DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 23-10-2022

எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் உடல்நலக் குறைவு காரணமாக தமது சொந்த ஊரான விளாத்திகுளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.

காடு, இரவுகள் உடையும், புதியன, இரவு மழை உள்பட ஏராளமான சிறுகதைத் தொகுப்புகளை பா. செயப்பிரகாசம் எழுதியுள்ளார். பள்ளிக்கூடம், மணல் என இரண்டு நாவல்களையும் அவர் எழுதியுள்ளார்.

தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பர துறையின் முன்னாள் இணை இயக்குனரும், சூரிய தீபன் என்ற புனைப் பெயரில் பல்வேறு கதைகள், கவிதைகள், நாவல்கள் மற்றும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல் குறித்து எழுதியவர் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம். 

மறைந்த பா செயப்பிரகாசம் 1965ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற மாணவர். அதன் காரணமாக இந்தியா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் மூன்று மாதங்கள் சிறை வாசம் அனுபவித்துள்ளார்.

தமிழ் இலக்கியத்தில் சமூக அக்கறை கொண்ட, மக்கள் நலன் சார்ந்து இயங்கக்கூடிய மிக முக்கிய எழுத்தாளர்களில் பா. செயப்பிரகாசம் ஒருவர். இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 1965-இல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குபெற்று சிறை சென்றவர்.

1968 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை மதுரையில் கல்லூரி விரிவுரையாளராகவும், 1971 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை  இணை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

தினமணி, தாமரை, கணையாழி, புதிய பார்வை, தீராநதி, கதை சொல்லி, ஆனந்த விகடன், காலச்சுவடு, அம்ருதா, உயிர்மை, நந்தன், சதங்கை, இந்தியா டுடே, தமிழ் நேயம், மன ஓசை போன்ற இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. கவிதை,, கதை, கட்டுரை, உருவகக் கதைகள் என பல அடங்கும்.

மன ஓசை என்ற கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராகவும், தமிழ் படைப்பாளிகள் முன்னணி என்ற அமைப்பின் செயலாளராகவும் இருந்துள்ளார். 

ஆய்வு மாணவர்கள் சிலர் இவரது படைப்புகளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். அதில்  பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல் காட்டு மக்களின் வாழ்வியல் என்ற ஆய்வும், பா.செயப்பிரகாசம் கதைகளில் மண்ணும் மக்களும் என்கிற மற்றொரு ஆய்வும் குறிப்பிடத்தக்கது.

கல்லூரி நாட்களில் இருந்து இவர் சிறந்த பேச்சாளராக திகழ்ந்துள்ளார்.  பல இலக்கிய மேடைகளிலும் கருத்தரங்குகளிலும் அரசியல் அரங்குகளிலும் இவர் சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

மறைந்த எழுத்தாளர் பா செயப்பிரகாசத்துக்கு மணிமேகலை என்ற மனைவியும் தீபன் என்ற மகனும் சாருநிலா என்ற மகளும் உள்ளனர். தீபன் ஆஸ்திரேலியாவிலும், சாரு நிலா  அமெரிக்காவிலும் உள்ளனர்.

பா.செயப்பிரகாசம் தனது மறைவுக்குப் பிறகு எவ்வித சடங்கு சம்பிரதாயங்களும் மேற்கொள்ளாமல் தன்னுடைய உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக ஒப்படைக்க வேண்டும் என தான் வாழ்ந்த போது தனது உறவினர்களிடமும் சக நண்பர்களிடமும் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நாளை 25 ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் அவரது வீட்டில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு அதன் பின்பு பா.செயபிரகாசத்தின் உடல் மருத்துவக் கல்லூரி வசம் ஒப்படைக்கப்பட இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
 



Read in source website

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோயில் வளாகத்தில் உலகின் மிக உயரமான நடராஜர் சிலை அமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. ரூ.4 கோடி மதிப்பில் 15,000 கிலோ ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலையை ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மா திறந்து வைத்தார்.

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோயில் வளாகத்தில் ரூ.4 கோடி மதிப்பில் உலகிலேயே மிக உயரமான ஐம்பொன் நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 23 அடி உயரம், 18 அடி அகலம் 15,000 கிலோ ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணத்தில் செய்ய தொடங்கப் பட்டது. தற்போது முழுமையாக உருவாக்கப்பட்ட இந்த சிலை கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலூர் தங்கக் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. ஸ்ரீபுரம் தங்கக்கோயில் அருகே உள்ள திருமண மண்டப வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலையை ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா ஞாயிற்றுக்கிழமை காலை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது; பழமையும், தொன்மையும், அழகும் வாய்ந்த இந்திய சமூக கலாச்சாரத்தில் கோயில்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். கோயில்களுக்குச் செல்லும்போது மனிதனுக்கு பூரண மன அமைதி கிடைக்கிறது. கோயில்களில்தான் தெய்வீகத்தன்மை உணர முடியும். மனித சமூகத்திற்கு கோயில் அவசியமானது. கோயிலில் நடக்கும் சமுதாய பூஜைகளுக்கும், ஆன்மீகம் மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் தொடர்புள்ளது. கோயிலுக்கு செல்லும்போது நாம் தெய்வத்திற்கு கொடுத்ததைவிட பல மடங்கு சக்தி, அமைதி நமக்கு கிடைக்கிறது.

இதையும் படிக்க- இந்தியாவில் 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு

சக்கரவர்த்திகளாக பல பகுதிகளை ஆண்ட ராஜாக்கள் கோயில்கள் மூலம்தான் இன்றும் பேசப்படுகின்றனர். ராஜராஜ சோழன் குறித்து தற்போதும் பேசுகிறோம் என்றால் அதற்கு அவர் கட்டிய தஞ்சை பெரிய கோயில் தான். அந்தவகையில், வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் கடந்த 1992-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு 30 ஆண்டுகளாக பல தரும காரியங்கள் நடந்து வருகிறது. 2007-ஆம் ஆண்டு ஸ்ரீபுரத்தில் தங்கக்கோயில் அமைக்கப்பட்டது. இந்த வளாகத்தில் 70 கிலோ தங்கத்தில் சொர்ண மகாலட்சுமி சிலை அமைக்கப்பட்டு பக்தர்கள் கைகளால் தற்போதும் அபிஷேகம் நடந்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து, 9 அடி உயரத்தில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சன்னதி அமைக்கப்பட்டது. தொடர்ந்து 1200 கிலோ வெள்ளியால் சக்தி கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, உலகில் மிகப்பெரிய அளவில் 23 அடி உயரத்தில் நடராஜர் சிலையும் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனந்த தாண்டவ ரூபத்தில் அமைக்கப்பட்டு இந்த நடராஜர் சிலையை வழிபடும்போது ஆனந்தம் தானாக வரும். இந்த நடராஜருக்கு என தனியாக கோயில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளில் கோயில் கட்டப்பட்டு சாஸ்திர முறைப்படி விநாயகர், நடராஜர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். அதுவரை தற்போது வைக்கப்பட்டுள்ள இடத்திலேயே நடராஜருக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும். இங்கு தினமும் 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இந்த சிலை உருவாக காரணம் இருந்த நாராயணி பீட நிர்வாகிகள், இதனை உருவாக்கிய அனைவரையும் ஆசீர்வதிக்கிறேன்.

ஸ்ரீபுரத்தில் சூரிய வழிபாடு, விநாயகர் வழிபாடு, அம்மன் வழிபாடு, சிவன் வழிபாடு பெருமாள் வழிபாடு ஆகியவை உள்ளன. இந்து தர்மத்தில் உள்ள ஆறு வழிபாட்டு முறைகளில் சுப்பிரமணியர் வழிபாடு மட்டும் இன்னும் இல்லை. அதுவும் விரைவில் அமையும் என்றார். அப்போது, நாராயணி பீடத்தின் இயக்குநர் சுரேஷ்பாபு, மேலாளர் சம்பத், நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 



Read in source website

தமிழகத்தில் காலநிலை மாற்றத்துக்கான ஆட்சிமன்றக் குழு, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ளாா்.

அவரது உத்தரவு விவரம்:-

தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்துக்கான பணிகள் ரூ.500 கோடியில் செயல்படுத்தப்படும் என்று மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் முதல் கட்டமாக பருவ நிலை மாற்றத்துக்கான மாநில செயல் திட்டம் வகுக்கப்பட்டது.

அதாவது, பருவநிலை மாற்றத்துக்கான தேசிய செயல் திட்டத்தை ஒட்டி, மாநிலத்தில் அதுபோன்ற செயல் திட்டம் உருவாக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு பசுமை சூழலுக்கான நிறுவனம் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு பருவநிலை இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் ஆகியவற்றுக்கான பணிகளை செயல்படுத்தும் வகையில் பசுமை சூழலுக்கான நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. இது கம்பெனிகள் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளைத் தொடா்ந்து, பசுமைச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்தும் நோக்குடன், இப்போது காலநிலை மாற்றத்துக்கான ஆட்சிமன்றக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சில முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு செயல்படும். தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்துக்கான கொள்கை வழிகாட்டுதல்களை ஆட்சிமன்றக் குழு வழங்கிடும்.

காலநிலை சூழல்களை ஏற்பது மற்றும் துயா் தணிப்பு போன்ற பணிகளுக்குரிய ஆலோசனைகளை வழங்குவது, காலநிலை மாற்றத்துக்கான செயல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது போன்ற பணிகளை ஆட்சிமன்றக் குழு செய்யும். மேலும், மாநில மற்றும் மாவட்ட அளவிலான பருவநிலை மாற்ற இயக்கங்களுக்கு உரிய வழிகாட்டுதல்களையும் வழங்கும்.

இந்த ஆட்சிமன்றக் குழுவானது, முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு செயல்படும். இதில், நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சா் க.ராமச்சந்திரன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், பொருளாதார வல்லுநா் மான்டெக்சிங் அலுவாலியா, இன்போசிஸ் தலைவா் நந்தன் நீலகேனி, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குநா் எரிக் சோல்கிம், பூவுலகின் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜி.சுந்தரராஜன் உள்ளிட்டோரும், தொழில், நகராட்சி நிா்வாகம், நிதி, எரிசக்தி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி, வீட்டுவசதி, கால்நடை, வேளாண் ஆகிய துறைகளின் செயலாளா்கள் என மொத்தம் 22 போ் உறுப்பினா்களாக இருப்பா் என்று தனது உத்தரவில் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளாா்.



Read in source website

‘வழக்கற்றுப்போன 1,500-க்கும் அதிகமான தொன்மையான சட்டங்கள் வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் ரத்து செய்யப்பட உள்ளன’ என்று மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

மக்களின் வாழ்வில் அரசின் பங்கை குறைக்கவேண்டும் என்ற பிரதமா் நரேந்திர மோடியின் விருப்பத்தின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

மேகாலய தலைநகா் ஷில்லாங்கில் சனிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா், இதுகுறித்து மேலும் கூறியதாவது:

வழக்கற்றுப்போன சட்டங்கள் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் இடையூறு ஏற்படுத்துவதாகவும், இன்றைய காலத்துக்கு தொடா்பில்லாததவையாகவும் இருக்கின்றன.

அதே நேரம், மக்களுக்கு அமைதியான வாழ்வை உறுதிப்படுத்துவதும், அவா்களின் சுமையை குறைப்பதும் பிரதமரின் விருப்பமாக உள்ளது. பொதுமக்களின் வாழ்வில் அரசின் பங்கை குறைக்க வேண்டும் என்பது பிரதமரின் விருப்பம்.

அந்த வகையில், வழக்கற்றுப்போன அனைத்து சட்டங்களையும் பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்துகிற தேவையற்ற சட்டங்கள் என்ற அடிப்படையில், அவற்றை நீக்க மத்திய அரசு தீா்மானித்துள்ளது. அதன்படி, வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் 1,500-க்கும் அதிகமான தொன்மையான சட்டங்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

சட்டம் என்பது மக்களுக்கு நீதியை வழங்குவதற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, தொல்லையை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. பொதுமக்களுக்கான சுமுக வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான நடைமுறைகளை பரிந்துரைப்பதாக சட்டங்கள் இருக்க வேண்டும் என்று அவா் கூறினாா்.



Read in source website

பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களுடன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சாா்பில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ராக்கெட் ஏவுதளத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.07 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது.

மூன்று நிலைகளைக் கொண்ட ராக்கெட் ஒவ்வொரு நிலையையும் வெற்றிகரமாக கடந்தபோது, இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் விஞ்ஞானிகள் கைகளைத் தட்டி வரவேற்பு தெரிவித்தனா்.

இறுதியாக, திட்டமிட்ட தற்காலிக புவி சுற்றுப் பாதையில் அனைத்து செயற்கைக்கோள்களும் அடுத்தடுத்து வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் வாழ்த்து தெரிவித்தாா்.

இஸ்ரோவின் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்’ மற்றும் பிரிட்டனின் ‘ஒன் வெப்’ நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒபபந்தத்தின் அடிப்படையில், வணிக ரீதியில் செயல்படுத்தப்பட்ட இந்த ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பாா்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் வெற்றி பெற்ன் மூலமாக, 5,796 கிலோ எடையை சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ராக்கெட் என்ற பெருமையையும் ஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட் பெற்றுள்ளது. இந்த ராக்கெட் 8,000 கிலோ எடையிலான செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் திறனுடையதாகும்.



Read in source website

இந்திய-அமெரிக்க தொழில் அதிபரும், சமூக ஆா்வலருமான1 ஸ்வதேஷ் சட்டா்ஜிக்கு அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

கேரி நகரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஆளுநா் ரே கூப்பா் மாகாணத்தின் உயரிய விருதான ‘தி ஆா்டா் ஆஃப் லாங் லீஃப் பைன்’ என்ற விருதினை சுதேஷ் சட்டா்ஜிக்கு வழங்கினாா். வடக்கு கரோலினா மாகாணம் மட்டுமல்லாமல், இந்திய-அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவதில் அவருடைய பங்களிப்பு குறித்து ஆளுநா் கூப்பா் பாராட்டினாா்.

தொடா்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்வதேஷ் சாட்டா்ஜி கூறியதாவது: இந்திய-அமெரிக்க உறவுகள் நீண்ட பயணத்தைக் கடந்துள்ளது. இதற்காக உழைத்த அமெரிக்க மற்றும் அதன் மாகாணங்களில் வாழும் இந்திய-அமெரிக்க சமூகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 5-6 ஆண்டுகளாக உலகம் முற்றிலுமாக மாற்றம் கண்டுவந்துள்ளது. எனவே, நம் முன் தீா்க்கப்பட வேண்டிய பெரும் பிரச்னைகள் பல உள்ளன. இரு நாட்டு உறவுகளும் உலகின் ஆரோக்கியம், கல்வி, பசுமை ஆற்றல், புத்தாக்கம் உள்ளிட்டவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

கடந்த மூன்று தசாப்தங்களாக இந்தியா-அமெரிக்காவின் உறவைப் பலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவா் ஸ்வதேஷ் சட்டா்ஜி. கடந்த 2000-இல் அமெரிக்காவின் அப்போதைய அதிபா் பில் கிளிண்டனின் இந்திய பயணத்தின்போது, இருநாட்டு உறவுகளுக்கு இடையே புதிய நம்பிக்கையையும் மாற்றத்தையும் கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகித்தவா்.

மேலும், 2005-ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திலும் அவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த 2001-இல் மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கெளரவித்தது.



Read in source website

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக தீவிர வலதுசாரிக் கொள்கையைக் கொண்ட ஜியாா்ஜியா மெலோனி சனிக்கிழமை பதவியேற்றாா். கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் அவரது கட்சி முன்னிலை பெற்றதைத் தொடா்ந்து, அவா் தற்போது பதவியேற்றுக்கொண்டுள்ளாா்.

அவரது தலைமையில் அமையவிருக்கும் அரசுதான், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலியின் முதல் தீவிர வலதுசாரி அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

சா்வாதிகாரி முசோலினியின் தேசிய பாசிச கட்சியின் வழித்தோன்றலான சுதந்திர மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து உருவானதுதான் ஜியாா்ஜியா மெலோனி தலைமையிலான இத்தாலியின் சகோதரா்கள் கட்சியாகும்.

அந்த வகையில், பாசிசத்துடன் தொடா்புடைய ஜியாா்ஜியோ மெலோனி இத்தாலியின் பிரதமராகியிருப்பது ஐரோப்பிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.



Read in source website

மாநில அரசுகள் தொலைக்காட்சி சேவை வழங்க மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது. இதனால், தமிழக அரசு நடத்தி வரும் கல்வித் தொலைக் காட்சிக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மத்திய தொலைதொடர்பு கண்காணிப்பு நிறுவனமான ‘ட்ராய்’ (இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) கடந்த 2012-ம் ஆண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கிய அறிவுறுத்தலில், ‘மத்திய, மாநிலஅரசுகள், அவற்றின் நிறுவனங்கள் தனியாருடன் இணைந்து ஒளிபரப்பு தொழிலை மேற்கொள்ளக் கூடாது’என்று குறிப்பிட்டுள்ளது.

தற்போது ஆந்திரா, கேரளா,தமிழகம் போன்ற மாநில அரசுகள்கல்வி நோக்கத்துக்காக தொலைக்காட்சி சேனல்களை தொடங்கி நடத்தி வருகின்றன. இதுபோன்று மாநில அரசுகள் நடத்தும் தொலைக்காட்சிகளில் மத்திய அரசுக்கு பாதகமான தகவல் இடம்பெறுவதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், இதுபோன்ற சேனல்களில் வெளியாகும் வீடியோக்களை கண்காணிப்புக்கு உட்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அதனால், ட்ராய் நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு வழங்கிய அறிவுறுத்தலை மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் கவனமாக பரிசீலித்து வந்தது.

அதைத் தொடர்ந்து கடந்த 21-ம்தேதி மத்திய, மாநில அரசுகளுக்கு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘மத்திய அமைச்சகங்கள், மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுத் துறைகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளை வழங்க கூடாது. அப்படி ஒளிபரப்ப விரும்பினால் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிரச்சார் பாரதி மூலமாகத்தான் மேற்கொள்ள வேண்டும். அதற்கான பணிகளை அடுத்த ஆண்டுடிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்கவேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில், கற்றலை இனிமையாக்கி இடைநிற்றலை தடுக்கும் வகையில் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதில் ஒளிபரப்பாகும் காட்சிகள் அனைத்தும் அரசுமற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர் குழுவால் தயாரிக்கப்படுபவை. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதுபற்றி தமிழக கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மத்திய அரசின் சுற்றறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்ததும், அதில்உள்ள வழிகாட்டுதல்களை பார்த்தபிறகுதான், அது கல்வி தொலைக்காட்சியை பாதிக்குமா, விலக்கு கோர வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து தெரியவரும்’’ என்றனர்.



Read in source website

மத்திய அரசுத் துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தின் கீழ், 255 பேருக்கு பணிநியமன ஆணைகளை சென்னையில் நடந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

நாடு முழுவதும் உள்ள, மத்திய அரசுத் துறைகளான ரயில்வே, வருமான வரி, சுங்கம், ஜிஎஸ்டி, அஞ்சல், பொதுத் துறை வங்கிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனப் பணிகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தை பிரதமர்நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று தொடங்கிவைத்தார்.

இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்று, அந்தந்த மாநிலங்களில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று, 255 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் தேர்வான 76 பேர், திருச்சி கோட்டத்தில் 7, கடற்படையில் 52, ஜிஎஸ்டி - சுங்கத் துறையில் 18, வருமான வரித் துறையில் 15, இஎஸ்ஐசி-ல் 25, இஸ்ரோவில் 1, கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ்அண்ட் இன்ஜினீயர்ஸ் நிறுவனத்தில் 1, அஞ்சல் துறையில் 6, சிஐஎஸ்எஃப்-ல் 7, சிஆர்பிஎஃப்-ல்10, எஸ்எஸ்பி-ல் 1, இந்தியன் வங்கியில் 17, கனரா வங்கியில் 8, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 2, பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் 9 பேர் என மொத்தம் 255 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இவர்கள் தமிழகம், ஆந்திரா, உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

முன்னதாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பணி நியமன ஆணை பெற்றவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, பணிநியமன ஆணையை பெற்ற தமிழகத்தை சேர்ந்த சிலர், ஆங்கிலத்தில் பதில் அளிக்க முயன்றபோது, தமிழிலேயே பேசுமாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா, ஐசிஎஃப் பொது மேலாளர் ஏ.கே.அகர்வால், மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் நிதின் குப்தா, சென்னை மண்டல பொது மேலாளர் கணேஷ் மற்றும் வங்கி, பாதுகாப்பு, வருமான வரித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.



Read in source website

புதுடெல்லி: ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் கடந்த மூன்று மாதங்களில் 66 குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்தியாவைச் சேர்ந்த மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்த 4 இருமல் மருந்துகள்தான் குழந்தைகளின் இறப்புக்கு காரணம் என்று உலக சுகாதார அமைப்பு குற்றம்சாட்டியது.

உலக அளவில் மருந்துத் தயாரிப்பில் இந்தியா முக்கிய நாடாக உள்ளது. இந்நிலையில், இந்திய நிறுவனத்தின் மருந்தால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவமானது, இந்திய மருந்துத் துறை மீதான சர்வதேச மதிப்பைக் குறைத்துள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது:

தரமற்ற மருந்துகள் தயாரிக்கப்படுவது என்பது ஒரு நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடியது. இந்திய மருந்துத் துறை மீதான மதிப்பை காப்பாற்றுவதற்கும், சர்வதேச அளவில் மருந்துத் தயாரிப்பில் முன்னணி நாடாக நீடிப்பதற்கும் இந்தியா வலுவான தரக் கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்டிருப்பது மிக அவசியம். தற்போது தரக் கட்டுப்பாட்டு அமைப்பில் இருக்கும் குறைகளை கண்டறிந்து அதை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு சவுமியா சுவாமிநாதன் வலியுறுத்தினார்.



Read in source website

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதன்படி வரும் 2025-ம் ஆண்டுக்குள் பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி மூலம் ரூ.41,500 கோடி வருவாய் இலக்கை எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிக்க கடந்த 1998-ம் ஆண்டு ஒப்பந்தம்செய்தன. இந்தியாவின் பிரம்மபுத்திராநதி (Brahmaputra), ரஷ்யாவின் மாஸ்க்வா (Moskva) நதியின் பெயர்களில் இருந்து புதிய சூப்பர்சானிக் ஏவுகணைக்கு பிரம்மோஸ் (BrahMos) என்று பெயரிடப்பட்டது. படைப்பின் கடவுளான பிரம்மனின் வலிமைமிக்க ஆயுதமான பிரம்மாஸ்திரத்தை முன்னிறுத்தியும் இந்த பெயர் வைக்கப்பட்டது.

கடந்த 2001-ம் ஆண்டில் ஒடிசாவில் பிரம்மோஸ் ஏவுகணை முதல்முறையாக வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதன்பிறகு நீர், நிலம், வான்பரப்பில் இருந்து ஏவும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. பின்னர் முப்படைகளிலும் பிரம்மோஸ் சேர்க்கப்பட்டது.

தற்போது பிரம்மோஸ் ஏவுகணை களை நீர்மூழ்கிகள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், நிலத்தில் இருந்து ஏவ முடியும். இது உலகின் அதிவேக சூப்பர்சானிக் ஏவுகணையாகும். 28 அடிநீளம், 2 அடி விட்டம், 3,000 கிலோ எடைகொண்ட பிரம்மோஸ் ஏவுகணை ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில் சீறிப்பாயக்கூடியது. இந்த ஏவுகணையின் வேகம், பாயும் தொலைவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு மார்ச்சில் நடத்தப்பட்ட சோதனையின்போது பிரம்மோஸ் ஏவுகணை 450 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து இலக்கை தாக்கி அழித்தது.

புதிய உற்பத்தி ஆலை: இந்தியா, ரஷ்யா இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமையகம் டெல்லி யில் செயல்படுகிறது. இதன் உற்பத்தி ஆலை ஹைதராபாத்தில் உள்ளது. உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலை திருவனந்தபுரத்தில் செயல்படுகிறது.

புதிதாக உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் ரூ.300 கோடி செலவில் 80 ஹெக்டேர் பரப்பளவில் பிரம்மோஸ்உற்பத்தி ஆலை கட்டப்பட்டு வருகிறது. வரும் 2024-ம் ஆண்டில் புதிய ஆலையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்த பிறகு ஆண்டுதோறும் 100 பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிக்க முடியும்.

எடை குறைப்பு: பிரம்மோஸின் அடுத்த தலைமுறை ஏவுகணையான பிரம்மோஸ் என்.ஜி.தயாரிப்பில் தற்போது தீவிர ஆராய்ச்சி நடக்கிறது. இதில் குறிப்பாக ஏவுகணையின் எடை பாதியாக குறைக்கப்படுகிறது. தற்போது நிலம், போர்க்கப்பலில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸின் எடை 3,000 கிலோவாகவும் போர் விமானத்தில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸின் எடை 2,500 கிலோவாகவும் உள்ளது.

புதிதாக தயாரிக்கப்படும் பிரம்மோஸ் என்.ஜி. ஏவுகணையின் எடை 1,330 கிலோவாக இருக்கும். இதன்மூலம் போர் விமானங்களில் இருந்து மிக எளிதாக ஏவ முடியும். அடுத்த ஆண்டு இறுதி அல்லது 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் பிரம்மோஸ் என்.ஜி. ஏவுகணையின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. புதிய ஹைப்பர்சானிக் ஏவுகணைக்கு பிரம்மோஸ் 2 (K) என்று பெயரிடப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நினைவுகூரும் வகையில் ஏவுகணையுடன் "K" என்ற வார்த்தை சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த ஏவுகணை மணிக்கு 9,000 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும். 1,000 கி.மீ. முதல் 1,500 கி.மீ. வரையிலான இலக்கை தாக்கி அழிக்கும். 500 கிலோ வரையிலான வெடிகுண்டுகளை சுமந்து செல்லும். வரும் 2024-ம் ஆண்டில் முதல் சோதனைநடத்தப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் பிரம்மோஸ் ஹைப்பர்சானிக் ஏவுகணை உற்பத்திதொடங்கப்பட உள்ளது. பிரம்மோஸ்ஏவுகணைகளை செயற்கைக்கோள்கள் மூலம் ஏவும் ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகளை வாங்கபிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ் ஏற்கெனவே ரூ.3,103 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்தநாட்டுக்கு அடுத்த ஆண்டு ஏவுகணைகள் அனுப்பப்படும் என்று பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தெரிவித்துள்ளது.

வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுடனும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, வரும் 2025-ம் ஆண்டுக்குள் பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி மூலம் ரூ.41,500 கோடி வருவாய் இலக்கை எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணையை வாங்கவும் பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாதுகாப்புக்காகவே ஆயுதங்களை இந்தியா வழங்குகிறது

இந்தியா ஒருபுறம் பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகள், ஆயுதங்களை தயாரிப்பது மட்டுமின்றி விற்பனையிலும் இறங்கியிருப்பதால், போருக்கு வழிவகுக்குகிறது என்று மற்ற நாடுகள் நினைக்க முடியாது. ஏனெனில், ஆயுதங்களை வாங்கும் வெளிநாடுகள், அந்தந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாத்துக் கொள்ளவே இந்தியா வழங்குகிறது என்று சர்வதேச நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதற்கு உதாரணமாக ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ், இந்திய பயணத்தின் போது பேசுகையில், ‘‘ஐ.நா. சார்பில் சர்வதேச அளவில் அமைதியை ஏற்படுத்தும் ராணுவப் படைக்கு (பல நாடுகள் சேர்ந்த அமைதிப் படை) ஆயிரக்கணக்கான வீரர்களை இந்தியா அனுப்பி வருகிறது. அவர்களில் ஏராளமானோர் பல நாடுகளில் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். உலக அமைதிக்கு இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கை அளப்பரியது’’ என்று மனம் திறந்து பாராட்டியிருப்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு பரவாயில்லை; இந்தியா போன்ற வளரும் நாடுகள் ராணுவத்துக்கு ஏராளமாக நிதி ஒதுக்குவது வளர்ச்சியை பாதிக்கும் என்று விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில், ராணுவத்துக்கு நிதி ஒதுக்கி அதிநவீன ஆயுதங்கள் தயாரிப்பது மட்டுமன்றி, மற்ற சிறிய நாடுகளின் பாதுகாப்புக்கும் அவற்றை வழங்குவதன் மூலம் வருவாய் ஈட்ட முடியும் என்பதை இந்தியா நிரூபித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. பொதுச்செயலாளர் புகழாரம்: மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் பேசியதாவது: இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய கொள்கைகளை பின்பற்றி ஐ.நா. சபை செயல்படுகிறது. ஐ.நா. அமைதிப் படைக்கு இந்தியாவில் இருந்தே அதிக அளவில் வீரர்கள் அனுப்பப்படுகின்றனர். கடந்த 1948-ம் ஆண்டு முதல் 49-க்கும் மேற்பட்ட அமைதி திட்டங்களில் இந்திய வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றி உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா திறம்பட செயல்பட்டு வருகிறது. அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள், நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். கரோனா பெருந்தொற்று காலம், தற்போதைய உக்ரைன் போரால் சர்வதேச அளவில் உணவு, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். ஏராளமான மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டு உள்ளனர்.

சோதனைகளை, சாதனைகளாக மாற்றுவதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக விளங்குகிறது. வறுமை ஒழிப்பு, வளர்ச்சியில் மற்ற நாடுகளைவிட இந்தியா மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை திட்டம் என இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

இந்தியாவில் சுமார் 100 கோடிக்கும் மேற்பட்டோர் செல்போன் இணைய வசதியை பயன்படுத்துகின்றனர். ஆன்லைன் சுகாதார சேவைகள், நிதித் துறை சார்ந்த சேவைகளில் இந்தியா முன்னோடியாக விளங்குகிறது. அனைத்து துறைகளிலும் இந்திய பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். டிஜிட்டல் சுகாதார தளம், கோவின் திட்டங்களால் கரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. கரோனா பெருந்தொற்று காலத்தில் இலங்கை, ஆப்கானிஸ்தானுக்கு தடுப்பூசிகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்களை இந்தியா தாராளமாக வழங்கியது.

இன்றைய கால கட்டத்தில் பல்வேறு நாடுகள் கடன் சுமையில் சிக்கித் தவிக்கின்றன. அந்த நாடுகளை மீட்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதை வரவேற்கிறோம். ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. இதன்மூலம் சர்வதேச நிதி கட்டமைப்பில் இந்தியாவால் சீர்திருத்தத்தை ஏற்படுத்த முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். பல்வேறு பிரச்சினைகளை உலகம் சந்தித்து வரும் வேளையில் சர்வதேச அரங்கில் இந்தியா முன்வரிசையில் நின்று பணியாற்ற அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.



Read in source website

புதுடெல்லி: நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கும் `ரோஜ்கார் மேளா'வை (வேலைவாய்ப்புத் திருவிழா) பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். முதல்கட்டமாக, 75 ஆயிரம் பேருக்கு நேற்று பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனிதவளம் தொடர்பாக பிரதமர் மோடிகடந்த ஜூன் மாதம் ஆய்வு மேற்கொண்டார். அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, பல்வேறு துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்பத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் `ரோஜ்கார் மேளா'வை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார்.

நாட்டின் பல்வேறு நகரங்களில், ஒரே நேரத்தில் காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்கட்டமாக 75,226 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

மத்திய அமைச்சர்கள் 50 பேர், சுமார் 20 ஆயிரம் பேருக்கு நேரடியாக பணி நியமன ஆணைகளை வழங்கினர். மற்றவர்களுக்கு அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன. இவர்கள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), எஸ்எஸ்சி மற்றும் ரயில்வே பணியாளர் வாரியம் (ஆர்ஆர்பி) உள்ளிட்டவை மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் முடிவடைந்ததைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு சார்பில் 75 ஆயிரம் இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.

உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5 இடங்கள் முன்னேறி உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சிக்கான தடைகள் அகற்றப்பட்டதே இதற்குக் காரணம்.

பணவீக்கம், வேலையின்மை, 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்ட நெருக்கடியின் (கரோனா வைரஸ் பரவல்) விளைவுகளால் உலகின் பல பெரிய பொருளாதார நாடுகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் பிரச்சினையை 100 நாட்களில் சரிசெய்துவிட முடியாது.

உலகம் முழுவதும் கடும் நெருக்கடி ஏற்பட்டபோதிலும், இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு சுயசார்பு மிகவும் அவசியம். கடந்த 2014-ல் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்திய நிறுவனங்கள் சுயசார்பு அடைந்துவருகின்றன. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம்.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி வழங்கியது. இதனால் 1.5 கோடி பேரின்வேலை பறிபோகாமல் தடுக்கப்பட்டது. வேளாண்மை, எம்எஸ்எம்இமற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை வலிமைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள். கடந்த சில ஆண்டுகளில், சுய உதவிக் குழுக்களில் 8 கோடி பேர் இணைந்துள்ளனர். இவ்வாறு பிரதமர் பேசினார்.

அமைச்சர்கள் பங்கேற்பு

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடிசாவிலிருந்தும், சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா குஜராத்திலிருந்தும், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் சண்டிகரிலிருந்தும், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மகாராஷ்டிராவிலிருந்தும், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தானிலிருந்தும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையிலிருந்தும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் 38 அமைச்சகங்கள் அல்லது துறைகளில் காலியாக உள்ள, ஏ மற்றும்பி (அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள்), பி (அரசிதழ் பதிவு பெறாதஅதிகாரிகள்), சி ஆகிய பிரிவுகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

மத்திய ஆயுதப் படை பணியாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், எல்.டி.சி., ஸ்டெனோ,பி.ஏ., வருமான வரி ஆய்வாளர்கள் மற்றும் எம்.டி.எஸ். உள்ளிட்டபதவிகளுக்கு யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்டவற்றின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.



Read in source website

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) மிகப்பெரிய ராக்கெட்டான ‘எல்விஎம் 3’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பிரிட்டனைச் சேர்ந்த ‘ஒன்வெப்’நிறுவனம் இணையப் பயன்பாட்டுக்கான செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போது அரசு, கல்வி,வர்த்தகம் தொடர்பான பயன்பாட்டுக்காக 36 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டு அந்த செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பணியை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவிடம் ஒப்படைத்தது.

இந்த 36 செயற்கைக்கோள்களும் நள்ளிரவு 12.07 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து ‘எல்விஎம் 3' ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ‘ஜிஎஸ்எல்வி எம்கே 3’ என்று அழைக்கப்பட்டு வந்த ராக்கெட்தான் தற்போது ‘எல்விஎம் 3’ என்று அழைக்கப்படுகிறது. இது 43.5 மீட்டர் நீளமும் 640 டன் எடையும் கொண்டது. இந்த ராக்கெட் இதுவரையில் அரசு செயல்பாடுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது முதன்முறையாக வணிகச் செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

விண்ணில் ஏவப்பட்ட 19 நிமிடத்தில் 36 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

முன்னதாக, 36 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்வெளி நிலைநிறுத்தப்பட்ட பிறகு விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், "இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க பணி. பிரதமர் மோடியின் ஆதரவால் இது சாத்தியமானது. எல்விஎம்3 வணிகச் சந்தைக்குள் வர வேண்டும் என்று அவர் விரும்பினார். நமது ராக்கெட்களை பயன்படுத்தி வணிகக் களத்தை ஆராய்வதற்கு விரிவாக்குவதற்கு அவர் அளித்த ஆதரவு முக்கியமானது.

நாங்கள் ஏற்கனவே (தீபாவளி) கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டோம் ... 36 செயற்கைக்கோள்களில் 16 வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டுவிட்டன, மீதமுள்ள 20 செயற்கைக்கோள்கள் பிரிக்கப்படும். தரவு சிறிது நேரம் கழித்து வரும். சந்திரயான்-3 கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. இறுதி ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை கிட்டத்தட்ட முடிந்தது. இன்னும் சில சோதனைகள் நிலுவையில் உள்ளன. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சந்திரயான்-3 விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம்" என்றார்.



Read in source website

கொல்கத்தா: வெளிநாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம் பெரும்பாலும் டாலரில் நடைபெற்றுவருகிறது. இந்த வர்த்தகத்தை ரூபாயில் மேற்கொள்வதற்கான முயற்சிகளை தற்போது மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இதற்கென்று வெளிநாட்டு வங்கிகளுடன் சிறப்பு கணக்குகள் தொடங்குமாறு இந்திய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த காஸ்ப்ரோம்பேங் இந்தியபொதுத்துறை வங்கியான யூகோவங்கியில் சிறப்பு ரூபாய் கணக்கைத் தொடங்கியுள்ளது.

இது குறித்து யூகோ வங்கியின்சிஇஓ சோம சங்கர் கூறுகையில், “யூகோ வங்கியில் காஸ்ப்ரோம் பேங் வோஸ்ட்ரோ கணக்கைத் தொடங்குவது தொடர்பானஅனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்துவிட்டன. தற்போதுஇந்த வோஸ்ட்ரோ கணக்கு செயல்பாட்டுக்கு வந்துவிட்டது” என்று குறிப்பிட்டார்.

டாலரில் வர்த்தகம் செய்துவருவதால், இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இது தவிர்த்து,அமெரிக்காவால் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்ட ரஷ்யா, ஈரான்உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவர்த்தகத்தில் ஈடுபடுவதும் சிக்கல்நிறைந்ததாக உள்ளது.

இந்தப் போக்கை மாற்றி அமைக்கும் பொருட்டு, மத்தியஅரசு ஏற்றுமதி - இறக்குமதிதொடர்பான பணப்பரிவர்த்த னையை ரூபாயிலேயே மேற்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டது. இந்திய வங்கிகள்வோஸ்ட்ரோ கணக்குகள் திறப்பதன் மூலம் வெளிநாடுகளுடன் ரூபாயிலே வர்த்தகம் செய்ய முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

இந்நிலையில், ரஷ்யாவின் மிகப் பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான காஸ்ப்ரோம்பேங் இந்திய பொதுத் துறை வங்கியான யூகோ வங்கியில் வோஸ்ட்ரோ கணக்கைத் தொடங்கியுள்ளது.

வோஸ்ட்ரோ கணக்கு மூலம் இந்திய இறக்குமதியாளர்கள், அவர்கள் செலுத்த வேண்டிய தொகையை டாலருக்குப் பதிலாக ரூபாயிலே செலுத்தலாம். அதேபோல் ஏற்றுமதியாளர் கள் அவர்களுக்குரிய தொகையை எதிர்நாட்டிலிருந்து ரூபாயிலே பெற்றுகொள்ள முடியும்.



Read in source website

நவீன தொழில் நுட்பத்திலான காற்றாலைகளை, கடலிலும் நிலத்திலும் அமைப்பதற்காக, தேசிய காற்றாலை மின்சக்தி நிலையத்துடன் சென்னையில் என்எல்சி இந்தியா நிறுவனம்ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக என்எல்சி இந்தியா நிறுவனம் அளித்துள்ள தகவல் விவரம் வருமாறு:

என்எல்சி இந்தியா நிறுவனம், பல்வேறு பசுமை மின்திட்டங்களை அமைத்து வரும் நிலையில், புதிய காற்றாலை மின் நிலையங் களை கடலிலும், கரையிலும் அமைப்பதற்காக தொழில் நுட்பங்களைப் பெறவும் அதிகா ரிகளுக்குப் பயிற்சி வழங்கவும், இந்த ஒப் பந்தத்தை என்எல்சி இந்தியா நிறுவனம் மேற் கொண்டுள்ளது.

சென்னை, பள்ளிக்கரணையில் உள்ள தேசிய காற்றாலை மின்சக்தி நிலையத்தின் தலைமை அலுவலகத்தில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குநர் மோகன் ரெட்டி மற்றும் தேசிய காற்றாலை மின்சக்தி நிலையத்தின்பொது இயக்குநர் டாக்டர் கே. பலராமன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட் டனர்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராக்கேஷ் குமார் காணொலி மூலம் இந்நிகழ்வில் பங்கேற்று, நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பசுமை மின்திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார்.

தற்போது என்எல்சி இந்தியா நிறுவனம் இயக்கி வரும் காற்றாலைகளின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் புதிய காற்றாலை மின் நிலையங்களில் சிறப்பான வகையிலான இயக்குதல் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற அம்சங்களும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

சென்னை: காற்றின் தரத்தை அறிந்துகொள்ளும் வசதி கூகுள் மேப்ஸ் தளத்தில் உள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் பகுதியில் உள்ள காற்றின் தரத்தை தெரிந்து கொள்ள முடியும். அது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

இப்போதெல்லாம் ஏதேனும் ஒரு புதிய இடத்திற்கோ அல்லது ஊருக்கோ செல்வதென்றால் பெரும்பாலனவர்கள் கூகுள் மேப்ஸ் துணையை நாடுவதுண்டு. லொகேஷனை பகிர்ந்தால் போதும் உலகின் எந்த பகுதியில் உள்ள இடமானாலும் கூகுள் மேப்ஸ் அறியும் என சொல்லலாம். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் இந்த அப்ளிகேஷன் மிகவும் பிரபலமானது. இந்த அப்ளிகேஷன் மூலம் பயனர்கள் காற்றின் தரத்தையும் அறிந்து கொள்ளலாம்.

பயன்படுத்துவது எப்படி?

  • மொபைல் போனில் கூகுள் மேப்ஸ் செயலியை ஓப்பன் செய்ய வேண்டும்.
  • பின்னர் லேயர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் ஸ்ட்ரீட் வியூ, 3டி, டிராஃபிக் வரிசையில் காற்றின் தரம் (ஏர் குவாலிட்டி) இருக்கும்.
  • அதன் மூலம் பயனர்கள் காற்றின் தரத்தை அறிந்து கொள்ளலாம்.

இதற்காக காற்றின் தரத்தை கணக்கிடும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்ற இந்திய அமைப்புகளுடன் இதற்காக இணைந்துள்ளது கூகுள். நலம், திருப்திகரம், மிதம், மோசம், மிகவும் மோசம் என்ற வகையில் இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. காற்றின் தரத்திற்கு ஏற்ப இதன் நிறம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இப்போதைக்கு இதன் மூலம் காற்றின் தரத்தை அறிந்து கொள்ள முடிகிறது. காற்றின் தரம் மோசமானால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நலன் சார்ந்த சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.



Read in source website

நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு, இம்ரான் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்போது என்ன நடக்கிறது?

பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. அந்நாட்டின் முன்னாள் அதிபர் இம்ரான் கான், அந்நாட்டின் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பனாமா ஆவணங்கள் தொடர்பான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இம்ரானின் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது

இம்ரானுக்கு எதிரான புகார் என்னவென்றால், அவர் பதவியில் இருந்தபோது பெற்ற பல பரிசுகளை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல், சட்டவிரோதமாக விற்றார்.
சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் அவருக்கு பரிசளித்த கிராஃப் வாட்ச், ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், விலையுயர்ந்த கஃப்லிங்க்ஸ், மதிப்புமிக்க பேனா மற்றும் மோதிரம் உள்ளிட்டவை அந்த பொருட்களில் அடங்கும்.

இம்ரான் பணம் செலுத்தியதால் இந்த விற்பனை சட்டவிரோதமானது அல்ல என்றாலும், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (ECP) விற்பனை செய்ததையோ அல்லது அதன் மூலம் செய்யப்பட்ட பணத்தையோ அறிவிக்காததற்காக அவரை தகுதி நீக்கம் செய்துள்ளது.
உயர் பதவியில் இருப்பவர் தனிப்பட்ட லாபத்திற்காக இத்தகைய பொருளை விற்பதில் முறைகேடு அதிகமாக உள்ளது என அந்நாட்டு சட்ட விதிகள் கூறுகின்றன.

2016ஆம் ஆண்டு நவாஸ் சொத்துக்களை அறிவிக்காததால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஏனெனில் பிரதமர் என்பவர் புத்திசாலித்தன்மையுடன் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்பது அந்நாட்டின் அரசியல் சாசன விதி.
இதனால் நவாஸை, தற்போதைய தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியல் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அவரை பின்னர் வாழ்நாள் தகுதி நீக்கம் செய்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்

இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிராக இம்ரான் கானின் வழக்குரைஞர்கள் மேல்முறையீடு செய்ய உள்ளனர். இதற்கிடையில் இம்ரான் கான் தகுதி நீக்கத்துக்கு எதிராக பாகிஸ்தானில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும், இம்ரான் எவ்வளவு காலத்திற்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் கடந்த வாரம் அவர் வென்ற நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கிறார்.

கடந்த ஏப்ரலில், இம்ரானும் அவரது பெரும்பாலான கட்சி உறுப்பினர்களும் அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடாளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்ததாக அறிவித்தனர்.
இதில் 8 இடங்களில் கடந்த வாரம் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையில் இம்ரான் கான் வெளியேற்றப்பட்ட பின்பு அவரது புகழ் அதிகரித்துவருகிறது. ஏனெனில் 7 தொகுதிகளில் போட்டியிட்டு ஏழையும் அவர் வென்றுள்ளார்.

தற்போது என்ன நடக்கிறது?

தேர்தல் வெற்றிகள் இம்ரான் தனது வாய்ப்புகள் மீது மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. 2016 ஆம் ஆண்டில், இம்ரான் தனது ஆதரவாளர்களால் இஸ்லாமாபாத்தை முற்றுகையிடப்போவதாக அச்சுறுத்திய பின்னரே உச்சநீதிமன்றத்தில் தனது வழக்கை விசாரிக்கப் பெற்றார்.
இம்முறை இம்ரான் பக்கம் ராணுவம் இல்லை. ஆனால் அவர் தனது பிரபலத்தின் மீது சவாரி செய்ய முடியும் என்று அவர் நம்புகிறார், தொடர்ந்து, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

குறைந்தபட்சம் தற்போதைக்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புக்கு அவர் அளித்த முதல் பதில், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

பாகிஸ்தான் ராணுவம் தற்போது மேலிடத்தில் மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. இம்ரான் கான் வெளியேற்றப்பட்டதற்குப் பின்னால் ஒரு முக்கிய நிகழ்வாக ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா நவம்பர் இறுதியில் ஓய்வு பெறுகிறார்.
மறுபுறம், இம்ரான் கான் தனது சாத்தியமானவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.



Read in source website

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஷேகன் கருணாதிலக, ‘தி செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்தா’ என்கிற தன்னுடைய இரண்டாவது நாவலுக்காக இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசைப் பெற்றுள்ளார்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரை மையமாகக் கொண்டது இந்நாவல். இதன் முதன்மைக் கதாபாத்திரமான அல்மெய்தா ஒரு ஒளிப்பட இதழாளர். அவர் இறந்துவிட்ட பிறகு பூவுலகில் வாழும் தனது நண்பர்களைத் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பு ஏழு நாட்களுக்கு அவருக்குக் கிடைக்கிறது. அவர்களின் மூலமாக மறைத்துவைக்கப்பட்டிருக்கும் தன்னுடைய ஒளிப்படங்களை மீட்டெடுத்து இலங்கைப் போர்க் குற்றங்களை அவர் அம்பலபடுத்துகிறார். “வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான சாகசம் நிறைந்த பயணத்தை வாசகருக்கு அளிக்கும் இந்த நூல், அதன் வழியாக உலகின் இருண்மையான இதயம் என்று ஆசிரியரால் அழைக்கப்படும் இடத்துக்கு அழைத்துச்செல்கிறது” என்று விருதுத் தேர்வுக் குழுவின் தலைவர் நீல் மெக்கிரெகோர் கூறியுள்ளார்.



Read in source website

கு.அழகிரிசாமி என்றதுமே, அவரின் ‘அன்பளிப்பு’ கதையில் வரும் சாரங்கனின் பெயரே பலரின் நினைவுக்கு வரும். இன்னும் சிலருக்கு, ‘ராஜா வந்திருக்கிறார்’ சிறுகதையில் இடம்பெற்ற சிறுவர்கள் கண்முன் வந்து செல்லலாம். இப்படி, ஓர் எழுத்தாளரின் முதன்மையான நினைவுகளாக அவர் உருவாக்கிய குழந்தைக் கதாபாத்திரங்கள் இருப்பது, இலக்கியச் சூழலில் அபூர்வமே.

பெரியவர்களுக்கான கதையில் சிறுவர்களை வலம்வர வைத்தது மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு என்றே கதைகளை எழுதியிருக்கிறார் அழகிரிசாமி. ‘மூன்று பிள்ளைகள்’, ‘காளிவரம்’ ஆகிய நூல்கள் அவரின் குழந்தை இலக்கியப் படைப்புகள் எனத் தெரியவந்துள்ளன. ஆனால், அவை இரண்டுமே தற்போது அச்சில் இல்லை. அவரின் மொத்த படைப்புகளாக வெளிவந்திருக்கும் நூல்களில் அவை இடம்பெறவும் இல்லை. நீண்ட தேடலுக்குப் பிறகு சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் ‘மூன்று பிள்ளைகள்’ நூலைக் கண்டெடுத்தேன்.



Read in source website

பாரதியை ‘மகாகவி’ என்று சொல்வதை ஆரம்பத்தில் ஆய்வாளர்கள் சிலர் ஏற்க மறுத்தனர். அவரது பாடல்களின் சொல்லாற்றலை, பொருண்மை அழகைத் தரிசித்த தமிழ்ச் சமூகம், அவரது மகோன்னத இடத்தை உறுதிசெய்த பிறகு, அவரை ‘மகாகவி’ என ஏற்றுக்கொள்ள முன்வந்தனர். புதுமைப்பித்தன் மறைவுக்குப் பின் அவருக்கு நேர்ந்த கதியும் கிட்டத்தட்ட இதேதான். சுந்தர ராமசாமி, தொ.மு.சி. போன்றவர்கள் ‘புதுமைப்பித்தன் மலர்’ வாயிலாக மீண்டும் அவரது மாபெரும் ரூபத்தை மீட்டெடுத்தனர். பின்னர்தான் பாரதி, புதுமைப்பித்தன் என்ற வரிசைப் பாதையைத் தமிழின் நவீன மரபு கண்டடைந்தது. அதில் ஜெயகாந்தன், ஆதவன், சுந்தர ராமசாமி, வண்ணநிலவன் என அழகிய வரிசை உருவானது.



Read in source website