DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 01-02-2022

Important News, Editorials & Opinions published in Popular Daily Tamil Newspapers for TNPSC Exams and other Competitive Exams

'நட்சத்திரவாசிகள்’ நாவலுக்காக 2021-ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சாகித்ய அகாதெமியின் ‘யுவ புரஸ்கார்’ விருது 2021-ஆம் ஆண்டிற்காக எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன் எழுதிய ‘நட்சத்திரவாசிகள்’ நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திக் பாலசுப்ரமணியன் எழுத்தில் ‘டொரினா’ ‘ஒளிரும் பச்சைக் கண்கள்’ ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் ‘நட்சத்திரவாசிகள்’ நாவலும் வெளியாகியுள்ளது.



Read in source website

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஓமந்தூரில் முன்னாள் முதல்வர் ராமசாமி ரெட்டியாரின் 125-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி ஓமாந்தூர் அரசு மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் த.மோகன் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா, திண்டிவனம் சார் ஆட்சியர் அமீத் மற்றும் திண்டிவனம் அரசு அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.



Read in source website

கேரளத்தின் புகழ்பெற்ற பாம்பு மீட்பரான வாவா சுரேஷ் நல்லபாம்பு கொத்தியதில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால், கேரளத்தில் தனி ஒரு மனிதராக  குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த 50,000-க்கும் மேற்பட்ட  பாம்புகளை மீட்டு வனத்தில் விடுபவராக இருப்பவர் வாவா சுரேஷ்.

இவர், நேற்று(ஜன.31) மாலை கோட்டயம் மாவட்டம் சங்கனச்சேரி பகுதியில் உள்ள குரிச்சி கிராமத்தில் குடியிருப்பில் புகுந்த நல்லபாம்பை மீட்கச் சென்றார். சில நிமிடங்களில் பாம்பைப் பிடித்து பொதுமக்கள் முன்னிலையில் அதை பையில் போட முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக சுரேஷின் தொடைப் பகுதியில்பாம்பு கொத்தியது.

இதனால், உடனடியாக அவர் கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பின், அவரை முதல்கட்ட சிகிச்சைக்குப் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்தனர். 

இந்நிலையில், இன்று காலை வரை கவலைக்கிடமான நிலையில் இருந்த வாவா சுரேஷின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக  மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தெரிவித்தார். 

2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அப்போது உரையாற்றிய அவர், 

டிஜிட்டல் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அவர் தெரிவித்தார். 



Read in source website

ஒரே நாடு, ஒரே பதிவு என்ற திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் கூறிய முக்கிய அம்சங்கள்:

நில ஆவணங்களை மின்னணுபடுத்தும் முறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் பத்திரப் பதிவை மேற்கொள்ள ஒரே நாடு, ஒரே பதிவு திட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.



Read in source website

ஐபிஎல் ஏலப்பட்டியலில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.

ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறவுள்ளது.  இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. 

ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். 10 அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. ஐபிஎல் 2022 ஏலத்தில் 590 வீரர்கள் இடம்பெறுகிறார்கள். ஏலப் பட்டியலில் உள்ள 590 வீரர்களில் 228 சர்வதேச வீரர்களும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத  355 வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். ஏலப் பட்டியலில் 370 இந்திய வீரர்களும் 220 வெளிநாட்டு வீரர்களும் உள்ளார்கள்.

48 வீரர்களின் அடிப்படை விலை தலா ரூ. 2 கோடியாக உள்ளது. ரூ. 1.50 கோடி அடிப்படை விலையை 20 வீரர்களும் ரூ. 1 கோடி அடிப்படை விலையை 34 வீரர்களும் தேர்வு செய்துள்ளார்கள். 

ஐபிஎல் ஏலப்பட்டியலில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார். கிரிக்கெட் வீரரும் மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சருமான மனோஜ் திவாரி, அடிப்படை விலை ரூ. 50 லட்சத்துடன் ஏலப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

36 வயது மனோஜ் திவாரி, இந்திய அணிக்காக 2008 முதல் 2015 வரை 12 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு சதம், ஒரு அரை சதம் அடித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் 98 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக பஞ்சாப் அணிக்காக 2018-ல் விளையாடினார். 

கடந்த வருடம் மே மாதம் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் சார்பாக ஷிப்பூர் பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஆனார். எனினும் ஐபிஎல் போட்டியிலும் இதர கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட அவர் ஆர்வமாக உள்ளார். 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாடுவதற்காக ஏலத்தில் தன்னுடைய பெயரை அளித்தார் மனோஜ் திவாரி. தற்போது அவருடைய பெயர் ஏலப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அடிப்படை விலை - ரூ. 50 லட்சம்.

ஐபிஎல் 2022 ஏலப் பட்டியலிலும் மனோஜ் திவாரியின் பெயர் இடம்பெற்றாலும் அவரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 2018-ல் ரூ. 1 கோடிக்கு பஞ்சாப் அணி தேர்வு செய்தது. கடந்த வருட ஜனவரி மாதம் பெங்கால் அணிக்காக சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் விளையாடினார். இந்த வருடம் ரஞ்சி கோப்பைப் போட்டிக்கான 21 பேர் கொண்ட பெங்கால் அணியில் மனோஜ் திவாரி இடம்பெற்றார். 



Read in source website

மும்முனைப் போட்டியில் முந்திக்கொண்டுவிட்டாா் ஸ்பெயின் வீரா் ரஃபேல் நடால். ஆம், ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியனாகி ஆடவா் டென்னிஸ் வரலாற்றில் அட்டகாசமான ஒரு சாதனையை படைத்திருக்கிறாா். அதாவது 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற முதல் வீரா் என்ற பெருமையை பெற்றிருக்கிறாா்.

எல்லா துறைகளிலுமே சாதனை என்ற ஒன்று எட்டப்படுவதும், அது அடுத்தடுத்து முறியடிக்கப்படுவதும் இயல்பானதுதான். ஆனால், ஒரு சாதனை எப்போது, எவ்வாறு, எத்தகைய சூழலில் எட்டப்பட்டது என்பதில் அதிகரிக்கிறது அதன் மீதான முக்கியத்துவம்.

அந்த வகையில், விளையாட்டின் கோணத்தில் பாா்த்தால் நடால் எட்டியிருக்கும் இந்த 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது காலப்போக்கில் நிகழக்கூடிய ஒரு சாதனையாகவே தெரியலாம். ஆனால், அதை அவா் எவ்வாறு எட்டியிருக்கிறாா் என்பதுதான், அவா் சாதனையாளா் என்பதற்கு சாட்சியம் அளிப்பதாக இருக்கிறது.

பந்தயம் என்றாலே பரபரப்பு இருக்கும் தான். அதிலும், சக போட்டியாளா்கள் இருவா் தன்னுடன் சரிக்கு நிகராக வரும் நிலையில் முன்னிலை பெறுவதென்பது பரபரப்பின் உச்சம்.

இத்தகைய நிலைதான் நடால், ஃபெடரா், ஜோகோவிச் ஆகிய 3 பேருக்குமே இருந்தது. 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை எட்டிவிட்டு, சாதனை பட்டத்துக்காக சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தனா். இந்த மூவரில் முதலில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை எட்டி சாதனை படைத்தது ஃபெடரா் தான். 2018-இல் இதே ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியனாகி அவா் அந்த மைல் கல்லை அடைந்தாா்.

அவரின் நண்பராகவும், களத்தில் எதிரியாகவும் இருக்கும் நடால் 2020-இல், தான் ஆதிக்கம் செலுத்தும் பிரெஞ்சு ஓபன் மூலம் தனது 20-ஆவது கிராண்ட்ஸ்லாமை வென்று ஃபெடரா் சாதனையை சமன் செய்தாா். அப்போதிருந்தே இருவரில் எவா் 21-ஆவது கிராண்ட்ஸ்லாமை எட்டுவாா்கள் என்ற எதிா்பாா்ப்பு இருந்தது.

முழங்கால் அறுவைச் சிகிச்சையால் முழுமையாக உடற்தகுதி பெறாத நிலையில் 2021 ஆஸ்திரேலிய ஓபனையும், பிரெஞ்சு ஓபனையும் தவிா்த்தாா் ஃபெடரா். அந்தப் போட்டிகளில் களம் கண்ட நடாலோ, முறையே காலிறுதி மற்றும் அரையிறுதியில் வீழ்ந்து வெளியேறினாா்.

மறுபுறம், மீண்டும் களம் கண்ட ஃபெடரா் விம்பிள்டனை குறிவைத்தாலும் அதில் காலிறுதியுடன் வெளியேறினாா். இதற்கிடையே அந்த ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபனில் சாம்பியனாகியிருந்த ஜோகோவிச், விம்பிள்டனிலும் வாகை சூடி ‘ஹாட்ரிக் கிராண்ட்ஸ்லாம்’ பெற்று 20-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை எட்டினாா்.

இதனால் இருமுனைப் போட்டி, மும்முனைப் போட்டியானது. இந்தத் தருணத்தில் அறுவைச் சிகிச்சை காரணமாக ஃபெடரரும், பாதத்தில் காயம் காரணமாக நடாலும், 2021 அமெரிக்க ஓபனில் பங்கேற்க முடியாமல் போனது. இது ஜோகோவிச்சுக்கு சாதகமானாலும், அதில் அவரது 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் கனவை தகா்த்து தனது முதல் கிராண்ட்ஸ்லாமை முத்தமிட்டாா் டேனியல் மெத்வதேவ்.

பின்னா் தான் அந்தச் சாதனையை இந்த ஆஸ்திரேலிய ஓபனில் நடால் நிகழ்த்தியிருக்கிறாா். இம்முறையும் ஃபெடரா் பங்கேற்காததால், களம் நடால் - ஜோகோவிச்சுக்கானதாக மாறியது. எனினும், கரோனா தடுப்பூசி விவகாரத்தால் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட, நடால் சாம்பியனாகி சாதனை படைப்பதற்கான சாத்தியம் உணரப்பட்டது.

ஆனால், முடியுமா அவரால் என்ற முனுனுப்புகள் எழுந்தன. ஏன், நடாலுக்கே அத்தகைய எண்ணம் இருந்ததை அவரே பின்னா் குறிப்பிட்டாா். காரணம், இடதுகால் பாதப் பகுதியின் காயம் காரணமாக நடால் 2021-இன் 2-ஆவது பாதி காலண்டா் முழுவதுமாகவே களம் காணவில்லை. இதனால் களமாடிய பயிற்சியே அவருக்கு இருக்கவில்லை. அதிலிருந்து அவா் சற்று மீண்ட நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டாா்.

இத்தகைய நிலையில் தான் ஆக்ரோஷமாக ஆட வேண்டியிருக்கும் ஆஸ்திரேலிய ஓபனுக்கு வந்தாா் நடால். முதல் சுற்று முடிவிலேயே தாம் வாழ்நாள் காயத்துடன் தான் போராடி வருவதாகத் தெரிவித்தாா். ஒவ்வொரு சுற்றையும் கடப்பது அவருக்கு முன்பு போல எளிதாக இருக்கவில்லை. இருந்தும் போராட்ட குணத்துடன் இறுதிச்சுற்றுக்கு வந்தாா்.

அங்குதான் காத்திருந்தது அவருக்கான சவாலின் உச்சம். மெத்வதேவ் உருவத்தில்... அமெரிக்க ஓபனில் ஜோகோவிச்சின் சாதனைக் கனவை சரித்த மெத்வதேவ், தற்போது நடாலுக்கும் அத்தகைய ‘நன்மை’ செய்யும் முனைப்புடன் காத்திருந்தாா். அனுபவமிக்க வீரா் என்றாலும் கிராண்ட்ஸ்லாமில் விளையாடுமுன் தகுந்த போட்டிப் பயிற்சி இருக்க வேண்டும். ஆனால், நடாலின் கைகளோ 6 மாதங்களாக ராக்கெட்டை பிடித்திருக்கவே இல்லை. மறுபுறம், மெத்வதேவோ அமெரிக்க ஓபன் கோப்பை வென்று அப்படியே நல்லதொரு ஃபாா்முடன் நேராக ஆஸ்திரேலிய ஓபன் வந்திருந்தாா்.

அனுபவமிக்க நடாலின் வயது 35; ஆக்ரோஷமிக்க மெத்வதேவின் வயது 25; இருந்தும், ஆக்ரோஷத்தை ஆக்கிரமித்தது அனுபவம். இறுதிச்சுற்றில் பொறி பறந்தது. முதலிரு செட்களை இழந்து மெத்வதேவுக்கு சற்றே நம்பிக்கை அளித்த நடால், அடுத்த 3 செட்களை சற்றும் விட்டுக்கொடுக்காமல் வெறியாட்டம் ஆடினாா்.

சாம்பியன்ஷிப் பாய்ண்ட்டுக்காக அவா் சா்வ் செய்தபோது அரங்கத்தின் ரசிகா்கள் அனைவரும் ஆா்வத்தில் எழுந்து நின்றனா். அந்த பாய்ண்ட்டை மெத்வதேவ் தவறவிட்டாா். அரங்கமே அதிர, 21-ஆவது கிராண்ட்ஸ்லாமை எட்டினாா் நடால். அதுவும், 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியனாகி... மகிழ்ச்சியில் ராக்கெட்டை நழுவ விட்டாா். கைகளை முகத்தருகே கூப்பி புன்னகை சிந்தினாா். தனது காயத்தின் வலிக்கு, சாதனையால் மருந்திட்டுக்கொண்டாா்.

நடாலின் இந்த சாதனை எண்ணிக்கையை அடுத்து வரும் போட்டிகளில் ஜோகோவிச் எட்டக்கூடும். அது இயல்பானதே. ஆனால், 35 வயதில் முடக்கிப் போடும் காயத்தையும் கடந்து நடால் எட்டியிருக்கும் இந்த 21 கிராண்ட்ஸ்லாம் சாதனை, ஆடவா் டென்னிஸில் அசைக்க முடியாத மைல் கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

‘இந்த 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் என்பது எத்தனை சிறப்பானது என்பதை அறிவேன். எனது டென்னிஸ் வாழ்க்கையில் ஒரு சிறப்பான சாதனையை எட்டியதற்காக கௌரவமாக, அதிருஷ்டமாக உணா்கிறேன். இந்தச் சாதனையால் டென்னிஸ் வரலாற்றில் சிறந்த வீரராக மதிக்கப்படுவேனா, இல்லையா என்பது குறித்து யோசிக்கவில்லை. எப்போதும் ஆட்டத்தின் நிகழ் தருணத்தை அனுபவித்து விளையாடுவதையே எதிா்நோக்குகிறேன். அதுவே எனக்கு முக்கியமானதும் கூட.

கடந்த 6 மாதங்களாக, மீண்டும் களம் காண்பதற்காக மிகவும் போராட வேண்டியிருந்தது. என்னால் மீண்டும் களம் காண முடியுமா என்ற கேள்வியும் கூட எழுந்தது. இப்போதும் உடல்தகுதி அளவில் சிறப்பாக இருப்பதாக நினைக்கவில்லை. இந்த இறுதிச்சுற்று முழுவதுமாக நான் உணா்வுப்பூா்வமாக இருந்தேன். ஆட்டம் முழுவதுமாக ரசிகா்களின் ஆதரவு அவ்வளவு உத்வேகம் அளித்தது. ஆனால், முடிவில் அதை அவா்களோடு சோ்ந்து கொண்டாடும் அளவுக்குக் கூட என் உடலில் ஆற்றல் இருக்கவில்லை’

கிராண்ட்ஸ்லாம் பட்டியல்...

ஆஸ்திரேலிய ஓபன் - 2009, 2022

பிரெஞ்சு ஓபன் - 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014, 2017, 2018, 2019, 2020

விம்பிள்டன் - 2008, 2010

அமெரிக்க ஓபன் - 2010, 2013, 2017, 2019

முதல் கிராண்ட்ஸ்லாம் - பிரெஞ்சு ஓபன் - வயது 18 - 2005

21-ஆவது கிராண்ட்ஸ்லாம் - ஆஸ்திரேலிய ஓபன் - வயது 35 - 2022

21-ஆவது கிராண்ட்ஸ்லாம் வென்ற எனது நண்பனும், களத்தில் சிறந்த எதிராளியுமான ரஃபேல் நடாலுக்கு வாழ்த்துகள். சில மாதங்களுக்கு முன் நாம் பேசிக்கொண்டிருந்தபோது ஊன்றுகோல் பயன்படுத்தி நடப்பது குறித்து நகைச்சுவையாக விவாதித்தோம். ஆனால், ஒரு சிறந்த சாம்பியனை (நடால்) அப்படி குறைத்து எடைபோடக் கூடாது என்பது இப்போது புரிகிறது.

எனது டென்னிஸ் வாழ்க்கை காலத்தை உங்களுடன் இணைந்து கடப்பதை பெருமையாக உணா்கிறேன். கடந்த 18 ஆண்டுகளாக நான் டென்னிஸில் சாதிப்பதற்கு ஒரு பலமிக்க போட்டியாளராக நீங்கள் எனக்கு உந்துதல் அளித்தீா்கள். நானும் உங்களுக்கு அத்தகைய ஒரு போட்டியாளராக இருப்பதற்காக கௌரவமாக உணா்கிறேன். உங்களது இந்த ஆட்ட நோ்த்தி, அா்ப்பணிப்பு, போராட்ட குணம் ஆகியவை எனக்கும், உலகில் இருக்கும் பலருக்கும் நல்ல முன்மாதிரியாக இருக்கிறது - ரோஜா் ஃபெடரா்.

21-ஆவது கிராண்ட்ஸ்லாம் வென்றதற்காக ரஃபேல் நடாலுக்கு வாழ்த்துகள். இது அற்புதமான சாதனை. உங்களிடம் எப்போதும் இருக்கும் அந்த போராட்ட குணம் இப்போதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது - நோவக் ஜோகோவிச்.



Read in source website

எஃப்ஐஹெச் புரோ லீக் போட்டியில் முதல் முறையாக களம் கண்ட இந்தியா, திங்கள்கிழமை தனது தொடக்க ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வென்றது.

தற்போது ரேங்கிங் பட்டியலில் 3 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது.

ஓமன் தலைநகா் மஸ்கட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கான முதல் கோலை நவ்னீத் கௌா் 5-ஆவது நிமிஷத்தில் அடித்தாா். அதன் பிறகு ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது இந்தியா. எனினும் 10-ஆவது நிமிஷத்தில் இந்தியாவின் தடுப்பு அரணை தாண்டி கோஸ் போஸ்ட் வரை வந்த சீனாவுக்கு முதல் பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அதை கோலாக மாற விடாமல் அசத்தலாகத் தடுத்தாா் இந்திய கேப்டனும், கோல்கீப்பருமான சவிதா. பின்னா் சீன தடுப்பாட்டத்துக்கு தொடா்ந்து நெருக்கடி அளித்த இந்திய அணி 12-ஆவது நிமிஷத்தில் நேஹா மூலமாக 2-ஆவது கோலை எட்டியது.

2-ஆவது கால்மணி நேர ஆட்டத்தின்போது இந்தியாவின் முயற்சிகளுக்கு அவ்வளவாக பலன் கிடைக்கவில்லை. முதல் பாதியில் இவ்வாறு 2-0 என முன்னிலையில் இருந்த இந்தியா, 2-ஆவது பாதியில் ஆடும் திசைகள் மாற்றப்பட்ட பிறகு வந்தனா கட்டாரியா மூலமாக 3-ஆவது கோல் அடித்தது.

இந்நிலையில், சீனாவுக்கான ஒரே கோலை அந்த அணியின் ஜியு டெங் 43-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். கடைசி கால்மணி நேரத்தில் முற்றிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்காக சானு 47-ஆவது நிமிஷத்தில் பெனால்டி காா்னா் வாய்ப்பை கோலாக மாற்றினாா்.

அடுத்து ஷா்மிளா தேவி 48-ஆவது நிமிஷத்திலும், குா்ஜித் கௌா் 50-ஆவது நிமிஷத்திலும் ஃபீல்டு கோலடிக்க, கடைசியாக 52-ஆவது நிமிஷத்தில் சானு மீண்டும் பெனால்டி காா்னா் வாய்ப்பில் ஒரு கோலடிக்க, இறுதியில் இந்தியா 7-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இப்போட்டியில் இந்தியா செவ்வாய்க்கிழமை மீண்டும் சீனாவையே சந்திக்கிறது.



Read in source website

சீன புத்தாண்டு செவ்வாய்க்கிழமை (பிப். 1) தொடங்குவதையொட்டி, நாட்டு மக்களுக்கு அதிபா் ஷி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளாா். வசந்த விழாவாக கொண்டாடப்படும் புத்தாண்டை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 12 விலங்குகளின் பெயரில் வருடப் பிறப்பு கொண்டாடப்படுகிறது. இந்த 12 வருடங்கள் நிறைவடைந்ததும் மீண்டும் சுழற்சி தொடங்கும். அந்த வகையில் எருது ஆண்டு திங்கள்கிழமை நிறைவடைந்து, புலி ஆண்டு பிப். 1-ஆம் தேதி தொடங்குகிறது. வசந்த விழாவாக இந்த வருடப் பிறப்பு கொண்டாடப்படுகிறது. சீன கலாசாரப்படி புலியானது தைரியம் மற்றும் வலிமையைக் குறிக்கிறது. அதன்படி, புதிய ஆண்டு மக்களைத் துன்பத்திலிருந்து மீட்டெடுத்து அமைதியை அளிக்கும் என்பது நம்பிக்கை.

இந்த வசந்த விழாவையொட்டி, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான சீன மக்கள் புத்தாண்டைக் கொண்டாட தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்வாா்கள். நிகழாண்டு கரோனா பரவல் பிரச்னை இருந்தபோதும் வெளிநாடுகளிலிருந்து சீனா திரும்பும் மக்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

வசந்த விழாவை முன்னிட்டு சீனாவில் அரசு அலுவலகங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு அதிபா் ஷி ஜின்பிங் விடுத்துள்ள வசந்த விழா செய்தியில், ஒற்றுமையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ளாா்.



Read in source website

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த மேக்களூர் கிராமத்தில் உள்ள நவநீத கோபால கிருஷ்ணசாமி கோயிலில் யானையின் நினைவாக வைக்கப்பட்ட சிற்பம் மற்றும் கல்வெட்டு, கீக்களூர் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் நிலம் தானம் வழங்கியதாக கூறப்படும் சம்புவராயர் கால கல்வெட்டு உள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேக்களூர் கோயிலில் உள்ள யானையின் சிற்பம், 4 அடி உயரம் மற்றும் 2 அடி அகலம் கொண்டது. சிற்பத்தின் மேல் பகுதியில் உள்ள வட்டத்தில் இலட்சனையை போன்று தும்பிக்கையை மடக்கிய நிலையில் யானையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

சிற்பத்தின் கீழ் பகுதியில் உள்ள கல்வெட்டில், பட்டத்து யானையின் பெயரை நீலகண்டரையன் என புத்தன் புவந திவாகரன் என்பவர் சூட்டி தானமாக கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கி.பி.10 மற்றும் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம்.

கீக்களூர் சிவன் கோயில் கருவறையின் புன்புறம் உள்ள சுவரில், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜநாராயண சம்புவராயர், 2 நிலம் தானமாக கொடுக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. இவ்வூரை பாக்கப்பற்றில் உள்ளது எனவும், கோயிலில் உள்ள இறைவனின் பெயரை விக்கிரம சோளிஸ்வரமுடைய நாயனார் என கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது.

பாக்கப்பற்று நாட்டைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்கு நிலம் மற்றும் கோயில் வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கூறும் தகவல்கள் உள்ளன” என்றார்.



Read in source website

சென்னை: பஞ்சாப் நேஷனல் வங்கியும் (பிஎன்பி) பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனமும் இணைந்து இந்தியதேசிய கொடுப்பனவு கழகத்தின் (என்பிசிஐ) துணையுடன் 2 வகையான ரூபே கடன்அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிஎன்பி ரூபே பிளாட்டினம், பிஎன்பி ரூபே செலக்ட் என்ற இரு வகைகளில் கடன் அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி பதஞ்சலிபொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக், லாயல்டி புள்ளிகள், காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. பதஞ்சலி ஸ்டோர்களில்ரூ.2,500-க்குமேல் பொருட்களைவாங்குபவர்களுக்கு ரூ.50 உச்சவரம்புடன் 2 சதவீத கேஷ்பேக் கிடைக்கும்.

இரு வகை கடன் அட்டைகளையும் வாங்கும்போதே 300 ரிவார்டு புள்ளிகள் வழங்கப்படும். மேலும் உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் இதைப் பயன்படுத்தலாம். பிஎன்பி ஜீனி செயலி மூலம் கடன் அட்டையை நிர்வகிக்க முடியும். பயன்பாட்டுக்கு ஏற்ப ரிவார்டு புள்ளிகள், சுலபத் தவணை வசதி, தானாகப் பணம் செலுத்தும் வசதி ஆகியவையும் கூடுதல் வசதியாகக் கிடைக்கும்.

விபத்தில் இறப்பு மற்றும் தனிப்பட்ட முழு ஊனம் ஏற்பட்டால் பிளாட்டினம் அட்டைதாரர்களுக்கு ரூ.2 லட்சம், செலக்ட் அட்டைதாரர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகையாகக் கிடைக்கும். மேலும் பிளாட்டினம் அட்டையை இலவசமாகப் பெறலாம். ஆண்டு கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும். செலக்ட் அட்டை பெற ரூ.500 கட்டணம், ஆண்டு கட்டணம் ரூ.750. முந்தையஆண்டில் ஒவ்வொரு காலாண்டிலும் ஒருமுறையாவது அட்டையைப் பயன்படுத்தினால், ஆண்டுகட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புது டெல்லி: தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை; மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு 30 சதவீதம் வரி (கிரிப்டோ வரி) உள்ளிட்ட அம்சங்களுடன் மத்திய பட்ஜெட் 2022-23-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வருமான வரியை பொறுத்தவரையில் பலன் பெறும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் தொடங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கு 15 சதவீத கார்ப்பரேட் வரி விகிதத்தை அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது. இது இப்போது 2024, மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரிச் சலுகைகளைப் பெறுவதற்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான கால அவகாசமும் 2023-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் 2022-23-ன் சிறப்பு அம்சங்கள்:

> இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

> உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 14 துறைகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

> உற்பத்தியுடன் இணைந்த முதலீட்டுத் திட்டத்தின்மூலம் கூடுதலாக 30 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி நடைபெறும்.

நேர்முக வரிகள்:

> கூடுதல் வரி செலுத்துவதற்கு புதிய வடிவிலான கணக்கு தாக்கலுக்கு வாய்ப்பு. ஏற்கெனவே தவறவிட்ட வருவாயை அறிவிப்பதற்கு மதிப்பீட்டாளரால் இயலும். உரிய மதிப்பீட்டு ஆண்டின் இறுதியில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் கணக்கு தாக்கல் செய்ய முடியும்

கூட்டுறவு சங்கங்கள்:

> கூட்டுறவுகளால் செலுத்தப்பட்ட குறைந்தபட்ச மாற்றுவரி விகிதம் 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

> கூட்டுறவு சங்கங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே சமச்சீரான வாய்ப்பை வழங்குதல்

> ரூ.1 கோடிக்கும் அதிகமாகவும், ரூ.10 கோடி வரையிலும் மொத்த வருமானம் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான கூடுதல் வரி 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

> மாற்றுத்திறனாளிகளுக்கு வரி நிவாரணம்: பெற்றோர்கள் / காப்பாளர்களின் வாழ்க்கை காலத்தில் அதாவது பெற்றோர்கள் / காப்பாளர்கள் 60 வயதை எட்டிய போது, மாற்றுத்திறனாளிகளை சார்ந்திருப்போருக்கு காப்பீட்டு திட்டத்தில் இருந்து கிடைக்கும் வருடாந்திர தொகை அல்லது மொத்த தொகை அனுமதிக்கப்படும்.

> தேசிய ஓய்வூதிய திட்டப் பங்களிப்பில் சமநிலை: மாநில அரசு ஊழியர்களின் தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கிற்குப் பங்களிப்பு செய்யும் உரிமையாளர்களுக்கான வரிப்பிடித்த வரம்பு 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக இவர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இது சமூகப் பாதுகாப்புப் பலன்களை விரிவாக்க உதவும்.

புதிய தொழில்களுக்கு ஊக்குவிப்பு

> தகுதி வாய்ந்த புதிய தொழில்களுக்கு வரிப் பயன் கிடைப்பதற்கான இணைப்புக்காலம் ஓராண்டிற்கு, 31.03.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இணைப்புக்கான கால வரம்பு ஏற்கெனவே 31.03.2022 ஆக இருந்தது.

சலுகை வரி முறையின் கீழ் ஊக்குவிப்பு திட்டங்கள்:

> பிஏபி பிரிவு 115-ன் கீழ் தயாரிப்பு அல்லது உற்பத்தி தொடக்கத்திற்கான கடைசி தேதி ஓராண்டுக்கு அதாவது 31 மார்ச் 2023-ல் இருந்து 31 மார்ச் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களின் வரி விதிப்புக்கான திட்டம்:

> மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களுக்கான குறிப்பிட்ட வரிமுறை (கிரிப்டோ வரி) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு மெய்நிகர் டிஜிட்டல் சொத்து பரிமாற்றத்திலிருந்து கிடைக்கும் வருவாய்க்கு 30 சதவீத விகிதத்தில் வரி விதிக்கப்படும்.

> ஆர்ஜித செலவு தவிர மற்ற வருவாயை கணக்கிடும் போது செலவு அல்லது ஊதியம் வரிக்குறைப்புக்கு அனுமதிக்கப்பட மாட்டாது.

> மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களின் பரிமாற்றத்தில் ஏற்படும் இழப்பு இதர வருவாய்க்கு மாற்றாக எடுத்துக் கொள்ள இயலாது

> பரிமாற்ற விவரங்களை பெறுவதற்கு மெய்நிகர் டிஜிட்டல் சொத்து பரிமாற்றம் தொடர்பாக வழங்கப்பட்ட தொகைக்கு ஒரு சதவீத அளவிற்கு டிடிஎஸ் (வருவாயிலிருந்து வரிப்பிடித்தம்) பிடித்தம் செய்யப்படும்.

> மெய்நிகர் டிஜிட்டல் சொத்து பரிசளிக்கப்படும் போது அதனை பெறுபவருக்கு வரி விதிக்கப்படும்.

கூடுதல் வரியில் சீர்திருத்தம்

> ஏஓபி-க்கள் (ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு அமைக்கப்படும் கூட்டமைப்பு) மீதான கூடுதல் வரி உச்சவரம்பு 15 சதவீதமாக இருக்கும்.

> தனி நபர் நிறுவனங்களுக்கும், கூட்டு நிறுவனங்களுக்கும் இடையேயான துணை வரியில் பாகுபாடு குறைக்கப்படும்

> எந்தவகையான சொத்துக்கள் பரிமாற்றத்திலிருந்தும் கிடைக்கின்ற நீண்டகால மூலதன லாபங்கள் மீதான துணை வரி 15 சதவீதமாக இருக்கும்

> புதிய தொழில் தொடங்கும் சமூகத்தினருக்கு ஊக்கம் அளிப்பதற்காக வருவாய் மற்றும் லாபங்கள் மீதான துணை வரி அல்லது செஸ் வரி வர்த்தக செலவாக அனுமதிக்கப்பட மாட்டாது

டிடிஎஸ் அம்சங்களில் சீர்திருத்தங்கள்

> வணிக மேம்பாட்டு உத்தியாக முகவர்களின் கைகளில் இருக்கும் வரி விதிப்பின் பயன்கள் முகவர்களுக்கு வழங்கப்படும்.

> நிதியாண்டின் போது ஒரு நபருக்கு வழங்கப்படும் பணப்பயன்களின் மொத்த மதிப்பு ரூ.20,000-ஐ கடக்கும் போது வரிப்பிடித்தம் செய்யப்படும்.

மறைமுக வரிகள் - குறிப்பிட்ட துறை முன்மொழிவுகள்:

> மின்னணு: அணியக் கூடிய உபகரணங்கள், கேட்கும் உபகரணங்கள், மின்னணு ஸ்மார்ட் மீட்டர்கள், உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க படிப்படியான விகித அமைப்பை உருவாக்க சுங்கத் தீர்வை விகிதங்கள் திருத்தியமைக்கப்படும்.

> மொபைல் ஃபோன் மின்னூக்கிகள் மின்மாற்றி, மொபைல் கேமராவுக்கான கேமரா லென்ஸ் ஆகியவற்றின் பாகங்கள் மற்றும் சில பொருட்களுக்கு, உயர் வளர்ச்சி மின்னணு பொருட்கள் உற்பத்தியை உள்நாட்டில் ஊக்குவிக்கும் தீர்வை சலுகைகள்.

வைரங்கள் மற்றும் ஆபரணங்கள்:

> பட்டைத் தீட்டப்பட்ட வைரங்கள் மற்றும் வைரக்கற்கள் மீதான சுங்கத் தீர்வை 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. வைரங்கள் மற்றும் நகைப்பிரிவை ஊக்குவிக்கும் வகையில் அறுக்கப்பட்ட வைரங்களுக்கு சுங்கத் தீர்வை இல்லை.

> மின் வணிகம் மூலம் நகை ஏற்றுமதியை ஊக்கவிக்க இந்த ஆண்டு ஜூன் மாதம் எளிதாக்கப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பு அமல்படுத்தப்படும்.

> கவரிங் நகை இறக்குமதிக்கு ஊக்கத் தடை விதிக்கும் வகையில், கவரிங் நகை இறக்குமதி மீது குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ.400 வீதம் சுங்கத் தீர்வை செலுத்த வேண்டும்.

ரசாயனங்கள்:

> மெத்தனால், அசிடிக் ஆசிட் போன்ற சில முக்கிய ரசாயனங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்புக்கான கனரக இருப்பு மீதான சுங்கத் தீர்வை குறைக்கப்படுகிறது; உள்நாட்டு உற்பத்தித் திறன் உள்ள சோடியம் சயனைடு மீதான தீர்வை அதிகரிக்கப்படுகிறது. இது உள்நாட்டு மதிப்புக் கூடுதலை அதிகரிக்க உதவும்.

எம்எஸ்எம்இ:

> குடைகள் மீதான சுங்கத் தீர்வை 20 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. குடைகளுக்கான பாகங்களுக்கு வழங்கப்பட்ட சலுகை திரும்பப் பெறப்படுகிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் துறைக்கான உபகரணங்கள் மீதான சலுகை மாற்றியமைக்கப்படுகிறது.

> சிறு, குறு, நடுத்தர தொழிலின் இரண்டாம் கட்ட உருக்கு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கும் வகையில் இரும்புக் கழிவுகளுக்கு சுங்கத் தீர்வை விலக்களிக்கப்படுகிறது.

> பொது நலன் கருதி உலோகங்களுக்கு அதிக விலை அளிக்கும் வகையில், துருப்பிடிக்காத ஸ்டீல், இரும்புக் கம்பிகள், அல்லாய் ஸ்டீல் மீதான சிவிடி தீர்வை ரத்து செய்யப்படுகிறது.

ஏற்றுமதிகள்:

> ஏற்றுமதியை ஊக்குவிக்க அலங்காரம், டிரிம்மிங், பாஸ்ட்னர்கள், பொத்தான்கள், ரிவிட், லைனிங் மெட்டீரியல், குறிப்பிட்ட தோல், மரச்சாமான்கள் பொருத்துதல்கள் மற்றும் பேக்கேஜிங் பெட்டிகள் போன்ற பொருட்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

> இறால் ஏற்றுமதியை ஊக்குவிக்க, இறால் வளர்ப்புக்குத் தேவையான சில பொருட்கள் மீதான தீர்வை குறைக்கப்படுகிறது.

> எரிபொருள் கலப்பை ஊக்குவிக்க கட்டண அளவீடு

> எரிபொருள் கலப்பை ஊக்குவிக்க, கலக்காத எரிபொருளுக்கு 2022 அக்டோபர் 1 முதல் லிட்டருக்கு ரூ.2 வீதம் கூடுதல் வித்தியாச கலால் வரி விதிக்கப்படும்.

> நாடு அடுத்த 25 ஆண்டுகளில் 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ள நிலையில், நீண்டகால திட்டங்களுக்காக நான்கு முக்கிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவை: பிரதமர் கதிசக்தி, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உற்பத்தி மேம்பாடு மற்றும் முதலீடு, புதிய வாய்ப்புகள், எரிசக்தி மாற்றம் மற்றும் பருவநிலை திட்டம், முதலீட்டிற்கான நிதி.

பிஎம் கதிசக்தி: சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், விரைவுப் போக்குவரத்து, நீர்வழிகள், போக்குவரத்து உள்கட்டமைப்பு ஆகியவை பிஎம் கதிசக்தியை இயக்கும் 7 என்ஜின்கள் ஆகும்.

பிஎம் கதிசக்தி தேசிய பெருந்திட்டம்: பிஎம் கதிசக்தி தேசிய பெருந்திட்டத்திற்கான வாய்ப்பு பொருளாதார மாற்றம், வலுவான பன்மாதிரி இணைப்பு மற்றும் போக்குவரத்துத் திறனுக்கான 7 என்ஜின்களை உள்ளடக்கியதாகும். தேசிய உள்கட்டமைப்பு திட்டத்தில், இந்த 7 என்ஜின்களை உள்ளிடக்கிய திட்டங்கள் பிஎம் கதிசக்தி வரையறைக்குள் கொண்டு வரப்படும்.

சாலைப் போக்குவரத்து: 2022-23-ல் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு 25,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு விரிவாக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு விரிவாக்கத்திற்கான ரூ.20,000 கோடி திரட்டப்படும்.

பன்மாதிரி போக்குவரத்து பூங்காக்கள்: 2022-23-ல் பன்மாதிரி போக்குவரத்து பூங்காக்களை 4 இடங்களில் செயல்படுத்துவதற்கு தனியார் பொதுத்துறை கூட்டு முயற்சி மூலம் ஒப்பந்தங்கள் வழங்கப்படும்

ரயில்வே:

> உள்ளூர் வர்த்தகம் மற்றும் விநியோக சங்கிலிக்கு உதவும் வகையில், ஒரு நிலையம் ஒரு பொருள் என்ற கருத்தியல் நடைமுறைப்படுத்தப்படும்.

> 2022-23 உலகத் தரம் வாய்ந்த உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் திறன் அதிகரித்தலுக்கு கவாஜ் திட்டத்தின் கீழ் 2000 கிலோ மீட்டர் ரயில்வே கட்டமைப்பு கொண்டு வரப்படும்.

> அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய தலைமுறை வந்தே பாரதம் ரயில்கள் தயாரிக்கப்படும்.

> அடுத்த 3 ஆண்டுகளில் பன்மாதிரி சரக்குப் போக்குவரத்துக்கான 100 பிஎம் கதிசக்தி சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும்.

பர்வதமாலா:

> தேசிய ரோப்வே வளர்ச்சித் திட்டம் பர்வதமாலா பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படும்.

> 2022-23-ல் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 ரோப்வே திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படும்.

வேளாண்மை:

> கோதுமை மற்றும் நெல் கொள்முதலுக்காக 1.63 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.37 லட்சம் கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

> நாடு முழுவதும் ரசாயன கலப்பற்ற இயற்கை வேளாண்மை மேம்படுத்தப்படும். கங்கை நதியின் குறுக்கே 5 கிலோ மீட்டர் அகல வழித்தடத்தின் விவசாய நிலங்கள் மீது ஆரம்பக்கட்ட கவனம் செலுத்தப்படும்.

> வேளாண்மை மற்றும் கிராமப்புற தொழில் தொடங்வோருக்கு நிதி அளிக்க மூலதனத்துடன் கூடிய நிதியை நபார்டு வழங்கும்.

> பயிர் மதிப்பீடு, நில ஆவணங்கள் டிஜிட்டல்மயமாக்கம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஊட்டச்சத்து தெளித்தலுக்கு கிசான் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.

கென்- பெட்வா திட்டம்:

> கென் – பெட்வா இணைப்புத் திட்ட அமலாக்கத்துக்கு ரூ.1400 கோடி ஒதுக்கீடு

> கென் – பெட்வா இணைப்புத் திட்டத்தால் 9.08 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ):

> உதயம், இ-ஷ்ரம், என்சிஎஸ் மற்றும் அசீம் (ASEEM) இணையதளங்கள் ஒன்றாக இணைக்கப்டும்.

> 130 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் (ECLGS) கீழ் கூடுதல் கடன் வழங்கப்பட்டது.

> இசிஎல்ஜிஎஸ் 2023ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்படவுள்ளது.

> இசிஎல்ஜிஎஸ் திட்டத்தின் கீழான உத்திரவாதம் விரிவுபடுத்தப்படவுள்ளது. ரூ.50,000 கோடி அதிகரிக்கப்பட்டு மொத்தம் ரூ. 5 லட்சம் கோடியாக விரிவுபடுத்தப்படும்.

> குறு மற்றும் சிறு நிறுவனங்ளுக்கான கடன் உத்திரவாத அறக்கட்டளையின் (CGTMSE) கீழ், குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி கூடுதல் கடன் வழங்கப்படும்.

> ரூ.6,000 கோடி மதிப்பில் எம்எஸ்எம்இ-க்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் திட்டம்(RAMP) அறிமுகம் செய்யப்படும்.

திறன் மேம்பாடு:

> ஆன்லைன் பயிற்சி மூலம் மக்களின் திறனை மேம்படுத்த திறன் மற்றும் வாழ்வாதாரத்துக்கான டிஜிட்டல் அமைப்பு (DESH-Stack இ-இணையதளம்) தொடங்கப்படும்.

> ட்ரோன் சேவைகளுக்கு, ‘ட்ரோன் சக்திக்கு’ உதவ தொடக்கநிலை நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.

கல்வி:

> பிரதமரின் இ-வித்யா திட்டத்தின் ‘ஒரு வகுப்பு- ஒரு டி.வி சேனல்’ 200 டி.வி சேனல்களாக விரிவுபடுத்தப்படும்.

> விவேகமான சிந்திக்கும் திறன்களை ஊக்குவிக்க மெய்நிகர் ஆய்வு கூடங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு மின்னணு-ஆய்வு கூடங்கள் மற்றும் கற்றல் சூழல் ஏற்படுத்தப்படும்.

> டிஜிட்டல் ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்க உயர்தர மின்னணு-பாடத்திட்டம் உருவாக்கப்படும்.

> உலகத்தரத்திலான கல்விக்கு டிஜிட்டல் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்.

சுகாதாரம்:

> தேசிய டிஜிட்டல் சுகாதார அமைப்புக்கு திறந்தவெளி தளம் அறிமுகப்படுத்தப்படும்.

> தரமான மனநல ஆரோக்கிய கலந்தாய்வுக்கு ‘தேசிய தொலைதூர மன நல திட்டம் மற்றும் சேவைகள் தொடங்கப்படும்.

> நிமான்ஸ்- ஐ சிறப்பு மையமாக கொண்டு 23 தொலை தூர மன நல சிறப்பு மையங்களின் நெட்வொர்க் ஏற்படுத்தப்படும். இதற்கான தொழில்நுட்ப உதவிகளை பெங்களூரில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையம்(IIITB) வழங்கும்.

ஷக்‌ஷம் அங்கன்வாடி:

> மிஷன் சக்தி, மிஷன் வத்சல்யா, ஷக்‌ஷம் அங்கன்வாடி மற்றும் போஷான் 2.0 திட்டம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பயன்கள்

> 2 லட்சம் அங்கன்வாடிக்கள் ஷக்‌ஷம் அங்கன்வாடிகளாக மேம்படுத்தப்படும்.

> ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு: வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டில் 3.8 கோடி வீடுகளுக்கு ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டது.

அனைவருக்கும் வீடு

> பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டில் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்க ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டது.

> வடகிழக்கு மாநிலங்களில் சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமரின்-DevINE என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்ப கட்டமாக ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

> வடக்கு எல்லையில் குறைவான மக்கள், இணைப்பு வசதி மற்றும் கட்டமைப்புகள் உள்ள எல்லை கிராமங்களின் மேம்பாட்டுக்கு துடிப்பான கிராமங்கள் திட்டம் தொடங்கப்பட்டது.

வங்கி வசதிகள்

> 1.5 லட்சம் தபால் அலுவலகங்களில் 100 சதவீதம் வங்கி அமைப்புக்குள் வரவுள்ளன.

> வணிக வங்கிகள், 75 மாவட்டங்களில், 75 டிஜிட்டல் வங்கி யூனிட்டுகளை தொடங்கவுள்ளன.

> இ-பாஸ்போர்ட்: மின்னணு சிப்கள் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகள் மற்றும் எதிர்கால தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்.

நகர்ப்புற திட்டம்:

> கட்டிட விதிகளின் நவீனமயமாக்கல், நகர திட்டமிடல் திட்டங்கள் மற்றும் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி ஆகியவை அமல்படுத்தப்படும்.

> நகர பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க பேட்டரி மாற்று கொள்கை கொண்டு வரப்படும்.

> நில ஆவணங்கள் மேலாண்மை

> தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் நில ஆவணங்கள் மேலாண்மைக்கு தனித்துவமான நில அடையாள எண்.

> துரிதமான பெருநிறுவனம் வெளியேற்றம்

> நிறுவனங்கள் விரைவாக வெளியேறுவதற்கு, துரிதமான பெருநிறுவன வெளியேற்ற மையம் (C-PACE) அமைக்கப்படும்.

ஏவிஜிசி ஊக்குவிப்பு குழு: அனிமேஷன், விஷூவல் எபெக்ட்ஸ், விளையாட்டு மற்றும் காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றின் ஊக்குவிப்புக்கு இத்துறையில் தனி குழு உருவாக்கப்படும்.

> தொலை தொடர்பு துறை: உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 5ஜி தொழில்நுட்பத்துக்கு வலுவான சூழலை உருவாக்க வடிவமைப்பு சார்ந்த உற்பத்தி திட்டம் தொடங்கப்படும்.

> ஏற்றுமதி வளர்ச்சி: நிறுவனம் மற்றும் சேவை மையங்கள் மேம்பாட்டில் மாநிலங்களையும் பங்குதாரர்களாக்க சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்.

பாதுகாப்புத்துறையில் இந்தியா தற்சார்பு அடைதல்:

> 2022-23-ல் மூலதன கொள்முதலில் 68% உள்நாட்டு தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய பட்ஜெட்டில் குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2021-22-ல் 58% ஆக இருந்தது.

> பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பெருந்தொழில்துறையினர், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவதுடன் இந்நிறுவனத்தின் பட்ஜெட்டில் 25% இதற்காக ஒதுக்கீடு செய்யப்படும்.

> பரிசோதனை மற்றும் சான்றிதழ் பெறுவதற்கு, சுதந்திரமான அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.

> புதிய வகைப் பொருட்கள், சேவை வாய்ப்புகள்: செயற்கை நுண்ணறிவு, புவி வானியல் சாதனங்கள், மற்றும் ட்ரோன்கள் செமி கண்டக்டர் மற்றும் அதன் சூழல் அமைப்பு, விண்வெளி பொருளாதாரம், மரபியல் பொருளாதாரம் மற்றும் மருந்து பொருட்கள், பசுமை எரிசக்தி மற்றும் தூய்மையான போக்குவரத்து சாதனங்கள் போன்ற புதிய வகைப் பொருட்கள், சேவை வாய்ப்புகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு அரசு பங்களிப்பு வழங்கப்படும்.

எரிசக்தி மாற்றம் மற்றும் பருவநிலை செயல்திட்டம்:

> 2030-க்குள் 280 ஜிகாவாட் சூரியசக்தி உற்பத்தி இலக்கை அடைய, உயர்திறன் கொண்ட சூரியசக்தி சாதனங்களை உற்பத்தி செய்ய, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையாக ரூ.19,500 கோடி கூடுதலாக ஒதுக்கப்படும்.

> அனல் மின் நிலையங்களில் உயிரி கழிவு வில்லைகள், 5 முதல் 7% அளவுக்கு இணை எரிபொருளாக பயன்படுத்தப்படும்.

> ஆண்டுக்கு 38 மில்லியன் மெட்ரிக் டன் கரியமில வாயு (CO2) வெளியேற்றம் தவிர்ப்பு.

> விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு

> விளை நிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிப்பதை தவிர்க்க உதவி

> தொழிற்சாலைகளுக்காக நிலக்கரியை ரசாயனப் பொருட்களாக மாற்றுதல் மற்றும் நிலக்கரி எரிவாயு நிலையங்களை அமைக்க நான்கு முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்படும்

> வேளாண் காடுகளை வளர்க்க விரும்பும் ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் ஷெட்யூல்டு பழங்குடியின விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.

அரசு மூலதன முதலீடு:

> 2022-23-ல் முக்கிய தனியார் முதலீடு மற்றும் தேவைகளை ஊக்குவிப்பதில் அரசு முதலீடு தொடரும்.

> நடப்பாண்டில் ரூ.5.54 லட்சம் கோடியாக உள்ள மூலதன செலவு ஒதுக்கீடு 2022-23-ல் 35.4% அதிகரிக்கப்பட்டு ரூ.7.50 லட்சம் கோடி ஒதுக்கீடு

> 2022-23-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 2.9% ஒதுக்கீடு

> மத்திய அரசின் ‘வலுவான மூலதன செலவு’ 2022-23-ல் ரூ. 10.68 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 4.1% ஆகும்.

> குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில், உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டுப் பல்கல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதிக்கப்படும்.

> சர்வதேச நீதித்துறை விவேகத் திட்டத்தின் கீழ் , சச்சரவுகளுக்கு குறித்த காலத்திற்குள் தீர்வு காண ஏதுவாக சர்வதேச சமரசத் தீர்வு மையம் அமைக்கப்படும்.

வளங்களைத் திரட்டுதல்:

> தரவு மையங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்பு அமைப்புகளுக்கு கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்படும்

> கடந்த ஆண்டில் ரூ.5.5 லட்சம் கோடிக்கும் அதிகமான மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு மூலதனம் மற்றும் தனியார் பங்கு முதலீடு, பெரிய அளவிலான ஸ்டார்ட் அப் மற்றும் வளர்ச்சி சூழலுக்கு வகை செய்துள்ளது.

> புதிய வகை பொருட்கள், சேவை வாய்ப்புகள் துறைகளுக்கு கலப்பு நிதியம் ஊக்குவிக்கப்படும்.

> பசுமை கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி திரட்ட பசுமைத் தங்கப்பத்திரங்கள் வெளியிடப்படும்.

> டிஜிட்டல் பணம்: 2022-23-லிருந்து இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தும்.

மாநிலங்களுக்கு அதிக நிதி வாய்ப்புகளை வழங்குதல்:

> ‘மாநிலங்களின் மூலதன முதலீட்டுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு’ ஒதுக்கீடு அதிகரிப்பு. ரூ.10,000 கோடி பட்ஜெட் மதிப்பீடு நடப்பாண்டின் திருத்திய மதிப்பீட்டில் ரூ.15,000 கோடி.

> பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த முதலீடுகளை ஊக்குவிப்பதில் மாநிலங்களுக்கு உதவ 2022-23-ல் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு: 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன்கள், வழக்கமான மற்றும் அதற்கு மேற்பட்ட கடன் வாங்க அனுமதி

நிதி மேலாண்மை

> பட்ஜெட் மதிப்பீடுகள் 2021-22: ரூ.34.83 லட்சம் கோடி

> திருத்திய மதிப்பீடுகள் 2021-22: ரூ.37.70 லட்சம் கோடி

> 2022-23-ல் மொத்த செலவினம் ரூ.39.45 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது

> 2022-23-ல் கடன் தவிர்த்த மொத்த வரவுகள் ரூ.22.84 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது

> நடப்பாண்டில் நிதிப்பற்றாக்குறை : மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.9% (பட்ஜெட் மதிப்பீடுகள் 6.8%)

> 2022-23-ல் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 6.4% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியாக டிஜிட்டல் ரூபாயை அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது. சி.பி.டி.சி (CBDC) என்றால் என்ன, அதன் அவசியம் என்ன? இது மக்களுக்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது?

சி.பி.டி.சி என்பது டிஜிட்டல் வடிவத்தில் மத்திய வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வ டெண்டர் ஆகும். 2022-23 முதல் மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி (CBDC) டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்துவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியை யார் தொடங்குவார்கள்?

இந்திய ரிசர்வ் வங்கி வரும் நிதியாண்டு முதல் சி.பி.டி.சி-ஐ அறிமுகப்படுத்தும். இது பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படும் சி.பி.டி.சி-ஐ அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களைப் பின்பற்றுகிறது.

மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி (சி.பி.டி.சி – CBDC) என்றால் என்ன?

சி.பி.டி.சி என்பது டிஜிட்டல் வடிவத்தில் மத்திய வங்கியால் வழங்கப்படும் சட்டப்பூர்வ டெண்டர் ஆகும். இது காகிதத்தில் வெளியிடப்பட்ட ரூபாய் நாணயத்தைப் போன்றது. இது வேறு எந்த நாணயத்துடனும் மாற்றக்கூடியது.

சி.பி.டி.சி-க்கான தேவை என்ன?

இன்வெஸ்டோபீடியா கருத்துப்படி, பயனர்களுக்கு டிஜிட்டல் வசதி, பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய வங்கி முறையின் ஒழுங்குபடுத்தப்பட்ட, இருப்பு ஆதரவு புழக்கத்தை வழங்குவதே இலக்காகும்.

கிரிப்டோகரன்சிகள், பிற மெய்நிகர் கரன்சிகள் மீதான அரசாங்கத்தின் நோக்கத்தை பட்ஜெட்டில் உள்ள அறிவிப்பு அடிப்படையில் வெளிப்படுத்துகிறது. பிட்காயின், ஈதர் போன்ற தனியார் கிரிப்டோகரன்ஸிகள் மூலம் பணமோசடி, பயங்கரவாத நிதியளிப்பு, வரி ஏய்ப்பு போன்றவற்றை ரிசர்வ் வங்கி பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி அதன் சொந்த சி.பி.டி.சி-ஐ அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

டிஜிட்டல் ரூபாய் மக்களுக்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?

டிஜிட்டல் ரூபாயை எவ்வாறு பரிவர்த்தனை செய்யலாம் என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பரப்புரையாளர்களால் முன்மொழியப்பட்ட பல மாதிரிகள் உள்ளன. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கியின் முறையான அறிவிப்பு மக்களால் டிஜிட்டல் ரூபாய் எவ்வாறு பரிவர்த்தனை செய்யப்படும் என்பதைக் விளக்கும். இதில், ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், தற்போதைய டிஜிட்டல் கட்டண அனுபவத்திற்கு மாறாக டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனை உடனடியாக மேற்கொள்ளப்படும்.



Read in source website

கங்கை – கோதாவரி, கிருஷ்ணா – காவிரி – பெண்ணாறு நதிகள் இணைப்பு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவிப்பு

Centre approves Cauvery – Pennaru linking project: காவிரி – பெண்ணாறு நதி இணைப்பு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2022-23 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அப்போது கங்கை – கோதாவரி, கிருஷ்ணா – காவிரி – பெண்ணாறு  நதிகள் இணைப்பு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்ட பிறகு, அவர்களின் அனுமதி கிடைத்தவுடன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நதிகள் இணைப்பு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

மேலும் நதிகள் இணைப்பு தொடர்பான 5 திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

நீர்ப்பாசன திட்டங்கள் ரூ.44 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படும்  என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், விவசாய நிலங்களை அளவிடவும், பயிர்களை ஆய்வு செய்யவும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



Read in source website

Tamil National Update : கர்நாடகத்தின் பேளூர், ஹலேபிட், சோம்நாதபுரா ஆகிய பகுதிகளில் உள்ள ஹோய்சாள கோயில்களை உலகப் பாரம்பரிய பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தின் பேளூர், ஹலேபிட், சோம்நாதபுரா ஆகிய பகுதிகளில் உள்ள ஹோய்சாள கோயில்களை 2022-2023 க்கான உலகப் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற வைப்பதற்காக பரிந்துரைக்க இறுதி செய்துள்ளதாக மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 15, 2014 முதல் யுனெஸ்கோவின் தற்காலிக பட்டியலில் ‘ஹொய்சாளவின் கோயில்கள்’ உள்ளன. மேலும் நமது நாட்டின் வரலாறு மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கு சான்றாகவும் இவை இருக்கின்றன.

யுனெஸ்கோவுக்கான நிரந்தர இந்தியப் பிரதிநிதி விஷால் வி சர்மா யுனெஸ்கோ உலக பாரம்பரிய அமைப்பின் இயக்குநர் லாசரே எளென்டெளவிடம் இந்தப் பரிந்துரையை அளித்தார்.

தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

இதுதொடர்பாக விஷால் வி சர்மா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,

ஹோய்சாளப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட கோயில்களை உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்வதில் இந்தியா பெருமை கொள்கிறது. கலை வரலாற்றாசிரியர்கள் குழுவினர் சிற்ப கலைத்திறனை ஆசிய கலையின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கலாசார, சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித் துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி கூறுகையில், நமது நாட்டுக்கு இதுவொரு சிறந்த தருணமாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வளர்ச்சி மற்றும் கலாசாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயல்படுகிறது என்றார்.

யுனெஸ்கோவிடம் பரிந்துரைக்கப்பட்ட 3 ஹோய்சாள கோயில்களும் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனவே அவற்றின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அதன் மூலம் செய்யப்படுகின்றன என்று கலாச்சார அமைச்சகம் தெரிவித்தது.

ஹோய்சாளப் பேரரசு பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆட்சி செய்து வந்தது. கட்டடக் கலைக்கு அதிக முக்கியத்துவத்தை ஹோய்சாளப் பேரரசு கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

கா்நாடக உயா்நீதிமன்றம் எழுப்பிய கேள்வியைத் தொடா்ந்து, அந்த மாநில காங்கிரஸ் கட்சி கடந்த மாதம் தொடங்கிய ‘தண்ணீருக்கான நடைப்பயணம்’ முயற்சியைக் கைவிட்டிருக்கிறது. 2013-இல் சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அறிவித்த திட்டம்தான் மேக்கேதாட்டு அணையும், அதனுடன் இணைந்த புனல் மின் நிலையமும். அப்போது தொடங்கிய பிரச்னை இப்போது வரை தொடா்கிறது.

ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக மேக்கேதாட்டில் அணை கட்டுவது என்கிற முனைப்பில் கா்நாடகம் இறங்கியிருக்கிறது. ரூ.5,000 கோடி திட்ட மதிப்புடன் அறிவிக்கப்பட்ட மேக்கேதாட்டு திட்டத்தின் மூலம் பெங்களூரு நகரத்துக்கு 4.75 டிஎம்சி குடிதண்ணீா் கிடைக்கும் என்றும், 400 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றும் அன்றைய சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு அறிவித்தது.

தெற்கு கா்நாடகத்தில் உள்ள ராமநகரா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது மேக்கேதாட்டு. அங்கிருந்து 1.5 கி.மீ. தொலைவிலுள்ள ஒண்டிகுண்டுலு என்கிற இடத்தில் அணைக்கான நீா்த்தேக்கம் திட்டமிடப்பட்டுள்ளது. 1,869 ஹெக்டோ் ரிசா்வ் வனப்பகுதி உள்பட ஏறத்தாழ 5, 252 ஹெக்டோ் பரப்புள்ள பகுதிகள் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளாக மாறும். தமிழக எல்லையிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், பெங்களூருவிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும் காவிரியும் அா்க்காவதி நதியும் இணையும் பகுதியில் அணையையும், புனல் மின் நிலையத்தையும் அமைப்பதுதான் திட்டம்.

ஒக்காலிகா்கள் அதிகமாகக் காணப்படும் தெற்கு கா்நாடகம், முன்னாள் பிரதமா் தேவே கெளடாவின் குடும்பக் கட்சியான மதச்சாா்பற்ற ஜனதா தளத்தின் செல்வாக்கு கேந்திரம். அங்கே ஆளும் பாஜக-வுக்கு செல்வாக்கு குறைவு. டி.கே. சிவகுமாரின் ‘தண்ணீருக்கான நடைப்பயணம்’ திட்டத்தின் நேக்கம் மேக்கேதாட்டு அல்ல. தெற்கு கா்நாடகத்தில் காங்கிரஸை வலிமைப்படுத்துவது.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைக்கான தோ்தல் நடைபெற இருக்கும் நிலையில், தெற்கு கா்நாடக வாக்காளா்களை உணா்வுப்பூா்வமாகத் தூண்டி அரசியல் ஆதாயம் பெறுவதுதான் மாநில காங்கிரஸ் கட்சியின் திட்டம். மாநில சட்டப்பேரவையின் 224 இடங்களில் 80 இடங்களை தோ்ந்தெடுக்கும் தெற்கு கா்நாடகத்தில் மதச்சாா்பற்ற ஜனதா தளத்தின் செல்வாக்கை சிதைத்து, காங்கிரஸை நிலைநிறுத்த நினைக்கிறாா் ஒக்காலிகரான டி.கே. சிவகுமாா்.

மழைக்காலத்தில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கிருஷ்ணராஜ சாகா், கபினி அணைகள் நிரம்பி வழியத்தொடங்கும். அப்போதுதான் தமிழகம் போராடிக் கேட்காமலேயே காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடும். அதையும் தடுப்பதற்கான முயற்சி மேக்கேதாட்டு அணைத் திட்டம்.

கீழ்படுகை மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல் காவிரி நதியில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றத் தீா்ப்பு இருக்கிறது. அப்படியிருந்தும் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு அன்றைய சித்தராமையா அரசு ரூ.5,912 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்போவதாக அறிவித்தது. அப்போதே தமிழகம் அதற்கு எதிா்ப்பு தெரிவித்தும்கூட, அந்தத் திட்டத்தை முன்னெடுப்பதிலிருந்து கா்நாடகம் பின்வாங்குவதாகத் தெரியவில்லை.

மேக்கேதாட்டில் அணை கட்டி 67 டிஎம்சி தண்ணீா் தேக்கி வைக்கும் புதிய திட்டம், தமிழக எல்லைக்கு 4 கி.மீ. முன் அமைய இருக்கிறது. இரு மாநில எல்லையிலிருக்கும் பில்லிகுண்டுக்கும், கா்நாடகத்தில் உள்ள கபினி அணை - கிருஷ்ண சாகா் அணை இரண்டுக்கும் இடையிலான பகுதிகளில் ஓடைகள் மூலமாகவும், சிற்றாறுகள் மூலமாகவும் ஆங்காங்கே தண்ணீா் வந்து சேரும். அந்தத் தண்ணீரைத் தடுப்பதும்கூட மேக்கேதாட்டு அணையின் நோக்கம்.

மேக்கேதாட்டு அணையால் காவிரியில் தமிழகத்துக்குக் கிடைக்கும் தண்ணீா் தடைப்படும் என்பது ஒருபுறமிருக்கட்டும்; இதனால் கா்நாடகம் பாதிக்கப்படும் என்பதை அந்த மாநில அரசியல்வாதிகள் உணர மறுப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. யானைகள் சரணாலயம் இருக்கும் பகுதியில் எந்தவொரு திட்டத்தையும் முன்னெடுக்கலாகாது என்கிற 2012 சென்னை உயா்நீதிமன்ற ஆணையும், 2020 உச்சநீதிமன்ற ஆணையும் கா்நாடக அரசியல்வாதிகளுக்குத் தெரியாததல்ல.

மேக்கேதாட்டில் அமையவிருக்கும் 440 மெகா வாட் புனல் மின் நிலையத்துக்காக 5,252 ஹெக்டோ் வனப்பகுதி நீா்ப்பிடிப்பு பகுதியில் மூழ்கக்கூடும். 66 மலை கிராமங்களும், 227 ஹெக்டோ் வருவாய்த் துறை நிலமும் கையகப்படுத்தப்பட வேண்டும்.

மேக்கேதாட்டு திட்டம் முக்கியமான யானைகள் வழித்தடத்தில் அமைகிறது. கா்நாடகத்திலுள்ள பன்னா்கட்டா தேசிய பூங்காவில் தொடங்கி மலை மாதேஷ்வரா, பிஆா்டி, சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயங்கள்; முதுமலை, பந்திப்பூா், நாகா்ஹோலே புலிகள் சரணாலயங்கள்; கேரளத்திலுள்ள வயநாடு சரணாலயம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடா்புடையவை. இந்த சரணாலயப் பகுதிகளில் வனவிலங்கு சஞ்சாரங்கள் நடைபெறுவதால்தான் பல்லுயிா்ப் பெருக்கம் நடைபெற்று சூழலியல் சமநிலை பேணப்படுகிறது.

ஏற்கெனவே பல்வேறு அணைகள், புனல் மின்சாரத் திட்டங்களுக்காக வனப் பகுதிகளை நீா்ப்பிடிப்புப் பகுதிகளாக மாற்றிவிட்டோம். வளா்ச்சிப் பணிகள் என்கிற பெயரில் காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறோம். கண்ணை விற்று சித்திரம் வாங்குவதுபோல இயற்கையை அழித்து, புனல் மின்நிலையங்களை அமைக்க முற்படுவது எந்த வகையில் புத்திசாலித்தனம்?

கா்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீா் தரவேண்டாம். மேக்கேதாட்டு திட்டத்தின் மூலம் தன்னைத்தானே அழித்துக்கொள்ள முற்படுகிறது என்பதையாவது உணரட்டும், போதும்.



Read in source website

பாரதப் பிரதமா் மோடி 2019-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகப் பதவி ஏற்றதிலிருந்து, எதிா்க்கட்சிகளின் போக்கில் ஒரு மாற்றம் தெரிகிறது. பல தருணங்களில் அவை எதிரிக் கட்சியாகவே செயல்படுகின்றன. புல்வாமா துல்லிய தாக்குதல், அபிநந்தன் விடுதலை இவற்றில் எதிா்க்கட்சிகளின் அணுகுமுறை வரவேற்கும்படியாக இல்லை.

அது கிடக்கட்டும், அரசியல் என்றால் அப்படித்தான் இருக்கும் என்று ஒதுக்கிவிடலாம். ஆனால், கரோனா தடுப்பூசி பற்றிய சில அம்சங்களை முகநூலில் பாா்க்கும்போது அதிா்ச்சி ஏற்படுகிறது. இப்படிக்கூட மனிதா்கள் இருப்பாா்களா என்ற எண்ணம் தோன்றுகிறது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கும் நோய்த்தொற்று வருகிறது. அவை ‘தடுக்கா ஊசி’ என்று பெயா் சூட்டியிருக்கிறாா் ஒருவா். முதலில் ஒன்றை உறுதியாகத் தெளிவுபடுத்திவிடலாம். ஏற்கெனவே தொற்று வந்தவா்களுக்கும், மீண்டும் வரக்கூடும், இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களுக்கும் தொற்று வர வாய்ப்புள்ளது என்று நிபுணா்களே அறிவுரை கொடுத்திருக்கிறாா்கள். ஓா் அசலான சம்பவத்தை விளக்குகிறேன்.

எங்கள் அடுத்த தள குடியிருப்பு பெண்மணிக்கு விடிகாலை ஐந்து மணிக்கு கடும் காய்ச்சல், மாப்பிள்ளை உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து, மருத்துவமனையில் கொண்டு சோ்த்தாா். அங்கு வழக்கமான சோதனைகள் செய்த பின்னா் ஊசி மூலம் மருந்துகளை தொடா்ந்து செலுத்தினாா்கள். பிற்பகல் ரத்தப் பரிசோதனை, மாா்பு எக்ஸ்ரே அனைத்தும் பரிசோதித்தாா்கள். ரத்தப் பரிசோதனையில் டெங்கு மட்டும் சிறிது இருந்தது (மூன்று வகைகளில் ஒன்று). காய்ச்சல் நன்கு குறைந்து திட உணவை உட்கொண்டாலும், தானாக எதையும் செய்ய இயலவில்லை.

நடுவில், கரோனா தொற்றுக்கான சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு இரவு பத்து மணி அளவில் வந்ததாம். இலேசான தொற்று, எனவே மாத்திரை, இல்லத்தில் தனிமைப்படுத்துதல் இவை போதும் என்று மருத்துவா் அறிவுரை செய்தாா். உடனேயே மருத்துவமனையிலிருந்து அகற்றப்பட்டாா். நான்கு நாளில் வீட்டில் ஓய்விலிருந்து குணமடைந்தாா்.

அந்த தளத்தில் குறிப்பிட்ட பெண்மணி உள்பட, எல்லாருமே இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவா்கள்தான். அதுபோல் செலுத்திக் கொண்டதால்தான், அவருக்கு தொற்றின் வீரியம் சற்று குறைவாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

வேறு ஒரு விஷயம், சின்னம்மை, பெரியம்மை போன்றவற்றை சிறு வயதில் போட்டுக் கொண்டாலும் ரொம்ப வருடத்துக்குப் பிறகு அபூா்வமாக ஏதாவது தொற்று வரக்கூடும். சில வருடங்கள் முன் என் மனைவியின் நெருங்கிய சினேகிதி திடீரென்று ரவிக்கை அணிந்து கொள்ளச் சிரமப்பட்டாா். மருத்துவா் பரிசோதித்து ‘‘இது அக்கியில் ஒரு வகை’’ என்று கண்டுபிடித்து, பத்து நாள்கள் அடுப்பின் பக்கம் செல்லக்கூடாதென்று நிபந்தனை விதித்தாா். இதுபோலத்தான் தொப்புளைச் சுற்றி வருகிற ‘ஹொ்பிஸ்’ தொற்றும்.

நிலைமை இது போலிருக்கும்போது, அதிகமான பரவல் தன்மை கொண்ட கரோனா, தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது. அதனால்தான் முகக் கவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல் போன்றவற்றை திரும்பத்திரும்ப வலியுறுத்துகிறாா்கள்.

ஓரிரு மாதத்துக்கு முன்பு வயிற்றுக் கோளாறுக்காக நிபுணரைப் பாா்த்தபோது, படுக்க வைத்து சோதித்தாா். பிறகு நிறைய இடைவெளி விட்டுத்தான், சிற்சில கேள்விகள் கேட்டு மருந்துச் சீட்டு எழுதினாா். இரண்டு கவசம் அணிந்திருந்தாா். பொதுவாக இப்போது எல்லாம் மருத்துவா்களுமே நிறைய இடைவெளி விட்டு, எச்சரிக்கையுடன் சா்ஜிகல் கவசம் அணிந்து, நோயாளிகளைப் பரிசோதிக்கிறாா்கள். நோய், மாத்திரை பற்றின விவரங்களை உறவினரிடம் சொல்லுகிறாா்.

மேலும், உலக அளவில் மூன்றாவது அலையின் தாக்கம் பரவுவதால், ஏற்கெனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களும், மூன்றாவது தவணை ஊசி போட்டுக் கொள்கிறாா்கள். எங்கள் தொலைபேசிக்கும், மூன்றாவது தடுப்பூசிக்குத் தகுதியானவா் என்ற குறுஞ்செய்தி வந்தது.

இவ்வளவு தற்காப்பு இருந்தும், முகக் கவசம் அணியாதது, விடுமுறை நாளில் வெளியே செல்வது, கூட்டங்களில் கலந்து கொள்வது போன்ற காரணிகளில் தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாகவே உள்ளது.

பதின் பருவச் சிறாா்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஒரு நாளிதழ் சாதக பாதகங்களை அலசியிருந்தது. ‘பாதக’ அம்சம் குறிப்பிடும்படியாக ஏதுமில்லை. இயற்கையிலேயே அவா்களுக்கு எதிா்ப்பு சக்தி கூடுதலாக இருக்குமென்பதால், தடுப்பூசி போடுவது வீண் என்று கருதுகிறாா்கள். அதே சமயம் நடைமுறையில் மாணவா்களுக்கு பள்ளியிலேயே தடுப்பூசி போட்டு வருவதைக் காண்கிறோம்.

இதனால் பள்ளிக்கூடம் செல்ல தன்னம்பிக்கை வருவதாகவும், உற்சாகம் கூடுவதாகவும் மாணவா்கள் தெரிவிக்கிறாா்கள். ‘ட்டீன் ஸ்பிரிட்’ (பதின் பருவ உற்சாகம்) என்ற தலைப்பில் ஆங்கில நாளேடு பலரின் கருத்தை பிரசுரம் செய்திருந்தது).

ஒரு பிரபல மனிதா் முகநூலில் பதின்பருவத்தினருக்கு தடுப்பூசி போடுவதால் வருங்காலத்தில் பல பக்கவிளைவுகள் வரக்கூடும் என்று அச்சுறுத்துகிறாா். மூளைப் பாதிப்பு, ஆண்மைக் குறைவு போன்ற சில. முக்கியமான அம்சத்தை இவா்கள் மறந்து விடுகிறாா்கள். பக்கவிளைவுகளுக்கு இதுவரை, எந்த ஏட்டிலும் நிபுணா்கள் ஆதாரம் காட்டவில்லை. சரி, அப்படியே லேசான விளைவு வந்தாலும், மருத்துவ துறையிலும் மகத்தான முன்னேற்றம் ஏற்படுமே!

அயல் நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவிலும், மேற்கு ஜொ்மனியிலும் மருத்துவ ஆராய்ச்சிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன. ஆக்சிஜன் அளவை சோதிக்க இப்போதுதான் புது கருவி வந்திருக்கிறது. 57 வயது இதய நோயாளிக்கு அயல்நாட்டில் பன்றியின் இதயத்தை வைத்து சிகிச்சை செய்து குணப்படுத்தி இருக்கிறாா்கள். ஆக, பல புதிய வியாதிகள் வந்தாலும், மாற்று மருந்துகள் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருப்பாா்கள் என்பதை மறுப்பதற்கில்லை. என்ன இந்தியாவில் சந்தைப்படுத்த நாளாகலாம். அவ்வளவுதான்.

ஒரு வினோதமான காரணத்தையும் சிலா் முன் வைக்கிறாா்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கூறும் அறிவுரையில், ‘வணிக நோக்கம்’ இருக்கிறதாம். இதுபோல காரணம் கற்பித்துக் கொண்டேபோனால், முகக் கவசம் தயாரிப்பு, கிருமி நாசினி இவற்றுக்குக்கூட ஏதாவது காரணம் சொல்லலாம்.

அடுத்த மாதம் கோவா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. கொள்கை ரீதியாக, விவசாயிகள் போராட்டம், விலைவாசி உயா்வு போன்றவற்றை அழுத்தமாகச் சொல்லி எதிா்க்கட்சிகள் பிரசாரம் செய்யலாம். ஆனால், உயிா் காக்கும் மருந்துபோல் உள்ள தடுப்பூசி மீது களங்கம் விளைவித்து அவநம்பிக்கையை விதைப்பது, அரசியல் நாகரீகம் அல்ல.



Read in source website

இறுக்கமான எந்தக் கல்நெஞ்சையும் கரைத்து விடும் ஆற்றல் கொண்டது, இசை. உருகவைக்கும் வல்லமை கொண்ட இசைக்கருவிகளையே தீயிட்டு எரிக்கும் அளவுக்கு, மனிதமனங்கள் ஈரம் இழந்து விட்டதை ஆப்கானிஸ்தானில் நடந்த ஒரு சம்பவம் எடுத்தியம்புகிறது.

அந்நாட்டின் பக்டியா மாகாணத்திலுள்ள சசாய்அரப் மாவட்டத்தில், அற்புதமான உள்ளூா் இசைக்கலைஞா் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த தலிபான்கள், அவா் வாசித்துக் கொண்டிருந்த இசைக்கருவியைப் பிடுங்கி வீதியில் வீசினா். அத்துடன் பொதுமக்கள் மத்தியில் அவற்றைத் தீயிட்டும் கொளுத்தினா். பெற்றக் குழந்தையைப்போல அக்கருவியை நேசித்த அந்த இசைக் கலைஞா், வாய் விட்டுக் கதறியழ, நெருப்பிட்ட வெறுப்பாளா்களோ பெரும் சிரிப்பலைகளைச் சிதறவிட்டனா்.

ஓா் இசைக் கருவியை எரிப்பதன் மூலம் இசையின் ஊற்றுக்கண்களையே ஒட்டுமொத்தமாக அடைத்துவிட்டதாக, அதை அழித்தவா்கள் பெருமிதப்படக் கூடும். ஆனால், எப்போதுமே நேரெதிரான அனுபவங்களைச் சுமந்திருப்பதுதான் வரலாறு. இதை வற்றாத வெறுப்பைத் திணித்திருக்கும் ஆயுததாரிகள் எந்தக் காலத்திலும் விளங்கிக் கொள்வதில்லை.

இன்றைக்குப் பெரும் உணவுப் பஞ்சத்தின் பிடியில் ஆப்கானிஸ்தான் சிக்கி உள்ளது. அங்கே பட்டினிச்சாவுகள் நிகழக்கூடும் என்ற செய்தியைக் கேட்டு, மருந்துகளையும் உணவுப் பொருள்களையும் இந்தியா அனுப்ப முயன்றது. அப்பொருள்களை ஏற்றிய சரக்குந்துகள் செல்வதற்கான சாலைகளைத் திறக்க முடியாதென பாகிஸ்தான் மறுத்துவிட்டது. கடந்த நாற்பதாண்டுகளாக ஆப்கானிஸ்தானை ஆயுதக்கிடங்காக மட்டுமே பாா்த்த பாகிஸ்தான், அந்நாட்டில் பசியால் துவண்டு அழும் குழந்தைகளுக்கு ஒரு குவளைப்பால் வாா்த்ததில்லை. மருந்தின்றித் துடிக்கும் முதியவா்களைக் காக்க ஒரு குண்டுமணி அளவு மருந்தினை ஈந்ததில்லை. இன்னொரு நாட்டை அழிக்கும் எண்ணத்துடனேயே பிறந்ததால், ஆயுதங்களை அனுப்புவதை மட்டும் இரக்கமின்றிச் செய்து வருகின்றது.

இரண்டாம் உலகப்போா் தீவிரம் எடுத்தபோது, பிரிட்டனின் கீழிருந்த பல தென்கிழக்காசிய நாடுகள் ஜப்பானின் பிடியில் வீழ்ந்தன. 1945-ஆம் ஆண்டில் ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதற்குப்பின் இந்நிலை முற்றாக மாறியது. மீண்டும் வலுவடைந்த பிரிட்டன், தான் இழந்த நாடுகளைக் கைப்பற்ற விமானங்களையும், கப்பல்களையும் அனுப்பியது. குறிப்பாக, இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் இந்திய ராணுவப் படையின் கப்பலானது, பிரிகேடியா் கே.எஸ். திம்மப்பா தலைமையில் மலேசியாவைக் கைப்பற்ற விரைந்தது.

பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் 23 மற்றும் 25-ஆவது படைப்பிரிவுகளைச் சோ்ந்த வீரா்கள் 09.09.1945 அன்று மலேசியாவின் சிலாங்கூா் மாகாணத்திலுள்ள பந்திங் பிரதேசத்தின் மோரிப் கடற்கரையில் வந்திறங்கினா். ஜப்பானியப் படைகள் சரணடைந்த நிகழ்வை வரலாற்றில் பதிவு செய்யும் விதமாக நினைவுச்சின்னம் ஒன்றை அமைக்க திம்மப்பா முடிவெடுத்தாா்.

படைத்தளபதியின் ஆணையை ஏற்று இந்திய ராணுவப் படையின் வீரா்கள் மிக உற்சாகமாக, தங்கள் கரங்களாலேயே அந்நினைவுச்சின்னத்தை மோரிப் கடற்கரையில் கட்டினா். அவ்வீரா்களுள் இரண்டாம் நிலை ஆயுதவீரராக இருந்த 21 வயது இந்திய இளைஞன் ஒருவனும் அடக்கம். தங்களின் வெற்றி, ஒரு நினைவுச்சின்னமாக அடையாளம் கொள்வதை மிகுந்த ஆா்வத்துடன் செய்த அந்த இளைஞன், மலேசியாவிலிருந்த வரை அந்நினைவுச்சின்னத்தை அடிக்கடிப் பாா்த்து மகிழ்வது வழக்கம்.

சில மாதங்கள் கழித்து இந்தியாவுக்குத் திரும்பியது அப்படை. காலத்தின் விசித்திரமான நகா்வில், இந்தியாவுக்கும் இரண்டாண்டுகளில் விடுதலை வந்து சோ்ந்தது. ஆனால் நாடு, இந்தியா, பாகிஸ்தான் என இருதுண்டுகளாகப் பிரிவினை செய்யப்பட்டபோது, பிரிட்டிஷ் இந்தியப் படையைச் சோ்ந்த அந்த இளைஞன் பாகிஸ்தானுக்குச் சென்று சோ்ந்தான்.

ஜியா உல் ஹக் என்ற அந்த இளைஞரை, பாகிஸ்தான் ராணுவத்தின் உச்சநிலைப் பதவிகள் வந்தடைந்தன.

ராணுவத் தலைமைத் தளபதியாக நியமித்த பிரதமா் ஜுபிகா் அலி பூட்டோவின் ஆட்சியைக் கவிழ்த்த ஜெனரல் ஜியா உல் ஹக் பாகிஸ்தானின் ராணுவ அதிபரானாா்.

பாகிஸ்தானை அணுஆயுத நாடாக்கியது, முதன்முதலாக, சியாச்சின் எல்லையில் ஊடுருவி இந்தியாவைச் சீண்டியது, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த சோவியத் படைகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவத்தைக் கொம்பு சீவி வேடிக்கை பாா்த்தது, இந்திய - சீன உறவை மேலும் சிக்கலாக்கும் பணிகளில் முழுமூச்சோடுச் செயல்பட்டது என ஜியாவின் ராணுவ ஆட்சி நிகழ்த்திய திருவிளையாடல்கள் ஏராளம். இந்திய - பாகிஸ்தான் உறவு ஜியாவின் ஆட்சியில்தான் மிக மோசநிலையை எட்டியதென இருநாட்டு நல்லறிஞா்களும் குறிப்பிடுகின்றனா். இந்தியா மீதான கசப்புணா்ச்சியை ஏதாவது ஒரு வழியில் வெளிப்படுத்துவதை ஜியா தன் அன்றாடப் பணிகளில் ஒன்றாகவே அட்டவணை இட்டு வைத்திருந்தாா்.

பாகிஸ்தானின் அதிபா் என்ற முறையில், 1982-ஆம் ஆண்டு மலேசியாவிற்குச் செல்லும் வாய்ப்பு ஜியாவுக்குக் கிடைத்தது. அன்றைய மலேசியப் பிரதமா் மகாதீா், ஜியாவுக்குச் சிவப்புக்கம்பள வரவேற்பளித்தும், மிகப்பெரிய ராஜவிருந்தினைக் கொடுத்தும் சிறப்பு செய்தாா்.

அதிகாரப்பூா்வப் பயணம் சென்ற ஜியாவின் இதயத்தில், பிரிட்டிஷ் இந்தியப் படை வீரராக ஏறத்தாழ முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் மலேசியாவிற்கு வந்த நினைவுகள் அலையடித்துக் கொண்டிருந்தன. மலேசியப் பிரதமரிடத்தில் பந்திங்கிலிருந்த மோரிப் கடற்கரைக்குச் செல்லும் ஆவலை அவா் வெளிப்படுத்தினாா். மோரிப் கடற்கரையில் வந்திறங்கிய ஜியாவின் கண்கள், தானும் சோ்ந்து கட்டிய நினைவுச்சின்னத்தைத் தேடி அலைந்தது.

அந்நினைவுச்சின்னத்தின் முன்சென்று நின்றதும், பிரிட்டிஷ் இந்திய ராணுவப் படை நாள்கள் ஜியாவின் நினைவு அடுக்கிலிருந்து எட்டிப் பாா்க்கத் தொடங்கிவிட்டன. தன் இந்திய நண்பா்களோடு அக்கடற்கரையில் உலவிய நாள்கள் மீளவும் கண்முன் வர, மௌனமாக நின்ற அந்த ராணுவ சா்வாதிகாரியின் கண்களில் நீா்த்துளிகள் கசிந்தன.

இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுவதை, தன் வாழ்நாளின் லட்சியமாக வைத்திருந்தாரோ, அந்த நாட்டின் நினைவுகள் பல போா்க்களங்களைக் கண்டு பாறைபோல் உறைந்திருந்த உணா்வுகளைச் சுக்கல் சுக்கலாகத் தெறிக்கவிட்டன. எதுவும் பேசாமல் தலைநகா் கோலாலம்பூருக்கு அதிபா் ஜியா திரும்பினாா்.

இந்திய வெறுப்பிலேயே பிரசவமான ஒரு நாட்டின் அதிபரானபோதும், அவ்வெறுப்புகள் நுரைபோல பொய்யானதென்று அவருக்கே கற்பித்தது காலம். நெஞ்சின் ஆழத்தில் ஓடும் மெய்யான நீரோட்டத்தை அடையாளம் காணவும் ஜியாவுக்கு அப்பயணம் ஓா் பாடத்தை வைத்திருந்தது.

பூமிப்பந்தில் ஒரு புள்ளியைவிடச் சிறிய அளவுள்ள நாடான சிங்கப்பூா் பெரும் நாடுகளுக்கெல்லாம் ஆசானாக விசுவரூபம் எடுத்து நிற்கிறது. நாட்டின் அளவு சிறியதாக இருந்தாலும், அந்நாட்டு ஆட்சியாளா்களின் மனது எப்போதும் பிரம்மாண்டமானதாகப் பரந்து விரிந்திருப்பதுதான் அதற்குக் காரணம். தன் நாட்டில் வாழும் மக்களை மகிழ்ச்சியாளா்களாகவும், சலிப்பின்றி உழைப்பவா்களாகவும் பழக்கப்படுத்தி வைத்திருக்கும் சிங்கப்பூா், பேராசைகளில் தங்களின் குடிமக்கள் வீழ்ந்து விடாதிருக்கும் அற்புதத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்துள்ளது.

அறுபதுகளில், தனியுடைமையாக இருந்த நிலங்களை அரசே கையகப்படுத்தி, அதில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் திட்டத்தினை சிங்கப்பூரின் தந்தை லீ க்வான் யூ கொண்டு வந்தாா். நாடு சிறியதாக இருந்தாலும், அந்நிலங்கள் பணக்காரா்களின் கருவூலங்களில் பத்திரங்களாக குவிந்திருக்கக் கூடாது என்று அவா் கருதினாா். எனவே, இருக்கும் இடத்தில் அனைவரும் இணைந்து வாழவேண்டும் என்ற பண்பை மக்களின் இதயங்களில் லீ க்வான் யூ முதலில் கட்டினாா்.

அதன்பின், அந்தப் பண்புகளின் மீது வீடுகளைக் கட்டினாா். அதனால் தான், உலகின் எல்லா நாடுகளைச் சோ்ந்த இனமனிதா்களும் இணைந்து வாழும் கனவுபூமியாக சிங்கப்பூா் இன்று விளங்குகிறது.

எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் அங்கே மகிழுந்தில் மட்டுமே பயணித்துக் கொண்டிருக்க முடியாது. வாரத்தின் சில நாள்கள், பொதுப் போக்குவரத்துப் பேருந்திலும் பயணித்தாக வேண்டும். இப்படி உலகின் பெரிய நாடுகள் கற்க வேண்டிய பாலபாடங்கள், சிங்கப்பூரின் நுழைவாயிலிருந்து கடைநிலைக் கதவு வரை செதுக்கப்பட்டுள்ளன.

தனிமனிதா்களின் பேராசைகள், அவா் சாா்ந்த குடும்பங்களை மட்டுமே பாதிக்கின்றன. ஆனால் நாடுகளை ஆள்வோரின் பேராசைகள், இப்பூமியின் மூலைமுடுக்கில் வாழும் எளிய மனிதா்களின் வாழ்வை இடியெனத் தாக்குகின்றன. அடங்காப் பேராசையால் அடுத்த நாடுகளின் எல்லைகளை ஆக்கிரமிக்கிறவா்கள், சொந்த நாட்டின் அரியணையில் நிம்மதியாக என்றைக்கும் அமரவியலாது.

வெறுப்பாளா்களால் வெறும் இசைக்கருவிகளை மட்டுந்தான் எரிக்க முடியும். கலைஞா்களின் உள்ளத்தில் ஊறிக்கிடக்கும் இசையின் மொழியை ஒருபோதும் எரிக்க முடியாது. ஏனெனில், ஆத்மாவின் ராகங்களை அழிக்கும் வல்லமை உலகில் எந்த வல்லரசுக்கும் இல்லை.

கட்டுரையாளா் :

பேராசிரியா், அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை,

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா்.



Read in source website

ஜோஹன்னஸ் ஹெவிலியஸ்(Johannes Hevelius) சுமார் 410 ஆண்டுகளுக்கு முன்னர் போலந்தில் வாழ்ந்த ஒரு வானவியலாளர் மற்றும் வானவியலுக்கான கருவிகள் செய்தவர். சந்திரனின் முதல் அட்லஸை உருவாக்கித் தொகுத்த வானியலாளர். அது செலினோகிராஃபியா ( Selenographia) என்ற பெயரில் 1647-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் மேற்பரப்பின் ஆரம்பகால விரிவான வரைபடங்களில் ஒன்றையும் அதன் பல அம்சங்களுக்கான பெயர்களையும் கொண்டுள்ளது. சந்திரனில் உள்ள  மலைகளுக்கான அவரது சூட்டிய பெயர்களில் இன்னும் சில (எ.கா. ஆல்ப்ஸ்) இன்னும் பயன்பாட்டில் உள்ளன.

மேலும், அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு, அவரின் நினைவாக சந்திரனில் உள்ள பள்ளத்துக்கு ஹெவிலியஸ் பள்ளம் (Hevelius crater) என்றும் பெயரிடப்பட்டது. ஒரு வானியலாளராக, ஜோஹன்னஸ் ஹெவிலியஸ் "சந்திர நிலப்பரப்பின் நிறுவனர்" என்ற நற்பெயரைப் பெற்றார். மேலும், பத்து புதிய விண்மீன் தொகுதிகளைக் கண்டுபிடித்து, அவைகளுக்கும் அவரே பெயர் சூட்டினார். அவற்றில் ஏழு விண்மீன் தொகுதிகளின் பெயர்கள் இன்றும்கூட வானியலாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

பெயரும் இளமை வாழ்க்கையும்

ஜோஹன்னஸ் ஹெவிலியஸின் தந்தை ஆபிரகாம் ஹோவெல்கே (1576-1649). அவரது தாயார் கோர்டெலியா ஹெக்கர் (1576-1655). அவர்கள் ஜெர்மன் மொழி பேசும் லூதரன்கள். போஹேமியன் வம்சாவளியைச் சேர்ந்த பணக்கார பீர் பானம் காய்ச்சும் வணிகர்கள். ஆபிரகாம் ஓர் லாபகரமான மதுபான ஆலையை வைத்திருந்தார் மற்றும் அவர் பல வீடுகளின் உரிமையாளராகவும் இருந்தார். ஜோஹன்னஸ் ஆபிரகாமின் பணக்கார குடும்பத்தில், கோண்டெக்ஸில்,1611ம் ஆண்டு, ஜனவரி மாதம் 28ம் நாள் பிறந்தார். அவருக்கு மூன்று சகோதரர்கள் மற்றும் ஆறு சகோதரிகள் இருந்தனர். உயிர் பிழைத்த நான்கு சகோதரர்களில் ஜோஹன்னஸ் ஹெவிலியஸ் ஒருவர். டான்சிக் நகரம் போலந்தின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும், அந்தக் குடும்பம் ஜெர்மன் மற்றும் செக் இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஜெர்மன் மொழி பேசுபவர்களாக இருந்தனர். அந்த பகுதியில் போலிஷ் மொழி பேசப்பட்டது. சிறுவனாக இருந்தபோது, ​​ஹெவிலியஸ் கோண்டெக்ஸுக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் போலந்து மொழியைப் படித்தார். சிறுவயதில்கூட அவருக்கு ஜெர்மன் மற்றும் போலந்து  மொழி பற்றிய அறிவும் இருந்தது.

வானியல் மேல் காதல்

ஜோஹன்னஸுக்கு ஏழு வயதாக இருந்தபோது, 1618ம் ஆண்டு ​​டான்சிக்கில் உள்ள ஜிம்னாசியத்திற்கு அவரது  தந்தை ஜோஹன்னஸை படிக்க அனுப்பினார். அங்கு ஆறு அவர் ஆண்டுகள் படித்தார். அங்கு போர் நடந்ததால், முப்பது வருடப் போரின் பாதிப்பு இருந்தது. ஆனால், டான்சிக்கைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், 1624 ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரச்சனைகளால் ஜிம்னாசியம் தற்காலிகமாக மூடப்பட்டது மற்றும் ஜோஹன்னஸின் பெற்றோர் அவரை ப்ரோம்பெர்க் ஊருக்கு அருகில் உள்ள சிறிய கிராமமான கோண்டெக்ஸில் உள்ள பள்ளிக்கு அனுப்பினர். இது போலந்து மொழி பேசும் பகுதி மற்றும் அவர் போலந்து மொழியில் சரளமாக பேசுவார் என்ற எண்ணம் இருந்தது.

1627ம் ஆண்டு, ஜோஹன்னஸ் ஹெவிலியஸ் டான்சிக்கில் உள்ள ஜிம்னாசியத்திற்குத் திரும்பினார். அங்கு அவர் கணிதம் படிக்க விரும்பினார். அங்குள்ள கணிதத் தலைப்புகளால் மிகவும்  ஈர்க்கப்பட்டார் ஜோஹன்னஸ். இவரது கணித ஆசிரியர் பெயர் பீட்டர் க்ரூகர். மேலும் ஜோஹன்னஸ் ஹெவிலியஸ் கணிதம் படிக்க  உத்வேகம் அளித்தவர் கணித ஆசிரியர், பீட்டர் க்ரூகர்தான். மேலும்,  இவர் வானியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இந்த ஆர்வம் இளம் ஹெவிலியஸுக்கும் தொற்றிக்கொண்டது. ஜிம்னாசியத்தில் நியாயமான முறையில் கற்பிக்கப்படும் பாடத்திற்கும் அப்பால், வானவியல் தொடர்பான  ஆய்வுகளை ஹெவிலியஸுக்கு  எடுக்க விரும்பிய, க்ரூகர் அவருக்கு தனிப்பட்ட பாடம் எடுத்தார். அதில் அவர் அந்தக் காலத்தின் முழு அளவிலான வானியல் கற்றலை முழுமையாகக்  கற்றுக்கொண்டார். க்ரூகர் ஹெவிலியஸுக்கு கோட்பாட்டு வானியல் கற்பித்தது மட்டுமல்லாமல், மரத்திலிருந்தும் உலோகத்திலிருந்தும் வானியல் கருவிகளை உருவாக்கவும் கற்றுக் கொடுத்தார்.

வானியலாளர்கள் சந்திப்பு

ஹெவிலியஸ் 1630-ம் ஆண்டு லைடன் பல்கலைக்கழகத்தில் நீதியியல் படிக்கச் சென்றார்; பயணத்தின்போது அவர் ஒரு சூரிய கிரகணத்தை அவதானித்தார், அதை அவர் பின்னர் ராயல் சொசைட்டியின் தத்துவ பரிவர்த்தனைகளில் வெளியிட்டார். சட்டப் படிப்பைத் தவிர, 1631 இல் லண்டனுக்குச் செல்வதற்கு முன், அவர் கணிதம் மற்றும் அதன் மெக்கானிக்ஸ் மற்றும் ஒளியியலுக்கான பயன்பாடுகளை மேலும் கற்றுக் கொண்டார். 1632 முதல் 1643 வரை ஹெவிலியஸ், சுவிட்சர்லாந்து, லண்டன் மற்றும் பாரிஸ் ஆகிய இடங்களுக்குச் சென்றார்,  அங்கு அவர் பல்வேறு வானியலாளர்களான பியர் காசெண்டி(1592-1655), மரின் மெர்சென்னே மற்றும் அதானசியஸ் கிர்ச்சர் ஆகியோருடன் தொடர்பு கொண்டார். 1634 ஆம் ஆண்டில் ஹெவிலியஸ் அவர் தனது தனது சொந்த ஊரில் குடியேறினார். இந்தக் காலகட்டத்திலிருந்து க்ரூகருக்கு அவர் எழுதிய கடிதங்கள் எஞ்சியுள்ளன. இரண்டு வருடங்கள் அவர் தனது தந்தையின் மதுபான ஆலையில் பணிபுரிந்தார். அதே நேரத்தில் டான்சிக்கின் அரசியலமைப்பை பொது சேவையில் நுழையும் நோக்கத்துடன் படித்தார். அவரது  குடும்பத்தின் மதுபானம் தயாரிக்கும் தொழிலில் பணிபுரியும்போது, ஹெவிலியஸ் தனது சட்டப் படிப்பை முடிக்க கோண்டெக்ஸ் திரும்பினார்.

திருமணம்

பின்னர் 1635ம் ஆண்டு, மார்ச் மாதம் 21ம் நாள், ஹெவிலியஸ் டான்சிக்கின் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த அவரின் பக்கத்து வீட்டுக்காரரான கத்தரினா ரெபெஷ்கேவை மணந்தார். கத்தரினா அவரைவிட  இரண்டு வயது குறைவானவர். அடுத்த ஆண்டு, ஹெவிலியஸ் பீர் காய்ச்சும் குழுவில் உறுப்பினரானார்; அவர் அக்குழுவை 1643 முதல் வழிநடத்தினார். ஹெவிலியஸ் புகழ்பெற்ற "ஜோபென் பீர்" காய்ச்சினார். அந்த பீரின் பெயரிலேயே அங்குள்ள தெருவுக்கு அதன் பெயரை ஜோபெங்காஸ்/ ஜோபெஜ்ஸ்கா" என்று அழைத்தார். பின்னர் 1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு, செயின்ட் மேரி தேவாலயம் அமைந்துள்ள பிவ்னா தெருவுக்கு  "பீர் ஸ்ட்ரீட்" என மறுபெயரிடப்பட்டது.

வானியல் கண்காணிப்பகம் நிறுவுதல்

ஹெவிலியஸ் ஜூன் 1, 1639 சூரிய கிரகணத்தைக் கண்டார்; இந்த ஆண்டு முதல் அவர் முறையான வானியல் அவதானிப்புகளைத் தொடங்கினார் மற்றும் அவரது குருவான க்ரூகரின் மரணத்தையும் சந்தித்தார். இது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. 1639 ஆம் ஆண்டிலிருந்து வானியலில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கத் தொடங்கினார். 1649 இல் அவரது தந்தையின் மரணம், மதுபானம் தயாரிக்கும் ஆலையின் அன்றாட ஓட்டத்திற்கான அவரது நேரத்தை மேலும் கோரியது என்றாலும், அது குறுகிய காலத்திற்கு உலகின் முன்னணி வானியல் ஆய்வகமாக மாறியதை உருவாக்க நிதியை அவருக்கு வழங்கியது. அவரது வீட்டில் ஒரு வானியல் கண்காணிப்பு நிலையத்தைக் கட்டுவதற்காக தனது குடும்பச் செல்வத்தை நிறையவே செலவழித்தார்.  அவரது பணிக்கு போலந்து மன்னர் மூன்றாம்  ஜான் சோபிஸ்கி,  தாராளமான ஓய்வூதியம் மூலம் நிதியுதவி செய்தார். 

1670களின் முற்பகுதியில், ஹெவிலியஸ், ஜான் ஃப்ளாம்ஸ்டீட் (1646-1719) மற்றும் பின்னர் ராபர்ட் ஹூக் (1635-1703) ஆகியோருடன் ஒரு சர்ச்சையில் ஈர்க்கப்பட்டார்.  அவர் தொலைநோக்கி மற்றும் மைக்ரோமீட்டர்களைப் பயன்படுத்தி விண்மீன்களின் நிலைகளை துல்லியமாக தீர்மானிக்க முடியும் என வாதிட்டார். ராயல் சொசைட்டியால் நியமிக்கப்பட்ட இளம் எட்மண்ட் ஹாலி (1656-1742) க்டான்ஸ்கில் ஹெவிலியஸுக்குச் சென்றபோது 1679 இல் விவாதம் சமநிலைக்கு வந்தது. இங்கிலாந்தில் இருந்து எடுத்துச் சென்ற அதிநவீன மைக்ரோமெட்ரிக் தொலைநோக்கி மூலம் ஹெவிலியஸின் நிலைப்பாடு துல்லியமானது என்பதை விஞ்ஞானி ஹாலி ராயல் சொசைட்டிக்கு உறுதிப்படுத்தினார்.

அவர் தனது 76வது பிறந்தநாளான ஜனவரி 28, 1687 அன்று க்டான்ஸ்கில் இறந்தார்.

ஹெவிலியஸின் விண்மீன் தொகுதிகளும், விண்மீன்கள் பட்டியலும்

வானில் தெரியும் கொஞ்சம் மங்கலான ஏழாவது பிரகாசம் அளவுள்ள விண்மீன்களைக் காணக்கூடிய அளவிற்கு ஹெவிலியஸுக்கு விதிவிலக்கான கூர்மையான பார்வை இருந்ததாகக் கூறப்படுகிறது. டைகோ ப்ராஹே (Tycho Brahe) வான்வெளி பொருள்களை துல்லியமாக மதிப்பிட்டவர். அவரின் வழிகாட்டலைப் பின்பற்றி, ஹெவிலியஸ் வானவியலின் மிகப் பெரிய அளவீட்டுக் கருவிகளையும்கூட தனியாகவே  உருவாக்கினார். மேலும், டைகோ ப்ராஹேவை விட துல்லியமாக, ஹெவிலியஸ் விண்மீன்களைப் பார்த்து அறிந்தார். அவரது வழக்கமான அடிப்படையில் 1 நிமிட வளைவு வரை அளவிடப்பட்ட அவரது நேரிடையான கண்பார்வை மூலம்  விண்மீன்களின் நிலைகளின் பிரகாசத்தை மற்றும் துல்லியத்தை அவரால் மேம்படுத்த முடிந்தது என்பதுதான் மிகவும் சிறப்பான அம்சமாகும்.

இரண்டாவது மனைவி எலிசபெத்தாவின் உதவி

1663 இல், ஹெவிலியஸின்  மனைவி கத்தரினா இறந்தார். எனவே, ஹெவிலியஸ் அடுத்த ஆண்டு 1664ம் ஆண்டு அவர் முப்பத்தாறு வயதிற்குள் கேத்தரினாவின் தங்கையான கேத்தரீனா எலிசபெத்தா கூப்மனை மணந்தார். அவர்களின் மூன்று மகள்களும் நீண்டகாலம் வாழ்ந்தனர். எலிசபெத்தா ஒரு பணக்கார வணிகரின் மகளாக இருந்தாலும், வழக்கத்திற்கு மாறாக நன்கு படித்த அவர், அவரது கணவர் ஹெவிலியஸின் கண்காணிப்பு இயக்கத்தில் கணிசமான பங்கை செலுத்தினார். அவருக்கு மிகவும் உதவியாக அவரது உதவியாளராக இருந்து கண்காணிப்பகத்தை நன்கு கவனித்துக் கொண்டார். எலிசபெத்தா தனது கணவரின் கண்காணிப்பகத்தில் மிகவும் உதவியாகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர், அங்கு ஹெவிலியஸின் கண்காணிப்பகத்திற்கு வருகை தரும் பல வானியலாளர்களுக்கு தொகுப்பாளினியாகவும் செயல்பட்டார். ஹாலி ஒருவேளை மிகவும் பிரபலமானவர், மேலும், அவரது கணவரின் மரணத்திற்குப் பிறகு எலிசபெத்தா வெளியிடப்படாத பல எழுத்துக்களைத் திருத்தி வெளியிட்டார்.

அவரது இரண்டாவது மனைவி எலிசபெத்தாவின் உதவியுடன்தான் இதுவரை யாருமே தயாரித்திராத துல்லியமான விண்மீன்களின் பட்டியலை ஹெவிலியஸ்  தொகுத்தார். அந்த காலத்திலேயே சுமார் 380 ஆண்டுகளுக்கு முன்னரே, வெறும் கண்ணால் பார்த்து, விண்மீன்களை கண்டறிந்து 1650, விண்மீன்களைப் பட்டியலிட்டு உள்ளார் என்றால் வியப்பாகத் தானே இருக்கிறது. 

தீயின் கங்குகளில் கண்காணிப்பு அறையும், ஹெவிலியஸின் எழுத்துப் பிரதிகளும்

1679 ஆம் ஆண்டில் செப்டம்பர் 26 அன்று, ஹெவிலியஸ் வீடும் கண்காணிப்பு அறையும் தீயில் எரிந்து அழிந்து போனது.  அவரது உழைப்பின் உன்னதமான வானியல் அட்லஸ், அவரது வாழ்க்கையின் உழைப்பும் நெருப்புக்கு இரையானது. இறுதியாக அவரின் கையெழுத்துப் பிரதிகள் எப்படியோ தப்பித்துக் கொண்டன. எனவே, 1690-இல் ஹெவிலியஸ் மனைவி எலிசபெத்தாவால், அவரது எழுத்துக்கள் திருத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது.

ஹெவிலியஸின் வாழ்க்கை பெரும் சோகத்துடனும் பெரும் அதிர்ஷ்டத்துடனும் வாசிக்கப்படுகிறது.

  • அவர் தனது விண்மீன் அட்லஸை வெளியிடுவதற்கு முன்பு, அவரது உதவியாளர் ஒருவரால் வேண்டுமென்றே ஏற்பட்ட தீ, விபத்தில், கண்காணிப்பகம், கருவிகள் மற்றும் பெரும்பாலான புத்தகங்கள் மற்றும் தரவுகளை இழந்தார். 
  • அதிர்ஷ்டவசமாக, சந்திரன் மற்றும் விண்மீன் அட்லஸிற்கான கையெழுத்துப் பிரதி மட்டும் எப்படியோ காப்பாற்றப்பட்டது.
  • பிரான்சின் மன்னர் பதினான்காம் லூயிஸ் மற்றும் போலந்தின் மன்னர் மூன்றாம் ஜான் சோபிஸ்கி ஆகியோர் புதிய கண்காணிப்பு நிலையத்தை கட்ட நிதியளித்தனர். சோபிஸ்கியின் ஆதரவிற்காக, ஹெவிலியஸ் 1684 இல் வானில் உள்ள ஒரு விண்மீன் தொகுதிக்கு அவரின் பெயரைச் சூட்டி "ஸ்கூட்டம்" விண்மீன் தொகுப்பை அறிமுகப்படுத்தினார்.
  • ஹெவிலியஸ் தனது தரவை மீண்டும் மறுகட்டமைக்கத் தொடங்கினார். அவர் ஸ்கூட்டம் கண்டுபிடித்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1687ம் ஆண்டு ஜனவரி 28ம் நாள் இறந்தார். அப்போது அவரது அட்லஸ் பாதி மட்டுமே அச்சிடப்பட்டிருந்தது.
  • ஹெவிலியஸ் அவரது சமகாலத்தவர்களால் கௌரவிக்கப்பட்டார்.
  • ஹெவிலியஸ் சூரியனின் வழியே புதனின் பயணம்/இடை நகர்வு  மற்றும் புதன் பற்றிய தகவல்களை வெளியிட்டார். சனிக்கோள்  மற்றும் அதன் நிலவுகளை வரைபடமாக வரைந்து காண்பித்தார். நமது சந்திரனின் தகவமைப்புக்ளையும் அதன் மலைகளையும், பள்ளங்களையும் பல அம்சங்களையும்  விவரித்தார்; அவைகளுக்கும் பெயரிட்டார். மேலும்  ஹெவிலியஸ் தனது கண்களால், விண்மீன்களைக் கணித்து, அவற்றை அவரது 1690 விண்மீன் அட்டவணையாக வெளியிட்டார். மேலும், அந்த  அட்லஸில் வானத்தில் வலம் வரும் பத்து புதிய விண்மீன் தொகுதிகளையும் சேர்த்தார்.

தற்போதுள்ள ஏழு ஹெவிலியஸ் விண்மீன்கள்

  1. கேன்ஸ் வெனாட்டிசி (Canes Venatici) என்ற விண்மீன் தொகுதி- வேட்டை நாய்கள்,
  2. லியோ மைனர் விண்மீன் தொகுதி -சிங்கக் குட்டி
  3. லாசெர்டா(Lacerta) விண்மீன் தொகுதி- பல்லி
  4. வல்பெகுலா (Vulpecula) விண்மீன் தொகுதி, நரியும் வாத்தும்
  5. செக்ஸ்டன்ஸ் (Sextans),  முதலில் யுரேனியாவின் செக்ஸ்டன்ட்(Sextans Uraniae) விண்மீன் தொகுதி. ஹெவிலியஸ் கண்டுபிடித்த மற்றும் நட்சத்திரங்களை வரைபடமாக்கப் பயன்படுத்தப்படும் பிரபலமான கருவிகளில் ஒன்றாகும், இது வானியல் அருங்காட்சியகமான யுரேனேவின் நினைவாகவும்  பெயரிடப்பட்டது.
  6. ஸ்கூட்டம்(Scutum) விண்மீன் தொகுதி, ஒரு காலத்தில் Scutum Sobiescianum, Sobieski's Shield என்று அழைக்கப்பட்டது, ஹெவிலியஸுக்கு தாராளமாக நிதியுதவி செய்த போலந்தின் மன்னரான மூன்றாம் ஜான் சோபிஸ்கியின் நினைவாக இந்த பெயரை சூட்டினார். .
  7. பின்னர் லின்க்ஸ் (Lynx), லின்க்ஸ் என்பது ஹெவிலியஸின் கூரிய பார்வையின் நினைவாக பெயரிடப்பட்டது.
  8. வானியல் சமூகத்தால் கைவிடப்பட்ட மூன்று விண்மீன்கள் செர்பரஸ், மோன்ஸ் மேனலஸ் மற்றும் முக்கோணம் மைனஸ் ஆகும்.
  9. மேலும், ஒரு விண்மீன் மஸ்கா பொரியாலிஸ், ஹெவிலியஸால் மட்டுமே மறுபெயரிடப்பட்டது.
  10.  சில குறிப்புகள் இந்த ஹெவிலியஸின் பதினொன்றாவது விண்மீன் கூட்டத்தைக் கருதுகின்றன.
  11. ப்ரிகாம் யங் யுனிவர்சிட்டி பிரஸ் (1971) வெளியிட்ட ஜோஹன்னஸ் ஹெவெலியஸ் மற்றும் அவரது விண்மீன்களின் பட்டியலில் இருந்து ஹெவிலியஸைப் பற்றி நாம்  அறியலாம். ஹெவிலியஸின் கூடுதல் தகவல்கள் என்பது, வௌலா சரிடாகிஸ், ஜிம் ஃபுச்ஸ், ரிச்சர்ட் டிபன்-ஸ்மித் மற்றும் விக்கிபீடியா ஆகியோரால் கொடுக்கப்பட்டுள்ளன.
  12. யுனைடெட் ஸ்டேட்ஸ் கடற்படை கண்காணிப்பகம் ஹெவிலியஸின் கருவிகளின் படங்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது.

செலினோகிராஃபியா & கண்காணிப்பகம்

1644 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி புதனின் நகர்வுகளை ஒவ்வொரு கட்டமாக  கவனிப்பதில் ஹெவிலியஸ் வெற்றி பெற்றார். அவரது சூரிய அவதானிப்புகள் சிறப்பானவை. அவரது வெளியீடுகளில் மிகவும் பாராட்டப்பட்டது, அவரே முதன்முதலில் கணித்த சந்திரனின் மேற்பரப்பு தகவமைப்பு. அதன் பெயர்: 1647ல் "செலினோகிராஃபியா".

செலினோகிராஃபியா என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை  கோபர்நிக்கஸுக்குப் பிறகு மிகவும் புதுமையான போலந்து வானியலாளர் ஹெவிளியஸாளல் உருவாக்கப்பட்டது. செலினோகிராஃபியா என்பது சந்திர வரைபடங்கள் மற்றும் வரைபடங்களின் முதல் புத்தகம், நிலவின் பல்வேறு கட்டங்களை விரிவாக உள்ளடக்கியது. சந்திரனின் மேற்பரப்பில் மனிதர்கள் காலடி எடுத்து வைப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு, ஹெவிலியஸ் தனது தொலைநோக்கி மூலம் பார்க்கக்கூடிய ஒவ்வொரு பள்ளம், சரிவு மற்றும் பள்ளத்தாக்குகளை ஆவணப்படுத்தினார். அவர் இந்த அவதானிப்புகளையும், மற்றவற்றையும் ஒரு விரிவான நட்சத்திர அட்டவணைக்காக, வீட்டில் தயாரிக்கப்பட்ட கூரை கண்காணிப்பகத்திலிருந்து தனது சொந்த உபகரணங்களைப் பயன்படுத்தி உருவாக்கினார் என்பது மிகவும் பிரமிப்பான விஷயமாகும். ஹெவிலியஸின் முதல் கண்காணிப்பகம் என்பது வீட்டின் மேல் உள்ள ஒரு சிறிய மேல் அறை தான். அது 1644-இல் அவரது வீட்டில் ஒரு சிறிய கூரை கோபுரத்தைச் சேர்த்தார். பின்னர் இரண்டு கண்காணிப்பு வீடுகளுடன் ஒரு தளத்தை அமைத்தார், அதில் ஒன்றை சுழற்ற முடியும். 

சூரியப்புள்ளிகள் மற்றும் வால்மீன்கள்

பின்னர் 1668 "கோமெட்டோகிராஃபியா" (வால்மீன்கள் பற்றியது) மற்றும் 1679 ஆம் ஆண்டு "மச்சினே கோலிஸ்டிஸ்" ஆகியவற்றின் பிற்சேர்க்கைகளாக வெளியிடப்பட்டன. ஹெவிலியஸ் தனது சூரியப் புள்ளிகளை 1642-1645 வரை அவதானித்து சூரிய சுழற்சி காலத்தை தனது முன்னோடிகளை விட மிகச் சிறந்த துல்லியமாக தீர்மானிக்கப் பயன்படுத்தினார். சூரிய புள்ளிகளைச் சுற்றியுள்ள பிரகாசமான பகுதிகளுக்கு "ஃபாகுலே" என்ற பெயரையும் அவர் உருவாக்கினார். இதுவும்கூட  இன்றுவரை வாழ்கிறது. 1642-1679 காலகட்டத்தை உள்ளடக்கிய அவரது சூரிய புள்ளி அவதானிப்புகள், சூரிய செயல்பாட்டின் "மவுண்டர் மினிமம்"(Maunder Minimum) இன் முதல் பகுதியையும், அதற்கு முந்தைய காலப்பகுதியையும் உள்ளடக்கியதால் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

லின்க்ஸ் விண்மீன் கூட்டம்

லின்க்ஸ் என்பது 1680களில் போலந்து வானியலாளர் ஜோஹன்னஸ் ஹெவெலியஸால் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு நவீன விண்மீன்களில் ஒன்றாகும். ஹெவிலியஸ் யார், லின்க்ஸ் என்ற பெயர் எப்படி வந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான கதை.

லின்க்ஸின் கண்கள்

வானியல் குறிப்பிடத்தக்க மனிதர்களால் நிரம்பியுள்ளது: கோட்பாட்டாளர்கள், நட்சத்திரக்காரர்கள், வானியற்பியல் வல்லுநர்கள், அண்டவியலாளர்கள், விண்வெளி வீரர்கள் மற்றும் பலர். ஹெவிலியஸ் கடைசியாக நேரடியாக வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய பார்வையாளர்களில் ஒருவர். தொலைநோக்கிகளுக்கு மரியாதை கிடைத்தபோது தொலைநோக்கி இல்லாமல் விண்மீன்களை வரைபடமாக்க அவர் தேர்வு செய்தார். ஹெவிலியஸ் இறப்பதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் தொலைநோக்கியால் விண்மீன்களை அவரைப் போல துல்லியமாக வரைபடமாக்க முடிந்தது. உண்மையில், அவர் தனது கூர்மையான பார்வைக்காக உலகப் புகழ்பெற்றவர் மற்றும் "ஒரு லின்க்ஸின் கண்கள்" கொண்டவர் என்று விவரிக்கப்பட்டார்.

புதன் இடை நகர்வு, சூரியப்புள்ளிகள் மற்றும் சனிக்கோளின் நிலவுகள் 

ஹெவிலியஸ் 1611 இல் பிறந்தார், அதே ஆண்டு கலிலியோ வியாழனின் நிலவுகள் பற்றிய தனது தொலைநோக்கி பற்றிய அவதானிப்புகளை ஜேசுட் கல்லூரியோ ரோமானோவிடம் வழங்கினார். அகாடமியா டீ லின்சியில் கற்பிக்கப்பட்டார். கலிலியோ, ஹெவிலியஸ் க்ரூகர், ஃபிளாம்ஸ்டீட் மற்றும் ஹாலி ஆகியோருடன் சமகாலத்தவராக இருந்தார். அவர்கள் அனைவரும் அவரை ஒரு மாஸ்டர் என்று கருதினர். அவர் சூரியனின் குறுக்காக புதன் செல்லும் பாதையை, புதன் கோள் இடை நகர்வு என்ற பெயரில் வரைபடமாக்கினார். மேலும், புதன் மற்றும் சூரியனின் பல பண்புகளையும் விவரித்தார். சூரியப் புள்ளிகளைக் கண்டறிந்து அதனை வரைபடமாக்குவதன் மூலம் சூரியனின் சுழற்சி காலத்தையும்  துல்லியமாக கணக்கிட்டார். ஹெவிலியஸ்  சனி மற்றும் அதன் நிலவுகளை வரைபடமாக்கினார்.

வால்மீன் கண்டுபிடிப்பும் அதன் நகர்வும்

ஹெவிலியஸ் மேலும் நான்கு வால்மீன்களைக் கண்டுபிடித்தார். அவற்றின் சுற்றுப்பாதையைக் கணக்கிட்டு வால்மீன்கள் பரவளைய சுற்றுப்பாதையைப் பின்பற்றுகின்றன என்றும் கணக்கிட்டார். நிலவின் மேற்பரப்பின் பக்கத்தை பூமியிலிருந்து பார்ப்பதுபோல வரைபடமாக்கினார். உண்மையில், சந்திரனில் உள்ள பெரும்பாலான முக்கிய அம்சங்களான மலைகள் மற்றும் பள்ளங்களுக்கு ஹெவிலியஸ்  பெயரிட்டுள்ளார். இருப்பினும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. நிலவின் மேற்பரப்பின் 'மென்மையான', இருண்ட தாழ்நில - கரடுமுரடான, பிரகாசமான மேட்டு நிலப்பரப்பு இருப்பதை அவர் கண்டுபிடித்தார். சந்திரனில் உள்ள மலைகளின் உயரங்களைத் துல்லியமாக அளந்தார். அவைகளின்  தாழ்நிலங்களுக்கு மரியா(maria) அல்லது கடல் என்று பெயரிட்டார்.

வால்மீன்கள் 

ஹெலிவியஸ் 1652 ஆம் ஆண்டு வால்மீன்கள் பற்றிய முதல் புத்தகத்தை எழுதினார். அவர் இடமாறுகளை மதிப்பிடுவதற்கான ஒரு புத்திசாலித்தனமான ஆனால் துல்லியமற்ற வழியைக் கண்டுபிடித்து வைத்து இருந்தார். மேலும் வால்மீனின் தூரத்தை பெரிதும் குறைத்து மதிப்பிட்டார். பின்னர் ஹெவிலியஸ் வால்மீன்களின் இயற்பியல் அமைப்பு பற்றியும்  எழுதினார். ஆனால், அதிக நுண்ணறிவு இல்லாமல்-உதாரணமாக, தலைக்கு ஒரு வட்டு போன்ற (கோள வடிவத்திற்கு மாறாக) அமைப்பு. VI, VII மற்றும் XII புத்தகங்களில் அவர் கணிசமான தகவல்களை சேகரித்தார்.

குறிப்பாக இரண்டு முந்தைய நூற்றாண்டுகளின் வால்மீன்கள் பற்றி, அவர் வால்மீன்கள் என்பவை அமுக்கப்பட்ட கோள்களின் வெளியேற்றங்களாக இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார். மேலும், அவை சூரியப் புள்ளிகளுக்கு காரணமான பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் நம்பினார், இதனால் திசைவேகங்கள் மற்றும் சுற்றுப்பாதைகளில் வெளிப்படையான சிரமங்களுக்கு ஆளானார்.

வால்மீன் இயக்கங்களின் இயற்பியல் காரணங்களை அவர் கேள்விக்குட்படுத்தியபோது, ​​ஊடாடும் வெளியேற்றங்களால் வழங்கப்பட்ட தூண்டுதல்களின் அடிப்படையில் தெளிவற்ற மற்றும் தரமான விளக்கத்தைத் தாண்டி அவரால் கடக்க முடியவில்லை. நிலப்பரப்பு எறிகணைகளின் பரவளைய இயக்கத்துடன் ஒப்பிடுவதன் மூலம் அவர் வால்மீன்களுக்கான அடிப்படை பரவளைய இயக்கத்தை முடிவு செய்தார். சரியான நேரத்தில் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, ​​​​அது காமெட்டோகிராஃபியாவின் கருதுகோளின் விளைவாக இல்லை; மேலும் ஹெவிலியஸுக்கு முன்னுரிமை அளித்தவர்களுக்கும் இது பற்றி எதுவும் தெரியாது.மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர்.

சூரியனைச் சுற்றும் பூமி பற்றி சொன்னவர்

பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்ற கோப்பர்நிக்கஸ் நம்பிக்கையை அவர் கொண்டிருந்தார். இந்த நம்பிக்கைக்காக கலீலியோ சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் கூட ஹெவிலியஸ் துணிந்து, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று சொன்னார். மேலும் அவரது மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று , அவர் தனது வெறும் கண்களைப் பயன்படுத்தி விண்மீன்களை சரியாக வரைபடமாக்கினார் மற்றும் வானத்தில் பதினொரு விண்மீன் தொகுதிகளையும் கண்டுபிடித்துச் சேர்த்தார்.

உலகின் சிறந்த கண்காணிப்பகம்

அவர் தனது வீடுகளில் ஒன்றில் ஒரு கண்காணிப்பு அறையையும் மற்ற மூவரின் கூரையின் குறுக்கே ஒரு கண்காணிப்பு தளத்தையும் கட்டினார். ஹெவிலியஸ் உயிருடன் இருந்தபோது, இந்த தளம் உலகின் சிறந்த கண்காணிப்பு மையமாக இருந்தது. ஹெவிலியஸ் தானாகவே வானியல் கருவிகளைக் கண்டுபிடித்து உருவாக்கி பயன்படுத்தினார். அவைகளே அவருடைய காலத்தில் உலகில் மிகவும் துல்லியமானது. அவரது கருவிகளில் நாற்கரம், முதல் நாற்கரம், செக் ஸ்டான்ட் மற்றும் பல தொலைநோக்கிகள் இருந்தன. அவை, பல கூரை உச்சிகளுக்கு குறுக்கே பொருந்தும் மற்றும் பலரால் கையாளப்பட வேண்டியிருந்தது. இந்தக் கருவிகளின் துல்லியம் குறித்து அவர் ஒருபோதும் மகிழ்ச்சியடையவில்லை. எனவே, அவர் மேலும் மேலும் வெவ்வேறு கருவிகளைக் கொண்டு அவர் செய்த ஒவ்வொரு அளவீட்டையும் திரும்பத் திரும்பச் செய்தார். ஒவ்வொரு அளவையும் வெவ்வேறு வழிகளில் அளந்தார். இறுதியில். அவர் தனது தொலைநோக்கிகளைவிட தனது கண்களையே அதிகம் நம்பியிருந்தார்.

மேலும், அன்றைய எந்த தொலைநோக்கி பார்வையையும்விட அவரது பார்வை மிகவும் துல்லியமானது என்பதை பல சோதனைகள் மூலம் நிரூபித்தார். ஹெவிலியஸின் வெறும் கண் அளவீடுகள் நவீன அளவீடுகளின் 27 வில் வினாடிகளுக்குள் இருப்பதாக உண்மையில் காட்டப்பட்டுள்ளது. அவரது விண்மீன் பட்டியல் அட்லஸ், அவரது மரணத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வரை உலகில் மிகவும் அதிகமான பயன்பாட்டில் இருந்தது.

ஹெவிலியஸ் மூன்று கடினமான பணிகளை மேற்கொண்டார்

  1. தனது சொந்த வானியல் கருவிகளை உருவாக்குதல்,
  2.  பல வெளிநாட்டு வானியலாளர்களுடன் தொடர்புடையது மற்றும் குடிமைப் பதவியை வகித்தார்,
  3. முதலில் கௌரவ மாஜிஸ்திரேட்டாகவும் (1641) பின்னர் (1651) நகர கவுன்சிலராகவும் இருந்தார்.  

தீயில் தப்பிப் பிழைத்தவை

செப்டம்பர் 1679 இல் ஹெவிலியஸ் கணிசமான சோகத்தை சந்தித்தார், அவர் நாட்டில் இல்லாத நேரத்தில், அவரது டான்சிக் வீடு மற்றும் கண்காணிப்பகம், அவரது கருவிகள் மற்றும் அவற்றின் உற்பத்திக்கான பட்டறை, அவரது பெரும்பாலான புத்தகங்கள் மற்றும் காகிதங்கள் மற்றும் அவரது அச்சகததில்  தீ பிடித்து அனைத்தும் அழிந்து போனது. இது அவருக்கு ஒரு பேரிடியை உருவாக்கியது.  ஒரு பெரிய நிதி அடியை விட அதிகமாக இருந்தது, ஆனால் ஹெவிலியஸ் உடனடியாக சேதத்தை சரிசெய்யத் தொடங்கினார், வெளிப்படையாக பல தரப்பிலிருந்து நிதி உதவியைப் பெற்றார். ஆகஸ்ட் 1681 வாக்கில், கண்காணிப்பு மையம் மீண்டும் கட்டப்பட்டது மற்றும் மறுசீரமைக்கப்பட்டது, இருப்பினும் குறைவான கருவிகள் மற்றும் இவை அழிக்கப்பட்டதை விட தாழ்ந்தவை. சேமித்த பொருட்களின் பட்டியல் சில ஆர்வமுடையது மற்றும் அவரது புத்தகங்களின் பெரும்பாலான பிணைப்பு நகல்களை உள்ளடக்கியது, அவருடைய நிலையான நட்சத்திரங்களின் பட்டியல், அவருடைய அது பத்திரிகையில் இருந்தது. மற்றும் வானியல் பொருட்களின் pala தகவல்கள் உட்பட பல மதிப்புமிக்க கையெழுத்துப் பிரதிகள். பதின்மூன்று கடிதத் தொகுதிகள் மற்றும் கெப்லரின் அனைத்து கையெழுத்துப் பிரதிகளும் மீட்கப்பட்டன.  மீட்கப்பட்ட பிற படைப்புகள், பின்னர் வெளியிடப்பட்டன.  அந்நூலின் முன்னுரையில் தீ பற்றிய விளக்கம் உள்ளது. ஹெவிலியஸ் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பேரழிவிலிருந்து தப்பினார்; ஆனால் அவரது உடல்நிலை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டது மற்றும் அவருக்கும் ராபர்ட் ஹூக்குடனான சர்ச்சையால் முன்னேற்றம் அடையவில்லை, பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் அதில் ஈர்க்கப்பட்டார். அவர் தனது எழுபத்தி ஆறாவது பிறந்தநாளில், 1687,ஜனவரி  28ம் ன் நாள்   இறந்தார்.

ஹெவிலியஸ் தொலைநோக்கி

ஹெவிலியஸ் தொலைநோக்கியுடன் பயன்படுத்திய மற்றொரு சாதனம் உச்சக்கட்டத்திற்கு அருகில் கண்காணிப்பதற்காக ஒரு வலது கோண கண் இமை ஆகும். ஹெவிலியஸ் தனது கருவியில் கார்டு நிறுத்தங்களைப் பயன்படுத்தும் பழக்கத்தில் இருந்தார். மேலும், அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் அவர் ஒரு வரையறுக்கப்பட்ட வட்டுடன் விண்மீன்களை உணர்ந்ததாகக் கூறினார். குறிப்பிடப்பட்ட மிகப்பெரிய தொலைநோக்கி பன்னிரெண்டு (டான்சிக்) அடி நீளம் மற்றும் தோராயமாக 50X உருப்பெருக்கம் கொண்டது. (பின்னர் மேற்கோள் காட்டப்பட்ட அனைத்து நீளங்களும் ஒரு டான்சிக் கால் அலகுகளில் உள்ளன, இது தோராயமாக பதினொரு அங்குலங்களுக்குச் சமம்.)

தொலைநோக்கி ஒரு இருண்ட அறையின் சுவரில் பொருத்தப்பட்ட ஒரு சாக்கெட்டுக்குள் ஒரு பந்தின் மையத்தைத் துளைத்தது. இதனால் சூரியனின் படத்தை நீல நிற காகிதத்தில் ஒரு நகரக்கூடிய ஈசல் பொருத்தப்பட்டது. அவரது முதல் ஹெலியோஸ்கோப்பின் சில மாற்றங்கள் செய்த பின்னர் புத்தகத்தில் அறிவிக்கப்பட்டன, அதில் அவை 1661 இல் புல்லியால்டஸ் (பௌல்லியாவ்) உடன் கலந்தாலோசித்ததன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது,

ஹெவிலியஸ் சந்தேகத்திற்கு இடமின்றி தனது அவதானிப்புகளின் வெற்றிக்குக் கருவிகளை வடிவமைத்தல், தயாரித்தல் மற்றும் வேலைப்பாடு ஆகியவற்றில் திறமை மிக்க வானியலாளராக இருந்தார். மேலும், அவர் தனது நுட்பங்களை விவரித்த பாணி என்பது அவரது சமகாலத்தவர்களுக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது.



Read in source website

கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் குறித்து முன்மொழிந்த உறுதிமொழி, ஒரு புதிய கொள்கையாக உருப்பெறும் நாளை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறது. டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு மாநிலப் பெண்களுக்கான புதிய கொள்கை வரைவு, மக்களின் கருத்தறிவதற்காக முன்வைக்கப்பட்டு, அதற்கான இறுதித் தேதி நேற்றுடன் முடிந்துள்ளது. இந்நிலையில், இந்த வரைவு குறித்துத் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அனைத்தையும் கருத்தில்கொண்டு கொள்கை விரைவில் இறுதிவடிவம் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பெண்களுக்கான புதிய கொள்கையின் வரைவு வெளிவந்தபோதே, அது தமிழ்நாட்டில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கவனத்தை ஈர்த்தது. குடும்பச் சூழலின் காரணமாகப் பணியிலிருந்து விலகிய பத்தாயிரம் பெண்களுக்கு மீண்டும் பணிவாய்ப்பைப் பெற்றுத்தரும் வகையில் அவர்களது தொழில்திறன்களை மேம்படுத்த இந்த வரைவு அறிக்கை உறுதியளித்துள்ளது. மாதவிடாய் நின்றுவிட்ட (மெனோபாஸ்) காலத்தில், பணியில் இருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் சிறப்பு விடுப்புகளை வழங்கவும் இவ்வரைவு உத்தேசித்துள்ளது.

தமிழ்நாட்டில் இது நடைமுறைக்கு வரும்போது, உலகத்துக்கே அது முன்னுதாரணமாக இருக்கும். உழைப்புச் சக்தியில் பெண்களின் பங்கேற்பானது, அவர்களது உடல்நலத்துடன் நேரடியாகத் தொடர்புகொண்டது என்பதை ஏற்றுக்கொள்ளும் இந்த வரைவு, மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக இருந்தாலும் அமைப்புசார் பணிகளில் உள்ள பெண்களுக்கு மட்டுமே அது பயன்படக் கூடியதாக இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. எனினும், அரசின் ஆதரவு தேவைப்படும் அனைத்துப் பெண்களையும் அமைப்புசாரா தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள் என்று பல்வேறு பிரிவினராக இந்த வரைவு வகைப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.

பெண்களின் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் குறைப்பது, அவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது, மாணவிகளுக்குத் தற்காப்புப் பயிற்சிகளை அளிப்பது, பெண்களுக்குப் போக்குவரத்து வசதிகளை உறுதிப்படுத்துவது, ஒரு கோடிப் பெண்களைச் சுய உதவிக் குழுக்களின் கீழ் ஒன்றிணைப்பது, மகளிர் வங்கியை நிறுவி, கடன்பெறும் வசதிகளை உருவாக்குவது என்று இந்தக் கொள்கை துறைவாரியாகப் பெண்களின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் இலக்குகளாகக் கொண்டுள்ளது.

2001-ல் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசியக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டிருந்தாலும், மாநில அளவில் பெண்களுக்கான ஒரு கொள்கை வகுக்கப்படுவது முன்னுதாரணம் இல்லாத ஒரு நிகழ்வாகும். வீடுகளில் பாலின சமத்துவமின்மையை மதிப்பிடும்வகையில் வீடுதோறும் கணக்கெடுப்புகளை நடத்தவும் இந்த வரைவு திட்டமிட்டுள்ளது. சுயமரியாதையை ஒரு அரசியல் கொள்கையாக மட்டுமின்றி, வாழ்க்கைக் கொள்கையாகவும் வரித்துக்கொள்ளும் சூழலை இந்தக் கொள்கை உருவாக்க முனைகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த வரைவின் மீது அனைத்துத் தரப்பினரும் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பதற்கான கால அளவை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பது குறித்தும் பரிசீலிக்கலாம்.



Read in source website

கடந்த 28.01.2022 அன்று சென்னை பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் திருவண்ணாமலை மாவட்டம், வீரளூர் கிராமத்தில் நிகழ்ந்த சாதிக் கொடுமை பற்றிய கள ஆய்வு அறிக்கையை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டார். அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் நானும் கலந்துகொண்டேன்.

அந்தக் கிராமத்திலிருந்து பாதிக்கப்பட்ட பட்டியலின அருந்ததியர் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மேற்கண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அறிக்கை வெளியிட்ட பிறகு, பாதிக்கப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் சிலர் பேசினார்கள். “நாங்கள் இந்த சாதியில் பிறந்தது தப்பா? செத்த பொணத்த புதைப்பதற்குப் பொதுப் பாதை கேட்பது தவறா?” என்று கண்ணீரும் கம்பலையுமாக அவர்கள் பேசியதை மிகுந்த கவலையோடு பார்த்தோம்... கேட்டோம். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...’ என்ற குறளை நான் மேற்கோள்காட்டிப் பேசியது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவில்லை.

சில தினங்களுக்கு முன்பு குடியரசு தின விழாவை நாடே கொண்டாடியது. அது அரசமைப்பு நடைமுறைக்கு வந்த நாள். ஆனால், ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் இப்போதும் கானல் நீராகவே உள்ளன. வீரளூர் கிராமத்தில் பட்டியலின அருந்ததிய மக்களில் யாராவது இறந்தால், சடலத்தை மயானத்துக்கு எடுத்துச்செல்லப் பொதுச் சாலையைப் பயன்படுத்த முடியாமல் மிகவும் குறுகலான, ஒதுக்குப்புறமான பாதை வழியாகக் கொண்டுசெல்ல வேண்டிய அவலம் இருந்தது. இந்தக் கொடுமைகளுக்கு எதிராகப் பட்டியலின மக்கள் தொடர்ந்து போராடி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் வரை தலையீடு செய்து, கடந்த ஜனவரி 12-ம் தேதி காவல் துறையின் பாதுகாப்புடன் நாட்டான் என்பவரின் சடலம் பொதுச்சாலை வழியாக மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. பட்டியலினத்தவர் ஒருவரின் சடலம் அந்தப் பொதுச் சாலை வழியாக எடுத்துச்செல்லப்பட்டது இதுவே முதன்முறை.

கடந்த ஜனவரி 15-ம் தேதி பட்டியலின வகுப்பைச் சார்ந்த அமுதா என்ற பெண் இறந்துவிட்டார். அவரது சடலத்தைப் பொதுப்பாதையில் எடுத்துச்செல்ல பட்டியலின சாதி அல்லாதவர்கள் ஆட்சேபணை தெரிவித்த காரணத்தால் அதிகாரிகள் முன்பு அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே, இடைநிலை சாதியைச் சார்ந்தவர்கள் பட்டியலின மக்களைக் கேவலமாகப் பேசி அடித்து விரட்டியதோடு, அவர்களின் குடியிருப்புக்குள் புகுந்து வீடுகள், வீட்டு உபயோகப் பொருட்கள், இரண்டு சக்கர வாகனங்கள் என அவர்களின் உடமைகளை அடித்து நொறுக்கியுள்னர்.

இந்தத் தாக்குதலில் ஆயுதங்களால் வெட்டப்பட்டு 7 பேர் தலை, கை, கால்களில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். வருவாய்த் துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் அங்கே இருந்தும் இந்த வன்முறைத் தாக்குதலைத் தடுத்துநிறுத்தவில்லை. முன்கூட்டியே தகவல் கிடைத்தும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளத் தவறியுள்ளனர்.

மேற்கண்ட வன்முறைச் சம்பவத்துக்குப் பிறகு, இடைநிலை சாதியைச் சார்ந்தவர்கள் பட்டியலின மக்களுக்கு விவசாய வேலைகளைத் தர மறுத்துள்ளனர். அந்தக் கிராமத்தில் பெரும்பான்மையான பட்டியலின மக்கள் இடைநிலை சாதிகளைச் சார்ந்த விவசாயிகளின் நிலங்களில் கூலி வேலை செய்வதுதான் அவர்களுக்கு வாழ்வாதாரம். இந்த வாழ்வாதாரம் தற்போது மறுக்கப்படுகிறது.

தங்கள் உரிமைகளுக்காகப் பட்டியலின மக்கள் குரல்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு விவசாய வேலையை மறுப்பது ஒருவகையிலான நிர்ப்பந்தமே. வீரளூர் கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 4,812. (2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி) இதில் 1,146 பேர் பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர்கள். ஆறு பேர் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான கிராமங்களில் மக்கள்தொகையில் பட்டியலின மக்கள் சிறுபான்மையினர்தான். பெரும்பான்மையான பட்டியலின மக்கள் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாகவே உள்ளனர். கூலி வேலைதான் அவர்களின் வாழ்வாதாரம். வாழ்வாதாரமும் மறுக்கப்படுகிறது, சாதிக் கொடுமையும் நிகழ்த்தப்படுகிறது.

வெளியிடப்பட்ட கள ஆய்வறிக்கையில் சொல்லப்படும் தகவல் நமது நெஞ்சைச் சுடுகிறது. இடைநிலை சாதிகளைச் சார்ந்தவர்கள் அரசியல் வேறுபாடின்றி எல்லாம் ஒன்றுதிரண்டு பட்டியலின மக்களைத் தாக்கியிருக்கிறார்கள். இதில் விரல்விட்டுச் சிலர் விதிவிலக்காக இருந்திருக்கலாம். பெரும்பான்மையானவர்கள் இத்தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கள ஆய்வறிக்கையில் உள்ள கசப்பான இந்த உண்மையைப் படிக்கும்போது பெரியார் செய்த எச்சரிக்கை நினைவுக்கு வருகிறது.

“பார்ப்பனர்கள் நமக்குச் செய்யும் கொடுமையை விட சூத்திரர்களாகிய நாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் செய்யும் கொடுமை பன்மடங்கு அதிகம் என்று சொல்லுவேன்” என்று இடைநிலை சாதிகளைச் சார்ந்தவர்களைச் சாடினார் பெரியார். சாதிய அடுக்கில் சூத்திரர்களாக வைக்கப்பட்டிருக்கும் இடைநிலை சாதியைச் சார்ந்தவர்கள் தங்களுக்குக் கீழே வைக்கப்பட்டிருக்கும் பட்டியலின மக்களை மதிக்க வேண்டும், சமமாக நடத்த வேண்டும், சாதிரீதியில் கொடுமைப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் பெரியார் அவருக்கே உரிய பாணியில் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்திருக்கிறார். ஆனாலும், பெரியார் எச்சரிக்கை இன்னும் எச்சரிக்கையாகவே இருக்கிறது.

தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட்டுவிட்டது, அதைக் கடைபிடிப்பது தடைசெய்யப்படுகிறது என்ற அரசியல் சட்டப் பிரிவு, குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் பட்டியலின மக்களுக்கு உரிமைகள் வழங்கினாலும் அந்த உரிமைகள் நடைமுறையில் மறுக்கப்படுவது தொடர்கதையாக நீடித்துவருகிறது.

சாதி ஆணவத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது மட்டும் போதாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசமைப்பு வழங்கிடும் உரிமைகளை உத்தரவாதப்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு உணர்த்த வேண்டும், உள்வாங்க வைக்க வேண்டும்.

அரசமைப்பு நிர்ணய சபையின் கடைசிக் கூட்டத்தில் அதன் வரைவுக்குழுத் தலைவராக இருந்த அம்பேத்கர் எச்சரித்ததை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

“இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் மேல்பூச்சாகவே இருக்கிறது. அடிப்படையில் அது ஜனநாயகமற்றது.”

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், பட்டியலின மக்களுக்கு உரிமைகளை வழங்கிடும் அரசமைப்பு நடைமுறைக்கு வந்து 73 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த அவலநிலை நீடிக்க அரசும் மக்களும் அனுமதிக்கலாமா?

- ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் - சிபிஐ(எம்).

தொடர்புக்கு: grcpim@gmail.com



Read in source website

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில், கரோனா மூன்றாம் அலையின் வீரியம் குறைந்துவருவதால், வார இறுதிப் பொதுமுடக்கம் உள்ளிட்ட பலதரப்பட்ட கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பிவரும் நிலையில், புதிய கரோனா வைரஸ் ‘நியோகோவ்’ மனிதர்களுக்குப் பரவ வாய்ப்புள்ளது என்று சீன அறிவியலர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை இணையவழியில் பரவி, அனைவரையும் அச்சமூட்டுகிறது.

கடந்த 2019-ன் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸின் முதல் அலை பரவுவது கண்டறியப்பட்டது. அங்கிருந்து அது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் கரோனா வைரஸில் ஏற்பட்ட மரபணுப் பிறழ்வுகள் காரணமாக, டெல்டா, டெல்டா பிளஸ் எனப் புதிய வேற்றுருவங்கள் உருவாகி, இரண்டாம் அலையைத் தோற்றுவித்தன. இவற்றின் தாக்குதல் வேகம் அதிகமாக இருந்ததால் உயிர்ச் சேதமும் பல மடங்கு அதிகரித்தது. கடந்த சில மாதங்களாக இந்தியா உட்பட உலகம் முழுவதிலும் ஒமைக்ரான் எனும் புதிய கரோனா வேற்றுருவம் அதிவேகமாகப் பரவியது. இந்த மூன்றாம் அலை விரைவிலேயே உச்சம் தொட்டு, இப்போது தணிந்துவருகிறது.

இதில் உயிர்ப் பலிகள் அவ்வளவாக இல்லை என்பது ஆறுதல். இந்தச் சூழலில் சீனாவின் நச்சுயிரி ஆய்வகமும் சீன அறிவியல் அகாடமி ஆய்வாளர்களும் கரோனா குடும்பத்தைச் சேர்ந்த ‘நியோகோவ்’ எனும் வைரஸ் குறித்து ஆய்வுசெய்து, விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், “ ‘வெஸ்பர்’ எனும் ஒரு வகைத் தென்னாப்பிரிக்க வௌவால்களிடம் (Vesper bats) ‘நியோகோவ்’ வைரஸ் காணப்படுகிறது. அந்த வைரஸில் ஒரு மரபணு மாற்றம் ஏற்பட்டால்கூட மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்றிக்கொள்ளும் ஆபத்து உள்ளது. இது அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் வைரஸாகும். அதாவது, இவ்வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 3 பேரில் ஒருவர் உயிரிழக்க நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதான் இப்போது உலகளாவிய அச்சத்துக்குக் காரணமாகிறது. அந்த அறிக்கையை முழுவதுமாகப் படித்தால், இந்த அச்சம் தேவையில்லை என்பது புரியும் என்பதே அநேக வைரஸ் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. எப்படி?

‘நியோகோவ்’ என்பது என்ன?

‘நியோகோவ்’ என்பது புதிய கரோனா வைரஸ் (New coronavirus) எனும் பொருளில் பெயர் சூட்டப்பட்ட வைரஸ். முதலில், இந்தப் பெயரே பொருத்தமில்லை என்கின்றனர் வல்லுநர்கள். காரணம், ‘நியோகோவ்’ புதிய வைரஸ் அல்ல. இது ஏற்கெனவே 2012-ல் மத்தியக் கிழக்கு நாடுகளைக் குறிவைத்துத் தாக்கிய ‘மெர்ஸ்’ வைரஸோடு நெருங்கிய தொடர்புடைய வைரஸ். இந்த வைரஸால் அப்போது 27 நாடுகளில் ‘மெர்ஸ்’ (Middle East Respiratory Syndrome) நோய் பரவியது. ஆனால், அது உலகளாவிய பெருந்தொற்றாகப் பரவவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

அடுத்து, ‘நியோகோவ்’ வைரஸ் வௌவால்களிடம் பரவுவதற்கு வௌவால்கள் உடலில் உள்ள ‘ஏசிஈ2’ (ACE2 receptors) எனும் ஏற்பிட செல் வாசல்களைப் பயன்படுத்துகின்றன. இதே வகை ‘ஏசிஈ2’ ஏற்பிட செல் வாசல்கள், மனிதர்களுக்கும் இருக்கின்றன என்பதால், மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்றிக்கொள்ளும் ஆபத்து உள்ளது என்கின்றனர். ஆனால், இதுவரை இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

ஆகவேதான், உலக சுகாதார நிறுவனம் உட்பட பல ஆய்வாளர்களும் ‘நியோகோவ்’ குறித்த சீனாவின் ஆய்வறிக்கை அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது. அது இன்னமும் சக ஆய்வாளர்களால் மறுமதிப்பீடு (Peer-review) செய்யப்படவில்லை. பொதுவாக, மறுமதிப்பீடு செய்யப்படாத ஆய்வறிக்கைகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதும், அவற்றின் முடிவுகளை வைத்து பொதுச் சமூகத்தை அச்சப்படுத்துவதும், வழிகாட்டுவதும் மருத்துவ நெறிமுறைகளை மீறுவது. இந்தப் புதிய வைரஸ் மனிதர்களுக்கு அச்சுறுத்தல் தருமா என்பது குறித்துப் பேச இன்னும் விரிவான ஆராய்ச்சிகள் தேவை’ என்று தெரிவித்துள்ளனர்.

மரபணு மாற்றம் ஏற்படுவது எப்படி?

‘நியோகோவ்’ வைரஸ் குறித்த சீனாவின் ஆய்வறிக்கையில், இப்போதைக்கு மனித செல்களுக்குள் தொற்ற இந்த வைரஸுக்கு ஆற்றல் இல்லை என்பதையும், அந்த வைரஸில் மரபணு மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே, மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்றிக்கொள்ளும் ஆபத்து உள்ளது என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர் (https://www.biorxiv.org/content/10.1101/2022.01.24.477490v1.full).

இந்த இடத்தில், வௌவால்களிடம் வைரஸ் குறித்து ஆராய்ந்துவரும் கனடாவின் மேக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளரான அரிஞ்ஜெய் பானர்ஜி கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். ‘நிலையான இயற்கைச் சூழல் உள்ள இடங்களில், இயல்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் வௌவால்களிடம் காலங்காலமாக வைரஸ் வகைகள் பல்லாயிரக்கணக்கில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த வைரஸ் வகைகளால் நமக்கு எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை... அவற்றையோ, அவற்றின் வாழிடத்தையோ நாம் தொந்தரவு செய்யாதவரை. காடழிப்பு மற்றும் காட்டுயிர் விற்பனை மூலம் அவற்றை நாம் நெருங்கும்போது மட்டுமே அவை நம்மைத் தொற்றுகின்றன. காடழிப்பு காரணமாக வௌவால்கள் பறக்கும் வழித்தடம் மாறும்போது, அந்தந்தப் பகுதிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட வயல்களுக்கும் நகர்ப் பகுதிகளுக்கும் அவை வருகின்றன.

அப்படி வரும்போது, அவற்றின் எச்சம், எச்சில் போன்றவற்றுடன் நாம் தொடர்புகொள்வது மட்டுமில்லாமல், நம்மைச் சார்ந்த வளர்ப்பு உயிரினங்களும் தொடர்புகொள்கின்றன. வழி மாறிய வௌவால்களுக்கு ஏற்படும் சூழல் அழுத்தம் காரணமாக, தம்மிடமுள்ள வைரஸ்களை அளவுக்கு அதிகமாக வெளிவிடுகின்றன. அந்த வைரஸ்கள் புதிய சூழலுக்கு ஏற்பத் தம்மைத் தகவமைத்துக்கொள்ளும்போது, வேறொரு உயிரினத்துக்குத் தாவுகின்றன. அப்போது, அந்த உயிரினத்துக்கோ, அந்த உயிரினம் வழியாக நமக்கோ அவை தொற்றுகின்றன; நோய்களையும் ஏற்படுத்துகின்றன. அப்படிப் பரவிய வைரஸ்களின் மரபணுக்கள் திடீர் பிறழ்வுக்கும் (Mutation) உட்படுகின்றன’ என்கிறார் அவர்.

சீனாவின் வூஹானில் காட்டுயிர் அங்காடிகளில் விற்கப்பட்ட வௌவால்களிடம் இருந்து சார்ஸ் கரோனா வைரஸ்-2 மனிதர்களுக்குத் தொற்றியதாக சீன அரசு அளித்த விளக்கம் பானர்ஜியின் கருத்துக்கு வலுசேர்ப்பதை நாம் உணரலாம். இன்னொரு எடுத்துக்காட்டு, நிபா வைரஸ் தொற்று. இது 1998-ல் மலேசியாவின் அழிக்கப்பட்ட ஒரு காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்ட தானியக் களஞ்சியம் ஒன்றில், ‘கலோங் வௌவால்கள்’ ஓய்வெடுக்கத் தொடங்கின. அவற்றின் எச்சம் வழியாகப் பன்றிகளுக்கு நோய் தொற்றியது. தொடர்ச்சியாக அந்தப் பன்றிகளைப் பராமரித்த உழவரும் பாதிக்கப்பட்டார். ஆகவே, ஒரு புதிய வைரஸ் நம்மைத் தொற்றுவதும் தொற்றாததும் நாம் நடந்துகொள்ளும் முறையில்தான் உள்ளது.

மேலும், இந்தியாவில் தேசிய நோய்ப் பரவல் மற்றும் தடுப்பியல் துறை ஏற்படுத்தியுள்ள அறிவியல் ஆலோசகர் குழுவின் தலைவர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் முளியில் சொல்வதும் நம் கவனத்தைப் பெறுகிறது. ‘வௌவால்களிடம் வாழும் எல்லா வைரஸ்களும் மனிதர்களுக்குத் தொற்றிவிடும் என்று சொல்வதற்கு இல்லை. ‘நியோகோவ்’ வைரஸ் மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. நம்மைச் சுற்றி இருக்கும் மாசடைந்த சூழலில் ஏற்கெனவே லட்சக்கணக்கான வைரஸ்கள் உள்ளன. அவற்றுடன் வாழ நாம் பழகியிருக்கிறோம்.

‘நியோகோவ்’ வைரஸ் கரோனா குடும்பத்தில் ‘மெர்பிகோ வைரஸ்’ (Merbecovirus) எனும் துணை இனத்தைச் சார்ந்தது. அந்தக் குடும்பத்தில் இதே இனத்தைச் சேர்ந்த ‘ஹெச்கேயு1’ (HKU1) மற்றும் ‘ஓசி43’ (OC43) வைரஸ் வகைகள் நம்மை அவ்வளவாகத் தொந்தரவு செய்யாதவை. அதிகபட்சம் ஜலதோஷத்தை மட்டுமே உண்டாக்கக்கூடியவை. இதுவரை மரபணு மாற்றத்துக்கு உள்ளாகாதவை. அந்த வகையைப் போலத்தான் ‘நியோகோவ்’ வைரஸும். இந்த வைரஸ் குறித்து பீதியும் பதற்றமும் தேவையில்லை’ என்கிறார் முளியில்.

எனவே, உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தாத மருத்துவச் செய்திகளைக் கொண்டும், ஆதாரமில்லாத அல்லது தீர்மானமான முடிவுக்கு வராத ஆய்வு முடிவுகளைக் கொண்டும் சமூக ஊடகங்கள் பொதுச் சமூகத்தை அச்சப்பட வைப்பதை இனிமேலாவது நிறுத்த வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பு.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர். தொடர்புக்கு: gganesan95@gmail.com



Read in source website

தொற்றுநோய்களின் இறுதிக் கேம், வைரஸ் பிறழ்வுகள் மற்றும் புதிய தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியுமா என்பது பற்றிய, CSIR இன் ஜெனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் இயக்குனர் அனுராக் அகர்வாலின் விளக்கங்கள் இங்கே.

Not the end yet but start living with smart surveillance, spot variants and take steps early: தொற்றுநோய்களின் இறுதி கேம், வைரஸ் பிறழ்வுகள் மற்றும் புதிய தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியுமா என்பது பற்றி, CSIR இன் ஜெனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் இயக்குனர் அனுராக் அகர்வால், நேரடி அமர்வில், விளக்கியது இங்கே.

மூன்றாவது அலை உச்சத்தை அடைந்துவிட்டதா மற்றும் நாம் தொற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோமா

டெல்லி மற்றும் மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில், இது முடிந்துவிட்டது, ஆனால் 2-ம் அடுக்கு  நகரங்களில், இது இன்னும் ஒரு பிரச்சனையாக உள்ளது. அவர்களில் சிலர் இன்னும் பாதிக்கப்படவில்லை. நிச்சயமாக, இந்தியா முழுவதும் சோதனை ஒரே மாதிரியாக இல்லை, எனவே தொற்று சரிவதற்கு முன்பு சிறிது நீடித்திருக்கும்.

இது கொரோனாவின் முடிவு அல்ல. ஆனால் இது முடிவு என எடுத்துக் கொண்டால், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டிய நேரம் இது என்று அர்த்தப்படுத்தினால், ஒப்பீட்டளவில் சிறிய மற்றும் மிகவும் கடினமான முன்னெச்சரிக்கைகளுடன் இயல்பு நிலைக்குத் திரும்புவது ஏற்கனவே தொடங்கியிருக்க வேண்டும். நேர்மையாக, குறைந்தபட்சம் பெரிய நகரங்களில் பள்ளிகளை மூடக்கூடாது. கொரோனா ஒரு தொற்றுநோயாக முடிவடைவதற்கும் எண்ட்கேமிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை, இது சுகாதார அமைப்புகளை மூழ்கடிக்கும் அச்சுறுத்தும் நோயாக கொரோனாவின் முடிவோடு தொடர்புடையது.

ஒரு ஆபத்தான மாறுபாட்டின் தோற்றம்

ஒரு வைரஸின் வீரியத்தை நமது சொந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அதன் கலவையுடன் குழப்புகிறோம். ஸ்பானியர்கள் தென் அமெரிக்காவை ஆக்கிரமித்தபோது, ​​அவர்கள் பல நோய்களையும் வைரஸ்களையும் கொண்டு சென்றனர், அவை ஐரோப்பாவை பாதிக்கவில்லை, ஆனால் தென் அமெரிக்காவில் மரணத்தை ஏற்படுத்தியது. சிக்கன் பாக்ஸ் பல பூர்வீக அமெரிக்கர்களைக் கொன்றது. ஆரம்பத்தில், நம்மில் யாருக்கும் வைரஸிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. டெல்டா ஆக்ரோஷமாக மாறியது, ஏனெனில் ஒரு பெரிய மக்கள் இன்னும் நோயெதிர்ப்பு அல்லது தடுப்பூசி போடப்படவில்லை மற்றும் வைரஸ் உருவாகும்போது எந்த மந்தை நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகாது. எனவே, எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நாம் கணக்கிட வேண்டும். நோய்த்தொற்று ஏற்பட்டவுடன், இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றிருந்தால், இறப்பதற்கான வாய்ப்பு கணிசமாகக் குறைகிறது என்பதை நாங்கள் பார்த்தோம்.

ஓமிக்ரான் உச்சத்தை அடைந்த நேரத்தில், பெரிய டெல்டா அலை மற்றும் சுமார் 80 முதல் 90 சதவீதம் வயது வந்தோர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதிலிருந்து நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தது. அது நம்மை மரணம் மற்றும் சுகாதார அமைப்பின் அழிவிலிருந்து பாதுகாத்தது. ஓமிக்ரானுக்குப் பிறகு, கொரோனாவிலிருந்து இறப்பதற்கான அதிக ஆபத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் சிறியதாகிவிடும், நோய்த்தொற்றுகள் இருந்தபோதிலும் சுகாதார அமைப்புகள் அதிகமாக இருக்காது. வைரஸ் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் மாறாவிட்டால் அழிவு காலப்போக்கில் குறையும், இது உடனடி சாத்தியம் அல்ல.

வைரஸை எப்போதாவது ஒழிக்க முடியுமா என்பது குறித்து

சின்னம்மை அல்லது போலியோ போன்றவற்றில் இருந்து நீக்கப்பட்ட வைரஸுக்கும், தொடர்ந்து போராடும் காய்ச்சலுக்கும் இடையில் நான் இந்த வைரஸை தேர்வு செய்ய வேண்டியிருந்தால், நான் காய்ச்சலைத் தேர்ந்தெடுப்பேன். கொரோனா நீங்கவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், ஆரோக்கியமற்றவர்கள், அதிக ஆபத்தில் உள்ளவர்கள், மிகவும் வயதானவர்கள் மற்றும் இளம் வயதினரை மட்டுமே பாதிக்கும். ஆனால் அது ஏற்படுத்தும் அழிவு மற்றும் சிரமம் மிகக் குறைவாக இருக்கும், வைரஸ் மிகவும் குறிப்பிடத்தக்க அளவு மாறாத வரை, இது எப்போதும் சாத்தியம் ஆனால் உடனடி சாத்தியம் அதிகமில்லை. SARS-CoV-2 அதிகம் மாற்றமடையாது, ஆனால் இது ஒரு RNA வைரஸ், எனவே இது பல DNA வைரஸ்களை விட அதிகமாக மாற்றமடைகிறது. மேலும் மனிதர்களில் அதிக எண்ணிக்கையிலான புரவலன்கள் (ஏற்றுக் கொள்ளும் தன்மை) இருப்பதால், வைரஸ் தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், மாற்றமடையவும் வாய்ப்பைப் பெறுகிறது. தவிர, இதை ஒழிக்க வேண்டும் என்றால், இதற்கு மனிதர்களுக்கு வெளியே ஒரு புரவலன் இல்லை என்பது முக்கியம். SARS-CoV-2 விலங்குகளில் வளரக்கூடிய வாய்ப்புகளைக் கண்டறிந்துள்ளது, அங்கு அது மேலும் வளர்ச்சியடையும்.

மந்தை நோய் எதிர்ப்பு சக்தி ஏன் மழுப்பலாக உள்ளது

பல தற்காலிக மந்தை நோய் எதிர்ப்பு சக்தி நிலைகள் இருந்திருக்கும் என்று நான் வாதிடுவேன், ஆனால் நீண்ட காலமாக எதுவும் இல்லை. டெல்டா ஏன் டெல்லியில் முடிந்தது? ஏனென்றால், எங்கள் ஆய்வு ஒன்றில், சுமார் 88 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம். அந்த அளவில், அந்த மாறுபாடு மற்றும் அதன் வழித்தோன்றல்களுக்கு எதிராக நீங்கள் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவீர்கள். அதனால்தான் டெல்டா மாறுபாட்டுடன் மிகவும் ஒத்திருந்த டெல்டா-பிளஸ், அதிக முன்னேற்றம் அடையவில்லை. இப்போது ஓமிக்ரான் என்பது தென்னாப்பிரிக்காவிலிருந்து பீட்டா மாறுபாட்டின் மிகவும் அதிகமாக மாற்றப்பட்ட வழித்தோன்றலாகும். இது டெல்டாவைப் போல் இல்லை. எனவே, நீங்கள் உருவாக்கிய எந்த ஆன்டிபாடிகளும் அதை பிணைக்காது மற்றும் நடுநிலையாக்காது. மறுபுறம், டி-செல்கள், கடுமையான நோயின் நினைவாற்றல் மற்றும் பாதிக்கப்பட்ட செல்களைக் கொல்லும், இது இன்னும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, கடுமையான நோய்கள் தடுக்கப்படுகின்றன, ஆனால் தொற்றுநோயை அல்ல. மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்பது ஒரு தொற்று நோய்க்கான கருத்தாகும், தீவிரமான தொற்றுக்கு அல்ல. சிறந்த பதிலைப் பெற, இதற்கு முன் ஒருபோதும் நோய்த்தொற்று பாதித்தது இல்லை என்று நீங்கள் உறுதியாக நம்பும் நபர்களுடன் உயர்தர ஆய்வுகள் தேவை.

ஓமிக்ரானில் ஒரு இயற்கை தடுப்பூசி

எனக்கு இந்த வாசகம் பிடிக்கவே இல்லை. தடுப்பூசி என்று எதையாவது அழைக்க, பக்க விளைவுகள் மிகவும் குறைவாக இருக்க வேண்டும், அத்தகையவற்றை தடுப்பூசிகளுடன் ஒப்பிடலாம். நமது தற்போதைய தடுப்பூசிகள் மூலம், ஒரு லட்சத்தில் ஒருவருக்கு அல்லது 50,000 தொற்று பாதிப்புகளில் ஒருவருக்கு ஏதாவது தவறு ஏற்படலாம் என எதிர்பார்க்கிறோம். இப்போது, ​​டெல்டா மற்றும் ஓமிக்ரானின் தொற்று இறப்பு விகிதத்தை (IFR) பாருங்கள். டெல்டாவில் 1,000 பேரில் இருவர். ஓமிக்ரான் அதை விட 60 முதல் 70 சதவீதம் குறைவாக உள்ளது, குறிப்பிட்ட வயதினருக்கு இது 25-50 சதவீதம் குறைவாக இருக்கலாம். அது மிகவும் பாதுகாப்பான வாய்ப்பு அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். டெல்லியில், இந்த நாட்களில் சுமார் 40 பேர் இறக்கின்றனர், அதில் பாதி தற்செயலாக இருக்கும். தினமும் 20 பேர் இறப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் தடுப்பூசியை நீங்கள் வைத்திருந்தால், அந்த தடுப்பூசியை நீங்கள் நிறுத்துவீர்கள், அதைப் பயன்படுத்த வேண்டாம். அதனால்தான் ஓமிக்ரானை இயற்கை தடுப்பூசி என்று அழைப்பது சரியல்ல.

ஆபத்தான மாறுபாடு மற்றும் கண்காணிப்பு பற்றிய பயம்

பயம் ஒருபோதும் தீர்வாகாது. பள்ளி, வேலை, வணிகங்கள் தடைபடுவது மற்றும் வீட்டிற்குள்ளேயே தங்குவது ஆகியவை அவற்றின் சொந்த சிக்கல்களைக் கொண்டுள்ளன. பெரும்பாலான மக்கள் தடுப்பூசி மற்றும் சில நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருக்கும் போது இறப்பு ஆபத்து குறைவாக இருப்பதால், உங்கள் வாழ்க்கையைத் தொடரவும். வைரஸ் தன்னைப் பெருக்கி, நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதால், மோசமான மாறுபாட்டின் சாத்தியக்கூறுடன் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது நோயெதிர்ப்பு அழுத்தத்தால் பலவீனமடையும். உயர்தர கண்காணிப்பைப் பராமரிக்கவும், மாறுபாடுகளைக் கண்டறிந்து முன்கூட்டியே நடவடிக்கைகளை எடுக்கவும்.

இந்தியாவிற்கு தேவை புத்திசாலித்தனமான கண்காணிப்பு, அதிகமான கண்காணிப்பு அல்ல. தென்னாப்பிரிக்காவைப் பாருங்கள். அவை அதிகம் வரிசைப்படுத்தப்படவில்லை, ஆனால் அதற்கு முன்பு ஓமிக்ரான் மற்றும் பீட்டாவைக் கண்டறிவதில் அவை மிகவும் பயனுள்ளதாக இருந்தன. அவர்களின் பொதுவான தொற்றுநோய் மிகவும் வலுவானது. தினசரி மரபணு வரிசைகளின் எண்ணிக்கையில் நாம் அதிகம் செயல்படக்கூடாது. வரிசைப்படுத்துதல் ஆய்வகங்கள் விரைவான மாற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் எல்லா தரவையும் பொதுவான தளங்களுக்கு விரைந்து செல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், இதன் மூலம் புதிய காட்சிகள் மருத்துவ ரீதியாக ஏதாவது நடக்கிறதா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். இப்போது எங்களிடம் ஒரு ஒருங்கிணைந்த சுகாதார தகவல் போர்டல் (IHIP) உள்ளது.

மேலும், ஒரு தொற்று வெடிப்பு என்பது வரிசைப்படுத்துவதற்கான மோசமான நேரமாகும், ஏனெனில் காரணமான மாறுபாடு ஆதிக்கம் செலுத்துகிறது. இது ஒரு பாதிப்பு அதிகரிப்பின் போது நடுவில் உள்ள பகுதியே, நீங்கள் தொடர்ந்து வரிசைப்படுத்த வேண்டும். நாம் களத்தில் இருந்து புத்திசாலித்தனத்துடன் இணைந்து ஒரு நல்ல நிலையான அளவிலான வரிசைமுறையை பராமரிக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை, எச்சரிக்கையாக இருங்கள், அறிவுரைகளைப் பின்பற்றுங்கள் மற்றும் பீதி அடைய வேண்டாம். பொதுச் செய்தி சரியானதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

தொற்றுநோயிலிருந்து கற்றல் பற்றி

SARS-CoV-1 ஏன் பரவவில்லை? ஏனெனில் விகாரமான வைரஸ்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவையாகவோ அல்லது சண்டையிடக்கூடியதாகவோ இல்லை. நீங்கள் SARS-CoV-2 வைரஸைப் பார்த்தால், இரண்டு ஆரம்ப விகாரங்களில் ஒன்று இறந்திருக்கலாம். D614G பிறழ்வு ஏற்படவில்லை என்றால், தொற்றுநோய் வேறு பாதையில் சென்றிருக்கும். இதன் விளைவாக உலகம் முழுவதும் வைரஸ் பரவியது. ஆனால் நாம் போதுமான வரிசைமுறைகளை செய்யவில்லை. இல்லையெனில், ஆரம்பத்திலேயே முகக்கவசம் மற்றும் காற்றோட்டம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். தடுப்பூசி பாதுகாப்பும் உதவியிருக்கும். அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் வரை எந்த நாடும் பாதுகாப்பாக இல்லை. அறிவியலில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும் பொது அறிவு நடவடிக்கைகள் முக்கியம்.

அடுத்த தலைமுறை தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

ஒரு சிறந்த தடுப்பூசி தொற்றுநோயைத் தடுக்கிறது மற்றும் கடுமையான நோயைத் தடுக்கிறது. ஏற்றுக்கொள்ளக்கூடிய தடுப்பூசியானது கடுமையான நோய்க்கு எதிராக தனிநபரைப் பாதுகாக்கிறது, ஆனால் பின்னர் இலக்கு ஆபத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான தடுப்பூசி வழங்குவதாகும். அனைத்து கொரோனா வைரஸ்களுக்கும் எதிராக நம்மைப் பாதுகாக்கும் சிறந்த தடுப்பூசிகளைப் பார்க்க விரும்புகிறேன், தடுப்பூசிகள் ஒரு மூதாதையர் வரிசைக்கு எதிராக அல்ல, ஆனால் பல சாத்தியக்கூறுகளுக்கு எதிராக இருக்க வேண்டும்.

பார்வையாளர்களின் கேள்விகள்

பூஸ்டர் டோஸ்களின் அவசியம் குறித்து

WHO பார்வையில், இது உலகளாவிய சமபங்குகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு ஆபத்தை மேலும் குறைக்கிறது. அதிக மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடுவதே முன்னுரிமையாக இருக்க வேண்டும். சில UK தரவுகளின்படி, பாதுகாப்பின் செயல்திறன் 65 முதல் 70 சதவிகிதம் வரை பூஸ்டர் மூலம் 70 முதல் 80 சதவிகிதம் வரை செல்கிறது, ஆனால் அது தொற்றுநோயைத் தடுக்காது. எனவே, நோயின் தீவிரத்தைப் பொறுத்தவரை, ஆதாயம் சிறியது. குறைந்தபட்ச நன்மை இருந்தால், அனைவருக்கும் பூஸ்டர்களை வழங்குவதில் எந்த அர்த்தமும் இல்லை, குறிப்பாக அனைத்து தடுப்பூசிகளும் சரியாக இல்லை என்ற உண்மையைக் கொடுக்கிறது. எனவே, சுகாதாரப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை அளவுகள் விவேகமான அணுகுமுறையை உருவாக்குகின்றன. பெரும்பாலான இந்தியர்கள் தொற்று பாதித்துள்ளனர் மற்றும் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர், எனவே மேற்கத்திய தரவுகளின் அடிப்படையில் நமது நோய் எதிர்ப்பு சக்தி ஏற்கனவே மூன்று தடுப்பூசி டோஸ்களுக்கு சமமாக இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய இந்திய ஆய்வுகள் இல்லாமல் இந்தியாவுக்கு பூஸ்டர்கள் எவ்வளவு அதிகம் தேவை என்பதை தீர்மானிக்க முடியாது.

இரவு ஊரடங்கு, ஊரடங்கு மற்றும் பள்ளி மூடல் கட்டுப்பாடு பற்றி

பள்ளிகள் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டியவை மற்றும் வகுப்பறைகளில் பெரிய ஜன்னல்கள் இருக்கும் போது அல்லது வகுப்புகள் வெளியில் செயல்பட முடியும் போது, ​​ஆபத்து உண்மையில் சிறியதாக இருக்கும். மேற்பரப்புகள் அல்ல, ஆனால் காற்று வைரஸ் பரிமாற்றத்தின் முக்கிய ஆதாரமாகும். எல்லாமே மூடிய மற்றும் குளிரூட்டப்பட்ட அறைகளுடன் கூடிய பல நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​திறந்த நிலையில் இருப்பதற்கு இந்தியா சிறந்த இடத்தில் உள்ளது.



Read in source website

புதிய மாவட்டங்களை உருவாக்கும் நடவடிக்கையானது, சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சியின் நலனுக்காக மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்களை உருவாக்கிட ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கையை 13-லிருந்து 26-ஆக அதிகரிக்கவுள்ளது.

வரைவு அறிவிப்பின்படி, புதிய மாவட்டங்களை உருவாக்கும் நடவடிக்கையானது, சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சியின் நலனுக்காக மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐடியா திடீரென வந்ததா?

இல்லை. 2019 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு, ஒய்எஸ்ஆர்சிபி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் புதிய மாவட்டங்களை உருவாக்குவேன் என்று முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்திருந்தார்.

ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதன் மூலம் நல்ல நிர்வாகம், சேவைகள், அரசு திட்டங்களை திறம்பட வழங்குவது உறுதி என்று முதல்வர் கூறியிருந்தார்.

கடந்த வாரம் குடியரசு தின விழாவில் பேசிய அம்மாநில ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிசந்தன், புதிய திட்டங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தெலுங்கு வருடப் பிறப்பு அன்று வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

புதியதாக உதயமாகவுள்ள மாவட்டங்கள் விவரம்

அரசாங்கத்தின் முன்மொழிவின்படி, ஸ்ரீகாகுளம், பிரகாசம் மற்றும் நெல்லூர் மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள 10 மாவட்டங்கள் தலா இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.

விசியநகரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு மான்யம் என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்படவுள்ளது.

விசாகப்பட்டினத்தில் இருந்து அனகாபள்ளி மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகிய பெயரில் இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து காக்கிநாடா மற்றும் கோனசீமா மாவட்டங்கள் உருவாகுகின்றன.

மேற்கு கோதாவரி மாவட்டத்திலிருந்து ஏலூர் வெளியேறி, புதிய மாவட்டம் ஆகிறது.

குண்டூர் மாவட்டத்தில் இருந்து பல்நாடு மற்றும் பாபட்லா உருவாகிறது.

கர்னூல் மாவட்டம் நந்தியால் வெளியேறி, புதிய மாவட்டம் ஆகிறது.

அனந்தபூரிலிருந்து ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் உதயமாகிறது.

சித்தூர் மாவட்டத்திலிருந்து ஸ்ரீ பாலாஜி புதிய மாவட்டம் ஆகிறது.

கடப்பா மாவட்டத்தில் இருந்து அன்னமையா, புதிய மாவட்டமாக மாறுகிறது.

கிருஷ்ணா மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, `என்.டி.ஆர் மாவட்டம்’ எனப் புதிய மாவட்டத்தை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டிருப்பது, TDP கட்சியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதேபோல், பெரிய நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் மன்யம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டங்கள் முற்றிலும் பழங்குடியின மாவட்டங்களாக இருக்கக்கூடும்

ஸ்ரீ பாலாஜி மாவட்டமானது, திருமலையில் உள்ள புகழ்பெற்ற வெங்கடேஸ்வரா கோயிலையும், கோயில் நகரமான திருப்பதியையும் உள்ளடக்கியது ஆகும்.

இந்த முன்மொழிவு ஏன் விமர்சிக்கப்படுகிறது?

மனித மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் சிறந்த நிர்வாகத்திற்காக சிறிய மாவட்டங்களை அமைப்பது கொள்கையளவில் நல்ல யோசனையாக இருந்தாலும், அரசாங்கத்தின் முன்மொழிவுகளில் சிக்கல்கள் உள்ளன என்று கூறுகின்றனர்.

மனித உரிமைகள் மன்றம் கூற்றுப்படி, மாவட்டப் பிரிவினையானது, அர்த்தமுள்ள பொது விவாதத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் சரியான சிந்தனையோ அல்லது ஜனநாயக ஆலோசனையோ இல்லை என கூறினர்.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், முன்மொழியப்பட்ட மாவட்ட தலைமையகத்திற்கும் மாநிலம் முழுவதும் உள்ள பல இடங்களுக்கும் இடையே கணிசமான இடைவெளியை ஏற்படுத்தும். சில இடங்களில், மாவட்டத் தலைமையகம் மிகவும் தொலைதூரமாகவும் அணுகுவதற்கு கடினமாகவும் இருக்கலாம்.

பயண தூரங்கள் அதிகமாக இருக்கும் போது புதிய மாவட்டங்களை உருவாக்குவதன் பயன் என்ன? இந்த முறையில் புதிய மாவட்டங்கள் அமைப்பது சிறப்பான நிர்வாகத்தின் குறிக்கோளுக்கு எந்த வகையிலும் பலன் தராது. நாடாளுமன்ற தொகுதிகள் அடிப்படையில் மாவட்டங்களை மறுசீரமைப்பது முடிவு குறைபாடுடையது என குறிப்பிட்டனர்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இஏஎஸ் சர்மா, பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளை இரண்டாகப் பிரிப்பது “பழங்குடியினரின் உரிமை மீறல்” என்று வாதிட்டார்.

திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

இது ஒரு வரைவு முன்மொழிவு என்றும், மக்கள் தங்கள் ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒரு மாதத்திற்குள் அனுப்புமாறு மாநில அரசு கூறியுள்ளது. அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்த பிறகு எல்லைகளை மறுவடிவமைப்பது குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



Read in source website