DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 17-01-2022

சென்னை: சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் எந்தெந்த சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

அதன்படி, பட்டியலினப் பெண்கள் மட்டுமே போட்டியிடும் வகையில் சென்னை மாநகராட்சியும், தாம்பரம் மாநகராட்சியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி மாநகராட்சி பட்டியலினத்தைச் சேர்ந்த ( ஆண்/பெண்) மட்டுமே போட்டியிடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, கடலூர் மாநகராட்சி, திண்டுக்கல் மாநகராட்சி, வேலூர் மாநகராட்சி, கரூர் மாநகராட்சி, சிவகாசி மாநகராட்சி, காஞ்சிபுரம் மாநகராட்சி,மதுரை மாநகராட்சி, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் ஈரோடு மாநகராட்சிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.



Read in source website

புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை நள்ளிரவு காலமானார்.

சமீப காலமாக சீறுநீரகப் பிரச்னைக்கு சிகிச்சைப் பெற்று வந்த பிர்ஜு(வயது 83) நேற்று இரவு 12.30 மணியளவில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கதக் நடனக் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்த பிர்ஜுவின் திறமையை அங்கீகரித்து இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் வழங்கி இந்திய அரசு கவுரவித்தது.

மேலும், கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் வரும் ‘உனைக் காணாத’ என்ற கதக் நடனப் பாடலை பிர்ஜு தான் வடிவமைத்துள்ளார். மேலும், கமல்ஹாசனுக்கு கதக் கற்றுக் கொடுத்ததும் பிர்ஜு என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

 உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தோ்தலில் போட்டியிடும் குற்றப் பின்னணியுடைய வேட்பாளா்களைக் கண்காணிக்க தனிப் பிரிவை தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதியை தலைமைத் தோ்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. அதனைத் தொடா்ந்து அந்த மாநிலங்களில் தோ்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளா்களைத் தோ்வு செய்து அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

அரசியல் கட்சிகள் சாா்பில் நிறுத்தப்படும் வேட்பாளா்கள் குறித்து வாக்காளா்கள் அறிந்து கொள்ள வசதியாக அரசியல் கட்சிகளுக்கு சில நிபந்தனைகளை தோ்தல் ஆணையம் விதித்துள்ளது. அதன்படி, அரசியல் கட்சிகள் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளரை தோ்வு செய்த 48 மணி நேரத்திற்குள்ளாக, அவா் குறித்த விவரங்கள் குற்ற வழக்கு பின்னணி விவரங்களை தோ்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தற்போது, வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசத்துக்குப் பிறகு முதல் 4 நாள்களுக்குள்ளாக வேட்பாளா்களின் குற்ற வழக்கு விவரங்களை வெளியிட வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தவறினால் மேலும் இரு அவகாசங்கள் வழங்கப்படும்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், அரசியல் கட்சிகள் வேட்பாளரின் குற்றப் பின்னணி, குற்றத்தின் தன்மை, அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விவரம், சம்பந்தப்பட்ட நீதிமன்றம், வழக்கு எண் உள்ளிட்ட விவரங்களையும், குற்ற பின்னணியுடைய இந்த வேட்பாளரை தோ்வு செய்ததற்கான காரணத்தையும் அந்தந்த கட்சி வலைதளத்தின் முகப்பு பக்கத்தில் வெளியிட வேண்டும். அதோடு, இந்த விவரங்களை ஒரு பிராந்திய மொழி பத்திரிகை மற்றும் ஒரு தேசிய பத்திரிகையிலும் வெளியிட வேண்டும். ஃபேஸ்புக், ட்விட்டா் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில், குற்றப் பின்னணியுடைய வேட்பாளா்களைக் கண்காணிக்க தனிப் பிரிவை தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.

அதுமட்டுமின்றி ‘உங்கள் வேட்பாளரை அறிந்துகொள்ளுங்கள்’ என்ற பெயரில் கைப்பேசி செயலி ஒன்றையும் தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. அதில், வேட்பாளரின் குற்றப் பின்னணி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.

விழிப்புணா்வு திட்ட நிதி:

வாக்காளா்களிடையே அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கென பிரத்யேக நிதியத்தை தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. அதன் மூலம், தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் குற்றப் பின்னணி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருப்பது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

தோ்தல் ஆணைய உத்தரவுகளை முழுமையாக பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை, இந்த நிதியில் சோ்க்கப்படும் என்றும் தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெட்டிச் செய்தி...

பஞ்சாப்: வாய்ப்பு மறுக்கப்பட்ட மாநில முதல்வரின் சகோதரா் சுயேச்சையாகப் போட்டி

புது தில்லி, ஜன.16: பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட மாநில முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னியின் சகோதரா் மனோகா் சிங், தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளாா்.

இந்தத் தோ்தலில் ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு வாய்ப்பு’ என்ற நடைமுறையைப் பின்பற்றுவதாகக் கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, பஞ்சாப் முதல்வா் சன்னியின் சகோதரா் மனோகா் சிங்குக்கு தோ்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கவில்லை.

இருந்தபோதிலும், கட்சியின் சில தலைவா்களின் உறவினா்களுக்கு பேரவைத் தோ்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு அளித்துள்ளது. குறிப்பாக ஃபதேகா் சாஹிப் தொகுதி எம்.பி. அமா் சிங்கின் மகன் காமில் அமா் சிங்குக்கு ராஜ்கோட் தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல ஜலந்தா் எம்.பி. சன்டோக் சிங் செளத்ரியின் மகன் விக்ரம்ஜித் சிங் செளத்ரிக்கு ஃபில்லெளா் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கட்சி சாா்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் மருத்துவரான மனோகா் சிங் தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளாா். இதையடுத்து, அரசு மருத்துவா் பணியை ராஜிநாமா செய்துள்ளாா். பேரவைத் தோ்தலில் பஸ்ஸி படானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக களமிறங்க உள்ளாா்.



Read in source website

அரபிக் கடலில் இந்திய- ரஷிய கடற்படையினா் வெள்ளிக்கிழமை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தப் பயிற்சியில் ஈடுபடும் இருநாட்டுக் கடற்படைகளும் இயற்கைப் பேரிடா் அல்லது போா் போன்ற சூழ்நிலையில், சுமுகமான ஒத்துழைப்பையும், தகவல்தொடா்பையும் ஏற்படுத்திக் கொள்ளும் வகையில், இதுபோன்ற கூட்டுப் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன.

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். கொச்சி போா்க்கப்பலும், ரஷியாவின் அட்மிரல் ட்ரிபியூட்ஸ் போா்க்கப்பலும் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டன. கடல்சாா் நடவடிக்கைகள், ஹெலிகாப்டா்களை இருநாட்டுக் கப்பலிலும் தரையிறக்குவதற்கான செயல்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கி, இருநாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பையும் செயல்பாடுகளையும் இந்தப் பயிற்சி பறைசாற்றியதாக இந்திய கடற்படை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

குவைத் நகரின் மாலியா பேருந்து நிலையத்தில் நின்று பேருந்தைப் பிடிப்பது என்பது கோடைக் காலத்தில் மிகப் பெரிய சவால்.
ஏனெனில் அப்படி ஒரு வெயில் கொளுத்தும், போக்குவரத்தின் மையமான இந்த பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லும் பேருந்துகளின் புகையும், நெரிசலும் காத்திருப்பை இன்னும் நரகமாக்கும். குடைக்குள் சிலரும், பேருந்து நிலைய நிழற்குடைக்குள் பலரும் தஞ்சம் புகுந்து கொள்வர்.

புவி வெப்பமயமாதலால் உலகம் முழுவதுமே தட்பவெப்பம் அதிகரித்துள்ளது. இதில் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது குவைத். புவியின் வெப்பமான நாடாக அறியப்படும் குவைத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு 54 டிகிரி வெப்பநிலை பதிவானது. கடந்த 76 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெப்பமாக இது கருதப்பட்டது.

கடந்த ஆண்டு, ஜூன் மாதம் முதன்முறையாக 50 டிகிரி வெப்பநிலை எட்டப்பட்டது. இந்நிலையில் 2071 ஆம் ஆண்டு குவைத்தின் பல்வேறு நகரங்களிலும் தற்போது நிலவும் வெப்பநிலை 4.5 டிகிரி அளவுக்கு அதிகரிக்கக் கூடும் எனக் கூறுகிறது என்விரான்மன்ட் பப்ளிக் அதாரிட்டி என்ற அமைப்பு. இதனால் குவைத் நாட்டின் பெரும்பாலான பகுதிகளும் வாழத் தகுதியற்ற பகுதிகளாக மாறும் என அந்நிறுவனம் கணிக்கிறது.

அரசியல் செயல்பாட்டின்மையே காரணம்: பிரேசில் தொடங்கி வங்கதேசம் வரை பல்வேறு நாடுகளும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆனால், ஓபெக் எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் உறுப்பு நாடுகளில் ஒன்றான வளமான, வெறும் 45 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட நாட்டால் ஏன் பசுமைகுடில் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்றால் அதற்கு அந்நாட்டில் அரசியல் செயல்பாட்டின்மையே காரணம் எனக் கூறப்படுகிறது.

குவைத்தின் அண்டை நாடான சவுதி அரேபியா, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது. 2060குள் ஜீரோ எமிஸன் என்ற நிலையை எட்டுவோம் என்று உறுதியெடுத்துள்ளது.

ஆனால், குவைத்தில் இதுபோன்ற அரசியல் ரீதியான எந்த நடவடிக்கையும் இல்லை என சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அடுத்த இரண்டு ஐ.நா பருவநிலை மாநாடுகள் எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மத்திய கிழக்கு பிராந்திய அரசுகளும் தாங்களும் காலநிலை மாற்றத்தால், அதிகரிக்கும் கடல் மட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

கடைசியாக நடந்த காலநிலை மாற்ற மாநாட்டில் 2035க்குள் 7.4% வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவோம் என குவைத் சூளுரைத்துள்ளது.

பணியைத் துறந்த இளைஞர்: குவைத் அரசின் மீது குற்றச்சாட்டுகள் குவியும் சூழலில், அந்நாட்டில் வங்கித் துறையில் பணியாற்றிய ஜஸீம் அல் அவாதி, தனது வேலையைத் துறந்துவிட்டு புவி வெப்பமயமாதல் பிரச்சினைகள் குறித்து பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது. அவரது இலக்கு குவைத் மக்கள், பொதுப் போக்குவரத்தை அதிகமாகப் பயன்படுத்தி, கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வைக்க வேண்டும் என்பதே. இப்போதைக்கு குவைத்தில், குறைந்த ஊதியம் பெறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டுமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர்.

உயிரிழக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்: வளரும் நாடுகளில் இருந்து குவைத்துக்கு வேலைக்கு வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆண்டுதோறும் வெயில் காலத்தில் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றனர். பொதுவாக வெயில் காலத்தில் உச்சிப் பொழுதில் வெளியே பார்க்கும் வேலைகளுக்கு தடை இருந்தாலும் கூட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிலர் இந்த வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதால் உயிரிழப்புகள் நேர்கின்றன. கடந்த ஆண்டு வெயில் காலத்தில், குவைத்தில் குறைந்த ஊதியம் பெறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழப்பு அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது இருமடங்கு அதிகமாக இருந்தது என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

2040 தொடங்கி 2050 இடைப்பட்ட காலக்கட்டத்தில் தட்பவெப்பத்தால் குவைத்தின் நம்பகத்தன்மை மீது எதிர்மறை விளைவுகளே ஏற்படும் என ஃபிட்ச் ரேட்டிங்ஸ் என்ற பொருளாதார கணிப்பு அமைப்பு கூறுகிறது.

இதனால், குவைத் அரசு அரசியல் குழப்பங்களுக்கு நிரந்தரத் தீர்வு கண்டு, காலநிலை மாற்றத்தினைக் கட்டுப்படுத்துவதன் நிமித்தமாக தனது கவனத்தைத் திருப்ப வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

உறுதுணைக் கட்டுரை: https://www.bloomberg.com/asia



Read in source website

புதுடெல்லி: கரோனா பெருந்தொற்றின் மூலம் ஆதாயம் அடைந்தது இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் பெரும் கோடீஸ்வரர்கள்தான். உலகின் முதல் 10 கோடீஸ்வரர்களின் சொத்து பெருந்தொற்றுக் காலத்தில் இரு மடங்காகியுள்ளது. 99 சதவீத மக்களின் வருமானம் குறைந்துள்ளது என்று ஆக்ஸ்ஃபாம் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்காட்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நேற்று தொடங்கிய நிலையில் சமத்துவமற்ற சமூகம் குறித்த அறிக்கையை ஆக்ஸ்ஃபாம் வெளியி்ட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''கரோனா பெருந்தொற்றால் உலகில் உள்ள முதல் 10 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதேசமயம், 99 சதவீத மக்களின் வருமானம் குறைந்துவிட்டது.

பெருந்தொற்று தொடங்கும்போது 70,000 கோடி டாலராக இருந்த 10 கோடீஸ்வரர்களின் சொத்து தற்போது 1.50 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஒரு வினாடிக்கு 15 ஆயிரம் டாலர் வீதமும், நாள் ஒன்றுக்கு 1300 கோடி டாலர் வீதமும் அதிகரித்துள்ளது.

இந்த 10 கோடீஸ்வரர்களும் தங்களின் 99.99 சதவீத சொத்துகளை நாளையே இழந்தால்கூட, மீதமிருக்கும் அவர்களின் சொத்து, உலகில் உள்ள 99 சதவீத மக்களின் சொத்து மதிப்பை விட அதிகமாக இருக்கும். உலகில் உள்ள 310 கோடி ஏழை மக்களின் சொத்துகளைவிட 6 மடங்கு இந்த 10 கோடீஸ்வரர்களிடம் இருக்கிறது.

கடந்த 14 ஆண்டுகளில் இந்த 10 கோடீஸ்வர்களின் சொத்து அதிகரித்ததைவிட, பெருந்தொற்றுக் காலத்தில்தான் வேகமாக அதிகரித்தது. அதாவது 5 லட்சம் டாலர் அளவுக்கு சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

2021, நவம்பர் 3-ம் தேதி, ஃபோர்ப்ஸ் கணக்கின்படி, உலக கோடீஸ்வரர்களில் முதல் 10 இடங்களில் எலான் மக்ஸ், ஜெப் பிஜோஸ், பெர்நார்ட் அர்னால்ட் குடும்பத்தார், பில் கேட்ஸ், லாரி எலிஸன், லாரி பேஜ், செர்ஜி பிரின், மார்க் ஜூகர்பெர்க், ஸ்டீவ் பால்மெர், வாரன் பஃபெட் ஆகியோர் உள்ளனர்.

பாலின சமத்துமின்மையையும் பெருந்தொற்று அதிகரித்துவிட்டது. பாலின சமத்துவம் பெருந்தொற்றுக்கு முன் 99 ஆண்டுகளில் இருந்த நிலையிலிருந்து தற்போது 135 ஆண்டுகள் இடைவெளிக்குச் சென்றுவிட்டது. 2020-ம் ஆண்டில் மட்டும் பெண்கள் ஒட்டுமொத்தமாக 80,000 கோடி டாலர் வருமானத்தை இழந்திருக்கிறார்கள். ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் ஆகிய நாடுகளில் உள்ள 100 கோடி பெண்களின் சொத்துகளைவிட 252 ஆண்களிடம் அதிகமாக இருக்கிறது.

இனப் பாகுபாட்டையும் பெருந்தொற்று அதிகரித்துள்ளது. 2-வது அலையில், இங்கிலாந்தில், வங்கதேசத்தைச் பூர்வீமாகக் கொண்டவர்கள்தான் பூர்வீக வெள்ளையர்களைவிட 5 மடங்கு அதிகமாக உயிரிழந்திருப்பார்கள்.

பிரேசிலில் உள்ள கறுப்பினத்தவர்கள்தான் வெள்ளை இன மக்களைவிட 1.5 மடங்கு அதிகமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில், 3.4 மில்லியன் கறுப்பின அமெரிக்கர்கள் தங்கள் ஆயுட்காலம் வெள்ளையர்களைப் போலவே இருந்திருந்தால் இன்று உயிருடன் இருப்பார்கள். இது நேரடியாக வரலாற்று ரீதியான இனவெறி மற்றும் ஆதிக்கத்துடன் தொடர்புடையது''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: இந்தியாவின் சேவைத்துறை ஏற்றுமதியை 1டிரில்லியன் டாலர்கள் அளவுக்கு அதிகரிக்கும் வகையில், வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்த்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதியளித்துள்ளார்.

முன்னணி ஐடி தொழில் நிறுவன தலைவர்களிடையே காணொலி மூலம் உரையாற்றிய கோயல் கூறியதாவது:

‘‘இந்த ஆண்டு வர்த்தக ஏற்றுமதி 400 பில்லியன் டாலர்கள் இலக்கை எட்டும் பாதையில் இந்தியா பயணிக்கிறது. சேவை ஏற்றுமதி சுமார் 240 பில்லியன் முதல் 250 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இருக்கும். இது மிகவும் குறைவாக இருந்த போதிலும், வர்த்தக ஏற்றுமதியை எட்டிப் பிடிக்கும் வகையில் வளர்ச்சி அடைய முடியும்.

இரண்டாம் அடுக்கு, மூன்றாம் அடுக்கு நகரங்களில் ஐடி மையங்களை தொடங்க ஐடி தொழில் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதை வரவேற்கிறோம். இது ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன், அந்தப் பகுதி வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவும். ஐடி தொழில் நிறுவனங்கள் நகரங்களை அடையாளம் கண்டால், மத்திய அரசு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக நீடித்துவந்த விவசாயிகளின் போராட்டம் கைவிடப்பட்டாலும், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உறுதி செய்யும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து நீடித்து வருகிறது. விவசாயிகளைப் பாதுகாக்கவும் அவர்கள் நஷ்டத்தைச் சந்திக்கக் கூடாது என்ற நோக்கிலும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயிக்கிறது.

இதில் என்ன பிரச்சினை என்றால், குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது ஏட்டளவில் மட்டும்தான் இருக்கிறது. அதை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை. ஆண்டுக்கு சுமார் 10,000 லட்சம் டன்கள் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யும் நம் நாட்டில், குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்க முடியுமா? அப்படிச் செய்தால், அதனால் யாருக்கு லாபம்? அத்தகைய திட்டத்தின் மொத்தச் செலவு என்னவாக இருக்கும்? குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்கு வதைத் தாண்டியும் வேறு வழிகள் உள்ளனவா? விரிவாகப் பார்க்கலாம்.

எம்எஸ்பி கணக்கீட்டில் போதாமை

விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையத்தின் (CACP) பரிந்துரைப்படி, 1965-ஆம் ஆண்டு முதல் கரீப், ராபி என இரண்டு பருவங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை இந்திய அரசு அறிவிக்கிறது. ஆரம்பத்தில், கோதுமை, நெல்லுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையானது, தற்போது 23 பயிர்களுக்கு வழங்கப்படுகிறது. சாகுபடிச் செலவு, இடு பொருட்களின் விலைகள், பயிர்களின் உற்பத்தி மற்றும் தேவை, உலகச் சந்தைகளில் பயிர்களின் விலை நிலைபோன்ற காரணிகளின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலை தீர்மானிக்கப்
படுகிறது.

பயிர்களின் உற்பத்திச் செலவைக் கணக்கிடுவதற்கு விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையமானது 9 வெவ்வேறு விலைக் காரணிகளைப் (A1, A2, A2+FL, B1, B2, C1, C2, C2*, C3) பயன்படுத்துகிறது. 2018-ஆம் ஆண்டு வரை குறைந்தபட்ச ஆதரவு விலையானது A2+FL செலவுச் சூத்திரத்தின் (formula) அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. A2+FL செலவுச் சூத்திரத்தின்படி, பயிர்ச் சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் தேய்மானச் செலவு, பயிர்க் கடனுக்கான வட்டி, போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இதனால் விவசாயிகளுக்கு எந்த லாபமும் கிடைப்பதில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலையானது உற்பத்திச் செலவை முழுமையாக ஈடுசெய்யக் கூடியதாக இருக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். நீண்ட காலமாக அதற்கான கோரிக்கையை வைத்துவருகின்றனர்.

இதற்கிடையில், எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான “விவசாயிகள் ஆணையம்” (2006), பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அவற்றின் உற்பத்திச் செலவை விட 50% அதிகமாக நிர்ணயிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. விவசாயிகளின் தொடர்ச்சியான கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, மத்திய அரசு தனது 2018-29 பட்ஜெட்டில், குறைந்தபட்ச ஆதரவு விலையானது பயிர்களின் உற்பத்திச் செலவைவிட 50% அதிகமாக நிர்ணயிக்கப்படும் என்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டது.

2018-ம் ஆண்டின் கரீப் பருவம் முதல் இம்முறையில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இவ்விலை உயர்வைச் செய்த பிறகும், பயிர்ச் சாகுபடியின் வருமானம் போது மானதாக இல்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஏன் இப்படியான குற்றச்சாட்டுகள் மீண்டும் மீண்டும் எழுகின்றன?

பாரபட்சக் கொள்முதல்

விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பெறுவதற்கு அவர்களின் பயிர்களை அரசு கொள்முதல் செய்யவேண்டும். ஆனால், கொள்முதல் கொள்கை நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளதால், பெரும்பாலான விவசாயிகளால் குறைந்தபட்ச ஆதரவு விலையை பெற முடியாமல் போய்விடுகிறது. நெல், கோதுமை தவிர மற்ற பயிர்களை அரசு கொள்முதல் செய்வது பல ஆண்டுகளாக மோசமாக உள்ளது. நெல், கோதுமை கொள்முதலிலும் பாரபட்சம் நிலவுகிறது. உதாரணமாக, 2020-21 கரீப் காலத்தில் இந்தியாவில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் மொத்த அளவு 601 லட்சம் டன்கள்.

இதில், 174 லட்சம் டன்கள் பஞ்சாப், ஹரியாணாவிலிருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலிருந்து செய்யப்பட்டுள்ள கொள்முதல் குறைவானது. அதாவது, நெல் கொள்முதலுக்காக மொத்தமாகச் செலவிடப்பட்ட பணத்தில் சுமார் 30% இந்த இரு மாநிலங்களுக்கு மட்டும் சென்றுள்ளது. இதேபோல், கோதுமை கொள்முதலுக்காகச் செலவிடப்பட்ட பணத்தில் சுமார் 52% இந்த இரண்டு மாநிலங்களுக்கும் மட்டும் சென்றுள்ளது. இப்படிப்பட்ட கொள்முதல் முறை மற்ற மாநில விவசாயிகளுக்கு எப்படி உதவும்? இன்னொரு பிரச்சினையும் உண்டு.

பயிர்களின் கொள்முதல் மாநிலங்களின் உற்பத்தியுடன் தொடர்புபடுத்தபடாமல் பல காலமாகச் செய்யப்படுகிறது. 2018-19-ம் ஆண்டில், இந்தியாவின் நெல் உற்பத்தியில் பஞ்சாபின் பங்கு 11% மட்டுமே, ஆனால் கொள்முதலில் அதன் பங்கு 25.53%. இந்தியாவின் நெல் உற்பத்தியில் மேற்கு வங்கத்தின் பங்கு 13.94%. ஆனால் கொள்முதலில் அதன் பங்கு வெறும் 4.46% மட்டுமே. அதேபோல, நெல் உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 5.26%, ஆனால் கொள்முதலில் அதன் பங்கு 2.91% மட்டுமே. இந்த புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வருவது என்னவென்றால், பெரும்பாலான மாநிலங்களில் நெல் பயிரிடும் விவசாயிகள் தங்கள் பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் குறைவான விலையில் தனியார் வியாபாரிகளிடம் கட்டாயமாக விற்றிருக்கலாம். 2018-19-ல் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட விவசாயிகளின் நிலை மதிப்பீடு (Situation Assessment Survey) ஆய்வின் தரவுகள் இதை உறுதி செய்கின்றன.

அதாவது, வெறும் 17% விவசாயக் குடும் பங்கள் மட்டுமே, அரசு கொள்முதல் நிறுவனங்களுக்கு நெல்லை விற்றதாக அந்த ஆய்வு கோடிட்டுக்காட்டியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் உற்பத்திப் பங்குடன் இணைத்து, பயிர்களைக் கொள்முதல் செய்தால், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் தானாகவே போய்விடும்.

அரசு ஏன் தயங்குகிறது?

அனைத்துத் தர விவசாயிகளும் பயனளிக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதிச்சட்டம் இயற்றப்பட்டால், அது கடுமையான பொருளாதார விளைவுகளை உருவாக்கலாம். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழ் உள்ள 23 பயிர்களைக் கட்டாயக் கொள்முதல் செய்ய, தற்போதைய உற்பத்தியின் படி ஏறக்குறைய ரூ.17 லட்சம் கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வ மாக்கப்பட்டால், தோட்டப் பயிர்களை (பழங்கள் மற்றும் காய்கறிகள்) சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை முதலில் எழும். அவற்றின் தற்போதைய உற்பத்தி சுமார் 3200 லட்சம் டன்கள். கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பால், பிற பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலையைக் கோரலாம். எனவே, வேளாண் பொருட்களை கொள்முதல் செய்வதற்குத் தேவைப்படும் செலவு கற்பனை செய்ய முடியாததாக இருக்கும்.

இச்செலவு ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக அதிகரிக்கக்கூடும். சிறு, குறு விவசாயிகளிடம் சந்தைப்படுத்தக்கூடிய (marketable surplus) பயிர்களின் அளவு குறைவாக உள்ளதால், இச்சட்டத்தால் பணக்கார விவசாயிகளுக்கே லாபம் அதிகம். எனில், இப்படிப்பட்ட சட்டத்தை அமல்படுத்த எந்த அரசு முன்வரும்? முதலில் அரசு, குறைந்தபட்ச ஆதரவு விலைசார்ந்து நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். சந்தையில் இடைத்தரகர்கள் மற்றும் தனியார் வர்த்தகர்களின் தொடர்ச்சியான சுரண்டலின் காரணமாகவே, குறைந்தபட்ச ஆதரவு விலையைச் சட்டப்பூர்வமாக்கும் பிரச்சினை எழுகிறது என்பதை வேளாண் சந்தைகளின் செயல்பாட்டை அறிந்தவர்கள் நன்கு உணர்வார்கள்.

பெரும்பாலான நேரங்களில், விவசாயிகள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் 70% கூட தனியார் வியாபாரிகளிடமிருந்து பெறமுடியவில்லை. பெரும்பாலான மாநிலங்களில் பயிர்களின் சந்தை விலை அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறைவானதாக இருப்பதாக விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையத்தால் வெளியிடப்
பட்டுள்ள தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

எனவே, தனியார் வியாபாரிகள் மற்றும் தனியார் ஏஜென்சிகள், குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் குறைவான விலையில் எந்தப் பயிரையும் கொள்முதல் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் கூடிய சட்டம் இயற்றப்பட வேண்டும். இது குறைந்தபட்ச ஆதரவு விலை சுற்றியுள்ள பெரும்பாலான சிக்கல்களை ஒழித்துவிடும். இரண்டாவது வழி, 2018-19-ல் வெளியிடப்பட்டுள்ள இந்திய விவசாயிகளின் நிலை மதிப்பீட்டு ஆய்வின்படி, குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையிலான கொள்முதல் பற்றிய விழிப்புணர்வு பொதுவாக விவசாயிகளிடம் குறைவாக உள்ளது.

குறிப்பாக, குறு, சிறு விவசாயிகளிடையே இந்த விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. இவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, தனியார் வியாபாரிகளும், இடைத்தரகர்களும், இந்த விவசாயிகளின் பயிர்களுக்கு, குறைந்த விலை நிர்ணயம் செய்து சுரண்டுகின்றனர். இதைத் தடுக்க, கவனமாக வடிவமைக்கப்பட்ட வழிமுறையுடன் “சிறு, குறு விவசாயிகள் மட்டும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்கும் உரிமை” சட்டத்தைக் கொண்டுவரவேண்டும்.

மூன்றாவது வழி பயிர்க் கொள்முதலுடன் தொடர்புடையது. விவசாயிகளின் நிலை மதிப்பீடு 2018-19 தரவுகளின்படி, பெரும்பாலான பயிர்களில், 5 சதவீதம் முதல் 10 சதவீத விவசாயக் குடும்பங்கள் மட்டுமே தங்கள் பயிர்களை அரசுக் கொள்முதல் நிறுவனத்திற்கு விற்றுள்ளன. இப்படிப்பட்ட கொள்முதலால், விவசாயிகள் எவ்வாறு குறைந்த பட்ச ஆதரவு விலையைப் பெற முடியும்? இந்திய உணவுக் கழகத்தின் பங்கை மறுசீரமைப்பதற்காக சாந்தகுமார் தலைமையில் (2015) அமைக்கப்பட்ட குழு நெல், கோதுமை கொள்முதலுக்குக் கொடுக்கப்படுகின்ற தேவையற்ற முக்கியத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல், கொள்முதல் திட்டத்தை மற்ற பயிர்களுக்கு விரிவுபடுத்தவும் பரிந்துரைத்துள்ளது. எனவே, பயிர்களின் உற்பத்தியில் 20%-25% கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டால், சந்தைக்கு அதிகப்படியாக வரும் பயிர்களின் வரத்து குறைக்கப்பட்டு, சந்தை விலை உயரும். இது, அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கும்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ளவேண்டும், தற்போதைய நடைமுறையின் அடிப்படையில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமாக்கப்பட்டால், அது விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க உதவும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனெனில் உற்பத்திச் செலவைக் கணக்கிடுவதற்குத் தற்போது பின்பற்றப்படும் முறை குறைபாடுடையது; அது யதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை. உண்மையான உற்பத்திச் செலவின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்வதற்கு முயற்சிகளை எடுப்பதோடு, அனைத்து வேளாண் பொருட்களுக்கும் பொருந்தக்கூடிய கொள் முதல் கொள்கைகளை உருவாக்கினால் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதிச் சட்டம் கேட்கமாட்டார்கள்!

narayana64@gmail.com



Read in source website

 

உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தோ்தல் தேதிகளை இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. ஏற்கெனவே நிச்சயித்திருந்தபடி பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மாா்ச் 10-ஆம் தேதி அனைத்து மாநிலங்களின் தோ்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும்.

கொள்ளை நோய்த்தொற்றின் மூன்றாவது அலை தொடங்குவதை கவனத்தில் கொண்டு உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான தோ்தலை தள்ளிவைப்பது குறித்து சிந்திக்கும்படி, டிசம்பா் 23-ஆம் தேதி அலாகாபாத் உயா்நீதிமன்றம் தோ்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டது. ஆனால் அரசியல் சாசன விதிமுறைகளின்படி ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல்களை நடத்த வேண்டிய கட்டாயத்தின் காரணமாக தோ்தல் ஆணையம் அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.

ஐந்து ஆண்டு பதவிக்காலம் என்பது சட்டப்பேரவைகளின் அதிகபட்ச வரம்பே தவிர, குறைந்தபட்ச வரம்பல்ல. குறிப்பிட்ட கால வரம்புக்குள் கலைக்கப்படாமல் இருந்தாலொழிய, மாநில சட்டப்பேரவைகள் தங்களது ஐந்தாண்டு பதவிக்காலம் முடிந்த பிறகு தொடர முடியாது என்பது அரசியல் சாசன வரம்பு.

அரசியல் சாசனப் பிரிவு 172-இன் கீழ் அவசர நிலை கருதி தோ்தல்களை ஒத்திவைக்கலாம். ஆனால் கொவைட் 19 கொள்ளை நோய், சட்டப்பிரிவு 172 குறிப்பிடும் அவசர நிலை வரம்பில் இல்லை. அரசியல் சாசனம் வகுக்கும்போது இப்படியொரு நிலைமை ஏற்படும் என்று யாரும் நினைத்துகூட பாா்த்திருக்க முடியாது. வேறு வழியில்லாததால் தோ்தலைத் தள்ளிப்போட முடியாது என்பது தோ்தல் ஆணையத்தின் தோ்ந்த முடிவு.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூா் ஆகிய மாநிலங்கள் சட்டப்பேரவை தோ்தலுக்குத் தயாராகின்றன. பஞ்சாப், உத்தரகண்ட், கோவா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பிப்ரவரி 14-ஆம் தேதி ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பிப்ரவரி 27, மாா்ச் 3 என்று இரண்டு கட்டங்களாக மணிப்பூரில் வாக்குப்பதிவு நடைபெறும். பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக உத்தர பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

பிப்ரவரி 10-ஆம் தேதி, முதல் கட்ட வாக்குப்பதிவில் கலந்துகொள்ளும் வாக்காளா்கள், முடிவு தெரிய ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். பஞ்சாப், உத்தரகண்ட், கோவா ஆகிய மூன்று மாநில வாக்காளா்கள் ஏறத்தாழ மூன்று வாரங்கள் காத்திருப்பாா்கள்.

மிகப் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பல கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரத்தில், சில மாநிலங்களில் முடிவுக்காக வாக்காளா்கள் நீண்ட நாள் காத்திருப்பது தவிா்க்கப்பட்டிருக்கலாம். தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஏறத்தாழ இரண்டு மாதங்கள், தோ்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அரசு நிா்வாகம் முடங்கிக் கிடக்கும் அவலம் இனிமேலாவது தவிா்க்கப்பட வேண்டும்.

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில், கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்களை நடத்துவதற்கு ஜனவரி 22-ஆம் தேதி வரை தோ்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. பொதுக்கூட்டங்கள், பாத யாத்திரை, வாகன ஊா்வலங்கள் உள்ளிட்டவைக்கும் 22-ஆம் தேதி வரை அனுமதியில்லை.

அரசியல் கட்சிகள் தங்களுடைய பிரசார உத்திகளை மாற்றி அமைத்து, இணைய வழி பிரசாரங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஆணையம் அனுமதித்திருக்கும் நாலைந்து போ் கொண்ட குழுக்கள், வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பாணியை முன்னெடுக்க வேண்டும். அறிதிறன்பேசிகளின் பயன்பாடு கிராமப்புறங்கள் வரை பரவியிருக்கும் நிலையில், இணைய வழி பிரசாரங்கள் முக்கியத்துவம் பெற வேண்டும்.

உத்தர பிரதேசத்தில் இன்னும்கூட இணைய பயன்பாடு கிராமப்புறங்களை முழுமையாகச் சென்றடையவில்லை. இந்தியாவிலேயே மிகக் குறைந்த அளவு இணைய ஊடுருவல் காணப்படும் மாநிலமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. 96% கிராமப்புற வீடுகளில் கணினி வசதி கிடையாது. பாதிக்கு மேற்பட்ட பெண் வாக்காளா்களுக்கு இணையம் குறித்துத் தெரியாது என்பது மட்டுமல்ல, அவா்கள் அறிதிறன்பேசி பயன்படுத்துபவா்களும் அல்ல. அதனால்தான் தோ்தல் ஆணையத்தின் பிரசாரத் தடை நீட்டிப்பை எதிா்க்கட்சிகள் விமா்சிக்கின்றன.

பேரணிகள், பொதுக்கூட்டங்கள் மூலம் வாக்காளா்களைச் சென்றடையும் வாய்ப்பு வேட்பாளா்களுக்கு மறுக்கப்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்கிற வாதம் ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும், தோ்தலைத் தள்ளிப்போட முடியாத நிலையில் ஆணையத்தின் நிலைப்பாட்டை குறை சொல்ல வழியில்லை. அதேநேரத்தில், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தால் அவை பின்பற்றப்படுமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. முன் அனுபவங்களின் அடிப்படையில் தோ்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் செயல்பட்டாக வேண்டிய நிா்ப்பந்தம் இருப்பதை அவா்கள் உணர வேண்டும்.

கொள்ளை நோய்த்தொற்றின் பாதிப்புக்கு இடையில் தோ்தல் நடப்பது புதிதல்ல. 2020 அக்டோபா், நவம்பா் மாதங்களில் கொள்ளை நோய்த்தொற்றின் முதல் அலை சற்று அடங்கும் நேரத்தில் பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் நடந்தது. இரண்டாவது அலை கடுமையாகப் பரவுவதற்கு 2021 மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த அஸ்ஸாம், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி பேரவைத் தோ்தல்கள் காரணமாயின. அதையெல்லாம் மனதில் கொண்டு, ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடத்தப்படுதல் அவசியம்.



Read in source website

உறக்கத்தினால், நினைவகம் நன்கு செயல்படுமா? அதிசயம்தான்... ஆனால் உண்மை. நவீன அறிவியல் புதிய புதிய நாம் எதிர்பார்க்காத விஷயங்களை வெளிக்கொணருகிறது. அதில் ஒன்றுதான் உறக்கத்தின்போது முகங்களையும் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்பதும், ஆழ்ந்த தரமான தூக்கம் நினைவகத்தைத் தூண்டி, மீண்டும் செயல்பட வைக்கமுடியும் என்பதும். நினைவகத்தை மீண்டும் செயல்படுத்துவது - தரமான தூக்கத்துடன் இணைந்து - முக்கியமானது என்று  இன்றைய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இந்த செய்தியை, வடமேற்கு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து, அதன் முடிவினை இயற்கை அறிவியல் பத்திரிகையான, கற்றலின் அறிவியல்  (Nature partner journal NPJ: Science of Learning ) என்னும் இதழில் 2022 ஜனவரி 12-ம் நாள் வெளியிட்டுள்ளனர்.

ஆழ்ந்த தூக்கமும் நல்ல நினைவுத்திறனும்

உறக்கத்தின்போது நினைவகத்தை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பாகவும், தூக்கத்தின்போது முகம் மற்றும் பெயரை நினைவில் வைத்துக்கொள்வது மற்றும் கற்றலில் ஏற்படுத்தும் விளைவை வடமேற்கு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்து புதிய ஆய்வு முடிவினை ஆவணப்படுத்தியுள்ளனர். புதிதாக நாம் பார்த்து நினைவில் பதிய வைத்துக் கற்றுக்கொண்ட முகம்-பெயர் இணைந்த நினைவுகள் அவர்கள் தூங்கும்போது மீண்டும் செயல்பட்டு பதிவிடும்போது, அவை மனிதர்களின் பெயர் நினைவுகூருதல் கணிசமாக மேம்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த முன்னேற்றத்திற்கான திறவுகோல் என்பது தடையற்ற ஆழ்ந்த தூக்கம் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

தூக்கம் அனைத்துக்குமான தீர்வு ..?

வயதாவதாலோ அன்றி அவர்களை சரியாக கவனிக்க மறந்ததாலோ, முகம் நினைவில் நிற்கும். ஆனால், பெயர் நினைவுக்கு வராது. அதற்கான ஆய்வுதான் இது. எனவே முகத்தை அரிதாகவே மறந்து, ஆனால் பெயர்களுடன் போராடுபவர்களுக்கு, இனி கற்றலை அதிகரிப்பதற்கான தீர்வு உங்கள் தலையணைக்கு அருகில் இருக்கலாம் என்று நினைத்துக்கொள்ளுங்கள். நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் புதிய ஆராய்ச்சியானது தூக்கத்தின் போது நினைவகத்தை மீண்டும் செயல்படுத்துவதன் விளைவை முகம்-பெயர் கற்றலில் முதலில் ஆவணப்படுத்தியுள்ளது.

உறக்கமும் நினைவும்

'இந்த ஆய்வு என்பது தூக்கத்தைப் பற்றிய ஒரு புதிய பரிமாணம் மற்றும் அற்புதமான கண்டுபிடிப்பு, ஏனெனில் நினைவக சேமிப்பை மேம்படுத்த தூக்கத்தின்போது தகவல் மீண்டும் ஊக்குவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் விதம் உயர்தர தூக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று இது நமக்குச் சொல்கிறது' என்று அறிவியல் முன்னணி  எழுத்தாளரும் மற்றும் வடமேற்கு பலகலைக்கழக நரம்பியல் திட்ட செயல்பாட்டாளருமான  நாதன் விட்மோர்(Nathan Whitmore) தெரிவிக்கிறார்.

இடையூறற்ற தூக்கமும் நினைவு செயல்பாடும்

"முகம்-பெயர் கற்றலின் இலக்கு என்பது நினைவகத்தை மீண்டும் செயல்படுத்துவது சரியாக போதுமான மற்றும் இடையூறு இல்லாத மெதுவான தூக்கத்தைப் பொறுத்தே இருக்கிறது" என்ற தகவல்தான். எனவே, தூக்கத்த்துக்கும் நினைவகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நாம் இப்போது அறிய முடிகிறது.

கட்டுரையின் மூத்த எழுத்தாளர் கென் பல்லர், உளவியல் பேராசிரியரும் வடமேற்கில் உள்ள வெயின்பெர்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவாற்றல் நரம்பியல் திட்டத்தின் இயக்குநரும் ஆவார். இந்த கட்டுரையின் இணை ஆசிரியர் அட்ரியானா பாசார்ட், பிஎச்.டி. உளவியலில் ஆய்வாளர்.

இ.இ.ஜி(EEG) மூலமாக தரமான தூக்கத்தின் ஆய்வு

ஆய்வுக் குழுவானது, EEG (Electro Encepahlo Gram) அளவீடுகளைக் கொண்ட ஆய்வில் பங்கேற்பவர்களுக்கு மூளையின் மின் செயல்பாடுகளை பதிவு செய்யும் மின் கருவியின் மூலம் உச்சந்தலையில் உள்ள மின்முனைகளால் எடுக்கப்பட்ட பதிவின் வழியே அனைத்தையும் கண்டறிந்தது. இதில், தூக்கம் சரியாக ஆழமாக இல்லாதவர்களின் தூக்கத்தில் நினைவுகள் சீர்குலைவு ஏற்படுவது தெரிந்தது. அந்த தரமற்ற தூக்கம் நினைவகத்தை மீண்டும் செயல்படுத்துவது உதவாது மற்றும் தீங்கு விளைவிக்கும். ஆனால், குறிப்பிட்ட நேரங்களில் தடையற்ற தரமான தூக்கம் உள்ளவர்களில், மீண்டும் நினைவகத்தை செயல்படுத்துவது என்பது ஒப்பீட்டளவில் நினைவின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது.

ஆய்வின் முறை

இந்த ஆய்வு 18-31 வயதுடைய 24 பங்கேற்பாளர்களிடம் நடத்தப்பட்டது. அவர்கள் கற்பனையான லத்தீன் அமெரிக்க வரலாற்று வகுப்பிலிருந்து 40 மாணவர்களின் முகங்களையும் பெயர்களையும் மனப்பாடம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர் மற்றும் ஜப்பானிய வரலாற்று வகுப்பில் இருந்து மேலும் 40 பேர், ஒவ்வொரு முகமும் மீண்டும் காட்டப்பட்டபோது, ​​அதனுடன் இணைப்பில் இருந்த பெயரைத் தெரிவிக்கும்படி கேட்கப்பட்டது. கற்றல் பயிற்சிக்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் EEG அளவீடுகளைப் பயன்படுத்தி மூளையின் செயல்பாட்டைக் கவனமாகக் கண்காணித்தனர்.  ​​பங்கேற்பாளர்கள் சிறிது நேரம் தூங்கினர். பங்கேற்பாளர்கள் ஆழ்ந்த உறக்க நிலையை அடைந்தபோது, ​​வகுப்புகளில் ஒன்றோடு தொடர்புடைய இசையுடன் கூடிய ஸ்பீக்கரில் சில பெயர்கள் மென்மையாக ஒலித்தன.

பங்கேற்பாளர்கள் எழுந்ததும், அவர்கள் முகங்களை அடையாளம் கண்டுகொள்வது மற்றும் ஒவ்வொரு முகத்துடன் தொடர்புடைய பெயரை நினைவுபடுத்துவதும் மீண்டும் சோதிக்கப்பட்டது. தூக்கம் சீர்குலைவு/தரமற்ற தூக்கம் மற்றும் நினைவகத் துல்லியம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பின் கண்டுபிடிப்பு பல காரணங்களுக்காக குறிப்பிடத்தக்கது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தூக்கச் சிதைவு

"மூச்சுத்திணறல் போன்ற சில தூக்கக் கோளாறுகள் நினைவாற்றலைக் கெடுக்கும் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிவோம்" என்று விட்மோர் கூறினார். "எங்கள் ஆராய்ச்சி இதற்கான சாத்தியமான விளக்கத்தை பரிந்துரைக்கிறது - இரவில் தூங்கும்போது அடிக்கடிஏற்படும்  குறுக்கீடுகள் நினைவாற்றலைக் குறைக்கும்" என்றார். 

இது தொடர்புடைய மூளையின் வழிமுறைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்காக, நினைவுகளை மீண்டும் செயல்படுத்துவதற்கும், தூக்கத்தை வேண்டுமென்றே சீர்குலைப்பதற்கும், ஆய்வகம் ஒரு பின்தொடர்தல் ஆய்வினையும் செய்துகொண்டுள்ளது.

"இந்த புதிய ஆராய்ச்சியானது பல சுவையான கேள்விகளுக்கு பதிலளிக்கும். தூக்கத்தில் இடையூறு என்பது எப்பொழுதும் தீங்கு விளைவிப்பதா அல்லது தேவையற்ற நினைவுகளை பலவீனப்படுத்த இது பயன்படுத்தப்படுமா என்பது போன்ற பல சுவை மிகுந்த கேள்விகளுக்கு தீர்வு காணும்" என்று வடமேற்கு பல்கலைக்கழக ஜேம்ஸ் பாடிலாவின் கலை மற்றும் அறிவியலில் தலைவரான பல்லர் தெரிவிக்கிறார்.

"எந்த வகையிலும், உயர்தர தூக்கத்தை மதிப்பிடுவதற்கான நல்ல காரணங்களை கண்டுபிடித்து வருகிறோம். நல்ல தரமான தூக்கம் என்பது உடல்நலத்துக்கும், மன நலத்துக்கும், நினைவாற்றல் மற்றும் அறிவுத் தூண்டலுக்கும் ஆணிவேராகவே உள்ளது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்போதைய மென்பொறியாளர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு பணிபுரிகின்றனர். அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆழ்ந்த தரமான தூக்கம் பற்றி கூறவேண்டும் என்பதையும் இந்த ஆய்வு தெளிவாகவே தெரிவிக்கிறது.



Read in source website

ஹாலி வால்மீன்

நம்மில் எத்தனை பேருக்கு ஹாலி என்ற வால்மீன், காலம் தவறாமல் 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியை வலம் வரும் என்பது தெரியும். இப்போது வாழும் மனிதர்களில் எத்தனை பேர் ஹாலி வால்மீனைப் பார்த்திருப்பீர்கள். அறிவியல் இயக்கத்தில் உள்ள நாங்கள் அனைவருக்கும் ஹாலி வால்மீனை பார்த்திருக்கிறோம், அதனைக் கொண்டாடியிருக்கிறோம். 

எட்மண்ட் ஹாலி

வானியல் துறை பல குறிப்பிடத்தக்க பெயர்களால் நிரப்பப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று எட்மண்ட் ஹாலி. ஹாலி ஒரு ஆங்கிலேயர். அவர் புவி இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் மற்றும் வானிலை ஆய்வாளர். அவர் 1720-இல் ஜான் ஃபிளாம்ஸ்டீடுக்குப் பிறகு கிரேட் பிரிட்டனில் வாழ்ந்த இரண்டாவது வானியலாளர் ராயல் ஆவார். அவர் கண்டுபிடித்த  மற்றும் புகழ்பெற்ற ஹாலியின் வால்மீன் அவரது பெயரினைத் தாங்கி பெருமைப்படுத்தப்பட்டது. அதன் சுற்றுப்பாதையைக் கணக்கிட்டதற்காக மிகவும் பிரபலமானவர். அவர் பல சாதனைகள் படைத்தவர். பல கண்டுபிடிப்புகளை வடிவமைத்தவர் மற்றும் ஒரு துணிச்சலான கண்டுபிடிப்பாளர். 

வானியல் கண்காணிப்பகம்/புதன் இடை நகர்வு

எட்மண்ட் ஹாலி 1676-77 இல் செயின்ட் ஹெலினாவில் ஒரு வானியல் கண்காணிப்பகம் கட்டினார். அந்த கண்காணிப்பு மையத்திலிருந்து, ஹாலி தெற்கு வான அரைக்கோளத்தை பட்டியலிட்டு, சூரியனுக்கு குறுக்கே புதன் செல்வதை பதிவு செய்தார். பூமி, வெள்ளி மற்றும் சூரியன் இடையே உள்ள தூரத்தை தீர்மானிக்க இதேபோன்ற வெள்ளி குறுக்கே செல்லும் போக்குவரத்து பயன்படுத்தப்படலாம் என்பதை அவர் உணர்ந்தார். அவர் இங்கிலாந்து திரும்பியதும், அவர் ராயல் சொசைட்டியின் உறுப்பினராக ஆக்கப்பட்டார், மேலும், இரண்டாம் சார்லஸ் மன்னரின் உதவியுடன் ஆக்ஸ்போர்டில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பிரின்சிபியா கணிதம் வெளிவர உதவி

ஹாலி ஐசக் நியூட்டனின் செல்வாக்குமிக்க தத்துவவியல் நேச்சுரலிஸ் பிரின்சிபியா கணிதம் (1687) வெளியீட்டிற்கு ஊக்கமளித்து நிதியளித்தார். செப்டம்பர் 1682 இல் ஹாலி செய்த அவதானிப்புகளிலிருந்து, வால்மீன்களின் வானியல் பற்றிய அவரது 1705 சுருக்கத்தில் ஹாலியின் வால்மீனின் கால இடைவெளியைக் கணக்கிட நியூட்டனின் இயக்க விதிகளைப் பயன்படுத்தினார்.

பாய்மரப் பயணம்

எட்மண்ட் ஹாலி 1698 ஆம் ஆண்டு தொடங்கி, கடலில் பாய்மரப் பயணங்களை மேற்கொண்டார் மற்றும் நிலப்பரப்பு காந்தத்தின் நிலைமைகளை அவதானித்தார். 1718 இல், அவர் "நிலையான" விண்மீன்களின் சரியான இயக்கத்தைக் கண்டுபிடித்தார்.

இளமை வாழ்க்கை

எட்மண்ட் ஹாலி இங்கிலாந்தில் நவம்பர் 8, 1656 இல் பிறந்தார். அவர் லண்டனில் மிகவும் வெற்றிகரமான சோப்பு தயாரிப்பாளராக இருந்த எட்மண்ட் ஹாலி சீனியரின் மகனாவார். அவரது குடும்பம் முதலில் டெர்பிஷையரில் இருந்து வந்தது. சிறுவயதில், எட்மண்ட் கணிதத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். லண்டனில் உள்ள செயின்ட் பால் பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார். 1673 இல், அவர் ஆக்ஸ்போர்டு குயின்ஸ் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அவர் இளங்கலைப்படிப்பின்போது சூரியப் புள்ளிகள் மற்றும் சூரியக் குடும்பம் பற்றிய கட்டுரைகளை வெளியிடுவதில் அதிக நேரத்தை செலவிட்டார். அதனால் புகழும் பெற்றார்.

துவக்க தொழில் மற்றும் பயணங்கள்

1675 ஆம் ஆண்டில், கிரீன்விச் ஆய்வகத்தில் முதல் வானியலாளர் ராயல் ஜான் ஃப்ளாம்ஸ்டீட்டின் உதவியாளராக ஹாலி பணிபுரிந்தார். ஹாலியின் பல பணிகளில் ஒன்று, அடையாளம் மற்றும் பட்டியல் நோக்கங்களுக்காக Flamsteed- இன் எண் அமைப்பைப் பயன்படுத்தி நட்சத்திரங்களுக்கு எண்களை ஒதுக்குவது. ஒரு வருடம் கழித்து, அவர் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள எரிமலை வெப்பமண்டல தீவான செயிண்ட் ஹெலினாவுக்குச் சென்றார். அவர் தன்னுடன் ஒரு பெரிய செக்ஸ்டன்ட் மற்றும் சில தொலைநோக்கி காட்சிகளை கொண்டு வந்தார். அதனால் அவர் ஒரு கண்காணிப்பு அறையை அமைத்து, தெற்கு அரைக்கோளத்தில் உள்ள விண்மீன்களை ஆய்வு செய்து பட்டியலிடுத்தார். செயின்ட் ஹெலினாவில் அவர் தங்கியிருந்தபோதுதான், புதன் கோள் வானத்தில் சூரியனின் குறுக்கே செல்வதைக் கவனமாகக் கவனித்தார். வெள்ளியும் அதே வழியில் நகரும் என்றும் அனுமானித்தார். பின்னர் சூரியக் குடும்பத்தின் அளவைக் கணக்கிட அதனைப் பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்தார்.

ஹெவெலியஸுக்கு உதவி

ஹாலி 1678 இல் இங்கிலாந்துக்குத் திரும்பினார். ஒரு வருடம் கழித்து அவர் ராயல் சொசைட்டியின் வேண்டுகோளின் பேரில் டான்சிக்கிற்குச் சென்று ராபர்ட் ஹூக் மற்றும் ஜோஹன்னஸ் ஹெவெலியஸுக்கு இடையே ஒரு சர்ச்சையைத் தீர்க்க உதவினார். ஹெவிலியஸ் தனது அவதானிப்புகளில் தொலைநோக்கியைப் பயன்படுத்தாததால், ராபர்ட் ஹூக் தனது கண்டுபிடிப்புகளை கேள்வி எழுப்பினார். அவரது கண்டுபிடிப்புகளை அவதானிக்க மற்றும் அவரது முடிவுகளை சரிபார்க்க ஹாலி ஹெவிலியஸுடன் தங்கினார்.

தெற்குகோள விண்மீன்கள்

அதே ஆண்டில் 1679 ஆம் ஆண்டில், ஹாலி செயின்ட் ஹெலினாவில் இருந்தபோது அவர் கவனித்த தெற்கு அரைக்கோள நட்சத்திரங்களின் பட்டியலான "ஆஸ்திரேலியாவின் விண்மீன்கள்" என்ற தலைப்பில் வெளியிட்டார். அவரது வெளியீடு மிகவும் விரிவானது. அதில் தெற்கு அரைக்கோளத்தில் மட்டுமே பார்க்கக்கூடிய 341 விண்மீன்கள் பற்றியதாகும். 16-ம்  நூற்றாண்டின் நன்கு அறியப்பட்ட வானியலாளரான டைகோ ப்ராஹேவைக் குறிப்பிடும் வகையில், வானியலாளர் ஃபிளாம்ஸ்டீட் அவருக்கு "தெற்கு டைக்கோ" என்ற பட்டத்தை வழங்கினார். ஹாலி ஆக்ஸ்போர்டில் முதுகலை பட்டமும் பெற்றார். பின்னர் 22 வயதில் ஹாலி  ராயல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருமணம்

ஹாலி 1682 இல் மேரி டூக்கை மணந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். 1686 இல், ஹாலியின் இரண்டாவது படைப்பு வெளியிடப்பட்டது. பருவமழை மற்றும் வர்த்தகக் காற்று பற்றிய விளக்கப்படங்களுடன் கூடிய ஒரு அறிவியல் பத்திரிகை அவரது ஹெலினியன் பயணத்திலிருந்து பெறப்பட்டது. சூரிய வெப்பம் வளிமண்டல இயக்கங்களுக்குப் பின்னால் இருப்பதாக அவர் முடிவு செய்தார். மேலும், கடல் மட்ட உயரத்திற்கும் காற்றழுத்த அழுத்தத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதையும்  ஹாலி நிறுவினார். அவரது பயனுள்ள விளக்கப்படங்கள் தகவல் காட்சிப்படுத்தலின் வளர்ந்து வரும் துறையை வரையறுக்க உதவியது.

கோள்களின் இயக்கம்

ஹாலி பல சந்திர அவதானிப்புகளை மேற்கொண்டார். இது அவரது பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொண்டது. அவரது சந்திர ஆய்வுகள் தவிர, புவியீர்ப்பு தொடர்பான பிரச்சனைகளிலும் அவர் ஆர்வம் காட்டினார். குறிப்பாக அவரைப் பற்றிய ஒரு பிரச்னை, கோள்களின் இயக்க விதிகளுக்கான ஆதாரத்தைக் கண்டறிவதுதான். 1684 ஆம் ஆண்டில், சர் ஐசக் நியூட்டனுடன் அந்த பிரச்னையைப் பேசுவதற்காக கேம்பிரிட்ஜுக்குச் சென்றார்.

நியூட்டன் ஏற்கனவே இந்த சிக்கலைத் தீர்க்க முடிந்தது என்பதைக் கண்டறிந்தார். கோள்களின் சுற்றுப்பாதைகள் நீள்வட்டமாக இருக்கும் என்றும் கூறினார். நியூட்டன் பயன்படுத்திய கணக்கீடுகளைப் பார்க்க ஹாலி இயல்பாக விரும்பினார். ஆனால், நியூட்டனால் அவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நியூட்டன் 1684 ஆம் ஆண்டில் "சுற்றுப்பாதையில் வான் பொருட்கள் நகர்வு " (On the Motion of Bodies in an Orbit)" என்ற தலைப்பில் ஒரு சிறு கட்டுரையை எழுதினார். அது அவரது கணக்கீடுகளை விளக்கியது. இந்த வேலை, பின்னர் நியூட்டனால் விரிவுபடுத்தப்பட்டது. 1687 இல் நியூட்டன் பிரின்சிபியா மேத்தமேட்டிகா (Philosophiæ Naturalis Principia Mathematica) புகழ்பெற்ற படைப்பை வெளியிட்டார். இதனை வெளியிட ஹாலிதான் பெரிதும் உதவினார்.

கணக்கீடுகள் மற்றும் கண்டுபிடிப்புகள்

ஹாலியின் முதல் சுற்றுப்பாதை கணக்கீடுகள் என்பவை கிர்ச் வால்மீன் 1680 மற்றும் 1681 ஆம் ஆண்டுகளில் ஜான் ஃப்ளாம்ஸ்டீடின் அவதானிப்புகளைப் பயன்படுத்திக் கொண்டதுதான். இந்த வால்மீனை முதன்முதலில் 1680-ம் ஆண்டு, நவம்பர் 14ம் நாள் கண்டுபிடித்தார். ஹாலி, கிர்ச் வால்மீனின் சுற்றுப்பாதையை 1682 இல் கணக்கிட்டார். அது  முற்றிலும் துல்லியமானதாக இருந்தது. 

டைவிங் பெல்

எட்மண்ட் ஹாலி 1691 ஆம் ஆண்டில், டைவிங் பெல் ஒன்றைக் கண்டுபிடித்தார். அதை அவரும் அவரது சகாக்களும் விரிவாகப் பரிசோதித்தனர். இது நீருக்கடியில் சுத்தமான காற்றை வழங்க தோல் குழாய்கள் மற்றும் ஈயம் கொண்ட பீப்பாய்களைப் பயன்படுத்தியது. ஹாலி நடுத்தர காது அதிர்ச்சிக்கான ஆரம்ப நிகழ்வுகளில் ஒருவராக அறியப்பட்டார், ஏனெனில் அவர் 4 மணி நேரம் வரை நீருக்கு அடியில் இருப்பார். அதே ஆண்டில் அவர் காந்த திசைகாட்டியின் ஆரம்ப வேலை மாதிரியை வடிவமைத்தார்.

1693 ஆம் ஆண்டில், அவர் வாழ்க்கை வருடாந்திரங்கள் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதில் 'இறப்பில் வயது' பற்றிய அறிக்கையும் அடங்கும். இது ஆக்சுவேரியல் அறிவியலின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

வால்மீன் கணிப்புகள்

பிற்கால வாழ்க்கையில் ஹாலி 1698 ஆம் ஆண்டில், பாய்மரக் கப்பலான Paramour-க்கு கட்டளையிடவும், திசைகாட்டியின் மாறுபாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைப் பற்றி மேலும் அறியவும்  தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்குச் செல்லவும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. பணியாளர்களிடையே ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக முதல் பயணம் குறைக்கப்பட்டது. அவரின் இரண்டாவது பயணம் 1699 இல் தொடங்கியது. அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலின் சில பகுதிகளின் காந்த வரைபடங்கள் 1701 இல் "காம்பஸின் மாறுபாட்டின் பொது விளக்கப்படத்தில்" வெளியிடப்பட்டன.

ஹாலி வால்மீன்

1704 ஆம் ஆண்டில், ஹாலி இறுதியாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வடிவவியலின் சாவிலியன் பேராசிரியரானார். அவரது தொழில் வாழ்க்கையில் இந்த மதிப்புமிக்க நியமனத்தை இழந்த பிறகு. அவர் 1705 இல் வால்மீன்களின் வானியல் சுருக்கம் பற்றிய கட்டுரையை வெளியிட்டார். இந்த பணியில் இவரது கட்டுரை 1337 முதல் 1698 வரை கவனிக்கப்பட்ட 24 வால்மீன்களின் பரவளைய சுற்றுப்பாதைகளை விரிவாகக் கூறியது. 1682ல் அவர் கண்டுபிடித்த வால்மீன்கள் ஒரே வால்மீன் ஆகும்.  இது ஒவ்வொரு 75-76 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வருகிறது என்பதைக் கண்டறிந்தார். மேலும் அது 1758 இல் திரும்பும் என்று அவர் சரியாகக் கணித்தார். வால்மீன் திரும்பியபோது அது ஹாலியின் வால்மீன் என்று அறியப்பட்டது. ஆனால், அவர்தான் அப்போது உயிருடன் இல்லை.

1761 மற்றும் 1769 ஆம் ஆண்டுகளில் சூரியன் முழுவதும் வெள்ளி இடைநகர்வை/குறுக்கே செல்வதைக் கண்காணிக்கும் முறையை அவர் வகுத்தார். இந்த அவதானிப்புகள் பின்னர் பூமியிலிருந்து சூரியனிலிருந்து தூரத்தை துல்லியமாக கணக்கிட பயன்படுத்தப்படும். 1720 இல் ஜான் ஃபிளாம்ஸ்டீட்க்குப் பிறகு ஹாலி கிரீன்விச் ஆய்வகத்தில் ராயல் என்ற வானியலாளரானார்.

ஹாலின் இறப்பு

எட்மன்ட் ஹாலி 1742-ம் ஆண்டு  ஜனவரி 14-ம் நாள்  தனது 86 வயதில் இறந்தார், துரதிர்ஷ்டவசமாக, அவரது நினைவாக பெயரிடப்பட்ட வால்மீன் திரும்புவதைக் காண அவர் வாழவில்லை. ஹாலியின் வால் நட்சத்திரம் 2062 ஆம் ஆண்டு மீண்டும் இரவு வானில் தோன்றும்.

எட்மண்ட் ஹாலி என பெயரிடப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டவை

  1. 1715, மே 3-இல் இங்கிலாந்து முழுவதும் சூரிய கிரகணத்தின் பாதையின் ஹாலியின் வரைபடம்
  2. ஹாலியின் வால் நட்சத்திரம் (சுற்றுப்பாதை காலம் (தோராயமாக) 75 ஆண்டுகள்)
  3. ஹாலி (சந்திர பள்ளம்)
  4. ஹாலி (செவ்வாய் பள்ளம்)
  5. ஹாலி ஆராய்ச்சி நிலையம், அண்டார்டிகா
  6. சமன்பாடுகளின் எண்ணியல் தீர்வுக்கான ஹாலியின் முறை
  7. ஹாலி தெரு, பிளாக்பர்ன், விக்டோரியா, ஆஸ்திரேலியா
  8. எட்மண்ட் ஹாலி சாலை, ஆக்ஸ்போர்டு அறிவியல் பூங்கா, ஆக்ஸ்போர்டு, OX4 4DQ UK
  9. எட்மண்ட் ஹாலி டிரைவ், ரெஸ்டன், வர்ஜீனியா, அமெரிக்கா
  10. எட்மண்ட் ஹாலி வே, கிரீன்விச் தீபகற்பம், லண்டன்
  11. ஹாலி மவுண்ட், செயின்ட் ஹெலினா (680 மீ உயரம்)
  12. ஹாலி டிரைவ், ஹேக்கென்சாக், நியூ ஜெர்சி, வால்மீன்களின் இல்லமான ஹேக்கன்சாக் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் வால்மீன் வழியுடன் குறுக்கிடுகிறது
  13. ரூ எட்மண்ட் ஹாலி, அவிக்னான், பிரான்ஸ்
  14. ஹாலி அகாடமி, இங்கிலாந்தின் லண்டனில் உள்ள பள்ளி
  15. ஹாலி ஹவுஸ் பள்ளி, ஹாக்னி லண்டன் (2015)
  16. ஹாலி கார்டன்ஸ், பிளாக்ஹீத், லண்டன்.

[ஜனவரி 14 - எட்மண்ட் ஹாலியின் நினைவு நாள்]

 



Read in source website

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ள தேர்தல் சட்டங்கள் (திருத்தச்) சட்டம்- 2021, வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் அலுவலர்கள் வாக்காளர்களிடம் அவர்களது ஆதார் எண்ணைக் கேட்டுப் பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் எண் இல்லாதபட்சத்தில் வேறு அடையாளச் சான்றுகளைக் காட்டவும் இச்சட்டத் திருத்தம் அனுமதிக்கிறது என்றபோதும், இச்சட்டத் திருத்தம் அரசியல் வெளியில் தொடர்ந்து சூறாவளிகளைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம், அரசின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படாமல் தனித்தியங்கும் அதிகாரத்தை அரசமைப்பின் வாயிலாகப் பெற்றுள்ளது; ஆதார் தரவுகளை நிர்வகிக்கும் ஆணையமோ மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இயங்கிவருகிறது என்பதே இந்த எதிர்ப்புக்கான முதன்மைக் காரணமாக முன்வைக்கப்படுகிறது. புதுச்சேரியிலும் தெலங்கானாவிலும் நடந்த வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு முயற்சிகள், அரசியல் கட்சிகள் வாக்காளர் பட்டியலைத் தங்களுக்கேற்றவாறு திருத்திக்கொள்ளும் வாய்ப்புகளுடன் இருப்பதைத் தெளிவுபடுத்தியிருக்கின்றன. ஏற்கெனவே, தொழில்நுட்பச் சிக்கல்களுடன் இயங்கிவரும் ஆதார் தரவுத்தளத்துடன் தேர்தல் ஆணையம் தன்னுடைய தரவுகளையும் பகிர்ந்துகொள்வது சரியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைப்பதை ஆதரிப்பவர்களும்கூட அதே அளவுக்குக் காரணங்களைப் பட்டியலிடுகின்றனர். இதன் மூலமாக, ஒரே நபர் இருவேறு இடங்களில் வாக்குரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது அவர்களது முக்கிய வாதம். சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரை முன்னேற்றுவதற்கான ஒரு கருவி என்று ஆதார் திட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரைக்கும் அதற்கு எதிராகப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன, அதன் தொடர்ச்சியே இப்போதைய எதிர்ப்புப் பிரச்சாரமும் என்று இச்சட்டத்தை ஆதரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

வாக்காளர் அட்டையில் புகைப்படம் இடம்பெற்றபோதும், எதிர்ப்புகள் எழத்தான் செய்தன. ஆனால், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் கள்ள வாக்குகள் போடுவது குறைந்தது. வாக்கு இயந்திரங்கள் குறித்து நம்பிக்கையின்மையும் சந்தேகங்களும் எழுந்தபோது, வாக்குப் பதிவை உறுதிசெய்துகொள்ளும் வகையில், விவிபாட் இயந்திரங்கள் இணைக்கப்பட்டன. எனவே, இந்த எதிர்ப்புகள் காலப்போக்கில் மறைந்துவிடும். எதிர்ப்புக்கு வலுவான காரணங்கள் இருக்கும்பட்சத்தில், அவை சரிசெய்யப்படும்.

வருமான வரித் துறையின் நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைத்ததால், ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை நிர்வகித்துவருவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதன் மூலமாகப் போலி வாக்காளர் பிரச்சினைகளுக்கும் முடிவுகட்ட முடியும். 18 வயதாகும் புதிய வாக்காளர்களைப் பட்டியலில் இணைப்பதும் எளிதாகும்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் வாக்காளர் பட்டியலிலிருந்து தங்கள் பெயரை நீக்கி, புதிய பட்டியலில் சேர்ப்பதற்கான நடைமுறைகளும் எளிதாகும். நேர்மையான, வெளிப்படையான ஜனநாயக நடைமுறைக்குத் துல்லியமான வாக்காளர் பட்டியலே தொடக்கப்புள்ளி. ஆனால், நாடாளுமன்ற நிலைக் குழுவில் இது குறித்து விவாதிக்கப்பட்டபோது, எதிர்ப்புத் தெரிவிக்காத எதிர்க்கட்சிகள் மக்களவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டபோது மட்டும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது அப்பட்டமான கட்சி அரசியலாகவே பார்க்கப்படும்.



Read in source website

பாரதியார் ‘தமிழ்த்தாய்’ என்னும் தலைப்பில் பாடிய பாடலின் வரிகள் இவை:

‘புத்தம் புதிய கலைகள்-பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்:

மெத்த வளருது மேற்கே - அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவுங் கூடுவதில்லை - அவை

சொல்லும் திறமை தமிழ்மொழிக்கு இல்லை

மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த

மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்

என்று அந்தப் பேதை உரைத்தான்-ஆ

இந்த வகை எனக்கு எய்திடல் ஆமோ’

இப்பாடலில் வரும் ‘மெல்லத் தமிழ் இனி சாகும்’ என்னும் வரியை எல்லோரும் மேற்கொள் காட்டுவது சகஜம். எதிர்காலத்தில் அழியப்போகும் மொழிகளுள் தமிழும் ஒன்று என்று ஐநா கூறியதாகச் சிலர் மேற்கோள் காட்டிச் சொல்வதும் சகஜம். இந்த இரண்டில் ஒன்று கவிஞரின் ஆதங்கம்; இன்னொன்று ஆய்வாளர்களின் ஊகம்.

தென் மாவட்ட வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் அவரது இளம் வயதில் மேம்போக்காக ‘மெல்லத் தமிழ் இனி அழியலாம்’ என்று சொன்னதன் மீதான கோபத்தை பாரதியார் தன் கவிதையில் வெளிப்படுத்தினார். பாரதி பாண்டிச்சேரியில் இருந்தபோது தமிழைவிட வங்க மொழி உயர்ந்தது என்று அரவிந்தர் உட்படச் சிலர் பேசியது (வ.ரா.கருத்து) பாரதியைப் பாதித்திருக்கலாம்.

ஒரு மொழியின் வாழ்வும் வளர்ச்சியும் அந்த மொழி சார்ந்த பண்பாட்டின் கூறுகளிலும் மக்களின் உணர்விலும்தான் இருக்கும். இன்னொரு வகையில் மொழியின் வளர்ச்சியானது ஆளும் அரசின் நிலையைப் பொறுத்தும் இருக்கும். இந்த விஷயங்களை 2,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட தமிழுக்குப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

உலக மொழிகள்

உலக மொழிகளின் எண்ணிக்கை அவை பற்றிய சரியான கணிப்பு, அவற்றின் வீழ்ச்சி, அழிவு பற்றிய கணக்கைத் துல்லியமாகக் கூற முடியவில்லை என்பதே ஆய்வாளர்களின் கருத்து. உலகில் சுமார் 6,800 மொழிகள் உள்ளன என்பது ஒரு கணக்கு. இவற்றில் 43% அழியப்போகும் சூழலில் உள்ளனவாம். உலக மொழிகளில் 40% மக்கள்தான் தாய்மொழியில் படிக்கின்றனர். உலக மொழிகளில் தொழில்நுட்பப் படிப்புக்குரிய கூறுகளுடன் இருக்கும் மொழிகள் நூற்றுக்கும் குறைவு என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையில் உள்ள மொழிகள் பற்றிய கணக்கு துல்லியமாக இல்லை என்று கூறுகின்றனர். 1921-2011 ஆண்டுகளில் 1,599 மொழிகள் இருந்தன. 220 மொழிகள் அழிந்துவிட்டன என்கின்றனர். இந்திய அரசமைப்புச் சட்டம் 8-ம் அட்டவணைப்படி இந்தியாவில் 23 மொழிகள் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன.

பழமை, தொடர்ச்சி

பழமையான உலக மொழிகளில் தமிழும் ஒன்று என்பதை மொழியியலர்கள் ஒத்துக்கொள்கின்றனர். ஒரு மொழியின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டுமல்ல; அதன் பண்பாட்டுத் தொடர்ச்சி, புரிதல் போன்றவற்றிலும் இருக்கிறது. செம்மொழிக்குரிய அந்தஸ்தே இதுதான். தமிழ், கிரேக்கம், மாண்டரின் (சீன மொழி), சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளும் பழமையானவையே. தமிழில் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளைப் புரிந்துகொள்வதில் இன்றைய சாதாரண மாணவனுக்குப் பெரிதும் பிரச்சினை இல்லை.

ஆனால், கிரேக்கம், மாண்டரின் போன்ற மொழிகளில் உள்ள பழைய இலக்கியங்களை அந்த மொழி பேசும் நவீன வாசகர்கள் புரிந்துகொள்வதில் சிரமம் உண்டு. இந்தியச் செம்மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஒடியா, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தமிழ் பழமையானது. இவை இலக்கியம் வழியாக மட்டுமல்ல. அகழாய்வுச் சான்றுகள் வழியும் நிறுவப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கவித்துவம் வாய்ந்த கபிலரின் தொடர்ச்சி ஆண்டாள், கம்பன், பாரதி எனத் தொடர்கிறது.

பன்முகத்தன்மை

தமிழ்ப் பண்பாடு ஒற்றைத் தன்மை கொண்டதல்ல. பன்முகத்தன்மை உடையது. இதற்குச் சமூகவியல்ரீதியான காரணங்கள் நிறையச் சொல்லலாம். முக்கியமாகத் தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்தும் அயல் நாடுகளிலிருந்தும் நடந்த வணிகம், படையெடுப்பு ஆகியவற்றைக் கூறலாம். இதற்கெல்லாம் தமிழ்நாட்டில் கிடைத்த ரோமானிய, கிரேக்க நாணயங்களும் அயலிடங்களில் கிடைத்த பிராமி பொறிப்புகளும் சான்றுகளாகும்.

பழங்காலத்தில் பன்மொழி அறிவு

தமிழ்நாட்டில் பல மொழிகள் அறிந்த தமிழ் வணிகர்கள் இருந்தனர். பத்துப்பாட்டில் ஒன்றான பட்டினப்பாலையில்,

‘மொழிபல பெருகிய பழிதீர் தேயத்து

புலம்பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்

முட்டாச் சிறப்பின் பட்டினம்”

என்னும் வரிகளை இதற்கு மேற்கோளாகக் கூறலாம். இதனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் வணிக நகரங்களில் பல மொழிகள் பேசிய வணிகர்கள் இருந்திருக்க வேண்டும் என்றும், அவர்களின் வழியாக அந்த மொழிகளைத் தமிழர்கள் அறிந்திருக்கலாம் என்றும் ஊகிக்கலாம்.

பலவகைப் பண்பாடுகள்

இந்திய சுதந்திரம் வரையுள்ள காலகட்டத்துத் தமிழ்நாட்டு வரலாற்றை மேம்போக்காகப் புரட்டுகிறவர்களுக்குப் பல்வேறு மொழிகள் பேசிய பல்வகைப்பட்ட பண்பாடுகள் கொண்டவர்கள் தமிழ்நாட்டை ஆண்டது தெரியும். சங்க காலத்திலேயே சமண, பௌத்த மதங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டன. இவர்களின் வழியாக பிராகிருதம், பாலி, அர்த்தமாகதி போன்ற மொழிகளின் சொற்கள் தமிழில் கலந்தன.

1,500 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் ஒரு பகுதியை ஆண்ட களப்பிரர்கள் தமிழர் அல்லர். இவர்களின் தாய்மொழி தமிழ் அல்ல. இவர்கள் காலத்தில் பிராகிருதமும் சம்ஸ்கிருதமும் தமிழுடன் உறவாடின. தமிழ் ஆட்சி மொழியாக, அரசியல் மொழியாக இருக்கவில்லை. இவர்களை அடுத்து வந்த பல்லவர்களும் தமிழரல்லர். காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தமிழ்நாட்டின் பெரும் பகுதியை ஆண்ட இவர்களின் ஆட்சி மொழி தமிழல்ல. இவர்கள் தங்கள் செப்பேடுகளை சம்ஸ்கிருதம், பிராகிருத மொழிகளில் வெளியிட்டனர்.

பல்லவர் காலத்தில் படையெடுப்பு, வணிகம் காரணமாக கன்னடம், தெலுங்கு மொழிச் சொற்களும், பண்பாட்டு விஷயங்களும் தமிழுடனும் தமிழ்நாட்டுப் பண்பாட்டுடனும் கலந்தன. தமிழர் பண்பாட்டில் வடஇந்திய சமயக் கூறுகள் பெரிதும் கலந்தது இக்காலத்தில்தான். பல்லவர் காலத்துக்குப் பின் வந்த சோழ அரசர்களில் சிலர் தெலுங்கு வம்சாவழியினாராக இருந்தனர். ஆனால், ஆட்சிமொழி தமிழ்தான். சோழரை அடுத்து வந்த பாண்டியர்களின் ஆட்சிமொழி தமிழ்தான்.

பாண்டியரின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்திய விடுதலை வரை தமிழ்நாட்டைத் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவரே ஆண்டனர். தமிழ்நாட்டைத் தெலுங்கு பேசியவர்கள் நீண்ட காலம் ஆண்டிருக்கின்றனர். தஞ்சைப் பகுதியில மராட்டியர் இருந்தனர். அப்போது ஆட்சிமொழி மராட்டியே. மோடி என்ற எழுத்துகளில் நிர்வாக விஷயங்களை எழுதி வைத்தனர்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியில் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் செல்வாக்கடைந்தது. இப்படியாகத் தமிழ்நாட்டில் 2,000 ஆண்டுகளாக சம்ஸ்கிருதம், பிராகிருதம், பால்லி, அர்த்தமாகதி, தெலுங்கு, கன்னடம், மராட்டி, ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துகீசியம், பாரசீகம் எனப் பல மொழிகள் கலந்திருக்கின்றன. 2,000 ஆண்டுகளின் வரலாற்றில் சோழர்கள், முற்காலப் பாண்டியர்கள், பிற்காலப் பாண்டியர்கள் காலம் தவிர்த்து, உத்தேசமாக 1,500 ஆண்டுகள் தமிழ் ஆட்சிமொழியாக இருக்கவில்லை. இப்படியான சூழ்நிலையிலும் தமிழின் கவிதை, இலக்கணம், உரைநடை போன்றவை அழியவில்லை. பல்வேறு மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன.

கலை, சடங்கு, மரபு

ஒரு மொழியின் வளர்ச்சியைத் தொய்வின்றிச் செயல்படுத்துவதில் படைப்பாளிகளுக்குரிய இடம் கலை, சடங்குகள், வாய்மொழி மரபு போன்றவற்றுக்கும் உண்டு. இந்தக் கூறுகளின் தொடர்ச்சி அவற்றின் பன்முகப் பண்பாட்டைப் பாதுகாப்பதில்தான் இருக்கிறது. இப்படியான பாதுகாப்பு எண்ணம் அண்மையில் இளைஞர்களிடம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம்.

‘மெல்லத் தமிழினி சாகும்’ என்ற வரிகள் இடம்பெற்ற பாடலை பாரதியார் பாடியதற்குக் குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சிதான் காரணம். 20-ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் கல்கத்தாவிலிருந்து வந்த ‘மாடர்ன் ரிவ்யூ’ என்னும் இதழில், எல்லா பாடங்களையும் தாய்மொழியில் படிக்க முடியும் என்று யதீந்திர சர்க்கார் எழுதினார்; இதற்கு வரலாற்றுப் பேராசிரியர் கே.ஏ.நீலகண்டன் மறுப்பு எழுதினார். தமிழுக்கு அந்த வலிமை இல்லை என்றார். இதை விமர்சித்து, பாரதி ஒரு கட்டுரை எழுதினார். பெரியசாமி தூரனின் ‘பாரதித் தமிழ்’ தொகுப்பில் இக்கட்டுரை உள்ளது. இன்று அந்தச் சூழல் மாறிவிட்டது. மெல்ல மட்டுமல்ல, எப்போதும் தமிழ் சாகாது.

- அ.கா.பெருமாள், நாட்டாரியல் ஆய்வாளர்.

தொடர்புக்கு: perumalfolk@yahoo.com



Read in source website

நிதி ஆயோக்கின் வளர்ச்சிக் குறியீட்டில் தமிழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறது. இதே வேளையில், அகில இந்திய அளவில், மத்திய அரசின் பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் ‘தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு 2019-21’ (National Family Health Survey- NFHS 2019-21) வெளிவந்துள்ளது. என்.எஃப்.ஹெச்.எஸ். என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை குழந்தைகள், மகளிர் - வயது வந்த ஆண்களின் ஊட்டச்சத்து தொடர்பான விவரங்கள், நல்வாழ்வு தொடர்பான புள்ளிவிவரங்களைத் தருவது.

1992-93-ல் தொடங்கி, இந்த அறிக்கை தற்போது ஐந்தாவது முறையாக வெளிவந்துள்ளது.சிறாரிடையே காணப்படும் ஊட்டச்சத்து தொடர்பான விவரங்களை அறிய மூன்று முக்கிய அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. முதலாவது, வயதுக்கேற்ற உயரம். வயதுக்கேற்ற உயரம் இல்லாதவர்கள் வளர்ச்சி குன்றியவர்களாகக் கருதப்படுவார்கள்.

என்.எஃப்.ஹெச்.எஸ்.-5-ன்படி 6 மாதங்கள் முதல் 5 வயதுக்கு உட்பட்ட தமிழகச் சிறாரில் வளர்ச்சி குன்றியவர்கள் 25% பேர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த அளவு 2 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளது. மேலும், இந்திய சராசரியைவிட (35.5%) தமிழ்நாட்டில் வளர்ச்சி குன்றியவர்கள் குறைவானவர்களே. எல்லா மாவட்டங்களும் அகில இந்திய சராசரியைவிடக் குறைந்த அளவிலேயே வளர்ச்சி குன்றுதலைப் பதிவுசெய்துள்ளன.

அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 33.6%-ம், தொடர்ந்து மதுரையில் 32.4%-ம், நாகையில் 32.3%-ம் பதிவாகியுள்ளன. முந்தைய ஐந்து ஆண்டுகளைவிடக் கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் வளர்ச்சி குன்றிய சிறார் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மதுரையில் 11.2 , நாகையில் 7.8 சதவீதப் புள்ளிகள் அதிகரித்துள்ளன. மற்றொருபுறம், திருவள்ளூரில் 12, சென்னையில் 10.5 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளன. இதன்மூலம், மாநில சராசரி குறைந்தாலும்கூட, மாவட்டங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் இருப்பது வெட்டவெளிச்சமாகிறது.

மற்றொரு முக்கிய அளவீடான வயதிற்கேற்ற எடையின்மை கொண்ட சிறார் தமிழ்நாட்டில் 22% உள்ளனர். இந்த அளவும் கடந்த 5 ஆண்டுகளில் 2 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளது; அகில இந்திய சராசரியைவிட (32.1%) மிகக் குறைவாக உள்ளது. ஆனால், கரூரில் மட்டும் எடை குறைந்த குழந்தைகள் 36.3% பேர் உள்ளனர். இந்த அளவீடு கரூர் உட்பட 10 மாவட்டங்களில் அதிகரித்துள்ளது.

மற்றுமொரு அளவீடு உயரத்துக்கேற்ற எடையின்மை. தமிழ்நாட்டுச் சராசரி 4.6%, அகில இந்திய சராசரியைவிட (19.3%) மிகவும் குறைவு. ஆனால், சிவகங்கை (29.8%), திண்டுக்கல் (21.1%), ஈரோடு (20.9%), திருச்சி (20.9%) ஆகிய மாவட்டங்கள் அகில இந்திய சராசரியைவிட அதிக அளவீட்டைக் கொண்டுள்ளன. ஒன்பது மாவட்டங்களில் உயரத்துக்கேற்ற எடையற்ற சிறாரின் சதவீதம் ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அதே வேளையில், திருவண்ணாமலை, தருமபுரி, கோவை போன்ற மாவட்டங்கள் எடையற்ற சிறாரின் சதவீதத்தைக் குறைந்துள்ளன.

அதிகரிக்கும் ரத்தசோகை

சிறாரிடையே காணப்படும் ரத்தசோகையும் அவர்களின் நல்வாழ்வைப் பெருமளவில் பாதிக்கக்கூடியது. என்.எஃப்.ஹெச்.எஸ். 5–ன்படி, தமிழகத்தில் 57.4% சிறார் ரத்தசோகையுடன் உள்ளனர். அகில இந்திய சராசரியைவிட (67.1%) இது குறைவுதான் என்கிறபோதும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அதன் அளவு அதிகரித்துள்ளது பெரிதும் கவலைக்குரியது. முந்தைய ஐந்து ஆண்டுகளில் ரத்தசோகையுடைய சிறார் சதவீதம் 50.7% ஆக இருந்தது.

குறிப்பாக, திருச்சி (82.3%), விழுப்புரம் (73.4%), கரூர் (73.2%) போன்றவை தேசிய சராசரியைவிட அதிக அளவில் ரத்தசோகை உடைய சிறாரைக் கொண்டுள்ளன. அது மட்டுமில்லாமல், 22 மாவட்டங்களில் இதன் அளவு கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. மறுபுறம், ரத்தசோகை உடைய சிறாரின் அளவை திருநெல்வேலி மாவட்டம் பெருமளவில் குறைத்துள்ளது.

ஒப்பீட்டளவில், பார்க்கையில் தமிழ்நாட்டின் ரத்தசோகையுடைய பெண்களின் அளவு இந்திய சராசரியை (57%) விடக் குறைவு. ஆனால், முந்தைய ஐந்து ஆண்டுகளைவிட, தமிழ்நாட்டில் ரத்தசோகை ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளை, 12 மாவட்டங்களில் பெண்களிடையேயான ரத்தசோகை அளவு அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக பெரம்பலூரில் 66% பேரும், கரூரில் 65% பேரும் ரத்தசோகையுடன் உள்ளனர்.

எடையின்மையும் கூடுதல் எடையும்

என்.எப்.ஹெச்.எஸ். 5–ன்படி,15 முதல் 49 வயதுடைய பெண்களிடையே போதிய எடை இல்லாதவர் சதவீதம் தமிழ்நாட்டில் 12.6%. இந்த அளவும் இந்திய சராசரியைவிட குறைவு. ஆனால், புதுக்கோட்டை (20.3%), நாகை (19.4%) மாவட்டங்களில் நாட்டின் சராசரியைவிட அதிக அளவில் பதிவாகியுள்ளது.

சமீபகாலமாக மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கத்தால் உடற்பருமன் பெரும் பிரச்சினையாய் மாறிவருகிறது. 15 முதல் 49 வயதுடைய பெண்களிடையே காணப்படும் உடற்பருமன் உள்ளவர்களின் சதவீதம் தமிழ்நாட்டில் 40.4. இந்த அளவு கடந்த ஐந்து ஆண்டுகளில் 10 சதவீதப் புள்ளிகள் அதிகரித்துள்ளது என்பது கவலைக்குரியது. மேலும், அகில இந்திய சராசரியைவிட (24.6%) தமிழ்நாட்டில் உடற்பருமனான பெண்கள் அதிகம். பெண்களில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்களின் விகிதாசாரத்தில் தமிழ்நாடு (7.5%) இந்திய அளவைவிட (6.1%) அதிகமாக உள்ளது. சென்னை, திருவாரூர், கரூர், கன்னியாகுமரி, திருச்சி போன்ற மாவட்டங்கள் அதிகமானவர்களைப் பதிவுசெய்துள்ளன. இதேபோல் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் விகிதமும் அதிக்ம்.

ஊட்டச்சத்து என்று வரும்போது, உணவுடன் பாதுகாப்பான குடிநீர், சுகாதாரமான கழிப்பிடங்களும் இன்றியமையாதவை. சுகாதாரமான கழிப்பிடத்துக்காக சமீப காலமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்துவருகின்றன. பெரும்பாலான மாவட்டங்கள் தமிழ்நாட்டில் மேம்பட்ட கழிப்பிடத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை(72.6%), அகில இந்திய எண்ணிக்கையைவிட (70.2%) அதிகம். இருந்தபோதிலும் விழுப்புரம் (53.8%), அரியலூர் (54.6%), புதுக்கோட்டை (55.2%), மாவட்டங்களில் இதன் அளவு குறைவாகவே உள்ளது.

அவசர கவனம் தேவை

பெண்கள், சிறாரின் ஊட்டச்சத்து தொடர்பான பெரும்பாலான அளவீடுகளில் தமிழ்நாடு இந்தியாவைவிடச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. அதேவேளையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சி குன்றிய சிறார் எண்ணிக்கை போன்றவை பல மாவட்டங்களில் பெருகிவருவதைக் கவனித்து, அந்தப் பிரச்சினையைக் களைவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம். ரத்தசோகை, உடற்பருமன் போன்றவற்றில் மாவட்டங்களுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கு மாநிலம் தழுவிய நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். கரோனா போன்ற பெருந்தொற்றுகளை இனிவரும் காலங்களில் எதிர்த்து நிற்பதற்கு ஊட்டச்சத்து மிகுந்த சமச்சீர் உணவோடு, ஆரோக்கியமான உடலும் அவசியம் என்பதைக் கவனத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும்.

- ஆர்.கோபிநாத், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தொடர்புக்கு: gopidina@gmail.com



Read in source website