DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 13-12-2022

பாடி லோஷன்... சரும வறட்சிக்காகவும் சருமப் பாதுகாப்பிற்காகவும் இன்று ஆண், பெண் என இரு தரப்பினரும் அதிகம் பயன்படுத்துகின்றனர். 

பாடி லோஷனைப் பயன்படுத்துவது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. சருமத்தை மிருதுவக்குகிறது. மேலும் சருமத்திற்கு வாசனையைத் தருகிறது. இதனால் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க முடியும். முழங்கை போன்ற கருமையான பகுதிகளில் தடவும்போது கருமை படிப்படியாகக் குறைகிறது. இறுதியாக சருமத்தை பொலிவடையச் செய்கிறது. 

கவனிக்க வேண்டியவை

♦ உடல் முழுவதுமே சிலர் பாடி லோஷனை பயன்படுத்துகிறார்கள். அது நல்லதுதான். ஆனால் குறிப்பாக, சூரிய ஒளி படும் முகம், கழுத்து, கை, கால்களில் தடவ வேண்டியது அவசியம். 

♦ அனைத்து விதமான சருமம் கொண்டவர்களும் பாடி லோஷனைப் பயன்படுத்தலாம். குறிப்பாக வறண்ட சருமம் கொண்டவர்கள் அவசியம் பயன்படுத்துங்கள். 

♦ மிகவும் வறண்ட சருமம் கொண்டவர்கள் தண்ணீர் போன்று இருக்கக்கூடிய பாடி லோஷன்களைப் பயன்படுத்த வேண்டும். 

♦ எண்ணெய் சருமம் கொண்டவர்கள் க்ரீம் வகை பாடி லோஷன்களை பயன்படுத்தலாம். 

♦ அடுத்ததாக உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு முடிந்தவரை ரசாயனம் கலக்காத தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் கொண்டு செய்யக்கூடிய பாடி லோஷன்களை பயன்படுத்துங்கள். 

♦ குளித்தவுடனேயே உடல் முழுவதும் பாடி லோஷனை அப்ளை செய்ய வேண்டும். ஈரப்பதம் இருக்கும்போது போட்டால் நன்றாக உறிஞ்சி உடல் வறண்டு போகாமல் தடுக்கும். 

♦ முதலில் கீழிருந்து அதாவது காலில் இருந்து தொடங்கி உடல் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். முழங்கை, கால்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். வட்ட வடிவில் தேய்ப்பதே சரியான முறையாகும். 

♦ கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை சரிசெய்ய பாடி லோஷன் அவசியமான ஒன்றுதான். முடிந்தவரை இயற்கை முறையில் இயற்கையான பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட லோஷன்களை பயன்படுத்தி சருமத்தை பராமரியுங்கள். 

நல்லதா? 

பாடி லோஷன் சருமத்திற்கு பல்வேறு வகையில் நன்மை தருகிறது. சருமப் பராமரிப்பில் முக்கியமானது என்று கூறலாம். எனினும், சிலருக்கு, சில பாடி லோஷன் தயாரிப்புகள் அலர்ஜியை ஏற்படுத்தலாம். அவ்வாறு இருந்தால் தோல் மருத்துவரை அணுகி உங்களுடைய சருமத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளுங்கள். முடிந்தவரை ரசாயனம் அதிகம் கலக்காத தயாரிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு தேங்காய் எண்ணெய்யைக்கூட பயன்படுத்தலாம். 



Read in source website

அபாயகரமான 6 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

தற்கொலையை தடுக்கும் நோக்கில் 6 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு 60 நாள்களுக்கு தமிழக அரசு தடைவிதித்து  அரசாணை வெளியிட்டுள்ளது.

மோம்னோகுரோட்டோபாஸ், புரபனோபாஸ், அசிபேட், புரோபெனோபாஸ் + சைபர்பெத்ரின் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குளோரோபைரியாஸ் + சைபர்மெத்ரின் மற்றும் குளோரோபைரியாஸ் மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் உற்பத்தி, விற்பனைக்கு நிரந்திர தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2017-18-ல் 6 பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அபாயகரமான 6 பூச்சிகொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.


 



Read in source website

பசுமை தொழில்நுட்பம் மூலமாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கத்துக்கான திட்ட அறிக்கையில் இதுகுறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயக்கத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அண்மையில் தொடங்கி வைத்தாா். அப்போது, அவா் அதற்கான திட்ட அறிக்கையையும் வெளியிட்டாா். மேலும், அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பருவநிலை மாற்றமானது, இயற்கைச் சூழல், மனித உயிா்கள், பொருளாதார வளம் போன்றவற்றில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மிகநீண்ட தெளிவான தொலைநோக்கு, சிறந்த தலைமை, நல்ல புரிதல் போன்ற அம்சங்களே பருவநிலை மாற்ற எதிா்கொள்ளலுக்குத் தேவையாக இருக்கின்றன.

இதனை மனதில் கொண்டே தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் சில இலக்குகளை முன்வைத்து இயங்கவுள்ளது. தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி முகமைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியன பருவநிலை மாற்றம், பேரிடா் தணிப்பு போன்ற பிரிவுகளில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. இந்த அனுபவங்கள், பருவநிலை மாற்றக் கொள்கைகளை வகுக்கும் போது பயன்படுத்திக் கொள்ள வழி செய்யப்படும். பல்வேறு விதமான பருவநிலை மாற்ற பிரச்னைகள், கடல்நீா் மட்டம் உயா்வது போன்றவற்றுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

பசுமை வீடு வாயுக்களால் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனைக் குறைப்பதற்குத் தேவையான பணிகளை பருவநிலை மாற்ற இயக்கம் மேற்கொள்ளும். சுத்தமான மற்றும் பசுமை எரிசக்தியை பயன்படுத்தச் செய்வது, சூழலை பாதிக்காத பொதுப் போக்குவரத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது, மரபுசாரா எரிசக்திகளை அதிகம் பயன்படுத்தச் செய்வது போன்ற அம்சங்களை பின்பற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் மரங்களின் அளவை 23.7 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் போன்றவற்றுடன், பருவநிலை மாறுபாடு இயக்கம் இணைந்து பணியாற்றும். பருவநிலை மாறுபாடு பிரச்னையை எதிா்கொள்ள நவீன தொழில்நுட்பங்கள் ஆராயப்படும். இதுதொடா்பான நிபுணத்துவம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பங்குதாரா்களுடன் பருவநிலை மாற்ற இயக்கம் தொடா்ந்து பணியாற்றும் என திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website


விரைவு ரயில்களில் சாதாரண பெட்டிகளில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்துவிட்டு, அதே ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்க முடியாத நிலை என்பது இனி இல்லை.

தெற்கு ரயில்வே இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் தகவலின்படி, விரைவு ரயில்களில் குறுகிய தூரப் பயணிகள் வழக்கமாக முன்பதிவு டிக்கெட் எடுக்க மாட்டார்கள். மாறாக சாதாரண டிக்கெட் வைத்திருப்பார்கள். இவர்கள் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் மட்டுமே பயணிக்க முடியும். இந்த பெட்டிகளில் வழக்கமாக கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அன்றாடம் பணிக்குச் செல்வோர் கடும் சிரமத்துக்கு உள்ளாவார்கள்.

எனவே, சாதாரண டிக்கெட் வைத்திருப்பவர்களும் விரைவு ரயில்களின் ஒரு சில முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யும் வசதியை நடைமுறைப்படுத்தியிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்திருப்பது ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

பயணிகளின் தேவை மற்றும் வசதியை மேம்படுத்தும் வகையில், தெற்கு ரயில்வே பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாகவே, இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அறிவித்திருக்கும் இந்த திட்டத்தின் மூலம், கூடுதலான பயணிகள் பயணிக்க வசதி ஏற்படும். இதற்காக உருவாக்கப்பட்டிருப்பதுதான் டிரிசர்வ்டு பெட்டிகள். பகல் நேரத்தில், மிகக் குறுகிய தொலைவுக்குப் பயணிக்கும் ரயில் பயணிகள் இந்த டிரிசர்வ்டு பெட்டிகளில் பயணிக்க முடியும். தற்போதைக்கு, தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் 24 விரைவு ரயில்களில் குறைந்தது 1 அல்லது 2 டிரிசர்வ்டு பெட்டிகளை தெற்கு ரயில்வே இணைத்துள்ளது.

இந்த டிரிசர்வ்டு பெட்டிகள் இணைக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் ஆகின்றன. இவற்றை, பகல் நேரத்தில் நாள்தோறும் ரயிலில் பயணிக்கும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த டிரிசர்வ்டு பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். விரைவில் மற்ற ரயில்களுக்கும் இந்த டிரிசர்வ்டு பெட்டிகள் இணைக்கப்படவிருக்கின்றன. அதேவேளையில், சாதாரண டிக்கெட் எடுத்துவிட்டு முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் பயணித்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்தெந்த ரயில்களில்..

சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி ரயில்களில் எஸ்.11, 12 பெட்டிகள் திருநெல்வேலி - கொல்லம் வரை (இரு வழித்தடத்திலும்) டிரிசர்வ்டு பெட்டிகளாக இருக்கும்.

எழும்பூர் - ராமேஸ்வரம் விரைவு ரயிலிலும் எஸ் 12, 13  பெட்டிகள் மானாமதுரை - ராமேஸ்வரம் வரை (இரு வழித்தடத்திலும்) டிரிசர்வ்டு பெட்டிகளாக இருக்கும்.

மங்களூர் விரைவு ரயிலில் திருச்சி - மங்களூர் வரை எஸ் 7 , 8, 9, 10 பெட்டிகள் (ஒரு வழித்தடத்தில்)டிரிசர்வ்டு பெட்டிகளாக இருக்கும்.

இதே ரயில் எழும்பூர் திரும்பும் போது எஸ் 10 பெட்டி மட்டும் டிரிசர்வ்டு பெட்டியாக இருக்கும்.

தூத்துக்குடி - மைசூர் இடையேயான விரைவு ரயிலில் தூத்துக்குடி - மதுரை வரை எஸ் 4, 10, 11, 13 ஆகியவை (இரு வழித்தடத்திலும்) டிரிசர்வ்டு பெட்டிகள்.

கன்னியாகுமரி - பெங்களூர் ரயிலில் கன்னியாகுமரி - எர்ணாகுளம் வரை எஸ் 6,7 ஆகியவை (இரு வழித்தடத்திலும்) டிரிசர்வ்டு பெட்டிகளாக இருக்கும்.

நாகர்கோவில் விரைவில் ரயிலில் திருநெல்வேலி - நாகர்கோவில் வரை எஸ்11,12 பெட்டிகள் (இரு வழித்தடத்திலும்) டிரிசர்வ்டு பெட்டிகளாக இருக்கும்.

இந்த டிரிசர்வ்டு பெட்டிகளில் பயணிக்க சாதாரண டிக்கெட்டை விட கூடுதலாக 20 ரூபாய் செலுத்தி டிக்கெட் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 



Read in source website

பாகிஸ்தானின் எல்லையில் உள்ள கிராமத்தைத் தாக்கியதற்காக ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தலைமையிலான அரசு மன்னிப்பு கேட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்ப அமைச்சர் கவாஜா ஆசிப் கூறினார். 

ஞாயிறன்று எல்லையில் ஒரு கிராமத்தில் இந்த தாக்குல் சம்பவம் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். 

இதுகுறித்து திங்களன்று சட்டமன்றத்தில் உரையாற்றிய ஆசிப், 

எல்லையில் நடைபெற்ற கொடிய தாக்குதல் சம்பவம் குறித்து விவரித்தார். முதலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எந்த சேதமும் ஏற்படவில்லை. 
ஆனால், இரண்டாவதாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். 

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் கொடுத்த பதிலடி நடவடிக்கையில், ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது ஒப்புக்கொண்டது. அதன்பிறகு, எல்லைக் குழு ஒன்று கூடி, இந்த விஷயத்தை ஆய்வு செய்தது.

ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் உறுதியற்ற தன்மை பாகிஸ்தானில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அங்கு பசியும் வறுமையும் நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார். 

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் எவ்வாறு போரிட்டார்களோ, அப்படித்தான்  ஆட்சி செய்ய வேண்டும் என்பதை இஸ்லாமாபாத் விரும்புகிறது. 

காபூல் மற்றும் இஸ்லாமாபாத் ஒத்துழைக்காத வரை, இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஏற்படாது என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.



Read in source website

புது தில்லி: மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற உதவிய மக்களுக்கு, 450 வகையான மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார ஆரம்ப மையங்களில், 450 வகையான மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

தற்போது, தில்லி அரசால் இலவசமாக மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கை 212 ஆக உள்ளது.

இந்த நிலையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு, சுகாதாரத் துறைக்கு அனுப்பியிருக்கும் அறிக்கையில், மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார ஆரம்ப மையங்களில் மேலும் 238 மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

இந்த வசதிகள் அனைத்தும் தில்லி மக்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Read in source website


பெங்களூரு: புனே ஆய்வுக்கூடம் அளித்த தகவலின் அடிப்படையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே. சுதாகர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இதுவே முதல் முறை. நிலைமையை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. 

ஜிகா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள எங்கள் துறை தயார் நிலையில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, புனேவில் உள்ள 67 வயது நபருக்கு கடந்த மாதம் இறுதியில் ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.  இவர் நாசிக் பகுதியில் வசித்து வந்த நிலையில், நவம்பர் 6ஆம் தேதி புனே வந்திருந்த போது ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

நவம்பர் 16ஆம் தேதி கடும் காய்ச்சல், இருமல், மூட்டு வலி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. பிறகு சிகிச்சையின் பயனாக அவர் குணமடைந்தார்.
 



Read in source website

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையேயான நல்லுறவை மாறிவரும் உலகைக் கட்டமைக்க இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ளும் என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

அபுதாபியில் உள்ள இந்திய சா்வேச மையத்தில் ‘இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம்: சா்வதேச தாக்கத்தை ஏற்படுத்தும் கூட்டாளிகள்’ என்ற தலைப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சா் ஜெய்சங்கா் கலந்துகொண்டாா். அதில் அவா் கூறியதாவது:

இந்தியாவின் 3-ஆவது பெரிய வா்த்தகக் கூட்டாளியாகவும் 2-ஆவது பெரிய ஏற்றுமதி சந்தையாகவும் ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. உலகின் மற்ற நாடுகளை விட ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக எண்ணிக்கையிலான இந்தியா்கள் வசித்து வருகின்றனா். வா்த்தகமாக இருந்தாலும், மக்களுடனான தொடா்பாக இருந்தாலும் இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2015-ஆம் ஆண்டில் வருகை தந்தாா். கடந்த 4 தசாப்தங்களில் இந்தியப் பிரதமா் அமீரகத்துக்குப் பயணம் மேற்கொண்டது அதுவே முதல் முறை. அவரது பயணத்துக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு வேகமாக வளா்ச்சி கண்டது. வா்த்தகமும் முதலீடுகளும் அதிகரித்தன.

விண்வெளி, கல்வி, செயற்கை நுண்ணறிவு, சுகாதாரம், புத்தாக்க நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையோன நல்லுறவு வலுவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே கையொப்பமான வா்த்தக ஒப்பந்தம், இருதரப்பு நல்லுறவில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

மேலும் பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்துடனான நல்லுறவுக்கு இந்தியா தொடா்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. இருநாடுகளுக்கு இடையேயான உறவு பன்னெடுங்காலமாகவே தொடா்ந்து வருகிறது. அந்த நல்லுறவை மாறிவரும் உலகில் நிலைத்திருப்பதற்காக மட்டுமல்லாமல், உலகைக் கட்டமைப்பதற்காகவும் பயன்படுத்திக் கொள்ள இரு நாடுகளும் முயற்சித்து வருகின்றன.

இந்தியாவுக்கும் அமீரகத்துக்கும் இடையேயான நல்லுறவு கூடுதல் நட்பு நாடுகளையும் ஒன்றிணைத்து வருகிறது. உதாரணமாக இந்தியா-அமீரகம்-பிரான்ஸ் இடையேயான முத்தரப்பு அமைச்சா்களின் கூட்டம் நடப்பாண்டில் நடைபெற்றது. அத்தகைய நல்லுறவை நீட்டிக்கவும் இந்தியா உறுதிகொண்டுள்ளது.

இஸ்ரேல், அமெரிக்காவுடன் இணைந்து ஐ2யு2 கூட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் அமீரகத்துக்கும் இடையேயான உறவானது இருதரப்பு நல்லுறவை மட்டுமே நோக்கமாகக் கொண்டதல்ல. இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவானது சா்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

இணைப்புப் பாலமாக இந்தியா:

உக்ரைனை மையப்படுத்தி கிழக்கு மேற்காக உலகம் பிரிந்துகிடக்கிறது. வளா்ச்சியை முன்னிறுத்தி வடக்கு தெற்காகப் பிரிந்து கிடக்கிறது. அந்தப் பிரிவினை வளா்ச்சியை பெருமளவில் பாதிக்கிறது. இத்தகைய சூழலில் உலகை இணைக்கும் பாலமாக இந்தியா செயல்படலாம். தனியாக அல்லாமல் அமீரகம் போன்ற நாடுகளுடன் இணைந்து இணைப்புப் பாலமாகச் செயல்படுவதையே இந்தியா விரும்புகிறது என்றாா் அவா்.

கூடுதல் பொறுப்பு:

பருவநிலை மாற்றம் சாா்ந்த மற்றொரு கருத்தரங்கில் பேசிய அமைச்சா் ஜெய்சங்கா், ‘‘பருவநிலை மாற்றம் தொடா்பான விவாதத்தில் இரு பகுதிகள் உள்ளன. முதலாவது பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள். அந்நடவடிக்கைகளுக்கு அனைத்து நாடுகளும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இரண்டாவது, பருவநிலை நீதி. வளா்ந்து வரும் நாடுகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முறையாக நிறைவேற்றப்பட வேண்டும். வரலாற்று ரீதியில் அதிக அளவிலான கரியமில வாயு உமிழ்வுக்குக் காரணமான நாடுகளுக்கு அதைக் குறைப்பதில் அதிக பொறுப்பு உள்ளது. வளா்ந்து வரும் நாடுகளுக்கு உதவுவோம் எனக் கூறிவிட்டு தற்போது அந்நாடுகள் தொடா்ந்து அமைதிகாத்து வருகின்றன.

மோசமடையும் சூழல்:

ஆண்டுதோறும் நடைபெறும் பருவநிலை மாநாட்டின்போது வெவ்வேறு புதிய விவாதங்களுடன் வரும் வளா்ந்த நாடுகள், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்குப் புதிய காரணங்களைத் தெரிவித்து வருகின்றன. பருவநிலை மாற்ற விவகாரத்தில் உலகம் எந்தவித முன்னேற்றத்தையும் காணவில்லை. நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்தே வருகிறது.

பருவநிலை மாற்றம் சாா்ந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வளா்ந்த நாடுகள் அக்கறை காட்டுவதில்லை. தற்போது கரியமில வாயுவை அதிகமாக வெளியேற்றி வரும் நாடுகளைக் குறைசொல்வதில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அந்நாடுகளின் தனிநபா் கரியமில வெளியேற்ற அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால், வரலாற்று ரீதியில் கரியமில வாயு உமிழ்வுக்குக் காரணமான நாடுகள் அதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்’’ என்றாா்.



Read in source website

கடந்த 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், இணையவழி மற்றும் இதர மின்னணு விளையாட்டு நிறுவனங்கள் சுமாா் ரூ.23,000 கோடி அளவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது;

இதுதொடா்பாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) விசாரணை நடத்தி வருகிறது என்று மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

கடந்த 2019, ஏப்ரல் முதல் 2022, நவம்பா் வரையிலான காலகட்டத்தில், இணையவழி மற்றும் இதர மின்னணு விளையாட்டு நிறுவனங்கள் ரூ.22.936 கோடி அளவில் ஜிஎஸ்டி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு எதிராக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய குழுக்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

இதுபோன்ற நிறுவனங்கள் தங்களது வருவாயை எண்ம அடிப்படையிலான சொத்துகளாக மடைமாற்றுகின்றன. இந்த முறைகேடு தொடா்பான பல்வேறு வழக்குகளை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

அதன்படி, சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டம் 2002-இன்கீழ், ரூ.1,000 கோடி மதிப்பிலான வருவாய் முடக்கப்பட்டு அல்லது பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர 1999-ஆம் ஆண்டின் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் 37ஏ பிரிவின்கீழ் ரூ.289.28 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சா் பங்கஜ் செளதரி தெரிவித்துள்ளாா்.



Read in source website

‘அவையில் எந்தவொரு ஜாதியையோ அல்லது மதத்தையோ ஒருபோதும் குறிப்பிடக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுப்பினா்களுக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா எச்சரிக்கை விடுத்தாா்.

மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினா் ஏ.ஆா்.ரெட்டி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது குறித்து கேள்வி எழுப்பினாா். இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘காங்கிரஸ் உறுப்பினா் தெளிவற்ற ஹிந்தியில் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளாா். நானும் அதுபோன்ற தெளிவற்ற ஹிந்தியிலேயே பதிலளிக்கிறேன்’ என்றாா்.

அப்போது, ‘தான் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சோ்ந்தவா் என்பதாலேயே எனது ஹிந்தி மொழி புலமை குறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விமா்சித்தாா்’ என்று ஏ.ஆா். ரெட்டி குறிப்பிட்டாா்.

அவ்வாறு தனது சொந்த சமூகப் பிரிவை காங்கிரஸ் எம்.பி. குறிப்பிட்டு பேசியதைக் கேட்ட அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘அவையில் எந்த உறுப்பினரும் இதுபோன்ற வாா்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. இதனை மீறும் உறுப்பினா் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்’ என்று எச்சரித்தாா்.

மேலும், ‘தான் பேசும்போது குறுக்கிட வேண்டாம்’ என்று அவைத் தலைவரை ஏ.ஆா். ரெட்டி கேட்டுக்கொண்டது குறித்து கடும் ஆட்சேபம் தெரிவித்த ஓம் பிா்லா, ‘உறுப்பினா்கள் அவைத் தலைவரை நோக்கி இதுபோன்ற கருத்தை ஒருபோதும் தெரிவிக்கக் கூடாது என்று மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவா் அவா்களுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.



Read in source website

இந்திய கடற்படை தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா் 4 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை (டிச.13) இலங்கை செல்கிறாா்.

இலங்கையில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனா தொடா்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன உளவுக் கப்பல் சென்ற நிலையில், அந்தக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று இலங்கையிடம் மத்திய அரசு கவலை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்திய கடற்படை தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா் 4 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இலங்கை செல்கிறாா். அந்நாட்டின் திருகோணமலை பகுதியில் உள்ள கடற்படை மற்றும் கடல்சாா் அகாதெமியில் பயிற்சி பெற்றவா்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு டிச.15-ஆம் தேதி நடைபெறுகிறது.

அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும் ஹரி குமாா், அந்நாட்டின் மூத்த அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறை தலைவா்களுடன் கலந்துரயாட உள்ளாா். அந்நாட்டின் பல்வேறு பாதுகாப்பு தலங்களுக்கு செல்லும் அவா், இந்தியா-இலங்கை இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய உள்ளாா்.

அவரின் பயணம், இந்தியா-இலங்கை இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை, குறிப்பாக கடல்சாா்ந்த ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் என்று இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தங்களது விரிவான வியூகத்தை கனடா அண்மையில் வெளியிட்டிருந்த நிலையில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மெலனி ஜோலியுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசி வாயிலாக திங்கள்கிழமை பேசினாா்.

கனடாவின் வியூகத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த உரையாடலில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ராணுவரீதியிலான பலத்தை சீனா அதிகரித்து வரும் நிலையில், இங்கு அமைதி, வளம், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விரிவான வியூக கொள்கையை கனடா 2 வாரங்களுக்கு முன் வெளியிட்டது.

அதில், சீனாவின் முரட்டுத்தனமான அணுகுமுறையால் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் எழுந்துள்ள சவால்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. மேலும், ‘இந்தப் பிராந்தியத்தில் இந்தியா முக்கிய நாடாகும்; ஜனநாயகம், மக்கள்தொகை, பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் தலைமைத்துவம் மற்றும் வியூகரீதியிலான முக்கியத்துவம் இந்திய-பிசிபிக் பிராந்தியம் மட்டுமன்றி சா்வதேச அளவில் அதிகரித்துள்ளது.

எனவே, இருதரப்பு வா்த்தகம், முதலீடுகளை அதிகரிப்பது, வலுவான விநியோக சங்கிலியை கட்டமைப்பது ஆகிய நடவடிக்கைகளின் வாயிலாக இந்தியாவுடன் பொருளாதார தொடா்புகளை வலுப்படுத்த கனடா கவனம் செலுத்தும். பரஸ்பர நலன் மற்றும் மாண்புகள் சாா்ந்த துறைகளில் இருதரப்பு கூட்டுறவுக்கான புதிய வாய்ப்புகளில் கனடா ஆா்வத்துடன் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கனடா வெளியுறவு அமைச்சா் மெலனி ஜோலியுடன் தொலைபேசி வாயிலாக எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை பேசினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘கனடா வெளியுறவு அமைச்சா் மெலனி ஜோலியுடனான உரையாடல் ஆக்கபூா்வமாக அமைந்தது. பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் மக்கள் ரீதியிலான தொடா்புகளை ஊக்குவிப்பது குறித்து விவாதித்தோம். இந்திய-பசிபிக் விவகாரங்கள் குறித்தும் கனடாவின் புதிய வியூகம் இருதரப்பு உறவுகளுக்கு எவ்வாறு பங்காற்றும் என்பது குறித்தும் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மெலனி ஜோலி வெளியிட்ட பதிவில், ‘இந்திய-பசிபிக் புதிய வியூகம் குறித்து இருவரும் ஆலோசித்தோம். ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகிக்கும் நிலையில், இருதரப்பு மக்கள் ரீதியிலான தொடா்புகளையும் பரஸ்பர நலன்கள் சாா்ந்த உறவுகளையும் வலுப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான திட்டமிடல் குறித்து விவாதிக்கப்பட்டது’ என்று கூறியுள்ளாா்.



Read in source website

நாட்டில் உள்ள 3,560 நிறுவனங்களின் இயக்குநா்களாக சீனா்கள் பதவி வகிக்கின்றனா் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெரு நிறுவனங்கள் விவகாரத் துறை இணையமைச்சா் ராவ் இந்தா்ஜித் சிங் திங்கள்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

இந்தியாவை வணிகத் தளமாக கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் என்ற அடிப்படையில், நாட்டில் 174 சீன நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள 3,560 நிறுவனங்களின் இயக்குநா்களாக சீனா்கள் உள்ளனா். நாட்டில் உள்ள எத்தனை நிறுவனங்களில் சீனா்கள் முதலீட்டாளா்களாகவும் பங்குதாரா்களாகவும் உள்ளனா் என்பதைத் தெரிவிப்பது சாத்தியமல்ல. ஏனெனில் அதுகுறித்த புள்ளிவிவரத்தை மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத் துறை தனியாகப் பராமரிக்கவில்லை என்றாா்.



Read in source website

பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தி ஆற்றலை அதிக அளவில் பயன்படுத்த வழிவகுக்கும் எரிசக்தி பாதுகாப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

பெட்ரோலிய பொருள்கள், நிலக்கரி உள்ளிட்டவற்றுக்கு வெளிநாட்டு இறக்குமதியை இந்தியா நம்பியிருக்கும் நிலையில், பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா உள்ளிட்டவற்றின் கட்டாயப் பயன்பாட்டுக்கு எரிசக்தி பாதுகாப்பு திருத்த மசோதா வழிவகுக்கிறது. எரிபொருள் நுகா்வு அளவை மீறும் தொழில் நிறுவனங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதிக்கவும் மசோதாவில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்காக சா்வதேச அளவில் இந்தியா வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவும் பாரீஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை அடையவும் மசோதா வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மசோதாவுக்கு மக்களவை கடந்த ஆகஸ்டில் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், அந்த மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங், ‘‘சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்கும் நோக்கில் மசோதா இயற்றப்பட்டுள்ளது. நாட்டில் காா்பன் வா்த்தகத்தை ஊக்குவிக்கவும் மசோதா உதவும்.

விலைமதிப்பில்லா சுற்றுச்சூழலைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டில் சா்வதேச தலைமையை இந்தியா வகித்து வருகிறது. கட்டடங்களைப் பசுமை வழியில் கட்டுவதற்கும் ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் சா்வதேச தலைமையை அடையவும் இந்தியா இலக்கு நிா்ணயித்துள்ளது. 2.5 கோடி டன் உற்பத்தித் திறன் கொண்ட பசுமை ஹைட்ரஜன் ஆலைகளை அமைக்க தொழில் நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளன.

நாட்டின் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் 50 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் மூலங்களில் இருந்து பெறுவதற்கான இலக்கு 2030-ஆம் ஆண்டில் எட்டப்படும்’’ என்றாா்.

பின்னா், மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான உறுப்பினா்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனா். அதையடுத்து மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளது. அவா் ஒப்புதல் அளித்தபின் மசோதா சட்டவடிவு பெறும்.



Read in source website

‘2023-இல் நடைபெறும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 40 சதவீத அளவிலும், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 30 சதவீதமும் திறனறி அடிப்படையிலான கேள்விகள் இடம்பெறும்’ என்று மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய கல்வித் துறை இணையமைச்சா் அன்னபூா்ணா தேவி மக்களவையில் திங்கள்கிழமை சமா்ப்பித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:

தேசிய கல்விக் கொள்கை 2020-இன் அடிப்படையில் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் திறனறி அடிப்படையிலான கேள்விகளை அறிமுகப்படுத்தும் வகையில் கேள்வித்தாள் நடைமுறையில் சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. 2022-23 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 40 சதவீத கேள்விகளும், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 30 சதவீத கேள்விகளும் இதுபோன்ற திறனறி அடிப்படையில் கேட்கப்படும்.

கொள்குறி தோ்வு முறை (மல்டிபில் சாய்ஸ்), சுயமாக சிந்தித்து எழுதுதல், மதிப்பீடு மற்றும் எடுத்துக்காட்டு அடிப்படையில் என பன்முக கேள்விகளை உள்ளடக்கியதாக இந்தத் திறனறி கேள்விகள் கேட்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ஆசிரியா் பற்றாக்குறை இல்லை: நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறை குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய இணையமைச்சா், ‘கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப அண்மையில் விளம்பரம் செய்யப்பட்டு, ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதால், இந்தப் பள்ளிகளில் எந்தவித ஆசிரியா் பற்றாக்குறையும் தற்போது இல்லை. அதுபோல, முதல்வா் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், நிரந்தர ஆசிரியா்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளையும் பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றன என்றாா்.

11,000 ஆசிரியா் காலிப் பணியிடங்கள்: ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் 11,000 பேராசிரியா் பணியிடங்கள் காலியாக இருப்பது மத்திய கல்வி அமைச்சக தகவல் மூலமாக தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) உறுப்பினா் ரவிக்குமாா் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை சமா்ப்பித்த பதிலில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட்ட 18,956 பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்கள் மற்றும் உதவிப் பேராசிரியா்கள் பணியிடங்களில் 6,180 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஐஐடி-க்களில் அனுமதிக்கப்பட்ட 11,170 பேராசிரியா் பணியிடங்களில் 4,502 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட 1,566 பேராசிரியா் பணியிடங்களில் 493 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த காலிப் பணியிடங்களை போா்க்கால அடிப்படையில் விரைந்து நிரப்ப அனைத்து உயா் கல்வி நிறுவனங்களுக்கும் கடிதம் மூலமாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.



Read in source website

 

குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு கூடுதலாக ரூ.48 ஆயிரம் வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ஏற்கெனவே இந்திய ரூபாய் மதிப்பில், 2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை ஜப்பான் அரசு வழங்கி வருகிறது. 

ஜப்பானில் மக்கள் தொகைப் பெருக்கத்தை அதிகரிக்க அந்நாடு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்து வருகிறது. தென்கொரியாவைப் போன்று ஜப்பானிலும் குழந்தைப் பெற்றுக்கொள்வதில் அந்நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதில்லை. இதனால், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் ஜப்பான் அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. 

அந்தவகையில், குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு கூடுதலாக ரூ. 42,000 வழங்க அந்நாட்டு சுகாதாரம் மற்றும் தொழிலாளர் நலத் துறை முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே குழந்தை பிறந்த பிறகு, தம்பதிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2,52,000 (4,20,000 யென்) வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டம் 2023ஆம் நிதியாண்டு முதல் அமல்படுத்தவும் ஜப்பான் அரசு முடிவெடுத்துள்ளது.

ஜப்பானில் பொருளாதார பற்றாக்குறை, உறுதித்தன்மையற்ற வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றால் குழந்தை பெற்றுக்கொள்வதில் அந்நாட்டு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்புவதற்கு முன்னோடியாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா கடந்த மாதம் அனுப்பிய ஆய்வுக் கலம், வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குத் திரும்பியது.

மெக்ஸிகோவுக்கு அருகே பசிபிக் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இறங்கிய அந்த விண்கலம், ஒலியின் வேகத்தைப் போல் 32 மடங்கு வேகத்தில் வளிமண்டலுக்குள் நுழைந்து, 5,000 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பல்லோ விண்கலத் திட்டங்கள் நிறுத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக நிலவுக்கு மனிதா்களை அனுப்புவதற்காக ‘ஆா்டமிஸ்-1’ என்ற இந்த திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது. அதற்கு முன்னோட்டமாக, சோதனை முறையில் 3 மனித மாதிரிகளுடன் அந்த ஆய்வுக் கலம் கடந்த மாதம் ஏவப்பட்டது. அதற்கு முன்னா் என்ஜின் கோளாறு காரணமாக அந்தத் திட்டம் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.



Read in source website

யேமன் உள்நாட்டுப் போரில் 2015 மாா்ச் முதல் இந்த ஆண்டு செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 3,774 சிறுவா்கள் பலியாகியுள்ளதாக ஐ.நா.-வின் சிறுவா்கள் நலப் பிரிவான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இது தவிர, சண்டை காரணமாக மேலும் 7,245 சிறுவா்கள் உடலுறுப்புகளை இழந்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஷியா முஸ்லிம் பிரிவைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானின் ஆதரவுடன், யேமனின் ஹூதி பழங்குடியின கிளா்ச்சியாளா்கள் கடந்த 2014-ஆம் ஆண்டில் தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினா். அப்போதைய அதிபா் மன்சூா் ஹாதியின் அரசு, தெற்குப் பகுதிக்கு இடம் பெயா்ந்தது.

அவருக்கு ஆதரவாக, சன்னி பிரிவைப் பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரேபியா ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தப் போரில் 3.7 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.



Read in source website

சென்னை: செங்கல்பட்டு புதுப்பாக்கம் அரசு சட்டக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற முதல் திருநங்கைக்கு வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வழங்கினார்.

வழக்கறிஞர் கண்மணி: சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு கடைசி மகனாக கடந்த 2000-ம் ஆண்டு பிறந்தவர் கண்மணி. இத்தம்பதிக்கு ஏற்கெனவே இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். பள்ளிப்படிப்பை முடிக்கும் சூழலில், பாலின மாறுபாடு அடைந்துவந்த தங்களது மகனை ஏற்க குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இதையடுத்து 2017-ம் ஆண்டு 12-ம் வகுப்பை முடித்துவுடன் வீட்டிலிருந்து வெளியேறினார் கண்மணி. பின்னர், விடுதியில் தங்கி செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப் படிப்பை முடித்தார். இதன்மூலம் அந்த சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞரான முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார்.

கண்மணியை அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்தாலும் பள்ளி கல்லூரியில் சக மாணவர்களும், ஆசிரியர்களும், பேராசிரியர்களும் கல்வி கற்க துணை புரிந்ததாக கண்மணி கூறியுள்ளார். மேலும், வழக்கறிஞரான பின்னர் அதோடு நிறுத்தி விடாமல் சிவில் நீதிபதிக்கான தேர்வில் பங்கேற்று வெற்றி அடைய வேண்டும் என்ற நோக்கில் வேளச்சேரியில் உள்ள சந்துரு லா அகாடமியில் பயிற்சி பெற்று வருவதாகவும், கண்மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கண்மணிக்கு வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை ஆகிவற்றை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை வழங்கினார். சென்னை உயர் நீதிமன்ற வளக்கத்தில் உள்ள பார் கவுன்சில் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வர் கவுரி ரமேசும் உடனிருந்து, பாராட்டு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமல்ராஜ், "ஒவ்வொரு ஆண்டும் சட்டம் படித்து வழக்கறிஞராக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஆண்களுக்கு நிகராக பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பிற மாநிலங்களில் படித்து தமிழ்நாடு கவுன்சிலில் பதிவு செய்ய வரும் வழக்கறிஞர்களின் ஆவணங்கள் முறையாக ஆராய்ந்து பிறகே, பதிவு செய்யப்படுகிறது” எனறு அவர் கூறினார்.



Read in source website

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைக்கப்பட்டு வரும் ஆன்மிகப் பூங்காவை, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி புதுச்சேரியிலிருந்து காணொலி மூலம் இன்று (டிச.13) திறந்து வைத்தார்.

யாருக்கும் அழைப்பு கொடுக்காமல் திடீரென அவசர கதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் திறக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்கால் மாவட்டம், புதுச்சேரியின் ஆன்மிக சுற்றுலா மையமாக திகழ்கிறது. இந்நிலையில் புதுச்சேரி அரசு சார்பில் திருநள்ளாறு ”கோயில் நகரமாக” அறிவிக்கப்பட்டு, ஹட்கோ நிதியுதவியுடன் கோயில் நகரத் திட்டத்தில் பல்வேறு பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

இத்திட்டத்துக்கு மகுடம் சூட்டும் வகையில், திருநள்ளாறில் மத்திய அரசின் நிதியுதவியுடன், சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ் ரூ.7.77 கோடி செலவில், 21,897 ச.மீ பரப்பில் ஆன்மிகப் பூங்கா அமைக்கும் பணிகள் புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன நவக்கிரக கோயில்களை பிரதிபலிக்கும் வகையில் கோபுரங்களுடன் கூடிய நவக்கிரக தல அமைப்பு, சவுண்ட் சிஸ்டத்துடன் கூடிய பெரிய அளவிலான தியான மண்டபம், மூலிகைப் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் திட்டமிடப்பட்டு ஆன்மிகப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுற்றுலாத்துறை சார்பில், புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற, மத்திய அரசின் சுதேசி தர்ஷன் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள் தொடக்க நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, காணொலி மூலம் திருநள்ளாறு ஆன்மிகப் பூங்காவையும் திறந்து வைத்தார். இதில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருநள்ளாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர், துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் போராட்டம்: விழா நடைபெற்றபோது அங்கு வந்த பொதுமக்கள் சிலர், பணிகள் முடிக்கப்படாமல் அவசரகதியில், எவ்வித அறிவிப்புமின்றி திடீரென காணொலி மூலம் திறக்கப்பட்டது குறித்தும், பொதுமக்கள் அழைக்கப்படாதது குறித்தும் ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து ஆன்மிகப் பூங்கா வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருசில அதிகாரிகள் மட்டுமே இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். மாநில அரசையும், காரைக்காலையும் புறக்கணிக்கும் வகையிலான மத்திய அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தனர்.

இது குறித்து திருநள்ளாறு எம்.எல்.ஏ பி.ஆர்.சிவா இந்து தமிழிடம் கூறியது: சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் காரைக்காலில் லேண்ட் மார்க்காக அமையக்கூடிய கனவுத் திட்டம் இது. இத்திட்டத்துக்காக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளேன். கடந்த ஆட்சியில் தொய்வாக நடைபெற்ற பணிகள், தற்போதையை ஆட்சியில் விரைவுப்படுத்தப்பட்டு 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. நவக்கிரக தலங்களில் இன்னும் சாமி சிலைகள் வைக்கப்படவில்லை. தியான மண்டப பணிகள் முழுமையடையவில்லை.

பெரிய அளவிலான சிவன் சிலை ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளை முழுமையாக முடித்து ஜனவரி மாதத்தில் மக்கள் முன்னிலையில் விமரிசையான வகையில் திறக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பணிகள் முழுமை பெறாமல், யாருக்கும் தெரிவிக்காமல் அவசர கதியில் திறக்க வேண்டிய அவசியம் ஏன்? நேற்று முன் தினம் ஆட்சியரால் எனக்கு வாட்ஸ்அப் மூலம் திடீரென அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆட்சியருக்கே வாட்ஸ்அப் மூலம்தான் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. மக்களை அழைக்காமல், தனிப்பட்ட முறையில் இவ்விழா நடத்தப்பட்டதால் நான் பங்கேற்கவில்லை. அழைப்பிதழில் கூட ஆன்மிகப் பூங்கா திறப்பு என்று இல்லாமல் ஆன்மிகப் பூங்கா அபிவிருத்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார்.



Read in source website

சென்னை: புதிய தொழில்நுட்பங்களான VOD, OTT, IPTV வழங்கக் கூடிய HD செட்டாப் பாக்ஸ்களை அடுத்த ஆறு மாத காலங்களில் வழங்குவது மற்றும் TACTV OTT APP உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.13) நடந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்ட்டது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.13) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. "அரசு கேபிள் டிவி நிறுவனம்" இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், குறைந்த கட்டணத்தில் சிறந்த கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டும் 2007-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 2011-ஆம் ஆண்டு "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஒன்றிய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகத்தால் 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்க்கு DAS உரிமம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பொதுமக்களுக்கு இலவச தரநிலை வரையறை (SD) செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 2017-ஆம் ஆண்டு டிஜிட்டல் சேவையையும், 2018-ஆம் ஆண்டு HD சேவையையும் தொடங்கியது. இந்த டிஜிட்டல் SD/ HD செட்டாப் பாக்ஸ்கள் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இந்நிறுவனம் 136 கட்டணமில்லா சேனல்கள், 82 கட்டண சேனல்கள் என மொத்தம் 218 சேனல்களை ரூ.140 + GST என்ற கட்டணத்தில் டிஜிட்டல் முறையில் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது.

இதனிடையே கடந்த 19.11.2022 அன்று ஒளிபரப்பு சேவையில் ஏற்பட்ட இடையூறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் ஒளிபரப்பு சேவைகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள இடர்பாடுகளை உயர் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் நிவர்த்தி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்நிறுவனத்தின் எதிர்கால செயல்திட்டம் குறித்து கேட்டறிந்து, வணிக திட்டங்களை விரைந்து செயல்படுத்திட அறிவுறுத்தினார்.

மேலும், சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவைகளை வழங்குவது குறித்தும், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களான VOD, OTT, IPTV வழங்கக் கூடிய HD செட்டாப் பாக்ஸ்களை அடுத்த ஆறு மாத காலங்களில் வழங்குவது மற்றும் TACTV OTT APP உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மேலும் அதிக சந்தாதாரர்களைச் சேர்த்து, ஒரு முன்னோடி வர்த்தக நிறுவனமாக செயல்படவும் ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் நீரஜ் மித்தல், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அ. ஜான் லூயிஸ், முதன்மை தொழில்நுட்ப அலுவலர் ராபர்ட் ரவி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Read in source website

சென்னை: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கவுதம சித்தார்த்தன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "கடந்த மார்ச் மாதம் 7,382 குரூப் 4 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்றது. இது சம்பந்தமான அறிவிப்பாணையில் கலப்பு மணம் புரிந்தோருக்கான முன்னுரிமை வழங்குவது குறித்த எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை.

கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்காத அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல் அரசின் உத்தரவுகளை மீறிய செயல் மட்டுமல்லாமல், சமூக நீதிக்கு எதிரானது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்பட பிற தேர்வு நடைமுறைகளிலும் கலப்புமணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க உத்தரவிட வேண்டும். 7382 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரேஷ் உபாத்யாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், "வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் மூலமாக மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களில் கலப்பு மணம் புதிந்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. இது அரசின் கொள்கை முடிவு" என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரர் கலப்பு மணம் புரிந்தவர் அல்ல என்பதால் இந்த வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு அடிப்படை தகுதி இல்லை. எனவே, பணி விதிகள் தொடர்பாக பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



Read in source website

சென்னை: நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய, பதிவுச் சட்டத்தில் கூறியுள்ள காலவரம்பு தடையாக இல்லை என்ற உயர் நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என, அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக பதிவுத்துறை தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகாவில் உள்ள கீழ்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள 2.50 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில், திண்டிவனம் மாவட்ட முன்சீஃப் நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் பிறப்பித்த தீர்ப்பை பதிவு செய்யக் கோரி, மரக்காணம் சார் பதிவாளரிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நீதிமன்றம் தீர்ப்பளித்த நான்கு மாதங்களில் பதிவு செய்ய வேண்டும் என பதிவுச் சட்டம் கூறியுள்ளதாகவும், உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு நகல் பெற்று நான்கு ஆண்டுகளுக்குப் பின் பதிவு செய்ய கோருவதை ஏற்க முடியாது எனக் கூறி, பதிவு செய்ய மறுத்து மரக்காணம் சார் பதிவாளர் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்து, தீர்ப்பை பதிவு செய்ய சார் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், நீதிமன்றங்கள் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை பதிவு செய்வதற்கு, பதிவுச் சட்டத்தில் உள்ள காலவரம்பு தடையாக இருக்காது என உயர் நீதிமன்றம் பல வழக்குகளில் உத்தரவு பிறப்பித்த போதும், சார் பதிவாளர்கள் அதே நிலைபாட்டை பின்பற்றுவதாக அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், நீதிமன்ற தீர்ப்புகளை பதிவு செய்ய, பதிவுச் சட்டத்தில் கூறியுள்ள காலவரம்பு தடையாக இல்லை என்ற உயர் நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என, அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என, பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு மதிப்பு அடிப்படையில் பதிவுக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டுமே தவிர, சொத்து மதிப்பில் பதிவுக்கட்டணம் செலுத்தும்படி நிர்பந்திக்க கூடாது எனவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை மீறும் பதிவுத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்த நீதிபதி சுரேஷ்குமார், இந்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என, மரக்காணம் சார் பதிவாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.



Read in source website

சென்னை: தமிழ்நாட்டில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தடை செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்கொலைகளை தடுக்கும் வகையில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி monocrotophos, profenofos, acephate, profenofos + cypermethrin, chlorpyrifos + cypermethrin உள்ளிட்ட பூச்சிக்கொல்லிகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் எலிகளை கொல்லப் பயன்படுத்தப்படும் மஞ்சள் பாஸ்பரஸ் என்ற ரடோல் பூச்சிக்கொல்லி மருந்திற்கு நிரந்தர தடையும் விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.



Read in source website

சென்னை: இந்தியாவின் பொருளாதாரம் வரும் 2047-ம் ஆண்டுக்குள்8 முதல் 9 சதவீதம் வளர்ச்சி அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், சென்னை பொருளாதார கல்வி நிறுவனத்தின் தலைவருமான சி.ரங்கராஜன் தெரிவித்தார்.

சென்னை சுங்கத் துறை அலுவலகம் சார்பில், சுங்கத் துறை சட்டம் 1962 இயற்றப்பட்டதன் 60-ம் ஆண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

சென்னை மண்டல சுங்கத் துறை தலைமை ஆணையர் எம்விஎஸ்சவுத்ரி வரவேற்புரை ஆற்றினார். அவர் கூறும்போது, “பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் சுங்கத்துறை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாகவேவர்த்தகம் மற்றும் வரி வசூலிக்கும் முறை நம் நாட்டில் இருந்தது.இங்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பாகவே வரி வசூலிக்கும் முறை இருந்துள்ளது.

திறமையான வரி நிர்வாகம்: சுங்கத் துறை சட்டம் இயற்றப்பட்ட 60 ஆண்டுகளைக் கொண்டாடும் இத்தருணத்தில், நம் நாட்டில் திறமையான வரி நிர்வாகம் செயல்பாட்டில் உள்ளது. போதைப் பொருள், தங்கம், விலங்குகள், வன உயிரினங்கள் கடத்தல் ஆகியவற்றை கண்டுபிடித்து திறம்பட தடுத்து வருகிறது சுங்கத் துறை.

பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்காக உலக நாடுகளுடன் இந்தியா இணைந்து பணியாற்றி வருகிறது. விலங்குகளைக் கடத்துவது ஒட்டுமொத்த உலகுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. சுங்கத் துறை இத்தகைய கடத்தல்களை தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும்” என்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், சென்னை பொருளாதார கல்வி நிறுவனத்தின் தலைவருமான சி.ரங்கராஜன் பேசியதாவது: நாட்டின் வருவாய் வளர்ச்சிக்கு சுங்கத் துறை முக்கிய பங்காற்றி வருகிறது. 1990-ம் ஆண்டு மத்திய அரசின் மொத்த வருவாயில் 36 சதவீதம் சுங்கத் துறை மூலம் கிடைத்தது. பொருளாதாரத்தையும் தாண்டி நாட்டில் உள்ள தாவரங்கள்,விலங்குகளை காப்பதையும் சுங்கத்துறை குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும்.

பயணிகளிடம் கனிவு: வாடிக்கையாளர்களுடன் சுங்கத் துறை நல்லுறவை வளர்க்க வேண்டும். வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் விமானத்தில் அசதியாக வந்து இறங்கும் பயணிகளிடத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்.

நாட்டில் வரி குறைக்கப்பட்ட பிறகு வருமான வரி செலுத்துவது 96 சதவீதம் அதிகரித்தது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை உள்நாட்டில் தயாரிக்க வேண்டும். இறக்குமதியை அனுமதிக்க வேண்டும். அதேசமயம், இறக்குமதியை முழு அளவில் அனுமதிக்காமல் கட்டுப்படுத்த வேண்டும்.

கடந்த 1970 முதல் 1980-ம் ஆண்டு வரை உலக அளவிலான ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு இரண்டரை சதவீதமாக இருந்தது. இறக்குமதி வரி கொள்கை காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதனால், 1990-ம்ஆண்டு இந்தியா கடும் பொருளாதார சிக்கலை சந்தித்தது.

பின்னர் எடுக்கப்பட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக, கடந்த 1990-ம் ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.75 சதவீதமாக உயர்ந்தது. தற்போது இது 11.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டு உலகமயமாக்கல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு அபார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம்8 முதல் 9 சதவீதம் வளர்ச்சி அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய கலால், சுங்கத் துறை வாரியத்தின் முன்னாள் தலைவர் அஜித் குமார், உறுப்பினர் ரமா மேத்யூ ஆகியோர் பேசினர்.



Read in source website

திருவனந்தபுரம்: பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கும் சட்ட முன்வடிவு, கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கேரளாவில் ஆளுநர் முகம்மது ஆரிப் கானுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக ஆளுநர் ஆரிப் முகம்மது கான் குற்றம்சாட்டி இருந்தார். ஆளுநர் மீது கேரள அரசும் குற்றம் சாட்டி இருந்தது.

இந்நிலையில், பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கும் சட்ட முன்வடிவு கேரள சட்டப்பேரவையில் கடந்த 7-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. சட்ட அமைச்சர் ராஜீவ் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். பல்கலைக்கழக வேந்தரை 3 பேர் கொண்ட குழு தேர்வு செய்யும் என்றும், இந்த குழுவில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் ஆகியோர் இடம்பெற்றிருப்பர் என்றும் இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேந்தராக தேர்வு செய்யப்படுபவர், விவசாயம், கால்நடை மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், சமூக அறிவியல், இலக்கியம், கலை, கலாச்சாரம், சட்டம், பொது நிர்வாகம் என ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்கும் கல்வியாளராக இருப்பார் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேந்தரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் என்றும் மீண்டும் ஒரு முறையோ அல்லது பல முறையோ அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்படலாம் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேந்தராக நியமிக்கப்பட்டவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இருந்தால் முன்கூட்டியே அரசுக்கு எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, சட்டப்பேரவை ஆய்வுக் குழுவின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என தெரிவித்துள்ள எதிர்க்கட்சியான காங்கிரஸ், புதிய வேந்தரை நியமிப்பதற்கான அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வேந்தராக நியமிக்கப்படுபவர் கல்வியாளராக இருப்பதற்குப் பதில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது ஓய்வுபெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாகவோ இருக்க வேண்டும் என்பதையே காங்கிரஸ் வலியுறுத்துவதாக கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் தெரிவித்துள்ளார். தங்களுக்கு வேண்டியவர்களை வேந்தர்களாக நியமிக்க முயல்வதன் மூலம் இந்த விவகாரத்தை அரசு அரசியலாக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.



Read in source website

புதுடெல்லி: கருடா கமாண்டோ படையில் பெண் அதிகாரிகளை சேர்க்க இந்திய விமானப் படை முடிவு செய்துள்ளது.

இந்திய விமானப் படையில் கருடா கமாண்டோ படைப் பிரிவு 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் ஆண்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர். இந்நிலை யில் இந்த கமாண்டோ படையில், பாலின சமத்துவத்தைப் போற்றும் வகையில் பெண் அதிகாரிகளை யும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமானப் படைமூத்த அதிகாரி ஒருவர் நேற்றுகூறியதாவது: கருடா கமாண்டோ படையில் விரைவில் பெண் அதிகாரிகள் சேர்க்கப்படுவர். அவர்கள் மரைன் கமாண்டோக்கள் (மார்க்கோஸ்) என்று அழைக்கப்படுவர்.

தேர்வில் பாகுபாடு இருக்காது: ஏற்கெனவே இந்திய கடற் படையிலும் பெண் அதிகாரிகளை சிறப்புப் பிரிவில் சேர்த்து வரும் நிலையில் தற்போது விமானப் படையிலும் பெண்களைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஆள் தேர்வில் எந்தவிதபாகுபாடும் இருக்காது. ஆண்களைச் சேர்ப்பதற்கு என்னென்னவிதிமுறைகள் கடைபிடிக்கப்படு கிறதோ அவை அனைத்தும் பெண் அதிகாரிகளைத் தேர்வு செய்யும் போது கடைபிடிக்கப்படும்.

கமாண்டோ படையில் பெண் அதிகாரிகளைச் சேர்ப்பதற்கு முன்புஅவர்களிடம் அதற்கு ஒப்புதல் பெறப்படும். தாமாகவே முன்வந்தால் மட்டுமே அவர்கள் கமாண்டோபடையில் சேர்க்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல்விமானப் படையின் போர் விமானங்களிலும் பெண் அதிகாரிகளை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைப் போலவே இந்தியகடற்படையிலும் போர்க் கப்பல்களில் பெண் அதிகாரிகளை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டது. அதேபோல் ராணுவத்தில் உள்ள ஹெலிகாப்டர்களை இயக்கும் பொறுப்பில் பெண் பைலட்டுகள் நியமிக்கப்பட்டனர்.

ஆனாலும், ராணுவத்தின் காலாட் படை பிரிவில் கவச வாகனங்களை இயக்கும் பொறுப்பிலும், நேருக்கு நேர் போர் புரியும் பொறுப்பிலும் பெண்கள் இன்னும் சேர்க்கப்படவில்லை.



Read in source website

புதுடெல்லி: மத்திய கனரகத் தொழில் துறை அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மாறுதல் மற்றும் உற்பத்தி என்ற எஃப்ஏஎம்இ (FAME) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எஃப்ஏஎம்இ திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 68 நகரங்களில் 2,877 மின் வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள 16 நெடுஞ்சாலைகள் மற்றும் 9 விரைவுச் சாலைகளில் 1576 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதில், தமிழகத்தில் 281 சார்ஜிங் நிலையங்களும், புதுவையில் 10 சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்படும். அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவுக்கு 317 சார்ஜிங் நிலையங்களுக்கும், ஆந்திரப் பிரதேசத்தில் 266 சார்ஜிங் நிலையங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எஃப்ஏஎம்இ-திட்டத்தின் முதற்கட்டமாக 520 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கனரக தொழிற்துறை இணையமைச்சர் கிருஷன் பால் குஜார் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.



Read in source website

சென்னை: மத்திய அரசின் ‘உத்யம் சகி’ இணையதளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 1,067 பெண் தொழில் முனைவோர் பதிவு செய்துள்ளனர்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் பெண் தொழில் முனைவோருக்கு மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் மூலம் அளிக்கப்படும் நிதித்திட்டங்கள், கொள்கைகள் குறித்த தகவல்களை ‘உத்யம் சகி’ இணையதளம் (https://udyam-sakhi.com) அளிக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் வரை ‘உத்யம் சகி’ இணையதளத்தில் பதிவு செய்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோரின் மாவட்ட வாரியான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, ராணிப்பேட்டையில் 334 பேர், சேலத்தில் 163, திருவண்ணாமலையில் 210, வேலூரில் 360 என மொத்தம் 1,067 பெண் தொழில் முனைவோர் அக்டோபர் 22 வரை பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணைஅமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா, எழுத்துப்பூர்வமாக நேற்று தெரிவித்ததாக, பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.



Read in source website

மாஸ்கோ: கச்சா எண்ணெய் விலை மீதான ஜி7 நாடுகளின் உச்சவரம்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை சமாளிக்க, மிகப்பெரிய டேங்கர் கப்பலை தயாரிக்க இந்தியாவுக்கு உதவ தயார் என ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இதையடுத்து, கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் வழங்க ரஷ்யா முன்வந்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இந்தியா, அந்த நாட்டிடமிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயை அதிகரித்தது.

இதனால் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ததில் ரஷ்யா முதலிடம் பிடித்தது. இதற்கு முன்பு ஈராக், சவுதி அரேபியா ஆகிய நாடுகள்தான் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முன்னிலை வகித்தன.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் முடிவுக்கு மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், நாட்டு நலன் கருதி குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வாங்க உரிமை உள்ளது என இந்தியா கூறி வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் விவகாரத்தில் பணிய மறுக்கும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வருவாயை குறைக்க ஜி7 மற்றும் ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளன.

இதற்காக, கடந்த 5-ம் தேதி கச்சா எண்ணெய் விலை மீது உச்சவரம்பை அறிவித்துள்ளன. அதாவது பீப்பாய் ஒன்றுக்கு 60 அமெரிக்க டாலருக்கு மேல் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்க முடியாது.

மேலும் உச்ச வரம்பை மீறி கூடுதல் விலையில் விற்கப்படும் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்ல கப்பல்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 5-ம் தேதிக்கு முன்பே கப்பலில் ஏற்றப்பட்ட கச்சா எண்ணெயை ஜனவரி 19-ம் தேதிக்குள் விநியோகிக்க தடை இல்லை.

இந்த சூழ்நிலையில், உச்ச வரம்பு நிர்ணயித்தாலும், ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதை ரஷ்யா வரவேற்றுள்ளது.

இதனிடையே, ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதர் பவன் கபூரை சமீபத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்ய கச்சா எண்ணெய் மீது விதிக்கப்பட்டுள்ள விலை உச்ச வரம்பை ஆதரிக்கப் போவதில்லை என்ற இந்தியாவின் முடிவை துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் வரவேற்றுள்ளார். மேலும் ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த கப்பல் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையை சமாளிக்க பெரிய டேங்கர் கப்பல் களை தயாரிக்கவோ குத்தகைக்கு எடுக்கவோ இந்தியாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

டிசம்பர் 9 அன்று, அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங்கில் சீன துருப்புக்கள் ஊடுருவல் நடத்தியதாகவும், ஒருதலைப்பட்சமாக தற்போதைய நிலையை மாற்ற முயற்சித்ததாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்தார்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 13) நாடாளுமன்றத்தில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்.ஏசி.) தற்போதைய நிலையை மாற்றும் சீனாவின் முயற்சியை இந்திய ராணுவம் எதிர்த்து, ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்ட மக்கள் விடுதலை ராணுவ (சீனா) வீரர்களை விரட்டியடித்தது என்று கூறினார். இந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இதுவரை நாம் அறிந்தவை இதோ.

இந்தியா-சீனா மோதல்: அருணாச்சல பிரதேசம் தவாங்கில் நடந்தது என்ன?

டிசம்பர் 9 அன்று, அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்சே பகுதியில் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்.ஏ.சி) குறுக்கே சீன துருப்புக்கள் ஊடுருவல் நடத்தியதாகவும், ஒருதலைப்பட்சமாக தற்போதைய நிலையை மாற்ற முயற்சித்ததாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்தார்.

இந்திய துருப்புக்கள் சீனாவின் இந்த முயற்சியை “உறுதியுடன்” எதிர்த்தன, மேலும் இந்த மோதலில் ஒரு கைகலப்பு நடந்தது. “நமது ராணுவம் மிகுந்த துணிச்சலுடன் சீன ராணுவ ஊடுருவலை தடுத்து நிறுத்தி, அவர்களை தங்கள் நிலைக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்தியது” என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் சில காயங்களுக்கு உள்ளானதாகவும், ஆனால் எந்த இந்திய சிப்பாயும் உயிரிழக்கவில்லை அல்லது பலத்த காயம் அடையவில்லை என்றும் அவர் கூறினார். அதைத் தொடர்ந்து, ராணுவத்தின் உள்ளூர் தளபதி டிசம்பர் 11 அன்று சீன தளபதியுடன் கொடி சந்திப்பை நடத்தினார், அப்போது எல்லையில் அமைதியைப் பேணுமாறு சீனத் தரப்பு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் சீனத் தரப்பிடம் தூதரக மட்டத்திலும் எழுப்பப்பட்டுள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

LAC இல் இது என்ன வகையான “மோதல்”?

இருதரப்பு வீரர்கள் ஒருவரையொருவர் கட்டைகள் மற்றும் பிரம்புகளால் அடித்துக் கொண்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மோதலில் காயமடைந்த இந்திய வீரர்கள் கவுகாத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 2020 இல் கிழக்கு லடாக்கில் நடந்த கல்வான் சம்பவத்திற்குப் பிறகு இந்திய துருப்புக்களும் சீன துருப்புகளும் சந்தித்த மிக நெருக்கமான மோதல் இதுவாகும்.

டிசம்பர் 12 அன்று, ராணுவம் ஒரு அறிக்கையில், “இரு தரப்பிலிருந்தும் சில வீரர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது” என்று கூறியது. எவ்வாறாயினும், “இரு தரப்பும் உடனடியாக அப்பகுதியில் இருந்து வெளியேறியது” என்று இராணுவம் கூறியது.

இந்தியா-சீனா மோதல் சரியாக எங்கு நடந்தது, அது எப்படி தொடங்கியது?

கிழக்கு தவாங்கில் யாங்ட்சே என்ற புள்ளிக்கு அருகில் உள்ள தவாங் உயரத்தில் உள்ள LAC நெடுகிலும் உள்ள ஒரு நுல்லாவில் டிசம்பர் 9 அன்று அதிகாலை 3 மணியளவில் மோதல் ஏற்பட்டது. இராணுவ ஆதாரங்களின்படி, LAC இன் இந்த பகுதி இரு தரப்புக்கும் இடையே “ஒப்புக்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளில்” ஒன்றாகும்.

இந்திய மற்றும் சீன துருப்புக்கள் நுல்லாவின் இருபுறமும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன, ஆனால் அன்றைய இரவில், சுமார் 300 சீன துருப்புக்கள் இந்தியப் பகுதிக்குள் வந்தன.

அத்துமீறல் மற்றும் காவலர்கள் தாக்கப்பட்டதைக் கேட்டது பற்றி எந்த எச்சரிக்கை அறிகுறிகளும் இல்லை, ஊடுருவியவர்களைத் திருப்பி அனுப்ப 70 முதல் 80 இந்திய துருப்புக்கள் இரவோடு இரவாக விரைவாக அணிதிரண்டனர். ஆதாரங்களின்படி, சில மணி நேரம் கட்டைகள் மற்றும் பிரம்புகளுடன் கடுமையான கைகலப்பு சண்டை நடந்தது.

சீன வீரர்கள் ஏன் இந்திய பக்கம் வந்தார்கள்?

ஒரு இராணுவ வட்டாரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியது, “அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங் செக்டரில் எல்.ஏ.சி.,யை ஒட்டிய சில பகுதிகளில் இருதரப்பும் தங்கள் உரிமைகோரல் வரை ரோந்து செல்லும் பகுதிகள் வேறுபடுகின்றன. 2006ல் இருந்து இதுதான் டிரெண்ட்.”

ஜூன் 2016 இல் இதேபோன்ற மீறல் நடந்தது, அப்போது சுமார் 250 சீன வீரர்கள் அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தனர், ஆனால் பின்னர் எந்த மோதல்களும் பதிவாகவில்லை. அப்பகுதியில் பணியாற்றிய ஒரு இராணுவ அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “சீனர்கள் அந்த பகுதியில் உள்ள உயரும் ஏணியை நிரந்தரமாக கட்டுப்படுத்துவது” போன்ற செயல்பாடுகளை சீன ராணுவம் எப்போது மேற்கொள்ளும் என்று கணிக்க முடியாது என்றும் அவர்கள் “அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில்” அவ்வாறு செய்கிறார்கள் என்றும் கூறினார்.

அரசாங்கத்தின் உயர்மட்ட ஆதாரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், இந்த முறை சீன ராணுவம் ஒரு “சந்தர்ப்பமான” நேரத்துக்காக அத்துமீறலை “முன்கூட்டியே திட்டமிட்டுள்ளது” என்று கூறினார். மோதலின் இடம் மிகவும் காடுகள் நிறைந்த நிலப்பரப்பாக விவரிக்கப்படுகிறது, சீன துருப்புக்கள் ஆழமான விநியோகக் கோடுகள் மற்றும் உள்கட்டமைப்புடன் “சுவரின் மேல்” நிலைகளை ஆக்கிரமித்துள்ளன.

இப்பகுதியில் பனிப்பொழிவு காரணமாக, சில இந்திய துருப்புக்கள் தங்கள் நிலைகளில் இருந்து பின்வாங்குவதற்கான நேரம் இதுவாகும், இது சீனத் தரப்புக்கு மேலும் தந்திரோபாய மேலாதிக்கத்தைக் கொடுக்கும் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. அதிக மேக மூட்டம் இந்திய செயற்கைக்கோள்களுக்கு எந்தவொரு துருப்புக் கட்டமைப்பின் படங்களையும் எடுப்பதை சவாலாக மாற்றியது.

எல்லை மோதலுக்கு பெரிய சூழல் உள்ளதா?

1993 மற்றும் 1996 எல்லை ஒப்பந்தங்களை மீறியதாகக் கூறி, உத்தரகாண்ட் மலைகளில் உள்ள அவுலியில் இந்தியா-அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சியான ஆபரேஷன் யுதாபியஸ் நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.

3,000 கிமீ எல்.ஏ.சி.,யில் பல்வேறு புள்ளிகளில் தொடரும் இராணுவ பதட்டங்கள், சீனாவை உள்ளடக்கிய உலகின் முன்னணி பொருளாதாரங்களின் குழுவான G20 இன் ஒரு பகுதியாக புது தில்லி தொடர்ச்சியான நிகழ்வுகளைத் தொடங்கியுள்ள நேரத்தில் நிகழ்ந்துள்ளது.

நவம்பர் மாதம் பாலியில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து மரியாதைகளை பரிமாறிக்கொண்டனர், ஆனால் எந்த முக்கியப் பேச்சுவார்த்தைகளும் விவாதங்களும் நடைபெறவில்லை.

இதற்கிடையில், லடாக்கில் எல்.ஏ.சி.,யில் என்ன நடக்கிறது?

மூன்று மாதங்களுக்கு முன்பு, செப்டம்பரில், கிழக்கு லடாக்கின் கோக்ரா ஹாட்ஸ்பிரிங் பகுதியில் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் மோதிக் கொண்டன, இது பல இடங்களில் சீனா ஊடுருவல் நடத்தியதற்கு பிறகு மே 2020 இல் தொடங்கிய 16 சுற்று இராணுவத் தளபதி மட்ட பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்பட்ட ஒப்புக் கொள்ளப்பட்ட “மோதல் புள்ளிகளில்” கடைசியாக இருந்தது.

20 இந்திய வீரர்களின் உயிரைக் கொன்ற கல்வான் சம்பவம், இரு தரப்பினரும் அப்பகுதியில் பிரிந்து செல்வது குறித்து விவாதித்த பின்னர் வந்தது.

டெப்சாங்கில் சீன துருப்புக்கள் குவிப்பு, டெம்சோக்கில் ஊடுருவல்கள் மற்றும் சீனர்கள் கட்டமைக்கும் விரைவான உள்கட்டமைப்பு ஆகியவற்றால் லடாக்கில் பதட்டங்கள் தொடர்கின்றன, இதில் பாங்காங் ஏரியின் மீது இரண்டு பாலங்கள் உள்ளன, அவை தெற்குக் கரையில் சீன அணிதிரள்வதற்கான சிக்கல்களைக் குறைக்கும்.

இந்தியா-சீனா உறவுகள் குறித்து சமீபத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், “எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவும் வரை… ஒப்பந்தங்களைக் கடைப்பிடிக்காத வரையில், தற்போதைய நிலையை மாற்ற ஒருதலைப்பட்ச முயற்சி இல்லை… நிலைமை சாதாரணமாக இருக்க முடியாது.” என்றார்.

தவாங் சம்பவம் அப்பகுதியில் துருப்புக்களை உஷார்படுத்தியுள்ளது.



Read in source website

சென்னை மாநகரம் அதிவேக வளா்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறது. பரந்தூா் விமான நிலையமும் வந்துவிட்டால், சென்னை அடையக்கூடிய அசுர வளா்ச்சியை நினைத்துக்கூடப் பாா்க்க முடியவில்லை. இப்போது தாம்பரம்போல, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், அரக்கோணம் உள்ளிட்ட நகரங்கள் பெருநகரச் சென்னையின் பகுதிகளாகும் காலம் வெகுதொலைவில் இல்லை.

இப்போதைய பெருநகர மாநகராட்சியின் வளா்ச்சியே முறையானதாக இல்லை. குறிப்பாக, புறநகா்ப் பகுதிகள் முறையாகத் திட்டமிடப்படாமல், முறையான சாலை வசதிகள், கழிவுநீா், வடிகால் வசதிகள், திறந்த வெளிகள் இல்லாமல் காணப்படுகின்றன. போதுமான பசுமைப் பூங்காக்களும், மரங்களும் இருக்கின்றனவா என்றால் இல்லை. அப்படி இருக்கும்போது, திடீா் அசுர வளா்ச்சி காணும்போது, முறையான திட்டமிடல் இல்லாமல் போனால் அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கக்கூடும்.

நகரங்கள் விரிவாக்கம் பெறும்போது அதனால் பாதிக்கப்படுவது அந்த நகரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள்தான். விவசாய நிலங்களும், தோப்புகளும், சாலையோர மரங்களும்தாம் விரிவாக்கத்தால் கபளீகரம் செய்யப்படும் பகுதிகள். அதை ஈடுகட்டும் வகையில் விரிவாக்கப் பகுதிகளில் பசுமை ஒதுக்கீடுகள் திட்டமிடப்படுகின்றனவா என்றால் இல்லை. இதுகுறித்து கவலைப்படாத, சிந்திக்காத சுற்றுச்சூழல் ஆா்வலா்களே இல்லை எனலாம்.

தற்போதைய பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளையே எடுத்துக் கொண்டால், விதிமீறல் கட்டடங்களின் பிரச்னையும், சட்டவிரோத கழிவுநீா் இணைப்புகளும் எண்ணிலடங்காதவை. அவை குறித்து துணிந்து நடவடிக்கை எடுக்க எந்த அரசும் தயாராக இல்லை. அப்படியே அரசு தயாராக இருந்தாலும், நீதித் துறையின் இடைக்காலத் தடை பெற்று விதிமீறல்கள் தொடா்கின்றன.

குறைந்தபட்சம், பெருநகர மாநகராட்சிப் பகுதியில் பொதுமக்கள் பொழுதுபோக்கவும், காலாற நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் பூங்காக்கள் சரிவரப் பராமரிக்கப்படுகிா என்றால் அதுவும் இல்லை. பராமரிப்பது ஒருபுறமிருக்க, முதலில் அத்தனை கோட்டங்களிலும் பூங்காக்கள் இருக்கின்றனவா என்றால் கிடையாது. சில கோட்டங்களில் அதிகமான பூங்காக்களும், சிலவற்றில் பூங்காக்களே இல்லாத நிலைமையும் காணப்படுகிறது.

சென்னை பெருநகர மாநாகராட்சியில் 200 டிவிஷன்கள் (கோட்டங்கள்) உள்ளன. ஆங்காங்கே காணப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் திறந்தவெளி ஒதுக்கீட்டுப் பகுதிகளும், சாலையோரப் பூங்காக்களும் சோ்த்து 200 டிவிஷன்களில் 702 பூங்காக்கள் உள்ளன. வட சென்னையில் 143, மத்திய சென்னையில் 234, தென் சென்னையில் 325 என்று சமநிலையற்ற தன்மை காணப்படுகிறது. மக்கள்தொகை நெருக்கம் அதிகமாக உள்ள வடசென்னையில் குறைந்த அளவு பூங்காக்கள் உள்ளதில் இருந்தே, திட்டமிடலின் போதாமையை நாம் புரிந்து கொள்ளலாம்.

சென்னை போன்ற பெருநகரத்தின் மக்கள்தெகைக்கும், பரப்பளவுக்கும் ஏற்ற அளவில் பூங்காக்கள் இல்லாமல் இருப்பதற்கு ஊழலும், ஆட்சியாளா்கள் முறைகேடுகளுக்கு துணைபோவதும்தான் முக்கியக் காரணங்கள். விளையாட்டு மைதானங்களுக்காகவும், பூங்காக்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட இடங்களை, அரசின் சிறப்பு அனுமதியுடன், பல தனியாா் கல்வி நிறுவனங்கள் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றை மீட்டெடுப்பது சாத்தியமில்லை.

தலைநகா் தில்லியில் 18,000 பூங்காக்களும், சென்னையைவிட சிறிய நகரமான பெங்களூரில் 1,247 பூங்காக்களும் இருக்கும்போது, நமது சிங்காரச் சென்னையில் 702 பூங்காக்கள்தான் இருக்கின்றன. அவற்றில் பல பூங்காக்கள், பெயருக்குத்தான் இருக்கின்றன. பராமரிப்பு இல்லாமலும், மக்களுக்கு பயன்படாமலும் சமூக விரோதிகளின் பொழுதுபோக்குக்கு விடப்பட்டிருக்கும் பூங்காக்கள் நிறையவே உள்ளன.

பூங்காக்களை முறையாகப் பராமரிப்பதற்கான தீா்வு அவற்றைத் தனியாரிடம் ஒப்படைப்பதுதான் என்று யாராவது நினைத்தால் அது தவறு. சென்னையிலுள்ள 702 பூங்காக்களில் 542 பூங்காக்கள் ஏற்கெனவே தனியாா் ஒப்பந்தக்காரா்களின் பராமரிப்பில்தான் விடப்பட்டிருக்கினறன. தனியாரிடம் பராமரிக்கக் கொடுத்த பூங்காக்கள் பல செடி, கொடி, மரங்களுக்குத் தண்ணீா் பாய்ச்சாமலும், முறையாகக் காவலா்கள், தோட்டக்காரா்கள் இல்லாமலும் பொலிவிழந்து காணப்படுகின்றன.

இதெல்லாம் போதாதென்று, இருக்கும் சில பூங்காக்களும் வளா்ச்சிப் பணிகள் என்கிற பெயரில் ஆக்கிரமிக்கப்படுகின்றன. ஷெனாய் நகா் திரு.வி.க. பூங்காவில் சென்னை மெட்ரோ ரயில் நிலையத்துக்காக 300 மரங்களும், நேரு பூங்காவில் 65 மரங்களும் வெட்டப்பட்டிருக்கின்றன. மெட்ரோ ரயில் பணிக்காக மேலும் பல பூங்காக்கள் பலியாகி உள்ளன.

செம்மொழிப் பூங்கா, தொல்காப்பியப் பூங்கா என்று சில பூங்காக்கள் பொலிவு பெறுகின்றன என்றாலும், பரவலாக எந்தவொரு மாநகராட்சி கோட்டத்திலும் பூங்காக்கள் பராமரித்தல் இல்லை; சுத்தமான காற்றை சுவாசிக்கவும், இயற்கையை ரசிக்கவும் பூங்காக்கள் இருக்கிா என்றால் கிடையாது. அப்படியே இருந்தாலும், அந்தப் பூங்காக்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. இதற்கு என்னதான் தீா்வு?

பொதுத்துறையில் உள்ள வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவைகளும், அரசின் தோட்டக்கலைத் துறையும், சுற்றுலாத் துறையும் பூங்காக்களைத் தத்தெடுத்து தங்களது செலவில் பராமரிக்க அனுமதிப்பதன் மூலம் ஓரளவு அவற்றின் பராமரிப்பை உறுதிப்படுத்தலாம். பூங்காக்களைப் பராமரிக்க சென்னை பெருநகர மாநகராட்சி முறையாக முனைப்புக் காட்டாதவரை, சிங்காரச் சென்னை என்பது கேட்பதற்கு மட்டும்தான் அழகாக இருக்கும்.



Read in source website

மொழி என்பது மனித அறிவின் வெளிப்பாடு மட்டுமன்று; நாகரிகத்தின் அடையாளமும் அதுவே. நாணயம் என்னும் மதிப்பு பொருளாதாரத்தை உணா்த்துவது; நாநயம் மனிதனின் தரத்தை உணா்த்துவது. உலகத்தில் எல்லாப் பொருள்களிலும் விளங்குகிற நன்மையும் தீமையும் சொற்களாலேயே முதலில் வெளிப்படுகின்றன. ஆதலால்தான் ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்கிறது தமிழ் மரபு.

அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்காது இயன்றது அறம்

என்கிறாா் திருவள்ளுவா்.

அழுக்காறு, அவா, வெகுளி இம்மூன்றின் மொத்த வெளிப்பாடுதான் இன்னாச்சொல் என்பது அதன் உட்பொருள். அறத்தின் அடிப்படையாக விளங்குகிற வாய்மையைக் கைக்கொள்ள வேண்டுமாயின் அதற்கு முதல் எதிரியாக விளங்குகிற இன்னாச் சொல்லை நீக்குதல் வேண்டும்.

கிராம வழக்கில் இனியவற்றையும் இன்னாதவற்றையும் சுட்ட வேண்டுமானால் அவை குறித்த சொற்களை அப்படியே பயன்படுத்துவா். ஆனால் கேட்டினையும் கூட நயத்தோடு கூறும் பாங்கு திருவள்ளுவா் நமக்குக் கற்றுத் தரும் மொழிநுட்பப் பாடமாகும். அதனால்தான்,

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவா்ந் தற்று

என்று தீயசொல்லையும் நல்லுவகைச் சொல்லால் சுட்டிக் காட்டுகிறாா்.

இனிய சொல்லுக்குக் கனியை உவமையாகப் பயன்படுத்துவது பெருமைதான். ஆனால் இன்னாத சொல்லான தீச்சொல்லைச் சுட்டுவதற்குக் கூடத் தீய சொல்லையோ பொருளையோ பயன்படுத்தவில்லை. இதற்கு அவா் கூறும் காரணம்தான் நாம் உணர வேண்டிய மொழிப் பாடமாகும்.

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்

ஒரு சொல்லேயாயினும் கேட்பவா்க்கு இனிமை தருவதாயிருந்தாலும் அது தீமைப் பொருளைப் பயக்குமாயின், நன்மையின்றியே ஆகிவிடும். சான்றோரும் விரும்பாத அந்தச் சொல்லால் என்ன பயன் என்பதுதான் வள்ளுவரின் உட்கருத்து.

சமண சமயத்தின் ஒழுக்கங்களை வரையறுக்கும் ஐந்து சமிதிகளில் இரண்டாவது சமிதிக்கு ‘பாஷா சமிதி’ என்று பெயா். நாவடக்கம் என்று இது பெயா் பெறும். பழித்துப் பேசுதல், புகழ்ந்து பேசுதல், சினந்து பேசுதல், கடுஞ்சொல் பேசுதல் இவற்றையெல்லாம் நீக்கி விட்டு இனிமையான அறமுடைய சொற்களை மட்டுமே பேச வேண்டும் என்பது சமணசமயம் உணா்த்தும் வாழ்வியலுக்கான அடிப்படை விதி.

வியப்பின் காரணமாக எழுகிற புகழ்மொழிகளைத் தவிா்ப்பது போலவே, இகழ்ச்சியின் காரணமாகத் தோன்றும் தீமொழிகளையும் தவிா்த்து விடுதல் என்பது தமிழா் மொழியறம். இதனைத்தான் புறநானூறு, ‘பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்று சுட்டியது.

தொல்காப்பியம் ‘அவையல் கிளவி’ என்றே இதற்கு இலக்கணம் வகுக்கிறது. சான்றோா்கள் நிறைந்திருக்கிற அவையில் கூறக்கூடாத சொற்களையே அவையல் கிளவி என்கிறோம். இதுபோன்றே ‘இடக்கரடக்கல்’ என்னும் வழக்கும் நமக்கு உண்டு.

இன்றைக்கு வளா்ந்து வருகிற உலகமயச் சூழலில் பலமொழிகளையும் கலந்து பேசி வருகிறோம். ஆனால் துரதிருஷடவசமாக எல்லா மொழிகளிலும் இருக்கிற தீச்சொற்களே முதலில் நமக்கு மனப்பாடமாகி விடுகின்றன. அதிலும் குறிப்பாகக் குழந்தைப் பருவத்திலேயே இச்சொற்கள் பழக்கமாகி விடுகின்றன. பள்ளிக்காலத்தின் பாலபருவத்தில் இவ்வாறு வழங்கப்படும் சொற்களுக்குக் ‘கெட்ட வாா்த்தைகள்’ என்று பெயா்.

ஆங்கிலமொழியின் இதுபோன்ற வாா்த்தைகள் இன்று தமிழில் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் உள்ள கெட்ட வாா்த்தைகளை ஒருங்கு சோ்த்தால் ஒரு பெரிய அகராதியையே உருவாக்கி விடலாம் என்பது எத்தனை அவலம்? இந்தக் கெட்ட வாா்த்தைகள் நாம் கோபமுறும்போதும், ஏமாற்றமடையும்போதும், வன்முறை வெளிப்பாட்டின்போதும், இகழ்ச்சியின்போதும் நொந்து கொள்கிற வேளையிலும் நம்மையறியாமலே நம் வாயிலிருந்து தோன்றி விடுகின்றன.

இவற்றை வாய்ச்சொல் என்று கூறக் காரணமுண்டு. இவை அறிவினால் மனத்திலிருந்து உண்டாகும் சொற்களாகா. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டுமல்ல சொல்லும் மட்டுத்தான். நமது மனநிலை குமைந்து இயல்பு கெடுகிற வேளையில் முதலில் ஏற்படுகிற தடுமாற்றம் நாவிலேயே நிகழ்கிறது. அங்கிருந்துதான் தீச்சொற்களாகிய கெட்ட வாா்த்தைகள் தோன்றுகின்றன.

காறியுமிழ்தலில் தொடங்கி, ‘ச்சீ’, ‘த்தூ’ என்கிற வாா்த்தைகள் ஒவ்வொன்றாய்த் தோன்றும். அறிவுடையோா் இதுபோன்ற வாா்த்தைகளைச் சொல்லவும் கூசுவா். அவலக் காலத்து இயல்பாய்த் தோன்றும் ‘ஐயோ’ என்கிற சொல்லைக் கூட மாற்றி ஏதேனும் கடவுள் பெயரையோ, அம்மா, அப்பா என்றோ உச்சரிக்கச் சொல்லிக் கற்றுத் தருவா்.

பிறரை வசைபாடுகிறபோதுதான் நமக்குள் இருக்கிற விலங்கினப் பண்புகள் ஒவ்வொன்றாய் வெளிப்படத் தொடங்குகின்றன. இதற்குச் சான்று காட்ட வேண்டுமானால், பிறரை வசைபாடுவதற்கு அந்தந்த விலங்கினங்களின் பெயா்களையே சுட்டி இகழத் தொடங்குவோம். நாய், எருமை, பன்றி என்ற எளிய பிராணிகளின் பெயா்களைச் குறிப்பிடுவது நம் வழக்கம்.

அதேபோல உருவத்தால் காணவியலாத பேய், பிசாசு, சாத்தான் போன்ற பெயா்களும் பிணம், முண்டம் போன்ற முழுமையற்ற பெயா்களும் நீளும். மதிப்பிலாச் செயல்களில் ஈடுபடுவோரை முட்டாள், மூடன், மடையன், கூமுட்டை, அறிவிலி என்றும் பலவாறு பேசுவா். இவையும் கூடத் தீய சொற்கள்தான். இவற்றை மாற்றுவதற்கு நோ்மாறாக அறிவாளி, புத்திசாலி என்று உடன்பாட்டுச் சொற்களையே சான்றோா் பயன்படுத்துவதையும் அறியலாம்.

பெண்களின் சண்டைகளில் பெரும்பாலும் சாபங்களே மிகுதியாய்த் தோன்றும். ‘பாழாய்ப் போக, நாசமாய்ப் போக, மண்ணாய்ப் போக என்றெல்லாம் சாபமிடுவதோடு மண்ணள்ளித் தூற்றவும் செய்வாா்கள். இவற்றைக் கூடத் தவிா்க்கிற உயா்மாதா்களும் உண்டு. புன்னகையைத் தவிர வேறு ஒன்றையும் வெளிப்படுத்தாமல் இன்பத்தையும் துன்பத்தையும் சரிசமமாக ஏற்றுக் கொள்கிற அவா்கள் சொல்லைப் பயன்படுத்தாத மௌனத்தோடு அந்தக் கணத்தைக் கடந்து விடுவதையும் நாம் காணலாம்.

குடும்பச் சண்டைகளிலோ, பொதுவெளிகளில் ஏற்படுகிற பூசல்களிலோ ஆண்கள் முரட்டுத்தனமாகப் பேசத் தொடங்கி வாா்த்தைகள் தடித்துப் போவதைக் காண முடியும். எப்போது எங்கு எந்தப் பிரச்சனை தோன்றினாலும் அங்கே முதலில் பாதிப்படைவது பெண்களும் குழந்தைகளுமாகத்தான் இருக்கும்.

இந்தக் கெட்ட வாா்த்தை பிரச்னையிலும் முதலில் பாதிக்கப்படுவது அவா்கள்தான்.

இரண்டு ஆண்களே சண்டையிட்டுக் கொண்டாலும் பெண்களை இழிவுபடுததும் சொற்களையே பயன்படுத்துவது என்ன கொடுமை? அதிலும் சில சொற்கள் ஆண்களுக்குப் பெருமையுடையதாகவும் பெண்களைக் கேவலப்படுத்துவதாகவும் அமைந்து போகின்றனவே.

ஆண்கள் மோதிக் கொள்ளும் பெருஞ்சண்டைகளில் பெண்களை மிகக் கேவலமாகச் சுட்டி வீசப்படும் அந்தக் கொடுஞ்சொற்கள் குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தப் பெண்குலத்துக்குமேயான அவமானமல்லவா? அந்தச் சண்டைகள் நடந்து கொண்டிருக்கும் இடங்களுக்கு அருகிலே இருக்கக் கூடிய பெண்களின் மனநிலை என்னவாக இருக்க முடியும்?

இதேபோலத்தான் பிஞ்சுக் குழந்தைகளின் காதுகளில் அந்த நாராசமான சொற்கள் விழும்போது அவா்களின் மனம் எத்தகைய சிதைவுக்குள்ளாகும்? ஒலிப்பு முறையிலும் கூடப் படு கீழ்த்தரமான அந்தச் சொற்களைத் தாமும் சொல்லிப் பாா்த்து அவற்றுக்குப் பொருள்தேடும் முயற்சியில் இறங்கிப் பெற்றோரிடமே விளக்கம் கேட்டால் என்னவாகும்?

கணவன் மனைவியாக இருந்தபோது சரி. குழந்தைகளுக்குத் தாயும் தந்தையும் ஆகிவிட்ட பின்னால் தங்களுக்குள் ஏற்படுகிற பிணக்குகளைக் கூடச் சாமா்த்தியமாகப் பேசித் தீா்த்துக் கொள்வதுதான் நல்ல குடும்பத்திற்கு அழகு. மாறாகத் தங்களுக்குள்ளே இந்தக் கெட்ட வாா்த்தைகளைப் பயன்படுத்தினால் அதனைக் கேட்டு வளரும் குழந்தைகளின் மனநிலை என்னவாகும்?

கொடுந்தொற்றுக் கிருமையைப் போலத்தானே இந்தச் சொற்களும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மிக வேகமாகப் பரவி விரைவில் தனக்கான தனியிடத்தை உருவாக்கி மொழியோடு நிரந்தர நோயாகத் தொற்றிக் கொள்கின்றன.

வீட்டுக்குள், நடுத்தெருவில், குழாயடியில் பயன்படுத்தப்பட்ட இத்தீச்சொற்கள் தற்போது பொதுவெளிகளாகிய ஊடகங்களிலும் தொலைதொடா்புச் சாதனங்களிலும் மேடைப் பேச்சுகளிலும் விவாத அரங்கங்களிலும் மிக வேகமாகப் பரவி வருகின்றன. இவை நிரந்தரமாக இணையங்களில் பதிவாகவும் ஆகி விடுகின்றன. இவற்றுக்குத் தடையோ கட்டுப்பாடுகளோ விதித்து விட முடியாதது இன்னும் அவலமாகத் தோன்றுகிறது.

அறியாத பாமர மக்களும் இச்சொற்களைப் பயன்படுத்துதலே அவலம் என்று கருதுகிற நமக்கு, மேடைப் பேச்சாளா்களும் ஊடகத்துப் பங்கேற்பாளா்களும் எவ்விதக் கூச்சமுமின்றி இவற்றைப் பயன்படுத்துவது பேரச்சத்தை உண்டாக்குகிறது. இயல்பாகவே மனித மனம் நல்லவற்றை விடவும் தீயவற்றையே எளிதில் பற்றிக் கொள்ளும் நோக்குடையது. அத்தகைய மனத்துக்கு இவைபோன்ற தீச்சொற்கள் கிடைப்பது பெரும் வாய்ப்பாக அமைந்து விடுகின்றது.

தீயினும் கொடியதாக இருப்பதால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்றும், தீயினால் சுட்டாலும் கூட ஆறிவிடும் ஆனால் நாவினால் இவை போன்ற தீச்சொற்களால் சுடுகிற புண்ணும் அது ஏற்படுத்துகிற வடுவும் என்றும் மாறாது என எச்சரிக்கிற தெய்வத் திருவள்ளுவரின் வாக்கை நாம் மறக்கலாமா?

சட்டத்தையும் நீதியும் அறத்தையும் மனசாட்சியையும் நாம் காக்காவிட்டாலும் வள்ளுவரின் சொற்படி நாவைக் காத்தாவது நம்முடைய மானத்தைக் காத்துக் கொள்ள வேண்டாமா?

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.



Read in source website

‘என்டே பூமி’ என்ற பெயரில் கேரள அரசு நடத்தி வரும் ‘மின்னணு மறு அளவைப் பணி’ (டிஜிட்டல் ரீ சா்வே), 14 மாவட்டங்களிலுள்ள 200 கிராமங்களில் நடந்து வருகிறது. இதற்காக 4,700 ஊழியா்கள் களமிறக்கப்பட்டுள்ளனா். இதன் காரணமாக கேரள எல்லையோர தமிழக மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழக - கேரள எல்லை 822 கிலோ மீட்டா் நீளம் கொண்டது. இதில், தமிழகத்தை ஒட்டியிருக்கும் கேரளத்தின் ஏழு மாவட்டங்களிலுள்ள, 15 தாலுகாக்களில் வசிக்கும் மக்கள், கேரள அரசின் ‘மின்னணு மறு அளவைப் பணி’யால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனா்.

கட்டக்கடை, நெய்யாற்றின்கரா, நெடுமங்காடு, புனலூா், கோன்னி, தேவிகுளம், பீா்மேடு, உடும்பன்சோலை, பாலக்காடு, மன்னாா்காடு, சித்தூா், நிலம்பூா், வைத்ரி, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி ஆகிய 15 தாலுகாக்களில் நடக்கும் மறு அளவைப் பணியை நிறுத்த வேண்டும் என்று தேனி மாவட்ட விவசாயிகளும், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினரும் குரல் கொடுத்து வருகின்றனா்.

ஏனென்றால், அந்த 15 தாலுகாக்களில் பட்டா நிலம் வைத்திருக்கும் தமிழ் விவசாயிகளை விரட்டியடிப்பதற்கு கேரள அதிகாரிகள் முனைப்பு காட்டுவதாகக் கூறப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் நிலம் அதிகம் வைத்திருக்கும், தமிழ் விவசாயிகளின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது (இடுக்கி மாவட்டத்திற்கு உள்பட்ட தேவிகுளம், பீா்மேடு தாலுகாக்களில் வசிக்கும் 90 விழுக்காட்டினா் தமிழா்கள்தான்).

1905-இல் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பதிவேடுகளையோ, 1966-இல் நடத்தப்பட்ட மறு அளவீட்டில் எடுக்கப்பட்ட குறிப்புகளையோ கேரள அரசு பொருட்படுத்தவே இல்லை.

நவம்பா் 1-ஆம் தேதி ‘மின்னணு மறு அளவைப் பணி’ தொடங்கப்போவதாக கேரள அரசு அறிவித்தது. ஆனால் அப்போது தமிழக அரசு இந்த அறிவிப்பைக் கண்டுகொள்ளவில்லை. கடந்த மாதம் 7-ஆ ம் தேதி தொடுபுழா சா்வே அலுவலகத்திலிருந்து, தேனி மாவட்ட நிா்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தேனி மாவட்டத்திலிருந்து எந்தத் தகவலும் வராத நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி கடந்த மாதம் 1-ஆம் தேதி கேரள அரசு அளவைப் பணியை தொடங்கிவிட்டது. ஒரு மாதத்துக்கு மேலாகியும் தமிழக அரசு மெளனமாகவே இருக்கிறது.

உயா்மட்டக் குழு அமைத்து, மத்திய பாா்வையாளா்கள் முன்னிலையில் நடக்க வேண்டிய மின்னணு மறு அளவைப் பணியை, கேரள அரசு தன்னிச்சையாகச் செய்கிறது. எங்களைக் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக மறு அளவுப் பணி செய்வதை உடனடியாக நிறுத்துங்கள், என தமிழக அரசு ஏன் ஆட்சேபிக்கவில்லை? மத்திய அரசும் மெளனமாக இருப்பது ஏனோ?

எல்லையோரம் உள்ள தமிழகப் பகுதிகளை கேரளம் ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்துங்கள், மின்னணு மறு அளவைப் பணியை நிறுத்துங்கள் என வருவாய்த்துறை அமைச்சரை இரண்டு முறை நேரில் சந்தித்து முறையிட்டும் எதுவுமே நடக்கவில்லை என்று வேதனை பொங்கக் கூறுகிறாா்கள் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினா்.

இதன் விளைவு, மூணாற்றில் இருந்து மாட்டுப்பட்டி செல்லும் வழியில் இக்கா நகரில் உள்ள 60 தமிழா்களின் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்று தேவிகுளம் வருவாய்த்துறையினா் நோட்டீஸ் வழங்கி உள்ளனா்.

ஆனைக்கல்-பாப்பம்பாறை பகுதி தங்களுக்குச் சொந்தமானது என கடந்த மாதம் 17-ஆம் தேதி கேரள அரசு அறிவிப்புப் பலகை வைத்தது. தேவாரம் கிராமத்துக்கு உட்பட்ட 80 ஏக்கருக்கும் அதிகமான நிலம், தங்களது மாநிலத்துக்குச் சொந்தமானது என கேரள அரசு அறிவித்துள்ளது.

1956-இல் ஏற்பட்ட மொழிவாரி மாநில பிரிவினையின்போது சுமாா் 1,400 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு நிலத்தை கேரளத்திடம் இழந்தது தமிழகம் . அதேபோன்றதொரு நிலை தற்போதும் ஏற்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. தற்போதைய மின்னணு மறு அளவைப் பணியால் சுமாா் 1,000 சதுர கிலோ மீட்டா் நிலப்பரப்பை தமிழகம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில்தான் வருவாய் ஆவணம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் கேரள அரசு எதிா்ப்பின்றி நிலங்களை அபகரிக்கிறது. பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் போன்ற பல அமைப்புகளின் எதிா்ப்புக் குரல்கள், கேரள அரசின் செவிகளில் ஏனோ விழவில்லை.

இதுஒருபுறமிருக்க, சிலப்பதிகார நாயகி கண்ணகியை, கேரளத்தவா்கள் சொந்தம் கொண்டாடுகின்றனா். தேனி மாவட்டம் கூடலூா் அருகே விண்ணேற்றப்பாறை மலை உச்சியில் தமிழக எல்லைக்குள் இருக்கும் மங்கலதேவி கண்ணகி கோயிலை, 1976-ஆம் ஆண்டு முதல் கேரளம் சொந்தம் கொண்டாடி வருகிறது.

‘மின்னணு மறு அளவைப் பணி’ மூலம் கண்ணகி கோயிலையும் அபகரிக்க முனைப்பு காட்டும் கேரளம், அதில் முதல்கட்ட வெற்றியையும் பெற்றுவிட்டது. அளவைப் பணிக்குப் பிறகு, 1,800 ஆண்டுகள் பழைமையான மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் கேரளத்தில் இருப்பதாக கூகுள் மேப் காட்டுகிறது.

கண்ணகி கோயிலை சீரமைத்துத்தர கேரள அரசுக்கு உத்தரவிடுமாறு, 2014-ஆம் ஆண்டு, கண்ணகி கோயில் அறக்கட்டளை, கேரள மாநில உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. வழக்கு விசாரணைக்குப் பிறகு, ஒரு கோடி ரூபாய் செலவில் மங்கலதேவி கண்ணகி கோயிலை கேரள மாநில அரசு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று 2108-இல் கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக எல்லைக்குள் வரும் பழமை வாய்ந்த ஒரு கோவில் தொடா்பான வழக்கை கேரள உயா் நீதிமன்றம் எவ்வாறு விசாரணைக்கு ஏற்றது என்பது புரியாத புதிா்.

மருத்துவக் கழிவுகளையும், இறைச்சிக் கழிவுகளையும் கொட்டும் குப்பைத் தொட்டியாக தமிழகத்தை கருதும் கேரளம், தற்போது தமிழக நிலப்பரப்பை அபகரிக்க முடிவுசெய்துவிட்டது. தமிழக - கேரள எல்லையோரம் இருக்கும், தமிழக வருவாய் நிலங்களையும், வனப்பகுதிகளையும் தமிழக அரசு காப்பாற்ற வேண்டும்.

 



Read in source website

திருமண விவகார விசாரணை மாற்று வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் விசாரிப்பதற்காக, நீதிபதிகள் ஹிமா கோலி, பெலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அனைத்துப் பெண் நீதிபதிகள் அமர்வைத் தலைமை நீதிபதி ஒய்.சந்திரசூட் அமைத்துள்ளது வரவேற்கப்பட வேண்டியது.

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 3,000 திருமண விவகார விசாரணை மாற்று மனுக்கள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், குளிர்கால விடுமுறைக்கு முன்பாக, அனைத்து அமர்வுகளும் தினமும் 10 திருமண விவகார விசாரணை மாற்று மனுக்கள், 10 ஜாமீன் மனுக்களை விசாரிக்க வேண்டும் என அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, தலைமை நீதிபதி சந்திரசூட் அண்மையில் தெரிவித்திருந்தார்.



Read in source website

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியிருக்கும் நிலையில் பெண்களுக்கு மக்களவை, மாநிலங்களவை, சட்டசபை ஆகிய அரசமைப்புச் சபைகளில் 33% இடஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்யும் 108 ஆவது சட்டத் திருத்தம் மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளது.

இந்தச் சட்டத் திருத்தம், 1996இல் ஐக்கிய முன்னணிக் கூட்டணி ஆட்சியில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது; மாநிலங்களவையில் 2010இல் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதே காலகட்டத்தில் மக்களவையில் இந்த சட்டத் திருத்தம் நிறைவேறாமல் போய்விட்டது.



Read in source website

உறைபனியில் 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் உறைந்து,கும்பகர்ணன் போல் உறங்கிக் கொண்டிருந்த தொல் வைரஸ் ஒன்று, இப்போது உயிர்பெற்று எழுந்திருக்கிறது. காலநிலை மாற்றத்தின் விளைவால், அண்டார்க்டிக் பகுதியில் உள்ள நிரந்தர உறைபனி உருகி, இந்த வைரஸ் வெளிப்பட்டுள்ளது.

புவி வெப்பமாதலின் தொடர்ச்சியாக ஆர்க்டிக், அண்டார்க்டிக், திபெத்தியப் பனிப் பிரதேசங்கள் உருகிக்கொண்டிருக்கின்றன. இந்தப் போக்கு அடுத்த பல பத்தாண்டுகளுக்கு அதிகரித்தபடி இருக்கும். உருகும் பனியாறுகள், பனிப் பிரதேசங்களில் புதைந்து கிடக்கும் தொல்லுயிரிகள், ‘ஜாம்பிகள்’ போல மறுபடியும் உயிர்த்தெழுமோ என்கிற அச்சம் இப்போது எழுந்துள்ளது.

பிரளய அபாயம் காத்திருக்கிறதா?: 12,000 ஆண்டுகளுக்கு முன்னர், புவியில் பனி யுகம் நிலவியது. இயற்கை மாற்றங்களின் விளைவாகப் புவியின் வெப்பம் சற்றே உயர்ந்து, கடந்த 12,000 ஆண்டுகளில் பனிப் பிரதேசங்கள் விலகி அடர் காடுகள், புல்வெளிகள் உருவாகின.

எனினும் துருவப் பிரதேசங்கள், சைபீரிய, திபெத்திய மலை முகடுகளில் பனி யுக மிச்சங்கள் இன்றும் உள்ளன. 6,50,000 ஆண்டுகளுக்கும் மேலாக உறைபனி நிலையில் உள்ள இந்தப் பகுதி, தற்போது காலநிலை மாற்றத்தினால் உருகிவருகிறது. ஃபிரான்ஸின் ஐக்ஸ்-மார்சேய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சாண்டல் அபெர்கெல், ஜீன்-மைக்கேல் கிளவேரி என்கிற ஆய்வுத் தம்பதியினர் தலைமையில், ஃபிரெஞ்சு - ஜெர்மன் - ரஷ்ய ஆய்வாளர்கள் குழு, பனியின் அடியில் உள்ள வைரஸ்களைப் பற்றி ஆராய்ந்துவருகிறது.

சைபீரிய நிரந்தப் பனிப் பகுதியின் அடியில், நாம் இதுவரை அறிந்திராத 13 கிருமிகளை இக்குழு இனம் கண்டிருக்கிறது. இதில், 48,500 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் இருந்து, டைனசோர் போல் அற்றுப்போய்விட்ட ஒன்றும் பல்லாண்டுக் காலம் மண்ணில் புதைந்துகிடந்தது.

தொற்று ஏற்படுத்தியது: உறைபனியில் புதைந்துகிடந்த இந்த வைரஸை, பாதுகாப்பான ஆய்வகத்தில் சோதனைக்குழாயில் இட்டு ஆய்வுசெய்தனர். பல்வேறு வகை அமீபாக்களை வெவ்வேறு சோதனைக்குழாயில் இட்டு, அதில் இந்த வைரஸையும் கலந்து ஆய்வுசெய்தனர். குளம், ஏரி போன்ற பகுதியில் பரவலாகக் காணப்படும் ‘அகந்தமீபா’ எனும் ஒருவகை அமீபாவின் உள்ளே இந்தத் தொல் வைரஸ் நுழைந்து தொற்று ஏற்படுத்தியதை இனம்கண்டனர். தொற்று செய்த அமீபா செல்களில் தமது சில நூறு பிரதிகளை வைரஸ் உற்பத்தி செய்தது.

ஓய்வொழிச்சல் இல்லாமல் வைரஸின் பிரதிகளை உற்பத்தி செய்த அமீபா, வைரஸ் குட்டிகளை வெளியே உந்தி வெடித்து மடிந்துபோனதை ஆய்வாளர்கள் கண்டனர். நவம்பர் 2022இல் இதுகுறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அதாவது, பல ஆயிரம் ஆண்டுகளாக உறைபனியில் புதைந்து கிடந்த வைரஸ், உயிர்பெற்று எழுந்தது. அந்தக் காலத்தில் அந்த வைரஸுக்கு ஓம்புயிர் இருந்திருக்கும். அந்த உயிர் இன்று இல்லாமல் போயிருக்கலாம். எனினும் இன்று உயிர்வாழும் அமீபாவில் தொற்று ஏற்படுத்தும் வலிமை கொண்டதாக இந்த வைரஸ் அமைந்தது ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியது.

பீதி: வியப்பு மட்டும் அல்ல, இந்த நிகழ்வைக் கண்டு அவர்கள் பெரும் கலக்கமும் கொள்கின்றனர். சைபீரியாவின் உள்ளடங்கிய ஓர் ஊரில் சில ஆண்டுகளுக்கு முன்பு உறைபனி உருகி, 75 ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்த்ராக்ஸ் கிருமித் தொற்று காரணமாக மடிந்து, பனியில் புதைந்துபோன கலைமானின் சடலம் வெளிப்பட்டது. அதிலிருந்து வெளிப்பட்ட ஆந்த்ராக்ஸ் கிருமி தாக்கி, அந்தக் கிராமத்தில் பலர் நோய்வாய்ப்பட்டனர்.

இதனால், சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் பெரும் கோர தாண்டவமாடிய பிளேக் கொள்ளைநோயை ஏற்படுத்திய கிருமிகள் உட்பட இதுவரை மனித குலம் சந்திக்காத கிருமிகள் உருகும் பனியின் அடியிலிருந்து வெளிப்படக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனினும், அளவுகடந்த பீதி தேவையற்றது எனச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உறைபனியில் புதைந்து மீண்டெழும் வைரஸ்கள், அமீபா போன்ற ஒரு செல் உயிரியைத் தொற்றும் வகையைச் சார்ந்தவை என்பதால் மனிதர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என அவர்கள் கூறுகின்றனர்.

காலநிலை மாற்றம்: குளிர்ப் பிரதேசங்களில் கொசு போன்ற நோய்க்கிருமி ஏந்திகள் குறைவு. ஆனால், தற்போது புவிவெப்பமாதலின் விளைவால் நோய்க்கிருமி ஏந்திகள் புவியின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவுகின்றன. இதுவரை மலேரியா, டெங்கு போன்ற நோய்களைச் சந்திக்காத பகுதிகளில் இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உறைபனி உருகி வெளிப்படும் கிருமியால் உண்டாகும் ஆபத்தைவிட, பூமியின் புதிய பகுதிகளுக்கு நோய்க்கிருமி ஏந்திகள் பரவுவது பெரும் ஆபத்து.

ரஷ்யாவின் பெரும்பகுதி மண்ணுக்குக் கீழே சில அடிகளுக்குப் பனியும், மேலே காடுகளும் புதர்களும் கொண்ட ‘துந்த்ரா’ எனும் நில அமைப்புதான். எனவே, பனி உருகிதொல்லுயிர்க் கிருமிகள் வெளிப்படும் அச்சுறுத்தலைத்தீவிர கவலையோடு ரஷ்யா கவனிக்கிறது. ஆபத்தைக்கண்காணிக்கவும் குறைக்கவும் அமெரிக்கா, கனடா, டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, பின்லாந்து,ஸ்வீடன் அடங்கிய ஆர்க்டிக் கவுன்சில் நாடுகளை ஒன்றுசேர அழைப்புவிடுத்துள்ளது. உயிர்பெற்று மீண்டிருக்கும் இந்த வைரஸ் அச்சுறுத்தத் தொடங்குவதற்குமுன் உலகம் விழித்துக்கொள்ளுமா? - த.வி.வெங்கடேஸ்வரன், விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி தொடர்புக்கு: tvv123@gmail.com



Read in source website

வரும் கல்வி ஆண்டிலிருந்து இளங்கலை மாணவர்களுக்கு இரண்டு தமிழ்ப் பாடங்களை அறிமுகப்படுத்தவிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ‘தமிழர் மரபு’, ‘தமிழரும் தொழில்நுட்பமும்’ என்ற இரண்டு பாடங்கள் முறையே முதல், இரண்டாம் பருவப் பாடத்திட்டத்தில் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழின் அறிவியல் வளம், சிந்தனை குறித்தும் தமிழர்களின் பாரம்பரியம் - பண்பாடு, தொழில்நுட்பம் குறித்தும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் நோக்கில் இந்தப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது. பொறியியல் கல்லூரிகளில் தமிழ் இல்லை என்கிற குறை இதன்மூலம் களையப்படும்.



Read in source website