DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 29-03-2023

திருச்சி: திருச்சி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கான விரிவான பொது போக்குவரத்து திட்டம் (சி.எம்.பி) குறித்த ஆய்வறிக்கை மாமன்ற ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. அப்போது, இத்திட்டம் தொடர்பாக தனியார் நிறுவன அலுவலர் அழகப்பன் விளக்கமளித்து கூறியதாவது: திருச்சி மாநகருக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தேவையான பொதுப் போக்குவரத்து திட்டம் குறித்த 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை மூலமாகவே, திருச்சிக்கான மெட்ரோ உள்ளிட்ட முக்கிய திட்டங்களை கொண்டு வர முடியும்.

கடந்த ஒரு வருடமாக திருச்சி மாநகரம் மட்டுமின்றி அருகிலுள்ள நகரம், ஊராட்சிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 22 சதவீதம் பேர் பொதுப் போக்குவரத்துகளில் ஒன்றான மாநகர பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். இந்தியாவிலுள்ள மற்ற மாநகராட்சிகளை ஒப்பிடும்போது, திருச்சியில் பொதுபோக்குவரத்து அதிகமாக உள்ளது. குறைந்தபட்சம் நாள்தோறும் 6.41 கி.மீ தொலைவுக்கு பேருந்துகளை சராசரியாக பயன்படுத்துகின்றனர். இதுதவிர 11 சதவீதம் பேர் பாதசாரிகளாகவும், 4 சதவீதம் பேர் சைக்கிளிலும், 41 சதவீதம் பேர் இருசக்கர வாகனத்திலும், 11 சதவீதம் பேர் காரிலும் செல்கின்றனர். மாநகர சாலைகளில் சராசரியாக 26 கி.மீ சராசரி வேகத்தில் பயணிக்க முடிகிறது. மற்ற நகரங்களை ஒப்பிடுகையில், இதுவும் சிறப்பாகவே இருக்கிறது.

இவை தவிர, மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்த திருச்சியில் 68 கி.மீ.க்கு தேவை உள்ளது. இதனை 3 வழித்தடங்களாக பிரித்துள்ளோம். சமயபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், தில்லைநகர் வழியாக வயலூர் வரை 18.7 கி.மீ தொலைவுக்கு ஒரு வழித்தடம் அமைக்கப்படும். துவாக்குடியிலிருந்து திருவெறும்பூர், பால்பண்ணை, மத்திய பேருந்து நிலையம் வழியாக பஞ்சப்பூர் வரை 26 கி.மீ தொலைவுக்கு இரண்டாவது வழித்தடம் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்ததாக ஜங்சனிலிருந்து பஞ்சப்பூர், ஏர்போர்ட், புதுக்கோட்டை சாலை வழியாக மாத்தூர் பகுதியிலுள்ள ரிங்ரோடு வரை 23.3 கி.மீ தொலைவுக்கு ஒரு வழித்தடம் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவற்றில் எங்கெங்கு நிறுத்தங்கள் அமையும், எந்த வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்பது குறித்து, அடுத்து நடைபெறக்கூடிய விரிவான திட்ட அறிக்கையின்போது தெரியவரும்.

இவைதவிர, மாநகரில் இணைப்பு சாலைகள் இல்லாததால் பல கி.மீ தொலைவுக்கு சுற்றி வரக்கூடிய 17 இடங்களை கண்டறிந்து, அவற்றை இணைக்க பரிந்துரை அளித்துள்ளோம். மேலும் பாதசாரிகளின் பாதுகாப்பான பயணத்துக்காக 66 கி.மீ தொலைவுக்கு நடைபாதை, ஜங்சன் உள்ளிட்ட 9 இடங்களில் நடை மேம்பாலம், சப்வே அமைக்க வேண்டும். சரக்கு போக்குவரத்தை கையாள பிராட்டியூர், துவாக்குடி, குமாரமங்கலம், காந்தி மார்க்கெட் ஆகிய 4 இடங்களில் சிறப்பு வளாகம் அமைக்க வேண்டும். நகர் பகுதியில் 7 இடங்களில் ஸ்மார்ட் சிக்னல் அமைக்க வேண்டும். 18 இடங்களில் சாலை சந்திப்புகளை மேம்படுத்த வேண்டும். 4 இடங்களில் மல்டிலெவல் பார்க்கிங் அடுத்த10 ஆண்டுகளுக்குள் கட்டப்பட வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் திருச்சியின் பொதுப் போக்குவரத்து 40 சதவீதமாக உயரும் என்றார்.

மேயர் அன்பழகன் பேசும்போது, ‘இந்த ஆய்வறிக்கையை மாநில அரசு மூலமாக மத்திய அரசுக்கு அனுப்பி நிதி பெற திட்டமிட்டுள்ளோம்' என்றார். ஆணையர் ஆர்.வைத்திநாதன் பேசும்போது, ‘ஆரம்பத்தில் சமயபுரத்திலிருந்து காவிரி பாலம் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வரை மட்டுமே மெட்ரோ வழித்தடத்துக்கு ஆய்வு செய்தனர். அமைச்சர் கே.என்.நேரு அதை ஏற்கவில்லை. மதுரை, கோவையைக் காட்டிலும் திருச்சியில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் அதிகமாக உள்ளனர். எனவே சில வழித்தடங்களில் ஆய்வு செய்ய அமைச்சர் அறிவுறுத்தினார். அதன்படி 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியாது. பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்படும்' என்றார்.



Read in source website

சென்னை: விபத்துகளில் மரணம் அடையும் வெளி மாநிலத் தொழிலாளர்களின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 29) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் பதில் அளித்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிவிப்புகளின் விவரம்:

> 8 அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக்கொள்ள ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

> புலம் பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்தினால் உயிர் இழக்க நேரிட்டால் அவர்களின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல நிதியுதவி வழங்கப்படும்.

> ரூ.18.70 கோடியில் 27 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் புதுப்பிக்கப்படும்.

> ரூ.1.23 கோடியில் அயனாவரம் ESI மருத்துவமனையில் புதிய பட்டயப்படிப்புகள் துவங்கப்படும்.

> கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4.74 கோடி செலவில் திறன் பயிற்சி வழங்கப்படும்.



Read in source website

புதுச்சேரி: சிறுதானிய ஆண்டு என்பதால் புதுச்சேரி ரேஷன் கடைகளில் கம்பு, கேழ்வரகு, சோளத்தில் மானிய விலையில் வழங்கப்படும் என அம்மாநில குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணக் குமார் பேரவையில் வெளியிட்ட அறிவிப்புகள்: "குடிமைப் பொருள் வழங்கல் துறையில் ரேஷன் கார்டு சேவைகளுக்கு பிரத்யேகமாக மத்திய அரசின் பொது சேவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது. அந்தந்த பகுதிகளில் பெறலாம். கணினி மயமாகப்பட்டு ஆன்லைன் சேவைகள் துவங்கப்பட்டுள்ளன. சேவைகள் துரிதப்படுத்தப்படும்.

ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு புதிய திட்டப்படி இலவச அரிசி, மானிய சர்க்கரை, சிறுதானியங்கள் தரப்படும். சிறுதானிய ஆண்டு என்பதால் கம்பு, கேழ்வரகு, சோளத்தில் மானிய விலையில் ரேஷனில் தரப்படும் குடிமைப் பொருள் வழங்கல் துறையில் மக்கள் குறைகளை கேட்க கால் சென்டர் இந்தாண்டு அமைக்கப்படும். மாவட்ட, மாநில நுகர்வோர் குறைதீர் மையம் அமைக்கப்படும். இதற்கு லாஸ்பேட்டையில் நவீன கட்டடம் கட்டப்படும்.

விஜயன் கமிட்டியானது, பாப்ஸ்கோவை மறுசீரமைக்க பரிந்துரைத்தது. அதன்படி பாப்ஸ்கோவிடம் உள்ள 33 பார் வசதிகளுடன் கூடிய சில்லரை மதுபானக் கடைகளை தனித் தனியாக தனியாருக்கு தருவதை விட ஒருவருக்கே, 33 கடைகளை 20 ஆண்டுகளுக்கு வழங்க ரூ. 150 கோடி டெ பாசிட் பெறப்பட்டு டெண்டர் விட முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டது.

அவர், உயர் மட்டக்குழு அமைத்து கருத்து கேட்டுள்ளார். கருத்துப்படி ஆவணம் செய்யப்படும். தீயணைப்புத் துறையில் 58 பதவிகள் உருவாக்கப்படும். அதில் 12 நிலை அலுவலர்கள் 5 உயர் அதிகாரிகள் என நேரடியாக நியமிக்கப்படுவார்கள். 19 பெண் தீயணைப்பு வீரர்கள் , ஒரு பெண் தீயணைப்பு நிலைய அதிகாரி நியமிக்கப்படவுள்ளனர். புதுச்சேரி, வில்லியனூர், தவளக்குப்பம், திருமலை ராயப்பட்டினத்தில் தீயணைப்பு நிலையங்களுக்கு கட்டடங்கள் கட்டப்படும்.

அனைத்து தீயணைப்பு நிலையங்களுக்கு ரூ. 10 கோடியில் வாகனங்கள் வாங்கப்படும். கோட்ட தீயணைப்பு அதிகாரி புதிய கட்டடம் கோரி மேட்டில் கட்டப்படும். நிரந்தர தீயணைப்புப் பயிற்சி மையம் அமைக்கப்படும். மனிதர் செல்ல முடியாத இடங்களுக்கு புதிய கிரேன் வாங்கப்படும். 4263 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 25 கோடி மத்திய அரசிடம் பெற்று ரூ. 17. 5 கோடி கடன் தரப்பட்டுள்ளது.

814 புதிய சுயஉதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 10 குழுக்கள் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது. தலா ரூ.15 ஆயிரம் சுழல் நிதி தரப்பட்டது" என அமைச்சர் கூறினார்.

அதையடுத்து பாஜக, என்.ஆர்.காங்கிரஸார் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் எழுந்து, குடிமைப் பொருள் வழங்கல் துறையில் எதிர்ப்பு தெரிவித்த அதிகாரியை மீண்டும் அங்கு பணியமர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சல் எழுந்தது. இதையடுத்து அந்த துணை இயக்குநர் அதிகாரியை உடன் மாற்றுவதாக அமைச்சர் சாய் சரவணன் குமார் உறுதி தந்தார்.



Read in source website

புதுச்சேரி: காரைக்காலில் 30 ஆயிரம் சதுர அடியில் ரூ.15 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை தொடங்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை இலவச கல்விக்கு அரசாணை வெளியிடப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் இன்று பேசியதாவது: "சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஆஷா பணியாளர்கள் ஊதியம் ரூ. 6 ஆயிரம் வாங்கி வந்தனர். அதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தரப்படும். காரைக்காலில் 30 ஆயிரம் சதுர அடி 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை ரூ. 15 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும். அதற்கு ரூ. 2 கோடி ஒதுக்கப்படும். வருவாய்த்துறையில் தினக்கூலி ஊதியம் உயர்த்தப்படும்.

எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவிகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை இலவசக் கல்வி என அறிவித்தோம். சென்டாக் மூலம் மட்டுமில்லாமல், இதர வழிகளிலும் படிக்கும் அனைவருக்கும் நிதி தரப்படும். சிறப்புக் கூறு நிதியில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து செய்வோம். அரசாணை வெளியிடப்படும். கல்வித் துறையில் ரொட்டி, பால் ஊழியர்களுக்கும் ஊதியம் ரூ. 18 ஆயிரமாக உயர்த்தி தரப்படும்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிறைய கேட்கிறீர்கள். எதிர்பார்த்ததை விட அதிகம் செய்கிறோம். ஊழியர்களுக்கு அறிவுரை தர வேண்டும். பணியாளர்களுக்கு வாங்கும் ஊதியத்துக்கு வேலை செய்யும் எண்ணம் இருக்க வேண்டும். மற்றவர்களைக் குறை கூறி உட்கார்ந்திருக்கக்கூடாது. துறையில் பணியாற்றுவோருக்கு செய்வது ஒரு விதம். அதே நேரத்தில் அரசு உதவி பெறும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன.

கார்ப்பரேஷன்களுக்கு முதலீட்டை வைத்து உதவுவது அவசியம். ஏன் இந்த நிலைக்கு அரசு சார்பு நிறுவனங்கள், கார்ப்பரேஷன்கள் மாறியது என்பதில் அனைவருக்கும் பொறுப்பு உண்டு. பல நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் வரை ஊதியம் இல்லை என்று கேட்கிறார்கள். எப்படி செய்ய முடியும். ஓரளவுதான் அரசு நேரடியாக செய்ய முடியும். மொத்தமாக ரூ. 150 கோடி எப்படி தரமுடியும். எந்த நிதியில் இருந்து செய்ய முடியும்.

தனது நிலையை உணர்ந்து ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். ஓரளவுதான் மானியம் தர முடியும். இன்றைய காலக்கட்டத்தில் போராட்டம் செய்கிறார்கள். செய்தித்தாள் மூலம் பார்க்கிறோம். பொறுப்பை உணராததால்தான் இந்த சிரமம். எப்படி செய்ய முடியும்- குழு வைத்து ஆராய்ந்தாலும் ஒத்துழைப்பில்லை. சரியான போராட்டமா என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அரசு ஓரளவுதான் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். நிலையை உணர முடியாததால் இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு சர்க்கரை ஆலையை சரி செய்யப் போகிறோம். தனியாருடன் இணைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கிறோம். நிதியை பயன்படுத்தி பொதுத்துறை நிறுவனங்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் ரங்கசாமி கூறினார்.



Read in source website

சென்னை: மகளிர் சுயஉதவிக் குழுக்கள் விண்ணப்பித்தால் 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கி, 21 நாட்களில் வங்கிக்கணக்கில் பணம் சேர்க்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு கடனுதவியை விரைவில் வழங்க வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கூட்டம் நடத்த கட்டிட வசதி செய்து தரப்படுமா? என்று பென்னாகரம் தொகுதி உறுப்பினரும், சட்டப்பேரவை பாமக கட்சி தலைவருமான ஜி.கே.மணி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: மகளிர் சுய.உதவிக் குழுக்கள் நேரடி வங்கிக்கடன் பெற குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை என 6 மாதங்களுக்கு தொடர்ந்து கூட்டம் நடத்தி,சேமிப்பு செய்து, உள்கடன் வழங்கி, குறித்த காலத்தில் அந்தக் கடனை திருப்பிச் செலுத்தி, கணக்குபுத்தகத்தை முறைப்படி செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

அத்தகைய குழுக்களுக்கு ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விண்ணப்பத்தின் அடிப்படையில் உடனடியாக கடன் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை ஆய்வு செய்து முன்னெப்போதும் இல்லாத வகையில் 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கி, 21 நாட்களில் குழுக்களின் வங்கிக்கணக்குக்கு கடன் தொகை செலுத்தப்படுகிறது.

அதற்கு மேல் நிலுவையில் உள்ள கடன் விண்ணப்பங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களால், வங்கியாளர்கள் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு விரைந்து கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த 2022-23-ம் நிதியாண்டில் எங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.25 ஆயிரம் கோடி இலக்கைவிட அதிகமாக ரூ.25,022.19 கோடி கடன் வழங்கியுள்ளோம். இதன்மூலம், 4.39 லட்சம் சுய உதவிக்குழுக்கள் பயனடைந்துள்ளன.

இந்தாண்டு 2023-24-ம் ஆண்டு பட்ஜெட்டில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன்இணைப்பு இலக்கு ரூ.30 ஆயிரம்கோடியாக முதல்வர் வழங்கியுள்ளார். இந்தாண்டும் அதைவிட அதிகமாக கடன் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 12,116 கிராமஊராட்சிகளில் 1,260 சதுரஅடி பரப்பில் ஒரு இ-சேவை மையம், ஒரு வைப்பறை, கழிவறை என 3 அறைகள் கொண்ட கிராம ஊராட்சி சேவை மையக் கட்டிடங்கள் உள்ளன. கூடுதலாக 12,161 கிராம ஊராட்சிகளில் 350 சதுரஅடியில் சுய உதவிக்குழுக்கள் மட்டுமேபயன்படுத்தும் வகையில் பிரத்யேககட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இவ்விரு கட்டிடங்களும் சுயஉதவிக் குழுக்களின் கூட்டம் நடத்த வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Read in source website

சென்னை: குறு, சிறு நடுத்தரத் தொழில்கள்துறை சார்பில், மாவட்டங்கள்தோறும் அமைக்கப்பட்டுள்ள ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் மற்றும் ரூ.15 கோடியில் கட்டப்பட்டபுதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தனித்துவம் வாய்ந்த பல பொருட்கள் ஒவ்வொருமாவட்டத்திலும் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை உலக அளவில்சந்தைப்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘மாவட்ட ஏற்றுமதி மையங்கள்’ உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.

அதற்கேற்ப, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம்தோறும் வர்த்தக மேம்பாட்டு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஏற்றுமதி ஊக்குவிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்: தொடர்ந்து, தமிழக அரசின் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் மதிப்பீட்டுக்கான அறிவுசார் பங்குதாரராக நியமிக்கப்பட்டுள்ள அகமதாபாத் - இந்திய மேலாண்மைக் கழகத்தைசெயல்படுத்தும் விதமாக, தமிழகஅரசின் தொழில் ஆணையர் சிஜிதாமஸ் வைத்யன், மற்றும் அகமதாபாத் - இந்திய மேலாண்மைக் கழகத்தின் பேராசிரியர்கள் நமன் தேசாய், ஜோஷி ஜேக்கப் ஆகியோர் இடையே முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அளவொப்புமை ஆய்வகங்களுக்கான அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் காக்களூர் மத்திய மின்பொருள் சோதனைக்கூடத்தில் ரூ.1.32 கோடியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சோதனைவசதிகள், குன்னூர் இண்ட்கோசர்வ் நிறுவனத்தில் ரூ.3.29 கோடியில் நிறுவப்பட்டுள்ள ஊட்டி டீ-யின்அதிநவீன கலவை மற்றும் சிப்பம்கட்டும் அலகு,

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிநிறுவனம் மூலம் ராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் ரூ.1.35 கோடியில் கட்டப்பட்டுள்ள பொதுவசதி மையக் கட்டிடம், திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் தொழிற்பேட்டையில் ரூ.2.93 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்,

மற்றும் காக்களூர் தொழிற்பேட்டையில் ரூ.2.72 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அதே தொழிற்பேட்டையில் ரூ.2.92 கோடியில் மூலப்பொருட்கள் சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட கட்டிடங்கள் என ரூ.15 கோடி செலவில் முடிவுற்ற பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.

தொழிற்பேட்டைகளில் பட்டா: மேலும், நெடுங்காலமாக தொழிற்பேட்டைகளில் பட்டா பெற காத்திருந்த ஒதுக்கீட்டாளர்களுக்கு சிறப்பு முன்னெடுப்பு மூலம் பட்டா வழங்கும் விதமாக முதற்கட்டமாக 210 மனைதாரர்களுக்கு பட்டா வழங்குவதை தொடங்கி வைத்து,5 ஒதுக்கீட்டாளர்களுக்கு பட்டாக்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, துறையின் செயலர் வி.அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Read in source website

ஸ்ரீவில்லிபுத்தூர்: கம்போடியா மற்றும் தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச யோகா போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்க ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி ஜெயவர்தனி(12) தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மா பட்டியைச் சேர்ந்த மர வியாபாரி குடியரசு(43). இவரது மனைவி கீதா(34). இவர்களது மகள்கள் கவியரசி(16) 10-ம் வகுப்பு, ஜெயவர்தினி(12), 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர். குடியரசு கடந்த 10 ஆண்டுகளாக தினசரி யோகா பயிற்சிக்கு சென்று வரு கிறார்.

கரோனா ஊரடங்கு காலத்தில் மனைவி, குழந்தைகளையும் யோகா பயிற்சிக்கு அழைத்து சென்றார். இவரது மகள் ஜெயவர்தனி 8 மாதங்களில் பள்ளி, மாவட்ட, மாநில அளவிலான சுமார் 30-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார்.

மேலும் தென் இந்திய அளவில் 3 போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றார். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடந்த ஜனவரியில் நடந்த 7-வது தேசிய யோகா போட்டியில் 12 வயது பிரிவில் மாணவி ஜெயவர்தினி கலந்து கொண்டு முதலிடம் பெற்றார்.

தென்காசி மாவட்டம் சிவசைலம் பகுதியில் குட்லைப் ஆசிரமம் மற்றும் யோகா கலாச்சார மையம் சார்பில் ஜனவரியில் நடைபெற்ற தேசிய யோகா சாம்பியன்ஷிப்-2023 போட்டியில் மாணவி ஜெயவர்தனி 12-13 வயது மற்றும் ஒட்டுமொத்த பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன்மூலம், தாய்லாந்தில் வருகிற டிசம்பரில் நடைபெறும் சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பழநியில் மார்ச் 11-ல் நடந்த தேசிய யோகா போட்டியில் மாணவி ஜெயவர்தினி கலந்து கொண்டு 12 வயது மற்றும் ஒட்டுமொத்த பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதையடுத்து கம்போடியாவில் மே 27-ல் நடைபெறும் சர்வதேச யோகா போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க ஜெயவர்தனி தேர்வாகி உள்ளார்.



Read in source website

புதுடெல்லி: இந்தியாவின் மிக முக்கியத் திட்டமான மண் ஆரோக்கிய திட்டம் தமிழகத்தில் எவ்வாறு செயல்படுகிறது என மக்களவையில் திமுக எம்.பி செந்தில்குமார் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு, மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் நரேந்தர் சிங் தோமர் விளக்கமாகப் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் எம்.பியான செந்தில்குமார் இன்று மக்களவையில் எழுப்பியக் கேள்வியில், ''இந்தியாவின் மிக முக்கியமான மண் ஆரோக்கிய திட்டம் தமிழகத்தில் எவ்வாறு செயல்படுகிறது? இது, செயல்படுத்தப்படுகிறது என்றால் தமிழ்நாட்டில் எத்தனை விவசாயிகளுக்கு மண் ஆரோக்கியத் திட்டத்திற்கான அட்டை வழங்கப்பட்டுள்ளது? குறிப்பாக மண் ஆரோக்கியத் திட்டம் செயல்படுத்தப்பட்ட நோக்கத்தினை மத்திய அரசு அடைந்துள்ளதா? இத்திட்டம் துவங்கப்பட்டு அதில் மத்திய அரசு எதிர்கொள்ளும் சவால்கள் என்ன மேலும் முக்கியமாக விவசாயிகளுக்கு தேவையான மண் பரிசோதனை நிலையங்களை இந்தியாவில் அமைத்துள்ளதா? அதற்குரியப் பலன்களை விவசாயிகள் பெறுகிறார்களா?” எனக் கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்தர்சிங் தோமர் கூறியதாவது: ''தமிழ்நாடு உட்பட இந்தியாவில் மண் ஆரோக்கிய அட்டை திட்டம் 2015 பிப்ரவரி 19ஆம் தேதி முதல் செயல்படுகிறது. இத்திட்டத்திற்காக, கடந்த 2022 ஆம் ஆண்டு வரை 148.09 லட்சம் மண் அட்டைகளை விவசாயிகள் பெற்றுள்ளனர். மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள விவசாயிகளை ஊக்குவிக்க அவர்களின் விவசாய நிலங்களுக்கு மண் சுகாதார அட்டை வழங்கி சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

ரசாயன உரங்களின் நுகர்வை குறைக்கவும் இயற்கை உரங்களின் நுகர்வு அதிகரிக்கவும் இத்திட்டம் பயனுள்ளதாக உள்ளது. இதனால் மண்ணின் வளம் குறையாமலும் அதேசமயம் விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கவும் இத்திட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் நிறைய பலன் அடைவதால் மண் சுகாதார அட்டை நாடு முழுவதும் பரவலாக உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக இத்திட்டத்தின் மூலம் 6.45 செயல்விளக்கக் கூட்டம், 93,781 விவசாயிகளுக்கு தனித்துவமான பயிற்சி வழங்கப்பட்டுள்ளன. மேலும், 7,425 விவசாய மேலாக்கல் இத்திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட வண்ணம் உள்ளது. தற்பொழுது கைபேசிகளின் பயன்பாடு பெருகி உள்ளதால் கியூ.ஆர் கோடு மூலம் மண் மாதிரிகளை வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோல் எண்ணற்ற சேவைகளை மண் சுகாதார அட்டை மூலம் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது'' என்று அமைச்சர் தெரிவித்தார்.

இத்துடன் நாடு முழுவதிலும் உள்ள மண் பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கையும் மாநிலங்கள் வாரியாக மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இவை, 2013-14 முதல் 2022-23 ஆண்டுகள் வரையில் அமைக்கப்பட்டவை. இந்த அட்டவணையின்படி, நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களில் தெலுங்கானாவில் மிக அதிகமாக மண் பரிசோதனை நிலையங்கள் எண்ணிக்கை 2,764 உள்ளன. இதன் எண்ணிக்கை தமிழகத்தில் 20 மற்றும் புதுச்சேரியில் 10 உள்ளன. இவற்றில் சிறிய அளவிலான மண் பரிசோதனை நிலையம் தமிழகத்தில் ஒன்று கூட இல்லை. தேசிய அளவில் மண் பரிசோதனை நிலையங்களின் மொத்த எண்ணிக்கை 11,840 ஆகும்.



Read in source website

புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கான காரணம் எதுவாக இருந்தாலும் அதனை நியாயப்படுத்தக் கூடாது என்று பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. 2001-ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் முழுமையான உறுப்பு நாடாக இந்தியா கடந்த 2017, ஜூன் 9-ல் இணைந்தது. தற்போது இந்த அமைப்பில் ஆப்கனிஸ்தான், பெலாரஸ், இரான், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. இவை மட்டுமின்றி, அர்மீனியா, அசர்பைஜான், கம்போடியா, நேபாள், இலங்கை, துருக்கி ஆகிய 8 நாடுகள் பேச்சுவார்த்தைக்கான பங்குதாரர்களாக உள்ளன.

இந்த அமைப்பின் 2023-ம் ஆண்டுக்கான தலைமையை இந்தியா கடந்த ஆண்டு ஏற்றது. அதன்படி, இந்த அமைப்பின் பல்வேறு மாநாடுகளை இந்தியா நடத்தி வருகிறது. சுற்றுலா வளர்ச்சிக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இந்த மாத தொடக்கத்தில் காசியில் நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் பிரதிநிதி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான இன்றைய மாநாட்டில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தொடக்க உரை ஆற்றினார். அப்போது, ''சர்வதேச பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது பயங்கரவாதமும், அதற்கான நிதி உதவியும்தான். பயங்கரவாதத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும் அது நியாயப்படுத்தப்படக்கூடியது அல்ல. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களும் நியாயப்படுத்தப்படக் கூடாதவையே'' எனத் தெரிவித்தார்.

முன்னதாக, மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை அஜித் தோவல் வரவேற்றார். இந்த மாநாட்டில், சீனா மற்றும் பாகிஸ்தான் பிரதிநிதிகள் ஆன்லைன் முறையில் பங்கேற்றுள்ளனர்.

இந்த அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு வரும் ஏப்ரல் 27-ம் தேதி முதல் 29ம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதையடுத்து, இந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு வரும் மே 4-5 தேதிகளில் கோவாவில் நடைபெற இருக்கிறது.



Read in source website

புதுடெல்லி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று (மார்ச் 29) தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்தார்.

அதன்படி 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

கர்நாடக தேர்தல்: சில முக்கிய தேதிகள்:

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் ஏப் 13
வேட்புமனு தாக்கல் கடைசி நாள் ஏப் 20
வேட்புமனு பரிசீலனை ஏப் 21
வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் ஏப் 24
வாக்குப்பதிவு நடைபெறும் நாள் மே 10
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் மே 13

ஆண் வாக்காளர்களே அதிகம்: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான ஆண் வாக்காளர்கள்: 2.62 கோடி, பெண் வாக்காளர்கள்: 2.59 கோடி. ஆண் வாக்காளர்களே அதிகம். மொத்த வாக்காளர்கள்: 5,21,73,579 (5 கோடியே 21 லட்சம்).

தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஏதுவாக 58,282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நகர்ப்புற வாக்குச்சாவடிகள் 20,886. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 36 தொகுதிகள் பட்டியலின வேட்பாளர்களுக்கும், 15 தொகுதிகள் பழங்குடிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 12.15 லட்சம் என்றளவில் உள்ளது. இது கடந்த 2018ஐ விட 32 சதவீதம் அதிகமாகும். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் 16,976 வாக்காளர்கள் 100 வயதை எட்டியவர்கள், கடந்தவர்கள் ஆவர்.

மாற்றுத்திறனாளிகள் 5.55 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க 9.17 லட்சம் முதன்முறை வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். 2023 ஏப்ரல் 1 ஆம் தேதியுடன் 18 வயது பூர்த்தியானவர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

எதிர்பார்ப்புகளும், சந்தேகங்களும்.. கர்நாடகாவில் கடந்த மே 2018ல் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னர் அங்கு தொங்கு சட்டப்பேரவை உருவானது. பாஜக தனிப்பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன. காங்கிரஸ் 80, ஜேடிஎஸ் 37 சீட்கள் வைத்திருந்தன. காங்கிரஸ் அதிக சீட்கள் வைத்திருந்தாலும் கூட மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் குமாரசாமியை முதல்வராக்கியது. ஆனால் 2019 ஜூலையில் எம்எல்ஏ.,க்கள் கட்சித் தாவலால் அந்த ஆட்சி கலைந்தது. பின்னர் பாஜக ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா முதல்வரானார். ஆனால் அவர் ஜூலை 2021ல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் பசவராஜ் பொம்மை முதல்வரானார். தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தாலும் கூட அது மீண்டும் அதனைத் தக்கவைக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அதேபோல் கடந்த தேர்தலைப் போல் தொங்கு சட்டப்பேரவை அமையுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகள் தனித் தனியாக களமிறங்குகின்றன. 3 கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளன. மஜத, ஆம் ஆத்மி, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அவர்களை முன்னிறுத்தி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன‌. இருப்பினும் ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸூக்கும் இடையே தான் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் ஏழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில், அதிக வாக்குகளாக திமுக எம்.பி. திருச்சி சிவா 42, அதிமுக எம்.பி. தம்பிதுரை 16 வாக்குகள் பெற்று உறுப்பினர்களாக தேர்வாகி உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் எம்.பி.,க்களுக்காக நாற்பதிற்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளன. இவற்றில் நிதிக்கான மூன்று குழுக்களாக பொதுக் கணக்கு குழு, மதிப்பீடு குழு மற்றும் பொதுத்துறைகளுக்கானக் குழு இடம் பெற்றுள்ளன.

இந்த மூன்றில் எம்.பி.க்கள் இடையே மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக பொதுக் கணக்கு குழு கருதப்படுகிறது. இதன் தலைவராக எதிர்க்கட்சி தலைவர் அமர்த்தப்படுவது வழக்கம்.தற்போது, காங்கிரஸின் அதிர் ரஞ்சன் சவுத்ரி தலைவராக உள்ள குழுவிற்கு, இரண்டு அவைகளின் எம்.பி.,க்களும் உறுப்பினர்களாக இருப்பர்.

பெரும்பாலும் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஒப்புதலுடன் உறுப்பினர்கள் ஒருமனதாகத் தேர்வாகி வந்தனர். எனினும், சமீப காலமாக இந்த ஒப்புதலுக்கு சில கட்சிகள் தயாராக இல்லை என்பதால், உறுப்பினர்களுக்கானத் தேர்தல் நடைபெறுவது வழக்கமாகி விட்டது.

இந்த தேர்தலில் மக்களவை எம்.பி.,க்கள் தேர்விற்கு அந்த அவையின் உறுப்பினர்களும், மாநிலங்களவை எம்.பி.,க்கு அதன் உறுப்பினர்களும் வாக்களிப்பது வழக்கம். இவற்றில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்விற்கானத் தேர்தல் நேற்று நடைபெற்றது.

மொத்தம் 8 பேர் போட்டியிட்டதில், மிக அதிகமாக திமுகவின் மூத்த எம்.பி.,யான திருச்சி சிவாவிற்கு 42 வாக்குகள் கிடைத்தன. ஆளும் கட்சியான பாஜகவின் எம்.பி. சுதான்ஷு திரிவேதி 34, காங்கிரஸின் சக்திசிங் கோஹில் ஆகியோர் 31 வாக்குகள் பெற்றுள்ளனர்.

பாஜகவில் தேர்வான மேலும் இரண்டு எம்.பி.,க்களில் டாக்டர்.லஷ்மண் மற்றும் கன்ஷியாம் திவாரி ஆகியோருக்கு தலா 29 வாக்குகள் கிடைத்தன. திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.,யான சுகேந்து சேகர் ராய் 17 மற்றும் அதிமுக எம்.பி.,யான எம்.தம்பிதுரைக்கு 16 வாக்குகள் கிடைத்துள்ளன. இவர்களில் டாக்டர்.தம்பிதுரை கடந்த ஆட்சியில் மக்களவை துணை சபாநாயகராக இருந்தவர். ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.,யான ராகவ் சட்டா வெறும் 2 வாக்குகளுடன் தேர்வாகவில்லை.

மத்திய அரசின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்து சரிபார்க்க, சிஏஜி எனும் காம்ப்ட்ரோலர் ஆப் ஆடிட்டிங் என்ற அமைப்பு உள்ளது. இந்த சிஏஜியையும் ஆராயும் உயரியக் குழுவாக நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்கு குழு செயல்படுகிறது.

இதன் காரணமாகவே இக்குழுவில் இடம்பெற எம்.பி.,க்கள் இடையே போட்டி அதிகமாகி வருகிறது. இக்குழுவின் பதவிக் காலமும் ஒரு வருடம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

புதுடெல்லி: நாட்டில் கரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்பிபி1 வைரஸ் பரவி வருகிறது என்று தெரியவந்துள்ளது.

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு கடந்த 2020-ம் ஆண்டு கரோனா வைரஸ் பரவியது. இதனால் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் இறந்தனர். கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகுகரோனாவால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கரோனாவால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு புதிய வகை கரோனா வைரஸான எக்ஸ்பிபி1.16 என்ற திரிபுதான் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

எக்ஸ்பிபி வைரஸ் என்பதுஒமிக்ரானின் பிறழ்வு வைரஸ் களில் இருந்து உருமாறிய வைரஸாகும். அதாவது பிஏ.2.10.1, பிஏ.2.75, எக்ஸ்பிஎப், பிஏ.5.2.3மற்றும் பிஏ.2.75.3 வைரஸ்களின் மறுவடிவம் என்று தெரியவந் துள்ளது. நாட்டில் கரோனா வைரஸின் மரபணு மாற்றமான எக்ஸ்பிபி 1.16 என்ற வைரஸ்பரவி வருகிறது என்று மருத்துவநிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வைரஸ்தான் தற்போது நிறைய பேரை பாதித்து வருகிறது.

எக்ஸ்பிபி 1.16 வைரஸ் வேகமாக பரவக் கூடியதாக இருகிறது. இதையடுத்து நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை எக்ஸ்பிபி1 வகை வைரஸால் 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த வகை வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1,573 பேர் பாதிப்பு: நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 1,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றுமத்திய சுகாதாரத்துறை அமைச்ச கம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் கரோனா வைரஸுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,981-ஆக உள்ளது. நாட்டில் இதுவரை 4.47 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 1.30 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 1.47 சதவீதமாகவும் உள்ளது.

நேற்று மட்டும் கேரளாவில் 4 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,30,841 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 4,41,65,703 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



Read in source website

பெங்களூரு: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பறக்கும் டாக்ஸிகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரும்என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

பறக்கும் டாக்ஸி தொழில்நுட்பம் தொடர்பாக நேற்று பெங்களூருவில் நடைபெற்ற மாநாட்டில் ஜோதிராதித்யா சிந்தியா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “நாம் பறக்கும் கார்களை இதுவரையில் சினிமாவில்தான் பார்த்தோம். ஆனால், விரைவில் அது பயன்பாட்டுக்கு வரவுள்ளது. பறக்கும் டாக்ஸிகளுக்கான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சி கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பறக்கும் டாக்ஸி சேவை பயன்பாட்டுக்கு வரும். பறக்கும் டாக்ஸி தொடர்பாக இந்தியாவில் முதலீடு செய்தவதற்கான சிறந்த வாய்ப்பு இது. விரைவிலேயே இந்தியாவில் பறக்கும் டாக்ஸி சேவை மிகப் பெரிய அளவில் வளரும்” என்று தெரிவித்தார்.

மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் டாக்ஸிகளை தயாரிக்கும்அமெரிக்காவைச் சேர்ந்த ஏரோகுரூப் நிறுவனத்துக்கும் இந்தியாவின் ஃப்ளைபிளேடு இந்தியாநிறுவனத்துக்கும் இடையேபெங்களூருவில் நேற்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஏரோ நிறு வனத்திடமிருந்து 150 பறக்கும் டாக்ஸிகளை ஃப்ளைபிளேடு இந்தியா நிறுவனம் வாங்க உள்ளது. மேலும், தேவையைப் பொறுத்து கூடுதலாக 100 பறக்கும் டாக்ஸிகள் வாங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி ரூ. 4.31 கோடி அபராதம் விதித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் டாலர்களையும், யூரோக்களையும், தினார்களையும் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி வழிபடுகின்றனர். உண்டியலில் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் விவரங்களை தேவஸ்தானம் அறியமுடிவதில்லை. ஆனால், இப்படி உண்டியலில் செலுத்தப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளை பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்வதன் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தங்களது அறக்கட்டளை கணக்கில் வரவு வைக்கிறது.

இதற்காக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் (எப்சிஆர்ஏ) கீழ் பதிவு செய்வது அவசியம். பின்னர் ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறைஅந்த பதிவை புதுப்பிக்க வேண்டும். ஆனால், கரோனா பரவல்காரணமாக திருப்பதி தேவஸ்தானம் பதிவை புதுப்பிக்க தவறிவிட்டது.

ஆதலால், கடந்த 2019-ம் ஆண்டுக்காக ரூ. 1.14 கோடியும், மார்ச்5-ம் தேதி வரை மேலும் ரூ. 3.17கோடி என மொத்தம் ரூ. 4.31 கோடிஅபராதத்தை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. தேவஸ்தானத்திடம் ரூ.26 கோடி மதிப்பிலான வெளிநாட்டு டாலர்கள் கடந்த 3 ஆண்டு களாக வங்கியில் டெபாசிட் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக வரலாற்றில் பதியும் மாபெரும் போராட்டத்தை இஸ்ரேல் மக்களும், எதிர்க்கட்சிகளும் அந்நாட்டில் முன்னெடுத்திருக்கிறார்கள். டெல் அவிவ் உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடத்திக் கொண்டிருக்கும் இப்போராட்டங்கள் ‘இஸ்ரேலில் என்ன நடக்கிறது..?’ என உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

ஏன் இந்த போராட்டம்? - இஸ்ரேலில் நீதித் துறை அமைப்பை மாற்றியமைப்பதற்கான பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு ஈடுபட்டு வருகிறார். அதாவது, நீதித் துறையின் அதிகாரத்தை கட்டுப்படுத்தவும், நீதித் துறை அதிகாரத்திற்கும், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் சமநிலையை மீட்டெடுக்கவும் நீதித் துறையில் மாற்றம் கொண்டுவருவதாகச் சொல்லி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மேற்கொண்ட முயற்சிகள்தான் தற்போது அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறது.

என்னென்ன மாற்றங்கள்: இஸ்ரேல் நீதித் துறையில் மூன்று முக்கிய மாற்றங்களை நெதன்யாகு கொண்டு வர இருக்கிறார். அவை:

* இஸ்ரேல் உச்ச நீதிமன்றத்தின் சட்டங்களை மறுபரீசிலனை செய்து, அதன் அதிகாரத்தை குறைப்பது. உதராணத்துக்கு நீதிமன்ற உத்தரவுகளை நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை மூலம் மீறலாம்.

* உச்ச நீதிமன்றம் உட்பட நீதிபதிகளை நியமிக்கும் குழுவில் அரசின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது. இதன்மூலம், யார் நீதிபதியாக வேண்டும் என்பது குறித்து தீர்க்கமான முடிவை அரசாங்கம் எடுக்கும் சூழல் உருவாகும்.

* இஸ்ரேல் அமைச்சர்கள் தங்கள் சட்ட ஆலோசகர்களின் ஆலோசனைக்கு கீழ்படிய வேண்டிய அவசியமில்லை.

சீர்திருத்த நடவடிக்கைகளில் முதற்கட்டாமாக பதவியில் இருக்கும் பிரதமரை ‘பதவிக்கு தகுதியற்றவர்’ என்று அறிவிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியின் அதிகாரத்தை நீக்கும் சட்டம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கிளர்ந்த போராட்டம்... - நீதித் துறையின் மீதான இந்த சீர்திருத்த மாற்றங்கள் நாட்டின் ஜனநாயகத்தை படுகுழிக்கு தள்ளிவிடும் என்ற நிலைபாட்டில்தான் தற்போது இஸ்ரேல் மக்களும், நாட்டின் எதிர்கட்சிகளும் வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

12 வாரங்களாக தொடரும் இப்போராட்டத்தில், நாட்டின் வர்த்தக தலைநகரான டெல் அவிவில் இந்த வாரம் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீதியில் கூடி போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும், அரசின் மீது கொண்ட அதிருப்தியின் காரணமாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரும் பணிக்கு வர மறுத்துள்ளதால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறிக்கு உள்ளாகும் சூழல் உருவாகி இருக்கிறது.

இதற்கிடையில், நாட்டில் நடக்கும் போராட்டங்கள் கவலைக்குரிய நிலையை ஏற்படுத்தி இருப்பதாக நெதன்யாகுவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேலண்ட் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தான் கூறிய கருத்துக்காக கேலண்ட்டை நெதன்யாகு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். நீக்கப்பட்ட கேலண்ட் அரசாங்கத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் பிரபலமான அமைச்சர்களில் ஒருவர். அமைச்சர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டிருப்பது கூடுதலான இஸ்ரேலியர்களை தெருக்களில் இறங்கி போராட வழிவகுத்திருக்கிறது.

போராட்டக்கார்கள் மீது போலீஸாரும், ராணுவமும் நடத்திய தடியடி தாக்குதலில் பலர் காயமடைந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எனினும், தங்கள் போராட்டத்தை கைவிடாது மக்கள் தொடர்ந்து வருகிறார்கள். நெதன்யாகு நீதித் துறையின் மீதான தனது சீர்திருத்த நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இஸ்ரேலும் நெதன்யாகுவும்: இஸ்ரேலின் வலதுசாரி தலைவர்களில் மிகவும் அதிகாரமிக்கவராக கருதப்படும் நெதன்யாகு 1996 முதல் 1999 வரையிலும், 2009-ல் இருந்து தற்போது வரையிலும் பிரதமராக இருந்து வருகிறார். பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் நெதன்யாகுவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இஸ்ரேல் இளைஞர்கள் முன்னரே வந்துவிட்டனர் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நெதன்யாகுவை பதவியைவிட்டு நீக்கும் வாய்ப்பாக இந்தப் போராட்டத்தை இஸ்ரேல் இளைஞர்களும்,இடதுசாரிகளும் பார்க்கின்றனர்.

இந்தச் சூழலில் இப்போரட்டம் உண்மையில் நெதன்யாகுவுக்கு பதற்றத்தை தந்திருக்கிறது என்பதே உண்மை. அதன் பொருட்டுதான் மற்ற சீர்திருத்தங்களை நிறைவேற்றும் கால அளவை அவர் தள்ளி வைத்துள்ளார். மேலும், போராட்டக்காரர்களையும், எதிரக்கட்சிகளையும் அவர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

போராட்டம் குறித்து நெதன்யாகு பேசும்போது, “இந்த நாடு உடைபட நான் அனுமதிக்க மாட்டேன். நான் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளேன். அதற்கான வாய்ப்பை வழங்குகிறேன்” என்று பேசி இருக்கிறார். மேலும், இந்த சீர்திருத்தங்களால் நீதித் துறை அமைப்பு பலவீனம் அடையாது என்றும் அவர் உறுதியாக கூறி இருக்கிறார்.

வரும் நாட்களில் போராட்டக்காரர்களுடன் இஸ்ரேல் அரசு முன்னெடுக்கு பேச்சுவார்த்தை மிக முக்கியமானது. இதனை மையமாக வைத்துதான் நெதன்யாகுவின் பதவி தீர்மானிக்கப்பட இருக்கிறது என்பதே இப்போராட்டம் மூலம் இஸ்ரேல் மக்கள் கூறும் செய்தி!

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in



Read in source website

கராச்சி: பாகிஸ்தானில் கரன்சி மதிப்பு சரிந்ததால், உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வெளிநாட்டுக்கடன் அதிகரிப்பாலும், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததாலும், தற்போது அங்கு கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் அங்கு உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்தாண்டு ஜுன் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளம், நாட்டில் 3-ல் ஒரு பகுதியை மூழ்கடித்தது.

இதனால் சுமார் 3 கோடியே 30 லட்சம் பேர் வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்தனர். இதனால் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் 12.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. டாலருக்கு எதிரான பாகிஸ்தான் கரன்சியின் மதிப்பும் வெகுவாக குறைந்ததாலும், பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் விற்பனை கொள்கையாலும், மருந்து பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்தன. இதனால் இறக்குமதியாளர்களால் உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்ய முடியவில்லை.

இறக்குமதி: பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இறக்குமதி தடுப்பூசிகள், கேன்சர் மருந்துகள், மயக்க மருந்துகளுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது.

பாகிஸ்தானில் சில மருந்துகள், மாத்திரைகள் உற்பத்தி செய்யப்பட்டாலும், தடுப்பூசிகள், புற்றுநோய் தடுப்பு மருந்துகள் போன்றவை இந்தியா, சீனா, ரஷ்யா,ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

மருந்து விலைக் கொள்கை 2018 திட்டத்தின் கீழ், பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் இறக்குமதி மருந்துகளை விநியோகிக்க முடியவில்லை.

கட்டுப்பாடுகளை மறுபரி சீலனை செய்யும்படி பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளை, மருந்து இறக்குமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.



Read in source website

புதுடெல்லி: என்பிசிஐ எனப்படும் நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சமீபத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ப்ரீபெய்டு வாலட்களைப் பயன்படுத்தி செலுத்தப்படும், ரூ.2,000-க்கு அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீதம் கட்டணம் வசூலிக்க பரிந்துரைத்துள்ளது. மார்ச் 24-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, இந்த மாற்றம் வரும் ஏப்ரல்1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணம் வசூல் யாருக்கெல்லாம் பொருந்தும் என்ற கேள்வியும், குழப்பமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களின் பல பதிவுகளில் என்பிசியின் பரிந்துரைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, ஏப்.1-ம் தேதி முதல் அனைவரும் இந்தக் கட்டணச் சுமையை ஏற்கவேண்டியது வருமோ என்று கவலைப்படுகின்றனர். ஆனால், யாரெல்லாம் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை என்பிசிஐயின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிமாற்ற கட்டணம் என்றால் என்ன? - பரிமாற்ற கட்டணம் என்பது, வங்கி அல்லது சேவை வழங்குநரால் வணிகர்களிடம் வசூலிக்கும் கட்டணம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம், யுபிஐ பரிமாற்றங்களால் அதிக சிரமத்திற்குள்ளாகி வரும் வங்கிகள் மற்றும் சேவை வழங்குநர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக பெறப்படுகிறது.

யாரெல்லாம் 1.1 சதவீதம் பரிமாற்ற கட்டணம் செலுத்த வேண்டும்? - என்பிசிஐ-யின் அறிக்கையில் வாடிக்கையாளர்கள் 1.1 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது. பிபிஐ எனப்படும் பிரீப்பெய்டு பேமென்ட் கருவியினைக் கொண்டு, ரூ.2000-க்கு அதிகமாக செய்யப்படும் பரிமாற்றத்திற்கு வணிகர்கள் மேற்கொள்ளும் பரிமாற்றத்துக்குதான் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

அதேபோல் கடன் அட்டை, வாலட்களைக் கொண்டு பிபிஐ மூலம் செய்யப்படும் யுபிஐ பரிமாற்றங்களுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும். முக்கியமாக, க்யூஆர் கோடு மூலம் செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கே இந்த பரிமாற்றக் கட்டணம் பொருந்தும்.

இதுகுறித்து பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கியும் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டு தெளிவு படுத்தியுள்ளது. அதன் ட்விட்டர் பக்கத்தில், "என்பிசிஐயின் சுற்றறிக்கைப்படி, யுபிஐ, வங்கிக் கணக்கு அல்லது பிபிஐ, பேடிஎம் வாலட் மூலம் செய்யப்படும் பரிமாற்றங்களுக்கு வாடிக்கையாளர்கள் எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

பணப் பரிவர்த்தனையின் பரிமாற்றக் கட்டணம் வணிர்களால், கடன் அட்டை அல்லது வாலட் கொடுப்பவர்களுக்கு செலுத்தப்படும்போது, அது வணிகர்களை பாதிக்கலாம். ஆனாலும், இது சிறு வணிகர்கள் மற்றும் கடைக்காரர்களை பாதிக்காது. ஏனென்றால் பரிமாற்றக் கட்டணம் ரூ.2000-க்கு அதிமான பரிமாற்றத்திற்குதான் வசூலிக்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், யுபிஐ பரிமாற்றத்திற்கு வாலட் மற்றும் பிபிஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்தக் கட்டண வசூல் தற்போது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், பின்னர் வணிகர்கள் இந்தக் கூடுதல் சுமையை தவிர்க்க நினைத்தால் அது வாடிக்கையாளர்களை பாதிக்கலாம். ரூ.2000-க்கு அதிகமான பரிமாற்றத்திற்காக வால்ட்களை புதுப்பிக்கும்போது, அதற்கான சேவைக் கட்டணமாக 15 அடிப்படை புள்ளிகளை பணம் அனுப்புவோரின் வங்கிக்கு பிபிஐ சேவை வழங்குபவர் செலுத்த வேண்டும் என்று என்சிபிஐ தெரிவித்துள்ளது.

அதாவது, வாடிக்கையாளர் ஒருவர் யுபிஐ பரிவர்த்தைனைக்காக தனது டிஜிட்டல் வால்ட்டில் பணம் ஏற்றும்போது, அந்த பிபிஐ வழங்குபவர் வாடிக்கையாளரின் வங்கிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதில் வாடிக்கையாளர் எந்த விதத்திலும் பாதிக்கப்பட போவதில்லை. ஆனால், இந்தக் கூடுதல் கட்டணத்தை வால்ட் வழங்குபவர் வாடிக்கையாளிடம் வசூலிக்க நினைத்தால், அவர் பாதிக்கப்படலாம்,

மேலும், என்பிசிஐ புதன்கிழமை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், "புதிய பரிமாற்றக் கட்டணம் பிபிஐ வணிகர்கள் பரிமாற்றங்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்றும், வாடிக்கையாளர்களுக்கு (மக்களுக்கு) எந்த விதமான கட்டணமும் கிடையாது என்றும், யுபிஐ மூலம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் செலுத்தும்போது கட்டணம் வசூல் செய்யப்படாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.



Read in source website

கோவை: கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது ஒருங்கிணைந்த சரக்கக வளாகம். உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் கோவையிலிருந்து சரக்குகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

நேரடி விமான சேவை இல்லாத ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கும் ‘பாண்டட் டிரக்’ சேவை மூலம் சாலை வழியாக கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏற்றுமதியாகின்றன.

மாதந்தோறும் உள்நாட்டு பிரிவில் 700 டன், வெளிநாட்டு பிரிவில் 150 டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. ஸ்கேனிங் ஆபரேட்டர் நியமிக்கப்படாததால் கடந்த 2 மாதங்களாக உள்நாட்டு சரக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது. வெளிநாடுகளுக்கான சரக்கு போக்குவரத்து தொடர்ந்து நடக்கிறது.

மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு வாரந்தோறும் 6 டன் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: வழக்கமாக பொறியியல் உற்பத்தி பொருட்கள், வார்ப்படம், காய்கறிகள், பழங்கள் மற்றும் சிப்ஸ் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் புக்கிங் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படும்.

சிங்கப்பூர் விமானத்தில் சரக்குகள் புக்கிங் மிகவும் குறைவாக உள்ளதால் அரை டன் அல்லது ஒரு டன் மட்டுமே சரக்குகள் கையாளப்படுகின்றன. ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்கள் விமான சேவை வழங்கப்படும் நிலையில், ஒவ்வொரு முறையும் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன.

கோடை காலத்தில் மாம்பழம் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படும். தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் கேரளா மற்றும் பொள்ளாச்சியிலிருந்து மாம்பழங்கள் அதிகளவு ஷார்ஜா விமானத்தில் கொண்டு செல்லப்படுகின்றன. வாரந்தோறும் 6 டன் எடையிலான மாம்பழங்கள் கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கோவை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 250 டன் சரக்குகள் கையாளும் உள்கட்டமைப்பு வசதிஉள்ளது. சர்வதேச நாடுகளுக்கு விமான சேவை அதிகரித்தால் சரக்குகள் கையாளப்படும் அளவும் கணிசமாக அதிகரிக்கும் என்றனர்.



Read in source website

புதுடெல்லி: வருங்கால வைப்பு நிதிக்கான (பி.எப்) வட்டி விகிதத்தை 2022-23- நிதியாண்டுக்கு 8.15 சதவீதமாக அதிகரிக்க ஓய்வூதிய நிதியமான இபிஎஃப்ஓ முடிவு செய்துள்ளது.

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்படும் தொகைக்கு கடந்த ஆண்டில் வட்டி விகிதமானது 8.1 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. இது, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிகவும் குறைந்தபட்ச அளவாகும்.

இந்த நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அறக்கட்டளை வாரியம் மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில், 2022-23 ஆண்டுக்கான பி.எப். வட்டியை 0.05 சதவீதம்உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பி.எப். வட்டி விகிதம் 8.1 சதவீதத்திலிருந்து 8.15 சதவீதமாக அதிகரிக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்த பரிந்துரையை நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் ஒப்புதலுக்குப் பிறகு வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்படும். அதன் பிறகே, இபிஎஃப்ஓ அமைப்பு சந்தாதாரர்களின் கணக்குகளில் வட்டி வரவு வைக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் ரூ.11லட்சம் கோடி உள்ளது. இந்ததொகைக்கு 2022-23 நிதியாண்டுக்கு 8.15 சதவீதம் வட்டி வழங்கமுடிவெடுத்துள்ளதை அடுத்து ரூ.90,000 கோடிக்கும் அதிகமானதொகையை சந்தாதாரர்கள் கணக்கில் செலுத்த வேண்டியுள்ளது.

கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ.9.56 லட்சம் கோடிக்கு ரூ.77,424.84 கோடி வட்டியாக வழங்கப்பட்டது என இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.

பிஎப். வட்டி விகிதம் கடந்த 2018-19 நிதியாண்டில் 8.65 சதவீத மாக இருந்த நிலையில் 2019-20-ல் ஏழு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாக 8.5 சதவீதமாக 2020 மார்ச் மாதத்தில் குறைக்கப்பட்டது என்பது குறிப் பிடத்ததக்கது.



Read in source website

சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், வனவிலங்கு பாதுகாப்பு திட்டத்திற்கு இது முக்கியமான நாள் என்று குறிப்பிட்டார். 2022 செப்டம்பரில் இந்தியாவில் விடுவிக்கப்பட்ட 8 நமீபிய சிவிங்கிபுலிகளில் ஒன்று இறந்ததைத் தொடர்ந்து குட்டிகள் பிறந்துள்ளன

Esha Roy 

சிவிங்கிபுலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் இந்தியாவின் திட்டத்திற்கான வரலாற்று தருணத்தைக் குறிக்கும் வகையில், இடமாற்றம் செய்யப்பட்ட நமீபிய சிவிங்கிபுலிகளில் ஒன்றான சியாயா, கடந்த இரண்டு நாட்களாக மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் நான்கு குட்டிகளைப் பெற்றெடுத்ததாக புதன்கிழமை காலை குட்டிகளைக் கண்டுபிடித்த வன அதிகாரிகள் தெரிவித்தனர். 1952 ஆம் ஆண்டில் நாட்டில் சிவிங்கிபுலிகள் அழிந்துவிட்டதால், 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் பிறந்த முதல் சிவிங்கிபுலி குட்டிகள் இவை ஆகும்.

சிவிங்கிபுலி குட்டிகளின் படத்தை ட்வீட் செய்துள்ள சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், “வாழ்த்துக்கள் இந்தியா! அமிர்த காலத்தின்போது நமது வனவிலங்கு பாதுகாப்பு வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு!” என்று பதிவிட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “வனவிலங்கு பாதுகாப்பு திட்டத்திற்கு இன்று ஒரு முக்கியமான நாள். அனைத்து சிவிங்கிபுலிகளும் சிறப்பாக செயல்படுகின்றன. பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட தென்னாப்பிரிக்க சிவிங்கிபுலிகளும் ஒரு மாதத்தை தனிமைப்படுத்தலை முடித்துள்ளன. ஒரு வருடத்திற்குள், அனைத்து ஆப்பிரிக்க சிவிங்கிபுலிகளையும் காட்டுக்குள் விட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இரண்டு நமீபிய பெண் சிவிங்கிபுலிகள் இன்னும் பெரிய அடைப்புக்குள் உள்ளன, மேலும் அவை தென்னாப்பிரிக்க சிவிங்கிபுலியுடன் விடுவிக்கப்படும். இதற்கான யோசனை என்னவென்றால், அவை இனச்சேர்க்கை செய்தால், இரண்டு சிவிங்கிபுலிகளுக்கு இடையிலான மரபணு வேறுபாடு அதிக உயிர்வாழ்வு நாட்களை உறுதி செய்யும்,” என்று கூறினார்.

செப்டம்பர் 2022 இல் தேசிய பூங்காவிற்குள் விடுவிக்கப்பட்ட எட்டு நமீபிய சிவிங்கிபுலிகளில் ஒன்று இறந்ததைத் தொடர்ந்து இந்த 4 குட்டிகள் பிறந்துள்ளன. சாஷா என்ற சிவிங்கிபுலி திங்கள்கிழமை (மார்ச் 26) உயிரிழந்தது. நமீபியாவில் சிறைபிடிக்கப்பட்டபோது, ​​கடுமையான சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சாஷா சில நாட்களுக்கு முன் இறந்தது.

“இது (நான்கு குட்டிகள் பிறந்தது) உலக வனவிலங்கு பாதுகாப்பு வரலாற்றில் பெரும் செய்தி. சியாயா சிவிங்கிபுலி மார்ச் 25 அல்லது 26 அன்று பிரசவித்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். சியாயாவின் அசைவுகளின் முறை காரணமாக நாங்கள் பிறப்பை எதிர்பார்த்தோம். சிறிது காலம் அதன் நடமாட்டம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. அந்த சிவிங்கிபுலி காடு முழுவதும் சுற்றித் திரிந்த பிறகு மீண்டும் அதே இடத்திற்குத் திரும்பியது. அதனால் அது குட்டிகளை பிரசவிக்கும் என்று எதிர்பார்த்தோம். அந்தச் சிவிங்கிபுலி எல்டன் அல்லது ஃப்ரெடி என்ற இரண்டு ஆண் நமீபிய சிவிங்கிபுலிகளுடன் இனச்சேர்க்கை செய்திருக்கும்; எந்த ஆண் சிவிங்கிபுலி என்று சொல்ல முடியாது. காடுகளில், அது ஒரு பொருட்டல்ல, ”என்று சிவிங்கிபுலி திட்டத்திற்கு பொறுப்பான தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் எஸ்.பி யாதவ் கூறினார்.

மேலும், சிவிங்கிபுலியின் கர்ப்ப காலம் 60-90 நாட்கள் ஆகும். தனிமைப்படுத்தப்பட்ட அடைப்புகளில் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிறகு சிறுத்தைகள் விடுவிக்கப்பட்ட 6 சதுர கிலோமீட்டர் அடைப்பில் சியாயா தனது குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது என்றும் எஸ்.பி.யாதவ் கூறினார்.

எவ்வாறாயினும், வன அதிகாரிகள் இனச்சேர்க்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஓபன் மற்றும் ஆஷாவுடன் ஃப்ரெடி மற்றும் எல்டன் சிவிங்கிபுலிகளுடன் காட்டுக்குள் விடுவிக்கப்பட்டனர், குனோ தேசிய பூங்காவில் காட்டுக்குள் விடப்பட்ட முதல் இரண்டு சிவிங்கிபுலிகள்ஓபன் மற்றும் ஆஷா ஆகும். அதிகாரிகளின் கூற்றுப்படி, ஓபன், ஒரு ஆண், நமீபிய சிவிங்கிபுலிகளில் மிகப்பெரியது மற்றும் மிகவும் திறமையாக வேட்டையாடக் கூடியது.

“சியாயா தனது குட்டிகளுடன் அடைப்பில் வைக்கப்படும், மேலும் அதன் குட்டிகள் வளர்ந்து வலிமையானவுடன், அவை தங்கள் தாயுடன் காட்டில் விடப்படும்” என்று எஸ்.பி.யாதவ் கூறினார். மேலும், பிப்ரவரி 18 அன்று பூங்கா குனோ தேசிய பூங்காவுக்கு வந்த தென்னாப்பிரிக்க சிவிங்கிபுலிகளும் சிறப்பாகச் செயல்பட்டன, என்றும் அவர் கூறினார்.



Read in source website

ஆஷா பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு; எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு இலவச கல்வி; புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

எஸ்.சி, எஸ்.டி மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை இலவச கல்விக்கு அரசாணை வெளியிடப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர் ரங்கசாமி, சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஆஷா பணியாளர்கள் ஊதியம் ரூ. 6 ஆயிரம் வாங்கி வந்தனர். அதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தரப்படும். காரைக்காலில் 30 ஆயிரம் சதுர அடி 50 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை ரூ. 15 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும். அதற்கு ரூ. 2 கோடி ஒதுக்கப்படும். வருவாய்த்துறையில் தினக்கூலி ஊதியம் உயர்த்தப்படும்.

எஸ்சி, எஸ்.டி மாணவ, மாணவிகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை இலவசக் கல்வி என அறிவித்தோம். சென்டாக் மூலம் மட்டுமில்லாமல், இதர வழிகளிலும் படிக்கும் அனைவருக்கும் நிதி தரப்படும். சிறப்புக் கூறு நிதியில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து செய்வோம். இதற்காக அரசாணை வெளியிடப்படும். கல்வித் துறையில் ரொட்டி, பால் ஊழியர்களுக்கும் ஊதியம் ரூ. 18 ஆயிரமாக உயர்த்தி தரப்படும் என்று கூறினார்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி



Read in source website

பாஸிங் அவுட் அணிவகுப்பை மதிப்பாய்வு செய்த கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார், அக்னிபாத் திட்டத்தில் முதன்முதலில் பெண் மாலுமிகள் தேர்வானது “இந்திய கடற்படைக்கு சரித்திரம்” என்றார்.

Indian Navy Agniveers women sailors Tamil News: அக்னிபாத் திட்டம் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் 4 ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றாலம். பணியில் சேர்வதற்கு முன்பு 6 மாத காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும்.

இந்நிலையில், இந்தியக் கடற்படையானது, அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி, பெண் அக்னி வீரங்கனைகளை சேவையில் சேர்க்கத் தொடங்கும் வாய்ப்பை உருவக்கியது. அதன் அடிப்படையில், இந்திய கடற்படை 2,585 அக்னி வீரர்களை தகுதி பெற்றவர்களாக தேர்வு செய்துள்ளது. இதில் 273 பேர் அக்னி வீரங்கனைகள் ஆவார்.

இந்தியக் கடற்படையின் அக்னி வீரர்கள் முதல் பேட்ஜ் ஒடிசாவில் உள்ள ஐஎன்எஸ் சில்கா போர்டல்களில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை தெற்கு கடற்படைக் கட்டளையின் கீழ் நடத்தப்பட்ட அதன் முதல் பாஸிங் அவுட் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். பாஸிங் அவுட் அணிவகுப்புகள் (POPs) பாரம்பரியமாக காலை நேரங்களில் நடத்தப்படுகின்றன என்றாலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இரவில் நடத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதுவே இந்திய ஆயுதப் படைகளில் முதல் முறையாகும்.

16 வார கடின கடற்படை பயிற்சியின் வெற்றிகரமான உச்சக்கட்டத்தை பாசிங் அவுட் அணிவகுப்பு குறிக்கும். இந்திய கடற்படையை போர் தயார், நம்பகமான, ஒருங்கிணைந்த மற்றும் எதிர்கால ஆதாரப் படையாக மாற்ற கடல் வீரர்கள் பயிற்சி பெற்றுள்ளனர் என்று இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸிங் அவுட் அணிவகுப்பை மதிப்பாய்வு செய்த கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார், இந்த நிகழ்வில் முதன்முதலில் பெண் மாலுமிகள் தேர்வானது “இந்திய கடற்படைக்கு சரித்திரம்” என்றார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “நம் நாரி சக்தியை (Nari Shakti) உலகுக்குக் காட்ட இது ஒரு வாய்ப்பு. தேசம் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், நமது பெண் மாலுமிகள் ஐஎன்எஸ் சில்காவைக் கடக்கிறார்கள். நாட்டின் முழு தலைமுறை இளம் பெண்களுக்கும் இது உத்வேகத்தை அளிக்கும்.

தேர்ச்சி பெறுபவர்கள் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளவும், அறிவாற்றல், கற்கும் விருப்பம் மற்றும் எதிர்காலத்தில் அந்தந்த தொழில்களில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் வலுவான அடித்தளத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இந்தியக் கடற்படையின் முக்கிய மதிப்புகளான கடமை, மரியாதை மற்றும் தைரியத்தை நிலைநாட்ட வேண்டும்

அக்னிவீரர்களின் முதல் பேட்ஜ் இந்தியாவின் முதல் அக்னிவீரர்களாக மாறி, இந்தியக் கடற்படையில் புதிய யுகத்தைத் தொடங்குவதன் மூலம் வரலாற்றை எழுதப் போகிறது.

அக்னிவீரர்களின் முதல் பேட்ஜ் எதிர்கால அக்னிவீரர்களுக்கு ஜோதியாக செயல்படுவார்கள். இந்தியக் கடற்படையில் சேர்வதன் மூலம் எதிர்கால அக்னிவீரர்கள் இந்தியாவின் பாதுகாப்பின் ஒரு பகுதியாக எப்படி இருக்க முடியும் என்பதை இந்த பேட்ஜில் உள்ள வீரர்கள் தீர்மானிப்பார்கள். அதுமட்டுமின்றி, ஆயுதப்படையில் இல்லாமல் தேசத்தை கட்டியெழுப்புவதில் எவ்வாறு பங்களிப்பது என்பதையும் இந்த அக்னிவீரர்கள் தீர்மானிப்பார்கள்.

இந்தியாவும் இந்திய கடற்படையும் வேகமாக வளர்ந்து வருகிறது. அக்னிவீரர்கள் வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பது அதிர்ஷ்டம். அவர்கள் உலகம் முழுவதும் மிகவும் போற்றப்படும் தொழில்களில் ஒன்றாக அடியெடுத்து வைக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

இந்த பாசிங் அவுட் அணிவகுப்பில், துணை அட்மிரல் எம்.ஏ.ஹம்பிஹோலி, தென் கடற்படைக் கட்டளைத் தளபதி, பிரபல தடகள வீராங்கனையும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.டி.உஷா, விளையாட்டு வீராங்கனை மிதாலி ராஜ் மற்றும் கடற்படை வீரர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



Read in source website

கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டாம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஜெகன், தன் சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து மணந்துகொண்டார். இதையடுத்து, பெண்ணின் தந்தையால் அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், ஆணவக் கொலை தொடர்பான விவாதங்களை மீண்டும் எழுப்பியிருக்கிறது.

காதல் திருமணங்களில், குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்லி தங்கள் மகனையும் மகளையுமே கொல்லும் அளவுக்குப் பலரிடமும் சாதி ஆணவம் ஆழ வேரூன்றியிருப்பதைத்தான் இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.



Read in source website

பள்ளிக் கல்வி: யாருக்கு இல்லை பொறுப்பு?’ என்கிற தலைப்பில், ‘இந்து தமிழ் திசை’யில் (மார்ச் 16) வெளியான கட்டுரையில், கரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்துக்குப் பிறகான மாணவர்களின் நடத்தை குறித்த விமர்சனங்கள் இடம்பெற்றிருந்தன. ‘ஆசிரியர் கையிலிருந்து பிரம்பு பறிக்கப்பட்டது சரியல்ல’ என்றும் அக்கட்டுரை சுட்டிக்காட்டியது. இது தொடர்பாகச் சில நடைமுறை நிதர்சனங்கள் விவாதிக்கப்பட வேண்டும்.

சமீபத்தில் ஓர் அரசுப் பள்ளியில் செய்முறைத் தேர்வு முடிந்த நாளில், மேல்நிலை வகுப்பு மாணவர்கள் ஒரு வகுப்பறையின் இருக்கைகளைச் சேதம்செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. பல ஆசிரியர்கள் அதைப் பகிர்ந்து, ‘எப்படிப்பட்ட மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறோம்?’ எனும் அங்கலாய்ப்புடன் பெற்றோரிடமும் மக்களிடமும் எதையோ நிரூபிக்க விரும்பினர். பல ஆண்டுகாலமாக ஆசிரியப் பணியில் இருந்துவரும் அனுபவத்தின் அடிப்படையில், இதுபோன்ற நிகழ்வுகளை அணுக வேறொரு பார்வை அவசியம் என்பதே என் கருத்து.



Read in source website

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்திக்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ள சூரத் நீதிமன்றம், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அந்தத் தீர்ப்பு வெளியான தேதியிலிருந்தே (மார்ச் 23) ராகுல் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதியிழந்துவிட்டதாக மக்களவைச் செயலரின் அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து உறுப்பினர் தகுதியிழப்பது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவை மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளன.



Read in source website

இந்தியாவில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதற்கு 2020 முதல் 2022ஆம் ஆண்டுவரை 112 மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி மக்களுக்கு வழங்கப்பட்டு, மாதிரி ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால், இந்த ஆய்வில் கிடைத்த முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், எல்லா மாநிலங்களிலும் பொது விநியோக முறை, மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட அரசு சார்ந்த திட்டங்கள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசியை (Fortified rice) வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள 5.51 லட்சம் ‘அந்தியோதயா அன்ன யோஜனா’, முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோருக்குச் செறிவூட்டப்பட்ட அரிசி ஏற்கெனவே வழங்கப்பட்டுவருகிறது. ஏப்ரல் 1 முதல் மாநிலம் முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை நீட்டிக்கத் தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 18.64 லட்சம் ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ பயனாளர்கள், 96.12 லட்சம் முன்னுரிமைக் குடும்ப அட்டைதாரர்கள், 1.1 கோடி முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

செறிவூட்டுதல்: ‘நாம் உண்ணும் உணவின் ஊட்டச்சத்துத் தரத்தை மேம்படுத்தும் வகையில், தேவையான நுண்ணூட்டச் சத்துக்களின் உள்ளடக்கத்தைத் திட்டமிட்ட வகையில் அதிகரிப்பதே’ செறிவூட்டல் என இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (FSSAI) வரையறை செய்துள்ளது. இந்த அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி-12 ஆகிய ஊட்டச்சத்துகள் செயற்கையாக ஏற்றப்படும்.

வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட பல நுண்ணூட்டச் சத்துப்பொருள்கள் கொண்ட செயற்கையான செறிவூட்டும் கலவை (பிரிமிக்ஸ்) இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேதிப்பொருள் கலவையும், மாவாக்கப்பட்ட அரிசியும் சேர்க்கப்படும். பிறகு, இந்த மாவு அரிசி வடிவில் மீண்டும் இயந்திரங்களில் வார்த்தெடுக்கப்படுகிறது. சாதாரண அரிசியுடன் 100:1 என்ற விகிதத்தில் இந்தச் செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் கலக்கப்படுகின்றன.

அறிவியல் உண்மைகள்: ரத்தசோகை பிரச்சினைக்கான தீர்வு என்கிற அடிப்படையில், இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களைச் சென்றடையும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசியைக் கட்டாயமாக வழங்குவது சரியா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தானியங்களில் இரும்புச் சத்தைச் செறிவூட்டுவது உடலில் ஃபெரிடின் போன்ற இரும்புச்சத்து சார்ந்த சேமிப்பைக் கணிசமாக அதிகரிக்கும்.

அது மட்டுமல்லாமல், ஹீமோகுளோபின் அளவையும் இது உயர்த்தாது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடலில் உள்ள நல்ல நுண்ணுயிரிகளை அழித்து பாக்டீரியத் தொற்று எளிதில் ஏற்படவும் இரும்புச்சத்து வழிவகுக்கும். உடலில் இரும்புச்சத்து அதிகரித்தால் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படலாம். பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படச் சாத்தியமுள்ளது.

உலக அளவில் தலசீமியா நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதேபோல் ரத்த சோகையின் தீவிரமான பிரச்சினைகளில் ஒன்றான, அரிவாள் உயிரணுச் சோகையால் (Sickle cell anaemia) பாதிக்கப்பட்ட மக்கள் இந்தியாவில் அதிகம் உள்ளனர். இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட உணவால் ஏற்கெனவே உள்ள பாதிப்புகள் இவர்களுக்கு அதிகரிக்கும்.

இத்தகைய பிரச்சினைகளை ஒப்புக்கொள்ளும் அரசாங்க அதிகாரிகள், குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவு வகை சார்ந்த பைகளில் எச்சரிக்கை வாசகங்களைப் பொறித்துவிட்டால், தீய விளைவுகளைத் தவிர்த்து விடலாம் என்கின்றனர். போதிய கல்வியறிவும் விழிப்புணர்வும் இல்லாதவர்கள் நிறைந்த நாட்டில், இந்த எச்சரிக்கை வாசகங்களால் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த இயலாது என்பதே உண்மை.

பொது விநியோகத் திட்டம் மூலம் இந்த அரிசியை ஏற்கெனவே பெற்றுள்ள மக்கள், இந்த அரிசியை வேகவைக்கும் முன் தண்ணீர் ஊற்றிக் களைந்தால், அரிசி தண்ணீரில் மிதப்பதாகவும், வழக்கமான முறையில் வேகவைக்க முடியவில்லை என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகை, பிளாஸ்டிக் அரிசி என்று குற்றஞ்சாட்டப்பட்டது நினைவிருக்கலாம். தற்போது வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியும் அந்த வகையில் செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான்.

யாருக்கு லாபம்? செறிவூட்டப்பட்ட அரிசித் திட்டம் மருத்துவ அறிவியல் கண்ணோட்டத்துடன் உருவாக்கப்படவில்லை. ரத்தசோகை, பசி, ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கான தீர்வுகளை, தானியங்களைச் செறிவூட்டுவதன் மூலமாக மட்டும் சரிசெய்துவிட முடியாது.

பல தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், மீன், அசைவ உணவு போன்ற சத்தான பல்வேறு உணவு வகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம்தான் பூர்த்திசெய்ய முடியும். பன்முகத்தன்மை மிகுந்த சத்தான உணவு வகைகளைக் குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று மருத்துவ, ஊட்டச்சத்து நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஏற்கெனவே பல்வேறு நோய்களால் வாடும் ஏழை எளியோர், தரமான தானிய உணவு-காய்கறி, பழங்கள் போன்றவற்றை விலை கொடுத்து வாங்க முடியாத சிக்கல்களால்தான் ஊட்டச்சத்துக் குறைபாடு சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆளாகிவருகின்றனர். உடல் சிறப்பாகக் கிரகித்துக்கொள்ளக்கூடிய காய்கறி, பழங்கள், தானியங்களைக் குறைந்த விலையிலும், எளிதாகக் கிடைக்கும் வகையிலும் சமூக-பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதே அரசு செய்ய வேண்டியது. அதற்குப் பதிலாகச் செயற்கையாக ஊட்டமேற்றப்பட்ட அரிசியைத் தருவதால் என்ன உத்தரவாதமான பலன் கிடைக்கப்போகிறது?

ஆக, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒரு திட்டத்தை அவசர அவசரமாக நாடு முழுவதும் அமல்படுத்துவது தனியார், பெருநிறுவனங்களுக்கு லாபம் சம்பாதிக்க உருவாக்கப்பட்ட திட்டமோ எனும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ஏனெனில், செறிவூட்டப்பட்ட அரிசியையும் அதற்குத் தேவையான செயற்கை நுண்ணூட்டச் சத்துகளையும் பன்னாட்டு நிறுவனங்களே உற்பத்திசெய்து வருகின்றன.

முதலில் பொது விநியோகத் திட்டம் மூலம் விநியோகிக்கப்படும் அரிசி, படிப்படியாக வெளி அரிசி விநியோகக் கட்டமைப்பையும் பெரிய அளவில் மாற்றும். பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் பல கோடி டாலர் புழங்கும் தொழில் இது. இதன்மூலம் நமது உணவுச் சங்கிலியானது அரசு-பொது நிறுவனங்களின் கைகளிலிருந்து வெளியேறி பெருநிறுவனக் கட்டுப்பாட்டுக்குச் செல்லும் நிலை ஏற்படும்.

விழிப்புணர்வுப் பிரச்சாரம்: செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் குறித்து மக்களிடையே அரசாங்கம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. எந்த அறிவியல்பூர்வத் தொடர் ஆய்வுகளும் இல்லாமல், பொது விநியோக முறையில், செறிவூட்டப்பட்ட அரிசியைக் கண்மூடித்தனமாக வழங்கும் இந்தத் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். மூன்று வருட கால மாதிரி ஆய்வுகளில் கிடைத்த தரவுகளைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.

அப்போதுதான் இந்தத் திட்டத்தின் சாதக, பாதக அம்சங்களைத் துறைசார் நிபுணர்களும் மக்களும் முழுமையாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு உருவாகும். அதேபோல் இதுதொடர்பாக, மக்கள் மத்தியில் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அதன்பிறகு மருத்துவ, ஊட்டச்சத்து நிபுணர்களின் முறையான ஆய்வுத் தரவுகள் அடிப்படையில் இந்தத் திட்டத்தை மாற்றியமைத்து செயல்படுத்த முன்வர வேண்டும்.

- அன்பு வாகினி | உணவுத் தொழில்நுட்ப வல்லுநர்; தொடர்புக்கு: navahini@gmail.com



Read in source website

ராஜஸ்தான் அரசு, அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றிய சுகாதார உரிமை சட்ட மசோதாவுக்கு அம்மாநில தனியார் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையில் இந்தச் சட்டம் யாருக்கானது? இந்தச் சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் என்னென்ன? - இவை குறித்து சற்றே விரிவாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.

நமது நாட்டில் கல்வி உரிமைச் சட்டம் அமலில் இருக்கிறது. 6 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட வேண்டியது கட்டாயம் என்கிறது இந்தச் சட்டம். வசதி இல்லை என்பதற்காக எந்த ஒரு குழந்தைக்கும் கல்வி மறுக்கப்படக் கூடாது என்பதே இதன் நோக்கம். இதற்காக ஒவ்வொரு தனியார் பள்ளியும் மாணவர் சேர்க்கையில் 25 சதவீதத்தை வசதி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்காக ஒதுக்க வேண்டும்; அவர்களுக்கான கல்விச் செலவை அரசே பள்ளிகளுக்கு வழங்கும் என்கிறது இந்தச் சட்டம்.

இதேபோல், அவசர காலத்தில் உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் ஒருவர் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக சுகாதார உரிமைச் சட்டத்தை இயற்றி இருக்கிறது ராஜஸ்தான் மாநில அரசு. இதுபோன்ற ஒரு சட்டம் இயற்றப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறை. முதல்வர் அஷோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு இதற்கான மசோதாவை கடந்த 21-ம் தேதி (மார்ச் 21) சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.

அவசர சிகிச்சை இலவசம்: இந்தச் சட்டத்தின்படி, ராஜஸ்தானில் வாழும் மக்கள் எந்த ஓர் அரசு அல்லது தனியார் மருத்துவமனையிலும் அவசர சிகிச்சையை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக முன்பணம் என்று ஏதும் செலுத்தத் தேவை இல்லை. வெளிநோயாளியாகவோ அல்லது உள்நோயாளியாகவோ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். அவசர கால சிகிச்சை, மருத்துவ ஆலோசனை, மருந்துகள், பரிசோதனைகள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். நோயாளிகள் செல்வதற்கான போக்குவரத்தும் இலவசமாக வழங்கப்படும். சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு இலவச காப்பீட்டுத் திட்டம் உண்டு.

தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ள நோயாளிகளுக்கான உரிமைகள் அனைத்தையும் இந்தச் சட்டம் ஏற்கிறது. இந்தச் சட்டத்தை அமல்படுத்த மாநில சுகாதார ஆணையம் மற்றும் மாவட்ட சுகாதார ஆணையம் ஆகியவை அமைக்கப்படும். இந்த ஆணையங்கள் சுதந்திரமாக இயங்கக் கூடியவைாக இருக்கும். மாநில சுகாதார ஆணையத்தின் தலைவராக இணை செயலர் அந்தஸ்துக்குக் குறையாத ஒரு ஐஏஎஸ் அதிகாரி இருப்பார். மாவட்ட சுகாதார ஆணையத்தின் தலைவராக அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இருப்பார்கள்.

சட்டத்தை மீறினால்..? - நோயாளிகள் தங்கள் குறைகளை இலவச தொலைபேசி எண் மூலமும், இணையதளம் மூலமும் பதிவு செய்யலாம். புகார் மீது சம்பந்தப்பட்ட அதிகாரி 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காவிட்டால் அதன் மீது மாவட்ட சுகாதார ஆணையம் உரிய நடவடிக்கையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எடுத்து தீர்வு காண வேண்டும். அதன் பிறகு அது குறித்த அறிக்கையை 30 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். புகார் மீது மாவட்ட சுகாதார ஆணையம் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநில சுகாதார ஆணையம் உத்தரவிட வேண்டும். முதல் முறையாக சட்டத்தை மீறுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கவும், தொடர்ந்து மீறுபவர்களுக்கு ஒவ்வொரு புகாரின் மீதும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கவும் இந்தச் சட்டம் வழி வகை செய்கிறது.

தனியார் எதிர்ப்பு ஏன்? - இந்த ஆண்டு இறுதிக்குள் ராஜஸ்தான் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களின் நன்மதிப்பைப் பெறும் நோக்கில் இந்தச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது காங்கிரஸ் அரசு. ஆனால், இந்தச் சட்டம் ஒரு கொடூரமான சட்டம் என்றும், இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி அம்மாநில தனியார் மருத்துவமனைகளும், தனியார் மருத்துவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு போராட்டக்காரர்கள் கூறும் காரணங்கள்:

1. இலவச சிகிச்சையை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு உரிய தொகையை அரசு வழங்க வேண்டும். ஆனால், இந்தச் சட்டத்தில் அது குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இது அரசியல் சாசன சட்டப்பிரிவு 19(1)(g) வழங்கியுள்ள தொழில் நடத்துவதற்கான உரிமையை மீறுவதாகும்.

2. அவசர சிகிச்சைக்கான பட்டியலில் பிரசவம் இடம்பெற்றுள்ளது. இதனை நீக்க வேண்டும்.

3. இந்தச் சட்டப்படி அவசர சிகிச்சை அளிப்பதில் இருந்து சிறிய அளவிலான கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவு உள்ள 50 படுக்கை வசதிகளுக்குக் குறையாத மருத்துவமனைகளுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும்.

4. நோயாளிகளுக்கான உரிமை தொடர்பாக மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்த விதிகள் ஏற்கப்படுவது போன்றே, சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் விஷயத்தில் நோயாளிகளுக்கு உள்ள கடமைகள் தொடர்பாக மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ள விதிகளும் ஏற்கப்பட வேண்டும்.

5. இந்தச் சட்டப்படி அனைவருக்கும் அனைத்து சிகிச்சைகளும் இலவசம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை அரசும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஏற்படுத்தி வருகிறார்கள். இது விஷயத்தில் மக்களை அரசு தவறாக வழிநடத்தக் கூடாது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை மருத்துவர்களும், மருத்துவமனைகளுமே எதிர்கொள்ள நேரிடும்.

6. சுகாதார ஆணையத்தின் கீழ் இந்தச் சட்டம் கண்காணிக்கப்படுவதால் அரசு நிர்வாகத்தின் தலையீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

7. புகார் மீதான நடவடிக்கைகள் மாவட்ட சுகாதார ஆணையத்தால் இணையத்தில் பதிவேற்றப்பட வேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவேற்றப்படும் தகவல்களை யார் யார் அணுக முடியும் என்பது குறித்து வரையறுக்கப்படவில்லை.

அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்டத்தில் இத்தனை குளறுபடிகள் இருப்பதால், இதனை ஏற்க முடியாது என தனியார் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும், சட்டம் திரும்பப் பெற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு முன்வருவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். சுமார் 55 ஆயிரம் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ராஜஸ்தானில் தற்போது மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

என்ன சொல்கிறார் முதல்வர்? - இந்நிலையில், மருத்துவர்களின் போராட்டத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அஷோக் கெலாட், ''மக்களின் நலன் கருதியே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் குறித்த தவறான புரிதல்கள் தீர்க்கப்படும். மருத்துவர்களின் கோரிக்கைளும் ஏற்கப்படும். அரசும் தனியாரும் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். எனவே, மருத்துவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். போராட்டத்தை கைவிட வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.

தனியார் மருத்துவமனைகளின் எதிர்ப்பு சரியா? - இந்தப் போராட்டம் குறித்து நம்மிடம் கருத்து தெரிவித்துள்ள சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத், ''தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் இந்தப் போராட்டம் தவறானது. அவர்கள் தங்களுக்கு உள்ள சமூக கடமைகளை புறக்கணிக்க முடியாது. சுகாதார உரிமையை உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. 1936-ம் ஆண்டிலேயே சோவியத் யூனியனில் சுகாதார உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இது உலகிற்கே முன்னோடியான நடவடிக்கையாக இருந்தது. இதன் அடிப்படையே மனித நலன்தான்.

சுகாதார உரிமைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை நாங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு கொண்டு வராத நிலையில், ராஜஸ்தான் அரசு கொண்டு வந்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரத்தில், இதுவே போதுமானது அல்ல. ராஜஸ்தானில் அரசு மருத்துவக் கட்டமைப்புகள் வலிமையாக இல்லை. எனவே, அரசு இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும். இந்தச் சட்டத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அது குறித்து அவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். மாறாக, இந்தச் சட்டத்தை கொடூரச் சட்டம் என்று வர்ணிப்பதும், சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துவதும் தவறானது. ராஜஸ்தானில் தனியார் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் நடத்தி வரும் இந்தப் போராட்டம் மக்களுக்கு எதிரானது.

ஒரு வகையில் இந்தச் சட்டம் தனியாருக்குச் சாதகமானது என்பதே எங்கள் பார்வை. ஏனெனில், மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு அதற்கான செலவை அரசு நிச்சயம் ஏற்கும். இதனால், தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு நிதி அதிக அளவில் செல்லும். எனவே, அரசு மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவதே சரியான நடவடிக்கையாக இருக்கும். அதேநேரத்தில், இந்தச் சட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்களும் உரிய சுகாதார வசதிகளை பெற முடியும் என்பதால், ராஜஸ்தான் அரசு கொண்டு வந்திருக்கும் இந்தச் சட்டத்தை நாங்கள் வரவேற்கவே செய்கிறோம்'' எனத் தெரிவித்தார்.

சுகாதார உரிமைச் மசோதா ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் மாநில அரசு பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைபெற்ற இதற்கான பேச்சுவார்த்தைகளின்போது, மசோதாவில் உள்ள பல்வேறு குறைகளை தாங்கள் சுட்டிக்காட்டியதாகக் கூறுகிறார் இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் ராஜஸ்தான் மாநில தலைவர் சுனில் சவுக்.

மசோதா இறுதி வடிவம் பெறும்போது இந்த குறைகள் அனைத்தும் சரி செய்யப்படும் என அரசு தரப்பில் உறுதி அளித்ததாகவும், ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார். இந்த மசோதா தொடர்பான தங்களின் கருத்துகளை எழுத்துபூர்வமாக கடந்த 17-ம் தேதி மாநில தலைமைச் செயலரிடம் வழங்கியதாகவும், இருந்தும் அவை பரிசீலிக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் சுனில் சவுக் கூறுகிறார்.

இது ஏன் முக்கியம்? - அஷோக் கெலாட் அரசைப் பொறுத்தவரை இது மிக முக்கியமான ஒரு நடவடிக்கை. தேர்தலை மனதில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும்கூட இது ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்கானது என்பதால் இதன் வெற்றி ராஜஸ்தானுக்கு மட்டுமல்ல; நாட்டிற்கே மிகவும் முக்கியமானது. இதில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் பல மாநிலங்கள் இந்த விவகாரத்தில் ராஜஸ்தானை பின்பற்ற வாய்ப்பு இருக்கிறது. இதில் ராஜஸ்தான் தோல்வி அடைந்தால் இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வருவதை பல மாநிலங்கள் தவிர்க்கவும் வாய்ப்பு இருக்கிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் அரசு போதைய கவனத்தைக் கொடுத்திருக்க வேண்டும். மருத்துவர்கள் தரப்பில் முறையீடுகளை தெரிவிக்கும்போதே அரசு அதன்மீது உரிய கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அப்போது விட்டுவிட்டு தற்போது பேச்சுவார்த்தைக்கு அழைப்பது அரசின் பலவீனத்தைக் காட்டுவதாகக் கருத இடமிருக்கிறது. அதோடு, மருத்துவத் துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பல தனியார் மருத்துவமனைகள் இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.



Read in source website