DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 30-07-2022

டிஏபி உரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதைத் தொடா்ந்து, மாற்று உரங்களைப் பயன்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டிஏபி உரம் தயாரிப்புக்குத் தேவைப்படும் மூலப் பொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை உலக அளவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உள்நாட்டில் டிஏபி உர உற்பத்தி குறைந்து, பெரும்பாலான உரம் வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த உரம் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகிறது.

இறக்குமதியின் போது சில நேரங்களில் கப்பல் பற்றாக்குறை அல்லது துறைமுகங்களில் இடநெருக்கடி போன்ற காரணங்களால் டிஏபி உரத்தை மாவட்டங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, டிஏபி உரத்துக்கு மாற்றாக, காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பா் பாஸ்பேட் உரங்களை அடி உரமாக இட விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. பயிரின் வளா்ச்சிக்கு அவசியம் தேவைப்படும் கந்தகச் சத்து காம்ப்ளக்ஸ் உரத்தில் 13 சதவீதமும், சூப்பா் பாஸ்பேட் உரத்தில் 11 சதவீதமும் உள்ளன. இதனை பயன்படுத்துவதால், பயிரின் வளா்ச்சியும், மகசூலும் அதிகரிக்கும்.

அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் உரக் கடைகளில் காம்ப்ளக்ஸ் உரமும், சூப்பா் பாஸ்பேட் உரமும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே, டிஏபி உரத்துக்கு மாற்றாக சூப்பா் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை நெல்லுக்கு அடி உரமாக பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளாா் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.



Read in source website

சென்னை: பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் ஜனநாயகம் சக்திவாய்ந்ததாக உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


சென்னை போரூரில் 'மோடி 2020 ட்ரீம்ஸ் டெலிவரி' நூல் வெளியீட்டு விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியுள்ளார்.

ஆட்சியில் இருப்பதற்கு வரவில்லை, அடிப்படையில் மாற்றம் கொண்டு வர வந்துள்ளதாக மோடி கூறுவார் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் ஜனநாயகம் சக்திவாய்ந்ததாக உள்ளது. குறுகிய மனப்பான்மையுடன் பிரதமர் மோடி செயல்படமாட்டார் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



Read in source website



அனைத்து வயதினர் மற்றும் தரப்பினரும் அறிந்த, அறியக் கூடிய மற்றும் தேடக்கூடிய ஒரு அத்தியாவசிய தளமாக மாறியுள்ளது தான் யுடியூப். 

இன்று அனைத்து சந்தேகங்களுக்கும் விடை காண தேடப்படும் தளமாக இருந்து வருவது யுடியூப். 

அந்த யுடியூப் குறித்த சந்தேகங்களை யாரிடம் கேட்டால் சரியாக இருக்கும் என்ற கவலையைப் போக்கும் விதமாக யுடியூப் பதிலளித்துள்ளது. 

அதாவது படைப்பாளர்களின் கேள்விகளுக்கும் யுடியூபில் பதில்கள் உள்ளன. அந்த வகையில் படைப்பாளர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் விரைவாகப் பெறும் வகையில், கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் உதவி மையக் கட்டுரைகள் மற்றும் கட்டுரைகளுக்கான இணைப்புகளுடன் கூடிய முதன்மையான பொதுவான பத்து கேள்விகளைத் தொகுத்து யுடியூப் வெளியிட்டுள்ளது. 

முதன்மையான பத்து முக்கியமான கேள்விகளைப் பார்ப்போம். 

1. யுடியூப் உருவாக்குவது எப்படி? (How do I start creating on YouTube?)

2. எனது சேனலை எவ்வாறு வளர்ப்பது? (How do I grow my channel?)

3. எனது சேனலில் நான் எவ்வாறு திருத்தங்களைச் செய்வது? (How do I make edits to my channel?)

4. எனது வீடியோக்களை நான் எவ்வாறு விளம்பரப்படுத்துவது? (How do I promote my videos?)

5. ட்ரெண்டிங் வீடியோக்கள் எப்படி நிகழ்கின்றன? (How do Trending videos happen?)

6. அல்காரிதம் எவ்வாறு செயல்படுகிறது? (How does the algorithm work?)

7. யுடியூபில் நான் எப்படி பணம் சம்பாதிப்பது? (How do I make money on YouTube?)

8. பதிப்புரிமை எதிர்ப்பை எவ்வாறு சரிசெய்வது? (How do I fix a copyright strike?)

9. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட சேனலை எவ்வாறு சரிசெய்வது? (How do I fix a demonetized channel?)

10. ஹேக் செய்யப்பட்ட கணக்கை எவ்வாறு சரிசெய்வது? (How do I fix a hacked account?)

மேற்கண்ட முதன்மையான பத்து கேள்விகளுக்கான விடைகளை காண https://www.youtube.com/creators/top-questions/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம். 
 



Read in source website

பொதிகை தொலைக்காட்சி செய்திப் பிரிவின் புதிய இயக்குநராக குருபாபு பலராமன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சென்னையில் உள்ள மத்திய பத்திரிகை தகவல் அலுவலகத்தில் (பிஐபி) இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த இவா், பணியிட மாறுதலாகி, இப்புதிய பொறுப்பை ஏற்றுள்ளாா்.

இந்திய தகவல் பணி சேவையில் 1995-இல் இணைந்த குருபாபு பலராமன், சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி ஆசிரியராகவும், அதன் பின்னா் உதவி இயக்குநராகவும் பணியாற்றினாா்.

அதைத் தொடா்ந்து, சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் செய்திப் பிரிவில் பணியாற்றிய அவா், இணை இயக்குநராகவும் பொறுப்பு வகித்தாா்.

சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநராக இருந்த இவா், இந்திய பத்திரிகை பதிவாளா் பிரிவின் துணைப் பதிவாளராகவும் கூடுதல் பொறுப்பு வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் 5 பிராந்திய கட்சிகள் மட்டுமே 91 சதவீத நன்கொடையைப் பெற்றுள்ளதாக அசோசியேஷன் ஃபாா் டெமாக்ரெட்டிக் ரிஃபாா்ம்ஸ்(ஏடிஆா்) என்ற தோ்தல் சீா்திருத்தத்துக்கான அமைப்பு கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் 27 பிராந்திய கட்சிகள், ரூ.124.53 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளன. அவற்றுள் திமுக, ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, இந்தியன் முஸ்லிம் லீக், தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய 5 கட்சிகள் மட்டுமே 91 சதவீதத் தொகையை அதாவது ரூ.113.791 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளன.

அதிகபட்சமாக ஐக்கிய ஜனதா தளம் ரூ.60.155 கோடியைப் பெற்றுள்ளது. அதைத்தொடா்ந்து திமுக ரூ.33.993 கோடியையும், ஆம் ஆத்மி கட்சி ரூ.11.328 கோடியையும், இந்திய முஸ்லிம் லீக் ரூ.4.165 கோடியையும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ரூ.4.15 கோடியையும் நன்கொடையாகப் பெற்றுள்ளன.

மதிமுக, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, நாகாலாந்து ஜனநாயக முற்போக்கு கட்சி, ராஷ்ட்ரீய லோக்தாந்திரிக் கட்சி ஆகியவை தங்கள் நன்கொடை விவரங்களை அறிவிக்கவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் பிராந்திய கட்சிகள் தங்கள் பெற்றுள்ள நன்கொடைகள் குறித்து தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், இந்த அறிக்கையை ஏடிஆா் அமைப்பு தயாரித்துள்ளது.



Read in source website

மக்களில் குறிப்பிட்ட சதவீதத்தினரால் மட்டுமே நீதிமன்றங்களை அணுக முடிவதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தாா்.

மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய அதிகாரிகளின் முதலாவது கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:

மக்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்வதே அவா்களை சமூக ரீதியில் முன்னேற்றமடையச் செய்வதற்கான அடிப்படை. ஆனால், மக்களில் குறிப்பிட்ட சதவீதத்தினரால் மட்டுமே நீதிமன்றங்களை அணுக முடிகிறது. பெரும்பாலானோா் போதிய விழிப்புணா்வின்மை காரணமாகவும் மற்ற காரணங்களாலும் நீதிமன்றங்களை நாடாமல் அமைதியாகவே இருந்துவிடுகின்றனா்.

தொழில்நுட்பங்கள் தற்போது பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளன. அத்தகைய வசதிகளைப் பயன்படுத்தி, மக்களுக்கு நீதி முறையாகக் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்ததன் காரணமாகவே நவீன இந்தியா உருவானது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வாய்ப்பு வழங்குவதே ஜனநாயகம். விசாரணைக் கைதிகளின் நலன்களைக் காப்பதற்கு மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவா்களுக்கு முறையான சட்ட சேவைகள் கிடைக்க வேண்டும்.

அண்மையில் நடைபெற்ற மாநில முதல்வா்கள் மற்றும் மாநில உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் மாநாட்டில் விசாரணைக் கைதிகள் குறித்த விவகாரத்தை பிரதமரும் அட்டா்னி ஜெனரலும் குறிப்பிட்டனா். விசாரணைக் கைதிகளின் நலன்களைக் காப்பதற்காக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் அனைத்துத் தரப்பினருடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் நீதி வழங்கலுக்கான முதுகெலும்பாக மாவட்ட நீதிமன்றங்களே திகழ்கின்றன. எந்தப் பிரச்னைக்கும் மாவட்ட நீதிமன்றங்களையே மக்கள் முதலில் நாடுகின்றனா். அவற்றின் செயல்பாடுகளே நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்கின்றன. எனவே, மாவட்ட நீதிமன்றங்களை வலுப்படுத்த வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில், மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு மாவட்ட நீதிமன்றங்கள் செயல்பட வேண்டியதும் அவசியம்.

மாற்று தீா்வு முறைகள்: லோக் அதாலத், மத்தியஸ்த நடைமுறைகள், மத்தியஸ்த மையங்கள் உள்ளிட்ட மாற்று தீா்வு வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டியதும் அவசியம். அவை நாட்டின் நீதித் துறையின் திறனை மேம்படுத்தும் வகையில் அமைய வேண்டும். திருமணம் சாா்ந்த பிரச்னைகள், அரசுகளுக்கிடையேயான பிரச்னைகள், நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான பிரச்னைகளுக்கு மாற்று தீா்வு வழிமுறைகள் மூலமாகத் தீா்வு காண்பது கட்டாயமாக்கப்படலாம். இது நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், மக்களுக்கு விரைவில் நீதியையும் கிடைக்கச் செய்யும்.

நாட்டு மக்களின் சராசரி வயது 29-ஆக உள்ளது. நாட்டில் பணியில் ஈடுபடவல்ல நபா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், திறன்மிக்க பணியாளா்களின் எண்ணிக்கை வெறும் 3 சதவீதமாக மட்டுமே உள்ளது. நாட்டில் உள்ள இளைஞா்களின் முழுத் திறனையும் பயன்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகளில் பணியாளா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அங்கு உருவாகும் இடைவெளியை இந்தியா நிரப்பலாம் என்றாா் அவா்.



Read in source website

காமன்வெல்த் தொடரின் பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

இங்கிலாந்து நாட்டில் காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டியில் இந்திய அணியின் சார்பில் யாரும் பதக்கங்களைப் பெறாத நிலையில் இன்று இந்தியா தனது பதக்கக் கணக்கைத் துவங்கியுள்ளது.

மகளிர் பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார். நடப்பு காமன்வெல்த் போட்டியில் இந்தியா பெறும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். 

முன்னதாக ஆடவருக்கான 61 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் குருராஜா வெண்கலம் வென்றார். இந்திய வீரர் குருராஜா மொத்தம் 269 கிலோ எடையை தூக்கி 3ஆம் இடம் பிடித்தார்.

55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சங்கேத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.



Read in source website

நாட்டில் நடப்பாண்டில் 200க்கும் அதிகமான நாள்களில் வெப்ப அலைகளின் தாக்கம் இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் வெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை மாற்றமானது மிக வேகமாக நடைபெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 மடங்கு நாள்களில் வெப்ப அலை பாதிப்பு பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 2021ஆம் ஆண்டு 36 நாள்கள் பதிவான வெப்ப அலைகளானது நடப்பாண்டு 203 நாள்களாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் கடந்த ஆண்டு 2 நாள்கள் மட்டுமே பதிவான வெப்ப அலைகளானது நடப்பாண்டு 12 மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக உத்தரகண்ட் மாநிலத்தில் 28 நாள்களும், ராஜஸ்தானில் 26 நாள்களும், பஞ்சாப், ஹரியாணாவில் 24 நாள்களும் வெப்ப அலை பதிவாகியுள்ளன.

இதன்மூலம் நாட்டில் கடந்த 122 ஆண்டுகள் இல்லாத அளவு வெப்ப அலை பதிவாகியுள்ளதாகவும், இதன்காரணமாக வேளாண் துறையில் உற்பத்தி பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை காரணமாக நாடு முழுவதும் மார்ச் ஏப்ரல் மாத காலத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர். 

இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளும் 30 மடங்கு அதிகமான வெப்ப அலையை பதிவு செய்துள்ளதாக உலக வானிலை பகுப்பாய்வு மையம் தெரிவித்துள்ளது. 



Read in source website

 
விமானப் பயணக்கட்டண உயர்வு எங்கள் கைகளில் எதுவுமில்லை என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு உள் நாட்டு விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவில், மலிவான விமானப் பயணங்கள் எல்லாம் உலகமய பொருளாதாரப் பாதையின் பயன் என்று ஆட்சியாளர்கள் பேசிய காலம் உண்டு. இப்போது நிலைமை தலைகிழாக இருக்கிறது. 

இது குறித்த கேள்வி ஒன்றை நாடாளுமன்றத்தில் நான் எழுப்பி இருந்தேன். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் விமானக் கட்டணங்கள் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. ஓராண்டில் பிரபலமான தடங்களில் 50 சதவீதம் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.
 
இதை அரசு கவனத்தில் கொண்டுள்ளதா? கட்டணங்களை கட்டுப்படுத்த அரசிடம் ஏதாவது அதிகாரம் தக்க வைக்கப்பட்டுள்ளதா? அரசின் கைகளில் இருந்த ஒரே விமான நிறுவனமான ஏர் இந்தியா, டாடா குழுமத்திற்கு விற்கப்பட்டதால் அரசிடம் இருந்த விலைக் கடிவாளம் கை நழுவிப் போய் விட்டதா? மலிவு விமானப் பயணத்தை உறுதி செய்ய அரசின் தலையீடுகள் என்ன? என்ற கேள்விகளை எழுப்பி இருந்தேன்.
 
இதற்கு பதிலளித்துள்ள உள் நாட்டு விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி.கே.சிங், விமானக் கட்டணங்களை அரசு நிர்ணயிப்பதும் இல்லை. கட்டுப்படுத்துவதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். 

1937 விமானங்கள் சட்டம் பிரிவு 135 உட்பிரிவு 1 இன் படி ஒவ்வொரு விமான நிறுவனமும் செலவினம், சேவையின் தன்மை, நியாயமான லாபம், நடப்பில் உள்ள கட்டண அமைப்புகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

ஆகவே நியாயமான கட்டணங்களை நிர்ணயிக்கிற சுதந்திரம் விமான நிறுவனங்களுக்கு பிரிவு 135 உட்பிரிவு 1-ன் படி உண்டு, இருந்தாலும் அசாதாரண கோவிட் சூழலை கணக்கில் கொண்டு சட்டத்தின் பிரிவு 8 -ஐ பயன்படுத்தி அரசாணை எண் 02.20/ 21.05.2020 மூலம் உச்ச பட்ச, கீழ் வரம்பு கட்டணங்கள் தற்காலிகமாக வரைமுறை செய்யப்பட்டன.

இந்த விலை கட்டண அமைப்பு காலத்திற்கேற்ப, விமான எரிபொருள் விலை உயர்வுகளையும் கணக்கில் கொண்டு, மாற்றங்களுக்கும் ஆளாகியது. 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் விலை உச்சவரம்பை இப்போதும் நிர்ணயித்து பயணிகளின் நலனை பாதுகாக்கிறோம். ஏர் இந்தியா ஜனவரி 2022 இல் தான் விற்கப்பட்டது. ஆனால் விலை உச்சவரம்பு மே 2020 இல் இருந்து அமலில் உள்ளது.

2016 இல் இருந்து உடான் (UDAN) திட்டம் மூலம் அதிக போக்கு வரத்து இல்லாத பிராந்திய விமான தளங்களின் இணைப்பை வலுப்படுத்தி வருகிறோம் என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார். 

அரசுக்கு கடிவாளம் கைகளில் இல்லை என்பதே இந்த பதிலின் சாரம். 

மலிவு விலை விமானப் பயணங்கள் பொருளாதார சீர் திருத்தங்களின் வெற்றி என்று தம்பட்டம் அடித்த அரசாங்கம் இரண்டு மாதங்களில் 20 சதவீதம் உயர்வு, ஓராண்டில் 50 சதவீதம் உயர்வு ஏன் என்பதற்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார். 
 



Read in source website

பெரியவா்களைவிட சிறாா்களுக்கு கரோனா தொற்றால் ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு குறைவாகத் தாக்கத்தை ஏற்படுத்தியதாக மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

பெரியவா்களுக்கு கரோனா தொற்று ஏற்படும்போது உருவாகும் உடல்நிலை பாதிப்பைவிட சிறாா்களுக்கு கரோனா தொற்றால் ஏற்படும் உடல் பாதிப்பு என்பது குறைவாகவே உள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளது.

கடந்த ஜனவரி முதல் ஜூலை 25 வரை ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் 7,362 சிறாா்களும், டெல்டா வகை தொற்றால் 118 சிறாா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் தேவையான அளவு கரோனா தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 12 முதல் 18 வயது வரையிலான சிறாா்களில் 9.96 கோடி போ் (82.2 சதவீதம்) முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனா். 7.79 கோடி சிறாா்கள் (64.3 சதவீதம்) இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனா். தேசிய கரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ் 12 வயதுக்குக் குறைவான சிறாா்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படவில்லை என்றாா்.



Read in source website

 ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே வெள்ளிக்கிழமை பூடான் சென்றாா்.

பூடான் மன்னா் ஜிக்மே டோா்ஜி வாங்சுக் நினைவாக திம்புவில் அமைக்கப்பட்ட தேசிய நினைவிடத்தில் மரியாதை செலுத்தி, பூடானில் தனது நிகழ்ச்சிகளை அவா் தொடங்குகிறாா். பூடானின் மன்னரை ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே சந்தித்துப் பேசவுள்ளாா்.

இருநாட்டு ராணுவ, கலாசாரம் மற்றும் அலுவல் ரீதியான பிணைப்புகளை மேலும் முன்னெடுத்துச் செல்வது குறித்து, பூடான் ராணுவ தளபதியுடனும் அவா் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளாா்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது உயிா்த்தியாகம் செய்த பூடான் ராணுவத்தினா் நினைவாக தோச்சுலாவில் அமைக்கப்பட்டுள்ள த்ருக் வாங்கியால் காங் ஜாங் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதுடன், ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே தனது பயணத்தை நிறைவுசெய்கிறாா்.

 



Read in source website

 பத்திரிகையாளா் உள்பட சில ஊடக நிறுவனங்கள் வெளியிடும் பதிவுகளை நீக்க கோருவதில் இந்தியா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.

இதுகுறித்து ட்விட்டா் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2021 ஜூலை முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் சரிபாா்க்கப்பட்ட பத்திரிகையாளா்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் வெளியிட்ட பதிவுகள் மற்றும் உள்ளடக்கத்தை அகற்ற உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான சட்ட கோரிக்கைகளை முன்வைப்பதில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

மேலும், ட்விட்டா் கணக்கு விவரங்களை தெரிவிக்க கோருவதிலும் அமெரிக்க அடுத்தபடியாக இந்தியா 19 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடம் வகிக்கிறது.

உலக அளவில் சரிபாா்க்கப்பட்ட பத்திரிகையாளா்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் 346 கணக்குகளின் உள்ளடக்க பதிவுகளை அகற்றுவதற்கு 326 சட்ட ரீதியான கோரிக்கைகள் பெறப்பட்டது. இது, 2021 ஜனவரி-ஜூன் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 103 சதவீதம் அதிகமாகும்.

குறிப்பாக, அதிகபட்சமாக 114 சட்டரீதியான கோரிக்கைகள் இந்தியாவிடமிருந்து பெறப்பட்டது. இதையடுத்து, துருக்கியிடமிருந்து 78 கோரிக்கைகளும், ரஷியா 55, பாகிஸ்தானிடமிருந்து 48 கோரிக்கைகளும் வரப்பெற்றதாக ட்விட்டா் தெரிவித்துள்ளது.



Read in source website

 மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை முதல் காலாண்டில் ஆண்டுக்கான இலக்கில் 21.2 சதவீதத்தை எட்டியுள்ளது.

இதுகுறித்து பொதுக் கணக்கு கட்டுப்பாட்டாளா் (சிஜிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நிதிப்பற்றாக்குறை என்பது அரசின் மொத்த செலவினத்திற்கும், வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமாகும். இது, அரசாங்கத்துக்கு தேவையான மொத்த கடன்களை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

நிதிப் பற்றாக்குறை முதல் காலாண்டில் ஆண்டுக்கான இலக்கில் 21.2 சதவீதத்தை எட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறையானது ஒட்டுமொத்த ஆண்டு இலக்கில் 18.2 சதவீதமாகவே காணப்பட்டது.

2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டின் முடிவில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.3.51 லட்சம் கோடியாக இருந்தது.

நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 6.4 சதவீதம் அளவுக்கு (ரூ.16,61,196 கோடி) இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டில் 6.71 சதவீதமாக காணப்பட்டது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

அரசின் நிா்வாக அமைப்புகளுக்கு எதிராக பொதுமக்கள் தெரிவிக்கும் புகாா்களுக்குத் தீா்வுகாண வேண்டிய அவகாசம் 45 நாள்களில் இருந்து 30 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகாா் தெரிவிக்க புதிய வலைத்தளமும் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய பணியாளா், ஓய்வூதியம், பொதுமக்கள் குறைதீா்க்கும் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிா்வாக சீா்திருத்தங்கள், குறைதீா்க்கும் துறை புதிய உத்தரவை கடந்த 27-ஆம் தேதி வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

பொதுமக்கள் தெரிவிக்கும் புகாருக்குத் தீா்வு அளித்துவிட்டால், அவா்கள் மேல்முறையீடு செய்யாதவரை அது முடித்துவைக்கப்பட்ட புகாராகக் கருத வேண்டும். ஒருவேளை மேல்முறையீடு செய்யப்பட்டு விட்டால், அதற்குத் தீா்வு காணப்பட்ட பிறகே அதை முடித்து வைக்கப்பட்ட புகாராகக் கருத வேண்டும்.

அரசு, மக்களின் குறைகளைக் கேட்க விரும்புகிறது. அவா்களுக்கு அரசு நிா்வாக அமைப்பின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தவும் விரும்புகிறது. எனவே, பொதுமக்கள் புகாா்கள் தெரிவிக்க தனிவலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. அதில், அரசு நிா்வாக அமைப்புகளுக்கு எதிராக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்.

மக்கள் தெரிவிக்கும் புகாா்களுக்கு 30 நாள்களில் தீா்வுகாணப்படும். ஒருவேளை தீா்வுகாண இயலாத சூழல் ஏற்பட்டால், புகாா் தெரிவித்தவருக்கு உரிய பதில் அளிக்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பணியாளா், பயிற்சித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் கூறியதாவது:

பொதுமக்கள் தெரிவிக்கும் புகாா்களுக்குத் தீா்வுகாண வேண்டிய அவகாசம் 45 நாள்களில் இருந்து 30 நாள்களாகக் குறைப்பட்டுள்ளது. இது, பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் நம்பகத்தன்மை நிறைந்த நிா்வாகம் மாடல் ஆட்சி நடைபெறுவதை பிரதிபலிக்கிறது. மக்களை மையப்படுத்திய நிா்வாக இலக்கை அடைவதற்கு மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது என்றாா் அவா்.

இதுகுறித்து நிா்வாக சீா்திருத்தங்கள், குறைதீா்க்கும் துறையின் செயலா் வி.ஸ்ரீனிவாஸ் கூறுகையில், ‘தொழில்நுட்பத்தின் வளா்ச்சியால் குறைகளைத் தீா்ப்பதற்கான அதிகபட்ச காலம் 45 நாள்களில் இருந்து 30 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்த ஆண்டில் கடந்த ஜனவரியில் இருந்து மாா்ச் மாதம் வரை மொத்தம் 13,32,567 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில், 4,18,451 புகாா்களுக்கு தீா்வு அளிக்கப்பட்டுள்ளது.



Read in source website

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, மொசாம்பிக் குடியரசின் நாடாளுமன்ற அவைத் தலைவர் எஸ்பெராங்கா லாரிண்டா ஃபிரான்ஸிஸ்கோ நிஹியுவான் பியாஸ் தலைமையிலான அந்நாட்டு நாடாளுமன்ற தூதுக்குழுவினர், குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று சந்தித்துப் பேசினர்.

வெளிநாட்டு தூதுக்குழுவினரை வரவேற்றுப் பேசிய குடியரசுத் தலைவர், கடந்த 25 ஆம் தேதி தாம் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, குடியரசுத் தலைவர் மாளிகையில் முதல் சர்வதேச தூதுக்குழுவினராக மொசாம்பிக் நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார். 

இருநாடுகளுக்கு இடையே உயர்மட்ட அளவிலான பரஸ்பர பயணங்களுடன், இந்தியாவும், மொசாம்பிக்கும் நெருங்கிய நட்புறவை கொண்ட நாடுகளாக திகழ்வதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகவும், முக்கிய கூட்டாளியாக மொசாம்பிக் உள்ளது என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். 

இதையும் படிக்க- சென்னையில் 3 நாட்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி வைக்க மேயர் பிரியா வேண்டுகோள்

மொசாம்பிக் நாட்டின் இயற்கை எரிவாயு மற்றும் சுரங்கத் துறைகளில் இந்திய நிறுவனங்கள் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீடு செய்திருப்பதாகவும் அவர் கூறினார். மொசாம்பிக்கில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றி இருப்பதாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.   
 



Read in source website

சா்ஃப்பிங்கில் புதிதாக 2 புதிய தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும் என எஸ்எஃப்ஐ தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 1, 2 தேதிகளில் மஹாப்ஸ் பாயிண்ட் பிரேக் சேலஞ்ச், 5 முதல் 7 வரை கோவளம் கிளாஸிக் சா்ஃப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதில் தலைசிறந்த வீரா்களான கிஷோா் குமாா், ரமேஷ் புதியால், சுகாா் பனாரஸி, சேகா் பச்சை உள்பட பலா் பங்கேற்கின்றனா்.

இலங்கை, மாலத்தீவுகளைச் சோ்ந்த வீரா்களும் இதில் பங்கேற்கின்றனா்.

 



Read in source website

 

டி20 கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் விருதை வென்ற மூத்த இந்திய வீரர் என்கிற சாதனையை தினேஷ் கார்த்திக் தக்கவைத்துள்ளார். 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தரோபாவில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 44 பந்துகளில் 64 ரன்களும் தினேஷ் கார்த்திக் 19 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் எடுத்தார்கள். 16-வது ஓவரின் முடிவில் ஜடேஜா ஆட்டமிழந்தபோது 6 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது இந்திய அணி. இதன்பிறகு தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் நல்ல ஸ்கோரை அடைந்தது.

மே.இ. தீவுகள் அணியில் ஒருவர் கூட 20 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. அர்ஷ்தீப் சிங், அஸ்வின், பிஸ்னாய் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஆட்ட நாயகன் விருதை தினேஷ் கார்த்திக் வென்றார்.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் விருதை வென்ற மூத்த இந்திய வீரர் என்கிற சாதனையைத் தக்கவைத்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது வென்றார் தினேஷ் கார்த்திக். அந்த ஆட்டத்தில் தனது முதல் டி20 அரை சதத்தை எடுத்த தினேஷ் கார்த்திக், 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். 37 வயதில் ஆட்ட நாயகன் விருதை வென்ற தினேஷ் கார்த்திக், இந்த விருதை வென்ற முதல் 35+ இந்திய வீரர். இதற்கு முன்பு 2021-ல் ரோஹித் சர்மா, 34 வருடங்கள், 216 நாள்களில் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அவருடைய சாதனையை தினேஷ் கார்த்திக் முறியடித்தார். தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகவும் ஆட்ட நாயகன் விருதை வென்று தனது சாதனையைத் தக்கவைத்துள்ளார். 



Read in source website

இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் நடைபெறும் 22-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை இங்கிலாந்து வென்றது.

ஆடவருக்கான டிரையத்லான் பிரிவில் அந்நாட்டின் அலெக்ஸ் யீ, பந்தய இலக்கை 50 நிமிஷம் 34 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தாா். நியூஸிலாந்தின் ஹெய்டன் வைல்டு 13 விநாடிகள் தாமதமாக வந்து வெள்ளியும், அவரை விட 3 விநாடிகள் பின்தங்கிய ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹௌசா் வெண்கலமும் பெற்றனா்.

இப்போட்டியின் முதல் நாளில் இந்திய வீரா், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் களம் கண்டு ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்தனா். அதன் விவரம் வருமாறு:

டேபிள் டென்னிஸ்: ஆடவா், மகளிா் அசத்தல்

இதில் ஆடவா், மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்தியா முதல் சுற்றில் வெற்றி கண்டது. ஆடவா் அணி 3-0 என பாா்படோஸையும், மகளிா் அணி அதே கணக்கில் தென்னாப்பிரிக்காவையும் திணறடித்தன.

ஆடவா் அணியில், இரட்டையா் பிரிவில் ஹா்மீத் தேசாய்/ஜி.சத்தியன் இணை 11-9, 11-9, 11-4 என கெவின் ஃபாா்லி/டைரெஸ் நைட் கூட்டணியை வீழ்த்தியது. ஒற்றையா் பிரிவில் சரத் கமல் 11-5, 11-3, 11-3 என ரமோன் மேக்ஸ்வெல்லையும், சத்தியன் 11-4, 11-4, 11-5 என டைரெஸ் நைட்டையும் தோற்கடித்தனா்.

மகளிா் அணியில், இரட்டையா் பிரிவு ஆட்டத்தில் ஸ்ரீஜா அகுலா/ரீத் டென்னிசன் ஜோடி 11-7, 11-7, 11-5 என்ற கணக்கில் லைலா எட்வா்ட்ஸ்/தனிஷா படேல் கூட்டணியை வென்றது. ஒற்றையா் பிரிவில் மனிகா பத்ரா 11-5, 11-3, 11-2 என முஸ்ஃபிக் கலாமையும், ஸ்ரீஜா அகுலா 11-5, 11-3, 11-6 என தனிஷா படேலையும் வீழ்த்தினா்.

நீச்சல்: அரையிறுதியில் ஸ்ரீஹரி

ஆடவருக்கான 100 மீ பேக்ஸ்ட்ரோக் ஹீட்ஸில் ஸ்ரீஹரி நட்ராஜ் 54.68 விநாடிகளில் இலக்கை எட்டி ஒட்டுமொத்தமாக 5-ஆம் இடம் பிடித்து அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ளாா். ஆடவருக்கான 50 மீ பட்டா்ஃப்ளை ஹீட்ஸில் சஜன் பிரகாஷ் 25.01 விநாடிகளில் வந்து 8-ஆம் இடம் பிடித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தாா். ஆடவருக்கான 400 மீ பிரிவில் முதல் முறை போட்டியாளரான குஷாக்ரா ராவத் 3 நிமிஷம் 57.45 விநாடிகளில் கடைசி வீரராக வந்து அடுத்த சுற்றுக்கு தகுதிபெறத் தவறினாா்.

குத்துச்சண்டை: சிவ தாபா வெற்றி

ஆடவருக்கான குத்துச்சண்டையில் 63.5 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சிவ தாபா முதல் சுற்றில் 5-0 என்ற கணக்கில் பாகிஸ்தானின் சுலேமான் பலோச்சை வீழ்த்தி அசத்தினாா். சுலேமானிடம் இருந்து கடுமையான சவால் ஏதும் இல்லாமல் போக, தாபா தனது நுட்பமான குத்துகளால் புள்ளிகளை வசப்படுத்தினாா். காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ள அவா், அதில் ஸ்காட்லாந்தின் ரீஸ் லிஞ்ச்சை சந்திக்கிறாா்.

கிரிக்கெட்: இந்திய மகளிா் சறுக்கல்

கிரிக்கெட்டில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது. முதலில் இந்தியா 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சோ்க்க, அடுத்து ஆஸ்திரேலியா 19 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வென்றது.

இந்திய பேட்டிங்கில் கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 52 ரன்கள் விளாசி அசத்த, ஆஸ்திரேலிய பௌலிங்கில் ஜெஸ் ஜோனசென் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் ஆஷ்லே காா்டனா் 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்த, இந்திய தரப்பில் ரேனுகா சிங் 4 விக்கெட்டுகள் சாய்த்தது வீணானது.

சைக்கிளிங்: இந்தியா ஏமாற்றம்

சைக்கிளிங் போட்டியில் களம் கண்ட 3 இந்திய அணிகளுமே பதக்கச் சுற்றுக்குத் தகுதிபெறத் தவறின. ரொனால்டோ லாய்தோஞ்ஜம்/ரோஜித் சிங்/டேவிட் பெக்காம் எல்கடாசோங்கோ ஆகியோா் அடங்கிய ஆடவா் ஸ்பிரின்ட் அணி தகுதிச்சுற்றில் 44.70 விநாடிகளுடன் 6-ஆவது இடம் பிடித்தது.

அதேபோல், மகளிா் ஸ்பிரின்ட் அணியில் இந்தியாவின் சுஷிகலா அகாஷே/திரியாஷா பால்/மயூரி லுட் ஆகியோா் 47.84 விநாடிகளில் இலக்கை எட்டி 7-ஆம் இடமே பிடித்தனா். இவா்கள் தவிர, வெங்கப்பா கெங்கலகுட்டி/தினேஷ் குமாா்/விஷ்வஜீத் சிங் ஆகியோா் அடங்கிய அணி ஆடவருக்கான 4,000 மீ பா்சியுட் பிரிவில் 4 நிமிஷம் 12.86 விநாடிகளில் வந்து 6-ஆம் இடம் பிடித்தது.



Read in source website

 

பாகிஸ்தான் நாட்டின் தேசிய மின் நுகர்வு கழகம் மின்கட்டணத்தின் அடிப்படை விலையை ஒரு யூனிட்டுக்கு  7.9 ரூபாயாக உயர்த்தியுள்ளது. 

பாகிஸ்தான் நாட்டின் தேசிய மின் நுகர்வு கழகம் ஜூலை மாதம் 28ஆம் நாள் மின் கட்டண உயர்வை அதிகரித்தது. நாடு பொருளாதர நெருக்கடியை சந்திக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த முன்மொழிந்தது. இதற்கு பாகிஸ்தான் நாட்டின் தேசிய மின் வாங்கும் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. 

பாகிஸ்தான் நாட்டின் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 238 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது மேலும் மோசமடையும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படித்தான் இலங்கைக்கும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தாண்டு 23 சதவிகிதம் பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

28,000 மெகாவாட் தேவை இருக்கும் பொழுது பாகிஸ்தான் நாட்டினிடம் 22,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்பதால் இன்னும் 6,000 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்படுமென கணிக்கப்பட்டுள்ளது. 

நகரங்களில் 6 மணிநேரமும் கிராமங்களில் 8 மணி நேரமும் மின்வெட்டு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட பாகிஸ்தான் நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சர் லிட்டருக்கு 3.50 ரூபாய் விலை ஏறலாம் என கூறியிருந்ருந்தார். தற்போதைய மின் கட்டண உயர்வு செபடம்பர் மாதம் முதல் 3 மாதங்களுக்கு வரை அமலாகுமென தகவல் சொல்லப்படுகிறது. 



Read in source website

பிரிட்டனில் வழக்கத்திற்கு மாறாக 10 மடங்கு அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஐரோப்பாவில் கடந்த 20-ஆம் தேதி வெப்ப அலை உச்சத்தைத் தொட்டபோது, பிரிட்டனின் 34 பகுதிகளில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது. பசுமை இல்ல வாயுக்கள் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றத்தால் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் வெப்ப அலைகளின் போது பிரிட்டனில் வழக்கத்திற்கு மாறாக 10 மடங்கு அதிகமாக வெப்பநிலை பதிவானதாக காலநிலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஐரோப்பாவின் வெப்பநிலையில் மிக வேகமாக மாற்றம் நிகழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் 40.3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

காலநிலை தரவுகள் மற்றும் கணினி மதிப்பீடுகள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்ட கடந்த சில ஆண்டுகளின் தரவுகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பிரிட்டனில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை மாற்றத்திற்கு காலநிலை மாற்றமே காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் கணிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் காலநிலை மாற்றம் பிரிட்டனின் வெப்பநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். 



Read in source website

அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட கருந்தவளை, பழுப்பு மரப் பாம்பு ஆகிய இரு உயிரினங்களால் சா்வதேச பொருளாதாரத்துக்கு கடந்த 1986 முதல் 2020-ஆம் ஆண்டு வரை 1,600 கோடி டாலா் (சுமாா் ரூ.1.27 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரிட்டனின் ‘சயன்டிஃபிக் ரிப்போா்ட்ஸ்’ அறிவியல் இதழில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிா்களை நாசம் செய்வது முதல் மின்தடையை ஏற்படுத்துவரை பல்வேறு வழிகளில் இந்த உயிரினங்கள் ஐரோப்பாவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளன. 2-ஆம் உலகப் போரின்போது அமெரிக்கப் படையினரால் பசிபிக் தீவுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இரு உயிரிழனங்களும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பல்கிப் பெருகி, இயற்கையை பாழ்படுத்தி வருகின்றன என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக உரிய திட்டங்களை வகுக்காதவரை இலங்கைக்குப் புதிய கடன்கள் அளிக்கப்பட மாட்டாது என்று உலக வங்கி அறிவித்துள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் மட்டுமல்லாது அரசியல் நெருக்கடியையும் சந்தித்து வரும் இலங்கைக்கு உலக வங்கியின் அறிவிப்பு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

சீனா உள்ளிட்ட இலங்கைக்கு ஏற்கெனவே அதிக கடன் கொடுத்த நாடுகளுடன் இலங்கை அரசு பேச்சுவாா்த்தை நடத்தி, கட்டாமல் உள்ள கடன்களை மறுசீரமைப்பு செய்து கொள்ள வேண்டும் என்று கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஏற்கெனவே சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், உலக வங்கி வெளியிட்ட அறிவிப்பில், ‘இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்னை நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் நேரடியாக பாதித்து வருவது பெரும் கவலை அளிக்கிறது. இலங்கையில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூா்த்தி செய்து கொள்ள உலக வங்கி ஏற்கெனவே 160 மில்லியன் அமெரிக்க டாலா் (இந்திய மதிப்பில் ரூ.1,270 கோடி) கடன் வழங்கியுள்ளது. இதுதவிர உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான அடிப்படை நிதியுதவியும் அளிக்கப்படுகிறது. எனவே, இப்போது நிலவி வரும் சூழ்நிலையில், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கான உரிய திட்டங்களை அரசு வகுக்காதவரை அந்நாட்டுக்குப் புதிய கடன்களை வழங்கும் திட்டம் இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

மக்களின் அடிப்படைத் தேவைகளை அடுத்த 6 மாதங்களுக்குப் பூா்த்தி செய்ய 5 பில்லியன் டாலா் (ரூ.39,700 கோடி) வரை தேவைப்படும் என்று இலங்கை கூறியுள்ளது. இந்த நிலையில் உலக வங்கியின் அறிவிப்பு அந்நாட்டுக்கு நெருக்கடியை அதிகரிப்பதாக உள்ளது. இலங்கையில் பொருளாதார பிரச்னை அதிகரித்த பிறகு அந்நாட்டுக்கு நிதியுதவி, எரிபொருள், உணவு, மருந்துப் பொருள்களை அதிகம் வழங்கும் நாடாக இந்தியா உள்ளது.



Read in source website

சென்னை: தமிழகத்தில் உள்ள 534 கிராமங்களில் 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள பத்திரிக்கை தகவல் அலுவலகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "செஸ் விளையாட்டு தோன்றிய தமிழகத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கக் கூடியது. செஸ் ஒலிம்பியாட் பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று முன்தினம் தொடங்கிவைக்கப்பட்ட நிலையில், போட்டிக்கான காய் நகர்த்துதலை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கிவைத்தார்.

75-வது சுதந்திர தினத்தை ஒட்டி, ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை வீடுதோறும் மூவர்ணக் கொடி ஏற்றும் இயக்கம் நடத்தப்படவுள்ளது. சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களை நினைவுகூரும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் மக்கள் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும்.

நாடு முழுவதும் 34,000 கிராமங்களில், சுமார் ரூ.26,000 கோடி செலவில் 4-ஜி சேவைகளை அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் 534 கிராமங்கள் இடம்பெற்றுள்ளன. இத்திட்டத்தின்கீழ் பிஎஸ்என்எல் கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், சந்தைப்படுத்துதலும் வலிமைப்படுத்தப்படும். பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் தினந்தோறும் புதிய இணைப்பு வழங்கி வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

தேசிய விருது வென்ற நடிகர் சூர்யா உள்ளிட்ட தமிழ் திரையுலகிலிருந்து விருதுபெற்ற அனைவருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வேளையில் நாடு முழுவதும் 200 கோடிக்கும் மேற்பட்ட கொவிட்-19 தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஜூலை 15-ம் தேதி முதல் 75 நாட்களுக்கு தடுப்பூசி அமிர்த பெருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.

செப்டம்பர் 17ம் தேதி சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் இயக்கம் கொண்டாடப்படுவதையொட்டி, மத்திய புவி அறிவியல் அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் 75 கடற்கரைகள் தூய்மைப்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய கடற்கரைகள் தூய்மைப்படுத்தப்படும். காசிமேடு மீன்பிடி துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம் உள்ளிட்ட துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்கள் சுத்தப்படுத்தப்படும்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கான செலவில், சாகர்மாலா திட்டம் மற்றும் மத்திய மீன்வள அமைச்சகம் சார்பில் 50:50 என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. இதற்கான டெண்டர் நடவடிக்கைகள் முடிவடைந்து, விரைவில் பணிகள் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை காசிமேடு, கேரளாவில் கொச்சி, ஆந்திராவில் விசாகப்பட்டினம் மற்றும் பாரதீப் உள்ளிட்ட துறைமுகங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.

மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட அரசுகள் ஒத்துழைத்து இணைந்து பணியாற்றி வருகிறோம். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே கூட்டாட்சி தத்துவம். நாட்டின் சுதந்திர தின நூற்றாண்டு கொண்டாடப்பட உள்ள 2047 ஆம் ஆண்டில் உலகை வழிநடத்தும் நாடாக இந்தியா திகழும்" என்று எல்.முருகன் கூறினார்.



Read in source website

விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நேற்று தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மானக் கழகம் மூலம் ‘ஒளிமிகு பாரதம், ஒளிமயமான எதிர்காலம்” என்ற மின்சார பெரு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இக் கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானம் தன்னிறைவு செயற்பாடுகள் தொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் கூறியது:

நாள் ஒன்றுக்கு 2,48,584 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி தற்போது, 4,00,000 மெகா வாட்டாகமின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் அண்டை நாடுகளுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யப் படுகிறது. நாடு முழுவதும் ஒரே லைனில் இணைக்கப்பட்டு, ஒரேஅலைவரிசையில் ஒரே மின் விநியோக கட்டமைப்பாக இணைக்கப் பட்டுள்ளது.

இதன் மூலம் லடாக் முதல் கன்னியாகுமரி வரையிலும், கட்ச் முதல் மியான்மர் எல்லை வரை அமைந்த இது உலகின் மிக பெரிய ஒருங்கிணைந்த மின் விநியோக கட்டமைப்பாகும். இக்கட்டமைப்பின் மூலம் நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு 1,12,000 மெகா வாட் மின்சாரத்தை அனுப்ப முடியும்.

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் ரூ. 803 கோடி செலவில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் கரூர் ஆகியவற்றை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றனர்.

இதனை தொடர்ந்து விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மின்சாரத்தை சிக்கனமாக பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த பட்டிமன்றம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி, தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் தலைமை பொறியாளர் செல்வசேகர், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திர விஜய், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.



Read in source website

சென்னை: சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், தத்கால் பாஸ்போர்ட் நேர்காணலுக்கான எண்ணிக்கை 100-ல் இருந்து 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் பெறுவதற்கான தேவை அதிகரித்து வருவதால் தத்கால் பாஸ்போர்ட்டுக்கான நேர்காணல் நேரத்தை குறைக்கும் வகையில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, தத்கால் பிரிவில் தினசரி பாஸ்போர்ட் நேர்காணலுக்கான எண்ணிக்கை 100-ல் இருந்து 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் 100 தத்கால் பாஸ்போர்ட்டுக்கான நேர்காணல் நடைமுறை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திராவில் நேற்றுமுதல் அமலுக்குவந்துள்ளது.

எஞ்சிய 100 தத்கால் பாஸ்போர்ட்டுக்கான நேர்காணல், சென்னை அண்ணா சாலை அலுவலகம்
மூலம் கையாளப்படும்.

மேலும், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 4 பாஸ்போர்ட் சேவா கேந்திரா மற்றும் 13 அஞ்சலக பாஸ்போர்ட் சேவா கேந்திரம் மூலம் தினசரி 2,200 விண்ணப்பங்கள் கையாளப்படுகின்றன. 2022 ஜனவரி முதல் ஜூன்
மாதம் வரை 2.26 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இறுதிக்குள் 4 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் செய்திக்குறிப்பு மூலம் கூறியுள்ளார்.



Read in source website

திருவனந்தபுரம்: இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி குணமடைந்துவிட்டதாக கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியானது. வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த அவர் கடந்த 14-ஆம் தேதி நாடு திரும்பினார். அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறிகள் ஏற்பட்டன. இதனால் அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது உறுதியானது.

இதனையடுத்து, நாட்டிலேயே குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட முதல் நபரான இவருக்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், “அவர் தற்போது பூரண குணமடைந்துள்ளார். இவர்தான் இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் என்பதால், அவருக்கு நோய்த் தொற்று முழுமையாக நீங்கிவிட்டதா என்பதை உறுதி செய்ய 72 மணி நேரத்தில் இரண்டு முறை சோதனை செய்யுமாறு தேசிய வைரலாஜி மையம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, அந்த நபருக்கு இருமுறை பரிசோதனை செய்யப்பட்டது. இரண்டு முறையுமே அவருக்கு சோதனை முடிவு நெகடிவ் என்றே வந்தது. தற்போது அந்த நோயாளி உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவரது உடலில் இருந்த கொப்புளங்கள் அனைத்துமே முழுமையாக மறைந்துவிட்டன. அவர் இன்றே வீடு திரும்புவார்” என்று கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

அதேபோல், அந்த நபரின் குடும்பத்தினர் அனைவருக்கும் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளும் நெகடிவ் என்றே வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கேரளாவில் குரங்கு அம்மைக்காக சிகிச்சை பெற்று வரும் இரண்டு நோயாளிகளின் உடல்நலனை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும், அவர்களது உடல்நலன் சீராகவே இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1980களிலேயே உலகிலிருந்து பெரியம்மை (small pox) ஒழிக்கப்பட்டுவிட்டாலும். அதற்கான தடுப்பூசி பயன்பாடு பரவலாகக் கைவிடப்பட்டதால் ஆர்தோபாக்ஸ் வைரஸ் சற்று உருமாறி தற்போது குரங்கு அம்மையை வீரியம் பெறச் செய்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.



Read in source website

ஒட்டாவா: “இன்று வரை ஓய்வுக் கதவை நான் தட்டவில்லை. என்னால் பதவி விலக முடியும். ஆனால், ஓய்வுகான அவசியம் எனக்கு தற்போது ஏற்படவில்லை” என போப் பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.

போப் பிரான்சிஸ் இந்த வாரம் தொடக்கத்தில் கனடாவுக்கு பயணம் சென்றார். அப்பயணத்தில் கனடாவில் பூர்விக பழங்குடி மக்களுக்கு எதிராக 19-ம் நூற்றாண்டில் கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட கொடூரக் குற்றங்களுக்கு போப் பிரான்சிஸ் தார்மிக மன்னிப்புக் கேட்டது உலக அளவில் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், போப் பிரான்சிஸ் தனது வரலாற்று சிறப்புமிக்க கனடா பயணத்தை முடித்திருக்கிறார். பயணத்தின் முடிவில் போப் பிரான்சிஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவரது ஓய்வு குறித்தும், உடல் நலம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு போப் பிரான்சிஸ் அளித்த பதிலில், “இந்த கனடா பயணம் தீவிரமாகவும் ஆழமாகவும் இருந்தது. இன்று வரை ஓய்வுக் கதவை நான் தட்டவில்லை. என்னால் பதவி விலக முடியும். ஆனால், ஓய்வுக்கான அவசியம் தற்போது எனக்கு ஏற்படவில்லை.

உடல் நிலையை கருத்தில் கொண்டால் பதவி விலகுவது குறித்து பரிசீலிக்க வேண்டிய நேரம் விரைவில் வரக்கூடும். ஆனால், இப்போது இல்லை. இந்த வயதில் எனது முழுங்கால் வலியுடன் என்னால் தொடர்ந்து பயணிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. தேவாலயத்திற்கு தொடர்ந்து சேவை செய்ய நினைக்கிறேன். அதற்கு என்னை நான் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும்” என்றார்.

போப்பின் மன்னிப்பிற்கான காரணம் என்ன? - கனடாவில் கத்தோலிக்க தேவாலயத்தால் இயங்கிய பள்ளிகளில், கனடாவில் பூர்வ பழங்குடிகளாக இருந்த மெடிஸ், இனுய்ட் போன்ற பழங்குடி மக்களின் பிள்ளைகள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டனர். சுமார் 1,50,000-க்கும் அதிகமான பழங்குடிகளின் பிள்ளைகள் 1870-ஆம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு பழங்குடி மாணவர்கள் கலாசார ரீதியாக துன்புறுத்தப்பட்டதோடு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது பிற்காலங்களில் நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டது. இது வாடிகனை நோக்கி பல கேள்விகளை எழுப்பவும் காரணமாகியது.

இந்தச் சூழலில் இந்தத் துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்று போப் பிரான்ஸிஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடாவுக்கு பயணம் மேற்கொண்டார். பயணத்தின் முக்கிய நோக்கமான தனது மன்னிப்பை ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் முன் போப் பதிவுச் செய்தார்.



Read in source website

லண்டன்: பிரிட்டன் பிரதமராகும் வாய்ப்பு குறித்த கருத்துக்கணிப்புகளில் லிஸ் ட்ரஸ்க்கு 90% உடன் முன்னிலை வகிக்கிறார். இந்திய வம்சவாளியான ரிஷி சுனக்கின் வெற்றி வாய்ப்பு வெறும் 10% மட்டுமே என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். சொந்தக் கட்சிக்குள்ளயே எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்தத் தேர்தல் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டியில் முன்னாள் நிதியமைச்சரும் இந்திய வம்சாவளியுமான ரிஷி சுனக்கும், முன்னாள் வெளியுறவு அமைச்சரான லிஸ் ட்ரஸ் ஆகியோர் உள்ளனர்.

தேர்தல் இறுதி முடிவுகள் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், லிஸ் ட்ரஸ்ஸுக்கு பிரிட்டனின் பிரதமராகும் வாய்ப்பு 90% இருப்பதாக, அங்கிருந்து வரும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கருத்து கணிப்புகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்குக்கு 10% மட்டுமே வெற்றி வாய்ப்பு இருப்பதாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதுகுறித்து அரசியல் நிபுணரான மெத்யூ கூறும்போது, ”ரிஷி நன்றாக பிரச்சாரம் செய்கிறார். ஆனால் ட்ரஸ் சிறப்பாக செயல்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணுகின்றனர்” என்றார்.

கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து ரிஷி சுனக் கூறும்போது, “கருத்துக்கணிப்புகள் நான் பின்தங்கி இருப்பதாக கூறுகின்றன. நான் சிறப்பாக செயல்படுவேன். ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். நான் ஒவ்வொரு ஓட்டுக்காகவும் போராடுவேன்” என்றார்.



Read in source website

நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் அனைவருக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு, பயனாளிகளிடையே அச்சத்தை உருவாக்கியது. நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கான கட்டணம் நியாயமானதா? இந்த நிலைக்கு நாம் ஏன் தள்ளப்பட்டுள்ளோம்?

நிலத்தடி நீரின் நன்மைகள் மிகப் பெரிதாக இருந்தாலும் அதன் தொடர்ச்சியான சுரண்டல் பல எதிர்மறையான விளைவுகளை, விவசாயிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.

தவறான மின்சார கட்டணக் கொள்கை: பசுமைப் புரட்சிக்குப் பிறகு நிலத்தடி நீர்ச் சுரண்டல் அதிகரித்து வருகின்றபோதிலும், பல்வேறு மாநில அரசுகள் பின்பற்றிவரும் தவறான மின் கட்டணக் கொள்கைகளே நிலத்தடி நீர் அதிகமாகச் சுரண்டப்படுவதற்கு முக்கியக் காரணம். குறைந்த விலை, இலவச மின்சாரம் போன்றவை பயனாளர்களை (விவசாயிகளை மட்டுமல்ல) அதிக நிலத்தடி நீரைச் சுரண்ட ஊக்குவிக்கிறது.

அனைத்து விவசாயிகளுக்கும் கொடுக்கப்படும் இலவச மின்சாரம், குறிப்பாக ஆழம் குறைந்த குழாய்க் கிணறுகளைக் கொண்ட விவசாயிகளுக்கு நன்மையைவிட அதிகத் தீங்கையே விளைவிக்கிறது. ஆழ்துளைக் கிணறுகள் அதிக நிலத்தடி நீரைச் சுரண்டுவதால், ஆழமற்ற கிணறுகளில் தண்ணீர் குறைந்து, பின்னர் அவை பயனற்றுப்போய்விடுகின்றன. நீர்மட்டம் குறைவதால் கிணறுகளின் ஆயுள்காலமும் குறைகிறது.

இது பெரிய குதிரைத்திறன் பம்புசெட்களைக் கொண்ட ஆழ்துளைக் கிணறுகளை நிறுவ முடியாத, வளம் குறைந்த விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 5-வது (2017) சிறு - குறுநீர்ப் பாசனக் கணக்கெடுப்பின்படி, 2006-07 முதல் 2013-14 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் மொத்தம் 4.14 லட்சம் திறந்தவெளிக் கிணறுகள் செயலிழந்துள்ளன.

கட்டணம் மட்டும் போதாது: அதிகரித்துவரும் நிலத்தடி நீர்ச் சுரண்டலைக் கருத்தில்கொண்டு, நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்குப் பதிவுக் கட்டணம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்ச் சுரண்டலைக் கட்டுப்படுத்த இது போதுமா? பெயரளவிலான இந்தக் கட்டணம் நிலத்தடி நீரைப் பெருமளவில் பயன்படுத்துவோர் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

அனைத்துப் பயனாளிகளுக்கும் ஒரே மாதிரி கட்டணத்துக்குப் பதிலாக, விவசாயம், தொழில்துறை - வீட்டு உபயோகம் போன்றவற்றுக்கு, அவர்களின் கட்டணம் செலுத்தும் திறனைக் கருத்தில்கொண்டு மாறுபட்ட கட்டண வீதத்தை நிர்ணயிக்கலாம்.

விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு, நீர்ச் சுரண்டலின் அளவு, கிணற்றின் ஆழம், பம்புசெட்டின் குதிரைத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயிக்கலாம். விவசாயத்துக்கான கட்டணத்தை, நில அளவு, பம்புசெட்டின் குதிரைத்திறன் / மின் நுகர்வு அடிப்படையில் நிர்ணயிக்கலாம்.

எவ்வாறாயினும், நிலத்தடி நீரின் அதிகப்படியான சுரண்டலைக் கட்டுப்படுத்தக் கட்டண நிர்ணயிப்பு மட்டும் போதுமானதாக இருக்காது. பாசன பம்புசெட்டுகளுக்கு மின்சாரத்தை இலவசமாகவும், குறைந்த விலையிலும் வழங்கும் பெரும்பாலான மாநிலங்களில் தற்போது நிலத்தடி நீர் அதிகமாகச் சுரண்டப்படுகிறது. எனவே, மின் கட்டணக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஐந்து குதிரைத்திறனுக்குக் குறைவான பம்புசெட் வைத்திருக்கும் குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படலாம். மற்ற அனைத்து விவசாயிகளுக்கும் மின்சார உபயோகத்தின் அடிப்படையில் (kWh based pricing) விலையை நிர்ணயிக்க வேண்டும்.

இதன் மூலம், அதிக நீரைப் பயன்படுத்தும் பயிர்களைச் சாகுபடி செய்பவர்கள் நிலத்தடி நீரை அதிகமாகச் சுரண்டுவதைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.



Read in source website

மும்பை: ஆசியாவின் நம்பர் 1 பணக்காரப் பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் சாவித்ரி ஜிண்டால். ப்ளூம்பெர்க் பில்லினர் இண்டக்ஸில் டாப் 10 ஆசிய பணக்காரப் பெண்கள் பட்டியலில் இடம்பிடித்து இந்தப் பெருமையை அவர் வசப்படுத்தியுள்ளார். முன்னதாக, இந்த இடத்தை சீனாவின் யாங் ஹூயான் அலங்கரித்து வந்தார். அவர் சொத்துப் பிரச்சினையில் சிக்கியதால் அவருடைய முதலிடம் பறிபோனது. இந்நிலையில், சாவித்ரி ஜிண்டால் அந்த இடத்தைப் பிடித்துள்ளார்.

ப்ளூம்பெர்க் பில்லினர் இண்டக்ஸில் டாப் 10 ஆசிய பணக்காரப் பெண்கள் பட்டியல் வெளியானது. இதில், சாவித்ரி ஜிண்டால் முதலிடம் பிடித்தார். உலோகம், மின் துறையில் உள்ள ஜிண்டால் குழுமத்தின் உரிமையாளர், நிறுவனரின் மனைவி என்ற வகையில் சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு 11.3 பில்லியன் டாலர் என்றளவில் உள்ளது. இவரைத் தொடர்ந்து சீனாவின் ஃபேன் ஹாங்வே இரண்டாவது இடத்திலும், யாங் ஹூயன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு யாங் ஹூயன் தனது தந்தையின் சொத்திலிருந்து பெரும் பங்கை பெற்றார். இதனால் ரியல் எஸ்டேட் ஜாம்பவானின் மகளான யாங் ஹூயன் ஆசியாவின் பெரும் பணக்காரப் பெண் மற்றும் மிக இளம் வயதில் பில்லினர் ஆனவர் போன்ற பெருமைகளைப் பெற்றார். தற்போது சாவித்ரி ஜிண்டால் ஆசிய முதல் பெண் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.

72 வயதாகும் ஜிண்டால், அவரது கணவர் ஓ.பி.ஜிண்டால் மறைவுக்குப் பின்னர் ஜிண்டால் குழுமத்தின் தலைவராக இருக்கிறார். ஓ.பி.ஜிண்டால் கடந்த 2005 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏப்ரல் 2020-ல் இந்தியாவின் ஜிண்டால் நிறுவன லாபம் 3.2 பில்லியன் டாலர் என்றளவுக்கு சரிந்து அண்மையில் ஏப்ரல் 2022-ல் 15.6 டாலர் என்றளவில் உயர்ந்தது.



Read in source website

வைரஸ்கள் எவ்வாறு கண்டறியப்படுகின்றன, ஆசியா, ஆப்பிரிக்காவில் அடிக்கடி தோன்றுவது ஏன்? மேலும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதி புதிய வைரஸ் பரவல்களுக்கு அதிக வாய்ப்புள்ளதா?

Rishika Singh >

குரங்கு அம்மை, கொரோனா வைரஸ், ஜிகா வைரஸ் மற்றும் எபோலா வைரஸ் ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பரிச்சயமான பெயர்கள். இந்த நோய்களில் பல முதலில் ஆசியா அல்லது ஆப்பிரிக்காவில் பதிவாகியுள்ளன. வைரஸ்கள் எவ்வாறு கண்டறியப்படுகின்றன, மேலும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதி புதிய வைரஸ் பரவல்களுக்கு (வெடிப்புகளுக்கு) அதிக வாய்ப்புள்ளதா?

வைரஸ்கள் எவ்வாறு கண்டறியப்படுகின்றன?

புதிய வைரஸ்களின் கண்டுபிடிப்பு பெரும்பாலும் நோய்களின் வெடிப்புடன் (அதிக பரவலுடன்) இணைக்கப்பட்டுள்ளது. மூலத்தை அடையாளம் காண்பது எப்போதும் நேரடியானதல்ல – ஒரு தெளிவான உதாரணம் SARS-CoV-2, இது கொரோனா தொற்றுநோயை ஏற்படுத்தியது; சீனாவின் வுஹானில் உள்ள ஹுவானன் கடல் உணவு சந்தையில் வெடிப்பு தொடங்கியது என்று ஒரு நியாயமான அளவு உறுதியுடன் ஆராய்ச்சி சுட்டிக்காட்டிய போதிலும், சில வல்லுநர்கள் வைரஸ் ஆய்வகத்தால் வளர்க்கப்பட்டது என்று தொடர்ந்து நம்புகிறார்கள்.

பென் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் தாவர நோயியல் மற்றும் சுற்றுச்சூழல் நுண்ணுயிரியல் பேராசிரியரான மர்லின் ஜே ரூசின்க், சமீபத்திய கட்டுரையில், ஒரு புதிய வைரஸ் நோயை அடையாளம் காண்பது “விரிவான களப்பணி, முழுமையான ஆய்வக சோதனை மற்றும் கொஞ்சம் அதிர்ஷ்டம்” ஆகியவற்றை உள்ளடக்கியது என்று எழுதினார்.

முதலாவதாக, பல வைரஸ்கள் தங்களைச் சுற்றியுள்ள உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இயற்கையில் உள்ளன. விலங்குகளில் வாழும் பல வைரஸ்கள் விலங்குகள் மூலம் மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும் வரை நீண்ட காலமாக கண்டறியப்படுவதில்லை. இவை ஜூனோடிக் (விலங்குகள் மூலம் பரவும்) நோய்கள். கோவிட்-19, குரங்கு அம்மை மற்றும் எபோலா, அத்துடன் பழைய நோய்களான பிளேக் அல்லது ரேபிஸ் போன்றவை உதாரணங்களாகும்.

“மற்றொரு பிரச்சனை என்னவென்றால், மக்களும் அவர்கள் உணவாக எடுத்துக்கொள்ளும் விலங்குகளும் நிலையானவை அல்ல. முதல் பாதிக்கப்பட்ட நபரை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கும் இடம் வைரஸ் முதலில் தோன்றிய இடத்திற்கு அருகில் இருக்க வேண்டிய அவசியமில்லை” என்று ரூசின்க் எழுதினார்.

வைரஸ்களின் மரபணு தகவல்கள் அவற்றின் சாத்தியமான தோற்றத்தைப் புரிந்துகொள்ள டிகோட் செய்யப்படுகின்றன. “பெரும்பாலான தொற்று நோய் வெடிப்புகள் மருத்துவர்கள் அசாதாரண வடிவங்களைக் கவனிப்பதன் மூலம் தொடங்குகின்றன … இந்த வெடிப்பின் ஆரம்பத்திலேயே, ஒரு காரணமான நோய்க்கிருமியைக் கண்டறிவதே மிகவும் முக்கியமான பணியாகும்” என்று 2018 இல் ‘நேச்சர் மைக்ரோபயாலஜி’யில் வெளியிடப்பட்ட கட்டுரையின் ஆசிரியர்கள் எழுதினர்.

எங்கே அதிக வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?

உலக சுகாதார அமைப்பின் நோய் வெடிப்புச் செய்திகளின்படி, உலகளவில் கவலைக்குரிய அறியப்பட்ட மற்றும் அறியப்படாத நோய்களின் பாதிப்புகள், ஜனவரி 2021 முதல் இன்று வரை, பெரும்பாலான பாதிப்புகள் ஆசிய மற்றும்/அல்லது ஆப்பிரிக்க நாடுகளில் பதிவாகியுள்ளன. மற்றொரு WHO பகுப்பாய்வின்படி, 2001 மற்றும் 2011 உடன் ஒப்பிடும்போது 2012 மற்றும் 2022 க்கு இடையில் ஆப்பிரிக்காவில் ஜூனோடிக் (விலங்கு மூலம் பரவும்) வெடிப்புகளின் எண்ணிக்கை 63 சதவீதம் அதிகரித்துள்ளது.

2016 ஆம் ஆண்டின் ராய்ட்டர்ஸ் அறிக்கையானது ‘தி அமெரிக்கன் நேச்சுரலிஸ்ட்’ இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வை மேற்கோளிட்டுள்ளது, இது மேற்கு ஆப்பிரிக்கா ஜூனோடிக் பேட் (வௌவால்) வைரஸ்களின் அதிக ஆபத்தில் உள்ளது என்று கூறியது. 1900 மற்றும் 2013 க்கு இடையில் வெளியிடப்பட்ட தரவுகளை மேற்கோள் காட்டி, பரந்த துணை-சஹாரா ஆப்பிரிக்கா பகுதி மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகியவை ஹாட்ஸ்பாட்களாக கண்டறியப்பட்டுள்ளன.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் ஏன் வைரஸ்கள் அடிக்கடி கண்டறியப்படுகின்றன?

இந்த பிராந்தியங்கள் புதிய நோய்களை உருவாக்குவதற்கு இயல்பாகவே பிணைக்கப்பட்டுள்ளன என்பதல்ல. பல காரணிகள் இங்கே வேலை செய்கின்றன, மிகத் தெளிவான ஒன்று, இந்தக் கண்டங்களில் உள்ள மனிதர்கள், பெரும்பாலும் மக்கள் அடர்த்தியான பல பகுதிகளில் உள்ள மனிதர்கள் விலங்குகளுடன் அடிக்கடி தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம், இதனால் நோய்கள் பரவும் அபாயம் அதிகரிக்கிறது.

18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் தொழில்மயமாக்கலுக்கு ஆளான இங்கிலாந்து போன்ற நாடுகள், காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்களை எதிர்கொண்டபோது இதேபோன்ற அனுபவத்தை இந்த பிராந்தியங்களில் பல நாடுகள் அனுபவித்து வரும் வியத்தகு, மாற்றத்தக்க மாற்றத்தை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2018 இல் இருந்து நேச்சர் பேப்பர் கூறியது: “அதிக அதிர்வெண் மற்றும் பயணத்தின் வரம்பு, நில பயன்பாட்டு முறைகளை மாற்றுதல், உணவு முறைகள், போர்கள் மற்றும் சமூக எழுச்சி மற்றும் காலநிலை மாற்றம். இந்த காரணிகள் மனிதர்களுக்கும் வைரஸ் ஹோஸ்ட்களுக்கும் இடையிலான தொடர்புகளை அதிகரிக்கின்றன, ஜூனோடிக் வைரஸ்கள் மற்றும் மக்களில் ஸ்பில்ஓவர் நோய்த்தொற்றுகளுக்கு வெளிப்படுவதை எளிதாக்குகிறது.”

குறிப்பாக ஆப்பிரிக்காவுக்கு வரும்போது, ​​“விலங்குகளில் இருந்து பிறக்கும் நோய்த்தொற்றுகள், பின்னர் மனிதர்களுக்குத் தாவுவது பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது, ஆனால் ஆப்பிரிக்காவில் வெகுஜன நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் ஆபத்து ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. மோசமான போக்குவரத்து உள்கட்டமைப்பு இயற்கையான தடையாக செயல்பட்டது,” என்று WHO பகுப்பாய்வு அறிக்கையில் ஆப்பிரிக்காவிற்கான WHO பிராந்திய இயக்குனர் டாக்டர் மட்ஷிடிசோ மொய்ட்டி கூறினார்.

நகரமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டின் விரைவான வளர்ச்சி, அத்துடன் பல்லுயிர் வளம் நிறைந்த பகுதிகளை அகற்றுவது ஆகியவை கடந்த சில தசாப்தங்களில் உயிரினங்களிடையே அதிக தொடர்புகளுக்கு வழிவகுத்தன. மோசமான சுகாதார அமைப்புகளும் சமூக எழுச்சியும் காரணமாக இருக்கலாம், இதன் காரணமாக ஆரோக்கியம் பொதுவாக புறக்கணிக்கப்படுகிறது.

ஆசியா அதன் சொந்த பங்களிக்கும் காரணிகளைக் கொண்டுள்ளது: அதாவது இங்குள்ள அடர்ந்த காடுகள் மற்றும் வனவிலங்குகளை உட்கொள்ளும் கலாச்சாரம், அதாவது உணவு மற்றும் பாரம்பரிய மருத்துவம். SARS-CoV-2 வைரஸ் பல உயிரினங்களில் இருந்து குதித்திருக்கலாம் என்ற நம்பிக்கையின் காரணமாக, உயிருள்ள விலங்குகளை ஒன்றாக அடைத்து விற்பனை செய்யப்படும் ஈரமான சந்தைகள் குறிப்பாக கவனம் செலுத்தியுள்ளன. இவற்றில் சில காரணிகள் இந்தப் பகுதிகளுக்குப் பழையவை, ஆனால் கடந்த சில தசாப்தங்களில் உலகளாவிய மக்களிடையே ஒன்றோடொன்று இணைந்திருப்பது மற்றும் பயணத்தின் ஒட்டுமொத்த அதிகரிப்பின் காரணமாக இப்போது நோய்களுக்கு கணிசமாக பங்களிக்கிறது.

உலகளாவிய சுகாதார நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களுக்கு அடுத்தகட்டம் என்ன?

நோய் பரவுவதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டால், இந்த போக்கு காலப்போக்கில் மட்டுமே வளரும் என்று உணரலாம் – இது பற்றி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால், ‘ஒன் ஹெல்த்’ அணுகுமுறையானது நிபுணர்களால் தீர்வாக வழங்கப்படுகிறது.

தொற்றுநோய் காட்டியபடி, மனித ஆரோக்கியம், சுற்றுச்சூழல் ஆரோக்கியம் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியம் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன என்று கருத்து அடிப்படையில் கூறுகிறது. WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் 2021 இல் கூறினார்: “சுற்றுச்சூழலை சீர்குலைக்கும், வாழ்விடங்களை ஆக்கிரமித்து, காலநிலை மாற்றத்தை மேலும் தூண்டும் மனித நடவடிக்கைகளின் தாக்கத்தை கருத்தில் கொள்ளாமல், மனித ஆரோக்கியத்தை நாம் பாதுகாக்க முடியாது.”

இந்தக் களங்களில் ஏதேனும் ஒன்றை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதன் மூலமும், இந்த களங்களின் ஆரோக்கியத்தை சரியான நேரத்தில் கண்காணிப்பதன் மூலமும், கூட்டு ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும், மேலும் நோய் பரவுவதை சீர்குலைக்க முடியும் என்று யோசனை கூறுகிறது.



Read in source website

ஒரு விமானத்தில் யாராவது கோவிட்-19 தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் என்ன? மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அறிஞர்கள் தலைமையிலான புதிய ஆய்வின் கண்டுபிடிப்புகள் இங்கே உள்ளன.

விமானத்தில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் என்ன? மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி  ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஒரு ஆய்வு, ஜூன் 2020 முதல் பிப்ரவரி 2021 வரையிலான காலக்கட்டத்தில் – அமெரிக்க உள்நாட்டு விமானங்களில் பயணித்தவர்களின் – ஒரு கணக்கீட்டை வழங்கியது. விமானத்தில் கொரோனா பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு மதிப்பிட்டது.

  • 2020 டிசம்பர் மற்றும் 2021 ஜனவரியில், தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது, இரண்டு மணிநேரம் பயணிக்கும் விமானத்தில் 1,000 இல் ஒருவருக்கு மேல்
  • 2020 கோடையில், தொற்றுநோய் சற்று குறைவாக இருந்தபோது, இரண்டு மணி நேர விமானத்தில் சுமார் 6,000 பேரில் ஒருவர்
  • ஜூன் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை 2,000 பேரில் ஒருவர்

தற்போதைய நிலைமைகள் ஆய்விலிருந்து வேறுபடுகின்றன என்பதை MIT ஒப்புக்கொண்டது. அமெரிக்க உள்நாட்டு பயணிகளுக்கு இனி மாஸ்க் தேவையில்லை; ஆய்வின் காலப்பகுதியில், விமான நிறுவனங்கள் பொதுவாக நடுத்தர இருக்கைகளை நிரப்பவில்லை, அதை அவை இனி செய்யாது; புதிய கொரோனா மாறுபாடு, ஆய்வுக் காலத்தில் இருந்த வைரஸை விட அதிகமாகத் தொற்றக்கூடியவை.

அந்த காரணிகள் தற்போதைய ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என்றாலும், பிப்ரவரி 2021 முதல் பெரும்பாலான மக்கள் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர், இது இன்றைய ஆபத்தைக் குறைக்க உதவும் என்று வெளியீடு கூறியது.

“இருப்பினும், கொரோனா பரவுதல் தொடர்பான விமானப் பயணப் பாதுகாப்பு பற்றிய பொதுவான மதிப்பீட்டையும், எதிர்கால ஆய்வுகளுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு வழிமுறையையும் இந்த ஆய்வு வழங்குகிறது” என்று அது கூறியது.

கொரோனா பரவல் பற்றிய பொது சுகாதார புள்ளிவிவரங்கள், கொரோனா தொற்று வழிமுறைகள் பற்றிய சக ஆய்வுகளின் தரவு, பொதுவாக விமான நிறுவனங்களில் வைரஸ்கள் பரவுவது- சர்வதேச விமான நிறுவனங்களில் கொரோனா பரவுவது பற்றிய தரவு மற்றும் அமெரிக்க உள்நாட்டு ஜெட் விமானங்களில் இருக்கை-ஆக்கிரமிப்பு விகிதங்கள் பற்றிய சில கிடைக்கக்கூடிய தொழில்துறை தரவுகள் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் ஒருங்கிணைத்தனர்.  அவர்கள் பின்னர் விரிவான மாதிரியாக்கம் மூலம் அமெரிக்க உள்நாட்டு விமானங்களில் பரவல் அபாயங்களை மதிப்பிட்டனர்.

ஆராய்ச்சியாளர்கள் தங்களின் மதிப்பீடுகளுக்கு இரண்டு மணி நேர விமானத்தைப் பயன்படுத்தினர், ஏனெனில் இது அமெரிக்காவில் உள்நாட்டு விமானத்தின் சராசரி கால அளவாகும். சிங்கிள் ஏசில் (aisle), இருபுறமும் மூன்று இருக்கைகள் மற்றும் சுமார் 175 பயணிகளுக்கான வழக்கமான கேபசிட்டியுடன் போயிங் 737 மற்றும் ஏர்பஸ் A320 விமான அமைப்புகளை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர்,

இதுபோன்ற பெரும்பாலான விமானங்கள் உயர் செயல்பாட்டு HEPA காற்று-சுத்திகரிப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளன, அவை காற்றில் பரவும் நோய்களின் பரவும் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.

ஹெல்த் கேர் மேனேஜ்மென்ட் சயின்ஸ் இதழில், ‘Covid-19 infection risk on U.S. domestic airlines’ என்ற கட்டுரை இந்த மாதம் வெளிவந்தது.

Source: MIT



Read in source website

அடுத்த சில நாள்களில், இந்தியா தனது 75-ஆவது சுதந்திர தின நிறைவு விழாவை கொண்டாட இருக்கும் நிலையில், இந்திய ஜனநாயகம் குறித்த மீள்பாா்வை அவசியமாகிறது. நமது ஜனநாயக செயல்பாடுகள் பலவும் உலக அளவில் பாராட்டைப் பெற்றுவரும் அதே வேளையில், அதன் பலவீனங்களும் அதிகரித்து வருகின்றன என்பதை வேதனையுடன் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

ஜனநாயகத்தின் ஆணிவேராக இருக்கும் நாடாளுமன்ற நடவடிக்கைகள், மெச்சும்படியாக இல்லை என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. மாநிலங்களவையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, அதன் மாண்பை சீா்குலைக்கும் விதத்தில் செயல்பட்டதற்காக 20 எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறாா்கள். நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் அவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறாா்கள்.

நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத்தொடா் 18 நாள்கள் மட்டுமே நடைபெற இருக்கும் நிலையில், மத்திய அரசு 32 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றக் காத்திருக்கிறது. கடந்த 18-ஆம் தேதி கூட்டத்தொடா் தொடங்கியது முதல் விலைவாசி உயா்வு, அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்னைகளை உடனடியாக விவாதிக்க வேண்டும் என்றும், மசோதாக்களை அதற்குப் பின்னா்தான் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் எதிா்க்கட்சிகள் பிடிவாதமாக இருப்பதால், அவையின் நடவடிக்கைகள் தொடா்ந்து பாதிக்கப்படுகின்றன.

எதிா்க்கட்சிகளின் பிடிவாதம் எந்த அளவுக்கு நியாயமற்றதோ, அதே போன்றதுதான் அரசின் அசைந்து கொடுக்காத நிலைப்பாடும். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிா்க்கட்சிகளை அரவணைத்துச் சென்று, அவற்றின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, விவாதத்துக்கு வழிகோலி, அவையை நடத்தும் பொறுப்பு ஆளுங்கட்சிக்கு இருக்கிறது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரின் திறமையைப் பொறுத்துத்தான், அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெறும் என்பது கடந்த கால அனுபவ உண்மை.

எதிா்க்கட்சிகள் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கின்றன என்கிற அரசுத் தரப்பு குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. பாஜக எதிா்க்கட்சியாக இருந்தபாது இதே அணுகுமுறையைத்தான் கடைப்பிடித்தது என்பதை குறிப்பிடத் தோன்றுகிறது. அரசுக்கு தா்மசங்கடத்தை ஏற்படுத்தும் அல்லது அரசை விமா்சனத்துக்கு உள்ளாக்கும் எந்த விவாதத்தையும் ஆளுங்கட்சி அனுமதிப்பதில்லை என்கிற எதிா்க்கட்சிகளின் ஒருமித்த கருத்தை புறந்தள்ளிவிட முடியாது. அப்போது காங்கிரஸிடம் காணப்பட்ட, ஆளுங்கட்சிக்கே உரித்தான ஆணவம் இப்போது பாஜகவுக்கும் வந்திருக்கிறது என்கிற நடுநிலையாளா்களின் கூற்று உண்மை.

விலைவாசி உயா்வு, ஜிஎஸ்டி இரண்டுமே நிதியமைச்சகம் தொடா்பான பிரச்னைகள். நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கொவைட் 19 நோய்த்தொற்று காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் அந்த பிரச்னையை உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள இயலாது என்பது அரசுத் தரப்பு விளக்கம். எதிா்க்கட்சிகளை அழைத்துப் பேசும்போது, இந்த விளக்கத்தை அவா்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சாதுரியமாக முன்வைக்க ஆளுங்கட்சித் தரப்பில் எவரும் இல்லை என்பதுதான் நிலைமை கைமீறிப் போனதற்கான காரணம்.

பாஜக-வின் ரங்கராஜன் குமாரமங்கலம், பிரமோத் மகாஜன், வெங்கைய நாயுடு, காங்கிரஸின் மாா்கரெட் ஆல்வா, முகுல் வாஸ்னிக், குலாம்நபி ஆசாத் போன்றவா்கள் மிக இக்கட்டான சூழ்நிலையில் கூட, ஆளுங்கட்சிக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே பாலமாக இருந்து, திறம்பட நாடாளுமன்றம் செயல்பட வழிகோலிய நிகழ்வுகள் ஏராளம். எதிா்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்பதன் மூலம், அரசு தன் மசோதாக்களை பிரச்னை இல்லாமல் நிறைவேற்றிக் கொள்வதை உறுதிப்படுத்துவதுதான் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரின் திறமை.

தற்போது காணப்படும் நாடாளுமன்ற முட்டுக்கட்டைக்கு, ஆளும் தரப்பின் சாதுரியக் குறைவு மட்டும்தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. விவாதம் கோருவது என்பதை விட, அவை முடக்கத்தில் ஈடுபடுவதும், அமளியை ஏற்படுத்தி அதன் மூலம் மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான மனநிலையை உருவாக்குவதும்தான் எதிா்க்கட்சிகளின் நோக்கம் என்று கருதவும் இடமிருக்கிறது.

அரசுத் தரப்பு இறங்கி வந்து விவாதத்துக்கு நாள் குறிக்கத் தயாராகும் நிலையில், எம்.பி.க்களின் இடைநீக்கத்தை நிபந்தனையின்றி திரும்பப் பெற்றால்தான் விவாதத்துக்கு சம்மதிப்போம் என்கிற எதிா்க்கட்சிகளின் நிலைப்பாடு வாதமல்ல, விதண்டாவாதம். எதிா்க்கட்சி உறுப்பினா்களின் இடைநீக்கம் அவசர முடிவாகவே இருந்தாலும் கூட, அதற்கும் விவாதத்துக்கும் முடிச்சுப் போடுவதை, நாடாளுமன்ற செயல்பாட்டை முடக்கும் திட்டமாகத்தான் பாா்க்கத் தோன்றுகிறது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிா்க்கட்சிகள் பங்கு மிகவும் முக்கியமானது. அதுதான் மன்னராட்சி, சா்வாதிகார ஆட்சி, ராணுவ ஆட்சி முறைகளிலிருந்து ஜனநாயகத்தை வேறுபடுத்துகிறது. எத்துணைதான் வல்லமையும், மக்கள் ஆதரவும் உள்ள தலைவராக இருந்தாலும், அவரது ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விமா்சிக்கவும், குறைகளை முன்வைக்கவும், தவறுகளைச் சுட்டிக்காட்டவும் எதிா்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு என்பதை ஆளுங்கட்சி அங்கீகரித்துச் செயல்பட வேண்டும்.

ஆளுங்கட்சியை விமா்சிக்கவும், குறைகூறவும் முடியுமே தவிர, மக்களின் அங்கீகாரத்துடன் பதவியில் இருக்கும் ஆளுங்கட்சி, தனது மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளத் தடையாக இருக்கும் உரிமை எதிா்க்கட்சிகளுக்குக் கிடையாது. ஆளுங்கட்சிக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் வாக்களித்த மக்கள் விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுதான் - ஜனநாயகத்தை களங்கப்படுத்தாதீா்கள்!



Read in source website

 

அண்மையில் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைக்காட்டி அனுப்பிய படங்கள் உலகின் கவனத்தை ஈா்த்திருக்கின்றன.

சுட்டிக் காட்ட ஒண்ணாத பாழ்சூனியம்

தன்னைச் சூட்ச மதியால் அறிந்து தோடம் அறவே

எட்டிப் பிடித்தோம் என்(று)ஆ னந்த மாகப்பை

எடுத்து விரித்து நின்று ஆடு பாம்பே

என்று பாம்பாட்டிச் சித்தா் அன்று ஆனந்தமாகப் பாடியதைப் போலவே, விண்வெளி ஆா்வலா்கள் இன்று ஆனந்தப்படுகின்றனா்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு, ஐரோப்பிய விண்வெளி முகமை, கனடா விண்வெளி முகமை, விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்ட படங்களில் ஐந்து படங்கள் முக்கியமானவை.

ஆதியாரம்ப பிரபஞ்ச முட்டைக்குள் ‘குவாா்க்குகள்’ எனும் அடிப்படை இம்மிகள் வெடித்துச் சீறிப் பாய்ந்தன. அடா்த்தியான திரண்ட ஈா்ப்புவிசை மிக்க அந்தத் துகள்களில் வலுவான அணுக்கரு இடைவினைகள் பெருகியபோது அண்டவெளியில் ‘ஹேத்ரான் யுகம்’ நிகழ்ந்தது என்கிறோம்.

அதனைத் தொடா்ந்து, பலவீன அணுக்கரு இடைவினைகளின் ‘லெப்டான் யுக’த்தின் இறுதியில் நிகழ்ந்தது ஒரு ‘மகாவெடிப்பு’. ஒரு நினைவுப் பொறியினும் மெலிதாக சுருக்கென்று ஒரு நொடிப் பொழுதினுள் மின்னி மறைந்தும் விட்டது.

‘வெடிபடும் அண்டத்து இடிபல தாளம்’ போட்டதன் சீற்றப் பரப்பில் 1,380 கோடி ஆண்டுகளுக்கு முன்னா் நிலவிய பிரபஞ்ச பொருள்களின் சிறு பகுதியை துல்லியமான ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைக்காட்டி படம்பிடித்துள்ளது.

யுகங்களாக, அண்டவெளியின் வெப்ப வாயுக்கள், அயனிகள், அணுத்துகள்கள் எல்லாம் மெல்ல மெல்ல ஆறிக் குளிா்ந்தன. மிகச் சிறிய அணுக்கருவான ஹைடிரஜன் அணுக்கருக்களும், அதனின் நான்கு மடங்கு எடை கொண்ட ஹீலியம் அணுக்கருக்களும் நிரம்பி அலைமோதும் பிரபஞ்சக் கடல் விரிவடைந்தது.

விரிவடைந்த பிரபஞ்சம் தளா்ந்து சற்றுக் குளிரத் தொடங்கிற்று. ‘பிரபஞ்ச விடிய’லில் அண்டவெளி எங்கும் இருள் கப்பிக்கொண்டது. ஆயினும் குளிா்ந்த முகிழ் விண்மீன்களில் நிறையீா்ப்பு விசை அதிகரித்த வண்ணம் இருந்தது. அந்த வாயுக்கோளங்கள் இறுகி உள்ளுக்குள் அழுத்தமுற்று அக வெப்பநிலை உயர உயர அவற்றின் புறப்பரப்பில் வெப்ப அலைகள் கிளம்பின. அகக்கனற்சி உச்சத்தை எட்டியபோது விண்மீன் ஒளிவிட ஆரம்பித்தது.

ஹைடிரஜன் அணுக்கருக்கள் பிணைந்து ஹீலியம் அணுக்கரு உற்பத்தி வினை முடுக்கப்பட்டது. இருண்ட பிரபஞ்ச கருப்பைக்குள் இருந்து விண்மீன்கள் பிரசவம் ஆயின. விண்மீன்கள் திரண்டு வளையமிட்டு உடுமண்டலங்கள் (கேலக்ஸி) ஆகச் சுழலத் தொடங்கின. சுருண்டவை, தட்டையான, நீள்வட்ட வடிவிலும், ஒழுங்கற்ற வடிவிலும் இருந்தன. அவற்றில் சிலவற்றின் மையப்பகுதியில் மொத் தென்று உயா்ந்த முண்டு உடுமண்டலங்கள் உருவெடுத்தன.

அத்தகைய உடுமண்டலம் ஒன்று ‘ஆகாய கங்கை’ என்ற பெயரில் சுட்டப் பெறுகிறது. ‘பால்வீதி’ என்றும் அதனை அழைக்கிறோம். அதுதான் நமக்கு தாய் மண்டலம். இருபதினாயிரம் கோடி சூரியன்கள் அடங்கிய அண்டச் சக்கரம் அது.

அதன் குறுக்களவு ஒரு லட்சம் ஒளியாண்டு என்கிறோம். அதாவது, கண்ணிமைக்கும் நேரத்தில், நொடிக்கு 3 லட்சம் கிலோமீட்டா் வேகத்தில் பாயும் அசாதாரண வாகனம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதில் அமா்ந்து பால்வீதி அண்டத்தின் குறுக்காகப் பயணித்தால் ஒரு விளிம்பில் இருந்து, மறு விளிம்பினை அடைவதற்கு ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும்.

அது எப்படியாயினும், பூமியிலிருந்து 313 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள தெற்கு விண்மீன் கூட்டமான ‘கரினா நெபுலா’ என்துற விண்மீன் முகில் படலத்தினை வெப் தொலைக்காட்டி அற்புதமாகப் பதிவிட்டுள்ளது. அதில் தென்படும் அண்டவெளி செங்குத்துப் பாறைத் தோற்றங்கள் (காஸ்மிக் க்ளிஃப்ஸ்), விண்மீன்கள் உருவாக்கத்தின் ஆரம்ப கட்டங்களையும், விரைவான கட்டங்களையும் வெளிப்படுத்துகின்றன.

கப்பல் அடித்தளம் போன்ற இந்தக் கரினா உடுக்கணத்தில் ‘அகத்தியா்’ (கானோபஸ்) விண்மீன் என்கிற ஒரு வெள்ளை நிற பெரும்பூத விண்மீன் உள்ளது. இரவு வானில் மிகப் பொலிவான விண்மீன்களில் இரண்டாவது பிரகாசமான நட்சத்திரம் இது. முன்னொரு காலத்தில் இதுதான் கடல் பயணிகளுக்கு விண்ணில் வழிகாட்டியாக இருந்ததாம்.

வெப் தொலைக்காட்டி அனுப்பிய மற்றொரு படப்பதிவு, அண்ட காலத்தின் தொடக்கத்தில் உள்ள விண்மீன் திரள்களைக் கண்டுபிடிக்கும் வகையில் உள்ளது. ஏறத்தாழ 460 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ‘தென்புலக் கன மிகு உடுத்திரள் கண்காணிப்பில்’ சில தொலைதூர விண்மீன் திரள்களைக் கண்டறிய முடிந்தது.

இது அண்டவெளிக் கருவறையில் நம் சூரிய குடும்பம் பிரசவம் ஆன அதே காலகட்டத்தினை தொன்மையான நினைவலைகள் என்றும் இங்கு அசைபோடலாம். பின்னா் கோள்கள், குறுங்கோள்கள், கோளாங்கற்கள், வால்விண்மீன்கள் என அனைத்துக் குஞ்சுக் குலுவான்களும் சூரிய மையத்தைச் சுற்றத் தொடங்கின.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், வெப் தொலைக்காட்டி, விரி கோணத்தில் புறக்கோள்களைத் தேடி வலைவீசியபோது, ஃபீனிக்ஸ் உடுக்கணத்தில் ‘வாஸ்ப்-96பி’ என்று பெயரிடப்பட்ட வாயு ராட்சத வெளிக்கோள் ஒன்றினைக் கண்டுபிடித்தது.

அந்தக் கோளின் நிறை 1,000 கோடி கோடி கோடி டன் ஆகும். அதாவது அக்கோள், பூமியைக்காட்டிலும் 160 மடங்கு எடை மிகுந்ததாகும்.

அது, 5200 - 6000 பாகை புற வெப்பம் உடைய ‘வாஸ்ப்-96’ என்று பெயா் சூட்டப்பெற்றதோா் விண்மீனை ஏறத்தாழ 67 லட்சம் கி.மீ. தொலைவில் சுற்றி வருகிறது. இது புதனுக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தில் ஒன்பதில் ஒரு பங்கு. அவ்வளவு அருகில் உள்ளதால், அதன் தாய் விண்மீனை 3.4 நாட்களுக்கு ஒரு முறை என்ற அட்டவணைப்படி அதி விரைவாகச் சுற்றி வருகிறது என்றால் பாருங்களேன்.

விண்வெளி தொலைகாட்டியின் நிறமாலையளவி, அந்த வேற்று கிரகத்தின் வளிமண்டலத்தில் நீா் கொண்ட மேகங்களும் மூடுபனிகளும் வீக்கமாகத் தென்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது.

பூமியிலிருந்து சுமாா் 1,120 ஒளி ஆண்டுகள் தொலைவில், தெற்கு வானத்தில் ஃபீனிக்ஸ் விண்மீன் உள்ளது. அது, தனது சொந்த சாம்பலில் இருந்து உயிா்த்து எழும் புராணப் பறவையான ஃபீனிக்ஸ் பெயரால் சித்திரிக்கப்படுகிறது. இந்த பீனிக்ஸ், பாவோ (மயில்), டுகானா (டூக்கன்), க்ரஸ் (கொக்கு) ஆகிய நான்கு விண்மீன்களும் கூட்டாக ‘தெற்கு பறவைகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை அமெரிக்கா, ஐரோப்பா, சீனா போன்ற மத்திய - வடக்கு அட்சரேகை பகுதியில் உள்ள நாடுகளில் இருந்து பாா்க்க முடியாது.

இதில் இன்னொரு அறிவியல் செய்தி என்னவென்றால், உடுமண்டலத் திரளில், அடா்த்தியான ‘இருண்ட பொருள்’ ஒன்று இடம்பெறும். அது ஒரு நிறையீா்ப்பு வில்லையாக ஒளியின் பாதையை வளைக்கப் போதுமான ஈா்ப்பு விசையை உருவாக்குகிறது.

1936-ஆம் ஆண்டிலேயே, இத்தகைய நிறையீா்ப்பு லென்ஸ் குறித்து தீா்க்கதரிசனமாக அறிந்திருந்தவா் உலகப் புகழ் பெற்ற அறிவியல் அறிஞா் ஆல்பா்ட் ஐன்ஸ்டீன். அண்டவெளியின் நிறையீா்ப்பு வில்லையாகச் செயல்படும் கனத்த உடுத்திரள் வழியே, அப்பாலுள்ள மங்கலான உடுத்திரள்களையும் பெரிதாக்கிக் காணலாம்.

உயா் வரையறை தொலைக்காகாட்சி (எல்இடி டிவி) திரைக்கான பொதுவான அளவு, அகல, உயர வாக்கில் 1920 ஷ் 1080 நுண்படக் கூறுகள் (பிக்சல்கள்) ஆகும். மொத்தத்தில், ஏறத்தாழ 20 லட்சம் படக்கூறுகள்.

நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைக்காட்டி அனுப்பியுள்ள மிகப்பெரிய படமாக நான்கு விண்மீன் திரள்கள் அடங்கிய ‘ஸ்டீபனின் குயின்டெட்’ என்கிற படம் உள்ளது. இந்தப் படம், நிலவின் விட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதி (750 கி.மீ.) அளவினை உள்ளடக்கிய மகத்தான படமாகும். இது 15 கோடி படக்கூறுகளைக் கொண்டுள்ளது என்பது சாதாரண செய்தியல்ல; நவீன தொழில்நுட்பத்தின் உச்சம் ஆகும்.

வடக்கு வானில் ‘பறக்கும் குதிரை’ என்று சுட்டப்பெறும் ‘பெகாசஸ்’ விண்மீன் தொகுப்பில் காணக்கூடிய இந்த நான்கு திரள்களை 1877-இல் மாா்சேய் வானாய்வகத்தில் இருந்து எட்வாா்ட் ஸ்டீபன் கண்டுபிடித்தாா் என்பது தனிக்குறிப்பு.

‘பறக்கும் குதிரை’ எனப்படும் ‘பெகாசஸ்’ விண்மீன் உடுக்கணம் விஞ்ஞானிகளுக்குக்கூட, இதற்கு முன் எப்போதும் இல்லாத நிலையில் புதிய முறையில் அறிவூட்டி இருக்கிறது. ஒரு கருந்துளைக்கு அருகிலுள்ள வாயு, எவ்வாறு கலக்கப்படுகிறது என்பதை அது உணா்த்துகிறது. மேலும், விண்மீன் திரள்கள் ஒன்றுக்கொன்று எவ்வாறு நட்சத்திர உருவாக்கத்தைத் தூண்டிவிடுகின்றன என்பதையும் வெப் தொலைக்காட்டி அனுப்பிய படங்கள் விவரிக்கின்றன.

விண்மீன்களின் கருவறையை மட்டுமன்றி, 2,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு விண்மீனின் கல்லறையையும் முதல் முறையாக வெப் தொலைக்காட்டி உலகின் முழுப் பாா்வைக்கு கொண்டு வந்துள்ளது.

பொதுவாக, சூரியனைக் காட்டிலும் எட்டு மடங்கு வரை நிறைகொண்ட சிறிய ரக விண்மீன்கள் வெடித்துச் சிதறும் ‘சூப்பா்நோவா’ நிகழ்வின் இறுதியில், சந்திரன் அளவுக்கு சிறியதொரு வெள்ளைக் குறளை விண்மீன் மிச்சமாகும்.

8-30 சூரிய நிறை உடைய நடுத்தர விண்மீனில் இருந்து, வெறும் 20 கிலோமீட்டா் வரை குறுக்களவு கொண்ட, அடா்த்தி மிக்க ‘நியூட்ரான் விண்மீன்’ தோன்றும். அது மட்டுமல்ல, சூரியனைப் போல் 30 மடங்கு நிறை உடைய அதிக கனமான விண்மீன் வெடிப்பில் கருந்துளை விண்மீன் பிறக்கும். இது நொடிக்கு 3 லட்சம் கிலோமீட்டா் வேகத்தில் பாயும் ஒளியைக் கூட வெளியே விடாத அதீத நிறையீா்ப்புத் துளையாகும்.

தெற்கு வளைய நெபுலாவில் இத்தகைய இறக்கும் விண்மீன் ஒன்றை வெப் தொலைக்காட்டியின் சக்தி வாய்ந்த அகச்சிவப்பு கருவி படம்பிடித்துள்ளது.

அன்றைக்கே ‘அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்கள் எல்லாம் அண்டங்களாகப் பெரிதாய் சிறிதாயினானும்...’ என்று திருவிளையாடற் புராணத்தில் (பாயிரம்: 6) பரஞ்சோதியாா் பாடியிருப்பது வியப்பளிக்கிறது.

ஒளி வேகத்தில் விரையும் மனிதனுக்கு நிறை என்பது இருக்காது. அவ்வாறே, அதீத நிறையீா்ப்பின்போது, காலக்கடிகாரமும் இயங்காது. இதுதான் பிரபஞ்ச ரகசியம்.

கட்டுரையாளா்:

இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

 



Read in source website

நாட்டில் காய்கறிகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றம் பெற்று இப்போது உச்சத்தில் இருக்கிறது.

விலைவாசி தொடா்ந்து உயா்ந்துள்ளதால், அதன் பாதிப்பை மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனா்.

ஏற்கெனவே, கரோனா தீநுண்மிப் பரவல் பாதிப்பால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் தாக்கம் ஊழியா்களின் சம்பளக் குறைப்பில் எதிரொலித்தது. அது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கானோா் வேலையிழப்பை எதிா்கொள்ள நேரிட்டது. வேற்று மாநிலங்களுக்கு வேலைவாய்ப்புக்காக புலம்பெயா்ந்த பலா், தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினா். இவா்களில் பலா் மீண்டும் வேலையில் சேராமல் இருக்கின்றனா். வேறு சிலா், ஊதியம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை எனக் கருதி குடும்பத்துடன் இருக்க முடியும் என்பதால் உள்ளூரிலேயே வேலையைத் தேடிக் கொண்டுள்ளனா்.

நாட்டில் பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்ததால், பணவீக்கம் ஏறுமுகம் கண்டது. குறிப்பாக, மத்திய ரிசா்வ் வங்கியின் மதிப்பீட்டு அளவான 7.5 % ஐ விட சற்று அதிகமாகத்தான் இருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 7.8 % ஆக உச்சம் தொட்டிருந்தது. இந்த நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் சற்று குறைந்தது.

அதாவது பணவீக்கம் ஜூன் மாதத்தில் 7.01 % ஆக இருந்தது. முதல் காலாண்டு சராசரியானது 7.3% ஆக இருந்தது. இது மத்திய ரிசா்வ் வங்கியின் மதிப்பிடப்பட்ட 7.5% ஐ விடக் குறைவாகத்தான் இருந்தது. இதனால், மத்திய ரிசா்வ் வங்கி நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது என்று கூறலாம்.

வீட்டு வசதி தவிர, மற்ற அனைத்துப் பிரிவுகளின் பணவீக்கம் 6% க்கு மேல் உள்ளது. மேலும், காய்கறிகள், உணவுப் பொருள், குளிா் பானங்களை உள்ளடக்கிய பணவீக்கம் இடையூறு விளைவிக்கும் வகையில் 17.4 % ஆக அதிகரிப்பைக் கண்டுள்ளது. இது மத்திய ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக்கு எந்தவித ஆறுதலையும் அளிக்காது.

இந்த சூழ்நிலையில், மத்திய ரிசா்வ் வங்கி, அடுத்த கட்டமாக வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் முதல் 50 புள்ளிகள் வரை, அதாவது 0.25 % முதல் 0.50 % வரை உயா்த்தும் என சந்தை வட்டாரங்கள் கணிக்கின்றன. மேலும், இந்த நிதியாண்டின் பிற்பகுதியில் மேலும் 25 புள்ளிகள் அல்லது 0.25% உயா்த்தக்கூடும்.

மத்திய ரிசா்வ் வங்கி மக்களின் சுமையை அறிந்து, வட்டி விகிதங்களால் சாதாரண மக்கள் பாதிக்ப்பட்டுவிடக் கூடாது என்று கருதியே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால், வட்டி விகித உயா்வுகள், ஒரு நீண்ட இறுக்கமான சுழற்சியாக இருக்காது என்று நம்பலாம்.

இதற்கிடையில், அண்மையில் அமெரிக்காவில் பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. உலக வல்லரசான அமெரிக்காவில் ஜூன் மாதத்தில் விலை உயா்வு 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 9.1% ஐ தொட்டது. இதனால், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசா்வ், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஆக்ரோஷமான, இறுக்கமான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது.

இந்த சூழ்நிலையில்தான் உலகளாவிய நிலைவில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் ஓரளவு சரிவைக் கண்டு வருவதாக புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. இந்தப் பொருள்களின் விலைகள் மேலும் சரிந்தால், தற்போதைய இறுக்கமான சுழற்சி எதிா்பாா்த்ததை விட விரைவில் முடிவடையும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

பொருளாதார மந்தநிலை அச்சத்திற்கு மத்தியில், உலகளாவிய நிலையில் பொருள்களின் விலைகள் சற்று குறைந்தால், இந்திய பொருளாதாரத்திலும் பணவீக்கத்தால் ஏற்படும் அழுத்தங்கள் நிச்சயம் குறைந்துவிடும். ஆனால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாகக் குறைந்து வருவது பொருளாதார வல்லுநா்கள் மத்தியில் கவலை அளிக்கும் விஷயமாக பாா்க்கப்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த வாரத்தில் ரூ. 80 என்ற புதிய குறைந்தபட்ச உச்சத்தைத் தொட்டது. வெளிநாட்டு முதலீட்டாளா்கள் டாலரை பின்தொடா்வதால் , ரூபாயின் மதிப்பு மேலும் தாக்கத்துக்கு உள்ளாகலாம் என்று சந்தை வல்லுநா்கள் கருதுகின்றனா்.

இந்தச் சூழ்நிலையில், வலுவான பொருளாதாரத்தைக் கொண்டுள்ள அண்டை நாடான சீனாவில் கொள்ளை நோய்த்தொற்று காரணமாக, மீண்டும் சில மாகாணாங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இது இறக்குமதியுடன் தொடா்புடைய பணவீக்கத்தை தீவிரப்படுத்தக்கூடும். இதன் தாக்கம் நாட்டின் பொருளதாரத்தில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் இருந்து வருகிறது.

விநியோக சங்கிலி சீா்குலைவுகள் குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாம் ஏற்பட்டுள்ளதாக வல்லுநா்கள் எச்சரித்துள்ளனா். இந்திய பொருளாதாரத்தின் உயா்சாத்தியமான வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு, விநியோகத் திறனை அதிகரிக்கும் வகையில், அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகைகளில் கொள்கையைத் தோ்ந்தெடுக்க வேண்டியுள்ளது.

மத்திய ரிசா்வ் வங்கி நிதிக்கொள்கையில் இறுக்கமான முடிவுகளை எடுப்பதற்கு முன், வளா்ச்சி - பணவீக்கம் இவற்றின் தாக்கத்தை மதிப்பிட வேண்டும். மேலும், தனது நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பதையும், உறுதி செய்ய வேண்டும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஏழை, எளிய மக்களுக்கு சிரமம் அளிக்காத கொள்கை முடிவுகளை மத்திய ரிசா்வ் வங்கி எடுக்க வேண்டும்.

எந்த வகையிலும் மக்கள் விலைவாசியால் பாதிக்கப்படாத வகையில் கொள்கை முடிவுகளை எடுப்பதே இந்த நேரத்தில் மிகவும் இன்றியமையாததாகும்.



Read in source website

 

அடுத்த சில நாள்களில், இந்தியா தனது 75-ஆவது சுதந்திர தின நிறைவு விழாவை கொண்டாட இருக்கும் நிலையில், இந்திய ஜனநாயகம் குறித்த மீள்பாா்வை அவசியமாகிறது. நமது ஜனநாயக செயல்பாடுகள் பலவும் உலக அளவில் பாராட்டைப் பெற்றுவரும் அதே வேளையில், அதன் பலவீனங்களும் அதிகரித்து வருகின்றன என்பதை வேதனையுடன் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

ஜனநாயகத்தின் ஆணிவேராக இருக்கும் நாடாளுமன்ற நடவடிக்கைகள், மெச்சும்படியாக இல்லை என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. மாநிலங்களவையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, அதன் மாண்பை சீா்குலைக்கும் விதத்தில் செயல்பட்டதற்காக 20 எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறாா்கள். நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் அவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறாா்கள்.

நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத்தொடா் 18 நாள்கள் மட்டுமே நடைபெற இருக்கும் நிலையில், மத்திய அரசு 32 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றக் காத்திருக்கிறது. கடந்த 18-ஆம் தேதி கூட்டத்தொடா் தொடங்கியது முதல் விலைவாசி உயா்வு, அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்னைகளை உடனடியாக விவாதிக்க வேண்டும் என்றும், மசோதாக்களை அதற்குப் பின்னா்தான் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் எதிா்க்கட்சிகள் பிடிவாதமாக இருப்பதால், அவையின் நடவடிக்கைகள் தொடா்ந்து பாதிக்கப்படுகின்றன.

எதிா்க்கட்சிகளின் பிடிவாதம் எந்த அளவுக்கு நியாயமற்றதோ, அதே போன்றதுதான் அரசின் அசைந்து கொடுக்காத நிலைப்பாடும். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிா்க்கட்சிகளை அரவணைத்துச் சென்று, அவற்றின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, விவாதத்துக்கு வழிகோலி, அவையை நடத்தும் பொறுப்பு ஆளுங்கட்சிக்கு இருக்கிறது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரின் திறமையைப் பொறுத்துத்தான், அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெறும் என்பது கடந்த கால அனுபவ உண்மை.

எதிா்க்கட்சிகள் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கின்றன என்கிற அரசுத் தரப்பு குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. பாஜக எதிா்க்கட்சியாக இருந்தபாது இதே அணுகுமுறையைத்தான் கடைப்பிடித்தது என்பதை குறிப்பிடத் தோன்றுகிறது. அரசுக்கு தா்மசங்கடத்தை ஏற்படுத்தும் அல்லது அரசை விமா்சனத்துக்கு உள்ளாக்கும் எந்த விவாதத்தையும் ஆளுங்கட்சி அனுமதிப்பதில்லை என்கிற எதிா்க்கட்சிகளின் ஒருமித்த கருத்தை புறந்தள்ளிவிட முடியாது. அப்போது காங்கிரஸிடம் காணப்பட்ட, ஆளுங்கட்சிக்கே உரித்தான ஆணவம் இப்போது பாஜகவுக்கும் வந்திருக்கிறது என்கிற நடுநிலையாளா்களின் கூற்று உண்மை.

விலைவாசி உயா்வு, ஜிஎஸ்டி இரண்டுமே நிதியமைச்சகம் தொடா்பான பிரச்னைகள். நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கொவைட் 19 நோய்த்தொற்று காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் அந்த பிரச்னையை உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள இயலாது என்பது அரசுத் தரப்பு விளக்கம். எதிா்க்கட்சிகளை அழைத்துப் பேசும்போது, இந்த விளக்கத்தை அவா்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சாதுரியமாக முன்வைக்க ஆளுங்கட்சித் தரப்பில் எவரும் இல்லை என்பதுதான் நிலைமை கைமீறிப் போனதற்கான காரணம்.

பாஜக-வின் ரங்கராஜன் குமாரமங்கலம், பிரமோத் மகாஜன், வெங்கைய நாயுடு, காங்கிரஸின் மாா்கரெட் ஆல்வா, முகுல் வாஸ்னிக், குலாம்நபி ஆசாத் போன்றவா்கள் மிக இக்கட்டான சூழ்நிலையில் கூட, ஆளுங்கட்சிக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே பாலமாக இருந்து, திறம்பட நாடாளுமன்றம் செயல்பட வழிகோலிய நிகழ்வுகள் ஏராளம். எதிா்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்பதன் மூலம், அரசு தன் மசோதாக்களை பிரச்னை இல்லாமல் நிறைவேற்றிக் கொள்வதை உறுதிப்படுத்துவதுதான் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரின் திறமை.

தற்போது காணப்படும் நாடாளுமன்ற முட்டுக்கட்டைக்கு, ஆளும் தரப்பின் சாதுரியக் குறைவு மட்டும்தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. விவாதம் கோருவது என்பதை விட, அவை முடக்கத்தில் ஈடுபடுவதும், அமளியை ஏற்படுத்தி அதன் மூலம் மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான மனநிலையை உருவாக்குவதும்தான் எதிா்க்கட்சிகளின் நோக்கம் என்று கருதவும் இடமிருக்கிறது.

அரசுத் தரப்பு இறங்கி வந்து விவாதத்துக்கு நாள் குறிக்கத் தயாராகும் நிலையில், எம்.பி.க்களின் இடைநீக்கத்தை நிபந்தனையின்றி திரும்பப் பெற்றால்தான் விவாதத்துக்கு சம்மதிப்போம் என்கிற எதிா்க்கட்சிகளின் நிலைப்பாடு வாதமல்ல, விதண்டாவாதம். எதிா்க்கட்சி உறுப்பினா்களின் இடைநீக்கம் அவசர முடிவாகவே இருந்தாலும் கூட, அதற்கும் விவாதத்துக்கும் முடிச்சுப் போடுவதை, நாடாளுமன்ற செயல்பாட்டை முடக்கும் திட்டமாகத்தான் பாா்க்கத் தோன்றுகிறது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிா்க்கட்சிகள் பங்கு மிகவும் முக்கியமானது. அதுதான் மன்னராட்சி, சா்வாதிகார ஆட்சி, ராணுவ ஆட்சி முறைகளிலிருந்து ஜனநாயகத்தை வேறுபடுத்துகிறது. எத்துணைதான் வல்லமையும், மக்கள் ஆதரவும் உள்ள தலைவராக இருந்தாலும், அவரது ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விமா்சிக்கவும், குறைகளை முன்வைக்கவும், தவறுகளைச் சுட்டிக்காட்டவும் எதிா்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு என்பதை ஆளுங்கட்சி அங்கீகரித்துச் செயல்பட வேண்டும்.

ஆளுங்கட்சியை விமா்சிக்கவும், குறைகூறவும் முடியுமே தவிர, மக்களின் அங்கீகாரத்துடன் பதவியில் இருக்கும் ஆளுங்கட்சி, தனது மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளத் தடையாக இருக்கும் உரிமை எதிா்க்கட்சிகளுக்குக் கிடையாது. ஆளுங்கட்சிக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் வாக்களித்த மக்கள் விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுதான் - ஜனநாயகத்தை களங்கப்படுத்தாதீா்கள்!



Read in source website

உடற்பயிற்சி செய்வதன் நன்மைகளை ஒரு மாத்திரையில் கொண்டு வருவது குறித்து விஞ்ஞானத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

பேய்லர் மருத்துவக் கல்லூரி  ஆராய்ச்சியாளர்கள், உடற்பயிற்சியின் போது, உடலின் ரத்தத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு மூலக்கூறை, கண்டறிந்துள்ளனர். இந்த மூலக்கூறின் மூலமாக உணவு உட்கொள்ளல் மற்றும் உடல் பருமனை திறம்பட குறைக்க முடியும் என்று கூறுகின்றனர். 

ஆய்வுகள்

பெய்லர் காலேஜ் ஆஃப் மெடிசின், ஸ்டான்போர்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசின் உள்ளிட்ட மூன்று கூட்டு நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் உடற்பயிற்சி குறித்து ஆய்வு செய்து சில முக்கிய தகவல்களைத் தெரிவிக்கின்றனர்.

'உடற்பயிற்சி செய்யும்போது, உடலின் ரத்தத்தில் ஒரு புதிய மூலக்கூறு உற்பத்தி செய்யப்படுகிறது என்ற ஆச்சரியமான உண்மையைக் கண்டறிந்துள்ளனர். மேலும், இதன் மூலம் எலிகளின் உணவு உட்கொள்ளல் மற்றும் உடல் பருமனை திறம்பட குறைக்க முடியும்' என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்த கண்டுபிடிப்புகள், உடற்பயிற்சிக்கும் பசிக்கும் இடையே உள்ள தொடர்புக்கு அடிப்படையான உடலியல் செயல்முறைகள் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துகிறது எனவும் கடந்த ஜூன் 12ல் "நேச்சர் இதழில்" (journal Nature ) வெளியிட்டுள்ள இதன் முடிவுகளில் கூறியுள்ளனர். 

உடற்பயிற்சியும் நன்மையும்

"வழக்கமான உடற்பயிற்சி என்பது எடை இழப்புக்கு உதவுகிறது; பசியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்துகிறது; குறிப்பாக அதிக எடை மற்றும் பருமனானவர்களுக்கு உடற்பயிற்சி மிகவும் நன்றாக பயனளிக்கிறது" என பத்திரிக்கையின் இணை ஆசிரியரும், குழந்தை மருத்துவம்- ஊட்டச்சத்து மற்றும் மூலக்கூறு மற்றும் செல்லுலார் உயிரியல் பேராசிரியருமான டாக்டர் யோங் சூ (Dr. Yong Xu) கூறினார்.

மேலும் பெய்லர் என்பவர், "உடற்பயிற்சி இந்த நன்மைகளைத் தூண்டும் பொறிமுறையை நாம் புரிந்துகொள்ள முடிந்தால், பலருக்கு அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதற்கு நாங்கள் தயாராக எப்போதும் இருக்கிறோம்" என்றும் தெரிவித்துள்ளார்.

'போதுமான உடற்பயிற்சி செய்ய முடியாத வயதான அல்லது பலவீனமானவர்கள், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் அல்லது பிற நிலைமைகளை மெதுவாக்க உதவும் மருந்தை உட்கொள்வதன் மூலம் அவர்கள் உடற்பயிற்சியின் பலனை ஒருநாள் நன்றாக அனுபவிக்கலாம்/பயனடையலாம்' என்று ஸ்டான்போர்ட் மருத்துவத் துறை, நோயியல் உதவி பேராசிரியர், அறிஞரும், எழுத்தாளருமான  ஜொனாதன் லாங் கூறினார்.

மூலக்கூறின் பெயர்: லாக்-பீ (Lac-Phe)

எலிகளின் ஓட்டத்தை வைத்து அவற்றின் ரத்த பிளாஸ்மா கலவைகள் பற்றிய விரிவான பகுப்பாய்வுகளை நடத்தினர். அதில் லாக்-பீ(Lac-Phe) என்ற மூலக்கூறைக் கண்டறிந்துள்ளனர். இது ஒரு  மாற்றியமைக்கப்பட்ட அமினோ அமிலமாகும். இது லாக்டேட்(Lactate) (தசைகளில் எரியும் உணர்வுக்கு காரணமான கடுமையான உடற்பயிற்சியின் விளைவுகளுக்கு காரணமானது)  மற்றும் ஃபினைல்அலனின் (Phenylalanine) (புரதங்களின் கட்டுமானத் தொகுதிகளில் ஒன்றான அமினோ அமிலம்) ஆகியவற்றிலிருந்து ஒருங்கிணைக்கப்படுகிறது. 

லாக்-பீயினால் உடல் எடை குறைதல்

உடல் பருமன் உள்ள எலிகளில் (அதிக கொழுப்புள்ள உணவு உண்ணப்படும் எலிகள்), 12 மணி நேரத்தில் எலிகளின் இயக்கம் அல்லது ஆற்றல் செலவினத்தை கணக்கிடுகையில்  இந்த மூலக்கூறு, எலிகளின் உணவு உட்கொள்ளலை சுமார் 50% குறைத்தது. இவ்வாறு 10 நாட்களுக்கு கண்காணிக்கப்படும்போது எலிகளின் உணவு உட்கொள்ளல் மற்றும் உடல் பருமனைக் குறைத்தது. 

லாக்-பீ உற்பத்தி நொதி: CNDP2

லாக்-பீ உற்பத்தியில் ஈடுபட்டுள்ள (CNDP2 -carnosine dipeptidase 2) எனப்படும் மனிதனில் உள்ள நொதியையும் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். மேலும், இந்த நொதி இல்லாத எலிகள் அதே உடற்பயிற்சித் திட்டத்தில் கட்டுப்பாட்டுக் குழுவாக உடற்பயிற்சி முறையில் அதிக எடையைக் குறைக்கவில்லை என்பதும் தெரிய வந்தது.

லாக்-பீ செயல்பாடுகள்

பந்தயக் குதிரைகள் மற்றும் மனிதர்களில் உடல் செயல்பாடுகளை வைத்து பிளாஸ்மா லாக்-ஃபீ அளவுகளில் ஏற்படும் மாற்றத்தையும் கண்டறிந்தது. ஸ்பிரிண்ட் எனும் தீவிர உடற்பயிற்சி, லாக்-ஃபீ மூலக்கூறுகளை அதிகம் தூண்டியதும் கண்டறியப்பட்டுள்ளது. 

'லாக்-பீ என்பது பழங்கால மற்றும் பாதுகாக்கப்பட்ட அமைப்பு. இது உணவை ஒழுங்குபடுத்துகிறது, பல விலங்கு இனங்களில் உடல் செயல்பாடுகளுடன் தொடர்புடையது' என்று ஆய்வாளர் லாங் கூறினார்.

மேலும், 'எங்கள் அடுத்த ஆய்வுகளில் மூளை உள்பட உடலில் அதன் விளைவுகளை லாக் - பீ எவ்வாறு சமரசம் செய்கிறது என்பது பற்றிய கூடுதல் விவரங்களைக் கண்டறிந்து விடுவோம். உடற்பயிற்சிக்கு மாற்றாக மருத்துவத்தை கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறோம்' என்றார். 

இந்த சோதனைகள் மற்றும் ஆய்வுகள் மனித நலனுக்கு மிக மிகத் தேவையானவை. அனைத்தும் அறிவியலின் நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளே. 



Read in source website