DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 31-03-2023

தஞ்சாவூர்: தமிழகத்தில் மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க வாய்ப்புள்ளது என அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞருமான பி.சஞ்சய் காந்தி தெரிவித்தார்.

இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியது: "இந்திய பொருட்களுக்கான புவிசார் குறியீடு சட்டம் 2003 ம் ஆண்டில் நடைமுறைபடுத்தப்பட்டு தற்போது 20 ஆண்டுகள் நிறைவு செய்கிறது. தமிழகத்தில் இதுவரை 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில், 10 பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவை. இந்நிலையில் மணப்பாறை முறுக்கு, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கற்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால்புரம் பிரம்பு வேலைப்பாடுகள், மார்த்தாண்டம் தேன், மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக கடந்த 10 ஆண்டுகளில் வெவ்வேறு காலகட்டத்தில் விண்ணப்பிக்கப்பட்டன. இவற்றில் ஊட்டி வர்க்கி தவிர மற்ற 10 பொருட்களும் எனது மூலமாக விண்ணப்பம் செய்யப்பட்டது.

இந்த 11 பொருட்களுக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அரசிதழில் 2022, நவம்பர் 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது. புவிசார் குறியீடுக்காக அரசிதழில் வெளியிடப்பட்ட 4 மாதங்களுக்குள் பொதுமக்கள் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம். ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படாவிட்டால், அப்பொருள்கள் புவிசார் குறியீடு பதிவு பெறுவதற்கு உறுதி செய்யப்படும். இதன் அடிப்படையில் தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பிக்கப்பட்ட 11 பொருட்கள் குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டதில் இருந்து ஆட்சேபனை தெரிவிப்பதற்கான 4 மாத கால அவகாசம் மார்ச் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. எனவே, 11 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம், புவிசார் குறியீடு பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெறக்கூடிய நிலை ஏற்படும்.

இவற்றில் மணப்பாறை முறுக்கு தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மணப்பாறையில் கிடைக்கும் தண்ணீர் இதன் சுவைக்கு காரணம். ஆத்தூர் வெற்றிலை குறித்து கி.பி. 1295 ஆம் ஆண்டு மார்கோ போலோ எழுதிய பயணக் குறிப்பில் இடம்பெற்றுள்ளது. மண், காற்று வளம், ஈரப்பதம், தாமிரபரணி தண்ணீர் ஆகியவையே ஆத்தூர் வெற்றிலையின் தனிச் சிறப்புக்குக் காரணம்.

கம்பம் பன்னீர் திராட்சை 19 ஆம் நூற்றாண்டிலிருந்து தேனி மாவட்டம் கம்பம், போடிநாயக்கனூர், சின்னமனூர், உத்தமபாளையம் வட்டங்களில் விளைவிக்கப்படுகிறது. இந்த ஊரில் கிடைக்கிற மண் வளம், காற்று, ஈரப்பதம் ஆகியவையே இந்த திராட்சைக்கு மகத்துவம் ஊட்டுகிறது. நகமம் காட்டன் சேலை 1871 ஆம் ஆண்டிலிருந்து பொள்ளாச்சி, சாலூர், கிணத்துக்கடவு, ஆணைமலை, உடுமலைப்பேட்டை ஆகிய ஊர்களில் தயாரிக்கப்படுகின்றன.

மயிலாடி கற்சிற்பம் 100 ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வருகிறது. தைக்கால்புரம் பிரம்பு வேலைப்பாடுகள் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் 20 ஆம் நூற்றாண்டிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மார்த்தாண்டம் தேன் 1924 ஆம் ஆண்டுக்கு முன்பாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மண் வளம், காற்று, ஈரப்பதம் ஆகியவை இதன் மகத்துவத்துக்கு காரணம். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கிடைக்கும் கரிசல் மண், செம்மண்ணில் தயாரிக்கப்படும் மானாமதுரை மண்பாண்டம் நீண்ட காலம் உழைக்ககூடியது” என்றார்.



Read in source website

சென்னை: கன்னியாகுமரி கடற்கரை முகப்புப்பகுதி மேம்பாட்டு பணிகளை சிறப்பாக செய்ததற்காக தமிழக சுற்றுலாத் துறைக்கு மத்திய அரசு விருது வழங்கி உள்ளது.

மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், சுற்றுலா தலங்களில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு ‘சுவதேஷ் தர்ஷன்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை, மாமல்லபுரம், ராமேசுவரம், திரிவேணி சங்கமம், குலசேகரப்பட்டினம், குமரி, தெற்குறிச்சி, மணக்குடி கடற்கரை பகுதி சுற்றுலா தலங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இதற்காக ரூ.73.3 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இந்த கடற்கரை சுற்றுலா தலங்களில் நிலச்சீரமைப்பு, மின்விளக்குகள் வசதி அமைத்தல், சுற்றுலா தகவல் மையம், பொது கழிப்பிடங்கள் உருவாக்குதல், கடற்கரை முகப்புப்பகுதி மேம்பாடு, மீட்புப் படகுகள், இலவச வைபை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், குமரி கடற்கரையில் செயல்படுத்தப்பட்ட கடற்கரை முகப்புப்பகுதி மேம்பாட்டு பணிகள், அங்கு வரும் சுற்றுலா பணிகளை கவர்ந்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு மற்றும் பொது தனியார் துறை கூட்டாண்மை குறித்த தேசிய பயிலரங்கத்தில், கன்னியாகுமரி கடற்கரை முகப்புப்பகுதி மேம்பாட்டு பணிகளை சிறப்பாக செய்ததற்காக தமிழக சுற்றுலாதுறைக்கு, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி விருதினை வழங்கினார். இந்த விருதை தமிழக சுற்றுலாத் துறை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் பெற்றுக்கொண்டார்.



Read in source website

புதுடெல்லி: ராணுவத் தளவாட தயாரிப்புத் தொடர்பாக பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்புத் துறை ரூ.5,498 கோடி மதிப்பில் 10 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

ஹெலிகாப்டர்களில் பயன்படுத்துவதற்கான 90 மின்னணு போர் சாதனங்கள் தயாரிப்பு, ஆகாஷ் ஏவுகணை அமைப்பின் பராமரிப்பு உட்பட 10 திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த 10 ஒப்பந்தங்களின் மதிப்பு ரூ.5,498 கோடி என்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து பாரத் எலக்ட்ரானிக்ஸ் கூறுகையில், “இந்தியாவை சுயசார்பாக மாற்றும் மத்திய அரசின் முயற்சிக்கும், மேக் இன் இந்தியா திட்டத்துக்கும் இந்த ஒப்பந்தம் ஒரு மைல்கல்லாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.



Read in source website

ஐபிஎல் தொடரில் இம்முறை 5 புதிய விதிமுறைகள் அறிமுகமாகின்றன. போட்டிகளை சுவாரஸ்யமாக்கும் வகையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய விதிகளின் விவரம்..

‘இம்பேக்ட் பிளேயர்’: ஐபிஎல் தொடரில் முறை ‘இம்பேக்ட் பிளேயர்’ என்ற புதிய விதியும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்படி டாஸ் வென்ற பின் வழங்கப்படும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியலுடன் மாற்று வீரர்கள் 5 பேரின் பெயர்களையும் வழங்க வேண்டும். இதில் இருந்து ஒரு வீரரை ஆட்டத்தின் நடுவே பந்து வீச்சிலோ, அல்லது பேட்டிங்கிலோ மாற்று வீரராக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த வகையில் ஏற்கெனவே 4 வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால் இம்பேக்ட் பிளேயர் விதிமுறையின் கீழ் வெளிநாட்டு வீரரை களமிறக்க முடியாது. இதனால் இந்திய வீரரரைதான் களமிறக்க முடியும். அதேவேளையில் களத்தில் 3 வெளிநாட்டு வீரர்கள் இருந்தால் புதிய விதிமுறையின்படி மற்றொரு வெளிநாட்டு வீரரை களமிறக்கலாம். மாற்று வீரராக வெளியே செல்பவர் மீண்டும் தனது பங்களிப்பை வழங்க முடியாது.

‘இம்பேக்ட் பிளேயர்’ விதியை களநடுவரிடம் தகவல் தெரிவித்துவிட்டு விக்கெட் விழும்போதோ அல்லது பேட்ஸ்மேன் காயம் அடையும் போது பயன்படுத்தலாம். முக்கியமான இந்த விதியை 14வது ஓவருக்கு முன்பாக பயன்படுத்த வேண்டும். மாற்று வீரராக வெளியே செல்பவர் 4 ஓவர்களை வீசியிருந்தாலும் ‘இம்பேக்ட் பிளேயர்’ விதிமுறையின் கீழ் உள்ளே வரும் வீரர் முழுமையாக 4 ஓவர்கள் பந்து வீச முடியும், பேட்டிங் செய்ய முடியும்.

குறிப்பாக சென்னை அணியில் அஜிங்க்ய ரஹானே விரைவாக ஆட்டமிழந்து விட்டால் அவருக்கு பதிலாக ‘இம்பேக்ட் பிளேயர்’ விதிமுறையின் கீழ் ஷிவம் துபே களமிறக்கப்பட்டால் அவர், பேட்டிங் செய்யவும் முடியும். பந்து வீச்சிலும் பங்களிப்பு செய்ய முடியும்.

‘வீரர்கள் பட்டியல்’: வழக்கமாக டாஸ் வீசுவதற்கு முன்பாக விளையாடும் 11 வீரர்களை தேர்வு செய்து நடுவரிடம் பட்டியலை கொடுக்க வேண்டும். ஆனால் ஐபிஎல் தொடரில் இம்முறை டாஸ் வென்ற பிறகு அதற்கு தகுந்தபடி விளையாடும் 11 வீரர்களை தேர்வு செய்து கொள்ளும் புதிய விதிமுறை அறிமுகம் ஆகிறது. மற்றொரு திருப்பமாக நடுவரிடம் விளையாடும் 11 வீரர்களின் பட்டியலை வழங்கிய பின்னரும் மாற்றம் செய்யலாம். ஆனால் இதற்கு எதிரணியின் கேப்டன் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

‘வைடு, நோபாலுக்கும் வந்தாச்சு’: கள நடுவர் வழங்கும் வைடு, நோ-பால் ஆகியவற்றை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். இந்த விதிமுறை சமீபத்தில் முடிவடைந்த மகளிருக்கான பிரிமீயர் லீக்கில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தற்போது இது ஐபிஎல் தொடரிலும் அறிமுகம் ஆகிறது.

‘நகர்ந்தால் 5 ரன் போச்சு’: பேட்ஸ்மேன்கள் பந்தை அடிப்பதற்கு முன்னரே அவர்களது நகர்வுகளை கணித்து அதற்கு தகுந்தவாறு விக்கெட் கீப்பர் இடது புறமோ அல்லது வலது புறமோ சற்று நகர்வார். இதற்கு தற்போது அபராதம் விதிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பரின் நகர்வுகள் விதிமுறைக்கு மாறாக இருப்பதை களநடுவர் கண்டறிந்தால்பந்தை டெட்பால் என அறிவிக்கலாம். அல்லது வைடு என்றோ, நோபால் என்றோ அறிவித்து ஒரு ரன்னை அபராதமாக விதிக்கலாம். இல்லையென்றால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்களை கொடுக்கலாம்.

‘நேரத்தை வீண் செய்தால் அவ்வளவுதான்’: நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களையும் 90 நிமிடங்களுக்குள் வீசி முடிக்க வேண்டும். ஒவ்வொரு ஓவரையும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் வீசி முடிக்க வேண்டும். இல்லையென்றால் வெளிவட்டத்துக்குள் 5 பீல்டர்களுக்கு பதிலாக 4 பீல்டர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும். இது இறுதிக்கட்ட ஓவர்களில் பந்து வீச்சாளர்களுக்கு பாதகமாக இருக்கக்கூடும்.



Read in source website

இன்று ஐபிஎல் கிரிக்கெட்டின் 16-வது சீசன் தொடங்கி உள்ளது. இந்த சீசனின் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில், இந்த சீசனில் விளையாடும் 10 அணிகள் குறித்த ஓர் பார்வை.

மும்பை இந்தியன்ஸ்: கேப்டன்: ரோஹித் சர்மா

முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்: கேமரூன் கிரீன் (ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர்), டிம் டேவிட் (சிங்கப்பூரை பிறப்பிடமாக கொண்ட ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்), ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்)

முக்கியமான இந்திய வீரர்கள்: இஷான் கிஷன் (தொடக்க வீரர்), சூர்யகுமார் யாதவ். இதில் சூர்யகுமார் யாதவ் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக உள்ளார். மைதானத்தின் எந்த பகுதிக்கும் பந்தை விரட்டும் திறன் கொண்ட அவர்,தனது வித்தியாசமான ஷாட்களால் பிரபலமாக உள்ளார்.

புதுவரவு: கடந்த சீசனில் இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சரை ரூ.8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் ஏலம் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக அவர், ஒரு ஆட்டத்தில் கூட பங்கேற்கவில்லை. தற்போது புதுப்பொழிவுடன் அவர், அணிக்கு திரும்பி உள்ளார். ஆல்ரவுண்டர்கள் வரிசையை பலப்படுத்தும் விதமாக இந்த சீசனில் ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியுள்ளது.

ஐபிஎல் சாதனை: 5 முறை சாம்பியன் (2013, 2015, 2017, 2019 and 2020), 2010-ம் ஆண்டு 2-வது இடம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: கேப்டன்: மகேந்திர சிங் தோனி

முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்: மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து ஆல்ரவுண்டர்கள்), டேவன் கான்வே (நியூஸிலாந்து பேட்ஸ்மேன்).

முக்கியமான இந்திய வீரர்கள்: ரவீந்திர ஜடேஜா (பந்து வீச்சு ஆல்ரவுண்டர்), ருதுராஜ் கெய்க்வாட் (பேட்ஸ்மேன்)

புதுவரவு: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனும் ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். காயம் காரணமாக அவர், தொடக்க ஆட்டங்களில் பேட்ஸ்மேனாக களமிறங்க உள்ளார்.

ஐபிஎல் சாதனை: 4 முறை சாம்பியன் (2010, 2011, 2018, 2021), 6 முறை 2-வது இடம் (2008, 2012, 2013, 2015, 2019, 2022).

டெல்லி கேபிடல்ஸ்: கேப்டன்: டேவிட் வார்னர்

முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்: லுங்கி நிகிரி (தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்), மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர்).

முக்கியமான இந்திய வீரர்கள்: குல்தீப் யாதவ் (இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர்), அக்சர் படேல் (பந்துவீச்சு ஆல்ரவுண்டர்).

புதுசு என்ன?: ரிஷப் பந்த் கடந்த டிசம்பர் மாதம் விபத்தில் சிக்கி காயம் அடைந்ததால் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் சாதனை: 2020-ம் ஆண்டு 2-வது இடம்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேப்டன்: கே.எல்.ராகுல்

முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்: குயிண்டன் டி காக் (தென் ஆப்பிரிக்க விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன்), மார்கஸ் ஸ்டாயினிஸ் (ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர்), நிக்கோலஸ் பூரன் (மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர்).

முக்கியமான இந்திய வீரர்கள்: அவேஷ் கான், ஜெயதேவ் உனத்கட் (வேகப்பந்து வீச்சாளர்கள்).

புதுவரவு: விக்கெட் கீப்பர் பேஸ்ட்மேன் நிக்கோலஸ் பூரனை ரூ.16 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

ஐபிஎல் சாதனை: அறிமுகமான முதல் சீசனிலேயே (2022-ம் ஆண்டு) 3-வது இடம்.

குஜராத் டைட்டன்ஸ்: கேப்டன்: ஹர்திக் பாண்டியா

முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்: டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான் லெக் ஸ்பின்னர்), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து பேட்ஸ்மேன்).

முக்கியமான இந்திய வீரர்கள்: ஷுப்மன் கில் (பேட்ஸ்மேன்), மொகமது ஷமி (வேகப்பந்து வீச்சாளர்).

புதுவரவு: நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் ஒடியன் ஸ்மித், அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில் ஆகியோர் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் சாதனை: அறிமுகமான முதல் ஆண்டிலேயே (2022) சாம்பியன் பட்டம்.

பஞ்சாப் கிங்ஸ்: கேப்டன்: ஷிகர் தவண்

முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்: லியாம் லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து பேட்ஸ்மேன்), காகிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்), சேம் கரண் (இங்கிலாந்து ஆல்ரவுண்டர்).

முக்கியமான இந்திய வீரர்கள்: ஷாருக்கான் (பேட்ஸ்மேன்), ஷிவம் துபே (வேகப்பந்து வீச்சாளர்).

புதுவரவு: இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சேம் கரண் ரூ.18.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீசும் சேம் கரண், கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையில் தொடர் நாயகனாக தேர்வாகி இருந்தார்

ஐபிஎல் சாதனை: 2014-ம் ஆண்டு 2-வது இடம்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: கேப்டன்: சஞ்சு சாம்சன்

முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்: ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்), டிரெண்ட் போல்ட் (நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர்), ஷிம்ரன் ஹெட்மயர் (மேற்கிந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன்).

முக்கியமான இந்திய வீரர்கள்: யுவேந்திர சாஹல் (லெக் ஸ்பின்னர்), ரவிச்சந்திரன் அஸ்வின் (ஆஃப் ஸ்பின்னர்).

ஐபிஎல் சாதனை: தொடர் அறிமுகம் செய்யப்பட்ட 2008ல் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் தலைமையில் பட்டம் வென்றிருந்தது. 2022-ம் ஆண்டு 2-வது இடம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: கேப்டன்: நிதிஷ் ராணா (ஸ்ரேயஸ் ஐயர் காயம் அடைந்துள்ளதால் பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்).

முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்: ஆந்த்ரே ரஸ்ஸல், சுனில் நரேன் (மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர்), டிம் சவுதி (நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர்).

முக்கியமான இந்திய வீரர்கள்: வெங்கடேஷ் ஐயர் (ஆல்ரவுண்டர்), வருண் சக்ரவர்த்தி (லெக் ஸ்பின்னர்).

ஐபிஎல் சாதனை: இரு முறை சாம்பியன் (2012, 2014), 2021-ம் ஆண்டு 2-வது இடம்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: கேப்டன்: எய்டன் மார்க்ரம்

முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்: மார்கோ யான்சன் (தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு ஆல்ரவுண்டர்), ஹெய்ன்ரிச் கிளாசன் (தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்), ஹாரி புரூக் (இங்கிலாந்து பேட்ஸ்மேன்).

முக்கியமான இந்திய வீரர்கள்: புவனேஷ்வர் குமார், உம்ரன் மாலிக் (வேகப்பந்து வீச்சாளர்), வாஷிங்டன் சுந்தர் (சுழற்பந்து வீச்சாளர்).

புதுவரவு: இங்கிலாந்து அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஹாரி புரூக் ரூ.13.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் சாதனை: 2016-ம் ஆண்டு சாம்பியன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: கேப்டன்: டு பிளெஸ்ஸிஸ்

முக்கியமான வெளிநாட்டு வீரர்கள்: கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர்), ரீஸ் டாப்லே (இங்கிலாந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர்), ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்). இதில் ஹேசில்வுட் காயம் காரணமாக விளையாடுவது சந்தேகமாக உள்ளது.

முக்கியமான இந்திய வீரர்கள்: விராட் கோலி (பேட்ஸ்மேன்), மொகமது சிராஜ் (வேகப்பந்து வீச்சாளர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன்).

ஐபிஎல் சாதனை: 3 முறை 2-வது இடம் (2009, 2011, 2016).



Read in source website

வாஷிங்டன்: இந்தியா உடனான உறவு அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம் என்று அமெரிக்க அதிபருக்கான துணை உதவியாளரும், இந்தோ - பசிபிக் ஒருங்கிணைப்பாளருமான கர்ட் கேம்பெல் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய - அமெரிக்க உறவு தொடர்பாக கூறியதாவது: ''இந்தியா மிகப் பெரிய சக்தி. அமெரிக்க அணியைச் சேர்ந்த நாடு அல்ல இந்தியா. அந்த நாடு ஒருபோதும் அமெரிக்க அணியில் இணையாது. இரு நாடுகளும் நெருக்கமான உறவில் இருக்க முடியாது என்பது இதற்கு அர்த்தமல்ல. ஒரு மிகப் பெரிய சக்தியாக இந்தியா உலக அளவில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அதன் காரணமாகவே, இருதரப்பு உறவின் அவசியத்தை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இரு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இடையேயான சந்திப்பு ஏற்கெனவே வலிமையடைந்திருக்கிறது.

இந்தியா உடனான இருதரப்பு உறவு 21-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியம். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அழைத்து வந்த மிக உயர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடனான கலந்துரையாடல் தற்போதுதான் முடிவடைந்தது. இந்தக் குழு வேறு எந்த நாட்டிற்கும் சென்றதில்லை. எந்தெந்த துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்த முடியும் என்பது தொடர்பாக நாங்கள் விரிவாக ஆலோசித்துள்ளோம்.

மக்களின் பாதுகாப்பு தொடர்பாக நாங்கள் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் அதிக அளவில் கல்வி பயில வர வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. அதேபோல், இந்திய பல்கலைக்கழகங்களில் அதிக அளவில் அமெரிக்க மாணவர்கள் கல்வி பயில வேண்டும் என்றும் விரும்புகிறது. மக்களுக்கு இடையேயான தொடர்பு, கல்விசார் தொடர்பு, சுகாதார உறவு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். விண்வெளி ஆராய்ச்சியிலும் இணைந்து செயல்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். எனவே, இதற்கான திட்டம் என்பது மிகப் பெரியது. கனவு மிகப் பெரியது''என்று அவர் தெரிவித்துள்ளார்.



Read in source website

நமது பால்வளி அண்டத்தில் உள்ள பிரமாண்ட நட்சத்திரமான சூரியனில் சமீப ஆண்டுகளாகவே பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் சூரியனின் மேற்பரப்பில் ராட்சத 'துளை' ஒன்று தோன்றியுள்ளது. இந்தத் துளையை கரோனல் துளைகள் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இந்த துளை பூமியை விட 30 மடங்கு அளவு பெரியது என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து நாசா விஞ்ஞானிகள் கூறும்போது, “இந்த துளை காரணமாக வெள்ளிக்கிழமைக்குள் பூமியை நோக்கி 1.8 மில்லியன் அளவு சூரியக் காற்று வந்தடையும். இதனை தெற்காசிய நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் உணரலாம். இந்த வெடிப்புகளிலிருந்து வெளியேறும் வெப்பக் கதிர்கள் ரேடியோ தகவல் தொடர்புகள், விண்கலம், விண்வெளி வீரர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். மேலும், இந்தத் துளையின் மூலம் பூமியின் மேற்பரப்பில் இன்னும் கூடுதல் இடங்களில் துருவ ஒளிகள் தோன்றலாம்” என்றனர்.

சூரியனில் ஏற்படும் இந்த கரோனல் துளைகள் மிகவும் பொதுவானவை, ஆனால், அவை பெரும்பாலும் சூரியனின் துருவங்களை நோக்கி தோன்றும், அங்கு அவற்றின் சூரிய காற்று விண்வெளியில் வீசப்படும். ஆனால் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சூரியனில் ஏற்படும் மாறுதலுக்கு சூரியன் தயாராகி வருவதால், இந்தத் துளைகள் சூரியனின் பூமத்திய ரேகைக்கு அருகில் தோன்றும் வாய்ப்புகள் அதிகம் என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் பேராசிரியர் மேத்யூ ஓவன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, பிப்ரவரி மாதம் சூரியனின் மேற்பரப்பிலிருந்து ஒரு பெரிய துண்டு உடைந்துவிட்டதாகவும், அது அதனுடைய வட துருவப் பகுதியில் ஒரு பெரும்புயலைப் போல் சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது சூரியனில் இரண்டாவது துளை உருவாகி இருக்கிறது.



Read in source website

புதுடெல்லி: அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் பாக்ஸ்லோவிட் கரோனா தடுப்பு மாத்திரையை உட்கொண்டவர்களுக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான பைசர், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் பாக்ஸ்லோவிட் என்ற பெயரில் கரோனா தடுப்பு மாத்திரையை அறிமுகம் செய்தது. இந்த மாத்திரை தற்போது உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் 30 பாக்ஸ்லோவிட் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. 30 மாத்திரைகளின் விலை ரூ.46,000 ஆகும். ஆரம்ப காலத்தில் பாக்ஸ்லோவிட் மாத்திரைகள் நல்ல பலன் அளிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில் அமெரிக்காவை சேர்ந்த யூனிவர்சிட்டி ஆப் மினசோட்டா மற்றும் யூனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா சான் டியாகோவை சேர்ந்த விஞ்ஞானிகள், பாக்ஸ்லோவிட் மாத்திரைகள் குறித்து ஆய்வு செய்து தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவற்றின் சாரம்சம் வருமாறு:

பாக்ஸ்லோவிட் மாத்திரை உட்கொண்ட கரோனா நோயாளிகளுக்கு இயற்கையான எதிர்ப்பு சக்தி உருவாவது குறைகிறது. இதன் காரணமாக இந்த மாத்திரை உட்கொண்ட நோயாளிகளுக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.

பாக்ஸ்லோவிட் மாத்திரைகளை எதிர்க்கும் வீரியத்தை கரோனா வைரஸ் பெற்றிருக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகளை ஆய்வு செய்தபோது இது உறுதி செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி கொண்டே இருக்கிறது. எனவே பல்வேறு மருந்துகளின் கூட்டுக் கலவை மூலம் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து பரிசீலிக்கலாம். குறிப்பாக எச்ஐவி, ஹெபாடிடிஸ் சி வைரஸ் சிகிச்சைக்கு தற்போது பயன்பாட்டில் உள்ள மருந்துகளை பயன்படுத்தி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். இவ்வாறு ஆய்வறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

வாஷிங்டன்: உலக வங்கியின் தலைவராக அமெரிக்க வாழ் இந்திய சீக்கியரான அஜய் பங்கா போட்டியின்றி தேர்வாக இருக்கிறார்.

உலக வங்கியின் தற்போதைய தலைவரான மால்பாஸ், காலநிலை மாற்றத்திற்கான உலக வங்கியின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அவர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். காலநிலை மாற்றம் தொடர்பான உலக வங்கியின் கொள்கைக்கு மாறாக தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் அவர் செயல்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பதவிக் காலம் முடிவடைவதற்கு ஒரு வருடம் முன்பாகவே அதாவது வரும் ஜூன் மாதத்தோடு அவர் பதவி விலக இருக்கிறார்.

இதையடுத்து, புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை உலக வங்கி தொடங்கியது. இந்தப் பதவிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அஜய் பங்காவை முன்மொழிந்தார். பின்னர் இது குறித்து கடந்த புதன்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டின் நிதி அமைச்சர் ஜெனட் யேலன், அடுத்த சில மாதங்களில் உலக வங்கியில் மிக முக்கிய மாற்றம் ஏற்படப் போகிறது. அதன் தலைவராக ஜோ பைடனின் வேட்பாளரான அஜய் பங்கா தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கிறோம்.

உலக வங்கியின் முன்னேற்றத்திற்காகவும், 21-ம் நூற்றாண்டின் சவால்களை சிறப்பாக எதிர்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை அஜய் பங்கா எடுப்பார். அவரது தேர்வு, வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய உதவும் என தெரிவித்திருந்தார்.

உலக வங்கியின் தலைவர் பதவிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 30. எனினும், அஜய் பங்கா ஒருவர் மட்டுமே இதற்காக விண்ணப்பித்திருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அவரது பெயரை உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு பரிசீலிக்கும் என்றும், முறைப்படி அஜய் பங்காவிடம் நேர்காணல் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நேர்காணல் வாஷிங்டனில் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நேர்காணல் தேதி குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில் புதிய தலைவர் வரும் மே மாதத்துக்குள் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அது கூறியுள்ளது.

மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அஜய் பங்கா, தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

புதுடெல்லி: நிறுவனங்கள் நாளை முதல் தங்கள் நிறுவனத்தின் வரவு, செலவுகணக்குகளை நிர்வகிக்கப் பயன்படுத்தும் மென்பொருளில் ஆடிட் டிரையல் எனப்படும் தணிக்கை சோதனை வசதியை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்று மத்திய நிறுவன விவகார அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

நிறுவனங்கள் தங்கள் மென்பொருளில் ஆடிட் டிரையல் வசதியை கொண்டிருக்கும்படி 2021 மார்ச் மாதத்தில் மத்திய நிறுவன விவகார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. 2022 ஏப்ரலில் மீண்டும் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், நடப்பாண்டு ஏப்ரல் 1 முதல் அனைத்து நிறுவனங்களும் ஆடிட் டிரையல் வசதியைக் கொண்டிருப்பதை கட்டாயமாக்கியுள்ளது.

ஆடிட் டிரையல் என்பது என்ன?

நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கென்று மென்பொருளைப் பயன்படுத்துவது வழக்கம். வரவு, செலவு உட்பட நிறுவனத்தின் அனைத்து நிதிசெயல்பாடுகளும் இந்த மென்பொருள் மூலம் நிர்வகிக்கப்படும். இந்த நிதிச் செயல்பாடுகளை முறையாக கண்காணிக்க ஆடிட் டிரையல் உதவும்.

நிறுவனத்தின் வரவு, செலவு பதிவேட்டு மென்பொருளில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் அனைத்தும் ஆடிட் டிரையல் வசதியின் கீழ் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டுவிடும். எப்போது ஒரு தகவல்பதியப்பட்டது, யார் அந்தத் தகவலை பதிந்தார், அந்தத் தகவல்திருத்தப்பட்டால் எப்போது திருத்தப்பட்டது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஆடிட் டிரையல் வசதி மூலம் கண்டறிய முடியும்.

ஏன் இந்த வசதி?

நிறுவனங்களில் நிகழும் மோசடிகளை ஆரம்பநிலையிலேயே தடுக்கவும், நிறுவனங்களின் நிதி செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் மத்திய அரசு ஆடிட் டிரையல் வசதியை கட்டாயமாக்கியுள்ளது.

நிறுவனங்கள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதை இந்த வசதி உறுதிப்படுத்தும்.

ஒரு நிறுவனத்தின் மீது மோசடிக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்போது வருமான வரித் துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் அந்த நிறுவனத்தின் ஆடிட் டிரையல் வசதியை பார்வையிட்டு, மோசடி தொடர்பான ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியும்.

நிறுவனங்கள் இந்த ஆடிட் டிரையல் வசதியை தங்கள் மென்பொருளில் செயலிழக்கச் செய்ய முடியாது.

ஆடிட் டிரையல் வசதி குறித்து நிபுணர்கள் கூறுகையில், “இனி நிறுவனங்கள் தாங்கள் மேற்கொள்ளும் பதிவுகளில் அலட்சியமாக இருக்க முடியாது. மோசடிகள் மேற்கொண்டால் அது எளிதில் வெளிச்சத்துக்கு வந்துவிடும்” என்கின்றனர்.



Read in source website

கடந்த 1973, ஏப்ரல் 3-ம் தேதி அன்று தான் வடிவமைத்த உலகின் முதல் கைபேசியை கொண்டு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டிருந்தார் அமெரிக்க பொறியாளர் மார்ட்டின் கூப்பர். இவர் செல்போனின் தந்தை என அறியப்படுகிறார். அதன் பிறகு சுமார் 10 ஆண்டு காலம் தனது குழுவினருடன் இணைந்து அதற்கு இறுதி வடிவம் கொடுத்தார். அது சந்தையிலும் விற்பனைக்கு வந்தது. அப்படி தொடங்கிய செல்போனின் பயணம் இன்றைய ஸ்மார்ட் டிஜிட்டல் யுகத்தில் வசித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது. அது பள்ளி செல்லும் குழந்தைகள் தொடங்கி அனைத்து வயதினருக்கும் பொருந்தும்.

‘ஹலோ’ சொல்வதில் ஆரம்பித்து குறுஞ்செய்தி அனுப்ப, வீடியோ வடிவிலான உரையாடல் மேற்கொள்ள, பணம் அனுப்ப மற்றும் பெற, ஆன்லைன் டிக்கெட் புக் செய்ய, படம் பார்க்க, புத்தகம் வாசிக்க, படம் பிடிக்க என மாயமானை போல ஸ்மார்ட்போன்களின் ஓட்டம் நீண்டு கொண்டே போகிறது. அதிலும் 5ஜி வரவால் இணைய இணைப்பின் வேகம் படு ஸ்பீடாக இருக்கிறது.

இந்தச் சூழலில் செல்போன் வடிவமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில் செல்போன் பயனர்களின் அடிக்‌ஷனை பார்த்து விரக்தி அடைந்துள்ளார் கூப்பர். இதை அண்மையில் அவர் பங்கேற்ற பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

“இப்போது மனிதனின் மற்றொரு நீட்சியாக மாறியுள்ளது செல்போன். அதனால் எளிதாக பல விஷயங்களை செய்ய முடியும். நாம் இப்போது அதன் தொடக்கப் புள்ளியில் தான் இருக்கிறோம். அது குறித்த புரிதலை இப்போதுதான் பெற தொடங்கி உள்ளோம். எதிர்வரும் நாட்களில் கல்வி மற்றும் சுகாதாரப் பிரிவில் சில புரட்சிகளை இந்த சாதனம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தப் புரட்சி எப்படி இருக்கும் என்றால் இப்போது ஸ்மார்ட் வாட்ச் நமது இதயத் துடிப்பை எப்படி மானிட்டர் செய்கிறதோ அது போல இருக்கும். முன்கூட்டியே சில நோய்கள் குறித்த அலர்டை போன்கள் கொடுக்கலாம். நான் ரொம்ப ஓவராக பில்ட்-அப் செய்து மிகைப்படுத்தி சொல்வது போல தெரியலாம். ஆனால், அடுத்த ஒன்று அல்லது இரண்டு தலைமுறைக்குள் இது நிச்சயம் நடக்கும்” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டெலிகாம் துறையில் 1877 முதல் பெல் சிஸ்டம் எனும் நிறுவனம்தான் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர்தான் மொபைல் போன் குறித்து அந்த நிறுவன பொறியாளர்கள் பேச தொடங்கியுள்ளனர். அதன்படி கார்களில் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் மோட்டோரோலா மில்லியன் கணக்கான டாலர்களை செல்போன் வடிவமைப்பு பணிக்காக முதலீடு செய்துள்ளது. கூப்பர் அந்த நிறுவனத்துடன் அப்போது இருந்துள்ளார்.

1972-ன் இறுதியில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தும் வகையில் ஒரு போனை உருவாக்க அவர் விரும்பியுள்ளார். செமிகண்டக்டர்கள், டிரான்சிஸ்டர்கள், ஃபில்டர்கள் மற்றும் ஆண்டெனாக்கள் போன்றவற்றை நான்கு அறிந்த நிபுனர்களுடன் மூன்று மாத காலம் ஓயாமல் பணி செய்துள்ளார். அதன் மூலம் செல்போனை வடிவமைத்துள்ளார். அப்போது வடிவமைக்கப்பட்ட போன் சுமார் 1 கிலோ எடையை கொண்டிருந்துள்ளது. 25 நிமிடங்கள் மட்டுமே பேட்டரி லைப் கொண்ட அந்த போனை பிடித்து பேசுவது கடினம் என அவரே தெரிவித்துள்ளார். மேலும், முதல் முறையாக சந்தையில் விற்பனை தொடங்கிய போது அதன் விலை சுமார் 5,000 டாலர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இன்றைய உலகின் பெரும்பாலான மக்கள் மொபைல் போனை பயன்படுத்தி வருகிறார்கள். அதன் வழியே எங்கள் கனவின் ஒரு பகுதி நிஜமாகி உள்ளது. உலகில் தொலைக்காட்சி அறிமுகமான போது வெவ்வேறு விதமான பேச்சுகள் இருந்தன. ஆனால், டிவி பார்ப்பதில் ஏதோ ஆதாயம் உள்ளது என அறிந்து கொள்ளப்பட்டது.

அதுபோல செல்போன் பயன்பாட்டில் இப்போது நாம் புத்தியை இழந்து நிற்கும் கட்டத்தில் இருக்கிறோம். இது நீண்ட நாட்கள் நீடிக்காது. ஒவ்வொரு தலைமுறையும் ஸ்மார்ட் ஆகும். அதன் வழியே செல்போனை எப்படி திறம்பட பயன்படுத்துவது என அறிந்து கொள்வார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.



Read in source website

சென்னை: இந்திய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு வலைதளங்கள் சைபர் தாக்குதலுக்கு ஆளாகும் அச்சுறுத்தலில் இருப்பதாக சைபர் செக்யூரிட்டி சார்ந்து இயங்கி வரும் செக்யூரின் (Securin Inc.) மற்றும் இவன்டி (Ivanti) நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆய்வு மேற்கொண்டு அதனடிப்படையில் இதனை அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பாஸ்வேர்டுடன் சுமார் 700-க்கும் மேற்பட்ட இந்திய அரசு தள பயனர் விவரங்கள் டார்க் வெப் தளத்தில் கடந்த 2022-ல் கிடைத்ததாகவும் இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபிஷிங் அட்டாக், கிரெடென்ஷியல் மிஸ் யூஸ், இம்பெர்சனேஷன் போன்ற தாக்குதலுக்கு இந்தத் தளங்கள் சிக்குவதாக தகவல்.

இந்திய மாநில அரசுகள் பயன்படுத்தி வரும் டொமைன்களில் சுமார் 10 சதவீதத்திற்கும் கூடுதலான தளங்கள் எஸ்எஸ்எல் எனப்படும் செக்யூர் சாக்கெட்ஸ் லேயர் என்கிரிப்ஷனை கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹேக்கர்கள் தங்கள் கைவரிசையை இதில் மிக எளிதில் காட்ட முடியும் எனத் தெரிகிறது.

"2022-ல் இந்திய அரசு நிறுவனங்கள் அதிக அளவில் சைபர் தாக்குதலை எதிர்கொண்டது. இது வலைதள பாதுகாப்பு சார்ந்த விஷயங்களை புறந்தள்ள முடியாது என்பதை காட்டுகிறது. மேலும், இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே வருவதையும் பார்க்க முடிகிறது” என செக்யூரின் இணை நிறுவனரும், தலைவருமான ராம் மொவ்வா தெரிவித்துள்ளார்.

“சைபர் பாதுகாப்புக்கான அடிப்படை தேவைகள் இல்லாத அரசு மற்றும் அமைப்புகளின் தளங்கள் சைபர் தாக்குதலுக்கு ஆளாகும் அச்சுறுத்தல் அதிகம் இருக்கக்கூடும். அதனால் இதில் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும். இந்த தளங்களை ரேன்சம்வேர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க நாங்கள் எங்கள் பார்ட்னருடன் இணைந்து இயங்குவோம்” என இவன்டியின் தலைமை ப்ராடெக்ட் அதிகாரி ஸ்ரீனிவாஸ் முக்கமலா தெரிவித்துள்ளார். ரேன்சம்வேர் அட்டாக் கடந்த 2019 உடன் ஒப்பிடுகையில் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக ஸ்பாட்லைட் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.



Read in source website

பாகிஸ்தானின் லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஷாஹித் கரீம், 124 ஏ பிரிவை நீக்கினார்.

பாகிஸ்தானின் லாகூர் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (மார்ச் 30) அந்நாட்டின் தண்டனைச் சட்டத்தின் 124A பிரிவின் விதிகளை செல்லாததாக்கியது,
இது “தேசத்துரோகச் சட்டம்” ஆகும். பிரிவு 124A தேசத்துரோகத்தில் ஈடுபடுவது அல்லது அரசாங்கத்திற்கு எதிரான “அதிருப்தியில்” ஈடுபடுவதை குற்றமாக கருதுகிறது.

இந்நிலையில், லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஷாஹித் கரீம், பிபிசியின் 124 ஏ பிரிவை நீக்கினார்.

பாகிஸ்தானின் தேசத்துரோகச் சட்டம் என்ன?

பாகிஸ்தானின் தண்டனைச் சட்டத்தின் 124A பிரிவு “தேசத்துரோகம்” என வரையறுக்கிறது, இதில், மாகாண அரசாங்கத்தின் மீது வெறுப்பு அல்லது அவமதிப்பு மற்றும் கிளர்ச்சியை தூண்டுதல் உள்ளிட்ட குற்றங்கள் வருகின்றன.
இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். அல்லது 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

தற்போதைய வழக்கில் என்ன நடந்தது?

லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஷாஹித் கரீம் அடங்கிய ஒற்றை நீதிபதி அமர்வு, இந்தத் தீர்ப்பை வழங்கியது.

பிரிவு 124A-ஐ எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் தரப்பில் வாதாடிய வழக்குரைஞர்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அரசியலமைப்பு வழங்குகிறது என்று வாதிட்டனர்.
மேலும், காலனித்துவ தேசத்துரோகச் சட்டம் அரசாங்கத்தை விமர்சிக்கும் சுதந்திரமான பேச்சுக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறது.

ஹரூன் ஃபாரூக் என்ற குடிமகன் ஒரு மனுவை தாக்கல் செய்தார், அவர் பிபிசியின் 124 ஏ பிரிவு “அரசியலமைப்புச் சட்டத்தின் 8 வது பிரிவு முரண்பாட்டின் அடிப்படையில் தீவிர வைரஸ்கள்” என்று வாதிட்டார்.
இந்தப் பிரிவின் கீழ் அரசியலமைப்பின் பிரிவு 9, 14, 15, 16, 17 மற்றும் 19, 19A ஆகியவை வருகின்றன.

அரசியலமைப்பின் 19 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சுதந்திரமான பேச்சு உரிமையைத் தடுக்க தேசத்துரோகச் சட்டம் “பொறுப்பற்ற முறையில்” சுரண்டல் கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்று அவர் வாதிட்டார்.

மற்ற பல்வேறு அரசியலமைப்புச் சுதந்திரங்களின் மீதான “சட்டவிரோத வரம்பு” என்று அந்த மனு வாதிட்டது. தேசத்துரோக குற்றத்திற்காக 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஜாவேத் ஹஷ்மி போன்ற பத்திரிகையாளர்களின் உதாரணங்களை மேற்கோள் காட்டி, அரசாங்கத்தை அல்லது அதன் நிறுவனங்களை விமர்சிப்பதற்காக இந்த விதியின் கீழ் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆர்வலர்கள் எவ்வாறு அதிகளவில் வழக்கு பதிவு செய்யப்படுகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டார்.

தேசத்துரோகச் சட்டத்தில் இந்தியா</strong>

காலனித்துவ ஆட்சியின் ஒரு விளைபொருளாக, தேசத்துரோகச் சட்டம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் தண்டனை முறைகளால் மரபுரிமை பெற்றது, மேலும் இரண்டு நாடுகளிலும் ஒரே மாதிரியாக உள்ளது.

இந்தியாவின் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் போது அரசியல் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த இந்த ஏற்பாடு பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. IPC இன் பிரிவு 124A சம்பந்தப்பட்ட பல சுதந்திரத்திற்கு முந்தைய வழக்குகள், பாலகங்காதர் திலக், அன்னி பெசன்ட், ஷௌகத் மற்றும் முகமது அலி, மௌலானா ஆசாத் மற்றும் மகாத்மா காந்தி உட்பட புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராக உள்ளன.

பாகிஸ்தானின் தண்டனைச் சட்டம் பிரிவு 124A இன் கீழ் அதை உள்ளடக்கியது, இந்திய தண்டனைச் சட்டம் (IPC) போன்ற பிரிவு 124A இன் கீழ் வரையறுக்கிறது.

மே 2022 இல், உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு “எஸ்.ஜி. Vombatkere vs Union of India”, தேசத்துரோகக் குற்றத்தைக் கையாளும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 124A-ன் கீழ் கட்டமைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து விசாரணைகள், மேல்முறையீடுகள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றை நிறுத்தி வைக்குமாறு மத்திய மற்றும் மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.

மத்திய அரசு முதலில் காலனித்துவ விதியை ஆதரித்தது, ஆனால் பின்னர் அதை மறுபரிசீலனை செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, ஒரு உறுதியான முடிவு இன்னும் காத்திருக்கிறது.



Read in source website

பிப்ரவரி 1, 2021-ல் நடந்த ராணுவ சதியின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ராணுவ ஆதரவு ஐக்கிய ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக் கட்சியை நசுக்கி என்.எல்.டி-ன் 2020 தேர்தல் வெற்றியை ரத்து செய்து இந்த ஆண்டு ஜனவரியில் ராணுவ ஆட்சிக்குழுவின் தேர்தல் பேச்சு தொடங்கியது.

மியான்மரில் பிப்ரவரி 1, 2021-ல் நடந்த ராணுவ சதியின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ராணுவ ஆதரவு கட்சியான ஐக்கிய ஒற்றுமை மற்றும் அபிவிருத்திக் கட்சியை (யு.எஸ்.டி.பி) நசுக்கி ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி (என்.எல்.டி) 2020 தேர்தல் வெற்றியை ரத்து செய்து, இந்த ஆண்டு ஜனவரியில் ராணுவ ஆட்சிக் குழுவின் தேர்தல் பேச்சு தொடங்கியது.

மியான்மரின் முக்கிய அரசியல் கட்சியான ஆங் சான் சூ கி தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் (என்.எல்.டி) 1988-ல் அதன் தொடக்கத்தில் இருந்து கலைக்கப்பட்டது. ராணுவம் ஒரு தேர்தல் மூலம் தனது அதிகாரத்தை கைப்பற்ற முற்படுகையில், அது மேலும் உள்நோக்கி இழுத்துச் செல்வதை சமிக்ஞை செய்கிறது.

பிப்ரவரி 1, 2021-ல் நடந்த ராணுவ சதியின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ராணுவ ஆதரவு ஐக்கிய ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக் கட்சியை நசுக்கி என்.எல்.டி-ன் 2020 தேர்தல் வெற்றியை ரத்து செய்து இந்த ஆண்டு ஜனவரியில் ராணுவ ஆட்சிக்குழுவின் தேர்தல் பேச்சு தொடங்கியது.

ராணுவத்தால் உருவாக்கப்பட்ட 2008 அரசியலமைப்பின் கீழ், நெருக்கடி நிலையை இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும். அதன் பிறகு, ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், பிப்ரவரி 1-ம் தேதி வாரியம் நெருக்கடிநிலையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்தது. இது ஆகஸ்ட் 31-ம் தேதி முடிவடைகிறது. மீண்டும் ஒருமுறை நெருக்கடி நிலை நீட்டிக்க திட்டமிடப்படாவிட்டால் பிப்ரவரி 2024-க்குள் தேர்தல் நடத்தப்படலாம்.

ஜுண்டாவின் ராணுவத்தின் மூத்த தலைமை தளபதி மின் ஆங் ஹ்லேயிங் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்தப்படும் என்று உறுதியளித்தார். ஆனால், ராணுவத்தின் அனுசரணையில் ஒரு தேர்தல் பயிற்சி எப்போதுமே கேள்விக்குரியதாக இருக்கும் என்றால், ஜனவரி பிற்பகுதியில் அறிவிக்கப்பட்ட புதிய தேர்தல் விதிகள், இது ராணுவ ஆட்சிக்குழுவினால் நடத்தப்படும் தேர்தல் என்ற சந்தேகங்களை நீக்கியது.

ஆங் சான் சூ கியின் கட்சி கலைக்கப்பட்டது: மியான்மர் ஆங் சான் சூ கி மணிலாவில் 31வது ஆசியான் உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வில் கலந்து கொண்டார்.

புதிய தேர்தல் சட்டம்

ராணுவத்தை மிகவும் கவலையடையச் செய்வது ஆங் சான் சூ கியின் அபரிமிதமான புகழ், அவர் விடுதலையாகி 2 ஆண்டுகளுக்குப் பிறகு 2012 இடைத்தேர்தல்களிலும், பின்னர் 2015 மற்றும் 2020 தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். அவருடைய கட்சி 2020-ல் நாடாளுமன்றத்தில் ஐந்தில் நான்கு பங்கு இடங்களை வென்றது. இது அக்கட்சி 2015-ல் பெற்ற வெற்றியை விட அதிகமாகும். ஆங் சான் சூ கி தனது அறுதிப் பெரும்பான்மையுடன், ராணுவத்தால் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தை அரசியலில் இருந்து விலக்கிவிடலாம் என்ற அச்சத்தால் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டது.

ஆட்சிக் கவிழ்க்கப்பட்ட பின்னர் என்.எல்.டி. தலைவர் சிறையில் இருந்தாலும், ராணுவம் வெற்றியைப் பற்றி உறுதி இல்லாமல் இருந்தது. புதிய சட்டங்கள் என்.எல்.டி-யை முழுமையாக அரசியல் கணக்குகளுக்கு வெளியே நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது.

அரசியல் கட்சிகள் பதிவுச் சட்டத்தின்கீழ், ஜனவரி 26-ம் தேதி நாட்டின் ராணுவத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட, தற்போதுள்ள கட்சிகள் மீண்டும் பதிவு செய்ய அல்லது தானாக கலைக்க 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்த என்.எல்.டி., பதிவு செய்யவில்லை. இந்நிலையில், மார்ச் 28ம் தேதி அக்கட்சி கலைக்கப்பட்டது.

ஆட்சிக்கவிழ்ப்புக்கு முன்னர் இருந்த 92 கட்சிகளில் 60-க்கும் குறைவான கட்சிகளே குறிபிட்ட காலக்கெடுவுக்குள் மீண்டும் பதிவு செய்துள்ளன. பதிவு செய்த கட்சிகள் தேர்தலில் போட்டியிட வேண்டும். புதிய சட்டம் தேசிய கட்சிகளுக்கு வேறு கடுமையான நிபந்தனைகளை விதிக்கிறது. பதிவு செய்த 90 நாட்களுக்குள் 1,00,000 கட்சி உறுப்பினர்களைக் காட்ட வேண்டும் இதற்கு முன்னர் 1,000 உறுப்பினர்களைக் காட்டினால் போதுமானதாக இருந்தது. கட்சியின் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கில் 100 மில்லியன் கியாட் (அல்லது சுமார் $35,000 அமெரிக்க டாலர்கள்) வைத்திருக்க வேண்டும். அவர்கள் 180 நாட்களுக்குள் 330 நகரங்களில் பாதி அளவு நகரங்களிலாவது கட்சி அலுவலகங்களைத் திறக்க வேண்டும். மேலும், நாடு முழுவதும் குறைந்தது பாதி தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று கூறுகிறது.

33 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் 77 வயதான ஆங் சான் சூ கி உட்பட அவருடைய கட்சியின் 80 தலைவர்கள் சிறையில் இருப்பதால், என்.எல்.டி பதிவு செய்திருந்தாலும், இந்த நிபந்தனைகளில் எதையும் நிறைவேற்றுவது கடினமாக இருந்திருக்கும். மியான்மரின் பெரும்பான்மையான பாமர் ஆதிக்கம் செலுத்தும் பிராந்தியங்களில் முன்னிலையில் உள்ள ஒரே மற்ற கட்சியான யு.எஸ்.டி.பி-க்கு இந்த சட்டம் வெளிப்படையாக ஆதரவளிக்கிறது.

மியான்மரில் பதிவு செய்த பெரும்பாலான கட்சிகள் ஒரு மாநிலத்தில் மட்டுமே போட்டியிடும் இன அரசியல் குழுக்களாகும். அவர்களுக்கான நிபந்தனைகள் அவ்வளவு கண்டிப்பானவை அல்ல – அவர்கள் 1,000 உறுப்பினர்களைக் காட்ட வேண்டும், $3,500 வங்கி இருப்பு, தங்கள் மாநிலம்/பிராந்தியத்தில் ஐந்து கட்சி அலுவலகங்கள் மற்றும் மூன்று இடங்களில் மட்டுமே போட்டியிட வேண்டும்.

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைக்கான பிந்தைய முறையை முதன்முதலில் அகற்றுவது பற்றி வாரியம் பேசியது, இது மீண்டும் யு.எஸ்.டி.பி-க்கு சாதகமாக இருக்கும்.

ஆனால் தேர்தலை நடத்த முடியுமா? என்றால், மியான்மரின் தற்போதைய ராணுவ ஆட்சிக் குழு, முந்தைய ராணுவ ஆட்சிகளைப் போல இல்லாமல், நாட்டின் மீது கட்டுப்பாட்டை நிறுவத் தவறிவிட்டது. பாமர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்க்க நூற்றுக்கணக்கான தன்னாட்சி மக்கள் பாதுகாப்புப் படைகளாக (பி.டி.எஃப்) குழுமியுள்ளனர். அவர்கள் சில இன ஆயுத அமைப்புகளின் (இ.ஏ.ஓ) ஆதரவைப் பெற்றுள்ளனர். அவர்கள் பெரும் நிலப்பரப்பைக் கட்டுப்படுத்துகின்றனர், ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் பொதுமக்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

ராணுவ ஆட்சிக்கு அரசியல் எதிர்ப்பில் நிற்கும் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை உள்ளடக்கிய தேசிய ஐக்கிய அரசாங்கம், பி.டி.எஃப்-களை தங்கள் ஆயுதப் பிரிவாக அறிவித்தது. அதே நேரத்தில் ஆதரவளிக்கும் இ.ஏ.ஓ-க்கள் ஒரு தளர்வான கூட்டணியில் உள்ளனர். பி.டி.எஃப் மற்றும் இ.ஏ.ஓ ஒன்றாக இணைந்து முன்பைவிட அதிகமான பகுதியைக் கட்டுப்படுத்தலாம். மியான்மர் அவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியுள்ளது.

மூத்த ராணுவ தளபதி மின் இந்த வார தொடக்கத்தில் மியான்மர் ஆயுதப்படை தினத்தை கொண்டாடும் ராணுவ அணிவகுப்பில் ராணுவம் எதிர்ப்பிற்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கையை எடுக்கும் என்று கூறினார்.

மியான்மர், வரும் நாட்களில் மேலும் வன்முறைக்கு தயாராகி வருகிறது. ராணுவ ஆட்சிக்குழு தனது உத்தரவை நிறுவ முயற்சிக்கிறது. ஜனநாயக சார்பு சக்திகள் எதிர்ப்பைத் தெரிவிக்க தயாராக உள்ளன. சில குழுக்கள் முன்பைவிட அதிநவீன ஆயுதங்களுடன் சண்டையிடுகின்றன, இ.ஏ.ஓ-க்களால் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் அல்லது வளமான கறுப்பு சந்தைகளில் இருந்து வாங்கப்பட்டன.

தேர்தலை நடத்துவதற்கான இராணுவ ஆட்சிக்குழுவின் உறுதிப்பாடு நிலைமையை மேலும் மோசமாக்கும். என்.எல்.டி பங்கேற்பு இல்லாமல், நெருக்கடி கால ஆட்சியைவிட சிறந்த கட்டுப்பாட்டை ஏற்படுத்த தேர்தல் உதவும் என்று ராணுவ ஆட்சிக்குழு நம்புவதாகத் தோன்றினாலும், மியான்மர் மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பார்வையில் இந்தத் தேர்தல் ஒரு குறைபாடுள்ள நடைமுறையாகவே இருக்கும்.

ஆனால், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களைப் போலவே, மியான்மர் ராணுவமும் சர்வதேச அழுத்தத்திலிருந்து விடுபடுகிறது. தத்மதவ் (Tatmadaw) (ராணுவம்) மீது செல்வாக்கு செலுத்தும் சீனாவும் கூட மட்டுப்படுத்தப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மியான்மரின் ஆசியான் ஐந்து அம்சத் திட்டம் இதுவரை எந்த முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை. இருப்பினும், குழுவின் தலைவராக இருக்கும் இந்தோனேசியா சில முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

என்.எல்.டி-க்கு அடுத்து என்ன?

கட்சி பல சோதனைகளைச் சந்தித்திருந்தாலும், இதுவரை ஒவ்வொரு சோதனைக்குப் பின்னும் வலுப்பெற்று வருகிறது. அது போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் தேர்தல் 1990-ம் ஆண்டு தேர்தல். 30 ஆண்டுகளுக்கு பிறகு, ராணுவம் தேர்தல் முடிவுகளை ரத்து செய்து ஆட்சியைப் பிடித்தது. ஆங் சான் சூ கி அடுத்த 20 ஆண்டுகளின் பெரும்பகுதியை வீட்டுக்காவலில் கழித்தார். 2000-களின் மத்தியில் என்.எல்.டி தடை செய்யப்பட்டது. ராணுவ ஆட்சிக்குழு தடையை நீக்கியபோது, ​​அது 2008 அரசியலமைப்பிற்கு சில சட்டபூர்வமான தன்மையை வழங்குவதாக இருந்தது.

ஆங் சான் சூ கி 2010-ல் விடுவிக்கப்பட்டார். ஆனால், என்.எல்.டி தேர்தலைப் புறக்கணித்தது. என்.எல்.டி கட்சி பிளவுபட்டது. பிரிந்து சென்ற குழு தேர்தலில் போட்டியிட்டது, அது தேர்தலில் தோல்வியடைந்தது. 2012 முதல் 2020 வரை, என்.எல்.டி., ராணுவத்தால் மீண்டும் துரத்தப்படும் வரை, மேலும், பலமடைந்தது. என்.எல்.டி.யின் ஆரம்ப கால முடிவில் போட்டியிடுவதில்லை என்ற முடிவில் இருந்து, ஆங் சான் சூ கி இன்னும் கட்சியின் மீது கட்டுப்பாட்டை வைத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், எவ்வளவு காலம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவரது நீண்ட தண்டனை, அவர் வெளியே வருவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். அப்போது கட்சியில் தலைமுறைகளுக்கு இடையே ஏற்படும் இடைவெளியைக் குறைக்க முடியாது.



Read in source website

‘இயற்கைப் பேரிடர்களின் காலம்’ என்று சொல்லத்தக்க வகையில், மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இயற்கைப் பேரிடர்களைத் துரிதப்படுத்திவருவதைச் சமீபகாலமாகப் பார்த்துவருகிறோம். இதனால், வலுவான பேரிடர் மேலாண்மை இன்றியமையாத ஒன்றாகிறது. இந்தப் பின்னணியில், சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மைத் திட்டம் - 2023, மாநிலப் பேரிடர் மேலாண்மைக் கொள்கை ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.

ஐநா-வின் பேரிடர் ஆபத்துக் குறைப்பு (UNDRR) அமைப்பின் ‘பேரிடர்களுக்குத் தரப்படும் மனித விலை’ (2020) அறிக்கையின்படி, 2000 முதல் 2019 வரை பதிவான இயற்கைப் பேரிடர்களில் சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் நிகழ்ந்தவைதான் மிகப் பெரிய பொருளாதார அழிவையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தியவை.



Read in source website

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் 1919 மார்ச் 23 முக்கியமான நாள். அந்த நாளில்தான், கஸ்தூரி ரங்க ஐயங்கார் அழைப்பின்பேரில், மகாத்மா காந்தி மதராஸ் பட்டினத்துக்கு வந்திருந்தார். பிரிட்டிஷ் அரசு இயற்றியிருந்த கொடூரமான ரௌலட் சட்டத்தை எப்படி எதிர்ப்பது என்ற சிந்தனையோடு காந்திஜி இருந்தார்.

மக்களைத் திரட்டி மாபெரும் ‘ஹர்த்தால்’ போராட்டத்தை நடத்தலாம் என்ற யோசனை, அன்றைக்கு அதிகாலையில்தான் கனவு மூலம் அவருக்குத் தோன்றியது. அதன்படி நாடு முழுவதும் 1919 ஏப்ரல் 6 அன்று மேற்கொள்ளப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் நாட்டையே ஸ்தம்பிக்க வைத்ததுடன் பிரிட்டிஷ் ஆட்சியின் அஸ்திவாரத்தையே ஆட்டம்காண வைத்தது.



Read in source website

ஓட்டத்தைக் கவனப்படுத்தி தேர்த் திருவிழாவைத் ‘தேரோட்டம்’ என்பதும் உண்டு. சூரியனும் சந்திரனும் தேர்க் கால்கள். வேதங்கள் நான்கும் தேரில் பூட்டிய குதிரைகள். சாரதியாக இருப்பது பிரம்மா. இறைவன் தேர் ஊர்வதைப் பிரபஞ்சத்தின் இயக்கமாக இப்படி அர்த்தப்படுத்துவது ஒரு வழக்கம். திருவாரூர்த் தேரோட்டம்தமிழ் இலக்கிய மரபு ஒன்றைக் காட்சிப்படுத்துவதாகவும் அர்த்தப்படுத்த இயலும்.

திருவாரூர் தியாகேசர் கோயில் நாகஸ்வரக் கலைஞர் பழனியப்பன், தேரோட்டத்தில் தான் வாசிக்கும் பாடல்களைப் பற்றி எனக்குச் சில அரிய தகவல்களைக் கொடுத்தார். அவர் குடும்பத்தினர் பல தலைமுறைகளாகத் தியாகேசர் கோயிலின் ஆஸ்தான கலைஞர்கள். நான்கு வீதிகளையும் சுற்றித் தேர் நிலைக்கு வரும் தூரத்தை எட்டு அங்கணங்களாக்கி ஒவ்வொன்றிலும் இன்னின்ன பாடல்களை வாசிக்க வேண்டும் என்கிற முறை இருப்பதாக பழனியப்பன் சொன்னார்.



Read in source website