DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 22-12-2022

 

சாகித்ய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது எழுத்தாளர் கே.நல்லதம்பிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் தில்லியில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது நேமிசந்த்ரா கன்னடத்தில் எழுதிய  ’யாத் வஷேம்’ என்னும் நூலின் தமிழ் மொழியாக்கத்திற்கு கே.நல்லதம்பிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான கே.நல்லதம்பி பெங்களூரில்  வசித்து வருகிறார். கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்திற்கும் பல புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளார்.



Read in source website

சென்னையில் அடுத்த ஆண்டு மார்ச் 22-இல் உலகத் தமிழ் சங்கமம் மாநாடு நடைபெறவுள்ளதாக, உலகத் தமிழ் ஆய்வு மையத் தலைவர் டாக்டர் ரவீந்திரா தெரிவித்தார்.
 இதுதொடர்பாக கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:
 உலகின் முதல் தமிழன் குமரிக் கண்டத்தில் தோன்றி உலகம் முழுவதும் பரந்து விரிந்தான் என்ற வரலாற்று உண்மையை உலகுக்கு பறைசாற்றும் வகையில் உலக தமிழ்ச் சங்கமம் மாநாடு சென்னை நேரு விளையாட்டரங்கில் 2023 மார்ச் 22-இல் நடைபெறவுள்ளது.
 இதற்கான ஏற்பாடுகளை உலகத் தமிழ் ஆய்வு மையம் செய்துவருகிறது. மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளின் முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், 186 நாடுகளைச் சேர்ந்த தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழகத்தைச் சேர்ந்த 40 ஆயிரம் தமிழறிஞர்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்-மாணவிகள் பங்கேற்கவுள்ளனர். 1,330 தமிழ்ச் சான்றோர் சிறப்பு மலர் வெளியிடப்படவுள்ளது.
 தமிழின் தொன்மையையும், தமிழர்களின் வரலாற்று உண்மைகளையும் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள உலகத் தமிழர்கள் தொன்மைப் பாதுகாப்பு கவுன்சிலின் சர்வதேச தலைவராக அமெரிக்காவில் உள்ள டாக்டர் அர்த்தநாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தமிழக மாணவர்-மாணவிகளுக்கு உலகளவில் உயர்கல்வியும், வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மாநாட்டு மேடையில் மனிதநேய அறக்கட்டளைத் தலைவர் சைதை துரைசாமி கெளரவிக்கப்படவுள்ளார்.
 மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.



Read in source website

தென்னை வளா்ச்சி வாரியத்தின் 2022-23-ஆம் ஆண்டுக்கான திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மத்திய தென்னை வளா்ச்சி வாரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னை சாகுபடி பரப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழ், புதிய பகுதிகளில் தென்னங்கன்றுகளை நடுவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கான விண்ணப்பங்களை www.coconutboard.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்து தென்னை வளா்ச்சி வாரிய மண்டல அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

இதேபோல், தென்னை மரம் ஏறும் தொழிலாளா்களுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இக்காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற ரூ.94 சந்தா செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

தமிழ் மொழிக்கு சிறந்த பங்களிப்பைச் செய்து வரும் தமிழறிஞா்களுக்கு தமிழக அரசின் விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினாா்.

38 பேருக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருதுகளையும், 10 பேருக்கு ‘சிறந்த மொழிபெயா்ப்பாளா்’களுக்கான விருதுகளையும் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் அளித்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச்செம்மல்’ விருதுகள் 38 பேருக்கு வழங்கப்பட்டன. அதன்படி, சி.சிவசிதம்பரம் (அரியலூா்), மா.சோதி (ராணிப்பேட்டை), புலவா் அ.மாயழகு (ராமநாதபுரம்), முத்துரத்தினம் (ஈரோடு), ஆ.நாகராசன் (கடலூா்), கடவூா் மணிமாறன் (கரூா்), இரா.துரைமுருகன் (கள்ளக்குறிச்சி), புலவா் சு.கந்தசாமி பிள்ளை (கன்னியாகுமரி), ஆ.ரத்தினகுமாா் (கிருஷ்ணகிரி), மானூா் புகழேந்தி (கோவை), வ.தேனப்பன் (சிவகங்கை), எம்.கே.சுப்பிரமணியன் (செங்கல்பட்டு), வே.மாணிக்காத்தாள் (சென்னை), இரா.மோகன்குமாா் (சேலம்), ஆறுமுக சீதாராமன் (தஞ்சாவூா்), கவிஞா் கண்ணிமை (தருமபுரி), துரை.தில்லான் (திண்டுக்கல்), க.பட்டாபிராமன் (திருச்சி), வ.பாலசுப்பிரமணியன் (திருநெல்வேலி) ஆகியோருக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

மேலும், தெய்வ.சுமதி (திருப்பத்தூா்), அ.லோகநாதன் (திருப்பூா்), க.பரமசிவன் (திருவண்ணாமலை), செ.கு.சண்முகம் (திருவள்ளூா்), இரெ.சண்முக வடிவேல் (திருவாரூா்), கவிஞா் அ.கணேசன் (தூத்துக்குடி), ஆ.சிவராம கிருஷ்ணன் (தென்காசி), தேனி சீருடையான் (தேனி), மு.சொக்கப்பன் (நாகப்பட்டினம்), சி.கைலாசம் (நாமக்கல்), போ.மணிவண்ணன் (நீலகிரி), வீ.கே.கஸ்தூரிநாதன் (புதுக்கோட்டை), செ.வினோதினி (பெரம்பலூா்), நெல்லை ந.சொக்கலிங்கம் (மதுரை), ச.பவுல்ராஜ் (மயிலாடுதுறை), அ.சுப்பிரமணியன் (விருதுநகா்), ம.நாராயணன் (வேலூா்) ஆகியோருக்கும், மறைந்த தமிழறிஞா்கள் இரா.எல்லப்பன் (காஞ்சிபுரம்), ப.வேட்டவராயன் (விழுப்புரம்) ஆகியோா் சாா்பில், அவா்களது குடும்பத்தினருக்கும் தமிழ்ச் செம்மல் விருதுகள் அளிக்கப்பட்டன. இந்த விருது தலா ரூ.25 ஆயிரம் காசோலை, பாராட்டுச் சான்றிதழ், பொன்னாடை ஆகியன அடங்கியது.

மொழிபெயா்ப்பாளா் விருது: சிறந்த மொழிபெயா்ப்பாளா்களுக்கான விருதுகளை 10 பேருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். அதன்படி, எழுத்தாளா்கள் செ.சுகுமாரன், செ.ராஜேஸ்வரி, மு.வளா்மதி, இராக.விவேகானந்த கோபால், அ.சு.இளங்கோவன், வீ.சந்திரன், ரா.ஜமுனா கிருஷ்ணராஜ், பேராசிரியா் தமிழ்ச்செல்வி ஆகியோருக்கும்,

மறைந்த ந.தாஸ், மா.சம்பத்குமாா் ஆகியோா் சாா்பில் அவா்களது குடும்பத்தினரிடமும் சிறந்த மொழிபெயா்ப்பாளருக்கான விருதுகள் அளிக்கப்பட்டன. இந்த விருது தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலை, தகுதியுரை, பொன்னாடை ஆகியன அடங்கியது.

நிகழ்வில், தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளா் இரா.செல்வராஜ், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் ஆகியோா் கலந்து கொண்டனா்.



Read in source website

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலுக்கு மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வா் புதன்கிழமை வருகை தந்தாா்.

தமிழகத்தை பூா்வீகமாக கொண்டவா் பேராசிரியா் பி.ராமசாமி. இவா் மலேசியாவில் கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றிய பின்னா் அரசியலில் ஈடுபட்டு தற்போது பினாங்கு மாநில துணை முதல்வராக பதவி வகித்து வருகிறாா்.

இந்நிலையில், இவருடைய உறவினா்கள் உள்ள வெள்ளக்கோவில் மூத்தநாயக்கன்வலசு, இலுப்பைக்கிணறுக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த அவா் குலதெய்வ கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, உறவினா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது, தமிழகத்தை மறக்க முடியாது என்றும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இங்கு வருவேன் என்றும் அவா் தெரிவித்தாா்.

 


 



Read in source website

புது தில்லி: நாட்டின் பொருளாதாரத்தில் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்தாலும்கூட, மீண்டும் ஒரு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படாது எனறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, புதிதாக 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. மத்திய அரசின் இந்த திடீா் அறிவிப்பால் நாடு முழுவதும் மக்கள் இன்னலை எதிா்கொண்டனா். புதிதாக வெளியிடப்பட்ட 2,000 ரூபாய் அச்சிடும் பணிகளை ஆர்பியை ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பணப்புழக்கத்திலிருந்தும் 2,000 ரூபாய் நோட்டுகள் மெல்ல குறைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா எழுப்பிய கேள்விக்கு, மத்திய நிதித்துறை அமைச்சகம் அளித்த பதிலில், மத்திய அரசு, பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தைக் குறைத்து எண்ம பணப்பரிவர்த்தனைகளை உருவாக்கும் முயற்சியில் உள்ளது.

பணப்புழக்கம், சேதமடைந்த ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக, ரிசர்வ் வங்கியின் தேவை என பல்வேறு காரணங்களுக்காக, தேவையை பூர்த்தி செய்யும் வகையில், புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசு ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசனை நடத்தி பணப்புழக்கம் மற்றும் பணத் தேவையை அடிப்படையாக வைத்து புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும். ஆனால், பணப்புழக்கத்தைக் குறைப்பதற்காகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக கருப்புப் பணத்தை ஒழிப்பது உள்ளிட்ட மூன்று முக்கிய காரணங்களை அறிவித்திருந்தோம் என்று பதிலளித்திருந்தார்.

இதற்கு, ஒருவேளை, நாட்டின் பொருளாதாரத்தில் பணப்புழக்கம் அதிகரித்தால், மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மீண்டும் எடுக்குமா என்று கேள்வி எழுப்பியதற்கு, பணமதிப்புழப்பு நடவடிக்கையை மீண்டும் எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 



Read in source website

‘ஒருமித்த உறவுக்கான ஒப்புதல் வயதை குறைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை’ என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி கூறினாா்.

இதுதொடா்பான கேள்விக்கு மாநிலங்களவையில் அவா் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் ‘போக்ஸோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்) சட்டம் 2012’ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், 18 வயதுக்கு கீழுள்ள எந்தவொரு நபரும் குழந்தை என்பதைத் தெளிவாக குறிப்பிடுகிறது.

மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபவா்களைக் கண்டறிந்து, அத்தகைய குற்றங்களைத் தடுக்கும் வகையில் இந்தச் சட்டத்தில் 2019-ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களைப் புரிபவா்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை உள்பட கடுமையான தடண்டனைகளை அளிக்கும் வகையில் நடைமுறைகள் சோ்க்கப்பட்டன.

ஒருவேளை, குழந்தைகள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும்போது, சிறப்பு நீதிமன்றம் மூலமாக அவா்களின் வயதைத் தீா்மானிக்கும் வகையில் போக்ஸோ சட்டம் பிரிவு 34-இல் நடைமுறைகள் ஏற்கெனவே இடம்பெற்றுள்ளன.

அதுபோல, 18 வயதை அடைந்தவா்கள் ‘மேஜா்’ வயதை அடைந்தவா்களாக கருத்தில் எடுத்துக்கொள்ளும் வகையில், 1875-இல் இயற்றப்பட்ட பெரும்பான்மை வயது சட்டத்தில் (தி மெஜாரிட்டி சட்டம்) கடந்த 1999-ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சட்டங்களின்படி, ஒருமித்த உறவுக்கான ஒப்புதல் வயது 18 என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை 16 வயதாகக் குறைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

‘குழந்தை திருமணம்’ அதிகரித்திருப்பது ஏன்?:

குழந்தைத் திருமணங்கள் தொடா்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சா், ‘தேசிய குற்ற பதிவு ஆணைய புள்ளி விவரங்களின்படி, குழந்தைகள் திருமணம் தொடா்பான புகாா்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. இதுதொடா்பான வழக்குகள் 2019-இல் 523-ஆக பதிவான நிலையில், 2020-ஆம் ஆண்டு 785 ஆகவும், 2021-ஆம் ஆண்டு 1,050-ஆகவும் அதிகரித்தது. அவ்வாறு வழக்குகள் அதிகரித்திருப்பதால், குழந்தைகள் திருமணம் அதிகரித்திருப்பதாகக் கருத முடியாது. மாறாக, பெண்களுக்கான உதவி எம் ‘181’, குழந்தைகளுக்கான உதவி எண் ‘1098’ போன்ற திட்டங்கள் அறிமுகம் மற்றும் விழிப்புணா்வு அதிகரிப்பு போன்ற காரணங்களால் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவே கருத முடியும்’ என்றாா்.



Read in source website

‘இணையவழி விளையாட்டுகளில் ஊறு விளைவிக்கும் தகவல்கள் அதிகரித்து வரும் சூழலில், இணைய பயன்பாட்டில் ஈடுபாட்டை அதிகரித்து வரும் இந்தியா்களின் தரவுகள் மற்றும் தனித் தகவல்கள் கசிவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது’ என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பான கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் மக்களவையில் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

வலைதள தொழில்நுட்பம் விரிவடைந்து வரும் சூழலில், இணைய பயன்பாட்டில் இந்தியா்களின் ஈடுபாடும் மிக அதிக அளவில் உயா்ந்துவருகிறது. அதன் காரணமாக, ஊறு விளைவிக்கும் தகவல்கள் அல்லது சட்ட மீறல்களாக கூடிய வகையிலான தகவல்களை உள்ளடக்கிய இணையவழி விளையாட்டுகள் மற்றும் இடைத்தரகா்களால் அறிமுகப்படுத்தப்படும் இணையவழி விளையாட்டுகள் மூலமாக இந்தியா்களின் தரவுகளும் தனித் தகவல்களும் கசிவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த சவால்களை மத்திய அரசு நன்கு உணா்ந்திருக்கிறது. இணைய பயனாளா்களின் தகவல் பாதுகாப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப (இடைத்தரகா்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் எண்ம ஊடக நெறிமுறை குறியீடு) விதி 2021-ஐ மத்திய அரசு வகுத்துள்ளது.

இந்த விதியை இணையவழி இடைத்தரகா்கள் பின்பற்றத் தவறினால், மூன்றாம் தரப்பு தகவல் அல்லது அவா்கள் வழங்கும் தரவு அல்லது தகவல் தொடா்பு இணைப்புக்கான சட்டத்தின் கீழான அவா்களின் பொறுப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது ரத்து செய்யப்பட்டுவிடும் என்று மத்திய அமைச்சா் தெரிவித்துள்ளாா்.



Read in source website

கடற்கொள்ளை தடுப்பு மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஏற்கெனவே மக்களவையில் நிறைவேறிய நிலையில், தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடற்கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்க கடற்கொள்ளை தடுப்பு மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதனைத்தொடா்ந்து மசோதாவை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மாநிலங்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தாா். அப்போது மசோதா மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து ஜெய்சங்கா் பேசுகையில், ‘இந்தியாவின் 90 சதவீதத்துக்கும் அதிகமான வா்த்தகம் கடல் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலத்துக்கு கடல்சாா்ந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது முக்கியம்.

தற்போது கடற்கொள்ளைக்கு எதிராக குறிப்பிட்ட சட்டம் எதுவும் இல்லை. இந்நிலையில், தற்போதைய மசோதா கடற்கொள்ளைக்கு எதிராக பயனுள்ள சட்ட வழியை ஏற்படுத்தும். அத்துடன் ஐ.நா. கடல் சட்ட ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா தனது கடமைகளை நிறைவேற்ற வழிவகுக்கும். அந்த ஒப்பந்தத்தின் அனைத்து எதிா்பாா்ப்புகளையும் மசோதா பூா்த்தி செய்யும்.

கடலில் இந்திய வா்த்தக வழித்தடங்களின் பாதுகாப்பு, சா்வதேச கடலில் இந்திய மாலுமிகளின் நலன் உள்பட நாட்டின் கடல்சாா்ந்த பாதுகாப்பை மசோதா வலுப்படுத்தும்.

தனது சா்வதேச கடமைகளைப் பூா்த்தி செய்யவும், சா்வதேச அரங்கில் இந்தியாவின் தகுதியை உயா்த்தவும் மசோதா வழிவகுக்கும்’ என்றாா்.

இந்த மசோதாவுக்குக் கட்சி பேதமின்றி பல உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.



Read in source website

எஃப்1 பந்தயத்தில் பங்கேற்கும் டிரைவா்கள் 2023 சீசன் முதல் அரசியல் மற்றும் மத ரீதியிலான நிலைப்பாடு குறித்த கருத்தை பந்தயத்தின்போது வெளிப்படுத்துவதற்கு சா்வதேச ஆட்டோமொபைல் சம்மேளனம் (எஃப்ஐஏ) கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது.

எஃப்ஐஏ தனது விதிகளில் கொண்டு வந்துள்ள திருத்தத்தின்படி, இனி அதனிடம் எழுத்துப்பூா்வ முன் அனுமதி பெறாமல் பந்தயத்தின்போது டிரைவா்கள் அரசியல், மத, இன, மொழி, பாலின, நிற உள்ளிட்ட எந்தவொரு ரீதியிலான தங்களின் நிலைப்பாட்டை வெளிக்காட்டும்படி நடந்துகொண்டால் அது விதிமீறலாகக் கருதப்படும்.

கடந்த 2020 செப்டம்பரில் டஸ்கன் கிராண்ட் ப்ரீ பந்தயத்தில் பங்கேற்ற மொ்ஸிடஸ் பென்ஸ் டிரைவரும், சாம்பியனுமான லூயிஸ் ஹாமில்டன், ‘பிரியோனா டெய்லரை கொன்ற காவலா்களை கைது செய்யுங்கள்’ என்ற வாசகம் பதித்த டி-சா்ட்டை அணிந்திருந்தாா். அந்த ஆண்டில் கருப்பினத்தைச் சோ்ந்த பெண்ணான பிரியோனா அவரது அடுக்ககத்தில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அவா் இதைச் செய்திருந்தாா்.

அதேபோல், 2021 பந்தயம் ஒன்றில் தன்பாலின ஈா்ப்பாளா்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வானவில் வண்ணம் பதித்த ஹெல்மெட்டை அணிந்திருந்தாா். ஓய்வு பெற்ற டிரைவரான செபாஸ்டியன் வெட்டலும் பல்வேறு தருணங்களில் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்திருந்தாா். அப்போதெல்லாம், டிரைவா்கள் தங்கள் பந்தயத்தில் மட்டும் கவனம் செலுத்துமாறு எஃப்ஐஏ அறிவுறுத்தி வந்தது. இந்நிலையில், தற்போது அவா்களைக் கட்டுப்படுத்தும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.



Read in source website

 

ஐபிஎல் போட்டியில் அடுத்த ஆண்டு முதல் இம்பாக்ட் வீரர் என்கிற புதிய விதிமுறை அமலுக்கு வரவுள்ளது. 

இந்தாண்டு சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் இம்பாக்ட் வீரர் என்கிற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது பிசிசிஐ. ஒவ்வொரு அணியும் ஆட்டத்துக்கு முன்பு வழக்கமாகக் கொடுக்கப்படும் 11 வீரர்களின் பெயர்களோடு 4 மாற்று வீரர்களின் பெயர்களையும் அளிக்க வேண்டும். அந்த 4 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் நடுவில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏதாவது ஒரு இன்னிங்ஸில் 14-வது ஓவர் முடியும் முன்பு இம்பாக்ட் வீரரை அணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். 

இந்நிலையில் 2023 ஐபிஎல் போட்டியில் இம்பாக்ட் வீரருக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம். அந்த விதிமுறையில் உள்ள முக்கிய அம்சங்கள்:

ஒவ்வொரு அணியும் கூடுதலாக 4 வீரர்களின் பெயர்களை டாஸின் போது வெளியிட வேண்டும். இந்த நான்கு வீரர்களில் ஒருவர் இம்பாக்ட் வீரராகப் பங்கேற்கலாம். 4 வீரர்களும் இந்திய வீரர்களாக மட்டுமே இருக்க வேண்டும்.

மாற்று வீரரை எப்போது வேண்டுமானாலும் சேர்க்கலாம். யாருக்குப் பதிலாக மாற்று வீரர் உள்ளே நுழைகிறாரோ அந்த வீரர் இனிமேல் ஆட்டத்தில் எவ்விதத்திலும் பங்கேற்க முடியாது. ஒருவேளை ஓர் அணியில் 3 வெளிநாட்டு வீரர்கள் மட்டும் இருந்தால் மாற்று வீரராக வெளிநாட்டு வீரரைத் தேர்வு செய்துகொள்ளலாம். 

மாற்று வீரர் அணியில் இடம்பெற்றாலும் 11 பேர் மட்டுமே பேட்டிங் செய்ய முடியும். 

பந்துவீச்சில் அந்த நிலைமை இல்லை. உதாரணத்துக்கு மும்பையின் பும்ரா முதலிலேயே 4 ஓவர்களை வீசி விடுகிறார். எனில் அவரை வெளியேற்றி விட்டு புதிய பந்துவீச்சாளரைக் களமிறக்கலாம். அவரும் 4 ஓவர்களை வீசலாம். இதனால் பந்துவீச்சிலும் அணிகளுக்கு இந்தப் புதிய விதிமுறை நிறைய பலன்களைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2005, 2006-ம் ஆண்டுகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் சூப்பர் சப் விதிமுறை பயன்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட ஒரு வீரருக்குப் பதிலாக இன்னொருவரைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால் அந்த பேட்டர் ஆட்டமிழந்துவிட்டால் சூப்பர் சப் வீரரால் பேட்டிங் செய்ய முடியாது. அதேபோல ஒரு பந்துவீச்சாளருக்குப் பதிலாகக் களமிறங்கினால் அந்த வீரர் எவ்வளவு ஓவர்களை வீசி முடித்துள்ளாரோ அதிலிருந்து மீதமுள்ள ஓவர்களை மட்டுமே சூப்பர் சப் வீரரால் வீச முடியும். 

ஆஸ்திரேலியாவின் பிபிஎல் போட்டியில் எக்ஸ் ஃபேக்டர் என்கிற ஒரு விதிமுறை அமலில் இருந்தது. தங்களுடைய அணியில் உள்ள 11 பேரில் ஒருவருக்குப் பதிலாக மாற்று வீரரை ஆட்டத்தின் பாதியில் அதாவது 10-வது ஓவரில் அதுவும் முதல் இன்னிங்ஸில் சேர்த்துக்கொள்ளலாம். எந்த வீரருக்குப் பதிலாக மாற்று வீரர் உள்ளே வருகிறாரோ, அந்த வீரர் பேட்டிங், பந்துவீச்சில் ஒரு ஓவருக்கு மேல் ஈடுபட்டிருக்கக் கூடாது. 

ஐபிஎல் போட்டியில் அணிகளுக்கு பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கூடுதலாக ஒரு வீரர் கிடைத்தால் அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்! டாஸ், ஆடுகளத்தின் தன்மை போன்றவற்றால் அணிகள் பெரிதாகப் பாதிக்கப்படுவதைத் தடுக்க இம்பாக்ட் வீரர் உதவுவார். அதேபோல ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டாலும் இந்த வசதி பெரிதும் பயன்படும். ஓர் அணி ஓர் ஆட்டத்தில் ஒரு இம்பாக்ட் வீரரை மட்டுமே பயன்படுத்த முடியும்.



Read in source website

 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராக முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு வாரியத்தில் 2003-04-ல் தலைமை அதிகாரியாகப் பணியாற்றினார்.  ரமீஸ் ராஜா - 57 டெஸ்டுகள், 198 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

2004-ல் இந்தியா பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்ததற்கு ரமீஸ் ராஜா முக்கியக் காரணமாக இருந்தார். அதேபோல பல வருடங்களுக்குப் பிறகு 2022-ல் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் டெஸ்ட் தொடருக்காக பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்ததிலும் ரமீஸ் ராஜாவின் பங்களிப்பு மிக அதிகம். எனினும் இங்கிலாந்துக்கு எதிராக 0-3 என முழுமையாகத் தோற்ற பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 4 டெஸ்டுகளிலும் தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து ரமீஸ் ராஜாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க நஜம் சேதி தலைமையிலான 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன்களான ஷாஹித் அஃப்ரிடி, சனா மிர் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 



Read in source website

இந்திய எல்லையில் சீனாவின் மோதல்போக்கால் இந்திய-அமெரிக்க உறவு மேலும் வலுவடையும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் குழு கருத்து தெரிவித்துள்ளனா்.

அண்மையில், அருணாசல பிரதேச எல்லையில் இந்திய-சீன வீரா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இது இரு நாட்டு எல்லைப் பிரச்னை மேலும் தீவிரமடையவும், இருநாடுகள் இடையிலான மோதல் போக்கு அதிகரிக்கவும் காரணமாக அமைந்தது.

இந்நிலையில் அமெரிக்க செனட் அவையின் இந்திய உறவுகளுக்கான எம்.பி.க்கள் குழு இது தொடா்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அண்மையில் நடைபெற்ற சம்பவம் இந்திய பிராந்தியத்துக்கு சீனா விடுத்த மற்றொரு அச்சுறுத்தலாக அமைந்தது. 2020-ஆம் ஆண்டில் இருந்து இந்திய எல்லையில் சீனா மோதல்போக்குடன் நடந்து கொள்கிறது. இதன் மூலம் இருதரப்பு ராணுவத்திலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்திய உறவுகளுக்கான குழு என்ற அடிப்படையில் இந்திய-அமெரிக்க உறவை வலுப்படுத்த தொடா்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ராணுவரீதியாக தன்னை வலுப்படுத்திக் கொண்டுள்ள சீனா, இந்திய பசிபிக் பிராந்தியம் முழுவதுமே தனது மோதல் போக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் இரு பெரும் ஜனநாயக நாடுகள் என்ற அடிப்படையில் இந்தியாவும், அமெரிக்காவும் உலகின் அமைதிக்கான முன்முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இப்போது இந்திய எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளால், இந்தியா, அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு, ராணுவ உறவு மேலும் வலுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

நேபாள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக, பிரதமா் ஷோ் பகதூா் ஷா தேவுபா புதன்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

அதையடுத்து, அந்த நாட்டில் புதிதாக அமையவிருக்கும் அரசில் அவா் அந்தக் கட்சி சாா்பில் பிரதமா் பதவியை ஏற்பது உறுதியாகியுள்ளது.

நேபாள நாடாளுமன்றத்தின் 275 உறுப்பினா்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கு கடந்த மாதம் தோ்தல் நடைபெற்றது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதையடுத்து, 89 இடங்களைக் கைவசம் வைத்திருக்கும் நேபாள காங்கிரஸ் கட்சியும், 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ள முன்னாள் பிரதமா் புஷ்ம கமல் பிரசண்டாவின் மாவோயிஸ்ட் மையம் கட்சியும் இணைந்து புதிய அரசை அமைக்கவுள்ளன.

அந்த அரசில் பிரதமா் பதவியை நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவா் இரண்டரை ஆண்டுகளுக்கும் மாவோயிஸ்ட் மையத் தலைவா் எஞ்சிய இரண்டரை ஆண்டுகளுக்கும் வகிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: 'காலா பாணி' நாவலுக்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் எழுத்தாளருமான மு.ராஜேந்திரனுக்கு 2022-க்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பாக வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் படைப்புக்காக 2022-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு மு.ராஜேந்திரன், இ.ஆ.ப. எழுதியுள்ள 'காலாபாணி' நாவல் தேர்வாகியுள்ளது. மு.ராஜேந்திரன் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த வடகரை கிராமத்தில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும் தமிழக வரலாற்றின்மீதும் பற்றுமிக்கவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருக்குறளில் சட்டக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இந்திய ஆட்சிப்பணியில் பொறுப்பேற்று தமிழகத்தின் பலவிதமான துறைகளில் பணியாற்றியானார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தபோது அப்பகுதியில் இயற்கை வளம் சார்ந்த மலைப் பகுதிகளை கனிம வளக் கொள்ளையர்களிடம் பறிபோவதைத் தடுத்துநிறுத்திய பெருமை இவருக்குண்டு. மேலும், ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கு கரடுமுரடான பாதைகளை செப்பனிட்டு சாலைகள் அமைத்துக் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே காலகட்டங்களில் தனது தணியாத ஆர்வமான வரலாற்றின்மீது தணியாத ஆர்வம் கொண்டு நேரில் களப்பணிகளில் ஈடுபட்டார். தமிழக வரலாற்றுகால செப்பேடுகளை ஆய்வு செய்தல், ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளின் பிரதிகளை தேடியெடுத்து தொகுத்தல் போன்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

நேரடியாக களப்பணியாற்றி தொகுத்த வரலாற்றின் உண்மைத் தகவல்களை ஆவண புத்தகங்களாகவும் வெளியிட்டார். அதனையொட்டி எழுந்த விடுபட்ட வரலாற்று சொல்லாடல்களை தனது புனைவில் புகுத்தி நாவல்களாகவும் எழுதி வந்தார். 1801, வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு, 'காலாபாணி' போன்ற நாவல்கள் அவரது ஆராய்ச்சியில் கிடைத்த நல்முத்துக்கள் எனலாம். இவரது படைப்புகளுக்காக தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு அறக்கட்டளைகள் இவருக்கு விருதுகள் பல வழங்கி கவுரவித்துள்ளன.

சாகித்ய அகாடமி விருது பெறும் ‘காலா பாணி’ நாவல், இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இந்திய சுதந்திர போராட்ட வரலாறு சிப்பாய் கலகத்துடன் தொடங்கவில்லை. அதற்கு முன்னரே தமிழகத்தில் தொடங்கப்பட்டுவிட்டது. எனவே, ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த இந்திய விடுதலை வரலாற்றை தமிழகத்தில் விடுபட்ட தியாகச் சுடர்களை பேசியபிறகே அதற்கு பின்வந்த மற்ற விடுதலை வீரர்களை பேசவேண்டும் என்பதுதான் காலாபாணி நாவல் முன்வைக்கும் வாதமாகும். எனவே, இந்நாவலின் செய்தி, தேசிய அளவில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு செய்தியாக மிளிர வேண்டியதும், அதற்கு விருது கிடைத்திருப்பதும் மிகவும் பொருத்தமானதுதான். இந்நாவல் அகநி பதிப்பக வெளியீடாக கிடைக்கிறது.

தமிழக அரசு மு.ராஜேந்திரன் தனது இஆப அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் பதவி வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

சென்னை: தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் அல்லாமல், வேறு வழக்கில் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தை தண்டனைக் காலமாக கணக்கில் எடுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கு ஒன்றில் கடலூர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சிவராமன் என்பவர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வேறு இரு வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர், நான்கு மாதங்களுக்கு மேல் விசாரணைக் கைதியாக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். இரு வழக்குகளில் ஒரு வழக்கில் விடுதலையும் செய்யப்பட்டார்.

இந்நிலையில், சிவராமன் தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளும்படி 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறையில் இருந்த காலத்தை கணக்கில் எடுக்க வேண்டும் என்றால், தண்டனை விதிக்கப்பட்ட குறிப்பிட்ட வழக்கில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தால் மட்டுமே கணக்கில் எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்புக்ளை மேற்கோள்காட்டி, 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் அல்லாமல் வேறு வழக்கில் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்ட காலத்தை கணக்கில் எடுக்க முடியாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.



Read in source website

மதுரை: "எந்த நேரத்திலும் இயற்கை பேரிடர் வரும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது, இத்தகைய சூழலில் பேரிடர் சேதங்களை அரசு ஏற்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா சேதுபாவாசத்திரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், கழுமுகடாவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர்கள் சொந்தமாக மீன்பிடி படகுகள் வைத்துள்ளனர். இவர்களின் படகு 2018ல் கஜா புயலில் சேதமடைந்தது. இதற்கு முறையே ரூ.12 ஆயிரம், ரூ.17 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. கூடுதல் இழப்பீடு கேட்டு இருவரும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர்களின் படகுகள் லேசான சேதமடைந்துள்ளது. அதற்குரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் இழப்பீடு வழங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில்: "தட்பவெப்ப நிலை மாறுதல் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். உலகம் முழுவதும் காலநிலை மாறுதல் இருந்து வருகிறது. எந்த நேரத்திலும் இயற்கை பேரிடர் வரும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இத்தகைய சூழலில் பேரிடர் சேதங்களை அரசு ஏற்க வேண்டும். அரசு தனது பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது.

இயற்கை பேரிடருக்கான இழப்பீடு தொகையை உயர்த்தி அரசு 2019ல் அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி படகு முழுமையாக சேதமடைந்தால் ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சேதத்தை ஆய்வு செய்யும் குழுவில் ஆய்வில், மதிப்பீடு செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இடம்பெற வேண்டும். ஆய்வின் போது பாதிக்கப்பட்டவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவரை வைத்தே சேதங்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.

ஆய்வின் போது பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கும் கருத்துகளை மனதில் வைத்து இழப்பீட்டு தொகையை முடிவு செய்ய வேண்டும். இழப்பீடு என்பது சட்டபூர்வமானது. நன்கொடையாக வழங்கப்படுவது இல்லை. இதனால் இழப்பீடு வழங்குவதை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும். இயற்கை பேரிடர் சேத மதிப்பீடு என்பது தன்னிச்சையாக நடைபெறக் கூடாது. இதில் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையும் அடங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சொந்தக்காலில் நிற்கும் வகையில் அரசின் கொள்கைகளை அதிகாரிகள் வகுக்க வேண்டும்.

இந்த அளவு கோல் அடிப்படையில் மனுதாரர்களின் படகு சேதத்துக்கான மதிப்பீடு இல்லை. எனவே மனுதாரர்களுக்கு முறையே ரூ.1.38 லட்சம் ரூ.1.33 லட்சம் இழப்பீட்டு தொகையை 8 வாரத்தில் வழங்க வேண்டும்." இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.



Read in source website

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் நால்வர் கோயில் பேட்டை பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மனோகர்.

இவரது மகள் ரக்சயா(20), கல்லூரி படிப்பை முடித்துள்ளார். தன்னுடைய சிறு வயது முதல் தான் அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு, குடும்ப வறுமையையும் பொருட்படுத்தாமல் தனது சொந்த முயற்சியில் பகுதி நேர வேலை செய்து தன்னை தயார்படுத்தி கொண்டார்.

2018-ல் நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் பங்கேற்று வென்றார். இதையடுத்து, அரசு சார்பில் மலேசியா அழைத்து சென்று கெளரவிக்கப்பட்டார். கடந்த செப்டம்பரில் ஃபாரெவர் ஸ்டார் இந்தியா அவார்ட்ஸ் அமைப்பு நடத்திய மாநில அளவிலான அழகிகள் போட்டியில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றார்.

இந்நிலையில், ஜெய்பூரில் மேற்கண்ட அமைப்பின் சார்பில் மிஸ் இந்தியா அழகி போட்டி கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 பேர் பங்கேற்றனர். இதில், ரக்சயா மிஸ் இந்தியா போட்டியில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.



Read in source website

புதுடெல்லி: 2022 ஆம் ஆண்டில் இந்தியா சுமார் 75 நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ஆண்டு பாதுகாப்புத் துறை செயல்பாடுகளின் முக்கிய அம்சங்களைப் பற்றிய பதிவு:

அக்னிபாத்- பெரிய சீர்திருத்த மாற்றம்: ஆயுதப் படைகளில் இளைஞர்களைச் சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டம் ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. தேசபக்தியுள்ள இளைஞர்கள் (அக்னிவீரர்கள்) புனித சீருடையை அணிந்து நான்கு ஆண்டுகளுக்கு நாட்டிற்கு சேவை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இத்திட்டத்தில் மாதாந்திர ஊதியம், பணிக் காலம் முடிந்ததும் வழங்கப்படும் 'சேவா நிதி' தொகுப்பும் உள்ளடக்கி உள்ளது. ஆயுதப் படைகளில் சேருவதற்காக, 54 லட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் பெறப்பட்டுள்ளன.



Read in source website

கரோனா தொற்று பரவத் தொடங்கியது முதல் ஒவ்வோர் ஆண்டும் பல சுகாதார அவரச நிலைகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. கரோனா என்ற சுகாதார அவரச நிலை தற்போது வரை முடிவுக்கு வரவில்லை என்றாலும், இதைத் தவிர்த்து 2022-ம் ஆண்டு பல சுகாதார அவரச நிலைகளை உலக நாடுகள் எதிர்கொண்டன. இதில் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட அவரச நிலைகளின் பாதிப்பு இன்று வரை தொடர்ந்து வருகிறது.



Read in source website

பியூனஸ் அய்ரஸ்: நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடரை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்றுள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில், அந்த நாட்டின் கரன்சி நோட்டில் மெஸ்ஸியின் புகைப்படத்தை அச்சிடுவது குறித்து அர்ஜென்டினா குடியரசின் மத்திய வங்கி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை செய்தியாக வெளியிட்டுள்ளது அந்நாட்டின் வணிகப் பத்திரிகையான ‘எல் பைனான்சிரோ’. ஆனாலும் இந்த ஐடியாவை மத்திய வங்கி உறுப்பினர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டத்தில் வேடிக்கையாக முன்மொழியப்பட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இது குறித்து உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே உறுப்பினர்கள் பேசி இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மெஸ்ஸி படங்கள் அடங்கிய மாதிரி ரூபாய் நோட்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.

கடந்த 1978 உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றபோது அதன் நினைவாக அந்த நாட்டில் நாணயங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நாட்டின் மத்திய வங்கி முன்மொழிந்துள்ளதாக சொல்லப்படும் கரன்சி நோட்டில் அணியின் பயிற்சியாளர் படமும் பின்பக்கத்தில் இருக்கும் எனத் தகவல் பரவி வருகிறது.



Read in source website

திருநெல்வேலி: தைப் பொங்கலை முன்னிட்டு பொங்கல் பானைகள் மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஏற்றுமதி 10 மடங்கு அதிகரித்திருப்பது உற்பத்தியாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கைவினைக் கலைஞர்களால் விதவிதமான வடிவங்கள் மற்றும் அளவுகளில் மண் பானைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிச்சி, காருகுறிச்சி, ஆழ்வார்குறிச்சி, ஏர்வாடி உள்ளிட்ட இடங்களில் பொங்கலுக்கான பானை, சட்டி, மூடி, அடுப்பு, தீப விளக்குகள், பூந்தொட்டிகள், கும்பக் கலசங்கள், தீச்சட்டி என்று பல்வேறு மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.

மாவட்டத்தில் ஆறு, குளங்கள், நீராதாரங்களின் படுகைகளில் இருந்து எடுக்கப்படும் களிமண்ணுடன், பசைத் தன்மையுள்ள குறுமண்ணை கலந்து மண்பாண்டங்களை தயாரிக்கிறார்கள். இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொங்கலுக்கான பானைகள் ஏற்றுமதி செய்யப்படவில்லை. நடப்பாண்டு பொங்கலுக்காக கடந்த 2 மாதங்களாக 2 ஆயிரம் பானைகள் தயாரிக்கப்பட்டு, அவற்றில் வண்ணம் பூசி அலங்காரம் செய்யப்பட்டு தற்போது சென்னைக்கு கன்டெய்னரில் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சரக்கு கப்பலில் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கரோனாவுக்குப்பின் மொத்தமாக 2 ஆயிரம் பானைகள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது உற்பத்தியாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இது குறித்து திருநெல்வேலி அருகே குறிச்சி மண்பாண்ட உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.முருகன் கூறியதாவது: கரோனாவுக்கு முன் 10 ஆண்டுகளாக 4 முதல் 5 லிட்டர் கொள்ளளவுள்ள 100 முதல் 200 பானைகள் மட்டுமே மலேசியாவுக்கு அனுப்பப்பட்டுவந்தன. கரோனாவால் 2 ஆண்டுகளாக பானைகள் ஏற்றுமதியாகவில்லை. தற்போது 3 லிட்டர் கொள்ளளவுள்ள ஆயிரம் பானைகளும், 2.5 லிட்டர் கொள்ளளவுள்ள ஆயிரம் பானைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மதுரையைச் சேர்ந்த கலைஞர்களை வரவழைத்து ஒவ்வொரு பானையிலும் வண்ணம் பூசி, மஞ்சள் குலை, மாவிலைத் தோரணம், தாமரை இதழ்கள் உள்ளிட்ட வண்ண ஓவியங்களையும் வரைந்து அழகுபடுத்தியிருந்தோம். கடந்த 2 மாதமாக இப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பானைகளை கன்டெய்னரில் ஏற்றி சென்னைக்கு அனுப்பியிருக்கிறோம். ஒரு பானைக்கு ரூ.150 என்ற விலையில் இவை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மலேசியாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடத்தப்படும் பொங்கல் சந்தைகளிலும், வணிக வளாகங்களிலும் பொங்கலுக்கு 10 நாட்களுக்குமுன் இவை விற்பனைக்கு வைக்கப்படும்.

20 லட்சம் அகல் விளக்கு: இதுபோல் கடந்த ஒரு மாதத்துக்குமுன் கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக இங்கிருந்து 20 லட்சம் மண் அகல் விளக்குகள் மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. கரோனாவுக்குமுன் 60 ஆயிரம் விளக்குகளே அனுப்பப்பட்டிருந்தன. இம்முறை 4 மடங்கு அதிகமாக அகல் விளக்குகள் அனுப்பப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

பொங்கல் பானைகளுடன், பொங்கல் வைக்க பயன்படும் வெல்லம், ஏலக்காய் மற்றும் கரும்பு, மஞ்சள் குலை உள்ளிட்டவையும் தனித்தனி கன்டெய்னர்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மலேசியாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.



Read in source website

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இப்போது தொழில்நுட்ப உலகில் அதிகம் பேசப்பட்டு வருகிறது ChatGPT. டிசம்பர் 1 முதல் இது பொதுவெளியில் பீட்டா டெஸ்டிங் பயன்பாட்டுக்கு கிடைத்து வருகிறது. அறிமுகமான ஒரே வாரத்தில் சுமார் 1 மில்லியன் பயனர்களை இந்த பிளாட்பாரம் கடந்துள்ளதாக தகவல். வரும் நாட்களில் இது கூகுளுக்கு மாற்றாக இருக்கும் என்ற ஊகங்கள் ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. அப்படியே அது எதிர்காலத்தில் மனிதர்களுக்கும் மாற்றாக அமையலாம் என சொல்லப்படுகிறது. இந்த சூழலில் ChatGPT என்றால் என்ன? இதை பயன்படுத்துவது எப்படி என்பதை விரிவாக பார்ப்போம்.



Read in source website

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) படி, 8-அவுன்ஸ் (சுமார் 240 ml) கிரீன் அல்லது கருப்பு தேநீரில் 30-50 mg காஃபின் உள்ளது.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (JAHA) இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கப் காபி குடிப்பது, காபி அருந்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, ​​கடுமையான உயர் பி.பி. (160/100 mm H அல்லது அதற்கும் அதிகமான) உள்ளவர்களிடையே இருதய நோயால் ஏற்படும் இறப்பு அபாயத்தை இரட்டிப்பாக்கலாம்.

இதற்கு நேர்மாறாக, ஒரு கப் காபி மற்றும் தினசரி கிரீன் டீ உட்கொள்வது எந்த இரத்த அழுத்த அளவீட்டிலும் இருதய நோய் தொடர்பான இறப்பு அபாயத்தை அதிகரிக்கவில்லை, இரண்டு பானங்களிலும் காஃபின் இருந்தாலும் என்று ஜப்பானில் 18,600க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) படி, 8-அவுன்ஸ் (சுமார் 240 ml) கிரீன் அல்லது கருப்பு தேநீரில் 30-50 mg காஃபின் உள்ளது, மேலும் 8-அவுன்ஸ் காபியில் 80-100 mg காஃபின் உள்ளது.

முந்தைய ஆராய்ச்சியில் ஒரு நாளைக்கு ஒரு கப் காபி குடிப்பது மாரடைப்பு நோயாளிகளுக்கு, மாரடைப்பிற்குப் பிறகு இறப்பு அபாயத்தைக் குறைப்பதன் மூலம் உதவலாம், மேலும் ஆரோக்கியமான நபர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று கண்டறிந்தது.

வேறு சில ஆய்வுகள் தொடர்ந்து காபி குடிப்பது, வகை 2 நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கலாம்; பசியைக் கட்டுப்படுத்த உதவலாம்; மனச்சோர்வின் அபாயத்தைக் குறைக்க அல்லது விழிப்புணர்வை அதிகரிக்க உதவலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

இருப்பினும் இந்த விளைவு காஃபின் அல்லது காபியில் உள்ள வேறு ஏதாவதில் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம் தீங்கு விளைவிக்கும் நோக்கில் பார்க்கும் போது , அதிகப்படியான காபி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம், இது கவலை, படபடப்பு மற்றும் தூங்குவதில் சிரமத்திற்கு வழிவகுக்கும்.

காபியின் அறியப்பட்ட பாதுகாப்பு விளைவு வெவ்வேறு அளவு உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்களுக்கும் பொருந்துமா என்பதைத் தீர்மானிப்பதை எங்கள் ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அதே குழுவிடம் கிரீன் டீ விளைவுகளை ஆய்வு செய்த ஆய்வின் மூத்த எழுத்தாளர் ஹிரோயாசு ஐசோ, ஒசாகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கூறினார்.

எங்களுக்கு தெரிந்தவரையில், தினசரி 2 அல்லது அதற்கு மேற்பட்ட கப் காபி குடிப்பதற்கும் கடுமையான உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களிடையே இருதய நோய் இறப்புக்கும் இடையே ஒரு தொடர்பைக் கண்டறியும் முதல் ஆய்வு இதுவாகும்.

உயர் இரத்த அழுத்தம், ஹைப்பர்டென்ஷன் என்றும் அழைக்கப்படுகிறது, இரத்த நாளங்களின் சுவர்களுக்கு எதிராக இரத்தத்தின் விசை தொடர்ந்து அதிகமாக இருக்கும் போது ஏற்படுகிறது, இதனால் இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக வேலை செய்கிறது.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் மற்றும் அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் தற்போதைய இரத்த அழுத்த வழிகாட்டுதல்கள், 130/80 mm Hg அல்லது அதற்கு மேற்பட்ட இரத்த அழுத்த அளவை, உயர் இரத்த அழுத்தமாக வகைப்படுத்துகின்றன.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்



Read in source website

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான BF.7 பரவல் அதிகரித்து காணப்படுகிறது.

சீனாவில் கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் தற்போதைய அதிகரிப்பு, அந்த நாட்டில் பரவி வரும் ஓமிக்ரானின் BF.7 துணை மாறுபாட்டால் உருவானதாக நம்பப்படுகிறது.
BF.7 வகை கொரோனா வைரஸ் பரபரப்பு செய்திகளை உருவாக்குவது இது முதல் முறை அல்ல. அக்டோபரில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் பரவல் அதிகரித்து காணப்பட்டது.

BF.7 பற்றி நமக்கு என்ன தெரியும்?

வைரஸ்கள் மாற்றமடையும் போது, அவை பரம்பரை மற்றும் துணை வம்சாவளியை உருவாக்குகின்றன. சார்ஸ் கோவிட் 2 (SARS-CoV-2) வைரஸின் முக்கிய தண்டு கிளைகள் மற்றும் துணை கிளைகள் முளைக்கின்றன. BF.7 என்பது BA.5.2.1.7 போலவே உள்ளது, இது Omicron துணை வரிசை BA.5 இன் துணை வரிசையாகும்.

இந்த மாத தொடக்கத்தில் ‘செல் ஹோஸ்ட் அண்ட் மைக்ரோப்’ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், BF.7 துணை மாறுபாடு அசல் D614G மாறுபாட்டை விட 4.4 மடங்கு அதிக நடுநிலைப்படுத்தல் எதிர்ப்பைக் கொண்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
2020 இல் உலகம் முழுவதும் பரவிய அசல் வுஹான் வைரஸை விட தனிநபர்கள் BF.7 ஐ அழிக்கும் வாய்ப்பு குறைவு ஆகும்.

ஆனால் BF.7 மிகவும் மீள்தன்மையுடைய துணை மாறுபாடு அல்ல – அதே ஆய்வு BQ.1 எனப்படும் மற்றொரு Omicron துணை மாறுபாட்டில் 10 மடங்கு அதிக நடுநிலைப்படுத்தல் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

அதிக நடுநிலைப்படுத்தல் எதிர்ப்பு என்பது மக்கள்தொகையில் மாறுபாடு பரவுவதற்கும் மற்ற வகைகளை மாற்றுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.

அக்டோபரில் BF.7 ஆனது 5% க்கும் அதிகமான US வழக்குகள் மற்றும் 7.26% UK வழக்குகள் ஆகும். மேற்கத்திய விஞ்ஞானிகள் மாறுபாட்டை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தனர்; இருப்பினும், இந்த நாடுகளில் வழக்குகள் அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் வியத்தகு அதிகரிப்பு இல்லை.

BF.7 இந்தியாவிலும் உள்ளதா?

இந்தியாவில் ஜனவரி 2022 அலையானது Omicron இன் BA.1 மற்றும் BA.2 துணை வகைகளால் இயக்கப்பட்டது. தொடர்ந்து வந்த BA.4 மற்றும் BA.5 ஆகிய துணை வகைப்பாடுகள், ஐரோப்பிய நாடுகளில் இருந்ததைப் போல இந்தியாவில் ஒருபோதும் பரவலாக இல்லை; இதனால், இந்தியா BF.7 இன் மிகக் குறைவான நிகழ்வுகளைக் கண்டது. இது BA.5 இன் ஒரு பகுதியாகும்.

இந்தியாவின் தேசிய SARS-CoV-2 மரபணு வரிசைமுறை நெட்வொர்க்கின் தரவுகளின்படி, BA.5 வம்சாவளியினர் நவம்பரில் 2.5% வழக்குகளில் மட்டுமே உள்ளனர். தற்போது, ஒரு மறுசீரமைப்பு மாறுபாடு XBB இந்தியாவில் மிகவும் பொதுவான மாறுபாடு ஆகும், இது நவம்பர் மாதத்தில் 65.6% வழக்குகள் ஆகும்.

சீனாவில் வித்தியாசம் என்ன?

BF.7 மாறுபாட்டின் அதிக பரவும் தன்மை அல்லது நோயெதிர்ப்புத் தவிர்க்கும் தன்மை சீனாவில் வழக்குகளின் அதிகரிப்புக்கு வழிவகுத்தது என்று நிபுணர்கள் நம்புகின்றனர், மாறாக நோயெதிர்ப்பு-அப்பாவி மக்கள் எண்ணிக்கையை இயக்கினர்.
இந்தியாவின் கோவிட்-19 ஜீனோம் சீக்வென்சிங் கூட்டமைப்பு INSACOG இன் முன்னாள் தலைவரான டாக்டர் அனுராக் அகர்வால், “மற்ற நாடுகள் ஏற்கனவே கண்ட வழக்கமான ஓமிக்ரான் எழுச்சியை சீனா இப்போது அனுபவித்து வருகிறது, மேலும் ஹாங்காங் தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்தும்போது பார்த்ததைப் போலவே உள்ளது” என்றார்.

தொடர்ந்து, “எங்களைப் பொறுத்தவரை, ஓமிக்ரான் அலை லேசானதாகத் தோன்றியது, ஏனெனில் மக்கள் முந்தைய தொற்று மற்றும் தடுப்பூசி மூலம் பாதுகாக்கப்பட்டனர். கூடுதலாக, டெல்டா அலையின் போது (ஏப்ரல்-மே 2021) விலையை நாங்கள் ஏற்கனவே செலுத்திவிட்டோம். மக்கள் இறந்தனர், ஆனால் உயிர் பிழைத்தவர்களுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி இருந்தது. இது தவிர, ஓமிக்ரான் முக்கியமாக அதன் முதியோர்களை கொன்று வருகிறது, மேலும் எங்களிடம் (இந்தியாவில்) இளைய மக்கள் உள்ளனர்” என்றார்.

காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றிற்குப் பிறகு பெரும்பாலான மக்கள் குணமடைவதால், அதிக அளவில் பரவக்கூடிய மாறுபாடுகள் கூட பாதிப்புகளுக்கு வழிவகுக்கவில்லை.

டாக்டர் அகர்வால் கூறுகையில், இந்த “விலையை” அதிகம் செலுத்தாத நாடுகள் மட்டுமே முழு மக்களுக்கும் தடுப்பூசி போடும் வரை முழுமையாக மூடப்பட்டு, பின்னர் திறக்கப்படும். அவை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் என்றார்.
நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு பெரும்பாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அல்லது இறப்புக்கு வழிவகுக்கும் கடுமையான வழக்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்புடன் இல்லை என்பதால், வழக்கு எண்கள் இனி முக்கியமில்லை என்று அவர் கூறினார்.

மேலும், “நோயெதிர்ப்பு அழுத்தங்களிலிருந்து தப்பிக்க ஓமிக்ரான் தொடர்ந்து பிறழ்ந்து வருவதால், பல நாடுகளில் அவ்வப்போது வழக்குகள் அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம்.” என்றும் அவர் கூறினார்.

சீனாவின் மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் தடுப்பூசி போடப்படவில்லையா?

WHO டேஷ்போர்டின்படி, சீனா உண்மையில் அதிக தடுப்பூசி விகிதத்தைக் கொண்டுள்ளது. 100 மக்கள்தொகைக்கு 235.5 டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இருப்பினும், அதன் மக்கள்தொகைக்கு தடுப்பூசிகளை உருவாக்கி நிர்வகிக்கும் உலகின் ஆரம்ப நாடுகளில் சீனாவும் ஒன்றாகும், மேலும் அதன் தடுப்பூசிகள் கொரோனா வைரஸின் அசல் மாறுபாட்டிற்கு எதிராக உருவாக்கப்பட்டன.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வைரஸ் பல முறை மாற்றமடைந்துள்ளது. மேலும் ஓமிக்ரான் வகைகள் தற்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான தடுப்பூசிகளிலிருந்து நோயெதிர்ப்பு சக்தியைத் தவிர்ப்பதாக அறியப்படுகிறது.

உண்மையில், இந்தியாவின் ஓமிக்ரான் அலையானது ஏற்கனவே இருமுறை தடுப்பூசி போடப்பட்ட மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்களைப் பாதித்தது. பல நிறுவனங்கள் சிறந்த பாதுகாப்பை வழங்க இருமுனை தடுப்பூசிகளைக் கொண்டு வந்ததற்கு இதுவே காரணம்.

“ஒமிக்ரான் வரை, தடுப்பூசிகள் நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். ஓமிக்ரானுக்குப் பிறகு, தடுப்பூசிகள் உண்மையில் பரவுவதை நிறுத்த முடியாது, ஆனால் அவை இறப்புகளைத் தடுக்கின்றன, ”என்று டாக்டர் அகர்வால் கூறினார்.

சீனாவில் பயன்படுத்தப்படும் ‘இறந்த வைரஸ்’ தடுப்பூசிகளை விட எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் (ஃபைசர் மற்றும் மாடர்னாவால் உருவாக்கப்பட்டவை போன்றவை) வெற்றிகரமானவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். “சில தடுப்பூசிகள் மற்றவற்றை விட சிறந்ததா என்பது பற்றிய விவாதம் உள்ளது. மேலும், எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் கொல்லப்பட்ட வைரஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களை விட சிறப்பாக செயல்பட்டனர் என்பதற்கான தெளிவான ஆதாரங்களை ஹாங்காங் முன்வைக்கிறது, ”என்று டாக்டர் அகர்வால் கூறினார்.

தொற்றுநோயின் மற்றொரு மோசமான உலகளாவிய அலையின் ஆபத்து உள்ளதா?

INSACOG உடன் இணைக்கப்பட்டுள்ள கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனத்தின் வைராலஜி பேராசிரியரான டாக்டர் ஏக்தா குப்தா, சீனாவில் அதிக பரவல் காரணமாக ஒரு புதிய மாறுபாடு உருவாகும் சாத்தியத்தை முழுமையாக நிராகரிக்க முடியாது என்றாலும், அது சாத்தியமில்லை என்று கூறுகிறார்.

“ஸ்பைக் புரதத்தில் உள்ள பிறழ்வுகள் குறைந்துவிட்டன, ஒரு வருடத்தில் பெரிய மாற்றம் இல்லை. இதனால்தான் புதிய மாறுபாடுகள் எதுவும் தோன்றவில்லை, வெறும் துணைப் பரம்பரைகள். நீங்கள் பார்த்தால், அசல் D614G மாறுபாடு மற்றும் டெல்டாவில் உள்ள ஸ்பைக் புரதம் அல்லது டெல்டா மற்றும் ஓமிக்ரான் இடையே உள்ள தூரம், இப்போது நாம் பார்ப்பதை விட அதிகமாக இருந்தது,” என்று அவர் கூறினார்.

எனினும், “அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நீக்குவதற்கு எதிராக டாக்டர் குப்தா எச்சரித்தார். “SARS-CoV-2 இப்போது ஒரு மனித வைரஸ், அது இங்கேயே இருக்கிறது. குளிர்காலங்களில் கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருக்கலாம், பொதுவாக அனைத்து சுவாச நோய்த்தொற்றுகளும் அதிகரிப்பதைக் காண முடியும்” என்றார்.



Read in source website

 பணியிடமாற்றமும், புலம்பெயர்தலும் தவிர்க்க முடியாதவை என்கிற நிலையில், விடுமுறைக் காலம், பண்டிகைக் காலம் வந்துவிட்டால் பலரும் சொந்த ஊருக்குச் செல்ல விழைவது இயல்பு. அவர்களது பயணத்தை சுலபமாக்குவதும், இனிமையாக்குவதும் மத்திய - மாநில அரசுகளின் கடமை.
 அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் காணப்படும் பல்வேறு பண்டிகைகளும், கோடைகாலத்தில் கல்விச்சாலைகளுக்கு வழங்கப்படும் விடுமுறைகளும் புலம்பெயர்ந்த அனைவரும் எதிர்நோக்கிக் காத்திருக்கும் தருணங்கள். குழந்தைகளுடன் சொந்த ஊருக்குத் திரும்பி, பெற்றோருடனும், உறவுகளுடனும் ஒருசில நாள்களாவது குதூகலமாகக் கூடி மகிழ்ந்து பணியிடங்களுக்குத் திரும்ப விரும்பம் தருணம் அது. அந்த வாய்ப்பை மறுப்பதுபோல அமைகிறது பேருந்து, ரயில், விமான கட்டணங்களும், போதுமான அளவில் வாகனங்கள் இயக்கப்படாமல் இருப்பதும்.
 பண்டிகைக் காலங்களில் மிக அதிகமாக பாதிக்கப்படுவது தென்னிந்திய மாநிலங்கள்தான். இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு தேடி இங்கிருந்து லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்புவதற்கு விடுமுறைக் காலமும் பண்டிகை நாள்களும்தான் உதவுகின்றன. ஆனால், போதுமான அளவில் அதற்கான போக்குவரத்து வசதிகள் இல்லை. வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக வளைகுடா நாடுகளிலும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் இருந்து இந்தியா திரும்ப விழைபவர்களும் போதுமான விமான சேவை இல்லாமல் இருப்பதால் கடுமையான கட்டணங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது.
 ரயில்வே துறையும், போக்குவரத்து துறையும், விமான நிறுவனங்களும் கூடிப்பேசி முடிவெடுத்தது போல, விடுமுறை காலப் பயணத்தை கொள்ளை லாபம் ஈட்ட பயன்படுத்துகின்றன. பேருந்து, விமானப் பயணக் கட்டணங்கள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. பயணிக்க விழைபவர்கள் கட்டணக் கொள்ளையால் சுரண்டப்படுகிறார்கள்.
 கடந்த மூன்று ஆண்டுகளாக கொள்ளை நோய்த்தொற்று பாதிக்கப்பட்டிருந்ததால் பல குடும்பங்கள் சொந்த ஊருக்கு வரவில்லை. பிற மாநிலங்களில் இருந்து ஊருக்குத் திரும்ப விழைந்தவர்களில் பெரும்பாலானோருக்கு ரயிலில் முன்பதிவு கிடைக்கவில்லை.
 விடுமுறை முடிந்து திரும்புவதற்கு முன்பதிவு செய்ய முடியாமலும், பயணச் சீட்டு கிடைக்காமலும் அவதிப்படுபவர்கள் பலர்.
 இப்போது அறிவிக்கப்படும் சிறப்பு ரயில்கள் முன் யோசனையுடன் ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தால் பலரும் சொந்த ஊருக்குப் பயணிக்க திட்டமிட்டிருப்பார்கள். கடைசி நேரத்தில் முன்பதிவு செய்யும்போது இடம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் பல மடங்கு அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
 இந்த ஆண்டு வழக்கத்துக்கு அதிகமாக சபரிமலை பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். சபரிமலையின் மண்டல பூஜை, மகர ஜோதி காலம், கிறிஸ்துமஸ், ஆங்கில வருடப் பிறப்பு, பொங்கல் பண்டிகைகளுடன் இணைவதால் எப்போதுமே வழக்கத்தைவிட பல மடங்கு பயணிகள் காணப்படுவார்கள். இதை தொலைநோக்குப் பார்வையுடன் உணர்ந்து சபரிமலை பக்தர்களுக்கு என்று தனியாக கூடுதல் ரயில்களை இயக்காதது ரயில்வேயின் தோல்வி.
 முன்கூட்டியே பதிவு செய்திருந்தால் விமான கட்டணம் குறைவாக இருந்திருக்கும் என்கிற மத்திய விமான போக்குவரத்துத் துறையின் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் விளக்கம் வேடிக்கையாக இருக்கிறது. மத்திய விமான போக்குவரத்துத் துறையின் நோக்கமும் முனைப்பும், குறைந்த கட்டணத்தில் பயணிக்க வசதி ஏற்படுத்திக் கொடுப்பதுதானே தவிர, விமான நிறுவனங்கள் அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு வாய்ப்பளிப்பது அல்ல. ரயில் கட்டணமும், விமான கட்டணமும் முன்புபோல பயணத் தொலைவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டுமே தவிர, கேட்பின் (டிமாண்ட்) அடிப்படையில் அமைவது இந்தியா போன்ற நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வாழும் தேசத்துக்கு ஏற்புடையதல்ல என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
 எல்லாவற்றையும்விட மிக அதிகமான கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவது தனியார் பேருந்துகள்தான். மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் தனியார் பேருந்துகளில் குறைந்தது 150% அதிகரித்த கட்டணம் இப்போதே வசூலிக்கப்படுகிறது. அடுத்த சில நாள்களில் அது இரண்டு, மூன்று மடங்கு உயரக்கூடும். மாநில அரசுகளின் மறைமுக ஆதரவு இல்லாமல் இது சாத்தியமல்ல.
 மாநில நகரங்களுக்கு இடையேயான கட்டணமும் வழக்கத்தைவிட பலமடங்கு அதிகமாக தனியார் பேருந்துகளால் வசூலிக்கப்படுகின்றன. சாதாரணமாகவே அரசுப் போக்குவரத்துக் கட்டணத்துக்கும், தனியார் பேருந்துகளின் கட்டணத்துக்கும் சுமார் 40% வேறுபாடு உண்டு. பண்டிகைக் காலம் வரும்போது பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணங்களை தனியார் பேருந்துகள் நிர்ணயித்துக் கொள்கின்றன.
 பண்டிகைக் காலங்களில் குறைந்தபட்சம் தமிழகத்திற்குள் பயணிப்பவர்களுக்காவது பேருந்துகளை உறுதி செய்வதும், அவற்றின் கட்டணத்தை முறைப்படுத்துவதும் அரசின் கடமை. அரசுப் போக்குவரத்துக் கழகங்களேகூட, பண்டிகைக் காலங்களில் வழக்கத்தைவிட அதிகக் கட்டணங்கள் வசூலிக்கின்றன. அரசுப் பேருந்துகளின் கட்டணங்களைவிட பலமடங்கு அதிகக் கட்டணம் தனியார் பேருந்துகள் வசூலிப்பது தடுக்கப்பட வேண்டும்.
 பண்டிகைக் காலங்களில் தனியார் பேருந்துகளை அரசின் கட்டுப்பாட்டில் எடுத்து, அரசே பயணக் கட்டணத்தை நிர்ணயித்து இடங்களை ஒதுக்கும் முறையை நடைமுறைப்படுத்துவதுதான் கட்டணக் கொள்ளைக்கு ஒரே தீர்வு!
 



Read in source website

 உலகின் முக்கிய வளர்ச்சியடைந்த - வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் கூட்டமைப்புதான் ஜி20 ஆகும். இந்த அமைப்பின் மாநாட்டை அடுத்த (2023) ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியா நடத்த உள்ளது. இது இந்தியர்கள் பெருமிதம் கொள்ளத்தக்க செய்தியாகும்.
 ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரிய குடியரசு, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் ஜி20 அமைப்பில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த அமைப்பின் தலைமைப் பதவி ஒவ்வொரு நாட்டுக்கும் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது.
 இந்தக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2022 டிசம்பர் 1 முதல் 2024 நவம்பர் 30 வரை இந்தியா தலைமைப் பொறுப்பை வகிக்கும். இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி20 கூட்டமைப்பின் மாநாடு முதல் முறையாக இந்தியாவின் தலைமையில் நடைபெற உள்ளது.
 தனது தலைமையில் கூட்டமைப்பு இயங்கக்கூடிய அடுத்த ஓராண்டுக்கு 200 மாநாடுகளை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதில் சிறப்புக்குரியது, அடுத்த ஆண்டு செப்டம்பர் 9, 10 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சிமாநாடாகும். இதற்கான ஜி20 தலைமைத்துவ இலச்சினை, கருத்துரு ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டதோடு, இணையதளத்தையும் தொடங்கி வைத்திருக்கிறார்.
 பொதுவாக எந்த நாட்டில் ஜி20 மாநாடு நடைபெறுகிறதோ அந்த நாட்டுக்கு ஜி20 அமைப்பின் தலைமைப் பதவி தற்காலிகமாக அளிக்கப்பட்டு வருகிறது. தொலைநோக்குப் பார்வையோடு இந்த ஜி20 உருவாக்கப்பட்டு, சிறந்த முறையில் வழிநடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, உலக அளவிலான அமைப்புக்குத் தலைமை வகிக்கும் வகையில் உருவாகியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
 சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் உலக அளவில் பங்களிக்க ஜி20 தலைமைத்துவம் இந்தியாவுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்றே சொல்லலாம். ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றதில் இருந்து நாடு முழுவதும் பல இடங்களில் 32 வெவ்வேறு துறைகள் சார்ந்த சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்தும். இது இந்தியாவின் சாதனைக்கான முக்கியத் தருணமாக பார்க்கப்படுகிறது.
 இந்தத் தருணத்தில் உலகம் மிகப்பெரும் சிக்கல்களையும், சறுக்கல்களையும் எதிர்கொண்டிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல், உக்ரைன் - ரஷியா இடையிலான போர், பொருளாதார நெருக்கடி ஆகியவை உலக நாடுகளை அச்சமூட்டுகின்றன. இந்தோனேஷியா நாட்டின் பாலி தீவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் "ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம்' என்ற கருப்பொருளின் கீழ் உலகளாவிய பிரச்னைகள் குறித்து, குறிப்பாக உணவு, எரிசக்தி பாதுகாப்பு, சுகாதாரம், டிஜிட்டல் பரிமாற்றம் இவை குறித்து ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் விரிவாக ஆலோசித்தார்கள்.
 அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை வழிநடத்தும் தலைமைப்பதவி இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. இதன் மூலம், கூட்டமைப்பு நாடுகள், தங்களுடைய வர்த்தகம், உள்நாட்டுப் பாதுகாப்பு போன்ற விவகாரங்கள் குறித்து ஏனைய நாடுகளுடன் விவாதித்துக் கூட்டமைப்பை பலப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உருவாகும். இக்கூட்டமைப்பில் வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் இணைந்து மொத்தம் 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
 உலகப் பொருளாதாரத்தில் நிலவும் சிக்கல்கள் பற்றிப் பேசுவதற்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு பருவநிலை மாற்றம், எரிசக்தித்துறை, எதிர்பாராது உருவாகும் அசாதாரண சூழ்நிலை இவற்றைக் குறித்து விவாதிப்பதற்கும் மிகச்சிறந்த களமாக உருவாகியுள்ளது.
 இந்தோஷியாவில் நடைபெற்ற இரண்டு நாள் உச்சி மாநாட்டில் உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதனை உலக நாடுகளின் தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். மேலும், அம்மாநாட்டில், இன்று மிக முக்கிய பிரச்னைகளாக உள்ள பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி இவற்றை சரிசெய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
 சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் வரை பல்வேறு கருத்துருக்கள் பரிமாறப்பட்டிருக்கின்றன. நாளுக்கு நாள் உக்ரைனில் ஏற்படும் மாற்றம், அதனுடன் தொடர்புடைய உலகளாவிய பிரச்னை இவை அனைத்தும் உலகம் முழுவதும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. சர்வதேச விநியோக சங்கிலி அழிந்து வருகிறது.
 அதனால், அத்தியாவசியப் பொருள்களுக்கும், அடிப்படைத் தேவைகளுக்கும் உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அனைத்து நாடுகளின் ஏழை எளிய மக்கள் சந்திக்கும் சவால்கள் தொடர்ந்து மோசமாகி வருகின்றன. ஏற்கெனவே, அன்றாட வாழ்வு அவர்களுக்கு போராட்டம் நிறைந்தது. மேலும் மேலும் சோதனைகளை எதிர்கொள்ளும் திறன் அவர்களிடம் இல்லை.
 ஐக்கிய நாடுகள் போன்ற பல்வேறு அமைப்புகளும், இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்ப்பதில் வெற்றி பெறவில்லை என்பதை ஒப்புக்கொள்ள நாம் தயங்கக் கூடாது. இதற்கான தகுந்த சீர்திருத்தங்களைக் கொண்டு வர நாம் அனைவரும் தவறிவிட்டோம். எனவே, ஜி20 மாநாட்டின் நடவடிக்கைகள் குறித்து உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜி20 கூட்டமைப்பின் செயல்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் திகழ்கிறது. இதனைத்தான் இந்திய பிரதமர் இந்தோனேஷியாவின் பாலி தீவில் குறிப்பிட்டார். அக்கருத்தை முக்கியமான ஒன்றாக நாம் பார்க்கலாம்.
 கொள்ளை நோய்த்தொற்றின்போது தனது 1.3 பில்லியன் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தது இந்தியா என்பது மிக முக்கியமான செய்தியாகும். அதே நேரத்தில், பல்வேறு நாடுகளுக்கும் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டன. இன்றைய உரத் தட்டுப்பாடு நாளை உணவுதட்டுப்பாட்டுக்கு வித்திட்டு விடும். இது நடக்கும்போது இதற்கான தீர்வு உலகநாடுகளிடம் இருக்காது.
 ஆக, உணவு மற்றும் உணவுத்தானியங்களின் விநியோக சங்கிலியை தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கான செயல்பாடுகளை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பிற்காக இந்தியாவில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதோடு, சிறுதானியங்கள் போன்ற ஊட்டச்சத்து மிக்க, பாரம்பரிய உணவு தானியங்களையும் மக்களிடையே பிரபலப்படுத்த வேண்டும்.
 உலகளாவிய அளவில் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடு, பசி ஆகிய பிரச்னைகளுக்கு சிறுதானியங்கள் தீர்வாக அமையும் என்று இந்திய பிரதமர் அந்த மாநாட்டில் பதிவு செய்திருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றது.
 ஜி20 கூட்டமைப்பின் முதல் மாநாடு கிழக்காசிய நாடுகளில் பெரும் நிதி நெருக்கடி இருந்த சமயத்தில் நடத்தப்பட்டது. நிதி நெருக்கடி உலகம் முழுவதும் சிறிய பொருளாதார பின்னடைவை உண்டாக்கியது. அதனால் முதல் ஜி20 மாநாடு ஜெர்மனியின் பெர்லின் நகரில் 1999-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த ஜி20 மாநாட்டை ஜி8 நாடுகளின் விரிவாக்கம் என்றே சொல்லலாம். உலகின் வளர்ந்த நாடுகள், உலகில் வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட சீனா, இந்தியா, பிரேஸில் போன்ற நாடுகளை இணைத்து உருவாக்கியதுதான் இந்த ஜி20.
 தொடக்கத்தில் இந்த ஜி20 மாநாடுகளில், உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள், நாட்டின் மத்திய வங்கித் தலைவர்கள் ஆகியோர்தான் சந்தித்து வந்தார்கள். ஆனால், 2008-இல் ஏற்பட்ட பொருளாதார சரிவிற்குப் பின் ஜி20 உறுப்பு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் என அனைத்து பெரிய தலைவர்களும் சந்திக்கத் தொடங்கி விட்டார்கள். இது ஜி20 மாநாடுகளின் முக்கியத்துவத்தைத் தலைவர்கள் உணர்ந்திருப்பதைக் காட்டுகிறது.
 நாட்டின் பொருளாதார மற்றும் நிதி சார்ந்த விஷயங்களைப் பேசுவதோடு நின்று விடாமல், உறுப்பு நாடுகள் கொண்டு வரும் பெரிய திட்டங்களுக்கு மற்ற நாடுகளின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் கேட்டுப் பெறுவதே இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக அமைந்தது.
 எரியும் வர்த்தகப் போர், பருவநிலை மாற்றம், ஈரான் நாட்டுடனான உறவு, உலகப் பொருளாதாரம் இவை குறித்து மிக முக்கியமாக இந்த ஆண்டு உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. 2023-ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை ஜூன் மாதம் முதல் 3 விழுக்காட்டில் இருந்து 1.9 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
 பணவீக்கம், வட்டிவிகித உயர்வு, கடன் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் வளர்ந்து வரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. டாலர் மதிப்பீட்டு பொருளாதார வளர்ச்சிக் கணக்கீட்டில் அமெரிக்கா, சீனா ஜப்பான் ஜெர்மனிக்கு அடுத்தபடியாக இந்தியப் பொருளாதாரம் இருக்கிறது. இவை, பிரிட்டன் ஆட்சி மாறி, புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் பிரதமருக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி 7.7சதவீதமாக சரியும் என பொருளாதார கணிப்பு சுட்டிக்காட்டுகிறது. இதற்கு வட்டிவிகிதங்களின் அதிகரிப்பும், சமச்சீரற்ற பருவநிலையும், சர்வதேச வளர்ச்சியின் மந்த நிலையும் மிக முக்கிய காரணிகளாகத் திகழ்கின்றன. இவை குறித்து வருகின்ற ஜி20 மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 கட்டுரையாளர்:
 முன்னாள் அமைச்சர்.



Read in source website

 தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகளுக்கு விநியோகம் செய்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்க நியாயவிலைக் கடைகள் மூலம் அவை பொதுமக்களுக்கு இலவசமாகவும் குறைந்த விலைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
 இப்படி பொதுமக்கள் வாங்கும் பொருட்கள் மறுவிற்பனைக்கு வருவதைத் தமிழகம் முழுவதும் காணமுடிகிறது. நியாயவிலைக் கடையில் வழங்கும் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், இலவச வேட்டி, சேலை மட்டுமல்லாது, அரசு அவ்வப்போது இலவசமாகக் கொடுக்கும் தொலைக்காட்சிப் பெட்டி, மடிக்கணினி, சைக்கிள் போன்றவையும் கூட விற்பனைக்கு வருகின்றன.
 இவற்றுள் அரிசி வியாபாரம் பிரதானமாக இருக்கிறது எனலாம். இதைத்தான் கடத்தல் என்றும் பதுக்கல் என்றும் அதிகாரிகள் ஆங்காங்கே மடக்கிப் பிடிக்கின்றனர். இப்படி வெளிப்படையாகக் கொள்முதல் செய்து விற்பதைக் கடத்தல் அல்லது பதுக்கல் என்று கூற முடியுமா? கொள்முதல் செய்தவர் குற்றவாளி என்றால் அதனை விற்றவரும் குற்றவாளிதானே!
 நியாயவிலைக் கடைகள் மூலம் மலிவு விலையில் அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்களை விற்கும் திட்டம் நாட்டில் பல காலமாக நடைமுறையில் உள்ளது. அரிசியை இலவசமாக வழங்கும் திட்டம் காலப்போக்கில் உருவானது.
 மத்திய அரசும், மாநில அரசும் அரிசியை வழங்குகின்றன. ஒரு குடும்பத்துக்கு முப்பதிலிருந்து ஐம்பத்தைந்து கிலோ அரிசிவரை இலவசமாகக் கிடைக்கிறது. மக்கள் பசியின்றி வாழவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது இலவச அரிசித் திட்டம். அது கடத்தலுக்கும் பதுக்கலுக்கும் வழி வகுத்துவிட்டது.
 நியாயவிலைக் கடையில் வாங்கிய அரிசியைச் சமைத்துச் சாப்பிடுவோர் சிலரே. பலர் அதனை விற்பனை செய்துவிடுகின்றனர். ஒரு மூதாட்டி, "நாங்கள் ஒருநாளும் ரேஷன் அரிசியைப் பொங்கியதில்லை. ஐம்பத்தைந்து கிலோ அரிசி கிடைக்கும். அதை அப்படியே விற்றுவிட்டு, கடையில் நாற்பது ரூபாய்க்கு நல்ல அரிசி வாங்கித்தான் பொங்குவோம்' என்று கூறினார். அந்தப் பாட்டி மட்டுமல்ல, அரிசி அட்டைதாரர்கள் பலரும் இதைத்தான் செய்கின்றனர்.
 அவர்களிடம் இருந்துதான் மேலே சொன்ன நபர்கள் வாங்குகின்றனர். நியாயவிலைக் கடைக்காரர் நேரடியாகக் கொடுப்பதும் உண்டு என்கின்றனர். ரேஷன் அட்டைக்குப் பொருட்கள் வாங்கிவிட்டதாக, பொருள் வாங்காத சிலருக்குக் குறுஞ்செய்திகள் வருவதாக எழும் புகார்கள் இதைப் புலப்படுத்தும். ரேகை வைத்தால்தான் பொருள் வாங்கமுடியும் என்ற நிலை இருக்கும்போது இது எப்படிச் சாத்தியமாகும் என்பதும் புரியவில்லை.
 அரசு குவிண்டால் 2,200 ரூபாய்க்கு நெல்லைக் கொள்முதல் செய்கிறது. பின் அது ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அரிசியாக்கப்படுகிறது. ஒரு குவிண்டால் நெல்லுக்கு 50 கிலோ அரிசி கிடைத்தாலும் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ. 40-க்கு மேல் ஆகிறது. ஈரப்பதம், சேதாரம் போன்றவற்றைக் கணக்கிட்டால் இன்னும் விலை அதிகமாகும். இப்படி நாற்பது ரூபாய்க்கு மேல் அசலாகும் அரிசியைத்தான் அரசு இலவசமாக வழங்குகின்றது.
 இந்த அரிசி கிலோ நான்கு ரூபாய்க்கும் ஐந்து ரூபாய்க்கும் கைமாறுகிறது என்பது வேதனையான விசயம். இப்படிக் கைமாறுவது அரசுக்கும் தெரியும்; அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனாலும் கண்டுகொள்வதில்லை. ஏனெனில் இது வாக்குவங்கி விவகாரம். இதில் தலையிட்டால் வாக்கு கிடைக்காது என்பது அவர்களுக்குத் தெரியும். இதை மறைப்பதற்குத்தான் கடத்தல், பதுக்கல் என்று ஒரு சிலரைக் கைது செய்து, அதைப் பத்திரிகை செய்தியாக்கிவிடுகின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
 அரிசி கடத்தலையும் பதுக்கலையும் தடுக்க வேண்டுமானால், அரசு சில செயல்களை முன்னெடுக்க வேண்டும். அரிசி அரைவையில் கவனம் செலுத்துவது முக்கியமானதாகும். வெளிச்சந்தையில் விற்பனையாகும் அரிசியின் தரத்துக்கு ஈடாக ரேஷன் அரிசி அரைவை இருக்க வேண்டும் என்பதில் அரசு கவனமாக இருக்க வேண்டும்.
 அரசு கொள்முதல் செய்யும் விவசாயிகளிடம் இருந்துதான் தனியார் ஆலையினரும் நெல்லைக் கொள்முதல் செய்கின்றனர். ஆனால் ரேஷன் அரிசிக்கும் தனியார் தயாரிக்கும் அரிசிக்கும் நிறம், வாசம், தரம், வேகும் நேரம் என நிரம்ப வித்தியாசம் உள்ளது. இது எப்படி உண்டானது? இலவச அரிசிதானே, எப்படி இருந்தால் என்ன என்ற எண்ணம் இருக்கக் கூடாது.
 நியாயவிலைக் கடை அரிசியை வாங்குபவர் மீது கடத்தல், பதுக்கல் என்று வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பது போல அதை விற்கும் ரேஷன் அட்டைதாரர் மீதும் நடவடிக்கை எடுப்பது அடுத்துச் செய்ய வேண்டியதாகும்.
 அடுத்ததாக, பொருளாதாரத்தில் நலிந்துள்ள, உண்மையிலேயே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களைக் கண்டறிந்து, அதைப் பயன்படுத்தும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு மட்டுமே அரிசி இலவசமாக விநியோகம் செய்யும் நடைமுறையை உருவாக்க வேண்டும். உண்மையான ஏழைகள் யார் என்பதை அடையாளம் காண்பதில் மத்திய அரசும் மாநில அரசுகளும் பின்பற்றும் அளவுகோல்கள் வித்தியாசமாக உள்ளன.
 இப்போது தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான அரிசி அட்டைதாரர்கள் இருப்பதாகத் தெரிகிறது. உண்மையிலேயே இலவச அரிசி சிலருக்கு வரப்பிரசாதமாகத்தான் உள்ளது. அதைச் சமைத்துத்தான் உண்கின்றனர். ஆனால் பெரும்பாலோர் இந்த அரிசியைச் சமைப்பதில்லை. வியாபாரிகளிடம் விற்றுவிடுகின்றனர். இந்த உண்மையை அறிந்து அதற்கேற்ற நடவடிக்கை எடுக்காமல் இருக்கும்வரை அரிசி கடத்தலும் பதுக்கலும் இருந்துகொண்டுதான் இருக்கும்.



Read in source website

2022 இன் மிகச் சில கொண்டாட்டத் தருணங்களில் ஒன்றாக, கத்தாரில் நடந்து முடிந்திருக்கிறது ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி. தென் அமெரிக்க தேசமான அர்ஜென்டினா, ஐரோப்பிய நாடான பிரான்ஸை வென்று மூன்றாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது. 92 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இப்படி நிகழ்ந்ததே இல்லை எனும் அளவுக்குப் பரபரப்பான தருணங்களைக் கொண்டிருந்த இறுதிப்போட்டி, இன்னும் பல சேதிகளை உலகுக்கு உணர்த்தியிருக்கிறது.

முதல் போட்டியிலேயே, சவுதி அரேபிய அணியிடம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்த அர்ஜென்டினா, உடனடியாக மீண்டெழுந்து அடுத்தடுத்த போட்டிகளில் அதிரடியாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. “இது வலிதரும் தோல்விதான். ஆனால், நம்பிக்கையுடன் தொடர்ந்து விளையாடுவோம்,” என்று சொன்ன அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயனல் மெஸ்ஸி, தன் மந்திரச் சொற்களை மெய்ப்பித்துக் காட்டிவிட்டார். 1986இல் மரடோனாவின் தலைமையில் உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா, இப்போது மெஸ்ஸியின் சீரிய வழிகாட்டுதலில் மீண்டும் வெற்றியைச் சுவைத்திருக்கிறது.



Read in source website

பெருந்தொற்று நெருக்கடியில் வாழ்வாதாரத்தை இழந்த பல குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்த்தன. இப்போதுவரை அந்தக் குடும்பங்களின் வாழ்க்கை பழைய நிலைக்குத் திரும்பவில்லை.

கோவையில் சுயநிதி மேல்நிலைப் பள்ளி ஒன்றின் விவரங்களைப் பார்த்தபோது, 500 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்திருப்பது தெரிந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூரிலும் தனியார் பள்ளி ஒன்றிலிருந்து 400 மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு மாறியுள்ளார்கள். ஒட்டுமொத்தமாக, தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு மாறியுள்ளார்கள். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை மேம்படுத்தி, பாதுகாக்கும் அவசியத்தை இது உணர்த்துகிறது.



Read in source website

புற்றுநோயுடன் போராடிவந்த பறவை ஆர்வலரும் காட்டுயிர்ப் புகைப்படக் கலைஞருமான ராம்கி ஸ்ரீனிவாசன் (49), டிசம்பர் 17 இரவு பெங்களூருவில் காலமானார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்ற ராம்கி, 1995 முதல் தனியார் துறையில் பணியாற்றிவந்தார். பறவை பார்த்தலில் ஆர்வம் கொண்டிருந்த அவர், 2007 முதல் அதில் முழுமூச்சுடன் இறங்கி, காட்டுயிர்ப் புகைப்படக் கலைஞராகப் பரிணமித்தார். ‘என்னால் காட்டுயிர்களுக்கு என்ன பயன்?’ என்ற கேள்வி அவருள் எழ, சேகர் தத்தாத்ரி எனும் காட்டுயிர் ஆவணப்பட இயக்குநருடன் இணைந்து ‘கன்சர்வேஷன் இந்தியா’ எனும் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார்.

சைபீரியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு வலசை செல்லும் அமூர் வல்லூறுகள் நாகாலாந்தில் வேட்டையாடப்படுவதை அறிந்தார். அரசு அதிகாரிகள் முதல் வேட்டைக்காரர்கள் வரை அனைவருடனும் பேசி அந்தப் பறவைகளைக் காத்தார். காட்டுயிர் ஒளிப்படக் கலையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தார்மிக நெறிமுறைகளில் அக்கறை காட்டினார்.

2017இல் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பிற உயிர்களின் வேதனைக்குத் தீர்வுகாண விழையும் குணம் கொண்ட ராம்கியின் கவனம், கண் புற்றுநோயால் (retinoblastoma) பாதிக்கப்பட்ட ஏழைச் சிறார்களின் பக்கம் திரும்பியது. இதற்கென பிரத்யேகமாக ஒரு தளத்தை (www.wildlifeforcancer.com) தொடங்கிய அவர், இக்‌ஷா ஃபவுண்டேஷன் எனும் தொண்டு நிறுவனத்தின் துணையுடன் அந்தச் சிறார்களுக்கு உதவிவந்தார். அவரது மரணம் எல்லா வகையிலும் பேரிழப்பு!



Read in source website

இந்த 2022ஆம் ஆண்டில்தான், ‘மனநலம்’ என்ற சொல் முதல் முறையாக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றது. பொதுமுடக்கத்துக்குப் பின், அதிகரித்துவரும் மனநலப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த வழிமுறைகள் உருவாக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.

தனிநபர் ஒருவரின் மனநலம் என்பது சமூக நலத்தோடு இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, உடல்நலனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நாம் மனநலனுக்குக் கொடுப்பதில்லை. மனரீதியாக ஒருவர் பாதிக்கப்படும்போது, அதைத் தனிநபரின் பலவீனமாகக் கருதும் நிலைதான் இங்கிருக்கிறது.

ஆகவே, மனநலம் தொடர்பாக வெளிப்படையாக உரையாடுவதைக் களங்கமாகப் பார்க்கிறோம். எனினும், உடல்நலனுக்கான முக்கியத்துவத்தை மனநலமும் சமீப காலங்களில் பெற்றுவரும் சூழலில், மத்திய அரசின் முன்னெடுப்பு, மனநலம் மீதான எதிர்மறையான பார்வையை, களங்கத்தைக் குறைத்து, அது தொடர்பான ஆக்கபூர்வமான விவாதங்கள் சமூகத்தில் தொடங்குவதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கலாம்.

பொதுமுடக்கத்துக்குப் வேண்டாம்...: உலகம் முழுக்கப் பொதுமுடக்கக் காலத்துக்குப் பின், மனநலப் பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்துவருவதாக உலக சுகாதார நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. குறிப்பாக, வளர்ந்துவரும் நாடுகளில் இந்தப் பிரச்சினைகளின் தீவிரம் அதிகமாக இருக்கிறது.

பொருளாதார மந்தநிலை, வேலையிழப்பு, கல்வியில் தேக்கம், குடும்ப உறவுகளிடையே ஏற்பட்ட நெருக்கடிகள், சமநிலையின்மை, வன்முறை, அதிகரிக்கும் சமூக ஊடகப் பயன்பாடு, இளைஞர்களின் மனநிலையில் அவற்றின் தாக்கம், குடும்ப அமைப்பில் மாற்றங்கள் அதன் விளைவாகத் தனிமைப்படுத்தப்படும் முதியவர்கள் போன்ற பல்வேறு காரணங்களால் மனநலப் பிரச்சினைகள் தீவிரம் பெற்றுவருகின்றன.

ஒவ்வொரு நாடும் இதை உணர்ந்து இந்தப் பிரச்சினைகளைத் தடுத்து, களைவதற்கு உண்டான ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது. அதன் தொடர்ச்சியாகவே, இப்பிரச்சினைகளைக் குறிப்பிட்டு, மத்திய நிதியமைச்சர் பேசியிருக்கிறார்.

தற்கொலைத் தடுப்பு: இந்தியாவில் தற்கொலைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 7% அதிகரித்துள்ளதாக, ஆகஸ்ட் மாதம் வெளியான தேசியக் குற்ற ஆவணக் காப்பக (NCRB) அறிக்கை கூறுகிறது. மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகம் பதிவாகியிருக்கின்றன. இந்தியாவில் இளவயதுத் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.

கடந்த ஆண்டு நடந்த தற்கொலைகளைப் பொறுத்தவரை 60%க்கும் அதிகமானோர் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர். பொதுமுடக்கத்துக்குப் பிறகான பொருளாதார நெருக்கடிகளும் வேலையிழப்பும் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்களின் தற்கொலைகளுக்குப் பெரும்பாலும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக இருக்கின்றன. தற்கொலைகளைத் தடுப்பதற்கான புதிய செயல்திட்டங்களும் வழிமுறைகளும் மத்திய, மாநில அரசுகளால் இந்த ஆண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இணையவழி மனநல ஆலோசனை, உளவியல் நிபுணர்களின் நியமனம் போன்ற மேலோட்டமான தீர்வுகளே அதில் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் தற்கொலைகள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரிடையே அதிகம் நிகழ்கின்றன. அவர்களுக்கான சமூக, பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்யாமல், அவர்களின் சமூக, பொருளாதார நெருக்கடிகளைக் குறைப்பதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுக்காமல் வெறும் ஆலோசனைகளை வழங்குவதாலேயே அப்பிரிவினரில் நடக்கும் தற்கொலைகளை முழுமையாகத் தடுத்துவிட முடியாது என்பதை அரசாங்கம் உணர வேண்டும்.

மாணவர்களும் மனநலமும்: தொழில்நுட்பக் கருவிகளின் வரவால் மாணவர்களும் இளைஞர்களுமே அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அதிகரித்துவரும் இளைஞர்களின் மனநலப் பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்பம் ஏதோ ஒருவகையில் காரணமாக இருக்கிறது. நீண்ட நேரம் திறன்பேசித் திரையில் செலவிடுவதால், மாணவர்களின் கவனிக்கும் திறன் பெருமளவு குறைந்திருக்கிறது.

அதேபோல், அவர்களின் சக மனித உறவுகள் குறைந்திருக்கின்றன, மனிதர்களின் மீதான மதிப்பீடுகள் மாறியிருக்கின்றன, அவர்களின் மீதும் புகார்களைச் சொல்லும் பெரியோர்களை மிகச் சுலபமாக அலட்சியப்படுத்துகிறார்கள், சக மனித அன்பும், பரிவும் குறைந்து, முற்றிலும் சுயநலமிக்கவர்களாக, யாரையும் மதிக்காத பண்புகள் கொண்டவர்களாக மாணவர்கள் மாறிப்போயிருக்கிறார்கள்.

பெற்றோர்கள் இந்தப் பண்புகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. தங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதால், அவர்களைத் தன்னிச்சையாகச் செயல்பட விடுவதில்லை. இதன் விளைவாக முதல் முறையாக ஒரு நெருக்கடியைச் சந்திக்கும்போது, மிகுந்த உணர்ச்சிவசப்பட்டவர்களாக மாணவர்கள் மாறிவிடுகிறார்கள். அதுவே அவர்களை ஏதேனும் ஒரு ஆபத்தில் கொண்டு நிறுத்திவிடுகிறது.

மேலும், டிஜிட்டல் சாதனங்களின் அதீதப் பயன்பாடு, அவர்களை இன்னும் தனிமைப்படுத்துகிறது, இணைய விளையாட்டுகள் அவர்களுக்குள் வன்முறையைத் தூண்டுகின்றன, வெளிப்படையற்ற தன்மையால் இணையக் குற்றங்களில் மிகச் சுலபமாக மாணவர்கள் சிக்கிவிடுகிறார்கள், சுலபமாகக் கிடைக்கும் போதைப் பொருட்கள் அவர்களை இன்னும் ஆபத்துக்குள்ளாக்குகின்றன. இப்படிப் பல காரணங்களால் மாணவர்களின் மனநிலை, சமீப காலத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இளைஞர்களின் பிரச்சினைகளை எப்போதையும் விடக் கடந்த ஆண்டு மிக அதிகமாக எதிர்கொண்டோம். இணைய விளையாட்டுகளால் தற்கொலை செய்துகொள்வது, திருடுவது, பிறர் மீது வன்முறையைப் பிரயோகிப்பது, ஆசிரியர்களை மிரட்டுவது, பெண்கள் மீது குற்றச் செயல்களில் ஈடுபடுவது எனப் பல்வேறு சம்பவங்களின் வழியாக நாம் புரிந்துகொள்ளக்கூடியது, அவர்களின் மனநலன் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுவருகிறது என்பதைத்தான்.

இளைஞர்களின் மனநலனைப் பாதுகாக்க, ஒருங்கிணைந்த செயல்திட்டங்களை உருவாக்க அரசாங்கங்கள் முயல்கின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாணவர்களின் கலைத் திருவிழா, சினிமா திரையிடல், உளவியல் ஆலோசனை எனப் பல திட்டங்கள் இந்த ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இவை தவிர, பள்ளிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் மாநில அளவிலான செயல்திட்டங்களைத் திட்டமிட வேண்டும்.

மனநலனை மேம்படுத்துதல்: ‘அனைவருக்குமான மனநலத்தை உறுதிசெய்ய வேண்டும்’ என்பதை 2022இன் உலக மனநல நாள் கருப்பொருளாக, சர்வதேச மனநல அமைப்புகள் அறிவித்தன. ஏனென்றால், ஐநாவின் ‘நூற்றாண்டு வளர்ச்சி இலக்கு’களில் (2000) பசி, வறுமை ஒழிப்பு, குழந்தைகள் இறப்பைத் தடுத்தல் ஆகியவற்றோடு மனநல மேம்பாடும் இடம்பெற்றிருந்தது. புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவும் மாறிவரும் வாழ்க்கை முறையின் காரணமாகவும் மனநலச் சீர்கேடுகள் தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றன.

மக்களை நோய்மையில் ஆழ்த்தும் ஐந்து முக்கியமான நோய்களில் மனச்சோர்வும் ஒன்று. பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை, ‘உடல்-மன ஆரோக்கியத்தின் உயரிய நிலையை அடைய அனைவருக்கும் உரிமை உண்டு’ என்கிறது. ஒவ்வொரு சமூகமும் அந்தச் சமூகத்தின் இயல்பை உணர்ந்து, அதன் விளிம்புநிலை மக்களின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

நல்வாழ்வை அடைவதற்கான முயற்சிகளில் மனநலத்தை முதன்மையாகக் கொள்ள வேண்டும். அதேபோல், மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியமும், மனித உரிமைகளும், வாழ்வாதாரமும் பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டும்.

தனிநபர்களும் தங்கள் மனநலப் பிரச்சினைகள் தொடர்பாக, வெளிப்படையாக உரையாட வேண்டும். மனநலமின்மை என்பதைப் பலவீனமாகக் கருதாமல், அதை உணர்ந்து அதற்கான தீர்வை அடையும் வழிகளைக் கண்டறிவதைப் பலமாகக் கருத வேண்டும். மானுட அறங்கள், மதிப்பீடுகள், சக மனித உறவுகளின் மீதான மாண்புகள் போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கடத்த வேண்டும். அதன் மூலம் அவர்களின் மனநலத்தையும் உறுதிசெய்ய முடியும். அனைவருக்குமான மனநலத்தை அனைவரும் இணைந்து செயல்படுவதன் வழியாகவே பெற முடியும் என்பதைக் கடந்த ஆண்டின் செயல்பாடுகளிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம். - சிவபாலன் இளங்கோவன் மனநல மருத்துவர், தொடர்புக்கு: sivabalanela@gmail.com



Read in source website