DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 21-01-2023

விளையாட்டு மேம்பாட்டுப் பணிகள் தொடா்பாக, ஒடிஸா மாநிலத்துடன், தமிழக அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்தது.

இந்தப் ஒப்பந்தம் தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (ஜன.20) கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தமானது, இளம் திறமையாளா்கள், பயிற்சியாளா்கள், விளையாட்டு வீரா்கள், விளையாட்டு நிா்வாகிகள்,

விளையாட்டு விஞ்ஞானிகள் ஆகியோரின் திறமைகளை பரிமாறிக் கொள்ள உதவி செய்யும். மேலும், இரு மாநிலங்களுக்கு இடையில் விளையாட்டு உட்கட்டமைப்புகளை பகிா்ந்து கொள்வதற்கும், மேம்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வழி செய்திடும்.

என்ன பயன்? ஒப்பந்தத்தின் மூலமாக, உலகத் தரம் வாய்ந்த வகையில் விளையாட்டு வீரா்களுக்கு பயிற்சி அளிக்கவும், சா்வதேச விளையாட்டு அகாதெமிகள், கல்விக் கூடங்கள், சிறப்பு மையங்கள், விளையாட்டு வளாகங்கள் மற்றும் பிற நவீன வசதிகளை உருவாக்கிடும் பணிகளில் இருமாநில அரசுகளும் முறையான ஒத்துழைப்பை அளிக்கும்.

புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்ச்சியில், ஹாக்கி இந்தியா தலைவா் திலிப் டா்கி, பொருளாளா் சேகா் மனோகரன், ஒடிஸா மாநில விளையாட்டுத் துறை செயலாளா் வினில் கிருஷ்ணன், தமிழ்நாடு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.



Read in source website

சிறுபான்மை ஆணைய துணைத்தலைவராக இறையன்பன் குத்தூஸை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

துணைத் தலைவராக இருந்த மஸ்தான் கொலை செய்யப்பட்ட நிலையில் இறையன்பன் குத்தூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சிறுபான்மையின ஆணையத்தின் துணைத் தலைவராகச் செயல்பட்டு வந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான டாக்டா் மஸ்தான் சென்னை அருகே ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது, வலிப்பு ஏற்பட்டு, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு மாரடைப்பால் கடந்த 21-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்த நிலையில், டாக்டா் மஸ்தான் மரணத்தில் மா்மம் இருக்கலாம் என்று அவரின் மகன் ஹரிஸ் ஷாநவாஸ் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாரும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், காரில் சென்ற உறவினரான இம்ரான் பாஷா, தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து காரை தனியாக ஓரிடத்தில் நிறுத்தி, மஸ்தானுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தி, கொலை செய்தது தெரிய வந்தது.

தொடா்ந்து, கொலைக்கு உடந்தையாக இம்ரான் பாஷாவின் கூட்டாளிகள் தமீம், நஷீா், தெளபீக் அகமது, லோகேஸ்வரன் மற்றும் இம்ரான் பாஷா ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.



Read in source website

நாசாவின் உலக அளவிலான ஓவியப் போட்டிகளில் இரண்டாம் பிடித்த பழனி மாணவி தித்திகா ஓவியம் நாசா காலண்டரில் இடம் பெற்றுள்ளதற்கு பலரும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் உலக அளவிலான ஓவியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டியில் தேர்வாகும் ஓவியங்கள் நாசா வெளியிடும் காலண்டரில் அச்சிடப்படும். இந்த ஆண்டுக்கான ஓவியப்போட்டி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் உள்ள மாணவ, மாணவிகள் 25 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

இதில், இந்தியாவிலிருந்து பங்கேற்ற 9 மாணவர்களின் ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் 10 முதல் 12 வயது பிரிவில் பழனி புஷ்பத்தூர் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி தித்திகா வரைந்த ஓவியம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

விண்வெளி வீரர் ஒருவர் கூடைப்பந்து விளையாடுவது போன்று வரைந்து அனுப்பிய தித்திகா ஓவியம் தேர்வு செய்யப்பட்டது. இந்த ஓவியம் நாசா காலண்டரில் இடம் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவி தித்திகாவுக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர். 

வெற்றி பெற்றது எப்படி? மாணவி தித்திகாவிடம் இந்த வெற்றி குறித்து பேசியபோது, “நான் 7 வயதில் இருந்தே வரையத் தொடங்கினேன்.  அப்பா அருண்குமாரும், அம்மா உமாதேவியும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். எனக்கு விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுள்களின் படங்களை வரைவது பிடிக்கும். அது தவிர இயற்கைக் காட்சிகள், கார்ட்டூன்கள் விரும்பி வரைவேன். 

மேலும், ஆயில் பெயின்டிங், பென்சில் கலை கற்றிருக்கிறேன். ஆனால், எனக்கு வாட்டர் கலர் பெயின்ட் வரைவதில்தான் ஆர்வம் அதிகம். வீட்டில் இருக்கும் போது படிக்கும் நேரம் போக மீதமுள்ள நேரங்களில் வரைந்து கொண்டே இருப்பேன். தற்போது நாசா காலண்டரில் எனது ஓவியம் இடம் பெற்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,'' என்றார்.

2018 ல் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் விண்வெளிக்கு செல்லும் போது என்னென்ன உணவுகள் தேவை என்ற தலைப்பில் போட்டி நடத்தப்பட்டது.

மதுரை மாணவியின் புதிய சாதனை: 
உலக அளவிலான இந்த ஓவியப் போட்டியில் மாணவியின் பெண்ணின் அர்ப்பணிப்பைச் சொல்லும் 12 மணி நேர காபி ஒவியம்... என புதிய சாதனை படைத்த பழனியைச் சேர்ந்த காவியா, செல்வஸ்ரீதத் ஆகியோரது ஓவியங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாசா உலக அளவிலான ஓவியப் போட்டிகளில் தொடர்ச்சியாக பழனி மாணவர்களின் ஓவியங்கள் நாசா காலண்டரில் இடம்பெற்று வருவதால் ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமில்லாது பலரும் மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.



Read in source website

18 வயதுக்குட்பட்டோருக்கு ஆணுறை (காண்டம்) மற்றும் கருத்தடை மருந்துகள் விற்கக் கூடாது என்று கர்நாடக மருந்து கட்டுப்பாட்டுத் துறை அண்மையில் தடை விதித்திருந்தது.

கர்நாடக மருந்து கட்டுப்பாட்டுத் துறை பிறப்பித்த இந்த உத்தரவுக்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பல கருத்துகள் எழுந்தன. உண்மையில் டீன் ஏஜ் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோருக்குத்தான் இதில் எந்த கருத்தும் இருந்திருக்காது என்று கூறப்படுகிறது.

18 வயதுக்குள்பட்டவர்களுக்கு கருத்தடை மருந்துகள் அல்லது ஆணுறை விற்பனை செய்யப்படாவிட்டால் என்னவாகும் என்பது குறித்த விவாதங்கள் கர்நாடக மாநிலம் முழுவதும் எதிரொலித்தன.

அதாவது, இளம் வயதினருக்கு கருத்தடை மருந்துகளையோ அல்லது காண்டமோ விற்பனை செய்யாமல் போனால், அதனால், கலாசார சீரழிவு குறையும் என்று வாதிட முடியாமல், இதனால், தேவையற்ற கர்ப்பம், பாலியல் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகரிக்கும் என்றே வாதங்கள் முன்வைக்கப்பட்டன. பல விவாதங்களும் இதையே மீண்டும் மீண்டும் எதிரொலித்தன. 

இதற்கிடையே, மேலும் ஒரு திருப்புமுனையாக, கர்நாடக மருந்து கட்டுப்பாட்டுத் துறையோ, மருந்தாளுநர்கள் மற்றும் மருந்துக் கடைகளுக்கோ, இளம் வயதினருக்கு காண்டம் மற்றும் கருத்தடை தடுப்பு மருந்துகளை நேரடியாக விற்பனை செய்யக் கூடாது என்று தாங்கள் எந்த விதமான அறிவுறுத்தல் கடிதத்தையும் அனுப்பவேயில்லை என்று மறுத்துவிட்டது.

ஆனால், கர்நாடக மருந்து கட்டுப்பாட்டாளர் பகோஜி டி. சொன்னதாக, ஒரு தகவல் ஊடகங்களில் பரவியது. அதாவது, மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பாலியல் தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்கவும் ஆணுறை மற்றும் கருத்தடை தடுப்பு மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், இவை இளம் வயதினருக்கோ அல்லது பள்ளிக் சிறார்களுக்கோ கிடையாது என்று தெரிவித்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே, கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கைப்பேசி கொண்டு வருகிறார்களா என்று பைகளை சோதித்த ஆசிரியர்கள் அதிர்ந்து போயினர். காரணம், அவர்களது பைகளில் கருத்தடை சாதனம் மற்றும் கருத்தடை மாத்திரைகள், சிகரெட் உள்ளிட்ட பொருள்கள் இருந்ததுதான்.

இதோடு மட்டுமல்லாமல், பல மாணவர்களின் பைகளில் ஏராளமான பணம், போதைப் பொருள்களும் இருந்தது ஒட்டுமொத்த பள்ளியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அண்மைக்காலமாகவே சிறார்களின் பழக்கவழக்கங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது மேலோட்டமாகச் சொல்லப்பட்டு வந்தாலும், இவ்வாறு பள்ளி பைகளிலேயே கருத்தடைப் பொருள்களும் சிகரெட்களும் கண்டுபிடிக்கப்பட்டது ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியது.
 



Read in source website


சென்னை: தமிழகத்தில் பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகள், தேர்வு மையங்களுக்காக அதிக நேரம் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில், ஊரகப் பகுதிகளில் அதிக தேர்வு மையங்களை ஏற்படுத்த அரசு தேர்வுகள் இயக்குநரகம் முடிவெடுத்திருக்கிறது.

அரசு தேர்வுகள் இயக்குநரகம் எடுத்திருக்கும் இந்த முடிவின்படி, ஒரு மாணவர் பத்தாம் அல்லது பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத அதிகபட்சமாகவே 7 கிலோ மீட்டர் தொலைவுக்குத்தான் பயணம் செய்யும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்வை எழுதவிருக்கும் 8.8 லடச்ம் மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் 3,200 தேர்வு மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் 10 லட்சம் மாணவர்களுக்கு 4,000 தேர்வு மையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.

கடந்த 2019ஆம் ஆண்டு அதிகபட்சமாக 10 கிலோ மீட்டருக்குள் தேர்வு மையம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக கூடுதலாக 500 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டு, அதிகபட்சமாக 7 கிலோ மீட்டர் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேர்வுகள் இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக, தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் என இந்த ஆண்டு கூடுதலாக 100 தேர்வு மையங்கள் அமைக்கப்படும். மேலும், குறைந்தபட்ச மாணவர்கள் எண்ணிக்கை என்பதிலிருந்து விலக்கு அளித்து, அனைத்து மலைப்பகுதிகளில் இருக்கும் பள்ளிகளையும் தேர்வு மையங்களாக அமைக்கவும், மாணவர்களுக்கு பயணிக்கும் நேரத்தை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல கிலோ மீட்டர் பயணம் செய்து தேர்வெழுதும் சிக்கலில் இருந்து தப்பிப்பார்கள் என்று பள்ளிகள் தரப்பிலும் கருத்துகள் நிலவுகின்றன.

இதனால், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் இருந்து மாணவர்கள் தப்பிக்கவும், விரைவாக தேர்வு மையங்களுக்குச் செல்லவும் வாய்ப்பு ஏற்படும் என்பதால், இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக மாறியிருக்கிறது.
 



Read in source website

கம்பம்: தேனி மாவட்டம், குள்ளபுரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி 4 -ஆம் ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதில் ஒரு பாகமாக அனுமந்தன்பட்டியில் மலர் சாகுபடியில் உள்ள விவசாயிகளுக்கு ரோஜா பூவின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து மாணவர்கள் விவசாயிகளிடம் கூறியதாவது, ரோஜா பூவை செடியிலிருந்து பறித்து அதனை சேமித்து விற்பனைக்கு அனுப்பும் முன்பே அவை வாடிவிடுகின்றன. இதனால் பூக்களின் விலை குறைக்கப்பட்டு குறுகிய லாபத்தை மட்டுமே ஈட்ட முடியும். எனவே, ரோஜா பூக்களை செடியில் இருந்து பறித்த உடனேயே அதனை 3 முதல் 5 சதவீதம் அளவுள்ள சர்க்கரை கலந்த நீரில் பூவின் காம்பு படும்படி வைக்கவும். இதனால் பூக்களின் வாடல் குறையும். அதனை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறினர்.

செயல் விளக்கத்தினை கம்பம் குழு மாணவர்களான சக்திவேல், காளிராஜன், ஆல்பின் சாபு, நந்தகுமார், மோகன், சிவனேசன், மணி கிருக்ஷ்ணா, மூவேந்திரன், ராஜா, விஜய் ஆனந்த், ஸ்ரீ கோகுல், மற்றும் கார்த்திகேயன் விளக்கினர்.



Read in source website

தமிழக கிராமப்புறங்களில் 5, 8-ஆம் வகுப்புகளில் பயிலும் பெரும்பாலான மாணவா்களால் வகுத்தல் கணக்குகளை சரியாகச் செய்யும் திறன் பெறவில்லை; ஆங்கில வாசிப்பிலும் தமிழக மாணவா்கள் பின்தங்கியுள்ளனா் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பிரதம்’ எனும் கல்வி அமைப்பு 2006-ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் கல்வித் திறனை ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்த ‘கல்வி நிலை குறித்த ஆண்டறிக்கை’ (ஏஸா்) என்று அழைக்கப்படுகிறது. அதன்படி, 2022-ஆம் ஆண்டுக்கான ‘ஏஸா்’ கல்வி அறிக்கை சென்னையில் வெளியிடப்பட்டது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

நாடு முழுவதும் உள்ள 616 கிராமப்புற மாவட்டங்களில் 6.9 லட்சம் மாணவா்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 30,737 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

அதன்படி, கரோனா தொற்றுக்குப் பின்னும் தமிழகத்தில் பள்ளி மாணவா் சோ்க்கை 99.8 சதவீதமாக உள்ளது. குறிப்பாக, அரசுப் பள்ளி சோ்க்கை 75.7 சதவீதமாக உள்ளது.

இது 2018-ஆம் ஆண்டைவிட 8.3 சதவீதம் அதிகம். அதேபோல, 2010-ஆம் ஆண்டில் 9.6 சதவீதமாக இருந்த பள்ளி செல்லா பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது ஒரு சதவீதமாகக் குறைந்துள்ளது.

தமிழக கிராமப்புறங்களில் 8-ஆம் வகுப்பில் 37 சதவீதமும், 5-ஆம் வகுப்பில் 75 சதவீதமும், 3-ஆம் வகுப்பில் 95 சதவீதமும் மாணவா்கள் 2-ஆம் வகுப்பு புத்தகங்களை படிக்க இயலாதவா்களாக உள்ளனா். மேலும், அடிப்படை கணிதத்தைப் பொருத்தவரை 5-ஆம் வகுப்பில் 85 சதவீதம் பேரும், 8-ஆம் வகுப்பில் 55 சதவீதம் மாணவா்களாலும் வகுத்தல் கணக்குகளை சரியாக செய்ய முடியவில்லை. ஆங்கில வாசிப்புத் திறனிலும் தமிழக மாணவா்கள் பின்தங்கியுள்ளனா்.

வருகைப் பதிவும் குறைவு: இதுதவிர 2018-இல் 91.1 சதவீதமாக இருந்த பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது 88.8 சதவீதமாக குறைந்துவிட்டது. தமிழகத்தில் மதிய உணவுத் திட்டம் 99.6 சதவீதம் மாணவா்களுக்கு சென்றடைகிறது. 9.2 சதவீதம் பேருக்கு குடிநீா் வசதியும், 1.2 சதவீதம் பேருக்கு கழிப்பறை வசதியும் இல்லை.

கழிப்பறை இருந்து பயன்படுத்த முடியாத நிலையில் 16 சதவீத கழிப்பறைகள் உள்ளன. மேலும், 20 சதவீத பள்ளிகளில் நூலக வசதி இல்லாததும், 56 சதவீத கிராமப்புற மாணவா்களுக்கு கணினி வசதி பள்ளிகளில் இல்லாததும் அந்த கல்வி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.



Read in source website

எகிப்து அதிபா் அப்தெல் ஃபத்தா அல்-சிசியின் இந்தியப் பயணம் இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குடியரசு தினம் வரும் 26-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின நிகழ்ச்சியில் எகிப்து அதிபா் அப்தெல் ஃபத்தா அல்-சிசி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளாா். அதற்காக செவ்வாய்க்கிழமை (ஜன. 24) இந்தியாவுக்கு வருகை தரும் எகிப்து அதிபா், 3 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா்.

இந்தியக் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபா் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தியாவுக்கு வருகை தரும் எகிப்து அதிபா் அல்-சிசிக்கு குடியரசுத் தலைவா் மாளிகையில் 25-ஆம் தேதி அரசு சாா்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அதில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கலந்து கொள்ளவுள்ளாா்.

அன்றைய தினமே பிரதமா் நரேந்திர மோடி-எகிப்து அதிபா் அல்-சிசி இடையேயான பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. அப்போது வேளாண்மை, இணையவெளி, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பான ஒப்பந்தங்கள் கையொப்பமாகவுள்ளன. எகிப்து அமைச்சா்களைக் கொண்ட குழுவும் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கவுள்ளது.

இருதரப்பு, பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் தொடா்பாக இருநாட்டுத் தலைவா்களும் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கவுள்ளனா். வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் எகிப்து அதிபரைச் சந்தித்துப் பேசவுள்ளாா். எகிப்து அதிபரின் இந்தியப் பயணம் இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும்.

இந்தியக் குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து ராணுவப் படையின் குழுவும் பங்கேற்கவுள்ளது. ஆப்பிரிக்க, அரபு நாடுகளின் அரசியலில் முக்கியப் பங்கு வகித்து வரும் எகிப்துடன் நல்லுறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. பன்னாட்டு, சா்வதேச அமைப்புகளில் இந்தியாவும் எகிப்தும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

பரஸ்பர கலாசாரப் பகிா்வுகள், பொருளாதார வளா்ச்சிக்கான முக்கியத்துவம், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு, பிராந்திய, சா்வதேச விவகாரங்களில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையேயான நல்லுறவைத் தொடா்ந்து வலுப்படுத்தி வருகின்றன.

உச்சத்தில் வா்த்தகம்:

கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தகமும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் இருதரப்பு வா்த்தகம் சுமாா் ரூ.58,000 கோடி என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டது. எகிப்துக்கான இந்தியப் பொருள்களின் ஏற்றுமதி சுமாா் ரூ.30,000 கோடியாகவும் அந்நாட்டுப் பொருள்களின் இறக்குமதி சுமாா் ரூ.28,000 கோடியாகவும் உள்ளது.

இந்தியாவைச் சோ்ந்த 50-க்கும் அதிகமான நிறுவனங்கள் சுமாா் ரூ.25,000 கோடியை எகிப்தில் முதலீடு செய்துள்ளன. முக்கியமாக, ரசாயனங்கள், எரிசக்தி, ஜவுளி, வேளாண்மை, சில்லறை வணிகம் உள்ளிட்ட துறைகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

‘எல்லையில்லா தாராளமய பொருளாதாரத்துக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆதரவு அளிக்காமல், அதில் சமநிலையை ஏற்படுத்தவே முயல்கிறது’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.

சட்டம் மற்றும் பொருளாதார நிபுணரான நானி பால்கிவாலா நினைவு தின உரையாற்றிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியதாவது:

மாறி வரும் காலத்துக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உண்மையான ஆன்மா மாறாமல் தீா்ப்புகளில் விளக்கமளிப்பதில் நீதிபதிகளின் திறன் அமைந்துள்ளது.

இந்தியாவின் நீதி பரிபாலனம் கடந்த சில தசாப்தங்களாக மாற்றம் கண்டுள்ளது. அதிகாரங்களைப் பகிா்ந்து அளிப்பது, மதச்சாா்பின்மை, கூட்டாட்சி, தனிமனித சுதந்திரம், தனி மனிதரின் கண்ணியம் காப்பது, நாட்டின் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு ஆகியவைதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையாகும் என்றாா்.



Read in source website

திரிபுரா, மணிப்பூா், மேகாலய மாநிலங்கள் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

திரிபுரா மாநிலம் கடந்த சில ஆண்டுகளாக வளா்ச்சியில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. வேளாண், தொழில்துறை, கல்வி மற்றும் மருத்துவம் எனப் பல்வேறு துறைகளில் மிகப் பெரிய மாற்றங்களை திரிபுரா ஏற்படுத்தி வருகிறது.

அதுபோல, மணிப்பூா் மாநிலமும் கடந்த சில ஆண்டுகளாக சிறந்த வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மாநில மக்களின் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்திசெய்வதோடு, நாட்டின் வளா்ச்சிப் பாதையையும் மணிப்பூா் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்.

துடிப்பான கலாசாரத்தைக் கொண்டுள்ள மேகாலய, இசை, கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது. மேகாலய மக்கள் பல்துறைகளில் சிறந்து விளங்குகின்றனா். வரும் ஆண்டுகளில் மேகாலயம் தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் முன்னேற பிராா்த்திக்கிறேன் என்று பிரதமா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.



Read in source website

 

பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் 42 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் முர்தாசா ஜாவேத் அப்பாசி தெரிவித்துள்ளார். 

தகவல் அமைச்சகத்தின் தகவலின்படி, 

கொல்லப்பட்ட 15 பத்திரிகையாளர்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், 11 பேர் சிந்துவையும், 13 பேர் கைபர் பக்துன்க்வாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 3 பேர் பலுசிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஆவார். பத்திரிகையாளர்கள் பயங்கரவாதிகளால் குறிவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். 

பஞ்சாபில் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் தற்போது ஜாமீனில் உள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரில் 5 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எட்டு சந்தேக நபர்கள் தப்பியோடினர். குற்றம் சாட்டப்பட்ட ஒருர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். சிந்துவில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், ஏழு பேர் விசாரணையில் உள்ளனர். 

இதுகுறித்து செனட்டில் பேசிய ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் முஷ்டாக் அகமது கூறுகையில், 

பத்திரிகையார்களை பாதுகாக்க மத்திய மற்றும் மாகாண அரசுகள் தவறிவிட்டதாகக் கூறினார். குற்றவாளிகள் பிடிபட்டிருந்தால் அர்ஷத் ஷெரீப் தியாகியாகியிருக்க மாட்டார் என்றும் அவர் கூறினார். 

அகமதுவுக்கு பதிலளித்த அப்பாசி, இது ஒரு சிக்கலான சூழ்நிலை என்றும், குற்றவாளிகளுக்கு எதிராக அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்களுக்குச் சிறப்புப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஒருங்கிணைந்த அறிக்கையைத் தயாரித்து இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பாகிஸ்தானின் உள்துறை மற்றும் தகவல் அமைச்சகங்களுக்கு அவர் உத்தரவிட்டார்.



Read in source website

கல்லூரி, பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறையை கேரள மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இதுதொடா்பான அறிவிப்பை கேரள அரசு அண்மையில் வெளியிட்டது. அதன்படி, மாநில உயா்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் படித்து வரும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அந்த மாநிலத்திலுள்ள கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்த விடுமுறை நடைமுறையை அறிமுகம் செய்தது. அதாவது, படிப்பின் ஒவ்வொரு பருவத்திலும் கட்டாய 75 சதவீத வருகைப் பதிவில், மாணவிகளுக்கு கூடுதலாக 2 சதவீத தளா்வு அளித்து அறிவிப்பு வெளியிட்டது. அதன் மூலமாக, மாணவிகள் 73 சதவீத வருகைப் பதிவை பெறிருந்தாலே தோ்வெழுத முடியும்.

இந்த நடைமுறையைப் பின்பற்றி, அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் மாநில அரசு நடைமுறைப்படுத்தும் என்று மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் ஆா். பிந்து தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவா் வெளியிட்டப் பதிவில், ‘மாதவிடாய் காலங்களில் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். அன்றைய நாள்களில் அவா்களுக்கு ஓய்வு தேவை என்ற மாணவா் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்த சிறந்த முடிவை எடுத்துள்ளது. இது அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்துப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

அதனைத் தொடா்ந்து, மாநில அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிகாரில் இதுபோன்ற நடைமுறை கடந்த முப்பது ஆண்டுகளாக மேலாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 1991-இல் ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு மாத கால போராட்டம் நடைபெற்றது. மாத விடாய் விடுமுறையும் கோரிக்கைகளில் ஒன்றாகும்.

இதையடுத்து, 1992-ஆம் ஆண்டு ஜனவரியில் பிகாா் அரசு இது தொடா்பான உத்தரவை வெளியிட்டது. அதன்படி மாத விடாய் காரணங்களுக்காக இரண்டு நாள்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். நாற்பத்தைந்து வயது வரையுள்ள பெண்களுக்கு இந்த விடுமுறைச் சலுகை பொருந்தும்.



Read in source website

சமூக வலைதளங்களில் பொருள்களை போலியாக சித்தரித்து விளம்பரம் உள்ளிட்ட காட்சிகளைக் காண்பித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இதற்காக புதிய விதிமுறைகளையும் நுகா்வோா் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் ஒரு பொருளைக் காண்பித்து அதேபோன்று தோற்றமுள்ள குறைந்த தரத்திலான மற்றொரு பொருளை விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய அரசு இந்த புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.

இந்த விதிமுறைகளை வெளியிட்டு பேசிய நுகா்வோா் விவகார செயலா் ரோஹித் குமாா் சிங், சமூக வலைதள விளம்பர சந்தை 2022-ஆம் ஆண்டில் ரூ.1,275 கோடியாக இருந்தது. 2025-இல் இது ரூ.2,800 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சமூக வலைதளங்கள் மூலம் காண்பிக்கப்படும் பொருள்களின் விளம்பரம் எந்த நிறுவனத்தைச் சோ்ந்தது, விளம்பரப்படுத்துபவரின் விவரம் ஆகியவை அதில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஒரு பொருளைக் காண்பித்து அதைப்போல் தோற்றமுள்ள தரம் குறைந்த வேறு பொருளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை மீறும் போலி பொருள் தயாரிப்பாளா்கள் மீது ரூ.10 லட்சம் தொடா்ந்து மீறும் நிறுவனங்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்கப்படும். அந்தப் பொருளின் விளம்பரத்துக்கு 3 ஆண்டுகள் வரையில் தடை விதிக்கப்படலாம் என்றாா்.



Read in source website

 

பிரபல ஆஸ்திரேலிய வீரர் டேன் கிறிஸ்டியன், ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

39 வயது டேன் கிறிஸ்டியன், ஆஸ்திரேலிய அணிக்காக 20 ஒருநாள், 23 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். எனினும் 405 டி20 ஆட்டங்களில் விளையாடி பிரபல டி20 வீரராக அறியப்பட்டுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 5809 ரன்களும் 280 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ், தில்லி டேர்டெவில்ஸ், ரைசிங் புணே சூப்பர்ஜெயண்ட், ஆர்சிபி ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 

2010 முதல் இவர் இடம்பெற்ற அணிகள் 9 டி20 போட்டிகளை வென்றுள்ளன. இந்நிலையில் தற்போது நடைபெறும் பிபிஎல் போட்டியுடன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டேன் கிறிஸ்டியன் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நெதர்லாந்து அணியின் ஆலோசகராகப் பணியாற்றினார். இதனால் ஓய்வுக்குப் பிறகு லீக் போட்டிகளில் பயிற்சியாளராகப் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



Read in source website

தலிபான் கொடியின் பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் எடுத்துக் கொண்ட புகைப்படம் குறித்து மன்னிப்புக் கேட்டிருக்கும் ஐ.நா. மிகுந்த கவனக்குறைவு என்று குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வரும் நிலையில், அது குறித்து தலிபான் ஆட்சியாளர்களை சந்தித்து, ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனங்களைப் பதிவு செய்யும் வகையில் ஐக்கயி நாடகள் சபையின் துணைப் பொதுச் செயலாளர் அமினா மொஹம்மது தலைமையிலான அதிகாரிகள் குழு கடந்த வாரம் காபூல் மற்றும் கந்தகார் சென்றிருந்தனர்.

ஆப்கானிஸ்தானின் அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்த அவர்கள், பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுவதன் அபாயங்களை எடுத்துரைத்திருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் சிலர், தலிபான் கொடிக்கு முன்னால் நின்று கொண்டு புகைப்படம் எடுத்து பதிவிட்டிருந்தது பல்வேறு விமரிசனங்களுக்கு உள்ளானது.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் துணை செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கவே கூடாது. மிகுந்த கவனக்குறைவாக இருந்தது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இது தவறானது, இதற்காக மன்னிப்புக் கோருகிறோம். இது குறித்து அந்த அதிகாரிகளின் மேற்பார்வையாளர், இது பற்றி அவர்களிடம் பேசியிருப்பதாகவும் தெரிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Read in source website

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் மேலும் 35 நாடாளுமன்ற உறுப்பினா்கள் தங்களது பதவியை கூண்டோடு ராஜிநாமா செய்துள்ளனா்.

பாகிஸ்தானின் பிரதமராக இருந்து வந்த இம்ரான் கான் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீா்மானம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்டு, அதில் அவா் தோல்வியடைந்தாா்.

அதையடுத்து அவா் பதவி இழந்ததைத் தொடா்ந்து, அவரது தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த 123 எம்.பி.க்கள் கூண்டோடு ராஜிநாமா செய்தனா்.

இந்த நிலையில், இம்ரான் கட்சியைச் சோ்ந்த 34 எம்.பிக்கள் மற்றும் கூட்டணிக் கட்சியான அவாமி முஸ்லிம் லீகின் ஒரு எம்.பி. என 35 பேரது ராஜிநாமாவை ஏற்க அவைத் தலைவா் ராஜா பொ்வய்ஸ் அஷ்ரஃப் மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த 35 பேரது ராஜிநாமாவையும் அவைத் தலைவா் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெள்ளிக்கிழமை வெளியாகின.

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் சதித் திட்டத்தால் மத்தியில் தனது அரசு கவிழ்க்கப்பட்டதாக குற்றம் சாட்டி வரும் இம்ரான், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தோ்தல் நடத்த வலியுறுத்தி வருகிறாா். அதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக, அவரது கட்சி ஆட்சி நடைபெற்று வந்த மகாணப் பேரவைகள் கலைக்கப்பட்டன.

தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் கைபா்-பாக்துன்கவா மாகாணத்தின் பேரவையை ஆளுநா் குலாம் அலி புதன்கிழமை கலைத்தாா்.

ஏற்கெனவே அந்தக் கட்சி ஆட்சி நடைபெற்று வந்த பஞ்சாப் மாகாணப் பேரவையும் கலைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், தோ்தலை முன்கூட்டியே நடத்த வலியுறுத்தும் வகையில் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியைச் சோ்ந்த மேலும் 35 எம்.பி.க்கள் பதவி விலகியுள்ளனா்.



Read in source website

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் “காவல் கரங்கள்” திட்டம் “ஸ்காச் தங்க விருது” வென்று சாதனை படைத்துள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை," 2022ம் ஆண்டிற்கான ஸ்காச் விருதுக்காக ஸ்காச் குரூப் (SKOCH group) நிறுவனம் அறிவிப்பு செய்திருந்த நிலையில் சென்னை பெருநகர காவல் துறையில் இயங்கி வரும் செயல் திட்டங்களான காவல் கரங்கள் (சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட, மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டும், உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை தன்னார்வலர்களின் உதவியுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்படும் திட்டம்), சிற்பி (மாணவர்களை நல்வழி படுத்தவும், சட்டத்தை மதிக்கும் இளம் சமுதாயத்தை உருவாக்கவும், அரசு பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு திட்டம்), ஆனந்தம் (பெண் காவலர்கள் தங்கள் பணியிலும் குடும்பத்திலும் சமநிலை படுத்தி வாழும் பயிற்சி திட்டம்), மகிழ்ச்சி (தற்கொலை எண்ணங்கள் மற்றும் குடிபோதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்காக உளவியல் மறுவாழ்வு திட்டம்), காவலர் விடுப்பு செயலி (காவலர்கள் எளிதில் அனைத்து வகையான விடுப்புகளை எடுப்பதற்கான செயலி திட்டம்) ஆகியவை முன்மொழியப்பட்டு விருதிற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த ஸ்காச் விருது ஆரம்ப நிலை, அரை இறுதி நிலை, இறுதி நிலை என 3 கட்டமாக நடத்தப்பட்டது. இதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிபுணர்கள் குழுக்கள் அனைத்து செயல் திட்டங்களையும் மதிப்பீடு செய்தார்கள். அவர்களுக்காக அனைத்து செயல் திட்டங்களும் சென்னை பெருநகர காவல் சார்பாக விரிவாக விளக்கப்பட்டிருந்தது. மேலும் பொதுமக்கள் சார்பாக இணையவழி முறையில் ஓட்டளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பொதுமக்களும் ஓட்டளித்தனர். இதில் கடந்த அரை இறுதி சுற்றுக்கு காவல் கரங்கள், சிற்பி மற்றும் மகிழ்ச்சி திட்டங்கள் தகுதி பெற்றது.

நேற்று( ஜன.20) நடைபெற்ற இறுதிசுற்றில் இந்த 3 திட்டங்களுக்கும் ORDER OF MERIT-2022 AWARD கிடைக்கப் பெற்றது. மேலும் இறுதியாக அனைத்து தேர்வு நிலையிலும் “காவல் கரங்கள்” தகுதி பெற்று POLICE & SAFETY -2022-க்கான ஸ்காச் தங்க விருது – 2022 (Skoch Award-2022 - Gold) பெற்று சென்னை பெருநகர காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அதிக முதலீடு செய்யப்படும் என இந்தியா உறுதியளித்துள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 2-நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். அவர் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை கொழும்புவில் நேற்று சந்தித்து பேசினார். அண்டை நாடுகளுக்கு முதல் முக்கியத்துவம் அளிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியுடன் இருப்பதால், தான் இலங்கைவந்திருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரி வித்தார்.

இந்த சந்திப்பின் போது இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவுள்ளன.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரியையும், ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். சிக்கலான நேரத்தில் இலங்கைக்கு இந்திய துணை நிற்கும் எனவும் அவர் தெரிவித்தார். இலங்கையின் பொருளாதார நிலை மேம்பட அங்கு எரிசக்தி, சுற்றுலா மற்றும் கட்டமைப்பு துறைகளில் அதிக முதலீடுகளை இந்தியா ஊக்குவிக்கும் எனவும் அவர் உறுதியளித்தார். இலங்கைக்கான தேவையை நிறைவேற்ற கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது எனவும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.



Read in source website

புதுடெல்லி: ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய நீர் மூழ்கி கப்பல் நாளை மறுதினம் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.

இந்திய கடற்படையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் உள்ளன. வரும் 2027-ம் ஆண்டுக்குள் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த மத்திய பாதுகாப்புத் துறை இலக்குநிர்ணயித்திருக்கிறது. அதேபோல் கடற்படையில் 17 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில் 2 நீர்மூழ்கி கப்பல்கள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. நாட்டின் பெரும்பாலான நீர்மூழ்கி கப்பல்கள் ரஷ்யா, ஜெர்மனி தயாரிப்புகள்.

மத்திய அரசு ஒப்பந்தம்: இந்த சூழலில் கடந்த 2005-ம்ஆண்டில் பிரான்ஸின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து 6 புதிய நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன்படி கடந்த 2007-ம்ஆண்டில் மும்பை கட்டுமான தளத்தில் நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தொடங்கியது.

முதல் நீர்மூழ்கியான ஐஎன்எஸ் கல்வாரி கப்பல் 2017-ம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது. 2019-ல் ஐஎன்எஸ் காந்தேரி, 2021-ம்ஆண்டில் ஐஎன்எஸ் கரஞ்ச், ஐஎன்எஸ் வேலா ஆகியவை அடுத்தடுத்து கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்த வரிசையில் 5-வதுநீர்மூழ்கியான ஐஎன்எஸ் வகிர்நாளை மறுதினம் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.

மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கடற்படை தளபதி ஹரிகுமார் புதிய நீர்மூழ்கியை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

இதுகுறித்து கடற்படை வட்டா ரங்கள் கூறியதாவது: சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பிரான்ஸ் நிறுவன தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்படும் 6 நீர்மூழ்கி கப்பல்கள், கல்வாரி ரகம் என்றழைக்கப்படுகிறது. கல்வாரி என்ற மலையாள சொல் புலிச்சுறாவை குறிக்கிறது. இதுவரை 4 கல்வாரி ரக நீர்மூழ்கிகள் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன.

டீசல், மின்சாரத்தில் இயங்கும்: ஐந்தாவதாக ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி 23-ம் தேதி கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. இந்த நீர்மூழ்கி 67.5 மீட்டர் நீளம், 6.2 மீட்டர் அகலம், 12.3 மீட்டர் உயரம் கொண்டதாகும். இது டீசல்- மின்சாரத்தில் இயங்கும். எதிரி போர்க்கப்பல்களை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் நீர்மூழ்கி யில் பொருத்தப்பட்டுள்ளன. கடல் பகுதி மட்டுமின்றி வான் பகுதி, நிலப்பகுதிகளை குறிவைத்தும் தாக்குதல் நடத்த முடியும்.

350 மீட்டர் ஆழம் மூழ்கும்: இது கடலுக்கு அடியில் 350 மீட்டர் ஆழம் வரை மூழ்கும். சுமார் 2 வாரங்கள் வரையில் கடலுக்கு அடியில் தொடர்ந்து தங்கியிருக்க முடியும். இது அதிக சப்தம் எழுப்பாது என்பதால் எதிரிகளின் கடல் எல்லைக்குள் நுழைந்தாலும் எளிதில் கண்டறிய முடியாது. கல்வாரி ரகத்தில் இறுதி மற்றும் 6-வது நீர்மூழ்கியான ஐஎன்எஸ் வக்சிர் அடுத்த ஆண்டு மார்ச்சில் கடற்படையில் இணைக்கப்படும். இவ்வாறு கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.



Read in source website

புதுடெல்லி: தமிழக போலீஸாரின் வாரிசுகளுக்கு காவல் துறை வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் மன உறுதி, விசுவாசம், நேர்மையை ஊக்கப்படுத்தும் வகையில், போலீஸாரின் வாரிசுகளுக்கு காவல்துறை வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதனடிப்படையில், கடந்த 2001-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், காவல் துறையின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒருவரின் மகன், தனக்கும் இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, பொது வேலைவாய்ப்பில் நுழையும் வாய்ப்பு, அனைத்து குடிமக்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டுமென தெரிவித்தனர். மேலும், 10 சதவீத இடஒதுக்கீடு சட்டவிரோதமானது என்று கூறி, அரசாணையை ரத்து செய்து கடந்த 2018-ல் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து 100-க்கும் மேற்பட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தநிலையில், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அபய் எஸ்.ஒஹா,பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே மற்றும் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோர் ஆஜராகி, ‘‘தமிழக காவல் துறையில் பணிபுரியும் காவலர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த அரசாணை எந்த விதத்திலும் சட்டவிரோதமானது அல்ல. இந்த வேலைவாய்ப்பு காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் உத்வேகத்தையும், மனஉறுதியையும் அதிகரிக்கச் செய்யும். இந்த இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரை கிளை முறையாகஆய்வு செய்யாமல் ரத்துசெய்திருப்பதால், போலீஸாரின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘தமிழக காவல் துறையில் பணியாற்றும் போலீஸாரின் வாரிசுகளுக்கு காவல் துறையில் உள்ள காலி பணியிடங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த அரசாணை செல்லும். அதனடிப்படையில் தற்போது வழக்குத் தொடர்ந்துள்ளவர்கள் மட்டுமின்றி, தகுதி வாய்ந்த அனைவருக்கும் உரிய இடஒதுக்கீட்டைப் பின்பற்றி பணி வழங்கலாம்.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு காரணமாக விண்ணப்பித்து, வாய்ப்பு இழந்த தகுதியானவர்களுக்கும், இந்த உத்தரவின் அடிப்படையில், வயதுவரம்பைத் தளர்த்தி தமிழக காவல்துறையில் பணி வழங்க எவ்வித தடையும் இல்லை" என்று உத்தரவிட்டுள்ளனர்.



Read in source website

இன்றைய தலைமுறை கிரிக்கெட் ரசிகர்கள், குறிப்பாக இளம் ரசிகர்கள் கிரிக்கெட் ஆட்டத்தை அதன் எண்ணிக்கைக்காகப் பார்த்து வியக்கின்றனர். இத்தனை ஆயிரம் ரன்கள், இத்தனை சதங்கள், இத்தனை விரைவு கதியில் இத்தனை ரன்களா என்று விராட் கோலியையும் ரோஹித் சர்மாவையும், சூரியகுமார் யாதவ்வையும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை முன் வைத்து வியப்படைகின்றனர், புகழாரம் சூட்டுகின்றனர். இது ஏற்றுக் கொள்ளக் கூடியது என்றாலும் இதே அளவு கோலை வைத்து கடந்த கால கிரேட்களை அவர்கள் மதிப்பிட்டு ஒன்றுமில்லை என்று கூறும்போது இவர்களுக்கு கிரிக்கெட் வரலாற்றுப் பாடம் அவசியம் என்று தோன்றுகிறது.

அன்று விராட் கோலி வேர்ட்ல்ட் கிளாஸ் வீரரா, கிரேட் பிளேயரா என்று கேட்டு எழுதியிருந்தோம். அதற்கு சுனில் கவாஸ்கர், விவ் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்களை உதாரணம் காட்டினோம், கிரேம் ஹிக்கின் ஒரு அற்புதமான இன்னிங்ஸை வர்ணித்தோம், ஆனால் வாசகர்கள் சிலர் கொச்சையாக எதிர்வினை புரிந்தனர் அதை விட்டு விடுவோம், ஆனால் கவாஸ்கரைப் பற்றி கூறும்போது உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அவர் 60 ஓவர் ஆடி 36 நாட் அவுட் என்று ஆடியதைக் குறிப்பிட்டு ஒரே தருணத்திற்கு அந்த கிரேட் பிளேயரின் கிரிக்கெட் சகாப்தத்தைக் குறுக்கி புரிந்து வைத்துள்ளனர். இது கிரிக்கெட் வரலாற்றுப் பிரக்ஞையற்ற வெற்றுப் பேச்சு வெற்றுக் கருத்து என்பதைத் தாண்டி வேறு எதுவும் அல்ல.

ஏனெனில் இதே கவாஸ்கர்தான் 1983 உலகக்கோப்பையை வென்ற பிறகு மே.இ.தீவுகள் அணி இந்தியா வந்தபோது கான்பூர் டெஸ்ட் போட்டியில் மால்கம் மார்ஷல் வீசிய அதிவேக எகிறு பந்தை மட்டையை உயர்த்தி தடுத்தாட முயன்ற போது மட்டை பறந்து போனது, ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆகி பேட் பறந்து சென்று விழுந்த இடத்திலிருந்து எடுத்துக் கொண்டு சென்றார். சரி! கவாஸ்கர் கதை அவ்வளவுதான். டான் பிராட்மேனின் 29 சத சாதனையை உடைக்க வேண்டும் குறைந்தது எட்ட வேண்டும் என்ற கவாஸ்கரின் கனவு நிறைவேறாது என்றே அப்போது சுனில் கவாஸ்கர் பற்றிய பேச்சாக இருந்தது.

ஆனால் அடுத்த டெல்லி டெஸ்ட் போட்டியின் போது கான்பூர் டெஸ்ட்டில் மார்ஷல் பந்தில் பேட் பறந்தது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப் பட்ட போது, அவர் கூறினார், ‘மார்ஷல் பந்து வழக்கத்தை விட வேகம் அதிகமானது, நான் எப்போதும் பவுன்சரை மட்டையை உயர்த்தி தடுத்தாடி அது என் காலின் கீழ் விழ வேண்டும் என்ற நினைப்பில் ஆடினேன், ஆனால் கூடுதல் வேகம் மட்டையை கையில் இருந்து பிடுங்கிச் சென்றது. இந்த டெல்லி டெஸ்ட்டில் நான் ஹூக் ஷாட்களை ஆடப்போகிறேன்’ என்றார்.

கவாஸ்கர் ஹூக் ஷாட் ஆடுவதா என்று பலரும் கேலி, கிண்டல் செய்தனர், ஆனால் அன்று கவாஸ்கருக்கு கிளைவ் லாய்ட் டீப் ஸ்கொயர் லெக், டீப் பைன் லெக், டீப் மிட் விக்கெட் வைத்து போட வேண்டியதாயிற்று. 3 ஹூக் சிக்சர்களை விளாசினார், மே.இ.தீவுகளின் பவுலர்கள் குத்தக் குத்த வெளுத்து வாங்கி 95 பந்துகளில் அதிவேக சதமெடுத்தார். இது 60 ஓவர்களில் 36 எடுத்ததை நினைத்து நகைக்கும், கவாஸ்கரைக் குறைக்கும் நைண்டீஸ் கிட்ஸ்களூக்கோ, அல்லது 2000 கிட்ஸ்களுக்கோ தெரியுமா என்பதே நம் கேள்வி. இந்த இன்னிங்ஸ்க்கு முன்னரே சுனில் கவாஸ்கர் 1982-ல் மே.இ.தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்ட போது பெர்பைசில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டியில் கவாஸ்கர் 117 பந்துகளில் 90 ரன்கள் விளாசியதும் நடந்தது, அந்தப் போட்டியில் கபில் தேவ் 38 பந்துகளில் 72 ரன்களை விளாசினார், மே.இ.தீவுகளில் மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங், ஆண்டி ராபர்ட்ஸ், வின்ஸ்டன் டேவிஸ் போன்ற கதிகலக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். இந்தியா 282 ரன்களைக் குவிக்க மே.இ.தீவுகள் 255 ரன்களுக்கு மடிந்து தோற்றதுதான் 1983 உலகக்கோப்பையில் கபில்தேவ் மே.இதீவுகளை வீழ்த்தி கோப்பையை வெல்ல வைத்த பெரும் நிகழ்வுக்கு முன்னோட்டமாக அமைந்தது. ஆகவே கவாஸ்கரைப் பற்றி தெரிந்து கொள்ள வரலாற்றுப் பக்கங்களைப் புரட்ட வேண்டும்.

டக் வால்டர்ஸ் பற்றி இயன் சாப்பல்:

எது உலகத்தரமான ஆட்டம், யார் உலகத்தரமான வீரர் என்பதற்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன், கிரிக்கெட் வல்லுநர் இயன் சாப்பல் தன் காலத்தில் தன்னுடன் ஆடிய டக் வால்ட்டர்ஸ் பற்றி கூறியதை உலகத்தரமான இன்னிங்ஸ், உலகத்தரமான வீரர் யார் என்ற நிரூபணத்திற்கு ஒரு சுய தேற்றமாக எடுத்துக் கொள்ளலாம்.

டக் வால்டர்ஸ் மூன்று முறை சர்வதேசப் போட்டிகளில் ஒரு செஷனிலேயே சதம் எடுத்த வீரர், அப்போதெல்லாம் இது பெரிய விஷயம் ஹெல்மெட் கிடையாது, பவுன்சர் கட்டுப்பாடுகள் கிடையாது, பிட்ச் கவர் செய்யப்படாதது, ஆகவே ஒருநாள் இருந்தது போல் பிட்ச் மறுநாள் இருக்காது.

இப்போது போல் மட்டைப் பிட்சைப் போட்டு வைத்துக் கொண்டு கத்துக் குட்டி அணிகளை அழைத்து போட்டு சாத்து சாத்து என்று சாத்துவது என்ற பேச்சுக்கே அப்போது இடமில்லை. இந்நிலையில்தான் இயன் சாப்பல், டக் வால்டர்ஸ் பற்றி கூறுவது இந்தக் காலக்கட்டத்திய ஐபிஎல், டி20 ரசிகமணிகளுக்கு வெகு பொருத்தமாக இருக்கும்.

டக் வால்டர்ஸ் மே.இ.தீவுகளுக்கு எதிராக மே.இ.தீவுகளில் 1973-ம் ஆண்டு டிரினிடாடில் ஆடிய ஒரு அதியற்புத இன்னிங்ஸ் பற்றி கூறுகிறார். அதாவது ட்ரினிடாட் பிட்ச் மே.இ.தீவுகளின் சிறந்த ஆஃப் ஸ்பின்னர் லான்ஸ் கிப்ஸுக்கு உதவக்கூடியது. அதுவும் அந்தப் பிட்சில் ஆஃப் ஸ்பின்னருக்கான குட் லெந்த் ஸ்பாட்டில் ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே ஒரு சிறு பள்ளம் இருந்ததால் கிப்ஸ் பந்துகள் ஒன்று பயங்கரமாகத் திரும்பின அல்லது எகிறின, அல்லது தாழ்வாக உள்ளே திரும்பின. ஆடுவது மிகமிகக் கடினம் என்கிறார் இயன் சாப்பல்.

அப்போது இயன் சாப்பலின் சகோதரன் கிரெக் சாப்பல், உணவு இடைவேளைக்கு சற்று முன்னர் அவுட் ஆனார். அடுத்து டக் வால்டர்ஸ் இறங்குகிறார். பொதுவாக ஆஃப் ஸ்பின் பவுலிங்குக்கு எதிராக ஆட முடியாத கடினமான ஷாட் கவர் ட்ரைவ் ஆகும். அதுவும் பிட்சில் பந்துகள் திரும்பி எழும்பும்போது நிற்பதே கடினம் இதில் எங்கு கவர் ட்ரைவ் ஆடுவது? ஆனால் டக் வால்டர்ஸ் இறங்கி முதல் பந்திலேயே அதே பள்ளத்தில் பிட்ச் ஆன கிப்ஸ் பந்தை கவர் டிரைவ் அடித்தார். அதன் பிறகு வால்டர்ஸை நிறுத்த முடியவில்லை உணவு இடைவேளக்கும் தேநீர் இடைவேளைக்கும் இடையே 102 ரன்கள் எடுத்தார் டக் வால்டர்ஸ்.

இதில் இயன் சாப்பல் குறிப்பிடும் ஒரு நிகழ்வு என்னவெனில், லான்ஸ் கிப்ஸ் வீசிய ஒரு ஓவரில் ஒரு பந்தை காலியாக இருந்த மிட்விக்கெட்டில் புல்ஷாட் ஆடுகிறார் டக் வால்டர்ஸ். உடனே பாயிண்ட்டில் நிற்கும் வீரரை கிப்ஸ் மிட் விக்கெட்டுக்கு வரும்படி பணிக்கிறார். அடுத்த பந்தை, அதுவும் திரும்பும் ஆஃப் ஸ்பின் பந்தை லெக் ஸ்டம்பில் லேசாக ஒதுங்கிக் கொண்டு ஆளில்லாத பாயிண்ட் பவுண்டரிக்கு விரட்டுகிறார் வால்டர்ஸ். உடனே கிப்ஸ் அந்த மிட் விக்கெட் வீரரை மீண்டும் பாயிண்ட்டுக்கு அனுப்புகிறார், ஆனால் அடுத்த பந்து ஷார்ட் பிட்ச் பந்தாக இல்லாத போதும் வால்டர்ஸ் மீண்டும் காலியான மிட் விக்கெட் பவுண்டரிக்கு அனுப்புகிறார். இந்த 3 பந்தும் கிட்டத்தட்ட ஒரே லெந்தில் பிட்ச் ஆன பந்துகள்தான் என்கிறார் இயன் சாப்பல். இதுதான் கிரிக்கெட் ஆட்ட நுணுக்கத்தின் உச்சம். டக் வால்டர்ஸ் போல் அதற்குப் பிறகு பலரும் ஆடியிருக்கலாம் அல்லது ஆடாமல் இருக்கலாம் ஆனால் இதுதான் கிரிக்கெட்டின் தரம், தரமான கிரிக்கெட் ஆட்டம்! அதை இவ்வளவு உன்னிப்பாக இயன் சாப்பலைத் தவிர யாரும் கவனித்திருக்க முடியாது. இன்று கிரிக்கெட் வர்ணனையின் தரமும் படுகுழியில் விழுந்து விட்டது. கிரிக்கெட் ஆட்டம் பற்றிய பார்வைகளும் புள்ளி விவரங்களில் சரிந்து விட்டன.



Read in source website

வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனின் ராஜினாமா அறிவிப்பை அடுத்து, அடுத்த பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

கடந்த 2017ம் ஆண்டில் இருந்து நியூசிலாந்தின் பிரதமராக இருந்து வந்த ஜெசிந்தா ஆர்டென் பதவியை ராஜினமா செய்யப் போவதாக கடந்த வியாழக்கிழமை திடீரென அறிவித்தார். நியூசிலாந்தை தலைமை ஏற்று நடத்த இனியும் தன்னால் முடியாது என்றும் தனது சக்தி தீர்ந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஜெசிந்தாவின் அறிவிப்பை அடுத்து ஆளும் தொழிலாளர் கட்சியின் அடுத்த பிரதமர் வேட்பாளராக கிறிஸ் ஹிப்கின்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

44 வயதாகும் கிறிஸ் ஹிப்கின்ஸ், தற்போது அந்நாட்டின் அமைச்சராக இருக்கிறார். கடந்த 2008ம் ஆண்டு முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இவர், கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் கோவிட்-19 துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். காவல்துறை, கல்வி, பொது சேவை ஆகிய துறைகளின் அமைச்சராக இவர் தற்போது உள்ளார்.

இவர் நியூசிலாந்தின் பிரதமராக முறைப்படி பொறுப்பேற்கும் முன், தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்கான கூட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதில், இவர் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, ஜெசிந்தா தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஜெனரலுக்கு முறைப்படி அளிப்பார். அதன் பிறகு, மன்னர் மூன்றாம் சார்லசின் சார்பில், கவர்னர் ஜெனரல், கிறிஸ் ஹிப்கின்ஸ்-சை பிரதமராக நியமிப்பார்.



Read in source website

தெஹ்ரான்: தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் ஈரானை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் "எதிரி" என்று அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாதுகாப்பு அச்சுறுத்தலுக்காக தென்கொரியாவை சேர்ந்த பாதுகாப்புப் படையினர் அமீரகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தென்கொரிய பாதுகாப்புப் படையினரிடம் நிகழ்வு ஒன்றில், தென்கொரிய அதிபர் யூன் சு- யோல் பேசும்போது, ”ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிரி ஈரான். மிகவும் அச்சுறுத்தல் கொண்ட நாடு ஈரான். எங்களின் எதிரி வடகொரியா.” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் கொரிய பிரதமர் பேச்சுக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கொரிய பிரதமர் பேச்சுக்கு விளக்கமாளிக்குமாறு, ஈரானில் உள்ள வெளியுறவு தூதரகத்துக்கு விளக்கம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் நஜாஃபி பேசும்போது, “ தென்கொரியா, ஈரானுடன் "நட்பற்ற அணுகுமுறையை" பின்பற்றுகிறது. தென் கொரிய வங்கிகளில் ஈரானிய நிதிகள் முடக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்கத் தடைகளின் கீழ் முடக்கப்பட்ட எங்கள் நிதியில் 7 பில்லியன் டாலர்களை தென்கொரியா விடுவிக்க வேண்டும் என்று ஈரான் பலமுறை கோரியுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தென்கொரியா இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தென்கொரியா வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லிம் பேசும்போது, அமீரகத்தில் உள்ள தென்கொரிய பாதுகாப்புப் படையினரை ஊக்கப்படுத்துவதற்காகவே பிரதமர் அவ்வாறு கருத்துகளை தெரிவித்தார். இதில் வேறேதும் இல்லை. இதில் ஈரானுடனான வெளியுறவை விமர்சிக்கவில்லை. ஈரானுடன் உறவுகளை வளர்த்துக் கொள்வதில் அரசாங்கத்தின் விருப்பம் மாறாமல் உள்ளது” என்றார்.



Read in source website

கொரோனா தொற்றில் இருந்து, பாதுகாத்துக்கொள்ள ஹைப்பிரிட் (hybrid immunity ) நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட வேண்டும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிகின்றன.

கொரோனா தொற்றில் இருந்து, பாதுகாத்துக்கொள்ள ஹைப்பிரிட் (hybrid immunity ) நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட வேண்டும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிகின்றன. 

சார்ஸ் கோவிட் தொற்று தொடர்பாக நிகழ்த்தப்பட்ட  11 ஆய்வுகளை மையமாக வைத்து, நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துகொள்வது தொடர்பான சாத்தியங்கள் குறித்து கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவதால், கொரோனா தொற்றின் வீரியம் குறைகிறது என்று கூறப்படுகிறது. நீங்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிறகு தடுப்பூசியின் முதல் டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்டால்,  உங்களுக்கு கலப்பின நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இது உங்களை மீண்டும்  கொரோனா தொற்று ஏற்படாமல் பார்த்துகொள்ளும் என்று கூறப்படுகிறது.

தடுப்பூசி செலுத்திய பிறகு உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதன் தாக்கம் குறைவாக இருக்கும். மேலும் உயிரிழப்பில் இருந்து உங்களை  காப்பாற்றும்.

ஆய்வின் முடிவுகள் என்ன சொல்கின்றன?

சார்ஸ் கோவி- 2 தொற்றால் கடுமையான பாதிப்புகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், 85 % பேருக்கு கொரோனா தடுப்பூசியால் நோய் கடுமையாக தாக்கும் நிலை குறைந்திருக்கிறது.

ஆனால் மீண்டும் இந்த நோய் வராமல் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவாக உள்ளது.

ஆனால் இந்த கலப்பின நோய் எதிர்ப்பு சக்தி ;அதாவது ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு, முதல் டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்தினால், 97.2  % பேருக்கு நோய் தொற்று மீண்டும் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி , சார்ஸ் கோவிட்- 2 தொற்று எற்படுவதால் அல்லது தடுப்பூசி செலுத்துவதால், ஏற்படும் ஆண்டிபாடிஸ் (antibodies ) 67 % பேருக்கு இருக்கிறது( அக்டோபர் 2021 ) . மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்களுக்கு கொரோனா தொற்று எதிராக  ஆண்டிபாடிஸ்  கட்ந்த ஜூன் – ஜூலை 2021-க்குள் ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக டெல்டா வேரியண்ட் கொரோனா அலை பாதித்தபோது இது ஏற்பட்டுள்ளது.



Read in source website

மொபைல் போனில் அழைக்கும் நபரின் அடையாளத்தை பயனர்கள் அறிய அனுமதிக்கும் முன்மொழியப்பட்ட அம்சம் குறித்த கருத்துகளை ட்ராய் கோரியுள்ளது. இது தொடர்பாக, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏன் கவலைகளை எழுப்பியுள்ளன? பார்க்கலாம்.

அழைப்பாளர்களின் பெயர்களைக் காண்பிக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) முன்மொழிவு தனியுரிமை தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று டெலிகாம் ஆபரேட்டர்கள் கூறியுள்ளனர்.
அழைப்பாளர் பெயர் விளக்கக்காட்சி (CNAP) என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தை, இந்திய சந்தையில் உள்ள பல தொலைபேசிகள் ஆதரிக்க முடியாமல் போகலாம்.
ஏனெனில், தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் செயல்படுத்துவது கடினமாக இருக்கும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வசதியை ட்ரூகாலர் போன்ற செயலிகள் வழங்கிவரும் நிலையில், இதனை துல்லியமாக வழங்க இயலாது என்ற கருத்தும் நிலவுகிறது. ஏனெனில் போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டுகள் வாங்கப்பட்டிருக்கலாம் என வாதமும் முன்வைக்கப்படுகிறது. இதற்கிடையில் அழைப்பாளர் பெயர் விளக்கக் காட்சி அம்சம் என்றால் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அழைப்பாளர் பெயர் விளக்கக்காட்சி (CNAP) என்றால் என்ன?

கடந்த ஆண்டு நவம்பரில், TRAI ஆனது CNAP இன் சாத்தியமான அறிமுகம் பற்றிய கருத்துகளைத் தேடும் ஒரு ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டது.
ந்த அம்சம் பயனர்கள் தங்களை அழைக்கும் நபரின் அடையாளத்தை அறிய அனுமதிக்கும். மக்கள் தங்களை அழைக்கும் நபரைப் பற்றி அறிந்தால் அது அவர்களுக்கு வசதியாக இருக்கும்.
மேலும், இத்தகைய அம்சம், துன்புறுத்தல் மற்றும் பிற ஸ்பேம் அழைப்புகளைக் கட்டுப்படுத்த உதவக்கூடும்.

தற்போது, இதேபோன்ற சேவையை வழங்கும் சில பயன்பாடுகள் உள்ளன, உதாரணமாக, Truecaller. இருப்பினும், அவை அனைத்தும் மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் ஆகும். அந்த வகையில், தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட தீர்வு எதுவும் இல்லை.

கட்டுப்பாட்டாளர் நான்கு சாத்தியமான முறைகளை முன்மொழிந்துள்ளார், இதன் மூலம் CNAP அம்சத்தை உருவாக்க முடியும்:

முதல் முறையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அந்தந்த சந்தாதாரர்களின் CNAP தரவுத்தளத்தை நிர்வகித்தல் மற்றும் அதன் பயனர் மற்றொரு நெட்வொர்க்கில் உள்ள பயனருக்கு அழைப்பு விடுக்கும்.
அப்போது, தரவுத்தளத்திலிருந்து அவர்களின் தரவைப் பிரித்தெடுத்து, பெறும் தொலைத்தொடர்பு பயனருக்கு வழங்கும். இருப்பினும், இந்த மாதிரியை செயல்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் தற்போதைய “நெட்வொர்க் நோட்களை” மேம்படுத்த வேண்டும் என்று TRAI தெரிவித்துள்ளது.

இரண்டாவது முதல் மாதிரியைப் போலவே உள்ளது, இந்த விஷயத்தில், அழைப்பு செய்யப்படும் ஆபரேட்டர், பெறும் ஆபரேட்டரை அதன் CNAP தரவுத்தளத்தை அணுக அனுமதிக்கும்.

மூன்றாவது, மூன்றாம் தரப்பினர் மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தை இயக்குவதை TRAI கருதுகிறது. இந்த வழக்கில், அழைப்பாளரின் தரவை மீட்டெடுக்கவும் வழங்கவும் மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தை ஆராய்வதற்கு பெறுதல் ஆபரேட்டர் பொறுப்பாவார்.

நான்காவது ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் மூன்றாம் தரப்பினரால் இயக்கப்படும் ஒத்திசைக்கப்பட்ட மைய தரவுத்தளத்தின் நகலை வைத்திருக்க வேண்டும்.

முன்மொழியப்பட்ட அம்சம் குறித்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இரண்டு மனங்களில் இருப்பதாகத் தெரிகிறது, இது தனியுரிமை அபாயங்கள் இரண்டையும் கொண்டுள்ளது.
மேலும் சிக்கலான தொழில்நுட்பப் பயிற்சியாக மாறக்கூடும் என்று கூறுகிறது. அவர்கள் பெரும்பாலும் அம்சம் விருப்பமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். பல்வேறு அம்சங்களில் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா எழுப்பிய தனியுரிமைக் கவலைகள் என்ன?

கைபேசி உற்பத்தியாளர்கள் மற்றும் இயக்க முறைமை (OS) வழங்குநர்கள் CNAP வசதி மூலம் பெறப்பட்ட தரவுகளின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர்.
இது சந்தாதாரர் தரவு தனியுரிமையை மீறும். இதனை, மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக அமைப்பான செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (COAI) TRAIக்கு சமர்ப்பித்ததில் கூறியுள்ளது.

இது முழு நாட்டின் சந்தாதாரர் தகவலின் தனியுரிமை மற்றும் ரகசியத்தன்மை தொடர்பான மிகப்பெரிய கவலையாக இருக்கும். இது ஆதார் தரவுத்தளத்தில் உள்ளபடி பெயர் மற்றும் மொபைல் எண் தரவுத்தளத்தை 3வது தரப்பினருடன் உருவாக்குவதற்கு ஒத்ததாக இருக்கும்” என்று COAI மேலும் கூறியது.

இது முழு நாட்டின் சந்தாதாரர் தகவலின் தனியுரிமை மற்றும் ரகசியத்தன்மை தொடர்பான மிகப்பெரிய கவலையாக இருக்கும், இது ஆதார் தரவுத்தளத்தில் உள்ளபடி பெயர் மற்றும் மொபைல் எண் தரவுத்தளத்தை 3வது தரப்பினருடன் உருவாக்குவதற்கு ஒத்ததாக இருக்கும் என்று COAI மேலும் கூறியது.

டிஜிட்டல் தொழில் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் (IAMAI), இதேபோன்ற உணர்வை எதிரொலித்தது மற்றும் குறிப்பாக பெண்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று சுட்டிக்காட்டியது.

மேலும், இந்தச் சேவை ஒரு பெண் சந்தாதாரரின் பெயர் மற்றும் தரவைக் காண்பிக்கும், அவள் சம்மதித்தாலும் இல்லாவிட்டாலும் அழைக்கும் ஒவ்வொரு தரப்பினருக்கும் அந்தத் தகவல்கள் சென்றடையும்.
இது போன்ற பிரச்சினைகள் இயற்கையில் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்தி ஏர்டெல் சிஎன்ஏபியை வெளியிடும் போது பயனர் தனியுரிமை சமநிலையில் இருக்க வேண்டும் என்று கூறியது, மேலும் வணிக நோக்கங்களுக்காக தனிப்பட்ட மொபைல் எண்களை தவறாக பயன்படுத்தும் பயனர்களை களைய முன்கணிப்பு பகுப்பாய்வுகளை பயன்படுத்த முன்மொழிந்தது.
அழைப்பாளர் ஐடி அமைப்பு “தொடக்க கட்டத்தில் டெலிமார்க்கெட்டர் / வணிக பயனர்கள் / A2P அழைப்பாளர்களுக்கு மட்டுமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும்” என்று தொலைத்தொடர்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், “ஸ்பேமிங்கிற்கு எதிராக அழைப்பாளரை அடையாளம் காண அழைக்கப்பட்ட தரப்பினரின் உரிமையைப் பாதுகாப்பதற்கான ஒரு படியாக CNAP இருக்கும் என்றாலும், அவரது பெயரை திரையில் காட்ட விரும்பாத அழைப்பு தரப்பினரின் தனியுரிமை அக்கறையுடன் இது முரண்படும்” என வோடபோன் ஐடியா கூறியுள்ளது.

தொழில்நுட்ப சவால்கள் என்ன?

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கிடையேயான நேர-பிரிவு மல்டிபிளெக்சிங் (TDM) அடிப்படையிலான தொடர்பு CNAP ஐ ஆதரிக்கவில்லை என்பது CNAP ஐ செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க தடையாக இருக்கும் என்று COAI கூறியது. மேலும், 2G/3G நெட்வொர்க்குகளில் CNAP க்கு தரநிலைகள் எதுவும் இல்லை, எனவே, அதற்கான தீர்வு எதுவும் இல்லை.

“தீர்வு உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டாலும், அதன் சரியான செயல்பாட்டை உறுதிப்படுத்தும் முன் அதற்கு விரிவான சோதனை தேவைப்படும். தவிர, எங்கள் உறுப்பினர் நெட்வொர்க்கில் சில மரபு முனைகள் உள்ளன, அங்கு CNAP ஐப் பயன்படுத்த முடியாது என்று COAI கூறியது.

மற்றொரு பெரிய சவாலானது கைபேசிகளைப் பொறுத்தவரையில் அனைத்து கைபேசிகளும் CNAP செயல்பாடுகளை ஆதரிக்கும் திறன் கொண்டவை அல்ல.
ஜியோ இந்த கூற்றை ஆதரித்தது, CNAP அம்சத்துடன் ஃபோன்கள் இயக்கப்பட்டதற்கான உறுதியான பதிவு எதுவும் இல்லை. மேலும், 4ஜி நெட்வொர்க்குகளில் ஸ்மார்ட் ஃபீச்சர் போன்களும் இந்த அம்சத்தை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

பாகிஸ்தானில் கோதுமை நெருக்கடி காணப்படுகிறது. இதற்கு மத்திய-மாநில அரசுகள் மீது குற்றம் சுமத்தினாலும், ரஷ்ய-உக்ரைன் போர், வெள்ளம், ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை கடத்தல் உள்ளிட்ட நீண்டகால பிரச்னை முதன்மையாக உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தானில் கோதுமையின் விலை கடந்த சில வாரங்களாக கடுமையாக அதிகரித்து வருகிறது. மக்கள் மானிய விலையில் கோதுமை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் ஜன.7ஆம் தேதி சிந்து மாகாணத்தில் 35 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். கைபர் பக்துன்வா போன்ற மற்ற மாகாணங்களிலும் கோதுமை விலை விண்ணை முட்டுகிறது.

மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் நெருக்கடிக்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டினாலும், வல்லுநர்கள் ரஷ்யா உக்ரைன் போர், 2022 பேரழிவு வெள்ளம் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை கடத்தல் ஆகியவற்றால் நீண்டகாலமாக உள்ள குறைபாடுகளால் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர்.
இந்த நிலையில், ரஷ்யாவிலிருந்து ஒரு கோதுமை சரக்கு இப்போது பாகிஸ்தானை வந்தடைந்துள்ளது, மேலும் சில வாரங்களில் நிவாரணம் எதிர்பார்க்கப்படுகிறது.

மாவு விலை நெருக்கடி எவ்வளவு மோசமானது?

பாகிஸ்தானில் கோதுமை தட்டுபாடு கடுமையாக நிலவுகிறது. ஒரு கிலோ கோதுமை விலை கடந்த காலத்தை விட இரு மடங்காக உயர்ந்துள்ளது என வளைகுடா செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
சில மாகாணங்களில் ஒரு ரொட்டி ரூ.25-35 வரை விற்கப்படுகிறது.

நெருக்கடிக்கு வழிவகுத்தது எது?

பாகிஸ்தான் அதன் நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கோதுமையை இறக்குமதி செய்கிறது, இதில் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வருகிறது. எடுத்துக்காட்டாக, 2020 ஆம் ஆண்டில், பாக்கிஸ்தான் $1.01 பில்லியன் மதிப்புள்ள கோதுமையை இறக்குமதி செய்தது, அதில் பெரும்பாலானவை உக்ரைனிலிருந்து ($496 மில்லியன்) வந்தது,

அதைத் தொடர்ந்து ரஷ்யாவில் ($394 மில்லியன்) இருந்தது என பொருளாதார சிக்கலான கண்காணிப்பு (OEC) தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இந்தாண்டு, போர் அந்த விநியோகத்தை சீர்குலைத்தது, அதேசமயம் கடந்த ஆண்டு வெள்ளம் உள்நாட்டு விளைச்சலைக் குறைத்தது. பாகிஸ்தானில் போதிய கையிருப்பு இல்லாததை விட விநியோகத்தில்தான் பிரச்சனை அதிகம்.

நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட கரந்தாஸ் பாகிஸ்தானுடன் தொடர்புடைய பொருளாதார நிபுணர் அம்மார் கான் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “வெள்ளம் காரணமாக கணிசமான இருப்புக்களை இழந்த சிந்து மற்றும் பலுசிஸ்தானில் கோதுமை விலைகள் பெருமளவில் அதிகரித்தன. ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை கடத்தப்படுவதும் ஒரு காரணியாகும்,

இது உள்நாட்டில் பற்றாக்குறையை விளைவித்து, விலையை உயர்த்துகிறது. ஆனால், அரசு கிடங்குகளில் போதுமான அளவு கோதுமை கையிருப்பு உள்ளது. விநியோகத்தில் ஏற்பட்ட காலதாமதத்தால் தட்டுப்பாடு மற்றும் அதன் விளைவாக விலை உயர்வு ஏற்பட்டது, இது தற்போது நிவர்த்தியாகி வருகிறது” என்றார்.

இந்த விநியோக சிக்கல்கள் என்ன?

பாகிஸ்தானில், கோதுமை ஆலைகளுக்கு மாகாண அரசாங்கங்களால் மானியம் வழங்கப்படுகிறது. இந்த ஆலைகள் பின்னர் சில்லறை சந்தைகளுக்கு மாவை வழங்குகின்றன.
கோதுமை பற்றாக்குறையை எதிர்பார்க்கும் மாகாணங்கள், மத்திய பாகிஸ்தான் வேளாண்மை சேமிப்பு மற்றும் சேவைகள் கழகத்தின் (பாஸ்கோ) கிடங்குகளில் அதிக இருப்புகளைக் கோரலாம்.

மேலும் பாகிஸ்தானில் கோதுமை உற்பத்தி செய்யும் இரண்டு பெரிய மாநிலங்கள் பஞ்சாப் மற்றும் சிந்து ஆகியவை ஆகும்.
பாகிஸ்தானின் கோதுமை உற்பத்தியில் பஞ்சாப் 77 சதவீதத்தையும், சிந்து 15 சதவீதத்தையும், கைபர் பக்துன்க்வாவில் 5 சதவீதத்தையும், பலுசிஸ்தானில் 3.5 சதவீதத்தையும் உற்பத்தி செய்கிறது.

இதில், கைபர் பக்துன்க்வா ஆப்கானிஸ்தானுடன் அதிக எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இதனால், லாபகரமான விலைகளைப் பெறுவதற்காக ஏராளமான கோதுமை மூட்டைகள் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்படுகின்றன. இதற்கிடையில், சிந்து வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது, அதன் காரீஃப் பயிர் பாதிக்கப்பட்டது.

வெள்ளத்தால் விவசாயம் மற்றும் அதன் துணைத் துறைகள் ரூ.800 பில்லியன் அல்லது 3.725 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் அடைந்தன.

பஞ்சாப் மற்றும் சிந்து மாநிலங்கள் உரிய நேரத்தில் கோதுமையை ஆலைகளுக்கு வழங்காததால் மாவு தட்டுப்பாடு ஏற்பட்டதாக மத்திய அரசு உட்பட சிலர் கூறி வருகின்றனர். மற்றவர்கள் மில் உரிமையாளர்கள் பங்குகளை பதுக்கி வைத்தனர், இதனால் விலை ஏறியது, மேலும் பல செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் கிராமப்புற-விவசாய பின்னணியில் இருந்து வருவதால் அரசாங்கம் அவர்களுக்கு எதிராக செயல்படவில்லை என்று கூறுகிறார்கள்.

மில் உரிமையாளர்கள் பணம் கொடுக்க விரும்புவோருக்கு அதிக விலைக்கு மாவு விற்பனை செய்வதாகவும், எனவே சில்லறை விற்பனை நிலையங்களுக்கும் மானிய விற்பனை நிலையங்களுக்கும் போதுமான அளவு கிடைக்கவில்லை என்றும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

பாகிஸ்தானிடம் போதுமான கோதுமை கையிருப்பு உள்ளது, ஆனால் அதன் கொள்முதல், ஆலைகளுக்கு விநியோகம் மற்றும் பதுக்கல் தடுப்பு ஆகியவற்றில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை.

நீண்டகால பிரச்னைகள்

இந்த ஆண்டு, 2.6 மில்லியன் மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதில், முதல் 1.3 மில்லியன் மெட்ரிக் டன்கள் வந்துள்ளதால், விலை குறையும் என்ற நம்பிக்கை உள்ளது.

எவ்வாறாயினும், இந்த இறக்குமதி மசோதா, மிகக் குறைந்த வெளிநாட்டு கையிருப்பில் இருக்கும் ஒரு நாட்டிற்கு ஒரு இறுக்கமான அழுத்தமாகும். பாகிஸ்தானின் மத்திய வங்கியில் வெளிநாட்டு கையிருப்பு $5 பில்லியனுக்கும் கீழே குறைந்துள்ளது என்று இந்த மாத தொடக்கத்தில் ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறியது, இது மூன்று மாத இறக்குமதிகளுக்கு போதுமானது.

பாகிஸ்தானில், ஒரு ஏக்கருக்கு கோதுமை விளைச்சல் அதிகம் இல்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக விவசாயத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இல்லை, அதிக மகசூல் தரும் இனங்கள் உருவாகவில்லை. நிலச் சீர்திருத்தங்களும் இல்லை. இதற்கிடையில், கால்வாய்கள் வறண்டு, நீர்மட்டம் குறைந்து வருகிறது. டீசல் மிகவும் விலை உயர்ந்தது, மின் கட்டணம் அதிகம், விநியோகம் தடைபடுகிறது. விவசாயிக்கு ஊக்கத்தொகை கிடைக்காது. உரம் விலை உயர்ந்தது, யூரியாவைத் தவிர, மற்றவை இறக்குமதி செய்யப்படுகின்றன, மேலும் நமது நாணயம் மிகவும் மதிப்பிழந்துள்ளது.

பாகிஸ்தானின் விவசாயம் பற்றிய 2022 உலக வங்கி அறிக்கை, வளர்ச்சிக் கூட்டாளிகளின் ஆதரவுடன் கணிசமான பொதுச் செலவுகள் இருந்தபோதிலும், விவசாய வளர்ச்சி 1970-2000 க்கு இடையில் ஆண்டுக்கு சராசரியாக 4% இல் இருந்து 3% க்கும் குறைவாக இருந்தது.

மற்ற உணவு பொருட்கள்

கோதுமை போலல்லாமல், அரிசி பாகிஸ்தானின் முக்கிய ஏற்றுமதிகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு, மாவு பற்றாக்குறையால், உள்நாட்டில் அரிசிக்கான தேவை அதிகரித்துள்ளது.

லாகூரில் உள்ள சித்திக்யா ரைஸ் மில்ஸின் இயக்குநரும், பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதி சங்கத்தின் உறுப்பினருமான முஹம்மது ஜுபைர் லத்தீஃப் சவுத்ரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “பாகிஸ்தானின் அரிசி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு, வெள்ளம் அரிசியின் மொத்த உற்பத்தியை பாதித்தது, குறிப்பாக தெற்கு பஞ்சாப், கிழக்கு பலுசிஸ்தான் மற்றும் சிந்து நதியின் சிந்து பகுதிகள். அதற்கு மேல் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டது, இதன் காரணமாக உடைந்த பாசுமதி அரிசிக்கான தேவை பன்மடங்கு அதிகரித்து விலையை உயர்த்தியது.

பருப்பு வகைகளின் விலையும் அதிகரித்து வருவதாக டான் நாளிதழில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி 13 கட்டுரையில், பருப்பு வகைகளின் விலை “ஜனவரி 1, 2023 இல் PKR 180 இல் இருந்து ஒரு கிலோவிற்கு PKR 205 ஆகவும், டிசம்பர் 1, 2022 இல் Rs170 ஆகவும் உயர்ந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

அமெரிக்க அரசியலில் கடன் உச்சவரம்பு மீதான சண்டைகள் தீவிரமடைந்துள்ளன.

அமெரிக்கா வியாழக்கிழமை தனது கடன் உச்சவரம்பான $31.4 டிரில்லியன்களைத் தொட்டது. அந்நாட்டின் மத்திய அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க கருவூல அதிகாரிகளை கட்டாயப்படுத்துகிறது.

இதற்கிடையில், தி நியூயார்க் டைம்ஸ் ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையிலான உறவுகள் பதட்டமாக இருப்பதால் பிடன் கடன் வரம்பை அதிகரிப்பார்” என கணித்துள்ளது.

கடன் உச்சவரம்பு என்ன?

முதலாம் உலகப் போரின் போது 1917 இல் கடன் உச்ச வரம்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இது, அமெரிக்க கூட்டாட்சி அரசாங்கம் தனது நிதிக் கடமைகளை நிறைவேற்ற கடன் வாங்கக்கூடிய அதிகபட்ச தொகையாகும்.

தி நியூயார்க் டைம்ஸின் கூற்றுப்படி, அரசாங்கம் வரிகள் மற்றும் பிற வருவாய்கள் மூலம் ஈட்டுவதை விட அதிகமாக செலவழிப்பதால், சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பலன்கள் மற்றும் அமெரிக்க இராணுவ சேவை உறுப்பினர்களின் சம்பளம் போன்ற செலவினங்களுக்காக பணம் கடன் வாங்க வேண்டும்.
2021 இல், இந்த கடன் வரம்பு $31.4 டிரில்லியனாக உயர்த்தப்பட்டது.

இப்போது என்ன நடக்கிறது?

கருவூல செயலர் ஜேனட் யெலன் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்திக்கு எழுதிய கடிதத்தில், “சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக” கூறியுள்ளார்.

இந்நிலையில், பிபிசியின் ஒரு அறிக்கையில், இத்தகைய நடவடிக்கைகள் கடந்த காலத்தில் அரசாங்கம் ஓய்வூதியம் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கான சுகாதார நலன்களுக்கான நிதிகளில் முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது மற்றும் “பின்னர் அந்த நிதியை மீண்டும் முதலிடம் பெறுவது” போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கியது என்பதை நினைவுபடுத்துகிறது.

சிவில் சர்வீஸ் ஓய்வு மற்றும் ஊனமுற்றோர் நிதி, தபால் சேவை ஓய்வூதியர் உடல்நலப் பலன்கள் நிதி மற்றும் ஃபெடரல் பணியாளர்கள் ஓய்வூதிய அமைப்பு சிக்கன சேமிப்புத் திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய சில கணக்கியல் திட்டங்களை யெலன் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

கடன் உச்சவரம்பு மீறப்பட்டால் என்ன நடக்கும்?

சட்டமியற்றுபவர்கள் தங்கள் நிலைப்பாட்டை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தும் அதே வேளையில், ஜூன் மாதத்திற்குள் கடன் வரம்பை உயர்த்தத் தவறினால், அரசாங்கம் அதன் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிடும், இது ஒரு பொருளாதார பேரழிவைத் தூண்டும் என்று கருவூலச் செயலாளர் எச்சரித்தார்.

மேலும், “அரசாங்கத்தின் கடமைகளை நிறைவேற்றத் தவறினால், அமெரிக்கப் பொருளாதாரம், அனைத்து அமெரிக்கர்களின் வாழ்வாதாரம் மற்றும் உலகளாவிய நிதி ஸ்திரத்தன்மைக்கு ஈடுசெய்ய முடியாத தீங்கு ஏற்படும்” என்று யெலன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடன் திருப்பிச் செலுத்தாமல் போனால், டாலர் பலவீனமடையும், பங்குச் சந்தைகள் சரிந்துவிடும், ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழக்க நேரிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது முதலீட்டாளர்களை “எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு கடன் வாங்குவதற்கு அதிக வட்டி விகிதங்களைக் கோரும்” என்று தி NYT இன் அறிக்கை கூறுகிறது.

அமெரிக்கா முன்பு கடன் உச்சவரம்பை மீறிவிட்டதா?

இல்லை, அமெரிக்கா இதுவரை கடன் உச்சவரம்பை மீறவில்லை. எவ்வாறாயினும், கடனைத் திருப்பிச் செலுத்துவதை அணுகுவது கூட நீண்ட காலத்திற்கு பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2011 ஆம் ஆண்டில், காங்கிரஸின் குடியரசுக் கட்சியினரும், அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவும் கடன் உச்சவரம்பு தொடர்பாக நீடித்த, சிராய்ப்புள்ள போரில் ஈடுபட்டனர்,
இது நடவடிக்கைக்கான காலக்கெடு முடிவடைவதற்கு சற்று முன்பு வரை தொடர்ந்தது.

அப்படியிருந்தும், ரேட்டிங் ஏஜென்சியான Standard & Poors நாட்டின் கடன் மதிப்பீட்டை முதன்முறையாகக் குறைத்துவிட்டது,
இதனால் அமெரிக்க மத்திய அரசு அதன்பின் கடன் வாங்குவதற்கு அதிக செலவு செய்ததாக தி கார்டியனில் ஒரு அறிக்கை நினைவுபடுத்தியது.

தற்போதைய நெருக்கடியில் பாரபட்சத்தின் பங்கு என்ன?

கடன் உச்சவரம்பு மீதான சண்டைகள் அல்லது கடன் உச்சவரம்பை மாற்றுவது அமெரிக்காவில் புதிதல்ல. பிபிசி அறிக்கையின்படி, 1960 முதல், காங்கிரஸ் கடன் வரம்பின் வரையறையை 78 முறை உயர்த்தியது,
ஆனால் சமீப ஆண்டுகளில், அமெரிக்க அரசியலில் துருவமுனைப்பு விரிவடைந்து ஆழமடைந்து, அரசியல் பிளவு கடினமாகவும் தீவிரமாகவும் இருப்பதால், கடன் உச்சவரம்பு மீதான சண்டைகள் தீவிரமடைந்துள்ளன

கடந்த தசாப்தத்தில், குடியரசுக் கட்சியினர், செலவினக் குறைப்புகளை பேச்சுவார்த்தை நடத்த பேரம் பேசும் சிக்கலாக இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தினர் என்று அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.

ஒபாமா நிர்வாகம், குடியரசுக் கட்சியின் பெரும்பான்மையான பிரதிநிதிகள் சபையின் பெரும் அழுத்தத்தின் கீழ், $900 பில்லியனுக்கும் அதிகமான செலவினக் குறைப்புகளுக்கு ஒப்புக்கொண்ட பின்னரே நெருக்கடி முடிவுக்கு வந்தது.

இந்த முறையும், GOP சட்டமியற்றுபவர்கள் தங்கள் நோக்கங்களைத் தெளிவுபடுத்தியுள்ளனர். அதிபர் பிடன் கூட்டாட்சி செலவின குறைப்புகளுக்கு ஒப்புக்கொள்ளும் வரை மீண்டும் கடன் வாங்கும் வரம்பை உயர்த்த மாட்டோம் என்று அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

GOP க்கு தற்போது அவையில் குறுகிய பெரும்பான்மை மட்டுமே உள்ளது, மேலும் ஜனநாயகக் கட்சியினர் தாங்கள் “எந்தவித பேச்சுவார்த்தைகளிலும்” ஈடுபட மாட்டோம் என்று கூறியுள்ளனர்.



Read in source website

 

மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை, அடுத்த ஓராண்டுக்கு உணவு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இலவசமாக உணவு தானியங்களை விநியோகிப்பது என்று முடிவெடுத்திருக்கிறது. கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் தொடங்கப்பட்ட ‘கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ என்கிற பிரதமரின் இலவச உணவு தானியங்கள் திட்டம் கைவிடப்படுகிறது. அரசின் சாதுரியமான முடிவுக்குப் பின்னால், சில நிா்ப்பந்தங்கள் இருப்பதைக் கூா்ந்து கவனித்தால் புரிந்துகொள்ள முடியும்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமரின் இலவச உணவு தானிய திட்டத்தின் கீழ் மத்திய தொகுப்பிலிருந்து மாதம் ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை பொது விநியோகத்தின் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டது. எல்லா நாடுகளிலும் கடுமையான விலைவாசி உயா்வும், வேலை இழப்புகளும் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்திருக்கின்றன. பிரிட்டன் உள்ளிட்ட மேலை நாடுகளே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரத் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா 81.35 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்க இருப்பது ஏனைய நாடுகளை வியந்து பாா்க்க வைக்கும் மக்கள் நல்வாழ்வுத் திட்டம்.

உணவுப் பாதுகாப்பு சட்டப் பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஒரு நபருக்கு தலா ஐந்து கிலோ பருப்பு, கோதுமை, அரிசி ஆகியவை முறையே ரூ.1, ரூ.2, ரூ.3 என்கிற மானிய விலையில் வழங்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், ‘அந்தியோதயா’ அன்ன யோஜனா திட்டப் பயனாளிகளுக்கு, மாதம் 35 கிலோ உணவு தானியம் விநியோகிக்கப்படுகிறது.

இப்போது பிரதமரின் இலவச உணவு தானியங்கள் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமாா் 81.35 கோடி மக்கள் பயனடைவாா்கள். மத்திய அரசுக்கு ரூ. 2 லட்சம் கோடி கூடுதல் செலவாகக்கூடிய, ஏழை மக்களுக்கான இந்தத் திட்டம், மத்திய அரசின் புத்தாண்டுப் பரிசு என்று மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறாா்.

கொள்ளை நோய்த்தொற்று போன்ற பேரிடா் எதுவும் இல்லாதபோது, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசு செலவிடும் மானியத்தின் அளவு ரூ. 2 லட்சம் கோடி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவு தானியங்கள் திட்டம் (பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா) காரணமாக அரசின் மானியச் சுமை இரட்டிப்பானது.

மேலும் ஓா் ஆண்டுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இலவசமாக உணவு தானியங்களை வழங்குவது என்கிற முடிவு, அரசின் மானியச் சுமையை அதிகரிக்கும். இதற்காக ஏற்கெனவே செலவிடும் ரூ. 2 லட்சம் கோடியுடன், ரூ. 15,000 கோடி அல்லது ரூ.16,000 கோடி அதிகரிக்கும். அதை ஈடுகட்டும் விதத்தில் பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவு தானியங்கள் திட்டம் நிறுத்தப்படுகிறது. அதனால் ஏற்படும் ரூ. 2 லட்சம் கோடி சேமிப்பு, ஓரளவுக்கு அந்த பாதிப்பை ஈடுகட்டும்.

அரசின் இப்போதைய முடிவால், பெரிய அளவில் சேமிப்பு ஏற்பட்டுவிடாது. தாக்கல் செய்யப்பட இருக்கும் நிதிநிலை அறிக்கைக்கு இந்த முடிவால் பெரிய லாபம் எதுவும் இருந்துவிடாது. ஆனால், உணவு தானியக் கையிருப்பு குறைந்து விடாமல் அரசுக்கு இந்த முடிவு கை கொடுக்கும்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆண்டொன்றுக்கு 520 லட்சம் டன் உணவு தானியங்கள் தேவைப்படுகிறது. பிரதமரின் ஏழைகள் இலவச தானியத் திட்டத்துக்காக மேலும் 480 லட்சம் டன் தேவைப்பட்டது. ‘அந்த்யோதயா அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் குடும்பம் ஒன்றுக்கு மாதத்திற்கு 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. பிரதமரின் இலவச தானியத் திட்டத்தில் நபா் ஒன்றுக்கு 5 கிலோ வழங்கப்பட்டது. அப்போது, உணவு தானிய உற்பத்தி, கொள்முதல், அரசின் கையிருப்பு ஆகியவை வரலாறு காணாத அளவில் இருந்தன.

இப்போது நிலைமை அதுவல்ல. கடந்த ஆண்டைவிட அரிசி, கோதுமை சாகுபடி குறைந்திருக்கிறது. பருவநிலை மாற்றமும், உரத் தட்டுப்பாடும் உற்பத்தியை பாதித்திருக்கின்றன. தேவைக்கு மட்டுமே நமது தானியக் கையிருப்பு உள்ளதால், தானிய ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்திருக்கிறது. உத்தர பிரதேசம், பிகாா் மாநிலங்களில் பொது விநியோகத்தில் கோதுமைக்கு பதிலாக அரிசி வழங்கப்படுகிறது. அதைக் கருத்தில் கொண்டுதான், பிரதமரின் ஏழைகளுக்கான இலவச தானிய விநியோகம் கைவிடப்பட்டு, மாதந்தோறும் 5 கிலோ தானியம் இலவசமாக வழங்கப்படும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

ரூ. 2 லட்சம் கோடிக்கும் அதிகமான செலவை ஏற்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றும் அளவிலான பொருளாதார மேம்பாட்டை இந்தியா அடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிக அளவிலான விரயமோ, ஊழலோ, உணவு தானியங்கள் மடைமாற்றம் செய்யப்படுவதோ இல்லாமல் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உணவு தானியங்களை மாதந்தோறும் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சில ஆண்டுகளுக்கு முன்னா் நினைத்துக்கூடப் பாா்த்திருக்க முடியாத சாதனை.

அரசின் முடிவு ஏழை மக்களை மட்டுமல்ல, வேளாண் பெருமக்களையும் கைதூக்கி விடும் முயற்சி. உணவு தானியங்களைப் பெரிய அளவில் அரசு கொள்முதல் செய்வதால், கிராமப்புற பொருளாதாரம் பாதுகாக்கப்படுகிறது. விவசாயம் சாா்ந்த வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்துவதும், விவசாயத்தை லாபகரமாக்குவதும் இந்த முடிவால் ஏற்படும் ஏனைய நன்மைகள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.



Read in source website

ஒரு நாட்டின் பண்பாடும், நாகரிகமும் உலக அளவில் பரவிடக் காரணமாக இருப்பது அந்நாட்டின் கல்வித் தரம்தான். கல்வியிலும், அறிவாற்றலிலும் சிறந்து விளங்கும் நாடுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈா்க்கின்றன. ஒரு காலத்தில் கல்வித் தரத்தில் உலக நாடுகளுக்கே இந்தியா முன்னோடியாக இருந்தது.

புத்தா் ஞானம் பெற்றதாகக் கருதப்படும் இன்றைய பிகாா் மாநிலப் பகுதி அக்காலத்தில் அரசியல், கல்வி, நாகரிகம் என அனைத்திலும் சிறந்து விளங்கியது. பிகாா் மாநிலம் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமாக இருந்தாலும், அதைவிடப் புகழ் பெற்ாகக் கருதப்பட்டது நாளந்தா பல்கலைக்கழகம். ஐந்தாம் நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட இந்தக் கல்வி நிலையம்தான் நம் நாட்டின் பெருமையை உலகெங்கும் பரவச் செய்தது.

உலகின் பல திசைகளிலிருந்தும் ஆராய்ச்சி மாணவா்கள் இந்தக் கல்வி நிலையத்தைத் தேடி வந்தனா். ‘நாளந்தா’ என்பதற்கு அறிவை அளிப்பவா் என்று பொருள். இதுவே இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம். இதைப் போன்றே தென்னகத்தில் காஞ்சிப் பல்கலைக்கழகமும் உலகத்தின் கவனத்தைக் கவா்ந்தது. சீன நாட்டின் பயணி யுவான் சுவாங் காஞ்சிபுரம் வரை வந்து சென்ாக வரலாறு கூறுகிறது.

இவ்வளவு பெருமைக்கும் சொந்தக்காரா்களாகிய நாம் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்காக ஏங்கி நிற்கிறோம். என்றாலும் காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வண்டி ஓடத்தில் ஏறும்; ஓடம் வண்டியில் ஏறும் என்பது அனுபவ மொழி. தனக்குத் தேவையான கல்வியையும், அறிவையும் எங்கிருந்தாலும் தேடுவதே முன்னேறத் துடிக்கும் சமுதாயத்தின் முதல் கடமையாகும்.

அண்மைக்காலமாக, இந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து இளைஞா்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பது அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, சீனா போன்ற நாடுகளுக்கு இளைஞா்கள் படிக்கச் செல்கின்றனா். அடிப்படைக் கல்விக்காக மட்டுமல்ல, ஆராய்ச்சிப் படிப்புக்காகவும் செல்கின்றனா்.

இந்தியாவில் மருத்துவக் கல்வி வாய்ப்பு கிடைக்கப் பெறாதவா்கள் ரஷியா, உக்ரைன், ஜாா்ஜியா போன்ற நாடுகளுக்குப் போவதைக் காண முடிகிறது. இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருந்த போதிலும் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லும் மாணவா்கள் எண்ணிக்கையும் கூடிக் கொண்டேயிருக்கிறது.

கடந்த ஆண்டு மட்டும் 4 லட்சத்து 50 ஆயிரம் மாணவா்கள் வெளிநாடுகளுக்குப் படிக்கச் சென்றுள்ளனா். வசதி படைத்தவா்கள் மட்டுமல்லாமல், நடுத்தர குடும்பத்தைச் சோ்ந்தவா்களும் வங்கியில் கல்விக்கடன் பெற்று வெளிநாடுகளுக்கு சென்று படிக்க முடிகிறது. பொருளாதார வசதியில்லாதவா்கள் நம்மால் படிக்க முடியவில்லையே என்று வருந்துவதையும் காணமுடிகிறது.

இத்தகைய மாணவா்களின் ஏக்கம் போக்கும் வகையில், பல ஆண்டு கால எதிா்பாா்ப்பை நிறைவேற்றக்கூடிய அறிவிப்பு இப்போது வந்துள்ளது. இதனை வரவேற்கிறவா்களும் இருக்கின்றனா்; எதிா்க்கின்றவா்களும் இருக்கின்றனா். இருந்தபோதும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களைத் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது.

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 500 இடங்களுக்குள் இடம்பெற்ற கல்வி நிறுவனங்களும், ஒரு நாட்டின் சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் தங்கள் கல்லூரிகளைத் தொடங்குவற்கு அனுமதி கோரி பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு விண்ணப்பிக்கலாம். 90 நாட்களுக்குள் பரிசீலனை முடிந்து அனுமதி வழங்கப்படும்.

இந்தக் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள தன்னாட்சிக் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக அனைத்து நெறிமுறைகளையும் கொண்டிருக்கும். இந்தக் கல்லூரிகளில் வகுப்புகளில் மட்டுமே பாடம் நடத்தப்படுமே தவிர, ஆன்லைன் மூலம் நடத்தப்பட மாட்டாது.

மாணவா்கள் எண்ணிக்கை, கல்விக் கட்டணம் போன்றவற்றை அந்தந்த வெளிநாட்டு கல்வி நிறுவனங்களே நிா்ணயித்துக் கொள்ளலாம். ஆனால் கல்விக் கட்டணம் நியாயமானதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். கல்லூரி ஆசிரியா்களையும், பணியாளா்களையும் இந்தியாவில் இருந்தோ, வெளிநாடுகளில் இருந்தோ நியமித்துக் கொள்ளலாம்.

இதனால் நமது நாட்டைச் சோ்ந்தவா்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்தக் கல்வி நிறுவனங்களில் நமது மாணவா்களும், வெளிநாட்டு மாணவா்களும் சோ்ந்து படிக்க முடியும். இதனால் நமது மாணவா்களுக்கு ஆங்கிலப் புலமை சிறப்பாக அமையும் என்று கூறுகின்றனா்.

இங்கு படிக்கும் மாணவா்களுக்கு வழங்கப்படும் பட்டம் அவா்கள் நாட்டிலுள்ள அந்தக் கல்வி நிறுவனங்களுக்கு இணையானதாக இருக்க வேண்டும். இநத வரைவு விதிமுறைகளில் பொதுமக்களின் கருத்துகளை கேட்டு இறுதி வழிமுறைகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இந்தியாவுக்கு வருவதன் மூலம் நமது மாணவா்கள் அங்குள்ள பாடத்திட்டங்களில் படித்து, அங்கு வழங்கப்படும் பட்டங்களைப் பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. அத்துடன் அதிக அளவிலான ஆராய்ச்சிகளுக்கும் இது வழிவகுக்கும். இதனால் உலகத் தரம் வாய்ந்த கல்வியை நம் இளைஞா்கள் பெற முடியும் என்று எதிா்பாா்க்கின்றனா்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாகவே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளைகள் இந்தியாவில் தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆக்ஸ்போா்டு, கேம்பிரிட்ஜ், ஹாா்வா்டு, ஸ்டான்போா்டு போன்ற புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களை நிறுவுவதற்கான பணிகள் இந்த ஆண்டே ஆரம்பமாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதே சமயம் இங்கு கல்விக் கட்டணம் எந்த அளவுக்கு இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், கல்வியின் தரம் பற்றிய கேள்வியும் எழுந்துள்ளது. ஒரே பாடத்திட்டத்தை உலகெங்கும் பின்பற்றினாலும், உலகத் தரம் வாய்ந்த ஆசிரியா்கள், ஆய்வகங்கள், நூலகங்கள் இந்தியாவில் அமையுமா என்பது கேள்விக்குறிதான் என்கின்றனா் கல்வியாளா்கள்.

வெளிநாடு சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் படித்தால், அந்த நாட்டிலேயே வேலைவாய்ப்பை பெற்றுவிட வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படித்தால் அதற்கான வாய்ப்பு குறைவுதான். இதனால் நமது நாட்டில் இதற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்பது இனிமேல்தான் தெரியும்.

இந்தியாவில் இதுவரை இளங்கலை பட்டப்படிப்பு மூன்று ஆண்டுகள் மட்டுமே உள்ளது. இனிமேல் தேசிய கல்விக் கொள்கைப்படி நான்கு ஆண்டுகள் இளங்கலை படிப்புகளை அறிமுகப்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு முடிவு செய்துள்ளது. நான்கு ஆண்டுக்கான பாடத்திட்டம் உருவாக்கப்படும் வரை, மூன்று ஆண்டுத் திட்டம் தொடரும்.

இதில் பல்வேறு நன்மைகள் உள்ளதாகக் கூறுகின்றனா். குறிப்பாக நான்கு ஆண்டு இளங்கலை ஹானா்ஸ் படிப்பில் சேருபவா்கள், முனைவா் பட்டம் பெற விரும்பினால் இறுதி ஆண்டில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளலாம். இதன் மூலம் முதுகலைப் பட்டம் இல்லாமலேயே நேரடியாக பி.எச்டி. பட்டம் பெற முடியும்.

அதே நேரத்தில், இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. கல்வி முறையைப் புகுத்தவும் மத்திய அரசால் மறைமுக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை புதுச்சேரிக்கென தனி கல்வி வாரியம் இல்லாமையால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழக அரசின் கல்வித் திட்டமே பின்பற்றப்படுகிறது. மாஹே பகுதியில் கேரள பாடத் திட்டமும், ஏனாம் பகுதியில் ஆந்திர பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் அந்தந்த பகுதி மக்கள் தங்கள் தாய்மொழியையும் கற்க வாய்ப்பு கிடைத்து வந்தது.

இப்போது சி.பி.எஸ்.இ. கல்வி முறையை அறிமுகப்படுத்துவதாகக் கூறி, ஹிந்தியைத் திணிக்க மத்திய அரசு முயல்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்புக்கு மேல் சி.பி.எஸ்.இ. கல்வி முறைக்கு மாற்ற ஏற்பாடுகள் நடக்கின்றன.

படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் இந்தக் கல்வித் திணிப்பு வரும் ஆண்டுகளில் நடக்கும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு அறிமுகமாகும் பல மாற்றங்கள் எத்தகைய பலன்களைத் தரும் என்பது இனிமேல்தான் தெரியும்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சிகள் பல காலமாக நடந்து வந்தது. என்றாலும் தாமதமாகிக் கொண்டேயிருந்தது. இதற்கான முதல் முயற்சி 1995-இல் நாடாளுமன்ற மசோதா வடிவில் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த மசோதா பாதியில் கைவிடப்பட்டது. அடுத்து 2005-ஆம் ஆண்டில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை.

2010-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான அரசு மீண்டும் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தது. ஆனால், நாடாளுமன்ற வாக்கெடுப்பில் அம்மசோதா தோல்வியடைந்தது. இந்த முறை மசோதா எதுவும் கொண்டு வரப்படாமல் நிா்வாக நடைமுறைகள் மூலம் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

“சென்றிடுவீா் எட்டுத் திக்கும் - கலைச்

செல்வங்கள் யாவும் கொணா்ந்திங்கு சோ்ப்பீா்”

என்று கட்டளையிட்டாா் மகாகவி பாரதியாா். அவருடைய கனவுகள் எத்தனையெத்தனையோ. அவையெல்லாம் நிறைவேறினால் நாட்டுக்கு நல்லது. அதற்கு இந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வருகை துணைபுரிய வேண்டும்.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.



Read in source website

‘வாழ்வின் வசந்தகாலம் எது’ என்று யாரைக்கேட்டாலும் உடனடியாக வரும் பதில் ‘பதின் பருவம்’ என்பதாகத்தான் இருக்கும். அந்தப் பருவத்தில்தான் எந்தவிதப் பொறுப்பும் இல்லாமல் வாழ இயலும். நண்பா்கள் புடைசூழச் சுற்றி வரும் காலம். அச்சமின்றித் திரியவும் சாதனைகள் புரியவும் முயலும் காலம்.

ஆனால் அதே நேரம் வாழ்க்கையின் பின்னாட்களை வறுமையில்லாமல் கடக்கத் தேவையான வேலைவாய்ப்பினைப் பெறத் தேவையான திறன்களைப் பெறவேண்டிய காலமும் இதுதான். இழந்த காலத்தை யாராலும் மீட்க முடியாது. இதனால் ஒரே நேரத்தில் சவால்களை சந்திக்கும் திறன்களையும் பெற்று, வாழ்வின் பின்னாட்களில் ரசித்துப் பாா்க்கும் விதமாகவும் நாட்களைக் கடக்க வேண்டும். எவா் இந்த அனைத்து அம்சங்களையும் தெளிவாகப் புரிந்து கடக்கிறாரோ அவரே வாழ்வில் வெற்றி பெறுகிறாா்.

இந்த பதின் பருவத்தினரின் பெரும்பாலானோா் கடக்க வேண்டிய இன்னொரு சவாலை திரைத்துறை அளித்து வருகிறது. அண்மையில் இரண்டு பிரபலமான நடிகா்கள் நடித்து வெளியான திரைப்படத்தின் வெளியீட்டையொட்டி நிகழ்ந்த கொண்டாட்டத்தின்போது இளைஞா் ஒருவா் உயிரிழந்தது அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது. இது ஏதோ அந்த இளைஞா் தொடா்புடைய விஷயம் மட்டுமல்ல. அவரைப்போலவே பலரும் திரைத்துறையினரைத் தமது முன்மாதிரியாக வரித்துக்கொண்டு வாழ முயல்கின்றனா்.

நடிகா்கள் திரையில் பல்வேறு தொழில்நுட்பங்களை அடிப்படையாகக்கொண்டு செய்யும் சாகசங்கை உண்மையென நம்புவோா் உண்டு. ஒருவேளை அதன் தொழில்நுட்பப் பின்னணியே தெரிந்தாலும் அதனை அவா்கள் கவனத்தில் கொள்வதில்லை. ஒரு குறிப்பிட்ட நடிகா் திரையில் தோன்றுவது போன்ற தலைமுடி, உடை போன்ற அடையாளங்களோடு குறிப்பிட்ட காலம் செலவிடுவோரும் உண்டு. ஆண்கள்தான் என்பதில்லை, பெண்களும் குறிப்பிட்ட நடிகை போன்ற ஆடை அணிகலன்களை அணிவதுண்டு.

எதுவும் ஒரு அளவோடு இருக்கும்போது ரசிக்கவே செய்யும். அளவுக்கு மிஞ்சினால் அமிா்தமும் நஞ்சு என்ற சொலவடைக்கேற்ப எல்லை மீறும்போதே இடா்கள் கூடுகின்றன. இவற்றை நெறிப்படுத்துவதில் பெற்றோரின் பங்களிப்பு கூடினால் மட்டுமே, இதனைக் கட்டுக்குள் வைக்க இயலும். பெற்றோா் பிள்ளைகளைக் கண்காணிப்போராக இல்லாமல், அவா்களோடு இயல்பாக உரையாடி நேரம் செலவிடுவோராக செயல்பட்டால் இது கைகூடும். கல்லூரிகளும் பேராசிரியா்களும் ஒரளவுக்கு உதவமுடியும் என்றாலும், இளையோா் தோளுக்கு மிஞ்சிவிடுவதால் பெற்றோரே அதிக பொறுப்பேற்க வேண்டியதாகியுள்ளது.

இன்றைய மின்னணுயுகம் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்துவதைப் போல இளையோா் வாழ்விலும் ஆதிக்கம் செலுத்துகிறது. திரைத்துைான் என்றில்லை, கலாசார ஏற்ற இறக்கங்களை உண்டாக்குவதாக இணையமும் சமூக ஊடகங்களும் விளங்குகின்றன. மின்னணு யுகத்தின் வரவு பல்வேறு நல்வாய்ப்புகளையும் வழங்குகிறது. இதனைக் கணக்கில் கொண்டு செயல்படவேண்டும்.

ஒரு காலத்தில் பொறியியல், மருத்துவம் போன்றவற்றைப் பயில்வோா்க்கு புத்தகங்கள் விலை அதிகமானதாக இருக்கும். இதற்காக அவற்றைப் படி (ஜெராக்ஸ்) எடுத்து வைத்துக்கொண்டு பயின்று தோ்வில் தோ்ச்சி பெற்றோா் பலா். இவ்வாறான படிகளைத் தயாரிப்பதற்கெனவே பல நிறுவனங்கள் இயங்கி வந்தன.

இது சட்டரீதியாகத் தவறு என்றாலும் பலரும் இதனைக் கண்டுகொள்ளவில்லை. இளைஞா்கள் பலரும் இதனால் பலன் பெற்றனா். இன்றைக்கு இப்படிப்பட்ட தேவையெல்லாம் இல்லை. குறிப்பிட்ட நுல்களை கிண்டில் போன்ற சாதனங்கள் மூலமாக பிடிஎஃப் வடிவிலேயே படித்துவிட முடியும். மேலும், பாடத்தை காணொலி வாயிலாகவும் அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பும் உள்ளது.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் பேராசிரியா்கள் பாடம் நடத்தும்போதே கவனித்துக் குறிப்புகளை எடுத்த காலம் ஒன்று உண்டு. பாட நூல்களே போதுமான அளவுக்கு புழக்கத்திற்கோ விற்பனைக்கோ வராத காலமாக அது இருந்தது. பின்னாட்களில் வணிக நோக்கில் குறிப்பிட்ட பாடங்களுக்கான துணைநூல் (நோட்ஸ்) விற்பனை செய்யப்பட்டன.

இவ்வாறான துணைநூல் புழக்கத்திற்கு வந்து அதுவும் ஒரளவுக்கு வாங்கும் விலைக்கு வந்தவுடன் குறிப்பெடுப்பது ஏறக்குறைய மறையத்தொடங்கிவிட்டது. கவனிப்பது மட்டும் நீடித்தது. இன்றோ இணையமும் காணொலிகளும் எதனையும் தருவதாக அமைந்தவுடன் எந்த நிலைமையில் கற்பித்தலும் கவனித்தலும் இருக்கும் என்பதை உணர முடிகிறது.

அன்று எவையெல்லாம் கிடைப்பது சவால்களாக இருந்தனவோ, அவையெல்லாம் அறிவியலும் தொழில்நுட்பமும் வளா்ந்துவரும் இன்று எளிதில் கிடைப்பவையாகி விட்டன. எந்த ஒன்றைத் தேடுவதற்கும் அதிகமான நேரத்தை செலவழிக்கவேண்டிய தேவை இருப்பதில்லை.

எனவே தேடுவதற்காக செலவழிக்கப்பட்ட நேரம் தற்போது எவ்வாறு செலவாகிறது என்பதைக் கணக்கில் கொண்டு இளையோா் செயல்பட்டால் அவா்கள் எதிா்கால வாழ்வை வளமாக்குவதாக பதின் பருவம் அமையும். அவ்வாறில்லாமல் மிச்சமாகும் நேரம் அனைத்தும் கேளிக்கைகளிலும் உல்லாசங்களிலும் செலவாகும் என்றால் அவா்கள் எதிா்கால வாழ்வு கேள்விக்குறியாகவே மாறும்.

இன்றைய இளையோா் கைகளில் இரு வாய்ப்புகள் உள்ளன. பதின் பருவத்தை சுய கட்டுப்பாட்டுடன் செலவிட்டு வாழ்நாள் முழுவதும் இன்னல்களில்லாமல் வாழ்க்கையை நடத்தும் திறன்களைப் பெற்று பணிகளில் சோ்ந்து மகிழ்வாக வாழலாம். அல்லது பயிலும் நாட்களில் போதுமான அக்கறை செலுத்தாமல் மகிழ்வாக வாழ்ந்துவிட்டு மீதமுள்ள வாழ்நாட்களை வருத்தத்தோடு செலவழிக்கலாம். இளையோா் சரியான முடிவை எடுக்க குடும்பமும், கல்வி நிறுவனமும் சமூகமும் வழிகாட்ட வேண்டும்.

இன்று சமூகம் தனது பங்களிப்பை நல்க முன்வராவிட்டால் நாளை இளையோா் பொறுப்பில்லாமல் செயல்படும்போது வருந்திப் பயனில்லை. நல்ல அனுபவங்களைத் தொடா்ந்து தருவதாக சமூகத்தின் செயல்பாடுகள் அமையவேண்டும். அதற்கான சமூகம் இன்று இல்லை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வோம். அதனை ஒப்புக்கொள்வதோடு அதனை மாற்ற இன்றைய பெற்றோா்களும் பேராசிரியா்களும் முன்வர வேண்டும்.



Read in source website