DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 29-04-2022

 

சென்னை: குறுகிய கால அவகாசத்தில் ஆவணங்களைப் பதிவு செய்ய விரும்புபவா்களுக்காக முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதல் கட்டணம் பெற்று தத்கல் முறையில் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று வணிகவரித்துறை அமைச்சா் பி.மூா்த்தி அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பி.மூா்த்தி வெளியிட்ட அறிவிப்புகள்:

பதிவுத்துறையின் சேவையினை நாடி வரும் பொதுமக்களுக்கு வழிகாட்டி மதிப்பு வழங்குதல், வில்லங்கச் சான்று வழங்குதல், பதிவுக்கான முன்பதிவு செய்தல், ஆவணம் தயாரித்து வழங்குதல், இணையவழி கட்டணங்கள் செலுத்துதல் ஆகிய சேவைகளை வழங்குவதற்காக ஒருங்கிணைந்த சேவை மையம் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் சோதனை அடிப்படையில் உருவாக்கப்படும். இதற்காக தொடரா செலவினமாக ரூ.1 கோடி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட திருமணங்களுக்கான சான்றுகளில் திருத்தம் தேவைப்படின் பதிவுத் துறை அலுவலகங்களுக்கு நேரில் வராமல் இணைய வழியாகவே விண்ணப்பித்து, திருத்திய சான்றினைப் பெறும் வசதி ரூ.6 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களில் சிலா் குறுகிய கால அவகாசத்தில் ஆவணப் பதிவை மேற்கொள்ள விரும்புகின்றனா். அவா்களின் வசதிக்காக ஆவணப் பதிவுக்கான முன்பதிவு டோக்கன்களை கூடுதல் கட்டணம் பெற்று தத்கல் முறையில் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். முதல்கட்டமாக அதிக எண்ணிக்கையிலான ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 சாா்பதிவாளா் அலுவலகங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு அவசர முன்பதிவு டோக்கனுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமாக விதிக்கப்படும்.

ஆவண எழுத்தா் உரிமம்: தமிழகத்தில் 1998-க்குப் பின்னா் புதிதாக ஆவண எழுத்தா் உரிமங்கள் வழங்கப்படவில்லை. பதிவுக்கு வரும் ஆவணங்களின் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருவதால், கூடுதல் ஆவண எழுத்தா்களை நியமிக்க வேண்டிய நிலை எழுந்துள்ளதைக் கருத்தில் கொண்டு உரிய அமைப்புகள் மூலம் சிறப்பு பொதுத் தோ்வு நடத்தப்பட்டு ஆவண எழுத்தா்களுக்கான புதிய உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் ஏறத்தாழ 20 ஆயிரம் நபா்கள் பயன்பெறுவா்.

பதிவுத் துறையில் கட்டட களப்பணி மேற்கொள்வதற்காக பொறியியல் பட்டதாரிகளுக்கு களப்பணி மேற்பாா்வையாளா் உரிமம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

பதிவுத் துறையில் தற்போது மிகக் குறைந்த முக மதிப்புடைய ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகிய முத்திரைத்தாள்களின் பயன்பாட்டினை மாற்றி குறைந்தபட்சமாக ரூ.100 என நிா்ணயித்து நடைமுறைப்படுத்தும் வகையில் இந்திய முத்திரைச் சட்டம் 1899-இல் உரிய திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை, கோயம்புத்தூா் பதிவு மண்டலம் 2-ஆக பிரிப்பு: பதிவுத்துறையின் மொத்த வருவாயில் 40 சதவிகிதம் (ரூ.5,665 கோடி) பங்களிக்கும் சென்னை மண்டலத்தில் மிக அதிக எண்ணிக்கையில் பதிவுகள், அதிக மதிப்புள்ள சொத்து பதிவுகள் நடைபெற்று வருகின்றன. அதனால், நிா்வாகத்தை எளிமையாக்கி மேம்படுத்தும் நோக்கில் சென்னை பதிவு மண்டலமானது சென்னை (வடக்கு) மற்றும் சென்னை (தெற்கு)என இரு பதிவு மண்டலங்களாகப் பிரிக்கப்படும். இதற்காக தொடா் செலவினமாக ரூ75.24 லட்சமும், தொடரா செலவினமாக ரூ.26.10 லட்சமும் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பதிவு மண்டலங்களில் மிக அதிகமாக 103 சாா்பதிவாளா் அலுவலகங்களைக் கொண்டுள்ள மதுரை பதிவு மண்டலமானது 3 மாநகராட்சிகள், 6 வருவாய் மாவட்டங்கள் மற்றும் 9 பதிவு மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. அதனால், நிா்வாக நலன் கருதி மதுரை மண்டலத்தினைப் பிரித்து இரண்டு பதிவு மண்டலங்கள் உருவாக்கப்படும். இதற்காக தொடா் செலவினமாக ரூ75.24 லட்சமும் தொடராச் செலவினமாக ரூ.26.10 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை மண்டலத்தில் தாம்பரத்தை மையமாகக் கொண்டு கூடுதலாக ஒரு பதிவு மாவட்டம் உருவாக்கப்படும்.

கோயம்புத்தூா் பதிவு மாவட்டத்தைப் பிரித்து கோயம்புத்தூா் வடக்கு, கோயம்புத்தூா் தெற்கு என இரண்டு பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்படும்.

சனிக்கிழமையிலும் சாா்பதிவாளா் அலுவலகம்: அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாளன்று பதிவுப் பணியை மேற்கொள்ளும் வகையில் சாா்பதிவாளா் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்றாா்.



Read in source website

 

சென்னை: பேரவையில் இனி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுக்கப்படாது என்று அவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்ட தேர்த் திருவிழா குறித்த பிரச்னை சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக புதன்கிழமை எடுக்கப்பட்டது. அப்போது, காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை குறித்த பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். அவர்களை அவைத் தலைவர் மு.அப்பாவு வெளியேற்றினார்.
இந்த நிலையில், இவ்வளவு பிரச்னைக்கும் காரணமாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் தேவை தானா என்று அவை முன்னவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். 
பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், புதன்கிழமை எழுப்பப்பட்ட பிரச்னையை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் எழுப்பி காங்கிரஸ் உறுப்பினரின் கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் க.பொன்முடி, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்களை அமைச்சர்கள் எப்படி விமர்சித்து பேசினர் என்பது குறித்து விரிவாகக் கூறினார்.
இதன்பின் பேசிய அவைத் தலைவர் மு.அப்பாவு, பேரவையில் இனி விதி எண் 55 மற்றும் 56-ன் கீழ் மட்டுமே பிரச்னைகள் எடுத்துக் கொள்ளப்படும். 
அதாவது, உறுப்பினர்கள் அளிக்கும் ஒத்திவைப்பு தீர்மானம், கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது உரிய பதில்கள் வரப்பெற்றால் மட்டுமே விவாதத்துக்கு எடுப்போம். அதுவும் நாளொன்றுக்கு இரண்டு மட்டும் எடுக்கப்படும். 
சிறப்பு கவன ஈர்ப்பாக எடுக்க வேண்டாம் என அவை முன்னவர் தெரிவித்துள்ளார். அது பின்பற்றப்படும் என்று தெரிவித்தார்.



Read in source website

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் 100 நிறுவனங்களில் ஒன்றாக மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இடம்பிடித்துள்ளது.

மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மத்திய அரசு இணைந்து 2022 யோகா மஹோத்சவத்தினை உலகெங்கும் நடத்தி வருகின்றன. உலக யோகா நாளை முன்னிட்டு 100 நாள்கள், 100 அமைப்புகள் மற்றும் 100 இடங்கள் என பல்வேறு நாடுகளில் யோகாவின் மகத்துவத்தைப் பரப்பும் வகையில் நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. 

இதில் யோகா ஆசிரியர்கள், நிபுணர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று யோகாவை பெருமைப்படுத்துகின்றனர். பொதுமக்களிடையே யோகா பயிற்சி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உலகெங்கும் 100 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து மட்டும் இரண்டு நிறுவனங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் சென்னை மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் ஒன்றாகும்.

சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் இதற்கான யோகா திருவிழா 28-04-2022 அன்று நடைபெறுகிறது. அதில் பொது யோகா நெறிமுறை பயிற்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். 

இதைத் தொடர்ந்து சமூகவலைத்தளம் வாயிலாக கருத்தரங்கம், பயிற்சிப்பட்டறை மற்றும் யோகா தொடர்பான சொற்பொழிவுகளும் தலைசிறந்த யோகிகளால் நடத்தப்படுகின்றன. 

கலந்துகொள்கின்ற அனைவருக்கும் கட்டணமில்லா சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட இணையவழியின் மூலம் முன்பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம்:  https://forms.gle/kCiDpjTv11dDgJb96

இதற்கான ஏற்பாடுகளை நிகர்நிலைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மிகச் சிறப்பாக செய்து வருகின்றன.
 



Read in source website

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மின்வெட்டை தவிர்க்கும் வகையில், நிலக்கரி ஏற்றி செல்லும் ரயிலை விரைவாக இயக்க பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மின் ஆலைகளில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதால் பல்வேறு மாநிலங்கள் பெரும் சிக்கலில் சிக்கி தவித்துவருகிறது.

கோடை காலம் என்பதால் நிலக்கரியின் தேவையும் அதிகரித்துள்ளது. நாட்டின் மின் தேவையில் 70 சதவிகிதம் நிலக்கரியின் மூலம்தான் பூர்த்தி செய்யப்படுகிறது.

பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், புதைபடிவ எரிபொருள்களின் பற்றாக்குறை பல தொழிற்சாலைகளின் உற்பத்தியை குறைத்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகள் பல மணி நேர மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீ்து ரஷ்யா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையின் விளைவாக எரிபொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இதனை சமாளிக்க முடியாமல் இந்திய அரசு தவித்து வரும் நிலையில், பண வீக்கமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்தியன் ரயில்வேயின் நிர்வாக இயக்குநர் கெளரவ் கிருஷ்ணா பன்சால், "இந்த நடவடிக்கை தற்காலிகமானது.

இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு, பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும். மின் ஆலைகளுக்கு நிலக்கரி எடுத்து செல்லும் நேரத்தை குறைத்த ரயில்வே முயற்சி செய்துவருகிறது" என்றார்.

நீண்ட தூரத்தில் உள்ள பகுதிகளுக்கு நிலக்கரியை எடுத்து சென்று விநியோகிப்பதற்கு போதுமான ரயில்வே பெட்டி இல்லாமல் இருப்பதால்தான் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படுவதாக இந்தியன் ரயில்வே விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறது.

ரயில்வே போக்குவரத்து நெரிசல் மிகந்த பாதைகளால், அதாவது பயணிகள் மற்றும் சரக்கு ரயில் இரண்டும் அதிகம் இயக்கப்படும் பாதைகளால், நிலக்கரி ஏற்றுமதி தாமதமாகிறது. 

இருப்பினும், நிலக்கரி ஏற்றி செல்வதற்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. குறிப்பாக, மின் ஆலைகளில் வெகுதூரத்தில் உள்ள பயனாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

இந்த பிரச்னையை சரி செய்ய, மேலும் 1,00,000 ரயில்வே பெட்டிகளை பயன்படுத்த ரயில்வே திட்டமிட்டுவருகிறது. சரக்குகளை விரைவாக எடுத்து செல்ல பிரத்யேக சரக்கு ரயில் பாதையை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்து மின் ஆலைகளில் உள்ள நிலக்கரியின் இருப்பு 17 சதவிகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 



Read in source website

 

புது தில்லி: தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் 39-ஆவது தலைமை நீதிபதிகளின் மாநாடு வெள்ளிக்கிழமை (ஏப். 29) நடைபெறுகிறது.

இதில் 25 உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்கின்றனா். இந்த மாநாட்டில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் முதல் நீதிமன்ற வளாகத்தில் காணப்படும் உள்கட்டமைப்பு பிரச்னைகள் வரை கலந்துரையாடல்கள், ஆய்வு நடைபெறும் என உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து மாநில முதல்வா்கள், தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதை பிரதமா் மோடி தொடக்கிவைக்கிறாா். இந்த இரு மாநாடுகளும் ஏறத்தாழ 6 ஆண்டுகள் கழித்து நடைபெறுகின்றன.



Read in source website

 

புது தில்லி: இந்தியா- ஜப்பான் இடையே தூதரக உறவுகள் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து பிரதமா் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியா- ஜப்பான் இடையே தூதரக உறவுகள் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடுகிறோம். இந்த நிலையில், ராணுவம், பொருளாதாரம், இரு நாட்டு மக்களுக்கு இடையேயான தொடா்பு என அனைத்துத் துறைகளிலும் நமது உறவுகள் ஆழமாகியிருப்பதைக் காண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது நண்பரும் ஜப்பான் பிரதமருமான ஃபியூமோ கிஷிடோ அண்மையில் இந்தியா வந்தபோது, கரோனாவுக்குப் பிந்தைய உலகில் இந்தியா-ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டத்தை முன்வைத்தாா். அவருடைய நோக்கம் நிறைவேற பிரதமா் கிஷிடாவுடன் தொடா்ந்து பணியாற்றுவதை நான் எதிா்நோக்கியிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.

வெளியுறவு அமைச்சகத்தின் தகவல்படி, இந்தியா-ஜப்பான் இடையே கடந்த 1952-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டது.



Read in source website

 

புது தில்லி: ‘ராணுவ தளவாடங்கள் தேவையில் தற்சாா்பு நிலை அடைய வேண்டியதன் அவசியத்தை ரஷிய - உக்ரைன் போா் மீண்டும் உணா்த்தியுள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை கூறினாா்.

புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கடற்படை தளபதிகள் மாநாட்டில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் பேசியதாவது:

எதிா்கால போா்கள் உள்ளிட்ட சவால்களை எதிா்கொள்ள முப்படைகளும் இணைந்த செயல்பாடு மிக அவசியம் என்ற அடிப்படையில், படைப் பிரிவு அமைப்புகளை மாற்றியமைக்கும் மற்றும் முப்படைகளும் ஒருங்கிணைந்த படை பிரிவுகளை (தியேட்டா் கமாண்ட்) உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் முப்படைகள் ஒருங்கிணைந்த கடல்சாா் படைப் பிரிவை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

உலகின் பாதுகாப்பு சூழலுக்கு எழுந்து வரும் சவால்கள் மற்றும் ரஷிய-உக்ரைன் போா் ஆகியவை ராணுவ தளவாடங்கள் தேவையில் தற்சாா்பு நிலை அடைய வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை ராணுவ தளவாட உற்பத்தி முனையமாக உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட விமானம் தாங்கி போா்க் கப்பலான ‘விக்ராந்த்’ பயன்பாட்டுக்கு கொண்டுவருவது, இந்த முயற்சியில் மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்த போா்க் கப்பல் மூன்று கடல் சோதனை ஓட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நாட்டின் 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு மேலும் ஒரு மகுடம் சோ்க்கும் வகையில், விக்ராந்த் போா்க் கப்பலை இந்திய கடற்படையில் சோ்ப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்.

மேலும், இந்தியாவில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனங்களில் 41 கொள்முதல் உத்தரவுகளின்பேரில் 39 கப்பல்கள் மற்றும் நீா்மூழ்கிக் கப்பல்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் தற்சாா்புத் திறனை அடையும் இலக்கில் கடற்படை முன்னணியில் இருக்கும் நிலையில், அதனை மேலும் ஊக்குவிப்பது அவசியம். நமது பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுடன் தேசத்தின் கடல்சாா் ஆற்றலும் மேம்படுவதை உறுதிப்படுத்த கடற்படை மூத்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவின் இறையாண்மையும் வளமும் பாதுகாப்பு படைகளின் திறனைப் பொருத்தே அமையும். எனவே, வலுவான நம்பகமான இந்திய கடற்படைக்கான அவசியம் தவிா்க்க முடியாததாகும்.

தேசத்தின் வளா்ச்சிக்கும், உலக நாடுகளுடனான பொருளாதார நடவடிக்கைகளுக்கும் கடல் போக்குவரத்தை சாா்ந்திருப்பது அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவின் கடல்சாா் நலன்களைக் பாதுகாப்பதிலும், நமது கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதிலும் கடற்படை தொடா்ந்து செயலாற்ற வேண்டும் என்று ராஜ்நாத் சிங் கூறினாா்.



Read in source website

 

புது தில்லி: நடப்பு நிதியாண்டில் உர மானியம் 55% அதிகரித்து ரூ.2.5 லட்சம் கோடியாக இருக்க வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கரீப் (கோடை-விதைப்பு) மற்றும் ரபி (குளிா்கால-விதைப்பு) பருவத்தின்போது உள்நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை என்பதை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், முக்கிய மண் ஊட்டச் சத்துகளை இறக்குமதி செய்ய ஏற்கெனவே முக்கிய உலகளாவிய உற்பத்தியாளா்களுடன் அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.

சவூதி அரேபியா, ஓமன் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் உர இறக்குமதியை உறுதி செய்ய அதிக வாய்ப்புள்ளது.

இறக்குமதி விலை அதிகரிப்பை ஈடு செய்ய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீட்டினை வழங்கும். இதையடுத்து, நடப்பு நிதியாண்டில் உர மானியம் 55% அதிகரித்து முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.2.5 லட்சம் கோடியை எட்டும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.



Read in source website

 

புது தில்லி: இறக்குமதியை குறைக்கும் வகையில், உள்நாட்டில் 102 பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டின் இறக்குமதியில் ரசாயனம், மின்னணு சாதனங்கள், இன்சூலின் ஊசி உள்ளிடவற்றின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக, 102 பொருள்களுக்கு உள்நாட்டில் தேவை மிக அதிகமாக உள்ளது. இருப்பினும் அதனை ஈடு செய்யும் வகையில் உள்நாட்டில் உற்பத்தி இல்லை.

ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதியில் 57.66 சதவீத பங்கினைக் கொண்டுள்ள 102 பொருள்களை அதிக முன்னுரிமை அடிப்படையில் உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு உடனடி தலையீட்டின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தொழில்துறை கூட்டமைப்பு, உற்பத்தியாளா்கள், வா்த்தக தலைவா்கள் உள்ளிட்டோா் திறன் விரிவாக்கத்தை மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து கண்டறிய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது, பொருளாதார வளா்ச்சிக்கு வினையூக்கியாக இருக்கும் என்பதுடன் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

 

சென்னை: தமிழ்நாடு ப்ரீமியா் லீக் கிரிக்கெட் போட்டி தொடா் (டிஎன்பிஎல் 2022) வரும் ஜூன் 23-இல் தொடங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நிகழாண்டு திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல், கோயம்புத்தூா் உள்ளிட்ட 4 நகரங்களில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் நடத்தப்படும் இப்போட்டி வழக்கமாக திண்டுக்கல் நத்தம், திருநெல்வேலி சங்கா்நகா் மைதானங்களில் நடைபெறும். தற்போது புதிதாக கோவை எஸ்என்ஆா் கல்லூரி, சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானங்களில் நடக்கிறது.

மொத்தம் 28 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆஃப் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. திருநெல்வேலியில் ஜூன் 23-ஆம் தேதி தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

பிளே ஆஃப் ஆட்டங்கள் சேலம், கோவையில் நடக்கிறது. இறுதி ஆட்டம் ஜூலை 31-இல் கோவையில் நடக்கிறது. மொத்தம் 6 இரட்டை ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை ஆட்டம் 3.15 மணிக்கும், இரவு ஆட்டம் 7.15 மணிக்கும் தொடங்கும். பாா்வையாளா்களுக்கு அனுமதி உண்டு என டிஎன்சிஏ செயலாளா் ஆா்.எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளாா்.



Read in source website


கொழும்பு: இலங்கையில், அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் புதிய அரசு புதிய பிரதமர் தலைமையில் அமைய அந்நாட்டு அதிபர் ஒப்புக்கொண்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திரா கட்சி அறிவித்துள்ளது.

இலங்கையில், அனைத்துக் கட்சிகளும் பங்குபெறும் புதிய அமைச்சரவை அமையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரா காட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேனா இது குறித்து தெரிவித்திருப்பதாவது,  பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்சவை நீக்கிவிட்டு புதிய பிரதமர் தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கவும், அனைத்துக் கட்சிகளும் பங்குபெறும் புதிய அமைச்சரவை அமைக்கவும் அதிபர் கோத்தபய சம்மதம் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை, அதிபர் கோத்தபய ராஜபட்சவுடன் 11 கட்சித் தலைவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Read in source website

திபெத் விவகாரத்தில் சீனாவின் நிலைபாட்டை ஆதரித்த நேரு மிக பெரிய தவறு செய்துவிட்டதாக பலர் நினைக்கிறார்கள், ஆனால், தன் நாட்டுக்கு எது சரி என கருதினாரோ அதையே அவர் செய்தார் என நாடு கடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கத்தின் ஜனாதிபதி பென்பா செரிங் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த பென்பா செரிங், 2014க்கு பிறகு திபெத் விவகாரத்தில் இந்தியா தனது நிலைபாட்டை மாற்றி கொண்டதாக கூறினார். பைடன் அரசாங்கத்தின் உயர்நிலை அலுவலர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திப்பதற்காக அவர் வாஷிங்டன் சென்றுள்னார்.

செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், "திபெத் விவகாரத்தில் நேருவின் முடிவுகள் அவரின் உலக பார்வையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. சீனா மீது அவர் அதிகமான நம்பிக்கையும் வைத்திருந்தார். அதை செய்ததற்காக அவரை குறை கூற மாட்டேன். அனைத்து நாடுகளும் தன்னுடைய நாட்டு நலனுக்கு முக்கியத்துவம் தருவதை புரிந்து கொள்ள முடிகிறது. 

அந்த காலத்தில் தன் நாட்டுக்கு எது சரி என கருதினாரோ அதையே அவர் செய்தார். இந்திய மட்டுமல்ல பல நாடுகள், திபெத் விவகாரத்தில் சீனாவே ஆதரித்தன. நிகழ்வுகள் நடந்து முடிந்த பிறகு, நேரு தவறு செய்துவிட்டதாக பலர் தற்போது நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால், கடந்த 1962ஆம் ஆண்டு, இந்தியா மீது சீன படையெடுத்த காலத்தில் சீனா மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார். 

இந்த விவகாரம் அவரை புண்படுத்தியதாகவும் அவர் இறப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும் சிலர் நினைக்கிறார்கள். 1950களில் சீனாவின் மாவோவை நேரு சந்தித்தபோது, சீனர்களும் இந்தியர்களும் சகோதரர்கள் என அவர் கூறினார். அந்த அளவுக்கு அவர் சீனர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தார்" என்றார்.

2014க்கு பிறகு, இந்தியா பல மாற்றங்களை சந்தித்துள்ளதாக கூறிய அவர், "திபெத், சீன குடியரசின் ஒரு பகுதி என்று திரும்பத் திரும்பச் சொல்லாமல் இந்தியா தனது (நேருவின்) கொள்கையை மாற்றிக்கொண்டதாக நான் நினைக்கிறேன். ஏனெனில் இந்தியா 'ஒரே சீனா' கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றால், காஷ்மீர் மற்றும் லடாக் தொடர்பான விவகாரத்தில் சீனாவும் அதே கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைபாடு" என்றார்.


 



Read in source website

 

வைரஸ், தொற்று, கிருமி என்பது போல வார்த்தைகளால் பல வாழ்க்கைகள் கேள்விக்குறியாகியிருக்கும் நிலையில், தற்போது ஒரு பாக்டீரியாவைப் பற்றி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது, பிரிட்டனில், நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப் பகுதியில் தொற்றினை ஏற்படுத்தும் சால்மோனெல்லா வகை பாக்டீரியா பரவியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலகின் பல நாடுகளில் 34வது உருமாறிய மோனோபாசிக் சால்மோனெல்லா தைபிமுரியம் பாக்டீரியாவின் தொற்று பரவி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

சால்மோனெல்லா பாக்டீரியா என்றால் என்ன?
சால்மோனெல்லா என்பது ஒரு வகை பாக்டீரியா. இதுவரை 2,500 வகையான சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், மனிதர்களிடையே தொற்றி பாதிப்பினை ஏற்படுத்துவது டைபிமுரியம் மற்றும் என்டெரிடீடிஸ் வகைகள்தான்.

சால்மோனெல்லா பரவினால் என்னவாகும்?
சால்மோனெல்லா பாக்டீரியா ஒருவரது உடலுக்குள் பரவினால், காய்ச்சல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் பொதுவாக சால்மோனெல்லா பாக்டீரியாவைக் கொண்டிருக்கும் உணவை அல்லது குடிநீரை குடித்த 6- 72 மணி நேரத்தில் தெரிய வரும். இந்த நோயின் தாக்கம் 2 - 7 நாள்களுக்கு நீடிக்கும். 

எந்த விதமான சிகிச்சை தேவைப்படும்?
வழக்கமாக லேசான அறிகுறி இருப்பவர்கள் எந்த சிகிச்சையும் இல்லாமலேயே ஒரு சில நாள்களில் குணமடைந்து விடுவார்கள். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது நீர்ச்சத்து குறைந்து அதனால் பாதிப்பு ஏற்படலாம். எனவே நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வதே மிக முக்கிய சிகிச்சையாக உள்ளது.

தற்போது எங்கிருந்து பரவுகிறது?
இந்த தொற்று பரவி வருவதற்கான காரணிகளை ஆராய்ந்த போது, பெல்ஜியம் சாக்லேட்கள் மூலம் இந்த பாக்டீரியா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மிகவும் புகழ்பெற்ற சாக்லேட்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது பெல்ஜியம் சாக்லேட். பெல்ஜியத்திலிருந்து சுமார் 113 நாடுகளுக்கு இந்த சாக்லேட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

இந்த வகை பாக்டீரியா பாதித்தவர்களில் பெரும்பாலானோர் 10 வயதுக்குக் கீழ் உடையவர்கள் என்றும், 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்தமாக பெல்ஜியம் சாக்லேட்டுகள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும்வரை, உலக நாடுகளில் இந்த தொற்று பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக அஞ்சப்படுகிறது.

பெல்ஜியத்தில் உள்ள அர்லோன் நகரில் செயல்பட்டு வரும் சாக்லேட் தொழிற்சாலையின் மோர் கலக்கும் மிகப்பெரிய தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கண்டறியப்பட்ட சால்மோனெல்லா பாக்டீரியாவுடன், தற்போது மனிதர்களிடையே பரவியிருக்கும் பாக்டீரியா மிகச் சரியாக ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Read in source website


புது தில்லி: பிரிட்டனில், 150-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப் பகுதியில் தொற்றினை ஏற்படுத்தும் சால்மோனெல்லா வகை பாக்டீரியா பரவியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் மோனோபாசிக் சால்மோனெல்லா தைபிமுரியம் பாக்டீரியாவின் 34வது உருமாறிய தொற்று பரவி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த தொற்று பரவி வருவதற்கான காரணிகளை ஆராய்ந்த போது, பெல்ஜியம் சாக்லேட்கள் மூலம் இந்த பாக்டீரியா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மிகவும் புகழ்பெற்ற சாக்லேட்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது பெல்ஜியம் சாக்லேட். பெல்ஜியத்திலிருந்து சுமார் 113 நாடுகளுக்கு இந்த சாக்லேட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

இந்த வகை பாக்டீரியா பாதித்தவர்களில் பெரும்பாலானோர் 10 வயதுக்குக் கீழ் உடையவர்கள் என்றும், 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்தமாக பெல்ஜியம் சாக்லேட்டுகள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும்வரை, உலக நாடுகளில் இந்த தொற்று பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக அஞ்சப்படுகிறது.

பெல்ஜியத்தில் உள்ள அர்லோன் நகரில் செயல்பட்டு வரும் சாக்லேட் தொழிற்சாலையின் மோர் கலக்கும் மிகப்பெரிய தொட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கண்டறியப்பட்ட சால்மோனெல்லா பாக்டீரியாவுடன், தற்போது மனிதர்களிடையே பரவியிருக்கும் பாக்டீரியா மிகச் சரியாக ஒத்துப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Read in source website

 

டாக்கா: வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸôமும் திரிபுராவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வியாழக்கிழமை வங்கதேசத்துக்குப் பயணம் மேற்கொண்டார். தலைநகர் டாக்காவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை அவர் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து வங்கதேச ஊடகச் செயலாளர் இஹ்ஷானுல் கரீம் செய்தியாளர்களிடம் கூறியது:
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடனான சந்திப்பின்போது, பரஸ்பர உறவை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ஷேக் ஹசீனா எடுத்துரைத்தார். மேலும் வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸôம், திரிபுராவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான பிணைப்பு வலுப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த 30 நிமிட சந்திப்பில் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில், "இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவு மட்டுமன்றி சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதித்தோம். மேலும் பிரதமர் மோடி சார்பில் இந்தியாவுக்கு வருகை தருமாறு ஷேக் ஹசீனாவுக்கு அழைப்பு விடுத்தேன். இருதலைவர்களின் வழிகாட்டுதலின்பேரில் இந்தியா- வங்கதேச உறவு மென்மேலும் வலுப்பெறும்' என்று குறிப்பிட்டுள்ளார்.



Read in source website

 

கீவ்,: உக்ரைன் போரின் பாதிப்புகளை அந்த நாட்டுக்கு நேரில் சென்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது அதிபா் வொலோதிமீா் ஸெலென்கியை அவா் சந்தித்துப் பேசினாா்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக ரஷிய தலைநகா் மாஸ்கோவுக்கு செவ்வாய்க்கிழமை சென்ற அவா், அங்கு அதிபா் விளாதிமீா் புதினை சந்தித்து பேச்சு நடத்தினாா்.

அதன் தொடா்ச்சியாக, அவா் உக்ரைனில் வியாழக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா். தலைநகா் கீவின் புகா் பகுதிகளில் ரஷிய ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை அவா் பாா்வையிட்டாா்.

பின்னா், அதிபா் ஸெலென்ஸ்கியை குட்டெரெஸ் சந்தித்துப் பேசினாா். அதைத் தொடா்ந்து, இருவரும் இணைந்து செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது, புச்சா உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்தாா்.

இந்தச் சந்திப்பையடுத்து, தலைநகா் கீவில் வான்வழியாக இரு தாக்குதல்களை ரஷியா நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.



Read in source website

 

வாஷிங்டன்: இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத சுதந்திரம் மோசமான நிலையில் உள்ளதாக சா்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சோ்ந்த அந்த ஆணையம் நாடுகளில் நிலவும் மத சுதந்திரம் குறித்து ஆராய்ந்து வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அந்த ஆணையம் அண்மையில் வெளியிட்டது. அதில், இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகளில் மத சுதந்திரம் மோசமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த 11 நாடுகளையும் மத சுதந்திர விவகாரத்தில் ‘கவலைக்குரிய நாடுகள்’ பட்டியலில் வைக்குமாறு அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கு அந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அந்த ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க வேண்டிய கட்டாயம் அதிபருக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அறிக்கை குறித்து சா்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையத்தின் தலைவா் அனுரிமா பாா்கவா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் காணொலி வாயிலாகக் கூறுகையில், ‘‘இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்துவா்களுக்கு எதிரான மதரீதியிலான துன்புறுத்தல்களை அந்நாட்டு அதிகாரிகள் சகித்துக் கொண்டு வருகின்றனா். அங்கு கும்பல் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன’’ என்றாா்.

அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘இந்தியா பல்வேறு சமூகங்களைக் கொண்டுள்ளது. சுதந்திரமான நீதி அமைப்பைக் கொண்டுள்ளது. ஜனநாயகம் தழைத்தோங்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. மனித உரிமை மீறல் தொடா்பான பிரச்னைகள் எழுந்தால், அதை விசாரிக்கும் வழிமுறைகளை இந்தியா கொண்டுள்ளது’’ என்றாா்.

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்கு அந்நாட்டின் உலக ஹிந்து கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான, ஹிந்துக்களுக்கு எதிரான மனநிலை கொண்டவா்களைக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த கவுன்சில் தெரிவித்துள்ளது.

அதே வேளையில், அமெரிக்காவில் உள்ள இந்திய முஸ்லிம், கிறிஸ்துவ அமைப்புகள் இந்த அறிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.



Read in source website

 

வாஷிங்டன்: இந்தியாவுடனான உறவை அமெரிக்கா முன்கூட்டியே வலுப்படுத்தத் தவறியதால், ரஷியாவுடான உறவை இந்தியா வலுப்படுத்திக் கொண்டது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறினாா்.

அமெரிக்காவில் வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆன்டனி பிளிங்கன் பதிலளித்துப் பேசியதாவது:

இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு வலிமை வாய்ந்தது. அது, அடுத்த 20 ஆண்டுகளுக்கு உலகை வழிநடத்திச் செல்லக் கூடிய அளவுக்கு அடித்தளத்தையும் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.

ரஷியாவுடன் தேவைக்கும் அதிகமாக இந்தியா நட்புறவை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவின் இடத்தில் அமெரிக்கா இருந்திருக்க வேண்டும். இந்தியாவுடனான நட்புறவை அமெரிக்கா முன்கூட்டியே வலுப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் அமெரிக்கா தற்போது ஈடுபட்டுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே குறுகிய கால அளவில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இந்த நூற்றாண்டில் நீண்ட கால அடிப்படையில் பல நல்ல விஷயங்களை செய்வதற்கான வாய்ப்புகளை இந்தியா கொண்டிருப்பதாகக் கருதுகிறேன்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் இந்திய பிரதமா் நரேந்திர மோடியுடன் நேரடியாகப் பேசுகிறாா். க்வாட் கூட்டமைப்பு வழியாக இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் நாம் நட்புறவை வலுப்படுத்தி வருகிறோம். இந்தியாவுடன் நட்புறவை வலுப்படுத்த அந்த அமைப்பு முக்கியமானதாக உள்ளது என்றாா் ஆன்டனி பிளிங்கன்.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ள நிலையில், ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொள்ளுமாறும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

ஆனால், அவ்வாறு எதையும் இந்தியா செய்யவில்லை. மேலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியாவை இந்தியா நேரடியாகக் கண்டிக்கவில்லை. மாறாக, இரு நாடுகளும் தூதரக ரீதியில் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா கூறுகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும் ரஷியாவுக்கு எதிரான தீா்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை.



Read in source website

 

30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் அசத்தலான மின்சாரக் காரை டாடா மோட்டார்ஸ் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

வாகன எரிவாயுவின் பயன்பாடுகளைக் குறைக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் படியான வாகனத்தை பல நிறுவனங்களும் தயாரித்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் ஓலா, ஹோண்டா போன்ற நிறுவனங்கள் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்து வருகின்றன.

தற்போது, அடுத்தகட்டமாக மின்சாரத்தில் இயங்கும் கார்களையும் உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் இன்று மின்சாரத்தில் இயங்கும் புதிய வகை கார் பற்றிய அறிமுகத்தை அளித்துள்ளது.

‘அவின்யா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் காரை 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை பயணிக்கலாம் என்றும் வருகிற 2025 ஆம் ஆண்டு இந்தக் கார் விற்பனைக்கு வரும் எனவும் டாடா மோட்டார்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்துப் பேசிய டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன் ‘அவின்யா கான்செப்ட் மின்சார வாகனங்களின் முன்னோடியாக இருக்கும். சிறந்த மென்பொருள் அமைப்புடன் உருவாக்கபட்டுள்ளது. அதிவேகமாக சார்ஜ் செய்யும் வசதியால் மின்சார உபயோகத்தின் நேரத்தையும் குறைக்கக்கூடியது. அவின்யா கான்செப்ட் என்பது நிறுவனம் எதை நோக்கமாக வைத்திருக்கிறது என்பதற்குச் சான்றாக இருப்பதுடன் மின்சார வாகனங்களின்  செயல்பாட்டை வழிநடத்தும் ஒன்றாகவும் இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.



Read in source website

சென்னை: அதிகரித்து வரும் தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் தமிழகத்தில் உயிர்க்கொல்லியான எலி கொல்லி பசை விற்பனை தடை செய்ய "சிறப்பு கவன திட்டம்" என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, 17,077 சுகாதார நிலையங்களில் கம்பி இல்லா இணைய சேவை (Wi-Fi Facility), தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் சுகாதார விவரக் குறிப்பினை மக்கள் நல பதிவேட்டில் (PHR) இணைக்கும் திட்டம், தொடர் தன்னார்வ குருதிக் கொடையாளர்களின் விவரங்களை பதிவு செய்ய, கணினி மயமாக்கப்பட்ட பதிவேடு மற்றும் செயலி , 4,308 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்தல், சூடான உணவு பொருள்களை பிளாஸ்டிக் பைகளில் விற்கும் நடைமுறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அவர் வெளியிட்ட 136 அறிவிப்புகளில், சில முக்கிய அறிவிப்புகள்:

> "புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்தல் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்துதல் திட்டத்தின்" கீழ் ரூபாய் 1018.85 கோடி மதிப்பீட்டில் ஜெயங்கொண்டான், தாம்பரம், பழனி, திருக்கோவிலூர், கரூர், ஓசூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், ராசிபுரம், அறந்தாங்கி, பரமக்குடி, கூடலூர், திருத்தணி, வள்ளியூர், திருப்பத்தூர், காங்கேயம், குடியாத்தம், திண்டிவனம் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 19 அரசு மருத்துவமனைகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் மற்றும் தென்காசி, குளித்தலை, திருச்செங்கோடு, அம்பாசமுத்திரம் மற்றும் ராஜபாளையம் ஆகிய 5 அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புகள் மாவட்ட மருத்துவமனைகளுக்கு இணையாக மேம்படுத்தப்படும்.

> தமிழகத்தில் 25 அரசு மருத்துவமனைகளில், பச்சிளங்குழந்தைகளின் செவித்திறன் கண்டறிவதற்காக, ஒலி புகா அறை மற்றும் நவீன உபகரணங்கள் ரூபாய் 5 கோடி செலவில் வழங்கப்படும்.

> சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், பொதுமக்கள் சிறந்த மருத்துவ சேவையை பெறுவதற்காக, நவீன உபகரணங்களுடன் புதிய நரம்பியல் பிரிவு கட்டடம் ரூபாய் 65 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

> இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும்-48 திட்டத்தின் கீழ் உயிர் காக்கும் அவரச சிகிச்சை உரிய நேரத்தில் வழங்கிட 7 அரசு மருத்துவமனைகளுக்கு ரூபாய் 14.70 கோடி மதிப்பீட்டில் புதிய சி.டி ஸ்கேன் (CT Scan) கருவிகள் வழங்கப்படும்.

> தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், விபத்து மற்றும் சிகிச்சை மையங்களில், விபத்து பதிவுக்கான தரவுகளை பதிவேற்றம் செய்ய புதிய மென்பொருள் (Trauma Registry Software) ரூபாய் 2 கோடி செலவில் உருவாக்கப்படும்.

> வட்டார அளவிலான பொது சுகாதாரப் சேவைகளை வலுப்படுத்தும் விதமாக 178 வட்டாரங்களில் புதியதாக வட்டார பொது சுகாதார அலகுகளுக்கான (Block Level Public Health Units) புதிய கட்டடங்கள் ரூபாய் 143.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வலிமைபடுத்தப்படும்.

> 10 ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியருக்கான குடியிருப்புகள் ரூபாய் 2 கோடி செலவில் புதியதாக தேசிய நலவாழ்வு குழும நிதியில் கட்டப்படும்.

> அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்களுக்கு நீரிழிவு நோய் பரிசோதனை காலை 7 மணி முதல் செய்யப்படும்.

> பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில், பன்னாட்டு பொது சுகாதார மாநாடு நடத்தப்படும்.

> "தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார சீரமைப்பு திட்டத்தின்" கீழ் முதன்முறையாக அனைத்து 21 மாநகராட்சிகளில் நவீன உபகரணங்களுடன் கூடிய, 35 சுகாதார ஆய்வக கட்டடங்கள் ரூபாய் 17.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

> "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தில் அனைவருக்கும் நலவாழ்வு எனும் இலக்கை அடைவதற்கு ஏதுவாக ரூபாய் 423.64 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவைகள் (Integrated Essential Laboratory Services) வழங்கப்படும்.

> 2025-ஆம் ஆண்டிற்குள் காசநோய் இல்லா தமிழகம் என்னும் இலக்கை அடையும் விதமாக, 33 மாவட்டங்களில் காச நோய் தீவிர கணக்கெடுப்பின் மூலம் நோய் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும், உரிய சிகிச்சைகள் வழங்கவும் ரூபாய் 9.41 கோடி செலவிடப்படும்.

> ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக பட்டுக்கோட்டை, கம்பம், சிதம்பரம் அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடங்கள் தலா ரூபாய் 12 கோடி வீதம் ரூபாய் 36 கோடி செலவில் தேசிய நலவாழ்வு குழும நிதியில் கட்டப்படும்.

> தமிழகத்தில் பச்சிளங்குழந்தை இறப்புகளை குறைப்பதற்கு 150 பச்சிளங்குழந்தை வென்டிலேட்டர் (Neonatal Ventilator) கருவிகள் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் 74 சிறப்பு பச்சிளங்குழந்தை பராமரிப்பு பிரிவுகளுக்கு வழங்கப்படும்.

> தமிழகத்தில் பச்சிளங்குழந்தை இறப்புகளை குறைப்பதற்கு 74 சிறப்பு பச்சிளங்குழந்தை பராமரிப்பு பிரிவுகளுக்கும், 146 பச்சிளங்குழந்தை நிலைப்படுத்தும் பிரிவுகளுக்கும் உயிர்காக்கும் அதிநவீன உபகரணங்கள் ரூபாய் 9.37 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

> தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 46 கோடி மதிப்பீட்டில் புதிய புற்றுநோய் சிகிச்சை பிரிவு உருவாக்கப்படும்.

> தமிழகத்தில் முன்னோடித் திட்டமாக சென்னை மாவட்டத்தில் 12-14 வயதுடைய அனைத்து வளரிளம் பெண்களுக்கு ரூபாய் 7.15 கோடி செலவில் ஹெச்.பி.வி. (Human Papilloma Virus) தடுப்பூசி செலுத்தப்படும்.

> செங்கல்பட்டு, நீலகிரி, மயிலாடுதுறை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, தென்காசி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் புகையிலை கட்டுப்பாட்டு மையங்கள் ரூபாய் 60.17 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

> புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட குழந்தை பருவத்தினர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திடும் விதமாக மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் குழந்தைப் பருவ புற்றுநோய் பராமரிப்பு பிரிவு ஏற்படுத்தி, சேவைகள் வழங்கப்படும்.

> இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு குருத்தணு பதிவேடு (Government Stem Cell Registry) சென்னை அரசு சிறார் நல நிலையம் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் இயங்கி வரும் பிரத்யேக இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அலகு சிகிச்சை மையத்தில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

> தமிழகத்தில் முதன்முறையாக 420 வட்டார அளவிலான பிறவிக் குறைபாடுகள் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் ரூபாய் 4.20 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும்.

> கருவுற்ற தாய்மார்களிடையே ஹீமோகுளோபினோபதீஸ் கோளாறுகளை கண்டறிந்து மரபணு ஆலோசனை வழங்கும் திட்டம் மேலும் 12 பழங்குடியினர் வசிக்கும் வட்டாரங்களில் ரூபாய் 1.68 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்படும்.

> "திருநங்கைகள்" நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அச்சேவைகள் மேலும் மேம்படுத்திட திருநெல்வேலி, வேலூர் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் "ஆலோசனை பிரிவு" (Gender Guidance Clinic) ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

> தமிழகத்தில் கர்ப்பக்கால உயர் இரத்த அழுத்த நோய் அதிகமுள்ள 11 மாவட்டங்களில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களின் இரத்த அழுத்தத்தை கண்டறிய நவீன இரத்த அழுத்தம் கண்டறியும் கருவி (Digital Blood Pressure Apparatus) ரூபாய் 2.77 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

> தகவல் மேலாண்மை திட்டத்தை வலுப்படுத்தும் விதமாக 17,077 சுகாதார நிலையங்களில் கம்பி இல்லா இணைய சேவை (Wi-Fi Facility) ரூபாய் 46 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

> தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களின் சுகாதார விவரக் குறிப்பினை மக்கள் நல பதிவேட்டில் (PHR) இணைக்கும் திட்டத்திற்கு ரூபாய் 3 கோடி செலவிடப்படும்.

> குருதி தேவைப்படும் நோயாளிகளுக்கு எளிதில் குருதி கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு, தொடர் தன்னார்வ குருதிக் கொடையாளர்களின் விவரங்களை பதிவு செய்ய, கணினி மயமாக்கப்பட்ட பதிவேடு மற்றும் செயலி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

> அதிகரித்து வரும் தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் தமிழகத்தில் உயிர்க்கொல்லியான எலி கொல்லி பசை விற்பனை தடை செய்ய "சிறப்பு கவன திட்டம்" செயல்படுத்த வழிவகை செய்யப்படும்.

> அனைத்து அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் புகார் மற்றும் ஆலோசனைகளை நேரடியாக பெற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் மருத்துவமனை வரவேற்பு பிரிவில் ஒருங்கிணைப்பு அலுவலர் நியமிக்கப்படுவர்.

> 1,021 உதவி மருத்துவர்கள், 3,287 மருத்துவம் சார்ந்த இதர பணியிடங்கள் உள்ளிட்ட 4,308 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்கள்.

> சூடான உணவு பொருள்களை பிளாஸ்டிக் பைகளில் விற்கும் நடைமுறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

> உணவு பொருள்களின் பாக்கெட்டுகளில் உள்ள முகப்பு சீட்டில் (Label) உள்ள விபரங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

> "இளஞ்சி மன்றம்" என்ற இளஞ்சிறார் மன்றம் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு மூலிகைகள், மூலிகை பயிர்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

> திண்டுக்கல் மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் மூலிகை பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படும்.

> தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்திய மருத்துவமுறை மருந்துகளின் தரத்தினை குறைந்த செலவில் சோதனை செய்து தரும் திட்டம் செயல்படுத்தப்படும்.



Read in source website

திருநெல்வேலி: கோயில் திருவிழா தேரோட்டத்துக்கு 15 நாட்களுக்குமுன் மின்வாரியத்தை அணுகி உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள திருவிழா ஏற்பாட்டாளர்களை மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக திருநெல்வேலி மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் கி. செல்வகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேர்த்திருவிழா காலங்களில் தேரோட்டத்தின்போது தேரோடும் வீதிகளில் மின்சாரத்தை நிறுத்தவும், தேரோட்டத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பிகளை அகற்றி பாதுகாப்பாக தேரோட்டம் நடைபெறுவதை உறுதி செய்யவும், தேரோட்டம் நடைபெறும் தினத்து க்கு 15 நாட்களுக்கு முன்ன தாகவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை அணுகி உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

தேரோட்டத்தின்போது சம்பந்தப்பட்ட தேர் அல்லது சப்பரத்தில் ஜெனரேட்டர் மூலம் அலங்கார விளக்கு அமைத்தால் அதற்கு தகுந்த மின் கசிவு தடுப்பு கருவி பொருத்தி அலங்கார விளக்குகளுக்கு இணைப்பு கொடுக்க வேண்டும்.

தேர் அமைக்கும்போது உலோகத்தால் ஆன கட்டுமானத் துக்கு பதிலாக காய்ந்த மரக் கட்டைகளில் அமைப்பது பாதுகாப்பானதாக இருக்கும். தேரின் உயரமானது அதன் அடிப்பாகத்தின் நீள, அகலத்துக்கு தகுந்தாற்போல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தேரோட்டத்தின்போது தீயணைப்பு மற்றும் முதலுதவி போன்ற அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துகொள்ள வேண்டும்.

இந்த பாதுகாப்பு வழிமுறை களை திருவிழா கமிட்டியினர் முன்ன தாகவே செய்து பாதுகாப்பாக திருவிழாக்களை கொண்டாடலாம் என்று தெரிவித்துள்ளார்.



Read in source website

புதுடெல்லி: கரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மீண்டும் சீனா திரும்ப அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு சீனா ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்திய மாணவர்கள் பல்வேறு நாடுகளில் உயர் கல்வி பயின்று வருகின்றனர். சீனாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிலும் இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். சீனாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இந்தியாவைச் சேர்ந்த 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

குறிப்பாக மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை பயின்று வருகின்றனர். சீனாவில் படிக்கும் மாணவர்களில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எம்பிபிஎஸ் படிக்கும் மருத்துவ மாணவர்கள் ஆவர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுவதுமே கரோனா தொற்று ஏற்பட்டபோது வெளிநாடுகளில் படித்து வந்த இந்திய மாணவர்கள் அவசர அவசரமாக நாடு திரும்பினர். சீனாவிலும் தொற்று தீவிரமாக பரவ தொடங்கியதை தொடர்ந்து, அங்கு பல்வேறு நகரங்களில் படித்து வந்த வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அவசர அவசரமாக தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பினர். சீனாவில் இருந்தும் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினார்.

கரோனா தொற்று குறைந்த நிலையில் தாய் நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் மீண்டும் தாங்கள் படித்த நாடுகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பினார். ஆனால் இந்திய மாணவர்கள் திரும்பி வருவதற்கு சீனா அனுமதிக்கவில்லை.

ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

பலரது விசா விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சீனா முன்னரே அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் இந்திய மாணவர்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் சீனாவில் படித்த இந்திய மாணவர்களின் படிப்பு பாதியிலேயே நின்று போகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சீனாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் கை சந்தித்து அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய மாணவர்கள், சீனாவில் தங்கள் கல்வியைத் தொடர சீன அரசு அனுமதி அளித்துள்ளது. சில இந்திய மாணவர்கள் தேவை-மதிப்பீடு அடிப்படையில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படிப்பைத் தொடர சீனா அனுமதித்துள்ளதாக இந்திய அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியதாவது:

சீனாவில் அதிகமான இந்திய மாணவர்கள் படிப்பதை நாங்கள் அறிந்துள்ளோம். அவர்கள் படிப்பு பாதியில் நின்று போகக்கூடாது என்ற எண்ணம் எங்களிடமும் உள்ளது.

படிப்பை தொடர சீனா திரும்புவதில் இந்திய மாணவர்களுக்கு உள்ள கவலை மற்றும் பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். மற்ற நாட்டு மாணவர்கள், சீனா திரும்புவதற்கான நடைமுறைகள் மற்றும் அனுபவத்தை இந்தியாவிடம் தெரிவித்துள்ளோம்.

இந்திய மாணவர்கள் சீனா திரும்புவதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. சீனாவிற்கு திரும்ப யார் அக்கறை கொண்டுள்ளனர் என்ற பட்டியலை இந்தியாவிடம் கேட்டுள்ளோம். அவர்களின் விவரத்தை சேகரிக்க இந்தியாவிற்கு சிறிது நேரம் ஆகும்.

தற்போதைய சிக்கலான பெருந்தொற்று காலத்தில் சில இந்திய மாணவர்களை அனுமதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். படிப்பை தொடர்வதற்கு, வெளிநாட்டு மாணவர்கள் சீனா திரும்பும் நிலையில், சர்வதேச பெருந்தொற்று சூழலை கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய மாணவர்கள், சீனா திரும்புவது தொடர்பாக, மாணவர்கள் வசதியை ஏற்டுத்தவும், வழிகள் குறித்தும் இந்தியாவில் உள்ள சீன தூதரகம் பணியாற்றி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மார்ச் 25-ம் தேதி அன்று புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோரின் சந்திப்பைத் தொடர்ந்து இந்திய மாணவர்கள் சீனா திரும்ப அனுமதிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டது என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேவை-மதிப்பீட்டு அடிப்படையில் இந்திய மாணவர்கள் திரும்புவதை எளிதாக்குவதைப் பரிசீலிப்பதாக சீன கூறியுள்ளது. இந்த செயல்முறையை எளிதாக்கும் வகையில், சீனா திரும்ப விரும்பும் மாணவர்களின் பட்டியலைத் தொகுத்து வருவதாக இந்திய தூதரகமும் தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தின் இணையதளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் மாணவர்கள் தங்கள் தகவல்களை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: கட்டாய ஹால்மார்க் திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2022 ஜூன் 01 முதல் அமலுக்கு வரும் எனவும், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஹால்மார்க் கட்டாயமாக்கப்படவுள்ளதாக பிஐஎஸ் எனப்படும் இந்திய தர நிர்ணய அமைப்பு கூறியுள்ளது.

சர்வதேச வர்த்தக அமைப்பான டபிள்யூடிஓ, தங்க நகை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பிஐஎஸ் தரச்சான்றை கட்டாயமாக்கியுள்ளது. டபிள்யூடிஓ அமைப்பில் இடம்பெற்றுள்ள 164 உறுப்புநாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி முதல் முதல்கட்ட திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி தங்க நகை வர்த்தகத்தில் முறைகேடுகளை தடுப்பதற்கு மூன்று கிரேடுகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்படுகிறது. அத்துடன் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

இதன்படி 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் உள்ளிட்ட மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகைகள் விற்பனை செய்யப்பட வேண்டும். இதற்கு முன்பு 10 கிரேடுகளில் தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இது தற்போது மூன்று கிரேடுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பிஐஎஸ் தெரிவித்துள்ளதாவது:

இந்திய தர நிர்ணய அமைவனத்தால் ‘ஹால்மார்க்’ செய்வது கட்டாயமாக்கப்பட்ட பிறகு நாட்டின் 256 மாவட்டங்களில், தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமான தங்கத்தலான பொருட்கள் எச்யுஐடி முத்திரையுடன் ஹால்மார்க் செய்யப்படுகின்றன.

2022 ஜூன் 01, முதல் கட்டாயம் ஹால்மார்க் செய்வதன் இரண்டாம் கட்டத்தை அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால் மேலும் 32 புதிய மாவட்டங்களில் ஹால்மார்க் செய்யும் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கட்டாய ஹால்மார்க் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் தேர்வாகியுள்ள மாவட்டங்களின் பட்டியலை இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS) www.bis.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

மேலும் கூடுதலாக தங்க நகை/கலைப்பொருள்களில் 20, 23, 24 ஆகிய மூன்று வகை காரட் அளவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மதிப்பீடு மற்றும் ஹால்மார்க் செய்யும் மையங்களில் எந்த ஒரு நுகர்வோரும் தங்களுடைய ஹால்மார்க் முத்திரையிடப்படாத தங்க நகைகளின் தூய்மையைப் பரிசோதிக்க முடியும்.

4 பொருட்கள் வரையிலான தங்க நகைகளை பரிசோதிப்பதற்கான கட்டணம் ரூ.200 ஆகவும், 5 அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.45 கட்டணமாக பெறப்படும்.

நுகர்வோரின் தங்க நகைகளை சோதனை செய்ய விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க் மையங்களின் பட்டியலை www.bis.gov.in இணையதளத்தில் அறியலாம்.

நுகர்வோர் வாங்கும் எச்யுஐடி எண்ணுடன் கூடிய ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகளின் நம்பகத்தன்மை மற்றும் தூய்மையை, பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய பிஐஎஸ் கேர் (BIS CARE) செயலியில் 'verify HUID' ஐப் பயன்படுத்தி நுகர்வோரே சரிபார்க்கலாம்.

இவ்வாறு இந்திய தர நிர்ணய அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் காஷ்மீர் பயணத்தை 'அரங்கேற்றம்' என்று விமர்சித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு இந்தியா கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "பாகிஸ்தான் பிரதமர் பயன்படுத்திய ஸ்டேஜ்ட் என்ற வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. ஒருவேளை அவர், பிரதமர் காஷ்மீருக்கு வராமலேயே வந்ததுபோல் சொல்லப்பட்டது எனக் கூறுகிறாரோ. அப்படியென்றால் அவரது புரிதல் தவறு. காஷ்மீரில் அவருக்குக் கிடைத்த வரவேற்பை பாகிஸ்தான் பிரதமர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காஷ்மீரில் பிரதமர் தொடங்கிவைத்த நலத்திட்டங்கள் தான் அவரது பயணத்திற்கு சாட்சி. இந்திய விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்த அதிகாரமும் இல்லை" என்று கூறியுள்ளார்.

பிரதமரின் முதல் பயணம்: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக் கிழமை ஜம்மு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு அவர், சூரிய சக்தி மின் நிலையம் உட்பட ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஜம்முவில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள பாலி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பாலி கிராமத்தில் மத்திய அரசின் ‘கிராம உர்ஜா ஸ்வராஜ்’ திட்டத்தின் கீழ் ரூ.2.75 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் நிலையத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர், "இந்த முறை பஞ்சாயத்து ராஜ் தினம், ஜம்மு காஷ்மீரில் கொண்டாடப்படுகிறது. இது மிகப் பெரிய மாற்றத்தை குறிக்கிறது. ஜனநாயகம் அடித்தட்டு மக்களைச் சென்றடைந்துள்ளது பெருமையான விஷயம். அதனால் தான், இங்கிருந்து நாட்டில் உள்ள பஞ்சாயத்துகளுடன் கலந்துரையாடுகிறேன். இந்த யூனியன் பிரதேசம் புதிய வளர்ச்சி கதையை எழுதப் போகிறது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள இளைஞர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகள் பல கஷ்டங்களுடன் வாழ்ந்தனர். உங்கள் வாழ்க்கையில் அதுபோன்ற கஷ்டங்கள் ஏற்படாது. அதை உங்களுக்கு நாங்கள் நிரூபிப்போம்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரதமரின் காஷ்மீர் பயணம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விமர்சித்துள்ளார். இந்தப் பயணமே ஒரு நாடகம் போல் அரங்கேற்றப்பட்டது என்று அவர் கூறியிருக்கிறார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



Read in source website

புதுடெல்லி: அடுத்த தொழில்நுட்பப் புரட்சிக்கு தலைமையேற்க இந்தியா வழிகாட்டுகிறது, உலகின் வேகமாக வளரும் ஸ்டார்ட்அப் சூழலியலில் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியா செல்கிறது, இந்தியா என்றால் வர்த்தகம் என்று பொருள்பட திகழச்செய்து வருகிறோம். என செமிகான் இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

செமிகான் இந்தியா மாநாடு 2022-ஐ காணொலி வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தொடக்க விழாவில் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். மத்திய அமைச்சர்கள், செமிகண்டக்டர் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

உலகளாவிய செமிகண்டக்டர் விநியோக சங்கிலியில் இந்தியாவை முக்கிய பங்குதாரர் நாடாக மாற்றுவதே நமது கூட்டு நோக்கம். உயர்- தொழில்நுட்ப, உயர்தர மற்றும் மிகுந்த நம்பத்தன்மை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் பணியாற்ற நாம் விரும்புகிறோம். செமிகண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த முதலீட்டை ஈர்க்கும் சிறந்த நாடாக இந்தியா திகழ்வதற்கான ஆறு காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, 1.3 பில்லியனுக்கு மேற்பட்ட இந்தியர்களை இணைப்பதற்கான டிஜிட்டல் கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. உள்ளார்ந்த நிதிசேவை, வங்கியியல் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை புரட்சியில் அண்மையில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றம் முக்கியமானது.

சுகாதாரம் மற்றும் குடும்பநலம் முதல் உள்ளடக்கிய மற்றும் அதிகாரம் அளித்தல் வரை அனைத்து வகையான ஆளுகையிலும் வாழ்க்கையை மாற்றியமைக்க நாம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்.

இரண்டாவதாக, ஆறு லட்சம் (600 ஆயிரம்) கிராமங்களை, அகன்ற கற்றை முதலீட்டில் 5ஜி, ஐஓடி மற்றும் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பம் போன்றவை மூலம் அடுத்த தொழில்நுட்ப புரட்சிக்கு தலைமையேற்க இந்தியா வழிகாட்டுகிறது.

மூன்றாவதாக, உலகின் வேகமாக வளரும் ஸ்டார்ட்அப் சூழலியலில் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியா செல்கிறது. இந்தியாவின் சொந்த செமிகண்டக்டர் பயன்பாடு 2026-ல் 80 பில்லியன் டாலரையும், 2030-ல் 110 பில்லியன் டாலரையும் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்காவதாக, தொழில் தொடங்குவதை எளிதாக்குவதை மேம்படுத்த விரிவான சீர்த்திருத்தங்களை இந்தியா மேற்கொண்டு வருகிறது. 25,000-க்கும் மேற்பட்ட பழங்கால நடைமுறைகளை ஒழித்தது போன்ற நடவடிக்கைகள் முக்கியமானது. உரிமங்களை தானாக புதுப்பித்தல், வெளிப்படை தன்மை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வாயிலாக முறைப்படுத்தும் கட்டமைப்புகளை விரைவுபடுத்துதல் மற்றும் உலகிலேயே மிகவும் சாதகமான வரிகட்டமைப்புகளில் ஒன்றாக இந்தியாவை திகழச் செய்து வருகிறது.

ஐந்தாவதாக, திறன் மேம்பாட்டில் அதிக முதலீடு மற்றும் 21-ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இந்திய இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. செமிகண்டக்டர் வடிவமைப்பு திறன்மிகுந்தவர்கள் நம்மிடையே பெருமளவில் உள்ளனர், இது உலகளவிலான செமிகண்டக்டர் வடிவமைப்பு பொறியாளர்களில் 20% ஆகும். ஏறத்தாழ முதல் 25 செமிகண்டக்டர் வடிவமைப்பு நிறுவனங்கள், அவற்றின் சொந்த வடிவமைப்பு அல்லது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை நம்நாட்டில் கொண்டுள்ளன.

ஆறாவதாக, இந்திய உற்பத்தித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. நூற்றாண்டில் ஒருமுறை ஏற்படக்கூடிய பெருந்தொற்று பாதிப்பை மனிதகுலம் எதிர்கொண்டு வரும் வேளையில் நமது மக்களின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தையும் இந்தியா மேம்படுத்தி வருகிறது.

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் 14 முக்கிய துறைகளில் 26 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஊக்கத் தொகையை வழங்கி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், மின்னணு பொருட்கள் உற்பத்தித் துறை வரலாறு காணாத வளர்ச்சி அடையும். 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான மொத்த மதிப்பீட்டில் செமி- கான் இந்தியா திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

செமி கண்டக்டர் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு சூழலை விளக்கும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். அரசின் உதவி தேவைப்படுவதால் வர்த்தகத்திற்கு உகந்த சூழலை வழங்குவதற்காக சிறந்த முயற்சிகளை அரசு மேற்கொள்ளும். தொழில்துறை கடினமாக பாடுபட்டால், அரசு அதைவிட மேலும் கடினமாக பாடுபடும்.

புதிய உலக நடைமுறை உருவாகி வருகிறது. புதிதாக உருவாகும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்க கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் பணியாற்றி வருகிறோம். தொழில்நுட்பம் மற்றும் சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. ஆதரவு கொள்கை சூழல் வாயிலாக இயன்ற அளவுக்கு முரண்பாடுகளை உங்களுக்கு சாதகமாக்கி வருகிறோம். இந்தியா என்றால் வர்த்தகம் என்று பொருள்பட திகழச்செய்து வருகிறோம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.



Read in source website

குறிப்பிட்ட சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்கவில்லை என பிரதமர் குற்றச்சாட்டு; எரிபொருள் விலை உயர்வுக்கு மத்திய வரி விதிப்பே காரணம் என மாநிலங்கள் எதிர்வினை; எரிபொருளுக்கு எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது, மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே வசூல் எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகிறது?

Explained: States vs Centre on fuel taxes: பெட்ரோல், டீசல் மீதான வரி மற்றும் வரி விதிப்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. மத்திய அரசின் கலால் வரி குறைப்புக்கு ஏற்ப மாநிலங்கள் வாட் வரியை குறைக்கவில்லை என மத்திய அரசு கருதினாலும், மாநிலங்கள் தங்கள் நிதி நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளன, குறிப்பாக ஜூன் மாதம் முடிவடைய உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டு கால அவகாசம் குறித்து கவலைத் தெரிவித்துள்ளன.

கடந்த புதன்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்கவில்லை என்றும், “உலகளாவிய நெருக்கடியின் இந்த நேரத்தில் அனைத்து மாநிலங்களும் கூட்டுறவு கூட்டாட்சி அடிப்படையில் ஒரு குழுவாக செயல்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எதிர்வினையாற்றியுள்ளன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பெட்ரோல் விலையில் 1 ரூபாய் மானியம் வழங்கியதால், மேற்கு வங்க அரசு ரூ. 1,500 கோடி இழந்துள்ளதாகவும், மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.97,000 கோடி பாக்கி உள்ளதாகவும் கூறினார். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, எரிபொருளுக்கான வரியில் மத்திய அரசு மற்றும் மாநிலத்தின் பங்கை விவரித்தும், மகாராஷ்டிராவுக்கு மத்திய அரசு ரூ.26,500 கோடி பாக்கி வைத்துள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டார். தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், 2014ல் இருந்து மாநிலம் எரிபொருள் விலையை உயர்த்தவில்லை என்று கூறினார். அதேநேரம், மத்திய அரசு விதித்துள்ள செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கேரள நிதியமைச்சர் கே என் பாலகோபால் தெரிவித்துள்ளார்.

2021 நவம்பரில் எரிபொருள் விலை உயர்ந்ததால், மத்திய அரசு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, பெட்ரோல் (லிட்டருக்கு ரூ. 5) மற்றும் டீசல் (லிட்டருக்கு ரூ. 10) மீதான மத்திய கலால் வரிகளைக் குறைத்தது. பாஜக ஆட்சி செய்யும் 17 மாநிலங்கள் உட்பட 21 மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்கள் வாட் வரியை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.80-10 மற்றும் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2-7 என்ற அளவில் குறைத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் 2021-22 ஆம் ஆண்டிற்கான மாநில நிதி அறிக்கையின்படி, எரிபொருள் மீதான வாட் வரி குறைப்பு காரணமாக மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.08% என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வரி குறைப்புகள் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத்தை விட, மார்ச் மாதத்தில் 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகான விலை உயர்வு அதிகமாக இருந்தது. சட்டமன்ற தேர்தல்களுக்கு முன்னதாக தொடர்ச்சியாக 137 நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் இல்லாமல் இருந்தது. தேர்தலுக்குப் பின் 16 நாட்களில் 14 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வருவாய் பங்காக எரிபொருள் வரிகள்

எரிபொருளின் மீதான கலால் வரி மற்றும் VAT வரி ஆகியவை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு முக்கியமான வருவாய் ஆதாரமாக உள்ளது. எரிபொருளின் மீதான கலால் வரியானது மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 18.4% ஆகும். RBI இன் பட்ஜெட் ஆய்வு 2020-21 படி, பெட்ரோலியம் மற்றும் ஆல்கஹால் மூலம் கிடைக்கும் வரி வருவாய் மாநிலங்களின் வருவாயில் சராசரியாக 25-35% ஆகும். மாநிலங்களின் வருவாய் வரவுகளில், மத்திய வரி பரிமாற்றங்கள் 25-29% மற்றும் சொந்த (மாநிலங்களுக்கான) வரி வருவாய் 45-50% ஆகும்.

ஏப்ரல்-டிசம்பர் 2021 இல், கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகள் மூலம் ரூ.3.10 லட்சம் கோடியை மத்திய அரசு அதன் கருவூலத்திற்கு ஈட்டியது, இதில் கலால் வரி ரூ.2.63 லட்சம் கோடியும், கச்சா எண்ணெய் மீதான செஸ் ரூ.11,661 கோடியும் அடங்கும். அதே காலகட்டத்தில், மாநிலங்களின் கருவூலத்தில் ரூ. 2.07 லட்சம் கோடி திரட்டப்பட்டது, இதில் ரூ. 1.89 லட்சம் கோடி வாட் மூலம் வந்ததாக பெட்ரோலியம், திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவு (பிபிஏசி) தெரிவித்துள்ளது.

இது 2020-21ல் மத்திய அரசு வசூலித்த ரூ.4.19 லட்சம் கோடி (ரூ. 3.73 லட்சம் கோடி கலால் வரி; ரூ. 10,676 கோடி செஸ்) மற்றும் மாநிலங்கள் வசூலித்த ரூ.2.17 லட்சம் கோடியுடன் (வாட் ரூ. 2.03 லட்சம் கோடி) ஒப்பிடப்படுகிறது.

மாநிலங்களுடனான பெட்ரோலிய வரிகள் அடிப்படை கலால் வரியிலிருந்து பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. பெட்ரோலியப் பொருட்களுக்கு கூடுதல் கலால் வரி மற்றும் செஸ்களையும் மத்திய அரசு விதிக்கிறது. 2020-21 ஆம் ஆண்டில், பெட்ரோல் மற்றும் டீசலில் இருந்து மொத்த மத்திய கலால் வரி (செஸ்கள் உட்பட) ரூ.3.72 லட்சம் கோடியாக இருந்தது. மத்திய கலால் வரியின் கீழ் வசூலிக்கப்பட்ட தொகுப்பில் இருந்து மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்ட மொத்த வரி ரூ.19,972 கோடி.

டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை விலையில் மத்திய வரி 43% மற்றும் மாநில வரி 37% ஆகும். 2023 ஆம் நிதியாண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிகளை தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு மீட்டமைக்க, மத்திய அரசு சுமார் ரூ.92,000 கோடி வருவாயை கைவிட வேண்டும் என்று பிப்ரவரியில் கடன் மதிப்பீட்டு நிறுவனமான ICRA குறிப்பிட்டிருந்தது. மற்ற மறைமுக வரி வருவாய் ஜிஎஸ்டி வரி முறை மூலம் செலுத்தப்படுவதால், எரிபொருள் மற்றும் மதுபானம் மீதான வரிகள் மாநிலங்களுக்கு ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக மாறியுள்ளது.

இந்திய மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சியின் முதன்மை பொருளாதார நிபுணர் சுனில் குமார் சின்ஹா ​​கூறுகையில், மாநிலங்கள் ஜிஎஸ்டிக்கு மாறியுள்ளது, சூழ்நிலைக்கு ஏற்ப வருவாயை சரிசெய்யும் மாநிலங்களின் நெகிழ்வுத்தன்மை கடுமையாகக் குறைத்துள்ளது. “எனவே இந்த நேரத்தில், அவர்கள் வருவாயைச் சரிசெய்யக்கூடிய ஒரே கூறுகள் எரிபொருள் வரி மற்றும் மதுபானத்தின் மீதான கலால் வரி மட்டுமே,” அதனால்தான் இந்த வரிகளில் மத்திய அரசின் தலையீட்டை மாநிலங்கள் ஏற்கத் தயாராக இல்லை என்று குறிப்பிட்டார்.

எரிபொருளுக்கு எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது

மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அடிப்படை விலை, சரக்குக் கட்டணம், கலால் வரி மற்றும் டீலர் கமிஷன் ஆகியவற்றின் மீது விளம்பர மதிப்பு VAT அல்லது விற்பனை வரியைப் பயன்படுத்துகின்றன. எனவே, மத்திய அரசு கலால் வரியை உயர்த்துவதால், மாநில வசூலும் உயரும். நவம்பர் 4 ஆம் தேதி கலால் வரி குறைக்கப்படுவதற்கு முன்பு, தொற்றுநோய்க்கு முந்தைய அளவைக் காட்டிலும், பெட்ரோல் மீது லிட்டருக்கு மொத்தம் 13 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 16 ரூபாயும் கலால் வரிகளை மத்திய அரசு அதிகரித்தது.

டெல்லி அரசு பெட்ரோலுக்கு 19.4% VAT விதிக்கிறது, கர்நாடகா அரசு பெட்ரோல் மீது 25.9% மற்றும் டீசல் மீது 14.34% விற்பனை வரி விதிக்கிறது. சில பிற மாநிலங்கள் ஒரு லிட்டருக்கு ஒரு நிலையான வரியுடன் கூடுதலாக ஒரு விளம்பர மதிப்பு வரியை விதிக்கின்றன. உதாரணமாக, ஆந்திரப் பிரதேசம், வாட் வரியுடன் (பெட்ரோலுக்கு 31%; டீசலுக்கு 22.5%) கூடுதலாக வாகன எரிபொருள் மீது லிட்டருக்கு வாட் வரியாக ரூ.4-ம் மற்றும் சாலை மேம்பாட்டு செஸ் ஆக ரூ.1-ம் விதிக்கிறது.

மற்ற மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் ரூபாய் அடிப்படையில் நிலையான தளத்துடன் விற்பனை வரி உள்ளது, ஆனால் விலைகள் அதிகமாக இருப்பதால் விளம்பர மதிப்பு வரியைப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, உத்தரபிரதேசம், பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு 19.36% அல்லது ரூ.14.85க்கு இடையில் எது அதிகமாக உள்ளதோ அந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதிக எரிபொருள் விலைகள் மற்றும் கலால் வரிகளில் முந்தைய உயர்வுகளுடன் மாநில VAT வசூல் உயர்ந்துள்ள நிலையில், FY2022 பட்ஜெட்டில் எரிபொருளின் மீதான கலால் வரிகளில் மாநிலங்களின் பங்கு குறைக்கப்பட்டது. இது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அடிப்படை கலால் வரியை (BED) முறையே ரூ.1.6 மற்றும் ரூ.3 குறைத்தது, மேலும் சிறப்பு கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு ரூ.1 குறைத்து, பெட்ரோல் லிட்டருக்கு 2.5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் ஆக விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியை (AIDC) அறிமுகப்படுத்தியது. மாநிலங்களின் பங்கைக் குறைக்கும் போது, ​​இது சில்லறை விற்பனை விலையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, ஏனெனில் செஸ்களிலிருந்து வரும் வசூல் என்பது பகிரக்கூடிய தொகுப்பின் பகுதியாக இல்லை.

வரி வருவாய் மற்றும் விலை போக்குகள்

மத்திய அரசின் கலால் வரி வசூல் 2014-15 முதல் 2016-17 வரை மேல்நோக்கி உயர்ந்துள்ளது, பின்னர் 2019 இல் கலால் வரி உயர்த்தப்பட்ட பிறகு 2019-20 முதல் மீண்டும் தொடங்கும் முன், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மிதமானதாக இருந்தது (படம் 1 ஐப் பார்க்கவும்). ஒவ்வொரு ரூபாய் கலால் வரி உயர்வும் ஆண்டுக்கு ரூ. 13,000-14,000 கோடியை ஈட்டுகிறது, இது உலகளாவிய விலைகள் மற்றும் நுகர்வு அளவுகளின் அடிப்படையிலானது.

137 நாட்கள் எரிபொருள் விலைகள் மாற்றம் செய்யப்படாமல் இருந்ததற்குப் பிறகு, அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, கடந்த மாதம் முதல் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMCs) விலையை மாற்றி அமைத்து வருகின்றன. சாதாரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 15 நாள் ரோலிங் சராசரி பெஞ்ச்மார்க் விலைக்கு ஏற்ப தினசரி மாற்றியமைக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், நவம்பர் 4 ஆம் தேதி கலால் குறைப்பு தொடங்கி மார்ச் மாதம் ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடியும் வரை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் விலையை நிலையானதாக வைத்திருந்தன.

மார்ச் மாதத்தில் திருத்தங்கள் தொடங்கியதில் இருந்து, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 12 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும் உயர்த்தியுள்ளன. எல்பிஜியின் விலையும் அதிகரித்துள்ளது: டெல்லியில் 15 கிலோ சிலிண்டரின் விலை இப்போது ரூ.949.50 (ரூ 50 அதிகரித்து) மற்றும் வணிக ரீதியான 19 கிலோ சிலிண்டர் ரூ.2,253 (ரூ. 250 அதிகரித்து).

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் பேரலுக்கு 25.53 டாலர் அதிகரித்து பேரலுக்கு 106.48 டாலராக உள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85% இறக்குமதி செய்கிறது.



Read in source website

Tamilnadu News Update : தலைமை செயலாளர் வெ.இறையன்பு எழுதிய மூளைக்குள் சுற்றுலா என்ற நூல் சிறந்த நூலாக தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்டது.

Tamilnadu News Update: தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு எழுதிய மூளைக்குள் சுற்றுலா என்ற நூல சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்பட இருந்த நிலையில் இதற்கான பரிசுத்தொகையை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தமிழக அரசு சார்பில் தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களை தேர்வு செய்து பரிசு வழங்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. அந்த வகையல் கடந்த 2018-ம் ஆண்டு தலைமை செயலாளர் வெ.இறையன்பு எழுதிய மூளைக்குள் சுற்றுலா என்ற நூல் சிறந்த நூலாக தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த நூலை எழுதிய ஆசியர் வெ.இறையன்பு மற்றும் பதிப்பகத்தார்களுக்கு பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து தலைமை இறையன்புவுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் தான் அரசுப்பதவியில் இருப்பதால், தமிழக அரசின் விருது மற்றும் பரிசுத்தொகையை ஏற்ற மறுப்பதாக பதில் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் தமிழ் வளர்ச்சித்துறை செயலவாளர் மகேசன், காசிராஜனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில், 2018-ம் ஆண்டு வெளிவந்த நூல்களில் போட்டிக்கு வரப்பெற்று தெரிவுக்குழுவால் தெரிவு செயயப்பட்ட தமிழில் சிறந்த நூல்களை எழுதிய நூல் ஆசிரியர் மற்றும் அதன் பதிப்பகத்தாகளுக்கு பரிசுகள் வழங்க கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 8-ம் நாள் பார்வையில் காணும் அரசாணையில், தெரிவு செய்யப்பட்ட நூல்கள் அதன் வகைபாடு நூலாசிரியர் மற்றும் பதிப்பகத்தார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனில் என் நூலான மூளைக்கு சுற்றுலா தெரிவு செய்யப்பட்டு நாளை நடைபெறவிருக்கும் அரசு விழாவில் பரிசு பெற அழைக்கப்பட்டுள்ளமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தமிழக அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி திங்களில் தெரிவு செய்யப்பட்ட எனது படைப்பிற்கு இவவாண்டு நடைபெறும் விழாவில், தலைமை செயலாளராக பரிசு பெறுவது ஏற்புடையதல்ல. எனவே எனது படைப்பிற்கு வழங்கப்பெறும் இப்பரிசை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.



Read in source website

ஜவுளிப் பூங்காவை அமைப்பது குறித்து மத்திய ஜவுளித் துறை திட்ட இயக்குநா் அனில்குமார், வா்த்தக ஆலோசகா் சுப்ரா ஆகியோர் தலைமையிலான குழுவினா், ஏப்.11, 12 தேதிகளில் விருதுநகா் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

விருதுநகரில் விரைவில் மெகா ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஆர் காந்தி வியாழக்கிழமை சட்டப்பேரவையில் அறிவித்தார்.

ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியங்கள் அமைக்கவும், ஆடைப் பூங்காக்கள் அமைக்கவும் மத்திய அரசு ரூ.4,445 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த வகையில் ஏழு இடங்களில் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஜவுளிப் பிராந்தியங்கள், ஆடைப் பூங்காக்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு, மத்திய வணிகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்துப் பேசினார். அப்போது’ தமிழகத்தில், மதுரை – கன்னியாகுமரி நெடுஞ்சாலையில், விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரத்தில், 1,௦52 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு உள்ளது. அங்கு ஒருங்கிணைந்த மெகா ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். அவரும் அதற்கான ஒப்புதலை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து ஜவுளிப் பூங்காவை அமைப்பது குறித்து மத்திய ஜவுளித் துறை திட்ட இயக்குநா் அனில்குமார், வா்த்தக ஆலோசகா் சுப்ரா ஆகியோர் தலைமையிலான குழுவினா், ஏப்.11, 12 தேதிகளில் விருதுநகா் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்நிலையில், விருதுநகரில் விரைவில் மெகா ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஆர் காந்தி வியாழக்கிழமை சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இது பிரதமர் மித்ரா திட்டத்தின் கீழ், இந்திய ஜவுளித் தொழிலை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் மெகா ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான முன்மொழிவை மாநில அரசு சமர்ப்பித்துள்ளது.

2027-2028 வரையிலான ஏழு ஆண்டுகளில், ரூ.30 கோடி நிர்வாகச் செலவுகள் உட்பட, ரூ.4,445 கோடி பட்ஜெட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

இதுத் தவிர, தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனம் (நிப்ட்) சென்னை மற்றும் பெங்களூரு மூலமாக 500 புதிய டிசைன்கள் உருவாக்கப்படும். ரூ.50 லட்சம் செலவில் தேசிய வடிவமைப்பு நிறுவனம் (என்.ஐ.டி.), அகமதாபாத் மூலம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் 50 வடிவமைப்பாளர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்படும்.

காஞ்சிபுரத்தில் உள்ள தமிழ்நாடு சரிகை ஆலையின் உட்கட்டமைப்புகள் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டு உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும். கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு கைத்தறி அங்கீகார அமைப்பு ரூ.1 கோடி செலவில் புதிதாக ஏற்படுத்தப்படும்.

ரூ.10 கோடி செலவில் சென்னையில் சர்வதேச தரத்தில் வடிவமைப்பு நிலையம் உருவாக்கப்படும். ரூ.10 கோடி செலவில் தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறிகளை கணக்கெடுத்து புவிசார் மூலம் அடையாளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

‘ஹேண்ட்லூம்ஸ் ஆப் இந்தியா’ என்ற பெயரில் கைத்தறி விற்பனை இணைவு அங்காடி ரூ.10 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்படும். கைத்தறி தயாரிப்புகள் மின்னணுமயமாக்கி ஆவணப்படுத்தப்படும்.

ரூ.1 கோடி செலவில் சென்னையில் ஜவுளி நகரம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வு மற்றும் விரிவான செயல்திட்டம் தயாரிக்கப்படும். தமிழ்நாட்டில் ஜவுளித் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஆலோசனைகள் வழங்க தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் ஆர் கார்ந்தி கூறினார்.



Read in source website

 

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினா்களின் சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினா்களின் சிறப்பு ஒதுக்கீடு, மத்திய கல்வி அமைச்சகப் பணியாளா்களின் 100 குழந்தைகளுக்கான ஒதுக்கீடு, நாடாளுமன்ற உறுப்பினா்களின் குழந்தைகள், பேரக் குழந்தைகளுக்கான ஒதுக்கீடு, ஓய்வு பெற்ற கேந்திரிய வித்யாலய பணியாளா்களுக்கான ஒதுக்கீடு, நிா்வாகக் குழு தலைவருக்கான சிறப்பு ஒதுக்கீடு ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இரண்டாவது மத்திய சம்பள ஆணையத்தின் பரிந்துரைப்படி 1963-இல் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்கப்பட்டன. அடிக்கடி பணியிட மாற்றத்தை சந்திக்கும் ராணுவத்தினா், துணை ராணுவத்தினா் உள்ளிட்ட மத்திய அரசு ஊழியா்களுடைய குழந்தைகளின் கல்வி தடைபடக் கூடாது; பள்ளிகள் மாறினாலும் ஒரே கல்வித் தரத்தில் அவா்கள் பயில வேண்டும் என்பதுதான் இந்தப் பள்ளிகள் தொடங்கப்பட்டதன் நோக்கம். மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலய சங்கதன் என்ற தன்னாட்சி அமைப்பு இந்தப் பள்ளிகளை 1975-ஆம் ஆண்டு முதல் நிா்வகித்து வருகிறது.

முன்னதாக இந்த சிறப்பு ஒதுக்கீட்டின்படி, ஒரு மக்களவை உறுப்பினா் தனது தொகுதிக்குட்பட்ட கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் 10 மாணவா்கள் வரை சோ்க்க பரிந்துரை செய்ய முடியும். தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் கேந்திரிய வித்யாலய பள்ளி இல்லையென்றால் பக்கத்து தொகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலய பள்ளியில் மாணவா்களை சோ்க்க பரிந்துரை செய்ய முடியும். மாநிலங்களவை உறுப்பினா்களைப் பொறுத்தவரை, அவா்கள் எந்த மாநிலத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்படுகின்றனரோ, அந்த மாநிலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் 10 மாணவா்களைச் சோ்க்க பரிந்துரை செய்யலாம்.

நாடு முழுவதும் உள்ள 1,248 கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் சுமாா் 14 லட்சம் மாணவா்கள் படித்து வருகின்றனா். இப்போது நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம், மக்களவை உறுப்பினா்கள் 543 போ், மாநிலங்களவை உறுப்பினா்கள் 245 போ் ஆக மொத்தம் 788 எம்.பி.க்கள் மூலம் பரிந்துரைக்கப்படும் 7,880 மாணவா்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு பட்டியலில் இருந்து அகற்றப்பட்டிருக்கிறது.

உயா்வான கல்வித் தரம், 1-40 என்ற ஆசிரியா்-மாணவா் விகிதம் ஆகியவை இந்தப் பள்ளிகளின் சிறப்புகள். குறிப்பிட்ட பிரிவினருக்கு கல்விக் கட்டண சலுகையும் உண்டு. எம்.பி.க்களுக்கான ஒதுக்கீடு உள்பட மொத்தம் 16 வகையான சிறப்பு ஒதுக்கீட்டு முறை மாணவா் சோ்க்கையின்போது கடைப்பிடிக்கப்படுகிறது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படுகிறது.

இந்தப் பள்ளிகளில் எம்.பி.க்களின் ஒதுக்கீட்டு உரிமை தவறாகப் பயன்படுத்தப்படுவதாக நீண்டகாலமாக புகாா்கள் இருந்து வருகின்றன. பல இடங்களில் இந்த ஒதுக்கீடு பணத்துக்காக விற்பனை செய்யப்படுவதாகவும் புகாா்கள் உண்டு. இதே போன்ற புகாா்களின் அடிப்படையில், 2010-இல் சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அரசியல் அழுத்தம் காரணமாக மீண்டும் கொண்டுவரப்பட்டது.

நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்களும் இந்த ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மாணவா்களுக்கு பரிந்துரை செய்கின்றனா் என்று சொல்வதற்கில்லை. ஆனால், 2018-19-இல் எம்.பி.க்களுக்கான ஒதுக்கீட்டையும் தாண்டி அதிக மாணவா்கள் சோ்க்கப்பட்டனா். இதனால், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியா்-மாணவா் விகிதத்தை பின்பற்ற முடியாமல் போனது. மேலும், இரண்டு ஷிப்டுகளாக வகுப்புகளை நடத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. இது, மாணவா்களின் கல்வித் தரம் குறைவதற்கு வழிவகுக்கும் என்ற நிலை ஏற்பட்டது. இதுவும் எம்.பி.க்களின் ஒதுக்கீட்டு உரிமையை மத்திய அரசு ரத்து செய்ததற்கு இன்னொரு காரணம்.

கேந்திரிய வித்யாலய பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்வதற்கு பதிலாக முறைப்படுத்த வேண்டும் என்றும் எம்.பி.க்கள் பலா் கோருகிறாா்கள். எம்.பி.க்களின் சிறப்பு ஒதுக்கீட்டு உரிமையை முழுமையாக ரத்து செய்வதால் மத்திய அரசு ஊழியா்கள் அல்லாத ஏழைகளின் குழந்தைகள் எம்.பி.க்களின் பரிந்துரைப்படி கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் சோ்க்கை பெற முடியாத சூழல் ஏற்படும் என்பது அவா்கள் வாதம்.

கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் மத்திய அரசு ஊழியா்களின் குழந்தைகள் கல்வி பயில்வது படிப்படியாக குறைந்து வருகிறது. அவா்கள் பெரும்பாலும் தனியாா் உறைவிடப் பள்ளிகளை நாடுகிறாா்கள். மத்திய அரசு ஊழியா்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இப்பள்ளிகள் இல்லாததால் பலரும் தங்கள் குழந்தைகளை அதில் சோ்ப்பதில்லை.

வேலைவாய்ப்புக்காக மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயா்தல் அதிகரித்திருக்கும் நிலையில், மாவட்டந்தோறும் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்கப்படுவதற்கு அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதன் மூலம் ஏனைய பள்ளிகளுக்கு முன்மாதிரி பள்ளிகளாகவும் அவை அமையும். மாவட்டந்தோறும் நவோதாய, கேந்திரிய வித்யாலய பள்ளிகள் அமைவதன் மூலம் அடித்தட்டு மக்களின் கல்வித்தரத்தை உயா்த்த முடியும்.



Read in source website

 

உலக நாடுகள் பலவற்றுக்கும் பசுமை மின் உற்பத்தி என்பது எளிதில் எட்ட முடியாத ஒரு கனவாகவே உள்ளது. முன்னேறிய பல ஐரோப்பிய நாடுகளும் கூட 2030-ஆம் ஆண்டுக்குப் பிறகே ஐம்பது சதவீத பசுமை மின் உற்பத்தியை எட்டுவதற்கான இலக்கினை நிர்ணயித்துள்ளன. இந்த இலக்குக்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியக் காரணம், மின் கட்டமைப்புக்கு ஏற்ற இலகுவான, சமச்சீரான மின் உற்பத்தியாக பசுமை மின் உற்பத்தி மாறவில்லை என்பதே.

சூரிய ஒளி மின் நிலையங்கள் தினமும் ஆறு அல்லது ஏழு மணி நேரம் மின் உற்பத்தி செய்யக்கூடியவை. பகலில் மட்டுமே இவை இயங்கும் என்பது ஒரு குறை. காற்றாலை மின் உற்பத்தியோ பருவம் சார்ந்த மின் உற்பத்தி. நீர் மின் நிலையங்களோ மொத்தத் தேவையில் ஒரு சிறு அளவையே நிறைவு செய்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே பெருமளவில் நீர் மின் ஆதாரங்கள் கட்டமைக்கப்பட்டு விட்டன. மழை அதிகரித்தால் மட்டுமே இவை கூடுதல் பலனை அளிக்கும்.

தாவர எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்கள் ஏற்ற இறக்கம் இன்றி சீராக மின் உற்பத்தியைத் தரக்கூடியவை. ஆயினும் இவற்றுக்கான எரிபொருள்களான கரும்புச் சக்கை, விவசாயக் கழிவு போன்றவை அதிகமாகக் கிடைப்பதில்லை. மேலும், இவற்றின் ஆற்றலடர்த்தி நிலக்கரியைப் போலன்றி குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக இவற்றைக் கையாளும் செலவும் கொண்டு செல்லும் செலவும் கூடுதலாக உள்ளது.

இன்றைய நிலையில் இந்தியாவின் மொத்த பசுமை மின் உற்பத்தியின் நிறுவுதிறன் ஒரு லட்சம் மெகாவாட்டுகளாக உள்ளது. இது நிலக்கரி மின் உற்பத்தி நிறுவுதிறனில் பாதி அளவாகும். ஆனால் இந்த நிறுவுதிறன் அளவுக்கு மின் உற்பத்தியை அவற்றால் எப்போதுமே தர இயலாது. பகலில் மட்டுமே கிடைக்கும் சூரிய ஒளி, பருவங்களில் மட்டுமே வீசும் காற்று எனப் பல குறைபாடுகளுடன் இவை உற்பத்தி செய்யும் மின்னாற்றலின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால் நிலக்கரி மின் உற்பத்தியோ உலக அளவில் நம்பகமான மின் உற்பத்தியாக உள்ளது.

இன்று உலக அளவில் ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக நிலக்கரி மின் உற்பத்தி உள்ளது. நிலக்கரி, எரிவாயு, டீசல் போன்ற எல்லா எரிபொருள்களையும் சேர்த்து இந்தியாவில் அனல் மின் நிலையங்கள் 2,36,000 மெகாவாட் திறனுடன் மின்னுற்பத்தி செய்து வருகின்றன. இதில் உள்ள இரண்டு லட்சத்து பத்தாயிரம் மெ.வா. திறன் கொண்ட நிலக்கரி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டால் நம் நாட்டின் தொழில்துறையும் விவசாயமும் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

உலக அளவில் ஒரு விவாதப் பொருளாக மாறிவிட்ட அனல் மின் உற்பத்தி இந்தியாவிலும் சிந்தனைகள் பலவற்றை உருவாக்கி உள்ளது. குறிப்பாக சாம்பல் மாசு என்பது மட்டுமே அனைவரின் மனதில் பதிந்துவிட்ட ஒரு சுற்றுச்சூழல் மாசு ஆகும். உண்மையில் இது தொழில்நுட்ப அளவில் முழுமையாக சரி செய்யக் கூடியதே. அதி திறன் கொண்ட மின் வடிகட்டிகள் சாம்பலை பெருமளவில் புகையிலிருந்து பிரித்து விடுகின்றன. கையாள்வதில் கவனக் குறைவு இல்லாதபோது புகையில் வெளியேறும் சாம்பல் மாசினை நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள்ளேயே நிறுத்துவது கடினமான செயல் அல்ல.

நைட்ரஸ் ஆக்சைடு உற்பத்தியைக் குறைப்பதற்கும் புகையில் இருந்து கந்தக ஆக்சைடை நீக்குவதற்குமான அமைப்புகள் தற்போது கட்டாயம் ஆக்கப்பட்டு அவற்றுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் கரியமில வாயு வெளிப்பாட்டை நம்மால் எதுவும் செய்ய இயலாது என்பதே உண்மை. இந்த ஒரு காரணத்துக்காகவே உலக அளவில் அனல் மின் உற்பத்தி பசுமை ஆதரவாளர்களால் எதிர்க்கப்பட்டு வருகின்றது. பசுமைக்குடில் வாயுவான கரியமில வாயுவைத் தவிர்க்க உடனடித் தீர்வு நம்மிடம் ஏதுமில்லை. மின் வாகனங்கள் கூட எங்கோ ஓரிடத்தில் கரியமில வாயுவின் வெளிப்பாட்டுக்குக் காரணமாகவே இருக்கின்றன.

பகலில் சூரிய மின்னுற்பத்தி மிகும் நேரத்தில் மின்பயன்பாடு கூடும்போது இது போன்ற விளைவுகளைக் குறைக்க இயலும். மேலும் தற்போதைய பசுமை உற்பத்தியில் உள்ள ஏற்ற இறக்கங்களால் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் தொழில்நுட்ப ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. ஏனெனில் எல்லா நிலக்கரி மின் நிலையங்களும் நிலையான உற்பத்தியை எதிர்நோக்கியே வடிவமைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாளும் பசுமை மின் உற்பத்தியை முழுமையாகப் பயன்படுத்தவேண்டி அனல் மின் நிலையங்களின் உற்பத்தியை அடிக்கடி ஏற்றவும் இறக்கவும் வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இதனால் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி கொதிகலனின் ஆயுளும் வெகுவாகக் குறைகின்றது.

இத்தகைய இடர்ப்பாடுகள் நீங்கி பசுமை மின் உற்பத்தியை ஒரே சீரான அளவில் செய்யும் நிலை ஏற்பட இன்னும் பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம். அது வரையிலும் நம்மால் அனல் மின் உற்பத்தியைக் குறைப்பது சாத்தியமற்றது. மேலும் பசுமை உற்பத்தி சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பதும் தவறான கணிப்பாகும். 660 மெ.வா. திறனுடைய மூன்று அலகுகள் (மொத்தம் 1980 மெ.வா) கொண்ட ஓர் அனல் மின் நிலையத்துக்கு 2,050 ஏக்கர் நிலம் தேவை. இதே அளவு நிலத்தில் சூரிய ஒளி மின் நிலையம் அமையும்போது அதில் நம்மால் 500 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்ய இயலும்.

மேலும் சூரியப்பலகைககளைப் பொருத்துவதற்கு நிழலற்ற இடம் வேண்டுவதால் அங்குள்ள மரங்கள் முழுமையாக நீக்கப்படவேண்டும். மின் உற்பத்திக்காக அந்த மரங்கள் வெளியிடும் ஆக்சிஜனை நாம் இழந்தே ஆகவேண்டும். அதே நேரம், தற்போது சுற்றுச்சூழல் அமைச்சக விதிகளின்படி, அனல் மின் நிலையங்களில் உள்ள கட்டடக் கூரைகளில் சூரியப் பலகைகள் கொண்டு பல மெகாவாட்டுகள் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும், மொத்த நிலத்தில் பத்து சதவீத அளவில் மரங்கள் நடப்பட்டு பசுமைப் போர்வையும் உருவாக்கப்படுகின்றது.

இருவித உற்பத்தியிலும் பல நிறை குறைகள் இருப்பினும் நம்முடைய இலக்கு நூறு சதவீத பசுமை மின் உற்பத்தியே. ஆயினும் நிலக்கரி அனல் மின் நிலையங்களின் தடையற்ற முழுமையான உற்பத்தி தற்போதைய நிலையில் நாட்டின் பொருளாதாரத்துக்கும் வேளாண் உற்பத்திக்கும் இன்றியமையாதது என்பது மறுக்கவியலா உண்மை.



Read in source website

 

கோவேந்தா்களை விடவும் பாவேந்தா்கள் வரலாற்றில் நிலைத்து வாழ்கிறாா்கள். எத்தனையோ மன்னா்களில் கரிகாலன், நெடுஞ்செழியன், இராசராசன், இராசேந்திரன் என மிகச் சில மன்னா்கள் மட்டுமே மக்கள் மனதில் நின்று நிலைபெறுகின்றனா். கபிலா் இல்லையென்றால் பாரியின் பெருமை வரலாற்றில் நிலைத்திருக்குமா என்பது கேள்விக்குறியே. இலக்கியப் படைப்பாளிகள் மக்கள் மனதுடன் பேசுகிறாா்கள். அதனால்தான் காலம் கடந்தும் வாழ்கிறாா்கள்.

கலை இலக்கியப் படைப்பாளிகள் தாங்கள் வாழும் சமூகத்தின், இனத்தின் முகமாக, ஆன்மாவாக விளங்குகிறாா்கள். ஒரு படைப்பாளி தான் வாழும் சமூகத்திற்கு, தன் இன மக்களுக்கு முழுமையாகத் தன்னை ஒப்படைத்துக் கொள்ளும்போதுதான் அப்படைப்பாளி மக்களின் அடையாளமாக, முகமாக மாற முடியும். ‘நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்’“ என்று பிரகடனம் செய்து அப்படியே வாழ்ந்தவா் பாரதியாா். பாரதிக்குப் பின் தமிழா்களின் முழுமையான முகமாக, அடையாளமாக விளங்கியவா் பாவேந்தா்.

கவிதை கவிஞனின் உள்ள வெளிப்பாடாக அமைந்தது. நல்லன போற்றியும், அல்லன தூற்றியும், சமுதாயச் சிக்கல்களை அலசி அவற்றின் தீா்வையும் மலரச் செய்வது கவிதை. மக்கள் மனங்களைத் தட்டி எழுப்பி அநீதிகளை இனங்கண்டு அவற்றை நீக்கும் வழிகளைக் காட்டிப் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தவல்லது கவிதை. மானுடத்தின் பெருமையையும் சமுதாய மறுமலா்ச்சிக்கு வித்திடும் கருத்துகளையும் மொழிநலம், இனநலம், பெண்மை நலம், உழைப்பாளா் நலம், உலக நலம் என்று அனைத்து நலன்களும் இம்மண்மீது மலா்ந்திட ஓயாமல் பாடிய புதுவைக் குயில் பாவேந்தா் பாரதிதாசன்.

மானிடத்தைப் போற்ற மறுப்பவன் தனக்கே பகைவன் ஆகிறான். வாழ்க்கையில் மானுட நேயத்தோடு இருப்பதுதான் வலிமையிலும் சிறந்த வலிமை என்கிறாா் பாவேந்தா்.

மானிடம் போற்ற மறுக்கும் - ஒரு

மானிடம் தன்னைத்தன் உயிரும்

வெறுக்கும்“

என்றும்

.... வாழ்வின்

வல்லமை மானிடத் தன்மை என்றே தோ்“

என்றும் அறிவுறுத்துகிறாா் பாவேந்தா்.

ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பா்

உதையப்ப ராகிவிட்டால் ஓா்நொடியில்

ஓடப்பா் உயரப்பா் எல்லாம் மாறி

ஒப்பப்பா் ஆய்விடுவா் உணரப்பாநீ“

என்ற வரிகளில், மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை விதைத்து, உழைக்கும் ஏழை மக்களைச் சுரண்டி வாழ்வோா்க்கு எதிரான போா்க்குரலும், குட்டக்குட்டக் குனிந்தே பழகிய மனிதா்களுக்கான விழிப்புணா்வும் இணைந்திருப்பதை உணரமுடிகிறது.

பிறா்க்கு அடிமைப்பட்டு மீளாத் துயரில் ஆழ்ந்த மக்களுக்காக ஓயாது சிந்திக்கும் அவா் மனம் அழகின் சிரிப்பில் விடை காண்கிறது.

ஆனைகள் முதலைக் கூட்டம்

ஆயிரம் கருங்குரங்கு

வானிலே காட்டி வந்த

வான்முகில் ஒன்றுகூடிப்

பானையில் ஊற்றுகின்ற

பதநீா் போல் குன்றில் மொய்க்கப்

போனது அடிமை நெஞ்சம்

புகைதல் போல் தோன்றும் குன்றம்!“

எனப் பாடுகிறாா்.

குன்றைத் தழுவும் மேகங்களின் கூட்டம் அடிமை நெஞ்சு புகைவதாகத் தெரிகிறது அவருக்கு. கூட்டில் இருந்து புறப்பட்ட புறாக்கள் எங்குச் சுற்றினாலும் மீண்டும் கூட்டுக்கே திரும்புவது கொத்தடிமைகளை நினைவூட்டுகிறது ஆசிரியருக்கு.

கூட்டமாய்ப் பறந்து போகும்

சுழற்றிய கூா்வாள் போலே

கூட்டினில் அடையும் வந்தே

கொத்தடிமைகள் போலே“

என்று மனம் வெதும்புகிறாா். இனத்தால் வேறுபட்டு மனிதா்கள் மேல்கீழ் என்று மடமையால் பிரிவுபட்டு இருத்தல் பாவேந்தருக்கு உடன்படாத ஒன்று. அப்படிப் பேதம் பாா்த்தால் மானுடம், மனிதம் என்ற சொற்களே பொருளிழந்து போகாதா என்கிறாா்.

மானிடம் என்றொரு வாளும் - அதை

வசத்தில் அடைத்திட்ட உன்னிரு தோளும்

வானும் வசப்பட வைக்கும் - இதில்

வைத்திடும் நம்பிக்கை வாழ்வைப் பெருக்கும்“

என்று மானுடத்தின் மீது வைக்கும் நம்பிக்கையானது வாழ்வை வளமுறச் செய்யும் என்கிறாா் பாவேந்தா்.

உடன் வாழ் மானிடப் பரப்பைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறாா். அந்த மானுடச் சமுத்திரத்தில் கலந்து கரைந்துவிட்டால் உலகம் ஒன்றாகும் என்கிறாா்.

அறிவை விரிவு செய் அகண்டம் ஆக்கு

விசாலப் பாா்வையால் விழுங்கு மக்களை

அணைத்துக்கொள் உன்னைச் சங்கமம் ஆக்கு

மானிடச் சமுத்திரம் நானென்று கூவு“

என்று மாந்தநேயம் பெருக்கெடுக்கப் பாடித் திளைக்கிறாா்.

உள்ளதைப் பேசு, ஒற்றுமை வெல்லும், சமமே அனைவரும் என இளையோா் ஆத்திசூடியிலும் இன்பம் முகிழ்க்க இசைக்கிறாா். உயா்ந்தவன், தாழ்ந்தவன் என்று பேசுபவா்கள் அறிவின் நினைவை இழந்தவா்கள் என்கிறாா்.

தூவென்று சாதிமதம் கான்று மிழ்ந்தால்

அந்தநொடியே நமது மிடிப றக்கும்“

என்ற வரிகளில் சாதிமதத்தின் மீதான தமது சீற்றச்சினத்தினை அனலாய்த் தெளிக்கிறாா் பாவேந்தா்.

பொதுமைச் சமுதாய விழைவு காண விரும்பிய பாவேந்தா் அங்குப் போா் இல்லை, தனியுடைமைக் கொடுமைகள் இல்லை, சாதி மதச் சழக்குகள் இல்லை, ஆணும் பெண்ணும் சமம், பெண் கல்வி மேம்பட்ட நிலை, தாய்மொழி தமிழ் ஏற்றம் பெற்றிருக்கும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையிருக்கும் என்கிறாா்.

பொது உடைமைக் கொள்கை

திசையெட்டும் சோ்ப்போம்

புனிதமோடதை எங்கள் உயிரென்று

காப்போம்”

ஏழை, பணக்காரருக்கு இதுவரை யாரும் கூறாத பொருள் கூறும் புரட்சிக்கவி,

தன்பொருட்டு வாழ்வானோா் ஏழை, மக்கள்

தம்பொருட்டு வாழ்வானோா் செல்வன்”

எனத் திட்டவட்டமாகப் பகுக்கிறாா். பிறருக்காக வாழ்பவா்களே உயிா் உள்ள மனிதா்கள். மற்றவா்கள் எல்லாம் செத்தவா்கள் என்ற விவேகானந்தரின் கூற்று இங்கு நோக்கத்தக்கது.

எனைஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்

இனம்ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்

தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்

செத்தொழியும் நாள் எனக்குத் திருநாள் ஆகும்

பனையளவு நலமேனும் தன்னலத்தைப்

பாா்ப்பானோா் மக்களிலே பதடி என்பான்“

என்று தன்னலம் கொண்டவரைப் பதடி என்று சாடுவதில் தெரிகிறது பாவேந்தரின் அறச்சினம்.

பாண்டியன் பரிசு என்னும் காப்பியத்தில் வீரப்பன் எனும் கதைமாந்தன் வழியாகத் தான் கட்டமைக்க விரும்பும் சமுதாயத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறாா். பெண்மையை உயா்வு செய்தல், புதுமைப் பெண்ணுக்கு இலக்கணம் எனப் பாரதி காட்டிய பாதையில் வலுவாகப் பயணித்தவா் பாரதிதாசன். ஆளுமைக்கான போட்டியில் ஆண் வென்றதிலிருந்து பெண் அடிமையாக்கப்பட்டாள். குடும்பம் என்ற அமைப்பினால் அக்கருத்து வலுப்பெற்றது. அச்சம், மடம், நாணம், பயிா்ப்பு என்ற வேலிகள் பாட வேறுபாடாக மாறிப் பாவையரை அடிமைகொள்ளச் செய்தன.

பெண்ணடிமை தீராவிட்டால்

மண்ணடிமை தீராது“

பெண்ணடிமை நிலவும் சமூகத்தில் ஆணுக்கும் உயா்வில்லை. மண்ணைவிட இழிவாகப் பெண்ணை எண்ணுவது நயன்மையாகுமா எனக் கேட்கிறாா்.

பெண்ணுக்குப் பேச்சுரிமை

வேண்டாம் என்கின்றீரோ?

மண்ணுக்குக் கேடாய் மதித்தீரோ

பெண்ணினத்தை?

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்

திருநாட்டில்

மண்ணடிமை தீா்ந்து வருதல்

முயற்கொம்பே

ஊமை என்று பெண்ணை

உரைக்கும் மட்டும் உள்ளடங்கும்

ஆமை நிலை தான் ஆடவா்க்கும் உண்டு“

என்று ஆணின் உரிமை மீறலையும், பெண்ணின் அடிமை நிலையையும் ஒருங்கே சுட்டுகிறாா்.

காலங்காலமாகப் பெண்கல்வி மறுக்கப்பட்ட நிலையிலும்கூடச் சங்ககாலப் பெண்பாற் புலவா்கள் நாற்பத்தி ஏழுபோ் இனங்காணப்பட்டனா். பெண்கள் கல்வி கற்றால்தான் வாழையடி வாழையாக வரும் சமுதாயம் வளம்பெறும் என்பதை,

கல்வியில்லாத பெண்கள்

களா்நிலம் அங்கே புல் விளைந்திடலாம்

நல்ல புதல்வா்கள் விளைவதில்லை“

என்று தெளிவாக்குகிறாா்.

பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என வள்ளுவப் பெருந்தகை பிறப்பிலே வேறுபாடுகள் இல்லை என நிறுவினாா். தீண்டும் மக்களின் அன்னை, தீண்டாரையும் பெற்றாளோ? ஈண்டிதை யாா் நம்புவாா் என்று சாதி மதங்களுக்குச் சாட்டையடி கொடுத்துப் பாடுகின்றாா் கவிஞா். எஞ்சாதிக்கு இவா் சாதி இழிவென்று சண்டையிட்டுப் பஞ்சாகிப் போனாரடி சகியே என்று சாதி ஆதிக்கத்தைச் சாடுகிறாா் பாவேந்தா்.

மொழியை வெறும் தகவல் பரிமாற்றக் கருவி என்று கூறும் வறட்டுப் பாா்வை புரட்சிக் கவியிடம் இல்லை.

இனத்தைச் செய்தது மொழிதான்

இனத்தின் மனத்தைச் செய்தது மொழிதான்“

என்று ஓா் இனம் உருவாக முதல் தேவை மொழிதான் என்கிறாா்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு”

என்று பாவேந்தா் பாடியது வெறும் மொழிப் பாராட்டன்று. அது ஒரு கோட்பாடு.

மனிதநேயச் சிந்தனைகளை, மூடத்தனத்தின் முடை நாற்றத்தைக் காலங்காலமாக எல்லாக் கவிஞா்களும் சாடிக்கொண்டுதான் இருக்கிறாா்கள். மக்களைப் பாடிய பாரதியின் தாக்கம், பாரதியின் எளிய நடை, பெண்ணுரிமை, பொதுவுடைமை, தமிழா் எழுச்சி எனப் பன்முகச் சங்கமிப்பாகவும், புதிய வாா்ப்பாகவும் உருவானவா்தான் பாரதிதாசன். சாதி ஒழித்தல் ஒன்று, நல்ல தமிழ் வளா்த்தல் மற்றொன்று. இதில் பாதியை நாடு மறந்தால் மறுபாதி துலங்குவதில்லையாம் என்று எனக்குப் பாரதி சொல்லித் தந்தாா் என்றாா் புரட்சிக்கவி. மகாகவியின் தடம் நடந்து இப்புவியைப் புதுப்பாா்வையில் நோக்கிய பாவேந்தா் பாரதிதாசனாரின் பிறந்த நாளில் மட்டும் அவரைப் போற்றாது முப்பொழுதும் அவரைப் போற்றுதல் நன்றே. புரட்சிக்கவியில் பூத்த மலா்கள் நாளும் நறுமணம் வீசட்டும்!

இன்று (ஏப். 29) பாவேந்தா் பாரதிதாசன் 132-ஆவது பிறந்தநாள்.

 

கட்டுரையாளா்: இயக்குநா், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்.



Read in source website

'தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்' என்ற தேன் சுவை சொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’. பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார்.

தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் பாரதிதாசன். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாகித்ய அகாதெமி விருது’ பெற்ற பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள் பல.  

பிறப்பு: பாவேந்தர் பாரதிதாசன், புதுவையில், 1891 - ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி (புதன்) இரவு 10.15 மணிக்கு புதுவையில் வணிகராக இருந்த கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார். உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள்.

கல்வி: பாரதிதாசன், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் அகவையிலேயே சுப்புரத்தினத்தைப் பெற்றதால் புகழ் பெற்றது புதுவை.

இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.

பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுபடுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சி பெற்றார்.

1908 ஆண்டில் புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார்.

ஆசிரியர் பணி: 1909 - கல்வி அதிகாரி உதவியால் காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப் பணி ஏற்றார். மிகச்சிறிய வயதிலேயே தமிழ்ப் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார். அப்போது பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறைபிடித்த அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்ந்தார். 

1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டு காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.

இல்லற வாழ்க்கை: பாரதிதாசன், தமிழாசிரியராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920 ஆம் ஆண்டில் புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி 1921 ஆம் ஆண்டில் தலைமகள் சரசுவதி பிறந்தார். இவருக்குப் பிறகு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928 ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.

1922 ஆம் ஆண்டு கே.சு. பாரதிதாசன் என்ற புனைப்பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன் "துய்ப்ளேச்சு", புதுவை கலைமகள், தேசோபகாரி, தேச பக்தன், ஆனந்த போதினி, சுதேசமித்திரன் இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதி வந்தார்.

பாரதியார் சந்திப்பு: தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருந்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற, பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் 'கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன்' என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

நண்பனின் திருமண நிகழ்வினபோது பாரதியாரை நேரில் சந்தித்த பாரதிதாசன், பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.

தொழில் வாழ்க்கை: பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார், அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்து அவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அந்த நேரத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைப்படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954 ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

1910 - வ.உ.சி.யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர் - பாரதியார், வ.வே.சு., பர்.வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தார். தம் பெற்றோர்க்குத் தெரியாமல் மேல் துண்டில் வடித்த சோறு கொடுத்தார். ஓரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தந்தார். காவலர்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவினார். பாரதியாரின் "இந்தியா" ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தந்தார். ஆசு ஆட்சித் தலைவரைச் (கலெக்டரைச்) சுட்டது (துப்பாக்கி) பாவேந்தர் அனுப்பியதே.

தந்தை மறைவு: 23.1.1916 ஆம் ஆண்டு கனகசபை முதலியார் இயற்கை எய்தினார்.

நாளிதழ் ஆசிரியர் பணி: 1930 டிசம்பர் 10ல் புதுவை முரசு கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றார்.

படைப்புகள்:  எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார்.

அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:

‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.

இறப்பு: எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன், 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி சென்னை பொது மருத்துவமனையில் இயற்கை எய்தினார். மறுநாள் புதுவைக் கடற்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

விருதுகள்: பாரதிதாசனுக்கு பெரியார், 'புரட்சி கவிஞர்' என்ற பட்டமும், 1946 ஜூலை 29 இல் அண்ணா, 'புரட்சிக்கவி" என்ற பட்டமும் ரூ.25,000 வழங்கியும்  கௌரவித்தனர். 

பாரதிதாசன் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு அவரது மரணத்திற்குப் பின், 1970 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.

இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினால் 1990ல் பொது உடைமையாக்கப்பட்டன. தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் ​​நிறுவப்பட்டது.

1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.

1968 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது சென்னைக் கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப் பெற்றது. 

1971, ஏப்ரல் 29 - பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு, 95 ஆம் எண் கொண்ட இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிப் பாவலர் நினைவு நூலகம், காட்சிக் கூடம் நடந்து வருகிறது.

1972, ஏப்ரல் 29 - பாவேந்தரின் முழு உருவச் சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்:

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த

தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

பாரதிதாசனின் படைப்புகள்:

பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)

• பாண்டியன் பரிசு (காப்பியம்)

• எதிர்பாராத முத்தம் (காப்பியம்)

• குறிஞ்சித்திட்டு (காப்பியம்)

• குடும்ப விளக்கு (கவிதை நூல்)

• இருண்ட வீடு (கவிதை நூல்)

• அழகின் சிரிப்பு (கவிதை நூல்)

• தமிழ் இயக்கம் (கவிதை நூல்)

• இசையமுது (கவிதை நூல்)

• அகத்தியன் விட்ட புதுக்கரடி

• பாரதிதாசன் பதிப்பகம் அமைதி

• செந்தமிழ் நிலையம்,இசையமுதம் (முதல் பாகம்)

• பாரதசக்தி நிலையம் (1944)

• இசையமுதம் (இரண்டாம் பாகம்)

• பாரதசக்தி நிலையம் (1952) இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்)

• குடியரசுப் பதிப்பகம் (1939)

• இருண்ட வீடு,முத்தமிழ் நிலையம் இளைஞர் இலக்கியம்

• பாரி நிலையம் (1967) உரிமைக் கொண்டாட்டமா?

• குயில் (1948) எதிர்பாராத முத்தம்

• வானம்பாடி நூற்பதிப்புக் கழகம் (1941)

• எது பழிப்பு

• குயில் (1948) கடவுளைக் கண்டீர்!

• குயில் (1948)

• கண்ணகி புரட்சிக் காப்பியம்

• அன்பு நூலகம் (1962) கதர் ராட்டினப் பாட்டு

• காசி ஈ.லட்சுமண பிரசாத் (1930)

• கற்புக் காப்பியம்

• குயில் (1960)

• காதல் நினைவுகள்,செந்தமிழ் நிலையம் (1969)

• காதல் பாடல்கள்,பூம்புகார் பிரசுரம் (1977)

• காதலா - கடமையா?,பாரதிதாசன் பதிப்பகம் (1948)

• குடும்ப விளக்கு (ஒரு நாள் நிகழ்ச்சி)பாரதிதாசன் பதிப்பகம் (1942)

• குடும்ப விளக்கு (திருமணம்)பாரதிதாசன் பதிப்பகம் (1950)

• குடும்ப விளக்கு (மக்கட் பேறு)பாரதிதாசன் பதிப்பகம் (1950)

• குடும்ப விளக்கு (விருந்தோம்பல்)

• முல்லைப் பதிப்பகம் (1944)

• குடும்ப விளக்கு (முதியோர் காதல்)

• பாரதிதாசன் பதிப்பகம் (1950)

• குயில் பாடல்கள்பூம்புகார் பிரசுரம் (1977)

• குறிஞ்சித் திட்டு,பாரி நிலையம்

• சஞ்சீவி பர்வதத்தின் சாரல்,பாரதிதாசன் பதிப்பகம் (1949)

• சேர தாண்டவம் (நாடகம்),பாரதிதாசன் பதிப்பகம் (1954)

• தமிழச்சியின் கத்தி,பாரதிதாசன் பதிப்பகம் (1949)

• தமிழியக்கம்,செந்தமிழ் நிலையம் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு

• திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்

• தேனருவி இசைப் பாடல்கள்

• பாரதிதாசன் பதிப்பகம் (1955)

• நல்ல தீர்ப்பு (நாடகம்),முல்லைப் பதிப்பகம் (1944)

• நீலவண்ணன் புறப்பாடு

• பாண்டியன் பரிசு

• முல்லைப் பதிப்பகம் (1943) பாரதிதாசன் ஆத்திசூடி

• பாரதிதாசன் கதைகள்முரசொலிப் பதிப்பகம் (1957)

• பாரதிதாசன் கவிதைகள்,கடலூர் டி.எஸ்.குஞ்சிதம் (1938)

• பாரதிதாசன் கவிதைககள் (முதற்பாகம்)

• குடியரசுப் பதிப்பகம் (1944) பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் பாகம்)

• பாரதிதாசன் பதிப்பகம் (1952)

• பாரதிதாசன் நாடகங்கள்

• பாரி நிலையம் (1959) பாரதிதாசன் பன்மணித் திரள்

• முத்தமிழ்ச் செல்வி அச்சகம் (1964)

• பிசிராந்தையார், பாரி நிலையம் (1967)

• புரட்சிக் கவி,துரைராசு வெளியீடு (1937)

• பெண்கள் விடுதலை

• பொங்கல் வாழ்த்துக் குவியல்,பாரதிதாசன் பதிப்பகம் (1954)

• மணிமேகலை வெண்பா

• அன்பு நூலகம் (1962) மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது

• முல்லைக் காடு,காசி ஈ.லட்சுமண பிரசாத் (1926)

• கலை மன்றம் (1955) விடுதலை வேட்கை,

• உயிரின் இயற்கை,மன்றம் வெளியீடு (1948)

• வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும்,குயில் புதுவை (1959)

• தமிழுக்கு அமுதென்று பேர்

• வேங்கையே எழுக ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது

• புகழ் மலர்கள் நாள் மலர்கள்

• தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்)பூம்புகார் பிரசுரம் (1978)

[ஏப்ரல் 29 - பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்]



Read in source website

இஸ்லாமியர்களின் மூன்றாவது கடமையான ஒரு மாத நோன்பு ரமலான் மாதத்தில் நோற்கப்படுகிறது. இவ்வாண்டு நோன்பு கடந்த ஏப்ரல் 2ல் தொடங்கி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

"நீங்கள் பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி கோருங்கள்' என்று எழில் மறை குர்ஆனின் 2.45 -ஆவது வசனம் அறிவுறுத்துகிறது. இவ்வசனத்தில் வரும் பொறுமை என்பது நோன்பைக் குறிப்பதாக குர்ஆன் விரிவுரையாளர் குர் து பீ (ரஹ்) கூறுகிறார். 

இதனாலேயே நோன்பு கடமையான ரமலான் மாதத்திற்குப் "பொறுமையின் மாதம்' என்ற சிறப்பு பெயரும் உண்டு. "நோன்பு, பொறுமையின் சரி பாதி' என்று சாந்த நபி (ஸல்) அவர்கள் சாற்றியதைத் திர்மிதீ, அஹமது முதலிய நூல்களில் காணலாம். 

பொறுமை, பாவங்களிலிருந்து விலகிடச் செய்யும். நடைமுறையில் பொறுமையற்றோர், ஒரு கோபத்தில் கொலை முதலிய கொடிய பாவங்களைச் செய்துவிட்டு பரிதவிப்பதைப் பாரில் காண்கிறோம், பத்திரிகைகளில் படிக்கிறோம். 

அதனால்தான் பொறுமை, வெறுப்புக்குரியன செய்யாமல் விலகி, இலகுவாய் பொறுப்புடன் செயல்பட வைத்து, நாடிய நன்மை கை கூடச் செய்யும். 

பொறுமை இரு வகைப்படும். 1. சோதனை ஏற்படும் பொழுது பொறுமை காத்தல். அது அழகானது. 2. இறைவன் தடுத்ததை விட்டும் தற்காத்துக் கொள்ளுதல் அழகினும் அழகானது. 

"உங்களுக்கு முன்னிருந்தோர் மீது கடமையாக்கப்பட்டது போல, நோன்பு உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் இறையச்சம் உடையவர் ஆகலாம்' என்று 2.183 -ஆவது வசனம் அறிவிக்கிறது. இவ்வசனத்தில் வரும் உங்களுக்கு முன்னிருந்தோர் என்பது வேதக்காரர்களைக் குறிக்கிறது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் விளக்கம் தப்ஸீர் இப்னு கதீரில் உள்ளது. இங்கு விளக்கப்படும் வேதக்காரர்கள் என்பது முன்னருள்ள நபிமார்களின் நற்போதனைகளைப் பின்பற்றியோரைக் குறிப்பிடுகிறது. 

உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் மீதும் அல்லாஹ் ரமலானுடைய மாத நோன்பைக் கடமையாக்கி இருந்தான் என்று இப்னு உமர் (ரலி) இயம்புவது தப்ஸீர் இப்னு ஹாத்தியில் உள்ளது. 

நோன்பு நோற்பதால் உள்ளம் தூய்மை பெறுகிறது. அற்ப குணங்கள் அகலுகின்றன. தாழ்ந்த பண்புகள் வீழ்கின்றன. இவையே இறை அச்சத்தின் உச்ச பண்புகள். "நோன்பு கடமை எண்ணப்படும் நாள்களில் மட்டுமே ஆகும்' என்ற 2.184-ஆவது வசனப்படி நோன்பு ஆண்டு முழுவதும் கடமையல்ல. குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே கடமை. நூஹ் நபி காலத்தில் முற்கால மக்களுக்கு இருந்ததைப் போல மாதம் மூன்று நாள்கள் நோன்பு இஸ்லாத்தின் துவக்க கால கடமையாக இருந்தது. ரமலான் மாத நோன்பு கடமையானதும் இந்நோன்பு கடமை அல்ல என்று ஆனது. 

மாநபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த பின் மாதத்தில் மூன்று நாள்களும், முஹர்ரம் பிறை பத்தில் ஆசுரா நாளிலும் நோன்பு நோற்றார்கள். ரமலான் மாதம் குர்ஆன் அருளப்பெற்ற மாதம். 

அம்மாதத்தை அடைந்தவர் நோன்பு நோற்கட்டும் என்ற 2.185 -ஆவது வசனம் அருளப் பெற்றதும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நோன்பைக் கட்டாயக் கடமை ஆக்கினார்கள். நூல் - தப்ஸீர் இப்னு கதீர். நோன்பு திறப்பதைத் தாமதப்படுத்தக் கூடாது. சஹர் உணவை இறுதி நேரம் வரை  உண்ண உத்தம நபி (ஸல்) அவர்கள் உரைத்ததை அறிவிக்கிறார் அபூதர் (ரலி). நூல்- அஹ்மது. ஒரு நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் வேண்டும் இறைவேண்டல் மறுக்கப்படாது. 

எனவே கடமையான நோன்பை இறை அச்சத்தோடு நோற்று எண்ணிய நல்லெண்ணங்கள் நிறைவேறி, இறையருளால் இனிதே வாழ்வோம்! 



Read in source website

அனல் மின்நிலையங்களின் நிலக்கரிக் கையிருப்பு குறைந்ததன் காரணமாக உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, மஹாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்ட எதிர்பாராத மின்வெட்டுகள், மேலும் இந்நிலை தொடரக்கூடுமோ என்ற அச்சத்தை மக்களிடமும் தொழில் துறையினரிடமும் ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மொத்தமுள்ள 173 அனல் மின்நிலையங்களில் 100-க்கும் மேற்பட்டவற்றில் தேவையான நிலக்கரிக் கையிருப்பு 25%-க்கும் குறைவாகவே உள்ளது. 50-க்கும் மேற்பட்ட மின்நிலையங்களில் இந்த அளவு 10%-க்கும் குறைவாக உள்ளது. இதையடுத்து, மாநிலங்கள் தங்களது மின்னுற்பத்திக்காக ‘கோல் இந்தியா’ நிறுவனத்திடம் கூடுதல் நிலக்கரியை ஒதுக்குமாறு கோரிவருகின்றன.



Read in source website

‘உலகம் உண்ண உண், உடுக்க உடுப்பாய்’ என்று உலகு தழுவிய பார்வை கொண்ட பாவேந்தர் பாரதிதாசன், யாவருக்குமான கவிதைகளைப் படைத்தவர். தமிழ், தமிழர், திராவிடம், தேசியம், உலகப் பொதுமை என்பதாக அமைந்த அவர் கவிதைகளில் மானுடத்தின் மகத்துவமே ஒளிபெற்றுத் திகழ்கிறது.

வடமொழியை, இந்தியை, ஆரியத்தை எதிர்த்துப் பாடப்பட்ட அவரின் கவிதைகளைக் கொண்டே அவரது கவிதை எல்லை குறுக்கப்பட்டுவிட்டது. பேராசிரியர் தமிழவன் குறிப்பிடுவதைப் போல் பாரதிதாசன் தன் கவித் திறத்தால், அழகியலால், தமிழ் மரபின் வேரில் கிளைவிட்டு நிற்கும் தன்மையால், உலகக் கவிஞராகக் கருதப்பட வேண்டியவர்; ஆனால், நமது தமிழ் ஆய்வுக் களங்கள் பாரதிதாசனை வேறு புதிய தளங்களில் காணும் முயற்சிகளில் ஈடுபடவில்லை. இக்கூற்றின் அடிப்படையில் காண்கையில், பாரதிதாசனின் கவிதைப் பரப்பைத் தமிழ், திராவிடம், சுயமரியாதைச் சிந்தனைகள் என்று சுருக்கிக் காணும் தன்மையே நம்மிடம் நிறைந்திருப்பதை உணரலாம்.

பாரதிதாசன் அழகியல் நாட்டம் கொண்டவர். சங்க மரபின் வடிவான அகம் - புறம் என்ற கட்டமைப்பில், திணைப் பண்பில் தம் கவிதைகளைப் புது வடிவம் பெறச் செய்தவர். ‘உன்கதிர், இருட்பலாவை உரித்து ஒளிச்சுளை யூட்டிற்றே’ என்று பாடிய ‘அழகின் சிரிப்’பே அதற்குச் சான்று. அவரது குறுங்காவியங்கள் யாவற்றிலும் தமிழை உயிராக, உயிர் வளர்க்கும் அமுதாக, அந்த உயிரே தானாக நின்றவர்.

ஒடுக்கப்பட்டோருக்கான உரிமை முழக்கத்தைக் காதல் கவிதைகளிலும் பாடியவர். ‘கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம், கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ’ என்று பாடும்போது, அவரது புலனுட்பமும் யாவற்றிலும் தேடுகின்ற எளியவர்களின் முகமும் நமக்குத் தெளிவுறும். தொடக்கத்தில் இறையுணர்வு கொண்டு துதிப்பாடல்களையும் பாடியுள்ள பாரதிதாசன், பின்னாட்களில் பெரியார் தொடர்பும் சுயமரியாதைச் சிந்தனை எழுச்சியும் பெற்ற பிறகு, தன் கவிதைகளில் முற்போக்கு அழகியல் கோட்பாட்டைக் கொண்டவராகிறார்.

பொய்மை மயக்கங்களைத் தகர்த்தெறியும் கவிதைகளைப் படைக்கிறார். தமிழியக்கம், திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் என்னும் மூன்றும் அவரது கவிதைச் செயல்பாட்டுக்கான களங்களாகின்றன. தன் காலத்தின் மடமைகளை, மூடத்தனங்களை, அறிவீனங்களைக் களையும் பொறுப்புடன் தன் கவிதைகளைப் படைக்கிறார். தன் மொழிக்கும் அம்மொழி பேசும் மக்களுக்கும் இடர் தரும் எதையும் எதிர்க்கும் படைக் கருவியாகத் தமிழையே காண்கிறார்.

‘சமூகத்தில் தாழ்வென்றும் உயர்வென்றும் பேதம் கொள்வதால் மனிதர்களிடம் இன்ப வாழ்வு எப்படி உண்டாகும்’ என்ற கேள்வி அவரிடம் எழுகின்றது.

‘அற்பத் தீண்டாதார் என்னும்

அவரும் பிறரும் ஓர்தாய்

கர்ப்பத்தில் வந்தாரன்றோ - சகியே

கர்ப்பத்தில் வந்தாரன்றோ?’

என்ற வரிகளில், சித்தர்களின் கலகக் குரலையும் பின் வந்த உத்திர நல்லூர் நங்கையின் சாதிகளற்ற மானுடச் சிந்தனையையும் கொண்ட நம் மரபின் பண்பாட்டுத் தொடர்ச்சியைக் கொண்டவராகிறார். வறுமை, அறியாமை, மூடநம்பிக்கை, சமயக் காழ்ப்பு, சாதிச் செருக்கு எனச் சமூகப் பிணிகள் அத்தனைக்கும் காரணங்களைக் கவிதைவழியாகச் சமூகத்துக்கு எடுத்துரைத்திடும் அவரது எளிய உணர்ச்சிப் பெருக்கே அவரது கவித்துவத்தைப் பாதித்தது என்றும் விமர்சனம் வைக்கப்படுவதுண்டு. என்றாலும், அந்த உணர்ச்சிப் பெருக்கே அவர் கவிதையின் தனிச் சாயலாக இருந்தது.

தமிழ்க் காதலின் தகைமையைப் பேசுகின்றபோது, இளையோரின் காதலில் ‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்/ மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்’ என்று பாடும் அதே வேளையில், காய்ந்த புற்கட்டே அவள் உடம்பு; அவள் இருக்கிறாள் என்பதே இன்பத்தை நல்கும் என்று முதியோர் காதலையும் பாடுகின்றார். சிலையழகு என்று காணும் கவிக்கு, குழிகொண்ட கண்களில் காதலில் பேரின்பத்தை நல்கும் அன்பைச் சொல்லவும் இயல்கிறது.

பெண்ணே குடும்பத்தின் யாவும் ஆனவள் என்று சொல்லி அவளைக் குடும்ப விளக்காகக் காணும் பாரதிதாசன், அவள் அடுக்களையிலிருந்து விடுபட வேண்டும். சமைக்கும் கடமை தனக்குமானது என்று ஓர் ஆண் உணர வேண்டும். அவ்வாறு உணரச் செய்தல் பெண் கல்வியாலே சாத்தியமாகும் என்று எழுதுகிறார். ஒரு பெண் கல்வி கற்றால், குடும்பத்தைப் பல்கலைக்கழகமாக மாற்றுவாள் என்றும், இந்த வையகம் அவளால் பேதமை அற்றிடும் என்றும் பெருநம்பிக்கை கொண்டிருந்தார். ஆணுக்கு அறிவு புகட்டுதல், அவனது சமூகக் கடமைகளை, அவனது அறவொழுக்கத்தைச் சுட்டிக்காட்டுதல் போன்ற பண்புகள் பெண்ணுக்கே இயலும். அப்பண்புகளை அவள் பெறுவது கல்வியால்தான். இச்சமூகம் எழுச்சி பெறப் பெண் விடுதலையே அடித்தளமிடும். பெண் விடுதலையே இந்த மண்ணின் விடுதலை என்று பாடுகிறார்.

தன்னலமற்ற தூய தொண்டுள்ளத்தை, அன்புள்ளத்தை, உலக மக்களெல்லாம் ஒன்றெனக் காண்கிற தாயுள்ளம் வேண்டிய அவரது கவிதைகள், ‘உடைமை மக்களுக்குப் பொது, புவியை நடத்துப் பொதுவில் நடத்து!’ என்று பொதுவுடைமை பேசின.

‘உழைப்போர் உதிர்த்த வியர்வையின் ஒவ்வொரு துளியிலும் கண்டேன் இவ்வுலகுழைப்பவர்க் குரியதென்பதையே’ என்கிறார் பாரதிதாசன். இந்தப் புவியை வளர்ச்சியெனும் பாதையில் இட்டுச்செல்லத் தம் உழைப்பை நல்கிய எளியோருக்குத்தான் இவ்வுலகம் உரியது என்கிறது அவரது கவியுள்ளம். ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற பாரதியின் குரலுக்கு பாரதிதாசனின் எல்லோருக்கும் எல்லாமும் வழங்குகிற சமூகத்தின் உயிர்ப்பு விடையாகிறது. பாரதிக்கு பாரத தேசம் என்கிற பெரும் பரப்பே, ஆன்மிக வழிபட்ட தேடலே கவிதைக்கான களமாக இருக்கையில், பாரதிதாசனுக்குத் தமிழியக்கமும் பொதுவுடைமையும் கருப்பொருள்களாகின.

‘எளிமையினால் ஒரு தமிழன் கல்வி இல்லை யென்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்!’ என்று எல்லோருக்குமான கல்வி வாய்க்கும் கனவும், அதன்வழி பிறக்கும் சமூகம் அறிவுடைச் சமூகமாகத் திகழும் என்ற முனைப்பும் கொண்ட பாரதிதாசன், நல்லறிவற்ற சான்றோரின்றி நாடு சிறக்காது என்றார்.

பாவேந்தருக்குக் கனவு, லட்சியம் யாவும் வேறுபாடுகளற்ற, சமத்துவமிக்க, எல்லோருக்கும் எல்லாமும் வாய்க்கப் பெறுகின்ற சமூகம்தான். பொதுவுடைமைக் கொள்கையைத் தம் உயிரென்று காக்கின்ற சமூகம். சித்திரச் சோலைகளை உருவாக்க இப்பாரினில் நம் முன் ரத்தம் சொரிந்த தோழர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் சமூகம்.

‘எல்லார்க்கும் தேசம்; எல்லார்க்கும் உடைமை எலாம்

எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!

எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக!

எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக

வல்லார்க்கும் மற்றுள்ள செல்வர்க்கும் நாட்டுடைமை

வாய்க்கரிசி என்னும் மனப்பான்மை போயொழிக;

வில்லார்க்கும் நல்ல நுதல் மாதர் எல்லார்க்கும்

விடுதலையாம் என்றே மணிமுரசம் ஆர்ப்பீரே!’

இதுவே பாரதிதாசனின் லட்சிய நோக்காக இருந்தது. யாவையும் தனியார்மயமாகி எளியோர் பிழைக்கக் கதியற்று நிற்கும் இந்த உலகமயச் சூழலில் பாவேந்தரின் கனவுகள் பேசப்பட வேண்டியவை.

- கவிதா நல்லதம்பி, உதவிப் பேராசிரியர்.

தொடர்புக்கு: janagapriya84@gmail.com

பாரதிதாசன் பிறந்த நாள்: ஏப்ரல் 29



Read in source website

நகர்ப்புற உள்ளாட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கான ஒருநாள் பயிற்சி முகாம்கள் நடைபெற்றுள்ளன. மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள் மற்றும் நகராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஆகியோருக்குத் தனியாக ஒரு நாளிலும், பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கு மற்றொரு நாளிலும் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகளின் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் நடந்தேறிய வரவேற்கத்தக்க நிகழ்வுகள் இவை.

முதலமைச்சர் இம்முகாம்களில் ஆற்றிய உரைகள் தனிக் கவனம் பெறுகின்றன. சென்னை மாநகர மேயராகப் பணியாற்றியதன் மூலம், தான் பெற்ற அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்துகொண்டதுடன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எப்படியெல்லாம் பணியாற்ற வேண்டும், எப்படியெல்லாம் பணியாற்றினால் மக்களின் நன்மதிப்பைப் பெற முடியும் என்ற ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். அவ்வுரைகள், உள்ளாட்சிமீது அவர் கொண்டிருக்கும் பிணைப்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தின. புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவராகச் சிறப்பாகப் பணியாற்றியதுடன், எல்லாக் காலத்திலும் மக்களோடு நெருக்கமாகப் பழகிவருபவர், உள்ளூர் நிர்வாகம், மக்கள் பிரச்சினைகள் ஆகியவற்றையும் நன்கு அறிந்தவர் அமைச்சர் நேரு. சென்னை மேயராகப் பணியாற்றி மக்கள் அன்பைப் பெற்றவர் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆலந்தூர் நகராட்சித் தலைவராகப் பணியாற்றியவர் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி. இந்த அனுபவசாலிகள் எல்லாம் இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டு, உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகத் தாங்கள் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன் பயனுள்ள ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்.



Read in source website