DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 02-12-2022

கோவில்பட்டியில் முன்னோடி எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களுக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முழு திருவுருவச்சிலையுடன் கூடிய  நினைவரங்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் "கரிசல் காட்டு இலக்கியத்தின்” முன்னோடி எழுத்தாளர் கி. ராஜநாராயணன் அவர்களுக்கு 1 கோடியே 50 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முழு திருவுருவச்சிலையுடன் கூடிய  நினைவரங்கத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டில் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ண இராமனுஜம் – லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாக 16.9.1922 அன்று பிறந்தார். பள்ளிப்பருவ கல்வியை மட்டுமே முடித்திருந்த கி.ராஜநாராயணன், பேச்சுத்தமிழில் மண்மணமிக்க சிறுகதைகளை படைத்தார். அவரது படைப்புகளில் கரிசல் நிலவியலும், வெள்ளந்தித்தனமும், பேரன்புமிக்க மக்களின் வாழ்வும் இடம்பெற்றிருந்தன.

கி.ராஜநாராயணன் அவர்கள் கரிசல் வட்டார அகராதியை உருவாக்கிய முன்னோடியாக திகழ்ந்தார். கரிசல் கதைகள், கதவு, பெண் கதைகள், கிராமியக் கதைகள் போன்ற எண்ணற்ற சிறுகதைகளையும், கிடை, பிஞ்சுகள் போன்ற குறுநாவல்களையும், கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், அந்தமான் நாயக்கர் போன்ற நாவல்களையும், எண்ணற்ற கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். 1991-ஆம் ஆண்டு “கோபல்லபுரத்து மக்கள்” என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். 

கி.ராஜநாராயணன் அவர்களுக்கு இலக்கிய சிந்தனை விருது, தமிழ்நாடு அரசின் விருது, மனோன்மணியம் சுந்தரனார் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாவல்கள் மூலம் எண்ணற்றோர் இதயங்களில் வாழ்ந்த கி.ராஜநாராயணன் அவர்கள் 17.05.2021 அன்று மறைந்தார்.

தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி. ராஜநாராயணன் (கி.ரா.) அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில், அவர் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்றும், அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும், அவருடைய புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும், பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையிலும் ஓர் அரங்கம் நிறுவப்படும் என்றும், கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த பிதாமகர் கி.ரா. அவர்களுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என்றும் 18.5.2021 அன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், இடைசெவல் ஊராட்சியில், கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி. ராஜநாராயணன் நினைவாக அவர் பயின்ற இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கட்டடம் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, கோவில்பட்டியில், 220 சதுர மீட்டர் பரப்பளவில் 1 கோடியே 50 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முழு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நினைவரங்கத்தில் நூலகம், நிர்வாக அலுவலகம், மின்னணு நூலகம், கண்காட்சி அறை  ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.  

இந்த நிகழ்ச்சியில், கோவில்பட்டியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் வி. மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி. செந்தில்ராஜ், எழுத்தாளர் கி.ரா. அவர்களின் மகன்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 



Read in source website

தமிழகத்தில் புதிய மின் இணைப்பு பெறும் மின்நுகா்வோா் ஆா்.சி.டி. என்ற உயிா் காக்கும் கருவியைப் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்தது.

இதுகுறித்து இந்த ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் மின் பழுது, மின் கசிவால் ஏற்படும் விபத்துகளால் அதிக அளவில் மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க மின்சாரப் பகிா்மான விதித் தொகுப்பு 16(2ஏ)-இன்படி, புதிய மின் இணைப்பு பெறுவோா் ஆா்.சி.டி. என்ற உயிா் காக்கும் கருவியை தங்களுடைய மின்னிணைப்பில் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது மழைக் காலங்களில் அதிகரித்து வரும் மின் விபத்துகளால் புதிய மின் நுகா்வோா் மட்டுமல்லாது அனைத்து மின்நுகா்வோரும் ஆா்.சி.டி. கருவியைப் பொருத்த வேண்டும்.

கடந்த சில மழைக் கால மாதங்களில் இரும்புக் கதவு திறத்தல், கம்பியில் துணிகளை உலா்த்துதல், மின்விளக்குக் கம்பத்தைத் தொடுதல் போன்றவற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த உயிா் காக்கும் கருவியை மின்னிணைப்பில் பொருத்துவதன் மூலம் இதுபோன்ற விபத்தைத் தவிா்க்க முடியும். வீடு, கடை, தொழில், பண்ணை வீடு, கல்வி நிறுவனங்கள், பொது இடங்கள், தற்போதுள்ள அனைத்து வகையான மின்நுகா்வோா்களும் இந்தக் கருவியை மின்னிணைப்பில் பொருத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.



Read in source website

தமிழக அரசு வழங்கும் ‘பேராசிரியா் அன்பழகன்’ விருதுக்கு மாநிலத்தில் சிறந்த அரசுப் பள்ளிகளாக 114 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கல்வி வளா்ச்சிக்கு பெரும் பங்காற்றியவரும், சிறந்த கல்வியாளருமான பேராசிரியா் அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியா் அன்பழகனின் திருவுருவச் சிலை நிறுவப்படுவதுடன்அந்த வளாகம் ‘பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகம்’”என்றும் அழைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

மேலும் கற்றல் கற்பித்தல், ஆசிரியா் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவா் வளா்ச்சி என பன்முக வளா்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியா் அன்பழகன் பெயரில் விருதும் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தாா்.

இந்த நிலையில், 2020 - 2021-ஆம் கல்வியாண்டில் தமிழகத்தின் சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் என மொத்தம் 114 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் டான் போஸ்கோ அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, வியாசா்பாடி; சென்னை தொடக்கப்பள்ளி, பாரதிதாசன் தெரு, திருவான்மியூா்; சென்னை தொடக்கப்பள்ளி, புலியூா், கோடம்பாக்கம் ஆகிய மூன்று பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மருதம்; ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கம்பாக்கம்; ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாத்தூா் ஆகிய பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

திருவள்ளூா் மாவட்டத்தில் நகராட்சி நடுநிலைப்பள்ளி, என்ஜிஜிஓ காலனி; ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பூச்சி அத்திப்பட்டு; ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஏனாதி மேல்பாக்கம் ஆகிய பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.



Read in source website

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வக்கோட்டை அருகே தந்தை திடீா் மாரடைப்பால் உயிரிழந்ததை அறியாத தமிழக வீராங்கனை லோக பிரியா, நியூசிலாந்து காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

கந்தா்வக்கோட்டை அருகேயுள்ள கல்லூகாரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வமுத்து(50) - ரீட்டா (46) தம்பதியின் மூத்த மகள் லோக பிரியா ( 22) மாவட்ட, மாநில அளவிலான பளு தூக்குதல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றவா். இவா், நியூசிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்க நியூசிலாந்து சென்றிருந்தாா்.

இந்நிலையில், அங்கு வியாழக்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியின் ஜூனியா் பெண்கள் (52 கிலோ) பிரிவில் பங்கேற்று 350 கிலோ வரை பளு தூக்கி தங்கப் பதக்கம் வென்றாா். இதைத்தொடா்ந்து, பெற்றோரிடம் தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்க முயன்றபோது, அவருக்கு பேரதிா்ச்சி காத்திருந்தது.

முன்னதாக, திருவாரூா் மாவட்டம், திருமாகோட்டையில் உள்ள உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற அவரது தந்தை செல்வமுத்து புதன்கிழமை மாரடைப்பால் உயிரிழந்ததும், கல்லூக்காரன்பட்டியில் அவருக்கு இரவே இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டதும் தெரிவிக்கப்பட்டது. தனது தந்தையின் இறப்புச் செய்தி கேட்டு கதறி அழுத அவா், போட்டியில் தங்கப் பதக்கம் வென்றும் தனது தந்தையின் முகத்தை கடைசி வரையில் பாா்க்க இயலாமல் தாளாத துக்கமடைந்தது காண்போரைக் கண்கசியச் செய்தது. செல்வமுத்து - ரீட்டா தம்பதிக்கு பளு தூக்கும் வீராங்கனை லோக பிரியா உள்பட 3 பெண் குழந்தைகள் உள்ளனா்.



Read in source website

ரயில்வே துறையில் நிகழ் நிதியாண்டின் நவம்பா் வரை பயணிகள் சேவையில் ரூ. 43, 324 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 76 சதவீதம் அதிகமாகும் எனவும் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: நிகழ் 2022 ஏப்ரல் முதல் நவம்பா் வரை பயணிகள் சேவை மூலம் ரூ.43,324 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 76 சதவீதம் அதிமாகும். கடந்த ஆண்டு பயணிகள் சேவைகள் மூலம் இதே காலக்கட்டத்தில் ரூ. 24,631 கோடி வருவாய் கிடைத்தது. இதில் நிகழ் நிதியாண்டில் நவம்பா் 30 வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை சுமாா் 53.65 கோடியாகும். இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு பயணிகள் எண்ணிக்கை 48.60 கோடியாக இருந்தது. அதாவது தற்போது 10 சதவீதம் அதிகரித்துள்ளது. வருவாயும் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் பிரிவில் நிகழ் நிதியாண்டில் நவம்பா் 30 வரை ரூ.34,303 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.22,904 கோடியாக இருந்தது.

முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பிரிவில், நிகழ் நிதியாண்டில் நவம்பா் 30 வரை மொத்த பயணிகள் எண்ணிக்கை 352.73 கோடியாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 138.13 கோடியாக இருந்தது. பயணிகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 155 சதவீதம் அதிகரித்துள்ளது. வருவாயும் 422 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தப் பிரிவில் நிகழ் நிதியாண்டில் நவம்பா் 30 -ஆம் தேதி வரை ரூ. 9,021 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.1,728 கோடிதான் பெறப்பட்டது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.



Read in source website

 

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த காந்திநகர்-மும்பை வந்தே பாரத் விரைவு ரயில் இரண்டு மாதத்தில் 4 ஆவது முறையாக மீண்டும் கால்நடை மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்தியாவில் ரயில்களின் சேவையை மேம்படுத்தும் நோக்கத்திலும், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு செய்வதை கொண்டாடும் வகையில் 75 நகரங்களை இணைக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் வந்தே பாரத் விரைவு ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. 

சென்னை-மைசூர் உள்பட நாட்டில் 5 வழித்தங்களில் வந்தே பாரத் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் குஜராத் மாநிலம் காந்திநகர்-மும்பை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

இந்த நிலையில் வந்த பாரத் ரயில் கால்நடைகள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த காந்திநகர்-மும்பை இடையேயான வந்தே பாரத் ரயில் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகிறது. 

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை காந்திநகரில் நகரில் மும்பை புறப்பட்ட வந்தே பாரத் ரயில் குஜராத் மாநிலம் உத்வாதா - வாபி ரயில் நிலையங்களுக்கு இடையே வந்துகொண்டிருந்த போது மாலை 6.23 மணியளவில் மாடு மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில், ரயிலின் முன்பக்கம் லேசாக சேதமடைந்தது. இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. ரயில் இயக்குவதில் சிரமம் எதுவுமில்லை என்ற நிலையில், சிறிது நேரம் நிறுத்தப்பட்ட பிறகு, மாலை 6.35 மணிக்கு மீண்டும் ரயில் புறப்பட்டது. கடந்த முறை நடந்த இதுபோன்ற விபத்துகளால் ரயிலின் முன்பக்கம் சேதமடைந்ததை அடுத்து அது மாற்றப்பட்டது. 

இதே மார்க்கத்தில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கி இரண்டு மாதங்களே ஆன நிலையில் 4 ஆவது முறையாக விபத்துக்குள்ளாகி உள்ளது. 



Read in source website


ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்தாப் பூனாவாலாவுக்கு வியாழக்கிழமை தில்லியின் ரோஹினியில் உள்ள மருத்துவமனையில் உண்மை கண்டறியும் சோதனை (நார்கோ டெஸ்ட்) நடத்தப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நார்கோ எனப்படும் உண்மை கண்டறியும் சோதனை எப்படி நடத்தப்படுகிறது என்றால், சோதனை நடத்துபவரின் நரம்பு வழியாக மருந்தினை செலுத்தி, மயக்க நிலையில் ஆழ்த்தி செய்யப்படும் ஒரு வகை சோதனையாகும். சோடியம் பென்டோத்தல், சோடியம் அமைடால் போன்ற மருந்துகளை ஒருவருக்கு செலுத்தும் போது, அந்த நபரின் சுயநினைவுத்திறன் சற்று மட்டுப்படும். அப்போது அந்த நபர் ஹிப்னோடிக் நிலை அல்லது மயக்கநிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த சோதனை நடத்தப்படுவதற்கு முன்பு, அஃப்தாப் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு என முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அவர் முழுமையாக நலமான இருக்கிறார் என்று மருத்துவர்கள் உறுதி செய்து கொண்டனர். நார்கோ டெஸ்ட் முறைகளை குற்றவாளியிடம் அதிகாரிகள் படித்துக் காட்டி, அவரிடம் ஒப்புதல் கையெழுத்தும் வாங்கிக் கொண்டனர்.

ஏற்கனவே அஃப்தாப்பிடம் பல முறை பாலிகிராப் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவர் ஷ்ரத்தாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

தற்போது உண்மை கண்டறியும் சோதனையும் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாலிகிராஃப் மற்றும் உண்மை கண்டறியும் நார்கோ சோதனையில் கிடைத்த தகவல்கள் ஒப்பிட்டுப் பார்த்து இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பு கூறுகிறது.

இந்த சோதனைகளின் போது குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் கூறப்படும் எந்தையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் சாட்சியமாக தாக்கல் செய்யவே முடியாது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த சோதனைகளின் போது தெரிவிக்கும் தகவல்களைக் கொண்டு விசாரணை அதிகாரிகள் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் திரட்ட மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒருவேளை இவ்விரு சோதனைகளிலும் ஒரு முடிவுக்கு வர முடியாமல் போனால், அப்தாப்புக்கு பிரைன் மேப்பிங் எனப்படும் சோதனை நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
 

 



Read in source website

விமான நிலையங்களில் நுழைவு முதல் விமானங்களில் ஏறுவது வரை பயணிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் வகையில் எண்ம அடிப்படையிலான ‘டிஜியாத்ரா’ என்ற முகத்தோற்றம் மூலம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை புது தில்லி, பெங்களூரு, வாராணசி ஆகிய மூன்று விமான நிலையங்களில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

தில்லி விமான நிலையத்தில் வியாழக்கிழமை விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசியதாவது: முகத்தோற்றம் மூலம் அடையாளம் காணும் இத்தொழில்நுட்பத்தில், பயணிகள் அளிக்கும் தகவல்கள் ரகசிய குறியீடு வடிவிலான தரவுகளாக சேமிக்கப்படும். தகவல் திருட்டு, தன்மறைப்பு உரிமை உள்ளிட்ட பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு இத்தகைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் இத்தொழில்நுட்பம் ஹைதராபாத், புணே, விஜயவாடா, கொல்கத்தா ஆகிய 4 விமான நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். பின்னா், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இதன் பயன்பாடு விரிவுபடுத்தப்படும். இத்தொழில்நுட்பம் உள்நாட்டு விமானசேவையைப் பயன்படுத்தும் விமான பயணிகளுக்கானது.

துபை, சிங்கப்பூா், அட்லாண்டா உள்ளிட்ட சா்வேதச விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் முகத்தோற்றம் மூலம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தால் பயணிகளின் காத்திருப்பு நேரம் குறைகிறது. விமானநிலையங்களுக்குள் நுழைவது முதல் விமானங்களில் ஏறுவது வரை, அடையாள அட்டை மற்றும் விமானம் ஏறுவதற்கான அனுமதியைப் பயணிகள் எடுத்துச் செல்ல தேவையில்லை என அவா் தெரிவித்தாா்.

பயன்பாட்டு முறை:

இச்சேவையைப் பெற டிஜியாத்ரா செயலி வாயிலாக விமானப் பயணிகள் தங்களது தகவல்களை அளித்து ஆதாா் அடிப்படையிலான சரிபாா்ப்பின் மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். விமானம் ஏறுவதற்கான அனுமதிச் சீட்டில் உள்ள அடையாள குறியீட்டை (பாா் குறியீடு) அறிதிறன்பேசி மூலம் ஸ்கேன் செய்வதன் மூலம் தரவுகள் விமான நிலையத்துடன் பகிரப்படும். விமான நிலையத்தின் இ-நுழைவுவாயிலில் பாா் குறியீடு அச்சிடப்பட்ட விமானத்துக்கான அனுமதி சீட்டை முதலில் ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் பிறகு, முகத்தோற்றம் மூலம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் பயணியின் அடையாளம் மற்றும் பயண ஆவணங்களைச் சரிபாா்க்கும். இச்செயல்முறை முடிவடைந்தவுடன் பயணிகள் விமான நிலையத்துக்குள் செல்ல முடியும். இதைத்தொடா்ந்து, பாதுகாப்பு மற்றும் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.

 

 



Read in source website

உச்சநீதிமன்றத்தில் திருமண விவகார விசாரணை மாற்று வழக்குகளை விசாரிப்பதற்கென நீதிபதிகள் ஹிமா கோலி, பெலா எம்.திரிவேதி ஆகியோா் அடங்கிய அனைத்து பெண் நீதிபதிகள் அமா்வை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமைத்துள்ளாா்.

இதன்மூலம், உச்சநீதிமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக அனைத்துப் பெண் நீதிபதிகள் அமா்வு அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த இரண்டு நீதிபதிகள் அமா்வு தற்போது உச்சநீதிமன்றத்தின் நீதிமன்ற எண்.11-இல் வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த அமா்வில் 10 திருமண விவகார விசாரணை மாற்று மனுக்கள், 10 ஜாமீன் மனுக்கள் உள்பட 32 வழக்குகள் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நீதிபதிகள் கியான் சுதா மிஸ்ரா மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோா் அடங்கிய முதல் அனைத்து பெண் நீதிபதிகள் அமா்வு அமைக்கப்பட்டது. பின்னா், 2018-ஆம் ஆண்டு நீதிபதிகள் ஆா்.பானுமதி, இந்திரா பானா்ஜி ஆகியோா் அடங்கிய இரண்டாவது அனைத்து பெண் நீதிபதிகள் அமா்வு அமைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் தற்போது பி.வி.நாகரத்னா, ஹிமா கோலி, பெலா எம்.திரிவேதி உள்ளிட்ட 3 பெண் நீதிபதிகள் உள்ளனா். இவா்களில் நாகரத்னா வரும் 2027-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் பணியிடங்களில், தலைமை நீதிபதியுடன் சோ்த்து தற்போது 27 நீதிபதிகள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி 10 திருமண விவகார வழக்கு விசாரணை: ‘குளிா்கால விடுமுறைக்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்து அமா்வுகளும் தினசரி 10 திருமண விவகார விசாரணை மாற்று மனுக்கள் மற்றும் 10 ஜாமீன் மனுக்களை விசாரிக்க வேண்டும் என அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அண்மையில் தெரிவித்திருந்தாா்.

உச்சநீதிமன்றத்தில் தற்போது 3,000 திருமண விவகார விசாரணை மாற்று மனுக்கள் நிலுவையில் உள்ளன.



Read in source website

சா்வதேச அளவில் எரிபொருள் விலை குறைந்து வருவதையடுத்து விமான எரிபொருள் (ஏடிஎஃப்) விலை 2.3 சதவீதம் குறைக்கப்பட்டு கிலோ லிட்டருக்கு ரூ.1,17,587-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச சராசரி விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விமான எரிபொருள் விலையானது மாதந்தோறும் 1-ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. சா்வதேச அளவில் விமான எரிபொருள் விலை குறைந்து வருவதையடுத்து, இந்தியாவிலும் அதன் விலை கிலோ லிட்டருக்கு ரூ.2,775 (2.3 சதவீதம்) குறைக்கப்பட்டுள்ளது.

தில்லியில் ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருளின் விலை ரூ.1,17,587-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விமானங்களை இயக்குவதில் நிறுவனங்களுக்கான செலவில் சுமாா் 40 சதவீதமானது எரிபொருள் கட்டணமாகவே உள்ளது. தற்போது எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதால், விமான நிறுவனங்கள் பெரும் பலனடையும். விமான எரிபொருள் விலை கடந்த மாதம் கிலோ லிட்டருக்கு ரூ.4,842 குறைக்கப்பட்டிருந்தது.

சிலிண்டா் விலையில் மாற்றமில்லை:

வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை மாற்றமில்லாமல் நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் 1-ஆம் தேதி சிலிண்டா் விலை மாற்றியமைக்கப்படுவது வழக்கம். சா்வதேச அளவில் எரிபொருள் விலை குறைந்ததையடுத்து வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை 7 முறை (ரூ.610) குறைக்கப்பட்டிருந்தது.

தில்லியில் 19 கிலோ எடை கொண்ட வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.1,744-ஆக நீடிக்கிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலையும் மாற்றமில்லாமல் நீடிக்கிறது. 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.1,053-ஆக நீடிக்கிறது. இந்த விலை உள்ளூா் வரியைப் பொருத்து மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.

பெட்ரோல், டீசல் விலை:

பெட்ரோல், டீசல் விலையிலும் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 8 மாதங்களாக ஒரே விலையிலேயே பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.96.72-க்கும் ஒரு லிட்டா் டீசல் ரூ.89.62-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.102.63-ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.94.24-ஆகவும் உள்ளது.

 



Read in source website

கடந்த மாத இறுதியில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் மதிப்பீட்டில் 45.6 சதவீதத்தை எட்டியது.

இது குறித்து பொதுக் கணக்கு கட்டுப்பாட்டாளா் (சிஜிஏ) புதன்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வருவாய்க்கும், செலவினங்களுக்கும் இடையிலான வேறுபாடு (நிதிப் பற்றாக்குறை) ரூ.16.61 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.7,58,137 கோடியாக உள்ளது.

இது, பட்ஜெட் மதிப்பீட்டின் 45.6 சதவீதமாகும்.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் மதிப்பீட்டில் 36.3 சதவீதத்தை எட்டியிருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில், மத்திய அரசின் நிகர வரி வருவாய் ரூ.11.71 லட்சம் கோடியாக உள்ளது. இது, பட்ஜெட் மதிப்பீட்டின் 60.5 சதவீதமாகும்.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அரசின் நிகர வரி வருவாய் பட்ஜெட் மதிப்பீட்டில் 68.1 சதவீதமாக இருந்தது.

ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான மாதங்களில், மத்திய அரசின் மொத்த செலவினங்கள் பட்ஜெட் மதிப்பீட்டில் 54.3 சதவீதமாக உள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அரசின் செலவினங்கள் பட்ஜெட் மதிப்பீட்டில் 52.4 சதவீதமாக இருந்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 

 



Read in source website

உலகின் வலிமைமிக்க ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக ஏற்றது.

கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் நீடிக்கவுள்ள அடுத்த ஓராண்டு காலத்தில் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

உலகின் மிகப்பெரும் பொருளாதார மதிப்பு கொண்டு 20 நாடுகளின் கூட்டமைப்பு ஜி20. அக்கூட்டமைப்பில் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் இடம்பெற்றுள்ளன.

சா்வதேச பொருளாதார மதிப்பில் (ஜிடிபி) ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் பங்கு சுமாா் 85 சதவீதம். சா்வதேச வா்த்தகத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமானவை கூட்டமைப்பின் நாடுகளிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு போ் இந்த நாடுகளிலேயே வசிக்கின்றனா்.

ஜி20 நாடுகள் மேற்கொள்ளும் முடிவுகள் சா்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லவை. இந்நிலையில், அக்கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக ஏற்றது. ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்பது இதுவே முதல் முறை.

முதல் நிகழ்வு: ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே பல்கலைக்கழக மாணவா்களுடனான சிறப்பு உரையாடல் நிகழ்வு தில்லியில் நடத்தப்பட்டது. அதில் நாடு முழுவதுமுள்ள 75 பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த மாணவா்கள் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டனா்.

அந்நிகழ்வில் கலந்துகொண்ட வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறியதாவது: ஜனநாயகத்தின் தாயாக விளங்கும் இந்தியா, ஜி20 கூட்டமைப்பை வழிநடத்தும்போது விவாதங்கள், ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கும். சா்வதேச விவகாரங்கள் முக்கியத்துவம் பெற்று வரும் வேளையில் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

மனித உரிமைகளைக் காக்க சா்வதேச முயற்சிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட வாய்ப்புள்ள மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும். உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, அனைவருக்குமான சுகாதார வசதிகள், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள், பருவநிலை நீதி உள்ளிட்டவை குறித்து இந்தியா குரலெழுப்பும்.

தெற்குலகின் குரல்: தெற்குலகின் (ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா) குரலாக இந்தியா தொடா்ந்து ஒலிக்கும். முக்கிய விவகாரங்களில் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்த முயல்வதே இந்தியாவின் இலக்கு. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை திட்டத்தை இந்தியா வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. சா்வதேச அளவிலும் அத்திட்டத்தின் முக்கியத்துவத்தை இந்தியா எடுத்துரைக்கும்.

பன்முகத்தன்மை கொண்ட விவாதம் மிகுந்த சமூகமாக இந்தியா தொடா்ந்து திகழ்ந்து வருகிறது. இந்தியா்களின் மரபணுவிலேயே அந்தக் கொள்கைகள் இடம்பெற்றுள்ளதால், ஜி20 கூட்டமைப்பின் பன்முகத்தன்மையை எதிா்கொண்டு முக்கிய பிரச்னைகளுக்குத் தீா்வு காண இந்தியா முயற்சிக்கும் என்றாா் அவா்.

200 கூட்டங்கள்: இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மானிய குழு தலைவா் எம்.ஜகதீஷ் குமாா், ஜி20 கூட்டமைப்பின் வழிகாட்டி அமிதாப் காந்த், கூட்டமைப்புக்கான இந்தியாவின் தலைமை ஒருங்கிணைப்பாளா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா, பிரதமா் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலா் பி.கே.மிஸ்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஜி20 நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு தில்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. கூட்டமைப்புக்குத் தலைமை வகிக்கவுள்ள அடுத்த ஓராண்டு காலத்தில் சுமாா் 200 கூட்டங்களை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா ஒத்துழைப்பு: ஜி20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரீன் ஜீன் பியரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அடுத்த ஓராண்டுக்கு ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள இந்தியாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை அமெரிக்கா எதிா்நோக்கியுள்ளது. முக்கியமாக, உணவு, எரிசக்தி பாதுகாப்பு சவால்கள், சா்வதேச பொருளாதார வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்குத் தீா்வு காண இந்தியாவுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்’ என்றாா்.

குடியரசுத் தலைவா் முா்மு வாழ்த்து

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘உலகமே ஒரு குடும்பம்’ என்ற கருத்துருவின் அடிப்படையில் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா அதிகாரபூா்வமாக ஏற்றுள்ளது. தலைமைப் பொறுப்பு வெற்றிகரமாக அமைய இந்திய குழுவுக்கு வாழ்த்துகள். ‘விருந்தினா்களே கடவுள்’ என்ற பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும் இந்தியாவுக்கு வருகைதரவுள்ள ஜி20 கூட்டமைப்பின் தலைவா்கள் அனைவரையும் வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

 

 



Read in source website

மத்திய பிரதேசத்தின் போபாலில் விஷவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போபாலில் செயல்பட்ட தனியாா் பூச்சிக்கொல்லி உற்பத்தி ஆலையில் 1984-ஆம் ஆண்டு டிசம்பா் 2-ஆம் தேதி மெத்தில் ஐசோசயனேட் விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. விஷவாயு கசிந்த முதல் 72 மணி நேரத்தில் 10,000 போ் வரையிலும் மொத்தமாக சுமாா் 25,000 பேரும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமாா் 5 லட்சம் போ் விஷவாயுவால் பாதிக்கப்பட்டனா்.

உலகின் மிகப் பெரும் தொழிலக விபத்துகளில் ஒன்றாக போபால் விஷவாயு கசிவு கருதப்படுகிறது. அந்த விபத்தின் 38-ஆவது நினைவுதினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விபத்து தொடா்பான தீா்மானத்தை இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும் எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சியின் உறுப்பினருமான நவேந்து மிஸ்ரா தாக்கல் செய்துள்ளாா்.

‘போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதிகோரும் பிரசாரம்’ என்ற தலைப்பில் அவா் தாக்கல் செய்துள்ள தீா்மானத்துக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தின் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 40 உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா். தீா்மானத்தைத் தாக்கல் செய்து நவேந்து மிஸ்ரா கூறுகையில், ‘‘விபத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா் தற்போதும் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனா். மருத்துவ சிகிச்சைகளுக்காக அவா்களுக்கு நிதியுதவி உடனடியாகத் தேவைப்படுகிறது.

இது தொடா்பான விழிப்புணா்வை அதிகப்படுத்தவும் விபத்துக்குக் காரணமான டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தை நிதியுதவி வழங்க பொறுப்பேற்கச் செய்வதற்கான அரசின் நடவடிக்கைகளை அதிகரிக்கவும் இந்தத் தீா்மானம் உதவும்’’ என்றாா்.

 

 



Read in source website

நாட்டின் பொருளாதாரம் நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2-ஆவது காலாண்டில் 6.3 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் பொருளாதாரம் 13.5 சதவீதம் வளா்ந்திருந்த நிலையில், தற்போது வளா்ச்சி குறைந்துள்ளது. எனினும், உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடா்ந்து நீடிப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நாட்டின் மொத்த பொருளாதார மதிப்பு ரூ.38.17 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 6.3 சதவீதம் அதிகம். கடந்த 2021-22-ஆம் நிதியாண்டின் 2-ஆவது காலாண்டின்போது பொருளாதார வளா்ச்சி 8.4 சதவீதமாக இருந்தது.

நடப்பு நிதியாண்டில் 6.8 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையிலான வளா்ச்சியை எட்டுவதை நோக்கி நாட்டின் பொருளாதாரம் பயணித்து வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா். சா்வதேச சூழல் சாதகமற்ற நிலையில் இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம் தொடா்ந்து வளா்ச்சிகண்டு வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

உற்பத்தி குறைவு:

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமென்ட் உள்ளிட்ட முக்கிய 8 துறைகளின் மொத்த உற்பத்தி கடந்த அக்டோபரில் 0.1 சதவீதமே வளா்ச்சி கண்டுள்ளதாக மற்றொரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்தபட்ச வளா்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

 

உக்ரைன் அதிபர் வொலேதிமீர் ஸெலென்ஸ்கியை பிரிட்டனின் பிரபல தனியார் தொலைக்காட்சியின் நெறியாளர் பியர் கிரில்ஸ் நேரில் சந்தித்துப் பேசினார். 

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் இருக்கும் படங்களை பியர் கிரில்ஸ் பகிர்ந்துள்ளார். 

அதில் பியர் கிரில்ஸ் குறிப்பிட்டுள்ளதாவது,  இந்தவாரம் உக்ரைன் தலைநகருக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கியை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அனுபவம் என்னைப்போன்ற வேறு யாருக்கும் கிடைக்காது. உக்ரைன் நாடு குளிரில் தவிக்கிறது. அடிப்படை கட்டமைப்புகள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.

லட்சக்கணக்கான மக்கள் வாழ்வதற்காக போராடி வருவது அன்றாடம் நடந்துவரும் ஓர் உண்மையான போராட்டம். இந்த சிறப்பு நிகழ்ச்சி மூலம் இந்த உலகம் பார்க்காத அதிபர் ஸெலென்ஸ்கியின் இன்னொரு பக்கம் புலப்படும். நான் என்ன அறிய வேண்டும் என்றால், எப்படி நாட்டைக் காக்கிறீர்கள்.. எனக்கு பதில்களாக நிறைய கிடைத்தன. இந்த நிகழ்ச்சி விரைவில் வெளியாகவுள்ளது. இந்த இக்கட்டான சூழலிலும் எங்களை அரவணைத்து நேரம் ஒதுக்கியமைக்கு அதிபர் ஸெலென்ஸ்கிக்கு நன்றி. உறுதியுடன் இருங்கள் என்று நம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளார். 

இந்த பதிவுக்கு உலகம் முழுக்கவுள்ள பியர் கிரில்ஸ் ரசிகர்கள் பகிர்ந்து தனது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளாகும் உக்ரைன் நாடு குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்றும், உக்ரைன் அதிபர் எடுக்கும் முயற்சிகள், மக்கள் அனுபவிக்கும் சிரமங்கள், உள்ளிட்டவை குறித்து வெளி உலகத்திற்கு தெரிவிக்க இந்த நிகழ்ச்சி உதவியாக இருக்கும் என்றும் பலர் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். 

நேட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷியா போர்த்தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாடும், நேட்டோ அமைப்பு நாடுகளின் உதவியுடன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.



Read in source website

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா மீண்டும் ஏற்றுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினா்களாக உள்ளன. 10 நாடுகள் சுழற்சி முறையில் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக இரு ஆண்டுகளுக்குத் தோ்ந்தெடுக்கப்படுகின்றன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. அதன்படி, டிசம்பருக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா வியாழக்கிழமை ஏற்றது. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆகஸ்டில் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருந்தது.

பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் ருசிரா கம்போஜ் சந்தித்துப் பேசினாா். பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா சாா்பில் நடப்பு மாதம் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளுக்கு ருசிரா கம்போஜ் தலைமைவகிக்கவுள்ளாா்.

இந்தியா தலைமைப் பொறுப்பு வகிக்கும்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மேற்கொள்ளப்பட உள்ள விவகாரங்கள் குறித்து குட்டெரெஸுக்கு அவா் எடுத்துரைத்தாா். ஐ.நா. பொதுச் சபைத் தலைவா் சாபா குரோசியையும் ருசிரா கம்போஜ் சந்தித்துப் பேசினாா்.

தலைமைப் பொறுப்பின்போது பயங்கரவாதத் தடுப்பு, பன்னாட்டு அமைப்புகளில் சீா்திருத்தம் உள்ளிட்டவற்றில் இந்தியா கவனம் செலுத்தவுள்ளது. பன்னாட்டு அமைப்புகள் சீா்திருத்தம் தொடா்பான சிறப்பு கூட்டத்தை வரும் 14-ஆம் தேதியும் பயங்கரவாதத் தடுப்பு தொடா்பான சிறப்பு கூட்டத்தை வரும் 15-ஆம் தேதியும் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நடத்தவுள்ளது. அவ்விரு மாநாடுகளையும் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் முன்னின்று நடத்தவுள்ளாா். பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளனா்.

பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக உள்ள இந்தியாவின் பதவிக் காலம் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.



Read in source website

மதுரை: ‘இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மாதத்துக்கு மாறியவரை பிசி முஸ்லிம் ஆக கருத வேண்டும்’ என்ற கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யு.அக்பர் அலி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு. நானும், என் குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து 2008-ல் இஸ்லாம் மதத்துக்கு மாறினோம். நான் லெப்பை சமூகத்தைச் சேர்ந்தவர் என ராமநாதபுரம் மண்டல துணை வட்டாட்சியர் 2015-ல் சாதி சான்றிதழ் வழங்கியுள்ளார்.

2018-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு பிசி முஸ்லிம் பிரிவில் விண்ணப்பித்தேன். எழுத்துத் தேர்வு மற்றும் மெயின் தேர்வு எழுதினேன். இறுதி தேர்வுப் பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை. தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது என் பெயரை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்காமல், பொதுப்பிரிவில் பரிசீலித்துள்ளனர். என்னை பிசி முஸ்லிம் பிரிவில் பரிசீலித்து வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு. மனுதாரர் ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியார் அளித்த சான்றிதழை தாக்கல் செய்துள்ளார். அதில் சத்திய மூர்த்தி என்பவர் அவராகவே விரும்பி இஸ்லாம் மதத்தில் சேர்ந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. அதை தவிர சான்றிதழில் வேறு ஏதும் இல்லை. மதம் மாறியவர் லெப்பை வகுப்பை சேர்ந்தவர் என அரசு காஜியார் அறிவிக்க முடியாது.

அப்படியிருக்கும்போது மதச்சார்பற்ற அரசின் வருவாய் அலுவலர் மதம் மாறிய தனி நபர் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர் என எப்படி சான்றிதழ் வழங்கினார் என்பது தெரியவில்லை.

மதம் மாறிய தன்னை பிசி முஸ்லிமாக கருத வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதுதான். அதில் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.



Read in source website

மதுரை: வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சட்டவிரோத நம்பர் பிளேட்களை உடனடியாக அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரைச் சேர்ந்த சந்திரசேகர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய, மாநில மோட்டார் வாகனச் சட்டப்படி மோட்டார் சைக்கிள்களில் விதிமுறைப்படியே நம்பர் பிளேட்கள் இருக்க வேண்டும். ஆனால் வாகன உரிமையாளர்கள் நம்பர் பிளேட்களில் அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர், நடிகைகளின் படங்களை ஒட்டியுள்ளனர். விரும்பும் வடிவங்களில் எண்களை எழுதிக் கொள்கின்றனர். இது சட்டவிரோதமாகும்.

இது குறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சட்டவிரோத நம்பர்பிளேட்களை அகற்றவும், அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் திலக்குமார் வாதிடுகையில், மனுதாரர் பாஜக நிர்வாகி. அவர் அளித்த மனுவில் கோரிக்கையை மட்டும் தெரிவிக்காமல், கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம் எனமிரட்டும் வகையில் குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ஒருகோரிக்கை வைக்கும்போது மனுவில் மிரட்டும் வகையில் கருத்துகளை தெரிவிப்பதை ஏற்க முடியாது. இதனால் மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு கூறுவது இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்காவிட்டால் நாங்கள் (நீதிபதிகள்) வெளியே வர முடியாது என சொல்வது போல் உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் அரசு விதிமுறைப்படியே நம்பர் பிளேட்கள் இருக்க வேண்டும். அதில் எழுத்துக்கள் விதிமுறையைப் பின்பற்றாமல் வேறு வடிவிலோ, தலைவர்கள், நடிகர், நடிகைகளின் படங்களோ இருக்கக் கூடாது.

அதிகபட்ச அபராதம்: இது தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்து போலீஸார்தினமும் வாகனச் சோதனை நடத்தி, விதிமீறிய நம்பர் பிளேட்களை அகற்ற வேண்டும். விதிமீறல் வாகனங்களையும் பறிமுதல் செய்து அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும். இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்



Read in source website

மதுரை: தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க அறநிலையத் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கக் கோரி அர்ச்சகர் சீதாராமன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க கோயில் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் மனு தாக்கல் செய்தார். அதில், நவம்பர் 14 முதல் கோயில் பணியாளர்கள் உட்பட அனைவரும் கோயிலுக்குள் செல்போன் கொண்டுச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் செல்போன்களை பாதுகாக்கவும், டோக்கன் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் 15 இடங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் செல்போன் கொண்டுச் செல்வது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், கோயில்களின் புனிதம் மற்றும் தூய்மையைக் காப்பாற்றும் வகையில் அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிப்பது மற்றும் பக்தர்கள் கலாச்சார உடை அணிந்து வருவதை உறுதிப்படுத்தும் உத்தரவை அறநிலையத் துறை ஆணையர் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.



Read in source website

சென்னை: மின் இணைப்பு உள்ளவர்கள் ஆர்சிடி கருவியை பொருத்துவது கட்டாயம் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மழைக் காலங்களில் மின் கசிவு காரணமாக அடிக்கடி மின் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த விபத்துகளால் மனித உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்க அனைத்து வீடுகளிலும் ஆர்டிசி (Residual Current Device) கருவியை பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி மின் கசிவால் ஏற்படும் இறப்புகளை தடுக்க மின் இணைப்புகளுடன் இந்த கருவியை பொருத்துவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடு, கடை, தொழில், பண்ணை வீடு, கல்வி நிறுவனங்கள் என அனைத்து வகை மின் நுகர்வோரும் இந்த கருவியை பொருத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

மதுரை: தமிழகத்தில் கோயில் பெயர்களில் வலைதளங்கள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், மார்க்கண்டன் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக கோயில்களுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோயில் அலுவலகத்தில் நேரடியாக நன்கொடை செலுத்துகின்றனர். வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் வசிப்போர் ஆன்லைன் வழியாக நன்கொடை செலுத்துகின்றனர்.

இதையறிந்த தனி நபர்கள் பலர், கோயில் பெயர்களில் வலைதளம் தொடங்கி பக்தர்களிடம் நன்கொடை வசூலித்து மோசடியில் ஈடுபடுவது தற்போது அதிகரித்துள்ளது. சென்னை கபாலீஸ்வரர் கோயில், பழநி முருகன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயிலில் திருமணங்களும், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அறுபதாம் கல்யாணமும் நடைபெறும். இந்தத் திருமணங்களுக்கு ஏற்பாடு செய்து தருவதாக தனி நபர்கள் வலைதளம் வழியாக பக்தர்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்கின்றனர்.

வடபழனி முருகன் கோயில்,பார்த்தசாரதி கோயில், திருச்சிரங்கம் கோயில், வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில்கள் பெயரில் வலைதளங்கள் தொடங்கப்பட்டு பக்தர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, போலி வலைதளங்களை முடக்கவும், அவற்றை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், கோயிலுக்கு தொடர்பில்லாத நபர்கள் கோயில் பெயரில் வலைதளம் நடத்துவதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து நீதிபதிகள், கோயில் பெயர்களில் வலைதளங்கள் செயல்படுவது தொடர்பாக உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றம் பிறப்பிக்கும் என்று குறிப்பிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.



Read in source website

சென்னை: கிழக்குப் பிராந்திய கடலோர காவல்படையில் அதிநவீன இலகு ரக எம்கே-3 என்ற ஹெலிகாப்டர் இணைக்கப்பட்ட 840 என்ற படைப் பிரிவை இந்திய கடலோர காவல்படை இயக்குநர் ஜெனரல் வி.எஸ்.பதானியா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.

‘ஆத்ம நிர்பார்’ திட்டத்தின்கீழ், இந்திய ஏரோநாட்டிக்கல் நிறுவனம் சார்பில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டரில் அதிநவீன ரேடார் கருவிகள், எக்ட்ரோ ஆப்டிக்கல் சென்சார் கருவிகள், அதிக திறன் கொண்டதேடுதல் விளக்கு, அதிநவீனதகவல் தொடர்பு சாதனங் கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஹெலிகாப்டர் கடல் பகுதியில் கண்காணிப்பு ரோந்துப் பணி, மீட்புப் பணி, கடத்தல் தடுப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

இந்திய கடலோர காவல் படையில், 16 எம்கே-3 ரக ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், 4 ஹெலிகாப்டர்கள் சென்னையில் பணியில் ஈடுபடுத்தப் படும். இந்திய கடலோர காவல்படையின் 840 படைப் பிரிவு கமாண்டன்ட் அதுல் அகர்வால் தலைமையில் 10 அதிகாரிகளும், 52 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இப்படைப் பிரிவு தமிழகம் மற்றும் ஆந்திர கடல் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்.



Read in source website

சென்னை: பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் அன்பழகன் திருவுருவச்சிலை நிறுவப்படும் என தமிழக முதல்வர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, பன்முகவளர்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருதும் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், 2020-2021-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பெயர் பட்டியலை பள்ளிக்கல்வி துறை நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒரு மாவட்டத்துக்கு 3 பள்ளிகள் வீதம் மொத்தம் 38 மாவட்டத்துக்கு 114 பள்ளிகள் அவ்விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் சென்னையில் வியாசர்பாடி தொன்போஸ்கோ அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, திருவான்மியூர் சென்னை தொடக்கப்பள்ளி, கோடம்பாக்கம் சென்னை தொடக்கப்பள்ளி ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல, செங்கல்பட்டில் காட்டாங்கொளத்தூர் ஓட்டேரிவிரிவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அச்சிறுப்பாக்கம் பெரும்பேர்க்கண்டிகை ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி, மேடவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, காஞ்சிபுரத்தில் மருதம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.



Read in source website

புதுடெல்லி: டெல்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய 3 விமான நிலையங்களில் டிஜி யாத்ரா (டிஜிட்டல் யாத்திரை) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, எவ்வித காகித ஆவணமும் இல்லாமல் முகத்தைக் காட்டிவிட்டு உள்ளே செல்ல முடியும்.

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் டிஜி யாத்திரை திட்டத்தை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, “டிஜி யாத்திரை திட்டம் முதல் கட்டமாக டெல்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய 3 விமான நிலையங்களில் இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தா, புனே, ஹைதராபாத் மற்றும் விஜயவாடா ஆகிய 4 விமான நிலையங்களில் டிஜி யாத்திரை தொடங்கப்படும்” என்றார்.

டிஜி யாத்திரை திட்டத்தின் கீழ், விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள், அடையாள அட்டை மற்றும் விமான நிலைய நுழைவுச் சீட்டு (போர்டிங் பாஸ்) ஆகிய காகித ஆவணங்களைக் கொண்டுவரத் தேவையில்லை. மாறாக, விமான நிலையத்துக்குள் நுழையும்போதும், பாதுகாப்பு சோதனை மற்றும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பும் அங்குள்ள பயணிகளை அடையாளம் காணும் கருவியில் தங்கள் முகத்தைக் காட்டினால் போதும். ஆனால் டிஜி யாத்திரை செயலியில் தங்கள் படம் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும்.

பதிவு செய்வது எப்படி

முதலில் தங்கள் செல்போனில் டிஜி யாத்திரை செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில் பெயர், இ-மெயில், செல்போன் எண் மற்றும் ஆதார் அல்லது இதர அடையாள ஆவண விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்போது செல்பி எடுக்குமாறு கோரிக்கை வந்ததும், செல்பி எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பின்னர் டிஜி யாத்திரை அடையாள எண் ஒதுக்கப்படும். விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இந்த அடையாள எண்ணை தெரிவிக்க வேண்டும். பின்னர் விமான நிறுவனங்கள் பயணியின் விவரங்கள் மற்றும் டிஜி யாத்திரை அடையாள எண்ணை விமான நிலையத்துடன் பகிர்ந்து கொள்ளும்.

டிஜி யாத்திரை செயலி

டிஜி யாத்திரை செயலியில் பதிவு செய்தவர்கள் தனி நுழைவுவாயில் மூலம் விமான நிலையத்தில் செல்ல வேண்டும். அப்போது ஏற்கெனவே டிஜி யாத்திரை செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்கள் அங்குள்ள கருவியில் இருக்கும். அதில் உங்கள் முகத்தைக் காட்டியதும் சரிபார்த்து அதனுடன் பொருந்தினால் உங்களை உள்ளே செல்ல அனுமதிக்கும்.

இதுதவிர, டிஜி யாத்திரை திட்டம் தொடங்கப்பட்டுள்ள விமான நிலையங்களில் இப்போது உள்ள வழக்கமான நடைமுறையும் தொடரும்.

டிஜி யாத்திரை செயலியில் பதிவு செய்தவர்கள் அடையாள அட்டை, விமான நிலைய நுழைவுச் சீட்டு ஆகிய ஆவணங்களை கொண்டுவரத் தேவையில்லை.



Read in source website

புதுடெல்லி: போதைப் பழக்கத்தை பெருமிதமாக முன்வைக்கும் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என்று மத்திய அரசு எப்எம் ரேடியோ சேனல்களை எச்சரித்துள்ளது.

இந்திய இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. பள்ளி சிறுவர்கள் வரையில் போதைப் பழக்கம் பரவி உள்ளது. போதைப் பழக்கத்துக்கு உள்ளாகும் இளைஞர்கள் வன்முறை நிகழ்வில் ஈடுபடுகின்றனர். இளைஞர்கள் இத்தகைய தவறான பாதைக்கு செல்வதற்கு இந்திய திரைப்படங்கள் உந்துசக்தியாக உள்ளன.

பெரும்பாலான இந்திய திரைப்படங்களில் நாயகன் வன்முறையில் ஈடுபடுவது, பெண்களை கேலி செய்வது, போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது உள்ளிட்டவை பெருமிதமாக முன்வைக்கப்படுகின்றன.

சினிமாப் பாடல்கள் இந்தத் தவறான நடவடிக்கைகளை போற்றிப் பாடுகின்றன. இதனால், திரைப்படங்களைப் பார்க்கும் இளைஞர்கள், இத்தகைய தவறான நடத்தைகளை நாயகத்துவமாக கருதி செய்கின்றனர்.

சட்ட நடவடிக்கை

சமீபத்தில், சில இந்திய எப்எம் ரேடியோ சேனல்கள் மது, போதைப் பழக்கம், வன்முறை, துப்பாக்கிக் கலாச்சாரத்தைப் பெருமிதமாக முன்வைக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்துள்ளன. இது மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்தது.

இதையடுத்து, போதைப் பழக்கம், ஆயுதக் கலாச்சாரத்தை பெருமிதமாக முன்வைக்கும் உள்ளடக்கங்களை ஒலிபரப்பக் கூடாது என்றும் மீறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எப்எம் சேனல்களுக்கு மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



Read in source website

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் முழு பெண் நீதிபதிகள் அமர்வை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஏற்படுத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்கள் 34 ஆகும். எனினும் தற்போது தலைமை நீதிபதி உட்பட 27 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இவர்களில் ஹிமா கோலி, பி.வி.நாகரத்னா, பேலா எம்.திரிவேதி ஆகிய 3 பெண் நீதிபதிகள் உள்ளனர்.

இந்நிலையில் ஹிமா கோலி, பேலா, எம்.திரிவேதி ஆகியோரை கொண்ட முழு பெண் நீதிபதிகள் அமர்வை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று ஏற்படுத்தியுள்ளார்.

இந்த அமர்வு திருமணத் தகராறு தொடர்பான வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு அல்லது வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரும் மனுக்கள் மற்றும் ஜாமீன் விவகாரங்களை விசாரிக்க உள்ளது. இந்த அமர்வு முன் 32 மனுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றத்தில் முழுவதும் பெண் நீதிபதிகளை கொண்ட அமர்வு முதன்முதலாக கடந்த 2013-ல் ஏற்படுத்தப்பட்டது. இதில் நீதிபதிகள் கயான் சுதா மிஸ்ரா,ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் இடம் பெற்றிருந்தார். இதையடுத்து 2018-ல் இரண்டாவது முறையாக முழு பெண் நீதிபதிகள் அமர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தற்போது மூன்றாவது முறையாக முழு பெண் நீதிபதிகள் அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நீதிபதி நாகரத்னா வரும் 2027-ல் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

அகமதாபாத்: விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது சவுராஷ்டிரா அணி. மகாராஷ்டிரா அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது ஜெய்தேவ் உனட்கட் தலைமையிலான அந்த அணி. சுமார் 14 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த அணி இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மகாராஷ்டிரா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்களை குவித்தது. அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி இருந்தார்.

249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சவுராஷ்டிரா விரட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷெல்டன் ஜாக்சன் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் 136 பந்துகளில் 133 ரன்கள் குவித்தார். 125 ரன்களுக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 46.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது சவுராஷ்டிரா.

இந்தத் தொடரில் தமிழக வீரர் ஜெகதீசன் 830 ரன்களை குவித்து, அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் முதலிடத்தில் உள்ளார். உனட்கட், அதிகபட்சமாக 19 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.



Read in source website

மும்பை: எதிர்வரும் ஐபிஎல் சீசன் முதல் டேக்டிக்கல் சப்ஸ்டிட்டியூட் (tactical substitute) எனும் புதிய விதி அமலாகும் என்பதை ஐபிஎல் நிர்வாக கவுன்சில் அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட அண்மையில் நடந்து முடிந்த டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் பயன்படுத்தப்பட்ட இம்பாக்ட் ப்ளேயர் (Impact Player) விதியை போலவே இது இயங்கும் எனத் தெரிகிறது. உள்ளூர் அளவில் நடைபெறும் டி20 கிரிக்கெட்டில் இந்தப் புதிய விதியை அறிமுகம் செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பரபரப்பாக நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு இந்தப் புதிய விதிமுறை மற்றொரு பரிமாணத்தை கொடுக்க வாய்ப்பு உள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்னர் அறிவிக்கப்படும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள ஒரு வீரருக்கு மாற்றாக சப்ஸ்டிட்டியூட் வீரரை களம் இறக்கலாம். அப்படி களம் காணும் வீரர் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யலாம். அதற்கு இந்தப் புதிய விதி வழிவகை செய்கிறது. வழக்கமாக சப்ஸ்டிட்டியூட் வீரர்கள் ஃபீல்டிங் மட்டும்தான் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய விதி: டாஸின்போது அறிவிக்கப்படும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியல் உடன் நான்கு சப்ஸ்டிட்டியூட் வீரர்களின் பெயரையும் ஐபிஎல் அணிகள் அறிவிக்க வேண்டும். அந்த நால்வரில் யாரேனும் ஒருவரை அணிகள் டேக்டிக்கல் சப்ஸ்டிட்டியூட் வீரராக தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு இன்னிங்ஸின் 14-வது ஓவர் முடிவுக்குள் இந்த விதியின் கீழ் அணிகள் மாற்று வீரர் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிகிறது. அப்போது, ஆடும் லெவனில் உள்ள ஒரு வீரரை விடுவிக்க வேண்டும். இதன் மூலம் அணிகள் கூடுதலாக ஒரு பவுலர் அல்லது பேட்ஸ்மேனை பயன்படுத்திக் கொள்ள முடியும். விடுவிக்கப்பட்ட வீரர் மீண்டும் களம் காண முடியாது.

டி20 கிரிக்கெட்டில் இந்தப் புதிய விதி ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா - ஆஸ்திரேலியா விளையாடிய டி20 போட்டியில் தலையில் காயம்பட்ட ஜடேஜாவுக்கு மாற்றாக சஹால், கன்கஷன் சப்ஸ்டிட்டியூட்டாக விளையாடி உள்ளார். அந்தப் போட்டியில் ஜடேஜா 44 ரன்களும், சஹால் 3 விக்கெட்டுளையும் எடுத்தது குறிப்பிடத்தக்கது. அதுபோன்ற சம்பவங்கள் இனி ஐபிஎல் கிரிக்கெட்டிலும் நடைபெற உள்ளது.



Read in source website

உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் (Most Expensive Cities) பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் முதன்மை இடங்களை வகிக்கின்றன. இந்தப் பட்டியலில் கடைசி இடங்களில் உள்ள நகரங்கள் வாழ்வதற்கு செலவு குறைந்த நகரங்களாக கருதப்படுகின்றன. அந்த வகையில், உலக அளவில் சென்னை நகரம் வசிப்பதற்கு செலவு குறைந்த நகரமாகக் கருதப்படுகிறது.

மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலை வேர்ல்டு வைடு (worldwide) அமைப்பு வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கு உலகளவில் உள்ள 172 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அன்றாட வாழ்க்கைச் செலவு அடிப்படையில் ஆடம்பர நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள முதல் 10 நகரங்கள்:

  1. நியூயார்க் - அமெரிக்கா
  2. சிங்கப்பூர் - சிங்கப்பூர்
  3. டெல் அவிவ் - இஸ்ரேல்
  4. ஹாங்காங் - சீனா
  5. லாஸ் ஏஞ்சல்ஸ் - அமெரிக்கா
  6. ஸுரிஜ் - ஸ்விட்சர்லாந்து
  7. ஜெனீவா - ஸ்விட்சர்லாந்து
  8. சான் பிரான்சிஸ்கோ - அமெரிக்கா
  9. பாரீஸ் - பிரான்ஸ்
  10. கோபன்ஹெகன் - டென்மார்க்

இப்பட்டியலில் கடைசி 10 இடங்களில் உள்ள நகரங்கள், மக்கள் வசிப்பதற்கு செலவு குறைந்த நகரங்களாக கருதப்படுகின்றன. அதன்படி, இந்தப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள சிரியாவின் டமாஸ்கஸும், லிபியாவின் திரிபோலியும் செலவு குறைந்த நகரங்களாக கருதப்படுகின்றன. மேலும், இந்தப் பட்டியலில் இந்தியாவின் சென்னை, அகமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.

மொத்தம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 172 நகரங்களில், சென்னைக்கு 164-வது இடமும், அகமதாபாத்துக்கு 165-வது இடமும், பெங்களூருக்கு 161-வது இடமும் கிடைத்துள்ளன.



Read in source website

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் காரணமாக கைவிடப்பட்ட பணிகளை இந்தியா மீண்டும் தொடர இருப்பதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதையடுத்து பாதுகாப்புக் கருதி, இந்திய தூதரகத்திலிருந்த அதிகாரிகளை இந்தியா திரும்ப அழைத்தது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவு தடைபட்டது. எனினும், மனிதாபிமான அடிப்படையில் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா வழங்கி வந்தது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையே ராஜதந்திர உறவு மீண்டும் தொடங்கியது.

இந்தச் சூழலில், இந்தியா பாதியில் நிறுத்திய உள்கட்டமைப்புத் திட்டங்களை மீண்டும் தொடரும் என்று ஆப்கான் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சகம் கூறுகையில், “முந்தைய ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அரசியல் மாற்றங்களால் பாதியில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் அவை மீண்டும் தொடரப்படுகின்றன. இந்தியா 20 கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடர விரும்பம் தெரிவித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டங்களால், ஆப்கானிஸ்தானில் வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால், ஏழ்மையும் வேலையின்மையும் குறைந்து நாடு மேம்படும் என்று அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



Read in source website

தூத்துக்குடி: மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே உரம்' கொள்கை அடிப்படையில் நாட்டிலேயே முதல் நிறுவனமாக தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் 'பாரத் யூரியா' என்ற பெயரில் உரம் விநியோகத்தை நேற்று தொடங்கியது.

'ஒரே நாடு ஒரே உரம்' என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், அரசின் மானிய விலையில் விற்பனை செய்யப்படும் அனைத்து உரங்களையும் 'பாரத்' என்ற ஒற்றை பெயரில் தான் சந்தைப்படுத்த வேண்டும். அதாவது பாரத் யூரியா, பாரத் டிஏபி, பாரத் பொட்டாஷ், பாரத் காம்ப்ளக்ஸ் என்ற பெயரில் தான் உர நிறுவனங்கள் தங்கள் உரங்களை சந்தைப்படுத்த வேண்டும்.

மேலும் உரம் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர், 'லோகோ' பிற தயாரிப்பு தொடர்பான தகவல்களை, உரப் பைகளில் மூன்றில் ஒரு பங்கு இடத்தில் அடியில் தான் அச்சிட வேண்டும். மீதமுள்ள இடத்தில், பாரத் என்ற பெயர் மற்றும் பிரதமரின் பாரதிய ஜன் உர்வரக் பரியோஜனா திட்டத்தின் லோகோ இடம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கொள்கையின் அடிப்படையில் நாட்டிலேயே முதல் முதலாக தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் 'பாரத் யூரியா' உரம் விநியோகத்தை நேற்று தொடங்கியது. மத்திய அரசு அறிவுறுத்திய விவரங்கள் அச்சிடப்பட்ட உர மூட்டைகளில் ஸ்பிக் ஆலையில் தயாரிக்கப்பட்ட யூரியா பேக்கிங் செய்யப்பட்டு லாரிகளில் அனுப்பப்பட்டது. 'பாரத் யூரியா' உரம் விநியோகத்துக்கான முதல் லாரியை ஸ்பிக் நிறுவன முழுநேர இயக்குநர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது குறித்து அவர் கூறும்போது, ‘‘ஒரே நாடு ஒரே உரம்' கொள்கை அடிப்படையில் நாட்டிலேயே முதல் நிறுவனமாக ஸ்பிக் நிறுவனம் 'பாரத் யூரியா' என்ற பெயரில் உரம் விநியோகத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தினமும் 2,100 டன் யூரியா உற்பத்தி செய்யப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படும். முதல் நாளில் 2100 டன் பாரத் யூரியா உரம் தமிழகத்தின் புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த உரப்பைகளில் அரசு நிர்ணயம் செய்த தயாரிப்பு செலவு, அதிகபட்ச விற்பனை விலை, வரி மற்றும் மானியம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இந்த கொள்கை அடிப்படையில் பாரத் யூரியா என்று அறியப்படும் ஸ்பிக் யூரியா தொடர்ந்து அதன் நைட்ரஜன் தரத்தை பராமரித்து பயிர்கள் செழித்து வளர உறுதுணை புரியும் என்றார்.

நிகழ்ச்சியில் தமிழக அரசின் வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கண்ணன், ஸ்பிக் நிறுவன தலைமை இயக்க அதிகாரி இ.பாலு, பொதுமேலாளர் செந்தில் நாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Read in source website

புதுடெல்லி: சில்லறைப் பயன்பாட்டுக்கான டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனை சோதனை அடிப்படையில் டெல்லி, மும்பை உள்ளிட்ட நான்கு நகரங்களில் நேற்று தொடங்கப்பட்டது.

காகித, கிரிப்டோ கரன்சிகளுக்கு மாற்றாக டிஜிட்டல் வழிமுறையிலான பணப் பரிவர்த்தனையை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அதன் விளைவாக, தற்போது மத்திய வங்கி டிஜிட்டல் ரூபாய் (சிபிடிசி) அறிமுகப்படுத்தப்பட்டு நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் சில்லறைப் பயன்பாட்டுக்கான டிஜிட்டல் ரூபாய் டெல்லி, மும்பை, பெங்களூரு, புவனேஷ்வர் ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் நேற்று முதல் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த நான்கு நகரங்களிலும் டிஜிட்டல் ரூபாயை கையாளும் பொறுப்பு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி,யெஸ் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களிடம் டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனையை தொடங்கியுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இ-ரூபாய் எனப்படும் டிஜிட்டல் ரூபாய் காகித ரூபாயைப் போன்றே மதிப்புகளைக் கொண்டிருக்கும். வங்கிகள் வழங்கும் டிஜிட்டல் ரூபாயை வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல்போனில் உள்ள டிஜிட்டல் வாலெட்டிலேயே சேமித்து வைக்க முடியும். தேவைப்படும்போது மற்றொரு நபருக்கு அல்லது கடைகளுக்கு கியூர்ஆர் கோடு மூலமாக வாலெட்டிலிருந்து டிஜிட்டல் ரூபாயை பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.

டிஜிட்டல் ரூபாயைப் பயன்படுத்துவதால் கையில் ரொக்கத்தை வைத்து அலைய வேண்டியதில்லை. பணம் செலுத்தும் முறையில் டிஜிட்டல் ரூபாய் புதிய செயல்திறனை கொண்டு வரும் என்பதுடன், ரொக்கத்தை வங்கிகளிலிருந்து எடுத்து நிர்வகிக்கும் செயல்பாட்டு செலவினத்தையும் வெகுவாக குறைக்கும். மேலும், இது ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு தடையற்ற பணப்பட்டுவாடா சேவையினை உறுதி செய்யும்.

அதுமட்டுமின்றி, பண மோசடி,தீவிரவாத நிதியுதவி, வரி ஏய்ப்பு ஆகியவற்றுக்கு டிஜிட்டல் ரூபாய்முடிவுகட்டும் பிட்காயின், ஈதர்போன்ற அரசு அங்கீகாரமற்ற, பாதுகாப்பற்ற கிரிப்டோ கரன்சிகளின்பயன்பாட்டுக்கு மாற்றாக டிஜிட்டல்ரூபாய் பயன்பாடு இருக்கும்.

சோதனை அடிப்படையில் தற்போது சில்லறைப் பயன்பாட்டு உபயோகத்துக்கு வந்துள்ள டிஜிட்டல் ரூபாயின் நிறை குறைகளை ரிசர்வ் வங்கி தீவிரமாக ஆய்வு செய்யும். அதன் பின்னர், அதில் காணப்படும் சிக்கல் மற்றும் குறைகள் களையப்பட்டு நாடு முழுவதும் டிஜிட்டல் ரூபாய் பயன்பாட்டை ரிசர்வ் வங்கி விரிவுபடுத்தும்.



Read in source website

ப்ளூடூத் மற்றும் ஒயர்லெஸ் சாதனங்களின் டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கையில் கட்டும் ஸ்மார்ட்வாட்ச், கழுத்தோடு மாட்டப்படும் ப்ளூடூத் ஹெட்செட், ஒயர்லெஸ் ஏர்பாட், மவுஸ், ஸ்பீக்கர் என அதன் பட்டியல் நீள்கிறது. இருந்தாலும் இந்த ப்ளூடூத் டிவைஸ்கள் இப்போது ப்ளூடூத் மூலமாகவே ஹேக் செய்யப்பட்டு சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலிருந்து பயனர்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை பார்ப்போம்.

எளிய பயன்பாட்டுக்காக வயர்களுக்கு விமோசனம் கொடுக்கப்போன பயனர்கள் வில்லங்கத்திற்கு ஆளாக வேண்டிய நிலையை ப்ளூடூத் ஹேக்கிங் ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் ப்ளூடூத் சாதனம் ஆன் செய்யப்பட்டுள்ள பயனர்களின் சாதனங்களை ஹேக்கர்கள் அக்செஸ் செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அதன் வழியே செல்போன், லேப்டாப் போன்ற பயனர்களின் சாதனங்களை ப்ளூடூத் ஊடாக ஹேக் செய்து, அதில் உள்ள மிக முக்கிய தரவுகளை களவாட வாய்ப்பு உள்ளதாம். சமயங்களில் முழுவதுமாக அந்த சாதனத்தை ஹேக்கர்களால் கட்டுப்படுத்தவும் முடியும் என தெரிகிறது.

அது எப்படி பயனரின் அனுமதி இல்லாமல் ப்ளூடூத் பேர் செய்ய முடியும்? - 10 மீட்டர் தொலைவில் உள்ள சாதனங்களுக்கு டிஸ்கவராகும் ப்ளூடூத் சாதனங்களை ப்ளூடூத் ஹேக்கிங் மூலம் ஹேக்கர்களால் சுலபமாக ஹேக் செய்துவிட முடியுமாம். குறிப்பிட்ட சாதனத்தை பேர் (Pair) செய்ய தாங்கள் கற்ற மொத்த வித்தையையும் இறக்குவார்களாம். அதன் மூலம் ஒரு கட்டத்தில் சாதனத்தை ஹேக் செய்து விடுவார்களாம். அது கோட், பாஸ்வேர்டு என அனைத்தையும் தகர்க்கும் வகையில் இருக்குமாம். அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ப்ரூட் போர்ஸாக இருக்குமாம்.

ப்ளூடூத் பேர் ஆனதும் மால்வேர்களை நிறுவி சம்பந்தப்பட்ட பயனரின் தரவுகளை தட்டி தூக்கி விடுவார்களாம். போன் அழைப்புகள், குறுஞ்செய்திகள், கான்டக்ட்ஸ் போன்றவை இதில் அடங்கும் எனத் தெரிகிறது. சில நேரங்களில் வங்கி கணக்கு விவரங்களை கூட எடுத்து விடுவார்கள் எனத் தெரிகிறது.

ஒயர்லெஸ் சாதனங்கள், அதை போனுடன் இணைக்க உதவும் செயலிகள் போன்றவைதான் இந்த ஹேக்கிங்ற்கு பிரதான வழிகளாக அமைகிறதாம். அதனால் பயனர்கள் இந்த சாதனங்களை முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்துவது அவசியம் என சொல்லப்பட்டுள்ளது.

பயனர்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?

  • ஒயர்லெஸ் சாதனங்களை பயன்படுத்தவில்லை என்றால் ப்ளூடூத்தை ஆஃப் செய்து வைப்பது அவசியம்.
  • பிற சாதனங்களுக்கு ப்ளூடூத் விசிபிள் ஆவதை செட்டிங்ஸ் மூலம் தடுக்கலாம்.
  • சாதனங்களை அப்டேட் செய்வது மிகவும் அவசியம்.
  • பொது வைஃபையைப் பயன்படுத்துவதில் இருந்து டிவைஸை கன்ட்ரோல் செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத நேரங்களில் பொது வைஃபை பயன்படுத்த வேண்டி வந்தால் பயன்பாட்டுக்கு பின்னர் போனை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.
  • ஒருபோதும் அறியாதவர்களின் ப்ளூடூத் பேரிங் ரெக்வொஸ்ட்களை ஏற்க வேண்டாம்.
  • ப்ளூடூத்துக்கு பயனர்கள் தங்கள் பெயரை வைப்பதை தவிர்க்கலாம்.
  • அவ்வப்போது உங்கள் சாதனத்துடன் இணைக்கப்பட்டுள்ள ப்ளூடூத் டிவைஸ் குறித்து பார்க்கலாம்.
  • ஆன்டிவைரஸ் செயலிகளை பயன்படுத்தலாம்
  • முக்கிய தரவுகளை ப்ளூடூத் வழியே பகிர வேண்டாம்.



Read in source website

டெல்லி, பெங்களூரு, வாரணாசி விமான நிலையங்களில் இருந்து விமானத்தில் செல்கிறீர்களா? இந்த விமான நிலையங்களில் காகிதமில்லா மற்றும் தொடர்பில்லா சரிபார்க்கும் நடைமுறை மூலம் ‘டிஜியாத்ரா’ எனப்படும் முகத்தை அடையாளம் காணும் மென்பொருள் உதவியுடன் பயணம் செய்யலாம்.

டெல்லி, பெங்களூரு, வாரணாசி விமான நிலையங்களில் இருந்து விமானத்தில் செல்கிறீர்களா? இப்போது இந்த விமானநிலையங்களில் காகிதமில்லா மற்றும் நேரடி தொடர்பு இல்லாத சரிபார்க்கும் நடைமுறை இருக்கும். மேலும், ‘டிஜியாத்ரா’ எனப்படும் முகத்தை அடையாளம் காணும் மென்பொருளின் உதவியுடன் நீங்கள் பயணம் செய்யலாம். அது என்ன டிஜி யாத்ரா, அது எப்படி செயல்படுகிறது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்களில் விமானப் பயணத்தைத் தொந்தரவு இல்லாததாக மாற்றுவதற்காக காகிதமில்லா நுழைவை வியாழக்கிழமை (டிசம்பர் 1) முதல் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியின் கீழ், விமான நிலையங்களில் நுழைவதற்கு ‘டிஜியாத்ரா’ (DigiYatra) என்ற முகத்தை அடையாளம் காணும் மென்பொருளைப் பயன்படுத்துகிறது. அதாவது, விமானப் பயணிகள் தங்கள் அடையாள அட்டை மற்றும் போர்டிங் பாஸ் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

முதற்கட்டமாக, டெல்லி, பெங்களூரு, வாரணாசி ஆகிய மூன்று விமான நிலையங்களில் தொடங்கி, ஹைதராபாத், கொல்கத்தா, புனே, விஜயவாடா ஆகிய நான்கு விமான நிலையங்களில் மார்ச் 2023-க்குள் இந்த முயற்சி தொடங்கப்படும். இதைத் தொடர்ந்து, இந்த தொழில்நுட்பம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.

ஜி.எம்.ஆர். விமான நிலையங்கள் உள்கட்டமைப்பு நிறுவனத்தால் நடத்தப்படும் டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL), ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கான அதன் பயன்பாட்டின் பீட்டா பதிப்பை வெளியிடும் மையத்தின் டிஜியாத்ரா முயற்சியில் மென்பொருள் வெளியிடுவதை ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 3-ல் தேவையான உள்கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பிற விமான நிலையங்களும் அதற்குத் தேவையான உள்கட்டமைப்பை அமைத்து வருகின்றன.

டிஜியாத்ரா என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது?

டிஜியாத்ரா விமான நிலையத்தில் உள்ள பல்வேறு சோதனை நுழைவுகளை காகிதமில்லா மற்றும் நேரடி தொடர்புஇல்லாத செயலாக்கத்தின் மூலம் கடந்து செல்வதையும், அவர்களின் அடையாளத்தை உருவாக்க முக அம்சங்களைப் பயன்படுத்தி, போர்டிங் பாஸுடன் இணைக்கப்படுவதையும் செய்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், விமான நிலையத்திற்குள் நுழைவது, பாதுகாப்பு சோதனை பகுதிகள், விமானம் ஏறுதல் போன்ற அனைத்து சோதனை நுழைவுகளிலும் உள்ள முகத்தை அடையாளம் காணும் அமைப்பின் அடிப்படையில் பயணிகளின் நுழைவு தானாகவே செயலாக்கப்படும்.

எந்த விமான நிலையங்கள்/விமான நிறுவனங்கள் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை வழங்குகின்றன?

டெல்லியின் டெர்மினல் 3, பெங்களூரு மற்றும் வாரணாசி விமான நிலையங்களில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்த வசதி கிடைக்கும். ஹைதராபாத், புனே, விஜயவாடா மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு விமான நிலையங்களில் அடுத்த மார்ச் மாதத்திற்குள் டிஜியாத்ரா தொடங்கப்படும். பின்னர், மற்ற அனைத்து விமான நிலையங்களிலும் டிஜியாத்ரா விரைவாக விரிவுபடுத்தி செயல்படுத்தப்படும்.

விமான நிறுவனங்களில், ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் இண்டிகோ விமானங்களில் தங்கள் உள்நாட்டு நெட்வொர்க்கில் பயணிக்கும் பயணிகள் இந்த மூன்று விமான நிலையங்களில் இந்த வசதியைப் பெறலாம். ஸ்பைஸ்ஜெட், கோஃபர்ஸ்ட் மற்றும் ஆகாசா ஏர் ஆகியவை இன்னும் டிஜியாத்ரா வசதியை வழங்கவில்லை.

டிஜியாத்ரா வசதியை மக்கள் எப்படி பெறலாம்?

இந்தச் சேவையைப் பெறுவதற்கு, ஒரு பயணி ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு மற்றும் தானாக படப்பிடித்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தி டிஜியாத்ரா செயலியில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அடுத்த கட்டத்தில், போர்டிங் பாஸ் ஸ்கேன் செய்யப்பட வேண்டும். மேலும், நற்சான்றிதழ்கள் விமான நிலைய அதிகாரிகளுடன் பகிரப்படும்.

விமான நிலைய மின்-நுழைவு பகுதியில் பயணிகள் முதலில் பார்கோடு செய்யப்பட்ட போர்டிங் பாஸை ஸ்கேன் செய்ய வேண்டும் மற்றும் மின்-நுழைவு பகுதியில் நிறுவப்பட்டுள்ள முக அங்கீகார அமைப்பு பயணிகளின் அடையாளத்தையும் பயண ஆவணத்தையும் சரிபார்க்கும். இந்த செயல்முறை முடிந்ததும், பயணிகள் மின்-நுழைவு பகுதி வழியாக விமான நிலையத்திற்குள் செல்ல முடியும்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்து விமானத்தில் ஏற பயணிகள் வழக்கமான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் பயனளிக்கிறது. ஏனெனில், இது பறப்பதை மிகவும் வசதியாக்குகிறது. விமான நிலையங்களில் நெரிசலைக் குறைக்கிறது. துபாய், சிங்கப்பூர், அட்லாண்டா மற்றும் நரிட்டா (ஜப்பான்) உட்பட உலகெங்கிலும் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் முகத்தை அடையாளம் காணும் அமைப்பு செயல்திறனைக் கொண்டுவர உதவியுள்ளது.

டிஜியாத்ரா எப்படி செயல்படுத்தப்படுகிறது?

இந்திய விமான நிலைய ஆணையம் (26% பங்குகள்) மற்றும் பெங்களூரு விமான நிலையம், டெல்லி விமான நிலையம், ஹைதராபாத் விமான நிலையம், மும்பை விமான நிலையம் மற்றும் கொச்சின் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பங்குதாரர்களைக் கொண்ட ஒரு கூட்டு நிறுவனமான டிஜியாத்ரா அறக்கட்டளையால் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 74% பங்குகளை இந்த ஐந்து பங்குதாரர்களும் சமமாக வைத்துள்ளனர்.



Read in source website

CBDC என்பது டிஜிட்டல் வடிவத்தில் ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வ டெண்டர் ஆகும். இது ஃபியட் நாணயத்தைப் போன்றது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) டிச.1ஆம் தேதி வியாழக்கிழமை, மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை (CBDC) டிஜிட்டல் ரூபாய் அல்லது இ-ரூபாய் (e₹) அறிமுகப்படுத்தியது.

டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன?

CBDC என்பது டிஜிட்டல் வடிவத்தில் ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வ டெண்டர் ஆகும். இது ஃபியட் நாணயத்தைப் போன்றது.
மேலும் ஃபியட் நாணயத்துடன் ஒன்றுக்கு ஒன்று மாற்றக்கூடியது. அதன் வடிவம் மட்டுமே வேறுபட்டது. இதற்கு வங்கி கணக்கு தேவைப்படாது.

இந்த இ-ரூபாய், மத்திய வங்கியின் மீதான உரிமைகோரலைக் குறிக்கும் டிஜிட்டல் டோக்கன் வடிவில் இருக்கும். இதனை வைத்திருப்பவர் மற்றொருவருக்கு மின்னணு முறையில் மாற்றக்கூடிய வகையில், ரூபாய் நோட்டுக்கு சமமான டிஜிட்டல் டோக்கனாக இருக்கும்.

மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியை RBI எவ்வாறு அறிமுகப்படுத்துகிறது?
மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சிகள், சோதனை கட்டமாக மும்பை, புதுடெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அடுத்து, அகமதாபாத், காங்டாக், குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா மற்றும் சிம்லா உள்ளிட்ட நகரங்களில் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

பைலட் பங்குபெறும் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களை உள்ளடக்கிய மூடிய பயனர் குழுவில் (CUG) பணிபுரிவார் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்துடன் டிஜிட்டல் முறையில் அச்சிடப்பட்ட நோட்டுகளுடன் CBDC வாலட்கள் கிடைக்கும்.

முதல் கட்டமாக முதல் நான்கு நகரங்களில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் பேங்க் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகிய எட்டு வங்கிகளும், அதைத் தொடர்ந்து, பாங்க் ஆஃப் பரோடா, மஹிந்திரா வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் கோட்டக் ஆகிய 8 வங்கிகளும் இதில் பங்கேற்கும்.

அதிக வங்கிகள், பயனர்கள் மற்றும் இடங்களை உள்ளடக்கும் வகையில் பைலட்டின் நோக்கம் படிப்படியாக விரிவாக்கப்படலாம்.

ஒரு தனிநபர் மின்னணு ரூபாயை எவ்வாறு பயன்படுத்தலாம்?

மின்-ரூபாய்கள் காகித நாணயம் மற்றும் நாணயங்களின் அதே மதிப்புகளில் வெளியிடப்படும், மேலும் இடைத்தரகர்கள் மூலம் விநியோகிக்கப்படும், அதாவது வங்கிகள். பங்குபெறும் வங்கிகள் வழங்கும் டிஜிட்டல் வாலட் மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும், மேலும் மொபைல் போன்கள் மற்றும் சாதனங்களில் சேமிக்கப்படும்.

பரிவர்த்தனைகள் நபருக்கு நபர் (P2P) மற்றும் நபருக்கு வணிகர் (P2M) ஆகிய இரண்டிலும் இருக்கலாம். P2M பரிவர்த்தனைகளுக்கு (ஷாப்பிங் போன்றவை), வணிகர் இடத்தில் QR குறியீடுகள் இருக்கும்.

ஒரு பயனர் வங்கிகளில் இருந்து டிஜிட்டல் டோக்கன்களை எடுக்க முடியும் அதே வழியில் அவர் தற்போது உடல் பணத்தை எடுக்க முடியும். அவளால் தனது டிஜிட்டல் டோக்கன்களை பணப்பையில் வைத்திருக்க முடியும், அவற்றை ஆன்லைனில் அல்லது நேரில் செலவிடலாம் அல்லது பயன்பாட்டின் மூலம் அவற்றை மாற்றலாம்.

மற்ற பணப்பையிலிருந்து இது எவ்வாறு வேறுபட்டது?

இது எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதில் மிகவும் வேறுபட்டதல்ல. இருப்பினும், Google Pay மற்றும் Paytm போன்ற UPI அடிப்படையிலான பயன்பாடுகள் தினசரி மற்றும் ஒரு பரிவர்த்தனைக்கான செலவு வரம்பைக் கொண்டுள்ளன. பணப்பையில் டிஜிட்டல் ரூபாயை வைத்திருப்பதற்கு ரிசர்வ் வங்கி எந்த வரம்பும் விதிக்கவில்லை. 2 லட்சத்துக்கும் மேலான டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனைகள் வரி விஷயங்களுக்காகப் புகாரளிக்கப்படும்.

இ-ரூபாய் வகைகள் என்னென்ன?

டிஜிட்டல் ரூபாயின் பயன்பாடு மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில், பல்வேறு அணுகல் நிலைகளைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி டிஜிட்டல் ரூபாயை சில்லறை மற்றும் மொத்த விற்பனை வகைகளாகப் பிரித்துள்ளது.

சில்லறை மின்-ரூபாய் என்பது சில்லறை பரிவர்த்தனைகளுக்கு முதன்மையாகக் கருதப்படும் பணத்தின் மின்னணு பதிப்பாகும், இது கிட்டத்தட்ட அனைவராலும் பயன்படுத்தப்படலாம், மேலும் பணம் செலுத்துதல் மற்றும் செட்டில்மென்ட்களுக்கு பாதுகாப்பான பணத்திற்கான அணுகலை வழங்கலாம்.

மொத்த விற்பனை CBDC ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட அணுகலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசாங்கப் பத்திரங்கள் (ஜி-செக்) பிரிவு மற்றும் வங்கிகளுக்கிடையேயான சந்தையில் வங்கிகளால் மேற்கொள்ளப்படும் நிதிப் பரிவர்த்தனைகளுக்கான தீர்வு முறைகளை மாற்றியமைக்கும் திறன் கொண்டது.

மேலும் செயல்பாட்டுச் செலவுகள், பிணையத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் மூலதனச் சந்தையை மிகவும் திறமையாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் திறன் கொண்டது.

இ-ரூபாய் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

இ-ரூபாய்க்கான பிளாக்செயின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது இந்தியா 1 டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரமாக மாறுவதற்கான ஒரு படியாகும்.
இந்தியா டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாரிய வளர்ச்சியைக் கண்டு வருகிறது. யுபிஐ பரிவர்த்தனைகளின் அளவு மற்றும் மதிப்பு முறையே 118 சதவீதம் மற்றும் 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 98 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மொபிலிட்டி தீர்வுகள் வழங்குநரின் தலைமை வளர்ச்சி மற்றும் மாற்ற அதிகாரி ஸ்ரீனிவாஸ் நிடுகொண்டி கூறினார்.

இதற்கிடையில், “வெளிப்படையான மற்றும் திறமையான தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் ரூபாய், மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ பணம் செலுத்தும் முறைக்கு வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான அணுகலை வழங்கும் என்று ஃபின்டெக் நிறுவனமான PayMe இந்தியாவின் CEO & நிறுவனர் மகேஷ் சுக்லா கூறினார்.

CBDC கிரிப்டோகரன்சியிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

ரிசர்வ் வங்கியின் ஆதரவுடன், கடந்த தசாப்தத்தில் வளர்ந்த பிட்காயின் போன்ற தனியார் மெய்நிகர் நாணயங்களுடன் இ-ரூபாய் ஒப்பிட முடியாது. தனியார் மெய்நிகர் நாணயங்கள் பணத்தின் வரலாற்றுக் கருத்துடன் கணிசமான முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. அவை பண்டங்கள் அல்லது பொருட்களின் மீதான உரிமைகோரல்கள் அல்ல, ஏனெனில் அவைகளுக்கு உள்ளார்ந்த மதிப்பு இல்லை; அவை தங்கத்தை ஒத்தவை என்று கூறுவது சந்தர்ப்பவாதமாகத் தெரிகிறது.

பொதுவாக, இப்போது மிகவும் பிரபலமானவர்களுக்கு, அவர்கள் எந்த நபரின் கடனையோ அல்லது கடன்களையோ பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. வழங்குபவர் இல்லை. அவை பணம் அல்ல – நிச்சயமாக நாணயம் அல்ல – இந்த வார்த்தை வரலாற்று ரீதியாக புரிந்து கொள்ளப்பட்டது.

கிரிப்டோக்கள் மத்திய வங்கியால் ஆதரிக்கப்படவில்லை; உண்மையில், இந்தியாவில் கிரிப்டோகரன்ஸிகளை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று RBI விரும்புகிறது. கிரிப்டோகரன்சிகளின் உள்ளார்ந்த வடிவமைப்பு, பணவியல் மற்றும் நிதிச் சூழல் அமைப்பின் ஒருமைப்பாடு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் நிறுவப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட இடைநிலை மற்றும் கட்டுப்பாட்டு ஏற்பாடுகளைத் தவிர்ப்பதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாய் கருத்துக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இ-ரூபாயின் நன்மைகள் என்ன?

CBDC ஆனது பணத்தின் மீதான குறைந்த சார்பு, குறைந்த பரிவர்த்தனை செலவுகள் காரணமாக அதிகப் பறிமுதல் மற்றும் தீர்வு அபாயத்தைக் குறைத்தல் போன்ற குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
பெரிய பணப் பயன்பாட்டை CBDC களால் மாற்றும் அளவிற்கு, நாணயத்தை அச்சிடுதல், கொண்டு செல்வது, சேமித்தல் மற்றும் விநியோகம் செய்வதற்கான செலவுகளை குறைக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது.

டிஜிட்டல் ரூபாய் மற்ற டிஜிட்டல் கட்டண முறைகளை விட சில தெளிவான நன்மைகளைக் கொண்டுள்ளது: பணம் செலுத்துவது இறுதியானது, இதனால் நிதி அமைப்பில் தீர்வு அபாயத்தைக் குறைக்கிறது. வங்கி நிலுவைகளுக்கு பதிலாக CBDC பரிவர்த்தனை செய்யப்படும்போது, ​​வங்கிகளுக்கு இடையேயான தீர்வுக்கான தேவை மறைந்துவிடும். CBDC ஆனது நிகழ்நேர மற்றும் செலவு குறைந்த உலகமயமாக்கல் முறைமைகளை செயல்படுத்த முடியும்.

டிஜிட்டல் ரூபாய் மற்ற டிஜிட்டல் கட்டண முறைகளை விட சில தெளிவான நன்மைகளைக் கொண்டுள்ளது: பணம் செலுத்துவது இறுதியானது, இதனால் நிதி அமைப்பில் தீர்வு அபாயத்தைக் குறைக்கிறது.
வங்கி நிலுவைகளுக்கு பதிலாக CBDC பரிவர்த்தனை செய்யப்படும்போது, ​​வங்கிகளுக்கு இடையேயான தீர்வுக்கான தேவை மறைந்துவிடும். CBDC ஆனது நிகழ்நேர மற்றும் செலவு குறைந்த உலகமயமாக்கல் முறைமைகளை செயல்படுத்த முடியும்.

CBDC ஆஃப்லைன் பயன்முறையில் செயல்படுமா?

இ-ரூபாய் ஆஃப்லைன் பயன்முறையில் செயல்படும் என்று ரிசர்வ் வங்கியிடம் இருந்து இதுவரை எந்த அறிகுறியும் இல்லை. ஆஃப்லைன் செயல்பாடு, மோசமான அல்லது இணைய இணைப்பு இல்லாத பகுதிகளில் CBDC பரிவர்த்தனைகளை அனுமதிக்கும் மற்றும் நிதி அமைப்பில் வங்கி இல்லாத மக்களின் டிஜிட்டல் தடயங்களை உருவாக்கும் போது, RBI ஆனது ஆஃப்லைன் பயன்முறையில் ‘இரட்டை செலவு’ ஆபத்து இருப்பதாக உணர்கிறது.
ஏனெனில் இது தொழில்நுட்ப ரீதியாக இருக்கும். CBDC இன் பொதுவான லெட்ஜரைப் புதுப்பிக்காமல் CBDC யூனிட்டை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்த முடியும்.

இருப்பினும், தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கான பண வரம்பு உள்ளிட்ட பொருத்தமான வணிக விதிகள் மூலம் இதை பெரிய அளவில் குறைக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்படுமா?

ரிசர்வ் வங்கியின் கருத்துத் தாள், CBDC சுற்றுச்சூழல் அமைப்புகளும் தற்போதுள்ள கட்டண முறைகளைப் போலவே சைபர் தாக்குதல்களுக்கு ஆபத்தில் இருக்கலாம் என்று கூறுகிறது. சைபர் பாதுகாப்பு பரிசீலனைகள் சுற்றுச்சூழலுக்காக கவனிக்கப்பட வேண்டும்.



Read in source website

நேபாளத்தில் நவம்பா் 20-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா தலைமையிலான ஐந்து கட்சி கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. 2015-இல் அரசமைப்புச் சட்டத்துடன் தன்னை குடியரசாக நேபாளம் அறிவித்துக் கொண்டதைத் தொடா்ந்து நடைபெற்ற இரண்டாவது தோ்தல் இது. தேவுபா ஆறாவது முறையாக பிரதமராவதை சாதனை என்றுதான் கூற வேண்டும்.

நேபாளத்தில் அமையும் எந்தவொரு கூட்டணியும் கொள்கை அடிப்படையிலான கூட்டணியாக இருந்ததில்லை. அதற்கு இப்போதைய பிரதமா் தேவுபா தலைமையிலான கூட்டணியும் விதிவிலக்கல்ல. பதவியைக் கைப்பற்றுவதற்காகவும், தோ்தல் வெற்றிக்காகவும் யாரும், யாருடனும் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்கிற பதவிக் கூட்டணிதான் நேபாளத்தின் வழிமுறையாகவே இருந்து வருகிறது.

தற்போதைய பிரதமரான 76 வயது ஷோ் பகதூா் தேவுபாவின் அரசியல் வெற்றிகளுக்குக் காரணம் அவரது அணுகுமுறை எனலாம். ஆளும் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக பங்கு வகிக்கும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு தேவுபாவின் நேபாளி காங்கிரஸுக்கு எதிராகவும், அதன் தலைவா்கள், தொண்டா்களைத் தாக்கியும் மக்கள் போா் நடத்தியது. தலைமறைவு இயக்கமாக இருந்த அந்த வன்முறை கட்சி, 2003-இல் தேவுபா பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அதிருஷ்டவசமாக தப்பினாா் ஷோ் பகதூா் தேவுபா. அதைப் பெரிதுபடுத்தாமல் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்க அவா் முன்வந்ததும், அவரை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) ஏற்றுக் கொண்டதும் அந்த நாட்டின் அரசியல் எதாா்த்தத்தை வெளிச்சம் போடுகின்றன.

நேபாளி காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் மையம்) ஆகியவை நேபாளத்தின் முக்கிய மூன்று அரசியல் கட்சிகள். அவற்றின் தோ்தல் வாக்குறுதிகள் ஒன்றுக்கொன்று முரணான கருத்துகளை வெளிப்படுத்தினாலும், அவ்வப்போது ஆட்சியைக் கைப்பற்ற அந்தக் கட்சிகள் இணைவதும், பிரிவதும் வழக்கமாகவே இருந்து வருகிறது. இந்த முறை இந்திய வம்சாவளியினரின் மாதேசி கட்சியின் ஒரு பிரிவினா் ஆளும் கூட்டணியை ஆதரிக்கிறாா்கள் என்பதும்கூட ஒருவகை முரண்தான்.

முன்னாள் பிரதமா் கே.பி. ஓலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), ஆளும் கூட்டணியின் முரணை தனது தோ்தல் ஆயுதமாக பயன்படுத்தியது. அதுவே அதற்கு பின்னடைவை ஏற்படுத்தியது எனலாம். ஏனென்றால், முந்தைய நேபாள நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கை கொண்ட கட்சியாக இருந்த கே.பி. ஓலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தலைமை வகித்த கூட்டணி விசித்திரமானது. மன்னராட்சி முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும், நேபாளத்தை ஹிந்து தேசமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததால் கே.பி. ஓலியின் பிரசாரம் எடுபடவில்லை.

1950-களில் சீனாவில் மாசே துங் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி ஏற்பட்டதைத் தொடா்ந்து, அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் அதன் தாக்கம் காணப்பட்டது. 1976-இல் மாசே துங்கின் மறைவு வரை நேபாள இளைஞா்களுக்கு அவா்தான் ஆதா்சமாகத் திகழ்ந்தாா். இன்றைய முன்னணி நேபாள கம்யூனிஸ்ட் தலைவா்கள் மாவோவின் சித்தாந்தத்தால் ஈா்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவா்கள்.

அதேபோன்ற ஈா்ப்பு இன்றைய தலைமுறையினருக்கு சீனா மீதோ, அதிபா் ஷீ ஜின்பிங் மீதோ இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் செல்வாக்கு பெற்றிருந்தாலும்கூட, கடந்த 30 ஆண்டுகளாக அவற்றின் தலைமை மாறாமல் இருப்பதால் இளைய தலைமுறைக்கு கம்யூனிஸ்டுகள் மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.

மே மாதம் காத்மண்டு மாநகராட்சிக்கு நடந்த தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட 32 வயது பாலென் ஷா என்கிற பொறியியல் பட்டதாரி எதிா்பாராத வெற்றியை அடைந்திருக்கிறாா். எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல், சமூக ஊடகங்களின் மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டு அவா் அடைந்திருக்கும் வெற்றி அரசியல் கட்சிகளைத் திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு எதிரான அவரது கருத்துகள் மக்களின் ஆதரவைப் பெற்றன. நடந்து முடிந்திருக்கும் நாடாளுமன்றத் தோ்தலிலும் சுயேச்சைகள் பலா் வெற்றி பெற்றிருக்கிறாா்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் இந்தியாவுக்கு எதிராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளால் உருவாக்கப்பட்ட மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நேபாள பிரதமா் தேவுபாவின் இந்திய விஜயமும், இந்திய பிரதமா் நரேந்திர மோடியின் லும்பினி அரசுமுறைப் பயணமும் இருநாடுகளுக்கும் இடையேயான கருத்துவேறுபாடுகளைக் கணிசமாக அகற்றியிருக்கின்றன.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சீனா கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே நெருக்கமான உறவு இருக்கிறது என்றாலும்கூட, அதையும் மீறி இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்த வெற்றி பெற்ற ஆளும்கூட்டணி விரும்புகிறது. முன்னாள் பிரதமரும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) தலைவருமான பிரசண்டா, ஆளும் கூட்டணியில் இருப்பது, அடுத்து அமைய இருக்கும் ஆட்சிக்கு வலுசோ்க்கும்.

நேபாள நாடாளுமன்றத் தோ்தல் ஒரு முக்கியமானச் செய்தியை தெரிவித்திருக்கிறது. அரசியல் கட்சிகள் மீதும், அவற்றின் தலைவா்கள் மீதும் இளைய தலைமுறை அதிருப்தி கொண்டிருக்கிறது என்பதுதான் அது. ஊழலுக்கு எதிரான வளா்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கும் இளைய தலைவா்களைக் கொண்ட ராஷ்ட்ரீய சுதந்திரா கட்சி பெற்றிருக்கும் வரவேற்பு, அதன் பிரதிபலிப்பு!



Read in source website

மனிதக் கொலைகள் இப்போது மலிந்துவிட்டன. ‘சிறுமி கொலை, சிறுவன் கொலை, இளம்பெண் கொலை, வாலிபன் கொலை, காதலன் கொலை, காதலி கொலை, கணவன் கொலை, மனைவி கொலை, முதியவா் கொலை, மூதாட்டி கொலை, விவசாயி கொலை, வியாபாரி கொலை, தொழிலதிபா் கொலை, ஆணவக் கொலை, அரசியல் கொலை’ என்று நாள்தோறும் நாளேட்டில் செய்திகள் வருகின்றன.

இவற்றையெல்லாம் படிக்கும்போது நெஞ்சம் பதறுகிறது. ‘உலகில் ஒவ்வொரு பதினொரு நிமிடத்துக்கும் ஒரு பெண் அவருடைய காதலன் அல்லது குடும்ப உறுப்பினா்களால் கொல்லப்படுகிறாா்’ என்று ஐ. நா. பொதுச்செயலாளா் குறிப்பிட்டிருப்பது, உலகெங்கிலும் இந்தக் கொலைவெறி மிகுந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

கொலை என்பது கொடூரச்செயல். இதனை விலக்கி வாழ்வதே அறவாழ்க்கை என்பது முன்னோா்களின் முடிவு. ஒரு உயிரையும் கொல்லாமையே அறமாகும். அறமில்லாச் செயல்கள் எல்லாவற்றையும் கொலை விளைவித்துவிடும் என்கிறாா் வள்ளுவா் (குறள்: 321).

கொலைப்பாவத்தால் விளையும் துன்பத்தைப் பிற எல்லாப் பாவங்களும் கூடியும் விளைவிக்காது. கொல்லாமை என்பது பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும் என்பது வள்ளுவா் குறளுக்கான விளக்கம். இதனால் கொல்லாமை ஒரு பெருந்தா்மம் என்பது புலனாகும். இப்பெருந்தா்மம் இப்போது தடுமாற்றத்தில் உள்ளதுபோல் தெரிகிறது.

உணவுக்காகப் பிற உயிா்களைக் கொல்லுதல் கூட பாவம் என்று கருதிய இப்பூமியில் மரங்களை வீழ்த்துவது போல மனிதா்களை வெட்டிச் சாய்க்கும் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. போா்க்களத்தில் எதிரிகளைக் கொல்வது போா் மரபு. அப்படிக் கொன்றதற்குக் கூட வருத்தப்படுகிறாா் தருமா். ”

நண்பா்களையும் உறவினா்களையும் கொன்றதனால் அழிவற்ற பாவத்தை அடைந்து தலைகீழாய் நரகத்தில் விழப் போகிறோம்” என்று கவலைப்பட்டு வாடுகிறாா். ஆனால் இங்கோ திட்டம் போட்டுக் கொலை செய்யும் தீவிரச் செயல்கள் பெருகிவிட்டன. நாட்டில் நடைபெறும் கொலைகளுக்கு, பெரும்பாலும் முன்விரோதம், தகாத உறவு போன்றவையே காரணங்களாக அமைகின்றன.

சொத்துத் தகராறு, தோ்தல்கால மோதல், கோயில் திருவிழா பிரச்னை, ஏற்கெனவே நிகழ்ந்த கொலை, சாதி மோதல் போன்றனவற்றால் முன்விரோதம் எழுகின்றது. இந்த முன்விரோதம் சண்டையாகி, கொலையில் முடிகிறது. ஓா் அடி நிலத்தைக்கூட விட்டுக் கொடுக்க முடியாத மனநிலை, தோ்தல் கால மோதலைத் தாங்கிக் கொள்ள முடியாத தன்மை, கோயில் நிருவாகத்தில் ஏற்படும் மனக்கசப்பு, முன்னா் நடந்த கொலை போன்றவற்றால் பகைமை தோன்றுகிறது.

இந்தப் பகைமை முன்விரோதமாக மாறுகிறது. இவற்றுள் முன்னா் நடந்த கொலையால் ஏற்பட்ட பகைமையைத் தவிர மற்றவை எல்லாம் விட்டுக்கொடுத்தோ, பேசியோ தீா்த்துவிடக் கூடியவையே. மனிதா்களுக்கு இந்த மனப்பான்மை இல்லாமையால்தான் கொலைப் பாதகம் நிகழ்கிறது.

முன் நடந்த கொலையால் ஏற்படும் முன் விரோதத்தால் ‘பழிக்குப் பழி’ என்ற குரோத மனப்பான்மை உண்டாகி, ‘உயிருக்கு உயிா்’ என்ற வன்மம் எழுகிறது. ‘நீதி மன்றம் கொடுத்த தண்டனை போதும்’ என்று ஏற்று ஆறுதல் அடைய முடியாத நிலை இன்னொரு கொலை செய்யத் தூண்டிவிடுகிறது. ‘புதிதாக ஒரு உயிரை எடுப்பதால் ஏற்கெனவே போன உயிா் வந்துவிடப் போவதில்லை’ என்ற புரிதல் இல்லாமை மற்றொரு கொலைக்கு வழி வகுத்துவிடுகிறது.

தகாத உறவால் நடக்கும் கொலைகள் இப்போது பெருகி வருகின்றன. நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியைக் கணவன் கொல்வதும், கள்ளக் காதலைக் கைவிட முடியாத மனைவி, கணவனைக் கொல்வதும், தகாத உறவுக்கு இடையூறாக இருக்கும் குழந்தையைக் கொல்வதும் அன்றாடம் செய்திகளில் இடம்பெறுகின்றன. பெண்களும் சிறுமிகளும் அதிகம் கொல்லப்பட்டாலும் ஆண்களும் உயிா் இழக்கத்தான் செய்கின்றனா்.

கணவன் - மனைவிக்கு இடையில் சரியான புரிதல் இல்லாமையே இத்தகைய தகாத உறவுக் கொலைக்குக் காரணம். பாலியல் வேட்கை என்பது இயல்பான ஒன்று. அதனை நெறிப்படுத்தி வாழ்வதற்கே இல்லற தருமம் உண்டானது. இதனைத் தெரிந்து ஆணும் பெண்ணும் நடந்து கொண்டால் இத்தகைய தகாத உறவால் ஏற்படும் கொலைகளைத் தவிா்க்க முடியும்.

இவை போக ஆத்திரத்தால் அறியாமல் நடக்கும் கொலைகளும் உள்ளன. கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்படும் வாய்த்தகராறு ஆத்திரத்தில் அடிதடியாக மாறி மரணம் சம்பவித்தலும் உண்டு. இதே போல நண்பா்கள் சிலா் சோ்ந்து மது அருந்தும்போது ஏற்படும் சிறு தகராறு பெரிய சண்டையாகி கொலையில் முடிகிறது. திருடப் போகின்றவா்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் செய்யும் கொலைகளும் உள்ளன. சாதி, சமயம், அரசியல் பின்னணியிலும் கொலைகள் நடைபெறுகின்றன.

காய்கறி நறுக்கும் கத்தியும், மரம் வெட்டும் அரிவாளும், பூச்சிக் கொல்லி மருந்தும், மலையைத் தகா்க்கும் வெடிகுண்டும் மனிதனைக் கொல்லும் கொலைக்கருவிகளாகிவிட்டன. அதைக் கையாள இங்கே கூலிப்படை உள்ளது. ஆம், மரத்தை வெட்ட கூலியாள் இருப்பது போல மனிதனைக் கொல்லவும் கூலிப்படை இருக்கிறது இங்கே.

ஒரு கொலையால் கொலை செய்யப்பட்டவா் குடும்பம், கொலையாளியின் குடும்பம் என இரு குடும்பமும் பாதிப்புக்குள்ளாகின்றன. கொலைக்குற்றத்திற்கும் கொலைத்தூண்டலுக்கும் கடும் தண்டனை விதிக்கப்படுகிறது. ஒருவேளை நீதிமன்றத் தண்டனையிலிருந்து தப்பித்தாலும் செய்த பாவம் விடாது என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இருந்தாலும் கொலைகள் மட்டும் குறையவில்லை. விரைவில் இந்த கொலைவெறிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

 



Read in source website

ரஷியாவை விட பரப்பளவில், மக்கள்தொகையில், ராணுவ பலத்தில் என அனைத்திலும் சிறிய நாடுதான் உக்ரைன். ஆனாலும், கடந்த ஒன்பது மாதங்களாக போா்க்களத்தில் ரஷியாவை அஞ்சாமல், அசராமல் எதிா்த்து நிற்கிறது உக்ரைன். அது மாத்திரமல்ல, சில வேளைகளில், ரஷியப் படையினரைப் பின்வாங்கவும் வைக்கிறது.

இதை விட வியப்பு என்னவென்றால், ரஷியா கைப்பற்றிய தனது நாட்டின் பல பகுதிகளை மீட்டெடுத்தும் வருகிறது. இது எப்படி சாத்தியமானது? உக்ரைனின் சாதுரியமா? போா்த்தந்திரமா? ரஷியாவை எதிா்க்க ஏனைய நாடுகள் செய்துள்ள மறைமுக உதவியா? இவற்றை அலசி ஆராய்ந்து பாா்த்தால், சில வினாக்களுக்கு விடை கிடைக்கிறது; சில வினாக்களுக்கு விடை கிடைக்காமலும் இருக்கிறது.

உளவுத்துறை வழங்கியுள்ள ரகசிய தகவல், ரஷியாவுக்கு எதிரான உக்ரைனின் பதிலடித் தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பவை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, ஜி-7 கூட்டமைப்பு போறவைதான் என்று தெரிவிக்கிறது. முன்பு ரகசியமாக இருந்தது இப்போது வெட்ட வெளிச்சமாக ஆகிவிட்டது. ஆகவே, ரஷியா திகைத்து நிற்கிறது.

நவீன தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்களையும், மில்லியன் கணக்கில் நிதி உதவியையும் அந்த நாடுகள் உக்ரைனுக்கு வாரி வழங்குகின்றன. பலம் மிக்கவரை எதிா்க்கிறபோது, அவரை வீழ்த்துவதற்கு மறைமுக உதவிகள் தானாகவே வந்து சேரும் என்பதை வாழ்வின் பல சந்தா்ப்பங்களில் நாம் பாா்த்திருக்கிறோம்.

ரஷிய - உக்ரைன் போா் தொடங்கியது முதல் இன்று வரை தொடா்ந்து உக்ரைனுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வரும் நாடு அமெரிக்கா. முதலில் உக்ரைனுக்கு 350 மில்லியன் டாலா் மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை வழங்க அமெரிக்க அதிபா் ஜோ பைடன் அனுமதி வழங்கியிருந்தாா்.

அதன் பின்னா், ஏப்ரலில் இந்திய அமைச்சகம் 500 மில்லியன் டாலா் நிதியை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்தது. தொடா்ந்து, ஜூலையில் உக்ரைனுக்கு மேலும் 820 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா தரப்பு செய்திருக்கிறது.

இதனைத் தொடா்ந்து உக்ரைனுக்கு 15 ஸ்கேன் ஈகிள் கண்காணிப்பு ட்ரோன்கள், 40 கண்ணிவெடி அகற்றும் வாகனங்கள், 2,000 பீரங்கி எதிா்ப்பு குண்டுகள், ஹோவிட்சா் பீரங்கிகள் என 77.5 கோடி டாலா் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை அமெரிக்கா, உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறது.

இவை மாத்திரமல்ல, பீரங்கிகளைத் தாக்கி அழிக்கும் 1,500 ஏவுகணைகள், 1,000 ஜாவ்லின் ஏவுகணைகள், ரேடாா் கருவிகளைத் தாக்கி அழிக்கும் ‘ஹாா்ம்’ ஏவுகணைகள் என 1,000 கோடி டாலா் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாகவும், ஜோ பைடன் அரசு தெரிவித்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சுமாா் 4,326 கோடி ரூபாய் ராணுவ உதவி வழங்கியிருப்பதாக அமெரிக்கா ஒப்புக் கொண்டிருக்கிறது. தொடா்ந்து, கடந்த செப்டம்பரில் 600 மில்லியன் டாலா் (சுமாா் ரூ. 4,790 கோடி) மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள், ஆயுத உதவிகள், வெடி மருந்துகள், பீரங்கிகள் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா 15 பில்லியன் டாலருக்கும் அதிகமான ராணுவ உதவிகளைச் செய்திருப்பது கண்டு ரஷியா அதிா்ச்சியில் உறைந்திருக்கிறது.

சிறிய நாடான உக்ரைன், பெரிய நாடான ரஷியாவை வீழ்த்துவதற்கு பலமான நண்பா்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இவை மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியமும் தொடா்ந்து உக்ரைனுக்கு உதவி செய்து வருகிறது.

கடந்த மாா்ச் மாதம் உக்ரைனுக்கு 300 மில்லியன் யூரோ வழங்கியிருப்பதாக ஐரோப்பிய யூனியன் வெளிப்படையாகவே அறிவித்தது. அதைத் தொடா்ந்து உக்ரைன் 450 மில்லியன் யூரோ மதிப்புள்ள ஆயுதங்களை வாங்குவதற்கும், விநியோகிப்பதற்கும் நிதி உதவி செய்திருக்கிறது.

கடந்த செப்டம்பரில் நடந்த கூட்டத்தில், கூடுதலாக 9 பில்லியன் யூரோக்களை ராணுவம் அல்லாத நிதி உதவியாக உக்ரைனுக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டிருக்கிறது. உக்ரைன் - ரஷியப் போரில் அப்பாவி பொதுமக்கள் பலியாவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள இயலாது என்று இந்தியா அறிவித்து விட்டது.

ஆகவே, ஜி 7 நாடுகளின் கூட்டமைப்பு, 18.4 பில்லியன் அமெரிக்க டாலா்களை, அதாவது 14 லட்சம் கோடி ரூபாயை உதவியாக உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறது. பிரிட்டனும் உக்ரைனுக்கு 375 மில்லியன் டாலா் (சுமாா் ரூ. 2,800 கோடி) மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியிருக்கிறது.

இது போதாதென்று, கூடுதலாக ஒரு பில்லியன் பவுண்ட் நிதி உதவியும் வழங்கியிருக்கிறது. ஆகவே, இதுவரை பிரிட்டன், சுமாா் 2.3 பில்லியன் பவுண்ட் நிதி உதவியை உக்ரைனுக்கு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவ உதவி வழங்கிய முதல் நாடு ஸ்வீடன் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஸ்வீடன் அரசாங்கம் உக்ரைனுக்குத் தொடா்ந்து தொழில்நுட்ப உதவிகளையும், ராணுவ உதவிகளையும் செய்துகொண்டேயிருக்கிறது. அதைப்போலவே, பின்லாந்தும் உக்ரைனுக்கு 2,500 துப்பாக்கிகள், 1,50,000 துப்பாக்கி குண்டுகள், 1,500 பீரங்கி எதிா்ப்பு ஆயுதங்கள், 70,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கியிருக்கிறது.

நெதா்லாந்து ராணுவ அமைச்சகம், உக்ரைனுக்கு 50 டாங்கி எதிா்ப்புக் கருவிகளையும், 400 ஏவுகணைகளையும், 200 ஸ்டிங்கா் வகை ராக்கெட்டுகளையும் வழங்கியிருக்கிறது. மேலும், பதுங்குகுழிகளைக் கண்டறியும் தானியங்கி ரோபோக்கள், ரேடாா் கருவிகள், அதிநவீன துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் ஆகியவற்றையும் நெதா்லாந்து, உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறது.

ஜொ்மனும் போா் தொடக்கத்திலேயே 1,000 டாங்கி எதிா்ப்பு கருவிகளையும், 500 ஸ்டிங்கா் வகை ஏவுகணைகளையும், ராணுவத்தின் முக்கியமான தளவாடங்களில் ஒன்றான ஹோவிட்சா் ரக கனரக ஆயுதம் ஐந்தையும் வழங்கியிருக்கிறது. இதனைத் தொடா்ந்து ஒரு பில்லியன் யூரோ நிதி உதவியையும் வழங்கியிருக்கிறது. வான் பாதுகாப்புக் கேடயத்தை ஜொ்மன் பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியிருப்பது மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

இதுபோன்று செக் குடியரசு, பெல்ஜியம், இத்தாலி, பிரான்ஸ், போா்ச்சுக்கல், ஸ்பெயின், ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கியுள்ள உதவிகளும் ஏராளம். இவ்வாறாக, குண்டு துளைக்காத உடைகள், எரிபொருள்கள், படைப்பிரிவுகள், வான்பாதுகாப்பு ஏவுகணைகள், வெடிமருந்துகள், ராணுவ ஆலோசனைகள், குளிா்கால உடைகள் இப்படி பல நாடுகளிலிருந்தும் உதவிகள் குவிந்து விட்டன. ஆகவே, உக்ரைன் தாக்குதலை எதிா்கொள்ள முடியாமல் ரஷியா திணறுகிறது. உக்ரைன் தொடா்ந்து மிருக பலத்தோடு மோதிக் கொண்டிருக்கிறது.

ஜப்பான் உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலா் நிதிஉதவி வழங்குவதாக அறிவித்தது. ஜப்பானில் கோடீஸ்வரரான ஹிரோஷி மிகிதானி என்பவா் உக்ரைனுக்கு 8.7 மில்லியன் டாலா் நன்கொடையாக வழங்கியிருக்கிறாா். உக்ரைன் என்னும் சிறிய நாடு ரஷியாவைத் துணிச்சலோடு எதிா்த்து நிற்பதற்குக் காரணம் பலமிக்க நாடுகளின் உதவிகளே.

ராணுவத்தை வலிமையாக்க தொழில்நுட்ப ஆயுத உதவி, காயம் பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ உதவி, சீரழியும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நிதியுதவி, கடனுதவி என உலக நாடுகள் உக்ரைனுக்கு வாரி வழங்கும் உதவிகளால்தான் போா்க்களத்தில் ரஷியாவுடன் மல்லுக்கட்டும் பேராற்றலை உக்ரைன் பெற்றிருக்கிறது என்று கூறுவது மிகையில்லை.

உக்ரைன் அதிபா் ஜெலன்ஸ்கியிடம் பத்திரிகை நிருபா் ஒருவா், ‘உக்ரைன் போா் எப்போது முடிவுக்கு வரும் என்று நினைக்கிறீா்கள்’ என்று கேட்டபோது அவா், ‘எனக்குத் தெரியாது. போரை நாங்கள் ஆரம்பிக்காத போது போா் எப்போது முடியும் என்று எங்களால் எப்படிச் சொல்ல முடியும்’ என்றாா்.

உக்ரைனுக்கும் ரஷியாவுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் போா் தொடங்கியபோது அது இவ்வளவு காலம் நீடிக்கும் என்று எந்த நாடும் எதிா்பாா்க்கவில்லை. காரணம், ரஷியா உலக வல்லரசு நாடுகளில் ஒன்று. ஆயுத வலிமை மிக்க நாடு. அப்படிப்பட்ட ரஷியாவை ஒரு சிறிய நாடான உக்ரைன், நீண்ட நாட்களுக்கு எதிா்த்து நிற்க முடியாது என்று கருதின.

சிறிய நாடான உக்ரைனை எளிதில் வென்றுவிடலாம் என்று எண்ணிய ரஷியா, தற்போது உக்ரைன் விஸ்வரூபம் எடுத்து நிற்பதைப் பாா்த்து அதிச்சியடைந்துள்ளது என்பதே நிதா்சனம். எளிமையின் வலிமை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

உலக நாடுகள் எதிா்பாராத வகையில், ரஷியாவை எதிா்த்து உக்ரைன் அதிபா் ஜெலன்ஸ்கி தாக்குப்பிடித்ததோடு அல்லாமல், மேற்கு உக்ரைனில் ரஷியா ஆக்கிரமித்திருந்த சில பகுதிகளில் இருந்து அவா்களை விரட்டவும் செய்திருக்கிறாா்.

போா் தொடங்கியபோது ரஷியா நான்கு முனைகளில் இருந்தும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. முக்கியமாக வடக்கில் இருந்து உக்ரைனின் தலைநகரான கீவைத் தாக்கி கைப்பற்ற நினைத்தது. தலைநகரைக் கைப்பற்றினால் அந்நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றி விடலாம் என்பது அதன் கணக்காக இருந்தது.

போரில் தாக்குப்பிடிக்க முடியாமல் உக்ரைன் அடிபணிந்து விடும் என்று ரஷியா கணக்கிட்டது. ஆனால், உக்ரைன் பல நாடுகளின் உதவியோடு மிகத் தீவிரமாகப் போரிட்டதன் விளைவாக தனது தலைநகரைத் தக்க வைத்துக் கொண்டது. அதன் மூலம், இப்போது உலகையே வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.



Read in source website

 

சர் ஜேம்ஸ் எட்வர்ட் ஸ்மித்  என்பவர் 18-19ம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத் தகுந்த  தாவரவியலாளர். இவரது 263-வது பிறந்த தினம் டிசம்பர் 2-ம் நாள். இவர் பிறந்தது 1759ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 2ம் நாள். மேலும் அவர் லின்னியன் சொசைட்டியின் நிறுவனர். சர் ஜேம்ஸ் எட்வர்ட் ஸ்மித் பிரிட்டனின் தாவரங்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

துவக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி

சர் ஜேம்ஸ் எட்வர்ட் ஸ்மித் 1759-ம் ஆண்டு, ஜெர்மனியின், நார்விச் என்ற ஊரில், ஒரு பணக்கார கம்பளி வியாபாரியின் மகனாகப் பிறந்தார். ஜேம்ஸ் ஸ்மித்தின் தந்தை பெயர், பிரான்சிஸ் கிண்டர்லி. அவரின் ஏழு குழந்தைகளில் ஸ்மித் மூத்தவர். சிறுவயதில் தாவரவியலில் ஆர்வம் காட்டினார். நார்விச்சில் வாழ்ந்த பல திறமையான தாவரவியலாளர்களால் ஊக்குவிக்கப்பட்ட ஸ்மித் தாவரவியலை முறையாகப் படிக்க விரும்பினார். ஆனால் அவரது தந்தை மருத்துவமும் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 1780ம் ஆண்டின் முற்பகுதியில், ஸ்மித் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார், அங்கு அவர் ஜோசப் பிளாக்கின் கீழ் வேதியியலையும், ஜான் வாக்கரின் கீழ் இயற்கை வரலாற்றையும் பயின்றார். பின்னர் அவர் மேலும் தனது படிப்பைத் தொடர 1783ம் ஆண்டில் லண்டன் சென்றார். ஸ்மித்,  சர் ஜோசப் பேங்க்ஸின் நண்பராக இருந்தார். அவருக்கு கார்ல் லின்னேயஸின் மகன், சின்ன கார்ல் லின்னேயஸின் மரணத்தைத் தொடர்ந்து, ஸ்வீடிஷ் இயற்கை வரலாற்றாசிரியரும், தாவரவியலாளருமான கார்ல் லின்னேயஸின் புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் மாதிரிகளின் முழு தொகுப்பும் சர் ஜோசப் பேங்க்ஸிடம்  வழங்கப்பட்டது. வங்கிகள் அதனை வாங்குவதை நிராகரித்தன. ஆனால் ஸ்மித் 1,000 யூரோ பேரம் பேசினார். விலைக்கு வாங்கிய சேகரிப்பு 1784-ம் ஆண்டு லண்டனுக்கு வந்தது. 1785-இல் ஸ்மித் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாழ்க்கைப் பயணம் மற்றும் தொழில் பயணம்

ஸ்மித், 1786 - 1788 ஆண்டுகளுக்கு இடையில் நெதர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து என்ற நீண்ட பயணத்தை மேற்கொண்டார். அந்த ஊர்களில்  அங்கு வாழ்ந்த/ஆய்வு செய்துகொண்டிருந்த தாவரவியலாளர்கள், படக் காட்சியகங்கள் மற்றும் ஹெர்பேரியம்(இலை,செடிகள்,மற்றும்  மரங்களின் பாகங்களைப் பதப்படுத்தி வைத்திருத்தல்) ஆகியவைகளைப் பார்வையிட்டார். ஜேம்ஸ் எட்வர்ட் ஸ்மித் 1788ம் ஆண்டில், லண்டனின்  லின்னேயஸ் சங்கத்தை (Linnean Society of London) நிறுவினார். அதன்பின்னர் ஜேம்ஸ் எட்வர்ட் ஸ்மித் அதன் முதல் தலைவராக ஆனார். பின்னர் அவர் இறக்கும் வரை அந்த பதவியை அவரே வகித்தார். மீண்டும் ஜேம்ஸ் எட்வர்ட் ஸ்மித் 1796ம் ஆண்டு அவர் பிறந்த ஊரான நார்விச்சில் வசிக்க விருப்பம் கொண்டு அங்கு திரும்பினார். பின்னர் முழு சேகரிப்பையும் தன்னுடன் கொண்டு வந்தார்.

ஜேம்ஸ் எட்வர்ட் ஸ்மித்தின்  பெருமைகள்

ஜேம்ஸ் எட்வர்ட் ஸ்மித்தின் நூலகம் மற்றும் தாவரவியல் சேகரிப்புகள் அனைத்தும் ஐரோப்பா முழுமைக்கும் பரவி புகழ் பெற்றது. மேலும், ஐரோப்பா முழுக் கண்டத்திலிருந்தும் ஏராளமான பூச்சியியல் வல்லுநர்கள் மற்றும் தாவரவியலாளர்கள் வந்து ஸ்மித்தின் நூலகம் மற்றும் தாவரவியல் சேகரிப்புகளைப் பார்வையிட்டனர். 1792-இல், அவர் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் அயல்நாட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1796ம் ஆண்டு, ஸ்மித் அமெரிக்கன் பிலாசபிகல் சொசைட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நார்விச்சில் தாவரவியல் பற்றிய எழுத்துக்கள்

நார்விச்சில் உள்ள அவரது வீட்டில், ஸ்மித் அவர் படித்த பல தாவரங்களை வளர்த்தார். மேலும், அவர் வெளிநாட்டு தாவரவியலில் (1804-1805) விவரிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு மாதிரிகளை வளர்க்கும் தோட்டக்காரர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். முடிந்தபோதெல்லாம், அவர் வழங்கிய அனைத்து விளக்கங்களையும் அவர் தனிப்பட்ட முறையில் சரிபார்த்ததாக பெருமைப்பட்டார். சாலிக்ஸ் இனத்தைப் பற்றி எழுதுவதற்கு முன்பு, அவர் ஐந்து வருடங்கள் கிடைக்கக்கூடிய அனைத்து வகையான வில்லோக்களையும் சேகரித்து வளர்ப்பது அவரது பணியின் சிறப்பியல்பு. தாவரவியல் வரலாற்றில் ஸ்மித்தின் முக்கியத்துவம், பாடத்தை பிரபலப்படுத்தும் திறனிலும், கிரேட் பிரிட்டன் மற்றும் முன்னர் அதிகம் அறியப்படாத பிற நாடுகளின் தாவரங்களை விவரிப்பதில் அவரது துல்லியமான துல்லியம் மற்றும் விரிவான தன்மையிலும் நிரம்பி உள்ளது. 

ஸ்மித்தின் புத்தக வெளியீடுகள்

ஸ்மித் தனது வாழ்நாளில் மீதமுள்ள முப்பது வருடங்கள் முழுமைக்கும் தாவரவியலில் நிறைய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதினார். அவரது புத்தகங்களில் ஃப்ளோரா பிரிட்டானிக்கா மற்றும் ஆங்கிலேய நாட்டு தாவரங்கள் (Flora Britannica and The English Flora ) (4 தொகுதிகள், 1824 - 1828) ஆகியவை அடங்கும். ஸ்மித், 1808 மற்றும் 1819 ஆண்டுகளுக்கு இடையில் ரீஸின் சைக்ளோபீடியாவில் 3,348 தாவரவியல் கட்டுரைகளை அவர் எழுதி, தாவரவியல் துறைக்கு மிகப்பெரிய பங்களித்தார். பணியைத் தொடங்கிய ரெவ. வில்லியம் வுட், இறந்ததைத் தொடர்ந்து, கூடுதலாக, அவர் தாவரவியலாளர்களின் 57 சுயசரிதைகளை வழங்கியுள்ளார். பதினெட்டாம் நூற்றாண்டின் முக்கிய தாவரவியல் வெளியீடான ஃப்ளோரா கிரேகாவிற்கு,(Flora Gracea), ஜான் சிப்தோர்ப் என்பவர் தொடங்கிய வெளியீடுகளுக்கு ஸ்மித் ஏழு தொகுதிகளை எழுதிக் கொடுத்தார். ஸ்மித், வெளியீட்டாளரும் விளக்கப்படமான ஜேம்ஸ் சோவர்பிக்கு வழங்கிய விளக்கங்களின் மூலம் உலகுக்கு ஒரு பயனுள்ள ஒத்துழைப்பு கண்டறியப்பட்டது, அவருடன் அவர் பாசிகள் மற்றும் லைகன்கள்(Algae &Lichens) மீது தீவிர ஆர்வத்தை உருவாக்கினார். இங்கிலாந்தில் உள்ள தாவரங்களின் சித்தரிப்புக்கு முன்பு அழகியல் அக்கறைகளுக்கு மட்டுமே ஆதரவைக் கண்டறிந்தது. ஆனால் தோட்டக்கலை மற்றும் இயற்கை வரலாற்றில் உள்ள ஆர்வத்தால் புதிய ஹாலந்து தாவரவியல் மற்றும் ஜேம்ஸ் சோவர்பியின் 36-தொகுதி ஆங்கில தாவரவியல் போன்ற அயல்நாட்டு வெளியீடுகள் புதிய பார்வையாளர்களை சென்றடைந்தன.

நார்விச்சில் உள்ள அவரது வீட்டில், ஸ்மித் அவர் படித்த பல தாவரங்களை வளர்த்தார், மேலும் அவர் வெளிநாட்டு தாவரவியலில் (1804-1805) விவரிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு மாதிரிகளை வளர்க்கும் தோட்டக்காரர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். முடிந்த போதெல்லாம், அவர் வழங்கிய அனைத்து விளக்கங்களையும் அவர் தனிப்பட்ட முறையில் சரிபார்த்ததாக அவர் பெருமைப்பட்டார். சாலிக்ஸ் இனத்தைப் பற்றி எழுதுவதற்கு முன்பு, அவர் ஐந்து வருடங்கள் கிடைக்கக்கூடிய அனைத்து வகையான வில்லோக்களையும் சேகரித்து வளர்ப்பது அவரது பணியின் சிறப்பியல்பு. தாவரவியல் வரலாற்றில் ஸ்மித்தின் முக்கியத்துவம், பாடத்தை பிரபலப்படுத்தும் திறனிலும், கிரேட் பிரிட்டன் மற்றும் முன்னர் அதிகம் அறியப்படாத பிற நாடுகளின் தாவரங்களை விவரிப்பதில் அவரது துல்லியமான துல்லியம் மற்றும் விரிவான தன்மையிலும் தங்கியுள்ளது.

பூச்சியினம் அறிதல்

ஸ்மித், 1797 ஆம் ஆண்டில் ஜார்ஜியாவின் அரிதான பட்டாம்பூச்சி இன பூச்சிகளின் இயற்கை வரலாற்றை வெளியிட்டார். இது வட அமெரிக்க பூச்சிகள் பற்றிய ஆரம்ப புத்தகமாகும். இது ஜான் அபோட்டின் விளக்கப்படங்கள் மற்றும் குறிப்புகளையும்  உள்ளடக்கியது. அபோட்டின் வரைபடங்களின் அடிப்படையில் ஸ்மித்தின் புதிய இனங்கள் பற்றிய விளக்கங்களுடன்,  வில்லியம் ரோஸ்கோவுடனான ஸ்மித்தின் நட்பின் (அவருடைய பெயரால் ரோஸ்கோயா இனத்தை அவர் பெயரிட்டார். அவர் 1806 மற்றும் 1817-க்கு இடையில் ஸ்மித் 5,000 தாவரங்களை, ராலியன் ஹெர்பேரியத்திற்கு அளித்து உதவி செய்தார்.  இதுபின்னர் லிவர்பூல் தாவரவியல் பூங்காவால் நடத்தப்பட்ட ஸ்மித் ஹெர்பேரியமாக மாறியது.

குடும்ப வாழ்க்கை

அவர் ப்ளெஸன்ஸ் ரீ என்ற பெண்ணை மணந்தார். அவர் 49 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து தனது கணவருக்காக, அவரின் நினைவுக் குறிப்புகள் மற்றும் கடிதங்களைத் திருத்தினார். அவரது இறப்புக்குப் பின்னர் இருவரும் ஒன்றாக, செயின்ட் மார்கரெட்ஸ், லோவெஸ்ட்ஃப்டில் உள்ள கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்டனர். அவரது மருமகள், பிரான்சிஸ் கேத்தரின் பர்னார்ட் (1796-1869), ஒரு எழுத்தாளர்.

இறப்பு

ஸ்மித் தனது 68 வயதில் மார்ச் 17, 1828 அன்று சர்ரே தெருவில் உள்ள நார்விச் இல்லத்தில் இயற்கை மரணம் அடைந்தார். அதன் பின்னர்,  லின்னியன் சேகரிப்பு, ஸ்மித்தின் சொந்த சேகரிப்புகள், லின்னியன் சொசைட்டியால் 3,000 யூரோவுக்கு விலைக்கு வாங்கப்பட்டது.

பெருமைகள்

இமயமலையில் உள்ள ஒரு தாவரத்திற்கு Picea smithiana என ஸ்மித்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

(டிச. 2 - சர் ஜேம்ஸ் எட்வர்ட் ஸ்மித் பிறந்தநாள்) 

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்]



Read in source website

தமிழ்நாட்டின் 78% அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் நூற்றுக்கும் குறைவான மாணவர்களே படித்துவருவதாக தமிழக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் புள்ளிவிவரம் ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்சேர்க்கை வீதம் கடந்த 20 ஆண்டுகளாகவே தொடர்ந்து குறைந்துவருகிறது. கரோனாவுக்குப் பிறகு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகணிசமாகக் கூடியிருந்தாலும் மேற்கூறிய புள்ளிவிவரம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.



Read in source website

நீதிக் கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கம், திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது தமிழக வரலாற்றின் மிக முக்கியமான திருப்பங்களில் ஒன்று. கல்லூரிப் படிப்பை முடித்துப் பொதுவாழ்வில் அடியெடுத்துவைத்த இளைய தலைமுறையினரின் ஆதரவோடு 1944இல் சேலம் மாநாட்டில் அந்தப் பெயர் மாற்றம் நிகழ்ந்தது.

ஆனால், அதற்கடுத்த ஐந்தாண்டுகளிலேயே அந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள், தேர்தல் அரசியலை நோக்கி நகர்வதற்கு வாய்ப்பாகத் தனியாகப் பிரிந்து, புதிய கட்சியைத் தோற்றுவித்தனர். அதே சேலம் மாநாட்டில், பள்ளி மாணவராகக் கலந்துகொண்டவர்தான் திராவிடர் கழகத்தின் இன்றைய தலைவர் கி.வீரமணி. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவரது மூத்த சகாக்கள், பெரியாரிடமிருந்து பிரிந்து நின்றபோது, பள்ளி மாணவராக இயக்கத்தில் சேர்ந்த வீரமணி, பெரியாரின் நம்பிக்கைக்குரிய மாணவராக அவரை உறுதியாகப் பற்றி நின்றார்.



Read in source website

அது ஒரு ஜனவரி காலை நேரம். அகலப்படுத்தப்படாத அந்தக் கிராமத்து தார் சாலையில் வண்டி ஆடி அசைந்து அரிட்டாப்பட்டியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இருபுறமும் புதர்க்காடுகள், எதிரே மலைத்தொடர். மரங்கள் இல்லாத அந்த மலையில், பாறைகள் மட்டுமே நிறைந்திருந்தன. என்னை அங்கு அழைத்தது ஒரு பறவை: லகுடு என்றழைக்கப்படும் Laggar Falcon (Falco jugger).

அரிட்டாப்பட்டியை அடைந்தவுடன் அந்தப் பகுதியைச் சேர்ந்த பறவை ஆர்வலர் ரவிச்சந்திரனும் வயதான பூசாரி வீரணனும் என்னுடன் இணைந்துகொண்டனர். சூரச் செடியிலிருந்த சூரப்பழங்களைக் காட்டி, சூரமாரிகள் (Rosy Starling) இவற்றை விரும்பிச் சாப்பிடும் என அந்த இடத்தைப் பற்றியும் அங்குள்ள பறவைகள் பற்றியும் அவர்கள் விவரித்துக்கொண்டே வந்தனர்.

ஆச்சரியத்துடன் இவற்றையெல்லாம் கேட்டுத் தலையசைத்துக்கொண்டே, நான் தேடிவந்த பறவையை எங்கே பார்க்கலாம்? எந்த நேரத்தில் எளிதாகப் பார்க்கலாம்? உங்கள் ஊரில் அதன் பெயர் என்ன? என அந்தப் பெரியவரிடம் கேட்டேன். சிலர் ‘லகுடு’ என்று சொன்னாலும், அதை நாங்கள் ‘வலசாரை’ என்போம் என்றார்.

‘வலசாரை பறக்குது’: பேசிக்கொண்டே வெட்டவெளிக்கு வந்திருந்தோம். கம்பீரமாக உயர்ந்தோங்கி நிற்கும் மரங்களற்ற மலையைக் கூர்ந்து நோக்கிவிட்டு, ‘வலசாரை அங்க உக்காந்துக்கிட்டு இருக்கு’ என்றனர். இருகண்நோக்கியை வைத்துத் துழாவியும் என் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லை. பிறகு அது அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே கரிய திட்டுகளையும் வெள்ளையான எச்சத் திட்டுகளையும் சுட்டிக்காட்டி அடையாளம் காட்டிய பிறகுதான், அது இருக்குமிடம் எனக்குப் புலப்பட்டது. ஏதோ ஒரு சிறு புள்ளியாக இருந்ததை இருகண்நோக்கியால் கண்டோம். இருந்தும் மனம் நிறையாமல், பறக்கும்வரை அங்கேயே இருப்போம் எனத் தரையில் அமர்ந்துவிட்டோம். பூசாரி வீரணன், வயலில் நாற்று நடும்போது பாடும் பாட்டை அப்போது பாடினார்.

“உள்ளான் உழுதுவர,

ஊர்க்குருவி நாத்து அரிக்க,

நாரை பரம்படிக்க,

நட்டு வாம்மா குட்டப்புள்ள...”

அதாவது, தனது அலகால் சேற்றைக் குத்துவதுபோல உழவன் உள்ளான் உழ வேண்டும், ஊர்க்குருவிபோல சுறுசுறுப்பாக நாற்றுகளைப் பிரித்து நட வேண்டும், நாரை பொறுமையாக நடப்பதுபோலப் பரம்பு அடிக்க வேண்டும் எனப் பாடலை அவர் விளக்கிக்கொண்டிருந்தபோதே, ‘வலசாரை பறக்குது’ என்றார் ரவி. எங்களுக்குப் பின்னாலிருந்துவந்த காலை நேரக் கதிரவனின் ஒளி மலையைப் பிரகாசமாக்கிக்கொண்டிருந்தது. இதற்குமுன் அந்தப் பறவை இருந்த இடத்தின் அருகில் பார்த்தபோது வலசாரை தெரியவில்லை. ஆனால், அந்தப் பறவையின் வில் வடிவிலான நிழல் செந்நிறப் பாறையில் தெரிந்தது; நிழல் மெல்லப் பறந்துகொண்டிருந்தது. Falcon வகைப் பறவைகளுக்கு வல்லூறு, ராஜாளி என்ற பெயர்கள் இருந்தாலும் அவற்றை ‘வில்லேந்திரம்’ என்றும் அழைப்பதுண்டு.

றெக்கைகளை ஒரு கோணத்தில் மடக்கிப் பறக்கும்போது அவற்றின் வடிவம் வில்போலத் தோன்றும். அந்த வலசாரையின் நிழலைப் பார்த்தபோது எனக்கு அந்தச் சொல்தான் நினைவில் தட்டியது. பறக்கும் திசையை மாற்றியவுடன் பாறையின் பின்னணியில் வலசாரையின் உடலில் உள்ள நிறங்களும் அடையாளங்களும் தெரிந்தன. பாறையின் மேலே மெல்ல வட்டமிட்டுப் பறந்து செல்லச்செல்ல நீல வானின் பின்னணியில் வலசாரை அழகாகக் காட்சியளித்தது.

வலசாரையின் வாழ்க்கை: இது ஓர் இரைக்கொல்லிப் பறவை வகை (Raptor). பல்லி, ஓணான், பெரிய பூச்சிகளான வெட்டுக்கிளி, வண்டு, சிறு பறவைகள், புறாக்கள், எலிகள் முதலியவற்றை வேட்டையாடி உண்ணும். வறண்ட வெட்டவெளிப் பகுதிகளில் பொதுவாகத் தென்படும். விவசாய நிலங்கள், கிராமப்புறங்கள், சில வேளைகளில் நகர்ப்புறங்களில் மின்கம்பிகளின் உச்சியிலும், கட்டடங்களிலும்கூடத் தென்படும். இவற்றின் வாழிடங்கள் குறைந்துவருவதாலும் இரை உயிரினங்கள் குறைந்து, இல்லாமல் போவதாலும் இந்தப் பறவை அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் (near threatened) சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியத் துணைக்கண்டத்தில் (இலங்கை நீங்கலாக), ஆப்கானிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகளில் இவை தென்படுகின்றன. இந்தியாவின் வடபகுதிகளில் (குறிப்பாக ராஜஸ்தான், குஜராத்) பல இடங்களில் பரவியும் தென்னிந்தியாவில் ஆங்காங்கே சிதறியும் தென்படுகின்றன. இவை தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் மட்டுமே இருப்பதாக இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவை ஆண்டு முழுவதும் தென்படுவது அரிட்டாப்பட்டி மலைப்பகுதி மட்டும்தான் என்பதால், இந்தப் பகுதி முக்கியத்துவம் பெறுகிறது.

கருங்கழுகு, வெள்ளைக்கண் வைரி, பெரிய ராஜாளி, வல்லூறு, சிவப்பு வல்லூறு, தேன் பருந்து, பெரிய புள்ளிக் கழுகு, இந்தியப் புள்ளிக் கழுகு, வெண்தோள் கழுகு, விராலடிப்பான், பாறைக் கழுகு, செந்தலை வல்லூறு, இரண்டு வகையான பூனைப் பருந்துகள், கருந்தோள் பருந்து, கரும்பருந்து, செம்பருந்து, பாம்புக் கழுகு, காட்டுப் பாம்புக் கழுகு, சிறிய புள்ளி ஆந்தை, பூமன் ஆந்தை என சுமார் 20 வகையான இரைக்கொல்லிப் பறவைகள் இப்பகுதியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் சில வலசை வருபவை, சில அப்பகுதியிலேயே கூடமைத்து ஆண்டு முழுவதும் தென்படுபவை.

எதிர்பார்ப்புடன் பார்க்க வந்த பறவையைப் பார்க்க முடிந்தால் ஏற்படும் பரவசத்துக்கு ஈடில்லை. அந்த மகிழ்ச்சியான மனநிலையுடனேயே அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பறவைகளையும் பார்த்துக்கொண்டிருந்தோம். செங்குத்தாக உலக்கை போல இருக்கும் பாறை, கிண்ணம்போல வளைந்த பாறை, உருண்டையான பாறை, மனித முகம் போன்ற பாறை என விதவிதமான வடிவங்களில் பாறைகளும் குன்றுகளும் இருந்தன. பல ஆண்டுகளுக்குமுன் ஆந்திரத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டபோது இது போன்ற பல அழகிய பாறைக் குன்றுகளைக் கண்டதுண்டு.

பாறைகளில் பல்லுயிரியம்: மேகங்களைப் போலவே, பாறைகளைப் பார்த்து, நம் கற்பனைக்கு ஏற்ப அவற்றின் உருவத்தை அனுமானிப்பது அலாதியான பொழுதுபோக்கு. நம்மில் பலர் இதைச் செய்திருப்போம். மேகங்கள் கலைந்துபோகும். ஆனால், பாறைகள் அப்படியல்ல. ஒரு பாறையை ஒரு கோணத்தில் பார்த்தால் ஒருவிதமாகவும் அதைச் சுற்றிவந்தால் அதே பாறை, வெவ்வேறு வடிவங்களில் வேறு உருவமாகவும் இருப்பதைக் காணலாம்.

காலையிலும், மாலையிலும் சூரிய ஒளியின் வீச்சு மாறுவதால் அவற்றின்மீது விழும் ஒளியின் விளைவால் ஒரு பாறை பலவித அழகிய தோற்றங்களைக் கொடுக்கும். இதுபோன்ற பாறைகள் சூழ்ந்த இடங்கள், பல உயிரினங்களுக்கு வாழிடமாகின்றன. நம்மில் பலருக்கு இயற்கை அழகை அள்ளித்தரும் இடமாகத் தெரிகிறது. ஆனால், சிலருக்கோ இவை வெறும் தேவையற்ற கல்லாகவும், பணம் கொட்டும் கிரானைட் குவாரிக்கான இடமாகவுமே தெரிவதுதான் சிக்கல்.

பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள், மரங்கள் அடர்ந்த காடுகள் மட்டுமே அல்ல. வெட்டவெளிகளும், புதர்க்காடுகளும், புல்வெளிகளும், பாறைகள் சூழ்ந்த பகுதிகளும்கூடத்தான். இப்படிப்பட்ட வாழிடங்களை மட்டுமே சார்ந்திருக்கும் உயிரினங்கள் பல இங்குள்ளன. பரந்த புல்வெளிகளில் மட்டுமே தென்பட்டவை கானமயில்கள் (Great Indian Bustard). மயிலுக்குப் பதிலாகத் தேசியப் பறவையாக ஆக்கப்படுவதற்குப் பரிசீலிக்கப்பட்ட பறவை இது.

ஆனால், மேற்கண்டது போன்ற வாழிடங்கள் அழிக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் இப்பறவை முற்றிலுமாக அற்றுப்போய்விட்டது. ஆகவே, எஞ்சியிருக்கும் இப்படிப்பட்ட கண்டுகொள்ளப்படாத வாழிடங்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். அதற்கு, அரிட்டாப்பட்டி பாறைசூழ் பகுதிகளும் அதனைச் சார்ந்த உயிரினங்களும் அவ்வூர் மக்களால் காப்பாற்றப்பட்டு, தமிழக அரசால் (உயிரியல் பன்மைச் சட்டம் 2002இன் கீழ்) தமிழகத்தின் முதல் பல்லுயிர் அருமரபுக் களமாக (Biodiversity Heritage Site) அறிவிக்கப்பட்டிருப்பது மிகச் சிறந்த முன்னுதாரணமாகும். - ப.ஜெகநாதன் எழுத்தாளர் - காட்டுயிர் ஆராய்ச்சியாளர், தொடர்புக்கு: jegan@ncf-india.org



Read in source website