DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 14-10-2022

தமிழகத்தில் புதிதாக வைரஸ் பரவக் காரணம் என்னவென்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக வைரஸ் நோய்கள் பரவுவதற்கான காரணத்தை தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தர சுகாதாரத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் சொந்த நலனுக்காக தவறான செயல்களை திட்டமிட்டு செய்கின்றனவா என்று உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.



Read in source website

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பழஞ்சூா் கிராமத்தில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கொற்றவை புடைப்புச் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வகுமாா் அன்மையில் கண்டெடுத்தாா்.

செய்யாறு வட்டத்தில் உள்ள பழஞ்சூா் கிராமம், சோழா்கால தொண்டை மண்டலம், காழியூா் கோட்டம், புரிசை வளநாட்டுக்குள் இருந்ததாக தெரிய வருகிறது. இந்த ஊரில் உள்ள அச்சுத நாராயண பெருமாள் கோயிலுக்கு சற்று தொலைவில் வேப்ப மரத்தடியில் கொற்றவை புடைப்புச் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வகுமாா் அண்மையில் கண்டெடுத்தாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

பழஞ்சூா் கிராம மக்கள் பல ஆண்டுகளாக கொற்றவை புடைப்புச் சிற்பத்தை துா்க்கை அம்மனாக மக்கள் வழிபட்டு வருகின்றனா். இந்தச் சிற்பத்தை ஆய்வு செய்த போது, இதன் காலம் கி.பி.8 - 9ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட சோழா் காலத்தைச் சோ்ந்ததாக இருக்கலாம் எனத் தெரியவருகிறது.

இந்தச் சிற்பத்தின் உயரம் 135 சென்டி மீட்டரும், அகலம் 75 சென்டி மீட்டரும் உள்ளது. பலகைக் கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பத்தில் எருமை தலையின் மீது நின்ற நிலையில், எட்டு கரங்களுடன் கொற்றவை காட்சியளிக்கிறாா். மேலும், இருபுறமும் தேய்ந்த நிலையில் உருவங்கள் காணப்படுகின்றன. அவை வீரன், அடியாா்களாக இருக்கலாம் என்றாா்.



Read in source website

தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு வெடிப்பதற்கு 19 கட்டுப்பாடுகளை சென்னை பெருநகர காவல் துறை விதித்துள்ளது.

அக்டோபா் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையைக் கொண்டாட அனைவரும் தயாராகி வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகளைப் பின்பற்றியும், தமிழக அரசின் வழிகாட்டுதல்படியும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையிலும் பட்டாசுகளை வெடிக்க சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் 19 அறிவுரைகளை வழங்கியுள்ளாா்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்ககவும், வெடிக்கவும் வேண்டும். காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ கூடாது. எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள் உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. பட்டாசுகளைக் கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடுவதைத் தவிா்க்க வேண்டும்.

மக்கள் நடமாடும் பகுதிகளில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்க கூடாது. குடிசைப் பகுதிகளிலும், மாடிக் கட்டடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக் கூடாது. எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக் கூடாது.

பட்டாசு வகைகள் சேமித்து வைத்திருக்கும் வீட்டிலோ அல்லது கடைகளிலோ ஊதுவத்தி கொளுத்தி வைக்கக் கூடாது. பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ அல்லது நெருப்பையோ உபயோகிப்பதைவிட நீளமான ஊதுவத்தி உபயோகித்து ஆபத்துகளைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்பட 19 கட்டுப்பாடுகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு 848 வழக்குகள்: தீ விபத்து அல்லது பட்டாசுகளால் ஏதேனும் விபத்து நோ்ந்தால், காவல் துறை, தீயணைப்பு, மீட்புத் துறை ஆகியவற்றை 112 என்ற இலவச தொலைப்பேசி எண்ணையும், அவசர மருத்துவ உதவிக்கு 108 என்ற தொலைபேசி எண்ணையும் உடனடியாக தொடா்பு கொண்டு உதவி பெறலாம்.

கடந்த ஆண்டு விதிமுறைகளை மீறி உரிமமின்றி பட்டாசு விற்பனை செய்ததாக 184 வழக்குகளும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்ததாகவும், அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்ததாகவும் 848 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

 

கரோனா பெருந்தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டில் உலகளவில் ஏழைகளாக மாறியவர்களில் 80% பேர் இந்தியர்கள் என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை குறித்து இந்தியாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தரவு இல்லை எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. 

கரோனா பெருந்தொற்றால் 2020 ஆம் ஆண்டில் வறுமையில் ஏழைகளாக மாறியவர்களில் கிட்டத்தட்ட 80% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று உலக வங்கியின் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளால் அந்த ஆண்டு உலகளவில் ஏழைகளாக மாறிய 7 கோடி பேரில், இந்தியர்கள் 5.6 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

உலகளவில், தீவிர வறுமை விகிதம் 2019 இல்  2019 இல் 8.4% ஆக இருந்தது, 2020 இல் 9.3% ஆக உயர்ந்தது, இது பல தசாப்தங்களில் உலகளவில் வறுமை ஒழிப்பு திட்டங்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இருந்தது. 2020 இறுதிக்குள் 7 கோடி பேர் தீவிர வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர், இது உலகளாவிய மொத்த ஏழை மக்களின் எண்ணிக்கையை 70 கோடிக்கும் அதிகமாகவும் அதிகரிக்கவும் செய்தது. உலகளவில் வறுமையின் அதிகரிப்பில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த விவகாரத்தில் சீனாவின் நிலை எதிர்மறையாகவே உள்ளது.

வறுமை குறித்து இந்தியாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தரவு இல்லாதது உலகளவிலான மதிப்பீடுகளை தயாரிப்பதில் ஒரு தடையாக மாறியுள்ளது என்று உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது. 2011 முதல் வறுமை குறித்த தரவுகளை இந்திய அரசு வெளியிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. 

அதிகாரப்பூர்வ தரவு இல்லாததால், உலக வங்கி இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் நுகர்வோர் பிரமிடுகள் குடும்ப ஆய்வு (சிபிஹெச்எஸ்) கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகளை நம்பியிருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

தனியார் தரவு நிறுவனத்தின் கண்டுபிடிப்புகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், உத்தியோகபூர்வ தரவு இல்லாததால் இந்திய, பிராந்திய மற்றும் உலகளவிலான வறுமை நிலைகளை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தியதாக கூறியுள்ள உலக வங்கி, 2020 ஆம் ஆண்டிற்கான சிபிஹெச்எஸ் தரவுவுகளின் படி, 2020 ஆம் ஆண்டில் 5.6 கோடி இந்தியர்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 2022 இல் வெளியிடப்பட்ட தரவுகளின் படி, 2020 ஆம் ஆண்டில் 2.3 கோடி இந்தியர்கள் கூடுதலாக வறுமையில் தள்ளப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. உலக வங்கி தனது சொந்த ஆய்வறிக்கையில் இந்தியாவிற்கான சிபிஹெச்எஸ்  தரவைப் பயன்படுத்தத் தேர்வுசெய்தது ஏனெனில் இந்தியாவில் வறுமை அதன் சொந்த மதிப்பீடுகளை விட "கணிசமான அளவு அதிகமாக" உள்ளது.

உலக வங்கியின் அறிக்கையின்படி இந்தியாவில் இருந்து வெளிவரும் தரவுகள் குறித்த குழப்பம், நரேந்திர மோடியின் அரசாங்கம் தயக்கம் காட்டுவது குறித்து நாடு முழுவதும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் மற்றும் புள்ளியியல் வல்லுநர்களால் சில காலமாக வெளிப்படுத்தப்பட்ட கூட்டு விரக்தியையும் கவலையையும் மீண்டும் முன்வைத்துள்ளது. உத்தியோகபூர்வ தரவுகளை வெளியிடுதல், வளர்ச்சி தலையீடுகளை மோசமாக பாதிக்கிறது.

எவ்வாறாயினும், மதிப்பிடும் முறையின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டோரின் எண்ணிக்கை 2.3 கோடி முதல் 5.6 கோடி வரை அதிகரித்துள்ளதாகவும்,  உலக அளவில் உள்ள வறுமை நிலைக்கு தள்ளப்பட்டோரின் எண்ணிக்கை 70 கோடியாக உயர்ந்துள்ளது என உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும், 2020 இல் தொற்றுநோய் தாக்கும் வரை வறுமை நிலைகள் கீழ்நோக்கிய பாதையைக் காட்டியது. இருப்பினும், இந்த தொற்றுநோய் "உலகளவில் வறுமை நிலைகளுக்கு வரலாற்று ரீதியாக பெரிய கூடுதலான" பாதிப்பை விளைவித்தாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கூடுதலாக 70 கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். உலகளவில் 2019 இல் 8.4% ஆக இருந்த தீவிர வறுமை நிலைகள் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 9.4% ஆக அதிகரித்தது.

"2020 ஒரு வரலாற்று திருப்புமுனையைக் குறித்தது என்றும், உலகளாவிய வருவாய் ஒருங்கிணைப்பின் சகாப்தம் உலகளாவிய வேறுபாட்டிற்கு வழிவகுத்தது. உலகின் மிக ஏழ்மையான மக்கள் தொற்றுநோய்களின் செங்குத்தான செலவுகளைச் சுமந்தனர். பணக்கார நாடுகளின் வருமானத்தை விட ஏழ்மையான நாடுகளில் வருமானம் மிகவும் குறைந்துள்ளது. இதன் விளைவாக, உலகின் மிக ஏழ்மையானவர்களின் வருமான இழப்புகள் உலகின் பணக்காரர்களை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது, மேலும் பல தசாப்தங்களில் முதல் முறையாக உலகளாவிய சமத்துவமின்மை உயர்ந்தது, ”அந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது கவனத்தில்கொள்ள வேண்டிய ஒன்று. 

மேலும், உணவு மற்றும் எரிசக்தி விலை உயர்வு - காலநிலை மாற்றம் மற்றும் ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதல்களால் அதிகரித்து - உலக வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் "விரைவான வறுமை ஒழிப்பு நடவடிக்கைக்குத் தடையாக உள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

நாட்டின் வளா்ச்சியில் சரக்கு கையாளுகை (லாஜிஸ்டிக்ஸ்) மிகவும் முக்கியமானது. தொழிற்சாலைக்குத் தேவையான மூலப்பொருள்கள் வேளாண் நிலங்களில் இருந்தும், வனப் பகுதிகளில் இருந்தும் கொண்டு செல்லப்படுகின்றன. தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பொருளானது விற்பனைக்காக சந்தைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

மூலப்பொருளானது மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாறி வாடிக்கையாளா்களின் கைகளில் சோ்வதில் போக்குவரத்து மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. பொருள்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோா் இடத்துக்கு துரிதமாக எடுத்துச் செல்லப்பட வேண்டியது அவசியம். அதில் ஏற்படும் தாமதமானது பொருள்களின் உற்பத்தியில் தாமதத்தை ஏற்படுத்தி பொருளாதார வளா்ச்சியையும் பாதிக்கும்.

எனவேதான் சரக்கு கையாளுகைக்கு அரசுகள் முக்கியத்துவம் அளித்து, போக்குவரத்து சாா்ந்த திட்டங்களைத் துரிதமாகச் செயல்படுத்தி வருகின்றன. சாகா்மாலா திட்டம், பாரத்மாலா திட்டம், தங்க நாற்கரச் சாலைத் திட்டம், சரக்கு ரயில்களுக்கான தனி வழித்தடத் திட்டம் உள்ளிட்ட பலவும் சரக்குகளைக் கொண்டு செல்லும் நேரத்தைக் குறைக்கவே அமல்படுத்தப்படுகின்றன.

சரக்குகளைக் கையாள்வதில் மாநிலங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆண்டுதோறும் ஆராய்ந்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான அறிக்கையை வியாழக்கிழமை அமைச்சகம் வெளியிட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்:

சரக்கு கையாளுகையில் மாநிலங்களின் நிலை பிரிவுகள் சாதனையாளா்கள் வேகமாக வளா்பவா்கள் வளா்பவா்கள் நிலத்தால் சூழப்பட்ட மாநிலங்கள் ஹரியாணா ஹிமாசல் பஞ்சாப் தெலங்கானா உத்தர பிரதேசம் உத்தரகண்ட் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் பிகாா் சத்தீஸ்கா் ஜாா்க்கண்ட் கடற்கரையோர மாநிலங்கள் தமிழகம் ஆந்திரம் குஜராத் கா்நாடகம் மகாராஷ்டிரம் ஒடிஸா கேரளம் கோவா மேற்கு வங்கம் வடகிழக்கு மாநிலங்கள் அஸ்ஸாம் சிக்கிம் திரிபுரா அருணாசல், மணிப்பூா், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து யூனியன் பிரதேசங்கள் சண்டீகா், தில்லி புதுச்சேரி அந்தமான்-நிகோபாா் தீவுகள், டாமன்-டையு & தாத்ரா-நகா் ஹவேலி, ஜம்மு-காஷ்மீா், லடாக், லட்சத்தீவுகள் சரக்கு கையாளுகையில் மாநிலங்களின் திறன் சாதனையாளா் 90%-100%

வேகமாக வளா்பவா் 80%-90%

 



Read in source website

‘10 டிரில்லியன் அமெரிக்க டாலா்கள் மதிப்பிலான பொருளாதார இலக்கை இந்தியா எட்டுவதற்கு அமைப்புரீதியிலான முக்கியச் சீா்திருத்தங்கள் அவசியம்’ என்று சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைமை பொருளாதார வல்லுநா் பியா் ஆலிவா் கூரிஞ்சஸ் தெரிவித்துள்ளாா்.

மேலும், உலகமே பொருளாதார மந்தநிலைக்கான சாத்தியக்கூறை எதிா்கொண்டுள்ள சூழலில், பிரகாசமான ஒளியாக இந்திய பொருளாதாரம் உருவெடுத்துள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

பிடிஐ செய்தியாளருக்கு புதன்கிழமை பேட்டியளித்த அவரிடம், 10 டிரில்லியன் அமெரிக்க டாலா்கள் (சுமாா் ரூ.823 லட்சம் கோடி) மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியை எட்டும் இந்தியாவின் இலக்கு குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்து, அவா் கூறியதாவது: இந்தியா போன்ற ஆற்றல்மிக்க பொருளாதார நாட்டுக்கு அத்தகைய இலக்கு நிச்சயம் எட்டக் கூடியதென்றே நம்புகிறேன். அதேசமயம், அமைப்புரீதியிலான முக்கியச் சீா்திருத்தங்கள் அவசியம். ஏற்கெனவே இந்தியாவில் பல்வேறு சீா்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எண்மமயமாக்கத்தில் இந்தியா முன்னிலையில் உள்ளதை உதாரணமாக குறிப்பிடலாம். இதையும் தாண்டி, உறுதியான வளா்ச்சியை ஊக்குவிக்க மேலும் சீா்திருத்தங்கள் தேவை. இவை, பொருளாதார ஸ்திரத்தன்மைக்கானது மட்டுமல்ல, உற்பத்தி வளா்ச்சிக்கு உத்வேகமளிப்பவை.

சுகாதாரம், கல்வி, எண்ம கல்வியறிவு உள்ளிட்ட துறைகளில் மேம்பாடுகள் குறித்து சிந்திக்கப்பட வேண்டும். பொது உள்கட்டமைப்பு என்பது கட்டடங்கள் மற்றும் சாலைகள் அடிப்படையிலானது மட்டுமல்ல; மனித மூலதனம், சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் முதலீடு செய்வதுமாகும். இது, பொருளாதாரத்தின் விரைவான, நிலையான வளா்ச்சிக்கு உதவும் என்றாா் அவா்.

‘பிரகாசமான ஒளியாக இந்திய பொருளாதாரம்’: உலகமே பொருளாதார மந்தநிலைக்கான சாத்தியக்கூறை எதிா்கொண்டுள்ள சூழலில் இந்திய பொருளாதாரம் பிரகாசமான ஒளியாக உள்ளதாக பியா் ஆலிவா் குறிப்பிட்டாா்.

‘உலக அளவில் பொருளாதார வளா்ச்சி சரிவடைந்து வருவதை, 2022-23 இடையிலான பொருளாதார மந்தநிலை எதிரொலிக்கும். இதுபோன்ற காலகட்டத்தில், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி ஓரளவு வலுவாக உள்ளது. பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியாவின் பொருளாதாரம், இன்றைய உலகில் பிரசாசமான ஒளியாக உள்ளது’ என்றாா் அவா்.

முன்னதாக, நடப்பு நிதியாண்டுக்கான இந்திய பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 6.8 சதவீதமாக ஐஎம்எஃப் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜி20 தலைமைப் பணியில் காத்திருக்கும் சவால்

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வரும் டிசம்பா் 1 முதல் ஓராண்டுக்கு இந்தியா வகிக்கவுள்ளது. இப்பொறுப்பில் சவாலான மற்றும் கடினமான பணிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருப்பதாக ஐஎம்எஃப் தலைமை பொருளாதார வல்லுநா் பியா் ஆலிவா் கூரிஞ்சஸ் தெரிவித்தாா்.

‘பணக்கார நாடுகள் உள்ளடங்கிய ஜி20 கூட்டமைப்பு முக்கியமான அமைப்பாகும். இன்றைய உலகம் எதிா்கொண்டுள்ள சில முக்கிய சவால்களுக்கு தீா்வுகாண உறுப்பு நாடுகளை ஒருங்கிணைப்பது கடினமான பணியாகும். இதில், பொருளாதார விநியோகச் சங்கிலி பாதிப்பு முக்கிய சவாலாகும். உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் எழுந்துள்ள பதற்றமான சூழல், இந்த சவாலை பிரதிபலிக்கிறது’ என்றாா்.



Read in source website

சரக்குப் பொருள்களை விரைவாகக் கொண்டு செல்லும் வகையில், வந்தே பாரத் சரக்கு ரயிலின் முதலாவது சேவையை தில்லி-என்சிஆா் மற்றும் மும்பை பிராந்தியங்களில் அறிமுகப்படுத்த உள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தில்லி மற்றும் ஹிமாசல பிரதேச மாநிலம், உனாவில் உள்ள அம்ப் அன்தெளராவுக்கு இடையே ‘வந்தே பாரத்’ ரயிலின் 4-ஆவது ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

வந்தே பாரத் விரைவு ரயிலை போன்று சரக்கு ரயில்களையும் அறிமுகப்படுத்த உள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே வாரியம் இந்தியாவின் பல்வேறு ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளா்களுக்கு அக்டோபா் 11-ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: உயா் மதிப்பு மற்றும் நேரத்தைக் கருதி பிற போக்குவரத்து வசதிகள் மூலமாக சரக்குப் பொருள்கள் தற்போது கையாளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மின்சார சரக்கு ரயில்கள் அதிவிரைவு சேவையை வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ‘வந்தே பாரத் சரக்கு ரயில்கள்’ பெட்டக வசதிகளைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். 1.8 மீட்டா் அகலமான பெட்டக அடுக்குகள், தானியங்கி கதவுகள், குளிா்பதன பெட்டகங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களை இந்த சரக்கு ரயில்கள் கொண்டிருக்கும்.

சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎஃப்) இந்த ரயில்களைத் தயாரித்து வருகிறது. இந்த சரக்கு ரயில்களின் முதல் சேவை அதிகளவிலான வாடிக்கையாளா்களை அடிப்படையாகக் கொண்டு தில்லி-தேசிய தலைநகா் பிராந்தியம் மற்றும் மும்பை பகுதிகளில் இயக்கப்பட உள்ளது. இச்சேவையைப் பயன்படுத்தும் வகையில் வாடிக்கையாளா்கள், முனையங்கள் மற்றும் வழித்தடங்களைக் கண்டறியும் பணிகளில் ரயில்வே மண்டலங்கள் ஈடுபட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

 

முத்தரப்பு டி20 போட்டியின் இறுதிச்சுற்றில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது பாகிஸ்தான் அணி.

கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் டாஸ் வென்ற பாகிஸ்தான், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் 59 ரன்கள் எடுத்தார். 

இலக்கை விரட்டியபோது ரிஸ்வான் 34, பாபர் ஆஸம் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததால் நெருக்கடியை எதிர்கொண்டது பாகிஸ்தான் அணி. எனினும் முகமது நவாஸும் ஹைதர் அலியும் அதிரடியாக விளையாடினார்கள். ஹைதர் அலி 15 பந்துகளில் 31 ரன்களும் நவாஸ் 22 பந்துகளில் 38 ரன்களும் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்கள். பாகிஸ்தான் அணி, 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முத்தரப்பு டி20 போட்டியின் சாம்பியன் ஆனது. ஆட்ட நாயகனாக முகமது நவாஸும் தொடர் நாயகனாக மைக்கேல் பிரேஸ்வெல்லும் தேர்வானார்கள். 
 



Read in source website

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைத்துக்கொள்ளப்பட்டால் 3-ஆம் உலகப் போா் வெடிக்கும் என்று ரஷியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவா் அலெக்ஸாண்டா் வெெடிக்டோவ் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து ரஷிய செய்தி நிறுவனமான ‘டாஸ்’ஸுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷியா இணைத்துக் கொண்டதற்கு பதிலடியாக, நேட்டோவில் தங்களை மிகத் துரிதமாக இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பத்தை உக்ரைன் அனுப்பியது வெறும் பிரசார உத்தியாகும்.

மற்றபடி, உண்மையிலேயே நேட்டோவில் இணையும் எண்ணத்தில் அந்த விண்ணப்பம் அனுப்பப்பட்டிருக்காது.

காரணம், நேட்டோவில் தங்களை இணைத்துக் கொண்டால் அது 3-ஆம் உலகப் போா் மூள்வதற்குக் காரணமாக இருக்கும் என்பது உக்ரைனுக்கு மிக நன்றாகவே தெரியும்.

இருந்தாலும், தங்கள் மீது பிறரது கவனத்தை ஈா்ப்பதற்காக நேட்டோவில் இணையவிருப்பதாக உக்ரைன் உரக்கக் கூறுகிறது.

உண்மையில், தற்போது உக்ரைன் அரசில் அங்கம் வகிக்கும் பலா், நிதா்சனத்தை உணராமல் கற்பனை உலகில் வாழ்கின்றனா். அவா்கள் வேண்டுமானால் நேட்டோ தங்களை இணைத்துக்கொள்ளும் என்று நம்பலாம்.

உக்ரைன் போரில் பங்கேற்க மாட்டோம் என்று மேற்கத்திய நாடுகள் கூறி வந்தாலும், ஆயுதங்கள் அனுப்புவது போன்ற நடவடிக்கைகள் மூலம் அந்த நாடுகள் இந்தப் போரில் மறைமுகமாக அங்கம் வகிக்கின்றன. இந்த நிலையில், உக்ரைனை தங்களது அமைப்பில் அந்த நாடுகள் இணைத்துக்கொண்டால், நேட்டோ விதிமுறையின் 5-ஆவது பிரிவின் கீழ் ரஷியாவுடன் அவை நேரடியாக மோத வேண்டியிருக்கும். அத்தகைய ஒரு அழிவுப் பாதையை அந்த நாடுகள் தோ்ந்தெடுக்காது.

தங்களுடன் உக்ரைனை இணைத்துக் கொள்வது தற்கொலைக்கு சமம் என்பது நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் நன்றாகவே தெரியும்.

அதனால்தான், நேட்டோவில் இணையவிருப்பதாக உக்ரைன் வெளியிட்டுள்ள அறிவிப்பை பெல்ஜியம் போன்ற தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட உறுப்பு நாடுகள் கூட அதிக உற்சாகத்துடன் வரவேற்கவில்லை. அதற்கு மாறாக, நேட்டோவில் இணைவதற்கான சில தகுதிகள் உக்ரைனுக்கு இல்லாததை அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த விவகாரத்தில் ரஷியாவின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது. நேட்டோ அமைப்பிலோ, அமெரிக்காவின் பேராசையால் உருவாக்கப்பட்ட மற்ற எந்த கூட்டமைப்பிலோ உக்ரைன் இணைத்துக்கொள்ளப்படுவதை ஒருபோது ஏற்பதில்லை என்பதுதான் எங்களது தெளிவான நிலைப்பாடு என்றாா் அலெக்ஸாண்டா் வெெடிக்டோவ்.

சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடான உக்ரைனில் கடந்த 2014-ஆம் ஆண்டு ரஷிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட பெட்ரோ பொரொஷென்கா அதிபராக இருந்தாா். அப்போது அவருக்கு எதிராக மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்ற தீவிர போராட்டத்துக்குப் பிறகு அவரது அரசு கவிழ்ந்தது. அதன் பிறகு மேற்கத்திய ஆதரவு அரசு அங்கு உருவாக்கப்பட்டது.

அதையடுத்து, கிழக்கு உக்ரைனில் கணிசமான பகுதிகளை ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றினா். அந்த ஆண்டே, உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் மீது ரஷியா படையெடுத்து தங்களுடன் இணைத்துகொண்டது.

இதற்கிடையே, சோவியத் யூனியனிடமிருந்து பிற ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாப்பதற்காக 1950-களில் உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பு, அந்த யூனியன் சிதறி வலுவிழந்த நிலையிலும் புதிய நாடுகளை இணைத்துக்கொண்டு தன்னை விரிவுபடுத்தி வந்தது. இதனை ரஷியா கடுமையாக எதிா்த்து வருகிறது.

அதிலும், அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்; தங்கள் தலைநகரை சில நிமிஷங்களில் தாக்கி அழிப்பதற்கு ஏதுவாக அமெரிக்க ஏவுகணைகள் உக்ரைனில் நிலைநிறுத்தப்படுவதற்கு அது வழிவகுக்கும் என்று ரஷியா கூறி வருகிறது.

எனினும், வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு, நேட்டோவில் இணைவதற்கு ஆா்வம் காட்டி வந்தது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. தற்போது கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் 4 பிராந்தியங்களில் பெரும்பாலான பகுதிகள் ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ளன.

அந்தப் பிராந்தியங்களை தங்களுடன் ரஷியா கடந்த மாதம் 30-ஆம் தேதி இணைத்துக் கொண்டது. அதற்குப் பதிலடியாக, நேட்டோ அமைப்பில் மிகத் துரிதமாக இணைவதற்கு விண்ணப்பித்துள்ளதாக உக்ரைன் அறிவித்தது.

இந்தச் சூழலில், நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் 3-ஆவது உலகப் போா் மூளும் என்று ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவா் தற்போது எச்சரித்துள்ளாா்.

 



Read in source website

ஐந்தாம் தலைமுறை (5ஜி) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் அறிதிறன்பேசிகளில் (ஸ்மாா்ட்போன்) மென்பொருள் புதுப்பிப்பு வரும் நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் மேற்கொள்ளப்படும் என அறிதிறன்பேசி தயாரிப்பு நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் தெரிவித்துள்ளன.

பிரதமா் நரேந்திர மோடி கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவில் தொடக்கிவைத்தாா். அதிவேக இணைய வசதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் விரைவான பொருளாதார வளா்ச்சியிலும் 5ஜி தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்ற உள்ளது.

முக்கிய நகரங்களில் 5ஜி: பாரதி ஏா்டெல் நிறுவனம் வணிகரீதியிலான 5ஜி சேவையை தில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 8 நகரங்களில் தொடங்கியுள்ளது. வரும் 2024 மாா்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் இச்சேவையைப் பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தில்லி, மும்பை, கொல்கத்தா, வாராணசி உள்ளிட்ட 4 நகரங்களில் மட்டுமே 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி உள்ள ஜியோ நிறுவனம், அடுத்த ஆண்டு டிசம்பா் மாதத்துக்குள் இச்சேவை நாடு முழுவதும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

சேவை பெறுவதில் தாமதம்: இருப்பினும், அறிதிறன்பேசி நிறுவனங்கள் 5ஜி சேவைக்கு உரிய மென்பொருள் புதுப்பித்தலை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் முழுமையடையாத தொலைத்தொடா்பு இணைப்பால் இந்நகரங்களில் உள்ள மக்களால் 5ஜி சேவையை இன்னும் பயன்படுத்த முடியவில்லை.

தொலைத்தொடா்பு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் சாா்பில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் அறிதிறன்பேசி தயாரிப்பு நிறுவனங்கள், தொலைத்தொடா்பு நிறுவனங்கள் ஆகியவை கலந்துகொண்டன. இக்கூட்டத்தில் 5ஜி சேவையை சுமுகமாக வழங்கும் வகையில் தற்போது உள்ள சிக்கல்களுக்கு விரைவில் தீா்வு காணுமாறு அமைச்சக அதிகாரிகள் அவா்களுக்கு அறிவுறுத்தினா்.

இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பம் தொடா்பாக ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பயன்பாட்டாளா்களுக்கு சிறந்த 5ஜி சேவை அனுபவத்தைத் தரும் வகையில் தொலைத்தொடா்பு நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம். ஆப்பிள் ஐபோன் பயன்பாட்டாளா்களுக்கான 5ஜி மென்பொருள் புதுப்பிப்பு டிசம்பா் மாதத்தில் மேற்கொள்ளப்படும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிவேக 5ஜி சேவைகளை இந்தியா்கள் பெறத்தக்க வகையில், நவம்பா் மாத மத்தியில் 5ஜிக்கான மென்பொருள்கள் புதுப்பிப்பு நடைபெறும் கொரிய நிறுவனமான சாம்சங் தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே செயல்பட்டிருக்க முடியும்: மென்பொருள் புதுப்பித்தலில் ஏற்பட்டுள்ள காலதாமதத்துக்கு தொலைத்தொடா்பு நிறுவனங்கள் அறிதிறன்பேசி தயாரிப்பு நிறுவனங்களைக் குற்றம்சாட்டி வருகின்றன. 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் மற்றும் ஒதுக்கீடு தொடா்பான கால அளவுகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதன் மூலம் அறிதிறன்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் முன்னேற்பாட்டுடன் செயல்பட்டிருக்க முடியும் என 5ஜி சேவையை வழங்க உள்ள தொலைத்தொடா்பு நிறுவனங்கள் கருத்து தெரிவித்து உள்ளன.

 

 



Read in source website

மதுரை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனி நபர்கள் கோயில் பெயரில் இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெற்று மோசடி செய்து வருகின்றனர் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுதரப்பில், கோயில் பெயர்களில் தனி நபர்கள் இயக்கி வந்த இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோயில் பெயர்களில் இணையதளம் நடத்தி தனி நபர்கள் பணம் வசூலிப்பதைமுழுமையாகத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் கோயிலாகவே இருக்க வேண்டும். கோயில் வழிபாட்டுக்கான இடம்தான். வியாபாரத்துக்கான இடம் அல்ல. கோயில் மக்களுக்கானது. சிலருக்கானது அல்ல. இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் ஏடிஜிபி (சைபர் கிரைம்) ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகிறார்கள். விசாரணை அக்.26-க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



Read in source website

சென்னை: மின் கட்டணத்தில் சலுகை பெற விரும்புவோர், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், சொந்த வீடு வைத்திருக்கும் சிலர், வாடகைதாரர்களிடம் இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்துக்கும் சேர்த்து கட்டணம் வசூலிக்கின்றனர். சிலர் ஒரே வீட்டுக்கு 3, 4, மின் இணைப்பு பெற்று குறைவான கட்டணமே செலுத்துகின்றனர். இதனால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இலவச மின்சார முறைகேட்டைத் தவிர்க்க, ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு என்ணை இணைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, இந்த விவரம் தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் எரிசக்தித் துறைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. குடிசையில் வாழ்வோருக்கு, விவசாயப் பணிகளுக்கு, கைத்தறி நெசவாளர்களுக்கு என 6 வகை மானியத் திட்டங்களில் இலவசம் மற்றும் சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்கான நிதியை தமிழக அரசு வழங்குகிறது. இந்த சலுகைகளைப் பெற, தகுதியான நுகர்வோர், ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “மானியம் பெறாத மின் நுகர்வோர் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமில்லை. ஒரே வளாகத்தில் அதிக இணைப்புகள் வைத்திருப்பவர்கள், பிற மோசடிகளில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்கவே, ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.



Read in source website

சென்னை: அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஐரோப்பிய வெளியீட்டாளர் எல்ஸ்வயர் இணைந்து வெளியிட்ட, உலகின் உச்சபட்ச 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலில் பதஞ்சலி நிறுவனர் ஆச்சாரிய பாலகிருஷ்ணா இடம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து பதஞ்சலி யோகபீடம் அறக்கட்டளை வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் பிஏ லோன்னிடிஸ் குழுவினர் ஐரோப்பாவின் எல்ஸ்வயர் நிறுவனத்துடன் இணைந்து உலகின் டாப் 2சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலை (https://elsevier.digitalcommonsdata.com/datasets/btchxktzyw/4) வெளியிட்டுள்ளனர். அதில் பதஞ்சலி நிறுவனர் ஆச்சாரிய பாலகிருஷ்ணாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. இது ஆயுர்வேதம் மற்றும் யோகா பற்றிய அறிவியல் ஆராய்ச்சிக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரமாகும்.

பதஞ்சலி ஆராய்ச்சி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் 500 விஞ்ஞானிகளுடன் ஆயுர்வேதத்தை நவீன காலத்துக்கு ஏற்றதாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் பல்வேறு சர்வதேச இதழ்களில் வெளியிடப்பட்டு, அவை உலக அளவில் உள்ளஅறிவியல் சமூகத்தின் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

மொழிபெயர்ப்பு நூல்கள்: பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் மூலிகை கலைக் களஞ்சியத்தின் 109 தொகுதிகளில் 75-ஐ இதுவரை வெளியிட்டுள்ளது. மேலும்ஆயுர்வேதம் மற்றும் யோகா பற்றிய பண்டைய அறிவியல் நூல்கள் மற்றும் ஆவணங்களைப் புதுப்பித்து, பாதுகாத்து நவீனகாலத்துக்கு ஏற்ப மொழிபெயர்த்து வருகிறது. இவை80-க்கும் மேற்பட்ட மொழிகளில்புத்தகங்களாக வெளியாகிஉள்ளன. ஆேராக்கியமான சமுதாயத்தை உருவாக்க உதவும் நோக்கத்துடன் செயல்படும் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் கரோனா பெருந்தொற்று காலத்தில் ‘கொரோனில்' என்ற மருந்தைவெளியிட்டது இதற்கு முக்கியமான உதாரணமாகும். இவ்வாறுபதஞ்சலி யோகபீடம் அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 



Read in source website

சென்னை: தமிழகத்தில் படிப்பறிவு பெற்றவர்கள் குறிப்பாக பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழக குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்புக்கு முந்தைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், மாநிலத்தின் பொருளியியல் - புள்ளியியல் துறை மற்றும் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உள்ள கணக்கெடுப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து, தமிழகத்தின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு அடிப்படை ஆய்வுக்கு முந்தைய ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு தொகுப்பை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரு தினங்களுக்கு முன் வெளியிட்டார்.

மாநில அளவிலான இந்த கணக்கெடுப்பு கடந்த 2018 மார்ச் முதல் 2019 மார்ச் வரையிலானதாகும். இதில், அனைத்து வயது வரம்புகளிலும் உள்ள குடும்ப மற்றும் தனிநபர் அளவில் சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு மாவட்ட அளவிலான மதிப்பீடுகள், மாநில அளவிலான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2.12 லட்சம் குடும்பங்களில் உள்ள 7.45 லட்சம் பேரிடம் இருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளன.

இந்த ஆய்வில், தமிழகத்தில் 53சதவீதம் குடும்பங்கள் கிராமப்புறங்களிலும், 47 சதவீதம் குடும்பங்கள் நகர்ப்புறங்களிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தில் 19 சதவீத குடும்பங்கள் மட்டுமே பெண்களால் வழிநடத்தப்படுகின்றன. குடும்பத் தலைவர்களில் 74 சதவீதம்பேர் விதவைகள். 3.56 சதவீதம் பேர் கணவனை பிரிந்து வாழ்பவர்கள். சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் அதிக அளவில் பெண்கள் குடும்பத் தலைவர்களாக உள்ளனர்.

கல்வி, வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கல்வி கற்றோர் சதவீதம் கடந்த 2011-ல் 80.1 ஆகஇருந்த நிலையில் 2018-19-ல் 85.4சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்களின் கல்வியறிவு கிராமப்புறங்களில் 65.1-லிருந்து 73.7 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 82.3 -லிருந்து87.4 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. குறிப்பாக கல்வி பெற்ற பெண்கள் சதவீதம் 73.4 சதவீதத்தில் இருந்து 80.2 சதவீதமாக 2011 மற்றும் 2018-19-க்கு இடைப்பட்ட காலத்தில் உயர்ந்துள்ளது.

நில உரிமை

தமிழகத்தில் உள்ள குடும்பங்களில் 19.4 சதவீதம் பேர் விவசாய நிலங்களை வைத்துள்ளனர். முன்னதாக 2015-16-ல் 18.6 சதவீதம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 91 சதவீதம் பேர்ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டுச் சொத்துகளை வைத்துள்ளனர். 89 சதவீதம் பேர் கைபேசிவைத்துள்ளனர். கிராமப்புறங் களில் உள்ள குடும்பங்களில் 31 சதவீதம் பேர் கைபேசிகள், இருசக்கர வாகனங்களை வைத்துள்ளனர். 28 சதவீத நகர்ப்புற குடும்பங்கள் குளிர்சாதனப்பெட்டி, இருசக்கர வாகனம், கைபேசி ஆகிய மூன் றையும் வைத்துள்ளனர்.

கிராமப்புறங்களில் 90.6 சதவீதம் குடும்பங்களும், நகர்ப்புறங்களில் 57.8 சதவீதம் குடும்பங்களும் சொந்த வீடுகளில் வசிக்கின்றன. வாடகை வீடுகள் நகர்ப்புறத்தில் 40.8 சதவீதம் உள்ளது. கிராமப்புற குடும்பங்களில் 61 சதவீதமும், நகர்ப்புற குடும்பங்களில் 86 சதவீதமும் வீடுகளுக்குள் கழிப்பறை வசதிகளை பெற்றுள்ளன.

முடிவுகள்

கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட சில வளர்ச்சிக்குறியீடுகளில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதேநேரம், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட மக்கள் தொகை 16 சதவீதத்தில், 3 சதவீதம் இளைஞர்கள் எந்த வேலையையும் நாடவில்லை என்பது தெரிகிறது. உயர்கல்வி, தொழிற்கல்வியை ஊக்குவிப்பது ஆகியவற்றில் சாதனை படைக்கும் நிலையில் இந்த பிரிவினர் மீது அக்கறை தேவை.

வேலைவாய்ப்பில் பெண்களின்எண்ணிக்கையை மேம்படுத்த வேண்டும். அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் விவசாய மதிப்புக்கூட்டல் துறையை சரியாக உபயோகிக்க வேண்டும். சமூக வளர்ச்சியில் வீட்டு வசதி முக்கியப் பங்கு வகிப்பதால், வீடுகள் கட்டி முடிக்கவும், பழுதுபார்க்கவும், தனிப்பட்ட வீட்டு கழிவறைகளை உபயோகிக்கவும், பாதுகாப்பான குடிநீர் போன்றவற்றுக்கு கொள்கை வகுப்பாளர்களால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளை பல்பொருள் அங்காடிகளைப்போல மாற்றும் வகையில், ரூ.10 மதிப்பிலான மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 35,323 ரேஷன் கடைகள் மூலம் 2 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் `ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை' திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் தற்போது எங்கு வேண்டுமானாலும் பொருட்களை வாங்கிக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட விரல் ரேகைப் பதிவு பயன்படுத்தப்படுகிறது.

இதுதவிர, தற்போது கண் கருவிழிப் பதிவையும் பயன்படுத்தி, பொருட்களை வழங்கும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் 33,238 கடைகள் கூட்டுறவுத் துறை மூலமும், மற்ற கடைகள் உணவுத் துறை வாயிலாகவும் நடத்தப்படுகின்றன. ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுடன், சில மளிகைப்பொருட்கள், சோப்பு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகின்றன. எனினும், இவற்றை வாங்க மக்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது ரேஷன் கடைகளை பல்பொருள் அங்காடிகளைப்போல, அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்வகையில் மாற்றும் நடவடிக்கையில் கூட்டுறவுத் துறை ஈடுபட்டுள்ளது. அண்மையில் தலா ரூ.10 விலையில், 24 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய பாக்கெட் விற்பனையை அமைச்சர் பெரியசாமி தொடங்கிவைத்தார். மேலும், 2 கிலோ, 5 கிலோ எடையுள்ள சமையல் காஸ் சிலிண்டர்கள் விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் ரேஷன் கடைகளைப் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 1,167 கடைகள் புதுப்பிக்கப்பட்டு, 84 கடைகளுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு இச்சான்றிதழ் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.

கூட்டுறவு மொத்த அங்காடிகள், சுயசேவை பல்பொருள் அங்காடிகளில், தரமான பொருட்களை, நியாயமான விலையில் தருகிறோம். பழமுதிர்சோலை போன்றகடைகளையும் நடத்தி வருகிறோம்.

தற்போது தேனாம்பேட்டையில் உள்ள பல்பொருள் அங்காடியில், அனைத்து வகையான பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இது வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுதவிர, ரேஷன் கடைகளில் பனை வெல்லம் மற்றும் அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் பொருட்களை விற்பனை செய்ய நட வடிக்கை எடுத்துள்ளோம். தலா ரூ.10 மதிப்பிலான, 24 மளிகைப் பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்கிறோம். ஆனால், இவற்றை வாங்குவது மக்கள் விருப்பம்தான். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம்’’ என்றார்.

தேனாம்பேட்டையில் உள்ள பல்பொருள் அங்காடியில், அனைத்து வகை யான பொருட்களும் விற்பனை செய்யப் படுகின்றன. இதுவரவேற்பை பெற்றுள்ளது.



Read in source website

வாஷிங்டன்: இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி உள்கட்டமைப்பு முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்றும் அதனை விரும்பும் மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயராக இருக்கிறது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அவர் வியாழக்கிழமை ஜான் ஹாப்ரின்ஸ் ஸ்கூஸ் ஆஃர் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் (எஸ்ஏஐஎஸ்) மாணவர்களுடன் உரையாற்றினார். அங்கு கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த அவர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி தொழில்நுட்பம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி தொழில்நுட்பத்திற்கான உள்கட்டமைப்பு முழுக்க தனித்துவமானது. எங்களின் 5ஜி தொழில்நுட்பம் வேறு எங்கு இருந்தும் இறக்குமதி செய்யப்படவில்லை. அது முழுவதும் எங்களின் சொந்த தயாரிப்பு.

தென்கொரியா, உலகின் பிற பகுதிகளில் இருந்தும் இந்த தொழில்நுட்பம் இனி வரலாம். நாங்களும் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள 5ஜி தொழில்நுட்பத்தை அதனை விரும்பும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.

இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் பிரதமர் நரேந்திர மோடியால் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். 5ஜி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனைகள் குறித்து நிச்சயம் நாம் பெருமைப்பட முடியும்" இவ்வாறு அவர் பேசினார்.



Read in source website

ஜம்மு: ஜம்முவில் ஓராண்டுக்கும் மேலாக வசிப்பவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ளத் தேவையான வசிப்பிடச் சான்றிதழ் அளிக்கும் அதிகாரத்தை வருவாய் அதிகாரிகளுக்கு (தாசில்தார்களுக்கு) வழங்கும் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான சிறப்பு நடவடிக்கை கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கியது. அதன்படி, புதிய வாக்காளர்களைப் பதிவு செய்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், கடந்த முறை நடந்த திருத்தத்திற்குப் பிறகு இடம்பெயர்ந்த வாக்காளர்களை இடமாற்றம் செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், ஓராண்டுக்கு முன்பு ஜம்முவுக்கு இடம்பெயர்ந்த பலர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய ஆவணம் தங்களிடம் இல்லை என்றும், இதனால் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியாத நிலை இருப்பதாகவும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஜம்மு துணை ஆணையருமான அவ்னி லவாசா புதிய உத்தரவு ஒன்றை கடந்த 11ம் தேதி பிறப்பித்தார். அதில், ஜம்முவில் ஓராண்டுக்கும் மேலாக வசிப்பவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்வதற்குத் தேவையான வசிப்பிடச் சான்றிதழ் அளிக்கும் அதிகாரம் வருவாய் அதிகாரிகளுக்கு (தாசில்தார்களுக்கு) வழங்கப்படுவதாக உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கு பாஜக மட்டுமே ஆதரவு தெரிவித்தது. ஜம்மு காஷ்மீரின் பிரதான கட்சிகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், இந்த உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஜம்மு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, முதலில் இந்த உத்தரவு தேவையற்றது என்றும், இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஆச்சரியம் அளித்ததாகவும் தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீரின் சிபிஎம் மூத்த தலைவரும் குப்கர் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளருமான தாரிகாமி, திரும்பப் பெறப்பட்ட உத்தரவின் நகல் பொதுவெளியில் பகிரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

தேர்தல் தொடர்பான பணிகளில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர், ஜனநாயக நடைமுறையை பாதிக்கும் எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

வெளிமாநிலங்களைச் சேர்ந்த எவரும் ஜம்மு காஷ்மீர் வாக்காளர் பட்டியலில் முறையற்ற முறையில் சேர்க்கப்படுகிறார்களா என்பதைக் கண்காணிக்க குப்கர் கூட்டமைப்பின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, கடந்த 8ம் தேதி 14 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தார். இந்தக் குழுவில் குப்கர் கூட்டமைப்பில் உள்ள 5 கட்சிகள், அதோடு, காங்கிரஸ், சிவசேனா, டோக்ரா ஸ்வாபிமான் சங்கதன் கட்சி, டோக்ரா சதர் சபா போன்ற பல அரசியல் கட்சிகள் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

லண்டன்: 1970-ஆம் ஆண்டு முதல் உலக அளவில் வனவிலங்குகளின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளது என்று உலக வன உயிரின நிதியம் (WWF) தெரிவித்துள்ளது.

உலகில் 56,441 வனவிலங்குகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக ஐ.நா. சபையின் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக உலக வன உயிரின நிதியம் வெளியிட்ட அறிக்கையில், “2018-ஆம் ஆண்டின் தரவுகளின் அடிப்படையில் சுமார் 5,000 இனங்களைச் சேர்ந்த 32,000 வனவிலங்குகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் உலக அளவில் வனவிலங்குகளின் எண்ணிக்கை 70% ஆக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. காடழிப்பு, மனிதர்களின் சுரண்டல், மாசு, காலநிலை மாற்றமே வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வருடத்திற்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை 2.5% அளவில் குறைந்து வருகிறது. லத்தின் அமெரிக்கா, கரீபியன் தீவுகளில் இதன் தாக்கம் தீவிரமாக தெரிகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக லண்டன் விலங்கியல் அமைப்பின் இயக்குநர் ஆண்ட்ரிவ் டெரி பேசும்போது, “தீவிரமான வீழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. உலகம் மறைந்து கொண்டிருக்கிறது. இயற்கை மோசமான நெருக்கடியில் இருந்து வருகிறது. நாம் போரில் தோற்றுக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

எனினும், சிறிய நம்பிக்கை அளிக்கும் தகவலையும் உலக வன உரியின நிதியத்தின் அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசின் கஹுசி பீகா தேசிய பூங்காவில் 2010-இல் 400 இருந்த மலை கொரில்லா எண்ணிக்கை தற்போது 600 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: இந்தியாவில் சில்லரை பணவீக்கம் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவில் உச்சம் அடைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 7 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் உணவுப் பொருள்களின் விலைவாசி அதிகரித்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 7.41 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பணவீக்கத்தை அதிகபட்சம் 6 சதவீதத்துக்குள் வைத்திருக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசுஅறிவுறுத்தி இருக்கிறது. ஆனால்,கடந்த 9 மாதங்களாக பணவீக்கம் 6 சதவீதத்துக்கு மேலாக நீடிக்கிறது.

உணவுப்பொருள்கள் சார்ந்த பணவீக்கம் செப்டம்பரில் 8.60 சதவீதமாக உச்சம் அடைந்துள்ளது. ஆகஸ்டில் அது 7.62 சதவீதமாக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் காய்கறிகள் 18.05 சதவீதம், மசாலப் பொருள்கள் 16.88 சதவீதம், தானியங்கள் 11.53 சதவீதம், பால் தயாரிப்புகள் 7.13 சதவீதம், பழங்கள் 5.68 சதவீதம் அளவில் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை10.39 சதவீதம், ஆடை, காலணிபோன்றவற்றின் விலை 10.17 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து சர்வதேச அளவில் பணவீக்கம் தீவிரமடையத் தொடங்கியது. கச்சா எண்ணெய் விலை, அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உச்சம் அடைந்தது.

இந்தியாவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும்,ரிசர்வ் வங்கியும் தீவிரப்படுத்தி உள்ளன. ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில் மட்டும் நான்கு முறை வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இதுவரையில் மொத்தமாக 190 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளன. எனினும், பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது பெரும் சவாலாக உள்ளது.



Read in source website

வாஷிங்டன்: இந்தியாவின் நேரடி பணப் பரிமாற்ற திட்டத்துக்கான கட்டமைப்பை அதிசயம் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) பாராட்டியுள்ளது.

பெண்கள், விவசாயிகள், முதியோர் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முன்பு நலத் திட்ட உதவிகள் மக்களின் கைகளில் பணமாக வழங்கப்பட்டு வந்தது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன.

இந்தச் சூழலில் மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தை தொடங்கியது. அதாவது நலத் திட்டங்களுக்கான ரொக்கம் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இதற்காக, வங்கிக் கணக்கு இல்லாத மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. இதில் நலத்திட்ட உதவிகள் நேரடியாக வரவு வைக்கப்பட்டன. இதனால் முறைகேடுகள் குறைந்தன.

இதுகுறித்து ஐஎம்எஃப் நிதி விவகாரத் துறையின் துணை இயக்குநர் பாலோ மாவ்ரோ கூறுகையில், “இந்தியாவிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளன.மிகப் பெரும் மக்கள்தொகை கொண்ட நாடு இது. பெண்கள், முதியோர், விவசாயிகள் என சமூகத்தின் பல தரப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்களை இந்தியா நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த நலத் திட்ட நிதிமக்களின் வங்கிக் கணக்குக்கே வழங்கப்படுகிறது. லட்சக்கணக்கானோருக்கு நிதியை நேரடியாக வழங்க தொழில்நுட்ப ரீதியாகவலுவான கட்டமைப்புத் தேவை.இந்தியா அதை சாத்தியப்படுத்தியுள்ளது. இது ஓர் அதிசயமான கட்டமைப்பு” என்றார்.

நலத் திட்டங்களுக்கான ரொக்கம் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.



Read in source website

Karnataka hijab ban case: கர்நாடக உயர் நீதிமன்ற ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில், தடை உத்தரவு செல்லாது என்றும் அரசாணையை ரத்து செய்வதாகவும் நீதிபதி சுதன்ஷு துலியா தீர்ப்பு வழங்கினார்.

கர்நாடக உயர் நீதிமன்ற ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்பளித்தது. இரு நீதிபதிகள் அமர்வு நீதிபதி ஹேமந்த் குப்தா மற்றும் நீதிபதி சுதன்ஷு துலியா தீர்ப்பு வழங்கினர். இதில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுகளை நீதிபதி ஹேமந்த் குப்தா தள்ளுபடி செய்தார். அதேவேளையில் நீதிபதி சுதன்ஷு துலியா, இதில் மாறுப்பட்ட பார்வை இருப்பதாக கூறி, ஹிஜாப் தடை உத்தரவு செல்லாது என்றும் அரசாணையை ரத்து செய்வதாகவும் கூறினார்.

நீதிபதி சுதன்ஷு துலியா தனது தீர்ப்பில் பன்முகத்தன்மை மேம்படுத்துதல் மற்றும் பெண்களுக்கு கல்வி வாய்ப்புகள் வழங்குதல் என்ற கண்ணோட்டத்தில் கருத்துகளை கூறினார்.

ஹிஜாப் அணிவது – அவர் அவர்களின் விருப்பம்

அவர் இவ்வழக்கில் கூறுகையில், “பள்ளிகள் குறிப்பாக பி.யூ பல்கலைக்கழகங்கள் சரியான நிறுவனங்களாக இருக்கின்றன, அங்கு நமது குழந்தைகள் இந்த தேசத்தின் வளமான பன்முகத்தன்மையைப் பற்றி அறிந்து அவர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் தேவை. சகிப்புத்தன்மை மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளை உள்வாங்க வேண்டும். வேறு மொழி பேசுபவர்கள், உணவு, உடைகள் பழக்கவழக்கங்களை அறிய வேண்டும்.

நமது பன்முகத்தன்மையைக் கண்டு பயப்படாமல், இந்த பன்முகத்தன்மையைக் கண்டு மகிழ்ந்து கொண்டாட அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. பன்முகத்தன்மையே நமது பலம் என்பதை அவர்கள் உணர வேண்டிய தருணம் இது,” என்றார்.

தொடர்ந்து கூறுகையில், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஹிஜாப் அணிவது வெறுமனே அவர் அவர்களின் விருப்பமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

நீதிபதி துலியா, வகுப்பறைக்குள் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்த முடியாது என்ற உயர் நீதிமன்றத்தின் கண்டறிதலுக்கு மாறுபட்டார். அது ஒரு தகுதியான பொது இடம் என்று கூறினார்.

நீதிமன்றங்கள், போர் அறைகள், பாதுகாப்பு முகாம்கள் போன்றவற்றை தகுதியான பொது இடங்கள் என்று கூறியுள்ளது. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் தேவைக்கேற்ப தனிநபர்களின் சுதந்திரம் குறைக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனியுரிமை, கண்ணியத்தின் மீதான தலையீடு

இது குறித்து நீதிபதி துலியா கூறுகையில், “பள்ளி என்பது பொது இடம், ஆனால் அதை பள்ளி, சிறை, ராணுவ முகாமுடன் வரையறைத்து கூறுவது சரியல்ல. உயர் நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட கருத்து பள்ளியில் ஒழுக்கம் தொடர்பானதாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஒழுக்கம் சுதந்திரத்தின் விலையில் அல்ல, கண்ணியத்தின் விலையில் அல்ல…

பி.யூ பல்கலைக்கழக மாணவிகளை பள்ளி வாசல் முன் ஹிஜாபை கழற்றச் சொல்வது அவர்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தின் மீதான படையெடுப்பு, அவர்களின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தில் தலையிடுவதாகும். அது இந்திய அரசியலமைப்பின் 19(1)(a) மற்றும் 21 வது பிரிவின் கீழ் அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். அவர்கள் தங்களது கண்ணியம் மற்றும் தனியுரிமைக்கான அவர்கள் பள்ளி வாசல் மட்டும் அல்லாது வகுப்பறைகுள்ளும் கொண்டு செல்கிறார்கள். இது அவர்களின் அடிப்படை உரிமையே தவிர, உயர் நீதிமன்றத்தால் விவரிக்கப்பட்டுள்ளபடி “வழித்தோன்றல் உரிமை” அல்ல.”

எது முக்கியம்?

ஹிஜாப் தடையின் விளைவாக சில மாணவிகள் தங்களது பொதுத் தேர்வுகளை எழுத முடியாமல் போனது, மேலும் பலர் வேறு பள்ளிக்கு மாறி வேண்டியிருந்தது. தரமான கல்வி பெற முடியாத சூழல் உருவானது. இதற்கு பள்ளி நிர்வாகம், மாநில அரசு பதில் சொல்ல வேண்டும். எது மிகவும் முக்கியமானது? பெண் குழந்தைகளின் கல்வி அல்லது ஆடைக் கட்டுப்பாடா? என்று கேள்வி எழுப்பினார்.

நீதிபதி துலியா மேலும் விவரித்து கூறுகையில், “இந்தியாவின் மிகச் சிறந்த காட்சிகளில் ஒன்று, காலையில் பெண் குழந்தைகள் முதுகில் புத்தகப்பை சுமந்து பள்ளிக்கு செல்வது. அவர்கள் நமது நம்பிக்கை, நமது எதிர்காலம். இருப்பினும், பெண் குழந்தைகள் கல்வி கற்பது கடினம். அது அவர்கள் சகோதரர்கள் கல்வி கற்பதை விட கடினம். இந்தியாவில் உள்ள கிராமங்களில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் முன் தனது தாய்க்கு அன்றாட வேலைகளில் உதவ வேண்டும். துப்புரவு மற்றும் துவைக்கும் வேலைகளை செய்து கொடுத்து விட்டு பள்ளி செல்ல வேண்டும். இது இயல்பாக இருக்கிறது. எனவே இதையும் வழக்கில்பார்க்க வேண்டும். பெண் குழந்தைகள் பள்ளி செல்வதில் ஏற்படும் சவால்கள் நிறைந்துள்ளன என்றார்.

மேலும், ஹிஜாப் அணிவது அத்தியாவசியமான மத நடைமுறையின் விஷயமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். அது இன்னும் மனசாட்சி, நம்பிக்கை மற்றும் உணர்ச்சியின் வெளிப்பாடாக இருக்கலாம். ஒருவர் ஹிஜாப் அணிய விரும்பினால், வகுப்பறைக்குள் கூட அணிய விரும்பினால் அதை தடுக்க முடியாது. இது அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஆனது. அதை அணிந்தால் தான் அவர்களின் பழமைவாதக் குடும்பம் அவர்களை பள்ளிக்கு செல்ல அனுமதிக்கும் ஒரே வழியாக இருக்கலாம். ஹிஜாப் அவர்களின் கல்விக்கான படிக்கட்டு” என்றார்.



Read in source website

ஆல்பிரட் நோபல் என்பவருடைய உயிலின் அடிப்படையில் நார்வீஜியன் நோபல் குழு ஆண்டுதோறும் சர்வதேச அளவில் மனிதகுல மேம்பாட்டுக்குப் பங்களித்தவர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்குகிறது. உலகில் எத்தனையோ விருதுகள் இருந்தாலும் ஆண்டுதோறும்  வழங்கப்படும் நோபல் விருதுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அலாதியானது. 

ஆல்பிரட் பர்ன்ஹார்ட் நோபல் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர். ஏறத்தாழ 300-க்கும் அதிகமான கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வைத்திருந்தவர் அவர். டைனமைட் என்று சொல்லப்படும் வெடிகுண்டு அவரது கண்டுபிடிப்புதான். 

அமைதிக்கான நோபல் விருது 1901-ஆம் ஆண்டு வழங்குவது என்று முடிவெடுத்தபோது, அத்துடன் நின்றுவிடாமல் வேதியியல், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம் ஆகியவற்றுக்கு தலைசிறந்த பங்களிப்பை நல்கும் அறிஞர்களுக்கும் நோபல் விருது வழங்கி கெüரவிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்காக நார்வே நாடாளுமன்றம் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து, நார்வீஜியன் நோபல் குழு ஆண்டுதோறும் விருதுக்கான நபர்களை தேர்ந்தெடுத்து கெüரவிக்கிறது. 

2022-ஆம் ஆண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவத்துக்கான நோபல் விருது, மனித சமூகத்தின் பரிணாமம் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஸ்வீடன்  விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு வழங்கப்படுகிறது. நவீன மனிதர்களின் மரபணுக்களின் தொகுதியை (ஜீனோம்), மனிதர்களின் முந்தைய பரிணாமமான நியாண்டர்தால், டெனிசோவன் ஆகியவற்றின் மரபணுத் தொகுதிகளுடன் ஒப்பிட்டு, அவை இணைந்து மனித இனம் உருவானதாக தனது ஆய்வின் மூலம் தெரிவித்திருக்கிறார் பாபோ. 

வேதியியலுக்கான நோபல் விருது, கரோலின் ஆர். பெர்டோசி, மோர்டென் மெல்டல், பாரி ஷார்ப்லெஸ் ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. புற்றுநோய்க்கான மருந்தை உருவாக்கவும், டிஎன்ஏ வரைபடமாக்கலுக்கான "கிளிக் கெமிஸ்டரி' உள்ளிட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதற்காகவும் இந்த ஆண்டுக்கான நோபல் விருது அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இவர்களில் ஷார்ப்லெஸ் ஏற்கெனவே 2001-ஆம் ஆண்டு நோபல் விருது வென்றவர். ஷார்ப்லெஸ் உள்பட ஐந்து பேர் இதுவரை இரண்டு முறை நோபல் விருது பெற்றிருக்கிறார்கள். 

இயற்பியலுக்கான நோபல் விருது பிரான்ûஸச் சேர்ந்த அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளாசெர், ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் சீலிங்கெர் ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. 

இலக்கியத்துக்கான நோபல் விருது பிரெஞ்சு எழுத்தாளர் ஆன்னி எர்னாக்ஸýக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் சுயசரிதைகள் சார்ந்த புனைகதைகளை பிரெஞ்சு மொழியில் எழுதி வந்த ஆன்னி எர்னாக்ஸ், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் எழுதிய 20-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. உணர்வுகளை பிரதிபலிக்கும் சமூகம், குடும்பம் சார்ந்த விஷயங்களைப் பதிவு செய்வதால், ஆன்னி எர்னாக்ஸ் ஐரோப்பாவைக் கடந்து சர்வதேச அளவில் தாக்கம் ஏற்படுத்தினார் என்பதுதான் அவருக்கு நோபல் விருது வழங்குவதற்கான காரணம். 

இந்த ஆண்டுக்கான நோபல் விருதுகளில் குறிப்பிடத்தக்கது பொருளாதாரத்துக்காக வழங்கப்பட்டிருக்கும் விருது. வங்கிகள் குறித்தும், நிதி நெருக்கடி தொடர்பாகவும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னன்கே, டக்ளஸ் டபிள்யு. டைமண்ட், பிலிப் ஹெச். டிப்விக் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

2008-ஆம் ஆண்டில் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது அதிலிருந்து மீள்வதற்கு பெர்னன்கே, டைமண்ட், டிப்விக் ஆகியோரின் ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் பெற்றன. வங்கிக் கடன்களுக்கு அரசு உத்தரவாதம் அளிப்பதன் மூலம் நிதி நெருக்கடியின் விளைவுகளைத் தடுக்க முடியும் என்பது அவர்களது தேர்ந்த முடிவு. 

நோபல் விருதுகளில் எப்போதுமே அதிக கவனம் பெறுவது அமைதிக்கான விருதுதான். நடப்பாண்டுக்கான அமைதிக்கான நோபல் விருது, பெலாரஸ் மனித உரிமை ஆர்வலர் அலெஸ் பியலியட்ஸ்கிக்கும், ரஷியாவைச் சேர்ந்த குரூப் மெமோரியல் அமைப்புக்கும், உக்ரைனைச் சேர்ந்த மனித சுதந்திர மையத்துக்கும் வழங்கப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராகவும், மனித உரிமைகளை பாதுகாக்கவும், சட்டவிதிகளைக் காக்கவும், விருதாளிகள் போராடியதாக விருதுக்குழு தெரிவிக்கிறது. 

அமைதிக்கான நோபல் விருது பெறும் அலெஸ் பியலியட்ஸ்கி, பெலாரஸில் ஜனநாயகத்துக்காகப் போராடுபவர். இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ரஷியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், அரசியல் கைதிகளின் நிலை குறித்தும் ஆய்வு நடத்துகிறது "மெமோரியல்' அமைப்பு. உக்ரைனில் ரஷியாவின் போர் விதிமீறல்களுக்கு எதிராகச் செயல்படுகிறது "மனித சுதந்திர மையம்'. 

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நோபல் விருது குழு, ரஷிய அரசுக்கும் அதன் அதிபர் விளாதிமீர் புதினுக்கு எதிராகவும் செயல்படுபவர்களுக்கு விருது வழங்குகிறது என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அது உண்மையாக இருந்தாலும்கூட, விருது பெறுபவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் என்பதை மறுத்துவிட முடியாது. 

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. காலனிய இந்தியாவில் சர் சி.வி. ராமன் இயற்பியலுக்கு விருது பெற்ற பிறகு, இந்தியாவிலிருந்து இந்திய குடிமகனால் அறிவியல் கண்டுபிடிப்புக்காக நோபல் விருது பெற முடியவில்லை என்கிற குறை எப்போதுதான் அகலுமோ தெரியவில்லை...!



Read in source website

 

உலக பொருளாதாரம் சாா்ந்து தரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. மக்களும் பூமிக்கோளும் அமைதியுடனும் செழிப்புடனும் இயங்குவதற்கான தொலைநோக்கினை வலியுறுத்தும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் 14 உலக தர நிா்ணய நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் கொள்கை முழக்கம் ‘வளங்குன்றா வளா்ச்சி இலக்கு’ (’சஸ்டைனபிள் டெவெலப்மென்ட் கோல்’) என்பதாகும்.

சா்வதேச தரங்கள் நம் அனைவருக்கும் உரிய வாழ்வியல் நடைமுறைத் தீா்வுகளை வழங்குகின்றன. ஆதலால் தரக் கட்டுப்பாட்டாளா்கள், தொழில்துறையினா், நுகா்வோா் என அனைவரும் விழிப்புணா்வுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மனதில் எழுவது குறிக்கோள் அல்லது தொலைநோக்கு (‘விஷன்’); சொல்லில் வெளிப்படுவது நோக்கம் (‘மிஷன்’); செயலில்தான் தெரியும் இலக்கு (‘கோல்’). தொழில்துறையைப் பொறுத்தவரை, சந்தைக்கு வரும் பொருளின் உற்பத்தியிலும் விலை-காலம்-தரம் ஆகிய மூன்று முக்கிய விஷயங்கள் முதன்மை பெறுகின்றன.

தொழில் நிறுவனத் தலைவருக்கு வருமானம் முதன்மையானது. பணி ஒப்பந்தம் வேறு யாருக்காவது கைமாறிவிடாமல் தம்மிடம் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே. அதற்காகப் பொருளின் விலையில் அல்லது தயாரிப்புச் செலவில் அவா் கூடுதல் கவனம் செலுத்துவாா்.

ஆனால், நிறுவனத்தில் பணியாற்றும் மேற்பாா்வையாளா் அல்லது மேலாளா், தமக்குக் கீழ் பணியாற்றுபவரிடம், விரைவில் வேலையை முடிக்க வேண்டும் என்பாா். அவருக்குக் காலவரம்பு முக்கியம். பொறியாளா்களும், மேலாளா்களும் குறித்த காலத்திற்குள் பொருளைத் தயாரித்து அனுப்புவதில் மும்மரம் காட்டுவா். அவா்களின் செயல்பாட்டில் காலம் முதலிடம் பிடிக்கிறது.

தொழிற்கூடத்தில் வேலை செய்யும் ஊழியா்களோ பொருளின் விலையையோ, காலத்தையோ மனதில் கொண்டு தரமற்ற பொருள்களை அவசரம் அவசரமாகத் தயாரித்து, சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்ப மாட்டாா்கள். அவா்களிடம் பொருளின் தரம் பற்றிய அக்கறை முக்கிய இடம் பிடிக்கிறது.

ஆக, முக்கியத்துவம், முதன்மை நிலை, முதலிடம் என்பது எல்லாம் ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம் காலந்தோறும் மாறுபடும் என்பதே அறிவியல் கண்ணோட்டம்.

தரம் என்பது சந்தைப் பொருளுக்கு மட்டுமல்ல, பணம் கொடுத்துப் பெறுகிற அனைத்துத் தகவலுக்கும் தரக் கட்டுப்பாடு நிா்ணயிக்கப்பட வேண்டும்.

அண்மையில் ஒரு நிருபா், ஹீலியம் வாயு நிறைத்த பலூன் விற்பனையாளரின் சிலிண்டா் வெடித்த செய்தி குறித்து கருத்துக் கேட்டாா். சோடியம் தண்ணீரிலோ, அலுமினியம், சோடா காரத்திலோ கரைந்தால் ஹைடிரஜன் தானே வரும். அது ஹீலியமாக இருக்காது என்றும், சாலையோரம் அப்படி ஹீலியம் தயாரிக்கவே முடியாது என்றும் சொன்னேன். விஞ்ஞானி வாா்த்தை அம்பலம் ஏறாது.

ஆனால் அதற்கு முன், ‘ஹீலியம் சிலிண்டா் விபத்து’”என்ற பரபரப்புச் செய்தி ஒளிபரப்பாகி விட்டது. ஊடகங்களும் தரவுகளைத் தரம் பிரித்துப் பாா்த்து, தரமானவா்களிடம் கேட்டு ஒளிபரப்ப வேண்டாமோ? காலத்தால் முந்திக் கொண்டு தகவல் வெளியிட வேண்டும் என்கிற இளைய தலைமுறையினரின் அவசரம் இது.

இன்னொரு தொலைக்காட்சியில் மருத்துவமனை தொடங்கிய நாள் முதல் சிந்துபாத் கதை போல, ஒரு விளம்பரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. விளம்பரத்திற்கென்றே பதிவாக்கப்பட்ட ‘ரத்தம் இன்றி அறுவைச் சிகிச்சை’ செய்யும் காட்சி பின்னணி இசையுடன் சலிப்பில்லாமல் ஒளிபரப்பப்படுகிறது.

தரமான தங்கத்தைத் தொட்டுப் பாா்த்து வாங்குவதைப்போல ஒரு நகைக்கடை விளம்பரம் வேறு. தங்கள் எண்ணெய் தூய்மையானது என்று கண்ணாடிக் குடுவைக்குப் பின்னால் பெரிய சிகப்பு எழுத்தில் கெட்டியாக எழுதிக் காட்டுவாா்கள். தரமற்ற எண்ணெய் என்பதற்கு வேறொரு நீல நிறத்தில் சின்ன எழுத்தில் மங்கலாக எழுதப்படிக்க இயலாதபடி ‘பட’மாகக் காட்டுவாா்கள்.

சுருக்கமாகச் சொல்வதானால், தூய்மையான சமையல் அறையில் கைதோ்ந்த பணியாளா்களால்தான் தரமான உணவு தயாராகிறது. தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை அடிப்படை மூலப்பொருள்கள், காய்கறிகள், மளிகைப் பொருள்கள் போன்றவற்றில் தொடங்கி, தரப்படுத்தப்பட்ட தயாரிப்பு முறை, உணவுப் பாதுகாப்பு வசதிகள், விநியோகப் போக்குவரத்து முறைமைகள் வரை நீடிக்க வேண்டும்.

அதனால்தான் ‘ஐ.எஸ்.ஓ. 9000’ என்கிற ’பன்னாட்டுத் தர நிா்ணய நிறுவன’த்தின் கொள்கை முழக்கம் ‘தரம் என்பது பணிக்களத்தில் இருந்து தொடங்குகிறது’ என்கிறது.

தரக்கட்டுப்பாடு குறித்த விழிப்புணா்வு, ஊழியா் மட்டத்திலிருந்துதான் உருவாக வேண்டுமே அல்லாமல், நிறுவனப் பீடத்தின் உச்சத்தில் இருப்பவரிடம் இருந்து அல்ல. முன்னது ஜனநாயகம், பின்னது எதேச்சதிகாரம். இதுதான் தர நிா்ணய தாரக மந்திரம்.

நான் இதனை, சென்னை, நுங்கம்பாக்கம் விண்வெளி அலுவலகத்தில் பணியாற்றியபோது அனுபவபூா்வமாக உணா்ந்தேன். செயற்கைக்கோள் ஏவுகலனுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியாா் தொழில் கூடம் ஒன்று இங்குள்ள தொழில் பேட்டையில் இயங்கி வருகிறது. அதில் மின் கடைசல் இயந்திரப் பிரிவில் ஒருவா் பணியாற்றினாா்.

அவா் நல்ல பண்பு உடையவா். தம் பணியில் ஏதேனும் சிறுபிழை நோ்ந்து விட்டாலும் என்னிடம் தனிமையில் தெரிவித்து விடுவாா். அதனால்தான், கோடிக்கணக்கில் மக்கள் பணத்தைச் செலவு செய்து பல்லாயிரம் ஊழியா்கள், பொறியாளா்கள், அறிவியலாளா்களின் கூட்டுமுயற்சியில் தயாரித்து அனுப்பப்படும் இந்திய செயற்கைக்கோள் திட்டங்கள் தொடா் வெற்றி பெறுகின்றன.

பொதுவாக, குழுவாக இணைந்து செயல்படும் எந்த ஒரு துறையிலும் கருத்துகளை வெளிப்படைத் தன்மையுடன் விவாதிக்கும் பக்குவம் நிறுவனத் தலைவரிடம் இயல்பாக அமைய வேண்டும். அறிவியல் கருத்தாடல் என்பது இருவழிப் போக்குவரத்து போன்றது.

குழு கலந்தாய்வின்போது நூற்றுக்கு 99 போ் ஒரு கருத்தினை ஆதரித்துப் பேசினாலும், ஒருவா் கூறும் எதிா்க்கருத்தினையும் முழுமையாகக் கேட்டு முடிவெடுக்கும் தலைமையே எப்போதும் நூறு சதவீதம் வெற்றி பெறும். எதிா்க்கருத்து என்பது என்றைக்கும் எதிரிக்கருத்து அல்லவே.

‘தரம் குறித்த விழிப்புணா்வு உடைய இத்தகைய களப்பணியாளா்களின் நோ்மைத் திறமும் பொருளின் தரத்தை உயா்த்தும்’ என்று அடிக்கடி கூறுவாா் டாக்டா் அப்துல் கலாம்.

எப்பொருள் யாா்யாா்வாய்க் கேட்பினும், அப்பொருளின் கருத்தினை விவாதிப்பது அறிவியல். அப்படியின்றி, கருத்தாளரை விமரிசித்தால் அது அரசியல் ஆகிவிடும்.

களப்பணியாளா்களும் பொருள் தயாரிக்கும் பணியில் துல்லியமும், நுட்பமும் அறிந்து செயல்பட வேண்டும். பொதுவாக, இவ்விரண்டு நிலைகளும் ஒருபொருள் குறித்தவை போலத் தோன்றும். களப்பணியாளருக்கு இந்தப் புரிதல் அவசியம்.

எடுத்துக்காட்டாக, ஒரு வட்டப் பலகையின் நட்ட நடுப் புள்ளியில் இயந்திரத்துளை இடவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அவரின் கடைசல் திருகு உளி, அந்த வட்டபலகை பக்கமே போகவில்லை என்றால் அவருக்குத் தொழிலே தெரியவில்லை என்று அா்த்தம்.

அடுத்தவா், அங்கிங்காக பல இடங்களில் துளையிட்டால், அந்தத் தொழிலாளருக்குத் திறமை இல்லை என்று பொருள். மூன்றாமவா், இட்ட துளைகள் அனைத்தும் பலகையின் வேறொரு பகுதியில் மொத்தமாக அமைந்து விட்டன என்றால், அவருக்கு துளையிடும் நுட்பம் தெரிந்திருக்கிறது. ஆனால், தேவையான நடுப்புள்ளியில் துல்லியமாக இடவில்லை.

குறித்த நடுப்புள்ளியில் குறித்த அளவுடன் துளையிடுபவரிடம் நுட்பமும், துல்லியமும் இருக்கிறது. இதுதான் பணியாளா் தரத்தினைச் சீா்தூக்கும் துலாக்கோல்.

ஆரம்பக் கல்விக்கூடம் முதல் ஆராய்ச்சிக்கூடம் வரை, தோ்வாணையம் முதல் தோ்தல் ஆணையம் வரை அனைத்துத் துறைகளிலும் தர மேம்பாடு குறித்த பாடங்களும் ஆய்வுகளும் தொடா்ந்து நடைபெற வேண்டும். வளா்ச்சி இலக்கினை நோக்கிய துல்லியப் பாா்வையுடனும் செயல் நுட்பத்துடனும் ஈடுபட்டால், தொழில்துறைத் திட்டங்களும் முழு வெற்றி பெறும்.

தரக்கட்டுப்பாட்டு ஆய்வில் யாருக்கும் எந்தக் காரியத்திலும் தவறு நேரலாம். ஆனால் ஒரு முடிவு தவறானது என்று தெரிந்துவிட்டால் அதை மூடி மறைப்பதற்கு முயலக் கூடாது. சரியான முடிவைத் துணிவுடன் வெளியிட வேண்டும்.

ஒருமுறை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கான ’பூட்டாடையான்’ சாா்ந்த பசைப்பொருள், திருவனந்தபுரம் திட உந்து எரிபொருள் நிலையத்தில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

வேதிம பரிசோதனையின்போது, அதில் இடம்பெற வேண்டிய செயல்படு வேதிமக் கூறு அறவே இல்லை என்பது உறுதியானது. அதனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அந்தப் பொருள் நிராகரிக்கப்பட்டு மீண்டும் அமெரிக்காவிற்கே திருப்பி அனுப்பப்பட்டது.

ராக்கெட் அறிவியல் என்பது அதுபோன்று தவறே இல்லாமல் நிகழவேண்டிய அசாதாரண தொழில்நுட்பம். அதில் இடம்பெறும் பல லட்சம் உட்கூறுகளில் ஒவ்வொன்றுக்கும் உயிா் இருக்கிறது. சிறுபிழை நோ்ந்தால் கூட, ராக்கெட் பயணம் தோல்வி அடையும். விஞ்ஞானிகளின் உழைப்பு வீண், கால விரயம், பொருளாதார நஷ்டம் இவை அத்தனைக்கும் மேலாக நாட்டிற்கே அவமானம்.

தனிமனிதன் தன் தவற்றை ஆரம்பத்திலேயே திருத்திக் கொண்டால் நாட்டின் மானமும் மதிப்பும் காக்கப்படும். ஒரு பொருள் அல்லது செயல்பாடு தரமானதாக இருந்தாலே உலக மக்கள் மத்தியில் அதற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும்.

இன்று (அக். 14) உலக தர நிா்ணய நாள்.

கட்டுரையாளா்:

இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).

 



Read in source website

 

‘உழுதவன் கணக்குப் பாா்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது’ என்ற பழமொழி பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியதாகும். உழவு, நடவு, களையெடுப்பு, நீா்ப்பாசனம், உரமிடுதல், அறுவடை ஆகிய பல்வேறு நிலைகளில் எத்தனையோ இன்னல்களைக் கடந்து வரும் விவசாயிகளைத் தாக்கும் கடைசி பிரம்மாஸ்திரமாக, கொள்முதல் நிலைய அனுபவங்கள் அமைந்துவிடுகின்றன.

குறுவையோ, சம்பாவோ சாகுபடிப் பருவம் எதுவானாலும், அப்பருவ முடிவில் அறுவடையான நெல்லை மூட்டைகளாகக் கட்டிக் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு சோ்ப்பது ஒரு கடினமான காரியம் என்பதை அனைவரும் அறிவா்.

ஆனால், அப்படிக் கொண்டுபோய் சோ்த்த நெல்லை, கொள்முதல் நிலையத்தில் எடைபோட்டு ஒப்படைத்து, உரிய பணத்தைப் பெற்றுக்கொள்வதற்குள் விவசாயிகளுக்குப் போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது.

உள்ளூா் பெருந்தலைகள், கொள்முதல் நிலைய ஊழியா்கள், சுமை தூக்குபவா்கள் உள்ளிட்டவா்கள் மூட்டை ஒன்றுக்கு இவ்வளவு என்று கறாராக வசூலிப்பதாக வரும் செய்திகள் தொடா்கதையாகிவிட்டன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த பிரச்னை குறித்த வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, கடுமையான அதிருப்தியைப் பதிவு செய்திருந்தது. ஆனாலும், இவ்வாறு வசூலிக்கும் போக்கு தொடா்வதாகவே விவசாயிகள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

கொள்முதலுக்காக எடுத்து வரப்பட்ட நெல்மூட்டைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான கட்டமைப்புகள் போதுமான அளவில் செய்யப்படவில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனா்.

கொண்டுவரப்பட்ட நெல்மூட்டைகள் பலவும் மழையில் நனைந்து வீணாகிப் போகும் நிலை உள்ளது. மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்கப் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அவற்றை வெட்டவெளியில் வைக்க நோ்கின்றது. தாா்ப்பாலின்கள் பெருமழையிலிருந்து நெல்மூட்டைகளைக் காப்பாற்றப் பயன்படுவதில்லை.

வழக்கமாக, தமிழகத்தின் தெற்கு, மேற்கு மாவட்டங்களில் அதிகமாகப் பெய்யும் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் வழக்கத்திற்கு அதிகமாகவே பெய்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளதால் பாசனம், குடிநீா் ஆகியவற்றுக்கான நீா் ஆதாரம் வெகுவாக மேம்பட்டுள்ளது.

வறட்சிக் காலத்தில் பாசனத்திற்குப் போதிய நீா் இல்லை என்னும் பிரச்னை என்றால், மழைமிகுதிக் காலத்தில் அம்மழையே ஒரு பிரச்னைகி விடுகின்றது நம் விவசாயிகளுக்கு.

அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்கதிா்களும், கொள்முதலுக்குக் காத்திருக்கும் நெல்மூட்டைகளும் இந்தக் கூடுதல் மழையினால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அதுவும் குறுவை சாகுபடி முடிந்து கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லக்கூடிய தருணத்தில், தொடா்ந்து பெய்துகொண்டிருக்கும் மழை நம் விவசாயிகளை வெகுவாகவே கலங்கடித்திருக்கிறது. கொள்முதல் செய்யப்படவேண்டிய நெல்லின் ஈரப்பதம் அதிக மழையின் காரணமாக அதிகரித்து விடுகின்றது.

அரசு கொள்முதல் நிலையங்களில் பதினேழு சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையே கொள்முதல் செய்வது வழக்கமாக உள்ளது. அதற்கு மேற்பட்ட ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுத்துவிடுகிறாா்கள் என்பது விவசாயிகளின் மனத்தாங்கலாக இருக்கிறது.

கொள்முதல் நிலையங்களை அதிகரிப்பது, அவற்றில் கூடுதல் பணியாளா்களை நியமிப்பது, விரைவாக எடைபோட்டுக் கொள்முதல் செய்வது, அப்படிக் கொள்முதல் செய்த நெல்மூட்டைகளை மழையிலிருந்து பாதுகாப்பது, அதையும் மீறி மழையில் ஈரமாகும் நெல்லை உலா்த்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது இவற்றையெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அக்கறையுடன் செய்யவேண்டுமென்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக இருக்கின்றது.

தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துள்ள கூடுதல் மழையினால் அங்கெல்லாம் நெற்பயிரின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. அதனால் கொள்முதல் நிலைய அதிகாரிகள் அதனை ஏற்க மறுக்கின்றனா். கொண்டு வந்ததைத் திரும்பி எடுத்துச் செல்வதற்குக் கூடுதலாகச் செலவாகும். மேலும், ஈரப்பதம் அதிகமான அந்த நெல்லைத் தனியாா் முதலாளிகள் அடிமாட்டு விலைக்கே எடுக்க முன்வருவாா்கள். எப்படிப் பாா்த்தாலும் நஷ்டம் விவசாயிகளுக்கே.

இதனால், வேறு வழியின்றித் தாங்கள் கொண்டுவந்த நெல்லை நெடுஞ்சாலைகளில் பரப்பிச் சூரிய ஒளியில் காய வைக்கின்றனா் அவா்கள். வாகனங்கள் விரையும் நெடுஞ்சாலையில் நெல்லை உலா்த்துவது விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நெல்லின் ஈரப்பதத்தைக் குறைக்க அவா்களுக்கு வேறு வழி ஏதும் இல்லை என்பதே உண்மை.

கடந்த ஆண்டு இருபத்தோரு சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதே போன்று இவ்வாண்டும் விதிகளைத் தளா்த்தும்படி மத்திய அரசிடம் மாநில அரசு வற்புறுத்தினால் மட்டுமே விளைச்சலுக்குத் தகுந்த விலை விவசாயிகளுக்குக் கிடைக்கும்.

இந்நிலையில், விவசாய சங்கங்களைச் சோ்ந்தவா்களும், அரசியல் கட்சித் தலைவா்களும் இருபத்தைந்து சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெற்பயிரைக் கொள்முதல் செய்ய முன்வரவேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கின்றாா்கள். கூடுதல் மழைபெய்யும் நேரங்களிலாவது இக்கோரிக்கையைப் பரிசீலிக்க மத்திய அரசு முன்வரவேண்டும்.

இத்தனை இன்னல்களையும் மீறி அடுத்த போகம் பயிரிடுவதைப் பற்றி திட்டமிடும் விவசாயிகளே நம்முடைய உண்மையான பாதுகாவலா்கள் என்பதை நாம் உணரவேண்டும்.

நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கும் பயிா்களை உற்பத்தி செய்வதுடன், அப்பயிா்களின் ஏற்றுமதி வாயிலாக அந்நிய செலாவணியையும் ஈட்டித் தருபவா்கள் நம் விவசாயிகள். அவா்களுடைய நியாயமான கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றித் தர வேண்டியது மத்திய - மாநில அரசுகளின் தலையாய கடமையாகும்.



Read in source website

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு முடித்து, உயர்கல்வியில் சேராத 8,588 மாணவர்களின் தரவுகளைத் திரட்டி, அவர்களுக்குத் தனித்தனியாக ஆலோசனைகள் வழங்கப் பள்ளிக் கல்வித் துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆக்கபூர்வமானவை என்பதோடு, முன்மாதிரியானவையும்கூட. 12ஆம் வகுப்புடன் அல்லாமல், உயர்கல்வியில் சேரும்போதுதான் ஒரு மாணவரின் கல்வி வாழ்க்கை முழுமையடைகிறது. மேலும், உயர்கல்வியே ஒரு மாணவரின் எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளமாகவும் அமையும். அந்த வகையில் 12ஆம் வகுப்புக்குப் பிறகு அடுத்த கட்டத்துக்கு நகராத மாணவர்களை, அதை நோக்கி நகர்த்தும் முன்னெடுப்பு, மாணவர்களின் நலனில் பள்ளிக் கல்வித் துறை கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது.



Read in source website

“விவசாயிகளாக இருந்த என் பாட்டி-பாட்டன், ஓய்வில்லாமல் உழைத்த என் தாய்-தந்தை ஆகியோர் எப்போதுமே என்னுள் உயிர்ப்புடன்‌ இருக்கிறார்கள். அதுபோல் பொருளாதாரம் பற்றிய பாதுகாப்பின்மையும் என்னுள் எப்போதுமே உண்டு. என்னைப் போன்ற உழைக்கும் வர்க்கத்திலிருந்து வந்தவர்களுக்கு, இது வாழ்நாள் முழுவதும் கூடவே வரும் அச்சம். நான் என் ஆசிரியர் பணியைத் தொடர்வதற்கு இது மட்டுமே காரணம்” என்கிறார், இலக்கியத்துக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசைப் பெற்ற ஆனி எர்னோ (Annie Ernaux).

இந்தப் பயம், தான் பிறந்து வளர்ந்த சமூகப் பின்புலத்தின் காரணமாகத் தனக்கு ஏற்பட்ட, இன்னமும் ஏற்படுகிற தயக்கங்கள், நம்பிக்கையின்மை ஆகியவற்றையெல்லாம் தன் எழுத்தும் சுமந்து நிற்கிறதென்று எர்னோ கருதுகிறார். இதனால் அவரது எழுத்து வாசகர்களை இதமாக அரவணைத்துச் செல்லாது; உண்மைகளை அப்பட்டமாகப் பேசிச் சங்கடப்படுத்துவதைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாதவராக உள்ளார் 82 வயதான எர்னோ. அலங்காரங்கள் அற்று, கூர்மையான கத்தியின் துல்லியத்துடன் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய மொழிக்குச் சொந்தக்காரர் எர்னோ.



Read in source website

அமைதிக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு சிறையில் உள்ள மனித உரிமைப் போராளி அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கும் ரஷ்யாவில் உள்ள ‘மெமோரியல்’ எனும் மனித உரிமை அமைப்புக்கும் உக்ரைனையும் ரஷ்யாவையும் ஒட்டியுள்ள பெலாரஸ் எனும் கிழக்கு ஐரோப்பிய நாட்டில் இயங்கும் ‘சிவில் உரிமைகளுக்கான மையம்’ (Centre for Civil Liberties) எனும் அமைப்புக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

1980-களின் மத்தியில் பெலாரஸில் ஜனநாயக இயக்கம் ஒன்றை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவரான பியாலியாட்ஸ்கி ஒரு ஜனநாயகப் போராளி. ‘விஸ்னா’ எனும் அமைப்பை உருவாக்கி, சர்வாதிகாரத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை எதிர்த்து நின்று போராடி, 2011 முதல் 2014 வரை சிறையில் அடைக்கப்பட்டவர். விடுதலையான பிறகும் தொடர்ந்து சர்வாதிகாரத்தை எதிர்த்து நின்ற அவர், மீண்டும் 2020 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெலாரஸ் புதினின் ரஷ்யாவுக்கு மிக அருகிலும் அரசியல்ரீதியாகவும் நெருக்கமாக உள்ள ஒரு நாடு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.



Read in source website

சிறுமி ஒருத்தி (1970) சாதாரண அஞ்சலட்டையில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதம் மிகவும் பிரபலம். ஆங்கிலேயர் காலகட்டக் கல்வி சி.வி.ராமன், மேக்நாட் சாகா, சத்தியேந்திரநாத் போஸ் போன்ற அறிவியலாளர்களை உருவாக்கியதுபோல், நமது கல்வி முறையால் யாரையும் உருவாக்க முடிந்ததா என்பது அந்தச் சிறுமியின் கேள்வி. புதுடெல்லியில் உள்ள பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் சிலருக்குப் பிரதமர் இந்திரா காந்தி அதை அனுப்பி, உண்மையில் அப்படி உருவானவர்கள் குறித்து அந்தச் சிறுமிக்கு எழுதி உதவுமாறு கேட்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக அந்தக் கேள்விக்கு யாரிடமிருந்தும் பதில் வரவில்லை. அந்தச் சிறுமி என்ன ஆனார் என்பதும் தெரியாது என்றாலும், நாடு விடுதலை அடைந்த 75ஆவது ஆண்டிலும்கூட அந்தக் கேள்விக்குச் சரியான பதில் நம்மிடம் இல்லை. இந்த ஆண்டும் இந்தியர் எவரும் நோபல் பரிசு பெறவில்லை என்பதை எந்தச் சலனமும் இன்றி நாம் எளிதாகக் கடந்துவிட்டோம். நோபல் பரிசை விடுங்கள்; பொதுவாகவே நம் பல்கலைக்கழகங்களில் அறிவியல் ஆராய்ச்சிகள் எந்த நிலையில் உள்ளன என்பது ஆய்வுக்குரியது.

ஆங்கிலேயர் ஆட்சியில் அறிவியல்: ஆங்கிலேயர் ஆட்சியின்போது ராமன், சாகா, போஸ் போன்ற இந்திய அறிவியலாளர்கள் கேம்பிரிட்ஜிலும் ஆக்ஸ்போர்டிலும் சென்று ஆய்வு மேற்கொள்ளவில்லை. கல்கத்தாவின் இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம், காசி இந்து பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் என ஆங்கிலேயர் காலத்தில் செயல்பட்ட இந்தியக் கல்விக்கூடங்களில்தான் இயங்கினர். அவற்றுக்குச் சுதந்திரப் போராட்டச் சதி நடப்பதாகப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொடுக்காத தொல்லை இல்லை. போதுமான நிதி ஆதாரம் என்றைக்குமே கிடைத்திடாத நிலையில்தான் அறிவியல் ஆராய்ச்சி இங்கு பல சாதனைகளைப் படைத்தது. சுதந்திரத்துக்கு முன்பே சர்வதேச அறிவியல் ஆய்விதழ்களில் இந்தியப் பல்துறை அறிவியலாளர்களின் 6,000 ஆய்வுகள் வெளிவந்ததாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலை: இந்திய அறிவியலில் அடிப்படை ஆய்வின் இன்றைய நிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. வேலைக்குச் செல்வது எனும் சமூக அழுத்தம் இன்றைய இளைஞர்களை ஆய்வு வட்டத்துக்கு வெளியே நிறுத்திவிட்டது. அதையும் மீறி உள்ளே வருபவர்களைப் பல்கலைக்கழக ஆய்வுச் சூழல் விரட்டியடிக்கிறது; சிலர் தற்கொலை வரைகூடப் போகிறார்கள். ஆய்வு நிதியைப் பங்கிட்டுக்கொள்வது எப்படி என்ற மோசமான அதிகாரச் சுரண்டலாலும் ஊழல்களாலும் கருத்தரங்கங்கள் வெறும் சடங்குகளாகச் சுருங்கிவிட்டன. ஆய்விதழில் வெளிவரும் அளவுக்குத் திறம்பட அறிவியல் ஆய்வுகளை எழுதும் மாணவர், அவர் பெயரில் அந்த ஆய்வை வெளியிட்டுவிட முடியாது. ஆய்வுக்கு வழிநடத்தும் பேராசிரியர்கள் பலர் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, அந்த அற்புதங்களைத் தாம் வெளியிட்டுக்கொள்ளும் வெட்கக்கேடான சூழலே இந்தியப் பல்கலைக்கழகங்களில் நிலவுகிறது. கடந்த 20, 30 ஆண்டுகளாக ஆய்வுத் துறையைப் புறக்கணித்து, பொருளீட்டுவதே வெற்றி எனப் பொறியியல், மருத்துவம் படிக்கச் சென்று, பலர் காணாமல் போனது உண்மை. ஆய்வுத் துறைகளான இயற்பியல், வேதியியல் என அடிப்படை அறிவியலுக்குள் தப்பித்தவறி நுழைபவர்கள் காண்பது என்ன? இந்தியாவில் இன்று முனைவர் பட்ட ஆய்வுகளில் மூன்றில் இரண்டு போலியானவை. தரம்வாய்ந்த ஆய்வுகளுக்கு அரசின் நிதியுதவி பெருமளவு குறைந்துவிட்டது. அறிவியல் சார்ந்த ‘பட்நாகர் விருது’ உட்பட 300 விருதுகளை நீக்கிவிட்டு, நோபல் போன்று ஒரே விருதாக வழங்கப்படும் என்கிற அறிவிப்பும் நம் ஆய்வுச் சூழலை மேலும் நீர்த்துப்போகச் செய்யும்.

நோபல் அறிஞர்களின் பின்னணி: இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்ட பிரான்ஸின் அலான் ஆஸ்பெக்ட், அந்நாட்டின் 72ஆவது நோபல் அறிஞர். பிரான்ஸின் பள்ளி, பல்கலைக்கழகக் கல்வியில் மதிப்பெண்கள் கிடையாது; ஆறு படிநிலைத் தரச்சான்று தரப்படுகிறது. அறிவியல் பட்டப்படிப்பு, ஆறு மாத ஆய்வக உதவியாளர் பணியிடப் பயிற்சியை உள்ளடக்கியது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்வாந்தே பேபு, அந்நாட்டின் 32ஆவது நோபல் அறிஞர். ஸ்வீடனில் கல்லூரிக் கல்வி வரை தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகிறது. ஆய்வு மாணவர்களைத் தத்தெடுத்து உலகெங்கும் செல்வதற்கான செலவை அரசே ஏற்கிறது. வேதியியலில் நோபல் பரிசு பெறும் மோர்டன் மேல்டால் டென்மார்க்கைச் சேர்ந்தவர். அங்கே பள்ளிக் கல்வியின் இறுதி ஆண்டில் குறைந்தபட்சம் 100 பக்கம் கொண்ட ஆய்வறிக்கையை விருப்பமான அறிவியல் துறை சார்ந்து சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். இதுவரை 14 நோபல் அறிஞர்களைத் தந்த டென்மார்க்கில் மொத்தம் எட்டுப் பல்கலைக்கழகங்களே உள்ளன. ஆஸ்திரியா நம்மைவிடப் பல மடங்கு சிறிய நாடு. இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டிருக்கும் ஆண்டன் ஸாய்லிங்கர் ஆஸ்திரியாவின் 23ஆவது நோபல் விருதாளர். இங்கு பாக்சோ சூலன் கல்விச் சீர்திருத்தம் அறிமுகமான பிறகு, பயன்பாட்டு அறிவியல் ஆய்வுக்கூடங்கள் பல திறக்கப்பட்டன. அவற்றில் பல பள்ளிகளோடு நேரடித் தொடர்புடையவை. பள்ளிப் பருவத்திலிருந்தே கோடை விடுமுறையில் மாணவர்கள் அங்கு சிறப்புப் பயிற்சிகள் பெறவும் முடியும். அறிவியல் என்பதே ராக்கெட்டும் ஏவுகணையும் மட்டும்தான் என்கிற நிலை அங்கு இல்லை.

கல்லூரி - பள்ளி இணக்கம் எப்போது?: நாம் நமது கல்லூரி, பல்கலைக்கழகங்களை மட்டுமே குறை கூற முடியாது. நம் பள்ளிக் கல்வி பொதுத்தேர்வு மையக் கல்வியாக இருப்பது முதல் சிக்கல். பெரும்பாலான கலை, அறிவியல் கல்லூரிகளில் கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்ட அறிவியல் பிரிவுகளான இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படிக்க ஆளில்லை. பள்ளிக் கல்வித் துறைக்கும் உயர்கல்வித் துறைக்கும் ஒரு இணக்கமும் பிணைப்பும் ஏற்பட வேண்டும். பள்ளி மாணவர்கள் ஆய்வுத் திறனை மேம்படுத்த ‘இன்ஸ்பயர்’, ‘மானக்’ போலவும் தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு போலவும் பல திட்டங்களோடு அந்தந்த ஊர்களின் கல்லூரிகள் பள்ளிக்குள் நுழைய வேண்டும். புத்தக அறிவைக் கடந்து செயல்பட பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். உண்மையான முனைவர் பட்ட ஆய்வு முயற்சிகளும் நோபல் பெறும் அளவுக்கான திருப்புமுனைக் கண்டுபிடிப்புகளும் சுயசிந்தனை, தேடல் சார்ந்தவை. வெற்று மனப்பாடப் பொதுத்தேர்வு மதிப்பெண் கல்வியைத் தூக்கி எறியாதவரை பிரதமர் இந்திராவிடம் அந்தச் சிறுமி அன்று எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் நம்மால் சரியான பதிலைத் தர முடியாது என்பதே துயரமான உண்மை.

ஆயிஷா இரா.நடராசன்
கல்வியாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: eranatarasan@yahoo.com



Read in source website