DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 18-01-2022

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை காற்றின் தரம் 'மோசம்' பிரிவில் இருந்து 'மிகவும் மோசம்' பிரிவுக்குச் சென்றது. 

'மிகவும் மோசம்' பிரிவில் நீடிக்கும் காற்றின் தரக் குறியீடு 312 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. 

காற்றில் இருக்கும் நுண்ணிய துகள்களின் அளவுகளான பி.எம். 2.5 மற்றும் பி.எம்.10 முறையே 135 மற்றும் 232 புள்ளிகளில் உள்ளன. 

இதனால் அடுத்த மூன்று தினங்களுக்கு காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

நொய்டாவிலும் காற்றின் தரம் 341 புள்ளிகளுடன் 'மிகவும் மோசம்' பிரிவிலும், குருகிராமில் 280 புள்ளிகளுடன் 'மோசம்' பிரிவிலும் உள்ளது. 

தலைநகர் தில்லியில் திங்கள்கிழமை காற்றின் தரம் 'மோசம்' பிரிவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, பஞ்சாப், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், பிகார், லக்னெள பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக காணப்படும் என்றும் பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் குளிர் அதிகம் காணப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 



Read in source website


புது தில்லி: நாட்டின் 75வது குடியரசு நாள் விழா ஜனவரி 26ஆம் தேதி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படஉள்ளது. இந்நிலையில், புது தில்லியில் நடைபெறும் குடியரசு நாள் அணிவகுப்பு விழா முதல் முறையாக 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கவிருக்கிறது.


வழக்கமாக, புது தில்லியில் நடைபெறும் குடியரசு நாள் விழா அணிவகுப்பு சரியாக காலை 10 மணிக்குத் தொடங்குவது வழக்கும். ஆனால், இம்முறை, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றும் பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காரணமாக, அணிவகுப்பு 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாள் அணிவகுப்பு சரியாக காலை 10 மணிக்குத் தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு அது 10.30 மணிக்குத் தொடங்கவிருக்கிறது என்றார்.

இதற்குக் காரணம், கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதும், ஜம்மு-காஷ்மீர் மாநில பாதுகாப்புக்காக தங்கள் இன்னுயிரை நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெறும் என்று கூறினார்.
 



Read in source website

 நாட்டில் உள்ள 12 முதல் 14 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு வரும் மாா்ச் மாதத்தில் இருந்து கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு அதிகாரி தெரிவித்தாா்.

நாட்டில் உள்ள 18 வயதைக் கடந்தோருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 3-ஆம் தேதியில் இருந்து 15-18 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முன்களப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், 60 வயதைக் கடந்த இணைநோய் உள்ளோா் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப அறிவுரை குழுவின் கரோனா செயற்குழு தலைவா் என்.கே. அரோரா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘நாட்டில் 15-18 வயதுக்குள்பட்ட சுமாா் 7.4 கோடி சிறாா்கள் உள்ளனா். அவா்கள் ஆா்வத்துடன் முன்வந்து, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனா். இதுவரை 3.45 கோடி சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது.

இதே வேகம் தொடா்ந்தால், ஜனவரி மாத இறுதியில் 15-18 வயதுக்குள்பட்ட அனைத்து சிறாா்களுக்கும் தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுவிடும். அவா்களுக்கு 28 நாள்கள் இடைவெளியில் 2-ஆவது தவணை செலுத்தப்படும் என்பதால், பிப்ரவரி மாத இறுதிக்குள் இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுவிடும்.

அதைத் தொடா்ந்து, 12 முதல் 14 வயது வரையிலான சிறாா்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மாா்ச்சில் தொடங்க வாய்ப்புள்ளது. அதுசாா்ந்த கொள்கை ரீதியிலான முடிவை அரசு மேற்கொள்ளும். அந்த வயது வரம்பில் சுமாா் 7.5 கோடி சிறாா்கள் உள்ளனா்’’ என்றாா்.



Read in source website

இந்தியாவின் ஆப்பிள் ஏற்றுமதி 82 சதவீதம் அதிகரித்துள்ளதாக வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து ஆப்பிள் ஏற்றுமதியானது 82 சதவீத வளா்ச்சியைப் பெற்றுள்ளது. அதேசமயம், பழங்களின் இறக்குமதியானது 3.8 சதவீதம் என்ற அளவிலேயே உயா்ந்துள்ளது.

அதன்படி, கடந்த 2014-15-ஆம் நிதியாண்டில் 86 லட்சம் டாலராக இருந்த ஆப்பிள் ஏற்றுமதி 2020-21 நிதியாண்டில் 1.45 கோடி டாலா் அளவுக்கு உயா்ந்துள்ளது.

குறிப்பாக, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான 8 மாத காலத்தில் இதன் ஏற்றுமதி 1.23 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, ஆப்பிள் ஏற்றுமதியில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட சிறப்பான வளா்ச்சியை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

அதேசமயம், பழங்களின் இறக்குமதி கடந்த 2014-15-இல் 23.08 கோடி டாலராக இருந்த நிலையில், கடந்த 2020-21-இல் 24 கோடி டாலரை தொட்டுள்ளது. இது, 3.8 சதவீத வளா்ச்சியாகும்.

ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளதால்ஆப்பிள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள காஷ்மீா், ஹிமாசல் பிரதேசத்தை சோ்ந்த விவசாயிகள் பெரிதும் பயனடைந்துள்ளனா். இதன் மூலம், அவா்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஆப்பிளை ஏற்றுமதி செய்ய மேலும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களில் 82 சதவீதம் சிலி, நியூஸிலாந்து, துருக்கி, இத்தாலி, பிரேசில் மற்றும் அமெரிக்காவைச் சோ்ந்தவை.

இந்தியாவின் ஆப்பிள் இறக்குமதியில் சிலி 25 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இதனைத் தொடா்ந்து நியூஸிலாந்து (16.45 சதவீதம்), துருக்கி (12.43 சதவீதம்), இத்தாலி (10.8 சதவீதம்) ஆகிய நாடுகள் உள்ளதாக வா்த்தக அமைச்சக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

 

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி சனிக்கிழமை அறிவித்திருப்பது எதிர்பாராதது அல்ல. ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், அவர் இப்படி ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டிருப்பதுதான் எதிர்பாராதது. 

நான்கு மாதங்களுக்கு முன்பு டி 20 கேப்டன் பதவியிலிருந்து அவர் விலகினார். அதைத் தொடர்ந்து, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தலைமையிலிருந்து அவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அகற்றியது. குறுகிய நேர ஆட்ட (ஒயிட் பால்)தொடர் களுக்கு இரண்டு கேப்டன்கள் இருக்க முடியாது என்பதால்தான் அவர் விலக்கப்பட்டார் என்கிற கிரிக்கெட் வாரியத்தின் வாதம் சர்ச்சையானது. அப்போதே விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகியிருக்கலாமோ என்று அவரது ரசிகர்கள் கருதுவதை புரிந்துகொள்ள முடிகிறது.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவரான 33 வயது விராட் கோலி, இனிமேல் இந்திய அணியின் வீரராக மட்டுமே தொடருவார். பேட்ஸ்மேனாக உலக கிரிக்கெட்டில் மிகப் பெரிய வெற்றிகளை குவித்த விராட் கோலி, உலகக் கோப்பையை தனது தலைமையில் வெற்றி பெறாமல் விலகுகிறார் என்பதுதான் சற்று வருத்தமாக இருக்கிறது. 

உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன்கள் வரிசையில் நான்காவது இடத்தைப் பெற்றவர் விராட் கோலி. கிரேம் ஸ்மித் (53), ரிக்கி பான்டிங் (48), ஸ்டீவ் வாக் (41) ஆகியோரை அடுத்து நான்காவது இடத்தில் 40 டெஸ்ட் வெற்றிகளுக்கு கேப்டனாக தலைமை வகித்த பெருமை அவருக்கு உண்டு. 

அணியினரை வழிநடத்துவது என்பது ஒருவகை. அணியினரைத் தனது தலைமைப் பண்புகளால் உற்சாகப்படுத்தி உருவாக்குவது என்பது இன்னொருவகை. இம்ரான் கான் (பாகிஸ்தான்), 
அர்ஜுன ரணதுங்க (இலங்கை), ஹான்ஸி குரோனியே (தென்னாப்பிரிக்கா) வரிசையில் தொலைநோக்குப் பார்வையுடன் தங்கள் நாட்டு கிரிக்கெட் அணிகளை உருவாக்கியவர்களின் வரிசையில் விராட் கோலிக்கும் ஓர் இடம் உண்டு. 

2014-இல் டெஸ்ட் கிரிக்கெட் தலைமையிலிருந்து மகேந்திர சிங் தோனி விடைபெற்றபோது, அந்த இடத்திற்கு வந்தவர் விராட் கோலி. ஒருநாள் போட்டி, டி 20 போட்டி ஆகியவற்றின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விடைபெற்றபோது அந்த பொறுப்பு இயல்பாகவே கோலியைத் தேடி வந்தது. ஒரு பேட்ஸ்மேன் என்கிற அளவிலும், கேப்டன் என்கிற நிலையிலும் அதன் பிறகு விராட் கோலியின் வெற்றிகள் தொடர்கதையாகின. ஒருநாள், டி 20, டெஸ்ட் என்கிற மூன்று பிரிவுகளிலும் இந்தியா பல வெற்றிகளை கோலியின் தலைமையில் அடைந்தது. 

விராட் கோலியின் சாதனைகளைப் புரிந்துகொள்வதற்கு அவர் கேப்டனாக பதவி ஏற்பதற்கு முன்பு இருந்த நிலைமை குறித்து சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும். எம்.எஸ். தோனி தலைமையில் ஒருநாள் கிரிக்கெட் பந்தயத்திலும், டி 20 பந்தயத்திலும் இந்திய அணி அடைந்த வெற்றியை, டெஸ்ட் பந்தயங்களில் அடையவில்லை. ஐந்து நாள்களுக்கு நீளும் டெஸ்ட் பந்தயங்களில், அணியினரின் உற்சாகத்தை தக்க வைத்து அவர்களை ஒருங்கிணைக்க இயலாத பலவீனம் தோனியின் தலைமைக்கு இருந்தது. 
உலக அளவில் டெஸ்ட் பந்தயங்களில் இந்தியா 7-ஆவது இடத்தில் இருந்தபோது கேப்டனாக கோலி பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு தொடர்ந்து பல வெற்றிகளால் முதலிடத்தை எட்ட முடிந்தது. கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது; இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் பந்தயத்தை வென்றது; 2017, 2018, 2019 ஆண்டுகளில் தலைசிறந்த ஆட்டக்காரருக்கான சர்வதேச விருதைப் பெற்றது என்று பல சாதனைகள் விராட் கோலிக்கு உண்டு. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிச்சுற்று வரை சென்ற இந்திய அணி அவர் தலைமையில் அதை வெல்ல முடியாமல் போனது என்பது மட்டுமே ஒரேயொரு குறை. 

கிரிக்கெட்டின் மூன்று பிரிவு ஆட்டங்களிலும் இந்தியாவுக்கு விளையாடும் விராட் கோலியின் சராசரி ரன்களின் எண்ணிக்கை 50-க்கும் அதிகம். 70 தடவை சதம் அடித்த சாதனையும் உண்டு. சச்சின் டெண்டுல்கர் (100), ரிக்கி பான்டிங் (71) என்று இருவர் மட்டுமே அவரை முந்திய சதம் அடித்த சாதனையாளர்கள். 68 டெஸ்ட் பந்தயங்களில் 40 பந்தயங்களை வென்று சாதனை படைத்திருக்கும் விராட் கோலி, அவரது ஏழு ஆண்டு தலைமையில் ஐந்து தொடர் ஆட்டங்களில்தான் வெற்றி காண முடியவில்லை என்கிறது புள்ளிவிவரம். 
விராட் கோலியின் தலைமையின் தனிச்சிறப்பு என்னவென்றால், அவரிடம் காணப்பட்ட அசாத்திய தன்னம்பிக்கை. வெற்றிபெற முடியும் என்கிற அவரது வெறித்தனமான நம்பிக்கையை, தனது அணியினருக்கும் அவரால் ஏற்படுத்த முடிந்தது என்பதால்தான் அவரது தலைமைப் பண்பு பல பலவீனங்களுக்கு இடையிலும் பாராட்டப்பட்டது. 

மைதானத்திலும், மைதானத்துக்கு வெளியிலும் ஆத்திரத்தில் கேப்டன் விராட் கோலி வெளிப்படுத்தும் அனல்கக்கும் விமர்சனங்களும், வார்த்தைகளும் விவாதப்பொருளாகி இருக்கின்றன. ஆனால், அவரது சாதனைகளுக்கு முன்னால் அவை புறந்தள்ளப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடனான சர்ச்சையைத் தொடர்ந்து, கோலி கேப்டன் பதவியிலிருந்து வெளியேறுகிறார் என்பது நெருடலாகத்தான் இருக்கிறது. விராட் கோலி விட்டுச் செல்லும் இடத்தை நிரப்பப்போவது யார் என்பது புதிராக இருக்கிறது.



Read in source website

பெஞ்சமின் பிராங்க்ளின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பாளர். அமெரிக்க வரலாற்றின் முக்கியமான மனிதர்களில் ஒருவர். பெஞ்சமின் பிராங்க்ளின் அறிவியலின் ஒளிவீசிய 18ம் நூற்றாண்டில்(ஜனவரி 17, 1706 - ஏப்ரல் 17, 1790) பிறந்த அமெரிக்காவின் பன்முகத் தன்மையுடைய சிறந்த விஞ்ஞானி. அவர் ஓர் எழுத்தாளர், விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர், அரசியல்வாதி, ராஜதந்திரி, அச்சுப்பொறி வெளியீட்டாளர் மற்றும் அரசியல் தத்துவவாதி.

அவரது காலத்தின் முன்னணி அறிவுஜீவிகளில், பிராங்க்ளின் அமெரிக்காவின் ஸ்தாபகர்களில் ஒருவர். அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் வரைவாளர். அதில் கையொப்பமிட்டவர்களில் ஒருவர், அவர்தான் அமெரிக்காவின் முதல் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாகவும் இருந்தார். ஒரு விஞ்ஞானியாக, அவர் மின்சாரம் தொடர்பான அவரது கண்டுபிடிப்புகள் மற்றும் கோட்பாடுகளுக்காக அமெரிக்க அறிவியல் வெளிச்சத்தில் மற்றும் இயற்பியல் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதராக இருந்தார். அவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை மின்னல் கம்பி, பைஃபோகல்ஸ் மற்றும் பிராங்க்ளின் அடுப்பு. வேறு சில கண்டுபிடிப்புகளுக்கும் பெயர் பெற்றவர்.

நிறுவனத் தந்தை

அமெரிக்கா சுதந்திரம் பெற பயன்படுத்திய நான்கு ஆவணங்களிலும் கையெழுத்திட்ட ஒரே நிறுவனத் தந்தை அவர்தான்.பெஞ்சமின் பிராங்க்ளின் நாட்டின் ஸ்தாபக தந்தைகளில் ஒருவர் என்பது ரகசியமல்ல. ஆனால், பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெறப் பயன்படுத்தப்பட்ட நான்கு ஆவணங்களிலும் அவர் மட்டுமே கையெழுத்திட்டார். 1776 இல் சுதந்திரப் பிரகடனம், 1778 இல் பிரான்சுடனான கூட்டணி ஒப்பந்தம், 1783 இல் பாரிஸ் மற்றும் 1787 இல் அமெரிக்க அரசியலமைப்பு. அதற்கு மேல், பிராங்க்ளின் சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிட்ட மிகவும் மூத்தவர் இவர்.  

ஃபிராங்க்ளினின் மற்ற சிறப்புகள்

பிராங்க்ளின், நூலக நிறுவனம், பிலடெல்பியாவின் முதல் தீயணைப்புத் துறை மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் உள்பட பல குடிமை அமைப்புகளை நிறுவினார். பிராங்க்ளின் காலனித்துவ ஒற்றுமைக்கான ஆரம்ப காலம் முதல் அவரது அயராத பிரசாரத்திற்காக "முதல் அமெரிக்கன்" என்ற பட்டத்தைப் பெற்றார். ஆரம்பத்தில் பல காலனிகளுக்கு லண்டனில் ஓர் எழுத்தாளராகவும் செய்தித் தொடர்பாளராகவும் இருந்தார். பிரான்சுக்கான முதல் அமெரிக்க தூதராக செயல்பட்டார்.

மேலும், அவர் வளர்ந்து வரும் அமெரிக்க தேசத்திற்கு முன்மாதிரியாக இருந்தார். சிக்கனம், கடின உழைப்பு, கல்வி, சமூக உணர்வு, சுயராஜ்ய நிறுவனங்கள், அரசியல் மற்றும் மதம் ஆகிய இரண்டிலும் சர்வாதிகாரத்தை எதிர்ப்பது, அறிவுஜீவிகளின் குழுக்களைக் கொண்டு அறிவியல் மற்றும் சகிப்புத்தன்மை மதிப்புகள் ஆகியவற்றை நடைமுறைப் படுத்தினார்.  அமெரிக்க நெறிமுறைகளை திருமணத்தின் மதிப்புகள் உள்பட பல விஷயங்களை  வரையறுப்பதில் பிராங்க்ளின் அடித்தளமாக இருந்தார். வரலாற்றாசிரியர் ஹென்றி ஸ்டீல் கொமேஜரின் வார்த்தைகளில், பிராங்க்ளின் "அவரது வயதில் மிகவும் திறமையான அமெரிக்கர்" என்று அழைக்கப்படுகிறார்.

சிறந்த ஆலோசகர்

பிராங்க்ளின் தனது 23-வது வயதில் பென்சில்வேனியா கெசட்டை வெளியிட்டு, காலனிகளின் முன்னணி நகரமான பிலடெல்பியாவில் ஒரு வெற்றிகரமான செய்தித்தாள் ஆசிரியர் மற்றும் அச்சகராக ஆனார். "ரிச்சர்ட் சாண்டர்ஸ்" என்ற புனைப்பெயரில் அவர் எழுதிய ஏழை ரிச்சர்டின் பஞ்சாங்கத்தையும் வெளியிட்டு செல்வந்தரானார். 1767-க்குப் பிறகு, அவர் பென்சில்வேனியா குரோனிக்கிள் என்ற பத்திரிக்கையுடன் தொடர்பில் இருந்தார்.  இது புரட்சிகர உணர்வுகள் மற்றும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் மற்றும் மகுடத்தின் கொள்கைகள் பற்றிய விமர்சனங்களுக்கு பெயர் பெற்றது.

முன்னோடி பிராங்க்ளின்

பிராங்க்ளின் நிறைய விஷயங்களுக்கு முன்னோடியாக இருந்தார். 1751 இல் திறக்கப்பட்ட பிலடெல்பியாவின் அகாடமி மற்றும் கல்லூரியின் முதல் தலைவராக இருந்தார்.  இது, பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகமாக மாறியது. அவர் அமெரிக்கன் பிலாசபிகல் சொசைட்டியின் முதல் செயலாளராகவும், 1769 ஆம் ஆண்டில் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிராங்க்ளின் லண்டனில் பிரபலமற்ற முத்திரை சட்டத்தை ரத்து செய்யும் முயற்சியை முன்னெடுத்தபோது, ​​பல காலனிகளின் முகவராக அமெரிக்காவில் தேசிய ஹீரோவானார். பிராங்க்ளின் ஒரு திறமையான இராஜதந்திரி. அவர் பாரிஸின் அமெரிக்க அமைச்சராக பிரெஞ்சுக்காரர்களிடையே பரவலாகப் பாராட்டப்பட்டார் மற்றும் நேர்மறையான பிரெஞ்சு -அமெரிக்க உறவுகளின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மனிதராக இருந்தார். பிரான்சில் இருந்து முக்கியமான ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கப் புரட்சிக்கு அவரது முயற்சிகள் இன்றியமையாததாக நிரூபிக்கப்பட்டது.

பென்சில்வேனியாவின் ஆளுநர்

பிராங்க்ளின் 1753-ம் ஆண்டு, ஆகஸ்ட் 10-ம் நாள், பிரிட்டிஷ் காலனிகளுக்கான துணை போஸ்ட் மாஸ்டர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். பல ஆண்டுகளாக பிலடெல்பியா போஸ்ட்மாஸ்டராக இருந்தார். மேலும், இது அவருக்கு முதல் தேசிய தகவல் தொடர்பு நெட்வொர்க்கை அமைக்க உதவியது. அவர் சமூக விவகாரங்கள் மற்றும் காலனித்துவ மற்றும் மாநில அரசியலிலும், தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களிலும் தீவிரமாக இருந்தார். 1785 முதல் 1788 வரை பிராங்க்ளின் பென்சில்வேனியாவின் ஆளுநராகப் பணியாற்றினார். அவர் துவக்க காலத்தில் அடிமைகளை வைத்திருந்தார். அவர்களைக்  கையாண்டார். பின்னர் 1750ம் ஆண்டுகளில் பிற்பகுதியில், அவர் அடிமைத்தனத்திற்கு எதிராக வாதிடத் தொடங்கினார். அடிமை ஒழிப்புவாதியாக ஆனார். மேலும், கல்வி மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை அமெரிக்க சமூகத்தில் ஒருங்கிணைப்பதை ஊக்குவித்தார்.

இறப்புக்குப் பின்னும் பெருமை

அவரது வாழ்க்கை மற்றும் அறிவியல் மற்றும் அரசியல் சாதனைகளின் மரபு மற்றும் அமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு மிக்க நிறுவனர்களில் ஒருவரான அவரது அந்தஸ்து, பிராங்க்ளின் இறந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக 100 டாலர் பணம், போர்க்கப்பல்கள் மற்றும் பல நகரங்கள், மாவட்டங்கள், கல்வி ஆகியவற்றின் பெயர்களின் மூலம் கௌரவிக்கப்பட்டது. நிறுவனங்கள், மற்றும் பெருநிறுவனங்கள், அத்துடன் பல கலாச்சார குறிப்புகள் மற்றும் அலுவலகத்தில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

பிராங்க்ளின் பிறப்பு

பிராங்க்ளின் 1706ம் ஆண்டு,  ஜனவரி 17ம் நாள், பாஸ்டனில் உள்ள மில்க் ஸ்ட்ரீட்டில் பிறந்தார். பெஞ்சமின் ஃபிராங்க்ளினின் தந்தை ஜோசியா பிராங்க்ளின், சோப்பு மற்றும் மெழுகுவர்த்தி தயாரிப்பவர். பெஞ்சமினின் தந்தை மற்றும் அவரது நான்கு தாத்தா - பாட்டிகளும் இங்கிலாந்தில் பிறந்தவர்கள். ஜோசியா பிராங்க்ளின் தனது இரண்டு மனைவிகளுடன் மொத்தம் பதினேழு குழந்தைகளைப் பெற்றிருந்தார். அவர் தனது முதல் மனைவியான அன்னே சைல்டை 1677 இல் எக்டனில் திருமணம் செய்து கொண்டு அவருடன் 1683ம் ஆண்டு பாஸ்டனுக்கு குடிபெயர்ந்தார்.

புலம்பெயர்வதற்கு முன் அவர்களுக்கு மூன்று குழந்தைகளும், பிறகு நான்கு குழந்தைகளும் இருந்தனர். அவரது மரணத்தைத் தொடர்ந்து, ஜோசியா 1689ம் ஆண்டு ஜூலை 9ம் ஓல்ட் சவுத் மீட்டிங் ஹவுஸில் அபியா ஃபோல்கரை மணந்தார்.  அவருடன் பத்து குழந்தைகளைப் பெற்றெடுத்தார். பெஞ்சமின், அவர்களின் எட்டாவது குழந்தை.  

ஆரம்ப கால வாழ்க்கை

பிராங்க்ளின் ஓல்ட் சவுத் மீட்டிங் ஹவுஸில் ஞானஸ்நானம் பெற்றார். சார்லஸ் ஆற்றங்கரையில் வளரும் குழந்தையாக பிராங்க்ளின் "பொதுவாக சிறுவர்களில் தலைவன்" என்று நினைவு கூர்ந்தார். பிராங்க்ளின் தந்தை அவர் மதகுருக்களுடன் பள்ளியில் சேரத்து படிக்க வைக்க விரும்பினார். ஆனால்,  அவரை இரண்டு ஆண்டுகளுக்கு பள்ளிக்கு அனுப்ப போதுமான பணம் மட்டுமே இருந்தது. அவர் பாஸ்டன் லத்தீன் பள்ளியில் பயின்றார். ஆனால், பட்டம் பெறவில்லை; ஆர்வமுள்ள வாசிப்பின் மூலம் தனது கல்வியைத் தொடர்ந்தார். ஃபிராங்க்ளினுக்கு அவரது பெற்றோர் தேவாலயத்தைப் பற்றி ஒரு தொழிலாகப் பேசினர். அவருக்கு  பத்து வயதிலேயே பள்ளிப் படிப்பு முடிந்தது. அவர் தனது தந்தையிடம் சிறிது காலம் பணிபுரிந்தார். மேலும் 12 வயதில் பென்னுக்கு அச்சிடும் தொழிலைக் கற்பித்த ஒரு பிரிண்டரான அவரது சகோதரர் ஜேம்ஸிடம் பயிற்சி பெற்றார். பென்னுக்கு 15 வயதாக இருந்தபோது, ​​​​ஜேம்ஸ் தி நியூ-இங்கிலாந்து கூரண்டை நிறுவினார். இது முதல் அமெரிக்க செய்தித்தாள்களில் ஒன்றாகும்.

தந்திரம் மிகுந்த பிராங்க்ளின்

பத்திரிக்கையில் கடிதம் எழுதும் வாய்ப்பு மறுக்கப்பட்டபோது, ​​ பிராங்க்ளின் நடுத்தர வயது விதவையான "சைலன்ஸ் டோகுட்" என்ற புனைப்பெயரை ஏற்றுக்கொண்டார். திருமதி. டோகூட்டின் கடிதங்கள் வெளியிடப்பட்டு, நகரம் முழுவதும் உரையாடலின் பொருளாக மாறியது. ஜேம்ஸுக்கோ அல்லது கூரண்டின் வாசகர்களுக்கோ இந்த தந்திரம் தெரியாது.  பிரபலமான நிருபர் இது தனது இளைய சகோதரர் என்பதைக் கண்டுபிடித்தார். பிராங்க்ளின் சிறுவயதிலிருந்தே பேச்சு சுதந்திரத்தை ஆதரித்தவர். 1722 ஆம் ஆண்டு ஆளுநருக்குப் புகழ்தராத செய்திகளை வெளியிட்டதற்காக அவரது சகோதரர் மூன்று வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டபோது, ​​இளம் பிராங்க்ளின் செய்தித்தாளைக் கைப்பற்றி, திருமதி டோகூட்  பிரகடனப்படுத்தினார்: "சிந்தனை சுதந்திரம் இல்லாமல் ஞானம் என்று எதுவும் இருக்க முடியாது. பேச்சு சுதந்திரம் இல்லாமல் பொது சுதந்திரம் என்று எதுவும் இல்லை" என்று.  பின்னர் தனது சகோதரருக்குத் தெரியாமல் பிராங்க்ளின் தனது பயிற்சியை விட்டு வெளியேறினார்.

பிலடெல்பியா செல்லுதல்

பிராங்க்ளின், தனது 17 வயதில் பிலடெல்பியாவுக்கு ஓடி, ஒரு புதிய நகரத்தில் ஒரு புதிய தொடக்கத்தைத் தேடினார். அவர் முதலில் நகரத்தைச் சுற்றியுள்ள பல பிரிண்டர் கடைகளில் பணிபுரிந்தார். உடனடி வாய்ப்புகளால் அவர் திருப்தி அடையவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு அச்சகத்தில் பணிபுரியும் போது,  ​​ஃபிலடெல்பியாவில் மற்றொரு செய்தித்தாளை நிறுவுவதற்குத் தேவையான உபகரணங்களைப் பெறுவதற்காக, லண்டனுக்குச் செல்லும்படி பென்சில்வேனியா கவர்னர் சர் வில்லியம் கீத் மூலம் சென்றார். கவர்னர்  பிராங்க்ளினை நம்பினார். ஒரு செய்தித்தாளை ஆதரிப்பதாக கெய்த்தின் வாக்குறுதிகள் காலியாக இருப்பதைக் கண்டறிந்த பிராங்க்ளின், லண்டனில் உள்ள ஸ்மித்ஃபீல்ட் பகுதியில் உள்ள செயின்ட் பார்தோலோமியூ-தி-கிரேட் தேவாலயத்தில் உள்ள ஒரு பிரிண்டர் கடையில் தட்டச்சு செய்பவராகப் பணிபுரிந்தார். இதைத் தொடர்ந்து, அவர் 1726 இல் பிலடெல்பியாவுக்குத் திரும்பினார். தாமஸ் டென்ஹாம் என்ற வணிகரின் உதவியுடன் அவர் பிராங்க்ளினை தனது வணிகத்தில் குமாஸ்தா, கடைக்காரர் மற்றும் புத்தகக் காப்பாளராகப் பயன்படுத்தினார்.

ஜுன்டோ மற்றும் நூலகம்

பிராங்க்ளின்  1727 ஆம் ஆண்டில், 21 வயதில், ஜுன்டோவை உருவாக்கினார். இது "ஒரே கருத்து மற்றும்  எண்ணம் கொண்ட ஆர்வமுள்ள கைவினைஞர்கள் மற்றும் வணிகர்களின் குழுவாகும், அவர்கள் தங்கள் சமூகத்தை மேம்படுத்தும் போது தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பினர்" ஜுன்டோ அன்றைய பிரச்சினைகளுக்கான விவாதக் குழுவாக இருந்தது; அது பின்னர் பிலடெல்பியாவில் பல அமைப்புகளை உருவாக்கியது. ஃபிராங்க்ளினுக்கு நன்கு தெரிந்த ஆங்கில காஃபிஹவுஸ்களை பின்பற்றி ஜுன்டோ வடிவமைக்கப்பட்டது. மேலும், இது பிரிட்டனில் அறிவுசார் குழுவின்  கருத்துக்களின் பரவலின் மையமாக மாறியது.

கல்வி

பெஞ்சமின் பிராங்க்ளின் இரண்டு ஆண்டுகள் மட்டுமே முறையான கல்வி கற்றார். இன்றைய காலகட்டத்தில், பிராங்க்ளின் போன்ற உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளர் வகுப்பறையில் காலடி எடுத்து வைப்பது கடினம்.

மாசசூசெட்ஸின் பாஸ்டனில் உள்ள தெற்கு இலக்கணப் பள்ளியில் (பாஸ்டன் லத்தீன்) பயின்றபோது பிராங்க்ளினுக்கு 8 வயது. அடுத்த ஆண்டு அவர் ஜார்ஜ் பிரவுனெல் ஆங்கிலப் பள்ளிக்கு மாறினார். அது எழுத்து மற்றும் எண்கணிதத்தில் நிபுணத்துவம் பெற்றது.

10 வயதில், பிராங்க்ளின் தனது தந்தையின் சோப்பு மற்றும் மெழுகுவர்த்தி செய்யும் கடையில் பயிற்சியைத் தொடங்கினார். இது அவரது முறையான கல்வியின் முடிவைக் குறித்தது. ஆயினும்கூட, அவர் ஒரு சிறந்த வாசகராகவும் எழுத்தாளராகவும் இருந்தார். நண்பர்களிடமிருந்து புத்தகங்களை கடன் வாங்கினார். இறுதியில், அவரது சகோதரரின் அச்சுக் கடையில் பயிற்சி பெற்றார்.

காப்புரிமை பெறாத விஞ்ஞானி

பிராங்க்ளின் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளராக இருந்தபோதிலும், அவர் ஒருபோதும் ஒரு கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றதில்லை. பிராங்க்ளின் தனது வாழ்நாளின் அனைத்து அறிவு சார்ந்த குறிப்பிடத்தக்க யோசனைகளுக்கும் பணம் பெற்றிருக்க முடியும். ஆனால் அவர் தனது கண்டுபிடிப்புகள் எதற்கும் காப்புரிமையை நாடவில்லை. பிபிஎஸ்ஸின் கூற்றுப்படி, அது அவருடைய நம்பிக்கை முறைக்கு எதிரானது. பிராங்க்ளின் கிண்டல் செய்தார், "மற்றவர்களின் கண்டுபிடிப்புகளிலிருந்து நாம் பயனடைவதால், நம்முடையதை... சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் பகிர்ந்து கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்" என்றார். 

கண்டுபிடிப்புகள்

அவரது அற்புதமான கண்டுபிடிப்புகளில் சில தெரு விளக்குகள், நீச்சல் துடுப்புகள், பைஃபோகல் கண்ணாடிகள் மற்றும் ஒரு அடுப்பு ஆகியவை அடங்கும்.

புனைப்பெயர் திருமதி. சைலன்ஸ் டோகுட்.

பிராங்க்ளின் டோகுட் என்று எழுதத் தொடங்கியபோது அவருக்கு வயது 16. அப்போதுதான் அவர் தனது முதல் பதிவை சமர்ப்பித்தார். அவரது மூத்த சகோதரர் ஜேம்ஸ் பிராங்க்ளின் நடத்திய செய்தித்தாள். நகைச்சுவையான மற்றும் புத்திசாலித்தனமான கட்டுரைகள் "ஆடையின் பெருமை" மற்றும் "மத பாசாங்குத்தனம்" போன்ற விஷயங்களைப் பற்றி இருந்தன, மேலும், அவை அந்த நேரத்தில் பாஸ்டனில் வெற்றியைப் பெற்றன.

திருமதி. சைலன்ஸ் டோகுட்" என்பது ஒரு புனைப்பெயர் என்பதை ஜேம்ஸ் அறிந்திருந்தாலும், அவரது சிறிய சகோதரர் பதிவுகளை எழுதுவது அவருக்குத் தெரியாது. இதையறிந்த அவர் மனமுடைந்து, சகோதரர்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

பெஞ்சமினின் தனியான எழுத்துரு

பரவலாகப் பயன்படுத்தப்படும் பிராங்க்ளின் கோதிக் எழுத்துரு எங்கும் காணப்படுகிறது: இது விளம்பர பலகைகள், தலைப்புச் செய்திகள், ஆல்பம் அட்டைகள் மற்றும் பலகை விளையாட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது.

1900களின் முற்பகுதியில், அமெரிக்க வகை நிறுவனர்களான மோரிஸ் புல்லர் பெண்டனுக்காக எழுத்துரு மேம்பாட்டின் தலைவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஜெர்மன் அக்ஜிடென்ஸ் க்ரோடெஸ்க் தட்டச்சு வடிவமைப்புகளால் ஈர்க்கப்பட்டாலும், ஃபுல்லர் பென்டன் தனது புதிய எழுத்துருவுக்கு பெயரிட முடிவு செய்தார். அவர் தனது காலத்தில் செல்வாக்கு மிக்க தட்டச்சு செய்பவராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தார். அவர் பிராங்க்ளின் கோதிக் எனப்படும் சான்ஸ்-செரிஃப் எழுத்துருவை உருவாக்கினார். இது 1902 இல் அவருக்குப் பெயரிடப்பட்டது மற்றும் இது வழக்கமாக செய்தித்தாள் தலைப்புச் செய்திகளில் பயன்படுத்தப்படுகிறது. 

மறைவு

பிராங்க்ளின் இறந்தபோது, ​​பிரெஞ்சு தேசிய சட்டமன்றம் துக்க நாளை அறிவித்தது. பிராங்க்ளின் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார் - ஏப்ரல் 17, 1790 அன்று 85 வயதில் இறந்தார். அவரது கடைசி வார்த்தைகளில் "இறக்கும் மனிதனால் எதையும் எளிதில் செய்ய முடியாது" என்று குறிப்பிடப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் சுமார் 20,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அவரது மறைவு பிலடெல்பியாவின் குடிமக்களுக்கு துக்கத்தின் காலத்தைக் குறித்தது. ஆனால் பிரான்சுக்கான முதல் அமெரிக்க தூதராக பல ஆண்டுகள் கழித்த பிறகு அவரது நற்பெயர் அங்கு நீடித்தது.

அரசியலமைப்பு மையத்தின்படி, பிரெஞ்சுக்காரர்கள் ஃபிராங்க்ளினை வணங்கினர். மேலும், அவரது பல திறமைகள் காரணமாக அவரை "மறுமலர்ச்சி மனிதர்" என்று கருதினர். இதன் விளைவாக, அவர் இறந்ததையடுத்து, பிரெஞ்சு தேசிய சட்டமன்றம் துக்கத்தில் மூழ்கியது.

ஜனாதிபதியாக இல்லாத ஒரே ஜனாதிபதி

பெஞ்சமின் பிராங்க்ளின் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தார் என்ற அனுமானம் பலரால் செய்யப்படும் பொதுவான தவறு. உண்மை என்னவென்றால், அவரது சமகாலத்தவர்களான ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெபர்சன் மற்றும் ஜான் ஆடம்ஸ் ஜனாதிபதி பதவி வகித்தனர். ஆனால் பிராங்க்ளின் ஜனாதிபதியாக பதவி வகித்ததில்லை. அவர் பென்சில்வேனியாவின் ஆளுநராக இருந்தார். பிரான்ஸ் மற்றும் ஸ்வீடனுக்கான முதல் அமெரிக்க தூதர் மற்றும் முதல் அமெரிக்க போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்.

செஸ் வீரர்

அவரது பல திறமைகளில், பெஞ்சமின் பிராங்க்ளின் ஒரு திறமையான செஸ் வீரர் ஆவார். அவர் 1999 ஆம் ஆண்டில் யுனைடெட் ஸ்டேட்ஸ் செஸ் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார். அவர் "தி மோரல்ஸ் ஆஃப் செஸ்" என்ற ஒரு நன்கு அறியப்பட்ட கட்டுரையை எழுதினார். இது விளையாட்டை விளையாடுவதற்கான நடத்தை விதிகளை விவரிக்கிறது மற்றும் செஸ்ஸை அமெரிக்காவில் பிரபலமான விளையாட்டாக மாற்றுவதற்கு காரணமாக இருந்தது.

பாரிஸ் உடன்படிக்கை

பிராங்க்ளின் வெளிநாட்டில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் மற்றும் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான அமெரிக்கராக ஆனார். பிராங்க்ளின் கணிசமான அளவு நேரத்தை வெளிநாட்டில் செலவிட்டார். அவர் இங்கிலாந்தில் பென்சில்வேனியாவின் காலனியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். பின்னர் பிரான்சில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் உலகளாவிய ரீதியில் போற்றப்பட்டார் மற்றும் புகழ்பெற்றார் மற்றும் புரட்சிகரப் போரின் போது ஒரு பிரெஞ்சு கூட்டணியைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்தார். புரட்சிகரப் போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவந்த பாரிஸ் உடன்படிக்கையை பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் உதவினார்

கண்டுபிடிப்பாளர்

பிராங்க்ளின் எப்போதும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உலகை மேம்படுத்த விரும்பினார். பைஃபோகல் கண்ணாடிகள் மற்றும் பிராங்க்ளின் அடுப்பு ஆகியவை அவரது மிகவும் பிரபலமான படைப்புகளாக இருக்கலாம். ஃபிராங்க்ளினின் புகழ்பெற்ற காத்தாடி பரிசோதனை அவரது பல அறிவியல் சாதனைகளில் ஒன்றாகும். அவரது அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் மிகவும் பிரபலமானது மின்னல் மின்சாரம் என்ற கண்டுபிடிப்பு. இடியுடன் கூடிய மழையின்போது கோட்டுடன் இணைக்கப்பட்ட சாவியைக் கொண்டு காத்தாடியை பறக்கவிட்டு இதை நிரூபித்தார். இந்த கண்டுபிடிப்பு கட்டிடங்களுக்கான மின்னல் கம்பிகளை அவர் கண்டுபிடித்ததற்கு வழிவகுத்தது.

ஆர்மோனிகா கண்டுபிடிப்பு

அவர் ஒரு கண்ணாடி ஆர்மோனிகாவைக் கண்டுபிடித்தார். ஃபிராங்க்ளினின் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான கண்டுபிடிப்புகளில் ஒன்று கண்ணாடி ஆர்மோனிகா ஆகும். ஈரமான விரல்கள் ஒன்றோடொன்று தேய்க்கும் ஒலிகளை பிரதிபலிக்கும் வகையில் அவர் அதை வடிவமைத்தார். முதல் முன்மாதிரி 1716 இல் லண்டனில் பிராங்க்ளின் ஒரு கண்ணாடி தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது உருவாக்கப்பட்டது. அவர்கள் வெவ்வேறு அளவுகள் மற்றும் பிட்ச்களில் 37 கண்ணாடி ஆர்மோனிகாக்களை உருவாக்கினர். அவர் கால் மிதி மூலம் கட்டுப்படுத்திய ஒரு சுழல் மீது அவற்றை ஏற்றினார். ஆர்மோனிகா 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரபலமடைந்தது. மொஸார்ட், பீத்தோவன் போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் இதற்கு இசையமைத்துள்ளனர். பிராங்க்ளின் அர்மோனிகா தனது மிகப்பெரிய மற்றும் சிறந்த கண்டுபிடிப்பு என்று ஒப்புக்கொண்டார்

இறப்பும் சிறப்பும்

முதன்மை நிறுவன தந்தைகளில் மூத்தவரான பிராங்க்ளின் 1790 இல் இறந்தார். அவர் அமெரிக்காவின் தலைசிறந்த ஹீரோக்களில் ஒருவராக இருந்ததால் உலகளவில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. காங்கிரஸில், அவர் "அறிவியலுக்கும் பொதுவாக மனித குலத்திற்கும் சிறப்பான சேவைகளை செய்துள்ளார்" என்றும், "இந்த நாட்டின் சுதந்திரம் மற்றும் செழிப்புக்கு அவரது தேசபக்தி உழைப்பு அதிக அளவில் பங்களித்தது" என்றும் குறிப்பிட்டு அவரைப் பாராட்டினர்.

பிராங்க்ளின் சில உண்மைகள்

ஒரு சிறுவனாக பிராங்க்ளின் நீச்சலை விரும்பினார். மேலும் ஒரு கண்டுபிடிப்பாளராக, பிராங்க்ளின் தனது முதல் கண்டுபிடிப்புகளை செய்தார்; கைகளுக்கான நீச்சல் துடுப்புகள்.

பிராங்க்ளின் லண்டன் சென்றபோது நீச்சல் பள்ளியைத் திறக்க முயன்றார். அவர் 1726 இல் தேம்ஸ் நதியில் நீந்தினார். 1968 இல், பிராங்க்ளின் சர்வதேச நீச்சல் அரங்கில் புகழ் பெற்றார். எல்லாப் பள்ளிகளிலும் நீச்சல் நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும் என்று அவர் அடிக்கடி முன்மொழிந்தார்.

பெஞ்சமின் பிராங்க்ளின் செஸ்

பிராங்க்ளின் ஒரு தீவிர செஸ் வீரர். அவர் விளையாட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார் மற்றும் அதற்கு சதுரங்கத்தின் ஒழுக்கம் என்று தலைப்பு வைத்தார். 1786 ஆம் ஆண்டு சதுரங்கம் பற்றிய அவரது கட்டுரை அமெரிக்காவில் சதுரங்க விளையாட்டின் இரண்டாவது அறியப்பட்ட எழுத்து ஆகும். அவர் விளையாட்டைப் பாராட்டினார் மற்றும் அதை எப்படி விளையாடுவது என்பதற்கான நடத்தை நெறிமுறையை பரிந்துரைத்தார்.

விளையாடுவதைத் தவிர, ஃபிராங்க்ளினும் அவரது நண்பரும் இத்தாலிய மொழியைக் கற்க விளையாட்டைப் பயன்படுத்தினர். ஆட்டத்தில் வெற்றி பெற்றவர், தோல்வியடைந்தவர் அடுத்த ஆட்டத்திற்கு முன் செய்ய வேண்டிய பணிகளை ஒதுக்கினார். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக விளையாடினார். அந்த விளையாட்டு பிரபலமாக இருந்த இங்கிலாந்தில். இது அவரை சிறந்த வீரராக மாற்றியது. பிராங்க்ளின் 1999 இல் யு.எஸ். செஸ் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார்.

ஃபிராங்க்ளினின் சொந்த ஒலிப்பு எழுத்துக்கள்

பிராங்க்ளின் லண்டனில் 85 ஆண்டுகள் வாழ்ந்தார். இந்த நேரத்தில், அவர் எழுத்துக்களுக்கு இயற்கையான ஒழுங்கைக் கொடுக்க முயன்றார். ஆங்கில வார்த்தைகளை வேறுவிதமாக உச்சரிக்கிறார்கள் என்று அவர் நினைத்ததே இதற்குக் காரணம்.அவர் தனது சொந்த மெய் எழுத்துக்களை உருவாக்கினார், அங்கு அவர் C, J, Q, W, X மற்றும் Y ஆகிய மெய் எழுத்துக்களை அகற்றினார். பிராங்க்ளின் ஆறு புதிய எழுத்துக்களைச் சேர்த்தார், அவை அவற்றின் சொந்த குறிப்பிட்ட ஒலியைக் குறிக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, பலர் அவரது புதிய மொழியை வாங்கவில்லை, அதனால் அவர் அதை நிறுத்தினார். இந்த எழுத்துக்கள் 1789 இல் நோவா வெப்ஸ்டர் என்பவரால் வெளியிடப்பட்டது.

ஃபிராங்க்ளினின் வர்த்தக பாணி

• பிரான்சில் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் போது, ​​பிராங்க்ளின் ஒரு ஃபர் தொப்பியை அணிந்தார், அது அவரது வர்த்தக முத்திரையாக மாறியது. தொப்பி அணிந்தபடி அவரது பல உருவப்படங்கள் செய்யப்பட்டன. இந்த ஃபேஷன் டிரெண்ட் அதிக அளவு விக் அணிந்து தொப்பியைப் பின்பற்றும் பெண்களையும் கவர்ந்தது. அவர்கள் இந்த பாணியை பிராங்க்ளின் பாணி என்றும் அழைத்தனர்.

•  ஃபோர்ப்ஸ் பெஞ்சமின் ஃபிராங்க்ளினை அமெரிக்க வரலாற்றில் 89-வது பணக்காரர் என்று மதிப்பிட்டுள்ளது.

• சிறிது காலம் சைவ உணவு உண்பவராக மாறினார்.

• பிராங்க்ளின் வாழ்க்கையில் மிகவும் செல்வாக்கு செலுத்திய புத்தகம் காட்டன் மாதரின் "போனிஃபாசியஸ்: நல்லதைச் செய்ய வேண்டிய கட்டுரைகள்" ஆகும். நியூ இங்கிலாந்து கோரண்டில் அவரது முதல் பேனா பெயர் சைலன்ஸ் டோகுட், இந்த புத்தகத்தில் இருந்து உருவான பெயர் மற்றும் "சைலன்டேரியஸ்: தி சைலண்ட் சஃபரர்".

• பிராங்க்ளின் மின்சாரத்தைக் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் புயலின் போது காத்தாடியை பறக்கவிட்டு மின்சாரத்தை விவரிக்க நேர்மறை மற்றும் எதிர்மறை நிகழ்வுகளைக் கண்டுபிடித்தார்.

• அவரது கண்டுபிடிப்புகளில்: நெகிழ்வான சிறுநீர் வடிகுழாய், நீச்சல் துடுப்புகள், நூலக நாற்காலி, நீட்டிக்கும் கை, பிலடெல்பியா அல்லது பிராங்க்ளின் அடுப்பு, மின்னல் கம்பி, பைஃபோகல்ஸ் மற்றும் கண்ணாடி ஆர்மோனிகா ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

• வளைகுடா நீரோடையை பட்டியலிட்ட முதல் நபர் மற்றும் வடக்கு அரைக்கோளத்தில் புயல் நகர்வு பற்றிய விளக்கத்தை முன்மொழிந்தவர். புயல்கள் காற்றிலிருந்து எதிர் திசையில் நகரும் என்று அவர் முன்மொழிந்தார்.

• 1752 இல் பிராங்க்ளின் மற்றும் ஜுண்டோ கிளப் தீக்கு எதிராக சொத்துக்களை காப்பீடு செய்வதற்காக பிலடெல்பியா பங்களிப்பை உருவாக்கியது. இன்று இது நாட்டின் பழமையான வெற்றிகரமான சொத்து காப்பீட்டு நிறுவனமாகும்.

• 1731 ஆம் ஆண்டில் பிராங்க்ளின் இணை கூட்டாண்மைகளை உருவாக்குவதன் மூலம் அமெரிக்காவில் முதல் வணிக உரிமை அமைப்பை நிறுவினார். அவருக்கு இரண்டு பெண் உரிமையாளர்கள் இருந்தனர். 

• அவரது அச்சிடும் அனுபவத்தின் போது, ​​ஈயத்தை நீண்டகாலமாக வெளிப்படுத்துவது, ஈயம் அச்சடிக்கும் அச்சுகளை கையாளுபவர்களுக்கு நோயை ஏற்படுத்தும் என்பதை அவர் கவனித்தார்.

• பென்சில்வேனியா பல்கலைக்கழகம், யூனியன் ஃபயர் கம்பெனி, பொது நூலகம் மற்றும் பென்சில்வேனியா மருத்துவமனை ஆகியவை அவருடைய மிக முக்கியமான பொதுத் திட்டங்களில் அடங்கும்.

• பென்சில்வேனியா மருத்துவமனையைக் கட்டுவதற்கு பொதுப் பணத்தை தனியார் நன்கொடைகளுடன் இணைத்து பொருந்தக்கூடிய மானியத்தைப் பயன்படுத்துவது பிராங்க்ளினின் யோசனையாக இருந்தது. இந்த கருத்து பயன்படுத்தப்பட்டது அவரது காலத்தில் முதல் முறை.

• பிராங்க்ளின் ஒரு வெளிநாட்டு அரசாங்கத்தால் பிரான்ஸ் பெற்ற முதல் தூதர் ஆவார். அவர் 1782 இல் ஸ்வீடனின் முதல் மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் அவர் ஒருபோதும் அந்த நாட்டிற்குச் செல்லவில்லை.

• 1783 ஆம் ஆண்டில் பிராங்க்ளின் "லிபர்டாஸ் அமெரிக்கானா" என்ற பதக்கத்தை பொறிக்க, பிரெஞ்சு நாணயம் மற்றும் பதக்கங்களை செதுக்குபவர் அகஸ்டின் டுப்ரே என்பவரை வடிவமைத்து நியமித்தார். இது முதல் முறையாக பாரிஸில் அச்சிடப்பட்டது.

• பிரிட்டனில் இருந்து அமெரிக்காவை விடுவிப்பதற்கான மூன்று ஆவணங்கள், சுதந்திரப் பிரகடனம், பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் அமெரிக்க அரசியலமைப்பு ஆகிய மூன்று ஆவணங்களிலும் கையெழுத்திட்ட ஒரே நிறுவன தந்தை பிராங்க்ளின் மட்டுமே.

• பிராங்க்ளின் 81 வயதில் அரசியலமைப்பில் கையெழுத்திட்ட மூத்த பிரதிநிதி ஆவார். இளையவர் நியூ ஜெர்சியைச் சேர்ந்த 26 வயதான ஜொனாதன் டேடன்.

• ஐரோப்பாவுக்கான தூதராக, பிராங்க்ளின் 5 மன்னர்களுக்கு முன்பாக நின்றார்.

• பிராங்க்ளின் தான் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, 1790 ஆம் ஆண்டில் அடிமை முறையை ஒழிக்க காங்கிரஸில் மனுத்தாக்கல் செய்த முதல் நபர் ஆவார்.

• 1728 இல், அவருக்கு 22 வயதாக இருந்தபோது, ​​அவர் தனது சொந்த கல்வெட்டை எழுதினார்.

  • அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் எங்கு திரும்பினாலும், பெஞ்சமின் பிராங்க்ளின் பெயர்தான் தென்படுகிறது.
  • அங்குள்ள பெஞ்சமின் பிராங்க்ளின் அருங்காட்சியகத்தில் உலகத்தில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளின் சேமிப்பும் வைக்கப்பட்டுள்ளது. அதனைப்பார்க்க குறைந்த பட்சம் ஒரு வார காலம் தேவைப்படும். 

[ஜனவரி 17 - பெஞ்சமின் பிராங்க்ளின் பிறந்தநாள்]



Read in source website

அண்மையில் வெளியாகியுள்ள இந்திய வனநிலை அறிக்கை- 2021, நாட்டின் மொத்த நிலப் பரப்பில் பசுமைப் பரப்பானது ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கை (24.6%) தொட்டிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளது. மொத்த நிலப் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு வனப் பரப்பாக இருக்க வேண்டும் என்பது இலக்கு. ஆனால், பசுமைப் பரப்பை மதிப்பிடும்போது வனங்கள் மட்டுமின்றி வனங்களுக்கு வெளியே உள்ள மரங்களின் அடர்த்தியும் கணக்கில் கொள்ளப்படுகிறது. முந்தைய 2019 மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில் நாடு முழுவதும் 2,261 சதுர கிமீ பரப்பு பசுமைப் பரப்பாக மாறியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. வனப் பரப்பை மட்டும் கணக்கில் கொண்டால், மொத்த நிலப் பரப்பில் இது 21.7% ஆக உள்ளது. முந்தைய மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில் 0.2% வனப் பரப்பு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்த இரண்டு ஆண்டுகளில் வனப் பரப்பானது 55 சதுர கிமீ அதிகரித்திருப்பது பாராட்டுக்குரியது. அதே வேளையில், வனங்களுக்கு வெளியே உள்ள மரங்களின் அடர்த்தி 406 சதுர கிமீ அளவுக்குக் குறைந்திருப்பது வருத்தத்தையும் அளிக்கிறது. கஜா புயலால் காவிரிப் படுகை மாவட்டங்களில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வீழ்ந்ததும் மரங்களின் அடர்த்தி குறைந்ததற்கான காரணமாக ஊகிக்கப்படுகிறது.

என்றாலும், வனப் பரப்பைப் போலவே மரங்களின் அடர்த்தி குறித்த விவரங்களையும் மாவட்டவாரியாக இந்திய வனநிலை அறிக்கை தெரிவித்தால் மட்டுமே, மரங்களின் அடர்த்தி குறைந்திருப்பதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். அதற்கு முன்பே புயல், வெள்ளம், பெருமழை போன்ற இயற்கைப் பேரிடர்களை அடுத்து, புதிதாக மரக்கன்றுகளை நடுவதும் அவற்றைப் பராமரிப்பதும் பேரிடர்க் காலத்தின் பணிகளில் ஒன்றாக மாற வேண்டும். அது மட்டுமின்றி, சாலை விரிவாக்கப் பணிகளின்போது வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில் மரங்கள் நடுவதையும் ஒரு கட்டாய விதிமுறையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் வனப் பரப்பு தற்போது 20% என்ற அளவிலேயே உள்ளது என்றாலும் காடுகள் அழிப்பைத் தடுப்பது, வனப் பரப்பை விரிவுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் நேர்மறையான அறிகுறிகள் தென்படுகின்றன. காஞ்சிபுரம், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வனப் பரப்பின் அளவு அதிகரித்துள்ளது. இடைப்பட்ட இதே ஆண்டுகளில் விழுப்புரம் மாவட்டத்தில், வனப் பரப்பின் அளவு 23 சதுர கிமீ அளவில் குறைந்திருப்பதும் கவனத்துக்குரியது.

சென்னைப் பெருநகரத்தைப் பொறுத்தவரையில், மொத்தப் பசுமைப் பரப்பு ஏறக்குறைய 5 சதுர கிமீ அளவுக்கு அதிகரித்துள்ளது. 2011-ல் 18 சதுர கிமீ ஆக இருந்த சென்னையின் மர அடர்த்திப் பரப்பு, 2021-ல் 22.7 சதுர கிமீ ஆக அதிகரித்துள்ளது. ஜப்பானிய வனவியலர் அகிரா மியாவாகியின் வழிமுறைகளைப் பின்பற்றி வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் மரத் தொகுதிகளை வளர்த்ததன் காரணமாக சென்னையின் பசுமைப் பரப்பு அதிகரித்துள்ளது. இத்திசையில் மேலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.



Read in source website

தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவராக இருந்த சாம் ராஜப்பா, கடந்த ஞாயிறு காலை கனடாவிலுள்ள தன் மூத்த மகன் வீட்டில் மாரடைப்பால் காலமானதை அறிந்து கடும் வலியால் மூடப்பட்டிருந்த என் கண்களில் ஒன்றிலிருந்தும் நீர் வழியத் தொடங்கியது. அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, இதழியலில் அவர் பெற்றிருந்த அனுபவத்தை மட்டுமின்றித் தன் காலத்தில் அவர் காணவும் அறியவும் நேர்ந்த முக்கிய இந்திய, தமிழக அரசியல், பொருளாதார நிகழ்வுகள், அவற்றின் வளர்ச்சிகள், சிதைவுகள் ஆகியவற்றை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று விரும்பியவர்களில் நானும் ஒருவன். அதை அவர் செய்திருந்தால், சமகால இந்திய வரலாறு பற்றிய ஆய்விலும் எழுத்திலும் ஈடுபட்டுள்ள அறிஞர்களுக்கு வலுவான ஓர் ஆவணத்தை விட்டுச்சென்றிருப்பார்.

ஆங்கில இதழாளர்களாக இருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய மனிதர்கள் சிலரை இப்போது என் உடனடி நினைவுக்கு எட்டியவரை பட்டியலிட முடிகிறது: மோகன்ராம், இராம.சம்பந்தம், ஐராவதம் மகாதேவன், சாம் ராஜப்பா, ஞாநி, சாஸ்திரி ராமச்சந்திரன். ‘அதிகாரத்திடம் உண்மையை உரைத்தல்’ என்ற எட்வர்ட் சைதின் அறக் கோட்பாட்டைத் தங்களால் இயன்ற அளவு கடைப்பிடித்த இவர்களில் கடைசியாகக் குறிப்பிட்டவர் மட்டுமே நம்மோடு இருக்கிறார் –டெல்லியில்.

சாம் ராஜப்பாவுடன் நீண்டகாலம் பழகியிருக்கிறேன். தனித்த அடையாளமும், சுதந்திர உணர்வும் கொண்டுள்ள ‘ஸ்டேட்ஸ்மன்’ ஆங்கில நாளேட்டின் சிறப்பு நிருபராக அவர் இருந்தபோதுதான் அவருடன் பழக்கம் ஏற்பட்டது. ‘ஸ்டேட்ஸ்மன்’ நாளேட்டிலும், பின்னர் ’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேட்டிலும் பணிபுரிந்த, யாருக்கும் பணியாத மனித உரிமைப் போராளி காலம்சென்ற கன்ஷியாம் பரதேசி என் நண்பர் என்பது சாம் ராஜப்பாவுக்குத் தெரிந்ததும் இருவரும் மிகவும் நெருக்கமானோம்.

1980-82-ம் ஆண்டுகளில் நக்ஸலைட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அனுதாபிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கில் கைதுசெய்யப்பட்டும் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டும், சித்ரவதை செய்யப்பட்டும் வந்தபோது, பெரும்பாலான ஏடுகள் காவல் துறை தரப்பில் சொல்லப்பட்டுவந்த விளக்கங்களையே ஏற்றுக்கொண்டிருந்தன. ஆனால், சாம் ராஜப்பாவோ பல்வேறு தரப்புகளிலிருந்து உண்மை விவரங்களைத் திரட்டி ‘ஸ்டேட்ஸ்மன்’ ஏட்டுக்கு அனுப்புவார்.

அப்போது தமிழ்நாட்டில் நடந்த போலி என்கவுண்டர்கள் பற்றி இந்தியாவின் பிற பகுதிகளுக்குத் தெரிய வைத்தவர்களில் சாமும் ஒருவர். அதன் பிறகு புகழ்பெற்ற கேரள எழுத்தாளர் ஓ.வி.விஜயன்கூட தமிழ்நாடு வந்து திருப்பத்தூர், தர்மபுரி பகுதிகளுக்குச் சென்று நீண்ட கட்டுரையை எழுதினார் - அரசு ஒடுக்குமுறையைக் கண்டனம் செய்தும் யதார்த்த நிலையைக் கருத்தில் கொள்ளாத போராளிகளை விமர்சித்தும்.

இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடிநிலை காலத்தில் கேரளத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ராஜன், நக்ஸலைட் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்படுபவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, போலீஸாரால் சித்ரவதை செய்யப்பட்டு இறந்துபோனதை இந்திய அளவில் செய்தியாக்கியவர் சாம் ராஜப்பா. கேரள இடதுசாரி அரசியல் வட்டாரங்களில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய செய்தி அது.

எந்த அரசியல் கட்சிக்கும் ஒருபோதும் சாதகமாக எழுதாத அவர், எல்லாக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுடனும், எந்தக் கட்சியையும் சேராதவர்களுடனும் தொடர்பு வைத்துக்கொண்டு, தகவல்களைத் திரட்டும்போது, அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிசெய்த பிறகே அவற்றைப் பற்றிய செய்தியை அனுப்புவார். தமிழகத்தின் சுற்றுச்சூழல் பிரச்சினையிலும் அவர் காட்டிய ஆர்வத்துக்குச் சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். கடலூரில் சிப்காட்டிலுள்ள தொழிற்சாலைகளால் ஏற்பட்டுவரும் சுற்றுச்சூழல் கேடுகளையும் மாசுகளையும் பலரும் அறிவார்கள்.

நாக்பூரைச் சேர்ந்த ‘நேஷனல் என்விரான்மென்ட் இன்ஜீனியரிங் ரிஸர்ச் இன்ஸ்டிட்டியூட்’ 2008-ல் தயாரித்த அறிக்கை, கடலூரில் சிப்காட் வளாகத்திலும் அதைச் சுற்றிலும் இருக்கும் மக்களுக்குப் புற்றுநோய் ஏற்படும் சாத்தியப்பாடு தமிழகத்தின் பிற பகுதிகளில் இருப்பவர்களைவிட ஆயிரம் மடங்கு அதிகம் என்று குறிப்பிட்டிருந்தது. சிப்காட் வளாகத்தில் உள்ள வேதிப்பொருள்கள், பூச்சிமருந்துகள், மனிதர்களுக்கான நோய்களுக்கான மருந்து ஆகியவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் கழிவுகளில் உள்ள நச்சுகள் மிக அதிக அளவு (சிகப்பு வகை) மாசு ஏற்படுத்துகின்றன என்று கூறிய அந்த அறிக்கை, அது தயாரிக்கப்பட்ட காலத்தில் அத்தொழிற்சாலைகளில் பாதி இயங்கவில்லை என்றும், அவை இயங்கியிருந்தால் சுற்றுச்சூழல் கேடு மூன்று மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என்றும் கூறியது.

கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் பொது இடங்களில் கொட்டப்படுவதால் காற்றிலும் நீரிலும் ஏறத்தாழ 30 வகையான நச்சுப் பொருள்கள் கலந்துவிடுவதை சுட்டிக்காட்டிய அந்த அறிக்கை, அவற்றால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள்தான் என்று கூறியது. அறிக்கையை ‘கம்யூனிட்டி என்விரான்மென்ட் மானிட்டரிங்’ என்ற தன்னார்வக் குழுதான், தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தி வெளியே கொண்டுவந்தது.

இந்தத் தகவல்களை வேறு சிலருடன் கலந்தாய்ந்து உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர் சாம் ராஜப்பா எழுதியவை, ’ஸ்டேட்ஸ்மன்’ ஏட்டில் ‘துரிதமான தொழில்மயமாக்கலும், மக்களின் உடல்நலத்துக்கு ஏற்படும் கேடுகளும்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. தொழிலாளர்களின் உடல்நலத்தையோ, ஆயுள்காலத்தையோ ‘மூலதனம்’ பொருட்படுத்துவதில்லை என்று கார்ல் மார்க்ஸ் எழுதியிருந்ததைக் குறிப்பிட்டு, ‘அரசாங்கம் மூலதனத்தின் பக்கமா அல்லது தொழிலாளர்களின் பக்கமா என்பதைக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று எழுதியிருப்பார் சாம்.

கூடங்குளத்தில் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடந்துவரும் மக்கள் போராட்டங்களைப் பற்றி சாம் தொடர்ந்து எழுதிவந்தார். முல்லைப் பெரியாறு அணை பற்றி எழுதும்போது தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து வலுவான சான்றுகளுடன் அவர் எழுதிய கட்டுரைகளும், பென்னிகுயிக் பற்றிய அவரது கட்டுரைகளும் கேரள அரசின் கவனத்தையும் ஈர்த்தன.

‘தி ஸ்டேட்ஸ்மன்’ ஏடு கொல்கொத்தாவில் நிறுவிய ‘இதழியல் பள்ளி’யின் இயக்குநராகச் செயல்பட்ட அவர், ஏறத்தாழ இரண்டாண்டு காலம் அந்த நகரில் வசித்தார். அவரது துணைவியார் புற்றுநோயால் அவதியுற்றுக்கொண்டிருந்ததால், இதழியல் பள்ளிப் பணிகளை வீட்டிலிருந்தே செய்துவந்தார். அதுமட்டுமல்ல, இதழியல் தொடர்பாக அவரது வீட்டில் ஏராளமான இளைஞர்களுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி பயிற்சியும் கல்வியும் வழங்கிவந்தார்.

‘டெக்கான் குரோனிக்கிள்’ ஏட்டுக்கும் அவ்வப்போது எழுதிவந்தார். குறைந்த காலமே நீடித்த ‘தி ஆந்திர பிரதேஷ் டைம்ஸ்’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக சாம் ராஜப்பா இருந்தார். பலரும் வியக்கும் வண்ணம் அவருக்கு ஒன்றிய அரசு 2017-ல் ‘சிறந்த இதழாளர்’ விருதை வழங்கியது. இத்தகைய அர்ப்பணிப்பு மிக்க இதழாளர்களைத் தமிழ்நாடு அரசும் உரிய முறையில் கெளரவிக்க வேண்டும்.

- எஸ்.வி.ராஜதுரை, மார்க்ஸிய-பெரியாரிய அறிஞர், ‘ஸரமாகோ: நாவல்களின் பயணம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: sagumano@gmail.com



Read in source website

2025-ல் இந்தியாவை காசநோய் இல்லாத தேசமாக்க வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் இலக்கு. ஆனால், இந்த இலக்கை எட்டுவதில் நிறைய சவால்கள் இருக்கின்றன. அதற்கான பயணத்தில் சில தடைக்கற்கள் சறுக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளன.

காசநோய் ஒழிப்பில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள சவால்கள் என்னவென்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

2020ஆம் ஆண்டுக்கான 'இந்திய காசநோய் அறிக்கை'யின்படி (National TB Report), நாடு முழுவதும் 17,19,40,182 பேருக்கு காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 52,273 பேருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நாட்டில், எத்தனை பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறிந்து அதனை, சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் முதல் உலக சுகாதார அமைப்பு வரை தெரியப்படுத்துவது டிபி நோட்டிபிகேஷன் எனப்படுகிறது.

அதன்படி, 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜனவரி முதல் பிப்ரவரி காலகட்டத்தில் 18,297, மார்ச் முதல் ஏப்ரலில் 10,251, மே முதல் டிசம்பரில் 41,753 பேர் காசநோயாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர். இதில் மார்ச் முதல் ஏப்ரல் வரையில் இந்தியாவில் கரோனா முதல் அலை உச்சத்தில் இருந்தபோது நோய் கண்டறிந்து ரிப்போர்ட் செய்தல் 44% குறைந்துள்ளது. அதேவேளையில், கரோனா அலையில் இருந்து மீண்ட பின்னர் இது கணிசமாக அதிகரித்துள்ளது.

கரோனாவால் ஏற்பட்ட பின்னடைவு: காசநோய் ஒழிப்பில் கரோனா பெருந்தொற்று இந்திய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார் சென்னை தாம்பரம் சானட்டோரியம் கண்காணிப்பாளர் (Dr R Sridhar Superintendent Tambaram Sanatorium) மருத்துவர் ஆர்.ஸ்ரீதர்.

"2019 இறுதியில் பதிவான முதல் கரோனா தொற்று இப்போது உலகம் முழுவதும் பரவிவிட்டது. 2020 மார்ச்சில் இந்தியாவில் முதன்முறையாக நாடு தழுவிய முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன் பின்னர் மாநிலங்களில் தேவைக்கேற்ப ஊரடங்குகள் அமல்படுத்தப்படுகின்றன. ஊரடங்கு காலத்தில் காசநோயாளிகளைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. காசநோய் ஒழிப்புப் படிநிலைகளில் மிகவும் முக்கியமானதே Early Screening எனப்படும் நோயை ஆரம்பநிலையில் கண்டறிதல். ஊரடங்கு காலத்தில் இந்த நோய் கண்டறிதலில் சிறு சறுக்கல் ஏற்பட்டது. இருப்பினும் கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்கெனவே நோய் கண்டறிந்தவர்களுக்கு எந்த விதத்திலும் மருந்துகள் கிடைப்பதில் சுணக்கம் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

குறிப்பாக, கரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் காசநோயாளிகளுக்கான மருந்தைக் கொண்டு சேர்ப்பதில் தமிழகம் முன்மாதிரியாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா முதல், இரண்டாவது அலைகளின்போது அனைத்து அரசு மருத்துவமனைகளும் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் காசநோய் அறிகுறியாக இருக்குமோ என்று அஞ்சியவர்கள்கூட காசநோய் மருத்துவமனைகளுக்கு வரத் தயங்கினர். காசநோய் மருத்துவமனைகளும் கோவிட் சிகிச்சை மையங்களாக இருந்ததால், காசநோய் பரிசோதனைக்காகச் சென்றுவிட்டு கரோனாவை வாங்கிவந்து விடுவோமோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டது. இதனாலும், நோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது" என்று மருத்துவர் ஸ்ரீதர் கூறினார்.

தேவை போதிய விழிப்புணர்வு: தொடர்ந்து பேசிய மருத்துவர் ஸ்ரீதர், "காசநோய் ஒழிப்பில் இன்னொரு சவால், மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாமை. நேஷனல் ஹெல்த் மிஷன் மூலம் எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்களுக்கு அதன் நோக்கம் புரிவதில்லை. காசநோய் ஏழைகளுக்கு, குறிப்பிட்ட சில தொழில் சார்ந்தவர்களுக்கே வரும் என்றளவிலேயே அவர்களின் புரிதல் இருக்கிறது. ஆனால், உலக நாடுகளில் நீரிழிவு நோயாளிகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்திலும், ‘ஹெச்ஐவி’ தொற்றாளர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திலும் உள்ளதையும், இந்த இரண்டும் காசநோயை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்துவது என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை.

அதுமட்டுமல்லாது இங்கு புகைபிடிப்போரும், மது அருந்துவோரும் அதிகம். இந்தப் பட்டியலிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடம் போதிய அளவில் இல்லை. இதனால், காசநோய் பரிசோதனைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைகிறது. ஆகையால் இப்போதெல்லாம் நாங்கள் மருத்துவமனைகளில் தீவிர சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக நோயாளிகளுக்கு காசநோய் பரிசோதனையும் செய்யுமாறு தூண்ட மருத்துவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அந்த வகையில், காசநோய் ஸ்க்ரீனிங்குக்கு வருவோரின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கோவிட் -19 மற்றும் காசநோய் என்ற 'இருதிசை' (Bi Directional) பரிசோதனையை செயல்படுத்துமாறு மத்திய அரசு, மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டது. கரோனா காலகட்டத்தில், பை டைரக்‌ஷனல் ஸ்க்ரீனிங் என்ற முறையில் அத்தனை கோவிட் நோயாளிகளுக்கும் எக்ஸ் ரே, சிடி ஸ்கேனின்போது காசநோய்க்கான ஸ்க்ரீனிங்கும் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காசநோய் கண்டறியப்பட்டால் அவர்களை காசநோயை உறுதிப்படுத்து சிபிநாட், ட்ரூநேட் போன்ற அடுத்தகட்டப் பரிசோதனைகளுக்கும் ஊக்குவித்துள்ளோம்" என்றும் கூறினார்.

இந்நிலையில், இரண்டு, மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் காசநோய் பரிசோதனை செய்து கொள்ளவேண்டியது அவசியம் என்று மத்திய அரசு (ஜன.18, 2022) வெளியிட்டுள்ள புதிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிசிஜி தடுப்பூசி வரவேண்டும், பெரியவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் திட்டம் வர வேண்டும், Preventive Therapy எனப்படும் காசநோய் பாதித்தோரின் குடும்பத்தில் உள்ளோரை ஸ்க்ரீனிங்குக்கு உட்படுத்தி அவர்களுக்கு நோய் வராமல் தடுக்கும் நடவடிக்கைகளை இன்னும் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்பன போன்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இவற்றைச் செயல்படுத்த கூடுதல் நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. கூடுதல் நிதி என்பது அரசின் கொள்கை ரீதியான முடிவு என்பதால், அதில் எனது எதிர்பார்ப்பை மட்டும் முன்வைக்கிறேன் என்று கூறினார்.

கேர் கிவ்வர்களை ஊக்கப்படுத்துவோம்! காசநோயாளிகள் 6 முதல் 9 மாதங்கள் வரை தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும். அவ்வாறு இடையில் சிகிச்சையைக் கைவிடாமல் மருந்தைச் சாப்பிட்டாலே, நோயை முற்றிலும் குணப்படுத்திவிடலாம். ஆனால், மருந்து உட்கொள்ள ஆரம்பித்த இரண்டு, மூன்று மாதங்களிலேயே அறிகுறிகள் குறைவதால் மருந்துகளை நிறுத்திவிடுகின்றனர். இதனால் நோய் அடுத்தகட்டமான மருந்துகளுக்குக் கட்டுப்படாத காசம் என்ற நிலைக்குச் செல்கிறது. இதனால், நோயாளிகள் அடுத்தகட்ட சிகிச்சைக்காகப் பொருளாதார ரீதியாக நிறைய இழப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது.

இந்தச் சவாலை எதிர்கொள்ள நிறைய தன்னார்வத் தொண்டு நிறுவனக் களப் பணியாளர்களின் உதவி தேவைப்படுகிறது. அவர்கள் சீரான இடைவெளியில் நோயாளிகளைக் கண்காணித்து, சிகிச்சைக்கு வராதவர்களை வீடு தேடிச் சென்று மீண்டும் சிகிச்சைக்கு வரவழைக்க வேண்டும். இப்போதும் இதைக் களப்பணியாளர்கள் செய்கின்றனர். கேர்கிவர்ஸ் எனப்படும் காசநோய் களப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்படுகிறது. முதல் 2 மாதங்கள் நோயாளிகள் சிகிச்சை முடித்தவுடன் 2000 ரூபாயும், அடுத்த 4 மாதங்கள் சிகிச்சை முடித்தவுடன் மீதமுள்ள ரூ.3000மும் வழங்கப்படுகிறது. இதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

இது தவிர அரசு களப் பணியாளர்களைப் பொறுத்தவரையில் ஹெல்த் விசிட்டருக்கு ரூ.10000 + ஆண்டுக்கு 5% ஊதிய உயர்வு மற்றும் டிஏ ரூ.1500 வழங்கப்படுகிறது. காசநோய் பரிசோதனைக்கூட சூப்பர்வைஸருக்கு (Senior TB Laboratory Supervisor) மாதந்தோறும் மாதம் ரூ.15,000 ஊதியம் + பயணப்படி வழங்கப்படுகிறது. Stastical Asst பணியாளர்களுக்கு மாதம் ரூ.19,000, ஆண்டுக்கு 5% சம்பள உயர்வு அளிக்கப்படுகிறது. இந்தப் பணியாளர்கள் அனைவருக்கும் விரைவில் இன்னும் கூடுதலாக 30% வரை சம்பள உயர்வு செயல்பாட்டுக்கு வரும். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

முன்களப் பணியாளர்கள் என்போர் கரோனா வார்டுகளில் பணியாற்றுவோர் மட்டுமல்ல. உலகில் இன்றளவு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் காசநோய் ஒழிப்புப் பணியாளர்களும் கூடுதல் கவனம் பெற வேண்டியவர்களே. களப் பணியாளர்களின் எதிர்பார்ப்பும் இதுதான். ஆனால், நம் இலக்கு 2025 என்று இருக்கும் நிலையில் களப்பணியாளர்கள் இன்னும் உத்வேகத்துடன் செயல்பட ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும்.

ஊட்டச்சத்தில் கவனம் தேவை: காசநோய் ஏற்பட ஊட்டச்சத்துக் குறைபாடும் ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது. காசநோய் சிகிச்சையில் உள்ளோருக்கு 2018ஆம் ஆண்டு முதல், மாதம் ரூ.500 என சிகிச்சை முடியும் வரை நோயாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. தேசிய சுகாதார திட்டம் (National Health Mission) இத்திட்டத்திற்கு நிக்‌ஷய் போஷான் யோஜனா (Nikshay Poshan Yojana) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நோயாளியின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக இந்தத் தொகை வரவு வைக்கப்படுகிறது. ஆனால், அதிகரித்துவரும் விலைவாசியில் காசநோயாளிக்குத் தேவையான ஆரோக்கியம் தரும் உணவை ஒரு மாதம் முழுமைக்கும் ரூ.500 கொண்டு வாங்க முடியாது என்பதே நோயாளிகளின் வருத்தமாக உள்ளது. மேலும், வங்கிக் கணக்கில்லாத நோயாளிகளால் இந்தத் தொகையைப் பெறுவதிலும் சிக்கல் உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரம் சர்வதேச டிபி ஹாட் ஸ்பாட் என அறியப்படுகிறது. அங்கு காசநோயாளிகளுக்கு மும்பை மாநகராட்சி சார்பில், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின்படி கோதுமை, கடலை மாவு, புரத இணை உணவுகள், வெல்லம் ஆகியன வழங்கப்படுகின்றன. மத்தியப் பிரதேசத்தில் Feed The Family, என்ற திட்டம் அமலில் உள்ளது. அதாவது, காசநோயால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கும் சேர்த்து உணவுப் பொருள் ரேஷனில் வழங்கும் திட்டம். காசநோய் உள்ளவர்களின் குடும்பத்தில் இருப்போர் நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதால், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என்பது தடுப்பு முறையில் முக்கியமான நடைமுறையாக இருக்கும் என அம்மாநில காசநோய் தடுப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுபோன்ற திட்டத்தை நாடு தழுவிய திட்டமாக முன்னெடுத்துச் செயல்படுத்த வேண்டும் என்பது காசநோய் தடுப்புப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள பல்வேறு என்ஜிஓக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், காசநோய் ஒழிப்பில் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதால், தொற்று கண்டறிதல் தொடங்கி ஊட்டச்சத்தை உறுதி செய்வது வரையிலும் நிதியைத் திரட்டுவதிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நம் இலக்கு 2025 என்று குறுகிய காலமாக இருக்கும் வேளையில், தனியார் பங்களிப்பு மிகமிக அவசியம் என காசநோய் ஒழிப்புச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

உள்ளுறை காசம் எனும் பூதம்: உள்ளுறை காசம் எனும் பூதம் மீது கவனம் செலுத்தி செயல்பட்டால் மட்டுமே காசநோய் ஒழிப்பு சாத்தியம் எனக் கூறுகிறார் பொது மருத்துவர் கு.கணேசன். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்தியாவில் 33-40% மக்களுக்குக் காசநோய் தொற்று இருக்கிறது. குறிப்பாக, 5 வயதுக்கு உட்பட்ட மூன்றரை லட்சம் குழந்தைகளுக்குக் காசம் தொற்றியிருக்கிறது. ஆனால், அது அறிகுறிகள் இல்லாத தொற்றாக உடலில் மறைந்திருக்கிறது; காசநோயாக மாறுவதற்குக் காத்துக்கொண்டிருக்கிறது. அதை ‘உள்ளுறைக் காசம்’ (லேட்டன்ட் டிபி) என்கிறோம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, இவர்களில் 10% பேருக்கு முழுமையான காசநோய் ஏற்பட்டுவிடும். அப்போது காசநோய்ப் பரவல் இன்னும் தீவிரமாகும். காசநோய் அகற்றும் திட்டத்துக்கு ஏற்பட்டுள்ள இந்தப் புதிய சவாலை இந்தியா முனைப்புடன் எதிர்கொள்ள இப்போதே தயாராக வேண்டும் என்கிறது, உலக சுகாதார நிறுவனம். இத்தனைக்கும் ‘டிஎஸ்டி’ (Tuberculin Skin Test) எனும் சாதாரணத் தோல் பரிசோதனையிலும், ‘ஐஜிஆர்ஏ’ (Interferon Gamma Release Assay) எனும் எளிதான ரத்தப் பரிசோதனையிலும் இந்தத் தொற்று இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிடலாம். அரசு மருத்துவமனைகளில் இவை இலவசம். இதனை ஊக்குவிக்க வேண்டும். ஆசியாவில் இந்த வழிமுறையில் சிங்கப்பூரும் தைவானும் காசநோயைக் கட்டுப்படுத்துகின்றன. அவற்றைத் தொடர்ந்து 44 ஆப்பிரிக்க நாடுகள் இம்மாதிரியான திட்டங்களை முன்னெடுத்துள்ளன. இந்த வழிமுறையை இந்தியாவும் பின்பற்ற வேண்டும். அரசின் முனைப்புடன், மக்களின் விழிப்புணர்வும் சிகிச்சைக்கான ஒத்துழைப்பும் கூடினால் ‘காசநோய் இல்லாத இந்தியா’ எனும் இலக்கு கைகூடும்" என்றார்.

காசநோய் ஒழிப்பில் இலக்கு 2025 என்ற அருகில் இருக்கும் இச்சூழலில், சமூகப் பொருளாதார பிரச்சினைகள், மருத்துவக் களப் பணியாளர்களின் எதிர்பார்ப்புகள், ஊட்டச்சத்து கொடுக்கும் நெருக்கடி, அச்சுறுத்தும் உள்ளுறை காசம் என அனைத்தும் மிகப்பெரிய சவால்களாக இருக்கின்றன. இந்தச் சவால்களைக் கலைந்தால் இலக்கை எட்டுவது சாத்தியமே. தனியார் பங்களிப்பையும் ஊக்குவித்துக் கொண்டால் நிச்சயம் காசநோய் ஒழிப்பின் சவால்களைச் சமாளிக்கலாம்.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in



Read in source website

கடந்த ஜனவரி 7-ல் நவீன மருத்துவம் உலகிலேயே முதல் முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதருக்குப் பொருத்தி சாதனை செய்துள்ளது. உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்குத் தேவையான மனித உறுப்புகள் கிடைக்காமல், உலகெங்கும் இந்த அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில், விலங்குகளின் உறுப்புகளையும் மனிதருக்குப் பயன்படுத்த முடியும் எனும் நம்பிக்கையை இது விதைத்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் நகரைச் சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னட் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு காரணமாக மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செயற்கை சுவாசக் கருவிகளுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பென்னட்டுக்குப் பன்றியின் இதயத்தை மருத்துவர் கிரிஃபித் பொருத்தினார். இன்றுவரை அந்த இதயம் சீராக இயங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தச் செயல்முறையைச் சொல்வது எளிது. நடைமுறையில் கடினம்.

உதவும் பன்றி உறுப்புகள்

மற்ற விலங்குகளைவிடப் பன்றியின் உறுப்புகள் கிட்டத்தட்ட மனிதர்களின் உறுப்புகளை ஒத்திருப்பதால், உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பொருத்தமானவையாக இவை தேர்வு செய்யப்படுகின்றன. முதன்முதலில் 1838-ல் பன்றியின் ஒளிப்படலம் (Cornea) மனிதக் கண்ணில் பொருத்தப்பட்டது. 1964-ல் சிம்பன்சி குரங்கின் இதயம் மனிதருக்குப் பொருத்திப் பார்க்கப்பட்டது. அது தோல்வியில் முடிந்தது. 1984-ல் ஆப்பிரிக்க/அரேபியக் குரங்கின் (Baboon) இதயம் ஃபாயி (Fae) எனும் குழந்தைக்குப் பொருத்தப்பட்டது. அது 21 நாட்களுக்கு உயிரோடு இருந்தது.

பொதுவாக, ‘மாற்றின உறுப்பு மாற்றுச் சிகிச்சை’யில் (Xenotransplantation) பொருத்தப்படும் உறுப்புகளை மனித உடல் நிராகரித்துவிடும். அப்படியே ஏற்றுக்கொண்டாலும் எதிர்கால நிராகரிப்பைத் தடுக்கத் தடுப்பாற்றல் எதிர்வினையை மட்டுப்படுத்தும் வீரியமான மருந்துகளைப் பயனாளி வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும். அதனால்தான் இம்மாதிரியான அறுவைச் சிகிச்சைகள் வேகம் பெறவில்லை. ஆனாலும், சோதனை முயற்சியாகச் சென்ற அக்டோபரில் நியூயார்க் மருத்துவமனை ஒன்றில் மூளை இறப்பு ஏற்பட்ட ஒருவருக்குப் பன்றியின் சிறுநீரகம் உடலுக்கு வெளியில் பொருத்தப்பட்ட அதிசயம் நடந்தது.

பன்றியின் சிறுநீரகச் செல்களில் சர்க்கரை வடிவில் ‘ஆல்பா-1’ நொதி இருக்கிறது. மனித உடலில் இது இல்லை. பன்றியிடமிருந்து பெறப்படும் சிறுநீரகத்தில், இந்த நொதியைக் கண்டுகொள்ளும் மனித உடல், இதை அந்நியனாகக் கருதி, மேற்படி உறுப்பை நிராகரித்துவிடுகிறது. கலிபோர்னியாவில் இருக்கும் ‘சிந்தெடிக்ஸ் ஜீனாமிக்ஸ்’ நிறுவனம், மரபணு மாற்று உறுப்புகளை வளர்ப்பதில் புகழ்பெற்றது. இந்த நிறுவனம் ‘ஆல்பா-1’ நொதி இல்லாத பன்றியை மரபணு மாற்று முறையில் வளர்த்துக் கொடுத்தது. அதன் சிறுநீரகத்தை மூளை இறப்பு நோயாளிக்கு நியூயார்க் மருத்துவர்கள் பொருத்தினார்கள். அதனால், அதில் பிரச்சினை எழவில்லை. இதை ஒரு மைல்கல் நிகழ்வாக மருத்துவ உலகம் பார்த்தது. இப்போது பன்றியின் இதயத்தை மனிதருக்குப் பொருத்தி வியப்பில் ஆழ்த்தியுள்ளனர் மேரிலேண்ட் மருத்துவமனை மருத்துவர்கள்.

சாத்தியமானது எப்படி?

பன்றிகளில் மரபணு வரிசையைத் துல்லியமாக மாற்றியமைக்கும் ஆராய்ச்சியில் முன்னேறிக்கொண்டிருக்கும் மற்றொரு அமெரிக்க நிறுவனம் ‘ரெவிவிகார்’ (Revivicor). இந்த நிறுவனத்தினர், பன்றி செல்களில் உறுப்பு நிராகரிப்புக்குக் காரணமாக இருக்கும் 4 வகை மரபணுக்களை ‘கிரிஸ்பர்’ (CRISPR/Cas9) எனும் மரபணுச் செதுக்கியால் செதுக்கி, அவற்றைச் செயலிழக்கச் செய்கின்றனர். அடுத்து, பன்றி செல்லின் மரபணு வரிசையில் புதிதாக 6 மரபணுக்களைப் புகுத்திவிடுகின்றனர்.

பிறகு, பன்றியின் கருமுட்டையிலிருந்து மரபணுவை நீக்கிவிட்டு, அதனுள் மேற்சொன்ன மாற்றியமைக்கப்பட்ட மரபணு உள்ள பன்றி செல்லைக் கலந்துவிடுகின்றனர். இப்போது இது கருக்கோளமாகிறது (Zygote). அதை ‘வாடகைத் தாய்’ பன்றியின் கருப்பையில் பதித்துவிடுகின்றனர். அதில் வளர்கருவாக (Embryo) வளர்ந்து சிசுவாகி 114 நாட்களில் மரபணு மாற்றமுள்ள பன்றிக்குட்டி பிறக்கிறது. படியாக்கம் (Cloning) மூலம் டோலி ஆடு பிறந்ததுபோல்தான் இது. இதன் பலனாக, மனித உடல் இந்த உறுப்புகளை அந்நியனாகக் கருதும் வாய்ப்பு குறைந்துவிட, உறுப்பு நிராகரிப்பு தவிர்க்கப்படுகிறது.

சாதாரணமாகவே பன்றிகளின் மரபணுக்களில் ரீட்ரோ வைரஸ்கள் வசிப்பதுண்டு. இவை உறுப்பு மாற்றத்துக்குப் பிறகு பயனாளிக்குத் தொற்றை உண்டாக்கி, உறுப்பு நிராகரிப்பைப் பூதாகரமாக்கும். பன்றியின் மரபணுக்களிலிருந்து 12 வகையான ரீட்ரோ வைரஸ்களை நீக்கியதன் மூலம் இது சரிசெய்யப்படுகிறது. இப்படி, ‘ரெவிவிகார்’ நிறுவனம் தயாரித்தளித்த மரபணு மாற்றுப் பன்றியின் இதயத்தையே பென்னட்டுக்கு மேரிலேண்ட் மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர்.

உறுப்பு நிராகரிப்பைத் தடுக்கும் புதிய மருந்து ஒன்றை பென்னட் இப்போது பயன்படுத்துகிறார். இதுவரை அந்த இதயத்தை அவரது உடல் நிராகரிக்கவில்லை. அவருக்குப் பொருத்தப்பட்டுள்ள பன்றியின் இதயம் மனித உடலுக்கு அந்நியமாகத் தெரியாத அளவுக்கு மரபணு மாற்றமுறையில் வளர்க்கப்பட்டது என்பதால், இந்த மருந்து இனியும் அவருக்குத் தேவைப்படுமா என்பது போகப்போகவே தெரியும்.

இந்திய மருத்துவரின் சாதனையும் வேதனையும்

பன்றியின் இதயத்தை மனிதருக்குப் பயன்படுத்த முடியும் என்பதை 25 ஆண்டுகளுக்கு முன்பே அசாம் மாநில மருத்துவர் ராம் பருவா நிரூபித்திருக்கிறார். 1997, ஜனவரி 1-ல் 32 வயதான ஒருவருக்குப் பன்றியின் இதயத்தை அவர் பொருத்தினார். அந்த நோயாளி 7 நாட்களுக்கு உயிருடன் இருந்தார். அவருக்குப் பல தொற்றுகள் இருந்ததால், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அரசிடம் இந்த சிகிச்சைக்கு முறையாக அனுமதி பெறவில்லை என்ற காரணத்துக்காக உறுப்பு மாற்றுச் சட்டம், 1994-ன் கீழ் பருவா கைதுசெய்யப்பட்டார்.

வரலாறு படைக்குமா?

இன்றைக்கு அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் மாற்று உறுப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர். இந்தியாவில் இதயச் செயலிழப்பால் 50 ஆயிரம் பேர் அவதிப்படுகின்றனர். இவர்களில் அதிகபட்சம் 15 பேருக்குத்தான் இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆண்டுதோறும் 1.8 லட்சம் பேருக்குச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நிலையில், 6 ஆயிரம் பேருக்குத்தான் மாற்றுச் சிறுநீரகம் கிடைக்கிறது. வருடத்துக்கு 30 ஆயிரம் பேருக்குக் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், 1,500 பேருக்கு மட்டுமே இது சாத்தியப்படுகிறது. இந்த நிலையில் மரபணு மாற்றுப் பன்றிகளின் உள் உறுப்புகளை மனிதருக்கும் பயன்படுத்துவது சாத்தியமானால், அனுதினமும் உயிருக்குப் போராடிவரும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் காக்கப்படும். நவீன மருத்துவத்தில் புதிய வரலாறு படைக்கப்படும்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com



Read in source website