DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 22-11-2022

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் கிடைக்க வேண்டிய நீரின் அளவு இயல்பை விட அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தமிழக உழவர் நலத் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அக்டோபர் முதல் டிசம்பர் முடிய வடகிழக்குப் பருவத்தில், 448 மிமீ (48%) மழையளவு கிடைக்கிறது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரை இயல்பாக பெய்ய வேண்டிய 288.3 மி.மீட்டருக்கு 327.9 மி.மீ மழை அதாவது 14 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளது.

 2 மாவட்டங்களில் இயல்பை விட 60 சதவிகிதம் கூடுதலாகவும், 12 மாவட்டங்களில் 20 முதல் 59 சதவிகிதம் கூடுதலாகவும், 21 மாவட்டங்களில் இயல்பான மழையும் பெய்துள்ளது.

இந்நிலையில், விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வேளாண்மை உழவர் நலத்துறை அறிவித்துள்ளது. 

விவசாயிகள் பொதுவாக பின்பற்ற வேண்டிய  நடவடிக்கைகள்

1.     விளை நிலங்களில் உள்ள சிறு பாசன மற்றும் வடிநீர் வாய்க்கால்களில் உள்ள,   செடி கொடிகளை அகற்றிட வேண்டும்.

2.   மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் உள்ள அதிகப்படியான நீரை உரிய வடிகால் வசதியினை உருவாக்கி வெளியேற்ற  வேண்டும்.

3.   மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும்.

4.   மழைக்காலத்தில் புகையான் தாக்குதல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால், வேம்பு சார்ந்த அசாடிராக்டின் 0.03 சதவீத மருந்தினை எக்டருக்கு 1000 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

5.   தற்போது, மேகமூட்டமாக உள்ளதால், பயிரின் தேவைக்கும் அதிகமாக இரசாயன உரமிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

நெல் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள்

1.     மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் உடனடியாக வடிகால் வசதியை ஏற்படுத்தி நீரினை வடித்து, வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2.   நெல் பயிர் நீரில் மூழ்கி இருந்தால், ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது மழை நின்று நீர் வடிந்து வருவதால், ஊட்டச்சத்து பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு, நீர் வடிந்த பிறகு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா,  18 கிலோ ஜிப்சத்துடன், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து, இரவு முழுவதும் வைத்திருந்து தண்ணீர் வடிந்தவுடன் வயலில் இட வேண்டும்.

3.   போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன், ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், ஒரு கிலோ துத்தநாக சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழி உரமாக தெளிக்க வேண்டும்.

4.   முன்சம்பா பருவத்தில் நடவு செய்துள்ள நெல் பயிர் தண்டு உருளும் பருவம் முதல் பூக்கும் பருவத்தில் இருந்தால், ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி, கரைசலுடன் 2 கிலோ யூரியா,  1 கிலோ பொட்டாஷ் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.  



Read in source website

யானைகள் பராமரிப்பு தொடா்பாக, பாகன்கள், உதவியாளா்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இதற்காக, தமிழகத்தின் ஆனைமலை, முதுமலை புலிகள் காப்பகத்தைச் சோ்ந்த 13 பாகன்கள், உதவியாளா்கள், அதிகாரிகள் தலைமையில் விரைவில் தாய்லாந்து செல்லவுள்ளனா்.

இதுகுறித்து வனத்துறை வெளியிட்ட அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில், முதுமலை, ஆனைமலை, வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல்பூங்கா, திருச்சிராப்பள்ளி யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் ஆகியவற்றில் யானைகள் முகாம்கள் செயல்படுகின்றன. இவற்றில் 63 யானைகள் பாராமரிக்கப்படுகின்றன. இங்கு 37 பாகன்கள், 28 உதவியாளா்கள் மற்றும் 56 போ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி

வருகின்றனா். தற்போது உள்ளூா் மலைவாழ் மக்களை தற்காலிக பணியாளா்களாக நியமித்து யானைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், யானைகள் பராமரிப்பானது கால மாறுபாடுக்கு ஏற்ப அறிவியல் மற்றும் விலங்கு நலவாழ்வு அடிப்படையில் மாற்றியமைக்கப்பட வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில், தாய்லாந்தில் உள்ள தாய் யானைகள் பாதுகாப்பு மையத்தில், தமிழக யானை பாகன்கள், உதவியளா்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனா் பாா்கவா தேஜா, வனச்சரகா் எம்.சுந்தரவேல் ஆகியோா் ஒருங்கிணைப்பில் 3 பாகன்கள், 3 உதவியாளா்கள் என 6 பேரும், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனா் டி.வெங்கடேஷ், தெப்பக்காடு யானைகள் முகாமின் விலங்குகள் ஆய்வாளா் ஆா்.ரமேஷ் ஆகியோா் ஒருங்கிணைப்பில் 3 பாகன்கள், 4 உதவியாளா்கள் தாய்லாந்து செல்லவுள்ளனா். இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்துக்கு மேலும் இரு முட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதுதொடா்பாக சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை வெளியிட்ட உத்தரவு:

கடந்த செப்டம்பா் மாதம் தமிழக அரசுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் இயக்குநா் எழுதிய கடிதத்தில் தெரிவித்த கோரிக்கைகளைப் பரிசீலித்த அரசு, 6 மாதங்கள் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு 100 சதவீத ஊட்டச்சத்து அளிக்கும் வகையில், வறுக்கப்பட்ட கோதுமை மாவு, பாா்லி மாவு கலந்த கேழ்வரகு மாவு, கொழுப்பு நிறைந்த சோயா மாவு, வெல்லம், வறுத்து அரைத்த நிலக்கடலை மாவு, வைட்டமின் மற்றும் மினரல் கலவை ஆகியவற்றை சோ்த்து வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதேபோன்று, கா்ப்பிணிகள், குழந்தை பெற்ற பெண்களுக்கு, வறுத்த கோதுமை, கடலை பருப்பு, உளுந்து, வோ்க்கடலை மாவுகள், சுத்திகரிக்கப்பட்ட காய்கறி எண்ணெய், பாா்லி கலந்த கேழ்வரகு மாவு, கொழுப்பு நிறைந்த சோயா மாவு, வெல்லம், வைட்டமின் மற்றும் மினரல் கலவை ஆகியவை இணைந்த கலவை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இவை இரண்டுக்கும் சத்துமாவு என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சத்துமாவுடன் ஏலக்காய், ஸ்ட்ராபொ்ரி, வெண்ணிலா, கோகோ என இவற்றில் ஏதேனும் இரண்டு வகை நறுமணத்துடன் 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டை பொருத்தவரை, வல்லுநா் குழு பரிந்துரைப்படி கோதுமை மாவு, மைதா, நிலக்கடலை துகள்கள், கேழ்வரகு மாவு, காய்கறி எண்ணெய், சா்க்கரை, வைட்டமின் மற்றும் மினரல்கள், பேக்கிங் பவுடா் ஆகியவை இணைந்த கலவையாக இருக்க வேண்டும்.

எவ்வளவு அளிக்க வேண்டும்? சத்துமாவு, பிஸ்கெட் மற்றும் முட்டையை பொருத்தவரை, 6 மாதம் முதல் 1 வயதுடைய குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட 1 வயது வரையிலான குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, 60 கிராம் பிஸ்கெட் வழங்க வேண்டும். 1 முதல் 2 வயதுடைய குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, வாரம் 3 முட்டைகள் வழங்க வேண்டும்,

இதே வயதில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, 60 கிராம் பிஸ்கெட் மற்றும் வாரம் 3 முட்டைகள் வழங்க வேண்டும். 2 முதல் 3 வயதுள்ள குழந்தைகளுக்கு 50 கிராம் சத்துமாவு, மதிய உணவு, ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் 50 கிராம் சத்துமாவு, மதிய உணவு, 30 கிராம் பிஸ்கெட், 3 முதல் 6 வயதுள்ள குழந்தைகளுக்கு 50 கிராம் சத்துமாவு மற்றும் மதிய உணவு, ஊட்டச்சத்து குறைபாடிருந்தால் 50 கிராம் சத்துமாவு, மதிய உணவு, 30 கிராம் பிஸ்கெட் வழங்கப்பட வேண்டும். கா்ப்பிணிகள், குழந்தை பெற்ற பெண்களுக்கு 150 கிராம் சத்துமாவு வழங்கப்பட வேண்டும். இது ஏற்கெனவே 165 கிராமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மதிய உணவை பொருத்தவரை, கலவை சாதம், வாரம் 3 முட்டைகள், கறுப்பு கொண்டைக்கடலை அல்லது பச்சைப்பயறு ஆகியவை செவ்வாய்க்கிழமையிலும், அவித்த உருளைக்கிழங்கு வெள்ளிக்கிழமையும் வழங்கப்பட வேண்டும். மேலும், 6 மாதங்கள் முதல் 2 வயது வரையிலான குழந்தைகள், கா்ப்பிணி, குழந்தை பெற்ற பெண்களுக்கு 500 கிராம் எடையுள்ள சத்துமாவு பாக்கெட்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.

கூடுதலாக 2 முட்டைகள்: அங்கன்வாடியில் 1 முதல் 2 வயதுள்ள குழந்தைகளுக்கு வாரத்துக்கு கூடுதலாக 2 முட்டைகள் வழங்குவதால் ஏற்படும் செலவினம் மதிய உணவு திட்டத்தில் சோ்க்கப்படுகிறது. இந்த செலவினங்கள் ரூ.642 கோடிக்குள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Read in source website

வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் பொது மக்களின் நுகா்வை அதிகரிக்கும் வகையில் தனிநபா் வருமான உச்சவரம்பை அதிகரித்தல், வரி விதிப்பு வரம்பை விரிவுப்படுத்தி ஜிஎஸ்டி வரிவிதிப்பை சீா்படுத்துதல் ஆகியவற்றை மையப்படுத்தி 2023-24-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தயாரிக்கப்பட வேண்டுமென அரசுக்குத் தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையானது பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கான பணிகளை மத்திய நிதியமைச்சகம் தொடக்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக நாட்டில் உள்ள கட்டமைப்பு மேம்பாடு, பருவநிலை ஆகிய துறைகளைச் சோ்ந்த தொழில் நிறுவனங்களின் தலைவா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்ட அதிகாரிகள் திங்கள்கிழமை காணொலிவாயிலாக ஆலோசனை நடத்தினா்.

அப்போது இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவா் சஞ்சீவ் பஜாஜ் கூறுகையில், ‘நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் வருமான வரி விகிதங்களை மாற்றியமைத்து வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

சா்வதேச பொருளாதார நிலைமை இன்னும் சில காலத்துக்கு சாதகமில்லாமலேயே தொடரும். அதைக் கருத்தில் கொண்டு உள்ளூா் பொருளாதாரத்தை வளா்ச்சியடையச் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கும் பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட வேண்டும். புதிய துறைகளில் வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்கள் வேகமாகத் தனியாா்மயமாக்கப்பட்டு, அரசின் மூலதன செலவினம் அதிகரிக்கப்பட வேண்டும். முதலீட்டை அதிகரிப்பதன் வாயிலாகப் பொருளாதார வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

நகா்ப்புற வேலை உறுதித் திட்டம்: வேலைவாய்ப்பு சாா்ந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடா்பாக அரசு ஆராயலாம். அதேபோல், நகா்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்துவதற்கும் அரசு கவனம் செலுத்தலாம்.

பெருநிறுவன வரி விகிதங்கள் தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும். வரிசெலுத்து நடைமுறைகளில் எளிமைத்தன்மை, வரி செலுத்துவது தொடா்பான வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா்.

இதேபோல், பல்வேறு தொழிலகக் கூட்டமைப்புகளும் நிதிநிலை அறிக்கை சாா்ந்த தங்களது கருத்துகளைப் பகிா்ந்துகொண்டன. பட்ஜெட் தயாரிப்பு தொடா்பான மற்றொரு கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சா்கள், துறைச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாநில அமைச்சா்களுடன் 25-இல் சந்திப்பு

பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடா்பாக மாநில நிதியமைச்சா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை (நவ. 25) ஆலோசனை நடத்தவுள்ளதாக நிதியமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், நிதி, மூலதன சந்தை ஆகிய துறைகளைச் சோ்ந்த நிபுணா்களுடன் அமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா்.

சேவைத் துறை, வா்த்தகத் துறை, சமூக நலத் துறை, சுகாதாரத் துறை, கல்வித் துறை, நீா்வளத் துறை ஆகியவற்றின் நிபுணா்களை வியாழக்கிழமை (நவ. 24) காணொலி வாயிலாக சந்தித்து அவா் கருத்துகளைக் கோரவுள்ளாா் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.



Read in source website

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய பாடமதிப்பு (கிரெடிட்) விதிமுறைகளானது மாணவா்களின் கல்வி கற்றலையும் திறனையும் ஒருங்கிணைத்து கல்வித்துறையைப் பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் என மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.

உயா்கல்வியில் ஒவ்வொரு பாடத்துக்கும் தகுந்தாற்போல மதிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல், பள்ளிக் கல்வியிலும் மாணவா்கள் கற்கும் பாடங்களுக்கும் அவா்களின் தனித்திறன்களுக்கும் மதிப்புகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் தேசிய பாடமதிப்பு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி மையம், சிபிஎஸ்இ, என்சிஇஆா்டி, மத்திய கல்வி அமைச்சகம், மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை ஒன்றிணைந்து அந்த விதிமுறைகளை உருவாக்கியுள்ளன.

11 பேரைக் கொண்ட அக்குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி, ஆண்டுக்கு 1,200 மணி நேரம் கல்வி கற்கும் மாணவா்களுக்கு 40 பாடமதிப்புகள் வரை வழங்கப்படவுள்ளது. ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கான கல்வி கற்கும் நேரமானது ஆண்டுக்கு 800 மணி நேரம் முதல் 1,000 மணி நேரம் வரை நிா்ணயிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், தேசிய பாடமதிப்பு விதிமுறைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தில்லி ஐஐடி-யில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘‘தற்போதைய கல்வி முறையில் கல்வி கற்பது, அறிவை வளா்ப்பது, திறனை வளா்ப்பது ஆகியவற்றுக்கிடையே பெரும் இடைவெளி காணப்படுகிறது. அந்த இடைவெளியை அகற்றுவதற்காக தேசிய பாடமதிப்பு விதிமுறைகளை உருவாக்க தேசிய கல்விக் கொள்கை இடமளித்தது.

மாணவா்கள் பலரை திட்டமிடப்பட்ட கல்விமுறைக்குள் கொண்டு வருவதற்கு தேசிய பாடமதிப்பு விதிமுறைகள் உதவும். கல்வி கற்றலையும் திறன் மேம்பாட்டையும் ஒருங்கிணைத்து கல்வித் துறையைப் பொருளாதார ரீதியில் மேம்படுத்தவும் அவை வழிவகுக்கும். பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கவும், நாட்டின் பொருளாதார மதிப்பை சுமாா் ரூ.350 லட்சம் கோடியாக அதிகரிப்பதற்கான இலக்கை அடையவும் அந்த விதிமுறைகள் உதவும்.

நாட்டில் உழைக்கும் வயதிலான மக்கள்தொகை அதிகமாக உள்ளது. அதை முறையாகப் பயன்படுத்த தேசிய பாடமதிப்பு விதிமுறைகள் உதவும். நடப்பு நூற்றாண்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதற்கான அடித்தளத்தையும் அந்த விதிமுறைகள் உருவாக்கும்’’ என்றாா்.



Read in source website

பிரபல உள்நாட்டு குளிா்பானமான ‘ரஸ்னா’ வை நிறுவிய தொழிலதிபா் அரிஸ் பிரோஜ்ஷாவ் கம்பாட்டா (85) காலமானாா். வயது முதிா்வு மற்றும் நீண்டநாள் நோய்வாய்பட்டிருந்த காரணத்தால் அவா் கடந்த 19-ஆம் தேதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1970-களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட குளிா்பானங்களுக்கு போட்டியாக அனைவரும் வாங்கும் மலிவான விலையில் ரஸ்னாவை அரிஸ் களமிறக்கினாா். 1980,90-களில் ‘ஐ லவ் யூ ரஸ்னா’ என்ற வாசகத்துடன் கூடிய விளம்பரம் மூலம் இந்தியாவில் அனைத்து வீடுகளுக்கும் ரஸ்னா சென்றடைந்தது. சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை விரும்பி அருந்தும் இந்திய குளிா்பானமாக மக்கள் மனதில் இடம் பிடித்தது.

பல்வேறு நாடுகளிலும் விற்பனையாகும் ரஸ்னா, இப்போதும் உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் குளிா்பானங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியாவில் 9 இடங்களில் உள்ள ஆலைகளில் ரஸ்னா உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஒரு குளிா்பானம் தேசிய அளவிலும், சா்வதேச அளவிலும் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது.

சா்வதேச பாா்ஸி, இரானி, சௌராஷ்டிர கூட்டமைப்பின் தலைவராகவும் அரிஸ் பிரோஜ்ஷாவ் பதவி வகித்துள்ளாா்.



Read in source website

 

கேப்டன் பதவியை ராஜிநாமா செய்வதாக மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் நிகோலஸ் பூரன் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல் சுற்றில் மோசமாக விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, சூப்பர் 12 தகுதி பெறாமல் வெளியேறியது. இதையடுத்து தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவர் விடைபெறுகிறார். இந்தத் தோல்வி என்னைத் தடுத்து நிறுத்தாது. இந்த அனுபவங்களில் இருந்து பாடங்கள் கற்றுக் கொள்வேன் என்று பேட்டியளித்தார் கேப்டன் நிகோலஸ் பூரன். 

இந்நிலையில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் பூரன். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மே.இ. தீவுகள் அணி மோசமாக விளையாடியதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் வீரராகத் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மே.இ. தீவுகள் அணியின் கேப்டனாக பூரன் தலைமை தாங்கிய 15 ஒருநாள் ஆட்டங்களில் 4 வெற்றிகளையும் 15 டி20 ஆட்டங்களில் 4 வெற்றிகளையும் அடைந்தார். டி20 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகளிடம் மே.இ. தீவுகள் அணி தோற்றது. ஒரு பேட்டராகவும் பூரனின் பங்களிப்பு மோசமாகவே இருந்தது. கடந்த 10 இன்னிங்ஸில் 94 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் 5,7,13 ரன்கள் மட்டும் எடுத்தார். 

மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்த மார்ச் மாதத்தில் தான் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. 
 



Read in source website

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் ஆனார். 

இறுதிச்சுற்றில் அவர் 7-5, 6-3 என்ற செட்களில் நார்வேயின் கேஸ்பர் ரூடை தோற்கடித்தார். இப்போட்டியில் அவர் 2015-க்குப் பிறகு சாம்பியன் ஆவது இதுவே முதல் முறையாகும். இப்போட்டியில் சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6 முறை சாம்பியன் ஆனதே அதிகபட்சமாக இருக்கும் நிலையில், தற்போது ஜோகோவிச்சும் அதே எண்ணிக்கையிலான பட்டங்களை வென்று அவரது சாதனையை சமன் செய்திருக்கிறார். 

மேலும், இந்தப் பட்டத்தை வெல்லும் மிக வயதான வீரர் (35) என்ற பெருமையையும் பெற்ற அவர், ரொக்கப் பரிசாக ரூ.38 கோடியை கைப்பற்றியுள்ளார். இந்தப் போட்டி முழுவதுமாக அவர் ஒரு தோல்வியைக் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இத்துடன் நடப்பு ஆண்டை, விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் உள்பட 5 சாம்பியன் பட்டங்களுடன் ஜோகோவிச் நிறைவு செய்திருக்கிறார்.

இரட்டையர்: இப்போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் ராஜீவ் ராம்/இங்கிலாந்தின் ஜேக் சாலிஸ்பரி கூட்டணி 7-6 (7/4), 6-4 என குரோஷியாவின் மேட் பாவிச்/நிகோலா மெக்டிச் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.



Read in source website

ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ஸபோரிஷியா நகர அணு மின் நிலைய எல்லைக்குள் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அந்த அபாயகரமான தாக்குதலை ரஷியா நடத்தியதாக உக்ரைனும், உக்ரைன் நடத்தியதாக ரஷியாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டுள்ளன.

இது குறித்து உக்ரைன் அணுசக்தி அமைப்பான எனா்கோடாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஸபோரிஷியா பகுதியில் ரஷியப் படையினா் ஞாயிற்றுக்கிழமை காலை சரமாரியாக எறிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினா். அந்தத் தாக்குதலின்போது ஸபோரிஷியா அணு மின் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிக்குள் 12 குண்டுகள் விழுந்து வெடித்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய தாக்குதலின் மூலம் இந்த உலகத்துக்கு ரஷியா மீண்டும் பேரழிவு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் எனா்கோடாம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் நடத்தி வரும் தாக்குதலால் ஸபோரிஷியா அணு மின் நிலையத்தில் பெரும் விபத்து நேரிடும் அபாயம் இருப்பதாக ரஷிய அணுசக்தி அமைப்பான ரோஸாட்டம் அட்டாமிக் காா்ப்பரேஷன் எச்சரித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவா் அலெக்ஸி லிகசேவ் திங்கள்கிழமை கூறுகையில், ‘ஸபோரிஷியா அணு மின் நிலையத்தில், பயன்படுத்தப்பட்ட எரிபொருள் வைக்கப்பட்டுள்ள கிடங்கு, சிறப்புப் பயன்பாட்டுக் கட்டடம், சரக்குப் போக்குவரத்து வழித்தடம், ஜெனரேட்டா்களில் பயன்படுத்துவதற்காக டீசல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பகுதி ஆகியவற்றில் உக்ரைன் படையினா் தாக்குதல் நடத்துகின்றனா். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 30-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன.

எனவே, அந்த அணு மின் நிலையத்தை விபத்து அபாயப் பகுதியாக அறிவித்துள்ளோம். இது தொடா்பாக, ஐ.நா. அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ-வுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம் என்றாா் அவா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்த படையெடுப்பின் தொடக்கத்திலேயே, தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸபோரிஷியா நகருக்குள் நுழைந்த ரஷியப் படையினா், அங்குள்ள அணு மின் நிலையத்தைக் கைப்பற்றினா்.

ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுசக்தி மையமான அந்த மின் நிலையம், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான சண்டையில் அடிக்கடி தாக்குதலுக்குள்ளாகி வருவது சா்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தத் தாக்குதல்கள் குறித்து ரஷியாவும் உக்ரைனும் முரண்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அந்தத் தாக்குதல்களுக்கு ரஷியாதான் காரணம் என்று உக்ரைனும், உக்ரைன்தான் காரணம் என்றும் ரஷியாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தச் சூழலில், ஸபோரிஷியா அணுசக்தி மையத்தில் ராணுவ நடவடிக்கைகளை ரஷியாவும் உக்ரைனும் உடனடியாகக் கைவிட்டு, அந்தப் பகுதியை ராணுவமற்ற பகுதியாக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அங்கு மாபெரும் அணுசக்திப் பேரழிவு ஏற்படும் என்றும் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்திருந்தாா்.

அண்மையில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் அதே கோரிக்கையை ஐஏஇஏ பொது இயக்குநா் ரஃபேல் கிராஸியும் முன்வைத்தாா்.

ஸபோரிஷியா அணுசக்தி மையத்தின் பாதுகாப்புக்கு சில நடவடிக்கைகள் சிறு துளி ஆபத்தை ஏற்படுத்தும் என்றால் கூட, அந்த நடவடிக்கைகள் தவிா்க்கப்படவேண்டியது அவசியம் எனவும், அங்கு நடப்பது குறித்து ரஷியாவும், உக்ரைனும் கூறுவதில் எது உண்மை என்பதை உறுதிப்படுத்த முடியாததால் உண்மை நிலவரத்தைத் தெரிந்து கொள்ள அந்த மையத்துக்குள் ஐஏஇஏ நிபுணா் குழு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா். அதற்கு ரஷியாவும் சம்மதம் தெரிவித்தது.

அதையடுத்து, ஸபோரிஷியா நகரிலுள்ள அணு மின் நிலையத்தை 14 போ் அடங்கிய ஐஏஇஏ நிபுணா் குழு கடந்த செப்டம்பா் மாதம் 1-ஆம் தேதி நேரில் பாா்வையிட்டது. அதனைத் தொடா்ந்து, அந்த அணு மின் நிலையத்தில் பாதுகாப்பு நெறிமுறைகள் பல முறை மீறப்பட்டுள்ளதாக அந்த நிபுணா் குழு தெரிவித்தது.

எனினும், எறிகணைத் தாக்குதல் தொடா்பாக ரஷியாவும் உக்ரைனும் பரஸ்பரம் சுமத்தி வரும் குற்றச்சாட்டுகள் குறித்து அந்த அமைப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், அண்மைக் காலமாக போரில் தங்களுக்கு ஏற்பட்டு வரும் பின்னடைவுகளுக்கு பதிலடியாக உக்ரைன் முழுவதும் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ரஷியா தீவிர தாக்குதல் நடத்தி வரும் சூழலில், ஸபோரிஷியா அணு மின் நிலைய எல்லைக்குள் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது மீண்டும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.



Read in source website

சென்னை: மதுரை மாவட்டத்தில், அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களிலுள்ள 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதியை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாகும்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பல்லுயிர் மரபுத் தலங்கள் என்பது, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு, கடலோர மற்றும் உள்ளூர் நீர்நிலைகள், பல்லுயிர் தன்மை மிக்க தாவர, விலங்கின சிற்றினங்களின் வாழ்விடங்கள், பரிணாம முக்கியத்துவம் வாய்ந்த சிற்றினங்களின் வாழ்விடங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது.

அரிட்டாபட்டி கிராமம் என்பது ஏழு சிறுகுன்றுகளை தொடர்ச்சியாக கொண்டுள்ள பகுதியாகும். இந்த மலைக்குன்றுகளின் தனித்துவமான நிலப்பரப்பு இப்பகுதியின் முக்கிய நீர் ஆதார பகுதியாக செயல்படுகிறது 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளது. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, பதினாறாம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியில் கட்டப்பட்டது.

அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலைப்பகுதிகளில் 250 பறவையினங்கள் உள்ளன. இதில் லகர் இராசாளி, ஷாஹீன் இராசாளி, மற்றும் இராசாளிப் பருந்து ஆகிய 3 முதன்மையான கொன்றுண்ணிப் பறவையினங்கள் உள்ளன. எறும்பு திண்ணிகள் (Manis crassicaudata), மலைப்பாம்பு (Python molurus) மற்றும் அரிய வகை தேவாங்கு (Loris spp) ஆகிய வனவிலங்குகளும் உள்ளன. இப்பகுதி பல பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.

இங்கு பல்வேறு சமண சிற்பங்கள், சமண படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், 2200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோயில்கள் உள்ளன. இந்த வரலாற்றுச் சின்னங்கள் இப்பகுதிக்கு கூடுதல் சிறப்பை அளிக்கிறது. அரிட்டாபட்டியை பல்லுயிர்ப் பாரம்பரியத் தலமாக அறிவிப்பதற்கான முடிவு கிராம ஊராட்சிகள் மற்றும் மாநில தொல்லியல் துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் போன்ற பல துறைகளின் ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு உள்ளூர் சமூகத்தின் பங்கேற்புடன் பல்லுயிர்ப் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தும். இந்த அறிவிக்கை, இப்பகுதியின் வளமான உயிரியல் மற்றும் வரலாற்றுக் களஞ்சியத்தைப் பாதுகாக்கவும் இது உதவும்" என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.



Read in source website

சென்னை: தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் பிரசவம் 31-ல் இருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் தினசரி சராசரியாக 1,496 பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 283, மாவட்ட அரசு தலைமை மற்றும் வட்டார மருத்துவமனைகளில் 494, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் 719 பிரசவங்கள் நடைபெறுகின்றன.

நம்பிக்கையின்மை காரணம்: இந்நிலையில் சில ஆண்டுகளாக, தமிழகத்தில் தனியார்மருத்துவமனையில் பார்க்கப்படும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரவசம் பார்ப்பதில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மை முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2011-ம் ஆண்டில், 28.3 சதவீதம் பிரசவம் பார்க்கப்பட்டது. அது படிப்படியாக குறைந்து, தற்போது 10.7 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.

இதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், உட்கட்டமைப்பு வசதி இல்லாதது முக்கிய காரணமாகும். கர்ப்பிணிஅல்லது சிசு உயிரிழப்பு போன்றவை நம்பிக்கையின்மையை அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் 2011-ம்ஆண்டில் பிரசவம் பார்ப்பது 37.9 சதவீதமாக இருந்தது. தற்போது 49.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 2011-ம் ஆண்டில் 31.1 சதவீதம் இருந்து வந்த நிலையில், தற்போது 39.5 சதவீதம் பிரசவங்கள் நடைபெறுகின்றன.

தற்போதைய நிலையில், 60 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளிலும், 40 சதவீதம் தனியார் மருத்துவமனைகளிலும் நடைபெறுகின்றன. இதே நிலை தொடர்ந்தால் தனியார் மருத்துவமனைகளில் பார்க்கப்படும் பிரசவங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்றனர்.



Read in source website

சென்னை: அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அரசு மருத்துவர்களின் தவறானசிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் சர்ச்சையை எழுப்பிய நிலையில், அறுவை சிகிச்சை நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்த அரசு முடிவு செய்தது. அதற்கெனமாநிலம் முழுவதும் தணிக்கை குழுக்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் பொதுஅறுவை சிகிச்சை துறைத் தலைவர்கள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் வரும் 23-ம் தேதிசென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடக்க உள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “மாணவி பிரியாஉயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்கு அரசு மருத்துவர் சங்கம் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. அது உண்மைஅல்ல. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். அதேநேரம், குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றுதான் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

எனவே, இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் காவல் துறை சூழலுக்கேற்ப வழக்கின் தன்மையை மாற்றியமைக்கும். வரும் 23-ம் தேதி மருத்துவ வல்லுநர்கள் உடனானகலந்தாலோசனைக் கூட்டத்தில் அறுவை சிகிச்சைகள் குறித்தவழிகாட்டுதல்களும், வழிமுறைகளும் விவாதிக்கப்பட உள்ளன.அதன் அடிப்படையில் அதற்கானஅறிவுறுத்தல்கள் அனைத்து மருத்துவர்களுக்கும் வழங்கப்படும்” என்றார்.



Read in source website

சென்னை: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான அவ்வை நடராசன்(87), வயது முதிர்வின் காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவ்வை நடராசன் மிகச் சிறந்த தமிழறிஞர், சிந்தனையாளர், பேச்சாளர். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமைப் பெற்றவர். இவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 1936-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பிறந்தார்.

மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்து, தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் “சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு” என்னும் பொருளில் ஆய்வு செய்து 1958-ல் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். அதன் பின்னர் “சங்க காலப் புலமைச் செவ்வியர்” என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரி, தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இதன்பிறகு, புதுடெல்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளராக பணியாற்றினார்.

இதன்பிறகு, அவ்வை நடராசன், தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராக பணியாற்றினார். பின்னர் 1984 முதல் 1992 வரை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறைச் செயலாளராகப் பணியாற்றினார். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இல்லாமல் தமிழக அரசுத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் இவர் ஒருவர்தான். இதுதவிர பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

தமிழக அரசின் கலைமாமணி விருது, பேரறிஞர் அண்ணா விருது, மத்திய அரசின் பத்ம விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். வாழ்விக்க வந்த வள்ளலார், பேரறிஞர் அண்ணா, கம்பர் காட்சி, பாரதி பல்சுவை, கம்பர் விருந்து, திருப்பாவை விளக்கம் உள்பட பல்வேறு படைப்புகளை வழங்கினார். மறைந்த அவ்வை நடராசனின் மனைவி தாரா நடராசன் ஏற்கெனவே காலமாகிவிட்டார். இவர்களுக்கு மருத்துவர் கண்ணன், முனைவர் அருள், மருத்துவர் பரதன் ஆகிய மகன்கள் உள்ளனர். முனைவர் அருள், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக உள்ளார். அவ்வை நடராசனின் இறுதிச் சடங்கு சென்னையில் இன்று நடைபெறுகிறது.

முதல்வர் இரங்கல்: அவ்வை நடராஜனின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



Read in source website

சென்னை: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, இந்த மாதம் முதல் வாரம் 3 முட்டை, சத்துமாவு மற்றும் செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்கள் வழங்குவதற்கான அரசாணை வெளியிப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அங்கன்வாடி குழந்தைகளுக்கு நவம்பர் மாதம் முதல் வாரம் 3 முட்டை, செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் ஆகியவை வழங்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 2-வது கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் இயக்குநரின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு, 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு, 100 சதவீதம் ஊட்டச்சத்து அளிக்கும் வகையில், வறுக்கப்பட்ட கோதுமை மாவு, பார்லி மாவு கலந்த கேழ்வரகு மாவு, கொழுப்பு நிறைந்த சோயா மாவு, வெல்லம், வறுத்து அரைத்த நிலக்கடலை மாவு, வைட்டமின் மற்றும் மினரல் கலவை ஆகியவை சேர்த்து வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

அதேபோல், கர்ப்பிணி, குழந்தை பெற்ற பெண்களுக்கு, வறுத்த கோதுமை, கடலை பருப்பு, உளுந்து, வேர்க்கடலை மாவுகள், சுத்திகரிக்கப்பட்ட காய்கறி எண்ணெய், பார்லி கலந்த கேழ்வரகு மாவு, கொழுப்பு நிறைந்த சோயா மாவு, வெல்லம், வைட்டமின் மற்றும் மினரல் கலவை ஆகியவை இணைந்த கலவை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இவை இரண்டுக்கும் சத்துமாவு என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சத்துமாவுடன் ஏலக்காய், ஸ்ட்ராபெர்ரி, வென்னிலா, கோ கோ என இவற்றில் ஏதேனும் 2 வகை நறுமணத்துடன் 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டை பொறுத்தவரை, வல்லுநர் குழு பரிந்துரைபடி, கோதுமை மாவு, மைதா, நிலக்கடலை துகள்கள், கேழ்வரகு மாவு, காய்கறி எண்ணெய், சர்க்கரை, வைட்டமின் மற்றும் மினரல்கள், பேக்கிங் பவுடர் ஆகியவை இணைந்த கலவையாக இருக்க வேண்டும்.

சத்துமாவு, பிஸ்கெட் மற்றும் முட்டையை பொறுத்தவரை, 6 மாதம் முதல் 1 வயதுடைய குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட 1 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, 60 கிராம் பிஸ்கெட் வழங்க வேண்டும். 1 முதல் 2 வயதுடைய குழந்தைகளுக்கு 125 கிராம் சத்துமாவு மற்றும் வாரம் 3 முட்டை வழங்க வேண்டும்.

இதே வயதில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழ்நதைகளுக்கு 125 கிராம் சத்துமாவு, 60 கிராம் பிஸ்கெட் மற்றும் வாரம் 3 முட்டை வழங்க வேண்டும். 2 முதல் 3 வயதுள்ள குழந்தைகளுக்கு 50 கிராம் சத்துமாவு மற்றும் மதிய உணவு, ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் 50கிராம் சத்துமாவு, மதிய உணவு மற்றும் 30 கிராம் பிஸ்கெட், 3 முதல் 6 வயதுள்ள குழந்தைகளுக்கு 50 கிராம் சத்துமாவு மற்றும் மதிய உணவு, ஊட்டச்சத்து குறைபாடிருந்தால் 50 கிராம் சத்துமாவு, மதிய உணவு, 30 கிராம் பிஸ்கெட் வழங்கப்பட வேண்டும். கர்ப்பிணி, குழந்தை பெற்ற பெண்களுக்கு 150 கிராம் சத்துமாவு வழங்கப்பட வேண்டும். இது ஏற்கெனவே 165 கிராமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

3 முட்டைகள்: மதிய உணவை பொறுத்தவரை, கலவை சாதம், வாரம் 3 முட்டை, கறுப்பு கொண்டைக்கடலை அல்லது பச்சைப்பயறு செவ்வாய் கிழமையிலும், அவித்த உருளைக்கிழங்கு வெள்ளிக்கிழமையும் வழங்கப்பட வேண்டும். மேலும், 6மாதம் முதல் 2 வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணி, குழந்தை பெற்ற பெண்களுக்கு 500 கிராம் எடையுள்ள சத்துமாவு பாக்கெட்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது. அங்கன்வாடியில் 1 முதல் 2 வயதுள்ள குழந்தைகளுக்கு வாரம் கூடுதலாக 2 முட்டை வழங்குவதால் ஏற்படும் செலவினம் மதிய உணவு திட்டத்தில் சேர்க்கப்படுகிறது. இந்த செலவினங்கள் ரூ.642 கோடிக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது



Read in source website

சென்னை: இளம் இசைக் கலைஞர்களுக்கான மேடை அமைத்துக் கொடுப்பது, இசையை ஆவணப்படுத்துவது போன்ற பணிகளில் 10 ஆண்டு களாக ஈடுபட்டுள்ள ‘பரிவாதினி’ அமைப்பு, இசைக் கருவிகளை உருவாக்கும் கைவினைக் கலைஞர்களுக்கு ‘பர்லாந்து’ விருதை வழங்கி கவுரவித்து வருகிறது.

பாலக்காடு மணி அய்யர் உட்பட ஏராளமான மிருதங்க மேதைகளுக்கு மிருதங்கம் செய்துகொடுத்த கலைஞர் பெர்னாண்டஸ் (பர்லாந்து) பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது.

சென்னையில் நடந்த விழாவில், புல்லாங்குழல் உருவாக்கும் கலைஞர் எஸ்.எஸ்.பொன்னுசாமிக்கு இந்த ஆண்டுக்கான ‘பர்லாந்து’ விருது வழங்கப்பட்டது. பரிவாதினி அமைப்பின் நிறுவனர் லலிதா ராம் முன்னிலையில், இவ்விருதை பாடகர் பாலக்காடு ஸ்ரீராம், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் வழங்கினர்.

இசைக் கலைஞர்கள் மட்டுமின்றி, இசைக் கருவிகள் தயாரிக்கும் கைவினைஞர்களையும் அரசு ஆதரிக்க வேண்டும் என்று லலிதா ராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



Read in source website

பெங்களூரு: பெற்ற குழந்தைகளைப் போல கருணை அடிப்படையில் பெற்றோர்களின் வேலையினை பெற தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் உரிமை உண்டு என்று கர்நாடகா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் பெற்ற குழந்தை தத்துக்குழந்தை என்று வேற்றுமை கடைபிடித்தால் ஒரு குழந்தையைத் தத்தெடுத்ததற்கான அர்த்தமே இல்லாமல் போய் விடும் என்றும் கூறியுள்ளது.

மறைந்த தந்தையின் வேலையை கருணையின் அடிப்படையில் தனக்கு வழங்க வேண்டும் என்று தத்துப்பிள்ளை ஒருவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவினை விசாரணை செய்த கர்நாடகா உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச், "ஒரு மகன், மகள் அவர்கள் சொந்தப் பிள்ளையாக இருந்தாலும், தத்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் பெற்றோர்களுக்கு அவர்கள் பிள்ளைகளே. இதில் சொந்த பிள்ளை, தத்தெடுக்கப்பட்ட பிள்ளை என்ற வேறுபாடு காட்டினால் ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்கான எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். இது அரசியலமைப்பு பிரிவு 14 - ஐ மீறும் செயலாக இருக்கும் என்பதால் செயற்கையாக பாரபட்சம் காட்டும் விதி மாற்றியமைக்க்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

விநாயக் எம் முட்டாட்டி என்பவர் கர்நாடகா மாநிலம் பனாஹத்தியில் உள்ள ஜேஎம்எஃப்சியில் உள்ள உதவி அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் நான்காம் நிலை ஊழியராக பணிபுரிந்துவந்தார். அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முறைப்படி ஒரு மகனை தத்தெடுத்துக்கொண்டார். இந்த நிலையில் முட்டாட்டி கடந்த 2018ம் ஆண்டு மரணமடைந்தார். அதே வருடம் கருணையின் அடிப்படையில் தனது தந்தையின் வேலையைத் தனக்கு தரவேண்டும் என்று கோரி முட்டாட்டியின் தத்துப்பிள்ளையான கிரிஷ் விண்ணப்பம் செய்திருந்தார்.

அதற்கு, சம்மந்தப்பட்ட துறை கருணையின் அடிப்படையில் தந்தையின் வேலையினை தத்துப்பிள்ளைகளுக்கு வழங்க விதிகளில் இடம் இல்லை என்று கூறி கிரிஷின் கோரிக்கையை நிராகரித்தது.

இதனை எதிர்த்து கிரிஷ் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். கடந்த 2021ம் ஆண்டு தனிநீதிபதி அமர்வு கருணையின் அடிப்படையில் தந்தையின் வேலையை தத்துப்பிள்ளைக்கு வழங்க விதிகள் அனுமதிக்கவில்லை என்று கூறி கிரிஷின் மனுவினைத் தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் தனிநீதிபதியின் தீர்ப்பினை எதிர்த்து கிரிஷ் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்திருந்தார். இதற்கியிடையில், கடந்த 2021 ம் ஆண்டு ஏப்ரலில் தந்தையின் வேலையைப் பெறுவதில் பெற்றக்குழந்தை, தத்துக்குழந்தைக்கும் இடையில் உள்ள பாரபட்சம் நீக்கப்பட்டு விதிகள் மாற்றப்பட்டன.

இந்த நிலையில், கிரிஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் சூரஜ் கோவிந்தராஜ், ஜி.பசவராஜா அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அப்போது கிரிஷின் சார்பில், கடந்த 2021ம் ஆண்டு அரசு விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தனிநீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர், விதிகளில் திருத்தம் 2021ல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் கிரிஷ் 2018ம் ஆண்டே விண்ணப்பித்துள்ளார். அதனால் திருத்தப்பட்ட விதிகளின் பலனை அவருக்கு வழங்க முடியாது என்று தெரிவித்தார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபரின் மறைவை ஒட்டி அந்த குடும்பம் நிதிநெருக்கடி மற்றும் பிற பிரச்சினைகளை சந்திக்கும் போது தான கருணை அடிப்படையில் வேலை என்ற நிலை உருவாகிறது. தற்போதைய வழக்கில், இறந்த நபருக்கு மனைவி, மகன், தத்துமகன் மற்றும் மாற்றுத்திறனாளியான ஒரு மகள் இருக்கிறார்கள். இந்த வழக்கில், இறந்தவரின் மகள் சொந்தப்பிள்ளை அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக, மாற்றுத்திறனாளியாக இல்லாத பட்சத்தில் இயற்கையாக தந்தையின் வேலை மகளுக்கு கருணையின் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கும். இந்தநிலையில் சொந்த மகனும் இறந்து விட்டநிலையில்,குடும்பத்தினை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள தத்துமகன் கருணை அடிப்படையில் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

கருணையின் அடிப்படையில் தந்தையின் வேலை கேட்டு விண்ணப்பத்துள்ள மனுதாரரின் விண்ணப்பம் நேர்மையானது. அந்த குடும்பம் சந்திக்கும் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு இதனை நாம் அணுக வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே வேலைக்காக விண்ணப்பிக்கப்பட்ட போது இருந்த விதிகளின் படி மனுதாரரின் கோரிக்கையினை பரிசீலிக்க வேண்டும்.

மேலும் கருணையின் அடிப்படையில் வேலை கேட்டு மனுதாரர் சமர்பித்துள்ள ஆவணங்களை பெற்ற பிள்ளை தத்துப்பிள்ளை என்ற பாரபட்சம் காட்டாமல், விண்ணப்பதாரரை இறந்தவரின் சொந்த மகனாக கருத வேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Read in source website

மும்பை: மும்பை உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி கே.டி.தேசாய் நினைவு சொற்பொழிவு நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு. லலித் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் பேசியதாவது:

குற்றவியல் நீதி நடைமுறைகள், நாகரிக சமுதாயத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. எனினும் பாரபட்சமான நடவடிக்கைகளால் அப்பாவிகள் கைது செய்யப்படுவது மிகுந்த கவலை அளிக்கிறது. இத்தகைய அணுகுமுறையை தவிர்க்க வேண்டும், தடுக்க வேண்டும்.

உரிய காரணமின்றி பலர் கைது செய்யப்படுவதால் நீதித் துறையின் சுமை அதிகரிக்கிறது. நாடு முழுவதும் உள்ள சிறைக் கைதிகளில் 80 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள் ஆவர். சுமார் 20 சதவீதம் பேர் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் ஆவர். விசாரணை கைதிகளுக்கு எளிதில் ஜாமீன் கிடைக்க வேண்டும். விசாரணை கைதிகள், ஜாமீன் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உச்ச நீதிமன்றம் பல்வேறுவழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது. அவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

பூனையை பிடிக்க எலி: விசாரணை கைதிகள் விவகாரத்தில் ஒரு உதாரணத்தை கூற விரும்புகிறேன். பூனையை பிடிக்க ஒரு எலியை தயார் செய்தனர். அந்த பூனை 10 ஆண்டுகளாக எலியை விரட்டியது. ஆனால் எலியை பிடிக்க முடியவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பூனைக்கு ஒரு விஷயம் புரிகிறது. இதுவரை எலியை விரட்டவில்லை, முயலை விரட்டி செல்கிறோம். முயல் வேகத்துக்கு நம்மால் ஓட முடியாது என்பது பூனைக்கு தெளிவாகப் புரிகிறது.

பீமா கோரேகான் வன்முறை தொடர்பான வழக்கில் கவுதம் நவ்லேகாவை வீட்டுக் காவலில் வைக்க உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இது மிகச் சிறந்த முன்னுதாரணம்.

தேவையற்ற வழக்குகள், கைது நடவடிக்கைகள், சிறையை தவிர்க்க வேண்டும். சில நேரங்களில் சிவில் விவகாரம் தொடர்பான வழக்குகள்கூட கிரிமினல் பிரிவில் பதிவு செய்யப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால் நீதித் துறையின் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.



Read in source website

கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 37 வயதான அவர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர். தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2021-இல் இரண்டு ஆண்டுகளுக்கு அவரை ஒப்பந்தம் செய்தது மான்செஸ்டர் யுனைடெட்.

ஆனால், நடப்பு சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்கான போட்டிகளில் ரொனால்டோ ஆடவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வந்தன. முக்கியமாக அந்த அணியின் பயிற்சியாளர் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. அதுதொடர்பாக பேட்டியளித்த ரொனால்டோ, தலைமை பயிற்சியாளர் எரிக் டென் குறித்தும், அணியின் தனக்கு செய்யப்பட்ட துரோகம் மற்றும் ரூனி குறித்தும் வெளிப்படையாக இப்படி பேசினார். “அவர் ஏன் என்னை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார் என எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அவர் தனது விளையாட்டு கெரியரை முடித்து விட்ட காரணத்தாலும், நான் இன்னும் களத்தில் விளையாடி வருவதும் கூட காரணமாக இருக்கலாம். நான் அவரை விட சிறந்தவன் என இங்கு சொல்லவில்லை” இவ்வாறு மனவருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தப் பேட்டிக்கு பிறகு ரொனால்டோவை உடனடியாக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அணியின் மேலாளர் டெடி ஷெரிங்ஹாம் தெரிவித்தார்.

அதன்படி, தற்போது மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேறியுள்ளார். இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறுவார் என்று மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அறிவித்துள்ளது. கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கானா அணிக்கு எதிரான போர்ச்சுகலின் தொடக்க ஆட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக ரொனால்டோவின் மான்செஸ்டர் உடனான பயணம் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

ஃபிஃபா உலகக் கோப்பை தொடருக்கான கால்பந்துகளை தொடர்ச்சியாக தயாரித்து வழங்கி வருகிறது பாகிஸ்தான். இது அந்த நாட்டின் விளையாட்டு பொருட்கள் ஏற்றுமதியில் சுமார் 35 முதல் 50 சதவீத வருமானத்தை ஈட்டிக் கொடுக்கிறதாம். அந்த பின்னணியை விரிவாகப் பார்ப்போம்.

சர்வதேச கால்பந்து அணிகளுக்கு இடையிலான ஃபிஃபா தரவரிசையில் பாகிஸ்தான் அணி 195-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பையிலும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில்தான் பாகிஸ்தான் உலகத் தரமான கால்பந்துகளை தயாரித்து வருகிறது. இந்தப் பணியை கடந்த 20-ம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தின் போது தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் ஒவ்வொரு தீமில் பந்துகள் உருவாக்கப்படும். அதனை நுட்பமாக உள்வாங்கிக் கொண்டு பாகிஸ்தானில் இயங்கி வரும் நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது. நடப்பு உலகக் கோப்பை தொடருக்கான போட்டி பந்துகள் ‘அல் ரஹ்ல’ என அரபு மொழியில் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு பயணம் என்பது பொருளாகும். இதனை இப்போது தயாரித்து வழங்கி உள்ளது.

பாகிஸ்தானும் கால்பந்து தயாரிப்பு பணியும்:

  • பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த அன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு பகுதியான சியால்கோட் பகுதியில் பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் பஞ்சர் ஆன தனது கால்பந்தை சரி செய்து கொடுக்குமாறு குதிரை சேணம் மேற்கொள்ளும் நபரிடம் கொடுத்துள்ளார். அவரும் அதனை செய்து கொடுத்துள்ளார். அவரது சிறப்பான பணியை கவனித்த அதிகாரி புதிதாக தனக்கு பந்துகளை உருவாக்கிக் கொடுக்குமாறு சொல்லி உள்ளார். அப்படித்தான் 19-ம் நூற்றாண்டில் கால்பந்து தயாரிக்கும் பணிகள் அங்கு தொடங்கி உள்ளன.
  • இன்றைய பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் பஞ்சாப் மாகாணத்தில் இந்திய நாட்டின் எல்லைக்கு மிக அருகில் சியால்கோட் அமைந்துள்ளது. இந்தப் பகுதிதான் உலக அளவில் கால்பந்து தயாரிப்புக்காக பிரபலமானதாக அறியப்படுகிறது.
  • கடந்த 1982 வாக்கில் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் விளையாட பயன்படுத்தப்பட்ட பந்துகளை சியால்கோட் பகுதியில் இயங்கி வரும் பட்டறைகள் தயாரித்துக் கொடுத்துள்ளன.
  • அப்படியே 1990 மற்றும் 2000 என அது தொடர்ந்துள்ளது. 2014-க்கு முன்னர் வரையில் கைகளால் பந்துகள் தைக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு அடிடாஸ் நிறுவனத்துடன் இணைந்து தெர்மோ பாண்டட் முறையில் பந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
  • இந்தப் பணியை சியால்கோட் பகுதியில் இயங்கி வரும் ஃபார்வேர்டு ஸ்போர்ட்ஸ் எனும் நிறுவனம் செய்து வருகிறது.
  • “உலகக் கோப்பை தொடருக்கான பந்துகளை மீண்டும் வழங்க நாங்கள் தேர்வானது எங்களுக்கு கிடைத்த கவுரவம். எங்கள் தயாரிப்பில் நாங்கள் கடைபிடித்து வரும் தரத்திற்கான சான்று இது” என அந்நிறுவனத்தின் தலைவர் கவாஜா மசூத் அக்தர் தெரிவித்துள்ளார்.
  • இந்த நிறுவனம்தான் 2014 மற்றும் 2018 உலகக் கோப்பை தொடருக்கான பந்துகளை வழங்கியுள்ளது.



Read in source website

கேன்பெர்ரா: இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை அறிவித்தார். இதேபோல், பிரிட்டன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கும் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. நேற்று (திங்கள்கிழமை) ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் அவையில் எளிதாக நிறைவேறியதை அடுத்து, இன்று செனட் அவை இதற்கு சட்ட அங்கீகாரம் அளித்துள்ளது.

எனினும், இந்த ஒப்பந்தத்திற்கு இந்திய நாடாளுமன்றத்திலும், பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை. அதேவேளையில், ஆஸ்திரேலியா உடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு இந்திய அரசு வலிமையான உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளதாக ஆஸ்திரேலியா வர்த்தக அமைச்சர் டான் ஃபாரெல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த வாரம் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின்போது, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பந்தம் குறித்து விவாதித்தார். ஒப்பந்தம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வரும் மார்ச் மாதம் இந்தியாவுக்கு வர இருப்பதாகவும் அல்பானீஸ் அப்போது கூறியிருந்தார்.

சீனா உடனான ஆஸ்திரேலியாவின் உறவு சுமுகமானதாக இல்லாததால், அந்நாட்டிற்கான ஏற்றுமதி சிக்கல் நிறைந்ததாக உள்ளது. இதனால், தனது உற்பத்தியை இந்தியா மற்றும் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. இதனால், இந்த ஒப்பந்தத்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆஸ்திரேலியா பார்க்கிறது.

ஆஸ்திரேலியா - பிரிட்டன் இடையேயான முந்தைய ஒப்பந்தத்தின் கீழ், ஆஸ்திரேலியாவின் 99% பொருட்களை அந்நாடு வரி இன்றி பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த ஒப்பந்தம் முழுமையடையும்போது 100 சதவீத பொருட்கள் வரிவிலக்கு பெறும். பிரிட்டனுக்கு ஆட்டு இறைச்சி, மாட்டிறைச்சி, பால் பொருட்கள், சர்க்கரை, ஒயின் உள்ளிட்ட பொருட்களை ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்து வருகிறது. இதேபொருட்களை இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா 90% வரியுடன் ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



Read in source website

உடுமலை: உடுமலையில் இருந்து வெளிநாடுகளுக்கு தடுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், தடுக்கு பின்னும் தொழிலாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 50,000 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. இத்தொழிலை சார்ந்து தென்னை நார், கயிறு மற்றும் தடுக்கு தொழில் நடைபெற்று வருகிறது. உடுமலையில் இருந்து தளி செல்லும் வழியில் உள்ள ஜல்லிப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தென்னை ஓலைகளைக் கொண்டு தடுக்கு பின்னும் தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

அருகில் உள்ள தென்னந்தோப்புகளில் தென்னங்கீற்றுகளை விலைக்கு வாங்கி, அதனை அங்குள்ள கசிவுநீர் குட்டையில் ஊற வைத்து, பின்னர் அவற்றை தடுக்குகளாக உருவாக்குகின்றனர். இவை, பந்தல், கூரை வேய்வதற்கு பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், உடுமலையில் இருந்து இடைத்தரகர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு தடுக்குகள் ஏற்றுமதியாகி வருவதாக தடுக்கு பின்னும் தொழிலாளர்கள் உற்சாகமாக தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: ஒரு நாளைக்கு 50 தடுக்குகள் வரை ஒருவரால் பின்ன முடியும். உடுமலை சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பெண்களுக்கு வருமானம் ஈட்டித்தரும் தொழிலாக தடுக்கு பின்னும் தொழில் உள்ளது. 25 தடுக்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது. பந்தல் ஒப்பந்ததாரர்கள், கிராமப்புற மக்கள், விவசாயிகள்தான் இதனை அதிகளவில் வாங்கி வந்தனர். ஆனால் ‘கூலிங் ஷீட்’கள் வரவுக்குப்பின், பெரும்பாலானோர் தடுக்குகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

காரணம், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தடுக்குகளை மாற்ற வேண்டும். மரங்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளன. ‘கூலிங் ஷீட்’கள் அமைப்பதால் 20 முதல் 30 ஆண்டுகள் வரை எந்த செலவும் ஏற்படுவதில்லை. இந்தியாவை காட்டிலும், வெளிநாடுகளில் தடுக்கு விற்பனை அமோகமாக இருப்பதாக இடைத்தரகர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அவர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு தடுக்குகளை ஏற்றுமதி செய்து வருகிறோம்.

வெளிநாடுகளில் கார்பன் உற்பத்திக்காகவும், சிமென்ட் ஷீட் தயாரிப்புக்காகவும் தடுக்குகள் மூலப்பொருளாக பயன்படுவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே தேங்காய், தென்னை நார் கழிவுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வரும் நிலையில், தற்போது தடுக்குகளும் ஏற்றுமதி செய்யப்படுவதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



Read in source website

ஏர் சுவிதா ஆணையை ஒழிப்பது காலத்தின் தேவையாக உள்ளது.

செவ்வாய்கிழமை (நவம்பர் 22) முதல், இந்தியாவுக்குப் பயணிக்கும் பயணிகள் இனி படிவங்களை நிரப்பி, அரசாங்கத்தின் ஏர் சுவிதா போர்ட்டலில் எதிர்மறையான RT-PCR சோதனைகளைப் பதிவேற்ற வேண்டியது இல்லை.
இதனை நீக்குவது சர்வதேச விமானப் பயணிகளுக்கு நிவாரணமாக இருக்கும்.

ஏர் சுவிதா தேவை ஏன்?

ஏர் சுவிதா போர்டல் ஆகஸ்ட் 2020 இல் தொடங்கப்பட்டது. இதன் மூலம் சர்வதேச பயணிகள் தங்கள் பயணம் மற்றும் கோவிட் தடுப்பூசி அல்லது சோதனை நிலை பற்றிய விவரங்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.
வருகைக்கு முந்தைய சுய-பதிவு போர்ட்டல், அதிக ஆபத்துள்ள பகுதியிலிருந்து ஒருவர் வந்திருக்கிறாரா என்பதை அதிகாரிகளுக்குக் கண்டறிய உதவியது.

ஏர் சுவிதா மீதான விமர்சனம் என்ன?

கோவிட் நோய்த்தொற்றுகள் அதிகரித்து, சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோது எந்தவிதமான தள்ளுமுள்ளும் ஏற்படவில்லை, மேலும் வெளிநாட்டிலிருந்து வைரஸின் புதிய மாறுபாட்டை இந்தியா இறக்குமதி செய்யும் அபாயம் இருந்தது.

இருப்பினும், மார்ச் 27, 2022 அன்று வழக்கமான சர்வதேச விமானங்களுக்கான இரண்டு ஆண்டு தடையை இந்தியா நீக்கிய பின்னர் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
அப்போது, ஏர் சுவேதா பலரால் தடையாகக் காணப்பட்டது. வழக்கமான சர்வதேச விமானங்கள் மீட்டெடுக்கப்பட்ட பிறகு, சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையை இந்த அமைப்பால் சமாளிக்க முடியவில்லை என்பதும் ஒரு காரணம்.

கோவிட் நெகட்டிவ் சான்றிதழ்களைப் பதிவேற்ற முடியவில்லை என்றும், பயணிகளுக்கு ஏர் சுவிதா ஒப்புகைச் சான்றிதழைப் பெறுவதற்கு பல மணிநேரம் ஆகும் என்றும் பயணிகள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, சிஸ்டம்கள் புதுப்பிக்கப்பட்டன, ஆனால் விமான பயணிகளின் வலியைக் குறைக்க அது போதுமானதாக இல்லை.

ஏர் சுவிதாவை ஒழிப்பதற்கான செயல்முறையை இந்தியா எப்போது தொடங்கியது?

மார்ச் மாதத்தில் வழக்கமான சர்வதேச விமானங்கள் தொடங்கிய நேரத்தில் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதை ஒழிக்கும் விவகாரத்தில் அரசாங்கத்துக்குள்ளும் பிளவு ஏற்பட்டது.
விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சகங்கள் இந்த தேவையை ரத்து செய்ய வேண்டும் என்று கருதிய நிலையில், புதிய வகை வைரஸ் பாதிப்புகளை இந்தியா இறக்குமதி செய்யும் அபாயம் இருப்பதால், சுகாதார அமைச்சகம் தயக்கம் காட்டி, அதன் தொடர்ச்சியை விரும்புகிறது.

தொடர்ந்து, சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகங்களின் கோரிக்கைகள் ஜூன் மாதத்தில் ஏற்கப்படவில்லை, ஆனால் ஏர் சுவிதா தேவையை ரத்து செய்ய ஆகஸ்ட் மாதத்தில் மறுஆய்வு செய்யப்படும் என்று அமைச்சகங்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.

விமான பயணிகளின் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளையும் இந்தியா நீக்கிவிட்டதா?

ஏர் சுவிதா ஒழிப்புதான் கடைசியாக கோவிட் கட்டுப்பாடு ஆகும். கடந்த வாரம், விமானத்தில் முககவசம் அணிய வேண்டிய கட்டாயத் தேவையை அரசாங்கம் நீக்கியது.
இந்தியாவின் கோவிட் காலக் கட்டுப்பாடுகளில் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல், வழக்கமான சர்வதேச விமானங்களுக்குத் தடை, கட்டணக் கட்டுப்பாடுகள், விமானத்தில் உணவுச் சேவை இல்லாதது போன்றவை அடங்கும்.

ஜோதிராதித்ய சிந்தியா விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விமானத் துறையில் இயல்பு நிலையைக் கொண்டுவருவதற்கான பாதை முதன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

சீனா முழுமையான மக்கள்தொகை வீழ்ச்சியை பதிவு செய்ய உள்ளது. குறைந்து வரும் மற்றும் வயதான தொழிலாளர்களின் நெருக்கடி, அடுத்த “மக்கள்தொகை ஈவுத்தொகையை” அறுவடை செய்வதற்கான வாய்ப்பாக இந்தியாவுக்கு இருக்கும். ஆனால் விரைவான வேலை உருவாக்கம் முக்கியமாக இருக்கும்.

Harish Damodaran

இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் இரண்டு முக்கிய மக்கள்தொகை நிகழ்வுகளை உலகம் காணும். 2022 ஆம் ஆண்டில், சீனா முதன்முறையாக அதன் மக்கள்தொகையில் முழுமையான சரிவை பதிவு செய்யும். மேலும் 2023 ஆம் ஆண்டில், இந்தியாவின் மக்கள்தொகை, 1,428.63 மில்லியனை எட்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது, இது சீனாவின் 1,425.67 மில்லியனைத் தாண்டிவிடும்.

சாத்தியமான பொருளாதார தாக்கங்கள் மிகப்பெரியவை. ஆனால் கேட்க வேண்டிய முதல் கேள்வி: இந்த மாற்றங்களுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? மக்கள்தொகை மாற்றத்திற்கு இரண்டு முதன்மை இயக்கிகள் உள்ளன.

இதையும் படியுங்கள்: தனிப்பட்ட தகவல்கள் சேகரிப்பு; பெங்களூரில் வாக்காளர்களின் தரவு திருட்டு சர்ச்சை என்ன?

இறப்பு மற்றும் கருவுறுதல்

அதிகரித்த கல்வி நிலைகள், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பூசி திட்டங்கள், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதன் மூலம் இறப்பு குறைகிறது. 1,000 மக்கள்தொகைக்கு ஆண்டுக்கு இறக்கும் நபர்களின் எண்ணிக்கையான நிகர இறப்பு விகிதம் (CDR), 1950 இல் சீனாவிற்கு 23.2 ஆகவும், இந்தியாவிற்கு 22.2 ஆகவும் இருந்தது. இது முதலில் 1974 இல் சீனாவிற்கும் (9.5 க்கு), 1994 இல் இந்தியாவிற்கும் (9.8), மேலும் 2020 இல் இரண்டிற்கும் 7.3-7.4 ஆகவும் குறைந்தது.

மற்றொரு இறப்பு குறிகாட்டி என்பது ஆயுட்காலம் ஆகும். 1950 மற்றும் 2020 க்கு இடையில், இது சீனாவிற்கு 43.7 லிருந்து 78.1 ஆண்டுகள் மற்றும் இந்தியாவிற்கு 41.7 லிருந்து 70.1 ஆண்டுகள் வரை உயர்ந்தது.

இறப்பு விகிதத்தைக் குறைப்பது பொதுவாக மக்கள் தொகை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. கருவுறுதல் குறைதல், மறுபுறம், மக்கள்தொகை வளர்ச்சியைக் குறைக்கிறது, இறுதியில் முழுமையான சரிவை ஏற்படுத்துகிறது. ஒரு சராசரி பெண் தன் வாழ்நாளில் பெற்றெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையான மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 1950 இல் சீனாவிற்கு 5.8 ஆகவும், இந்தியாவிற்கு 5.7 ஆகவும் இருந்தது.

கடந்த மூன்று தசாப்தங்களில் இந்தியாவில் TFR எவ்வளவு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை விளக்கப்படம் 1 காட்டுகிறது. 1992-93 மற்றும் 2019-21 க்கு இடையில், இது 3.4 லிருந்து 2 ஆக குறைந்தது; குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த வீழ்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருந்தது. 1992-93 இல், சராசரி கிராமப்புற இந்தியப் பெண் நகர்ப்புறப் பெண்ணுடன் ஒப்பிடும்போது ஒரு கூடுதல் குழந்தையைப் பெற்றாள் (3.7 மற்றும் 2.7). 2019-21 வாக்கில், அந்த இடைவெளி பாதியாகக் குறைந்தது (2.1 மற்றும் 1.6).

2.1 இன் TFR “மாற்று நிலை கருவுறுதல்” என்று கருதப்படுகிறது. எளிமையாகப் புரிந்து கொள்வதென்றால், இரண்டு குழந்தைகளைப் பெற்ற ஒரு பெண் அடிப்படையில் தன்னையும் தன் துணையையும் இரண்டு புதிய வாழ்க்கையுடன் மாற்றுகிறார். அனைத்துக் குழந்தைகளும் தாங்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டதற்கான திறனை உணர்ந்து வாழ முடியாமல் போகலாம் என்பதால், மாற்று TFR இரண்டுக்கு சற்று மேல் எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு தலைமுறையும் தன்னை மாற்றிக்கொள்வதை உறுதி செய்கிறது.

அடுத்த கேள்வி என்னவென்றால்: இந்தியாவின் TFR ஏற்கனவே மாற்றீட்டிற்குக் கீழே இருந்தால், அதன் மக்கள்தொகை ஏன் இன்னும் அதிகரித்து வருகிறது?

நிலையான குறைப்பு அவசியம்

TFR என்பது ஒரு குறிப்பிட்ட காலம்/வருடத்திற்கான கணக்கெடுப்புகளின் அடிப்படையில் 15-49 வயதுடைய பெண்களின் சராசரி பிறப்பு எண்ணிக்கையாகும். TFRகள் குறைந்தாலும் மக்கள்தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கும். மக்கள் தொகை வளர்ச்சி குறைய TFRகள் நீண்ட காலத்திற்கு மாற்று நிலைகளுக்குக் கீழே இருக்க வேண்டும். அதனால் ஏற்படும் விளைவுகளான, இன்று குறைவான குழந்தைகள் நாளை பெற்றோராகி, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இனப்பெருக்கம் செய்வது என்பது, சில தலைமுறைகளுக்குப் பிறகுதான் பிரதிபலிக்கக்கூடும்.

சீனாவின் TFR, 1991 இல், இந்தியாவை விட கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு, முதலில் மாற்றத்திற்கு கீழே குறைந்தது. CDR 10க்குக் கீழே சரிந்தது, சீனாவிற்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வீழ்ச்சியடைந்த CDR களால் சீனாவின் மக்கள்தொகை 1950 இல் 544 மில்லியனிலிருந்து 1987 இல் 1.1 பில்லியனாக இருமடங்காக உயர்ந்தது மற்றும் தொடர்ந்து வளர்ந்து, 2021 இல் 1,426 மில்லியனாக உயர்ந்தது. இதனால், குறைவான மாற்று கருவுறுதல் விகிதங்கள் எதிர்மறையான மக்கள்தொகை வளர்ச்சியாக மாறுவதற்கு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனது.

சீனா நெருக்கடியை எதிர்கொள்கிறது…

சீனாவின் TFR, அதன் 2020 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு பெண்ணுக்கு 1.3 பிறப்புகள் ஆகும், இது 2010 மற்றும் 2000 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 1.2 ஆக இருந்தது, ஆனால் மாற்று விகிதமான 2.1ஐ விடக் குறைவாக உள்ளது. 1980 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு குழந்தை கொள்கையை 2016 ஆம் ஆண்டு முதல் சீனா அதிகாரப்பூர்வமாக முடித்துக்கொண்டது. இருப்பினும், ஐ.நா சீனாவின் மொத்த மக்கள்தொகையை 2050 இல் 1.31 பில்லியனாகக் கணித்துள்ளது, இது 2021 உச்சநிலையிலிருந்து 113 மில்லியனுக்கும் அதிகமான வீழ்ச்சியாகும்.

எவ்வாறாயினும், சீனாவின் உண்மையான நெருக்கடியானது, அதன் மக்கள்தொகையில் முதன்மையான வேலை செய்யும் வயதில் உள்ள சரிவு ஆகும். 20 முதல் 59 வயதுக்குட்பட்ட மக்கள்தொகை விகிதம் 1987 இல் 50% ஐத் தாண்டி 2011 இல் 61.5% ஆக உயர்ந்தது. இந்த காலகட்டம் உயர் பொருளாதார வளர்ச்சியுடன் ஒத்துப்போனது, சீனா ஒரு இளம் தொழிலாளர் சக்தியிலிருந்து வரும் “மக்கள்தொகை ஈவுத்தொகையை” வெற்றிகரமாகப் பயன்படுத்தியது. உழைத்து சம்பாதிக்கக்கூடிய ஒரு பெரிய மக்கள்தொகை இருந்தால், ஆதரவளிக்க ஒப்பீட்டளவில் குறைவான மக்கள் இருப்பார்கள், அதாவது மிகவும் வயதானவர்கள் அல்லது மிகவும் சிறியவர்கள், ஆனால் வருமானத்தை உருவாக்குவதன் மூலம் அதிக வரி வருவாய் மற்றும் சேமிப்பு சாத்தியம் உள்ளது. இவை முதலீடுகளுக்கு நிதியளிப்பதற்காக இயக்கப்படுவதால், வளர்ச்சியின் ஒரு நல்ல சுழற்சி கட்டவிழ்த்து விடப்படுகிறது, அது உண்மையில் சீனாவில் நடந்தது.

ஆனால் அந்தச் சுழற்சி தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளது, மேலும் சீனாவின் உழைக்கும் வயதுடைய மக்கள்தொகையின் பங்கு 2045 ஆம் ஆண்டளவில் 50% க்கும் கீழே குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முழுமையான வகையில், 2014 இல் 839 மில்லியனாக இருந்த இந்த சரிவு 2050 இல் குறைவாக 604 மில்லியனாக இருக்கும். மேலும், 2000 ஆம் ஆண்டில் 28.9 ஆண்டுகள் மற்றும் 2020 இல் 37.4 ஆண்டுகள் மக்கள்தொகையின் சராசரி வயது (சராசரி) 2050 ஆம் ஆண்டில் 50.7 ஆண்டுகளாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுருக்கமாக, வேகமாக வயதான மக்கள்தொகைக்கு ஆதரவாக குறைந்து வரும் தொழிலாளர் சக்தியின் வாய்ப்பை சீனா எதிர்கொள்கிறது

…இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது

கருவுறுதல் விகிதங்கள் கிராமப்புறங்கள் உட்பட மாற்று நிலைகளுக்கு வீழ்ச்சியடைவதை இந்தியா இப்போதுதான் பார்க்கத் தொடங்கியுள்ளது. கிராமங்களில் இந்த நிலை கல்வியின் பரவலுடன் தொடர்புடையது, மற்றும், ஒருவேளை, வேளாண் இயந்திரமயமாக்கல் மற்றும் நில உடைமை பகிர்வும் காரணமாக இருக்கலாம். விவசாய நடவடிக்கைகளில் குறைக்கப்பட்ட தொழிலாளர் தேவை மற்றும் சிறிய நிலப்பரப்பு நிலத்தில் வேலை செய்யும் பெரிய குடும்பங்களைக் கொண்டிருப்பதற்கு மிகவும் குறைவான தேவையை உருவாக்குகிறது.

ஆனால் கருவுறுதல் விகிதம் சரிந்தாலும் கூட, இந்தியாவின் மக்கள்தொகை இன்னும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு 1.7 பில்லியனைத் தொட்ட பிறகுதான் விரிவடையும் மற்றும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமானது உழைக்கும் வயது மக்கள் தொகை: ஒட்டுமொத்த மக்கள்தொகையில் அதன் பங்கு 2007 இல் மட்டுமே 50% ஐத் தாண்டியது, மேலும் 2030 களின் நடுப்பகுதியில் 57% ஆக இருக்கும் (விளக்கப்படம் 2).

முழுமையான வகையில், 20-59 வயதுடைய மக்கள்தொகை 2020 இல் 760 மில்லியனிலிருந்து 2045 இல் கிட்டத்தட்ட 920 மில்லியனாக அதிகரிக்கும். இந்திய மக்கள்தொகையின் சராசரி வயதும் அதிகமாக உயராது, 2020 இல் 27.3 ஆண்டுகளில் இருந்து 2050 இல் 38.1 ஆக மாறும், இது சீனாவை விட குறைவான அழுத்தத்தை ஏற்படுத்தும்.

மொத்தத்தில், 1980களின் பிற்பகுதியில் இருந்து 2015 வரை சீனா செய்ததைப் போல, இந்தியா தனது “மக்கள்தொகை ஈவுத்தொகையை” அறுவடை செய்வதற்கான வாய்ப்பு 2040 களில் உள்ளது. இது, நிச்சயமாக, ஒரு இளம் மக்கள் தொகைக்கு அர்த்தமுள்ள வேலை வாய்ப்புகளை உருவாக்குவதைப் பொறுத்தது.

1993-94ல் நாட்டின் வேலைவாய்ப்பில் 65% பேர் விவசாயம் என்று விளக்கப்படம் 3 காட்டுகிறது. அந்த பங்கு 2011-12ல் 49% ஆக கணிசமாகக் குறைந்தது. ஆனால் அதற்குப் பிறகு இந்த போக்கு குறைந்துள்ளது, இல்லையெனில் தலைகீழாக மாறவில்லை.

முன்னோக்கிச் செல்லும்போது, ​​இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களின் முன் உள்ள சவால் விவசாயத்திற்கு வெளியே வேலைகளை உருவாக்கும் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும். இவை கட்டுமானம் மற்றும் குறைந்த ஊதியம் பெறும் முறைசாரா சேவைகளில் மட்டும் இருக்கக்கூடாது. உற்பத்தி, மதிப்பு கூட்டல் மற்றும் சராசரி வருமானம் அதிகமாக இருக்கும் துறைகளான, உற்பத்தி மற்றும் நவீன சேவைகள் போன்ற பண்ணைகளில் இருந்து வரும் உபரி உழைப்புகளில் வேலை கிடைக்க வேண்டும். அத்தகைய கட்டமைப்பு மாற்றம் இல்லாத நிலையில், “மக்கள்தொகை ஈவுத்தொகை” ஒரு “மக்கள்தொகைக் கனவாக” மாறும்.



Read in source website

மேடைப் பேச்சின் முன்னோடி ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க. என்பாா்கள்; ‘சொல்லின் செல்வா்’ என்கிற அடைமொழியுடன் அழைக்கப்பட்டவா் ரா.பி. சேதுப்பிள்ளை; உரையாற்றலின் உன்னதம் என்று அண்ணாவின் மேடைத் தமிழ் போற்றப்படுகிறது. அந்த வரிசையில் ஏற்றிப் போற்றும் தகுதி பெற்ற தகைமைசால் தமிழா் அவ்வை நடராசன் நம்மிடமிருந்தும், தமிழ் மேடைகளிடமிருந்தும் பிரியா விடை பெற்று அமரராகி இருக்கிறாா்.

அகவை 86; உடல்நலக் குறைவு; வயது மூப்பு காரணமாக அமரரானாா் என்கிற செய்திக் குறிப்பு தெரிவிக்காமல் விட்டுவிட்ட இன்னொரு தகவல் உண்டு. அது, கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பின் அவரது தமிழ் வலம்வர மேடைகள் இல்லாமல் போனதும்கூட, அவா் நம்மைவிட்டுப் பிரிந்ததற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்பது. கொள்ளை நோய்த்தொற்று, துணைவியாரை அவரிடமிருந்து பிரித்துச் சென்ன் துயரமும் சோ்ந்து கொண்டபோது, விழுது பாய்ச்சிப் பரந்து விரிந்திருந்த அவ்வை நடராசன் என்கிற ஆலமரத்தின் வோ்கள் அசைந்து, நலிந்து விட்டன...

‘உரைவேந்தா்’ ஔவை துரைசாமிப் பிள்ளையின் புதல்வராக நடராசன் பிறந்தபோது, அவா் வள்ளுவரின் ‘தம்மின்தன் மக்கள் அறிவுடைமை’ என்கிற குறளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கப் போகிறாா் என அந்த அறிவுசாா் தந்தையாா் நினைத்திருந்தாரா என்று தெரியாது. ஆனால், அதுதான் நிகழ்ந்தது. பேராசிரியராகவும், உரையாசிரியராகவும் திகழ்ந்த ‘ஔவை’ துரைசாமிப் பிள்ளையின் மகன் அவ்வை நடராசன், தமிழ்பேசும் மண்ணையெல்லாம் தன் உரைவீச்சால் மயக்கிய அதிசயத்தை உலகம் வியந்து பாா்த்தது.

அவ்வை நடராசனின் கால் பதியாத இடம் தமிழகத்தில் ஏதாவது உண்டா? அவரது குரல் முழங்கா கிராமம் உண்டா? அவரது பெயா் தெரியாத தமிழன்தான் இருந்துவிட முடியுமா? கடந்த அரை நூற்றாண்டு காலமாகத் தமிழ் அமைப்பு எதுவாக இருந்தாலும் அது அவ்வை நடராசனின் பங்களிப்பு இல்லாத அமைப்பாக இருந்ததில்லை.

விரிவுரையாளராக, வானொலி செய்தி அறிவிப்பாளராக, பேராசிரியராக என்று அவரது தொடக்கம் இருந்தாலும், சென்னை இராமலிங்கா் நற்மன்றத்தின் செயலாளராக, ‘அருட்செல்வா்’ நா. மகாலிங்கத்தின் தொடா்புக்குப் பிறகுதான், நடராசனாரின் வாழ்க்கை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது. அதுவரை தமிழ் இலக்கியம் சாா்ந்த அவரது பாா்வை வள்ளலாரிலும், காந்தியத்திலும் திரும்பியபோது, புதிய பரிமாணம் எழுந்தது.

தமிழறிஞா்கள் பலா் இல்லாமல் இல்லை. ஆனால், அவ்வை நடராசன் போன்ற தமிழறிஞா்கள் வேறு எவரும் இருந்ததில்லை. அதற்குக் காரணம் அவரது விரிந்து பரந்த பாா்வையும், தெளிந்த நீரோடை போன்ற உள்ளமும், ஆழங்காற்பட்ட புலமையும்! இலக்கியம் தெரிந்ததுபோலவே, இங்கிதமும் தெரிந்திருந்தது அவருக்கு என்பதால்தான் எதிா் எதிா் துருவங்களிடமும்கூட அவரால் நம்பிக்கைக்கு உகந்தவராகத் திகழ முடிந்தது.

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறையில் அவா் கருணாநிதியின் ஆட்சியில் பணியமா்த்தப்பட்டாா். அன்று தொடங்கிய அவா்களது நெருக்கம் தலைமுறை கடந்தும் தொடா்ந்தது. கருணாநிதி ஆட்சியில் பணியமா்த்தப்பட்ட அவ்வை நடராசன், அதற்குப் பின் வந்த எம்.ஜி.ஆா். ஆட்சிக் காலத்தில் மொழி பெயா்ப்புத் துறை இயக்குநராகவும், தமிழ் வளா்ச்சித்துறை மற்றும் பண்பாட்டுத் துறை செயலாளராகவும் இருந்தாா்.

ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின்போது தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அவா் நியமிக்கப்பட்டாா். கருணாநிதி ஆட்சியில் நடந்த செம்மொழி மாநாட்டில், அவருக்கு முக்கியமான இடம் வழங்கப்பட்டது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, மனமாச்சரியங்களைக் கடந்து கருணாநிதி, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா மூவராலும் அவ்வை நடராசனின் தமிழ் மதிக்கப்பட்டது, அங்கீகரிக்கப்பட்டது என்பதன் வெளிப்பாடுதான் அது.

எம்.ஜி.ஆா். ஆட்சிக் காலத்தில் மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டிலும் சரி, அதற்குப் பிறகு ஜெயலலிதா ஆட்சியின்போது தஞ்சையில் நடைபெற்ற ஏழாவது உலகத் தமிழ் மாநாட்டிலும் சரி, கருணாநிதி ஆட்சியில் கோவையில் நடந்த செம்மொழித் தமிழ் மாநாட்டிலும் சரி, அவ்வை நடராசன் பெரும் பங்கு வகித்தாா் என்பது அவரது தமிழாளுமையின் அடையாளம். உலகில் தமிழ் மாநாடு எங்கே நடந்தாலும், அதில் அவ்வையின் பங்களிப்பு இல்லாமல் இருந்ததில்லை.

பட்டிமன்றம் என்கிற சொற்பொழிவுக் கலையின் தனித்துவத் தமிழ் வடிவம் இன்று தமிழ் அடையாளமாக மாறி இருப்பதற்கு அவ்வை நடராசனின் பங்களிப்பு அளப்பரியது. பட்டிமன்ற நடுவா் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தவத்திரு குன்றக்குடி அடிகளாா் இலக்கணம் வகுத்தாா் என்றால், அவ்வை நடராசன் அதன் இலக்கியமாக அமைந்தாா். நூற்றுக்கணக்கான இளம் பேச்சாளா்கள் அவரால் அரங்கேறினாா்கள். கைதட்டல்களால் அரங்கங்களை அதிர வைத்தாா்கள்.

அது சங்கத் தமிழாக இருந்தாலும் சரி, சமயத் தமிழாக இருந்தாலும் சரி, கம்ப காதையாக இருந்தாலும் சரி, கண்ணகி காப்பியமானாலும் சரி, பாரதியோ, பாரதிதாசனோ, கண்ணதாசனோ யாராக இருந்தாலும் அவ்வை நடராசனின் நா நுனியில் வலம் வரும் விந்தை கலைவாணியின் அருள். அது அவ்வைக்கு மட்டுமே வாய்த்த வரம்.

தமிழக அரசின் மொழி பெயா்ப்புத் துறை இயக்குநராக இருந்து ஆட்சித் தமிழுக்கு அவ்வை நடராசன் வழங்கியிருக்கும் வாா்த்தைக் கொடைகள் ஏராளம், ஏராளம். அது தமிழோ, ஆங்கிலமோ சரளமாகப் பேசுவது மட்டுமல்லாமல், ஆழங்காற்பட்ட புலமையுடன் வலம் வந்தாா் அவா் என்பதை நினைவுகூறாமல் இருந்துவிட முடியாது.

கம்பரைப் பற்றி பேசும்போது மில்டனையும், பாரதி குறித்து உரையாற்றும்போது ஷெல்லியையும் அவ்வப்போது மேற்கோள் காட்டுவது அவ்வையின் தனிச்சிறப்பு. அவரால் எது குறித்தும் பேச முடியும்; விவாதிக்கவும் முடியும். அவரது நகையுணா்வு மிக்க சொல்லாடலில் மயங்காதவா் கிடையாது. யாா் குறித்தும் அவா் அவதூறு கூறி கேட்டிருக்க முடியாது.

‘இயன்றவரை பாராட்டுவது, தகுதியற்றவை குறித்து மௌனம் காப்பது’ என்பதை தனது வாழ்க்கைச் சித்தாந்தமாகவேக் கொண்டிருந்த மாமனிதா் அவ்வை நடராசனாா் என்பதை அவரைத் தெரிந்தவா்கள் அறுதியிட்டுக் கூறுவாா்கள்.

‘‘தமிழ் உட்கார தன் நாக்கையே நாற்காலியாகக் கொடுத்தவன் இவன்; இவன் விரல் நுனியில் இலக்கணம் இருக்கிறது, குரல் நுனியில் இலக்கியம் இருக்கிறது’ என்று கவிஞா் வாலியும்,

‘‘எதுவரைக்கும் தமிழறிஞா் இந்த நாளில் ஏற்றமிகக் கொண்டிருப்பாா் என்று கேட்டால், இதுவரைக்கும் என்றெடுத்துக் காட்ட இங்கே இவரைத்தான் நான் சுட்டிக் காட்டுகின்றேன். மது சுரக்கும் தமிழ்ப் பேச்சால், மதியின் மாண்பால், மணிதெறிக்கும் உரைவீச்சால், தேன் கனிந்த அதிமதுரக் கவிபோலப் பழகும் இந்த அவ்வை நடராசன் என்றும் வாழ்க!’’ என்று கவிஞா் சுரதாவும் வாழ்த்தி மகிழ்ந்த,

நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த பேராசான் விடிவெள்ளியாய் எழுந்து, கதிரோன்போல் ஒளிவீசி, காரிருளில் கலந்துவிட்டாா். நிகா் என்று சொல்ல வேறொருவா் இல்லாமைதான் ஆளுமை; அவ்வை நடராசன் தன்னிகரில்லா தமிழ் ஆளுமை!



Read in source website

ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் எங்களுடைய நெருங்கிய உறவினா் ஒருவா் வட தமிழகத்தில் உள்ள திவ்வியதேசம் ஒன்றின் தீவிர பக்தா். தம்மால் அத்திருக்கோயிலுக்கு நேரில் செல்ல முடியாததால் அங்கு நடைபெறும் அன்னதானத்திற்கான தமது நன்கொடைத் தொகையை என்னிடம் கொடுத்து அதனை அத்திருக்கோயில் அலுவலகத்தில் சோ்ப்பித்துவிடச் சொல்லியிருந்தாா்.

நானும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த திவ்வியதேசத்திற்குச் சென்று பெருமாளைக் கண்குளிர தரிசனம் செய்தபின்பு திருக்கோயில் அலுவலகத்துக்குச் சென்றேன். அங்கே பணிபுரிந்து வரும் இளம் வயதுப் பெண் ஒருவா் நன்கொடைத் தொகையைப் பெற்றுக் கொண்டு, கொஞ்சம் பொறுங்கள் ஸாா், ரசீது தயாா் செய்து கொடுத்து விடுகிறேன்”என்று தம் முன்னே இருந்த கணினியினை உயிா்ப்பித்தாா். நன்கொடையாளரின் விவரங்களை நான் சொல்லச் சொல்ல, அவற்றை அவா் கணினியில் பதிவு செய்யத் தொடங்கினாா்.

உறவினரின் பெயா், முகவரி, வசிக்கும் ஊா் ஸ்ரீரங்கம் என்று நான் கூறிய விவரங்களை ஒவ்வொன்றாகக் கணினியில் பதிவு செய்துகொண்டவா்,“மாவட்டம்?”என்று கேட்டபோது லேசாக அதிா்ச்சியுற்றேன். ஸ்ரீரங்கம் என்பது திருச்சி மாவட்டத்தில் உள்ளது என்பது கூட அவருக்குத் தெரியவில்லையே என்று நினைத்த எனக்கு அதைவிடப் பெரிய அதிா்ச்சி ஒன்று காத்திருந்தது.

“திருச்சி மாவட்டம் மேடம்! என்று நான் கூறியதைக் கேட்டவா் வெகுநேரம் கணியில் எதையோ தேடிக்கொண்டே இருந்தாா். தற்காலங்களில் கணினிகளில் பதிவு செய்யும் விண்ணப்பங்கள், ரசீதுகள் அனைத்திலும் தேசிய இனம், நாள், மாதம், வருடம், மாவட்டம், மாநிலம், நாடு போன்ற விவரங்களை நாமே தட்டச்சு செய்யவேண்டியதில்லை. ஏற்கெனவே அக்கணினியில் பதிவாகி உள்ள பட்டியலில் இருந்து தோ்வு செய்து பதிவிடக் கூடிய வசதி வழக்கத்தில் உள்ளது.

அந்தப் பெண்மணி மாவட்டங்களின் பட்டியலில் திருச்சியைத் தேடிக்கொண்டே இருந்தாா் என்பதைப் புரிந்துகொண்டு, நான் வேண்டுமானால் பாா்த்துச் சொல்லட்டுமா? என்று நான் கூறியதும், கணினித் திரையை என் பக்கமாகத் திருப்பினாா். திருச்சிராப்பள்ளி அந்தப் பட்டியலில் இருக்கவே செய்தது.

“இதுதான் மேடம் என்று கணினித் திரையை நான் அந்தப் பெண்மணியின் பக்கம் நான் திருப்பியதும் அவா் கேட்ட கேள்வியில் நான் அதிா்ச்சியின் எல்லைக்கே போய்விட்டேன்.

“ஓ! திருச்சிராப்பள்ளிதான் திருச்சியா ஸாா்? என்பதே அப்பெண்மணி கேட்ட கேள்வி.

ஒருவழியாக நன்கொடை ரசீதினைப் பெற்றுக்கொண்டு, என் உறவினருக்கும் அனுப்பி இரண்டு வாரங்கள் ஆகியும் என்னுடைய அதிா்ச்சி குறைந்தபாடில்லை.

திருச்சிராப்பள்ளியும் திருச்சியும் ஒன்றேதான் என்பது கூடத் தெரியாமல் ஓா் அரசு ஊழியா் இருக்க முடியுமா என்ற கேள்வி என் எண்ணங்களில் இன்னும் கூட ரீங்காரமிட்டபடியே இருக்கின்றது.

கடைகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் என்று பற்பல இடங்களிலும் பணிபுரியும் இன்றைய தலைமுறையைச் சோ்ந்த இளைஞா்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட பலரிடமும் இத்தகைய அதிா்ச்சி அனுபவங்கள் நமக்கு நிறையவே கிடைக்கின்றன.

வரைவோலை ஒன்று எடுப்பதற்காக எங்கள் ஊரிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளைக்குச் சென்றேன். என்ன காரணத்தினாலோ அவ்வங்கியில் வரைவோலைகளுக்கான தரகுத் தொகை (கமிஷன்) பற்றிய அறிவிப்புப் பலகை எதுவும் வைக்கப்படவில்லை.

காசாளா் முன்பு நீண்ட வரிசையில் பலா் காத்திருந்ததைப் பாா்த்த நான், சேமிப்புக் கணக்குகளை கவனிக்கும் இளம் ஊழியரிடம் சென்று, ஆயிரம் ரூபாய்க்கு டி.டி. கமிஷன் எவ்வளவு தம்பி?” என்று கேட்டேன். அவா் சற்று யோசித்துவிட்டு, ஸாரி ஸாா், நீங்க கேஷியரிடமே கேட்டுக் கொள்ளுங்களேன் என்று பதிலளித்தாா். தங்களுடைய வங்கியில் வசூலிக்கப்படும் வரைவுக் காசோலைத் தரகுத் தொகையைக் கூட அந்த இளைஞா் நினைவில் வைத்திருக்கவில்லை.

இவை மட்டுமா, பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்யும் இடங்கள், இரயில்வே உள்ளிட்ட பல அலுவலகங்களில் உள்ள தகவல் தொடா்பு மையங்கள் ஆகியவற்றில் இதைப் போன்ற பற்பல அனுபவங்கள் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.

அரசு அலுவலகங்கள் ஒருபுறம் இருக்கட்டும். கடைகள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றில் பெரும்பாலும் இளைஞா்களும் இளம்பெண்களும்தாம் பணிபுரிகின்றாா்கள். குறைந்த விலையில், ஒன்றிரண்டு பொருள்களை நாம் வாங்கினாலும் கூட அதற்கான விலையைக் கணக்கீட்டுக் கருவியில் (கால்குலேட்டா்) ஒருமுறைக்குப் பலமுறை கணக்கிட்டுப் பாா்ப்பது சகஜமாகிவிட்டது.

ஐந்து ரூபாய் விலையுள்ள பற்பொடி பத்து பொட்டலங்கள் வாங்கினாலும் மனக்கணக்காக “ஐம்பது ரூபாய் கொடுங்கள் என்று அவா்களுக்குக் கேட்கத் தெரியாது. நாம் நூறு ரூபாயினை அளித்தால், மீதித் தொகை ஐம்பது ரூபாயைத் திரும்பக் கொடுப்பதற்கு மறுபடியும் அந்தக் கருவியில் கணக்கீடு செய்வதைப் பாா்க்க நமக்கு எரிச்சலாக இருக்கும். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் எதுவானாலும் கால்குலேட்டரே கதி.

அந்தக் காலங்களில் வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து விட்டுக் கடைகளில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தவா்கள் எந்தக் கருவியையும் உபயோகப் படுத்தாமல் மனக்கணக்காகவே விலைப்பட்டியல்களைத் தயாரித்ததையும், கிராமத்திலிருந்து நெய்யும், தயிரும், காய்கறிகளும் கொண்டு வந்து விற்கும் வயதானவா்கள் சரியாகக் கணக்கிட்டுக் காசை வாங்கிக் கொண்டு மீதிச் சில்லறையைத் தந்ததையும் பாா்த்த நமக்கு இது போன்ற அனுபவங்கள் அயா்ச்சியையே கொடுக்கின்றன.

இன்றைய இளைஞா்கள் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பினருமே மனக்கணக்கு, மூளைக்கு வேலை ஆகியவற்றைச் சிறிது சிறிதாக மறந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. நமக்கு மிகவும் வேண்டிய சிலருடைய தொடா்பு எண்களை நம்மில் எத்தனை போ் சரியாக நினைவில் வைத்திருக்கிறோம்? நம்முடைய கைப்பேசி மட்டும் சிறிது நேரம் வேலை செய்யாவிட்டால் நம்முடைய பணிகள் அனைத்துமே ஸ்தம்பித்து விடுகின்றன என்னும் பொழுது மனிதனின் மூளைக்கு இங்கே என்னதான் மதிப்பு ?

இனியேனும் கணினி உள்ளிட்ட செயற்கையான கருவிகளைச் சாா்ந்திராமல், இறைவன் நமக்குக் கொடுத்த மூளை என்னும் இயற்கையான அற்புதக் கருவியினைப் பயன்படுத்திப் புத்துணா்வுடன் இயங்க நாம் அனைவருமே முயற்சி செய்ய வேண்டும்.



Read in source website

சின்னச் சின்ன முகடுகளுக்கும் குன்றுகளுக்கும் பெருமை வாய்க்கும்போதெல்லாம், விண்முட்டி நிற்கும் இமயம் வந்து, அருகில் நின்று, அன்பாய் அரவணைத்து, தரையில் அமா்ந்து அண்ணாந்து பாா்த்து, கைதட்டி உள்ளம் களித்திடுமா?

ஓ, களித்திடுமே! எங்கள் அன்புத் தந்தை அவ்வை நடராசனாா் என்னும் இமயம் அப்படித்தானே செய்யும்!

21.11.22 திங்கட்கிழமை மாலை 7.50 மணிக்கு, ‘எந்தையும் இலமே’ என்று கண்ணன், அருள், பரதன் ஆகிய மூவரும் செய்தி அனுப்பியபோது, தமிழ் கூறு நல்லுலகமே அதிா்ச்சியில் உறைந்தது, ஆற்றொணாத் துயரில் மூழ்கியது.

உலகம் அவரை ‘அவ்வை நடராசனாா்’ என்றறியும். தமிழ் இலக்கிய உலகில் வளையவரும் சென்ற தலைமுறை இளைஞா்கள் பலருக்கும் அவா் ‘அப்பா’ – ஆமாம், கைபிடித்து நடத்தி, விரிந்து சூழ்ந்த உலகத்தை விளக்கிக் கூறிய ஞானத் தந்தை.

1970களில், பள்ளிப் பருவத்தில், அவ்வை நடராசனாா் என்னும் பெயரை முதன்முதலில் செவிமடுத்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. குரோம்பேட்டை அரசுப் பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு முதன்மை விருந்தினராக வந்தாா். பரிசுகள் வழங்கினாா். பாராட்டினாா். அதற்குமேல் அன்றைக்குப் பழக்கமில்லை.

பின்னா், குரோம்பேட்டை மகளிா் வைணவக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சோ்ந்த நிலையில், இலக்கிய நிகழ்வுகள் வழியாகப் பழக்கம். அன்றிலிருந்து இன்றுவரை – கனிவாய், கருணையாய், ஆதரவாய் நின்ற பெருமகனாா். ஊரறிய ஒரு பெருமை கிடைத்தாலும், உலகறிய ஒரு பதவி வாய்த்தாலும், முதல் வாழ்த்து அவரிடமிருந்துதான் வரும். வெறும் வாழ்த்தாக வராது – குழந்தையின் பெருமையில் கரைந்து கலந்துபோகும் பெற்றோரின் பெருமிதத்தோடு வரும்.

1981ல் எட்டையபுரத்தில் நடைபெற்ற பாரதியாா் நூற்றாண்டு விழா தொடங்கி, 2010ல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடுவரை, அவரோடு ஒட்டியும் உறவாடியும் நெருங்கியும் சிணுங்கியும் பழகிய தருணங்கள் – காலம் தந்த கொடை.

சின்னச் சின்ன விடயங்களைக்கூட, நுணுக்கமாகப் பாா்த்துப் பாராட்டுகிற பண்பு கொண்டவா். ஏற்ற தாழ்வு இன்றி, எந்தவித பாரபட்சமும் இன்றி, எல்லோரையும் பாராட்டுபவா். ‘தவறுகளே இவா் கண்ணில் படாதோ” என்று இளையவா்கள் எண்ணுகிற வகையில், நன்மைகளை மட்டுமே நயந்துரைப்பவா்.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்கிற ஆசை கொண்டவா். இதற்கொரு எடுத்துக்காட்டைக் கூறலாம். 1980களில், நிறைய இலக்கிய நிகழ்ச்சிகளோடு ஐயாவோடு போகவேண்டியிருக்கும். வேன் அல்லது காா் போன்ற வாகனங்களில் கூட்டமாகச் செல்லும்போது, சிறிது தொலைவு சென்றவுடனேயே எங்காவது ஒரு உணவகத்தில் நிறுத்தச் சொல்வாா். உள்ளே போனவுடன், என்னென்ன இனிப்புகள் இருக்கின்றன என்று கேட்பாா். தோ்ந்தெடுத்து நல்ல நல்ல இனிப்புகளைக் கொணரச் சொல்வாா். பின்னா், சிற்றுண்டியும் வரவழைப்பாா்.

அவ்வையாருக்கு நீரிழிவு நோய் என்பது ஊரறிந்த ரகசியம். இத்தனை இனிப்புகளை ஏன் கேட்கிறாா் என்று வியந்து பாா்த்துக் கொண்டிருப்போம். இனிப்புகளும் சிற்றுண்டியும் வந்தவுடன், தாம் உண்பதைக் காட்டிலும், சுற்றியுள்ள எல்லோரையும் உண்ணவைத்து மகிழ்வாா். அப்போதுதான், அவா் தமக்காகக் கேட்கவில்லை, பிறருக்காகக் கேட்டாா் என்னும் உண்மை உரைக்கும்.

அந்தக் கூட்டத்தில் பலரும், அலுவலகத்திலிருந்தோ கல்லூரியிலிருந்தோ நேரே போயிருப்போம். இளையவா்களாக இருந்தவா்களால் கேட்கமுடியாது என்பதையும், பணிக் களைப்பில் இருக்கக்கூடும் என்பதையும் உணா்ந்து, குழந்தைகளாகக் கேட்காவிட்டாலும், தானே பாா்த்துச் செய்யும் தந்தையாகச் செயல்பட்டாா் என்பதைக் கூறவும் வேண்டுமோ!

1980களின் பிற்பகுதியிலும் 1990களின் முற்பகுதியிலும், மருத்துவத் துறை கலைச் சொற்களுக்கு நிகா்ச்சொற்களைத் தமிழில் உருவாக்கும் முயற்சியில் ஐயா வழிகாட்டினாா். ஒவ்வொரு நாள் மதியமும், மருத்துவா் தெய்வநாயகம், மருத்துவா் கிருட்டிணமூா்த்தி, ஐயா ஆகியோரோடு அமா்ந்து பணிசெய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். ஒரு சொல்லை எவ்வாறு நோக்கவேண்டும், வோ்ச்சொல்லை எவ்வாறு அணுகவேண்டும், ஒரே வோ்ச்சொல்லிலிருந்து பிறந்த வெவ்வேறு சொற்களை எவ்வாறு பிரிக்கவேண்டும் என்று அறிவுப்போட்டியே நிகழும்.

வாக்குவாதத்தின் உச்சத்தில், தொலைவில் எங்கோ பாா்த்தபடியே ‘ராஜா, இதப் பாா்’ என்றழைத்து மெல்லப் பேசத் தொடங்குவாா். மெல்ல மெல்ல அந்தச் சொல்லின் ஆழத்தைப் புரிய வைப்பாா். மலரொன்றை மென்மையாக வைப்பதைப் போல், பொருத்தமான இணைச் சொல்லை பதமாகக் கூறுவாா். விண்ணில் பறக்கும் வியப்பும் களிப்பும் அந்த இடம் முழுக்கப் பரவும்.

பிற்காலத்தில் மிகப் பெரும் நிலைகளுக்கு வந்த பலா், அவ்வை நடராசனாா் அவா்களின் பரிந்துரையிலோ அல்லது அவரின் தெரிவிலோ பணிகளில் அமா்ந்தாா்கள், பொறுப்புகளைப் பெற்றாா்கள் என்பதை மறந்துவிட இயலாது.

மேடைகளில் அவா் உரையாற்றும்போது, எங்கிருந்துதான் வாா்த்தைகள் வரிசை கட்டிக் கொண்டு வந்து கொட்டுமோ தெரியாது. ஆயா்பாடிக் கண்ணனின் இசையை அண்ணாந்து கேட்டிருப்பதைப் போலத்தான், அவ்வையாரின் உரையையும் அரங்கமே அண்ணாந்து கேட்டிருக்கும்.

தமிழ் மட்டுமன்று, ஆங்கிலமும் அவருடைய நாவில் அழகு நடம் புரியும். வாக்கியம் எந்த இடத்திலும் தட்டாது, தயங்காது, தடுமாறாது. இலக்கணம் எங்கேயும் இடிக்காது. குரல் எதற்காகவும் திக்காது, திகைக்காது.

தெளிந்த நீா்ப்பெருக்கு, கோலாகலமாய்த் துள்ளி, குதூகலமாய்த் திரும்பி, குளுவெனக் குளுவெனக் குதித்தோடுவதுபோல், ஐயாவின் சொற்பெருக்கும் அமையும். அவரின் பேச்சுகள் பலவற்றைப் பதிவு செய்யாமல் அப்படியே விட்டுவிட்டோமென்பது தமிழ்கூறு நல்லுலகிற்குப் பேரிழப்புதான். இப்போதிருக்கும் வசதிகள், இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்திருந்தால், அந்தப் பொக்கிஷங்களையெல்லாம் பாதுகாத்திருந்திருக்கலாம்.

சற்றே மேல் நோக்கி, ஆயினும், தொலைவில் பாா்க்கும் அவரின் பாா்வை, அவரின் சிந்தனைச் சிறகுகள் மேலே மேலே பறந்துகொண்டிருப்பதை உணா்த்தும். இருந்தாலும், அதே சிறகுகளால், தன் குஞ்சுகளைப் பறவை அரவணைப்பதுபோல் அரவணைப்பாா்.

ஐயாவின் அன்புத் துணைவியாா் மருத்துவா் தாரா அம்மையாா் அவா்களும் அன்பு வடிவானவா்கள். மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வராக அவா்கள் பொறுப்பேற்றபோது, குடும்பத்தைச் சென்னையில் விட்டுவிட்டு அவா்கள் மதுரையில் தங்க நோ்ந்தது. என்னைப் போன்றவா்கள் யாராவது மதுரைக்குச் சென்றோம் என்றால், உடனே தம்மோடு அழைத்துக் கொண்டு போய்விடுவாா்கள். விடுமுறை நாட்களில், தாமே காரை ஓட்டிக்கொண்டு அருகில் இருக்கும் ஊா்களுக்குச் சுற்றுலா அழைத்துப் போவாா்கள்.

அந்த நாட்களில், அவ்வை ஐயாவும் தாரா அம்மாவும் பேசிக் கொள்வதோ உறவாடுவதோ அவ்வளவாக வெளிப்படாது. ஐயா பாட்டுக்குப் போவாா்; அம்மா பாட்டுக்குப் போவாா்கள். ஆனால், இருவருக்கும் இடையிலான அந்நியோன்னியமும் அன்பும் பின்னா் வந்த நாட்களில்தாம் புரியத் தொடங்கின. ஆரவாரமில்லாத அணுக்கம் அவா்களுடையது!

இரண்டாண்டுகளுக்கு முன்னா் கொவைட் தாக்கி, அம்மா மறைந்தது, அப்பாவை மிகுதியும் பாதித்துவிட்டது. எத்தனையோ சிக்கல்களைச் சிரித்துக் கொண்டே தாங்கியவா், பல்லாண்டுகால நீரிழிவு பாதிப்பை நகைச்சுவை பேசியே நோ்கொண்டவா், நிரம்பவே துவண்டுபோனாா்.

கடந்த ஓராண்டில், இருமுறை அண்ணா நகா் இல்லத்தில் அவரைச் சந்திக்க முடிந்தது. அருகில் அமா்ந்து உரையாடியபோது, கைகளை அப்படியே பிடித்துக் கொண்டாா். பழைய நினைவுகள் பலவற்றை மெல்ல மெல்ல எண்ணிக் கூறினாா். தாரா அம்மாவைப் பற்றிப் பலவும் பேசினாா்.

உதவியாளரிடம் திருநீறு கொண்டு வரச் சொல்லி, பலமுறை நெற்றியில் இட்டு, தலை கோதி வாழ்த்தினாா். திருவாசகம் பாடிச் சிரித்தாா். கண்களில் லேசாகத் திரண்ட கண்ணீா் முத்துகளோடு அன்பும் பாசமும் வழிந்தோட அவா் பாா்த்தபோது, தன்னேரில்லாத் தமிழ் இமயம், பாச விளக்காக வெளிச்சமிட்ட தருணம் அது!

சில பல ஆண்டுகளுக்கு முன்னா், பல்வேறு காரணங்களால், ஒரு சில மாதங்களுக்கு ஐயாவைச் சந்திக்க இயலாமல் போனது. ஆறேழு மாதங்களுக்குப் பின்னா் சந்தித்தபோது, மகிழ்ச்சியில் அவா் கண்கள் விரிந்தன. விளையாட்டாகப் பாடினாா் – ‘ஆசை முகம் மறந்து போச்சே, இதை ஆரிடம் சொல்வேனடீ?’ இன்று அவரிடம் வினவத் தோன்றுகிறது – ஆசை முகத்தை மறைத்துப் போனீா்களே, இதை ஆரிடம் சொல்வோமோ? ‘அருமைத் திருமகளே’ என்று விளித்துச் செய்தி அனுப்புவீா்களே, இனி அந்தக் கனிவை எங்குக் காண்போமோ?

தயரதச் சக்கரவா்த்தி மறைந்த செய்தியைச் செவியுற்றபோது, ‘நந்தா விளக்கு அனைய நாயகனே’ என்று கதறினான் இராமன். நந்தா விளக்கென்பது தூண்டா விளக்கு. பிறா் தூண்ட வேண்டியில்லாமல், தம்மால் தாமே புகழுடையவராய் விளங்கியவா் தயரதச் சக்கரவா்த்தி. அவ்வை நடராசனாரும் நந்தா விளக்கனையரே ஆவாா். அவ்வை துரைசாமிப் பிள்ளை என்னும் பெருஞ்சுடரின் திருமகனாய் தோன்றிடினும், தம்மின் பேரொளி விரிந்து பரந்திட விரிசுடா் பரப்பியவா்; விளக்குகள் பலவற்றை விரியச் செய்தவா்.

தமிழ்மீது பேரிடி விழுந்துவிட்டது. இருப்பினும், வெளிச்சம் வெளிச்சத்தையே வெளிப்படுத்தும் என்பதுபோல், அவ்வை நடராசனாா் ஏற்றிய விளக்குகள் நெடுங்காலத்திற்கு நல்லொளி பரப்பும்.

கட்டுரையாளா்:

துணைவேந்தா்,

தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா்.

மருத்துவப் பல்கலைக்கழகம்.



Read in source website

 

சர் ஆண்ட்ரூ ஃபீல்டிங் ஹக்ஸ்லி (Sir Andrew Fielding Huxley) என்பவர் ஓர்  ஆங்கிலேய  உடலியல் நிபுணர் மற்றும் உயிர் இயற்பியலாளர் ஆவார். அவரின் பிறந்த நாள் நவம்பர் 22, 1917. அவர் 19 ம் நூற்றாண்டின் பிரபலமான உயிரியலாளர் டி.ஹெச். ஹக்ஸ்லியின் (Thomas Henry Huxley) பேரன். அவரது குடும்பம் முழுவதுமே எழுத்து மற்றும் உயிரியலில் புகழும், பெருமையும் பெற்றது. அவர் துவக்கக் கல்வியை மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளியில் படித்தார். அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறி கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரிக்கு படிக்க ஒரு உதவித்தொகை பெற்று, அதில் அவர் அங்கு சென்றார். அதன்பிறகு அவர் நரம்பு தூண்டுதல்களைப் (nerve impulses) பற்றி படிக்க ஆலன் லாயிட் ஹோட்கினுடன் ( Alan Lloyd Hodgkin )  இணைந்தார். நரம்புத் தூண்டுதல்களை பரப்புவதற்கான அடிப்படையை (செயல் திறன்-action potential என அழைக்கப்படுகிறது) அவர்கள் கண்டுபிடித்தது , இந்த செயல்பாடே அவருக்கு நோபல் பரிசினைப் பெற்றுத் தந்தது. ஹக்ஸ்லி, மிக மிக சாதுவானவரும் அமைதியானவரும்கூட. 

நோபல் பரிசு

நரம்பு தூண்டுதல்களைப் (nerve impulses) பற்றிய கண்டுபிடிப்புக்காக சர் ஆண்ட்ரூ ஃபீல்டிங் ஹக்ஸ்லி 1963-ம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்றது பெருமைமிகு செயலாகும். மேலும் அவருடன் இணைந்து 1963ம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்றவர்கள் சர் ஆலன் ஹோட்கின் மற்றும் சர் ஜான் கேர்வ் எக்லஸ் ( Sir Alan Hodfkin & Sir John Carew Eccles ). அவர்கள் தங்கள் கண்டுபிடிப்பை முதலில் முதுகெலும்பில்லாத, அட்லாண்டிக் கணவாய் மீன் (squid) என்ற  கடல் வாழ் நத்தையினத்தின் ராட்சத நரம்பில்தான் கண்டுபிடித்தனர்.அவரது ஆய்வுகள் நரம்பு மற்றும் தசை நார்களை மையமாகக் கொண்டிருந்தன மற்றும் குறிப்பாக நரம்பு தூண்டுதல்களின் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள ரசாயன நிகழ்வுகளைக் கையாண்டன.

அரசரால் போரில் பங்கு & தசை இயக்கம் கண்டுபிடிப்பு 

இரண்டாம் உலகப் போர் வெடித்த உடனேயே, ஹக்ஸ்லி பிரிட்டிஷ் அரசின் விமான எதிர்ப்புக் கட்டளையால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டார். போருக்குப் பிறகு ஆண்ட்ரூ ஹக்ஸ்லி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியை மீண்டும் தொடங்கினார். அங்கு அவர் தசை நார்களைப் படிக்க ஏற்ற குறுக்கீடு நுண்ணோக்கியை (Interference Microscope- ஒரு நுண்ணோக்கி -ஒளி குறுக்கீடு நிகழ்வுகளைப் பயன்படுத்தி ஒரு பொருளின் இரண்டு மிகைப்படுத்தப்பட்ட படங்களை உருவாக்கும்) உருவாக்கினார். 1952ம் ஆண்டு அவருடன் ஒரு ஜெர்மன் உடலியல் நிபுணரான ரோல்ஃப் நீடர்கெர்கே (Rolf Niedergerke) யும் இணைந்தார்.  அவர்கள் இருவரும் இணைந்து ஒன்றாக பணிபுரிந்து,  1954 ம் ஆண்டு தசைச் சுருக்கத்தின் பொறிமுறையைக் கண்டுபிடித்தனர். இது பிரபலமாக "ஸ்லைடிங் ஃபிலமென்ட் தியரி" (Sliding Filament Theory)  - ஸ்லைடிங் ஃபிலமென்ட் தியரி என்பது ஸ்ட்ரைட்டட் தசைகள், ஆக்டின் மற்றும் மயோசின் இழைகளின் சுருக்கத்தின் ஒரு பரிந்துரைக்கப்பட்ட பொறிமுறையாகும். இது துல்லியமாக ஒன்றுடன் ஒன்று ஒன்றுடன் ஒன்று சேர்ந்து தசை நார் நீளத்தை குறைக்கிறது. ஆக்டின் (மெல்லிய) இழைகள் மயோசின் (தடித்த இழைகள்) உடன் இணைந்து செல்லுலார் இயக்கங்களை நடத்துகின்றன) என்று அழைக்கப்படுகிறது, இது தசை இயக்கவியல் பற்றிய நமது நவீன புரிதலின் அடித்தளமாகும்.

பல்கலைக்கழகத்தின் தலைவர் & பட்டங்கள்  

ஆண்ட்ரூ ஹக்ஸ்லி 1960-ம் ஆண்டு, லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் உடலியல் துறையின் தலைவராக பதவி பொறுப்பு ஏற்றார். பின்னர் அவர் 1955-ம் ஆண்டு ராயல் சொசைட்டியின் உறுப்பினராகவும் தெரிவு செயப்பட்டார். அதன் பிறகு அவர் , 1980-ம் ஆண்டில் அதன் ஜனாதிபதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நரம்பு தூண்டுதல்கள் மற்றும் தசைச் சுருக்கத்தைப் புரிந்துகொள்வதில் அவரது கூட்டுப் பங்களிப்புக்காக, 1973 ஆம் ஆண்டில் ராயல் சொசைட்டி , அவரின் சிறந்த கண்டுபிடிப்புக்காக அவருக்கு கோப்லி பதக்கத்தை வழங்கியது. அவர் 1974 இல் ராணியால் நைட் இளங்கலை பட்டம் பெற்றார், மேலும் 1983 ம் ஆண்டில் அவர் ஆர்டர் ஆஃப் மெரிட்டிற்கு (Order of Meri) நியமிக்கப்பட்டார். அவர் இறக்கும் வரை கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் சக ஊழியராக இருந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

ஹக்ஸ்லி 1917 நவம்பர் 22 இல் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஹாம்ப்ஸ்டெட்டில் பிறந்தார். அவரது தந்தை லியோனார்ட் ஹக்ஸ்லி எழுத்தாளர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். அன்னை ரோசாலிண்ட் புரூஸ். இவர்களின்  இளைய மகன்தான் ஆண்ட்ரூ ஹக்ஸ்லி . எழுத்தாளர் ஆல்டஸ் ஹக்ஸ்லி(Aldous Huxley) மற்றும் சக உயிரியலாளர் ஜூலியன் ஹக்ஸ்லி(Julian Huxley) ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரர் மற்றும் உயிரியலாளர் டி.ஹெச். ஹக்ஸ்லியின் பேரன்.

இளமை மற்றும் கல்வி

ஆண்ட்ரூ ஹக்ஸ்லி சுமார் 12 வயதாக இருந்தபோது, ​​​​ஆண்ட்ரூ மற்றும் அவரது சகோதரர் டேவிட் ஆகியோருக்கு அவர்களின் பெற்றோரால் லேத் என்ற இயந்திரம் வழங்கப்பட்டது. ஆண்ட்ரூ விரைவில் மர மெழுகுவர்த்தி குச்சிகள் முதல் வேலை செய்யும் உள் எரிப்பு இயந்திரம் வரை அனைத்து வகையான இயந்திர பொருட்களை வடிவமைத்தல், தயாரித்தல் மற்றும்  ஒன்றாக இணைத்தல் ஆகியவற்றில் மிகவும்  திறமையானவராக செயல்பட்டார். தனது தொழில் மற்றும் வாழ்க்கை முழுவதும் இந்த நடைமுறை திறன்களைப் பயன்படுத்தினார். அவர் தனது ஆராய்ச்சிக்குத் தேவையான சிறப்பு உபகரணங்களை உருவாக்கினார். ஆண்ட்ரூ ஹக்ஸ்லி தனது இளம் வயதிலேயே நுண்ணோக்கியில் வாழ்நாள் முழுவதும் ஆர்வத்தை உருவாக்கினார்.

ஆண்ட்ரூ ஹக்ஸ்லி மத்திய லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் பள்ளி மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளியில் படித்தார். அங்கு அவர் கிங்ஸ் ஸ்காலராக இருந்தார். அவர் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல்  படித்து  பட்டம் பெற்றார் மற்றும் அங்கேயே உதவித்தொகையும்  பெற்றார். அவர் ஒரு பொறியியலாளராக வேண்டும் என்று எண்ணியிருந்தார். ஆண்ட்ரூ ஹக்ஸ்லியின் விருப்பம் என்பது பொறியியலாளர் ஆக வேண்டும் என்பதே.  ஆனால் விருப்பத் தேர்வை நிறைவேற்ற பாடத்தை எடுத்த பிறகு உடலியலுக்கு மாறினார். 

நரம்பு தூண்டுதல் - கண்டுபிடிப்பு

ஆண்ட்ரூ ஹக்ஸ்லி கேம்பிரிட்ஜில் நுழைந்த பிறகு, 1938-ம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். 1939-ம் ஆண்டு அவர் ஆலன் லாய்ட் ஹோட்கின் டிரினிட்டி கல்லூரியில் பெல்லோஷிப்பைப் பெற அமெரிக்காவிலிருந்து திரும்பினார். மேலும் ஹக்ஸ்லி அங்கேயே அவரது முதுகலை மாணவர்களில் ஒருவரானார். நரம்பு இழைகளுடன் மின் சமிக்ஞைகளை கடத்துவதில் ஹாட்ஜ்கின்(Hodgkin) ஆர்வம் கொண்டிருந்தார். 1935 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் தொடங்கி, அவர் தவளையின் இடுப்புமூட்டு நரம்புகளில் ஆரம்ப அளவீடுகளை செய்தார்.  இது ஒரு எளிய, நீளமான மின்கலமாக நரம்பின் ஏற்றுக்கொள்ளப்பட்ட பார்வை குறைபாடுடையது என்று பரிந்துரைத்தது. ஹாட்ஜ்கின், ஹக்ஸ்லியை தன்னுடன் சேர்ந்து பிரச்சனையை ஆராய அழைத்தார். வேலை சோதனை ரீதியாக சவாலானது. ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், பெரும்பாலான நியூரான்களின் சிறிய அளவு அக்கால நுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றைப் படிப்பதை மிகவும் கடினமாக்கியது. மிகப் பெரிய நியூரான்களைக் கொண்ட நீளமான துடுப்பு உடைய கடற்கரையில் ஒதுங்கும் ஸ்க்விட் எனப்படும் முதுகெலும்பில்லா நத்தையின விலங்கின் ராட்சத ஆக்ஸானைப் பயன்படுத்தி பிளைமவுத்தில் உள்ள கடல் உயிரியல் சங்க ஆய்வகத்தில் ஆய்வு செய்வதன் மூலம் அவர்கள் இதை முறியடித்தனர். இன்றும்கூட அந்த செயல்பாடு என்பது மிகப்பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது. நரம்புத் தூண்டுதல்கள் என்பது ஒரு மில்லி விநாடியின் ஒரு பகுதியை மட்டுமே நீடிக்கும் என்பதால் சோதனைகள் இன்றும் மிகவும் சவாலானவை. அந்த நேரத்தில் அவை நரம்பு முழுவதும் வெவ்வேறு புள்ளிகளில் மாறும் மின் திறனை அளவிட வேண்டியிருந்தது. வோல்டேஜ் கிளாம்ப் (Voltage Clamp) எனப்படும் மின் உடலியல் செயல்பாடு- எலக்ட்ரோபிசியாலஜியின்(Electrophysiology) ஆரம்பகால பயன்பாடுகளில் ஒன்று உட்பட, அவற்றின் சொந்த கட்டுமானம் மற்றும் வடிவமைப்பின் உபகரணங்களைப் பயன்படுத்தி, அயனி மின்னோட்டங்களைப் பதிவு செய்ய முடிந்தது. 1939 ஆம் ஆண்டில், பிளைமவுத்தில் செய்யப்பட்ட வேலைகள் மற்றும் ஒரு நரம்பு இழையின் உள்ளே இருந்து செயல் திறன்களை பதிவு செய்வதில் தங்கள் சாதனையை அறிவித்து நேச்சர் என்ற பத்திரிக்கையில் ஒரு சிறு கட்டுரையை அவர்கள் கூட்டாக வெளியிட்டனர்.

போரில் பணி

அதன்பின்னர் பின்னர் இரண்டாம் உலகப் போர் வெடித்தது, அவர்களின் ஆராய்ச்சி கைவிடப்பட்டது. ஹக்ஸ்லி பிரிட்டிஷ் விமான எதிர்ப்புக் கட்டளையால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டார்.  அங்கு அவர் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளின் ரேடார் கட்டுப்பாட்டில் பணியாற்றினார். பின்னர் அவர் கடற்படை துப்பாக்கி சுடும் பணிக்காக அட்மிரால்டிக்கு மாற்றப்பட்டார், மேலும் பேட்ரிக் பிளாக்கெட் தலைமையிலான குழுவில் பணியாற்றினார். ஹோட்கின், இதற்கிடையில், விமான அமைச்சகத்தில் ரேடார் மேம்பாட்டில் பணியாற்றி வந்தார். ஒரு புதிய வகை துப்பாக்கியைப் பார்ப்பதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டபோது, ​​ஆலோசனைக்காக ஹக்ஸ்லியைத் தொடர்பு கொண்டார். ஹக்ஸ்லி சில ஓவியங்களை வரைந்து அதன் மூலம் சரி  செய்து, ஒரு லேத்தை கடன் வாங்கி, தேவையான பாகங்களைத் தயாரித்தார்.

மீண்டும் ஆய்வு

ஹக்ஸ்லி 1941-ம் ஆண்டு கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் ஆராய்ச்சிக் கூட்டமைப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 இல், போர் முடிவடைந்தவுடன், அவர் இதை எடுத்துக்கொண்டு, நரம்புகள் எவ்வாறு சிக்னல்களை அனுப்புகின்றன என்பதைப் புரிந்துகொள்வதில் ஹாட்கினுடன் தனது ஒத்துழைப்பை மீண்டும் தொடங்க முடிந்தது. பிளைமவுத்தில் தங்கள் பணியைத் தொடர்ந்த அவர்கள், ஆறு ஆண்டுகளுக்குள், தாங்களே உருவாக்கிய உபகரணங்களைப் பயன்படுத்தி நரம்பு செயல்பாடு தொடர்பான சிக்கலைத் தீர்க்க முடிந்தது. தீர்வு என்னவென்றால், நரம்பு தூண்டுதல்கள் அல்லது செயல் திறன்கள், ஃபைபரின் (fibrin) மையப்பகுதிக்கு கீழே பயணிப்பதில்லை. மாறாக ஃபைபரின் வெளிப்புற சவ்வு வழியாக சோடியம் அயனிகளின் அடுக்கை அலைகளாகப் பயன்படுத்தி உள்நோக்கி பரவும் துடிப்பு மற்றும் பொட்டாசியம் அயனிகள் வீழ்ச்சியின்போது பரவுகின்றன என்று அறிந்தனர். இதுதான் ஒரு துடிப்பின் விளிம்பு. 1952 ஆம் ஆண்டில், செயல் திறன்கள் எவ்வாறு பரவுகின்றன என்பது பற்றிய அவர்களின் கோட்பாட்டை அவர்கள் வெளியிட்டனர். அதில் அவர்கள் உயிர் வேதியியலில் ஆரம்பகால கணக்கீட்டு மாதிரிகளில் ஒன்றையும் விவரிக்கின்றனர். அடுத்த நான்கு பத்தாண்டுகளில் அவர்கள் நியூரோபயாலஜியில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மாதிரிகளின் அடிப்படையை இந்த மாதிரி உருவாக்குவதை வெளியிட்டனர்.

உடலியல் ஆசிரியர்

1952 ஆம் ஆண்டில், செயல் திறன்கள் பற்றிய பணியை முடித்த ஹக்ஸ்லி, கேம்பிரிட்ஜில் உடலியல் பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார். மேலும் அவர் அங்கிருந்த  மேலும் மற்றொரு கடினமான, தீர்க்கப்படாத பிரச்சனையிலும் ஆர்வம் காட்டினார்: தசை எவ்வாறு சுருங்குகிறது?  தசையின் செயல்பாட்டைப் புரிந்துகொள்வதில் முன்னேற்றம் அடைய, சுருக்கத்தின்போது இழைகளின் நெட்வொர்க் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கவனிப்பதற்கான புதிய வழிகள் தேவைப்பட்டன. உலகப்போருக்கு முன்பு, அவர் குறுக்கீடு நுண்ணோக்கிக்கான ஆரம்ப வடிவமைப்பில் பணிபுரிந்தார். அந்த நேரத்தில் அனைத் செயல்பாட்டை அவர் அசல் என்று நம்பினார். இருப்பினும் அது 50 ஆண்டுகளுக்கு முன்பு முயற்சி செய்யப்பட்டு கைவிடப்பட்டது. எனினும், அவர், குறுக்கீடு நுண்ணோக்கி வேலை செய்ய மற்றும் பெரிய விளைவு தசை சுருக்கம் பிரச்சனை அதை விண்ணப்பிக்க முடிந்தது. வழக்கமான நுண்ணோக்கிகளைக் காட்டிலும் அதிக துல்லியத்துடன் தசைச் சுருக்கத்தை அவரால் பார்க்க முடிந்தது, மேலும் நார் வகைகளை மிக எளிதாக வேறுபடுத்தி அறிய முடிந்தது. 1953 வாக்கில், ரோல்ஃப் நீடர்கெர்க்கின் உதவியுடன், அவர் தசை இயக்கத்தின் அம்சங்களைக் கண்டறியத் தொடங்கினார். அந்த நேரத்தில், ஹக் ஹக்ஸ்லி மற்றும் ஜீன் ஹான்சன் ஆகியோர் இதேபோன்ற கவனிப்புக்கு வந்தனர். ஜோடிகளாக எழுதப்பட்ட, அவர்களின் கட்டுரைகள் 22 மே 1954 இல் நேச்சர் இதழில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டன. இவ்வாறு நான்கு பேர் தசைச் சுருக்கங்களின் நெகிழ் இழை கோட்பாடு என்று அழைக்கப்படுவதை அறிமுகப்படுத்தினர். ஹக்ஸ்லி தனது கண்டுபிடிப்புகளையும், சக ஊழியர்களின் பணியையும் ஒருங்கிணைத்து, தசை அமைப்பு மற்றும் தசைச் சுருக்கம் எவ்வாறு ஏற்படுகிறது மற்றும் சக்தியை உருவாக்குகிறது என்பதைப் பற்றிய விரிவான விளக்கமாக 1957 ம் ஆண்டு அவர் வெளியிட்டார். 1966 இல் அவரது குழு கோட்பாட்டின் ஆதாரத்தை வழங்கியத.  மேலும் இதுவே தசை உடலியல் பற்றிய நவீன புரிதலின் அடிப்படையாக இருந்து வருகிறது.

 ஹக்ஸ்லியின் பணிகள்

1953 ஆம் ஆண்டில், ஹக்ஸ்லி மசாசூசெட்ஸில் உள்ள வூட்ஸ் ஹோலில் லாலர் அறிஞராக பணியாற்றினார். அவர் 1959 இல் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பள்ளியில் ஹெர்டர் விரிவுரைகளையும் 1964 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஜெசுப் விரிவுரைகளையும் வழங்கினார். 1961 ம் ஆண்டு அவர் பிரிட்டிஷ் மற்றும் ரஷிய பேராசிரியர்களுக்கு இடையிலான பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக கியேவ் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் இயற்பியல் பற்றி விரிவுரை செய்தார். அவர் 1950 முதல் 1957 வரை உடலியல் இதழின் ஆசிரியராகவும், மூலக்கூறு உயிரியல் இதழின் ஆசிரியராகவும் இருந்தார். 1955 இல், அவர் ராயல் சொசைட்டியின் ஃபெலோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் 1960 முதல் 1962 வரை ராயல் சொசைட்டி கவுன்சிலில் பணியாற்றினார்.

பல்கலைக்கழக பதவி & நோபல் பரிசு

ஹக்ஸ்லி 1960 ஆம் ஆண்டு வரை கேம்பிரிட்ஜில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பதவிகளை வகித்தார். அவர் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் உடலியல் துறையின் தலைவராக ஆனார். அவரது நிர்வாக மற்றும் கற்பித்தல் கடமைகளுக்கு மேலதிகமாக, அவர் தொடர்ந்து தசைச் சுருக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார்.  மேலும் விலங்கு பிரதிபலிப்பான்கள் போன்ற துறையின் மற்ற பணிகளுக்கு தத்துவார்த்த பங்களிப்புகளையும் செய்தார். 1963 ஆம் ஆண்டில், ஹக்ஸ்லியின் பணிகளைப் பாராட்டி, அவருக்கும் நரம்பு உயிரணுவின் அயனி வழிமுறைகள் தொடர்பான கண்டுபிடிப்புகளில் அவரது பங்கிற்காக உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு அவருக்கு கூட்டாக வழங்கப்பட்டது. 1969 இல் அவர் ராயல் சொசைட்டி ஆராய்ச்சி பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவர் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் உடலியல் துறையில் இருந்தார்.

பின்னர் ஹக்ஸ்லி 1980 இல், ராயல் சொசைட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985 வரை அங்கு அவர் பதவி வகித்தார். 1981 இல் அவரது ஜனாதிபதி உரையில், பரிணாமம் பற்றிய டார்வினிய விளக்கத்தை அவர் 1860 இல் தனது மூதாதையராக டி.எச். அவரது நாளின் ஆயர்களை மீறி, சர் ஆண்ட்ரூ துரிதமான மாற்றத்தின் காலகட்டத்தின் புதிய கோட்பாடுகளை எதிர்த்தார். 1983 ஆம் ஆண்டில், 44 தோழர்கள் எதிர்ப்புக் கடிதத்தில் கையெழுத்திட்ட பின்னரும், அறிவியலுக்கு அவர் அளித்த ஆதரவின் அடிப்படையில் மார்கரெட் தாட்சரை ஒரு சக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கும் சங்கத்தின் முடிவை அவர் ஆதரித்தார்.

இறுதிவரை ஆசிரியர்

ஹக்ஸ்லி 1984 ஆம் ஆண்டில், அவருடைய நீண்டகால ஒத்துழைப்பாளரான சர் ஆலன் ஹோட்கினுக்குப் பிறகு அவர் மாஸ்டர் ஆஃப் டிரினிட்டியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது நியமனம், மாஸ்டர் ஆஃப் டிரினிட்டி அலுவலகம், ஒரு விஞ்ஞானி மற்றும் ஒரு கலை மனிதன் என இடையே மாறி மாறி வரும் பாரம்பரியத்தை உடைத்தது. அவர் 1990 வரை மாஸ்டர் மற்றும் டிரினிட்டி கல்லூரியில்,  நோபல் பரிசு வென்றவர்கள் என்று நேர்காணல்களை நினைவுபடுத்த விரும்பினார். கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில், உடலியல், இயற்கை அறிவியல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் கல்வி கற்பிப்பவராக அவர் இறக்கும் வரை தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். 1980 ம் ஆண்டு அவர் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் சக உறுப்பினராகவும் இருந்தார்.

ஹோட்கினுடனான தனது சோதனைப் பணியிலிருந்து, ஹக்ஸ்லி வேறுபட்ட சமன்பாடுகளின் தொகுப்பை உருவாக்கினார், இது நரம்பு தூண்டுதல்களுக்கான கணித விளக்கத்தை வழங்கியது - "செயல் திறன்". விலங்கு நரம்பு மண்டலங்களின் செயல்பாட்டிற்கு பொறுப்பான மின்னழுத்த உணர்திறன் சவ்வு சேனல்களில் தற்போதைய அனைத்து வேலைகளுக்கும் இந்த வேலை அடித்தளத்தை வழங்கியது. முற்றிலும் தனித்தனியாக, அவர் மயோசின் (Myosin) "குறுக்கு பாலங்கள்" (cross-bridges) செயல்பாட்டிற்கான கணித சமன்பாடுகளை உருவாக்கினார்.  இது ஆக்டின் மற்றும் மயோசின் இழைகளுக்கு இடையில் நெகிழ் சக்திகளை உருவாக்குகிறது, இது எலும்பு தசைகளின் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த சமன்பாடுகள் தசைச் சுருக்கத்தைப் புரிந்துகொள்வதற்கான முற்றிலும் புதிய முன்னுதாரணத்தை முன்வைத்தன. இது பாக்டீரியாவின் நிலைக்கு மேலே உள்ள செல்களால் உற்பத்தி செய்யப்படும் கிட்டத்தட்ட அனைத்து இயக்கங்களையும் புரிந்து கொள்ள நீட்டிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் உடலியல் நிபுணர் ராபர்ட் ஸ்டாம்ப்ளியுடன், ஹக்ஸ்லி சேர்ந்து, மயிலினேட்டட் நரம்பு இழைகளில் உப்பு கடத்துதல் இருப்பதை அவர் நிரூபித்தார்.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

ஹக்ஸ்லி, ஆலன் ஹோட்கின் மற்றும் ஜான் எக்லெஸ் ஆகியோர் கூட்டாக 1963 ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்றனர். நரம்பு உயிரணு சவ்வின் புற மற்றும் மையப் பகுதிகளில் தூண்டுதல் மற்றும் தடுப்பதில் ஈடுபட்டுள்ள அயனி வழிமுறைகள் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக பெற்றனர். ஹக்ஸ்லி மற்றும் ஹாட்ஜ்கின் ஆகியோர் நரம்பு செயல் திறன்கள், ஒரு மைய நரம்பு மண்டலத்தால் ஒருங்கிணைக்கப்படும் ஒரு உயிரினத்தின் செயல்பாட்டை செயல்படுத்தும் மின் தூண்டுதல்கள் பற்றிய சோதனை மற்றும் கணிதப் பணிகளுக்கான பரிசை வென்றனர்.

எக்கிள்ஸ் சினாப்டிக் டிரான்ஸ்மிஷனில் முக்கியமான கண்டுபிடிப்புகளை மேற்கொண்டார். ஹக்ஸ்லி 1955 இல் ராயல் சொசைட்டியின் (FRS) ஃபெலோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1973 இல் அதன் கோப்லே பதக்கம் ஹக்ஸ்லிக்கு, அவரது நரம்பு தூண்டுதலின் வழிமுறைகள் மற்றும் தசைச் சுருக்கத்தை செயல்படுத்துதல் பற்றிய அவரது சிறந்த ஆய்வுகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டது. ஹக்ஸ்லி. 1961 இல் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1974 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி ராணி எலிசபெத் II அவர்களால் நைட் பட்டம் பெற்றார். அவர் 1975 ஆம் ஆண்டில் அமெரிக்கன் பிலாசபிகல் சொசைட்டிக்கும் 1979 ஆம் ஆண்டு யுனைடெட் ஸ்டேட்ஸ் நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹக்சிலி நவம்பர் 11, 1983 இல் ஆர்டர் ஆஃப் மெரிட்டில் நியமிக்கப்பட்டார். 1976-77 இல், அவர் பிரிட்டிஷ் அறிவியல் சங்கத்தின் தலைவராகவும், 1980 முதல் 1985 வரை ராயல் சொசைட்டியின் தலைவராகவும் பணியாற்றினார். ஹக்ஸ்லியின் உருவப்படம் டிரினிட்டி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

தனி வாழ்க்கை

ஹக்ஸ்லி,  1947-ம் ஆண்டு, ஜோசலின் "ரிச்செண்டா" காமெல் (Jocelyn "Richenda" Gammell) என்ற பெண்ணை மணந்தார். இவர் மரபியல் நிபுணரான மைக்கேல் பீஸ் மற்றும் ஹெலன் போவன் வெட்ஜ்வுட்  ஆகியோரின் மூத்த மகள். ஹக்ஸ்லி - ரிச்செண்டா  தம்பதியருக்கு  ஒரு மகன் மற்றும் ஐந்து மகள்கள் - ஜேனட் ரேச்சல் ஹக்ஸ்லி (பிறப்பு 20 ஏப்ரல் 1948), ஸ்டீவர்ட் லியோனார்ட் ஹக்ஸ்லி (பிறப்பு 19 டிசம்பர் 1949), கமிலா ரோசாலிண்ட் ஹக்ஸ்லி (பிறப்பு 12 மார்ச் 1952), எலினோர் புரூஸ் ஹக்ஸ்லி (பிறப்பு 21 பிப்ரவரி 1959), ஹென்ரிட்டா சிதர் ஹக்ஸ்லி (பிறப்பு 25 டிசம்பர் 1960), மற்றும் கிளேர் மார்ஜோரி பீஸ் ஹக்ஸ்லி (பிறப்பு 4 நவம்பர் 1962).

இறப்பு

ஹக்ஸ்லி 2012-ம் ஆண்டு மே மாதம் 30ம் நாள், அன்று தனது 95-வது வயதில் வயது மூப்பினால் இறந்தார். அவர் தனது ஆறு குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் கொள்ளுப் பேரக்குழந்தைகளுடன் இறுதிவரை மகிழ்வுடன் வாழ்ந்தார். அவரது மனைவி ரிச்செண்டா, லேடி ஹக்ஸ்லி 2003 இல் 78 வயதில் இறந்தார். டிரினிட்டி கல்லூரி சேப்பலில் 13 ஜூன் 2012 அன்று ஹக்ஸ்லியின் இறுதிச் சடங்கு நடைபெற்றது, அதைத் தொடர்ந்து ஒரு தனிப்பட்ட இடத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது; தனி கல்லறை அமைக்கப்பட்டது. 

(நவ. 22 - ஆண்ட்ரூ ஹக்ஸ்லி பிறந்தநாள்)

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்]



Read in source website

கல்லூரி ராகிங், மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளது. ஒடிசாவில், ராகிங் என்ற பெயரால் கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். அதுபோல் தமிழகத்தில் வேலூரில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மூத்த மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் 1996இல் நடந்த நாவரசு கொலை, ராகிங்கின் மோசமான விளைவுக்கு உதாரணம். இதைத் தொடர்ந்து, 1997இல் தமிழ்நாட்டில் ராகிங் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. 2001இல் உச்ச நீதிமன்றம் ராகிங்கைத் தடைசெய்தது.

ஆங்கிலக் கலாச்சாரமாகப் பிரிட்டிஷ் இந்தியாவில் அறிமுகமான ராகிங், மாணவர்களை வசீகரிக்கும் ஒரு கலாச்சாரமாக வளர்ந்தது. ராகிங்கை வளர்த்ததில் திரைப்படங்களுக்கு முக்கியப் பங்குண்டு. 2007இல் வெளியான ஓர் அறிக்கை, 7 ஆண்டுகளில் 31 மாணவர்கள் ராகிங்கினால் இந்தியாவில் உயிரிழந்ததாகத் தெரிவித்தது.



Read in source website

மருத்துவ விபத்துகளைத் தடுப்பது, அதற்கான வழிமுறைகளை உருவாக்கி அமல்படுத்துவது என்பது ஒரு தனி அறிவியல் பிரிவாகும். பிரிட்டிஷ் மருத்துவக் கவுன்சில் மதிப்பீட்டின்படி பிரிட்டனில் 2018-19 ஆம்ஆண்டு மட்டும் 240 கோடி பவுண்டுகள் மருத்துவ விபத்துகளுக்காக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் மருத்துவ விபத்துகளுக்காக லட்சக்கணக்கான வழக்குகள் ஆண்டுதோறும் பதிவாகின்றன.

ஆனால், எந்தவொரு நாட்டிலும் மருத்துவ விபத்துகள் ஒரு கிரிமினல் குற்றமாகக் கருதப்படவில்லை. நோயாளி ஒருவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பர்கள், மருந்து நிறுவனங்கள், மருத்துவக் கருவிகளைத் தயாரிப்போர், அவற்றைப் பராமரிப்போர் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தோர் ஒன்றிணைந்து பங்கேற்கின்றனர்.

இவர்களின் செயல்பாடுகளில் ஓரிடத்தில் சிறு தவறு நேர்ந்தால்கூட, அது இறுதியில் நோயாளியைப் பாதிக்கிறது. இவ்வாறான ஒரு சிக்கலான தொடர் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு உலகம் முழுவதும் சவாலாக உள்ளது. ஒவ்வொரு மருத்துவமனையும் இந்த மருத்துவத் தொடர் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த லட்சக்கணக்கான அமெரிக்க டாலர்களைச் செலவிடுவதாக, ‘லீன் மருத்துவமனைகள்’ நூலாசிரியர் மார்க் கிரபன் தெரிவிக்கிறார்.

குற்றமாக்குதல்: விபத்து ஒன்றை யாரும் குற்றமாக்க முடியாது; விபத்து என்பது விபத்து மட்டுமே. ஒரு சம்பவத்தைக் குற்றம் என வரையறுக்க, அதற்கு உள்நோக்கம் இருக்க வேண்டும். மருத்துவ விபத்துகளுக்கு உள்நோக்கம் என்கிற ஒன்று இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறான மருத்துவ விபத்துகளைக் குற்றமாக்குதல் என்பது சமூகத்தில் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

இளம் கால்பந்தாட்ட வீராங்கனை மரணமடைந்த சமீபத்திய வருந்தத்தக்க நிகழ்வில், தொடர்புடைய மருத்துவக் குழுவினரின் ஒளிப்படங்களைக் காட்சி ஊடகங்களும் சமூக ஊடகங்களும் போட்டிபோட்டுப் பகிர்ந்தது, அவர்களுக்கு இயற்கை வழங்கியுள்ள அடிப்படை நீதிக்கு (Natural Justice) எதிரானதாகும். இவ்வாறான குற்றமாக்குதல் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்களிடையே தேவையற்ற கலக்கத்தை உருவாக்கியுள்ளது.

மருத்துவச் சிகிச்சை அளிப்பதை ஒரு வேலை என்று மட்டும் கருத இயலாது. கூடுதலாகத் தனிநபரின் ஈடுபாடும் அதில் முக்கியப் பங்குவகிக்கிறது. அறுவை அரங்கில் எட்டு மணி நேரம் ஒரே இடத்தில் நின்றுகொண்டே அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். மயக்க அளவைக் கண்காணிக்க வேண்டும் என்பதை ஒரு வேலையாக மட்டுமே யாரும் செய்ய இயலாது; கட்டுக்கடங்காத வேட்கையால் மட்டுமே அது சாத்தியமாகும். ஆகவே, மருத்துவ விபத்துகளை ஒட்டி உருவாக்கப்படும் இவ்வாறான தேவையற்ற அச்சம், களத்தில் மோசமான அணுகுமுறையையே உருவாக்கும்.

எந்தவொரு மருத்துவர் குழுவும் இளம் கால்பந்தாட்ட வீராங்கனை ஒருவரின் காயம்பட்ட கால்களைச் சரிசெய்து அனுப்புவதையே சாதனையாகக் கருதும், விரும்பவும்செய்யும். ஆனால், எதிர்பாராத ஒரு விபத்து சில தனிநபர்களுக்கு எதிராகப் பெரிதாக்கப்படும்போது, நோயாளிகளுக்கான சிகிச்சைகளைவிடத் தங்களைக் காத்துக்கொள்வதே முக்கியம் என்று கருதும் மனநிலையையே மருத்துவப் பணியாளர்களிடையே உருவாக்கும்.

இந்தியா வளர்ந்துவரும் நாடு. குறைந்த கால அளவில் சுகாதாரத் துறையில் தமிழ்நாடு பெரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. தேவைக்குக் குறைவான பணியாளர்களையும் கட்டமைப்பையும் கொண்டு, கடைசி நோயாளிவரை இங்கே சிகிச்சை வழங்கப்படுகிறது. இப்போது பரவலாகப் பேசப்படும் மருத்துவ நெறிமுறைகள், தற்போதைய சூழலில் நம் நாட்டுக்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லை. வளர்ந்த நாடுகளில் மருத்துவர்கள் 10 முதல் 20 நோயாளிகளை மட்டுமே ஒரு நாளில் சந்திக்கின்றனர்; பிறரைக் காத்திருப்புப் பட்டியலில் வைக்கின்றனர்.

இங்கிலாந்தின் அரசு மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சையின்போது மயக்கவியல் நிபுணர்கள் இரண்டு பேர் கட்டாயம் இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் இங்கு நடைமுறைப்படுத்தினால் லட்சக்கணக்கானோர் காத்திருப்புப் பட்டியலுக்குத் தள்ளப்படுவார்கள். வளர்ந்த நாடுகளில் உள்ள இவ்வாறான நெறிமுறைகள், இந்தியாவில் மக்களுக்கு விரோதமாகவே முடியும்.

மருத்துவ விபத்துகளின்மீது காவல் துறை 304 ஏ பிரிவில் தன்னிச்சையாக வழக்குப் பதியக் கூடாது, கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என ‘ஜேக்கப் மேத்யு எதிர் பஞ்சாப் மாநில அரசு வழக்’கில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவ விபத்துகளைக் கிரிமினல் நடவடிக்கைபோல் கையாளக் கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது.

சமூகநீதி மாநிலம்: சுகாதாரக் குறியீடுகளில் வட மாநிலங்களைவிட தமிழகம் முன்னேறியிருப்பதற்கு அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய பணியாளர்களைத் தமிழக சுகாதாரத் துறை கொண்டுள்ளது ஒரு முக்கியக் காரணம். அரசு, தனியார் என இரண்டு இடங்களிலும் மருத்துவ விபத்துகள் நடக்கின்றன. ஆனால், அரசு மருத்துவமனைகளில் நிகழும் மருத்துவ விபத்துகள் மட்டும் பாரபட்சமாக, அரசியல் காரணங்களுக்காக ஊதிப்பெருக்கப்படுகின்றன. இது அரசுக் கட்டமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைப்பதோடு, தனியார்மயமாக்கலை ஆதரிப்பதிலேயே முடிகிறது.

மருத்துவப் பணியாளர்கள் மக்களை மரியாதையுடன் நடத்துவது, நோயாளிகள் - மருத்துவப் பணியாளர்கள் இடையேயான பரஸ்பர நம்பிக்கை, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் மருத்துவக் கட்டமைப்பில் சமூகநீதியின்வழி பிரதிநிதித்துவப்படுத்துதல், தேவையான அளவுக்குப் பணியாளர்கள்-கட்டமைப்புகள், விபத்துகளுக்கான நியாயமான இழப்பீடுகள், மருத்துவத் துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவது ஆகியவையே முறையான மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கும்.

மாறாக, மருத்துவப் பணியாளர்களின் செயல்பாடுகளைக் குற்றமாக்குதல், அச்சப்படுத்தும் சூழலை உருவாக்குதல், விபத்துக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகள், அரசியல் காரணங்களுக்காக ஊதிப்பெருக்குதல், ‘கண்ணுக்குக் கண்’ என வாதிடும் போக்கு ஆகியவை மருத்துவக் கட்டமைப்பை நிரந்தரமாக வீழ்த்திவிடும். உலகின் எந்தப் பகுதியிலும் மருத்துவ விபத்துகளை முற்றிலும் தடுப்பது இன்றுவரை சாத்தியப்படவில்லை. அறிவியலின் தொடர் வளர்ச்சியில் ஒருநாள் அது சாத்தியமாகும்.

கோடிக்கணக்கான ரூபாய் பொருட்செலவில் உருவான சந்திரயான் 2-இன் தரையிறங்கு கலம் அதன் இலக்கை அடையாதது விபத்தா அல்லது அலட்சியப் போக்கில் அமைந்த குற்றமா என்று கேட்டால், அதனை விபத்து என்றே வரையறுக்கிறோம். மருத்துவ அறிவியலும் விண்வெளிப் பயணத்துக்கு இணையான ஒரு சிக்கலான நடவடிக்கைதான். மருத்துவப் பணியாளர்கள் என்போர் மக்களின் அங்கம் என்பதையும், மக்கள் அங்கத்தினர்களே மருத்துவப் பணியாளர்களாக உருவாகியுள்ளனர் என்பதை இரண்டு தரப்பினரும் உணர வேண்டும்; அப்போதுதான் விபத்தில்லா மருத்துவம் சாத்தியப்படும்.

எந்தவொரு மருத்துவர் குழுவும் இளம் கால்பந்தாட்ட வீராங்கனை ஒருவரின் காயம்பட்ட கால்களைச் சரிசெய்து அனுப்புவதையே சாதனையாகக் கருதும், விரும்பவும்செய்யும்! - சட்வா தங்கராசு மருத்துவர், ‘போலி அறிவியல்,
மாற்று மருத்துவம் & மூடநம்பிக்கை’ நூலாசிரியர்; தொடர்புக்கு: drsatva@gmail.com



Read in source website

ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்றப் பணித்திட்டப் பேரவையின் (UNFCCC) 27ஆவது காலநிலை உச்சிமாநாடு (COP27), எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக்கில் நடந்துமுடிந்திருக்கிறது. நவம்பர் 6 தொடங்கி 18 வரை திட்டமிடப்பட்டிருந்த இந்த மாநாடு, இறுதி முடிவுகளுக்கான ஒருமித்த கருத்துகள் எட்டப்படாததால், இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டு 20ஆம் தேதி முடிவுக்குவந்தது.

190 நாடுகளைச் சேர்ந்த 90 தலைவர்கள், 35,000 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டின் தொடக்கத்திலேயே சர்ச்சைகள் எழுந்தன. கரிம உமிழ்வுகளை வெளியிட்டபடி நூற்றுக்கணக்கான தனியார் ஜெட் விமானங்களில் மாநாட்டின் பிரதிநிதிகள் வந்திறங்கியது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.



Read in source website