துக்குரியது. இது போன்ற தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் மக்கள் விரோதக் கும்பல்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக் கோவை முஸ்லிம் கூட்டமைப்பு திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி உள்ளது. முஸ்லிம்களின் கல்வியைத் தொலைநோக்குடன் திட்டமிட்டுச் செயல்படுத்துவது, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது, விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபாடு, போட்டித் தேர்வுக்கான பயிற்சி போன்றவற்றில் பள்ளிவாசல் நிர்வாகங்கள் கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிம் மதச் சொற்பொழிவாளர்கள், இந்தியாவின் மீதான எதிர்மறைப்பேச்சுகளைக் குறைத்து, இந்தியாவில் வாழும் அனைவரும்நம் சகோதரர்கள் என்பது உள்ளிட்ட நேர்மறை அம்சங்களை அழுத்தமாகப் பேசிவர வேண்டும்.

நியாயமா?: பன்முகத்தன்மைக்கும் மத நல்லிணக்கத்துக்கும் நீண்ட காலமாக அறியப்பட்ட இந்த நாட்டில், குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிரான வெறுப்பு துரதிர்ஷ்டவசமானதுதான். இதை முறியடிப்பதற்குச் சரியான அரசியல் வியூகங்களை மதச்சார்பற்ற அணியினர் மேற்கொள்ள வேண்டும். மதவெறியை எதிர்க்க வேண்டிய பொறுப்பை மொத்தமாக முஸ்லிம்கள் தலையில் கட்டுவது மதச்சார்பற்ற சக்திகளே. எல்லாருக்கும் பொதுவாகவே ஓர் அரசு செயல்பட வேண்டும்; எல்லா மதமும் எங்களுக்கு சமம்தான் என்ற கொள்கையோடு எதிர்க் கட்சிகளும் செயல்பட வேண்டும். எந்த ஒரு மதத்துக்கு எதிராகவும், மத நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும் விதமாகவும் எந்த அரசியல் கட்சியோ இயக்கமோ செயல்படக் கூடது. குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிராகவோ, ஆதரவாகவோ தன்னைக் காட்டிக்கொள்வது இந்தியாவின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் எதிரானதாகவே அமையும். உலக மக்கள்தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 170 கோடி. இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக உலகில் அதிக முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தியா (சுமார் 20 கோடி பேர்). இதில் தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம்தான். இதில் இருநூறுக்கும் குறைவானவர்களே தீவிரவாதச் சிந்தனை உடையோராகக் கண்காணிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் இதுதான் நிலை.

கோவையில் நடந்த கார் வெடிப்பு போன்ற சம்பவங்களைத் தமக்கான அரசியல் லாபமாக, இரண்டு சமூகங்களைப் பிளவுபடுத்தும் உத்தியாக, வருங்காலத்தில் தங்களுக்கான வாக்காக மாற்றிட எந்தவொரு அரசியல் கட்சியுமே முன்வரக் கூடாது. தீவிரவாதச் செயலில் சிறுபான்மை, பெரும்பான்மை அணுகுமுறையும் தேவையில்லாதது. நடந்த நிகழ்வை மனிதகுலத்தை அழிக்கும் வகையிலான சட்டவிரோதச் செயலாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நாட்டில் அனைத்து சமூகத்தினரும் அமைதியையும் வளர்ச்சியையும் அனுபவிக்கும்போது முஸ்லிம்கள் மட்டும் பலவீனத்தால் அரசியல் சூழ்ச்சிகளில் சிக்குண்டு குற்றஉணர்வால் சிக்கித் தவிக்கும் நிலை சரிதானா? குடிமைச் சமூகம் சிந்திக்க வேண்டும்! - புதுமடம் ஜாபர் அலி, தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com



Read in source website

ரஷ்யா - உக்ரைன் போர் முற்றுப்பெறாத நிலையில், பக்கவிளைவாய் வேறொரு யுத்தம் மறைமுகமாக நடந்துகொண்டிருக்கிறது. அமெரிக்க- ஐரோப்பிய நாடுகளிடம் உக்ரைன் கொண்டுள்ள பற்றுதல் தனக்கு ஆபத்து என்று ரஷ்யா கருதுகிறது. அதை உறுதிசெய்வதுபோலவே உக்ரைனின் நடவடிக்கைகளும் அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் செயல்பாடுகளும் உள்ளன. உக்ரைன் மீது போர்தொடுத்து எளிதில் வென்றுவிடலாம் என்ற ரஷ்யாவின் திட்டம், உக்ரைனுக்கு அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் பெருமளவில் ஆயுத உதவிகள் செய்வதால் தவிடுபொடியாகிவிட்டது. இந்நிலையில் போரின் போக்கு வேறு திசைக்குச் செல்கிறது.

ஜெர்மனியின் மானியம்: ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடு ஜெர்மனி. இதன் இயற்கை எரிவாயுத் தேவையின் பெரும் பகுதி ஏறத்தாழ 52% ரஷ்யாவிலிருந்து பெறப்படுகிறது. தற்போது அதனை ரஷ்யா அதிரடியாக நிறுத்திவிட்டது. இதன் விளைவாகப் பெரும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு, தொழிற்சாலைகளும் குடிமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களில் மின்கட்டணம் 10 மடங்காக உயர்ந்துவிட்டது. இதனால் சலுகை விலையில் மின்சாரம் அளிக்க ஜெர்மனி 200 பில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் கோடி) ஒதுக்கியுள்ளது. தன் நாட்டுமக்களும் உற்பத்தியாளர்களும் பாதிப்புக்குள்ளாகக் கூடாது என்ற ஜெர்மனியின் இத்திட்டம் சரியானதாக இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்ற 26 நாடுகளுக்குப் பெரும் தலைவலியாகவும் பேரிடியாகவும் அமையும் என்பது உறுதி. இந்த நிதி உதவியால், ஜெர்மன் தொழிற்சாலைகளில் பொருட்களின் உற்பத்திச் செலவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதேநேரத்தில், மற்ற 26 நாடுகளில் மானியம் வழங்க முடியாது என்பதால், அவர்களது உற்பத்தி விலை கூடுதலாக இருக்கும். ஜெர்மன் நாட்டுப் பொருட்கள் மலிவு விலையில் சந்தையில் குவியும். விளைவாக, பிற நாடுகளின் பொருளாதாரம் புதைகுழிக்குள் செல்லும் அபாயம் உள்ளது. மானிய அறிவிப்பு வெளியானதுமே மற்ற ஐரோப்பிய நாடுகள் பதற ஆரம்பித்துள்ளன. ஜெர்மனியைப் போல் பொருளாதாரத்தில் பலமான சில நாடுகள் மானியம் வழங்கித் தப்பித்துக் கொள்ளலாம். நிதி வளமற்ற நாடுகள் தங்கள் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க இறக்குமதி வரி விதிக்கலாம். ஆனால் அது எளிதல்ல. காரணம், ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பின் அடித்தளமே நாடுகளுக்குள் வணிகம் எளிதாக எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி நடைபெற வேண்டும் என்பதே. இதற்காகவே யூரோவைப் பொதுப் பணமாகப் பரிவர்த்தனைக்கு உருவாக்கிக் கொண்டனர்.



Read in source website

தமிழக மெய்யியல் தொடர்பாகக் கவனம்கொள்ளத்தக்க ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் க.நெடுஞ்செழியன் (79), நவம்பர் 4 அன்று காலமானார். தமிழியல் பொருள்முதல்வாதக் கோட்பாடு நவீன இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டபோது, மேற்குலகச் சிந்தனை என விமர்சிக்கப்பட்டது. கருத்துமுதல்வாதமே இந்தியச் சிந்தனை மரபு என முன்மொழியப்பட்டபோது, தத்துவவியலாளர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா போன்றோர் பொருள்முதல்வாதத்தின் இந்தியப் பின்னணியை எழுதினர். இந்த மரபில் பொருள்முதல்வாதம் தமிழகத்தில் தோன்றிய தத்துவம் என எடுத்துரைக்க முயன்றவர் நெடுஞ்செழியன்.

பெளத்த, சமண மதங்கள்போல் ஆசீவகமும் வடக்கிலிருந்து வந்த மதம் என்ற கருத்தை மறுத்து, அதன் தமிழ் வேர்களைத் தன் ஆய்வுகள்வழி நெடுஞ்செழியன் கண்டறிய முயன்றார்; இந்த ஆய்வு அவரது அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்தியவியல் அறிஞரான ஏ.எல்.பசாமின் ஆசீவகம் குறித்த ஆய்வுகளை நெடுஞ்செழியன் இதற்கு ஆதாரமாக எடுத்துக்கொண்டார். தமிழ் இலக்கியங்கள் வழிதான் பசாம் ஆசீவகத்தை ஆராய்ந்தார். இந்த அடிப்படையில் நெடுஞ்செழியன் ஆசீவகம் ஒரு தமிழ் மதம் என்ற துணிபுக்கு வந்தார். அதற்கான சான்றுகளைக் கல்வெட்டு, இலக்கியங்கள் வழியாக அவர் தேடிச் சேகரித்துள்ளார். ஆசீவகத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசாலர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் சாத்தன், ஐயனார் என இன்றும் வணங்கப்படும் திருவுரு அவர்தான் என்றும் நெடுஞ்செழியன் மொழிந்துள்ளார்.



Read in source website