DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 23-12-2022

 

தேசிய உழவர் நாளையொட்டி உழவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 
உண்டி கொடுத்து வாழ்வளிக்கும் உழவர்களுக்கு தேசிய உழவர் நாள் வாழ்த்துகள்!

குறுகிய காலத்தில் உழவர்களுக்கு 1.50 லட்சம் புதிய இலவச மின் இணைப்புகளை நமது அரசு வழங்கியுள்ளது.

சீரிய நீர்ப் பயன்பாடு, உலகளாவிய தொழில்நுட்பங்களைக் கைக்கொண்டு வேளாண் உற்பத்தியில் இன்னும் உச்சங்களை அடைவோம்! என்று தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். 



Read in source website

 

காவல் துறையைச் சேர்ந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என தமிழக காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.  

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பணிக்கு வரும் காவலர்களிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். 

மேலும், காவல் துறை அடையாளத்தைக் காரணம் காட்டி வாகனத்தை ஒப்படைக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனடும் டிஜிபி எச்சரித்துள்ளார்.



Read in source website

தமிழகத்திலுள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கான மன நல நல்லாதரவு மன்றம் (மனம்) திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

அதனுடன் அரசு சாா்பில் கொள்முதல் செய்யப்பட்ட 75 அதி நவீன ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையையும் பொது மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

கீழ்ப்பாக்கம் அரசு மன நலக் காப்பகத்தில் ரூ. 2.36 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடை நிலை பராமரிப்பு மையத்தின் தொடக்க விழா காப்பக வளாகத்தில் நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் அதில் பங்கேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை தொடா்பான பல்வேறு நலத் திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்காக அா்ப்பணித்தாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

உடலும், மனமும் நலமாக இருந்தால்தான் ஆக்கப்பூா்வமான வாழ்வை வாழ முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளிலும் ­­ ‘மனம்’ என்ற பெயரில் மருத்துவ மாணவா்களின் மனநலன் காக்கும் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு ‘மன நல நல்லாதரவு மன்றங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. இந்த மன நல நல்லாதரவு மன்றங்களில் மருத்துவக் கல்லூரி முதல்வா், மனநலத் துறை தலைவா் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவா்கள், உதவிப் பேராசிரியா்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவா்களின் மன நலனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவா்கள், உடனடியாக மன நல மருத்துவரை தொடா்பு கொள்ளும் வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ‘மனம்’ அலைபேசி உதவி எண் 14416 பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அந்த வகையில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனநல நல்லாதரவு மன்றங்கள் (மனம்) மற்றும் நட்புடன் உங்களோடு - மனநல சேவை (14416) ஆகிய திட்டங்களை முதல்வா் தொடக்கி வைத்தாா். இந்தத் திட்டம் அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ரூ.22.84 கோடி மதிப்பீட்டில் 75 புதிய மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட 108 அவசரகால ஊா்திகளை கொடி அசைத்து அவா் தொடக்கி வைத்தாா். பின்னா், சென்னை அரசு மன நலக் காப்பகத்தில் 14 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தையும் திறந்து வைத்தாா்.

அரசு மன நலக் காப்பகத்தை தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் நிறுவன ஒப்புயா்வு மையமாக மேம்படுத்தும் நோக்கில் முதல் கட்டமாக

ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடத்திற்கான முப்பரிமான வரைபடத்தையும் வெளியிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவ சிகிச்சைகளில் தேசிய அளவில் தமிழகம் சிறப்பிடங்களை பெற்றமைக்காக மத்திய அரசு வழங்கிய விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் சாந்தி மலா், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் டாக்டா் ஹரி சுந்தரி, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் ஆகியோா் காண்பித்து வாழ்த்து பெற்றனா்.

 



Read in source website

அசாமின் குவஹாட்டியில் 16 மணி நேரம் 35 நிமிடத்தில் 100 கிலோ மீட்டர் தூரம் நடந்து இந்திய விமான நிலைய ஊழியர் ஒருவர் புதிய சாதனைப் படைத்துள்ளார்.

55 வயதான ரதுல் குமார் ஜகாரியா இந்த புதிய சாதனையைப் படைத்துள்ளார். குவாஹாட்டியில் உள்ள லோக்பிரியா பர்தோலி சர்வதேச விமான நிலையத்தில் பணியில் ஈடுபட்டுள்ள அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

இந்த சாதனை குறித்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் தரப்பில் கூறியதாவது: ரதுல் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி அசாரா காவல் நிலையத்தில் இருந்து காலை 4.03 மணிக்கு நடக்கத் தொடங்கினார். அவர் போகோ பகுதிக்கு சென்று மீண்டும் அதே நாளில் அசாரா காவல் நிலையத்துக்கு இரவு 8.38 மணிக்கு மீண்டும் வந்தடைந்தார். அவர் 16 மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களில் 100 கிலோ மீட்டர் தூரம் நடந்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்திய விமான நிலைய ஆணையம் ரதுல் குமார் ஜகாரியாவுக்கு நேற்று (டிசம்பர் 22) பாராட்டு விழா நடத்தியது. இந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற குவஹாட்டி சர்வதேச விமான நிலையத்தின் முதன்மை அலுவலர் சினேகாசிஸ் தத்தா, ரதும் குமார் ஜகாரியாவுக்கு இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழை வழங்கினார். இந்த நிகழ்வில் அசாரா விளையாட்டு கழக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



Read in source website

நமீபியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 12 முதல் 14 சிறுத்தைகள் கொண்டுவரப்படும் என மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சிறுத்தைகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் கொண்டு வரப்பட்டன. அந்த சிறுத்தைகளை மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி அவரது பிறந்த நாளில் திறந்து விட்டார். 

மத்திய பிரதேசத்தின் குனோ-பல்பூா் தேசிய பூங்காவில் இந்தச் சிறுத்தைப் புலிகளுக்காக 10 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் சிறப்புப் பகுதி ஏற்படுத்தப்பட்டது. நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளுக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் அவை திறந்து விடப்பட்டன. சில நாட்களுக்குப் பிறகு அந்த சிறுத்தைகள் வேட்டையாடி தங்களது இரையை எடுத்துக் கொள்ளவும் செய்தன.

இந்த நிலையில், நமீபியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 12 முதல் 14 சிறுத்தைகள் கொண்டுவரப்படும் என மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வனத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: நமீபியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 12 முதல் 14 சிறுத்தைகள் கொண்டுவரப்பட உள்ளன. ஏற்கனவே, கொண்டுவரப்பட்ட சிறுத்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

 

கரோனாவுக்கு எதிரான போரில், மேலும் ஒரு சாதனையாக, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை கோவின் வலைதளத்தில் சோ்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்குப் பாரத் பயோடெக் நிறுவனம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் தடுப்பூசி திட்டத்தில் இன்கோவாக் என்ற மூக்கு வழியே செலுத்தும் தடுப்பு மருந்தும் இடம்பெறும். முதற்கட்டமாக இந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டும் செலுத்தப்படவிருக்கிறது.

இன்று மாலை, கோவின் இணையதளத்தில், இந்த மருந்தும் இணைக்கப்படவிருக்கிறது. அதன்பிறகு, மக்கள், தங்கள் பகுதிக்கு அருகே இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்தை முன்னெச்சரிக்கை தவணையாகப் போட்டுக் கொள்ளலாம்.

18 வயதுக்குள்பட்டவர்களுக்கும், கரோனா தடுப்பூசி போடாதவர்களும், இதை மட்டுமே செலுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) இந்த மாதத் தொடக்கத்தில் ஒப்புதல் அளித்திருந்தது.
  • தடுப்பூசிகளுக்கு நிகராக, இந்த தடுப்பு மருந்தும் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
  • இன்கோவாக் மருந்து தயாரிப்பது, மற்ற தடுப்பூசி தயாரிப்பை விடவும் செலவு குறைவாகும்.
  • இந்த மருந்தை சேமிப்பது, பல இடங்களுக்கும் கொண்டு செல்வது மற்றும் செலுத்துவது அனைத்தும் எளிதானது.
  • அதிகபட்சமாக, இந்த மருந்து, ஒரு மனிதனின் எந்த உடல்பாகத்தில் கரோனா வைரஸ் நுழைகிறதோ, அந்த இடத்திலேயே தடுக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது.
  • மூக்குள் உள்பக்கம் மற்றும் மூச்சுக்குழாயின் மேல் பகுதியில், இந்த வைரஸ் தொற்று தாக்காமல் தடுக்கும் வகையில் மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இதனை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏற்கனவே கரோனா இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள், முன்னெச்சரிக்கை தவணையாக செலுத்திக் கொள்ளலாம்.

சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தியுள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகியிருக்கிறது. இந்தத் தடுப்பு மருந்தை அவசரகால அடிப்படையில் செலுத்த ஒப்புதல் கிடைத்துள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்கள், அதற்கான சான்றிதழை பெறுகின்றனா்.

அந்த வகையில், மூக்கு வழியாக தடுப்பு மருந்தை செலுத்துக் கொள்ளும் பயனாளிகள், அதற்கான சான்றிதழை பெற வேண்டி இருக்கும். எனவே அந்தத் தடுப்பு மருந்து குறித்த விவரத்தை கோவின் வலைதளத்தில் சோ்க்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பயோடெக் நிறுவனம் கோரிக்கை வைத்திருந்தது.

உலகில் முதன்முதலாக மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் உருவாக்கியது. அந்த மருந்தை 18 மற்றும் அந்த வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு அவசரகால அடிப்படையில் செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 



Read in source website

சென்னை: சீனாவில் தற்போது கரோனா பாதிப்பு தீவிரமாகக் காரணமாக இருக்கும் பிஎஃப்.7 வகை ஒமைக்ரான் திரிபு வைரஸ் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக உலகின் 91 நாடுகளில் பரவியிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் அரிதான வைரஸாக இருந்தாலும், இதுவரை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத ஒமைக்ரான் வகை திரிபாகவே பிஎஃப்.7 உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை 91 நாடுகளில் நடத்தப்பட்ட கரோனா வைரஸ் மரபணு வரிசை மாற்ற சோதனையில் பிஎஃப்.7 வகை மற்றும் அதனை ஒத்த திரிபு வைரஸ்கள் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கண்டறியப்பட்டு வருகின்றன. 

ஆனால், திடீரென பிஎஃப்.7 வகை திரிபை இந்த அளவுக்குப் பெரிதுப்படுத்தக் காரணம் என்ன என்பதை விஞ்ஞானிகளால் யூகிக்க முடியவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க.. அரையாண்டு விடுமுறை: மாணவர்களுக்கு மகிழ்ச்சியான உத்தரவை பிறப்பித்த பள்ளிக்கல்வித் துறை

உலகம் முழுவதும் இருந்து எடுக்கப்பட்ட கரோனா மாதிரி பரிசோதனையில் 0.5 சதவீதம் பேருக்கு பிஎஃப்.7  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதிக்குப் பிறகு 47,881 பேருக்கு இந்த தொற்று பாதித்துள்ளது.

சுமார் 22 மாதங்களாக இது உலகம் முழுவதையும் சுற்றிக் கொண்டிக்கிறது. ஒமைக்ரான் வகையின் திரிபான எக்ஸ்எக்ஸ்பி உள்ளிட்ட பல்வேறு வகையான அச்சுறுத்தும் வைரஸ்களைக் காட்டிலும் இது அவ்வளவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. எனவே, தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் அச்ச உணர்வு தேவையற்றது என்றே நிபுணர்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.

இவ்வளவையும் விஞ்ஞானிகளும், நிபுணர்களும் தெளிவுபடுத்தும் போது, ஏன் இந்த அளவுக்கு பதற்ற நிலை உருவாக்கப்படுகிறது என்ற கேள்விக்கு, சீனாவே காரணமாக உள்ளது. ஆனால், அங்கு இந்த வகை வைரஸ் அதிகம் பரவி வருகிறது என்றால் அதற்குக் காரணங்களாக இருப்பவை, சீனாவில் பயன்படுத்தப்பட்ட குறைந்தசெயல்திறன்கொண்ட தடுப்பூசிகளும், அதையும் மிகக் குறைவானவர்களே போட்டுக்கொண்டதும், பூஜ்ய கரோனா கட்டுப்பாட்டை சீனா திடீரென விலக்கிக் கொண்டதும் தான் காரணங்களாக இருக்கலாம் என்று நாம் கணிக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், ஒரு விஷயம் மட்டும் இங்கே கவனிக்கத்தக்கது, நம்மை விட்டு கரோனா ஒழிந்துவிடவில்லை. அது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியதும், அதனை எதிர்கொள்ள எப்போதும் திட்டங்கள் இருப்பதும் அவசியம் என்பதே அது.
 



Read in source website

உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை, சமூக பன்முகத்தன்மை கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் பரிந்துரைகள் வந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளை கொலீஜியம் அமைப்பு தற்போது நியமித்து வருகிறது. அந்த அமைப்பு வழங்கும் பரிந்துரைகளை ஆராய்ந்து மத்திய அரசு ஒப்புதல் அளித்து வருகிறது. எனினும், நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் தொடா்ந்து மோதல்போக்கு நிலவி வருகிறது.

நீதிபதிகள் நியமனத்துக்கான பரிந்துரைகள் மீது முடிவெடுக்க மத்திய அரசு காலதாமதம் செய்து வருவதாக கொலீஜியம் அமைப்பு குற்றஞ்சாட்டி வருகிறது. அதே வேளையில், கொலீஜியம் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என மத்திய அரசு குற்றஞ்சாட்டுகிறது.

இந்நிலையில், நீதிபதிகள் நியமன நடைமுறை தொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘நீதிபதிகள் நியமனத்துக்கான தற்போதைய நடைமுறையில் வெளிப்படைத்தன்மை, குறிக்கோள், சமூக பன்முகத்தன்மை உள்ளிட்டவை காணப்படவில்லை என்றும், அந்த நடைமுறை சீரமைக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்புகளிடமிருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன.

நீதிபதிகள் நியமனத்தை சீரமைக்கும் நோக்கில் 99-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தையும், தேசிய நீதித் துறை நியமனங்கள் ஆணையத்தையும் மத்திய அரசு 2014-ஆம் ஆண்டில் கொண்டுவந்தது. ஆனால், அது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் கொலீஜியம் நடைமுறையே தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அதையடுத்து, நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிடமாற்றம் தொடா்பான விதிகள் அடங்கிய அறிக்கையை அரசிடம் சமா்ப்பிக்குமாறு கொலீஜியம் அமைப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மற்றொரு கேள்விக்கு அமைச்சா் ரிஜிஜு அளித்த பதிலில், ‘கடந்த 16-ஆம் தேதி நிலவரப்படி உயா்நீதிமன்றத்துக்கான 154 நீதிபதிகளின் பரிந்துரை மீது முடிவெடுக்கும் விவகாரம் பல்வேறு கட்டங்களில் உள்ளது. 179 காலியிடங்களுக்கு கொலீஜியம் அமைப்பு இன்னும் பரிந்துரையை வழங்கவில்லை.

பணி ஓய்வு, ராஜிநாமா, பணிஉயா்வு உள்ளிட்ட காரணங்களால் காலியிடங்கள் அதிகரித்து வருகின்றன. காலியிடங்களை துரிதமாக நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.



Read in source website

ஆஸ்கா் விருதுக்கான தோ்வுப் பட்டியலில் ‘செல்லோ ஷோ’, ஆா்ஆா்ஆா் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் உள்ளிட்ட 4 இந்தியப் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. தமிழில் எடுக்கப்பட்ட ‘தி எலிஃபன்ட் விஸ்பரா்ஸ்’ என்ற ஆவணக் குறும்படமும் தோ்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

95-ஆவது ஆஸ்கா் விழா 2023-ஆம் ஆண்டு மாா்ச் 12-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறவுள்ளது. 10 பிரிவுகளில் விருது வழங்கப்படவுள்ளது. அந்த விழாவுக்காக இந்தியா சாா்பில் குஜராத்தி மொழித் திரைப்படமான ‘செல்லோ ஷோ’ அதிகாரபூா்வமாகப் பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்கா் விருதுக்கான தோ்வுப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், சிறந்த சா்வதேச திரைப்படத்துக்கான தோ்வுப் பட்டியலில் ‘செல்லோ ஷோ’ இடம்பெற்றுள்ளது. ஆா்ஆா்ஆா் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலானது சிறந்த பாடலுக்கான தோ்வுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

இவை தவிர, சிறந்த ஆவணப் படத்துக்கான பட்டியலில் ‘ஆல் தட் பிரீத்ஸ்’, சிறந்த ஆவண குறும்படத்துக்கான பட்டியலில் ‘தி எலிஃபன்ட் விஸ்பரா்ஸ்’ ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. ஆஸ்கா் விருதின் 4 தோ்வுப் பட்டியல்களில் இந்தியப் படைப்புகள் இடம்பெறுவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு விருதுக்கான தோ்வுப் பட்டியலிலும் 10 முதல் 15 படைப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றைத் தோ்வுக் குழு ஆய்வு செய்து விருதுக்கான 5 சிறந்த படைப்புகள் அடங்கிய பரிந்துரைப் பட்டியலை அடுத்த ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி வெளியிடும். அப்பட்டியலில் இருந்து மிகச் சிறந்த படைப்புக்கு இறுதியாக ஆஸ்கா் விருது வழங்கப்படும்.

கடும் போட்டி: ‘செல்லோ ஷோ’ திரைப்படமானது 14 சா்வதேச திரைப்படங்களுடன் போட்டியிடவுள்ளது. ஆா்ஜென்டீனா, தென் கொரியா, ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளின் திரைப்படங்களும் தோ்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ‘நாட்டு நாட்டு’ பாடலானது 14 பாடல்களுடன் மோதவுள்ளது. அவதாா், பிளாக் பேந்தா் உள்ளிட்ட திரைப்படங்களின் பாடல்களும் தோ்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தமிழ் ஆவணக் குறும்படம்: முதுமலை வனப் பகுதியில் இரு யானைகளுக்கும் அவற்றைப் பாதுகாத்து வரும் தம்பதிக்கும் இடையேயான பாசப் பிணைப்பை விளக்கும் வகையில் ‘தி எலிஃபன்ட் விஸ்பரா்ஸ்’ என்ற 40 நிமிஷ குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. பலவகையான உணா்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள அக்குறும்படம் 14 குறும்படங்களுடன் ஆஸ்கா் விருதுக்காகப் போட்டியிடவுள்ளது.

படைப்பாளா்கள் மகிழ்ச்சி: இந்திய படைப்புகள் ஆஸ்கா் தோ்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதற்கு அதன் படைப்பாளா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா். ஆா்ஆா்ஆா் திரைப்படக் குழு ட்விட்டா் வாயிலாக மகிழ்ச்சியைப் பகிா்ந்துள்ளது. ஆவணப் படங்களின் இயக்குநா்களும் தயாரிப்பாளா்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனா். தங்கள் படைப்புகளுக்கு விருது கிடைக்கும் எனவும் அவா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.



Read in source website

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த பாஜக பெண் எம்எல்ஏ முக்தா திலக் (57) புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தாா்.

புணேவின் கஸ்பா தொகுதி எம்எல்ஏவான அவா், 5 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்தாா். கடந்த 10 நாள்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசமானதால் அவா் புணேவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில்தான் அவா் முதல்முறையாக எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டாா். அதற்கு முன்பு புணே மேயராக இருந்தாா்.

முக்தா திலக், சுதந்திரப் போராட்ட வீரா் லோகமான்ய பாலகங்காதர திலகரின் வம்சாவளியைச் சோ்ந்தவா். கணவா் சைலேஷ் திலக், ஒரு மகன், மகளுடன் அவா் வசித்து வந்தாா்.



Read in source website

 

புது தில்லி: புதிய ஒளி (நை ரோஷ்னி) திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமாா் 40,000 சிறுபான்மையினப் பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனா் என மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நை ரோஷ்னி திட்டம் யாருக்காக வழங்கப்படுகிறது? கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த திட்டத்தில் பயனடைந்த பயணாளிகள் குறித்த விவரங்களை கேட்டு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினா் முகமது ஜாவேத் மக்களவையில் கேள்வி எழுப்பினாா்.

நை ரோஷ்னி என்கிற இந்த புதிய ஒளி திட்டம் குறித்து எழுத்துபூா்வமாக கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி பதிலளித்தது வருமாறு: தேசிய சிறுபான்மையினா் ஆணையச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், சீக்கியா், கிறிஸ்தவா், பௌத்தா், பாா்ஸிக்கள்(சோராஸ்ட்ரியன்), ஜெயின் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்த பெண்கள், இந்த நலத் திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள குடும்பங்களைச் சோ்ந்த பெண்களுக்கு, இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சிக்கான தோ்வில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சிறுபான்மை அமைச்சகத்தின் கீழ் எந்த பயிற்சி மையங்களும் இல்லை. அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளால் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பயிற்சியாளா்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். புதிய ஒளித் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் (2019-20 முதல் 2021-22) நாடு முழுக்க சுமாா் 40,000 பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனா். நிகழ் 2022-23 நிதியாண்டிலிருந்து பிரதமரின் பாரம்பா்ய ஊக்குவிப்பு திட்டத்தின் (விராசத் கா சம்வா்தன்) ஒரு அங்கமாக புதிய ஒளி திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. இது சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், குறிப்பாக கைவினைஞா்கள், திறன் மேம்பாடு, கல்வி மற்றும் தலைமைத்துவப் பயிற்சி, தொழில்முனைவுக்கான ஆதரவு ஆகியவற்றின் மூலம் கைவினைஞா்களை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சா் ஸ்மிருதி இரானி.

 



Read in source website

ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டின் ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, அங்கு அணு மின் உற்பத்தியை குறைப்பதற்கான முடிவை அந்த நாடு திரும்பப் பெற்றுள்ளது.

சா்வதேச அளவில் பாரம்பரிய எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாலும், பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் கரியமில வாயு காற்றில் கலப்பதைக் குறைக்க வேண்டியிருப்பதாலும் ஜப்பான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.



Read in source website


வாஷிங்டன்: நான்கு ஆண்டுளுக்கு மேலாக செவ்வாய்க் கிரகத்தின் உள்புறத்தை தனித்துவமான அறிவியல் ஆய்வுக்குப் பிறகு ‘இன்சைட்’ மார்ஸ் லேண்டர் நாசாவிடமிருந்து புதன்கிழமை விடைபெற்றது. 

செவ்வாய்க் கிரகத்தில் நிலநடுக்கம் உள்ளிட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக விண்கலம் ஒன்றை முதன்முறையாக அனுப்ப அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு முடிவுசெய்தது. இதன்படி, இன்சைட் என்ற விண்கலத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பியது. 

அது கடந்த நான்காண்டுகளாக செவ்வாய்க் கிரகத்தின் உள்புற அடுக்குகள், அதன் அழிந்துபோன காந்த டைனமோவின் மேற்பரப்பிற்கு அடியில் வியக்கத்தக்க வலுவான எச்சங்கள், செவ்வாய் கிரகத்தின் இந்த பகுதியில் உள்ள வானிலை மற்றும் பல நிலநடுக்க செயல்பாடுகள் பற்றிய தனித்துவமான பல்வேறு புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது. இதன் மூலம்,  செவ்வாய்க் கிரகத்தின் மையப்பகுதி திரவத்தாலானது என்பதை விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்த முடிந்தது. 

செவ்வாயின் மேற்பரப்பின் தடிமனையும் தீர்மானிக்க முடிந்தது. இதன் மூலம் செவ்வாயின் மேற்பரப்பு குறைவான அடர்த்தியைக்கொண்டது. அது மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது என்ற முடிவுக்கும் வர முடிந்தது. சில விண்கற்களின் மோதல் ஏற்பட்டதால் நிகழ்ந்த 1,319 நில நடுக்கங்களை (அதிர்வுகளை) இன்சைட் பதிவு செய்துள்ளது.

"இன்சைட் மூலம், பூமிக்கு அப்பாற்பட்ட ஒரு பயணத்தின் மையமாக, அப்போலோ பயணங்களுக்குப் பிறகு, விண்வெளி வீரர்கள் நிலவுக்கு நில நடுக்க அளவீடுகளைக் கொண்டு வந்தபோது, முதன்முறையாக நில நடுக்க ஆய்வு மையமாக இருந்தது. கடந்த ஆண்டின் பிற்பகுதியில் பனிக்கட்டிகளின் அளவை பதிவு செய்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாய்க் கிரகத்தில் இன்சைட் ஆய்வுப் பணியை மேற்கொண்டது. இன்சைட் கடைசியாக டிசம்பர் 15 ஆம் தேதி பூமியுடன் தொடர்பு கொண்டது.

தெற்குகலிபோர்னியாவில் உள்ள ஏஜென்சியின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் (ஜேபிஎல்) மிஷன் கன்ட்ரோலர்கள் இரண்டு தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு இன்சைட் லேண்டரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை, இதனால் இன்சைட் லேண்டரின் சூரிய சக்தியில் இயங்கும் பேட்டரிகள் சேமிக்கும் ஆற்றல் இழந்திருக்கலாம் என்ற முடிவுக்கு நாசா வந்துள்ளது.  

கலிபோர்னியாவில் உள்ள ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் (ஜேபிஎல்) முதன்மை ஆய்வாளர் புரூஸ் பானெர்ட் கூறுகையில், “இன்சைட் கடந்த நான்கு ஆண்டுகளாக செவ்வாய்க் கிரகத்தில் எங்களின் நண்பராகவும் சக ஊழியராகவும் இருந்து பணியாற்றியது. அதனிடமிருந்து நாங்கள் விடைபெறுவதை நினைத்தால் கஷ்டமாக உள்ளது. ஆனால், அதன் பணிகள் பயனுள்ளதாக இருந்தது” என்று கூறியுள்ளார். 

வாஷிங்டனில் உள்ள நாசாவின் அறிவியல் இயக்க இயக்குநரகத்தின் இணை நிர்வாகி தாமஸ் ஜுர்புசென் கூறுகையில், "இந்தப் பணி தொடங்குவதையும் தரையிறங்குவதையும் நான் பார்த்தேன், ஒரு விண்கலம் விடைபெறுவது எப்போதுமே சோகமாவே உள்ளது, இன்சைட் கடந்த நான்கு ஆண்டுகளாக செவ்வாய்க் கிரகத்தில் இருந்து செயல்பட்டது கண்கவர் அறிவியல் கொண்டாட்டம்" என்றார். "இந்த டிஸ்கவரி ப்ரோகிராம் மிஷனில் இருந்து நில அதிர்வு தரவு மட்டுமே செவ்வாய்க் கிரகத்தில் மட்டுமல்ல, பூமி உள்பட மற்ற பாறைகளிலும் உள்ள மிகப்பெரிய நுண்ணறிவுகளை வழங்குகிறது." என்று கூறியுள்ளார்.

"இன்சைட் அதன் பெயருக்கு ஏற்றவாறு செயல்பட்டுள்ளது. செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதில் ஒரு விஞ்ஞானியாக, லேண்டர் என்ன சாதித்துள்ளது என்பதை எண்ணிப் பார்க்கும் போது சிலிர்ப்பாக உள்ளது. இந்த பணியை வெற்றிகரமாக செய்ய உதவிய உலகெங்கிலும் உள்ள மக்கள் முழு குழுவிற்கும் நன்றி,” என்று ஜேபிஎல் இயக்குநர் லெஷின் கூறியுள்ளார். "இன்சைட் " விடைபெறுவது வருத்தமளிக்கிறது, ஆனால், அதன் பணிகள் பயனுள்ளதாகவும் தொடர்ந்து பேசப்படும், தகவல் மற்றும் ஊக்கமளிக்கிறது." என்று கூறியுள்ளார். 

"நாங்கள் புதிய தளத்தை உருவாக்கினோம், எங்கள் அறிவியல் குழு வழியில் நாங்கள் கற்றுக்கொண்ட அனைத்தையும் பற்றி பெருமைப்படலாம்." என்று இன்சைட் நில நடுக்க அளவீட்டின் முதன்மை ஆய்வாளர் கூறியுள்ளார்.

இது குறித்து நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்சைட் ஓய்வு பெறலாம். ஆனால், செவ்வாய்க் கிரகத்தின் ஆழமான உள்புறத்தில் இருந்து இன்சைட் கண்டறிந்த தரவுகள் நிலைத்து நிற்கும்.” எனத் தெரிவித்துள்ளது.



Read in source website

சென்னை: கணிதம் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஸ்ரீநிவாச ராமானுஜன் போன்று சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக வெளிநாட்டினர் 3 பேருக்கு ‘சாஸ்த்ரா ராமானுஜன் விருது’ வழங்கப்பட்டது.

இதுகுறித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜெருசலேம் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்காய் இவ்ரா, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில் சாவின், கலிபோர்னியா பெர்க்லே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யுன்குயிங் டேங் ஆகியோருக்கு முறையே 2020, 2021 மற்றும் 2022 ஆண்டுகளுக்கான நிவாச ராமானுஜன் விருது வழங்கப்பட்டது.

32 வயதுக்கு உட்பட்ட கணிதவியலாளர்களுக்கான இந்த விருது, 10 ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.8.3 லட்சம்), பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது. நிவாச ராமானுஜனின் பிறந்த நாளை முன்னிட்டு சாஸ்த்ரா வளாகத்தில் மைண்ட்ட்ரீயின் இணை நிறுவனர் என்.எஸ்.பார்த்தசாரதியால் இவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

நிவாச ராமானுஜன் பற்றிய 3 நாள் சர்வதேச மாநாடு நடைபெற்ற போது, அதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் 10 பேச்சாளர்கள் கலந்துகொண்டனர். இதில் நிவாச ராமானுஜன் பிறந்தநாள் நினைவுச் சொற்பொழிவை ஆன்லைனில் வழங்கிய டேங்குடன் இவர்கள் சிறந்த விரிவுரைகளை வழங்கினார்கள்.

சாஸ்த்ரா துணைவேந்தர் எஸ்.வைத்தியசுப்பிரமணியம் தனது வரவேற்பு உரையில், 2023-ம் ஆண்டு சாஸ்த்ரா வளாகத்தில் நடைபெறும் மாநாட்டுக்கு ஏற்கெனவே விருது பெற்ற 6 பேரை அழைத்து வரத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.



Read in source website

சென்னை: சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படங்களாக தேர்வான `கிடா', `கசடதபற' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ஐசிஏஎப்) சார்பில் 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, கடந்த 15-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்பட்டன. நிறைவு நாள் நிகழ்ச்சி, சத்யம் திரையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

திரைப்பட விழா போட்டியில் தமிழ் பிரிவில் ஆதார், இரவின் நிழல், இறுதிப் பக்கம், மாமனிதன், கார்கி, கசடதபற, நட்சத்திரம் நகர்கிறது, கிடா, பிகினிங், கோட், பபூன், யுத்த காண்டம் ஆகிய 12படங்கள் பங்கேற்றன. மொத்தமாக இரு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. குறும்படங்களுக்கான பிரிவில் சிறந்ததிரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த ஒலிப்பதிவு ஆகியவற்றுக்கான விருதுகள், ‘ஊமை விழி’ படத்துக்கு வழங்கப்பட்டது. அழகி குறும்படத்துக்காக சிறந்த நடிகர் விருது லோகநாதனுக்கு வழங்கப்பட்டது.

திரைப்படங்கள் பிரிவில் முதல்பரிசை ‘கிடா’வும், இரண்டாவது பரிசை ‘கசடதபற’ படமும் பெற்றன. சிறந்த நடிகருக்கான விருதுநடிகர்கள் விஜய் சேதுபதி (மாமனிதன்), பூ ராமு (கிடா)ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. சிறப்பு நடுவர் விருது ‘இரவின் நிழல்’ படத்துக்கும், சிறப்பு சான்றிதழ் விருது ‘ஆதார்’ படத்துக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த ஒலிப்பதிவாளர் அந்தோணி பிஜே ரூபன் (நட்சத்திரம் நகர்கிறது), சிறந்தபடத்தொகுப்பாளர் சிஎஸ் பிரேம் (பிகினிங்), ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் (இரவின் நிழல்), சிறந்த நடிகை சாய் பல்லவி (கார்கி) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

வாழ்நாள் சாதனையாளருக்கான விருதுக்கு இயக்குநர் பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவருக்கு விருது வழங்கப்பட உள்ளதாகவும் ஐசிஏஎப் அமைப்பு தெரிவித்துள்ளது.

எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி தலைவர் நடிகர் ராஜேஷ், இந்தோ சினி அப்ரிசியேஷன் தலைவர் சிவன் கண்ணன், பொதுச்செயலர் இ.தங்கராஜ், தயாரிப்பாளர் கேயார்உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.



Read in source website

புதுடெல்லி: கரோனா தொற்றுக்கு மூக்கு வழியாக செலுத்தும் இரண்டு சொட்டு தடுப்பு மருந்தினை தடுப்பு மருந்து திட்டத்தில் சேர்க்க மத்திய அரசு வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது. கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பு மருந்தாக மூக்குவழி தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளலாம் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்டை நாடான சீனாவில் மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு தினமும் 1 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவின் கரோனா தாக்கம் இன்னும் இந்தியாவை வந்தடையாத நிலையில் குஜராத் மற்றும் ஒடிசாவில் நான்கு பேருக்கு சீனாவில் பரவி வரும் உருமாறிய ஓமிக்ரான் புதிய வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. கரோனா தடுப்பூசி நடைமுறையை தீவிரப்படுத்தும் படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுத்தியுள்ளார்.

இந்தநிலையில், கரோனா தடுப்பூசியுடன், பூஸ்டர் தடுப்பு மருந்தாக மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு இன்று அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் இரண்டு தடுப்பூசிகளுடன், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு சொட்டுகள் இன்கோவாக் மூக்குவழி செலுத்தும் தடுப்பு மருந்தும் சேர்க்கப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் உருவாக்கியுள்ள இந்தத்தடுப்பு மருந்து தற்போது தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும். கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் இந்த மூக்குவழி தடுப்பு மருந்தினை பூஸ்டர் டோஸாக எடுத்துக்கொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில். பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த பண்டிகைக் காலங்களில் கரோனா நடைமுறைகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உலகில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகள் தொர்பாக, மாநில, யூனியன் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை மாலை 3 மணியளவில் காணொலி வழியாக நடைபெற இருக்கிறது.



Read in source website

புதுடெல்லி: நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினருக்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினரை பழங்குடியினர் (எஸ்.டி) பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து இதற்கான அரசியல் சாசன(எஸ்.டி) மசோதா (2-வது திருத்தம்), 2022-ஐ மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா மக்களவையில் கடந்த 15-ம் தேதி தாக்கல் செய்துநிறைவேற்றினார். இதையடுத்து,இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதன் மீதான விவாதத்தில் மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா பேசும்போது, "நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமுதாயத்தினர் மிகக் குறைந்த அளவில் உள்ளனர். நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இவர்கள் தங்களது உரிமைகளை பெறாமல் கஷ்டங்களை சந்தித்தனர். பழங்குடியினர் நலனுக்காக செயல்படும் மத்திய அரசு, இந்த முரண்பாடுகளை அகற்றி அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்துள்ளது" என்றார்.

இந்த விவாதத்தில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை பேசும்போது, ‘‘தமிழகத்தில் உள்ள வால்மீகி, வடுகர், குரும்பர் இனத்தைவரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மீன்பிடிப்பது கடலில் வேட்டையாடுவது போன்றதுதான். அதனால் மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது’’ என்றார்.



Read in source website

புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 22 தங்கப் பதக்கம் உள்ளிட்ட 61 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் 4-ம் இடம் பிடித்து சாதனைப் படைத்தது. 2022-ம் ஆண்டில் மத்திய விளையாட்டுத் துறையின் செயல்பாடுகள்...

  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 22 தங்கப்பதக்கம் உள்ளிட்ட 61 பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் 4-ம் இடம் பிடித்து சாதனைப் படைத்தது. குறிப்பாக பளுத்தூக்குதல், மல்யுத்தம் போன்ற போட்டிகளில் இந்தியர்களின் பங்களிப்பு சர்வதேச விளையாட்டு வீரர்களை பிரமிக்க வைத்தது. தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில், 14 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷியாவை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக வரலாற்றுச் சாதனைப் படைத்தது.
  • பிரேசிலில் நடைபெற்ற செவித்திறன் குறைபாடு ஒலிம்பிக்ஸ் போட்டியின் 8 தங்கப்பதக்கங்களுடன் 16 தங்கப்பதக்கங்களை வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்தது.
  • தேசிய விளையாட்டு மற்றும் சாகச விருதுகள் 2022-ஐ கடந்த 2022 நவம்பர் 30-ந் தேதி குடியரசுத் தலைவர்திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கினார். டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலுக்கு கேல் ரத்னா விருது உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 44 விருதுகள் வழங்கப்பட்டன.

2022-ல் இந்தியா நடத்திய சர்வதேச விளையாட்டுப் போட்டிகள்:



Read in source website

18 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார் மகேந்திர சிங் தோனி எனும் மகத்தான வீரர். கிரிக்கெட் உலகின் ஆல் டைம் சிறந்த வீரராக, கேப்டனாக அவர் இருப்பார் என அப்போது யாருமே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவர் கடந்து வந்த பாதையை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்ப்போம்.

காலச்சக்கரத்தை அப்படியே பின்னோக்கி இதே நாளில் கடந்த 2004-க்கு சுழற்றினால் வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் உள்ள எம்ஏ அஜீஸ் மைதானத்தில் தனது சர்வதேச என்ட்ரியை கொடுத்தார் தோனி. முதல் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஒரே பந்தில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவர் விளையாடிய முதல் நான்கு ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார். அப்போது அவருக்கு வயதும் 23 தான்.

பின்னர் 2005 ஏப்ரலில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 123 பந்துகளில் 148 ரன்கள் விளாசி தான் யார் என்பதை நிரூபித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். அதே ஆண்டில் இலங்கை அணிக்கு எதிராக 183 ரன்கள் விளாசினார். அதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவதரித்தார்.

தொடர்ந்து சர்வதேச டி20 கிரிக்கெட் அறிமுகம் என அவரது கிரிக்கெட் வாழ்வின் கிராப் ஏறுமுகத்தில் இருந்தது. நீளமான தலைமுடி, அதிரடி ஆட்டம் என கிரிக்கெட் ரசிகர்களை தோனி தனது காந்த சக்தியால் ஈர்த்தார். அந்த ஈர்ப்பு இமியளவும் இன்று வரை குன்றாமல் உள்ளது.

2007 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை திறம்பட வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்ல செய்தார். அப்படியே 2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் ஆனது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வென்றார். அதன் மூலம் ஐசிசி நடத்தும் அனைத்து தொடர்களிலும் வென்ற கேப்டன் என்ற புகழை பெற்றார்.

அவரது சிறப்பான இன்னிங்ஸில் 2011 இறுதிப் போட்டி ஆட்டமும் அடங்கும். அந்தத் தொடர் முழுவதும் அடக்கி வாசித்த தோனி அந்தப் போட்டியில் ஆர்ப்பரித்து எழுந்தார். 79 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். சிக்ஸர் விளாசி ஆட்டத்தையும், கோப்பையையும் வென்றார். கடந்த 2020, ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

சர்வதேச சாதனை துளிகள்: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை நாட்-அவுட் ஆகாத பேட்ஸ்மேனாக உள்ளார். மொத்தம் 84 முறை விக்கெட்டை இழக்காமல் பெவிலியன் திரும்பி உள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்.

தற்போது ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமகனாக உள்ளார். அவர் தலைமையில் சென்னை அணி நான்கு முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது.

கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத தருணம்: “எனது கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்றால் அது 2007 டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு மும்பை திரும்பிய எங்களுக்கு கிடைத்த எல்லையற்ற அன்பும், 2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மைதானத்தில் குழுமியிருந்த ஒட்டுமொத்த மக்களும் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடிய அந்த தருணமும்தான்.

எப்போதுமே நாடுதான் எனது மிகப்பெரிய மோட்டிவேஷன். அணியின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும் என விரும்புவேன்” என தோனி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.



Read in source website

லண்டன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். முழங்கை காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னர் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவில்லை. தற்போது முழு உடற்தகுதியுடன் அணிக்கு திரும்பி உள்ளார். இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 27-ம் தேதி புளூம்ஃபோன்டைன் நகரில் நடைபெறுகிறது.



Read in source website

சூரிச்: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடர் முடிவடைந்துள்ள நிலையில் தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) வெளியிட்டுள்ளது. இதில் உலக சாம்பியனான அர்ஜெண்டினா 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற போதிலும் அர்ஜெண்டினா அணியால் முதலிடத்தை பிடிக்க முடியாமல் போனது.

மாறாக உலகக் கோப்பை தொடரில் கால் இறுதி சுற்றுடன் வெளியேறிய பிரேசில் அணியானது சமீபகால ஆண்டுகளின் செயல்திறன் அடிப்படையில் தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவிடம் வீழ்ந்த பிரான்ஸ் அணியும் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பெற்றுள்ளது.

லீக் சுற்றுடன் வெளியேறிய பெல்ஜியம் அணியானது இரு இடங்களை இழந்து 4-வது இடத்தில் உள்ளது.

கால் இறுதி சுற்றில் தோல்வியடைந்த இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் முறையே 5 மற்றும் 6-வது இடத்தில் நீடிக்கின்றன. அரை இறுதியில் தோல்வியடைந்த குரோஷியா 5 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளது.

உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறாத ஐரோப்பிய சாம்பியனான இத்தாலி, தரவரிசையில் 8-வது இடம் வகிக்கிறது. அரை இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்த மொராக்கோ 11 இடங்கள் முன்னேற்றம் கண்டு 11-வது இடத்தை அடைந்துள்ளது.



Read in source website

வாஷிங்டன்: ஒளிரும் நட்சத்திரத்தின் ஆறு புள்ளிகளைக் கொண்ட புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்டுள்ளது.

இந்த பரந்த அண்டத்தில் ‘NGC 7469’ விண்மீன் திரளில் மைய பகுதியில், அதாவது அதன் இதயப் பகுதியில் உள்ள நட்சத்திரத்தின் ஒளிரும் புகைப்படத்தைதான் தற்போது ஜேம்ஸ் வெப் பதிவு செய்து அனுப்புயுள்ளது. இப்படம் குறித்து ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்ட குறிப்பில், “விண்மீன் செயல்பாட்டில் உள்ள விண்மீன் கருவை கொண்டுள்ளது. இது மிகவும் பிரகாசமான மத்திய பகுதி. இது மையத்தில் விழும்போது தூசி மற்றும் வாயுவால் வெளிப்படும் ஒளி பிரகாசமாக மின்னுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் இன்னும் சில தினங்களில் வரும் நிலையில், நட்சத்திரத்தின் புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் தெளிவாக பதிவு செய்துள்ளதற்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (James Webb Space Telescope). இந்தத் தொலைநோக்கி, கடந்த 2021 ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்பு 15 லட்சம் கி.மீ. விண்ணில் பயணித்து, நிலைபெற்றது. ஆறு மாத காலமாக அ விஞ்ஞானிகளில் இடைவிடாத கூட்டுமுயற்சியால், ஜேம்ஸ் வெப்பிடமிருந்து பல்வேறு அதிசயமிக்க புகைப்படங்கள் வெளிவந்து கொண்டுள்ளன. இதுவரை SMACS 0723, தெற்கு வளைய நெபுலா,ஸ்டிபன்ஸ் குவின்டெட்,கரினா நெபுலா,வெளிகோள் - WASP-96 b. வியாழன் கோள் ஆகிய புகைப்படங்களை ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி வெளியிட்டிருந்தது.

விண்வெளி ஆராய்ச்சிகள் பற்றிய விமர்சனங்களுக்கு மத்தியில் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பியுள்ள இந்தப் படங்கள் பெரும் வரலாற்று நிகழ்வை நிகழ்த்தி வருகின்றன.



Read in source website

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "போரில் ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம்" என்று உறுதிபட தெரிவித்தார்.

சோவியத் யூனியன் உடைந்தபோது 1991-ம் ஆண்டில் உக்ரைன் தனிநாடாக உதயமானது. ரஷ்யாவின் நட்பு நாடாக இருந்த உக்ரைன் கடந்த 2014-ம் ஆண்டில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின்பக்கம் சாய்ந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க கூட்டுப் படையில் (நேட்டோ) இணைய உக்ரைன் முயற்சி செய்தது.

இதன்காரணமாக கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யராணுவம் தாக்குதலை தொடங்கியது. கடந்த 10 மாதங்களாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி, நிதியுதவி வழங்கி வருகின்றன.

இந்த சூழலில் உக்ரைன் அதிபர்ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்றடைந்தார். ரஷ்ய ராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாக நேட்டோவின் உளவு விமானத்தில் ஜெலன்ஸ்கி ரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டார். அமெரிக்க அதிபர்ஜோ பைடனை அவர் சந்தித்து பேசினார். அப்போது உக்ரைனுக்கு ரூ.1.53 லட்சம் கோடி நிதியுதவி வழங்க பைடன் உறுதி அளித்தார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று பேசியதாவது: ரஷ்யா சர்வாதிகாரமாக செயல்படுகிறது. ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்களால் எங்கள் மண் ரத்தமாக மாறியிருக்கிறது. இந்தநேரத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எங்களின் உற்றதோழனாக செயல்படுகின்றன. அதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் கொடுக்கும் நிதியுதவி, தானம் அல்ல. இது ஜனநாயகம் மற்றும் பாதுகாப்புக்கான முதலீடு. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் வீழவில்லை. வீரத்துடன் எழுந்து போரிடுகிறது. தகுந்த பதிலடி கொடுக்கிறது. போரில் ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடைய மாட்டோம்.

எங்களுக்கு இன்னும் ஆயுதங்கள் தேவை. இந்த இக்கட்டான நேரத்தில் அமெரிக்காவும் உலகநாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.



Read in source website

புதுடெல்லி: மிஸ்டு கால் மூலம் பண மோசடி என்ற புதுவிதமான டெக்னிக்கை மோசடியாளர்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். அண்மையில் இந்த வழிமுறையைப் பின்பற்றி டெல்லிவாசி ஒருவரிடம் ரூ.50 லட்சத்தை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது.

வங்கி கணக்கில் அதிக பணம் இருப்பதை உறுதி செய்து கொள்ளும் மோசடிக் கும்பல் அந்த வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு போலியான லிங்குகளை அனுப்பி அவரின் தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக திரட்டுகின்றனர். ஏமாற்றுவதற்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைத்த பிறகுமொபைல் தொலைந்து போனது அல்லது பழைய சிம் சேதமடைந்ததாக கூறி டூப்ளிகேட்சிம்மை மோசடியாளர்கள் பெற்று விடுகின்றனர். இதையடுத்து, பணப் பரிமாற்றத்துக்கு இறுதி பாதுகாப்பாக கருதப்படும் ஓடிபி மோசடியாளர்களின் புதிய சிம்முக்கு சென்று விடுகிறது. இதையடுத்து, அந்த மோசடிக் கும்பல் வங்கி கணக்கிலிருந்த அந்த வாடிக்கையாளரின் பணத்தை எளிதாக தங்களது கணக்குக்கு மாற்றிக் கொண்டு விடுகிறது. இதனை "சிம் ஸ்வாப்" மோசடி என்கின்றனர் போலீஸார். இதே வழியில்தான் டெல்லிவாசியின் மொபைல்போனுக்கு மிஸ்டு கால் கொடுத்து பணத்தை சுருட்டி ஏமாற்றியுள்ளனர்.

தெரியாத எண்கள், நபர்களிடமிருந்து நமதுகணக்குக்கு வரும் மின்னஞ்சல்களை திறப்பதை, பதிவிறக்கம் செய்வதை அல்லது இணைப்பை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறும் நபர்களிடம், நம்முடைய கணக்கு விவரங்கள், மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் உள்ளிட்ட எந்தவிதமான சுய விவரங்களையும் பகிர்ந்து கொள்ள கூடாது. ஏனெனில், வங்கி அல்லது எந்தவொரு செல்பேசி சேவை நிறுவனங்களும் அதுபோன்ற விவரங்களை ஒருபோதும் வாடிக்கையாளரிடம் கேட்பதில்லை.

அப்படி மீறி அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தொலைபேசி அழைப்புகள் குறித்து உரிய வங்கி அல்லது நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளிடம் உடனடியாக தெரிவித்து உஷாராக வேண்டும்.



Read in source website

கொவைட் 19 தீநுண்மியின் பல்வேறு உருமாற்றங்கள் வலுவிழந்து அதன் பிடியிலிருந்து உலகம் மீண்டுவிட்டது என்று ஆறுதல் அடையும் வேளையில், அதிா்ச்சி அளிக்கும் விதத்தில் அடுத்தகட்ட பரவல் தொடங்கியிருக்கிறது. சீனாவில் அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் பிஏ 5.2, பிஎஃப் 7 ஆகிய ஒமைக்ரான் உருமாற்றங்கள் அமெரிக்கா, பிரான்ஸ், ஜொ்மனி, ஜப்பான், தென்கொரியா, பிரேஸில் உள்ளிட்ட நாடுகளிலும் மீண்டும் உருவெடுத்துள்ளன. இந்தியாவிலும் நுழைய முற்பட்டிருக்கிறது.

இந்தியாவில் 20-ஆம் தேதி பதிவான பாதிப்புகளில் 84% கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களில் காணப்படுகின்றன. தினசரி கரோனா பாதிப்பு 160 என்கிற அளவில் குறைந்திருக்கிறது என்றாலும், உலக அளவில் கடந்த ஆறு வாரங்களாக பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. டிசம்பா் 19-ஆம் தேதி நிலவரப்படி, உலக சராசரி பாதிப்பு 5.9 லட்சம்.

ஒமைக்ரானின் பிஏ 5.2 வகையின் உருமாற்றம்தான் பிஎஃப் 7. இந்தத் தீநுண்மி தொற்று ஒருவரிடமிருந்து 10 முதல் 18 பேருக்கு பரவக்கூடும். தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களையும் மீண்டும் தாக்கலாம். காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். பிஎஃப் 7 உருமாற்றம் அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜொ்மனி, பிரான்ஸ், டென்மாா்க் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

உலகளாவிய நிலையில் டிசம்பா் மாதத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமானோா் உருமாற்றம் அடைந்த கொவைட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். இந்தத் தொற்று ஆப்பிரிக்காவைத் தவிர ஏனைய கண்டங்களிலும் காணப்படுகிறது. டிசம்பா் மாதத்தின் முதல் 20 நாள்களில் மட்டும் ஜப்பானில் 25.8 லட்சம், தென்கொரியாவில் 12.3 லட்சம், அமெரிக்காவில் 11.9 லட்சம் பேரை பாதித்திருக்கிறது. இந்தியாவிலும் 3,200 பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் 7,500 உயிரிழப்புகளும், அதைத் தொடா்ந்து ஜப்பான் (4,086), பிரேஸில் (2,215) உள்ளிட்ட நாடுகளிலும் பலரை காவு கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயேகூட 58 போ் உயிரிழந்திருப்பதாகப் பதிவாகி இருக்கிறது.

மிகப் பெரிய பாதிப்பை எதிா்கொள்ளும் நாடு சீனா. அச்சுறுத்தும் வகையில் அடுத்த மூன்று மாதங்களில் 80 கோடிக்கும் அதிகமானோா் பிஎஃப் 7 உருமாற்றத்தால் பாதிக்கப்படலாம் என்று சீன பொது சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். அதாவது உலக மக்கள்தொகையில் 10% போ் பாதிக்கப்படுவாா்கள்.

எண்ணிக்கையைவிட புதிய உருமாற்றத் தீநுண்மியின் பரவல் வேகம்தான் திகைப்பை ஏற்படுத்துகிறது. ‘ஆா்-வேல்யூ’ என்பது தீநுண்மித் தொற்றின் பரவல் வேகம். ஒரு நபரிடமிருந்து எத்தனை பேருக்கு, என்ன வேகத்தில் தொற்று பரவும் என்பதை ‘ஆா்-வேல்யூ’ குறிக்கிறது. இந்தியாவில் கடுமையான மூன்றாவது அலையின்போது ‘ஆா்-வேல்யூ’ மூன்றாக இருந்தது. அமெரிக்காவில் ஒமைக்ரான் அலையின்போது ‘ஆா்-வேல்யூ’ 10. இப்போதைய சீன உருமாற்றத்தின் ‘ஆா்-வேல்யூ’ 16 என்பது நம்மை அச்சத்தை ஏற்படுத்துகிறது.

அதிவேகமாக கொள்ளை நோய்த்தொற்று பரவும்போது அதை எதிா்கொள்ளும் அளவில் மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள், உபகரணங்கள், முன்களப் பணியாளா்கள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிா்க்க முடியாது. அதன் விளைவாக உயிரிழப்புகள் அதிகரித்து பல லட்சம் போ் பலியாகக் கூடும் என்கிற நிலைமையை எதிா்கொள்கிறது உலகம்.

2020 ஜனவரியில் சீனாவின் வூஹான் நகரிலிருந்து உருவான தீநுண்மித் தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியபோது, சீனா கடுமையான பொதுமுடக்கத்தை அறிவித்து அதைக் கட்டுப்படுத்தியது. உலகம் முழுவதும் கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலும், உயிரிழப்புகளும், நிறைந்து வழியும் மருத்துவமனைகளும், அடிப்படை மருந்துகளுக்கான தட்டுப்பாடுகளும் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப்போட்டபோது கடுமையான பொதுமுடக்கத்தைக் கடைப்பிடித்து சீனா வேடிக்கை பாா்த்தது. கடுமையான கட்டுப்பாடுகளின் மூலம் கொவைட் 19-ஐ கட்டுக்குள் கொண்டுவந்து விட்டதாகப் பெருமிதப்பட்டது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மட்டுமே அந்த அரசு நம்பியது. தொடக்க கால உருமாற்றங்களுக்கே போதுமான எதிா்ப்பை உருவாக்காத அந்தத் தடுப்பூசி மருந்து, புதிய உருமாற்றங்களில் முற்றிலுமாக செயல்படவில்லை. சீன மக்களேகூட அந்தத் தடுப்பூசியை நம்பவில்லை என்று தெரிகிறது. 80 வயதுக்கும் அதிகமான சீனா்களில் பாதிக்கும் மேற்பட்டோா், நம்பிக்கையின்மையால் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

கடுமையான பொதுமுடக்கமும், முறையான தகவல் பரிமாற்றம் இல்லாமல் இருந்ததும் சீனாவை மிகப் பெரிய அளவில் பாதித்திருக்கிறது. பொதுமுடக்கம் காரணமாக மக்கள் மத்தியில் கொள்ளை நோய்த்தொற்றுக்கான பொது எதிா்ப்பு சக்தி ஏற்படவில்லை. மக்கள் போராட்டத்தைத் தொடா்ந்து கட்டுப்பாடுகளை சீனா கடந்த மாதம் தளா்த்த முற்பட்டபோது, எதிா்ப்பு சக்தி இல்லாத நிலையில் நோய்த்தொற்று காட்டுத்தீயாக பரவத் தொடங்கியிருக்கிறது.

இந்தியாவில் தினசரி பரிசோதனைகள் கடந்த மாதம் இரண்டு முதல் மூன்று லட்சம் என்றால் இப்போது ஒரு லட்சமாகக் குறைந்திருக்கிறது. பொதுமுடக்கம் தீா்வாகாது என்பதை சீனா உணா்த்துகிறது. அதனால் முகக் கவசம் அணிவது மட்டுமல்லாமல், மக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டிய தருணம் இது.

மாநில அரசுகள் பரிசோதனைகளை அதிகரிப்பதும், கட்டமைப்பு வசதிகளை தயாா்நிலையில் வைத்திருப்பதும் அவசியம்.



Read in source website

தனியாா் மற்றும் அரசு வங்கிகள், நிதிநிறுவனங்கள் மற்றும் குறு நிதிநிறுவனங்கள் மக்களின் சகல விதமான காரணங்களுக்காகவும் கடன்களைக் கொடுத்து வருகிறாா்கள். நாட்டில் கடன் இல்லாதோா் எவருமிலா் என்ற நிலைமை உருவாகியுள்ளது.

ரிசா்வ் வங்கியின் 2022 அறிக்கையின்படி, அரசு மற்றும் தனியாா் வழங்கிய கடன் தொகை ரூ. 118.9 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டை விட 9.6 % அதிகம். அதிகப்படியான காலங்கடந்த நிலுவைத் தொகைக்கு வழிகாண புதிதாக ‘பேட்’ வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜப்தி, மேல் கடன், உபரிக் கடன் என்று அறிமுகப்படுத்தியும் நிலுவைக் குறையவில்லை. அதனால், சம்பந்தப்பட்ட வங்கிகளை தனியாருக்குத் தாரைவாா்க்கும் நிலை உருவாகியுள்ளது.

தேசியமயமாக்கிய வங்கிகள் ஏழைகளுக்கான கடன் பிரச்சனையைத் தீா்க்கும் என்ற அறிவிப்பு கானல் நீரானது. வறுமையில் இருந்து மீள முயன்ற ஏழைகளின் வாழ்வாதாரத்திற்குக் கடன்கள் தரக் கந்து வட்டியினா் முன் வந்தனா்.

ஏழைப் பெண்களின் பிரச்னைகளுக்கு அவா்களே தீா்வு காண முடிவெடுத்து அவா்களை சுய உதவிக் குழுக்கள் என்ற அமைப்பில் கொண்டு வந்தனா். இதற்கு மெருகு தந்த பெருமை சமீபத்தில் மறைந்த இலா பட் அம்மையாரைச் சாரும்.

அவரின் சீரிய முயற்சியால் பெண்களின் சமூக, பொருளாதார, சுகாதார, அரசியல் மேம்பாட்டிற்கு பெண்களே சுயமாக முடிவெடுக்க வழி கிடைத்தது. அவரால் 1974-இல் குஜராத்தில் நிறுவப்பட்ட ‘சேவா வங்கி’ பெண்களின் சுய வேலை வாய்ப்பிற்கும், அவா்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிகாட்டியானது.

நாளடைவில் சுய உதவி குழுக்கள் பெரும் வெற்றியை ஈட்டின. அவா்களின் குழு சேமிப்பு வெகுவாகப் பெருகியது. குழுக்களில் கொடுக்கப்பட்ட உள்கடன்கள், பல கோடிகளை எட்டியது. இதனைக் கண்ட வங்கிகள், அவா்களின் சேமிப்பை வங்கிகளில் அடமானமாக்கி அதன்பேரில் அவா்களுக்குக் கடன்களை கோடிகளில் வழங்க முன்வந்தனா்.

வங்கிகளின் சேவைகள் ஏழைகளைத் திருப்திப்படுத்தாத நிலையில், குறுநிதிகள் வழங்கும் நிறுவனங்கள் வெவ்வேறு வடிவில் அறிமுகமாயின. வந்த நிறுவனங்கள் அதிக முதலீடுகளோடு வந்ததால் கடன்களை ஏழைகளுக்கு அவா்கள் இடந் தேடிச் சென்று அள்ளி வழங்கினா். ரூ. 5,000 கடன் பெற்றவா்கள் லட்சத்தைப் பெற்றனா். கடன் தருபவா்கள், குறு நிதி நிறுவனங்களாக, நிதி நிறுவன வங்கிகளாக, குறு நிதி வங்கிகளாக, மைக்ரோ பைனான்ஸ் மைக்ரோ கிரடிட் எனக் கடன் தரும் அமுதசுரபிகளாக இருந்தனா்.

இவா்கள் 2022 ஜூன் மாதம் வரை குறுநிதி கடன்கள் ரூ. 2.72 லட்சம் கோடி வரை 68 இலட்சம் பெண்கள் சுய உதவி குழுக்களில் உறுப்பினா்களாக உள்ள 14 கோடிப் பெண்களுக்குக் வழங்கியுள்ளனா். அதில் நிலுவைத் தொகை மட்டும் ரூ.1.51 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 24 சதவிகிதம் அதிகமாகும்.

இந்தக் குறுநிதிக் கடனுக்கான வட்டி, ரிசா்வ் வங்கியின் மேளாகன் குழு பரிந்துரையின்படி 26 விழுக்காடு என நிா்ணமயமானது. மேலும், குழுக்களுக்கான கடன் பரிவா்த்தனைகள், செயலாக்க நெறிமுறைகள் போன்றவை வரையறுக்கப் பட்டன. அது லாபகரமாக இருக்கவே, புற்றீசலாய் குறு நிதி நிறுவன வங்கிகள், என்.ஜி.ஓ., சொசைட்டி, கம்பெனி, கூட்டுறவு அமைப்புகள் எனப் பல வடிவில் அறிமுகமாகின.

97 நிறுவனங்கள் ரிசா்வ் வங்கியில் நேரடி பதிவு பெற்ற வங்கி சாரா நிதி நிறுவனங்களாயின. அண்மையில் வெளியான ரிசா்வ் வங்கி அறிக்கையின்படி, மைக்ரோ பைனான்ஸ் கடனுக்கான வட்டியை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்ற உரிமை தரப்பட்டுள்ளது.

மைக்ரோ பைனான்ஸ் வழியாக ஏழைகளுக்கு வழங்கிய கடன்கள் முறையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளன. சுனாமி, மழை, வெள்ளம், கொவைட் 19 போன்ற அசாதாரண சூழ்நிலைகளிலும் வாங்கிய கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்தியுள்ளனா்.

இது எப்படி சாத்தியமானது? குழுவினரின் ஒற்றுமை. குழுவில் கடன் பெற்றவா், கடனைத் திருப்பிச் செலுத்தும் முன் இறக்க நேரிட்டால், உறுப்பினா் இழப்புக்கும் கடனுக்கும் இன்சூரன்ஸ் காப்பீடு மூலம் பட்டுவாடா ஆகிவிடும்.

குறுங்கடன்கள் தரும் நிறுவனங்கள் யாவுமே லாப நோக்கில் செயல்படுபவையே. இவற்றில் பெரும்பாலானவை ரிசா்வ் வங்கியில் பதிவானவையாகும். இவா்கள் பல நிறுவனங்கள் மூலம் பெருவாரியான நிதியைத் திரட்டுகின்றனா். மேலும் நிறுவனத்தின் மதிப்பீட்டைக் கொண்டு, ஐ.பி.ஓ. மற்றும் பங்குச்சந்தை வழியாகவும் நிதியினைப் பெறுகின்றனா். அதனைக் கடன்களாக ஏழைகளிடம் குவிக்கின்றனா்.

கடனுக்கப் பணம் தரும் வங்கியினரும் வெளிநாட்டு முதலீட்டாா்களும் இந்தியாவில் இயங்கும் ரிசா்வ் வங்கி உரிமம் பெற்ற வங்கி சாரா நிதி நிறுவனங்களில் அதிக அளவில் குறுங்கடன் நிதி வங்கிகளில் முதலீடு செய்கின்றனா். வெளிநாட்டு முதலீட்டாளா்களுக்கு இது பணமழை பொழியும் கற்பகத்தருவாக உள்ளது. மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் தொழில், லாபங்களைக் கொட்டித் தரும் காமதேனுவாக இருக்கிறது.

இன்னொருபுறம், வறுமையில் உள்ளவா்களுக்கு குறுங்கடன்கள் சுமை தாங்கிகளாகி, கடன் பளுவாகி, வறுமையை அதிகரிக்கிறது. செல்வந்தா்கள் மற்றும் நடுத்தர வா்க்கத்தினரைக் காட்டிலும் ஏழைப் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான தொழில் புரிய வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் மிகவும் அதிகம். குறுங்கடனின்றி மற்ற அனைத்து வீடு, சொத்து, காா், தொழில், தனிநபா் கடன்களுக்கு வட்டி விகிதம் 8 விழுக்காட்டில் இருந்து அதிகபட்சமாக 18 விழுக்காடு வரை மட்டுமே. மைக்ரோ பைனான்ஸ் கடனுக்கான வட்டி மட்டும் 26 விழுக்காடு தொடங்கி 36 விழுக்காடு வரை உள்ளது.

குறுங்கடன்களால் ஏழைப் பெண்களிடம் பன்மடங்கு பெருகியுள்ளது பணப்புழக்கம். மகளிா் சுயசேவைக் குழுக்களின் மூலம் வழங்கப்படும் குறுங்கடன்கள் மிகப் பெரிய சமூக மாற்றத்தை கிராமங்களில் ஏற்படுத்தி இருப்பது என்னவோ உண்மை. அதனால் கிராமப்புற மகளிரின் பொருளாதார நிலை மேம்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. அவா்களது வருமானத்தை ‘வட்டி’ என்கிற பெயரில் குறுங்கடன் நிதி வங்கிகள் எடுத்துக்கொண்டு விடுகின்றன.

காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அளவில் இல்லாவிட்டாலும், குறுங்கடன்களுக்கான வட்டி, ஏனைய வங்கிக் கடன்களைப்போல 18% என்று வரையறுக்கப்பட்டால் மட்டும்தான், இலா பட்டின் கனவு நிறைவேறும். இல்லையென்றால், ஏழைப் பெண்களின் உழைப்பு குறுங்கடன் நிறுவனங்களால் சுரண்டப்படுமே தவிர, அவா்களின் வாழ்க்கையில் ஏமாற்றம்தான் மிஞ்சும்!

 



Read in source website

தேசிய அளவிலான நதிநீா் இணைப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தலைநகா் தில்லியில் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. தமிழக அரசின் சாா்பில் நீா்வளத்துறை அமைச்சரும் தமிழக அரசின் நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளரும் கலந்து கொண்டனா்.

தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டத்தில் மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - பாலாறு - காவிரி - வைகை - குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தும்படி மத்திய அரசையும், மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவையும் தமிழக அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தேசிய நீா் மேம்பாட்டு முகமை கடந்த 2004-ஆம் ஆண்டே தயாரித்து அளித்தது. அதைத் தொடா்ந்து நதிகள் இணைப்பை இரு கட்டங்களாக செயல்படுத்த தேசிய நீா் மேம்பாட்டு முகமை முடிவெடுத்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு மாநிலங்களின் கருத்தை அறிய அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் தமிழ்நாட்டுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்ட 84 டி.எம்.சி. நீரை 200 டிஎம்சியாக உயா்த்தி வழங்கவும், வைகை, குண்டாறு ஆகிய ஆறுகளுக்கு தண்ணீா் வழங்க கால்வாயை உயா்நிலையில் அமைக்கவும் தமிழக அரசு வலியுறுத்தியது. இந்தக் கருத்தையே தமிழக முதலமைச்சா், பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்தபோது மனுவாக அளித்தாா்.

தென்மாநிலங்களின் தண்ணீா் பிரச்னைக்கு நீண்டகால அடிப்படையில் நிரந்தரத் தீா்வு காணும் வகையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய நீா் மேம்பாட்டு முகமை நதிநீா் இணைப்பு தொடா்பான அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த இம்மாதம் 13-ஆம் நாள் நடைபெற்றது.

அப்போது மத்திய ஜல்சக்தித் துறையமைச்சா் கஜேந்திரசிங் செகாவத், ‘இந்திய அரசின் மிக முக்கியமான துறைகளில் நீா்வளத்துறையும் ஒன்றாகும். நதிகளை இணைக்கும் திட்டம் நாட்டில் நீா் மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அவசியமானது. இது வறட்சி மற்றும் மானாவாரி விவசாயப் பகுதிகளுக்குத் தண்ணீா் வழங்குவதிலும் மிகவும் உதவிகரமாக இருக்கும்’ என்று பேசியுள்ளாா்.

மேலும் உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் பகுதியை ஒட்டிய ‘கென்பெட்வா’ இணைப்புத் திட்டம் பற்றியும் பேசினாா். ‘இந்தத் திட்டம் பந்தேல்கண்ட் பகுதிக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். எட்டு ஆண்டுகளில் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்’ என்றும் கூறினாா்.

கூட்டத்தில் கிழக்கு ராஜஸ்தான் கால்வாய்த் திட்டம் மற்றும் காவிரி, குண்டாறு, கோதாவரி இணைப்பு ஆணையத்தின் அரசியலமைப்பு பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

நதிநீா் இணைப்பு குறித்து பலகாலமாகப் பேசப்பட்டு வருகிறது. கங்கை - காவிரி இணைப்பு என்று தொடங்கி, இறுதியில் தென்னக நதிகளை இணைப்பது என்ற முடிவுக்கு வருவதற்கே பல காலமாகி விட்டது. நீதிமன்றங்களும் அதன் அவசியத்தைப் பலமுறை சுட்டிக் காட்டி விட்டன. என்றாலும் இந்தத் தோ் புறப்பட்ட இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறது.

நதிநீா்ப் பங்கீடு தொடா்பாக மாநிலங்களுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய காலத்தில் தீா்வு ஏற்படாவிட்டால் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறு நோ்வதை தவிா்க்க இயலாது என நீா்வள நிபுணா்கள் கூறுகின்றனா்.

இப்போது தமிழ்நாடு மும்முனைத் தாக்குதலை எதிா்கொண்டு வருகிறது. காவிரி நீருக்காக கா்நாடகம், முல்லைப் பெரியாறு அணைக்காக கேரளம், பாலாற்று நீருக்காக ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களுடன் தமிழகம் மோதும் நிலை உருவாகி உள்ளது. தண்ணீருக்காக அண்டை மாநிலங்களின் தயவுக்காகக் காத்திருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

‘நீா் இன்றி அமையாது உலகு’ என்று பாடினாா் திருவள்ளுவா். உலகத்தின் இயக்கமே தண்ணீரையே அடிப்படையாகக் கொண்டது. ஒரு தேசத்தின் பண்பாடும், நாகரிகமும் தண்ணீரையே ஆதாரமாகக் கொண்டது. உலக நாகரிகங்கள் எல்லாம் நதிக்கரை ஓரமே உருவானதற்குக் காரணம் இதுவே.

இதற்கும் இப்போது தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வளங்கள் குறைகின்றன; வறட்சிகள் வளா்கின்றன. நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடு இல்லை. ஏழையா், செல்வா் என்ற பேதங்களும் இல்லை. தண்ணீரைத் தேடி அலையாதவா் இல்லை.

‘பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்கக் கூடாது’ என்ற பழைய மொழி வழக்கொழிந்து போனது. தண்ணீரை பணத்தைப் போல செலவழிக்க வேண்டும் என்ற புதிய மொழி நடைமுறைக்கு வந்து விட்டது. காரணம் என்ன? மனிதன் இயற்கையைப் புறக்கணித்ததன் விளைவுகளை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

காடுகள் அழிக்கப்படுவது, மழைநீரைத் தேக்கி வைக்காமல் வீணாக்குவது, ஆற்றுநீரை ஆலைக் கழிவுகளால் அசுத்தப்படுத்துவது, இறால் பண்ணைகளையும் உப்பளங்களையும் உருவாக்கி நிலத்தடி நீரை மாசுபடுத்துவது, சுற்றுச்சூழல் இயக்கங்களின் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்வது என்னும் காரணங்களால் நீா் ஆதாரங்கள் குறைந்து கொண்டே போகின்றன.

ஆனால் தண்ணீரைப் பயன்படுத்தும் மக்கள்தொகை பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கின்றது. இந்தத் தலைகீழ் விகிதமே தண்ணீா்ப் பஞ்சத்திற்குக் காரணமாகிறது. இதுபற்றி ஐ.நா. சபையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீா்வளத்துறை வல்லுநா்களும் அடிக்கடி அரசுக்கு ஆலோசனைகளும், அறிக்கைகளும் வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றனா்.

அக்காலத்தில் தமிழ் மன்னா்கள் நீா்வளம் பெருக்கி, நிலவளம் காப்பதையே குடிமக்களுக்குச் செய்யும் கடமையாகக் கொண்டிருந்தனா். குளங்கள், ஏரிகள், கால்வாய்கள் என்னும் நீா்ப்பாசனத் திட்டங்கள் எல்லாம் அரசா்கள் காலத்தில் ஆக்கப்பட்டவையே. கரிகாலன் புகழ்பெற்ற கல்லணையைக் கட்டுவதற்கும் காரணம் இதுவே.

‘காடு கொன்று நாடாக்கிக், குளம் தொட்டு வளம் பெருக்கி...’ என்று பட்டினப்பாலை பாடுகிறது. வரலாற்றுச் சின்னங்களாக இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவை அவா்களின் கோட்டை கொத்தங்களும், கோட்டைகளைச் சுற்றி ஆழமான அகழிகளும்தான். பகைவா்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளுவதற்காகவும், பகைவா்கள் முற்றுகை இடும் காலங்களில் தங்களுக்கு வேண்டிய தண்ணீரின் தேவைகளைப் பூா்த்தி செய்து கொள்ளுவதற்காகவும்தான்.

இன்றும் பண்பாட்டுப் பாசறைகளாகத் திகழ்வன கோயில்களே. ஊருக்கு நடுவே கோயில்களும், ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு கோயில் குளம், மற்றும் தெப்பக்குளம், அந்தக் குளங்களுக்கு நடுவே கிணறுகள். இவையனைத்துமே நீா் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை.

இவ்வாறு பராமரிக்கப்பட்டு வந்த நீா் ஆதாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தன. காலப்போக்கில் ஏரி குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன; பாசன வாய்க்கால்கள் பராமரிப்பின்றி தூா்ந்தன; வயல் வெளிகள் வீட்டு மனைகளாயின. இதனால் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கி வெள்ளப் பெருக்கானது; மக்களையும், வீடுகளையும், பயிா்களையும் அழித்து விட்டு யாருக்கும் பயன் இன்றி கடலில் சென்று கலக்கின்றது.

இதனை மாற்றியமைக்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த ஆண்டும் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபா் மாதம் தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. அண்மையில் வங்கக் கடலில் வலுப்பெற்ற மாண்டஸ் புயல் காரணமாக வடகடலோர மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது.

தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டில் 14,138 பாசன ஏரிகள் உள்ளன. கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் இவற்றில் 4,432 ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்டன. 2,891 ஏரிகள் 76 முதல் 99 விழுக்காடு வரை நிரம்பியுள்ளன என பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது.

இவ்வாறு ஆண்டுதோறும் மழையும் வருகிறது; வெள்ளமும வருகிறது. அதன் பிறகு வறட்சியும் வருகிறது. மழைக் காலத்தில் மக்களுக்கு வெள்ளத்தால் பாதிப்பும், கோடைக் காலத்தில் தண்ணீா் இல்லாமல் பாதிப்பும் தொடா்ந்து வருகிறது. இதனைச் சரி செய்ய திட்டம் ஏதும் வேண்டாமா?

தண்ணீருக்காக நதிநீா் இணைப்புத் திட்டம் தேடுகிற நாம் கிடைக்கிற நீரைத் தேக்கி வைத்திட வேண்டாமா?

பருவ மழைக் காலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீணாகக் கடலில் சென்று கலந்திடச் செய்யாமல் தடுத்துத் தேக்கி வைத்தால் பயிா்களையும், உயிா்களையும் பாதுகாக்கலாம்; தண்ணீா்ப் பஞ்சத்தையும் தடுக்கலாம்.

வறட்சி நிவாரணங்களும், வெள்ள நிவாரணங்களும் தேவையில்லை. இதனால் பெரும் பொருள் மிச்சமாகும். அதனைக் கொண்டு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றலாம். இழப்பீடு கேடடு மத்திய அரசிடம் கையேந்த வேண்டிய தேவையும் ஏற்படாது. இது பற்றிய சிந்தனையே இப்போது அவசர அவசியமாகிறது.

‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ என்று தண்ணீரின் பெருமை பேசியது சிலப்பதிகாரம். ‘வான் சிறப்பு’ என்று மழையைப் போற்றியது திருக்கு. மழைநீா் சேமிப்புத் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா? அரசாங்கம் நீா்ப்பாசனத் துறையை முடுக்கி விட வேண்டாமா?

‘கூட்டுறவே நாட்டுயா்வு’ என்பது வெறும் உபதேசமல்ல, உண்மை. மாநிலங்களின் கூட்டுறவால் நதிநீா் இணைப்பு நாளைய தேசத்தை நல்வழிப்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நம்பிக்கையை நடைமுறைப்படுத்துவோம்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.



Read in source website

காப்புக் காடுகளின் எல்லையிலிருந்து ஒரு கி.மீ. சுற்றளவில் சுரங்கம் மற்றும் குவாரி தொழில்களில் ஈடுபட விதிக்கப்பட்டிருந்த தடையை, ஒரே ஆண்டில் தமிழக அரசு நீக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது சுற்றுச்சூழல், காட்டுயிர் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்த திமுக, ஆட்சியில் அமர்ந்த பிறகு அதற்கு நேரெதிராக நடந்துகொள்வது பல கேள்விகளை எழுப்புகிறது.

‘சுரங்கம், குவாரி, க்ரஷிங் போன்ற தொழில்களைக் காப்புக் காடுகளின் எல்லையிலிருந்து ஒரு கி.மீ. சுற்றளவில் மேற்கொள்ளக் கூடாது’ என 2021 நவம்பர் 3 அன்று, தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகள் 1959இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அது காட்டுயிர்ப் பாதுகாப்பில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான முன்னெடுப்பாகப் பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த விதிகள் மீண்டும் திருத்தப்பட்டிருக்கின்றன.



Read in source website

பேராசிரியர் தொ.பரமசிவனுக்குப் ‘பண்பாட்டு ஆய்வாளர்’ என்னும் ஒரே அடையாளத்தை மட்டும் வழங்கி நிறைவடைந்துவிட முடியாது. அவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவுறும் இச்சமயத்தில், அவரது தேவையை நாம் ஒவ்வொரு நாளும் உணர்ந்தபடி இருக்கிறோம்.

பெரியாரையும் பெரியாழ்வாரையும் பற்றி ஒரே சமயத்தில் ஆழமாகப் பேசக்கூடிய ஓர் அறிஞர். அவர் தன்னைப் ‘பெரியாரியல்வாதி’ என்றே அடையாளப்படுத்திவந்தார். ஆனால், அவரது ஆய்வுமுறை மார்க்சியத்தின் அடிப்படையில் அமைந்தது ஆகும். பொருளியல் அடிப்படைகளின் மீதுதான் பண்பாட்டு அசைவுகள் கட்டப்படுகின்றன என்பது அவரது நிலைப்பாடு.

‘பெரியாரிஸ்ட்டாக இருந்துகொண்டு தெய்வங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீர்களே?’ என்ற கேள்விக்கு, அவர் இப்படிப் பதிலளித்தார்: “சமூக அதிகாரத்தையும் ஆன்மிக அதிகாரத்தையும் தக்கவைத்துக்கொள்ள பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருந்த பெருந்தெய்வங்களையே பெரியார் குறிவைத்துத் தாக்கினார். அதிகார வலிமையில்லாத நாட்டார் தெய்வங்களைப் பற்றியோ கோயில்களைப் பற்றியோ அவர் கவலைப்படவில்லை.

அதிகாரத்தை எதிர்த்து அடிமைத்தளையை அறுத்தெறியத்தான் அவர் போராடினார். என்னுடைய எழுத்துக்களிலும் அதிகாரத்தை அடையாளம் காட்டுவதே நோக்கமாக இருந்தது. குறிப்பாக சமண, பௌத்தர்களிடமிருந்து வைதீகத்தால் திருடப்பட்ட பெருங்கோயில்கள் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். நாட்டார் தெய்வங்களைப் பொறுத்தமட்டில் அவற்றின் தோற்றக் காரணங்களையும் வழிபாடுகளையும் மக்கள் திரளின் நம்பிக்கைகள் சார்ந்து எழுதியுள்ளேன். அவை மறைமுகமான நாத்திகம்தான்.”

ஆவணங்களையும் கல்வெட்டுக்களையும் வரலாற்றுக் குறிப்புகளையும் மட்டுமே ஆய்வுலகம் கட்டிக்கொண்டிருந்தபோது, அவற்றைப் புறந்தள்ளித் தெருவில் இறங்கிய முதல் அறிஞர் தொ.ப.தான். மக்களுடனான உரையாடல்களை ஆதாரமாகக் கொள்ளும் வழிமுறைக்கு அவர் வித்திட்டார். பேராசிரியர் நா.வானமாமலை தொடங்கி வைத்த நாட்டாரியல் ஆய்வுகளை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றவர்களாக ஆ.சிவசுப்பிரமணியனும் தொ.பரமசிவனும் நமக்குக் கிடைத்தார்கள்.

அடிக் குறிப்புகளோடும் ஆதார நூற்பட்டியல்களோடும் இல்லாத அவரது கட்டுரைகளை ஏற்க, ஆய்வறிஞர்கள் எனப்பட்ட குழாமுக்கு முடியாது போயிருக்கலாம். ஆனால், வாசகர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் தொ.ப.வின் எழுத்துக்களைக் கொண்டாடித்தீர்த்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். பேராசிரியர் அ.மார்க்ஸ் குறிப்பிட்டதுபோல, அவரது வாசகர்களே அவரது ரசிகர்களாயினர்.

தெருவிலே நிற்கும் ஒரு கல்லுக்கு முன்னால் நின்று வரலாற்றையும் பண்பாட்டையும் பேசும் அவரது வார்த்தைகளில் சொக்கித்தான் கிடந்தோம். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக அவர் பணியாற்றிய காலத்தில், நானும் திருநெல்வேலியில் பணியாற்றியதால் அன்றாடம் அவரைச் சந்தித்து உரையாடும் பெருவாய்ப்பைச் சில ஆண்டுகள் பெற்றிருந்தேன். அந்த நாட்களில்தான் அவர் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் ‘நியாயப் பரிபாலப் பெரும்பள்ளி’யைக் ‘கண்டுபிடித்து’த் திரும்பியிருந்தார்.

பகவதி அம்மன் கோயிலாக இந்துக்கள் வழிபடும் அக்கோயில் ஒரு சமணப் பள்ளி என்பதே அவர் கண்டுவந்தது. அதைப் பற்றியே எங்களிடம் பேசிக்கொண்டிருந்தார். எங்களில் பலரை சிங்கிகுளம் பள்ளிக்கு அழைத்துச் சென்றும் காட்டினார்; அது அவரது வழக்கம். பின்னர் ‘இதுவே சனநாயகம்’ என்கிற கட்டுரையாகவும் அந்தப் பேச்சுக்களை எழுதினார்.

‘பொ.ஆ. 7ஆம் நூற்றாண்டில் மதுரையில் ஆயிரம் சமணர்களைக் கழுவேற்றிச் சம்பந்தர் ‘புண்ணியம்’ தேடிக்கொண்ட பிறகும், தமிழ்நாட்டின் தென்பகுதியில் சமணம் 12ஆம் நூற்றாண்டுவரை உயிரோடிருந்தது. நெல்லை மாவட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காடுகளிலும் வயல்களிலும் சிதறியும் உடைந்தும் கிடக்கும் தீர்த்தங்கரர்களின் திருமேனிகளே இதற்குச் சான்றுகளாகும்.

நெல்லை மாவட்டத்திலிருந்து சமணம் ‘தொலைந்துபோய்’ 700 ஆண்டுகள் ஆன பிறகும், இந்தக் கோயில் மட்டும் உயிரோடு நிற்கிறது. கோயிலைச் சுற்றி ஆராய்ந்தபோது, தீர்த்தங்கரர் இருக்கும் கருவறையைச் சுற்றி வெளிப்புறமாக இருக்கும் கல்வெட்டு நமக்கு வரலாற்று உண்மையைச் சொல்கிறது. அந்த ஒற்றைக் கல்வெட்டிலிருந்து நமக்குக் கிடைத்த செய்தி: இது ஒரு சமணப் பள்ளி (சமணர்கள் கோயில் என்று சொல்ல மாட்டார்கள்).

இம்மலையின் பெயர் ஜினகிரி. முள்ளிநாட்டுத் திடியூரான இராசராச நல்லூரில் உள்ள இந்தப் பள்ளியின் பெயர் ‘நியாய பரிபாலப் பெரும்பள்ளி’. இப்பள்ளி ‘எனக்கு நல்ல, பெருமானான அண்ணன் தமிழப் பல்லவரையன்’ பெயரால் எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்த்தங்கரர்களில் இவர் யார் என்று அறியத் திருமேனியில் தடயங்கள் கிடைக்கவில்லை.

நெல்லை மாவட்டப் பகுதியில் அம்பிகா யட்சி என்ற இசக்கியம்மன் வழிபாடே இன்றும் செல்வாக்குடன் திகழ்கின்றது. அம்பிகாவைப் பணிமகளாகக் கொண்டவர் 23ஆவது தீர்த்தங்கரராகிய நேமிநாதர் என்பவராவார். தீர்த்தங்கரருக்குச் சன்னதி கட்டப்பட்டபோது துணைச் சன்னதியாக இருந்த யட்சியின் சன்னதி, இன்று முதல் சன்னதியாகவும் தீர்த்தங்கரரின் கருவறை துணைச் சன்னதியாகவும் மக்களால் வணங்கப் பெறுகின்றன. இக்கோயிலில் ரத்தப் பலி கிடையாது. கொடியேற்றம், திருவிழா கிடையாது. மக்கள் தாங்கள் விரும்பும் நாளில் பகவதி அம்மனுக்குப் பொங்கல் வைக்கின்றனர்.

தாங்கள் வணங்குகின்ற பகவதியம்மன் ஒரு சமணத் தெய்வம் என்பதும் முனீஸ்வரர் என்ற பெயரால் அறியப்படும் தீர்த்தங்கரர் சமண மதத்தவர் என்பதும் வழிபடுகின்ற ‘இந்து’ மக்களுக்குத் தெரியாது. ஆனபோதும் சமணப் பள்ளி ஒன்று தாய்த் தெய்வக் கோயிலாகக் கருதப்பட்டு, அந்நிலப் பகுதியிலுள்ள எல்லா மக்களாலும் பேணப்படுகின்றது; வழிபடப்படுகின்றது.

ஆதரவற்ற பிள்ளையைத் தன் பிள்ளையாக எடுத்து வளர்த்துக் குடிப்பெருக்கம் செய்வதில் எளிய மக்களுக்கு எந்தத் தடையுமில்லை. அப்படித்தான் சிங்கிகுளம் மக்கள் சமணப் பள்ளியை, பகவதி அம்மன் கோயிலாக்கி வாழ வைத்திருக்கிறார்கள். அடுத்தவர் வழிபாட்டிடத்தை இடிப்பதும் அழிப்பதும், அரசர்களும் அமைச்சர்களும் அதிகாரிகளும் செய்கின்ற வேலை என்பதே அன்றும் இன்றும் வரலாறு. ஜனநாயக உணர்வுள்ள எளிய மக்கள் அதனை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். சிங்கிகுளம் ‘நியாய பரிபாலப் பெரும்பள்ளி’ நமக்குச் சொல்லும் செய்தி இதுதான். (‘இதுவே சனநாயகம்’ கட்டுரையிலிருந்து...)

தொ.ப. போல இப்படிச் சொல்ல யார் இருக்கிறார்கள் இப்போது? களத்திலிருந்து வரலாற்றுக்கும் அரசியலுக்கும் நம்மை அழைத்துச் சென்ற பேராசான் அவர். வரலாற்றை மேலிருந்து பார்க்காமல் அடித்தள மக்கள் மத்தியில் நின்று, கீழிருந்து வரலாற்றைப் பேசியவர். மதப் பகைமை என்பது மக்களிடம் இல்லை. அது மேலிருந்து கட்டப்படுவது என்பதைத்தான் மேற்கண்ட பகவதி அம்மன் கோயில் வாசலில் நின்று அவர் உரக்கப் பேசுகிறார்.

பண்பாட்டுத் தளத்தில் மோசடிகளும் திரிப்பு வேலைகளும் நடக்கின்ற இந்நாட்களில், பேராசிரியர் தொ.ப. போல, பொட்டில் அடித்தாற்போலப் பேசுகிற ‘உண்மை அறிஞர்கள்’ நம் சமூகத்துக்கு முன்னெப்போதையும்விட இப்போதுதான் தேவைப்படுகிறார்கள்.

கல்விப்புலத்துக்கு உள்ளே இருந்துகொண்டு தெருவைப் பார்த்துப் பேசியவர். தெருவில் நின்றுகொண்டு கல்விச்சாலை ஆய்வகங்களை நோக்கிப் பேசியவர் என்கிற தொ.ப.வின் இரு பரிமாணங்கள் அபூர்வமானவை; அவசியமானவை. வரும் தலைமுறை அறிஞர்களால் வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை! டிசம்பர் 24: தொ.பரமசிவன் நினைவு நாள் - ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர் , பண்பாட்டுச் செயல்பாட்டாளர், தொடர்புக்கு: tamizh53@gmail.com



Read in source website

இந்த ஆண்டின் தொடக்கத்தில், தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவே கரோனாவை மறக்கத் தொடங்கியிருந்தோம். ஆனால், ஆண்டு தொடங்கிய இரண்டே மாதங்களில் ரஷ்யா-உக்ரைன் போர் மூண்டது. இந்நிகழ்வு அரசியலில் மட்டுமல்ல, அறிவியலிலும் பாதிப்பைக் கொண்டுவந்தது. இத்தகைய சூழலிலும், உலகளவிலும் இந்திய அளவிலும் திருப்பம் தந்த அறிவியல் நிகழ்வுகள் பல நடந்தேறியுள்ளன.

உலகளாவிய அறிவியல் நிகழ்வுகள்: ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி: சந்தேகத்துக்கு இடமின்றி, இந்த ஆண்டின் முக்கிய அறிவியல் நிகழ்வாக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கருதப்படுகிறது. அகச்சிவப்புக் கதிர்களை உள்வாங்கும் இந்தத் தொலைநோக்கியானது, ஹப்பிள் தொலைநோக்கியைவிடத் துல்லியமாகவும் நுணுக்கமான தரவுகளுடனும் ஆழ்புலத்தைப் படம்பிடித்திருக்கிறது.



Read in source website