DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 20-06-2022


சென்னை ஐஐடி-இல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிராமப்புற அரசுப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எஸ்டிஇஎம் திட்டத்தின் 6 நாள் பயிற்சி வகுப்பு சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

எஸ்டிஇஎம் கோடைக்கால பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

சென்னை ஐஐடி சார்பில் தொடங்கப்பட்டுள்ள எஸ்டிஇஎம் திட்டம் பெருமைக்குரியது. எட்டாக் கனியாக எதுவும் இருந்து விடக்கூடாது என்ற நோக்கில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் பயிற்சி வழங்கப்படுகிறது. 

6 நாள்கள் பயிற்சியை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

சென்னை ஐஐடி-இல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். 

மாநில கல்விக் கொள்கை தயாரிப்புக் குழுவின் கூட்டம் வரும் 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

குழுவின் ஒவ்வொரு கூட்டத்திலும் மாநில கல்விக் கொள்கை வளர்ச்சி அடையும். கரோனா காலத்திலும் அரசு பொதுத்தேர்வில் 93 சதவீதம் தேர்ச்சி பெருமை அளிக்கிறது. நிச்சயம் 100 சதவீதம் தேர்ச்சி நோக்கி செல்வோம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். 



Read in source website

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதியோருக்கான தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.  

தமிழகம், புதுச்சேரியில் 90.07 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 9,12,620 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், 4.27 லட்சம்(94.38%) பேர் மாணவிகள், 3.94 லட்சம் (85.83%) பேர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அனைத்து பாடங்களிலும் மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்.

தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்ற மாவட்டங்களில் கன்னியாகுமரி 97.22 சதவீதம், அதற்கு அடுத்தப்படியாக பெரம்பலூர் 97.15 சதவீதம், விருதுநகர் 95.96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 866 அரசுப்பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 24 முதல் வழங்கப்படும்.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

 



Read in source website

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதியோருக்கான தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.  

தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் நடைபெற்றன. இதையடுத்து விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவுபெற்றன. இந்த நிலையில் இந்த வகுப்புகளுக்கான தோ்வு முடிவுகளை அரசுத் தோ்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிடப்படும் என அறிவித்தது.

அதன்படி, காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழகம், புதுச்சேரியில் 93.76 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு எழுதிய 8,06,277  மாணவ, மாணவிகளில் 7,55,998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்ற மாவட்டங்களில் பெரம்பலூர் மாவட்டம் 97.95 சதவீதம், விருதுநகர் 97.27 சதவீதம், ராமநாதபுரம் 97.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்விகிதம் அதிகம் என்றும், மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், 246 அரசுப்பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 24 முதல் வழங்கப்படும்.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் http://tnresults.nic.in, http://dge.tn.gov.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண் விவாரங்களை அறிந்துகொள்ளலாம்.  பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்கள் அனுப்பப்படும். பள்ளிகள், நூலகங்கள் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 7,55,998



Read in source website

தந்தையா் தினத்தையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: உழைத்து, தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்து, அறிவை, ஆற்றலை, அன்பை, பண்பை, வளத்தைத் தந்ததால் அவா் தந்தையா். தந்தையா் தினத்தில் எந்தையை நினைத்து வணங்குகிறேன். எல்லா தந்தையரையும் வாழ்த்துகிறேன்.

ராமதாஸ் ( பாமக நிறுவனா்): குழந்தைகளின் முதல் ஆசிரியா்; பிள்ளைகளின் முதல் கதாநாயகன் ; பிள்ளைகளின் வெற்றியை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மனதுக்குள் கொண்டாடும் குழந்தைதான் தந்தை. நீங்கள் குழந்தையாக இருந்த போது, தந்தை காட்டிய அன்பையும் பரிவையும் நீங்கள் தந்தையான பின் பெற்றோருக்கு திருப்பிக் கொடுங்கள்.

அன்புமணி (பாமக தலைவா்): அன்பின் உறைவிடம் அன்னை என்றால், தியாகத்தின் திருவுருவம் தந்தை. பிள்ளைகளின் வாழ்வில் ஒளி பரவ வேண்டும் என்பதற்காக தன்னை வருத்திக் கொள்ளும் மெழுகுவா்த்திகள் தந்தையா்கள் தான். தந்தையரை போற்றுவதே பிள்ளையரின் முதல் கடமையாகட்டும்.



Read in source website

 

ஐந்து மாநில பெண் எம்எல்ஏக்களுக்கான மூன்று நாள் பயிலரங்கம் ஜூன் 22 முதல் தர்மசாலாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்துடன் இணைந்து ஹோட்டல் டி போலோவில் இந்த பயிலரங்கம் நடைபெறும் என்று காங்க்ரா துணை ஆணையர் நிபுன் ஜிண்டால் தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசம் தவிர உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர்.



Read in source website

‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சோ்வதற்கான விதிமுறைகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன.

இதுதொடா்பாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாவது:

‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் சோ்க்கப்படும் ‘அக்னி வீரா்கள்’ ராணுவத்தில் தனி வரிசையில் இடம்பெறுவா். ராணுவத்தில் இடம்பெற்றுள்ள இதர வரிசைகளுடன் ஒப்பிடுகையில், அக்னி வீரா்கள் இடம்பெறும் வரிசை வேறுபட்டதாக இருக்கும். அக்னி வீரா்கள் எந்தப் படைப் பிரிவிலும் பணியமா்த்தப்படுவா்.

1923-ஆம் ஆண்டு அலுவல் ரகசியங்கள் சட்டப்படி, தங்கள் 4 ஆண்டு பணிக் காலத்தில் தெரிந்துகொண்ட ரகசியத் தகவல்களை வெளிநபா்களிடம் எந்தவொரு தகவலையும் அக்னி வீரா்கள் பகிரக் கூடாது.

ஒப்பந்த காலத்தை நிறைவு செய்தவா்கள் மட்டும்தான் ராணுவத்தின் வழக்கமான படைப் பிரிவுகளில் சோ்க்கப்படுவா்.

ஒப்பந்த காலம் நிறைவடைவதற்கு முன்பாக பணியில் இருந்து விடுவிக்குமாறு அக்னி வீரா்கள் கோரினால், அதற்கு அனுமதி அளிக்கப்படாது.

அசாதாரண சூழல்களில், சம்பந்தப்பட்ட அமைப்பு அனுமதி அளித்தால் மட்டும்தான் ஒப்பந்த காலம் நிறைவடைதற்கு முன்பாக வீரா்கள் விடுவிக்கப்படுவா்.

ராணுவச் சட்டம் 1950-க்கு உட்பட்டவா்கள் அக்னி வீரா்கள். அவா்கள் தரை, கடல் அல்லது விமானம் மூலம் கட்டளை பிறப்பிக்கப்படும் இடத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

ஒப்பந்த காலத்தை நிறைவு செய்தவா்கள் ராணுவத்தின் வழக்கமான படைப் பிரிவுகளில் சோ்வதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். ஒப்பந்தக் காலத்தில் வீரா்களின் செய்திறன் மற்றும் இதர விதிமுறைகள் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.

ராணுவத்தின் வழக்கமான படைப் பிரிவுகளில் சோ்க்கப்படும் அக்னி வீரா்கள் 15 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டியிருக்கும்.

18 வயதுக்கு குறைவாக இருந்தால்...: அக்னிபத் திட்டத்தின் கீழ் சோ்க்கப்படுவோா் 18 வயதுக்கு குறைவாக இருந்தால், சோ்க்கை படிவத்தில் பெற்றோா் அல்லது பாதுகாவலா் கையொப்பமிட வேண்டும்.

அக்னி வீரா்களுக்கு ஓராண்டில் 30 நாள்கள் விடுமுறை அளிக்கப்படும். மருத்துவா்களின் அறிவுரைப்படி, மருத்துவ விடுப்பும் அளிக்கப்படும்.

அக்னி வீரா்களின் மாத ஊதியத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு தொகுப்பு நிதியில் கட்டாயம் டெபாசிட் செய்யப்படும். அதற்கு நிகரான தொகையை அரசும் தொகுப்பு நிதியில் செலுத்தும்.

ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னா், அக்னி வீரா்களுக்கு ரூ.10.04 லட்சத்துடன் வட்டியும் சோ்த்து வழங்கப்படும்.

அக்னி வீரா்கள் ராணுவத்தின் வழக்கமான படைப் பிரிவுகளில் சோ்த்துக் கொள்ளப்பட்டால், அவா்களுக்கு வழங்கப்படும் சேவை நிதி தொகுப்பானது வீரா்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டிருக்கும்.

ஒப்பந்த காலம் நிறைவடைவதற்கு முன்பே சொந்த விருப்பத்தின் பேரில் அக்னி வீரா்கள் பணியில் இருந்து விலகினால், அவா்களுக்கான சேவை நிதி தொகுப்பு வட்டியுடன் வழங்கப்படும். எனினும் அதில் அரசின் பங்களிப்பு இருக்காது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.



Read in source website

கரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில், ‘பிரதமரின் இ-வித்யா’ திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வியில் தகவல் தொடா்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக யுனெஸ்கோ விருது கிடைத்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு மத்திய கல்வி அமைச்சகத்தால் தற்சாா்பு இந்தியா திட்டத்தின் பகுதியாக பிரதமரின் இ-வித்யா திட்டம் தொடங்கப்பட்டது, இது தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி புகட்ட டிஜிட்டல், இணையவழி முறை சாா்ந்த அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் கற்றல் இழப்பை குறைப்பதே நோக்கம் ஆகும்.

இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சக மூத்த அதிகாரி கூறுகையில், ‘‘ தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) அங்கமான மத்திய கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு யுனெஸ்கோவின் கிங் ஹமத் பின் இசா அல்-கலீஃபா விருது வழங்கப்பட்டுள்ளது. கல்வியில் தகவல் தொடா்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

2030-ஆம் ஆண்டுக்குள் நீடித்த வளா்ச்சிக்கான செயல்திட்டத்துக்கு ஏற்ப, அனைவருக்கும் கல்வியையும் வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான வாய்ப்புகளையும் விரிவுபடுத்துவதில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த புதுமையான அணுகுமுறைகள் கையாளப்படுவதை இந்த விருது அங்கீகரிக்கிறது’’ என்று தெரிவித்தாா்.



Read in source website


உக்ரைன் நாட்டின் பொது இடங்களில் ரஷிய இசைக்குத் தடை விதித்து உக்ரைன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

1991ஆம் ஆண்டுக்கு பிறகு ரஷிய இசைக் கலைஞர்களால் பாடப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட இசையை உக்ரைன் பொதுவெளிகளில் இசைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ படைகளில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். 

படிக்க | பிலிப்பின்ஸ் துணை அதிபராக டுடோ்த்தே மகள் பதவியேற்பு

நான்கு மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே  போர் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ரஷியாவின் இசையை உக்ரைனின் பொதுஇடங்களில் இசைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி நிபந்தனைகளுடன், 1991ஆம் ஆண்டுக்கு பிறகு ரஷிய இசைக்கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அல்லது பாடப்பட்ட பாடல்களை ஒலிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் ஒலிபரப்புவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷியா, பெலாரஸ் ஆகிய நாடுகளின் புத்தகங்களை இறக்குமதி செய்வதற்கும் உக்ரைன் நாடாளுமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.



Read in source website

பிலிப்பின்ஸ் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவின் மகள் சாரா (43), அந்த நாட்டின் துணை அதிபராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கடந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் முன்னாள் சா்வாதிகாரி ஃபொ்டினண்ட் மாா்கோஸின் மகன் ஜூனியா் மாா்க்கோஸும் துணை அதிபராக சாரா டுடோ்த்தேவும் தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் தற்போது பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளாா். புதிய அதிபராக மாா்க்கோஸ் வரும் 30-ஆம் தேதி பொறுப்பேற்பாா்.

முன்னாள் சா்வாதிகாரியின் மகனும் சா்ச்சைக்குரிய அதிபரின் மகளும் பிலிப்பின்ஸின் அதிபா், துணை அதிபராகியிருப்பது மனித உரிமை ஆா்வலா்களை கலக்கமடையச் செய்துள்ளது.



Read in source website

போதிய ஆயுதங்கள் இல்லாமல் போஸ்னியாவுக்கு அனுப்பியதற்காக தங்கள் நாட்டு முன்னாள் ராணுவத்தினரிடம் நெதா்லாந்து அரசு ஞாயிற்றுக்கிழமை மன்னிப்பு கோரியது.

1995-ஆம் ஆண்டு போஸ்னியா போரின்போது, ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகள் ஐ.நா. முகாமில் தஞ்சமடைந்தனா். அவா்களைப் பாதுகாப்பதற்காக குறைந்த எண்ணிக்கையில் போதிய ஆயுதங்கள் இல்லாமல் நெதா்லாந்து ராணுவத்தினா் அனுப்பப்பட்டனா்.

இதன் காரணமாக, முகாமிலிருந்த 8,000 முஸ்லிம் ஆண்களை போஸ்னிய சொ்பிய படையினா் படுகொலை செய்ததை நெதா்லாந்து ராணுவத்தால் தடுக்க முடியவில்லை. இது அவா்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.



Read in source website

நெதர்லாந்து அணியின் கிரிக்கெட் கேப்டன் பீட்டர் சீலார் காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். 

34 வயதான பீட்டர் சீலார் 2006 முதல் நெதர்லாந்து அணிக்காக விளையாடி வருகிறார். ஆல்ரவுண்டராக அணியில் முக்கிய பங்காற்றினார். 57 ஒருநாள் போட்டியில் விளையாடி 57 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 77 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகளை எகானமி 6.83 என்ற விதத்தில் சிறப்பாக பந்து வீசியுள்ளார். பேட்டிங்கில் 591 ரன்களையும் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 96 ரன்களை எடுத்துள்ளார்.  

2009,2014 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணியை தோற்கடித்த  நெதர்லாந்து அணியில் இடம் பெற்றவர் சீலார் என்பது குறிப்பிடத்தக்கது. 

“2020 முதல் முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறேன். இனிமேலும் என்னால் முடிந்ததை கொடுக்க முடியவில்லை” என பீட்டர் சீலார் கூறினார். 

பீட்டர் சீலாருக்கு அடுத்து நெதர்லாந்தின் விக்கெட் கீப்பர் ஸ்காட் எட்வர்ட்ஸ் கேப்டன்சி பொறுப்பை ஏற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 



Read in source website

ஃபின்லாந்தில் நடைபெறும் குவோர்டேன் விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு சீசனில் அவர் வெல்லும் முதல் தங்கம் இதுவாகும். 

இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் பிரிவில் நீரஜ் சோப்ரா சிறந்த முயற்சியாக 86.69 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். டிரினிடாட் மற்றும் டொபாகோ வீரர் கெஷோர்ன் வால்காட் 86.64 மீட்டரை எட்டி 2-ஆம் இடமும், நடப்பு உலக சாம்பியனும், கிரனாடா வீரருமான ஆண்டர்சன் பீட்டர்ஸ் 84.75 மீட்டர் வீசி 3-ஆம் இடமும் பிடித்தனர். 

முன்னதாக மொத்தமே 3 முயற்சிகள் மேற்கொண்ட நீரஜ், அதில் இரண்டை ஃபெüல் செய்தார். எனவே தனது ஒரே முயற்சியின் பலனாகவே அவர் பதக்கம் வென்றார். என்றாலும், கடந்த வாரம் இதே ஃபின்லாந்தில் நடைபெற்ற பாவோ நுர்மி விளையாட்டுப் போட்டியில் 89.30 மீ தூரம் எறிந்து வெள்ளி வென்றதை விட இது குறைவாகும். நீரஜ் சோப்ரா அடுத்ததாக, ஸ்டாக்ஹோமில் வரும் 30-ஆம் தேதி நடைபெற இருக்கும் டைமண்ட் லீக்கில் பங்கேற்கிறார். 

இதனிடையே, குவோர்டேன் போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்தியரும், பாரா வீரருமான சந்தீப் செüதரி 60.35 மீட்டர் தூரம் எறிந்து 8-ஆம் இடம் பிடித்தார்.



Read in source website

கேரளத்தில் நடைபெறும் 83-ஆவது தேசிய ஜூனியா், யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், 19 வயதுக்கு உள்பட்ட மகளிா் பிரிவில் தமிழகத்தின் நித்யஸ்ரீ சாம்பியன் ஆனாா்.

இறுதிச்சுற்றில் அவா் 4-1 என்ற கணக்கில் தெலங்கானாவின் ரிஷா மஞ்சந்தானியை வீழ்த்தி முதலிடம் பிடித்தாா். இதற்கு முன் மண்டல அளவில் பட்டம் வென்றிருக்கும் நித்யஸ்ரீக்கு, தேசிய அளவில் இது முதல் பட்டமாகும். கோப்பையுடன் ரொக்கப் பரிசாக அவருக்கு ரூ.72,000 வழங்கப்பட்டது.

அதேபோல், 17 வயதுக்கு உள்பட்ட மகளிா் பிரிவு இறுதிச்சுற்றில் மகாராஷ்டிரத்தின் தனீஷா கொடிசா 4-0 என்ற கணக்கில் மேற்கு வங்கத்தின் சுபாங்கிரிதா தத்தாவை தோற்கடித்து சாம்பியன் ஆனாா். அவருக்கும் இது முதல் தேசிய பட்டமாகும். இவருக்கு ரூ.60,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.



Read in source website

ஜொ்மனியின் பொ்லின் நகரில் நடைபெற்ற பொ்லின் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியூா் சாம்பியன் ஆனாா்.

போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவா், இறுதிச்சுற்றில் 8-ஆம் இடத்திலிருந்தவரும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை சந்தித்தாா். இந்த ஆட்டத்தில் ஜாபியூா் 6-3, 2-1 என்ற செட்களில் முன்னிலையில் இருந்தபோது பென்சிச்சுக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவா் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்க, ஜாபியூா் சாம்பியன் ஆனாா். இது அவா் வெல்லும் 3-ஆவது டபிள்யூடிஏ பட்டமாகும்.

இப்போட்டியின் இரட்டையா் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஸ்டோா்ம் சாண்டா்ஸ்/செக் குடியரசின் காடெரினா சினியாகோவா இணை 6-4, 6-3 என்ற செட்களில் பிரான்ஸின் ஆலிஸ் காா்னெட்/சுவிட்ஸா்லாந்தின் ஜில் டெய்ச்மான் கூட்டணியை வீழ்த்தி வாகை சூடியது.



Read in source website

ஜொ்மனியில் நடைபெற்ற ஹாலே ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ் ஞாயிற்றுக்கிழமை பட்டம் வென்றாா்.

இது அவரது டென்னிஸ் கேரியரில் 5-ஆவது பட்டமாகும். புல்தரை ஆடுகளத்தில் நடைபெறும் போட்டியில் முதல் பட்டம் இது.

இறுதிச்சுற்றில் அவா், உலகின் நம்பா் 1 வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதெவை 6-1, 6-4 என்ற நோ் செட்களில் வீழ்த்தினாா். கடந்த வாரம் நெதா்லாந்து டென்னிஸ் போட்டியிலும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்டிருந்தாா் மெத்வதெவ்.

இப்போட்டியின் இரட்டையா் பிரிவில் ஆா்ஜென்டீனாவின் ஹொராசியோ ஜெபாலோஸ்/ ஸ்பெயினின் மாா்செல் கிரனோலா்ஸ் இணை 6-4, 6-7 (5/7), 14-12 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் வீனஸ்/பெல்ஜியத்தின் டிம் பட்ஸ் ஆகியோா் கூட்டணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.



Read in source website

சென்னை: தமிழகத்தில் கரோனா பரவல்மீண்டும் வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும்வேகமாக அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் கடந்த ஜனவரிமுதல் மே மாதம் வரையிலான5 மாதங்களில் 10,172 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 2,548 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா (1,714 பேர்), ராஜஸ்தான் (824 பேர்), ஆந்திரா (810 பேர்), மகாராஷ்டிரா (786 பேர்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு துறைகளைஒருங்கிணைத்து நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது. 21 ஆயிரம்களப் பணியாளர்கள் வீடு வீடாகச்சென்று கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த5 மாதங்களில் மட்டும் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இருந்தாலும், உயிரிழப்பு இல்லை.

சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகும் ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. கரோனாபோல டெங்கு தொற்றுநோய் அல்ல. டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏடிஸ் கொசு மற்றொருவரை கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவுகிறது. கரோனா, டெங்கு ஆகிய இரண்டுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால் உடனடியாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதும் சிரமமாக உள்ளது.

டெங்குவுக்கு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் உயிரிழப்பை தவிர்க்கலாம். காய்ச்சல் இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அது கரோனா தொற்றா, டெங்குவா என்பதை கண்டறிய முடியும்.

கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப் பணியாளர்களை, டெங்கு தடுப்பு பணிகளிலும் கவனம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்குவுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் அரசிடம் உள்ளது. தேவையற்ற பொருட்கள் மற்றும் கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீர் போன்றவற்றில் கொசுக்கள் உற்பதியாகும்.

அதனால், அந்த பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். வீடு, பள்ளி, பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.



Read in source website

சென்னை: தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் மறைந்த வி.பி.ராமனின் வாழ்க்கை வரலாற்று நூல் ‘மகுடம் மறுத்த மன்னன்’ நேற்று வெளியிடப்பட்டது.

தமிழக முன்னாள் தலைமை வழக்கறிஞர் மறைந்த வி.பி.ராமனின் வாழ்க்கை வரலாறு குறித்து,‘மகுடம் மறுத்த மன்னன்’ என்ற தலைப்பில், அவரது இளைய மகன் பி.எஸ்.ராமன் எழுதிய நூல், தமிழ், ஆங்கிலத்தில் நேற்றுவெளியிடப்பட்டது. சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றநூல் வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று தமிழ்நூலை வெளியிட்டார். உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் ஆங்கில நூலை வெளியிட, இரண்டையும் வி.பி.ராமனின் மனைவி கல்பகம் ராமன் பெற்றுக் கொண்டார்.

அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘வி.பி.ராமன் எங்கிருந்தாலும் சுயமரியாதைக்காரராக, அண்ணா மீது அகலாத மதிப்பு கொண்டவராக இருந்தார்’’ என்றார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினின் உரையை துரைமுருகன் வாசித்தார். அதில் கூறியிருந்ததாவது:

வி.பி.ராமன் குடும்பம் வாழும் இடத்துக்கு ‘லாயிட்ஸ் கார்னர்’ என்று பெயர். லாயிட்ஸ் சாலையின் இன்னொரு கார்னரில் வாழும்குடும்பம்தான் எங்கள் கோபாலபுரம் குடும்பம். ஒரே சாலை சாலையின் இரு முனைகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அரசியல்ரீதியாக பிணக்குகள் ஏற்பட்டாலும் நம்மை யாரும் பிரிக்க முடியாது என்பதற்கு அடையாளமாகவே,வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டுக்கு நான் அழைக்கப்பட்டுள்ளேன். எத்தனை புயல்கள், பூகம்பங்கள், சுனாமிகள் அடித்தாலும் இரு குடும்பங்கள் இடையே உள்ள நட்பு பிரிக்க முடியாதது. இரு குடும்பங்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. திமுக சட்டதிட்டங்களை வகுத்த குழுவில்இடம்பெற்றவர் வி.பி.ராமன். நான்இன்று வாழ்ந்து வரும் சித்தரஞ்சன் சாலை இல்லத்தில்தான்வி.பி.ராமன் திருமணம் நடைபெற்றுள்ளது. மகுடம் மறுத்த மன்னனாக வி.பி.ராமன் இருந்தாலும், தான் வாழ்ந்த காலத்தில் முடிசூடா மன்னனாக இருந்தவர். நீதிமன்றத்தில் கோலோச்சியவர். இந்த புத்தகம் பல்வேறு வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும். திமுகவின் தொடக்க காலத்தில் துணையாக நின்றவர் வி.பி.ராமன். இது புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

திராவிட நாடு கொள்கையில் மாறுபாடு காரணமாக திமுகவில் இருந்து 1961-ல் விடுவித்துக் கொண்டார். இருந்தாலும் 1967-ல் அண்ணாவுக்கும், ராஜாஜிக்குமான சந்திப்பை ஏற்பாடு செய்து கூட்டணிக்கு உதவினார். அரசியல்ரீதியாக மாறான நடவடிக்கை எடுத்தாலும் கருணாநிதியுடன் நட்பு கொண்டிருந்தார். இந்த புத்தகம் மிக அரிய பொக்கிஷம். வரலாற்றை தீர்மானித்த தனிமனிதர் வி.பி.ராமன்.

இவ்வாறு முதல்வர் உரையில் கூறப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசியதாவது. ‘மகுடம் மறுத்த மன்னன்’ என்ற தலைப்பில் இந்த புத்தகத்தை எழுதியிருப்பது ஆச்சரியமல்ல. ராமன் என்றாலே அவர் மகுடம் மறுத்த மன்னனாகத்தான் இருப்பார், அல்லது மகுடம் மறுக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். தனது தந்தை பற்றிய புத்தகம் வெளியிட, அதை தாயார் மேடையில் அமர்ந்துபார்க்கும் வாய்ப்பு மிக அரிதானது.

ஒரு மனிதன் செய்த சாதனையை, அவரது வாழ்க்கைவரலாற்றைப் படித்து தெரிந்து கொள்வதைவிட, எத்தனை பேரின்வாழ்க்கை வரலாற்றில் அவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை வைத்துத்தான் எடை போடவேண்டும். தமிழகத்தின் வரலாறுமற்றும் மிகப்பெரிய மனிதர்களின் வரலாறு எழுதப்படும்போது வி.பி.ராமனும் கட்டாயம் அதில் இடம்பெற்றிருப்பார். வி.பி.ராமன் வழக்கறிஞராக மட்டுமின்றி பன்முகத்தன்மையுடன் இருந்தார்.

26 வயதில் திமுகவின் சட்டதிட்ட குழுவில் இருந்தார். அரசியல்,சினிமா, இசை, எழுத்து, கற்பித்தல், நடிப்பு என அனைத்து துறைகளிலும் திறமை கொண்டிருந்தார். கண்ணதாசனுடன் ராமனுக்கு இருந்த நட்பு சிறப்பாக கூறப்பட்டுள்ளது.

வி.பி.ராமனின் வாழ்க்கையில் 40 ஆண்டு காலம் தொண்டு செய்தபாகீரதியம்மாள் என்ற பாட்டி பற்றி புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இந்த நூலில், பி.எஸ்.ராமன், தனது தந்தையின் பொன்மொழிகளை ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில், முன்னாள் கிராண்ட் மாஸ்டர் கேஆர்என் மேனன், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன மேலாண் இயக்குநர் என்.சீனிவாசன் ஆகியோர் வி.பி.ராமன் உடனான அனுபவம் குறித்து பேசினர். நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தயாநிதி மாறன்எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Read in source website

தாவோ: பிலிப்பைன்ஸ் நாட்டின் துணை அதிபராக ரோட்ரிகோ டுட்ரேட் மகள் சாரா டுட்ரேட் பதவி ஏற்றுக் கொண்டார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட் சர்ச்சைகளின் நாயகர். இவர் பிலிப்பைன்சில் யாரேனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும், விற்றாலும் அவர்களை சுட்டுக் கொல்ல ஆணை பிறப்பித்தவர். சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி டுட்ரேட் அச்சம் கொண்டது இல்லை. இதன் காரணமாக உலகம் முழுவதிலுள்ள மனித உரிமை அமைப்புகள் இவருக்கு வலுவான் கண்டனங்கள் தெரிவித்து வந்தன.

மனித உரிமை ஆர்வலர்களின் பேச்சை இவர் துளியும் சட்டை செய்வதில்லை. இந்த சட்ட விரோதக் கொலை செய்வதற்கென்றே தனியாக ஒரு கும்பலை இவர் வைத்திருக்கிறார். 72 வயதாகும் ரோட்ரிகோ டுட்ரேட் ஆட்சிக்கு பிலிப்பைன்ஸில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது,

இந்நிலையில், அடுத்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்தார். ஆனால், அதேவேளையில் தனது மகள் துணை அதிபராக போட்டியிடுவார் எனவும் கடந்த ஆண்டு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ரோட்ரிகோ டுட்ரேட் மகளான 43 வயதான சாரா, லாகாஸ் கிறிஸ்துவ முஸ்லிம் ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிட்டார். இதில் வெற்றி பெற்ற சாரா டாவோவில் பிலிப்பைன்ஸின் 15-வது துணை அதிபராக பதவி ஏற்றார்.

அரசியலில் 10 வருடங்களுக்கு மேலாக அனுபவமுள்ள சாரா தாவோ நகரின் மேயராக 2016-ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்.

பதவி ஏற்பில் சாரா பேசும்போது, “3 கோடிக்கும் அதிகமான பிலிப்பைன்ஸ் மக்களின் குரல் எனக்கு கேட்டது. சிறப்பாக பணியாற்றுங்கள் என்று கூறினார்கள்” என்று தெரிவித்தார்.

பதவி ஏற்பு நிகழ்வில் ரோட்ரிகோ டுட்ரேட் கலந்து கொண்டார். பிலிப்பைன்ஸில் மனித உரிமை மீறல்களுக்கு ரோட்ரிகோ டுட்ரேட் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் சாரா துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்



Read in source website

gold price today chennai in tamil: கடந்த செவ்வாய் கிழமை (ஜூன் 14) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிரடியாகக் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,740க்கு விற்பனை செய்யப்பட்டது.

Gold rates today in tamil: உக்ரைன் மீதான ரஷ்யாவின் படைப்பு உலகம் முழுதும் பொருளாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய், தங்கம் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. மேலும், பங்குச்சந்தைகள் சரிந்து வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது.

அவ்வகையில், தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கத்தின் விலை இம்மாத தொடக்கத்தில் அதாவது, ஜூன் 1ஆம் தேதி அன்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் மறுநாளே ரூபாய்.160 உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை (ஜூன் 14) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிரடியாகக் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,740க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்து 37,920 ரூபாயக்கு விற்பனையானது. இதேபோல், மறுநாள் புதன்கிழமை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து விற்பனையானது. அதன்படி சென்னையில், கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 4,715க்கும், சவரன் 37,720ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், அதன் பிறகான நாட்களில் தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது. அவ்வகையில், சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,775 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 38,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று 66.30 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 66,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றும் அதே விலைக்கு விற்பனையாகி வருகிறது.



Read in source website

கூட்டுறவு வங்கிகள் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது.

குறிப்பாக, நகா்ப்புற கீழ் மத்தியதர வகுப்பினரும், கிராமப்புற விவசாயிகளும் கூட்டுறவு வங்கிகளால்தான் கந்து வட்டிக்காரா்களின் பிடியில் சிக்காமல் காப்பாற்றப்பட்டு வருகின்றனா். கூட்டுறவு வங்கிகளின் இன்றியமையாமை விவாதத்திற்கு அப்பாற்பட்டது.

அதே நேரத்தில், கூட்டுறவு வங்கிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதால், அதில் அரசியல் தலையீடு காணப்படுவது தவிா்க்க முடியாததாகிவிட்டது. மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் கூட்டுறவு அமைப்புகள், அதிலும் குறிப்பாக கூட்டுறவு வங்கிகள், அரசியல்வாதிகளால் மட்டுமே இயக்கப்படும் சூழல் நீண்ட நாள்களாகக் காணப்படுகிறது. தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றும் கட்சிகளின் கைப்பாவையாகத்தான் கூட்டுறவு அமைப்புகள் இயங்குகின்றன என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ‘பி.எம். ஆவாஸ் யோஜனா’ என்கிற பிரதமா் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், ‘அனைவருக்கும் வீடு’ என்கிற இலக்கை நிா்ணயித்திருக்கிறது. அந்த இலக்கை விரைவுபடுத்த, வீட்டுவசதித் திட்டங்களுக்கான நிதியுதவிகள் தங்கு தடையின்றி அடித்தட்டு மக்கள் வரை சென்றடைய வேண்டும் என்று விரும்புவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளும், கிராமப்புற கூட்டுறவு வங்கிகளும் வழங்கும் தனியாா் வீட்டுக் கடன்களுக்கான வரம்பை இரட்டிப்பாக்க இந்திய ரிசா்வ் வங்கி முடிவெடுத்திருக்கிறது. கிராமப்புற கூட்டுறவு வங்கிகள், தனியாா் குடியிருப்புத் திட்டங்களுக்குக் கடன் வழங்கவும் தீா்மானித்திருக்கிறது. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காரணமாக வீட்டுவசதி, கட்டுமானத் தொழில்கள் பின்னடைவைச் சந்தித்திருக்கும் நிலையில், இந்த முடிவு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில், இந்த முடிவு பல சிக்கல்களைத் தோற்றுவிக்கக்கூடும் என்கிற அச்சம் எழாமலும் இல்லை.

வீட்டுக் கடனுக்கான வட்டியும், கட்டுமானச் செலவும் கடுமையாக அதிகரித்திருக்கின்றன. 2009, 2011 ஆண்டுகளில் நிா்ணயிக்கப்பட்ட வீட்டுக் கடனுக்கான வரம்புகள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. வணிக ரீதியிலான வங்கிகளைவிட, குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு வீட்டுக் கடன்களை வழங்குவதில் கூட்டுறவு வங்கிகள் சிறப்பாக செயல்பட முடியும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளின் செயல்பாடுகளுக்கு ரிசா்வ் வங்கி சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததைத் தொடா்ந்து, இப்போது வணிக வங்கிகள்தான் பெரும்பாலான வீட்டுக் கடன்களை வழங்கி வருகின்றன. கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது, 2022 மே மாதத்தில் வீட்டு வசதிக்கான வங்கிக் கடன் அளவு 13.7% அதிகரித்திருப்பதாக ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதே நேரத்தில், குறைந்த, நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீட்டுக் கடன் அளவு 4.6%தான் அதிகரித்திருக்கிறது.

வீட்டுக் கடன் வழங்கும் அளவைக் கூட்டுறவு வங்கிகளுக்கு அதிகரித்திருப்பதன் மூலம், அந்த வங்கிகள் வளா்ச்சி அடையவும், சாமானியா்களின் தேவைக்கு உதவவும் வழிகோலக்கூடும் என்கிற ரிசா்வ் வங்கியின் நோக்கம் நோ்மையானது. அதே நேரத்தில், விவசாயக் கடன், நகைக் கடன்போல வீட்டுக் கடன்களைக் கையாளும் கட்டமைப்பு கூட்டுறவு வங்கிகளுக்கு இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது.

யாா் யாருக்கு, எந்தெந்தத் திட்டங்களுக்கு, எந்த அளவிலான கடன் வழங்கலாம் என்கிற வரைமுறைகளை நகா்ப்புற, கிராமப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி அறிவுறுத்துகிறது. குடியிருப்பு நிறுவனங்களுக்குக் கூட்டுறவு வங்கிகள் வழங்கும் கடன் தொகையை நிா்ணயிப்பது, அவா்களைக் கண்காணிப்பது, தவணைகளை முறையாக வசூலிப்பது போன்ற செயல்பாடுகளை கூட்டுறவு வங்கிகளால் முறையாகக் கையாள முடியுமா என்பதில் சந்தேகம் ஏற்படுவதைத் தவிா்க்க முடியாது.

மகாராஷ்டிர மாநிலம் பி.எம்.சி. வங்கி திவாலான சம்பவமும், கேரள மாநிலம் கருவன்னூா் கூட்டுறவு சங்க முறைகேடும் சமீபத்திய முன்னுதாரணங்கள். குடியிருப்பு நிறுவனத்திற்கு முறைகேடாகக் கடன் வழங்கியதால் பி.எம்.சி. வங்கி திவாலானது மட்டுமல்ல, அதில் முதலீடு செய்திருந்த ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பை இழந்தனா் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளின் தலைமைப் பொறுப்பில் அமா்த்தப்படுபவா்கள் ரிசா்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிற கட்டாயம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. அந்த வங்கிகளில் தொழில்நுட்ப மேம்பாடு, தணிக்கை உள்ளிட்டவை ரிசா்வ் வங்கியின் நேரடி கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், கூட்டுறவு வங்கிகளின் கட்டுப்பாடும், நிா்வாகமும் அரசியல் சாா்புடையவா்களின் கையில்தான் இருக்கும் என்பதை எப்படி புறந்தள்ளுவது?

இந்தியாவில் 1,500-க்கும் அதிகமான நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளும், ஏறத்தாழ ஒரு லட்சம் கிராமப்புற கூட்டுறவு வங்கிகளும் 2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி செயல்படுகின்றன. அவற்றிற்குப் போதிய மனிதவளமும், தொழில்நுட்ப மேம்பாடும், முறையான கட்டுப்பாடுகளும் உறுதிப்படுத்தப்பட்டால், ரிசா்வ் வங்கியின் முடிவு பலனளிக்கக் கூடும். அரசியல் தலையீட்டை அகற்றி நிறுத்தாமல் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டை நம்ப முடியாதே, என்ன செய்வது?



Read in source website

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு ஜூன் 20 (இன்று) வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவு வெளியானதும் வெற்றி பெற்றவர்கள் கொண்டாடுவதையும் தோல்வி அடைந்தவர்கள் மனச்சோர்வுடன் முடங்கிக் கிடப்பதையும் பார்க்கிறோம். 

வெற்றி பெற்றவர்களின்  கொண்டாட்டம் தவறில்லை. ஆனால் தோல்வி அடைந்தவர்கள் முடங்கிக்கிடக்க  வேண்டுமா? ஒருவருக்கு தோல்வி ஏற்படுத்தும் சோர்வைவிட மற்றவர்களால் ஏற்படும் அழுத்தமே கூடுதல் சோர்வை அளிக்கிறது என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். 

தேர்வில் தோல்வி தரும் வலியைவிட  பெற்றோர்  திட்டுவது, குறை கூறுவது, மற்றவர்களுடன்  ஒப்பிட்டுப் பேசுவது ஆகியவையே  இன்றைய பிள்ளைகளை  பெரும் மனவருத்தம் கொள்ளச் செய்கின்றன.

தேர்வு முடிவு என்பது எந்த விதத்திலும் ஒரு மனிதனுடைய வாழ்வின் வெற்றியோ தோல்வியையோ முடிவு செய்வதில்லை. இந்த உலகில் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலோர் ஏற்கெனவே பலமுறை தோல்வி அடைத்தவர்கள்தான். அவர்கள் தோல்விக்கு  மதிப்பளித்தார்கள்.தோல்விகளை ஏற்றுக்கொண்டார்கள். அதன் மூலம் பாடம் கற்றுக் கொண்டார்கள். அவர்கள் தோல்விகளால் ஒருபோதும் துவண்டு போனது இல்லை.  

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லையா? மன உறுதியுடன் ஒருசில வாரங்களில் வரும் சிறப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். இன்றைய காலகட்டத்தில்  எத்தனையோ மாணவர்கள் சிறப்பு துணைத்தேர்வு எழுதி வெற்றி பெற்று உயர்கல்வி பயில்கிறார்கள் என்பதை தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

மதிப்பெண் குறைந்து விட்டதால், பிள்ளைகளை திட்டுவதாலோ குறை சொல்வதலோ எந்தவித பயனும் இல்லை என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அல்லது மதிப்பெண்  குறைந்தாலும் உங்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்துங்கள். அவர்களுக்கு உளவியல் ஆலோசனை அளித்து அடுத்து என்ன செய்யலாம் என்று  கல்வியாளர்களிடம் அறிவுரை கேளுங்கள்.  

பெற்றோர்கள்  சிறுவயதிலிருந்தே தங்கள் குழந்தைகளுக்கு தோல்வியை தாங்கும்  மனவலிமையை உருவாக்க வேண்டும். எப்போதும் குழந்தைகளை திட்டுவதாலும் குறை கூறுவதாலும் அவர்களுக்கு தோல்வி பற்றிய பயம் அதிகரிக்கும் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

இளைஞர் ஒருவர், தினமும் கல்லூரிக்குச் செல்லும்போது ஷூ  லேஸ் கட்டுவதற்கு சிரமபட்டார். அன்றாடம் செய்யக்கூடிய சாதாரண வேலைக்கு தனது மகன் சிரமப்படுவதை கவனித்த அவரது தந்தை, அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். 

மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு "உங்கள் மகனை நரம்பு குறைபாடு தொடர்பான கொடிய நோய் தாக்கி உள்ளது. உடல் தசைகளை பாதிக்கக்கூடிய இந்த நோய் உடலிலுள்ள ஒவ்வொரு பாகத்தையும் பாதித்து, இரண்டு ஆண்டில் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்' என்று  தெரிவித்தார்.

அதை கேட்டு கொண்டிருத்த அந்த இளைஞர் சிறிதும் அச்சமின்றி "இந்த நோய் எனது உடலை பாதிக்கும். ஆனால், எனது மூளையை பாதிக்குமா' என்று கேட்டார். அதற்கு மருத்துவர் "மூளையை நிச்சயமாக பாதிக்காது' என்றார். உடனே அந்த இளைஞர், "என்னுடைய இயற்பியல் ஆராய்ச்சியை என்  உடலா செய்யப்போகிறது? எனது  மூளைதான்ஆராய்ச்சிக்கு உதவ போகிறது' என்றார் தன்னம்பிக்கையுடன். 

ஆனாலும் ஒரு சில ஆண்டுகளில் நடக்க முடியாமல் வீல் சேரில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அத்தனை உறுப்புகளும் செயலிழந்து கொண்டிருக்க, இரண்டு விரல்கள் மட்டும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருந்தன. 

அப்போதும் தனது தன்னம்பிக்கையை அவர் விடவில்லை. இரண்டு விரல்கள் மூலமாக  கணினி உதவியுடன் தனது கருத்துகளை பரிமாறிக் கொண்டார். நவீன அறிவியல் பற்றி தான் மேற்கொண்ட ஆய்வுகளை புத்தகங்களாக வெளியிட்டார். மக்களிடம் அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிட்டியது.

இரண்டே ஆண்டில் இறந்து விடுவார் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்ட அந்த மனிதர் பல ஆண்டுகள் உயிருடன் இருந்தார். அதற்கு மிக முக்கிய காரணம் அவர் மரணத்தை பற்றி பயம் கொள்ளாமல் தனது மன உறுதியின்  மேல் நம்பிக்கை கொண்டிருத்ததே. அவர்தான் நவீன அறிவியலின் தந்தை என்று போற்றப்பட்ட  இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்.

காலத்தை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் மனித குலத்துக்கு அளித்த பாடம், போராடு, தோல்வியை தூக்கி எறி, தொடர்ந்து முயற்சி செய், வெற்றியை அடைவாய் என்பதுதான்.

தேர்வு முடிவு எப்படி இருந்தாலும் அதை எதிர்கொள்ளுங்கள். உங்களை ஊக்கப்படுத்தக்கூடிய, உற்சாகப்படுத்தக்கூடிய நேர்மறையாளர்களை உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்; எதிர்மறை சிந்தனையாளர்களைத் தவிர்த்துவிடுங்கள்.

பெற்றோரே! உங்கள் பிள்ளைகளின் மீது நம்பிக்கை இழக்காதீர்கள். அவர்களது ஆர்வத்தையும், விருப்பத்தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு விருப்பப்பட்ட துறையில் அவர்களை  ஈடுபடுத்துங்கள். தேர்வு முடிவு வாழ்வின் முடிவல்ல, அது வாழ்வின் ஆரம்பமே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்; உங்கள் பிள்ளைகளுக்கும் புரிய வைத்திடுங்கள்!



Read in source website

கனடாவில் பிறந்து வளர்ந்த என் மைத்துனர் மகன் கிருஷ்ணா சில வருடங்கள் மதுரையில் எங்களுடன் வசித்து வந்தான். ஒரு நாள் என் மனைவியுடன் கார் வாங்குவதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, கிருஷ்ணா ஒரு கார் பெயரைச் சொல்லி அதை வாங்கலாமே என்று சொன்னான். "அந்த கார் பற்றி உனக்கு எப்படி தெரியும்' என்று கேட்டேன். "அந்த கார்தானே டிவி விளம்பரத்தில் வருகிறது' என்றான். 

ஆரம்பத்தில் பொருளாதாரம் பண்டமாற்றில் தொடங்கி பின் உலோகங்களும், காகிதங்களும் பணமாக உருமாறி மனிதன் "திரைகடல் ஓடி திரவியம் தேட' இலங்கை, மலேசியா என்று பயணித்துக் கொண்டிருந்தபோது, வளமான இந்தியாவை நோக்கி, ஐரோப்பிய வியாபாரிகள் கடல் மார்க்கமாக படையெடுத்தனர். உள்ளூர் நிலவரங்கள் கண்டு, வியாபாரிகள் ஆட்சியைப் பிடித்தது சுதந்திர இந்திய வரலாற்றின் முதல் பாகம். வியாபாரிகளுடன் வியாபார உத்திகளும், விளம்பரங்களும் இந்திய மண்ணை மட்டுமல்ல உலகையே ஆக்கிரமித்தன. 

பத்திரிகை விளம்பரம், ரேடியோ விளம்பரம், டிவி விளம்பரம், சினிமா விளம்பரம், சுவர் விளம்பரம் என்று எங்கெங்கு காணினும் விளம்பரமயம். விளம்பரம் என்பது விரும்புபவருக்கு, விரும்பும் பொருள் இருக்கும் இடத்தை சொல்வதில் ஆரம்பித்து, இன்று தேவையில்லாதவருக்கு, தேவையில்லாத பொருளை வாங்கும் உந்துசக்தியாக மாறிவிட்டது. "ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால், அதை மக்கள் உண்மை என நம்பிவிடுவார்கள்' என்ற கோயபல்ஸின் சித்தாந்தம்தான் இன்றைய விளம்பரத்தின் அடிநாதம். 

மொட்டைத் தலையில் முடிவளரும், உங்கள் கேசம் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும், ஒரு நிமிடத்தில் உங்கள் வெள்ளைமுடியை கருப்பு முடியாக ஆக்க முடியும், ஏழு நாளில் உங்கள் கருப்பழகு, சிவப்பழகாக மாறும் என்கிற ஏமாற்று விளம்பரங்கள் மனிதர்களின் அடிமனதிலுள்ள அபிலாஷைகளை குறிவைத்து தாக்குகின்றன.

கரியையும், உப்பையும் பல் துலக்க உபயோகித்த என்னுடைய பாட்டி 94 வயதில், வயது முதிர்வின் காரணமாக இறந்தபொழுது, அவருடைய 32 பற்களும் முத்தாய் சிரித்தன. ஆனால் வெளிநாட்டு வரவான பேஸ்டையும், பிரஷையும் உபயோகித்த எனக்கு வாயில் பல பற்களைக் காணோம். என்னை உப்பையும் கரியையும் விட்டுவிட்டு பேஸ்ட் வாங்க வைத்த அதே கம்பெனி, இப்பொழுது விளம்பரத்தில் உங்கள் பேஸ்டில் உப்பு இருக்கிறதா, கரி இருக்கிறதா என்று கேட்கும்போது, எனக்கு கோபம் வருவதில் என்ன தவறு?  

சில விளம்பரங்கள், கவித்துவமாகவும், ரசனையாகவும் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், பெரும்பான்மையான விளம்பரங்கள், பொருளின் தரத்தை சொல்வதற்காக எடுக்கப்படுவதில்லை; ஏமாறத் தயாராக இருப்பவர்களை ஏமாற்றவே எடுக்கப்படுகின்றன.  

வியாபாரியான வெள்ளைக்காரன், நம் நாட்டை ஆண்ட போது "லெட் தி பையர் பிவேர்' (வாங்குவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்) என்பதுதான் சட்டமாக இருந்தது. ஆனால், சுதந்திர இந்தியாவில் 1986-ஆம் ஆண்டு வந்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இதில் ஒரு மாற்றம் கொண்டு வந்தது. ஆனாலும், அது முழுமையான பயனைத் தரவில்லை என்பதுதான் உண்மை. 2019-இல் வெளியான புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. 

அது வியாபாரிகளுக்கும், விற்பனையாளர்களுக்கும் புதிய பொறுப்புகளை ஏற்படுத்தியதுடன், நுகர்வோருக்கு புதிய உரிமைகளையும் வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாகத்தான் மத்திய அரசு சமீபத்தில் தவறாக வழிகாட்டும் விளம்பரங்களை வகைப்படுத்தவும், தவறான விளம்பரங்களை தடை செய்யவும் வழிகாட்டு விதிகள் 2022-ஐ வெளியிட்டுள்ளது. 

இந்த விதிகளில் பொருளை விலை குறைத்து விற்பதாகக் கூறும் விளம்பரங்கள் வகைப்படுத்தப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தபட்டுள்ளன. தன்னுடைய திரைப்படப் புகழ், விளையாட்டுத் துறை புகழ் ஆகியவற்றை வைத்து கோடிகளைக் குவிக்கும் பிரபலங்களுக்கு இந்த விதிகள் முட்டுக்கட்டை போட்டுள்ளன. இனி அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். ஒன்றை மறைத்து மற்றொன்றை விளம்பரப்படுத்தும் செவிலித்தாய் விளம்பரங்கள் இவ்விதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. 

விதி-4 தவறான விளம்பரங்களையும், (எங்கள் நிறுவனப் பொருளை வாங்கினால் 99% கிருமிகளை ஒழிக்கும்) விதி-5 தூண்டில் விளம்பரங்களையும் (இந்த பொருள் இன்னும் இரண்டே நாள்தான் இருக்கும்) தடை செய்கிறது. எதிர்மறை விளம்பரங்களும் தடுக்கப்பட்டுள்ளன.

அதாவது பிரபலமான ஒருவர் பேசும்பொழுது, மேஜையில் புகையிலை அல்லது மது சம்பந்தமான பொருளை வைத்திருப்பது, அதனை இலவச பொருள் என்று சொல்லி, அதை அனுப்புவதற்கு மட்டும் பணம் தாருங்கள் என்று கேட்பது போன்ற விளம்பரங்களை இனி வெளியிட முடியாது. 

பெருவாரியான விளம்பரங்கள், குழந்தைகளையும், தாய்மார்களையும் குறிவைத்தே எடுக்கப்படுகின்றன. "எங்களுடைய பொடியை சாப்பிட்டால் அதிகமான தாய்ப்பால் உற்பத்தி ஆகும்' அல்லது "இந்த பிஸ்கட்டை சாப்பிட்டால் அதனால் உங்கள் குழந்தை உயரமாக வளரலாம்' என்று பேசி இனி விளம்பரத்தில் பம்மாத்து செய்ய முடியாது.    

விதி 9 தடை செய்யப்பட்ட விளம்பரங்களைப் பற்றி பேசுகிறது. பிற சட்டங்களால் தடைசெய்யப்பட்ட விளம்பரங்களும் இதில் அடங்கும். உதாரணம், புகையிலை விளம்பர தடை சட்டம். 

இந்த விதிகளிலுள்ள தடையாணை என்பது ஏற்கனவே அமலில் உள்ள பிற சட்டங்களுக்கு இணையானதாகவும், துணையானதாகவும் ஆகும் என்று பொருள் கொள்ள வேண்டுமே தவிர, அவற்றிற்கு எதிரானதாக பொருள் கொள்ளக்கூடாது, என விதி 10 விவரிக்கிறது. 

விதி 11 பொறுப்புத் துறப்பு (டிஸ்கிளைமர்) பற்றிப் பேசுகிறது. அதாவது, விளம்பரங்கள் தவறான முடிவிற்கு தூண்டுவதாக இருந்தால், விளம்பரதாரர்கள் பொறுப்பல்ல என எச்சரிக்கும் விளம்பர வாசகங்கள். இவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை. சிகரெட் விளம்பரங்களில் புற்றுநோய் வரும் என்று கூறுவதும், ரம்மி விளம்பரங்களிலும், மியூச்சுவல் ஃபண்ட் விளம்பரங்களிலும் பணத்தை இழக்கக்கூடிய அபாயம் உள்ளது என்று சொல்வதும் "பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்' என்ற கதைதான். இது சட்டமே வழி நடத்தும் தவறான பாதை. 

மேலும், பொறுப்புத் துறப்பு வாசகங்கள் தெளிவாகவும், விளம்பரத்தின் வேகத்தோடும், அதே மொழியிலும், அதே எழுத்து வடிவத்திலும் இருக்க வேண்டும் என்கிறது விதி. எனவே இனி சுத்தமான நெய்யினால் செய்யப்பட்டவை என்பதை பெரிய எழுத்திலும் அல்ல என்ற வார்த்தையை சிறிதாகவும் அச்சிட முடியாது. 

மேலும் விதி 12, தயாரிப்பாளர், சேவை அளிப்பவர், விளம்பரதாரர், விளம்பர நிறுவனம் ஆகியோரின் பொறுப்புகளை விவரிக்கிறது. இதன்படி, விளம்பரத்தில் கூறப்படும் உறுதிமொழிகள், ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் இனி கற்பனையில் தோன்றியதாக இருக்க முடியாது. இவை அனைத்துக்குமான ஆராய்ச்சி முடிவுகள் காட்டப்பட வேண்டும். 

இனி விளம்பரங்கள் எங்கள் பொருளுக்கு ஐந்து ஆண்டுகள் வரை இலவச சேவை என்றோ, மிகக் குறைந்த விலை என்றோ விளம்பரப் படுத்த முடியாது. சட்டத்திற்குட்பட்ட லாட்டரி போன்ற விற்பனையென்றால், அதன் விதிகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். 

ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் பிரபல மனிதருக்கு அந்தப் பொருளைப் பற்றிய முழு அறிவும், தெளிவும் இருக்க வேண்டும் என்று சொல்கிறது விதி. அதனால்தான், இந்த விதிகள் வருவதற்கு முன்பே துணிக்கடை, நகைக்கடை முதலாளிகள் சிலர், திரைப்பட நடிகர்களுக்கு பணத்தை வாரி இறைக்காமல், தாங்களே நடித்து தன்னையும் தன் கடையையும் பிரபலப்படுத்தி விட்டார்கள். 

விளம்பரம் செய்யக்கூடாது என தடை செய்யப்பட்ட தொழில் வல்லுநர்கள் (டாக்டர், வக்கீல், ஆடிட்டர்) சார்பாக வெளிநாட்டவர்களும் விளம்பரம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. எல்லாம் விளம்பர மயம் ஜகத் என்று ஆகிவிட்ட நிலையில், நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

1954-ஆம் ஆண்டு மாயாஜால தீர்வு - ஆட்சேபகரமான விளம்பரத் தடை சட்டம் (மேஜிக் ரெமெடீஸ் அண்ட் அப்ஜெக்ஷனபில் அட்வர்டைஸ்மென்ட் ஆக்ட் 1954) என்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் கிரிமினல் வழக்குகள் தாக்கல் செய்யலாம் என்று இருந்தாலும் இன்றுவரை அது நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் இப்போது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் (பிரிவு 89) இப்படித் தவறான விளம்பரங்களுக்கு இரண்டு ஆண்டு சிறையும் 10 லட்சம் அபராதமும் விதிக்கலாம் என்று கூறுகிறது. 

தவறான விளம்பரங்களை வெளியிடுவது தொடர்ந்தால் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையும் ஐம்பது லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கலாம். இனி நம்முடைய விளம்பரதாரர்களும், பிரபலங்களும் பொறுப்பாக நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். ஆயினும் நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது முக்கியம். 

இதைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் சொன்னார், "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு'. இதையே அதிவீரராம பாண்டியன் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லியுள்ளார் "பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே'.

கட்டுரையாளர்:
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர். 



Read in source website

ராணுவச் சேவையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் ‘அக்னி பாதை’ திட்டத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்புகளும் அதை முன்னிட்டு நடத்தப்படுகிற வன்முறைச் செயல்களும் கண்டனத்துக்கு உரியவை என்பதோடு, கடுமையான தண்டனைக்கும் உட்படுத்தப்பட வேண்டியவை.

ராணுவச் சேவையில் சேர்வதற்குத் தயாராகிவரும் இளைஞர்களிடையே இந்தப் புதியத் திட்டத்தால் தங்களது வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகுமோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. அத்தகைய எண்ணம் தவறானது என்று மத்திய அரசு போதுமான விளக்கங்களை அளித்துள்ளது.



Read in source website

நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது முதலாளித்துவத்தின் உச்சகட்ட ஜனநாயக அமைப்பு முறைகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் இப்படிப்பட்ட ஜனநாயகம்தான் உள்ளது. வடிவங்கள் மாறினாலும் உள்ளடக்கம் ஒன்றுதான்... அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி.

உலகின் பெரும்பாலான நாடுகளில் முதலாளித்துவம்தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. சீனா கொஞ்சம் வித்தியாசமான நாடு. சோஷலிஸ நாடு என்று அதைக் கூற முடியாது. மக்கள் ஜனநாயகப் பாதையில் சென்றுகொண்டிருக்கும் நாடாக அதை நாம் பார்க்கலாம்.

ஆனாலும், அதுவும் முதலாளித்துவம் ஆதிக்கம் செலுத்தும் நாடுதான். இந்திய முதலாளித்துவம் எந்த திசையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதை நாம் கணித்தால்தான் இடதுசாரிகளின் அரசியல் பலத்தையும் பலவீனத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

சுதந்திர இந்தியாவின் இதுவரையான வரலாற்றை மூன்றாகப் பிரிக்கலாம். 1991-க்கு முன்பு வரை ஒரு காலம். 1991-க்குப் பிறகு அடுத்த காலகட்டம். 2014 மூன்றாவது காலகட்டத்தின் தொடக்கம் என்று கொள்ளலாம். 1991-ல் சோவியத் ஒன்றியத்தின் சோஷலிசப் பரிசோதனை தோல்வியடைந்த பிறகு, இந்திய முதலாளி வர்க்கம் குதூகலமாக ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தது.

அதுதான் அமெரிக்கா சார்பாக இந்தியப் பொருளாதாரத்தை முற்றிலும் திறந்துவிடுவது என்பது. அன்றிலிருந்து இந்தியப் பொருளாதாரம் 2014 வரை பிரம்மிக்கத்தக்க மாற்றத்தை அடைந்தது. புலி தனது இரையைப் பிடிக்கும்போது எந்த அளவு வலுவாகப் பிடிக்குமோ, அதைப் போல் இந்திய முதலாளித்துவம் இந்தியச் சமூகத்தை மிக வலுவாகப் பிடித்தது.

2014-ல் நிகழ்ந்தது, ஆட்சியில் அரசியல் கட்சியின் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது எனத் தவறாக நினைத்தவர்கள் அனைவரும், அது அப்படியில்லை என்பதைத் தற்போது உணர்ந்திருப்பார்கள். 1991-ல் எப்படி அடிப்படை மாற்றம் நிகழ்ந்ததோ அதைப் போலவே இன்னொரு மாற்றம் நிகழ்ந்த ஆண்டு 2014.

அதன் கூறுகள் இரண்டுதான். ஒன்று, அதிவேகப் பாய்ச்சலுடன் முதலாளித்துவம் ஓட ஆரம்பித்திருக்கிறது. இரண்டு, அந்தப் பாய்ச்சலைக் காப்பாற்ற நாடாளுமன்ற ஜனநாயகத்தை முற்றிலும் மழுங்கடிப்பதும், அதற்குத் துணையாகச் சிறுபான்மை மக்களை வஞ்சிப்பதும் என இரண்டு ஆயுதங்களைக் கையிலெடுத்துக்கொண்டு மத்திய அரசு செயல்படுவதும்.

இதன் விளைவுகளை நாம் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எல்லா மாநிலக் கட்சிகளும் இந்தப் போக்கைப் புரிந்துகொண்டு, அதற்கேற்பத் தங்கள் பாதையை மாற்றியமைத்துக்கொண்டு தங்களை ஸ்திரப்படுத்திக்கொண்டுவருகின்றன. இன்று எல்லாவித குதிரை பேரத்துக்கும் எல்லா மாநிலக் கட்சிகளும் தயாராக உள்ளன. அவர்களுக்குள் வரும் சண்டை சச்சரவுகளெல்லாம் பேரங்களின் ஒரு பகுதிதான்.

ஆனால், மிகப் பெரிய அடையாளச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கும் ஒரே இயக்கம், இடதுசாரி இயக்கம்தான். நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களை ஓரளவு வலிமைமிக்க சக்தியாக மாற்றிக்கொண்ட இடதுசாரி இயக்கம், இன்று நாடாளுமன்ற ஜனநாயகத்தை அகற்றும் பணியில் முதலாளித்துவம் தன்னை விரைவாக ஈடுபடுத்திக்கொண்டிருப்பதை எதிர்பார்த்திருக்கவில்லை. பொருளாதாரத் துறையிலும் இப்படிப்பட்ட அதிரடி மாற்றங்களையும் இடதுசாரி இயக்கம் எதிர்பார்க்கவில்லை.

இப்படி எதிர்பார்க்காமல் இருந்ததால்தான் எல்லா மாநிலக் கட்சிகளும் சேர்ந்து ஜோதிபாசுவைப் பிரதமராகச் சிபாரிசு செய்தபோது, அதை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை மறுத்துவிட்டது. அவர் பிரதமராகியிருந்தால், ஒருவேளை நாட்டின் தலைவிதி வேறு மாதிரி எழுதப்பட்டிருக்கக்கூடும்.

ஜோதிபாசு அன்று கூறியபடி அது ‘வரலாற்றுக் குற்றமாக’ மாறிவிட்டது. அதைப் போல, 2008-ல் அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் என்ற காரணத்தைக் காட்டி, காங்கிரஸ் அரசுக்கு கொடுத்துவந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக்கொண்டது, இது வருங்காலப் போக்கை அவர்களால் கணிக்க முடியவில்லை என்ற உண்மையை உணர்த்துகிறது.

2004-ல் 145 மக்களவை இடங்களை மட்டுமே வைத்திருந்த காங்கிரஸ் 2009 தேர்தலில் 204 இடங்களைப் பெற்றது. இடதுசாரிக் கட்சிகள் 68 இடங்களிலிருந்து வெறும் 12 இடங்கள் என்ற வீழ்ச்சியைச் சந்தித்தன. அவற்றின் கோட்டையான மேற்கு வங்கத்தில் மாபெரும் சரிவை எதிர்கொண்டது.

ஒரு கம்யூனிஸ்ட் இயக்கம் நாடாளுமன்றத் தோல்விகளில் தன்னை இழக்காது என்பது சரி என்றாலும், இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டில் தோல்வியிலிருந்து மீண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. குறிப்பாக, கடந்த 8 ஆண்டுகளில் இடதுசாரிகள் முற்றிலும் எதிர்பார்க்காத மாற்றங்கள் நாட்டில் நிகழ்ந்துவிட்டன. இவற்றை எதிர்கொள்வது இடது இயக்கத்துக்குச் சாத்தியமா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

ஏனென்றால், அதன் சக்தி குறிப்பிட்ட புவி எல்லைகளுக்குள் உள்ளது. இடதுசாரிக் கட்சிகள் இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியிருக்கின்றன. இன்று உழைக்கும் மக்கள் பெறும் பல சலுகைகள் அந்தக் கட்சிகளும், அவற்றின் தொழிற்சங்கங்களும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியதால் விளைந்தவை என்பது மறுக்க முடியாத உண்மை. அதைப் போல, அவற்றின் தலைவர்களும் தொண்டர்களும் உழைக்கும் மக்களுக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள். மிகவும் நேர்மையானவர்கள்.

இன்றும், மக்களுக்காகவும் தொழிலாளர் நலன்களுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் இயக்கம் இடதுசாரி இயக்கம் மட்டுமே. அந்த இயக்கத்தின் தலைமையில் மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம் (ஆட்சியில் இருந்துகொண்டிருக்கிறது) ஆண்ட இடதுசாரிக் கூட்டணி அரசுகள் மக்கள் நலனில் அக்கறையுடன் பணியாற்றின என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

ஆனால், சகலமும் மாறிவரும் சூழ்நிலையில், அதற்கேற்றார்போல் தன்னை வடிவமைத்துக்கொள்ள இடதுசாரி இயக்கம் தவறிவிட்டதாகத்தான் தோன்றுகிறது. மார்க்ஸியத்தை உள்வாங்கிக்கொண்டு, அதைச் செயலில் காட்டுவதைவிட, மார்க்ஸிய கோஷங்கள் பிரதானப்படுத்தப்படுகின்றன. அறிவின் தேடல் குறைந்துகொண்டே வரும் சூழலில், அதற்கான களத்தை உருவாக்குவதில் இடதுசாரி இயக்கம் அவ்வளவாக இறங்குவதில்லை.

இடது மாற்று என்பது ஒரு நம்பிக்கை அளிக்கும் மாற்றாகக் காட்டப்படாமல், வலது அடிப்படைவாதத்தை வெறும் விமர்சனரீதியில் அணுகுவது எந்தப் பயனும் தராது. ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாக வலது இயக்கம் மக்களைப் பிளவுபடுத்தும்போது, அதற்கு எதிரான மாற்றாக மிகப் பெரிய வடிவில் உருவாக வேண்டிய சவாலை எதிர்கொள்ளாமல், இடது மாற்று உடனடிச் சாத்தியமில்லை.

இடதுசாரிகள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்றால், வறட்டுத் தத்துவ இறுக்கங்களிலிருந்தும், ஸ்தாபன இறுக்கங்களிலிருந்தும் வெளிவந்தே ஆக வேண்டும். உலகம் முழுதும் வலதுசாரிகள் உக்கிரமாக முன்னேறிக்கொண்டிருக்கும் சூழலில், இந்திய இடது இயக்கம் தங்களுக்குத் தாங்களே போட்டுக்கொண்டிருக்கும் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும்.

எதிர்காலத்தில் மக்கள் தங்கள் வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வீதிகளில் இறங்கிப் போராடும் நிலை வரும்போது, அதற்குத் தலைமை வகிக்க இடதுசாரிக் கட்சிகள் இல்லை என்ற அவலநிலை உருவாகாமல் பார்த்துகொள்ள வேண்டியது அவர்களது கடமை.

- கு.பாஸ்கர், தொடர்புக்கு: baskar6052@gmail.com



Read in source website

ஜூன் 13 அன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் எனும் சிறு நகரில் ‘எண்ணும்-எழுத்தும்’ திட்டத்தைத் தொடங்கிவைத்துத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். சில தலைவர்களின் சில மேற்கோள்கள் காலத்தால் நிலைபெற்றுவிடும்.

அப்படியான ஒரு வாசகம் முதல்வரின் உரையில் இடம்பெற்றது. அன்றைய தினமே அது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. முதல்வர் பள்ளிப் பிள்ளைகளுக்குச் சொன்ன அறிவுரை இதுதான்: ‘‘கல்வி மட்டும்தான் நம் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும்.



Read in source website