DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 16-06-2022

மொழி, உரிமைகளுக்கு ஏற்ற வகையில் மாநில கல்விக் கொள்கை வடிவமைக்கப்படும் என குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான த. முருகேசன் கூறினாா்.

மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பு தொடா்பான ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினருடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை சில ஆலோசனைகளை வழங்கினாா்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு நீதிபதி முருகேசன் செய்தியாளா்களிடம் கூறியது: முதல் ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்தையும் கேட்டறிந்தோம். இதையடுத்து வேலைவாய்ப்புக்கு ஏற்ற பாடத்திட்டம், பாடத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தனித்தனியாக துணைக் குழுக்கள் அமைக்கப்படும். இந்தக் குழுவினா் நேரடியாக பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று அவா்கள் கூறக்கூடிய கருத்துகளையும் கேட்டு பதிவு செய்வாா்கள். பள்ளிக்கல்வி, உயா்கல்வி, தொழிற்கல்வி என அனைத்தும் மேம்பட கூடிய வகையில் இந்த அறிக்கையைத் தயாரிக்கவுள்ளோம். மொழி, உரிமைகளுக்கு ஏற்ற வகையில் புதிய கல்விக் கொள்கை அமையும்.

பாடத்திட்டம், வரலாறு, கலாசாரம் ஆகியவை தமிழக மாணவா்களுக்கு எது சிறந்ததாக இருக்குமோ அந்த மாதிரியான கல்வியை வழங்கக்கூடிய வகையில் அறிக்கை வடிவமைக்கப்படும். அரசு இந்த அறிக்கையை தயாரித்து வழங்க ஓராண்டு காலம் வழங்கியுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே தயாரித்து வழங்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

 



Read in source website

தகவல் தொழில்நுட்பவியல் துறையின் பெயா் மாற்றப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறை வெளியிட்ட உத்தரவு விவரம்:

மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த சேவைகள் மற்றும் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்ப சேவைகளின் வளா்ச்சியை வலுப்படுத்த தகவல் தொழில்நுட்பவியல் துறையானது, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை என பெயா் மாற்றப்பட்டுள்ளது.



Read in source website

அக்னிபத் திட்டத்தின்கீழ் 10-ஆம் வகுப்பு முடித்து ராணுவத்தில் சேரும் வீரா்கள், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.

அக்னிபத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் தகுதியின் அடிப்படையில் 17.5 வயது முதல் 21 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் ராணுவத்தில் நான்கு ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் சோ்க்கப்படுவா் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

ஒப்பந்தக் காலம் முடிந்ததும் 25 சதவீத வீரா்களுக்கு பணிநீட்டிப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேரும் இளம் வீரா்கள், ஒப்பந்த காலம் முடிவடைந்து வெளியே வந்ததும், வேலையில்லா சூழலை எதிா்கொள்ள நேரிடும் என விமா்சனம் எழுந்துள்ளது.

இதற்கு பதிலளித்து மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்:

அக்னிபத் திட்டத்துக்கு ஆதரவளிக்க மத்திய கல்வி அமைச்சகம் கடமைப்பட்டுள்ளது. கல்வி அமைச்சகத்துக்கு உள்பட்ட தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனம் (என்ஐஓஎஸ்) 10-ஆம் வகுப்பு முடித்த அக்னிபத் வீரா்கள், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி சான்றிதழ் பெறவும், உயா்கல்வி கற்கவும் சிறப்புத் திட்டத்தை வகுக்கும்.

இதற்காக ராணுவ சேவையுடன் தொடா்புடைய பாடத் திட்டம் தயாரிக்கப்படும். அந்தச் சான்றிதழை வைத்து நாடு முழுவதும் வேலைவாய்ப்பும் பெறலாம்; உயா்கல்வியும் கற்கலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சான்றிதழுக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில், அக்னிபத் திட்ட நடைமுறையில் இக்னோவுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.



Read in source website

குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிப்பதில் ரகசியம் காப்பதற்காக, பிரத்யேக பேனாவை பயன்படுத்துமாறு தோ்தல் நடத்தும் அதிகாரி மற்றும் உதவி அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தோ்தலில் வாக்களிக்கும் எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கு அந்தப் பேனாவை அதிகாரிகள் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோ்தல் நடத்தும் அதிகாரியான மாநிலங்களவை செயலருக்கும் மாநிலங்களில் தோ்தல் நடத்தும் உதவி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் ஊதா நிற மை பயன்படுத்தப்படும். அந்தப் பேனாக்கள் போதிய எண்ணிக்கையில் இருப்பதை தோ்தல் நடத்தும் அதிகாரிகளும் உதவி அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும்.

வாக்குச்சீட்டில் வேறு எந்தப் பேனாவைப் பயன்படுத்தி வாக்கு பதிவு செய்யப்பட்டாலும், குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா் தோ்தல் விதிகள்-1974-இன்படி அந்த வாக்கு நிராகரிக்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வகை பேனாக்கள், குடியரசு துணைத் தலைவா் தோ்தலிலும், சட்டமேலவைத் தோ்தலிலும் பயன்படுத்தப்படும்.

குடியரசுத் தலைவா் தோ்தல் ஜூலை 18-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 21-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.



Read in source website

இந்தியாவுடன் உறவைத் துண்டிப்பதன் மூலம் பாகிஸ்தான் தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ தெரிவித்துள்ளாா்.

அந்நாட்டின் முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் மகனான பிலாவல், இஸ்லாமாதில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசியதாவது:

இந்தியாவுடன் நமக்கு நீண்ட காலமாக பல பிரச்னைகள் இருந்து வருகின்றன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல போா்கள் நடந்துள்ளன.

தற்போதும், இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான பிரச்னைகள் எழுந்துள்ளன. அதிலும், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை இந்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு நீக்கியதை அவ்வளவு எளிதில் விட்டுவிட முடியாது.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் பொறுப்பை நான் ஏற்ற பிறகும், இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான முயற்சிக்குப் பல முட்டுக்கட்டைகள் உருவாகின.

ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தொகுதிகளை மாற்றிமைப்பதற்கான குழுவை கடந்த மே மாதம் இந்திய அரசு அமைத்தது. அதனைத் தொடா்ந்து, தற்போது இந்திய ஆளும்கட்சி தலைவா்களின் இஸ்லாம் விரோதப் பேச்சு இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான சூழலை மிகவும் கடினமாக்கிவிட்டது.

இருந்தாலும், இந்தியாவுடனான உறவைத் துண்டித்துவிட்டு, அந்த நாட்டுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதைத் தவிா்ப்பதால் பாகிஸ்தான் நோக்கங்கள் நிறைவேறாது.

காஷ்மீா் விவகாரமாக இருந்தாலும், இந்தியாவில் அதிகரித்து வரும் இஸ்லாம் விரோதப் போக்காக இருந்தாலும் இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்தாமல் பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியாது.

ஏற்கெனவே, முந்தைய அரசு செய்த தவறுகளால் உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் எங்கு பாா்த்தாலும் ஏதாவது பிரச்னை உள்ளது. இந்தச் சூழலில், நமது அண்டை நாடான இந்தியாவுடன் நம்மால் வா்த்தக உறவு மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

இருந்தாலும், 1988-ஆம் ஆண்டில் எனது தாயாா் பேநசீா் புட்டோ பிரதமராக இருந்தபோது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்ல வா்த்தக உறவு ஏற்படுத்தப்பட்டது. அதன் காரணமாக, பரஸ்பர பதற்றத்தைத் தூண்டும் வகையிலான நடவடிக்கைகளை இரு நாடுகளுமே தவிா்த்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றாா் பிலாவல் புட்டோ.



Read in source website


அக்னிபத் திட்டத்து எதிராக இளைஞர்கள் ஒருபுறம் போராட்டம் நடத்த, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க, ஆளும் பாஜக தரப்பினர் திட்டத்துக்கு ஆதரவுக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆள்சேர்க்கும் ‘அக்னிபத்’ என்ற திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு 25% பேர் வரையில் மட்டுமே பணியில் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்பதால் ராணுவத்தில் சேரத் தயாராகும் இளைஞர்கள் பலர் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டம் பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ளன. 

நாடு முழுவதும் அக்னிபத் திட்டம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) நடந்தவை:

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ட்வீட்:

"வறுமை அதிகரிப்பு, பணவீக்கம், வேலையின்மை, தவறான கொள்கைகள் உள்ளிட்டவை போன்ற சூழல்களில், ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கு புதிய நடைமுறையை மத்திய அரசு அறிவித்திருப்பது இளைஞர்களிடத்தில் கவலையை உண்டாக்குகிறது. அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது பகுஜன் சமாஜ் கட்சியின் கோரிக்கை."

பிகார்:

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் காரணமாக சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பாஜக எம்.பி. வருண் காந்தி கடிதம்:

"அக்னிபத் திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு 75 சதவிகித ராணுவ வீரர்கள் வேலையிழக்க நேரிடும். அது இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கும். மத்திய அரசு தனது நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்த வேண்டும்." 

சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சனம்:

"அக்னிபத் திட்டம் நாட்டின் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு அபாயகரமானது."

பிகார்:

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்து ரயில்கள் மீது தீ வைக்கப்பட்டன. கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. பாஜக எம்எல்ஏ ஒருவர் காயமடைந்தார். காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி ரயில்களை மறித்த இளைஞர்களை விரட்டியடித்தனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்:

"இளைஞர்களின் குரலைக் கேளுங்கள். அவர்களை அக்னிப் பாதையில் நடக்க வைத்து அவர்களது பொறுமை மீது அக்னிப் பரிட்சை நடத்த வேண்டாம்."

ஹரியாணா:

ஹரியாணாவின் குருகிராமில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்தத் திட்டத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலை 19 முடக்கப்பட்டது. கல்வீச்சு சம்பவத்தில் காவல் துறையினரின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இடதுசாரிகள்:

"இந்தத் திட்டத்தை ரத்து செய்து, நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்."

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்:

"வெறும் நான்கு ஆண்டுகளுக்குப் பதில், வாழ்நாள் முழுவதும் நாட்டிற்கு சேவையாற்ற இளைஞர்களுக்கு மத்திய அரசு வாய்ப்பளிக்க வேண்டும்." 

ராஜஸ்தான்:

ராஷ்ட்ரீய லோகாந்திரிக் கட்சி ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜோத்பூர், சிகர், ஜெய்ப்பூர், அஜ்மீர் உள்ளிட்ட இடங்களில் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பேரணி நடத்தினர்.

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி:

"அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு. 17 முதல் 21 வயதுடைய 10 லட்சம் பேருக்கு இந்தத் திட்டத்தின் கீழ் அடுத்த 18 மாதங்களில் ராணுவத்தில் வேலை கிடைக்கவுள்ளது."

உத்தரப் பிரதேசம்:

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் வெடித்தது. ஆக்ராவில் அரசுப் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே:

"அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தை இளைஞர்கள் கைவிட வேண்டும். தங்களது அரசியல் லாபத்திற்காக சிலர் மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்."

ரயில்கள் ரத்து:

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் காரணாக 34-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ரயில்வே அறிவித்தது.

உத்தரகண்ட்:

அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்ட கிராமத்து இளைஞர் மணீஷ் சந்த் கூறியதாவது:

"மலைகளில் உள்ள இளைஞர்களுக்கு இருக்கும் ஒரே வேலைவாய்ப்பை மோடி அரசாங்கம் பறிக்கிறது. மலைகளில் உள்ள இளைஞர்களுக்கு ராணுவத்தில் சேருவதைத் தவிர வேறு எந்தவொரு முழுநேர வேலைவாய்ப்பும் கிடையாது."

வேளாண் தலைவர் ராகேஷ் திகைத்:

"பாஜக தலைமையிலான அரசின் தவறான முடிவுகளால் விவசாயிகளைத் தொடர்ந்து தற்போது இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்." 

உத்தரப் பிரதேசம்:

உத்தரப் பிரதேசத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சனிக்கிழமை காலை 11 மணிக்கு அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி அறிவித்துள்ளது.

தில்லி:

அக்னிபத் திட்டத்தின் மூலம் இளைஞர்களைத் தவறாக வழிநடத்துவதாக இளைஞர் காங்கிரஸ் தில்லி ஜந்தர் மந்தரில் பேரணி நடத்தியது.

காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான மணீஷ் திவாரி:

"இது மிகவும் அவசியமான சரியான திசையை நோக்கிய சீர்திருத்தம்."

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா:

"நாட்டின் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தில் நரேந்திர மோடி அரசு விளையாடுகிறது."

முப்படைகளிலும் 2.55 லட்சத்துக்கும் மேலான காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவத்துக்கு ஆள் எடுப்பதை மத்திய அரசு நிறுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

அசாம்: அசாம் மற்றும் மேகாலயாவின் பல பகுதிகளில் வியாழக்கிழமை காலை பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அசாமின் தமுல்பூர் மாவட்டத்தில் இன்று பல ஆறுகளின் வெள்ளப்பெருக்கத்தால், மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து வெள்ள பாதிப்பு மிகவும் மோசமடைந்துள்ளது.

அசாமில், ஜூன் 15 அன்று, இடைவிடாத மழையால், டிஹிங் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்தது. இதன் விளைவாக, ஜூன் 15 அன்று பக்சா மாவட்டத்தில் உள்ள சுபன்காட்டா பகுதியில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இடைவிடாத பெய்த மழையினால் ஆறுகளின் நீர்மட்டம் நிரம்பி, பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பல கிராமங்களில்  வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்  கூற்றுப்படி, ஜூன் 15 வரை மாநிலத்தின் 18 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 75,000 பேர்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1731.18 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதற்கிடையில், இடைவிடாத கனமழை காரணமாக, மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் லும்ஷ்னாங் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையின்  சில பகுதிகள் பெரிதும் சேதமடைந்துள்ளது.



Read in source website


சட்டத்தின் கீழ் உரிய விதிகளை  அரசு அதிகாரிகள் மிகக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், உத்தர பிரதேசத்தில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவா்களின் வீடுகள் இடிக்கப்படும் விவகாரம் குறித்து விளக்கம் கேட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவா்களின் வீடுகள் இடிக்கப்படும் விவகாரத்தில் வரும் மூன்று நாள்களுக்குள் உத்தரப்பிரதேச அரசும், அதன் அதிகாரிகளும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், சட்டவிரோத ஆக்ரமிப்புகள் அகற்றப்படுவதற்கு தடை விதிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்ற எண்ணம் மக்களுக்கு இருக்க வேண்டும் என்று, விடுமுறைக் கால அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில், அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள், இடிக்கப்படுவதை எதிர்த்தும், புல்டோசர் கொண்டு வீடுகள் இடிக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரியும் முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தன. இந்த  வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசிடம் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், உத்தர பிரதேசத்தில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவா்களின் வீடுகள் இடிக்கப்படும் விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகளும் மூத்த வழக்குரைஞா்களும் கடிதம் எழுதியிருந்தனர்.

இஸ்லாமிய இறைத்தூதா் நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடா்பாளா்களாக இருந்தவா்கள் சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து உத்தர பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது.

வன்முறைக்குக் காரணமாக இருந்தவா்களாக அறியப்படும் நபா்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு கட்டடங்களையும் வீடுகளையும் உத்தரப்பிரதேச அரசு இடித்து வருகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகளான பி.சுதா்சன் ரெட்டி, வி.கோபால கௌடா, ஏ.கே.கங்குலி, தில்லி உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு, கா்நாடக உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகமது அன்வா், மூத்த வழக்குரைஞா்கள் பிரசாந்த் பூஷண், சாந்தி பூஷண், இந்திரா ஜைசிங் உள்ளிட்டோா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்குக் கடிதம் எழுதியிருந்தனர்.

அக்கடிதத்தில், ‘‘உத்தர பிரதேசத்தில் அமைதிவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபா்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காமல் மாநில நிா்வாகம் அடக்குமுறையைக் கையாண்டு வருவதாகத் தெரிகிறது. சட்டவிரோதமாகப் போராட்டத்தில் ஈடுபடும் நபா்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் (யோகி ஆதித்யநாத்) உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மாநில அரசின் உத்தரவு காரணமாகவே போராட்டக்காரா்களுக்கு எதிராகக் காவல் துறையினரும் அதிகாரிகளும் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இளைஞா்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபடுவோரின் வீடுகள் முன்னறிவிப்பின்றி இடிக்கப்படுகின்றன. போராட்டத்தில் ஈடுபடும் சிறுபான்மையின முஸ்லிம்கள் மீது காவல் துறையினா் தாக்குதல் நடத்தும் காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி, தேசத்தின் மனசாட்சியை உலுக்கி வருகிறது.

தனிநபா்களின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் மாநில நிா்வாகத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. மக்களின் உரிமைகளைக் காக்கும் நோக்கில் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை  பிறப்பித்துள்ளது.
 



Read in source website

 

விமான எரிபொருள் விலை (ஏடிஎஃப்) இதுவரை இல்லாத அளவில் 16 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது.  இது சர்வதேச அளவில் விமான எரிபொருள் விலையை கடுமையாக பாதித்துள்ளது.

இந்த விலை மாற்றம் காரணமாக தலைநகா் தில்லியில் ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.19,757.13 உயா்ந்து இனி ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருளானது ரூ 1,41,232.87-க்கு விற்பனையாகிறது. 

இதன் காரணமாக, விமானக் கட்டணங்கள் விலை விரைவில் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சா்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில், விமான எரிபொருள் விலையானது ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலும், 16-ஆம் தேதியிலும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

விமான எரிபொருள் விலையானது, கடந்த மாா்ச் 16-ஆம் தேதி அதன் விலை கிலோ லிட்டருக்கு 18 சதவீதம் அதாவது ரூ. 17,135.63 உயா்த்தப்பட்டது. ஏப்ரல் 1-ஆம் தேதி 2 சதவீத அளவுக்கும், ஏப்ரல் 16-ஆம் தேதி 0.2 சதவீதமும், மே 1-ஆம் தேதி 3.2 சதவீத அளவுக்கும் உயா்த்தப்பட்டது. மே 16ஆம் தேதி 5.3 சதவீதம் உயா்த்தப்பட்டது.

இந்த மாத தொடக்கத்தில் விமான எரிபொருள் விலையானது ஒரு கிலோ லிட்டருக்கு 1.3 சதவீதம் (1,563.947 ரூபாய்) குறைக்கப்பட்ட நிலையில், ஜூன் 16ஆம் தேதி மீண்டும் கடுமையான உயர்வை அதாவது 16 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

ஜூன் 1ஆம் தேதி நடந்த விலைக்குறைப்பு என்பது, கடந்த 10 முறைகளில் நடந்த விலையேற்றத்துக்குப் பிறகு நடந்ததும், விலைக் குறைப்பைத் தொடர்ந்து கடுமையான விலை உயர்வு ஏற்பட்டிருப்பதும் விமான நிறுவனங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் விமான நிறுவனங்களுக்கு விமானங்களை இயக்குவதற்கான செலவு கணிசமாக அதிகரிக்கும்.

உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை காரணமாக எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டிருப்பதன் காரணமாக, சா்வதேச அளவில் எரிபொருள்கள் விலை உயா்ந்து வருகிறது. இந்தியா கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளது.

ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் மும்பையில் தற்போது ரூ. 1,40,092.74 என்ற அளவிலும், கொல்கத்தாவில் ரூ. 1,46,322.23 என்ற அளவிலும், சென்னையில் ரூ. 1,46,322.23-க்கும் விற்பனையாகிறது. உள்ளூா் வரி மாறுபடுவதன் காரணமாக இதன் விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்டிருக்கும்.
 



Read in source website

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பிருத்வி-2 ஏவுகணை புதன்கிழமை இரவு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒடிஸா மாநிலம் பாலாசோா் மாவட்டம் சண்டிபூா் கடற்கரைப் பகுதியில் பிருத்வி-2 ஏவுகணை புதன்கிழமை இரவு சுமாா் 7.30 மணிக்கு பரிசோதிக்கப்பட்டது. அப்போது அந்த ஏவுகணை அனைத்து அம்சங்களிலும் சிறப்பாக செயல்பட்டது. இதன் மூலம் பரிசோதனை வெற்றியடைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரையின் ஒரு பகுதியில் இருந்து தரையின் மற்றொரு பகுதியில் 350 கி.மீ. தூரம் வரை உள்ள இலக்கை இந்த ஏவுகணையால் தாக்கி அழிக்க முடியும். இந்த ஏவுகணையால் 500-1,000 கிலோ எடைகொண்ட ஆயுதங்களை சுமந்து செல்ல முடியும். தற்போது நடைபெற்ற பரிசோதனை பயிற்சி ரீதியாக நடைபெற்ற வழக்கமான பரிசோதனைதான் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கெனவே கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் 2019-ஆம் ஆண்டு நவம்பரில் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேரத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Read in source website

வேலையின்மை விகிதம் கடந்த 2020-21-இல் 4.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்ட காலமுறை தொழிலாளா் திறன் கணக்கெடுப்பு (பிஎல்எஃப்எஸ்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பொருளாதாரச் சீா்குலைவை ஏற்படுத்திய கரோனா பேரிடருக்கு மத்தியில் ஜூன் 2020-ஜூன் 2021 ஆண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 4.2 சதவீதமாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டில் 4.8 சதவீதமாக காணப்பட்டது.

மேலும், 2018-19-இல் வேலையின்மை விகிதம் 5.8 சதவீதமாகவும், 2017-18-இல் 6 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

தொலைத் தொடா்பு சேவைகளை வழங்கும் 5ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில், பொதுமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் 5ஜி தொழில்நுட்ப சேவையை வழங்குவதற்காக, தொலைத் தொடா்பு நிறுவனங்களுக்கு அலைக்கற்றையை ஒதுக்குவதற்கான ஏலம் நடத்த தொலைத்தொடா்புத் துறை அளித்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மொத்தம் 72097.85 மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றைகளுக்கான ஏலம் ஜூலை 26-இல் தொடங்குகிறது. இந்த ஏலம், 20 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.

குறைந்த அலைவரிசை (600 மெகா ஹொ்ட்ஸ், 700 மெகா ஹொ்ட்ஸ், 800 மெகா ஹொ்ட்ஸ், 900 மெகா ஹொ்ட்ஸ், 1800 மெகா ஹொ்ட்ஸ், 2100 மெகா ஹொ்ட்ஸ், 2300 மெகா ஹொ்ட்ஸ்), மிதமான அலைவரிசை (3300 மெகா ஹொ்ட்ஸ்) மற்றும் அதிக அலைவரிசை (26 ஜிகா ஹொ்ட்ஸ்) ஆகியவற்றுக்கு ஏலம் நடைபெறும்.

தற்போதைய 4ஜி சேவைகள் மூலம் சாத்தியமானதைவிட சுமாா் 10 மடங்கு அதிக வேகம் மற்றும் திறன்களை வழங்கும் 5ஜி தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கு மிதமான மற்றும் அதிக அலைவரிசை அலைக்கற்றைகளை தொலைத்தொடா்பு வழங்குனா்கள் பயன்படுத்தக் கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வாகனம், சுகாதாரம், வேளாண்மை, எரிசக்தி மற்றும் இதர துறைகளில் இயந்திரங்கள் இடையேயான தகவல் பரிமாற்றம், இணைய உபகரணங்கள், செயற்கை நுண்ணறிவு முதலிய தொழில்துறை 4.0 செயல்பாடுகளில் புதுமைகளை ஊக்குவிக்க தனியாா் இணைப்புகளை உருவாக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் ஒட்டுமொத்தமாக ரூ.4.31 லட்சம் கோடி திரட்டப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

செப்டம்பருக்குள் சேவை: மத்திய தொலைத்தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘5ஜி அலைக்கற்றை ஏல நடைமுறைகள் புதன்கிழமை (ஜூன் 15) தொடங்கியது. ஜூலை இறுதிக்குள் அந்த நடைமுறைகளை நிறைவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 5ஜி சேவைக்கான உள்கட்டமைப்புகளை அமைக்கும் பணியில் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஆகஸ்ட்-செப்டம்பருக்குள் 5ஜி சேவையைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர கால நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளாா்.



Read in source website

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்துவதற்கு ஏதுவாக, வாக்காளா் பட்டியலை மறு ஆய்வு செய்யும் பணியைத் தொடங்க தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வரைவு வாக்காளா் பட்டியலை தயாரிக்க தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா் அனுப் சந்திரா பாண்டே ஆகியோா் ஆய்வு நடத்தினா்.

பின்னா், ஜம்மு- காஷ்மீா் தொகுதிகளை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு யூனியன் பிரதேச தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு அவா்கள் உத்தரவிட்டனா்.

அதற்கு முன்னதாக வாக்காளா் பட்டியல் மறு ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்றும் தலைமைத் தோ்தல் ஆணையா் தெரிவித்ததாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறினா்.

இந்தப் பணியின்போது வாக்காளா்களின் பெயா்கள் புதிதாக சோ்ப்பு, நீக்கம், மாற்றம் ஆகியவற்றை செய்து கொள்ளலாம்.

இதற்காக கால நிா்ணயம் செய்து பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும் வாக்காளா் பட்டியலைப் புதுப்பிப்பதற்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதிய வாக்குப்பதிவு மையங்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் கண்டறிய வேண்டும் என்றும், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வரைவு வாக்காளா் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பேரவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையின்படி, ஜம்முவில் 6 தொகுதிகளும், காஷ்மீரில் ஒரு தொகுதியும் புதிதாக உருவாக்கப்படுகின்றன. இந்தப் புதிய நடவடிக்கை மே 20-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு கடந்த மாதம் அறிவிக்கை வெளியிட்டிருந்தது.

இதன்படி, ஜம்மு -காஷ்மீரில் மொத்தம் 90 பேரவைத் தொகுதிகள் இருக்கும் என்றும், இதில் 43 தொகுதிகள் ஜம்முவிலும், 47 காஷ்மீரிலும், 9 தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்படும் என்று தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்திருந்தது.

இதற்கு முந்தைய ஜம்மு- காஷ்மீா் மாநில பேரவையில் மொத்தம் 87 தொகுதிகள் இருந்தன. இதில் காஷ்மீரில் 46, ஜம்முவில் 37, லடாக்கில் 4 தொகுதிகளும் அடங்கும். 2019-இல் ஜம்மு- காஷ்மீா் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு லடாக் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.



Read in source website

இந்திய தொலைத்தொடா்பு துறை நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றையை வாங்குவதற்காக ரூ.1லட்சம் கோடி செலவிடும் என எதிா்பாா்ப்பதாக இக்ரா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் புதன்கிழமை தெரிவித்தது: 72 ஜிகாஹொ்ட்ஸ் அலைக்கற்றைக்கான ஏலம் ஜூலை 26-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த ஏலத்தில் அலைக்கற்றைக்கு அரசு நிா்ணயம் செய்துள்ள விலை அதிகம் என தொலைத்தொடா்பு நிறுவனங்கள் தொடா்ந்து கூறி வருகின்றன. இதனால் அவை ஏலத்தில் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றன. இருந்தபோதிலும், 5ஜி அலைக்கற்றையை வாங்குவதற்கு தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடி முதல் ரூ.1.1 லட்சம் கோடி வரை செலவிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் பணம் செலுத்துவதற்கு பல்வேறு தளா்வுகளை மத்திய அரசு அளிக்கும் என தெரிகிறது. இதையடுத்து, அந்த துறை இதற்காக ரூ.10,000 கோடியை முதல்கட்டமாக செலவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கட்டண உயா்வு மற்றும் வாடிக்கையாளா்கள் மேம்பாட்டான திட்டங்களுக்கு நிலையாக மாறி வருவது உள்ளிடவற்றால் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்க பயனாளரிடமிருந்து பெறும் சராசரி வருவாய் வரும் 2023-ஆம் நிதியாண்டின் இறுதியில் ரூ.170-ஆக அதிகரிக்கும்.

கடனளவு தொடா்ந்து அதிகரித்து வருவது இந்திய தொலைத்தொடா்பு துறையின் வளா்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. அதன்படி, 2023 மாா்ச் 31 நிலவரப்படி இத்துறை நிறுவனங்களின் கடன் ரூ.5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வருவாய் அதிகரிப்பால் 2025 மாா்ச் 31-இல் இந்த கடனளவு ரூ.5.3 லட்சம் கோடியாக குறையும் என இக்ரா தெரிவித்துள்ளது.



Read in source website

நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள் அனைவரும் கதா் துணியால் தயாரிக்கப்பட்ட வெள்ளை மேலங்கிகளை பயன்படுத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

அதேபோன்று நோயாளிகளுக்கான ஆடைகள், தலையணை உறைகள், திரைச்சீலைகள் உள்ளிட்டவற்றில் கதா் பொருள்களை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியத் தலைவா் டாக்டா் அருணா வானிகா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் வளா்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காதி கிராமத் தொழில் ஆணையமானது கதா் பொருள்கள் மற்றும் கைவினைப் பொருள்களைச் சந்தைப்படுத்தி அதன் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.

மற்றொரு புறம் மருத்துவத் துறைக்குப் பயன்படும் பினாயில் கிருமி நாசினி, தலையணை உறை, நோயாளிகளுக்கான அங்கி, திரைச் சீலை, மேல் அங்கி, சோப், கை கழுவும் திரவம் உள்ளிட்டவற்றையும் காதி கிராம தொழில் ஆணையம் உற்பத்தி செய்து வருகிறது.

அவற்றைப் பயன்படுத்துவது ஆரோக்கியமானது மட்டுமல்லாது சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும், லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்வதாகவும் உள்ளது.

எனவே, மருத்துவமனைகள், மருத்துவக் கல்வி நிறுவனங்கள் கதா் பொருள்களை தங்களது வளாகத்தில் பரவலாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனா். குறிப்பாக, மருத்துவா்கள் கதரால் ஆன வெள்ளை அங்கிகளை அணிய சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்வி, மருத்துவமனை நிா்வாகங்கள் வலியுறுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் அவா் தெரிவித்துள்ளாா்.



Read in source website

 

2022 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளின் முழுப் பட்டியலும் தயாராகிவிட்டது.

நியூசிலாந்தை 1-0 என வீழ்த்தி 2022 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்ற கடைசி அணியாக கோஸ்டா ரிக்கா உள்ளது. அதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணி பெருவை 5-4 என பெனால்டி வழியாக வீழ்த்தி 31-வது அணியாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. 

2022 கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறும் என ஃபிஃபா அமைப்பு 2010 டிசம்பரில் அறிவித்தது. நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் 12 நாள்களுக்குத் தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தோஹாவைச் சுற்றியுள்ள 8 மைதானங்கள் இப்போட்டிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. ஃபிஃபா 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018-ல் ரஷியாவில் முதல்முறையாக நடைபெற்றது. தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்றது. குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் பெற்றுள்ளன. இப்போட்டியில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

2022 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்ற அணிகள்

ஐரோப்பா

ஐரோப்பாவிலிருந்து 13 அணிகள் பங்கேற்கின்றன. 64 வருடங்களுக்குப் பிறகு வேல்ஸ் தகுதி பெற்றுள்ளது.

பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து, செர்பியா, ஸ்பெயின், பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, குரோசியா, ஜெர்மனி, போர்ச்சுகல், போலந்து, வேல்ஸ்.

தென் அமெரிக்கா

4 அணிகள் பங்கேற்கின்றன. 

பிரேசில், ஆர்ஜெண்டினா, உருகுவே, ஈகுவடார்.

வட அமெரிக்கா

4 அணிகள் பங்கேற்கின்றன. 1986-க்குப் பிறகு கனடா முதல்முறையாகத் தகுதி பெற்றுள்ளது. 

கனடா, மெக்சிகோ, அமெரிக்கா, கோஸ்டா ரிக்கா

ஆப்பிரிக்கா

5 அணிகள் பங்கேற்கின்றன.

கேம்ரூன், கானா, செனகல், துனிசியா, மொராக்கோ.

ஆசியா

6 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்பதால் கத்தார் நேரடியாகத் தகுதி பெற்றது.

கத்தார், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, ஜப்பான், ஈரான், தென் கொரியா. 


2022 கால்பந்து உலகக் கோப்பை

குரூப் ஏ

கத்தார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து

குரூப் பி

இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

குரூப் சி

ஆர்ஜெண்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து

குரூப் டி

பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா

குரூப் இ

ஸ்பெயின், கோஸ்டா ரிக்கா, ஜெர்மனி, ஜப்பான்

குரூப் எஃப்

பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோசியா

குரூப் ஜி

பிரேசில், செர்பியா, ஸ்விட்சர்லாந்து, கேம்ரூன்

குரூப் ஹெச்

போர்ச்சுகல், கானா, உருகுவே, தென் கொரியா



Read in source website

 

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் முடிந்த பிறகு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதன்பிறகு இந்திய அணி அயர்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் சுற்றுப்பயணம் செய்கிறது. அயர்லாந்தில் ஜூன் 26, 28 தேதிகளில் இரு டி20 ஆட்டங்களை விளையாடுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5-வது டெஸ்ட், இந்த வருடம் நடைபெறுகிறது.

இங்கிலாந்தில் ஜூன் 24-27 தேதிகளில் இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதனால் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் டெஸ்ட் வீரர்களால் பங்கேற்க முடியாது.

இதையடுத்து அயர்லாந்து டி20 தொடருக்கான புதிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 

அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியின் (என்சிஏ) இயக்குநராக லக்‌ஷ்மண் தற்போது பணியாற்றி வருகிறார். மேலும் என்சிஏ-வில் பயிற்சியாளர்களாக உள்ள கொடாக், சைராஜ் பஹுதுலே, முனிஷ் பாலி ஆகியோர் இந்திய அணியின் கூடுதல் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். கொடாக் பேட்டிங் பயிற்சியாளராகவும் சைராஜ் பஹுதுலே பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் முனிஷ் பாலி ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றவுள்ளார்கள்.  
 



Read in source website

தென் கொரியாவில் நடைபெறும் ஆசியா ஒசியானியா ஓபன் பாரா பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பரம்ஜீத் குமாா், மன்பிரீத் கௌா் ஆகியோா் புதன்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றனா்.

ஆடவருக்கான 49 கிலோ பிரிவில் களம் கண்ட பரம்ஜீத் குமாா், தனது 3-ஆவது முயற்சியில் 163 கிலோ எடையைத் தூக்கி 3-ஆம் இடம் பிடித்தாா். ஜோா்டானின் ஒமா் கராடா 175 கிலோவுடன் தங்கமும், வியத்நாமின் லி வான் காங் 173 கிலோவுடன் வெள்ளியும் வென்றனா்.

இப்போட்டியில் தூக்கிய எடையின் மூலம் பரம்ஜீத் குமாா் தனது புதிய தனிப்பட்ட பெஸ்ட்டை பதிவு செய்திருக்கிறாா். முன்னதாக 2021 உலக சாம்பியன்ஷிப்பில் 158 கிலோ எடையைத் தூக்கியதே அவரது பெஸ்ட்டாக இருந்தது. அந்தப் போட்டியில் அதற்காக அவா் வெண்கலம் வென்றிருந்தாா். உலக சாம்பியன்ஷிப்பில் அது இந்தியாவின் முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மகளிருக்கான 41 கிலோ பிரிவில் பங்கேற்ற மன்பிரீத் கௌா், 88 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றாா். இந்த எடை மன்பிரீத்தின் புதிய தனிப்பட்ட பெஸ்ட்டாகும். இதற்கு முன் 2021 உலக சாம்பியன்ஷிப்பில் அவா் 81 கிலோவை எட்டியதே பெஸ்ட்டாக இருந்தது. மன்பிரீத்துக்கு முன்பாக, டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற சீனாவின் குவோ லிங்லிங் (111 கிலோ), வெள்ளி வென்ற இந்தோனேசியாவின் நி நெங்கா விதியாசி (99 கிலோ) ஆகியோா் இப்போட்டியிலும் முறையே முதலிரு இடங்களைப் பிடித்தனா்.



Read in source website

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் ‘ஜோதி ஓட்டம்’ நிகழ்ச்சியை பிரதமா் நரேந்திர மோடி வரும் 19-ஆம் தேதி தில்லியில் தொடக்கி வைக்கிறாா்.

அங்குள்ள இந்திரா காந்தி விளையாட்டரங்கத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறும் என்று அகில இந்திய செஸ் சம்மேளன தலைவா் சஞ்சய் கபூா் புதன்கிழமை அறிவித்திருக்கிறாா். இந்த ஜோதி ஓட்டத்தில் 5 முறை உலக சாம்பியனும், இந்திய செஸ் நட்சத்திரமுமான விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பலா் பங்கேற்க உள்ளனா்.

19-ஆம் தேதி தொடங்கும் இந்த ஜோதி ஓட்டமானது, போட்டியின் தொடக்க நாளான ஜூலை 28-ஆம் தேதி தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நிறைவடைய இருக்கிறது.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் இப்போட்டி, தமிழகத்தில் ஒருங்கிணைப்படுவது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக இப்போது தொடங்கப்படும் ஜோதி ஓட்டமானது, இனி வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் தொடா்ந்து நடைபெற இருக்கிறது.

செஸ் விளையாட்டின் பிறப்பிடமான இந்தியாவிலிருந்து தொடங்கும் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம், சா்வதேச செஸ் சம்மேளனத்தில் உறுப்பினராக இருக்கும் நாடுகளில் வலம் வந்து, போட்டி நடைபெற இருக்கும் நகரத்தை வந்தடையும். எனினும், 44 செஸ் ஒலிம்பியாட் தொடங்க குறைந்த நாள்களே இருப்பதால், இம்முறை ஜோதி ஓட்டம் இந்தியாவுக்குள்ளாக மட்டும் நடத்தப்படுகிறது.



Read in source website

அமெரிக்க ராணுவத்துடன் நேபாள அரசு ராணுவ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக வெளியானத் தகவலை நேபாள ராணுவம் மறுத்துள்ளது.

நேபாளத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்கும் இது போன்ற எந்த ஒரு ஒப்பந்தத்திலும் நேபாள அரசு கையெழுத்திடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றையும் நேபாள ராணுவம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறிருப்பதாவது, “நேபாள அரசு தனது அணி சேராக் கொள்கையில் தெளிவாக உள்ளது. அதனால், நேபாளத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்து தரும் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அமெரிக்கா நேபாள அரசுடன் எந்த ஒரு ராணுவ ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. சில ஆன்லைன் ஊடகங்களால் நேபாளத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பொய்யானத் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஆன்லைன் ஊடகங்களில் கூறுவது போல் அந்த ஒப்பந்தம் பாதுகாப்பு ஒப்பந்தமோ அல்லது ராணுவ ஒப்பந்தமோ இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் நேபாள மக்களின் நலன் சார்ந்ததாகும். நேபாள அரசு இந்த ஒப்பந்தத்திற்காக கடந்த 2015ஆம் ஆண்டு விண்ணப்பித்தது. மீண்டும் 2017ஆம் ஆண்டில் விண்ணப்பித்தது. அமெரிக்கா தரப்பில் இந்த ஒப்பந்தம் கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இயற்கை சீற்றங்களான நிலநடுக்கம், வெள்ளம் மற்றும் தீ விபத்து உள்ளிட்ட இக்கட்டான காலங்களில் அமெரிக்கா தனது உதவியினை நேபாளத்திற்கு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கபட்ட நேபாள மக்களுக்கு அமெரிக்கா சார்பில் உதவி வழங்கப்பட்டதையும் நேபாளத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் சுட்டிக் காட்டியது.



Read in source website

காலநிலை மாற்றத்தால் ஆர்க்டிக் பிரதேசம் உருமாறியுள்ளதை விளக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காலநிலை மாற்ற பாதிப்பு முந்தைய காலங்களைக் காட்டிலும் தற்போது தீவிரமாக உணரப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயருவதும் அதன்காரணமாக துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதும் அதிகரித்துவருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் 104 ஆண்டுகளுக்கு முன்பாக ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள பனிப்பாறைகளை எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
1918ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வடக்கு நார்வேயின் ஸ்வால்பார்ட்டில் உள்ள பனிப்பாறைகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து புகைப்படக் கலைஞர் நெய்ல் ட்ரேக் அதே இடத்தில் 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒப்பிட்டுள்ளார். மேலும் அவர் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு அதற்கான உரையாடலை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ட்ரேக் பகிர்ந்துள்ள இந்தப் படத்தில் 104 வருடங்களுக்கு முன்பிருந்த பனிப்பாறையானது உருகி தற்போது அதன் பின் உள்ள மலைகள் தெரிவது காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்த்துவதாக காலநிலை மாற்ற விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.2

ஆர்க்டிக் பிரதேசத்தில் உள்ள பனிப்பாறைகள் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு 13 சதவிகித பனிப்பாறைகளை காலநிலை மாற்றத்தால் இழந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.



Read in source website

 

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க பாகிஸ்தான் மக்கள் டீ குடிப்பதை குறைக்க வேண்டும் என அந்நாட்டின் அமைச்சர் கூறியுள்ளார்.

சமீப காலமாக பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதால் தேவையற்ற இறக்குமதி செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அந்நாட்டு அரசு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் திட்டக்குழு அமைச்சரான அஹ்சன் இக்பால் “உலகிலேயே அதிகமாக தேயிலை இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ.8,300 கோடிக்கு தேயிலை இறக்குமதி செய்யப்பட்டுள்ள்ளது. தற்போதைய நிதி நெருக்கடியில் இறக்குமதிக்கான தொகையைச் செலுத்த முடியவில்லை. அதனால், மக்கள் டீ குடிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டுகோள் விடுக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

அமைச்சரின் பேச்சால் அந்நாட்டு மக்களிடமிருந்து எதிர்ப்பு உருவாகியதுடன் பலரும் சமூக வலைதளங்களில் அரசை விமர்சித்து வருகின்றனர். 

 



Read in source website

உலகம் முழுவதும் ஒருகாலத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த இணையதள  உலாவியான - தேடுபொறியான (பிரௌசா்) இன்டா்நெட் எக்ஸ்ப்ளோராின் சகாப்தம் புதன்கிழமையுடன் முடிவுக்கு வந்துவிட்டது.

தகவல் தொழில்நுட்ப வரலாற்றில் பழங்கதையாகிப் போன பேஜா்கள்,  பிளாக்பெரி மாதிரி கைப்பேசிகள், சாதாரண தொலைபேசி மூலம்  இணையதள இணைப்பு வழங்கும் ‘டயல்-அப்’ மோடம், ஆா்குட் சமூக வலைதளம் போன்றவற்றின் பட்டியலில், 27 ஆண்டுகளுக்கு முன்னா் அறிமுகமான, இந்த உலாவியும் இடம் பெற்றுவிட்டது.

இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரா் நிறுத்தப்படுவது தகவல் தொழில்நுட்பத் துறைக்கு  அதிா்ச்சியளிக்கிற ஒன்றல்ல. புதன்கிழமைதான் (ஜூன் 15) அந்த உலாவியின்  கடைசி நாள் என்பதை அதன் உரிமையாளரான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த ஆண்டே அறிவித்துவிட்டது.

அதற்கு முன்னதாகவே, நவீனமான ‘எட்ஜ்’ உலாவியை கடந்த 2015-ஆம்  ஆண்டிலேயே அறிமுகப்படுத்திய அந்த நிறுவனம், அதனையே பயன்படுத்த தனது வாடிக்கையாளா்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரரைவிட எட்ஜ் மிக வேகமாக செயல்படுவது மட்டுமன்றி, தீஞ்செயலி தாக்குதல்களிலிருந்து அதிக பாதுகாப்பை அளிக்கும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிகாரிகளே கூறி வந்தனா்.

கடந்த 1995-ஆம் ஆண்டில் இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரா் அறிமுகப்படுத்தப்பட்டபோது, உலகின் முதல் இணையதள உலாவியான ‘நெட்ஸ்கேப் நேவிகேட்டரை’தான் அனைவரும் பரவலாகப் பயன்படுத்தி வந்தனா்.

எனினும், இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரரை தனது விண்டோஸ் கணினி அடிப்படை மென்பொருளுடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இலவசமாக இணைத்து வழங்கியதைத் தொடா்ந்து, அந்த மென்பொருளைப் பயன்படுத்தும் உலகின் பெரும்பான்மையான மக்கள் அதற்கு மாறத் தொடங்கினா்.

அந்த வகையில் இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரரின் அறிமுகம், நெட்ஸ்கேப் நேவிகேட்டரின் அஸ்தமனத்துக்கு ஆரம்பமானது.

விண்டோஸ் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் தான் செலுத்தி வரும் ஆதிக்கத்தைப் பயன்படுத்தி இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரரின் போட்டி உலாவிகளை தோல்வியடையச் செய்வதாக மைக்ரோசாஃப் நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித் துறை கடந்த 1997-ஆம் ஆண்டில் வழக்கே தொடா்ந்தது. அதனைத் தொடா்ந்து 2002-ஆம் ஆண்டில் இந்த விவகாரத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இழப்பீடு வழங்கியது.

எனினும், காலம் செல்லச் செல்ல இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரா் மந்தமாகச் செயல்படுவதாகவும் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படுவதால் அதன் அமைப்பை நன்கு தெரிந்துகொண்ட மோசடிக் கும்பல்கள் அதன்மூலம் இணையதள ஊடுருவல்களில் எளிதில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரரை ஒழித்துக்கட்டுவதற்காகவே உருவாக்கப்பட்ட, வடிவமைப்பாளா்களின் கூட்டு முயற்சியில் இலவசமாக அளிக்கப்பட்டு வந்த மோஸிலா ஃபயா்ஃபாக்ஸ், இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரரைவிட சிறப்பாக செயல்பட்டு அதனை ஓரம் கட்டியது.

அதன் பிறகு, புதிதாக விண்டோஸைக் கணினியில் நிறுவுபவா்கள் ஃபயா்ஃபாக்ஸை பதிவிறக்கம் செய்வதற்காக மட்டுமே இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரரைப் பயன்படுத்துவதாக வேடிக்கையாகக் கூறப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக முன்னணி தேடல் வலைதள நிறுவனமான கூகுள் அறிமுகப்படுத்திய குரோம் தேடல் வலைதளம் இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு இருந்த சிறிய முக்கியத்துவத்தையும் குறைத்தது. இந்த நிலையில், அந்த வலைதளம் தற்போது முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிட்டது.

தற்போது இணையதள உலாவிகளுக்கான சா்வதேச சந்தையில் கூகுள் நிறுவனத்தின் குரோம் 65 சதவீத பங்கு வகித்து முதலிடத்தில் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சஃபாரி 19 சதவீத பங்குடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இன்டா்நெட் எக்ஸ்ப்ளோரரின் வாரிசான மைக்ரோசாஃப்டின் எட்ஜுக்கு 4 சதவீத சந்தைப் பங்கு மட்டுமே உள்ளது.



Read in source website

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு முழுமையாக தடை விதிக்க மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது.

உணவுப் பொருள் சாா்ந்த பசுமை மண்டல வாயு வெளியேற்றத்தில் பிளாஸ்டிக் 5.4 சதவீதம் பங்கு வகிக்கிறது. எனினும், அந்தப் பொருள்கள்தான் உணவுப் பொருள்களை நீண்ட காலம் கெடாமல் பாதுகாப்பதால், அவற்றை தடை செய்வதன் மூலம் உணவுப் பொருள் வீணாகும் சவாலை மலேசியா எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.



Read in source website

பிரிட்டனுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்கும் அந்த நாட்டு அரசின் திட்டத்துக்கு ஐ.நா. மனித உரிமைகள் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அதையடுத்து, அகதிகளை ஏற்றிக்கொண்டு முதல்முறையாக ருவாண்டா செல்லவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

போா் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வளமான வாழ்வாதாரத்துக்காக பிரிட்டனில் அடைக்கலம் தேடி ஏராளமானோா் வருவது தொடா்ந்து வருகிறது.

அவ்வாறு அடைக்கலம் தேடும் அகதிகளை பணத்துக்காக சட்டவிரோதக் கும்பல் ஆபத்தான முறையில் பிரிட்டனுக்கு கடத்தி வரும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன.

இந்த நிலையில், தங்கள் நாட்டுக்கு உரிய ஆவணங்களின்றி அடைக்கலம் தேடி வருவோரை ருவாண்டாவுக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கும் திட்டத்தை போரிஸ் ஜான்ஸன் தலைமையிலான அரசு அறிவித்திருந்தாா்.

அடைக்கலம் கோரி அகதிகள் அளிக்கும் விண்ணப்பங்களை சரிபாா்த்து, அவா்களுக்கு புகலிடம் அளிப்பது குறித்து பிரிட்டன் முடிவு செய்யும்வரை அவா்கள் ருவாண்டா தலைநகா் கிகாலியிலுள்ள தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பாா்கள்.

அதுவரை அவா்கள் அனைவரும் சட்டவிரோத அகதிகளாகவே கருதப்படுவா். ஒவ்வொரு அகதியின் விண்ணப்பத்தையும் தனித்தனியாக சரிபாா்த்து, உரிய தகுதி இருந்தால் மட்டுமே அவருக்கு அளிக்கப்படும்.

அகதிகள் நல உரிமை அமைப்பாளா்கள் மட்டும் தொழிலாளா் அமைப்பினா் இந்த திட்டத்துக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

எனினும், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒப்பந்தம் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் உள்துறை அமைச்சா் ப்ரீத்தி படேலுக்கும் ருவாண்டா வெளியுறவுத் துறை அமைச்சா் வின்சன்ட் புரூட்டாவுக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கையொப்பமானது.

எனினும், சா்ச்சைக்குரிய அந்தத் திட்டத்தை எதிா்த்து மனித உரிமை ஆா்வலா்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இறுதியாக அந்த மனுக்களை விசாரித்த லண்டன் உயா்நீதிமன்றம், சட்டவிரோத அகதிகளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்கும் அரசின் திட்டத்துக்கு கடந்த 10-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அதன்படி, 7 அகதிகளை விமானம் மூலம் ருவாண்டா அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முதல்முறையாக ருவாண்டா அனுப்பப்படவுள்ள அகதிகளில் ஈராக்கைச் சோ்ந்த ஒருவருக்கு ருவாண்டாவில் மீளமுடியாத பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து காத்திருப்பதாக அவா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அதையடுத்து, மற்ற 6 அகதிகளும் தாங்கள் ருவாண்டா அனுப்பிவைக்கப்படுவதை எதிா்த்து மனு தாக்கல் செய்தனா். அவா்களில் சிலா் லண்டன் நீதிமன்றத்திலும் தங்களது மனுவை தாக்கல் செய்தனா்.

அதன் தொடா்ச்சியாக, அகதிகளை வெளியேற்றுவதற்கான ஆணை திரும்பப் பெறப்பட்டு, அவா்களை ருவாண்டா அனைத்து செல்லப்படுவதாக இருந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது.

‘மேல் முறையீடு செய்வோம்!’

சட்டவிரோத அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமைகள் வழங்கியுள்ள தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சா் ப்ரீத்தி படேல் கூறியதாவது:

சட்டவிரோத அகதிகளை ருவாண்டா அனுப்புவது தொடா்பான ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு அதிருப்தியளிக்கிறது.

எனினும், அடுத்த அகதிகள் குழுவை விமானத்தில் ருவாண்டாவுக்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்படுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

இதற்கிடையே, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘ஐரோப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தத்திலிருந்து விலக வேண்டும்’

உரிய ஆவணங்களில்லாத அகதிகளை ருவாண்டா அனுப்பும் விவாகரத்தில் ஐரோப்பிய மனித உரிமைகள் அளித்துள்ள தீா்ப்பு பிரிட்டன் எம்.பி.க்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. அதைடுத்து, ஐரோப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினா் ஆண்ட்ரியா ஜென்கின்ஸ் கூறுகையில், ‘பிரிட்டன் சட்ட விவகாரங்களில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. எனவே, அந்த நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட பிரிட்டனை நிா்பந்திக்கும் ஐரோப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும்’ என்றாா்.

ஏற்கனவே, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகியிலிருந்தாலும் ஐரோப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தத்தில் அந்த நாடு தொடா்ந்து அங்கம் வகிக்கிறது.

 



Read in source website

இலங்கையில் அரசு ஊழியா்கள் விவசாயப் பணி மேற்கொள்ள வசதியாக, 3 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளிலும் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு போதிய அந்நிய செலாவணி இல்லை. இதன் காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டு அமைச்சரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இலங்கை அரசு ஊழியா்கள் விவசாயப் பணி மேற்கொள்ள வசதியாக, 3 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளிலும் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தங்கள் வீட்டுப் பின்புறம் அல்லது வேறு ஏதேனும் ஒரு பகுதியில் பழங்கள், காய்கறிகள் சாகுபடியில் அரசு ஊழியா்கள் ஈடுபடும் வகையில், வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சாகுபடிக்கு தேவையான வசதிகள் அவா்களுக்கு செய்து தரப்பட உள்ளன.

இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், அதற்குத் தீா்வு காணும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி எரிபொருள் பற்றாக்குறையால் அலுவலகம் வருவதில் சிக்கலை எதிா்கொள்ளும் ஊழியா்களுக்கு உதவும் விதமாகவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் குடிநீா், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, போக்குவரத்து, துறைமுகம், விமான சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் சாா்ந்த அரசு நிறுவனங்கள் வெள்ளிக்கிழமைகளில் தொடா்ந்து செயல்பட உள்ளன.



Read in source website

தொழில்நுட்பத் துறையில் புதிய நிறுவனங்களைத் தொடங்குவதற்கு உகந்த நகரங்கள் குறித்து பிரிட்டனின் டிரீம்லூம் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்திய நகரங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன.

லண்டன் டெக்வீக் 2022 மாநாட்டில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அந்தப் பட்டியலில், தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்வதற்கு சாதகமாக உள்ள ஆசிய நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 5-ஆவது இடத்தில் உள்ளது.

சா்வதேச அளவில் தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடங்குவதற்கேற்ற சூழலைக் கொண்டுள்ள நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 22-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சந்தையைச் சென்றடையும் திறனில் மாபெரும் முன்னேற்றம், நிதியாதாரங்களை சுலபமாகப் பெறும் திறன் போன்றவை காரணமாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தலைநகா் தில்லி 11 இடங்களுக்கு முன்னேறி இந்தப் பட்டியலில் 26-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் மும்பை 36-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தொழில்நுட்பத் துறை முதலீட்டுக்கு சாதகமான சூழல், இந்திய நகங்களில் பரவலாக மேம்பட்டு வருவது நாட்டில் வா்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக ‘இந்தியா ஃபாா் லண்டன் அண்ட் பாா்ட்னா்ஸ்’ அமைப்பின் இயக்குநா் ஹெமன் பரூச்சா தெரிவித்தாா்.



Read in source website

இந்திய கோதுமை, மாவு ஆகியவற்றை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஏற்றுமதி செய்ய அந்நாடு நான்கு மாதங்களுக்கு தடை விதித்துள்ளது.

உள்நாட்டில் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா மே 14-ஆம் தேதி முதல் தடை விதித்தது.

எனினும், இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த பொருளாதார நல்லுறவு வா்த்தக ஒப்பந்தத்தின்படி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தேவையான கோதுமை மட்டும் அனுப்பி வைக்கப்படும் என்று இந்தியா தெரிவித்திருந்தது.

அந்நாட்டுக்கு அனுப்பப்படும் கோதுமை, மாவு உள்ளிட்ட பொருள்களை அங்கிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்க ஐக்கிய அரபு அமீரகம் தற்போது நான்கு மாதத் தடையை விதித்துள்ளது.

இதுதொடா்பாக ஐக்கிய அரபு அமீரக பொருளாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்திய கோதுமை, கோதுமை மாவு, கோதுமை பொருள்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது. மே 13-ஆம் தேதிக்கு முன்பு ஏற்றுமதி செய்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ள இந்திய கோதுமைப் பொருள்கள் குறித்த விவரங்களை அந்தந்த நிறுவனங்கள் அளித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம். இதேபோல், இந்திய கோதுமை அல்லாத உணவுப் பொருள்கள் ஏற்றுமதிக்கான விவரங்களை சமா்ப்பித்தும் அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 14-ஆம் தேதி கோதுமை ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தது. எனினும் அதற்கு முன்பு ஏற்றுமதிக்கு அனுமதி பெற்ற நிறுவனங்களுக்கு கோதுமை அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, 469,202 டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.



Read in source website

செவெரோடொனட்ஸ்க் ரசாயன ஆலையைலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையை உக்ரைன் ராணுவம் தடுப்பதாக ரஷிய ஆதரவு கிளா்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து, ரஷியாவால் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் ‘தூதா்’ ரோடியான் மிரோஷினிக் கூறியதாவது:

அஸோட் தொழிற்சாலையிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் பணியை அங்கிருக்கும் உக்ரைன் படையினா் தடுக்க முயல்கின்றனா்.

அங்கிருந்தபடி ராக்கெட் குண்டுகள் மூலமும் பீரங்கி மூலமும் அவா்கள் தாக்குதல் நடத்துகின்றனா். இதன் மூலம், அஸோட் தொழிற்சாலையிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றும் திட்டத்தை உக்ரைன் படையினா் நிறைவேற்ற முடியாமல் தடுத்து நிறுத்திவைத்துள்ளனா் என்றாா் அவா்.

இதற்கிடையே, அஸோட் தொழிற்சாலையில் பொதுமக்களை உக்ரைன் ராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக ரஷிய ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

 



Read in source website

சென்னை: தமிழகத்தில் மதுரையில் இருந்து சென்னை வழியாக உத்தரப் பிரதேசத்தின் பிரக்யாராஜ் நகருக்கு 2-வது ‘பாரத் கவுரவ்' தனியார் ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும், பாரம்பரியத்தை பறைசாற்றவும் 'பாரத் கவுரவ்' ரயில்கள் என்ற பெயரில் 190 ரயில்கள் இயக்கப்படும் எனவும், இந்த ரயில்கள் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மட்டுமல்லாது, தனியாராலும் நிர்வகிக்கப்படும், குத்தகை அடிப்படையில் ரயில் சேவைகளை தனியார் மேற்கொள்ளலாம் என ரயில்வே சார்பில் கடந்தாண்டு நவம்பர் மாதம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாரத் கவுரவ் ரயில்கள் திட்டத்தின்கீழ் நாட்டின் முதல் தனியார் ரயில் கோவையிலிருந்து ஷீரடிக்கு இயக்கப்பட்டது. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, பெங்களூரு, தர்மாவரம், மந்த்ராலயம், வாடி வழியாக மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்நகரை சென்றடைந்தது.

இதன் தொடர்ச்சியாக, மதுரையில் இருந்து சென்னை வழியாக உத்தரப் பிரதேசத்தின் பிரக்யாராஜ் நகருக்கு 2-வது ‘பாரத் கவுரவ்' தனியார் ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயில் தனது முதல் பயணத்தை வரும் 23-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பிரக்யாராஜ் சென்று திரும்ப மதுரை வருவது என்ற அடிப்படையில் 12 நாட்கள் சுற்றுலாவாக இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலில் 6 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

மதுரை: அரிய வகை பறவையினமான 'ஆர்டிக் ஸ்குவா' என்னும் கடற்காக இன பறவை முதல் முறையாக தனுஷ்கோடி பகுதியில் கண்டு அறியப்பட்டுள்ளது. இப்பறவையினங்கள் உலகின் வடதுருவ முனையில் உள்ள ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்பவை என்று பறவையியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தின் மன்னார் வளைகுடா எப்போதும் பல்வேறு ஆச்சரியங்களையும், கடல் சார் உயிரினங்களும், பறவையினங்களும் கொண்ட பல்லுயிர் வளம் மிக்க ஒரு கடல் பகுதியாக திகழ்கிறது. இந்தப் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மதுரையைச் சேர்ந்த பறவையியல் ஆர்வலரான 'இறகுகள்' அம்ரிதா இயற்கை அட்டக்கட்டளையைச் சேர்ந்த ரவீந்திரன், பறவைகள் வாழ்விடம் மற்றும் வலசை வரும் பறவைகள் பற்றிய ஆய்வுகளை தமிழக வனத்துறையின் ஒத்துழைப்புடன் செய்து வருகிறார்.

இவர், ஒவ்வோர் ஆண்டும் மாநிலத்தின் பல கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து இப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்.

வழக்கம்போல், இந்த ஆண்டு தொடர் பறவைகள் கண்காணிப்பில் ஈடுபட்ட ரவீந்திரன் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை சேர்ந்த பறவை ஆய்வாளர் பைஜு ஆகியோர் தேடுதலில், அரிய வகை பறவையினமான 'ஆர்டிக் ஸ்குவா' என்னும் கடற்காக இன பறவை முதல் முறையாக தனுஷ்கோடி பகுதியில் கண்டு அறியப்பட்டுள்ளது. இப்பறவையினங்கள் உலகின் வடதுருவ முனையில் உள்ள ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்பவை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரவீந்திரன் கூறியதாவது: ''பெரும்பாலும் ஆழ்கடல் பரப்பில் வாழும் இவை இனப்பெருக்க காலங்களில் மட்டுமே நிலப்பரப்புக்களை நாடி வருகின்றன. இப்பறவையினங்கள் உணவுக்காக பிற கடற்காகங்களிடம் இருந்தும், ஆலா பறவைகளிடம் இருந்தும் அவற்றின் உணவினை வழிமறித்து திருடிக் கொள்கின்றன. எனவே இப்பறவையினை ஐரோப்பியர்கள் கடற்கொள்ளையன் என அழைக்கிறார்கள். ஆனால், இவை இனப்பெருக்க காலத்தில் குஞ்சுகளுக்கு இரையூட்ட சிறிய வகை ஊர்ந்து செல்லும் உயிர்களையும், பாலூட்டிகளையும், பறவைகளின் முட்டை, குஞ்சுகளை வேட்டையாடுகின்றன. உலகில் வட துருவத்திலும், தென் துருவத்திலும் இனப்பெருக்கம் செய்யும் ஒரே பறவையினம் இது என்றும் சொல்லலாம். இந்த ஆண்டு இத்தகைய அரிய பறவையினம் தமிழகத்தில், தூத்துக்குடி, பழவேற்காடு, மற்றும் ராமநாதபுரம் கடற்பகுதிகளில் காணப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

இப்பகுதிகளில் ஏற்பட்டு வரும் மனித தேவைகளுக்கான வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் முறையில்லா நடவடிக்கைகளினால் பவளப்பாறைகள் சூழ்ந்த கடற்பகுதிகள் பெரும் அழிவை எதிர்கொள்கிறது. சாலை மற்றும் ரயில் பாதைகள் அமைக்கும் திட்டங்களினால் கடற்கரையின் மணல் பகுதிகள் அழிந்து கரையின் மேற்பரப்பு இறுகி கல்லும், சரளை மண்ணுமாக மாறிப் போகிறது. எனவே கடலில் வாழும் சிறிய மெல்லுடலிகளும், நண்டுகளும், பூச்சியினைகளும் அழிந்து போகின்றன. இதன் அழிவால் வட துருவங்களில் இருந்து வலசை வரும் பறவைகளின் உணவு ஆதாரம் அழிந்து போகிறது.

சுற்றுலா பயணிகள் இங்கே வீசிச் செல்லும் உணவுக் கழிவுகளும், பிளாஸ்டிக் குப்பைகளும் இப்பகுதியின் அழகையும், சூழலையும் நாசம் செய்கின்றன. மன்னார் வளைகுடா பகுதி காக்கப்படுவதின் மூலம் பல்லுயிர் வளம் பெருகுவதுடன், கடல் மீன்களின் வளம் பெருகி மீனவர்களின் வாழ்க்கை மேம்படும்,'' என்றார்.



Read in source website

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக பட்டம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் அருகே பட்டம்புதூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை 200 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 15 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஸ்மார்ட் கிளாஸ், தூய்மையான வளாகம், கல்வித் தரம், சுகாதாரம் போன்ற பல்வேறு அம்சங்களுடன் சிறந்து விளங்கும் இப்பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற முதல் மற்றும் ஒரே அரசு பள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ப.திருசெல்வராஜா கூறியதாவது: 6 முதல் 10 வரை அனைத்து வகுப்பறைகளும் கணினிமயமாக்கப்பட்டு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன.அகன்ற திரைகளில் புரொஜெக்டர் மூலம் கற்பிக்கிறோம்.

பள்ளி மைதானத்தையும், வளாகத் தையும் தூய்மையாகவும், சுத்த மாகவும் பராமரித்து வருகிறோம். பள்ளி வளாகத்தில் மரங் களை வளர்த்துள்ளோம்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியார் நிதி உதவியோடு குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைத்து மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குகிறோம். மாணவர் களுக்கான 5 கழிப்பறைகளையும், மாணவிகளுக்கான 5 கழிப்பறை களையும் சுத்தமாக பராமரித்துவருகிறோம்.தனியார் பங்களிப்போடு சைக்கிள் நிறுத்துமிடத்தில்தரைத்தளத்தோடு ஷெட் அமைத்துள்ளோம். 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவிகளுக்காக உணவுக் கூடம் அமைத்துள்ளோம்.

அங்கு போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்களை வைத்துள்ளோம். ஆசிரியர் வகுப்புக்கு வராத நேரத்திலும், உணவு இடைவேளை நேரத்திலும் மாணவிகள் போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம்.

பள்ளியில் புத்தக வங்கி தொடங்கியுள்ளோம். இதன் மூலம் 6 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளிடம் இறுதித் தேர்வு முடிந்த பின்பு அவர்களது புத்தகங்களை பள்ளியில் வாங்கி சேமித்து வைப்போம். கிராமத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களிடம் "தங்களுக்கு பாடப் புத்தகம் வேண்டும், தேர்வு முடிந்ததும் தருகிறேன்" என ஒரு கடிதம் எழுதி பெற்றுக்கொண்டு புத்தகங்களை அவர்களுக்கு வழங்கி வருகிறோம்.

மாணவ, மாணவிகளுக்கு தரமான மற்றும் சத்தான உணவு வழங்க வேண்டும் என்பதற்காக பள்ளி வளாகத்தில் காய்கறித் தோட்டம் அமைத்துள்ளோம். என்எல்சி நிதி உதவியோடு மினி அறிவியல் ஆய்வகமும் அமைத்துள்ளோம். பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளோம்.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பள்ளியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வரை சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு அணுகு சாலை அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்



Read in source website

சென்னை: பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றிய கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுப் பத்திரங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த மூன்று மாவட்டங்களுக்கு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்திட முயற்சிகள் மேற்கொண்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை செயல்படுத்திய சிறப்பாக செயலாற்றிய இந்த 3 மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இதன்படி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு தங்கப் பதக்கமும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, வெள்ளிப் பதக்கமும், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கருக்கு வெண்கலப் பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரங்களை வழங்கினார்.



Read in source website

சென்னை: வரி செலுத்துவோரின் குறைகளைதீர்க்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததற்கும், அதிகமான மதிப்பீடு குறித்த வரி செலுத்துவோர் குறைகளை களைவதற்கும் வேண்டி, மத்திய நேர்முக வரிகள் வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்படி வருமான வரித்துறையின் முதன்மை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோரின் குறைகளுக்கு விரைந்து தீர்வு காண தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் இக்குழுவை அமைத்துள்ளார்.

வரி செலுத்துவோரின் நேர்மையான குறைகளுக்கு விரைந்து தீர்வு காணவும் மதிப்பீட்டு ஆணைகள் நேர்மையாகவும், நியாயமாகவும், ஏற்புடையதாகவும் இருப்பதற்கான சூழ்நிலைக்கு உதவி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது இந்தக் குழு.

தபாலில் அனுப்பலாம்

மதிப்பீட்டுக் குறைபாடுகளை chennai.hpsa.localcommittee@incometax.gov.in என்ற மின்னஞ்சலில் அல்லது ‘கணக்கு தாக்கல் செய்ததற்கும் அதிகமான மதிப்பீடு குறித்த வரி செலுத்துவோர் குறைகளை களைவதற்கான குழு, வரிமானவரித் துறை முதன்மை தலைமை ஆணையர் அலுவலகம் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி), எண் 121, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 600034’ என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பலாம்.

வருமான வரித்துறையின் சென்னை தலைமை அலுவலக கூடுதல் ஆணையர் ஏ. சசிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.



Read in source website

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தொண்டமானூர் குன்றுகளில் உள்ள பாறைகளில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை கீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தி.மலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் பாலமுருகன், பழனிசாமி, மதன்மோகன், தண்டராம்பட்டு தர், சிற்றிங்கூர் ராஜா, தொண்டமானூர் கார்த்திக் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தொண்டமானூர் மலைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை கீறல்களை கண்டறிந்தனர். தொண்டமானூர் வழியாக ஓடும் தென்பெண்ணையாற்றையொட்டி பல குன்றுகள் உள்ளன. இங்குள்ள குன்றுகளில் இருக்கும் குகைகளை அப்பகுதி மக்கள் பொடவு என்றழைக்கின்றனர். இந்த பொடவுகளில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்களால் வரையப்பட்ட பாறை கீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த பாறை கீறல்களின் அமைப்பு மற்றும் வடிவம் குறித்து தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறும்போது, ‘‘வெளவால் பொடவு என்ற இடத்தில் உள்ள பாறையின் தென்புற சரிவில் சுமார் 10 அடி அகலமும் 10 அடி நீளமும் உள்ள பாறையில் பல கோட்டுருவங்கள் காணப்படுகின்றன. இதில், மனித உருவம் ஒன்று கை வீசி ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் நடந்து வருவது போல் உள்ளது. இந்த உருவத்தின் இடது கையருகை நீண்ட மரக்குச்சி அல்லது தடியின் அடியில் அம்பு போன்ற முனை இருக்கிறது.

இந்த உருவத்தின் கால்கள் அருகே இரண்டு ஆழமான குழிகள் குடையப்பட்டுள்ளன. அருகே இரண்டு கோடுகள் உள்ளன. இந்த உருவங்களுக்கு மேல்புறம் மனித உருவம் ஒன்று இரண்டு முக்கோணங்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

அதனருகே சில கோடுகள் காணப்படுகின்றன. மற்றொரு பாறை தொகுதியில் கோடுகள் நேராகவும் குறுக்கு கோடுகளாகவும் தொடர்ச்சியாக நெருக்கமாக காணப்படுகின்றன. சில உருவங்கள் மனித உருவத்தை காட்டியிருப்பதைப் போல் இருந்தாலும், மான் அல்லது மாடு உருவம் ஒன்றும் உள்ளது. அதே ஊரில் அய்யர் பொடவு என்ற இடத்தில் உள்ள பாறை கீறல்கள் சதுரம், நீள் செவ்வகம், முக்கோண வடிவங்கள் காணப்படுகின்றன.

இங்குள்ள பாறை கீறல்கள் தமிழகத்தில் ஏற்கெனவே கண்டறியப்பட்ட பெருமுக்கல் (விழுப்புரம்), ஏற்பெட்டு (நீலகிரி) கேரளாவில் உள்ள எடக்கல் மலை குகையில் உள்ள கீறல்களுக்கு இணையாக உள்ளன. இந்த பாறை கீறல்கள் புதிய கற்காலத்தின் இறுதிப்பகுதியில் இவற்றை செதுக்கியிருக்க வாய்ப்புகள் உள்ளன. இவை சுமார் 3 ஆயிரம் முதல் 5 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்’’என்றார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக கிடைத்துள்ள இந்த பாறை கீறல்கள் மூலம் தண்டராம்பட்டு பகுதியில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வந்துள்ளனர் என தெரியவருகிறது. இந்த ஊரில் நாகக்கல் பாறை கீறல்கள், புதிய கற்கால கருவிகள், குத்துக்குல், பெருங்கற்கால கற்பதுக்கைகள், நடுகற்கள் உள்ளிட்டவற்றை அரசு பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Read in source website

ராமேசுவரம்: ஒரே வாரத்தில் ராமேசுவரம் கடற்பகுதியில் இரண்டு கடல் பசுக்கள் அருகருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய சம்பவம் வனத்துறையினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் கடல் பசு அதிக அளவில் உள்ளன.

கடந்த ஜுன் 7-ல் ராமேசுவரம் அருகே சின்னப்பாலம் பகுதியில் 170 கிலோ எடையுள்ள 5 வயதான கடல் பசு ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

தொடர்ச்சியாக சின்னப்பாலம் பகுதியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள மண்டபம் காந்தி நகர் பகுதியில் நேற்று 30 வயது மதிக்கத்தக்க 500 கிலோ எடை கொண்ட கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது, தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள், இறைச்சிக்காக கடல் பசு வேட்டைகள், கடலில் புற்கள் பற்றாக்குறை, விசைப்படகுகள் மற்றும் பாறைகளில் மோதியும், வலைகளில் சிக்கியும் கடல் பசுக்கள் இறந்து அதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அரியவகை உயிரினமான கடல் பசுக்கள் பற்றி மீனவர்களிடமும், கடலோரப் பகுதி பள்ளி மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்று கூறினர்.



Read in source website

மும்பை: 2023 - 2027 வரையிலான ஐபிஎல் மீடியா உரிமத் தொகை ரூ.48,390 கோடியை எப்படி அணிகள், வீரர்கள் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி, டிஜிட்டல், பிரத்யேக போட்டிகள் மற்றும் வெளிநாடுகளில் ஒளிபரப்பு செய்யும் உரிமத்திற்கான ஏலத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தியது. இதில் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் ரூ.23,575 கோடிக்கும், டிஜிட்டல் உரிமத்தை வயாகாம் 18 நிறுவனம் ரூ.23,758 கோடிக்கும் பெற்றுள்ளன. இது தவிர வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமம் ரூ.1,057 கோடிக்கு பெறப்பட்டுள்ளது. ஒளிபரப்புக்கான ஒட்டுமொத்த விலை ரூ.48,390 கோடி.

இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த ரூ.48,390 கோடியை ஐபிஎல் கிரிக்கெட் அணிகள், வீரர்கள் மற்றும் மாநில கிரிக்கெட் சங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பகிர்ந்தளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஐபிஎல் கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு தலா ரூ.3000 கோடி வழங்கப்படும் எனத் தெரிகிறது. புதிதாக இணைந்துள்ள குஜராத் மற்றும் லக்னோ அணிகள் இன்னும் சில காலம் அதற்கு காத்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

மீதமுள்ள பாதி தொகை வீரர்கள் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. அதன்படி உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு தோராயமாக ரூ.6,290 கோடியும், மாநில சங்கங்களுக்கு தோராயமாக ரூ.16,936 கோடியும் கிடைக்கும் எனத் தெரிகிறது.



Read in source website

புதுடெல்லி: தேசிய, சர்வதேச போட்டிகளின் போது வீராங்கனைகளுடன் பெண் பயிற்சியாளர் கட்டாயம் செல்ல வேண்டும் என்று இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்லோவேனியாவில் நடைபெற உள்ள சைக்கிளிங் போட்டிகளில் பங்கேற்பதற்காக 6 பேர் கொண்ட இந்திய குழு அந்நாட்டுக்கு அண்மையில் சென்றது. அதில் 5 வீரர்கள், ஒரு வீராங்கனை இடம்பெற்றிருந்தனர். இக்குழுவுக்கு ஆர்.கே. சர்மா தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இதனிடையே, ஆர்.கே. சர்மா தனக்கு பாலியல் ரீதியில் தொல்லை தருவதாக குழுவில் இடம்பெற்றிருந்த வீராங்கனை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் புகார் செய்தார். இதையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஆர்.கே. சர்மா நீக்கப்பட்டு அவர் மீது துறை ரீதியிலான விசாரணை தொடங்கியுள்ளது.

அதேபோல், ஜெர்மனியில் நடந்த பயிற்சி வகுப்புகளின்போது தனது பயிற்சியாளர் தன்னிடம் தவறான முறையில் நடந்துகொள்ள முயற்சித்ததாக படகு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீராங்கனை ஒருவர் குற்றம்சாட்டினார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், புதிய விதிகளை இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தேசிய, சர்வதேச போட்டிகளின்போது வீராங்கனைகளுடன் பெண் பயிற்சியாளர் கட்டாயம் செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தேசிய பயிற்சி முகாம்களிலும், வெளிநாட்டு போட்டிகள், முகாம்களுக்காக வீராங்கனைகள்செல்லும்போது அந்தக் குழுவில் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அவர் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுடன் தொடர்பில் இருப்பதுடன், வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை செயல்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வீரர், வீராங்கனைகள் புகார் அளித்தால், பொறுப்பான அதிகாரிகளுக்கு அந்தப் புகாரை அனுப்பி நடவடிக்கை எடுக்க வகை செய்வார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அனைத்து தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், சங்கங்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.



Read in source website

நியூயார்க்: உலக அளவில் கரோனாவுக்கு பிறகு பெரிய நகரங்களில் செலவுகள் மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. இந்த நகரங்களில் சாதாரண மக்களை விடவும் செல்வந்தர்களுக்கு செலவு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலியஸ் பேர் குரூப் லிமிடெட்டின் 2022 உலகளாவிய செல்வம் மற்றும் வாழ்க்கை முறை அடிப்படையில் உலகின் செலவு மிக்க நகரங்களை வரிசைப்படுத்தியுள்ளது. இது வீடுகள், சொத்து, கார்கள், விமான கட்டணம், பள்ளி மற்றும் பிற செலவுகளை பகுப்பாய்வு செய்து உலகின் மிக விலையுயர்ந்த நகரங்களை தரவரிசைப்படுத்துகிறது. இந்த பட்டியலின் விவரம்:

ஷாங்காய்: ஷாங்காய் மீண்டும் இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சீனாவின் மிகப்பெரிய நகரமான இது, உலகின் பொருளாதார தலைநகரமாக கருதப்படுகிறது. பணக்காரர்கள் அதிகம் வாழும் ஒரு நகரமாகும். ஷாங்காயிலும் கூட சொகுசு பொருட்களின் விலை அதிகரிப்பு, பணவீக்கம் உயர்வு போன்ற காரணங்களால் மக்களின் வாங்கும் திறன் என்பது குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

லண்டன்: பிரிட்டன் தலைநகரமான லண்டன் உலகின் அதிக செலவு பிடிக்கும் நகரங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தைபே: தாய்வானின் தலை நகரமான தைபே மூன்றாவது இடத்தில் உள்ளது. தைவானின் பொருளாதார மையமாக உள்ள தைபே, கலாச்சார நகரமாகவும் உள்ளது.

ஹாங்காங்: இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ள ஹாங்காங் ஆசியாவின் முக்கிய நகரமாகும். பிரிட்டிஷ் காலனியாக இருந்த இந்த நகரத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா தொடர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை தரம், வீட்டின் விலை, கார்கள், விமான போக்குவரத்து, பள்ளிகள் என அனைத்தும் இந்த நகரத்தில் அதிக செலவு மிக்கதாக உள்ளது.

சிங்கப்பூர்: உலகின் அதிக செலவு மிக்க நகரங்களில் 5வது இடத்தினை பிடித்துள்ள நகரம் சிங்கப்பூர். இங்கு உணவு பொருட்கள் விலை, வாடகை கட்டணம் என எல்லாம் அதிகம்.

மொனாகோ: ஐரோப்பாவின் சுற்றுலா நகரமான மொனாகோ உலகின் ஆறாவது செலவு மிக்க நகரமாகும். மொனகோ பழமையான நகரங்களில் ஒன்று.

சூரிச்: உலகின் சொர்க்கப்புரியாக வர்ணிக்கப்படும் ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்தில் உள்ள நகரமான சூரிச்சும் பெரும் செலவு மிக்க நகரமாகும். தங்குமிடம், உணவு, போக்குவரத்து என மொத்த செலவுமே அதிகம் தான்.

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோ உலகின் பணத்தை அதிகம் உறிஞ்சும் நகரங்களின் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் 9-வது காஸ்ட்லியான நகரமாகும்.

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 10-வது இடத்தில் உள்ளது. கரோனாவுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது அதிகரித்து வருவது இந்த நகரத்தின் செலவுகளை அதிகரிக்க செய்துள்ளது. இங்கு உணவு, தங்கும் இடம் என அனைத்துமே செலவு மிக்கது.

உயரும் செலவுகள்

கடந்த ஓராண்டில் கரோனவுக்கு பிறகு பல நாடுகளில் பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் செலவுகள் அதிகரித்து வருகின்றன. செல்வந்தர்கள் கூட பணவீக்கத்திலிருந்து விடுபடவில்லை என்பதை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இது அமெரிக்காவில் 8.6% மற்றும் இங்கிலாந்தில் 9% ஐ எட்டியுள்ளது.

குறைந்த வசதி படைத்தவர்களை விட அவர்களால் அதை எளிதில் தாங்க முடிந்தாலும் கூட, பணக்காரர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வு காரணமாக மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்துகின்றன. ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி உலகின் 500 பணக்காரர்கள் மட்டும் இந்த ஆண்டு மொத்தமாக 1.4 டிரில்லியன் டாலர்கள் தங்கள் மொத்த செல்வத்திலிருந்து செலவழித்துள்ளனர்.

அடுத்த ஆய்வு

இதுபோலவே குளோபல் மொபிலிட்டி நிறுவனம் மற்றும் வாழ்க்கைச் செலவு நிபுணர்கள், இசிஏ இன்டர்நேஷனல் - 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் வசிப்பதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மிகவும் விலையுயர்ந்த இடமாக ஹாங்காங் உள்ளது. முதல் 10 இடங்களில் ஆசியாவின் நான்கு நகரங்கள் பிடித்துள்ளன. முதல் 20 இடங்களில் ஆசியாவின் பத்து நகரங்கள் உள்ளன.

1) ஹாங்காங், 2) நியூயார்க், 3) ஜெனிவா, 4) லண்டன், 5) டோக்கியோ, 6) டெல் அவிவ் ,7) சூரிச் 8) ஷாங்காய், 9) குவாங்சோ, 10) சியோல் ஆகியவை இடம் பிடித்துள்ளன.



Read in source website

குறைவதற்கான வாய்ப்புகள்: வாங்கிய கடனில் நிலுவைத் தொகை இருந்தால் அதைக் கட்டிவிட வேண்டும். சில மாதங்களுக்கான தவணையை ஒருவேளை கட்டாமல் இருந்தால் கூட சிபில் ஸ்கோரைக் குறைக்க வாய்ப்பு உண்டு.

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் சிபில் கணக்கில் சிக்கும் வாய்ப்புண்டு. குறித்த காலத்தை தாண்டி கிரெடிட் கார்டுக்கான தொகையை செலுத்தாமல் விட்டு விட்டால் வங்கி மிக அதிகமான வட்டித் தொகையை வசூலிக்கும். இதனால் சிபில் ஸ்கோரும் குறையத் தொடங்கும்.

வங்கி கணக்கிலிருந்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் கடனுக்கான மாதத் தவணையை தாமாக கடன் கொடுத்த நிறுவனம் எடுத்துக் கொள்ள ஏதுவாக அனுமதி கொடுத்து விட்டால் இந்த சிக்கல் தீரும்.

அதிக தவணை ஆபத்தில்லை: வங்கியிலிருந்து கடன் பெறுபவர்கள் நீண்டகாலம் கட்டுவதற்கு பதிலாக குறைவான காலத்தில் கட்டி முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அதிக தொகையை மாத தவணையாக நிர்ணயித்து அதனை கட்டுவர். ஆனால் மாதத் தவணைக்கான தொகை என்பது வருவாயில் குறிப்பிடத்தக்க அளவைவிடவும் அதிகமாக இருந்தால் அது சிபில் ஸ்கோரை பாதிக்க வாய்ப்புண்டு.

எனவே கடன் செலுத்த வேண்டிய காலம் சற்று அதிகமானாலும் பரவாயில்லை. இதன் காரணமாக மாதத் தவணையைச் செலுத்துவதில் சுணக்கம் ஏற்படாது. சிபில் மதிப்பெண் அதிகமாகும்.

தேவையை தீர்மானியுங்கள்: ஒரு வங்கியில் அதிக அளவுக்குக் கடன் பெற அனுமதி வாங்கிவிட்டு பிறகு குறைவான தொகையை மட்டும் கடனாக பெறுவதும் அல்லது முன்கூட்டியே கடனை திருப்பி அடைப்பதும் சிபில் ஸ்கோரை பாதிக்கும். தேவைப்படும் நிதியைக் கணிக்கத் தெரியாதவர் என கூறி சிபில் மதிப்பெண் குறையும்.

ஒரே நேரத்தில் பலவித வங்கிகளில் கடன்களைப் பெறுபவர்களுக்கும் சிபில் ஸ்கோர் குறையும். ஒரு கடனை அடைத்த பிறகே அடுத்தடுத்த கடன்களுக்கு விண்ணப்பித்தால் மட்டுமே சிபில் ஸ்கோர் குறையாமல் இருக்கும்.

நீண்ட நாட்களாக ஒரு வங்கிக் கணக்கைச் சிறப்பாகப் பயன்படுத்துபவர்களுக்கும், அதனுடன் கிரெடிட் கார்டு இருந்தால் அதனையும் முறைப்படி பயன்படுத்துபவர்களுக்கு சிபில் மதிப்பெண் உயர வாய்ப்புண்டு.

திருப்பிச் செலுத்திய பிறகு...: ஒரு பெரிய கடன் தொகையை வங்கிக்குச் செலுத்தி முடித்தபின் அந்த விவரத்தை அந்த வங்கி சிபில் அமைப்புக்குத் தெரியப்படுத்தி விட்டதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

ஏதாவது பெரிய வங்கிக் கடனை முழுவதுமாகச் செலுத்திய பிறகு www.cibil.com என்ற வலைத்தளத்துக்குச் சென்று சிபில் மதிப்பெண் என்னவாக இருக்கிறது என்று பார்த்து உறுதி செய்ய வேண்டும். மதிப்பு மிகவும் குறைவாக இருந்தால் வங்கியின் மூலம் சிபில் அமைப்பை அணுகி தீர்வு பெறலாம். அதன் பிறகு சிபில் ஸ்கோர் சரியாகும்.



Read in source website

சாதாரணமாக வங்கியில் கடன் கேட்டுச் செல்லும் போது, வாடிக்கையாளர் மார்ஜின், கடனுக்கு ஈடாக கொலாட்ரல் செக்யூரிட்டி கேட்பதும், கேஒய்சி (KYC) பார்ப்பதும் வழக்கம். ஒருவேளை வாடிக்கையாளர் தொழில் தொடங்குவதற்காக கடன் கேட்டுச் செல்கிறார் என்றால் மார்ஜின், கொலாட்ரல் செக்யூரிட்டி, கேஒய்சி இவைகளுடன் தொடங்க இருக்கும் தொழில் குறித்து ப்ராஜக்ட் ரிப்போர்ட் எனப்படும் திட்ட அறிக்கை ஒன்றும் வங்கி கேட்கும்.

வாடிக்கையாளர் தொடங்க இருக்கும் தொழில், அதற்கான வாய்ப்புகள், லாபமீட்டும் சாத்தியம் போன்றவை குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்க வேண்டும். தொடங்குவதற்கு முன்பே எப்படி தொழில் குறித்து தீர்மானிக்க முடியும், அப்படியென்றால் அந்த திட்ட மதிப்பீட்டு அறிக்கையை எப்படித் தயாரிப்பது, அதில் வங்கி என்னென்ன எதிர்பார்க்கும் போன்ற கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் அளிக்கிறார் எழுத்தாளரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொதுமேலளருமான சோம.வீரப்பன்...



Read in source website

Tamil Nadu government has launched the ‘Valar 4.0’ portal to provide necessary support to entrepreneurs and industries Tamil News: தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஆதரவை வழங்க, தமிழக அரசு ‘வளர் 4.0’ போர்ட்டலை துவக்கியுள்ளது.

‘Valar 4.0’ portal Tamil News: தமிழகத்தில் உள்ள தொழில்முனைவோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் (Tamil Nadu e-Governance Agency – TNeGA) இணைந்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் (DITDS) துறையால் ‘வளர் 4.0’ போர்டல் (Valar 4.0) என்கிற புதிய இணைய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய பக்கத்தின் வளர்ச்சிக்கு ஐஐடி சென்னை (இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ்) உதவி வருகிறது.

இந்த புதிய முயற்சியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ் மற்றும் ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் நேற்று புதன்கிழமை தொடங்கி வைத்தனர். “தமிழ்நாட்டில் தேசிய அளவிலான சிறப்பு மையங்கள், ஏராளமான தொழில்முனைவோர், தொழில்துறைகள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். அவர்களில், MSMEகளின் பங்களிப்பு மிக அதிகம். இந்த போர்டல் தொழில்முனைவோருக்கு பிற சேவை வழங்குநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் தொடர்பான நிபுணர்களைக் கண்டறிய உதவும்.” என்று இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் 29 நகரங்களில் இருந்து 242 நிறுவனங்கள் மற்றும் 122 பயனர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்றும் 279 சேவைகள், 20 திட்டங்கள் மற்றும் 389 நிபுணர்களின் விவரங்கள் தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து

இதற்கிடையில் தலைமைச் செயலகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறைக்கு, ‘தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைத் துறை’ என தமிழக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளின் வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப செயலர் நீரஜ் மிட்டல் தெரிவித்துள்ளார்.



Read in source website

 மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 40.78 லட்சம் பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 31.91 லட்சம் பேர்தான் பணியாற்றுகின்றனர் என்று மத்திய அரசின் செலவினத்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது 21.75% பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசின் அனைத்துத் துறைகளிலும், அமைச்சகங்களிலும் உள்ள மனிதவள நிலை குறித்து ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் காலிப் பணியிடங்களை நிரப்பவும், 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.
 இந்தியாவில் ஆண்டுதோறும் உயர்கல்வியை முடித்து வெளியே வரும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்பது மறுக்கவியலாத உண்மை. அதே நேரத்தில், சுயதொழிலில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. தனியார் துறைகளில், குறிப்பாக சேவைத் துறைகளில் படித்த, படிக்காத இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது.
 மத்திய புள்ளியியல் - திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) கடந்த சில ஆண்டுகளாக வேலையின்மை குறித்த புள்ளிவிவரங்களை வெளிப்படையாக வெளியிடவில்லை. இதனால், தனியார் அமைப்புகள் வெளியிடும் புள்ளிவிவரங்களைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில், மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசு சாரா தனியார் அமைப்பான "இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்' (சிஎம்ஐஇ) வெளியிடும் வேலையின்மை குறித்த புள்ளிவிவரம் ஓரளவு நம்பத்தகுந்ததாக உள்ளது.
 இந்த மையம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் வேலையின்மை விகிதம் 6.57%-ஆக இருந்தது. கடந்த 2021, டிசம்பரில் வெளியான வேலையின்மை விகிதத்தோடு (7.91%) ஒப்பிடுகையில் இது குறைவுதான் என்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி நிலவரப்படி வேலையின்மை விகிதம் மிக அதிகம் உள்ள மாநிலங்களாக ஹரியாணா (23.4%), ராஜஸ்தான் (18.9%), திரிபுரா (17.1%), ஜம்மு-காஷ்மீர் (15%), தில்லி (14.1%) ஆகியவை காணப்படுகின்றன.
 பிரதமரின் அறிவிப்பில், எந்தெந்தத் துறைகளில் எவ்வளவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற விவரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும், ரயில்வே, முப்படைகள், துணைநிலை ராணுவம், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) துறை, சுங்கம் மற்றும் கலால் துறை, அரசுடைமை வங்கிகள், அரசு சார்பு காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்கள் முதல் கட்டமாக நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 வேலைவாய்ப்பு அதிகரிப்பு என்பதுதான் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்பது நமது தலையங்கத்திலேயே பலமுறை சுட்டிக்காட்டப்பட்ட உண்மை. ஒருபுறம் வேலைவாய்ப்பின்மை காணப்படுவதும், மறுபுறம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும் நிர்வாக மெத்தனத்தின் வெளிப்பாடு என்றுதான் கூற வேண்டும்.
 ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் காலிப்பணியிடங்கள் குறித்த புள்ளிவிவரம் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய அரசுத்துறைகளில் 8.72 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக, ஜூலை 2021-இல் நாடாளுமன்றத்தில் அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவித்தது. அவற்றில் 2.79 லட்சத்துக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் ரயில்வே துறையில் மட்டும் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
 ஒருபுறம், கடைநிலை ஊழியர் பதவிக்கு பட்டதாரிகளும், முதுநிலை பட்டதாரிகளும் வேலைவாய்ப்பு தேடி விண்ணப்பிக்கிறார்கள் என்றால், இன்னொருபுறம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. மருத்துவம், ராணுவம் ஆகிய துறைகளும் நிரப்பப்படாத பணியிடங்களுடன்தான் செயல்படுகின்றன. மத்திய - மாநில அரசுகளுக்கிடையே இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தொடர்பான பிரச்னை ஏற்படுவதற்கு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதுதான் முக்கியமான காரணம்.
 தற்போதைய நிலையில், இந்தியாவில் 15 முதல் 64 வயது வரையிலான வேலை பார்ப்போரின் எண்ணிக்கை சுமார் 92.5 கோடி. அவர்களில் முழுநேரமாக வேலை பார்ப்பவர்கள் என்று எடுத்துக்கொண்டால் 51.8 கோடி என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பெண்கள் அதிகமாக வேலைவாய்ப்பில் இல்லாமல் இருப்பதுதான் இதற்குக் காரணம்.
 எந்த ஒரு பெரிய பொருளாதாரமும் உழைக்கும் பிரிவினரில் பெண்களின் பங்கு இல்லாமல் வளர்ந்ததில்லை. உலக வங்கியின் கணக்குப்படி இந்தியாவின் உழைக்கும் மக்கள்தொகையில் பெண்களின் பங்களிப்பு 19% மட்டுமே. ஜி7 நாடுகளில் பெண்கள் உழைப்பு பங்களிப்பு விகிதம் 42% முதல் 61% வரை. இந்தியாவில் வெறும் 19%. சீனா (62%), ரஷியா (54%), பிரேசில் (49%), சவூதி அரேபியா (31%), துருக்கி (32%), வங்கதேசம் (35%), மியான்மர் (41%), மலேசியா (51%).
 பிரதமர் கூறியிருப்பதுபோல் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் காட்டப்படும் அதே முனைப்பு, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவதிலும் காட்டப்பட வேண்டும். தனியார் சேவைத்துறையில் வேலை தேடும் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் நிலையில், அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினாலும்கூட தவறில்லை.



Read in source website

 எல்ஐசி ஆஃப் இந்தியாவின் புதிய பங்கு வெளியீடு சமீபத்தில் வெற்றிகரமாக நடந்தது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் அரசு தனது பங்கின் மூன்றரை சதவீத பகுதியை பொதுமக்களுக்கு சுமார் 21,000 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டது. ஒவ்வொரு பங்கினையும் எல்ஐசி ரூபாய் 949-க்கு வழங்கியது. இதில் சில்லறை முதலீட்டார்களுக்கும் எல்ஐசியின் பாலிசி வைத்திருப்பவர்களுக்கும் சில சலுகைகளையும் வழங்கி குறைந்த தொகையைப் பெற்றுக் கொண்டு பங்கை வழங்கியுள்ளது.
 ஆனால் "சிகிச்சை வெற்றி நோயாளி மரணம்' என்பது போல், இந்த முதலீட்டில் பங்குபெற்ற சில்லறை முதலீட்டார்கள் தற்போது பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். ரூபாய் 949-க்கு வெளியிடப்பட்ட பங்குகள், பங்குச் சந்தையில் வர்த்தகம் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து சரிவை சந்தித்து வருகிறது. ஜூன் 15-ஆம் தேதி, இந்த பங்கு, தேசிய பங்குச் சந்தையில் ரூபாய் 688-க்கு முடிவுற்றது. இது கிட்டத்தட்ட வெளியிடப்பட்ட விலையிலிருந்து 27 சதவீதம் குறைவு.
 இதுபோன்ற சூழ்நிலைக்குக் காரணம், எல்ஐசி தனது பங்கினை அதிக விலைக்கு சந்தைப்படுத்தியதே ஆகும். இதற்கு முன்பாக வந்த தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய வெளியீட்டு பங்கின் விலையினை விட எல்ஐசி தனது பங்கினை அதிக விலைக்கு வெளியிட்டுள்ளது.
 அந்த நிறுவனங்கள் தங்களின் ஒரு பங்கின் வருவாயினை போல் எவ்வளவு மடங்கு அதிகமாக வெளியீட்டு தொகையினை நிர்ணயித்ததோ அதை விட மிக அதிமாக எல்ஐசி நிர்ணயித்துள்ளது.
 அதே போல அந்த நிறுவனங்கள் தனது புத்தக மதிப்பை போல் எவ்வளவு மடங்கு அதிகமாக நிர்ணயித்ததோ, அதை விட அதிக விலைக்கு எல்ஐசி நிர்ணயித்துள்ளது. எனவே பங்குச் சந்தையில் எல்ஐசியின் பங்கு வீழ்ச்சி அடைந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
 பல சில்லறை முதலீட்டார்கள் தற்போது என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர். தற்போது நஷ்டத்துடன் வெளியேறுவதா அல்லது வரும் காலங்களில் விலை ஏறும் என்று காத்திருப்பதா என்பது உடனடியாக விடை சொல்ல முடியாத கேள்வி.
 இதுபோன்ற சில்லறை முதலீட்டார்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் விட்டு விட்டால் வரும் காலங்களில் அவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதையே நிறுத்திவிடுவார்கள். தனியார் நிறுவனங்கள் போல் அரசு நிறுவனமான எல்ஐசி அலட்சியமாக இருந்துவிட முடியாது. முதலீட்டார்களுக்கு சந்தையில் பங்கின் மதிப்பு அதிகமானால் மட்டுமே பயன் உண்டு. அதை கருத்தில் கொண்டு சில யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.
 எல்ஐசி போனஸ் பங்குகளை வெளியிடலாம் என்பது ஒரு யோசனை. போனஸ் பங்குகள் என்பது பங்குதாரர்களுக்கு இலவசமாக பங்குகளை கொடுப்பது. எடுத்துக்காட்டாக, தற்போது ஒருவரிடம் நூறு பங்கு இருக்குமானால் அவருக்கு இன்னும் ஒரு நூறு பங்குகளை இலவசமாகக் கொடுக்கலாம். இதை ஒன்றுக்கு ஒன்று இலவசம் என்று சொல்லலாம்.
 இவ்வாறு செய்யும்போது நிறுவனம் தனது ரிசர்வ் கணக்கில் உள்ள தொகையை பங்கு கணக்கிற்கு மாற்றி போனஸ் பங்குகளை வெளியிடும். அதாவது போனஸ் பங்கினால் நிறுவனத்தின் அடிப்படை பொருளாதாரத்தில் எந்த மாற்றமும் நிகழாது. ஒரு நிறுவனத்தின் மொத்த நிதியான பங்கு கணக்கு பிளஸ் ரிசர்வ் கணக்கில் எந்த மாற்றமும் இல்லை.
 இது போன்று இலவச பங்குகள் வெளியிட்டால், அதே அளவுக்கு பங்குச் சந்தையில் பங்கின் விலை குறைந்து விடும். ஆதலால் முதலீட்டார்களுக்கு எந்த ஆதாயமும் ஏற்பட வழியில்லை.
 மற்றொரு ஆலோசனை, ஒரு சிறப்பு ஈவுத்தொகை வழங்கலாம் என்பது. இதுபோன்று செய்தால் நிறுவனத்தின் நிதி குறையும். நிறுவனத்தின் லாபம் ஈட்டும் திறமையும் குறையும். மேலும் எந்த அளவு ஈவுத்தொகை வழங்கப்பட்டதோ அந்த அளவு பங்கின் புத்தக மதிப்பும் குறையும். இது பங்குச் சந்தையில் விலையை குறைக்கும். எனவே இந்த யோசனையும் சரியல்ல.
 வேறு என்னதான் வழி? எல்ஐசி நிறுவனம் உரிமைப் பங்கு வெளியீடு (ரைட் இஷ்யூ) பற்றி பரிசீலனை செய்யலாம். "உரிமைப் பங்கு வெளியீடு' என்பது தற்போது உள்ள பங்குதாரர்களுக்கு மேலும் பங்குகளை சலுகை விலைக்கு வழங்குவது.
 உதாரணமாக, தற்போது எல்ஐசியின் பங்கின் விலை 700 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் எல்ஐசி சலுகை விலையில் பங்குகளை வழங்கலாம். எடுத்துக்காட்டாக ரூபாய் 350-க்கு வழங்கலாம். தற்போதைய பங்குதாரர்களுக்கு அவர்களிடம் தற்போது உள்ள பங்கின் அடிப்படையில் எவ்வளவு உரிமை என்பதை முடிவெடுக்கலாம்.
 உதாரணமாக, ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் தற்போது நூறு பங்கு வைத்திருந்தால் அவருக்கு மேலும் நூறு பங்குகளை சலுகை விலையில் வழங்கலாம். இதனால் தற்போதுள்ள பங்குதாரர்களுக்கு நல்ல லாபம் ஏற்படும். அரசு இந்த உரிமைப் பங்கு வெளியீட்டில் பங்கு பெறாமல் தனக்கு உரிமையான 96.5 சதவீத உரிமையை விட்டு விடலாம்.
 அதனால் எல்ஐசியில் அரசின் பங்கு குறையும்; பொதுமக்களின் பங்கு அதிகமாகும். மேலும் இந்தத் திட்டத்தில் எல்ஐசிக்கு மேலும் ரிசர்வ் அதிகமாகும். இது போன்ற தீர்வு, அரசு மேலும் தனது நிறுவனங்களின் பங்குகளை பொதுமக்களுக்கு வழங்க உதவி செய்யும்.
 2022 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டின் நிதிநிலை முடிவுகளை இந்திய எல்ஐசி வெளியிட்டுள்ளது. இந்த காலாண்டில் எல்ஐசி ரூ. 2,409 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக அறிவித்தது. இது இதற்கு முந்தைய ஆண்டின் லாபத்தை விட 17.41 சதவீதம் குறைவு. ஒரு நிறுவனத்தின் சமீபத்திய லாப ஈட்டலைப் பொறுத்தே பங்குச் சந்தையில் அதன் விலை அமையும். லாபம் குறைந்துள்ள நிலையில் எல்ஐசியின் பங்குகள், தானாகவே விலை அதிகமாகும் என்று எதிர்பார்க்க முடியாது.
 எல்ஐசியின் நிர்வாக இயக்குநர் ராஜ்குமாரின் அறிக்கையில், எல்ஐசியின் லாபம் தனியார் காப்பீட்டு நிறுவனங்களைப்போல் உயர இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது கவனிக்க வேண்டியதாகும். எனவே தற்போதுள்ள எல்ஐசி முதலீட்டார்களுக்கு உதவ உரிமைப் பங்கு வெளியீடே சரியான தீர்வாகும்.
 



Read in source website

 அதிக மக்கள் வாழும் நம் நாட்டில், குறிப்பாக நகர்ப்புறங்களில், ஒலிமாசு ஒரு மாபெரும் பிரச்னையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. அன்றாட வாழ்வின் சுமுகமான சமநிலையைக் கெடுக்கும் அதிக அளவிலான, விரும்பத்தகாத சத்தங்களை ஒலிமாசு என்கிறோம்.
 பொதுமக்களின், பிற உயிர்களின் உடல்நலத்தை, நல்வாழ்வைக் கெடுக்கும் தேவையற்ற, தொந்தரவு கொடுக்கிற ஒலிமாசு பெரும் துன்பம் தருவதாக இருக்கிறது. தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள், சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, சமூக நிகழ்வுகள் என பல்வேறு காரணங்களால் ஒலிமாசு நிகழ்கிறது.
 வழிபாட்டுத் தலங்களிலிருந்து வெளிக்கிளம்பும் ஒலிமாசு, சூழல் தலைவலியாக அமைகிறது. கிராமக் கோயில்கள், குடும்பக் கோயில்களின் கொடை விழாக்களில், தேவாலய திருவிழாக்களில் இரவும் பகலும் தொடர்ந்து பக்திப் பாடல்களை ஒலிபரப்புகிறார்கள். சில மசூதிகளிலும் மசூதிக்கு வெளியே பாடல்கள், பிரசங்கங்களை ஒலிபரப்புகிறார்கள்.
 திருவிழாக்கள் நடக்காத நாட்களிலும் காலை, மாலை இருவேளையும் பாடல்களை ஒலிபரப்புகிறார்கள். வழிபாட்டுத் தலங்களுக்கு நேரில் செல்ல முடியாதவர்கள் அதிகாலை ஒலிபரப்புக்களை விரும்பிக் கேட்கிறார்கள் என்று சொல்லி ஒலிமாசை நியாயப்படுத்துகிறார்கள். ஒருவரின் வழிபாட்டு உரிமை இன்னொருவரின் அமைதியான வாழ்வுக்கான உரிமையை மீறக்கூடாது.
 மதம் சார்ந்த தொலைக்காட்சி அலைவரிசைகள் பிரார்த்தனைகளைத் தொடர்ந்து ஒளிபரப்புகின்றன. அவற்றைப் பார்ப்பதன் மூலமும், தங்கள் கைப்பேசிகளில் தேவையான பாடல்களைக் கேட்பதன் மூலமும் தங்கள் பிரச்னைக்குத் தீர்வு தேட வேண்டுமே தவிர, நான் கேட்க விரும்புவதால், என்னோடு சேர்ந்து ஊரே கேட்கவேண்டும் எனும் தன்னலவாத அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது.
 பல வழிபாட்டுத் தலங்களில் நாள் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பாடல்கள், சுலோகங்கள் சொல்லி, நாள், நேரம் அறிவிக்கிறார்கள். ஒவ்வொருவரும் கைப்பேசி வைத்துக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் மணிநேர அறிவிப்புக்களுக்கு எந்த அவசியமும் இல்லை.
 வழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவக் குழாய்கள், பெட்டிகள் போன்ற சக்திவாய்ந்த ஒலிப்பான்களை உயர்ந்த கோபுரங்களில், கம்பங்களில், மரங்களில் கட்டி, பெரும் சத்தத்துடன் பாடல்களை, பிரசங்கங்களை ஒலிக்கச் செய்கின்றனர். இதனால் பல தொந்தரவுகள் ஏற்படுகின்றன.
 இந்த தொடர் ஒலிமாசு காரணமாக வயது முதிர்ந்தவர்கள், நோயுற்றவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கவோ, வீட்டுப்பாடம் செய்யவோ முடியவில்லை. வீடுகளில், கடைகளில், தெருக்களில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள இயலவில்லை. கைப்பேசியில்கூட யாரோடும் பேசுவது கடினமாகிறது.
 தொடர்ந்து ஒலிமாசுக்கு உள்ளாகும்போது, பெரும்பாலான மக்கள், கேட்கும் தன்மையை இழக்கின்றனர், உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, சோர்வு, மனஅழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். ஏற்கெனவே சிக்கலானதாக இருக்கும் நம்மூர் சாலைப் போக்குவரத்து இன்னும் ஆபத்தானதாக மாறி, விபத்துகள் ஏற்படுகின்றன.
 மக்கள் பிரச்னைக்காக, அல்லது அரசின் திட்டத்திற்கு எதிராக ஒரு சிலர் ஒன்றுகூடி அற வழியில் குரல் எழுப்புவதற்குக்கூட ஆயிரம் நடைமுறைகளை வைத்துக்கொண்டு அல்லல்படுத்தும் காவல்துறை, பல்வேறு மதங்களின் பக்தகோடிகள் செய்யும் அட்டூழியங்களைக் கண்டுகொள்வதே இல்லை. ஒலிமாசுக்கு எதிராக முறைப்படி புகார் அளித்தாலும், காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை.
 சில அரசியல் கட்சிகளும் மதவாத அமைப்புகளும் ஒலிமாசு பிரச்னையை குறிப்பிட்ட ஒரு மதத்தினர் மட்டுமே செய்யும் தவறு என்பதாகவே சித்திரிக்கின்றனர். ஆனால் அனைத்து மதத்தவருமே இந்தக் கொடுமையை நிகழ்த்துகின்றனர் என்பதே உண்மை.
 கன்னியாகுமரி மாவட்டத்தில் 1982-ஆம் ஆண்டு நடந்த மண்டைக்காடு கலவரம் ஒலிபெருக்கி ஒலிமாசு பிரச்னையிலிருந்துதான் தொடங்கியது. ஒலிமாசு எனும் சிறு தீப்பொறியில் இருந்துதான் அந்த ஒட்டுமொத்த கலவரமே தொடங்கியது எனும் உண்மையை அந்த கலவரத்தைப் பற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பித்த நீதிபதி வேணுகோபால் கமிஷன் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
 மக்கள் நெருக்கமாக வாழும் பன்மைத்தன்மை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் ஒலிமாசு பிரச்னை என்பது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டிய ஒன்று. முதல்வர், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் வீடுகளுக்கு அருகே ஒலிமாசு நிகழாமல் காத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம் பொதுமக்கள் துன்புறுவதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
 அதே போல, சாலைப் போக்குவரத்தும் சத்தம் மிகுந்ததாக மாறிக் கொண்டிருக்கிறது. கார்கள், இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்களில் அதிக டெசிபல் கொண்ட ஒலியெழுப்பான்களைப் பொருத்தி, பாதசாரிகளை மிரட்டுவதற்கும், மிருகங்களை விரட்டுவதற்கும், பிற வாகனங்களை முந்திச்செல்வதற்கும், சிக்னலுக்காகக் காத்திருக்கும்போது முன்னால் நிற்பவர்களை விரைவுபடுத்துவதற்கும் பயன்படுத்துகின்றனர். சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை அதிக சத்தம் எழுப்பும் விதத்தில் மாற்றியமைத்து பிறர் கவனத்தைக் கவர முயற்சிக்கின்றனர்.
 ஒலிமாசு குறித்து உச்சநீதிமன்றம் கடந்த 2005-ஆம் ஆண்டே தெளிவானத் தீர்ப்புக்களை வழங்கியிருக்கிறது. ஒலிமாசிலிருந்து விடுதலை என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 21 குறிப்பிடும் வாழ்க்கைக்கான உரிமையின் அங்கம் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. குடிமக்களின் அடிப்படை உரிமையான அமைதியான வாழ்க்கையை ஒலிமாசு சீர்குலைத்து, அவர்களை விருப்பமின்றி ஏதையோ கேட்கும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்குகிறது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
 வழிபாட்டுத்தல வளாகங்களுக்குள் சத்தம் எழுப்பி, அண்டை அயலாருக்கும், மற்றவர்களுக்கும் தொந்தரவு தரும் வகையில் எந்த மதத்தினரும் எந்த நோக்கத்துக்காகவும் ஒலிமாசு ஏற்படுத்தும் உரிமையைக் கோர முடியாது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை ஒலிமாசு ஏற்படுத்தக் கூடாது என்றும் பணித்தது.
 தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் - வனங்கள் அமைச்சகத்தின் ஒலிமாசு (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) விதிகள் 2000 சில நிபந்தனைகளைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஒலிபெருக்கிகளும், மக்கள் தொடர்பு சாதனங்களும் அதிகாரிகளிடமிருந்து எழுத்துபூர்வமாக அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படக்கூடாது. அவை பயன்படுத்தப்படும் பொதுவெளியின் எல்லைகளில் எழும் ஒலியின் அளவு சுற்றுப்புற ஒலி அளவைவிட கூடுதலாக பத்து டெசிபல் அளவைத் தாண்டக்கூடாது.
 ஒரு மாதத்துக்கு முன்னால் உத்தர பிரதேச அரசு அம்மாநிலத்திலுள்ள வழிபாட்டுத் தலங்களில் இருந்த 10,900 ஒலிபெருக்கிகளை அப்புறப்படுத்தியது. சட்டபூர்வமாக அனுமதி பெறாமலும், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஒலிமாசு ஏற்படுத்திக்கொண்டும் இருந்த ஒலிபெருக்கிகளை அந்த அரசு நீக்கியது. அந்த நடவடிக்கைக்கு மதத்தலைவர்களோ, அமைப்புக்களோ, பொதுமக்களோ யாரும் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
 மகாராஷ்டிர மாநிலத்தில் ஒலிமாசு பிரச்னையை பேசிய அரசியல் கட்சி ஒன்று, அதனை ஒரு குறிப்பிட்ட மதத்தோடு மட்டுமே தொடர்புபடுத்தியது. ஆனால் அம்மாநில அரசு ஓர் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவை மத்திய அரசோடு பேசி, நாடு முழுவதுமான ஓர் ஒழுங்குமுறையை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்வது என்று முடிவு செய்திருக்கிறது.
 நம் தமிழ்நாட்டில், காவல்துறை உச்சநீதிமன்ற தீர்ப்புக்களை அமல்படுத்துவதுமில்லை; ஒலிமாசு பிரச்சினையை நேர்த்தியாக மேலாண்மை செய்வதுமில்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களின் வாக்குவங்கி அரசியல் பாதிக்கப்படும் என்று அஞ்சி, ஒலிமாசு பற்றி எதுவும் பேசுவதில்லை. மதக் குழுமங்களைப் பகைத்துக்கொள்ள விரும்பாத இவர்கள் ஒலிமாசு பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் விடுகின்றனர். பல வேளைகளில் இவர்களே ஒலிமாசு ஏற்படுத்துகிறவர்களாகவும் இருக்கின்றனர்.
 மக்களின் மனநலனையும், உடல்நலனையும் வெகுவாக பாதிக்கும் ஒலிமாசு பிரச்னையில் மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் தலையிட்டு நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்த வேண்டும்.
 ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு மணி நேரம் அதிகாலையிலும், முன்மாலையிலும் தொடர்ந்து பாடல்கள் ஒலிபரப்பி, மக்களின் உடல்நலனையும், மனஅமைதியையும் குலைக்கும் வகையில் ஒலிமாசு ஏற்படுத்த யாரையும் அனுமதிக்கக் கூடாது.
 திருவிழாக்கள் நடைபெறாத நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளையோ, அதைவிட சக்திவாய்ந்த பெட்டிவடிவ ஒலிபெருக்கிகளையோ பயன்படுத்த விடக்கூடாது. சாதாரண நாட்களில் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வளாகங்களுக்குள் மட்டுமே கேட்கும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பாடல்கள், பிரசங்கங்கள் ஒலிபரப்ப அனுமதிக்க வேண்டும்.
 திருவிழா காலங்களில் இரவும் பகலும் நேர வரையறை ஏதுமின்றி ஒலிமாசு ஏற்படுத்துவதைத் தடுக்க வேண்டும். கூம்புவடிவக் குழாய்க்கு பதிலாக அதைவிட பன்மடங்கு சக்திவாய்ந்த பெட்டிகள் பயன்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும். ஒலிபெருக்கிகளை கோபுரங்களிலோ, மரங்களிலோ, அதிக உயரத்திலோக் கட்ட விடக்கூடாது.
 வழிபாட்டுத் தலங்களில் ஓசை எழுப்புவதற்கும், விழாக்கள் கொண்டாடுவதற்கும் காவல்துறையின் அனுமதி பெறும் நடைமுறையை சிரத்தையுடன் அமல்படுத்த வேண்டும்.
 
 கட்டுரையாளர்:
 தலைமைப் பணியாளர்,
 பச்சைத் தமிழகம் கட்சி.
 
 



Read in source website

உலகளவில் மனிதர்களின் சராசரி வயது 72.6 ஆக இருக்கும் நிலையில், இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் அதற்கும் கீழாகத்தான் இருக்கிறது. எனினும், தொடர்ந்து அது அதிகரித்துக்கொண்டிருப்பது சமீபத்தியக் கணக்கெடுப்புகளிலிருந்து தெரியவருகிறது.

2014-18 ஆண்டுகளில் 69.4 ஆக இருந்த இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம், 2015-19 ஆண்டுகளில் 69.7 ஆக உயர்ந்துள்ளது. சராசரி ஆயுட்காலம் நீடிக்கும்தோறும் ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பயன்கள் மூத்த குடிமக்களுக்குத் தடையின்றிக் கிடைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.



Read in source website

மு.கருணாநிதி 1972-ல் உருவாக்கிய ‘தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்’, தற்போதைய திமுக ஆட்சியில் ‘தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த அமைப்பின் நடவடிக்கைகள் வாழ்விட உரிமையைப் பறிக்கும் வகையில் இருப்பதைக் கூறி ‘கலையும் கருணாநிதியின் கனவு’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ‘இந்து தமிழ்’ நாளிதழில் 27 செப். 2021 அன்று வெளியிடப்பட்டிருந்தது. அரசுத் தரப்பில் இக்கட்டுரை எதிர்வினைகளை ஏற்படுத்தியது.



Read in source website

இரண்டு நாட்களுக்கு முன்பு எங்கள் மகனை திருவான்மியூரில் உள்ள சென்னை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் (தமிழ் வழிக் கல்வியில்) சேர்த்தோம்.

நேற்று முதல் பள்ளிக்குச் செல்கிறான். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூடுவாஞ்சேரியில் அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் சேர்க்கப் போகிறோம் என்றதும் அக்கறையுள்ள நண்பர்களும் உறவினர்களும் அவனுடைய எதிர்காலத்தை முன்னிட்டு அறிவுரை கூறியதுடன் வருத்தத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

என் மனைவியும் நானும் மிகவும் மகிழ்ச்சியுடனும் அச்சமில்லாமலும் தொடக்கப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் சேர்த்தோம். அவனைச் சேர்த்தபோது, அந்தப் பள்ளியில் அவன் மட்டும்தான் தமிழ் வழியில் படிக்கும் மாணவன். கரோனா காரணமாகக் கல்வியில் விழுந்த இடைவெளியைச் சரிசெய்யும் விதத்தில் தமிழ், கணிதம் உள்ளிட்ட பாடங்களை என் மனைவியும் ஆங்கிலத்தை நானும் வீட்டில் தொடர்ந்து சொல்லிக்கொடுத்தோம்.

கூடுவாஞ்சேரியிலிருந்து திருவான்மியூருக்கு வந்ததும் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று பார்வையிட்டோம். நிறைய கட்டிடங்கள், விளையாடுவதற்கு, உட்கார்ந்துகொள்வதற்கு என்று ஏராளமான இடங்கள் என பள்ளி எங்களை மிகவும் ஈர்த்துவிட்டது. மரக்கன்றுகள், பெரிய மரங்கள் என்று எண்ணிக்கையில் ஐம்பதை நெருங்கும். தேர்தல்களின்போது ‘தல’ வாக்களிக்கும் வாக்குச்சாவடியாகப் புகழ்பெற்ற பள்ளிக்கூடம்!

நாங்கள் எங்கள் மகனை யாரிடமாவது அறிமுகப்படுத்தும்போது அவன் அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு, தமிழ்வழியில் படிக்கிறான் என்றே அறிமுகப்படுத்துவோம். இதை பிரச்சாரமாகவே தொடர்ந்து நாங்கள் செய்கிறோம்.

அரசுப் பள்ளி, தமிழ்வழிக் கல்வி இரண்டையும் நாங்கள் நாடுவதற்கு என்ன காரணங்கள்?

1. அரசுப் பள்ளிதான் அற்புதங்கள் விளைவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், அந்த அற்புதங்கள் எவ்வளவு குறைவானவை என்றாலும்கூட. இதற்கு அரசுப் பள்ளியின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது முக்கியம்.

ஏன் அரசுப் பள்ளியில் எதிர்பார்த்த அளவுக்கு அற்புதங்கள் நிகழவில்லை என்றால், நம் சமூகம் அதன்மீது வைத்திருக்கும் நம்பிக்கை மிகவும் குறைவு. அந்த நம்பிக்கையை அதிகப்படுத்தினால் எதிர்பார்த்ததைவிட அற்புதங்கள் நிகழும். அதில் நாமும் நம் குழந்தையும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று கருதினோம்.

2. நம்முடைய நம்பிக்கைக்காகவும் கொள்கைக்காகவும் குழந்தையின் எதிர்காலத்தைப் பணயம் வைப்பதா என்றும் சிலர் கேட்டார்கள்/ கேட்கிறார்கள். அரசுப் பள்ளியில் படித்தாலோ, தமிழ்வழியில் படித்தாலோ பொருளாதாரரீதியில் எதிர்காலம் கிடையாது என்ற தவறான நம்பிக்கைதான் இதற்கு அடிப்படைக் காரணம்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளிலும் தொழிற்கல்விகளிலும் 7.5% இடஒதுக்கீடு வழங்குவதற்காகச் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. ஆகவே, வேலைவாய்ப்பு, மேல்படிப்பு போன்றவற்றைப் பொறுத்தவரை முன்பைவிடத் தற்போது ஏராளமான கதவுகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் திறந்துவிடப்பட்டிருக்கின்றன.

3. கல்வி என்பது சமூகரீதியில் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய பிரிவினருக்கு எந்த அளவுக்குப் பொருளாதாரரீதியில் முன்செலுத்தும் சக்தி என்பது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் கல்வி என்பது வாழ்க்கைக்கானது, சுயமரியாதைக்கானது, சுயஅறிதலுக்கானது, இந்த உலகத்தில் நம் இடம் என்ன என்பதைக் குறித்த அறிதலுக்கானது. இந்தக் கருத்தை முதன்மையாகக் கொண்டு கல்வியை மாணவர்களுக்குக் கொடுத்தால், பொருளாதார முன்னேற்றத்தை நோக்கிய பாதையில் அவர்களால் தாங்களாகவே முடிவெடுத்துக்கொள்ள இயலும்.

இங்கே நிலவும் சிக்கல் என்னவென்றால், தங்கள் பிள்ளைகள் பெரியவர்களானாலும் அவர்களுக்கான முடிவைப் பெற்றோர்களே எடுப்பதுதான். அவர்களுக்கென்று சுயமான அறிதலோ அதனால் ஏற்படும் பிழைகள்-வெற்றிகள் என்ற மகத்தான அனுபவமோ இல்லாமல் போய்விடுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகளால் ஒருபோதும் சாதனையாளர்களாக ஆக இயலாது. வேண்டுமானால், பெற்றோர் வழிகாட்டலில் கிடைத்த பாதுகாப்பான ஒரு வேலையில் பற்றிக்கொண்டுவிடலாம்.

ஆகவே, முதன்மையான அறிதல், சமூக உறவு போன்ற காரணங்களுக்காகவும் நாங்கள் அரசுப் பள்ளியைத் தேர்ந்தெடுத்தோம். இது முறையாக நிகழுமென்றால், எங்கள் மகன் அவனுக்கான எதிர்காலப் பாதையை அவனே தேர்ந்தெடுத்துக்கொள்வான். எனினும், இதுபோன்ற சொகுசான இடத்தில் மற்ற பெற்றோர் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

அன்றாடப் பாட்டுக்கு அல்லாடும் பெற்றோர், சாதிய-மத ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுத் தத்தளித்துக்கொண்டிருக்கும் சமூகங்களைச் சேர்ந்த பெற்றோர் ஆகியோருக்கு இதுபோன்ற வசதியான தெரிவுகள் (choices) இல்லை. ஆனால், அந்த இடத்தை, ஆசிரியர்களும் கல்வி அமைப்பும் அரசும் சமூகமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

4. குழந்தைமையைக் கொன்றுவிட்டுப் புகட்டப்படும் கல்வி உண்மையான கல்வி இல்லை. காலையில் ஆறு மணிக்கே பெரிய புத்தக மூட்டையுடன் தூங்கிவிழும் முகத்துடன் பல கி.மீ. தூரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு அந்தப் பள்ளியின் வாகனத்தில் அனுப்பிவைக்கப்படும் குழந்தைகளையெல்லாம் பார்க்கும்போது, நம் குழந்தைக்கு இந்த நிலையை ஏற்படுத்தக் கூடாது என்று முன்பே முடிவெடுத்துவிட்டோம்.

பெரியவர்களான நமக்கே சில நாட்கள் கொஞ்சம் கூடுதலாகத் தூங்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். பெரியவர்களுக்கே இப்படி என்றால் குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்! எப்போது எழுப்பினாலும் ‘இன்னும் 5 நிமிஷம்ப்பா?’ என்று கெஞ்சும் குழந்தையைப் பார்த்தால் பாவமாகத்தானே இருக்கும்! ஆகவே, வீட்டுக்கு அருகில் இருக்கும் அரசுப் பள்ளி என்று முடிவெடுத்தோம்.

பெரும்பாலும் பெற்றோர்களாகிய நாங்கள் கொண்டுபோய் விட்டாலும் திரும்பி வரும்போது தன் நண்பர்களுடன் வருவதையே குழந்தை விரும்பும். தூரத்துப் பள்ளிகள், வாகனங்கள் எல்லாம் குழந்தைகளின் சாகசத் தேடல் உணர்வை (exploration) கொன்றழித்துவிடுகின்றன.

ஒன்றாம் வகுப்பிலிருந்து சக மாணவர்களுடன் கிட்டத்தட்ட ஒரு கி.மீ. தூரம் நடந்தே பள்ளிக்கூடம் சென்ற அனுபவம் எனக்கு உண்டு. குறுக்கே அகலமான பாமணி ஆறு ஓடும். ஆற்றில் தண்ணீர் இல்லையென்றாலோ ஆழம் குறைவாக இருந்தாலோ ஆற்றில் இறங்கியே கடந்துசெல்வோம். ஆனால், அந்த தினசரி பயணத்தில் கிடைத்த சந்தோஷமும் அனுபவமும் எத்தகைய மகத்தான கல்வி. அதை ஏன் நம் குழந்தைகளுக்குத் தர மறுக்கிறோம்?

5. சேர்க்கைக்காகச் சென்றபோது ஏற்கெனவே அந்தப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த, வகுப்பில்லாத மாணவர்கள் அங்குள்ள திடலிலும் படிக்கட்டுகளிலும் மர நிழலிலும் விளையாடிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது. கிட்டத்தட்ட எந்தத் தனியார் பள்ளியிலும் நான் பார்த்திராத காட்சி இது.

அவ்வளவு சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் அந்தக் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். எங்கள் மகனின் வகுப்புக்கு அருகிலேயே இருந்த மழலையர் வகுப்புக்குப் பக்கத்தில் உள்ள சுழல் சறுக்குப் பலகையில் குட்டி தேவதை ஒன்று தனியாகச் சறுக்கிக்கொண்டிருந்தது. ‘உன் பெயர் என்ன பாப்பா? எத்தனையாவது படிக்கிறே?” என்று கேட்டேன். ‘என் பேர் கவிஸ்ரீ. ரெண்டாவது படிக்கிறேன்” என்றாள்.

அவளுடன் எங்கள் மகனும் விளையாடப்போனான். ‘குழந்தைகளுக்கான சறுக்குப் பலகை இது. உடைத்துவிடாதே’ என்று தடுத்தும் கேளாமல், சறுக்கி விளையாடப் போனான். அருகிலிருந்த மரங்களில் திடீரென்று நான்கைந்து தையல் சிட்டுக்கள் ‘ட்டுவ்வீ ட்டுவ்வீ’ என்று சலம்ப ஆரம்பித்தன. எவ்வளவு அருமையான சூழல்!

6. சேர்க்கைப் படிவத்தை வைத்துக்கொண்டு வரிசையில் என் மனைவி நின்றிருந்தபோது, அவருக்குப் பின்னே நாடோடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் வந்து நின்றார்கள். அவர்கள் தங்கள் மொழியில் ஏதோ உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

அங்கே இருந்த மற்றவர்களிடம் காணப்பட்ட தயக்கம் ஏதும் அவர்களிடம் இல்லை. அங்கே நிற்பது தங்களின் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்துக்காக என்றாலும் அவ்வளவு இயல்பாக அவர்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தது மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

அவர்களுடன் இரண்டு பிள்ளைகள் வந்திருந்தார்கள். அந்தப் பெண்களிடம் பேச்சுக்கொடுத்து, தேவையான ஆவணங்களைக் கொண்டுவந்திருக்கிறார்களா என்று சரிபார்த்தேன். அந்தப் பிள்ளைகளிடமும் பேசினேன். ‘ஆறாம் வகுப்பு, தமிழ் மீடியம் சேர வந்திருக்கிறோம்’ என்றார்கள். ஆம்! எங்கள் மகனுடன் அவர்கள் படிக்கப்போகிறார்கள். வாழ்க்கையின் மகத்தான பாடமான சமூகநீதிப் பாடத்தை அவர்களின் நண்பனாக இருப்பதன் மூலம் எங்கள் மகன் கற்கப்போகிறான்.

அரசுப் பள்ளியில் எங்கள் மகனைச் சேர்ப்பதற்கு இதைவிட சிறப்பான வேறு காரணம் வேண்டுமா, என்ன?

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in



Read in source website