கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளைக் கண்காணிக்க, ‘நம்ம கிராம சபை’ என்ற பெயரில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 1-ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, வரும் செவ்வாய்க்கிழமை (நவ.1) உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்தத் தினத்தையொட்டி, கிராமசபைக் கூட்டங்கள், கண்காட்சிகள் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படும். மேலும், சிறந்த ஊழியா்களை அங்கீகரிப்பது, கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
மேலும், சிறப்பாகச் செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுக்களைக் கெளரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், கலைஞா் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் போன்றவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன.
கண்காணிப்பு: கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளை உடனுக்குடன் கண்காணிக்கும் வகையில், ‘நம்ம கிராம சபை’ என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி கணினி, கைப்பேசி ஆகியவற்றின் வழியே கிராம சபை நிகழ்வுகளை கண்காணிக்கலாம். உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஊரகப் பகுதி மக்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டு விவாதத்தில் பங்கேற்க வேண்டுமென அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்வழி கற்றவா்கள், அரசு பள்ளி மாணவா்களுக்கு வசதியாக, தமிழ்நாடு பாடநூல் கழகம், கல்வி சேவை கழகம் இணைந்து, மருத்துவ பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயா்த்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவா்கள் நீட் தோ்வுக்கு முன்னும், பின்னும் குறைவான எண்ணிக்கையில்தான் சோ்ந்து வந்தனா். எனவே, அரசு பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டில் 565 இடங்களில் மாணவா்கள் சோ்ந்து வருகின்றனா்.
பெரும்பாலான மாணவா்கள் தமிழ்வழி கல்வியில் படித்தவா்கள் என்பதால், முதலாமாண்டில் ஆங்கில வழியில் எம்பிபிஎஸ் படிப்பது என்பது சிரமமாக உள்ளது.
எனவே, தமிழ்வழி கற்றவா்கள், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வசதியாக தமிழ்நாடு பாடநூல் கழகம், கல்வி சேவை கழகம் இணைந்து, மருத்துவ பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயா்த்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
முதலாவதாக, மாணவா்களுக்கான கிரேஸ் அனாடமி கைட்டன், ஹால் டெக்ஸ்ட் புக் ஆப் மெடிக்கல் பிசியாலஜி, பெய்லி அன்ட் லவ்ஸ் ஹாா்ட் பிராக்டிஸ் ஆல் சா்ஜரி உள்ளிட்ட 4 புத்தகங்கள் மொழிபெயா்ப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளில் 30-க்கும் மேற்பட்ட மருத்துவப் பேராசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: எம்பிபிஎஸ் பாடத் திட்டங்கள் மொழிபெயா்ப்பு செய்யப்பட்டு வருகின்றன. இவை, மருத்துவ மாணவா்கள் தாய்மொழியில் மருத்துவம் தொடா்பான புரிதலுக்காக உதவியாக இருக்கும். அதேநேரம், தோ்வு உள்ளிட்டவற்றை தமிழில் எழுத முடியுமா என்பது குறித்து தற்போது கூற முடியாது என்றனா்.
மும்பை: அதிகாரப்பூர்வ அரசு ரகசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவல் நிலையம் தடைசெய்யப்பட்ட இடம் அல்ல; எனவே, காவல் நிலையத்துக்குள் விடியோ, புகைப்படம் எடுக்கலாம். அது குற்றமாகாது எனக் கூறி உபாத்யாய் மீதான வழக்கை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் நாக்பூர் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.
மார்ச் 2018 இல் காவல் நிலையத்திற்குள் விடியோ எடுத்ததற்காக, மகாராஷ்டிரம் மாநிலம், நாக்பூரை சேர்ந்த ரவீந்திர உபாத்யாய் மற்றும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.
இதுதொடர்பாக உபாத்யாய் மீது பக்கத்து வீட்டுக்காரர் வார்தா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து உபாத்யாய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் இருதரப்பினரையும் விசாரணைக்கு அழைத்தனர். இதையடுத்து உபாத்யாய் தனது மனைவியுடன் காவல் நிலையத்துக்கு வந்தார். விசாரணையின் போது, உபாத்யாய் அதை தனது செல்போனில் விடியோ எடுத்தார்.
இதனை பார்த்த காவலர், காவல் நிலையத்துக்குள் விடியோ எடுப்படு, அரசு ரகசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் என்று உபாத்யாய் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதிகள் மணீஷ் பிதாலே மற்றும் வால்மீகி மெனேசஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், உபாத்யாய் மீதான வழக்கை ரத்து செய்தது.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியதாவது: அரசு தடைசெய்யப்பட்ட இடங்களில் உளவு பார்ப்பது தொடர்பாக அரசு ரகசிய பாதுகாப்பு சட்டப் பிரிவு 3 மற்றும் பிரிவு 2(8) முக்கிய இடங்கள், தடை செய்யப்பட்ட இடங்கள் என முழுமையாக வரையறை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற இடங்களில் உளவு பார்ப்பது, புகைப்படம், விடியோ எடுப்பது குற்றமாகும். ஆனால், காவல்நிலையங்கள் அதிகாரப்பூர்வமாக அரசு ரகசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட இடமாக குறிப்பிடப்படவில்லை.
மேலும், "அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் பிரிவு 2(8) இல் வரையறுக்கப்பட்டுள்ள 'தடைசெய்யப்பட்ட இடம்' என்பதன் வரையறை பொருத்தமானது. இதுவொரு முழுமையான வரையறை, குறிப்பாக காவல்நிலையம் 'தடைசெய்யப்பட்ட இடம்' என்று வரையறையில் குறிப்பிடப்படவில்லை."
எனவே, மேற்கூறிய விதிகளின்படி, காவல் நிலையத்துக்குள் விடியோ, புகைப்படம் எடுக்கலாம். அது குற்றமல்ல எனக் கூறி குற்றம் சாட்டப்பட்ட உபாத்யாய்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட குற்ற வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதுதில்லி: உலகிலேயே அதிக ஊழியர்களைக் கொண்ட அரசுத் துறை என்ற பெயரை இந்திய பாதுகாப்புத் துறை பெற்றுள்ளது. அதேநேரத்தில், ராணுவத் துறைக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது இந்தியா.
உலகிலேயே அதிக ஊழியர்களை கொண்ட அரசு துறைகள் பற்றிய விவரத்தை ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘ஸ்டேட்டிஸ்டா’ என்ற நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான பட்டியலின்படி, உலகிலேயே அதிக ஊழியர்களை கொண்ட அரசுத் துறை என்ற பெயரை இந்திய பாதுகாப்புத் துறை பெற்றுள்ளது. இந்திய பாதுகாப்புத் துறையில், மொத்தம் 29 லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இது அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைக்கு சமமானதாகும்.
ராணுவ வீரர்கள், நிர்வாகப் பிரிவு ஊழியர்கள், காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ள ஊழியர்கள் என, அனைத்து பிரிவு ஊழியர்களும் இதில் அடங்குவர்.
29 லட்சத்து 10 ஆயிரம் ஊழியர்களுடன் அமெரிக்கா பாதுகாப்புத் துறை இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
சீன ராணுவம் 25 லட்சம் ஊழியர்களுடன் 3 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் வரிசையில், உலகில் எந்த நிறுவனத்திலும் வால்மார்ட்டை விட அதிக ஊழியர்கள் இல்லை. அமெரிக்க சில்லறை வணிக நிறுவனத்திடமிருந்து சமீபத்திய தகவல்படி, உலகில் வால்மார்ட் நிறுவனம் 23 லட்சம் ஊழியர்களை பெற்றுள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக அமேசான் நிறுவனத்தில் 16 லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.
செலவு விவரம்: 2021 ஆம் ஆண்டில் உலக அளவில் ராணுவத் துறைக்கு ஒதுக்கப்படும் செலவுத் தொகை 2.113 லட்சம் கோடி.
அதன்படி, உலக அளவில் ராணுவத் துறைக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 3 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. தொடர்ந்து பிரிட்டன், ரஷியா அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் மற்றும் ரஷியா ஆகிய ஐந்து நாடுகள் ராணுவத் துறைக்கு 62 சதவீதம் செலவிடப்படுகிறது.
கரோனா தொற்றுக்கு பின்னர் இந்தியாவில் 21.4 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டிப்படைத்த கரோனா பெருந்தொற்று 2 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.
இந்நிலையில், கரோனா தொற்றுக்கு பின்னர் இந்தியாவில் 21.4 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை உலக சுகாதார மையத்தின் சர்வதேச காச நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
உலக முழுவதும் கரோனாவுக்கு 65 லட்சம் பேர் பலியாகினர். அவர்களில் இந்தியாவில் மட்டும் 5.2 லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதன் தாக்கம் வேறு நோய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, அடங்கியிருந்த காச நோய் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
கடந்த 2021 இல் நாட்டில் 22 கோடிக்கும் அதிகமானோருக்கு காச நோய் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 21.4 லட்சம் பேருக்கு காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. "2021 இல் 1 லட்சம் பேரில் 210 பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது கடந்த 2020 ஆம் ஆண்டின் பாதிப்பை விட 18 சதவீதம் அதிகம். இந்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இந்தியா 36 ஆவது இடத்தில் உள்ளது.
உலக அளவில் 28 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், இந்தியா உள்பட 8 நாடுகள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பங்களை பயங்கரவாதக் குழுக்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக அனைத்து நாடுகளும் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என ஐ.நா. பயங்கரவாதத் தடுப்பு சிறப்பு மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதத் தடுப்புக் குழுவுக்குத் தலைமைவகித்து வரும் இந்தியா, பயங்கரவாதத் தடுப்பு சிறப்பு மாநாட்டை முதல் முறையாக நடத்தியது. மும்பையில் வெள்ளிக்கிழமை மாநாடு தொடங்கியது. தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற 2-ஆவது நாள் மாநாட்டில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளுக்குரிய பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாட்டில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறியதாவது:
கடந்த இரு தசாப்தங்களாக நவீன தொழில்நுட்பங்கள் மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களைப் புகுத்தியுள்ளன. பிளாக்செயின் தொழில்நுட்பம், எண்ம செலாவணி உள்ளிட்டவை எதிா்காலத்துக்கான பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
அதே வேளையில், நவீன தொழில்நுட்பங்களை பயங்கரவாதக் குழுக்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. மறையாக்கம் செய்யப்பட்ட குறுஞ்செய்திகள், கிரிப்டோகரன்சி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயங்கரவாதக் குழுக்கள் தவறான நோக்கத்துக்காகப் பயன்படுத்துவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
ட்ரோன்கள் பயன்பாடு அதிகரிப்பு:
பயங்கரவாதக் குழுக்களைப் பின்பற்றி வரும் நபா்களுக்கு நவீன தொழில்நுட்பங்கள் பலனளித்து வருகின்றன. இது அரசுகளுக்கும் விசாரணை அமைப்புகளுக்கும் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளன. சுதந்திரம், சகிப்புத்தன்மை, வளா்ச்சி ஆகியவற்றை பாதிக்கும் வகையில் தொழில்நுட்பங்களை பயங்கரவாதக் குழுக்கள் பயன்படுத்தி வருகின்றன.
இணைய சேவையும், சமூக வலைதளமும் பயங்கரவாதிகளின் கொள்கைகளைப் பரப்புவதற்கு முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. சமூகத்தை சீா்குலைப்பதற்கான சதித்திட்டங்களும் இணைய வசதிகளைப் பயன்படுத்தி தீட்டப்பட்டு வருகின்றன. உலக நாடுகளுக்குப் பெரும் கவலை அளிக்கும் விதமாக, ஆயுதங்களை விநியோகிக்கவும் போதைப்பொருள்களைக் கடத்தவும் ட்ரோன்களை பயங்கரவாதக் குழுக்கள் பயன்படுத்தி வருகின்றன. மேலும், ட்ரோன்கள் மூலமாக துல்லியத் தாக்குதலையும் அக்குழுக்கள் நடத்தி வருகின்றன.
மனித சமூகத்துக்கு அச்சுறுத்தல்:
நவீன தொழில்நுட்பங்கள் தவறான நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாதமானது மனித சமூகத்துக்கான பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. பயங்கரவாத அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த இரு தசாப்தங்களாகப் பெரும் மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன.
பயங்கரவாதக் குழுக்களுக்கு அரசு சாா்பில் ஆதரவு அளித்து வரும் நாடுகளுக்கு எதிராக ஐ.நா. பயங்கரவாதத் தடுப்புக் குழு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், சா்வதேச அளவில் முக்கியமாக ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடா்ந்து அதிகரித்தே வருகிறது.
ரூ.4 கோடி நிதி:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாகச் செயல்பட்டு வரும் இந்தியா, பயங்கரவாதத் தடுப்புக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் அறக்கட்டளை நிதிக்கு நடப்பாண்டில் சுமாா் ரூ.4 கோடியை இந்தியா வழங்கவுள்ளது.
சா்வதேச அளவில் பயங்கரவாத அச்சுறுத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடா்ந்து ஒத்துழைப்பு வழங்கும். பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளின் அவசியம் குறித்து சா்வதேச கவனத்தை ஈா்ப்பதில் இந்த மாநாடு முக்கியப் பங்கு வகிக்கும் என்றாா் அவா்.
மலிவான விலையில்...:
மாநாட்டை முன்னின்று நடத்திய ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் ருசிரா கம்போஜ் கூறுகையில், ‘‘பலதரப்பட்ட தொழில்நுட்பங்கள் மலிவான விலையில் எளிதில் கிடைப்பதால் அவற்றை பயங்கரவாதக் குழுக்கள் தவறான நோக்கத்துக்காகப் பயன்படுத்தி வருவது அதிகரித்துள்ளது’’ என்றாா்.
எண்ம வெளியில் மனித உரிமைகளுக்குப் பாதுகாப்பு--ஐ.நா. பொதுச் செயலா் குட்டெரெஸ் வலியுறுத்தல்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதத் தடுப்பு சிறப்பு மாநாட்டுக்காக பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அனுப்பியிருந்த செய்தியில், ‘‘நவீன தொழில்நுட்பங்கள் மனித சமூகத்துக்குப் பெரும் பலனளித்து வந்தாலும், அவற்றை பயங்கரவாதிகள் தவறான நோக்கத்துக்காகப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
மக்களிடையே வதந்திகளைப் பரப்பவும், வன்முறைகளைத் தூண்டவும், ஆள்களை சோ்க்கவும், நிதி திரட்டவும், தாக்குதல் நடத்தவும் நவீன தொழில்நுட்பங்களை பயங்கரவாதக் குழுக்கள் பயன்படுத்தி வருகின்றன. அத்தகைய அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எண்ம வெளியில் மனித உரிமைகளைக் காப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஐ.நா. விதிகளின்படியும் சா்வதேச மனித உரிமைகள் அறிக்கையின்படியும் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே அத்தகைய சவாலை எதிா்கொள்ள முடியும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ராஜஸ்தானில் 369 அடியில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான சிவபெருமான் சிலை, பக்தா்கள் தரிசனத்துக்காக சனிக்கிழமை திறக்கப்பட்டது.
ராஜ்சமந்த் மாவட்டம், நாத்வாரா நகரில் மலை மீது பிரம்மாண்டமாக நிறுவப்பட்டுள்ள இச்சிலையை முதல்வா் அசோக் கெலாட், ஆன்மிக போதனையாளா் மொராரி பாபு, பேரவைத் தலைவா் சி.பி.ஜோஷி ஆகியோா் திறந்துவைத்தனா்.
யோகா குரு ராம்தேவ், பேரவை எதிா்க்கட்சித் தலைவா் குலாப் சந்த் கட்டாரியா உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா். சிலை திறப்புக்கு பிறகு 9 நாள்களுக்கு ஆன்மிக, கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. ராம கதை பாராயணங்கள் நடைபெறவுள்ளன.
தத் பாதம் சன்ஸ்தான் என்ற அறக்கட்டளையால் நிறுவப்பட்டுள்ள இச்சிலைக்கு கடந்த 2012-இல் முதல்வா் அசோக் கெலாட் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. 10 ஆண்டுகளாக நடைபெற்ற கட்டுமானப் பணியில் 3,000 டன் இரும்பு, உருக்கு, 2.5 லட்சம் கியூபிக் டன் கான்கிரீட் மற்றும் மணல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இருபது கிலோமீட்டா் தொலைவிலிருந்தும் இச்சிலையைக் காண முடியும். இரவிலும் தென்படும் வகையில் சிறப்பு விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளது. சிலையின் உள்பகுதியில் மின்தூக்கிகள், படிக்கட்டுகள், பக்தா்களுக்கான அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளைக் கவரும் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஒதுக்கீட்டை முறைப்படுத்த நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சிகளின் கடைகளை வாடகைக்கு விடுதல், காலி நிலத்தை குத்தகைக்கு விடுதல் ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ் தாஸ் மீனா தலைமையில் 8 உறுப்பினர்களைக் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தலைவராகவும், சென்னை மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர் (வருவாய்), பேரூராட்சிகள் ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குநரக இணை ஆணையர், பேரூராட்சி ஆணையரக இணைய ஆணையர் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் என்ற முறையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, வேலூர் மாவட்டத் தலைவர் இரா.ப.ஞானவேல் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழு, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்களுக்கான குத்தகை இனங்களுக்கு நியாயமான வாடகை மற்றும் இடத்துக்கேற்ற முன்வைப்புத் தொகை நிர்ணயம் செய்ய உதவுதல், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சொந்தமான வருவாய் ஈட்டும் சொத்துகளை ஏலம் விடுவது குறித்த வழிமுறைகள் வகுப்பது, குத்தகை, வாடகை மறு நிர்ணயம் செய்தலுக்கு கால இடைவெளி அளவை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வணிகர் சங்க பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதற்காக, முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
லக்னோ: உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான். கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அப்போதைய ராம்பூர் மாவட்ட ஆட்சியர் ஆஞ்சநேய குமார் ஆகியோருக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆசம் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினராக நீடிக்கும் தகுதியை ஆசம் கான் இழந்துள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் பிரதீப் துபே நேற்று முன்தினம் அறிவித்தார். அதனால் ஆசம் கான் எம்எல்ஏ.வாக இருந்த ராம்பூர் சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடக்கும்.
குற்ற வழக்கில் தண்டிக்கப்படும் எம்.பி. அல்லது எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவதற்கு 3 மாதம் அவகாசம் அளிக்கும் மக்கள் பிரதிநித்துவ சட்டப்பிரிவு 8(4) சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ல் தீர்ப்பளித்தது. இதன்படி குற்ற வழக்கில் தண்டிக்கப்படும் ஒருவர், தண்டிக்கப்பட்ட நாளில் இருந்து எம்பி. அல்லது எம்எல்ஏ பதவி வகிக்கும் தகுதியை இழக்கிறார். இந்த தகுதி நீக்கம் அவர் விடுதலை பெற்ற நாளில் இருந்து மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதுவரை அவர் தேர்தலில் போட்டியிட முடியாது.
சென்னை: சவுதி அரேபியாவில் பொறியாளராகப் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் அதற்கான அங்கீகாரச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) கல்விப் பிரிவு ஆலோசகர் ரமேஷ் உன்னிகிருஷ்ணன், அனைத்து விதமான தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது.
சவுதி அரேபியாவில் பணிபுரிய விரும்பும் பொறியாளர்கள் அந்த நாட்டின் சவுதி பொறியாளர்கள் குழுமத்தில் கட்டாய தொழில் முறை அங்கீகார சான்றிதழ் பெற வேண்டும். முறையான அங்கீகாரம் பெறாதவர்கள் பொறியாளர்களாக பணிபுரிய அனுமதி வழங்கப்படாது என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. இத்தகவல் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து கிடைத்துள்ளது.
எனவே, சவுதியில் பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள், தற்போது பொறியியல் படித்து வரும் மாணவர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும்.
இதுபற்றிய கூடுதல் விவரங்களை https://www.aicte-india.org என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் சமீப ஆண்டுகளாக சமூக வலைதள நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே முரண்பாடு அதிகரித்து வந்தது. சமூக வலைதளங்கள் கட்டுப்பாடில்லாமல் செயல்படுகின்றன. பொய்ச் செய்திகள், வன்முறையைத் தூண்டும் பதிவுகள், ஆபாசப் பதிவுகள் அதிகரித்துள்ளன. இவற்றை சமூக வலைதள நிறுவனங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறி வந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது.
அந்தப் புதிய விதிகளின்படி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் உள்ளடக்கங்கள் சார்ந்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கஅந்நிறுவனங்கள் தனியே அதிகாரியை நியமிப்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று புகார்கள் எழுந்தன. இதையடுத்து மக்கள் புகார்களை விசாரிக்க ஒழுங்குமுறை குழு அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது. முதலில் ட்விட்டர், பேஸ்புக் நிறுவனங்கள் ஒப்புக் கொண்டன. ஆனால், கூகுள் நிறுவனம் ஒப்புக் கொள்ளவில்லை.
இந்நிலையில் சமூக வலைதளங்கள் மீதான மக்களின் புகார்களை விசாரிக்க மேல்முறையீட்டுக் குழுக்கள் 3 மாதங்களுக்குள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப (இன்டர்மீடியரி கைட்லைன்ஸ் அண்ட் டிஜிட்டல் மீடியா எதிக்ஸ் கோட்) திருத்த விதிகளை மத்திய அரசு நேற்று கெசட்டில் வெளியிட்டது.
இந்தப் புதிய திருத்தத்தின்படி, இந்திய நாட்டுக்குள் செயல்படும் ட்விட்டர், பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் இனிமேல் இந்திய சட்டதிட்டங்களின்படியே செயல்பட வேண்டும். பயனாளர் புகார்களை சமூக வலைதள நிறுவனங்கள் 24 மணி நேரத்துக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். 15 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
இணையத்தை பாதுகாப்பானதாக மாற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.
பயனாளர் புகார்களை சமூக வலைதள நிறுவனங்கள் 24 மணி நேரத்துக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பெங்களூரு: இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்துக்காக 36 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியில் இஸ்ரோ தனது ஜிஎஸ்எல்வி எம்கே3 ராக்கெட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி விண்ணுக்கு அனுப்பியது. ஒன்வெப் நிறுவனத்துக்காக மேலும் 36 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி எம்கே3 ராக்கெட்டில் அனுப்ப நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கான பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி எம்3 ராக்கெட்டை இஸ்ரோ தற்போது சுருக்கமாக எல்விஎம்3 என அழைக்கிறது. இந்த ராக்கெட்டில் மேல் அடுக்கில் பொருத்தப்படும் கிரையோஜெனிக் பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த சிஇ-20 இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜின் மகேந்திரகிரியில் உள்ள சோதனை மையத்தில் நேற்று முன்தினம் 25 வினாடிகள் இயக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
தேவைக்கு தகுந்தபடி இன்ஜினை ட்யூன் செய்வதுதான் இந்த பரிசோதனையின் முக்கிய நோக்கம். அனைத்து செயல்பாடுகளும் திருப்திகரமாக இருந்ததாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுடெல்லி: கம்ப்யூட்டர்கள் அல்லது மொபைல் போன்களின் செயல்பாட்டை கெடுக்க, தகவல்களை திருடி மோசடியில் ஈடுபடுவது என்பது உட்பட பல்வேறு சட்டவிரோத நோக்கங்களுக்காக பல்வேறு மால்வேர்களை (வைரஸ்) ஹேக்கர்கள் உருவாக்குகின்றனர். இதுகுறித்து சைபர் ஆராய்ச்சி மற்றும் புலனாய்வு ஆய்வகம் (சிரில்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் போல் செயல்படும் புதிய டிரினிக் ஆண்ட்ராய்டு டிரோஜன் என்ற மால்வேர் 18 வங்கிகளைக் குறி வைத்து ஊடுருவி வருகிறது. வருமான வரி செலுத்துவோர், அதை திரும்பப் பெறுவதற்கான செயலி என்று கூறி மோசடி நடக்கிறது.
இதுபோன்ற மால்வேர் 2016-ம் ஆண்டு முளைத்தது. தற்போது அதன் புதிய வடிவம் வந்துள்ளது. கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த மால்வேர் தீவிரமாக செயல்படுவது தெரியவந்தது. உடனடியாக புதிய மால்வேர் குறித்து 27 வங்கி வாடிக்கையாளர்களுக்கு இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் எச்சரிக்கை வெளியிட்டது.
அதன்பின், போலி மொபைல் ஆப், போலி இ மெயில்கள், எஸ்எம்எஸ்.கள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களிடம் மோசடி நடத்த முயற்சிகள் நடந்தன. தற்போது டிரினிக் என்ற பெயரில் ‘ஏபிகே பைல்’ என்ற ஆவணத்தை வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்புகிறது.
அதில் ‘ஐஅசிஸ்ட்’ என்ற அப்ளிகேஷன் உள்ளது. அது வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ பக்கம் போலவே உள்ளது. ஆண்ட்ராய்டு போனில் ஐஅசிஸ்ட்டை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கும் விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய சொல்லும்.
கடைசியில் உண்மையான வருமான வரித் துறை பக்கம் திறக்கும். அதை வாடிக்கையாளர்கள் திறந்து தங்களுடைய பான் எண், ஆதார் எண் உட்பட அனைத்துத் தகவல்களையும் அளித்த பின்னர், ‘வருமான வரியில் கூடுதலாக செலுத்தப்பட்ட தொகையை உடனடியாக உங்கள் வங்கிக்கணக்கில் செலுத்த ‘கிளிக்’ செய்யவும் என்று தெரிவிக்கப்படும். அதை நீங்கள் கிளிக் செய்தால், மோசடிக்காரர்கள் உங்கள் தகவல்களை திருடி விடுவார்கள்.
அதன் பின்னர் உங்கள் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை எளிதாக திருடி விடுவார்கள். எனவே, உங்கள் போன்களுக்கு அதிகாரப்பூர்வ அல்லது புதிய லிங்க் எது வந்தாலும், அதை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
இவ்வாறு சிரில் எச்சரித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளிக்கிழமை (அக். 28) மாநில உள்துறை அமைச்சர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளின் முதல் சிந்தன் ஷிவிர் அமர்வில் இந்திய போலீஸ் படைகளுக்கு “ஒரே நாடு, ஒரே சீருடை” என்ற யோசனையை முன்வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “காவல்துறையினருக்கான ‘ஒரே நாடு, ஒரே சீருடை’ என்பது ஒரு யோசனை மட்டுமே. நான் அதை உங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை.
சற்று சிந்தித்து பாருங்கள். இது நடக்கலாம், 5, 50 அல்லது 100 வருடங்களில் நடக்கலாம். அனைத்து மாநிலங்களும் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்”என்றார்.
நாடு முழுவதும் உள்ள காவல்துறையின் அடையாளம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.
மேலும், “தனிப்பட்ட அடையாளத்தைக் கொண்ட தபால் பெட்டி இருப்பதைப் போல, காவல்துறை சீருடைகள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அடையாளம் காணப்பட வேண்டும்” என்று மோடி கூறினார்.
ஒற்றுமைக்கான பிரதமரின் அழுத்தம்
பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையான “ஒரே நாடு, ஒரே சீருடை” நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கைகளை அறிமுகப்படுத்துவதற்கான அவரது பரந்த முயற்சிக்கு ஏற்ப உள்ளது.
ஆகஸ்ட் மாதம், இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் “ஒரே நாடு ஒரு உரம்” திட்டத்தை செயல்படுத்தியதாக அறிவித்தது.
இந்திய அரசு ஆகஸ்ட் 2019 இல் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
“ஒரே நாடு, ஒரே தேர்தல்” மற்றும் அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை ஏற்க வேண்டும் என்றும் மோடி பலமுறை பரிந்துரைத்துள்ளார்.
அவர் தனது புதிய சீருடைத் திட்டத்தை முன்வைத்தபோது, “நம் தேசத்திற்கு ஒரு முக்கியமான பிரச்சினை உள்ளது. தற்போது நம் நாட்டில், ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ அட்டை உள்ளது.
மேலும், ‘ஒரு நாடு, ஒரு சைகை மொழி’. இதைப் போலவே, அனைத்து மாநிலங்களும் ‘ஒரே தேசம், ஒரே சீரான’ கொள்கையைப் பற்றி சிந்திக்க வேண்டும்” என்றார்.
சட்டம் ஒழுங்கு- மாநில அரசு
இந்தச் சூழ்நிலையில், பிரதமரின் ஆலோசனையை, அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொண்டால், அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்தியாவில் காவல்துறை பணியாளர்கள் பெரும்பாலும் காக்கி நிறத்துடன் தொடர்புடையவர்கள் என்றாலும், அவர்களின் சீருடைகள் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அளவுகளில் வேறுபடுகின்றன.
மாநில அரசுகள் மற்றும் ஒரு தனிப்படை கூட தங்கள் பணியாளர்கள் அணியும் சீருடையை தீர்மானிக்க முடியும் என்பதால், சில நேரங்களில் அவர்களின் அதிகாரப்பூர்வ உடையில் முரண்பாடுகள் உள்ளன.
கொல்கத்தா போலீசார் வெள்ளை சீருடை அணிகின்றனர்.
புதுச்சேரி போலீஸ் கான்ஸ்டபிள்கள் தங்கள் காக்கி சீருடையுடன் பிரகாசமான சிவப்பு தொப்பியை அணிந்துள்ளனர்.
டெல்லி போக்குவரத்து காவலர்கள் வெள்ளை மற்றும் நீல நிற சீருடைகளை அணிகின்றனர்.
போலீஸ் சீருடையில் மாற்றம்
பல ஆண்டுகளாக, பல்வேறு மாநிலங்களின் காவல் துறைகள் தங்கள் பணியாளர்களுக்கான சீருடைகளை சீர்திருத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
இந்த ஆண்டு மான் புக்கர் பரிசு இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட எழுத்தாளர் ஷெஹன் கருணதிலகவின் ‘தி செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்தா’ (The Seven Moons of Maali Almeida) என்னும் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஷெஹன் கருணதிலக இலங்கையில் பிறந்தவர். கொழும்பு, நியூசிலாந்து ஆகிய இடங்களில் கற்றவர். எழுத்தாளராக, ஒளிப்படக் கலைஞராக லண்டன், ஆம்ஸ்டர்டாம், சிங்கப்பூர் ஆகிய இடங்களில் பணியாற்றியவர். இவருடைய முதல் நாவல் ‘சைனாமேன்’ காமன்வெல்த் விருது பெற்றது. அமெரிக்கப் பத்திரிகைகள் பலவற்றில் கதை, கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
கரிசல் காட்டு எழுத்தாளர், சமூகப் போராளி, தோழர் பா.செயப்பிரகாசம் 81ஆவது வயதில் கால வெள்ளத்தில் கரைந்துவிட்டார். மனித வாழ்வில் எதிர்கொள்ள நேரும் எந்த ஒன்றையும் பாதிக்கப்பட்டவர் பக்கம் நின்றே சிந்தித்தல், பேசுதல், எழுதுதல், செயல்படுதல் என்கிற மகத்தான இடதுசாரி மனநிலையில் பார்த்தவர் அவர்.
அவரோடு நெருக்கமாகப் பழகக் கிடைத்த காலம், என் தனிப்பட்ட வாழ்வில் அடர்த்தியாகத் துக்கத்தை அடைகாத்துக் கிடந்த 1977 வாக்கில்தான் அமைந்தது. 1965இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகிப் பாளையங்கோட்டையில் சிறை வாழ்வைக் கண்டவர் என்ற முறையில், திமுக ஆட்சிக்கு வந்த 1967-க்குப் பிறகு தமிழ் முதுகலை முடித்திருந்த அவருக்கு மக்கள் தொடர்பு அதிகாரி என்கிற புதிய அரசு வேலை கிடைத்தது. இடதுசாரிக் குடும்பத்தைத் தேடிப் பெண் பார்த்துத் திருமணமும் நடைபெற்றது. இந்நிலையில், 1975இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டவுடன், அவருடைய அரசு வேலை போயிற்று.
தோழர் பா.செயப்பிரகாசத்தை 1988இன் இறுதியில் சந்தித்தேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்திருந்த காலம். அப்போது அறிமுகமான ‘மனஓசை’ இதழுக்குச் சிலவற்றை எழுதியனுப்பினேன். அதன்வழியாகப் பாசெவைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. ‘மனஓசை’ இதழின் பொறுப்பாசிரியர் அவர். அச்சில் அவர் பெயர் இருக்காது. மார்க்சிய லெனினிய இயக்கம் ஒன்றின் கலை இலக்கிய இதழ் என்பதாலும் பாசெ அரசு ஊழியர் என்பதாலும் பெயர் இடம்பெறவில்லை.
‘ஒரு ஜெருசலேம்’, ‘காடு’, ‘கிராமத்து ராத்திரிகள்' ஆகிய அவரது சிறுகதைத் தொகுப்புகளை வாசித்திருந்த பிரமிப்பு எனக்குள் இருந்தது. அப்பேர்ப்பட்ட எழுத்தாளர் பொறுப்பு வகிக்கும் இதழ், அவர் இணைந்து இயங்கும் அமைப்பு ஆகிய காரணங்களால் மார்க்சிய அறிவு ஏதும் இல்லாமலே அவ்வமைப்பில் ஐக்கியமானேன். அப்போது ‘மனஓசை’ இதழ் ஆசிரியர் குழுவில் நால்வர் இருந்தனர். மாநில அரசுத் துறையில் பாசெ உயரதிகாரியாக இருந்தார். அலுவலக வேலைகள் கூடுதல். அமைப்புப் பேச்சாளராகக் கூட்டங்களுக்குச் செல்லும் பணி. அவற்றுக்கிடையே ‘மனஓசை’ பொறுப்பு. ‘சூரியதீபன்’ என்கிற பெயரிலும் வேறு பல புனைபெயர்களிலும் ‘மனஓசை’ இதழில் எழுதுவார். இதழ்ப் பணிக்குக் கூடுதலாக இன்னொருவர் தேவைப்பட்டதால், அதற்குப் பொருத்தமானவன் என்று என்னை அவர்கள் உணர்ந்ததால் அறிமுகமான சில மாதங்களிலேயே ஆசிரியர் குழுவில் இணைந்தேன். 1989 முதல் 1991இல் இதழ் நிற்கும் வரை ஆசிரியர் குழுவில் செயல்பட்ட அந்த மூன்றாண்டுகள் என் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம்.