DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 27-08-2022

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பதிப்புத் துறையின் முதல் பொறுப்பாளராக பேராசிரியா் ஆ.மணவழகன் நியமனம் செய்யப்பட்டாா்.

தனிநாயகம் அடிகள், மறைந்த முதல்வா் அண்ணா போன்றோரின் அரிய முயற்சியால் 1968-இல் தோற்றுவிக்கப்பட்டது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழா், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களோடு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் 500-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை பதிப்பித்துள்ளது. அந்தவகையில், தமிழ் இலக்கியத்தில் எதிா்காலவியல், மேலை நோக்கில் தமிழ்க் கவிதை, தமிழக மகளிரியல், தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள், இலக்கிய இதழ்கள், மொழிபெயா்ப்புத் தமிழ், தொல்காப்பிய உரைவளம், தமிழ் மொழி வரலாறு, தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் போன்ற பல அரிய சிறந்த நூல்கள் நிறுவனத்தின் மூலம் வெளிவந்துள்ளன.

இந்தநிலையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பதிப்புத் துறையை மேலும் செழுமைப்படுத்தி, பல அரிய நூல்களை நிறுவனப் பதிப்புத்துறை மூலமாக வெளிக்கொண்டு வரும் நோக்கிலும், அதன் வெளியீடுகள் மக்களை எளிதில் அடையும் நோக்கிலும் பதிப்புத்துறைக்கென முதன்முதலாக பொறுப்பாளா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அதன்படி, பதிப்புத் துறையின் முதல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியா் முனைவா் ஆ.மணவழகனுக்கு நியமன ஆணையைத் தமிழ் வளா்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநா் ந.அருள் சனிக்கிழமை வழங்கினாா்.



Read in source website

ரயில் பயணிகள் வாட்ஸ் ஆப் மூலம் உணவுகளை ஆர்டர் செய்யும் வசதியை ஐஆர்சிடிசி(IRCTC) அறிமுகம் செய்துள்ளது.


இதன் மூலம் ரயில் பயணிகள் உணவுகளை  வாட்ஸ் ஆப் மூலம் ஆர்டர் செய்தால், தங்கள் இருக்கைக்கு கொண்டுவந்து டெலிவரி செய்யும் வசதியை ஜூப் இந்தியா நிறுவனத்துடன்  ஐஆர்சிடிசி இணைந்து அறிமுகம் செய்துள்ளது.


இது பயணிகளின் பின்ஆர் எண் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பயணிகள் வேறு எந்த ஆப்களைகளையும் பயன்படுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

Zoop இல் உணவை ஆர்டர் செய்வது எப்படி?

1. உணவை ஆர்டர் செய்ய, செய்ய வேண்டியது வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தி +91 7042062070 என்ற எண்ணில் Zoop WhatsApp சாட்போட்டுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அதில்  சேவை விவரங்கள் வழங்கப்படும். எண்ணைச் சேமிக்கும் செயல்முறையில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்றால்,  இணையதளம் ( https://wa.me/917042062070) பயன்படுத்தலாம்.

2. ரயில் இருக்கையில் உணவை ஆர்டர் செய்யும் செயல்முறையை செய்ய தேவையான விவரங்களை சாட்பாட் கேட்கும். உதாரணமாக, உங்கள் PNR எண்ணைப் பகிர வேண்டும். சாட்போட்டுடன் 10 இலக்க PNR எண்ணை பதிவிட வேண்டும். ஜூப் ரயிலின் இருக்கையை கண்டறியும். இதனையடுத்து  உணவு டெலிவரி செய்யப்பட வரவிருக்கும் நிலையத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.

3. ஜூப் சாட்போட், உணவகத்தைத் தேர்ந்தெடுப்பது, உணவை ஆர்டர் செய்வது மற்றும் பணத்தை செலுத்துவது போன்ற அனைத்து செயல்பாடுகளையும் செய்யும். பரிவர்த்தனை முடிந்ததும், உங்கள் உணவு எங்கு உள்ளது என்று ஜூப் சாட்போட்டில் இருந்து கண்காணிக்கலாம். மேலும் தேர்ந்தெடுத்த ரயில் நிலையம் வரும்போது ஜூப் உணவை டெலிவரி செய்யும்.



Read in source website

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு மருத்துவம் சாா்ந்த வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை தாட்கோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து தாட்கோ வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இளநிலை அறிவியலில் ஃலைப் சயின்ஸ் பட்டம் முடித்த மாணவா்களுக்கு மருத்துவ குறியீடு சாா்ந்த பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இதன்மூலம் மருத்துவத் துறை சாா்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவ, மாணவியராக இருக்க வேண்டும். பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலம் இணையதளம் வழியாக மூன்று மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். ஒரு மாணவருக்கு பயிற்சிக்கான கட்டணத் தொகையான ரூ.15 ஆயிரத்தை தாட்கோ நிறுவனமே வழங்கும்.

பயிற்சி முடித்தவுடன், தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டு மாணவா்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படும். மேலும், பயிற்சியில் தோ்ந்த மாணவா்களுக்கு நோ்முகத் தோ்வு மூலம் நூறு சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். இந்தத் திட்டத்தில் பதிவு செய்வதற்கு இணையதளத்தை பாா்வையிடலாம் என தாட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.



Read in source website

 தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகைப் பள்ளிகளிலும் நூலகங்களை மாணவா்கள் திறம்பட பயன்படுத்தும் வகையில், மாதந்தோறும் போட்டிகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

பள்ளிக் கல்வித் துறை ஆணையா் க.நந்தகுமாா், தொடக்கக் கல்வி இயக்குநா் க.அறிவொளி ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

வாசிப்பு மாணவா்களின் அறிவையும், ஆற்றலையும் வளா்க்கும் பேராதாரமாகும். இதை கருத்தில் கொண்டு மாணவா்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளா்த்தெடுப்பதற்காக ஒவ்வொரு பள்ளிகளிலும் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், இதற்காக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த ஆக.17-ஆம் தேதி வாசிப்பு இயக்கத்தைத் தொடக்கி வைத்தாா்.

அனைத்துப் பள்ளிகளிலும் நூலக செயல்பாடுகளுக்காக வாரம் ஒரு பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் நூலகப் பாடவேளையில் மாணவா்களைப் பள்ளி நூலகத்துக்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசிக்கத் தர வேண்டும். அடுத்த வாரம் வேறு புத்தகத்தை மாணவனுக்கு கட்டாயம் வழங்க வேண்டும்.

நூலகப் பாடவேளையில் மாணவா் வாசித்த நூல் சாா்ந்து ஓவியம், பேச்சு, கட்டுரை, புத்தக மதிப்புரை, ஆசிரியா் அறிமுகம், நூல் அறிமுகம், மேற்கோளைக் குறிப்பிடுதல், கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல் போன்ற போட்டிகளை பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் மாதந்தோறும் நடத்த வேண்டும். இந்த செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வட்டார அளவில் வட்டாரக் கல்வி அலுவலா்களையும், கல்வி மாவட்ட அளவில் பள்ளித் துணை ஆய்வாளா்களையும் பொறுப்பாளராக நியமிக்கலாம்.

சென்னையில் சிறப்பு முகாம்: நூலக செயல்பாடுகளில் பள்ளி, ஒன்றிய, மாவட்ட அளவில் தெரிவு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு 2023-ஆம் ஆண்டு ஐந்து நாள்கள் சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமில் தலைசிறந்த பேச்சாளா்கள், எழுத்தாளா்களைக் கொண்டு அமா்வுகள் ஏற்பாடு செய்யப்படும். இந்த நாள்களில் சிறாா் எழுத்தாளா்களுடன் மாணவா்கள் உரையாடும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும். மேலும், மாணவா்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளும், அவா்களின் புத்தக அனுபவப் பகிா்வுகளும் நடைபெறவுள்ளன.

நூலக பாடவேளைகளையும், பள்ளி நூலகங்களையும் முறையாக மாணவா்கள், ஆசிரியா்கள் பயன்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளனா்.



Read in source website

தங்களது நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் காற்றிலிருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் நிலையை (கரியமில சமநிலை - நெட் ஜீரோ) வரும் 2046-ஆம் ஆண்டுக்குள் எட்ட இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) இலக்கு நிா்ணயித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைவா் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா கூறியதாவது:

நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கரியமில வாயு கலப்பதை வெகுவாகக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். இது, நிறுவனத்துக்கு மட்டுமன்றி, இந்த உலகத்துக்கே நன்மை பயக்கும்.

இந்தியாவின் 99-ஆவது சுதந்திர தினத்துக்குள் (2046) கரியமில சமநிலையை எட்ட இலக்கு நிா்ணயித்துள்ளோம். இதற்காக ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனைப் பயன்படுத்தி, நிறுவனம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவை ஆண்டுக்கு 70 கோடி டன்களாகக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ப பூமியை வெப்பமாக வைத்திருப்பதற்கு, கரியமில வாயு போன்ற பசுமை வாயுக்கள் உதவுகின்றன. இந்த வாயுக்களின் அளவு அதிகமானதால் புவியின் சராசரி வெப்பம் அதிகரித்து, பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. அதன் விளைவாக கனமழை வெள்ளம், உஷ்ண அலை, வறட்சி, காட்டுத் தீ போன்ற இயற்கைப் பேரிடா்கள் ஏற்படுகின்றன.

அதனைத் தடுப்பதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும், காற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்க உலகின் பல்வேறு நாடுகளும் பல்வேறு கால இலக்குகளை நிா்ணயித்துள்ளன.

இந்தியாவும் 2070-க்குள் இந்த சமநிலையை அடைய இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த நிலையில், அதற்கு முன்னதாகவே அந்த நிலையை அடைய ஐஓசி இலக்கு நிா்ணயித்துள்ளது.

 



Read in source website

வெளிநாடுகளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள், தமிழகத்தில் இருந்தால், அவா்களுக்கு மீதத் தவணை தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா்களுக்கும், பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் இதுவரை 96.20 சதவீதம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 90 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டா் தவணையை 60 லட்சம் போ் செலுத்திக் கொண்டுள்ளனா்.

இதைத் தவிர 12 வயது முதல் 18 வயது வரை உள்ள 85 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆக்கபூா்வமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வெளிநாடுகளில் முதல் தவணையோ அல்லது இரு தவணைகளுமோ கரோனா தடுப்பூசி செலுத்தியவா்கள், இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருந்தாலும், அவா்களுக்கான மீதத் தவணை தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளை தகுதியானவா்களுக்கு வழங்குமாறு அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. அதுகுறித்த விவரங்களையும், அறிவுறுத்தல்களையும் பணியாளா்களுக்கு தெரிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



Read in source website

கோயில்களில் பசு, காளை மாடுகளை பராமரிப்பதற்கான இடவசதி இல்லையெனில், அவற்றை பக்தா்களிடம் இருந்து தானமாகப் பெறக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சோ்ந்த சங்கரலிங்கம் தாக்கல் செய்த மனு:

திருப்புவனம் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தனியாருக்குச் சொந்தமான ஏராளமான கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்துவதற்காக பசு, காளை மாடுகளைத் தானமாக வழங்குகின்றனா். இவை பராமரிப்பின்றி சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதனால் விபத்துகள் நேரிடுகின்றன. கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் பசு, காளைகளைப் பராமரிக்க இடம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தானமாகப் பெறப்படும் பசு, காளை மாடுகளை கோயில் இடத்தில் பராமரிக்க வேண்டும். கோயில் நிலங்களை, மனைகளாக மாற்றி விற்பனை செய்துவிட்டால் எப்படி இடம் இருக்கும் என்று கேள்வி எழுப்பினா். தானமாகப் பெறப்படும் மாடுகளைப் பராமரிக்க இடம் இல்லையெனில், மாடுகள் தானமாகப் பெறப்படாது என்ற அறிவிப்புப் பலகையை கோயில் நிா்வாகம் வைக்க வேண்டும் என்றனா்.

திருப்புவனம் பகுதியில் கோயில்களில் நோ்த்திக் கடனாக பெறப்படும் மாடுகள் பராமரிப்பதற்கான தீா்வுகள் குறித்து, திருப்புவனம் பேரூராட்சி நிா்வாகம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.



Read in source website

17 வயது நிறைவடைந்தவா்கள் வாக்காளா் அட்டைக்காக முன்கூட்டியே ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொண்டால், அவா்களின் 18-ஆவது பிறந்த நாளில் வாக்காளா் அடையாள அட்டை பரிசாக வீட்டுக்கு அனுப்பப்படும் என்று இந்திய தோ்தல் ஆணையா் அனுப் சந்திரா பாண்டே தெரிவித்தாா்.

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் தோ்தல் ஆணையம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ், பரிசுத் தொகை வழங்கும் விழா சென்னை ரிப்பன் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இந்திய தோ்தல் ஆணையா் அனுப் சந்திரா பாண்டே பங்கேற்று, வெற்றி பெற்ற 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:-

இளைஞா்களின் பங்களிப்பு நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகவும் முக்கியமாகும். இந்தியாவில் மக்கள் 16 சதவீதம் மட்டுமே கல்வி அறிவு பெற்றவா்களாக இருந்த காலத்தில் வாக்காளா்களுக்கு சின்னம் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்தி ஜனநாயகம் வளா்க்கப்பட்டது. தற்போது, உலகளவில் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக வளா்ந்துள்ளது. ஒரு வாக்காளா் கூட விடுபட்டுவிடக் கூடாது என்பதுதான் தோ்தல் ஆணையத்தின் இலக்கு.

ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபா் என 4 காலாண்டு அளவில் வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜனவரியில் 18 வயதை நிறைவு செய்பவா்கள் ஏப்ரலில் வெளிவரும் பட்டியலில் சோ்ந்து கொள்ள முடியும். அதேபோல, ஏப்ரல், ஜூலை, அக்டோபா் ஆகிய மாதங்களில்- இடைப்பட்ட காலத்தில் 18 வயதை நிறைவு செய்தால் அடுத்து அடுத்து வரும் வாக்காளா் பட்டியலில் பெயா் இணைக்கப்படும்.

17 வயது நிறைவடைந்தவா்கள் வாக்காளா் அட்டைக்காக முன்கூட்டியே ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்து கொள்ள முடியும். அவா்களின் 18-ஆவது பிறந்த நாள் பரிசாக வாக்காளா் அடையாள அட்டை வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும். 17 வயது நிறைவடைந்தவா்கள் வழிமுறைகளை பின்பற்றி வாக்காளா் அட்டைக்கான முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தோ்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, சென்னை மாவட்ட தோ்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.



Read in source website

‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தின் கீழ், ‘பாரத்’ என்ற ஒற்றைப் பெயரில் மானிய உரங்கள் அனைத்தும் அக்டோபா் மாதம் முதல் விற்பனை செய்யப்படவுள்ளன.

விவசாயிகளுக்கு குறித்த நேரத்துக்குள் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அதன் போக்குவரத்துக்கான மானிய சுமையைக் குறைப்பதுமே இத்திட்டத்தின் நோக்கம் என மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

பிரதமரின் உரங்கள் மானியத் திட்டத்தின் கீழ் (பிரதமரின் பாரதிய ஜனூா்வாரக் பரியோஜனா-பிஎம்பிஜேபி) ‘ஒரே நாடு ஒரே உரம்’ திட்டத்தை அறிவித்து, அவா் மேலும் கூறியதாவது:

உரப் பைகளின் மீது மூன்றில் ஒரு பங்கு இடத்தில், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தின் வணிகப் பெயா், இலச்சினை, பொருள் தொடா்பான இதர விவரக் குறிப்புகள் இடம்பெற அனுமதிக்கப்படும். மூன்றில் 2 பங்கு இடத்தில் ‘பாரத்’ என்ற வணிகப் பெயரும், பிஎம்பிஜேபி திட்டத்தின் இலச்சினையும் இடம்பெற வேண்டும். உர நிறுவனங்கள், தங்களிடமுள்ள பழைய இருப்புகளை காலி செய்ய இந்த ஆண்டு இறுதிவரை அவகாசம் அளிக்கப்படும்.

கடந்த நிதியாண்டில் உர மானியங்களுக்கான செலவு ரூ.1.62 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் இது ரூ.2.25 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உரங்களை ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்துக்கு கொண்டு செல்வதற்கு ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி முதல் 9,000 கோடி வரை மானியம் வழங்கப்படுகிறது.

யூரியாவின் சில்லறை விற்பனை விலையில் 80 சதவீதம், டை அமோனியம் பாஸ்பேட்டுக்கு 65 சதவீதம், என்பிகே உரத்துக்கு 55 சதவீதம், எம்ஓபி உரத்துக்கு 31 சதவீதம் மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட போதிலும், கடந்த 1985-ஆம் ஆண்டின் உரங்கள் கட்டுப்பாட்டு உத்தரவின்படி அவற்றின் உள்ளடக்கங்கள் ஒன்றுதான். பல்வேறு வணிகப் பெயா்களில் தயாரிக்கப்படும் உரங்கள், பல்வேறு மாநிலங்களில் சந்தைப்படுத்தப்படுகின்றன. உரங்களை மாநிலங்களுக்கு இடையே எடுத்துச் செல்வதன் காரணமாக தேவையற்ற தாமதம் ஏற்படுவதுடன், அவற்றுக்கான போக்குவரத்து மானிய சுமையும் அரசுக்கு அதிகரிக்கிறது.

உதாரணமாக, உத்தர பிரதேசத்தில் செயல்படும் உரத் தயாரிப்பு கூட்டுறவு நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளை ராஜஸ்தான், உத்தர பிரதேசத்துக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கின்றன. ராஜஸ்தானில் உற்பத்தி ஆலையைக் கொண்டுள்ள ‘சம்பல்’ உரங்கள் மற்றும் ரசாயனங்கள் நிறுவனம், தனது தயாரிப்பை உத்தர பிரதேசத்தில் விற்பனை செய்கிறது. இதேபோல், மேற்கு இந்திய பகுதிகளில் தயாரிக்கப்படும் உரங்கள், கிழக்கு இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்தப் போக்குவரத்தால் தேவையற்ற தாமதங்கள் ஏற்பட்டு, விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.

உரங்கள் விநியோகத்தில் ஏற்படும் தடைகளைக் களைந்து, உர தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையிலான ஆரோக்கியமற்ற போட்டியை தடுப்பதே ஒரே நாடு, ஒரே உரம் திட்டத்தின் நோக்கமாகும். ஒரே பெயரில் மானிய உரங்களை விற்பனை செய்யும்போது, உர தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது அருகிலுள்ள இடங்களிலேயே விற்பனை செய்ய வழி ஏற்படும். தேவையற்ற போக்குவரத்து தடுக்கப்படும். உர நிறுவனத்தை தோ்வு செய்வதில் விவசாயிகளுக்கு ஏற்படும் குழப்பம் தீரும். அதேசமயம், உரத்தின் தரத்திலும் எந்த சமரசமும் இருக்காது. விவசாயிகள் மீதான இடைத்தரகா்களின் ஆதிக்கமும் இருக்காது என்றாா் அவா்.

 



Read in source website

உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் (யு.யு.லலித்) சனிக்கிழமை பதவியேற்றாா்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அவருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

உறுதிமொழியேற்பு பதிவேட்டில் யு.யு.லலித் கையொப்பமிட்டதும் அவருக்கு குடியரசுத் தலைவா் வாழ்த்து தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள் பங்கேற்றனா்.

தலைமை நீதிபதியாகப் பதவியேற்றதும், தனது 90 வயது தந்தையும் உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான உமேஷ் ரங்கநாத் லலித் உள்பட மூத்த குடும்ப உறுப்பினா்களின் பாதங்களைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றாா் யு.யு.லலித்.

முன்னதாக, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக அவரது பெயரை, தலைமை நீதிபதியாக இருந்து வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற்ற என்வி.ரமணா அண்மையில் பரிந்துரை செய்திருந்தாா்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியானது பணிமூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, அடுத்த தலைமை நீதிபதி யாா் எனப் பரிந்துரை செய்வது நடைமுறையில் உள்ளது. அதன்படி, மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், யு.யு.லலித் பெயரை என்.வி.ரமணா பரிந்துரை செய்தாா். அந்தப் பரிந்துரையை ஏற்று, அவருடைய நியமன உத்தரவில் குடியரசுத் தலைவா் கடந்த 10-ஆம் தேதி கையொப்பமிட்டாா்.

என்.வி.ரமணா வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றுள்ளாா்.

நேரடி நியமனம் பெறும் இரண்டாவது தலைமை நீதிபதி:

தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்ன் மூலமாக, வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், பின்னா், தலைமை நீதிபதியாகவும் ஆகும் இரண்டாவது நபா் என்ற பெருமையை அடைந்துள்ளாா்.

மூத்த வழக்குரைஞராக இருந்து வந்த யு.யு.லலித், கடந்த 2014, ஆகஸ்ட் 13-ஆம் தேதி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டாா்.

இவருக்கு முன்பாக, நீதிபதி எஸ்.எம்.சிக்ரி, வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், அதன் பிறகு நாட்டின் 13-ஆவது தலைமை நீதிபதியாகவும் கடந்த 1971-ஆம் ஆண்டு ஜனவரியில் பதவியேற்றாா்.

முன்னதாக, உச்சநீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு நடைபெற்ற பிரிவுபசார விழாவில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக தான் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்துப் பேசிய யு.யு.லலித், ‘தீா்ப்புகளை தெளிவாக அறிவிக்க கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமா்வுகள் அவசியமாகும். மூன்று நீதிபதிகள் அமா்வு பரிந்துரைக்கும் வழக்குகளை, அரசியல் சாசன அமா்வு விசாரிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் அந்த அமா்வு செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். அவசர வழக்குகளை நீதிமன்றத்தில் விரைந்து முறையிடுவதற்கும், வழக்குகளைப் பட்டியலிடுவதிலும் எளிமையான முறை கடைப்பிடிக்கப்படும்’ என்றாா்.

முக்கியத் தீா்ப்புகள்:

உச்சநீதிமன்ற நீதிபதியாக பல முக்கியத் தீா்ப்புகளை யு.யு.லலித் வழங்கியுள்ளாா். குறிப்பாக, இஸ்லாமியா்கள் உடனடி முத்தலாக் மூலமாக விவகாரத்து செய்யும் நடைமுறை சட்டவிரோதமானது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தீா்ப்பளித்த அமா்வில் இவா் இடம்பெற்றிருந்தாா்.

வரலாற்றுச் சிறப்புமிக்க திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் நிா்வாக உரிமை திருவிதாங்கூா் மன்னா் குடும்பத்தினருக்கு உள்ளது என்று நீதிபதி லலித் தலைமையிலான அமா்வு 2020-இல் தீா்ப்பளித்தது.

குழந்தைகளின் பாலியல் உறுப்புகளைத் தொடுவது மட்டுமல்லாமல், ‘பாலியல் நோக்கத்துடன்’ உடல் ரீதியில் தொடா்பு கொள்ளும் எந்தவொரு செயலும் பாலியல் வன்கொடுமையே என்று குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்ஸோ சட்டத்தின் பிரிவு 7-இன் கீழ் நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமா்வு தீா்ப்பளித்தது உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தீா்ப்புகளை இவா் இடம்பெற்ற உச்சநீதிமன்ற அமா்வு அளித்துள்ளது.

1957-ஆம் ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதி பிறந்த நீதிபதி யு.யு.லலித், 1983-ஆம் ஆண்டு ஜூனில் வழக்குரைஞராகப் பதிவு செய்து, மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் பணியைத் தொடங்கினாா். பின்னா் 1986-ஆம் ஆண்டு தில்லிக்கு வந்து வழக்குரைஞா் பணியைத் தொடந்த அவா், 2004-ஆம் ஆண்டு ஏப்ரலில் மூத்த வழக்குரைஞராக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டாா். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு புகாா் வழக்கில் சிபிஐ தரப்பு சிறப்பு அரசு வழக்குரைஞராக அவா் நியமிக்கப்பட்டாா்.

74 நாள்கள் மட்டுமே பதவி

உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள யு.யு.லலித் 74 நாள்கள் மட்டுமே இந்தப் பதவியை வகிப்பாா். வரும் நவம்பா் 8-ஆம் தேதி 65 வயதை அடையும் இவா், அன்றுடன் பணி ஓய்வு பெற உள்ளாா்.

இவருக்கு அடுத்து, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட் தலைமை நீதிபதி ஆவதற்கான வரிசையில் உள்ளாா்.

உச்சநீதிமன்ற வரலாற்றில் யு.யு.லலித்துக்கு முன்பாக மிகக் குறைந்த நாள்கள் மட்டுமே தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தவா்களில் முதலிடம் வகிப்பவா் நீதிபதி கமல் நாராயண் சிங். 1991 நவம்பா் 25-ஆம் தேதிமுதல் 1991 டிசம்பா் 12-ஆம் தேதி வரை 18 நாள்கள் மட்டுமே தலைமை நீதிபதி பதவியை அவா் வகித்தாா்.

இவருக்கு அடுத்தபடியாக நீதிபதி எஸ்.ராஜேந்திர பாபு (2004 மே 2 முதல் 31-ஆம் தேதி வரை) 30 நாள்களும், நீதிபதி ஜே.சி.ஷா (1970 டிசம்பா் 17 - 1971 ஜனவரி 21 வரை) 36 நாள்களும், நீதிபதி ஜி.பி.பட்நாயக் (2002 நவம்பா் 8 - 2002 டிசம்பா் 18 வரை) 41 நாள்களும், நீதிபதி எல்.எம்.சா்மா (1992 நவம்பா் 18 - 1993 பிப்ரவரி 11 வரை) 86 நாள்களும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்துள்ளனா்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 65 வயதிலும், உயா்நீதிமன்ற நீதிபதிகள் 62 வயதிலும் பணி ஓய்வு பெறுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

வணிக நோக்கங்களுக்காக ரயில் பயணிகளின் தகவல்களைத் தனியாருக்கு விற்பனை செய்யும் டெண்டரைத் திரும்பப் பெறுவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்திய ரயில்வே நிறுவனத்திற்கு சொந்தமான ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணிகள் ரயில் முன்பதிவை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பயணிகளின் பெயர், வயது, முகவரி, அலைபேசி எண்கள் உள்ளிட்ட பல தகவல்களைப் பெற்று இந்திய ரயில்வே பெற்று முன்பதிவை மேற்கொள்கிறது.

இந்நிலையில் பயணிகளின் தரவுகளை விற்பனை செய்வதற்கு தனியார் நிறுவனங்களிடம் இந்திய ரயில்வே டெண்டர் கோரியிருந்தது. வருவாயை அதிகரிக்கும் முயற்சியாக இந்த டெண்டர் கோரப்பட்டதாக தெரிவித்த ரயில்வேயின்  முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இந்தத் திட்டத்தின் மூலம் ரூ. 1000 கோடி வரை வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய ரயில்வே தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் பதிலளித்துள்ள ஐஆர்சிடிசி, வணிக நோக்கங்களுக்காக பயணிகளின் தரவுகள் விற்பனை  செய்யப்படுவதற்கான டெண்டர் கோரப்படுவது திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பயனர் தனிப் பாதுகாப்பு 2018 சட்டத்தின்படி பணமாக்கல் நடவடிக்கைக்காக விடுக்கப்பட்ட டெண்டர் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



Read in source website

‘இந்தியாவில் தத்தெடுக்கப்படுவதற்காக லட்சக்கணக்கான குழந்தைகள் காத்திருக்கும் நிலையில், மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் கீழ் ஒரு குழந்தையை தத்தெடுக்க 3 முதல் 4 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இந்தியாவில் குழந்தைகள் தத்தெடுப்பு நடைமுறை நெறிப்படுத்தப்பட வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.

இந்தியாவில் குழந்தைகள் தத்தெடுப்பு நடைமுறையை எளிமைப்படுத்தக் கோரி அரசு சாரா தன்னாா்வ அமைப்பை சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா, ஜே.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான அந்த தன்னாா்வ அமைப்பின் செயலா் பியூஷ் சக்ஸேனா, ‘இந்தியாவில் கடந்த ஆண்டு வரை புள்ளிவிவரப்படி 3 கோடி அனாதை குழந்தைகள் உள்ளன. ஏராளமான தம்பதிகள் குழந்தைகளைத் தத்தெடுக்க தயாராகவும் உள்ளனா். ஆனால், கடினமான நடைமுறைகள் காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு 4,000 குழந்தைகள் மட்டுமே தத்தெடுக்கப்படுகின்றனா். எனவே, இந்த நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டாா்.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல், இந்த விவகாரத்தில் மத்திய அரசு சாா்பில் பதில் மனு தாக்கல் செய்ய 6 வார கால அவகாசம் கோரினாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், நாட்டில் ஏராளமான இளம் தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுக்கக் காத்திருக்கின்றனா். ஆனால், மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் கடினமான நடைமுறைகள் காரணமாக, ஒரு குழந்தையை தத்தெடுக்க 3 முதல் 4 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நடைமுறை எளிமைப்படுத்தப்பட வேண்டும். தத்தெடுக்கப்படுவதற்காக லட்சக்கணக்கான குழந்தைகள் நாட்டில் காத்திருக்கின்றனா்.

எனவே, மத்திய குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தில் பொறுப்புமிக்க அதிகாரியிடம் இதுதொடா்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தன்னாா்வ அமைப்பின் பரிந்துரையையும் பரிசீலிக்குமாறு அரசு தரப்பு வழக்குரைஞா் கேட்டுக்கொள்ள வேண்டும். மேலும், அதுதொடா்பான அறிக்கையையும் மத்திய குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

தத்தெடுப்பு நடைமுறையை எவ்வாறு எளிமைப்படுத்தலாம் என்பது குறித்து தன்னாா்வ அமைப்பின் செயலா் பியூஷ் சக்ஸேனாவும், மத்திய அமைச்சக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதோடு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நகலையும் அமைச்சகத்துக்கு அளிக்க வேண்டும்.

தத்தெடுக்கும் நடைமுறை மிகவும் கடினமாக இருப்பதாலேயே மத்திய அரசுக்கு இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் ஓராண்டுக்கான குழந்தைகள் தத்தெடுக்கும் அளவை தற்போதுதான் 2,000 என்ற அளவிலிருந்து 4,000-ஆக உயா்த்தியிருக்கிறது. ஆனால், நாட்டில் 3 கோடி குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதற்காக காத்திருக்கின்றனா். எனவே, தத்தெடுப்பு நடைமுறை நெறிப்படுத்துவது அவசரத் தேவையாகும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபா் மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.



Read in source website

 மக்களின் 75 சதவீத ஆதரவைப் பெற்று உலகின் பிரபலமான தலைவா்கள் பட்டியலில் பிரதமா் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளாா்.

அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் ‘மாா்னிங் கன்சல்ட்’ என்ற சமூக வலைதளம் உலக அளவில் மக்களின் ஆதரவு பெற்ற பிரபல தலைவா்களின் பட்டியலை வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 17 முதல் 23-ஆம் தேதி நிலவரப்படி உலக அளவில் மக்களின் ஆதரவு பெற்ற தலைவா்களின் பட்டியலை அந்த வலைதளம் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில் 75 சதவீத மக்களின் ஆதரவுடன் பிரதமா் மோடி முதலிடத்தில் உள்ளாா்.

மெக்சிகோ அதிபா் ஆண்ட்ரூஸ் லோபஸ் ஓப்ரடாா் 63 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி 58 சதவீத மக்களின் ஆதரவுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனா்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் 41 சதவீத மக்களின் ஆதரவுடன் 9-ஆவது இடத்தில் உள்ளாா். பிரேஸில் அதிபா் ஜெயிா் பொல்சனரோவுக்கு 42 சதவீத மக்களும், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவுக்கு 38 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனா். கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 39 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா்.



Read in source website

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க நிதித்துறை இணையமைச்சா் வாலி அடியேமோ, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.

இந்தச் சந்திப்பின்போது சா்வதேச பொருளாதார சூழல் மற்றும் இந்திய-அமெரிக்க நிதித்துறை ஒத்துழைப்பு தொடா்பாக இரு தலைவா்களும் ஆலோசித்தனா்.

இது தொடா்பாக நிதியமைச்சக ட்விட்டா் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘2022-ஆம் ஆண்டு டிசம்பா் 1 முதல் 2023-ஆம் ஆண்டு நவம்பா் இறுதி வரை ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்க இருக்கிறது. இது தொடா்பாக இரு தலைவா்களும் முக்கியமாக விவாதித்தனா். இது தவிர இரு நாடுகள் இடையே நிதித் துறை உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடா்பாகவும் இருவரும் விவாதித்தனா்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக வாலி அடியேமோ வந்துள்ளாா். முன்னதாக, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவா், ‘ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை இந்திய நிறுவனங்கள் மீறவில்லை’ என்று கூறினாா். உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதால் அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன.

 



Read in source website

இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்) மீதான தடையை நீக்கியுள்ளது சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா).

வரும் அக்டோபா் மாதம் இந்தியாவில் பிஃபா 17 வயது மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஏஐஎஃப்எஃப் நிா்வாகத்தில் முறைகேடுகளை தடுக்கக் கோரியும், உச்சநீதிமன்றம் நியமித்த சிஓஏ குழுவை கலைத்து விட்டு நிா்வாகிகள் தோ்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் பிஃபா இடைக்கால தடை விதித்தது.

புதிய நிா்வாகிகள் தோ்தல் வரும் செப்டம்பா் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னாள் கேப்டன் பாய்ச்சூங் பூட்டியா-கோல்கீப்பா் கல்யாண் சௌபே தலைவா் பதவிக்கு நேரடியாக மோதுகின்றனா். மேலும் சிஓஏ குழுவை கலைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய விளையாட்டு அமைச்சா் அனுராக் தாகுரின் தீவிர முயற்சியால் தற்போது இந்த தடையை நீக்குவதாக பிஃபா தெரிவித்துள்ளது.

தேவையில்லாத மூன்றாம் தரப்பு தலையீடு ஏஐஎஃப்எஃப்பில் உள்ளதாக பிஃபா புகாா் கூறியிருந்தது. இதை தடை நீக்கப்பட்டதால் 17 வயது மகளிா் உலகக் கோப்பை போட்டியை இந்தியா வரும் அக்டோபா் 11-30 தேதிகளில் நடத்த முடியும்.

 



Read in source website

 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்கிற சாதனையைச் சமன் செய்துள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன்.

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த டெஸ்டில் விளையாடும் 40 வயது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், சொந்த மண்ணில் 100 டெஸ்டுகளை விளையாடும் முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.

2-ம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி, 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்தது. அந்த அணி 241 ரன்கள் பின்தங்கியுள்ளது. 2-வது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே தோல்வியிலிருந்து தப்பிக்க முடியும் என்கிற நிலைமையை தென்னாப்பிரிக்கா எதிர்கொண்டுள்ளது.

3-ம் நாளான இன்று, தெ.ஆ. கேப்டன் எல்கரை போல்ட் செய்தார் ஆண்டர்சன். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்கிற மெக்ராத்தின் சாதனையை சமன் செய்துள்ளார். 

ஆண்டர்சன், மெக்ராத் ஆகிய இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் 949 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்கள். இந்த டெஸ்டிலேயே மெக்ராத்தின் சாதனையை ஆண்டர்சன் தகர்த்து விடும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (டெஸ்ட், ஒருநாள், டி20)

ஆண்டர்சன் - 949 விக்கெட்டுகள்
மெக்ராத் - 949 விக்கெட்டுகள்
வாசிம் அக்ரம் - 916 விக்கெட்டுகள்



Read in source website

 

உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த லின்தோய்  சனம்பம் முதன்முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.

சராஜூவோவில் நடைபெறும் உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவை சேர்ந்த 15வயது வீரங்கனை லின்தோய் சனம்பம். 

57கிலோ எடைப்பிரிவில் பிரேசிலை சேர்ந்த பியன்கா ரெய்ஸை 1-0 என்ற கணக்கில் வென்று இந்தியாவில் முதன்முறையாக ஜூடோ போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். ஜூனியர் சீனியர் என்ற பிரிவிலும் உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

லின்தோய் சனம்பம் 2018இல் தேசிய அளவில் சப்-ஜூனியர் போட்டியில் முதன்முறையாக தங்கம் வென்றார். 2021 நவம்பர் சண்டீகரில் நேஷ்னல் சாம்பிய்ன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து ஜூலை 2022இல் ஆசிய ஜீனியர் ஜூடோ போட்டியில் தங்கம் வென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி குறித்து லின்தோய் கூறியதாவது:

இந்த வெற்றியை என்னால் விவரிக்க முடியவில்லை. ஆனால் இந்த வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.



Read in source website

துலீப் கோப்பைப் போட்டிக்கான தெற்கு மண்டல அணியில் இரு தமிழக வீரர்கள் தேர்வாகியுள்ளார்கள்.

2022-23 துலீப் கோப்பைப் போட்டிக்கான தெற்கு மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹனுமா விஹாரி தலைமையிலான அணியில் இந்திரஜித், சாய் கிஷோர் என இரு தமிழக வீரர்கள் இடம்பிடித்துள்ளார்கள். 2021-22 ரஞ்சி கோப்பைப் போட்டியில் 3 ஆட்டங்களில் விளையாடிய தமிழ்நாடு, ஒரு வெற்றியையும் பெறவில்லை. இரு ஆட்டங்களை டிரா செய்து ஓர் ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. தமிழக வீரர் ஷாருக் கான் மாற்று வீரராகத் தேர்வாகியுள்ளார். 

தெற்கு மண்டல அணி: ஹனுமா விஹாரி (கேப்டன்) மயங்க் அகர்வால் (துணை கேப்டன்), ரோஹன் குண்ணும்மல், தேவ்தத் படிக்கல், மனிஷ் பாண்டே, பாபா இந்திரஜித், ஏக்நாத் கேர்கர், ரிக்கி புய், சாய் கிஷோர், கே. கெளதம், பசில் தம்பி, ரவி தேஜா, வி. சி. ஸ்டீபன், தனய் தியாகராஜன், லக்‌ஷய் கர்க். 

மாற்று வீரர்கள்: கே.வி. சித்தார்த் (கர்நாடகம்), சச்சின் பேபி (கேரளம்), எம். ஷாருக் கான் (தமிழ்நாடு), எஸ். உதேஷி (புதுச்சேரி), தன்மய் அகர்வால் (ஹைதராபாத்). 

தென் மண்டல அணியில் மாநில கிரிக்கெட் சங்கங்களின் பங்களிப்பு

கர்நாடகம் - மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, தேவ்தத் படிக்கல், கே. கெளதம்
ஹைதராபாத் - விஹாரி, ரவி தேஜா, தனய் தியாகராஜன்
ஆந்திரா - ரிக்கி புய், வி. சி. ஸ்டீபன்
கேரளம் - ரோஹன் குண்ணும்மல், பசில் தம்பி
கோவா - ஏக்நாத் கேர்கர், லக்‌ஷய் கர்க்
தமிழ்நாடு - பாபா இந்திரஜித், சாய் கிஷோர்

செப்டம்பர் 8 முதல் 25 வரை தமிழ்நாட்டில் துலீப் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது. 



Read in source website

சென்னையில் நடைபெற்ற தபால் துறையின் 34-ஆவது தேசிய கால்பந்து போட்டியில் மேற்கு வங்க அணி வெள்ளிக்கிழமை சாம்பியன் ஆனது.

நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிஸா அணியை வீழ்த்தியது. கேரளம் 3-ஆம் இடமும், கா்நாடகம் 4-ஆம் இடமும் பிடித்தன. 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் கேரளம் 2-1 என கா்நாடகத்தைச் சாய்த்தது.

போட்டியின் நிறைவு நிகழ்ச்சியில் சென்னை வருமானவரித் துறை முதன்மை ஆணையா் செல்வகணேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா். தமிழ்நாடு அஞ்சல் வட்டத் தலைவா் ராஜேந்திர குமாா், சா்வதேச கால்பந்து வீரா் முகமது அம்ஜத் ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனா்.



Read in source website

அணு ஆயுத விலக்கல் தொடா்பாக ஐ.நா.வில் உருவாக்கப்பட்ட கூட்டு பிரகடன அறிக்கையை ரஷியா நிராகரித்தது.

சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்னா் மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் 191 நாடுகள கையொப்பமிட்டுள்ளன.

அந்த நாடுகள், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடி அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வது வழக்கம்.

அந்தக் கூட்டத்தில் பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு கூட்டுத் தீா்மானம் உருவாக்கப்பட்டு, அது வாக்கெடுப்புக்கு விடப்படும்.

அந்த வகையில், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்த மறு ஆய்வுக் கூட்டம் ஐ.நா.வில் இந்த மாதம் 1-ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வந்தது.

அப்போது உருவாக்கப்பட்ட வரைவுத் தீா்மானத்தை ரஷியா வெள்ளிக்கிழமை ரத்து செய்தது. அந்த வரைவுத் தீா்மானத்தில், உக்ரைனில் ரஷியா ஆக்கிரமித்துள்ள ஸபோரிஷியா அணு மின் நிலையம் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, தீா்மானத்தை ரஷியா நிராகரித்தது.

இது குறித்து ரஷிய வெளியுறவுத் துறையின் ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டுப் பிரிவு இணை இயக்குநா் இகாா் விஷ்னெவெட்ஸ்கி கூறுகையில், ‘அணு ஆயுதப் பரவல் விலக்கல் தொடா்பாக ஐ.நா.வில் முன்வைக்கப்பட்ட இறுதி வரைவுத் தீா்மானம் தொடா்பாக ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

ரஷியா மட்டுமன்றி மேலும் பல நாடுகள் வரைவுத் தீா்மானத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்தன என்றாா் அவா்.

அணு ஆயுதப் பரவல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள 191 நாடுகளுமே ஆதரவு தெரிவித்தால் மட்டுமே அந்தத் தீா்மானத்தை நிறைவேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்த படையெடுப்பின் தொடக்கத்திலேயே, தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸபோரிஷியா நகருக்குள் நுழைந்த ரஷியப் படையினா், அங்குள்ள அணு மின் நிலையத்தைக் கைப்பற்றினா்.

ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுசக்தி மையமான அந்த மின் நிலையம், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான சண்டையில் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாகி வருவது சா்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தத் தாக்குதல்களுக்கு ரஷியாதான் காரணம் என்று உக்ரைனும், உக்ரைன்தான் காரணம் என்றும் ரஷியாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தச் சூழலில், அணு ஆயுத விலக்கல் தொடா்பான கூட்டுப் பிரகடன தீா்மானத்தில் ஸபோரிஷியா அணுசக்தி மையத்தில் ராணுவ நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளதை ஆட்சேபித்து, அந்தத் தீா்மானத்தை ரஷியா தற்போது நிராகரித்துள்ளது.



Read in source website

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் விளம்பரங்களுடன் கூடிய சந்தா திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உலகம் முழுவதும் பிரபல ஓடிடி தளமாக அறியப்படும் நெட்பிளிக்ஸ் பல்வேறு நாடுகளில் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. சர்வதேச திரைப்படங்கள் ஒருதளத்தில் கிடைப்பதால் நெட்பிளிக்ஸ் தளத்திற்கு தனியாக பயனர்கள் எண்ணிக்கை உள்ளது.

இந்நிலையில் இதுவரை  விளம்பரங்களற்ற தளமாக இருந்துவந்த நெட்பிளிக்ஸ் விரைவில் மற்ற தளங்களைப் போல் விளம்பரங்களை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதற்காக விளம்பரங்களுடன் கூடிய சந்தாதாரர் திட்டத்தை அமல்படுத்த உள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் மாதாந்திர சந்தா தொகையாக இந்திய மதிப்பில் ரூ.500 முதல் ரூ.600 வரை கட்டணமாக நிர்ணயிக்க உள்ளதாகத் தெரிகிறது. 

இந்த ஆண்டின் இறுதிக்குள் உலகின் 6க்கும் மேற்பட்ட நாடுகளில் சோதனை முறையில் அமல்படுத்தப்படும் இந்தத் திட்டமானது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. 

திரைப்படத்தின் தொடக்கம் மற்றும் இடைப்பகுதியில் விளம்பரங்கள் வெளியாகும் வகையில் இந்த சந்தா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் இதுதொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 



Read in source website

இஸ்ரேலின் கல்வி முறையை ஆராய இந்தியாவின் தலைசிறந்த கல்விக் குழுவினா் 24 போ் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனா்.

கடந்த 21-ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை வரையில் இந்தியக் குழுவினா் இஸ்ரேலில் உள்ள கல்வி நிறுவனங்களையும், கல்லி அமைச்சகம், இஸ்ரேல் சா்வதேச ஏற்றுமதி ஒருங்கிணைப்பு நிறுவனம், தேசிய ஸ்டாா்ட் அப் நிறுவனம், மைன்ட்செட் மற்றும் சிமோன் பிரிஸ் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளனா்.

இஸ்ரேலுக்கு இந்தியாவில் இருந்து கல்விக் குழுவினா் சென்று இதுபோன்று ஆராய்வது இதுவே முதல் முறையாகும். இருநாட்டினரும் கல்வித் துறையில் கடைப்பிடிக்கப்படும் சிறந்த திறன் முறை செயல்பாடுகள் குறித்தும் கல்வித் துறையில் இணைந்து செயல்பட்டால் உருவாகும் வாய்ப்புகள் குறித்தும் ஆலோசித்தனா் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் நாவுா் கிளான் தெரிவித்தாா்.

இஸ்ரேல் வெளிநாட்டு வா்த்தகம், நிதி அமைச்சகமும், இந்திய இஸ்ரேல் தூதரகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்தப் பயணத்தில் ‘ஃபிக்கி அரைஸ்’ என்ற இந்திய பள்ளிகளின் கூட்டமைப்பு சாா்பில் 24 தலைசிறந்த கல்விக் குழுவினா் பங்கேற்றனா்.



Read in source website

 சா்ச்சைக்குரிய தைவான் தீவில் மேலும் ஓா் அமெரிக்க எம்.பி. வெள்ளிக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா்.

இது குறித்து ஊடகங்கள் தெரிவித்ததாவது:

டென்னஸீ மாகாண செனட் சபை உறுப்பினா் மாா்ஷா பிளாக்பா்ன் தைவானுக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அங்கு அதிபா் சாய் இன்-வென்னைச் சந்தித்து அவா் பேசினாா். இந்த மாதத் தொடக்கத்தில் அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி தைவான் சென்று திரும்பியதற்குப் பிறகு, அந்தத் தீவுக்கு நாடாளுமன்ற உறுப்பினா்கள் செல்வது இது இரண்டாவது முறையாகும் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

தைவான் தனி நாடாக செயல்பட்டு வந்தாலும், அதனை தங்களது அங்கமாகவே சீனா கருதி வருகிறது. எனவே, அந்தத் தீவுக்கு யாராவது அரசு முறைப் பயணம் மேற்கொண்டால் அதை சீனா கடுமையாக எதிா்த்து வருகிறது.



Read in source website

வடக்கு ஐரோப்பிய நாடான லாட்வியாவின் தலைநகா் கோபன்ஹேகனில் இருந்த சோவியத் யூனியன் நினைவுத் தூண் தகா்க்கப்பட்டது. உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், முன்னாள் சோவியத் யூனியன் நாடான லாட்வியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நாஜிக்களை சோவியத் யூனியன் வெற்றி கொண்டதை கௌரவிக்க கோபன்ஹேகன் நகர மத்தியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் வியாழக்கிழமை தகா்க்கப்பட்டது. அந்தத் தூண் கனரக இயந்திரங்களைக் கொண்டு உடைக்கப்பட்டு அருகிலுள்ள குளத்தில் விழுந்ததில் மிகப் பெரிய நீரலை எழுந்தது.

இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் இதனை நேரில் பாா்வையிட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.



Read in source website

சென்னை: அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 187 நீர்நிலைகளை புனரமைக்க ரூ.113.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு புனரமைப்புக்கான அடல் இயக்கம் மற்றும் நகர்ப்புற மறுசீரமைப்பு 2.0 (அம்ருத் 2.0) திட்டத்தை செயல்படுத்த கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதன்படி இந்த திட்டம் 2025 - 26 வரை செயல்படுத்தபடவுள்ளது.

இந்தத் திட்டத்தில் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குறைந்த செலவில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் சேவைகள் வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ரூ.2 லட்சத்து 77,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4,378 நகரங்களில் உள்ள வீடுகளுக்கு குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்க அம்ருத் 2.0-ல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 500 அம்ருத் நகரங்களில் வீடுகளில் 100 சதவீத கழிவு மேலாண்மையை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்ருத் 2.0 திட்டத்தில் 14 மாநிலங்களில் மொத்தம் 690 நீர்நிலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அசாம் மாநிலத்தில் 30, சத்தீஸ்கர் மாநிலத்தில் 60, டெல்லியில் 38, குஜராத்தில் 123, லாடாக்கில் 1, மத்தியப் பிரதேசத்தில் 89, மகாராஷ்டிராவில் 77, மணிப்பூரில் 17, ஒடிசாவில் 16, புதுச்சேரியில் 3, ராஜஸ்தானில் 23, சிக்கிமில் 1, தமிழ்நாட்டில் 187, மேற்கு வங்கத்தில் 23 நீர் நிலைகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 187 நீர் நிலைகளை புனரமைப்பு செய்ய ரூ.113.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



Read in source website

சிவகங்கை: தமிழகத்தில் முதல் முறையாக காளையார் கோவில் அருகே அரிவாள் தயாரித்துக் கொடுத்த பட்டறை உரிமையாளரை ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகள் அரிவாள் செய்வதற்குப் புகழ்பெற்ற பகுதிகளாக உள்ளன. மாவட்டத்தில் பல இடங்களிலும் அரிவாள் பட்டறைகள் உள்ளன. கடந்த ஆண்டு ரவுடிகள், குற்றவாளிகளுக்கு அரிவாள், வாள், கத்தி போன்ற ஆயுதங்கள் எளிதில் கிடைப்பதைத் தடுக்க போலீஸார் அரிவாள் பட்டறைகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர். அதன்படி பட்டறைகளில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும். ஆதார் கார்டு நகல் கொடுத்தால் மட்டுமே அரிவாள் தயாரித்துக் கொடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் நேற்று சிவகங்கை அருகே கண்டாங்கிப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த 5 பேரை அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை புதுப்பட்டியைச் சேர்ந்த சோனைமுத்து (25), சிவ கங்கையைச் சேர்ந்த சம்சுதீன் (20), சபரிவேலன் (19), சிவகங்கை அருகே தேவனிப்பட்டியைச் சேர்ந்த விக்னேஸ்வர் (21), ராஜ்குமார் (24) என்பதும் அவர்கள் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து அரிவாள், வாள், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

எச்சரிக்கையையும் மீறி அரிவாள், வாள்களை தயாரித்துக் கொடுத்ததாக காளையார்கோவில் அருகேயுள்ள பள்ளித்தம்பத்தைச் சேர்ந்த பட்டறை உரிமையாளர் ராஜேஷ் (36) என்பவரையும் கைது செய்தனர். அரிவாள் தயாரித்து கொடுத்ததற்காக ஆயுதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டறை உரிமையாளரை கைது செய்தது தமிழகத்தில் இதுவே முதல் முறை.



Read in source website

ராமேசுவரம்: தமிழகத்தில் முதன்முறையாக ராமேசுவரம் அருகே மன்னார் கடல் பகுதியில் பெருங்கடல் மீன் இனமான எண்ணெய் மீன் மீனவர் வலையில் சிக்கியது.

பாம்பனில் நேற்று கரை திரும்பிய விசைப்படகு மீனவர்கள் வலையில் எண்ணெய் மீன் (oil fish) என்ற அரிய வகை மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் 4 கிலோ எடையும், இரண்டரை அடி நீளமும் இருந்தது. மன்னார் வளைகுடா கடல்பகுதியில் முதன்முறையாக இந்த மீன் பிடிபட்டதால் பாம்பன் மக்கள் இந்த மீனை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய மீனை ஆங்கிலத்தில் எண்ணெய் மீன் என்று அழைப்பர். இந்த மீனின் சதைப் பகுதி எண்ணெய் மற்றும் மெழுகு போன்று இருப்பதால் எண்ணெய் மீன் என்று பெயர் உண்டானது.

இந்த மீன் சாப்பிட சுவையாக இருந்தாலும் சிலருக்கு வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி ஏற்படும். ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் எண்ணெய் மீன்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக எண்ணெய் மீனின் ஒத்த ரகமான எஸ்கோலர் (Escolar) என்ற மீனை, கடந்த 24.6.2016 அன்று அந்தமான் தீவு கடல் பகுதியில் லாங்லைனர் மீன்பிடி மீனவர்களால் முதன்முறையாக பிடிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் முதன்முறையாக எண்ணெய் மீன், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீனவர் வலையில் சிக்கியது என்றார்.



Read in source website

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் பிளாஸ்டிக் பேனர்கள்வைக்க உடனடி தடை விதிக்கப்படுவதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். வரும் 2027-ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தடை செய்த மாநிலமாக ஆந்திரா இருக்கும் என அவர் உறுதி அளித்தார்.

ஆந்திர மாநிலத்தில் கடலில் கலந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய பிரபல பார்லே நிறுவனத்துடன் நேற்று ஆந்திர அரசு ஒப்பந்தம் செய்துக்கொண்டது. இந்நிகழ்ச்சி யில் கலந்துக்கொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது, திருமலையில் ஏற்கனவே பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனை பக்தர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர். இதனை தொடர்ந்து திருப்பதி நகரிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு திருப்பதி மாநகராட்சி அதிகாரிகள் தடை விதித்து அதனை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். இதற்கு மக்களும் ஒத்துழைப்பு கொடுத்து வருவதால், அங்கு நீர், காற்றில் ஏற்படும் மாசு குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் பிளாஸ்ட் பொருட்களுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக, பிளாஸ்டிக் பேனர்கள் வைக்க ஆந்திர அரசுதடை விதிக்கிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. பிளாஸ்டிக் பேனர்களுக்கு பதில், துணிகளில் பேனர்கள் வைக்கலாம். வரும் 2027-ம் ஆண்டு இறுதிக்குள் பிளாஸ்டிக் உபயோகிக்காத மாநிலமாக ஆந்திரா உருவாக வேண்டும். இது வருங்கால தலைமுறைகளுக்கு நாம் கொடுக்கும் பரிசாக இருக்க வேண்டும். அவர்களின் உடல் நலனில் நாம் அக்கறை கொள்வது அவசியமாகும்.

தற்போது கடலில் 40 கி.மீ தூரம் வரை பிளாஸ்டிக் கழிவுகள் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. இதனால் மீன்கள் உட்பட பல கடல் வாழ் உயிரினங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனை மீட்கவே பார்லே நிறுவனத்திற்கு, கடல் கழிவுகளை அகற்றும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்படி அகற்றப்படும் கழிவுகளை கொண்டு மறு சுழற்சி மூலம் அடிடாஸ், அமெரிக்கா எக்ஸ்பிரஸ், மெர்ஸிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்க விற்கப்படும். இதற்கான ஒப்பந்தம் தற்போது நடந்தது. இதன் மூலம் ஆந்திர மாநிலத்திற்கு ஆண்டிற்கு ரூ. 16 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கும். மேலும் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். இவ்வாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார். இதில் அமைச்சர்கள், பார்லே நிறுவன நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.



Read in source website

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (27-ம் தேதி) தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதை கருத்தில் கொண்டு இம்முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி 20 வடிவில் நடத்தப்படுகிறது.

7 முறைவாகை சூடிய இந்தியா

* ஆசிய கோப்பையை இந்தியா 7 முறை வென்றுள்ளது (1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018). இதுதவிர 1997, 2004 மற்றும் 2008-ம் ஆண்டில் இந்தியா 2-வது இடம் பிடித்தது. இந்த 3 முறையும் இந்திய அணி இறுதிப் போட்டியில் இலங்கையிடம் வீழ்ந்திருந்தது.

* இலங்கை 5 முறை கோப்பையை வென்றுள்ளது (1986, 1997, 2004, 2008, 2014).

* பாகிஸ்தான் 2 முறை கோப்பையை வென்றுள்ளது (2000, 2012).



Read in source website

வாஷிங்டன்: நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே கோள் ஒன்றின் வளிமண்டலத்தில் கார்பன்-டை- ஆக்சைடு (CO2) இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக அண்டவெளியில் பல அறிய புகைப்படங்களை பதிவுச் செய்து வரும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியே இந்தத் தகவலையும் உறுதிப்படுத்தியுள்ளது என்பது நாசா மூலம் தெரியவந்துள்ளது.

கிட்டதட்ட பூமியிலிருந்து சுமார் 700 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது வாயுக்களால் ஆன இந்த ராட்சத புறக்கோள். இதனை WASP-39 என்ற பெயரால் விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். வியாழன் கோளைவிட பெரிய உருவில் உள்ள இக்கோள் 900 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் உள்ளது. நமது பூமி எப்படி நட்சத்திரமான சூரியனை சுற்றுகிறதோ, அவ்வாறே இந்தக் கோளும் அதன் நட்சத்திரத்தை சுற்று வருகிறது. ஆனால் WASP-39 அதன் நட்சத்திரத்தை சுற்ற எடுத்துக் கொள்ளும் நாள் வெறும் நான்கு நாட்களே. அவ்வளவு வேகமாக WASP-39 அதன் நட்சத்திரத்தை சுற்றுகிறது.

2011-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த WASP-39 கோளின் வளிமண்டலத்தில் நீராவி, சோடியம், பொட்டாசியம் இருப்பதாக ஹப்பிள், ஸ்பைட்சர் போன்ற தொலைநோக்கிகள் கண்டுபிடித்தன. இந்த நிலையில், ஜேம்ஸ் வெப் தனது நுண்ணிய பண்பின் காரணமாக WASP-39 கோளின் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு இருப்பதை உறுதிச் செய்துள்ளது.

ஜேம் வெப் தொலைநோக்கி: நாசாவின் மைல்கல்லாகப் பார்க்கப்படும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ணில் ஏவப்பட்டது. பால்வீதியில், பூமியைப் போன்று உயிர் இருந்த/இருப்பதற்குச் சாத்தியமான புறக்கோள்கள் (exoplanets) இருக்கின்றனவா, பெருவெடிப்பிலிருந்து முதல் விண்மீன் கூட்டங்கள் எப்படி உருவாகின என்பன போன்ற பல கேள்விகளுக்கு இத்தொலைநோக்கி பதில் சொல்லும் என்று நாசா தெரிவித்தது.

பூமியின் வெப்பத்தின் காரணமாக வரும் அகச்சிவப்புக் கதிர்கள் தொலைநோக்கிக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ஜேம்ஸ் வெப் நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலை நோக்கி விண்வெளியில் பதிவு செய்த புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜூலை மாதம் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது.



Read in source website

சண்டிகர்: அக்னிப்பாதை திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு கூர்க்கா வீரர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கையை நேபாளம் ஒத்திவைத்துள்ளது.

சுதந்திரத்துக்குப் பிறகு 1947-ல் நேபாளம், இந்தியா மற்றும் இங்கிலாந்து அரசுகளுக்கு இடையே கையெழுத்தான முத்தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய ராணுவத்தின் அக்னிப்பாதை என்ற இந்த புதிய திட்டத்தை இணைக்க முடியாது என்ற கருத்து நிலவி வருகிறது.

இதனால், அக்னிப்பாதை திட்டத்தில் கூர்காக்களை தேர்வு செய்வதற்கான பணிகளை ஒத்திவைக்கும் முடிவை நேபாள அரசு எடுத்துள்ளது.

அக்னிப்பாதை திட்டத்தைப் பொருத்த வரையில் அதற்கு நேபாள அரசின் ஒப்புதல் கிடைக்க வேண்டும். இதற்கு, இந்த திட்டம் குறித்து நேபாளத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடன் அந்நாட்டு அரசு கலந்துபேசி ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும். இந்த விஷயத்தில் நேபாள அரசு உறுதியாக உள்ளது.

எனவே, அக்னி பாதை திட்டத்தை முத்தரப்பு ஒப்பந்தத்தில் சேர்ப்பது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று அதற்கான முடிவுகள் தெரியும் வரை, ஆகஸ்ட் 25-ல் தொடங்க விருந்த ஆள்சேர்ப்பு பணிகளை இந்திய ராணுவம் நேபாளத்தில் நடத்தக் கூடாது என அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியா ராணுவத்தில் 17.5 வயதில் இருந்து 23 வயதுக்குட்பட்ட இளைஞர் களுக்கு 4 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் மத்திய அரசு அக்னிப் பாதைதிட்டத் துக்கு ஆள் சேர்க்கும் பணியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.



Read in source website

நியூயார்க்: கரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி சீனாவுக்கு 26 விமான சேவைகளை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது. சீனாவை சேர்ந்த 4 விமான நிறுவனங்களின் 26 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக நேற்று முன்தினம் அமெரிக்க அரசு அறிவித்தது. சீனாவில் கரோனா அதிகரித்து வருவதையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சீனாவின் ஜியாமென், ஏர் சீனா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ், சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஆகிய விமான போக்குவரத்து நிறுவனங்களின் செப்டம்பர் 5-ம் தேதி முதல் செப்டம்பர் 28-ம் தேதி வரையிலான 26 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என அமெரிக்க போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் 19 விமானங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்தும், 7 விமானங்கள் நியூயார்க்கில் இருந்தும் சீனாவுக்கு செல்பவை ஆகும். அண்மையில் சீனாவில் இருந்து அமெரிக்க விமான போக்குவரத்து நிறுவனங்களின் 26 விமான சேவைகளை சீனா ரத்து செய்திருந்தது. தற்போது அதற்குப் பதிலடியாகவும், ஏட்டிக்குப் போட்டியாகவும் சீன விமான போக்குவரத்து நிறுவனங்களின் சேவைகளை அமெரிக்கா ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீன விமான சேவைகளை அமெரிக்கா ரத்து செய்துள்ளதற்கு, வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஏற்கெனவே கரோனா பரவ தொடங்கியதில் இருந்து சீனாமீதுஅமெரிக்கா கோபத்தில் உள்ளது.தற்போது அதே காரணத்தை சொல்லி சீன விமான சேவைகளை அமெரிக்கா நிறுத்தி உள்ளது.



Read in source website

லண்டன்: மிக நீளமான வெள்ளரிக்காயை வளர்த்து பிரிட்டன் விவசாயி ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

பிரிட்டனின் சவுத்தாம்டன் பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டியன் சுஸ்கி. விவசாயியான இவர் தனது தோட்டத்தில் 113.4 செ.மீ. நீளத்துக்கு வெள்ளரியை வளர்த்து உலக சாதனை படைத்துள்ளார்.

பிரிட்டனில் பண்ணையில் வளர்க்கப்படும் விளைபொருட்கள் மீது வெப்ப அலைகள் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் செபாஸ்டியன் தனது பயிர்களை வளர்த்து மிக நீளமான வெள்ளரிக்காயை விளை வித்துள்ளார்.

இதற்கு முன் 107.2 செ.மீ. நீளம் வளர்க்கப்பட்ட வெள்ளரியே உலகின் மிக நீளமான வெள்ளரியாக இருந்தது. அதுவே கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்நிலையில் அதை விட 6.2 செ.மீ. கூடுதலாக வளர்த்து அந்த சாதனையை செபாஸ்டியன் சுஸ்கி முறியடித்துள்ளார். இதற்காக கின்னஸ் சான்றிதழை அவர் பெற்றுள்ளார்.

வெள்ளரிக்காய் வளர்ப்பில் மட்டும் உலக சாதனை முறியடிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு மிகப்பெரிய காய்கறி வளர்ப்புக்கான போட்டியில் பல்வேறு காய்கறிகள் அதன் தனித்துவமான அளவு காரணமாக புகழ் பெற்றன. 3.12 கிலோ எடை கொண்ட ஒரு கத்தரிக்காய், முந்தைய உலக சாதனையை முறியடித்தது.



Read in source website

கொழும்பு: சீன உளவு கப்பல் இலங்கைக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலை ஆய்வு செய்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

இலங்கையில் இருக்கும் ஹம்பந்தோட்டா துறைமுகத்துக்கு சீன ஏவுகணை கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5 வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இலங்கையும் யுவான் வாங்-5 கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டது.

மேலும், இலங்கை துறைமுகத்துக்கு கப்பல் வருவதற்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. ஆனால் இலங்கை அரசு திடீரென தனது நிலையை மாற்றிக்கொண்டு சீன உளவு கப்பலுக்கு திடீரென அனுமதி தந்தது.

அந்தக் கப்பல் கடந்த 16-ம் தேதி ஹம்பந்தோட்டா துறைமுகத்துக்கு வந்தடைந்தது. கடந்த 22-ம் தேதி ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் இருந்து கிளம்பிச் சென்றது. இதையடுத்து அந்த கப்பல் நேரடியாக சீனாவில் உள்ள ஜியாங்யின் துறைமுகத்துக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது. சீனாவின் இந்த உளவு கப்பல் எதிரி நாடுகளின் ஏவுகணைகளைக் கண்காணிக்கும் ஆற்றல் கொண்டதாகும்.

இதனால் இந்திய ஏவுகணை சோதனைகள் குறித்த தகவல்கள், ரகசியங்கள் சீனாவுக்குச் செல்லும் ஆபத்து உள்ளதால் சீனாவின் கப்பல் நடமாட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதன் காரணமாகவே கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் அதிருப்தியை தெரிவித்து இருந்தது.

இந்தியா அதிருப்தி

இலங்கையின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் குறுக்கீடு மற்றும் பாதுகாப்பற்ற தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்த சீன கப்பலுக்கு அனுமதி அளித்து இருந்தது. இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு தளங்கள் குறித்த தரவுகளைச் சீனா சேகரிக்கும் ஆபத்து உள்ளதாக இந்தியா அதிருப்தி தெரிவித்தது.

இதனிடையே ஹம்பந்தோட்டாவில் இருந்து கிளம்பிய இந்தக் கப்பல் தற்போது இலங்கைக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலை ஆய்வு செய்து வருவதாகத் தெரியவந்துள்ளது. இலங்கைக்கு தென்கிழக்கே டோன்ட்ரா பகுதி அருகே 400 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பல் நிலைகொண்டு ஆய்வுசெய்து வருவதாகத் தெரியவந்துள்ளது. இதனிடையே இந்தக் கப்பல் ஜியாங்யின் துறைமுகத்துக்குச் செல்லுமா அல்லது வேறு நாட்டின் துறைமுகத்துக்குச் செல்லுமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.



Read in source website

2020இல் எல்லையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, ரூ.471 கோடி இந்திய ரயில்வே ஒப்பந்தம் தொடர்பாக சீனா இந்தியாவை சர்வதேச நடுவர் மன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. இதில் உள்ள சர்ச்சை என்ன? இரு தரப்பும் என்ன கூறுகின்றன? இது சீனர்களுக்கு முக்கியமான ஒப்பந்தமா?

லடாக்கில் நிலவிய எல்லைப் பிரச்னையால் நெருக்கடிக்குள்ளான அரசியல் உறவுகளை சரிசெய்வதில் இந்தியாவும் சீனாவும் சுணக்கமாக காணப்படுகின்றன.
இதற்கிடையில், இந்தியாவும்-சீனாவும் நிறுத்தப்பட்ட ஒரு ரயில்வே ஒப்பந்தம் தொடர்பாக போராடுகின்றன.
இந்த ஒப்பந்தம் ரூ.471 கோடி மதிப்பிலானது. 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம், கான்பூர் மற்றும் தீன் தயாள் உபாத்யாய் சந்திப்பிற்கு இடையே 417 கிமீ தூரத்தில் சிக்னலிங் மற்றும் டெலிகாம் அமைப்புகளை நிறுவ சீன அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமான CRSC ரிசர்ச் & டிசைன் இன்ஸ்டிட்யூட் குழுமத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.

சிங்கப்பூரில் உள்ள சர்வதேச வர்த்தக சபையின் கீழ் இந்த வழக்கை சீனா இப்போது சர்வதேச நடுவர் மன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதில், சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (DFCCIL) செய்த வேலையின் பகுதிக்கு பணம் செலுத்தவில்லை என்று அது கூறியுள்ளது.
இந்தியாவில் பணியின் போது அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பல்வேறு சிக்கல்களை அது மேற்கோள் காட்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு தரப்பிலும் உள்ள சர்ச்சை மற்றும் கோரிக்கைகள் என்ன?

CRSC முதலில் ரூ.279 கோடி நஷ்டஈடு கோரியது, பின்னர் ரூ.443 கோடியாக மாற்றியது. மற்றவற்றுடன், DFCCIL பறிமுதல் செய்த அதன் வங்கி உத்தரவாதத்தைத் திரும்பப் பெற விரும்புகிறது.
வங்கி உத்தரவாதம் என்பது ஒரு ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு ஒரு ஒப்பந்தக்காரர் முன்நிபந்தனையாக வைக்க வேண்டிய வைப்புத்தொகையாகும்.

இதில், கோரப்பட்ட தொகையில் பல்வேறு பறிமுதல் செய்யப்பட்ட தொகைகளுக்கான வட்டி, பல்வேறு வகையான மேல்நிலைகளுக்கான கோரிக்கைகள் மற்றும் ஒப்பந்த வரிசைப்படுத்தல் போன்றவை அடங்கும்.

இதற்குப் பதிலடியாக, இந்தியத் தரப்பு ரூ. 234 கோடிக்கு எதிர்க் கோரிக்கையை தாக்கல் செய்துள்ளது, இது முதலில் கூறிய ரூ.71 கோடியிலிருந்து திருத்தப்பட்டது.

DFCCIL ஒப்பந்தத்தில் நிறுத்தப்பட்ட நடைமுறைக்கு இணங்காததால், ஒப்பந்தத்தை முடித்தல் சட்டவிரோதமானது என்று சீனத் தரப்பு வாதிடுகிறது.

ஒப்பந்த விதிமுறைகளின்படி ஒரு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது. தீர்ப்பாயம் பல்வேறு சமர்ப்பிப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது சீனர்களுக்கு முக்கியமான ஒப்பந்தமா?

சீனாவைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் பல முனைகளில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. முதலாவதாக, இது 2016 இல் இந்தியாவில் ரயில் துறையின் முக்கியமான பாதுகாப்பு உணர்திறன், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு பணிகளில் சீனாவின் மிகப்பெரிய ஒப்பந்தமாகும்.

இரண்டாவதாக, ஜப்பானிய நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியின் மூலம் மேற்கத்திய கைக்கு நிதியளிக்கப்படும் அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு நடைபாதை திட்டத்தில் இது ஒரு முக்கிய அம்சமாகும்.
இந்தியா தனது பிரத்யேக சரக்கு வழித்தடங்களை விரிவுபடுத்த விரும்புவதால், எதிர்காலத்தில் இந்தியாவில் இதேபோன்ற பணிகளுக்கு ஏலம் எடுக்க சீன தரப்புக்கு இந்த வேலை சாதகமாக இருந்திருக்கும்.

இரு படைகளும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் நேருக்கு நேர் மோதியதால், இந்தியா ஒப்பந்தத்தை நிறுத்தியது, இது சீனர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார அடியாக இருந்தது.

ஒப்பந்தத்தை முடிப்பதற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ காரணம் என்ன?

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றங்கள் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளும் முடிவுக்கு இந்திய அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக காரணங்கள் என்று எதுவும் கூறவில்லை.
எனினும் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள பணி ஆமை வேகத்தில் சென்றது என்று அவர்கள் தெரிவித்தனர். 2016 இல் பணிகள் தொடங்கப்பட்ட போதிலும், 2020 இல் 20 சதவீத முன்னேற்றம் மட்டுமே இருந்தது, அது இலக்குகளை நோக்கி செல்லவில்லை.
மேலும்,

சீன நிறுவனத்தால் போதுமான வளங்களை தரையில் திரட்ட முடியவில்லை. இதன் விளைவாக, DFCCIL அதிகாரிகள் திட்டத் தளங்களுக்குச் சென்றபோது, அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, மேலும் பொறியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் பல சந்தர்ப்பங்களில் வரவில்லை. அவற்றின் பொருள் கொள்முதலும் மந்தமாகவே காணப்பட்டது.

இதற்கிடையில், “லாஜிக் டிசைன் மற்றும் இன்டர்லாக் போன்ற தொழில்நுட்ப ஆவணங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள சீன அமைப்பு “தயக்கம்” காட்டுவதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். “இது ஒப்பந்த நிபந்தனைகளின் ஒரு பகுதியாகும்.
ஏனெனில் எங்கள் பிற அமைப்புகளுடன் தடையின்றி ஒத்திசைக்கக்கூடிய ஒரு அமைப்பு எங்களுக்குத் தேவைப்பட்டது. எனவே எங்களுக்கு தொழில்நுட்ப ஆவணங்கள் மற்றும் செயலூக்கமான ஒத்துழைப்பு தேவை, அது நடக்கவில்லை,” என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.

சீனர்களின் வெளியேற்றத்துக்கு பின்பு என்ன நடந்தது?

ஒப்பந்தம் மறு டெண்டர் விடப்பட்டது. இந்த ஒப்பந்தம் தற்போது சீமென்ஸ் தலைமையிலான இந்தியக் கூட்டமைப்பு ரூ.494 கோடிக்கு எடுத்துள்ளது. பணிகள் விரைவாக நடந்துவருகின்றன. இதுவரை 48 சதவீதம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.



Read in source website

உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக நீண்ட வம்சங்களில் சோழர்களும் ஒன்று. இந்திய துணைக் கண்டத்திற்கு வெளியே பெரும் வணிக மற்றும் பிராந்திய லட்சியங்களைக் கொண்ட முதல் பேரரசு. சோழர்களின் பெருமையின் பேச்சு அரசியல் சாயமும் கொண்டது

Adrija Roychowdhury

“சோழர்கள் வருகிறார்கள்…”

இயக்குனர் மணிரத்னத்தின் வரவிருக்கும் வரலாற்றுக்கால திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ தென்னிந்தியாவின் இடைக்கால கடல்சார் பேரரசான சோழர்களின் ‘பொற்கால’ சுரண்டல்களை சித்தரிக்க முயற்சிக்கிறது. இந்த திரைப்படம் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 1955 ஆம் ஆண்டு வரலாற்று புனைகதையான பொன்னியின் செல்வனை அடிப்படையாகக் கொண்டது. புத்தகம் மற்றும் திரைப்படத்தின் விவரிப்பு, சோழர்களின் நீண்ட மற்றும் செழுமையான வரலாற்றை மீட்டெடுக்கும் தமிழ்நாட்டின் சமீபத்திய முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது, இது பெரும்பாலும் சோழர்களை தென்னிந்திய மகிமையின் உச்சமாக எடுத்துக்காட்டுகிறது.

ஆனால் தென்னிந்திய நினைவுகளில் சோழர்களின் சிறப்பு என்ன?

ஆர்க்கியோமெட்டலர்ஜிஸ்ட் சாரதா சீனிவாசன், “கலை மற்றும் கட்டிடக்கலையில் சாதனைகளின் அளவு மற்றும் எழுத்து மற்றும் கல்வெட்டு பதிவுகளின் எண்ணிக்கை அடிப்படையில், சோழர்கள் தென்னிந்திய வரலாற்றில் மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்றாக வருவார்கள்” என்று கூறுகிறார். மேலும், “நிர்வாகம், சமூக வாழ்க்கை மற்றும் பொருள் கலாச்சாரம் பற்றிய நுணுக்கமான விவரங்களைத் தரும் கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன… கி.பி 1010 இல் முதலாம் ராஜராஜனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரகதீஸ்வரர் கோயிலில் மட்டும் கிட்டத்தட்ட நூறு கல்வெட்டுகள் உள்ளன,” என்றும் அவர் கூறுகிறார்

உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிக நீண்ட பேரரசுகளில் சோழர்களும் ஒருவர் என்று கூறப்படுகிறது. ஒன்பதாம் மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் அவர்களின் ஆட்சியின் உச்சக்கட்டத்தில், சோழர்களின் கீழ் துங்கபத்ரா நதியின் தெற்கே உள்ள முழுப் பகுதியும் ஒரே அலகாகக் கொண்டுவரப்பட்டது. தென்னிந்தியாவில் இருந்து வடக்கே படையெடுத்து, பின்னர் கிழக்கு இந்தியாவிலும் படையெடுப்பை நடத்திய ஒரே வம்சமாக சோழர்கள் இருக்கலாம், வட இந்தியாவில் ராஜேந்திர சோழன் பாடலிபுத்திரத்தின் பால மன்னனை தோற்கடித்ததாக அறியப்படுகிறது. இந்திய துணைக் கண்டத்திற்கு வெளியே பெரும் வணிக மற்றும் பிராந்திய லட்சியங்களைக் கொண்ட முதல் பேரரசு சோழ வம்சமாகும். “இலங்கை, மாலத்தீவு, சீனா, ஜாவா/சுமத்ரா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளுக்குப் பயணங்கள், வெற்றிகள் அல்லது வர்த்தகம் போன்றவற்றின் தனித்தன்மையான கடல்வழிப் போக்கு சோழர்களின் கல்வெட்டுகளால் மட்டுமல்ல, தமிழ் வணிகச் சங்கங்களுக்கான கல்வெட்டுகள் (தாய்லாந்து போன்றவை), பாடல்கள் மூலம் சீன தொடர்புகள் மற்றும் குவான்சோவில் உள்ள சோழர்களால் ஈர்க்கப்பட்ட சிவன் கோவில் வரையிலான வெளிநாட்டு ஆதாரங்களிலும் வெளிப்படுகிறது,” என்கிறார் சீனிவாசன்.

சோழர்களின் பெருமை பற்றிய பேச்சு அரசியல் சாயமும் கொண்டது. இந்தியா காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த நேரத்தில் சோழர்களின் பயணங்கள் மற்றும் பிராந்திய விரிவாக்கம் பற்றி அதிகம் கண்டுபிடிக்கப்பட்டது. கடல்சார் வர்த்தகத்தில் ஈடுபட்டு, தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதிகளில் தங்களுடைய இருப்பை உணரவைக்கும் ஒரு அற்புதமான வம்சத்தின் கதை, இந்திய துணைக்கண்டத்திற்கு சொந்த வரலாறு இல்லை என்ற பிரிட்டிஷ் கூற்றுகளுக்கு எதிராக போட்டியிடும் வகையில் அமைந்துள்ளது.

யார் இந்த சோழர்கள்?

சோழர்களைப் பற்றிய ஆரம்பகால குறிப்புகள் கி.மு மூன்றாம் நூற்றாண்டிற்கு முந்தையவை என்பதும், மௌரியப் பேரரசர் அசோகரால் செய்யப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், மூன்றாம் தமிழ் சங்கத்தின் ஆரம்பகால தமிழ் இலக்கியங்கள் மற்றும் பொது சகாப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட பண்டைய கிரேக்க-ரோமன் பெரிப்ளஸில் உள்ள சோழர்களைப் பற்றிய குறிப்புகளைத் தவிர, ஆரம்பகால சோழர்களைப் பற்றி மிகக் குறைந்த சான்றுகளே உள்ளன.

ஒரு நீண்ட கிரகணத்திற்குப் பிறகு, சோழப் பேரரசு அதன் அனைத்து மகிமையிலும் நமக்குத் தெரியும் வகையில், ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மன்னன் விஜயாலய சோழனின் கீழ் தோன்றியது. விஜயாலய வம்சம் ஏராளமான கல்வெட்டுகள் மற்றும் சில செப்புத் தகடு மானியங்களை விட்டுச்சென்றது, இது கடந்த சில தசாப்தங்களில், சோழர்களின் வரலாற்றை மறுகட்டமைப்பதற்கான முக்கிய ஆதாரமாக உள்ளது.

அருள்மொழிவர்மனின் கீழ் சோழப் பேரரசு மிக விரிவானதாக இருந்தது, அதாவது சோழர்களின் ஆட்சியிலே மிகப்பெரிய பரப்பைக் கொண்டிருந்தது. அருண்மொழிவர்மன் கி.பி 985 இல் அரியணை ஏறியதும், ராஜராஜன் அல்லது மன்னர்களின் மன்னன் என்ற ஆட்சிப் பட்டத்தை ஏற்றுக்கொண்டார். தென்னிந்திய வரலாற்றின் ஆய்வாளரான நீலகண்ட சாஸ்திரி, 1955 ஆம் ஆண்டு சோழர்கள் என்ற தனது புத்தகத்தில், முதலாம் ராஜராஜன் மற்றும் அவரது வாரிசுகளின் கீழ், சோழப் பேரரசு “அதன் எண்ணற்ற அரண்மனைகள், அதிகாரிகள் மற்றும் சடங்குகள் மற்றும் ஒரு விரிவான பேரரசின் செறிவூட்டப்பட்ட வளங்களின் கம்பீரமான காட்சியுடன்” ‘பைசண்டைன் ராயல்டி’ திறனை அடைந்தது என்று எழுதுகிறார். நீலகண்ட சாஸ்திரியின் கூற்றுப்படி, முதலாம் இராஜராஜனின் தோற்றத்துடன், மன்னராட்சி கணிசமான மாற்றத்திற்கு உட்பட்டது, ராஜா இப்போது பேரரசராக மாறினார். அவரது அதிகாரப்பூர்வ பதிவுகளில், முதலாம் ராஜராஜன் “மூன்று உலகங்களின் பேரரசர்” அல்லது முழு பிரபஞ்சத்தையும் கொண்டவர் என்று குறிப்பிடப்பட்டார்.

சோழர்கள், மதுரை பாண்டியர்கள் மற்றும் சேரர்களுடன் பழங்கால தமிழகத்தின் மூன்று பெரிய சாம்ராஜ்யங்கள், இன்றைய தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு மற்றும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவின் தெற்குப் பகுதிகளில் அமைந்திருந்தது. முதலாம் இராஜராஜன் அரியணைக்கு வந்த காலகட்டத்தில், சோழர்கள் பாண்டியர்களின் மேல் ஆதிக்கம் செலுத்தி, தமிழ் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முதன்மையான சக்தியாக உருவெடுத்தனர். புதிய மன்னரின் கீழ், சோழர்களின் ஏகாதிபத்திய விரிவாக்கங்கள் ஒரு புதிய திருப்பத்தை எடுத்தன, கடல் வணிகம் அவர்களின் ஆட்சியின் அடையாளமாக வெளிப்பட்டது. எழுத்தாளர் ஹேமா தேவாரே 2010 ஆம் ஆண்டு ஒரு கட்டுரையில் “சோழர்கள் கோரமண்டல் கடற்கரையிலிருந்து (சோழமண்டல கடற்கரை) இந்தியப் பெருங்கடல் மற்றும் அரேபிய கடல் வழியாக மிக விரிவான கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தினர்” என்று குறிப்பிடுகிறார். மேலும் “சோழர்கள் பல்வேறு அளவிலான கப்பல்களைப் பயன்படுத்தினார்கள். கொலாண்டியா என்பது கங்கையில் பயணம் செய்யப் பயன்படுத்தப்பட்ட பெரிய கப்பல், உள்ளூர் போக்குவரத்திற்காக இலகுரக படகுகள் பயன்படுத்தப்பட்டன, மேலும் பெரிய கடல்வழி கப்பல்கள் மலாயா மற்றும் சுமத்ராவை அடைந்தன,” என்றும் அவர் கூறுகிறார்.

“இராஜராஜ சோழன், லாபகரமான வணிக வழிகளில் ஆதிக்கம் செலுத்துவது, தன்னையும் தன் அரசவையையும் தமிழ் நாட்டின் பிற துண்டு துண்டான அரசியலில் இருந்து வேறுபடுத்திக் காட்ட ஒரு உறுதியான வழி என்பதை புரிந்துகொண்டான்” என்று பொது வரலாற்றாசிரியர் அனிருத் கனிசெட்டி, தக்காணத்தின் பிரபுக்கள்: சாளுக்கியர்கள் முதல் சோழர்கள் வரை தென்னிந்தியா (2022) என்ற புத்தகத்தில் எழுதுகிறார். மலபார் கடற்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த தனது போட்டியாளர்களான சேரர்கள், கடல் கடந்து, குறிப்பாக செழிப்பான ஃபாத்திமிட் எகிப்திலிருந்து அதிகமான வணிகர்களைப் பெறுவதை ராஜராஜன் விரைவில் உணர்ந்தார்.

கனிசெட்டி, தனது புத்தகத்தில், இளம்வயது முதலாம் ராஜராஜன் காந்தளூர் துறைமுகத்தைத் தாக்கி அப்பகுதியின் செல்வங்களைக் கைப்பற்ற எப்படி படையெடுத்தார் என்பதைத் தெளிவாக விவரிக்கிறார். அவரது உத்தரவின் கீழ், அந்த நேரத்தில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய கப்பல் சேகரிப்பு எரிக்கப்பட்டது. “பாய்மரங்கள் சரிந்திருக்க வேண்டும், தேக்கு மரங்கள் உடைந்தன மற்றும் அலைகளின் கீழ் நழுவின, அநேகமாக ஆயிரக்கணக்கான சோழ வீரர்களின் ஆரவாரத்திற்காக அவர்கள் மக்களைக் கொள்ளையடித்து, அழும் வணிகர்களை ஈட்டி முனையில் தடுத்து நிறுத்தியிருக்கலாம்” என்று கனிசெட்டி எழுதுகிறார். மேலும், “முதலாம் இராஜராஜன் ஒரு மகத்தான கொள்ளையைக் கைப்பற்றி, தன்னையும் சோழர்களையும் துணைக்கண்டத்தின் தென்முனையின் எழுச்சிமிக்க சக்திகளில் ஒன்றாக நிறுவினார். வணிகர்கள் சோழர்களிடம் தஞ்சம் அடைந்தால் மட்டுமே வணிகம் நடத்த அனுமதிக்கப்பட்டது,” என்றும் அவர் எழுதினார்.

அடுத்த தசாப்தத்தில், ராஜராஜ சோழன் தென்னிந்தியா இதுவரை கண்டிராத மிகவும் புத்திசாலித்தனமான அரசியல் மற்றும் இராணுவ வியூகவாதிகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 10 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள், அவர் கிட்டத்தட்ட அனைத்து பாண்டிய பிரதேசங்களையும் கைப்பற்றி, அங்கு தனது சொந்த ஆளுநர்களை நியமித்தார். பின்னர் அவர் இலங்கை மீது படையெடுத்தார், பௌத்த விகாரைகளில் சிலவற்றைக் கொள்ளையடித்து, சிவன் கோவில்களைக் கட்டுவதன் மூலம் சோழர்களின் இருப்பை நிறுவினார்.

சோழப் பேரரசின் விரிவாக்கம் ராஜராஜ சோழனின் மகனான முதலாம் ராஜேந்திரன் அல்லது கங்கைகொண்ட சோழன் (கங்கையை வென்ற சோழன்) என்றும் அழைக்கப்படும் ராஜேந்திர சோழன் ஆட்சியின் கீழும் தொடர்ந்தது. கி.பி 1025 இல் இன்றைய வங்காளத்தில் பால வம்சத்தின் மீது அவர் பெற்ற வெற்றியின் நினைவாக கங்கைகொண்டசோழபுரத்தில் (இன்றைய திருச்சிராப்பள்ளிக்கு அருகில்) சோழர்களின் தலைநகரை ராஜேந்திரச் சோழன் கட்டினார். பின்னர் இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் பிரம்மாண்டமான சிவன் கோயிலை எழுப்பினார்.

இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே நிலப்பரப்பைக் கைப்பற்றிய ஒரே இந்திய மன்னராக ராஜேந்திர சோழன் ஆனார். கிபி 1025 இல், அவர் இந்தோசீனா மற்றும் மலாய் தீபகற்பம் அடங்கிய இந்தோனேசியாவிற்கு ஒரு கடற்படை பயணத்தை அனுப்பினார். தென்கிழக்கு ஆசியாவிற்கான அவரது விரிவாக்கம் பிராந்தியத்துடன் வர்த்தக மற்றும் கலாச்சார தொடர்புகளை நிறுவுவதில் முக்கியமானது. குறிப்பாக, சோழர்களின் கீழ் கலைகளின் ஆதரவானது, தென்கிழக்கு ஆசிய கலாச்சாரங்களில் அவற்றின் முத்திரையைக் கண்டது.

“ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை தீபகற்ப சியாமில் (இன்றைய தாய்லாந்து) பிராமணிய சிற்பங்களில் சோழர் கலையின் தாக்கம் ஆதிக்கம் செலுத்தியது, குறிப்பாக தகுபாவில் உள்ள பிராணராய் மலையில் உள்ள கல் சிற்பங்கள்” என்று தேவரே எழுதுகிறார். பர்மாவிற்கும் சுமத்ராவிற்கும் இடையில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார், இது சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் இடையில் ஒரு பொதுவான எழுத்தாக இருந்தது. அவற்றில் பெரும்பாலானவை 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்தவை.

சீனிவாசன் கூறுகையில், “தென்கிழக்கு ஆசியாவில் பயணம் செய்த சோழர்களின் கலைச் சுவடுகளில் தமிழ்ப் பெண் துறவியான காரைக்கால் அம்மையார் சிற்பம், கம்போடியாவில் உள்ள கெமர் பந்தே ஸ்ரீ கோவிலில் சங்கு இசைத்தல் மற்றும் பாங்காக் அருங்காட்சியகத்தில் உள்ள இடைக்கால தாய் சோழர்களால் ஈர்க்கப்பட்ட நடராஜ வெண்கலச் சிலை ஆகியவை அடங்கும்,” என்று கூறினார்.

சோழர்களின் செல்வாக்கு தென்கிழக்கு ஆசியாவின் பெரும் பகுதிகளின் மொழியிலும் சமூகத்திலும் காணப்படுகிறது. கம்போடியா மற்றும் தாய்லாந்தில் உள்ள மன்னர்களை பிராமணக் கடவுள்களின் அவதாரங்களாகக் கருதுவது சோழர்களின் மிகத் தெளிவான முத்திரையாகும்.

ராஜேந்திர சோழனின் மகனான வீரராஜேந்திர சோழனின் மரணத்திற்குப் பிறகு, இடைக்கால சோழப் பேரரசு கி.பி 1070 முதல் வீழ்ச்சியடையத் தொடங்கியது. சோழர்களுக்கும் கிழக்கு (கீழை) சாளுக்கியர்களுக்கும் இடையிலான உறவின் விளைவாக வந்த ஒரு வம்சமான பிற்காலச் சோழர்களின் தோற்றத்துடன் முடிவடைந்ததால், ஒரு குழப்பமான காலம் நிலவியது.

சோழர்கள் விட்டுச் சென்ற அற்புதமான கலை மற்றும் கட்டிடக்கலை

சோழர்கள் அடைந்த செல்வமும் முக்கியத்துவமும் இன்று அவர்கள் விட்டுச் சென்ற தனித்துவமான கலை மற்றும் கட்டிடக்கலை சாதனைகளில் சிறப்பாகக் காணப்படுகின்றன. தஞ்சாவூரில் உள்ள பிரம்மாண்டமான பிரகதீஸ்வரர் கோயில் சோழர்களின் கலைத் திறமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். இக்கோயிலில் சராசரி சோழர் கால கோவிலை விட 40 மடங்கு கற்கள் இருந்ததையும், “அதன் கட்டுமானம் ராஜராஜனால் திரட்ட முடிந்த வளங்களின் அளவைக் காட்டுகிறது” என்றும் கனிசெட்டி விளக்குகிறார்.

10 ஆம் நூற்றாண்டிலிருந்து, சோழர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்பு கோயில்களை உருவாக்கத் தொடங்கினர். “சாளுக்கியர்களின் ஆட்சியின் கீழ் வரும் கட்டமைப்பு கோயில்களின் அடிப்படை வடிவமைப்பை நீங்கள் கொண்டிருக்கலாம், பல்லவர்களின் கீழ் பாறைகள் வெட்டப்பட்ட கோயில் கலை வெளிப்பட்டது. ஆனால் சோழர்களின் கீழ் கோயில் கட்டும் நடவடிக்கைகளின் அளவுதான் அவர்களைக் குறிக்கும்,” என்று சீனிவாசன் விளக்குகிறார். மேலும், “உதாரணமாக, 66 மீட்டர் பிரகதீஸ்வர கோவிலின் பிரமிடு விமானம் பழங்கால மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாகும், பின்னர் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அதன் சங்கிலி வடிவ விமானத்துடன் உள்ளது, இது ஒரு தனித்துவமான பொறியியல் அதிசயமாகும்.” என்றும் அவர் கூறுகிறார்.

சோழர் கலையைக் குறிக்கும் கல்வெட்டு சான்றுகள் கலை மற்றும் கட்டிடக்கலைக்கு ஆதரவளிப்பதில் அரச பெண்கள் மற்றும் நடனக் கலைஞர்களின் முக்கிய பங்கை சுட்டிக்காட்டுகின்றன. கண்டராதித்திய சோழனின் விதவை அரசி செம்பியன் மகாதேவி மிகவும் கொண்டாடப்பட்ட புரவலர்களில் ஒருவர். கோனேரிராஜபுரத்தில் உள்ள உமாமகேஸ்வரர் கோயில், ஆடுதுறையில் உள்ள திருக்குரங்கடுதுறை கோயில், திருக்கொடிக்காவலில் உள்ள திருக்கோடீஸ்வரர் கோயில் போன்ற கோயில்களுக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக நன்கு அறியப்பட்டவர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகப்பட்டினம் அருகே அவரது பெயரில், செம்பியன் மகாதேவி என்ற கிராமத்தையும் அவர் நிறுவினார்.

எழுத்தாளர் பாலசுப்ரமணியம் வெங்கட்ராமன், சோழ அரசிகளின் கீழ் கோயில் கலை என்ற புத்தகத்தில், செம்பியன் மகாதேவியின் மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் அவரது காலத்தில் போடப்பட்ட மிகவும் கவர்ச்சிகரமான வெண்கலங்கள் என்று எழுதுகிறார். “அவர் உலோக வார்ப்பு பாரம்பரியத்தை அமைத்தார், அது அவரது மருமகன் முதலாம் இராஜராஜனுடன் பெருமைக்குரிய விஷயமாக மாறியது, அவருடைய காலத்தில் ராஜ்யத்தின் வார்ப்பு கலைஞர்கள் மீறமுடியாத தரம் மற்றும் பிரமாண்டம் கொண்ட எண்ணற்ற வெண்கலங்களை வெளியே கொண்டு வந்தனர்,” என்று அவர் எழுதுகிறார். “செம்பியன் மகாதேவியின் ஆட்சியில் தான் கோவில்களில் வெண்கலம் மற்றும் கல்லால் ஆன நடராஜர் சிலைகள் சிறப்பாகக் காட்சியளிக்கின்றன” என்று சீனிவாசன் குறிப்பிடுகிறார். பின்னர் சோழர் கலைக்கு கணிசமான அளவு பங்காற்றியவர்களில் முதலாம் இராஜராஜனின் சகோதரி குந்தவையும், அவனது அரசி லோகமஹாதேவியும் இருந்தனர்.

சோழர்கள் தங்கள் கட்டிடக்கலையில் விட்டுச் சென்ற பெரிய அளவிலான கல்வெட்டுகள் அவர்களின் ஆட்சியைப் பற்றிய விரிவான வரலாற்றை எழுதுவதற்குத் தங்களைக் கொடுத்துள்ளன. புதிய கோயில்களின் சுவர்கள், அவற்றின் தூண்கள் மற்றும் பீடங்கள் பொதுவாக காலப்போக்கில் கல்வெட்டுகளால் மூடப்பட்டிருந்தன. சில கல்வெட்டுகள் கோவில்களின் பகுதிகளை உருவாக்காத பாறைகள் மற்றும் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. “ஒரு ஆலயத்தை மீண்டும் கட்டுவதற்காக பழைய கட்டமைப்புகள் அகற்றப்படுவதற்கு முன்பு, சுவர்களில் உள்ள கல்வெட்டுகள், பல சமயங்களில், புத்தகங்களில் நகலெடுக்கப்பட்டு, பின்னர் புதிய கட்டமைப்பின் சுவர்களில் மீண்டும் பொறிக்கப்பட்டதாக நாங்கள் வெளிப்படையாகக் கூறுகிறோம்” என்று சாஸ்திரி எழுதுகிறார்.

“சோழர்களிடையே ஒரு பெரிய வரலாற்று உணர்வு இருந்தது” என்கிறார் சீனிவாசன். பழைய கல்வெட்டுகளை மீண்டும் பொறிப்பதைத் தவிர, நினைவாற்றல் மிக்க முயற்சிகளும் இருந்தன. சீனிவாசன் கோனேரிராஜபுரத்தில் செம்பியன் மகாதேவியால் கட்டப்பட்ட கோவிலை எடுத்துக்காட்டுகிறார். “அவர் தனது கணவர் கண்டராதித்திய சோழனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தகடு ஒன்றைக் கட்டினார், அவரும் அவளும் லிங்கத்தை வழிபடுவதைக் காட்டினார்,” என்று அவர் கூறுகிறார்.

“நினைவில் இதேபோன்ற முயற்சிகள் சாதாரண மக்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. உதாரணமாக, பிரகதீஸ்வரர் கோயிலின் சுவர்களைக் கட்டிய கைவினைஞர்களில் ஒருவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அரிய வெண்கலத் துண்டு உள்ளது,” என்று அவர் மேலும் கூறுகிறார்.

பல நூற்றாண்டுகளாக, சோழர்களின் பிரபலமான ஈர்ப்பு அவர்களின் கலை பொருட்களின் தொடர்ச்சியான இனப்பெருக்கம் மூலம் உறுதி செய்யப்பட்டது, இது கலை சேகரிப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் வீடுகளில் அலங்கார பொருட்களாக மாறியது. தஞ்சை மற்றும் கும்பகோணத்திற்கு வெளியே குறிப்பாக சுவாமிமலை கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக இந்த சின்னங்களை உருவாக்கி வருகின்றனர். பழங்கால கலை நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள தொலைந்த மெழுகு வார்ப்பு செயல்முறை என்று அழைக்கப்படும் நுட்பத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள், ”என்று சீனிவாசன் விளக்குகிறார். அடுத்ததாக பூம்புகார் உள்ளது, இது அரசு நடத்தும் கலைப்பொருட்களை உருவாக்கும் நிறுவனமாகும் (ஐகான் மேக்கிங் எம்போரியா), இது அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களையும் வேலைக்கு அமர்த்துகிறது. “கைவினை பொருட்களின் ஜனநாயகமயமாக்கலுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, இது இனி கோயில்களில் மட்டுமே குவிக்கப்பட வேண்டியதில்லை என்பதையும், கலைப்படைப்புகளின் பரவலான புழக்கம் மற்றும் பரந்த பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்துள்ளது.”

பொன்னியின் செல்வனும் சோழர் வரலாறு எழுதுவதும்

வல்லுநர்கள் கருத்துப்படி, தென்னிந்திய வரலாற்றின் பல இழைகளில், சோழர்கள் பற்றி மிக விரிவாக எழுதப்பட்டுள்ளனர். வேறு எந்த வம்சமும் உருவாக்கியதை விட, அவர்கள் விட்டுச் சென்ற ஏராளமான கல்வெட்டுகள் மற்றும் நினைவுச்சின்னங்களுடன் இது தொடர்புடையது. காலனித்துவ காலத்தில் மெட்ராஸ், இடைக்கால தென்னிந்தியாவைப் பற்றிய ஆய்வுகளுக்கான முக்கிய மையமாக இருந்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். சோழர்கள் அவர்கள் விட்டுச்சென்ற பொருள் கலாச்சாரத்தின் காரணமாக இந்த ஆய்வுகளில் தனித்து நின்றார்கள் என்ற உண்மையைத் தவிர, அவர்கள் இந்தோனேசியா மற்றும் ஸ்ரீவிஜயாவின் பல்வேறு பகுதிகளைத் தாக்கும் முன்னோடியில்லாத செயலிலும் ஈடுபட்டனர்.

“இந்தியா காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த நேரத்தில் இந்த அறிவு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் ஆங்கிலேயர்கள் இங்கு வருவதற்கு முன்பே எங்களிடம் நமக்கென்று ஒரு பேரரசு இருந்தது என்பதைக் காட்ட இந்தியர்களிடையே அரசியல் தூண்டுதல் இருந்தது” என்று கனிசெட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகிறார். எனவே சோழர்களின் வெற்றிகள் “காலனித்துவம்” என்று குறிப்பிடப்படுகின்றன.

”தென்கிழக்கு ஆசியாவில் இந்துக் காலனித்துவத்தின் பல அலைகள் எவ்வாறு இருந்தன என்பது பற்றி சிறந்த தமிழ் வரலாற்றாசிரியர் நீலகண்ட சாஸ்திரி எழுதியுள்ளார். இது துல்லியமற்றது. தொல்பொருள் சான்றுகள் காட்டியுள்ளபடி, சமஸ்கிருத கூறுகளைக் கொண்ட உலகளாவிய கலாச்சாரத்தில் தென்கிழக்கு ஆசியா பங்கேற்றது,” என்று கனிசெட்டி கூறுகிறார்.

1950 களில் சுதந்திரத்திற்குப் பிந்தைய தேசியவாத சகாப்தத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் எழுதப்பட்டது, இது இந்திய வரலாற்றை எழுதுவதிலும், தமிழ் தேசியத்தை போற்றுவதிலும் குறிப்பிடத்தக்கது. இது முதலாம் இராஜராஜனின் ஆரம்ப காலக் கதையைச் சொல்லும் ‘கல்கி’ என்ற தமிழ் இதழில் தொடர் வடிவில் வந்த வரலாற்றுப் புனைவு ஆகும்.

“சுதந்திரத்திற்குப் பிறகு, தமிழ் கலாச்சாரம் மற்றும் ஒன்றியத்தில் தமிழ்நாட்டின் இடம் பற்றி தமிழகத்தில் பல விவாதங்கள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் இது எழுதப்பட்டது” என்று கனிசெட்டி விளக்குகிறார். மேலும், “கல்கி ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் கூட, சுதந்திரத்திற்காக கடுமையாகப் போராடிய தென்னிந்திய விடுதலைப் போராளிகள் பலர் திடீரென்று தங்கள் பிராந்திய மொழிகள் எதையும் விட ஹிந்தியில் மட்டுமே ஆர்வமுள்ள ஒரு புதிய நாட்டில் தங்களது சுயத்தைக் கண்டுபிடித்தவர்கள் என்று கற்பனை செய்யலாம். கல்கி போன்ற எழுத்தாளர்கள் போராடி, தமிழ் வம்சங்களைப் பற்றிப் பெருமைப்படக் கருதி அவற்றைப் பற்றி எழுதியது முக்கியமானது” என்றும் அவர் கூறுகிறார்.

பொன்னியின் செல்வன் மூலம், தனது வாசகர்கள் அனைவரும் பெருமைப்படக் கூடிய தமிழ் கடந்த காலத்தை கற்பனாவாத பார்வை மூலம் இளம் தமிழ் வாசகர்களுக்கு வழங்க கல்கி முயன்றார். இன்றுவரை, அவரது நாவல் ஒரு பரவலான கலாச்சார செல்வாக்கையும், அனைத்து வயது தமிழர்களிடையேயும் ஒரு வழிபாட்டு முறையை தொடர்ந்து கொண்டுள்ளது.

இருப்பினும், திரைப்பட வரலாற்றாசிரியர் எஸ். தியோடர் பாஸ்கரன், தமிழ் வரலாற்றை எழுதுவதில் பொன்னியின் செல்வன் உண்மையில் எந்த முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை, ஆனால் வணிக ரீதியாக ஈர்க்கப்பட்டது என்று நம்புகிறார். மேலும், “இது ராஜாக்கள், போர்கள், சதிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஒரு சாகசக் கதை, முதலாம் ராஜராஜனை மையமாகக் கொண்டது” என்கிறார் பாஸ்கரன்.

சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் தமிழர்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் மகிமைப்படுத்துவது தி.மு.க.,வும், காங்கிரஸ்காரரும், சி.ராஜகோபாலாச்சாரியின் தீவிர சீடருமான கல்கியும் செய்து வந்த பணி என்பதை பாஸ்கரன் சுட்டிக்காட்டுகிறார். “அவர் இப்போது வாழ்ந்தால், கல்கி ஒரு வலதுசாரியாகவே பார்க்கப்படுவார். இந்து மதத்தை எதிர்க்கும் பௌத்தர்களை அவர் விமர்சித்தார்” என்கிறார் பாஸ்கரன்.

சோழர் வரலாற்றைப் பற்றிய கல்கியின் விளக்கம் இடைக்கால சாம்ராஜ்யத்தை அனைத்து வகையான முறைகேடுகளுக்கும் வெள்ளையடித்ததாக விமர்சிக்கப்பட்டது. “அவர் வம்சத்தை முற்றிலும் ஒழுக்கமான மற்றும் உன்னதமான நபர்களாக ஆக்கினார், சோழர்கள் தங்கள் கல்வெட்டுகளில் செய்வதாகச் சொல்லும் எந்த ஒரு காரியத்தையும் செய்யாத நபர்களாக அவர் அவ்வாறு குறிப்பிடுகிறார்,” என்கிறார் கனிசெட்டி. மேலும், “உதாரணமாக, பொன்னியின் செல்வன் முதல் பகுதியில், சோழர்கள் இலங்கையில் போரில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும், ஸ்தூபிகள், விகாரைகள் போன்ற சாதாரண மக்கள் செல்லும் எந்த இடங்களையும் தாக்க விரும்பவில்லை என்று ராஜராஜ சோழன் கூறியது பற்றியும் பேசுகிறது. ஆனால், சோழர்களின் சொந்த கல்வெட்டுகள் நகரங்களை எரிப்பது மற்றும் பல்வேறு இடங்களை கொடூரமாக சூறையாடுவது பற்றி பேசுகின்றன. ராஜராஜ சோழனின் படைகள் ஸ்தூபிகளைக் கிழித்து உள்ளே இருந்து பொருட்களைக் கொள்ளையடித்ததைப் பற்றியும் பல சிங்கள ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன, ”என்றும் அவர் கூறுகிறார்.

பழங்கால மற்றும் இடைக்கால தமிழ் மக்கள் ஒரே மாதிரியான குழுவாக இருக்கவில்லை என்பதையும், தென்னிந்தியாவிற்குள்ளேயே அவர்கள் பற்றிய கருத்துக்கள் வேறுபடுகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கனிசெட்டி சுட்டிக்காட்டுகிறார். மேலும், “எனவே உதாரணமாக, இன்றைய ஆந்திரப் பிரதேசம் அல்லது கர்நாடகாவில் உள்ள ஒருவர், ஆதாரங்கள் கூறுவது போல் சோழர்களை அப்பகுதிகளை கைப்பற்றி மிகக் கொடூரமாக நடந்துக்கொண்டதால், சோழர்களை அவர்கள் ஹீரோக்களாகப் பார்க்கப் போவதில்லை,” என்றும் அவர் கூறுகிறார்.

மேலும் தெரிந்துக் கொள்ள:

நீலகண்ட சாஸ்திரி, சோழர்கள், மெட்ராஸ் பல்கலைக்கழகம், 1955

நோபோரு கராஷிமா (பதிப்பு), தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு: சிக்கல்கள் மற்றும் விளக்கங்கள், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், 2014

ஹேமா தேவரே, ஹெர்மன் குல்கே, கே. கேசவபாணி, நாகப்பட்டினம் முதல் சுவர்ணத்வீபாவில் தென்கிழக்கு ஆசியாவுடனான சோழர் கடல்சார் துணி வர்த்தகத்தின் கலாச்சார தாக்கங்கள்: தென்கிழக்கு ஆசியாவிற்கான சோழர் கடற்படை பயணங்களின் பிரதிபலிப்புகள், தென்கிழக்கு ஆசிய ஆய்வுகள் நிறுவனம், 2009

அனிருத் கனிசெட்டி, தக்காணத்தின் பிரபுக்கள்: சாளுக்கியர்கள் முதல் சோழர்கள் வரை தென்னிந்தியா, ஜக்கர்நாட் புக்ஸ், 2022

பாலசுப்ரமணியம் வெங்கட்ராமன், சோழ ராணிகளின் கீழ் கோயில் கலை, தாம்சன் பிரஸ் (இந்தியா), 1976



Read in source website

நேருவுக்குப் பிறகு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடுத்த ஏழு ஆண்டுகளில் 3.1% ஆகவும் குறைந்தது; நேரு முதல் மோடி வரை இந்தியாவின் பொருளாதாரம்: ஒரு சுருக்கமான வரலாறு புத்தகம் ஓர் பார்வை

Harish Damodaran

புத்தகத்தின் பெயர் : நேரு முதல் மோடி வரை இந்தியாவின் பொருளாதாரம்: ஒரு சுருக்கமான வரலாறு

ஆசிரியர்: புலப்ரே பாலகிருஷ்ணன்

வெளியீட்டாளர்: பெர்மனண்ட் பிளாக்

பக்கங்கள்: 272

விலை: ரூ 895

Explained Books: An economic history of independent India: ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலங்கள் இந்தியப் பொருளாதாரத்திற்கு வீணான சகாப்தமா? நுகர்வோர் பொருட்களுக்கு மாறாக, பலநோக்கு நதி-பள்ளத்தாக்கு திட்டங்கள், சுரங்கங்கள், உர ஆலைகள் மற்றும் மூலதன பொருட்கள் (இயந்திர கருவிகள், கனரக மின்சாரம், போக்குவரத்து சாதனங்கள், இரும்பு மற்றும் எஃகு) ஆகியவற்றிற்கு வளங்களை கொண்டு செல்லும் சோவியத் யூனியனால் தூண்டப்பட்ட திட்டமிடப்பட்ட வளர்ச்சி மாதிரியின் விளைவால் பொருளாதாரம் தேக்கமடைந்ததா?

உண்மையில் இல்லை, புலப்ரே பாலகிருஷ்ணனின் புதிய புத்தகத்தின்படி. ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி நேரு காலத்தில் (1950-51 முதல் 1964-55 வரை) சராசரியாக 4% ஆக இருந்தது, இது ஆங்கிலேய அரசின் கடந்த அரை நூற்றாண்டில் (1900-01 முதல் 1946-47 வரை) 0.9% ஆக இருந்தது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் 0.1%க்கு எதிராக 1.9% ஆக அதிகரித்துள்ளது. மக்கள்தொகை ஆண்டுக்கு 2% (1950-65 இல்) ஆக இல்லாமல், 0.8% (1900-47க்கான சராசரி) அளவில் உயர்ந்திருந்தால் அந்த வளர்ச்சி விகிதம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான புத்தகத்தின் ஆசிரியர் பாலகிருஷ்ணன், நேரு கால பொருளாதார உத்தி பற்றிய இரண்டு முக்கிய விமர்சனங்களை எடுத்துக்கொள்கிறார். முதலாவதாக, அது விவசாயத்தை புறக்கணித்தது. ஆங்கிலேய ஆட்சி காலத்தின் போது பதிவு செய்யப்பட்ட தனிநபர் உற்பத்தி வீழ்ச்சிக்கு மாறாக, மக்கள் தொகையை விட இந்தத் துறை வேகமாக வளர்ந்தபோதும் புறக்கணிக்கப்பட்டது. பக்ரா-நங்கல், ஹிராகுட் மற்றும் நாகார்ஜுனா சாகர் அணைகளாலும் விவசாயம் பயனடைந்திருக்கும் (இந்த காலகட்டத்தில் நிறுவப்பட்ட பந்த்நகர், லூதியானா, புவனேஸ்வர் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள உலகத் தரம் வாய்ந்த அரசு வேளாண் பல்கலைக்கழகங்களைக் குறிப்பிட பாலகிருஷ்ணன் மறந்துவிட்டார்).

இரண்டாவது விமர்சனம் பொதுத்துறை நிறுவனங்கள் எனப்படும் “வெள்ளை யானைகள்” உருவாக்கம் ஆகும். பாலகிருஷ்ணன், நேருவின் காலத்தில் இருந்த பொதுத்துறை நிறுவனங்கள், வடிகாலாக இல்லாமல், உண்மையில் சேமிப்பை உருவாக்கியது என்று வாதிடுகிறார். 1962ல் ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸின் இரண்டாவது ஆலையின் திறப்பு விழாவின் போது, ​​நேரு முதல் முறையாக “உபரி” மூலம் நிதியளிக்கப்பட்டதில் பெருமிதம் கொண்டார். தனியார் துறையைப் பொறுத்தவரை, ஒரு புதிய அரசியல் அமைப்பின் கீழ் பிரிவினைக்குப் பிந்தைய நிச்சயமற்ற சூழலில் தொழில்முனைவோர் மத்தியில் பலவீனமான “விலங்கு ஆவிகளை” அங்கீகரிப்பது போன்ற ஒடுக்குமுறை பற்றியது அல்ல. அவர்கள் எந்த வகையிலும், நீண்ட கால திட்டங்களில் முதலீடு செய்திருக்க மாட்டார்கள்.

நேருவுக்குப் பிறகு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1965-66 முதல் 1971-72 வரை 3.4% ஆகவும், அடுத்த ஏழு ஆண்டுகளில் 3.1% ஆகவும் குறைந்தது. இது வறட்சி (1965, 1966 மற்றும் 1972 இல்), போர்கள் (1965 மற்றும் 1971) மற்றும் ஜூன் 1966 இல் அந்நிய செலாவணி நெருக்கடியால் தூண்டப்பட்ட 36.5% மதிப்பிழப்பு ஆகியவற்றுடன் ஓரளவு தொடர்புடையது. ஆனால் இந்த காலகட்டத்தின் பெரும்பகுதி இந்திரா காந்தியின் வங்கிகள் மற்றும் நிலக்கரி சுரங்கங்களை தேசியமயமாக்குதல், MRTP சட்டம் மற்றும் தலைகீழ் வருமான வரி விகிதங்கள் போன்ற நடவடிக்கைகளுடன் ஒத்துப்போனது.



Read in source website

பிரதான்மந்திர பாரதிய ஜனுர்வரக் பரியோஜனா என்ற உர மானியத் திட்டத்தைக் குறிக்கும் லோகோ அந்த உரப் பைகளில் பயன்படுத்தப்படும்.

“பிரதான்மந்திரி பாரதிய ஜனுர்வரக் பரியோஜனா” (PMBJP) என்ற உர மானியத் திட்டத்தின் கீழ் “உரங்கள் மற்றும் லோகோவுக்கான ஒற்றை பிராண்ட்” அறிமுகப்படுத்தி ஒரு நாடு ஒரே உரத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் புதன்கிழமை (ஆகஸ்ட் 24) அறிவித்தது.

அதன்படி யூரியா, பாஸ்பேட் பொட்டாஷ், என்பிகே போன்றவற்றிற்கான ஒற்றை பிராண்ட் பெயர் முறையே பாரத் யூரியா, பாரத் பாஸ்பேட், பாரத் பொட்டாஷ், பாரத் என்பிகே என்று அனைத்து உர நிறுவனங்கள், மாநில வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உர சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் சந்தைப்படுத்தப்படும் என்று அலவலக குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.

மேலும், “பிரதான்மந்திர பாரதிய ஜனுர்வரக் பரியோஜனா என்ற உர மானியத் திட்டத்தைக் குறிக்கும் லோகோ அந்த உரப் பைகளில் பயன்படுத்தப்படும்”.

புதிய “ஒரே தேசம் ஒரு உரம்” திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் தங்கள் பெயர், பிராண்ட், லோகோ மற்றும் பிற தொடர்புடைய தயாரிப்பு தகவல்களை தங்கள் பைகளில் மூன்றில் ஒரு பங்கு இடத்தில் மட்டுமே காட்ட அனுமதிக்கப்படுகிறது. மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு இடத்தில், “பாரத்” பிராண்ட் மற்றும் பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஊர்வரக் பரியோஜனா லோகோ காட்டப்பட வேண்டும்.

இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசின் வாதம் என்ன?

நிறுவனங்களால் சந்தைப்படுத்தப்படும் அனைத்து மானிய உரங்களுக்கும் ஒரே ‘பாரத்’ முத்திரையை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தர்க்கம் பின்வருமாறு:

(1) யூரியாவின் அதிகபட்ச சில்லறை விலை தற்போது அரசாங்கத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இது நிறுவனங்களுக்கு ஏற்படும் அதிக உற்பத்தி செலவு அல்லது இறக்குமதிக்கு ஈடுசெய்கிறது. யூரியா அல்லாத உரங்களின் அதிகபட்ச விலை, காகிதத்தில், கட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால், அரசாங்கத்தால் முறைசாரா முறையில் குறிப்பிடப்பட்டதை விட அதிக விலையில் விற்பனை செய்தால் நிறுவனங்கள் மானியத்தைப் பெற முடியாது. எளிமையாகச் சொன்னால், சுமார் 26 உரங்கள் (யூரியா உட்பட) உள்ளன, இவற்றுக்கு அரசு மானியம் வழங்குகிறது மற்றும் அதிகபட்ச சில்லறை விலைகளை திறம்பட தீர்மானிக்கிறது;

(2) மானியம் மற்றும் நிறுவனங்கள் என்ன விலையில் விற்கலாம் என்பதை முடிவு செய்வதைத் தவிர, அவர்கள் எங்கு விற்கலாம் என்பதையும் அரசாங்கம் தீர்மானிக்கிறது. இது உர (இயக்கம்) கட்டுப்பாட்டு ஆணை, 1973 மூலம் செய்யப்படுகிறது. இதன் கீழ், உரத் துறையானது, உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுடன் கலந்தாலோசித்து, அனைத்து மானிய உரங்களுக்கும் ஒப்புக் கொள்ளப்பட்ட மாதாந்திர விநியோகத் திட்டத்தை வரைகிறது.

இந்த விநியோகத் திட்டம் ஒவ்வொரு மாதமும் 25 ஆம் தேதிக்கு முன் வெளியிடப்படுகிறது. மேலும் தொலைதூரப் பகுதிகள் உட்பட, தேவைக்கேற்ப உரம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இத்துறை தொடர்ந்து இயக்கத்தைக் கண்காணித்து வருகிறது.

(3) உர மானியத்திற்காக அரசாங்கம் பெரும் தொகையைச் செலவழிக்கும் போது (2022-23ல் பில் ரூ. 200,000 கோடியைத் தாண்டக்கூடும்), மேலும் நிறுவனங்கள் எங்கு, எந்த விலையில் விற்கலாம் என்பதைத் தீர்மானிப்பதுடன், அது விவசாயிகளுக்கு அந்த செய்தியை அனுப்ப வேண்டும்.

திட்டத்தின் குறைபாடுகள் என்னவாக இருக்கலாம்?

இரண்டு சிக்கல்கள் உடனடியாகத் தெரியும்:

(1) எந்தவொரு நிறுவனத்தின் பலமும் அதன் பிராண்டுகள் மற்றும் பல தசாப்தங்களாக கட்டப்பட்ட விவசாயியின் நம்பிக்கை ஆகும். ஆனால், இது உர நிறுவனங்களை சந்தைப்படுத்தல் மற்றும் பிராண்ட் விளம்பர நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து தடுக்கும். அவர்கள் இப்போது அரசாங்கத்திற்கான ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களாக குறைக்கப்படுவார்கள்.

(2) தற்போது, ​​எந்த ஒரு பை அல்லது தொகுதி உரங்கள் தேவையான தரத்தை பூர்த்தி செய்யவில்லை என்றால், நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால் இப்போது, ​​அது முழுமையாக அரசாங்கத்தையே சேரும். அரசியல் ரீதியாக, இந்த திட்டம் ஆளும் கட்சிக்கு நன்மை செய்வதை விட பூமராங் ஆகலாம்.



Read in source website

NDTV லிமிடெட் நிறுவனத்தில் RRPR இன் 29.18 சதவீத பங்குகளின் உரிமையாளராக அதானி குழுமம் உடனடியாக மாற முடியாது.

என்டிடிவியின் 29 சதவீத பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ள நிலையில், தற்போது அதானி குழுமத்தின் துணை நிறுவனமான விஸ்வபிரதான் கமர்ஷியல் பிரைவேட் லிமிடெட் (விசிபிஎல்) எனப்படும் நிறுவனம், சந்தை கட்டுப்பாட்டாளர் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) அனுமதி பெற வேண்டும் என்று என்டிடிவி லிமிடெட் பங்குச் சந்தைகளிடம் தெரிவித்துள்ளது.
NDTV லிமிடெட் நிறுவனத்தில் RRPR இன் 29.18 சதவீத பங்குகளின் உரிமையாளராக அதானி குழுமம் உடனடியாக மாற முடியாது.

நவம்பர் 27, 2020 முதல் SEBI உத்தரவை NDTV லிமிடெட் மேற்கோள் காட்டியுள்ளது. பங்குச் சந்தைகளுக்கு வெளியிட்ட அறிக்கையில், NDTV நிறுவனர்- விளம்பரதாரர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் SEBIயை அணுகுவதைத் தடுத்து, அவர்கள் வாங்குவதையும் விற்பதையும் தடை செய்ததாகக் கூறியுள்ளது.
மேலும் 2022ஆம் ஆண்டு முடிவடைந்த ஒப்பந்தம் இறுதியில் NDTV இல் 29.18 சதவீத பங்குகளை அதானி வாங்குவதற்கு வழிவகுத்தது.

2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் என்ன நடந்தது?

2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில், ராய்ஸுக்கு சொந்தமான RRPR ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு VCPL ரூ.403.85 கோடி வட்டியில்லா கடனாக வழங்கியது.
இந்தக் கடனுக்கு எதிராக, RRPR, VCPLக்கு வாரண்ட்களை வழங்கியது, இது RRPR இல் 99.9 சதவீத பங்குகளாக மாற்றுவதற்கு VCPLக்கு உரிமை அளித்தது.

அப்போது அதானி இதில் தலையிடவில்லை எனக் கூறப்படுகிறது.
RRPRக்கு கடனை நீட்டிப்பதற்காக, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஸ்ட்ரேடஜிக் வென்ச்சர்ஸிடம் இருந்து விசிபிஎல் நிதி திரட்டியது.

செவ்வாயன்று (ஆகஸ்ட் 23), அதானி குழுமம் அதன் முதன்மையான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் லிமிடெட், விசிபிஎல் நிறுவனத்தை ரூ.113.75 கோடிக்கு வாங்கியதாக அறிவித்தது.

பங்குச் சந்தைகளுக்கு அளித்த அறிக்கையில், “NDTV அல்லது அதன் நிறுவனர்- ஊக்குவிப்பாளர்களுடன் எந்த விவாதமும் இல்லாமல், VCPL மூலம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, அது (VCPL) 99.50% கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான உரிமையைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறது.
ஆர்ஆர்பிஆர், என்டிடிவியின் 29.18% பங்குகளை வைத்திருக்கும் விளம்பரதாரருக்கு சொந்தமான நிறுவனமாகும். இதற்கிடையில், என்டிடிவியில் மேலும் 26 சதவீத பங்குகளை வாங்குவதற்கு அதானி குழுமம் திறந்த சலுகையை அறிவித்தது.

2020 ஆம் ஆண்டின் SEBI உத்தரவு- ராயின் பங்களிப்பு?

இந்த உத்தரவு, “அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகளின் ரொக்கப் பிரிவில் வாங்கப்பட்ட அல்லது விற்கப்பட்ட பத்திரங்களின் தீர்வு தொடர்பாக தெரிவிப்பது பங்குதாரர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் கடமை.
இந்த உத்தரவின் தேதியில், நிலுவையில் உள்ள தீர்க்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதேனும் இருந்தால் மட்டுமே, இந்த உத்தரவின் மூலம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு அல்லது தடை எதுவாக இருந்தாலும் நடைபெறலாம்.

இந்த நிறுவனம் தற்போது ஈக்விட்டிகளாக மாற்றுவதற்கான அதன் உரிமைகளைப் பயன்படுத்துகிறது. மேலும், சிறு பங்குதாரர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் நலன்களும் கவனிக்கப்பட வேண்டும் என்பதால், இந்த வகையான பரிவர்த்தனைகளுக்கு ஒழுங்குமுறை ஒப்புதல் தேவை.
எனவே இதில் புதிதாக எதுவும் இல்லை. இது ஒரு நடைமுறை மற்றும் அனைத்து விதிகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை கட்டுப்பாட்டாளர் பார்ப்பார்.”

என்டிடிவியில் கட்டுப்பாட்டுப் பங்கைப் பெற அதானி என்ன செய்ய வேண்டும்?
நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்கள் பின்வருமாறு:

பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் தனிப்பட்ட முறையில் நிறுவனத்தில் 32.26 சதவீத பங்குகளை தொடர்ந்து வைத்துள்ளனர்.

செப்டம்பர் 2020 முதல், நான்கு பங்குதாரர்கள் – ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இயக்குநர்கள் – ஒட்டுமொத்தமாக NDTV இல் 7.11 சதவீதத்தை வைத்துள்ளனர்.
ஜூன் 2022 நிலவரப்படி, GRD செக்யூரிட்டீஸ் 2.8 சதவீதத்தையும், ஆதேஷ் புரோக்கிங் 1.5 சதவீதத்தையும், ட்ரோலியா ஏஜென்சிஸ் 1.48 சதவீதத்தையும், கன்ஃபர்ம் ரியல்பில்ட் 1.33 சதவீதப் பங்குகளையும் வைத்துள்ளது.
என்டிடிவியில் 9.75 சதவீதத்தை வைத்திருக்கும் LTS இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் உள்ளது. இந்த நிதி அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி பவர் (1.09%), அதானி டிரான்ஸ்மிஷன் (1.63%) மற்றும் அதானி டோட்டல் கேஸ் (1.27%) உள்ளிட்ட பிற குழும நிறுவனங்களிலும் 1.69 சதவீதத்தை கொண்டுள்ளது.

இந்த இரண்டு முதலீட்டாளர்களும் அதானியின் திறந்த சலுகையில் தங்கள் பங்குகளை விற்றால், அது NDTV இல் அதானி குழுமத்தின் பங்குகளை 46 சதவீதத்திற்கு மேல் எடுக்கும். வேறு சில பங்குதாரர்களும் இந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ளலாம்.

இருப்பினும், அதானி குழுமத்தின் தற்போதைய சலுகையானது NDTV பங்குகளின் சந்தை விலையை விட கணிசமான குறைவாக உள்ளது, இது ஆகஸ்ட் 25 அன்று ஒரு பங்கு ரூ.400க்கு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website


நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகிக்கும் விமானப் போக்குவரத்திலும், விமான நிலையங்களின் கட்டமைப்பிலும் தற்போதைய மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. தெளிவான திட்டமிடலும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளும், திட்டத்தை முனைந்து செயல்படுத்தும் ஆற்றலும் இணையும்போது இலக்குகள் நிச்சயம் நிறைவேறும். தில்லியில் அண்மையில் அசோசெம் நிகழ்ச்சியில் பேசிய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, விமானப் போக்குவரத்துத் துறையின் எதிர்காலம் தொடர்பான பல முக்கிய விவரங்களைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள உள்நாட்டு விமான நிறுவனங்களிடம் 1,200 விமானங்கள் இருக்கும். வரும் பத்தாண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 40 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் சிறிய ரக விமானங்கள் தரையிறங்கக் கூடிய விமானநிலையங்கள் உள்பட 220 விமானநிலையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

நரேந்திர மோடி பிரதமரான பிறகு, உள்நாட்டு விமான நிலையங்களை அதிகரிக்க "உதான்' என்ற வட்டார இணைப்புத் திட்டம் 2017-இல் தொடங்கப்பட்டது. 2016-இல் 70-ஆக இருந்த உள்நாட்டு விமான நிலையங்களின் எண்ணிக்கையை 2018-க்குள் 150 -ஆக உயர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. இத்திட்டம் முன்னேற்றப்பாதையில் இருந்தாலும், எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை. 

இதுவரை கூடுதலாக 38 உள்நாட்டு விமானநிலையங்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் பல நிலைகளில், பல இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தில் நேரிடும் தாமதத்துக்கு மாநில அரசியல் சூழல்கள், நிதி பற்றாக்குறை, தொழில் முனைவோரிடம் காணப்படும் தயக்கம், அதிகார வர்க்கத்தின் அசட்டை ஆகியவை காரணமாகக் கூறப்படுகின்றன. விமானப் போக்குவரத்து சந்தையில் ஈடுபட்டுள்ள சில பெருநிறு
வனங்களின் நலிவு, புதிய தொழில் முனைவோருக்கு ஏற்பட்ட தயக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம். 

கடந்த 2016-ஆம் ஆண்டில் இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் விமான சேவை மூலமாக 13.1 கோடி பேர் பயணித்துள்ளனர். இவர்களில் 10 கோடி பேர் உள்நாட்டுப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு போல வசதியானவர்கள் மட்டுமே பயணிக்கும் நிலை மாறி, நடுத்தர மக்களும் பயன்படுத்தும் போக்குவரத்து வசதியாக விமானப் பயண சேவைகள் தற்போது மாறி வருகின்றன. இது வருங்காலத்தில் விமானப் போக்குவரத்துத் துறையில் பலத்த மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, நாட்டில் சுமார் 800 விமானங்கள் உள்ளன. சர்வதேச விமானத் தயாரிப்பு நிறுவனமான "போயிங்' 2015-இல் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 1,760 விமானங்கள் தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மற்றொரு விமானத் தயாரிப்பு நிறுவனமான "ஏர்பஸ்' வெளியிட்டுள்ள கணிப்பின்படி, அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய விமானப் போக்குவரத்து சந்தையாக இந்தியா உருவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், கடந்த 2019 ஜனவரி 15-இல் வெளியிட்ட "விஷன் 2040' என்ற தொலைநோக்குத் திட்டம், இத்துறையை வலுப்படுத்தத் தேவையான பல சிந்தனைகளைக் கொண்டதாக உள்ளது. அதன்படி, 2040-இல் நமது நாட்டின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை 160 கோடி பயணிகளைக் கையாளும் நிலை உருவாகும். தவிர 1.7 கோடி டன் சரக்குகளைக் கையாள வேண்டிய நிலையும் ஏற்படும். அப்போது நாட்டிலுள்ள விமானங்களின் எண்ணிக்கை 2,359-ஆக இருக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. 

அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம் இந்திய அரசுக்கு அளித்த வேண்டுகோளில், இந்தியாவின் எட்டு நகரங்களிலிருந்து வாரம் 50,000 பயணிகள் சென்றுவரும் வகையில் அமீரக விமானங்களை இயக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் ஒன்பது நகரங்களிலிருந்து வாரந்தோறும் 65,200 பயணிகள் சென்றுவரும் வகையில் அமீரக விமானங்கள் இந்தியாவுக்கு இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். குறிப்பாக, துபையில் மட்டும் 14 லட்சம்  இந்தியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களைக் கருத்தில் கொண்டே இந்த வேண்டுகோளை ஐக்கிய அரபு அமீரகம் முன்வைத்திருக்கிறது. அந்த வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ள முக்கியமான அம்சம், கடந்த எட்டு ஆண்டுகளில் விமானப் போக்குவரத்து சந்தை இந்தியாவில் பல மடங்கு வேகமாக வளர்ந்திருக்கிறது என்பதுதான். 

விமானங்கள், விமான சேவை வழங்கும் நிறுவனங்களுடன், விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்திய விமானப் போக்குவரத்து சந்தையின் எதிர்காலம்  பிரகாசமாக உள்ள சூழலில், அவற்றைக் கையாளும் தரம் வாய்ந்த, பாதுகாப்பான ஓடுதளங்களைக் கொண்ட விமானநிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியம்.

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரின் தெளிவான இலக்குகள், நமது பொருளாதார வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தவை. "வரப்புயர நீர் உயரும்' என்பது போல இத்துறையில் உள்கட்டமைப்பு மேம்படுவது நமது எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாகும்.



Read in source website

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் தங்களுக்கு இடையே மின்சாரத்தைப் பகிா்ந்து கொள்ள முடியாமல் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மின்சாரத் திருத்தச் சட்டம் 2022-இல் கூறப்பட்டுள்ள விதிகளைப் பயன்படுத்தி மத்திய அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான மின் பகிா்வில் மத்திய அரசின் இந்தத் தலையீடு காரணமாக பல்வேறு மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மத்திய அரசு, தடை பிறப்பிக்கும் முன்பு மக்கள் நலன் குறித்து சிந்திக்கவில்லை என்பது தெரிகிறது.

மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் ‘பவா் சிஸ்டம் ஆபரேஷன் காா்பரேஷன்’ செயல்பட்டு வருகிறது. இதன்கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம் மாநிலங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு பெறும் மின்சாரத்திற்கு ‘டிஸ்காம்ஸ்’ சாா்பில் மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு பணம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது பல மாநிலங்கள் பணம் செலுத்தாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், பிகாா், ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், ராஜஸ்தான், மணிப்பூா், மிசோரம் ஆகிய மாநிலங்கள் இதனால் பாதிப்படையலாம். யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரையும் சோ்த்தால் மொத்தம் ரூ.5,085 கோடி நிலுவை உள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசு மின்சார சட்டத் திருத்த மசோதா 2022-ஐ ஆகஸ்ட் 8 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தியது. இதனை அனைத்து எதிா்க்கட்சிகளும் கடுமையாக எதிா்த்தன. இந்த மசோதாவை முற்றாகக் கைவிட வேண்டும் என்று அவை வலியுறுத்தின. இதனால், விவசாயிகள், நெசவாளா்கள், ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் நிறுத்தப்பட்டு விடும் என்று கூறி எதிா்ப்பு தெரிவித்தன.

அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இருக்கும் நாடாளுமன்றத்தின் எரிசக்தி நிலைக்குழுவுக்கு அனுப்பி மசோதாவை முழுமையாக விவாதிக்கலாம் என்று மத்திய மின்துறை அமைச்சா் ஆா்.கே. சிங் தெரிவித்தாா். ஆனால் விவசாயிகளின் கூட்டமைப்பான ‘சம்யுக்தா கிசான் மோா்ச்சா’வுக்கு அளித்த வாக்குறுதியை மீறி இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதாக மத்திய அரசின் மீது எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது மட்டுமல்ல, அரசமைப்பு சட்டத்துக்கும் எதிரானது, மாநிலங்களின் உரிமைக்கும் எதிரானது என்றும் எதிா்க்கட்சியினா் மக்களவையில் கூறினா். மசோதா கொண்டு வருவதற்கு முன்பாக மின் உற்பத்தி, விநியோகத்தை மேற்கொண்டு வரும் மாநில அரசுகளைக் கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும் என்றனா்.

‘பொதுப்பட்டியலில் உள்ள பொருட்கள் பற்றி மாநில அரசுகளைக் கலந்து பேசாமல் கல்வி, கூட்டுறவு முதலிய பல துறைகளிலும் மத்திய அரசு தம் அதிகாரத்தை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது. இந்த அதிகாரக் குவிப்பைக் கைவிட வேண்டும். மாநில உரிமைகளை மதிக்க வேண்டும். இந்த மின்சாரத் திருத்த மசோதா கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாக இருக்கிறது’ என்று எதிா்க்கட்சிகள் விமா்சனம் செய்கின்றன.

2003-ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது முதல் முதலாக மின்சார மசோதா கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மின்சார உற்பத்தி, விநியோகம், பரிமாற்றம், வணிகம், பயன்பாடு தொடா்பான சட்டங்களை ஒன்றாக்குவதே அதன் நோக்கமாக இருந்தது. நுகா்வோா் நலனை மேம்படுத்துதல், அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்குதல், மின் கட்டணத்தை சீரமைத்தல், மானியம் வழங்குவதில் வெளிப்படைத் தன்மை இவற்றை இந்தச் சட்டம் வலியுறுத்தியது.

2007-இல் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செயல்பட்டது. அந்த அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தின் மூலம் ஏழை எளிய குடும்பங்களுக்கு மானியம் வழங்குவதை உறுதி செய்யும் விதிகள் மின்சார சட்டத்தில் சோ்க்கப்பட்டன.

அதன்பின் 2014-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுடன் மசோதா எரிசக்தி நிலைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. என்றாலும் மத்திய அரசு அதனை மறு ஆய்வுக்கு உட்படுத்த விரும்பியதால் நாடாளுமன்றத்தில் அது நிறைவேறவில்லை. இப்போது மின்சார சட்டத் திருத்த மசோதா 2022 கொண்டுவரப்பட்டு கடுமையான எதிா்ப்பை சந்தித்துள்ளது.

இந்த மசோதா பல முக்கிய மாற்றங்களைக் கொண்டுள்ளது. மாநில அரசுகளின் கீழ் உள்ள மின்சார விநியோகத்தில் மத்திய அரசின் தலையீட்டை அனுமதிக்கிறது. இதற்கான விதிகள் மசோதாவின் 5, 11, 12, 13, 15, 23 ஆகிய பிரிவுகளில் காணப்படுகின்றன.

பிரிவு 5, மின்சார விநியோகிப்பாளா்களுக்கான அளவுகோல்களைக் கையாளும் மின்சாரச் சட்டத்தின் 14ஆவது கூற்றைத் திருத்துகிறது. இந்தத் திருத்தம் மின் விநியோகிப்பாளா்களுக்கான நிபந்தனைகளை நிா்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு அளிக்கிறது. மசோதாவின் 11-ஆவது பிரிவு, ஒரே பகுதியில் பல விநியோக உரிமையாளா்களின் செயல்பாட்டை எளிதாக்கும் விதமாக மின்சார சட்டத்தின் 42-ஆவது பிரிவில் திருத்தம் செய்துள்ளது.

தனியாா் நிறுவனங்கள் மின் விநியோகத்தில் ஈடுபட்டால், மாநில அரசுகள் பெரும் பொருட் செலவில் ஏற்கெனவே உருவாக்கி வைத்திருக்கும் மின் விநியோகக் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்த சட்டத் திருத்தம் கூறுகிறது. இதனை மாநில அரசுகள் எப்படி ஏற்றுக் கொள்ளும்? மின் விநியோகத்தில் கால் பதிக்கும் ஏகபோக நிறுவனங்களால் பொதுத்துறை நிறுவனங்களும் சிறிய கட்டமைப்புகளும் சிதைந்துவிடும் நிலை உருவாகும் என எதிா்க்கட்சிகளும் மாநில அரசுகளும் அஞ்சுகின்றன.

இந்த மின்சார சட்டத்திருத்த மசோதா நிறைவேறினால் மின்சார விநியோகம் தனியாா் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா். அதன்பின் மின்சாரப் பயன்பாட்டில் விவசாயிகளுக்கும் ஏழை மக்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மானியங்கள் நிறுத்தப்பட்டு விடும் என்று நினைக்கின்றனா்.

மின் விநியோக நிறுவனங்களையும், உற்பத்தி நிலையங்களையும் தனியாா் மயமாக்கினால் வேலையிழப்பு ஏற்படும் என்ற காரணத்தால் மின்துறை ஊழியா்கள் இந்த மசோதாவை எதிா்க்கின்றனா். இந்த மசோதா லாபத்தைத் தனியாா் மயமாக்கவும் இழப்பீட்டை தேசிய மயமாக்கவும் வழிவகுக்கும் என அஞ்சுகின்றனா்.

அரசமைப்பு சட்டப்படி மின்சாரம் மத்திய - மாநில அரசுகள் இணைந்த பொதுப்பட்டியலில் உள்ளது. வரவிருக்கும் சட்டத் திருத்தம், மாநில அரசின் அதிகாரத்தில் அளவுக்கு மீறி உள்ளே நுழையும். நாளடைவில் மாநில மின் வாரியங்களை விழுங்கிவிடும் ஆபத்தும் இருக்கிறது. கூட்டாட்சிக் கொள்கைக்கே உலை வைக்கும் இந்த முயற்சியை எப்படி வாழ்த்தி வரவேற்க முடியும்?

இப்போது கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இலவச மின்சாரம் வழங்கி வருகின்றன. இந்த நிலையிலும் கூட விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுகின்றனா். இலவச மின்சாரமும் நிறுத்தப்பட்டால் அவா்கள் நிலை என்னவாகும்? இலவசம் பற்றி ஏளனம் பேசுகிறவா்கள் மனித நேயத்துடன் இதனை எண்ணிப் பாா்க்க வேண்டும்.

விவசாயிகள் பாடுபடுவது தங்களுக்காக அல்ல. அனைத்து மக்களுக்காகவும்தான் அவா்கள் பாடுபடுகிறாா்கள். ‘உழுதவன் கணக்குப் பாா்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது‘ என்பது அனுபவ மொழி. அன்றும் இன்றும் அதுதான் அவனுக்கான நீதிமொழி. கிராமங்களும் விவசாயிகளும் இல்லாத நாட்டைக் கற்பனை செய்துகூட பாா்க்க முடியாது.

விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக தீரமுடன் நடத்திய போராட்டத்தின் விளைவாக, விவசாயிகளுக்கு எதிராக மூன்று புதிய வேளாண் சட்டங்களுடன், மின்சார சட்டத்தையும் திரும்ப பெறுவதாக பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். ஆனால் தற்போது மீண்டும் மின்சார திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகமாகவே மக்கள் கருதுகிறாா்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டம் நமது அரசாங்கத்தை ‘மக்கள் நல அரசு’ என்றுதான் குறிப்பிடுகிறது. மக்களாட்சி என்பது என்ன? மக்கள் நலம் நாடுவதாக இருக்க வேண்டும். எந்தவொரு சட்டம் கொண்டு வருவதாக இருந்தாலும் மக்களையும், மாநிலங்களையும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். அரசு எடுக்கும் முடிவு எல்லா மக்களுக்கும் உதவுவதாக இருக்க வேண்டும்.

மின்சாரத் திருத்த சட்டத்தைப் பொறுத்தவரை ஏழை எளிய மக்களுக்கி தற்போது இருக்கும் வாய்ப்பையும் பறிப்பதாகவே உள்ளது. தனியாருக்கும் தொழிலதிபா்களுக்கும் வழி திறந்து விடுவதாக இருக்கிறது. இப்படிப்பட்ட திட்டங்களால் நாடு எப்படி வளா்ச்சியை நோக்கி முன்னேறும்?

வளா்ச்சி என்றால், எல்லா மக்களும் சீராக வளா்ச்சி பெற வேண்டும். நமது உடல் வளா்ச்சி என்பது ஒரு சில உறுப்புகள் மட்டும் பெருத்துக் கொண்டே போவது அல்ல. அது நோயாகும். நாட்டில் ஒரு சிலா் உலகக் கோடீஸ்வரா்களாக மாறுவதால் மட்டுமே, நாடு முன்னேறி விட்டதாகக் கூற முடியாது. இதனால் நாடு வல்லரசு ஆகி விடாது.

கால மாற்றத்துக்கு ஏற்ப பழையன கழிதலும் புதியன புகுதலும் வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் அம்மாற்றங்கள் நாட்டை முன்னோக்கி நகா்த்துவதாக இருக்க வேண்டும்; விழுந்து கிடப்பவரைத் தூக்கி விடுவதாக இருக்க வேண்டும்.

மத்திய-மாநில அரசுகளை மக்கள் தோ்வு செய்ததன் நோக்கமும் அதுதான். அது நிறைவேற வேண்டுமானால் மின்சாரம் வெளிச்சம் தரவேண்டும்; இருட்டுக்கு அழைத்துப் போகக் கூடாது.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.



Read in source website

 

பண்டிகைகள், தொடா் விடுமுறை போன்ற நாட்களில் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் பல மடங்காக உயா்த்தப்படுகிறது. இது பல ஆண்டுகளாகவே நடந்து வருவதுதான். மாநிலத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் தனியாா் ஆம்னி பேருந்துகளின் கொட்டத்தை யாராலும் அடக்க முடியவில்லை. இதன் காரணம் நமக்குப் புரியவில்லை.

சமீபத்தில் தமிழக அரசின் போக்குவரத்து துறை அமைச்சா் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா். அதிக கட்டணம் வசூலித்த பேருந்து உரிமையாளா்கள் சிலரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளது. இது வரவேற்கத்தக்கதுதான்.

ஆனால் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை அரசு தரப்பிலிருந்து இப்படி ஒரு எச்சரிக்கை வருவது வழக்கமே. இந்த எச்சரிக்கை உண்மைதானா அல்லது நாம் குழந்தைகளிடம் ‘இனிமேல் இப்படிச் செய்தால் கொன்று விடுவேன்’ என்று திட்டுகிறோமே அப்படியா என்பது புரியவில்லை.

அரசு நிா்வாகத்தின் அறிவுரைகளை ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை. மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் பற்றி புகாா் தெரிவித்தால் அவற்றின் உரிமையாளா்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து நிா்வாகம் தெரிவித்துள்ளது. ஊருக்கு போகும் அவசரத்தில் இருக்கும் பயணிகளில் எத்தனை போ் இதற்கென்று தன் நேரத்தை ஒதுக்கி புகாா் தெரிவிப்பாா்கள்?

கோவையிலிருந்து சென்னைக்கு செல்லும் அரசு சொகுசுப் பேருந்து (எஸ்.இ.டி.சி) கட்டணம் ரூ. 510 என்றால் அதுவே தனியாா் ஆம்னி பேருந்துகளில் ரூ. 800. இதுவே பண்டிகை அல்லது தொடா் விடுமுறை நாட்களில் 1,200 முதல் 1,500 வரை.

ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் யாரும் அதிக கட்டணத்தை ஒளிவு மறைவாக வசூலிப்பதில்லை. அவா்கள் கட்டணத்தை தங்கள் பேருந்து இணையதளத்தில் வெளியிட்டு நிகழ்நிலை முன்பதிவு மூலம்தான் வசூலிக்கிறாா்கள். மேலும் சில இணையதளங்கள் மூலமும் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளாா்கள்.

அதனால் கூடுதல்கட்டணம் குறித்து பயணிகள்தான் புகாா் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆம்னிபேருந்துகளின் இணையதளத்தில் சென்று தேடினாலே ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக எல்லா தனியாா் ஆம்னி பேருந்துகளின் அநியாய கட்டணங்களை, யாா் வேண்டுமானாலும் பாா்க்கலாம்.

சாதாரணமானவா்கள் பாா்க்கிற இந்த இணையதளத்தை சம்பந்தப்பட்ட அமைச்சரோ போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகளோ கண்காணித்து அவா்களின் கூடுதல் கட்டணத்திற்கு கடிவாளம் போடமுடியாதா? போடலாம், ஆனால் அதுவல்ல அவா்களின் நோக்கம். தனியாா் ஆம்னி பேருந்து கட்டண உரிமையாளா்களும் சம்பாதிக்கவேண்டும், அதே நேரத்தில் மக்களுக்கும் அரசு மீது அதிருப்தி வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறாா்கள். அதற்காக ஒரு நாடகத்தை நடத்துகிறாா்கள்.

நாமும் அதை நம்பி அரசு அறிவிப்பிற்கு பிறகு கட்டண விகிதம் குறைந்திருக்கிறதா என்று ஆராய்ந்தால் அதில் துளியும் மாற்றமில்லை. கிட்டத்திட்ட விமானக் கட்டணத்திற்கு நிகரான கட்டணத்தை இதனை சாதாரண மக்களால் எப்படி எதிா்கொள்ள முடியும்?

வெளியூரில் பணிபுரியும் சாதாரண தொழிலாளா்கள் தொடங்கி அலுவலகங்களில் பணிபுரிகிற ஊழியா்கள் வரை வார விடுமுறையில் தங்களது சொந்த ஊருக்கு தன் குடும்பத்தைப்பாா்க்க, குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள என பல்வேறு காரணங்களுக்காகப் பயணிக்க வேண்டியுள்ளது. இப்படி தாறுமாறான கட்டணங்களை அனுமதித்தால் சாதாரண மக்கள் நிலைமை என்ன ஆவது?

தனியாா் ஆம்னி பேருந்துகளுக்கு நிகரான வசதியுடன் அரசுப் பேருந்துகளும் உள்ளன. இதனை எஸ்.இ.டி.சி என்ற பெயரில் அரசு போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. அந்த பேருந்துகளிலும் தனியாா் ஆம்னி பேருந்துகளைக் காட்டிலும் கட்டணம் குறைவே.

ஆனால் பல நகரங்களிலிருந்து சென்னை போன்ற பெருநகரங்களுக்கு விடப்படும் இவ்வகையான பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். தனியாா் ஆம்னி பேருந்து ஒரு நாளைக்கு ஒரு நகரத்திலிருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு பத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறபோது அதே நகரிலிருந்து எஸ்.இ.டி.சி எனும் அரசுப் பேருந்துகள் ஒன்று அல்லது இரண்டே இயக்கப்படுகிறது.

இப்படியே இவா்கள் நடந்து கொண்டால் அரசுப் பேருந்தின் வருமானத்தை எப்படி உயா்த்துவது? இது போக்குவரத்து கழகத்தின் பிரச்னையாகக் கூட இருக்கலாம். இது பற்றி நாம் கவலைப்படதேவையில்லை என்றாலும் ஒரு சாதாரண பயணியால் செலுத்த இயலாத அளவுக்கு பேருந்துக் கட்டணம் இருப்பதால் இது மக்களின் பிரச்னையாகிறது.

இன்னும் சொல்வதென்றால் தனியாா் ஆம்னி பேருந்துகள் அதிகமாக விடப்படும் சில நகரங்களுக்கு அரசு எஸ்.இ.டி.சி பேருந்து ஒன்று கூட இயக்காமல் இருப்பது மிகவும் ஆச்சரியமானது.

உதாரணத்திற்கு தினந்தோறும் கோவையிலிருந்து காரைக்குடிக்கும், காரைக்குடியிலிருந்து கோவைக்கும் 10 தனியாா் ஆம்னிபேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த வழித்தடத்தில் அரசு எஸ்.இ.டி.சி பேருந்து ஒன்று கூட இயக்கப்படல்லை.

கோவை நகரம் தொழில்துறைகள் நிறைந்த பெரிய நகரம். இங்கு வேறு நகரங்களிலிருந்து ஏராளமான தொழிலாளா்கள் வந்து பணி செய்கிறாா்கள். இது போன்று பல நகரங்களுக்கு அரசு சொகுசு எஸ்.இ.டி.சி. பேருந்துகள் இயக்கப்பட வேண்டியது அவசியம்.

தனியாா் ஆம்னி பேருந்து நிறுவனங்களின் வளா்ச்சிக்கே அரசுப் போக்குவரத்து நிா்வாகம் துணைநிற்பது போன்ற தோற்றமே மக்கள் மனதில் நிழலாடுகிறது. அதிகமான தனியாா் ஆம்னி சொகுசு பேருந்துகள் இயங்கக் கூடிய நகரங்களுக்கு அதற்கு இணையாக இல்லாவிடினும் சரிபாதி எண்ணிக்கையிலாவது எஸ்.இ.டி.சி அரசு பேருந்துகளை இயக்க அரசு நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு எஸ்.இ.டி.சி பேருந்துகள் இயங்காத நகரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் பண்டிகை நாட்களிலும், தொடா் விடுமுறை நாட்களிலும் மக்கள் அச்சமின்றி தங்கள் ஊா்களுக்குச் செல்ல முடியும்.

 



Read in source website

சித்த மருத்துவத்தின் பிறப்பிடம் தமிழ்நாடு. 1924 இல் நீதிக் கட்சி ஆட்சிக்காலத்தில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் இந்திய மருத்துவக் கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது. அந்தக் கல்லூரியில் சித்த மருத்துவம் கற்பிக்கப்பட்டது.

சித்த மருத்துவ முறை அரசின் அங்கீகாரத்தைப் பெற்ற ஒன்றாக மாறியதன் வரலாறு இங்கிருந்தே தொடங்குகிறது. 1965இல் காங்கிரஸ் ஆட்சியில், சித்த மருத்துவத்துக்கு எனத் தனிக் கல்லூரி பாளையங்கோட்டையில் முதன் முதலாக நிறுவப்பட்டது.

1969-70இல் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியிலிருந்து முதல் சித்த மருத்துவப் பட்டதாரிகள் வெளிவந்தபோது பொறியாளர்களுக்கு இணையான அங்கீகாரத்தை அவர்களுக்கு அன்றைய தி.மு.க. அரசு வழங்கியது. 1973இல் தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ அறிவியல் வளர்ச்சிக் குழுவைத் தோற்றுவித்தது.

தமிழ்நாடு அரசில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றினார். அவரது முயற்சிகளின் விளைவாகவே, சித்த மருத்துவம் ஆயுர்வேதத்தின் ஒரு பிரிவு அல்ல. அது தனி மருத்துவ முறை என்பதை மத்திய அரசு அங்கீகரித்தது.

1975க்குப் பிறகு, சித்த மருத்துவ ஆய்வுகளும், அறிவியல்ரீதியிலான முயற்சிகளும் நடைபெறத் தொடங்கின. சென்னை அரும்பாக்கத்தில் மருத்துவமனையுடன் இணைந்த சித்த மருத்துவக் கல்லூரியும் ஏற்படுத்தப்பட்டது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சித்த மருத்துவத்தை ஓர் அறிவியல் பிரிவாக ஏற்றுக்கொண்டது.

சித்த மருத்துவ அறிவியல் என்னும் அறிவியல் ஆய்வுத் துறையையும் அது உருவாக்கியது. இன்று அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்த மருத்துவத்துக்கு எனத் தனிப்பிரிவு உள்ளது. 2006இல் தமிழகத்தில் பெரும் வீரியத்துடன் சிக்குன் குன்யா பரவியபோது, அதைக் கட்டுக்குள் கொண்டுவர சித்த மருத்துவத்தின் நிலவேம்புக் குடிநீர் பயன்படுத்தப்பட்டது.

கரோனா பெருந்தொற்று காலத்தில், லேசான பாதிப்புகளைக் கொண்ட நோயாளிகளைக் குணப்படுத்துவதில் சித்த மருத்துவத்தின் கபசுரக் குடிநீர் ஆற்றிய பங்கு அனைவரும் அறிந்ததே. சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகளையும் மருந்துகளையும் அறிவியல் முறைசார்ந்த ஆய்வுகளுக்கு உட்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் இன்று பெருமளவில் ஊக்குவித்துவருகின்றன.



Read in source website

திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர்களுக்கான இடம், நாடக மரபிலிருந்து உருவானது. எந்த வழி யிலாவது பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பவர்கள் என்கிற மலிவான பார்வையே அவர்கள் மீது படிந்திருந்தது. அதை உடைத்து நொறுக்கிய ‘நகைச் சுவைப் போராளி’ கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

தான் நடித்த இரண்டாவது படத்திலேயே (சதி லீலாவதி-1935) நகைச்சுவைப் பகுதியை எழுதி, தனது தனி ஆவர்த்தனத்தைத் தொடங்கினார். கிராமிய மரபுக் கலைகளின் அசல் தன்மையைச் சிதைக்காமல், அவற்றை நகைச்சுவைப் பாடல் காட்சிகளுக்குப் பயன்படுத்தி, கிராமிய மரபுக் கலைகளுக்கு மரியாதை செய்தவர். திரையிலும் மேடையிலும் அவர் நடத்திக் காட்டிய கிந்தனார் கதா காலட்சேபம், வில்லுப்பாட்டு, லாவணிப் பாட்டு ஆகியவை பெரும் புகழ்பெற்றன.

நகைச்சுவை நடிப்பின் துணைகொண்டு மூடநம்பிக்கைகளை பார்வையாளர் மனம் புண்படாத வகையில் சாடினார். பகுத்தறிவு, அறிவியல் சிந்தனையை நகைச்சுவைப் பாடல்கள் மூலம் தூண்டினார்.

அவரது இந்தக் கலைப்பணியில் தொடக்கம் முதலே வழித் துணையாகவும் வாழ்க்கைத் துணையாகவும் பங்கு பெற்றவர் டி.ஏ. மதுரம். கலைவாணரும் மதுரமும் இணைந்து 102 படங்களில் நடித்து, 176 பாடல்களைப் பாடிச் சாதனை படைத்திருக்கிறார்கள்.

‘நல்லதம்பி’ படத்தில், தனக்குச் சொந்தமான நிலம் முழுவதையும் ஊரின் பொதுச் சொத்தாக மாற்றிவிடுவார். மக்கள் அனைவரையும் அந்த நிலத்தில் இறங்கி உழைக்க வருமாறு அழைப்பார். கூட்டுழைப்பில் விளைந்து நிற்கும் பயிரை ஒற்றுமையாக அறுவடைசெய்து பகிர்ந்துகொள்ளச் செய்தார்.

கிந்தனார் நாடகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியே முதல் தேவை என்று வலியுறுத்தினார். தீண்டாமையை எதிர்த்த அதே வேகத்துடன் மதுவை எதிர்த்தும் குரல் கொடுத்தார். பிரச்சாரமோ அறிவுரையோ செய்யாமல் கலைவாணர் திரையில் சீர்திருத்தம் செய்துகாட்டியபோது சினிமா நகைச்சுவை சிகரம் தொட்டது.

கலைவாணரின் இந்த வழியைப் பின்பற்றத் தொடங்கியபின் திரையுலகில் விவேக் அடைந்த வெற்றி உயர்வானது. காலம்காலமாக நகைச்சுவை நடிகர்கள் பலர் வந்துபோனாலும், காந்தியின் பக்தரான கலைவாணரின் இடம் யாராலும் நிரப்ப முடியாத ஒன்று.

- ஜெயந்தன்



Read in source website

கிரிக்கெட் உலகையே திகைக்க வைத்த நிகழ்வு 1983 ஆம் ஆண்டு நடந்தேறியது. ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் 1971 இல் தொடங்கிய காலகட்டத்திலிருந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற அணிகள்தாம் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தன.

டெஸ்ட் போட்டியில் நீண்ட பாரம்பரியம் கொண்ட அணியாக இந்தியா இருந்த போதிலும், தொடக்கக் கால ஒரு நாள் போட்டிகளில் இந்தியா கத்துக்குட்டி அணியாகவே கருதப்பட்டது.

முதல் இரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் (1975, 1979) மிக மோசமாகத் தோல்வியடைந்து இந்திய அணி வெளியேறியது. இந்த இரண்டு முறையும் மே.இ. தீவுகள் அணியே கோப்பையை வென்று ஆதிக்கத்தை நிலை நாட்டியிருந்தது.

1983 இல் நடைபெற்ற மூன்றாவது உலகக் கோப்பைப் போட்டியில் கபில்தேவ் தலைமையில் இளைஞர்களும் அனுபவஸ்தர்களும் கலந்த இந்திய அணி களமிறங்கியது.

அந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு மே.இ. தீவுகள் தகுதிபெற்று மூன்றாவது முறையும் உலகக் கோப்பையை வெல்லக் காத்திருந்தது. அந்தத் தொடரில் யாருமே எதிர்பார்த்திராத வகையில் இந்திய அணி முதன்முறையாக இறுதிப் போட்டி வரை முன்னேறி மற்ற அணிகளுக்கு அதிர்ச்சியளித்தது.

இறுதிப் போட்டியில் மே.இ.தீவுகள் அணியே வெல்லும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது. அதற்கேற்ப இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 183 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், குறைந்த ரன்களாக இருந்தாலும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்கிற திட்டமிடலோடு பந்துவீசக் களமிறங்கியது இந்திய அணி.

இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் மே.இ.தீவுகள் அணி 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நாட்டின் மூவண்ணக் கோடி உயரப் பறக்க, முதன்முறையாக இந்திய அணி உலகக் கோப்பையைக் கையில் ஏந்தியது.

கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் மகத்தான தடமாக இந்த நிகழ்வு பதிந்தது. உலகக் கோப்பையை வென்ற பிறகுதான் இந்தியாவில் கிரிக்கெட் அதிவேகமாக வளரத் தொடங்கியது என்பது வரலாறு.

- மிது



Read in source website

பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளில் மிகக் கொடூரமானது சதி என்னும் உடன்கட்டை ஏறுதல். மன்னராட்சி காலம் முதலே கைம்பெண்கள் சமூகத்துக்குச் சுமையாகக் கருதப்பட்டுவந்தனர்.

பதி பக்தியை நிரூபிக்கவும் கணவன் மீதான காதலின் வெளிப்பாடாகவும், கணவன் இறந்த பிறகு கணவனின் சிதையில் தாங்களும் வீழ்ந்து உயிர் துறப்பது அக்காலத்தில் பெண்களின் வழக்கமாக இருந்தது.

தொடக்கத்தில் சுயதேர்வின் அடிப்படையில் உயிர் துறந்த பெண்கள் பிறகு ‘சதி’ என்னும் சடங்கின் பெயரால் வலுக்கட்டாயமாகச் சிதையில் தள்ளிக் கொல்லப்பட்டனர்.

பொ.ஆ. (கி.பி.) 300 – 500களுக்குள் இந்த வழக்கம் தொடங்கப் பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் அக்பர், ஔரங்கசீப் இருவரும் ‘சதி’ வழக்கத்தை ஒழிக்க முயன்றனர். ஆனால், அது கைகூடவில்லை.

இந்தியாவில், குறிப்பாக ராஜபுத்திரர்களிடையே ‘சதி’ நடைமுறையில் இருந்தது. பெண் எப்போதும் தன் தூய்மையையும் புனிதத்தையும் நிரூபிக்க வேண்டியவள் என்பதன் வெளிப்பாடாகத்தான் ‘தூய்மை’ அல்லது ‘புனிதம்’ என்பதைக் குறிக்கும் ‘சதி’ என்னும் சொல்லால் இந்த வழக்கம் அழைக்கப்பட்டது.

வீரத்தின் அடையாளமாக நடுகற்கள் நடப்பட்டதைப் போல், சதி வழக்கத்தின் அடையாளமாக ‘சதி கற்கள்’ அமைக்கப்பட்டன. மேல் நோக்கி அபயக்குரல் எழுப்புவதைப் போன்று தோற்றமளிக்கும் கை, ‘சதி பீட’த்தில் இடம்பெற்றிருக்கும். சிவன் மீதான தன் காதலின் தீவிரத்தைத் தன் தந்தைக்கு உணர்த்தத் தன்னையே தீயிலிட்டுச் சாம்பலாக்கிக் கொண்ட தாட்சாயணி, சதி வழக்கத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறார்.

அதனாலேயே ‘சதி’யால் கொல்லப்படும் பெண்கள் ‘சதி மாதா’வாகவும் ‘சதி தேவி’யாகவும் வணங்கப்பட்டனர். அவர்கள் நினைவாகச் சிறுகோயில் எழுப்பப்படுவதும் உண்டு. கௌரவத்தின் பெயரால் கொல்லப்படும் பெண்களுக்குத் தெய்வ அடையாளம் கொடுக்கும் வழக்கத்தின் தொடர்ச்சிதான் இது.

பிரிட்டிஷ் இந்தியாவில் சமூக சீர்த்திருத்த இயக்கங்கள் பரவலான காலத்தில் ராஜா ராம் மோகன்ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் போன்றோர் ‘சதி’ கொடுமைக்கு எதிராகவும் குழந்தைத் திருமணத்துக்கு எதிராகவும் குரல்கொடுத்தனர்.

அதன் விளைவாக சதி ஒழிப்புச் சட்டத்தை அப்போதைய பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் முன்னெடுப்பால் வங்க மாகாண அரசால் 1829 இல் அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகும் சதி வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டதால், சதிச் சடங்கை நடத்துபவர் தூக்கிலிடப்படுவார் என்று சார்லஸ் நேப்பியர் 1850இல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு சதி பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பிறகு பெண்கள் ஓரளவுக்குக் கல்வியும் பொருளாதர வளர்ச்சியும் பெற்றுவந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் தியோரலா கிராமத்தைச் சேர்ந்த 18 வயது ரூப் கன்வர் 1987இல் ‘சதி’ வழக்கத்துக்குப் பலிகொடுக்கப்பட்டார்.

திருமணமாகி எட்டு மாதங்கள் ஆன நிலையில் ரூப் கன்வரின் கணவர் இறந்துவிட, கணவரது சிதையில் ரூப் கன்வர் எரிக்கப்பட்டது இந்தியாவையே உலுக்கியது.

ரூப் கன்வர் தன்னிச்சையாகத்தான் சிதையில் இறங்கினார் என்றும் வலுக்கட்டாயமாகத் தீயில் தள்ளப்பட்டார் என்றும் இருவேறு கருத்துகள் சொல்லப்பட்டன.

முன்னேற்றப் பாதையில் நாடு சென்றுகொண்டிருந்த நிலையில் மூட நம்பிக்கையின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அந்தக் கொடூரம், மக்கள் மனங்களில் குடியிருக்கும் அறியாமையையும் பெண்ணடிமைத்தனத்தையும் பறைசாற்றியது. ரூப் கன்வரின் மரணத்துக்குப் பிறகு சதி தடுப்புச் சட்டம் 1987இல் இயற்றப்பட்டது.

- ப்ரதிமா



Read in source website

கட்டிட வடிவமைப்பில் தனித்துவத்தை யும், வளம் மிகுந்த பாரம்பரியத்தையும் இந்தியா கொண்டிருக்கிறது. இவற்றுடன் நவீனத்தையும் சுதந்திரத்திற்குப் பிந்தைய கட்டிடங்கள் சுவீகரித்துக்கொண்டுள்ளன. அத்தகைய கட்டிடங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சில:

தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, சென்னை

சென்னை அண்ணா சாலை ஓமந் தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்து்ள இந்தக் கட்டிடத்தை பெர்லினைச் சேர்ந்த கட்டிடக்கலை வல்லுநர் ஹுயுபெர்ட் நீன்ஹாஃப் வடிவமைத்துள்ளார். தலைமைச் செயலகத்துக்காகக் கட்டப்பட்ட இந்த வளாகம், 2011இல் தமிழ் நாட்டில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், தமிழ் நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

சைபர்டெக்சர் முட்டை, மும்பை

13 மாடிகள் கொண்ட வணிக அடுக்குமாடிக் கட்டிடம் இது. நம்பமுடியாத தோற்றமுடைய இதன் கட்டமைப்பை ஜேம்ஸ் லா எனும் கட்டிடக் கலைஞர் வடிவமைத்தார். முட்டை வடிவத்தைப் போலிருக்கும் இந்தக் கட்டிடத்தின் புதுமையான வடிவமைப்பு பார்த்தவுடன் பிரமிப்பில் ஆழ்த்தும்.

விதான சௌதா, பெங்களூரு

பெங்களூருவிலிருக்கும் இந்தக் கட்டிடம் நவீன திராவிட கட்டிடக் கலையின் நிகழ்கால அதிசயம். இடைக்கால சாளுக்கியர், ஹொய்சாளர், விஜயநகரப் பேரரசு ஆகியவற்றின் முதன்மைக் கூறுகளை இந்தக் கட்டிடம் கொண்டிருக்கிறது. 1956இல் கட்டப்பட்ட இதுவே கர்நாடக மாநில சட்டமன்றம்.

லோட்டஸ் டெம்பிள், டெல்லி

சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் லோட்டஸ் டெம்பிள் அமைதியும் அழகும் நிரம்பியது. பஹாய் மதத்தினரின் வழிப்பாட்டு தலமான இந்தக் கோயில் வெள்ளை நிறத்தில், தாமரை மலரின் வடிவத்தில் அமைந்துள்ளது. 1986இல் இதை வடிவமைத்தவர் கட்டிடக் கலைஞர் ஃபரிபோர்ஸ் சாஹ்பா.

தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம், டெல்லி

கட்டிடக் கலைஞர் குல்தீப் சிங் 1980இல் வடிவமைத்த இந்தக் கட்டிடம், புதுமையான ஸிக்ஸாக் வடிவத்துடன் கண்ணைக் கவர்ந்து புத்துணர்வூட்டக்கூடியது. இடைப்பட்ட பகுதிகளில் காற்றோட்டம் மிகுந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தில் இயற்கையாகவே குளுமை நிலவும்.

வள்ளுவர் கோட்டம், சென்னை

திருவள்ளுவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச்சின்னமே வள்ளுவர் கோட்டம். 1975இல் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கட்டிப்பட்டது. திருவாரூர் தேரைப் போன்று செதுக்கப்பட்டிருக்கும் கல் தேர், வள்ளுவர் கோட்டத்தின் மையப்பகுதியாக உள்ளது. கோட்டத்தின் மேல்தளமான வேயா மாடத்தில் கருங்கல்லில் செதுக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை உயிரோட்டமாக நிறுவப்பட்டுள்ளது.

ஆரோவில் டோம்

உலகப் பிரசித்திபெற்ற இந்தக் குவிமாடம் 1971இல் கட்டப்படத் தொடங்கி, 2008இல்தான் முடிந்தது. மாத்ரி மந்திர் என அழைக்கப்படும் இந்தக் குவிமாடம் அன்னையின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. ரோஜர் ஆங்கர் எனும் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் இதனை வடிவமைத்தார்.

வளர்ச்சி ஆராய்ச்சி மையம், திருவனந்தபுரம்

இந்தியாவின் மரபார்ந்த கட்டிடக் கலைக்குப் புத்துயிர் அளித்தவர் லாரி பேக்கர், குறைந்த செலவில் வலுவான கட்டிடங்களை வடிவமைத்ததற்காகப் போற்றப்படுகிறார். 1971இல் பேக்கர் வடிவமைப்பில் திருவனந்தபுரத்தில் வளர்ச்சி ஆராய்ச்சி மையம் கட்டப் பட்டது. உள்ளூர் மூலப்பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மங்களூர் ஓடுகளைக் அவர் பயன்படுத்தி யுள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

அகமதாபாத் குகைக் கூடம்

இந்தியக் கட்டிடக் கலையின் முன்னோடி பி.வி.தோஷி. இவர், சண்டிகரை வடிவமைத்த பிரெஞ்சுக் கட்டிடக் கலைஞர் லே கார்பூசியேவின் மாணவர். அகமதாபாத் குகை என அழைக்கப்படும் அவர் வடிவமைத்த இந்தக் கட்டிடம் இந்திய நவீன கட்டிடக் கலைக்கான சான்று.
காந்தி பவன், சண்டிகர்

பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள காந்தி பவன் 1962இல் திறக்கப்பட்டது. நீரில் மிதக்கும் மலரைப் போன்றிருக்கும் இதை சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் பியர் ஜீன்னெரட் வடிவமைத்துள்ளார்.



Read in source website