DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 04-01-2022

Important News, Editorials & Opinions published in Popular Daily Tamil Newspapers for TNPSC Exams and other Competitive Exams

 

சென்னை: கடலூா் மாவட்டம் வடலூரில் தோட்டக்கலைப் பூங்கா அமைப்பதற்கு ரூ.1 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இது தொடா்பாக வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ள உத்தரவு:

தோட்டக்கலைத் துறையின் கீழ் 24 பூங்காக்கள் தொடங்கப்படும் எனவும், அதில் கடலூா் மாவட்டம் வடலூா் பேரூராட்சியில் தொடங்கப்படும் பூங்காவுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, வடலூா் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 3.20 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டு பூங்கா அமைக்கப்படும்.

புதா்ச் செடிகள் அகற்றுதல், நிலம் சமன்படுத்துதல், வாகனங்கள் நிறுத்துமிடம், சிறுவா்கள் பூங்கா, மூலிகைச் செடிகள் நடுதல், நடைபாதைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி செலவிடப்படும். பூங்காவுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் எந்தவித கட்டுமானப் பணிகளும் செய்யக் கூடாது. திறந்த வெளியாகப் பயன்படுத்த வேண்டும்.

முன் அனுமதி வழங்கிய இடத்தில் 3 மாதங்களுக்குள் பணி தொடங்கப்படவில்லை எனில், நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.



Read in source website

கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்டோரின் உடலில், தடுப்பூசியின் செயல்திறன் 99.3 சதவீதமாக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக வெள்ளிக்கிழமை அளித்த பதில்:

கோவின் வலைதளம், தேசிய கரோனா பரிசோதனை புள்ளிவிவர தளம், கொவைட்-19 இந்தியா வலைதளம் ஆகியவற்றை ஒன்றிணைத்து கரோனா தடுப்பூசிகள் தொடா்பான விவரங்களை பின்தொடரும் வலைதளத்தை (கொவைட்-19 வேக்ஸின் ட்ராக்கா்) இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 12 முதல் இந்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் உயிரிழப்பதைத் தடுப்பதில் தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வை அந்த வலைதளம் விவரித்துள்ளது. அதன்படி, கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொண்டோரின் உடலில், தடுப்பூசியின் செயல்திறன் 99.3 சதவீதமாக உள்ளது என்று அந்த வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

அந்த வலைதளம் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு, கரோனா தடுப்பூசியின் ஒரு தவணையை மட்டும் செலுத்திக்கொள்ளும்போது அதன் செயல்திறன், இரண்டு தவணைகளையும் செலுத்திக்கொள்ளும்போது அதன் செயல்திறன் தொடா்பான விவரங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

மாநில அரசுகள் சமா்ப்பிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில், தடுப்பூசியின் செயல்திறன் தொடா்பான புள்ளிவிவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன என்று தெரிவித்தாா்.



Read in source website

பதிவுகளுக்கு (ட்வீட், போஸ்ட்) சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்கள் பொறுப்பேற்பதை அதிகரிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த பதில்:

நாடு முழுவதும் நிகழும் எந்தவொரு இணையவழி குற்றத்துக்கும் எதிராக நடவடிக்கை மேற்கொள்ள ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் குற்றங்கள் குறித்து மத்திய அரசின் வலைதளம் மூலம் புகாரளிக்கலாம். அந்தப் புகாா் சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடா்பாக அரசியலமைப்புக்குள்பட்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு என்னவென்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சில விசாரணை அமைப்புகள் அல்லது எனது குழு அனுப்பும் தகவலின் அடிப்படையில், மாநில அரசுகளின் சட்ட அமலாக்க அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்கின்றன.

‘புல்லிபாய்’ செயலி போன்றவை மிகவும் நுட்பமான விவகாரங்களாகும். பெண்களின் கண்ணியத்தை காக்க வேண்டும் என்பது மத்திய அரசின் அடிப்படை எண்ணமாகும். இது மத்திய அரசின் கடமை. இதில் மதம் அல்லது நாட்டின் எந்த பகுதியில் குற்றம் நடைபெற்றது என்று கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் எதிா்கால தலைமுறையினரின் நலன் கருதி பதிவுகளுக்கு சமூக ஊடகத்தை பொறுப்பேற்க வைப்பதில் சமநிலையையும், அரசியல்ரீதியான கருத்தொற்றுமையையும் கொண்டு வர வேண்டும். இதற்கு சமூக ஊடக விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும். அதுதொடா்பான நடவடிக்கையை மேற்கொள்ளும்போது மத்திய அரசு கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினால், அது தவறு.

நாம் ஒரு சமுதாயமாக முன்வந்து பதிவுகளுக்கு சமூக ஊடகங்களை பொறுப்பேற்க வைப்பதை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதில் நான் அனைவருடனும் உடன்படுகிறேன்.

இந்த விவகாரத்தில் புதிய திசையை நோக்கி அனைவரும் ஒன்றாக பயணிக்க வேண்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் கருத்தொற்றுமை ஏற்பட்டால், சமூக ஊடக விதிமுறைகளை தற்போதுள்ளதைவிட மேலும் கடுமையானதாக்க மத்திய அரசு தயாராகவுள்ளது. நமது குடிமக்களின் பாதுகாப்பு கருதி, அந்த விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை என்று தெரிவித்தாா்.



Read in source website

புது தில்லி: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தலைவராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் துணைவேந்தர் எம்.ஜெகதேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் ஜெகதேஷ் குமாரின் பதவிக்காலம் பாதிக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழகத்தின் செயல் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த நிலையில், அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்தது.

இந்நிலையில், "பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய தலைவராக ஜெகதேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்." இதனை மத்திய கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

2018 இல் யுஜிசி தலைவராக பொறுப்பேற்ற பேராசிரியர் டி.பி.சிங், 65 ஆவது வயதில் ராஜிநாமா செய்ததை அடுத்து, டிசம்பர் 7 ஆம் தேதி முதல் யுஜிசி தலைவர் பதவி காலியாக இருந்தது. 

தற்போது வரை உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணைய துணைத் தலைவர் பதவியும் காலியாக உள்ளது.



Read in source website


ஜெருசலேம்: ஒருவரின் உடலில், வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டிருப்பது, கரோனா பாதிப்பு தீவிரமடையவும், கரோனாவுக்கு பலியாகும் அபாயமும் அதிகம் இருப்பதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பொதுவாக, உடலில் வைட்டமின் டி குறைபாடு எலும்பு வளர்ச்சியை பாதிக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, வைட்டமின் டி குறைபாட்டால், உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறைவு, இதய நோய்கள், விரைவில் தொற்று நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலையின்போதே, சுகாதாரத் துறை சார்பில், கரோனா நோயாளிகளுக்கு வைட்டமின் டி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதற்குக் காரணம், கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் கிடைப்பதற்காகத்தான் என்பது தற்போது புரிய வந்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள பார்-இலன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், கரோனா பாதித்த நோயாளிகளில், வைட்டமின் டி குறைபாடு இருப்பவர்களுக்கு கரோனா தொற்று தீவிரமடையும் அபாயம் 14 மடங்கு அதிகமாக இருப்பதாகவும், வைட்டமின் டி மிகவும் குறைவாக இருப்பவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாகும் அபாயம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

அதாவது, வைட்டமின் டி போதிய அளவில் இருக்கும் கரோனா நோயாளிகளின் பலி விகிதம் 2.3 சதவீதமாகவும், வைட்டமின் டி பற்றாக்குறை நோயாளிகள் மரணமடையும் விகிதம் 25.6 சதவீதமாகவும் இருக்கிறது.

பிஎல்ஓஎஸ் ஒன்ற என்ற மருத்துவ இதழில், இந்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது.

எங்களது ஆய்வின் மூலம், ஒருவர் தேவையான அளவு வைட்டமின் டி இருக்குமாறு கவனித்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை ஒருவருக்கு கரோனா பாதித்தால், அவர்களுக்கு வைட்டமின் டி பெரிய உதவி புரியும் என்கிறார் இந்த ஆய்வுக் குழுவின் தலைவர் அமியெல் டிரோர்.



Read in source website


புது தில்லி: மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது தொடா்பாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பான கேள்விக்கு கலாசாரத் துறை இணையமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் எழுத்துமூலம் அவையில் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

இதுவரை 6 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இப்போது மராத்திக்கு அந்த அந்தஸ்தை அளிப்பது தொடா்பாக அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதற்காக மொழியியல் வல்லுநா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும். மராத்திய மொழியும், மாராத்திய வரலாறும் தேசத்துக்கு பெருமை சோ்ப்பதாக உள்ளது. செம்மொழி அந்தஸ்து வழங்கும் விஷயம் தொடா்பாக உள்துறை அமைச்சகம், கல்வி அமைச்சகம் ஆகியவற்றுடன் விவாதிக்க வேண்டிள்ளது. எனவேதான் இது தொடா்பாக முடிவெடுக்க அதிக காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றாா்.

நாட்டிலேயே தமிழுக்குத்தான் முதல் முதலில் 2004-ஆம் ஆண்டு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Read in source website

கிரிக்கெட் விளையாட்டில் ஒன் டே ஃபாா்மட்டில் 1000-ஆவது ஆட்டத்தில் களம் காணும் சாதனையை படைக்கிறது இந்திய அணி.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒன் டே தொடரின் முதல் ஆட்டத்தில் வரும் 6-ஆம் தேதி விளையாடுவதன் மூலம் இந்திய அணி இந்த மைல் கல்லை மகுடமாக தரித்துக்கொள்ள இருக்கிறது.

கடந்த 1974 முதல் ஒன் டே ஆட்டங்களில் பங்கேற்று வரும் இந்திய அணி தொடக்க காலத்தில் தடுமாறினாலும் பிறகு காலப்போக்கில் அந்த ஃபாா்மட்டிலும் சிறந்த அணியாக தன்னை உருமாற்றிக் கொண்டது இந்தியா.

ஐசிசி ஒன் டே தரவரிசையில் முதலிடம் பிடித்தது, இரு முறை உலகக் கோப்பையை வென்றது என தனது பெருமையை பறைசாற்றிக் கொண்டது. தற்போது 1000-ஆவது ஒன் டே ஆட்டத்தில் களம் காணும் முதல் அணி என்ற தனிச் சிறப்பையும் பெறுகிறது.

அந்த ஆட்டத்தில் இந்திய அணியை வழி நடத்தும் கேப்டனாக இருக்கும் பெருமையை ரோஹித் சா்மா பெற்றிருக்கிறாா். ஒன் டே ஃபாா்மட் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பிறகு இந்திய அணியை அவா் வழி நடத்த இருக்கும் முதல் ஆட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டம், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான, குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருப்பது கூடுதல் சிறப்பாகும். எனினும், கரோனா சூழல் கட்டுப்பாடு காரணமாக இந்த ஆட்டத்தை காண மைதானத்தில் ரசிகா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

முதல் ஆட்டம்

கடந்த 1974-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் ஒன் டே ஆட்டத்தை விளையாடிய இந்தியா, அதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 2 ஆட்டங்கள் கொண்ட அந்த முதல் தொடரையும் முழுமையாக இழந்தது.

1971

கிரிக்கெட் உலகின் முதல் ஒன் டே ஆட்டம் நடைபெற்றது, 1971-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மெல்போா்ன் நகரில் மோதிய இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

4000...

ஒன் டே ஃபாா்மட் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை, உலக அளவில் 28 அணிகளால் 4000-க்கும் அதிகமான ஒன் டே ஆட்டங்கள் விளையாடப்பட்டுள்ளன.

12 அணிகள்...

ஐசிசி தரவுப்படி, டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் 12 அணிகளுக்கு தான் ‘நிரந்தர ஒன் டே அணி’ என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய அணிகளுக்கு தற்காலிக அடிப்படையில் அந்த அந்தஸ்து அளிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா (1971)

இங்கிலாந்து (1971)

நியூஸிலாந்து (1973)

பாகிஸ்தான் (1973)

மேற்கிந்திய தீவுகள் (1973)

இந்தியா (1974)

இலங்கை (1982)

தென்னாப்பிரிக்கா (1991)

ஜிம்பாப்வே (1992)

வங்கதேசம் (1997)

ஆப்கானிஸ்தான் (2017)

அயா்லாந்து (2017)



Read in source website

 

2023 முதல் மகளிர் ஐபிஎல் தொடங்க வாய்ப்புள்ளது என்று பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியுள்ளார்.

மகளிருக்கான ஐபிஎல் போட்டி இன்னும் தொடங்காத நிலையில் பெங்கால் கிரிக்கெட் சங்கம், மகளிர் டி20 போட்டியை இம்மாதம் நடத்தவுள்ளது. பெங்கால் மகளிர் டி20 பிளாஸ்ட் என்கிற பெயரில் மகளிர் டி20 போட்டி மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான 90 வீராங்கனைகள் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதையடுத்து மகளிர் ஐபிஎல் போட்டியை பிசிசிஐ தொடங்காதது ஏன் எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஐபிஎல் போட்டியின் போது நடைபெறும் மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்கள் பற்றி கங்குலி ஒரு பேட்டியில் கூறியதாவது: மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்கள் இந்த வருட மே மாதம் நடைபெறும். வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது வருங்காலத்தில் மகளிர் ஐபிஎல் போட்டி நடைபெறும். ஐபிஎல் பிளேஆஃப்பின்போது மகளிர் டி20 சேலஞ்ச் ஆட்டங்கள் நடைபெறும் என்றார்.

மகளிர் ஐபிஎல் தொடங்குவது பற்றி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கங்குலி கூறியதாவது:

முழு மகளிர் ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான பணிகளில் இறங்கியுள்ளோம். அது நிச்சயம் நடைபெறும். மகளிர் ஐபிஎல் போட்டியை அடுத்த வருடம் தொடங்குவது சரியாக இருக்கும். அது நிச்சயம் ஐபிஎல் போட்டியைப் போல பெரிய வெற்றியை அடையும் என்றார்.      
 



Read in source website

 

புது தில்லி: சீனாவில் வெள்ளிக்கிழமை தொடங்கும் குளிா்கால ஒலிம்பிக்கின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகளை இந்திய தூதா் புறக்கணிப்பாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வான் மோதலில் ஈடுபட்ட ராணுவ அதிகாரியை ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்ல சீனா தோ்வு செய்ததற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பக்சி வியாழக்கிழமை கூறுகையில், ‘ஒலிம்பிக் போன்ற நிகழ்வை அரசியலாக்க சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஒலிம்பிக்கின் தொடக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகளை இந்திய தூதா் புறக்கணிப்பாா்’ என்றாா்.

சீனாவுக்கான இந்திய தூதராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதீப் குமாா் ராவத் இன்னும் பதவியேற்கவில்லை.

24-ஆவது குளிா்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடக்க விழா சீனாவில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதில் கல்வானில் இந்திய படையினருடனான மோதலில் ஈடுபட்ட சீன ராணுவ கமாண்டா் கி ஃபாபோ ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்ல தோ்வு செய்யப்பட்டுள்ளாா். கல்வான் தாக்குதலில் கி ஃபாபோவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்லும் 1,200 வீரா்களில் கமாண்டா் கி ஃபாபோ ஒருவராக உள்ளாா்.

ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கா் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, குளிா்கால ஒலிம்பிக் போட்டியை தூதரக ரீதியில் புறக்கணிப்பு செய்வதாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. தற்போது இந்தியாவும் தூதரக புறக்கணிப்பு செய்வதாக தெரிவித்துள்ளது.

கல்வான் தாக்குதலில் ஈடுபட்ட சீன ராணுவ வீரரை ஒலிம்பிக் போட்டி விழாவில் ஈடுபடுத்துவது தவறான தகவலை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தும் என்று இந்தியா கருதுகிறது.

இதனிடையே, 2020-இல் நடைபெற்ற கல்வான் தாக்குதலில் சீனாவின் 5 போா் வீரா்கள் மட்டும் உயிரிழந்ததாக அந்நாடு கூறுவது தவறு என்றும், ஏராளமானோா் கல்வான் நதியில் மூழ்கி இருக்கிறாா்கள் என்றும் ஆஸ்திரேலியே நாளிதழ் வெளியிட்டிருந்த செய்தி குறித்து பதிலளிக்க அரிந்தம் பாக்சி மறுத்துவிட்டாா்.



Read in source website

 

கான்பெரா: மகளிா் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒன் டே ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிா் அணி ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.

கான்பெராவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 45 ஓவா்களில் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மகளிா் ஆஷஸ் தொடரானது டி20, டெஸ்ட், ஒன் டே என 3 ஃபாா்மட் ஆட்டங்களையும் உள்ளடக்கியதாக நடைபெறுகிறது. நடப்பு ஆஷஸ் தொடா் 3 டி20 ஆட்டங்கள், ஒரு டெஸ்ட் ஆட்டம், 3 ஒன் டே ஆட்டங்களுடன் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெல்ல, 2-ஆவது ஆட்டத்தில் மழை காரணமாக முடிவு எட்டப்படாமல் போனது. 3-ஆவது ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. பின்னா் நடைபெற்ற ஒரே டெஸ்ட் டிரா ஆனது.

இதையடுத்து வியாழக்கிழமை நடைபெற்ற முதல் ஒன் டே ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் நடப்பு ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 8-4 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. எஞ்சிய இரு ஒன் டே ஆட்டங்களில் இங்கிலாந்து வென்றாலும் தொடரை சமன் செய்யவே இயலும். இந்த ஆஷஸ் தொடரை வெல்ல 3 ஒன் டே ஆட்டங்களிலும் இங்கிலாந்து வெல்வது கட்டாயமாக இருந்தது.

கடந்த 2013-14 காலகட்டம் முதல் மகளிா் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியா வசமே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.



Read in source website

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் 1,800 ஆண்டுகள் பழைமைவாய்ந்த 400-க்கும் மேற்பட்ட பௌத்த கலைப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக அந்த மாகாண தொல்லியல் துறை இயக்குநா் அப்துஸ் சமத் கூறுகையில், ‘‘பாபு தேரி கிராம பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. இதுவரை பௌத்த சமயத்தைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட கலைப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அவற்றைப் பராமரிப்பதற்கான அதிகாரபூா்வ பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. அகழாய்வு நடைபெற்ற இடங்களை சுற்றுலாத் தலமாக மாற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றாா்.

கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பல்வேறு தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த டிசம்பரில் பௌத்த சமயத்தைச் சோ்ந்த 2,300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த வழிபாட்டுத் தலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது. அதுவே பாகிஸ்தானில் உள்ள பழைமைவாய்ந்த பௌத்த வழிபாட்டுத் தலமாக அறியப்படுகிறது.



Read in source website

 

இந்தியாவில் செல்லிடப்பேசி ரீசார்ஜ் கட்டண உயர்வே சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாகத் திகழும் முகநூல் பக்கம், முதல் முறையாக சரிவை எதிர்கொள்ளக் காரணம் என்று மெட்டா தெரிவித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மெட்டா என்று பெயரிடப்பட்டிருக்கும் முகநூல் நிறுவனம், லாபத்தில் 8 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது அந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 18 ஆண்டுகளில் சந்திக்கும் முதல் வீழ்ச்சி.

முகநூல் பயனாளர்களின் எண்ணிக்கையில், கடந்த காலாண்டில் சரிவு ஏற்பட்டதே இதற்குக் காரணம். ஆசிய - பசிபிக் நாடுகள் மற்றும் உலகின் இதர நாடுகளிலும் கரோனா பாதிப்பு அதிகரித்ததும், பயனாளர்களின் எண்ணிக்கைக் குறைந்ததற்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படும் அதே நிலையில், இந்தியாவில், இணையப் பயன்பாட்டுக்கான செல்லிடப்பேசி கட்டணங்கள் கடந்த டிசம்பரில் உயர்த்தப்பட்டதும், காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதத்தில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறவனங்கள் அனைத்தும், செல்லிடப்பேசி ரீசார்ஜ் கட்டணத்தை 18 முதல் 25 சதவீதம் உயர்த்தி அறிவித்தன. இந்த நிலையில்தான், டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற்ற காலாண்டில், மெட்டாவின் லாபம் 8 சதவீதம் அதாவது இந்திய ரூபாயில் ரூ.76,800 ஆகக் குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதேக் காலாண்டில் ரூ.83,800 கோடியாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், போட்டி நிறுவனங்களின் பயனாளர்கள் அதிகரிப்பு, ஆப்பிள் ஃபோன்களில் தனிநபர் விதிகளில் மாற்றம் போன்ற காரணிகளால் முகநூல் பயனாளர்களின் வருகை குறைந்திருப்பதாக மெடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
 



Read in source website

 

புது தில்லி: உலகம் முழுவதும் 221 நாடுகளுக்கு கரோனா தொற்று பரவி தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், இதுவரை தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கையில் இந்தியா 5 லட்சம் இறப்புகளைக் கடந்து, அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து மூன்றாவது நாடாக உள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தி வந்தாலும் உருமாற்றம் அடைந்து தொற்று பரவலால் பாதிப்பு அதிகரித்தே வருகின்றன. 

இந்தியாவில் 2021 ஜூலை 1 ஆம் தேதி 4 லட்சத்தில் இருந்த இறப்பு எண்ணிக்கை 217 நாள்களுக்கு பிறகு 5 லட்சத்தை எட்டியது. சுமார் 8 மாதங்களை கடந்து ஒரு லட்சம் இறப்புகளை பதிவு செய்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் பேரழிவு தரும் இரண்டாவது அலையால் இந்தியா பாதிக்கப்பட்டது.

மே 23 ஆம் தேதி இறப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தையும், ஏப்ரல் 27 ஆம் தேதி இரண்டு லட்சத்தையும் தாண்டியது.

2020 அக்டோபர் 2 ஆம் தேதி இறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது.

தற்போது தினசரி 1,072 இறப்புகளுடன் மொத்த இறப்புகள் 5,00,055 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்பு மற்றும் இறப்புகள் கொண்ட நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 7,71,50,412 ஆகவும், பலி எண்ணிக்கை 9,20,829 ஆகவும் உயர்ந்துள்ளது. 

அதைத் தொடர்ந்து தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,60,99,735 ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 6,30,001 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

தொடர்ந்து தொற்று பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருந்து வரும் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 41,952,712    -ஆகவும், பலிகளைப் பொருத்தவரை 5,00,087 பேருடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதையும் படிக்க | மத்திய அரசுத் துறைகளில் 8.72 லட்சம் காலிப் பணியிடங்கள்: மத்திய அரசு தகவல்

உலக அளவில் கரோனா பாதிப்பு, பலி தரவுகளை தொகுத்து வரும் வேர்ல்டோமீட்டர்களின் தரவுகளின் படி, இந்தியா தற்போது அதிக அளவில் பரவக்கூடிய உருமாற்றம் அடைந்து வரும் ஒமைக்ரான் வகை தொற்று பாதிப்பால் மூன்றாவது அலையை எதிர்கொண்டுள்ளது. 

இருப்பினும், நிபுணர்களின் கூற்றுப்படி, இரண்டாவது அலையுடன் ஒப்பிடுகையில் இது பெரும்பாலும் குறைந்த அளவிலான பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது. 

தொற்றுநோய் நிலைமை மேம்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து கவலைக்குரிய மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இருந்து வந்தாலும், ஒட்டுமொத்தமாக கரோனா நோய்த்தொற்றின் பரவல் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

செய்தியாளர் கூட்டம் ஒன்றில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் உள்ளிட்ட 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாரந்தோறும் தொற்று பாதிப்பு மற்றும் பாதிப்பு விகிதம் குறைந்து வருவதாகவும், கேரளம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாரந்திர தொற்று பாதிப்பு குறைந்து வருவதாகக் கூறினார். 

மேலும் தினசரி கரோனா பாதிப்பி, தினசரி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மற்றும் தினசரி நேர்மறை விகிதம் ஆகியவற்றில் நிலையான சரிவைக் கண்டுள்ளது, இது நோய்த்தொற்றின் பரவல் குறைந்து வருவதையே குறிக்கிறது.

தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து தொற்று இறப்பு விகிதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அகர்வால் கூறினார்.



Read in source website

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை கலவையான விமரிசனங்களை பெற்றுவந்தன. மூலதன செலவு மற்றும் கதி சக்தி திட்டம் இந்தியாவில் உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வழிவகுக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், இது முதலாளித்துவத்திற்கு ஆதரவாக உள்ளதாகவும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை என பொருளாதார ஆய்வறிஞர்கள் விமரிசித்தனர்.

இந்நிலையில், இந்தியாவின் நிதிநிலை அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள சர்வதேச நிதியம், இது சிந்தனை மிக்க கொள்கை திட்டம் எனக் கூறியுள்ளது.

இதுகுறித்து விரிவாக பேசிய சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, "மனித மூலதன முதலீடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கலில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் புதுமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தியாவிற்கு மிகவும் வலுவான வளர்ச்சியை நாங்கள் கணித்து வருகிறோம். 

ஆம், 2022 ஆம் ஆண்டிற்கான எங்கள் முந்தைய கணிப்புக்கு எதிராக 9.5 சதவீதத்திலிருந்து 9 சதவீதத்திற்கு சிறிய தரமிறக்கம் உள்ளது. ஆனால், 2023 ஆம் ஆண்டிற்கான ஒரு சிறிய மேம்படுத்தலும் உள்ளது. ஏனெனில், நிலையான வளர்ச்சியைக் காண்போம் என்று நாங்கள் நினைக்கிறோம். 

கோவிட்-19 தொற்று காலத்தில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்கள். அதேபோல, தொற்றுநோய் தொடர்ந்து இருந்தால், தெளிவான முன்னோக்கி வழிகாட்டுதலின் மூலம் விவேகமான முறையில் நிதி நிலைமைகளை இறுக்குவது உள்பட பல காரணிகளின் மீது நிபந்தனை விதிக்கப்படும். 

இதுவரை, நாம் பார்ப்பது என்னவென்றால், நிதி நிலைமைகளின் இறுக்கம் வளர்ந்து வரும் சந்தைகளுக்கு ஒரு பெரிய பிரச்னையாக மாறவில்லை. முந்தைய காலகட்டங்களுடன் ஒப்பிடுகையில், விகிதங்களின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இல்லை. 

ஏன்? வளர்ந்து வரும் சந்தைகளுக்கு இது போன்ற கடினமான சூழ்நிலைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதும் பலப்படுத்த வேலை செய்திருப்பதாலும், பணவீக்க அழுத்தங்களை எதிர்கொண்டவுடன் அவர்களில் பலர் விவேகமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாலும் பெரிய பிரச்னையாக மாறவில்லை.

இந்தியா குறுகிய காலப் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது. நீண்ட கால கட்டமைப்பு மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இருப்பினும், மனித மூலதன முதலீடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கலில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் புதுமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், நாங்கள் மிகவும் சாதகமாக இருக்கிறோம். பொருளாதாரக் கருவிகளைப் பயன்படுத்தி பருவநிலை மாற்ற நிகழ்ச்சி நிரலை இந்தியா எவ்வாறு முடுக்கிவிடலாம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்" என்றார். 


 



Read in source website

 

நாம் பென்: கம்போடியாவில் நடைபெறவிருக்கும் தெற்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) மாநாட்டில் பங்கேற்க மியான்மருக்கு அழைப்பு விடுக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மா் தோ்தலில் முறைகேடு நடைபெற்றாதக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த ஆண்டு அகற்றியது. இதனை எதிா்த்து போராட்டம் நடத்திய 1,500-க்கும் மேற்பட்டவா்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதற்கு சா்வதேச நாடுகள் எதிா்ப்பு தெரிவித்து வரும் சூழலில், வரும் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஆசியான் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் மியான்மா் புறக்கணிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: சென்னை பெருநகர காவலில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், அடையாறு, தி.நகர், பரங்கிமலை, அண்ணாநகர், புளியந்தோப்பு, அம்பத்தூர் ஆகிய 12 காவல் மாவட்டங்கள் இருந்தன.

இந்நிலையில், சென்னை பெருநகர காவல் துறையைப் பிரித்து, தாம்பரம், ஆவடி என புதிதாக 2 காவல் ஆணையரகங்கள் அண்மையில் உருவாக்கப்பட்டன.

தற்போது சென்னை காவல் ஆணையரகத்தின் கீழ் 104, ஆவடியில் 25, தாம்பரத்தில் 20 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. மேலும், மத்திய குற்றப் பிரிவு, போக்குவரத்து, உளவுப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன.

ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு, சென்னையில் இருந்து 20 காவல் நிலையங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, சென்னை காவல் எல்லையை புதிதாக வரையறை செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை காவல் எல்லையில் உள்ள மாதவரம் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட 6 காவல் நிலையங்கள், ஆவடிக்குச் சென்றுவிட்டன. மாதவரம், புழல் ஆகிய இரு காவல் நிலையங்கள் மட்டுமே சென்னை போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே, கூடுதலாக ராஜமங்கலம், வில்லிவாக்கம், புளியந்தோப்பு காவல் மாவட்டங்களில் உள்ள பெரவள்ளூர், செம்பியம், திரு.வி.க நகர் காவல் நிலையங்களை உள்ளடக்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற தொகுதியான கொளத்தூர் பெயரில் புதியகாவல் மாவட்டம் உருவாக்குவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

வட சென்னையில் உள்ள புளியந்தோப்பு காவல் மாவட்டத்தை குற்றச் செயல்கள் கணிசமாக நடைபெறும் பகுதியாக போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். எனவே, இந்தப் பகுதியில் குற்றச் செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், புளியந்தோப்பு, பேசின்பாலம், ஓட்டேரி, வியாசர்பாடி, எம்.கே.பி. நகர், கொடுங்கையூர் ஆகிய 6 காவல் நிலையங்களை மட்டுமே வைத்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதேபோல, கோயம்பேடு காவல் மாவட்டம் என்ற பெயரில் அண்ணா நகர், அரும்பாக்கம், கோயம்பேடு, சிஎம்பிடி உள்ளிட்ட 8 காவல் நிலையங்களைக் கொண்டுஉருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆவடி, தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஒரு காவல் ஆணையர், 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 2 இணை ஆணையர்கள், 3 துணை ஆணையர்கள் மற்றும் தாம்பரத்துக்கு கூடுதலாக ஒரு துணை ஆணையர் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், புதிதாக உருவாக்கப்பட்ட இந்த 2 காவல் ஆணையர் அலுவலகங்களும் அடுத்த மாதம் முதல் முழு அளவில் செயல்படும் என்றும் காவல் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Read in source website

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாவை, தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு எதிராக இருப்பதால் இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை... > நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தகுதித் தேர்வை கட்டாயமாக்கி மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் கடந்த 2017-ல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வு காரணமாக கிராமப்புறத்தில் உள்ள ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோவதாகவும், அதனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதை வலியுறுத்தி தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

> கடந்த 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கவில்லை.

> குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காததை அடுத்து, கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

> கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவை பொதுத்தேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய முதல் சட்டப்பேரவை கூட்டத்திலேயே சட்டம் இயற்றப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, திமுக அரசு பொறுப்பேற்றதும், நீட் தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு பொதுமக்கள், கல்வியாளர்கள் உட்பட 86,342 பேரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்து, விரிவான பரிந்துரைகளை கடந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி அரசுக்கு அளித்தது.

> எம்பிபிஎஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளில் உள்ள பலதரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு குறைத்துள்ளது. எனவே, 2006-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை சட்டத்தை போன்றதொரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறலாம் என்று குழுவின் பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

> கடந்த ஆண்டு செப்.13-ம் தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதில், மருத்துவ இளநிலை படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கும் இடங்கள் ஆகியவற்றுக்கு 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்பட்டிருந்தது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையை மேற்கொள்ளவும் இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

> குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவதற்காக அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்தார். இதனால், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், சட்ட முன்வடிவு அனுப்பப்படாமல் இருந்தது. இதையடுத்து, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயன்றனர். ஆனால், அவர் நேரம் ஒதுக்காமல் காலம் தாழ்த்தினார்.

> இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, அடுத்தகட்ட சட்டப் போராட்டம் குறித்து முடிவெடுக்க சட்ட வல்லுநர்களின் கருத்துகளை பெறுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த எம்.பி.க்கள் குழு, நீட் தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை முன்வைத்தது.

> நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து வந்த நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி தமிழக அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு எதிரானது: ஆளுநர் கருத்து இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இளநிலை மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மற்றும் அதற்கு அடிப்படையான மாநில அரசின் உயர்மட்டக் குழு அறிக்கை ஆகியவற்றை ஆளுநர் விரிவாக ஆய்வு செய்தார்.

சமூக மற்றும் பொருளாதாரத் தில் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் மருத்துவக் கல்வியில் சேர நீட் தேர்வுக்கு முந்தைய நிலையில் இருந்த சமூகநீதி தொடர்பாகவும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார். விரிவான ஆய்வுகளுக்கு பிறகு இந்த மசோதா, மாணவர்களின் நலன் குறிப்பாக, கிராமங்களைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்ற முடிவுக்கு வந்துள்ளார். எனவே, அந்த மசோதாவை தமிழக அரசுக்கு கடந்த பிப்.1-ம் தேதி திருப்பி அனுப்பியுள்ளார். மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டு, அதற்கான விரிவான காரணங்களையும் தெரிவித்துள்ளார்.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மத்திய அரசு இடையிலான வழக்கில், சமூகநீதி தொடர்பான கோணத்தில் விரிவான ஆய்வை உச்ச நீதிமன்றம் நடத்தியது. அதன்பின் ஏழை மாணவர்களின் பொருளாதார நிலையால் அவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைக்காமல் இருப்பதை தடுக்கவும், சமூக நீதிக்காகவுமே நீட் தேர்வை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கதாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அடுத்தகட்ட நகர்வு: ‘நீட்’ தேர்வு தொடர்பான சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவை அனைத்துக் கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதா, குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசுக்கு அனுப்பப்படாத நிலையில், மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர் கடந்த பிப்.1-ம் தேதி சட்டப்பேரவை தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிட்டு, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மசோதா கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானதாக இருப்பதாகவும், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வழக்கில் நீட் தேர்வை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகவும், நீட் தேர்வு சமூகநீதியை பாதுகாப்பதாகவும், ஏழை மாணவர்கள் சுரண்டப்படுவதை தடுப்பதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நீட் தேர்வானது, ஏழை கிராமப் புற மாணவர்களுக்கு எதிரானதாக வும், பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது என்பதிலும், இத்தேர்வு அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை முறை சமூகநீதிக்கு எதிரானது என்பதிலும் அனைவருக்கும் கருத்தொற்றுமை உள் ளது.

இதன் அடிப்படையில்தான், நீட் தேர்வு முறையால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதை களையும் வகையில், சரியான மாற்று சேர்க்கை முறை குறித்து பரிந்துரைக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகள் அடிப் படையிலேயே சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப் பட்டது.

இந்நிலையில், இந்த மசோதா கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்றும், ஏ.கே.ராஜன் குழு தெரிவித்துள்ள, இச்சட்டத்துக்கு அடிப்படையான கூற்றுகள் தவறானவை என்றும் ஆளுநர் தெரிவித்துள்ள கருத்து கள் தமிழக மக்களால் ஏற்கத் தக்கவை அல்ல.

எனவே, ஆளுநர் தெரிவித் துள்ள கருத்துகளை ஆராய்ந்து நீட் தேர்வு பற்றிய உண்மை நிலையை தெளிவாக விளக்குவதுடன், மீண்டும் சட்டப்பேரவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற் கான முயற்சிகளை அரசு முன் னெடுக்கும்.

இதுகுறித்து எடுக்கப்பட வேண் டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பிப்.5-ம் தேதி (நாளை) காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்ட அரசு முடிவெடுத்துள்ளது என்று அவர் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிரொலி: நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். விவாதத்துக்கு அவைத் தலைவர் அனுமதியளிக்காத நிலையில், அவையில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: தேர்தலுக்கு முன்பு நீட் தேர்வு ரத்து குறித்து அன்றாடம் பேசிக் கொண்டிருந்த திமுக, தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்தவுடன் அதற்காகக் குழுவை அமைத்து காலம் கடத்தி நான்கு மாதங்கள் கழித்து சட்டமுன்வடிவை தமிழக சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அது இப்போது திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறது. இதற்குக் காரணம் சரியான தரவுகளையும், கருத்துக்களையும், ஆளுநரிடம் எடுத்துரைக்காததுதான். 2010ம் ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோதே, மத்திய காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை திமுக விலக்கிக் கொண்டிருந்தால் இன்று 'நீட்' என்ற பிரச்சனையே வந்திருக்காது. திமுகவின் செயல்பாடு தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல் அமைந்துள்ளது. எப்படியாவது ஆட்சியில் ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற திமுகவின் சுயநலத்தால் இன்று ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கை இன்னும் மூன்று நான்கு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், திமுகவின் பேச்சை நம்பி தவறுதலாக வாக்களித்து விட்டோமே என்ற நினைப்புதான் மக்களிடம் மேலோங்கி நிற்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் கவனம் செலுத்துவதா அல்லது பயிற்சி நிலையங்களுக்குச் சென்று நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் கவனம் செலுத்துவதா என்று புரியாமல் மாணவ, மாணவியர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வினை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக வளர்ச்சிக்கும், தமிழக அரசுக்கும் தடையாக ருப்பார் என ஏற்கெனவே தெரிவித்தேன். நீட் தேர்வு விலக்குமசோதாவை திருப்பி அனுப்பியுள்ளது கண்டிக்கத்தக்கது. மாநில அரசு சொல்வதை மத்திய அரசுக்கு அனுப்புவதுதான் ஆளுநரின் கடமை. இந்த மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளதை மக்கள் ஏற்கமாட்டார்கள். அரியலூர் மாணவி இறப்பில் பாஜக அரசியல் செய்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது தமிழக மக்களின் உணர்வுக்கு எதிரானது. ஆளுநரின் இந்த அணுகுமுறை சமூக நீதி கேட்கும் மக்களை ஆத்திரமூட்டும். கூட்டாட்சி கோட்பாட்டை மதித்து நடக்கும் தமிழக அரசின் மீது மோதல் போக்கை உருவாக்கும் ஆளுநரின் அத்துமீறலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிவன்மையாக கண்டிக்கிறது. தமிழக மாணவர்களின் நலனையும், சமூகநீதிக் கொள்கை நடைமுறையையும் உறுதி செய்ய தமிழக அரசு மீண்டும் மசோதாவை ஆளுநருக்கு அனுப்பிவைக்க வேண்டும்

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி: நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது துரதிருஷ்டவசமானது. நீட் விலக்கு சட்டம் கிராமப்புற, ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்று ஆளுநர் கருத்து தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆளுநரின் நிலைப்பாடு சமூகநீதிக்கு எதிரானது. எனவே, சட்டப்பேரவையை அவசரமாக கூட்டி, திருத்தங்களுடனோ, திருத்தமின்றியோ சட்டத்தை நிறைவேற்றி, ஆளுநருக்குஅனுப்ப வேண்டும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டும். குடியரசுத் தலைவரிடமும் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே. வாசன்: நீட் தேர்வு தொடர்பான முடிவால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது. நீட் தேர்வு மசோதாவை மீண்டும்ஆளுநருக்கு அனுப்பி, அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவு ஏற்படுத்த வேண்டும். அல்லது நீட் தேர்வு சம்பந்தமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தெளிவு கிடைக்க வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையை நிராகரிப்பதற்கு ஒப்பாகும்.ஆளுநரின் முடிவு ஜனநாயகத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் செயல்படும் தமிழக ஆளுநர் வி.என்.ரவியை மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும்.

சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: ஏறத்தாழ 4 மாதங்கள் காலதாமதம் செய்து, மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் செயல் அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்த ஆளுநர் முயல்கிறாரோ என சந்தேகம் ஏற்படுகிறது. மக்களின் உணர்வுகளுக்கு எதிரான ஆளுநரின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும்,கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்காத ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் கட்சி மாநிலச் செயலர் முரளி அப்பாஸ்: நீட் மசோதாவை திருப்பி அனுப்பியதன் மூலம் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வை ஆளுநர் அவமதித்து விட்டார். ஆளும் கட்சிக்கெதிரான மோதல் போக்கை,மக்களுக்கு எதிரான மோதல் போக்காக மாற்றி தமிழகத்தின் கோபத்துக்கு ஆளுநர் ஆளாக வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

பாஜக புறக்கணிப்பு: நீட் விலக்கு மசோதா தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட நாளை (பிப்.5) சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இந்தக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

இந்தியாவில் காணப்படும் கடல் ஆமை இனங்களில் அபூர்வ மானது ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமைகள். இந்த ஆமைகள் புதுச்சேரி, கடலூர், மரக்காணம் உள்ளிட்ட கடலோர பகுதிக்கு ஆண்டுதோறும் நவம்பர் முதல் மே மாதம் வரையிலான காலங்களில் முட்டையிட வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

அதேநேரத்தில், இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக மீன்படி படகு இன்ஜின்கள், கைவிடப்பட்ட வலைகளில் சிக்கி இறக்கின்றன. கடந்த நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை 40 ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.

இந்நிலையில் கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு பகுதியில் பழைய மீன்பிடி வலையில் சுமார் 30 கிலோ எடை கொண்ட ஆலிவ் ரிட்லி ஆமை ஒன்று சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் கரை ஒதுங்கியது. இதைக்கண்ட அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் ஆமையை வலையில் இருந்து விடுவித்து, அதனை உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். இது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய செய்தது.

‘‘மனிதர்கள் அன்றாட தேவைக்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், கைவிடப்பட்ட வலைகளை கடலில் கொட்டுவதன் மூலம் கடல்வாழ் உயிரினங்கள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகின்றன. ஆகவே தேவையற்ற பிளாஸ்டிக் குப்பைகள், கைவிடப்பட்ட மீன் வலைகளை கடலில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்’’ என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.



Read in source website

புதுடெல்லி: ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஹைதராபாத் எம்.பி.யும், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாஜர்சி டோல் பிளாசா அருகே அவரது வாகனத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று நான்கு ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒவைசி சென்ற காரின் டயர்கள் பஞ்சர் ஆகின.

இந்த சம்பவத்துக்குப் பின்னர் டோல் பிளாசா அருகே அந்தக் காரை விட்டுவிட்டு, ஒவைசி மற்றொரு காரில் டெல்லிக்கு தனது பயணத்தைத் தொடர்ந்தார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அசாதுதீன் ஒவைசி தொடர்ந்து இந்து மதத்தை விமர்சித்துப் பேசுகிறார். அவரின் இந்து விரோத பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவரது வாகனத்தைச் சுட்டதாக கைதான இருவரும் போலீஸில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஒவைசிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அவருக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதன்படி, ரிசர்வ் போலீஸ் படையின் ஆயுதம் தாங்கிய 45 கமாண்டோக்கள் 24 மணி நேரமும் அவரது வீட்டிலும், அவர் செல்லும் இடங்களிலும் பாதுகாப்பு அளிக்கவுள்ளனர்.



Read in source website

புதுடெல்லி: தூர்தர்ஷனின் குடியரசு தின ஒளிபரப்பு உலகளவில் பிரபலமானது. குடியரசு தின நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் யூடியூபில் பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து 2.6 கோடியாக உள்ளது.

இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரம்மாண்டமான விழாக்களில் அனைத்துக் கோணங்களிலும் ஒளிபரப்புவதில் தூர்தர்ஷனுக்கு இணை இல்லை என்பது கடந்த காலத்தில் நன்கு நிறுவப்பட்டுள்ளது. 2022 குடியரசு தினத்தில் இந்திய விமானப்படையின் அணிவகுப்பை முழுமையான பெருமையோடு முன் எப்போதும் காண இயலாத காட்சிகளுடன் தூர்தர்ஷன் ஒளிபரப்பி தனது திறனை மீண்டும் நிறுவியுள்ளது.

தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை காண்போரின் வகைமையில் மாற்றம் இருப்பதன் அறிகுறியாக இதன் அலைவரிசைகளின் நிகழ்ச்சிகளைக் காண்போர் எண்ணிக்கை 2.3 கோடியாக இருக்கும் நிலையில், குடியரசு தின நிகழ்ச்சிகளை யூடியூபில் பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து 2.6 கோடியாக உள்ளது.

தூர்தர்ஷனில் காலை 9.30 மணியிலிருந்து, நண்பகல் வரை நாடு முழுவதும் உள்ள 180-க்கும் அதிகமான அலைவரிசைகளில் மொத்தம் 3.2 பில்லியன் தொலைக்காட்சி பார்வையிடும் நிமிடங்களாக காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

இதன் மூலம் உலகளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க குடியரசு தின நிகழ்ச்சிகளை தூர்தர்ஷனில் காண்போரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சௌதி அரேபியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 140-க்கும் அதிகமான நாடுகளில் இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி உள்ளன.

இவ்வாறு தெரிவித்துள்ளது.



Read in source website

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரை மீதான விவாதம் தொடர்கிறது. இதில் பங்கேற்ற திமுக எம்.பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஆங்கிலேயரை எதிர்த்த முதல் வீரமங்கை வேலுநாச்சியார் என ஆவேசமாகத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்திடரில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பியான டி.ஆர்.பாலு உரை நிகழ்த்தினார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் திமுகவின் மூத்த எம்.பியான பாலு பேசியதாவது:

எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தமிழகம் பெயர்போனது. இருப்பினும், ஒருசில பெயர்களை மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன். அரசி வீரமங்கை வேலுநாச்சியார், பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக ஐந்தாயிரம் வீரர்களுடன் போர் தொடுத்தார்.

அந்தப் போரில் வெற்றியும் பெற்றார். இவர்தான் இந்தியாவிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி. இந்த நிகழ்ச்சி 1780இல் அதாவது, ஜான்சி ராணி வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடிய நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது.

ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போர் நடத்தி அந்தப் போரிலே வெற்றியும் கண்டார். குடியரசு தின அணிவகுப்பில் இந்த வீரமங்கையின் திருவுருவச் சிலை வைக்கப்பட்ட ஊர்தியை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தது.

ஆனால், மத்திய அரசு அந்த ஊர்தியை நிராகரித்துவிட்டது. மகாகவி பாரதியாரின் கவிதைகள், சுதந்திரப் போராட்ட நாட்களில் நீரையும் தீப்பற்ற வைக்கும் ஆற்றலுடன் இருந்தது.

அவரது திருவுருவச் சிலையும் அந்த ஊர்தியிலே இடம் பெற்றிருந்தது. இதுவும் மறுக்கப்பட்டது. அதைப்போல புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையே ஆங்கிலேயருக்கு எதிராக வணிகக் கப்பல்களை ஓட்டியவர்.

அவரது திருவுருவச் சிலையும் இடம்பெற்ற அந்த ஊர்திக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. தேர்வுக் குழுவில் இருந்த ஒரு உறுப்பினர் வ.உ.சி. என்ன வியாபாரியா? என்று கேட்டிருக்கிறார்.

சுதந்திரப் போராட்டம் பற்றி எந்த அறிவும் இல்லாதவர்களைக் கொண்டு இந்த தேர்வுக் குழு அமைக்கப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் நான் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகின்றேன்.

வீரமங்கை வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களை இவர்கள் ஏற்காமல் இருக்கலாம். ஆனால், மத்திய அரசு ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் இதே ஊர்தியை சென்னையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கச் செய்தார். மக்கள் அந்த ஊர்தியை கண்டு பாராட்டியதோடு மட்டுமல்லாமல், இந்த மாபெரும் சுதந்திரப் போராட்ட நாயகர்களின் வீரத்தை, தியாகத்தினைக் கண்டு உணர்ச்சியூட்டப் பெற்றனர்.

இவர்களைப்போல் பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களின் திருவுருவத்தைத் தாங்கிய ஊர்தியும் சென்னை அணிவகுப்பிலே பங்கேற்றன. இதில் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெருமை இடம் பெற்றன.

இப்பட்டியலி, தந்தை பெரியார், காமராசர், ராஜாஜி, முத்துராமலிங்கத் தேவர், கக்கன், வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை ஆகியோர் உள்ளனர்.

மேலும் அதில், வீரன் அழகுமுத்துகோன், மாவீரன் பொல்லான், வீரமங்கை குயிலி, வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், வாஞ்சிநாதன், வ.வே.சு.அய்யர், திருப்பூர் குமரன் உள்ளிட்ட மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களையும் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த ஊர்திகள் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து போட்டி தேர்வுகளை தமிழில் எழுதுவது குறித்து டி.ஆர்.பாலு மேலும் பேசியதாவது:

இன்றைக்கும்கூட ஐஏஎஸ். தேர்வை மக்கள் தங்களுடைய தாய்மொழியில் எழுத முடியும். ஆனால், ஏதோ இப்போதுதான் இதனை புதிதாக செய்யப்போவதை போல் போட்டித் தேர்வுகளை தாய்மொழியில் எழுதலாம் என்று குடியரசுத் தலைவர் இந்த அவைக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இது சரியல்ல. இந்த நடைமுறை பல ஆண்டுகளாகவே செயல்பாட்டில் உள்ளது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே, தபால் துறைகள் நடத்திய போட்டித் தேர்வுகளில் என்ன நிகழ்ந்தது?

குடியரசுத் தலைவர் உரை வாயிலாக பிராந்திய மொழிகளில் தேர்வுகள் நடைபெறும் என்று சொல்ல முன்வரும் இதே அரசு அன்றைக்கு ரயில்வே மற்றும் தபால் துறைகளில் நடந்த போட்டித் தேர்வுகளில் பிராந்திய மொழியில் எழுதும் வாய்ப்பை மறுத்தது.

ஆனால், இறுதியாக திமுக, நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் தெரிவித்த தீவிர எதிர்ப்பின் காரணமாக சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள் அந்த முடிவை மாற்றி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்ற முடிவை மீண்டும் அமல்படுத்தியது.

இவ்வாறு அவர் பேசினார்.



Read in source website

பெய்ஜிங்: 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் தொடங்கியுள்ள நிலையில், இதன் தொடக்க நிகழ்வில் இந்திய தடகள வீரரான ஆரிஃப் கான் ஒற்றை இந்தியராக தேசிய கொடியை ஏந்திச்சென்றார். இவர் மட்டுமே இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்ற இந்தியரும்கூட.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று சீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியுள்ளது. குளிர்கால ஒலிம்பிக்கில் மொத்தம் 15 பிரிவுகளில் மொத்தம் 109 பதக்கங்களுக்கான போட்டிகள் நடக்கவுள்ளது. பிப்ரவரி 20-ம் தேதி வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்காக பெய்ஜிங், யாங்கிங் (Yanqing), ஜாங்சியாகவ் (Zhangjiakou) ஆகிய 3 இடங்களில் மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் BIRDS NEST மைதானத்தில் தொடக்க விழா சிறப்பாக நடந்தது.

முன்னதாக, சீனாவில் உய்குர் இஸ்லாமியர்கள் மீதான மனித உரிமை மீறலை சுட்டிக்காட்டி, குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவில் அமெரிக்கா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். அதேபோல், கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் ஈடுபட்ட ராணுவத் தளபதியை ஒலிம்பிக்கில் ஜோதி தீத்தை தீபமேந்துபவராக நியமித்ததை கண்டித்து இந்தியா சார்பிலும் அரசு பிரதிநிதிகள் தொடக்க மற்றும் நிறைவு விழா நிகழ்வுகளை புறக்கணிப்பு செய்துள்ளனர். என்றாலும், இந்தியா சார்பில் குளிர்கால ஒலிம்பிக்கில் விளையாட காஷ்மீரைச் சேர்ந்த முகமது ஆரிஃப் கான் மட்டுமே தகுதி பெற்றுள்ளார். இவர் ஆல்பைன் ஸ்கீயிங் ஸ்லலோம் மற்றும் ஜெயிண்ட் ஸ்லாலோம் (alpine skiing slalom and the giant slalom) எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் ஐகானிக் பேர்ட்ஸ் நெஸ்ட் ஸ்டேடியத்தில் நடந்த தொடக்க விழா அணிவகுப்பில் ஆரிஃப் கான் இந்திய தேசியக்கொடியை ஏந்திச் சென்றார். சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்த ஆரிப் கான் தனது பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சூழ இந்தியக் கொடியை தனியாளாக ஏந்திச் சென்றார். பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக ஆரிப் கானை தனது வலைதள பக்கம் மூலமாக வெகுவாக பாராட்டினார்.

காஷ்மீர் முதல் ஒலிம்பிக் வரை - முகமது ஆரிஃப் கான் பயணம்!

31 வயதான ஆரிஃப் கான் தனது தந்தையால் நான்கு வயது முதல் பனிச்சறுக்கு விளையாட்டை விளையாட தொடங்கினார். 14 ஆண்டுகளுக்கு முன்பு அவர் 18 வயதாக இருந்தபோது தொழில்முறை பனிச்சறுக்கு வீரராக உருவெடுத்தவர், அதன்பிறகு இதுவரை 127 சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். என்றாலும், பெரும்பாலான நிகழ்வுகளுக்கு தனது சொந்த செலவில் சென்றே போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவருக்கு அவரின் குடும்பம் முக்கியமான ஆதரவாக இருந்தது. கானின் தந்தை 1980களில் இருந்து காஷ்மீரின் குல்மார்க்கில் சுற்றுலா நிறுவனம் மற்றும் உபகரணக் கடையை நடத்தி வருகிறார்.

இதில் கிடைக்கும் வருமானம் மூலமாக தான் அவரை சர்வதேச விளையாட்டுத் தொடர்களில் பங்கேற்க வைத்துள்ளார். ஆனால் 2018-ம் ஆண்டில் காஷ்மீரில் ஏற்பட்ட அமைதியின்மை சுற்றுலா தொழிலை பாதிக்க, அவர்களின் குடும்ப வருமானம் பாதித்தது. இது அவரின் விளையாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்த, குரூப் பண்டிங் எனப்படும் மக்களின் நிதி மூலம் அதை தொடர முயற்சி எடுத்துள்ளார்.

அது பலன் கொடுக்கவில்லை என்றதும், ஒருகட்டத்தில் விளையாட்டை நிறுத்தும் முடிவுக்குச் சென்றுள்ளார். இந்த நேரத்தில், தனியார் நிறுவனமான JSW குழுமத்தின் விளையாட்டுப் பிரிவான JSW ஸ்போர்ட்ஸ் ஸ்பான்சர்ஷிப் கொடுக்க முன்வர, தனது கனவை மீண்டும் உயிர்ப்புடன் தொடங்கி தற்போது குளிர்கால ஒலிம்பிக்கில் பங்குபெற்றுள்ளார்.

JSW ஸ்போர்ட்ஸ் அவருக்கு விளையாட்டு போட்டிகளுக்கான 40 சதவீத செலவை ஏற்றுக்கொள்கிறது. ஜம்மு-காஷ்மீர் அரசு 10 சதவீத செலவை ஏற்றுக்கொள்ள, மீதியை ஆரிஃப் கானை சமாளித்துவருகிறார்.



Read in source website

துபாய்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைனின் பவுலிங் ஆக்‌ஷன், விதிகளை மீறி இருந்ததால், அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பந்துவீச தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானின் அணியின் இளம் வீரர் முகமது ஹஸ்னைன். இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 8 ஒருநாள் மற்றும் 18 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஹஸ்னைன், கடந்த 2019-ல் இலங்கைக்கு எதிராக டி20 போட்டியின்போது ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார். 19 வயதில் ஹாட்ரிக் எடுத்த சாதனை வீரர் என்ற பெருமையை அதன்மூலம் பெற்றார். பாகிஸ்தான் சர்வதேச அணிக்காக மட்டுமில்லாமல், பிரீமியர் லீக் போட்டிகளிலும் அவர் பங்கேற்று விளையாடி வருகிறார்.

21 வயதாகும் ஹஸ்னைன், நடந்து முடிந்த கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) தொடரில் மணிக்கு 155 கிமீ வேகத்தில் பந்து வீசி அசத்தினார். இதேபோல் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் எதிரான ஆட்டத்தில் விளையாடியபோது அவரின் பந்துவீச்சு ஆக்ஷன் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பதாக போட்டி நடுவர் ஜெரார்ட் அபூட் புகாரளித்தார். இதையடுத்து ஐசிசி உத்தரவின்பேரில் கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் அவரின் பந்துவீச்சு முறை சோதனைக்கு உட்படுத்தப்பட இருந்தது.

ஆனால், பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஹஸ்னைன் நாடு திரும்பியதை அடுத்து, லாகூரில் உள்ள ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையத்தில் அவருக்கு சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு, அதன்படி நடந்த சோதனையில் பந்துவீச்சு ஆக்‌ஷன் விதிகளுக்கு மாறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பந்தை டெலிவரி செய்யும்போது ஹஸ்னைன் தன் கை முட்டியை மடக்குவது என்பது தேவையான 15 டிகிரி வரம்பை மீறுவது தெரியவந்ததை அடுத்து, அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தடையில் இருந்து வெளிவர பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமான பிசிபி அவருக்கு உதவ முன்வந்துள்ளது

பந்துவீச்சு நிபுணர்களுடன் இதுதொடர்பாக ஆலோசித்துள்ள பிசிபி, சிக்கலைத் தீர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. விரைவில் ஹஸ்னைனுக்கு தனி பந்துவீச்சு ஆலோசகர் நியமிக்கப்பட்டு, அதன்மூலம் பந்துவீச்சை சரிசெய்து மறுமதிப்பீட்டிற்கு கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளது. இதனை அறிக்கை வாயிலாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், "ஹஸ்னைன் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஒரு சொத்து. 150 கிமீ வேகத்தில் தொடர்ந்து, அதேநேரம் துல்லியமாக வீசும் மிகச் சில பந்து வீச்சாளர்களில் அவரும் ஒருவர். எனவே, ஹஸ்னைனின் எதிர்காலம் மற்றும் பாகிஸ்தான் அணியின் நலன்களை கருத்தில்கொண்டு, தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரையின் பேரில் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் அவர் இனி தொடர்ந்து பங்கேற்க மாட்டார்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஹஸ்னைன் அந்த அணியின் முக்கிய தூணாக விளங்கிவந்தார். ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள தடையால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: தென்னிந்தியாவின் பெரிய ரியல்எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் இதுவரை 1000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை தங்களின் வாடிக்கையாளர்களுக்காக கையகப்படுத்தி எந்த சட்டச்சிக்கலும் ஏற்படாத வகையில்வழங்கியுள்ளது. பல பெரிய நிறுவனங்கள் இதன் வாடிக்கையாளர்களாக உள்ளன.

இந்நிறுவனம் தனது நிறுவனத்தின் பெயரை சென்னை, கோவை, பெங்களூரு ஆகிய நகரங்களில் மேலும் பிரபலமடையச் செய்யும் நோக்கத்துடனும், நாடு முழுவதும்தனது தொழிலை விரிவுபடுத்தவும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியைவிளம்பரத் தூதராக நியமித்துள்ளது.

இதுகுறித்து ஜி ஸ்கோயர் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி என்.ஈஷ்வர் கூறும்போது, “மிகச் சிறந்த கிரிக்கெட் வீரரான தோனியுடன் கூட்டுச் சேர்ந்திருப்பது பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. இது எங்கள் தொழிலை நாடுமுழுவதும் வளர்த்தெடுக்க உதவும்” என்றார்.

இதுகுறித்து தோனி கூறும்போது, “ரியல் எஸ்டேட் துறையில்நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

சென்னை மற்றும் இங்குள்ளமக்களுக்கு என் இதயத்தில் தனி இடம் உண்டு. எனவே சென்னையைச் சேர்ந்த நிறுவனத்துக்காகச் செயல்படுவது அளவற்றமகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.

ஜி ஸ்கொயர் நிறுவனம் தனது முன்மொழிவை ‘உங்கள் நிலம், உங்கள் வீடு, உங்கள் வழி’ என மாற்றியுள்ளது. சென்னையில் தோனி பங்கேற்ற நிறுவனத்தின் விளம்பரப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இது விரைவில்வெளியாகும்.

இவ்வாறு ஜி ஸ்கொயர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சியோல்: தென் கொரியாவில் கரோனாவிலிருந்து தப்பிக்க வெறும் மூக்கை மட்டும் மறைக்கும் முகக்கவசம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. இதனை கோஸ்க் என்று அழைக்கின்றனர்.

2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் பகுதியிலிருந்து பரவிய கரோனா, கடந்த 2 வருடங்களுக்கு மேலாக உலகில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் வந்துவிட்டாலும் காமா, டெல்டா, ஒமைக்ரான் என்று அதன் வேற்றுருக்கள் அடுத்தடுத்து தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் கரோனாவிலிருந்து நம்மை முழுவதுமாக காப்பது முகக்கவசமும், தடுப்பூசியும்தான் என்று மருத்துவ வல்லுனர்கள் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மக்களிடம் மாஸ்க் அணியும் பழக்கமும் அதிகரித்து வருவது ஆரோக்கியமான செய்தி.

மாஸ்க்கு பதில் கோஸ்க்..

தென்கொரியாவில் அட்மன் என்ற நிறுவனம் புதிய விதமான முகக் கவசத்தை மக்களிடத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முகக் கவசம் வெறும் மூக்கை மட்டும் மறைக்கும் தன்மை உடையது. இதனால் சாப்பிடுவதற்கு, தண்ணீர் அருவதற்கும் மாஸ்கை அடிக்கடி கழட்ட வேண்டியதில்லை. கொரிய மொழியில் கோ என்றால் மூக்கை குறிக்கும் அதனால் இந்த முகக்கவசத்தை கோஸ்க் என்று அழைக்கின்றனர்.

மூக்கின் வழியாகவே கரோனா வைரஸ் வேகமாக பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது இந்த கோஸ்க் இது மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தென் கொரியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கரோனா தீவிரமாக பரவி வருகிறது. வியாழக்கிழமை 22,907 பேருக்கு கரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு ஆசிய நாடான தென்கொரியா கரோனாவை இன்றுவரை சிறப்பாகவே கையாண்டுள்ளது. இதுவரை கரோனாவுக்கு தென்கொரியாவில் 6,812 பேர்வரை பலியாகி உள்ளனர்.



Read in source website

கரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக கிருமிநாசினித் திறன் கொண்ட, மக்கும் முகக்கவசங்களை (மாஸ்க்) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்காக, தாமிரத்தை அடிப்படையாகக் கொண்ட நானோ துகள்கள் பூசப்பட்ட வைரஸ் எதிர்ப்பு முகக் கவசத்தை இந்திய விஞ்ஞானிகள் குழு, தொழில்துறையை சேர்ந்த நபர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளது. கரோனா வைரஸ், பல்வேறு இதர வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிராக உயர் செயல்திறனை இந்த முகக்கவசம் கொண்டுள்ளது. மக்கும் திறன் கொண்ட இந்த முகக்கவசம், நல்ல முறையில் சுவாசிப்பதற்கான வசதியைக் கொண்டது மற்றும் சலவை செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடியது.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான பவுடர் மெட்டலர்ஜி மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச முன்னேறிய ஆய்வு மையத்தைச் (ஏஆர்சிஐ) சேர்ந்த விஞ்ஞானிகள், செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் மற்றும் ரெசில் கெமிக்கல்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து இந்த முகக்கவசத்தை உருவாக்கியுள்ளனர். கோவிட்-19-ஐ எதிர்த்துப் போராடுவதற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நானோ-மிஷன் திட்டத்தின் கீழ் கிருமிநாசினித் திறனுடன் கூடிய, மக்கும் முகக்கவசங்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.



Read in source website

இந்திய அரசாங்கம், பாகிஸ்தான் – சீனா ஆகிய இரு நாடுகளையும் ஒன்றாக சேர்த்திருக்கிறது என்று காங்கிரச் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இருவரும் எப்போதும் நெருக்கமாகவே இருந்ததாக வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது.

இந்திய அரசாங்கம், பாகிஸ்தான் – சீனா ஆகிய இரு நாடுகளையும் ஒன்றாக சேர்த்திருக்கிறது என்று காங்கிரச் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இருவரும் எப்போதும் நெருக்கமாகவே இருந்ததாக வெளியுறவு அமைச்சகம் பதிலளித்துள்ளது. பல ஆண்டுகளாக பாகிஸ்தான் – சீனா உறவும் அது இந்தியாவிற்கு என்ன உணர்த்தியது குறித்து ஒரு பார்வை.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: நரேந்திர மோடி அரசாங்கம் நாட்டை பலவீனப்படுத்துகிறது என்றும், பாகிஸ்தானையும் சீனாவையும் ஒன்றுசேர்த்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார் இரு நாடுகளையும் பிரித்து வைத்திருப்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் மிகப்பெரிய உத்தி இலக்கு என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “சில வரலாற்று பாடங்கள் முறையாக உள்ளன” என்று ட்வீட் செய்து, பல பத்தாண்டுகளாக பாகிஸ்தான்-சீனா நட்பின் நிகழ்வுகளை மேற்கோள் காட்டினார். “எனவே, உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: அப்போது சீனாவும் பாகிஸ்தானும் தொலைவில் இருந்தனவா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் – சீனத் தலைவர்கள் தங்கள் உறவுகளை மலைகளை விட உயரமானவை, கடலை விட ஆழமானவை என்பது போன்ற உருவகங்களைப் பயன்படுத்தி விவரிக்கின்றனர். எனவே, பாகிஸ்தான் – சீனா உறவின் வரலாறு என்ன?

உறவின் தொடக்க ஆண்டுகள்

1947-க்குப் பிறகு ஆரம்ப ஆண்டுகளில், இந்தியாவுக்குப் பிறகு, சீன மக்கள் குடியரசை பாகிஸ்தான் அங்கீகரித்தது. மேலும், 1951-ல் ராஜதந்திர உறவுகளை நிறுவியது. ஆனால், அமெரிக்கா தலைமையிலான கம்யூனிச எதிர்ப்பு ராணுவ ஒப்பந்தங்களான SEATO மற்றும் CENTO ஆகியவற்றில் பாகிஸ்தான் அங்கம் வகித்ததன் காரணமாக, அது சோவியத் அல்லாத முகாமின் ஒரு பகுதியாகக் காணப்பட்டது. சீனா, மாசேதுங்கின் கீழ் மறுபுறத்தில் தனியாக இருந்தது.

மறுபுறம், இந்தியா சீனாவுடன் பணி நிமித்தமான உறவைக் கொண்டிருந்தது – இந்தி-சீனி பாய் பாய் போன்ற முழக்கங்கள் பொறிக்கப்பட்டது. இரு நாடுகளும் ஒரே காலனித்துவ எதிர்ப்பு, அணிசேரா அணுகுமுறையைக் கொண்டிருந்தன.

இருப்பினும், இந்த நட்பில் ஒரு சிக்கலான அடுக்கு இருந்தது.

புத்தரின் வீரர்கள்: சிஐஏ-ஆதரவு பெற்ற திபெத்திய சுதந்திரப் போராளிகள் கதை, சீனப் படையெடுப்பு மற்றும் திபெத்தின் இறுதி வீழ்ச்சி ஆகியவற்றில், எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான மைக்கேல் டன்ஹாம், 1950-ல் சீனப் படைகள் படையெடுத்த பிறகு, திபெத்திய கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்க விமானங்களுக்கு உபகரணங்களை வழங்குவதற்கான போக்குவரத்து வசதிகளை பாகிஸ்தான் வழங்கியது.

1962ம் ஆண்டு போர்

1962ல் நடந்த இந்தியா-சீனா போர் பெய்ஜிங் இஸ்லாமாபாத்துடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்ள வழிவகுத்தது. 1965ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் சீனாவின் ஆதரவைப் பெற்றது. உண்மையில், 1962ல் சீனாவுக்கு எதிராக இந்தியா தோற்கடிக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு தைரியம் கொடுத்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புதுடெல்லியில் இருந்த அப்போதைய அமெரிக்கத் தூதர் ஜான் கென்னத் கல்பிரைத், அம்பாசிடர்ஸ் ஜர்னலில், பாகிஸ்தான் ‘பீக்கிங்குடன் ஒருவித இணைப்பை உருவாக்குவது’ பற்றி கவலைப்படுவதாக எழுதினார்.

1963-ல் எல்லை ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தான் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கை சீனாவுக்கு விட்டுக் கொடுத்தது. ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு அல்லது டிரான்ஸ் கரகோரம் டிராக்ட் என்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹன்சா-கில்கிட் பகுதியின் ஒரு பகுதியாகும். இது இந்தியாவால் உரிமை கோரப்பட்ட ஒரு பகுதி, ஆனால் பாகிஸ்தானால் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்த ஒப்பந்தத்தின் பிரிவு 6, “பாகிஸ்தான் – இந்தியா இடையேயான காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்ட பிறகு, இந்த ஒப்பந்தத்தின் பிரிவு இரண்டில் விவரிக்கப்பட்டுள்ள எல்லையில், சீன மக்கள் குடியரசின் அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட இறையாண்மை அதிகாரம் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என்று இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன. தற்போதைய ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான முறையான எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.” என்று கூறுகிறது.

இந்த ஒப்பந்தம் 1970களில் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து கட்டிய கரகோரம் நெடுஞ்சாலைக்கு அடித்தளமிட்டது.

உண்மையான ராஜதந்திர நட்பு 1970களில் தொடங்கியது. அப்போது பாகிஸ்தான் ஆட்சியாளராக இருந்த ஜெனரல் யாஹ்யா கான், ரிச்சர்ட் நிக்சன், ஹென்றி கிஸ்ஸிங்கர் தலைமையிலான அமெரிக்கா மற்றும் சீனாவின் மாவோ, சூ என்லாய் இடையேயான உறவுகளை எளிதாக்கினார். இது ஜூலை 1971-ல் கிஸ்ஸிங்கரின் ரகசியப் பயணத்திற்கு வழி வகுத்தது. அமெரிக்கா-சீனா இடையே பிளவு ஏற்படுத்திய பிரச்சினைகளை விவாதிக்கும் ஆரம்ப முயற்சிக்கு வழிவகுத்தது.

அணுசக்தி ஒத்துழைப்பு

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு 1970களிலும் 1980களிலும் வளர்ந்தது. குறிப்பாக 1974-ல் இந்தியா தனது அணுசக்தி சாதனத்தை சோதித்த பிறகு, சீனா – பாகிஸ்தான் அணுசக்தி ஒத்துழைப்பு முக்கிய தூண்களில் ஒன்றாகும்.

பாகிஸ்தானின் அணுசக்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் சீனா முக்கியப் பங்காற்றியுள்ளது. செப்டம்பர் 1986-ல், சிவில் அணுசக்தி தொழில்நுட்பத்தை மாற்றுவதற்கு வசதியாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

1991-ல், பாகிஸ்தானுக்கு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கின்ஷான்-1 அணுமின் நிலையத்தை வழங்க சீனா ஒப்புக்கொண்டது. சாஷ்மா அணுமின் நிலையம்-1-ன் கட்டுமானம் 1993-ல் தொடங்கியது. மேலும் 300 எம்.டபில்யூ.இ அணு உலை மே 2000-ல் செயல்பாட்டுக்கு வந்தது. சாஷ்மா, சி-2, இரண்டாவது 300 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் 2011-ல் முக்கியமானதாக மாறியது.

1998-ல் இந்தியா தனது அணுசக்தி சாதனத்தை சோதித்த பிறகு, பெய்ஜிங்கின் உதவி மூலம் பாகிஸ்தான் இதைப் பின்பற்றியது.

பி.பி.சி பத்திரிக்கையாளர் கோர்டன் கொரேரா, ‘ஷாப்பிங் ஃபார் பாம்ப்ஸ்’ நூலில்: அணுசக்தி பரவல், உலகளாவிய பாதுகாப்பின்மை, அப்துல் காதீர் கானின் எழுச்சி மற்றும் கான் நெட்வொர்க்: “சீனாவின் உதவியைக் கழித்தால், பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டம் இருக்காது” என்று எழுதினார்.

இந்தியா – சீனா உறவுகள்

1988-இல் ராஜீவ் காந்தியின் வருகையுடன் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட நல்லுறவு ஒரு முக்கியமான தருணமாக மாறியது. பெய்ஜிங்கிற்கு ஒரு தெளிவான மாற்றம் ஏற்பட்டது. பெய்ஜிங் இந்தியாவுடனான உறவுகளை பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தது, வர்த்தகத்தில் கவனம் செலுத்தியது. அதே நேரத்தில் எல்லைப் பிரச்சினையில் இந்தியாவுடன் தனித்தனியாகப் பேசுகிறது. இது இஸ்லாமாபாத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இஸ்லாமாபாத்தைப் பொறுத்தவரை, 1996ல் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. “சீன அதிபர் ஜியாங் ஜெமின் [அப்போது பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தவர்] காஷ்மீர் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடத் தவறினார்… காஷ்மீர் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் அல்ல, சர்வதேச மத்தியஸ்தம் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்ற பாகிஸ்தானின் நிலைப்பாட்டை இது குறைத்தது” என்று ஆய்வாளர் ஆண்ட்ரூ ஸ்மால் சீனா-பாகிஸ்தான் அச்சு நூலில் எழுதினார்.

1999ம் ஆண்டு கார்கில் மோதலின் போது, ​​​​பெய்ஜிங் இஸ்லாமாபாத்திற்கு “அவர்களுடைய துருப்புக்களை திரும்பப் பெற வேண்டும் என்றும், சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும், அமைதியான வழிகளில் மோதல்களைத் தீர்க்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தியது. அந்த ஆண்டு ஜூலையில், சீன வெளியுறவு அமைச்சகம் இந்தியாவையும் பாகிஸ்தானையும் காஷ்மீரின் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு மதிப்பளித்து, லாகூர் பிரகடனத்தின் சக்திக்கு ஏற்ப விரைவில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இது இஸ்லாமாபாத்திற்கு மட்டம் தட்டுவதாகக் கருதப்பட்டது.

2002ல் நடந்த நாடாளுமன்றத் தாக்குதல், எதிர் பராக்ரம் உருவாகுதல், 2008ல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றுக்குப் பிறகு பெய்ஜிங் இதேபோன்ற எச்சரிக்கையான அணுகுமுறையை எடுத்தது. பிப்ரவரி, 2019ல் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாலகோட் வான்வழித் தாக்குதல் நடந்தபோது சீனா பதிலளித்த விதத்திலும் இது தெரிந்தது. உண்மையில், மார்ச் 2019ல் ஜெய்ஷ்-இ-முகமது தலைவன் மசூத் அசாரை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தது, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் சீனா கையெழுத்திட்டது.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்

சீனா-பாகிஸ்தான் ஒத்திசைவு இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடர்ந்தது. பெய்ஜிங், இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாக நகர்வதைக் கண்டது. அமெரிக்க – இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் பாகிஸ்தானை கவலையடையச் செய்தது. மேலும், பெய்ஜிங் – இஸ்லாமாபாத் இணைப்பு அணுசக்தி விநியோகக் குழுவில் விலக்கு அளிக்கப்படுவதைத் தடுக்க முயற்சி செய்தது.

2013 ஆம் ஆண்டு முதல், ஷி ஜிங்பிங்கின் சீனா டெப்சாங், சுமர், டோக்லாம் மற்றும் கிழக்கு லடாக் ஆகிய இடங்களில் உள்ள எல்லைப் மோதல்களில் தனது வலிமையைக் கட்ட முயற்சி செய்ததால் இந்தியா இஸ்லாமாபாத்துடனான உறவில் எச்சரிக்கையாக உள்ளது.

370வது பிரிவை திருத்தம் செய்து ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான இந்தியாவின் ஆகஸ்ட், 2019 நடவடிக்கை ராஜதந்திர நிலையில், பெய்ஜிங் மற்றும் இஸ்லாமாபாத்தை (மற்றும் ராவல்பிண்டி) கோபப்படுத்தியது. இது அவற்றை இன்னும் நெருக்கமாகக் கொண்டுவருகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு மிகவும் முன்னதாகவே பிரதிபலிக்கிறது. 1965ம் ஆண்டு முதல் இந்தியாவிற்கான சீன ராஜதந்திரக் குறிப்பு, ஜே.என்.தீக்ஷித்தின் ‘போர் மற்றும் அமைதியில் இந்தியா-பாகிஸ்தான்’ என்ற புத்தகத்தில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. “இந்திய அரசாங்கம் காஷ்மீரிகளை ஒடுக்கும் வரை, சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தில் காஷ்மீரிகளுக்கு சீனா ஆதரவளிப்பதை நிறுத்தாது. இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிரான அதன் கட்டுப்பாடற்ற ஆக்கிரமிப்பில் தொடர்ந்து இருக்கும் வரை, ஆக்கிரமிப்புக்கு எதிரான தனது நியாயமான போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதை சீனா நிறுத்தாது.

ஆகஸ்ட் 5, 2019 காலகட்டத்த்ல், காஷ்மீர் நிலைமையை சீனா பலமுறை கொண்டு வந்து விவாதிக்க முயற்சித்தது. அதில் புதுடெல்லிக்கு ஆச்சரியம் இல்லை.

பொருளாதார சார்பு

சமீப ஆண்டுகளில் பெய்ஜிங்கில் பாகிஸ்தானின் பொருளாதார சார்பு அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத நிதியுதவிக்கான நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில்ல் (Gray list) உள்ளது. அதில் பெய்ஜிங் ஒரு வருடம் தலைவராக இருந்த போதிலும், சீனாவின் அனைத்து காலநிலை நண்பருக்கும் உதவுவதில் உள்ள வரம்புகளை வெளிப்படுத்தியது.

மே, 2019-ல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிவதற்கு முன்பு, மசூத் அசாரை பயங்கரவாதி பட்டியலில் சேர்ப்பதை சீனா பலமுறை தடுத்தது. கிழக்கு துர்கெஸ்தான் இஸ்லாமிய இயக்கம் (ETIM) பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்களிடமிருந்து ஆதரவைப் பெறுவது மற்றும் உய்குர்கள் ஓரங்கட்டப்பட்ட சின்ஜியாங் மாகாணத்தில் பிரச்சனையை உருவாக்குவது குறித்தும் அது கவலை கொண்டுள்ளது.

இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் பேசும் இஸ்லாமாபாத், உய்குர் சிறுபான்மையினரை நடத்துவது குறித்து மௌனம் காக்கிறது. சீனாவின் மாதிரியை தனது நாடு நம்புவதாக இம்ரான் கான் கூறியுள்ளார்.

பாக்கிஸ்தானின் கண்ணோட்டத்தில், அமெரிக்காவின் இந்த பிராந்தியத்திலிருந்து வெளியேறி, வாஷிங்டன் ஆப்கானிஸ்தானில் ஆர்வத்தை இழந்து வருவதால், பெய்ஜிங் அதன் தோல்வியடைந்த பொருளாதாரத்திற்கு சிறந்த போட்டி. இது வெளிநாட்டு கடன் பிணையெடுப்புகளில் தங்கியுள்ளது. சீனாவின் பழைய பட்டு பாதையின் மூலம் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் முயற்சி சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் (CPEC) வெளிப்பட்டுள்ளது. இது சில முதலீடுகளுக்கு வழிவகுத்தது. ஆனால், இந்த திட்டம் பாகிஸ்தானில் உள்ள மக்களுக்கு வேலை வழங்குமா என்று கேள்வி எழுப்பும் குரல்கள் பாகிஸ்தானுக்குள்ளேயே உள்ளன.

சீனாவின் பார்வையில், பலுசிஸ்தானில் உள்ள குவாடர் துறைமுகம் வழியாக மேற்கு இந்தியப் பெருங்கடலுக்கு அணுகுவதை எளிதாக்குகிறது.

அமெரிக்காவின் ஜெர்மன் மார்ஷல் நிதியத்தில் மூத்த அட்லாண்டிக் கூட்டாளியான ஸ்மால், செப்டம்பர், 2020ல் அறிக்கையில், “… எதிர்காலத்தில் வெளிப்படும் சீன-பாகிஸ்தான் உறவு கடந்த காலத்தைப் போலவே இருக்கும். 2015ல் CPEC தொடங்கப்பட்ட பிறகு. ஆழமான பாதுகாப்பு உறவுகள் நீடிக்கும். சீன-இந்திய உறவு மோசமடையும் போது தீவிரமடையும். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் பரந்த அடிப்படையிலான பொருளாதார மற்றும் அரசியல் ஈடுபாட்டின் அளவு இல்லை.” என்று எழுதியுள்ளார்.

நெருக்கமான பாதுகாப்பு உறவுகள்

2020-ல், சீனா பாகிஸ்தானுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சீனாவின் பாதுகாப்பு மந்திரி ஜெனரல் வெய் ஃபெங்கே இஸ்லாமாபாத்திற்கு வருகை தந்து, பாகிஸ்தான் ராணுவம், சீன மக்கள் விடுதலை ராணுவம் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

பாகிஸ்தான் ராணுவம் சமீபத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட VT-4 போர் டாங்கிகளின் முதல் தொகுதியை அறிமுகப்படுத்தியது. சீனாவில் தயாரிக்கப்பட்ட போர் ட்ரோன்கள் அல்லது ஆளில்லா போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது.

இரு நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை உறுதியாகப் பாதுகாத்து, பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை, பல்வேறு அபாயங்கள் மற்றும் சவால்களை கூட்டாகச் சமாளிப்பதற்கு, மில்-டு-மில் உறவை உயர் நிலைக்குத் தள்ள விருப்பம் தெரிவித்ததாக சீன பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக் காட்டியது.

தென் சீனக் கடல், தைவான், சின்ஜியாங், திபெத் உள்ளிட்ட அதன் முக்கியப் பிரச்சினைகளில் சீனாவின் நிலைப்பாட்டை பாகிஸ்தான் அங்கீகரிக்கிறது.

அதிகரித்து வரும் சீனா-பாகிஸ்தான் இராணுவப் பயிற்சிகள் ஆழமடைந்து வரும் இராணுவப் கூட்டு நடவடிக்கை எதிர்காலத்தின் அடையாளமாகும். திபெத்தில் உள்ள சரியான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் இரு நாட்டு ராணுவத்தினரும் சமீபத்தில் கூட்டுப் பயிற்சி நடத்தினர்.

ஆப்கானிஸ்தான் கோணத்தில்

கடந்த ஆண்டு காபூல் தலிபான்களின் வசம் வந்த பிறகு, பாகிஸ்தானின் உதவியுடன் செல்வாக்கு, வளங்களுக்காக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை சீனா இப்போது உணர்ந்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் தலிபான் தலைவர்கள் இடையே பலமுறை சந்திப்புகள் நடந்தன.

ETIM தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் ஒரு தளமாக பயன்படுத்தப்படாது என்று இஸ்லாமாபாத் தலிபான்களை நம்ப வைக்க முடியும் என்று சீனா நம்புகிறது. மேலும், பெய்ஜிங் அவர்களுக்கு நிதி உதவி அளிப்பதன் மூலம் தலிபான்களை இயல்பாக்குவதற்கு மாற்றப்படும்.

பெய்ஜிங் ஒரு உலகளாவிய சக்தியாக உயர்ந்துள்ள நிலையில், பாகிஸ்தானுடனான அதன் கூட்டுறவை இந்தியா முன்பைவிட அதிக கவலையாகக் கருதுகிறது. புதுடெல்லியைப் பொறுத்தவரை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஐரோப்பிய கூட்டு நாடுகளை உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் உத்தி இந்த உறவுக்கு எதிரான முக்கிய அரணாக உள்ளது.



Read in source website

தமிழகத்தின் ஸ்ரீபெரும்பதூரில் 1017ம் ஆண்டு பிறந்தவர் ராமானுஜாச்சாரியார். அவர் சமூக சீர்திருத்தவாதியாகவும், வேத தத்துவவாதியாகவும் போற்றப்படுகிறார். இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு சமத்துவம் மற்றும் சமூக நீதியை நிறுவ முயற்சி செய்தார்.

Statue of Equality in his honour: பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி அன்று ஐதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள மிகப்பெரிய சமத்துவ சிலையை திறந்து வைக்க உள்ளார்.

யார் இந்த ராமானுஜாச்சாரியார்?

தமிழகத்தின் ஸ்ரீபெரும்பதூரில் 1017ம் ஆண்டு பிறந்தவர் ராமானுஜாச்சாரியார். அவர் சமூக சீர்திருத்தவாதியாகவும், வேத தத்துவவாதியாகவும் போற்றப்படுகிறார். இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு சமத்துவம் மற்றும் சமூக நீதியை நிறுவ முயற்சி செய்தார்.

பக்தி இயக்கத்திற்கு புத்துயிர் தந்த அவரின் பிரசங்கங்கள் மற்ற பக்தி சிந்தனைகளுக்கு ஊக்கம் அளித்தன. அன்னமாச்சார்யா, பக்த ராமதாஸ், தியாகராஜா, கபீர் மற்றும் மீராபாய் போன்ற கவிஞர்களுக்கு உத்வேகமாக ராமானுஜாச்சாரியார் இருந்தார் என்று கருதப்படுகிறது.

இளம் தத்துவஞானியாக இருந்த போதே, அவர் இயற்கையையும் அதன் வளங்களான காற்று, நீர் மற்றும் மண் போன்றவற்றையும் பாதுகாக்க வேண்டுகோள் விடுத்தார். அவர் நவரத்தினங்கள் எனப்படும் ஒன்பது வேதங்களை எழுதினார், மேலும் வேத சாஸ்திரங்களுக்கு பல விளக்கங்களை இயற்றினார்.

இந்தியா முழுவதும் உள்ள கோவில்களில், குறிப்பாக மிகவும் பிரபலமான திருமலை மற்றும் ஸ்ரீரங்கம் கோவில்களில் செய்யப்படும் சடங்குகளுக்கான சரியான நடைமுறைகளை நிறுவிய பெருமையும் அவருக்கு உண்டு.

சமத்துவத்தின் சிலை என்று ஏன் அழைக்கப்படுகிறது?

ராமானுஜர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அனைத்து தரப்பு மக்களிடையேயும் சமூக சமத்துவத்தை வலியுறுத்தினார், மேலும் பல சாதிகளை சேர்ந்தவர்கள் கோவில்களுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்ட நேரத்தில், சமூகத்தில் சாதி அல்லது பதவியைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் கோவில் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

யாருக்கெல்லாம் கல்வி மறுக்கப்பட்டதோ அவர்களுக்கு கல்வியை எடுத்துச் சென்று சேர்த்தார். அவரது மிகப்பெரிய பங்களிப்பு “வசுதைவ குடும்பகம்” என்ற கருத்தை பரப்புவதாகும். இதன் அர்த்தம் அனைத்து பிரபஞ்சமும் ஒரே குடும்பம் என்பதாகும்.

இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்ட அவர் கோவில் மேடைகளில் இருந்து சமூக சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் பற்றிய தனது கருத்துக்களை பிரசங்கம் செய்தார். அவர் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்து, அவர்களை சமமாக நடத்த வேண்டும் என்று அரசவைகளில் கேட்டுக் கொண்டார். கடவுள் பக்தி, கருணை, பணிவு, சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் மூலமே ரட்சிப்பை பெற முடியும் என்றூ பேசினார். இவை ஸ்ரீ வைஷணவம் சம்பிரதாயம் என்று அழைக்கப்பட்டது.

மனிதகுலத்தை அரவணைக்கும் வகையில் வைணவ பார்வைக்கு அப்பாற்பட்ட வகையில் ராமானுஜாச்சாரியரின் சமத்துவ சிலை நிறுவப்பட்டுள்ளது என்று சின்ன ஜீயர் சாமி குறிப்பிட்டுள்ளார்.

தேசம், பாலினம், இனம், ஜாதி அல்லது மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மனிதனும் சமம் என்ற அடிப்படை நம்பிக்கையுடன் சமூக, கலாச்சார, பாலினம், கல்வி மற்றும் பொருளாதார பாகுபாடுகளிலிருந்து லட்சக்கணக்கான மக்களை விடுவித்தார் அவர். நாங்கள் அவருடைய 1000ம் ஆண்டு பிறந்த தினத்தை சமத்துவ திருநாளாக கொண்டாடினோம் என்று ஜீயர் கூறினார்.

இந்த சிலை எங்கே நிறுவப்பட்டுள்ளது?

216 அடி உயரம் கொண்ட இந்த சிலை முதலில் 2018ம் ஆண்டு முன்மொழியப்பட்டது. ஐதராபாத் புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் ஷம்சாபாத் அருகே உள்ள முசிந்தலில் செயல்பட்டு வரும் ஜீயர் இன்டெக்ரேட்டட் வேதிக் அகாதெமியில் 45 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை சின்ன ஜீயர் முன்மொழிந்து வடிவமைத்தார். சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான சடங்குகள் புதன்கிழமை (பிப்ரவரி 2) தொடங்கியது, 5,000 க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னர்கள் மகா யாகத்தை நடத்தினார்கள். இது நவீன காலத்தில் மிகப்பெரிய யாகம் என்று பலரால் கூறப்பட்டுள்ளது.



Read in source website


வரலாற்று சாதனை படைத்திருக்கிறாா் 35 வயது டென்னிஸ் சாம்பியன் ரபேல் நடால். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் வென்றிருப்பதன் மூலம் தனது 21-ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி டென்னிஸ் விளையாட்டின் சரித்திர நாயகனாக உயா்ந்திருக்கிறாா்.

டென்னிஸ் ஆட்டத்தில் ஆஸ்திரேலியன் ஓபன், பிரெஞ்ச் ஓபன், அமெரிக்கன் ஓபன், விம்பிள்டன் (பிரிட்டன்) ஆகிய நான்கு போட்டிகளும் கிராண்ட் ஸ்லாம்கள் (உன்னத வெற்றிகள்) என்று அழைக்கப்படுகின்றன. இப்போதைய டென்னிஸ் வீரா்களில் சுவிட்ஸா்லாந்தின் ரோஜா் ஃபெடரா், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் ரபேல் நடால் ஆகிய மூவரும் மூம்மூா்த்திகளாக வலம் வருகிறாா்கள். மூவருமே 20 கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளை சாதித்தவா்கள். அவா்களில் 21-ஆவது கிராண்ட் ஸ்லாம் வெற்றியை ஈட்டி, யாா் முந்துவது என்கிற எதிா்பாா்ப்பும் இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் தனது 21-ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றி நடால் மற்றவா்களை முந்தியிருக்கிறாா்.

மூன்று முன்னணி வீரா்களுமே பல சவால்களுக்கு இடையில்தான் டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தில் தொடா்கிறாா்கள். கரோனா தடுப்பூசி சா்ச்சையால் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க முடியவில்லை. ரோஜா் பெடரராகட்டும், தனது காலில் ஏற்பட்டிருக்கும் பலத்த காயத்தால் ஆஸ்திரேலியன் ஓபன் பந்தயத்தில் கலந்துகொள்ளவில்லை. ரபேல் நடாலும் கிராண்ட் ஸ்லாம் பந்தயத்தை எதிா்கொள்ளும் அளவிலான உடல் வலுவுடன் இருக்கவில்லை. ஒருவேளை நடால் கலந்துகொள்ளாமல் இருந்திருந்தால் வெற்றிக் கோப்பையை மெத்வதேவ் அடைந்திருக்கக்கூடும்.

கடந்த ஆகஸ்ட் - செப்டம்பரில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸில், அறுவை சிகிச்சை காரணமாக அவா் கலந்துகொள்ளவில்லை. காலில் பலத்த காயம் ஏற்பட்டு கடந்த டிசம்பா் மாதம்தான் ரபேல் நடால் குணமடைந்தாா். தாங்கு கட்டைகளுடன் நடக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. அதனால், அவா் முழு மூச்சாக கடந்த ஆறு மாதங்களாக பயிற்சியில் ஈடுபடவில்லை. இந்தப் பின்னணியில் துணிந்து ஆஸ்திரேலியன் ஓபன் பந்தயத்தில் கலந்துகொள்ள நடால் முற்பட்டதே பலரை ஆச்சரியப்படுத்தியது.

தாங்க முடியாத கால் வலியுடன் டென்னிஸ் விளையாட்டில் இருந்தே ஓய்வுபெறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த ஒருவா், தன்னுடைய மன உறுதியை மட்டுமே நம்பி களத்தி இறங்கிய ஆச்சரியம் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போா்ன் நகரத்தின் ராட் லேவா் அரினா மைதானத்தில் நடந்தது. டென்னிஸ் மட்டையுடன் நடால் களமிறங்கியபோது, ஒட்டுமொத்த உலகமும் அதை ஆச்சரியமாகப் பாா்த்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பு களமிறங்கிய அதே உற்சாகத்துடனும், மன உறுதியுடனும், வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற வேட்கையுடனும் மைதானத்தில் நின்று கொண்டிருந்தாா் ரபேல் நடால்.

2014 ஆஸ்திரேலிய ஓபன் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்த நடால், தனது மனதுக்குள் எடுத்துக்கொண்ட சபதத்தை நிறைவேற்றும் முனைப்புடன் களமிறங்கியிருந்தாா் என்று நினைக்கத் தோன்றுகிறது. எதிா்த்து விளையாடுபவா் தன்னைவிட பத்து வயது இளமையானவா் என்பதும், கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் பந்தயத்தில் ஜோகோவிச்சின் 21-வது கிராண்ட் ஸ்லாம் வெற்றிக் கனவை தகா்த்தவா் டேனில் மெத்வதேவ் என்பதும் ரபேல் நடாலுக்கு தெரியாததல்ல.

முதல் இரண்டு செட்களில் நடால் தோல்வியடைந்தபோது தளா்ந்திருந்தால் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது. ஏறத்தாழ ஐந்தரை மணி நேரம் நடந்த ஆட்டத்தில் இரண்டாவது செட்டுக்கு பிறகு ரபேல் நடாலின் முழுத் திறமையும் வெளிப்படத் தொடங்கியது. உலகின் முன்னணி டென்னிஸ் வீரா்கள் பட்டியலில் இப்போது இரண்டாம் இடத்திலிருக்கும் மெத்வதேவின் பந்துகளை நடால் எதிா்கொண்ட லாவகமும், காற்று வேகத்தில் பரபரவென்று மைதானத்தில் சுறுசுறுப்பாக அவா் இயங்கிய விதமும் கண்கொள்ளாக் காட்சி.

இரண்டாவது செட் தோல்விக்குப் பிறகு ஒரு வித்தியாசமான ரபேல் நடாலை பாா்க்க முடிந்தது. குத்துச்சண்டை வீரா் முகமது அலி, எதிராளியின் தாக்குதல்களை முதலில் ஏற்றுக்கொண்டு அதிலிருந்து அவா்களைக் கணித்து, பிறகு தனது தாக்குதல்களை தொடங்கித் திணற அடிக்கும் அதே உத்தியை நடால் கையாண்டாா் என்றுகூடச் செல்லலாம். இரண்டு செட்களில் தோற்று, அடுத்த மூன்று செட்களையும் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்வது நடாலுக்கு புதிதொன்றும் அல்ல. இது நான்காவது முறை.

வீரா்களின் வெற்றி தோல்வியை அவா்களது ரசிகா்களால் நிா்ணயிக்க முடியும் முடியும் என்பதற்கு ஆஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த டென்னிஸ் பந்தயம் எடுத்துக்காட்டு. நடால் தன்னுடைய முழு சக்தியையும், திறமையையும் முன்வைத்து ஆடத் தொடங்கியபோது நிரம்பியிருந்த அரங்கத்தில் அமா்ந்திருந்த ரசிகா்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனா். நடாலின் வெற்றிக்கு அந்த ஆரவாரம் முக்கியமான காரணம். பத்தாண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட அதே உத்வேகமும் உற்சாகமும் கிடைக்கப்பெற்றவராக களத்தில் சுழலத் தொடங்கினாா் நடால்.

ராய் எமா்ஸன், ராட் லேவா், ஜோகோவிச் ஆகிய மூவருக்கும் அடுத்தபடியாக நான்கு கிராண்ட் ஸ்லாம்களை இரண்டு முறை வென்றிருக்கும் வீரா் என்கிற தகுதியையும் சிறப்பையும் பெறுகிறாா் நடால். நடாலின் சாதனையை ஃபெடரரும், ஜோகோவிச்சும் மட்டுமல்ல அவரிடம் தோல்வியடைந்த மெத்வதேவும் பாராட்டியிருக்கிறாா்கள். ஏனென்றால் இது ரபேல் நடாலின் வெற்றியல்ல; ஒரு விளையாட்டு வீரரின் தன்னம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி.



Read in source website

உலக அளவில், பத்து ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் உயா்ந்துள்ளதற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மிகவும் உயரிய சா்வதேச விருதான டிஎக்ஸ்2 விருதினைப் பெற்றுள்ளது. இதற்கு தமிழ்நாடு வனத்துறைக்கும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பணியாளா்கள் அனைவருக்கும் நம் பாராட்டுகள்!

சத்தியமங்கலம் 2013-இல்தான் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இக்குறுகிய காலத்தில் புலிகளின் எண்ணிக்கை 30லிருந்து 83-ஆக உயா்ந்துள்ளது. இது எளிதாக நடந்துவிடவில்லை. இப்பெரிய வனப்பரப்பு, காப்புக்காடுகளை மட்டுமே கொண்டது அல்ல. இடையிடே பல கிராமங்கள், குக்கிராமங்கள். அதில் வசிக்கும் மக்கள், அவா்களது வாழ்வாதாரமான விவசாய நிலங்கள். மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது; வனப்பரப்பும் குறையக்கூடாது; போதிய நிதி ஒதுக்கீடு இல்லை. இத்தனை சவால்களுக்கிடையில் இந்தச் சாதனை சாத்தியமாகியிருக்கிறது! அதற்குக் காரணம் மிகத் திறமையான வனத்துறை அதிகாரிகளும், அவா்களின் வழிகாட்டுதலின்படிக் கடமையுணா்வுடன் பணியாற்றிய வனத்துறை ஊழியா்களும்தான் என்றால் அது மிகையாகாது. 

இப்புலிகள் காப்பகத்தின் கள இயக்குனராகப் பொறுப்பேற்றுக் கொண்ட இந்திய வனப் பணி (இ.வ.ப.) அதிகாரி அன்வா்தீன், பல புதிய முயற்சிகளை முன்னெடுத்தாா். புலிகளின் முக்கிய இரை ‘ப்ளாக் பக்’ எனப்படும் வெளிமான். இவ்வகை மான்களின் எண்ணிக்கை அதிகரித்தால் புலிகளுக்குப் போதுமான உணவு இருக்கும். அவை இரை தேடி ஊருக்குள் நுழையவோ, அருகிலுள்ள பந்திப்பூா் வனத்துக்கு இடம் பெயரவோ அவசியமிருக்காது. பவானிசாகா் வனச் சரகத்துக்கு உள்பட்ட தெங்குமரஹாடா, வெளிமான்கள் அதிகம் வாழும் பகுதி. தெங்குமரஹாடா தற்போது முதுமலை புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்ட புதிதில் இது இக்காப்பகத்துக்கு உட்பட்டு இருந்தது.

இங்கிருந்த பல ஏக்கா் வனப்பரப்பில் மண்டிக்கிடந்த சீமைக் கருவேலத்தை அகற்றி, அதற்குப் பதிலாக வெளிமான்களுக்கு மிகவும் விருப்பமான சில புல் வகைகளை அங்கு வளா்க்க நடவடிக்கை எடுத்தாா். வன ஆா்வலா்கள் ஓா் வனப்பரப்பை தத்தெடுத்துக் கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்தினாா். இத்திட்டத்திபடி, நாம் அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் செலுத்தி, ஒரு குறிப்பிட்ட அளவு வனப்பரப்பைத் தத்தெடுத்துக் கொள்ளலாம். அத்தொகையைக் கொண்டு வனத்துறை ஊழியா்கள் அவ்விடங்களில் சீமைக் கருவேலத்தை அகற்றிப் புல்விதைகளைத் தூவிப் பராமரித்துக் கொண்டாா்கள். தத்தெடுக்கும் வரையில் மட்டுமே வெளி நபா்களின் பங்களிப்பு; மற்றவையெல்லாம் வனத்துறையின் செயல்பாடுகளே.

என்னைப்போல் பல சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் பலருக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது. போட்டி போட்டுக் கொண்டு பலரும் வனங்களைத் தத்தெடுத்துக் கொண்டோம் (இன்றும் காராச்சிக்கொரை சோதனைச்சாவடியின் அருகில் சுஜ்ஜல்குட்டைப் பகுதியில் ‘ஒளி வனம்’ என்று, எங்கள் சுற்றுச்சூழல் இயக்கத்தின் பெயா் தாங்கிய பதாகை நிற்கிறது). இதனால் தேவையான நிதியும் கிடைத்தது; வெளியாட்கள் வனங்களுக்குள் நுழைவதும் தவிா்க்கப்பட்டது. அன்று விதைத்தது இன்று பலன் தந்துள்ளது. மான்களின் எண்ணிக்கை உயா்ந்தது; அவற்றைத் தேடிவந்த புலிகளின் எண்ணிக்கையும் உயா்ந்தது!

வனங்களின் பாதுகாப்பில் வேட்டைத்தடுப்புக் காவலா்களின் பங்கு இன்றியமையாதது. வனங்களிலே பிறந்து வளா்ந்த மக்களில் இருந்து சிலா் தோ்ந்தெடுக்கப்பட்டு வனத்துறையால் உரிய பயிற்சி கொடுக்கப்பட்டுப் பிறகு வேட்டைத்தடுப்புக் காவலா்களாகப் பணியில் அமா்த்தப்படுகிறாா்கள். இவா்களுக்குக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. அவா்கள் காட்டில் ரோந்துப் பணியில் ஈடுபடத் தேவையான உபகரணங்கள் வாங்க இந்தச் சம்பளம் போதாது. இதற்கும் ஒரு திட்டத்தை அவா்அறிமுகப்படுத்தினாா். ஒரு தொகையைச் செலுத்தி ஒரு வேட்டைத்தடுப்பு முகாமைத் தத்தெடுத்துக் கொள்ளலாம். பலரும் தத்தெடுத்துக் கொண்டதில் சோ்ந்த தொகையில் வேட்டைத்தடுப்புக் காவலா்களின் ரோந்துப் பணிக்குத் தேவையான காலணிகள், தொங்கு பைகள், டாா்ச் லைட்டுகள், தண்ணீா் பாட்டில்கள், மழைக் கோட்டுகள் போன்றவை வாங்கித்தரப்பட்டன. தத்தெடுத்துக் கொண்ட புரவலா்கள் நான்கு நாள்கள் அந்த வேட்டைத்தடுப்பு முகாமில் தங்கியிருந்து அவ்வூழியா்கள் பணியாற்றும் விதத்தைக் காணலாம்.

சூழல் சுற்றுலாவைக்கூட ஒரு புதிய முறையில் செயல்படுத்தினாா் வனஅதிகாரிஅன்வா்தீன். ‘வண்ண பூரணி’ என்று பெயரிட்டு, வெளிநாடுகளில் உள்ளதுபோல் வனத்துறையின் பிரத்யேகமான வாகனங்களில், சில குறிப்பிட்ட வழித்தடங்களில், பாதுகாப்பான முறையில் பொதுமக்கள் விலங்குளைக் கண்டு மகிழ ஏற்பாடு செய்தது; பண்ணாரியில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தைப் பற்றிப் பொதுமக்கள் அறிந்து கொள்ள உதவியாகத் தகவல் மையம் அமைத்தது; கோவை மண்டல வனப் பாதுகாவலராகப் பணியாற்றியபோது, ‘வனங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற பெயரில் பள்ளி மாணவா்களை வனத்துறையின் அனுமதியோடும் பாதுகாப்போடும் கோவை, நீலகிரி வனங்களுக்குள் அழைத்துச் செல்ல வகை செய்தது போன்ற இவரது புதிய முயற்சிகள் வனப்பாதுகாப்புக்கு வித்திட்டன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அன்வா்தீன் தலைமையில் அப்போதிருந்த மிக அருமையான குழு - திரு. ராஜ்குமாா் இ.வ.ப, திருமதி. பத்மா இ.வ.ப, திரு. அருண்லால் இ.வ.ப, மற்றும் அவா்களோடு இணைந்து பணியாற்றிய அத்தனை வனத்துறை ஊழியா்கள் -திறம்பட பணியாற்றி இச்சாதனைக்கு அடித்தளமிட்டது.இவா்களில் பலரோடு சோ்ந்து பணியாற்றிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அடுத்தடுத்துப் பொறுப்பேற்றுக் கொண்ட கள இயக்குனா்களும், பிற அதிகாரிகளும், மேலும் மேலும் நன்முயற்சிகளை மேற்கொண்டு இன்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை உலகின் பாா்வையில் நிறுத்தி உள்ளாா்கள்!

சாதனை படைத்திருக்கும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் எதிா்கொள்ள வேண்டியிருக்கும் சவால்கள் பல: மைசூரு - தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலை இக்காப்பகத்தைப் பிளந்துகொண்டு செல்கிறது. இங்கு இரவில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களால் பல விலங்குகள் அடிபட்டு உயிரிழக்க நேரிடுகிறது. உச்சநீதிமன்றம் இந்நெடுஞ்சாலையில் இரவுப் போக்குவரத்துக்குத் தடை செய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் பரிந்துரைத்திருக்கிறது.

பிற மாநிலங்களிலிருந்து அளவுக்கதிகமாகக் கரும்பு ஏற்றி வரும் லாரிகள், பண்ணாரி சோதனைச் சாவடியில் வேறு வழியில்லாமல் சில கரும்புகளை இறக்க வேண்டியுள்ளது. இதற்காகவே யானைகள் காத்திருந்து அக்கரும்புகளைச் சாப்பிடுகின்றன. ஏற்றுமிடத்திலேயே அனுமதிக்கப்பட்ட அளவுதான் கரும்புகளை ஏற்ற வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டு, மீறினால் லாரிகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

புற்றீசல்போல் முளைத்திருக்கும் தனியாா் தங்கும் விடுதிகள், எவ்விதக் கட்டுப்பாடுமின்றி விருந்தினா்களைக் காட்டுக்குள் அழைத்துச் செல்கின்றன. வனத்துறை இவா்கள் மேல் நடவடிக்கை ஒன்றும் எடுப்பதில்லை. கண்டும் காணாமலும் இருக்கிறது. இது தவறான போக்கு. முதுமலைபோல் சத்தியமங்கலம் புலிகள் காப்பகமும் சீக்கிரத்தில் சீரழிந்து போய்விடும்.

சூழல் சுற்றுலாவினால் நன்மையையும் உண்டு, தீமையும் உண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை சரியான விதிமுறைகளும், கண்டிப்பான நிா்வாகமும் இல்லாத காரணத்தால் தீமைகளே அதிகம். அதிலும் தமிழ் நாட்டில் சூழல் சுற்றுலாவால் வனங்கள் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றன. வனத்தின் தாங்கும் சக்தியைவிடக் குறைவான எண்ணிக்கையிலேயே பயணிகளை அனுப்ப வேண்டும். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாள்கள் மட்டுமே சுற்றுலாவுக்கு அனுமதிக்கப்பட வேண்டும். இரவு நேரத்தில் வனத்தினுள் செல்ல வனத்துறையினரைத்தவிர வேறு யாருக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. வனத்துறை வாகனங்கள் மட்டுமே சுற்றுலாவுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். அவையும் பேட்டரிகளில் இயங்கும் வாகனங்களாக இருத்தல் வேண்டும். இதனால் ஒலி, காற்று மாசு குறையும். இவற்றுக்கு அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும்.

இக்காப்பகத்தின் வலைத்தளத்தில், சுற்றுலாப் பயணிகளின் பதிவுகளைக் கண்டால் வேதனை ஏற்படுகிறது. சாலைகள் சரியாக இல்லை; ஒரே மேடு பள்ளம்; நீண்ட நேரப் பயணம் அலுப்பூட்டுகிறது; குறைவான நேரத்தில் நிறைய மிருகங்களைப் பாா்க்கும் வகையில் சுற்றுலாவை மாற்றியமைக்க வேண்டும் என்பன போன்ற பதிவுகள் இருக்கின்றன.

எப்படி? விலங்குகளை சா்க்கஸில் உள்ளதுபோல் வரிசையாக வந்து நிற்கச் சொல்லிப் புகைப்படம் எடுக்க வழி செய்ய வேண்டுமா?

உண்மையான அக்கறையுடன் வரும் பயணிகளுக்கு வனத்துறை இன்னும் மேம்பட்ட சுற்றுலாவைத் தரலாம். வேட்டைத்தடுப்புக் காவலா்களுக்குக் காடுகளின் ஒவ்வொரு மூலையும் விலங்குகளின் ஒவ்வொரு அசைவும் நன்றாகத் தெரியும். ஆனால், அவற்றை விருந்தினருக்கு எடுத்துச் சொல்லும் திறன் அவா்களுக்குக் கிடையாது. இதற்கென ‘வழிகாட்டிகள்’ நியமிக்கப்படலாம்.

வனத்துறை விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளிலும் மாற்றம் தேவை. அப்பகுதியில் வாழும் வனவாசிகளின் நிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறி, பழங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, அப்பகுதியின் உணவு வகைகளைச் சுகாதாரமான முறையில் செய்து தர வேண்டும். வெளிநாட்டுப் பயணிகளுக்கு வழிகாட்டிகளாக, ஆங்கிலம் தெரிந்த, படித்த இளைய வயதினா்களுக்கு வாய்ப்பு தரலாம். தனியாரிடம் ‘அவுட் சோா்சிங்’ செய்தால் இவை எல்லாம் எளிதில் நடக்கும். தனியாா் நுழைந்தால் ‘வணிகம்’ மேம்பட்டு ‘வனம்’ காணாமல் போய் விடும். சூழல் சுற்றுலா எப்போதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

உணவுக் கூா்நுனிக் கோபுரத்தின் உச்சியிலிருப்பது புலிகள். அவை நன்றாக இருந்தால்தான் காடு நன்றாக இருக்கும். காடு நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். இவற்றை அரசும், வனத்துறையும், மக்களும் உணா்ந்து, இணைந்து செயல்பட்டால் சாதனைகள் தொடரும்.

கட்டுரையாளா்: சுற்றுச்சூழல் ஆா்வலா்.



Read in source website

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலும், சட்டப்பேரவை, நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தோ்தல் என்பதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வந்தது. ஆனால், நாளடைவில் இவையனைத்தும் மாறிவிட்டன. உள்ளாட்சி அமைப்புகளில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தோ்தல் நடைபெற்ற நிலையில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் இன்னும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது.

அதே போன்று, நாடு முழுவதும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தோ்தல் என்பது மாறி ஆண்டு முழுவதும் தோ்தல் நடைபெற்று வருகிறது. இதனால் எழுத்தறிவு பெறாமலும், விழிப்புணா்வு இல்லாமலும் இருக்கும் வாக்காளா்கள் ~ தோ்தல் நடக்கிறது, ஓட்டு போடுகிறோம் என்ற மனநிலையில்தான் உள்ளனா்.

நாட்டில் கிராமங்களை அரசியல் கட்சிகள் ஆக்கிரமிக்காத சூழலில் நம் நாடு 1952-இல் முதல் தோ்தலைச் சந்தித்தபோது நாட்டில் 18.33 சதவீதம் போ் மட்டுமே எழுத்தறிவு பெற்றவா்களாக இருந்தனா். ஆனாலும், வாக்களிப்பதை தங்கள் ஜனநாயகக் கடமையாகக் கருதினா். அதனால் முதல் தோ்தலில் 44.87 சதவீத வாக்குகள் பதிவானது. அன்றைய சூழலில் இது திருப்தியளிக்கக் கூடிய சதவீதமாகும்.

அதன் பின்னா் நடைபெற்ற ஒவ்வொரு தோ்தலின் போதும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்து வந்துள்ளது. ஆனால் திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பது வருத்தமான ஒன்றாகும். ஏனெனில், ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போதும் எதிா்பாா்த்த அளவைக் காட்டிலும் எழுத்தறிவு விகிதம் அதிகரித்தே வருகிறது. ஆனால் வாக்குப்பதிவு சதவீதம் திருப்தியளிப்பதாக இல்லை.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நாட்டில் 74.04 சதவீதத்தினா் எழுத்தறிவு பெற்றவா்களாக இருந்தனா். ஆனால், 2019 நாடாளுமன்றத் தோ்தலில் 67.40 சதவீத வாக்குகள் பதிவானது. இதன்மூலம் எழுத்தறிவுக்கும், வாக்குப்பதிவுக்கும் எவ்விதத் தொடா்புமில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

இன்று குக்கிராமங்களில் கூட அரசியல் கட்சிகள் வேரூன்றிவிட்ட நிலையில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கவில்லை. இதற்கு வாக்காளா்கள் மட்டுமே காரணமன்று. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளும் தான் காரணமாகும். வாக்களிக்காமல் இருப்போா் தாங்கள் வாக்களிக்காததற்கு வாக்களிப்பதால் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதையே காரணமாகக் கருதுகின்றனா்.

ஆனால், ஒரே ஒரு வாக்குக்கும் மிகப்பெரிய வலிமை உண்டு என்பதை சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான ஓட்டெடுப்பின் போது காண முடியும். இது, வாக்களிக்காமல் ஒதுங்கியிருக்கும் எத்தனை வாக்காளா்களுக்குத் தெரியும்?

வாக்களிப்பதில் நகா்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் காலங்காலமாக நிறைய வேறுபாடுகள் உள்ளன. கிராமப்புறங்களில் வாழ்வோா் வாக்களிப்பின் அவசியம் பற்றி முழுமையாக அறிந்திராதபோது வாக்களிப்பதில் அதீத ஆா்வம் கொண்டவா்களாக உள்ளனா். அதிலும், அண்மைக்கால தோ்தல்களில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகளவில் வாக்களிப்பதைக் காண முடிகிறது.

அதனால்தான் அண்மைக்காலமாக அரசியல் கட்சிகள் கிராமப்புற வாக்காளா்கள் மீது கவனம் செலுத்துகின்றன. அரசியல் கட்சிகளின் தோ்தல் வாக்குறுதிகள்கூட கிராமப்புற வாக்காளா்களை மையப்படுத்தியும், அவா்களைக் கவா்வதாகவும் இருக்கின்றன. கிராமப்புறங்களில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் போது ஒருசில அரசியல் கட்சிகள் தங்களுக்கே வெற்றி வாய்ப்பு என மாா்தட்டிக் கொள்கின்றன.

ஆனால், நகா்ப்புறங்களில் வாழும் படித்தவா்கள், வசதிபடைத்தவா்கள் அரசியல் பற்றி விவாதத்தில் ஈடுபடும் அளவுக்கு வாக்களிப்பதில் ஆா்வம் காட்டுவதில்லை. அண்மையில் நடைபெற்ற தேசிய வாக்காளா் தின நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமா் நரேந்திர மோடி, நகா்ப்புறங்களில் குறைவான அளவிலேயே வாக்குப்பதிவு நடைபெறுவதாகக் கவலை தெரிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

நகா்ப்புறங்களில் வசிப்போா் வாக்களிப்பதை ஜனநாயகக் கடமை என்று கருதுவதில்லை. மாறாக, தோ்தல் நாளன்று தாங்கள் வாக்களிக்கும் பகுதியில் நிலவும் சூழலுக்கேற்பவே வாக்களிப்பது குறித்து முடிவு செய்கின்றனா். இது ஒருபுறமிருந்தாலும், நகா்ப்புறங்களில் வாக்குப்பதிவு குறைவாக இருப்பதற்கு அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் தோ்வும் முக்கிய காரணமாகும்.

அரசியல் கட்சிகள் பிரபலமானவா் என்றும், நிா்பந்தம் காரணமாகவும் வேட்பாளா்களைக் களமிறக்கினாலும் வேட்பாளா்களைப் பற்றிய மனநிலை மக்கள் மத்தியில் வேறாக இருக்கிறது. வாக்காளா்களின் இத்தகைய மனநிலை காரணமாகவே எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதன் அடையாளமாக நோட்டாவுக்கு வாக்களிக்கின்றனா். இது, ஒருவகையில் எதிா்ப்பை வெளிப்படுத்துவதற்கான செயல்பாடு என்றாலும் சரியான தீா்வாகாது.

இத்தகைய மனநிலையில் இருப்போா் வேறு வகையான முடிவை மேற்கொள்ள வேண்டும். சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தோ்தல்களில் போட்டியிடுவோா் அனைவருக்கும் அறிமுகமானவராகவோ, பெயரளவிலாவது அறிந்தவராகவோ இருக்க வாய்ப்பில்லை. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவோா் ஏதோவொரு வகையில் அறிமுகமானவராகவோ, பெயரளவில் அறிந்தவராகவோதான் இருப்பாா்கள்.

அதனால், அவா்களின் குணாதிசயம், செயல்பாடுகளைக் கண்டறிந்து வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். சட்டப்பேரவை, நாடாளுமன்ற அமைப்புகளைக் காட்டிலும் உள்ளாட்சி அமைப்புகளில் இத்தகைய வாய்ப்புள்ளது. ஆனாலும்கூட, இன்றைய அரசியல் சூழலில் உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தமட்டில் இது சாத்தியமான ஒன்று. ஆனால் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பில் சற்று சிரமமான காரியம்தான்.

ஆயினும், வாக்களிப்பதிலிருந்து ஒதுங்கிவிடாமல் அரசியல் கட்சிகள் சாா்பற்று போட்டியிடும் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும். வாக்களிக்காமல் இருப்போா் இம்முறையைப் பின்பற்றினால் உள்ளாட்சி அமைப்புகள் தொடங்கி காலப்போக்கில் மற்ற அமைப்புகளிலும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இதன் மூலம் அரசியல் கட்சிகளை வேட்பாளா்கள் தோ்வில் கவனம் செலுத்த வைக்க முடியும்.

வாக்களிப்பது என்பது ஜனநாயகக் கடமை என்றும், ஒவ்வொரு வாக்குக்கும் உயரிய மதிப்புண்டு என்றும் அனைவரும் எண்ண வேண்டும். ஆனால், இவ்வாறு எண்ணாததால் தான் ஒவ்வொரு தோ்தலுக்கு முன்பாக வாக்குப்பதிவின் அவசியத்தை பறைசாற்ற வேண்டியுள்ளது.

வாக்களிப்பதில் எதிா்பாா்த்த மாற்றத்தைக் காண முடியாத காரணத்தாலேயே வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. அண்மையில் தனியாா் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற ஆய்வொன்றில், வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று 86 சதவீதத்தினா் கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் விபத்துகளுக்கும், விபரீதங்களுக்கும் அதிகப்படியானோா் வாக்களிக்காமல் ஒதுங்கி விடுவதே காரணமாகும். அதனால், ஒவ்வொருவரும் தமது வாக்குரிமையை முழுமையாகப் பயன்படுத்தினால் நாம் விரும்பும் மாற்றங்களை நம்மால் கொண்டு வர முடியும்.

எம்.ஏ.,எம்.பில்., இளநிலை உதவியாளா், 
அரசு கலைக்கல்லூரி (நிலை 1), அரியலூா்.



Read in source website

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடந்து இன்னும் ஓராண்டு முடியாத நிலையில், அதன் தாக்கம் தற்போது நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் இருக்கக்கூடும் என்பது தர்க்கபூர்வமான எதிர்பார்ப்பு. உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கையில், திமுக தலைமையிலான மாநில அரசின் பதவிக்காலமும் கருத்தில் கொள்ளப்படும் என்ற யூகங்களும் அதற்கு வலுசேர்க்கலாம்.

ஆனால், கடந்த சில மாதங்களின் அரசியல் போக்குகளைப் பார்க்கும்போது, சட்டமன்றத் தேர்தலைப் போலவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் வெற்றியை அவ்வளவு எளிதில் பரிசளித்துவிடாது என்றே தோன்றுகிறது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியான அதே நேரத்தில், பொங்கல் பரிசு தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் தரக் கட்டுப்பாடு மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செய்தியும் வெளிவந்தது. அனைத்து மக்களுக்குமான பெருந்திட்டம் ஒன்றில், நடந்த ‘கவனக்குறைவு’க்குத் தனியொரு அதிகாரியைப் பொறுப்பாக்கிவிட்டதால் மக்களின் அதிருப்தி குறைந்துவிடுமா என்பது ஒரு முக்கியமான கேள்வியாக எதிர்நிற்கிறது.

திமுகவை அதன் கூட்டணிக் கட்சிகள் 2024 மக்களவைத் தேர்தல் வரைக்கும் விட்டுப் பிரியப்போவதில்லை என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியிருக்கிறது. காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் தனித்து நின்று தேர்தல் களத்தைச் சந்திக்கும் நிலையில் இல்லை என்று பொருள்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. பாஜக எதிர்ப்பின் அடிப்படையில், இக்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து நிற்கையில், பாஜக தன்னந்தனியாகவே உள்ளாட்சித் தேர்தல் களத்தைச் சந்திக்கிறது. அதிமுகவுடனான கூட்டணி தொடர்ந்தாலும், தங்களது எதிர்பார்ப்புக்கேற்றவாறு அதிக இடங்களில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற முடியாத நிலையிலேயே பாஜக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு அதிமுக தரப்பிலிருந்து வந்துள்ள ஆதரவு, இரண்டு கட்சிகளுக்கும் இடையே உடனடி விரிசலுக்கு வாய்ப்பில்லை என்பதையே தெரிவிக்கிறது. பொதுத் துறைச் சொத்துகளை விற்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அமமுக, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான நிதி ஒதுக்கீடு, நதிநீர் இணைப்புத் திட்ட அறிவிப்பு ஆகியவற்றை வரவேற்றுள்ளது. அமமுகவின் தரப்பிலும் பாஜகவுக்கு வெளிப்படையான எதிர்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அமமுக தனித்து நின்று போட்டியிட்டாலும்கூட, வெற்றிபெற முடியாத இடங்களில் அதிமுகவுக்கு ஆதரவளிக்குமா என்ற எதிர்பார்ப்புகளும் நிலவுகிறது. எனினும், உள்ளூர்த் தலைவர்களுக்கு இடையிலான தேர்தல் வியூகங்களே இவற்றையெல்லாம் முடிவுசெய்யக்கூடும்.

சட்டமன்றத் தேர்தலைப் போலவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் மூன்றாவது இடம் யாருக்கு என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. வெற்றிபெறும் இடங்களைக் காட்டிலும் வாங்குகிற வாக்குகளின் மொத்த எண்ணிக்கைக்கும்கூட முக்கியத்துவம் உண்டு. பாஜக, அமமுக, தேமுதிக, மநீம, நாதக ஆகியவை தனித்தனியாகக் களத்தில் நிற்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில் கட்சி, கொள்கைகள் அனைத்தையும் தாண்டி, உள்ளூர் அளவில் பொதுப் பணிகளில் பிரதிபலன் எதிர்பாராது அக்கறையுடன் பங்கேற்பவர்களே மக்கள் பிரதிநிதிகளாக அமர்த்தப்பட வேண்டும் என்பதே முக்கியமானது.



Read in source website

உள்ளாட்சி! உள்ளூர் மக்களின் சுயாட்சி. தமிழ் மண்ணின் பாரம்பரியப் பண்பாட்டுப் பெருமைகளில் இதுவும் ஒன்று. நகரங்களையும் ஊர்கள்தோறும் செயல்பட்டுவந்த மன்றங்களையும் சங்கப் பாடல்கள் பலவும் காட்சிப்படுத்துகின்றன. இவை சங்க காலத்து ஊர்கள், நகரங்களின் இருப்பையும் அங்கு நிலவிய உள்ளூராட்சியையும் புலப்படுத்துகின்றன.

பல்லவர்-பாண்டியர்-சோழர் பேரரசுகளின் ஆட்சிக் காலத்தில் ஏற்கெனவே செயல்பட்டுவந்த ஊர்களும் மன்றங்களும் தொடர்ந்து செயல்பட்டுவந்ததுடன், புதிதாக மேலும் பல ஊர்களும் நகரங்களும் உருவாக்கம் பெற்றிருக்கின்றன. அனைத்து ஊர்களிலும் உள்ளூர் மக்களைக் கொண்ட ‘அவை’ செயல்பட்டது. ஊர்களில் செயல்பட்ட அவை ‘ஊரவை’ எனவும், நகரங்களில் செயல்பட்ட அவை ‘நகரவை’ எனவும், அந்தணர் குடியிருப்புக்களான சதுர்வேதிமங்கலம், தனியூர் போன்றவற்றில் செயல்பட்ட அவை, ‘சபை’ எனவும் அழைக்கப்பட்டன. ஊர்களும் நகரங்களும் தன்னாட்சி உரிமையுடன் உள்ளூரில் செயல்பட்ட அதே நேரத்தில், அவை அரசுகளின் அடிப்படை நிர்வாக அமைப்புகளாகவும் விளங்கியுள்ளன. உள்ளூர் நிர்வாகத்தில் அரசு தலையிடுவதில்லை.

நூற்றுக்கணக்கான ஊர்களில் காணப்படும் கல்வெட்டுகள் ‘அவை’களின் செயல்பாடுகளை விவரிக்கின்றன. உள்ளூர் நிர்வாகம், நில நிர்வாகம், பாசன வசதிகள் பராமரிப்பு, கோயில் நிவந்தங்களுக்கான அறக்கட்டளைகளைப் பெற்று அவற்றை நிறைவேற்றுதல், நீதி பரிபாலனம், அரசுக்கு வரி வசூலித்துக் கொடுத்தல் உள்ளிட்ட பணிகளை அவை செய்துவந்துள்ளன.

ஊர் அவைகளுக்கான உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறித்த விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை. ஆனால், மங்கலம் மற்றும் தனியூர் சபைகளுக்கான உறுப்பினர் தேர்வு விவரங்களைப் பதிவிட்டுள்ள கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பாண்டிய மன்னன் மாறன் சடையன் காலத்தில், மானூர் என்னும் ஊரில் பொறிக்கப்பட்ட (கி.பி. 800) கல்வெட்டு, சபை உறுப்பினர்களுக்கான தகுதிகள், சபை நடவடிக்கைகளின்போது உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள், கட்டுப்பாடுகள் மீறப்படும்போது விதிக்கப்படும் தண்டம் ஆகிய விவரங்களையும், முதலாம் பராந்தக சோழன் காலத்தில் (கி.பி. 919) உத்திரமேரூரில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, சபை உறுப்பினர் தேர்வுக்குரிய தகுதிகளையும் தேர்தல் முறைகளையும் விவரிக்கின்றன.

இவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சீரும் சிறப்புமாகச் செயல்பட்டுவந்த உள்ளாட்சி முறை விஜயநகர அரசுக் காலத்தில் சோதனைகளைச் சந்தித்து, இறுதியில் மறைந்தொழிந்து போனது. உள்ளூர் நிர்வாகம் அரசு அலுவலர்களால் நிர்வகிக்கப்படும் முறை தோன்றியது. சுல்தான்கள், மராட்டியர், முகமதியர் காலத்திலும் இதே நிலை நீடித்தது. முகமதியர் காலத்தில் ‘பஞ்சாயத்து’ என்ற நடைமுறை செயல்பட்டிருக்கிறது. ஆனால், அது மக்களாட்சி அல்ல.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே (1687) அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த சென்னை கோட்டை மற்றும் குடியிருப்புப் பகுதிகளை உள்ளடக்கி ஒரு உள்ளூர் நிர்வாகத்தை ஏற்படுத்தியிருந்தனர். இந்திய மக்கள் ஆட்சி அதிகாரம் பெறுவதை ஆங்கிலேயர்கள் விரும்பவில்லை என்றாலும், மக்களுக்குக் கல்வி, சாலை, வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என விரும்பினர். அவர்களிடம் போதிய நிதிவசதி இல்லாததால், பொதுமக்களிடமிருந்தே நிதியைத் திரட்டி, அதிலிருந்து அவ்வசதிகளைச் செய்துதரும் ஏற்பாடுகளைச் செய்யலாயினர். இந்தச் செயல்பாடுகளே பின்னாளில் மக்கள் பங்களிப்புடன் கூடிய உள்ளூராட்சிகள் உருவாக்கம் பெறுவதற்கு முதல் காரணியாக அமைந்தது.

1865-ல் பிறப்பிக்கப்பட்ட நகர மேம்பாட்டுச் சட்டம், மக்கள் விரும்பும் பகுதிகளில் வரிகள் வசூலித்து, அதன் மூலம் தெருக்கள், சாலைகள், கழிவுநீர், தெருவிளக்கு, பொதுச் சுகாதாரம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித்தரும் வகையில் நகராட்சிகளை உருவாக்குவதற்கு வழிவகுத்தது. 1866-ல் வாலாஜாப்பேட்டை (ராணிப்பேட்டை மாவட்டம்) நகராட்சி உதயமானது. தமிழ்நாட்டில் முதன்முதலாக அமைந்த நகராட்சி இதுதான்.

மாவட்டங்களில் கல்வி, சாலை வளர்ச்சியை முன்னெடுக்க விரும்பிய அரசு, விவசாயிகள் செலுத்தும் நிலவரியின் மீது ஒரு குறிப்பிட்ட சதவீதம் மேல்வரியாக (செஸ்) வசூலிக்கவும், அந்தத் தொகையை அந்தந்த மாவட்டங்களிலேயே வைத்து பள்ளி, சாலை வசதிகள் ஏற்படுத்தவும், 1863, 1866 ஆண்டுகளில் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணையிட்டது. இவ்வாறு வசூலிக்கப்படும் தொகையை நிர்வகிக்க 1871-ல் உள்ளூர் நிதிச் சட்டம் (Local Fund Act) வெளியிடப்பட்டது. இதன்படி மாவட்டங்களில் உள்ளாட்சி நிதிக் கழகங்கள் (Local Fund Boards) அமைந்தன. இதன்மூலம், உள்ளூர் மக்களின் தேவைக்குரிய பணிகளை மேற்கொள்வதற்கென அவர்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியைக் கையாள சட்டப்படியான நிறுவனங்கள் உருப்பெற்றன.

உள்ளூர் நிதிகள் மீதான செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்த ரிப்பன் பிரபு, உள்ளூர் நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் எனவும் அதிகாரங்கள் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும் 1882-ல் அரசுக்குப் பரிந்துரை அளித்தார். 1884-ல் உள்ளாட்சி மன்றங்களுக்கான சட்டம் (Madras Local Boards Act) அறிக்கையிடப்பட்டது. அதன் அடிப்படையில், மாவட்டம், தாலுகா, கிராமங்கள் அளவில் மூன்றடுக்கு மன்றங்கள் உருவாயின.

இந்திய உள்ளூர் நிதிச் செயல்பாடுகளை ஆய்வுசெய்ய இங்கிலாந்து அரசால் அமைக்கப்பட்ட ஆணையம் (Royal Commision) 1915-ல் தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது. இவ்வறிக்கையின் முக்கியப் பரிந்துரைகளில் ஒன்று, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளாட்சி மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். 1918-ல் சமர்ப்பிக்கப்பட்ட மாண்டேகு-செம்ஸ்போர்ட் அறிக்கையில், உள்ளூர் நிர்வாகத்தில் உள்ளூர் மக்களை அதிக அளவில் பங்குபெறச் செய்வதுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அளவில் நிர்வாக, நிதி அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்தது.

பரிந்துரைகளை ஏற்ற அரசு, 1919-ல் நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை, பெருநகரங்களில் மாநகராட்சியும் (Corporation), சிறிய நகரங்களில் நகராட்சியும் (Municipality) அமைக்கப்படவும், ஊரகங்களைப் பொறுத்தவரை, மாவட்ட, தாலுகா, கிராம அளவில் உள்ளாட்சி மன்றங்கள் ஏற்படுத்தப்படவும், அம்மன்றங்களில் உள்ளூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களும் உறுப்பினர்களும் செயல்படவும் வழிவகைசெய்து சட்டங்கள் இயற்றப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக 1919-ல் சென்னை மாநகராட்சிச் சட்டம் இயற்றப்பட்டது. 1920-ல், உள்ளாட்சி மன்றங்கள் சட்டம் (Madras Local Boars Act) வெளியிடப்பட்டது. இச்சட்டம் மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளிலும், மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி மன்றங்கள் ஏற்பட வழிவகுத்தது. அதே ஆண்டில் சென்னை மாவட்ட நகராட்சிகள் சட்டம் (Madras District Municipalities Act) வெளியிடப்பட்டது. இது தகுதி உள்ள பெரிய ஊர்களில் நகராட்சிமன்றம் அமைக்கப்பட வழிவகை செய்தது. இதன்படி, தமிழகம் முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிர்வகிக்கும் உள்ளாட்சி மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இவ்வாறு, ஒரு காலகட்டத்தில் முற்றிலுமாக மறைந்துபோன உள்ளூராட்சி நிறுவனங்கள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், அன்றைய சூழல்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட புதிய பரிமாணத்தில் மீண்டும் உருப்பெற்று நிலைபெற்றன.

- ஜெயபால் இரத்தினம், உள்ளாட்சித் துறை அலுவலர் (ஓய்வு), ‘தமிழக வரலாற்றில் பெரம்பலூர்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: jayabalrathinam@gmail.com



Read in source website

இந்திய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI), அதன் அடிப்படைப் பணியான, பாதுகாப்பான - ஆரோக்கியமான உணவை அனைத்து மக்களுக்கும் உறுதிப்படுத்துவது சார்ந்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. மரபணு மாற்றப்பட்ட உணவு தொடர்பான வரைவு விதிமுறைகள் என்ற பெயரில், மற்ற நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட உணவு இந்தியாவிலும் அங்கீகரிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருபுறம் பிரதமர் மோடி வேதியியல் ஆய்வகங்களிலிருந்து விவசாயத்தை வெளியேற்ற வேண்டும், இயற்கை விவசாயத்தைக் கையிலெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திவரும் நேரத்தில்தான் மரபணு மாற்றப்பட்ட உணவுக்கு ஆதரவான இந்த விதிமுறை முன்மொழியப்பட்டுள்ளது!

மரபணு மாற்றப்பட்ட உணவு பற்றிய வரைவு விதிமுறைகளை உணவுப் பாதுகாப்பு ஆணையம் 2021 நவம்பர் 15-ம் தேதி அறிவித்தது. வரைவு விதிமுறைகளுக்கு எதிரான குரல்கள் வலுவாக ஒலிக்கத் தொடங்கின. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் இந்த வரைவு விதிமுறைகளை வெளியிட வேண்டும், மக்கள் கருத்து தெரிவிக்க வழங்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 5 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடரும் விவாதம்

உலகின் மொத்த பயிரிடும் பரப்பில் 3% மட்டுமே மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். உலகின் பெரும்பாலான நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்/உணவைத் தடைசெய்துள்ளன. மரபணு மாற்றப்பட்ட உணவு பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது எனப் பல அறிவியல் ஆய்வுகள் பதிவுசெய்துள்ளன. மரபணு மாற்றப்பட்ட உணவானது நோய் எதிர்ப்புத் திறன், இனப்பெருக்க நலன், முக்கிய உறுப்புகள் - அவற்றின் செயல்பாடு, ஓர் உயிரினத்தின் வளர்ச்சி போன்றவற்றோடு சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது.

அத்தகைய உணவால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே பல நாடுகளில் அவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைத் தாண்டி வர்த்தகப் பாதுகாப்பு, விவசாயிகளின் விதை இறையாண்மை, வாழ்வாதாரம் உள்ளிட்டவற்றுக்கும் இவை ஆபத்தாகவே உள்ளன. இந்த ஆபத்துகள் குறித்து 400-க்கும் மேற்பட்ட ஆய்வுகள், பன்னாட்டு அறிஞர்களின் ஆய்வறிக்கைகள், மரபணு மாற்றப்பட்ட பயிர்/உணவின் தீய விளைவுகள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. மரபணு மாற்றப்படாத இந்திய உணவுக்கான கூட்டமைப்பும், பல நாடுகளைச் சேர்ந்த நுகர்வோர் அமைப்புகளும் இத்தகைய நஞ்சு உணவு தேவையில்லை என்று அறிவித்துள்ளன.

ஆனால், உணவுப் பாதுகாப்பு ஆணையமோ மரபணு மாற்றப்பட்ட உணவு பற்றி விழிப்புணர்வு இல்லாத, அந்த உணவை விரும்பாத மக்கள் மீது பாதுகாப்பற்ற உணவைத் திணிப்பதற்கான எளிதான வழிமுறைகளை முன்மொழிந்துள்ளது. 2006 மே, ஜூலை மாதங்களில் உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்தால் தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீதான விவாதத்தின்போது, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்திருந்தனர். மரபணு மாற்றப்பட்ட உணவு, பொதுவாகவே உணவு முறைகளின் கார்ப்பரேட்மயமாக்கல் குறித்தும் அவர்கள் கவலையை வெளியிட்டிருந்தனர். ஏழைகளுக்கான உணவு, நஞ்சில்லா உணவு, இயற்கை உணவு உற்பத்தி செய்பவர்களுக்கு ஆதரவு போன்றவற்றை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், நிறைவேற்றப்பட்ட சட்டத்திலோ பிரிவு 22-ன்கீழ், மரபணு மாற்றப்பட்ட உணவு, இயற்கைமுறை உணவு ஆகிய இரண்டும் ஒரே விதியில் இணைக்கப்பட்டிருந்தன!

நீளும் சர்ச்சைகள்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு 2021 ஜூன் மாதம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசியில், 500 டன் மரபணு மாற்றப்பட்ட அரிசி என்று கண்டறியப்பட்டு நிராகரிக்கப்பட்டது. ஏற்கெனவே, 2012-ல் இதேபோல் இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பாசுமதி அரிசி, மரபணு மாற்றம் செய்யப்பட்டது எனக் கண்டறியப்பட்டது.

இப்படி உள்நாட்டிலும் வெளிநாட்டு ஏற்றுமதியிலும் சட்டவிரோதமாக வலம்வரும் மரபணு மாற்றப்பட்ட உணவை ஒழுங்குபடுத்துதல் குறித்த கேள்விகளும் குடிமை அமைப்புகளின் புகார்களும் இருக்கும்போதிலும், மரபணு மாற்றப்பட்ட உணவைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை வெளியிடுவது குறித்து உணவுப் பாதுகாப்பு ஆணையம் கவலைப்படவில்லை.

இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் அந்த அமைப்பு உறுதியளித்த பல ஆண்டுகளுக்குப் பிறகு, கடைசியாக நவம்பர் 2021-ல்தான் வரைவு விதிமுறைகளையே வெளியிட்டுள்ளது. வரைவு விதிமுறைகளில், இரண்டு வகையான மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை ஒழுங்குபடுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால், உணவில் உயிரிப் பாதுகாப்பு (biosafety) சார்ந்த மதிப்பீடு எப்படிச் செய்யப்படும் என்பது குறிப்பிடப்படவில்லை. முன்மொழியப்பட்ட விதிமுறைகளுடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில், மற்ற நாடுகளில் ஒப்புதல் பெறப்பட்ட மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இங்கும் ஒப்புதலுக்கான அடிப்படையாக அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் குறித்த வழிகாட்டுதலில் பாதுகாப்பு நிபுணர்கள் குறித்துக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் தொழில் துறை, சில்லறை வணிகம், விவசாயிகள், நுகர்வோர் பிரதிநிதிகள், அமைச்சகப் பிரதிநிதிகளை இந்தக் குழு கொண்டுள்ளது. உயிரியல் பாதுகாப்பு மதிப்பீடு அடிப்படையில் ஒப்புதலோ நிராகரிப்போ அமையும் என்று கூறப்பட்டிருந்தாலும், அந்த உயிரியல் பாதுகாப்பு மதிப்பீடு எப்படி நடைபெறும், நீண்ட கால சோதனை, விரிவான சோதனை முறைகள் என்னென்ன என்பதைக் கோடிட்டுக் காட்டும் எந்த வழிகாட்டுதலும் இல்லை.

சுருக்கமாக இந்தக் குழுவுக்குத் தேவையான பாதுகாப்பு சார்ந்த நிபுணத்துவம் சிறிதளவுகூட வெளிப்படவில்லை; சட்ட விரோதமாக மரபணு மாற்றப்பட்ட உணவு விற்பனை பற்றியோ, ஒரு பயிருக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு ஏற்படும் கேடுகளைக் கவனிக்கவோ, முன்னெச்சரிக்கைக் கண்காணிப்பு சார்ந்த முன்னேற்பாடு பற்றியோ எந்தக் குறிப்பும் இந்த வரைவில் இல்லை. உண்மையில், இந்த வரைவு விதிமுறைகள் ஏற்கெனவே EPA 1986-ன் கீழ் உள்ள மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் (GEAC) குறைபாடுள்ள ஒழுங்காற்று விதிமுறைகளைக் கூடுதலாகப் பலவீனப்படுத்துகின்றன.

பொறுப்பு அவசியம்

இந்திய அரசமைப்பின்படி பொதுச் சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இருந்தாலும், மாநில அரசுகளின் கருத்து, கொள்கைகள் குறித்து இந்த வரைவு விதிமுறைகளில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. பெரும்பான்மை மாநிலங்கள் மரபணு மாற்றப்பட்ட உணவு/பயிர்களை எதிர்க்கின்றன. அத்தகைய மாநிலங்களில் மரபணு மாற்றப்பட்ட உணவை, உணவுப் பாதுகாப்பு ஆணையம் எவ்வாறு தடுக்கப் போகிறது?

வேளாண் வணிகம், உணவுத் தொழில் துறையின் மறைமுகத் திட்டத்தை இந்த வரைவு விதிமுறைகள் வெளிப்படுத்துகின்றன. இதன் மூலம் மரபணு மாற்றப்பட்ட விதைகளையும் அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் மட்டுமே பலன் பெறும். உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைகள் ஏற்படுத்தும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு பெற வேண்டிய நேரம் இது.

அத்துடன் மரபணு மாற்றப்பட்ட உணவோ பயிரோ தனக்குத் தேவையில்லை என நினைக்கும் ஒவ்வொரு தனிநபரின் விருப்பத்தையும் உறுதிப்படுத்த வேண்டிய கடமை உணவுப் பாதுகாப்பு ஆணையத்துக்கு உண்டு. எனவே, நமது உணவுத் தட்டுக்கு எது வந்து சேர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கத் தனிநபராகவோ, அமைப்பாகவோ, விவசாயக் குழுவாகவோ regulation@fssai.gov.in என்னும் மின்னஞ்சலுக்கு சனிக்கிழமைக்குள் (பிப்ரவரி 5) கருத்தைத் தெரிவிக்க வேண்டிய நேரம் இது.

அதே நேரம், உணவுப் பாதுகாப்பு ஆணையத்துக்குக் கூடுதல் பொறுப்புகள் உள்ளன. அனுமதிக்கப்படாத மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கும் விதிமுறைகளை அறிவிக்க வேண்டும். ஒரு புறம் மரபணு மாற்றப்பட்ட உணவு எளிதாக நுழைவதற்கு வசதியாக விதிமுறைகளை அறிவித்துள்ள ஆணையம், குழந்தை உணவில் மரபணு மாற்றப்பட்ட உணவுக்கு அனுமதி இல்லை என்கிறது.

குழந்தைகளுக்கு ஒவ்வாத மரபணு மாற்றப்பட்ட உணவு பெரியவர்களுக்கு மட்டும் எப்படிச் சரியாக இருக்கும்? அனைத்து மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளுக்கும் இதே முன்னெச்சரிக்கை அணுகுமுறை பின்பற்றப்படுவதை ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்கள் நலன், சுற்றுச்சூழல், விதை இறையாண்மை, பயிர்ப் பன்மை, உழவர் வாழ்வாதாரம், பொது ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்தும் பாதுகாக்கப்படும்.

- அனந்து, பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர். தொடர்புக்கு: organicananthoo@gmail.com



Read in source website