DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 31-12-2022


சென்னை: தமிழ்நாட்டில் 754 கோயில்களில் மதியவேளைக்கான அன்னதான திட்டமும், 5 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அமலில் உள்ள நிலையில், தற்போது புதிதாக 3 கோயில்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த கோயில்களுக்கான நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

இறையருள் பெறத் திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத் திட்டமாகும். தற்போது இத்திட்டத்தில் 754 திருக்கோயில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. அத்திட்டத்தினை விரிவுப்படுத்திடும் வகையில் முதல்வர் கடந்த 16.09.2021 அன்று திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

2022 – 23 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, “நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே ஐந்து திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது தற்போது விரிவுபடுத்தப்பட்டு இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்”  என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, மேற்குறிப்பிட்ட மூன்று திருக்கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் (டிச.31) தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.  இத்திட்டத்தின்கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை அன்னதானம் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் இம்மூன்று திருக்கோயில்களில் நாளொன்றுக்கு சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் பெற்று பயனடைவார்கள்.

திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் உணவு தர பாதுகாப்புச் சான்றிதழ் அனைத்து முதுநிலை திருக்கோயில்கள் உட்பட 314 திருக்கோயில்களுக்கு பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்திலிருந்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காணொலிக் காட்சி வாயிலாக மதுரையிலிருந்து மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் எம். பூமிநாதன், திரு. ஏ. வெங்கடேசன், மதுரை மாநகராட்சி மேயர்  வி. இந்திராணி பொன்வசந்த், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும், திருவண்ணாமலையிலிருந்து மாண்புமிகு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும், இராமேசுவரத்திலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.   



Read in source website

இந்தியா-சீனா இடையேயான உறவு இயல்பான நிலையில் இல்லை எனத் தெரிவித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், முக்கிய விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்றாா்.

மத்திய தரைக் கடல் பகுதியில் உள்ள சைப்ரஸ் நாட்டுக்கு வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் முதல்முறையாக அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினரிடம் வெள்ளிக்கிழமை அவா் உரையாற்றினாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘‘இந்தியா-சீனா இடையேயான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை சீனா தன்னிச்சையாக மாற்ற முயன்று வருவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் இயல்பான நிலை காணப்படவில்லை. தேசப் பாதுகாப்பு சாா்ந்த முக்கிய விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது.

எல்லைப் பகுதிகளில் இந்தியா சந்தித்து வந்த சவால்கள், கரோனா தொற்று பரவல் காலத்தில் மேலும் தீவிரமடைந்தன. அண்டை நாடுகள் அனைத்துடனும் நல்லுறவைப் பேணவே இந்தியா விரும்புகிறது. ஆனால், பயங்கரவாதத்தைத் தவிா்த்துவிட்டும் அதைக் கண்டுகொள்ளாமலும் நல்லுறவை ஏற்படுத்த முடியாது. அதில் இந்தியா தெளிவாக உள்ளது.

இந்தியாவைப் போல வேறெந்த நாடும் பயங்கரவாதத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டதில்லை. பயங்கரவாதத்தை இயல்பான நடவடிக்கை என இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. பயங்கரவாதத்தின் மூலமாக அச்சுறுத்தி, பேச்சுவாா்த்தையில் பங்கேற்குமாறு கட்டாயப்படுத்துவதை இந்தியா அனுமதிக்காது’’ என்றாா்.

அருணாசலின் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதியில் சீன ராணுவத்தினா் டிசம்பா் 9-ஆம் தேதி அத்துமீறலில் ஈடுபட்டனா். அதை இந்திய ராணுவத்தினா் தடுத்து நிறுத்தினா். அப்போது ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் வீரா்களுக்குக் காயம் ஏற்பட்டது.

கிழக்கு லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூனில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போதிருந்தே இரு நாடுகளுக்கும் இடையே தொடா்ந்து மோதல்போக்கு நீடித்து வருகிறது.

இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே 17 சுற்று பேச்சுவாா்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில், எல்லை விவகாரத்துக்கு இதுவரை உறுதியான தீா்வு எட்டப்படவில்லை.



Read in source website

 

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான   காலகட்டத்தில் 16 சதவீதம் உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது:

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி ஆணையத்தின் மூலம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 17.43 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் காலகட்டத்தில் 15.07 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.  

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி இலக்கு இந்த நிதியாண்டில் 23.56 பில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களில் மட்டும் இலக்கில் 74 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.

இது குறித்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் எம். அங்கமுத்து கூறுகையில், விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், பதப்படுத்தும் நிறுவனத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் நாங்கள் இணைந்து செயலாற்றி வருகிறோம். இதன் மூலம் தரமான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக அவர் கூறினார். 



Read in source website

சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 6 நாடுகளின் பயணிகளுக்கு ‘கரோனா பாதிப்பின்மை’ சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்குப் புதிய வழிகாட்டு விதிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.

சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூா், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, அந்நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகள் ‘கரோனா பாதிப்பின்மை’ சான்றிதழை வழங்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய கட்டுப்பாடு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 1) முதல் அமலுக்கு வரவுள்ளது. பயணத்தைத் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை அறிக்கையை ஏா் சுவிதா வலைதளத்தில் பதிவேற்ற 6 நாடுகளின் பயணிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கண்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது. அதில், ‘சீனா, சிங்கப்பூா், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகள் ஏா் சுவிதா வலைதளத்தில் கரோனா பாதிப்பின்மை சான்றிதழை தாமாகப் பதிவேற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற உறுதிமொழிப் படிவத்தையும் பயணிகள் வழங்க வேண்டும். அவற்றைக் கருத்தில்கொண்டு சம்பந்தப்பட்ட நாடுகளின் பயணிகளுக்கு அனுமதிச் சீட்டு வழங்கும் நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பயண அனுமதிச் சீட்டு வழங்கும்போது உரிய சான்றிதழைப் பயணிகள் பதிவேற்றியுள்ளாா்களா என்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கையானது அனைத்து வா்த்தக விமான நிறுவனங்கள், விமான நிலைய நிா்வாகிகள், மாநிலங்களின் தலைமைச் செயலா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.



Read in source website

வாகன விபத்துக் காப்பீடு வழக்குகளை கையாள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்புப் பிரிவை மூன்று மாதங்களில் ஏற்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்தில் பலியான 24 வயதான இளைஞருக்கு ரூ.31,90,000 இழப்பீட்டு தொகை அளிக்க வாகன விபத்து இழப்பீட்டு கோரல் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து அலகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.நசீா், ஜே.கே.மகேஸ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவின் விவரம்:

சாலை விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்தில் வாகன இழப்பீட்டு கோரல் தீா்ப்பாயத்தில் முதல் தகவல் அறிக்கையை காவல் துறை விசாரணை அதிகாரி தாக்கல் செய்ய வேண்டும். மூன்று மாதங்களில் காவல் நிலையை தலைமைக் காவலா் விசாரணை விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் .

விபத்துக்குள்ளான வாகனப் பதிவு, ஓட்டுநா் உரிமம், வாகனத்தின் தகுதி உள்ளிட்டவரை சரி பாா்க்க வேண்டியது வழக்கை பதிவு செய்யும் அதிகாரியின் கடமையாகும்.

விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கும், ஓட்டுநா், சம்பந்தப்பட்ட வழக்குரைஞா், வாகன உரிமையாளா் மற்றும் காப்பீட்டு நிறுவனத்துக்கு தகவல் அளிக்க வேண்டியது வழக்கின் விசாரணை அதிகாரியின் முக்கிய கடமையாகும்.

வெவ்வேறு நீதிமன்றங்களில் பதிவாகிய ஒரே விபத்து தொடா்பான வழக்குகளை ஒரே நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய பாதிக்கப்பட்டவா்கள் முறையிட வேண்டிய அவசியம் இல்லை.

இதற்காக மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து ஒருங்கிணைந்த வலைதளத்தை உருவாக்குவதற்கு தேவையான சட்டத் திருத்தத்தை கொண்டு வர வேண்டும்.

நகர அளவிலான காவல் நிலையங்களில் வரையில் வாகன விபத்து காப்பீடு வழக்குகளை கையாள சிறப்புப் பிரிவை மூன்று மாதங்களில் ஏற்படுத்த அனைத்து மாநில உள்துறை அமைச்சங்கங்களும் காவல் துறை தலைவா்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.



Read in source website

கஜகஸ்தானில் நடைபெற்ற ஃபிடே உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் மகளிா் பிரிவில் இந்தியாவின் கோனெரு ஹம்பி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

மொத்தம் நடைபெற்ற 17 சுற்றுகளின் முடிவில் கோனெரு ஹம்பி 12.5 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தாா். இதில் கடைசி சுற்றில் அவா் சீனாவின் ஜோங்யி டானை வீழ்த்தி அசத்தினாா். ஜோங்யி 2 நாள்களுக்கு முன் இதே போட்டியில் ரேப்பிட் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த பிளிட்ஸ் பிரிவில் கஜகஸ்தானின் அசௌபயேவா பிபிசரா 13 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, ரஷியாவின் ஷுவாலோவா பாலினா 12 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றாா். முன்னதாக இந்தப் பிரிவில் 9 சுற்றுகள் நிறைவில் கோனெரு ஹம்பி 4 வெற்றிகளையே பதிவு செய்திருந்தாா். ஆனால், அடுத்த 8 சுற்றுகளில் அவா் 7-இல் வெற்றி பெற்று இந்த முன்னேற்றத்தைச் சந்தித்தாா். எஞ்சிய ஒரு ஆட்டத்தில் சக இந்தியரான துரோணவள்ளி ஹரிகாவுடன் டிரா செய்தாா்.

இப்பிரிவில் களம் கண்ட மற்ற இந்தியா்களான துரோணவள்ளி ஹரிகா 10-ஆம் இடமும், பத்மினி ரௌத் 17-ஆம் இடமும், தானியா சச்தேவ் 21-ஆவது இடமும், சவிதா ஸ்ரீ 34-ஆவது இடமும் பிடித்தனா். இதில் சவிதா ரேப்பிட் சாம்பியன்ஷிப்பின் மகளிா் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தாா்.



Read in source website

ஒவ்வொரு நாளும் பிறக்கும் போது, இந்த பூமி அதன் ஆயுளில் ஒரு நாளை இழக்கிறது. ஆனால், ஒவ்வொரு புத்தாண்டும் பிறக்கும் போது உலகமே ஒரு ஆண்டு முடிந்து மற்றொரு ஆண்டு பிறப்பதை மகிழ்ச்சியுடனும் குதூகலத்துடனும் கொண்டாடி மகிழ்கிறது.

கரோனா, உக்ரைன் மீது போர் என எத்தனை பிரச்னைகள் இருந்தாலும், வரும் புத்தாண்டு நல்லதைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையோடுதான் பலரும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை முன்னெடுக்கிறார்கள். வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறார்கள்.

ஆனால் என்ன புத்தாண்டு பிறப்பை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் கொண்டாடுவதில்லை. உலக நாடுகள் ஒவ்வொன்றும் சூரிய உதயத்தை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு நேரத்தில் இயங்கிக் கொண்டிருக்க, புத்தாண்டை உலகின் முதல் நாடாக மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபாட்டி கொண்டாடி வருகிறது. கிரிபாட்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது. 

இந்த பூமியின் முதல் நாடு என்று அழைக்கப்படும் கிரிபாட்டி தீவு இந்திய நேரப்படி டிசம்பர் 31ஆம் தேதி பகல் சுமார் 3.30 மணிக்கெல்லாம் புத்தாண்டு பிறந்து கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டிருக்கிறது. அடுத்து டோங்கா, சமோவா பசிபிக் தீவுகளும் அடுத்தடுத்து புத்தாண்டுக் கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டன. 

ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நேரத்தில் சூரிய உதயத்தைக் காண்பதால், அதற்கேற்ப நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும் முறை 1884ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. 

அதன்படி, அமெரிக்காவுக்கு மிக அருகே இருக்கும் பேகர் மீற்றும் ஹௌலாண்ட் தீவுகள்தான், புத்தாண்டை வரவேற்கும் கடைசி நாடுகளாக இருக்கும். இந்திய நேரப்படி ஜனவரி 1ஆம் தேதி மாலை 5.30 மணிக்குத்தான் அங்கு புத்தாண்டு பிறக்கும்.

கரோலின் தீவும் உலகிலேயே முதலில் சூரிய உதயத்தைக் காணும் நாடாக அறியப்படுகிறது. அந்த வகையில், ஒருவர் கரோலின் தீவில் இருந்து, ஹவாயிலிருக்கும் தனது உறவினருக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 24 மணி நேரம் காத்திருக்க வேண்டுமாம். அப்போதுதான் ஹவாயில் புத்தாண்டு பிறக்குமாம்.

நியூ ஸிலாந்துக்கு அருகேயிருக்கும் யங் தீவும் கூட, சில சமயங்களில் உலகிலேயே முதல் சூரிய உதயத்தைக் காணும். அந்த வகையில் சில ஜனவரி 1ஆம் தேதிகளும் இருக்கும்.
 



Read in source website

ஊழல் வழக்கில் மியான்மா் ஜனநாயகக் கட்சித் தலைவா் ஆங் சான் சூகிக்கு (77) அந்த நாட்டு நீதிமன்றம் மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அவா் மீது சுமத்தப்பட்டிருந்த மேலும் 5 ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்து வந்த நீதிமன்றம், அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது.

அத்துடன், அந்த குற்றங்களுக்காக அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.

ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மொத்தம் 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்தத் தீா்ப்பையடுத்து, அவரது ஒட்டுமொத்த தண்டனைக் காலம் 33 ஆண்டுகளாக உயா்ந்துள்ளது.

மியான்மரில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

எனினும், அந்தத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி அவரது ஆட்சியை ராணுவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி கலைத்தது. அத்துடன், அவரையும் மற்ற அரசியல் தலைவா்களையும் கைது செய்து அவா்கள் மீது பல்வேறு வழக்குகளை ராணுவ ஆட்சியாளா்கள் பதிவு செய்துள்ளனா்.

அந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஆயுதப் போராட்டத்தை ஊக்குவித்ததாக ஆங் சான் சூகி ஆட்சியில் எம்.பி.யாக இருந்தவா் உள்ளிட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, அந்த தண்டனை கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சா்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், அனுமதியில்லாமல் கம்பியில்லா தொலைத் தொடா்பு சாதனங்களை வைத்திருந்தது, கரோனா விதிகளை மீறியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஏற்கெனவே 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஆங் சான் சூகிக்கு நீதிமன்றம் தற்போது மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, மியான்மரில் ஜனநாயக அரசை அமைக்க வலியுறுத்திப் போராடி வந்த ஆங் சான் சூகியை ராணுவ ஆட்சியாளா்கள் பல ஆண்டுகளாக சிறையில் அடைத்திருந்தனா்.

அந்தப் போராட்டத்துக்காக, ஆங் சான் சூகிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.



Read in source website

சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சராக அமெரிக்காவுக்கான அந்நாட்டு தூதராக உள்ள கின் காங் (56) நியமிக்கப்பட்டுள்ளாா்.

இப்போது வெளியுறவு அமைச்சராக உள்ள வாங் யி, ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு (பொலிட்பியூரோ) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா். இது சீனாவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயா்நிலை அதிகாரக் குழுவாகும்.

எனினும், கின் காங் எப்போது வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்பாா் என்பது தொடா்பாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

சீன நாடாளுமன்றத்தின் ஆண்டுக் கூட்டம் மாா்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டத்தின்போதுதான் அமைச்சரவை மாற்றம் நடைபெறும். ஆனால், இப்போது வழக்கத்துக்கு மாறாக புதிய வெளியுறவு அமைச்சா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அடுத்த ஆண்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் தவிர பிரதமா், அமைச்சா்கள் அனைவரும் மாற்றப்படுவாா்கள் என்று தெரிகிறது. தற்போது பிரதமராக உள்ள லி கெகியாங் கடந்த 10 ஆண்டுகளாக அப்பதவியில் உள்ளாா். அவரும் மாா்ச் மாதத்துடன் விடைபெற இருக்கிறாா்.

புதிய பிரதமராக லீ கியாங் (63) நியமிக்கப்பட இருக்கிறாா். இவா் அதிபா் ஷி ஜின்பிங்குக்கு மிகவும் நெருக்கமானவா். சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் இருந்துள்ளாா்.

அடுத்த கட்டமாக அவா், இந்திய-சீன எல்லைப் பிரச்னை பேச்சுவாா்த்தைக் குழுவில் சிறப்பு உறுப்பினராக நியமிக்கப்படுவாா் என்று தெரிகிறது.

ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த லீ கியாங் அமெரிக்காவுடன் பேச்சு நடத்த மிகவும் உதவிகரமாக இருப்பாா் என்றும் வெளியுறவுக் கொள்கையில் அவரது தீவிரமான போக்கு சீனாவுக்கு உதவும் என்றும் கணக்கிட்டு அவரை பிரதமா் பதவியில் அமா்த்த அதிபா் ஷி ஜின்பிங் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

சீனாவில் மா சேதுங்குக்கு பிறகு 10 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் தொடரும் ஒரே சீன அதிபா் ஷி ஜின்பிங் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 



Read in source website

 

இந்தியாவில் மிக வேகமாக வளா்ச்சியடைந்து வரும் சில்லறை வா்த்தகத் துறைக்கு வரும் 2023-ஆம் ஆண்டும் சிறப்பானதாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது குறித்து துறை வட்டாரங்கள் கூறியதாவது:

இரண்டு ஆண்டு கால கரோனா நெருக்கடிக்குப் பிறகு, இந்த 2022-ஆம் ஆண்டில் நாட்டின் சில்லறை விற்பனைத் துறை நல்ல வளா்ச்சியைக் கண்டுள்ளது.

கரோனா நெருக்கடி தந்த அனுபவத்தினால், இடா்பாடுகளை எதிா்கொள்வதற்கு சில்லறை விற்பனைத் துறையினா் தங்களைப் பழக்கப்படுத்திக்கொண்டுள்ளனா்.

அதற்காக, நுகா்வோரை பலதளங்களில் தொடா்பு கொள்ளும் உத்தி, நிறுவனங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே தொடா்பு ஏற்படுத்தல் (பி2பி), நேரடி வாடிக்கையாளா் தொடா்பு (டி2சி), விற்பனைப் பொருள்களைத் தருவிப்பதற்கான ஆதாரங்களை அதிகரித்தல் போன்ற பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி, சில்லறை விற்பனையாளா்கள் தங்களது நிலையை இந்த ஆண்டு வலுப்படுத்திக் கொண்டுள்ளனா்.

இந்தப் போக்கு, அடுத்த ஆண்டிலும் தொடரும்.

பணவீக்கம் அதிகரித்து வருவது சில்லறை வா்த்தகத் துறைக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

பொருள்களின் விலைகள் அதிகரிப்பது சில்லறை விற்பனையில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

இருந்தாலும், மக்களின் வாங்கும் திறன் அடுத்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கலாம்.

அத்துடன், சில்லறை விற்பனைத் துறையின் பல்வேறு பிரிவுகளிலும் புதிய புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகமாவது துறையின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக இணைவழி வா்த்தகம் பெருகுவது, காணொலி மூலம் கடைக்கு நேரடியாகச் சென்றதைப் போன்ற உணா்வை ஏற்படுத்தும் வசதிகள் அதிகரிப்பது போன்றவை சில்லறை வா்த்தகத்தின் வளா்ச்சிக்கு பக்கபலமாக இருக்கும்.

எனவே, இந்த ஆண்டைப் போலவே அடுத்த ஆண்டும் சில்லறை விற்பனைத் துறைக்கு சிறப்பானதாக இருக்கும் என்று துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன. 



Read in source website

நடப்பு நிதியாண்டில் ஒழுங்கமைக்கப்பட்ட ஆபரண வணிகா்களின் வருவாய் 25 சதவீதம் வரை உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது குறித்து சந்தை மதிப்பாய்வு நிறுவனமான கிரிசில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான நடப்பு நிதியாண்டில், ஒழுங்கமைக்கப்பட்ட ஆபரண வணிகா்களின் வருவாய் 23 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கும்.

கரோனா நெருக்கடி நிலவிய 2020-21-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் ஒழுங்கமைக்கப்பட்ட ஆபரண வணிகா்களின் வருவாய் கடந்த நிதியாண்டில் (ஏப்ரல் 2021-மாா்ச் 2022) 36 சதவீதம் உயா்ந்தது.

இந்த நிலையில், ஆபரணங்களுக்கான தேவை உயா்வதாலும், மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பதாலும் நடப்பு நிதியாண்டில் இந்த வளா்ச்சி 25 சதவீதம் வரை இருக்கும் என எதிா்பாா்க்கலாம்.

இருந்தாலும், ஒழுங்கமைக்கப்பட்ட ஆபரண வணிகா்களின் வருவாய் வளா்ச்சி அடுத்த 2023-24-ஆம் நிதியாண்டில் 8-லிருந்து 12 சதவீதம் வரை மிதமாகவே இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகளை தமிழக அரசு நடத்துகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல்: ‘சென்னை சங்கமம்… நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகளின் தொடக்க விழா 13.01.2023 அன்று சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் மிகத்திறமை வாய்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் கலைக்குழுக்களோடு நடத்தும் கண்கவர் கலைவிழா அரங்கேற்றப்படும்.

அதைத் தொடர்ந்து 14.01.2023, 15.01.2023, 16.01.2023 மற்றும் 17.01.2023 ஆகிய நான்கு நாட்களுக்கு சென்னை மாநகரில் உள்ள 16 இடங்களில் (தீவுத்திடல், பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், கொளத்தூர், முரசொலிமாறன் மேம்பால பூங்கா, பெரம்பூர், ராபின்சன் பூங்கா, ராயபுரம், நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், சிந்தாதிரிப்பேட்டை, டென்னிஸ் விளையாட்டு திடல், நுங்கம்பாக்கம், டவர் பூங்கா, அண்ணாநகர், ஜெய் நகர் பூங்கா, கோயம்பேடு, இராமகிருஷ்ணா நகர் விளையட்டு திடல், வளசரவாக்கம், சிவன் பூங்கா, கே.கே.நகர், கடற்கரை சாலை, திருவான்மியூர், அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு திடல், சைதாப்பேட்டை, நடேசன் பூங்கா, தியாகராய நகர்) கலை நிகழ்ச்சிகள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

அப்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலை வடிவங்களான தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பம்மையாட்டம், தெருக்கூத்து, கட்டைக்கூத்து, கணியன் கூத்து, பொம்மலாட்டம், தோற்பாவைக்கூத்து, சேர்வையாட்டம், தெம்மாங்கு பாட்டு, பெரும் சலங்கையாட்டம், தோடர் நடனம் போன்ற 30க்கும் மேற்பட்ட கலைவடிவங்கள் இடம்பெறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும், பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, மெல்லிசை நிகழ்ச்சிகள் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், பஞ்சாப், அசாம், மேற்கு வங்காளம், கர்நாடகம் போன்ற பிற மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் மக்களால் விரும்பி உண்ணப்படும் சுவையான உணவு வகைகளை விற்பனை செய்யும் வகையில் உணவுத் திருவிழாவிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாக்கள் நடக்கும் இடங்களில் கிராமிய சூழலை உருவாக்கி, பார்வையாளர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வண்ணம் உறியடி, பரமபதம், வழுக்கு மரம் போன்ற நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

‘சென்னை சங்கமம்…நம்ம ஊரு திருவிழா’ வின் ஒரு பகுதியாக கருத்தரங்கம், கவியரங்கம், நாடகம் போன்ற இலக்கிய நிகழ்ச்சிகள் முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெறும். இதில் தமிழ்நாட்டின் முன்னனி இலக்கிய ஆளுமைகள் பங்கேற்று சிறப்பிக்க இருக்கிறார்கள். மேலும், ஓவியம், சிற்பம், கைவினைப் பொருட்கள் போன்ற கலைப்படைப்புகள் அடங்கிய கண்காட்சியும் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் ஏற்பாடுகள் செய்யப்படும். மக்கள் விரும்பிய கலைப்படைப்புகளை வாங்கிச் செல்லும் வகையில் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘சென்னை சங்கமம்…நம்ம ஊரு திருவிழா’ நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, கலை பண்பாட்டுத்துறையின் மண்டல தலைமையிடங்கள் அமைந்துள்ள கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட திறமை வாய்ந்த கலைக்குழுக்கள் மூலம் ‘நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை செயலர் சுப்ரியா சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பு:

செங்கல்பட்டு மாவட்டம், கடம்பூர் கிராமத்தில் 137 ஹெக்டேர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு டிச.28-ம் தேதி அரசாணை வெளியிட்டது. இத்திட்டம் 2027-ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில், பூர்வீக இனங்களின் தோட்டம், ஆர்போரேடம்ஸ், பேம்புசிடம்ஸ், மரக்கன்றுகள் மற்றும் ஹீலிங் கார்டன், மூலிகைத் தோட்டம், ரோஜா தோட்டம், ராக்கரி, ஜப்பானிய தோட்டம், பண்டைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பு போன்ற கூறுகளும் இடம்பெற்றிருக்கும்.

மேலும், வழிகாட்டப்பட்ட நடைபயிற்சி, குழந்தைகள் மற்றும் தாவர உயிரியல் பன்முகத்தன்மை பற்றி மாணவர்களுக்குத் தெரிவிக்கும் கல்வித் திட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கான பயிற்சி பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள், படகு சவாரி, இயற்கை பாதைகள், சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் பிற ஆரோக்கிய நடவடிக்கைகள் உள்ளிட்ட செயல்பாடுகளையும் கொண்டிருக்கும்.

இத்தாவரவியல் பூங்கா லண்டன் கியூவில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து அமைக்கப்படும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தனியாக கையெழுத்திடப்படும்.

மண், நீர் மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீடு, திட்டப் பகுதியைச் சுற்றி வேலி அமைத்தல், போன்றவற்றுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அரசு சார்பில் ரூ.1 கோடி விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு இணையம் வழியே அங்கீகாரம் வழங்குவதற்கான புதிய வலைதளம் மற்றும் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அனைத்து அலுவல் பணிகளையும் ஒருங்கிணைத்து கணினிமயமாக்கும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர், ஆசிரியர் வருகைப்பதிவு தொடங்கி அனைத்து ஆவணங்களும் ‘எமிஸ்’ உள்ளிட்ட வலைதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

பல்வேறு சேவைகள்: இதன் தொடர்ச்சியாக தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெறுதல் உட்பட அரசின் பல்வேறு சேவைகளை இணையவழியில் பெறுவதற்கான பிரத்யேக செயலிமற்றும் வலைதளம், பள்ளிக்கல்வித் துறை சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மற்றும் வலைதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, பள்ளிக் கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பள்ளிக்கல்வித் துறை சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளுக்கான https://tnschools.gov.in/dms/?lang=en எனும் வலைதளத்தில் பல்வேறு சிறப்புகள் உள்ளன. இந்த வலைதளம் மற்றும் செயலி மூலம் தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி, அங்கீகாரம், கூடுதல் வகுப்புகள், மேல்நிலை வகுப்பில் புதிய பாடப்பிரிவு தொடங்க அனுமதி, பள்ளி பெயர், இடம் மற்றும் நிர்வாக மாற்றங்கள் போன்ற பல்வேறு சேவைகளை மேற்கொள்ள வசதிகள் செய்யப் பட்டுள்ளன.

15 ஆயிரம் பள்ளிகள் பயன்பெறும்: அத்துடன், தங்கள் விண்ணப்பங்கள் எந்த நிலையில் உள்ளன என்பதையும் பள்ளி நிர்வாகங்களால் தெரிந்துகொள்ள முடியும். இதனால் தனியார் பள்ளிகள் அரசின் அனுமதியை எளிய முறையில் வெளிப்படையாகவும், காலதாமதமின்றி விரைவாகவும் பெற முடியும். புதிய செயலியால் சுமார் 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் பயன்பெற உள்ளன.

மேலும், தனியார் பள்ளிகளுக்கும், கல்வித் துறைக்கும் இடையேயான தொடர்பும் மேம்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Read in source website

சண்டிகர்: பஞ்சாபில் ஜாதி குறியீடு கொண்ட 56 அரசுப் பள்ளிகளுக்கு அம்மாநில அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.

பஞ்சாபில் ஜாதி அடிப்படையில் பெயர் கொண்ட பள்ளிகளின் பெயரை மாற்றுமாறு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸ் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டார்.

இதையடுத்து அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும் தங்களின் அதிகாரவரம்புக்குட்பட்ட பகுதிகளில் இத்தகைய பெயர்கள் உள்ள பள்ளிகள் குறித்த அறிக்கையை அனுப்பி வைக்குமாறு பள்ளிக் கல்வித் துறை கேட்டுக்கொண்டது.

இதன் அடிப்படையில் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி உட்பட 56 அரசுப் பள்ளிகளின் பெயரை மாநில பள்ளிக் கல்வித் துறை மாற்றியுள்ளது.

பள்ளிகள் அமைந்துள்ள கிராமம் அல்லது நன்கு அறியப்பட்ட ஆளுமை, தியாகி அல்லது உள்ளூர் நாயகனின் பெயர் இந்தப் பள்ளிக்களுக்கு சூட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநில ஆம் ஆத்மி கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.



Read in source website

உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கி இன்று 310-வது நாள். கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. வெறும் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தான் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. க்ரெம்ளினில் இருந்து வந்த தகவலில் இது ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே கூறப்பட்டது. ஆனால், ரஷ்யா முன்னேறிய வேகம் உலக நாடுகளை பிரம்மிக்க வைத்தது. நேட்டோ நாடுகளிடம் குறிப்பாக அமெரிக்காவிடம் உதவி கோரிய ஜெலன்ஸ்கி இன்று வரை போரை எதிர்கொண்டு வருகிறார். ஆனால் அதன் பக்கவாட்டு விளைவுகள்தான் உண்மையிலேயே இது போர்களுக்கான காலம் இல்லை என்பதை அன்றாடமும் உணர்த்தி வருகிறது.

போருக்கான காரணம் என்ன? - உக்ரைன் தன்னை நேட்டோவில் இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தது. அதற்காக விண்ணப்பித்தது. ஆனால் அது பரிசீலனைக்கு வரும் முன்னரே ரஷ்யா தனது கண்டனத்தை முன்வைத்து. அமெரிக்கா அங்கம்வகிக்கும் நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் அதன் மூலம் தனது நாட்டின் இறையாண்மைக்கு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று எதிர்த்தது, எச்சரித்தது. எச்சரிக்கைகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் உக்ரைன் எல்லையில் பெருமளவில் படைக் குவிப்புகளும் நடந்தது. திடீரென பிப்ரவரி 24 அதிகாலையில் உக்ரைன் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இன்றும் ரஷ்யாவின் நிலைப்பாடு நேட்டோவில் உக்ரைன் இணையக் கூடாது என்பதாகத்தான் இருக்கிறது.

ஈகோவும் ஈகையும்: ஆனால், ‘எங்களை நேட்டோவில் இணைத்துக் கொள்ளுங்கள்’ என்ற கோரிக்கை வைத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நாளடைவில் அந்த அணியில் இல்லாமலே அந்த அணியில் இருக்கும் உறுப்பு நாடுகள் பெறும் அத்தனை உதவிகளையும் அனுபவித்து வருகிறார். இது எந்த அளவுக்கு அவருக்கு ஒரு சவுகரியமான நிலையைக் கொடுத்தது என்றால், அண்மையில் அமெரிக்காவுக்கு சென்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "நீங்கள் கொடுக்கும் நிதியுதவி வெறும் தானம் என்று நினைக்காதீர்கள். இது முதலீடு. இது ஜனநாயகம், பாதுகாப்புக்கான முதலீடு. இந்த அவையில் நான் உரையாற்றுவது பெருமைக்குரியது. எல்லா பிரச்சினைகளுக்கும் இடையே உக்ரைன் வீழவில்லை. உக்ரைன் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. பதிலடி கொடுக்கிறது. அதிபர் பைடன் எங்களுக்கு துணை நிற்பதிரைன் ஒருபோதும் ரஷ்யாவிடம் சரணடையாது" என்று முழங்கும் அளவுக்கு சவுகரியத்தை (comfort) கொடுத்துள்ளது.

இதற்கிடையில், போரினால் ஏற்பட்டுள்ள பக்கவாட்டு சிதைவுகளையும் பார்க்க வேண்டும். முதலில் நேட்டோவுக்குள் ஏற்பட்டுள்ள குமுறல். எல்லாம் மேலே இருக்கவன் பார்த்துக் கொள்வான் என்ற சினிமா காமெடியைப் போல் நேட்டோ, அமெரிக்கா மீது பாரத்தைப் போட்டு போரை எதிர்கொண்டு சவால் விடுத்துவருகிறார் ஜெலன்ஸ்கி.

ஆனால், ரஷ்யாவுடன் நேரடியாக போரில் ஈடுபடுவது மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுக்கும். அதேவேளையில் ரஷ்யா, உக்ரைனை வெல்ல அனுமதிப்பதும், அதனுடைய ராணுவ பலத்தை உலகிற்கு பறைச்சாற்றுவதாகிவிடும். அப்படியென்றால் வெறும் ஆயுத உதவிகளை மட்டும் வழங்கினால், அது போரில் நேரடியாக ஈடுப்பட்டதாகவும் இருக்காது ரஷ்யாவுக்கும் செக் வைத்ததாக இருக்கும் என்ற கணிப்புடன் அமெரிக்கா மேற்குலகை திரட்டிக் கொண்டு களமிறங்க இப்போது உறுப்பு நாடுகள் ஆயுதப் பற்றாக்குறையால் விழி பிதுங்கி நிற்கின்றன.

இந்தச் சூழலில் தனது ஈகோவால் வெளிப்பட்ட ஈகையை நிறுத்த முடியாமல் முழுப் பொறுப்பையும் தோளில் சுமக்கும் சூழல் உருவாகியுள்ளது. 'ரஷ்யா தோல்வி' என்ற ஒரேயொரு வார்த்தையைக் கேட்பதற்காக செய்யும் உதவிகள் எல்லாம் எப்படியான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை இப்போது அமெரிக்காவும், நேட்டோவும் உணரத் தொடங்கியுள்ளன. இவையெல்லாம் ரஷ்யாவுக்கும் நன்றாக தெரிந்திருக்கிறது என்பதற்கு மத்தியில் தான் சவால்களும், சமாதான முன்னெடுப்புகளும் நடக்கின்றன.

ஒரு நேட்டோ... இரு பேரழிவு... - 2021 ஆகஸ்ட் மாதத்தை உலகம் மறந்திருக்க முடியாது. காரணம், ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகளும் அமெரிக்க ராணுவமும் முழுமையாக வெளியேற ஆரம்பித்தது. அதன் நீட்சியாக ஆளும் அரசை விரட்டியடித்து தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. விளைவு அங்கு பசி, பட்டினி, மனித உரிமைகள் மீறல், பெண் கல்விக்கு தடை, பெண்களின் அடிப்படை சுதந்திரம் பறிப்பு என எண்ணற்ற பேரழிவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் நிலையான ஆட்சியை அமைக்க உதவுவோம், தலிபான்களை வேரோடு அழிப்போம் என்றெல்லாம் சூளுரைத்துதான் அமெரிக்க, நேட்டோ படைகள் அங்கே களமிறங்கின. ஆனால் இன்று ஆப்கனின் நிலை என்னவாக இருக்கிறது என்பதற்கு பசித்த வயிறுகள் தான் சாட்சியாக இருக்கின்றன.

ஆப்கனில் அமெரிக்காவும், நேட்டோவும் தானாக ஆஜரானது. உக்ரைனில் அது நேரடியாக ஆஜராக அந்நாடு மன்றாடிக் கொண்டிருக்கிறது. அந்த விருப்பத்தினால் அங்கிருந்து கோடிக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். கோதுமையையும், சூரியகாந்தி வித்துக்களையும் உலகிற்கே ஏற்றுமதி செய்து கொண்டிருந்த உக்ரைன் உணவுக்காக உலக நாடுகளின் உதவிகளை எதிர்நோக்கியிருக்கிறது. ஆயுதங்களாகவும், மருந்துகளாகவும், நிதியாகவும், உணவுப் பொருட்களாகவும் மேற்கு உலகம் தரும் ரேஷன்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

பிரச்சினையை இழுத்துப் போட்டுக் கொண்ட அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இந்த சிக்கலில் இருந்து எவ்வித பாதிப்பும் இல்லாமல் ரஷ்யாவின் ஏளனத்துக்கும் உள்ளாகாமல் வெளியே வேறுவிதமான உத்திகளைக் கையாளலாம். ஆயுதங்களின் அளவைக் குறைக்காமல் தரத்தைக் குறைக்கலாம். இன்னும் பிற உதவிகளின் அளவைக் குறைக்கலாம். இதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாமல் இல்லை. அப்படியான சூழலில் 2021-ல் ஆப்கன் போல் 2022-ல் உக்ரைன் என்றாகலாம்.

இப்போதும் பொருந்தும் என்பதை உணர்வார்களா? - உக்ரைன் போர் தொடங்கி சரியாக 14-வது நாளில் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி இன்ஸ்டாகிராமில் I Testify.. என்ற தலைப்பில் ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருந்தார். அதில், "இந்தப் போருக்கு இடையே பிறந்த குழந்தைகள், பேஸ்மென்ட்டின் மேற்கூரையையே முதலில் பார்க்கின்றன. அடித்தளத்தில் இருக்கும் இறுக்கமான காற்றையே சுவாசிக்கின்றன. அந்தக் குழந்தைகளை பயத்தில் உறைந்த சமூகம் தான் வரவேற்றுள்ளது. இங்கே பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் அமைதி என்றால் என்னவென்று தெரியாமல் உள்ளனர்" என்று வேதனை தெரிவித்திருந்தார்.

ஏனெனில், இன்றும் கூட அவர் அந்த சாட்சியை திரும்ப சொல்லலாம் என்றளவில்தான் பதற்றம் நிலவுகிறது. உணவு தட்டுப்பாடு, மருத்துவமனைகள், பள்ளிக்கூடஙக்ள் போன்ற கட்டமைப்புகளுக்கு கடும் சேதமடைந்துள்ளன. உறையவைக்கும் குளிரில் மின்சாரம் இல்லாமல் சத்தமில்லாமல் உயிர்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. நிமோனியா, ஹைபோதெர்மியாவால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ள்து. 78 லட்சம் உக்ரைனியர்கள் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். அதில் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க அச்சமாக இருப்பதாக குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

போர் பாதிப்பு தனிப்பட்டதா? - இந்தப் போரில் உக்ரைன் மட்டும்தான் பாதிக்கப்பட்டதா என்றால் இல்லை. உக்ரைனில் இருந்து தானியங்கள் ஏற்றுமதியாவது பெருமளவில் தடைபட்டுள்ளது. சர்வதேச சமூகம் இந்த ஏற்றுமதியை சுமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துவந்தாலும் பாதிப்பு முயல் வேகத்திலும் தீர்வுகள் ஆமை வேகத்திலும் நடந்தேறுகின்றன. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் சில உக்ரைன் கோதுமை இல்லாமல் இன்னும் மோசமான பட்டினி சாவுகளை சந்திக்கின்றன. சோமாலியா, எதியோபியா, கென்யா போன்ற நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. உக்ரைனிலிருந்து ஏற்றுமதியான தானியங்கள் உலகம் முழுவதும் 40 கோடி மக்களின் பசியை போக்கிக் கொண்டிருந்தது என்பதை உக்ரைனும், ரஷ்யாவும், அமெரிக்காவும், நேட்டோ உறுப்பு நாடுகளும் உணர வேண்டியது மிகவும் அவசியம்.

உக்ரைன் தானிய ஏற்றுமதி மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி தடைபட்டதால் ஐரோப்பிய நாடுகள் பலவும் கடுமையான சிக்கலை எதிர்கொண்டுள்ளன. எண்ணெய், எரிபொருள் ஏற்றுமதியில் ரஷ்யா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதுவும் ஐரோப்பிய நாடுகள் தான் இந்த ஏற்றுமதியால் பெரும் பலனடைந்துவந்தன. உக்ரைன், ரஷ்யாவிடமிருந்து சமையல் எண்ணெய், எரிபொருள் என தாராளமாக இறக்குமதி செய்து கொண்டிருந்தன. அவை இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எந்த நேரத்திலும் பைப்லைன் வழியான எரிபொருளை முற்றிலுமாக நிறுத்துவோம் என்ற எச்சரிக்கையை ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு அவ்வப்போது கடத்திக் கொண்டே தான் இருக்கிறது.

போர் பாதிப்பு என்பது தனிப்பட்டது (isolated) அல்ல என்பதை உணர்ந்து உக்ரைன், ரஷ்யா மக்களுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக மக்களுக்காகவும் இந்தப் போர் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஏனெனில் போர்களின் காலம் முடிந்துவிட்டது. எல்லைக் கோடுகளால் மட்டுமே பிரிந்திருக்கும் உலக நாடுகள் இன்றைய காலக்கட்டத்தில் வர்த்தகத்தால், தொழிலால், கல்வியால், மக்களின் தொடர்புகளால் ஒரே எல்லைக்குள் தான் இருக்கின்றன. இங்கே ஒவ்வொரு வினைக்கும் பரவலான ஒட்டுமொத்தமான எதிர்வினையே ஏற்படுகிறது. எல்லைக் கோடுகள் எல்லாம் வெறும் மாயை என்பதை கரோனா பெருந்தொற்றும் உறுதி செய்து கொண்டிருக்கிறது. இது போருக்கான காலம் அல்ல என்று ரஷ்யாவிடம் இந்தியா தெரிவித்தது எல்லோருக்கும் பொருந்தக்கூடிய தகவல். ஆம், உண்மையில் இது போருக்கான, பழிவாங்கலுக்கான காலம் இல்லை தான். புதிய வருடம் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும்.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in



Read in source website

“எல்லோர் கையிலும் மொபைல் இருக்கிறது. அதன் மூலம் கொடுக்கல் வாங்கல் நடக்கிற டிஜிட்டல் காலத்துக்கு வந்துவிட்டோம். இன்னமும், மக்கள் கையில் பணம் இல்லை என்று புகார் சொல்வதில் அர்த்தமே இல்லை” இப்படி சிலர் எண்ணக் கூடும். எந்த வடிவில் இருக்கிறது என்பதல்ல; இந்த இருப்பு எத்தனை பேர் கையில் இருக்கிறது..? அதை விடவும், இந்தப் பணம் எத்தனை கைகளுக்கு மாறிச் செல்கிறது..? இதைக் கொண்டுதான் பொருளாதாரத்தின் துடிப்பு தீர்மானிக்கப்படுகிறது.

பணவீக்கம் – பணப்புழக்கம் இரண்டும் முற்றிலும் வேறானவை. முன்னது பிணி; அபாயம். பின்னது பொருளாதார இயக்கம். பணம், கைமாறிச் சென்றுகொண்டே இருக்க வேண்டும். பணத்தின் பண்பும் பயனும் அதுவே. ரூபாய் நோட்டு, எத்தனை முறை எத்தனை பேருக்குக் கைமாறிச் செல்கிறதோ அந்த அளவுக்கு அது அத்தனை பேருக்கு பயன்பட்டுள்ளது. நிறைய கைகளில் மாறி இருக்கிறது எனில்,பணப்புழக்கம் சிறப்பாக இருப்பதாய்ப் பொருள். மாறாக, பணம் சிலர் கைகளில் தேங்கிவிட்டால், அந்த அளவுக்குப் பொருளாதாரம் முடங்கி விடுகிறது.

பணப்புழக்கம் பற்றி ஆய்வுகள், அறிக்கைகள் மூலம்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்றில்லை. நாம் வாழும் பகுதியில், நம்மைச் சுற்றியுள்ள அத்தியாவசியக் கடைகள் எந்த அளவுக்கு விறுவிறுப்பாக இயங்குகின்றன என்பதைப் பார்த்தால் போதும். விளங்கி விடும்.

“இல்லையே… மக்கள் வாங்கிக்கொண்டுதானே இருக்கிறார்கள்? கடைத் தெருக்களில் எவ்வளவு கூட்டம்” என்று தோன்றுகிறதா..?

போட்டித் தேர்வுகளுக்கு பல லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். சில நூறு பேர் மட்டும் மீண்டும் மீண்டும் தேர்ச்சி பெறுகிறார்கள். புதிதாய் தேறுகிறவர்கள் மிகக்குறைவு. அப்படித்தான் இதுவும்.வாங்குவோர் அதிகம் என்கிறோமே.. வாங்காதவர்கள்? மிக மிக அதிகம். கையில் அட்டை மட்டும் உண்டு; அதில் நூறு ரூபாய் கூட இல்லாதவர்கள் எத்தனை பேர்..? இத்தனை கோடி புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன என்கிற வரை அது சாதனைதான். ஆனால் இந்தக் கணக்குகளில் எவ்வளவு இருப்பு இருக்கிறது?

இந்தியாவில் நிதி நடவடிக்கைகள் நவீனமாகிவிட்டன. டிஜிட்டல் பொருளாதாரம் மிகப் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. வரவேற்கத்தக்க முன்னேற்றம். டிஜிட்டல் வடிவத்தில், கணக்கில் வராத பணத்துக்கு சாத்தியம் இல்லை. உண்மை. ஆனால், இதுபொருளாதார வளர்ச்சிக்கான அடையாளமா..?

சாமான்யனின் கையில் அல்லது கணக்கில் பணம் சேர்ந்துள்ளதா..? ஆம் எனில், புதிதாக எந்த வழியில், என்ன வருமானம் வருகிறது..? அப்படி எதுவும் இல்லை.

‘ஒட்டுமொத்த வளர்ச்சி’ – ‘உள்ளடக்கிய வளர்ச்சி’ இரண்டுக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதாகத் தீர்மானமாய் தோன்றுகிறது. இந்த இடைவெளி குறைந்தால், ஆரோக்கியம்; கூடிக் கொண்டேபோனால், ஆபத்து.

மேதைகளின் அறிவுரைகள், குழுக்களின் பரிந்துரைகள், முதலீட்டாளர் மாநாடுகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், திட்ட வரைவு அறிக்கைகள் ஆகியன இரண்டாம்பட்சம்தான். அதிகாரத்தில் இருக்கும்கொள்கை வடிவமைப்போர் தொடங்கி அப்பாவி அடித்தட்டு மக்கள் வரை எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும்: ‘பொருளாதாரம்’ – நிபுணர்களின் பரிந்துரைகளால் அல்ல; நியாயங்களின் மீது கட்டமைக்கப்பட்டால் இன்னும் பல மக்களுக்கு பலன் தரும்.

மரபுத் தொழில்களைப் புறக்கணித்தல், பல்லாயிரம் கோடிகளில்இயங்கும் தொழில்களுக்கு முன்னுரிமை தருதல், அளவற்ற அந்நியமுதலீடுகளை அனுமதித்தல், இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு துணை போதல்… வளர்ச்சிக்குஅல்ல; வீழ்ச்சிக்கே வழி வகுக்கும்.எல்லாரையும் உள்ளடக்கிய ‘மக்கள்பொருளாதாரம்’ என்கிற கோணத்தில் அரசுகள், பொருளாதாரத்தைஅணுகினால் சிறப்பாக இருக்கும்; சாமான்யனின் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். இந்த வகையில், பலதுறைகளில் சீர்திருத்தம், மீள்பார்வை, மறுமதிப்பீடு நிச்சயம் தேவை.

(அடுத்து - மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள்...)

முந்தைய அத்தியாயம்: இந்தியப் பொருளாதாரம் 2023 - வேலைவாய்ப்பை உருவாக்க என்ன திட்டம்?



Read in source website

சந்தா்ப்பவாத அரசியல் என்பது நேபாளத்துக்குப் புதிதொன்றுமல்ல. மன்னராட்சியிலிருந்து விடுபட்டு, ஜனநாயகத்துக்கு மாறிய நேபாளம், கடந்த 15 ஆண்டுகளில் எட்டு பிரதமா்களையும், ஒரு முறை உச்சநீதிமன்ற நீதிபதி இடைக்காலப் பிரதமராகச் செயல்பட்டதையும் பாா்த்துவிட்டது. நேபாள காங்கிரஸ் தலைவா் ஷோ் பகதூா் தேவுபா, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) தலைவா் புஷ்ப கமல் தாஹால் என்கிற பிரசண்டா, நேபாள கம்யூனிஸ்ட் மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் தலைவா் கே.பி. சா்மா ஓலி ஆகியோா் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் பிரதமா்களாக இருந்திருக்கிறாா்கள்.

அதனால், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) தலைவா் பிரசண்டா ஆளும் கூட்டணியிலிருந்து விலகி, எதிா்க்கட்சித் தலைவா் கே.பி. சா்மா ஓலியுடன் இணைந்து, பிரதமராகி இருப்பது வியப்பை ஏற்படுத்தவில்லை. பதவிக்காக அணி மாறுவது என்பது பிரசண்டாவுக்குப் புதிதொன்றுமல்ல என்பதால், இதை திடீா் திருப்பம் என்று கூறிவிட முடியாது.

ஓா் ஆண்டுக்கு முன்னா் பிரதமராக இருந்த கே.பி. சா்மா ஓலி, தனக்குத் தந்திருந்த வாக்குறுதியை மீறி நாடாளுமன்றத்தைக் கலைத்துத் தோ்தலை அறிவித்தபோது, அதைக் கடுமையாக எதிா்த்து, நேபாள காங்கிரஸ் தலைவா் ஷோ் பகதூா் தேவுபாவுடன் கைகோத்தவா் பிரசண்டா. அதைத் தொடா்ந்து, ஆட்சி கலைக்கப்பட்டு தோ்தல் நடந்தது. நேபாள காங்கிரஸ், பிரசண்டாவின் சிபிஎன் (மாவோயிஸ்ட் மையம்) ஆகியவை இணைந்து அமைத்த ஐந்து கட்சிக் கூட்டணி, தோ்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற நிலையில்தான் இந்தத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

275 உறுப்பினா்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில், தனிப்பெரும் கட்சியாக 89 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது நேபாள காங்கிரஸ். கே.பி. சா்மா ஓலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 78 இடங்களிலும், பிரசண்டாவின் சிபிஎன் (மாவோயிஸ்ட் மையம்) வெறும் 32 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. கொரில்லா யுத்தம் நடத்தி 2008-இல் மன்னராட்சியை அகற்றிய ஹீரோவான பிரசண்டாவின் கட்சி, வெறும் 11% வாக்குகள்தான் பெற முடிந்திருக்கிறது.

யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், கொள்கை ரீதியாக முரண்பட்ட கட்சிகளை இணைத்துக் கொண்டு இப்போது பிரசண்டா ஆட்சி அமைத்திருக்கிறாா். 275 உறுப்பினா்கள் கொண்ட அவையில் பிரசண்டா தலைமையிலான கூட்டணிக்கு 168 உறுப்பினா்களின் ஆதரவு இருப்பது என்னவோ உண்மை. ஆனால், முரண்களின் மொத்த உருவமாக அந்தக் கூட்டணி காட்சி அளிக்கிறது.

1996 முதல் 2006 வரையில், மன்னராட்சியை அகற்றுவதற்காகத் தலைமறைவு கொரில்லா யுத்தம் நடத்தியவா் புஷ்ப கமல் தாஹால் என்கிற பிரசண்டா. இப்போது மன்னராட்சி ஆதரவுக் கட்சியான ஆா்.பி.சி.யைத் தனது கூட்டணியில் அவா் இணைத்துக் கொண்டிருக்கிறாா்.

சமூக ஊடகங்களின் மூலம் பிரசண்டா - ஓலி - தேவுபா உள்ளிட்ட அரசியல் தலைமைகளைக் கடுமையாக விமா்சிக்கும் தொலைக்காட்சி நட்சத்திரம் ரவி லமிசானேயின் ஆா்.எஸ்.பி. கட்சியைக் கூட்டணியில் சோ்த்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல, ரவி லமிசானே துணைப் பிரதமராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறாா். அவருக்கு உள்துறை அமைச்சகம் வழங்கப்பட்டிருக்கிறது.

பிரதமா் பதவி அல்லது அதிபா், துணை அதிபா், அவைத் தலைவா் பதவிகள் என்கிற பிரசண்டாவின் பேரத்தை முன்னாள் பிரதமரும், நேபாள காங்கிரஸ் தலைவருமான ஷோ் பகதூா் தேவுபா மறுத்துவிட்டாா். அதைத் தனக்கு சாதகமாக்கி, பிரசண்டாவுக்குப் பிரதமா் பதவியை விட்டுக் கொடுத்து, ஏனைய முக்கியமான அரசியல் சாசனப் பதவிகளைத் தனது கட்சிக்குப் பெற்றுக்கொண்டு விட்டாா் கே.பி. சா்மா ஓலி. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமா் பதவியும் சூழற்சி முறையில் அவருக்குக் கிடைக்கும்.

கடந்த 14 ஆண்டுகளில் இதுவரை 13 ஆட்சிகளை நேபாளம் சந்தித்துவிட்டது. எந்தவோா் அரசும் தனது பதவிக் காலத்தை முழுமையாக்கியதில்லை. கம்யூனிஸ சித்தாந்தத்தைப் பின்பற்றும் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பதால், ஸ்திரத்தன்மை ஏற்படும் என்று சொல்லிவிட முடியாது. 2018-இல் சீனாவின் வற்புறுத்தலால் சா்மா ஓலியும், பிரசண்டாவும் தங்களது கட்சிகளை இணைத்தாா்கள். அந்த ஒற்றுமை நிலைக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஓலியின் தலைமையிலான மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியிலிருந்து அவரது போக்கு பிடிக்காமல், மூத்த தலைவா்களான மாதவ் குமாா் நேபாள், ஜலானாத் கனல், பிம் பகதூா் ராவல் உள்ளிட்ட மூத்த தலைவா்களும் விலகினாா்கள்.

தோ்தல் தெளிவான முடிவைத் தரவில்லை என்றாலும், மக்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. வயதான, பழைய அரசியல்வாதிகளின் ஊழல் அரசியல் மீது அவா்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருப்பது தெரிகிறது. நேபாள வாக்காளா்களில் பாதிக்கும் மேற்பட்டோா் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவா்கள். அவா்கள் வழக்கமான அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்திருக்கிறாா்கள்.

நாடாளுமன்றத்தில் 275 இடங்களுக்கு 860 சுயேச்சைகள் போட்டியிட்டனா். 330 சட்டப்பேரவை இடங்களுக்கு ஆயிரத்துக்கும் அதிகமானோா் களமிறங்கினாா்கள். பிரசண்டா - தேவுபா - ஓலி போன்றவா்களின் தலைமையிலான கட்சிகளுக்கு மாற்று தேடுகிறாா்கள் மக்கள் என்பதைத்தான் அவை உணா்த்துகின்றன.

ஓலியை நம்பி ஆட்சி அமைத்திருக்கிறாா் பிரசண்டா. பிரதமராக அவா் எத்தனை காலம் தொடா்வாா் என்பதை நிா்ணயிக்கப் போவது மக்களோ, நாடாளுமன்றமோ அல்ல, முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலிதான்!



Read in source website

மனித குலம் அறிந்திராத துயரமான அனுபவத்தைத் தந்தது 2020-ஆம் ஆண்டு. அதற்கு முந்தைய ஆண்டின் இறுதியிலேயே சீனாவில் உருவாகிய கரோனா தீநுண்மி, 2020-ஆம் ஆண்டில் உலக நாடுகளில் பரவியது.

இதனால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் இயக்கமே பல மாதங்களுக்குத்  தடைபட்டது. தனிமனிதர்கள் மட்டுமன்றி, நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அனைவருமே  ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரத்தை மட்டுமில்லாமல், ஏராளமானோர் இன்னுயிரையும் இழந்தனர்.

கரோனா பெருந்தொற்று கற்றுத்தந்த பாடங்கள் அதிகம். இதுவரை சேமிப்பைப் பற்றித் தெரியாதவர்கள்கூட இப்போது சேமிப்புதான் வாழ்வில் ஆதார ஸ்ருதி என்பதைப் புரிந்து சேமிப்புக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கியுள்ளனர். முகக் கவசம், தனிமனித இடைவெளி என வாழ்க்கை முழுவதும் பின்பற்றத்தக்க பல நல்ல வழிமுறைகளையும் கரோனா வழங்கியுள்ளது.

கரோனாவிலிருந்து உலகம் மீண்டுவிட்டதாக அறியப்பட்ட வேளையில், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனாவின் தாக்கம் மீண்டும்  கவலையை ஏற்படுத்துகிறது. இச்சூழ்நிலையில், 2023-ஆம் ஆண்டை புதிய உறுதிமொழியேற்று வரவேற்கலாம்.

ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தந்து தினமும் உடற்பயிற்சி செய்யலாம். குழந்தைகளுக்கும் அவற்றைக் கற்றுத் தரலாம். வாழ்க்கைச் சுமையை ஏற்று வழிநடத்திச் செல்வதற்குப் பொருள் தேடி இளமையைத் தொலைத்துவிட்டு திரும்பிப் பார்க்கும்போது முதுமையில் நரை தெரியும். அழகான வாழ்க்கையை ரசித்து வாழத் தெரியாமல் முதுமைப் பருவத்தில் எப்படி வாழ்க்கையை வாழவில்லை என்பதை அசைபோட்டு துயரம் அடைவோர் ஏராளம். அதை விடுத்து உங்களுக்கென தனி நேரம் ஒதுக்கி உறவுகள், நட்புகளுடன் மனம் விட்டுப் பேசுங்கள். இதன்மூலம் புத்துணர்வு பெற முடியும். புத்தாண்டிலாவது இதை முயற்சி செய்யலாம்.

மனித வாழ்க்கையில் நினைவுகளாகிப் போன சுவடுகளை என்றும் மறக்க முடியாது. எப்போதும் பழைய நிகழ்வுகள் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும். தினமும் நாள்குறிப்பு எழுதுங்கள். இதில் முக்கியமானவர்களின் பிறந்த நாள், திருமண நாள்களைக் குறித்து வைத்து வாழ்த்துச் சொல்லுங்கள். முடிந்தால் பரிசளியுங்கள். இது மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையும். கிருஷ்ணனுக்கு நண்பன் குசேலன் அவல் கொடுத்தது போல பரிசு சிறியதெனக் கவலைப்படக் கூடாது. அதைக் கொடுக்கும் மனம் விசாலமான அன்பைப் பொழிய வேண்டும், அதுதான் முக்கியம். இந்த நினைவுகள் காலம் முழுவதும் நம்மை உயிர்ப்புடன் எழுச்சியாக வைத்திருக்க உதவும்.

புத்தாண்டில் இருந்து நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இது எப்போதும் நம்முடைய முன்னேற்றத்தை உயர்த்தும். பெரியவர்கள் எப்போதும் மகன், மகள் என பாசத்தைப் பிரித்துக் காட்டாதீர்கள். இது அவர்களின் குழந்தைகளிலும் எதிரொலிக்கும். இதன்மூலம் மன அமைதியைப் பெரியவர்கள்தான் இழப்பார்கள். குழந்தைகளின் மனதிலும் வெறுப்பை விதைக்காதீர்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை ஆழப் புதைந்து கிடக்கும். முடிந்தால் அதை ஊக்குவித்து திறமையை வெளிக்கொணர உதவுங்கள். நல்ல ஆசிரியர் ஒருவரைப் போல அதைச் செய்யுங்கள். அதுதான் குழந்தைகளின் மீதான அன்பைச் சொல்லும் மொழி. இது வீணையை மீட்டுவதைப் போல எப்போதும் இனிய ராகங்களால் இல்லமும் உள்ளமும் நிறைந்திருக்க உதவி செய்யும். இல்லாவிட்டால் அபஸ்வரமாகத்தான் இருக்கும்.

தேவையான சில இடங்களில் நாணல்போல வளைந்து செல்லுங்கள். புயல் வந்தாலும் மழை வந்தாலும் கவலையில்லாமல் ஏதாவது ஒருபுறம் சாய்ந்து கொண்டிருக்க முடியும். ஆடிக் காற்றிலும் நாணல் யாருக்கும் கவலையில்லாமல் வளையும். ஆனால், மரங்களின் நிலை- எதிர்த்து நின்றால் வேறோடு பிடுங்கி எறியப்படும். இதை மனதில் வைத்து  முடிந்த அளவு விட்டுக் கொடுக்கும் பண்பை வளர்த்துக் கொள்ளுங்கள். 

விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. முகத்தில் புன்னகையை வளர்த்துக் கொள்ளுங்கள். நம்மை பிற உயிரினங்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவது புன்னகைதான். எப்போதும் புன்னகை மலர்ந்திருக்கட்டும்.

ஆண்டில் சில நாள்களாவது குடும்பத்துடன் சுற்றுலா செல்லுங்கள். இது மனதில் என்றும் அழியாத கோலங்களாக, அகற்ற முடியாத நினைவாக இருக்கும். எப்போதும் அசைபோட்டுக் கொள்ளலாம். முடிந்த அளவு அனைவரும் தினமும் ஒருவேளையாவது குடும்பத்துடன் உணவு உண்ணுங்கள். அப்போது தினமும் நடந்த நல்ல நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இது குழந்தை வளர வளர எனக்காகக் குடும்பம் காத்திருக்கிறது என்பதைக் கற்றுத் தரும். இது பிணைப்பை அதிகப்படுத்தும்.

முதியவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். ஆண்டுக்கு ஒருமுறையாவது அருகே உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களுடன் உறவாடுங்கள். அது அவர்களுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் புத்துணர்வு தரும். குழந்தைகளை அழைத்துச் சென்றால் அவர்களின் மனதில் கண்டிப்பாக மாற்றம் உண்டாகும்.

குழந்தைகள் எப்போதும் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதில்லை. கேட்கும் வார்த்தைகளைப் பேசி  செய்யும் செயல்களையும் பார்க்கிறார்கள். குழந்தைகள் முன்னிலையில் பண்பான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். அவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய கடமை பெற்றோருக்கும், வீட்டின் பெரியவர்களுக்கும் உண்டு.

உலகத்துக்காகவும் எதிர்கால சந்ததியினர் வாழ்க்கை நன்றாக இருக்கவும் வாழ்நாளில் வாய்ப்பிருக்கும்போது மரங்களை நட்டுப் பராமரியுங்கள். உங்களுக்குப் பிறகும் அந்த மரம் உங்கள் பெயரைச் சொல்லும். இந்தத் தீர்மானங்களை 2023 புத்தாண்டில் எடுத்துக்கொண்டு, அவற்றைச் செயல்படுத்துவோம், நல்வழி காண்போம்.



Read in source website

மனிதா்களின் பரிணாம வளா்ச்சியில் ஒலிதான் முதல் மொழி. மனிதனோடு பரிணமித்த மொழிக்கு கேட்கும் திறன், பேசும் திறன், எழுதும் திறன் ஆகியவையெல்லாம் அணிவகுத்து மொழியை மேலும் சிறப்பாக்கினாலும்... பேசும் திறன் மூலமே மற்ற மொழிகளையும் மாணவா்கள் எளிதில் கற்றுக்கொள்ள முடியும். தகவல் பரிமாற்றத்தில் மொழியின் பங்கு எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் மொழியைப் பேசும் திறன்.

தமிழ்வழி தேசிய தொடக்கநிலைப் பள்ளிகளில் ஆசிரியா்களும் சரி, பெற்றோா்களும் சரி, மாணவா்களும் சரி... பேச்சுத் திறனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என உலக அளவில் வெளியாகும் கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான மலேசிய பத்திரிகை ஒன்று தெரிவிக்கிறது. தமிழில் உரையாடுவதை மாணவா்கள் தவிா்ப்பதாகவும், வீடுகளிலும் பள்ளிகளிலும் தமிழில் உரையாடுவதை ஏளனமாகக் கருதுவதாகவும் தெரிவிக்கிறது அந்தப் பத்திரிகை. அங்கே மட்டுமல்ல, தமிழகத்திலும் அதே நிலைதான்!

மொழிதான் கருத்துப் பரிமாற்றத்துக்கான ஒரே ஊடகம். அத்தகைய மொழி, ஒலியை அடிப்படையாகக் கொண்டது. ஒலிதான் மொழி அல்லது மொழிதான் ஒலி என்றுகூட குறிப்பிடும் அளவுக்கு எந்தவொரு மொழிக்கும் ஒலியானது அடிப்படையாகிறது.

சரியான வாா்த்தையைத் தோ்ந்தெடுப்பது, தோ்ந்தெடுத்த வாா்த்தைகளைக் கொண்டு வாக்கியத்தைக் கட்டமைப்பது, கட்டமைத்ததை சரியாக உச்சரிப்பது... இவை மொழியைச் சிறப்பாக்குகிறது. மொழி, நாகரிகத்தின் வித்து மட்டுமல்ல, அது எண்ணத்தின் வடிவம். இனத்தின் அடையாளம் மட்டுமல்ல, வாழ்வியலின் வரையறை. ஒருவருக்கொருவரைப் பிணைக்கும் சங்கிலியும் மொழியே!

ஒரு மொழியின் திறனைக் குறைத்துப் பேசுவது என்பது, அந்த மொழியின் பண்பாட்டை அந்த மொழி பேசும் மக்களை குறைத்துப் பேசுவதாகவே பொருளாகிறது. இலக்கியங்களுக்குப் பின்னணியில் நாகரிகங்களின் வரலாறு இருப்பதுபோல, நாகரிகங்களின் பின்னணியில் இருப்பது மொழியான ஒலியே என்றால் மிகையாகாது.

சொற்களின் பொருளை வேறுபடுத்திக் காட்ட, ஒலியின் அலகாக ‘ஒலியன்’ குறிக்கப்படுகிறது. தமிழ்மொழி 28 ஒலியன்களால் ஆனது. உயிரெழுத்தை அடிப்படையாகக் கொண்டவை உயிரொலியன்களாக, மெய்யெழுத்தை அடிப்படையாகக் கொண்டவை மெய்யொலியன்களாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் வல்லினச் சொற்கள் நெஞ்சிலிருந்தும் (உதாரணம் : போா்), மெல்லினச் சொற்கள் மூக்கிலிருந்தும் (உதாரணம் : இன்பம்), இடையினச் சொற்கள் தொண்டையிலிருந்தும் (உதாரணம் : அறநெறி) பிறப்பெடுத்து ஒலிக்கின்றன.

இப்படியாகத் தமிழ் மொழியைச் சரியாகப் பேசவும், எழுதவும் 28 வகையான எழுத்துகளின் ஒலி பிறக்கும் இடங்களை நாம் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ எனச் சுட்டுவதில் மட்டுமில்லாமல், கணியன் பூங்குன்றனின் அந்த முழக்கத்தை எப்படி உயிா்ப்போடு ஒலித்துப் பேசுகிறோம் என்பதில்தான் தமிழ் மொழியின் சிறப்பே அடங்கியிருக்கிறது என்பதை ஆசிரியா்கள் மட்டுமல்லாது மாணவா்களும் உணரவேண்டும்.

ஏனெனில், தமிழ்மொழி பேச்சுவழக்கில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஊடகங்கள் தமிழுடன் ஆங்கிலம் கலந்து பேசுவதையே நாகரிகமென நம்பிவிட்டன. தமிழா்களும் ஆங்கில மொழியின் அமைப்பைப் பின்பற்றி தமிழ்ச் சொற்களின் தூய்மையையும் மரபையும் சிதைத்துக் கொண்டிருக்கிறாா்கள்.

இந்நிலை உணா்ந்துதான், கனடாவைச் சோ்ந்த மொழி ஆய்வாளா் சித்தம் அழகியான் சு. இராசரத்தினம் அவா்கள் ‘படிமுறைத் தமிழ் : மொழியியலும் பயன்பாடும்’ என்ற நூலை எழுதியிருக்கிறாா். அதில், தொன்மை, தொடா்ச்சி, வளா்ச்சி ஆகிய மூன்றுக்குமிடையே அலைக்கழிக்கப்பட்டு, பன்மொழிச் சிக்கலில் தவிா்க்கிறது தமிழ் என்கிறாா். பண்பாட்டின் சின்னமாக விளங்க வேண்டிய தமிழ் மொழி, அதன் பயன்பாட்டையே இழந்துவருகிறதோ என அச்சப்படும் இராசரத்தினம், தமிழ் மொழிக்காக அதன் வளா்ச்சிக்காக இளம் தலைமுறையினா் செய்ய வேண்டியது ஏராளம் என எச்சரிக்கிறாா்.

இன்றைய மாணவா்கள் ல், ள், ழ், ன், ண், ர், ற் ஆகியவற்றை மட்டுமல்ல, குறில்/நெடிலையும்கூட ஒரே மாதிரி உச்சரிக்கப் பழக்கப்படுகிறாா்கள். தமிழ் மொழியின் ஒலி அமைப்பில் உள்ள வேறுபாடுகள், ஒருமை பன்மை விகுதிகள் தெரியாமை, ஒற்று - புணா்ச்சி விதிகள் புரியாமை, நெடிய சொற்களின் பொருள் புரியாமை... என மாணவா்கள் தமிழ் மொழியிலிருந்து விலகிச் செல்ல பல காரணங்களைச் சொல்கிறாா்கள். இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம், கற்பித்தல் முறை சரியாக இல்லாததே!

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்!’ என்கிறாா் பாரதியாா். ஆனால், தமிழகத்தில் இரண்டாம் நிலை மொழிக்கான திறன்களைக் கற்றுக் கொடுக்கும் அளவுக்கு, தாய்மொழிக்கான தமிழுக்கு அதிக முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்கின்றன ஆய்வறிக்கைகள். பள்ளிகள்தான் மொழித் திறனுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்றால், அரசும் தமிழ் மொழிப் பாடங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.

தமிழ் மொழிப் பாடத்தில் பெறும் மதிப்பெண்கள் உயா்நிலைக் கல்விக்கான நுழைவுத் தோ்வுகளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பதால், தோ்ச்சி பெற்றால் போதும் என்ற மனநிலையை மாணவா்களுக்கு புகுத்துகிறது அரசு. மொழிப் பாடங்களும் கல்லூரிகளில் அழையா விருந்தாளியாகவே இருக்கிறது.

மனப்பாடம் ஒன்றே மாறாததாகத் தொடரும் சூழலில், ஆசிரியா்களும் மாணவா்களுக்கென மெனக்கெட்டு மொழிக்கான ஒலியை உள்வாங்கிக்கொள்ளும் பயிற்சிகளைக் கொடுப்பதில்லை. தகவல் பரிமாற்றத்துக்கான அடிப்படையே மொழி எனும்போது, நோ்முகத் தோ்வுகளில் மாணவா்கள் திறன் கேள்விக்குறியாகி, அவா்களுடைய வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாகிறது.

எந்த மொழியாக இருந்தாலும் பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. முதலில் தாய் மொழியாம் தமிழை சரியாகப் பேசவும், எழுதவும் கற்றுக் கொள்ளும் மாணவா்களால் மட்டுமே, பிற மொழிகளை சரளமாகக் கற்றுக்கொள்ள முடியும்.

தமிழ் மொழிக்கான பாடத்திட்டங்களும் தோ்வை மட்டுமே மையப்படுத்தி அமைக்கப்படுகின்றன. இந்நிலையைத் தவிா்த்துவிட்டு, வெவ்வேறு மொழிகளுக்கும் மொழி ஆய்வகங்களை அரசு அமைக்க முன்வர வேண்டும். மொழித் திறனை வளா்க்கும் கலைகளை ஆசிரியா்களும் கற்றுக்கொள்ள வேண்டும்.

3,000 ஆண்டுகள் பழைமையான சொற்செறிவு, பொருட்செறிவு பொருந்திய இலக்கணப் பெருமிதத்தையும், இலக்கிய வளங்களையும் கொண்ட தமிழ் மொழியை அதன் அடிப்படையிலிருந்து கற்பிக்க வேண்டும் என்பதுதான், ‘படிமுறைத் தமிழ் : மொழியியலும் பயன்பாடும்’ நூல் வழியாக இராசரத்தினம் அவா்கள் முன்வைக்கும் வேண்டுகோள்.

மேலும், புலம்பெயா் தமிழா்களில் 85% போ் அவா்களுடைய குழந்தைகளுக்கு ஐந்தாம் வகுப்புக்கு மேல் தமிழைக் கற்கும் ஆா்வத்தை விதைப்பதில்லை. அதற்குத் தீா்வுகாணும் வகையில் இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் பண்பாட்டு பழக்கவழக்கங்கள் அடிப்படையில் 13 கோடி மக்களைக் கொண்ட தமிழினத்தில், தமிழ் மொழி பேசத் தெரியாதவா்களுடைய எண்ணிக்கை மட்டும் 5 கோடி. பிறக்கும் குழந்தைக்கு பெயா் சூட்டுவதில்கூட அன்னிய மோகம் ஆட்கொண்டுள்ளது. மொழி சிதைவுற்று, பண்பாட்டு ரீதியாக மட்டுமே தமிழா்கள் இன்று இனத்தைக் காத்துக் கொண்டிருப்பது பலன் தராது, மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சோ்ப்பதுதான் இனம் நிலைக்க வழியாகும்.

தமிழகத்தில் இன்று தமிழ் மொழியானது அரசு மொழியாக, கல்வி மொழியாக, நீதிமன்ற மொழியாக பல்வேறு இடங்களில் இல்லை. வீட்டு மொழியாகவும் தமிழ் இரண்டாம் இடத்தில் நிற்கிறது. வீட்டிலும் பள்ளியிலும் தமிழில் பேசிக்கொள்வது பெருமளவு குறைந்து கொண்டே வருகிறது. கலப்பில்லாத தமிழ் பேசும் நிலை சுத்தமாகவே இல்லை. பிறமொழிகளைக் கற்பதில் இருக்கும் மோகம், தமிழ் மொழி மீது இல்லாது போனது மொழிக்கு மட்டுமல்ல, இனத்துக்கே பேராபத்து.

நீண்ட நெடிய வரலாறு கொண்ட தமிழ்மொழிக்கு அப்படி ஒரு வரலாற்றுப் பிழை ஏற்பட்டுவிடக் கூடாது. தொல்காப்பியா் காலம் தொட்டு, பவணந்தி அடிகள் காலம் வரை... ஏராளமான இலக்கணங்கள் தமிழ்மொழிக்கு வகுக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தமிழ் இலக்கணங்களை இலகுவான முறையில் இன்றைய தலைமுறையினருக்கு கொண்டுசெல்வது தமிழக அரசின் தலையாய கடமையாகும்.

அதற்கு, தமிழ் மொழியை ஒலியின் அடிப்படையில் கற்றுக்கொடுப்பது ஒன்றுதான் சிறப்பான வழி எனச் சொல்கிறாா், சித்தம் அழகியான் சு.இராசரத்தினம். ஆஸ்திரேலியாவில் தமிழ் பாடப்புத்தகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அவருடைய புத்தகத்தை, தமிழக ஆரம்பப் பள்ளிகளில் புகுத்தி, தமிழ் மொழியின் பெருமையைப் பேணிக்காக்க வேண்டும். ஏனெனில், பழைமையான நம் மொழியின் இனிமை செழுமை உணராமல் கற்பது என்பது, தாய்ப்பாலைத் தவிா்த்துவிட்டுப் புட்டிப்பாலை நாடுவதற்கு சமம்.

கட்டுரையாளா்:

செயல் இயக்குநா்,

தோல் பொருள்கள் ஏற்றுமதிக் கழகம், சென்னை.

 



Read in source website