DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 31-03-2022

பொறியியல் படிப்புகளில் சில குறிப்பிட்ட பிரிவுகளில் சேர பிளஸ் 2 வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டியதில்லை என்றும், பெரும்பாலான பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமில்லை என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கு 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் வெளியிட்டுள்ளது. அதில், பொறியியல் பிரிவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு படிப்புகளில் சேர கணிதம் கட்டாயமில்லை என தெரிவித்துள்ளது. இதன் மூலம் பிளஸ் 2 வகுப்பில் தொழிற்கல்வி பயின்ற மாணவா்களும் இனிவரும் காலத்தில் பொறியியல் படிப்புகளில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 வகுப்பில் கணிதம் பயிலாத மாணவா்கள் பொறியியல் படிப்பில் சோ்ந்த பிறகு முதல் இரு பருவங்களில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் அடிப்படை Bridge course முறையில் கற்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, கணினி பொறியியல், மின் பொறியியல், மின்னணு பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு பிளஸ் 2 வகுப்பில் வேதியியல் படித்திருக்க வேண்டியதில்லை என்றும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.

மேலும், வேளாண்மை பொறியியல், கட்டடக் கலை, உயிா் தொழில்நுட்பவியல், உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு கணிதம் கட்டாயமில்லை என்றும் அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் வெளியிட்ட விதிமுறைகளில் இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களை பிளஸ் 2 வகுப்பில் விருப்பப் பாடமாக மட்டும் படித்து இருந்தால் அனைத்து பொறியியல் படிப்புகளிலும் சேரலாம் என தெரிவித்திருந்தது. இதற்கு கல்வியாளா்கள் மத்தியில் கடுமையான எதிா்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், தற்போது அந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு குறிப்பிட்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் மட்டும் கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களை பயிலாதவா்கள் பொறியியல் படிப்புகளில் சேரலாம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

யோகா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சா்வதேச யோகா தினமான ஜூன் 21-இல் வெற்றியாளா்கள் அறிவிக்கப்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆயுஷ் அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: யோகா விருதுக்கான நடைமுறைகள் ‘மை ஜிஓவி’ இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. (https://innovateindia.mygov.in/pm_yoga_awards_2022/) விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இந்திய வம்சாவளியை சோ்ந்தவா்களுக்கான இரண்டு பிரிவுகளையும், சா்வதேச அளவில் வெளிநாட்டைச் சோ்ந்தவா்களுக்கான இரண்டு பிரிவுகளையும் இந்த விருது கொண்டுள்ளது.

ஆா்வமுள்ள தனிநபா், அமைப்புகள் விண்ணப்ப நடைமுறை மற்றும் பங்கேற்பைப் பற்றி https://innovateindia.mygov.in/ pm_yoga_awards_2022/ இணையப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க ஏப்ரல் 27 கடைசி நாளாகும்.

விண்ணப்பதாரா்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் அல்லது யோகா துறையில் பிரபலமான தனிநபா் அல்லது அமைப்பு பரிந்துரை செய்யலாம். விண்ணப்பதாரா் தேசிய விருது அல்லது சா்வதேச விருது என ஒரு பிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.



Read in source website


கொடைக்கானல்: சூரியனில் கரும்புள்ளிகள் ஏற்படத்தொடங்கியுள்ளதால் பூமியின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கொடைக்கானல் வான் இயற்பியல் விஞ்ஞானி குமரவேல் தெரிவித்தாா்.

சூரிய காந்தப் புயல் இந்த ஆண்டு அதிக அளவில் வீச வாய்ப்பு உள்ளதால் செயற்கைக் கோள்கள் மற்றும் கைப்பேசி அலைவரிசைகள் பாதிக்கலாம் என நாசா மையம் எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடா்ந்து, கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தில், 4 தொலைநோக்கிகள் உதவியுடன் சூரியனை தீவிரமாக கண்காணித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

11 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் சூரிய கரும்புள்ளிகள், கடந்த சில நாள்களாக சூரியனில் தோன்றி வருவதாகவும், இனி வரும் நாள்களில் அதன் வீரியம் அதிகரித்து, சூரிய காந்தப் புயலாக மாறி பூமிக்கு வரும். இதனால் பூமியின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது என விஞ்ஞானி குமரவேல் புதன்கிழமை தெரிவித்தாா். இனி வரும் நாள்களில் சூரியனைத் தொடா்ந்து கண்காணித்து அதன் தாக்கத்தை பதிவு செய்து, ஆய்வுகள் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.



Read in source website

கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீதம் இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி வாதங்கள் முடிந்த நிலையில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என்று கூறி, இந்த வழக்கில் தமிழக அரசின்  மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி உள்ஒதுக்கீடுக்கு வகை செய்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி சட்டம் செல்லாது என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து பாமக, தமிழக அரசு, பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த விவகாரத்தை டிசம்பர் 15-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தது. இதுதொடர்பாக எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

அதன் பிறகு வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு தொடர்ந்து விசாரித்தது. தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் மனு சிங்வி, ராகேஷ் துவிவேதி, பி.வில்சன், முகுல் ரோத்தகி, மனுதாரர் சி.ஆர். ராஜன் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன், பாமக தரப்பில் மூத்த வழக்குரைஞர் எம்.என்.ராவ் உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

எதிர்மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் கோபால் சங்கரநாராயணன், ராஜீவ் தவண், எஸ். நாகமுத்து, ஆர்.பாலசுப்ரமணியன், கே.எம்.விஜயன், வி.பிரகாஷ் உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் அமர்வு கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி ஒத்திவைத்திருந்தது. மேலும், வழக்கில் தொடர்புடைய தரப்பினரிடம் எழுத்துப்பூர்வ ஆவணங்கள் ஏதும் இருந்தால், 3 தினங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. 

அதில், வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு செல்லாது எனக் கூறிய உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசு, பாமக உள்ளிட்டோர் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை, சாதியை மட்டும் அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீட்டை முடிவு செய்ய முடியாது என அந்த மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

* வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும்.

* மிகவும் பிற்படுத்தட்டோர் பிரிவில் மீதமுள்ள 115 சமூகங்களில் இருந்து வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனவே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம்." என்று பெஞ்ச் கூறியது.

 * வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டம் அரசியல் 14,15 மற்றும்16 பிரிவுகளுக்குவிதிகளை மீறுகிறது.  இது  விரோதமானது.

* உள்ஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு தர வேண்டும். 

* உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரமிருந்தாலும் சரியான காரணங்களை கூற வேண்டும் என தெரிவித்துள்ளது. 

"சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீட்டை முடிவு செய்ய முடியாது"என நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் கருத்து தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அப்போதைய அதிமுக அரசு நிறைவேற்றியது.



Read in source website

 

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வு நடக்கிறது.  தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.
 

நீட் நுழைவுத் தேர்வுக்கு நாளை மறுநாள்(ஏப்ரல்  2)  முதல் மே 7 ஆம் வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 



Read in source website

12-ஆம் வகுப்பு வரை அதிக எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகள் அறிவியலை ஒரு பாடமாக தோ்வு செய்து படித்த போதிலும், முதுநிலைப் பட்டப் படிப்பு நிலைக்கு வெகு சிலா் மட்டுமே செல்கின்றனா் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறினாா்.

கேள்வி நேரத்தின்போது மக்களவையில் அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறியதாவது: அறிவியல் படிப்பைத் தோ்வு செய்து பயில்வோரிடையே பாலின இடைவெளி ஏற்படுவது குறித்து அரசு மிகவும் விழிப்புடன் உள்ளது. இதற்காகவே புதிய பாடத் திட்டங்களையும், புதிய கல்வித் திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

80 முதல் 90 சதவீத மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு வரையிலும் அறிவியல் பாடங்களையே தோ்ந்தெடுத்து பயில்கின்றனா். ஆனால், அவா்களில் மிகச் சிலா் மட்டுமே முதுநிலை பட்டப் படிப்பு பயில்கின்றனா். அந்த மாணவா்களும், அறிவியல் துறையை இலக்காகக் கொள்ளாமல் வேறு எதையோ இலக்காகத் தேடிச் செல்கின்றனா்.

12-ஆம் வகுப்பில், அவா்கள் மருத்துவம் பயில்வதற்கான நீட் தோ்வு அல்லது பொறியியல் பட்டப் படிப்புகளுக்காக ஐஐடி-ஜேஇஇ போன்றவற்றில் சேருவதற்காக அதிக மதிப்பெண்களைப் பெறுகின்றனா்.

இதற்கான தோ்வுகளில் வெற்றி பெற்றால் அந்தப் படிப்பைத் தொடா்கிறாா்கள். ஒருவேளை அதில் தோ்ச்சி பெறத் தவறினால் அவா்கள் சிவில் சா்வீசஸ் தோ்வெழுதுவதற்காக பட்டப் படிப்புகளை தோ்வு செய்து பயிலத் தொடங்கி விடுகிறாா்கள்.

சிவில் சா்வீசஸ் பயில விரும்பும் மாணவா்களில் 90 சதவீதம் போ் பொறியியல், மருத்துவப் பிரிவுகளில் சேர விரும்பிய மாணவா்களாகவே உள்ளனா். மாணவா்கள் எந்தத் துறையில் தமது தகுதியை வளா்த்துக் கொள்வது என்பதில் குழப்பம் நிலவுகிறது. இந்தக் குழப்பம் இந்திய சமூகத்தில் அதிகமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றாா் அவா்.



Read in source website

கணக்குத் தணிக்கையாளா், செலவுக் கணக்காளா் மற்றும் நிறுவனச் செயலாளா்கள் நிறுவனங்களை மறுசீரமைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத் திருத்த மசாதோவுக்கு மக்களவையில் புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கணக்கு தணிக்கையாளா் சட்டம் 1949, செலவு மற்றும் பணிகள் கணக்காளா் சட்டம் 1959 மற்றும் நிறுவனச் செயலாளா்கள் சட்டம் 1980 ஆகிய சட்டங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.

புதிய நடைமுறைகள் என்ன? இந்திய கணக்கு தணிக்கையாளா் நிறுவனம் (ஐசிஏஐ), இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளா் நிறுவனம் (ஐசிடபிள்யூஏஐ) மற்றும் இந்திய நிறுவனச் செயலாளா்கள் நிறுவனம் (ஐசிஎஸ்ஐ) ஆகியவை நிறுவன ஒழுங்கு நடவடிக்கை குழுக்களின் தலைமை அதிகாரியாக முறையே கணக்குத் தணிக்கையாளா் அல்லாத, செலவுக் கணக்காளா் அல்லாத மற்றும் நிறுவனச் செயலா் அல்லாத நபா்களை நியமனம் செய்ய வேண்டும்.

மூன்று நிறுவனங்களும், நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சக செயலா் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். அதில், மூன்று நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் உள்ளிட்ட புதிய நடைமுறைகள் இந்த சட்டத் திருத்த மசோதாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இந்திய கணக்குப் பதிவு நிறுவனங்கள் பெரும் வளா்ச்சி பெற வழி ஏற்படுத்தும் வகையில், தொழில் நிறுவனங்கள் இந்த 3 கணக்காளா் நிறுவனங்களுடன் பதிவு செய்வதற்கு மசோதா வழிசெய்வதோடு, முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் பங்குதாரா்களுக்கு அபராதம் விதிக்கவும் இந்த மசோதா வழி செய்கிறது.

இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள சில நடைமுறைகளுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. மேலும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் சாா்பில் மக்களவையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில், அவை நிராகரிக்கப்பட்டு மசோதாவுக்கு புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முன்னதாக, மசோதாவை மத்திய நிதி மற்றும் நிறுவன விவகாரத் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் அறிமுகப்படுத்தியபோது, ‘இந்த சட்டத் திருத்தத்தால் ஐசிஏஐ, ஐசிடபிள்யூஏஐ, ஐசிஎஸ்ஐ நிறுவனங்களின் தன்னாட்சி அதிகாரம் பாதிக்கப்படும்’ என்று திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் சுகதா ராய், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினா் சுப்ரியா சுலே, புரட்சிகர சோசலிச கட்சி உறுப்பினா் என்.கே.பிரமசந்திரன் ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

அதற்கு பதிலளித்த நிா்மலா சீதாராமன், ‘இந்த சட்டத் திருத்தங்களால், ஐசிஏஐ, ஐசிடபிள்யூஏஐ, ஐசிஎஸ்ஐ நிறுவனங்களின் தன்னாட்சியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக, கணக்குத் தணிக்கையின் தரம் மேம்படும் என்பதோடு, நாட்டின் முதலீடுக்கான சூழ்நிலையும் மேம்படும். இந்த 3 நிறுவனங்களும் மிகுந்த பொறுப்புடனும் நடந்துகொள்வதையும் இந்த சட்டத் திருத்தம் உறுதிப்படுத்தும். இந்த மூன்று நிறுவனங்களும் ஓா் ஒருங்கிணைப்புக் குழுவை அமைப்பதற்கென ஏற்கெனவே புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டன. ஆனால், அது நிறைவேறவில்லை. தற்போது இந்தக் குழு அமைப்பதையும் இந்த சட்டத் திருத்தம் உறுதிப்படுத்தும். இந்தக் குழு, நிறுவனங்களின் வளங்களை சிறந்த முறையில் நிா்வகிக்க உதவும். இதுபோன்ற ஒருங்கிணைப்புக் குழுக்களை ஐஐஎம், ஐஐடி கல்வி நிறுவனங்களும் பெற்றுள்ளன’ என்றாா்.

Image Caption

மக்களவையில் பேசிய மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்.

 



Read in source website

நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் வேளாண் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்து, 4,087 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.3.10 லட்சம் கோடி) எட்டியுள்ளது என்று மத்திய வா்த்தகத் துறை இணையமைச்சா் அனுப்ரியா சிங் படேல் கூறினாா்.

இதுதொடா்பாக, மக்களவையில் அவா் புதன்கிழமை மேலும் கூறியதாவது:

நடப்பு நிதியாண்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் தொடங்கி நிகழாண்டு ஜனவரி வரையிலான 10 மாதங்களில் வேளாண் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி 4,087 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் வேளாண் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி 3,266 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.47 லட்சம் கோடி) இருந்தது.

நடப்பு நிதியாண்டில் கோதுமை, சா்க்கரை, பருத்தி ஆகியவற்றின் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. அரிசி உள்ளிட்ட சில தானியங்கள், காபி, இறைச்சி, பால் பொருள்கள், கோழி இறைச்சி, முட்டை, கடல் உணவு வகைகள் ஆகிய முக்கியப் பொருள்களின் ஏற்றுமதிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை அவை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வேளாண் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரிப்பால், விவசாயிகளின் வருவாயும் அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

 



Read in source website

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று அந்தத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

மேலும், கடந்த 2 ஆண்டுகளாக கட்டண சலுகையின்றி சுமாா் 7 கோடி மூத்த குடிமக்கள் ரயில்களில் பயணித்துள்ளதாகவும் அவா் கூறினாா்.

இதுதொடா்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவா் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகை கடந்த 2020, மாா்ச் மாதம் நிறுத்தப்பட்டது. அப்போது முதல் 2021, மாா்ச் 31 வரை 1.87 கோடி மூத்த குடிமக்களும், 2021, ஏப்ரல் 1 முதல் கடந்த பிப்ரவரி வரை 4.74 கோடி மூத்த குடிமக்களும் ரயில்களில் பயணித்துள்ளனா்.

கடந்த 2019-20-ஆம் ஆண்டில் கட்டண சலுகையுடன் (முன்பதிவு, முன்பதிவு இல்லாத டிக்கெட்கள்) சுமாா் 12 கோடி மூத்த குடிமக்கள் ரயில்கள் பயணித்திருந்தனா். அந்த வகையில் ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ.1,667 கோடி ஆகும்.

கரோனா நோய்த்தொற்றால் எழுந்த சவால்கள் காரணமாக, கடந்த 2019-20-ஆம் ஆண்டைவிட 2020-21ஆம் ஆண்டில் பயணிகள் மூலம் ரயில்வேக்கு கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளது. மாற்றுத் திறனாளிகளில் 4 பிரிவுகள், நோயாளிகள் மற்றும் மாணவா்களில் 11 பிரிவுகளில் உள்ளவா்களுக்கு தொடா்ந்து கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. மூத்த குடிமக்கள் உள்பட அனைத்துப் பிரிவினருக்கும் கட்டண சலுகை வழங்குவது ரயில்வே நிா்வாகத்துக்கு கடுமையான நிதிச் சுமையை ஏற்படுத்தும். இப்போதைய சூழலில், மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்கும் திட்டம் இல்லை என்று ரயில்வே அமைச்சா் கூறியுள்ளாா்.

 



Read in source website

நிகழாண்டில் இஸ்ரோ 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் கூறியுள்ளாா்.

இதுகுறித்து மக்களவையில் புதன்கிழமை கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், ‘‘பிஎஸ்எல்வி சி-52 செலுத்து வாகனம் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இஓஎஸ்-4 கடந்த பிப்ரவரி 14-இல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்வெளியின் சுற்று வட்டப்பாதையில் செயல்படுவதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை நானோ செயற்கைக்கோள்களில் முதலாவதான ஐஎன்எஸ்- 2டிடி-யும் இதனுடன் அனுப்பப்பட்டது. இதேபோல, நிகழாண்டில் இஸ்ரோ 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது என்றாா் அவா்.



Read in source website

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 355 நாள்கள் தங்கியிருந்து பணியாற்றிய அமெரிக்க விண்வெளி வீரர் மார்க் வேன்ட் ஹே (55) ரஷிய விண்கலத்தில் புதன்கிழமை பூமி திரும்பினார்.
 அவருடன் ரஷிய விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த அன்டன் ஸ்காப்லெரோவ், பீட்டர் டப்ரோவ் ஆகியோரும் பூமிக்கு திரும்பினர்.
 இவர்களில் டப்ரோவும் மார்க் வேன்ட் ஹையை போலவே சுமார் ஓராண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 கடந்த ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மார்க் வேன்ட் ஹே சென்றார். அங்கு 355 நாள்கள் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில், தனது விண்வெளி பயணத்தை நிறைவு செய்துகொண்டு, ரஷிய விண்கலமான சோயுஸ் எம்எஸ்-19-இல், அவர் புதன்கிழமை பூமி திரும்பினார். ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் அங்கமாக இருந்த கஜகஸ்தானில் அந்த விண்கலம் தரையிறங்கியது.
 உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், ரஷிய விண்கலத்தில் மார்க் வேன்ட் ஹே பூமி திரும்பியுள்ளார்.



Read in source website

 

கடந்த நான்கு மகளிர் உலகக் கோப்பைப் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்று அசத்தியுள்ளது.

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா என முதல் மூன்று ஆட்டங்களில் தோற்றது இங்கிலாந்து. இதன்பிறகு வரிசையாக நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி இன்று தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 137 ரன்கள் வித்தியாசத்தில் அரையிறுதியை வென்ற இங்கிலாந்து அணி இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. உலகக் கோப்பைப் போட்டியில் 6-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது.

இந்நிலையில் கடந்த ஐந்து வருடங்களில் பங்கேற்ற நான்கு உலகக் கோப்பைப் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஒருமுறை மட்டுமே இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறாமல் இருந்தது.

2017 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி, அடுத்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றில் இடம்பெற்றது. 2020 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதியுடன் வெளியேறியது. மழை காரணமாக சிட்னியில் நடைபெறுவதாக இருந்த அரையிறுதி ஆட்டம் ரத்தானது. லீக் சுற்றில் இந்தியாவை விட குறைவான புள்ளிகளைக் கொண்டிருந்ததால் இங்கிலாந்து வெளியேறியது. இம்முறை கடுமையாக உழைத்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

உலகக் கோப்பையில் இங்கிலாந்து

2017 உலகக் கோப்பை - சாம்பியன்
2018 டி20 உலகக் கோப்பை - இறுதிச்சுற்றுக்குத் தகுதி
2020 டி20 உலகக் கோப்பை - அரையிறுதி வரை முன்னேறியது
2020 உலகக் கோப்பை - இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்*

(* இன்னும் இறுதிச்சுற்று நடைபெறவில்லை.)



Read in source website

 

12 வயதிலிருந்து மிகவும் விருப்பத்துடன் விளையாடி வந்த கிரிக்கெட்டை இரு வருடங்களுக்கு முன்பு கைவிட நினைத்தார் ஷெல்டன் ஜாக்ஸன். நிராகரிப்பை எவ்வளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும் என வெம்பினார். ட்விட்டரில் நேரடியாகவே கேள்வி எழுப்பினார்.

இன்று நிலைமை மாறிவிட்டது. ஷெல்டன் ஜாக்ஸனைத் தெரியாத இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியாது. இரண்டே ஆட்டங்களில் தான் யார் என்பது நிரூபித்துவிட்டார். 

கரோனாவுக்கு முன்பு ரஞ்சி கோப்பைப் போட்டியின் இரு பருவங்களிலும் நன்கு விளையாடினார் ஜாக்ஸன். ஆனாலும் இந்திய ஏ அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து ட்விட்டரில் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். தேர்வுக்குழுவினரைச் சந்தித்தால் அவர்களிடம் இதுபற்றி கேட்கவும் என்று பத்திரிகையாளர்களிடம் கோரிக்கை விடுத்தார். ஒருமுறை மட்டும் இந்திய ஏ அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்ததால் மிகவும் நொந்து போனார். எவ்வளவு ரன்கள் அடித்தாலும் கண்டுகொள்ள மாட்டீர்கள் என்றால் நான் ஏன் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று எண்ணினார். ஆனால் காலம் ஜாக்ஸனின் வருத்தத்தை மெல்ல மெல்ல போக்கியது.

கரோனாவுக்குச் சற்று முன்பு 2020 மார்ச்சில் செளராஷ்டிர அணி முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்றது. அந்தப் பருவத்தில் 809 ரன்கள் எடுத்தார் ஜாக்ஸன். சராசரி - 50.56. ரஞ்சி இறுதிச்சுற்றுக்கு முன்பு 12 வயதில் தன் திறமையைக் கண்டறிந்த பயிற்சியாளர் என்.சி. கோகிலை இழந்தார். கோப்பையை வென்ற முந்தைய நாள், தந்தையானார். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என அவர் உணர்ந்த தருணம் அது. எனக்கு 33 வயது ஆகிவிட்டாலும் என்னால் 22 வயது வீரருடன் சரிக்குச் சமமாகப் போட்டியிட முடியும் என்று அப்போது பேட்டியளித்தார். அஹமதாபாத்தில் வருமான வரித் துறையில் பணி. உள்ளூர் போட்டிகள் இல்லாத சமயங்களில் எல்லோரையும் போல தினமும் அலுவலகம் சென்றுவிடுவார். 

திடீரென புதுச்சேரி அணிக்கு மாறினார். எனினும் ரஞ்சி போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். பிறகு மீண்டும் செளராஷ்டிர அணிக்கு மாறினார். 2021-ல் விளையாடிய இரு சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிகளில் 11 இன்னிங்ஸில் 513 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 147.83. அதற்கு முன்பு அவர் இவ்வளவு நன்றாக விளையாடியதில்லை. ரஞ்சி கோப்பையை வென்ற பிறகு கரோனாவால் கிடைத்த ஓய்வில் தனது ஆட்டத்தையும் அணுகுமுறையையும் நிறைய மாற்றினார். கைமேல் பலன்கள் கிடைக்க ஆரம்பித்தன. 

2021 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு ஷெல்டன் ஜாக்ஸனைத் தேர்வு செய்தது கேகேஆர் அணி. இந்தமுறை ரூ. 60 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. இதுவரை அவரை கேகேஆர் அணி மட்டுமே ஏலத்தில் தேர்வு செய்துள்ளது.

2017-ல் கேகேஆர்  அணிக்காக 4 ஐபிஎல்  ஆட்டங்களில் விளையாடினார் ஜாக்ஸன். இப்போது 5 வருடங்கள் கழித்து 35 வயதில் கேகேஆர் அணியின் எல்லா ஆட்டங்களிலும் ஒரு வாய்ப்பு அவருக்கு உருவாகியுள்ளது. 

கேகேஆர் அணியில் சாம் பில்லிங்ஸ் இருந்தாலும் அவர் இதுவரை விக்கெட் கீப்பராகச் செயல்படவில்லை. காரணம் ஆரோன் ஃபிஞ்ச், பேட் கம்மின்ஸ் வந்துவிட்டால் அணியில் பில்லிங்ஸுக்கு இடம் இருக்காது. இதனால் இரு ஆட்டங்களிலும் ஷெல்டன் ஜாக்ஸனே விக்கெட் கீப்பராக இருந்தார். 

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷெல்டன் ஜாக்ஸனின் துடிப்பான விக்கெட் கீப்பிங் அனைவரையும் ஈர்த்தது. தோனியைப் போல மின்னலென ஸ்டம்பிங் செய்து உத்தப்பாவை ஆட்டமிழக்கச் செய்தார். பேட்டிங்கில் ஆட்டமிழக்காமல் 3 ரன்கள் எடுத்தார். இப்படியொருவர் இந்திய கிரிக்கெட்டில் இருக்கிறாரா என்று பலருக்கும் அன்றுதான் தெரிய வந்தது. 

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் தான் ஜாக்ஸனின் திறமை மேலும் தெரிந்தது. 3 கேட்சுகளும் ஒரு ஸ்டம்பிங்கும் செய்தார். ரூதர்ஃபோர்டின் கேட்சை நம்பமுடியாத வகையில் இடப்பக்கம் பாய்ந்து பிடித்தார். தொலைக்காட்சி வர்ணனையில் இதற்குப் பாராட்டு மழை பொழிந்தார்கள். ஐபிஎல் 2022 போட்டியில் சிறந்த விக்கெட் கீப்பர் ஜாக்ஸன் தான் எனப் பலரும் பாராட்டுவதும் இதனால் புதிய வெளிச்சம் கிடைப்பதும் ஜாக்ஸன் இதுவரை அனுபவிக்காத ஒன்று. 

ஜாக்ஸனின் பேட்டிங் பலத்தைப் பலரும் இன்னும் அறியவில்லை. 2006 முதல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2011 முதல் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஜாக்ஸன் 79 ஆட்டங்களில் 19 சதங்களுடன் 5947 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் ஐபிஎல் மேடையில் சாதித்தால் தான் அது அனைவரையும் போய்ச்சேரும்!

35 வயதில் இந்தியா, இந்திய ஏ அணிகளுக்கு ஜாக்ஸன் தேர்வு செய்யப்படுவாரா என்று தெரியாது. ஆனால் ஒரு மனிதன் பல வருடங்களாக நிராகரிக்கப்பட்டும் கூட அதன் சுவடு தெரியாமல் இளம் வீரரைப் போல உற்சாகமாக ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார். ஊரே வியக்கும்படி உள்ளது அவருடைய பங்களிப்பு. காலங்கள் மாறட்டும், கவலைகள் ஓயட்டும், ஷெல்டன் ஜாக்சனுக்குப் புதிய வாழ்க்கை அமையட்டும். 



Read in source website

டபிள்யூடிடி ஸ்டாா் கன்டெண்டா் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மனிகா பத்ரா/அா்ச்சனா காமத் இணை வெண்கலப் பதக்கம் வென்றது.

போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த இந்த ஜோடி, அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி, போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீன தைபேவின் லி யு ஜுன்/செங் ஐ சிங் இணையை அதில் எதிா்கொண்டது. இறுதியில் இந்திய ஜோடி, 8-11, 6-11, 7-11 என்ற கணக்கில் தோல்வியை தழுவி வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறியது.

மறுபுறம், மகளிா் ஒற்றையா் பிரிவிலும் மனிகா பத்ரா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜொ்மனியின் யிங் ஹானிடம் 11-5, 11-2, 11-4 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினாா். ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஜி.சத்தியனும் அதே சுற்றில் 11-5, 8-11, 7-11, 4-11 என்ற கணக்கில் ஸ்வீடனின் கிறிஸ்டியன் காா்ல்சனிடம் வீழ்ந்தாா். இத்துடன் இப்போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.



Read in source website

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஆடவா் பிரிவில் இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆட்டங்களில் மோதுவதற்கான இந்திய அணி 22 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

கேப்டனாக அமித் ரோஹிதாஸ், துணை கேப்டனாக ஹா்மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஏப்ரல் 2 மற்றும் 3-இல் ஒடிஸாவின் புவனேசுவரத்தில் மோதுகின்றன.

இப்போட்டியில் இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 5-இல் வென்றிருக்கும் இந்தியா 16 புள்ளிகளுடன் பட்டியலில் 2-ஆம் இடத்தில் இருக்கிறது.

அணி விவரம்: கிரிஷன் பகதூா் பாதக், பி.ஆா். ஸ்ரீஜேஷ் (கோல்கீப்பா்கள்); சுரேந்தா் குமாா், ஹா்மன்பிரீத் சிங், நிலம் சஞ்சீப் ஜெஸ், வருண் குமாா், அமித் ரோஹிதாஸ், ஜக்ராஜ் சிங் (டிஃபெண்டா்கள்); ஜஸ்கரன் சிங், மன்பிரீத் சிங், ஹா்திக் சிங், நீலகண்ட சா்மா, ஷம்ஷோ் சிங், ராஜ்குமாா் பால், சுமித், விவேக் சாகா் பிரசாத் (மிட்ஃபீல்டா்கள்); குா்ஜந்த் சிங், மன்தீப் சிங், சுக்ஜீத் சிங், அபிஷேக், குா்சாஹிப்ஜித் சிங், ஷிலானந்த் லக்ரா (ஃபாா்வா்ட்கள்).



Read in source website

 

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதால் அரசுத் துறைகள் சிலவற்றை தனியார் மயமாக்க சர்வதேச நாணய நிதியம்(IMF) பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அந்நாட்டின்  போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எஃப்) உலக நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதோடு, அந்நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களைக்கூறி அதை சரி செய்ய சில பரிந்துரைகளை வழங்குவது வழக்கம்.

அதன்படி, தற்போது இலங்கை சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி குறித்து அறிக்கை அளித்த ஐஎம்எஃப், சில மாகாணங்களில் நஷ்டத்தில் நடத்தப்படும் அரசு நிறுவனங்களைத் தனியார் மயமாக்க ஆலோசனை வழங்கியுள்ளது.

குறிப்பாக, சிலோன் அரசு ரயில்வேயையும் தனியாரிடம் ஒப்படைக்க அதில் பரிந்துரைத்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் அமுனுகமா தெரிவித்ததுடன், ’பொருளாதார நெருக்கடியின்போது வரும் சில ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் முக்கியமானவை. ஐஎம்எஃப்-ன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால் சில துறைகள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இருப்பினும், பரிந்துரைகளை செயல்படுத்தலாமா வேண்டாமா என்பது அரசின் முடிவு’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அதிபர் கோத்தபய ராஜபட்ச பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர ஐஎம்எஃப் உடன் இணைந்து செயலாற்ற உள்ளதாக தெரிவித்திருந்ததும் ஐஎம்எஃப் அளித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய கடந்த மார்ச் 28 ஆம் தேதி இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் குறிப்பிடத்தக்கது. 



Read in source website

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்துள்ளது. இதன் காரணமாக, பல மணி நேரங்களுக்கு அங்கு மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை முதல் டீசல் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

சுதந்திரம் பெற்றதற்கு பிந்தைய காலத்திலிருந்தே இம்மாதிரியான மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்ததே இல்லை. அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு செலவழிப்பதற்கு கூட அந்நாட்டிடம் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லை.

அங்கு பெரும்பாலான பேருந்துகளும் வணிக வாகனங்களும் டீசலை நம்பியே உள்ளது. இதனிடையே, இலங்கையில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிலையங்களில் டீசல் கையிருப்பு இல்லாமல் உள்ளதாத செய்தி வெளி்யாகியுள்ளது. பெட்ரோல் விற்கபட்டாலும் அதுவும் பற்றாக்குறையிலேயே உள்ளது. இதன் விளைவாக, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இலங்கை போக்குவரத்துத்துறை அமைச்சர் திலும் அமுனுகம கூறுகையில், "பேருந்து பழுதுபார்க்கும் இடங்களில் பழுதுபார்ப்பதற்காக நிற்க வைக்கப்பட்டுள்ள பேருந்துகளிலிருந்து டீசலை எடுத்து மற்ற வாகனங்களுக்கு பயன்படுத்திவருகிறோம்" என்றார்.

இலங்கையில் மூன்றில் இரண்டு பேருந்துகள் தனியார் வசமே உள்ளது. தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள் டீசல் பற்றாக்குறை குறித்து கூறுகையில், "ஏற்கனவே, எண்ணெய் இல்லாமல் தான் உள்ளோம். அங்கும் இங்குமாய் கொஞ்சமாக கிடைக்கும் டீசல் கூட வெள்ளிக்கிழமைக்கு பிறகு கிடைக்காது" என்றனர்.

தனியார் பேருந்து இயக்க கூட்டமைப்பின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதுகுறித்து கூறுகையில், "நாங்கள் இன்னும் பழைய டீசலைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இன்று மாலைக்குள் எங்களுக்கு கூடுதலான டீசல் கிடைக்கவில்லை என்றால், எங்களால் இயக்க முடியாது" என்றார்.

ஜெனரேட்டர்களுக்கு நிரப்பு கூட டீசல் இல்லாததால் இன்று முதல் 13 மணி நேர மின் வெட்டு அமல்படுத்தப்படும் என அரசு மின் வாரியம் அறிவித்துள்ளது. 



Read in source website

 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 2020 மே மாதத்தில் ஆறுமுகம் தொண்டமான் மறைவுக்குப் பிறகு இந்தப் பதவிப் பொறுப்பு நிரப்பப்படாமலேயே இருந்தது.

தற்போது,  கோட்டகல தலைமையகத்தில் புதன்கிழமை  கூடிய கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே கட்சியின் துணைத் தலைவராக செயல்பட்டுவந்தவர் செந்தில் தொண்டமான்.

மேலும், கட்சியின் அவைத் தலைவர் மற்றும் பொருளாளராக எம். ராமேசுவரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மிக மோசமான பொருளாதாரச் சூழலை இலங்கை கடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் காங்கிரஸ் தலைவராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்பது குறிப்பிடத் தக்கது. 



Read in source website

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு வங்கியான சிட்டி வங்கி குழுமத்தின் இந்திய வாடிக்கையாளா்கள் பிரிவை ஆக்சிஸ் வங்கி கையகப்படுத்தியுள்ளது.

இனி சிட்டி வங்கி வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்குகள், கடன் அட்டை, கடன்கள் என அனைத்தையும் ஆக்சிஸ் வங்கியே நிா்வகிக்கும். இதன் மொத்த மதிப்பு ரூ.12,325 கோடியாகும். இந்தியாவின் 18 நகரங்களில் 7 பிரதான அலுவலகங்கள், 21 கிளைகள், 499 ஏடிஎம்கள் சிட்டி வங்கிக்கு உள்ளன. 30 லட்சத்துக்கு மேற்பட்ட வாடிக்கையாளா்கள் சிட்டி வங்கியில் உள்ளனா்.

சிட்டி வங்கியின் 4,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் தொடா்ந்து பணியில் இருப்பாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு அடுத்து 3-ஆவது பெரிய வங்கியாக ஆக்சிஸ் வங்கி திகழ்கிறது.



Read in source website

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணியில்முதன்முறையாக சங்க காலபாண்டிய மன்னர்களின் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வுப் பணிகள் கடந்த அக்டோபரில் தொடங்கி 7 மாத காலமாக நடந்து வருகிறது. அகழாய்வுக்காக 9 இடங்களில் 32 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து 60-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், மண் குடுவைகள், பானைகள், இரும்பு பொருட்கள், மணிகள் உள்ளிட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன.

மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் ஆதிச்சநல்லூர் வந்து அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டார். ஆய்வாளர்களிடம் ஆய்வுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வுப் பணியில் முதல் முறையாக சங்க காலத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னர்களின் 2 நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்களில் ஒரு தொட்டியில் கடல் ஆமைகள் இருப்பது போலவும், மரம், யானை, மீன்கள் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் ஆதிச்ச நல்லூரில் சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்ததையும், கடல் சார் வாணிபம் நடந்ததையும் உறுதிப்படுத்தும் விதமாக உள்ளன” என்றார்.

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதற்கான பணிகளும் அங்கு நடந்து வருகின்றன.



Read in source website

தமிழகத்தில் கொல்லி மலை மற்றும் ஜவ்வாது மலைப்பகுதிகளில் சாகசப் பயணங்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

இந்திய பயணம் மற்றும் சுற்றுலா நிபுணர்கள் சங்கத்தின் (ஐஏடிடிஇ) தமிழக கிளை தொடக்க விழா சென்னை தி.நகரில் நேற்றுநடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுற்றுலாத் துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், கிளையைத் தொடங்கி வைத்தார். அதன்பின் தமிழகத்தின் சுற்றுலா தலங்கள் குறித்த சிறப்பு காணொலி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: கரோனா பரவல் குறைந்துள்ளதால் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அதன் ஒருபகுதியாக ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடர்ந்து சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு சிறப்புநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

இதுதவிர, கொல்லி மலை, ஜவ்வாது மலை உள்ளிட்ட முக்கியமலைப் பகுதிகளில் சாகசப் பயணங்களை அனுமதிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் விரைவில் வெளியிடப்படும். மேலும்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை (டிடிடிசி)நவீனப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பிரத்யேக செயலி மூலம் பயனாளர்கள் தேவையான தகவல்களைப் பெற முடியும். இவர் அவர் கூறினார்.



Read in source website

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ரூ.3,887 கோடி செலவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 15 இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், விமானப்படைக்கு 10 ஹெலிகாப்டர்களும், ராணுவத்துக்கு 5 ஹெலிகாப்டர்களும் வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உட்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்காக ரூ.377 கோடி ஒதுக்கவும் அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.

மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த ஹெலிகாப்டர்களைத் தயாரிக்கிறது. சீனாவுடனான எல்லை பிரச்சனை உட்பட பல்வேறு பாதுகாப்பு சவால்களை இந்தியா எதிர்கொண்டு வருவதை கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த திறன்களையும் மேம்படுத்துவதில் முப்படைகள் கவனம் செலுத்தும் நிலையில், ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவம் மற்றும் விமானப்படையின் தேவைகளை எதிர்கொள்ள இது முக்கியமான நடவடிக்கையாகும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.



Read in source website

புதுடெல்லி: கடும் எதிர்ப்பையும் மீறி சார்டர்ட் அக்கவுன்டன்ட் மசோதா மக்களவையில் நிறைவேறியது. சார்டர்ட் அக்கவுன்டன்ட் சட்டம் 1949, காஸ்ட் அண்ட் வொர்க் அக்கவுன்டன்ட் சட்டம் 1959 மற்றும் நிறுவன செயலர் சட்டம் 1980 ஆகிய மூன்றிலும் திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதாவை நிறுவன விவகாரத்துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித்சிங் மக்களவையில் தாக்கல் செய்தார்.

இதில் ஐசிஏஐ அமைப்பின் ஒழுங்குமுறை கமிட்டியில் ஐந்து உறுப்பினர்கள் இடம்பெறுவர் என்றும் அவர்களில் மூன்று பேர் பட்டய தணிக்கையாளர் அல்லாத உறுப்பினர்கள் இடம்பெறுவர் என திருத்தம் செய்யப்பட்டதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததோடு இதை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பலாம் என வலியுறுத்தினர். ஒழுங்குமுறை குழுவின் தலைவராக நிறுவன விவகாரத்துறை அமைச்சகத்தின் செயலர் தலைவராக இருப்பார் என்ற விதி மாற்றத்துக்கு அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன்சவுத்ரி பேசுகையில், ஒழுங்குமுறை நடவடிக்கை மற்றும் நிர்வாகவியல் செயல்பாடுகளில் எப்படி பட்டய தணிக்கையாளர் அல்லாதஒருவர் தலைவராக இருப்பது சரியாக இருக்கும் என்று புரியவில்லை என்று வாதிட்டார்.

ஏற்கெனவே 3 குழுக்கள் உள்ள நிலையில் மேலும் ஒருஒருங்கிணைப்புக் குழு அமைப்பதற்கான அவசியம் என்ன என்று அவர் கேள்வியெழுப்பினார். நிறுவன விவகாரத்துறை அமைச்சக செயலர் இக்குழுவுக்கு தலைவராக இருப்பது என்பது மிகப்பெரும் இடைவெளியை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் இந்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.

- பிடிஐ



Read in source website

சீயோல்: வழக்கமாகவே வட கொரியாவின் ஏவுகணை செய்திகளே வந்த வண்ணம் இருக்கும். ஆனால், இந்த முறை தென் கொரிய வெற்றிகரமாக திட எரிபொருளில் இயங்கும் ராக்கெட்டில் ஸ்பை சாட்டிலைட்டை ஏவி சோதனை செய்துள்ளது. இதன் மூலம் விண்வெளி கண்காணிப்பில் தென் கொரியா முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இந்தச் சோதனை தென் கொரிய ராணுவ அமைச்சர் சூ வூக் முன்னிலையில் தலைநகர் சீயோலில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டேன் என் எனும் பகுதியில் நடத்தப்பட்டது.

ஒரு வாரத்துக்கு முன்னதாக வட கொரியா ஐசிபிஎம் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஏவி பரிசோதனை செய்த நிலையில், தென் கொரியாவின் திட எரிபொருள் ராக்கெட் சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து தென் கொரிய ராணுவ அமைச்சகம், "இது நமது ராணுவத்தில் ஒரு மைல்கல். அதுமட்டுமல் விண்வெளி ஆராய்ச்சிகளில் சுதந்திரமான முயற்சி. இதனால் நமது கண்காணிப்பு திறனும் அதிகரிக்கும்" என்று கூறியுள்ளது.

இதுவரை தென் கொரியாவுக்கு தனியாக ஸ்பை சாட்டிலைட் எனப்படும் உளவு செயற்கைக்கோள்கள் இல்லை. அமெரிக்காவின் செயற்கைக்கோள் தரவுகளையே பயன்படுத்தி வந்தது. இந்நிலையில், இந்த சோதனையை தென் கொரியா வெற்றியாகக் கருதுகிறது.

திரவ எரிபொருள் ராக்கெட்டுகளை ஒப்பிடும் போது திட எரிபொருள் ராக்கெட்டுகளை தயாரிப்பது எளிது. அதன் கட்டமைப்பு அதிக சிக்கல் இல்லாதது. அதேபோல், அதன் உற்பத்தி செலவும் குறைவு. அதை விண்ணில் ஏவுவதற்கான நேரமும் ஒப்பீட்டு அளவில் குறைவு. இதனாலேயே முதன்முறையாக முற்றிலுமாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட திட எரிபொருள் ராக்கெட் மூலம் ஸ்பை சாட்டிலைட்டுகளை ஏவியுள்ளதை தென் கொரியா முக்கியமானதாகக் கருதுகிறது.



Read in source website

இந்த ஒப்பந்தம் அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளியறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் ஆகியோர் முன்னிலையில் மார்ச் 28ஆம் தேதி கையெழுத்தானது.

சமீபத்தில் இலங்கைக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, இலங்கைத் தலைநகர் கொழும்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்திய பொதுத் துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம், நவீன கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை (MRCC)
இலங்கையில் அமைக்க வழிவகை செய்வதாகும்.

இந்த ஒப்பந்தம் அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளியறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் ஆகியோர் முன்னிலையில் மார்ச் 28ஆம் தேதி கையெழுத்தானது.

இரு நாடுகளுக்கு இடையே இந்தியப் பெருங்கடலின் பிராந்திய பாதுகாப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் இந்த ஒப்பந்தம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்திய பெருங்கடலின் ஒரு சில பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை உதவியுடன் சீனா தனது செல்வாக்கை நிலைநிறுத்தியிருக்கிறது.

முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் இலங்கை கடற்படைக்கு மிதக்கும் கப்பல் கட்டுமானத்தளத்தையும், விமானப்படைக்கு இரண்டு டோர்னியர் விமானங்களையும் இந்தியா வழங்கியது.

கூட்டுப்பயிற்சி

மார்ச் 23ஆம் தேதி முதல் இலங்கை விமானப் படைக்கும் கடற்படைக்கும் இந்திய கடற்படை குழு ஹெலிகாப்டர்களை இயக்கும் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

இந்தப் பயிற்சியின்போது இலங்கை விமானிகள் இந்தியாவின் மேம்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர்களை ஏற்கனவே பரிச்சயமானது போன்று இயக்கினர்.

மேலும், இரு நாட்டு கடற்படைகளும் கொழும்பில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ள கடல் பிராந்தியத்தில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டன. இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான சாரதா கப்பலும் இந்தப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது.

இதேபோல் ஓபிவி சாயுரலா கப்பலும் இந்தப் பயிற்சியில் இணைந்து செயல்பட்டது. இதுகுறித்து மூத்த அதிகாரிகள் கூறுகையில், கடத்தலை முறியடிக்கவும், கடல்சார் தகவலை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

இலங்கையின் திறனை மேம்படுத்துதல்

MRCC-கள் ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் கீழ் வரும் சர்வதேச நெட்வொர்க் ஆகும்.
இவை, கடலில் ஏதாவது அவசர உதவிகள் தேவைப்படும்பட்சத்தில் கண்காணித்து நிறைவேற்ற விரைந்து உதவும் பணிகளை மேற்கொள்ளும். உதாரணத்துக்கு எண்ணெய் எடுத்துச் செல்லும் கப்பல் விபத்தில் சிக்கி விடும் பட்சத்திலும், மனிதர்கள் கடலில் சிக்கித் தவிக்கும் சமயங்களிலும் இவை உதவும்.

ஒவ்வொரு நாடும் அதன் சொந்த தேடல் மற்றும் மீட்புப் பகுதிக்கு பொறுப்பாகும். MRCC களின் பணி ஒவ்வொரு நாட்டிலும் கடற்படை அல்லது கடலோர காவல்படையால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

இந்தியாவில், கடலோர காவல்படை ஒருங்கிணைக்கும் நிறுவனமாகும். இலங்கையில் கடற்படைதான் இதனை செய்கிறது. பெங்களூருவை தளமாகக் கொண்ட BEL நிறுவனம், இலங்கையின் சிறிய MRCC ஐ மேம்படுத்துவதற்கு மேம்பட்ட மென்பொருள் அமைப்புகளை அமைப்புக்கும் பணிகளில் ஈடுபடவுள்ளது.
மேம்படுத்தப்பட்ட MRCC ஆனது கொழும்பில் உள்ள இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் இருந்து செயல்படும்.

அம்பாந்தோட்டாவில் ஒரு துணை மையம் இயங்கும். அங்கு சீன அரசுக்கு சொந்தமான நிறுவனம் ஆழமான நீர் துறைமுகத்தை நடத்தி வருகிறது. 2016 இல் இலங்கை அரசு சீனாவுக்கு அந்த இடத்தை குத்தகைக்கு கொடுத்தது.

இந்த ஒப்பந்தம் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் SAGAR (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) முன்முயற்சியின் ஒரு பகுதியாகத் தோன்றுகிறது. இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகள் 2011 இல் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பேசியதை தற்போது நடைமுறைக்குக் கொண்டு வருவதாக தெரிகிறது. இப்போது மொரிஷியஸும் இதில் உள்ளடங்கியுள்ளது.

CSC தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் சமீபத்திய கூட்டத்தில், ஒத்துழைப்பின் “ஐந்து தூண்களை” அடையாளம் கண்டுள்ளது. அவை, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு; தீவிரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்தல்; கடத்தல் மற்றும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல்; இணைய பாதுகாப்பு, முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு; மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவை ஆகும்.

இலங்கை விளக்கம்
MRCC இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு சில பகுதிகள் இலங்கை ஊடகங்களில் கசிந்தது.

இந்தியாவுடன் கையெழுத்தான இந்த ஒப்பந்தங்கள் பற்றி இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்தது.

இந்திய அரசாங்கத்துடன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கடல்சார் பாதுகாப்பு உடன்படிக்கைகள் பல அச்சு மற்றும் ஊடகங்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

Written by  Nirupama Subramanian 



Read in source website

லித்தியம் அயன் பேட்டரிகளால் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரியும் நான்கு நிகழ்வுகள் பதிவாகியுள்ளது. Li-ion பேட்டரிகள் என்றால் என்ன? அவை எப்படி வேலை செய்கிறது? எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்க என்ன காரணம்?

கடந்த 5 நாள்களில், ஓலா, ஒகினாவா மற்றும் ப்யூர் EV போன்ற நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட இரு சக்கர மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இத்தகைய தொடர் சம்பவங்கள், எலக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பை குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அத்தகைய வாகனங்களை இயக்கும் பேட்டரிகள் தரம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

செல்போன், ஸ்மார்ட்வாட்ச்-களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிகளால் தான் எலக்ட்ரிக் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மற்ற பேட்டரிகளுடன் ஒப்பிடுகையில், லித்தியம் அயன் திறன் வாய்ந்ததாகவும், இலகுவாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், அவை தீ ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது சமீபத்திய சம்பவங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

லித்தியம் அயன் பேட்டரிகள் என்றால் என்ன, அவை எவ்வாறு வேலை செய்கின்றன?

மின்சார கார்கள் முதல் ஸ்மார்ட்போன், மடிக்கணினிகள் வரை லித்தியம்-அயன் (Li-ion) பேட்டரிகள் பயன்படுத்துவதால், அவை பிரபலமான பேட்டரி வகையாக மாறியுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரியில் ஒரு அனோட், கேத்தோடு, பிரிப்பான், எலக்ட்ரோலைட் மற்றும் 2 சேகரிப்பான்கள் உள்ளன. இதில், அனோட் மற்றும் கேத்தோடில் லித்தியம் சேமிக்கப்படுகிறது. அதே சமயம் எலக்ட்ரோலைட், சார்ஜ் செய்யப்பட்ட லித்தியம் அயன்களை அனோட்-லிருந்து கேத்தோடுக்கு கொண்டு செல்கிறது. இதே செயல்முறை, நேர்மாறாக separator வாயிலாக நடைபெறும். லித்தியம் அயன்களின் இயக்கம் அனோடில் இலவச எலக்ட்ரான்களை உருவாக்குகிறது. இது பாசிட்டிவ் கரன்ட் சேகரிப்பானில் சார்ஜை உருவாக்குகிறது.

லித்தியம் அயன் பேட்டரிகள் மற்ற பேட்டரிகளை காட்டிலும் எலக்ட்ரிக் கார்கள், ஸ்மார்ட்போன்கள் போன்றவற்றுக்கு பக்கவாக பொருத்தவதற்கான காரணம், அதன் குறைந்த எடை, ஹை என்ர்ஜி டென்சிட்டி, ரீசார்ஜ் செய்யும் திறன் ஆகியவை தான். இது தவிர, லி-அயன் பேட்டரிகள் பொதுவாக லீட் ஆசிட் பேட்டரியுடன் ஒப்பிடும்போது நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கும்.

ஒரு லித்தியம் அயன் பேட்டரி ஒரு கிலோவிற்கு 150 வாட்ஸ்-மணிநேரத்தை சேமித்து வைக்கும். ஆனால், லீட்-அமில பேட்டரியால் ஒரு கிலோவிற்கு சுமார் 25 வாட்ஸ்-மணிநேரத்தை மட்டுமே சேமித்து வைத்திட முடியும்.

Li-ion பேட்டரிகள் மற்ற பேட்டரி வகைகளுடன் ஒப்பிடும்போது அதிக செயல்திறனை வழங்குகின்றன. இதனால், லித்தியான் அயன் பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்கள் நீண்ட தூரம் ஒரே சார்ஜில் பயணிக்கும், ஸ்மார்ட்போனும் நாள் முழுவதும் பயன்படுத்திட முடிகிறது.

லி-அயன் பேட்டரிகளின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று அதிக ஆற்றல் அடர்த்தி(high energy density ) ஆகும். இரு சக்கர EV தயாரிப்பாளரான Ather Energy இன் வலைப்பதிவின்படி, லி-அயன் பேட்டரிகளின் அதிக ஆற்றல் அடர்த்தி என்பது சில சூழ்நிலைகளில் இந்த செல்கள் நிலையற்றதாக மாறி, செயல்பாட்டைத் தடுக்கிறது. அவை பாதுகாப்பான செயல்பாட்டு வரம்பிற்குள் சிறப்பாக செயல்படுகின்றன. லி-அயன் பேட்டரி பாதுகாப்பாக இயங்குவதை உறுதிசெய்ய, பேட்டரி மேலாண்மை அமைப்பு (BMS) பயன்படுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பேட்டரி மேலாண்மை அமைப்பு என்றால் என்ன?

BMS என்பது அடிப்படையில் ஒரு லி-அயன் பேட்டரி பேக்கில் உள்ள அனைத்து செல்களுடன் இணைக்கப்பட்ட ஒரு மின்னணு அமைப்பாகும். இவை, அவற்றின் மின்னழுத்தத்தையும், மின்னோட்டத்தையும் தொடர்ந்து அளவிடுகிறது. BMSஇல் வெப்பநிலை கண்டறியும் சென்சார் உள்ளது. அதன் மூலம், பேட்டரி பேக்கின் வெவ்வேறு பிரிவுகளில் வெப்பநிலை பற்றிய தகவலை வழங்குகிறது. இந்தத் தரவு அனைத்தும், சார்ஜிங் மற்றும் டிஸ்சார்ஜிங் வீதம், பேட்டரி ஆயுள் சுழற்சி மற்றும் செயல்திறன் போன்ற பேட்டரி பேக்கின் மற்ற அளவுருக்களைக் கணக்கிடுவதற்கு BMSக்கு உதவுகிறது.

ஓலா, ஒகினாவா உட்பட பிற ஸ்கூட்டர் தீப்பிடிக்க என்ன காரணம்?

ஓலா, ஒகினாவா ஸ்கூட்டர்கள் தீப்பிடித்தற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக அந்நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒகினாவா பைக் தீவிபத்து குறித்து நடத்திய முதற்கட்ட ஆய்வில், வாகனத்தை சார்ஜ் செய்வதில் அலட்சியமாக இருந்ததன் காரணமாக ஷார்ட் சர்க்யூட்டில் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது.

இந்த எடுத்துக்காட்டுகள் லி-அயன் பேட்டரி பேக்கில் உள்ள தவறுகளின் விளைவுகளை நினைவூட்டுகின்றன. தொழில் வல்லுநர்களின் கூற்றுப்படி, உற்பத்தி குறைபாடுகள், வெளிப்புற சேதம் அல்லது BMS இல் பயன்படுத்துவதில் உள்ள தவறுகள் போன்ற பல காரணங்களால் இந்த பேட்டரிகள் தீ ஆபத்தை ஏற்படுத்தலாம்.

மறுபுறம், லி-அயன் பேட்டரி பேக்கில் வெப்பநிலையும் முக்கிய பங்கு வகிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெயர் கூற விரும்பாத EV உற்பத்தியாளரின் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், லி-அயன் பேட்டரிகள் வெப்பநிலையில் சிறப்பாகச் செயல்படும் ஆனால், மிக அதிக வெப்பநிலையின்போது, பேட்டரி பேக்கின் சுற்றுப்புற வெப்பநிலை 90-100 டிகிரி வரை உயரக்கூடும். அப்போதுதான் அவை தீப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றார்.

EV மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களில் நூற்றுக்கணக்கான பேட்டரிகள் ஒரு பேட்டரி பேக்கில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஒரு சில பேட்டரியில் சிக்கல் ஏற்பட்டு ஷாட் சர்க்யூட் ஆனால், அதன் தாக்கம் மொத்த பேட்டரிகளுக்கும் பரவி தீவிபத்தை ஏற்படுத்தக்கூடும். லி-அயன் பேட்டரிகள் உடனடியாக தீப்பிடித்து வெடிப்பதற்கு இதுவே காரணமாக கருதப்படுகிறது.

இது தவிர, வாகனத்தின் முந்தைய விபத்துக்களின் போது பேட்டரி பேக் சேதமாகியிருந்தால், சில நேரங்களில் சார்ஜ் செய்த பிறகு தீப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

சமீபத்திய தீவிபத்து சம்பவங்கள் குறித்து ஊடகத்திற்கு பதிலளித்த ஏதர் எனர்ஜியின் நிறுவனர் தருண் மேத்தா, உற்பத்தியாளர்கள் தயாரிப்புகளை வடிவமைக்க போதுமான நேரத்தை எடுத்துக்கொள்வதில்லை. அனைத்து நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளையும் துல்லியமாக சோதிக்க, அரசாங்க அமைப்புகளால் நிர்ணயிக்கப்பட்ட சோதனை தரநிலைகள் போதுமானதாக இருக்காது என்றார்.

தீவிபத்து குறித்து எடுத்த நடவடிக்கை என்ன?

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீவிபத்து குறித்து அந்தந்த நிறுவனங்களே ஆய்வு நடத்தி வரும் நிலையில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், தீப்பிடிக்கும் வாகனங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க தீ வெடிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தை (CFEES) அணுகியதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு லி அயன் பேட்டரி ஏற்படுத்திய தீ விபத்துகள்?

Li-ion பேட்டரிகளால் இயங்கும் சாதனங்கள் அல்லது வாகனங்கள் தீப்பிடித்து வெடித்த பல நிகழ்வுகள் உள்ளன. சாம்சங் நோட் 7 மற்றும் ஷாங்காயில் பார்க்கிங் கேரேஜில் நிறுத்தப்பட்டிருந்த டெஸ்லா மாடல் எஸ் ஆகியவை தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது.

டெஸ்லா சம்பவத்தைப் பொறுத்தவரை, வாகனத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள ஒற்றை பேட்டரி பகுதியால் தான் தீவிபத்து ஏற்பட்டதாகவும், மற்ற அமைப்புகளில் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை கண்டறிந்துள்ளனர்.

சாம்சங் பொறுத்தவரை, ஆயிரணக்கணக்கான நோட் 7 சீரிஸூக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த தீ விபத்து சம்பவத்திற்கு உற்பத்தி குறைபாடு தான காரணம் என கண்டறிந்தது. சில சமயங்களில் பேட்டரிகளைச் சுற்றியுள்ள இன்சுலேஷன் டேப் மிஸ் ஆகும் பட்சத்தில், ஷார்ட் சர்க்யூட் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சில பேட்டரிகளில் செல்களுக்குள் உள்ளே கூர்மையான ப்ரோட்ரஷன்கள் இருந்தன. இது, அனோட் மற்றும் கேத்தோடிற்கு இடையே உள்ள Seperatorஐ சேதப்படுத்த வாய்ப்பிருக்கிறது.



Read in source website

நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலத்தின் சில பகுதிகளில் இருந்து ஆயுதப்படை சிறப்பு சட்டம் நீக்கம்; மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

Deeptiman Tiwary 

Govt removes AFSPA from parts of Nagaland, Assam and Manipur: நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூரில் உள்ள சில மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் ஒரு டஜன் குடிமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து AFSPA ஐ அகற்றுமாறு வடகிழக்கில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து குரல் எழுப்பப்பட்ட கோரிக்கைகளின் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பல தசாப்தங்களுக்குப் பிறகு நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் (AFSPA) கீழ் கட்டுப்பாடு செய்யப்பட்ட பகுதிகளைக் குறைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி ஜியின் தீர்க்கமான தலைமையின் கீழ் மத்திய அரசு முடிவு செய்துள்ளது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வியாழக்கிழமை ஒரு ட்வீட்டில் கூறினார்.

AFSPA இன் கீழ் பகுதிகள் குறைக்கப்பட்டது, “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் வடகிழக்கில் நீடித்த அமைதியைக் கொண்டுவருவதற்கும், மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் பல ஒப்பந்தங்கள் காரணமாக மேம்பட்ட பாதுகாப்பு நிலைமை மற்றும் விரைவான வளர்ச்சியின் விளைவாகும்.” என்றும் அமித் ஷா கூறினார்.

“பிரதமர் மோடியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்கு நன்றி, பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்ட நமது வடகிழக்கு பகுதி, இப்போது அமைதி, செழிப்பு மற்றும் இதுவரை இல்லாத வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை காண்கிறது. இந்த முக்கியமான தருணத்தில் வடகிழக்கு மக்களுக்கு நான் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்,” என்றும் அமித் ஷா கூறினார்.

ஏப்ரல் 1 முதல் இந்த வாபஸ் அமலுக்கு வரும் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு மோன் கொலை சம்பவத்தை அடுத்து நாகாலாந்தில் இருந்து AFSPA ஐ அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஆராய அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு தனது அறிக்கையை இந்த மாதம் சமர்ப்பித்திருக்க வேண்டும். அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த விவகாரம் குறித்து குழு ஆலோசித்து வந்த நிலையிலும், கடந்த டிசம்பரில் நாகலாந்தில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.

நாகாலாந்தில் AFSPA தடை கட்டுப்பாடு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் காலாவதியாக இருந்தது, ஏனெனில் மாநிலத்தில் கடைசியாக ஜூன் 30 அன்று நீட்டிக்கப்பட்டது. AFSPA சட்ட கட்டுப்பாடானது, ஒரு பகுதி அல்லது ஒரு பிராந்தியத்தில் ஒரே நேரத்தில் ஆறு மாதங்களுக்கு விதிக்கப்படலாம், அதன் பிறகு அரசாங்கம் தேவை என்று கருதினால் அது நீட்டிக்கப்பட வேண்டும்.

டிசம்பர் 26 அன்று, நாகாலாந்தில் AFSPA ஐத் திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒரு செயலர் நிலை அதிகாரி தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்தது. குழுவுக்கு மூன்று மாதங்கள் காலக்கெடு வழங்கப்பட்டது.

டிசம்பர் 4 அன்று நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் 6 நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், ஆயுதப்படை குழுவின் ஆப்ரேஷனில் தவறுதலாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த குழு அமைக்கப்பட்டது. இச்சம்பவத்திற்குப் பிறகு, நாகாலாந்து சட்டமன்றம் AFSPA-ஐ ரத்து செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.

பதிவாளர் ஜெனரல் மற்றும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் விவேக் ஜோஷி தலைமையிலான இந்தக் குழுவில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் பியூஷ் கோயல், நாகாலாந்து தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல், அசாம் ரைபிள்ஸ் டிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

2004-ல் அப்போதைய மன்மோகன் சிங் அரசால் அமைக்கப்பட்ட ஜீவன் ரெட்டி கமிட்டி AFSPA-ஐ ரத்து செய்ய பரிந்துரைத்தது. இதைத் தொடர்ந்து, இது குறித்து ஆராய அமைச்சரவை துணைக் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், மோடி அரசு ரெட்டி கமிட்டியின் பரிந்துரைகளை நிராகரித்தது மற்றும் அமைச்சரவை துணைக் குழுவும் கலைக்கப்பட்டது.

அதன்பிறகு, AFSPAவை ஒட்டுமொத்தமாக ரத்து செய்வது பற்றியோ அல்லது எந்த மாநிலத்திலிருந்தும் அதை அகற்றுவது தொடர்பாகவோ எந்தக் குழுவும் அமைக்கப்படவில்லை. மாநில அரசுகள், ஆயுதப்படைகள் மற்றும் மத்திய ஏஜென்சிகளுடன் உரிய ஆலோசனைக்குப் பிறகு அரசால் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ AFSPA திணிக்கப்படுகிறது அல்லது அகற்றப்படுகிறது என்று அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.

AFSPA ஒரு மாநிலம் அல்லது ஒரு மாவட்டத்தில் ஆறு மாதங்களுக்கு மட்டுமே விதிக்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து அது மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். “மாநிலங்கள், பாதுகாப்புப் படைகள் மற்றும் மத்திய அமைப்புகளின் கருத்தைப் பெற்ற பிறகு இது செய்யப்படுகிறது. முழு செயல்முறையும் உள்துறை செயலாளரின் மேற்பார்வையின் கீழ் நடைபெறுகிறது,” என்று ஒரு அதிகாரி விளக்கினார்.

முன்னதாக மோடி அரசாங்கம் AFSPA ஐ முழுமையாக மேகாலயாவில் இருந்தும், பகுதியளவு அருணாச்சல பிரதேசத்தில் இருந்தும் நீக்கியுள்ளது. மார்ச், 2018 இல், உள்துறை அமைச்சகம் மேகாலயாவிலிருந்து AFSPA ஐ முழுமையாகவும், அருணாச்சலப் பிரதேசத்தில் அசாம் எல்லையில் உள்ள எட்டு காவல் நிலையப் பகுதிகளில் இருந்தும் அகற்ற உத்தரவிட்டது. ஓராண்டுக்குப் பிறகு, இது மேலும் நான்கு காவல் நிலையங்களாகக் குறைக்கப்பட்டது. அருணாச்சலத்தில் தற்போது இந்த நான்கு காவல் நிலையங்கள் தவிர மூன்று மாவட்டங்கள் AFSPA கீழ் உள்ளன.



Read in source website

IPL 2022, MS Dhoni Completes 7000 T20 Runs, During LSG vs CSK match Tamil News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி டி-20 போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

MS Dhoni Tamil News: 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடந்த 7-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக விளையாடியது. சென்னை அணியின் வீரர்கள் சிக்சர் மழை பொழிந்தனர். அணியில் அதிகபட்சமாக உத்தப்பா 50 ரன்கள் அடித்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்கள் குவித்தது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் சிவம் துபேயின் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி தனது ஆட்டத்தை சிக்ஸருடன் தொடங்கினார். அவர் மேலும் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் குவித்தார். இதன் மூலம் தோனி அனைத்து விதமான டி-20 போட்டிகளையும் சேர்த்து 7 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனையை நிகழ்த்தினார். அவர் இந்த சாதனையை படைக்கும் 6-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

முன்னதாக, இந்த சாதனையை விராட் கோலி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் படைத்துள்ளனர்.

இந்த ஆட்டத்தில் தோனி மற்றொரு மைல்கல்ளையும் அடைந்தார். விக்கெட் கீப்பராக அவர் அனைத்து விதமான டி-20 போட்டிகளிலும் சேர்த்து 200 கேட்ச்களை பிடித்துள்ளார்.



Read in source website

 கடல் வளமும், இயற்கை வளமும் மிகுந்த இலங்கைத் தீவு, அந்நாட்டு ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால் தற்போது கடும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. 2.2 கோடி மக்கள்தொகை கொண்ட அந்நாடு, உலகப் பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி திவால் நிலையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.
 நிலக்கரி வாங்க நிதி இல்லாததால் அங்கு தினசரி அதிகபட்சம் 10 மணிநேர மின்வெட்டு தொடர்கதையாகி விட்டது. அந்நிய செலாவணி இருப்புக் குறைவால் எரிபொருள் இறக்குமதி குறைந்து, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு பற்றாக்குறையுடன், அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. உணவுப் பொருள்களின் விலை உயர்வாலும் தட்டுப்பாட்டாலும், பெரும்பாலான குடும்பங்கள் இருவேளை உணவு முறைக்கு மாறும் அளவிற்கு அந்நாட்டு மக்கள் அல்லாடுகின்றனர்.
 அதுமட்டுமல்ல, உலக நாடுகளிடம் வாங்கிய பல பில்லியன் டாலர் கடன் சுமையால் இலங்கை தள்ளாடுகிறது. கடனைத் திருப்பித் தர முடியாமலும், அன்றாடச் செலவுகளுக்கு மீண்டும் அந்நியக் கடனை வாங்க வேண்டிய நிலையிலும் அந்நாடு தத்தளிக்கிறது.
 பிப்ரவரி 2022 நிலவரப்படி இலங்கை வெளிநாடுகளில் வாங்கியுள்ள கடனின் அளவு 51 பில்லியன் டாலர் (இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.14.3 லட்சம் கோடி). இதில் உடனடியாக திருப்பிக் கொடுத்தாக வேண்டிய கடனின் மதிப்பு 7 பில்லியன் டாலர். ஆனால் அந்நிய செலாவணிக் கையிருப்பு 2 பில்லியன் டாலர் மட்டுமே இருக்கிறது. அதுவும் அன்றாட இறக்குமதிக்கு அளிக்கவே போதவில்லை.
 இந்த நிலை திடீரென ஏற்பட்டு விடவில்லை. கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்தே ஆட்சியாளர்களின் தவறான கொள்கை முடிவுகளால் இலங்கை பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்லத் தொடங்கி விட்டது. கடந்த இரண்டாண்டு கால கரோனா பொதுமுடக்கம் இந்த வீழ்ச்சியை மேலும் விரைவுபடுத்திவிட்டது.
 2019-இல் அதிபர் கோத்தபய ராஜபட்ச மேற்கொண்ட சில முக்கிய முடிவுகளே இன்றைய நிலைக்குக் காரணம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். முதலாவதாக, நாட்டின் வரிவிதிப்பு முறையில் மாற்றம் செய்த அதிபர், 15% வரியை 8% ஆகக் குறைத்தார். இதனால் அரசின் வரி வருவாய் குறையத் தொடங்கியது. அதேசமயம், அரசுத் துறையில் ஒரு லட்சம் புதிய வேலைகளை அவர் உருவாக்கினார். அதனால் அரசின் செலவினம் அதிகரித்தது.
 போதிய ஆய்வின்றி இயற்கை விவசாயத்தை அரசு நடைமுறைப்படுத்தியதால், இலங்கைக்கே உரித்தான தேயிலை, மிளகு, ஏலம், காய்கறி உற்பத்தியில் சுமார் 30% சரிவு ஏற்பட்டது. அதேசமயம், நாட்டின் ஜி.டி.பி.யில் 10% பங்களிக்கும் சுற்றுலாத் துறையும் கரோனா நோய்த்தொற்றால் கடும் வீழ்ச்சி அடைந்தது. 2019-இல் 7.5 பில்லியன் டாலராக இருந்த சுற்றுலா வருவாய், 2021-இல் 2.8 பில்லியன் டாலராகக் குறைந்தது. இந்த நிலையிலும், கடந்த நிதியாண்டில் ராணுவத்துக்கு 1.62 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
 கரோனா தொற்றுப் பரவலால் விவசாய விளைபொருள், ஆயத்த ஆடை ஏற்றுமதியும் சரிவு கண்ட நிலையில், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 2021-இல் 6 பில்லியன் டாலராக அதிகரித்தது. அதேபோல, நாட்டின் நிதிப் பற்றாக்குறை 2020-இல் 5% ஆக இருந்தது, 2022-இல் 15% ஆக அதிகரித்தது. இந்த பொருளாதாரச் சரிவால், அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 280.42 (மார்ச் நிலவரம்) ஆக வீழ்ந்தது. இது நாட்டின் பொருளாதார நிலையை மேலும் பாதித்தது. 2021 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 1.5% ஆக இருந்தது.
 இவையெல்லாம் போதாதென்று, ஹம்பன் தோட்டா துறைமுகம், பன்னாட்டு விமான நிலையம் போன்ற பிரமாண்டமான திட்டங்களில் அளவுக்கு மீறி முதலீடு செய்தது இலங்கை அரசு. இதில் ஊழல் முறைகேடு குறித்த புகார்களும் உண்டு. இந்த முதலீடுகளுக்கு சீனாவின் கடனுதவியை இலங்கை சார்ந்திருந்தது. அந்நாட்டுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடனை செலுத்த முடியாததால், பல அரசு சொத்துகளை சீனாவுக்கு குத்தகைக்கு விடும் நிலை தற்போது இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.
 இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் சீனா 10% பங்கு வகிக்கிறது; அந்நாடு கந்துவட்டிக்காரர் போலவே உலகிலுள்ள ஏழை நாடுகளை கடன் வலையில் வீழ்த்தி வருகிறது.
 இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டின் ஜி.டி.பி.யைக் கருத்தில் கொள்ளாமல், அதிக அளவிலான கரன்சி நோட்டுகளை அச்சிட்டது இலங்கை அரசு. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சம் கோடி இலங்கை ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது. நாட்டின் உற்பத்தி - வருவாயைக் கணக்கில் கொள்ளாமல் செயற்கையாக கரன்சியைப் பெருக்கியதன் விளைவாக, நாட்டில் பணவீக்கம் அதிகரித்தது. 2022 பிப்ரவரி நிலவரப்படி இலங்கையின் பணவீக்கம் 17.5% ஆக இருந்தது. இதுவே உச்சபட்ச விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்திருக்கிறது.
 கடந்த ஒரு மாதமாக நடைபெறும் உக்ரைன் - ரஷிய போரால், கோதுமை, சமையல் எண்ணெய்க்கு அந்நாடுகளைப் பெருமளவில் சார்ந்திருக்கும் இலங்கை கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பொறுத்தவரை இறக்குமதியைச் சார்ந்திருக்கக் கூடாது என்ற அடிப்படை உண்மையை அந்நாடு இப்போது உணர்ந்திருக்கிறது. வெளிநாட்டுக் கடன்களையே இலங்கை நம்பி இருப்பது அந்நாட்டின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
 



Read in source website

 திரையுலகக் கதாநாயகர்களை அவர்களுடைய ரசிகர்கள் கொண்டாடுவது என்பது காலங்காலமாக நடைபெறும் விஷயம்தான். அந்தக் காலத்து எம்.கே. தியாகராஜ பாகவதர், டி.ஆர். மகாலிங்கம் தொடங்கி இந்தக் காலத்தின் எண்ணற்ற கதாநாயகர்கள் வரையில் அனைவருக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
 தங்கள் நெஞ்சம் கவர்ந்த நாயகர்களின் திரைப்படம் வெளியாவதற்குக் காத்துக் கிடப்பதும், வெளிவந்த பின்பு தங்களின் சொந்தச் செலவில் அந்த நாயகர்களின் புகைப்படம் கொண்ட பதாகைகளை நிறுவி அவற்றுக்குப் பாலபிஷேகம் செய்தும் மாலை சூட்டியும் ரசிகர்கள் மகிழ்வது வழக்கம்.
 சில நடிகர்களின் ரசிகர்கள் நற்பணி மன்றங்களைத் தொடங்கி அன்னதானம் செய்வது, ரத்ததான முகாம் ஏற்பாடு செய்வது என்றெல்லாம் செய்கின்றனர். ஆனால், பெரும்பாலான ரசிகர்கள் இவ்வாறு ஆக்கபூர்வமாக ஏதேனும் தொண்டு செய்வதை விடவும், தங்கள் மனம் கவர்ந்த நாயகனின் புதுப்பட வெளியீட்டைக் கொண்டாடுவதுடன், அந்தப் படத்தை முதல் நாள் முதல் காட்சியிலேயே பார்த்து விடுவது என்பதையே தங்களின் வாழ்நாள் சாதனையாக எண்ணிப் பெருமிதம் கொள்கின்றனர்.
 சில நேரத்தில் அத்தகைய புதுப்படங்கள் விடியற்காலையில் சிறப்புக் காட்சியாக திரையிடப்படும்போது அதற்கு முந்தைய நாள் இரவெல்லாம் கண்விழித்தும், பலமடங்கு கட்டணம் செலுத்தியும் அவற்றைப் பார்த்து மகிழ்கின்றனர்.
 இவற்றையெல்லாம் கூட ஏதோ ஒருவித ஆர்வக் கோளாறு என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தாங்கள் வழிபடும் கதாநாயகனின் திரைப்படம் குறிப்பிட்ட தினத்தில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வந்த பிறகு ஏதோ ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவ்வாறு வெளியிடப் படாமல் போகும்போதோ திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தடைப்பட்டாலோ ஏதோ இந்த உலகமே மூழ்கிவிட்டது போன்று நினைத்துக் கொண்டு கலவரங்களில் ஈடுபடுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது ?
 சமீப காலமாக இத்தகைய பொறுப்பற்ற இளம் ரசிகர்களின் வன்முறை காரணமாகப் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்படுவது தொடர்கதையாகி விட்டது. சாதாரணத் திரைப்படம் ஒன்றைப் பார்க்க முடியாததற்காகக் கலவரத்தில் ஈடுபடும் ரசிகர்கள் நமது மாநிலத்தில் மட்டுமின்றி நாடெங்கிலும் இருக்கின்றார்கள்.
 மிகப்பெரிய பொருட்செலவில் இரண்டு முக்கியக் கதாநாயகர்களை நடிக்க வைத்து தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் உருவாக்கப்பட்ட ஆர். ஆர். ஆர். என்கிற திரைப்படம் அண்மையில் திரையிடப் பட்டது. அதன் இயக்குனரும் பிரம்மாண்டப் படங்களின் இயக்குனர் என்ற புகழைப் பெற்றவராவார். வழக்கம் போலவே அந்தப் படத்தின் இரண்டு கதாநாயகர்களுடைய ரசிகர்களும் திரைப்படம் வெளியாவதற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.
 ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் அந்தப் புதிய படம் திரையிடப்பட்ட சிறிது நேரத்தில் திரையில் சரியாகக் காட்சிகள் தெரியவில்லை. திரையரங்க ஊழியர்கள் தொழில்நுட்பக் கோளாற்றைக் கண்டறிந்து மீண்டும் படத்தை இயக்குவதற்குள் கொதித்துப் போன ரசிகர்கள் ஒட்டுமொத்தத் திரையரங்கையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
 இது போதாதென்று அங்கிருந்த ரசிகர்களில் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை உயர்த்திக் காட்டி ஆரவாரம் செய்திருக்கின்றார். விசாரணையில், துப்பாக்கியை வைத்திருக்க உரிமம் பெற்றுள்ள அந்த ரசிகர், ஆர்வ மிகுதியில் அவ்வாறு செய்ததாகத் தெரிய வந்துள்ளது. மொத்தத்தில், துப்பாக்கி வைத்திருந்தவர் உட்பட, கலவரத்துக்குக் காரணமானவர்கள் அனைவரின் மீதும் சட்ட நடவடிக்கை பாய்ந்திருக்கிறது.
 நமது தமிழகத்திலும் முன்னணிக் கதாநாயகர்கள் நடிக்கின்ற புதுத் திரைப்படங்கள் வெளிவரும் நேரங்களில் எல்லாம் இத்தகைய வன்முறைகள் ஆங்காங்கே நிகழ்ந்தேறுகின்றன. புதுப் படங்களை முதல் நாள் முதல் காட்சியாகப் பார்க்க முடியாவிட்டால் திரையரங்குகளையும் இதர பொதுச் சொத்துகளையும் சேதப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. ஒரே நாளில் இரண்டு கதாநாயகர்களின் படங்கள் வெளியாகும்படி நேர்ந்துவிட்டால், இரண்டு கதாநாயகர்களின் ரசிகர்களிடையே மோதல் வெடிப்பதும், இணையதளம் உள்ளிட்ட பொதுவெளிகளில் இரண்டு வெவ்வேறு கதாநாயகர்களின் ரசிகர்களும் பரஸ்பரம் வார்த்தைகளால் தாக்கிக் கொள்வதும் உண்டு.
 இதற்கெல்லாம் காரணம் நம் நாட்டின் இளைஞர்கள் ரசனை என்பதை வெறியாக உள்வாங்கிக் கொண்டிருப்பதுதான். நாடும் வீடும் அன்றாடம் சந்திக்கும் எத்தனையோ வாழ்வாதாரப் பிரச்னைகளுடன் ஒப்பிடும் பொழுது, ஒரு புதிய திரைப்படத்தை அது வெளியிடப்படும் நாளிலேயே பார்த்துவிடுவது ஒன்றும் முக்கியமான விஷயமல்ல.
 திரைப்படத் துறையில் பணிபுரிபவர்களுக்கு இயக்கம், நடிப்பு, இசை, கதை, வசனம் என்று பலதுறைப்பட்ட திறமைகள் இருக்கின்றன. அவற்றை ஒருங்கிணைத்து ஒரு திரைப்படமாக உருவாக்கி வெளியிடுவதை வாய்ப்பு கிடைக்கும் பொழுது பார்த்து ரசித்தால் போதுமானது. மற்றபடி ஒரு திரைப்படத்தை முதல் நாளே பார்க்க முடியாவிட்டால் எந்த நஷ்டமும் இல்லை என்பதையும், திரைப்பட நாயகர்கள் என்பவர்கள் நம்முடைய பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் விட முக்கியமானவர்கள் இல்லை என்பதையும் நம் இளைஞர்கள் உணரத் தொடங்க வேண்டும்.
 இதை எல்லாம் தாண்டி, தாம் விரும்பும் கதாநாயகர்களின் ஒரேமாதிரியான, இயல்புக்கு மாறான மிகை நடிப்புக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதன் மூலம் அந்நாயகர்கள் வித்தியாசமான பாத்திரங்களில் நடித்துத் தங்களின் திறமையை வெளிப்படுத்துவது தடைபடும். இரண்டு பாடல்கள், இரண்டு சண்டைக் காட்சிகள், படம் முடியும் தறுவாயில் எதிரிகளைத் துரத்தி வேட்டையாடுதல் இவற்றைக் கொடுத்தாலே தங்களின் ரசிகர்கள் திருப்திப்பட்டு விடுவார்கள் என்ற நிலைமை எந்த ஒரு திரைக்கலைஞருக்கும் உகந்ததல்ல.
 திரைப்படங்களை இனி கலைரசனையுடன் மட்டுமே பார்ப்பது என்று நம் இளைஞர்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ரசனை வெறியாக மாறாமல் இருக்கும்.



Read in source website

 தேசிய கல்விக் கொள்கை ஏற்புடையது அல்ல என்பதால்தான் மாநில கல்விக் கொள்கை வகுக்கும் கட்டாயம் எழுந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை 1968, 1984 ஆகிய ஆண்டுகளில் வகுக்கப்பட்டுள்ளது. அவை முறையே 6 பக்கம், 21 பக்கம்தான். இப்போதைய (2019-20) தேசிய கல்விக் கொள்கை சுமார் 150 பக்கங்கள் கொண்டது. கல்விக் கொள்கையை நடைமுறைப் படுத்தச் செயல்திட்டம் (பிளான் ஆஃப் ஆக்ஷன் - பிஓஏ) என்ற விரிவுத்திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவராக அன்று இருந்த முனைவர் ராம ரெட்டி 1992-இல் தயாரித்தார். அது சுமார் 300 பக்கங்களைத் தொட்டது. கல்விக் கொள்கை என்பது அன்று சுருக்கமாக இருந்த நிலையில், இன்றையக் கல்விக்கொள்கை 150 பக்கங்களில் ஒரு பிஓஏ போன்று உள்ளது.
 தேசிய கல்விக் கொள்கையின் முகவுரையை மட்டும் படித்து விட்டுப் பலர் இக்கொள்கையைப் பாராட்டியுள்ளனர். நாமும் பாராட்டலாம். ஆனால், உள்ளே நுழைந்தால்தான் இது எந்த அளவு சமூக விரோதமானது என்பதைக் காணலாம். இதனை வகுக்க அமைக்கப்பட்ட குழுவில் கல்வியாளர் எவரும் இல்லை என்பதை நோக்கவேண்டும்.
 காலத்துக்கேற்ற மாறுதல் தேவைதான். அதை அந்தந்த மாநிலங்களும், மாநிலப் பல்கலைக்கழகங்களுமே செய்து கொள்ள முடியும். ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே கலாசாரம் என்று அதிகாரத்தை மையப்படுத்தும் வகையில்அமையும் கல்விக் கொள்கை தேவை இல்லை.
 தமிழ்நாடு கல்வித் திட்டத்தில் படித்த மூவர் இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆகியுள்ளார்கள். டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் முன்பு தயாரித்த "இராதாகிருஷ்ணன் (கல்வி) அறிக்கை' இன்றும் சிறப்பாகப் பேசப்படுகிறது. ஆர். வெங்கட்ராமன், தமிழகத்தில் பல துறைகளில் அமைச்சராக அனுபவம் பெற்று, மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சராக சிறப்பாகப் பணியாற்றியவர். அப்துல் கலாம் இஸ்ரோவிலும், பாதுகாப்பு அமைப்பிலும் திறம்படப் பணியாற்றி, பிரதமரின் அறிவியல் ஆலோசகராகப் பணி உயர்வு பெற்று, பின்னர் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர்.
 இம்மூவர் மட்டுமல்ல, சி. சுப்பிரமணியம் தமிழகத்தில் அமைச்சராகப் பணியாற்றியவர். பின் மத்திய அரசில் பாதுகாப்பு அமைச்சராகவும் திறம்படச் செயலாற்றியவர். அதன் பின், பசுமைப் புரட்சியைப் புகுத்தி, நாட்டில் உணவு பற்றாக்குறையைப் போக்கியவர். இவரும் தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கைத் திட்டத்தில் பயின்றவரே.
 பாமரர்களுக்கும் பயன்படும் கல்வி தேவைதான். அதனை மட்டும் கோடிட்டுக் காட்டும் வகையில் சுருக்கமான கல்விக் கொள்கையை உருவாக்க முடியும். அப்படியில்லாமல், ஒரு செயல் திட்ட பிஓஏ போன்று கல்விக் கொள்கையை அமைத்திருக்கிறார்கள்.
 மெக்காலே கல்வி முறையை பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் பழிக்கிறார்கள். இங்கேயும் சிலர் அவர்களுடன் சேர்ந்து கொண்டு பேசிவருகிறார்கள். மெக்காலேதான் அவர்களின் மனுநீதியைக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒழித்துக் கட்டியவர். நீதிக்கட்சி 100 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கல்வியையும், அனைவருக்கும் கல்வியையும், வேலைவாய்ப்பையும் கொண்டுவர இதுவே ஊக்கம் அளித்தது.
 அமெரிக்கக் கல்வியாளர் ஒருவர் "கல்வியறிவை கற்பிப்பதே கல்வி நிலையத்தின் வேலை. அவரவர்களின் தேவைக்கேற்ப பயிற்சி அளிப்பது தொழில்துறையினரின் வேலை. ஆகவே, பொதுவாக, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், காந்திஜி வலியுறுத்தியது போன்று உடல் உழைப்பின் மதிப்பை உணர்த்தும் வகையில் பயிற்சி வழங்க வேண்டும். ஒவ்வொரு தொழிலுக்கும் வெவ்வேறு திறமை தேவைப்படும். அவ்வளவையும் கல்விக்கூடங்களில் பயிற்சி கொடுக்க முடியாது' என்று கூறினார். இந்த உண்மையை கல்விக் கொள்கை வகுப்போர் மனதில் கொள்ளவேண்டும்.
 தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்துள்ள "நான் முதல்வன்' பயிற்சித் திட்டத்தின் மூலம், என்னென்ன தொழில்கள் எங்கெங்கு உள்ளன, அவற்றில் என்னென்ன வேலை வாய்ப்புக்கள் உள்ளன, அவற்றில் நமக்கு உகந்தவை எவை என்பதை மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே அறிந்து கொள்ள முடியும். இதுவே போதும். ஒவ்வொரு மாணவரும் விரும்பும் பயிற்சியை பள்ளிகளில் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எல்லாப் பள்ளிகளிலும், எல்லா மாணவர்களும் ஒரே விதமான பயிற்சி பெறுவது சரியல்ல. இப்பயிற்சிகளுக்குத் தொழில் துறையினர் பங்களிப்பு தேவை. எனவே, தொழிலதிபர்களும் கல்வித் திட்டம் வகுப்பதில் பங்கு பெற வேண்டும்.
 இந்த தேசிய கல்விக் கொள்கையில், பள்ளிக் கல்வி நிலையிலேயே நான்கு வடிகட்டுதல்கள் உள்ளன. தேர்வில் தவறுவோர் மேல் வகுப்புக்கு செல்ல இயலாமல் நிறுத்தப்படுகிறார்கள். மறு வாய்ப்புகள் மறைமுகமாக மறுக்கப் படுகின்றன. சமூகத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்திலிருந்து வருகின்ற மாணவர்கள், குறிப்பாக மாணவிகள், பல வாய்ப்புகளைப் பெறாவிட்டால் மேல் கல்வியே பெறமுடியாது.
 கல்லூரி கல்வியில், "பல கட்டங்களில் பல கல்வி நிலையங்களில் அல்லது அஞ்சல் வழியில் படித்து சான்றிதழ் படிப்போ பட்டயப் படிப்போ பட்டப் படிப்போ பெற முடியும்' என்பது கேட்பதற்கு மிக நன்றாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், இது நடைமுறையில் பெரிய குழப்பத்தை உருவாக்கும். அதுவும் ஒரு கல்லூரியிலோ பல்கலைக்கழகத்திலோ பெற்றுக் கொள்ளலாம் என்பது மேலும் குழப்பத்தை விளைவிக்கும்.
 பிரிட்டன், அமெரிக்காஆகிய நாடுகளில் உள்ளது போன்ற நிலையைக் கருத்தில் கொண்டு இங்கு தேசிய கல்விக் கொள்கை வகுத்துள்ளனர். அங்கெல்லாம் பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற கல்லூரிகளும் மட்டுமே உள்ளன. இந்தியாவில் இருப்பதுபோல் இணைப்பு (அஃப்ளியேடட்) கல்லூரிகள் கிடையாது. அங்கெல்லாம் மக்கள்தொகையும் குறைவு.
 இங்குள்ள அதிக மக்கள்தொகை, குடும்ப, சமூகப் பொருளாதார நிலை இவையெல்லாம் வேறுபட்டவை. அங்கெல்லாம் இருப்பதுபோல், மாணவர் எண்ணிக்கை அதிகம் கொண்ட பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற கல்லூரிகளும் இங்கும் வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை குறிப்பிடுகிறது. இது நமது நாட்டின் நிலைமையை உணராதவர் கூற்றாகும்.
 அந்நாடுகளில் உயர்கல்விக் கொள்கையை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே உருவாக்கிக் கொள்கின்றன. இப்போது 3 ஆண்டு 4 ஆண்டு பட்டப்படிப்பு என்று அரசே கொள்கை வகுத்துள்ளது. ஊடகங்கள் அனைத்தும் இதையே பெரிதாகப் பேசுகின்றன. இந்த அமைப்பு புதிதல்ல. 60 ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் பி.ஏ., பி.எஸ்சி இருந்தது.
 பி.ஏ., பி.எஸ்சி இரு ஆண்டு படிப்பு. பி.ஏ., பி.எஸ்சி ஹானர்ஸ் 3 ஆண்டு படிப்பு. ஹானர்ஸ் தேறியோர் நேரிடையாக முனைவர் பட்டப் படிப்பில் சேர முடிந்தது. பி.ஏ., பி.எஸ்சி படித்தவர்கள் இரு ஆண்டு எம்.ஏ., எம்.எஸ்சி முடித்தபின் முனைவர் பட்டப் படிப்பில் சேரலாம். ஆகவே இது ஒன்றும் புதிய கொள்கை அல்ல. இந்தத் தேசிய கல்விக் கொள்கையில் மூன்று ஆண்டு படித்துப் பட்டம் பெறுவோர் மட்டமாக நினைக்கப்படுகிறார்கள்.
 நான்கு ஆண்டு பட்டப் படிப்பை முடித்தவர்கள் நேரடியாக முனைவர் பட்ட ஆய்விற்குச் செல்லலாம் என விதி உருவாக்குவது குறித்து பரிசீலிக்கும்படி பல்கலைக்கழகங்களுக்கு அரசு ஆலோசனை கூறலாம். அதை விடுத்து, அரசே விதி அமைத்து கட்டாயப்படுத்துவதாக இந்த தேசிய கல்விக் கொள்கை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டுள்ள நாடுகளில் கூட இப்படிப்பட்ட விதிமுறைகளை பல்கலைக்கழகங்களே உருவாக்குகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
 இன்றும் சில பல்கலைக்கழகங்களிலும், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களிலும் (ஐஐடி) இம்முறை உள்ளது. இருந்தாலும், முனைவர் ஆய்விற்கு வழி காட்டும் ஆசிரியர் மறுத்தால், மாணவரை அனுமதிக்க முடியாது. அரசு கட்டாயப்படுத்த முடியாது. சில ஆசிரியர்கள் முனைவர் பட்டம் இல்லாமலே மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்துள்ளனர். அவர்கள் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து பல கட்டுரைகள் வெளியிட்டு இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்கள் வேறு யாரும் வழிகாட்டியாக இல்லாமலே தாங்களே ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறவும் பல்கலைக்கழகங்கள் அனுமதி அளித்துள்ளன.
 நாம் வேறு எங்கும் செல்ல வேண்டாம், சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே அப்படி பட்டம் பெற்றவர்கள் உள்ளனர். கிண்டி பொறியியல் கல்லூரி மூத்த பேராசிரியர் ஒருவர் இப்படிப் பட்டம் பெற்றவர்தான். அவர் என்னுடன் பணியாற்றினார். ஆகவே, இவையெல்லாம் பல்கலைக்கழகங்களின் வேலை. அதை புதிய கல்விக் கொள்கை என்று சொல்லக்கூடாது. அது ஆரோக்கியமானது நடைமுறை அல்ல.
 பல மாநிலத்தவர் எதையும் யோசிப்பதில்லை. அகப்பட்டுக் கொண்டபின் வலையில் சிக்கிக் கிடப்பார்கள். தமிழ்நாடு சொன்னதைக் கேட்காமல் மாட்டிக் கொண்டோமே என்று பின்பு அங்கலாய்ப்பார்கள். இது நானே கண்ட அனுபவம். 1965-இல் நான் கர்நாடகத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடினேன். அங்குள்ளோர் என்னை எதிர்த்தனர் (தமிழன் என்பதாலும் இருக்கலாம்). பின்பு அவர்களே சில ஆண்டுகளுக்குப் என்னிடம் வருத்தம் தெரிவித்தனர். ஒரு வேளை இன்று தேசிய கல்விக் கொள்கையை ஆதரிப்போரும் நாளை இப்படி மனம் வருந்தலாம்.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் துணைவேந்தர்,
 சென்னைப் பல்கலைக்கழகம்.



Read in source website

 

இந்திய பெருங்கடலின் பெரும்பகுதியை சீனா மற்றும் நார்வே தூண்டுதலால் சிங்கள அரசு கைப்பற்றத் துடிக்கிறது. இதுகுறித்தான ஆவணங்கள் தற்போது வெளிவந்துள்ளன. ஐ.நா.வில் சிங்கள அரசு, இந்து மகா சமுத்திரத்தின் பெரும் பகுதியைத் தன் நிலத்திற்கு சொந்தமென உரிமை கோரி மனு அளித்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் ஆதிக்கம் தற்போது ஏறத்தாழ 200 மைல்களாக உள்ளதை 350 மைல்களாக அதிகரிக்க வேண்டி ஐ.நா-வில் முறையிட்டுள்ளது. இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய இந்தியாவோ வாய்மூடி மௌனியாகவே இருந்துகொண்டிருக்கிறது.

இப்படியான சிக்கலில், போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் நேரடியாக கேரளம், தமிழகம், குறிப்பாக குமரி முனையிலிருந்து இராமேஸ்வரம், நாகை வரை உள்ள கடற்கரைப் பகுதிகளுக்கும் நாட்டின் பாதுகாப்பில் பாதகம் ஏற்படும்.

இது தமிழகத்தின் வாழ்வாதார, பாதுகாப்பு பிரச்னை. இலங்கையின் இந்த கோரிக்கை விசாரிக்கப்பட்டு, இறுதித் தீர்ப்புக்காக அடுத்த ஐ.நா. அமர்விற்கு தள்ளிப்போட்டுள்ளது. இதே மாதிரியான மனுவை இந்திய அரசும் ஒருமுறை ஐ.நா.வில் கொடுத்ததாகத் தகவல்கள் உள்ளன. சிங்களம் கைப்பற்றத் துடிப்பது குமரிக் கண்டத்தின் இந்திய பெருங்கடலின் பெரும் நீர்பரப்பை.

ஏற்கெனவே, கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டு, இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டும், கைது செய்யப்பட்டும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். இப்போது இலங்கை, இந்தியாவின் பாதுகாப்புக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் சீனாவின் துணையுடன் இந்திய பெருங்கடலில் தனது ஆளுகையை ஏறத்தாழ 350 மைல்களுக்கு விரிவாக்க வேண்டி முறையிட்டுள்ளது.

வழக்கமாக சர்வதேச கடல் பகுதியில் ஒரு நாட்டின் ஆளுகையானது 200 மைல் தொலைவுக்குதான் இயங்க முடியும். இது சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானது. இந்த நிலை எதற்கு என்றால் இந்திய பெருங்கடலில் இந்தியாவை அச்சுறுத்தவே சீனா இலங்கையைப் பகடைக் காயாகப் பயன்படுத்துகிறது.

அமைதி மண்டலமான இந்து மகா சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒருபக்கத்தில் சீசல்ஸின் டீகோ கார்சியா தீவுப் பகுதியில் பிரிட்டன் மூலமாகக்  குத்தகைக்கு எடுத்து அமெரிக்கா ராணுவத் தளம் அமைக்க இருக்கிறது.

பிரான்ஸும் ரஷ்யாவும் இந்தக் கடலில் தனது ஆதிக்கத்தை செலுத்த திட்டங்களை தீட்டியுள்ளது. பெயருக்குதான் இந்தியப் பெருங்கடல். நம்முடைய கண்காணிப்பையும் மீறி இலங்கையின் தயவால் அமெரிக்காவும் சீனாவும் வியாபாரத்திற்காகவும் (Silk Road) தனது போர்க்கப்பல்களை எல்லாம் அங்கு நிறுத்த மட்டுமல்லாமல் கடற்படைப் பயிற்சிகளும் நடப்பதாக செய்திகள் வருகின்றன.

கச்சத்தீவு வரை சீனாவின் தேசியக் கொடிகள் பறந்தன. தற்போதைய நிலையில் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மர், நேபாளம், இலங்கை, வங்கதேசம் போன்றவற்றுடன் நல்ல ஒருங்கிணைப்பான- இணக்கமான உறவுகள் இந்தியாவிற்கு இல்லாமல் இருப்பது அனைவரும் அறிந்ததே. மாலத்தீவு மட்டும் இந்தியாவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் சூழலுக்கேற்றவாறு நடந்துகொள்கிறது.

அமெரிக்காவைப் பொருத்தவரை தன் மீதான சர்வதேச நாடுகள் சார்ந்திருக்கச் செய்ய வேண்டும் என்றே விரும்புகிறது. இத்தகையதொரு தன்மையினை அடைந்துகொள்ள அமெரிக்கா கடைப்பிடிக்கும் உபாயங்கள் மூன்றாம் உலக யுத்தத்திற்குகூட வழிவகுக்கலாம். ஆனால் இது சீனாவின் இராஜதந்திர ரீதியிலான செயற்பாட்டினைப் பொருத்தே அமையும்.

உலக, பிராந்திய நலன், அதிகாரங்கள் போன்றவற்றைக் கைப்பற்ற அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய யூனியன் நடத்தும் அதிகார போராட்டத்தில் இந்து சமுத்திர பிராந்தியமும், இலங்கையும் முதன்மையான இடத்தினைப் பெற்றுள்ளன.

இந்து சமுத்திர பிராந்தியம் இன்று அரசியல் பொருளாதார இராணுவ ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாகியுள்ளது. வரலாற்றில் இப்பிராந்தியம் பெற்றிருந்த முக்கியத்துவத்தில் இருந்தே இன்றைய இதன் முக்கியத்துவத்தை உணரக் கூடியதாக உள்ளது.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் பெரும் பேரரசாகத் தோற்றம் பெற்ற சோழப் பேரரசு கிழக்கு ஆசிய நாடுகளில் தமது செல்வாக்கினைப் பெருக்கவும் பின்னர், அரேபியர்களின் கவனத்தை ஈர்த்த இப்பிராந்தியம் அராபியர்களின் சமய, கலை, கலாச்சாரங்களை இப்பிராந்திய நாடுகளில் பரப்பவும் வாய்ப்பு ஏற்பட்டது.

16 ஆம் நூற்றாண்டில் இப்பிராந்தியத்தில் ஐரோப்பியர் ஆதிக்கம் பெற தொடங்கியதுடன், அவர்கள் உலகில் அரசியல் பொருளாதார ரீதியில் மேன்மையடைய வழி ஏற்பட்டுள்ளதுடன் சமயத்தை பரப்பச் செய்யவும் வாய்ப்பு கிடைத்தது.

இப்பிராந்திய நாடுகள் இராண்டாம் உலக யுத்தத்தை தொடர்ந்து காலனித்துவ ஆதிக்கத்தைத் தோற்கடித்தன. இதனால் மேலைதேச வல்லரசுகள் இப்பிராந்தியத்திலுள்ள நலன்களைத் தமதாக்கிக்கொள்ள புது வடிவங்களை நிலைநிறுத்த முற்பட்டனர்.

இத்தகையதொரு நிலையில் இந்து மகா சமுத்திர நாடுகளின் நிலை இவ்வல்லரசுகளின் போட்டிக்குள் ஏதோ ஒருவகையில் சிக்கி தமது சுய ஆதிக்கம் மற்றும் அமைதியை இழந்து வாழவேண்டிய துர்பாக்கியம் உள்ளதாய் இருக்கிறது.

இந்திய பெருங்கடல் ஆப்பிரிக்கா, ஆசியா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இது ஏறத்தாழ 28,350,000 சதுர மைல் பரப்பு கொண்டதாகும்.  உலகிலுள்ள பெரிய சமுத்திரங்களில் மூன்றாவது சமுத்திரமாகவும் உலக நீர்ப்பரப்பில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது. மேலும், தென்முனையில் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளடங்கலாக 10,000 கிலோ மீட்டர் அகலத்தைக் கொண்டது.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தை ஐந்து புவிசார் அரசியல் பிரதேசங்களாக பிரிக்கலாம். கிழக்கு ஆப்பிரிக்கா பிராந்தியம், தென் மேற்காசியா பிராந்தியம், தென்னாசியப் பிராந்தியம், ஆஸ்திரேலிய பிராந்தியம் என ஐந்து பிராந்தியங்களாகக் கொள்ளலாம். இது தென்கிழக்காசியாவையும், மத்திய கிழக்கையும் அதாவது மலாக்கா நீரினையும், அரபிக்கடலையும் இணைக்கும் சமுத்திரமாகவும் விளங்குகிறது.

மேலும், அரபிக்கடல், வங்களாவிரிகுடா, ஓமன் வளைகுடா, ஆஸ்திரேலிய குடா, ஏடன் வளைகுடா, பசிபிக்கடல், மொசாம்பிக் கால்வாய், மலாக்கா நீரிணை,சபுக் கடல், தீமோர் கடல் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய அகன்ற கடற்பிராந்தியமாகும்.

குறிப்பாக, இந்திய பெருங்கடலைச் சார்ந்து 47 நாடுகள் உள்ளன. இதில் 36 நாடுகள் கரையோர நாடுகளாகவும், 11 நாடுகள் பின்னணி நாடுகளாகவும் காணப்படுவதுடன்  கொக்கோ தீவுகள், இலங்கை, அந்தமான் தீவுகள், மாலத்தீவுகள், டிகோ கார்சியா, மொரிஷியஸ், பிச்ரல்ஸ் போன்ற பல தீவுகளும் அமைந்துள்ளன.

அதே நேரம் கப்பல் போக்குவரத்துக்கான பல துறைமுகங்கள் காணப்படுகின்றன. சிற்றாங் கொஸ், திருகோணமலை, கொழும்பு, ஹம்பாந்தோட்டை, தூத்துக்குடி, சென்னை, நாகை, விசாகப்பட்டினம், கொச்சி, கர்வோர், நர்மாறா வோடர், தீலுகிஸ் துறைமுகம், விக்டோரியா துறைமுகம், பூயூகென் என பல துறைமுகங்கள் இந்திய பெருங்கடலைச் சேர்ந்த பிராந்திய நாடுகளில் உள்ளன.

பெருமளவான சக்தி மூல வளங்களான பெட்ரோலியமும் இயற்கை வாயுவும் மிக முக்கியமானவை. இவை தவிர பல தாது பொருட்களான தகரம், செம்பு, ஈயம், மற்றும் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், பருத்தி, ஆடைகள் போன்ற பெறுமதி மிக்க தாதுப்பொருட்களையும் கொண்டுள்ளதுடன் இன்று உலகில் முக்கிய சர்ச்சைக்குரிய ஓர் மூலவளமான யுரேனியம் இப்பராந்தியத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா பகுதிகளில் காணப்படுகின்றது. மேலும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தவிர்த்து மற்ற பிராந்திய நாடுகளில் பரவலாக விவசாயப் மூலப் பொருட்கள் காணப்படுகின்றன.

மேலும் 40 எண்ணெய் உற்பத்திகள், பெர்சியன் வளைகுடாவிலிருந்தும் இந்தோனேசியாவில் இருந்தும் இந்திய பெருங்கடல் வழியாக ஏனைய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. மலாக்கா நீரிணை உலகத்தில் இரண்டாவது கடல்வழிப் பாதையாகும். ஜப்பானுக்கான எண்ணெய் விநியோகத்தில் 80 சதவீதம், சீனாவுக்கான எண்ணெய் விநியோகத்தில் 60 சதவீதமும் மலாக்கா நீரிணை வழியாக இடம்பெறுகின்றன.

70 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான மசகு எண்ணெய் ஒவ்வொரு வருடமும் இந்த நீரினை வழியாக எடுத்துச் செல்லப்படுகின்றன. உலக நாடுகளுக்கு கப்பல்களில் பொருள்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன்களில் ஏறக்குறைய அரைப்பங்கு இவ்வழியாகவே ஏற்றி இறக்கப்படுகின்றன. அதோடு இப்பிராந்தியம் பெரும் சந்தை வாய்ப்பினைக் கொண்டதாகும்.

மேற்கூறப்பட்ட தன்மைகளின் அடிப்படையில் பார்க்கும்போது  இன்றைய நவீன உலகில் இந்தியப் பெருங்கடல் என்றும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகிறது. இதன் காரணமாகவே, 'யார் இந்திய பெருங்கடலைக் கட்டுப்படுத்துவார்களோ அவர்களே ஆசியாவை க்கட்டுப்படுத்துவார்கள். இருபத்தியோராம் நூற்றாண்டில் இதுவே ஏழு கடல்களின் திறவுகோலாக விளங்கும். உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சமுத்திரமாக விளங்கும்” எனக் கூறுகிறார்கள்.

மேலும், இந்திய பெருங்கடல் பொருளாதார ரீதியிலும் தொடர்பாடல் மற்றும் பாதுகாப்பு ரீதியிலும் இலங்கை தீவின் கேந்திர முக்கியத்துவத்தினை ஏற்படுத்துகிறது.

இத்தகைய நிலைமையில் இலங்கை தீவின் கேந்திர முக்கியத்துவத்தினை ஆராய்வதன் வழியாக உலக அமைதி, உலக சமாதானம், உலக பாதுகாப்பு, உலக பொருளாதார போட்டி ஆகிய அம்சங்களை நிகழ்காலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி, நாடுகளில் முன்னெடுத்து செல்லப்படும் என்பதை எதிர்வுகொள்ளக் கூடியதாகவுள்ளது.

இந்தியபெருங்கடல் என்று பெயர் இருந்தாலும், நமது கட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அயலார்களுடைய அத்துமீறலும் வல்லரசுகளின் வல்லாதிக்கமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

அமைதி மண்டலமாக இருந்த இந்தக் கடல் அயல்நாடுகளின் ஆதிக்கத்தால் எதிர்காலத்தில் புவி அரசியலில் பெரும் குழப்பங்களை உருவாக்கும் கடல் மண்டலமாக ஆகிவிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது.

நேரு காலத்தில் வடக்கேயும், வடகிழக்கிலும் சீனாவுடன் போர் நடந்தது. அவர் காலத்திற்குப் பின் வடமேற்கில் பாகிஸ்தானுடன் போர் நடந்தது. தெற்கே இந்திய பெருங்கடலில் இம்மாதிரியான நெருக்கடியில் போர் மூளும் என்ற அச்சம் தற்போதுள்ள சூழலில் ஏற்படுகிறது. அப்படி போர் மூண்டால் கூடங்குளம், மகேந்திரகிரி, தும்பா, ஐஎன்எஸ் கட்டபொம்மன், தூத்துக்குடி ஆலைகள், கல்பாக்கம் வரை தாக்குதல் நடத்தினால் பெரும் துயர விளைவுகள் ஏற்பட்டுவிடலாம்.

எனவே, இதை முன்கூட்டியே தடுக்கக் கூடிய வகையில் இந்தியாவின் இறையாண்மை காக்க அயல்நாட்டினுடைய அத்துமீறலை கண்காணித்து உரிய நடவடிக்கைள் எடுக்க வேண்டும். இல்லையென்றால் தென் மாநிலங்களுக்கு பெரும் ஆபத்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சூழல் வரலாம்.

ஜவாகர்லால் நேரு, தென் தமிழகம் அமைதியான பகுதி என்று நினைத்துதான் இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தென் மாநிலங்களில் அமைத்தார். ஏனெனில் வடமாநிலங்களுக்கு பாகிஸ்தான், சீனா ஆகியவற்றால் போர் பிரச்னை ஏற்படும் என்று எண்ணினார்.

ஆனால், இன்றைய நிலைமைகள் மாறி  இந்தியாவிற்கு கேடுகள் வரக்கூடிய அபாயங்கள் கண்ணில்படுகின்றன. இத்தகைய ஆபத்துகள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது அவசரமும் அவசியமான பணியாகும். டீகோ கார்சியா தீவில் பிரிட்டன், அமெரிக்காவும் ராணுவ தளங்களை அமைக்க வேண்டும் என்று 1969லிருந்து முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்தியா, சோவியத் நாட்டின் ஆதரவுடன் கடுமையாக எதிர்த்ததால் இராணுவ தளங்கள் அமைக்க முடியவில்லை.

அப்போது, அமெரிக்கா, தனது ராணுவத் தளத்தை அமைப்பதற்காக, டீகோகார்சியா தீவில் வசித்துக் கொண்டிருந்த 2,000க்கும் மேற்பட்ட மொரீசியஸ் நாட்டினர் வெளியேற்றப்பட்டனர்.

அந்தத் தீவுக்கு மொரீசியஸ் உரிமை கொண்டாடி வரும் நிலையில், அமெரிக்காவுடனான குத்தகைக் காலம், சமீபத்தில் காலாவதியானது. எனினும், அமெரிக்காவுடனான குத்தகையை, வரும் 2036-ஆம் ஆண்டு வரை பிரிட்டன் புதுப்பித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள மொரீசியஸ் அரசு இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்க கொள்ளைக்காரர்களின் நடமாட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அரபிக்கடலிலும் வங்கக் கடலிலும் பாதுகாப்பற்ற, மோசமான புவியரசியல் நிலை ஏற்படும்.

இந்தியப் பெருங்கடல் பிரச்னையில் இயற்கைத் துறைமுகமான திருகோணமலை துறைமுக சிக்கலையும் நாம் கவனித்தாக வேண்டும். 18 ஆம் நுாற்றாண்டில் ஐரோப்பாவில் எழுச்சி பெற்ற நெப்போலியன் ‘இலங்கைத் தீவின் திருகோணமலையைக் கைப்பற்றிவிட்டால் இந்த உலகை நான் ஆள்வேன்' எனக் குறிப்பிட்டமை திருகோணமலையின் உலகளாவிய முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.

திருகோணமலை துறைமுகம் தென்கிழக்கு ஆசியாவின் ஒரு கேந்திர மையமாகும். ஆழ்கடல், வர்த்தகம், தொழில் போன்றவற்றுக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகம் போல இந்த திருகோணமலை துறைமுகம் அமைந்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, சீனா போன்ற நாடுகள் திருகோணமலை துறைமுகத்தில் இடம்பெறத் துடிக்கின்றன. ஏற்கெனவே அமெரிக்கா 1970களில் வாய்ஸ் ஆப் அமெரிக்காவும் (voice of america), எண்ணெய் கிடங்குகளும் அமைக்க, இந்த துறைமுகத்தை கைப்பற்ற கழுகுப் பார்வையில் இருந்தது. ஜப்பானும் இந்த துறைமுகத்தின் மேல் ஒரு கண் வைத்திருந்தது. இதற்கான நிலஅமைப்பைத் கொண்ட திருகோணமலை எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும்.

இந்திரா காந்தி காலத்திலிருந்து திருகோணமலை துறைமுகத்தையும் நில அமைப்பு ரீதியாக இந்தியா கவனித்து வருகிறது. இந்த துறைமுகமோ இந்து மகா சமுத்திரத்தின் பாதுகாப்பையும் உள்ளடக்கியதாகும்.

இதோடு இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுக விவகாரத்தையும் இந்தியா கவனிக்க வேண்டிய கடமைகள் உள்ளது.

தென் இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுக பங்குகள் சீனாவிற்கு விற்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இலங்கை இறுதி யுத்தத்திற்கு பிறகு தற்போது அங்கு செய்யப்பட்டு வரும் கட்டுமான வேலைகளில் சீனாவின் முதலீடு அதிகளவில் உள்ளது.

ஹம்பன்தோட்டா துறைமுக கட்டுமான பணிகளுக்கு சீனாவின் முதலீடு தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீன அரசின் துறைமுக வணிக குழுமத்திற்கு ஹம்பன்தோட்டா துறைமுகத்தின் 70 சதவீத பங்குகளைக் குத்தகை அடிப்படையில் 99 வருடங்களுக்கு இலங்கை அரசு அளிக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி ஹம்பன்தோட்டா துறைமுகம் சார்ந்த பணிகளில் 1.1 பில்லியன் டாலர்கள் (8000 கோடிகளை) சீனா முதலீடு செய்கிறது.ஏற்கனவே இந்த துறைமுகத்தில் சீனாவின் ஆதிக்கத்தால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமென்ற இந்தியாவின் கவலையை மீறி, இலங்கை துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் இலங்கைக்கான சீன தூதர் ஆகியோர் முன்னிலையில் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி துறைமுக பாதுகாப்புக்கு இலங்கை கடற்படையே பொறுப்பு எனவும், அங்கு தளம் அமைக்க எந்த வெளிநாட்டுக் கடற்படைக்கும் அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களும், போர்க்கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதேபோல மேலை நாட்டுப் போர்க்கப்பல்களின் நடமாட்டங்களும் இந்திய பெருங்கடலில் இருப்பதாக செய்தி வருகிறது.

எச்எஸ்பிசி வேர்ல்ட் ஆஃப் ஃபோர்காஸ்ட் (“HSBC World in Forecast 2050”) நடத்திய கணிப்பில், 2050இல் ஆசியாவின் 19 நாடுகளே உலகின் பொருளாதாரத்தை ஆளுகை செய்ய இருக்கிறது என்றும், 2017 இல் வெளியான பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (Price Water House Coopers ) அறிக்கையில் இந்தியா, சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளே இந்திய பெருங்கடலை நோக்கிய பொருளாதாரத்தில் ஆளுகை செலுத்தும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

உலகமயமாக்கல் என்ற நிலையில் எதிர்காலத்தில் இந்திய பெருங்கடல் பல்வேறு நாடுகளின் கேந்திரப் பகுதியாகும்பட்சத்தில் பெரும் அபாயங்கள் நேரலாம். அமெரிக்காவும், இந்தோ-பசிபிக் கட்டுப்பாட்டு மையத்தை மாற்றி இந்திய பெருங்கடலை அதோடு 2018 இல் இணைத்து இந்தியாவைத் தன் வலைக்குள் போட்டுக்கொண்டது.

இந்தியப் பெருங்கடலில் 13 முக்கிய கேந்திரத் துறைமுகங்கள் உள்ளன. கடல்சார் வணிகப் போக்குவரத்து, எண்ணெய் உற்பத்தி போன்ற பணிகளுக்கு உலக நாடுகளிடையே இந்தக் கடலில் போட்டிகள் உள்ளன. தற்போதைய நிலையில் இந்தியா எதிரிகளால் சூழப்பட்டுள்ளது.

நமக்கு நம்முடைய அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, நேபாளம், மியான்மர், வங்கதேசம், இலங்கை என யாருடனும் சுமுகமான நட்புறவு இருப்பதாகக் கூற முடியாது. இத்தகைய நிலையில் மாலத்தீவில் மட்டும் சுமுகமான உறவுள்ளது. இந்திய பிரதமர் மோடி மாலத்தீவு வளர்ச்சிக்கு வழங்கிய கடனும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடலை இந்தியா கவனிக்காமல் புறக்கணித்தால் என்ன செய்ய?

உலகின் முதலாவது கடலாதிக்கப் பேரரசு சோழப் பேரரசாகும். 10ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரையான ஏறக்குறைய 400 ஆண்டுகள் இந்து- பசிபிக் சமுத்திரப் பகுதிகளிலுள்ள வங்கக்கடலிலும் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளிலும், அரபி கடலிலும் சோழர்களின் கடற்படையும் சோழர் கணங்களும் (வர்த்தக கம்பெனிகள்) ஏகசெல்வாக்கு செலுத்தின.

சோழர்கள்தான் முதன்முதலில் கடல் கடந்து படையெடுத்துச் சென்று தென்கிழக்கு ஆசியாவில் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் என்ற அரசை ஸ்தாபித்தார்கள். இதன் மூலம் கடல்கடந்து பேரரசுகளை உருவாக்கலாம் என்பதை உலகிற்கு முதலாவதாக செய்துகாட்டியவர்கள் சோழர்கள்.

உலகின் முதலாவது கடற்படையும் சோழர்களதே. சோழர்களின் கடல்வீரர்களைச் சுமந்துகொண்டு தொடராக இந்தோ –பசிபிக் கடலில் உலாவந்த கடற்கலங்களுக்கு நாவாய் என அன்று அழைத்தனர். இன்றைய கடற்படை என்ற சொல் நாவாய் என்ற வேர்ச்சொல்லில் இருந்தே தோன்றியது. சோழர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வகுத்ததுக் கைக்கொண்ட கடல்சார் கொள்கையைத்தான் இன்று அமெரிக்கா "இந்தோ-பசிபிக் கோட்பாடு" என தமது நலன் சார்ந்து மீண்டும் புதுவடிவம் கொடுத்திருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது.

இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு, மேற்கு கடற்கரை முழுவதும் சோழர் கட்டுப்பாட்டிலேயே அன்று இருந்தன. சோழருடைய கடல் ஆதிக்க கொள்கையை உற்று அவதானித்தால் மேற்குறிப்பிட்ட இலங்கைத் தீவின் தமிழர் பிரதேசம் சோழர்களின் கடல் ஆதிக்க கடற்கொள்கையின் வியூகத்தில் இணைவது புரியும்.

சோழர்களின் கடல் ஆதிக்கம் வீழ்ச்சி அடைகின்றபோது 13ம் நூற்றாண்டுக்குப் பின்னர் 14ம்,15ம் ஆம் நூற்றாண்டு வரை அராபியர்களின் கைகளில் இந்து சமுத்திர ஆதிக்கம் சென்றது. அவர்கள் வங்கக் கடலை கடந்து தென்கிழக்காசிய வரை வர்த்தகம் செய்து ஆதிக்கம் செலுத்தியதோடு மாத்திரமல்ல, தென்கிழக்காசியாவில் மலேசியா, இந்தோனேசியா என்ற இரண்டு பெரும் இஸ்லாமிய நாடுகளையும் கட்டமைப்புச் செய்துவிட்டார்கள்.

சோழர்களாகிய தென்னிந்தியர்களின் கடல் வலிமை குன்றியபோது இத்தகைய பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

15 ஆம் நுாற்றாண்டில் சீனர்கள் இந்திய பெருங்கடலில் பெரும் கடற்படையுடன் இலங்கைத் தீவிற்கு கி.பி 1407-1419களில் நான்கு முறை சீன கடற்படைத்தளபதி அட்மிரல் ஷென் -ஹி (Admiral Zheng-he) 440 அடி நீளமும் 180 அடி அகலமும் கொண்ட 62 கப்பல்களில் 37000 சீன வீரர்களுடன் வந்தார்.

இலங்கைத்தீவில் முதலாவது துப்பாக்கி பிரயோகத்தை செய்தவர் ஷென் -ஹிதான். கொழும்பு கோட்டை ராஜ்யத்தைக் கைப்பற்றி (1409-1411) மூன்று ஆண்டுகள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்துவிட்டுச் சென்றுவிட்டார்.

16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகேயரும், ஒல்லாந்தரும், தொடர்ந்து ஆங்கிலேயரும் இந்திய பெருங்கடலில் நுழைந்து இப்பிராந்திய நாடுகளை தமது காலனிய ஏகாதிபத்தியத்தின் கீழ் கொண்டுவந்தனர்.

வல்லரசாக வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆக வேண்டும் என்றெல்லாம் நினைக்கும் நாம், நம் நாட்டின் தெற்கெல்லையில் உள்ள நமது கடல் ஆதிக்கத்தை இழக்கலாமா?

                                                                                                                                  (தொடரும்)



Read in source website

பணமதிப்பு வீழ்ச்சியடைந்து, படுமோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு அருகமை நாடான இந்தியா தொடர்ந்து செய்துவரும் மனிதநேய உதவிகள், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வளர்த்தெடுக்கும் வகையில் அமைந்துள்ளது. மார்ச் 15 அன்று இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்த இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, பிரதமர் மோடியைச் சந்தித்து இந்தியா செய்துவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, நெருக்கடியைச் சமாளிக்க மேலும் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரையும் அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்புகளை அடுத்து உணவு, மருந்துப் பொருட்களுக்காக 100 கோடி அமெரிக்க டாலர்களை வழங்குவதாக இந்தியா உறுதியளித்தது. இந்திய மதிப்பில் இது ரூ.7,500 கோடி ஆகும். இத்தொகைக்கு ஈடான அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்படும்.

சில தினங்களுக்கு முன்பு இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அந்நாட்டின் அரசும் அமைச்சர்களும் மிகப் பெரும் மரியாதையை அளித்துள்ளனர். இலங்கை அதிபர் மற்றும் பிரதமருடனான சந்திப்பில், மேலும் இந்தியா 150 கோடி அமெரிக்க டாலர்கள் கொடுத்து உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் மரபுசாரா மின்னுற்பத்தித் திட்டங்களை மேற்கொள்ள சீன நிறுவனத்துடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்த நிலையில் அவை ரத்துசெய்யப்பட்டு, தற்போது அப்பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு இந்திய நிறுவனம் ஒப்பந்தமாகியிருப்பது, இந்தியாவின் எல்லையோரப் பாதுகாப்பு தொடர்பிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இலங்கையுடனான வெளிநாட்டு உறவில் உருவாகியுள்ள இந்தப் பிணைப்பு, இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகள் குறித்து விவாதிக்கவும் தீர்வுகளைப் பரிந்துரைக்கவுமான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கையில் மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

இலங்கையில் வாழும் அனைத்து மக்களையும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கவும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தவும் முயற்சிகளை எடுத்துவரும் இந்திய அரசு, தமிழ்நாட்டு மீனவர்களின் மீது இலங்கைக் கடற்படை தொடர்ந்து நடத்திவரும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தவும் மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முயல வேண்டும்.

இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி நிலை, தமிழ்நாட்டு மீன்பிடிப் படகுகளைத் தாக்கி அவர்களிடம் உள்ள பொருட்களைப் பறித்துச்செல்லும் கடற்கொள்ளைச் சம்பவத்துக்கும் காரணமாகியுள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்திவரும் வன்முறைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண இருநாட்டு மீனவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்திச் சமரசம் காண வேண்டும். அதற்கான நல்லதொரு வாய்ப்பாக, தற்போதைய சூழலைப் பயன்படுத்திக்கொள்வதே தேர்ந்த ராஜதந்திரம்.



Read in source website

கடந்த வாரம் ‘இந்து தமிழ்’ நாளிதழில் ‘பள்ளிக் கல்வியில் ஒரு வெளிச்சக் கீற்று’ என்ற என்னுடைய கட்டுரை வெளியானது. அதில் தமிழ்நாடு அரசின் மிகச் சிறந்த முன்னெடுப்பான, பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மறுகட்டமைப்பு குறித்துக் கூறப்பட்டிருந்தது. கல்வித் துறையால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டிக் கையேட்டில் ஒரு முக்கியமான பகுதி, கல்வி உரிமைச் சட்டத்தின்படி வெளிவந்த அரசாணைகள் (Go 213, Go 42) குறிப்பிடும் பகுதியிலிருந்து மாறுபடுகிறது. அது குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தருவது அவசியமாகிறது.

பள்ளி மேலாண்மைக் குழு தொடர்பான அரசாணைகள் 213 மற்றும் 42-ன் அடிப்படையில், பள்ளி மேலாண்மைக் குழுவில் ஊராட்சித் தலைவர் இடம்பெற முடியாது. ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மட்டுமே இடம்பெற முடியும் என்பதே இங்கு நாம் தெளிவுபடுத்த வேண்டிய பகுதி. ‘Elected members’ என்ற பதமே கல்வி உரிமைச் சட்டத்தின்படி வந்த அரசாணைகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனில், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என்பவர்கள் உறுப்பினர்களே அன்றி, தலைவர்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அனைவருக்கும் கல்வித் திட்டம் (சர்வ சிக்ஷா அபியான்) உருவான காலத்தில்தான் பள்ளிகளில் கிராமக் கல்விக் குழுக்கள் (VEC -Village Education Committee) உருவாக்கப்பட்டன. பள்ளிக்கான கட்டிட நிதியை முழுவதும் SSA வழியாகக் கிராமக் கல்விக் குழுவின் வங்கிக் கணக்கு எண்ணுக்கு அனுப்பப்படும். பள்ளிக்கான எந்தச் செலவினமாக இருந்தாலும். பள்ளித் தலைமை ஆசிரியர் அப்பள்ளி VEC-ன் தலைவராக இருக்கும் ஊராட்சி மன்றத் தலைவரின் அனுமதியுடன் கையொப்பம் பெற்று, செலவுசெய்யும் முறை கடைப்பிடிக்கப்பட்டுவந்தது. பல்வேறு இடங்களில் தலைமை ஆசிரியருக்கும் இந்த ஊராட்சி மன்றத் தலைமைக்கும் தீராத பிரச்சினைகள் ஏற்பட்டன.

2009-கல்வி உரிமைச் சட்டம்தான், பெற்றோர்களால் பள்ளிகள் மேலாண்மை செய்யப்படும் முறையான ‘பள்ளி மேலாண்மைக் குழு’வின் (SMC-School Management Committee) உருவாக்கத்துக்கு வித்திட்டது. தமிழ்நாட்டில் அதற்கான அரசாணைகள் 2011, 2019 ஆகிய வருடங்களில் வெளியிடப்பட்டுப் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் நடைமுறைக்கு வந்தன. ஆனாலும், பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் SMC குறித்த விழிப்புணர்வு ஏற்படாமல் போனதுதான் கள யதார்த்தமாக இருந்தது.

இவற்றைச் சீரமைத்துப் பள்ளிகளின் மேம்பாட்டுக்குப் பெற்றோர்களின் பங்களிப்பை உறுதிசெய்யவே பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மறுகட்டமைப்பு குறித்த கூட்டத்தை, கடந்த 20.03.2022 தேதி, ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் அரசு நடத்தியது.

மீண்டும் வரும் ஏப்ரல் மாத முதல் வாரத்தில் குழு உறுப்பினர்களை உறுதிசெய்வதற்கான கூட்டம் நடைபெறவிருக்கிறது. தற்போது குழுவை இறுதிசெய்வதற்காக முடிவெடுக்கும் பணி நடந்துவருகிறது. இந்த நேரத்தில் நாம் கவனம் கொள்ள வேண்டியது, SMC மறுகட்டமைப்புக்கான ஆணையை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ளார். அதில் பள்ளி மேலாண்மைக் குழுவில் ஊராட்சித் தலைவர் இடம்பெற வாய்ப்பளிக்கும் வகையில் வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது.

எனில், ஏற்கெனவே தலைமை ஆசிரியர்களின் ஆளுமையின் கீழ் இருந்த பள்ளி மேலாண்மைக் குழு ஊராட்சித் தலைவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். ஊராட்சி மன்றத் தலைவர்களைப் பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம்பெற வைத்தால், பெற்றோர்கள் பெயரளவில் மட்டுமே தலைவராக இருக்கும் நிலை உருவாகும். ஊராட்சித் தலைவர், ஆளும் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால், அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் வகையில் ஒரு தீர்மானத்தைக்கூட இயற்ற முடியாது. மேலும், சமீபத்தில் தமிழ்நாட்டு நிதியமைச்சர் வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் வகுப்பறைக் கட்டிடங்களுக்கு ரூ.7,500 கோடி (28,000 வகுப்பறைகள்) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,500 கோடி என்ற வகையில் 5 ஆண்டுகளுக்கு இந்த நிதியை SMC வழியாகவே பள்ளிகளை மேம்படுத்தப் பயன்படுத்தப்போவதாக அறிவிப்புகள் வருகின்றன.

அப்படியானால், இந்த நிதிப் பங்கீட்டுப் பணியில் ஊராட்சி மன்றத் தலைவர்களின் தலையீடுகளும் இருக்க வாய்ப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு ஊரில் மூன்று பள்ளிகள் இருக்குமானால் அவற்றிலேயே பெரிய பள்ளியை ஊராட்சி மன்றத் தலைவர் SMC வழியாகத் தன்வசப்படுத்த வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே அந்த ஊரின், நகரின் பல குழுக்களுக்கும் அவர்களே தலைவர்களாக இருப்பார்கள். மறுபடியும் பள்ளிக்குள்ளும் உறுப்பினராகத் தலைவர்களைக் கொண்டுவருவது ஏற்புடையதாக இருக்காது.

மீண்டும் அரசியல் தலையீடுகளால் அரசுப் பள்ளிகள் சீர்கேட்டை நோக்கிச் சென்றுவிடுமோ என்ற அச்சம் கல்வி குறித்துச் சிந்திப்பவர்கள் மற்றும் செயல்படுபவர்களிடையே உருவாகியுள்ளது. ஆகவே, ஊராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள் என அனைத்துத் தரப்பிலிருந்தும் தலைவர்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் உறுப்பினர் என்ற இடத்தைப் பிடிக்காமல், மக்களால் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களை SMC உறுப்பினர்களாக நியமிக்கும் தெளிவான வழிகாட்டுதலை அரசும் கல்வித் துறையும் பள்ளிகளுக்கும் பெற்றோர்களுக்கும் தந்து SMC-ன் மாண்பைக் காப்பாற்ற வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

- சு.உமாமகேஸ்வரி, ஆசிரியர், கல்வியாளர். தொடர்புக்கு: uma2015scert@gmail.com



Read in source website

அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்களில் புவிசார் குறியீடு என்பது பாரம்பரியமான நுண்கலை அறிவைத் தனிச்சிறப்பானதாக ஏற்றுக்கொள்ளும் ஒரு சர்வதேச அங்கீகாரம். இதற்கு முன்பு காவிரிக் கரையிலிருந்து சுவாமிமலை உளியின் ஓசையும், திருபுவனத்தின் தறி ஓசையும், நாச்சியார்கோவில் விளக்குகளின் ஒளியும், தஞ்சாவூரின் தலையாட்டி பொம்மைகளும் இன்னும் நெட்டிவேலை, ஓவியம், வீணை, கண்ணாடி வேலைப்பாடுகளும் அடுக்கடுக்காக இம்மண்ணின் அடையாளங்களாக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. இப்போது அந்தப் பெருமை நரசிங்கன்பேட்டையின் நாகசுர ஓசைக்கும் கிடைத்திருக்கிறது.

பல ஆண்டுகளாகப் பேசப்பட்டுவந்த கோரிக்கைகளில் ஒன்றுதான் இது. பாரம்பரிய இசைக் கருவிகளை உருவாக்குவதில் தனித்திறமை வாய்ந்த இந்தக் கலைஞர்கள், இதே வேலையை வெளிநாடுகளில் செய்துவந்திருந்தால் எப்படியெல்லாம் பெயரும் புகழும் பெற்றவர்களாக இருந்திருப்பார்கள் என்ற அங்கலாய்ப்புக்குப் புவிசார் குறியீடு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. ஆனாலும், இசையுலகின் விற்பன்னர்கள் நரசிங்கன்பேட்டை நாகசுரத்தைக் காலம்காலமாய்ப் போற்றிவந்திருக்கிறார்கள்.

நாகசுரம் என்ற பெயர் 17-ம் நூற்றாண்டிலிருந்துதான் நமக்குக் காணக் கிடைக்கிறது. மரத்தால் செய்யப்படும் இந்தக் கருவியில் மூன்று பகுதிகள் உள்ளன. ஸ்வரங்கள் வாசிக்க வேண்டிய துளைகளுடன் கூடிய உடற்பகுதியை ‘உலவு’ என்று அழைப்பார்கள். இது ஆச்சா மரத்தால் செய்யப்படுவது. நல்ல நாகசுரத்துக்குப் பழமையான மரமே தேவைப்படுகிறது. இந்தப் பழமையான மரத்தை வெட்டி எடுப்பதில்லை.

பழமையான வீடுகளின் கட்டுமானத்தில் ஆச்சா மரம் பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த வீடுகளில் உள்ள கதவுகள், தூண்கள், உத்திரங்கள் என எல்லாமே ஆச்சா மரத்தில்தான் இருக்குமாம். இது போன்ற 75 ஆண்டுகளுக்கு மேலான மரங்களைக் கொண்டே நாகசுரம் செய்யப்படுகிறது. உலவின் ஒரு முனையில் கூம்பு வடிவிலான ‘அனசு’ ரோஸ்வுட் மரத்திலும், மற்றொரு முனையில் கெண்டையின் துணைகொண்டு ஊதுவதற்கான ‘சீவாளி’யும் இணைக்கப்படும்.

நாகசுரத்தை முதலில் யார் வடிவமைத்திருப்பார்கள் என்ற கேள்விக்குப் பதில் இல்லை. ஆனாலும், அந்தப் பாரம்பரியத் தொடர்ச்சி அறுபட்டுவிடாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 70, 80 வயதைக் கடந்த நாகசுரச் சிற்பிகளும் தங்களது அடுத்த தலைமுறை செய்யக்கூடிய நாகசுரங்களை வாங்கிப் பார்த்து, அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் சொல்லத் தவறுவதில்லை. அதையும் தாண்டி, சிற்பிகள் தாங்கள் செய்த நாகசுரங்களைக் கலைஞர்களை வாசிக்கவைத்து மத்திமம், காந்தாரம் எல்லாம் சரியாகப் பேசுகிறதா என்றும், கலைஞர்களுடைய பக்குவத்துக்கு ஏற்றவாறு இருக்கிறதா என்றும் கேட்டறிந்துகொண்ட பிறகுதான் தருகிறார்கள்.

மத்திம சுருதி நாகசுரம் செய்யப்படுவதற்கு முன்பு, 3, 3-1/2, 4, 4 -1/2, 5, 5 -1/2 கட்டை நாகசுரங்கள் செய்த காலத்தில் வாசிக்கும் கலைஞர்களையே அருகில் உட்கார வைத்து, அந்த சுருதியில் உள்ள ஒத்தை வாசிக்கவைத்து, சரிசெய்து கொடுத்தனர். இன்றும்கூட, நாகசுரக் கலைஞர்கள் தங்களது பக்குவத்துக்கு ஏற்றவாறு செய்யக்கூடிய நாகசுரச் சிற்பியைத் தேர்ந்தெடுத்தே கருவியை வாங்குகிறார்கள்.

நரசிங்கன்பேட்டை நாகசுரச் சிற்பிகளின் பாரம்பரியம் என்பது தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருவது. நாகசுரச் சிற்பி ரெங்கநாத ஆசாரியின் குடும்பம், ஐந்தாவது தலைமுறையாக இன்றும் நாகசுரம் செய்துவருகிறது. கோவிந்தஸ்வாமி, நாராயணஸ்வாமி, ரெங்கநாதன், செல்வராஜ், தற்போது சதீஷ் - பிரகாஷ் சகோதரர்கள் ஆகியோர் அந்தப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள். அதுபோல சக்திவேல் ஆசாரியின் பாரம்பரியத்தில் நாராயணஸ்வாமி, லக்ஷ்மண ஆசாரி, கந்தஸ்வாமி, சக்திவேல், செந்தில்குமார், சபரி ஆகியோர் அதைத் தொடர்கின்றனர். கண்ணன் ஆசாரியின் பாரம்பரியத்தில் லக்ஷ்மண ஆசாரி, சிங்காரவேலு, கண்ணன், மணிகண்டன், அர்ஜுன் ஆகியோரும் குணா ஆசாரியின் பாரம்பரியத்தில் குருஸ்வாமி, பழநிஸ்வாமி, சுந்தர்ராஜ், குணா என இன்னும் பலரும் தொடர்கின்றனர்.

நாகசுரக் கருவியில் இருந்து வரும் ஓசையின் அளவை (2 கட்டை, 2 1/2 கட்டை என) சரிபார்த்துத் திருத்தங்கள் செய்யத் தெரிந்த இந்தச் சிற்பிகளுக்கு, நாகசுரத்தில் வாசிக்கப்படும் ராகங்களைப் பற்றி அவ்வளவு நுட்பமாகத் தெரியாது என்பது இன்னும் ஓர் ஆச்சரியம். ஆனால், நாகசுரத்தை வாசித்துப் பார்க்கும் கலைஞர்களின் சிரமத்தையும், மாறிவரும் ஸ்ருதியின் அளவையும் சரியாகக் கணிப்பதில் இவர்கள் வல்லவர்கள்.

நாகசுரச் சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்னம் பிள்ளையின் ஆறரை நிமிடங்கள் மட்டுமே கொண்ட தோடி ராக ஒலிப்பதிவை எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புது அனுபவம்தான். தனக்குச் சாதகமான சங்கதிகளை எந்த இடையூறும் இல்லாமல் வாசிப்பதற்கு இசைக் கலைஞரின் மனநிலையோடு சீவாளியின் தன்மையும் அக்கருவியைச் செய்த கலைஞரின் உழைப்பும்கூடப் பின்னணிக் காரணங்களாக இருக்கின்றன என்று சொல்லலாம். பாரதியின் கவிதை வரிகள்தான் நினைவுக்குவருகின்றன. ‘பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான். குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா? பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா? அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது.’ இப்படி ஒரு நெருக்கமான பந்தம், நாகசுரக் கலைஞருக்கும் அதை உருவாக்கிய சிற்பிக்கும் இருக்கிறது.

பல தலைமுறைகளைக் கடந்தும் நமது இசைப் பாரம்பரியத்தைக் காத்துவரும் நாகசுரச் சிற்பிகளுக்குச் சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கலாம். ஆனால், அரசு அங்கீகாரங்கள் எதுவும் அவர்களை இதுவரை எட்டிப்பார்க்கவே இல்லை. இசைக் கலைஞர்களைப் போல, இசைக் கருவிகளை உருவாக்கும் அவர்களுக்கும் கலைமாமணி போன்ற விருதுகளும், கலைஞர்களுக்கான ஓய்வூதியங்களும் வழங்கப்பட வேண்டும். இது அவர்களுக்குச் செய்யும் உபகாரம் மட்டுமல்ல, தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவிகளை இன்னும் பல தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்வதற்கான முயற்சியாகவும் அமையும்.

- சுவாமிமலை சரவணன், தொடர்புக்கு: saravanswa@gmail.com



Read in source website