தமிழகத்தைச் சேர்ந்த சதிர் நடனக் கலைஞர் ஆர். முத்துக்கண்ணம்மாள் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. மறைந்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்பட 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழகத்திலிருந்து சிற்பி பாலசுப்பிரமணியம், சௌகார் ஜானகி, டாக்டர் வி. சேஷய்யா, ஏ.கே.சி. நடராஜன், ஆர். முத்துக்கண்ணம்மாள், பல்லேஷ் பஜந்திரி உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.
தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பத்ம விருதுகளை வழங்கினார். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்பட 54 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் கௌரவித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், சதிர் நடனக் கலைஞர் முத்துக்கண்ணம்மாள், கிளாரினெட் கலைஞர் ஏ.கே.சி. நடராஜன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த வழங்கினார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை (சிபிஎஸ்) அமல்படுத்துவதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3,000 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதைத் தவிர்க்க மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை (சிபிஎஸ்) ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்கள் தரப்பில் சுமார் 20 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே 2003-க்கு பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் சுமார் 6 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இதுவரை இணைக்கப்பட்டுள்ளனர். அதாவது தற்போது அரசுப் பணியிலுள்ள ஊழியர்களில் சுமார் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் சிபிஎஸ் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இதுவரை அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை மற்றும் அரசின் பங்களிப்புத் தொகை என ரூ.50,000 கோடி சேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் இணைந்த அரசு ஊழியர்களில் சுமார் 24,000 பேர் இதுவரை பணி ஓய்வு பெற்றும், உயிரிழந்தும் உள்ளனர்.
ஆனால் இவர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட பணப் பலன்கள் இதுவரை வழங்கப்படவில்லை என்பதே அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராடுவதற்கு முக்கியக் காரணம்.
ராஜஸ்தான், சத்தீஸ்கரில் சிபிஎஸ் ரத்து: இந்தியாவில் மேற்குவங்கம் நீங்கலாக பிற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம் என எந்தவொரு இறுதி முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதனிடையே காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பிலுள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் மற்றொரு மாநிலமான சத்தீஸ்கரிலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில், தமிழகத்திலும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள் உள்ளனர். திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திமுக ஆட்சி அமைந்து விரைவில் 2-ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக்கான சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது சிபிஎஸ் ஒழிப்புக்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும் என பல்வேறு சங்கங்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
புதிய ஓய்வூதியத் திட்டத்தால் கூடுதல் செலவு: தமிழகம் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் (சிபிஎஸ்) இணையாமலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடராமலும் உள்ளது. சிபிஎஸ் திட்டத்தில் இணைந்தால், தில்லியிலுள்ள ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி, ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையுடன், அரசின் பங்களிப்பு நிதியையும் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
நிதி நெருக்கடி ஒருபுறம் அச்சுறுத்தி வரும் நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3,000 கோடி கூடுதல் செலவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அதாவது சிபிஎஸ் திட்டத்தில் அரசு ஊழியரிடம் ரூ.1000 பிடித்தம் செய்தால், அரசின் பங்களிப்பாகவும் ரூ.1000 செலுத்த வேண்டும். அதே நேரத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தில், அரசு பங்களிப்பு நிதியாக எவ்வித தொகையையும் செலுத்த வேண்டியதில்லை. மேலும், 33 ஆண்டுகள் பணிபுரிந்தால் மட்டுமே முழு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்தால் மட்டுமே ஓய்வூதியப் பலன்களைப் பெற முடியும் என்ற விதிமுறை உள்ளது. இது அரசுக்கு சாதகமான அம்சமாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரெடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது:
ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்படாத போதிலும், சிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வுக்குப் பின் பல்வேறு நெருக்கடிகளை சந்திப்பது ஒருபுறம் இருந்தாலும், அரசுத் தரப்பில் கூடுதல் செலவுகளை தவிர்க்கும் வகையிலேயே அந்த மாநில அரசுகள் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறியுள்ளன.
தமிழகத்தைப் பொருத்தவரை 2016 சட்டப்பேரவைத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் என 3 தேர்தல்களில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்பது திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது. கூடுதல் செலவைத் தவிர்க்கும் வகையிலும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மணிப்பூர் மாநில முதல்வராக மீண்டும் என் பிரேன் சிங் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
மணிப்பூர் உள்பட உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு மார்ச் 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் மணிப்பூர் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றியடைந்தது.
இதனைத்தொடர்ந்து முதல்வரைத் தேர்வு செய்வது தொடர்பாக மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று (மார்ச் 20) நடைபெற்றது. பாஜக மேலிடப் பொறுப்பாளர்களாக நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் பிரேன் சிங் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற விழாவில் பிரேன் சிங்கிற்கு மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் அமைச்சர்களாக 5 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.
இதன்மூலம், தொடர்ந்து இரண்டாவது முறையாக மணிப்பூர் மாநிலத்தின் முதல்வரானார் பிரேன் சிங்.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்கு ஹர்பஜன் சிங் போட்டியிடுகிறார்.
முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே.அந்தோணி (கேரளம்), மாநிலங்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் ஆனந்த் சா்மா (ஹிமாசல பிரதேசம்), காங்கிரஸின் பிரதாப் சிங் பாஜ்வா (பஞ்சாப்), சிரோமணி அகாலி தள மூத்த தலைவா் நரேஷ் குஜ்ரால் (பஞ்சாப்) உள்பட 13 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரலில் முடிவடைய உள்ளது.
பஞ்சாபில் 5, கேரளத்தில் 3, அஸ்ஸாமில் 2, ஹிமாசல பிரதேசம், நாகாலாந்து, திரிபுராவில் தலா ஒன்று என இப்பதவிகள் காலியாகவுள்ளன. இந்த 13 இடங்களுக்கும் வரும் 31-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலனை மாா்ச் 22-ஆம் தேதி நடைபெறும்.
இதையும் படிக்க- கிண்டி கிங் மருத்துவமனை: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
வேட்புமனுவை திரும்பப் பெற மாா்ச் 24 கடைசி நாளாகும். இதற்கான வாக்குப் பதிவு மாா்ச் 31-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்கு ஹர்பஜன் சிங் போட்டியிடுகிறார்.
இவர்தவிர ஐஐடி பேராசிரியர் சந்தீப் பதக், தில்லி சட்டப்பேரவை உறுப்பினர் ராகவ் சதா, அசோக் மிட்டல், தொழிலதிபர் சஞ்சீவ் ஆரோரா ஆகியோரும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடுகின்றனர்.
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி 2022 சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்றது ஹைதராபாத் எஃப்சி.
மா்மகோவாவின் படோா்டா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் ஷூட் அவுட் முறையில் 3-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் அணியை வென்று பட்டத்தை கைப்பற்றியது. தொடக்கம் முதலே பரபரப்பாக அமைந்த இந்த ஆட்டத்தில் கேரள அணி தரப்பில் 68-ஆவது நிமிஷத்தில் ராகுலும், ஹைதராபாத் தரப்பில் 88-ஆவது நிமிஷத்தில் சாஹிலும் கோலடித்தனா்.
பட்டம் வென்ற ஹைதராபாத் அணிக்கு ரூ.6 கோடியும், ரன்னா் அணி கேரளத்துக்கு ரூ.3 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிநாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோருக்கு நீண்ட கால குடியுரிமையை வழங்கும் நோக்கில் ‘கோல்டன் விசா’ என்ற சிறப்பு விசாவை அந்நாட்டின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிமுகப்படுத்தினார்.
ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் விதித்துள்ள விதிகளின் கீழ் உள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர்கள் இந்த கோல்டன் விசாவைப் பெற முடியும்.
இந்த விசாவை பொறுத்தவரை, அந்நாட்டு குடியுரிமை பெற்றவரின் ஆதரவின்றி நீண்ட காலம் அங்கு தங்கவும், படிக்கவும், பணிபுரியவும் வழிவகை செய்கிறது. இவர்கள், அந்நாட்டின் வியாபாரங்களின் உரிமையை 100 சதவீதம் அனுபவிக்க முடியும். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கவும் வேண்டும்.
முதலீட்டாளர்களை பொறுத்தவரை கோல்டன் விசா பெறுவதற்கு ரூ. 48 லட்சம் (10 மில்லியன் திர்ஹம்) பொது முதலீடு செய்திருக்க வேண்டும். முதலீட்டாளர்கள் செய்த தொகை கடனாக இருக்கக் கூடாது.
மாணவர்களை பொறுத்தவரை, உயர்கல்வியில் குறைந்தபட்சம் 95 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் கோல்டன் விசாவிற்கு தகுதிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பிற நாடுகளை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கெளரவப்படுத்தி வருகின்றது. தமிழ் திரையுலக பிரபலங்களான விஜய் சேதுபதி, பார்த்திபன், திரிஷா, மீனா, சிம்பு உள்ளிட்டோர்களுக்கும் கோல்டான் விசா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கரோனா தொற்றின் போது வேலை இழந்தவர்கள், மீண்டும் வேலை தேடுவதற்கும், மாற்று வேலையை நோக்கி நகர்வதற்கும் இந்த கோல்டன் விசா உதவியதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தொற்று காலத்தில் நாடு திரும்பியவர்கள் மீண்டும் அமீரகம் வருவதற்கு பல்வேறு சிக்கல்களை சந்தித்தனர். அப்போது கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு முன்னிரிமை வழங்கப்பட்டது. அவர்களுக்காக 200 இருக்கைகளை கொண்ட விமானம் ஒன்றும் துபைக்கு இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற விசாவை பெறுபவர்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை விசாவை புதுப்பிக்க மருத்துவ உடற்தகுதி உள்ளிட்ட பல்வேறு செலவுகளை சந்திக்க நேரிடும். ஆனால், கோல்டன் விசாதாரர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பதால் இந்த செலவுகளை சேமிக்க வழிவகை செய்கிறது.
தற்போது கோல்டன் விசா பெற்று அரபு அமீரகத்தில் குடியேறியவர்களுக்கு மற்றொரு நம்பிக்கையை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது. தொழிலில் முதலீடு செய்பவர்கள் அல்லது தனிப்பட்ட பணிகளுக்காக அந்நாட்டில் இருக்கும் கோல்டன் விசாதாரர்கள் அரசின் நிபந்தைகளில் ஏதேனும் கடைபிடிக்க தவறினால், அடுத்த 30 நாள்களுக்குள் தங்கள் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்ற விதிமுறையை நீக்கியுள்ளது.
இதுமட்டுமின்றி, கோல்டன் விசாதாரர்கள் தங்கள் சொந்த நாடுகளில் பெற்ற ஓட்டுநர் உரிமத்தை வைத்து துபையில் எந்த தேர்வுமின்றி ஓட்டுநர் உரிமையை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அபுதாபியில் உள்ள கார்கள் வாங்குவதற்கு முன்னிரிமை அளிப்பதுடன் சலுகைகளும் வழங்கப்படுகிறது. ஸ்பா சேவைகள், உணவகங்கள், மருத்துவ காப்பீட்டிற்கான ஆண்டு சந்தாக்கான தொகைகளில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சலுகைகளுக்கும், சேமிப்பிற்கும் மத்தியில் அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறுவதை பலர் பெருமையாக கருதுவதால் வரும் ஆண்டுகளில் கோல்டன் விசா பெறுபவர்களின் எண்ணிக்கையும், ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடுகளும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்கு வளைகுடா நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் குழு ஸ்ரீநகா் வந்துள்ளது.
இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா கடந்த ஜனவரி மாதம் துபை எக்ஸ்போவுக்கு சென்றிருந்தபோது, முதலீட்டாளா்களுக்கு அழைப்பு விடுத்திருந்தாா். அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்கு வளைகுடா நாடுகளைச் சோ்ந்த 36 போ் ஸ்ரீநகருக்கு வருகை தந்துள்ளனா்.
4 நாள் பயணத்தில், ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா, விருந்தோம்பல் உள்ளிட்ட முதலீடுகளுக்கான வாய்ப்புள்ள துறைகள் குறித்து அவா்களிடம் ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் எடுத்துரைக்கும். குல்மாா்க், பஹல்கம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று அந்தக் குழுவினா் பாா்வையிடுவையிடுகிறாா்கள் என்றாா் அவா்.
வளைகுடா நாடுகள் குழுவில் மனை வணிகம், விருந்தோம்பல், தொலைத் தொடா்பு, ஏற்றுமதி-இறக்குமதி ஆகிய துறைகளைச் சோ்ந்த தொழிலதிபா்கள், ஆளும் அரச குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். தூதரக அதிகாரி, சில கல்வியாளா்கள், பத்திரிகையாளா் உள்ளிட்டோரும் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.
பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீது எதிா்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீா்மானம் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றம் மாா்ச் 25-ஆம் தேதி கூடுகிறது.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதிகரிக்கும் பணவீக்கம் ஆகியவற்றுக்கு பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தஹ்ரீக்- ஏ -இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) ஆட்சிதான் காரணம் எனக் குற்றம்சாட்டி, இம்ரான் கானுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்துள்ளன.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகியவற்றைச் சோ்ந்த 100 எம்.பி.க்கள் நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸை நாடாளுமன்றச் செயலகத்தில் கடந்த மாா்ச் 8-ஆம் தேதி அளித்தனா்.
இந்தத் தீா்மானம் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றம் மாா்ச் 25-ஆம் தேதி காலை 11 மணியளவில் கூட்டப்படுவதாக நாடாளுமன்றச் செயலகம் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது. இந்தத் தீா்மானம் நாடாளுமன்ற கீழவையில் முறைப்படி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதிலிருந்து மூன்று முதல் ஏழு நாள்களுக்குள் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
342 உறுப்பினா்கள் கொண்ட கீழவையில் இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு 155 உறுப்பினா்கள் உள்ளனா். 6 கட்சிகளைச் சோ்ந்த 23 உறுப்பினா்கள் இம்ரான் கானுக்கு ஆதரவு அளித்து வருகின்றனா். நம்பிக்கையில்லா தீா்மானத்தை தோற்கடிக்க 172 உறுப்பினா்களின் ஆதரவு அவருக்குத் தேவை.
ஆளும் கட்சியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள் அண்மைக்காலமாக இம்ரான் கானுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சியைச் சோ்ந்த சிலா் தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தாலும் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்துவிடும்.
அதிருப்தி உறுப்பினா்களை கட்சியில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் கோரி ஆளும்கட்சி சாா்பில் சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்க முன்னணி அமெரிக்கத் தொண்டு நிறுவனமான ஹியூலெட் அறக்கட்டளைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுற்றுச்சூழல், பாலின சமத்துவம் மற்றும் நிா்வாகம் சாா்ந்தத் தளங்களில் இயங்கி வரும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ஹியூலெட் அறக்கட்டளை நன்கொடை அளித்து வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு, அந்த அறக்கட்டளை 465 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.3,500 கோடி) நன்கொடை அளித்துள்ளது.
அந்த அறக்கட்டளை தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘ஹியூலெட் அறக்கட்டளையிடம் இருந்து பெற்ற நன்கொடையை அந்நிய நிதியுதவி ஒழுங்குமுறைச் சட்டம் (எஃப்சிஆா்ஏ) அனுமதியளிக்காதப் பணிகளுக்கு இந்திய தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து எஃப்சிஆா்ஏயின் பிஆா்சி பிரிவின் கீழ் ஹியூலெட் அறக்கட்டளை கொண்டு வரப்பட்டுள்ளது.
பிஆா்சி பிரிவின்படி, மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் வெளிநாட்டு நன்கொடையாளா் நிதியுதவி அளிக்க முடியாது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்திய தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஹியூலெட் அறக்கட்டளை நன்கொடை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.
கடந்த 5 ஆண்டுகளில் எஃப்சிஆா்ஏ பிரிவுகளின் விதிமுறைகளை மீறியதாக சுமாா் 1,900 தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் பதிவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம்: ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 13.05 மணி நேரத்தில் ஆட்டிசம் பாதித்த மும்பை சிறுமி ஜியாராய் நீந்தி கடந்து சாதனை படைத்தார்.
மும்பையைச் சேர்ந்த கடற்படை வீரர் மதன்ராய் என்பவரின் மகள் ஜியாராய்(13). ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இச்சிறுமி நீச்சல் பயிற்சியில் கைதேர்ந்தவர். ஏற்கெனவே பல சாதனைகளை படைத்துள்ளார்.
இந்நிலையில், ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை பாக் ஜலசந்தி கடலை நீந்தி சாதனை புரிவதற்காக ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மற்றும் பைபர் படகில் ஜியாராய், அவரது தந்தை மதன்ராய், பயிற்சியாளர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 10 பேர் தலைமன்னாருக்கு நேற்று முன்தினம் சென்றனர். நேற்று அதிகாலை 4.15 மணிக்கு நீந்தத் தொடங்கிய ஜியாராய் நேற்று மாலை 5.20 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை வந்தடைந்தார்.
இவர் தலைமன்னார்- தனுஷ்கோடி இடையிலான 29 கி.மீ. தூரத்தை 13 மணி 5 நிமிடத்தில் நீந்தி கடந்துள்ளார். அரிச்சல் முனையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சிறுமி ஜியா ராய்க்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.
கடலோர பாதுகாப்புக் குழுமக் கூடுதல் டிஜிபி சின்னச்சாமி, ராமநாதபுரம் எஸ்.பி. இ.கார்த்திக், நகராட்சி துணைத் தலைவர் தெட்சிணாமூர்த்தி, மீனவர்கள், கடலோர காவல் படையினர், இந்திய கடற்படையினர் சிறுமியை வரவேற்று வாழ்த்தினர்.
புதிதாக அறிமுகப்படுத்தப்படும் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் பள்ளிகளில் பகவத்கீதையை பாடமாக கொண்டு வருவதற்கு கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சைக்குரியதாகவும் மாறிவருகிறது.
புதிய தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்கள் அமல்படுத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக நாட்டிலேயே முதல் மாநிலமாக குஜராத்தில் வரும் கல்வியாண்டு முதல் 6 முதல் 12-ம் வகுப்புக்கான பாடத்திட்டத்தில் பகவத்கீதை மற்றும் ராமாயணம் சேர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கர்நாடகாவிலும் இப்பாடம் சேர்க்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு வெளியிட்டார். மாணவர் சமுதாயத்திடம் கீதை நெறியை வளர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கல்வித்துறையை காவிமயமாக்கும் முயற்சிகள் நடப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியதால் இந்த விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியது. கர்நாடக முதல்வர் அறிவிப்பு வெளியிட்ட மறுநாளே அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நாகேஷ், ’பள்ளிகளில் பகவத்கீதை மற்றும் ராமாயணத்தை பாடமாக கொண்டு வருவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று மறுத்துள்ளார்.
நாடு முழுவதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசு கல்வித்துறையில் மதச்சாயம் பூச முயல்வதாக குற்றம்சாட்டி வரும் நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கு பகவத்கீதை மற்றும் ராமாயணத்தை கற்பிப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. நன்னெறியை போதிக்கும் கருத்துகளை மாணவர்களுக்கு கற்பிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று ஒருதரப்பினரும், ஒரு குறிப்பிட்ட மத போதனையை மட்டும் ஏன் புகுத்துகிறீர்கள் என்று இன்னொரு தரப்பும் கேள்வி எழுப்புவதால் கல்வித்துறையை மையமாக வைத்து அரசியல் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை திமுக அரசு ஏற்கவில்லை. இருந்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்கள் ஆளுநர் மூலமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மறைமுகமாக அமல்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், பள்ளி பாடத்திட்டத்தில் பகவத்கீதை, ராமாயணம் சேர்க்கப்பட்டுள்ளதற்கு அரசியல் நோக்கங்கள் இருக்கலாம் என்று கருதப்படுவதால் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவே கல்வியாளர்கள் தயங்குகின்றனர். சில கல்வியாளர்கள் மட்டும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். அதன் விவரம்:
கல்வியாளர் நெடுஞ்செழியன்: "அனைத்து மதங்களில் உள்ள நல்ல கருத்துகளையும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ராமாயணம், மகாபாரதம் என இரண்டை மட்டுமே முன்னிலைப்படுத்தி, மற்றவற்றை புறக்கணிக்கக்கூடாது. இஸ்லாம், கிறிஸ்துவம், சமணம், பௌத்தம் என அனைத்திலும் உள்ள நல்ல கருத்துகளை இணைத்து மாணவர்களுக்கு அளிக்கலாம். அப்போதுதான் நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை முன்வைக்க முடியும்.
அனைவரும் உள்ள உலகில்தான் குழந்தைகள் வளர்கின்றனர். எனவே, அனைத்து மத கருத்துகளை சரிசமமாக உள்ளடக்கியதாக நன்நெறிக் கல்வி இருக்க வேண்டும். கல்வி சார்ந்து மட்டுமே இதை கொண்டு சேர்க்க வேண்டுமே தவிர, அரசியல் சார்ந்து வாக்கு வங்கிக்காக இதுபோன்ற விஷயங்களை முன்னெடுக்கக்கூடாது. கல்வி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். எனவே, கல்வியாளர் என்ற முறையில் ஒரு குறிப்பிட்ட மதத்தை முன்னிறுத்துவதை ஆதரிக்க முடியாது."
தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துபாண்டியன்: "பன்முகத் தன்மை கொண்ட இந்திய நாட்டில் கல்வி நிலையங்களில் மத ரீதியான கருத்துகளை திணிக்க கூடாது. பகவத்கீதை ஒரு மதத்தை சார்ந்ததாக இருப்பதால் தேவையின்றி மாணவர்களிடம் பிரச்சினையை தான் ஏற்படுத்தும். இந்நூலை அனுமதித்தால் மற்ற மதத்தினர் தங்களின் மத நூங்களையும் அனுமதிக்க வேண்டும் என பிரச்சினை எழுப்ப வாய்ப்புள்ளது. இது அரசியலாக்கப்படும். இதன் மூலம் மாணவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படும்.
ஒரு மதத்தின் நூலை மற்ற மதத்தினர் கற்க கட்டாயப்படுத்தவும் முடியாது. இதனால் ஒரு வகுப்பில் 3 மதத்தினர் இருந்தால், இதுபோன்ற நூல்களை தனித்தனியாக மாணவர்களை பிரித்து பாடம் நடத்த வேண்டிய சூழல் உருவாகும். இது மாணவர்களை பிற்போக்கு நிலைக்கு தள்ளும் வாய்ப்பு உருவாகிவிடும். அவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்திவிடும். முற்போக்கான எண்ணம் கொண்டுள்ள தமிழகத்தில் இதுபோன்ற நிலை வந்து விடக்கூடாது. இதுபோன்ற சூழ்நிலை உருவாகும் என்பதால் தான் நாங்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்."
மும்பை: மும்பையைச் சேர்ந்த ஒருபெண், மறதி உட்பட பல்வேறு நோய் காரணமாக படுத்த படுக்கையாக உள்ள தனது கணவரின் சொத்துக்கு சட்ட பாதுகாவலராக தன்னை நியமிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவரை கவனித்து வருகிறேன். அவருக்கான மருத்துவ செலவுக்காக ஏராளமாக கடன் வாங்கி உள்ளேன்.
எங்களுக்கு ஒரு மகன் இருந்தும் எங்களை கண்டுகொள்ளவில்லை. எனது பெயரில் ஒரு வீடும், என் கணவர் பெயரில் ஒருவீடும் உள்ளது.எனது கணவர் பெயரில் உள்ள வீட்டை விற்றுகடனை அடைக்க திட்டமிட்டுள்ளேன். இதற்காக, அவரது பெயரில்உள்ள சொத்துக்கு பாதுகாவலராக என்னை நியமிக்க உத்தரவிட வேண்டும்” என கோரியுள்ளார்.
இந்நிலையில், தனது தாய் தொடர்ந்த வழக்கில் தன்னையும் சேர்க்கக் கோரி தனியாக வசித்துவரும் அவரது மகன் கோரிக்கை வைத்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “தந்தையின் சொத்தில் மகனுக்கு உரிமைஇருப்பது சாதாரண நடைமுறைதான். அந்த வகையில் எனக்கும் அதில் பங்கு உள்ளது. எனவே, எனது அனுமதி இல்லாமல் தந்தையின் சொத்தை விற்க அனுமதிக்கக் கூடாது” என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கவுதம் படேல் மற்றும் மாதவ் ஜம்தார் பிறப்பித்த உத்தரவில், “பெற்றோரின் பாதுகாவலராக நீங்களே (மகன்) முன்வந்து செயல்பட்டிருக்க வேண்டும். உடல்நலம் குன்றிய உங்கள்தந்தையை ஒரு முறையாவது மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றீர்களா? மருத்துவ செலவுக்கு பணம் வழங்கினீர்களா?
பெற்றோர் உயிருடன் இருக்கும் வரை அவர்களுடைய சொத்தில் மகன் சட்டப்படி உரிமை கோரமுடியாது. எனவே உங்கள் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தந்தையின் சொத்தை விற்க மகனுடைய அனுமதி தேவையில்லை” என்றனர்.
மேலும் கணவரின் மருத்துவ செலவுக்காக கூட்டு வங்கிக் கணக்கு தொடங்குமாறு அந்தப் பெண்ணுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வீடு விற்பனை தொடர் பான பேச்சுவார்த்தையை தொடர அனுமதி அளித்தனர்.
பீஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்திலிருந்து குவாங்சு மாகாணத்தை நோக்கி 132 பேருடன் சென்ற போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடக்கும் நிலையில், பயணிகள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு சொற்பமானதாகக் கருதப்படுகிறது.
கடந்த 2010-ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீனாவில் நடந்துள்ள மிகப்பெரிய பயணிகள் விமான விபத்து என்பதால் சீன அதிபர் ஜி சின்பிங் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ரேடாரில் இருந்து விலகிய அந்த நொடி... - விபத்துக்குள்ளான விமானம் சீனாவின் தென்மேற்கு நகரான குன்மிங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 1.11 மணியளவில் புறப்பட்டுள்ளது. விமானம் குவாங்சு மாகாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சரியாக 2.22 மணியளவில் விமானம் 3,225 அடி உயரத்தில் 376 நாட் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. ஆனால், அடுத்த நொடி ரேடார் கண்காணிப்பில் இருந்து விமானம் விலகியது என சீனாவின் உள்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
அந்த நொடியில்தான் விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் காட்டுத் தீ பரவிவிட்டதால் மீட்புப் பணிகள் சுணக்கம் கண்டுள்ளது.
இதற்கிடையில், விபத்தை நேரில் பார்த்த மலைகிராமவாசி ஒருவர், ’விமான விழுந்தவுடன் மிகப் பெரிய சத்தம் கேட்டது. தீ பிழம்பும் புகையுமாக அந்த இடம் மாறியது. சிறிது நேரத்தில் மூங்கில் காட்டில் தீ வேகமாகப் பரவியது’ என்றார்.
விபத்துப் பகுதியின் சுற்றுவட்டாரத்தில் விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடக்கின்றன. புகைப்படங்கள், காட்சிகள் உயிர் பிழைத்தோர் குறித்த நம்பிக்கையை குறைக்கும் சூழலில் சீனாவின் கிழக்கு ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது இணையதளத்தை கறுப்பு வெள்ளையாக மாற்றியுள்ளது.
சீனாவில் கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு E-190 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 44 பேர் இறந்தனர். அதன்பின்னர் இன்று நடந்த விபத்துதான் பெரிய விபத்தாகக் கருதப்படுகிறது. இந்த விமானத்தில் 132 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களில் 122 பேர் பயணிகள்; மீதமுள்ளோர் விமானத்தின் சிப்பந்திகள் ஆவர்.
தலைக்குப்புற கவிழ்ந்த விமானம்... - ஃப்ளைட் ட்ராக்கர் ஃப்ளைட் ரேடார் 24, விமான விபத்து நடந்த விதத்தைக் கணித்துள்ளது. சரியாக 2.15 மணிக்கு விமானம் தலைகுப்புற விழுந்துள்ளது. 29,100 அடி உயரத்தில் இருந்து விமானம் 9,075 அடி உயரத்திற்கு சரிந்துள்ளது. பின்னர், அடுத்த 20 வினாடிகளில் 3225 அடிக்கு சரிந்தது. அத்துடன் விமானம் தொடர்பிலிருந்து விலகியுள்ளது.
சீன அதிபர் ஜி சின்பிங் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பலரும், இதய ரீதியான பிரச்சினையை சந்திப்பதாக புகாரளிக்கின்றனர். இதுதொடர்பான உண்மை நிலையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் டெல்லி எய்ம்ஸ் இருதயவியல் பேராசிரியர் டாக்டர் அம்புஜ் ராய். இவர், கோவிட்-19க்குப் பிந்தைய தொடர்களை நிர்வகிப்பதற்கான தேசிய விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்ட ஆராய்ச்சிக் குழுவுடன் பணியாற்றியவர் ஆவர்.
கொரோனா நோயாளிகள் ஏன் இதய பிரச்சினை சந்திக்கிறார்கள்?
இது புதியது கிடையாது. முந்தைய தொற்று பாதிப்பிலும், இத்தகைய பிரச்சினையை பலர் சந்தித்துள்ளனர். ஸ்பேனிஷ் தொற்றுக்கு பிந்தைய காலத்திலும், அதன் நேரடி தாக்கத்தின் காரணமாக பல இறப்புகள் ஏற்பட்டதை உணர்ந்தோம். அதில் முக்கியமான சிக்கல் இதய பிரச்சினை ஆகும். தொற்று பாதிப்புக்கு பிறகு, இதய நோய் பிரச்சினைகள் அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாகவே, எளிதில் தொற்றால் பாதிக்கப்படக்கூடியவர்களும், இதய நோயாளிகளும் தொற்று தடுப்பூசியை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இதய நோய் அதிக ஆபத்தில் உள்ள நபர்களிடையே வைரஸ் பரவலை தடுக்க விரும்புகிறோம்
இதில், கொரோனா தொற்றும் விதிவிலக்கு அல்ல. கொரோனா வைரஸ் தீவிரத்திலிருந்து மீண்டும் வருபவர்களிடையே, இதய பிரச்சினை ஏற்படுவதை பரவலாக காணமுடிகிறது.
உதாரணமாக, அமெரிக்கா வீரர்களின் டேட்டாபேஸ் மூலம் 1.54 லட்சம் பேருக்கு நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு ஒரு ஆண்டிற்கு பிறகு பெரும்பாலானோருக்கு இதய பிரச்சினை ஏற்படுவது உறுதியாகியுள்ளது. இந்தியாவிலும் அதிகளவிலான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ள நிலையில், இதய பிரச்சினையை சந்திக்க வேண்டிய அபாயம் ஏற்படலாம் என்பது தெரிகிறது.
லேசான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காட்டிலும், தீவிர தொற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு தான் இதய பிரச்சினை சந்திக்கிறார்கள். கொரோனா தடுப்பூசி போடும்பட்சத்தில், லேசான பாதிப்பே ஏற்படக்கூடும். எனவே, கொரோனா தடுப்பூசி இதய பிரச்சினை ஏற்படுவதையும் தடுக்கிறது.
இதய பிரச்சினை ஏற்படுவதற்கான அறிகுறிகள்?
இதய பிரச்சினையில் முதல் மாரடைப்பு ஆகும். அவை ஏற்படுகையில், மார்பில் அதிக எடை, வியர்வை, கடுமையான மூச்சுத் திணறல், மேல் மார்பை சுற்றி வலி போன்றவை ஏற்படும்.
இரண்டாவது, அரித்மியா ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த பாதிப்பின்போது, நோயாளிகள் பதற்றமாக உணர்வார்கள். இதயத் துடிப்பு சீரற்றதாகவும், வேகமாகவும் இருக்கும்.
மூன்றாவது, இதய தசைகளை பாதிக்கும். கொரோனாவால் இறந்தவர்களிடம் நடத்தப்பட்ட உடற்கூராய்வில், வைரஸ் தொற்று இதய தசையில் இருப்பது தெரியவந்தது. இந்த வைரஸ், சிலரின் இதயத்தில் வீக்கத்தை ஏற்படுத்தி, தசைகளை பலவீனமாக்கும். இதன் காரணமாக, இதய திசையின் பம்பிங் பிராசஸ் திறன் குறைந்து, சம்பந்தப்பட்ட நபரிடம் மூச்சுத்திணறல் அல்லது உடலில் திரவம் அளவு குறைவதை உணரக்கூடும்.
இறுதி சிக்கலானது, கொரோனாவால் கட்டி உருவாக வாய்ப்புள்ளது. குறிப்பாக, உங்கள் நரம்பு மண்டலங்களில் கட்டி உருவாகுவது, அதிக ஆபத்தை ஏற்படுத்தம். அவை, நுரையீரலுக்குள் நுழைந்தால், உடலுக்கு தேவையான ரத்த விநியோகத்தை நிறுத்தி திடீர் இதய அடைப்புக்கு வழிவகுக்கும்.
எந்த வயதினருக்கு அதிக ஆபத்து?
கொரோனாவின் தீவிர தொற்றால் பாதிக்கப்படைந்தவர்கள் எளிதில் இதய பாதிப்புக்கு ஆளாகுவார்கள். குறிப்பாக, வயதானவர்களும், இணை நோய் உள்ளவர்களும், அதிகளவில் இதய பிரச்சினையை சந்திக்கிறார்கள். ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, இளைஞர்களே அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், இதய பாதிப்பு ஏற்படும் வயதுபிரிவில் மாற்றம் வரக்கூடும். எனவே, இளைஞர்களிடையே பாதிப்பு தென்பட தொடங்கினால், அதன் தாக்கம் அதிகளவில் இருக்கும்.
இணை நோய் இல்லாதவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவது ஏன்?
தெற்காசிய நாட்டவர்களான நாம் எப்படியும் இதய நோய்க்கு ஆளாகிறோம். வெளிநாட்டில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் மீது மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள் பொதுவாக மேற்கு நாடுகளுடன் ஒப்பிடும்போது தெற்காசியாவில் ஒரு தசாப்தத்திற்கு முன்பே உருவாகின்றன.
இதய நோய் ஏற்பட ஐந்து ஆபத்து காரணிகள் உள்ளன. புகையிலை பயன்பாடு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு, குடும்ப வரலாறு ஆகியவை ஆகும். தற்போது, கொரோனா ஆறாவது ஆபத்து காரணியாக மாறியுள்ளது.
இந்த பிரச்சினையை முன்கூட்டியே கண்டறிவது எப்படி?
முதலில் ஆபத்து காரணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நபரும் ஒரு தடுப்பு இதய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இது மிகவும் எளிமையான சோதனை. உங்கள் ரத்த அழுத்தம் அளவு, ரத்த சர்க்கரை அளவு, இரத்த கொழுப்பு அளவு, உங்கள் எடை மற்றும் உணவு முறை செக் செய்யப்படும்.
உயர் இரத்த அழுத்தம் பாதிப்பு கொண்டவர்களில் பாதி பேர் அதனை அறிந்திருக்கவாய்ப்பில்லை. ஏனெனில், அவர்கள் அதனை செக் செய்யவில்லை. உயர் ரத்த அழுத்தம் எவ்வித அறிகுறியும் காட்டாமல் நம்மை இறப்புக்கு அழைத்துச்செல்லும். மக்கள்தொகை அளவைப் பார்த்தால், கிராமப்புறங்களில் 10 சதவீத பேரும், நகர்ப்புறங்களில் 20 சதவீத பேர் மட்டுமே ரத்த அழுத்தம் அளவை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே அனைவரும் இதய தடுப்பு பரிசோதனைக்கு செல்ல வேண்டும்
ECHO பரிசோதனை, இதய MRI-களை பலர் செய்வதை காணமுடிகிறது. அது தேவையா?
அறிகுறியற்ற நபருக்கு,நிச்சயம் அத்தகைய பரிசோதனை தேவையில்லை. கோவிட்-க்கு பிந்தைய இதய மேலாண்மை குறித்து சுகாதார அமைச்சகத்திற்காக வெளியிட்ட அறிவிப்பில் தெளிவாக உள்ளது. மிக அடிப்படையான சோதனைகளைத் தவிர, அறிகுறிகள் இல்லாவிட்டால் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள். உதாரணாக, மூச்சு விடுவதில் சிரமம் இன்றி 20 நிமிடம் நன்றாக நடைப்பயிற்சி செய்வது, அன்றாட பணிகளை தொய்வின்றி செய்வது போன்றவை ஆகும். உங்கள் வயது, உடற்தகுதி பொறுத்து முடிந்தவரை நடக்கலாம். நீங்கள் எந்த சோதனைக்கும் செல்ல வேண்டியதில்லை.
ஆனால், படிக்கட்டுகளில் ஏறுகையில் படபடப்பு, மூச்சுத் திணறல் போன்றவற்றை எதிர்கொண்டால், கூடுதல் சோதனை செய்வது நல்லது,
ஜெர்மனி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிக்கப்படாதவர்களை வைத்து ஆய்வு நடத்தியது. அதில், இருவரது எம்ஆர்ஐ அளவு ஓரே மாதிரியாக தான் இருந்தது. எனவே, விலை மதிப்பிலான சோதனையில் துல்லியமாக தெரியும் என சொல்வதெல்லாம் கிடையாது. அறிகுறிகள் இல்லாவிட்டால், அடிப்படை சோதனைகளைத் தவிர வேறு எதையும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை.
எப்போது நிபுணரை அணுக வேண்டும்?
தொற்று பூரணமாக குணமடைந்த நிலைக்கு வந்தும், மூச்சுத் திணறல், படபடப்பு, வேகமான இதயத் துடிப்பு, சீரற்ற இதயத் துடிப்பு, கைகால்களில் வீக்கம், நடைபயிற்சியில் நெஞ்சில் பாரமாக உணர்வது போன்ற அறிகுறிகளில் ஏதெனும் ஒன்று இருந்தாலும், நிபுணரை விரைவில் அணுகுவது சிறந்தது ஆகும்.
அப்படியில்லாமல், வழக்கமான உடல் செயல்பாடுகளை கொண்டிருந்தால், ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை மற்றும் ரத்தக் கொலஸ்ட்ரால் சோதனையைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை. 25 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் இந்த அடிப்படை சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
தடுப்பு நடவடிக்கைகள் என்ன?
தடுப்பு நடவடிக்கையானது,எளிமையான வாழ்க்கை முறையுடன் தொடங்குகிறது. முதலில், புகையிலை பழக்கத்தை முழுமையாக கைவிடவேண்டும். இரண்டாவது, உடல் எடையை நிர்வகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மூன்றாவது, தினசரி வாழ்க்கையில் உடற்பயிற்சி மேற்கொள்வது, அதாவது வாரத்தில் 5 முதல் 6 நாள்கள், 20 முதல் 30 நிமிடம் வரை நடைபயிற்சி மேற்கொள்வது போதுமானது.
நான்காவது உணவில் பழங்கள், காய்கறிகள் சேர்த்துக்கொள்வது. சர்க்கரை உணவு, உப்பு, வறுத்த உணவை உட்கொள்வதை குறைக்க வேண்டும். அவ்வப்போது, ஒரு வழக்கமான தடுப்பு இதய பரிசோதனை செய்ய வேண்டும். அவை சீராக இல்லாத பட்சத்தில், நீங்கள் சிகிச்சையை தொடங்க வேண்டும்.
கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா தீநுண்மித் தொற்றால் உலகம் பல விதங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 138 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நமது நாடும் பொருளாதார ரீதியாகவும், மனிதவள ரீதியாகவும் பெரும் இழப்புகளை எதிர்கொண்டு இப்போதுதான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.
இந்தியாவில் 5.16 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்கிறது அதிகாரபூர்வ புள்ளிவிவரம். ஆனால், அதைவிட அதிக உயிரிழப்புகள் நேர்ந்திருக்க வாய்ப்புள்ளது. இத்தனை லட்சம் உயிரிழப்புகளால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ இருவரையுமோ இழந்து ஆதரவற்றவர்களாக ஆகி உள்ளனர். இதுபோன்ற குழந்தைகளுக்கு நிவாரண நிதியாக தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த இழப்பீட்டைப் பெறுவதற்காக சிலர் போலியான சான்றிதழ்களை சமர்ப்பிப்பதாக நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் எம்.ஆர். ஷா, பி.வி. நாகரத்னா கொண்ட அமர்வு, 'ஆதரவற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதில் கூட போலியாக இழப்பீடு கோரும் அளவுக்கு ஒழுக்க நெறிகள் தரம் தாழ்ந்துவிட்டனவா? இந்த அளவுக்கு யாரும் செல்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை' என்று குறிப்பிட்டுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பொருளாதார ரீதியாக சந்திக்கும் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை அளிக்கும் விதத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டம், 2006-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை, மக்களவையில் மார்ச் 16-இல் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கை, 'தகுதிவாய்ந்த தொழிலாளர்கள் முறையாக ஊதியம் பெறுவதில்லை. களத்தில் இந்தத் திட்டத்தை அமல்படுத்தும்போது இரக்கமற்ற சிலரால் பணம் கைமாறிக் கொண்டே இருக்கிறது என்பது கசப்பான உண்மை' என்கிறது. தொழிலாளர்களின் வருகைப் பதிவு இணையவழியில் முறையாகப் பதிவு செய்யப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவை ரூ.4,060 கோடி, தளவாடப் பொருள்களுக்கான நிலுவைத் தொகை ரூ.9 ஆயிரம் கோடி எனும்போது, ஒடுக்கப்பட்டவர்களுக்காகத் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் தோல்வியடைகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 2022-23 நிதிநிலை அறிக்கையில் ரூ.73,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா'விலும் (பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்) முறைகேடுகள் நடைபெறுவதாக நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக்காட்டி உள்ளது. ஏற்கெனவே வசதியாக வாழ்பவர்களும், ஆடம்பர வீடுகளை வைத்திருப்பவர்களும் இந்தத் திட்டத்தில் பயனடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுவதை என்னவென்று சொல்ல?
விவசாயிகளுக்கு உதவுவதற்காக பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம் (பிரதம மந்திரி விவசாயிகள் நிதி உதவித் திட்டம்) மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு மத்தியில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி பயனாளிகள் சேர்க்கப்பட்டு பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்தது.
பிரதமர் நரேந்திர மோடி, கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக என்று காரணம் கூறி கடந்த 2016 நவம்பர் 8-ஆம் தேதி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, ரூ.1,000, ரூ.500 ஆகிய உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அவற்றை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவித்தார். அந்த அறிவிப்பால் கறுப்புப் பணம் ஒழிந்ததா என்பது தெரியவில்லை, ஆனால், அந்த நேரத்தில் ஒரே இரவில் வங்கி மேலாளர்களின் உதவியுடன் பல்லாயிரம் கோடி ரூபாய் வெள்ளையாக மாற்றப்பட்டது என செய்திகள் வெளிவந்தன.
தமிழ்நாடு ஒவ்வொரு முறை வெள்ளத்தால் பாதிக்கப்படும் போதும் அரசு நிவாரண உதவித் தொகை வழங்கி வருகிறது. அது அவ்வப்போது அதிகரித்தும் வருகிறது. ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டபோது அடுக்குமாடிகளில் வசிப்பவர்கள் காரில் வந்து அதைப் பெற்றுச் சென்றதை நாம் கண்டோம்.
அதே போன்று, கரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வேலைவாய்ப்புகளை இழந்ததனால் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கம் அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒருமுறை கொடுக்கப்பட்டது. இப்போது நிலைமை சீராகி இயல்பு நிலை திரும்பியபோதும்கூட ரொக்கப் பணம் தரப்பட வேண்டும் என்றும், அதிக தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர்கூட கோரிக்கை விடுத்ததுதான் வேடிக்கை. நல்லவேளையாக, மோசமான நிதிநிலை காரணமாக அந்த மோசமான வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அந்த சமயத்தில் பலரும் உடனடியாக நகைகளை வைத்துக் கடன் பெற்றனர். ஆனால், இதை உணர்ந்த திமுக அரசு, நகைக் கடன் தொடர்பாக உரிய ஆய்வுகளை நடத்தி, தகுதியானவர்களுக்கு மட்டும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.
இலவசங்கள் அளிப்பதை மத்திய - மாநில அரசுகள் அறவே விடுத்து, எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் அதில் எந்த வகையிலும் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லாத நடைமுறையை வகுக்க வேண்டும். அப்போதுதான் அரசுப் பணம் வீணாவது தடுக்கப்படுவதுடன் அது தகுதிவாய்ந்த பயனாளிகளைப் போய்ச் சேரும்!
ஒரு நிறுவனத்தின் சொத்து என்பது அதன் நிலம், கட்டடம், எந்திரங்கள், கச்சாப் பொருட்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவை மட்டுமல்ல. இவை அனைத்தையும் விட, முக்கியமானதும் அதிக மதிப்புடையதும் அந்நிறுவனத்தின் மனித வளமே ஆகும்.
ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள், மேலாளர்களின் திறன், அவர்களது அனுபவம், அதன் மூலம் அவர்கள் பெற்றுள்ள அறிவு ஆகியவை, அந்நிறுவன சொத்துகள் அனைத்தையும் விட மதிப்பு மிக்கவையாகும். எனவே, தொழில், சேவை நிறுவனங்களில் ஊழியர்கள் திறன் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வரும். இதனை செய்வதற்கென்றே அங்கெல்லாம் தனிப் பிரிவு ஒன்று எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
கார்ப்பரேட் எனப்படும் பெருநிறுவனங்களில், பல்வேறு துறைகள் இருக்கும். ஒரு துறையில் ஏற்படும் அனுபவம், அதில் கற்ற பாடங்கள் அவற்றைப் பிற துறைகளுடன் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும். இதன் மூலம், ஒரு சாரார் பெற்ற அனுபவத்திலிருந்து மற்ற அனைவரும் பாடம் கற்கும் சூழல் ஏற்படுத்தப்படும். தொழில்துறையில் இதனை 'அறிவு பரிமாற்றத்துறை' (நாலெட்ஜ் டிரான்ஃபர் டிபார்ட்மென்ட்) என்று கூறுவார்.
பன்னாட்டு நிறுவனங்கள் இதனை இன்னும் செம்மையாகச் செய்லபடுத்தும். அந்த நிறுவனங்கள், ஒரு நாட்டில், ஏற்படும் அனுபவங்களை, பிற நாடுகளில் உள்ள தன் கிளை நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளதால், அதன் மூலம் பயன் பெறுகின்றன.
இதன் மூலம் புதுப்புது ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வது என்பது அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு நேரடியாக உதவும். பிற நிறுவனங்களுடன் போட்டியிடுவது, சந்தையில் தனது பங்கினை அதிகப்படுத்துவது, உற்பத்தி செலவைக் குறைப்பது இவையெல்லாம் ஒரு சில தனி மனிதர்களின் முயற்சியின் விளைவு என்கிற கருத்து தவறு . அது முறையாகத் திட்டமிடப்பட்ட கூட்டு முயற்சியாகும் .
தகவல் சேகரிப்பு என்பது இதில் ஒரு முக்கிய அம்சமாகும். ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் தகுதி, திறமை, அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்கள் ஆகியவை குறித்த தகவல்கள் ஓரிடத்தில் சேகரித்து வைக்கப்படும். அது போலவே, அந்த நிறுவனத்தின் சிறப்பு அம்சங்கள், அதன் தகுதி ஆகியவை தொடர்ந்து மேம்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கும்.
பொருளாதார லாபத்தையும் கடந்து, ஊழியர்கள் - நிர்வாகிகளின் சராசரி அறிவும் திறனும் தொடர்ந்து உயர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இப்படிச் செய்வதன் மூலமாக அந்நிறுவனத்தின் செயல்திறனை உயர்த்தவும் திட்டமிடப்படுகிறது. மேலும் இவை குறிப்பிட்ட கால அட்டவணைப்படி செயல்படுத்தப்படுகிறது. வளர்ச்சியடையும் ஒரு நிறுவனத்துக்குப் பொருந்தும் இந்த நடைமுறை, ஒரு சமுதாயத்திற்கும் ஏன், குடும்பத்திற்கும் பொருந்தும் என்பதே உண்மை.
நம் நாட்டில், பல நூறு ஆண்டுகளாக, பல தலைமுறைகளாகக் கண்டறியப்பட்டு, சேகரிக்கப்பட்ட நுண்ணறிவுத் தகவல்கள், தொடர் சங்கிலிபோல அடுத்தவர்களுக்கு பரிமாறப்பட்டு வந்தன. அவை பிறருடன் பகிர்ந்துகொள்ளப்படாததால், அதிலும் குறிப்பாக, தங்களது குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு எவருடனும் பகிர்ந்து கொள்ளாத காரணத்தால் ஒரு சமுதாயம் என்ற அளவில் நாம் இழந்தவை ஏராளம்.
பாரம்பரிய மருத்துவம், இசை, நெசவு உள்ளிட்ட கைவினைத் திறன்களும், கலைகளும், இயற்கை சார்ந்த நுண்ணறிவும் அழிந்துபட்டதற்குக் காரணம் மேலை நாட்டு மோகம் மட்டுமே அல்ல. அவை குறித்து தொடர்ந்த அறிவுப் பரிமாற்றம் இல்லாததே முக்கிய காரணமாகும்.
அது மட்டுமல்ல, வரலாறு சார்ந்த தகவல்களை முறையாகப் பதிவு செய்து வைக்கும் வழக்கம் நமது மன்னர்களிடையே இல்லாதிருந்தது பெரும் குறை. சோழர்கள் காலத்தில் சீனாவுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு குறித்த தகவல்கள், சீனாவின் சூரியவம்ச அரசர்களின் பதிவுகளில் இன்றும் இருக்கின்றன. ஆனால், இங்குள்ள கல்வெட்டுக்களிலோ செப்புப் பட்டயங்களிலோ அவை குறித்த தகவல் ஏதும் காணப்படவில்லை.
ஆனால், தற்போது நம் அரசாங்கங்கள், பெருமுயற்சி செய்து, பாரம்பரிய சித்த மருத்துவம், அருகிவிட்ட பழங்கலைகளின் வளர்ச்சி ஆகியவற்றில் நிறுவன ரீதியான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
குடும்பம் என்ற அளவில், தங்கள் குடும்பத்தின் பாரம்பரியப் பெருமைகள், மூதாதையரின் சாதனைகள், அவர்களது பெருவாழ்வு, குடும்பம் எனும் மரம், அதில் கிளைத்த உறவினர்கள், சொத்து விவரம், மூதாதையரின் தனித்திறன், அவர்கள் சந்தித்த இன்னல்கள், அவற்றிலிருந்து மீண்டு வந்த விதம் இவை பற்றிய புரிதலும் அறிவும் இல்லாத பலரை நாம் பார்க்க இயலும்.
அவர்கள் அந்தச் செய்திகளில் இருந்து உத்வேகம் பெறும் வாய்ப்பை இழக்கின்றனர். அது மட்டுமல்ல, சில இடங்களில் அவர்களின் அறியாமையால் குடும்ப உறவுகள் அறுபட நேரிடுகிறது.
அறிவுப் பரிமாற்றம் என்பது, ஒவ்வொரு குடும்ப அளவிலும் இடையறாது செய்யப்பட வேண்டும். அது ஒரு திட்டமிடப்பட்ட கால அட்டவணைப்படி செய்யப்பட வேண்டிய ஒன்றல்ல. மாறாக, இயல்பான ஒன்றாக அது நிகழ வேண்டும். கூட்டுக் குடும்பங்கள் இருந்த நாட்களில், குடும்பத்தில் இருந்த மூத்தவர்களிடம் இருந்து இளையவர்களுக்கு , இத்தகைய பரிமாற்றம் செவ்வனே நடைபெற்றது.
பின்னர், கூட்டுக் குடும்பங்கள் குறையத் தொடங்கியதாலும், பல இடங்களில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாலும் இந்த அறிவுப் பரிமாற்றம் சாத்தியமில்லாது போயிற்று. இது குறித்த விழிப்புணர்வுடன் ஒவ்வொருவரும் செயல்படும்போது, குடும்ப அளவில் அறிவுப் பரிமாற்றம் இயல்பாக நடைபெறும்.
இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில், முந்தைய தலைமுறையினருக்கு இல்லாத வாய்ப்பாக, இளைய தலைமுறையினர் புதுப்புதுத் துறைகளில் அறிவினைத் தேடிப்பெறுகிறார்கள். அவ்வாறு பெறும் புத்தறிவுடன், பாரம்பரிய அறிவும் இணையும் போது அவர்கள் பயன்பெறுவதோடு, சமுதாயமும் பெரும்பயன் பெறும் என்பதில் ஐயமில்லை.
இதனை வலியுறுத்தியே திருவள்ளுவர்
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
எனக் கூறினார் போலும்.
கடந்த பிப்ரவரி 24 அன்று ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. இதனால் அங்கு வசித்த இந்தியர்கள் 20 ஆயிரம் பேரின் நிலை கேள்விக்குறியானது. இதில் உயர்கல்வி பயிலச் சென்ற மாணவர்கள் நிலை மிகவும் பரிதாபமானது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதைக் கண்டித்து ஐக்கிய நாடுகள், பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது வாக்கெடுப்பிலிருந்து விலகி நின்ற 35 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உக்ரைன் போர் தொடர்பாக ஐ.நா. பொது அவையைக் கூட்ட வேண்டும் என்ற பாதுகாப்பு அவையின் வாக்கெடுப்பிலும் இந்தியா கலந்து கொள்ளவில்லை.
போர் நடவடிக்கைகளுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றுவதிலிருந்து இந்தியா விலகி நின்றதற்குக் காரணம் அது எதிர்கொண்டிருந்த முக்கிய சவால்களேயாகும். ஆயிரக்கணக்கான மாணவர்கள் போர் பதற்றம் நிறைந்த பகுதிகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர். இந்தியாவின் ஒரே நோக்கம் அவர்கள் பாதுகாப்பாக தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான்.
மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வரும் பணியில், ரஷிய மொழி பேசும் வெளியுறவுத் துறை அதிகாரிகளை ஈடுபடுத்தியதோடு அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கவும் வசதியாக வெளியுறவு இணைச் செயலர் தலைமையில் சிறப்புக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இந்தப்போர் பற்றிக் குறிப்பிடும்போது, 'இந்தியா எப்போதும் அமைதியின் பக்கமே நிற்கிறது. அனைத்துச் சிக்கல்களையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும்' என்று கூறினார்.
இதனை இரு சாராரும் எண்ணிப் பார்க்க வேண்டும். போரைத் தொடங்குவது எளிது; அதனை முடிவுக்குக் கொண்டுவருவது எளிதல்ல. போரால் ஏற்படும் அழிவுகளிலிருந்து உக்ரைன் மீண்டு வருவதற்கு எத்தனை காலம் பிடிக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
போருடன் தொடர்புடைய இரு நாடுகளுமே இந்தியாவுடன் பொருளாதாரம், பாதுகாப்பு, உயர்கல்வி, அரசியல் தொடர்புகளைக் கொண்டுள்ளன. போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இருந்து சுமார் 22,500 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள். உக்ரைனுக்கு மீண்டும் திரும்பிச் செல்ல முடியாத நிலையில், இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
இதுபற்றி மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. உக்ரைனின் அண்டை நாடுகளில் இந்த மாணவர்கள் தங்கள் கல்வியை நிறைவு செய்ய வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களின் எதிர்காலம் குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
போர்த் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள உக்ரைனில் இருந்து இதுவரை 1,890 மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர்களை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து தமிழக முதலமைச்சர் வரவேற்றார்.
உக்ரைனில் மருத்துவக் கல்வி பயின்று வந்த 1,921 மாணவர்களில் இதுவரை 1,890 மாணவர்கள் மீட்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்தப் பணிகளை தில்லியிலிருந்து ஒருங்கிணைக்க எம்.பி.க்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 10 பேர் குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. இந்தக் குழுவினர் தில்லியில் முகாமிட்டு தமிழக மாணவர்களை வரவேற்று தமிழகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில் 1,524 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் செலவில் அழைத்து வரப்பட்டனர். மீதமுள்ள 366 மாணவர்கள் அவர்களின் சொந்த செலவில் தமிழகம் திரும்பியுள்ளனர். இவர்களைத் தவிர 31 மாணவர்கள் உக்ரைனிலும், அண்டை நாடுகளிலும் பாதுகாப்பான பகுதிகளில் குடியேறி விட்டனர் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாகத் திரும்ப நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கும், வெளியுறவுத் துறைக்கும் தமிழக முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். என்றாலும் இந்தப் பிரச்னை இத்துடன் முடிந்து விடாது. உக்ரைனில் இருந்து திரும்பி வந்த மாணவர்களின் கல்வி மிகப் பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. இது தொடர்பாக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது.
அயல்நாட்டுக் கல்விச் செலவுக்காக மாணவர்கள் கல்விக் கடனாக பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். இந்தக் கல்விக் கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். இந்திய மாணவர்கள் சுமார் 20 லட்சம் பேர் உக்ரைனில் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் பெற்ற கல்விக் கடனை எப்படித் திரும்பப் பெறுவது என்பது பற்றி இந்திய வங்கிகள் சங்கம் விவாதித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஜனவரி மாதக் கணக்குப்படி, நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக இந்திய வங்கிகள் ரூ. 63 ஆயிரத்து 57 கோடி கல்விக் கடன் வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இந்தத் தொகையில் உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள் பெற்ற கடன் தொகை எவ்வளவு என்ற விபரம் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் உயர்கல்வி பயிலுவதற்கு வாய்ப்பில்லாத மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இந்தியாவிலிருந்து சுமார் 6 லட்சம் மாணவர்கள் கல்விக்காக ஆண்டுதோறும் வெளிநாடு செல்கின்றனர். இவர்களில் தமிழகத்திலிருந்து செல்வோர் சுமார் 40 ஆயிரம் பேர். இவர்களில் பெரும்பாலோர் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், சட்டம், மேலாண்மை போன்ற துறைகளில் இளநிலைப் படிப்பை முடித்துவிட்டு முதுநிலை படிக்கச் செல்பவர்களே அதிகம். இளநிலை, மருத்துவப் படிப்புக்குச் செல்பவர்கள் தொகை குறைவாகும். நீட் தேர்வு 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது.
இதில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கெல்லாம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. 540 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கே இடம் கிடைக்கும். மற்றவர்கள் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளையும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களையும் நாட வேண்டும். இங்கெல்லாம் செலவு அதிகம் என்பதால் மாணவர்கள் வெளிநாடுகளை நாடுகிறார்கள்.
இப்படித்தான் ரஷியா, சீனாவுக்கு மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த உக்ரைன், ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், அர்மேனியா போன்ற நாடுகள் தங்கள் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்தி வெளிநாட்டு மாணவர்களை ஈர்த்தன. இந்தியாவெங்கும் முகவர்களை நியமித்தன. விளம்பரம் செய்தன.
எளிய சேர்க்கை முறை, குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி, குறைவான கல்விக் கட்டணம் எனப் பல வசதிகள் இருந்ததால் 2016க்குப் பிறகு இந்த நாடுகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இப்போது போரின் காரணமாக அவர்களின் கல்வி தடைபட்டுள்ளது. அரசாங்கம்ஆறுதல் சொன்னால் மட்டும் போதாது. அதற்கொரு வழிகாண வேண்டும்.
நார்வே போன்ற வளர்ந்த நாடுகளில் கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.7% வரை நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தியாவிலும் அதே அளவுக்கு நிதி ஒதுக்கி கல்வித் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கை. ஆனால் இந்திய அரசு கல்விக்காக 3% மட்டுமே ஒதுக்கீடு செய்து வருகிறது.
கடந்த 2021}22 நிதிநிலை அறிக்கையை எடுத்துக்கொண்டால் கல்வித் துறைக்கு ரூ.93,224 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இது மிகவும் குறைவான தொகை என்று கல்வியாளர்கள் கூறினர். ஆனால் இவ்வளவு குறைவாக ஒதுக்கப்பட்ட நிதியிலும், கடந்த 2022 ஜனவரி மாத நிலவரப்படி ரூ.56,567 கோடியை மட்டுமே கல்விப் பணிகளுக்காக மத்திய அரசு செலவிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் உதவி பெறும் கல்வி மையங்களில் மட்டும் ரூ.7,143 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 46 மத்திய பல்கலைக்கழகங்களில் 19,349 அனுமதிக்கப்பட்ட பேராசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன.
இதில் 6,535 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தரமான கல்வி வழங்க தரமான ஆசிரியர்கள் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பதும், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும் கவலையளிப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்களை அரசுகள் எப்படி சமாளிக்கப் போகின்றன என்பது இதுவரை தெரியவில்லை. மாணவர்களை மீட்டு வருவதில் காட்டப்பட்ட அக்கறை அவர்கள் தங்கள் கல்வியைத் தொடர்வதிலும் காட்டப்பட வேண்டும்.
இந்திய மாணவர்கள் இந்தியாவில் படிக்க வேண்டும் என்கிறார் பிரதமர். இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்க வேண்டுமானால் இங்கு போதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். உக்ரைன் உள்பட பல நாடுகளில் அரசாங்கமே அதிக அளவில் கல்வி நிறுவனங்களை நடத்துகின்றன.
இந்தியாவில் மட்டும் தனியார் 'சுயநிதிக் கல்வி' என்ற பெயரால் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.
தற்போது உள்ள சூழலில் மீட்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் உக்ரைன் திரும்பிச் செல்ல வாய்ப்பில்லை என்பதைச் சுட்டிக் காட்டி, பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ள தமிழக முதலமைச்சர், அந்த மாணவர்கள் தங்கள் படிப்பை இந்தியாவில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நிதிப் பற்றாக்குறையில் நெகிழ்வான பார்வை வேண்டும் என்று உலகெங்கும் விவாதிக்கப்பட்டுவரும் நிலையில், வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைத்துள்ளதையே தனது சாதனையாக முன்னிறுத்துகிறது, அடுத்த நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை. வழக்கமான அரசு செலவினங்களின் தொகுப்பாகவே பெரிதும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவியர்க்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியது என்றபோதும் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்குச் சமாதானமாகவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியும் உண்டு.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு இந்த உதவித்தொகை மறுக்கப்படக் கூடாது. முக்கியமாக, பெருந்தொற்றுக் காலத்தில் உயர்கல்வி பயில விரும்பும் இருபால் மாணவர்களுக்கும் கல்விக்கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதே உடனடித் தேவை. அரசு, தனியார் துறைகளில் மிகப் பெரிய எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் இந்த பட்ஜெட் முழுமையாக நிறைவேற்றவில்லை. பட்ஜெட் மற்றும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களிலாவது இது குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
வேளாண் நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரையில், அதன் ஒவ்வொரு வார்த்தையும் விவசாயிகளின் ஆழ்மனக் காயங்களுக்கு மயிலிறகால் மருந்து தடவ முயல்கிறது. திமுக ஆட்சியில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த இரண்டாவது வேளாண் பட்ஜெட், முந்தைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எத்தனை திட்டங்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, நீண்ட காலத் திட்டங்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளுக்காகக் காத்திருப்பவை எத்தனை என்ற விவரங்களோடு இடம்பெற்றுள்ளது ஒரு நல்ல முன்னுதாரணத்தைத் தொடங்கிவைத்திருக்கிறது.
இத்தகைய அணுகுமுறையைப் பொது நிதிநிலை அறிக்கையிலும் இயன்றவரை கையாளுவது வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தும். ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் எழுதிய கட்டுரைகளில் வலியுறுத்தப்பட்ட பயிர்வாரி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளடங்கியுள்ளன. விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரத்துக்கான செலவை அரசு ஏற்றுக்கொண்டிருப்பதுடன் வேளாண் பணிகளுக்குச் சூரிய மின்சக்தியைப் பயன்படுத்துவதையும் அரசு ஊக்கப்படுத்திவருவது நடைமுறை எதார்த்தத்தையும் எதிர்காலத்துக்கான தொலைநோக்குப் பார்வையையும் ஒருசேர வெளிப்படுத்துகிறது.
பயிர்க் காப்பீட்டு மானியங்களுக்கான நிதி ஒதுக்கீட்டுக்குப் பதிலாக, மாநில அரசே பயிர்க் காப்பீட்டு நிறுவனம் தொடங்குவதைப் பற்றியும் பரிசீலிக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கப்படவுள்ள விவசாயத் தொழிற்பேட்டை வெகுவிரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். உழவர் சந்தை சீரமைப்பும் மாநில எல்லையோரச் சந்தைகளும் பாராட்டுக்குரியவை. நிதிநிலை அறிக்கைகளின் வாயிலாக அரசிடமிருந்து விவசாயிகள் இன்னும் நிறையவே எதிர்பார்த்தனர். அவை இனிவரும் ஆண்டுகளிலேனும் நடைமுறைக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையை இந்த நிதிநிலை அறிக்கை ஏற்படுத்துகிறது.
இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், ஆடைகள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றின் விலையையும் புகையிரத, பேருந்துக் கட்டணத்தையும் நாளாந்தம் ஏற்றிப் பல சுமைகளை இலங்கை அரசு பொதுமக்கள் மீது திணித்துவருவதைப் பற்றிக் கடந்த வாரம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கட்டுரை எழுதியிருந்தேன். தற்போது பிரித்தானியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும் இலங்கைக்குச் சுற்றுலாப் பயணம் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு தமது தேசத்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. காகிதத் தட்டுப்பாடும் உச்ச அளவில் காணப்படுவதால் இலங்கை அரச பாடசாலைகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களின் பரீட்சைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமது குழந்தைகளுக்கு உணவளிக்க இயலாமல் போன கவலையிலும் பட்டினியாலும் பெற்றோர்கள் பலரும் தற்கொலைசெய்துகொண்டது, உணவுப் பொருட்களையும் மண்ணெண்ணெயையும் பெற்றுக்கொள்வதற்காக மணித்தியாலக் கணக்கில் பல கிலோமீற்றர்கள் நீளமான வரிசைகளில் பட்டினியோடு காத்துக்கொண்டிருந்தவர்கள் மயங்கி வீழ்ந்து மரணிப்பது போன்ற செய்திகள் இலங்கை ஊடகங்களில் தினமும் காணக்கூடியதாக இருக்கிறது.
இலங்கையில் இவ்வாறான பொருளாதார நெருக்கடியும் பஞ்சமும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் பிரதமர் மஹிந்த ராஜபசவின் புதல்வரும் அமைச்சருமான நாமல் ராஜபக்ச மாலத்தீவில் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளமை நாட்டுமக்களிடையே பெரும் அதிருப்திக்கும் கண்டனத்துக்கும் காரணமாகியிருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடந்த வாரம் எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவை பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை ஒன்றுதிரட்டி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தியதில் கொழும்பு நகரின் பல பகுதிகள் முடங்கிப் போயிருந்தன. மீண்டும் உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் கோரிக்கையாக இருந்தது. தனக்கு எதிராகக் கிளம்பியுள்ள இந்த அரசியல் நெருக்கடிகளைக் கண்ணுற்ற ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச உடனடியாக, கடந்த 16-ம் திகதி தொலைக்காட்சி வழியாக நாட்டுமக்களுக்கு உரையாற்றினார். அதில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிநிலையைத் தான் அறிவேன் என்றும் இந்த நெருக்கடிக்குக் காரணம் தானல்ல என்றும் தெரிவித்ததோடு, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதற்குத் தான் முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒரு நாட்டில் வாழும் மக்கள் மீது தனக்குள்ள பொறுப்பை இவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல அந்த நாட்டின் அரசாங்கத்தால் முடியாது. தனது தேசத்தவர்கள் நாட்டில் நிம்மதியாகவும் கௌரவமாகவும் வாழும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல், அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தேவையான வசதிகளை வழங்குதல் போன்றவை ஒரு அரசாங்கத்தின் கட்டாயக் கடமைகளாகும். என்றாலும், இப்போது இலங்கையிலுள்ள அரசாங்கம் அந்தக் கடமைகளைச் சரிவரச் செய்கிறதா என்பது தவிர்க்க முடியாத கேள்வியாக மக்களிடம் எழுந்திருக்கிறது.
‘நான் செய்வதுதான் சரியானதும் முழுமையானதும் ஆகும்’ என்று நாட்டின் ஜனாதிபதி மார்தட்டிக்கொள்வதை நிறுத்திவிட்டு, ஏனையவர்களின் கருத்துகளைக் கேட்டுச் செயலாற்ற வேண்டும். அவ்வாறே இந்த நெருக்கடி நிலையை மாற்ற அனைவரினது உதவிகளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். தகுந்த ஆலோசனைகளையும் உதவிகளையும் பெறுவதற்கு நாட்டில் இருக்கும் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றுகூடச் செய்ய வேண்டும்.
அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்கும் நாட்டை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்துதான் மீட்டெடுக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு, அனைத்துக் கட்சிகளும் ஒன்றுதிரண்டு ஒருமித்த மனதோடு இந்தச் சந்தர்ப்பத்தில் தமது ஒத்துழைப்பை நேர்மையான மனதோடு வழங்க வேண்டும். சில பிரச்சினைகளுக்குக் காலம் தீர்வளிக்கும். என்றாலும், அவ்வாறான ஒன்றை எதிர்பார்த்து வெறுமனே காலம்தாழ்த்துவது இருக்கும் பிரச்சினைகளை மேலும் மேலும் உக்கிரமாக்கி, சிக்கல்களுக்குள்ளாக்கும். அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்கும் நாட்டை மேலே தூக்கிவிட உடனடி நடவடிக்கை அவசியமாகும். தற்போதுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண்பதற்குக் காலம் தாழ்த்துவது என்பது பிரச்சினைகளை மேலும் தீவிரமாக்கவே செய்யும்.
தமக்குத் தேவையானவற்றை வாங்குவதற்காக வரிசைகளில் காத்திருக்கும் மக்கள், செய்திக் காணொளிகளில் தெரிவிக்கும் கருத்துகள் மூலம் பொதுமக்களை வருத்தும் நெருக்கடிகள் எவை என்பதை அரசியல்வாதிகள் எளிதில் அறிந்துகொள்ளலாம். அந்த நெருக்கடிகள், நாட்டுமக்கள் அனைவருக்கும் உரியவை. கடக்கும் ஒவ்வொரு மணித்தியாலமும், ஒவ்வொரு நாளும் அந்த நெருக்கடிகளை மேலும் மேலும் தீவிரமாக்குவதையே செய்துவருகின்றன.
அவற்றுக்கான அரசாங்கத்தின் தீர்வு அருகில் இல்லை என்பது பொதுமக்களை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதோடு மக்களது சந்தோஷத்தையும் நிம்மதியையும் இழப்பதற்குக் காரணமாகவும் உள்ளது. தமது வாழ்க்கையில் இவை இரண்டும் இல்லாமல் ஒவ்வொரு நாளையும் கடத்த வேண்டி நேர்ந்திருப்பது எந்த அளவு மோசமானதும், துயர் நிறைந்ததுமான நிலைமை என்பதை வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு இலங்கையர்கள் அனைவரும் இன்று தமது அனுபவத்தில் அறிந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்க அரசாங்கமானது, பல்வேறு நாடுகளிடம் உதவி கோரியபோதிலும் இந்தியா மாத்திரமே தனது ஒத்துழைப்புகளைத் தொடர்ந்து இலங்கைக்கு வழங்கிவருகிறது. தற்போதைய நிலையில், இலங்கை அரசாங்கத்தின் ஒரே நம்பிக்கையாக இந்தியா இருக்கிறது. ஆகவே, கடந்த 16-ம் திகதி இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து நிதியுதவி கோரியதோடு, ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை நிபந்தனையற்ற கடனாக இந்தியா வழங்கியது. கடந்த டிசம்பர் மாதமும் பசில் ராஜபக்ச இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரையும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துக் கலந்துரையாடியதில் நிதியுதவி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை நாடு சவால்களை வாய்ப்புகளாகக் கருதி, பல வெற்றிகளைக் கண்ட நாடு. இப்போதும் ஒன்றன் பிறகு ஒன்றென வந்துகொண்டேயிருக்கும் நெருக்கடிகளை எதிர்த்து வெல்ல நாட்டுமக்களால் முடியும். அதற்கு, நாட்டுமக்கள் அனைவருக்கும் அந்த ஒரே குறிக்கோள்தான் இருக்க வேண்டும். அத்தோடு, ஒரு சரியான செயல்திட்டமும் இருக்க வேண்டும். கட்சிகளும் தலைவர்களும் மக்களும் என அனைவரும் ஒன்றுசேர்ந்தால் அந்த செயல்திட்டத்தை உருவாக்குவது சிரமமில்லை.
- எம்.ரிஷான் ஷெரீப், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலங்கை. தொடர்புக்கு: mrishansh@gmail.com
அவர் 50 வயது நிரம்பிய சுமை தூக்கும் தொழிலாளி. பல் ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டதும் சிகிச்சைக்குச் சென்றார். அவருக்கு வாய் நலம் மிகவும் கெட்டுப்போயிருந்தது. காரணம், புகையிலை மெல்லும் பழக்கம். அதை விட்டொழிக்க வேண்டும் என்று பல் மருத்துவர் வலுவாக எச்சரித்தார். அந்தத் தொழிலாளி அதை நிராகரித்தார்.
ஆறு மாத இடைவெளியில் மறுபடியும் அவருக்குப் பற்களில் பிரச்சினை. அப்போதும் புகையிலைப் பழக்கத்தை அவர் கைவிடவில்லை. அடுத்த சில மாதங்களில் வாய்க்குள் ஆறாத புண்கள் வந்து படுத்தின. இந்த முறை அவருக்கு வாயில் புற்றுநோய் இருப்பதாகச் சோதனை முடிவுகள் முத்திரை குத்தின. இப்போது அவர் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
வாய் நலம் முக்கியம்
நம் வாய்க்குள் சாதாரணமாகவே 400-க்கும் மேற்பட்ட பாக்டீரியா இனங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. காலையில் எழுந்ததும் பல் துலக்கி, ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்டதும் நன்றாக வாயைக் கொப்பளித்து, இரவிலும் ஒருமுறை பல் துலக்கி வாய் நலம் காத்தால், இந்த பாக்டீரியாக்கள் சமர்த்தாகவே இருக்கின்றன. புகைபிடிப்பது, புகையிலை மெல்லுவது, குட்கா மற்றும் பான்மசாலா பயன்பாடு போன்றவற்றால் வாய் நலம் கெடும்போது, இந்த பாக்டீரியாக்கள் தூண்டிவிடப்படுகின்றன.
அதன் விளைவாக, அவை கெடுதல் செய்யும் பாக்டீரியாக்களாக மாறிவிடுகின்றன. அப்போது, ஈறுகள் அடிக்கடி வீங்குகின்றன. வீக்கத்தில் சீழ் பிடிப்பது, பற்களில் சொத்தை விழுவது, வாய்ப்புண் எனப் பலதரப்பட்ட பிரச்சினைகளை அவை கொண்டுவருகின்றன. சமயங்களில் அவை வாய்க்குள் புற்றுநோயை உண்டுபண்ணும் அளவுக்கு வீரியமும் பெற்றுவிடுகின்றன. அப்படி அண்மையில் கண்டறியப்பட்ட பாக்டீரியா ஒன்றின் பெயர் ‘ஃபியூசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம்’ (Fusobacterium nucleatum). கட்டுரையின் ஆரம்பத்தில் அறிமுகமான சுமை தூக்கும் தொழிலாளிக்குப் புற்றுநோயைப் புகுத்தியது இந்த பாக்டீரியாதான்.
புற்றுநோய்த் தொற்றுக் கிருமிகள்!
உடலில் நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸ் இனங்களில் சில வகை மட்டும் புற்றுநோயையும் உண்டுபண்ணும் என்பது ஏற்கெனவே தெரிந்த உண்மைதான். உதாரணத்துக்கு, இரைப்பையில் குடித்தனம் நடத்தும் ‘ஹெலிக்கோ பாக்டர் பைலோரி’ (Helicobacter pylori) எனும் பாக்டீரியா இரைப்பையில் புற்றுநோயை ஏற்படுத்தும். கல்லீரலைப் பாதிக்கும் ‘ஹெபடைடிஸ் – பி வைரஸ்’ (Hepatitis-B Virus-HBV) ‘ஹெபடைடிஸ் – சி வைரஸ்’ (Hepatitis-C Virus-HCV) ஆகியவை கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. பெண்களைப் பாதிக்கும் ‘ஹுயுமன் பாப்பிலோமா வைரஸ்’ (Human Papilloma Virus- HPV) கருப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும்.
உலக அளவில் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து அறியப்பட்ட புற்றுநோய்களில் 20% வரை பல வகைத் தொற்றுக்கிருமிகளால் ஏற்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் உறுதிசெய்துள்ளன. இந்த சதவீதம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
புற்றுநோய்க்கு வித்தாகும் புகையிலை
இந்தச் சூழலில், நவி மும்பையில் உள்ள டாடா நினைவு மையத்தில் ஆய்வாளர் அமிட் தத் (Amit Dutt) தலைமையில் இயங்கும் உயர்தர புற்றுநோய் சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தினர் (ACTREC-Tata Memorial Centre), ‘ஹுயுமன் பாப்பிலோமா வைரஸ்’ தொடர்பான மரபணு பகுப்பாய்வுச் சோதனைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த வைரஸானது கருப்பை வாய் (Cervix) மட்டுமல்லாமல் ஆண், பெண் இருபாலரின் வாய் மற்றும் தொண்டையிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் வல்லமை பெற்றது. எனவே, வாய்ப் புற்றுநோயுள்ள இந்தியர்களின் மரபணுக்களில் ஹுயுமன் பாப்பிலோமா வைரஸுடன் வேறு ஏதாவது புற்றுக்காரணிகளோ அல்லது தொற்றுக் கிருமிகளோ இணைந்துள்ளனவா என்பதைக் கண்டறிவது அவர்களது ஆராய்ச்சியின் நோக்கம்.
அப்போது, இரண்டு அறிவியல் உண்மைகளை அவர்கள் கண்டறிந்தனர். முதலாவது, இந்தியப் புற்றுநோயாளிகளிடம் 1,058 வகையான தொற்றுக் கிருமிகள் இணைந்தே காணப்பட்டன என்றாலும், அவற்றில் பெரும்பாலானவை புற்றுக் காரணிகளாக இல்லை என்பது. அடுத்தது, புகையிலையை மெல்லும் பழக்கம் உள்ள வாய்ப் புற்றுநோயாளிகளுக்கு ‘ஃபியூசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம்’ எனும் பாக்டீரியா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதுவரை இந்த பாக்டீரியா மலக்குடல் புற்றுநோய்களை (Colorectal cancers) ஏற்படுத்தும் கிருமியாகத்தான் அறியப்பட்டது. இப்போது புதிதாக வாய்ப் புற்றுநோய்க்கும் இது காரணமாகிறது எனும் உண்மை ஆய்வாளர்களை அதிர்ச்சியடையச் செய்தது. அதேசமயம், இந்த ஆய்வின் வழியாக வாய்ப் புற்றுநோயாளிகளுக்கு ‘ஃபியூசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம்’ தொடர்பில் சிகிச்சை கொடுத்தால் புற்றுக்கட்டி குணமாகிறது எனும் புதிய வழி அவர்களை மகிழ்ச்சியடையச் செய்தது.
புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது?
வாய் நலம் கெடும்போது, அங்கு புற்றுநோய் தோன்றுவதற்குத் தேவையான ‘முன்னழற்சி நுண்சூழலை’ (Pro-inflammatory tumour-promoting micro environment) இந்த பாக்டீரியாக்கள் உருவாக்குகின்றன. மேலும், புற்றுநோயைத் தடுக்கும் தடுப்பாற்றல் அணுக்களுக்குப் பல வழிகளில் இவை இடர்ப்பாடுகளைத் தருகின்றன. முக்கியமாக, புற்றுசெல்களைத் தாக்கி அழிக்கும் ஆற்றலுள்ள ‘இயற்கைக் கொல்லி செல்க’ளையே (Natural killer cells) இவை அழித்துவிடுகின்றன. இப்படித் தொடர்ச்சியான தாக்குதல்கள் மூலம் இவை வாய்க்குள் புற்றுநோயைப் புகுத்திவிடுகின்றன. அடுத்து, இந்த பாக்டீரியாக்களுக்கும் புற்றுநோய்த் தடுப்பாற்றல் அணுக்களுக்கும் இடையில் நடக்கும் போரில் ஐஜிஏ, ஐஜிஜி ஆகிய எதிரணுக்கள் (IgA, IgG antibodies) உருவாகின்றன. ஒருவருக்கு ‘ஃபியூசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம்’ தொற்று இருக்கிறதா என்பதை இந்த எதிரணுக்களை அளப்பதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். மேலும், இந்த பாக்டீரியாக்களை அழிக்கும் திறனுள்ள நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் நம்மிடம் உள்ளன. எனவே, இந்த பாக்டீரியாக்களுக்குப் பயப்படத் தேவையில்லை என்பது ஓர் ஆறுதல்.
என்ன செய்யலாம்?
2020-ல் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் ஏற்படும் புற்றுநோய்களில் 27% புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் புற்று வகையாகவே இருக்கிறது. ஆண்டுதோறும் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வழியில் இறக்கின்றனர். இந்த இறப்புகளைத் தவிர்க்க வேண்டுமானால், புகையிலை மெல்லும் பழக்கம் நாட்பட்டு இருப்பவர்களிடம் வருடந்தோறும், ‘ஃபியூசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம்’ தொற்று இருக்கிறதா என்பதை எலிசா பரிசோதனையில் தெரிந்துகொள்ளும் வழிமுறையை நம் நலவாழ்வுத் துறையினர் சமூக அளவில் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். அப்படி இருப்பது தெரிந்தால், ஆரம்பத்திலேயே தகுந்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைக் கொடுத்து சிகிச்சை செய்ய வேண்டியது முக்கியம்.
- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com