ஜி7 மாநாட்டில் பங்கேற்க விரைவில் பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி செல்ல உள்ளார்.
ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி விரைவில் ஜெர்மனி செல்கிறார்.
ஜுன் 26, 27 தேதிகளில் நடக்கும் மாநாட்டில் சுற்றுச்சூழல், பருவநிலை, எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, பாலின சமத்துவம், குடியரசு மற்றும் சர்வதேச உறவு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்க அர்ஜெண்டினா, இந்தோனேசியா, செனகல் மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணத்தை முடித்தபின் ஜுன் 28 ஆம் தேதி பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளார். அங்கு மறைந்த அதிபா் ஷேக் காலிஃபா பின் சயீது அல் நயான் மறைவுக்கு தனிப்பட்ட முறையில் துக்கம் அனுசரிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி: மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான சுற்றுச்சுழல் அனுமதி விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடியில் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கர்நாடக அரசின் விண்ணப்பத்தை பரிசீலனையில் இருந்து மத்திய சுற்றுச்சுழல் துறை நீக்கியுள்ளது. நீர்வளத்துறை அமைச்சகமே அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை முடிவு செய்யும் என்று நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்தால் மட்டுமே சுற்றுச்சுழல் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி ஒருவர் ஓட்டப்பந்தயதில் பங்கேற்றதோடு மட்டுமல்லாமல், புதிய சாதனையையும் நிகழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஞாயிறன்று தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற மூதாட்டி ராம்பாய், 100 மீட்டர் ஓட்டப் பந்தய தொலைவை 45.40 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
100 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இந்த ஓட்டப்பந்தயத்தில், ராம்பாய் மட்டுமே பங்கேற்று ஓடியிருந்தார். இதில் அவர் புதிய சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இவ்வளவு வயதில், அவர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி புதிய சாதனை படைப்பதற்குக் காரணம் அவர் எடுத்துக் கொள்ளும் உணவுதான் காரணம் என்கிறார். தினமும் தான் கோதுமை, பால், தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
சுத்த சைவமான ராம்பாய், நாள்தோறும் 250 கிராம் நெய் மற்றும் 500 கிராம் தயிரை உணவில் சேர்த்துக் கொள்வார் என்றும் கூறுகிறார். அதுமட்டுமல்ல, நாள்தோறும் இரண்டு வேளை 500 மில்லி லிட்டர் பால் குடிப்பாராம். கோதுமை ரொட்டிகளை விரும்பி சாப்பிடும் ராம்பாய், அரிசி உணவை அவ்வளவாக எடுத்துக் கொள்வதில்லையாம்.
நாள்தோறும் வயலில் வேலை செய்து உடற்கட்டை பேணுவதோடு, 3 முதல் 4 நாள்கள் தினமும் ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதாகவும் உற்சாகம் குறையாமல் கூறுகிறார்.
பாகிஸ்தானின் சில பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வானிலை ஆய்வு மைய தகவலின்படி,
இன்று அதிகாலை 1.54-க்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்டிலிருந்து 44 கி.மீ தென்மேற்கே 50.8 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
பெஷாவர், இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பஞ்சாபின் பிற பகுதிகளிலும், கைபர்-பக்துன்க்வா மாகாணங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
கடந்த ஜூன் 17 அன்று நாட்டின் சில பகுதிகளில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஒரு வாரத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.
2005ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 74,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காணொலி வாயிலாக நடக்கவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
14-ஆவது பிரிக்ஸ் மாநாட்டை சீனா வரும் 23, 24 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடத்தவுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ""சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 14-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் காணொலி வாயிலாகக் கலந்து கொள்ளவுள்ளார். ஜூன் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள உயர்நிலைக் கூட்டத்தில் சர்வதேச சூழல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், சுற்றுச்சூழல், அறிவியல்-தொழில்நுட்பம், புத்தாக்கம், வேளாண்மை, தொழிலகக் கல்வி-பயிற்சி உள்ளிட்டவற்றில் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே நிலவும் ஒத்துழைப்பு குறித்து மாநாட்டின்போது விவாதிக்கப்படவுள்ளது.
கரோனா தொற்று பரவலை எதிர்கொள்ளுதல், பன்னாட்டு அமைப்புகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, சர்வதேச பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா.வுக்கான இந்தியத் தூதராக, மூத்த வெளியுறவு அதிகாரி ருசிரா கம்போஜ் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
தற்போது அந்தப் பொறுப்பை வகித்து வரும் டி.எஸ்.திருமூர்த்திக்குப் பதிலாக அவர் அந்தப் பதவியை ஏற்கவுள்ளார்.
1987-ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான அவர், தற்போது பூடானுக்கான இந்தியத் தூதராக இருந்து வருகிறார். ஐ.நா.வுக்கான இந்தியத் தூதராக ருசிரா கம்போஜ் கூடிய விரைவில் பொறுப்பேற்பார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் எளிமையான முறையில் ஓய்வூதியம் பெறும் வகையில், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து ஒருங்கிணைந்த வலைதளம் ஏற்படுத்தப்படும் என மத்திய பணியாளர், மக்கள் குறைதீர், ஓய்வூதியத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தத் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு விவரம்:
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வங்கியாளர்கள் விழிப்புணர்வு மாநாட்டின் ஒரு பகுதியாக ஓய்வூதிய கொள்கை சீர்திருத்தம், ஓய்வூதிய விநியோக டிஜிட்டல் மயமாக்கம் தொடர்பாக அமர்வுகள் நடைபெற்றன. குறிப்பாக ஓய்வூதியதாரர்களுக்கான வருமான வரி பிரச்னை தொடர்பாகவும், ஆயுள் சான்றிதழை ஆன்லைனில் சமர்ப்பிப்பது குறித்தும் சிறப்பு அமர்வுகள் நடைபெற்றன.
இந்தக் கூட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் தங்குதடையின்றி ஓய்வூதியம் பெறும் நோக்கில், தற்போது நடைமுறையில் உள்ள பணியாளர், மக்கள் குறைதீர், ஓய்வூதியத் துறை வலைதளத்தை பாரத ஸ்டேட் வங்கியின் வலைதளத்துடன் இணைத்து ஒருங்கிணைந்த வலைதளம் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டுமென முடிவு எடுக்கப்பட்டது.
ஓய்வூதியதாரர் ஆயுள் சான்றிதழுக்கான முக அடையாளம் காணும் எண்ம தொழில்நுட்பம் குறித்து வங்கிகளால் விரிவாக விளம்பரப்படுத்தப்படும். ஓய்வூதியர்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் எண்ம ஆயுள் சான்றிதழும், முக அடையாள தொழில்நுட்பமும் திருப்புமுனையாக அமையும். இந்தத் திட்டங்களின் வாயிலாக ஓய்வூதியதாரர்களின் அன்றாட வாழ்க்கை இலகுவாகும். இந்த இலக்கு மிகப்பெரிய அளவில் எட்டப்படும்.
இதேபோல பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து மேலும் நான்கு விழிப்புணர்வுக் கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் கடன் அட்டை மற்றும் பற்று அட்டை தொடர்பான விதிமுறைகளை அமல்படுத்துவதை மேலும் 3 மாதங்களுக்கு தள்ளிவைப்பதாக ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் ஒப்புதலின்றி கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மற்றும் பற்று அட்டை (டெபிட் கார்ட்) ஆகியவற்றை வழங்கவோ மற்றும் செயல்படுத்தவோ கூடாது என தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விதிமுறையை நிகழாண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அனைத்தும் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நிதித் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில் அந்த விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.
அதன்படி, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிறுவனங்கள் அனைத்தும் நிகழாண்டு அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து கடன் மற்றும் பற்று அட்டை தொடர்பான புதிய விதிமுறைகளை கண்டிப்பாக அமலாக்கத்துக்கு கொண்டு வர வேண்டும் என ரிசர்வ் வங்கி அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளை பதிவேட்டில் இருந்து நீக்க தலைமைத் தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா் அனுப் சந்திர பாண்டே தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஏற்கெனவே கடந்த மே 25-இல் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத 87 கட்சிகளை நீக்க முடிவு செய்யப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, தற்போது மேலும் 111 அரசியல் கட்சிகளை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சரியான முகவரியை சமா்ப்பிக்க தவறியது, முகவரி மாற்றம் குறித்து தெரிவிக்காதது உள்ளிட்ட காரணங்களால், பதிவேட்டில் இருந்து அவை நீக்கப்படவுள்ளன. ஏற்கெனவே மே 25-இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, இந்த அரசியல் கட்சிகள் சரியான முகவரியில் இல்லாதது கண்டறியப்பட்டதாலும், தோ்தல் ஆணையத்தால் அனுப்பப்பட்ட கடிதங்கள் திரும்பி வந்ததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அறிவிக்கை வெளியான 30 நாள்களில், ஆண்டுவாரியான தணிக்கை கணக்குகள், தோ்தல் செலவு அறிக்கை, நிதிப் பரிவா்த்தனை உள்ளிட்ட முறையான ஆவணங்களை தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்த ஆசியா ஓசியானியா ஓபன் பாரா பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 6 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது.
போட்டியின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, ஆடவருக்கான 88 கிலோ பிரிவில் சுதிா் தனது சிறந்த முயற்சியாக 214 கிலோ எடையைத் தூக்கி 3-ஆம் இடம் பிடித்தாா். ஜோா்டானின் அப்துல்கரீம் கதாப் 241 கிலோவுடன் தங்கமும், சீனாவின் ஜிக்ஸியாங் யே 233 கிலோவுடன் வெள்ளியும் வென்றனா். இப்போட்டியில் பதக்கம் வென்ன் மூலம் சுதிா், சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதிபெற்றாா்.
சுதிருக்கு முன்பாக, அசோக் (65 கிலோ), பரம்ஜீத் குமாா் (49 கிலோ), சகினா காட்டூன் (45 கிலோ) ஆகியோரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளனா். சா்வதேச தரவரிசையிலும் இவா்கள் முன்னேற்றத்தை சந்திப்பாா்கள் என்பதால், 2024 பாராலிம்பிக் போட்டிக்கும் இவா்கள் தகுதிபெற வாய்ப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது.
டென்னிஸ் காலண்டரில், ஒரு ஆண்டில் நடைபெறும் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், வரும் 27-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதற்கான இரு பாலா் தகுதிச்சுற்று ஆட்டங்கள் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்டமாக பங்கேற்பாளா்களுக்கான போட்டித் தரவரிசையும் (சீட்) செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புல்தரையில் நடைபெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் குறித்த சில விவரங்கள், இதோ.
போட்டி தொடக்கம்: 1877
நடப்பு ஆண்டு போட்டி: 135-ஆவது சீசன்
நடப்பு சாம்பியன்கள்
ஆடவா்: நோவக் ஜோகோவிச் (சொ்பியா)
மகளிா்: ஆஷ்லி பா்ட்டி (ஆஸ்திரேலியா) (ஓய்வு)
ஆடவா் இரட்டையா்: நிகோலா மெக்டிச்/மேட் பாவிச் (குரோஷியா)
மகளிா் இரட்டையா்: சியே சுவெய் (தைவான்)/எலிஸ் மொ்டன்ஸ் (பெல்ஜியம்)
கலப்பு இரட்டையா்: டெஸைரே கிராவ்ஸிக் (அமெரிக்கா)/நீல் ஸ்குப்ஸ்கி (இங்கிலாந்து)
மொத்த பரிசுத் தொகை: ரூ.386 கோடி
ஒற்றையா் பிரிவு
சாம்பியன்: ரூ.19.16 கோடி
ரன்னா் அப்: ரூ.10.06 கோடி
அரையிறுதி: ரூ.5.12 கோடி
காலிறுதி: ரூ.2.96 கோடி
4-ஆவது சுற்று: ரூ.1.82 கோடி
3-ஆவது சுற்று: ரூ.1.14 கோடி
2-ஆவது சுற்று: ரூ.74 லட்சம்
முதல் சுற்று: ரூ.47 லட்சம்
இரட்டையா் பிரிவு
சாம்பியன்: ரூ.5.17 கோடி
ரன்னா் அப்: ரூ.2.58 கோடி
அரையிறுதி: ரூ.1.29 கோடி
காலிறுதி: ரூ.64 லட்சம்
3-ஆவது சுற்று: ரூ.31 லட்சம்
2-ஆவது சுற்று: ரூ.19 லட்சம்
முதல் சுற்று: ரூ.11 லட்சம்
சாதனைகள்...
அதிகமுறை சாம்பியன்
ஒற்றையா்: ரோஜா் ஃபெடரா் (சுவிட்ஸா்லாந்து) (8)
இரட்டையா்: டாட் வூட்பிரிட்ஜ் (ஆஸ்திரேலியா) (9)
வயதான சாம்பியன்
ரோஜா் ஃபெடரா் (சுவிட்ஸா்லாந்து) (35 வயது/ 2017)
இளம் சாம்பியன்
போரிஸ் பெக்கா் (ஜொ்மனி) (17 வயது/ 1985)
குறைந்த ரேங்கிங்குடன் சாம்பியன்
கோரான் இவானிசெவிச் (125-ஆவது இடம்) (2001)
கடைசியாக சாம்பியன் ஆன உள்நாட்டு போட்டியாளா்
ஆண்டி முா்ரே (2016)
அதிக ஆட்டங்களில் வெற்றி
ரோஜா் ஃபெடரா் (சுவிட்ஸா்லாந்து) (105)
நடப்பு ஆண்டுக்கான டாப் 10 போட்டித்தரவரிசை
ஆடவா்
1. நோவக் ஜோகோவிச் (சொ்பியா)
2. ரஃபேல் நடால் (ஸ்பெயின்)
3. கேஸ்பா் ரூட் (நாா்வே)
4. ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்)
5. காா்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்)
6. ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே (கனடா)
7. ஹியூபா்ட் ஹா்காக்ஸ் (போலந்து)
8. மேட்டியோ பெரெட்டினி (இத்தாலி)
9. கேமரூன் நோரி (இங்கிலாந்து)
10. யானிக் சின்னா் (இத்தாலி)
மகளிா்
1. இகா ஸ்வியாடெக் (போலந்து)
2. ஆனெட் கொன்டவிட் (எஸ்டோனியா)
3. ஆன்ஸ் ஜாபியூா் (டுனீசியா)
4. பௌலா பதோசா (ஸ்பெயின்)
5. மரியா சக்காரி (கிரீஸ்)
6. கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு)
7. டேனியேல் காலின்ஸ் (அமெரிக்கா)
8. ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா)
9. காா்பின் முகுருஸா (ஸ்பெயின்)
10. எம்மா ரடுகானு (இங்கிலாந்து)
‘சென்டா் கோா்ட்’ நூற்றாண்டு
விம்பிள்டன் போட்டி நடத்தப்படும் டென்னிஸ் கோா்ட்டுகளில் பிரதானமானதாக இருக்கும் ‘சென்டா் கோா்ட்’ இந்த ஜூன் மாதத்துடன் நூற்றாண்டை எட்டுகிறது. அதைக் கொண்டாடும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் மேற்கொண்டுள்ளனா்.
அதன்படி, 100 ஆண்டுகளாக சென்டா் கோா்ட்டுடன் தொடா்புடைய தரவுகள் அடங்கிய தொகுப்பை வெளியிடுவது, சென்டா் கோா்ட்டின் சிறந்த தருணத்தை ரசிகா்கள் வாக்கெடுப்பு மூலம் அறிவது, சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது, நூறாண்டுகளாக சென்டா் கோா்ட் கண்ட மாற்றத்தை காட்சிப்படுத்துவது, போட்டியாளா்கள் பயன்படுத்தும் டவல்களில் நூற்றாண்டு கொண்டாட்டத்தை அச்சிடுவது, சிறப்பு போஸ்டா் வெளியீடு உள்ளிட்டவற்றை மேற்கொண்டுள்ளனா்.
இதுதவிர, இறுதி ஆட்டங்களின்போது டாஸ் வீசுவதற்காக பயன்படுத்தப்படும் காயின் பிளாட்டினத்தில் செய்யப்பட்டு, நூற்றாண்டு கொண்டாட்டம் குறித்து அதில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி பதவியேற்றதன் 75-ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாகவும் இந்த முறை கையாளப்படுகிறது.
விம்பிள்டன் போட்டி நடத்தப்படும் ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் அண்டு குரோகெட் கிளப்பில் மொத்தம் டென்னிஸ் கோா்ட்டுகள் உள்ளன. இதில் சென்டா் கோா்ட் மற்றும் நம்பா் 1 கோா்ட் ஆகியவை பிரதானமானவையாகும். பொதுவாக அவை விம்பிள்டன் போட்டியின்போது மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 2012-இல் ஒலிம்பிக் போட்டிக்காகவும் பயன்படுத்தப்பட்டது. இதர போட்டிகள் யாவும் எஞ்சிய 17 கோா்ட்டுகளில் விளையாடப்படுகின்றன.
பிரிட்டன் மற்றும் வேல்ஸில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு கருக்கலைப்புகள் உயர்ந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளன.
2021-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,15,000 பேர் கருக்கலைப்புகள் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சுகாதார மேம்பாட்டுத் துறை அலுவலகத்தின் அறிக்கையின்படி,
சுகாதார தரவுகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளிலேயே கருக்கலைப்பு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா பெருந்தொற்று காலத்தில், அஞ்சல் மூலம் மாத்திரை பெரும் திட்டம் மிகவும் பிரபலமாக இருந்ததால், மருத்துவர்களை நேரில் சந்திக்க இயலாத பல பெண்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்தியாக கூறப்படுகிறது.
சுகாதார அமைச்சர்கள் இந்த திட்டத்தைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும், இதனால் எந்தவித பலனும் ஏற்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது.
பிரிட்டிஷ் கர்ப்ப ஆலோசனை சேவையின் தலைவரான கிளேர் மர்பி, கடந்தாண்டு பதிவு செய்யப்பட்ட கருக்கலைப்பு எண்ணிக்கையில் இந்த கொள்கை திட்டத்துக்குப் பங்கு இருந்திருக்கலாம் என்று பரிந்துரைத்தார்.
கரோனா தொற்றுநோய் மற்றும் அதற்குப் பதிலளிக்கும் வகையில் அரசு ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள், பெண்களின் கர்ப்பத் தேர்வுகளில் தெளிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
தங்களது எல்லை வழியாக குறிப்பிட்ட ரஷியப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு தடைவிதிக்கும் லிதுவேனியாவின் முடிவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்பு கவுன்சில் செயலர் நிக்கோலாய் பேட்ருஷெவ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தங்கள் நாட்டின் இருப்புப் பாதை வழியாக ரஷியாவிலிருந்து கலினின்கிராட் பிராந்தியத்துக்கு குறிப்பிட்ட பொருள்களை எடுத்துச் செல்வதற்கு லிதுவேனியா தடை விதித்துள்ளது.
இது போன்ற செயல்களுக்கு உரிய பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம். பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான திட்டங்களை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் அந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்.
பொருள்கள் போக்குவரத்துத் தடைக்கு ரஷியா ஆற்றவிருக்கும் எதிர்வினை, லிதுவேனிய மக்களை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கும் என்றார் அவர்.
எனினும், லிதுவேனியாவுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
ஐரோப்பிய யூனியன் தூதருக்கு சம்மன்: இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து மாஸ்கோவிலுள்ள ஐரோப்பிய யூனியன் தூதர் மார்கஸ் எடெரெரை ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து தனது கண்டனத்தைத் தெரிவித்தது.
இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷியாவுக்கும் கலினின்கிராட் பகுதிக்கும் இடையிலான சரக்குப் போக்குவரத்தை மீண்டும் சஜக நிலைக்குக் கொண்டு வர வேண்டுமென்று ஐரோப்பிய யூனியன் தூதரிடம் வலியுறுத்தப்பட்டது. அவ்வாறு செய்யத் தவறினால் உரிய எதிர் நடவடிக்கைககள் எடுக்கப்படும் என்று அவரிடம் எச்சரிக்கப்பட்டது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பால்டிக் கடலையொட்டி அமைந்துள்ள ஜெர்மனியின் கலினின்கிராட் பகுதியை ரஷியா கடந்த 1945-ஆம் ஆண்டு இணைத்துக் கொண்டது.
எனினும், ரஷியாவின் மற்ற பகுதிக்கும் கலினின்கிராட் பகுதிக்கும் இடையே லாட்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகள் உள்ளன.
எனவே, லிதுவேனியா வழியாகவே ரயில் மூலம் கலினின்கிராடுக்கு பொருள்கள் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பொருள்கள் ரஷியாவின் பிற பகுதிகளுக்கு கொண்டு வரபப்பட்டன.
இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.
அதனைக் கண்டிக்கும் வகையில், ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது.
அதன் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட பொருள்களை ரஷியாவிலிருந்து கொண்டு வருவதற்கும் வெளியிலிருந்து ரஷியாவுக்குள் கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
அந்தப் பொருளாதாரத் தடையை பின்பற்றியே குறிப்பிட்ட பொருள்களை தங்கள் எல்லை வழியாக ரஷியா கொண்டு செல்ல அனுமதி மறுப்பதாக லிதுவேனியா தெரிவித்துள்ளது.
ரஷியாவுக்கு எதிராக தாங்கள் எந்தத் தடையையும் விதிக்கவில்லை; ஐரோப்பிய யூனியனின் தடை மட்டுமே செயல்படுத்தப்படுகிறது என்று லிதுவேனியா கூறி வருகிறது.
எனினும், இந்த விவகாரத்தில் லிதுவேனியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷியா தற்போது எச்சரித்துள்ளது.
உள்நாட்டில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டை முதல்முறையாக தென் கொரியா செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: முழுக்க முழுக்க தென் கொரியாவிலேயே உருவாக்கப்பட்ட ராக்கெட் மூலம் முதல்முறையாக செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 3 நிலைகளில் இயங்கக் கூடிய ‘நூரி’ என்ற ந்த ராக்கெட் பூமியிலிருந்து 700 கி.மீ. தொலைவில் செயற்கைக்கோளை துல்லியமாக செலுத்தியதாக அதிகாரிகள் கூறினா்.
இதன் மூலம், செயற்கைக்கோள்களை புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்துவதற்கான தொழில்நுட்பமும் பெரிய வகை ராக்கெட்டுகளை தயாரிக்கும் திறனும் தங்களிடம் இருப்பதை தென் கொரியா நிரூபித்துள்ளது.
அமெரிக்க அரசின் பொருளாளராக பூா்வகுடியைச் சோ்ந்த ஒருவரை அதிபா் பைடன் முதல்முறையாக பரிந்துரைத்துள்ளாா். மரிலின் லின் மலோ்பா என்ற அவா், மோஹெகன் பழங்குடியின அமைப்பின் வாழ்நாள் தலைவராவாா்.
பதிவு பெற்ற மருத்துவப் பணியாளரான அவா் ஏற்கெனவே பல்வேறு அரசுப் பொறுப்புகளை வகித்துள்ளாா். முக்கியத்துவம் வாய்ந்த பொருளாளா் பதவிக்கு அவரைப் பரிந்துரைத்ததுடன், நிதியமைச்சகத்தில் பழங்குடியினா் விவகாரங்களுக்கான புதிய துறையையும் ஜோ பைடன் உருவாக்கியுள்ளாா்.
அமெரிக்க நாணயங்கள் அச்சிடுவது, மத்திய வங்கி நடவடிக்கைகளை பதிவு செய்வது, நிதியமைச்சகத்தின் நுகா்வோா் கொள்கையை மேற்பாா்வையிடுவது போன்ற பணிகளை அரசின் பொருளாளா் மேற்கொள்வாா்.
இந்தியாவில் வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் 5ஜி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 50 கோடியைத் தொடும் என ஸ்வீடனைச் சோ்ந்த தொலைத்தொடா்பு நிறுவனமான எரிக்ஸன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் 2022-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 5ஜி தொலைத் தொடா்பு சேவையை வணிக ரீதியில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த சேவையை பயன்படுத்துவோா் எண்ணிக்கை 50 கோடியாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது, ஒட்டுமொத்த கைப்பேசி வாடிக்கையாளா்களில் 39 சதவீதம்.
ஸ்மாா்ட்போன் விற்பனை மற்றும் அதன் சராசரி பயன்பாடும் சிறப்பான அளவில் அதிகரிக்கும் என்பதால், 2021 இல் மாதத்துக்கு 20 ஜிபியாக இருந்த மொபைல் டேட்டா பயன்பாடு 2027-இல் 50 ஜிபியாக உயரும். இதற்கான ஆண்டு வளா்ச்சி விகிதம் 16 சதவீதமாக இருக்கும்.
உலக அளவில் 2027-ஆம் ஆண்டுக்குள் 5ஜி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 440 கோடியைத் தொடும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகளவில் 5ஜி பயன்பாட்டில் வட அமெரிக்கா முன்னிலை வகிக்கும் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இந்திய ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏஇபிசி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து ஏஇபிசி-யின் தலைவா் நரேன் கோயங்கா கூறியதாவது:
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் தடையற்ற வா்த்தகத்தை மேற்கொள்ளும் வகையிலான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், ஆயத்த ஆடை துறைக்கான ஏற்றுமதி சந்தை விசாலமடைந்துள்ளது. இதன் மூலம், ஏற்றுமதி ஊக்குவிக்கப்படுவதுடன், கணிசமான அந்நியச் செலாவணியை ஈட்டவும் வழிபிறந்துள்ளது.
கடந்த 2013-இல் உலகளாவிய ஆயத்த ஆடை செந்தை மதிப்பு 1.5 டிரில்லியன் டாலராக மட்டுமே காணப்பட்டது. ஆனால், 2022-இல் இந்த துறை 1.8 டிரில்லியன் டாலா் வருவாயையும், 2025-இல் 1.9 டிரில்லியன் டாலா் வருவாயையும் உருவாக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீன்வளத் துறை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு மாற்றிய உத்தரவுகளை ரத்து செய்த தனி நீதிபதியின் தீர்ப்பு சரியானதுதான் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சக்தி முத்தம்மன் கோயிலுக்குச் சொந்தமான 2.03 ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத் துறை அனுமதி இல்லாமல் 1963-ம் ஆண்டு மீன்வளத் துறைக்கு மாற்ற்பட்டு, அதில் சிறு பகுதியில் ஐஸ் உற்பத்தி நிலையம் மற்றும் மீன்களை பாதுகாப்பதற்கான கட்டடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
அதேபோல, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 1.15 ஏக்கர் நிலம் கடந்த 2018-ம் ஆண்டு அறநிலையத் துறை அனுமதி இல்லாமல், போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் இந்த உத்தரவுகளை எதிர்த்து கோயில் நிர்வாகங்களின் சார்பிலும், பக்தர்கள் குகன், ஸ்ரீதர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், அறநிலையத் துறை கோயில்களின் நிலங்களை கோயில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக் கூடாது என கூறி, அரசின் உத்தரவுகளை ரத்து செய்து கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், "கோயில்களுக்கு சொந்தமான நிலம் அதன் பயன்பாடுகளுக்கு தவிர மற்றவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவில் தவறு இல்லை.
எனவே, அற நிலையத்துறை அனுமதி இல்லாமல் நிலத்தை மாற்றிய உத்தரவு ரத்து செய்யப்பட்டது சரிதான். இந்த உத்தரவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கோயில்களின் நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கைகளை தொடங்க உத்தரவிட்டு, அரசின் மேல்முறையீட்டு வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
சென்னை: தமிழக காவல் துறையை சேர்ந்த மாணிக்கவேல் என்பவர், தன்னை காவலர் குடியிருப்பில் இருந்து வெளியேற்ற பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸைஎதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணிக்கவேல் மீதான நடவடிக்கை சரிதான் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு கடந்த 14-ம் தேதி நீதிபதிஎஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சமீபத்தில்தான் அந்த குடியிருப்பை மாணிக்கவேல் காலி செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு ஜூன் 21-ம்தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார். நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் ஆஜராகி, அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதி, வீட்டு வேலைகளை செய்வதற்காக ஆர்டர்லி வைத்துக்கொள்ளும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதிகாரிகளின் வீடுகளில் பணியில் உள்ளஆர்டர்லிகளை உடனே திரும்ப பெறவும் அறிவுறுத்தினார்.
இந்திய அரசியலில் காங்கிரஸ் எந்த அளவுக்கு அவசியமோ, அதற்கு சற்றும் குறையாமல் தமிழக அரசியலில் அதிமுக மிகவும் தேவை.
நமது நாட்டில் சிறிதும் பெரிதுமாய் நூற்றுக்கணக்கான கட்சிகள் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு எப்போதுமே தனி இடம் உண்டு.
சுதந்திரா கட்சி - தொலைநோக்கு கொள்கைகளை முன்வைத்து, இந்தியாவுக்கு முற்றிலும் புதிய தளத்தில் செயல்பட்ட கட்சி. ஒருசில ஆண்டுகளுக்கு, ஓரிரு மாநிலங்களில் மட்டும் சற்றே செல்வாக்குடன் இருந்து, பிறகு சிறிது சிறிதாகக் கரைந்து காணாமல் போனது. ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்தது சுதந்திரா கட்சி. அது இருந்தபோதே யாராலும் கவனிக்கப்படவில்லை. தேய்ந்து மறைந்ததைப் பற்றியும் யாரும் கவலைப் படவில்லை.
கடந்த 1977 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது உருவான ஜனதா கட்சி - பல புதிய நம்பிக்கைகளை தோற்றுவித்தது. ஆனாலும் மிகக் குறுகிய காலத்திலேயே சுருங்கிப் போனது.
கடந்த 1990-களில் 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த இடதுசாரிகள் இன்று ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு, இரவல் ஆக்ஸிஜனில், இன்னமும் இருப்பதாகக் காட்டிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
சிவசேனா, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ் ஆகியன, மாநிலக் கட்சியாக இருந்து கொண்டு, தேசிய கட்சிகளாக போக்கு காட்டிக் கொண்டு இருக்கின்றன. ஆம் ஆத்மி மட்டும் டெல்லி, பஞ்சாப் வெற்றியைத் தொடர்ந்து குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா என்று விரிவடைய முயற்சித்துக் கொண்டு இருக்கிறது. வரும் ஆண்டுகளில் மக்கள் தரும் வரவேற்பைப் பொருத்து இது வலுவான தேசிய கட்சியாக உயருமா என்று பார்க்கலாம்.
தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஜனதா தளம் (பிஜுபட்நாயக்) ஜனதா தளம் (தேவகவுடா), திமுக, அதிமுக ஆகியன அந்தந்த மாநிலங்களில் வலுவாக செயல்புரிந்து வருகின்றன.
இரண்டு கட்சிகளின் பிடியில்
திமுக, அதிமுக இரண்டும், எதிரெதிர் முனைகளில் இருந்தாலும், தமிழக அரசியல், இந்த இரண்டு கட்சிகளின் பிடியில்தான் இருக்கிறது. இவ்விரு கட்சிகளையும் தாண்டி தமிழக அரசியல் இயங்குவது இப்போதைக்கு சாத்தியமில்லை.
தமிழக மக்களுக்கு இவ்விரண்டும் நன்மையும் தீமையும் கலந்தே செய்துள்ளன. சில இடங்களில் ஒன்றுபட்டும், பல சமயங்களில் வேறுபட்டும் தனித்தனியே இயங்குகிற போதும், இரு கழகங்களின் செல்வாக்கு பெரிதாக எப்போதும் குறைந்ததே இல்லை.
அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா மீது மக்கள் கொண்டிருந்த தீராத அன்பு, பற்று, நம்பிக்கையே - இவ்விரு கட்சிகளின் ஆழமான அஸ்திவாரம்.
கருணாநிதி, ஜெயலலிதா முறையே தங்கள் கட்சியின் நிறுவனர்களைத் தொடர்ந்து மிகப்பெரும் வலிமை சேர்த்தார்கள். இவ்விரு தலைவர்களின் மறைவுக்குப் பிறகு, மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அநேகமாக அதே வலிமையுடன் திகழ்கிறது; ஆனால் அதிமுக தத்தளிக்கிறது. எனவே, திமுகவைப் போலவே அதிமுகவையும் வலிமையாக வைத்திருக்க வேண்டியது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கடமை.
ஒரு வேடிக்கையான உண்மை - திமுகவுக்கு அதிமுகவும், அதிமுகவுக்கு திமுகவும் மிகவும் தேவைப்படுகிறது. திமுகவின் வெற்றியில், அதிமுக எதிர்ப்பு ஓட்டுக்குக் கணிசமான பங்கு இருக்கிறது. இதேபோல அதிமுக வெற்றியை, திமுக எதிர்ப்பு ஓட்டுகளே தீர்மானிக்கும். ஒன்றுக்கு மாற்றாக அல்ல; ஒன்றுக்கு எதிராக மற்றொன்றை மக்கள் பார்க்கிறார்கள். இந்த நிலையில், திமுக - அதிமுக இடையிலான முக்கிய வேறுபாட்டை மக்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள்.
அடிமட்ட அரசியலுக்கு அதிமுக!
எப்போதுமே வீரியத்துடன் எல்லாவற்றிலும் அரசியல் செய்து தீவிரமாகக் களப்பணியாற்றும் திமுக - ஒரு ‘ஹைப்பர்’ மாடல். தேர்தலின்போது மட்டும் தீவிரமாகப் பணியாற்றி, பின்னர் அவரவர் வேலைக்குச் செல்ல விடும் அதிமுக - ஒரு ‘ஸ்லீப்பர்’ மாடல்! திமுக, அதிமுக மீதான விமர்சனப் பார்வை அல்ல இது. ஓர் அரசியல் கட்சியின் தன்மை, இயல்பு, அடையாளம் பற்றிய மதிப்பீடு. அவ்வளவே.
ஒருசில பிரிவினரின் நிரந்தர ஆதரவுடன், வேறு சிலரைச் சேர்த்துக் கொண்டு இயங்கும் திமுக ‘மாடல்’, ஒரு வலுவான மாடல். சந்தேகமில்லை. அதுமட்டுமல்ல; சில உரிமைகளை, சில கோரிக்கைகளை ஓங்கி ஒலிக்கிற கட்சி. A truly vocal party.
அதிமுக - சாதி, மதம், மொழி இனங்களுக்கு அப்பாற்பட்டு, சாமானியர்களின் ஆதரவில் இயங்குகிற, எல்லாரையும் உள்ளடக்கிய, இயன்றவரை எல்லாருக்கும் சமவாய்ப்பு நல்கக் கூடிய ‘மிதமான’ கட்சி. இது அப்படியே, அகில இந்திய அளவில், காங்கிரஸ் கட்சியின் மாடல்.
தீவிர கொள்கைப் பிடிப்பு, ஆக்ரோஷமான ஆர்ப்பாட்டங்கள் - இங்கு மிகக் குறைவு. ஏறத்தாழ ஒரு பகுதி நேரப் பணி போல விருப்பத்துக்கு ஏற்ப அதிமுகவினர் செயல்படலாம்; செயல்படாமல் ஒதுங்கி நிற்கலாம்.
அரசியல் என்பது, தொட்டுக் கொள்ள ஊறுகாய் போல; தேர்தலில் வாக்களித்தல் தவிர்த்து, அபூர்வமாக எப்போதேனும், நெருங்கிய சிலருடன் கட்சி அரசியல் ‘பேசுவதோடு’ சரி; மற்றபடி ஒரு பார்வையாளனாக மட்டுமே அதிமுக ஆதரவாளர் நின்றுவிடுவார். காங்கிரஸ் கட்சி ஆதரவாளரும் இதே ரகம்தான்.
அரசியல் ரீதியாக காங்கிரஸ், அதிமுக மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் இங்கே விவாதத்துக்கு உட்படவில்லை. ஓர் அரசியல் கட்சியின் பொதுவான இயல்பு, நடைமுறை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகையில், அமெரிக்காவில் ஜனநாயக (மென்மை), குடியரசு (தீவிரம்) கட்சிகளைப் போன்று தமிழகத்தில் அதிமுக, திமுக இரண்டையும் சொல்லலாம். அந்த வகையில் தமிழகத்துக்குத் திமுக, அதிமுகவின் இருப்பு மிக அத்தியாவசியம் ஆகிறது.
இந்திய அரசியலில் ஹைப்பர்மாடலாக செயல்பட்ட இடதுசாரிகளின் சரிவும் பாஜகவின் ஹைப்பர் மாடல் வெற்றியும் ஏறக்குறைய ஒரே காலத்தில் நிகழ்ந்தவை! இரண்டு ஹைப்பர் மாடல்கள் அல்லது இரண்டு ‘ஸ்லீப்பர்’ மாடல்கள் ஒரே சமயத்தில் வெற்றி காண இந்திய தேர்தல் களத்தில் இடமில்லை.
தீவிரம், செயல் வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் பாஜக - திமுக, இரண்டும் ஒரே ரகம்! நினைவில் கொள்வோம் இது - கொள்கை ஒப்பீடு அல்ல; செயல்பாடுகளில் உள்ள பொதுமை குறித்த பார்வை மட்டுமே.
அரசியல் மென்மையாளர்கள்
‘எனக்கு அது வேண்டாம்’ என்கிற எண்ணம் கொண்ட மிதமான சாமானியர்களுக்கு ஓர் அரசியல் புகலிடம் தேவைப்படும் போது, தமிழகத்தில் அதிமுகவின் இருப்புக்கு அர்த்தம் சேர்க்கிறது. தேசிய அளவில், காங்கிரஸுக்கான தேவை கூடுகிறது. மக்களுக்கும் அதிமுகவுக்கும் உள்ள தொடர்பு இதுதான்.
அதிமுகவுக்கு இணையாக வேறு ஒரு மிதமான கட்சி தமிழகத்தில் தோன்றாத வரை, அரசியல் மென்மையாளர்கள், பொது வாக்காளர்களுக்கு திமுகவுக்கு மாற்று அதிமுகதான்.
அதிமுகவுக்கு இணையாக வேறு ஒரு மிதமான கட்சி தமிழகத்தில் தோன்றாத வரை, அரசியல் மென்மையாளர்கள், பொது வாக்காளர்களுக்கு அதிமுகவை விட்டால் வேறு வழி இல்லை.
ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பழையபட்டினம் நீதி கிராமத்தைச் சேர்ந்தவர் கேதாரேஸ்வர் ராவ் (55). இவர், கடந்த 1998-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால், இதனை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை நாடினர். இதனால், அந்த ஆண்டு தேர்வு ஆனவர்கள் யாரும் அரசு ஆசிரியர் ஆக முடியவில்லை. இவ்வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதையடுத்து, கேதாரேஸ்வர் ராவ் சைக்கிளில் ஊர் ஊராக சென்று துணிகளை விற்க தொடங்கினார். ஏழ்மை இவரை வாட்டியது. இவர் அணிய சரிவர துணி கூட இல்லை. இவரது நிலைமையை பார்த்து யாரும் துணி வாங்கவும் முன் வரவில்லை. பெற்றோரும் இறந்து விட்டனர். அதனால் அனாதை ஆனார். தான் வசித்து வரும் பாழடைந்த வீட்டைத் தவிர வேறு எதுவும் இவரிடம் இல்லை.
வயிற்று பிழைப்புக்காக பேப்பர்கள், பிளாஸ்டிக் பொருட்களை பொறுக்கி, அதை விற்று வாழ்நாளை கழித்தார். சில நாட்கள் பிச்சை எடுத்ததாகவும் இவர் தெரிவித்தார். இந்நிலையில், 1998-ம் ஆண்டு அரசு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் அனைவருக்கும் அரசு ஆசிரியர் பணி நியமனம் வழங்குமாறு சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.
அதன்படி, கேதாரேஸ்வர் ராவுக்கும் பணி நியமன உத்தரவு வீடு தேடி வந்தது. இதனை பார்த்து ஆச்சர்யமும், ஆனந்தமும் அடைந்தார் கேதாரேஸ்வர் ராவ். தன்னுடைய வாழ் நாள் முழுவதும் கஷ்டத்தை தவிர வேறு எதையுமே பார்க்காத அவர், முதன் முறையாக தான் கண்ட கனவு நிறைவடையும் நாள் வந்ததை அறிந்ததும் முதலில் அழுது தீர்த்தார்.
கடைசி கால கட்டங்களில் தனது பெற்றோரை பார்த்துக்கொள்ள முடியவில்லை. உற்றார், உறவினர் பணம் இல்லாததால் தொலைந்து போயினர். நண்பர்கள் யாரும் நெருங்ககூடவில்லை. யாரும் பண உதவியோ, அல்லது ஆறுதலுக்காக கூட நெருங்கி பேச முன் வரவில்லை. வேலை இல்லாத காரணத்தினால் இவர் இதுவரை திருமணம் கூட செய்துகொள்ளவில்லை.
கேதாரேஸ்வர் ராவுக்கு அரசு ஆசிரியர் பணி உத்தரவு கிடைத்ததும், அவர் வசிக்கும் நீதி கிராமமே மகிழ்ச்சியடைந்தது. என்றாவது மாஸ்டர் ஆகி விடுவேன் என கேதாரேஸ்வர் ராவ் அடிக்கடி கூறியதால், அவரை அந்த கிராமத்து இளைஞர்கள் மாஸ்டர் என்றே அவரை கிண்டல் செய்துள்ளனர். தற்போது அதுவே உண்மையாகிவிட்டது என அவ்வூர் இளைஞர்கள் ஆச்சர்யத்துடன் கூறுகின்றனர். இதற்காக அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, மாஸ்டர் கேதாரேஸ்வர் ராவுக்கு, தங்களது பரிசாக ஒரு புத்தம் புதிய செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தனர். மேலும், பல நாட்கள் யாசகம் கேட்டு திரிந்த ஒரு தெருவில் வியாபாரி ஒருவர், கேதாரேஸ்வர் ராவுக்கு புதிய சட்டைகள், ஜீன்ஸ் பேண்டுகளையும் வாங்கி கொடுத்து பாராட்டியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை இவரை கண்டுகொள்ளாத அவரது கிராம மக்கள், இப்போது கேதாரேஸ்வர் ராவை தாங்கு, தாங்கு என தாங்குகின்றனர். சிலர் இவரது வாழ்க்கையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனால், ஒரே நாளில் கேதாரேஸ்வ ராவ் அப்பகுதிகளில் பிரபலமாகிவிட்டார்.
துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் 108 இடங்கள் முன்னேறி 87-வது இடத்தை பிடித்துள்ளார். அண்மையில் முடிந்த தென்னாப்பிரிக்க தொடருக்கு பின்னர் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளார் அவர்.
37 வயதான தினேஷ் கார்த்திக் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். அணியின் தேர்வாளர்களின் வீரர்கள் பட்டியலில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார் அவர். அதற்கு காரணம் அவரது அபார பேட்டிங் திறன். 15-வது ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். இப்போது ஐசிசி பேட்டிங் தரவரிசையிலும் முன்னேற்றம் கண்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் 4 இன்னிங்ஸ் விளையாடி 92 ரன்களை எடுத்திருந்தார் அவர். அவரது ஸ்ட்ரைக் ரேட் 158.62. இந்த தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட இந்திய பேட்ஸ்மேன்களில் முதலிடத்தில் இருப்பதும் அவர் தான். இந்நிலையில், டி20 பேட்டிங் தரவரிசையில் 108 இடங்கள் முன்னேறி 87-வது இடத்தை பிடித்துள்ளார். இதை ஐசிசி உறுதி செய்துள்ளது.
வரும் நாட்களில் அவர் விளையாட உள்ள டி20 போட்டிகள் மூலம் பேட்டிங் தரவரிசையில் அவர் சிறப்பான முன்னேற்றத்தை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ரெகுலராக விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதை செய்வார். இந்திய அணி வரும் நாட்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆசிய கோப்பை போன்ற டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.
பெல்ஜியத்தால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட காங்கோவின் விடுதலை நாயகன் பாட்ரிஸ் லுமும்பாவின் 'பல்' 61 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாட்ரிஸ் லுமும்பா... ஆப்பிரிக்கவின் விடுதலை வரலாற்று நாயகர்களில் மறுக்க முடியாத பெயர்.
1925-ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் நாள், பெல்ஜிய காங்கோவின் அனாலுவா என்ற கிராமத்தில் பழங்குடி குடும்பத்தில் பிறந்தவர்தான் பாட்ரிஸ் லூமம்பா. சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக பெல்ஜியத்திடம் காங்கோ அடிமைப்பட்டு இருந்த காலக்கட்டம் அது. பாட்ரிஸ் தனது இளம் வயதிலேயே கடின உழைப்பாளியாக இருந்தார். படித்துக்கொண்டே காங்கோவிலிருந்த பெல்ஜிய கம்பெனிகளில் வேலையும் செய்து வந்தார். சிறுவயதிலே பாட்ரிஸுக்கு அரசியலில் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வமே அவரை அரசியல் நோக்கி அழைத்தும் சென்றது.
காங்கோ ஐரோப்பாவின் காலனியாக இருந்ததை பாட்ரிஸ் ஒருபோதும் விரும்பியதே இல்லை. காங்கோ விடுபட்டு சுதந்திரமாக, அதேநேரத்தில் ஐரோப்பாவுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதனைத்தான் தனது கட்டுரைகளிலும், கவிதைகளிலும் அவர் தொடர்ந்து எழுதி வந்தார்.
பாட்ரிஸ் தனது 20 -ஆவது வயதுக்குப் பிறகுதான் காங்கோவின் விடுதலைக்கான அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட தொடங்கி, அதில் தீவிரமாக ஈடுபட்டார். காங்கோவில் பழங்குடிகள் இனவாதத்தால் பிரிவினைக்கு உள்ளாகி இருப்பதை பாட்ரிஸ் உணர்ந்தார். இந்த இனவாதம்தான் காங்கோவின் சுதந்திரத்திற்கு எதிரியாக இருப்பதை கண்டறிந்து, காங்கோ மக்கள் அனைவரும் பொது தேசிய நலனுக்காக ஒன்றுபட வேண்டிய காலக்கட்டம் இது.. ஒன்றுபடுங்கள் என்று மக்களை நோக்கி கேள்வி எழுப்ப தொடங்கினார்.
பாட்ரிஸின் அரசியல் வளர்ச்சி அங்கிருந்துத்தான் தொடங்கியது. அதன்பின்னர் காங்கோவின் அரசியல் முகமானார் பாட்ரிஸ். ஐரோப்பிய நாடுகளும் அவரை அவ்வாறே அறிமுகம் செய்தது. பல போராட்டகளுக்கு இடையே 1958-ஆம் ஆண்டு காங்கோ தேசிய இயக்கம் (Congolese national movement) என்ற கட்சியை பாட்ரிஸ் ஆரம்பித்தார்.
அதனைத் தொடர்ந்து எழுந்த வலுவான தேசியவாத முழுக்கம் காரணமாக பெல்ஜியத்தின் கை பணிந்தது. விளைவு... 1960-ஆம் ஆண்டு காங்கோ குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஜனநாயக முறையில் நாட்டின் பிரதமராக பாட்ரிஸ் லுமும்பா பதவியேற்றார். இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையுடனான உடன்பாட்டில் ஐரோப்ப நாடுகளின் கண்காணிப்பில் காங்கோ இருப்பதை பாட்ரிஸ் எதிர்த்தார்.
மேலும் பெல்ஜியம் - காங்கோ உடன் ஏற்படுத்தப்பட்ட நட்பு உடன்படிக்கையையும் அவர் ரத்து செய்தார். பாட்ரிஸின் இந்த நடவடிக்கை பெல்ஜியத்தை கோபமடையச் செய்தது. இதனைத் தொடர்ந்துதான் வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றத்திற்கு பெல்ஜியம் தன்னை உடன்படுத்திக் கொண்டது. நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை இருந்தும் அரசின் சொத்துகளை பாட்ரிஸ் சட்டத்துக்கு புறமாக பயன்படுத்திக்கொண்டார் என்று போலியான குற்றம் சுமத்தப்பட்டு அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. இந்த ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் பெல்ஜியம் இருந்தது. பாட்ரிஸ் கைது செய்யப்பட்டார்.
1961-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி காங்கோ பாதுகாப்புப் படையால் பாட்ரிஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளர்கள் அத்துடன் நிற்கவில்லை. பாட்ரிஸ் மரணத்திற்கு தடயம் இருக்கக் கூடாது என்று கருதி அவரது உடலை கூறாக்கி அமிலத்தில் கரைத்தனர். அவர் உடலில் மீதமிருந்த தங்கப் பல், பெல்ஜியம் வசம் இத்த்னை ஆண்டுகளாக இருந்து வந்தது.
வரலாற்றில் பாட்ரிஸ் லுமும்பாவின் மரணம், கொடூரமான மரணமாகவே அறியப்படுகிறது.
61 ஆண்டுகளுக்கு பின்னர் ஒப்படைக்கப்பட்ட பல்: பாட்ரிஸின் உடல் உறுப்பில் தங்கத்தினால் ஆன அவரது ஒரே ஒரு பல் மட்டுமே மிச்சம் இருந்தது. அதனை திங்கட்கிழமை பெல்ஜிய அரசு, அரசு மரியாதையுடன் பாட்ரிஸின் குடும்பத்தாரிடம் ஒப்படைந்தது.
நிகழ்வில் பெல்ஜிய பிரதமர் அலெக்ஸாண்டர் டி க்ரூ பேசும்போது, “பாட்ரிஸ் கொலைக்கு தார்மிகமாக பொறுப்பேற்கிறேன். இது மிகவும் வலி மிகுந்தது. மறுக்க முடியாத உண்மை. இவை நிச்சயம் பேசப்பட வேண்டும். ஒருவர் தனது அரசியல் நம்பிக்கைகளுக்காகவும், வார்த்தைகளுக்காகவும், சிந்தனைகளுக்காகவும் கொல்லப்பட்டார்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
பாட்ரிஸ் குடும்பத்தினர் கூறும்போது, ”அவரது இறுதிச் சடங்குகளை இனியாவது நாங்கள் முடிப்போம்” என்று தெரிவித்தனர்.
ஆப்பிரிக்க விடுதலை வரலாற்றில் பாட்ரிஸ் லுமும்பா பெயர் அழுத்தமாக நிலைத்துவிட்டது. அதற்கான காட்சிகளை காங்கோவின் முக்கிய வீதிகளில் நாம் காணலாம். சுரண்டலுக்கு எதிராக பாட்ரிஸின் குரல் காங்கோவின் இளம் தலைமுறை மூலமாக தொடர்ந்து ஒலித்து கொண்டிருக்கிறது.
"வரலாறு பேசும் அந்த நாள் வரும். ஆப்பிரிக்கா தன் வரலாற்றை எழுதும். அது பெருமையும் கண்ணியமும் கொண்ட வரலாறாக இருக்கும்” - பாட்ரிஸ் லுமும்பா
பாட்ரிஸ் லுமும்பா கூறியதுபோலவே அந்த நாள் வந்தது....
தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in
<கட்சித் தாவல் தடுப்புச் சட்டம், ஒரு கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு தாவும் தனி எம்.பி/எம்.எல்.ஏ.க்களை தண்டிக்கும். ஆனால், கட்சியில் ஒரு அணியாக மாறுவது என்றால் என்ன? தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்கு? கட்சித் தாவல் தடைச் சட்டம் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்கிறதா?
மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிரான அதிருப்தி தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, தன்னுடன் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதிருப்தி அணியில் 55 உறுப்பினர்களைக் கொண்ட சிவசேனா சட்டமன்றக் கட்சியின் 33 எம்எல்ஏக்களும், மாநில அரசுக்கு ஆதரவளிக்கும் 7 சுயேட்சைகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்பின்படி, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை பெறாமல் தப்பிப்பதற்கு, அதிருப்தி அணியில் அந்த கட்சியின் மொத்த எம்.எல்.ஏ.க்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுபினர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
287 உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஏக்நாத் ஷிண்டேவின் அதிருப்திக்கு முன், சிவசேனாவுக்கு 55 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 53 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் 44 எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணியின் எம்.எல்.ஏ.க்களின் பலத்தை 152 ஆக உயர்த்தியுள்ளனர்.
கட்சித் தாவல் தடைச் சட்டம் என்றால் என்ன, அதன் நோக்கம் என்ன?
கட்சித் தாவல் தடுப்புச் சட்டம், ஒரு கட்சியை விட்டு மற்றொரு கட்சிக்கு தாவும் தனி எம்.பி/எம்.எல்.ஏ.க்களை தண்டிக்கும். இது எம்.பி/எம்.எல்.ஏ.க்கள் அணி வேறு அரசியல் கட்சியில் சேர (அதாவது இணைவதற்கு) கட்சித் மாறியதற்காக தண்டனையை நடைமுறைப்படுத்தாமல் இருக்க அனுமதிக்கிறது. மேலும், கட்சியில் இருந்து விலகும் சட்டமன்ற உறுப்பினர்களை ஊக்குவிப்பதற்காகவோ அல்லது கட்சி மாறியவர்களை ஏற்றுக்கொண்டதற்காகவோ இந்த சட்டம் அரசியல் அரசியல் கட்சிகளுக்கு அபராதம் விதிக்காது.
1985-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, நாடாளுமன்றம் இந்த விதிகளை அரசியலமைப்பில் பத்தாவது அட்டவணையில் சேர்த்தது.
கட்சித் தாவலில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களை தடுப்பதன் மூலம் அரசாங்கங்களில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதே கட்சி மாறுதல் தடுப்புச் சட்டத்தின் நோக்கமாகும். 1967 பொதுத் தேர்தலுக்குப் பிறகு கட்சித் தாவிய எம்.எல்.ஏ.க்களால் பல மாநில அரசாங்கங்கள் கவிழ்ந்ததின் எதிரொலியாக இந்த சட்டம் அமைந்தது.
கட்சியின் ஒரு அணியாக மாறுவது என்றால் என்ன? தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்கு? இந்த சட்டம் மூன்று வகையான காட்சிகளை உள்ளடக்கியுள்ளது.
ஒன்று, ஒரு அரசியல் கட்சியின் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அந்தக் கட்சியின் உறுப்பினர் பதவியை தானாக முன்வந்து கைவிடுவது அல்லது கட்சியின் விருப்பத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களிப்பது.
பத்தாவது அட்டவணையில், கட்சியின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 1/3-க்கும் குறைவானவர்கள் பிரிந்தால் அல்லது ஒரு சட்டமன்றக் கட்சியின் 2/3-க்கும் குறைவான எம்.எல்.ஏ.க்கள் வேறு அரசியல் கட்சியுடன் இணைந்தால், அந்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடு இருந்தது.
2003 இல் செய்யப்பட்ட திருத்தத்தைத் தொடர்ந்து, மூன்றில் ஒரு பங்குக்கு குறைவான எம்.எல்.ஏ.க்கள் பிரிந்தால் தகுதி நீக்கம் செய்வதற்கான பிரிவு மட்டும் நீக்கப்பட்டது.
சுயேட்சை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி/எம்.எல்.ஏ. பின்னர் ஒரு கட்சியில் சேரும்போது இரண்டாவது சூழ்நிலை எழுகிறது.
மூன்றாவது சூழ்நிலை நியமன சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புடையது. நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் விஷயத்தில், அவர்கள் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் ஒரு அரசியல் கட்சியில் சேரலாம், அதற்கு பிறகு சேர முடியாது என்று இந்த சட்டம் குறிப்பிடுகிறது.
இந்தச் சூழ்நிலைகளில் ஏதேனும் சட்டத்தை மீறினால், ஒரு சட்டமன்ற உறுப்பினர் கட்சித் தாவலில் ஈடுபட்டதற்காக தண்டிக்கப்படுவார். சட்டமன்றத்தின் தலைமை அதிகாரம் மிக்கவர்கள் (சபாநாயகர், தலைவர்) இது போன்ற வழக்குகளில் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவர்களாக உள்ளனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை அதிகாரம் உள்ள சபாநாயகர் முடிவுகளை உயர் நீதித்துறையில் எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கட்சித் தாவல் தடைச் சட்டம் அரசாங்கங்களின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ததா என்றால்
முற்றிலும் இல்லை.
அரசியல் கட்சிகள், எம்.எல்.ஏ.க்களை தங்களுடைய விசுவாசத்தை மாற்றிக்கொள்வதையோ அல்லது போட்டிக் கட்சி தொடங்குவதையோ அல்லது தங்கள் கட்சியின் எதிர் பிரிவினரால் இழுக்கப்படுவதையோ தடுக்க, அவர்களை அடிக்கடி ரிசார்ட்டுகளில் தனிமைப்படுத்துகின்றன. சமீபத்திய உதாரணங்கள் ராஜஸ்தான் (2020), மகாராஷ்டிரா (2019), கர்நாடகா (2019 மற்றும் 2018), மற்றும் தமிழ்நாடு (2017).
தற்போது மகாராஷ்டிரா விவகாரத்தில், ஏக்நாத் ஷிண்டேவின் எம்.எல்.ஏ.க்கள் முதலில் குஜராத் மற்றும் அஸ்ஸாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இரு மாநிலங்களும் பாஜக ஆளும் மாநிலங்கள் ஆகும்.
அரசியல் கட்சிகள் கட்சித் தாவல் தடை சட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவும் முடிகிறது.
2019 ஆம் ஆண்டு கோவாவில், 15 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 10 பேர் தங்கள் சட்டமன்றக் கட்சியை பாஜகவுடன் இணைத்தனர். அதே ஆண்டில், ராஜஸ்தானில், 6 பி.எஸ்.பி எம்எல்ஏக்கள் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தனர். சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் 15 எம்.எல்.ஏ.க்களில் 10 பேர் பாஜகவில் இணைந்தனர்.
இந்த சட்டத்தை மேம்படுத்த ஏதேனும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதா?
இந்த சட்டம் பற்றி கருத்து கூறுபவர்கள் சிலர், இந்த சட்டம் தோல்வியுற்றதாகக் கூறி அதை நீக்குவதற்கு பரிந்துரைத்தனர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசுகளை காப்பாற்ற மட்டுமே இது பொருந்தும் என முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி கருத்து தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம், கட்சித்தாவல் வழக்குகளில் முடிவெடுக்கும் அதிகாரமாக இருக்க வேண்டும் – பெரும்பாலும் பாரபட்சமான முறையில் செயல்படும் தலைமை அதிகாரிகள் முடிவெடுப்பவர்களாக இருக்கக்கூடாது என்று பரிந்துரைத்துள்ளது.
கட்சித் தாவல் மனுக்களை குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் விசாரிக்க வேண்டும் என்று சிலர் வாதிட்டனர். கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றம், கட்சியில் இருந்து பிரிவது தொடர்பான வழக்குகளை விரைவாகவும், பாரபட்சமின்றியும் தீர்த்து வைப்பதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு சுயாதீன தீர்ப்பாயத்தை நாடாளுமன்றம் அமைக்க வேண்டும் என்று கூறியது.
Sports Tamil News: குஜராத் மாநிலம் வதோதராவில் தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் 105 வயது மூதாட்டியான ராம்பாய் கலந்து கொண்டார். ராம்பாய், 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் தனிநபராக கலந்து கொண்ட நிலையில், அவர் 100 மீட்டர் இலக்கை 45.40 வினாடிகளில் எட்டி புதிய சாதனையை படைத்தார்.
மேலும் அவர் 200 மீட்டர் ஓட்டத்தில் இலக்கை 1 நிமிடம் 52.17 வினாடிகளில் கடந்து அசத்தினார். அதோடு, உலக மாஸ்டர்ஸ் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தை 74 வினாடிகளில் ஓடி தங்கம் வென்ற 101 வயதான மான் கவுரின் சாதனையை ராம்பாய் முறியடித்தார்.
இந்த உலகில் சாதனைகளை படைக்க வயது ஒன்றும் விதிவிலக்கல்ல. அவை வெறும் எண்கள் தான் என்று கூறுவார்கள். அதற்கேற்ப, ராம்பாய் தடகள போட்டியில் தனிநபராக கலந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். தனது 105 வயதிலும் சாதனை தாகத்தை தீர்க்க இந்தியா முழுதும் ஓடி வரும் ராம்பாய் நம்மில் பலருக்கு முன்னோடியாக இருக்கிறார்.
1917ஆம் ஆண்டும் பிறந்த “சூப்பர் நானி” ராம்பாய், கடந்த ஆண்டு நவம்பரில் வாரணாசியில் தனது ஓட்டப்பந்தய அறிமுகத்தை ஏற்படுத்திக்கொண்டார். அதன் பின்னர் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளாவில் நடந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு நிறைய பதக்கங்களை வென்றுள்ளார். அவரை இதுபோன்ற போட்டிகளுக்கு அவரது பேத்தி ஷர்மிளா சங்வான் தான் அழைத்துச் செல்வாராம்.
அவர் ஏன் முன்னதாக இதுபோன்ற ஓட்டப் பந்தயங்களில் போட்டியிடவில்லை என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு, “நான் எப்போதும் தயாராகவே இருந்தேன், ஆனால் இதற்கு முன் யாரும் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை!” என்று தெரிவித்து இருக்கிறார். இப்போட்டியில் பதக்கம் வென்றது குறித்து அவர் பேசுகையில், “இது சிறப்பான உணர்வாக உள்ளது. இனி சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Critical Illness Policy benefits in tamil: ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மக்கள் தொகை எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதைப் பொறுத்தது. சுகாதாரப் பாதுகாப்பு முறையின் மோசமான நிலை மற்றும் உடல்நலக் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு இல்லாதது இந்தியாவில் காப்பீட்டின் ஊடுருவலைக் குறைக்க வழிவகுத்தது. இப்போதும் சுமார் 70-75 சதவீத இந்தியர்கள் மருத்துவச் சேவைகளுக்கு தங்கள் பாக்கெட்டில் இருந்து பணம் செலுத்துகிறார்கள்.
ப்ரோபஸ் இன்சூரன்ஸ் ப்ரோக்கரின் இயக்குனர் ராகேஷ் கோயல் கூறும்போது, “அத்தகைய சூழ்நிலையில், ஒரு கொடிய நோய் எந்த குடும்பத்தின் பொருளாதார நிலையையும் சிதைத்துவிடும். அடிப்படைத் தரமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டிருப்பது கூட, ஏதேனும் ஆபத்தான நோய் இருந்தால் போதுமான பாதுகாப்பை அளிக்காது.
உதாரணமாக, புற்றுநோய் என்பது ஒரு முக்கியமான நோயாகும். இது ஒரு பொதுவான உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்யப்பட்ட தொகையின் எல்லைக்கு அப்பாற்பட்ட கணிசமான செலவுகளை உள்ளடக்கியது. கிரிடிக்கல் இல்னஸ் பாலிசி (CI), உயிருக்கு ஆபத்தான கடுமையான நோய்கள் மற்றும் பக்கவாதம், நேரடி கோளாறுகள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற வாழ்க்கை முறை நோய்கள் தொடர்பான செலவுகளைக் கையாள பாலிசிதாரர்களுக்கு உதவும் காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது.
எனவே, “இந்தியாவில் தரமான பராமரிப்பு மிகவும் விலையுயர்ந்த இன்றைய காலகட்டத்தில் இது போன்ற முக்கியமான நிலைமைகளை மட்டுமே கையாளும் ஒரு குறிப்பிட்ட காப்பீட்டுக் கொள்கை மிகவும் அவசியமானது” என்று கோயல் சுட்டிக்காட்டுகிறார்.
சாதாரண உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களிலிருந்து கிரிடிக்கல் இல்னஸ் பாலிசி (CI) திட்டங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன?
வழக்கமான உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களுடன், பாலிசிதாரர்கள் மருத்துவச் சேவையைப் பெறும்போது ஏற்படும் செலவினங்களைத் திரும்பப் பெறுவார்கள். எவ்வாறாயினும், தீவிர நோய்க்கான காப்பீட்டுக் கொள்கைகள் மூலம், ஒரு நபர் ஒரு பெரிய தொகையைப் பெறலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது ஏதேனும் ஒரு தீவிர நோய் கண்டறியப்பட்டால், சிகிச்சை செலவுகளை ஈடுகட்ட பயன்படுத்த முடியும்.
கிரிடிக்கல் இல்னஸ் பாலிசி (CI) திட்டங்களின் நன்மைகள்
ஒரு தீவிர நோய் கொள்கையின் பல நன்மைகள் உள்ளன. இது மருத்துவச் செலவுகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதை உள்ளடக்குகிறது. ஏனெனில் மருத்துவ சிகிச்சை மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். மேலும் ஒருவருக்கு ஆபத்தான நோய் இருப்பது கண்டறியப்பட்டால் அது பெரும் நிதிச்சுமையாக மாறும்.
“சிகிச்சைக்காக ஒருவர் வேலையிலிருந்து பல இலைகளை எடுக்க வேண்டியிருக்கலாம். ஒரு தீவிர நோய் திட்டம் இந்த வருமான இழப்பை ஈடு செய்யும். மேலும், கடுமையான நோய் ஏற்பட்டால், அது பாலிசிதாரர் மட்டுமல்ல, அவர்களின் குடும்பமும் நிதி ரீதியாக பாதிக்கப்படும். பாலிசிதாரர்கள் தங்களின் மருத்துவ மற்றும் வீட்டுச் செலவுகளை ஈடுகட்டப் பயன்படுத்தக்கூடிய முன்னரே தீர்மானிக்கப்பட்ட மொத்தத் தொகையை ஒரு தீவிர நோய்த் திட்டம் செலுத்துகிறது,” என்று கோயல் விளக்குகிறார்.
வருமான வரிச் சட்டத்தின் 80D பிரிவின் கீழ் பணம் செலுத்துவது முற்றிலும் வரியற்றது என்பதால், கடுமையான நோய்க் காப்பீடு வரிச் சலுகைகளுடன் வருகிறது. இருப்பினும், பாலிசியை வாங்கும் போது சில காரணிகளை மனதில் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பாலிசியை வாங்கும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்
ஒரு தீவிர நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு மருத்துவ செலவுகள் பொதுவாக மிக அதிகமாக இருக்கும். எனவே, கிரிடிக்கல் இல்னஸ் பாலிசியின் முதன்மையான நோக்கம் இதுவாக இருப்பதால், சிகிச்சைச் செலவுகளை ஈடுகட்டுவது முக்கியம் என்று தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நம்பகமான மருத்துவ நிபுணரிடம் அல்லது இதைப் பற்றி அறிந்த ஒருவரிடமிருந்தோ நீங்கள் செலவினங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
கவரில் முடிவெடுக்கும் போது, மருத்துவக் கட்டணங்கள் தவிர வேறு பல செலவுகள் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதில் பல்வேறு சோதனைகள், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு செலவுகள் ஆகியவை அடங்கும்.
மேலும், சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதற்கு நீங்கள் வேலையிலிருந்து பல இலைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, கோயலின் கூற்றுப்படி, வருமான இழப்பு மற்றும் வீட்டுச் செலவுகள் அல்லது பொறுப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் சிகிச்சை பெறும் போது உங்கள் குடும்பத்திற்கு பெரிய நிதிச் சுமை இருக்காது.
கிரிடிக்கல் இல்னஸ் பாலிசி திட்டத்தை யார் தேர்வு செய்ய வேண்டும்?
“குறிப்பிட்ட சில உடல்நல நிலைமைகளுக்கு எந்த வாய்ப்புகளையும் எடுக்க விரும்பாத நபர்களுக்கு, குறிப்பாக அவர்களுக்கு மருத்துவ வரலாறு இருந்தால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், ஒரு முக்கியமான நோய் காப்பீட்டுக் கொள்கையிலிருந்து தங்கள் நிதியை மோசமாகப் பெறக்கூடிய குடும்பங்களின் முதன்மை வருமானம் பெறுபவர்கள்.
நாம் அனைவரும் இதுபோன்ற நோய்களின் அபாயத்தை எதிர்கொள்வதால், யார் வேண்டுமானாலும் கிரிடிக்கல் இல்னஸ் பாலிசியை வாங்கலாம். மருத்துவச் செலவுகள் அதிகரித்து வருவதால், பெரிய நோய்களுக்கான சிகிச்சைச் செலவு ஏறக்குறைய அதிகமாகிவிட்டது.
சிகிச்சைக்காக ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், செலவு இன்னும் அதிகமாக இருக்கும், குறிப்பாக ஒருவர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தால். எனவே, கிரிடிக்கல் இல்னஸ் பாலிசியை தேர்ந்தெடுப்பது ஒரு புத்திசாலித்தனமான தேர்வாக இருக்கும்.” என்று கோயல் கூறுகிறார்.
மிகப் பெரிய பொருளாதார மந்தநிலையை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றும், அதை எதிர்கொள்ள கையாண்ட நடவடிக்கைகளும் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டிருக்கின்றன. போதாக்குறைக்கு உக்ரைன் - ரஷிய போர், நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது.
இதுபோன்ற பொருளாதார மந்தநிலையை உலகம் சந்திப்பது புதிதொன்றுமல்ல. முதலாவது உலகப் போருக்குப் பிறகு 1918-இல் தொடங்கிய மந்தநிலை, 1920, 1921 ஆண்டுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. 1918 ஸ்பேனிஷ் காய்ச்சல் என்கிற கொள்ளை நோய்த்தொற்றும் சேர்ந்துகொண்டபோது ஒட்டுமொத்த உலக பொருளாதாரமும் தடம்புரண்டதில் வியப்பில்லை.
கடந்த 70 ஆண்டுகளில் உலகம் இதற்கு முன்பு நான்கு பொருளாதார மந்தநிலைகளை எதிர்கொண்டிருக்கிறது. 1975, 1982, 1991, 2009-ஆம் ஆண்டுகளில் இதேபோல விலைவாசியும், வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து உற்பத்திக்கு ஏற்ப விற்பனை இல்லாத மந்தநிலை காணப்பட்டது. இப்போது 2022-இல் கச்சா எண்ணெய் விலையில் தொடங்கி, எல்லா அத்தியாவசியத் தேவைகளும் அதிகரித்திருக்கின்றன. மேலும் அதிகரிக்கக்கூடிய நிலைமை பரவலாகக் காணப்படுகிறது.
அமெரிக்கா உள்பட வல்லரசு நாடுகள் அனைத்துமே கடுமையான பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. உயர்ந்து வரும் பணவீக்கம் என்கிற அசுரனின் தாக்குதல்தான் முக்கியக் காரணம். அமெரிக்க அரசின் புள்ளிவிவரப்படி, கடந்த ஒரு தலைமுறையில் எதிர்கொள்ளாத அளவில் பணவீக்கம் 8.6% அதிகரித்திருக்கின்றது. குடியிருப்புகள், உணவுப் பொருள்கள், விமானக் கட்டணம், புதிய - பழைய வாகனங்கள் என்று அனைத்துப் பிரிவிலும் அதிகரித்த விலைவாசியை அமெரிக்கக் குடிமகன் எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது.
பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு, உலகளாவிய மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை கடந்த மே மாதம் முதல் உயர்த்தத் தொடங்கியுள்ளன. இந்த நடவடிக்கை மிகவும் தாமதமானது என்று வல்லுநர்கள் கருதினாலும், இப்போது இந்த நடவடிக்கையை எடுக்காவிட்டால், நிலைமை மிகவும் விபரீதத்துக்கு இட்டுச் செல்லும் என்கிற கட்டாயத்தால்தான் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
உலகளாவிய அளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலையும், விலைவாசி ஏற்றமும், பணவீக்கமும் இந்தியாவையும் பாதிக்காமல் இல்லை. ஏனைய வல்லரசு நாடுகளையும் வளர்ச்சி அடையும் நாடுகளையும் ஒப்பிடும்போது மிகச் சாதுரியமாக நிலைமை கையாளப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக, ரஷியாவுடனான கச்சா எண்ணெய் ஒப்பந்தமும், ரூபாய் - ரூபிள் வர்த்தகச் செலாவணியும் இந்தியப் பொருளாதாரம் சீர்குலைந்து விடாமல் காப்பாற்ற உதவியிருக்கின்றன.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகித்தை அடுத்தடுத்த வாரங்களில் 0.50% மற்றும் 0.40% என மொத்தம் 0.90% உயர்த்தியுள்ளது. வங்கிக் கடன் பெற்றவர்கள், தவணைத் தொகை அதிகரிப்பால் பாதிக்கக்கூடும்.
கடந்த புதன்கிழமை அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், 75 புள்ளிகள் அல்லது 0.75% வட்டி விகிதத்தை உயர்த்தி இந்தியாவுடன் இணைந்து கொண்டது. இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய பிராந்தியத்திலும் பிரிட்டன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தத் தொடங்கிவிட்டன; அல்லது தொடங்கக் காத்திருக்கின்றன.
பணவீக்கத்துக்கு எதிரான இந்தப் போராட்டம், இத்தகைய ஒருங்கிணைந்த மற்றும் ஆக்ரோஷமான கொள்கை முடிவுகள் வெற்றியைத் தருமா என்பது கேள்வி அல்ல; ஆனால், அது மேலும் சிக்கலை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே கவலை. வளர்ச்சி அடைந்த மேலைநாடுகளில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நிதி ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடருமா என்பது சந்தேகம். அமெரிக்க மத்திய வங்கியின் அளவுக்கதிகமான வட்டி விகித உயர்வுகள், "ரிஸஷன்' என்று சொல்லப்படும் பொருளாதார மந்தநிலைக்கான அறிகுறியாகத் தெரிகிறது.
அமெரிக்க மத்திய வங்கி அதன் கொள்கை விகிதம் 2022-க்குள் 3.5%-ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது, இது மார்ச் மாத மதிப்பீட்டை விட 1.5% அதிகமாகும். ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி அத்தகைய கொள்கை விகிதங்களைத் தெளிவுபடுத்தவில்லை. கடந்த மாதம் வட்டி விகிதங்களை சரியான நேரத்தில் உயர்த்தியது. வட்டி விகித உயர்வு என்பது பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான கூர்மையானஆயுதமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், பொருளாதார மந்தநிலை காலத்தில் மக்களுக்கு பாரமாகவும் இருந்துவிடக்கூடாது.
பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல சவால்களுக்கு இடையேயும் இந்தியப் பொருளாதாரம் மந்தநிலைக்குத் தள்ளப்படவில்லை என்கிற அளவில் நாம் ஆறுதல் அடையலாம். கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் சற்று பின்தங்கினாலும்கூட, 2021-22-இல் அதிவிரைவில் வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடர்கிறது. சாதகமான பருவமழையும் அதிகரித்த ஏற்றுமதியும் உதவுமானால், தற்போதைய பணவீக்கப் பிரச்னையை பின்னுக்குத் தள்ளி கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளில் ஆள் சேர்ப்பதற்கான புதிய திட்டமான "அக்னிபத்' திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கி விட்டது. ஆனால், இந்தத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இப்போராட்டங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் ஆங்காங்கே எழுந்திருக்கின்றன.
இந்திய ராணுவத்தில் நிரந்தர சேவை, குறுகியகால சேவை ஆகிய பிரிவின்கீழ், வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். குறுகியகால சேவையில் பணியாற்றுபவர்கள் 10 முதல் 14 ஆண்டுகள் வரை பணியாற்றலாம். இப்படி சேருகிற இவர்களுக்கும் ஓய்வூதியம், ஓய்விற்குப் பிறகான ராணுவப் படை பலன்கள் போன்ற அனைத்தும் கிடைக்கும்.
ராணுவத்தில் தேவையில்லாத செலவைக் குறைக்க மத்திய பாதுகாப்புத் துறை நீண்ட நாட்களாகவே ஆலோசனை செய்து வந்தது. அந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில்தான் அக்னிபத் திட்டத்தை அரசு முன்வைத்திருக்கிறது. 2022 - 23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ரூ.5,25,166 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ஓய்வூதியத்திற்காக மட்டும் ரூ.1,19,696 கோடியை ராணுவம் செலவழித்து வருகிறது.
அதாவது நான்கில் ஒரு பகுதி ஓய்வூதியத்திற்காகவே செலவு செய்யப்படுகிறது. ராணுவ வீரர்களின் ஊதியம் மற்றும் பராமரிப்பு செலவுக்கு ரூ.2,33,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத் தொகையைக் கொண்டே தளவாடங்கள் வாங்குவது உள்ளிட்ட ராணுவத்திற்கான மற்றைய செலவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆகவே, இந்த செலவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக புதிய திட்டமாக வடிவமைக்கப்பட்டதுதான் அக்னிபத் திட்டமாகும். இந்தப் புதிய வேலைவாய்ப்பு முறைக்கு அக்னிபத் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வரை வயதுடைய ஆண், பெண் இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். ஆயுதப்படைக்கு வழக்கமாக ஆட்கள் தேர்வு செய்வதற்கான கல்வித்தகுதியே அக்னிபத் திட்டத்திற்கும் பொருந்தும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பணியில் சேருவோர் "அக்னி வீரர்கள்' என்று அழைக்கப்படுவார்கள். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில், நான்கு ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். முதல் ஆறு மாதங்கள் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். நடப்பு ஆண்டில் 46ஆயிரம் அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். அடுத்த 90 நாட்களில் புதிய திட்டத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
2023-ஆம் ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகி விடும் என்று ராணுவம் தெரிவிக்கிறது. இவ்வீரர்களுக்கான மாதாந்திர ஊதியம், முதலாம் ஆண்டு ரூ.30ஆயிரம், இரண்டாம் ஆண்டு ரூ.33ஆயிரம், மூன்றாம் ஆண்டு ரூ.36,500, நான்காம் ஆண்டு ரூ.40 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஊதியத்தோடு சேர்த்து இதர படிகளும் கிடைக்கும். ஊதியத்தில் 30 சதவீதம் பங்களிப்புத் தொகையாக பிடித்துக்கொள்ளப்படும். மீதமுள்ள 70 சதவீத தொகை மட்டும் வழங்கப்படும்.
வீரர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் அதே அளவிலான தொகையை மத்திய அரசு தனது பங்களிப்பாக செலுத்தும். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சேர்த்து வட்டியுடன் சேவை நிதியாக ரூ.11.71 லட்சம் பணப்பலன் வீரர்களுக்கு வழங்கப்படும். இதற்கு வருமானவரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளில் சேரும் வீரர்கள் நான்காண்டுகள் பணிநிறைவுக்குப் பிறகு நிரந்தரப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிப்பவர்களில் 25 சதவீத அக்னி வீரர்கள் மட்டுமே நிரந்தரப் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவர். மீதமுள்ள 75 சதவீத வீரர்களுக்கு சேவை நிதி வழங்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். இந்த அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணிக்காலம் முடிந்ததும், பணி அனுபவ சான்றிதழ் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.
அக்னி வீரர்களுக்கென்று தனிப்பட்ட தகுதிப்பட்டியல் உருவாக்கப்படும். முப்படைகளில் இதுவரை இருக்கும் எந்தப் பணி நிலைகளிலும், இந்த வீரர்கள் பணியமர்த்தப்பட மாட்டார்கள் என ராணுவம் தெரிவிக்கிறது. அதைப் போன்றே, பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தற்போது வழங்கப்படும் பதக்கம், விருதுகள் அனைத்தும் அக்னி வீரர்களுக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கிறது.
அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதால், அவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. பணி காலத்தில் பங்களிப்பு இல்லாத ரூ.48 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு வழங்கப்படும். உயிரிழப்பு ஏற்பட்டால் கூடுதலாக ரூ.44 லட்சம் நிதி வழங்கப்படும். பணியின்போது காயமடைந்து நூறு சதவீதம் மாற்றுத்திறனாளி ஆகிவிட்டால் ரூ.44 லட்சமும், 75 சதவீதமானால் ரூ.25 லட்சமும், 50 சதவீதமானால் ரூ.15 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும். இந்தத் தொகை சேமிக்கப்பட்டால், முப்படைகளையும் நவீனப்படுத்த முடியும் எனவும் அதிக வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் எனவும், பாதுகாப்புத்துறை கருதுகிறது.
அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அக்னி வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை, உள்துறை அமைச்சகங்களில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை, பாதுகாப்புத் துறை அமைச்சகங்கள் தெரிவித்துள்ளன.
ஆக, வேலைவாய்ப்பு அளிப்பதாக இருந்தாலும், ராணுவ வீரர்களுடைய ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான செலவைக் குறைக்க இந்தத் திட்டத்தை அரசு தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் அக்னிபத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பிகாரின் சாப்ரா மாவட்டத்து இளைஞர்கள் போராட்டக் களத்தில் குதித்து அம்மாநிலத்தை வன்முறைக் காடாக மாற்றியிருக்கிறார்கள். இதனால் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து அம்மாநிலத்தில் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. பிகார் மாநிலத்தில் மட்டுமல்ல, ராஜஸ்தான், அஸ்ஸாம், உத்தர பிரதேசம், ஹரியாணா போன்ற மாநிலங்களிலும் இந்த அக்னிபத் திட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தத் திட்டத்தால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகிவிடும். அதனால் வேலையில்லாத இளைஞர்கள் ஒன்று சேர்ந்து போராளிகள் குழுவை ஏற்படுத்தி விடுவார்கள் என்கிற அச்சம் நிலவுகிறது. ராணுவத்திற்கென்றே தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிற இளைஞர்கள், இந்தத் திட்டம் தங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தருவதாக சொல்கிறார்கள். பிகார், ராஜஸ்தான், அஸ்ஸாம் மாநிலங்களிலும் தென் பகுதியில் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களிலும், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்திலும் இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
2019-ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து ராணுவத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள், கரோனா நோய்த்தொற்று காரணமாக எழுத்துத் தேர்வு எழுத முடியாமல் போய்விட்டது. அதனால், அவர்களுக்கு இந்த அக்னிபத் திட்டம் மிகுந்த ஏமாற்றத்தையும், கவலையையும் உண்டாக்கியிருக்கிறது. இந்திய ராணுவத்தை உலகத்தரம் வாய்ந்த ராணுவமாக மாற்ற அக்னிபத் திட்டம் மிக முக்கியப் பங்காற்றும் என்று பாதுகாப்புத் துறை சொன்னாலும், இளைஞர்கள் அதனை ஏற்கும் மனநிலையில் இல்லை.
ஆனாலும், அக்னிபத் திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று ராணுவ விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி கூறியுள்ளார்.
இந்திய ராணுவத்தில் 14 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசை, இந்திய இளைஞர்களின் நெஞ்சில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் பேர் இந்திய ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள். இந்த இடங்களை நிரப்பக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு அக்னிபத் திட்டம் மிகப்பெரிய துரோகமிழைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
நான்காண்டு வேலைக்குப் பிறகு, வேலையில்லாத சூழ்நிலை ஏற்பட்டு விடும். அல்லது மீண்டும் தனியார் வசம் வேலைக்குச் செல்ல வேண்டும். ஆகவேதான், இளைஞர்கள் பதற்றம் அடைந்திருக்கிறார்கள். நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவும், நமது இளைஞர்களுக்கு ராணுவப் பணி வாய்ப்பை வழங்குவதற்காகவும் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது என்று கூறப்பட்டாலும் பணி நிரந்தரம் இல்லை என்பதனால் இளைஞர்கள் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள்.
இந்திய ராணுவத்தின் ஒட்டுமொத்த தன்மையையும் இந்த அக்னிபத் திட்டம் சிதைத்துவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. ஏனென்றால், ராணுவப் பணி என்பது இடைக்கால பணியோ, பொழுதுபோக்கும் வேலையோ அல்ல. ராணுவ வாழ்க்கை என்பது, போருக்கும், உயிரிழப்பிற்கும் தயாரான ஓர்அர்ப்பணிப்பு. இதில் நிரந்தரமற்ற வேலை என்கிற நிலை உருவானால், ராணுவம் தனது நம்பகத்தன்மையை இழந்து விடும் என்கிற கூற்றையும் மத்திய அரசு கருதிப் பார்க்க வேண்டும்.
உக்ரைன் போரில் ரஷியாவின் பின்னடைவை நாம் பார்த்தோம். உறுதியான எதிர்த்துப் போரிடும் திறனில்லாத பகுதிநேர அல்லது போதிய பயிற்சி பெறாத படையைக் கொண்டிருந்தால், இதுபோன்ற ஆபத்துதான் ஏற்படும். ஆகவே, அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியாவிற்கு நல்ல பயிற்சி பெற்ற ராணுவமே தேவை.
வழக்கமாக ராணுவ வீரர்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை பயிற்சி பெறுவார்கள். ஆனால், அக்னிபத் வீரர்கள் ஆறு மாதம் மட்டுமே பயிற்சி பெறுவார்கள். ஆகவே, போதிய பயிற்சி கிடைக்காமல் தங்களது திறனை இழந்து விடக்கூடும்.
அது போன்றே, ராணுவத்தில் இடைக்கால பிரிவு, நிரந்தர பிரிவு என இரண்டு பிரிவுகள் இருப்பது, ராணுவத்தின் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்து செயல்படுத்தும் திறனை வெகுவாக பாதிக்கும். அதனால் ஏற்றத்தாழ்வுகளும் உருவாகக்கூடும்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இளைஞர்கள் என்ன செய்வார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது. இந்திய ராணுவத்தில் புதிய வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், பழைய படைப்பிரிவின் கட்டமைப்பு சீர்குலைந்து விடும். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 40ஆயிரம் இளைஞர்கள் தங்கள் பணியை இழப்பார்கள். கண்களை விற்று ஓவியம் வாங்குவது அறிவுடைமையல்ல!
கட்டுரையாளர்:
முன்னாள் அமைச்சர்.
ராஜபட்ச குடும்பம் அதிகாரத்தில் இருந்தபோது தங்கள் உறவினர்களையும், இராணுவ அதிகாரிகளையும் அரச நிர்வாகத்தின் பல்வேறு துறைகளின் தலைவர்களாக நியமித்திருந்தார்கள்.
தற்போது ராஜபட்ச குடும்பத்தின் துணையுடன் அதிகாரத்திற்கு வந்துள்ள ரணில் விக்ரமசிங்க தேர்தலில் தோல்வியடைந்த தனது கட்சி உறுப்பினர்களை அரச நிர்வாகத்தின் பல்வேறு துறைகளுக்கு நியமித்திருக்கிறார்.
குறிப்பாக கடந்த நாடளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த சாகல ரத்தநாயக்க தற்போது பிரதமர் அலுவலக முக்கிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சட்ட ஒழுங்கு அமைச்சராக இருந்த சாகல ரத்தநாயக்க, ரூ.4 பில்லியன்(400 கோடி) அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கி தலைமறைவாக இருந்த தற்போதைய அதிபர் செயலாளர் காமினி செனரத்தை தனது வீட்டில் வைத்து பாதுகாத்து மேற்குறித்த வழக்கிலிருந்து தப்ப உதவி செய்தார்.
அதேபோல, கடந்தத் தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்ரமசிங்கவின் மருமகன் ருவான் விஜேவர்தன தற்போது பிரதமர் அலுவலக இணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ருவான் விஜேவர்தன, ராஜபட்ச குடும்பம் மைத்திரிபால சிறிசேன உதவியுடன் சதி செய்து ஆட்சியை கைப்பற்ற முற்பட்டபோது தங்களுக்கு உதவ முன்வந்த கட்சி தலைவர்களுக்கு ரூ.500 மில்லியன்(50 கோடி) பணத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓவருவருக்கும் ரூ.30 கோடியையும் ராஜபட்ச குடும்பம் லஞ்சம் வழங்கியதாக பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இது தவிர, ருவான் விஜேவர்தன பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது பாதுகாப்பு அமைச்சகத்தின் துணைப்படையில் இருந்த சகரான் தலைமையிலான கும்பல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
அதேபோல நல்லாட்சி அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த அகில விராஜ் காரியவசம் பிரதமர் அலுவலக அதிகாரிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார்.
அகில காரியவசம் கல்வி அமைச்சராக இருந்தபோது பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவசச் சீருடை தொடர்பான கூப்பனில் தனது படத்தை அச்சிடுவதற்க்கு செலவு செய்யும் தொகையிலும் 25% அதிகமாக செலவு செய்திருந்தார்.
ஆகவே, ராஜபட்ச குடும்பத்திற்கும் ரணில் விக்ரமசிங்க கும்பலுக்கும் எந்த வேறுபாடுகளும் கிடையாது. இவர்கள் யாருக்கும் தூய அரசியல் கலாச்சாரத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்கிற அக்கறையும் கிடையாது. சுயநல அரசியலைத் தான் செய்கிறார்கள்.
மேலும், இரண்டு தரப்புமே சிங்கள பௌத்த மேலாண்மை கருத்தியலை போட்டி போட்டு பகிர்ந்து கொள்கிறார்கள்.
குறிப்பாக, சிங்கள பௌத்த அரசியல் பீடம் தனது அரசியலை பேரிடர் காலப் பகுதியில் நிறுத்தி வைக்காது என்பதற்கு குருந்தூர் மலை விவகாரம் ஒரு சான்று. ஆனால், இந்த உண்மைகளை மறந்து சிலர் இப்போதும் ரணில் புராணம் பாடுகிறார்கள்.
கடந்த கரோனா பெருந்தொற்று காலத்தில் கோத்தபய ராஜபட்ச தவிர வேறு யாரால் பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியும் என் கேட்ட அதே கும்பல்தான் பொருளாதாரத்தை ரணில் விக்ரமசிங்க தவிர வேறு யாரால் நிமிர்த்த முடியும் என ரணிலை புகழ்கிறார்கள்.
ஆனால், உண்மையில் அரசியல் கட்டமைப்பு மாற்றம் இன்றி இலங்கையின் பொருளாதாரத்தை எவராலும் காப்பாற்ற முடியாது. இவர்கள் தமிழர்களின் சிக்கல்களுக்கு தீர்வு தர விரும்ப மாட்டார்கள்.
- தொடரும்
அடுத்துவரும் 18 மாதங்களுக்குள் நாடு முழுவதும் 10 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கவிருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது, இளைஞர்களிடத்தில் உற்சாக அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தாலும், இது மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதற்கான பாஜகவின் வியூகம் என்ற அரசியல் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்ட பெரும் எண்ணிக்கையிலான வேலையிழப்புகள், பணவீக்கத்தின் எதிர்மறையான விளைவுகள் இவற்றுக்கிடையே வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று பொருளியல் வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.
‘இந்தியாவைப் பல்வேறு மன்னர்கள் ஆட்சிசெய்துள்ளனர். ஆனால், இந்திய வரலாற்றாளர்கள் முகலாயர்கள் குறித்து மட்டுமே அதிக நூல்களை எழுதியுள்ளனர். மெளரியர், சோழர், பாண்டியர், பல்லவ மன்னர்களைப் பற்றி அதிகம் எழுதாதது ஏன்?’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஜூன் 10-ல் புத்தக வெளியிட்டு விழாவில் திடீர் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு வேறு எவரும் காரணம் அல்ல. நாமேதான் காரணம். அமித் ஷா குறிப்பிடும் முகலாயர்கள் வரலாற்றுக்கும் இதர மன்னர்களின் வரலாற்றுக்கும் பெரிய அளவு வித்தியாசம் உள்ளது. இதற்கு அவர்களது காலகட்டமும், நமது மன்னர்களின் பழக்கவழக்கங்களும் முக்கியக் காரணம்.
இந்தியா மீது படையெடுத்து வந்த முகலாயர் உள்ளிட்ட முஸ்லிம் மன்னர்களுடன் அன்றாடக் குறிப்பு எழுதுபவர்களும் வந்தனர். இவர்கள் பாபர், அக்பர், ஔரங்கசீப், ஷாஜஹான் என மன்னர்களின் போர், விழாக்கள், பொழுதுபோக்கு, அரண்மனை என அனைத்தையும் பாரசீக மொழியில் பதிவுசெய்துள்ளனர்.
ஷாஜஹானின் தாஜ்மகால் மீது எழுப்பப்படும் புகார்களுக்கு அதைக் கட்டியபோது பாரசீகப் பயணியான அப்துல் ஹமீது லாகூரி எழுதிய ‘பாட்ஷாநாமா’ இன்று பதிலளிக்கிறது. பேரரசரான அக்பரின் அன்றாட நிகழ்வுகள் குறித்து இரண்டு நாட்குறிப்புகள் உள்ளன.
ஒன்றில், அக்பரின் அனைத்து நடவடிக்கைகளும் பதிவாகியிருக்கும். மற்றொன்றில், அக்பர் படித்துச் சரிபார்த்துத் தேவையானவற்றை மட்டும் பதிவுசெய்து எழுதப்பட்டிருக்கும். இந்த இரண்டு நாட்குறிப்புகளுமே ‘அயினி அக்பரி’ எனும் பெயரில் இன்றும் உள்ளன.
இவற்றில், அக்பர் சரிபார்த்தது மட்டும் இந்தியாவில் இருக்க, முதலில் பதிவான குறிப்புகள் லண்டனின் எச்.சி.ஐ.யில் உள்ள ‘இந்தியா ஹவுஸ்’ நூலகத்தில் உள்ளன.
இதர மன்னர்களின் பல வரலாற்று ஆவணங்களும்கூட இந்தியாவுக்கு வெளியே உள்ளன. இதில் முக்கியமான ராஜராஜனின் சாசனங்கள் எனும் செப்பேடுகள், நெதர்லாந்திலுள்ள லேடன் அருங்காட்சியகத்தில் சிக்கியுள்ளது.
இவை போன்ற ஆதாரங்கள் மட்டுமன்றி, அவ்வப்போது ஐரோப்பிய அறிஞர்கள் தரவுகளாகக் கொண்டுசென்ற ஓலைச்சுவடிகளுடன், பல முக்கிய நூல்களும் வெளிநாடுகளில் உள்ளன.
தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு ஆகியவற்றில் ஆங்கிலேயர் ஆட்சியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்தவையும் திரளாக வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
இவற்றின் எண்ணிக்கையும் விவரமும் நம்மிடம் இல்லை. மத்திய அரசு நினைத்தால் இந்தியாவை நான்கு பகுதிகளாகப் பிரித்து, அங்குள்ள வரலாற்றாளர்களைத் தேர்வுசெய்து குழுக்கள் அமைக்கலாம். அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, நம் வரலாற்று ஆதாரங்களைத் தொகுப்பதுடன், மீட்கவும் முயலலாம். இவை அனைத்தும் கிடைத்தால்தான் நம் வரலாற்றை விரிவாக எழுத முடியும்.
முகலாயர்களுடையதுபோல், நம்மிடம் ஆதாரங்களாக இருப்பவை மன்னர்கள் வடித்த கல்வெட்டுக்களே. பெரும்பாலான தென்னிந்திய மன்னர்கள் கல்வெட்டுகளையும், செப்புப் பட்டயங்களையுமே ஆதாரமாக்கிக் கொண்டனர். இக்கல்வெட்டுகள் பிராகிருதம், சம்ஸ்கிருதம், பாரசீகம், அரபு, பாலி, இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் உள்ளன.
மத்திய அரசின் இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் (ஏஎஸ்ஐ) கல்வெட்டியல் பிரிவு, கிடைத்தவற்றில் பெரும்பாலானவற்றைப் பதிப்பித்துவிட்டது, நூறாண்டுகளுக்கு முன் படி எடுத்தும் முழுமையாகப் பதிக்கப்படாமல் மைசூரில் உள்ளவை தமிழ்க் கல்வெட்டுகள் மட்டுமே.
இப்பிரச்சினை குறித்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.சாந்தினிபீ ‘விகடன்’, ‘இந்து தமிழ்’ பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். இதையடுத்து, மைசூர் அலுவலகம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தமிழகத்துக்குத் தமிழ்க் கல்வெட்டுகளின் படி நகல்கள் வந்துள்ளன.
மிக அதிகமான இலக்கியச் சான்றுகளைக் கொண்டது சங்க காலம். தற்போது அகழாய்வு நடைபெற்றுவரும் கீழடியிலும் கொந்தகையிலும் கிடைப்பவை இந்தச் சான்றுகளை நிரூபணமாக்கிவருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
இதன் பிறகும் அகழாய்வு செய்ய வேண்டிய இடங்களில் அதற்கான அனுமதியை அளிக்க ஏஎஸ்ஐ முன்வரவில்லை. எனினும், இதன் மீதான விழிப்புணர்வு தமிழர்களிடையே இருப்பதை உணர்ந்தது தமிழக அரசு. தானே முன்வந்து நடத்தும் அகழாய்வின் நான்காவது அறிக்கையும் வெளியானது.
ஆதிச்சநல்லூரில் இரண்டாவது முறை அகழாய்வு 2004-ல் நடத்தியும் அதன் அறிக்கையை ஏஎஸ்ஐ இன்னும் வெளியிடாமல் உள்ளது. கீழடியின் பானை ஓடு எழுத்துகள், பொ.ஆ,மு. (கி.மு.) ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பாகவே எழுதப்பட்டவை என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டன.
இதன்படி, நம் முதல் எழுத்துகள் எனக் கருதப்படும் அசோகர் காலத்துக்கும் இரண்டு நூற்றாண்டுகள் முன்னதாகவே தமிழர்களுக்கு எழுதத் தெரியும் என்பதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு, பெருமைகொள்ள வேண்டும். இது குறித்து மத்திய அரசு காக்கும் அமைதி, தென்னிந்தியா முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாது என்பதை வெளிப்படுத்துவதுபோல் தோன்றுகிறது.
இதுபோன்ற கல்வெட்டு ஆதாரங்கள் வடஇந்தியாவிலும் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பதிப்பிக்கப்பட்டு மெளரியர்கள், குப்தர், ஹர்ஷர் என விரிவாக வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. மெளரியர்களின் முக்கிய வரலாற்று ஆதாரமான ‘அர்த்தசாஸ்திரம்’ தஞ்சாவூரின் சரஸ்வதி மஹால் நூலகத்தில்தான் கண்டெடுக்கப்பட்டது.
மத்திய அரசின் பாடத்திட்டம், வடஇந்தியர்கள் எழுதியிருக்கும் வரலாற்று நூல்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அதிகமாக இடம் ஒதுக்கப்பட்டிருப்பது வடஇந்தியர்களுக்கே. 1857 மீரட்டின் சிப்பாய்க் கலகம். சாவர்க்கர் தனது நூலில் குறிப்பிட்டார் என்பதற்காகவே முதல் சுதந்திரப் போராகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், 1806 வேலூர் புரட்சி, 1808 திருவாங்கூர் கலவரம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நடந்தவற்றை மத்திய அரசு கவனத்தில் கொள்ளாமல் உள்ளது.
இதுபோன்றவைதான் ஐரோப்பியர்கள் தம் வரலாற்றை எழுதி முடித்தமைக்கும், நாம் இன்னும் எழுதாமல் இருப்பதற்கும் காரணம். அரசியல், மதம், சமூகம், மொழி, பிரதேசம் போன்றவை தொடர்பான எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இன்றி எழுதப்படுவதுதான் ஒரு நாட்டின் வரலாறு என்பது அமைச்சர் அமித் ஷா அறியாததா?
- ஆர்.ஷபிமுன்னா, தொடர்புக்கு shaffimunna.r@hindutamil.co.in
சொல்...பொருள்...தெளிவு
| சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து அறிவியலாளர் ரேச்சல் கார்சன் எழுதி பெரும் கவனத்தைப் பெற்றிருந்த ‘மௌன வசந்தம்’ நூல் வெளியாகி சில ஆண்டுகள் கடந்திருந்தன.