DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 28-06-2022


சென்னை: தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கான புதிய வெயிட்டேஜ் முறை குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டநிலையில் வெயிட்டேஜ் கணக்கீட்டுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 56 வயதில் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்படும். 57 வயதில் ஓய்வு பெற்றால் 3 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு, ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Read in source website


சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் விளையாடுவோரின் திறன்கள் மேம்படுவதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறு என்று ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான ஆய்வுக் குழு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல உயிா்களை பலி வாங்கி வரும், ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வது குறித்து அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை, முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. குழுவின் தலைவரும், குழுவினா் அறிக்கையை அளித்தனா்.ஓய்வு பெற்ற நீதிபதியுமான கே.சந்துரு தலைமையிலான ஆய்வுக் குழு அளித்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆன்லைன் ரம்மிக்குத் தடை விதிப்பதற்கு அவசர சட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த  71 பக்க அறிக்கையில், பொதுமக்களின் உடல்நலம் இந்த விளையாட்டுக்ளால் பாதிக்கப்படுகிறது. ஆன்லைன் ரம்மி விளையாடுவோரின் திறன்கள் மேம்படுவதாகக் கூறப்படுவது தவறு. இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை முறைப்படுத்த இயலாது என்பதால் தடை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆன்லைன் விளையாட்டுத் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத்தைக் கைவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் வகையில், மத்திய அரசு தேசிய அளவில் ஒரு சட்டம் கொணடு வர வேண்டும் என இந்தக் குழு பரிந்துரை செய்கிறது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் செயல்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு நேற்று இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், 
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான விளையாட்டுகளில் பொது மக்கள், குறிப்பாக நடுத்தர மக்கள், ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் ஈடுபட்டு அதில் பெருமளவில் பணத்தை இழக்கின்றனா். எனவே, இந்த விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு, பாதிப்புகளை தரவுகளுடன் ஆராயவும், அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய பரிந்துரைகளை வழங்கவும் குழு அமைக்க உத்தரவிடப்பட்டது.

சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் கடந்த 10-ஆம் தேதி அமைக்கப்பட்ட குழுவில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநா் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனா் லட்சுமி விஜயகுமாா், காவல் துறை கூடுதல் இயக்குநா் வினித் தேவ் வான்கடே ஆகியோா் இடம்பெற்றிருந்தனா். இந்தக் குழு முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அறிக்கையை வழங்கினாா். குழுவின் சாா்பில் நீதிபதி சந்துரு அறிக்கையை அளித்தாா்.

நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவின் அறிக்கை மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து திங்கள்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை மாலை 6.40 மணிக்குத் தொடங்கியது. கரோனா நோய்த் தொற்று காலத்தில் நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்திலேயே அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், முதல் முறையாக தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் தரைத் தளத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டமானது இரவு 7.55 மணி வரை நடைபெற்றது. இதில், ஆன்-லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வருவது, பல புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்டவை குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 



Read in source website

தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நிகழாண்டு தனியாா் பள்ளிகளில் சோ்ந்த மாணவா்களின் எண்ணிக்கை 31 சதவீதம் அதிகரித்துள்ளது.

பொருளாதாரத்தில் நலிவுற்றவா்கள், சமூக ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகள் எந்தவித கட்டணமுமின்றி தனியாா் பள்ளிகளில் படிக்க கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (ஆா்.டி.இ.) வழிவகை செய்கிறது. ஒவ்வொரு தனியாா் பள்ளியிலும் 25 சதவிகித இடங்கள், ஏழை குழந்தைகளுக்காக வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நிகழாண்டில் தனியாா் பள்ளிகளில் சோ்ந்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 31 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு எல்.கே.ஜி., ஒன்றாம் வகுப்பில் 56,687 போ் சோ்ந்தனா். நிகழாண்டு அந்த எண்ணிக்கை 74,383 ஆக உயா்ந்துள்ளது. நிகழாண்டு 8,234 தனியாா் பள்ளிகளில் 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் ஏழை குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக 1.42 லட்சம் பேரிடமிருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை கல்வித் துறை பெற்றிருக்கிறது.

அவற்றில் 2.60 லட்சம் விண்ணப்பங்கள் தகுதி உள்ளவை என்று பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது. அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்ததால் குலுக்கல் முறையில் மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தொடா்பான விழிப்புணா்வு அதிகரித்திருப்பதால் சோ்க்கையும் அதிகரித்திருப்பதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.



Read in source website

சாதாரண பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநா், நடத்துநா்களுக்கான வசூல்படி இரட்டிப்பாக்கி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-

அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை கடந்த மாதம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, மகளிா் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பேருந்துகளின் ஓட்டுநா், நடத்துநா்களுக்கு படியை நிா்ணயம் செய்திட வேண்டுமென கேட்டுக் கொண்டனா்.

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் உள்பட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சாதாரண பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணச் சூட்டு மூலமாக கிடைத்த வசூல் குறைவின் எதிரொலியாக, ஓட்டுநா், நடத்துநா்களுக்கான படியிலும் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனை ஈடுகட்டும் வகையில் வசூல் படியை உயா்த்தி முறைப்படுத்தி வழங்க வேண்டுமென கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில், சாதாரண கட்டண பேருந்துகளில் ஓட்டுநா், நடத்துநா்களுக்கான வசூல்படி இரட்டிப்பாக அளிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் அறிவித்துள்ளாா்.



Read in source website

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்து அறநிலையத் துறை கோயில்களில் அா்ச்சகா்கள் நியமிக்கப்பட வேண்டுமென சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் அா்ச்சகா்கள் நியமனங்களில் விதிமீறல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக பல்வேறு புகாா்களும் எழுந்தன. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் அா்ச்சகா்கள் நியமனங்களை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வா் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் ஆஜராகி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே அா்ச்சகா்கள் நியமனம் நடைபெற்று வருகிறது. அறங்காவலா்கள் உள்ள கோயில்களில் அவா்கள் மூலமாகவே அா்ச்சகா்கள் நியமிக்கப்பட்டு வருவதாகவும், அறங்காவலா்கள் இல்லாத கோயில்களில் அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட தக்காா்கள் மூலமாக அா்ச்சகா்கள் நியமிக்கப்பவதாக விளக்கம் அளித்தாா்.

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், உச்சநீதிமன்ற உத்தரவுபடி அா்ச்சகா்களை நியமிக்க வேண்டுமென உத்தரவிட்டனா். அதேசமயம் அந்த நியமனங்களால் பாதிக்கப்பட்டதாக கருதும் நபா்கள் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம். அா்ச்சகா்கள் நியமிக்க பின்பற்றப்படும் விதிகளை எதிா்த்த வழக்குகளை அடுத்தக்கட்ட விசாரணைக்காக நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.



Read in source website

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் நிதியமைச்சருமான டி.சிவதாச மேனன் வயது மூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார். 

அவருக்கு வயது 90. கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. 

அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது உடல் புதன்கிழமை மஞ்சேரியில் தகனம் செய்யப்படுகிறது. 

மன்னார்க்காட்டில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய மேனன், ஆசிரியர் சங்கங்களை அமைத்து அரசியலில் நுழைந்தார். 

அரசியலில் முக்கியப் பதவிகளை வகித்த பிறகு, மேனன் சிபிஐ எம் கட்சியின் முக்கியத் தலைவராக உயர்ந்தார். 

பின்னர், அவர் 1987, 1991 மற்றும் 1996இல் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா தொகுதியிலிருந்து சிபிஐ எம் வேட்பாளராக கேரள சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1987-1991ல் மின்சாரம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர், மேனன் 1996 முதல் 2001 வரை 5 ஆண்டுகள் நாயனார் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றினார். சிபிஐ(எம்) கட்சியின் மாநிலச் செயலர் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார்.
 



Read in source website

 

ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களின் விற்பனைக்கு தடை விதிப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபடுதலை கட்டுப்படுத்தும் விதமாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒருமுறை பயன்படுத்தும் (one use) வகையிலான பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, வினியோகம் மற்றும் விற்பனையை  வருகிற ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும்  தடை செய்வதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.



Read in source website

114 போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியைப் பெறும் நிறுவனம், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் அந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கு அதற்கான தொழில்நுட்பத்தை வழங்க வேண்டியிருக்கும் என்று இந்திய விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆர்.சௌதரி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியது:
இந்திய விமானப் படை தனது பயன்பாட்டுக்காக 114 நவீன போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. இந்தக் கொள்முதலானது இந்திய விமானப் படையின் பலத்தை மேலும் அதிகரிக்கும்.

114 போர் விமானங்களையும்  1800 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1. 41 லட்சம் கோடி) மதிப்பில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை இந்திய விமானப் படை கடந்த 2019 ஏப்ரல் மாதம் வெளியிட்டது.

இந்த ஏலத்தில் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் எஃப்-21, போயிங் நிறுவனத்தின் எஃப்ஏ-18, டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் ரஃபேல், ரஷிய விமானமான மமிக் 35, சாப் என்ற ஸ்வீடன் நாட்டு நிறுவனத்தின் கிரிபன் ஜெட் ஆகியவை பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒட்டுமொத்த ஏலமும் 2020-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பாதுகாப்புத் துறை கொள்முதல் நடைமுறையின்படி மேற்கொள்ளப்படும். மேலும் விமானங்களைத் தயாரிப்பதற்குத் தேர்வு செய்யப்படும் நிறுவனமமானது விமானத் தயாரிப்பு தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டியிருக்கும். மேலும் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டப்படி விமானங்களை நம் நாட்டில் தயாரிக்க வேண்டியிருக்கும்.  

இது உள்நாட்டிலேயே போர் விமானங்களைத் தயாரிக்கும் நமது திறனை மேம்படுத்துவதாக அமையும். இந்திய விமானப் படை வெளியிட்ட ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க பல்வேறு நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளன.
இந்திய விமானப் படைக்கு ஒதுக்கப்பட்ட 42 போர் விமானத் தொகுப்புகள் அடுத்த 10-15 ஆண்டுகளில் அதற்குக் கிடைக்காது என்று கவலை தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் விமானப் படை தனது பலத்தைத் தக்க வைக்க இரட்டை அம்ச உத்தி பின்பற்றப்படுகிறது. புதிய தலைமுறை விமானங்களைக் கொள்முதல் செய்வது, தற்போதுள்ள விமானங்களைத் தரம் உயர்த்துவது என்பதே இரட்டை அம்ச உத்தியாகும்.

114 புதிய போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதும் 83 இலகுரக தாக்குதல் விமானங்களை வாங்குவதும் இந்திய விமானப் படை தனது தாக்குதல் திறனை மேம்படுத்திக் கொள்ள உதவும்.

ஐந்தாம் தலைமுறை மத்திய ரக எடை கொண்ட போர் விமானங்களை 500 கோடி டாலர் செலவில் உருவாக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) இதில் ஈடுபட்டுள்ளது என்றார்.

 



Read in source website


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் இயான் மார்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

மார்கன் ஓய்வு முடிவை அறிவிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவர் ஓய்வு பெற்றதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

13 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த இயான் மார்கன் (35) இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு 2019-இல் உலகக் கோப்பை வென்று கொடுத்தார்.

2010-இல் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை வென்றபோது அதிலும் விளையாடியிருந்தார் மார்கன்.

7 ஆண்டுகளாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்த மார்கன், ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்தை முதலிடத்துக்கு அழைத்துச் சென்றார்.

ஒருநாள் மற்றும் டி20யில் அதிக ஆட்டங்களில் விளையாடிய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை மார்கன் பெற்றுள்ளார். அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்கள் வரிசையிலும் மார்கனுக்கே முதலிடம்.

225 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியுள்ள மார்கன் 13 சதங்கள் உள்பட 6,957 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 39.75. 126 ஆட்டங்களுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள மார்கன் வெற்றி விகிதம் 60 சதவிகிதத்துடன் 76 ஆட்டங்களில் வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.

மார்கன், டி20 கிரிக்கெட்டில் 72 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்டவர் என்ற இந்தியாவின் மகேந்திர சிங் தோனியின் சாதனையை மார்கன் சமன் செய்துள்ளார். மொத்தம் 115 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள மார்கன் 2,458 ரன்கள் குவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 16 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இரண்டு சதம் அடித்துள்ளார்.

இயான் மார்கன், 2006 முதல் 2009 வரை அயர்லாந்து அணிக்காக 23 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்:

ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவே பெரும்பாலான ஆட்டங்களில் விளையாடியுள்ளார் இயான் மார்கன். 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார். 2017-இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார். 2020-இல் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குத் திரும்பிய மார்கன், அந்த சீசன் பாதியில் தினேஷ் கார்த்திக்கிடமிருந்து கேப்டன் பொறுப்பைப் பெற்றார். 

இதுவரை மொத்தம் 83 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள இயான் மார்கன் 1,405 ரன்கள் எடுத்துள்ளார். 



Read in source website

கஜகஸ்தானில் நடைபெறும் காசனோவ் நினைவு தடகள மீட்டில் இந்தியரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான எஸ்.தனலட்சுமி, மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார். 

பந்தய இலக்கை 22.89 விநாடிகளில் எட்டிய அவர், தனது புதிய தனிப்பட்ட பெஸ்ட்டைப் பதிவு செய்தார். இதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்தியரான டூட்டி சந்த், 23.60 விநாடிகளில் வந்து 3-ஆம் இடம் பிடித்தார். ஹிமா தாஸ் ஹீட்ஸில் காயம் கண்டதால் பந்தயத்தில் பங்கேற்கவில்லை. 

3-ஆவது இந்திய வீராங்கனை: 200 மீட்டர் ஓட்டத்தில் 23 விநாடிகளுக்குள்ளாக பந்தைய இலக்கை எட்டியிருக்கும் 3-ஆவது இந்திய வீராங்கனை தனலட்சுமி ஆவார். சரஸ்வதி சாஹா (22.82 விநாடிகள்), ஹிமா தாஸ் (22.88 விநாடிகள்) ஆகியோர் முதலிரு இடங்களில் உள்ளனர். தனலட்சுமி தங்கம் வென்றாலும், ஜூலையில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு உரிய தகுதி இலக்கை (22.80) எட்டவில்லை. 

இதனால் நேரடியாக அப்போட்டிக்குத் தகுதிபெறத் தவறிய தனலட்சுமி, உலக ரேங்கிங் அடிப்படையில் அதற்கான வாய்ப்பை எதிர்
நோக்கியிருக்கிறார். 
 



Read in source website

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாகக் கைப்பற்றியிருக்கிறது அந்த அணி.

கடைசி டெஸ்டில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து, 117.3 ஓவர்களில் 329 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 109 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து பெளலிங்கில் ஜேக் லீச் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 67 ஓவர்களில் 360 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜானி பேர்ஸ்டோ 162 ரன்கள் விளாச, நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர் 31 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து, 105.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது. டாம் பிளண்டெல் 88 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். 
இங்கிலாந்தின் ஜேக் லீச் மீண்டும் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். இறுதியாக 296 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து, 54.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு அந்த ரன்களை எட்டியது. ஆலி போப் 82 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, ஜோ ரூட் 86, ஜானி பேர்ஸ்டோ 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனர்.நியூஸிலாந்தின் டிம் செளதி, மைக்கேல் பிரேஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.



Read in source website

இங்கிலாந்தில் திங்கள்கிழமை தொடங்கிய கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியூா் ஆகியோா் முதல் சுற்றில் வென்றனா்.

ஆடவா் ஒற்றையரில் போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவரும், நடப்புச் சாம்பியனுமான ஜோகோவிச் 6-3, 3-6, 6-3, 6-4 என்ற செட்களில் தென் கொரியாவின் வோன் சூன் வூவை வீழ்த்தினாா். இங்கிலாந்தின் கேமரூன் நோரி 6-0, 7-6 (7/3), 6-3 என்ற செட்களில் ஸ்பெயினின் பாப்லோ அண்டுஜாரை வென்றாா். இதர ஆட்டங்களில் நாா்வேயின் கேஸ்பா் ரூட், அமெரிக்காவின் டாமி பால் உள்ளிட்டோா் வென்றனா்.

மகளிா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ஜாபியூா் 6-1, 6-3 என ஸ்வீடனின் மிா்ஜாம் ஜோல்க்லண்டை வெளியேற்றினாா். உக்ரைனின் அன்ஹெலினா கலினினா, அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கே உள்ளிட்டோரும் முதல் சுற்றில் வெற்றியைப் பதிவு செய்தனா்.



Read in source website

காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதன் காரணமாக முன்கூட்டிய உயிரிழப்பும் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாடு குறித்த ஆய்வறிக்கையை அமெரிக்காவைச் சோ்ந்த நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. ஈரானில் உள்ள சுமாா் 50,045 ஏழை மக்களிடம் 15 ஆண்டுகளுக்கு மேலான தொடா் கண்காணிப்பின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முக்கிய விவரங்கள்:

மாசடைந்த காற்றை நீண்ட காலத்துக்கு சுவாசிப்பதால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். விறகு மூலமாகவோ, மண்ணெண்ணெய் அடுப்பு மூலமாகவோ சமைப்பவா்கள் முன்கூட்டியே உயிரிழப்பது 23 சதவீதம் அதிகரித்துள்ளது. காற்று மாசுபாட்டால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் வாய்ப்பு 36 சதவீதம் அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் இருந்து வெகுதூரம் வசிப்பவா்களும், போக்குவரத்து அதிகமாக உள்ள சாலைகளுக்கு அருகே வசிப்பவா்களும் உயிரிழக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏழ்மை நாடுகளிலும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளிலும் வசிப்போா் அதிக பாதிப்புகளை எதிா்கொள்கின்றனா்.

அதிக வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள நகரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கே உயா்தரமான மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்கின்றன. மருத்துவமனையில் இருந்து மக்கள் வசிக்கும் தூரம் ஒவ்வொரு 10 கி.மீ. அதிகரிக்கும்போதும், உயிரிழப்புக்கான வாய்ப்பு 1 சதவீதம் அதிகரிக்கிறது.

முக்கிய சாலையில் இருந்து 500 மீட்டருக்குள் வசிப்போா் உயிரிழப்பதற்கான அபாயம் 13 சதவீதம் அதிகரித்துள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 



Read in source website

கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இலங்கையின் அதிபா் கோத்தபய ராஜபட்சவை அமெரிக்க உயா்நிலைக் குழு சந்தித்துப் பேசியது. நாட்டின் பொருளாதார சூழல் தொடா்பாக அப்போது விவாதிக்கப்பட்டது.

பொருளாதார சரிவைச் சந்தித்து வரும் இலங்கை, சா்வதேச அமைப்புகளிடமும் மற்ற நாடுகளிடமும் உதவி கோரி வருகிறது. அந்நாட்டுக்கு அத்தியாவசியப் பொருள்களை அனுப்பிவரும் இந்தியா, கடனுதவிகளையும் வழங்கியுள்ளது. சா்வதேச நிதியம், உலக வங்கி ஆகியவை இலங்கைக்கு உதவுவது தொடா்பாக ஆராய்ந்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சோ்ந்த உயா்நிலைக் குழு இலங்கைக்கு வந்து ஆய்வு செய்தது. அக்குழு இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசியது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதா் ஜூலி சங், அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரி ராபா்ட் கேப்ரோத், அமெரிக்க கருவூலத் துறையின் அதிகாரி உள்ளிட்டோா் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனா். இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழல் குறித்து சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

சந்திப்பு தொடா்பாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘சவால்மிக்க சூழலில் இலங்கைக்குத் தேவையான நீண்டகால உதவிகளை வழங்க அமெரிக்கா உறுதிகொண்டுள்ளது. இலங்கையின் வளமான எதிா்காலத்துக்கு அமெரிக்கா உதவும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இலங்கையின் பொருளாதார நிபுணா்கள், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் உள்ளிட்டோரையும் அமெரிக்க உயா்நிலைக் குழு சந்தித்துப் பேசவுள்ளது. சந்திப்புகளுக்குப் பிறகு இலங்கைக்கு நிதியுதவி வழங்குவது தொடா்பாக முடிவெடுக்கப்படும் என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்தள்ளது.

பொருளாதாரத்தை மீட்பதற்காக இதுவரை 57 லட்சம் அமெரிக்க டாலரையும், பால் உற்பத்தித் துறையை மேம்படுத்த 2.7 கோடி அமெரிக்க டாலரையும், தொழில்துறையை மேம்படுத்த 12 கோடி அமெரிக்க டாலரையும் இலங்கைக்கு அமெரிக்கா இதுவரை வழங்கியுள்ளது.

இதனிடையே, ரஷியாவிடம் இருந்து உதவி கோருவதற்காக இலங்கையைச் சோ்ந்த இரு அமைச்சா்கள் அந்நாட்டுக்குச் செல்ல உள்ளதாக எரிசக்தித் துறை அமைச்சா் காஞ்சனா விஜேசேகரா தெரிவித்தாா். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை நேரடியாகக் கொள்முதல் செய்வது உள்ளிட்டவை தொடா்பாக ரஷிய அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.

 



Read in source website

காமன்வெல்த் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் இளம் தூதரக அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் வகையிலான அகாதெமியை இந்தியாவும் பிரிட்டனும் கூட்டாக இணைந்து அமைத்துள்ளன.

இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் லிஸ் ட்ரஸ் ஆகியோா் கடந்த வாரம் ருவாண்டாவில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டின் இடையே இருதரப்பு பேச்சு நடத்தினா். அப்போது, ஒருங்கிணைந்த காமன்வெல்த் தூதரக அகாதெமி திட்டத்தைத் தொடங்க அவா்கள் முடிவெடுத்தனா்.

அதன்படி, காமன்வெல்த் நாடுகளைச் சோ்ந்த இளம் அதிகாரிகளுக்கு சா்வதேச சவால்கள் குறித்தும், ஜனநாயகக் கொள்கைகள் உள்ளிட்டவை குறித்தும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது தொடா்பாக லிஸ் ட்ரஸ் கூறுகையில், ‘‘இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுபவா்கள் காமன்வெல்த் கூட்டமைப்பின் நலனை உறுதிசெய்ய முக்கியப் பங்கு வகிப்பா்.

சா்வதேச சூழல் தொடா்ந்து மாறி வரும் நிலையில், ஜனநாயகக் கொள்கைகள், இறையாண்மை உள்ளிட்டவற்றில் காமன்வெல்த் கூட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். காமன்வெல்த் கூட்டமைப்பை 21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியாவும் பிரிட்டனும் உறுதி கொண்டுள்ளன. அதன் காரணமாகவே பயிற்சி அகாதெமி நிறுவப்படவுள்ளது. அதன் கீழ் சா்வதேச சவால்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது’’ என்றாா்.

இது தொடா்பாக இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘‘காமன்வெல்த் பயிற்சி அகாதெமியானது தில்லியில் அமையவுள்ளது. சா்வதேச சவால்கள் குறித்து காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும். இது காமன்வெத் கூட்டமைப்பின் எதிா்காலத்தையும் வலுப்படுத்தும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

நேட்டோ அமைப்பில் அதிவிரைவுப் படையினரின் எண்ணிக்கை 8 மடங்கு அதிகரிக்கப்படும் என அதன் தலைவா் ஜென்ஸ் ஸ்டால்டன்பொ்க் தெரிவித்துள்ளாா்.

நேட்டோ அமைப்பின் உச்சிமாநாடு ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு செய்தியாளா்களிடம் ஸ்டால்டன்பொ்க் கூறியதாவது:

நேட்டோ அமைப்பில் அதிவிரைவுப் படையினரின் எண்ணிக்கை இப்போதுள்ள 40,000-இலிருந்து 3 லட்சமாக உயா்த்தப்படும். ஸ்பெயினில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில், உக்ரைனுக்கு கூடுதல் உதவிகள் அளிக்க நேட்டோ நாடுகள் ஒப்புக்கொள்ளும் எனவும், எங்கள் பாதுகாப்புக்கு ரஷியா அச்சுறுத்துலாக உள்ளது எனவும் உறுப்பு நாடுகள் திட்டவட்டமாக தெரிவிப்பாா்கள் எனவும் எதிா்பாா்க்கிறேன்.

சீனாவால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சவால்களுக்கும் நேட்டோ மாநாட்டில் தீா்வு காணப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா். நேட்டோ அமைப்பில் ஃபின்லாந்து, ஸ்வீடனை இணைப்பது குறித்த சாத்தியக்கூறு குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.



Read in source website

ஈரான் அரசுக்குச் சொந்தமான இரும்பு ஆலையில் சைபா் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, அங்கு உற்பத்தி நிறுத்தப்பட்டது.

நாட்டின் முக்கியமான தொழில் துறையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய சைபா் தாக்குதலாக இது கருதப்படுகிறது.

இதுகுறித்து அரசுக்குச் சொந்தமான குசெஸ்தான் இரும்பு ஆலை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

சைபா் தாக்குதலைத் தொடா்ந்து ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் ஆலையை தொடா்ந்து இயக்க முடியாது என நிபுணா்கள் கண்டறிந்தனா். இதையடுத்து, அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை ஆலை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலையின் இணையதளமும் செயல்படவில்லை.

ஈரானின் தென்மேற்கில் உள்ள குசெஸ்தான் இரும்பு நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாகும். இந்த சைபா் தாக்குதலுக்கு தனிப்பட்ட எந்தக் குழுவும் காரணம் என நிறுவனம் தெரிவிக்கவில்லை.

இருப்பினும் நாட்டின் உள்கட்டமைப்பில் அண்மைக்காலமாக நடத்தப்பட்டு வரும் சைபா் தாக்குதலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் காரணம் என ஈரான் குற்றம்சாட்டி வருகிறது.



Read in source website

அடுத்த குளிா் காலத்தைக் கருத்தில்கொண்டு 80 சதவீதம் அளவுக்கு இயற்கை எரிவாயுவை இருப்புவைக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் திங்கள்கிழமை முடிவு செய்தன.

ரஷியாவிலிருந்து இயற்கை எரிவாயு விநியோகம் குறைந்தால், அதை எதிா்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மேற்கொண்டுள்ளன.

உக்ரைன் மீதான ரஷிய போரைத் தொடா்ந்து, ரஷியாவுக்கு எதிராக 27 நாடுகளைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையும் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. ஆனால், ரஷியாவிடமிருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கவில்லை.

இதற்கு பதிலடியாக ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை ரஷியா ஏற்கெனவே குறைத்துவிட்டது. உக்ரைன் போருக்கு முன்னா் சுமாா் 40 சதவீதம் அளவுக்கு ரஷியாவிடமிருந்து இயற்கை எரிவாயுவை ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்து வந்தன.

இந்நிலையில், எரிவாயு விநியோகத்தை ரஷியா மேலும் குறைத்துவிட்டால் அதை எதிா்கொள்வதற்காக குறைந்தபட்சம் 80 சதவீதம் அளவுக்கு எரிவாயுவை இருப்பு வைப்பது என ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் திங்கள்கிழமை முடிவு செய்தது. சில உறுப்பு நாடுகளில் எரிவாயுவை இருப்பு வைக்கும் வசதி இல்லாததால், அந்த நாடுகள் ஆண்டு பயன்பாட்டு அளவில் 15 சதவீதத்தை பிற உறுப்பு நாடுகளில் இருப்பு வைத்துக் கொள்ளள அனுமதிக்கப்பட்டுள்ளன.

ரஷியாவுக்கு மாற்றாக அமெரிக்கா, நாா்வே, அல்ஜீரியா, அஸா்பைஜான் ஆகிய நாடுகளிலிருந்து இயற்கை எரிவாயு இறக்குமதியை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கெனவே அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

மும்பை: எஸ்பி குரூப் என்று அழைக்கப்படும் ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவரும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவருமான பெரும் தொழிலதிபர் பலோன்ஜி மிஸ்திரி காலமானார். அவருக்கு வயது 93.

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்று ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம். மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் இன்ஜினியரிங், கட்டுமானம், உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், தண்ணீர், எரிபொருள், நிதிசேவை ஆகிய பல்துறைகளில் கால்பதித்து பெரும் நிறுவனமாக இயங்கி வருகிறது.

1865ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம் மும்பையில் சாதாரண கட்டுமான நிறுவனமாக பணியை தொடங்கியது. தற்போது 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் 50,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் பெரும் தொழில் நிறுவனமாக உள்ளது. மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி கட்டிடம், மும்பையில் உள்ள ஓபராய் ஹோட்டல், ஓமன் சுல்தானுக்கான நீலம் மற்றும் தங்கம் கொண்ட அல் ஆலம் அரண்மனை ஆகியவை இந்த நிறுவனம் கட்டிய பிரபல கட்டிடங்களாகும்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, மிஸ்திரி கிட்டத்தட்ட 29 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை வைத்துள்ளார். இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் பெரும் பணக்காரர்களில் ஒருவராக அவர் இடம் பெற்றுள்ளார்.


ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தில் பலோன்ஜி மிஸ்திரி நேரடி நிர்வாகப் பணிகளில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பபே விலகி விட்டார். தற்போது இக்குழுமத்தை பலோன்ஜி மிஸ்திரி வாரிசுகளான சைரஸ் மிஸ்திரி உள்ளிட்டோர் கவனித்து வருகின்றனர்.

ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவராக இருந்த பலோன்ஜி மிஸ்திரி இந்த நிறுவனத்தை பெரும் சாம்ராஜ்யமாக வளர்த்தெடுத்தார். எனினும் பலோன்ஜி நிறுவனத்தின் செல்வம் என்பது டாடா சன்ஸ் நிறுவனத்தில் வைத்துள்ள பங்குகளே.

தொழில் மூலம் குடும்ப உறவு

பலோன்ஜி குடும்பம் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் 18.4 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதன் மூலம் டாடா சன்ஸ் நிர்வாகத்தில் அதிகப்படியான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. ஆனால் இதற்கு அடித்தளமிட்டது குடும்ப உறவு.

டாடா குடும்பத்தினர் அனைவருமே பார்சி மதத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல பலோன்ஜியும் அவரின் முன்னோரும் பார்சி மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்த இரு பார்சி குடும்பத்துக்கு இடையேயான உறவு 70 ஆண்டுகளுக்கு மேலானது. ஷபூர்ஜி பலோன்ஜி குரூப் பலோன்ஜியின் தந்தையால் உருவாக்கப்பட்டது.

1924-ம் ஆண்டில் டாடா குழும நிறுவனங்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டபோது இப்போதைய பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் ஒரு காலத்தில் பெரும் பணக்காரராக விளங்கிய பிரம்சோஸ் எடுல்ஜி தின்ஷா 2 கோடி ரூபாயை கடன் கொடுத்தார். இவரும் பார்சி சமூகத்தை சேர்ந்தவர். இந்தக் கடனுக்கு ஈடாக 12.5% டாடா சன்ஸ் பங்குகளை தின்ஷா குடும்பம் பெற்றிருக்கிறது.

பின்னர் மும்பையில் ரியல்எஸ்டேட் தொழில் செய்த பலோன்ஜி குடும்பத்தினருக்கு உறவினர் என்ற வகையில் தின்ஷா குடும்பத்தினர் டாடா சன்ஸ் நிறுவனத்தின் 12.5% பங்குகளை விற்பனை செய்து விட்டனர். இதுமட்டுமின்றி டாடா குடும்பத்துடன் திருமண உறவின் மூலமும் பலோன்ஜி குடும்பத்துக்கு பங்குகள் வந்துள்ளன.

பலோன்ஜியின் மகள் நோயல் டாடாவைத் திருமணம் செய்துகொண்டார். அதன் மூலம் அவர்களது பங்கை வெளிநபருக்கு விற்க விரும்பாமல் பலோன்ஜி வாங்கியுள்ளார். இதன் மூலம் பலோன்ஜி மிஸ்திரி டாடா சன்ஸ் இயக்குநர் குழுவிலும் இருந்துவந்தார்.

2006-ம் ஆண்டு அவர் டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து விலகியவுடன் அவருக்கு பதில் அவரது மகன் சைரஸ் மிஸ்திரி, டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் இணைந்தார். டாடா குழுமத்தில் பல பொறுப்புகளைக் கையாண்ட சைரஸ் மிஸ்திரி 2011-ம் ஆண்டு துணைத் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டார்.

சைரஸ் மிஸ்திரி 2012-ம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டார். ஆனால், நான்கே ஆண்டுகளில் டாடா சன்ஸ் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். எனினும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் 18.37% பங்குகள் எஸ்பி குரூப் வசம் உள்ளன.

பலோன்ஜி மிஸ்திரி மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



Read in source website

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிரான அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அங்கு மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கருக்கலைப்புக்கு எதிரான இத்தீர்ப்பின் மூலம் அமெரிக்கா 150 வருடங்கள் பின்னால் சென்று விட்டது என்ற விமர்சனக் குரல்கள் வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

கடந்த 1973-ம் ஆண்டு ரோ vs வேட் வழக்கில், அமெரிக்க அரசியல் சாசனத்தின் 14-வது திருத்தத்தின் படி கர்ப்பிணிகள் கருக்கலைப்பு செய்வதற்கு உரிமை உள்ளது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, எத்தனை வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்ய அனுமதிப்பது என்பது உட்பட பல்வேறு விவாதங்கள் எழுந்தன.



Read in source website

முனிச்: பருவநிலை மாறுபாடு, எரிசக்தி, உக்ரைன் விவகாரம் குறித்து ஜி7 தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று அவர் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.

ஜெர்மனியின் பவேரியன் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மிட்டன்வால்ட் நகர் அருகே அமைந்துள்ள ஸ்லாஸ் எல்மவ் பேலஸ் ஓட்டலில் நேற்று முன்தினம் ஜி7 மாநாடு தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஜெர்மனியின் முனிச் நகருக்கு சென்றார். முதல் நாளில் இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து, ஜி7 மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்றார். பிற்பகல் 4 மணிக்கு நடைபெற்ற பருவநிலை மாறுபாடு, எரிசக்தி, சுகாதாரம் தொடர்பான அமர்வில் அவர் கலந்து கொண்டார். பின்னர் மாலை 6.30 மணிக்கு நடந்த உணவுப் பாதுகாப்பு, பாலின சமநிலை குறித்த அமர்விலும் அவர் பங்கேற்றார்.

இந்த அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

உலகின் மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். எனினும் கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியாவின் பங்கு 5 சதவீதம் மட்டுமே. வளரும் நாடுகள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கையை பேணிப் பாதுகாத்து வருகிறோம்.

இந்த பசுமை முயற்சி தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவின் அனைத்து வீடுகளுக்கும் சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை சேமிக்க எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. உலகின் முதல் சூரிய சக்தி விமான நிலையம் இந்தியாவில் உள்ளது. பருவநிலை மாறுபாட்டை தடுத்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இந்தியா முன்னோடியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

தலைவர்களுடன் சந்திப்பு

இந்த மாநாட்டின்போது ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இரு தலைவர்களும் அரை மணி நேரம் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் விவகாரம், இருநாட்டு பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேசினர்.

மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி7 நாடுகளின் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளின்போது உக்ரைன் விவகாரம், பருவநிலை மாறுபாடு, எரிசக்தி குறித்து பிரதமர் மோடி ஆலோசித்தார்.

ஜி7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்கி காணொலி வாயிலாக பங்கேற்றார். உக்ரைனுக்கு தாமதமின்றி ஆயுதங்களை வழங்க வேண்டும். ரஷ்யா மீது மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். அப்போதுதான் போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று அதிபர் ஜெலன்கி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணை

உக்ரைனுக்குத் தேவையான ராணுவ உதவிகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வழங்கி வருகின்றன. எனினும், நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகளை இதுவரை வழங்கவில்லை. போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் வேண்டுகோளை ஏற்று நீண்ட தொலைவு பாயும் அதிநவீன ஏவுகணைகளை அந்த நாட்டுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஜி7 மாநாடு நடைபெறும் நேரத்தில் உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்ய விமானப் படை தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்யாவை தனிமைப்படுத்துவதில் நேட்டோ மற்றும் ஜி7 நாடுகள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை ஜி7 நாடுகளின் தலைவர்கள் மறுத்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, ரஷ்யாவுக்கு எதிராக உலகத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர் என்று தெரிவித்தார்.

அமீரக அதிபருடன் சந்திப்பு

ஜெர்மனியில் இருந்து டெல்லி திரும்பும் வழியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் மறைந்த முன்னாள் அதிபர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யானின் இரங்கல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

மோடியை தேடி வந்த பைடன்

ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்புக்கு தனியாக நேரம் ஒதுக்கப்படவில்லை. எனினும் மாநாட்டின்போது இரு தலைவர்களும் சிறிது நேரம் ஆழ்ந்த நட்புடன் பேசினர்.

ஜி7 நாடுகளின் தலைவர்கள், சிறப்பு விருந்தினர்கள் இணைந்து புகைப்படம் எடுத்தபோது பிரதமர் மோடிக்கு அருகில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நின்றிருந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சற்று தள்ளி நின்றிருந்தார். அப்போது, அதிபர் பைடன் பிரதமர் மோடியை தேடிச் சென்றார். பின்னால் இருந்து அவர் பிரதமர் மோடியை தொட்டார். ஆச்சரியத்தில் திளைத்த மோடி, பைடனுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதேபோல, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் பிரதமர் மோடியும் ஆரத் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இருவரும் இணைந்து தேநீர் அருந்தினர்.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இத்தாலி பிரதமர் மரியோ தெராவி ஆகியோருடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.



Read in source website

உண்மையான ஹனுமன் பிறந்த இடம் தொடர்பாக கர்நாடகாவும் ஆந்திரப் பிரதேசமும் மோதலில் ஈடுபட்டுள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. கர்நாடக அரசின் ஹனுமன் கோவில் திட்டம் என்ன? ஆந்திராவின் கோரிக்கை என்ன, அதை கர்நாடகா எப்படி எதிர்கொண்டது?

இந்துக் கடவுளான ஹனுமனின் பிறப்பிடமாகக் கருதப்படும் கொப்பல் மாவட்டத்தில் உள்ள அஞ்ஜெயநாத்ரி மலையில் உள்ள கோயிலை மறுசீரமைக்கும் பணியைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மேம்பாட்டுப் பணிகளுக்கான வரைபடம் தயாராக உள்ளதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங் தெரிவித்துள்ளார்.

உண்மையான ஹனுமன் ‘ஜென்மஸ்தலம்’ தொடர்பாக கர்நாடகாவும் ஆந்திராவும் மோதலில் ஈடுபட்டுள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

வட கர்நாடகாவில் ஹம்பிக்கு அருகில் உள்ள கிஷ்கிந்தாவில் உள்ள அஞ்ஜெயநாத்ரி மலையில் இந்துக் கடவுள் ஹனுமான் பிறந்ததாக கர்நாடகா கூறும்போது, ​​ஆந்திரா ஹனுமன் பிறந்த இடமாக திருமலையின் ஏழு மலைகளில் உள்ள அஞ்சனாத்ரியைக் குறிப்பிடுகிறது.

கர்நாடக அரசின் ஹனுமன் கோவில் திட்டம் என்ன?

அஞ்ஜெயநாத்ரி மலையில் உள்ள அனுமன் கோவிலையும், அயோத்தியில் வரும் ராமர் கோவிலையும் சுற்றுலா வழித்தடத்தின் மூலம் இணைக்க முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு விரும்புகிறது.

அஞ்ஜெயநாத்ரி மலையில் ஏற்கனவே உள்ள கோவிலை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தில் அடங்கியுள்ளது. உலக பாரம்பரிய இடமான ஹம்பியில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோவில் துங்கபத்திரை நதியைத் தாண்டி உள்ளது.

ஹம்பி என்பது ராமாயணத்தில் குறிப்பிடப்படும் ‘வானரஸ்’ அல்லது குரங்குகளின் பண்டைய இராச்சியமான ‘கிஷ்கிந்தா’ என்று நம்பப்படுகிறது.

இத்திட்டத்தில் சாலை அமைத்தல் மற்றும் மலைக்கோயிலுக்கு மாற்று வழிகள் வழிகள் அமைத்தல் ஆகியவை அடங்கும்.

பசவராஜ் பொம்மை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “இந்த திட்டத்துக்கு 60 ஏக்கர் நிலம் தேவை. இதில் 58 ஏக்கர் தனியார் நிலம் விவசாயிகளுக்கு சொந்தமானது. விவசாயிகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அல்லது கர்நாடக தொழில்துறை பகுதிகள் மேம்பாட்டு வாரியம் (KIADB) மூலம் நிலத்தை வாங்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பசவராஜ் பொம்மை இந்த திட்டத்தில் தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்துக்கொண்டு இந்த திட்டம் தொடர்பாக பல்வேறு கூட்டங்களை நடத்தினார்.

மேலும், மறு ஆய்வுக் கூட்டத்திற்காக ஜூலை 15 ஆம் தேதி மலைப்பகுதிக்கு செல்வதாகவும் முதல்வர் கூறினார்.

ஆந்திராவின் கோரிக்கை என்ன?

டிசம்பர் 2020 இல், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருமலை வெங்கடேஸ்வரா கோயில் உள்ளிட்ட கோயில்களை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), வேத அறிஞர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானி அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து, ஆய்வு செய்து உண்மையான ஹனுமன் பிறந்த இடத்தை குறிப்பிட்டு அறிக்கை சமர்ப்பித்தது.

பின்னர், ஏப்ரல் 2021 இல், ஆந்திராவில் உள்ள அஞ்சனாத்ரி மலை ஹனுமான் பிறந்த இடம் என்று இந்த குழு கூறியது. திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி கே எஸ் ஜவஹர் ரெட்டி, அவர்களின் கருத்தை ஆதரிக்க புராண, ஜோதிட மற்றும் அறிவியல் சான்றுகள் உள்ளன என்று கூறினார்.

கர்நாடகாவின் எதிர்க் கேள்வி என்ன?

ஹம்பிக்கு அருகில் உள்ள அஞ்ஜெயநாத்ரி மலையில் ராமாயணத்தில் இந்துக் கடவுள் ராமர் மற்றும் அவரது தம்பி லக்ஷ்மணன் ஹனுமனை சந்தித்த இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கர்நாடக அமைச்சர்கள் பலர் கூறியுள்ளனர். மலையின் உச்சியில் பாறையில் செதுக்கப்பட்ட சிலையுடன் அனுமன் கோயிலும், அருகில் ராமர், சீதா மற்றும் அஞ்சனா தேவி கோயில்களும் உள்ளன. கர்நாடக அரசு இந்த மலையை ஹனுமன் ‘ஜென்மஸ்தம்’ (பிறந்த இடம்) என்ற அடையாளத்துடன் ஒரு புனித யாத்திரை மையத்தை உருவாக்க உள்ளது.

உண்மையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் குழு அமைக்கப்பட்ட உடனேயே, கர்நாடக சுற்றுலாத் துறையானது மலைக் கோயில் தளத்தை மேம்படுத்துவதற்கான அதன் திட்டங்களில் வேலை செய்யத் தொடங்கியது.



Read in source website

மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் நெருக்கடி; கட்சி தாவல் தடைச் சட்டம் செல்லுமா? 2/3 விதி என்பது என்ன?

Explained: What is the 2/3rds rule in anti-defection law?: மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் நெருக்கடி, கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவதை சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தவிர்க்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சட்டம் மற்றும் விதிவிலக்கு

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தங்கள் அரசியல் கட்சியின் உறுப்பினர் பதவியை தானாக முன்வந்து விட்டுக் கொடுத்தால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்; மற்றும் அவர்/அவள் தங்கள் கட்சியால் (அல்லது கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நபர் அல்லது அதிகாரத்தால்) வழங்கப்பட்ட எந்தவொரு வழிகாட்டுதலுக்கும் மாறாக சபையில் வாக்களித்தால் அல்லது வாக்களிக்காமல் இருந்தால், அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

அத்தகைய சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதிலிருந்து பாதுகாக்க ஒரு விதி உள்ளது. மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மற்றொரு கட்சியுடன் இணைவதற்கு ஒப்புக்கொண்டால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள். 2003 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 91வது திருத்தத்தின் கீழ், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தனிக் குழுவை (திருத்தத்திற்கு முந்தைய விதி) அமைத்தால் தகுதி நீக்கம் செய்வதிலிருந்து விலக்கு அளிப்பது நீக்கப்பட்டது.

நீதிமன்றங்கள் எப்படி தீர்ப்பளித்துள்ளன?

இந்த ஆண்டு பிப்ரவரியில், கோவாவில் உள்ள பம்பாய் உயர்நீதிமன்றம், 2019 இல் பா.ஜ.க.,வுக்குத் தாவிய 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் இரண்டு எம்.ஜி.பி எம்.எல்.ஏ.,க்களுக்கு தகுதி நீக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, இந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் குழுவின் இணைப்பு பா.ஜ.க.,வுடன் அசல் அரசியல் கட்சியின் இணைப்பாகக் “கருதப்படுகிறது” என்று தீர்ப்பளித்தது (கிரிஷ் சோடங்கர் v சபாநாயகர், கோவா சட்டமன்றம்).

ராஜேந்திர சிங் ராணா எதிர் சுவாமி பிரசாத் மௌரியா (2007) வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச், “ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர் பதவியை தானாக முன்வந்து விட்டுக் கொடுப்பது” என்ற சொல்லுக்கு விளக்கம் அளித்தது, மேலும் “ஒரு நபர் தானாக முன்வந்து அவரது கட்சியின் உறுப்பினர் பதவியை, விட்டுவிட்டதாகக் கூறினால், அவர் அல்லது அவள் சார்ந்துள்ள அசல் கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டாலும், அவர் உறுப்பினர் பதவியை விட்டுவிட்டதாகக் கருதலாம்,” மற்றும் உறுப்பினரின் நடத்தையிலிருந்து ஒரு அனுமானத்தை எடுக்க முடியும்.

மூன்றில் இரண்டு பங்கு விதி

மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்து சென்றாலும், அவர்கள் வேறொரு கட்சியுடன் இணைந்தால் அல்லது சட்டமன்றத்தில் தனிக் குழுவாக மாறினால் மட்டுமே அவர்கள் தகுதிநீக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்று சில நிபுணர்கள் கருதுகிறார்கள்.

சிவசேனா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் குழு வேறு கட்சியுடன் இணையும் வரை, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் அவர்களுக்குப் பொருந்தும் என்று கூறினார். ரவி நாயக் வழக்கு (1994) உள்ளிட்ட நீதிமன்றத் தீர்ப்புகள் உச்ச நீதிமன்றத்தில் இந்தக் கருத்தைக் கொண்டதாக அவர் கூறினார்.

மகாராஷ்டிராவின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீஹரி அனே, கட்சித்தாவல் தடைச் சட்டம் குறித்து விவாதத்திற்குரிய நிலைப்பாடுகள் உள்ளன என்றார். “பல்வேறு நீதிமன்றங்கள் வழக்கின் குறிப்பிட்ட பிரச்சனைகளின்படி தீர்ப்புகளை வழங்கியுள்ளன, மேலும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு ஏற்கனவே மூன்றில் இரண்டு பங்கைத் தாண்டிவிட்டது, எனவே இந்தச் சட்டத்தின் கீழ் அவர்கள் உட்படுத்தப்பட முடியாது மற்றும் அவர்கள் கட்சித் தாவல் சட்டத்திற்கு எதிராக பாதுகாக்கப்படுகிறார்கள் என்று நான் கருதுகிறேன். அவர்கள் ஒரு தனிக் குழுவாகவோ அல்லது சபையில் ஒரு ‘தனிப் பிரிவாகவோ’ அடையாளம் காணப்படுவதற்கும், நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு.

தகுதி நீக்க அறிவிப்புகள்

16 கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நோட்டீஸ் சட்டத்தின் ஆய்வுக்கு நிற்குமா என்பது மற்றொரு பிரச்சினை. மகாராஷ்டிரா சட்டப் பேரவை (மாறுதலால் தகுதி நீக்கம்) விதிகள் மற்றும் பிற நிபந்தனைகளின்படி, துணை சபாநாயகரின் முடிவை உறுதிப்படுத்த முடியாது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

“என்னுடைய கருத்துப்படி, சில எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யும் நோட்டீஸ் செல்லாது. இந்த எம்.எல்.ஏ.க்கள் அதிகாரப்பூர்வ கூட்டத்தில் பங்கேற்கவில்லை மற்றும் கொறடா உத்தரவைக் கடைபிடிக்கவில்லை என்ற அடிப்படையில் இந்த உத்தரவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கொறடா என்பது சட்டமன்றத்தின் அலுவல்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது… இங்கே உத்தரவு என்பது அவர்களின் தலைவர் உத்தவ் தாக்கரேவால் அழைக்கப்பட்ட கூட்டத்திற்காக இருந்தது” என்று அனே கூறினார்.



Read in source website

சர்க்காரியா குழு பரிந்துரையின் அடிப்படையில், குடியரசுத் தலைவரால் கடந்த 1990-ஆம் ஆண்டு மே மாதம் 28-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மூலம் ஏற்படுத்தப்பட்ட நிரந்தர அமைப்புதான் "மாநிலங்களிடை மன்றம்' (இன்டர் ஸ்டேட் கவுன்சில்). நாடு தழுவிய எந்தவொரு திட்டமானாலும் அல்லது பிரச்னையானாலும் அதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட வழிவகுப்பதுதான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம்.

இந்த அமைப்பின் தலைவராக பிரதமரும், உறுப்பினர்களாக மத்திய கேபினட் அமைச்சர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள மாநிலங்களின் ஆளுநர்களும் செயல்படுகின்றனர். இந்த அமைப்பு ஆண்டுக்கு மூன்று முறை கூட வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பிறகு, கடந்த 32 ஆண்டுகளில் இதுவரை 12 முறை மட்டுமே கூடியுள்ளது என்பதன் மூலம் இது செயல்படும் விதத்தைப் புரிந்து கொள்ளலாம். மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த அமைப்பின் செயல்பாட்டில் பெரிய மாற்றம் ஏற்படுவதில்லை. இது முறையாகக் கூட்டப்படுவதில்லை.

மன்மோகன் சிங் தலைமையிலான 10 ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், கடந்த 2006-ஆம் ஆண்டு ஒரே முறைதான் இந்த அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து, கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலையில் இந்த அமைப்பு கூடியது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் கடந்த 8 ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஒரேயொரு முறை மட்டுமே "மாநிலங்களிடை மன்றம்' கூடியிருக்கிறது.

நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து முடக்கப்படுவதால் கடந்த 1999-க்குப் பிறகு முறையான விவாதங்கள் நடைபெறுவதில்லை. தற்போதைய ஆட்சியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, நிலம் கையப்படுத்தும் மசோதா, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்ட 370-ஆவது பிரிவு ரத்து, புதிய வேளாண் சட்ட மசோதாக்கள், 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்துக்கு வீரர்களைத் தேர்வு செய்யும் அக்னிபத் திட்டம் உள்ளிட்டவை முறையான விவாதத்துக்கும் நாடாளுமன்ற ஒப்புதலுக்கும் பிறகு கொண்டுவரப்பட்டவை அல்ல. 

திட்டங்களும், அறிவிப்புகளும் நாடாளுமன்ற விவாதங்களுக்கு உட்படுத்தப்படாமலும், மாநிலங்களுடன் முன்கூட்டியே கலந்தாலோசிக்காமலும் செயல்படுத்தப்படுவதால்தான் நாடு முழுவதும் தேவையற்ற போராட்டங்களும், சர்ச்சைகளும் ஏற்படுகின்றன. சுமார் 138 கோடி மக்கள்தொகை கொண்ட பல்வேறு இன, மொழி, கலாசாரம் என பன்முகத்தன்மையுடைய நமது நாட்டில் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதில்தான் அரசின் வெற்றி அடங்கியுள்ளது. 

ஆளுங்கட்சியோ கூட்டணியோ கொண்டுவரும் எந்தவொரு திட்டத்தையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பது என்பதும், நாடாளுமன்றத்தை அமளியால் முடக்குவது என்பதும் கருத்தொற்றுமை ஏற்படாமல் இருப்பதற்கு ஒரு காரணம். எதிர்க்கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்கிற மனப்போக்கு ஆளும்தரப்பினரிடம் இல்லாமல் இருப்பது இன்னொரு காரணம். 

நாடாளுமன்ற விவாதம் இல்லாததால் பாஜக அல்லாத இதர கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசுடன் அவ்வப்போது மோதல் போக்கை மேற்கொள்கின்றன. இந்தப் பின்னணியில், மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே ஏற்படக்கூடிய பிரச்னைகளை விவாதித்து தீர்வு காணக்கூடிய பொதுத் தளம் "மாநிலங்களிடை மன்றம்'. அதனால் அந்த அமைப்பு  ஆண்டுக்கு மூன்று முறை கூடுவதை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் எழுதியுள்ள கடிதம் வரவேற்புக்குரியது.

மாநிலங்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதிக்கக்கூடிய பல்வேறு சட்ட மசோதாக்கள் முறையாக விவாதிக்கப்படாமல் நாடாளுமன்றத்தில் அவசரகதியில் நிறைவேற்றப்படுவதாகவும், இத்தகைய மசோதாக்கள் குறித்து மாநிலங்களிடை மன்றத்தில் முன்கூட்டியே விவாதித்து கருத்தொற்றுமையை ஏற்படுத்தினால் அது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் தனது கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவர் குறிப்பிடுவதுபோல "மாநிலங்களிடை மன்றம்' மத்திய - மாநில உறவுக்கு பாலமாக அமையக்கூடும் என்பதால் அதை மத்திய அரசு பரிசீலிப்பது நல்லது. 

மத்திய திட்டக் குழுவுக்குப் பதிலாக நரேந்திர மோடி ஆட்சியில் அமல்படுத்தப்பட்டுள்ள நீதி ஆயோக் அமைப்பால் மாநிலங்கள் தங்களுக்குரிய நிதியைப் பெறுவதில் இடையூறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மத்திய திட்டக் குழு இருந்தபோது, ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலத்துடனும் தனித் தனியாக ஆலோசனை நடத்தி நிதி ஒதுக்கீடு செய்யும் வழக்கம் இருந்தது.

ஆனால், இப்போது அதுபோன்ற நடைமுறை இல்லாததால், மாநிலங்களுக்கு மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கீடு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

நமது அரசியல் சட்டத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்பது மிகத் தெளிவாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. பிரச்னைகளையும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களையும் முறையாக விவாதித்து கருத்தொற்றுமை காண்பதற்கு ஒரே வழி "மாநிலங்களிடை மன்றம்' திறம்படச் செயல்படுவதுதான். ஆண்டுக்கணக்கில் முடங்கிக் கிடக்கும் இந்த அமைப்பை உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.



Read in source website

மத்திய நிதி அமைச்சர் 2021-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் போது, மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களில் உள்ள பங்குகளை விற்பதன் மூலம் ரூபாய் 1.75 லட்சம் கோடி நிதி திரட்ட இருப்பதாக தெரிவித்தார். இதில் நீதி ஆயோக் முன்னர் பரிந்துரைத்த மூன்று வங்கிகளில் இரண்டு வங்கிகளும் அடக்கம்.

அதனைத் தொடர்ந்து ஜூலை 2021-இல் மத்திய அரசின் நிதி செயலாளர் டி.வி. சோமநாதன், "பொதுத்துறை வங்கிகளில் பெரும்பாலானவை தனியார்மயமாக்கப்படும் என்று நாங்கள் இப்போது அறிவித்துள்ளோம். நாங்கள் அவற்றை தனியார்மயமாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்' என்று கூறினார்.

டிசம்பர் 2021-இல் சுமார் பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் அரசின் தனியார்மயமாக்கும் கொள்கையை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்தனர். வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யும் நாட்களுக்கு ஊதியத்தை இழப்பர். இருப்பினும், ஊதியத்தை இழந்து அவர்கள் வேலைநிறுத்தம் செய்வதிலிருந்து அவர்களின் எதிர்ப்பினை உணர முடியும்.

அரசு வங்கிகளை தனியார்மயமாக்குவதால் நன்மையா, தீமையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் இந்த வங்கிகளை தனியார்மயமாக்குவது சாத்தியமா என்று பார்க்கவேண்டும். 

1970, 1980 ஆண்டுகளில் தனியாக சட்டம் இயற்றப்பட்டு தனியார் வங்கிகள் அரசு வங்கிகளாக மாற்றப்பட்டன. தற்போது இந்த வங்கிகளை மீண்டும் தனியார்மயமாக்க தேவையான சட்ட திருத்தம் தேவை. தற்போதைய அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதால் இது சாத்தியமே.

ரிசர்வ் வங்கி புதிய வங்கி தொடங்குவதற்கான உரிமம் வழங்குவதற்கு "ஆன் டேப் லைசென்சிங் நார்ம்ஸ்' என்கிற வரைமுறைகளை வெளியிட்டுள்ளது. இது புதிய தனியார் வங்கி தொடங்குவதற்கான வரைமுறைகள் ஆயினும், இதே வரைமுறைகள், தனியார்மயமாக்கப்போகும் வங்கிகளுக்கும் பொருந்தும் என்று புரிந்துகொள்ளலாம்.

அரசு வங்கிகளை தனியாருக்கு விற்கவேண்டுமானால் அந்த வங்கிகளின் தற்போதைய சந்தை மதிப்பிற்கோ, அதற்குக் கூடுதலாகவோ மட்டுமே விற்க வேண்டும். அனைத்து அரசு வங்கிகளின் சில பங்குகள் தனி முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட்டு அவை பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. எனவே தற்போது வர்த்தகம் நடைபெறும் விலையில் அவற்றின் சந்தை மதிப்பை அளவிடமுடியும்.

மார்ச் 31, 2022-இல் இந்த வங்கிகளின் சந்தை மதிப்பு ரூ. 7,24,436 கோடி ஆகும். இந்த சந்தை மதிப்பில் அரசிடம் உள்ள பங்குகளின் மதிப்பு ரூ. 4,80,207 கோடி ஆகும். எனவே இந்த வங்கிகளை தனியாருக்கு விற்க முனைந்தால் குறைந்தபட்சம் ரூ. 4,80,207 கோடி முதலீடு செய்ய நிறுவனங்களோ தனியாரோ தேவை. அவர்கள் ரிசர்வ் வங்கியின் தகுதிப்பட்டியலில் இடம் பெற்ற நிறுவனமாகவோ தனி நபராகவோ இருக்கவேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் வங்கி உரிம விதிமுறைகளின்படி, வங்கி அல்லாத ஆதாரங்களில் இருந்து மொத்த வருமானத்தில் 40%-க்கு மேல் வருமானம் உள்ள பெரிய தொழில் நிறுவனங்கள், வங்கி அமைக்க தகுதி பெறாது.

எனவே ரிலையன்ஸ், அதானி, டாடா, பிர்லா போன்ற தொழில்துறை நிறுவனங்கள் எந்த வங்கி உரிமத்தையும் கொண்டிருக்க முடியாது. எனவே வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தில் அவை பங்கேற்க முடியாது.

10 வருட அனுபவமுள்ள தனிநபர்கள், ரூ.5,000 கோடி சொத்து மதிப்பு கொண்ட வணிகக் குழுக்கள் மட்டுமே வங்கி உரிமத்திற்குத் தகுதியுடையவர்கள். ஆனால்  குழுவின் நிதி அல்லாத வணிகம் மொத்த அடிப்படையில் 40% க்குள் இருக்க வேண்டும். இதுபோன்ற தகுதியுடன் எந்த  ஒரு தனிநபரோ  நிறுவனமோ இருப்பதாகத் தெரியவில்லை.

தற்போதுள்ள தனியார் வங்கிகள் அரசு வங்கிகளை ஏலம் எடுக்கத் தயாராக இருக்கும்பட்சத்தில், அரசு வங்கிகளை கையகப்படுத்தத் தகுதியுடையதாக இருக்கலாம். ஆனால் இங்கே இரண்டு கட்டுப்பாடுகள் உள்ளன. முதலாவது, பணி கலாசாரம். அதிக பணியாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, தனியார் வங்கிகள் அரசு வங்கிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டாது.

இரண்டாவது, தனியார் வங்கிகளிடம் எந்த வங்கியையும் வாங்குவதற்கு  போதுமான உபரி நிதி இல்லை. வங்கிகள் தங்கள் பெறும்  டெபாசிட்டில்  ரொக்கக் கையிருப்பு விகிதம் 4.5% ஆகவும், சட்டபூர்வ பணப்புழக்க விகிதம் 18% ஆகவும் இருக்க வேண்டும். எனவே எந்தவொரு வங்கியும் தன் வைப்புத்தொகையில் 77.5% ஐ மட்டுமே வசதியாக கடன் கொடுக்க முடியும். இதற்கு மேல் கடன் கொடுத்தால், அது டெபாசிட்டிலிருந்து அல்ல, வங்கிகள் தனியாக வாங்கிய கடனிலிருந்து கொடுப்பதாகும்.  

தற்போது முன்னணியில் உள்ள தனியார் வங்கிகள் எல்லாம் டெபாசிட்டை தவிர, வெளியில் கடன் வாங்கியே  வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்கின்றன. அவ்வாறு தங்களது கடன் கொடுக்கும் தேவைக்கே நிதி இல்லாத சூழ்நிலையில்  இந்த வங்கிகள் அரசு வங்கிகளை வாங்குவ என்பது எப்படி சாத்தியம்?

அரசாங்க வங்கிகளை வாங்குவதற்கு மற்றொரு  தகுதியான  வகை, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களாக இருக்கலாம். அவை பொருத்தமான மற்றும் சரியான அளவுகோலின் கீழ் வரலாம். ஆனால்  குழுவின் நிதியல்லாத வணிகமானது மொத்த சொத்துகள் - மொத்த வருமானத்தின் அடிப்படையில் 40% அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், ஒரு வங்கியாக ஆவதற்கு தகுதியற்றது.

பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட், ஆதித்யா பிர்லா கேபிடல் லிமிடெட், எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட், சுந்தரம் ஃபைனான்ஸ் போன்ற முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் அனைத்தும் தொழில்துறை குழுவின் பகுதியாக இருப்பதால் அவை வங்கி உரிமம் பெற முடியாமல் போகலாம்.

மொத்தத்தில், வங்கி தனியார்மயமாக்கல் நடவடிக்கையைத் தொடங்குவது வீண் செயலாகும். அரசு வங்கிகளை தனியார்மயமாக்க முயல்வதற்கு பதிலாக, அரசாங்கமும் இந்திய ரிசர்வ் வங்கியும், அரசு வங்கிகளின் செயல்திறனையும் நம்பகத்தன்மையையும் அதிகரிக்க முயல வேண்டும்.



Read in source website

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. முதல் நாளில் மாணவர்களும், ஆசிரியர்களும் உற்சாகமாகப் பள்ளிக்கு வந்தனர். பிள்ளைகளை ஆசிரியர்கள் வரவேற்றதை ஊடகங்களில் பார்த்தபோது திருவிழா போலத் தோன்றியது. ஆசிரியர்கள், குழந்தைகளுக்கு மலர் கொடுத்தும், இனிப்பு கொடுத்தும், சந்தனம் இட்டும் வரவேற்றனர். ஆசிரியர்கள் முகத்தில் உற்சாகத்தைப் பார்க்க முடிந்தது. இந்த உற்சாகம் வடிந்து போகாமல் ஆண்டு முழுவதும் இருக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகள் என்றால் மக்கள் மனத்தில் ஒரு பிம்பம் வரும். தூய்மையற்ற, காற்றோட்டம் இல்லாத வகுப்பறைகளும், அழுக்கான சுவர்களும், காரை பெயர்ந்த தரைகளும், தண்ணீர் இல்லாத அசுத்தமான கழிவறைகளும், சுற்றுச் சுவர் இல்லாதப் பள்ளி வளாகமும் மனதில் படமாய் விரியும். ஆனால், தற்போது பல அரசுப் பள்ளிகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அடிப்படை வசதிகள், உள் கட்டமைப்பு எல்லாம் கொண்ட அழகான அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. ஆனாலும், இன்னமும் கவனிக்கப்பட வேண்டிய நிலையில் பல பள்ளிகள் உள்ளன. 

அனைத்து அரசுப் பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு நிகரான உள்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு அந்தந்த ஊர் மக்களின் பங்களிப்பும் இன்றியமையாதது. திருவிழா நடத்த லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள். அப்போது பள்ளிகளுக்கு ஒரு சிறு தொகையை நன்கொடையாகத் தரலாம். மின்விசிறி, நாற்காலி, மேஜை போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம். 

பள்ளியின் வளர்ச்சியில் ஊர் மக்கள் அனைவரும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள பெரிய குறையே, பொது இடங்களையும், பொது சொத்துகளையும் முறையாகப் பராமரிக்கத் தவறுவதுதான். பள்ளிகளின் பராமரிப்பில் சுணக்கமோ, அசட்டையோ கூடாது.

கொள்ளை நோய்த்தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது பள்ளி மாணவர்கள்தான். இரண்டாண்டு பள்ளி சரிவர இயங்காததால் குழந்தைகள் எழுத்துகளை மறந்து விட்டனர். தனியார் பள்ளி மாணவர்கள் இணையவழி கற்றல் மூலம் ஓரளவு பாடங்களுடன் தொடர்பில் இருந்தார்கள். அவர்கள் பாடங்களைப் படிக்கவில்லை; ஆனாலும் பாடங்களை கவனித்தார்கள்.

வசதி படைத்த, விவரமான பெற்றோர் சிலர், தங்கள் குழந்தைகளை தனிப்பயிற்சி வகுப்புகளில் சேர்த்து, அவர்கள் கல்வி தேங்கிப் போகாமல் பார்த்துக் கொண்டார்கள். ஏழைப் பிள்ளைகளின் பெற்றோர், குழந்தைகளின் படிப்பு வீணாகிறதே என்று ஏங்கவும் இல்லை; வருந்தவும் இல்லை. ஆகவே, அரசின் பொறுப்பு கூடிப் போயிற்று. இரண்டாண்டு இடைவெளி விட்டு, பள்ளிகளைத் திறந்து பாடங்களைத் தொடர்ந்தால் குழந்தைகளுக்கு என்ன புரியும்? ஆகவே, மாணவர்களின் கற்றல் திறன் பாதிப்பை சரிசெய்ய வேண்டியது முக்கியம். 

முதல் இரு வகுப்புகள் படிக்காமலேயே மூன்றாம் வகுப்புக்கு சென்றுள்ள மாணவர்களுக்கு அந்த வகுப்புக்கு உரிய பாடம் எதுவும் விளங்காது. அரிச்சுவடியையே அறியாதவர்கள் அவர்கள். ஆகவேதான் அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படைக் கணிதத் திறனுடன் பிழையின்றி எழுதவும், படிக்கவும் வேண்டும் என்பதற்காக "எண்ணும் எழுத்தும்' திட்டத்தை மாநில அரசு முன்னெடுத்துள்ளது. 

எட்டு வயதிற்குள் மாணவர்கள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும், அடிப்படை கணித செயல்பாட்டுத் திறனையும் பெற்றிருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் இலக்கு. இதற்கான பயிற்சியும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தொடக்கக் கல்வி தரமானதாகக் கிடைத்து விட்டால், அவர்கள் வேர் ஊன்றி வளர்ந்து விடுவார்கள். கல்வியின் ருசியை அவர்கள் உணர்ந்து கொண்டால் இடைநிற்றல் இருக்காது. பாடங்கள் புரியாமல் போவதாலும், ஆசிரியர்களின் கண்டிப்பாலும், பள்ளியின் சூழல் இதமாக இல்லாததாலும்தான் மாணவர்கள் பள்ளியில் இருந்து நின்று விடுகிறார்கள். 

இதைத் தடுக்க வேண்டுமென்றால் பள்ளிகள் மாணவர்களை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும். வகுப்பறையின் அழகு அவர்களைக் கவர வேண்டும். குட்டி மேசையும் இருக்கையும் அவர்களுக்குப் பிடிக்க வேண்டும். வீட்டில் கிடைக்காத அன்பும் அரவணைப்பும் பள்ளியில் கிடைக்க வேண்டும். 

எந்தக் குழந்தையும் முட்டாளாகப் பிறப்பதில்லை. அதன் சூழலும், வளர்ப்பும், வாய்ப்பும் அதை உருமாற்றுகிறது. எண்ணும் எழுத்தும் திட்டம் அத்தகைய சிறந்த சூழலை உருவாக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனிக் குழுக்கள் அமைத்து, இத்திட்டத்தை செழுமைப்படுத்தியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இம்மூன்று பாடங்களிலும் பயிற்சி நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

தமிழ் வழி, ஆங்கில வழி ஆகிய இரண்டிலும் இந்த நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு ஆர்வம் மேலிடும் வகையில் எளிய ஆடல் - பாடல் மூலம், கதையாகச் சொல்லுதல், நடித்துக் காட்டுதல், பொம்மலாட்டம், கைவினைப் பொருள் என பல்வேறு வடிவங்களில் இப்பாடங்கள் பயிற்றுவிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று, பள்ளி ஆசிரியர்களின் வேலை, கல்லூரி பேராசிரியர்களின் பணியை விடக் கடினமாகி விட்டது. 

அடுத்த வரவேற்புக்குரிய செய்தி, பள்ளிகளில் வாரந்தோறும் மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகள் நடத்த முடிவெடுத்திருப்பது. அண்மைக்காலமாக பள்ளி மாணவர்கள் சிலரின் நடத்தை பற்றிய காணொலி சமூக ஊடகங்களில் பரவி சமூகத்தையே தலைகுனிய வைத்திருக்கிறது. 

ஆசிரியை வகுப்பில் இருக்கும்போதே சில மாணவர்கள் அருவருப்பாக நடனம் ஆடுகிறார்கள்; ஓர் ஆசிரியரைச் சுற்றிச் சுற்றி வந்து நடனம் ஆடுகிறார்கள்; ஒரு மாணவன் ஆசிரியரை அடிக்க கை ஓங்குகிறான்; பெண் பிள்ளைகள் மது அருந்துகிறார்கள்; புகை பிடிக்கிறார்கள்; காதில் கடுக்கண், கையில் வளையல், அருவருப்பான சிகை அலங்காரம் இவை மாணவர்களின் அடையாளங்களாகி விட்டன. ஒழுங்கீனங்கள் பெருகிப் போய் விட்டன. 

அவர்களைக் கண்டிக்க ஆசிரியர்களுக்குத் தயக்கம். சிக்கலில் மாட்டிக் கொள்வோமோ என்ற பயம். இதனால் மாணவர்கள் அடங்க மறுக்கிறார்கள். அந்த மாணவர்களை நல்வழிப்படுத்த நீதிபோதனை வகுப்புகள் கைகொடுக்கும் என நம்புவோம். சில ஆண்டுகளுக்கு முன் பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் இருந்தன. அது தவிர ஓவிய வகுப்பு, இசை வகுப்பு, கைவேலை வகுப்பு என எல்லாம் இருந்தன. ஆனால், நீதிபோதனை வகுப்பும், விளையாட்டு நேரமும் கணித வகுப்பாகவும், அறிவியல் வகுப்பாகவும் மாறிவிடும். 

வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் விளையாட்டுக்கென ஒதுக்கப் பட்டிருக்கும். அந்த வகுப்புக்காக மாணவர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அந்த வகுப்புகள் எல்லையில்லா மகிழ்ச்சியைத் தரும். ஆனால், ஆசிரியர்கள் அந்த நேரத்தில் பாடம் நடத்துவது உண்டு. அப்போது நடத்தப்படும் கணிதம் மாணவர்களுக்கு கசக்கவே செய்யும். நீதிபோதனை வகுப்புகள், அட்டவணையில் மட்டும் இல்லாமல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்.

ஒரு நீதிக்கதை பிள்ளைகளின் மனக்கசடுகளைப் போக்கக் கூடும். வெற்றியாளர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் மாணவர்களின் மனதில் நம்பிக்கை விதைகளைத் தூவும். பேரரசர்களின் வாழ்க்கை வரலாறு வீரத்தை விதைக்கும். தேசம் குறித்த நல்ல சிந்தனைகளையும், நம் மண்ணின் மகத்துவத்தையும் மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

குழந்தைகளைத் தவறான வழியில் இட்டுச் செல்வதற்கு, கைப்பேசிகளும் இணையமும் போட்டி போடும்போது, அவர்களை மீட்டெடுக்க வேண்டியது அரசு, பெற்றோர், ஆசிரியரின்  பொறுப்பாகும். 

சிறுவர்களாக இருக்கும் போது நன்னடத்தைப் பயிற்சி பெற்றவர்களே பெரியவர்களான பின்னர் வெற்றிகரமான வாழ்வை அடைந்துள்ளதாக பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 20 ஆண்டுகளாக நடத்தப்பட்ட அந்த ஆய்வின் முடிவு கூறுவது என்னவென்றால், நன்னெறி பயிற்றுவிக்கப்பட்ட குழந்தைகள் பிற்காலத்தில் எத்தகைய மன அழுத்தமும் இன்றி ஒழுக்கமாக வாழ்கிறார்கள் என்பதே. நம் முன்னோர்கள் உருவாக்கிய ஒழுக்க நெறிகளைப் பின்பற்றினால் மாணவர்களின் வாழ்க்கை செம்மையாகும். 

ஒழுக்கத்தைத் தராத கல்வியும், விளைச்சலைத் தராத வயலும் வீண். கல்வியின் பயன் அறிவு; அறிவின் பயன் ஒழுக்கம். நம் நல்லொழுக்க வகுப்புகள் மாணவர்களை நல்வழியில் இட்டுச் செல்ல வேண்டும். தொடக்க நிலையுடன் ஆசிரியர்களின் உற்சாகம் நின்று போய்விடக் கூடாது. முதல் நாளன்று அவர்கள் தங்கள் முகத்தில் தேக்கி வைத்த புன்னகை ஆண்டு முழுவதும் அவர்கள் முகத்தில் தங்கி இருக்க வேண்டும்.

பிள்ளைகள் மகிழ்ச்சியாகப் பள்ளிக்கு வரவேண்டும். ஆர்வத்துடன் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் நேர்மையுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். ஆசிரியர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். பள்ளிக்கு கைப்பேசி கொண்டுவர தடை விதித்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

புள்ளிகளை சரியாக வைத்தால் கோலம் சரியாக வரும். அளப்பறிய ஆற்றலைத் தன்னகத்தே வைத்துள்ள குழந்தைகள் நாளை சிகரம் தொடும். தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் உயர்வும் வெற்றியும் தங்களைச் சார்ந்தவை என ஆசிரியர்கள் எண்ண வேண்டும். சிறந்த மாணவர்களை உருவாக்கினால் சமுதாயம் சிறக்கும்; மனிதம் மலரும்; வாழ்வு இனிக்கும். 

அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டிவரும் இன்றைய நிலையில், ஆசிரியர்கள் தங்களின் திறமையை, அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்த வேண்டியது 
இன்றியமையாதது. 

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு).



Read in source website

தமிழ்நாட்டில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதையடுத்து, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 7,000-ஐத் தாண்டியுள்ள நிலையில், இப்படியொரு தற்காப்பு நடவடிக்கை தவிர்க்கவியலாதது.

சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்கள் மாநகரப் பகுதிகளை உள்ளடக்கியிருப்பதோடு தொழிற்சாலைகள் மிகுந்துள்ள பகுதிகள் என்பதால் தொற்றுப் பரவலுக்கான வாய்ப்பு அதிகம்.



Read in source website

உலகளவில் வேதியுரத் தட்டுப்பாடு தீவிரமடைந்துவருகிறது. இந்தத் தட்டுப்பாடு ரஷ்யா-உக்ரைன் போரால் மட்டும் விளைந்த ஒன்றல்ல, தற்காலிகமானதும் அல்ல. இன்னும் பல காலத்துக்கு நீடிக்கக்கூடிய, நம் அடிப்படைத் தேவையான உணவுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வளர்ந்துவரும் பூதம் இது.

பசுமைப் புரட்சியின்போது செயற்கை உரங்களின் பயன்பாட்டை இந்தியா பெரிய அளவில் ஊக்குவித்தது. வேதியுரம் இடப்படும் பயிர்களுக்கு அதிக நீர் தேவைப்படும். இதனால் நீர்ப் பற்றாக்குறை மோசமடைந்தது. வேதியுரங்களின் பயன்பாட்டால், இயற்கை உரம்/எரு போன்றவற்றின் பயன்பாடும் சரிந்ததால் மண்ணில் கரிமக் கார்பன் குறைந்து, நுண்ணுயிரிகளும் குறைந்தன.

இந்தப் பின்னணியில் உலகில் உரத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 70 சதவீதத்துக்கும் அதிகமான யூரியா, 90 சதவீத பாஸ்பேட், 100 சதவீதம் பொட்டாஷ் ஆகியவற்றை இறக்குமதி செய்கிறது. ஆக, பசுமை புரட்சியினால் நாம் உணவுத் துறையில் தற்சார்பை அடையவில்லை. வெளிநாடுகளில் இருந்து உணவாக இறக்குமதி செய்யாமல், உணவு உற்பத்திக்கான இடுபொருளாக இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம்.

மானியக் கொள்கை

சமீபத்திய உர நெருக்கடி காரணமாக விவசாயிகளுக்கான உர விலை பெரிய அளவில் மாறாமல் இருப்பதை உறுதிசெய்வதற்காக மத்திய அரசு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத்தை (NBS) உயர்த்திக்கொண்டே வந்தது. இதன் விளைவாக, மற்ற உரங்களைவிட யூரியாவின் விலை மலிவானது, யூரியா பயன்பாடு அதிகரித்தது.

இது மண் வளம், தாவர ஆரோக்கியம், மத்திய அரசின் நிதி ஆகியவற்றில் நெருக்கடியை ஏற்படுத்திவருகிறது. இதை உணர்த்தும் விதத்தில் இந்த ஆண்டுக்கான உர மானியத் தொகை ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் எச்சரித்தார். ஆனால், 2022-23 நிதியாண்டில் உரத்துக்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ. 1.05 லட்சம் கோடி மட்டுமே.

நீண்ட கால நெருக்கடி

நமது நாட்டின் வேதியுரக் கையிருப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கவலைக்கிடமாக உள்ளது. உர மானியம் குறித்து குறுகிய கால முடிவுகளையே அரசு எடுத்துவருகிறது. அந்த முடிவுகளும்கூடப் போதுமான‌ முன்னறிவிப்பு இன்றி திடீரென அறிவிக்கப்படுகின்றன.

உரம் சார்ந்த ஒரு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளோம். ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்னதாகக் கடந்த குறுவைப் பருவத்திலேயே நாடு முழுவதும் இதற்கான அறிகுறிகள் தென்பட்டன. கரோனா, சீனாவின் ஏற்றுமதி தடுப்புச் சட்டம், பதுக்குதல், இயற்கை எரிவாயு விலையேற்றம், ரஷ்ய-உக்ரைன் போர் போன்ற பல காரணங்களால் உலக அளவில் உர விலை மூன்று மடங்கு அதிகரித்தது. வ

ரும் சம்பா பருவத்தில் உரம் இருப்பின்மையும், விலை உயர்வும் நம்மை பெரிதாக வாட்டும். உரத் தொழில் சார்ந்து அரசின் கொள்கை தெளிவில்லாமல் இருப்பதால் நிச்சயமற்ற தன்மை உள்ளது. உர மானியங்களின் அளவு குறித்த தெளிவு இல்லாததால், உர நிறுவனங்களால் உற்பத்தி, இறக்குமதி, சரக்கின் இருப்பு ஆகியவற்றுக்கான நீண்ட காலத் திட்டங்களை உருவாக்க முடியவில்லை.

ஆக இது குறுகிய கால நெருக்கடி அல்ல - குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு மேல் உர விலைகள் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.

உரப் பிரச்சினை காரணமாக பெரு, பிரேசில், ஸ்பெயின், கிரீஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் விலைவாசி ஏற்றம் மக்களிடையே எதிர்ப்பை உருவாக்கியது. உலகளாவிய உரச் சந்தை போட்டித்தன்மை மிகுந்தது. உரத் தட்டுபாடு நிலவும் நேரத்தில் மத்திய அரசு மானியத்தை உயர்த்துவதால் மட்டுமே இந்தப் பிரச்சினையை சமாளிக்க முடியுமா என்பது தெரியவில்லை.

இயற்கை வேளாண்வழி

எவ்வளவு காலத்திற்கு இப்படிக் குறைந்த விலையில் வேதியுரத்தை வழங்க முடியும் என்பதில் தெளிவில்லை. இயற்கை சார்ந்த, நிலைத்த வேளாண் வழிமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது. நஞ்சில்லா உணவு மட்டுமில்லாமல், இறக்குமதி சாரா, இயற்கை சார்ந்த வேளாண் வழிமுறைகளுக்கான நேரமும்கூட.

நாட்டின் கொள்கைகளும், வேளாண் கல்லூரிகளும் இயற்கை வேளாண்மை சார்ந்த முன்முயற்சிகளை எடுக்க வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட விவசாய முறைகளுக்கு ஆதரவாக வாதிடத் தொடங்க வேண்டும்.

அந்த வகையில் இலங்கை தற்போது சந்தித்துள்ள நிலைமை, ஒரு நல்ல பாடம். தடாலடியாக வேதியுரங்களை நிறுத்துவதோ இயற்கை வேளாண்மைக்கு மாறுவதோ எளிதல்ல. சீரிய திட்டங்களும் தொலைநோக்கும் தேவை. முறையான முதலீடு, கொள்கை அடிப்படைகளுடன் படிப்படியாக மாற்றத்தைத் திட்டமிட வேண்டும்.

இப்போது என்ன செய்யலாம்?

மத்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டியவை:

# மானியங்கள் - அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான வேதியுரத்திற்கான கொள்கைகளை அறிவித்து, உர நிறுவனங்கள் திட்டமிட்டு செயல்பட உதவ வேண்டும்.

# இறக்குமதி - வெளியுறவு அமைச்சகம் எதிர்கால சூழ்நிலையைக் கையாள்வதற்கான திட்டத்தை (contingency) உருவாக்கி, வெளிநாடுகளிலிருந்து தேவையான உரத்தைப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.

# கள்ளச்சந்தையையும், விலையேற்றத்திற்காக பதுக்குதல் போன்றவற்றையும் தடுக்க வேண்டும்.

# உர மானியத்தை நிறுவனத்துக்குத் தராமல், நேரடியாக விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக அறிவிக்க வேண்டும்

# அரிசி, கோதுமை ஆகியவற்றைத் தாண்டி சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளையும் அரசின் கொள்முதலில் சேர்க்க வேண்டும். இதனால் நீர், உரத் தேவை, இறக்குமதி செய்யப்படும் உரம், தானியத்தின் தேவை ஆகியவை குறையும்.

# இயற்கை வேளாண்மைக்கான ஆய்வுகள், ஆலோசனைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

# மரபார்ந்த இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க ஊக்கத்தொகை வழங்க வேண்டும்

தமிழக அரசு செய்ய வேண்டியவை:

# நுண்ணுரங்கள் தயாரிக்கும் மைக்ரோ கம்போஸ்டிங் மையங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இதனால் நகரங்களில் இருக்கும் குப்பைகளை அகற்ற முடியும், விவசாயிகளுக்கு இடுபொருளும் கிடைக்கும்.

# மகளிர் சுயஉதவிக் குழுக்களை விவசாயி களுடன் இணைக்க வேண்டும்; சத்தீஸ்கரில் நடத்தப்படுவது போல், தரத்தில் கவனத்துடன் மண்புழு உரம் தயாரிக்க சுயஉதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.

# விவசாயிகளுக்கு நேரடி மானியமாக பணத்தைக் கொடுத்து தங்கள் விருப்பப்படி இடுபொருள்களுக்குப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நேரடி பணப் பரிமாற்ற முறையைப் பயன்படுத்த வேண்டும்.

# இயற்கை வேளாண்மை/இடுபொருள் உற்பத்தி/உபயோக‌த் திறனை வளர்க்க மாவட்ட அளவிலான நிபுணர்களை உருவாக்க வேண்டும்

- அனந்து, பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு தொடர்புக்கு: organicananthoo@gmail.com



Read in source website

பிளாக்செயின், பிட்காயின் குறியீட்டு நாணயம் (Cryptocurrency) என்பதைப் பற்றி பலரும் பேசிக்கொண்டிருப்பதைக் காணலாம். பிளாக்செயின் தொழில்நுட்பம் எவ்வாறு உருவானது என்பதற்கு ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட இரண்டு அணிகள்தான் ஜெயிக்கும் என்று இரண்டு நண்பர்கள் தங்களுக்குள் பந்தயம் வைத்துக்கொள்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம்.



Read in source website