DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 20-01-2022

கடலூர்: கூட்டுப் பண்ணையம் மூலம் பயிர் செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்று பின்னலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம.கதிரேசன் தெரிவித்தார்.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூர் கிராமத்தில் வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் நம்மாழ்வார் நினைவு பாசுமதி நெல் வயல் செயல் விளக்கப் பண்ணை தொடக்க விழா இன்று (ஜன.20) நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு வீரநாராயண உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் அண்ணாமலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் இராம.கதிரேசன் கலந்துகொண்டு நம்மாழ்வார் நினைவு பாசுமதி நெல் வயல்வெளி செயல் விளக்கப் பண்ணையைத் திறந்து வைத்துப் புதிய வேளாண் சுவரொட்டிகளை வெளியிட்டார்.

பின்னர் துணைவேந்தர் இராம.கதிரேசன் பேசுகையில், ''விவசாயிகள் தற்போது இயற்கை வேளாண் முறையில் பயிரிட ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது வரவேற்கதக்கது. நெல் வயல்களில் விவசாயிகள் கூட்டுப் பண்ணையம் அமைத்து வேளாண்மை செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும். கூட்டுப் பண்ணை என்றால் நெல் வயலில் கோழிப் பண்ணை, குட்டையில் மீன் வளர்ப்பதாகும். இதனால் விவசாயத்திற்கு உரம், பூச்சி மருந்துகள் தேவையில்லை. பயிர்கள் நன்கு செழித்து வளரும்.

பயிர்களில் பூச்சி மற்றும் களை இருக்காது. கூட்டுப் பண்ணையம் அமைத்து விவசாயிகள் பயிர் செய்ய முன்வர வேண்டும். இதற்கான அனைத்துப் பணிகளையும் நானே முன்னின்று செய்து தருகிறேன். இதில் முன்னோடியாகச் செயல்படும் விவசாயிகள் ஊக்கப்படுத்தப்படுவார்கள். கூட்டுப் பண்ணையம் முறையில் விவசாயிகள் தொடர்ந்து பயிர் செய்தால் அதிக செலவு இல்லாமல் இயற்கை வேளாண் முறையில் மகசூலைப் பெற முடியும்'' என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புல இணைப் பேராசிரியர் முனைவர் ராஜ்பிரவீன், ஊரக வளர்ச்சி மையம் இயக்குநர் பாலமுருகன், தோட்டக் கலைத்துறை பேராசிரியர் பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விவசாயிகள் அதிக மகசூல் பெறுவது குறித்தும், ஒவ்வோரு காலத்திலும் எப்படி பயிர் செய்ய வேண்டும், விளைந்த பயிர்களைச் சந்தைப்படுத்தும் முறை குறித்தும் தெளிவாக விளக்கிக் கூறினார்கள். இந்த விழாவில் கலந்துகொண்ட சுற்றுவட்ட விவசாயிகள் ஏராளமானவர்கள், இந்த நிகழ்வு பயனுள்ளதாக இருந்தது என்று தெரிவித்தனர்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் இயற்கை முறையில் விளைந்த பாசுமதி அரிசி தலா 1 கிலோ வழங்கப்பட்டது. வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் சங்கத்தின் இயக்குநர் ரெங்கநாயகி நன்றி கூறினார். இதில் வீரநாராயணன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Read in source website

கரோனா உபயத்தால் 2020 முதல் இதுவரை இல்லாத அளவில் உச்சத்தை எட்டியிருக்கிறது டோலோ 650 மாத்திரையின் விற்பனை. இந்த மாத்திரையை பெங்களூருவைத் தளமாகக் கொண்ட மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் தயாரித்து வருகிறது. அந்தவகையில் சர்வ சாதாரணமாக எல்லோர் வீட்டிலும் பயன்பாட்டில் இருக்கக்கூடிய பாராசிட்டமால் மாத்திரையின் நன்மை, தீமை என்ன? என்பது குறித்து வேலூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பொது மருத்துவரும், இணைப் பேராசிரியருமான அ. இராமலிங்கத்திடம் பேசினோம்.

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பாராசிட்டமால் மாத்திரையைச் சாப்பிடலாமா? அதன் குணாதிசயம் என்ன?

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் முதலில் எந்த மாத்திரையும் சாப்பிடக்கூடாது. பாராசிட்டமால் மாத்திரையின் குணாதிசயம் என்னவென்றால் வலி நிவாரணம் மற்றும் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். மேலும் ப்ரூபன், டைக்லோபினக், மெப்பனமிக் ஆசிட் என்பன போன்ற பல மருந்துகள் இதுபோல் உள்ளது. இது எல்லாம் ஒரு குடும்பம். இந்த பாராசிட்டமால் என்பது நான் ஸ்டிராய்டல் ஆன்டி இன்பிளெமெட்ரி ட்ரக்ஸ் Non-steroidal anti-inflammatory drugs (NSAIDs) என்கிற பிரிவில் வரும். இவை எல்லாவற்றுக்கும் என்ன குணம் என்றால் நம் உடலில் இருக்கும் ப்ராஸ்டா கேண்டின் என்னும் திரவ வேதிப்பொருளைப் கட்டுப்படுத்தி வேலை செய்யும். அந்த திரவத்தின் சுரப்பைப் பொறுத்துதான் காய்ச்சல், உடல் வலி, சோர்வு போன்றவை ஏற்படுகின்றன. அதைக் கட்டுப்படுத்தும் மருந்துதான் பாராசிட்டமால்.

பொதுவாக அலோபதியில் மருந்து என்றாலே ஒரு அளவுதான். ஒருவரின் எடையைப் பொறுத்து மருந்தின் அளவு விகிதம் மாறுபடும். அதிகமாக மருந்து எடுத்துக் கொண்டால் அது விஷமாகி விடும். குறைவாக எடுத்துக்கொண்டால் அது வேலை செய்யாமல் போய்விடும். எனவே யார் யார், எந்த அளவு மருந்தை உட்கொள்ள வேண்டும் என்று தெரிந்து சாப்பிடுவது நல்லது.

அதிக டோஸ் உள்ள மாத்திரையை எடுத்துக்கொண்டால் என்னாகும்?

ஒரு கிலோ எடைக்கு பாராசிட்டமால் 10 மில்லிகிராம் தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் எடைக்கு ஏற்றவாறு சாப்பிட வேண்டும். ஆனால் அதிக டோஸ் உள்ள மாத்திரையை எடுத்துக்கொண்டால் வயிறு புண்ணாகி விடும். அடுத்ததாக கல்லீரல் பாதிப்பு உண்டாகும். பாராசிட்டமாலின் மிகப்பெரிய அச்சுறுத்தலே கல்லீரலைப் பாதித்துவிடும் என்பதுதான். நமக்கு இருப்பது ஒரே ஒரு கல்லீரல் தான். அதை நாம் கட்டாயம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு நாளைக்கு பாராசிட்டமாலை எத்தனை முறை எடுத்துக் கொள்ளலாம்?

ஒரு நாளைக்கு, மேற்கூறிய அளவில் அதிகபட்சம் 4 முறை எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக 4ல் இருந்து 6 மணி நேரம்தான் அந்த மருந்தின் வீரியம் இருக்கும். இதையும் தாண்டி அதே மருந்தை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும் போது கட்டாயம் கல்லீரல் பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும்.

இன்னும் முக்கியமானது, இணை நோய்களுக்குச் சாப்பிடும் மருந்துகளுடன் பாராசிட்டமாலை சேர்த்துச் சாப்பிடுவது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சரியான டோஸ் கொடுக்கவில்லை என்றால் நாம் சாப்பிடும் இரண்டு வெவ்வேறு நோய்களுக்குமான மாத்திரை வேதியியல் வேறுபாடு ஏற்படும். அவை ஒன்றுக்கொன்று ஒத்துப்போகிறதா? இல்லை முரண்படுகிறதா? என்பதைப் பொறுத்து இணை நோய்க்கு சாப்பிடும் மருந்தின் வேகம் மாற வாய்ப்பு இருக்கிறது.

எனவே நாம் சாப்பிடும் ஒரு மருந்தோடு மற்றொரு மருந்து எடுத்துக் கொள்ளும்போது கட்டாயம் டாக்டர்கள் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்வது நல்லது. பொதுவாக ஒருவருக்கு என்ன நோய் இருக்கிறது என்று பார்த்துதான் மருத்துவர்கள் மருந்துகளைப் பரிந்துரை செய்வார்கள். நாமாகவே எடுத்துக்கொள்ளும்போது அதில் இப்படி ஒரு ஆபத்து இருக்கிறது.

பாராசிட்டமாலை எப்போதாவது ஒரு முறை எடுத்துக்கொள்ளலாமா? பாராசிட்டமால் மாத்திரையால் எப்போது பாதிப்பு வரும்?

எடுத்துக்கொள்ளலாம். அதற்கும் ஒரு காலமுறை இருக்கிறது. மருத்துவரைப் பார்க்கமுடியாத சூழலில் உடல் அதிக குளிராக இருக்கிறபோது, காய்ச்சல் இருக்கிறது என்கிறபட்சத்தில் நாமாகவே எடுத்துக்கொள்வது தவறில்லை. ஆனால் தொடர்ந்து அதனை எடுத்துக்கொள்வது தவறானது.

ஜுரம், தலைவலி வந்தால் முதலில் என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு உடனே பாராசிட்டமால் போட்டுக்கொள்ளக் கூடாது. உடலில் நீர்ச்சத்து குறைகிறது என்றால் காய்ச்சல் வரும். பயணம் செய்யும்போதோ, அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருக்கும்போதோ நீர்ச்சத்து குறைந்து உடல் உஷ்ணமாகி, உடல் சோர்வு ஏற்பட்டு உடல் காய்ச்சல் போல கனகனவென்றுதான் இருக்கும். உடனே அதற்கும் நாம் பாராசிட்டமால் எடுத்துக்கொண்டோம் என்றால் என்ன நடக்கும். ஏற்கெனவே உடம்பில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும்போது அதனுடன் பாராசிட்டமால் எடுத்தால் கட்டாயம் பாதிக்கப்படுவோம். பொதுவாக எல்லா மாத்திரைகளுமே கல்லீரல் மற்றும் கிட்னி வழியாகத்தான் கிரகித்து மலம் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறும். அப்படி இருக்கும்போது கல்லீரல் மற்றும் கிட்னிக்கு ஆபத்தை நாமே தேடித் தருகிறோம்.

முதலில் நம் உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டாலே முதலில் காய்ச்சல்தான் வரும். அது வேறு இன்பெக்ஷன் ஏற்பட்டதால் வந்த காய்ச்சலாக இருக்கும்பட்சத்தில், சாதாரண காய்ச்சல் என்று நீங்களாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரிடம்தான் போய் செக்கப் அப் செய்து கொள்வது சாலச் சிறந்தது.

பொதுமக்களுக்கு வழங்கும் அறிவுரை?

காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு இருந்தால் நீங்கள் முதலில் நீர்ச்சத்து நிறைந்த ஒரு உணவை எடுத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது உடல் புத்துணர்ச்சி பெறும். அதன்பிறகும் சரியாகவில்லை என்றால் மட்டுமே பாராசிட்டமால் எடுத்துக்கொள்ளுங்கள். ஏன் என்றால் 90 சதவிகித நோய்களை நம் உடலே சரி செய்துவிடும். அதை விடுத்து தேவையில்லாமல் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் உடலுக்குள் சென்றால் வேலை செய்யும். இல்லாத நோய்க்கு எடுத்துக்கொள்ளும் மருந்து ஏற்படுத்தும் பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவோம். என்னென்ன மருந்துகளால் யார், யார் எவ்வாறு பாதிக்கப்படுவோம் என்பது அவரவர்களின் உடல் நிலையைப் பொறுத்தது.

இன்னும் சில புத்திசாலி நோயாளிகள் மருத்துவர்களைச் சந்திக்கும்போது, இணை நோய்களுக்குச் சாப்பிடும் மாத்திரைகளைக் கையோடு கொண்டுவந்து காண்பித்து இப்போது நீங்கள் தரும் இந்த மாத்திரைகளோடு இதனையும் சேர்த்துச் சாப்பிடலாமா என்று கேட்பார்கள். அதுதான் சரியான அணுகுமுறை. கர்ப்பிணிகள் கட்டாயம் டாக்டர்களிடம் கேட்ட பின்பே எந்தவொரு மருந்து மாத்திரைகளையும் சாப்பிட வேண்டும். தனிப்பட்ட அலர்ஜி எதுவும் இருந்தால் மருத்துவர்களிடம் முன்னேமே கூறி அதற்குத் தகுந்தாற்போல் மாற்று மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்திக் கொள்வது சாலச்சிறந்தது. அலர்ஜி என்பது எல்லா மருந்து மாத்திரைகளுக்கும் பொருந்தும்.

சிட்ரசின், அமெக்சி 250, அசித்ராமைசின் போன்ற ஆன்டிபயாடிக் மாத்திரைகளை எல்லாரும் இஷ்டத்திற்கு பயன்படுத்துகிறார்களே?

ஆன்டிபயாடிக் என்பதை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் கட்டாயம் பயன்படுத்தவே கூடாது. 90 சதவிகிதம் நோய்களை நம் உடலே சரிப்படுத்திக் கொள்ளும். அதையும் மீறி 10 சதவிகிதம் பேருக்குக் கட்டாயம் ஆன்டிபயாடிக் தேவை. அவ்வளவுதான். ஆன்டிபயாடிக் மருத்துவர் அறிவுரை இல்லாமல் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் சிக்கல் என்னவென்றால் எந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்பது மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியும். அப்படியிருக்கையில் மெடிக்கலில் நாமாகவே வாங்கிச் சாப்பிடும்போது எதனால் இன்பெக்ஷன் ஆனது என்பது தெரியாமல் அந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது, அது ரத்தத்தில் கலந்து நோயை உருவாக்கிய பாக்டீரியாவை விழிப்படையச் செய்துவிடும். இதனால் என்ன ஆகும் என்றால் நோயை உருவாக்கிய பாக்டீரியாவானது அதிக சக்தியுடன் உருமாறி அதிக பாதிப்பை உடலில் ஏற்படுத்திவிடும். எனவே டாக்டர்கள் அறிவுரை இல்லாமல் ஆன்டிபயாடிக் கட்டாயம் எடுத்துக்கொள்ளக் கூடாது.

இவ்வாறு பொது மருத்துவரும், இணைப் பேராசிரியருமான ராமலிங்கம் தெரிவித்தார்.



Read in source website

கோவை: கோவையில் உள்ள நீர்நிலைகளும், குளங்களும் ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு வாழ்விடமாக இருந்து வருகின்றன. உக்குளம், கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, நரசாம்பதி, ஆச்சான்குளம், சின்னவேடம்பட்டி குளம், அக்ரஹார சாமகுளம், காளிங்கராயன் குளம் உள்ளிட்ட குளங்கள், அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள பறவைகளை கண்டறிய ஆசிய நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு (ஏடபுள்யுசி) ஆண்டுதோறும் ஜனவரியில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பாண்டுக்கான கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை கோவையில் உள்ள 29 குளங்களில் நடைபெற்றது. கோயம்புத்தூர் நேச்சர் சொசைட்டியைச் (சிஎன்எஸ்) சேர்ந்த தன்னார்வலர்கள் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். கணக்கெடுப்பின்போது நீர்நிலைகள், அதனையொட்டிய பகுதிகளில் 133 வகை பறவைகள் தென்பட்டுள்ளன. இதில், 27 வகை பறவைகள் வலசை பறவைகள் ஆகும். மேலும், மாசுபட்டுள்ள குளங்களைவிட, மாசு குறைவாக உள்ள குளங்களில் பறவைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சிஎன்எஸ் தலைவர் செல்வராஜ், மூத்த உறுப்பினர் பாவேந்தன் ஆகியோர் கூறியதாவது: பொதுவாக கணக்கெடுப்பின்போது 35 முதல் 40 வகை வலசை பறவைகள் தென்படும். நடப்பாண்டு இது 27 ஆக குறைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இதுவே குறைவாகும். நடப்பாண்டு தென்பட்ட வலசை பறவைகளில் ஊசிவால் வாத்து, செண்டு வாத்து, தட்டை அலகு வாத்து, நீலச்சிறகி, மஞ்சள் கால் கொசு உள்ளான், பச்சைகால் உள்ளான், சாம்பல் வாலாட்டி, மீசை ஆலா, ஆற்று ஆலா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

மாசுபட்ட குளங்கள்

குளங்களில் உள்ள பறவைகளின் எண்ணிக்கையை அங்கு கிடைக்கும் உணவு, நீரின் தரம், ஆழம், வாழிடம் ஆகியவை தீர்மானிக்கின்றன. கோவையில் உள்ள பல குளங்கள் கழிவுநீராலும், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றாலும் மாசுபட்டுள்ளன. இயற்கையாக இருந்த குளங்களின் கரைகள் கான்கிரீட் கட்டுமானங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், கரையோரம் இரைதேடும் பறவைகள் இரைதேட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. எப்போதும் இங்கேயே இருக்கும் (ரெசிடென்ட் பேர்ட்) பறவைகளில், கணக்கெடுப்பின்போது மொத்தம் 5,858 பறவைகள் தென்பட்டன. வலசை வந்த பறவைகளில் மொத்தம் 1,580 பறவைகள் தென்பட்டன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



Read in source website

சென்னை: தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு அவர் அனுப்பிஉள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்றின்3-வது அலை ஜனவரி மாதத்தில் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து பொது இடங்களிலும், குறிப்பாக தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலும் அதிக அளவில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அங்கு தீவிரமாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து நிறுவனங்களிலும் ஊழியர்களின் உடல் நிலையைக் கண்காணிக்க வேண்டும். ஊழியர்களுக்கோ அல்லது அவர்களது குடும்பத்தினருக்கோ காய்ச்சல், சளி, உடல்வலி, தொண்டை வலி போன்ற கரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்களைத் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பணிக்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்க வேண்டும். 99 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவானால், அவர்களை தனிமைப்படுத்தி கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

மூக்கு, வாய் ஆகியவற்றை முழுமையாக மூடியபடி ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமிக்கவோ அல்லது சிசிடிவி கேமரா மூலம்ஆய்வு செய்யவோ தொழில் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களை பணியிடங்களில் இருந்து வெளியேற்ற உத்தரவிட வேண்டும்.

பணியிட வளாகத்துக்குள் தனி நபர் இடைவெளி கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், கை கழுவுவதற்கான வசதிகள், சானிடைசர் வசதிகளை ஊழியர்களுக்கு நிறுவனங்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். அலுவலக உணவு விடுதிகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அமர்ந்து உணவருந்த வேண்டும்.

தொழில் நிறுவனங்களின் குடியிருப்புகள், போக்குவரத்து சேவைகளின்போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் இரு தவணைகளும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்தல் அவசியம்.

300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் நோய்த் தடுப்பு விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனமே சுகாதார ஆய்வு அதிகாரிகளை பணியமர்த்தலாம். கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் இணையவழியே பயிற்சிகளை வழங்கவும் நிறுவனங்கள் முன்வரவேண்டும்.

இந்த வழிகாட்டுதல்களை அனைத்து தொழில் நிறுவனங்களும் பின்பற்றுகின்றனவா என்பதை மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள் ஆய்வு செய்ய வேண்டும். விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Read in source website


கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம் என்று ஏராளமான இளம்பெண்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  இது தொடர்பாக  ஆன்லைனில் தேடுதலும் அதிகரித்துள்ளது.

சரி.. கரோனாவிலிருந்து மீண்டவர்கள் எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்? நிச்சயமாக காத்திருக்க வேண்டுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு மருத்துவ நிபுணர்கள் அளித்துள்ள பதிலில்..

ஏன் காத்திருக்க வேண்டும்?
தாய்மையடைதல் என்பது அவ்வளவு எளிதான வேலையல்ல. ஒன்பது மாதங்கள் கருவை சுமந்து ஏராளமான உடல் மாற்றங்கள், மன மாற்றங்கள், சுரப்பிகளின் மாற்றங்களை இந்தக் காலத்தில் ஒரு பெண் எதிர்கொள்ள வேண்டும். ஒன்பது மாதம் கருவைச் சுமந்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க ஒரு தாய் நிச்சயமாக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டியது அவசியம். 

ஏற்கனவே கரோனா பாதித்து, உடல் நலப் பிரச்னைகளை சந்தித்த பெண் ஒருவர், உடனடியாக தாய்மையடைய நேரிட்டால், அவர்களுக்கு ஏராளமான சிக்கல்கள் ஏற்படும் அபாயமிருக்கிறது.

காத்திருப்பது அவசியம்தானா?
கரோனாவிலிருந்து மீண்டதுமே தாய்மையடைவது தாய் - சேய் உடல்நலனில் பாதிப்பை ஏற்படுத்தலாம். கரோனா வைரஸ் என்பது ஏதோ நமது சுவாசப் பாதையை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல. அது பல உடல் உள்ளுறுப்புகளையும் தாக்கியிருக்கும். சிலருக்கு கரோனா தொற்றின் அறிகுறிகளே பல காலத்துக்கு நீடிக்கிறது. எனவே, கர்ப்பமடைதலை எதிர்கொள்ள உடல்நலம் பூரண குணமடையும் வரை காத்திருப்பது அவசியம்தான்.

தாய்மையடைதலும் ஒரு சவால்தான்
ஏற்கனவே கரோனா என்ற பெருந்தொற்றுச் சவாலை எதிர்கொண்டு மீண்டு வந்திருக்கும் பெண், உடனடியாக மனதளவிலும் உடலளவிலும் மற்றொரு சவாலை எதிர்கொள்ளத் தயாராவது சற்று கடினமானது விஷயம்தான். எனவேதான் கரோனாவிலிருந்து மீண்டு சில காலம் காத்திருக்கச் சொல்கிறார்கள்.

எத்தனை காலம்?
கடந்த காலத்தில் கரோனா பாதித்து அதிலிருந்து மீண்டுவிட்டீர்கள். உடடியான உங்களது குடும்பத்தை திட்டமிட எண்ணுகிறீர்களா? அதற்கென எந்தக் குறிப்பிட்ட கால அவகாசத்தையும் மருத்துவத் துறை நிர்ணயிக்கவில்லை. ஆனால், சில மாதங்கள் உங்கள் உடல்நலம் தேறுவதற்காகக் காத்திருக்கலாம். கரோனா அறிகுறிகள் உங்களிடமிருந்து முற்றிலும் விடைபெறும்வரை காத்திருக்கலாம். 

நீங்கள் முழு உற்சாகத்துடன் முழு உடல்நலனையும் பெற்றுவிட்டதாக உணரும்பட்சத்தில், குடும்பத்தை திட்டமிட ஆனந்தமாகத் தயாராகலாம்.
 



Read in source website


கரோனா பாதித்திருந்த போது மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளில் இருக்கும் விட்டமின் டி மற்றும் பல சத்துக்கள் நிறைந்த மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டாம், அது நீண்ட கால உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

கரோனா சிகிச்சையின்போது பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் விவரங்களை மாற்றியமைத்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது ஐசிஎம்ஆர்.

ஸ்டீரியோ வகை மருந்துகளை அளவுக்கு அதிகமாக அளிக்கும் போது பூஞ்சை தொற்று போன்ற இரண்டாம் வகை பாதிப்புகள் உருவாகிறது என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சை அளித்து வரும் டாக்டர் சௌரவ் மிட்டல் கூறுகையில், ஸ்டீரியோ வகை மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரையின்றி எடுத்துக் கொள்வது உடல்நலத்துக்கு நல்லதல்ல. ஒரு சிலருக்கு மட்டுமே மருத்துவ பரிந்துரையின்படி ஸ்டீரியோ வகை மருந்துகள் கொடுக்கப்படும். அனைவருக்கும் அது பொருந்தாது என்கிறார்.

கரோனா சிகிச்சையில் ஸ்டீரியோ வகை மருந்துகள் பலனளிப்பதற்கு இதுவரை எந்த ஆதாரப்பூர்வமும் கிடைக்கவில்லை. கரோனா இரண்டு அலைகளின்போதும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு தற்போது நுரையீரல் பிரச்னை, நரம்பியல் பிரச்னை, இதய மற்றும் மனநலப் பிரச்னைகள் ஏற்படுவதைக் காண முடிகிறது என்கிறார்.

கரோனாவிலிருந்து மீண்ட பலருக்கும் மயக்கம், நெஞ்சு வலி, இதய படப்படப்பு, தலைச்சுற்றல், இதய பாதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி, சிறுநீரக தொற்று போன்ற பாதிப்புகள் உருவாகின்றன என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

விட்டமின் டி மாத்திரையை அடிக்கடி எடுத்துக் கொள்வது குறித்து கேட்டதற்கு, டாக்டர் ஆனந்த் மோகன் அளித்த பதிலில், இவையெல்லாம் மிகச் சிறந்த மருந்துகளாக மக்கள் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இவை கரோனாவை கையாளும் சிகிச்சையில் மிகப்பெரிய பங்களிப்பை செய்யவில்லை என்று தெரிவிக்கிறார்.
 



Read in source website


புது தில்லி: கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு நிபுணா் குழு பரிந்துரை செய்துள்ளது.

கரோனாவுக்கு எதிரான கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் நாடு முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கோவேக்ஸின் தடுப்பூசியை ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும், கோவிஷீல்ட் தடுப்பூசியை புணேயில் உள்ள சீரம் நிறுவனமும் தயாரித்து வருகின்றன. இவ்விரு தடுப்பூசிகளையும் நிபந்தனைகளுக்கு உள்பட்டு, அவசரகாலத்தில் மட்டும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தை விற்பனைக்கு தங்கள் தடுப்பூசிகளுக்கு அனுமதி கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்தில் (டிசிஜிஐ) இரு நிறுவனங்களும் விண்ணப்பித்தன. டிசிஜிஐ அந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்தது. அதைத் தொடா்ந்து, அவ்விரு தடுப்பூசிகளையும் நிபந்தனைகளுக்கு உள்பட்டு சந்தை விற்பனைக்கு அனுமதிக்கலாம் என்று நிபுணா் குழு பரிந்துரை செய்தது.

அந்த நிபுணா் குழுவின் பரிந்துரை அறிக்கை, இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த இயக்குநரகமே இறுதி முடிவை எடுக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Read in source website


புது தில்லி: தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) உருவாக்கப்பட்ட தினத்தை (ஜன. 19) முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ட்விட்டரில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

என்டிஆா்எஃப் உருவாக்கப்பட்ட தினத்தில் அவா்களின் கடின உழைப்பை பாராட்டுகிறேன். மிகவும் சவாலான சூழ்நிலைகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பலவற்றில் அவா்கள் முன்னணியில் இருந்துள்ளனா். என்டிஆா்எஃப்-இன் துணிவும் செயல்பாடுகளும் மிகவும் ஊக்கமளிப்பவை. அவா்களின் எதிா்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.

பேரிடா் நிா்வாகம் என்பது அரசுகளுக்கும், கொள்கை வகுப்போருக்கும் மிகவும் முக்கியமான விஷயமாகும். நடைமுறை அணுகுமுறையோடு, பேரிடா் மேலாண்மைப் பிரிவினா் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த பின், பேரிடரை தாக்குப் பிடிக்கும் அடிப்படைக் கட்டமைப்பு குறித்து நாங்கள் சிந்திக்கவும், இந்த விஷயம் தொடா்பாக ஆராய்ச்சியில் கவனம் செலுத்தவும் வேண்டியுள்ளது.

‘பேரிடரை தாக்குப் பிடிக்கும் அடிப்படை கட்டமைப்பு ஒருங்கிணைப்பை’ வடிவமைக்கும் முயற்சியை இந்தியா மேற்கொண்டுள்ளது. நமது என்டிஆா்எஃப் அணிகளின் திறனை மேலும் கூா்மைப்படுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதனால் எந்தவொரு சவாலான காலத்திலும் அதிகபட்ச உயிா்களையும், உடைமைகளையும் நாம் பாதுகாக்க முடியும் என்று கூறியுள்ளாா்.



Read in source website


புது தில்லி: இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ. 1,500 கோடி முதலீடு செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம், 4,000 மெகாவாட் வரையில் கூடுதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறனுக்கான கடன் தேவை நிறைவு செய்யப்படும்.

பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை விளக்கினாா். அவா் கூறியதாவது:

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.1,500 கோடி முதலீடு செய்வதால் அந்த நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு ரூ. 12,000 கோடி வரையில் கடன் வழங்க முடியும். ஆண்டுதோறும் சுமாா் 10,200 வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும், ஆண்டுக்கு சுமாா் 7.49 மில்லியன் டன் கரியமில வாயு உமிழ்வைக் குறைக்கவும் இந்த முதலீடு உதவும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்திய அரசின் இலக்குகளை எட்டுவதற்குப் பங்காற்றும் வகையில் அத்துறையின் நிகர மதிப்பை அதிகரித்து, கூடுதல் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி திட்டங்களுக்கு கூடுதல் நிதி வசதி ஏற்படும்.

34 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்நுட்ப-வணிக நிபுணத்துவம் கொண்ட இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான நிதியளிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கடன் வழங்கிய வங்கிகளுக்கு ஊக்கத் தொகை: 2020-இல் கரோனா பாதிப்பு எதிரொலியால் கடன்களைச் திருப்பி செலுத்த 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்காக பாரத ஸ்டேட் வங்கிக்கு கூடுதலாக ரூ.973.74 கோடியை ஊக்கத் தொகையாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

குறிப்பிட்ட சில கடன் கணக்குகளின் கீழ் (01.03.2020 முதல் 31.08.2020 வரை) வழங்கப்பட்ட கடன்களுக்கு கூட்டு வட்டிக்கும், சாதா வட்டிக்கும் இடையேயான வித்தியாசத்தை ஈடுசெய்ய கடன் வழங்கிய வங்கிக்கு ஊக்கத்தொகையாக 6 மாதங்களுக்கு இந்தத் தொகையை ஒதுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

கரோனா பெருந்தொற்று பாதிப்பால் சிறு கடன்தாரா்கள் மீண்டெழ உதவும் வகையில், அவா்கள் தவணை தவறிய கடன் சலுகையை பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைத்துத் தரப்பினருக்கும் சமமான முறையில் உதவும் விதமாக இந்த ஊக்கத்தொகை பாரத ஸ்டேட் வங்கி மூலம் வழங்கப்படுகிறது. இதன்படி ரூ.2 கோடி வரையிலான குறு, சிறு, நடுத்தர தொழில் கடன்கள், கல்விக் கடன்கள், வீட்டுவசதிக் கடன்கள், நுகா்வோா் பயன்பாட்டு பொருள் கடன்கள், கடன் அட்டை (கிரெடிட் காா்டு) தவணைகள், வாகனக் கடன்கள், தனிநபா் கடன்கள், நுகா்வுக் கடன்கள் ஆகியவை இந்தக் கடன் சலுகையில் இடம் பெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்தத் திட்டத்துக்காக 2020-21 பட்ஜெட்டில் ரூ.5,500 கோடி பாரத ஸ்டேட் வங்கிக்கு வழங்கப்பட்டது. எனினும், கடன் வழங்கிய வங்கிகளிடம் இருந்து இந்தத் தொகை ரூ.6,473.74 கோடியாக தணிக்கைக்கு பிறகு குறிப்பிடப்பட்டதால் மீதமுள்ள ரூ.973.74 கோடியை ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.



Read in source website


புது தில்லி: இந்தியாவில் சா்வதேச விமானப் போக்குவரத்து மீதான தடை பிப். 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் புதன்கிழமை அறிவித்தது.

நாட்டில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதிமுதல் அட்டவணைப்படுத்தப்பட்ட சா்வதேச பயணிகள் விமான சேவைக்குத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், 2020, ஜூலைமுதல் சிறப்பு ஏற்பாடுகளுடன் சுமாா் 40 நாடுகளுக்கு சா்வதேச பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், சா்வதேச விமான சேவைக்கான தடை மேலும் நீட்டிக்கப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது. இதுகுறித்து டிஜிசிஏ புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்:

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கும் வரும் அட்டவணைப்படுத்தப்பட்ட சா்வதேச பயணிகள் விமான சேவை மீதான தடையை பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் சா்வதேச சரக்கு விமானங்கள், டிஜிசிஏ-யால் அனுமதிக்கப்படும் விமானங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. இதுமட்டுமன்றி சிறப்பு ஏற்பாடுகளுடன் இயங்கும் விமான சேவையும் பாதிக்கப்படாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அட்டவணைப்படுத்தப்பட்ட சா்வதேச பயணிகள் விமான சேவை கடந்த ஆண்டு டிச. 15-ஆம் தேதிமுதல் மீண்டும் செயல்படுவதாக இருந்தது. இந்நிலையில், நாட்டில் உருமாறிய ஒமைக்ரான் வகை கரோனா பரவத் தொடங்கியதால், விமான சேவையை தொடங்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடமும், டிஜிசிஏ-விடமும் பிரதமா் மோடி கேட்டுக்கொண்டாா். இதனை ஏற்று சா்வதேச பயணிகள் விமான சேவையை மீண்டும் தொடங்கும் முடிவை டிஜிசிஏ நிறுத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website


புது தில்லி: மத்திய அமைச்சகங்கள் மேற்கொள்ளும் செலவினங்கள் நிா்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் இருக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது: அமைச்சகங்கள் மற்றும் துறைகள் அனைத்தும் தாங்கள் மேற்கொள்ளும் செலவினங்களை அங்கீகரிக்கப்பட்ட திருத்தப்பட்ட மதிப்பீட்டு உச்சரவரம்புக்குள் இருக்குமாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். நிதி நெருக்கடி மிகுந்த இந்தக் காலகட்டத்தில் இந்த நடவடிக்கை மிக அத்தியாவசியமானதாகும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2022-23-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி சமா்ப்பிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில் செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டும் என நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.



Read in source website

ஜகர்த்தா: இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவை போர்னியோ தீவுக்கு மாற்றும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிய தலைநகருக்கு நுசாந்தரா எனப் பெயர் வைக்கவும் இந்தோனேசிய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த சில வருடங்களாக இந்தோனேசியத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வந்த கோரிக்கை தற்போது நிறைவேறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் தலைநகரை மாற்ற நாடாளுமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து புதிய தலைநகரை மேம்படுத்துவதற்கான பணியை இந்தோனேசியா தொடர்ந்துள்ளது.

தேசிய திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு முகமையின் தரவுகளின்படி, புதிய தலைநகருக்கான மொத்த நிலப்பரப்பு சுமார் 256,143 ஹெக்டேர் (சுமார் 2,561 சதுர கிலோ மீட்டர்) என அளவிடப்பட்டுள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய தீவான போர்னியோவின் பெரும்பகுதியை இந்தோனேசியா கொண்டுள்ளது. மலேசியா மற்றும் புருனே ஆகிய நாடுகள் போர்னே தீவின் வடக்குப் பகுதியின் சில பகுதிகளைக் கொண்டுள்ளன.

ஏன் தலைநகரை மாற்றுகிறது இந்தோனேசியா?

தலைநகர் ஜகர்த்தாவில் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருவது இந்தோனேசிய அரசுக்குத் தொடர்ந்து பிரச்சினையாகவே இருந்து வந்தது. மேலும் காலநிலை மாற்றம் காரணமாகப் பல்வேறு இயற்கை பேரிடர்களால் கடும் பாதிப்பை ஜகர்த்தா சந்தித்து வருகிறது. மக்கள்தொகை அதிகரிப்பால் வாகனப் பெருக்கமும், காற்று மாசும் ஜகர்த்தாவில் அதிகரித்து வருகின்றன.

2019ஆம் ஆண்டே ஜகர்த்தாவிலிருந்து தலைநகரை மாற்றும் முடிவை இந்தோனேசிய அரசு எடுத்துவிட்டது. கரோனா காரணமாக இந்த முடிவு தள்ளிவைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

மாட்ரிட்: உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சாடர்னினோ டிலா ப்யூன்டே நேற்று முன்தினம் தனது 112 -வது வயதில் காலமானார்.

ஸ்பெயின் நாட்டின் வடமேற்கில் உள்ள லியோன் நகரைச் சேர்ந்தவர் சாடர்னினோ டிலா ப்யூன்டே. இவரை உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது.

இவர் லியோன் நகருக்கு அருகில் உள்ள பியூன்டே காஸ்ட்ரோ என்ற இடத்தில் கடந்த 1909-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி பிறந்தார். ஸ்பெயினில் கடந்த 1918-ல் ஸ்பானிஷ் ஃப்ளூ என்ற பெருந்தொற்று பரவியபோது அதிலிருந்து உயிர் தப்பினார்.

தனது 13-வது வயதில் காலணிதொழிற்சாலை ஒன்றில் பணியாற்றத் தொடங்கிய ப்யூன்டே பிறகு சொந்தமாக காலணி வியாபாரத்தில் ஈடுபட்டார்.

ப்யூன்டே மற்றும் இவரது மனைவி அன்டோனியாவுக்கு 8 குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் மூலம் 14 பேரக்குழந்தைகள் மற்றும் 22 கொள்ளு பேரக் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ப்யூன்டே நேற்று முன்தினம் லியோன் நகரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவரதுஉடல் உள்ளூர் கல்லறையில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இத்தகவலை ஸ்பெயின் அரசின் இஎப்இ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



Read in source website

புதுடெல்லி: ரிலையன்ஸ் நிறுவனத்தின் அங்கமான ஜியோ நிறுவனம் நிரந்தர இணைப்பு மூலமான பிராட்பேண்ட் சேவை அளிப்பதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஜியோ நிறுவனம் பிக்ஸட் பிராட்பேண்ட் சேவையை 2019 செப்டம்பரில் தொடங்கியது. 2 ஆண்டுகளே ஆன நிலையில் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறு வனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறு வனத்தின் வாடிக்கையாளர் எண் ணிக்கையை விட கூடுதலான எண்ணிக்கையிலான சேவையை வழங்குகிறது.

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட மாதாந்திர பயனாளர்களின் அறிக்கையில், அக்டோபரில் 41.60 லட்சமாக இருந்த ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை நவம்பரில் 43.40 லட்சமாக உயர்ந் துள்ளது.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அக்டோபரில் 47.20 லட்சமாக இருந்தது. இது நவம்பர் மாதத்தில் 42 லட்சமாக சரிந்துவிட்டது.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் வாடிக்கையாளர் எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் 40 லட்சமாக உள்ளது.

2019-ம் ஆண்டு பிஎஸ்என்எல் வசமிருந்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 86 லட்சமாகும். 2 ஆண்டுகளில் அதாவது 2021-ல் வாடிக்கையாளர் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் வயர் மூலமான பிராட்பேண்ட் சேவை 70% அதிகரித்துள்ளது. 2021 நவம்பரில் 40 லட்சம் வாடிக்கையாளர்களை இது பெற்றிருந்தது. இதே அளவில் இது வளரும்பட்சத்தில் விரைவிலேயே பிஎஸ்என்எல் நிறுவனத்தை பார்தி ஏர்டெல்லும் விஞ்சிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Read in source website

இந்தியப் பொருளாதாரம் வளா்ச்சி அடைகிறது என்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. கொள்ளை நோய்த்தொற்றுக் காலத்துக்கு முந்தைய நிலையை மாா்ச் மாதத்திற்குள் கடந்து மேலும் வளா்ச்சி அடையக்கூடும் என்று நிபுணா்கள் கருதுகிறாா்கள். கடந்த நிதியாண்டில் (2020 - 21) ஜிடிபி வளா்ச்சி 7.3%-ஆக சுருங்கியது என்றால், நடப்பு நிதியாண்டில் (2021 - 22) அது 9.2%-ஆக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இப்போதைய நிலையில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜொ்மனி, பிரிட்டனுக்கு அடுத்தபடியாக உலகின் ஆறாவது பொருளாதாரமாக இந்தியா காணப்படுகிறது. சா்வதேச நிதியத்தின் கருத்துப்படி, 2022-இல் அதிவிரைவாக வளரும் ஆசியப் பொருளாதாரம் இந்தியாவாக இருக்கக்கூடும். ‘ஜெப்ரீஸ்’ என்கிற ஆய்வு நிறுவனம், ஆசியாவில் இரட்டை இலக்க வளா்ச்சி அடையும் ஒரே நாடு இந்தியாவாக இருக்கக்கூடும் என்கிறது. 2030-க்குள் ஜப்பானை முந்திக்கொண்டு ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உயரக்கூடும் என்கிறது இன்னொரு ஆய்வு.

இவையெல்லாம் மகிழ்ச்சியும், உற்சாகமும் தரும் செய்திகளாக இருந்தாலும், சில பின்னடைவுகளும், தடைகளும் நம்மை யோசிக்க வைக்கின்றன. மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பதாகத் தெரியவில்லை. சேவைத்துறையும் எதிா்பாா்த்த வளா்ச்சி காணவில்லை. ஒமைக்ரான் தொற்றுப் பரவல், வாங்கும் சக்தியை மட்டுமல்ல தொழில்துறை உற்பத்தியையும், சேவைத்துறையையும், வேலைவாய்ப்பையும் பாதிக்கக்கூடும் என்கிற அச்சமும் நிலவுகிறது.

சா்வதேச வா்த்தகக் கணக்குத் தணிக்கை நிறுவனமான ‘மாா்கன் ஸ்டேன்லி’, உலகின் பெரிய பொருளாதாரங்கள் எதிா்கொள்ளப்போகும் சவாலாக விலைவாசி உயா்வு இருக்கும் என்று எச்சரிக்கிறது. ‘சப்ளை செயின்’ எனக் கூறப்படும் உதிரிபாகங்கள் உற்பத்தியும், அவை தேவைக்கேற்ப கிடைப்பதும் இல்லாமல் போனால் விலைவாசி உயா்வுடன் இணைந்து பொருளாதாரங்களைக் கடுமையாக பாதிக்கக்கூடும்.

விலைவாசி உயா்வு சா்வதேச பிரச்னை என்று நாம் அமைதி கொள்ள முடியாது. 2014-இல் முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது உணவுப் பொருள்களின் விலைவாசி உயா்வு என்பதை மறந்துவிடக் கூடாது. அதுபோன்ற சூழல் இப்போது இந்தியாவில் மீண்டும் உருவாகி வருவதைப் பாா்க்க முடிகிறது. ஏனைய நுகா் பொருள்களின் விலைவாசி உயா்வு அதிகரிக்கவில்லை என்றாலும், காய்கறிகள், உணவுப் பொருள்களின் விலை உயா்வு சாமானிய மக்களை கடுமையாக பாதிப்பதால் இதில் அரசு உடனடியாக கவனம் செலுத்தியாக வேண்டும்.

கொள்ளை நோய்த்தொற்றுக்கு முந்தைய நிலையை நோக்கி பொருளாதார நடவடிக்கைகள் மெதுவாக நகா்ந்து கொண்டிருக்கின்றன. 2021 - 22 நிதியாண்டின் நடப்புக் காலாண்டில் ஏற்றுமதி - இறக்குமதிக்கு இடையேயான ‘பேலன்ஸ் ஆஃப் பேமெண்ட்’ எனப்படும் அந்நியச் செலாவணி இடைவெளி கடுமையான அழுத்தத்தை எதிா்கொள்ளக் கூடும்.

நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலேயே நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஜிடிபியில் 13%-ஐ (9.6 பில்லியன் டாலா்) எட்டியது. நடப்புக் கணக்கு பற்றாக்குறையும், அந்நிய நேரடி முதலீடும் மிக முக்கியமானவை. அந்நிய நேரடி முதலீடும் குறைந்து, பற்றாக்குறையும் அதிகரிக்கும்போது பொருளாதார வளா்ச்சி பின்னடைவை எதிா்கொள்ளும்.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறைக்கு மிக முக்கியமான காரணம், கச்சா விலை அதிகரிப்பால் ஏற்பட்ட வா்த்தகப் பற்றாக்குறை. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நடப்புக் கணக்குப் பற்றாக்குறை காணப்படுகிறது என்றாலும், அந்நிய முதலீடுகளில் காணப்படும் நிச்சயமற்ற தன்மை, ஏற்றுமதி - இறக்குமதிக்கு இடையே காணப்படும் ‘பேலன்ஸ் ஆஃப் பேமெண்ட்’ அளவை கடுமையாக பாதிக்கும்.

நுகா்வு சக்தி அதிகரிப்பால் இறக்குமதியின் அளவு அதிகரித்திருக்கிறது. போதாக்குறைக்கு கச்சா எண்ணெய் விலை உயா்வால் அதை இறக்குமதி செய்வதற்கான அந்நியச் செலாவணி தேவையும் அதிகரிக்கிறது. இந்த நிலையில், டிசம்பா் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகமாகக் காணப்பட்டது.

நடப்பு நான்காவது காலாண்டிலும் இதே நிலை தொடரக்கூடும். உலகின் ஏனைய பொருளாதாரங்களும் நுகா்வோா் தேவையும், விலைவாசியும் இப்போதுபோலவே அதிகரித்து வா்த்தகப் பற்றாக்குறையைப் பாதிக்கும் என்று கவலை கொள்கின்றன.

வா்த்தகப் பற்றாக்குறை இப்போதுபோல தொடா்ந்தால், அடுத்த நிதியாண்டும் பல அழுத்தங்களைத் தரக்கூடும். ஒமைக்ரான் உருமாற்றப் பரவலால் தொடரும் உற்பத்திக்கான உதிரி பாகங்களின் தட்டுப்பாடும், தங்கம், வெள்ளி போன்ற பொருள்களின் விலை உயா்வும் வா்த்தகப் பற்றாக்குறையை மேலும் கடுமையாக்குகின்றன.

தங்கத்தின் இறக்குமதிக்கான தேவை கடுமையாக அதிகரித்திருக்கிறது. தங்களது சேமிப்பை தங்கத்தில் முதலீடு செய்யும் வேகம் மக்கள் மத்தியில் அதிகரித்திருப்பதும், கறுப்புப் பணம் வைத்திருப்பதுபோய் தங்கமாக பதுக்கி வைக்கும் போக்கு அதிகரித்திருப்பதும் இதற்கு முக்கியக் காரணங்கள். ஒருபுறம் தங்கத்தின் இறக்குமதிக்கான அந்நியச் செலாவணி தேவை அதிகரிக்கும்போது, இன்னொருபுறம் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த அந்நிய முதலீடுகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன.

‘பேலன்ஸ் ஆஃப் பேமெண்ட்’, வா்த்தகப் பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி போன்ற தீா்வுகாணக்கூடிய இடைக்கால பிரச்னைகளை சாதுரியமாக எதிா்கொள்வதுதான் நமது இப்போதைய சவால்.



Read in source website

கரும்பு விவசாயிகளுக்கு மானியங்கள் அளிப்பது தொடர்பாகக் கடந்த மாதம் உலக வர்த்தக நிறுவனத்தின் பூசல் தீர்வுக் குழுவால் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது. வரிவிதிப்புகள் மற்றும் வர்த்தகம் தொடர்பான பொது உடன்பாட்டுக்கு (காட்) மாறாக, இந்தியா தனது கரும்பு விவசாயிகளுக்கு மானியங்களைத் தொடர்ந்து அளித்துவருகிறது என்று ஆஸ்திரேலியா, பிரேசில், குவாட்டமாலா ஆகிய நாடுகள் குற்றம்சாட்டுகின்றன. உலக வர்த்தக நிறுவன விதிமுறைகளின்படி, கரும்பு உற்பத்தியின் மொத்த மதிப்பில் 10%-க்கு மேல் மானியங்கள் வழங்கப்படக் கூடாது.

ஆனால், இந்தியாவில் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி மானியங்கள் இந்த அளவைக்காட்டிலும் அதிகமாக இருப்பதாகவும் அதனால் இந்தியாவின் கரும்பு உற்பத்தி அதிகரித்து சர்வதேசச் சந்தையில் தாங்கள் விலைக் குறைவைச் சந்திப்பதாகவும் இந்நாடுகள் 2019-ல் பூசல் தீர்வுக் குழுவின் முன்னால் புகார் தெரிவித்திருந்தன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இது தொடர்பில் உலக வர்த்தக நிறுவனம் அளித்துள்ள தீர்ப்பானது, இந்தியக் கரும்பு விவசாயிகளுக்கு எதிரானதாக அமைந்துள்ளது. உற்பத்தி, கையிருப்பு, சந்தைப்படுத்துதல், போக்குவரத்து என ஒவ்வொரு நிலையிலும் கரும்பு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுவரும் மானியங்களை 120 நாட்களுக்குள் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று உலக வர்த்தக நிறுவனம் இந்தியாவுக்குப் பரிந்துரைத்துள்ளது.

கரும்பு விவசாயிகளை ஆதரிக்கும் உள்நாட்டுத் திட்டங்களைப் பற்றிய தவறான தகவல்களின் அடிப்படையில் பூசல் தீர்வுக் குழு இந்த முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்துள்ள இந்தியா, தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் மேல்முறையீடு செய்துள்ளது. உலகளவில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது மிகப் பெரிய கரும்புச் சர்க்கரை உற்பத்தியாளராக இந்தியா விளங்கிவருகிறது. இந்தியாவில் 5 கோடிக்கும் மேலானவர்கள் கரும்பு விவசாயத்தை மட்டுமே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

கரும்பு விவசாயிகளுக்கு நேரடியாக எந்த மானியமும் அளிக்கப்படவில்லை என்பதால், சர்வதேச வர்த்தக உடன்படிக்கையின் விதிமுறைகளை மீறியதாகக் கொள்ளக் கூடாது என்பது இந்தியாவின் வாதம். ஆனால், மத்திய - மாநில அரசுகள் கரும்பு விவசாயிகளிடமிருந்து கரும்பாலைகள் வாங்கும் கரும்புக்கு நியாயமான விலையை நிர்ணயிப்பதையும்கூட மற்ற கரும்பு உற்பத்தி நாடுகள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையைக் காட்டிலும் சற்றுக் கூடுதலாக மாநில அரசுகள் தங்களது சூழல்களை அனுசரித்து நிர்ணயித்துக்கொள்கின்றன.

நியாயமான விலை நிர்ணயங்களால் கரும்பு உற்பத்தி அதிகரித்தாலும் அதன் சந்தைத் தேவை நிலையாக இருப்பதால், சர்க்கரை விலை குறைந்து கரும்பாலைகள் கடன் சுமைக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. அதைத் தவிர்க்க எத்தனால் தயாரிப்பை அரசு ஊக்குவிப்பதோடு கரும்பாலைகளுக்குக் கடனுதவிகளைச் செய்து ஏற்றுமதியையும் ஊக்குவிக்கிறது. இந்நிலையில், உலக வர்த்தக நிறுவனத்தின் மேல்முறையீட்டு அமைப்பிலும் இந்தியாவின் நியாயங்கள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், தற்போது அளிக்கப்பட்டுவரும் கரும்பு மானியங்களைக் குறைத்துக்கொள்ள நேரலாம். தற்போதைக்கு, உறுப்பு நாடுகளுக்கு இடையிலான கருத்து முரண்பாடுகளால் மேல்முறையீட்டு அமைப்பு இயங்கவில்லை என்பதே தற்காலிக ஆறுதல்.



Read in source website

அண்மையில் குஜராத்தில் நடைபெற்ற இயற்கை விவசாயம் தொடர்பான மாநாட்டில் பேசிய பிரதமர், விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாற வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன் ரசாயன ஆய்வகங்களிலிருந்து விவசாயத்தை இயற்கை ஆய்வகத்துக்கு அறிவியல் சார்ந்து கொண்டுசெல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், ரசாயன உரங்கள் பசுமைப் புரட்சியின் வாயிலாக உணவு தானிய உற்பத்தியில் முக்கியப் பங்காற்றியதை நினைவுகூர்ந்த பிரதமர், தற்போது அத்தகைய ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தவிர்த்து, அதற்கு மாற்றாக இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார். இயற்கை விவசாயத்தில் மாடுகளின் சாணம், கோமியம் போன்றவற்றை உரமாகவும் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறியதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளுக்கு ஆதரவாளரான வேளாண் விஞ்ஞானி நார்மன் போர்லாக் எழுதிய கடிதத்துக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி எழுதிய பதில் கடிதத்தை இங்கே நினைவுகூரலாம். “பசுமைப் புரட்சி மூலம் அதிக அளவிலான உரம், போதிய அளவிலான பயிர்ப் பாதுகாப்பு மேற்கொண்ட காரணத்தால் உற்பத்தி பெருகியுள்ளது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

எனினும் ரசாயனப் பொருட்களைக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தும்போது, சில பக்கவிளைவுகளும் துன்பங்களும் ஏற்படுகின்றன. அதற்கான சான்றுகளும் அண்மையில் வெளியாகியுள்ளன. மேலும், டீ.டீ.டி. போன்ற பூச்சிக்கொல்லிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது பற்றி போதிய அளவிலான விவாதம் நடைபெற வேண்டும். அதுமட்டுமின்றி பொருளாதாரத் தேவைகள், லாபம் போன்றவற்றுடன் சமூகத்தில் ஏற்படும் தீய விளைவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

“இயற்கை வளங்களை அழித்து, அதன் பகுதிகளைச் சுயநலத்துக்காக ஆக்கிரமித்துவருவது உலகெங்கிலும் வேகமாக நடைபெற்றுவருகிறது. இது பெரும் கவலையை உண்டாக்குகிறது. பொருளாதாரம் துரிதமாக வளர வேண்டும் என்பதற்காகச் சூழலியல் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது. ரசாயனப் பொருட்களைப் பரிந்துரை செய்த அளவில் பயன்படுத்தி, விளைச்சலைப் பெருக்க வேண்டும். தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை இயற்கைச் சூழல் பாதிப்படையாத வகையில் கட்டுப்படுத்த வேண்டும்” என்று இந்திரா காந்தி முடிக்கிறார். சுற்றுச்சூழல், இயற்கை தொடர்பான இந்திரா காந்தியின் புரிதல் என்பது விசாலமானது. அது ஏதேனும் ஒரு வகையில் பிரதமர் மோடியின் தற்போதைய கூற்றுடன் ஒத்துப்போகிறது.

உண்மையாகவே இயற்கை வேளாண்மை என்று வரும்போது இடுபொருள் செலவு என்பது குறைவாகவே இருக்கும். மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுபாஷ் பாலேக்கர் 1990-ம் ஆண்டு முதல் ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை’ பற்றி விவசாயிகளிடையே கலந்துரையாடல் மேற்கொண்டுவருகிறார். ஒரே ஒரு நாட்டுமாட்டை வைத்து 30ஏக்கர் அளவில் இயற்கை விவசாயம் செய்யலாம் என்றும் ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம், பீஜாமிர்தம் போன்றவற்றைத் தயாரித்து, இடுபொருள்களாகப் பயன்படுத்தலாம் என்றும், இதன்மூலம் விவசாயிகளின் பெரும் இடுபொருள் செலவு குறையும் என்றும் கூறிவருகிறார். பொருளாதார ஆய்வறிக்கை ஒன்று 1.6 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இயற்கை வேளாண்மையை மேற்கொண்டுவருவதாகவும் குறிப்பாக கர்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்கள் இதில் முனைப்புக் காட்டிவருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆயினும் ரசாயன வேளாண்மையைக் காட்டிலும் இயற்கை வேளாண்மை மூலம் அனைத்து வகையான பயிர்களையும் சாகுபடி செய்து, அளப்பரிய மகசூல் பெற்றுவிட முடியுமா என்பது கேள்விக்குறிதான். இதற்கிடையில் 17-வது மக்களவையில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது, நிதி அமைச்சர் ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை’யை வளர்த்தெடுக்கும் வகையில் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தேசிய வேளாண் அறிவியல் கழகம், ‘போதிய அளவிலான ஆராய்ச்சியும் தரவுகளும் இன்றி இத்தகைய வேளாண்முறையைப் பிரகனப்படுத்தக் கூடாது’ என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியது.

சரி, ரசாயன வேளாண்மை மூலம் இந்தியாவில் மண்வளம் உள்ளிட்டவற்றுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றால் ஆம் என்றுதான் கூற வேண்டும். கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் 4,500 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் அரசின் முந்திரித் தோட்டங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் எண்டோசல்பான் எனும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டுவந்தது. நாட்கள் செல்லச்செல்ல அங்குள்ள சுற்றுச்சூழல் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளானது. காற்றில் ஊடுருவிய எண்டோசல்பான் அங்குள்ள நீர்நிலைகள், கால்நடைகள், வனவிலங்குகள் இறுதியாக மனிதர்கள் என இயற்கைச் சூழலையும் அனைத்து உயிரினங்களையும் பெரிய அளவில் பாதித்தது. பல கட்டப் போராட்டங்களுக்குப் பின் எண்டோசல்பான் முற்றிலும் தடைசெய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தருவதற்குக் கேரள அரசு முன்வந்தது.

மற்றொரு புறம், இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் மாம்பழம், திராட்சை, மிளகாய், புளி போன்றவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் வேதிப்பொருள்கள் படிந்திருப்பதாகக் கூறி அமெரிக்கா, வியட்நாம், ஐரோப்பிய நாடுகள், சவுதி அரேபியா, ஜப்பான், பூட்டான் போன்ற நாடுகள் இவற்றை அங்கே இறக்குமதிசெய்வதைத் தடைசெய்யும் நிலையும் உண்டானது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, வேதிப்பொருள்களைப் பரிந்துரை செய்த அளவில் மட்டுமே விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, மற்ற உரங்களைக் காட்டிலும் யூரியா உரத்துக்கு அதிக அளவிலான மானியம் தரப்படுகிறது. அதனால் பல விவசாயிகளும் வரைமுறையின்றி யூரியாவைப் பயன்படுத்திவருகின்றனர். மண்ணில் தேவையான அளவு நுண்ணுயிரிகள் இல்லையென்றால், அங்கு இடப்படும் உரங்களால் எவ்விதப் பயனும் இருக்காது என்பதை விவசாயிகளும் அரசும் உணர வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் உரப் பயன்பாட்டை வகுத்துக்கொள்ள வேண்டும்.

அதேநேரம், ரசாயன வேளாண்மையைப் பற்றி முற்றிலும் எதிர்மறையான பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. பல்வேறு வகையிலான ஆராய்ச்சிகளின் விளைவாகவே உர அளவு, பூச்சிக்கொல்லியின் வீரியம் போன்றவை வேளாண் விஞ்ஞானிகளால் பரிந்துரைக்கப்படுகிறது. இயற்கை எரு, மக்கிய தொழு எரு என்று எதனை மண்ணில் இட்டாலும் பயிர்கள் அவற்றை ரசாயன வடிவில்தான் எடுத்துக்கொள்கின்றன.

வளரும் மக்கள்தொகைக்குப் போதுமான அளவிலான உற்பத்தியை இயற்கை வேளாண்மை மூலம் தர முடியாது. நம் நாட்டில் பெரும்பாலானோர் சிறு-குறு விவசாயிகள்தான். அவர்களின் பிரதான வாழ்வே விவசாயத்தை நம்பித்தான் இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் பயிர் ரகம், விதை, உரம், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி என அனைத்திலும் தொழில்நுட்பம் புகுந்த காரணத்தால்தான் வருமானமும் சொல்லிக் கொள்ளும் வகையில் வளர்ந்தது. எனவே, இங்கு இரண்டில் எது சிறந்தது என்று விவாதிப்பதைக் காட்டிலும், விவேகத்துடன் ரசாயனம் கலந்த இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடிப்பதே சாலச் சிறந்ததாகும். அதுவே காலத்தின் தேவையும் கூட!

- செ.சரத், வேளாண் ஆராய்ச்சியாளர், ‘ஏர்நாடி’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: saraths1995@gmail.com



Read in source website

குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறுவதற்குத் தமிழ்நாட்டு ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது விவாதப் பொருளாகியிருக்கிறது. தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கவனக் குறைவு என்று சொல்லி யாரும் கடந்துவிட முடியாது. ஆனால், பிரச்சினையை வெறுமனே ‘குடியரசு தின அணிவகுப்பில் இடம் கிடைக்காதது’ என்று சுருக்கிப் பார்த்துவிடக் கூடாது. அதையும் தாண்டி ஆழமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் ஒரு வடஇந்தியர் சென்றுவருவார் என்றால் காந்தி சாலை, சர்தார் பட்டேல் சாலை, நேரு சாலை, நேதாஜி சாலை, பகத்சிங் தெரு, ஆசாத் தெரு, திலகர் திடல் போன்றவற்றைச் சகஜமாக அவரால் காண இயலும். அவருக்கு இதில் ஆச்சரியம் ஏதும் இருக்காது. ஏனெனில், அவருடைய பொதுப் புத்தியில் இவர்கள் மட்டும்தான் இந்தியத் தலைவர்கள், இவர்கள் மட்டும்தான் இந்திய விடுதலைக்காகப் பாடுபட்டவர்கள் என்றே உறைந்துபோயிருக்கும். ஆனால், வடஇந்தியர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இந்தத் தலைவர்களின் பெயர்களைச் சூட்டியதைவிட தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இவர்களின் பெயர்களைச் சூட்டியதுதான் அதிகம்.

என் தந்தையைப் பெற்றவரும் படிப்பறிவற்றவருமான என் ஆத்தா, தன் தங்கைப் பிள்ளைகளுக்கு ‘காந்தி’, ‘போஸ்’ என்ற பெயர் வைத்தார். மேலும், எத்தனை நேருகள், எத்தனை பகத் சிங்குகள், எத்தனை சந்திரசேகர் ஆசாதுகள், எத்தனை ஜெயப்ரகாஷ் நாராயண்கள் நம் தமிழ்நாட்டில்? ரணதிவே, பூபேஷ், டாங்கே, ஜோதிபாசு என்று வடக்கின் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பெயர்களையும் தஞ்சைப் பகுதிகளில் சகஜமாகக் காணலாம். ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை எத்தனை வடஇந்தியர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வைத்திருக்கிறார்கள்? தமிழ்நாட்டுத் தலைவர்கள் பெயர்களை எத்தனை வடஇந்தியத் தெருக்கள், சாலைகள் தாங்கியிருக்கின்றன? தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டலாம்!

ஒரு வடஇந்தியரின் பொதுப் புத்தியில் தென்னகம், குறிப்பாகத் தமிழ்நாடு எந்த அளவுக்கு இடம்பெற்றிருக்கும் என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும். வேலுநாச்சியார், வ.உ.சி., பாரதியார் மட்டுமல்ல வீரபாண்டியக் கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்களில் ஆரம்பித்து சுப்பிரமணிய சிவா, திருப்பூர் குமரன், லட்சுமி என்று பலருக்கும் இதே கதிதான். ராஜாஜி, காமராஜர் பற்றிச் சிறிது தெரிந்திருக்கலாம். இதற்கெல்லாம் அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. பள்ளிப் பாடத்தில் ஆரம்பித்து, வாய்மொழி வரலாறு, எழுதப்பட்ட வரலாறு என்று எதிலுமே தென்னிந்தியாவுக்கு இடமில்லை. இத்தனைக்கும் ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் போராடியவர்கள் தமிழர்கள். விதிவிலக்காகச் சில நிகழ்வுகள், சில வரிகள், சில பத்திகள் வட இந்தியர்களின் வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கலாம். இது குறித்து வடஇந்தியாவில் வாழும் தமிழர்களிடம் பேசியபோது இந்தக் கருத்தை அவர்கள் உறுதிப்படுத்தவே செய்தார்கள்.

சாதாரண வடஇந்தியர்கள் மட்டுமல்ல, ஊடகர்களுமேகூட எப்படித் தென்னகத்தையும் தென்னகத்தின் மொழிகளையும் அணுகுகிறார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு சமீபத்தில் தனுஷிடம் பேட்டிகண்ட ஓர் ஊடகர் “சவுத்தில் பேசிக் காட்டுங்கள்” என்று கேட்டது. ‘சவுத்’ என்று ஒரு மொழி இருக்கிறதா என்ன? உலகின் தொன்மையான மொழிகளுள் ஒன்று, செழுமையான இலக்கியத்தையும் நாகரிகத்தையும் கொண்ட மொழிகளுள் ஒன்று தமிழ். இத்தனைக்கும் பிரதமர் பல உரைகளில் திருக்குறளை மேற்கோள் காட்டுகிறார், தமிழை மூத்த மொழி என்கிறார். அந்த மொழியின் பேர்கூட உங்களுக்குத் தெரியவில்லை என்றால், அந்த மொழி பெற்றெடுத்த செல்வங்களான வேலுநாச்சியார், வ.உ.சி., பாரதியார் ஆகியோரை உங்களுக்குத் தெரியாதது குறித்து வியப்பொன்றுமில்லை.

இது குறித்து புதுடெல்லியில் வாழும் தமிழரும் எழுத்தாளருமான ஷாஜஹானிடம் பேசியபோது, ‘‘ஊர்தி விவகாரம் குறித்து 2015-லேயே நான் குரல் எழுப்பினேன். டெல்லி வந்ததிலிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பார்க்கிறேன். சில மாநிலங்களின் ஊர்திகள்தான் வரும். 2015-ல் தமிழ்நாட்டு ஊர்தி இருக்கவில்லை… பாஜக ஆட்சியில் இல்லாத எந்த மாநிலத்தின் ஊர்தியும் அப்போது இடம்பெறவில்லை. பிஹார், மேற்கு வங்கம், ஒடிஷா, தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்களின் ஊர்தி அப்போது இல்லை. வடக்கில் இமாச்சல பிரதேசமும் வடகிழக்கின் நாகாலாந்து, திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்களின் வாகனங்களும் இடம்பெறவில்லை. டெல்லி உட்பட எந்த ஒன்றியப் பிரதேசமும் இடம்பெறவில்லை. 16 மாநிலங்களின் ஊர்திகள் மட்டுமே பங்கேற்ற அணிவகுப்பை இந்தியக் குடியரசின் முழுமையான பங்கேற்பாகக் கருத முடியுமா? இந்த ஆண்டு 12 மாநிலங்களின் ஊர்திகள்தான் பங்கேற்கின்றன எனும்போது அதே கேள்விதான் மறுபடியும் எழுகிறது” என்றார்.

மேலும், “ஊர்திகளின் தெரிவுகளை மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகம்தான் முடிவு செய்கிறது. இந்தத் தேர்வு முறை எப்போதுமே குளறுபடிதான். குடியரசு தினம் என்பதே நமது அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதையும், இந்தியா என்னும் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டாட்சித் தத்துவத்தையும் கொண்டாடும் தினம். அத்தகைய ஒரு விழாவில் எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகளை அனுமதிக்கலாம் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று ஒன்றிய அரசு கருதுவது கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்க மாட்டோம் என்று சொல்வதாகவே பொருள்” என்றும் தெரிவித்தார் அவர்.

இது குறித்து எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கிறார். “மத்திய அரசு வேண்டுமென்றே தமிழக அரசின் அலங்கார ஊர்தியைத் தடுத்துவிட்டது என்று சொல்வது முட்டாள்தனம்… ஆனால், இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் விதமாக அமைக்கப்படும் ஊர்வலத்தில் இந்தியா முழுவதும் இடம்பெற வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல்கூட இவ்வரசுக்கு இல்லை என்பதும் உண்மை. இதை ஒரு நிர்வாகச் சொதப்பல் என்று சொல்லலாமே தவிர, திட்டமிட்டுச் செய்ததாகச் சொல்ல முடியாது” என்கிறார் அவர். மேலும், “குடியரசு தின விழாவை டெல்லியில் மட்டும் ஏன் நடத்த வேண்டும் என்ற கேள்வியையும் நாம் கேட்க வேண்டும். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை டெல்லியில் நடத்தலாம். மாநிலங்களின் உதவியுடன் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு பிரதேசங்களில் மற்றைய நான்கு வருடங்களில் நடத்தலாம்” என்று அவர் கூறியிருப்பது கவனிக்கத் தக்கது.

இத்தனைக்கும் வேலுநாச்சியார், வ.உ.சி., பாரதியார் ஆகியோரின் பிறந்தநாளுக்குப் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தமிழில் வாழ்த்துச் சொல்லி, அவர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்திருக்கிறார். இதற்கு மேல், இந்தியா அறிந்த, உலகம் அறிந்த தலைவர்களாக அவர்கள் ஆக வேண்டும் என்றால், அவர்கள் வடக்கில் பிறந்திருக்க வேண்டுமோ என்ற கேள்வி எழுகிறது. வேலுநாச்சியார் வடஇந்தியராக இருந்திருந்தால் இன்று ஜான்சி ராணி அளவுக்குப் புகழ்பெற்றிருப்பார். வ.உ.சி.க்கு இணையாக வடக்கில் யாரைச் சொல்வதென்று தெரியவில்லை. பாரதியாரைத் தமிழ்நாட்டுக்குள்ளேதான் ‘தேசிய கவி’ என்கிறோமே தவிர, தேசத்துக்கு அவரை யாரென்று தெரியாது. இதே அவர், வடஇந்தியாவில் பிறந்திருந்தால் தாகூருக்கு இணையாகக் கருதப்பட்டு, தன் கவிதைகளுக்காகவும் சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்குக்காகவும் இந்தியா முழுவதும் அறியப்பட்டிருப்பார். இதுதான் உண்மை!

வடக்கில் பிறந்த தேசத் தலைவர்களைத் தமிழர்கள் ஒருபோதும் வடஇந்தியர்களாகக் கருதியதில்லை. தங்கள் தலைவர்களாகத்தான் கருதிவருகிறார்கள். தெற்கில் பிறந்த தலைவர்களை வடக்கு ஒருபோதும் அப்படிக் கருதியதில்லை. ஆனால், தமிழ்நாட்டைப் பிரிவினைவாதிகளின் பிரதேசம்போல் வடஇந்தியர்கள் அப்போதிலிருந்து சித்தரித்துவருகின்றனர். இந்தப் பாகுபாட்டை அன்றே உணர்ந்து இதற்கு எதிராகக் குரல் எழுப்பியவர்கள்தான் பெரியாரும் அண்ணாவும். ஆனால், அவர்கள் மீது பிரிவினைவாத முத்திரை! அப்படியென்றால், தெற்கை இந்தியாவாக நினைத்து உள்ளடக்காத வடஇந்தியர்களின் மீது என்ன முத்திரை குத்துவது?

‘இந்தியா’வின் விடுதலைக்காகவும் உருவாக்கத்துக்காகவும் நாட்டின் ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒவ்வொரு மூலைமுடுக்கிலிருந்தும் கணக்கற்றோர் உயிர் உட்பட அனைத்தையும் தியாகம் செய்திருக்கிறார்கள். ‘மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்/ நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?’ என்ற பாடலில் வ.உ.சி.யைப் பற்றிதான் பாரதி பாடியிருக்கிறார். ஆனால், வ.உ.சி.யும் சரி, அவரைப் பாடிய பாரதியும் சரி, இந்திய வரலாற்றின் அடிக்குறிப்பில்கூடத் தங்களுக்கான இடத்துக்காக இன்று போராட வேண்டிய நிலை உண்மையில் பேரவலம்!

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in



Read in source website