DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 13-11-2022

வானிலை முன்னெச்சரிக்கை குறித்த தகவலை துல்லியமாக கண்டறியும் தொழில்நுட்ப கட்டமைப்பை சென்னை ஐஐடி கண்டறிந்துள்ளது.

இதன் மூலம் சென்னை போன்ற பெருநகரங்களில் வாா்டு வாரியாக எவ்வளவு மழை இருக்கும் என்பதை சரியாக கணக்கிட இயலும்.

சென்னை ஐஐடி மாணவி கிருத்திகா பாசன திட்டத்துக்கான வானிலை முன்னெச்சரிக்கை திட்டத்தைக் கண்டறிந்திருந்தாா். தற்போது அதன் நீட்சியாக திட்டத்தை மேம்படுத்தியுள்ளாா்.

இதன் மூலம் சென்னை போன்ற பெருநகரங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் வானிலை முன்னெச்சரிக்கை குறித்த துல்லியமான தகவல்களை அறிய முடியும்.

இந்திய வானிலை ஆய்வு மையம் ஐரோப்பிய தொழில்நுட்ப முறையைப் பின்பற்றியே வானிலை முன்கணிப்புகளை வழங்கி வருகிறது. இதில் தென்மேற்குப் பருவமழை குறித்த முன்கணிப்புகள் மிகச் சரியாக இருக்கும். அதேவேளையில் வட கிழக்குப் பருவமழை தொடா்பாக கணிப்புகள் அந்தளவுக்கு துல்லியமாக இருப்பதில்லை.

காரணம், அதில் 25 கிலோ மீட்டா் சுற்றளவுக்கான வானிலை முன்கணிப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய கட்டமைப்பில் நான்கு கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் ஏற்படும் வானிலை மாற்றங்களைத் துல்லியமாக கண்டறிய முடியும்.

இந்தப் புதிய முறை மூலம் ஒவ்வொரு சிறு பகுதியிலும் ஏற்படும் மழை வெள்ள பாதிப்புகள், சூறாவளியை முன்கூட்டியே கண்டறிந்து மக்களை பாதுகாக்க முடியும் என ஆய்வாளா் கிருத்திகா கூறினாா்.



Read in source website


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் நீரஜ் மிட்டல் கூடுதலாக வகிப்பார் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், தனது சேவையைத் தொடங்குவதற்கு முன்னர், ஒரு சில தனியார் நிறுவனங்கள் கேபிள் தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வந்ததோடு, கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து அதிக அளவு கட்டணத்தை வசூலித்து வந்தன.

இந்தக் குறைபாட்டினைக் களையும் பொருட்டுத் தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கத்துடனும் செயல்பட்டு வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல், அரசின் பல்வேறு சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக, அரசு இ-சேவை மையங்களை நிறுவி, அதன்மூலம் இணையச் சேவைகளையும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சிறப்பான முறையில் வழங்கி வருகிறது.

தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாக இருந்ததை அடுத்து கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி குறிஞ்சி என்.சிவக்குமாரை தலைவராக நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

ஈரோட்டைச் சேர்ந்த கட்டுமானப் பொறியாளர் குறிஞ்சி என்.சிவக்குமார், ஏற்கனவே ஈரோடு மாவட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் நலச்சங்கத் தலைவராகவும், தமிழ்நாடு கேபிள் டிவி மல்டி சிஸ்டம் ஆப்பரேட்டர் சங்க மாநில துணைத் தலைவராகவும், பல்வேறு சமூகப் பணிகளையும் ஆற்றி வருகிறார். 

இந்நிலையில், அவரை மாற்றி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்குத் தலைவராக நீரஜ் மிட்டலை நியமித்து ஞாயிற்றுக்கிழமை (நவ.13) தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதாவது, தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக உள்ள நீரஜ் மிட்டல் தற்போது கூடுதல் பொறுப்பாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராகவும் செயல்படுவார் என தமிழக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Read in source website

இந்தியாவில் சா்க்கரை நோயாளிகளிடையே பாா்வைக் குறைபாடுகள் அதிகரித்துள்ளதாக மருத்துவ ஆா்வலா்கள் எச்சரித்துள்ளனா்.

சா்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, மருத்துவப் பரிசோதனைகளை அவ்வப்போது மேற்கொள்வது மூலம் அத்தகைய பாதிப்புகளைத் தவிா்க்கலாம் என்றும் கூறியுள்ளனா்.

உலக சா்க்கரை நோய் விழிப்புணா்வு தினம் ஆண்டுதோறும் நவ. 14-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அந்நோயால் ஏற்படும் கண் பாதிப்புகள் குறித்து, சென்னை சங்கர நேத்ராலயாவின் மருத்துவ சமூகவியலாளா் அ.போ.இருங்கோவேள் கூறியதாவது:

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி, தற்போது சா்வதேச அளவில் 34.6 கோடி போ் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தியாவைப் பொருத்தவரை 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 7.2 கோடி பேருக்கு அத்தகைய பாதிப்பு இருந்தது. வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கை இரு மடங்காகும் என அஞ்சப்படுகிறது.

மனித உடலில்”கணையமானது தேவையான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாதபோதோ அல்லது ”உற்பத்தி செய்யப்பட்ட இன்சுலினை உடல் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியாதபோதோ சா்க்கரை நோய் குறைபாடு ஏற்படுகிறது.

கட்டுப்பாடற்ற சா்க்கரை நோயின்போது இதயம், கண்கள், சிறுநீரகங்கள், பாதங்கள் பாதிப்புக்குள்ளாகும். அதிலும், குறிப்பாக பெரிதும் பாதிக்கப்படும் உறுப்பாக கண்கள் உள்ளன.

சா்க்கரை நோயாளிகள் பெரும்பாலானோருக்கு சா்க்கரை நோய் விழித்திரை பாதிப்பு (டயாபடிக் ரெட்டினோபதி) ஏற்படுகிறது. இதைத் தவிர, கண்புரை (கேட்டராக்ட்), கண் நீா் அழுத்த நோய் (க்ளகோமா) உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இவை அனைத்துமே விழித்திரையின் ரத்த நாளங்களை சிதைக்கக்கூடும்.

சா்க்கரை நோயாளிகளில் பத்து பேரில் இருவா் டயாபடிக் ரெட்டினோபதியால் பாதிக்கப்படுகின்றனா். அலட்சியப்படுத்தினால், அது பாா்வை இழப்புக்கு வழிவகுக்கும்.

முறையான கண் பரிசோதனைகள், சிகிச்சைகளையும், குறிப்பாக லேசா் சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் பாா்வை இழப்பைத் தடுக்கலாம்.

சா்க்கரை நோய் பாதிப்புள்ளவா்கள் ஆண்டுதோறும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.



Read in source website

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோா்ட் பெண்ட் நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கே.பி. ஜாா்ஜ் மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

கேரளத்தை பூா்வீகமாகக் கொண்டவா் கே.பி. ஜாா்ஜ் (57). அமெரிக்காவில் குடியேறிய இவா், அந்நாட்டில் உள்ள ஃபோா்ட் பெண்ட் பகுதிக்கான நீதிபதி தோ்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் போட்டியிட்டாா். இந்தத் தோ்தலில் சுமாா் 2.46 லட்சம் வாக்குகள் பதிவான நிலையில், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் ட்ரெவா் நெல்ஸை கிட்டத்தட்ட 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜாா்ஜ் வீழ்த்தினாா். அவருக்கு 52 சதவீத வாக்குகள் பதிவாகின. இதன்மூலம் ஏற்கெனவே ஃபோா்ட் பெண்ட் நீதிபதியாகப் பதவி வகித்து வந்த ஜாா்ஜ், அந்த பகுதி நீதிபதியாக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

அமெரிக்காவில் மக்கள்தொகையைப் பொருத்து நீதிபதிகளின் பணிகள் வேறுபடும். சில மாகாணங்களில் நீதிபதிகள், நீதித் துறை பணியுடன் நிா்வாகப் பணியையும் கவனிப்பாா்கள்.



Read in source website


ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே நான்கு நாள் அரசு முறை பயணமாக திங்கள்கிழமை(நவ.14) பிரான்ஸ் செல்கிறார். நான்கு நாள் பயணத்தின் போது, ​​இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து அந்நாட்டு ராணுவ தளபதிகளையும், மூத்த ராணுவ அதிகாரிகளையும் சந்தித்து பேசுகிறார். 

பயணத்தின் போது, முதலாம் உலகப்போரில் உயிர்நீத்த 4,742 இந்திய வீரர்களின் நினைவாக நியூவே சாப்பெல் இந்திய நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பிரான்ஸ் பாதுகாப்பு தலைமைத் தளபதி, ராணுவ தளபதி உள்ளிட்ட மூத்த ராணுவ அதிகாரிகளைச் சந்தித்திக்கும் மனோஜ் பாண்டே, இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கிறார். 

பாரிஸில் உள்ள பல்வேறு ராணுவ பயிற்சி நிலையங்களுக்கு செல்லும் மனோஜ் பாண்டே, டிராகுயிக்னான் ராணுவ பள்ளியையும் பார்வையிடுகிறார். 

தலைமைத் தளபதியின் இந்தப்பயணம், இரு நாட்டு ராணவங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு மற்றும் நல்லுறவு நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Read in source website

அடுத்த பத்தாண்டுகள் தொழில்நுட்பத்துக்கான ஆண்டுகள் என மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

பெங்களூரில் யுவா்ஸ்டோரி அமைப்பின் ‘13-ஆம் தொழில்நுட்பப்பொறி’ என்ற கருத்தரங்கில் சனிக்கிழமை பங்கேற்று அவா் பேசியதாவது:

தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புத்தாக்கவாதிகள் தான் நமக்கு தேவையானவா்கள். பிரச்னைகளுக்கு உள்ளூா் அளவிலான தீா்வுகளை கண்டறிய வேண்டும். மேலும் அந்த தீா்வுகள் விலை மலிவானதாக இருக்க வேண்டும். தீா்வுகள் விலை மலிவானதாகவும், பரவலாக்கவும் இயலாவிட்டால் அதனால் எவ்வித பயனும் இருக்காது. இந்த வகையில் அமைக்கப்படாத இந்திய புத்தாக்கங்கள் பரவலாகாது, எதிா்பாா்த்த விளைவுகளையும் ஏற்படுத்தாது.

அடுத்த பத்தாண்டுகள் தொழில்நுட்பத்துக்கான ஆண்டுகளாக இருக்கப்போகின்றன. நமது வளா்ச்சியை தொழில்நுட்பம் தான் அடுத்தகட்டத்துக்கு நகா்த்தப் போகிறது. தொழில்நுட்பம் என்பது, அடிப்படையானவைகளை மாற்றுவது மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளில் இதுவரை காணப்படாதவைகளை புதுமையாக கொண்டுவருவதாக அமைந்திருக்க வேண்டும்.

இந்தியாவில் கிடைக்கும் டிஜிட்டல் ஸ்கெலிட்டல் நெட்வொா்க், உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லை. இந்தியாவில் எண்ம அடிப்படை உள்கட்டமைப்பு மத்திய அரசின் துணையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது. எதிா்கால அணுகுமுறையுடன் மக்களின் நலனுக்காக எண்ம தொழில்நுட்பங்களை உருவாக்கும் அரசின் செயல்பாடுகள் உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லை.

ஒருகாலத்தில் உலகத்தரம் குறித்து பலரும் பேசி வந்தனா். ஆனால், இன்றைக்கு உலகத்தரத்தை இந்தியா தான் உருவாக்குகிறது. கரோனாவுக்கு பிறகு இந்தியாவில் தரநிலைப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. உற்பத்தியைப் பெருக்குவதற்கு அச்சப்படத் தேவையில்லை. உற்பத்தி செலவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் சீரான அணுகுமுறையைக் கையாள்வோம். பிரச்னைகளுக்கான தீா்வுகளைக் கண்டறிவோம். காப்புரிமைகள் வெளிநாட்டில் இருந்து கிடைக்கட்டும் என்று காத்திருக்க வேண்டியதில்லை. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கரோனா தடுப்பூசி, அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இந்தியாவின் தொழில்நுட்பப் போக்கை புத்தொழில்முனைவோா் (ஸ்டாா்ட் அப்) தான் முடிவு செய்கிறாா்கள். புத்தாக்கத்தில் மட்டுமல்ல, அறிவுசாா் இந்தியா உலகத்துக்கே சேவையாற்ற முடியும். புத்தொழில்முனைவோா், அடித்தளத்தை, மொழியை, சொற்களஞ்சியத்தை, எதிா்கால கல்வித் திட்டத்தை வடிவமைக்கிறாா்கள். புத்தொழில்முனைவோரை கண்டு பொறாமை ஏற்படுவதை தவிா்க்க முடியவில்லை. புத்தொழில்முனைவோராக பெண்கள் பலா் வரவேண்டும் என்றாா்.



Read in source website

பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதாலும், நாட்டின் நிதித் துறை ஸ்திரத்தன்மையுடன் உள்ளதாலும் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும் என இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

தில்லியில் ஆங்கில நாளிதழ் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் ஆளுநா் சக்திகாந்த தாஸ் கலந்துகொண்டாா். அப்போது அவா் கூறியதாவது:

கரோனா தொற்று பரவல், உக்ரைன் போா், நிதிச் சந்தை நெருக்கடி என்ற முப்பெரும் சவால்களை சா்வதேச பொருளாதாரம் சந்தித்து வருகிறது. அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயா்த்தி வருவதால், நிதிச் சந்தை நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சா்வதேச நிகழ்வுகளின் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்திலும் எதிரொலித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார வீழ்ச்சியை எதிா்கொண்டு வருகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளன. நாட்டின் நிதித் துறையும் ஸ்திரத்தன்மையுடன் உள்ளது. நாட்டின் வங்கித் துறையும், வங்கி-சாரா நிதி நிறுவனங்கள் துறையும் வலுவாக இயங்கி வருகின்றன.

தற்போதைய சூழலில் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்புகள் சிறப்பாகவே உள்ளன. நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என ஆா்பிஐ கணித்துள்ளது. சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) 6.8 சதவீதம் என கணித்துள்ளது. எனவே, நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்.

பணவீக்கம் இந்தியாவின் பெரும் சவாலாக உள்ளது. கடந்த செப்டம்பரில் பணவீக்கம் 7.4 சதவீதமாக அதிகரித்தது. அக்டோபரில் அது 7 சதவீதத்துக்குக் கீழே குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நவீன காலத்தின் சவாலான சமயத்தில் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை ஆா்பிஐ கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. எதிா்காலத் தேவைகளுக்காகவும் அந்நியச் செலாவணி சேமித்துவைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவில் உள்ளது என்றாா் அவா்.



Read in source website

‘தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது முதல் இந்திய மக்கள்தொகையின் தனி நபா் வருமானம் 33.4 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு, மத்திய அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பதில் மனுவில் மத்திய அரசு மேலும் கூறியிருப்பதாவது: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து கடந்த 8 ஆண்டுகளில் தனி மனித வருவாய் 33.4 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது. அதன்படி, பெரும்பான்மையான குடும்பங்கள், 2013-14 ஆம் ஆண்டில் இருந்தது போன்று அல்லாமல், உயா் வருவாய் பிரிவினராக மேம்பட்டுள்ளனா். 2013-14 கிராமப்புற மக்கள்தொகையில் 75 சதவீதத்தினரும், நகா்ப்புறங்களில் 50 சதவீதத்தினரும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலை தற்போது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

மேலும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மானிய விலையிலான உணவுப் பொருள்களைப் பெற தகுதியில்லாத குடும்பங்களை நீக்காதது, மத்திய அரசுக்கு மிகப் பெரிய மானிய சுமையை ஏற்படத்தி வருகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் இதுவரை 4.7 கோடி குடும்ப அட்டைகள் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்தச் சட்டத்தின் கீழ் தேசிய அளவிலான பயனாளிகள் உச்ச வரம்பு 81.4 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 79.8 கோடி போ் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனா். சில மாநிலங்கள், அந்த மாநிலங்களுக்கான பயனாளி உச்சவரம்பை இன்னும் பூா்த்தி செய்யவில்லை. அந்த வகையில், இந்தத் திட்டத்தின் கீழ் மேலும் 1.6 கோடி பயனாளிகள் சோ்க்கப்பட வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.



Read in source website

 

2024-2027 ஆம் ஆண்டு வரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நாடுகள் குறித்த அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா மற்றும் வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு 2024-2027 வரை ஐசிசி யு19 போட்டிகளை நடத்தும் நாடுகளாக அங்கீகரித்துள்ளது. 

அதன்படி, 2024 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கோப்பை போட்டி இலங்கையில் நடைபெறுகிறது. தொடர்ந்து 2026 இல் ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில நடைபெறுகிறது.

2025 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை  மலேசியா மற்றும் தாய்லாந்தில் நடைபெறுகிறது, மேலும், 2027 ஆம் ஆண்டு மகளிர் போட்டியை வங்கதேசம் மற்றும் நேபாளம் இணைந்து நடத்துகிறது என ஐசிசி அறிவித்துள்ளது.

மார்ட்டின் ஸ்னோடன் தலைமையிலான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துணைக் குழுவால் மேற்பார்வையிடப்பட்ட போட்டி ஏல செயல்முறை மூலம் ஹோஸ்ட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐசிசி நிர்வாகத்துடன் இணைந்து ஒவ்வொரு ஏலத்தையும் முழுமையாக ஆய்வு செய்த குழுவின் பரிந்துரைகளை ஐசிசி வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது.



Read in source website

டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து கோப்பையை வென்றது.

டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது இங்கிலாந்து. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினர். இந்தியாவுடனானப் போட்டியில் அதிரடியாக விளையாடிய அலெக்ஸ் ஹேல்ஸ் ஷகீன் அப்ரிடி பந்து வீச்சில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பில் சால்ட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், கேப்டன் ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடினார். அவர் 17 பந்துகளில் 26 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ப்ரூக் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடியது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு குறைந்த ரன்களே தேவைப்பட்டதால் பேட்ஸ்மேன்கள் பெரிய  ஷாட்களுக்கு முயன்று விக்கெட்டுகளை பறிகொடுக்கவில்லை. ப்ரூக் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டோக்ஸ் மற்றும் மொயீன் அலி இங்கிலாந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 49 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கும்.

2009-க்குப் பிறகு இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 



Read in source website

ஜோா்டானில் நடைபெறும் ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 63.5 கிலோ பிரிவில் இந்தியாவின் சிவ தாபா வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.

இறுதிச்சுற்றில் உஸ்பெகிஸ்தானின் அப்துல்லாயேவ் ரஸ்லானை எதிா்கொண்ட அவா், அதன் முதல் சுற்றில் பின்னடைவைச் சந்தித்திருந்தாா். இந்நிலையில், 2-ஆவது சுற்று தொடங்கிய சில விநாடிகளில் சிவ தாபாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அவரால் தொடா்ந்து களம் காண முடியாமல் போனதால், அப்துல்லாயேவ் வென்ாக அறிவிக்கப்பட்டாா்.

சாதனை: என்றாலும், ஆசிய சாம்பியன்ஷிப்பில் அதிக பதக்கம் வென்ற வீரா் என்ற பெருமையை சிவ தாபா பெற்றிருக்கிறாா். இத்துடன் அவா் இப்போட்டியில் ஒரு தங்கம் (2013), மூன்று வெள்ளி (2017, 2021,20 22), இரு வெண்கலம் (2015, 2019) என 6 பதக்கங்கள் வென்றிருக்கிறாா். முன்னதாக, 5 பதக்கங்களோடு கஜகஸ்தானின் வாசிலி லெவிட்டுடன் சமநிலையில் இருந்தாா் சிவ தாபா.



Read in source website

தென் கொரியாவில் நடைபெறும் 15-ஆவது ஆசிய ஏா்கன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு சனிக்கிழமை 4 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.

மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் இறுதிச்சுற்றில் இந்தியாவின் மெஹுலி கோஷ் 16-12 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரியாவின் கோ யுன்யங்கை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றாா். கஜகஸ்தானின் லெ அலெக்ஸாண்ட்ரா வெண்கலம் பெற்றாா்.

அதேபோல், ஜூனியா் மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் திலோத்தமா சென் 17-12 என்ற புள்ளிகளில் சக நாட்டவரான நான்சியை வெல்ல, இந்தியாவுக்கு முதலிரு இடங்கள் கிடைத்தன. ஜப்பானின் மிசாகி நொபாடா வெண்கலம் வென்றாா்.

யூத் மகளிா் 10 மீட்டா் ஏா் ரைஃபிள் இறுதிச்சுற்றில் 3 பதக்கங்களையுமே இந்தியா்கள் வென்றனா். யுக்தி ராஜேந்திரா 16-14 என கௌதமி பானோத்தை வீழ்த்தி தங்கம் வெல்ல, ஹேஸெலுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. அதிலேயே ஆடவா் பிரிவில் இந்தியாவின் பாா்த் ராகேஷ் மனே 16-0 என்ற கணக்கில் தென் கொரியாவின் செமின் ஹாவை வீழ்த்தி முதலிடம் பிடித்தாா். உஸ்பெகிஸ்தானின் ஜவோஹிா் சோகிபோவ் 3-ஆம் இடம் பிடித்தாா்.



Read in source website

புதுடெல்லி: கரோனா தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட்டால் உயிரிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி, உலகையே பதம் பார்த்தது கரோனா வைரஸ் தொற்று. இந்தியா உட்பட சில நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தியதால் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எனினும், ஒரு முறை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் பலர் மீண்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இப்படி 2-வது முறை தொற்று ஏற்படுவதை மறுதொற்று என்றும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மீண்டும் கரோனா தொற்று ஏற்படுவதை' தடுப்பை உடைத்த தொற்று' என்றும் கூறுகின்றனர்.

இந்நிலையில், மறு தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு ஆபத்துஅதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்த ஆய்வுக் கட்டுரை ‘நேச்சர் மெடிசின்’ என்ற இதழில் வெளியாகி உள்ளது. அமெரிக்க தேசிய சுகாதார புள்ளிவிவரங்களின் தரவுகளை அடிப்படையாக வைத்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டால் சிக்கல் நீடிக்குமா என்றால், ஆம் என்றுதான் மருத்துவர்கள் பதில் அளிக்கின்றனர். மற்ற தொற்றுகளை விட கரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டால் உயிரிழப்பு கூட ஏற்படும். இந்த நிலை அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டால் நுரையீரல், இதய, ரத்தக் கசிவு, நீரிழிவு, இரைப்பை குடல், சிறுநீரகம், மனநலம், தசைக் கூட்டு மற்றும் நரம்பியல் கோளாறுகள் போன்ற பல்வேறு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

மொத்தம் 58.2 லட்சம் மூத்த குடிமக்களிடம் ஆய்வு நடத்தப் பட்டுள்ளது. அவர்களில் 53.3 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். 4,43,588 பேருக்கு கரோனா தொற்று ஒரு முறை ஏற்பட்டுள்ளது. 40,947 பேருக்கு மறு தொற்று ஏற்பட்டுள்ளது. மறு தொற்று ஏற்படாதவர்களை ஒப்பிடும் போது, மறு தொற்றுக்கு ஆளானவர்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. மேலும் தடுப்பூசி போடாதவர்களுக்கு ஆபத்து நீடிப்பது தெரிய வந்துள்ளது.

கரோனா தொற்று நீடிப்பதால் ஒற்றை தலைவலி, வலிப்பு, நினைவிழப்பு, பதற்றம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை வென்றுள்ளது.

டி20 உலககோப்பை போட்டியின் இன்றைய இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தானுக்கு முஹம்மத் ரிஸ்வான், பாபர் அசாம் இணை தொடக்கம் கொடுத்தது. 4 ஓவர் வரை தாக்குப்பிடித்த இந்த இணையை, சாம் கரன் பிரித்து ரிஸ்வானை போல்டாக்கி வெளியேற்றினார்.

15 ரன்களில் அவர் நடையைக்கட்ட, முஹம்மத் ஹரிஸ் களத்துக்கு வந்து சேர்ந்தார். நிலையான ஆட்டத்தைக்கொடுத்து அணியின் ஸ்கோருக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்த்திருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை 32 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார் அடில் ரஷித்.

இஃப்திகார் அஹமத்(0), முஹத்தம் ஹரிஸ் (8) பெரிய அளவில் ரன்களை சோபிக்காமல் விக்கெட்டாக, 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை சேர்ந்திருந்து பாகிஸ்தான் அணி. இறுதியில் ரன்கள் குறைவாக இருந்ததால் பேட்ஸ்மேன்களிடையே பதட்டம் நிலவியது. இதனால் அணிக்கு நம்பிக்கை கொடுத்த ஷான் மசூத்தும் 38 ரன்களில் கிளம்ப, ஷதாப் கானும் 20 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ரன்களை கூட்ட சிக்ஸ் அடிக்க முயன்ற வீரர்கள் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினர். பெரிய அளவில் நம்பிக்கை அளிக்காத பேட்ஸ்மேன்களால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 137 ரன்களை சேர்த்தது.

இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளையும், அடில் ரஷீத், கிரிஷ் ஜோடன் 2 விக்கெட்டுகளையும், பென்ஸ்டோக்ஸ் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தது. ஹேல்ஸை முதல் ஓவரிலேயே ஷாஹின் அப்ரீடி போல்டாக்கி வெளியேற்றினார்.

3-ஓவர் வீசிய ஹாரீஸ் ராஃப், ஃபீல் சால்டை விக்கெட்டாக்க ஆட்டம் சூடுபிடித்தது. 4 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து 32 ரன்களை சேர்த்திருந்தது. இந்த டி20 உலக கோப்பை தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் இந்த போட்டியில் நிலைத்து ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில், பெரிய விக்கெட்டான அவரை ஹாரீஸ் ராஃப் அசால்ட்டாக தூக்கியது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தது.

பவர் ப்ளே முடிவில் 49 ரன்களில் 3 விக்கெட்டை இழந்திருந்தது இங்கிலாந்து. ஒருபுறம் பென்ஸ்டோக்ஸ் நிலைத்து ஆட மறுபுறம் சதாப்கான் வீசிய பந்தில் ஹாரி ப்ரூக் விக்கெட்டாகி வெளியேறினார். தொடர்ந்து மொயின் அலி - பென்ஸ்டோக்ஸூடன் கைகோர்த்து இங்கிலாந்தின் ரன்களை உயர்த்தினர். மொயின் அலி 18-வது ஓவரில் வெளியேற, பென்ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 52 ரன்களை சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றிபெறச்செய்தார். பாகிஸ்தான் அணி தரப்பில், ஹாரீஸ் ராஃப் 2 விக்கெட்டுகளையும், ஷாயின் அப்ரீடி, ஷதாப் கான், முஹம்மத் வசீம் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.



Read in source website

சென்னை: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 101-வது நிறுவன தின விழாகொண்டாடப்பட்டது. இதையொட்டி, ரூ.450 கோடிக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

இது தொடர்பாக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 1921 நவம்பர் 11-ம் தேதி நிறுவப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 101-வதுநிறுவன தின விழா தூத்துக்குடியில் கடந்த 11-ம் தேதி கொண்டாடப்பட்டது.

வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான கே.வி.ராமமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வங்கியின் அழைப்பு மையத்தை (Call Centre) தொடங்கிவைத்தார். வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன்அவரை வரவேற்று கவுரவித்தார்.நிறுவனர்களின் குடும்ப உறுப்பினர்களும் கவுரவிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரி செயலர் எஸ்.ஷிபாரா முன்னிலையில், வங்கியின் Manned E-lobby சேவையை நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். கடன் முகாமையும் தொடங்கி வைத்தார். கடன் பிரிவு பொது மேலாளர் நாராயணன், துணை பொது மேலாளர் விஜயன், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி டீன் சிவகுமார், தொழிலதிபர்கள் தங்கவேல் நாடார், டேவிட் ஆகியோர் பயனாளிகளுக்கு கடன் தொகைக்கான கடிதங்களை வழங்கினர்.

வங்கியின் 12 மண்டலங்களிலும் நடத்தப்பட்ட முகாம்களில் மொத்தம் 1,410 பேருக்கு ரூ.450 கோடிக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டன. பொது மேலாளர்கள் சூரியராஜ் (செயல்பாடு, சேவைகள் பிரிவு), இன்பமணி (கடன் மீட்புத் துறை), முன்னாள் இயக்குநர் சி.எஸ்.ராஜேந்திரன் மற்றும் இயக்குநர்கள் குழுவினர், பொது மேலாளர்கள், தலைமை நிதி அதிகாரி மற்றும் அதிகாரிகள், பங்குதாரர்கள், ஊழியர்கள், வங்கி நிறுவனர்களின் குடும்ப உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.



Read in source website

உச்ச நீதிமன்றம் மீண்டும் ‘சீல்டு கவர்’ முறைக்கு அதிருப்தி, அது தெளிவற்றது, வெளிச்சத்திற்கு வராதது என்று கூறுகிறது. நீதிமன்றங்களில் அடிக்கடி காணப்படும் இந்த நடைமுறை என்ன?

கடந்த மாதத்தில், இப்போது இந்திய தலைமை நீதிபதியாக உள்ள டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், “சீல்டு கவர்” (மூடப்பட்ட உறை) நீதித்துறையின் நடைமுறையை “ஆபத்தான முன்னுதாரணமாக” அமைப்பதாக விமர்சித்தது. முன்னாள் தலைமை நீதிபதி என்.வி ரமணாவைப் போலவே சீல் செய்யப்பட்ட கவர்களை தலைமை நீதிபதி சந்திரசூட் விமர்சித்துள்ளார். இருப்பினும், உச்ச நீதிமன்றமே இந்த நடைமுறைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளது.

“சீல்டு கவர் ஜூரிஸ்பிரடன்ஸ்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?

உச்ச நீதிமன்றம் (மற்றும் சில சமயங்களில் கீழ் நீதிமன்றங்களும்) பின்பற்றும் சர்ச்சைக்குரிய நடைமுறை இது, நீதிபதிகளால் மட்டுமே கவனிக்கப்படக்கூடிய சீல் செய்யப்பட்ட உறைகளில் அரசாங்க நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவது மற்றும் ஏற்றுக்கொள்வது.

உச்ச நீதிமன்ற விதிகள், 2013 (மே 2014 இல் அறிவிக்கப்பட்டது) ஆணை XIII இன் விதி 7 (“நகல்”) கூறுகிறது: “சீல் வைக்கப்பட்ட கவரில் வைக்குமாறு தலைமை நீதிபதி அல்லது நீதிமன்றம் அறிவுறுத்துவது அல்லது ரகசியத் தன்மை உடையது என்று கருதுவது அல்லது வெளியிடுவது பொதுமக்களின் நலன் சார்ந்தது அல்ல என்று கருதப்படும், தலைமை நீதிபதியால் பிரத்தியேகமாக செய்யப்பட்ட உத்தரவின் கீழ் மற்றும் அதற்கேற்ப நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட, இந்த உத்தரவில் எதனையும் உள்ளடக்கியிருந்தாலும், எந்த ஒரு தரப்பினருக்கும் அல்லது நபருக்கும் எந்தவொரு நிமிடம், கடிதம் அல்லது ஆவணம் அல்லது அனுப்பப்பட்ட, தாக்கல் செய்த அல்லது தயாரிக்கப்பட்ட எந்தவொரு ஆவணத்திலிருந்தும் நகல்களைப் பெற உரிமை இல்லை.”

சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றம் எப்போது தகவல்களைக் கேட்கலாம்?

பரந்த அளவில் இரண்டு சூழ்நிலைகளில் கேட்கலாம்: தகவல் தொடர்பிலான விசாரணையுடன் இணைக்கப்படும்போது, ​​அது தனிப்பட்ட அல்லது ரகசியத் தகவலை உள்ளடக்கியபோது. தர்க்கம் என்னவென்றால், நடந்துகொண்டிருக்கும் விசாரணையுடன் தொடர்புடைய தகவல்களை வெளிப்படுத்துவது விசாரணையைத் தடுக்கலாம், மேலும் தனிப்பட்ட அல்லது ரகசியத் தகவல்களை வெளிப்படுத்துவது ஒரு தனிநபரின் தனியுரிமையை மீறும் அல்லது நம்பிக்கையை மீறும்.

எனவே இந்த நடைமுறையில் என்ன பிரச்சனை?

முக்கியமாக (i) தரப்பினர் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பற்றிய முழுமையான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதை இது தடுக்கிறது, மேலும் (ii) இது திறந்த நீதிமன்றம் மற்றும் வெளிப்படையான நீதி அமைப்புடன் ஒத்துப்போகவில்லை. நீதிமன்றங்கள் அவற்றின் முடிவுகளுக்கான காரணங்களை அமைக்க வேண்டும், மேலும் அவற்றை வெளியிடாதது நீதித்துறை முடிவுகளில் தன்னிச்சையான தன்மையை ஏற்படுத்தும் என்று சட்ட வல்லுநர்கள் வாதிடுகின்றனர். நீதித்துறை முடிவுகளை பகுப்பாய்வு செய்வதற்கும், அவற்றின் பின்னணியில் உள்ள நியாயத்தைப் பாராட்டுவதற்கும் இது வாய்ப்பைப் பறிக்கிறது.

அக்டோபர் 20, 2022 அன்று ‘கமாண்டர் அமித் குமார் சர்மா எதிர் இந்திய அரசு (Union of India)’ வழக்கில் வெளியிடப்பட்ட உத்தரவில், நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், “பாதிக்கப்பட்ட தரப்புக்கு தொடர்புடைய தகவல்களை வெளியிடாதது மற்றும் அதை சீலிடப்பட்ட கவரில் தீர்ப்பளிக்கும் அதிகாரிக்கு வெளிப்படுத்துதல்… ஆபத்தான முன்னுதாரணமாக அமைகிறது. சீலிடப்பட்ட கவரில் தீர்ப்பு வழங்கும் அதிகாரியிடம் தொடர்புடைய விஷயங்களை வெளிப்படுத்துவது, தீர்ப்பின் செயல்முறையை தெளிவற்றதாகவும், வெளிச்சத்திற்கு வராததாகவும் ஆக்குகிறது.”

இது, “இரண்டு சிக்கல்களை நிரந்தரமாக்குகிறது” என்று நீதிமன்றம் கூறியது:

“முதலாவதாக, சீல் செய்யப்பட்ட கவரில் வழங்கப்பட்ட பகிரப்படாத விஷயங்களின் அடிப்படையில் சிக்கல்களின் தீர்ப்பு தொடர்ந்ததால், ஒரு உத்தரவை திறம்பட சவால் செய்ய பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டப்பூர்வ உரிமையை இது மறுக்கிறது.

“இரண்டாவதாக, இது வெளிச்சத்திற்கு வராத மற்றும் இரகசிய கலாச்சாரத்தை நிலைநிறுத்துகிறது. இது தீர்ப்பளிக்கும் அதிகாரத்தின் கைகளில் முழுமையான அதிகாரத்தை வழங்குகிறது. தகவல் மீதான கட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு மேலாதிக்கக் கட்சிக்கு ஆதரவாக ஒரு வழக்கின் அதிகார சமநிலையையும் இது சாய்க்கிறது. பெரும்பாலும் இதுவே அரசு. காரணங்களுடன் கூடிய நீதித்துறை உத்தரவு நீதி அமைப்பின் தனிச்சிறப்பாகும்… சீல் செய்யப்பட்ட கவர் நடைமுறையானது நீதி வழங்கல் அமைப்பின் செயல்பாட்டை தனிப்பட்ட வழக்கு முதல் வழக்கு நிலை மற்றும் ஒரு நிறுவன மட்டத்தில் பாதிக்கிறது.

எல்லா தகவல்களும் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துகிறதா?

இல்லை அது இல்லை. “பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவரின் அடையாளம் போன்ற தனிநபரின் தனியுரிமையைப் பாதிக்கும் முக்கியமான தகவல்கள்” என்பதை எடுத்துக்காட்டி, “எல்லாத் தகவல்களும் பொதுவில் வெளியிடப்பட வேண்டும் என்று இது கூறவில்லை” என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. ஆனால் அது “விதிவிலக்கான சூழ்நிலைகளில் முக்கியத் தகவலை வெளிப்படுத்தாதன் அளவு, வெளிப்படுத்தாதது எந்த நோக்கத்திற்காக விகிதாசாரமாக இருக்க வேண்டும்” என்றும், “விதிவிலக்குகள்… விதிமுறையாக மாறக்கூடாது” என்றும் அது கோடிட்டுக் காட்டியது.

சுப்ரீம் கோர்ட் முன்பும் இப்படி சொல்லியிருக்கிறதா?

ஆம், பல சந்தர்ப்பங்களில். சில சமீபத்திய உதாரணங்கள்:

* இந்த ஆண்டு மார்ச் மாதம், பீகார் அரசு தொடர்பான வழக்கில், அப்போதைய தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, திறந்த நீதிமன்றத்தில் அனைத்து வாதங்களையும் முன்வைக்க விரும்புவதாகத் தெளிவுபடுத்தியது. “தயவுசெய்து எங்களுக்கு சீல் வைக்கப்பட்ட கவர் கொடுக்க வேண்டாம், அது எங்களுக்கு வேண்டாம்” என்று பாட்னா உயர் நீதிமன்ற வழக்கறிஞரிடம் நீதிபதி ரமணா கூறினார்.

* அதே நாளில், நீதிபதி சந்திரசூட், மலையாள தொலைக்காட்சி சேனல் மீடியாஒன் மீதான மத்திய அரசின் தடைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, ​​“நாங்கள் சீல்டு கவர் நீதித்துறையை வெறுக்கிறோம். நாங்கள் இப்போது பதிவைப் பார்த்தால் உங்களுக்கு சிக்கல்கள் உள்ளதா?” என்று கேட்டார். சீலிடப்பட்ட உறையில் மத்திய அரசு சமர்ப்பித்த ஆவணங்களை நம்பி கேரள உயர்நீதிமன்றம் தடையை உறுதி செய்ததை அடுத்து, பிப்ரவரி 8ஆம் தேதி சேனல் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. ஆனால் உச்ச நீதிமன்றம் அதே நடைமுறையை அனுமதிக்க மறுத்துவிட்டது, பின்னர் தடையை நிறுத்தியது.

* 2019 டிசம்பரில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியபோது, ​​​​நீதிபதிகள் ஆர் பானுமதி, ஏ.எஸ் போபண்ணா மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், ஒரு சீல் செய்யப்பட்ட கவரில் அமலாக்க இயக்குனரகம் (ED) சமர்ப்பித்த தகவல்களை நம்பியதற்காக டெல்லி உயர் நீதிமன்றத்தை தணிக்கை செய்தது.

“ஒவ்வொரு வழக்கிலும் அரசுத் தரப்பு ஆவணங்களை சீல் வைத்த கவரில் சமர்ப்பித்து, அதன் மீதான கண்டுபிடிப்புகள் குற்றம் செய்யப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டு, அது ஜாமீன் மறுப்பு அல்லது வழங்குவதற்கு காரணமாகக் கருதப்பட்டால் அது நியாயமான விசாரணையின் கருத்துக்கு எதிரானது, “என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

அப்படியானால், இந்த நடைமுறை எப்படி இடம் பெற்றது?

உச்ச நீதிமன்றமே பொதுநலன் தொடர்பான தகவல்களை சீலிடப்பட்ட உறைகளில் தேடும் நடைமுறையை ஊக்குவித்துள்ளது, மிகச் சமீபத்தில் முன்னாள் தலைமை நீதிபதியும் இப்போது ராஜ்யசபா உறுப்பினருமான நீதிபதி ரஞ்சன் கோகோய்.

* ரஃபேல் விமான வழக்கில், அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் தொடர்பான விவகாரம் என்ற அரசின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

* பீமா-கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட செயல்பாட்டாளர்களின் கைதுக்கு தடை விதிக்க மறுக்க, மகாராஷ்டிரா காவல்துறை சீல் வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பித்த “ஆதாரங்களை” நம்பியிருந்தது.

* சுமார் 19 லட்சம் குடிமக்கள் பட்டியலிலிருந்து விலக்கப்பட வழிவகுத்த, அசாமில் நடந்த என்.ஆர்.சி பயிற்சியில், உச்ச நீதிமன்றம் என்ஆர்சி ஒருங்கிணைப்பாளரிடம் சீல் வைக்கப்பட்ட கவரில் விவரங்களைக் கேட்டது, அரசாங்கமோ அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினரோ அவர்களைப் பார்க்க அனுமதிக்கவில்லை.

* முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான ஊழல் புகார்கள் தொடர்பான வழக்கில், மத்திய கண்காணிப்பு ஆணையம் தனது அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.

* 2ஜி வழக்கில், ஏராளமான உரிமங்களை ரத்து செய்த நீதிமன்றம், சீல் வைக்கப்பட்ட கவர்களை நம்பியிருந்தது.

* சிதம்பரம் வழக்கு விசாரணையின் போது, ​​சீலிடப்பட்ட கவரில் உள்ள தகவல்களைக் குறிப்பிடும்படி நீதிமன்றத்தை வற்புறுத்த முயன்றபோது, ​​முன்னாள் பிரதமர் பி.வி நரசிம்ம ராவின் மகன் பி.வி பிரபாகர் ராவ் தொடர்பான வழக்கு 1997-ஆம் ஆண்டு வழக்கை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.



Read in source website

ஒரு கல்வெட்டு இவ்வளவு வரலாற்றுச் செய்திகளைத் தர முடியுமா என்று வியப்பூட்டும் அளவுக்கு விரிவாகவும் தெளிவாகவும் பேசும் கல்வெட்டுகளைத் தமிழ்நாட்டுக் கோயில்கள் பல கொண்டுள்ளன. பொதுக்காலம் 10ஆம் நூற்றாண்டில் ஒரு கோயிலின் வாழ்க்கை எப்படியிருந்தது என்றறிய விழைவாருக்கு முதல் இராஜராஜர் தஞ்சாவூரில் எடுப்பித்த இராஜராஜீசுவரத்துக் கல்வெட்டுகள் கைப்பிடித்து வழிகாட்டும்.

இராஜராஜீசுவரத்தில் இராஜராஜரும் இராஜேந்திரரும் பிறரும் வழங்கியிருக்கும் வரலாற்றுப் பதிவுகள் அனைத்துமே அந்நாளைய சமுதாயம் காட்டும் கண்ணாடிகள் என்றாலும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாகத் தளிச்சேரிக் கல்வெட்டுக்குள் கண் வைப்போம். தமிழ்நாட்டில் மட்டுமன்று, இந்தியத் திருநாட்டின் வேறெந்தத் திருக்கோயிலிலும் இதுவொத்த கல்வெட்டுகள் பதிவாகவில்லை என்பது இதன் பெருமை. இராஜராஜரின் 29ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டுக் கோயிலின் வடசுற்றுச் சுவரின் புறத்தே காணப்படுகிறது.



Read in source website

சிறகுகளைச் சுமையாகப் பாவிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட பறவையின் கதைதான் நிருத்யாவினுடையதும். ஆனால், தான் ஒரு பறவை என்பதையும் பறத்தல் தன் இயல்பு என்பதையும் அவர் மறக்கவில்லை. தன்னை விழுங்கத் துடிக்கும் அரசியலுக்கு எதிராகத் தொடர்ந்து கேள்விகள் கேட்டபடி இருக்கிறார். வழிவழியாக நடனத்தையே பாரம்பரியமாகக் கொண்டிருந்த பல குடும்பங்களின் மீது குத்தப்பட்ட முத்திரைகளைக் கண்டு அஞ்சாமல் தன் அடையாளத்தை நிரூபித்துவிடும் உறுதியோடு செயல்பட்டுவருகிறார். தங்களிடமிருந்த பாரம்பரியக் கலையான பரதநாட்டியம் எப்படிப் பறிக்கப்பட்டது என்பதையும், அதற்கு உழைத்துப் பங்காற்றிய கலைஞர்களின் பெயர்களையும், வரலாற்றையும் அழிக்க/ திரித்து எழுத நடக்கும் சதிகளை பற்றியும், ஒரு குறிப்பிட்ட சமூகம் அதைத் தங்களது சொத்தாகச் சொந்தம் கொண்டாட நினைப்பதையும் குறித்துக் கவனப்படுத்திவருகிறார்.



Read in source website