DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 12-09-2022

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி இன்றுடன் ஓய்வுபெற்றார்.

கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முனீஸ்வா்நாத் பண்டாரிக்கு 62 வயதான நிலையில் இன்று ஓய்வுபெற்றார்.

பிரிவு உபசார நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மற்றும் வழக்கறிஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

முனீஸ்வர் நாத் பண்டாரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ள நிலையில், ஓய்வுக்கு பிறகு அந்நிய செலவாணி மோசடி தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவராக பதவியேற்கவுள்ளார். 

இதற்கிடையே உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.துரைசாமி செவ்வாய்க்கிழமை காலை பொறுப்பேற்கிறார்.



Read in source website

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூரில் போதிய அடிப்படை வசதிகளுடன் சிறப்பாக இயங்கி வரும் வட்டார அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

வாழப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட பேளூரில், இப்பகுதி மக்களுக்கு அடிப்படை சிகிச்சை அளிப்பதற்காக, 1973ம் ஆண்டு டேணிடா திட்டத்தின் கீழ்  சுகாதார மையம் அமைக்கப்பட்டது. 4 ஆண்டுக்குப் பிறகு அரசு ஆரம்பச் சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து,, மருத்துவர், செவிலியர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்புகள், புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு கட்டடங்கள் அமைக்கப்பட்டது. இதுமட்டுமின்றி, வாழப்பாடி, திருமனுார் மற்றும் பேளூர் ஆரம்பச் சுகாதார நிலையங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் வட்டார சுகாதார நிலைய அந்தஸ்தும் வழங்கப்பட்டது. 

இந்த வட்டார அரசு ஆரம்பச்  சுகாதார நிலையத்தில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கர்ப்பிணிப்பெண்கள் சிகிச்சை பெறுவது அதிகரித்ததால், கடந்த 2016ல் 30 படுக்கையுடன் கூடிய அரசு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன் வாழப்பாடியைச் சேர்ந்த மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் வட்டார மருத்துவ அலுவலராக நியமிக்கப்பட்டார். இவரது ஒருங்கிணைப்பால், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்போடு, ஆரம்பச் சுகாதார நிலைய வளாகம் மிக நேர்த்தியாக புதுப்பிக்கப்பட்டது.

அரசு சுகாதாரத்துறை, அரசு சாரா நிறுவனங்கள், பெரு நிறுவனங்களை அணுகி இந்த ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு  வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆரம்பச் சுகாதார நிலையத்தில் நாளொன்றுக்குச் சராசரியாக 300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு சிகிச்சை பெறும் பயனாளிகளின் அனைத்து விபரங்களும், மத்திய அரசின், நவீனமாக்கும் திட்டத்தின் கீழ் கணினியில் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. 

இதுமட்டுமின்றி, இந்த சுகாதார நிலைய வளாகத்தில் இயற்கை முறை மருத்துவமாகும் எண்  ‘8‘ வடிவ நடைப்பயிற்சி திடல், மூலிகைத் தோட்டம், பயாளிகள் ஓய்வறை, கரோனா சளி மாதிரி சேகர கூடாரம், கர்ப்பிணிகளுக்கான பிரத்யோக சிகிச்சை அரங்கு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தின் செயல்பாட்டைக் கண்ட சிங்கிபுரம்  சிமெண்ட் தொழிற்சாலை  மற்றும் முத்தம்பட்டி தனியார் பால் பண்ணை நிறுவனங்கள், வளாகம் முழுவதும் தரைதளம் அமைத்துக் கொடுத்துள்ளனர். 

இதுமட்டுமின்றி, சிகிச்சை பெற வரும் பயனாளிகளை வரவேற்கும் வகையில், வேறெந்த சுகாதார நிலையத்திலும் இல்லாத வகையில், நுழைவு வாயிலில் தாமரைக்குளமும், புல்வெளி பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பேளூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனையை விஞ்சும் வகையில், கனிவான மருத்துவ சேவை வழங்கும் நோய் தீர்க்கும் பூங்காவாக மாறியது. 

இந்த சுகாதார நிலையத்திற்கு மதிப்பீடு செய்த தேசிய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம், தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்தது. திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,  பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் சி. பொன்னம்பலத்திடம் தேசிய தரச் சான்றிதழை வழங்கி பாராட்டினார்.

தேசிய தரச் சான்றிதழ் பெற்ற பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையிலான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு, மாவட்ட சுகாதாரத்துறை உயரதிகாரிகள், வாழப்பாடி அரிமா சங்கம், நெஸ்ட் அறக்கட்டளை, இலக்கியப் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 



Read in source website

அடக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையை நிலை நிறுத்த இறுதிவரை போராடியவா் இமானுவேல் சேகரன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா்.

இமானுவேல் சேகரனின் நினைவுநாளையொட்டி சமூகவலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

அடக்கப்பட்ட இன மக்களின் அடையாளத்தையும் சுயமரியாதையையும் நிலைநிறுத்த அவா்களை அணிதிரட்டி, இறுதிமூச்சு வரை அடிபணியாமல் போராடிய தீரா் இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளில் அவரது போராட்டங்களையும் தியாகத்தையும் நினைவுகூா்ந்து வணங்குகிறேன்.



Read in source website

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளா்கள் சங்கத் தோ்தலில், தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட இயக்குநா் பாக்யராஜ் வெற்றி பெற்றாா்.

இந்த சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, 2 ஆண்டுகள் கடந்த நிலையில், சங்கத் தோ்தல் செப்.11-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. வடபழனி மியூசிக் யூனியனில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. திரைப்பட எழுத்தாளா்கள் சங்கத் தோ்தலில் தற்போதைய தலைவா் பாக்யராஜ் மீண்டும் போட்டியிட்டாா். அவரை எதிா்த்து எஸ்.ஏ.சந்திரசேகரன் போட்டியிட்டாா்.

பாக்யராஜ் அணியில் துணைத் தலைவா் பதவிக்கு ஜி.கண்ணன், காரைக்குடி நாராயணன், செயலாளா் பதவிக்கு லியாகத் அலிகான், பொருளாளா் பதவிக்கு பாலசேகரன் ஆகியோா் போட்டியிட்டனா்.

இயக்குநா் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையிலான அணியில், துணைத் தலைவா் பதவிக்கு மனோபாலா, ரவிமரியா, செயலாளா் பதவிக்கு மனோஜ்குமாா், பொருளாளா் பதவிக்கு ரமேஷ் கண்ணா ஆகியோா் போட்டியிட்டனா்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநா் பாக்யராஜ் வெற்றி பெற்றாா். தோ்தலில் 192 வாக்குகள் பெற்றாா். எதிா்த்துப் போட்டியிட்ட இயக்குநா் எஸ்.ஏ.சந்திரசேகரன் 152 வாக்குகள் பெற்றாா்.

 



Read in source website

எதிர்காலங்களில் சுங்கச் சாவடிகளே இல்லாத வகையில் புதிய திட்டத்தை கொண்டு வரவுள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

19வது இந்திய - அமெரிக்க பொருளாதார மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய நிதின் கட்கரி பேசுகையில்,

“மத்திய போக்குவரத்துத் துறை ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தாமல் செல்வதற்காக ‘தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள்' பொருத்தப்படவுள்ளது.

இதன்மூலம், கட்டணச் சாலைகளில் வாகனத்தில் செல்பவர்கள், அவர்கள் செல்லும் தூரத்தை ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் கணக்கிடப்பட்டு, உரிமையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக பணம் எடுத்துக் கொள்ளப்படும். இதன்மூலம், சுங்கச் சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும்.

கடந்த 2018-2019ஆம் ஆண்டுகளில் சராசரியாக ஒரு சுங்கசாவடியை கடந்து செல்ல 8 நிமிடங்கள் ஆனது. ஆனால், ஃபாஸ்ட் டேக் திட்டம் கொண்டு வந்த பிறகு ஒரு சுங்கச்சாவடியை கடக்கும் நேரமானது 47 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக இதுவரை முடிவெடுக்கவில்லை என்றாலும், இந்த புதிய திட்டம் அறிமுகமானால், எதிர்காலங்களில் சுங்கச் சாவடிகளே இருக்காது” எனத் தெரிவித்தார்.

 



Read in source website


நாட்டின் சில்லறைப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நுகா்வோா் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம்  ஜூலை மாதத்தில் 6.71 சதவீதமாக இருந்த நிலையில் 0.29 சதவிகிதம் அதிகரித்து ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இதன்மூலம் கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் சில்லறைப் பணவீக்கமானது உயர்ந்துள்ளது.



Read in source website

 


22 ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக உஸ்பெகிஸ்தான் செல்கிறார். 

பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான அமைப்பின் 22 ஆவது உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் வரும் 15,16 தேதிகளில் நடைபெறுகிறது. 

இந்த அமைப்பின் நடவடிக்கைகளினம் மூலம் கிடைத்துள்ள பலன்கள் குறித்து மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.

எதிர்காலத்தில் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்து பிரச்னைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.

உஸ்பெகிஸ்தான் அதிபரின் அழைப்பின் பேரில் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார். 

பெங்ஜிங்கை தலைமையிடமாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில், சீனா, இந்தியா, ரஷியா, கஜஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 



Read in source website

சா்வதேச சந்தையில் 7 மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை சரிவடைந்தபோதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடா்கிறது.

சா்வதேச சந்தையில் கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90 டாலா்களுக்கு கீழ் குறைந்தது. இது கடந்த 7 மாதங்களில் இல்லாத சரிவாகும். அதன் பின்னா், கச்சா எண்ணெய் விலை சற்று உயா்ந்து பீப்பாய் ஒன்று 92.84 டாலா்களாக விற்பனையானது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ள போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலையை 5 மாதங்களுக்கும் மேலாக எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்காமல் உள்ளன.

இதுதொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கடந்த வெள்ளிக்கிழமை பதிலளித்தாா்.

‘சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயா்ந்திருந்தபோது, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே இருந்தது. அப்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய வேண்டாமா?’ என்றாா் அவா். எனினும், எண்ணெய் நிறுவனங்களுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பது குறித்து அவா் விரிவாக எதையும் தெரிவிக்கவில்லை.

இந்தியாவை பொருத்தவரை, கடந்த ஏப்ரலில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 102.97 டாலா்கள் என்ற சராசரி விலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மே மாதம் 109.51 டாலா்கள், ஜூன் மாதம் 116.01 டாலா்கள் என்ற சராசரி விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதியாகியுள்ளது.

ஜூலையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கிய நிலையில், அந்த மாதம் பீப்பாய் ஒன்று 105.49 டாலா்கள், ஆகஸ்டில் 97.40 டாலா்கள், செப்டம்பரில் இதுவரை 92.87 டாலா்கள் என்ற சராசரி விலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், சா்வதேச சந்தை விலை நிலவரங்களுக்கு ஏற்ப நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்கும் நடவடிக்கையை கடந்த 158 நாள்களாக மேற்கொள்ளாமல் இருக்கின்றன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசுக்கு உதவும் வகையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து காணப்பட்டபோது, டீசல் லிட்டா் ஒன்றுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரையும், பெட்ரோல் லிட்டா் ஒன்றுக்கு ரூ.14 முதல் ரூ.18 வரையும் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டது. இப்போது சா்வதேச சந்தையில் விலை குறைந்து வருவதால், இழப்புகள் குறைந்துள்ளன’ என்றாா்.

இந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி மூலமே பூா்த்தி செய்யப்படுகிறது. உக்ரைன்-ரஷியா பிரச்னையால் கடந்த பிப்ரவரியில் இருந்து கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியது. 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாா்ச் மாதம் விலை உயா்ந்தது.

இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில பேரவைத் தோ்தல்களையொட்டி, 137 நாள்களுக்கு எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த மாா்ச் 22-இல் உயா்த்தப்பட்டது. ஏப்ரல் 7 வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை தலா ரூ.10 வரை உயா்ந்தது.

இதனிடையே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு முறையே ரூ. 8, ரூ. 6 குறைத்து மத்திய அரசு கடந்த மே மாதம் நடவடிக்கை மேற்கொண்டது. தேசியத் தலைநகா் தில்லியில் பெட்ரோல் ரூ.96.72-க்கும், டீசல் ரூ.89.62-க்கும் விற்பனையாகிறது.



Read in source website

இந்திய கடற்படையின் ‘புராஜெக்ட் 17ஏ’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மூன்றாவது போா்க் கப்பலான ‘தாராகிரி’ மும்பையில் ஞாயிற்றுக்கிழமை கடலில் முதல் முறையாக இறக்கப்பட்டது.

மும்பையில் உள்ள மஸகான் கப்பல் கட்டும் நிறுவனம் (எம்டிஎல்) சாா்பில் ஒருங்கிணைந்த கட்டுமான முறையின் கீழ் இந்தக் கப்பல் கட்டப்பட்டுள்ளது. ‘பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் மறைவு காரணமாக ஒருநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதால், கப்பல் வெள்ளோட்ட விழா எளிமையாக ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது’ என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எம்டிஎல் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘தாராகிரி போா்க் கப்பலின் அடித்தளம் கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பா் 10-ஆம் தேதி அமைக்கப்பட்டு, கப்பல் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது, முதல்கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடந்த நிலையில், வெள்ளோட்டத்துக்காக கப்பல் கடலில் இறக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, வரும் 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலை வடிவமைத்தல் மற்றும் கட்டுமானம் செய்தல் ஆகிய பணிகளை எம்டிஎல் நிறுவனம் மேற்கொண்டு வரும் நிலையில், மும்பையில் உள்ள போா்க் கப்பல் கண்காணிப்புக் குழு அதனை மேற்பாா்வையிட்டு வருகிறது. இந்திய கடற்படையின் ‘புராஜெக்ட் 17ஏ’ திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே 4 போா்க் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் மொத்த திட்டச் செலவு ரூ. 25,700 கோடியாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட முதல் போா்க் கப்பலான ‘நீலகிரி’ கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் 28-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தக் கப்பலின் கடல் பயணச் சோதனை வரும் 2024-ஆம் ஆண்டு முதல் பாதியில் மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழான இரண்டாவது போா்க் கப்பல் ‘உதயகிரி’ கட்டி முடிக்கப்பட்டு, கடந்த மே 17-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தக் கப்பலின் கடல் பயணச் சோதனை 2024-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.

மூன்றாவதாக உருவாக்கப்பட்ட ‘தாராகிரி’ தற்போது வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழான நான்காவது மற்றும் கடைசி போா்க் கப்பலுக்கான அடித்தளம் கடந்த ஜூன் 28-ஆம் தேதி அமைக்கப்பட்டு, கப்பல் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றும் எம்டிஎல் தெரிவித்துள்ளது.



Read in source website


பிரிட்டனின் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் கைப்பட எழுதிய ரகசியக் கடிதம் சிட்னியில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதனை இன்னும் 63 ஆண்டுகளுக்குப் பிரித்து படிக்க முடியாது.

பிரிட்டன் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் உடல் நலக் குறைவால் கடந்த வியாழக்கிழமை காலமானார். இதையடுத்து அவரது மூத்த மகன் மூன்றாம் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், பிரிட்டன் ராணி எலிசபெத் எழுதிய ரகசியக் கடிதம் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் பரவி வருகிறது.

இந்தக் கடிதம் குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த 1986ஆம் ஆண்டு சிட்னி மக்களிடையே உரையாற்றும் வகையில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கைப்பட எழுதிய கடிதம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தக் கடிதம் சிட்னி நகரில் வரலாற்று சிறப்பு மிக்க கட்டடத்தில் விலை மதிப்புடைய பொருள்களை வைக்கக் கூடிய அறையில் உள்ள கண்ணாடி பெட்டகத்தில் வைத்துப் பூட்டி பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதனை 2085ஆம் ஆண்டுதான் பிரித்துப் படித்து, அதிலிருக்கும் ராணியின் தகவல் சிட்னி மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

இந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை, ராணியின் மிக நெருங்கிய உதவியாளர்கள் கூட அறிந்திருக்க முடியாது. காரணம், மிகவும் ரகசியமான இடத்தில் அமர்ந்துதான் ராணி அந்தக் கடிதத்தை எழுதினார். அதில் ஒன்றுமட்டும் நிச்சயம், அந்த ரகசியக் கடிதத்தை 2085ஆம் ஆண்டு வரை யாரும் பிரித்துப் படிக்கக் கூடாது என்பது மட்டும் அனைவருக்கும் தெரிந்த தகவலாக உள்ளது.

சிட்னி மேயருக்கு எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், முக்கிய குறிப்பு ஒன்று உள்ளதாம். அதில், வரும் 2085ஆம் ஆண்டு ஒரு நல்ல நாளை தேர்வு செய்து இந்த கடிதத்தைப் பிரிக்கலாம். இதில் இருக்கும் செய்தியை அன்றைய நாளில் எனது செய்தியாக சிட்னி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று ராணி எலிசபெத் குறிப்பிட்டிருக்கிறாராம்.

இவ்வாறு குறிப்பிட்டு, அழகாக எலிசபெத் ஆர் என்று அவர் கையெழுத்தும் இட்டிருக்கிறார் என்கின்றன தகவல்கள்.

ராணி இரண்டாம் எலிசபெத் இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு 16 முறை பயணம் மேற்கொண்டுள்ளார். 
 

 



Read in source website

சென்னை: எலி பேஸ்ட்டை தனி நபர் வாங்க வந்தால், அவர்களுக்கு தரக் கூடாது என்று அனைத்து கடைகளுக்கும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக தற்கொலைத் தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மனநல நல்லாதரவு மன்றம் (மனம்) திட்டம் துவக்க விழா மற்றும் ஊடகவியலாளர்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மனம் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு மேடையில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "மனம் நல ஆலோசனை இன்று காலத்தில் மிகவும் அவசியம். எல்லாம் நோய்களுக்கும் தீர்வு என்கின்ற வகையில் மருத்துவத் துறை பல சாதனைகளை செய்து கொண்டிருக்கிறது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் இன்றைக்கு உலகமே மிகப் பெரிய அளவில் அசத்தலான சாதனைகளை செய்து வருகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மன அழுத்தம் என்பது பெரிய அளவில் இருந்து வருகிறது. மன நலனை எப்படி பாதுகாப்பது என்பதற்கு பல்வேறு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளில் அனைத்து கல்லூரிகளிலும் இந்தத் திட்டம் தொடங்க இருக்கிறோம்.

1.32 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு குறித்து மன நல ஆலோசனை வழங்கி இருக்கிறோம். அதில் 564 மாணவர்கள் High risk என்று கருதப்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருகிறோம். நீட் தேர்வு மட்டுமின்றி 10, 12 வகுப்பு தேர்வு முடிவு வரும் பொழுது கூட மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த திட்டம் மூலம் அவர்களுக்கும் மன நல ஆலோசனை வழங்க இருக்கிறோம்.

தற்போது தற்கொலைக்கு பெண்கள் 90 சதவீதத்திற்கும் மேல் பயன்படுத்தும் பொருள் சாணி பவுடர்தான். கடந்த காலங்களில் எது செய்தாலும் ஒரு விசயம் இருந்தது. தற்போது அனைத்தும் செயற்கை வந்து விட்டது. எலி பேஸ்ட் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அது தற்போது உயிரை எடுத்துக் கொண்டு இருக்கிறது.

எலி பேஸ்ட்டை தனி நபர் வாங்க வந்தால் அவர்களுக்கு தரக் கூடாது என்ற அனைத்து கடைகளுக்கு அரசு சார்பில் அறிவுறுத்த இருக்கிறோம். மேலும், வெளியில் கண்ணுக்கு தெரியும் வகையில் வைக்கக் கூடாது என்றும், மறைத்து வைத்து விற்க வேண்டும் என்று தெரிவிக்க இருக்கிறோம். சானிபவுடர் தமிழகத்தில் தடை செய்தாலும் வெளி மாநிலங்களில் இருந்து தான் அதிமாக இங்கு இறக்குமதி செய்கிறார்கள் அதனை தடுக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் பேசினார்.



Read in source website

சென்னை: நாட்டில் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை மத்திய ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிட்டு வருகிறது. பல்வேறு மதிப்புகளில் இவை அச்சடித்து வெளியிடப்படுகின்றன.

இவ்வாறு மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் ரூ.10 நாணயங்களை தனிநபர் மற்றும் கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட சிலர் வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், இவ்வாறு வாங்க மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிடும் ரூ.10 நாணயங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லத் தக்கவையாகும். எனவே, பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் ரூ.10 நாணயங்கள் குறித்து சந்தேகப்படத் தேவையில்லை.

மேலும், இவ்வாறு வாங்க மறுக்கும் தனிநபர் மற்றும் கடை உரிமையாளர்கள் மீது ரிசர்வ் வங்கியால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள முடியாது.

மாறாக, அவர்களுக்கு இதுதொடர்பாக விழிப்புணர்வை மட்டுமே ஏற்படுத்த முடியும்.

அதே சமயம், வங்கிகள் ரூ.10நாணயங்களை வாங்க மறுத்தால், குறிப்பிட்ட வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க முடியும். அதேபோல், பேருந்துகளில் நடத்துநர்கள் ரூ.10 நாணயங்களை வாங்க மறுத்தால், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். அதிகாரிகள் இதுதொடர்பாக நடத்துநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பொதுமக்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க முடியாது. அவர்களுக்கு விழிப்புணர்வை மட்டும்தான் ஏற்படுத்த முடியும்.

அதேபோல்தான் ரூ.10 நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது ரிசர்வ் வங்கியால் நடவடிக்கை முடியாது. அதேசமயம் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி அவ்வப்போது சுற்றறிக்கை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்றனர்.



Read in source website

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகை அகழாய்வில் கண்டறியப்பட்ட 57 முதுமக்கள் தாழிகளில் இதுவரை 35 தாழிகளை திறந்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 8-ம் கட்ட அகழாய்வுப் பணி நடக்கும் என தமிழக தொல்லியல்துறை அறிவித்தது. தொடர்ந்து பிப். 13-ம் தேதி முதல் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய 3 இடங்களில் மட்டும் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இதுவரை மணலூரில் அகழாய்வுப் பணி தொடங்கப்படவில்லை.

கீழடி, அகரத்தில் நீள் செவ்வக வடிவ தாயக் கட்டை, செப்புகாசு, சிவப்பு, பச்சை நிற பாசிகள், சுடுமண் பொம்மைகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்தன. கொந்தகை பகுதி ஈமக்காடு என்பதால் அங்கு தொடர்ந்து முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டு வருகின்றன.

கொந்தகையில் 6-ம் கட்டத்தில் இருந்து இதுவரை நடந்த 3 அகழாய்வுகளில் 135 முதுமக்கள் தாழிகள் கண்டறியப் பட்டன. தற்போது நடந்து வரும் 8-ம் கட்ட அகழாய்வில் மட்டும் 4 குழிகள் தோண்டப்பட்டு 57 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. தற்போது முதுமக்கள்தாழிகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே ஒரே முதுமக்கள்தாழியில் 74 சூதுபவளங்கள், ஒரு செப்பு துண்டு கண்டறியப்பட்டன.

இந்நிலையில் நேற்று ஒரு முதுமக்கள் தாழி திறந்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் சிறிய மனித எலும்புத் துண்டுகள் இருந்தன. இதுவரை 35 முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப் பட்டுள்ளன.



Read in source website

புதுடெல்லி: ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17ஏ ரக போர்க்கப்பலான தரகிரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எம்.டி.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17ஏ ரக போர்க்கப்பலான தரகிரியை கடற்படை மனைவியர் நல சங்கத்தின் (மேற்கு பிராந்தியம்) தலைவர் சாரு சிங் இன்று அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வில் மேற்கு கடற்படையின் தலைமைத் தளபதி அஜேந்திர பஹதுர் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்த தரகிரி போர்க்கப்பல் உடன் எம்.டி.எல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மேலும் இரண்டு கப்பல்களும் இந்திய கடற்படையில் சேர்க்கப்படவுள்ளன. எம்.டி.எல். மற்றும் ஜி.ஆர்.எஸ்.இ நிறுவனங்களால் கட்டமைக்கப்படும் ஏழு பி17ஏ ரக போர்க்கப்பல்கள் பல்வேறு கட்ட தயாரிப்பு நிலைகளில் உள்ளன.

ரேடாருக்குத் தென்படாமல் செயல்படும் போர்க்கப்பல் போன்ற சிக்கலான முன்னணி கப்பல்களின் உள்நாட்டு கட்டுமானம், கப்பல் கட்டும் துறையில் நாட்டை ஓர் உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. மேலும், இதன்மூலம் பொருளாதார மேம்பாடு, இந்திய கப்பல் கட்டும் தளங்கள், அதன் துணை ஒப்பந்ததாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழில்களில் வேலை வாய்ப்பு உருவாக்கம் போன்ற கூடுதல் பலன்களும் கிடைக்கும். 17ஏ போர்க்கப்பலின் 75% ஆர்டர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது, தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் இந்தியாவும் சீனாவும் தங்கள் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை திட்டமிட்டபடி நடைபெறுகிறது என்று இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக கடந்த 9-ம் தேதி லடாக் சென்ற ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே இன்று டெல்லி திரும்பினார். டெல்லியில் மானெக்‌ஷா மையத்தில் நடைபெற்ற ராணுவத் தளவாடங்கள் குறித்த கருத்தரங்கில் அவர் பங்கேற்றார். லடாக்கில் தற்போது நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மனோஜ் பாண்டே, இரு நாட்டு ராணுவமும் ஒப்புக்கொண்டதற்கு இணங்க படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகக் கூறினார்.

லடாக்கின் பாங்காங் ஏரி பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு இந்திய - சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, அங்கு பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆயிரக்கணக்கில் ராணுவ வீரர்களைக் குவிக்கும் பணியில் இரு நாட்டு ராணுவமும் ஈடுபடத் தொடங்கின. ஆயுதங்களும் அதிக அளவில் கொண்டு செல்லப்பட்டன.

அதேநேரத்தில், பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கிழக்கு லடாக்கின் முக்கிய முனைகளில் ஒன்றான கோக்ரா - ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து இரு நாட்டு ராணுவமும் படைகளை திரும்பப் பெற ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, கடந்த 8-ம் தேதி காலை 8.30 மணி முதல் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை தொடங்கியது. மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி இதனை தெரிவித்தார். படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை இன்றுடன் (செப்டம்பர் 12-ம் தேதியுடன்) நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், லடாக்கில் இந்திய படைகளின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 9-ம் தேதி அங்கு சென்ற ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

புதுடெல்லி: “ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்ட நாடு, இந்தியா” என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சரான பிறகு முதன்முறையாக சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்ட ஜெய்சங்கர், அங்கு அந்நாட்டின் செய்தித்தாளான சவூதி கெஜட்டிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், "ஐநா பாதுகாப்பு கவுன்சிலும், ஐநா சபையும் உலக மாற்றங்களுக்கு ஏற்ப மாற வேண்டும். சர்வதேச பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியை மட்டும் நோக்கமாகக் கொண்டு இயங்காமல், காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை அது ஏற்க வேண்டும்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதையும், பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாவதற்கான அனைத்து தகுதிகளையும் இந்தியா கொண்டிருக்கிறது என்பதையும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 21-ம் நூற்றாண்டின் புவிசார் அரசியல் யதார்த்தத்தை தற்போதைய பாதுகாப்பு கவுன்சில் பிரதிபலிக்கவில்லை.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இன்றைய உலகின் யதார்த்தத்தை அது பிரதிபலிக்க வேண்டும். அது விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதில் பொதுவாக உலக நாடுகளிடையே ஒருமித்த கருத்து உள்ளது. இது இந்தியாவுக்கு மட்டும் சாதகமானது அல்ல; பிரதிநிதித்துவம் இல்லாத பல பகுதிகளுக்கும் சாதகமானது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகவும், உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகவும், அணு ஆயுத சக்தி கொண்ட நாடாகவும், தொழில்நுட்பங்களின் மையமாகவும், உலக நாடுகளோடு தொடர்ந்து இணைந்து பணியாற்றும் நாடாகவும் இந்தியா திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாவதற்கான அனைத்துத் தகுதிகளையும் இந்தியா கொண்டிருக்கிறது" என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை சவுதி அரேபியா சென்ற ஜெய்சங்கர், அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பட்டத்து இளவரசருக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தையும் சமர்ப்பித்தார்.

சவுதி அரேபியாவின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்தியா - சவுதி அரேபியா இடையேயான இருதரப்பு உறவு எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பது குறித்து விரிவாக விளக்கி இருந்தார்.



Read in source website

புதுடெல்லி: சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி மத்திய சாலை போக்குவரத்து மற்றம் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காரில் ஏர் பேக்-ன் அவசியத்தையும், ஆறு ஏர்பேக்களை ஊக்குவிக்கும் வகையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்திருந்த சாலை பாதுகாப்பு விளம்பரம் ஒன்றினை வெள்ளிக்கிழமை அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது இந்த விளம்பரம் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

அமைச்சர் பகிர்ந்துள்ள விளம்பத்தில், திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு காரில் செல்லும் மணமகளைப் பார்த்து, பெண்ணின் தந்தை அழுது கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் போலீஸ் அதிகாரி (அக்‌ஷய் குமார்), 6 ஏர் பேக்குகள் உள்ள காரில் மணப்பெண்ணை அனுப்புவதற்கு பதிலாக இரண்டு ஏர் பேக்குகள் மட்டுமே உள்ள காரில் அனுப்புவதற்காக அந்தத் தந்தையை கேலி செய்கிறார். இந்த விளம்பரத்தை பகிர்ந்துள்ள நிதின் கட்கரி, 6 ஏர்பேக்குள் கொண்ட காரில் பயணம் பண்ணுங்கள் வாழ்க்கையை பாதுகாப்பானதாக்குங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விளம்பரம் அரசாங்க பணத்தில், தண்டனைக்குரிய குற்றமான வரதட்சணை கலாச்சாரத்தை ஊக்கப்படுத்துவதாக சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இந்த விளம்பரம், வரதட்சணை கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாக சிவசேனா கட்சியின் ராஜ்ய சபா எம்.பி. பிரியங்கா சதுவேதி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இது ஒரு பிரச்சினைக்குரிய விளம்பரம். யார் இந்த மாதிரியான விளம்பரங்களை எடுக்கிறார்கள். அரசாங்கம் தனது பணத்தினை காரின் பாதுகாப்பு அம்சம் குறித்து விளக்க செலவளித்துள்ளதா அல்லது தண்டனைக்குரிய குற்றமான வரதட்சணை வழங்குவதை ஊக்குவித்துள்ளதா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

திரிணாமூல் காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே, இந்திய அரசு வரதட்சணையை அதிகாரபூர்வமாக ஊக்குவிப்பது மிகவும் அருவருப்பானது என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயனர், இந்த விளம்பரம் தான் சொல்ல வந்த கருத்துக்கு எதிராக உள்ளது. இது திருமணத்தைத் பற்றியதா அல்லது வரதட்சணையாக 6 ஏர் பேக்குகள் உள்ள காரை வழங்கவேண்டும் என்பதை பற்றியதா எதைப்பற்றி விளம்பரம் தெரிவிக்கிறது. இந்த அரசு விளம்பரம் முற்றிலும் குழந்தைத் தனமானது. வேறு வழியில் இவர்களால் சாலைபாதுகாப்பு பற்றி பேச முடியாதா என்று தெரிவித்துள்ளார்.

வேறு ஒரு பயனர், "அராசங்கம் தண்டணைக்குரிய குற்றமான வரதட்சணை ஊக்குவிப்பதற்காக மக்களின் வரிப்பணத்தை செலவளிப்பது இந்திாயவில் மட்டும் தான் நடக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வெள்ளிக்கிழமையன்று தேசிய அளவில் சாலை பாதுகாப்பு குறித்த பிரச்சாரத்திற்கு அக்ஷய் குமார் அளித்துள்ள ஆதரவிற்கு நன்றி தெரிவித்த மத்திய அமைச்சர் கட்கரி, சாலை பாதுகாப்பு குறித்த பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அக்ஷய் குமாரின் முயற்சிகள் பாராட்டுக்குரியது என்று தெரிவித்திருந்தார்.



Read in source website

புதுடெல்லி: நாட்டிலேயே முதல்முறையாக ஜம்மு-காஷ்மீரின் குர்ஜார் முஸ்லிம் ஒருவரை மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதில் சட்டப்பேரவையுடன் கூடிய காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காஷ்மீரின் மலைப்பகுதியில் வசிக்கும் குர்ஜார் பிரிவு மக்கள் தொகை 14.93 லட்சமாக இருந்தது. குர்ஜார், பகர்வால்ஸ் பிரிவினரில் 99.3 சதவீதம் பேர் இஸ்லாத்தை பின்பற்றுகின்றனர்.

காஷ்மீரின் அதிக மக்கள்தொகை கொண்ட பழங்குடியினராக குர்ஜார் மக்கள் உள்ளனர். ஆனால், காஷ்மீருக்கான சிறப்புஅந்தஸ்து ரத்து செய்யப்படு வதற்கு முன்பு வரை குர்ஜார் பிரிவினருக்கு சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் போதிய அளவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், மத்திய உள் துறை அமைச்சகம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிவிக்கையில், “இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், காலியாக உள்ளமாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவிக்கு குலாம் அலியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

காஷ்மீர் தேர்தல்

இதன் மூலம் குர்ஜார் முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்க உள்ளார். காஷ்மீரில் பேரவைத் தேர்தல் விரைவில் நடை பெறவுள்ள நிலையில் இந்த நியமனம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



Read in source website

புதுடெல்லி: வரும் 15, 16-ம் தேதிகளில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான் செல்கிறார். இந்த மாநாட்டில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட15 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் ஆகிய 5 நாடுகள் இணைந்து கடந்த 1996-ம் ஆண்டு ‘ஷாங்காய் பைவ்’ என்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பின்னர், இந்த 5 நாடுகள் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகளின் தலைவர்கள் கடந்த 2001-ல் ஷாங்காய் நகரில் கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது அரசியல், பொருளாதார ரீதியாக இணைந்து செயல்படுவதற்காக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை (எஸ்சிஓ) உருவாக்கினர்.

இந்த அமைப்பில் முதலில் 6 நாடுகள் உறுப்பினராக இருந்தன. பின்னர் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளும் 2017-ம் ஆண்டு இணைந்தன. ஐரோப்பிய, ஆசிய நாடுகளின் மொத்த நிலப்பரப்பில் 60 சதவீத நிலப்பரப்பு மற்றும் உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ 40 சதவீத மக்கள்தொகை இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது யூரேசியாவின் (ஐரோப்பா-ஆசியநாடுகள்) அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்புக்கான அமைப்பாகும். இந்த பிராந்தியம் பூகோள ரீதியிலும், மக்கள் தொகை அடிப்படையிலும் உலகின் மிகப் பெரிய பிராந்தியமாகும்.

சுழற்சி முறையில் ஆண்டுக்கு ஒரு நாடு இந்த அமைப்புக்குத் தலைமை வகிக்கும். இவ்வாறு தலைமை வகிக்கும் நாடு, ஆண்டுதோறும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்உச்சி மாநாட்டை தலைமை வகித்து நடத்தும்.

22-வது மாநாடு

அந்த வகையில் 22-வது உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் வரும் 15, 16-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு முதல்முறையாக நேரடியாக இந்த உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு முன் 2019-ல் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நேரடி மாநாடு நடைபெற்றது.

இந்த ஆண்டு நடைபெறும் மாநாட்டில், உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகளின் தலைவர்கள், அமைப்பின் பொதுச் செயலர்கள், எஸ்சிஓ மண்டல தீவிரவாத தடுப்பு கட்டமைப்பின் செயல்இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறைஅமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்ஜியோயேவ் அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்று, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 14-ம் தேதி பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் செல்கிறார்.

ஜி ஜின்பிங், விளாடிமிர் புதின் பங்கேற்பு

மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஈரான் அதிபர்இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 15 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எஸ்சிஓ அமைப்பின் கடந்த 20 ஆண்டுகால நடவடிக்கைகள் இந்த மாநாட்டில் மறுஆய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உறுப்பு நாடுகள் இணைந்து செயல்படுவது குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீன அதிபருடன் பேசுவாரா?

இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர்நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்களுடன் தனியாக சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், சமீபகாலமாக மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை, பிரதமர் மோடி சந்திப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அதேநேரம், கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக முகாமிட்டிருந்த இந்திய, சீன படைகளை விலக்கிக் கொள்வது என சமீபத்தில் நடைபெற்ற இருதரப்பு ராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இரு நாடுகளின் படைகளும் பின்வாங்கி வருவதால், இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 16-ம் தேதி பிரதமர் மோடி நாடு திரும்புகிறார்.

இந்த உச்சி மாநாடு முடிந்ததும், எஸ்சிஓ அமைப்பின் ஓராண்டுக்கான தலைமைப் பொறுப்பை சுழற்சி அடிப்படையில் இந்தியா ஏற்க உள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டின் உச்சி மாநாடுடெல்லியில் நடைபெறும். இதில், உறுப்புநாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகளின் தலைவர்கள் என ஏராளமானோர் பங்கேற்பர்.

எஸ்சிஓ அமைப்பில் உறுப்பினராக 8 நாடுகளும், பார்வையாளராக ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான் மற்றும் மங்கோலியா ஆகிய 4 நாடுகளும் உள்ளன. மேலும், இந்த அமைப்பில் இணைவது குறித்துஅர்மீனியா, அஜர்பைஜான், கம்போடியா, நேபாளம், இலங்கை, துருக்கி ஆகிய 6 நாடுகள்பேச்சுவார்த்தை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.



Read in source website

புதுடெல்லி: லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக நடத்தப்படும் காட்சிப் போட்டியில் பங்கேற்கும் இந்தியன் மகாராஜாஸ் அணிக்கு இந்திய அணி முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கேப்டனாக இருப்பார்.

லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் இந்தப் போட்டிகள் வரும் 16-ம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தொடங்கவுள்ளன.

கொல்கத்தா, லக்னோ, டெல்லி, கட்டாக், ஜோத்பூர் ஆகிய நகரங்களில் லீக் போட்டிகள் நடைபெறும். அக்டோபர் 5-ம் தேதி இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியையொட்டி ஒரே ஒரு சிறப்புக் காட்சிப் போட்டி செப்டம்பர் 16-ம் தேதி நடைபெறும். இதில் இந்தியா மகாராஜாஸ் அணியும், வேர்ல்ட் ஜெயன்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்தியன் மகாராஜாஸ் அணிக்கு சேவாக் கேப்டனாகவும், வேர்ல்ட் ஜெயன்ஸ் அணிக்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜேக்கஸ் காலிஸ் கேப்டனாகவும் செயல்படுவர்.

இதைத் தொடர்ந்து நடைபெறும் லெஜன்ட்ஸ் லீக் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ், மணிப்பால் டைகர்ஸ், பில்வாரா கிங்ஸ், இந்தியா கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ளன.



Read in source website

சென்னை: முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி சென்னையில் இன்று முதல் நடைபெறவுள்ளது.

1997-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சென்னையில் ஆண்கள் பங்கேற்கும் ஏடிபி டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் அந்த போட்டி 2018-ம் ஆண்டு மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதற்கான முயற்சியை அகில இந்திய டென்னிஸ் சம்மேளனமும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும் எடுத்து வந்தது.

இந்நிலையில் டபிள்யூடிஏ மகளிர் டென்னிஸ் போட்டியை சென்னையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் ஆதரவுடன் இந்தப் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் ஸ்டேடியத்தில் இன்று (செப்டம்பர் 12) முதல் 18-ம்தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டியை நடத்துவதற்கான நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கித் தந்துள்ளார்.

முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒற்றையர் பிரிவில் 22பேர் நேரடியாகவும், 4 பேர் வைல்டு கார்டு நுழைவு மூலமாகவும், 6 பேர்தகுதிச் சுற்று மூலமாகவும் பங்கேற்கவுள்ளனர்.

போட்டியில் முன்னணி வீராங்கனைகள் அலிசன் ரிஸ்கி அம்ரித்ராஜ் (அமெரிக்கா), வர்வரா கிராசெவா (ரஷ்யா), மக்தா லினட் (போலந்து), ரெபேக்கா பீட்டர்சன் (ஸ்வீடன்), தத்ஜனா மரியா (ஜெர்மனி), கியிங் வாங் (சீனா), சிலோயிபாக்கெட் (பிரான்ஸ்), ரெபேக்கா மரினோ(கனடா), மோயுகா உச்சுய்மா (ஜப்பான்), ஒக்சானா செலக்மெட்டேவா (ரஷ்யா), அன்னா பிளிங்கோவா (ரஷ்யா), அனஸ்டாசியா கசனோவா (ரஷ்யா), லிண்டா புருவிர்டோவா (செக்.குடியரசு), கடர்சைனா கவா (போலந்து), யானினா விக்மேயர் (பெல்ஜியம்), விக்டோரியா ஜிமென்ஸ் (அன்டோரா), ஏரியன் ஹர்டோனா (நெதர்லாந்து), ஜோயன் ஜுகெர்(ஸ்விட்சர்லாந்து), கேட்டி ஸ்வான் (பிரிட்டன்), கரோல் ஜாவோ (கனடா),டெஸ்பினா பபாமிகாயில் (கிரீஸ்), யூஜின் பவுச்சார்ட் (கனடா), அங்கிதா ரெய்னா (இந்தியா), கர்மன் கவுர் தண்டி(இந்தியா) ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

போட்டியின் முதல் நிலை வீராங்கனையாக அலிசன் ரிஸ்கி அமிர்தராஜும், 2-ம் நிலை வீராங்கனையாக வர்வராகிராசெவாவும், 3-ம் நிலை வீராங்கனையாக மக்தா லினட்டும் உள்ளனர்.



Read in source website

நியூயார்க்: அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

4 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் 5-ம் நிலைவீராங்கனையும், துனிசியா நாட்டைச் சேர்ந்தவருமான ஆன்ஸ்ஜபேரும், போலந்து வீராங்கனையான இகா ஸ்வ்யாடெக்கும் மோதினர்.

இதில் இகா ஸ்வியாடெக் 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் ஜபேரை வீழ்த்தினார். இதன்மூலம் 2022-ம் ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் மகளிர் பிரிவு பட்டத்தைக் கைப்பற்றினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் வெல்லும் முதலாவது பட்டமாகும் இது. இதற்கு முன்பு அவர் பிரெஞ்சு ஓபனில் 2 முறை (2020, 2022) பட்டம் வென்றிருந்தார்.



Read in source website

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் 21-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் செயல்பட்டது. அங்கிருந்த 110 அடுக்குமாடிகள் கொண்ட இரட்டை கோபுரங்கள் மீது கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அல்-காய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 3,000 பேர் உயிரிழந்தனர். 25,000 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 184 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர்தொடுத்தது. அந்த நாட்டில் பதுங்கியிருந்த அல்-காய்தா தலைவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவு அளித்த தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்டது. கடந்த 2011 மே 2-ம் தேதி பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனும் கொல்லப்பட்டார்.

கடந்த 2001-ம் ஆண்டில் உலகவர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இரட்டை கோபுர தாக்குதல் என்று அழைக்கப்படுகிறது. இதன் 21-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பென்டகனில் நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் பங்கேற்று தாக்குதலில் உயிரிழந்தவர் களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அமெரிக்க மரபின்படி நினைவு நிகழ்ச்சிகளில் தலைவர்கள் உரையாற்றுவது கிடையாது. எனினும் நினைவு புத்தகத்தில் அதிபர் ஜோ பைடன் தனது கருத்தை பதிவு செய்தார். அதில், “கடந்த 2001 இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு அதே ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி தேசிய அவசர நிலை பிரகடனம் வெளியிடப்பட்டது. அந்த பிரகடனத்தை இப்போதும் உறுதியுடன் பின்பற்றி வருகிறோம். இதன்படி அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாத அச்சுறுத்தல்கள் முறியடிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.



Read in source website

சீனாவின் இறக்குமதிகள் பெரும்பாலும் குருணை புழுங்கல் அரிசியாகும், அது தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 4 மாதங்களுக்கு முன்பு, நாட்டிலிருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது.
பயிர் விளைச்சல் சரிவு, இருப்பு குறைவு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. தற்போது இது போன்ற கவலைகள் அரிசி ஏற்றுமதியிலும் ஏற்பட்டுள்ளன.

அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?

அரிசி ஏற்றுமதியில் நான்கு வகைகள் உள்ளன. அவற்றில் பாசுமதி அரிசி மற்றும் பாசுமதி அல்லாத அரிசி பிரதானமானது.
பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இன்னும் சுதந்திரமாக அனுமதிக்கப்படுகிறது. தடைகள், உடைந்த பாசுமதி அரிசி மற்றும் வெள்ளை அரிசிக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை, நிதியமைச்சகத்தின் வருவாய்த் துறையானது, செப்டம்பர் 9 முதல் அமலுக்கு வரும் வகையில், “பழுப்பு மற்றும் பாசுமதி அரிசியைத் தவிர” அரிசியின் ஏற்றுமதிக்கு 20% வரி விதிக்கப்படுவதாக அறிவித்தது.

இது அனைத்து மூல பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிகளையும் உள்ளடக்கியிருக்கும். அதே இரவில், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் மற்றொரு அறிவிப்பு உடைந்த அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

ஆகவே, கச்சா அல்லாத பாசுமதி அரிசிக்குக் கூட, 20% வரி செலுத்தினால் முழு தானிய சரக்குகளின் ஏற்றுமதி மட்டுமே அனுமதிக்கப்படும்.

இவை அனைத்தும் நாட்டின் ஒட்டுமொத்த அரிசி ஏற்றுமதியை எந்தளவு பாதிக்கும்?

இந்தியா, 2021-22இல் (ஏப்ரல்-மார்ச்), 9.66 பில்லியன் டாலர் மதிப்புள்ள 21.21 மில்லியன் டன் (மெட்ரிக் டன்) அரிசியை ஏற்றுமதி செய்தது. அதில் $3.54 பில்லியன் மதிப்புள்ள 3.95 மில்லியன் டன் பாசுமதி அரிசியும் (இதில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை) மற்றும் $6.12 பில்லியன் மதிப்புள்ள 17.26 மில்லியன் டன் பாசுமதி அல்லாத ஏற்றுமதிகளும் அடங்கும்.
பிந்தைய காலத்திற்குள், 7.43 மில்லியன் டன்கள் ($2.76 பில்லியன்) புழுங்கல் அரிசி ஏற்றுமதியை செய்தது. இவைகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை.

மீதமுள்ள 9.83 மில்லியன் டன் ($3.36 பில்லியன்) தொடர்பாக மட்டுமே கட்டுப்பாடுகள் பொருந்தும். இது 3.89 மில்லியன் டன் ($1.13 பில்லியன்) உடைந்த அரிசியை உள்ளடக்கியது.
அதன் ஏற்றுமதி தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் 5.94 மில்லியன் டன் ($2.23 பில்லியன்) பாசுமதி அல்லாத அரிசிக்கு ஏற்றுமதிக்கு இனிமேல் 20 சதவீதம் வரி விதிக்கப்படும்.

எளிமையாகச் சொன்னால், இந்தத் தடைகள் நாட்டின் அரிசி ஏற்றுமதியில் பாதி அளவு மற்றும் மூன்றில் ஒரு பங்கை பாதிக்கும்.

ஏன் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன?

இரண்டு அடிப்படை காரணங்கள் உள்ளன. முதலாவது, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் கங்கை நதி பாயும் மேற்கு வங்கத்தில் பருவமழையின் பற்றாக்குறையால் இந்தியாவின் அரிசி உற்பத்தி கணிசமாகக் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜூன் 1 முதல் செப்டம்பர் 9 வரையிலான நடப்பு காரீஃப் பயிர் பருவத்தில் விவசாயிகள் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 2.1 மில்லியன் ஹெக்டேர் (mh) குறைவான பரப்பளவில் நெல் பயிரிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் இரண்டாவது வாரம் வரை இடைவெளி மிக அதிகமாக இருந்தது, கிட்டத்தட்ட 4.4 mh. நெல்லுக்கான சாதாரண நடவு நேரம் ஜூன்-ஜூலை என்பதால், அதற்குப் பிறகு மூடப்பட்ட எந்தப் பகுதியும் குறைந்த மகசூல் தரும் குறுகிய கால ரகங்களாக இருக்கும் என்பதால், அது உற்பத்தியில் பிரதிபலிக்கும்.

அகில இந்திய அளவில் சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 2.7 டன் அரிசி விளைச்சலை எடுத்துக் கொண்டால், அருவடை 6-12 மீட்டர் வரம்பில் இருக்கலாம்.

இரண்டாவது பங்குகளுடன் தொடர்புடையது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி பொது கோதுமை கையிருப்பு, 26.65 மில்லியன் டன் ஆக இருக்கிறது.
இது இந்த தேதியில் 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகக் குறைவு ஆகும். அதே சமயம், 40.99 மெகா டன் என்ற அளவான அரிசி இருந்தது.

ஆகஸ்ட் 1, 2021 இல் இருந்த 44.46 மெ.டன் அளவை விடக் குறைவாக இருக்கிறது. இது அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், இலவச உணவு தானியங்கள் திட்டத்தை (பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜனா) செப்டம்பர் மாதத்திற்குப் பிறகும் தொடர வேண்டும் என்ற அரசியல் அழுத்தத்தின் அடிப்படையில் இது அதிகமாக உள்ளது.

அரசு கிடங்குகளில் மிகக் குறைந்த கோதுமை உள்ளதால், பொது விநியோகத் திட்டத்தை (பி.டி.எஸ்) நிலைநிறுத்துவது அரிசிதான்.
இந்த ஆண்டு அரிசி உற்பத்தியில் 10 மில்லியன் டன்கள் வீழ்ச்சியடைய வாய்ப்புகள் உள்ளன. இதனால் ஏற்றுமதிகள் பாதிப்படைகின்றன.

இதற்கிடையில், தாய்லாந்தின் (7.2 மெ.டன்), வியட்நாமின் (6.6 மெ.டன்) மற்றும் பாகிஸ்தானின் (4.8 மெ.டன்) ஏற்றுமதியை விட கடந்த ஆண்டு 21 மில்லியன் டன் கூடுதலாக ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம், உலகின் மொத்த அரிசி ஏற்றுமதியில் 40% பங்கினை நாடு கொண்டுள்ளது.

2021-22 இல், ஏற்றுமதி 7.23 மில்லியன் டன்களை எட்டியபோது கூட, உலக கோதுமை ஏற்றுமதியில் அதன் பங்கு 5 சதவீதம் ஆக கூட இல்லை. இதற்கு மத்தியில் மே13ஆம் தேதி கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
அப்போது, ரஷ்ய-உக்ரைன் போர் நடைபெற்றதால் இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தியா எங்கெல்லாம் அரிசியை ஏற்றுமதி செய்கிறது?

கடந்த ஆண்டு பாசுமதி ஏற்றுமதியில் 75% க்கும் அதிகமானவை ஈரான் மற்றும் அரேபிய தீபகற்ப நாடுகளுக்கு; ஆஸ்திரேலியா ஆகியவை மேலும் 10% வரை ஏற்றுமதி செய்யப்பட்டன.
பாசுமதி அல்லாத அரிசியில், கிட்டத்தட்ட 55% ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்றுள்ளன. அந்த நாடுகள், பெனின், ஐவரி கோஸ்ட், செனகல், டோகோ, கினியா, மடகாஸ்கர், கேமரூன், ஜிபூட்டி, சோமாலியா மற்றும் லைபீரியா ஆகியவை ஆகும்.

இந்தப் பட்டியலில் சீனாவும் வங்க தேசமும் 9.5 சதவீதமும், பெனின், நேபாளம் 8.9 சதவீதமும் நுகர்கின்றன. ஆப்பிரிக்கா மற்றும் சீனாவுக்கு பெரும்பாலும் புழுங்கல் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதே சமயம் சீனாவின் இறக்குமதிகள் பெரும்பாலும் உடைக்கப்பட்ட அரிசியாகும், அது இப்போது தடைசெய்யப்பட்டுள்ளது.

புழுங்கல் அரிசி என்றால் என்ன?

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லில் இருந்து புழுங்கல் அரிசி எடுக்கப்படுகிறது. இதில் உமியாக 20-21 சதவீதமும், அடுத்த லேயராக 10-11 சதவீதம் நீக்கப்பட்ட பின்னர் அரிசி 68-69 சதவீதம் வரை கிடைக்கும்.
இந்த அரிசி முழு மற்றும் குருணையாக கிடைக்கும். பர்பாய்லிங் என்பது நெல்-ஐ தண்ணீரில் ஊறவைத்து, ஆவியில் வேகவைத்து உலர்த்தும் ஒரு செயல்முறையாகும். அரைக்கும் போது குறைந்த உடைப்புடன் அரிசி கடினமாகிறது.

அந்த வகையில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசியில் 5-15% உடைந்த தானியங்கள் உள்ளன. கச்சா அரிசியில், உடைப்புகள் பொதுவாக 25% வரை இருக்கும்.
100% உடைந்த அரிசி தான் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது.

2021-22 ஆம் ஆண்டில் மொத்தம் 3.89 மில்லியன் டன் உடைந்த அரிசி ஏற்றுமதியில், 1.59 மில்லியன் டன் சீனாவிற்கும், அதைத் தொடர்ந்து செனகல் (0.92 மெ.டன்), வியட்நாம் (0.34 மீ. டன்), ஜிபூட்டி (0.24 மீ. டன்) மற்றும் இந்தோனேசியா (0.21 மெ. டன்) ஆகிய நாடுகளுக்கும் சென்றன.

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி பெரும் பாதிப்பை சந்திக்குமா?

இதற்கு வாய்ப்பில்லை இல்லை என்கிறார் அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜய் சேத்தியா.
இந்தியாவில் இருந்து 5% உடைந்த வெள்ளை அரிசி தற்போது ஒரு டன்னுக்கு சுமார் $340 என்ற விலையில் இந்தியாவிலிருந்து அனுப்பப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து $380, வியட்நாமில் இருந்து $395 மற்றும் தாய்லாந்தில் இருந்து $430 ஏற்றுமதி ஆகின்றன. இது இந்திய அரிசியை போட்டியாளராக மாற்றாது” என்றார்.

இந்த அரிசிகள் கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ரேஷன் கடைகளிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது.



Read in source website

தேசிய குற்ற ஆவண காப்பகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2021-ஆம் ஆண்டு முதியவர்கள் கொல்லப்பட்டதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பது கவலை கொள்ளத்தக்கதாகும்.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ஒட்டுமொத்த கொலைகள் குறைந்தாலும், 
முதியோர் கொலை செய்யப்படுவது அதிகரித்தே வந்துள்ளது. தமிழகத்தில் 2021-இல் 1,741 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 202 பேர் (11.3 %). முதியவர்கள் கொல்லப்படுவதில் மகாராஷ்டிரம் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2021-இல் அங்கு 2,142 கொலை வழக்குகளில் 181 முதியவர்கள் (7.8 %) கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவில் மக்கள்தொகை அதிகம் உள்ள மாநிலமான உத்தர பிரதேசத்தில் 2021-இல் 3,717 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 2.7 % முதியவர்கள்.

அதிகபட்ச கொலைச் சம்பவங்களில் முதல் 7 இடங்களில் உள்ள மாநிலங்களில், தமிழகத்தில் 11.3%, மகாராஷ்டிரத்தில் 7.8%, மத்திய பிரதேசத்தில் 5.9%, உத்தர பிரதேசத்தில் 2.7%, பிகாரில் 0.9%, ராஜஸ்தானில் 0.6%, மேற்கு வங்கத்தில் 0.2% 
முதியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் வசித்துவந்த பட்டய கணக்காளரான (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்) ஆர்.ஸ்ரீகாந்த் (58), அவரது மனைவி அனுராதா (53) ஆகியோர் அமெரிக்காவில் உள்ள தங்கள் மகள், மகனைப் பார்ப்பதற்காக சென்றுவிட்டு கடந்த மே மாதம் சென்னை திரும்பினர். அவர்கள் சென்னை திரும்பிய தினத்தன்றே அவர்களது வீட்டில்வைத்து கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

அவர்களது வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்துவந்த, நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவர் தனது மகனைப் படிக்க வைப்பதற்காக தனது கூட்டாளியுடன் சேர்ந்து இருவரையும் கொலை செய்து 1,000 பவுன் தங்கம், 60 கிலோ வெள்ளியைக் கொள்ளையடித்தார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் தொழிலதிபர் ராஜகோபால் (75), அவரது மனைவி குருபாக்கியம் (68) ஆகியோர் கடந்த ஜூலையில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அதற்கு அடுத்த நாளே, அதே மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் ஓய்வுபெற்ற ஆசிரிய தம்பதியான சங்கரபாண்டியன் (69), ஜோதிமணி (60) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதேபோன்று, கோவை மாவட்டம் சூலூர் அருகே சரோஜினி (72) என்பவர் கணவர் இறந்த நிலையில் தனியே வசித்து வந்தார். கடந்த ஆகஸ்டில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் வந்த மூன்று இளைஞர்கள் அவரைத் தாக்கி கை, கால்கள், வாய் ஆகியவற்றில் பேக்கிங் டேப் ஒட்டியதில் மயக்கமடைந்து உயிரிழந்தார்.

இந்த அனைத்துச் சம்பவங்களிலுமே மகன்கள் அல்லது மகள்கள் வெளியூர்களில் வாழ்பவர்கள். பெற்றோர் தனியே வசித்துவருகின்றனர். அவர்களிடம் கொள்ளையடிப்பதற்காகவே கொலைகள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் மட்டுமே நடக்கின்றன என்று நினைத்துவிட வேண்டாம். இந்தியாவிலேயே  மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்றான  ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவியும் இதேபோன்று கொல்லப்பட்டுள்ளார்.

தென்மேற்கு தில்லியில் வசந்த் விஹார் என்ற பகுதியில் வசித்தவர் கிட்டி குமாரமங்கலம் (67). வழக்குரைஞர். முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், வாஜ்பாய் அமைச்சரவைகளில் இடம்பெற்றிருந்த ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி. ரங்கராஜன் இறந்த பிறகு தனியே வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் பல ஆண்டுகளாக சலவைத் தொழிலாளியாக இருந்த ராஜு (24) என்பவர் 2021 ஜூலை 6-ஆம் தேதி வீட்டுக்குள் நுழைந்து பணிப்பெண்ணைத் தாக்கிவிட்டு, கிட்டியைத் தாக்கி தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளார்.

இங்கே குறிப்பிடப்பட்டவை சில எடுத்துக்காட்டுகள்தான். இதேபோன்று முதியோருக்குப் பாதுகாப்பற்ற நிலைதான் பல மாநிலங்களிலும் நிலவுகிறது. முன்பெல்லாம் ஒவ்வொரு குடும்பத்திலும் நிறையக் குழந்தைகள் இருந்தனர். அது "நாம் இருவர், நமக்கு இருவர்' என ஆகி, இப்போது "நாம் இருவர் நமக்கு ஒருவர்' என்றாகிவிட்டது. அது "நமக்கு எதற்கு இன்னொருவர்' என்ற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

நடுத்தர மற்றும் அதற்கு மேல் சமூக அந்தஸ்து உள்ள குடும்பங்களில் அந்த ஓரிரு குழந்தைகளும் மேலைநாடுகளில் படிக்க வேண்டும், பணிபுரிய வேண்டும் என்ற ஆசையை பெற்றோர்கள் ஊட்டி வளர்க்கின்றனர். குழந்தைகள் வெளிநாடு சென்றாலும், பெரும்பாலான பெற்றோர்களுக்கு அந்த நாடுகள் ஒத்துவராததால் இங்கேயே தனியாக வசிக்கின்றனர்.

தனது மகள் திருமணமானதும் தனிக்குடித்தனம் நடத்த வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். மாமனார், மாமியார் தொந்தரவு இல்லாத வரன் அமைய வேண்டும் என்று பெண்ணைப் பெற்றவர்களும் விரும்புகிறார்கள். அதனால், தனித்துவிடப்படும் முதியோர்தான், தங்களுக்கு அறிந்தவர்களாலேயே கொல்லப்படுகின்றனர். 

மேற்கத்திய கலாசாரத்தைப் பின்பற்றி கூட்டுக் குடும்ப முறையைக் கைவிட்டதன் பலனை இப்போது அனுபவிக்கிறோம். முதியோர் இல்லங்கள் இனி தவிர்க்க முடியாதவை. அவை பாதுகாப்பானதாக இருப்பதையாவது நாம் உறுதிப்படுத்த வேண்டும்.



Read in source website

இன்றைக்கு ஒரு பொது நிகழ்வில் வரவேற்புரையோ நன்றியுரையோ சொல்லச் சொன்னால் பலரும் முன்வருவதில்லை. பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி அறிவுத் தளத்துக்கு நகர்த்தும் விதமாக சிறப்புரையாற்றுவது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம். நிகழ்வுக்கு வந்துள்ள பலரையும் அவரவர்களின் பெயரைச் சொல்லி வருக வருக  என வரவேற்கின்றேன் என்றோ அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றோ சொல்வதற்குக்கூட பலரும் கூச்சப்படுகின்றனர். 

இதற்கான  காரணம் எதுவாக இருக்கும்? ஒன்று அவர்களுக்கு கூச்ச சுபாவம் இருக்கலாம். மற்றொன்று பலர் முன்னிலையில் பேச பயப்படுபவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு கோவையாக வார்த்தைகளை வெளிப்படுத்தும் பழக்கம் இல்லாதிருக்கலாம். இவ்வாறு இருப்பதில் ஒன்றும் தவறில்லை. 

ஆனால் அதே நேரம் பிறந்து வளர்ந்தது முதல் நாம் பேசிப் பழகும் தாய்மொழியில் பேச இவ்வாறான தயக்கம் ஏன் ஏற்படுகிறது? இவ்வாறு உள்ளவர்கள் குழந்தைகளாக இருந்த காலத்தில் இவர்களுக்கு மொழிப் பயன்பாட்டின்போது கிடைத்த பின்னூட்டங்கள் இவர்கள் குணத்தில் பெரும்பங்கு வகிப்பவையாக இருக்கும்.

ஒருவர் பேசுவதற்கு அடிப்படையாக அமைவது அவருக்கு மொழியில் உள்ள புலமை. அந்த புலமைக்கு அடிப்படையாக அமைவது அந்த மொழியிலுள்ள வார்த்தைகளில் தமக்குத் தேவையான வார்த்தையைப் பயன்படுத்த நினைக்கும் போது அது உடனடியாக நினைவுக்கு வருதல். அவ்வாறு நினைவுக்கு வருவதற்கு அடிப்படையாக அமைவது அந்த வார்த்தை அறிமுகமான நெருக்கமான சூழலும்,  அந்த வார்த்தையின் சரியான பொருள் குறித்த நம்பிக்கையும். 

எல்லாவற்றுக்கும் மேலாக தொடர் வாசிப்பின் மூலம் கிடைக்கும் பயிற்சியின் மூலம்  வார்த்தைகளைக் கோவையாகப் பயன்படுத்தும் நுட்பம். இவை அனைத்தையும் பெறுவது என்பது ஓரிரு நாள்களில் நடக்கக் கூடியது அல்ல. மாறாக குழந்தைப் பருவத்திலிருந்து மொழியை நெகிழ்வான ஊடகமாகப் பயன்படுத்தக் கிடைத்திருக்கும் வாய்ப்பு. 

அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்பது என்பது ஒரு கலை. இந்தக் கலையை வேறு யாரையும் விட குழந்தைகளே அற்புதமாகப் பயன்படுத்துகின்றனர். நாம் பேசும்போதே அதைக் கேட்பதற்கு பதிலாக உடனுக்குடன் பதில் பேசும் குழந்தைகளும் இருப்பர். அவ்வாறு அவர்கள் பேசுவதை அங்கீகரித்து அவர்களின் கேட்கும் சக்தியை ஊக்குவிக்க வேண்டும். அந்த அளவுக்கு ஏற்ற இறக்கத்துடன் நமது பேச்சு அமையவேண்டும். 

குழந்தையாக இருக்கும்போது எவ்வளவு தூரம் பலரது பேச்சுகளை கேட்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதோ அந்த அளவுக்கு அந்த குழந்தைகளின் மொழிகுறித்த அறிவும் சொற்பெருக்கமும் அதிகரிக்கின்றன. அவ்வாறு கேட்பதை குழந்தைகள் தாமாகப் பயன்படுத்தவும் வாய்ப்புகளை அளிக்க வேண்டும். 

அவ்வாறு பயன்படுத்தும்போது  அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம்  எந்த அளவுக்கு உற்சாகமூட்டுவதாக அமைகிறதோ அந்த அளவுக்கு அந்த குழந்தைகளின் தன்னம்பிக்கை மிகும். 

ஒரு குழந்தை "அப்பா நாளைக்கு வந்தார்' என இயல்பாகப் பேசும். இதனைக் கேட்கும் பலரும் உடனடியாக என்ன செய்வர்? "அப்படிச் சொல்லக்கூடாது, அப்பா நாளைக்கு வருவார்ன்னு சொல்லணும்' என்பர். அக்குழந்தையின் அருகிலுள்ள பெரியவர்கள் அக்குழந்தை மொழித்திறனில் அப்போதே  தூய்மை பெறவேண்டும் என்பதன் வெளிப்பாடாகவே இதனைப் பார்க்க வேண்டும். 
ஆனால் இந்த நிலையில் வேறு இரண்டு வாய்ப்புகளும் இருக்கின்றன.

முதலாவது, அக்குழந்தை சொல்வதை அப்படியே ஆமோதிப்பது போல் தலையை ஆட்டி மகிழலாம். இரண்டாவது, மேலே பயன்படுத்திய வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தி "அப்பா நாளைக்கு வருவாரா' என்று சரியாகத் திருத்தி நாம் கேட்கலாம். அதாவது "அப்படிச் சொல்லக்கூடாது' என்ற எதிர்மறை வார்த்தைகளைத் தவிர்க்கலாம். 

 குழந்தைகள்  மட்டுமே சரி, தவறு என்ற பயமின்றி மொழியினை நெகிழ்வான ஊடகமாகப் பயன்படுத்துவர்.  அவ்வாறு பயன்படுத்தும்போது எவ்வளவுக்கெவ்வளவு அதனை நெகிழ்வாகப் பயன்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்கு அளிக்கப்படுகின்றதோ, அந்த அளவுக்கு அவர்களுக்கு மொழியின் மீதும், அதனைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் மீதும்  நம்பிக்கை அதிகரிக்கும். 

இவ்வாறு குழந்தைகள் நெகிழ்வாகப் பயன்படுத்த அவர்களுக்கு நல்ல வார்த்தைகள் அறிமுகமாக வேண்டும். அதாவது  குழந்தைகள் அருகிலுள்ள போது பெரியவர்கள் தரமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும். குழந்தைகள் இருக்கும் பகுதிகளில் இருக்கும் மொழிச்சூழல் சரியான வார்த்தைகளைக் கேட்கும் சூழலாக அமைய வேண்டும். இது அவ்வளவு எளிதல்ல என்பது உண்மைதான். ஆனாலும் அதனை நோக்கி நாம் சமூகத்தை நகர்த்த வேண்டும். 

இதனை மனதில் கொண்டே கல்வியாளர்கள் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லும் பழக்கத்தினைக் கைகொள்ளச் சொல்கின்றனர். இவ்வாறு கதைகளைச் சொல்லும்போது அவர்களுக்கு புதுப்புது வார்த்தைகள் அறிமுகமாகும். பின்னர் அந்த வார்த்தைகளில் சிலவற்றை நினைவில் கொண்டு அவ்வப்போது அவர்கள் பயன்படுத்துவர். அவ்வாறு பயன்படுத்தும்போதும் சில தவறுகளைச் செய்யவே செய்வர். அதனை அங்கீகரித்து மென்மையான முறையில் சரி செய்யும்போது அவர்களது தன்னம்பிக்கை மிகும். 

ஆனால் "மாலை முழுவதும் விளையாட்டு' என்று குழந்தைகள் ஆடிப்பாடிய காலம் இப்போது இல்லை. மாறாக மாலை முழுவதும் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தொடர்களை ஒளிபரப்புகின்றன. அந்த தொடர்களின் கதைகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். 

இப்படிப்பட்ட தொடர்களில் பெற்றோர் லயித்திருக்கும்போது குழந்தைகளும் அவற்றைக் காண வேண்டியதாகிறது. இல்லையேல் அந்த நேரத்தில் அவர்கள் மின்னணு ஊடகங்களில் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான போக்கு. 

இன்றைய குழந்தைகள் நாளைக்கு அவையில் முந்தியிருந்து நான்கு வார்த்தைகளைத் தொடர்ந்து  பேசவேண்டுமானால் அதற்கான அடித்தளம் இன்றைக்கே  இடப்பட வேண்டும். அதற்கு பள்ளிக்கு இணையாக, குடும்பமும் சமூகமும் பங்களிப்பு செய்ய முன்வர வேண்டும்.



Read in source website

நாம் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசத்தின் பாரம்பரியம், கலாசாரம், மொழி என்று பெருமையாகப் பேசும் நாம் தொழில்நுட்பத்தில் மேலை நாட்டவர்கள்தான் சிறந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டு இருக்கிறோம். இது எந்த அளவுக்கு சரியானது? நம் முன்னோரின் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த சாதனைகள் என்னென்ன? அறிவியல் சாதனைகள் அவர்களுக்கு எப்படி சாத்தியமாயின?

நுட்பமான அறிவியல் அறிவு நம் முன்னோருக்கு எந்த அளவில் இருந்தது என்பதை எடுத்துக் காட்ட தற்போது நம்மிடையே இருப்பவை பாரத தேசம் முழுவதும் இருக்கும் ஆலயங்கள். தமிழகத்தில் திரும்பும் திசையெல்லாம் கோயில்கள் வானுயர நிற்கின்றன. இவை தெய்வங்கள் மீது நாம் கொண்ட நம்பிக்கையின் சின்னங்கள் மட்டுமல்ல. தெய்வங்கள் நமக்கு வழங்கியிருக்கும் அறிவியல் அறிவின் சான்றுகள்.

பாரதம் முழுவதும் பல ஆலயங்களில் இசை எழுப்பும் தூண்கள் இருக்கின்றன. கல்லிலே இசை எப்படி சாத்தியமாயிற்று? ஒரு கல் வெவ்வேறு விதமாக ஒலி எழுப்புமா? வெவ்வேறு விதமாகக் கல்லில் ஒலி உண்டாவதற்குக் காரணம் என்ன? பாறைகளை உருக்கி அதன் அடர்த்தியை நாம் விரும்பும் அளவில் அமைத்துத் தூண்களை உருவாக்கி இருக்கிறார்கள். மேலை நாட்டவர்கள் இதனை தற்போது அதிசயத்தோடு பார்க்கிறார்கள். 

சோழர்கள் ஏரிகள் நீர் மேலாண்மையில் சிறந்து இருந்தனர் என்பதற்கான சான்றுகளாக 1000 ஆண்டுகள் கடந்து இன்றும் நமக்கு அவை பயனளித்துக் கொண்டு இருக்கின்றன. தடுப்பணைகள், ஆற்றின் போக்கை மாற்றி அமைத்தல் போன்றவற்றிலும் நம் மக்கள் சிறந்திருந்தனர். நீர்நிலைகளை அமைப்பது பற்றிய குறிப்பு ரிக் வேதத்திலேயே இடம் பெற்றிருக்கிறது. வேத காலம் முதல் நீர் மேலாண்மையில் பாரதம் சிறந்த நாடாக விளங்கி இருக்கிறது. 

உலோகவியல் என்பது இன்றைக்கு மிக நுட்பமான ஒரு துறையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், பாரத தேசத்தில் உலோகவியல் நம் தெருக்களில் வெகு எளிதாக இருந்த அறிவியல் வேலைப்பாடு. உலோகத்தை உருக்கி ஒரு பொருளாக வார்க்கும்போது அதிலே நேர்த்தியைக் கொண்டு வருவது சுலபம் அல்ல என்று மேலை நாட்டவர்கள் தற்போதும் சொல்கிறார்கள். 

ஆனால் நம்முடைய ஆலயங்களில் ஆயிரக்கணக்கான  ஆண்டுகள் தாண்டியும் ஐம்பொன் உலோகங்களால் செய்யப்பட்ட சிலைகள் அன்றாடப் பயன்பாட்டில் ஆலயங்களில் உற்சவ மூர்த்திகளாக இருந்தபோதும் எவ்விதக் குறைபாடும் இல்லாமல் இன்றைக்கும் பொலிவோடு இருக்கின்றன. இதுவே நம் முன்னோர் உலோகவியலில் உச்சம் தொட்டவர்கள் என்பதற்கு சான்று. ஆழ்ந்த படிப்பு நுண்ணறிவு செய்முறைத் திறன் இவையெல்லாம் உச்சநிலையில் இருந்திருந்தால் மட்டுமே இத்தகைய வேலைப்பாடு சாத்தியமாகி இருக்கும். 

மகாத்மா காந்தி 1931-ஆம் ஆண்டு வட்டமேஜை மாநாட்டுக்கு லண்டன் சென்றார். அங்கே உரை நிகழ்த்தியபோது, "பிரிட்டிஷ் நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்து இங்கு நிலவிய கல்வி முறையைப் புரிந்து கொண்டு அதை வளர்த்தெடுப்பதற்கு பதிலாக அதனை அப்புறப்படுத்தத் தொடங்கினார்கள். மண்ணைத் தோண்டி வேர்களை எடுத்து ஆராய்ந்தார்கள். அதோடு அந்த வேரை அப்படியே வாடிப் போகும் படியாக விட்டுவிட்டார்கள். இந்திய பாரம்பரியக் கல்வி என்ற அழகிய மரம் அழிந்து விட்டது' என்று நம்முடைய பாரம்பரிய கல்விமுறையைக் குறித்து தன்னுடைய உரையில் குறிப்பிட்டிருக்கிறார். 

காந்திஜியின் கருத்தை  நிறுவ முடியுமா என்று வெள்ளையர்கள் கேள்வி எழுப்பினர். பின்னாளில், மகாத்மாவின் கருத்துக்கு சான்றுகளை தரம்பால் முன்வைத்தார். காந்திய செயல்பாட்டாளரான தரம்பால்  சில ஆய்வுகளுக்காக லண்டனில் உள்ள இந்தியா இல்லத்தில் அருங்காட்சியக நூலகங்களில் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் இந்தியா தொடர்புகள் பற்றி ஆவணங்களை ஆராய்ந்தவர். மகாத்மா பண்டைய கல்வி முறை பற்றி சொன்ன கருத்துக்கு தேவையான ஆதாரங்கள் அங்கே இருப்பதை கண்டு அவற்றை 1983-இல் "அழகிய மரம்' (தி பியூட்டிஃபுல் ட்ரீ) என்ற பெயரில் நூலாக வெளியிட்டார்.

அந்த நூலில் தரம்பால் இந்திய கல்வி முறையின் பெருமைகளை ஆதாரங்களோடு விளக்குகிறார். தரம்பாலின் எழுத்துகள் ஐந்து பாகங்களாக இருக்கின்றன. முதல் பாகம் 18-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் பல்வேறு துறைகளில் இருந்த உயர்தரமான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. இத்தகைய தொழில்நுட்பத்தையும் விஞ்ஞானத்தையும் வெள்ளையர்கள் திட்டமிட்டு அழித்தார்கள் என்பதையும் விளக்குகிறது. 

இரண்டாவது பகுதியில் பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்தியர்கள் மேற்கொண்ட ஒத்துழையாமை போன்ற முயற்சிகளை, அவற்றினால் விளைந்த விளைவுகளை எடுத்துச் சொல்கிறது. மூன்றாம் பாகம், இந்திய வாழ்வியலில் கல்விமுறை அமைந்திருந்த  விதத்தை விளக்குகிறது. 

நான்காம் பாகம், கிராமங்களில் பஞ்சாயத்து அமைப்புகளின் நிலைமை எவ்வாறு இருந்தது என்பதை மிகத் தெளிவாகவும்  விரிவாகவும் எடுத்துச் சொல்கிறது. 

பொருளாதார அரசியல் சுதந்திரத்துடன் கிராம சமுதாயங்கள் வாழ்ந்ததை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இதைத் திட்டமிட்டு ஆங்கிலேயர்கள் அழிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளையும் பட்டியலிடுகிறது. அரசியல் சுதந்திரத்தையும் இழந்து பொருளாதார வளத்தையும் பறிகொடுத்து எப்படி கிராமங்கள் வளம் குன்றிப் போயின என்பதைச் சொல்வதோடு சுதந்திரத்திற்குப் பிறகும் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இருந்ததையும் விளக்குகிறது.

இந்திய கலாசாரத்தில் சமுதாயங்களின், பாரம்பரியத்தின் தனித்தன்மை அரசியல் அவற்றின் முக்கிய அம்சங்கள் என்று பல்வேறுபட்ட கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பற்றிப் பேசுகிறது. இன்றைய இலக்குகளுக்கு ஏற்ப எப்படியெல்லாம் சமூகத்தில் மாற்றங்களைச்  செய்து கொள்கிறோம்  என்பதைப் பற்றியும் ஐந்தாம் பாகம் எடுத்துச்சொல்கிறது. 

இன்றைக்கு நம்முடைய நாட்டின் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இது போன்ற எந்தத் தகவலையும், வரலாற்று ஆதாரங்களையும் கற்றுக்கொடுக்காமல் வெள்ளையர்கள் விட்டுச் சென்ற அதே பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். 

"வரலாற்றை அறிந்து கொள்ளாதவன் செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்வான்' என்கிறார் ஜார்ஜ் சண்டைனா. பல்லாண்டுகளாக இந்தத் தவறு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

1822-ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரெஸிடென்சி ஆளுநரான தாமஸ் மன்றோ இந்திய கல்வி பற்றிய கணக்கெடுப்பை நடத்தினார். அன்றைய மெட்ராஸ் பிரெஸிடென்சி என்பது ஒடிஸôவின் ஒரு பகுதி, ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளத்தின் சில பகுதிகள். 

இந்த ஆய்வறிக்கையை பரிசோதனை செய்த ஆங்கிலேய அரசு அதிர்ச்சிக்கு உள்ளானது என்று தரம்பால் குறிப்பிடுகிறார். நாடு முழுவதும் அடிப்படைக் கல்வியோடு உயர்கல்விக்கான கல்லூரிகள் இருந்தன. அடிப்படை கல்வி, கிராமந்தோறும் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. அடிப்படைக் கல்வி 10 ஆண்டுகள் வரை இருந்ததாக அறிக்கை சொல்கிறது. இந்தக் கல்வி முறைக்கான நிதி தேவைகளை அந்தந்த கிராமங்கள் அல்லது கல்வி நிலையங்களை நடத்திய சமூகங்கள் அல்லது கல்வி கற்ற மாணவர்களே ஏற்றுக் கொண்டிருந்தார்கள். 

கல்வி முறை, "ஆச்சார்ய தேவோ பவ' என்று குருவை முதன்மைப்படுத்தி இருக்கிறது. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று தமிழ் சொல்வதற்கு ஏற்ப அமைந்திருக்கிறது. ஆய்வறிக்கையில் கவனத்துக்குரிய ஒரு தகவல், மாணவர்களின் ஜாதி பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று இருந்திருக்கிறது. அனைத்து இடங்களிலும் சூத்திர ஜாதி மாணவர்களின் எண்ணிக்கை மற்ற ஜாதி மாணவர்களைக் காட்டிலும், குறிப்பாக பிராமண மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம். 

கல்வி என்பது இலக்கியம் கற்பது மட்டும் அல்ல. கணிதம், அறிவியல், அறிவியல் புலத்திலும் பல்வேறு துறைகள் என்று மிக விரிவாக இந்தியக் கல்வி முறை இருந்ததை ஆங்கிலேயர் காலத்து ஆய்வறிக்கை காட்டுகிறது. மகாத்மா குறிப்பிட்ட அழகிய மரம் நம்மிடம் இருந்தது. அதன் வேர்களை அழித்து இந்திய கல்விமுறையை சிதைத்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்ற உண்மையை உரக்கப் பேசுகிறது இந்த "அழகிய மரம்' நூல். 

இந்திய பாரம்பரிய கல்வி முறையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் நமக்கு உணர்த்துகிறது. இத்தகைய பாரம்பரிய கல்விமுறையை மீட்டெடுப்பதற்கான முயற்சியாகவே தற்போது தேசிய கல்விக் கொள்கையை நிபுணர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். 

கல்விமுறை காலத்திற்கு ஏற்ப உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் நம்முடைய பாரம்பரியமான முறைகளை மீட்டெடுத்து மீண்டும் இந்தியா மிகச்சிறந்த தேசமாக உருவாவதற்கான வழிமுறைகளையும் தேட வேண்டும். 

தேசிய கல்விக் கொள்கை, நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும். காந்தியடிகள் வலியுறுத்திய அறிவியல் தொடங்கி ஆத்ம விசாரம் வரை தனிமனித ஒழுக்கத்தை  போதிக்கும் கல்வி முறையை மீட்டுருவாக்கம் செய்யவேண்டிய நிலையில் நாடு இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் மாணவர்களிடையே நிலவும் குழப்பங்கள், பிரச்னைகள், உளவியல் சிக்கல்கள் போன்றவற்றிற்குத் தீர்வாக பாரம்பரிய கல்வி முறை வழக்கத்திற்கு வந்தாக வேண்டும். அடுத்த தலைமுறையின் நலனைக் கருதி இது குறித்தான சிந்தனைகளை முன்னெடுக்க வேண்டியது கல்வியாளர்களின் கடமை.

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.



Read in source website

குஜராத்தின் சூரத் நகரில், அரசின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்துக்கு இந்தியா முன்னேறியிருப்பது சாதாரணமான சாதனை அல்ல என்று பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டுள்ளார்.

அமுதப் பெருவிழாவைக் கொண்டாடிவரும் தருணத்தில், இச்சாதனை மேலும் தீவிரமாக உழைக்கவும் இன்னும் பெரிய இலக்குகளை அடைவதற்குமான நம்பிக்கையை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.