DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 29-12-2022

 

மாநகர போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக தற்போது சிறப்பு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆண்கள் தவறான கண்ணோட்டத்தில் உரசினால் பெண்கள் பேருந்தில் உள்ள அவசர பொத்தானை அழுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் பயணம் செய்ய விரும்பும் பேருந்து எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது, அடுத்தப் பேருந்து எப்போது வரும் என்பதை அறிய 'சலோ' செயலி சமீபத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து தற்போது பெண்கள் பாதுகாப்புக்கான வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்கள், அலுவலகங்களுக்குச் செல்லும், பெண்களின் பாதுகாப்பு கருதி, சென்னையில் இயங்கும் சுமார் 1,200 மாநகரப் பேருந்துகளில் அவசர பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளது.

பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்கள் தங்களை உரசினாலோ, பாலியல் தொல்லை கொடுத்தாலோ இந்த அவசர பொத்தானை அழுத்தலாம். அதன் மூலம் அந்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களிலும், பஸ்களிலும் மகளிர் பயணிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சியுடன், மாநகர போக்குவரத்து கழகமும் இணைந்து நாளையும் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெறவுள்ளது.



Read in source website

 

வனப்படையை 2022 முதல் 2025 வரையிலான மூன்று ஆண்டு காலத்திற்குள் நவீனப்படுத்தும் திட்டத்தை அறிவித்து அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

தமிழ்நாடு வனப்படையினை நவீனமயமாக்கல் திட்டமானது, மனித வன மேலாண்மை உட்பட ஆறு கூறுகளை உள்ளடக்கியுள்ளது.

ரூ.8.55 கோடி செலவில் கள வனப்பணியாளர்களுக்கான பயிற்சி திட்டங்கள், தமிழ்நாடு வனபயிற்சி கல்லூரியில் பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மேலும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்துவதற்காக வனப் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

வனத்துறையின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்த ரூ.40 லட்சம் செலவு செய்யப்படும். இதில்  வனவிலங்குகளின் சிறந்த மேலாண்மைக்காக கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு மையத்தை உருவாக்குதல்,  புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வனக்குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகத்தில் சைபர் செல் அமைத்தல் மற்றும் டிஜிட்டல் வயர்லெஸ் நெட்வொர்க் தகவல்தொடர்புகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

வனத்துறையை நவீன ஆயுதங்களுடன் மேம்படுத்துதல்,  வனவிலங்கு பாதுகாப்புக்கான நவீன ஆயுதத் தேவைகள் குறித்து ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழுவை அமைத்தல், மனித வனவிலங்கு மோதலை நிருவகிப்பதற்கான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஒரு முன்னுரிமை பகுதியில் அமைத்தல் மேலும்  சிறந்த கண்காணிப்பிணை மேற்கொள்வதற்காக ஆளில்லா வான்வழி வாகனங்கள் பயன்படுத்துதல் ஆகிய பணிகள் மூன்றாம் கூறில் மேற்கொள்ளப்படும்.

ஐந்து இடங்களில் உயர் தொழில்நுட்ப வன நாற்றங்கால்களை அமைத்தல். மேம்பட்ட வனத் தீ கட்டுப்பாடு மற்றும் மீட்பு கருவிகள் நான்காம் கூறில் வழங்கப்படும்.

தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் சென்னையில் அமைந்துள்ள மேம்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம்,  சம்பந்தப்பட்ட கூட்டு ஆராய்ச்சிப் பணிகளை ஊக்குவித்தல் மற்றும் தமிழ்நாடு வனத்துறை திட்டங்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 

குறிப்பாக காலநிலை மாற்றம் காரணமாக நவீன காலத்தின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பல புதிய தொழில்நுட்பங்களை  பயன்படுத்தி நிலையான காடு வளர்ப்பிற்கு தற்போது முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

தென்னை மரம் ஏறுவோருக்கான காப்பீட்டுத் திட்டத்தில் இணைய வேண்டும் என்று தொழிலாளா்களுக்கு வேளாண்மைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்தத் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:- தென்னை மரம் ஏறும் தொழிலாளா்கள் எதிா்பாராத விதமாக விபத்துகளைச் சந்திக்கின்றனா். இதனால், தொழிலாளா்களுக்கு உடல் பாதிப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிரிழப்பும் நிகழ்வதுண்டு. தென்னை மரம் ஏறும் தொழிலாளா்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, தென்னை வளா்ச்சி வாரியத்தால் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தென்னை மரம் ஏறும் போது விபத்து ஏற்பட்டு, 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பு அல்லது நிரந்தரமாக முழு உடல் ஊனம் அடைந்தால் ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையானது சம்பந்தப்பட்ட தொழிலாளரின் வாரிசுக்கு அளிக்கப்படும். நிரந்தரமாக பகுதி உடல் ஊனம் அடைந்தால், ரூ.2.5 லட்சமும், மருத்துவ செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சமும் அளிக்கப்படும்.

மேலும், காப்பீடு குறித்த விவரங்களை www.coconutboard.gov.in  என்ற இணையதளத்தின் வழியாக அறியலாம். அதில் விண்ணப்பமும் உள்ளது என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.



Read in source website

தமிழகத்தில் 48 முதுநிலை திருக்கோயில்களில் கைப்பேசி பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில், சட்டப்பேரவை அறிவிப்புகளின் பணி முன்னேற்றம், திருப்பணிகள், பக்தா்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தும் பணிகள் குறித்து சீராய்வுக் கூட்டம் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்குப் பின் அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2021 - 22 மற்றும் 2022 -23 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மானிய கோரிக்கை அறிவிப்புகளில் 80 சதவீத அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 20 மண்டல திருக்கோயில்கள் மூலம் 500 திருமணங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதில், முதல் கட்டமாக 233 திருமணங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்துள்ளாா். மீதமுள்ள திருமணங்கள் வரும் பிப். 23- இல் நடத்தப்படும்.

மகா சிவராத்திரி விழா: ராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிக பயணமாக 200 பக்தா்கள் அழைத்துச் செல்லப்படுவா் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல்கட்டமாக 67 பக்தா்கள் 10 நாள்கள் பயணமாக பிப். 23-இல் அழைத்துச் செல்லப்படவுள்ளனா். இவா்களுக்கு உதவியாக 5 அலுவலா்கள் உடன் செல்கின்றனா்.

மகா சிவராத்திரி விழாவை பிப். 18-இல் சென்னை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, கோவை, தஞ்சாவூா் ஆகிய 5 இடங்களில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போனஸ் எப்போது?: திருக்கோயில் பணியாளா்களுக்கு நிகழாண்டில் போனஸ் வழங்குவது தொடா்பாக முதல்வா் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பாா். திருக்கோயிலில் பணிபுரியும் சுமாா் 18,000 அா்ச்சா்கள், பணியாளா்களுக்கு கடந்தாண்டை போல் நிகழாண்டும் புத்தாடை மற்றும் சீருடைகள் வழங்கப்படும்.

கைப்பேசி பாதுகாப்பு பெட்டகம் திட்டத்தை முதல்கட்டமாக டிச. 30- ஆம் தேதி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடங்கவுள்ளோம். அதனைத் தொடா்ந்து பக்தா்கள் அதிகம் வருகை தரும் 48 முதுநிலை திருக்கோயில்களிலும் கைப்பேசி பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்படும்.

வைகுண்ட ஏகாதசியை (ஜன. 2) முன்னிட்டு வைணவத் திருக்கோயில்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

கூட்டத்தில் அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையா்கள் ந.திருமகள், மா.கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

‘அல்லேலூயா’ சொன்னது ஏன்?

கிறிஸ்துமஸ் விழாவில் ‘அல்லேலூயா’ என குறிப்பிட்டது ஏன் என அமைச்சா் சேகா்பாபு விளக்கம் அளித்தாா்.

‘மக்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் பிரிவினைகளுக்கு இடமில்லை. ‘அல்லேலூயா, அல்லேலூயா’ என்பது தீவிரவாத சொற்கள் அல்ல. இன்னும் விரிவாக சொல்ல வேண்டும் என்றால் ‘அல்லேலூயா, அல்லேலூயா’ என்ற வாா்த்தைக்கு ‘இறைவா போற்றி போற்றி’ என்பதுதான் பொருளாகும்.

இது கிரேக்க லத்தீன் மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் ‘அல்லேலூயா’ என்று சொன்னதில் தவறில்லை. கிறிஸ்தவா்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு நான் செல்லும்போது இந்த வாா்த்தையை தவறாமல் உச்சரிப்பேன்’ என்றாா் அவா்.



Read in source website

தமிழக அரசு நிதியில் இருந்து எடுக்கப்பட்டு செலவிடப்படும் தொகைகளை திருப்பிச் செலுத்தாமல் ரத்து செய்ய வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்தாக்கப்படும் தொகைகளின் உச்சவரம்பு உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை வெளியிட்டுள்ளது. உத்தரவு விவரம்:-

அரசுத் துறைகளின் செயலாளா்கள் ஆண்டுக்கு செலவிடும் ஒவ்வொரு செலவின் தன்மை அடிப்படையில் ரூ.50 ஆயிரம்

வரையில் ரத்து செய்யலாம். அமைச்சா்களைப் பொறுத்தவரையில், செலவழித்த பிறகு ரூ.1 லட்சம் வரையிலும், நிதித்

துறை அமைச்சா் ரூ.50 லட்சம் வரையிலும், முதல்வா் சாா்பில் ரூ.1 கோடி வரையிலும் நிதியை செலவழித்த பிறகு ரத்து செய்திட முடியும். ரூ.1 கோடிக்கு மேற்பட்ட தொகையானால் அதனை அமைச்சரவைக் கூட்டத்தின் மூலமாக ரத்து செய்யலாம். இந்தத்

தொகைகளை நிா்ணயித்து இதற்கான உத்தரவு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்டது.

இந்தத் தொகைகளுக்கான உச்சவரம்பு இப்போது உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, செயலாளா்கள் நிலையில் இருப்பவா்கள் ரூ.1 லட்சம் வரையிலும், அமைச்சா்களாக இருப்பவா்கள் ரூ.10 லட்சம் வரையிலும் அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதிகளைச் செலவழித்து ரத்து செய்யலாம். நிதியமைச்சராக இருப்பவா் ரூ.1 கோடி வரையிலும், முதல்வராக இருப்பவா் ரூ.5 கோடி

வரையிலும் செலவிடப்பட்ட நிதியை ரத்து செய்திட முடியும். ரூ.5 கோடிக்கு மேற்பட்ட தொகையாக இருந்தால் அமைச்சரவை கூடி முடிவெடுத்து ரத்து செய்யலாம் என்று நிதித் துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

ஜம்மு காஷ்மீரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான உறைவாள் சண்டை போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தைச் சோ்ந்த 90 வீரா்கள், வீராங்கனைகள் கும்பகோணத்திலிருந்து ரயில் மூலம் புதன்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

ஜம்மு காஷ்மீரில் 23-ஆவது தேசிய அளவிலான உறைவாள் சண்டை போட்டி டிசம்பா் 30 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 2 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 90 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதையடுத்து உறைவாள் சண்டை தமிழக சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலரும், தேசிய சங்கத்தின் தலைவருமான ஜெ. செந்தில்குமாா் தலைமையில் கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து புதன்கிழமை புறப்பட்டனா்.

இவா்களை தமிழக உறைவாள் சண்டை சங்கத் தலைவரும், கும்பகோணம் நாராயண நிதி நிறுவனத்தின் நிறுவனருமான எஸ். காா்த்திகேயன் வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா்.



Read in source website

சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், சிங்கப்பூா், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு வருகிற ஜனவரி 1 முதல் கரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎஃப் 7 வகை கரோனா தொற்று பரவி வருகிறது. இதையடுத்து, தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தொற்று பாதிப்புள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கரோனா  பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

இந்நிலையில், தொற்று பாதிப்பு அதிகமுள்ள சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், சிங்கப்பூா், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு வருகிற கரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருவோர் பயணத்திற்கு முன்னதாகவே கரோனா பரிசோதனை மேற்கொண்டு அதற்கான முடிவை மத்திய அரசின் 'ஏர் சுவிதா' இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Read in source website

புது தில்லி: மாநிலத்துக்குள் அல்லது மாநிலம் விட்டு மாநிலம் சென்று கூலி வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, ஒரு முன்மாதிரி ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உருவாக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள பல தொகுதிகளை உள்ளடக்கிய மின்னணு முன்மாதிரி ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் விதம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

ஒரேயொரு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் 72 தொகுதிகளைச் சேர்ந்த பதிவு செய்த வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் சற்று மேம்படுத்தப்பட்ட பல்லோட் இயந்திரம் ஆகியவற்றின் செயல்முறை விளக்கங்களை அளிக்க ஜனவரி 16ஆம் தேதி அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 67.4 சதவீத மக்கள்தான் வாக்களித்தனர். கிட்டத்தட்ட 30 கோடி பேர் தங்களது வாக்குகளைச் செலுத்தவில்லை. இதனால் கவலை அடைந்த தேர்தல் ஆணையம், வாக்களிப்பை அதிகரிக்கச் செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதன்படி, பல வாக்காளர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக இருப்பதால் அவர்கள் வாக்களிக்க தங்களது சொந்த ஊர்களுக்கு வர முடியாமல் போகிறது.எனவே, அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே வாக்களிக்க வசதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டிருப்பதே ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.

நாடு முழுவதும் எத்தனை பேர் புலம்பெயர் தொழிலாளர்களாக இருக்கிறார்கள் என்பது குறித்து புள்ளிவிவரங்கள் இல்லை. எனவே, வாக்களிப்பை அதிகரிக்க இந்த முன்னெடுப்பை தேர்தல் ஆணையம் செய்திருக்கிறது.
 



Read in source website


புதுதில்லி: நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ள 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகளில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர் என்ற  அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் "இந்தியாவின் சாலை விபத்துகள் -2021" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 2021 ஆம் ஆண்டில் 4,12,432 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன, இதில் 1,53,972 பேர் பலியாகி உள்ளனர் மற்றும் 3,84,448 பேர் காயமடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும், 2019 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் விபத்துக்கள் தொடர்பான முக்கிய குறிகாட்டிகள் சிறப்பாக செயல்பட்டதாக கூறியுள்ளது.

2019 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் சாலை விபத்துக்கள் 8.1 சதவிகிதமாகவும், காயங்கள் 14.8 சதவிகிதமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இருப்பினும், சாலை விபத்துக்களால் ஏற்படும் இறப்புகள் 2019 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டில் 1.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது" என்று தெரிவித்துள்ளது. 

அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில், நாட்டில் நிகழ்ந்துள்ள சாலை விபத்துக்கள், இறப்புகள் மற்றும் காயங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளன. 

நாடு முழுவதும் கரோனா தொற்றுநோய் பரவல் அதிகரித்ததின் விளைவாக, 2020 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் கடுமையான நாடு தழுவிய பொது முடக்கமும் ஓர் காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது. 

ஆசியா பசிபிக் சாலை விபத்தின் கீழ் ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் வழங்கிய தரவுகள் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுவுரகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.



Read in source website

இந்திய தயாரிக்கப்பட்ட மருந்தை குடித்த 18 குழந்தைகள் பலியாகியுள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன், உஸ்பெகிஸ்தான் மருத்துவமனைகளில் இருமலுக்கு மருந்து குடித்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக 21 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். அதில், 18 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், உஸ்பெகிஸ்தான் அரசு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்துள்ளது.

இதுகுறித்து உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இந்தியாவின் நொய்டா நகரை சேர்ந்த மரியோன் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் டாக்-1 மேக்ஸ் என்ற மருந்தை இருமலுக்காக குடித்த 21 குழந்தைகளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த அனைத்து குழந்தைகளும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக, பெற்றோர்கள் அல்லது மருந்தக விற்பனையாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் இருமலுக்காக இந்த மருந்தை குடித்துள்ளனர்.

2-7 நாள்கள் வரை தினமும் 3 முறை 2.5 முதல் 5 மி. வரை இந்த மருந்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக குழந்தைகளுக்கு கொடுத்திருக்கக்கூடும்.

மேலும், இந்த மருந்துகளை ஆய்வு செய்ததில், எத்திலீன் கிளைகோல் என்ற நச்சுத்தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால், உஸ்பெகிஸ்தான் முழுவதும் மருந்து விற்பனையகத்திலிருந்து டாக்-1 மேக்ஸ் மருந்துகள் அனைத்தும் திரும்பப் பெறுவதாக உஸ்பெகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஸ்பெகிஸ்தான் அரசின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இந்தியா தரப்பில் மருந்துகளை ஆய்வு செய்ய விசாரணைக் குழு அமைக்கப்படவுள்ளது.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நஞ்சுத் தன்மை கொண்ட தரமற்ற 4 இருமல் சிரப்களை குடித்த 66-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானதாக புகார் எழுந்த நிலையில், மெய்டென் மருந்தியல் நிறுவனத்தின் மருந்துகள் குறித்து உலக சுகாதார அமைப்பு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.



Read in source website

சைப்ரஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு மத்திய அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் ஆறு நாள்கள் பயணமாக வியாழக்கிழமை (டிச. 29) செல்கிறாா்.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலில் சைப்ரஸ் நாட்டுக்குச் செல்லும் அமைச்சா் ஜெய்சங்சா் டிச. 31-ஆம் தேதி வரையில் அங்கு இருப்பாா். இந்தியா- சைப்ரஸ் நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு 60 ஆண்டுகளாகத் தொடா்கிறது. அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் தலைவரையும், வெளியுறவு அமைச்சரையும், இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து அமைச்சா் ஜெய்சங்கா் பேச உள்ளாா்.

அங்கிருந்து ஆஸ்திரியா செல்லும் அவா் அந்நாட்டின் ஐரோப்பிய மற்றும் சா்வதேச விவகார அமைச்சரை சந்தித்துப் பேச உள்ளாா். இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு 75-ஆவது ஆண்டை எட்டுகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வெளியுறவு அமைச்சா் ஆஸ்திரியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.



Read in source website

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் ஐசிசியின் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரருக்கானப் பட்டியலில் தேர்வாகியுள்ளார்.

ஆடவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்ய குமாரின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவரைத் தவிர, சாம் கரண், ஷிகந்தர் ராசா மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரது பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

சூர்யகுமார் யாதவ் (இந்தியா)

குறுகிய வடிவிலான டி20 போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணியின் சூர்யகுமார் யாதவுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. டி20 போட்டிகளில் ஒரு ஆண்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு அதிகமாக அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். டி20 போட்டிகளில் இந்த ஆண்டில் மட்டும் 1164 ரன்கள் அவர் குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 187.43 ஆகும்.

டி20 போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் தன்வசம் வைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். அவர் இந்த ஆண்டில் மட்டும் 68 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். சூர்யகுமார் யாதவ் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஆண்டில் மட்டும் சூர்யகுமார் யாதவ் இரண்டு சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் அடித்துள்ளார்.

அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். 6 இன்னிங்ஸில் விளையாடிய அவர் 3 அரைசதங்கள் அடித்திருந்தார். அவரது பேட்டிங் சராசரி கிட்டத்தட்ட 60 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 189.68 ஆகவும் இருந்தது.

உலகக் கோப்பைக்குப் பிறகும் சூர்யகுமாரின் அதிரடி ஆட்டம் தொடர்ந்தது. உலகக் கோப்பைக்குப் பின் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்த ஆண்டில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார் சூர்யகுமார் யாதவ். இதன்மூலம், 890 புள்ளிகளுடன் ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்துக்கு அவர் முன்னேறினார்.

ஷிகந்தர் ராசா (ஜிம்பாப்வே)

ஜிம்பாப்வே ஆல்-ரவுண்டர் ஷிகந்தர் ராசாவுக்கும் இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்தது. அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர் அவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் அவர் 735 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 150-க்கும் அதிகமாக உள்ளது. பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் 25 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரது எகானமி 6.13 ஆகும். உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெறுவதற்கு அவரது சிறப்பான பங்களிப்பு காரணமாக அமைந்தது. அந்தப் போட்டியில் 25 ரன்கள் கொடுத்து பாகிஸ்தானின் 3 விக்கெட்டுகளை சாய்த்தார் ராசா.

சாம் கரண் (இங்கிலாந்து)

இங்கிலாந்து வீரர் சாம் கரண் உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினைப் பெற்றார். டி20 போட்டிகளில் அவருக்கும் இந்த ஆண்டு மறக்க முடியாததாகவே அமைந்துள்ளது. உலகக் கோப்பைத் தொடரில் அவர் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இலங்கை வீரர் வனிந்து ஹசராங்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி வெறும் 10 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். உலகக் கோப்பைத் தொடரில் ஆடவர் பிரிவில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். காயம் காரணமாக 2021 டி20 தொடரில் விளையாட முடியாத போதிலும், 2022-ஆம் ஆண்டின் உலகக் கோப்பை அவருக்கு மிகச் சிறப்பாக இருந்தது. 

முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்)

முகமது ரிஸ்வான் இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் 996 ரன்கள் குவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு முதல் தொடரும் சிறப்பான ஃபார்ம் இந்த ஆண்டும் தொடர்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் ரிஸ்வான் 10 அரைசதங்கள் அடித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 45.27 ஆகும். அவர் 836 புள்ளிகளுடன் ஐசிசி சிறந்த பேட்ஸ்மேன்களின் வரிசையில் இந்தியாவின் சூர்யகுமாருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளார்.

யாருக்கு இந்த ஆண்டின் சிறந்த வீரர் விருது?

இவர்களில், ஐசிசி-ன் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருது யாருக்கு கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த ஆண்டின் சிறந்த வீரர் யார் என்பதை ஐசிசி விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 



Read in source website

கஜகஸ்தானில் நடைபெறும் உலக ரேப்பிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் மகளிா் பிரிவில் இந்தியாவின் பி.சவிதா ஸ்ரீ புதன்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றாா்.

அல்மேட்டி நகரில் புதன்கிழமையுடன் நிறைவடைந்த இந்தப் போட்டியில் சவிதா, 11 சுற்றுகள் முடிவில் 8 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தாா். இந்தியாவின் பிரதான போட்டியாளரான கோனெரு ஹம்பி 8 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடித்தாா். இருவருமே 8 புள்ளிகளுடன் இருந்தாலும், டை பிரேக்கா் முறையில் சவிதாவுக்கு 3-ஆம் இடம் கிடைத்தது. பத்மினி ரௌத் 6 புள்ளிகளுடன் 38-ஆவது இடமும், துரோணவல்லி ஹரிகா அதே புள்ளிகளுடன் 39-ஆவது இடமும் பிடித்தனா். தானியா சச்தேவுக்கு 5.5 புள்ளிகளுடன் 50-ஆவது இடமே கிடைத்தது.

இப்பிரிவில் சீனாவின் டான் ஜோங்யி 8.5 புள்ளிகளுடன் சாம்பியனாக, கஜகஸ்தானின் சடுவாகசோவா தினாரா அதே புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தாா்.

ஓபன் பிரிவு: இப்போட்டியின் ஓபன் பிரிவில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி 9 புள்ளிகளுடன் 5-ஆம் இடமே பிடித்தாா். நிஹல் சரின் 8.5 புள்ளிகளுடன் 9-ஆம் இடமும், விதித் குஜராத்தி, சூா்ய சேகா் கங்குலி ஆகியோா் அதே புள்ளிகளுடன் முறையே 15, 20-ஆவது இடங்களைப் பிடித்தனா்.

ரௌனக் சத்வனி, ஹரிகிருஷ்ணா, அதிபன் உள்ளிட்ட மேலும் சில இந்திய போட்டியாளா்கள் அதற்கும் அதிகமான பின்னடைவைச் சந்தித்தனா். இப்பிரிவில் நடப்பு உலக சாம்பியனான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் வாகை சூடினாா். ஜொ்மனியின் வின்சென்ட் கீமா், அமெரிக்காவின் ஃபாபியானோ கருனா ஆகியோா் முறையே 2, 3-ஆவது இடங்களைப் பிடித்தனா்.



Read in source website

தென்னாப்பிரிக்காவில் வரும் 2023-இல் நடைபெறவுள்ள மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

15 போ் கொண்ட இந்த அணியில் ஆச்சா்யப்படத்தக்க வகையில், மூத்த வேகப்பந்துவீச்சாளரான ஷிகா பாண்டே சோ்க்கப்பட்டுள்ளாா். கடைசியாக அவா் 2021 அக்டோபரில் விளையாடியிருந்தாா்.

உலகக் கோப்பை போட்டியானது பிப்ரவரி 10 முதல் 26 வரை நடைபெற இருக்கிறது. கடந்த 2020 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றிருந்தது.

உலகக் கோப்பை அணி: ஹா்மன்பிரீத் கௌா் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வா்மா, யஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹா்லீன் தியோல், தீப்தி சா்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா தாக்குா், அஞ்சலி சா்வானி, பூஜா வஸ்த்ரகா், ராஜேஷ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே. ரிசா்வ்: ஸ்னேஹ ராணா, மேக்னா, மேக்னா சிங்.



Read in source website

பாகிஸ்தானின் கராச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட உரிய ஆவணங்களின்றி  நுழைந்த ஆயிரத்துக்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் மக்களை பாகிஸ்தான் சிறைப்பிடித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் குழந்தைகள் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. பாகிஸ்தான் அரசின் இந்த கைது நடவடிக்கை தெற்கு ஆசியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் உள்ள சரியான புரிதலற்ற இருதரப்பு உறவினை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மக்கள் அனைவரும் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்ப விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் அரசு உரிய ஆவணங்களின்றி நாட்டினுள் நுழைபவர்களை கைது செய்வதை வழக்கமாக வைத்திருந்தாலும், கடந்த அக்டோபர் முதல் பாகிஸ்தானின் கைது நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் இருந்து உரிய ஆவணங்களின்றி உள்ளே நுழைந்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 
இது குறித்து கராச்சியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரக அதிகாரி கூறியதாவது: இந்த கைது நடவடிக்கைகள் தொடர்பாக பாகிஸ்தான் அரசுடனும், உள்ளூர் காவல்  துறை அதிகாரிகளுடனும் தொடர்ந்து பேசி வருகிறேன். ஆப்கானிஸ்தான் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 139 பெண்கள் மற்றும் 165 குழந்தைகள் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் என பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் தரப்பில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 


 



Read in source website

உலகின் வெப்பமான நாடாக அறியப்படும் குவைத்தில் அண்மையில் பெய்த கனமழை பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பல நாடுகளிலும் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டவண்ணம் இருக்கின்றன. பருவநிலை பிறழ்வுகளை கணிக்க முடியாமல் விஞ்ஞானிகள் தவித்துவரும் நிலையில் உலக நாடுகள் கார்பன் வெளியீட்டு அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. 

இந்நிலையில் உலகின் வெப்பமான நாடாக அறியப்படும் குவைத்தில் சமீபத்தில் கனமழை பெய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக குவைத் நாடானது அதீத வெப்பத்துடன் காணப்படும். அந்நாட்டில் அதிகபட்சமாக 55 டிகிரி செல்சியஸ் வரை கூட வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டில் கனமழையுடன் சேர்த்து பனிப்பொழிவும் ஏற்பட்டு வருவது காலநிலை விஞ்ஞானிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. குவைத் நாட்டில் இதுவரை பனிப்பொழிவு ஏற்படாத நிலையில் தற்போது ஆலங்கட்டி மழையுடன் கூடிய பனிப்பொழிவு பெய்து வருவது விடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 

காலநிலை மாற்றம் குவைத் நாட்டின்  பருவநிலையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது விஞ்ஞானிகளை கவலை கொள்ளச் செய்துள்ளது.



Read in source website


குளிர் என்றால் அது ஊட்டியிலோ கொடைக்கானலிலோ இருக்கிறது என்று சொல்லும் சென்னை மக்களே இந்த ஆண்டு குளிரில் நடுங்கிக் கொண்டிருக்க, குளிர் என்றால் பனி மழை பெய்யும் நாடுகளில் எல்லாம் சொல்லவா வேண்டும்?

நியூ யார்க் நகரில் இந்த ஆண்டு வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு குறைந்து எதிர்பாராத பனி மழை மற்றும் பனிக்காற்று, சூறாவளி என மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது.

இந்தநிலையில்தான் செவ்வாய்க்கிழமை இரவு கனடா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாக பாய்ந்தோடி விழுந்து கொண்டிருந்த நயாகரா நீர்வீழ்ச்சி நின்று போனது. ஆம்.. நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி அப்படியே உறைந்துபோய் நின்றுவிட்டது.

சுமார் 170 அடிக்கு கொட்டிக் கொண்டிருந்த தண்ணீர் சிறு பிள்ளைகள் விளையாடும் அட்டாக் சொன்னால் அப்படியே நின்றுவிடும் விளையாட்டைப் போல நின்று விட்டது. சில இடங்களில் நிற்க முடியாமல் பனிக்கட்டிகள் விழுந்து கொண்டிருக்கின்றன.

இந்த புகைப்படங்களும் விடியோக்களும் ஆன்லைனில் அதிவேகமாகப் பரவி வருகிறது. வழக்கமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் உள்புறம் மற்றும் வெளிப்பகுதிகளில் பனிப்படலமாக மாறுவது வழக்கம். ஆனால் இதுவரை ஒட்டுமொத்தமாக உறைபனியாகிவிட்டது அரிதுதான். இதற்கு முன்பு, 1848ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த நயாகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் உறைந்து போனதாக ஆவணங்களில் தகவல்கள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நயாகரா எனும் மாபெரும் அருவி

நயாகரா என்பது ஒரு ஆற்றின் பெயர்! ஆற்றின் பெயரே அருவிக்கும் வழங்கப்படுகிறது. இந்த ஆறு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சென்று வடக்காகத் திரும்பி ஓடிக் கொண்டிருக்கிறது!

இதன் மேற்குக் கரையில் கனடா உள்ளது. கிழக்குக் கரையில் அமெரிக்கா உள்ளது. கனடாவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் எல்லையாக நயாகரா உள்ளது! 

உலகில் வேறு எங்கும் இத்தகைய பேரெழிலைக் காண முடியாது என்று அமெரிக்கர்கள் பெருமிதம் கொள்ளும் நயாக்ரா நீர்வீழ்ச்சி, உறைபனி காரணமாக பகுதியாக உறைந்துபோயிருக்கிறது. 

இந்த பிரம்மாண்டமான அருவியின் பேரழகைக் காண்பதெற்கென்றே கோடான கோடி மக்கள் ஆண்டுதோறும் இங்கு வந்து குவிகிறார்கள்! 

உச்சியில் இருந்து கீழே விழும் அருவியின் உயரம் 170அடி. அது அப்படியே பூமியைத் துளைத்து இன்னுமோர் 170அடி ஆழத்திற்கு ஊடுருவிச் சென்று விடும். இந்த அருவி பாதி ஆகாய அருவியாகவும், பாதி பாதாள அருவியாகவும் இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

ஈரி, ஹ்யூரன், மிச்சிகன், சுபீரியர் என்னும் நான்கு மாபெரும் ஏரிகளிலிருந்து இந்தத் தண்ணீர் வந்து ஆறாய் ஓடி அருவியாய் கொட்டுகிறது. மீண்டும் ஆறாகப் பெருக்கெடுத்து கனடாவில் உள்ள ஒன்டாரியோ என்ற ஏரியில் சேர்கிறது. மீண்டும் அங்கிருந்து செயின்ட் லாரன்ஸ் என்ற பெயரோடு ஆறாகி இறுதியில் அட்லாண்டிக் பெருங்கடலில் கடலோடு கடலாய்க் கலந்து விடுகிறது.

அரை வட்ட வடிவமாகத் தோன்றும் லாடப் பாறையில் கொட்டும் அருவியும் அரைவட்ட வடிவமாகவே காணப்படுகிறது. நெடிதுயர்ந்த பாறைகளால் வளைந்த சுவர் போல சூழப்பட்டு குகை போல் இந்த இடம் உள்ளது. இதைத்தான் "பனிமூட்டப்பாவை' என்று அழைக்கிறார்கள். 

பயங்கரமான இந்தப் பனிப்பாவைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெருங்கி மக்களை அழைத்துச் சென்று சுற்றுலாப் பயணிகள் காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

கனடாவின் கரையிலிருக்கும் உயரமான கட்டடம் ஒன்றிலிருந்து பல்வேறு வண்ணங்களில் ஒளியுமிழும் மின் விளக்குகளை அமைத்து அருவியின் மேல் விழும்படியாக ஒளிக்கதிர்களை வீசுகிறார்கள். அருவியின் தண்ணீர் தகடுகளை அந்த ஒளிக்கதிர்களால் அசையும் வண்ணப் பட்டுச் சேலைகளாய் மாற்றி விடுகிறார்கள். அமெரிக்கர்கள் தங்கள் பக்கத்திலிருக்கும் அருவிக்கு மணப்பெண்ணின் முகத்திரை என்று பெயரிட்டுள்ளனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் இந்த அருவி கனடாவில் இருக்கும் ஒன்டாரியோ என்ற ஏரியில்தான் விழுந்து கொண்டிருந்ததாம். பின்னர் பாறைகளை அறுத்துப் பின்னடைந்து வந்து தற்போது உள்ள இடத்தில் விழுகிறது என்று புவியியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.


நன்றி kcaescon230 டிவிட்டர்பக்கம்
 

 



Read in source website

 

ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலைக்குச் செல்லவும், சிறுமிகள் கல்வி பயிலவும் தலிபான் அரசு தடைவித்துள்ளதை அடுத்து ஆப்கானிஸ்தானில் சில உதவித் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ஐ.நா கூறியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் பெண்களும் சிறுமிகளும் கல்வி பயில தலிபான்கள் தடை விதித்திருப்பதற்கு உறுப்பு நாடுகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஆப்கானில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் அனைத்திலும் சரிசமமான பங்களிப்பு வழங்கப்பட வேண்டும். பெண்கள் பயில பள்ளிகளை தலிபான் அரசு திறக்க வேண்டும். அவர்களின் கொள்கையை தீவிர மறுபரிசீலனை செய்ய வேண்டும். தற்போது அவர்கள் எடுத்திருக்கும் கொள்கை முடிவு மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரத்தையும் அழிக்கும் செயலாகும்.

அத்துடன் அரசுசாரா அமைப்புகளில், சர்வதேச நிறுவனங்களில் அந்நாட்டு பெண் உதவிப் பணிபுரியவும் தலிபான் அரசு சனிக்கிழமை தடை விதித்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த வாரம் பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து. மார்ச் மாதம் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வது நிறுத்தப்பட்டது. இது அந்நாட்டில் மனித உரிமையின் மீது விளைவுகளை ஏற்படுத்தும். அந்நாட்டு மக்கள் பிற நாட்டு அமைப்புகளின் உதவி, சுகாதார உதவிகளைப் பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும்.

தலிபான் அரசின் இந்த நடவடிக்கைகள் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கும், சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் முரணானது என்று இந்தியா உள்பட பல தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தது

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் முக்கியத்துவம் வாய்ந்த சில உதவித் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஐ.நா கூறியுள்ளது. 

மனிதாபிமான உதவிகள் லட்சக்கணக்கான ஆப்கானியர்களை சென்றடைந்துள்ள நான்கு முக்கிய திட்டங்கள், பெண் பணியாளர்கள் இல்லாமல் தங்கள் திட்டங்களை இயக்க முடியாததால், அந்த திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஐ.நா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது.

ஆப்கானிஸ்தானில் சில "முக்கியத்துவம் வாய்ந்த" சில திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவதாகவும், பெண்கள் உதவிப் பணியாளர்களுக்கு தலிபான் தலைமையிலான நிர்வாகம் தடை விதித்துள்ளதால், பல திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டியிருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை புதன்கிழமை தெரிவித்தது.

இந்நிலையில், ஐ.நா சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைச்செயலாளர் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ், ஐ.நா. நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல உதவிக் குழுக்களின் கூட்டு அறிக்கையில், பெண்கள் "உதவிப் பணிபுரியதில் பங்கேற்பது பேச்சுவார்த்தைக்குட்பட்டது அல்ல, அது தொடர வேண்டும்" என்றும், ஆப்கான் அதிகாரிகள் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

"மனிதாபிமானப் பணிகளில் இருந்து பெண்களைத் தடை செய்வது அனைத்து ஆப்கானியர்களுக்கும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். ஏற்கனவே, பெண் பணியாளர்கள் பற்றாக்குறையால் சில நேரங்களில் முக்கியமான திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டியிருந்தது."

"ஒரு மனிதாபிமான சமூகமாக இப்போது நாம் எதிர்கொள்ளும் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளை நாங்கள் புறக்கணிக்க முடியாது," என்றும் கூறியுள்ளது. "நாங்கள் உயிர்காக்கும், நேரத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளைத் தொடர முயற்சிப்போம்... ஆனால் பெண் உதவிப் பணியாளர்கள் இல்லாமல் கொள்கை ரீதியான மனிதாபிமான உதவிகளை எங்களால் வழங்க முடியாது என்பதால், பல நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டியிருக்கும்" என்று தெரிவித்துள்ளனர். 

 "எந்தவொரு நாடும் அதன் மக்கள்தொகையில் பாதியை சமூகத்திற்கு பங்களிப்பதில் இருந்து விலக்க முடியாது" என்று அகதிகள் மற்றும் மனித உரிமைகளுக்கான ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், "பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் சுதந்திரமான, கொள்கை ரீதியான, உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதில் உறுதியுடன் இருப்போம் என்று அவர்கள் உறுதியளித்தனர்".

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கடைசியாக ஆட்சியில் இருந்தபோது அவர்கள் பெரும்பாலும் பெண் கல்வியைத் தடை செய்தனர். ஆனால் அவர்களின் கொள்கைகள் மாறிவிட்டதாகக் கூறினர். தலிபான் தலைமையிலான நிர்வாகம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

தங்களது கச்சா எண்ணெய்க்கு அதிகபட்ச விலை வரம்பு நிா்ணயித்துள்ள நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய ரஷியா தடை விதித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் பிறப்பித்துள்ள ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விலை வரம்பு நிா்ணயிக்கும் யாருக்கும் ரஷியாவின் கச்சா எண்ணெய் மற்றும் அது சாா்ந்த பொருள்கள் விற்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 1-ஆம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.

அதிபா் புதின் விரும்பினால், இந்தத் தடையிலிருந்து சில நாடுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது நெருங்கிய அண்டை நாடான உக்ரைன், தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. அவ்வாறு நேட்டோவில் உக்ரைன் இணைவது தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

இந்தச் சூழலில், உக்ரைனின் தற்போதைய அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான அரசு, நேட்டோவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தது.

அதனைத் தொடா்ந்து உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

எனினும், மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் சில பகுதிகளை ரஷியப் படையினரிடமிருந்து உக்ரைன் மீட்டது.

அதற்குப் பதிலடியாக, உக்ரைனின் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பொதுமக்களுக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் மீது ரஷியா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கோடிக்கணக்கான உக்ரைன் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தச் சூழலில், உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டின் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 60 டாலா் என விலை வரம்பு நிா்ணயிக்க ஐரோப்பிய யூனியன், ஜி-7 உறுப்பு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா இந்த மாதத் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டன.

அதன்படி, ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலையை பேரலுக்கு 60 டாலா் என்பதை அதிகபட்ச வரம்பாக நிா்ணயிக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கிய ஜி-7 அமைப்பு ஒப்புக்கொண்டது. அந்த அமைப்பின் குறிப்பிடப்படாத உறுப்பினரான ஐரோப்பிய யூனியனும் இந்த விலை நிா்ணயத்தை ஏற்றுக்கொண்டது. இதற்கான உடன்படிக்கையில் ஆஸ்திரேலியாவும் இணைந்துகொண்டது.

அந்த விலை வரம்பு நிா்ணயமும், அதற்கு முன்னதாகவே ரஷிய கச்சா எண்ணெயை கடல்வழியாக ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் விதித்த தடையும் கடந்த 5-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன.

இதனை ஏற்க முடியாது என்று அப்போதே ரஷியா திட்டவட்டமாக கூறியிருந்தது.

இந்த நிலையில், தங்களது எரிசக்தி தேவைக்கு பெரும்பான ஐரோப்பிய நாடுகள் ரஷிய கச்சா எண்ணெயை பெரிதும் நம்பியுள்ள சூழலில், விலை வரம்பு நிா்ணயித்துள்ள அந்த நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி முழுமையாக தடை செய்யப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Read in source website

சென்னை: தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் ஆண்டுக்கு ரூ.94 மட்டும் செலுத்தி, தென்னை வளர்ச்சி வாரியத்தின் காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம் என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து துறை செயலர் சி.சமயமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க, மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்தால் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தென்னை மரம் ஏறும்போது விபத்து ஏற்பட்டு, 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பு அல்லது நிரந்தரமாக முழு உடல் ஊனம் அடைந்தால், அவர்களது வாரிசுக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. நிரந்தர பகுதி உடல் ஊனம் அடைந்தால் ரூ.2.50 லட்சம், மருத்துவ செலவுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம், தற்காலிக முழு ஊனத்துக்கு ரூ.18 ஆயிரம், உதவியாளர் செலவுக்கு ரூ.3 ஆயிரம், ஆம்புலன்ஸ் செலவுக்கு ரூ.3 ஆயிரம், இறுதிச் சடங்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டத்தில் காப்பீடு செய்ய ஆண்டு காப்பீடு தொகையாக ரூ.375 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் தங்களது பங்குத்தொகையாக 25 சதவீதம் அதாவது ஆண்டுக்கு ரூ.94 மட்டும் செலுத்தினால் போதும். எஞ்சிய 75 சதவீதம் அதாவது ரூ.281-ஐ தென்னை வளர்ச்சி வாரியமே செலுத்தும். இத்திட்டத்தில் பயனடைய விருப்பம் உள்ளவர்கள், தென்னை வளர்ச்சி வாரிய இணையதளத்தில் (http://www.coconutboard.gov.in) உள்ள விண்ணப்பத்தில், பெயர், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களுடன், பகுதிவட்டார வேளாண்மை அலுவலரின் சான்றிதழ் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தென்னை வளர்ச்சி வாரியத்தின் சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்னை சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டத்தின் கீழ், புதிய பகுதியில் தென்னங்கன்றுகள் நடுவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கான மானியத் தொகை 2 தவணையாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். தென்னை நாற்றங்கால் பண்ணை அமைக்க 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் சான்று பெற்று ‘இயக்குநர், தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம். எண்.47/ எஃப்-1, டாக்டர் ராமசாமி சாலை, சிவன் பூங்கா அருகில்,கே.கே.நகர், சென்னை-8’ என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.



Read in source website

புதுடெல்லி: தொழில்செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு,தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் ‘ஜான் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) - 2022’ என்ற புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளது.

சுற்றுச்சூழல், வேளாண்மை,உணவு, அஞ்சல் சேவை, ரயில்வே, தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் சில சட்டங்களின் கீழ் சிறிய அளவிலான குற்றங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில், தொழில் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு, சிறு குற்றங்களுக்கான சிறை தண்டனையை நீக்கவும், சிறை தண்டனைக்குப் பதிலாக அபராதத் தொகையை உயர்த்தவும் முடிவுசெய்துள்ளது. இது தொடர்பான மசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இம்மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய வனச் சட்டம் 1972-ன் கீழ், வனப் பகுதியில் அத்துமீறி நுழைதல், கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு சிறை தண்டனையும் ரூ.500 அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தச் சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனையை நீக்க புதிய மசோதாவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் படி, விதிமுறைகளை மீறி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கழிவுகளை வெளியேற்றினால் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் குற்றத்துக்கான சிறை தண்டனை நீக்கவும்அபராதத் தொகையை உயர்த்தவும்புதிய மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக 42 விதிகளில் சிறை தண்டனையை நீக்கபரிந்துரைக்கப்பட்டுள்ளது. குற்றத்தின் தீவிரத்தைப் பொருத்து அபராதம் விதிக்கப்படும் என்றும் அபராதத் தொகையை முடிவு செய்வதற்கு அலுவலர் நியமிக்கப்படுவர் என்றும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கூறுகையில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த சிறு குற்றங்களுக்கு விதிக்கப்படும் சிறை தண்டனையால், மக்கள் தொழில் தொடங்க தயக்கம் காட்டுகின்றனர். இதனால், தொழில் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் சிறு குற்றங்களுக்கான சிறை தண்டனையை நீக்கி, அபராதத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொழில் தொடங்குதல் மேலும் எளிமையாகும்” என்று தெரிவித்துள்ளது.



Read in source website

மெல்போர்ன்: 17 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.

மெல்போர்ன் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா அணியை 2-வது இன்னிங்ஸிலும் சொற்பமாக 204 ரன்களில் சுருட்டி ஆஸ்திரேலியா 182 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்று 3 டெஸ்ட்கள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் இன்னும் ஒரு டெஸ்ட் மீதமுள்ளது. இந்த வெற்றி ஆஸ்திரேலிய மண்ணில் 2005-06ல் நடந்த டெஸ்ட் தொடரில் பெற்ற வெற்றிக்குப் பிறகு 17 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவை தங்கள் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய வரலாற்றுத் தருணமாகும்.

தொடர்ச்சியாக 3 டெஸ்ட் தொடர்களை ஆஸ்திரேலிய மண்ணில் தென் ஆப்பிரிக்கா வென்றிருந்தது, ஆனால் அவையெல்லாம் வேறு அணி இப்போது இருக்கும் தென் ஆப்பிரிக்க அணி மாற்றத்தில் இருக்கும் அணியாகும் எனவே 4வது தொடர் வெற்றி சாத்தியமில்லாமல் போனது.

சிட்னியில் அடுத்த டெஸ்ட் நடைபெறுகிறது, இதில் வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வாய்ப்பில் தென் ஆப்பிரிக்கா இருக்கும். இல்லை உதை என்றால் வெளியேறி விடும் என்றே தெரிகிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரே ஆறுதல் 8 டெஸ்ட் இன்னிங்ஸ்களாக 200 ரன்களுக்கும் கீழ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஒரு தரக்குறைவான சாதனைக்கு இந்த இன்னிங்ஸில் 204 ரன்கள் எடுத்து முற்றுப்புள்ளி வைத்தது. தெம்பா பவுமா (65 ரன்கள்) மட்டுமே அரைசதம் கடந்தார். இந்தத் தொடரில் ஓரளவுக்கு சீரான முறையில் ஆடும் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் கைல் வெரைனா 40 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து 63 ரன்களைச் சேர்த்ததுதான் ஒரே அரைசதக் கூட்டணியாகும்.

உலகின் தலைசிறந்த ஆஃப் ஸ்பின்னர் நேதன் லயன், 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற. ஸ்காட் போலண்ட் 2 விக்கெட், ஆனால் பாட் கமின்ஸ் பந்து வீச்சை சிறப்பானது என குறிப்பிட்டே ஆக வேண்டும். 16 ஓவர்கள் வீசி 8 மெய்டன்கள் வெறும் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். இவரது கேப்டன்சி அட்டகாசமாக இருந்தது. அதுவும் சாரல் எர்வி, மார்க்கோ யான்செனுக்கு டி.ஆர்.எஸ். கோரியது உண்மையில் அபாரமானதாகும். கடைசியில் ஸ்டீவ் ஸ்மித் லுங்கி இங்கிடியை பவுல்டு செய்தது வெற்றிக்கான தருணமாக அமைந்தது.

தென் ஆப்பிரிக்க வீரர்கள் சாதாரண பவுலிங்கில் ஆட்டமிழந்தனர், 2 ரன் அவுட்கள் அவர்களது சிங்கிள் எடுக்கும் முடிவை கேள்விக்குட்படுத்துகிறது. மேலும் ஷாட் தேர்வில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சோடைபோயினர். உதாரணமாக அலட்சியமாக ஆடி அவுட் ஆவதற்கு டீன் எல்கரின் அவுட்டை குறிப்பிடலாம் இந்த தொடரில் 2வது முறையாக அவர் நேற்று லெக் திசையில் செல்லும் பந்தை தொட்டு அவுட் ஆனார். இப்படித்தான் மற்றவர்களும் சுலபமாக ஒர்க் அவுட் செய்யப்பட்டு ஆஸ்திரேலிய பவுலர்களால் காலி செய்யப்பட்டனர்.

உத்தி, மனநிலை என்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு அணியை மறுகட்டுமானம் செய்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. 3ம் நிலையில் இறங்கும் வீரர் எப்போதும் வலுவான வீரராக இருக்க வேண்டும் எந்த அணியிலுமே 3ம் நிலை வீரர் வலுவாக இருப்பது அவசியம். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் வான் டெர் டுசன் மற்றும் இந்த டெஸ்ட்டில் ஆடிய டி ப்ருய்ன் ஆகியோருக்கு உத்தி என்பது சுத்தமாகவே இல்லை. கன்னாபின்னாவென்று பந்துகளை டி ப்ருய்ன் எட்ஜ் செய்தார். எத்தனைப் பந்துகள்தான் ஸ்லிப்பில் பீல்டருக்கு முன்னால் விழும்? ஒரு எட்ஜ் ஸ்மித் கையில் போய் உட்கார்ந்தது.

யான்சென் முதல் இன்னிங்ஸில் அரைசதம் எடுத்தார். ஆனால் 2வது இன்னிங்சில் எல்.பி.ஆகி வெளியேறினார், பாட் கமின்ஸின் ரிவியூ ஸ்பாட் ஆன். ஜோண்டோ, ட்ராவிஸ் ஹெட்டின் அற்புதமான நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். அதே போல் கேஷவ் மகராஜ் கமின்ஸ் பந்தை அடித்து விட்டு 3வது ரன்னுக்காக ஓடும் போது ரன் அவுட் ஆனார். 69வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா 204 ஆல் அவுட். டேவிட் வார்னர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தோல்விக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா கேப்டன் சரியான புரிதலை வெளிப்படுத்தினார். ஒன்று தன் அணி வீரர்களின் அனுபவமின்மையைக் குறிப்பிட்ட அவர் கடந்த சில ஆண்டுகளாக நல்ல பேட்டர்கள் சிலரை இழந்து விட்டோம் என்று கூறும்போது நமக்கே வேதனையாகத்தான் இருந்தது. இந்தத் தொடரில் இதுவரை தென் ஆப்பிரிக்கா 40 விக்கெட்டுகளை இழந்துள்ளது, ஆஸ்திரேலியா 22 விக்கெட்டுகளை இழந்துள்ளது.



Read in source website

பாரத் ஜோடோ யாத்திரை மூலம் காங்கிரஸ் மீண்டும் கட்சியை புதுப்பித்துக் கொள்ளும் இவ்வேளையில் காங்கிரஸின் வரலாறு குறித்து பார்க்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் (INC), டிசம்பர் 28 அன்று அதன் 138ஆவது நிறுவன நாளைக் கொண்டாடியது.

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, புதுடெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் கட்சித் தொண்டர்களிடம் உரையாற்றினார்.
அப்போது, “தலித்கள், ஏழைகளின் பிரச்னைகளை உடைக்க காங்கிரஸ் துணிச்சலை எடுத்ததால் இன்று இந்தியா முன்னேறியுள்ளது. அனைவரையும் அழைத்துச் செல்லும் கொள்கையை இது காட்டுகிறது,” என்றார்.

மேலும், பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கட்சியின் சமூக ஊடக கணக்குகளில் இருந்து வாழ்த்து செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர், அதன் வரலாற்றின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கட்சியின் பங்கு மற்றும் சுதந்திர இந்தியாவில் பங்கு பற்றிய காணொலிகளும் உள்னன.

டிசம்பர் 28, 1885 இல், இந்திய தேசிய காங்கிரஸ் எவ்வாறு உருவானது, பிளவுகள் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் அது எவ்வாறு அதன் தற்போதைய நிலைக்கு வந்தது என்பதைப் பார்ப்போம்.

காங்கிரஸ் எப்படி உருவானது

ஆங்கில அதிகாரத்துவ அதிகாரியான ஆலன் ஆக்டேவியன் ஹியூம் அல்லது ஏஓ ஹியூம் இந்த அமைப்பின் நிறுவனராகக் கருதப்படுகிறார்.
டிசம்பர் 28, 1885 அன்று, மும்பையில் உள்ள கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரியில் இந்திய தேசிய காங்கிரஸின் முதல் அமர்வுக்கு 72 சமூக சீர்திருத்தவாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கூடியிருந்தனர்.

அந்த நேரத்தில், இந்தக் குழுவின் நோக்கம், நடந்துகொண்டிருக்கும் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் கோருவது அல்ல, மாறாக இந்தியர்களுக்கு ஆதரவாக பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்துவதாகும்.
நோக்கம் பெரும்பாலும் “பாதுகாப்பை” வழங்குவதாக விவரிக்கப்படுகிறது, இதன் மூலம் இந்தியர்கள் தங்கள் குறைகளையும் விரக்தியையும் வெளிப்படுத்த முடியும்.

தொடர்ந்து, சமூக மற்றும் அரசியல் என அனைத்து வழிகளிலும் படிப்படியாக மீளுருவாக்கம் செய்யப்பட்டது. மூன்றாவது, இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பும் ஆகும்.
தொடர்ந்து, வெடர்பர்ன் பின்னர் தலைவர் கோபாலகிருஷ்ண கோகலேவை மேற்கோள் காட்டுகிறார், “எந்த ஒரு இந்தியனும் இந்திய தேசிய காங்கிரஸைத் தொடங்கியிருக்க முடியாது.

காங்கிரஸின் நிறுவனர் ஒரு சிறந்த ஆங்கிலேயராகவும், புகழ்பெற்ற முன்னாள் அதிகாரியாகவும் இல்லாமல் இருந்திருந்தால், அரசியல் கிளர்ச்சியின் மீது அதிகாரபூர்வ அவநம்பிக்கை இருந்தது. இயக்கத்தை ஒடுக்க அதிகாரிகள் உடனடியாக ஏதாவது வழியைக் கண்டுபிடித்திருக்க வேண்டும்” என்றார்.

சுதந்திரத்திற்கான கோரிக்கையை நோக்கி மாற்றம்

அடுத்த சில ஆண்டுகளில், இந்தியர்களுக்கு அனுமதிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் குறித்த காலனித்துவ நிர்வாகிகளின் அணுகுமுறைகள் மற்றும் கொள்கைகளை மாற்றும் வகையில் கட்சியின் பணி தொடர்ந்தது.
இருப்பினும், ஹியூமும் கட்சியும், தங்களுக்கு சாதகமாக இருக்கும் அமைப்புகளை மாற்ற முயன்றதற்காக ஆங்கிலேயர்களாலும், சில இந்தியர்களாலும் ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க முடிவுகளை அடையவில்லை என்பதற்காகவும் விமர்சிக்கப்பட்டனர்.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஹியூம் இந்தியாவை விட்டு வெளியேறினார்.

கட்சியில் பெரும்பாலும் படித்த, வெளிநாட்டில் படித்த மேல்தட்டு மக்கள் இருந்தனர். ஆனால் காலப்போக்கில், இந்த அமைப்பு மாகாண அமைப்புகளை அமைக்கத் தொடங்கியதால், இந்த குழுவானது மிகவும் மாறுபட்டது.
1895 இல் அதன் பதினொன்றாவது அமர்வில், பிரதிநிதிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டில் 1,163 இல் இருந்து 1,584 ஆக அதிகரித்தது.
ஜனாதிபதி சுரேந்திரநாத் பானர்ஜி, “பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மக்கள்தொகையின் சிதறிய கூறுகளை” ஒன்றிணைத்ததற்காக காங்கிரஸை வாழ்த்தினார்.

வங்காளப் பஞ்சம் மற்றும் இந்தியாவிலிருந்து செல்வம் வெளியேறுதல் போன்ற பிரிட்டிஷ் காலனித்துவ பிரச்சினைகளை உறுப்பினர்கள் அடிக்கடி எதிர்த்தனர். எவ்வாறாயினும், இந்த எதிர்ப்புக்கள் பொதுவாக பிரார்த்தனைகள் மற்றும் அதிகாரிகளுக்கு கடிதங்கள் எழுதுவது உட்பட மனுக்களுக்கு மட்டுமே. ஆங்கிலேயர் ஆட்சி தொடர்ந்ததால், கட்சியின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பதில் வேறுபாடுகள் அதிகரித்தன.

பிளவுகள் மற்றும் மீண்டும் கூடுகிறது

இந்திய சமூகத்தின் பரந்த பிரிவினரை ஈர்க்க உதவியது, கட்சியின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று, வெவ்வேறு கருத்தியல் நிலைகளை வகித்த உறுப்பினர்களைக் கொண்டது.
1906ல் சூரத்தில், கோபால கிருஷ்ண கோகலே மற்றும் சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையிலான ‘மிதவாதிகள்’ மற்றும் பாலகங்காதர திலகர் தலைமையிலான ‘தீவிரவாதிகள்’ இடையே பிளவு ஏற்பட்டு, பிளவு ஏற்பட்டது.
திலகர் மற்றும் லாலா லஜபதி ராய் ஆகியோர் ஒரு வருடத்திற்கு முன்னர் வங்காளப் பிரிவினைக்கு எதிராக வேல்ஸ் இளவரசரின் வருகையை காங்கிரஸ் புறக்கணிக்க வேண்டும் என்று விரும்பினாலும், மிதவாதிகள் அத்தகைய நடவடிக்கையை எதிர்த்தனர்.

ஆனால் 1915 வாக்கில், பம்பாய் அமர்வு இந்த இரண்டு குழுக்களும் மீண்டும் ஒன்றாக இருப்பதைக் கண்டது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகும், பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கீழ் தொடர்ந்து பொதுத் தேர்தல்களில் கட்சி முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பின்னரும், பிளவுகள் மற்றும் இறுதியில் ஒருங்கிணைவு முறை தொடர்ந்து நீடித்தது.

1960களின் பிற்பகுதியில், பிரதமர் இந்திரா காந்தியின் கீழ் அதிகாரப் போட்டி நிலவியது. மூத்த தலைவர் மொரார்ஜி தேசாய் போலல்லாமல், காந்தி சோசலிசத்தின் பக்கம் வலுவாக சாய்ந்ததால், அரசாங்கம் பின்பற்ற வேண்டிய பொருளாதாரக் கொள்கைகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த நேரத்தில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல்கள் ஒரு வகையான பினாமி போராக மாறியது, இரு பிரிவினரும் தங்கள் வேட்பாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர்,
காந்தியின் வேட்பாளர் வி.வி.கிரி வெற்றிபெற்றார். காங்கிரஸ் தலைவர் எஸ் நிஜலிங்கப்பா பிரதமரை காங்கிரஸில் இருந்து வெளியேற்றினார், மேலும் கட்சி அதிகாரப்பூர்வமாக இந்திரா தலைமையிலான காங்கிரஸ் (ஆர்) மற்றும் காங்கிரஸ் (ஓ) என பிரிந்தது, அது பின்னர் ஜனதா கட்சியுடன் இணைந்தது.

இந்த நேரத்தில் காந்தி கூறினார், “காங்கிரஸில் பிளவுக்குப் பிறகு, நான் சிறுபான்மை அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தேன். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்திருந்தால் நாம் மிக மோசமாகத் தோற்கடிக்கப்பட்டிருப்போம். ஆனால் எதிர்க்கட்சிகள் மிகவும் உதவியாக இருந்தன. எங்களை விட்டு பிரிந்தவர்கள் மட்டுமே எங்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். பின்னர் 1971 தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

இது உள் சண்டைகளின் கடைசி அல்ல, இன்றுவரை, கோஷ்டிவாதம் மற்றும் கட்சியின் சித்தாந்த வேறுபாடுகள் பெரும்பாலும் பல விஷயங்களில் பகிரங்கமாகி வருகின்றன.
பாரத் ஜோடோ யாத்ரா மூலம் இந்திய அரசியலில் அதன் வரலாற்று நிலைப்பாட்டை புத்துயிர் பெறுவதற்காக கட்சி மீண்டும் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குகையில், அது எவ்வாறு தன்னை ஒன்றிணைக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.



Read in source website

 நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்த சில புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக இருக்கின்றன. வங்கியில் வாங்கிய கடனை திருப்பி அடைக்காதவர்கள், வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்பால் திவாலாகி சொத்து, சுகம் அனைத்தையும் இழந்தவர்கள் என்றால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், எல்லா வசதிகளுடன் இருந்தும் பல கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்று திருப்பி செலுத்தாத மோசடியாளர்களை என்னவென்று சொல்ல?
 வங்கிக் கடன்களை திருப்பி அடைக்காத கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நிதியமைச்சகம் தாக்கல் செய்த புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்று வசதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் செய்தி. விஜய் மல்லையாவும், நீரவ் மோடியும், மெஹுல் சோக்ஷியும் மட்டுமல்ல; அவர்களைப் போன்ற வங்கிக் கடன் மோசடியாளர்கள் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
 திட்டமிட்டு வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி அடைக்காத 50-க்கும் மேற்பட்ட மோசடியாளர்களிடமிருந்து வங்கிகளுக்குக் கிடைக்க வேண்டிய பணம் ரூ. 92,570 கோடி. கீதாஞ்சலி ஜெம்ஸ் என்கிற வைர வியாபார நிறுவனத்தின் உரிமையாளர் மெஹுல் சோக்ஷி, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு திருப்பித் தர வேண்டிய கடன் நிலுவை மட்டும் ரூ.7,848 கோடி.
 ரூ.25 லட்சத்துக்கும் அதிகமாக பொதுத்துறை வங்கிகளிலிருந்து கடன் வாங்கி திருப்பி அடைக்காதவர்களின் எண்ணிக்கை 2017-இல் 8,045-ஆக இருந்தது. அது இப்போது 12,439-ஆக அதிகரித்திருக்கிறது. தனியார் வங்கிகளிலும் இதுபோல கடன் வாங்கி ஏமாற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தப் பட்டியலில் 2,447 பேர் காணப்படுகிறார்கள். போதுமான அசையா சொத்துகள் ஈடாகப் பெறாமல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்கியதன் விளைவுதான் இந்த வாராக்கடன்கள் என்கிற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை.
 வாராக்கடன் அதிகரித்து வருவது பல வங்கிகளை மிகப் பெரிய நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் முன்னணி வங்கிகள் ரூ.11.18 லட்சம் கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்திருக்கின்றன. ரிசர்வ் வங்கி அளித்த அறிக்கையின் அடிப்படையில் இதை மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதில் பொதுத்துறை வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் ரூ.8.16 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிதள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
 வங்கிகளின் வரவு - செலவு புத்தகத்தில் நீண்டகாலமாக ஆஸ்தியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்வதால் அவற்றை திரும்பப் பெறும் முயற்சிகள் கைவிடப்பட்டன என்று அர்த்தமில்லை என்பது வங்கிகளின் வாதம். வாராக்கடனை தொடர்ந்து இருப்பாகக் காட்டிவரும்போது, வங்கிகளின் ஆஸ்தி அளவு போலித்தனமான அதிகரிப்பைக் காட்டுகிறது. அவற்றை அகற்றி வைப்பதன் மூலம் மட்டுமே உண்மையான நிதி நிலைமையைத் தெரிந்துகொள்ள முடியும் என்பது வங்கி நிர்வாகத்தின் வாதம்.
 வரவு - செலவு கணக்குப் புத்தகம் முறைப்படுத்தப்படுவது, அதன் மூலம் எதார்த்த நிலைமையைத் தெரிந்துகொள்வது என்பவற்றில் தவறில்லை. ஆனால், ரிசர்வ் வங்கியும், வங்கிகளும் குறிப்பிடுவதுபோல, நீண்டநாள் வாராக்கடனை மீட்டெடுக்கும் முயற்சி, தள்ளுபடி செய்யப்படுவதுடன் கைவிடப்படுகிறது என்பதுதான் உண்மை. கடந்த ஐந்தாண்டுகளில் மீட்டெடுக்கப்பட்ட வாராக்கடன் தொகை வெறும் 13% மட்டுமே.
 வாராக்கடன் தள்ளுபடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2004 முதல் 2014 வரை ரூ.2.11 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் ரூ. 2 லட்சம் கோடி அளவில் தள்ளுபடி செய்து வரவு - செலவு கணக்குகளை முறைப்படுத்தும் வழக்கம் கடந்த ஆண்டு வரை தொடர்ந்தது.
 இதே காலகட்டத்தில், கடன் வாங்கி மோசடி செய்த 515 வழக்குகளில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைகளில் ரூ.45,000 கோடிக்கும் அதிகமான சொத்துகள் முடக்கப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து வங்கிகள் முனைப்பு காட்டுவதில்லை என்பது தெரிகிறது.
 உலக அளவில் வங்கி மோசடிகளும், வாராக்கடன்களும் புதிதல்ல. அமெரிக்காவின் லேமென் பிரதர்ஸ் வங்கி மோசடி போன்ற நிகழ்வுகள் இல்லாமல் இல்லை. ஆனால், இந்தியாவைப் போல மோசடியாளர்களும், வங்கி உயரதிகாரிகளும் திட்டமிட்டு நடத்தும் வாராக்கடன் மோசடிகள் ஏனைய வளர்ச்சி பெற்ற நாடுகளில் நடந்தால் கடுமையான தண்டனைக்கு உள்ளாகிறார்கள். அங்கே கண்காணிப்பு அமைப்புகள் ஊழல் இல்லாமல் நேர்மையாகச் செயல்படுகின்றன. இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் யாருக்கும் சொந்தமில்லாதவை என்கிற எண்ணம் காணப்படுவதால் மோசடிகள் திட்டமிட்டு நடைபெறுகின்றன.
 வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்வது, "பேட் பேங்க்' உருவாக்கி அதற்கு மாற்றுவது உள்ளிட்ட முயற்சிகள் மோசடிகளைக் குறைக்க உதவாது. முறையாகத் தவணை செலுத்தும் தொழில் நிறுவனங்கள், தவணை தவற நேர்ந்தால் அந்த நிறுவனங்களை இழப்பிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும், திட்டமிட்டு மோசடி செய்பவர்களை அடையாளம் கண்டு இரக்கமின்றித் தண்டிப்பதுமே வாராக்கடன்கள் குறைவதற்கான வழிகள். இவை அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தெரியாதவையா என்ன?
 



Read in source website

 நடந்து முடிந்த இந்திய - வங்கதேச கிரிக்கெட் தொடர் பல்வேறு படிப்பினைகளை நமது இந்தியக் கிரிக்கெட் அணிக்கு அளித்துச் சென்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபது ஒவர் உலகக் கிரிக்கெட் கோப்பைக்கான போட்டித்தொடரின் அரை இறுதியுடன் வெளியேறிய இந்திய அணி, அதைத்தொடர்ந்து நியூசிலாந்து நாட்டுக்குச் சென்றது. அங்கே, தான் விளையாடிய இருபது ஒவர் தொடரில் வெற்றி கண்ட இந்திய அணி, ஐம்பது ஓவர் ஒரு நாள் போட்டித் தொடரில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
 அதனை அடுத்து வங்கதேசத்திற்குச் சென்ற இந்திய அணி, ஒருநாள் போட்டித் தொடரில் தோற்று, ஐந்து நாள் டெஸ்ட் போட்டித்தொடரின் இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளது.
 நீண்ட காலமாகவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற இயலாத போக்கு தொடர்வதுடன், இரு நாடுகளுக்கிடையேயான போட்டிகளிலும் இந்திய அணியின் செயல்பாடு நிலையற்றதாகவே இருக்கின்றது.
 குறிப்பாகச் சொல்வதென்றால், ஒருநாள் போட்டிகள், ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றின் தரவரிசையில் நம்மை விடக் குறைந்த நிலையில் இருக்கின்ற வங்கதேச அணியை, நமது அணி எதிர்கொண்ட விதம் நமது அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவே அமைந்துவிட்டது.
 ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா நான்காவது இடத்திலும், வங்கதேசம் ஏழாவது இடத்திலும் இருக்கின்றன. ஆயினும், நமது அணி வங்கதேசத்திடம் ஒன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் தோல்வியைச் சந்தித்தது.
 அடுத்து நடந்த டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றபோதும், அவ்வெற்றியைப் பெறுவதற்கு மிகவும் போராட வேண்டியிருந்தது என்பதே உண்மை.
 விராட் கோலி இந்திய அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், டெஸ்ட், ஒரு நாள், இருபது ஓவர் ஆகிய மூன்று விதமான போட்டிகளுக்கும் ரோகித் சர்மாவே தலைமை வகிப்பார் என்று கூறப்பட்டது.
 ஆனால், ரோகித் சர்மாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்படும்போதும், முக்கியமான மூத்த வீரர்களுக்கு அவ்வப்பொழுது ஓய்வு அளிப்பது என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டபோதும் கே.எல். ராகுல், ஹர்தீக் பாண்டியா, ஷிகார் தவான் உள்ளிட்ட வீரர்களுக்குத் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது.
 மேலும் சில வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது என்ற திட்டமும் அவ்வப்போது நடைமுறைபடுத்தப்பட்டது.
 இவ்விதம் ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை கையாளப் பட்டதால் அணியின் செயல்திட்டங்களில் இலக்கில்லாதது போன்ற ஒரு தோற்றம் இருந்ததாக முன்னாள் வீரர்கள் விமரிசனம் செய்யும் நிலைமை ஏற்பட்டது. மேலும், ஒரு தொடருக்கான ஒட்டுமொத்த அணியினைத் தேர்வு செய்வதிலும், அவ்வணியிலிருந்து குறிப்பிட்ட ஒவ்வொரு போட்டிக்கான பதினொரு வீரர்களைத் தேர்வு செய்வதிலும் தெளிவற்ற நிலைமையே நீடித்து வந்தது.
 அப்படியே பதினொரு வீரர்களைக் கொண்ட இறுதி அணியினைத் தேர்வு செய்து விட்டாலும், ஆட்டத்தின் அந்தந்த நேர நிலவரத்திற்குத் தக்கபடி எந்த பேட்டரைக் களம் இறக்குவது, எந்த பந்து வீச்சாளரிடம் பந்தைக் கொடுப்பது ஆகிய அனைத்திலும் குழப்பங்கள் நீடிக்கவே செய்தன.
 இத்தகைய தெளிவற்ற தன்மை, குழப்பங்கள் ஆகியவற்றுக்கு உதாரணமாகவே வங்கதேசத்துடனான சமீபத்திய டெஸ்ட் தொடர் அமைந்து விட்டது.
 குறிப்பாக, முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் மிகக் குறைவான ரன்களுக்கு "ஆல் ஆவுட்' ஆனபோது உடனடியாக அவ்வணியையே தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையடுமாறு (ஃபாலோ ஆன்) சொல்லியிருந்தால் நமது அணியின் வெற்றி சுலபமாக இருந்திருக்கும்.
 ஆனால் அவ்வாறு செய்யாமல், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி, வங்கதேச அணிக்கு ஐந்நூற்றுப் பதின்மூன்று ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்து டிக்ளேர் செய்தது நம் அணித்தலைவரின் தற்காப்பு அணுகுமுறையையே வெளிப்படுத்தியது. அதிலும், வங்கதேச அணி முன்னூறு ரன்களைத் தாண்டிய நிலையில் நமது அணியினால் வெற்றி பெற முடியுமா என்ற ஐயம் எழுந்தது உண்மை.
 இதைப் போலவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற நூற்று நாற்பத்தைந்து ரன்களே தேவை என்ற நிலையில், மூத்த வீரராகிய விராட் கோலியை அவருக்குரிய வரிசையில் களம் இறக்காமல் அக்ஸர் படேலை மட்டையடிக்க அனுப்பியதும் விமரிசனத்துக்கு உள்ளானது. தரவரிசையில் நம்மை விடக் குறைந்த நிலையில் உள்ள வங்கதேசம் போன்ற அணிகளுக்கு எதிராக இத்தகைய அணுகுமுறை நமது அணியின் தோல்வி பயத்தைப் பறைசாற்றுவதாக அமைந்து விட்டது என்பதை மறுப்பதற்கில்லை.
 நமது நாட்டுக்காக நீண்ட காலம் விளையாடி பற்பல சாதனைகளைப் புரிந்த மூத்த வீரர் ராகுல் திராவிட், தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கின்றார்.
 அடிக்கடி மாறும் அணித்தலைமை, சுழற்சி முறையில் வீரர்கள் தேர்வு, அவ்வப்போதைய போட்டிகளுக்கான பதினொரு வீரர்களின் தேர்வு, போட்டிச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அணி வீரர்களுக்கு அளிக்கப்படும் பொறுப்பு ஆகிய அனைத்தும் தலைமைப் பயிற்சியாளருடைய ஒப்புதலுடனேதான் நடைபெறுகின்றன.
 இந்நிலையில், அனுபவம் வாய்ந்த முன்னாள் வீரராகிய ராகுல் திராவிட், நமது இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு மேலும் தெளிவாகவும் உறுதியாகவும் வழிகாட்டி, சர்வதேச அரங்கில் நமது அணி மேன்மேலும் வெற்றிகளைக் குவிக்க உதவிட வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
 ஒரு வீரராக இந்திய அணிக்குப் பற்பல வெற்றிகளைக் கொடுத்த திராவிட், அதன் தலைமைப் பயிற்சியாளராகவும் தம்முடைய மிகச்சிறந்த பங்களிப்பைத் தரவேண்டும்; தருவார் என நம்புவோம்.
 



Read in source website

 மக்களாட்சி என்பது மானுடத்தை மேம்படுத்தும் ஓர் அற்புதமான கருவி. அந்தக் கருவியை எந்த அளவுக்கு மக்கள் புரிந்து கொண்டு பயன்படுத்துகின்றார்களோ அந்த அளவுக்கு சமூகத்திற்கு அது பயன் தரும். அந்தக் கருவியை சரியாகப் பயன்படுத்த மக்களுக்கு அதற்கான சிந்தனையும் பார்வையும் திறனும் வேண்டும். அந்த சிந்தனையுடன் மக்கள் அரசியலிலும், ஆளுகையிலும், நிர்வாகத்திலும் பார்வையாளராக இல்லாமல் பங்காளர்களாக மாற பழகிக்கொள்ள வேண்டும்.
 இவை அனைத்துக்கும் ஒரு தயாரிப்பு வேண்டும். அந்தத் தயாரிப்பு என்பது மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகே நிகழும் நிகழக்கூடியது. இதைக் கூறியவர் அலெக்ஸிஸ் டி தொக்கிவில்லி என்ற பிரான்ஸ் தேசத்து சிந்தனையாளர். அவர் எழுதிய "அமெரிக்க மக்களாட்சி' நூல் மிகவும் புகழ்பெற்றது. அதில் அவர் அமெரிக்கா பற்றி கூறிய கருத்துக்கள் இன்றுவரை சரியானவை என்று உலகம் கருதுகின்றது.
 அது மட்டுமல்ல, அந்நூல் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் மக்களாட்சி பற்றிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அது அவரின் படைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். அந்த நூலை எழுதுவதற்கு முன்னர், பத்துமாத காலம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்; இருநூறுக்கும் மேற்பட்ட ஆளுமைகளையும் சாதாரண மனிதர்களையும் சந்தித்தார்; மக்களாட்சி பற்றி அமெரிக்க மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை அறிந்தார். இவற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகம்தான் "அமெரிக்க மக்களாட்சி'.
 அலெக்ஸிஸ் டி தொக்கிவில்லி ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய நூல்தான் இது. இந்த நூலின் சிறப்பு, இது அமெரிக்க மக்களாட்சி ஆரம்ப நிலையில் இருந்தபோது எழுதப்பட்டது என்பதுதான். அந்த தொடக்கநிலை மக்களாட்சி எதிர்காலத்தில் என்னவாகக்கூடும் என்பதை கணித்து எழுதியது மட்டுமல்ல, மக்களாட்சியைக் கட்டமைக்க ஆசைப்பட்டு முயல்கின்ற சமூகங்களுக்கு மக்களாட்சி முறையை எப்படி உருவாக்கினால் அது நீடித்து நிலைத்த தன்மையைப் பெறும் என்பதையும் விளக்கியுள்ளதுதான் இதன் தனிச்சிறப்பு.
 ஒரு நாட்டில் மக்களாட்சி எப்படிக் கட்டமைக்கப்படுகிறது, அது எந்த அடித்தளத்தில் நிற்கிறது, அதற்காக செய்ய வேண்டியவை யாவை என்பனவற்றை இந்தப் புத்தகத்தில் விளக்கியிருப்பதால்தான் இந்தப் புத்தகம் இன்றளவும் அனைவராலும் மீண்டும் மீண்டும் படிக்கப்படுகிறது. அமெரிக்க மக்களாட்சி சிறிது காலத்திற்குக்கூட நீடித்து நிற்காது என்று அறிஞர்கள் பலர் கூறியபோது, அமெரிக்க மக்களாட்சி நிலைத்த தன்மையைப் பெற்றுவிடும் என்று அடித்துக் கூறியவர் அலெக்ஸிஸ் டி தொக்கிவில்லி.
 இந்தியா சுதந்திரம் அடைந்து மக்களாட்சியை கைக்கொண்டபோது அறிஞர்கள் பலரும், இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்கப்போவதுமில்லை, மக்களாட்சியில் செயல்படப்போவதுமில்லை என்று கூறினார்கள். ஆனால், ஏ.எல். பாஷாம் ஒருவர்தான் "வியப்பு: அதுதான் இந்தியா' என்ற தனது நூலில், இந்தியா எக்காலத்தும் பிளவுபடாது என்று கூறி அதற்கான காரணத்தையும் கூறினார்.
 அதுபோலவேதான் அமெரிக்க மக்களாட்சி நீடிப்பதற்கான ஐந்து அடிப்படையான காரணிகளை அலெக்ஸிஸ் டி தொக்கிவில்லி முன்வைத்தார். அமெரிக்காவில் மக்களாட்சி வேண்டும் எனச் செயல்பட்டுக் கொண்டுள்ள மக்கள் அனைவரும் அந்த விழுமியங்களைப் பாதுகாக்கப் பாடுபடுகின்றனர் என்பதை அவர் எடுத்துக்காட்டி விளக்கினார். அந்த ஐந்து விழுமியங்களான, விடுதலை, சமத்துவம், தனியுரிமை, குடிப் பொதுமைச் செயல்பாடுகள், அரசின் கட்டுப்பாடற்ற வணிகம் ஆகியவை மக்களின் உயிரோடு, உணர்வோடு ஒன்றியுள்ளன என்பதை விவரித்தார். இவைதான் அமெரிக்க மக்களாட்சியின் தூண்கள் என விளக்கினார்.
 பொதுமக்கள் குடிமக்களாக நின்று மக்களாட்சியின் விழுமியங்களில் ஒன்றான சமத்துவத்தை, மக்களாட்சி வேண்டுமென்போர் மத்தியில் புகுத்தி, அதற்காக அவர்களைப் போராட வைத்ததுதான் அந்த நாட்டின் சிறப்பு என்று அவர் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல, அந்நாட்டுக் குடிமக்கள் குடிமைச் சமூக அமைப்புக்களை உருவாக்கி அவற்றின் மூலம் மக்களாட்சியை பாதுகாப்பது எப்படி என்பதை விவரித்துள்ளது பல சமூகங்களுக்கு வழிகாட்டும் செயல்பாடாகும் என்றும்பதிவு செய்துள்ளார்.
 அரசியல் என்பது படித்தவர்களுக்கானது மட்டுமல்ல கல்வியில் அடித்தளத்தில் உள்ளவர்களையும் பெருமளவில் வசீகரிக்கக்கூடியது, கவரக்கூடியது என்று அவர் தன் புத்தகத்தில் பதிவு செய்திருந்தது இன்றுவரை உலகம் முழுவதும் உண்மையாகவே இருக்கின்றது. இவற்றைத் தாண்டி ஊழலுக்கு உதவிடும் இடமாக இருப்பதும் இந்த அரசுகள்தான் என்பதையும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார். மக்களாட்சியில் பொதுமக்கள் குடிமக்கள் சிந்தனையோடு செயல்பட்டாவிட்டால், செல்வந்தர்கள் கூடி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் அரசைக் கொண்டு வந்து விடுவார்கள் என்று கூறிய தீர்க்கதரிசனமான கருத்து வியக்கத்தக்கது.
 மக்களாட்சியில் உருவாகும் ஒரு சட்டமோ, திட்டமோ எதுவானாலும் அது மிக அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு நலன்களை விளைவிக்க வேண்டும். அரசாங்கத்தை கவனிக்க பொதுமக்கள் குடிமைச் சமூக அமைப்புக்களை உருவாக்கி செயல்படவில்லையானால் குறைந்த எண்ணிக்கை கொண்ட ஒரு குறிப்பிட்ட குழுவிடம் அதிகாரமும், பொருளும் சென்று சேர்ந்துவிடும். அது மக்களாட்சிக்கு ஆபத்தை விளைவிக்கும்.
 மக்களாட்சியில் கொண்டு வரும் திட்டம் ஒவ்வொன்றும் ஒட்டு மொத்த சமூகத்தை மேம்படுத்தக்கூடியதாக இருக்கின்றதா அல்லது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு பயணிக்கக்கூடியதாக இருக்கின்றதா என்பதை சீர்தூக்கிப்பார்த்துக் கொண்டே வரவேண்டும். அதற்கான பார்வையை மக்கள் மத்தியில் வளர்த்தெடுக்க வேண்டும். எவ்வளவு மோசமானவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் அதிகாரம் பற்றி புரிந்தவர்களாக இருந்தால் எந்த நிலையிலும் தங்களுக்கு பாதகம் வராத வகையில் பார்த்துக் கொள்வார்கள்.
 எந்த ஆட்சியும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் நன்மை செய்வதில்லை, மாறாக அதிக மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்களை செய்ய முயற்சி செய்யும். மக்கள் விழிப்புடன் செயல்பட்டால் மட்டுமே அரசு மக்கள் மீது கரிசனம் கொண்டு செயல்படும் என்பதை கோடிட்டு காட்டிவிட்டார், தன் புத்தகத்தில் அலெக்ஸிஸ் டி தொக்கிவில்லி. ஒரு நாட்டில் மக்களுக்கு நாட்டுப்பற்று என்பது மிக முக்கியமானது. அமெரிக்க மக்களின் நாட்டுப்பற்றில் தனிச் சிறப்பு உள்ளது என்பதையும் அவர் விளக்கத் தவறவில்லை. பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வந்தவர்கள், தங்கள் கலாசாரத்தை விட்டுவிட்டு அமெரிக்க மண்ணுக்கான கலாசாரத்தைக் கட்டியெழுப்பினார்கள் என்று குறிப்பிடுகிறார் அவர்.
 பொதுச்சிந்தனை நம் நலனுக்கு மேல் பெரிதானது, அதில்தான் நம் நலனும் அடங்கியுள்ளது என்பது புரிந்து நாட்டின் மேம்பாட்டுச் சிந்தனையை மக்களிடம் வளர்த்துச் செயல்பட்டது ஒரு தனிச்சிறப்பு. இதிலும்கூட நாட்டின் மேல் பற்றுக் கொண்ட மக்கள் தங்களின் தலைவர்கள்மேல் பற்றுக் கொள்ளவில்லை என்பது மகத்தான சிறப்பு. இவை எல்லாவற்றுக்கும் மேலாக அந்த நாடு மக்களுக்கு உரிமைகளாகத் தந்தவற்றை மக்கள் எப்படிப் பார்த்தார்கள் என்பதை விளக்கும்போது, 'எல்லா உரிமைகளும், மக்களுக்கான பொறுப்புக்கள் அதை முறையாக பயன்படுத்தும் தன்மையை வளர்த்துச் செயல்பட்டது என்பதுதான் அமெரிக்க மக்களாட்சியின் தனிச்சிறப்பு' என்று குறிப்பிடுகிறார்.
 நாட்டு மக்களுக்கு ஒரு சிந்தனை நிலவுகின்றது, அது மகத்தான விளைவினை உருவாக்கும் என்று விவரித்தார். அதாவது மக்களுக்கு ஒரு மனோபாவம் இருக்கிறது. அது நாடு வளம் பெறுவதை தாங்கள் வளம் பெறுவதாக எண்ணி மகிழ்வது. அந்த எண்ணம் மக்களாட்சிக்கு வலுச் சேர்ப்பதாகும். ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கு உதவாத மூட நம்பிக்கையை தகர்ப்பது, பழைய மத, கலாசார பழமைவாதங்களை முடக்குவது, புதுமைகளைப் புகுத்துவது, அறிவியலை கடைப்பிடிக்கச் செய்வது அத்தனையும் அரசுக்கு சவாலான பணிகள். ஆனால் அமெரிக்காவில் அவை மிக எளிதில் நடந்தேறின.
 அந்த நாட்டில் குடிமக்களின் பொறுப்புக்களும், உரிமைகளும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து செயல்பட்டதால்தான் செயல்தன்மை மிக்க மக்களாட்சியை கட்டமைக்க முடிநத்து என்று விளக்கியுள்ளார். ஒரு மனிதன் பெரிய மனிதனாவதற்கு உயர்ந்த வாழ்க்கை விழுமியங்களைப் பின்பற்ற வேண்டும். அதேபோல் எந்த ஒரு நாடும் உயர்ந்த லட்சியங்களை நோக்கிச் செயல்படாமல் உயர முடியாது என்பதை அமெரிக்க மக்களாட்சி காட்டுகிறது என்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.
 ஆகையால்தான் அந்த நாட்டின் ஒவ்வொரு உரிமையும் ஒழுக்கத்தின் கூறாக பொதுமக்களால் பார்க்கப்படுகிறது. சட்டத்தை மதிக்கும் மனோபாவத்தை மக்கள் மத்தியில் வளர்த்து வருவதும், தனிமனிதர்கள் சட்டத்தினை மீறாமல் பார்த்துக் கொள்வதும் அமெரிக்க மக்களாட்சியை வலுவாக்குகிறது என்று விளக்கினார். இவை அனைத்தும் அமெரிக்க மக்களாட்சி ஆரம்ப நிலையில் இருந்தபோது, அதை ஆய்வு செய்து எழுதிய புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவை.
 மக்களாட்சிக்கான அடிப்படைக் கூறுகளை ஆய்வு செய்தபோது இதன் பின்னணியில் நின்று இயக்கியவர் யார் என்பதையும் கவனித்து எழுதத் தவறவில்லை. அமெரிக்காவில் படித்த கிறித்துவ இளைஞர்கள்தான் இந்தக் கட்டமைப்பை உறுதி செய்ய பின்புலமாக நின்று இயக்கியுள்ளனர். இவற்றை வைத்துக்கொண்டு இந்திய மக்களாட்சியை ஆராய்ந்து பார்த்தால் நாம் எங்கு இருக்கிறோம் என்பதை எளிதாக கண்டுபிடித்து விடமுடியும்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).
 



Read in source website

கேரளத்திலிருந்து ஆபத்தான மருத்துவக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் கொட்டப்படும் விவகாரம் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் நீண்டுகொண்டேயிருக்கிறது. இதை எதிர்த்து தமிழகத்தின் எல்லை மாவட்ட மக்கள் போராட்டங்களில் இறங்கினாலும்கூட, அதற்கெல்லாம் செவிசாய்க்காமல் கேரள அரசும் அங்குள்ள உள்ளாட்சி அமைப்புகளும் அதை உதாசீனப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இப்பிரச்சினையை அதிகம் எதிர்கொள்பவை நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள்தாம். ஆள் நடமாட்டம் அற்ற தமிழக நிலப்பகுதி, வனப்பகுதிகளில் கேரள வாகனங்கள் கழிவுகளைக் கொட்டிச் செல்வதும், கழிவுகளை ஏற்றிவந்த வாகனங்களைப் பொதுமக்கள் பிடித்துவைப்பதும் தமிழக எல்லை மாவட்டங்களில் வாடிக்கையாகிவிட்டது. தென் மண்டலத்தில் கழிவுகளை ஏற்றிவரும் வாகனங்களைக் கண்காணிப்பதற்காகச் சிறப்புப் படையை அமைத்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். தமிழக எல்லையில் ஆபத்தான கழிவுகளைக் கொட்ட வேண்டாம் என்று கேரள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடுமாறு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கேரள மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குக் கடிதமும் எழுதியுள்ளது.



Read in source website

நரேந்திர மோடியின் காலத்தில், இந்திய அரசியல் பாஜகவை மையம் கொண்டதாக மாறியிருக்கிறது. பாஜகவின் நகர்வுகள்தான் எதிர்க்கட்சிகளின் திசையைத் தீர்மானிக்கின்றன. இந்தச் சூழலில், 2022இல் கவனம்பெற்ற பாஜகவின் செயல்பாடுகள், எதிர்க்கட்சிகளின் வியூகங்கள் போன்றவற்றிலிருந்து சில முக்கிய அம்சங்களை கவனிக்கலாம்.

எதிர்பார்த்ததுபோலவே கோவா, உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்களில் நான்கில் வெற்றிபெற்று பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் அக்கட்சியின் வாக்குவங்கி அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் அதன் பலம் கூடியது. கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக, மாநிலங்களவையில் 100 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் கட்சி எனும் அந்தஸ்து அக்கட்சிக்குக் கிடைத்தது.



Read in source website

சர்வதேசப் பல்கலைக்கழகங்களின் தரவாிசையில் ஹார்வர்டு பல்கலைக்கழகம், மாஸசூஸெட்ஸ் தொழில்நுட்பக் கழகம், கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உள்ளிட்டவையே கடந்த பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து முதல் 10 இடங்களைப் பிடித்துவருகின்றன.

இந்தியாவைச் சேர்ந்த ஐஐடி, ஜேஎன்யு, ஜாமியா மில்லியா, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகியவை உலகத் தரவரிசையில் இடம்பெற்றுள்ளன. பெங்களூருவின் இந்திய அறிவியல் நிறுவனம், முதல் 300 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. எனினும், இந்தியாவின் 1,100 பல்கலைக்கழகங்களில் ஒன்றுகூட முதல் 100 இடங்களுக்குள் வரவில்லை. இந்தச் சூழலில், பிரதமர் தொடங்கி கல்வி அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் பல்கலைக்கழகங்களின் தரம், செயல்பாடுகள் பற்றி வெவ்வேறு விதங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.



Read in source website