DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 07-09-2022

 

அரசு பணியில் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அமல்படுத்த திருத்தம் கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

2016ஆம் ஆண்டு சட்ட பிரிவின் கீழ் 30 சதவிகிதம் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் நடைமுறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு புதன்கிழமை இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், முதலில் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கிவிட்டு, பிறகு சமுதாய ரீதியிலான ஒதுக்கீடு என்பது தீர்ப்புக்கு முரணானது என சுட்டிக்காட்டியது.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ரத்து செய்வது முறையாக இருக்காது என்றும், அதேவேளையில் தகுதி அடிப்படையில் பணி நியமனம் பெறும் உரிமையையும் மறுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.



Read in source website

 

காலம் காலமாக பெண்கள் முகத்திற்கு பூச்சாக பயன்படுத்தி வந்த மஞ்சளைக் கூட பயன்படுத்தக்கூடாது என்று சொல்லும் நவீன அறிவியல் உலகில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ‘டாக்டர், மஞ்சள் பூசிக்கொள்ளக்கூடாது, தலையில் எண்ணெய் வைக்கக்கூடாது என்று நான் சிகிச்சைக்கு சென்ற தோல் சிகிச்சை நிபுணர் கூறிவிட்டார்’ என்று பலர் கூறுவது வருத்தமளிக்கக்கூடியது தான். 

நாம் பரம்பரையாக பழகி வந்த வழக்குமுறைகள் பலவும் இன்று வழக்கொடிந்து போவதும் கூட பல்வேறு நோய்நிலைகளுக்கு ஓர் முக்கிய காரணம். ஆனால் நம்ம ஊர் மஞ்சளையும், சந்தனத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள், டப்பாவில் அடைத்து சந்தைப்படுத்துவது என்பது வணிக நோக்கம் தானே. 

மறுபுறம் பார்த்தால், ‘அறிவியல் வளர்ந்துவிட்டது இன்னும் கூட எண்ணெய் குளியலா?’ என்று கேட்பவர்கள் அதற்கும் ஆராய்ச்சி தரவுகள் இருக்கிறதா? என்பதும் பாரம்பரியத்திற்கு சவாலான நிலை தான். “உடல் ரொம்ப உஷ்ணமா இருக்கு, உட்கார்ந்திருந்த இடம் நெருப்பு போல சூடாக இருக்கு’என்று சொன்னதும் முதலில் நல்லெண்ணையில் சீரகம் சேர்த்து காய்ச்சி எண்ணெய் தேய்த்துக் குளித்தால் எல்லாம் சரி ஆகிடும் என்று நாம் பாரம்பரியமாக பாட்டி வைத்தியமாய் பழகி வந்த எண்ணெய் குளியல் கூட, இன்று எதிரியாகி விட்ட அவலநிலை. 

வாதம், பித்தம், கபம் தான் நோய்களுக்கு முக்கிய காரணம் என்கிறது சித்த மருத்துவம். இது உடல் உறுப்புகளுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு உடல் செல்களுக்கும் பொருந்தும். அந்த வகையில் தோல் என்பது நம் உடலில் பரந்து விரிந்த மிகப்பெரிய உறுப்பு. அதில் வாத, பித்த, கப ஏற்றத்தாழ்வுகள் வரவொட்டாமல் தடுக்க உதவுவது தான் ‘எண்ணெய் குளியல்’ என்கிறது சித்த மருத்துவம். 

அது ஒருபுறமிருக்க, காலம் முழுதும் நீங்காமல் உடல் வேதனையை விட, அதிக மன வேதனையை தந்து பலரை வருந்தச் செய்யும் தோல் நோய் தான் சோரியாசிஸ். வறண்ட தோலும், உறுத்தலும் மட்டுமின்றி படைகள் தோறும் செதில் செதிலாய் உதிரும் தன்மை கொண்டு, பாதிக்கப்பட்டவர்களை உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கும் சரும நோய் இது. 

கன்ம வியாதிகள் என்று அகத்திய மாமுனிவரால் கருதப்பட்ட சோரியாசிஸ் போன்ற தோல் வியாதிகள் தீரும் வாய்ப்பில்லை என்றும், பருவநிலை மாறுபாட்டிற்கும், உணவு முறைக்கும், மன உளைச்சலுக்கும் தகுந்தாற்போல் அவை உடலில் மறைந்திருந்து, அவ்வப்போது தோலில் வெளிவந்து துன்புறுத்தும் என்றும் சித்த மருத்துவம் கூறுகின்றது. 

‘டாக்டர் மாதந்தோறும் ஆயிரம் ஆயிரமாக செலவு செய்தும் எனது சோரியாசிஸ் தோல் மாறுவது போல் தெரியவில்லை, மருந்துகள் நாள்பட உட்கொண்டால் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் வருமா?’ என்ற பயமும் உள்ளுக்குள்.  இவ்வாறு பணத்தையும், மனத்தையும் இழந்து சோகத்தில் உள்ளவர்களுக்கு தீர்வு தரும் தமிழ் மருத்துவ மூலிகை தான் ‘கற்றாழை’

சித்த மருத்துவத்தில் குட்ட நோய் என்ற பெயரில் பல்வேறு தோல்நோய்களை பற்றி குறிப்பிட்டு மூலிகைகளும், மருத்துவமும் கூறப்பட்டுள்ளது. அதில் வறட்சியான நிலப்பகுதியில் வளர்ந்து, நீர்ப்பசையை தாங்கி, உடலில் வறண்ட தோல் வியாதிகளையெல்லாம் போக்கும் தன்மையுடைய ஒரு மூலிகை ‘சோற்றுக்கற்றாழை’. 

கசப்பு தன்மையும், குளிர்ச்சி வீரியமும் உள்ள கற்றாழை வாத, பித்த குற்றங்களை தோலில் மட்டுமில்லாது உடலிலும் தன்னிலைப்படுத்தும் தன்மை உடையது. ‘குமரி தைலம்’ என்ற சித்த மருந்தினை இவ்விரு குற்றங்களை சமப்படுத்த எண்ணெய் குளியலுக்கு பயன்படுத்தலாம்.

இந்தியாவில் மட்டுமில்லாமல் கிரீஸ், எகிப்து, மெக்சிகோ, ஜப்பான், சீனா போன்ற பல்வேறு நாடுகளின்  பண்டைய கலாச்சாரங்களில் கற்றாழை மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. எகிப்து நாட்டு ராணிகள், பேரழகுக்காக வருணிக்கப்படும் கிளியோபாட்ரா ஆகியோர் கூட தங்கள் சருமத்தைப் பராமரிக்க கற்றாழையை பசையாக்கி பயன்படுத்தினர் என்கிறது வரலாறு. 

கிரேக்கத்தின் வரலாற்று வீரர் அலெக்சாண்டர் ‘தி கிரேட்’, தனது வீரர்களின் காயங்களுக்கு சிகிச்சையளிக்க இதைப் பயன்படுத்தினார் என்கிறது மற்றொரு வரலாற்றுக் குறிப்புகள்.

1800-களில் அமெரிக்காவில், மலச்சிக்கல் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க கற்றாழை பயன்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு முன்னரே ‘குமரி எண்ணெய்’ என்ற மருந்தினை மலச்சிக்கலுக்கும், மூல வியாதிக்கும் சித்த மருத்துவம் பரிந்துரை செய்துள்ளது என்பது, உலகிற்கே நம் மருத்துவம் தான் முன்னோடி என்று விளங்க வைக்கிறது. 

சோற்றுக்கற்றாழையில் உள்ள மடலை நீக்கி உள்ளே உள்ள பசை போன்ற பகுதியில் நீர், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், லிப்பிடுகள், ஸ்டீரால்கள், டானின்கள் மற்றும் என்சைம்கள், பீனாலிக் கலவைகள், சபோனின், ஆந்த்ராகுயினோன்களையும் கொண்டுள்ளது. இதில் உள்ள சி-கிளைகோசைடுகள் மற்றும் அலோ-எமோடின், அலோசின், போன்ற ஆந்த்ராகுயினோன்கள் இதன் மருத்துவ குணத்திற்குக் காரணமாக உள்ளது. இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மேலும், வைட்டமின்-பி12, ஃபோலிக் அமிலம், கோலின் போன்றவையும் உள்ளன.

கற்றாழையில் உள்ள வேதி மூலக்கூறுகளால் காயங்களை ஆற்றும் தன்மையும், பூஞ்சை, வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்ப்பதாகவும், மலமிளக்கியாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக, உடலில் கட்டிகளை கரைப்பதாகவும், புற்றுநோயை வரவிடாமல் தடுப்பதாகவும், ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும், ஒவ்வாமைக்கு எதிராக செயல்படும் தன்மையும், செரிமானத்தை தூண்டுவதாக, வயிற்றுப்புண்ணை ஆற்றுவதாகவும் உள்ளது. மேலும், கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைடுகளைக் குறைத்து சிறுநீரகக் கல்லைத் தடுக்கவல்லது. அத்தகைய சிறப்பு மிக்க கற்றாழையை மடல் நீக்கி, சளி போன்ற பிசினை 7 முறை அலசிய பின் பயன்படுத்த வேண்டுமென சித்த மருத்துவம் அறிவுறுத்துகின்றது. 

கற்றாழையில் உள்ள மியூகோபாலிசாக்கரைடுகள் தோலில் ஈரப்பதத்தை உறிஞ்சி சோரியாசிஸ் நோயில் தோல் வறட்சி வராமல் தடுக்கக்கூடியது. அதில் உள்ள சாலிசிலிக் அமிலம் என்ற வேதிப்பொருள் சோரியாசிஸ் நோயில் தோல் அழற்சிக்கு காரணமாகும் ப்ரோஸ்டாகிளாண்டின் ஈ-2 உற்பத்தியை தடுத்து அழற்சியை நீக்கி பளப்பான சருமத்தை ஏற்படுத்த உதவுகிறது.  

இன்று சோற்றுக்கற்றாழை இல்லாத சவுக்கார கட்டிகளோ (சோப்பு), முகப்பூச்சிகளோ இல்லை என்றே ஆணித்தரமாக சொல்லலாம். ஆக, இன்றைய நவீன அறிவியல் உலகம் அணுக நினைக்கும் பலவற்றையும், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அணுகி அவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருவது நம் சித்த மருத்துவம். அதனை முறையோடு பயன்படுத்தி வாழ்ந்தால், நலம் தேடும் உலக மக்களுக்கு நாம் முன்னோடியாக திகழ முடியும்.

மருத்துவரின் ஆலோசனைக்கு: +91 8056040768 இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com



Read in source website

சென்னையில் வாகனங்களில் ‘ராங் ரூட்’டில் சென்றால் ரூ.1,100 அபராதமாக வசூலிக்கப்படும்.

சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறுபவா்களிடம் அபராதம் வசூலிக்கும் வகையில் கடந்த 2011-ஆம் ஆண்டு இ-செலான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 2017-ஆம் ஆண்டு பணமில்லா பரிவா்த்தனை மூலம் போக்குவரத்து விதிமுறை மீறல் ஈடுபடுவோரிடமிருந்து அபராதம் வசூலிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அண்மையில் க்யூ ஆா் கோடு முறையில் அபராதம் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பொதுமுடக்கக் காலக்கட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த முடியாமல் இருந்த காவல்துறை, இப்போது தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.

அதிக சாலை விபத்துக்கள்:

சாலை விபத்துகளுக்கும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவோா் மீது அதிகளவில் வழக்குகள் பதியப்படுகின்றன. முக்கியமாக மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் , கைப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல் உள்ளிட்ட 8 போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடுவோா் மீது அதிகளவில் வழக்குப் பதியப்படுகிறது.

இதன் அடுத்தக் கட்டமாக ‘ராங் ரூட்’டில் வாகனம் செல்வதினால் அதிகளவில் விபத்து ஏற்படுவது தெரியவந்தது. அதேவேளையில் ராங் ரூட்டில் வாகனங்கள் செல்வதினால் பெரும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதும் போக்குவரத்துப் பிரிவுக்கு தெரியவந்தது.

இனி ரூ,1,100 அபராதம்:

ஆனால் ‘ராங் ரூட்’ டில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரூ.100 மட்டும் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், இந்த தொகையை எளிதாக செலுத்துவதாக கருதப்பட்டது. இதையடுத்து மோட்டாா் வாகன சட்டம் புதிய திருத்தத்தின்படி, ‘ராங் ரூட்’ டில் பயணிப்பவா்களுக்கு ரூ.1,100 அபராதம் விதிக்க சென்னை காவல்துறை உயா் அதிகாரிகள் முடிவு செய்தனா்.

இந்த முடிவின்படி, திங்கள்கிழமை முதல் ராங் ரூட்டில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,100 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் திங்கள்கிழமை மட்டும் 1,300 வாகன ஓட்டிகளுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது. சாலை விபத்துகளைத் தடுக்க இந்த நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும் என சென்னை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.



Read in source website

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ள நிலையில், அதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி கல்லூரி வளாகம் முழுவதும் 25 கேமராக்களை உரிய தொழில்நுட்ப அம்சங்களுடன் பொருத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்எம்சி இயக்குநா் பங்கஜ் அகா்வால் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது இன்றியமையாததாக உள்ளது. அதன்படி, வளாக முகப்பில் ஒரு கேமராவும், நோயாளிகள் பதிவு இடத்தில் இரு கேமராக்களும், புறநோயாளிகள் பிரிவில் 5 கேமராக்களும் பொருத்த வேண்டும்.

விரிவுரைக் கூடங்கள், ஆய்வகங்கள், அவசரசிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கேமராக்கள் பொருத்துதல் அவசியம். மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் மொத்தம் 25 கேமராக்கள் இருத்தல் வேண்டும்.

‘4 கே’ துல்லியத்தன்மையுடன் அவை பொருத்தப்பட வேண்டும். இந்த அறிவிப்பு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில், அதுதொடா்பாக பல்வேறு சந்தேகங்களை தொடா்ந்து என்எம்சியிடம் மருத்துவக் கல்லூரிகள் எழுப்பி வருகின்றன.

அதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் என்எம்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

 



Read in source website

 

ரயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு அளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

இதுவரை ரயில்வே நிலங்கள் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே குத்தகைக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீண்ட காலத்திற்கு குத்தகை விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. 

அந்தவகையில், ரயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரயில்வே நிலத்தின் மதிப்பில் 1.5 சதவிகிதத்தை குத்தகை தொகையாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ரயில்வே நிலங்களை நீண்டகால குத்தகைக்கு விடுவதால், நாடு முழுவதும் 300 சரக்கு கையாளும் முனையங்கள் அமைய வாய்ப்புள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.



Read in source website

 

புது தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜபாதையின் பெயரை ‘கா்த்தவ்ய பாதை’ (கடமைப் பாதை) எனப் பெயா்மாற்றம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய நாடாளுமன்ற வளாகம், குடியரசு துணைத் தலைவா் மாளிகை உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டடப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதன் கீழ், இந்தியா கேட் அடங்கிய புதுப்பிக்கப்பட்ட ராஜபாதையை செப். 8-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைக்கிறாா்.

இந்தப் பாதையில் புதிய நாடாளுமன்ற கட்டடம், மத்திய அரசின் தலைமைச் செயலக அலுவலகங்கள், குடியரசு துணைத் தலைவரின் புதிய இல்லம், பிரதமரின் புதிய இல்லம் மற்றும் அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன.

தற்போது இந்தியா கேட் அருகே அமைந்துள்ள நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் சிலையிலிருந்து குடியரசுத் தலைவா் மாளிகை வரை அமைந்துள்ள சாலை ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் மன்னரின் பாதை என அழைக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு இது ராஜபாதையாக பெயா் மாற்றம் பெற்றது.

இந்தச் சாலையின் பெயரை ‘கா்த்தவ்ய பாதை’ (கடமைப் பாதை) என பெயா்மாற்றம் செய்ய புது தில்லி மாநகராட்சி கடந்த திங்கள்கிழமை முடிவு செய்திருந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற புது தில்லி மாநகராட்சி மன்றத்தின் சிறப்புக் கூட்டம் ராஜபாதை மற்றும் சென்ட்ரல் விஸ்டாவின் பெயா் மாற்றம் குறித்தான தீா்மானம் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, கடந்த 2015-ஆம் ஆண்டில், பிரதமா் இல்லம் அமைந்துள்ள ரேஸ் கோா்ஸ் சாலை லோக் கல்யாண் சாலை எனவும், ஔரங்கசீப் சாலை ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சாலை எனவும், 2017-இல் டல்ஹெளசி சாலை தாரா ஷிகோ சாலை எனவும் 2018-இல் தீன்மூா்த்தி செளக் என்பது தீன்மூா்த்தி ஹைஃபா செளக் எனவும் பெயா்மாற்றம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website


சண்டிகர்; நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதால் மட்டுமே, மணமகளின் சம்மதம் இன்றி, அவரை பாலியல் ரீதியாக தொடுவதற்கு மணமகனுக்கு எந்த உரிமையோ, சுதந்திரமோ கிடைக்காது என்று பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹரியாணா மாநிலம் கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், தனது உத்தரவில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, ரோகா எனப்படும் நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரியில் நடந்துள்ளது. குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்துடன் டிசம்பரில் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் முன்ஜாமீன் கோரிய நபர், பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்துள்ளார். பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் அப்பெண் மறுத்துவிட்டார். மீண்டும் கடந்த மே மாதம் மற்றும் ஜூன் மாதமும் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போதும் இதேதான் நடந்துள்ளது.

இதற்கிடையே, ஜூலை மாதம் மனுதாரர், அப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை விடியோவும் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில், மணமகனின் தாயார், பெண் வீட்டாரைத் தொடர்பு கொண்டு திருமணத்தை நிறுத்துவதாகக் கூறியுள்ளார்.

இது குறித்து நீதிமன்றத்தில் கூறிய மனுதாரர் தரப்பு, மணமகளுக்கு வேறொரு நபருடன் நட்பு இருந்ததைக் கண்டுபிடித்ததால்தான் திருமணத்தை நிறுத்தியதாகக் கூறியிருந்தனர்.

இது குறித்து அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இரு தரப்பினரும் அப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற அடிப்படையில் வாட்ஸ்ஆப்பில் பேசியிருக்கலாம். ஆனால், மனுதாரர் செய்திருப்பது, அது பாதிக்கப்பட்டவரின் அனுமதியுடன் நடந்திருந்தாலும் கூட சரியாகாது.

அதுபோல, திருமணத்தை நிறுத்தியதற்கு மனுதாரர் தரப்பில் சரியான ஆதாரங்கள் காட்டப்படவில்லை என்றும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.

 



Read in source website

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவா் சைரஸ் மிஸ்திரி (54), மும்பை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா். இந்த விபத்து நிகழ, சம்பவம் நடந்தப் பகுதியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் பாலத்தின் மிக மோசமான வடிவமைப்பே காரணம் என்று தடயவியல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

சைரஸ் மிஸ்திரி வந்த கார் விபத்துக்குள்ளான இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்த தடயவியல் துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழு, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்யுவி காரில் வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்றும், சம்பவம் நடந்த இடத்தில் கட்டப்பட்டிருக்கும் பாலத்தின் மிக மோசமான வடிவமைப்பே விபத்துக்குக் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

காரில் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் மிகச் சரியாக வேலை செய்திருப்பதையும், தடயவியல் துறையினர் உறுதி செய்திருக்கிறார்கள்.

மகாராஷ்டிர காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில் அமைக்கப்பட்ட இக்குழுவானது, கார் மிக வேகத்தில் வந்திருப்பதும், பாலத்தின் கட்டமைப்பும் விபத்துக்குக் காரணம் இன்று இறுதி முடிவுக்கு வந்துள்ளது. இரண்டு சாலைகளுக்கு இடையே இருக்கும் தடுப்புச் சுவரானது சாலையில் துருத்திக் கொண்டு இருப்பதையும், பால வடிவமைப்பின் மோசமான தவறே இந்த விபத்துக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், அந்த இடத்தில், விபத்து நிகழ்வதற்கு சற்று தொலைவில், மூன்று வழிச் சாலை, திடீரென இரண்டு வழிச் சாலையாக மாறுகிறது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த விபத்து நிகழ்ந்தபோது, அந்தக் கார் சுமார் மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையும் தடயவியல் குழுவினர் உறுதி செய்திருக்கிறார்கள்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் அளித்திருக்கும் இடைக்கால விசாரணை அறிக்கையில், அதிவேகமும், தவறான முன்கணிப்புமே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் உருகுலைந்திருக்கும் காரினை ஆய்வு செய்தபோது, அது விபத்து நேரிட்டபோது மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அதாவது, காரின் ரேடியேட்டர் முற்றிலுமாக சேதம் மட்டும் அடையவில்லை. அது கிட்டத்தட்ட 2 முதல் 3 அடி உள்பக்கமாக அழுத்தப்பட்டுள்ளதே, விபத்தின்போது கார் பயங்கர வேகத்தில் வந்திருப்பதை உறுதி செய்கிறது.

விபத்து நடந்த பல்கார் மாவட்டத்தின் நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர்தான்.  ஒரு வேளை இந்தக் கார் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தால் கூட, அது மிக வேகம்தான். இது குறித்து கார் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வரழைக்கப்பட்டு, துல்லியமான வேகத்தை அளவிட அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை கூறுகிறது.

இதில் துயரமான விஷயம் என்னவென்றால், காரில் பயணித்த மிஸ்திரி மற்றும் ஜெஹாங்கீர் ஆகியோர் சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை. காரின் காற்றுப்பைகள் விரிவடைந்தும் அவர்கள் சீட் பெல்ட் அணிந்திருக்காமல் போனதால், தலை முன்பக்க சீட்டில் இடித்து படுகாயமடைந்து மரணமடைந்தனர். ஆனால் அதே காரில் வந்த மற்ற இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் படுகாயத்துடன் உயிர் தப்பினர் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க  | எப்படி இருக்கிறது பெங்களூரு? கைகொடுக்கும் படகும் டிராக்டரும் - புகைப்படங்கள்

இது தொடா்பாகக் காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மிஸ்திரி தனது காரில் அகமதாபாதில் இருந்து மும்பைக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தாா். மகாராஷ்டிரத்தின் பல்காா் மாவட்டத்தில் சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்துக்குள்ளானது. பிற்பகல் 3.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் மிஸ்திரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரில் இருந்த மற்றொரு நபரும் உயிரிழந்தாா். காா் ஓட்டுநரும், மற்றொரு நபரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்’’ என்றனா்.

தலைமை பிரச்னை: டாடா குழுமத்தின் தலைவா் பொறுப்பிலிருந்து ரத்தன் டாடா கடந்த 2012-இல் விலகினாா். அதையடுத்து, சைரஸ் மிஸ்திரி அப்பொறுப்பை ஏற்றாா். எனினும், 4 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பதவியில் இருந்து மிஸ்திரி நீக்கப்பட்டாா்.

டாடா குழுமத்துக்குப் புதிய தலைவா் நியமிக்கப்பட்டதற்கு எதிராக தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தில் சைரஸ் மிஸ்திரி தரப்பில் முறையிடப்பட்டது. அதை விசாரித்த தீா்ப்பாயம், சைரஸ் மிஸ்திரியை குழுமத்தின் தலைவராக நியமிக்குமாறு உத்தரவிட்டது.

அதற்கு எதிராக டாடா குழுமம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், மிஸ்திரியின் நீக்கம் சரியானதே எனக் கடந்த ஆண்டு மாா்ச்சில் உத்தரவிட்டது. மிஸ்திரிக்குப் பிறகு ரத்தன் டாடா தலைவா் பொறுப்பை மீண்டும் ஏற்றாா். கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து அப்பொறுப்பை என்.சந்திரசேகரன் வகித்துவருகிறாா்.

இந்நிலையில், முன்னாள் தலைவா் மிஸ்திரியின் உயிரிழப்பு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், காா் விபத்துக்கு உள்ளாகியுள்ளது என்றே முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா். விபத்து தொடா்பாகத் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

 



Read in source website

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து வர தடை மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் அரசு அலுவலங்களில் முறையாக உடை அணிய வேண்டும், ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்ற கேஷுவல் உடைகளை அணியக்கூடாது என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஷிவேஷ் குமார் குப்தா தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், 'இதற்கு முன்பும் ஆடைக் கட்டுப்பாடு குறித்து பலமுறை எழுத்துப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் முறையான உடைகளை அணியுமாறும் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட்களை அலுவலகத்தில் அணிய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஆனால், இனி ஜீன்ஸ், டி-ஷர்ட் உள்ளிட்ட உடைகளை அணிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்; என்று தெரிவித்தார். 

இதுபோல உத்தரப் பிரதேசத்தில் சம்பல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள், ஜீன்ஸ் மற்றும் டிசர்ட் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



Read in source website

 


புது தில்லி: தில்லியில் காற்றுமாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, பதுக்கி வைக்கவோ, வெடிக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் இந்த தடை உத்தரவானது, ஆன்லைன் மூலம் நடைபெறும் பட்டாசு விற்பனைக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோபால் ராய் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தயாரிப்பு, குடோன்களில் பதுக்கி வைப்பது, விற்பனை மற்றும் அனைத்து விதமான பட்டாசுகளை வெடிக்க முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. தில்லிவாழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த முறை கூடுதலாக ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை மற்றும் விநியோகத்துக்கும் சேர்த்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறுவோர் மீது, தில்லி காவல்துறை, தில்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்கவும்  அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 



Read in source website

 

கர்நாடக மாநிலத்தின் நுகர்வோர் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த உமேஷ் கட்டி(61) மாரடைப்பால் இன்று காலமானார்.

பெங்களூருவில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர், நேற்று இரவு  வீட்டில் உணவு அருந்திய பின்பு குளியறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த பணியாளர்கள் கதவை திறந்து பார்த்தபோது அமைச்சர் உமேஷ் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் அமைச்சர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மூத்த அமைச்சர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மேலும், பாஜக தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உயிரிழந்த அமைச்சரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Read in source website

தேசிய அளவில் புதிய கூட்டுறவுக் கொள்கையை உருவாக்க முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் குழு அமைக்கப்படும் என மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
 மேலும், இதை முன்னிட்டு மாநிலக் கூட்டுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டை வியாழக்கிழமை (செப்டம்பர் 8) மத்திய அரசு கூட்டியுள்ளது. தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கக் குழுவில் நாடு முழுவதிலும் இருந்து 47 உறுப்பினர்கள் இடம் பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அதிகாரத்தில் உள்ள கூட்டுறவுகளில் மத்திய அரசு தலையிடுகிறது என்கிற விமர்சனங்களுக்கிடையே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 நாட்டிலுள்ள பெரும்பான்மை கூட்டுறவு சங்கங்கள் பெயர் அளவிற்கு மட்டுமே இருந்து சரியாக செயல்படாத நிலையில் இதை ஒழுங்குபடுத்தும் விதமாக புதிய கூட்டுறவுக் கொள்கையை உருவாக்க தேசிய அளவில் குழு அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
 முன்பு "கூட்டுறவே நாட்டுயர்வு' என்கிற மந்திரம் பிரபலமாக இருக்க, தற்போது பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் "ஒத்துழைப்பின் மூலம் வளம்' (சஹகர் சே சம்ரித்தி) என்கிற புதிய கோஷத்துடன் கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவதற்காக புதிய தேசிய கூட்டுறவுக் கொள்கை உருவாக்கப்படுகிறது எனவும் மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 இந்த தேசிய அளவிலான குழு முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் அமைக்கப்படுகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 47 உறுப்பினர்கள் இடம் பெறுவர். உறுப்பினர் பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
 இதற்கு முன்னதாக 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கலந்து கொள்ளும் மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர்களின் 2 நாள் மாநாடு வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் தேசிய கூட்டுறவின் புதிய கொள்கை, புதிய கூட்டுறவு திட்டங்கள், தரவுகள், கணினிமயமாக்கல் போன்றவை குறித்து விவாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வங்கி, வேளாண்மை, பால், மீன் வளம், வீட்டுவசதி, நெசவு போன்ற துறைகளில் கடன் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் கூட்டுறவு சங்கங்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



Read in source website

நான்கு சக்கர வாகனங்களின் பின் இருக்கையில் பயணிப்பவா்களுக்கான ‘சீட் பெல்ட்’ எச்சரிக்கை ஒலி அமைப்பை கட்டாயமாக்குவது குறித்து அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சா் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

அனைத்து வாகன தயாரிப்பாளா்களுக்கும் முன் இருக்கைக்கான ‘சீட் பெல்ட்’ எச்சரிக்கை ஒலியெழுப்பும் அமைப்பை கட்டாயம் வாகனங்களில் ஏற்படுத்துவது தற்போது நடைமுறையில் உள்ளது. மகாராஷ்டிரத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவா் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தாா்.

இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சா் நிதின் கட்கரி கூறுகையில், ‘வாகன விபத்தில் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்ததைத் தொடா்ந்து, வாகனங்களிலும் பின் இருக்கையில் அமா்ந்திருப்பவா்களுக்கும் ‘சீட் பெல்ட்’ எச்சரிக்கை ஒலியெழுப்பும் அமைப்பை ஏற்படுத்துவது குறித்து முடிவுஎடுக்கப்பட்டுள்ளது’ என கூறினாா்.

மத்திய மோட்டாா் வாகன விதிகளின்படி, பின் இருக்கையில் பயணிப்போா் சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 2020-ஆம் ஆண்டில் சீட் பெல்ட் அணியாததன் காரணமாக 15,146 போ் உயிரிழந்தனா். 39,102 போ் காயமடைந்துள்ளனா்.



Read in source website

இந்திய காடுகளில் மீண்டும் ‘சிவிங்கிப் புலி’யை (சீட்டா) அறிமுகப்படுத்தும் திட்டத்தை, மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பிரதமா் நரேந்திர மோடி செப்.17-இல் தொடக்கி வைக்கவுள்ளதாக அம் மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இத்திட்டத்துக்காக தென்ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்படும் சிவிங்கிப் புலிகள், அன்றைய தினம் தேசிய பூங்காவில் விடப்படவுள்ளன என்றும் அவா் கூறினாா்.

செப்.17-ஆம் தேதி பிரதமா் மோடியின் பிறந்த நாளாகும். அன்று மத்திய பிரதேசத்துக்கு வருகை தரும் அவா், மத்திய அரசின் லட்சிய திட்டங்களில் ஒன்றான சிவிங்கிப் புலியை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தை தொடக்கிவைக்கிறாா். அத்துடன், சியோபூா் மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் சாா்பில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பிரதமா் பங்கேற்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

உலகிலேயே வேகமாக ஓடக் கூடிய உயிரினமான சிவிங்கிப் புலிகள், ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளை ஆண்ட அரசா்கள், ஆங்கிலேய ஆட்சியாளா்கள் உள்ளிட்டோா் பொழுதுபோக்குக்காக அவற்றை பெருமளவில் வேட்டையாடியதால், சிவிங்கிப் புலிகளின் இனமே இந்தியாவில் அழிந்து போனது.

நாட்டில் கடைசியாகக் காணப்பட்ட சிவிங்கிப் புலி, இன்றைய சத்தீஸ்கா் பகுதியில் கடந்த 1947-இல் கண்டறியப்பட்டது. இந்தியாவில் இந்த இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக கடந்த 1952-இல் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிவிங்கிப் புலிகளை நாட்டில் மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. தற்போது உலகம் முழுவதும் சுமாா் 7,000 சிவிங்கிப் புலிகளே காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆப்பிரிக்க காடுகளில் உள்ளன.



Read in source website

பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள மூக்குவழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பைத் தடுப்பதற்காக கோவேக்ஸின் தடுப்பூசியை ஹைதராபாதைச் சோ்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஏற்கெனவே தயாரித்துள்ளது. அத்தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊசி மூலமாக அல்லாமல் மூக்கு வழியாகவே செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை பாரத் பயொடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த மருந்தை 18 வயதைக் கடந்த நபா்களுக்கு செலுத்த டிசிஜிஐ அவசரகால ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ’கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்குவழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை 18 வயதைக் கடந்தவா்களுக்கு செலுத்துவதற்கான அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் அறிவியல் திறன், ஆராய்ச்சி-வளா்ச்சித் திறன், மனித வளம் ஆகியவற்றை இந்தியா சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறது. அறிவியல்-தொழில்நுட்பத்தின் துணையுடன் கரோனா தொற்றை ஒழிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சுவாசப் பாதையின் மேற்பரப்பில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதை கரோனா தடுப்பூசி தடுப்பதில்லை எனக் கூறிய பாரத் பயோடெக் நிறுவனம், அதற்குத் தீா்வுகாணும் நோக்கில் ’பிபிவி154’ என்ற மூக்குவழியாகச் செலுத்தும் தடுப்பு மருந்தைத் தயாரித்தது. அந்த மருந்தை சுமாா் 4,000 தன்னாா்வலா்களிடம் பாரத் பயோடெக் நிறுவனம் பரிசோதனை செய்தது. அதில் எவருக்கும் தீவிர பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்ட ஆய்வில் மூக்குவழி தடுப்பு மருந்து போதிய நோய்எதிா்பொருளை உருவாக்கியதாகவும், பாதுகாப்பாக செயல்படுவதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த ஆகஸ்டில் தெரிவித்திருந்தது.

மூக்குவழி கரோனா தடுப்பு மருந்தைக் குறைந்த விலையில் தயாரிக்க முடியும் என்பதால், குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் பெரிதும் பலனடையும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.



Read in source website

தில்லி ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித் துறையை தொடங்க ரூ.5 கோடி நிதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்ப் பிரிவானது இனி, தமிழ் இலக்கியவியல் ஆய்வு, தமிழ் மற்றும் திராவிட மொழியியல் ஆய்வு, தமிழ் மற்றும் தென்னக வரலாற்றியல் மூவகையாக விரிவுபடுத்திப்படும். இந்தப் பிரிவானது தமிழ் இலக்கியவியல் எனும் தனித் துறையாக விளங்கும். இதற்காக ரூ.5 கோடி நிதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

துணைவேந்தா் நன்றி: தமிழ் இலக்கியவியல் துறையை உருவாக்கிடத் தேவையான நிதியை ஒதுக்கியதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் சாந்தி ஸ்ரீ பண்டிட் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதத்தில், தமிழ் மொழி வளா்ச்சிக்காகத் தாங்கள் செய்கின்ற மாபெரும் தொண்டாக இதைக் கருதுகிறேன். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவா் என்ற முறையிலும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் என்ற அடிப்படையிலும் முதல்வரின் முயற்சி மிகுந்த பெருமை அளிக்கிறது என்று தனது கடிதத்தில் துணைவேந்தா் குறிப்பிட்டுள்ளாா்.



Read in source website

ஐந்து நாள் அரசு முறைப்பயணமாக நேபாளம் சென்றுள்ள இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே அந்நாட்டு பிரதமா் ஷோ் பகதூா் தேவுபாவை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினாா். அப்போது பாதுகாப்பு துறையில் இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது இருநாட்டின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே உறுதி அளித்தாா் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சந்திப்பின்போது அந்நாட்டுக்கான இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவாவும் உடன் இருந்தாா்.

இந்த சந்திப்பைத் தொடா்ந்து, நேபாள ராணுவ பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற மாநாட்டில் மனோஜ் பாண்டே உரையாற்றினாா். அப்போது இரு நாட்டு ராணுவத்தினரிடையேயான திறன்களை மேம்படுத்துவது குறித்துப் பேசினாா்.

வடமேற்கு நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற முக்திநாத் கோயிலுக்கு புதன்கிழமை செல்லும் மனோஜ் பாண்டே, அன்றைய தினம் போக்காராவில் உள்ள நேபாள ராணுவ தலைமையகத்தை பாா்வையிட்டு வியாழக்கிழமை காத்மாண்டுவில் இருந்து தில்லிக்கு திரும்புகிறாா்.

இந்திய ராணுவத்தின் உயா் அதிகாரிகள் வருகை தருவது இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்தும் என்று நேபாள ராணுவம் அறிவித்துள்ளது.

சிக்கிம், மேற்கு வங்கம், பிகாா், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களையொட்டி 1,850 கி.மீ. தூரத்துக்கு இந்திய-நேபாள எல்லை அமைந்துள்ளது. அந்நாட்டுக்குத் தேவையான சரக்குப் போக்குவரத்துக்கு இந்திய எல்லைச் சாலைகளையே நேபாளம் வெகுவாக நம்பியுள்ளது.

 



Read in source website

 

ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் புதிய நெ. 1 வீரராக பாகிஸ்தானின் ரிஸ்வான் இடம்பெற்றுள்ளார்.

ஆசியக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வான் 3 இன்னிங்ஸில் 192 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 

இந்நிலையில் டி20 தரவரிசையில் நெ.1 பேட்டராக இருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸமைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார் ரிஸ்வான். டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த 3-வது பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான். இதற்கு முன்பு மிஸ்பா 313 நாள்களுக்கும் பாபர் ஆஸம் 1155 நாள்களுக்கும் முதலிடத்தில் இருந்தார்கள். பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் ஆசியக் கோப்பைப் போட்டியில் இதுவரை 33 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவர் 2-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார். 

டி20 தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்திலும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 14-வது இடத்திலும் கோலி 29-வது இடத்திலும் உள்ளார்கள். 



Read in source website

ஆசிய ஜூனியா் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது.

இறுதிச்சுற்றில் இந்தியாவின் பயஸ் ஜெயின்/யஷஸ்வினி கோா்படே கூட்டணி 11-9, 11-1, 10-12, 7-11, 11-8 என்ற கணக்கில் சீனாவின் ஹான் ஜின்யுவான்/கின் யுஸுவான் இணையை வீழ்த்தியது. ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்திய ஜூனியா்களுக்குக் கிடைக்கும் முதல் தங்கம் இது.

இது தவிர, நடப்புப் போட்டியில் இந்தியாவுக்கு 3 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன. 19 வயதுக்கு உள்பட்ட ஆடவா் இரட்டையா் பிரிவு அரையிறுதியில் பயஸ் ஜெயின்/யஷன்ஷ் மாலிக் கூட்டணியை, 11-8, 11-7, 12-14, 11-6 என வென்றது ஜப்பானின் யுடா லிமுரா/யுஹி சகாய் இணை.

19 வயதுக்கு உள்பட்ட மகளிா் ஒற்றையா் அரையிறுதியில் யஷஸ்வினி கோா்படே 13-11, 11-9, 11-4, 11-3 என சீனாவின் சென் யிவிடம் தோல்வி கண்டாா். 19 வயதுக்கு உள்பட்ட ஆடவா் அணிகள் பிரிவில் பயஸ், அங்குா், தீபித், யஷன்ஷ் கூட்டணி அரையிறுதியில் ஜப்பான் அணியிடம் 2-3 என வெற்றியை இழந்து வெண்கலம் பெற்றது.



Read in source website

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

இதன் மூலம், ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது இலங்கை.

இந்தச் சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா, போட்டியிலிருந்து வெளியேறும் நிலையில் இருக்கிறது. அடுத்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வென்றாலும், இதர அணிகள் மோதும் ஆட்டங்களின் முடிவுகள் அடிப்படையிலேயே இந்தியாவுக்கு இறுதிச்சுற்றுக்கு வாய்ப்புள்ளது. அதிலும், பாகிஸ்தான் புதன்கிழமை ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வெல்லும் பட்சத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் வெளியேறுவது உறுதியாகிவிடும்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பௌலிங்கை தோ்வு செய்தது. இந்திய இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் 1 பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்து எல்பிடபிள்யூ ஆனாா். விராட் கோலி ரன்கள் சோ்க்காமல் ஸ்டம்பை பறிகொடுக்க, 13 ரன்களுக்கே இரு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.

அடுத்து சூா்யகுமாா் யாதவ் ஆடவர, மறுபுறம் ரோஹித் சா்மா அதிரடி காட்டி ஸ்கோரை உயா்த்தினாா். சூா்யகுமாரும் முனைப்பு காட்ட, 3-ஆவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சோ்த்தது இந்த பாா்ட்னா்ஷிப். இதில், ரோஹித் அரைசதம் கடந்து 5 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 72 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தாா்.

5-ஆவது வீரராக ஹாா்திக் பாண்டியா களமிறக்கப்பட, மறுபுறம் சூா்யகுமாா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 34 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். தொடா்ந்து ஆடியோரில் ஹாா்திக் பாண்டியா 1 சிக்ஸருடன் 17 ரன்களுக்கு வீழ்ந்தாா். தீபக் ஹூடா 3 ரன்களுக்கும், ரிஷப் பந்த் 3 பவுண்டரிகளுடன் 17 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனா்.

கடைசி விக்கெட்டாக புவனேஷ்வா் குமாா் கடைசி ஓவரில் டக் அவுட்டானாா். முடிவில் அஸ்வின் 1 சிக்ஸருடன் 15, அா்ஷ்தீப் சிங் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலிங்கில் தில்ஷன் மதுஷங்கா 3, சமிகா கருணாரத்னே, டாசன் ஷனகா ஆகியோா் தலா 2, மஹீஷ் தீக்ஷனா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 174 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இலங்கையில் தொடக்க வீரா்களான பாதும் நிசங்கா 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 52, குசல் மெண்டிஸ் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 57 ரன்கள் விளாசி வெற்றிக்கு அடித்தளமிட்டு வெளியேறினா்.

இடையே சரித் அசலங்கா 0, தனுஷ்கா குணதிலகா 1 ரன்னுக்கு வீழ்ந்தாலும், முடிவில் பானுகா ராஜபட்ச 2 சிக்ஸா்களுடன் 25, கேப்டன் டாசன் ஷனகா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். இந்திய தரப்பில் யுஜவேந்திர சஹல் 3, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினா்.



Read in source website

ரஷியாவில் நடைபெறும் ‘வாஸ்டாக்’ ராணுவ கூட்டுப் பயிற்சியை அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி ரஷியாவில் ‘வாஸ்டாக்’ என்ற பெயரிலான ராணுவ கூட்டுப் பயிற்சி தொடங்கியது. ரஷியாவின் தொலைதூர கிழக்கு பகுதியிலும், ஜப்பான் கடல் பகுதியிலும் நடைபெறும் இந்தப் பயிற்சி, புதன்கிழமை (செப்.7) நிறைவடைகிறது.

இதில் இந்தியா, சீனா, லாவோஸ், மங்கோலியா உள்ளிட்ட 13 நாடுகள் பங்கேற்றுள்ளன. 50,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா். 140 போா் விமானங்கள், 60 போா்க் கப்பல்கள், ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் பயிற்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பயிற்சியில் சீன முப்படைகள் சாா்பில் 2,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றுள்ளனா். அந்நாட்டின் 300 ராணுவ வாகனங்கள், 21 போா் விமானங்கள், 3 போா்க் கப்பல்கள் உள்ளிட்டவையும் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகருக்கு வெளியே சொ்கெய்வ்ஸ்கி பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியை அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். அவருடன் ரஷிய பாதுகாப்பு அமைச்சா் சொ்கெய் ஷோய்கு, முப்படை தலைமைத் தளபதி வலேரி கெராசிமோவ் ஆகியோா் உடனிருந்தனா்.

 



Read in source website

இந்தியாவின் சேவைகள் துறை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிகப் பெரிய எழுச்சியைக் கண்டுள்ளது.
புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள், சேவைகளுக்கான தேவையும் வேலை வாய்ப்பு உருவாக்கமும் அதிகரித்தது போன்ற காரணங்களால் இந்த எழுச்சி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து எஸ் அண்டு பி குளோபல் மார்க்ùட் இன்டெலிஜென்ஸ் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளதாவது:
தொழில் நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ தொடர்ந்து 4 மாதங்களாக சரிவைச் சந்தித்து வந்தது. கடந்த ஜூலையில் 55.5-ஆக சரிந்த பிஎம்ஐ, ஆகஸ்ட் மாதத்தில் 57.2-ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்த 14 ஆண்டுகளில் காணப்படாத மிகத் துரிதமான வளர்ச்சியாகும்.
தொடர்ந்து பதின்மூன்றாவது மாதமாக சேவைகள் துறையின் அளிப்பு விரிவாக்கத்தைக் கண்டு வருகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது, சந்தையிடுவதில் அதிக முனைப்பு போன்ற காரணங்களால் சேவைகள் துறை மீண்டெழுந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.



Read in source website

தருமபுரி: புதுமைப்பெண் நிதியுதவி திட்டம், மாணவியர் இடைநிற்றலை முழுமையாக தடுக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் இன்று (7-ம் தேதி) தருமபுரியில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடந்தது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கான இந்த ஆய்வுக் கூட்டத்தில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சாந்தி வரவேற்புரை ஆற்றினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களிடம் கூறியது: ''கல்வியில் பின் தங்கிய நிலையில் உள்ளதாகக் கருதப்படும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆலோசனைகளும், கருத்துகளும் பெறப்பட்டன. அரசுப் பள்ளிகள் தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி, கடந்த ஆண்டு முதற் கட்ட ஆய்வுக் கூட்டங்கள் நடந்து முடிந்தது. தற்போது இரண்டாம் கட்ட ஆய்வுக் கூட்டங்கள் நடந்து வருகிறது.

இம்மாவட்டங்களில் பெண் குழந்தைகள் இடைநிற்றல் இருப்பதை அறிய முடிகிறது. குறிப்பாக, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இதுபோன்ற நிலை அதிகம் இருப்பதை அறிய முடிகிறது. இக்குறையை களைய தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக அண்மையில் அறிவிக்கப்பட்ட புதுமைப்பெண் நிதியுதவி திட்டம் தமிழகம் முழுக்க பள்ளி மாணவியர் இடைநிற்றலை தடுக்கும். இதுதவிர, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிக் கல்வி தொடர்பாக உள்ள சில பிரச்சினைகளையும் இந்தத் திட்டம் களையும்.

ஆய்வுக் கூட்டங்கள் மூலம் பெறப்படும் கருத்துக்கள் அனைத்தையும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இத்தகைய கள ஆய்வின் மூலமாக ஏராளமான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெற முடிகிறது. எனவேதான், நாங்கள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கருதி சிதிலமடைந்த வகுப்பறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறோம். சிதிலமடைந்த, ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அந்த இடங்களில் தேவைக்கேற்ப புதிய கட்டிடங்கள் கட்டுவது குறித்து பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பள்ளிக்கும், வகுப்பறையைப் போலவே கழிப்பறை கட்டிடங்களும் முக்கியம். அவை, வகுப்பறைகளைப் போலவே தூய்மையாக இருப்பதும் அவசியம். அதனால்தான் நாங்கள் ஆய்வுக் கூட்டங்களின்போது, முன்னறிவிப்பின்றி திடீரென நேரடியாக பள்ளிகளுக்கு சென்று கழிப்பறையின் சுத்தம், பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்துகிறோம். அதேபோன்று, அரசுப் பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எதிர்வரும் 4 ஆண்டுகளில் பள்ளிகளில் கழிப்பறைகளை ஏற்படுத்தி பராமரிக்கவும், வகுப்பறைகள் கட்டவும் 7,000 கோடி ஒதுக்கப்படும். அதில், நடப்பு ஆண்டுக்கு 1,300 கோடி ஒதுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கிடவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்றைக்கு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இந்தத் தேர்வை ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்களும் எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் எப்படியிருந்தாலும் மாணவ, மாணவியர் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வரும் தொடர்ந்து மாணவ, மாணவியருக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசி வருகிறார். மேலும், தன்னம்பிக்கை வழிகாட்டி நிகழ்ச்சிகளையும் அரசு நடத்தி வருகிறது. எனவே, மாணவர்கள் எதையும் எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஜி.கே.மணி(பென்னாகரம்), வெங்கடேஸ்வரன்(தருமபுரி), சதாசிவம்(மேட்டூர்) உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



Read in source website

சென்னை: கிராமப் பகுதிகளில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியோர் தங்களின் தயாரிப்புகளை மத்திய அரசின் மின்னணு சந்தை மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி செய்தபோது அரசு நிறுவனங்களுக்குத் தேவையான பேப்பர், பென்சில், நாற்காலி முதல் ஆயுதங்கள் வரை அனைத்தையும் கொள்முதல் செய்வதற்காக இந்தியா ஸ்டோர்ஸ் என்ற நிறுவனத்தை இந்தியாவில் 1922-ம் ஆண்டு தொடங்கினர்.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, பொது பொருட்கள் வழங்கல் மற்றும் அகற்றல் இயக்குநரகம் (Directorate General of Supplies and Disposals) என்ற பெயரில் இந்நிறுவனம் மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிறுவனத்தில் பொருட்களை கொள்முதல் செய்வதில் நிறைய முறைகேடுகளும், தனியார் நிறுவனங்களின் ஆதிக்கமும் இருந்ததால், இந்நிறுவனம் மூடப்பட்டது. இதையடுத்து, கடந்த 2016-ம்ஆண்டு ஜெம் எனப்படும் அரசு மின்னணு சந்தை (GeM – Government e-Marketplace) மத்திய அரசால் தொடங்கப்பட்டது.

மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் உள்ளிட்டவற்றுக்குத் தேவையான பொருட்கள் இந்த மின்னணு சந்தை மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், கிராமப் பகுதிகளில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியோர் தங்களின் தயாரிப்புகளை ஜெம் தளத்தில் விற்பனை செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மத்திய அரசின் மின்னணு சந்தையின் தலைமை செயல் அதிகாரி பி.கே.சிங் கூறியதாவது: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் சார்பில், கடந்த 2016-ம் ஆண்டு அரசு மின்னணு சந்தை (ஜெம்) என்ற தேசிய பொது கொள்முதல் தளம் ஏற்படுத்தப்பட்டது. இந்த மின்னனு சந்தை தொடங்கியதில் இருந்து இதுவரை ரூ.2.83 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்துள்ளன. அத்துடன், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்களுக்குத் தேவையான 46.5 லட்சம் பொருட்கள் மற்றும் 250 சேவைகள் வழங்கப்படுகின்றன.

சுமார் 50 லட்சம் விற்பனையாளர்கள் மற்றும் சேவை நிறுவனங்கள் ஜெம் இணையளத்தில் பதிவு செய்துள்ளனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் இந்தப் போர்டல் மூலம் செய்யப்பட்டுள்ளன. இதில், எம்எஸ்எம்இ நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் 57 சதவீதம் ஆகும்.

தமிழகத்தில் 4.06 லட்சம் விற்பனையாளர்கள் ஜெம் தளத்தில் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம்,இத்தளத்தில் அதிகளவு பதிவுசெய்த மாநிலங்களின் பட்டியலில்மகாராஷ்டிரா, உத்தர பிரதேசத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஜெம் தளம் தொடங்கியதில் இருந்து இதுவரை தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்கள் ரூ.1,090கோடி மதிப்பிலான பொருட்களை கொள்முதல் செய்துள்ளன. இதேபோல், ரூ.7,185 கோடிமதிப்பிலான ஆர்டர்களை தமிழகத்தைச் சேர்ந்த விற்பனையாளர்கள் பெற்றுள்ளனர். அண்மையில், ஜெம் தளத்தில் கூட்டுறவு அமைப்புகளும் கொள்முதல் செய்வோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கிராமப் பகுதிகளைச் சேர்ந்த சிறு, குறு தொழில்நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், பெண் தொழில் முனைவோர், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், கைவினைக் கலைஞர்கள் மற்றும்நெசவாளர்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் ஆகியவை தங்களது தயாரிப்புகளை ஜெம் தளம்மூலம் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, இந்திய அஞ்சல் துறை மற்றும் பொது சேவை மையம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர்கள் ஜெம் தளத்தில் பதிவு செய்து கொண்டு தங்களது தயாரிப்புகளை எளிதில் விற்பனை செய்யலாம்.

இவ்வாறு சிங் கூறினார்.



Read in source website

வரும் 2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆளும் பாஜக கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் களம் இறங்க உள்ள நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன்னிறுத்தப்படுவாரா என்ற கேள்வி மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதற்கான சாத்தியங்கள் குறித்தும், சவால்கள் குறித்தும் பார்ப்போம்.

கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தவர் நிதிஷ் குமார். அந்தக் கூட்டணியில் இருந்துகொண்டு பிஹார் முதல்வராக பதவி வகித்து வந்த அவர், முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொண்டே கூட்டணியை மாற்றிக்கொண்டவர். பிஹாரில் ஆளும் கட்சியாக இருந்த பாஜக, நிதிஷ் குமாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது அதிகாரத்தை இழந்து எதிர்க்கட்சியாகி உள்ளது. பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் பிஹாரில் ஒன்றிணைந்துள்ளன.

இந்த பிஹார் மாடலை தேசிய அளவில் விரிவுபடுத்தினால், அதாவது பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்தால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை, நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதை தடுத்துவிட முடியும் என்று உறுதிபட கூறும் நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளதாகக் கூறி அதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

மெகா கூட்டணி சார்பில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி பிஹார் முதல்வராக மீண்டும் பதவியேற்ற பிறகு, டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள நிதிஷ் குமார் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மூத்த தலைவர் ஷரத் யாதவ் என அவர் நடத்திய சந்திப்புகள் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

71 வயதாகும் நிதிஷ் குமார், தற்போது 8-வது முறையாக பிஹார் முதல்வராக உள்ளார். அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் இரு முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். தேசிய அளவில் நன்கு அறிமுகமான தலைவரான நிதிஷ் குமார், தேசிய அரசியலில் மீண்டும் கவனத்தை ஈர்த்து வருகிறார். பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்தாலும், தனது சந்திப்பின் நோக்கம் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது மட்டுமே என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

எனினும், பிரதமர் வேட்பாளராக களம் இறக்கப்படுவதற்கான வாய்ப்புள்ள தலைவர் அவர் என தெரிவித்துள்ளார் பிகார் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவருமான தேஜஸ்வி யாதவ். பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதற்கு நிதிஷ் குமாரை விட சிறந்த தேர்வு வேறு இல்லை என கூறுகிறார் சரத் யாதவ்.

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிதிஷ் குமாரின் முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்து வரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், சமீபத்தில் பாட்னாவிற்கே சென்று தனது ஆதரவை நேரில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் பலருடனும் நல்லுறவு கொண்டுள்ள நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான சரியான ஆளுமையாக கருதப்படுகிறார். எனினும், எதிர்க்கட்சிகளின் பொது பிரதமர் வேட்பாளராக அவர் அனைவராலும் ஏற்கப்படுவாரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

குறிப்பாக, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, அர்விந்த் கெஜ்ரிவால் போன்றோர் ஏற்பார்களா என்பதை இப்போதே கணிப்பது கடினம். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்வதற்கும் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளுக்கு தலைமை வகிப்பதற்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது.

அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் உள்ள நிதிஷ் குமார், அந்தத் தலைமை இடத்திற்கு வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- பால. மோகன்தாஸ்



Read in source website

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் ராஜபாதையின் பெயர் ‘கர்த்தவ்ய பாத்' என்று மாற்றப்பட்டு உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்டெல்லியில் நேதாஜி சிலை முதல்குடியரசுத் தலைவர் மாளிகை வரையிலான சாலைக்கு 'கிங்ஸ்வே' என்று பெயர் சூட்டப்பட்டது. இதனை இந்தியில் 'ராஜபாதை' என்று அழைத்தனர்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜபாதையின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி டெல்லி ராஜபாதை இனிமேல் ‘கர்த்தவ்ய பாத்' என்று அழைக்கப்படும். இதற்கு, ‘கடமையை செய்யும் பாதை' என்று அர்த்தம். டெல்லி மாநகராட்சியின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பெயர் மாற்றம் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட உள்ளது.

ரேஸ் கோர்ஸ் சாலை

மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு ஆங்கிலேயர் காலத்தில் சூட்டப்பட்ட பெயர்கள், நடைமுறைகள் படிப்படியாக மாற்றப்பட்டு வருகின்றன. டெல்லியில் பிரதமர் இல்லம் அமைந்துள்ள சாலை, ரேஸ் கோர்ஸ் சாலை என்று அழைக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டில் இந்த சாலை, லோக் கல்யாண் சாலை என்று மாற்றப்பட்டது.

நேதாஜி ஹாலோகிராம் சிலை

டெல்லி இந்தியா கேட் பகுதியில் பிரிட்டிஷ் மன்னர் 5-ம் ஜார்ஜின் சிலை நிறுவப்பட்டிருந்தது. அந்த சிலை கடந்த 1968-ம் ஆண்டு அகற்றப்பட்டது. கடந்த ஜனவரியில் அங்கு 28 அடி உயரத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஹாலோகிராம் சிலை நிறுவப்பட்டது. இந்த இடத்தில் விரைவில் 25 அடி உயரத்தில் நேதாஜியின் கிரானைட் சிலை அமைக்கப்பட உள்ளது.

ஆங்கிலேயர் பாடல் நீக்கம்

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் வீரர்கள் தங்களது முகாமுக்கு திரும்பி செல்லும் பாசறை திரும்பும் அணிவகுப்பு ஜனவரி 29-ம் தேதி நடத்தப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் ஆங்கிலேயர்களின் ‘அபைட் வுத் மீ' பாடல் இசைக்கப்படும். கடந்த குடியரசு தின விழாவில் இந்த பாடல் நீக்கப்பட்டு, லதா மங்கேஷ்கர் பாடிய ‘ஆயே மேரே வதன் கே லோகோ' என்ற பாடல் இசைக்கப்பட்டது.

அந்தமான்-நிகோபர் தீவில் ஆங்கிலேயர்கள் பெயரில் இருந்த 3 தீவுகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டில் சுபாஷ் சந்திர போஸ் உட்பட 3 இந்திய தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டது.

இந்திய கடற்படை கொடியில் ஆங்கிலேயர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட சிவப்பு பட்டைகள் இருந்தன. அவை நீக்கப்பட்டு சத்ரபதி சிவாஜியின் சின்னம் பொறிக்கப்பட்ட புதிய கொடி கடந்த 2-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

இதேபோல ஆங்கிலேயர் கால அடிமைத்தனத்தின் அடையாளங்களை பாஜக அரசு ஒவ் வொன்றாக நீக்கி வருகிறது.



Read in source website

புதுடெல்லி: காரின் பின் இருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். அவ்வாறு அணியாதவர்களுக்கு விரைவில் ரூ.1000 அபராதம் வசூலிக்கும் திட்டம் அமலுக்கு வரும் என்று மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறு அன்று மும்பையில் கார் விபத்தில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார். சைரஸ் மிஸ்திரி ஞாயிற்றுக்கிழமை அன்று அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு பென்ஸ் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். முன் இருக்கையில், மும்பையைச் சேர்ந்த மருத்துவர் அனாஜிட்டா பண்டோலும் அவரது கணவர் டேரியஸ் பண்டோலும் அமர்ந்திருந்தனர். பின் இருக்கையில் சைரஸ் மிஸ்திரியும் டேரியஸ் பண்டோலின் சகோதரர் ஜெஹாங்கிர் பண்டோலும் அமர்ந்திருந்தனர். மதியம் 3 மணி அளவில் மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் உள்ள சூர்யா நதி மேம்பாலத்தில் அவர்களது கார் அதிவேகமாக சென்ற நிலையில், மற்றொரு காரை இடப்புறமாக முந்த முயன்றபோது சாலைத் தடுப்புச் சுவற்றில் மோதியது.பின் இருக்கையில் இருந்த சைரஸ் மிஸ்திரியும், ஜெஹாங்கிர் பண்டோலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் சீட் பெல்ட் அணியவில்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கட்கரி, "காரின் பின் இருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது ஏற்கெனவே போக்குவரத்து விதிமுறையில் உள்ளது. ஆனால் மக்கள் யாரும் அதனைப் பின்பற்றுவதில்லை. இனிமேல் முன் இருக்கையில் உள்ளவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் சைரன் ஒலிப்பதுபோல் பின் இருக்கையில் உள்ளவர்களும் சீட் பெல்ட் அணியாவிட்டால் சைரன் ஒலிக்கும் வகையில் கார்கள் வடிவமைக்கப்படும். மீறி சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அபராதம் மூலம் வருமானம் பார்ப்பது நோக்கமல்ல. 2024ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சாலை விபத்துகளை இப்போது உள்ளதில் இருந்து 50 சதவீதம் அளவிற்குக் குறைக்க வேண்டும் என்பதே இலக்கு. காரில் பின் இருக்கையில் சீட் பெல்ட் அணியாதவர்களிடம் ரூ.1000 வரை அபராதம் வசூலிக்கப்படும். போக்குவரத்து விதிகளில் மாநில அரசுகளுக்கும் கட்டுப்பாடு இருந்தாலும் கூட இந்த அபராதம் விதிப்பில் சிக்கல் ஏதும் இருக்காது. மக்கள் யாரும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளை ஏமாற்றலாம் என்று எண்ணிவிட வேண்டாம். பெரும்பாலான இடங்களில் கேமரா இருக்கிறது.

அதேபோல், பின் இருக்கைகளுக்கும் ஏர் பேக் அமைப்பது குறித்த பரிசீலனைகள் நடைபெறுகின்றன. அவ்வாறு பின் இருக்கைகளுக்கும் ஏர் பேக் பொருத்துவது கார் விலையை அதிகரிக்கும் என்றாலும் கூட மனித உயிர்கள் விலை மதிப்பற்றது. இப்போதைக்கு ஒரு ஏர் பேக்கின் விலை ரூ.1000 என்றளவில் உள்ளது. ஒரு காரில் 6 ஏர் பேக்குகள் அமைத்தால் அதற்கு ரூ.6000 செலவாகும். ஆனால் அதிகளவில் ஏர் பேக் உற்பத்தி செய்யப்படும் இந்த விலை சற்று குறையும். இப்போதைக்கு முன் இருக்கைகளில் தான் ஏர் பேக் கட்டாயம் என்றுள்ளது. ஆனால் 2022 ஜனவரி முதலே அரசாங்கம் 8 பேர் அமரும் காரில் முன் இருக்கைகள் உட்பட மொத்தம் 6 ஏர் பேக் அமைக்குமாறு வலியுறுத்தியுள்ளது. சாலை பாதுகாப்பு குறித்து பிரபலங்களை வைத்து பிரச்சாரங்கள் செய்து வருகிறோம். ஊடகங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சைரஸ் மிஸ்த்ரி மறைவுக்காக வேதனைப்படுகிறேன். அதேவேளையில் நடந்த அந்த துயரத்தில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.



Read in source website

புதுடெல்லி: கரோனா வைரஸுக்கு எதிராக பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்குவழி சொட்டு மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்பு தல் அளித்துள்ளது.

கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்தாக, மூக்கு வழியாக விடும் சொட்டு மருந்தை தயாரிக்கும் பணியில் ஹைதராபாத்தை சேர்ந்தபாரத் பயோடெக் நிறு வனம் ஈடுபட்டு வந்தது. இந்த மருந்தின்3 மற்றும் 4-ம் கட்ட சோதனைகளை மேற்கொள்ள அந்த நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று தனது ட்விட்டர் பதிவில்,“பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பு சொட்டு மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குஅவசர கால அடிப்படையில் பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நடவடிக்கை, கரோனா தொற்று நோய்க்கு எதிரான நமது ஒன்றுபட்ட போரை மேலும் வலுப்படுத்தும். கரோனாவுக்கு எதிராக பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் போரில் இந்தியா தனது அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மனித வளங்களை பயன்படுத்தி உள்ளது. கரோனா தொற்று நோயை நாங்கள் முறியடிப்போம்” என்று கூறியுள்ளார்.

பாரத் பயோடெக் நிறுவனம் சுதந்திர தினத்தன்று வெளியிட்ட அறிவிப்பில், தனது கரோனா தடுப்பு சொட்டு மருந்து பாதுகாப்பானது, பொறுத்துக் கொள்ளக் கூடியது மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டது என மூன்றாம் கட்ட பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த சொட்டு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கிறது.



Read in source website

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த இரு வாரங்களாக இரவில் க‌னமழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நேற்று இரவு வரை விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்த‌து. திங்கள்கிழமை இரவு 131.6 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவானது. 1947-ம் ஆண்டுக்கு பின் தற்போது 130 மில்லிமீட்டருக்கு மேல் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத மழையால் பெங்களூரு மாநகரமே வெள்ளத் தில் மிதக்கிறது. அதிலும் எலக்ட்ரானிக் சிட்டி, ஒயிட் ஃபீல்ட், மாரத்தஹள்ளி, பொம்மனஹள்ளி, மகாதேவபுரா, சர்ஜாப்பூர் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்குள்ள ஆயிரக்கணக்கான வீடு களுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். கட்டில், டிவி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் நீரில் மூழ்கி நாசமாகின. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசம் அடைந்துள்ளன.

வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினரும், கர்நாடக பேரிடர் மீட்பு குழுவினரும் ரப்பர் படகுகளின் மூலம் மீட்டு வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை இரவு பணி முடிந்து வீடு திரும்பிய அகிலா (23) என்ற தனியார் நிறுவன ஊழியர் வெள்ளத்தால் இடறி மின்கம்பத்தின் மீது விழுந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அடுக்குமாடி குடியிருப்புகள், சாலைகள் என எங்குப் பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், பேருந்து, ஜேசிபி, டிராக்டர் மூலம் ஊழியர்கள் அலுவலகத்துக்கு சென்ற வீடியோக்கள் வைரலாயின. இதை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வெள்ளத்தால் தனியார் பள்ளி, கல்லூரிகள் நேற்று விடுமுறை அறிவித்தன. இதேபோல வெளி வட்ட சாலையில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனங்களும் விடுமுறையை அறிவித்தன. கனமழை காரணமாக ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள்சாய்ந்த தால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைக ளில் வெள்ளம் சூழ்ந்ததால் எலக்ட் ரானிக் சிட்டி, ஒயிட் ஃபீல்ட் போன்றஇடங்களில் குடிநீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று வெள்ளத்தால் பாதிக்க‌ப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் கூறியதாவது:

பெங்களூருவில் கனமழையால் அனைத்து ஏரி, குளங்கள், கால்வாய்க‌ளும் நிரம்பி வழிகின் றன. தற்போதைய வெள்ள பாதிப்புக்கு முந்தைய காங்கிரஸ் அரசின் திட்டமிடப்படாத நிர்வாகமே காரணம். வெள்ள பாதிப்புகளை தீர்ப்பதற்காக அரசின் பேரிடர் மீட்பு குழு, மாநகராட்சி அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியாற்றி கொண்டிருக்கின்றனர். இன்னும் 2 நாட்களுக்குள் தேங்கியுள்ள நீர் முழுமையாக வெளியேற்றப்படும்.

மக்கள் ஒத்துழைப்பு வேண்டும்

எனவே பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். வெள்ளநிவாரண நிதியாக ரூ.300 கோடிவிடுவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவின் பயன்பாட்டுக்காக ரூ.10கோடியில் ரப்பர் படகுகள் வாங்கப்படும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

பெங்களூருவில் 10‍-ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பெங்களூருவுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



Read in source website

புதுடெல்லி: வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு ரூ.7,183 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

2022-23 நிதி ஆண்டுக்கு, நிதிப் பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறையாக 14 மாநிலங்களுக்கு ரூ.86,201 கோடி வழங்க 15-வது நிதிக் குழு பரிந்துரைத்தது. அதன்படி, இந்தத் தொகை 12 மாதத் தவணையாக குறிப்பிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 6-வது தவணையாக செப்டம்பர் மாதத்துக்கு ரூ.7,183 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம், கேரளா, அசாம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உட்பட 14 மாநிலங்களுக்கு இந்த மானியத்தை மத்திய செலவினத் துறை விடுவித்துள்ளது. அந்த வகையில், நடப்பு நிதி ஆண்டுக்கு இதுவரையில் ரூ.43,100 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டம் 275 அடிப்படையில், நிதிப் பகிர்வுக்குப் பிந்தைய வருமானப் பற்றாக்குறை மானியம் வழங்கப்படுகிறது. நிதிப்பகிர்வுக்கு பிறகு மாநிலங்களின் வருவாய் மற்றும் செலவினங்களைக் கணக்கிட்டு வருவாய் பற்றாக்குறை நிலவும் மாநிலங்களை நிதிக் குழு பரிந்துரை செய்யும். பரிந்துரை செய்யப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய செலவினத் துறைஒவ்வொரு ஆண்டும் 12 தவணைகளில் மானியம் வழங்கும்.

2022-23-ம் நிதி ஆண்டுக்கு ஆந்திரா, அசாம், இமாச்சலப் பிரதேசம், கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.



Read in source website

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

35 வயதான சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனியுடன் இணைந்து கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரெய்னா தனது ட்விட்டர் பிதிவில், “நாட்டுக்காகவும், உத்தரப்பிரதேச அணிக்காகவும் விளையாடியது பெருமையாக உள்ளது.

அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். பிசிசிஐ, உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம், சிஎஸ்கே நிர்வாகம் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இனிமேல் ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ரெய்னா விளையாடமாட்டார். அதேவேளையில் உலகின் மற்ற பகுதிகளில் நடைபெறும் தொழில்முறை ரீதியிலான டி 20 லீக்குகளில் பங்கேற்க முடியும். இதை கருத்தில் கொண்டே ரெய்னா ஓய்வு முடிவை அறிவித்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

ரெய்னா கடைசியாக 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக களமிறங்கியிருந்தார்.



Read in source website

புதுடெல்லி: கனடா நாட்டின் அடுத்த இந்திய தூதராக சஞ்சய் வர்மாவையும், தென்கொரியாவுக்கான இந்திய தூதராக அமித் குமாரையும் வெளியுறவுத் துறை அமைச்சகம் நியமித்துள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வில் கடந்த 1988-ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர் சஞ்சய்வர்மா. தற்போது ஜப்பான் நாட்டிற்கான இந்திய தூதராக உள்ளார். அவர் கனடாவிற்கான இந்திய தூதராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்சீனா, வியட்நாம், துருக்கி, இத்தாலி தூதரகங்களிலும் பணியாற்றி உள்ளார்.

கடந்த 1995-ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரி அமித் குமார். இவர் கான்பூர் ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் முடித்தவர். இவர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் தூதராக பணியாற்றுகிறார். இவர் தென் கொரியாவுக்கான இந்திய தூதராக வெளியுறவுத்துறை அமைச்சகம் நியமனம் செய்துள்ளது. அமித் குமார் இதற்கு முன்பு வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைத் தூதராக பணியாற்றியுள்ளார்.



Read in source website

லண்டன்: பிரிட்டனின் 56-வது பிரதமராக லிஸ் ட்ரஸ் (47) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ராணி எலிசபெத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பிரிட்டன் பிரதமராக பதவி வகித்த போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியதால் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜூலையில் அவர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் பல்வேறு கட்டங்களாக உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. முதல் 5 சுற்று தேர்தலில் கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் வாக்களித்தனர். 8 பேர் போட்டியிட்ட நிலையில் 5-வது சுற்றில் லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக் மட்டும் களத்தில் இருந்தனர்.

இறுதிகட்டமாக கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர். மொத்தம் 1.72 லட்சம் வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில் லிஸ் ட்ரஸுக்கு 81,326 வாக்குகளும் ரிஷி சுனக்குக்கு 60,399 வாக்குகளும் கிடைத்தன. அதிக வாக்குகள் பெற்ற லிஸ் ட்ரஸ் பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டனில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று இறுதி உரையாற்றினார். ராணி எலிசபெத் ஸ்காட்லாந்தின் பால்மோரா அரண்மனையில் தங்கியிருப்பதால் லண்டனில் இருந்து விமானம் மூலம் ஸ்காட்லாந்துக்கு சென்ற அவர், ராணியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இதற்கிடையில் லிஸ் ட்ரஸ் தனி விமானத்தில் லண்டனில் இருந்து நேற்று ஸ்காட்லாந்துக்கு சென்றார். அங்கு அபெர்டின்ஷையர் பகுதியில் அமைந்துள்ள பால்மோரா அரண்மனைக்கு வாகனங்கள் புடைசூழ காரில் சென்ற அவர், ராணி எலிசபெத்தை சந்தித்தார். அரண்மனையில் நடைபெற்ற விழாவில் பிரிட்டனின் 56-வது பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ராணி எலிசபெத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அங்கிருந்து விமானத்தில் லண்டன் திரும்பிய லிஸ் ட்ரஸ் அதிகாரப்பூர்வமாக பிரதமர் இல்லத்தில் குடியேறினார்.

ஸ்காட்லாந்தில் பதவியேற்பு ஏன்?

பிரிட்டனின் ஒருங்கிணைந்த பகுதியான ஸ்காட்லாந்தில் பிரிட்டன் அரச பரம்பரைக்கு சொந்தமான பால்மோரா அரண்மனை உள்ளது. அங்கு ராணி எலிசபெத் கோடை விடுமுறையை கழிப்பது வழக்கம். இதன்படி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக பால்மோரா அரண்மனைக்கு ராணி சென்றார். அவரது உடல்நிலை மோசமானதால் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

பிரிட்டனின் புதிய பிரதமர் பதவியேற்கும் விழா லண்டனில் அமைந்துள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெறுவது வழக்கம். ராணி எலிசபெத்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு போரிஸ் ஜான்சன் ஸ்காட்லாந்து சென்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதேபோல லிஸ் ட்ரஸ் ஸ்காட்லாந்தின் பால்மோரா அரண்மனைக்கு சென்று புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.



Read in source website

இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகம் எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க நிதி அமைச்சகம் வங்கிகள் மற்றும் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சகங்கள் உள்ளிட்ட பங்குதாரர்களை சந்திக்க திட்டமிடப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகள் சங்கம், வங்கிகளின் பிரதிநிதிகள் அமைப்பு மற்றும் தொழில்துறை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.

நடப்பாண்டில் ஜூலை 11 ஆம் தேதி, ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில், “இன்வாய்ஸ், பணம் செலுத்துதல் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு இந்திய ரூபாயில் கூடுதல் ஏற்பாட்டைச் செய்ய முடிவு செய்துள்ளதாக” கூறப்பட்டது.
இது குறித்து மேலும், “இந்தியாவில் இருந்து ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளித்து உலகளாவிய வர்த்தகத்தின் வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் இந்திய ரூபாயில் உலகளாவிய வர்த்தக சமூகத்தின் அதிகரித்து வரும் ஆர்வத்தை ஆதரிப்பது” ஆகும்.

இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையே வர்த்தக தீர்வுகளை ரூபாயில் அனுமதிக்கும் நடவடிக்கை, ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் முதன்மையாகப் பயனடைவதாகக் காணப்பட்டாலும், டாலர் வெளியேறுவதைத் தடுக்கவும், “மிகக் குறைந்த அளவிற்கு” ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் குறைக்கவும் இது உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எந்தவொரு நாட்டுடனும் வர்த்தக பரிவர்த்தனைகளைத் தீர்ப்பதற்கு, இந்தியாவில் உள்ள வங்கிகள் Vostro கணக்குகளைத் திறக்கும். இந்திய இறக்குமதியாளர்கள் இந்தக் கணக்குகளில் தங்கள் இறக்குமதிகளுக்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்தலாம்.
இறக்குமதி மூலம் கிடைக்கும் இந்த வருமானம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய ரூபாயில் செலுத்த பயன்படுத்தப்படலாம்.

Vostro கணக்கு என்பது மற்றொரு வங்கியின் சார்பாக ஒருவர் வங்கி வைத்திருக்கும் கணக்கு – எடுத்துக்காட்டாக, HSBC Vostro கணக்கு இந்தியாவில் SBI ஆல் உள்ளது.

தற்போது, நேபாளம் மற்றும் பூட்டான் போன்ற விதிவிலக்குகளுடன், ஒரு நிறுவனத்தின் ஏற்றுமதி அல்லது இறக்குமதிகள் எப்போதும் வெளிநாட்டு நாணயத்தில் இருக்கும்.
எனவே, இறக்குமதிகள் விஷயத்தில், இந்திய நிறுவனம் வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த வேண்டும், இது முக்கியமாக டாலர்கள், ஆனால் பவுண்டுகள், யூரோக்கள் அல்லது யென் போன்றவையாக இருக்கலாம்.

இந்திய நிறுவனம் ஏற்றுமதியின் போது வெளிநாட்டு நாணயத்தில் பணம் பெறுகிறது மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதன் தேவைகளுக்கு ரூபாய் தேவைப்படுவதால் நிறுவனம் அந்த வெளிநாட்டு நாணயத்தை ரூபாயாக மாற்றுகிறது.

எதிர்பார்க்கப்படும் பயன்பாடு

ரிசர்வ் வங்கியின் உத்தரவு அவ்வாறு கூறப்படவில்லை என்றாலும், இந்த ஏற்பாடு ரஷ்யாவிற்கு முதன்மையாக பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
“உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் உள்ளன, மேலும் நாடு SWIFT அமைப்பிலிருந்து (வெளிநாட்டு நாணயத்தில் பணம் செலுத்துவதற்கு வங்கிகளால் பயன்படுத்தப்படும் அமைப்பு) முடக்கப்பட்டுள்ளது.
இதன் பொருள் வெளிநாட்டு நாணயத்தில் பணம் செலுத்த வேண்டியதில்லை, இந்த ஏற்பாடு ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் உதவும், ”என்று பாங்க் ஆஃப் பரோடாவின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

இந்த ஏற்பாடு மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்பில்லை என்று சப்னவிஸ் கூறினார். “நாங்கள் விரும்பலாம், ஆனால் மற்றவர்கள் தங்கள் சொந்த இறக்குமதிகளுக்கு பணம் செலுத்துவதற்கு வெளிநாட்டு நாணயம் தேவைப்படுவதால் அதை ஏற்காமல் போகலாம்,” என்று அவர் கூறினார்.
இலங்கையும் நாங்கள் டாலர் அல்லது வேறு எந்த வெளிநாட்டு நாணயத்திலும் செலுத்த விரும்பலாம்.

ரூபாயின் வீழ்ச்சி

இந்த ஏற்பாடு குறிப்பிடத்தக்க அளவிற்கு ரூபாய் வீழ்ச்சியை தடுக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.
டாலருக்கு நிகரான அனைத்து உலக நாணயங்களைப் போலவே ரூபாயின் மதிப்பும் சரிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.



Read in source website

கிங்ஸ்வே முதல் ராஜ்பாத் வரையிலிருந்து மத்திய விஸ்டாவின் கர்தவ்யா பாதை வரை: டெல்லியின் நூற்றாண்டு பழமையான சின்னத்தின் சுருக்கமான வரலாறு

Divya A

ராஷ்டிரபதி பவனில் இருந்து இந்தியா கேட் வரை நீண்டுள்ள, டெல்லியின் சின்னமான ராஜ்பாத், கர்தவ்யா பாதை (கடமையின் பாதை) என மறுபெயரிடப்பட உள்ளது, பிரதமர் நரேந்திர மோடி புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூவை வியாழக்கிழமை (செப்டம்பர் 8) திறந்து வைக்கும்போது இந்த பெயர் மாற்றம் அறிவிக்கப்பட உள்ளது. அவென்யூ பெரிய சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும், அங்கு புதிய முக்கோண பாராளுமன்ற கட்டிடம், மத்திய செயலகம் மற்றும் பல அரசு அலுவலகங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. மூன்று கிலோமீட்டர் நீளம் கொண்ட பாதையின் ஒரு சுருக்கமான வரலாறு மற்றும் அது 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்பட்ட மாற்றங்களை இங்கே காணலாம்.

கிங்ஸ்வே

பிரிட்டிஷ் ஆட்சியின் போது கிங்ஸ்வே என்று அழைக்கப்பட்டது, இது 1920 ஆம் ஆண்டில் புது தில்லியின் கட்டிடக் கலைஞர்களான எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் விழாக்கள் நடத்த ஏதுவாக இருபக்கம் மரங்கள் நிறைந்த பாதையாக கட்டப்பட்டது. ரைசினா மலையில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இருந்து விஜய் சௌக் மற்றும் இந்தியா கேட் வழியாக பாதை செல்கிறது, அவென்யூ இருபுறமும் பெரிய புல்வெளிகள், கால்வாய்கள் மற்றும் மரங்களின் வரிசைகள் என வரிசையாக உள்ளது. 1911 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் கொல்கத்தாவிலிருந்து (அப்போது கல்கத்தா) டெல்லிக்கு தங்கள் தலைநகரை மாற்ற முடிவு செய்தது, அதன் விளைவாக, அவர்கள் நிர்வாக தலைநகராக செயல்பட புது டெல்லியை உருவாக்கத் தொடங்கினர்.

லுட்யன்ஸ் ஒரு “சம்பிரதாய விழாக்களை” மையமாகக் கொண்ட ஒரு நவீன ஏகாதிபத்திய நகரத்தின் பாதையை உருவாக்கினார், அதற்கு அவர்கள் கிங்ஸ்வே என்று பெயரிட்டனர். இந்த பெயர் லண்டனில் உள்ள கிங்ஸ்வேயைப் போலவே இருந்தது, 1905 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அந்த முக்கிய சாலை, ஜார்ஜ் V இன் தந்தை எட்வர்ட் VII இன் நினைவாக பெயரிடப்பட்டது.

டெல்லியின் கிங்ஸ்வே, துணை அரச மாளிகையிலிருந்து (அப்போது வைஸ்ராயின் வீடு; இப்போது ராஷ்டிரபதி பவன்) நகரத்தின் பரந்த காட்சியை வழங்குகிறது. 1911 ஆம் ஆண்டு தர்பாரின் போது டெல்லிக்கு வருகை தந்த செய்த இந்தியாவின் பேரரசர் ஜார்ஜ் V இன் நினைவாக இந்த சாலைக்கு கிங்ஸ்வே என்று பெயரிடப்பட்டது, அங்கு அவர் தலைநகரை மாற்றுவதற்கான முடிவை முறையாக அறிவித்தார்.

ராஜ்பாத்

இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்த சாலையின் ஆங்கிலப் பெயருக்குப் பதிலாக ‘ராஜ்பாத்’ என்ற ஹிந்திப் பெயர் வழங்கப்பட்டது. ஹிந்தியில் ‘ராஜ்பாத்’ என்பது ராஜாவின் பாதை என்று பொருள்படும் என்பதால், இது மறுபெயரிடுவதை விட வெறும் மொழிபெயர்ப்பைக் குறிக்கிறது. 75 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று நடைபெறும் குடியரசு தின அணிவகுப்புக்கான காட்சிப் பொருளாக இந்தப் பாதை அறியப்படுகிறது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் பிப்ரவரி 2021 அறிக்கையின்படி, சுதந்திரத்திற்குப் பிறகு சென்ட்ரல் விஸ்டா அவென்யூவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. நிலப்பரப்பு மாற்றப்பட்டது, 1980 களில் புதிய வரிசையில் மரங்கள் சேர்க்கப்பட்டன, மேலும் ஒரு புதிய சாலை, ரஃபி அகமது கித்வாய் மார்க், வடக்கு-தெற்கு இணைப்பை மேம்படுத்துவதற்காக கட்டப்பட்டது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து தனது உரையின் போது, ​​பிரதமர் மோடி “காலனித்துவ மனநிலை” தொடர்பான சின்னங்களை ஒழிக்க வலியுறுத்தினார். இந்தியாவில் பிரிட்டிஷ் அதிகாரத்தை மீறியதற்காக அறியப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 28 அடி சிலை, ஒரு காலத்தில் ஜார்ஜ் V இன் சிலை இருந்த சாலையில் நிறுவப்படும், மற்றும் செப்டம்பர் 8 ஆம் தேதி கிராண்ட் கேனோபியின்போது மற்றொரு காலனித்துவ நினைவுச்சின்னமான இந்த ராஜ்பாத் உதிர்க்கபடும்.

கர்தவ்யா பாதை

மத்திய விஸ்டா மறுவடிவமைப்புத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் பிப்ரவரி 2021 இல் தொடங்கப்பட்டன, அதன் முதல் கட்டத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் சென்ட்ரல் விஸ்டா அவென்யூவை மறுவடிவமைப்பு செய்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. “இது டெல்லியில் அடிக்கடி பார்வையிடப்படும் இடம் மற்றும் முக்கியமான சுற்றுலாத்தலமாகும். இருப்பினும், கழிப்பறைகள், பாதைகள், நியமிக்கப்பட்ட விற்பனை மண்டலங்கள், பார்க்கிங், சரியான விளக்குகள், பலகைகள் போன்ற பொது வசதிகள் இல்லை, ”என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் 2021 செய்திக்குறிப்பில் கூறியது.

மறுவடிவமைப்பில் இயற்கையை ரசித்தல், பசுமைப் பரப்பை 3.5 லட்சம் சதுர மீட்டரிலிருந்து 3.9 லட்சம் சதுர மீட்டராக அதிகரிப்பது மற்றும் மழைநீர் சேகரிப்புடன் புதிய நீர்ப்பாசன முறை ஆகியவை அடங்கும். கழிவுநீர் மறுசுழற்சி ஆலை, பொது கழிப்பறை, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும். நடைபாதைகள் மற்றும் கால்வாய்கள் மீது உள்ள பாலங்கள் தவிர, அவென்யூவில் 10 இடங்களில் விற்பனை பகுதி கட்டப்படும்.

குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நிறுவப்பட்டு அகற்றப்படும் தற்காலிக கட்டமைப்புகளுக்கு பதிலாக மடிக்கக்கூடிய இருக்கை ஏற்பாடுகள் செய்யப்படும். அவென்யூவை “நிஜமாகவே புதிய இந்தியாவிற்கு ஏற்ற” ஐகானாக மாற்றுவதே 608 கோடி ரூபாய் மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா அவென்யூ திட்டத்தின் நோக்கமாகும் என அரசு தெரிவித்துள்ளது.



Read in source website

பி.எம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் (PM SHRI) தேசிய கல்விக் கொள்கை 2020 இன் முக்கிய அம்சங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.

2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில், மத்திய அரசு நிதியுதவியில் புதிய திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (செப்டம்பர் 5) அறிவித்தார்.

பி.எம். – ஸ்ரீ திட்டம் என்றால் என்ன?

கல்வி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளபடி, இந்தத் திட்டம் பி.எம் ஸ்ரீ பள்ளிகள் (PM Schools for Rising India) என்று அழைக்கப்படும். இதன் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 14,500 பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் முக்கிய அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் மேம்படுத்தப்படும்.

குஜராத்தில் உள்ள காந்திநகரில் ஜூன் மாதம் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்த ஒரு மாநாட்டின் போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்களுடன் இந்த திட்டம் முதலில் விவாதிக்கப்பட்டது. மாநிலங்களுடன் கலந்தாலோசித்து இம்முயற்சி முன்னெடுக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அப்போது தெரிவித்திருந்தார். நவோதயா வித்யாலயா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் போன்ற முன்மாதிரியான பள்ளிகள் இருக்கும்போது, ​​பி.எம். ஸ்ரீ தேசிய கல்விக் கொள்கை ஆய்வகங்களாக செயல்படும் என்று அவர் கூறினார்.

பள்ளிக் கல்வியில் தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் என்ன?

தேசிய கல்விக் கொள்கை பாடத்திட்டத்தின் அமைப்பு மற்றும் கற்பித்தல் பாணியை பல்வேறு நிலைகளாகப் பிரிக்கிறது – அடித்தளம், தயாரிப்பு, நடுத்தர மற்றும் இரண்டாம் நிலை என பிரிக்கிறது. அடிப்படை ஆண்டுகள் (முன்பள்ளி மற்றும் தரங்கள் I, II) விளையாட்டு அடிப்படையிலான கற்றலை உள்ளடக்கியத். ஆயத்த நிலையில் (III-V), சில முறையான வகுப்பறை கற்பித்தலுடன் ஒளி பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பாட ஆசிரியர்கள் நடுத்தர அளவில் (VI-VIII) அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். இரண்டாம் நிலை (IX-XII) கலை மற்றும் அறிவியல் அல்லது பிற துறைகளுக்கு இடையே கடினமான பிரிப்பு இல்லாமல் இயற்கையில் பலதரப்பட்டதாக இருக்கும்.

மத்திய நிதியுதவி திட்டம் என்றால் என்ன?

மத்திய அரசு மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இடையே 60:40 என்ற விகிதத்தில் செயல்படுத்துவதற்கான செலவு பிரிக்கப்படுவதுதான் மத்திய நிதியுதவி திட்டம். உதாரணமாக, மதிய உணவு திட்டம் (பி.எம் போஷான்) அல்லது பி.எம் ஆவாஸ் யோஜனா ஆகியவை மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களுக்கு எடுத்துக்காட்டுகள். வடகிழக்கு மாநிலங்கள், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர் மற்றும் சட்டமன்றங்கள் இல்லாத யூனியன் பிரதேசங்களில், மத்திய அரசின் பங்களிப்பு 90 சதவீதமாக உயரும்.

பி.எம். ஸ்ரீ பள்ளிகள் கேந்திரிய வித்யாலயா அல்லது ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளிலிருந்து எவ்வாறு வேறுபடும்?

கேந்திரிய வித்யாலயாக்கள் அல்லது ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் முற்றிலும் மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் வருகின்றன. மத்தியத் துறைத் திட்டங்களின் கீழ் அவை மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படுகின்றன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி கற்பித்தலை கேந்திரிய வித்யாலயாக்கள் பெரிதும் பூர்த்தி செய்யும் அதே வேளையில், நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள திறமையான மாணவர்களை வளர்ப்பதற்காக ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் அமைக்கப்பட்டன. இதற்கு மாறாக, பி.எம் ஸ்ரீ பள்ளிகள், தற்போதுள்ள மத்திய, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளை மேம்படுத்தும். இதன் அடிப்படையில் பி.எம் ஸ்ரீ பள்ளிகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள், மாநில அரசு பள்ளிகள் அல்லது முனிசிபல் கார்ப்பரேஷன்களால் நடத்தப்படும் பள்ளிகளாக இருக்கலாம்.

பி.எம் ஸ்ரீ (PM SHRI) பள்ளிகள் எங்கே வரும்?

இதற்காக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் பட்டியலை இதுவரை மத்திய அரசு வெளியிடவில்லை. இருப்பினும் பி.எம் ஸ்ரீ பள்ளிகள் தங்கள் அருகில் உள்ள மற்ற பள்ளிகளுக்கும் வழிகாட்டிகளை வழங்கும் என்று அறிவித்துள்ளது. இந்த பள்ளிகள், ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு உபகரணங்கள், கலை அறை போன்ற நவீன உள்கட்டமைப்புகளுடன் இருக்கும். நீர் பாதுகாப்பு, கழிவு மறுசுழற்சி, மின்சார உள்கட்டமைப்பு மற்றும் இயற்கை வாழ்க்கை முறையை பாடத்திட்டத்தில் ஒருங்கிணைக்கும் பசுமை பள்ளிகளாகவும் உருவாக்கப்படும்.



Read in source website

ஒவ்வோர் இந்தியனும் பெருமிதம் கொள்ள வேண்டிய தருணம் இது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட முதல் விமானம் தாங்கிப் போர்க்கப்பல் "ஐஎன்எஸ் விக்ராந்த்' பிரதமரால் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
262.5 மீட்டர் நீளம், 62.5 மீட்டர் அகலம், 59 மீட்டர் உயரம், சுமார் 43,000 டன் எடை கொண்ட இந்த பிரம்மாண்டமான விமானம் தாங்கிப் போர்க்கப்பல், கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தால் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. 333 திமிங்கிலங்களின் நீளத்தைக் கொண்டது இந்த "ஐஎன்எஸ் விக்ராந்த்'.
இதன் 76% பாகங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. 23,000 டன் உருக்கு, 2,500 கி.மீ. நீளம் வரும் அளவிலான மின்சார கேபிள்கள், 150 கி.மீ. நீளம் வரக்கூடிய அளவிலான குழாய்கள், 2,000 வால்வுகள் தொடங்கிய பெரும்பாலான பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. டெல், ஜிஆர்எஸ்இ, கெல்ட்ரான், கிர்லோஸ்கர், எல் அண்ட் டி உள்ளிட்ட 100-க்கும் அதிகமான சிறிய, பெரிய நிறுவனங்களின் பங்களிப்பு "ஐஎன்எஸ் விக்ராந்த்'தில் இருக்கிறது.
விக்ராந்த் போர்க்கப்பலுக்கான ரூ.23,000 கோடி செலவில் 80% முதல் 85% வரை இந்திய நிறுவனங்களுக்கே சென்றிருப்பதால், அதன் மூலம் பொருளாதாரமும் பயனடைந்திருக்கிறது. நமது பொறியியல் நிபுணர்களின் கப்பல் கட்டுமானத் திறன் மேம்பாட்டுக்கு உதவியிருப்பது மட்டுமல்லாமல், வருங்காலத்தில் பிற நாடுகளுக்கான விமானம்தாங்கி போர்க்கப்பல்களைத் தயாரித்துக் கொடுக்கும் ஆற்றலையும் இதனால் இந்தியா பெற்றிருக்கிறது.
88 மெகா வாட் என்ஜின் திறன் கொண்ட "ஐஎன்எஸ் விக்ராந்த்', மணிக்கு 28 கடல் மைல் வேகத்தில் (அதாவது சுமார் 52 கி.மீ.) பயணிக்கக் கூடியது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால், சுமார் 7,500 கடல் மைல் தொலைவு செல்லக்கூடியது. மிக்-29கே, கமோவ் 31 போர் விமானங்களையும், எம்எச் 60ஆர் உள்ளிட்ட ஹெலிகாப்டர்
களையும் இயக்கவல்ல இந்தக் போர்க்கப்பலில் 30 போர் விமானங்களை நிறுத்த முடியும். 18 அடுக்குகள் கொண்ட இந்தக் கடல் பிரம்மாண்டத்தில் 2,300 அறைகள் இருக்கின்றன.
இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் இதுவரை நமது கடற்படைக்கு மூன்று விமானம் தாங்கிக் கப்பல்கள்தான் வாங்க முடிந்திருக்கிறது. அவற்றில் செயல்பாட்டில் உள்ளது சோவியத் யூனியனிலிருந்து பெறப்பட்ட "ஐஎன்எஸ் விக்ரமாதித்யா' மட்டும்தான். "ஐஎன்எஸ் விராட்'டைவிட இரண்டு மடங்கு பெரிதான "ஐஎன்எஸ் விக்ரமாதித்யா'வைவிட இப்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கும் "ஐஎன்எஸ் விக்ராந்த்' அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.
விடுதலை பெற்றவுடன் நாம் வாங்கிய முதலாவது போர்க்கப்பலுக்கு "ஐஎன்எஸ் விக்ராந்த்' என்றுதான் பெயரிடப்பட்டது. 1942-இல் பிரிட்டன் அந்தக் கப்பலை நிர்மாணிக்கத் தொடங்கியது. இரண்டாம் உலகப்போர் முடிந்துவிட்டதால், அதன் நிர்மாணம் பாதியில் கைவிடப்பட்டது. "எச்எம்எஸ் ஹெர்குலீஸ்' என்கிற பெயருடைய அந்தக் கப்பலை அரைகுறை நிலையில் 1957-இல் வாங்கி, அயர்லாந்தில் முழுமையாக நிர்மாணித்து, 1961-இல் "ஐஎன்எஸ் விக்ராந்த்' என்கிற பெயரில் அது இந்திய கடற்படையில் இணைந்தது.
1997-இல் முதலாவது "ஐஎன்எஸ் விக்ராந்த்' ஓய்வுபெற்றபோது அதற்கு பதிலாக இந்தியாவிலேயே இன்னொரு போர்க்கப்பலை நிர்மாணிக்க வேண்டும் என்கிற முடிவு எடுக்கப்பட்டது. 1999-இல் அன்றைய வாஜ்பாய் அரசால் முடிவெடுக்கப்பட்டு, 2002- 03-இல் கப்பல் கட்டும் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. கால் நூற்றாண்டுக்குப் பிறகு இப்போது "ஐஎன்எஸ் விக்ராந்த்' புனர்ஜென்மம் எடுத்திருக்கிறது.
இதைவிடப் பெரிய அளவிலான போர்க்கப்பல்களை நான்கு ஆண்டுகளில் சீனா கட்டி முடிக்கிறது என்பதையும், "ஐஎன்எஸ் விக்ராந்த்'தின் அனுமதிக்கும், அர்ப்பணிப்புக்கும் இடையே 23 ஆண்டு இடைவெளி இருக்கிறது என்பதையும் நாம் எண்ணிப் பார்க்கும்போது நமது பலவீனம் தெரிகிறது.
உலகில் போர்க்கப்பல்கள் வைத்திருக்கும் நாடுகள் 10 மட்டுமே. அமெரிக்கா (11), சீனா (3), பிரிட்டன் (2), இந்தியா (2), பிரேஸில் (1), பிரான்ஸ் (1), இத்தாலி (1), ஸ்பெயின் (1), ரஷியா (1), தாய்லாந்து (1). அவற்றில் சொந்தமாக போர்க்கப்பலை நிர்மாணிக்கும் ஆற்றல் பெற்ற ஆறாவது நாடாக இந்தியா உயர்ந்திருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகியவை ஏனைய நாடுகள்.
இந்தோ - பசிபிக் கடல் பகுதியில் தனது மேலதிகாரத்தை நிலைநாட்டத் துடிக்கிறது சீனா. அதன் போர்க்கப்பல்கள் அடிக்கடி இந்தியாவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் வளையவரத் தொடங்கியிருக்கின்றன. இந்தப் பின்னணியில் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் நிலையில் இருந்தாக வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருக்கிறது.
சீனாவிடம் 355 போர்க்கப்பல்கள் இருக்கின்றன. 2030-க்குள் 460-ஆக அதை அதிகரிக்கத் திட்டமிடுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் அல்லாமல், மேலும் 40 போர்க்கப்பல்களை இணைத்து 170 போர்க்கப்பல்கள் கொண்ட கடற்படையை உருவாக்கும் முயற்சியில் நரேந்திர மோடி அரசு முனைப்பு காட்டுவதன் பின்னணி இதுதான்.
"ஐஎன்எஸ் விக்ராந்த்' என்கிற அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டிருப்பது இந்தியாவின் தன்னம்பிக்கையை மட்டுமல்ல, தொழில்நுட்ப தேர்ச்சியையும் உலகுக்கு பறைசாற்றுகிறது.

 



Read in source website

டிசம்பர் 31, 1600-இல் விக்டோரியா மகாராணி கையொப்பமிட்ட கிழக்கிந்திய கம்பெனியின் சார்டர், இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிவிட்டது என்று சொல்வதுதான் சரி. வியாபாரிகளாக வந்த வெள்ளைக்காரர்கள் நாடு பிடித்து, நாட்டையே ஒரு கம்பெனியின் கீழ் ஆண்டது பழைய கதை. 
சுரண்டல்களும், மனித உரிமை மீறல்களும் ஒரு பக்கம் நடந்து கொண்டேயிருந்தாலும், ஆங்கில ஆட்சி ஆப்கானிஸ்தானையும், பர்மாவையும், பாகிஸ்தானையும், இலங்கையையும், வேறு பல பகுதிகளையும் நம்மிடமிருந்து பிரித்தாலும், வேதம் சொல்லும் பரத கண்டத்தை "இந்தியா என்கிற பாரத'மாக மாற்றினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. 
அவர்களுடைய வசதிக்காக அவர்கள் ஏற்படுத்திய வருவாய்துறை, ராணுவம், காவல்துறை, உள்ளாட்சிதுறை, ரயில்வே, பதிவுத்துறை என பட்டியல் நீண்டு கொண்டே போனாலும், இவை எல்லாவற்றிலும் நடுநாயகமாகவும், இன்றும் வலிமையுடனும் இருப்பது "நீதித்துறை' தான் என்றால் மிகையல்ல.
சமகால இந்தியாவின் வரலாற்றை எழுதினால், அதை ஜூன் 27, 1975 முதல் மார்ச் 21, 1977 வரை இருந்த அவசரநிலை காலத்துக்கு முன், அவசரநிலை காலத்துக்கு பின் என இரண்டாகப் பிரிக்கலாம். அவசரநிலையை கொண்டு வந்ததற்காக இன்றும் இந்திரா காந்தியைப் பழிப்பவர்கள் அனைவரும், இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே யாருமே எதிர்பாராத பொழுது அவசரநிலையை இந்திராவே ரத்து செய்து, தேர்தலை சந்தித்து 1977 இல் பதவியையும், ஆட்சியையும் இழந்தது குறித்துப் பேசுவதில்லை. 
அவசர நிலை அறிவிக்கப்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பே, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சிக்ரி 25 ஏப்ரல் 1973-இல் ஓய்வு பெற்றபொழுது, குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அஹமது, நீதிபதி ஏ.என்.ரே-யை 26 ஏப்ரல் 1973 முதல் இந்தியாவின் தலைமை நீதிபதியாக நியமித்தார். 
இது நீதித்துறையில் அதிர்ச்சியையும், அரசியல் தளத்தில் கடுமையான எதிர்வினையையும் ஏற்படுத்தியது. காரணம், அதுவரை இருந்த நடைமுறைக்கு விரோதமாக வழக்கப்படி பதவி பெற வேண்டிய மூன்று மூத்த நீதிபதிகள் அப்போது ஓரங்கட்டப்பட்டனர். 
நீதிபதி ரே-யின் நியமனம் அதுவரை உச்சநீதிமன்றத்தில் இருந்த மூத்தவரே தலைமை நீதிபதி என்ற வழக்கத்துக்கு விரோதமாகவும், எதிராகவும் அமைந்தது. அது மட்டுமல்ல, பதவி மூப்பு அடிப்படை கடைப்பிடிக்கப்பட்டு இருந்தால் ஏ. என்.ரே ஜனவரி 29, 1977-இல் ஹெக்டே தலைமை நீதிபதியாக இருக்கும்பொழுதே தலைமை நீதிபதியாக ஆகாமல் ஓய்வு பெற்றிருப்பார். ரே-யின் தலைமை நீதிபதி எஸ்.எம்.சிக்ரியைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அரசால் செய்யப்பட்டது என கண்டனத்துக்கு உள்ளானது. 
நீதிபதி ரே தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதும், இந்திரா காந்தி அவசரநிலையைக் கொண்டு வந்ததும் இந்திய ஜனநாயகத்திற்கும், நீதித்துறைக்கும் சவாலாக கருதப்பட்டது. தலைமை நீதிபதி பதவி உயர்வு மறுக்கப்பட்ட மூன்று நீதிபதிகளும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர்.
தலைமை நீதிபதி நியமனம் தொடர்பாக, ஏப்ரல் 26-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய சட்ட அமைச்சர் ஹெச்.ஆர்.கோகுலே, அரசின் செயல்பாட்டை நியாயப்படுத்த 1960- இல் சட்ட ஆணைய குழுவின் (லா கமிஷன்) பரிந்துரைப்படி தலைமை நீதிபதி என்பவர் வயது மூப்பு அடிப்படையில் நியமிக்கப்படுவதை விட, தலைமை நீதிபதி பதவியில் ஒரு ஸ்திரத்தன்மையும், தொடர்ச்சியும் இருக்க வேண்டும் என்று கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். 
நாடாளுமன்றத்தில் மே 2 -ஆம் தேதி பேசிய அமைச்சர் மோகன் குமாரமங்கலமோ, மோதல் போக்கைத் தவிர்க்க விரும்பும் ஒரு தலைமை நீதிபதியை நியமிக்க வேண்டும் எனவும், அவரே மாறிவரும் இந்திய சமுதாய சூழலுக்கு ஏற்றவராகவும், நீதிமன்றத்திற்கும், அரசிற்கும் நிலையான தொடர்புடையவராகவும் இருக்க முடியும் என்று அரசு விரும்புகிறது என்றார்.
அடிபட்ட புலியாக உச்சநீதிமன்றம் சரியான தருணத்திற்காகக் காத்திருந்தது. தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றங்களால், அரசியல்வாதிகளும், அரசும் தங்களுடைய உரிமைகளை இழந்து விட்டதாக நம்பினார்கள் அல்லது நம்பத் தொடங்கிவிட்டார்கள். இந்த நேரத்தில் நீதிமன்றம் தன்னுடைய அதிகார வரம்புகளை விஸ்தரிக்க ஆரம்பித்தது.
நீதிபதிகளை அரசு மூலமாக குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் என்று அரசியல் நிர்ணய சட்டம் சொல்வதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நீதிபதிகளை, உச்சநீதிமன்ற நீதிபதிகளே நியமிக்கலாம் என தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பு நீதிபதிகளை, நீதிபதிகளே நியமிக்க அரசியல் சாசனத்தில் இல்லாத முதல் ஐந்து நீதிபதிகளை கொண்ட "கொலீஜியம்' என்கிற "மேலாண்மை குழுவை' ஏற்படுத்தியது.
காங்கிரஸ் அரசு செய்யத் தவறியதை அல்லது காங்கிரஸôல் செய்ய முடியாததை, இந்திய அரசியலில் இந்திரா காந்திக்குப் பிறகு சர்வ வல்லமை பொருந்திய பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி "நீதிபதிகள் நியமன சட்டம்' மூலம் செய்வதற்கு முடிவெடுத்தார். ஆனால், அதை உச்சநீதிமன்றம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று கூறி ரத்து செய்தது.
நிதி அமைச்சரும், புகழ் வாய்ந்த வழக்குரைஞருமான அருண் ஜேட்லி அந்தத் தீர்ப்பை "தேர்தலை சந்திக்காதவர்களின் அராஜகம்' (டைரனி ஆஃப் தி அன்எலக்டட்) என்று கடுமையாக விமர்சித்தபொழுது நீதிமன்ற ஆதரவாளர்கள் வாய்மூடி இருந்தார்கள்.
சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகால நீதிமன்ற வரலாற்றில், 49-ஆவது தலைமை நீதிபதி யு. யு.லலித் 27.8.2022 -இல் பதவி ஏற்றுள்ளார். அதாவது, இந்த 75 ஆண்டுகளில் தலைமை நீதிபதிகள் சராசரியாக ஒன்றரை ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார்கள். இதை இன்னமும் கூர்மையாகப் பார்த்தால் நிலைமை வேடிக்கையாக இருக்கும் (பட்டியலைக் காண்க).
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த 21 பேர் ஓர் ஆண்டுக்கும் கீழாக பதவி வகித்தார்கள் என்றால், அதில் ஐவர் 99 நாட்களுக்கும் கீழாகவும், இருவர் 30 நாட்களுக்குக் குறைவாகவும் தலைமை நீதிபதி பதவியில் இருந்துள்ளார்கள். அதே சமயம், 16-ஆவது தலைமை நீதிபதியான ஒய்.வி. சந்தரசூட் 7 வருடம் 139 நாட்கள் தலைமை நீதிபதியாக பதவி வகித்து சாதனை படைத்துள்ளார். 
குடியரசுத் தலைவராக இரண்டாவது பெண்மணி பதவி வகிக்கும் நிலையில், ஒரு பெண்மணி கூட இன்றுவரை தலைமை நீதிபதியாகும் வாய்ப்பைப் பெறவில்லை. நீதிபதி பி.வி. நாகரத்னா நியமிக்கப்பட்ட பொழுது அவர் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக இருப்பார் எனப் பலரும் ஆனந்த கூத்தாடினார்கள். ஆனால், வெளியே வராத உண்மை அவர் தலைமை நீதிபதியாக பதவி வகிக்கப் போவது வெறும் 36 நாட்கள் மட்டுமே. 
உண்மையில், குடியரசுத் தலைவராக இருந்த பிரதிபா பாட்டீல் அதிருஷ்டக்காரர். அவர் முழுமையாக ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தார். திரெüபதி முர்முவும் ஐந்து ஆண்டுகள் பதவி வகிப்பார். 
நீதிபதி நாகரத்தினாவின் எதிர்வரும் தலைமை நீதிபதி பதவியில் இருக்கும் 36 நாளில் பதவியேற்க ஒரு நாள், பிரிவு உபசாரத்திற்கு ஒரு நாள் என இரண்டு நாள் போய்விடும்; குறைந்தபட்சம் எட்டு நாள் சனி, ஞாயிறு; வக்கீல்கள் போராடாமல் இருந்தால் அவர் சுமார் 24 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்! 
17 நாள் முதல் 2 வருடத்திற்கு உட்பட்ட காலகட்டத்தில் மட்டுமே பதவியில் இருக்கும் நீதிபதிகளால் என்ன மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் நீதித்துறையில் கொண்டு வர முடியும்?
இந்திரா காந்தி தலைமை நீதிபதி நீண்ட நாள் பதவி வகிக்க வேண்டும் என்று வழங்கப்பட்ட கருத்துரையை, பொதுவில் விவாதிக்காமல் அமல்படுத்திய முறை தவறாக இருக்கலாம். 
ஆனால், அவர் வினையாற்றியது சட்ட ஆணையக் குழுவின் கருத்துரை மட்டுமல்ல; இந்த கருத்துரையை உச்சநீதிமன்றமே சில அரசுத் துறைகளில் கடைப்பிடிக்க வேண்டுமென சமீபகாலமாக தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றமே சில ராணுவ, காவல்துறை பதவிகள், சில இந்திய ஆட்சிப்பணி, ஒற்றர் பணி ஆகியவற்றில் தலைமை பதவியேற்பவர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் என உத்தரவிட, அதை அரசு நடைமுறைப்படுத்தவும் செய்தது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளும் மரணம் அல்லது ராஜிநாமா போன்ற தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர்த்து, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பதவி வகிக்க வேண்டும் என இனி ஒரு விதி செய்யப்பட வேண்டும். 
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து, உச்சநீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். இதுவே, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிகளுக்கும் பொருந்தும். இல்லாவிட்டால், "ஊருக்குத்தான் உபதேசம்' என்கிற பழமொழி உச்சநீதிமன்றத்துக்கும் பொருத்தமாகி விடும். 

கட்டுரையாளர்:
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.
 



Read in source website

இந்திய தீபகற்பத்தின் தென்கோடி முனையிலிருந்து ‘இந்தியாவை ஒருங்கிணைப்போம்’ என்ற நாடு தழுவிய நடைப் பயணத்தை இன்று தொடங்கவிருக்கிறார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கும் இந்தப் பயணம், 12 மாநிலங்களையும் 2 யூனியன் பிரதேசங்களையும் கடந்து ஜம்முவில் நிறைவடைய உள்ளது.

ஒரு நாளைக்கு 22-23 கிமீ என்ற அளவில் 150 நாட்களில் மொத்தம் 3,750 கிமீ நீளத்துக்கு இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான கட்சிகள், அமைப்புகள், ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் இந்த நடைப் பயணம் ஒருங்கிணைப்பதோடு, பலவீனமான நிலையிலிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் புத்துயிர் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Read in source website

போரிஸ் ஜான்சனுக்கு இப்படி ஒரு முடிவு நிகழும் என மூன்று ஆண்டுகளுக்கு முன் எவரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். 1987 பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி மாபெரும் வெற்றிபெற்றது.

அதற்கு நிகரான வெற்றியை 2019இல் ஈட்டித்தந்து பிரதமரானார் போரிஸ் ஜான்சன். ஆனால், அவரது பதவிக் காலம் முடிய இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ள நிலையில், ராஜினாமா செய்யும்படி அவரது கட்சியினரால் கட்டாயப்படுத்தப்பட்டார்.



Read in source website

ஐஎன்எஸ் விக்ராந்த் எனும் விமானம்தாங்கிப் போர்க் கப்பலின் சாதனைப் பயணம் 2009இல் தொடங்கியது. 2009இல், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

ஏறக்குறைய 2,000-க்கும் அதிகமான பொறியாளர்களின் 13 ஆண்டு காலக் கடும் உழைப்பில் விக்ராந்த் முழு வடிவம் பெற்றுள்ளது. அந்தக் கப்பலைப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.



Read in source website

‘சுயராஜ்யம் என் பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்’ என்ற முழக்கமே இன்றுவரை பால கங்காதர திலகரை, நம் கண்முன் நிறுத்துகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக் காலத் தலைவர்களில் முக்கியமானவராகவும் மக்களின் ஆதரவுபெற்ற தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர்.

மகாராஷ்டிரத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த திலகர், ஆங்கிலேய அரசு இந்தியர்களைக் காரணமின்றி சிறையில் தள்ளியதால், அவர்களுக்காக வாதாடுவதற்குச் சட்டம் படித்தார். இந்திய வளங்கள் ஆங்கிலேயரால் எப்படிச் சுரண்டப்படுகின்றன என்பதை விளக்கிய தாதாபாய் நெளரோஜியின் நூல், திலகரை விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட வைத்தது.

நண்பர்களுடன் இணைந்து மராத்தியில் ‘கேசரி’, ஆங்கிலத்தில் ‘மராட்டா’ ஆகிய பத்திரிகைகளை 1881இல் ஆரம்பித்தார் திலகர். இரண்டு பத்திரிகைகளிலும் அவர் எழுதிய தலையங்கங்களும் கட்டுரைகளும் மக்களை விடுதலைப் போராட்டத்தில் உணர்வுபூர்வமாக ஈடுபடவைத்தன. இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பத்திரிகையாக ‘கேசரி’ மாறியது.

காங்கிரஸில் 1889இல் திலகர் இணைந்தார். விவேகானந்தருடன் நெருங்கிப் பழகியபோது ஆன்மிகம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் அவரது கவனம் திரும்பியது. ஆங்கிலேயர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்குக் காரணம் திலகர் எழுதிய தலையங்கங்கள்தாம் என்று கருதிய ஆங்கிலேய அரசு, அவரை 12 மாதங்கள் சிறையில் அடைத்தது. இதன் மூலம் மக்களிடம் திலகரின் செல்வாக்கு பெருமளவு அதிகரித்தது.

1905இல் வங்கத்தை இரண்டாகப் பிரிப்பதை திலகர் கடுமையாக எதிர்த்தார். பிரிவினையை எதிர்த்த விபின் சந்திர பால், லாலா லஜபதி ராய் ஆகியோருடன் சேர்ந்து போராட்டங்களைத் தீவிரப்படுத்தினார். காங்கிரஸ் கட்சி மிதவாதிகள், தீவிரவாதிகள் என இரண்டாகப் பிரிந்தது. திலகர் தீவிரமாகச் செயல்பட்டவர்களின் தலைவரானார்.

பிரபுல்ல சாக்கி, குதிராம் போஸ் ஆகியோரை ஆதரித்துக் கட்டுரைகள் எழுதியதற்காக,1908-1914 வரை 6 ஆண்டுகளைச் சிறையில் கழித்தார் திலகர். அன்னி பெசன்ட்டுடன் இணைந்து அகில இந்திய ஹோம் ரூல் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார்.

ஒற்றுமையையும் தேசிய உணர்வையும் உருவாக்க நினைத்து, விநாயக சதுர்த்தி ஊர்வலத்தை அவர் கோலாகலமாக நடத்தினார். இந்தச் செயல் மாற்று மதத்தினரை அவரிடமிருந்து அந்நியப்படுத்தியது. பெண்கள், சாதி போன்ற சமூகக் கருத்துகளில் பழமைவாதத்தையே திலகர் பிரதிபலித்தார்.

ஜலியான்வாலாபாக் படுகொலைகளால் திலகரின் மனமும் உடலும் பாதிப்படைந்தன. என்ன நடந்தாலும் போராட்டத்தை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட திலகர், 1920இல் நிரந்தர ஓய்வு நிலைக்குச் சென்றார்.



Read in source website

கல்விக்கும் பெண்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்று பலரும் நம்பியிருந்த காலகட்டத்தில் வரலாற்று ஆய்வாளராகத் தடம்பதித்தவர் ரொமிலா தாப்பர்.

லக்னோவில் 1931இல் பிறந்த அவர், தன் தந்தையின் ராணுவப் பணி காரணமாகப் பல்வேறு நகரங்களில் படித்தார். வரலாற்றை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தார். 1958 இல் ‘இந்திய வரலாறு’ குறித்த ஆய்வுப் படிப்பை லண்டன் பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்தார்.

டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்பட, பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் வருகைதரு பேராசியராகவும் பணியாற்றியுள்ளார்.

பண்டைய வரலாற்றை இந்துத்துவமாகக் கட்டமைத்து அதுவே சமூக அறிவியலாக நிறுவப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, பண்டைய இந்தியா குறித்த ஆய்வில் ரொமிலா ஈடுபட்டார். பாடப்புத்தகங்களில் சொல்லியிருப்பவற்றை அகழாய்வுகள் சொல்லும் தரவுகளின் அடிப்படையில் கேள்விக்கு உள்ளாக்குவதாகப் பண்டைய இந்தியா குறித்த இவரது சமூக, கலாச்சார வரலாற்று ஆய்வு அமைந்தது.

அசோகர், மௌரியர்கள் குறித்த இவரது ஆய்வு நூல் குறிப்பிடத்தகுந்தது. வரலாற்று ஆய்வில் எவ்விதச் சமரசத்துக்கும் சாய்வுக்கும் இடங்கொடுக்கக் கூடாது என்பது ரொமிலாவின் பார்வை.

சிலர் பழங்கால இந்தியாவைப் பொற்காலமாகச் சித்தரிக்க நினைத்து அந்நாளில் நிலவிய சாதியக் கட்டுமானங்களைப் பதிவுசெய்வதில்லை. ஆனால், அதுவும் சேர்ந்ததுதானே இந்தியா என்பது ரொமிலாவின் வாதம்.

பழங்காலத்தில் நிலவிய சாதியக் கட்டுமானங்களும் வர்க்கப் பிரிவினைகளும் எப்படி அதிகாரப் படிநிலையை உருவாக்கின என்பது உள்ளிட்ட வரலாறே முழுமையானதாக இருக்கும் என்று சொல்லும் ரொமிலா தாப்பர், வரலாற்று ஆய்வை அப்படித்தான் மேற்கொண்டார். இவரது ஆய்வு நூல்கள் பண்டைய இந்திய வரலாற்றை மறுஆய்வுக்கு உட்படுத்தின.

வரலாற்று ஆய்வாளர் என்பதற்காகச் சமகாலத்திலிருந்து ரொமிலா தாப்பர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை. சமகால அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து விமர்சித்துவருகிறார். நாடு விடுதலை பெற்றபோது 15 வயது சிறுமியாகத் தான் கனவு கண்ட முற்போக்கு இந்தியா இன்னும் கைகூடவில்லை என்று தன் அதிருப்தியைப் பதிவுசெய்துள்ளார்.

மதத்தின் பெயரால் அத்துமீறலும் வன்முறையும் நிகழ்த்தப்படும்போது, வரலாற்று ஆய்வின் அடிப்படையிலான உண்மையை எடுத்துச் சொல்லி, நாம் தற்போது பேசும் சித்தாந்தத்துக்கும் நம் வரலாற்றுக்கும் தொடர்பில்லை என்பதைக் கவனப்படுத்திவருகிறார்.

1992, 2005 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுகளை ரொமிலா தாப்பர் மறுத்தார். “நான் தொடர்புடைய கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்கள் தவிர அரசாங்கம் வழங்கும் எந்த விருதையும் நான் ஏற்பதற்கில்லை” என்று அதற்குக் காரணமும் சொன்னார். போலிப் பெருமிதங்களில் மூழ்கிவிடுவதிலிருந்து மக்களைக் காத்துவரும் வரலாற்று ஆய்வாளர்களில் ரொமிலா தாப்பர் தனித்துவமானவர்.



Read in source website

தனிப்பட்ட மதச் சட்டங்களுக்கும் சடங்குகளுக்கும் பலிகொடுக்கப்பட்ட பெண்ணுரிமையை மீட்கும் நிகழ்வுகள் இந்தியச் சமூகத்தில் மிக அரிதாகவே நிகழ்கின்றன.

கணவன் ஒரே நேரத்தில் மூன்று முறை ‘தலாக்’ சொல்வதன் மூலம் மனைவியை விவாகரத்து செய்யும் ‘உடனடி முத்தலாக்’ முறையைத் தடைசெய்யும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 2017 இல் வழங்கியது. இதற்குக் காரணம் உத்தராகண்டைச் சேர்ந்த ஷாயரா பானு.

கடிதம் மூலம் ‘முத்தலாக்’ சொல்லி ஷாயரா பானுவை விவாகரத்து செய்திருந்தார் அவருடைய கணவர். உடல்ரீதியான வன்முறைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளான ஷாயரா பானு, பெண்களைச் சிறுமைப்படுத்தும் முத்தலாக் முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அடிப்படை உரிமைக்கு எதிரானது ‘உடனடி முத்தலாக்’ என்கிற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது.

அதைத் தொடர்ந்து இஸ்லாமியப் பெண்கள் திருமணப் பாதுகாப்புச் சட்டம், 2019 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ‘உடனடி முத்தலாக்’ நடைமுறை சட்டவிரோதமானது; மீறினால் சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும்.



Read in source website

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன் முதலாக 10 ஆயிரம் ரன்களை இந்தியாவின் சுனில் கவாஸ்கர் எடுத்ததுபோல, ஒரு நாள் போட்டிகளிலும் அந்தச் சாதனையை ஓர் இந்தியர்தான் படைத்தார். அவர், சச்சின் டெண்டுல்கர்.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் 1971இல் தொடங்கின. இந்தியா தன்னுடைய முதல் ஒரு நாள் போட்டியை 1974இல் விளையாடியது. டெஸ்ட் அரங்கில் பல சாதனைகளைப் படைத்த வீரர்கள் இருந்ததுபோலவே, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறந்த வீரர்கள் இருந்தார்கள்.

என்றாலும் பத்தாயிரம் ரன்களை எட்டும் போட்டியில் ஒரு கட்டத்தில் இந்தியாவின் முகமது அசாரூதினும் சச்சின் டெண்டுல்கரும்தான் இருந்தார்கள். 2000இல் சூதாட்டப் புகாரில் சிக்கி வாழ்நாள் தடையை அசாரூதின் எதிர்கொண்டதால், கிரிக்கெட்டில் இல்லாமல் போனார்.

2000இலேயே 9,800 ரன்களைத் தாண்டிய சச்சின் டெண்டுல்கர், 2001இல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்தூர் நேரு விளையாட்டு அரங்கில் தன்னுடைய 266ஆவது போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியபோது இந்த மைல்கல்லை சச்சின் டெண்டுல்கர் எட்டினார்.

சர்வதேச அரங்கில் ஒரு நாள் கிரிக்கெட் தொடங்கி 30 ஆண்டுகள் கழித்து இந்த மைல்கல் எட்டப்பட்டது. 1989இல் ஒரு நாள் போட்டியில் அறிமுகமான டெண்டுல்கர், 12 ஆண்டுகளில் இந்தச் சாதனையைப் படைத்தார்.

இந்தச் சாதனை மட்டுமல்ல, இன்றுவரை அதிக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் (463) பங்கேற்ற வீரர், அதிக ரன்களை (18,426) விளாசி ரன் குவிப்பில் முதலிடம் வகிக்கும் வீரர், ஒரு நாள் போட்டிகளில் அதிக சதங்கள் (49) விளாசிய வீரர் உள்ளிட்ட சாதனைகளும் சச்சின் டெண்டுல்கரிடமே உள்ளன.



Read in source website

நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி

மத்திய அரசு வலுவாக இருக்க வேண்டும் என்ற சித்தாந்தத்துக்கு ஏற்பக் கூட்டாட்சி அமைப்பு முறையில் மத்திய அரசே எதையும் திட்டவட்டமாகத் தீர்மானிக்க வேண்டும் என்ற வகையில் அரசமைப்பே பல்வேறு கட்டுப்பாட்டு அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்யும் உரிமையையும் அதிகாரத்தையும் மத்திய அரசுக்கு அளித்திருப்பதன் மூலம், உயர்ந்த அதிகாரமுள்ளது எது மத்திய அரசா – மாநில அரசுகளா என்பதற்கான விடையைத் தந்திருக்கிறது அரசமைப்பு.

அரசமைப்பு ஏற்படுத்திய இந்த ஏற்பாடுகளுக்கும் மேலாக, அனைத்திந்திய அளவில் தனக்கு ஈடு இணையில்லாத மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக ஜவாஹர்லால் நேரு திகழ்ந்தார். மாநில அலகுகளை எப்போதும் தனது கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கருதிய ஆளும் (காங்கிரஸ்) கட்சியின் தலைவராக நேரு கோலோச்சினார்.

இந்த அரசியல் உடைமைகளுக்குச் சிகரம் வைத்தாற்போல ‘மத்திய திட்டக் குழு’ என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. பொருளாதார – சமூக வளர்ச்சித் திட்டங்களில் மாநில அரசுகள் எவற்றையெல்லாம் செய்ய வேண்டும், எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்று கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் அதிகார வர்க்கத்துக்கெல்லாம் உயர் அதிகாரபீடமாகச் செயல்பட்டது ‘மத்திய திட்டக் குழு’.

புதிய தேசத்தை உருவாக்குவது என்பது புதிய லட்சியமாகிவிட்டது. நாட்டை நவீனப்படுத்த விரும்பிய அரசியல் தலைவர்கள் அதை மக்களுடைய மனங்களில் உருவேற்றியதால், வலுவான மத்திய அரசு தேவை என்ற கருத்துக்கு அது கவசமானது. பாசன வசதிக்காக உருவாக்கப்பட்ட மிகப் பெரிய நீர்த்தேக்கங்களையும் தொழில் வளர்ச்சிக்காக அரசுத் துறையில் கட்டிய பெரிய தொழிற்சாலைகளையும் ‘புதிய இந்தியாவின் கோயில்கள்’ என்று வர்ணித்தார் நேரு.

புதிய, வளமான, சமத்துவ சமுதாயம் ஏற்பட ஐந்தாண்டு திட்டங்கள், புதிய அடிப்படை செயல்திட்டங்களாக ஏற்கப்பட்டன. நேருவும் ஐந்தாண்டு திட்டங்களுக்கான மாதிரிகளை உருவாக்கிய பி.சி. மஹாலனோபிஸும் புதிய குருமார்களாகப் போற்றப்பட்டனர். இது ஏற்படுத்திய உற்சாகமும், ஆர்வமும் எல்லோரையும் மயக்கத்தில் தள்ளிவிட்டது. அதில், ஐந்தாண்டு திட்டங்களை நிறைவேற்ற அனைத்து மாநிலங்களுமே மத்திய அரசின் ஆணையைத்தான் கேட்டு நடக்க வேண்டும் என்பதைச் சற்றே மறந்துவிட்டனர்.

மாநிலங்களின் லட்சியம்

‘வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை’ என்ற ஜனநாயக உரிமை காரணமாக மக்களை ஜனநாயகரீதியாகத் திரட்ட வேண்டியிருந்தது. இதனால் மாநிலங்களைச் சேர்ந்த படித்த - மக்களைக் கவரும் பேச்சாற்றல் மிக்க தலைவர்கள் அதிகார பீடத்தில் தங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று பிரதேச, மொழி அடிப்படையில் வலியுறுத்தத் தொடங்கினர்.

‘மத்திய அரசுக்கு எல்லாம் தெரியும்’ என்ற அரசியல் கலாச்சாரத்தைக் கேள்வி கேட்ட அவர்களுடைய உரிமைக் குரல்கள், கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க காங்கிரஸ் கட்சி கையாண்ட தீர்வு காணும் முறைமைக்கு பெரிய சோதனையாக அமைந்தன.

தங்களுக்குத் துளியும் விருப்பமோ, மனச் சமாதானமோ ஏற்படாவிட்டாலும் தெலுங்கு பேசும் மக்களுக்குத் தனி மாநிலம் வேண்டும் என்ற ஆந்திரர்களின் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். இது மொழி அடிப்படையில் மாநிலங்களை உருவாக்கும் பெரிய ஆவலைத் தூண்டிவிட்டது.

தங்களுடைய மொழி அடிப்படையில் மாநிலத்தை திருத்தியமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அத்துடன் நிற்காமல், எந்த விவகாரமாக இருந்தாலும் அதற்கு என்ன தீர்வு என்று மத்திய அரசுக்குத் தெரியும் அல்லது மத்திய அரசே முடிவெடுக்கும் என்பதைக் கேள்வி கேட்கவும் தொடங்கினர்.

வெவ்வேறு மொழி பேசும் மக்களிடையே தங்களுடைய சமூகத்துக்கு என்ன தேவையோ அதை மாற்று மொழிக்காரர்கள் புரிந்துகொள்ளவில்லை அல்லது அக்கறை காட்டவில்லை என்கிற கருத்து வலுப்பட்டதை, மாநிலங்களின் மறுசீரமைப்புக்காக மத்திய அரசால் நிறுவப்பட்ட ஆணையமும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய கண்ணோட்டத்துக்கு உள்பட்டு மாநில – மொழி அடிப்படையிலான உரிமைகளுக்கும் பெருமைகளுக்கும் இடம் தரலாம் என்றும் வலுவான மத்திய அரசு வேண்டும் என்றும் கருத்தைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தேசம் முழுவதையும் தானே ஆண்டதால் விட்டுக்கொடுக்க முடிந்தது. இப்படிக் கோரிக்கைகளை எழுப்பியவர்களுக்கும் தேசிய உணர்வு இருந்ததாலும், பிற மொழி, இன, சமூக மக்களுடன் கலந்து பழகும் பண்பு இருந்ததாலும் மாநிலங்களைப் புதிதாக உருவாக்குவதும் ஓரளவுக்கு சுமுகமாகவே நடைபெற்றது.

மொழி உணர்வு

பம்பாய் மாகாணத்தில் குஜராத்தி மொழிக்காரர்களுக்கும் மராட்டியர்களுக்கும் நாளுக்கு நாள் இடைவெளி அதிகமாகிக் கொண்டே வந்தது. இறுதியாக, 1960 இல் பம்பாயைத் தலைநகரமாகக் கொண்டு மகாராஷ்டிரம், அகமதாபாத்தைத் தலைநகரமாகக் கொண்டு குஜராத் என்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

பஞ்சாப் மாநிலத்தில் இந்தி பேசும் - சீக்கியர் அல்லாத மக்கள் வசித்த பகுதிகளைத் தனியாகப் பிரித்து ஹரியாணா என்ற மாநிலத்தை 1966இல் உருவாக்கினார்கள். பிறகு வட கிழக்குப் பகுதியில் அசாமிலிருந்து வெவ்வேறு மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அடுத்து இப்போது உத்தராகண்ட், விதர்பா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைப் பிரித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுவருகின்றன.

கூட்டாட்சி முறை நமக்குத் தேவைதானா என்கிற கேள்வியை மொழி அடிப்படையிலான மாநிலப் பிரிவினைக் கோரிக்கைகள் எழுப்புகின்றன. அது போதாது என்று, தேசிய ஆட்சி மொழியாக – இணைப்பு மொழியாக இந்திதான் இருக்க வேண்டும் என்கிற மத்திய அரசின் கொள்கையும் இப்போது இந்தி பேசாத மக்களிடையே குறிப்பாக தென்னிந்தியர்களிடையே எதிர்ப்பை வளர்த்துவருகிறது. சுதந்திரம் அடைந்த 15 ஆண்டுகளுக்குள் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்துக்குப் பதில் இந்தி இடம்பெற வேண்டும் என்ற கால வரம்பு தென்னிந்திய மாநிலங்களைத் தொடர்ந்து கொந்தளிக்க வைக்கிறது.

‘இந்தியை ஆட்சி மொழியாக ஏற்பதே நாட்டின் தன்மானத்துக்குப் பெருமை’ என்கிற கருத்தை, இந்தி பேசாத மாநிலங்கள் ஏற்கத் தயாராக இல்லை. இதை, வட இந்தியா தன்னுடைய மொழியையும் கலாச்சாரத்தையும் தென்னிந்தியா மீது திணிப்பதற்கான முயற்சி என்றே அவை பார்க்கின்றன. ராஜாஜி இப்படிக் கூறியுள்ளார்: “(இந்தி தான் பெருமைக்குரியதா?) இந்த நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருக்கும் மக்களும் அவர்களுடைய மொழிகளும் இந்தியாவுக்குப் பெருமையில்லையா? வெற்றிகரமான ஜனநாயக வழிமுறைகளில்தான் நியாயம் இருக்கிறது, இதைப் புறக்கணிப்பது நாசத்துக்கே வழிவகுக்கும்”.

கையாண்ட காங்கிரஸ்

அரசின் தேசிய மொழிக் கொள்கையால் நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் உணர்ச்சிவசப்பட்டனர், அவரவர் மொழியைக் காக்க உணர்ச்சிகரமாகத் திரண்டனர், மொழி அடையாளத்தைக் காப்பதில் உறுதியாக இருந்தனர். இந்த விவகாரத்தில் இவ்வளவு எதிர்ப்பு ஏற்பட்டுவிட்டதே இந்தியக் கூட்டாட்சி இதைத் தாங்குமா, இந்தியா ஒரே நாடாக நீடிக்குமா என்றெல்லாம் சந்தேகங்கள் ஏற்பட்டன. மொழிப் போராட்டங்கள் உச்சம் பெற்றிருந்தாலும், மொழிவழி மாநிலப் பிரிவினைகள் நடந்து முடிந்தாலும் இந்தியா இன்னமும் கூட்டரசாகவே தொடர்வது மிகப் பெரிய அற்புதம்தான்.

இதில் அரசியல் சமரசம் ஏற்படப் பெருமளவு காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சி. தீவிரமான கோரிக்கைகளும் ஏற்கப்படவில்லை, தீவிரமான தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை. கட்சிகளின் மாநிலத் தலைவர்களேகூட இந்த மொழிப் போராட்டக்காரர்களின் அணிகளில் ஊடுருவி, கோரிக்கைகளை வலியுறுத்திய போதும் காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைவர்கள், பதற்றத்தைத் தணித்து சமரசத்தை ஏற்படுத்த தங்களுடைய திறமை, அனுபவம் ஆகிய அனைத்தையும் பக்குவமாகப் பயன்படுத்தினர். மொழிவழிக் கோரிக்கைகளால் ஏற்பட்ட கோபம் இருந்தாலும், தங்களை மத்திய அரசு ஒதுக்கிவிட்டது என்று போராட்டக்காரர்கள் ஒருபோதும் நினைத்துவிடாமல் அரவணைத்தது காங்கிரஸ் கட்சி.

(தொடரும்)

1997 ஆகஸ்ட் 15 ‘தி இந்து‘ சுதந்திரப் பொன் விழா சிறப்பு மலரில் வெளியான கட்டுரை

(ஹரீஷ் கரே, மூத்த பத்திரிகையாளர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகர்)

நன்றி: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

தமிழில்: வ. ரங்காசாரி



Read in source website