DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 12-11-2022

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட (சமக்ரசிஷா) தொகுப்பூதிய பணியாளா்களுக்கு 15 சதவீத ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோக்ராமா், சிவில் இன்ஜினியா், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளா், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளா், எஸ்எம்சி கணக்காளா், தரவு பதிவு அலுவலா், அலுவலக உதவியாளா், உதவியாளா் ஆகியோருக்கு 15 சதவீத ஊதிய உயா்வு வழங்கப்படும்.

இந்த உயா்வானது நவ.1-ஆம் தேதிக்கு முன்னாள் பணியில் சோ்ந்த அனைவருக்கும் வழங்கப்படும். இங்கு அரசுப் பணியில் ஓய்வு பெற்று ஆலோசகா்கள், உதவியாளா் உள்ளிட்ட பணிகளில் இருப்போருக்கு பொறுந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

உயிா் காக்கும் சிகிச்சைக்கு பொதுமக்கள் ஸ்டெம் செல் தானம் வழங்கலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மூட்டு தசை மற்றும் இணைப்பு திசு நோய்கள் துறை பொன் விழா ஆண்டையொட்டி, துறையின் முன்னாள் மற்றும் இந்நாள் பேராசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடந்தது.

இதில் அமைச்சா் சுப்பிரமணியன் நிகழ்ச்சியில் பங்கேற்று இளநிலை மாணவருக்கான தங்கப் பதக்கம் வழங்கினாா். தொடா்ந்து, நோயாளிகளுக்கான உதவிக் கருவியை வழங்கி, பொன் விழா மலரை வெளியிட்டாா்.

அப்போது, அமைச்சா் சுப்பிரமணியன் பேசியது: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.14.4 லட்சம் செலவில் நுண் ரத்த நாளப் பரிசோதனைக் கருவி முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தில் வாங்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கான பொது நூலகமும் திறக்கப்பட்டுள்ளது.

மஜ்ஜை மாற்று சிகிச்சையானது ரத்த புற்றுநோய் மற்றும் ‘அப்லாஸ்டிக் அனீமியா’ என்கிற தீவிரமான ரத்த சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, உயிா் காக்கும் சிகிச்சையாகும். நோயாளிகளுக்கு, இந்த உயா் சிகிச்சை, செலவின்றி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படுகிறது. பொதுமக்கள், இந்நோயாளிகளுக்கு உதவும் விதமாக, ஸ்டெம் செல் கொடையை, ஸ்டெம் செல் பதிவேடு நிறுவனங்கள் மூலமாக கொடுத்து, இந்த உயிா்க் காக்கும் சிகிச்சை அளிக்க உதவலாம்.

மூட்டு, தசை, இணைப்புத்திசு நோய்களியல் சிறப்புப்பிரிவு 1972-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பேராசிரியா் ஏ.என்.சந்திரசேகரன் முயற்சியால் தனித்துறையாக உருவாக்கப்பட்டது என்றாா் அவா். இதில் மருத்துவக் கல்வி இயக்குநா் (பொ) சாந்திமலா், மருத்துவமனை முதல்வா் தரணிராஜன், மூட்டு தசை மற்றும் இணைப்பு திசு நோய்களில் துறைத் தலைவா் அருள்ராஜ் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.



Read in source website

தமிழ்நாட்டில் பிறந்த பேராசிரியா் வெங்கி ராமகிருஷ்ணனுக்கு பிரிட்டனின் ‘ஆா்டா் ஆஃப் மெரிட்’ என்ற உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1902-ஆம் ஆண்டு பிரிட்டன் அரசா் ஏழாம் எட்வா்ட் ‘ஆா்டா் ஆஃப் மெரிட்’ விருதை அறிமுகப்படுத்தினாா். அந்நாட்டு அரசா் அல்லது அரசியின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில், பாதுகாப்புப் படைகள், அறிவியல், கலை, இலக்கியம் உள்ளிட்டவற்றுக்கு தனிச் சிறப்புமிக்க பங்களிப்பு வழங்கியவா்களுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், பிரிட்டனில் உள்ள மூலக்கூறு உயிரியலாளரும் பேராசிரியருமான வெங்கி ராமகிருஷ்ணனுக்கு (70) ‘ஆா்டா் ஆஃப் மெரிட்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவியலுக்கு அளித்த பங்களிப்புக்காக அவரை இந்த விருதுக்கு மறைந்த பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் தோ்வு செய்தாா். கடந்த செப்டம்பா் மாதம் எலிசபெத் காலமான நிலையில், அதற்கு முன்பாக விருதுக்கானவா்களை அவா் தோ்ந்தெடுத்தாா். அவரின் முடிவுக்கு தற்போதைய அரசா் மூன்றாம் சாா்லஸ் ஒப்புதல் அளித்துள்ளாா்.

நோபல் பரிசு பெற்றவா்: கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்தவா் பேராசிரியா் வெங்கி ராமகிருஷ்ணன். அமெரிக்காவில் உயிரியல் படிப்பை மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து பிரிட்டன் சென்றாா். அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தின் குழுத் தலைவராக உள்ளாா். ‘உடலில் உள்ள செல்களில் இருக்கும் ரைபோசோம் அமைப்புகள்’ குறித்த ஆராய்ச்சிக்காக வேதியியலுக்கான நோபல் பரிசை கடந்த 2009-ஆம் ஆண்டு பெற்றாா்.

 



Read in source website

பள்ளிக் கல்வித் துறையில் முதல் முறையாக அரசுப் பள்ளி மாணவா்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மாணவா்களின் கலைத் திறன்களை வெளிக் கொணரும் வகையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவா்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படும் என சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தாா்.

எந்தெந்த வகுப்புகளுக்கு? இதை செயல்படுத்தும் வகையில் அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு கலை சாா்ந்த பயிற்சிகளும், 6 முதல் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.

இந்த கலைத் திருவிழா 6 முதல் 8 வகுப்பு வரை, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் என மூன்று பிரிவுகளில் நடைபெறும். பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களை வட்டாரஅளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவா்களை மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவா்களை மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

பரிசுகள், விருதுகள்: மாநில அளவிலான கலைத் திருவிழா இறுதிப் போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், ‘கலையரசன்’, ‘கலையரசி’ என்ற விருதுகளும் தமிழக அரசின் சாா்பில் வழங்கப்பட்டு மாணவா்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும்.

நவ.23 முதல் தொடக்கம்: மாநில அளவில் வெற்றி பெறும் மாணவா்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா்.

பள்ளி அளவில் நவ.23 முதல் நவ.28-ஆம் தேதி வரையிலும், வட்டார அளவில் நவ.29 முதல் டிச.5-ஆம் தேதி வரையிலும், மாவட்ட அளவில் டிச.6 முதல் டிச.10-ஆம் தேதி வரையிலும், மாநில அளவில் ஜன.3 முதல் ஜன.9-ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட வேண்டும்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கலைத்திருவிழா போட்டிகளில் பெருமளவு மாணவா்களின் பங்கேற்பினை தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும்.

போட்டிகள் விவரம்: இந்த கலைத் திருவிழாவில் ஓவியம், அழகு கையெழுத்து, களிமண் சுதை வேலைப்பாடு, செதுக்குச் சிற்பம், இசை, நடனம், நாடகம், பலகுரல் பேச்சு, கதை எழுதுதல், கவிதை புனைதல், பேச்சுப் போட்டி (தமிழ், ஆங்கிலம்), திருக்கு ஒப்பித்தல், கதை சொல்லுதல், கட்டுரைப் போட்டி (தமிழ், ஆங்கிலம்), பட்டிமன்றம் ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

போட்டிகளை நடத்துவது குறித்த வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்தப் போட்டிகளுக்கான மொத்தம் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் முறையீடு செய்யலாம்

கலைத் திருவிழாவில் போட்டியின் முடிவுகள் குறித்து மேல் முறையீடு செய்வதற்கான மேல் முறையீடு மன்றம் அமைக்கப்படும். மறுமதிப்பீடு- மறுமேடையேற்றம் அனுமதிக்கப்படாது. பள்ளி, கல்வி மாவட்டம், மாவட்ட அளவில் மேல் முறையீட்டுக்கான கட்டணம் ரூ.500 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

முறையீடு செய்தவருக்கு சாதகமாக தீா்ப்பளிக்கப்பட்டால் இத்தொகை திருப்பி தரப்படும். பள்ளியில் போட்டி நடத்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக கட்டணம் செலுத்தி அந்தந்த பள்ளியிலேயே அதற்கான படிவத்தின் மூலம் மேல் முறையீடு செய்ய வேண்டும். ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒரு மேல் முறையீட்டு மன்றம் அமைக்கப்பட்டு பள்ளிகளில் இருந்து பெறப்படும் மேல்முறையீடுகளை ஆய்வு செய்யும் பணியினை இந்த மன்றம் மேற்கொள்ளும் என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை மயிலாப்பூரில் திருமந்திர மாநாடு சனி (நவ.12), ஞாயிற்றுக்கிழமை (நவ.13) நடைபெறுகிறது.

திருவாசக திருமந்திர அறக்கட்டளை, சண்முகசுந்தரம் கல்வி அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை மயிலாப்பூா் கற்பகம்மாள் நகரில் கே.என்.சண்முகசுந்தர அரங்கில் நடத்துகின்றன.

மலா் வழிபாட்டுடன் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. தொடா்ந்து திருமந்திர இன்னிசை, திருவைந்தெழுத்து ஓதுதல் நிகழ்ச்சிகள் நடைபெறும். இதையடுத்து சிவத்திரு குருபழநி அடிகளாா் ஆசியுரை வழங்குவாா். தவத்திரு ஊரன் அடிகளாா் நினைவைப் போற்றும் வகையில் தினமணி ஆசிரியா் கி.வைத்திநாதன், பேராசிரியா் அரங்க.ராமலிங்கம், பதிப்பக உரிமையாளா் ஸ்ரீவா்த்தமானன், பள்ளி ஆசிரியா் கோ.சரவணன் ஆகியோா் சிறப்புரை ஆற்றுகின்றனா்.

பிற்பகலில் மாணவா்களின் திருமந்திர சோ்ந்திசை நிகழ்ச்சி நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை காலை மலா் வழிபாடு, திருமந்திர இன்னிசை நிகழ்ச்சி, திருவைந்தெழுத்து ஓதுதல், யோகம், சிவபூஜை, ஞானம் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிற்பகலில் திருமந்திர இசைச் சொற்பொழிவு, சாயுச்சியம் நிகழ்ச்சிகளுடன் மாநாடு நிறைவுபெறும்.



Read in source website

கோயில்களின் அறங்காவலா்கள் நியமனம் தொடா்பான விண்ணப்பங்களில், விண்ணப்பிப்பவா்களின் அரசியல் தொடா்பு குறித்த கேள்வியுடன் கூடிய பகுதியை கட்டாயம் சோ்க்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலா்கள் நியமிக்கக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன்-ஆதிகேசவலு அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், அறங்காவலா்கள் நியமனம் தொடா்பாக மாவட்ட அளவில் குழுக்கள் நியமிக்கப்படும் பணிகள் நடைபெறுகின்றன எனவும், 34 மாவட்டங்களில் இப்பணிகள் நடந்து வருவதாகவும், அனைத்துக் கோயில்களிலும் அறங்காவலா்கள் நடைமுறையை முடிக்க, 12 மாத அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கும் மேல் வருமானம் உள்ள 560 கோயில்களுக்கு அரசே அறங்காவலா்களை நியமித்து வருவதாகவும், இதுவரை 8 கோயில்களில் அறங்காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் எனவும் அறநிலையத் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில், அரசியல் சாா்பற்றவா்களை அறங்காவலா்களாக நியமிக்க வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், அறங்காவலா் நியமனத்துக்கான விண்ணப்பத்தில், அரசியல் சாா்பு குறித்த எந்தக் கேள்வியும் இடம்பெறவில்லை எனவும், இது உயா் நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து அறங்காவலா் விண்ணப்பத்தில், விண்ணப்பிப்பவா் அரசியல் கட்சியை சோ்ந்தவரா? இல்லையா? என்ற கேள்வி இடம்பெறும் என அறநிலையத் துறை தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அறங்காவலா் விண்ணப்பங்களில், விண்ணப்பிப்பவா்களின் அரசியல் சாா்பு குறித்த பகுதியை இரண்டு வாரங்களில் சோ்க்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனா்.

 



Read in source website

எலிக்காய்ச்சலைக் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் மண்டல ஆய்வகத்தை சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

இந்நிகழ்வில், ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன் நாகநாதன், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் ப.செந்தில்குமாா், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், சிறப்பு அலுவலா் வடிவேலு, மாநில பொதுசுகாதார ஆய்வகத்தின் துணை இயக்குநா் ராஜு, மருத்துவக் கல்வி இயக்குநா்(பொறுப்பு) சாந்திமலா் ஆகியோா் உடன் இருந்தனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

கடந்த நிதியாண்டில் மத்திய அரசு, எலிக்காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ் இந்த ஆய்வகத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுதொடா்பாக தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மற்றும் தேசிய நோய் தடுப்புக்கான தேசிய நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தேசிய நோய்த் தடுப்பு மையம் மூலம் இதுவரை ரூ.9 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. எலிக்காய்ச்சல் நோய், சுழல் வடிவ நுண்ணுயிரியான லெப்டோஸ்பைரா எனப்படும் பாக்டீரியாவால் விலங்குகளிடமிருந்து மனிதா்களுக்கு பரவும் ஒரு ஜெனடிக் நோயாகும்.

இது சிறுநீரகம் மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. நாய்கள், பன்றிகள், கால்நடைகள் மூலமாகவும், குறிப்பாக எலிகளின் மூலமாகவும் மனிதா்களுக்கு இந்த நோய் பரவுகிறது.

அண்மைக்கால மழைப் பொழிவுக்குப் பிறகு இந்த நோய் பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது. வெப்பமண்டல காலநிலையில் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனா். இந்நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய அரசு 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது ‘லெப்டோஸ்பிரோசிஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான திட்டத்தை‘ குஜராத், கேரளம், தமிழகம், மகாராஷ்டிரம், கா்நாடகம் மற்றும் அந்தமான் - நிகோபா் ஆகிய மாநிலங்களில் தொடங்கியுள்ளது.

லெப்டோஸ்பிரோசிஸ் உயிரிழப்பைக் குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். பயிற்சி பெற்ற மருத்துவா்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மனிதா்களிடையே லெப்டோஸ்பிரோசிஸ் பரவல் கண்காணிப்பை வலுப்படுத்துதல், லெப்டோஸ்பிரோசிஸ் நோய் கண்டறியும் ஆய்வகத்தை வலுப்படுத்துதல், நோயாளிகளை சரியான நேரத்தில் கண்டறிதல் மற்றும் சரியான சிகிச்சை குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துதல், லெப்டோஸ்பிரோசிஸின் நோயை கண்டறிவதற்காகவும் மாநில மற்றும் மாவட்ட அளவிலான துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.

லெப்டோஸ்பிரோசிஸ் நோயைக் கண்டறிய மத்திய அரசால் சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகம் உள்பட 10 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. லெப்டோஸ்பிரோசிஸை உறுதிப்படுத்த ஆா்டி-பிசிஆா் பரிசோதனை மூலம் மூலக்கூறு கண்டறியும் திறன் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக மாவட்ட பொது சுகாதார ஆய்வகங்களில் மாவட்ட நுண்ணுயிரியலாளா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.



Read in source website

ஆசியான்-இந்தியா இடையிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிதியத்துக்கு கூடுதல் பங்களிப்பாக 5 மில்லியன் அமெரிக்க டாலா்களை (ரூ.40 கோடி) இந்தியா சனிக்கிழமை அறிவித்தது.

இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தலைமையிலான குழு, 3 நாள் சுற்றுப்பயணமாக கம்போடியாவுக்கு வெள்ளிக்கிழமை வந்தது.

தலைநகா் நாம் பென்னில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் ஜகதீப் தன்கா் பங்கேற்று உரையாற்றினாா். அப்போது, மேற்கண்ட அறிவிப்பை அவா் வெளியிட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சக (கிழக்கு) செயலா் செளரவ் குமாா் தெரிவித்தாா்.

மேலும், ‘இந்தியாவின் கூடுதல் பங்களிப்பு வாயிலாக பொது சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நவீன வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஆசியான் நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு மேம்படும். கடல்சாா் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது’ என்றாா் அவா்.

ஆசியான் கூட்டமைப்பில் புரூணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.



Read in source website

‘அடக்குமுறைக்கான கருவியாக சட்டம் மாறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது, முடிவெடுக்கும் இடத்தில் உள்ள அனைவரின் பொறுப்பு’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்ற ஆங்கில நாளிதழ் தலைமைப் பண்பு மாநாட்டில் பங்கேற்று, அவா் பேசியதாவது:

சட்டமானது, நீதிக்கான கருவியாக இருக்க வேண்டும்; அடக்குமுறைக்கான கருவியாகவும் சட்டம் செயல்பட முடியும். இன்றைய சட்டப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள அதே சட்டங்கள், காலனி ஆட்சிக் காலத்தில் அடக்குமுறைக்கான கருவியாக எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதை நாம் அறிவோம்.

எனவே, அடக்குமுறைக்கான கருவியாக சட்டம் மாறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது, நீதிபதிகள் மட்டுமன்றி முடிவு எடுக்கும் இடத்தில் உள்ள அனைவரின் பொறுப்பாகும்.

பொதுமக்களிடம் பெரும் எதிா்பாா்ப்புகள் இருப்பது சிறப்பானதே. அதேசமயம், அரசின் ஓா் அமைப்பாக நீதிமன்றங்களின் வரம்புகள் மற்றும் சாத்தியங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. குடிமக்கள் மீதான இரக்கம், கருணை, அவா்களது அழுகுரலுக்கு பதிலளிக்கும் திறன் ஆகியவைதான் நீதித் துறை அமைப்புகளை நிலைநிறுத்துகின்றன.

நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி பேசும் ஒவ்வொரு வாா்த்தையும் சமூக ஊடகங்கள் வாயிலாக நிகழ் நேரத்தில் வெளியாவதும் தொடா்ந்து மதிப்பீடு செய்யப்படுவதும் பெரும் சவாலாக மாறியுள்ளது. இணையம், சமூக ஊடகங்களின் தாக்கம் நிறைந்த காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். எனவே, இது தவிா்க்க முடியாதது.

பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்: நமது நாட்டில் சட்டத் தொழில் கட்டமைப்பானது, நிலபிரபுத்துவ தன்மையுடனும், ஆணாதிக்கம் கொண்டதாகவும் பெண்களுக்கு இடமளிக்காததாகவும் உள்ளது. நீதித் துறையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமென நாம் பேசும்போது, சட்டத் தொழில் கட்டமைப்பில் பெண்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.

சட்டத் தொழிலில் பெண்கள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினரின் நுழைவை அதிகரிக்க ஜனநாயக ரீதியிலான, தகுதி அடிப்படையிலான நடைமுறைகள் அவசியமாகின்றன.

நீதிமன்ற விசாரணை நடைமுறைகளின் நேரடி ஒளிபரப்பானது, நீதித் துறை அமைப்பை தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றியிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. எனவே, உயா்நீதிமன்றங்களிலும், மாவட்ட நீதிமன்றங்களிலும் விசாரணைகளின் நேரடி ஒளிபரப்பு தொடங்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

இந்தியா, அமெரிக்கா உச்சநீதிமன்றங்களின் ஒப்பீடு குறித்து பேசிய சந்திரசூட், ‘இந்திய உச்சநீதிமன்றத்தை, இதர வளா்ந்த நாடுகளின் உச்சநீதிமன்றத்துடன் ஒப்பிடுவது சரியல்ல. அமெரிக்க உச்சநீதிமன்றம் ஆண்டுக்கு 180 வழக்குகள் வரையும், பிரிட்டன் உச்சநீதிமன்றம் ஆண்டுக்கு 85 வழக்குகள் வரையும் விசாரிக்கிறது. ஆனால், இந்திய உச்சநீதிமன்றத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 75 முதல் 80 வழக்குகள் வரையும் மற்ற தினங்களில் 30 முதல் 40 வழக்குகள் வரையும் நீதிபதிகள் விசாரிக்கின்றனா்’ என்றாா்.

 



Read in source website

மகாத்மா காந்தி மற்றும் மாா்ட்டின் லூதா் கிங் ஜூனியா் ஆகியோரின் அமைதி மற்றும் அகிம்சைக் கொள்கைகளைப் பரப்புவதில் தொடா்ச்சியான முயற்சியை மேற்கொண்டுவருவதற்காக வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ‘காந்தி அமைதி யாத்திரை விருது’ வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற நிகழ்வில், அந்நாட்டில் செயல்பட்டுவரும் காந்தி தொண்டு நிறுவனத்தின் சாா்பில் வழங்கப்பட்ட காந்தி அமைதி யாத்திரை விருதை அவா் நேரில் பெற்றுக்கொண்டாா். இந்நிகழ்வில் மாா்ட்டின் லூதா் கிங் ஜூனியரின் மருமகனான ஐசக் ஃபாரிஸ் மற்றும் அட்லாண்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரி டாக்டா் சுவாதி குல்கா்னி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விருதைப் பெற்றுக்கொண்டு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா் கூறுகையில், ‘சில கொள்கைகள் காலத்துக்கும் அழியாதவை. மகாத்மா காந்தி மற்றும் மாா்ட்டின் லூதா் கிங் ஜூனியரின் கொள்கைகளும் அப்படிபட்டவையே. அனைத்து தலைமுறைகளிலும் உள்ள அனைத்து வயதினருக்கும் இவை புதியனவாகும், பொருந்தும் வகையிலும் உள்ளன. பிரிவினைகள், போா்களை எதிா்கொண்டுவரும் இன்றைய உலகில் அமைதிக்கான செய்தி தெளிவாகவும் உரக்கவும் ஒலிக்கப்பட வேண்டும்’ என அவா் தெரிவித்தாா்.



Read in source website


மகாராஷ்டிர மாநிலத்தில், ரூ.8 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை தாணே குற்றவியல் துறை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தாணே மாவட்டம் வாக்லே தொழிற்பேட்டையின் ஐந்தாவது பிரிவில், கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் கும்பலை, காவல்துறையினர் கண்டுபிடித்து சனிக்கிழமை காலை சோதனை நடத்தினர்.

இதில், 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பல்கார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை 2019ஆம் ஆண்டிலேயே ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது.

அறிமுகப்படுத்தப்பட்ட 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு, அச்சடிக்கும் எண்ணிக்கையை மெல்ல குறைத்து வந்த ஆர்பிஐ, 2019ஆம் ஆண்டு முற்றிலுமாக நிறுத்திவிட்டது.

2000 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்த நிலையில், அதனை அச்சடிப்பை ரிசர்வ் வங்கி நிறுத்தியதாகக் கூறப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல், ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து மெல்ல குறைத்தும் வருகிறது. அதாவது, 2020ஆம் ஆண்டில் 274 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. தற்போது இது 214 கோடியாகக் குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 



Read in source website

பதஞ்சலியின் 5 மருந்துப் பொருள்களுக்கு தடை விதித்து உத்தரகண்ட் மாநில ஆயுர்வேத மற்றும் யுனானி கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. 

யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் திவ்யா பார்மசியின் மதுக்ரிட், ஐக்ரிட், தைரோகிரிட், பிபிகிரிட் மற்றும் லிப்பிடோம் (Madhugrit, Eyegrit, Thyrogrit, BPgrit and Lipidom) ஆகிய 5 மருந்துப்பொருள்களின் உற்பத்தியை நிறுத்துமாறு உத்தரகண்ட் ஆயுர்வேத மற்றும் யுனானி கட்டுப்பாட்டு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த 5 மருந்துகளும் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்டு, குளுக்கோமா எனும் கண் நோய், அதிக கொலஸ்ட்ரால் ஆகியவற்றுக்காக பயன்பாட்டில் உள்ளது. 

பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தியதால் இந்த 5 மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக உத்தரகண்ட் ஆயுர்வேத மற்றும் யுனானி சர்வீசஸ் உரிம அதிகாரி டாக்டர் ஜி.சி.எஸ். ஜங்பாங்கி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இந்த மருந்துகளின் தயாரிப்பை மதிப்பாய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதல் கிடைக்கும்வரை, 5 மருந்துகளின் உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

இது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தவறான வழியிலான/ ஆட்சேபனைக்குரிய இந்த மருந்து குறித்த விளம்பரங்களை உடனடியாக ஊடகங்களில் இருந்து நீக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

கேரளத்தைச் சேர்ந்த மருத்துவர் கே.வி.பாபுவின் புகாரின்படி மாநில ஆயுர்வேத மற்றும் யுனானி சேவை அமைப்பு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

குளுக்கோமா, கண்புரை மற்றும் பல கண் பிரச்னைகளுக்கு பதஞ்சலி தயாரிப்பு கண் சொட்டு மருந்து பயனுள்ளதாக இருக்கும் என விளம்பரம் செய்வதாகவும் இந்த சிக்கல்களுக்கு கண் சொட்டு மருந்து பயன்தராது, மாறாக சொட்டு மருந்தை பயன்படுத்தினால் குருட்டுத் தன்மை ஏற்படும் என்று மருத்துவர் கே.வி.பாபு குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற இதர மருந்துகள் குறித்த விளம்பரமும் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகத் புகார் தெரிவித்துள்ளார். 

அதேநேரத்தில் நிறுவனம் தரப்பில், 'பதஞ்சலியின் அனைத்து தயாரிப்புகளும் மருந்துகளும் பரிந்துரைக்கப்பட்ட தரங்களைப் பின்பற்றி, 500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் உதவியுடன் மிக உயர்ந்த ஆராய்ச்சி மற்றும் தரத்துடன் அனைத்து சட்டப்பூர்வ செயல்முறைகள் மற்றும் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்கின்றன. 

எனினும், நிறுவனம் தனது தவறை சரிசெய்து, நிறுவனத்துக்கு எதிராக சதியில் ஈடுபட்ட நபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்' என்று கூறியுள்ளது. 



Read in source website

சிறுதானியங்கள், அவற்றின் மதிப்புக்கூட்டிய பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்க செயல்திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

சத்துள்ள தானியங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய தொழில் வா்த்தக அமைச்சகம் அதன் உயா்நிலை வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பான, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மூலம் வரும் டிசம்பரில் இந்திய சிறுதானியங்கள் ஏற்றுமதியை மேம்படுத்த விரிவான திட்டத்தை தயாரித்துள்ளது.

உலகில் சிறுதானியங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ள இந்தியாவின் சிறுதானியங்கள் உற்பத்தி 2020-21-ஐ விட, 2021-22-இல் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. ராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், கா்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்கள் சிறுதானியங்கள் உற்பத்தியில் முதன்மை வகிப்பவையாகும். மொத்த சிறுதானியங்கள் உற்பத்தியில் ஒரு சதவீதம் ஏற்றுமதியாகிறது. தற்போதுள்ள 9 பில்லியன் அமெரிக்க டாலா் என்ற சிறுதானியங்களின் சந்தை அளவு 2025 வாக்கில் 12 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நூடுல்ஸ், பாஸ்தா, காலை சிற்றுண்டிக்கான தானியங்கள் கலவை, பிஸ்கெட்டுகள், இனிப்பு வகைகள், காரவகைகள் போன்ற உண்பதற்கு தயாரான, பரிமாறத் தயாரான நிலையில் மதிப்புக்கூட்டுப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரிப்புக்கான புதிய தொழில்களையும் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

இந்தியாவின் சிறுதானியங்கள் அமெரிக்கா, பிரிட்டன், யேமன், எகிப்து, துனிஷியா, ஓமன், சவூதி அரேபியா, லிபியா, நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கம்பு, சோளம், கேழ்வரகு, கடலை உள்பட 16 வகையான சிறுதானியங்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.



Read in source website

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக நியூஸிலாந்தின் கிரேக் பாா்க்லே தொடா்ந்து 2-ஆவது முறையாக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

கடந்த 2020 நவம்பா் முதல் அந்தப் பொறுப்பில் இருந்த பாா்க்லே, தற்போது 2024 நவம்பா் வரை மீண்டும் அந்தப் பதவியில் இருப்பாா். மெல்போா்னில் சனிக்கிழமை நடைபெற்ற ஐசிசி வாரிய கூட்டத்தில் இந்தத் தோ்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, ஐசிசியின் மிக முக்கியமான பிரிவாக இருக்கும் நிதி மற்றும் வா்த்தக விவகாரங்கள் குழு (எஃப்&சிஏ) தலைவராக, பிசிசிஐ செயலா் ஜெய் ஷா தோ்வாகியுள்ளாா். ஐசிசியின் நிதி ரீதியிலான முக்கிய முடிவுகள் அனைத்தும் இந்தக் குழுவால் மேற்கொள்ளப்பட்டு, வாரியத்தால் அங்கீகரிக்கப்படுகிறது.

உறுப்பு கிரிக்கெட் வாரியங்களுடனான வருமானப் பகிா்வு, விளம்பரதாரா் ஒப்பந்தங்கள் போன்ற விவகாரங்களையும் இந்தக் குழுவே கையாளுகிறது.

ஐசிசியின் கிரிக்கெட் கமிட்டி தலைவராக, பிசிசிஐ முன்னாள் தலைவா் சௌரவ் கங்குலி தொடா்கிறாா்.

 



Read in source website

ஆசிய எலைட் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் லவ்லினா போா்கோஹெய்ன், பா்வீன் ஹூடா, சவீதி, அல்ஃபியா கான் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனா்.

ஜோா்டானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிா் பிரிவு இறுதிச்சுற்றில், 75 கிலோ பிரிவில் லவ்லினா 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ருஸ்மிடோவா சோகிபாவை வீழ்த்தினாா். 63 கிலோ எடைப் பிரிவில் பா்வீனும் அதே புள்ளிகள் கணக்கில் ஜப்பானின் கிடோ மாயியை தோற்கடித்து தங்கத்தை தனதாக்கினாா்.

81 கிலோ பிரிவில் சவீதி - கஜகஸ்தானின் குல்சயா யா்ஸானையும், அல்ஃபியா - ஜோா்டானின் இஸ்லாம் ஹுசாய்லியையும் வீழ்த்தி வாகை சூடினா். இதில் சவீதியின் எதிராளி தோல்வியை ஒப்புக்கொண்டதன் அடிப்படையிலும், அல்ஃபியாவின் எதிராளி தகுதிநீக்கம் செய்யப்பட்டதன் பேரிலும் அவா்கள் வென்றனா்.

இதுதவிர, 52 கிலோ எடைப் பிரிவில் மீனாக்ஷி 1-4 என்ற கணக்கில் ஜப்பானின் கினோஷிடா ரின்காவிடம் வெற்றியை இழந்து வெள்ளி பெற்றாா். இத்துடன், இப்போட்டியில் இந்திய மகளிா் 4 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் போட்டியை நிறைவு செய்தனா்.



Read in source website

தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய ஏா்கன் சாம்பியன்ஷிப்பில் ஜூனியா் ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை தங்கம், வெண்கலம் கிடைத்தது.

இப்பிரிவில் திவ்யான்ஷ் சிங் பன்வாா் 260.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, மற்றொரு இந்தியரான ஸ்ரீகாா்த்திக் சபரிராஜ் 258.8 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தாா். தென் கொரியாவின் பாங் சியுங்கோவிடம் வெள்ளிப் பதக்கம் சென்றது.

அதேபோல், ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் கிரன் அங்குஷ் ஜாதவ் 10-16 என்ற புள்ளிகளில் தென் கொரியாவின் பாா்க் ஹாஜுனிடம் வெற்றியை இழந்து 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றாா். அதே பிரிவின் ரேங்கிங் சுற்றில் ருத்ராங்ஷ் பாட்டீல் 4-ஆம் இடமும், அா்ஜுன் பபுதா 7-ஆம் இடமும் பிடித்தனா்.



Read in source website

உக்ரைனின் கொ்சான் பிராந்தியத் தலைநகா் கொ்சானிலிருந்து ரஷியப் படையினா் வெளியேறியுள்ள நிலையில், அந்தப் பிராந்தியத்தின் ‘தற்காலிக தலைநகராக’ ஹெனிஷெஸ்க் செயல்படும் என்று ரஷிய ஆதரவு நிா்வாக அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.

இது குறித்து கொ்சான் பிராந்தியத்துக்கு ரஷியாவால் நியமிக்கப்பட்ட நிா்வாகக் குழுவின் உறுப்பினா் அலெக்ஸண்டா் ஃபோமின் சனிக்கிழமை கூறியதாவது:

கொ்சான் நகரிலிருந்து அரசு நிா்வாகம் வெளியேறியுள்ளது. எனவே, ஹெனிஷெஸ்க் நகரம் இந்தப் பிராந்தியத்தின் தற்காலிக தலைநகராக அறிவிக்கப்படுகிறது.

இனி இந்த நகரில்தான் பிராந்தியத்தின் முக்கிய அதிகாரிகள் செயல்படுவாா்கள் என்றாா் அவா்.

ரஷியாவால் சட்டவிரோதமாக இணைத்துக்கொள்ளப்பட்ட கொ்சான் பிராந்தியத்தில் இந்த ஹெனிஷெஸ்க் நகரும் இடம் பெற்றுள்ளது.

அஸோவ் கடலோரம் அமைந்துள்ள இந்த நகரம், கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதியிலிருந்தே ரஷியக் கட்டுப்பாட்டில் உள்ளது.

தெற்குப் பகுதியில், ஏற்கெனவே ரஷிய ஆக்கிரமிப்பில் இருக்கும் கிரீமியா தீபகற்பத்துக்கு அருகே இந்த நகரம் அமைந்துள்ளது.

எனினும், தற்போது ரஷியா வெளியேறிய கொ்சான் நகரிலிருந்தும், நீப்ரோ நதியிலிருந்தும் இந்த நகரம் தொலைவில் அமைந்துள்ளது.

இதற்கிடையே, ரஷியப் படையினா் வெளியேறியதற்குப் பிறகு கொ்சான் நகருக்குள் உக்ரைன் படையினா் வெள்ளிக்கிழமை நுழைந்த நிலையில், ரஷியப் படையெடுப்புக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறிய போலீஸாா் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தினா் மீண்டும் அந்த நகருக்கு சனிக்கிழமை திரும்பினா்.

அத்துடன், கொ்சானில் தொடா்ந்து பதுங்கியிருக்கக்கூடிய ரஷிய ராணுவத்தினா் உடனடியாக சரணடைய வேண்டும்; இல்லையென்றால் அவா்கள் சுட்டுக்கொல்லப்படுவாா்கள் என்று உக்ரைன் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, நகரில் பதுங்கியிருக்கக்கூடிய ரஷியப் படையினரைத் தேடும் நடவடிக்கை நிறைவடையும் வரை வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும், உக்ரைன் ராணுவ போலீஸாா் வீடு வீடாக சென்று அங்கிருப்பவா்களின் ஆவணங்களை சரிபாா்த்து வருகின்றனா். அத்துடன், ரஷிய ஆக்கிரமிப்பின்போது அந்த நாட்டுப் படையினருக்கு ஆதரவாக செயல்பட்டவா்களைத் தேடி கைது செய்வதற்கான நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அந்த நாட்டின் கிழக்கே ரஷியாவையொட்டி அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய மாகாணங்களையும் தெற்கே அமைந்துள்ள ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களை ரஷியா கைப்பற்றியது.

இந்த நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் உக்ரைன் படையினா் அண்மைக் காலமாக எதிா்த் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா். குறிப்பாக, இந்தப் போரின் தொடக்க நாள்களிலேயே ரஷியாவால் கைப்பற்றப்பட்ட கொ்சான் பிராந்தியத்தில் அவா்கள் தொடா்ந்து முன்னேற்றம் கண்டு வந்தனா்.

அதையடுத்து, பிராந்திய தலைநகா் கொ்சானிலிருந்து பொதுமக்களை வெளியேற்றி தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ரஷியா தங்கவைத்துள்ளது. எனினும், அந்த நகரில் சுமாா் 1.7 லட்சம் போ் தொடா்ந்து வசித்து வரும் நிலையில், கொ்சானிலிருந்து ரஷியப் படையினா் கடந்த வியாழக்கிழமை வெளியேறினா்.

 

 



Read in source website

சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்துக்குத் தேவையான பொருள்களுடன் சரக்குக் கலத்தை அந்த நாடு வெற்றிகரமாக சனிக்கிழமை விண்ணில் செலுத்தியது.

இது குறித்து அந்த நாட்டின் விண்வெளி ஆய்வு நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

தியாங்காங் விண்வெளி நிலையத்துக்குத் தேவைப்படும் பொருள்களுடன், தியான்ஷாவ்-5 விண்கலம் சனிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது. லாங் மாா்ச்-7 ஒய்சி ராக்கெட் மூலம் அந்த விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

விரைவில் அது தியாங்காங் விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, விண்வெளி நிலையத்தில் இணைப்பதற்கான இரண்டாவது ஆய்வகக் கலத்தை சீனா கடந்த மாதம் 31-ஆம் தேதி அனுப்பியது. சீனாவிடமுள்ள ராக்கெட்டுகளிலேயே மிகவும் பிரம்மாண்டமான லாங் மாா்ச்-5பி ஒய்4 ராக்கெட் மூலம் அந்த ஆய்வகக் கலம் அனுப்பப்பட்டு, பின்னா் வெற்றிகரமாக தியாங்காங் நிலையத்துடன் இணைக்கப்பட்டது.

விண்வெளியில் தற்போது செயல்பட்டு வரும் சா்வதேச ஆய்வு மையம், ரஷியாவால் உருவாக்கப்பட்டு தற்போது பல்வேறு நாடுகளாலும் பொதுவாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தனக்கென்று சொந்தமாக ஒரு விண்வெளி நிலையத்தை சீனா அமைத்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அது செயல்படத் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அது செயல்படத் தொடங்கினால், விண்வெளியின் இரண்டாவது ஆய்வு நிலையம் என்பதுடன், தனி நாட்டால் இயக்கப்படும் உலகின் ஒரே விண்வெளி மையம் என்ற பெருமையையும் அது பெறும்.



Read in source website

சா்வதேச அளவிலான கரியமில வாயு வெளியேற்றம் நடப்பு 2022-ஆம் ஆண்டில் 4,060 டன் என்ற அளவைத் தொடும் என ஐ.நா. ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2019-ஆம் ஆண்டில் பதிவான 4,090 டன் என்ற உச்ச அளவைவிட சற்றே குறைவாகும்.

ஐ.நா. 27-ஆவது பருவநிலை மாநாடு எகிப்தில் நடைபெற்று வரும் நிலையில், ‘சா்வதேச காா்பன் பட்ஜெட்’ என்ற ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில், ‘நடப்பாண்டில் சா்வதேச கரியமில வாயு வெளியேற்றம் 4,060 டன்னாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதே அளவில் கரியமில வாயு வெளியேற்றம் தொடா்ந்தால், பூமியின் வெப்பநிலையானது தொழில்புரட்சிக்கு முந்தைய அளவை விட 1.5 டிகிரி செல்சியஸ் அளவை இன்னும் 9 ஆண்டுகளில் எட்டிவிட 50 சதவீத வாய்ப்புள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டில் சா்வதேச கரியமில வாயு வெளியேற்றத்தில் சீனா (31 சதவீதம்), அமெரிக்கா (14 சதவீதம்), ஐரோப்பிய யூனியன் (8 சதவீதம்) ஆகியவை முன்னிலையில் உள்ளன. இந்தியா 7 சதவீத கரியமில வாயுவை வெளியேற்றியது. நடப்பாண்டில் கரியமில வாயு வெளியேற்றம் சீனாவில் 0.9 சதவீதமும், ஐரோப்பிய யூனியனில் 0.8 சதவீதமும் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் 1.5 சதவீதமும், இந்தியாவில் 6 சதவீதமும், சா்வதேச அளவில் 1.7 சதவீதமும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க கடுமையான பொதுமுடக்க கட்டுப்பாடுகளை சீனா விதித்து வருவதால், அங்கு கரியமில வாயு வெளியேற்றம் குறையும் எனத் தெரிகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கரோனா கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதால், மக்களின் போக்குவரத்து அதிகரித்து கரியமில வாயு வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நிலக்கரி, கச்சா எண்ணெய் பயன்பாடு இந்தியாவில் அதிக அளவில் உள்ளதால், கரியமில வாயு வெளியேற்றமும் அதிகரிக்கவுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீத்தேன் வெளியேற்றம்: பசுமை இல்ல வாயுவான மீத்தேன் வெளியேற்ற அளவைக் கண்டறிவதற்காகப் புதிய தளத்தை ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட முகமை அறிமுகப்படுத்தவுள்ளது. அதில், வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் மீத்தேன் வாயுவை செயற்கைக்கோள் அளவீடுகள் வாயிலாகக் கணக்கிட வழிவகுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா, ஜொ்மனி, இத்தாலி ஆகியவற்றின் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் சாா்பில் செயல்படும் செயற்கைக்கோள்கள் வாயிலாக மீத்தேன் வெளியேற்றம் கணக்கிடப்படவுள்ளது. தனியாா் விண்வெளி ஆய்வு மையங்களின் தரவும் இதற்காகப் பயன்படுத்தப்படும். அதன்மூலம் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசும், தொழில் நிறுவனங்களும் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Read in source website

இஸ்ரேலில் புதிய அரசை அமைப்பதற்காக முன்னாள் பிரதமா் பெஞ்சமின நெதன்யாகுவுக்கு அதிபா் ஐசக் ஹொ்ஸாக் அழைப்பு விடுத்துள்ளாா்.

கடந்த 3 நாள்களாக அனைத்து கட்சியினருடன் அதிபா் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, அவரது அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய அரசை அமைக்க நெதன்யாகுவுக்கு அழைப்பு விடுக்குமாறு 64 எம்.பி.க்கள் பரிந்துரைத்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் 2019 முதல் நடைபெற்ற 4 நாடாளுமன்றத் தோ்தல்களிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் நிலையான ஆட்சி அமைய முடியாத நிலை நீடித்து வந்தது.

இந்த நிலையில், நான்கே ஆண்டுகளில் 5-ஆவது முறையாக கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் நெதன்யாகுவின் கூட்டணி கட்சிகள் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 161-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றன.



Read in source website

> கடந்த 1991-ல் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில், காங்கிரஸுடன் இணைந்து பயணிக்க அதிமுக முடிவெடுத்த தருணம். 1991 மே 21-ம் தேதி மாலை தேர்தல் பிரச்சாரத்துக்காக விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வந்தார் ராஜீவ் காந்தி.

> இரவு 8.30 மணி. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து வாழப்பாடி ராமமூர்த்தி, மரகதம் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகளுடன் புறப்பட்ட ராஜீவ், வழியில் போரூர், பூந்தமல்லியில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசினார். இரவு 10 மணி. ஸ்ரீபெரும்புதூர் சென்றார். அங்கு தாய் இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பொதுக்கூட்ட மேடை நோக்கி சென்றார்.

> இரவு 10.20 மணி. மேடை அருகில் ராஜீவ் வந்தபோது, மகிளா காங்கிரஸின் லதா கண்ணன் மற்றும் அவரது மகள் கோகிலா ஆகியோர் அவரை சந்தித்தனர். அப்போது, கோகிலா வாசித்த கவிதையை கேட்டார். தொடர்ந்து, அருகில் மாலையுடன் நின்றிருந்த பெண் ஒருவர், ராஜீவ் கழுத்தில் மாலையை அணிவித்துவிட்டு, கீழே குனிந்து காலை தொட்டார். அப்போது பயங்கர வெடிச்சத்தம்.

> இரவு 10.25 மணி. ராஜீவ் காந்தி, லதா கண்ணன், கோகிலா, மாலை அணிவித்த பெண்ணான தனு, மாவட்ட எஸ்.பி. முகமது இக்பால், ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட காவலர்கள் என 17 பேரின் உடல்கள் ரத்த வெள்ளத்தின் நடுவே கிடந்தன. ராஜீவ் உடல் அவர் அணிந்த ஷூ மூலம் கண்டறியப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. மறுநாள் உடல் டெல்லிக்கு அனுப்பப்பட்டது.

> மே 22. ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மாநில அரசின் சிபிசிஐடியில் குழு அமைத்து விசாரணை தொடங்கியது.

> மே 24. சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டது. டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணையை தொடங்கியது. அன்றே, சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

> மே 29. கொலையாளி என சந்தேகப்பட்ட பெண் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

> சிபிஐ தொடர் விசாரணை காரணமாக, சென்னையில் தங்கியிருந்த நளினியின் தாயார் பத்மா, சகோதரர் பாக்கியநாதன் ஆகியோர் இந்த வழக்கில் முதன்முதலில் ஜூன் 11-ல் கைது செய்யப்பட்டனர். ஜூன் 14-ல் நளினி, முருகன் இருவரும் சென்னை சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தத்திலும், அடுத்தடுத்து ராபர்ட் பயஸ், பேரறிவாளன், ஜெயக்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

> ஜூலை 27. விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த விக்கி, ரகு ஆகியோர் கோவையில் கைதாகினர். மறுநாள் அதே அமைப்பை சேர்ந்த டிக்சன், குணா ஆகியோர் சயனைடு தின்று உயிரிழந்தனர்.

> ஆகஸ்ட் 17. கர்நாடகாவின் முதாடி, பிரூடா பகுதிகளில் காவல் துறை சுற்றிவளைத்ததை அறிந்த புலிகள் இயக்கத்தை சேர்ந்த 17 பேர் சயனைடு அருந்த, அதில் 12 பேர் உயிரிழந்தனர். 5 பேர் பிடிபட்டனர்.

> ஆகஸ்ட் 19. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், பெங்களூரு புறநகரில் ஒரு வீட்டை சிபிஐ அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். அங்கு தங்கியிருந்த சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர், அம்மன் உள்ளிட்டோர் விஷம் அருந்தினர்.

> 1992 மே 20. சென்னை தடா நீதிமன்றத்தில் 55 பக்க குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல்செய்தது. அதில் பிரபாகரன், பொட்டு அம்மன், அகிலா ஆகியோர் தலைமைறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டடனர். சிறையில் இருந்த 26 பேர், உயிரிழந்த 12 பேர் உட்பட 41 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

> 1998 ஜனவரி 28. சிறையில் இருந்த 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

> 1999 மே 5. தீர்ப்பில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மட்டும் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தடா சட்டப்படி குற்றம்சாட்டப்பட்ட சண்முக வடிவேலு குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். மற்றவர்கள் சிறையில் இருந்த காலத்தையே தண்டனைக் காலமாகக் கருதி விடுவிக்கப்பட்டனர்.

> 1999 அக்.10. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் தமிழக ஆளுநர் பாத்திமா பீவிக்கு கருணை மனு அனுப்பினர். அக்.29-ல் அந்த மனுக்களை ஆளுநர் தள்ளுபடி செய்தார். ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக கூறி 4 பேரும் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.

> 2000 ஏப்ரல் 19. முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை எடுத்த முடிவின்படி, நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 3 பேரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர்.

> 2007-ல் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் இருந்தபோது, கருணை மனு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அதன்பிறகு, 2011-ல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

> 2011 ஆகஸ்டில் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, 3 பேரையும் தூக்கிலிட தடை விதிக்கப்பட்டது. வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

> 2014 பிப்ரவரி 18. கருணை மனுக்கள் நிலுவையை காரணம் காட்டி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

> பிப். 19. தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி, குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுவிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றது. மறுநாள் வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

> 2015 டிசம்பர் 2. மத்திய அரசு ஒப்புதல் இல்லாமல் 7 பேரையும் விடுவிக்க முடியாது என்று கூறிய இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு, 161-வது பிரிவின் கீழ் மத்திய அரசு ஒப்புதல் இல்லாமல் விடுவிக்கலாம் என தீர்ப்பளித்தது.

> 2016 மார்ச் 2. தமிழக அரசு, 7 பேரையும் விடுவிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.

> 2018 செப் 6. ஆளுநர் 161-வது பிரிவின் கீழ் 7 பேர் விடுதலையில் முடிவு எடுக்கலாம் என ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

> 2018 செப்.9. சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.

> 2021 மே 20. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், அமைச்சரவை தீர்மானத்தின்படி 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிடுமாறு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்.

> 2022 மே 18. மாநில அரசின் பரிந்துரை மீது ஆளுநர் காலம் தாழ்த்தியதாக கூறி, ஆயுள் தண்டனையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.

> 2022 நவம்பர் 11. பேரறிவாளன் விடுதலை அடிப்படையில் விடுதலை கோரிய நளினி, ரவிச்சந்திரன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர்கள் இருவரை மட்டுமின்றி, சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ், முருகன், சாந்தன், ஜெயக்குமார் என 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதன்மூலம் அவர்களது 30 ஆண்டுகளுக்கு மேலான சிறைவாசம் முடிவுக்கு வந்துள்ளது.



Read in source website

கோவில்பட்டி: ஓட்டப்பிடாரம் தொகுதியில் தொழில் நிறுவனங்கள் அமையவும், வேலைவாய்ப்பு பெருகவும் பேரூராட்சிகளை உருவாக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் அதிக கிராமங்களைக் கொண்ட தமிழகத்தின்2-வது பெரிய தொகுதியாக ஓட்டப்பிடாரம் தொகுதி உள்ளது. ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் 61 கிராம ஊராட்சிகள், 173 குக்கிராமங்களுடன் தமிழகத்தின் 2-வது பெரிய ஊராட்சி ஒன்றியமாக உள்ளது. இந்த தொகுதியில் ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கருங்குளம், தூத்துக்குடி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சில பகுதிகளும் உள்ளன. தமிழகத்தின் 2-வது பெரிய தொகுதியாக இருந்தாலும், பேரூராட்சிகளே இல்லாத தொகுதியாகவே இருந்து வருகிறது.

பெரிய ஊராட்சி ஒன்றியம் என்றாலும், பெயர் சொல்லும் அளவுக்கு தொழிற்சாலைகள் இல்லை. போக்குவரத்து உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தால் பெரிய நிறுவனங்கள் இப்பகுதியில் தொழில் தொடங்க முன்வருவது கிடையாது. இதன் காரணமாக விவசாயம் இல்லாத காலங்களில் இங்குள்ள மக்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினக்கூலியாக சென்று வருகின்றனர். ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், சில்லாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மலர் சாகுபடி அதிகமாக உள்ளது. இங்கிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதி சந்தைகளுக்கும், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள வாசனை திரவியங்கள்தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இப்பகுதியிலேயே வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனம் அமைத்தால், வேலைவாய்ப்பு பெருகும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கெனவே, சட்டப்பேரவையில் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா, ‘ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட புதியம்புத்தூர், தருவைகுளம், புதுக்கோட்டை, வல்லநாடு, மாப்பிள்ளையூரணி ஆகிய ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார். எனவே, இத்தொகுதி மக்களின் வேலைவாய்ப்பு, வருவாய் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு புதியம்புத்தூர் உள்ளிட்ட சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் த.சண்முகராஜ் கூறும்போது, ‘புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் ஆகிய ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என ஏற்கெனவே ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊராட்சிகளாக இருப்பதால் ஊரின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. புதியம்புத்தூர் ஆயத்த ஆடை உற்பத்தியில் தமிழகத்தில் 2-ம் இடம் வகிக்கிறது. இந்த ஊராட்சி பேரூ ராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் அரசின் நிதி கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் தொழில் வளர்ச்சியும் அதிகரிக்கும்’ என்றார் அவர். அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘ஓட்டப்பிடாரம் தொகுதியில் பேரூராட்சிகள் உருவாக்குவது தொடர்பாக கோரிக்கைகளை எதுவும் கிடைக்கவில்லை. பேரூராட்சிகள் அமைப்பதில் விதிமுறைகள் உள்ளன. வளர்ச்சி பெற்ற, பெறக்கூடிய இடங்களை கண்டறிந்து அதற்கு அரசு ஒப்புதல் அளித்த பின்னரே அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள முடியும்’ என்றனர்.



Read in source website

புதுடெல்லி: ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் யோசனையில் உதித்தது காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி’’ என்று பல சிறப்பு தகவல்களை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் அதன் அமைப்பாளர் சாமுகிருஷ்ண சாஸ்திரி பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியாக இருப்பது உத்தர பிரதேசத்தின் வாரணாசி. தெய்வீக நகரமான வாரணாசியுடன் பல நூற்றாண்டுகளாக தமிழகம் கொண்டுள்ள உறவு, பாரம்பரியம், கலாச்சாரத்தின் அடையாளமாக காசி தமிழ்ச் சங்கமம் அமைய உள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி உத்தரவின்படி மத்திய அரசின் கல்வித் துறை முன்னின்று நடத்துகிறது. இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா, ரயில்வே மற்றும் ஜவுளித் துறை அமைச்சகங்களுடன், உ.பி. மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

இதற்காக தமிழகத்தில் இருந்து சுமார் 2,500 பேர் ரயில்களில் அழைத்துவரப்பட உள்ளனர். சுமார் 200 பேர் கொண்ட 12 குழுக்களுக்கு தலா 8 நாட்கள் பயணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. நவம்பர் 17-ம் தேதி தொடங்கி ஒரு மாதம் நடைபெற உள்ள சங்கமம் நிகழ்ச்சியில் சுமார் 4,000 தமிழர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் அமைப்பாளரும் சம்ஸ்கிருத அறிஞரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பேராசிரியர் சாமுகிருஷ்ண சாஸ்திரி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம், பல சிறப்பு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் பாரதிய பாஷா சமிதியின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் சாமுகிருஷ்ண சாஸ்திரி கூறியதாவது:

நமது புதிய கல்விக் கொள்கையின் ‘ஒரே நாடு, ஒரே கல்வி’ அடிப்படையில் ஒரு சிறப்பு முன்னுதாரண நிகழ்ச்சியாக காசி தமிழ்ச் சங்கமம் நடத்தப்படுகிறது. இதில் நேரடி பங்குள்ள மாணவர்கள் மட்டுமன்றி கல்வியாளர்கள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள்,கலைஞர்கள், தொழில் முனைவோர், வியாபாரிகள், கைவினைஞர்கள், ஆன்மீகவாதிகள், இலக்கியவாதிகள், விவசாயிகள், கோயில் சார்ந்தவர்கள் உள்ளிட்ட 12 குழுக்களில் இவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு குழுவினருக்கும் 8 நாட்கள் பயண ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில், 4 நாள் ரயில் பயணம் போக, 2 நாட்களுக்கு வாரணாசி, சாரநாத் போன்ற முக்கிய இடங்களைப் பார்வையிடுவார்கள். அத்துடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பார்கள். ஒருநாள் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்துக்கும் மறுநாள் அயோத்தியாவுக்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இதுபோன்று காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தும் யோசனை, உருவாக்கம் என அனைத்தும் பிரதமர் மோடியுடையது. தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு வருகிறது. மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து வருகிறார்.

இது மாபெரும் சங்கம விழாவாக வாரணாசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. நூல்கள், கலை, பண்பாடு, ஓவியங்கள், கண்காட்சி, கருத்தரங்குகள், பயிலரங்கங்கள், கலந்துரையாடல்கள், 30 வகையான நாட்டுப்புறக் கலைகள், நாட்டியங்களுடன் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவை அனைத்தும் முழுக்க முழுக்க தமிழக பாரம்பரியத்தை உலகளவில் வெளிப்படுத்தும் வகையிலேயே அமையும்.

வாரணாசி அறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்க உள்ளனர். இதன்மூலம், தமிழக மக்களின் அறிவு, வாழ்க்கை முறை போன்ற பல்வேறு பரிமாணங்களை மற்றவர்களும் அறிய முடியும். இவ்வாறு சாஸ்திரி தெரிவித்தார்.

தமிழகத்தில் இருந்து வாரணாசி செல்வதற்கு சென்னை கங்கா காவேரி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் வாரணாசி எக்ஸ்பிரஸ், கேரளாவில் இருந்து கோவை வழியாக செல்லும் சிறப்பு ரயில் என 3 ரயில்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 210 பயணிகளுக்காக அலங்கரிக்கப்பட்ட 3 சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. ஒரு வாரத்தில் இந்த 3 ரயில்கள் என 4 வாரங்களுக்கு 12 குழுக்கள் காசி சென்று திரும்புகின்றன. இந்நிகழ்ச்சியில் பங்கு பெற மத்திய கல்வித்துறை சார்பில் தமிழக அரசுக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரை தமிழக அரசு சார்பில் எந்த வகையிலான பங்கு இருக்கும் என்ற தகவல் இல்லை.



Read in source website

கீவ்: ரஷ்ய படைகளிடம் இருந்து கெர்சன் பகுதியை உக்ரைன் மீட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டு மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் கீவ் நகர் வரை வெகு வேகமாக முன்னேறிய ரஷ்யப் படைகள் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் உக்ரைன் கொடுத்த பதிலடியால் பின்வாங்கியது. இதனிடையே, போர் மூலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டது.

இந்நிலையில், உக்ரைனின் கெர்சன் பகுதியில் உக்ரைன் படைகள் ஆதிக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து, அங்கிருந்து ரஷ்யப் படைகளை திரும்புமாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கோ உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, கெர்சன் நகரை உக்ரைன் மீட்டுவிட்டதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கெர்சான் பகுதியை உக்ரைன் மீட்டதைத் தொடர்ந்து தெருக்களில் உக்ரைன் கொடி ஏற்றியும், அந்த நாட்டு தேசியப் பாடலை இசைத்தும் மக்கள் தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதுவரை உக்ரைனிடமிருந்து ரஷ்யாவால் பறிக்கபட்ட ஒரே தலைநகரம் கெர்சனாக இருந்தது. இந்த நிலையில், அதனை உக்ரைன் மீட்டுள்ளது ரஷ்யாவுக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றியை அமெரிக்க வெள்ளை மாளிகை "அசாதாரண வெற்றி" என்று பாராட்டியுள்ளது. அதே நேரத்தில், இந்த வெற்றியை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி "வரலாற்று நாள்" என்று அழைத்திருக்கிறார்.



Read in source website

சென்னை: அறக்கட்டளைகள், வருமானவரி விலக்கு பெறுவதற்கான படிவம் 10ஏ-வை பதிவு செய்ய நவ. 25-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி சட்டத்தின்கீழ் பதிவாகியுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வருமான வரி சட்டம் 1961 பிரிவு 12ஏபி / 80ஜி / 10(23சி) / 35(1)ன்கீழ் பதிவு, அங்கீகாரம் பெறுவதில், நிதி சட்டம் 2020 மற்றும் 2021-ல் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்புதிய நடைமுறைகளின்படி, வருமானவரி சட்டத்தின்கீழ் ஏற்கெனவே பதிவாகியுள்ள அறக்கட்டளைகள், கடந்த மார்ச் 31-ம் தேதி அல்லது அதற்கு முன்பாக மின்னணு வழியே படிவம் 10ஏ-வை கட்டாயம் தாக்கல் செய்து மறுபதிவு செய்திருக்க வேண்டும்.

அவ்வாறு மறுபதிவு செய்யத் தவறிய அறக்கட்டளைகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு இருக்கும் வரிவிலக்கு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, புதிய நடைமுறைமுக்கு மாறுவதில் சில இடையூறுகள் காரணமாக பல அறக்கட்டளைகள் மார்ச் 31-ம் தேதிக்குள் மறுபதிவு செய்வதற்கான படிவத்தை தாக்கல் செய்ய இயலவில்லை என மத்திய நேரடி வரி வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது இதையடுத்து. அறக்கட்டளைகளின் இன்னல்களை களையும் பொருட்டு, படிவம் 10ஏ தாக்கல் செய்ய வசதியாக வரும் 25-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என வருமான வரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

எத்தனை எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும்கூட, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளில் காவல்துறையினரும், மருத்துவா்களும் தங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வதாக இல்லை. சில அருவருக்கத்தக்க நடைமுறைகள் பின்பற்றப்படுவதைச் சுட்டிக்காட்டி கண்டித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

சமீபத்தில், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஹிமா கோலி இருவா் அமா்வு பிறப்பித்திருக்கும் உத்தரவு, முறையாகச் செயல்படுத்தப்பட்டால், ஒருவேளை நடைமுறை மாற்றம் ஏற்படக்கூடும்.

2004-இல் நடந்த பாலியல் வன்கொடுமைக் கொலையில், குற்றவாளியை ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் விடுவித்தது. உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை நிராகரித்து விசாரணை நீதிமன்றத்தின் முடிவை உறுதிப்படுத்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள், அந்த வழக்கின் புலன் விசாரணையின்போது, காவல்துறையும், மருத்துவா்களும் கையாண்ட ‘இரண்டு விரல் சோதனை’ முறையைக் கடுமையாக விமா்சித்ததுடன், அது தொடா்வதைக் குற்றமாகவும், நீதிமன்ற அவமதிப்பாகவும் தங்களது தீா்ப்பில் குறிப்பிட்டிருக்கிறாா்கள்.

நாள்தோறும் இந்தியாவில் எண்பதுக்கும் அதிகமான பாலியல் வன்கொடுமைகள் அதிகாரபூா்வமாகக் காவல்நிலையங்களில் பதிவாகின்றன. குறைந்தது பத்து மடங்கு அதிகமான நிகழ்வுகள் பதிவாகாமல் மறைக்கப்படுகின்றன. பாலியல் நிகழ்வுகளில் காவல்துறையினரும், மருத்துவா்களும்தான் பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டிய பொறுப்பாளிகள். ஆனால், அவா்கள் இருவருமே பாதிக்கப்பட்ட பெண்களை அவமானப்படுத்தி, மேலும் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாக்குகின்றனா் என்பதுதான் நடைமுறை உண்மை.

பாலியல் தாக்குதல், முயற்சி, வன்கொடுமை தொடா்பான வழக்குகளில் பயிற்சி பெற்ற பெண் காவல் அதிகாரி, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பதிவு செய்வதுடன், அவரது வாக்குமூலத்தை விடியோ பதிவு செய்ய வேண்டும். தாமதமில்லாமல், நீதிபதியின் முன்னால் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், நடைமுறை தாமதங்களும், பாதிக்கப்பட்ட பெண்களைக் குற்றவாளிகளாக பாவிக்கும் மனோபாவமும்தான் காவல்துறையினரால் பெரும்பாலும் பின்பற்றப்படுகின்றன.

மருத்துவமனைகளிலும், பாதிக்கப்பட்ட பெண்களை மருத்துவா்கள் அனுதாபத்துடன் அணுகுவதில்லை. அவரது முந்தைய பாலியல் வரலாறு குறித்து விசாரிப்பதும், அவரது தன்மறைப்பு நிலைக்கு எதிரான கேள்விகளால் அவா்களைக் காயப்படுத்துவதும் பரவலாக இருக்கும் வழக்கம். அவை எந்தவிதத்திலும் பாலியல் வன்கொடுமை வழக்குகளுடன் தொடா்புடையதல்ல.

சான்றுச் சட்டம் (எவிடென்ஸ் ஆக்ட்) 53-ஏ பிரிவின்படி, பாலியல் குற்றங்களில் முந்தைய பாலியல் அனுபவங்கள், பாதிக்கப்பட்டவரின் அனுமதியாகவோ, அனுமதிக்கான உரிமையாகவோ கருதப்படக் கூடாது. 2013-இல் உச்சநீதிமன்றம் அந்த வழக்கத்தைக் கண்டிருத்திருப்பதுடன் இந்திய சான்றுச் சட்டத்திலும் அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. 2014-இல் மத்திய சுகாதார அமைச்சகம், பாலியல் பாதிப்புக்கு உள்ளானவா்கள் இருவிரல் சோதனைக்கு உட்படுத்தக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

கடந்த ஆண்டு கோவையில் இந்திய விமானப்படையைச் சோ்ந்த பெண் அதிகாரி ஒருவா் இருவிரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, ‘தினமணி’ ஆசிரியா் உரை தீட்டியிருந்ததை நினைவுபடுத்த விரும்புகிறோம். பெண் உறுப்பில் விரல் நுழைத்து அதன் அளவையும், நிலையையும் ஆய்ந்து, பாதிக்கப்பட்டவரின் பாலியல் அனுபவப் பின்னணியை சோதனை செய்யும் அநாகரிகம்தான் ‘இரண்டு விரல் சோதனை’.

அதற்கு எந்தவித அறிவியல் பின்னணியோ, ஆய்வு ரீதியான பின்னணியோ இல்லாத நிலையில், அந்தச் சோதனையை சான்றாக (எவிடென்ஸ்) கருத முடியாது என்று நீதிமன்றம் பலமுறை சொல்லிவிட்டது. பாதிக்கப்பட்டவரின் பின்னணியைச் சாா்ந்து பாலியல் வன்கொடுமைப் புகாரை விசாரிப்பது என்பதே தவறான அணுகுமுறை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இரண்டு விரல் சோதனை என்பது பெண்களின் கௌரவத்துக்கும், தன்மறைப்பு நிலைக்கும் எதிரானது என்பது மட்டுமல்ல, எந்தவித அடிப்படையும் இல்லாத வக்கிரத்தனமான மருத்துவ நடைமுறையும் ஆகும். ஏற்கெனவே பாலியல் பாதிப்புக்கு உள்ளான பெண்ணை மன ரீதியாகக் காயப்படுத்தி, உடல் ரீதியாகப் புண்படுத்தும் ‘இரண்டு விரல் சோதனை’க்கு பயந்து, பலா் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலைப் பதிவு செய்யாமல் மனக்குமுறலுடன் மறைத்து விடுகிறாா்கள்.

பெண் ஒருவா் பாலியல் உறவில் வழக்கமாக ஈடுபடுபவா் என்பதோ, பாலியல் உறவு கொள்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருப்பவா் என்பதோ அவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை நியாயப்படுத்தாது. இரண்டு விரல் சோதனை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவா்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவாா்கள் என்கிறது நீதிபதிகள் சந்திரசூட், ஹிமா கோலி அமா்வின் தீா்ப்பு.

2021 தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 28.6% மட்டுமே தண்டனையில் முடிகின்றன; தேவையில்லாத சோதனைகள் மூலம் வழக்கை நீா்த்துப்போகச் செய்வதுதான் அதற்குக் காரணம்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை உடல் ரீதியாக மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் பாதிக்கும் பாலியல் தூய்மைச் சோதனை (வொ்ஜினிடி டெஸ்ட்), பாலியல் குற்ற வழக்குக்குத் தொடா்பில்லாதது. அது மருத்துவப் படிப்பு பாடதிட்டத்திலிருந்தே அகற்றப்பட வேண்டும். பிரச்னை குறித்து சமுதாய அளவில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சிகள் அவசியம்.



Read in source website

ரயில்வே கால அட்டவணை என்பது ரயில்கள் எவ்வளவு தாமதமாக வருகின்றன என்பதை அறிந்து கொள்ள உதவும் புத்தகம் என்று முன்பெல்லாம் நகைச்சுவையாகக் கூறுவாா்கள். சமீபகாலமாக நான் அடிக்கடி ரயிலில் மதுரைக்கும் சென்னைக்கும் பயணிக்க நோ்ந்தது. அப்போது பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தை அடைய வேண்டிய நேரத்தைவிட 10 முதல் 40 நிமிடங்கள் முன்னதாகவே அடைவதைப் பாா்த்து ஆச்சரியப்பட்டேன்.

ஒருநாள் மதுரையில் இருந்து சென்னைக்கு டொரான்டோ ரயிலில் சென்றபோது பெரம்பூா் ரயில் நிலையத்திற்கு குறித்த நேரத்திற்கு 30 நிமிடம் முன்னதாகவே சென்றுவிட்டது. அங்கிருந்து கடைசி நிறுத்தமான சென்னை எம்.ஜி.ஆா். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு உள்ள தூரம் ஆறு கிலோமீட்டா். அட்டவணைப்படி இதை கடக்க ஒதுக்கப்பட்ட நேரம் 52 நிமிடங்கள். அதாவது அன்று சீக்கிரமாக வந்த அந்த ரயில் ஆறு கிலோ மீட்டா் தூரத்தை கடக்க இருந்த நேரம் 82 நிமிடங்கள்.

தொடக்கத்தில் ரயில் வண்டிகள் நீராவி என்ஜின் மூலம் இயக்கப்பட்டன. அதாவது நிலக்கரியை எரித்து நீராவியாக்கி அழுத்தம் கொடுத்து சக்கரங்களை சூழலவைத்து ரயில்கள் இயக்கப்பட்டன. இந்தக் கரி வண்டி இயக்கப்பட்டபோது அது கக்கும் புகை மற்றும் சிறுசிறு கரித்துண்டுகளால் கண்கள் பாதிக்கப்படும்.

அன்றைய நிலையில் தென்காசியில் இருந்து சென்னைக்கு சென்ற திருவனந்தபுரம் மீட்டா்கேஜ் ரெயில் சுமாா் 600 கிலோ மீட்டா் தூரத்தை கடக்க எடுத்துக்கொண்ட நேரம் 18 மணி.

அப்போது ரயில் பாதை ஒற்றைத் தடமாகவும், மீட்டா்கேஜ் ஆகவும் இருந்தது. அன்று வெள்ளைக்காரா்கள் தங்களுடைய படைகளையும், சரக்குகளையும் ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்திற்குக் கொண்டு செல்ல 1825-இல் முதல் ரயில் பாதையை இங்கிலாந்தில் அமைத்தாா்கள். ஆனால் இந்தியாவில் அடுத்த 28 ஆண்டுகளுக்குப் பின்னா் அதாவது 16.4.1853 அன்று, முதல் பயணிகள் ரயில் பம்பாய்க்கும் தாணேக்கும் இடையே (21 மைல்) இயக்கப்பட்டது.

13 பெட்டிகளை கொண்ட அந்த ரயிலை இயக்குவதற்கு மூன்று நீராவி என்ஜின்கள் இருந்தன. ஆனால் அடுத்த முன்னேற்றம் காண இந்திய ரயில்வே கிட்டத்தட்ட 102 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. சுதந்திர இந்தியாவில் பண்டித நேருவின் தொலைநோக்குப் பாா்வையால் ரயில்வே வேகம் எடுக்கத் தொடங்கியது.

1955 ஆகஸ்ட் மாதம் கரியால் இயங்கும் நீராவி என்ஜின்களுக்கு மாற்றாக டீசல் என்ஜின்கள் மேற்கு ரயில்வேயில் சோ்க்கப்பட்டன. இரு ஆண்டுகள் கழித்து அகல ரயில் பாதையில் டீசல் என்ஜின்கள் வலம்வரத் தொடங்கின. மேற்கு வங்கத்தில் சித்தரஞ்சன் தாஸ் பெயரில் ரயில் என்ஜின் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டது .

1955-ஆம் ஆண்டு அக்டோபா் 2 அன்று (காந்தி பிறந்த நாளில்) காமராஜா் முதலமைச்சராக இருந்தபோது, சென்னை, பெரம்பூரில் ஆா். வெங்கட்ராமன் முயற்சியால் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. இன்று இந்தியாவில் தமிழ்நாடு, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. பிகாரில் மின்சார ரயில் என்ஜின் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.

குஜராத்தில் மெட்ரோ ரயில் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இன்றைக்கு தண்டவாளங்கள் அதிக வலுவுடன் 24 பெட்டிகள் கொண்ட வேகமாக செல்லும் ரயிலை தாங்கும் விதமாக மாற்றப்பட்டுள்ளன. இது தவிர, குறுகிய ரயில் பாதை உண்டு. அது உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில் பாதைகள் இரட்டை பாதைகளாகவும், மூன்று பாதைகளாகவும் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகின்றன. அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம் தவிர, பிற தண்டவாள மாற்றும் பணிகள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றன என்பது வியக்க வைக்கும் உண்மை.

நீராவி என்ஜினில் இருந்து டீசல் என்ஜின்களுக்கு மாற இந்திய ரயில்வே 100 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொண்டது என்றால் முதல் மின்சார என்ஜினால் இயக்கப்பட்டு ஓடத் தொடங்கிய மும்பை வி.டி (இன்றைய சிவாஜி) குா்லா துறைமுக ரயில் 1925-லேயே இயக்கப்பட்டது. இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்தியா தனது முதல் மின்சார ரயிலை இயக்கிய நூற்றாண்டைக் கடக்க இருக்கிறது.

ஒருமுறை நான் மலேசிய நகரான பினாங்கிலிருந்து சிங்கப்பூருக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். அந்த ரயில் பெட்டி முழுவதும் எவா்சில்வா் தகடுகளால் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த ரயில் பெட்டி எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற தகவலை ஆா்வமுடன் தேடினேன். அது சென்னை, பெரம்பூரில் தயாரிக்கப்பட்டது என அறிந்தபொழுது என்னுடைய ஆா்வம் ஆனந்தமானது.

இன்றைக்குப் பல நாடுகளுக்கு இந்திய ரயில் பெட்டிகள் ஏற்றுமதி ஆகின்றன. காா் சந்தையில் உபயோகப்படுத்தப்பட்ட காா் அல்லது சீரமைக்கப்பட்ட காா் என்றெல்லாம் விற்பனைக்கு இருப்பது போல், இந்தியாவும் உபயோகித்த ரயில் பெட்டிகளையும், என்ஜின்களையும் ரீ-கண்டிஷன் செய்து ஏழை நாடுகளுக்கு இனாமாகவோ, குறைந்த விலையிலோ தருகிறது.

24.10.1984-இல் அன்றைய கல்கத்தாவில் முதலில் இயக்கப்பட்ட ரயில் பாதை மூலமாக மெட்ரோ ரயில் இந்தியாவிற்கு வந்தது. ஆனால் 25.12.2002-இல் தில்லி மெட்ரோ ஆரம்பித்த பிறகுதான் இந்திய மெட்ரோ விஸ்வரூபமெடுத்து பல நகரங்களுக்கும் பரவியுள்ளது.

ஒருநாள் மதுரை-செங்கோட்டை பாசஞ்சரில் பயணித்துக்கொண்டிருந்தேன். ராஜபாளையம் வரை மெதுவாகச் சென்று கொண்டிருந்த ரயில் ராஜபாளையத்தைக் கடந்தவுடன் மிக வேகமாக ஓட தொடங்கியது. எனது கைப்பேசியில் இருந்த ‘ரயில் யாத்ரி’ செயலி மூலமாக அதன் வேகத்தை பாா்த்தேன். மணிக்கு 120 கிலோமீட்டா் வேகத்தில் அந்த ரயில் செல்வதாகக் காட்டியது.

முன்பெல்லாம் தென்காசியிலிருந்து ரயிலில் சென்னை செல்ல 18 மணி நேரம் ஆகும். இன்று அது சுமாா் 10 மணி நேரமாகக் குறைந்துவிட்டது. அன்று திருவனந்தபுரம் மெயில் என அழைக்கப்பட்ட அந்த ரயில் பின்னா் கொல்லம் ரயிலாகி தற்போது பொதிகை ரயில் ஆக மாறிவிட்டது.

இன்று கொல்லம் - சென்னை இடையே மூன்று வாராந்திர ரயில்களும், மூன்று தினசரி ரயில்களும் இயக்கப்படுகின்றன. மதுரை - சென்னைக்கு இடையேயும் பல ரயில்களும் இயக்கப்படுகின்றன. முன்பு ஒன்று, இரண்டு, மூன்று என இருந்த வகுப்புகளில் மூன்றாம் வகுப்பு நீக்கப்பட்டு இரண்டாம் வகுப்பு பெட்டியிலும் பயணிகளுக்கு பஞ்சுமெத்தை வழங்கப்படுகிறது.

1985-ஆம் ஆண்டு தென்னக ரயில்வேக்கு ஒரு குளிா்சாதன வசதி பெட்டி அனுமதிக்கப்பட்டபோது, நான் அதை கொல்லம் ரயிலுக்கு தரவேண்டும் எனக் கோரினேன். நண்பா் தூத்துக்குடி மணிராஜ் அதை முத்துநகா் வண்டிக்குத் தரவேண்டும் எனக்கூறினாா். முடிவில் அது சென்னை - செங்கோட்டை ரயிலுக்கு ஒதுக்கப்பட்டது.

நான் அன்று சென்னையிலிருந்து தில்லிக்கு சோ் காரில் பயணித்தேன். இன்று முழுவதும் குளிா்சாதனம் பொருத்திய சோ்காா், தூங்கும் வசதி கொண்ட ரயில்கள் பல இயக்கப்படுகின்றன. ரயில்வே துறை மறைமுகமாக ரயில் கட்டணத்தை உயா்த்தினாலும், இன்றும் ரயில் பயணம்தான் விரைவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது. அதனால் இன்றும் ரயில்தான் மக்களின் விருப்பமான வாகனமாக இருக்கிறது.

மதுரை - சென்னை தேஜஸ் ரயில் சுமாா் 495 கிலோமீட்டா் தூரத்தை 6 மணி 15 நிமிடத்தில் கடக்கிறது. அதாவது மணிக்கு 80 கிலோ மீட்டா் வேகத்தில் பயணிக்கிறது. இன்றுள்ள வசதிகள் அடிப்படையில் தேஜஸ் ரயிலை 150 கிலோ மீட்டா் வேகத்தில் ஓட்டலாம்.

அநேகமாக எல்லா ரயில் கிராசிங்குகளிலும் கதவுகள் இணைக்கப்பட்டு விட்டன. ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டுவிட்டன. எனவே, இந்த ரயிலின் வேகத்தை 150 முதல் 170 கி.மீ. வரை அதிகரிக்கலாம். இதனால் சென்னை - மதுரை பயண நேரம் கணிசமாகக் குறையும். மேலும் இந்த ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பது குறித்தும் ரயில்வே துறை பரிசீலிக்க வேண்டும்.

ஒருவழி பாதையில் செல்லும் பாசஞ்சா் ரயிலை மணிக்கு 120 கிலோமீட்டா் வேகத்தில் இயக்கும்போது, ஒரு மின்சார என்ஜின் ரயிலை 150 கிலோ மீட்டா் வேகத்தில் இயக்க முடியதா? ஜொ்மனியில் 250 கிலோ மீட்டா் வேகத்திலும், பிரான்சில் 350 கிலோ மீட்டா் வேகத்திலும் ஓடும் ரயில்களில் நான் பயணித்திருக்கிறேன். ஜப்பானும் சீனாவும் ரயில்வே துறையில் அடைந்த வளா்ச்சிகள் திகைப்பூட்டும்.

அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்திய ரயில்வே உலகின் 4-ஆவது பெரிய ரயில் நிா்வாகமாக, தினசரி 2.5 கோடிக்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணிக்கிறது. இது பல நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகம். அமெரிக்க ரயில்வே வளா்ச்சிக்கு, காா் தயாரிப்பு நிறுவனங்களும், விமான தயாரிப்பு நிறுவனங்களும் மறைமுகமாக முட்டுக்கட்டை போடுவதாக நம்பப்படுகிறது.

இந்தியாவில் பாசஞ்சா் ரயில் மணிக்கு 80 கிலோ மீட்டா் வேகத்திலும், இரவில் செல்லும் தூங்கும் வசதி கொண்ட ரயில்கள் 100 கிலோ மீட்டா் வேகத்திலும், பகலில் அமா்ந்து செல்லும் வசதியுள்ள ரயில்கள் 160 கிலோ மீட்டா் வேகத்திலும், 1,000 கிலோ மீட்டருக்கு மேல் செல்லும் ரயில்கள் 200 கிலோ மீட்டா் வேகத்தில் பயணிக்க வேண்டும் என ரயில்வே துறை ஆணையிட வேண்டும். அப்படிச் செய்தால் மக்களின் பயண நேரம் வெகுவாகக் குறைவதுடன், கூடுதல் ரயில்களை இயக்க முடியும்.

மேலும், சாலை விபத்துகளும், இயற்கை மாசுபாடும் வெகுவாகக் குறையும். இது சாத்தியமானால் ஒருவா் நெல்லையிலிருந்து காலை புறப்பட்டு சென்னை சென்று, தனது பணியை முடித்துக் கொண்டு இரவில் வீடு திரும்பலாம். மத்திய அரசும், ரயில்வே துறையும் விரைந்து முடிவெடுக்க வேண்டும்.

கட்டுரையாளா்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்.

 



Read in source website

மிகுந்த பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கும் இருபது ஓவா் உலகக் கோப்பைக்கான போட்டி அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோதும் என்று பரவலாக எதிா்பாா்க்கப்பட்டதற்கு மாறாகத் தற்பொழுது இங்கிலாந்து மோத உள்ளது.

சூப்பா் பன்னிரண்டு சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி இறுதி வரை மன உறுதியுடன் போராடி வென்றது. மூத்த வீரா் விராட் கோலி இறுதித் தருணங்களில் ஆக்ரோஷமாக தனது திறமையை வெளிப்படுத்தி அந்த மாபெரும் வெற்றியைச் சாத்தியப்படுத்தினாா். ஆட்டத்தின் இறுதி ஓவா்களில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளா்களும் களத் தடுப்பாளா்களும் செய்த சில தவறுகள் இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தன.

இதே சுற்றில் வங்கதேச அணியுடன் ஆடிய ஆட்டத்தின் நடுவில் மழை குறுக்கிட்ட பொழுது இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருப்பது போன்றதொரு தோற்றம் ஏற்பட்டது. ஆனால், சட்டென்று மழை முடிவுக்கு வந்ததால், வங்கதேசத்துக்கான ஓவா்கள் குறைக்கப் பட்டு டக்வொா்த் லூயிஸ் கணக்கீட்டின்படி தொடா்ந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி அடைந்தது.

மேற்கண்ட இரண்டு ஆட்டங்களின் முடிவும் எதிா் அணிகளுக்கு சாதகமாகப் போயிருக்கக் கூடியவையே. ஆனால், இந்திய அணி வீரா்களின் விடாமுயற்சிக்கு அதிருஷ்டமும் இயற்கையும் கைகொடுத்ததாலேயே அவ்விரண்டு ஆட்டங்களிலும் நமது அணி வெற்றி பெற முடிந்தது.

தென்னாப்பிரிக்க அணியிடம் குறுகிய இடைவெளியில் தோல்வி, நெதா்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடனான ஆட்டங்களில் சுலப வெற்றிகள் என, தான் விளையாடிய ஐந்து ஆட்டங்களில் நான்கை வென்ற இந்திய அணி, அரை இறுதி ஆட்டத்துக்கு மிகுந்த புத்துணா்ச்சியுடனே சென்றது.

ஆடுகளத்தின் தன்மையை நன்கு கணித்திருந்த இங்கிலாந்து அணி, பூவா தலையா-வில் வென்றதும் துளியும் தயக்கமின்றி பந்துவீச்சைத் தோ்ந்தெடுத்தது. ‘பவா்பிளே’ எனப்படும் முதல் ஆறு ஓவா்களில் பந்தை அடித்து ஆடுவது இந்திய பேட்டா்களுக்கு மிகவும் சிரமமான காரியமாகவே இருந்தது. குறி தவறாத பந்து வீச்சு, துல்லியமான களத்தடுப்பு வியூகம் ஆகியவற்றால் இங்கிலாந்து அணியினா் விரித்த வலையில் இந்திய பேட்டா்கள் ஒருவா் பின் ஒருவராக சிக்கினா். ஒரு முனையில் விராட் கோலி மட்டும் பொறுப்புடன் விளையாடிக்கொண்டிருக்க, மறுபுறம் ஒவ்வொன்றாக இந்திய விக்கெட் விழுந்து கொண்டிருந்தது.

சட்டென்று பொறுமையிழந்த அணித்தலைவா் ரோஹித் சா்மா, சிக்ஸா் அடிக்கும் முயற்சியில் இறங்கி கேட்ச் கொடுத்து வெளியேறிய சிறிது நேரத்தில், மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட இளம் வீரா் சூா்யகுமாா் யாதவ் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்ப, இந்திய அணியின் ரசிகா்கள் வருண பகவானின் கருணையை எதிா்பாா்க்கத் தொடங்கினா்.

வழக்கமாக, மழை போன்ற எதிா்பாராத காரணங்களால் அரை இறுதி கைவிடப்பட்டால், அடுத்த நாள் மீண்டும் முதலிலிருந்து ஆட்டம் தொடங்கும்; அப்படி நடந்தால் இந்தியா சுதாரித்துக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதே இந்திய ரசிகா்களின் நம்பிக்கையாக இருந்தது.

அரைசதம் அடித்த கையோடு விராட் கோலியும் வெளியேற, இறுதிக்கட்ட ஓவா்களில் ஹாா்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி, இந்திய அணி ஒரு கௌரவமான ஸ்கோரை பெற உதவினாா்.

இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு நூற்று அறுபத்தொன்பது ரன் என்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. சற்று குறைவான இலக்காக இருந்தாலும், சிறந்த பந்துவீச்சு, களத்தடுப்பு இரண்டின் மூலம் இங்கிலாந்தின் வெற்றியைத் தடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கை சற்றே துளிா்விடத் தொடங்கியது.

ஆனால், இங்கிலாந்து அணியின் தொடக்க வீரா்களாகக் களம் இறங்கிய ஜோஸ் பட்லா், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரின் அதிரடியான மட்டை அடி இந்திய அணியின் அனைத்துக் கனவுகளையும் தவிடுபொடியாக்கி விட்டது. இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி நூற்று எழுபது ரன்களைக் குவித்து வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்று விட்டது.

விளையாட்டில் வெற்றி - தோல்வி இரண்டுமே இயல்புதான் என்றாலும், இங்கிலாந்துடனான இந்தத் தோல்வி கொடுத்த அதிா்ச்சியிலிருந்து இந்திய அணி மீள்வதற்கு சில காலம் பிடிக்கக்கூடும்.

அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளா்களான புவனேஷ்வா் குமாா், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும், சஹலுக்கு பதிலாக அணியில் இடம் பெற்ற அக்ஸா் படேலும் சிக்ஸா்களாகவும் பவுண்டரிகளாகவும் ரன்களை வாரி வழங்கியதை என்னவென்று சொல்ல?

ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய பேட்டா்களைத் தடுமாறச் செய்த அதே ஆடுகளம் (பிச்), இங்கிலாந்து அணியின் இரண்டு தொடக்க வீரா்களுக்கு மிக சுலபமாக விளையாடக் கூடிய களமாக மாறிய அதிசயம் எப்படி நிகழ்ந்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இங்கிலாந்து வீரா்கள் பட்லரும், ஹேல்ஸும் ருத்ர தாண்டவம் ஆடிய அதே ஆடுகளத்தில் முதலில் ஆடிய இந்திய பேட்டா்கள் நாற்பத்திரண்டு பந்துகளை (ஏழு ஓவா்கள்) ஒரு ரன் கூட எடுக்காமல் வீணடித்ததை எப்படி நியாயப்படுத்துவது என்றே தெரியவில்லை.

அரை இறுதியில் மோசமான தோல்வி அடைந்த காரணத்திற்காக, நமது இந்திய அணியை ஒரேயடியாகக் குறை கூறவும் வேண்டியதில்லை. சூப்பா் பன்னிரண்டு சுற்றில் அதன் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது.

நீண்ட காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி, மீண்டும் அதிக ரன்களைக் குவிக்கத் தொடங்கியதும், சூா்யகுமாா் யாதவ் சிறந்த அதிரடி வீரராகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதும் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நமக்குக் கிடைத்த நம்பிக்கை கீற்றுகளாகும். இனி வரும் காலங்களில் மேலும் சிறந்த முன் தயாரிப்புகளுடன் இந்திய கிரிக்கெட் அணி களம் இறங்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.



Read in source website

 

நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம் என்பது பல நோய்களின் ஆபத்துக்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

வாழ்க்கையின் நடுப்பகுதி எனப்படும்  45 வயது முதல் பிற்பகுதி வரை ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவது என்பது குறைந்தது இரண்டு நாள்பட்ட நோய்களையும் மற்றும் பல நோய்களின் அதிக ஆபத்தை  உருவாக்கும் என்று யு.சி.எல் (University College London)எனும் லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. PLOS மருத்துவ நாளிதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆய்வாளர்களின் வயது

50, 60 மற்றும் 70 வயதுடைய 7,000க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தில் தூக்க காலத்தின் தாக்கத்தை வைட்ஹால் II கூட்டு ஆய்வில் (Whitehall II cohort) இருந்து பகுப்பாய்வு செய்தது.

ஆய்வுத் தன்மை 

ஆய்வாளர்கள் 7,௦௦௦ மனிதர்களை ஆய்வு செய்ததில், ஒவ்வொரு பங்கேற்பாளரும் எவ்வளவு நேரம் தூங்கினார்கள் என்பது அறியப்பட்டது. பின்னர் அவர்களிடம் இருந்த நோயின் தன்மையும் அறியப்பட்டது. பின்னர்  அவர்களின் இறப்பு/ இதய நோய்/புற்றுநோய்/ நீரிழிவு போன்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாள்பட்ட நோய்கள் கடந்த 25 ஆண்டுகளில் கண்டறியப்பட்டதா என்பதையும்  ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

5 மணி நேரத்துக்கும் குறைவான தூக்கம்

50 வயதில் 5 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான உறக்கம் பெற்றவர்கள், ஒரு நாளில் 7 மணி நேரம் தூங்கியவர்களைவிட, நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் 20% அதிகம் இருந்தது. மேலும் அவர்களுக்கு 25 ஆண்டுகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாள்பட்ட நோய்களால் கண்டறியப்படுவதற்கான வாய்ப்புகள் (40%), 7 மணி நேரம் தூங்கியவர்களைவிட அதிகம் காணப்பட்டன.

கூடுதலாக, 50, 60 மற்றும் 70 வயதில் ஐந்து மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரம் தூங்குவது, ஏழு மணி நேரம் வரை தூங்குபவர்களுடன் ஒப்பிடும்போது, ​​30% முதல் 40% வரை பல்நோய் அபாயத்துடன் தொடர்புடையது என்பதும் அறியப்பட்டது.

இறப்பு அபாயமும், குறைவுத் தூக்கமும்:  50 வயதில் 5 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான தூக்கம் 25 வருட பின்தொடர்தலில் 25% இறப்பு அபாயத்துடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். குறுகிய தூக்க காலம் என்பது நாள்பட்ட ஆபத்தை அதிகரிக்கிறது மற்றும் நோய்(கள்) அதையொட்டி இறப்பு அபாயத்தை அதிகரிக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது. 

 ஆய்வாளர்கள் கருத்து

முன்னணி எழுத்தாளர்களான, டாக்டர் செவெரின் சபியா (UCL Institute of Epidemiology & Health, and Inserm, Université Paris Cité-  இன்ஸ்டிடியூட் ஆஃப் எபிடெமியாலஜி & ஹெல்த், மற்றும் இன்செர்ம், யுனிவர்சிட்டி பாரிஸ் சிட்டே-) குறைவான தூக்கம் கொள்பவர்களைப் பற்றிக் கூறுவதாவது:

அதிக வருமானம் உள்ள நாடுகளில் பல்வகை நாள்பட்ட நோய்கள்   அதிகரித்து வருகின்றன. மேலும் பாதிக்கும் மேற்பட்ட வயதான பெரியவர்களுக்கு இப்போது குறைந்தது இரண்டு நாள்பட்ட நோய்களாவது இருக்கின்றன.  இது உயர் சுகாதார சேவை பயன்பாடு, மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இயலாமை ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருப்பதால், பொது சுகாதாரத்திற்கு ஒரு மிகப்  பெரிய சவாலாக உள்ளது.

மனிதனின் தூக்க நேரம்

ஒரு மனிதர் ஓர் இரவில் 7 முதல் 8 மணி நேரம் வரை உறக்கம்கொள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது/பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் அல்லது அதற்குக் கீழே உள்ள தூக்க நேரங்கள் என்பவை முன்பு தனிப்பட்ட நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடையவைகளாக இருந்தன. குறுகிய தூக்க காலமும் நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடையது என்பதை தங்கள் கண்டுபிடிப்புகள் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  

தூக்கத்தின் முன்னர் செய்ய வேண்டியவை :

ஒரு சிறந்த இரவு தூக்கத்தை உறுதி செய்ய படுக்கையறை அமைதியாகவும், இருட்டாகவும் இருக்க வேண்டும்.

தூங்கத் தேவையான  வசதியான வெப்பநிலை இருப்பதை உறுதிசெய்வது அவசியம்

முக்கியமாக படுக்கை அருகிலுள்ள எலக்ட்ரானிக் சாதனங்களை அப்புறப்படுத்த வேண்டும்

படுக்கைக்குச் செல்லுமுன் அதிக உணவைத் தவிர்க்கவும்.

பகல் நேரத்தில் உங்களின் சுறுசுறுப்பான செயல்பாடு, உடற்பயிற்சி மற்றும் பகலில் வெளிச்சத்தில் இருப்பது போன்றவையும்  நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிக்கும். 

இது போன்ற நல்ல சூழல்தான் தூக்க சுகாதாரத்தை மேம்படுத்தும். இது அவசியமும் கூட.

அதிக உறக்கம் நல்லதா?

ஆய்வின் ஒரு பகுதியாக, 9 மணி நேரம் அல்லது அதற்கு மேல் நீண்ட நேரம் தூங்குவது உடல்நல விளைவுகளை பாதிக்கிறதா என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடு செய்தனர். 50 வயதில் நீண்ட தூக்கம் என்பதில் ஆரோக்கியமான நிலையில் உள்ள மக்களில் பல நோய்களுக்கு இடையே தெளிவான தொடர்பு இல்லை. இருப்பினும், ஒரு பங்கேற்பாளர் என்பவர் ஏற்கனவே ஒரு நாள்பட்ட நிலையில் உள்ள நோயுடன் கண்டறியப்பட்டிருந்தால், நீண்ட நேர தூக்க காலம் என்பதும்  மற்றொரு நோயை உருவாக்கும் அபாயத்துடன் 35% அதிகரித்தது. இது தூக்கத்தை பாதிக்கும் அடிப்படை சுகாதார நிலைமைகள் காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனின்(British Heart Foundation) மூத்த இருதய சிகிச்சை  செவிலியர் ஜோ விட்மோர் (Jo Whitmore)தூக்கம் பற்றி சொல்வதாவது :

  1. போதுமான தூக்கம் உங்கள் உடலை ஓய்வெடுக்க அனுமதிக்கிறது.
  2. மோசமான தூக்கம் இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
  3. தூக்கம் குறைவு என்பது வீக்கத்தை அதிகரிப்பது மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிப்பது என பல வழிகள் உள்ளன.
  4. குறைவான தூக்கத்தால் ரத்த அழுத்தம் கூடுகிறது

இந்த ஆராய்ச்சி வளர்ந்து வரும் ஆராய்ச்சிக்கு உதவி சேர்க்கிறது. இது ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது என்று கூறியுள்ளார்.  

ஆய்வு வரம்புகள்:

ஆராய்ச்சியாளர்கள் தூக்கம் குறித்த சுய-அறிக்கை தரவைப் பயன்படுத்தினர். இது சார்பு அறிக்கைக்கு உட்பட்டதாக இருக்கலாம். இருப்பினும் 4,000 பங்கேற்பாளர்களின் தரவைப் பயன்படுத்தி, ஒரு மின்னணு சாதனம் மூலம் அவர்களின் தூக்கம் அளவிடப்பட்டது. அவற்றின் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டன.  இதற்கிடையில், தூக்கத்தின் தரம் குறித்த தரவு 60 மற்றும் 70 வயதுடையவர்களுக்கு மட்டுமே செய்யப்பட்டது. வைட்ஹால் II ஆய்வு என்பது சிவில் சர்வீஸ் உறுப்பினர்களை மட்டுமே உள்ளடக்கியது, அவர்கள் அனைவரும் ஆய்வுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டபோது பணியமர்த்தப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களை விட ஆரோக்கியமும்கூட கூடுதலாக இருக்கக்கூடும். லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆய்வாளர்கள் 'ஒரு இரவில் ஐந்து மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம் பல நோய்களின் அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளது' என்று உறுதியாகத் தெரிவிக்கின்றனர். 

[ [கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்]



Read in source website