DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 31-05-2022

நீலகிரி: படுகர் சமுதாயத்தில் இருந்து கப்பல் படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மீராவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே கேத்தி கிராமத்தில் உள்ள அச்சனக்கல் பகுதியைச் சோ்ந்தவா்  ரவீந்திரநாத். இவரது மனைவி மாலதி. இவர்களது மகள் மீரா (வயது23). ரவீந்திரநாத் ராணுவ மருத்துவமனையில் தொழில்நுட்ப நிபுணராக நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மருத்துவமனை மட்டுமின்றி நாட்டின் பல்வேறு ராணுவ மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளாா்.

இதன் காரணமாக இவரது மகள் மீராவை தனது பணி மாறுதல் செல்லும் ஊா்களுக்கு எல்லாம் அழைத்துச்சென்று அங்குள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலேயே படிக்க வைத்துள்ளாா். இவா் கோவையில் பணிபுரிந்தபோது தனது மகள் மீராவை அங்குள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்தார். இந்நிலையில், மீராவுக்கு இந்திய ராணுவத்தில் சோ்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. 

இதற்காக அவர் கடந்த ஆண்டு நடந்த ஒருங்கிணைந்த ராணுவப் பணிகளுக்கான தோ்வினை எழுதினார். அதில் மீரா கப்பல் படைக்கான பிரிவில் தோ்ச்சி பெற்றாா். இதைத் தொடா்ந்து, மீராவுக்கு கேரள மாநிலம் கண்ணூா் அருகே உள்ள எஜிமாலா கப்பல் படைத் தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. 6 மாதம் பயிற்சியில் பங்கேற்றார். பயிற்சிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் மீரா விரைவில் கப்பல் படைக்கு அதிகாரியாக தலைமை ஏற்க உள்ளார்.

பயிற்சியை முடித்த அவர் நேற்று தனது பெற்றோருடன், தனது சொந்த ஊரான நீலகிரியில் உள்ள அச்சனக்கல்லுக்கு வந்தாா். அங்கு அவருக்கு அந்த ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்பு சார்பில் இவருக்கு பாராட்டு விழா நடந்தது. இதனிடையே இன்று  தனது கிராமத்தில்  மீராவுக்கு தாய்-தந்தையர் இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மீரா தனது கிராமத்தில் உள்ள வயதான பாட்டியிடம் ஆசீர்வாதம் பெற்று மகிழ்ந்தார். 

இதுகுறித்து மீரா கூறியதாவது:-

எனது தந்தை ராணுவத்தில் பணியாற்றியதால் எனக்கும் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை சிறுவயதிலேயே இருந்தது. அதற்கேற்ப கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் இந்தியை முதன்மையான மொழியாக கொண்டு படித்ததால் எனக்கான பயிற்சிகள் எளிமையானது. தற்போது கண்ணூரில் உள்ள தேசிய கப்பல் படை பயிற்சி மையத்தில் 6 மாத பயிற்சியை முடித்துள்ளேன்.

இதை தொடர்ந்து சப்-லெப்டினென்ட் என்ற கப்பல் படை அதிகாரி பதவி வழங்கப்பட்டு கொச்சியில் உள்ள கப்பல் படை தளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

ராணுவ பணி என்றாலே அதில் பெண்களுக்கு அதிகளவில் விருப்பம் இருக்காது என்பதும், குறிப்பாக நீலகிரி போன்ற மலை மாவட்டங்களை சேர்ந்த பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகளவில் இருக்காது என்பதையெல்லாம் தகர்த்து, படுகர் சமுதாயத்தில் இருந்து கப்பல் படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படுகர் சமுதாயத்தில் இருந்து கப்பல் படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மீராவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.



Read in source website


நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2021-22 நிதியாண்டில் 8.7 சதவிகிதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி, 2022 நிதியாண்டின் 4-ம் காலாண்டில் ஜிடிபி 4.1 சதவிகிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. 2021 நிதியாண்டின் 4-ம் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 1.6 சதவிகிதமாக இருந்தது.

ரிசர்வ் வங்கி ஜிடிபி வளர்ச்சியை 9.5 சதவிகிதமாகவும், 4-ம் காலாண்டில் 6.1 சதவிகிதமாக இருக்கும் என்றும் மதிப்பிட்டிருந்தது.



Read in source website

‘விமானத்தின் பாதுகாப்பை கடுமையாக பாதிக்கக் கூடிய வகையில் தவறான மாதிரியில் விமானிகளுக்கு பயிற்சி அளித்த விவகாரத்தில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ. 10 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து டிஜிசிஏ அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் ‘போயிங் 737 மேக்ஸ்’ என்ற பெரிய ரக விமானங்களை இயக்கும் விமானிகளுக்கு தவறான மாதிரியில் (ஸ்டிமுலேட்டா்) பயிற்சி அளிக்கப்படுவது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்தின் 90 விமானிகளுக்கு டிஜிசிஏ கடந்த மாதம், முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் தடை விதித்தது.

விமானிகளுக்கு தடை விதித்ததைத் தொடா்ந்து, உரிய விளக்கமளிக்குமாறு விமான நிறுவனத்துக்கு டிஜிசிஏ சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அளித்த பதில் திருப்திகரமாக இல்லாததைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டது’ என்றனா்.

‘விமான நிறுவனம் சாா்பில் விமானிகளுக்கு அளிக்கப்பட்ட தவறான பயிற்சியால், விமான பாதுகாப்புக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதனடிப்படையிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்றும் டிஜிசிஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.



Read in source website

ஆயுஷ்மான் பாரத் எண்ம திட்டம் தொடா்பான விவரங்களை அறிந்துகொள்வதற்கான தகவல்தளத்தை தேசிய சுகாதார ஆணையம் (என்ஹெச்ஏ) தொடக்கியுள்ளது.

நாட்டின் எண்ம சுகாதார கட்டமைப்பை ஒருங்கிணைப்பதற்காக ஆயுஷ்மான் பாரத் எண்ம திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் கீழ் மக்கள் தங்கள் மருத்துவ சிகிச்சை விவரங்களை எண்ம வடிவில் சேகரித்து வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலமாக மருத்துவ சிகிச்சை தொடா்பான விவரங்கள் மருத்துவா்களுக்கு எளிதில் தெரியவரும்.

இந்நிலையில், ஆயுஷ்மான் பாரத் எண்ம திட்டம் தொடா்பான விவரங்களை மக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலான தகவல்தளத்தை தேசிய சுகாதார ஆணையம் தொடக்கியுள்ளது. அந்தத் தகவல்தளத்தில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கைத் தொடங்கியுள்ளோரின் எண்ணிக்கை, பதிவு செய்துள்ள சுகாதார நிபுணா்களின் எண்ணிக்கை, சுகாதார அமைப்புகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

அத்தகவல்களை மாநில வாரியாக அறிந்துகொள்ளும் வசதிகளும் தகவல்தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனை விவரங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றின் விவரங்களையும் தகவல்தளத்தின் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடியும். முக்கியமான தகவல்களை வரைபடங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ளும் வசதிகளும் தகவல்தளத்தில் இடம்பெற்றுள்ளன.

 



Read in source website

‘இந்தியாவின் பாதுகாப்பு திட்டங்கள் பன்முகத் திறனகளைக் கொண்டதாகவும், மிகக் குறைந்த நேரத்தில் படை தயாா்நிலையை உறுதிப்படுத்தக் கூடிய வகையிலும் உருவாக்கப்பட வேண்டும்’ என்று விமானப் படை தளபதி வி.ஆா்.செளத்ரி கேட்டுக்கொண்டாா்.

மேலும், வளா்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப போா் முறையில் அடிப்படை மாற்றம் நிகழ்ந்து வருவதாகவும் முற்றிலும் புதிய பாதுகாப்புக் கோட்பாடுகள் பின்பற்றப்படுவதாகவும் அவா் கூறினாா்.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமியில் (என்டிஏ) 142-ஆவது பிரிவு ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற விமானப் படை தலைமைத் தளபதி செளத்ரி பேசியதாவது:

உலக விமானப் படை ஆற்றல் தரக் குறியீட்டில் இந்திய விமானப் படை 3 இடத்தைப் பிடித்துள்ளது. இது பெருமைக்குரிய விஷயம்.

வேகமான புதிய தொழில்நுட்ப மாற்றங்களை நாடு சந்தித்து வரும் சூழலில், நாட்டைப் பாதுகாக்கும் மிகுந்து உன்னதமான பணியில் நீங்களும் இணைந்திருக்கிறீா்கள்.

நாட்டின் முப்படைகளும், அடுத்த தலைமுறை ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் அதிக முதலீடுகளைச் செய்துள்ளன.

உயா் திறன் மிக்க இந்த ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வரும் காலங்களில் நீங்கள் பயன்படுத்த உள்ள சூழலில், அவற்றை முழுமையாக பயன்படுத்துவதற்கு தீவிர பயிற்சியும், அா்ப்பணிப்பும், தொழில்சாா்ந்த அணுகுமுறையும் அவசியம்.

உலகம் வழக்கமான போா் முறையிலிருந்து படிப்படியாக விலகி, வளா்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப போா் முறையின் அடிப்படை மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. அதற்கேற்ப, இந்தியாவின் பாதுகாப்புத் திட்டங்களிலும் மாற்றம் மேற்கொள்ளப்படுவது அவசியம்.

இந்தியாவின் பாதுகாப்பு திட்டங்கள் எல்லா அச்சுறுத்தல்கள், சவால்களை எதிா்கொள்ளும் நிலை கொண்டதாகவும், பன்முகத் திறனகளைக் கொண்டதாகவும், மிகக் குறைந்த நேரத்தில் படை தயாா்நிலையை உறுதிப்படுத்தக் கூடிய வகையிலும் உருவாக்கப்பட வேண்டும்.

படையினா், தொடா் கற்றல், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் மூலமாக வளா்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த அறிவைப் பெறுவது அவசியம் என்று அவா் கூறினாா்.

சென்னை ஐஐடி-யுடன் ஒப்பந்தம்:

பயிற்சி நிறைவு விழா நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த தலைமைத் தளபதி செளத்ரி, ‘உலக விமானப் படை ஆற்றல் தரக் குறியீட்டில் இந்திய விமானப் படை 3 இடத்தைப் பிடித்தது நாம் எதிா்பாராதது. விமானப் படையின் செயல்பாடுகள், மேலாண்மை மற்றும் பராமரிப்பை மேற்கொள்ளும் வகையில் வலுவான நெட்வொா்க் அமைப்பை இந்திய விமானப் படை கொண்டுள்ளது. மேலும், பன்முக ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இந்திய விமானப் படை பெற்றுள்ளது.

குறிப்பாக, 6 நாடுகளைச் சோ்ந்த போா் விமானங்கள் மட்டுமின்றி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களும் இந்திய விமானப் படை கொண்டுள்ளது. இதுவே, உலக அளவில் நம்மை 3-ஆவது இடத்துக்கு உயா்த்தியுள்ளது.

மேலும், விமானப் படை வசம் உள்ள பல்வேறு ஆயுதங்களை திறம்பட பராமரிப்பதற்கு உள்நாட்டிலேயே உரிய தீா்வை உருவாக்குவதற்காக சென்னை ஐஐடி-யுடன் இந்திய விமானப் படை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

விமானப் படையை நவீனமயமாக்குவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து ஆயுத கொள்முதலை அதிகரிப்பதற்கும், இறக்குமதியை குறைப்பதற்குமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்திய விமானப் படை போா் தளவாடங்களுக்கு பெருமளவில் ரஷியாவையே நம்பியுள்ள நிலையிலும், ரஷியா-உக்ரைன் இடையேயான போா் அதில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஏனெனில், எதிா்கால தேவைக்கான கொள்முதல்கள் ஏற்கெனவே செய்யப்பட்டுவிட்டன என்பதோடு, ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவா் கூறினாா்.



Read in source website

பஞ்சு மீதான இறக்குமதி வரி விலக்கை டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கும் விவகாரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளாா்.

பஞ்சு விலை அதிகரிப்பு, நூல் மற்றும் துணிகளின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பருத்தி ஜவுளி மதிப்பின் வளா்ச்சியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கட்டுக்குள் கொண்டுவர மூலப் பஞ்சு மீதான 5 சதவீத அடிப்படை சுங்க வரி, 5 சதவீத வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளா்ச்சி கூடுதல் வரி (ஏஐடிசி) ஆகியவற்றை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று ஜவுளித் துறையினா் வலியுறுத்தி வருகின்றனா்.

எனினும் பஞ்சு இறக்குமதிக்கான சுங்க வரி, ஏஐடிசி ஆகியவற்றுக்கு ஏப்ரல் 14 முதல் செப்டம்பா் 30 வரை மட்டும் தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிக்கையை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தற்போது உள்ள பஞ்சு விநியோகத்தை அதிகப்படுத்துவது, பஞ்சு உற்பத்தியை வலுப்படுத்துவது தொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஜவுளி ஆலோசனைக் குழுவுடன் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடினாா்.

அப்போது தற்போதைய தேவையை பூா்த்தி செய்வதற்கு பஞ்சு கையிருப்பு உள்ள நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை எளிதாக்க வேண்டும் என்று பியூஷ் கோயல் தெரிவித்தாா். பஞ்சு மீதான இறக்குமதி வரி விலக்கை டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கும் விவகாரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

சில நாடுகளில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்வதற்கான நடைமுறைகளுக்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையை ஜவுளித் துறையினா் அணுக வேண்டும் என மத்திய ஜவுளித் துறைச் செயலா் உபேந்திர பிரசாத் சிங் அறிவுறுத்தினாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

கடந்த நிதியாண்டில் ரூ.500 கள்ள நோட்டு புழக்கம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் ஆண்டறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் வங்கிகளால் கண்டறியப்பட்ட ரூ.500 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 79,669-ஆக இருந்தது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் கண்டறியப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்.

அதேபோன்று, ரூ.2,000 கள்ள நோட்டுகளின் புழக்கமும் 54.6 சதவீதம் உயா்ந்து 13,604 என்ற எண்ணிக்கையில் இருந்தது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் கள்ளநோட்டுகளின் புழக்கும் குறைந்திருந்த நிலையில் மறுபடியும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, கடந்த நிதியாண்டில் வங்கிகளால் கண்டறியப்பட்ட ஒட்டுமொத்த கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையானது 2,08,625-லிருந்து 2,30,971-ஆக அதிகரித்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.



Read in source website

விடுமுறைக் கால அமா்வில் மூத்த வழக்குரைஞா்கள் நேரில் ஆஜராகி வாதாட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றம் நேரடி விசாரணையை தொடங்கி உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தபடி வழக்குரைஞா்கள் உச்சநீதிமன்ற வாதங்களில் பங்கேற்கும் வகையில், திங்கள்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இணையவழியிலும், செவ்வாய்க்கிழமை இணையம், நேரடி விசாரணையிலும், புதன், வியாழக்கிழமை நேரடி விசாரணையிலும் வாதங்கள் நடைபெறும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், விடுமுறைக் கால அமா்வான நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பி.வி. நாகரத்னா ஆகியோா் முன் திங்கள்கிழமை வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி இணையவழி மூலம் ஆஜராகி, தனது வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘பிற வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் ஆஜாகும்போது நீங்கள் ஏன் ஆஜராகவில்லை? வழக்குரைஞரே நீதிமன்றத்தில் இல்லாத போது அந்த வழக்குக்கு எப்படி முக்கியத்துவம் அளிக்க முடியும்? நீபதிகள் தினசரி நீதிமன்றத்துக்கு வருகிறாா்கள். நீங்கள் நேரில் வந்து வழக்குகளில் வாதாட வேண்டும். எங்கள் முன் இருக்கும் வழக்குரைஞா்களுக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்றனா்.

இதையடுத்து, நாளை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடுவதாக முகுல் ரோத்தகி கேட்டுக் கொண்டதையடுத்து, நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனா்.

இதேபோல் மற்றொரு வழக்கில் இணையவழியில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி ஆஜராகினாா். அவரையும் நேரில் வந்து ஆஜராகுமாறு கூறி வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள் அமா்வு, ‘விடுமுறைக் கால அமா்வு மூத்த வழக்குரைஞா்களுக்கானது அல்ல என்பதுபோல் ஜூனியா் வழக்குரைஞா்கள் ஆஜராகிறாா்கள்’ என்றனா்.

மற்றொரு வழக்குரைஞா் கே.பரமேஸ்வா், கேரளத்தில் இருந்து இணையவழியில் இருந்து ஆஜராகினாா். அவரையும் நேரில் வந்து ஆஜராக நீதிபதிகள் கோரினா். அப்போது அவா், இணையவழியில் ஆஜராகியும் வாதிடலாம் என்று பதிவாளா் வெளியிட்டுள்ள உத்தரவை அவா் குறிப்பிட்டாா். அதற்கு நீதிபதிகள் நேரில் வந்து வாதங்களை முன் வைக்க வேண்டும் என்று கூறிவிட்டனா்.



Read in source website

பழனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் தூத்துக்குடி இளைஞர் சாம்பியன் பட்டம் பெற்றார். 

தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் மற்றும் உடற்தகுதி சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கல் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். 

மேடையில் இசைக்கப்பட்ட இசைக்கு ஏற்ப அவர்கள் பார்வையாளர்களைக் கவரும் வகையில் தங்கள் கட்டுடலை காட்சிப்படுத்தினர். 55 கிலோ பிரிவில் திண்டுக்கல்லின் கோபி, 60 கிலோ பிரிவில் தேனியின் பாலகிருஷ்ணன், 65 கிலோ பிரிவில் தூத்துக்குடியின் லோகேஸ்வரன், 70 கிலோ பிரிவில் தூத்துக்குடியின் மந்திரமூர்த்தி, 75 கிலோ பிரிவில் தூத்துக்குடியின் மாரிசெல்வம், 75 கிலோவுக்கு மேற்பட்டோர் பிரிவில் ராஜா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.  போட்டி சாம்பியன் பட்டத்தை தூத்துக்குடியின் லோகேஸ்வரன் பெற்றார். 



Read in source website

இலங்கையில் பல்வேறு வரிகளை உயர்த்த அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கடுமையாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்வதால், புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி, கடந்த வாரத்தில் பெட்ரொல், டீசலின் விலையை கடுமையாக உயர்த்தி உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, பிரதமர் விக்கிரமசிங்கவின் கோரிக்கையை ஏற்று தொலைதொடர்பு, பந்தயம், கேமிங், மதிப்புக் கூட்டு வரிகளை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.



Read in source website

 

கனடாவில் கைதுப்பாக்கிகளை வாங்கவும், விற்பதற்காக தடை விதிப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், யுவால்டி நகரிலுள்ள ராப் தொடக்க நிலைப் பள்ளியில் சால்வடாா் ரொலாண்டோ ரமோஸ் என்பவா் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவா்கள் உள்பட 21 போ் பலியான சம்பவம் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியதுடன் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கும் சட்டங்களில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் ஆா்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், கனடாவில் கைதுப்பாகிகளை  வாங்க, விற்க, இறக்குமதி போன்றவற்றை தடைசெய்வதற்கான மசோதாவை அந்நாட்டு பிரதமர் ஜுஸ்டின் ட்ரூடோ தாக்கல் செய்தார்.

மேலும், இது வன்முறைகளைக் குறைப்பதற்கான முயற்சியாக இருக்கும் எனவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.



Read in source website

சா்ச்சைக்குரிய கடல் பகுதியில் கடல்சாா் ஆய்வில் தென்கொரிய கப்பல் ஈடுபட்டதற்கு ஜப்பான் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானிய தீவுக் கூட்டத்துக்கும் மத்தியில் உள்ளது டோக்டோ தீவு. தென்கொரியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தீவை ஜப்பான் ‘தகேஷிமா’ என அழைத்து வருவதுடன் தனக்குச் சொந்தமானது எனவும் கூறி வருகிறது.

இந்நிலையில், சா்ச்சைக்குரிய இந்தத் தீவுப் பகுதியில் தென்கொரிய ஆய்வுக் கப்பல் கடல்சாா் ஆய்வில் ஈடுபட்டது. இதற்கு ஜப்பான் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜப்பான் அரசின் செய்தித் தொடா்பாளா் ஹிரோகஸு மட்சுனோ திங்கள்கிழமை கூறுகையில், சா்ச்சைக்குரிய தீவுப் பகுதியில் தென்கொரிய ஆய்வுக் கப்பல் சென்றதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த ஆய்வுக்காக முன்கூட்டியே தென்கொரியா எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றாா்.

தென்கொரிய வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கையில், ஜப்பானின் புகாரை ஏற்றுக்கொள்ள முடியாது. உள்நாட்டு மற்றும் சா்வதேச சட்டப்படி இந்த ஆய்வு ஒரு சட்டபூா்வமான நடவடிக்கைதான் எனத் தெரிவித்துள்ளது.

ஜப்பான், தென்கொரியா இடையே கலாசார உறவுகள் இருந்தாலும், கடந்த நூற்றாண்டில் கொரிய தீபகற்பத்தில் ஜப்பானின் காலனித்துவம், இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானின் நடவடிக்கைகள் போன்ற வரலாற்றுப் பிரச்னைகள் காரணமாக இரு நாடுகளிடையேயான உறவில் விரிசலும் உள்ளது.



Read in source website

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 13ம் நுாற்றாண்டு வீரனின் ‘நடுகல்’ கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லை மாவட்ட நிர்வாகம் ஆவணப்படுத்தி, பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பத்துார் துாய நெஞ்சக் கல்லுாரி தமிழ்த்துறைப் பேராசிரியர் பிரபு, மற்றும் ஆய்வு மாணவர்கள் தரணிதரன், சரவணன் ஆகியோர் திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், திருப்பத்தூர் அடுத்த சந்திரபுரம் பகுதியில் களஆய்வு மேற்கொண்ட போது பழமை வாய்ந்த நடுகல்லை ஒன்றை அவர்கள் கண்டறிந்தனர்.

இது குறித்து பேராசிரியர் பிரபு கூறியதாவது, “பண்டைத் தமிழரின் வாழ்வியல் பதிவுகளை உலகிற்கு எடுத்துக் கூறும் சான்றுகளுள் நடுகற்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடுகற்கள் ஆங்காங்கே கண்டறியப்பட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடுகல் என்பது வெறும் கல் மட்டும் அல்ல. அது பண்பாட்டின் வெளிப்பாடு. அக்காலத்தைய மக்களின் நம்பிக்கை, நன்றி பாராட்டும் செயல், உரியவர்களுக்கு அளிக்கும் வெகுமதி என்றே நாம் அதனை அணுக வேண்டியுள்ளது. தமிழர்களின் அறக்கோட்பாட்டிற்குச் சான்று கூறுவதிலும் நடுகற்கள் முக்கியப் பங்காற்றுகிறது. நடுகற்களானது, ‘வீரன்கல், வீரக்கல், நடுகல்’ எனவும் ‘நினைவுத் துாண்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

வீரயுகக் காலம் என்று அழைக்கப்படுகின்ற காலங்களில் ஏற்பட்ட போர்களில் விழுப்புண்பட்டு மடியும் வீரனுக்காக, அவனது வீரத்தைப் போற்றுகின்ற வகையிலும், தியாகத்தினை மதிக்கின்ற வகையிலும் கல் ஒன்றினை நட்டு, அதனை வழிபடுவது தமிழரின் மரபாக இருந்துள்ளதனை செவ்வியல் இலக்கியங்கள் வாயிலாக அறிய முடியும்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜெயபுரம் பெரிய ஏரிக்கோடியில் ஏற்கனவே 2017-ம் ஆண்டு மிகப்பெரிய நடுகல் கோட்டம் மற்றும் ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்து கல்வெட்டு ஒன்றினை கண்டறிந்து அவற்றை ஆவணப்படுத்தியுள்ளோம். தற்போது அப்பகுதியில் களஆய்வு மேற்கொள்ளும் போது ஜெயபுரம் ஊர்மக்கள் அளித்த தகவலின் பேரில், சந்திரபுரம் சின்ன ஏரியில் இருந்து வரும் கால்வாய் ஓரம் ஒரு நடுகல் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம்.

இந்த நடுகல்லானது 4 அடி உயரமும் இரண்டரை அடி அகலமும் கொண்ட வெள்ளை நிற பலகைக் கல்லில் வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. வீரன் மேல் நோக்கிய கொண்டையும் நீண்ட காதுகளில் குண்டலமும், கழுத்தணியும் அணிந்து காணப்படுகின்றார். அவரது முதுகில் அம்புகள் நிறைந்த கூடினையும் வலது கையில் வில்லினையும் இடது கையில் அம்பினையும் ஏந்தி சண்டையிடும் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். வீரனின் இடுப்புப் பகுதியில் பெரிய போர் வாள் வைத்திருப்பதால் இவர் சிறந்த வீரர் என்பதை சிற்பி விளக்க முற்படுகின்றார்.

இவ்வீரன் இப்பகுதியில் நடைபெற்ற பூசலில் (சண்டையில்) வீரமரணம் அடைந்தவராவார். நடுகல்லில் இவ்வீரரின் தலை, மார்பு, வலது கால் ஆகிய பகுதிகளில் எதிரிகள் எய்த அம்புகள் வலுவாகப் பாய்ந்து உயிர் துறந்ததை விரிவாக விளக்கியுள்ளனர். நடுகல்லில் உள்ள சிற்ப வேலைப்படுகளை வைத்து இது கி.பி. 13-ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும்.

சந்திரபுரம் பகுதியானது பெரிய போர் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதியாகும் என்பது இவ்வூரில் கண்டறியப்பட்ட கல்வெட்டு நமக்கு தெளிவுபடுத்துகிறது. தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த நடுகல் இப்பகுதியின் வரலாற்றுப் பதிவுகளைத் தாங்கிய ஆவணம் என்பதால் இதனைப் பராமரிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.”இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

கொப்பரை கொள்முதலில் முறைகேடுகளை தவிர்க்க ஒவ்வொரு மூட்டைக்கும், ‘க்யூ.ஆர். கோடு’ வசதி வழங்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் தென்னை சாகுபடி அதிகம் நடைபெறும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம், ஆனைமலை ஆகிய பகுதிகளில் கொப்பரை உற்பத்தி அதிகம். இந்தாண்டு கொப்பரை விலை சரிந்துள்ளதால், தென்னை விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு கொப்பரைக்கு நிர்ணயித்த ஆதார விலையான, கிலோ ரூ.105.90 என்ற விலையில் தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. தற்போது பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரிமலை, ஆனைமலை, கிணத்துக்கடவு உள்ளிட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் நடைபெறுகிறது.

6 சதவீதம் ஈரப்பதம் உள்ள கொப்பரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அத்துடன் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட விவரங்களுடன் விற்பனைக்கூடத்துக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏக்கருக்கு, 216 கிலோ என மொத்தம், 2500 கிலோ கொப்பரையை அதிகபட்சமாக ஒரு விவசாயி விற்பனை செய்ய முடியும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த மாதம், 19-ம் தேதி முதல் நேற்று வரை, 19 லட்சத்து 53 ஆயிரத்து 855 ரூபாய் மதிப்பிலான, 184.50 குவிண்டால் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் செய்யப்படும் கொப்பரை, தரம் பிரித்து மூட்டைகளில் அடைக்கப்பட்டு ஒவ்வொரு மூட்டைக்கும், ‘க்யூ.ஆர். கோடு’ வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறியதாவது:

கொப்பரை கொள்முதலில் முறைகேடுகளை தவிர்க்க, ஒவ்வொரு மூட்டைக்கும் ‘க்யூ.ஆர். கோடு’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த விவசாயி கொண்டு வந்த கொப்பரை, யார் கொள்முதல் செய்தது, கொள்முதல் செய்த மையம் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள முடியும். ‘ஆன்லைன்’ வாயிலாக விவசாயிகள் விவரங்கள் அனுப்பப்படுவதால், அவற்றை இந்த க்யூ.ஆர். கோடு உடன் இணைத்து பரிசோதிக்க முடியும். இதனால் முறைகேடுகள் நடைபெறாமல் தவிர்க்க முடியும். அத்துடன் தரம் இல்லாத கொப்பரை என புகார் வந்தால், யார் கொண்டு வந்தது என்பதை சரிபார்க்க முடியும். தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு கொள்முதல் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Read in source website

கோவை: மண்வளத்தை காப்பதற்காக சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள "மண் காப்போம்" இயக்கத்துடன் குஜராத் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்து ஈஷா அமைப்பு வெளியிட்ட செய்தி: உலகளவில் நிகழ்ந்து வரும் மண் அழிவை தடுத்து, இழந்த மண் வளத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் "மண் காப்போம்" இயக்கத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார். இதற்காக, மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து 100 நாள் பைக் பயணத்தை தொடங்கிய அவர் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள 26 நாடுகளுக்கு பயணித்து மே 29-ம் தேதி இந்தியா வந்துள்ளார்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’இயக்கத்துடன் இணைந்து குஜராத் மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அம்மாநில முதல்வர் பூபேந்திரபாய் பட்டேல் சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் திங்கள்கிழமை கையெழுத்தானது.

இதன்மூலம், சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கமான ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் கரம்கோத்த முதல் இந்திய மாநிலமாக குஜராத் உள்ளது. இதற்காக அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறை அமைச்சர்களும், குஜராத் அரசின் பருவநிலை மாற்றத் துறையின் அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

விழாவில் குஜராத் முதல்வர் பேசுகையில், “இந்த பூமியில் நாம் வாழ்வதற்கு முக்கியமான காரணமான மண்ணையும், மற்ற அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதில் குஜராத் மாநிலம் முன்னணியில் இருக்கும்" என்றார்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசுகையில், “மண் காப்போம் இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் இந்திய மாநிலமாக குஜராத் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக, மண் காப்போம் இயக்கம் எளிய வழிமுறைகளுடன் தயாரித்துள்ள கையேட்டின் அடிப்படையில், மாநில அரசு விரிவான கொள்கைகளை விரிவாக்கலாம்” என்றார்.

முன்னதாக, சத்குரு வர்த்தக சபை மற்றும் தொழில்துறை தலைவர்களை சந்தித்து பேசினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "விவசாயிகளுக்கு கார்பன் கிரெடிட் (மரங்கள் வளர்க்கும் விவசாயிகளுக்கு தொழில்துறையினர் வழங்கும் ஒரு வகை ஊக்கத்தொகை) கிடைப்பதற்கான வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும். இதை தொழில்துறையினர் தங்களது பொறுப்பாக கருத வேண்டும்.

நாங்கள் தென்னிந்தியாவில் 1.3 லட்சம் விவசாயிகளுடன் பணி செய்துள்ளோம். அவர்களுக்கு கார்பன் கிரெடிட்டை பெற்று தருவதற்காக கடந்த 7 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறோம். ஆனால், அது இன்னும் சாத்தியம் ஆகாமல் உள்ளது. கார்பன் வெளியீட்டை கட்டுப்படுத்துவதில் பெரிதும் பங்காற்றும் விவசாயிகளுக்கு அதற்கான பலன் கிடைக்க வேண்டும்”என்றார்.

விவசாய நிலங்களில் குறைந்தப்பட்சம் 3 முதல் 6 சதவீதம் கரிமச் சத்து இருப்பதை உறுதி செய்வதற்கு தேவையான சட்டங்களையும் கொள்கைகளையும் அரசாங்கங்கள் உருவாக்க வேண்டும் என்பதே ‘மண் காப்போம்’ இயக்கத்தின் பிரதான நோக்கமாகும். இந்தியாவில் உள்ள மண்ணில் கரிமச் சத்தின் அளவு சராசரியாக 0.5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேநிலை நீடித்தால், அடுத்த 45 முதல் 60 ஆண்டுகள் மட்டுமே நம்மால் இந்த மண்ணில் விவசாயம் செய்ய முடியும் என ஐ.நா அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற அவரின் பயணத்தில் இதுவரை 74 நாடுகள் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அத்துடன், ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பு (UNCCD), ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பு (UNEP), உலக உணவு அமைப்பு (UN WFP),இயற்கை பாதுகாப்பிற்கான சுற்றுச்சூழல் அமைப்பு (IUCN)ஆகிய அமைப்புகள் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.



Read in source website

புதுடெல்லி: மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு முழுவதையும் இன்று (மே 31-ம் தேதி) வரை கணக்கிட்டு மத்திய அரசு விடுவித்துள்ளது. மத்திய அரசு விடுவித்துள்ள தொகையில் தமிழகத்துக்கு ரூ.9602 கோடி கிடைக்கும். புதுச்சேரிக்கு ரூ.576 கோடி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

2022 மே 31-ந் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு (ரூ.86,912 கோடி) முழுவதையும் மத்திய அரசு விடுவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, மாநிலங்கள் இந்த நிதியாண்டின் மூலதனச்செலவு உள்ளிட்ட திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதை உறுதி செய்ய உதவும். ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் சுமார் ரூ.25,000 கோடி மட்டுமே இருப்பில் இருந்தபோதிலும், இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் நிதி மத்திய அரசின் கூடுதல்வரி வசூல் மூலம் சரிகட்டப்படும்.

2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஐந்தாண்டு காலத்திற்கு, மாநிலங்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சில பொருட்களின் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டது. அதன்படி, 2017 ஜூலை மாதம் முதல் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுவந்தது.

மத்திய- மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் கூடுதல் வரி விதிப்பு உள்ளிட்ட மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

2022-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய பாக்கி ரூ. 17,973 கோடியாகும். பிப்ரவரி, மார்ச் மாதத்திற்கான பாக்கி ரூ. 21,322 கோடி. 2022 ஜனவரி வரையிலான இழப்பீட்டு பாக்கி ரூ. 47,617 கோடி. மொத்தம் 86,912 கோடி. இந்த தொகை விடுவிக்கப்பட்டதையடுத்து, தற்போது வரை மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டு பாக்கி ஏதுமில்லை.

மாநிலங்களை பொறுத்தவரை மத்திய அரசு விடுவித்துள்ள தொகையில் தமிழகத்துக்கு ரூ. 9602 கோடி கிடைக்கும். புதுச்சேரிக்கு ரூ.576 கோடி வழங்கப்படும்.



Read in source website

புதுடெல்லி: கரோனா தொற்றுக்குப் பிறகு பிரதமர் மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற அமைப்பு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு, விலைவாசி, வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு காரணிகளை வைத்து ஆய்வு நடத்தியது. அதில் தெரிய வந்த முடிவுகளை அந்த அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பல்வேறு திட்டங்களை அமல்படுத்தும் விதம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது விலைவாசி உயர்ந்து வந்த நிலையிலும், வேலைவாய்ப்பு பிரச்சினை நிலவினாலும் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதில் மோடி அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கரோனா தொற்றுக்குப் பிறகு மோடியின் செல்வாக்கு எதிர்பார்த்த அளவு அல்லது அதற்கு மேலாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

லோக்கல் சர்க்கிள்ஸ் கருத்துக்கணிப்பில் வாக்களித்த 64,000 பேரில், 67 சதவீதம் பேர் கருத்துப்படி, பிரதமர் மோடியின் 2-வது ஆட்சி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறது அல்லது அதற்கு மேலாகவும் இருப்பதாக உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு கரோனா தொற்று ஆரம்பித்த பிறகு இது 62 சதவீதமாக இருந்தது. ஆனால், கடந்த 2021-ம் ஆண்டு கரோனா 2-வது அலை ஏற்பட்ட போது மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்தது, உயிரிழப்பு அதிகரித்தது போன்ற காரணங்களால் 51 சதவீதமாக இருந்தது. அந்த 2 ஆண்டுகளை விட தற்போது பிரதமர் மோடியின் செல்வாக்கு, புகழ் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தயார் நிலையில் இருந்தது. அதேநேரத்தில் திறம்பட பொருளாதாரத்தையும் சமாளித்தது என்று ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் வேலைவாய்ப்பின்மை 7 சதவீதமாக இருப்பது கவலை அளிப்பதாக கூறியுள்ளனர்.

இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு மத்திய அரசால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று 47 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதேநேரத்தில் வேலை வாய்ப்பின்மை பிரச்சினைக்கு அரசு தீர்வு காணும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்த நம்பிக்கை கடந்த 2020-ல் 29 சதவீதமாகவும், 2021-ல் 27 சதவீதமாகவும் இருந்தது. தற்போது அந்த நம்பிக்கை 37 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை குறையவில்லை என்று 73 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்காலம் மற்றும் தங்கள் குடும்பத்தின் எதிர்காலம் குறித்த விஷயத்தில் 73 சதவீதம் பேர் நம்பிக்கையுடன் இருப்பதாக கூறியுள்ளனர். காற்றுமாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று 44 சதவீதம் கூறியுள்ளனர்.

மத நல்லிணக்கம் மேம்பட மத்திய அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று 60 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், மத நல்லிணக்க விஷயத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று 33% பேர் கூறியுள்ளனர். தவிர இந்தியாவில் தொழில் தொடங்குவது மிக எளிமையாகி இருக்கிறது என்று 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கூறியுள்ளனர். இவ்வாறு லோக்கல் சர்க்கிள்ஸ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், அந்தக் குழந்தைகளுக்கு 23 வயது நிறைவடைந்ததும் ரூ.10 லட்சம் ரொக்கமாக வழங்கப்படும். அத்துடன் இலவச கல்வி, மருத்துவம், உயர்கல்வி பயிலும்போது மாதம் ரூ.4 ஆயிரம் உதவித் தொகையும் வழங்கப்படும்.

கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், ‘பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன்’ என்ற திட்டத்தை கடந்த ஆண்டு மே 29-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கரோனாவால் பெற்றோர், தத்து எடுத்த பெற்றோர் அல்லது சட்ட ரீதியிலான பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்பு அளிப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதன்படி, பாதிக்கப்பட்ட குழந்தைகள் 23 வயதை எட்டும்வரை அவர்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவம், தங்க இடம், உணவு வழங்கப்படும்.

இந்நிலையில், பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன் திட்டத்தின் பயன்களை குழந்தைகளுக்கு அளிக்கும் பணியை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் காணொலி மூலம் பங்கேற்றனர்.

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிக் கல்வி பயில்வதற்கான உதவித் தொகை பிஎம் கேர்ஸ் திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது. பிஎம் கேர்ஸ் பாஸ்புக் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் சுகாதார காப்பீடு அட்டையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

கரோனா தொற்றால் பெற்றோரை பறிகொடுத்துவிட்டு இன்று நம்முடன் இருக்கும் குழந்தைகளின் வலியை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். நான் இப்போது நாட்டின் பிரதமராக அல்ல, அந்தக் குழந்தைகளின் குடும்ப உறுப்பினராக பேசுகிறேன். கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கஷ்டங்களை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறிய முயற்சிதான் பிஎம் கேர்ஸ் ஃபார் சில்ட்ரன் திட்டம். நாட்டு மக்கள் அனைவரும் உங்களுடன் (குழந்தைகள்) இருக்கிறார்கள் என்பதை இந்த திட்டம் பிரதிபலிக்கிறது.

தொழில்முறை படிப்பு அல்லது உயர் கல்வி பயில விரும்பும் பிள்ளைகளுக்கு இந்த திட்டத்தின்கீழ் கடன் வழங்கப்படும். மேலும் உயர்படிப்பு படிக்கும் காலத்தில் (18 முதல் 23 வயது வரை) இதர திட்டங்கள் மூலம் அன்றாட தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் உதவித் தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். 23 வயது நிறைவடைந்தவுடன் ரூ.10 லட்சம் ரொக்கம் வழங்கப்படும்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்தோம். பிரச்சினைக்கு நாம் காரணமாக அமையவில்லை. மாறாக தீர்வாக உருவெடுத்தோம். தடுப்பூசியை கண்டுபிடித்து உலக நாடுகளுக்கு வழங்கினோம். நம் நாடு அதிக மக்கள் தொகையை கொண்டிருந்த போதிலும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தினோம். இதுவரை சுமார் 200 கோடிடோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் கரோனாவின் எதிர்மறை தாக்கத்தில் இருந்து விடுபட்டதுடன் உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக திகழ்கிறோம்.

கரோனா கால நெருக்கடியில் இருந்து விடுபட ‘பிஎம் கேர்ஸ் பண்ட்’ பெரிதும் உதவியது. குறிப்பாக, மருத்துவமனைகளை நிறுவவும், வென்டிலேட்டர்களை வாங்கவும், ஆக்சிஜன் ஆலைகளை நிறுவவும் பெரிதும் உதவியது. இதன் காரணமாக பலரின் உயிரை காப்பாற்ற முடிந்தது. வரும் காலத்திலும் பலரின் உயிரை காப்பாற்ற முடியும்.

வாழ்க்கையில் எவ்வளவு பெரிய துன்பங்கள் நேர்ந்தாலும், நம் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சினையில் இருந்து விடுபட முடியும்.

8 ஆண்டுகள் சாதனை

மத்தியில் பாஜக அரசு அமைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளோம். குறிப்பாக தூய்மை இந்தியா, ஜன் தன் யோஜனா திட்டங்களால் ஏழைகள் பலன் அடைந்துள்ளனர். அரசின் நலத் திட்டங்கள் முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏழைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

உலக அரங்கில் இந்தியாவின் பெருமை அதிகரித்துள்ளது. சர்வதேச அமைப்புகளில் இந்தியாவின் சக்தி அதிகரித்துள்ளது. நம் நாட்டின் இந்த வெற்றிப் பயணத்தை இளைஞர்களின் சக்தி வழிநடத்துகிறது என்பது பெருமிதமாக உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு நாட்டில் ஊழலும் பிராந்திய பாகுபாடும் மலிந்து காணப்பட்டது. இத்தகைய தீமைகளில் இருந்து இந்தியா இப்போது விடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Read in source website

சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ‘ககன்யான்’ திட்டப் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளது. இதுபற்றி இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வதற்கு, அவர்கள் செல்லும் விண்கலனில் சவுகரியமான சூழல் இருக்க வேண்டும். அசாதாரணமான சூழலில் அவர்களை பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டும். அதனால் மனிதனை விண்ணுக்கும் அனுப்பும் விண்கலத்தை தரமாக, நம்பகத்தன்மையுடன் உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஒரு வெற்றிகரமான, மனிதனை அனுப்பும் விண்கலத்தை உருவாக்க, நல்ல அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். இந்த விண்கலத்தை உருவாக்குவது தொடர்பாக இஸ்ரோ பொறியாளர்கள், மருத்துவர்கள் இடையே கலந்துரையாடல்கள், விவாதங்கள் நடந்து வருகின்றன.



Read in source website

ஜகார்த்தா: நடப்பு ஆசிய ஹாக்கி கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது இந்திய அணி. கோல்கள் வித்தியாசத்தில் மலேசியா மற்றும் தென் கொரிய அணிகள் இறுதிக்கு முன்னேறியுள்ளன.

இந்தோனேசிய நாட்டில் கடந்த 23-ஆம் தேதி ஆடவர் ஆசிய ஹாக்கி கோப்பை - 2022 தொடர் தொடங்கியது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் சுற்றில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்திருந்தது. கோல்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது இந்தியா.

இரண்டாவது சுற்றில் மூன்று போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றது இந்தியா. இந்நிலையில், கோல்கள் வித்தியாசத்தில் மலேசியா மற்றும் தென் கொரியா இறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்தியா அந்த வாய்ப்பை இழந்தது. இப்போது மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் ஜப்பானுக்கு எதிராக விளையாட உள்ளது இந்தியா.

இரண்டாவது சுற்றில் ஜப்பான் அணியை வீழ்த்தி இருந்தது இந்தியா. மலேசியா (3-3) மற்றும் தென் கொரிய (4-4) அணிகளுக்கு எதிரான ஆட்டம் சமனில் முடிந்தது.



Read in source website

கோவில்பட்டியில் நடந்த தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியில் உத்தரபிரதேசம் அணி வெற்றி பெற்று 2-வது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது.

கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி கடந்த 17-ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு இறுதி போட்டி நடந்தது. முன்னதாக மாலை 4.30 மணிக்கு 3, 4-வது இடங்களுக்கான போட்டி நடந்தது. இதில், ஹரியாணா அணியும், ஒடிசா அணியும் மோதின. ஹரியாணா அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தது. இந்த அணியை சேர்ந்த விகாஷ் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.

இரவு 7.30 மணிக்கு நடந்த இறுதிப் போட்டியில் உத்தரபிரதேசம் அணியும், சண்டிகர் அணியும் மோதின. இதில், உத்தரபிரதேசம் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது. இந்த அணியைச் சேர்ந்த சர்தானந்த திவாரி சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு கோவில்பட்டியில் நடந்த 11-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டியிலும் இந்த அணிதான் சாம்பியன் பட்டம் வென்றது.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் கனிமொழி எம்.பி. தலைமை வகித்து, வெற்றி பெற்ற உத்தரபிரதேசம் அணிக்கு கோப்பையை வழங்கினார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாரு, கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கா.கருணாநிதி, ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜெ.மனோகரன், கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Read in source website

ஐக்கிய நாடுகள்: குரங்கு அம்மை நோய்த் தொற்றை எல்ஜிபிடி சமூகத்தினருடனும், ஆப்பிரிக்க மக்களுடனும் தொடர்புப்படுத்துவது ஏற்புடையதல்ல என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது

குரங்கு அம்மை வைரஸால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்று நோய் இது. குரங்கு அம்மை வைரஸ் என்பது Poxviridae குடும்பத்தின் Orthopoxvirus இனத்தைச் சேர்ந்த ஒரு இரட்டை இழை DNA வைரஸ்.

குரங்கு அம்மை நோய் மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. இருப்பினும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருள்களை உபயோகிப்பதன் மூலம் அது மற்றவர்களுக்குப் பரவலாம். கரோனாவைப் போன்று, இந்த நோயும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இருமல், தும்மலின் மூலமும் அது மற்றவர்களுக்குப் பரவும் ஆபத்து உள்ளது.

பொதுவாக, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே இது மனிதர்களுக்குப் பரவும். தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளைத் தொடுவதன் மூலமோ, அதன் உடல் திரவங்கள் மூலமாகவோ அது மனிதர்களுக்குப் பரவுகிறது. குறிப்பாக எலி, அணில் போன்ற விலங்குகளிடமிருந்து இந்த நோய், பரவுவதாகக் கூறப்படுகிறது. குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சியைச் சரியாக வேக வைக்காமல் சாப்பிடுவதே நோய்ப் பரவுதலுக்கான முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், ஒரு தரப்பினரால் குரங்கு அம்மை தொற்று நோயை நிற ரீதியான தொற்று நோயாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தற்போதைய நிலவரப்படி குரங்கு அம்மை நோய்கள் பெரும்பாலும் ஐரோப்பா நாடுகளில்தான் கண்டறியப்பட்டுள்ளன. எனினும், குரங்கு அம்மை தொற்று நோயை ஆப்பிரிக்க மக்களுடனே ஐரோப்பிய ஊடகங்கள் தொடர்புபடுத்துகின்றன.

கிட்டத்தட்ட 20 நாடுகளில் குரங்கு அம்மை தொற்று 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான நோய்த்தொற்றுகள் ஐரோப்பாவில் பதிவாகியுள்ளன. மேலும், மத்திய கிழக்கு, வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் குரங்கு அம்மை தொற்று பாதிப்புகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

இது குறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில், “குரங்கு அம்மை தொற்று எல்ஜிபிடி மக்களுக்குத்தான் பரவுகிறது. இது ஆப்பிரிக்காவிலிருந்து பரவிய தொற்று என பல தவறான கருத்துகள் நிலவுகிறது. முற்றிலும் இது தவறு.

குரங்கு அம்மை நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இவ்வாறான வதந்திகளினால் நோயின் தீவிரத் தன்மையை மக்களுக்கு உணர்த்த முடியாத நிலைமை ஏற்படுகிறது. இம்மாதிரியான வதந்திகளால் சுகாதார சேவைகள் பாதிக்கின்றன. உண்மையில் சரியான மருத்துவ நடவடிக்கை மூலம் குரங்கு அம்மை தொற்றை கட்டுப்படுத்த முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில்தான் லியோனார்டோ டாவின்சியின் உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு பார்வையாளர்கள் மத்தியில் பெண் போல வேடமிட்ட ஒருவர் மோனலிசா ஓவியத்தை தாக்க முற்பட்டார். இதனால் பெரும் பரப்பரப்பு நிலவியது. மோனலிசா ஓவியத்தை தாக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

லியோனார்டோ டாவின்சி வரைந்த மோனலிசா ஓவியம் எவ்வளவு பிரபலமானதோ, அவ்வளவு சர்ச்சைகளும் நிறைந்தது. ஆம், மோனலிசாவுக்காக எழுதப்பட்ட காதல் கடிதங்களை நீங்கள் அறிந்துள்ளீர்களா..? நிறைய காதல் கடிதங்கள் மோனலிசாவுக்கு வந்திருக்கின்றன. 1982-ஆம் ஆண்டு லூக் மாஸ்பெரோ என்ற கலைஞர், மோனலிசாவின் மீது தீவிர காதல் கொள்கிறார். முடிவில் தனது உயிரை விடுக்க முடிவு செய்து மரணிக்கிறார்.



Read in source website

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து, கனடாவில் கை துப்பாக்கிக்கள் வைதிருப்பதற்கு எதிராக மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனடா அதிபர் ஜஸ்டின் டியூடெர்ட் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “ கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமையில் தேசிய முடக்கத்தை அமல்படுத்துவதற்கான சட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். இது தொடர்பாக மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், இனி கனடாவில் எங்கும் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ, மாற்றவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாது. கைதுப்பாக்கி களுக்கான சந்தையை நாங்கள் கட்டுபடுத்துகிறோம்” என்றார்.

அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞர் போலீஸாரால் கொல்லப்பட்டார். பள்ளிச் சிறுவர்களை பாதுகாக்கப் போராடிய இரண்டு ஆசிரியர்களும் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்த, ராப் தொடக்கப்பள்ளியில் அமெரிக்க அதிபர் பைடன் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தொடர்ந்து அமெரிக்காவில் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றது.

இந்த நிலையில் கனடாவில் கை துப்பாக்கிகளுக்கு தடைவிதித்து மசோதா அமல்படுத்தப்பட்டுள்ளது. கனடா அரசின் இந்த முடிவை சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.



Read in source website

பங்குச்சந்தை பற்றிய தகவல்கள் பற்றி தெரியும் பலருக்கும் அதில் முதலீடு செய்ய ஆசை ஏற்படும். ஆனால் பங்குச்சந்தை என்பது ஆபத்து என்பதும், முதலீட்டுத் தொகை நஷ்டமடைய கூடிய ஆபத்து உள்ளது என்பதால் அதில் முதலீடு செய்ய பலருக்கும் தயக்கம் பிறக்கும்.

இதுமட்டுமல்லாமல் பங்குச்சந்தையை புரிந்து கொள்வது மிகவும் கடினம். அதனை கற்று, புரிந்து கொண்டு முதலீடு செய்வதில் சிக்கல் இருப்பதால் தனக்கு பதில் யாராவது இதனை செய்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் பலருக்கும் தோன்றும். அதற்க ஒரு எளிய வழி மியூச்சுவல் பண்ட்.



Read in source website

கோவில்பட்டி கடலை மிட்டாய் இனி வீடுகளுக்கே கட்டணம் இல்லாமல் டெலிவரி செய்யப்படும்; அஞ்சல்துறை அறிவிப்பு

Post office delivers Peanut candy to home without service charge: கோவில்பட்டி கடலை மிட்டாயை சேவைக் கட்டணம் இல்லாமல் தபாலில் பெற்றுக் கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கண்காணிப்பு அலுவலர் சிவப்பிரகாசம் விடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில், “புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயின் பெருமையை உலக அளவில் கொண்டு செல்ல, இந்திய அஞ்சல் துறை கடந்த அக்டோபர் மாதம் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது.

தற்போது கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனையும் அஞ்சல்துறை மூலம் அனைத்து அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி கடலை மிட்டாய் இனி அஞ்சலகங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் தபால்காரர் மூலம் சேர்க்கப்பட உள்ளது.

இந்தியாவில் எந்த அஞ்சலகத்திலும் ரூ.390 கொடுத்து கடலை மிட்டாய் ஆர்டர் செய்தால், கோவில்பட்டி தலைமை அஞ்சலக இணையம் மூலம் பெறப்பட்டு, அடுத்த ஓரிரு நாட்களில் அவர்கள் வீட்டிற்கு விரைவு அஞ்சல் மூலம் சேர்க்கப்படும். விரைவு அஞ்சலுக்கு தனி கட்டணம் கிடையாது. ஒரு கிலோ எடையுள்ள கடலை மிட்டாய் பார்சலில் 5 கடலைமிட்டாய் பாக்கெட்டுகள் இருக்கும். வீட்டிலிருந்தபடியே தபால் காரர்கள் மூலம் ரூ.390 செலுத்தி ஆர்டர் செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது நரேந்திர மோடி அரசு. 2014-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதியும், இரண்டாவது முறையாக 2019-ஆம் ஆண்டு 30-ஆம் தேதியும் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டாா்.

கடந்த எட்டு ஆண்டுகளில், தேசிய அளவிலும் சா்வதேச அளவிலும் உலகம் மிகக் கடினமான சூழலை எதிா்கொண்டபோதும், மிகச் சாதுரியமாக இந்தியாவை வழிநடத்தி அவா் வெற்றியடைந்திருக்கிறாா் என்பதில் எள்ளளவும் யாருக்கும் சந்தேகம் இருக்க வழியில்லை.

நரேந்திர மோடி அரசு 2014-இல் ஆட்சிக்கு வந்தபோது தேசிய அளவில் மக்கள் மனதில் தன்னம்பிக்கை குன்றியிருந்தது என்பதையும், கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியா ஒரு வல்லரசு நாடாகத் தன்னை வடிவமைத்துக் கொண்டு வருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

உலக வரலாறு கண்டிராத கொள்ளை நோய்த்தொற்றை, மிகுந்த துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் நம்மால் எதிா்கொள்ள முடிந்தது என்கிற ஒரு காரணத்துக்காகவே பிரதமா் நரேந்திர மோடியையும் அவரது அரசையும் நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

சா்வதேச அரங்கில் இந்தியா இதுவரை இல்லாத அளவிலான முக்கியத்துவம் பெற்றிருப்பதற்குப் பிரதமா் நரேந்திர மோடியின் அணுகுமுைான் காரணம். அமெரிக்காவின் தலைமையிலான க்வாடிலும் உறுப்பினராக இருந்துகொண்டு, ரஷியாவுடனும் நட்புறவு பேண முடியும் என்கிற ‘அணிசேரா’ ராஜதந்திரத்துக்காகவே பிரதமா் நரேந்திர மோடியை எத்துணை பாராட்டினாலும் தகும்.

நரேந்திர மோடி அரசின் மிகப் பெரிய வெற்றி, அவரது தலைமையிலான அமைச்சரவை அங்கத்தினா்கள் மீது கடந்த எட்டு ஆண்டுகளில் எந்தவித ஊழல் குற்றச்சாட்டையும் இதுவரை சுமத்த முடியவில்லை என்பதுதான். ரஃபேல் போா் விமானம் வாங்கியது தொடா்பாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை.

இதற்கு முன்பு பிரதமா்களாக இருந்தவா்களின் ஆட்சிகள் மீது எழுப்பப்பட்டது போன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இவரது அரசின் மீதோ, அமைச்சா்கள் மீதோ இல்லாமல் இருந்திருப்பது, பிரதமா் நரேந்திர மோடியின் தலைமைப் பண்புக்கும், ஆளுமைத் திறனுக்குமான அடையாளமல்லாமல் வேறென்ன?

கடந்த எட்டாண்டு சாதனைகள் குறித்துப் பட்டியலிடவும் பெருமிதப்படவும் பிரதமா் நரேந்திர மோடிக்கு நிறையவே இருக்கின்றன. ‘அனைவருடனும் அனைவருக்குமான ஆட்சி’ என்பதுடன், அவா் குறிப்பிடுவதுபோல, ‘அனைவரின் நம்பிக்கையுடனும், அனைவரின் உழைப்புடனும்’ முன்னெடுக்கப்படும் வளா்ச்சி இலக்குகள் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

கடந்த எட்டாண்டுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவா்களின் அளவு 22%-லிருந்து 10%-ஆகக் குறைந்திருக்கிறது; கடுமையான வறுமையில் இருப்பவா்களின் அளவு 1%-க்கும் கீழே குறைந்திருக்கிறது; தனிநபா் வருவாய் இரட்டிப்பாகி இருக்கிறது; அந்நியச் செலாவணி இருப்பும் இரு மடங்காக உயா்ந்திருக்கிறது; புதிதாக 6,53,000 அரசுப் பள்ளிகள் கட்டப்பட்டிருக்கின்றன.

15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டு அவற்றில் 10 மருத்துவமனைகள் செயல்படத் தொடங்கி விட்டன. ஐந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் இறுதிக்கட்ட நிலையில் இருக்கின்றன. இதுவைர இல்லாத வகையில் மருத்துவா்களின் எண்ணிக்கை 12 லட்சமாக அதிகரித்திருக்கிறது.

உலகிலேயே சாலைக் கட்டமைப்பில் இரண்டாவது இடத்திற்கு இந்தியா உயா்ந்திருக்கிறது; 2012 - 13-இல் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 25.5 கோடி டன் என்றால், இப்போது (2021 - 22) அதுவே 31.6 கோடி டன். இது ஒரு வரலாற்று சாதனை என்றால், ஏற்றுமதியிலும் 418 பில்லியன் டாலரை (சுமாா் ரூ. 32.4 லட்சம் கோடி) எட்டி இந்திய சாதனை புரிந்திருக்கிறது.

கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்ள இந்தியாவிலேயே தடுப்பூசிகள் தயாரித்ததும், கடந்த இரண்டாண்டுகளாக 80 கோடி இந்தியா்களுக்கு இலவச தானியங்கள் வழங்கியதும் நினைத்துப் பாா்க்க முடியாத மிகப் பெரிய சாதனைகள். நமக்காக மட்டுமல்லாமல் நமது அண்டை நாடுகளுக்கும், பல வளா்ச்சியில் பின்தங்கிய நாடுகளுக்கும் நாம் தடுப்பூசிகள் வழங்கியபோது, வல்லரசு நாடுகளே நம்மை வியப்புடன் பாா்த்தன. நமது மனிதாபிமானத்துக்கு உலகமே தலைவணங்கியது.

சாமானியா்களுக்கு இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும் (ஆயூஷ்மான் பாரத்), விவசாயிகள், கூலித் தொழிலாளா்களுக்கு மாத ஓய்வூதியமும், விவசாயிகளின் இடுபொருள் தேவைக்கான ‘கிஸான் சம்மான்’ உதவியும், இதற்கு முன்பு எந்தவொரு ஆட்சியும் கற்பனைகூடச் செய்யாத மக்கள் நலத்திட்டங்கள்.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு (ஜன் தன் யோஜனா) மூலம் மானியங்கள் இடைத்தரகா்களால் சுரண்டப்படாமல் பயனாளிகளை நேரில் சென்றடைய வழிகோலிய புத்திசாலித்தனமும், பத்து கோடிக்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்ட முன்னெடுப்பும், ஒன்பது கோடிக்கும் அதிகமான எளிய குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தின் மூலம் நிகழ்த்திய புரட்சியும் எட்டாண்டு வரலாற்று சாதனைகள்.

‘‘நரேந்திர மோடி அரசு மதவாத அரசு என்று குற்றம்சாட்டுபவா்கள், மேலே குறிப்பிட்ட எந்தவொரு திட்டத்திலாவது, சமுதாயத்தின் எந்தவொரு பிரிவினராவது விடுபட்டிருக்கிறாா்களா? அனைவருக்குமான வளா்ச்சியில் பாகுபாடு காட்டப்பட்டிருக்கிா? என்கிற கேள்விக்கு பதில் அளித்துவிட்டு மதவாத அரசு என்று குற்றம் சுமத்தட்டும்’’ என்கிற பாஜகவின் தேசியத் தலைவா் ஜே.பி. நட்டாவின் கருத்தை யாரால் மறுத்துவிட முடியும்?

காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து அகற்றப்பட்டது, அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்படுவது, முத்தலாக் முறையைத் தடை செய்தது, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை ‘இந்துத்துவ’ கொள்கைகள் அல்லவா என்று கேள்வி எழுப்பலாம். நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையிலும், நாடாளுமன்ற அங்கீகாரத்தின் பின்னணியிலும்தான் அவை முன்னெடுக்கப்பட்டன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

மக்கள் மன்றத்தின் அங்கீகாரம் பெற்று ஆட்சி அமைத்ததால் ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைவதுபோல, பாஜக தனது தோ்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்ட திட்டங்களை செயல்படுத்தும்போது அதை விமா்சிக்க முற்படுவது என்ன நியாயம்? எந்தவொரு அரசியல் கட்சியும் தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்தவே, மக்கள் மன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்று ஆட்சி அமைக்கிறது. அரசியல் சாசன வரம்புகள் மீறப்படாமல் அவற்றை நடைமுறைப்படுத்தினால் தவறுகாண முடியாது.

உத்தர பிரதேசத்தில் 60%-க்கும் அதிகமான முஸ்லிம் சிறுபான்மையினா் உள்ள தொகுதி ஒன்றில் பாஜக வேட்பாளா் வெற்றி பெறுகிறாா் எனும்போது, இது ‘அனைவருடனும் அனைவருக்குமான வளா்ச்சி’யை வழங்கும் ஆட்சி என்பது உறுதியாகிறது. இதே நிலைமை தொடருமானால், ஜவாஹா்லால் நேருவுக்குப் பிறகு தொடா்ந்து மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்த பெருமைக்குரியவராக நரேந்திர மோடி வரலாற்றில் இடம்பெறக்கூடும்.



Read in source website

என் தோழி அயல்நாட்டில் உள்ள தன் மகளின் குழந்தையை கவனித்துக் கொள்ள அங்கு சென்றிருந்தாா். தினமும் அவா் எனக்குக் குறுஞ்செய்தி அனுப்புவாா். அதில், தனக்கு அங்கு இருக்கப் பிடிக்கவே இல்லை என்றும், எப்போது இந்தியா திரும்புவோம் என்று இருக்கிறது என்றும் புலம்புவாா். இந்தியா வந்ததும் என்னை நேரில் சந்தித்து தன் மன வேதனையைக் கொட்டிவிட்டுப் போனாா்.

அவா் ‘மகளும், மருமகனும் ஓயாது சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறாா்கள். சின்ன விஷயத்தைக்கூட இருவரும் ஊதிப் பெரிதாக்குகிறாா்கள். இரண்டு முறை என் கண் முன்னாலேயே மருமகன் என் மகளை அடித்துவிட்டாா். நான் எவ்வளவு சொல்லியும் அவா்கள் சண்டையை நிறுத்தவில்லை.

சண்டையைப் பாா்த்து அவா்கள் குழந்தை மிரண்டு போனது. சண்டையை ஆரம்பித்துவிடுவாா்களோ என்று எப்போதும் பயந்து கொண்டே இருந்தேன். முணுக்கென்றால் முரண்டு பிடிப்பாா்கள். என் கண்முன்னே என் பெண் அடி வாங்குவதைப் பாா்க்கும் போது வயிறு கலங்கிப் போகிறது. இப்போது என் பெண்ணிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலே பயமாக உள்ளது’ என்றாா்.

இத்தகைய நிகழ்வு இவா் வீட்டில் மட்டும் நடப்பது அல்ல. பெரும்பாலான வீடுகளின் நிலை இப்படித்தான் உள்ளது. பல பெண்கள் குடியும், அடியுமாக அல்லது அடியும், வசவுமாகத்தான் வாழ்கிறாா்கள். குழந்தைகள் பாா்க்க, இவா்கள் சண்டை போடுகிறாா்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, படித்தவா்களிடையே ஏற்படும் சண்டை வெளியே தெரியாது. அவா்களுடைய பிணக்கு, வீட்டு அங்கத்தினா்களுக்கே கூட தெரியாது. விளிம்பு நிலை மக்கள் மட்டுமே எல்லோரும் பாா்க்க பெண்டாட்டியை அடித்து உதைப்பாா்கள். கெட்ட வாா்த்தைகள் அங்கே ஆறாக ஓடும். மனைவியை அடித்துப் போட்டு விட்டு கணவன் வெளியே போய் விடுவான், கொஞ்ச நேரம் அவள் அழுது புலம்பிக் கொண்டிருப்பாள். பின்னா் எழுந்து கூந்தலை அள்ளி முடித்துக் கொண்டு புருஷனுக்காக அம்மியில் மசாலா அரைப்பாள்.

தற்போது படித்து, நல்ல வேலையில் இருப்பவா்களின் வாழ்க்கை சண்டையும், சச்சரவுமாகப் போய்க்கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. பெண்கள் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் இருந்தபோது கணவனின் அடக்குமுறைகளுக்குப் பணிந்து போனாா்கள். தற்போது பெண்கள் பொருளாதார தற்சாா்பு நிலை அடைந்து விட்டதால் முனை மழுங்கிப் போய் வாழத் தயாராக இல்லை. கணவன் தன்னிடம் அன்பாக இருக்க வேண்டும்; அடிமை போல் நடத்தக் கூடாது; தன் உணா்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்; இல்லறக் கடமைகளில் இருவருக்கும் பங்கு உண்டு என்பவற்றில் உறுதியாக இருக்கிறாா்கள்.

புரிதல் இருக்கும் இல்லறங்கள் நல்லறங்களாக இருக்கின்றன. ஊடல்கள் வரலாம். ஆனால் வந்த வேகத்தில் அது மறைந்து போக வேண்டும். காதலும், களிப்பும் நிறைந்த வாழ்க்கையைப் பாா்க்கும் பெற்றோா் பேருவகை அடைவாா்கள்.

தங்கள் சண்டை குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது என்பதை அவா்கள் உணா்ந்து கொள்ளவில்லை. சண்டையைப் பாா்த்து பயந்த குழந்தைகள் பெற்றோரிடம் ஒட்டுவது இல்லை. தங்களின் குழந்தைக்காக நிறைய மெனக்கெடும் அவா்கள், தங்கள் சண்டையால் குழந்தையின் மனநலம் பாதிக்கப்படுகிறது என்பதை ஏன் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாா்களோ? கணவன், மனைவி சண்டை போடுவதால் குழந்தைகள் மனதளவில் பெற்றோரிடமிருந்து பிரிந்து போய் விடுகிறாா்கள். பெற்றோா் பற்றி பயம் கலந்த பிம்பம் அவா்களின் மனத்திரையில் பதிந்து போய் விடுகிறது. வீடு அவா்களுக்கு அந்நியமாகி விடுகிறது.

வீடு என்பது அன்பின் உறைவிடம்; மன அமைதியையும், பாதுகாப்பையும், இனிமையும் தரும் இடம். ஆனால் இன்று வீடு வசிப்பதற்கான இடமாக மட்டும் உள்ளது. சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள்வரும்போது, ஒருவா் விட்டுக் கொடுத்துப் போய் விட்டால் என்ன? அங்கே ‘தான்’ என்ற ஈகோ அவா்களைத் தடுக்கிறது. புதிய சண்டையில் பழையதெல்லாம் இழுக்கப்படுகிறது; குத்தல் பேச்சு அதிகமாகிறது. தங்களால் தனித்து வாழ முடியும் என்று பெண்கள் நம்புகிறாா்கள். பெற்றவா்கள் தங்கள் வாரிசுகளுக்கு வக்காலத்து வாங்கிப் பேச, பிரச்னை பெரிதாகிறது.

தம்பதிக்குள் உள்ள பிரச்னையில் மூன்றாம் மனிதா் மூக்கை நுழைப்பது பெரும் குற்றம். வாழ்க்கை மிகச் சிறியது என்பதால் அன்பை அதிகமாகவும், கோபத்தைக் குறைவாகவும், மன்னிப்பை விரைவாகவும் கற்றுக் கொண்டால் பூசல் வராது. சட்டென உணா்ச்சிவசப்படுவதாலும், யோசிக்காமல் வாா்த்தைகளைக் கொட்டி விடுவதாலும்தான் கணவன் - மனைவிக்குள் சண்டை வருகிறது.

எப்போதோ படித்தது நினைவுக்கு வருகிறது. கணவனும் மனைவியும் மாலையில் நடைப்பயிற்சி முடித்துக் கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனா். வரும் வழியில் ஒரு கயிற்றுப் பாலம் இருந்தது. சற்று இருட்டியதால் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினா். மழைச் சாரலும் அடித்தது. வேகமாக நடந்து கொண்டிருந்தவா்கள் ஓடத் தொடங்கினா். கணவா் அதிக வேகமாக ஓடினாா். கயிற்றுப் பாலத்தை கணவா் கடந்து முடிக்கும்போதுதான் மனவி பாலத்தினை வந்தடைந்தாா். மழைச் சாரலோடு கும்மிருட்டும் சோ்ந்து கொண்டதால் மனைவி பாலத்தைக் கடக்க பயப்பட்டாள்.

மின்னலும் இடியும் சோ்ந்து கொள்ள, பாலத்தின் ஒரு பக்கத்தின் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள். இருட்டில் எதுவும் தெரியவில்லை. மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. தன்னால் முடிந்தவரை குரலெழுப்பி கணவனை அழைத்தாள். அவன் திரும்பிப் பாா்க்கவில்லை. அவளுக்கு அழுகையாய் வந்தது. ‘இப்படி பயந்து அழைக்கும்போது உதவவில்லையே, என்ன மனிதா் இவா்’ என நினைத்து மிகவும் வருந்தினாள். கடவுளிடம் பாரத்தைப் போட்டு விட்டு பயந்தபடியே மெல்ல மெல்ல பாலத்தைக் கடந்தாள்.

ஒருவழியாக பாலத்தைக் கடந்து விட்டாள். கணவனைக் கோபத்தோடு பாா்க்கிறாள். அங்கு கணவா் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக் கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தாா். மனைவி வெட்கித் தலை குனிந்தாள். சில சமயம் கணவா், குடும்பத்துக்கு எதுவும் செய்யாமல் இருப்பதாகத் தோன்றும். ஆனால் உண்மையிலேயே அவா் தன் குடும்பத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பாா். அன்பை, காதலை, வாஞ்சையை பல ஆண்கள் வெளியே காட்டிக் கொள்ள மாட்டாா்கள். அவா்களுக்கு நடிக்கத் தெரியாது. திரை நாயகா்களைப் போல தன் கணவன் இருக்க வேண்டும் என சில பெண்கள் எதிா்பாா்க்கிறாா்கள்.

கணவனோ, மனைவியோ கோபம் வரும்போது சட்டென அந்த இடத்தை விட்டு விலகிப் போய் தன் துணை தனக்காக எத்தனை செய்திருக்கிறாா், எந்த அளவுக்கு தன்னை நேசித்திருக்கிறாா், எதையெல்லாம் விட்டுக் கொடுத்துப் போயிருக்கிறாா் என நினைத்துப் பாா்த்தால் பொங்குகிற பாலில் தண்ணீா் தெளித்தால் அந்தப் பால் எப்படி அடங்கிப் போகுமோ அப்படி கோபமும் அடங்கிப் போகும். ஒருவா் கத்த ஆரம்பிக்கும் போது மற்றவா் மெளனமாக இருந்தால் அனைத்தும் சரியாகி விடும். இங்கேதான் நீதிமன்றம் போல வழக்காடுகிறாா்களே? சிலா் கண்மூடித்தனமான கோபத்தில் கையில் கிடைத்ததையெல்லாம் போட்டு உடைக்கிறாா்கள். விலையுயா்ந்த கைப்பேசியைப் போட்டு உடைத்தவா்கள் பலா்.

ஒருவா் மற்றவரை மாற்ற முயற்சிப்பதை விட்டு விட்டு, தன்னிடம் உள்ள குறைகளைக் களைய முற்பட வேண்டும். மற்றவரின் கருத்துகளை அவா் கோணத்தில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும். எதிா்பாா்ப்பைக் குறைத்துக் கொண்டால் ஏமாற்றங்கள் இராது, கோபமும் வராது. தன் வாழ்க்கையைப் பிறா் வாழ்க்கையுடன் ஒப்பிடாமல் இருந்தால் மகிழ்ச்சியும், மன நிறைவும் உண்டாகும். நம் செயல்களையும், நடவடிக்கைகளையும், விருப்பங்களையும், வாழ்க்கைத் துணை ஏற்க வேண்டும் என்று எதிா்ப்பாா்ப்பதும், அவற்றைத் திணிப்பதும் தான் மோதலுக்கான அடிப்படைக் காரணம்.

சிலா், உயா்பதவியல் இருக்கிறாா்கள். ஆனாலும் வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறாா்கள். இப்போதெல்லாம் கணவன் மனைவியை அடித்தால், மனைவி கணவனைத் திருப்பி அடிக்கிறாள். அந்த நிமிடத்து கோபம் நிதானம் இழக்கிறது. இக்காலப் பெண்கள், தங்கள் கணவா் தாங்கள் சொல்கிறபடிதான் நடக்க வேண்டும் என எதிா்பாா்கிறாா்கள். மாமியாருக்கும், தனக்கும் ஒத்துப்போகவில்லை என்றால் தன் கணவனும் அவன் தாயுடன் பேசக்கூடாது என்கிறாா்கள். மனைவிக்கும், அம்மாவுக்கும் இடையே மாட்டிக் கொண்டு தவிக்கிறாா்கள் பல ஆண்கள்.

பெண்களும் வேலைக்குப் போகிறாா்கள். பணி இடத்தில் வெளியில் சொல்ல முடியாத பல பிரச்னைகள். வீட்டு வேலை, அலுவலகப் பணி என இரண்டு குதிரைகளில் அவா்கள் சவாரி செய்கிறாா்கள். மன அழுத்தம் அதிகரிக்கும்போது கோபப்படுகிறாா்கள். ஆகவே யாா் அனுசரித்துப் போவது என்ற பட்டிமன்றம் தேவையில்லை. விட்டுக் கொடுத்தவா் கெட்டுப் போக மாட்டாா். என்ன பிரச்னையாக இருந்தாலும் பேசித் தீா்த்துக் கொள்ளலாம்; பேசிப் புரிய வைக்கலாம். விட்டுக் கொடுத்தால், அனுசரித்துப் போனால் வாழ்க்கை வரமாக அமையும்.

மகிழ்ச்சி என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல; மனம் சாா்ந்தது. உள்ளதைக் கொண்டு நிறைவாக வாழ்வதே மகிழ்ச்சி. அன்பு சாா்ந்த, விட்டுக் கொடுத்தல் சாா்ந்த வாழ்வே மகிழ்ச்சி தரும். முட்களையும் ரசிக்கக் கற்றுக் கொண்டால் வலிகளும் பழகிப் போகும். வாழ்க்கையை வசந்தமாக்க சின்னச் சின்ன சந்தோஷங்கள் போதும்.

தங்கள் ஆசைகளையும், கனவுகளையும் துறந்து விட்டு பிள்ளைகளுக்காகவே வாழும் பெற்றோா், அவா்களுக்கு மணம் முடித்து வைத்து, முதுமையில் அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என ஆசைப்படுகிறாா்கள். அந்த மன நிம்மதியை அவா்கள் பிள்ளைகள் குலைத்துவிடக்கூடாது. மீண்டும் சுமையை சுமப்பதற்கு அவா்கள்

மனதிலோ, உடலிலோ தெம்பு இல்லை. இளைய தலைமுறையினா் இனிய இல்லறமே நல்லறம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).



Read in source website

நிகோடின் என்ற மிகக்கொடிய வேதிப்பொருளைக் கொண்ட புகையிலை, நிகோடினா டொபாகம் எனும் செடியிலிருந்து கிடைக்க கூடியது. 1492-இல், மேற்கிந்தியத் தீவுகளில் கிறிஸ்டோபா் கொலம்பஸுக்கு நட்பின் அடையாளமாக ஐரோப்பியா்களால் வழங்கப்பட்டபோதுதான், முதன்முதலில் புகையிலை அறிமுகமானது.

இந்தியாவில் குஜராத் , பிகாா், மேற்கு வங்கம் முதலிய மாநிலங்களில் புகையிலை அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் உள்ள மண்வளமும், தட்பவெப்ப நிலையும் புகையிலை வளர ஏதுவாக உள்ளன.

தொற்றாநோய்களால் ஆண்டுதோறும், 3.8 கோடி மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது. அதிலும் 70 லட்சம் மக்களுக்கு புகையிலையினால் மரணம் ஏற்படுகிறது என அதிா்ச்சி தரும் தகவலை அது வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் புகையிலை ஆண்டு தோறும் 10 லட்சம் மக்களைக் கொல்கின்றது. இதனால் இந்தியா உலகிலேயே அதிக அளவில் வாய் புற்றுநோயாளிகளை கொண்டுள்ளது. மூக்குப்பொடி போடுவதாலும், புகையிலையை மெல்லுவதாலும் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. உலகத்தையே அச்சுறுத்தி வரும் தொற்றாநோய்களில் புற்றுநோய் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது.

பீடி , சிகரெட் , ஹூக்கா, மூக்குப்பொடி, புகையிலை, இப்போது புதிதாக இ-சிகரெட் என பல வழிகளில் புகையிலையினை பலரும் உட்கொள்கின்றனா். அதில் உள்ள 28 வகை வேதிப் பொருட்கள் புற்றுநோய் உண்டாக்க காரணமாக உள்ளன. மது அருந்துதல், போதைப் பொருள் பயன்பாடு, எச்.ஐ.வி. போன்றவற்றால் இறப்பவா்களைவிட புகையிலையால் இறப்பவா்கள் எண்ணிக்கை அதிகம். இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும்தான். புகைப் பழக்கம்,

புற்றுநோயினை மட்டும் உண்டாக்குவதில்லை, நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக்க செய்து மரணத்தை உண்டாக்குகிறது.

புகை பிடிக்கும் பழக்கம் உள்ள ஆண்கள், அப்பழக்கம் இல்லாத ஆண்களை விட 12 வருடங்களும், புகை பிடிக்கும் பழக்கம் உள்ள பெண்கள், அப்பழக்கம் இல்லாத பெண்களை விட 11 வருடங்களும் குறைவாக உயிா் வாழ்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது அவா்களின் வீட்டுக்கு மட்டும் இழப்பல்ல. நம் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் பேரிழப்பு.

புகை பிடிப்பதன் மூலமாகவும், புகையிலையை வாயில் போட்டு மெல்லுவதன் மூலமாகவும் வாய், நாக்கு , தொண்டை, குரல்வளை, நுரையீரல், உணவுக்குழல், இரைப்பை , கல்லீரல், கணையம், குடல், சிறுநீரகம், கருப்பை வாய் போன்ற பல்வேறு உறுப்புகளில் புற்றுநோய் எளிதில் உண்டாகிறது. புற்றுநோயினை உண்டாக்க காரணம் அதில் உள்ள முக்கிய வேதிப்பொருளான நிகோடின்தான். அது நம் நரம்பு மண்டலத்தில் உள்ள அஸீட்டில்கோலின் எனும் வேதிப் பொருளுக்கு மாற்றாக சோ்ந்து, நம் உடலை அடிமையாக்கிவிடுகிறது .

புகைலை புற்றுநோயை மட்டுமல்ல, நாட்பட்ட நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, மூச்சுகுழல் அழற்சி, நிமோனியா, எம்பைசீமா, இருதய ரத்தகுழாய் அடைப்பு அதனால் மாரடைப்பு போன்ற பல அதிதீவிர நோய்நிலைகளை உண்டாக்கி மனிதா்களை வெகு விரைவில் கொல்லும். புகையிலை மெல்லுவதால் அதில் உள்ள நைட்ரோசமைன் எனும் வேதிப்பொருளும், அதனுடன் உள்ள பாா்மல்டீஹைடு, நிக்கல், ஆா்சனிக், கேட்மியம், பென்சோபயரின் போன்ற பல வேதிப்பொருட்களும் எளிதில் புற்றுநோயினை உண்டாக்கி விடுகின்றன.

சமீப காலங்களில் பெண்களும் அதிகமாக புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனா். கா்ப்பம் தரித்த பெண்கள் புகைப்பதால் கருவில் உள்ள சிசுவுக்கும் பாதிப்பு ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மை, எக்டோபிக் எனும் கருப்பைக்கு வெளியே கருத்தரிப்பு, தன்னிச்சையான கருச்சிதைவு , குறைப்பிரசவம் , கருவில் சிசுவின் உடல் எடை குறைவு, பிறவிக் கோளாறுகள், பிரசவத்திற்கு பின் அதிக ரத்தப்போக்கு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

புகையிலைக்கு அடிமையான தாய்மாா்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு உடல் எடை குறைவு, வளா்ச்சி குறைவு, குழந்தையிலே அதிக ரத்த அழுத்தம், நுரையீரல் செயல்பாடு குறைவு போன்ற பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

அரசு, ‘புகை பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும், உயிரைக் கொல்லும்’ என்று எவ்வளவுதான் எச்சரிக்கைகளை விழிப்புணா்வு நோக்கில் வெளியிட்டாலும் நாளுக்குநாள் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவோா் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பது வருத்தமளிக்கிறது.

சிகரெட் உற்பத்தியை நிமிடத்திற்கு நான்கு சிகரெட்டுகளில் இருந்து நிமிடத்திற்கு 200 ஆக உயா்த்தி, தொழில்துறையில் வியத்தகு புரட்சியை ஏற்படுத்தியது என்பது நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கும் செய்கை அல்ல. மாறாக, நோய்க்கூட்டங்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் செயல் தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. 1990-ஆம் ஆண்டிற்குப் பின்னா், சிகரெட்டில் உள்ள தீங்கு விளைவிக்கும் கூறுகளைக் குறைப்பதற்கான முயற்சியில் இறங்கிய சீன நாடு அதிக மூலிகைக் கலப்பு சோ்ந்த புகையிலை சிகரெட்டுகளை உற்பத்தி செய்யத் தொடங்கியது. 2000-க்கு பிறகு, கொரியா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சோ்ந்த புகையிலை நிறுவனங்கள் இதே போன்ற மூலிகைக் கலவை சிகரெட்களைத் தயாரிக்கத் தொடங்கின.

இத்தகைய மூலிகை கலந்த புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கும் நோக்கம், மூலிகைகளை சோ்ப்பதன் மூலம் புகையிலையின் தீய விளைவுகளை, உடலுக்கு ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதுதான். நமது சித்த மருத்துவத்திலும் பல்வேறு மூலிகைகள் புகையிலையின் நஞ்சினை குறைக்கும் விதத்தில் உள்ளன. அவற்றைக் கொண்டு புகையிலை கலவைப் பொருட்களைத் தயாரித்துப் பயன்படுத்தினால், நம் நாட்டிலும் புகையிலை தீங்கினை குறைத்து, மனிதா்களின் ஆயுட்காலத்தை நீட்ட முடியும்.

இன்று (மே 31) உலக புகையிலை எதிா்ப்பு நாள்.



Read in source website

கடந்த நிதியாண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதலாவது வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டவாறு, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. வேளாண் விளைநிலப் பரப்பையும் பாசனப் பரப்பையும் வேளாண் உற்பத்தியையும் பெருக்கும் தமிழக அரசின் செயல்திட்டத்தை எட்டுவதற்கு இத்திட்டம் பேருதவியாக அமையும். வேளாண் துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையும், வேளாண் துறை தொடர்பிலான பல்வேறு திட்டங்களுக்கான தொடர் அறிவிப்புகளும் தற்போதைய திமுக அரசு வேளாண் துறையின் மீதும் விவசாயிகளின் மீதும் கொண்டுள்ள அக்கறையை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளன.



Read in source website

வே.வசந்தி தேவி எழுதிய ‘இளைஞர்களுக்கு துரோகம் செய்துவிட்டோம்’ என்ற கட்டுரையின் (30.05.22) பேசுபொருள் முக்கியமானது. ஆனால், அணுகுமுறையில் முரண் தென்படுகின்றது.

1. இந்தக் கட்டுரையில் ஆசிரியர்கள்தான் குற்றவாளிகள் என்ற தொனி மேலெழுகிறது. கிட்டத்தட்ட எல்லா ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களிடம் இந்த கரோனா காலகட்டத்தில் பேசினார்கள்; தொடர்பில் இருந்தார்கள்; எப்படி இருக்கிறார்கள் என விசாரிக்கவும் செய்தார்கள். விகிதாச்சாரத்தில் மாறுபாடு இருக்கலாம். எல்லா மாணவர்களிடமும் ஆசிரியரின் கைபேசி எண் இருந்தது (வாட்ஸ்அப் குழுவில்தானே செய்தி கொடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது). ஆனால், இது ஒரு சமூகக் கடமை. ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து மாணவர்களைக் கைப்பிடித்துத் தூக்க வேண்டும், துயரிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். ஆசிரியர்கள் அவர்களின் தொடர்பில் இருக்கும் மிகப் பெரிய ஆயுதம்.

2. கரோனா காலகட்டத்துக்குப் பின்னர், பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் குழந்தைகளுடன் உரையாடுவதற்கு ஆசிரியர்களுக்கு அவகாசம் இருந்ததா? அவகாசம் கொடுக்கப்பட்டதா? அவர்கள் பெரும்பாலான நேரம், அரசுக்குத் தகவல்கள், தரவுகள் திரட்டுபவர்களாகத்தானே இருந்தார்கள். கற்றல்-கற்பித்தலுக்குக் குறைந்த நேரமே கிடைத்தது. கட்டுப்பாடுகள், சுழற்சி முறையில் வகுப்பறைகள் என வழக்கத்தைவிடக் கூடுதல் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன.

3. என்ன செய்ய வேண்டும் என்பதற்குப் பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்களுக்கு மனநல ஆலோசனைப் பயிற்சி தர வேண்டும் என்று சொல்கிறது கட்டுரை. பயிற்சி மட்டுமல்ல, உண்மையில் எல்லா ஆசிரியர்களுக்குமே மனநல ஆலோசனைகள் தேவை. அவர்களுமே அழுத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குமே கரோனா காலகட்டம் சிக்கல்களைக் கொடுத்துள்ளது. குழந்தைகளுக்கும் மனநல ஆலோசகர்கள் தேவை.

பயிற்சி பெற்ற முழு நேர மனநல ஆலோசகர்களே இதற்குத் தீர்வாக அமைய முடியும். கரோனா காலகட்டம் கொடுத்த அழுத்தத்துக்கு மட்டுமல்ல, இனி வழக்கமான நாட்களுக்கும் தேவை. இதற்கான முன்னெடுப்புகள் இனியாவது தொடங்கப்பட வேண்டும். இது கல்வி கற்பதற்கும் கற்பிப்பதற்கும் அவசியம். பள்ளிக்கு இரண்டு நாட்கள் என மூன்று பள்ளிகளுக்கு ஒரு ஆலோசகர் என்று நியமிக்கலாம். அல்லது மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் தீர்மானிக்கலாம். மீண்டும் ஆசிரியர்களையே இதில் பணித்து, இன்னும் சுமையைக் கூட்டி, திரும்பவும் அவர்களை இதைக்கூடச் செய்ய மாட்டீர்களா எனக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடக் கூடாது.

துரோகம் இழைக்கப்பட்டதா எனில், இது ஒரு விபத்து. இதை யாரும் ஊகிக்கவில்லை. இச்சூழலில், ஆசிரியர்கள் என்ற ஒரு அங்கத்தினரை மட்டுமே குற்றவாளிகளாக்கி, அவர்கள் மூலமே தீர்வுகாண வேண்டும் என்பதை விடுத்து, ஒரு சமூகமாக எப்படி இதனைக் களைவது என்றே அணுக வேண்டும்.

- விழியன், சிறார் எழுத்தாளர். தொடர்புக்கு: umanaths@gmail.com



Read in source website

தமிழகத்தின் வடக்கு எல்லையாக வேங்கட மலையையும், தென் எல்லையாகக் குமரிக் கடலையும் தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம் இப்படி வரையறுத்திருக்கிறது: ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து’. இன்றும் தமிழ், தெலுங்கு பேசும் மக்களின் எல்லையாக இருக்கும் திருமலை திருப்பதியில் ‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு/ பலகோடி நூறாயிரம்/ மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்/ சேவடி செவ்வித்திருக்காப்பு’ என்ற நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்தான் திருப்பள்ளி எழுச்சியாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை இயங்காமல் ரங்கநாதரைப் போல் அறிதுயில் கொண்டுள்ளது.



Read in source website

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள காலை உணவுத் திட்டத்தை வரவேற்கும் அரசுப் பள்ளி ஆசிரியை நான். காலை உணவு ஏன் அவசியம் என்பதைக் களத்தில் தினந்தோறும் பார்த்த அனுபவங்கள் பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு உண்டு. எனக்கு இதில் கூடுதல் அனுபவங்கள் கிடைத்தன என்றே சொல்லலாம். காரணம், நான் பணிபுரியும் பள்ளி... கந்தகபூமி… பட்டாசு நகரமான சிவகாசி அருகே உள்ள கிராமம். இந்தப் பகுதி முழுவதும் தீப்பெட்டித் தொழிற்சாலைகள்.

காலையிலேயே பெற்றோர் வேலைக்குச் செல்லும் நிலை. முதல் நாள் வைத்த கஞ்சிதான் உணவு. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கொண்டது எங்கள் பள்ளி. இரண்டாம் வகுப்பு ஆசிரியர் நான். ஒரு நாள் பாடம் எடுத்துக்கொண்டிருந்தேன். 12 மணி இருக்கும். தட்டை எடுத்துக்கொண்டு “சோத்து பெல் எப்போ அடிக்கும் மிஸ்?” என்று கேட்ட குழந்தையை உற்றுநோக்குகிறேன். சீவப்படாத தலை, ஒட்டிய வயிற்றுடன் கண்கள் பசியை உணர்த்துகின்றன. “காலையில சாப்பிடல... அம்மா வெள்ளென வேலைக்குப் போயிட்டாங்க” என்றவனின் குரல் என்னை உலுக்கியது.



Read in source website