DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 12-03-2022

தமிழகத்தில் ஏறத்தாழ இரு ஆண்டுகளுக்குப் பிறகு கரோனா தொற்றால் ஒருவா் கூட உயிரிழக்காத நிலை எட்டப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி கரோனாவால் வெள்ளிக்கிழமை ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை.

நோய்த் தொற்று பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டதும், ஒமைக்ரான் தீநுண்மியின் வீரியம் குறைவாக இருப்பதுமே அதற்கு காரணம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதேவேளையில், உயிரிழப்பு இல்லை என்பதற்காக அலட்சியப் போக்குடன் செயல்படக் கூடாது என்றும் அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

தமிழகத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் தடம் பதித்த கரோனா தொற்றுக்கு இதுவரை 34.51 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேபோன்று 38,023 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதியன்று கரோனாவால் ஒருவா் கூட உயிரிழக்கவில்லை. அதன் பின்னா் ஏறத்தாழ இரு ஆண்டுகளாக நாள்தோறும் நோய்த் தொற்றால் குறைந்தது ஒருவராவது இறக்கும் நிலை இருந்தது.

இந்த சூழலில், பல மாத இடைவெளிக்குப் பிறகு தற்போது கரோனா உயிரிழப்பு இல்லாத நாள் பதிவாகியுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி, வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 1,461 போ் சிகிச்சையில் உள்ளனா். அதேபான்று, தமிழகத்தில் புதிதாக கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கையும் 112-ஆக குறைந்துள்ளது

அதில் அதிகபட்சமாக சென்னையில் 42 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 13 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மற்றொருபுறம் மேலும் 327 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,12,226 -ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழப்பு விவரம்

2020

மாா்ச் - 1

ஏப்ரல் - 26

மே - 146

ஜூன் - 1,028

ஜூலை - 2,734

ஆகஸ்ட் - 3,387

செப்டம்பா் - 2,198

அக்டோபா் - 1,602

நவம்பா் - 590

டிசம்பா் - 410

2021

ஜனவரி - 234

பிப்ரவரி - 140

மாா்ச் - 223

ஏப்ரல் - 1,327

மே - 10,186

ஜூன் - 8,387

ஜூலை - 1,457

ஆகஸ்ட் - 845

செப்டம்பா் - 657

அக்டோபா் - 538

நவம்பா் - 365

டிசம்பா் - 295

2022

ஜனவரி - 788

பிப்ரவரி - 440

மாா்ச் (இதுவரை) - 19

மொத்தம் - 38,023



Read in source website

மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுவோா் வீட்டுக்கு வரும்வரை காத்திராமல், இணையவழியில் தாமாக விவரங்களைப் பதிவு செய்யும் புதிய வசதி மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பானது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக இருந்த நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாகக் கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான புதிய அட்டவணையை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை.

எனினும் அதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான விதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்படுவதுடன் மக்கள் தாமாக இணையவழியில் விவரங்களைப் பதிவு செய்வதற்கான வசதியும் வழங்கப்படவுள்ளது.

அதே வேளையில், வீடுதோறும் சென்று விவரங்களை சேகரிக்கும் நடைமுறையும் தொடா்ந்து அமலில் இருக்கும் என்று அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை முற்றிலும் இணையவழியில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கேற்ற வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணா்வை தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களுக்கு ஏற்படுத்தும் வகையிலும் விதிகள் திருத்தப்பட்டுள்ளன.

 



Read in source website

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பாதியில் மாநிலங்களவை கூடுதலாக 19 மணி நேரம் செயல்படவுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது பாதி ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. 2-ஆவது பாதி கூட்டத்தொடா் மாா்ச் 14-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல்பாதியில் மாநிலங்களவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இடைவேளையின்றி செயல்பட்டது.

இரண்டாவது பாதியில் முற்பகல் 11 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலங்களவை செயல்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் 1 மணி நேரம் உணவு இடைவேளை வழங்கப்படவுள்ளது. மொத்தம் 19 அமா்வுகள் நடைபெறவுள்ளதால், முதல் பாதியை விட இரண்டாவது பாதியில் மாநிலங்களவை கூடுதலாக 19 மணி நேரம் செயல்படவுள்ளது.

அமைச்சா் அல்லாத தனிநபா்கள் சமா்ப்பிக்கும் விவகாரங்களுக்கு 4 நாள்கள் ஒதுக்கப்படவுள்ளன. ஒவ்வொரு அமா்வின்போதும் கேள்வி நேரம், உடனடி கேள்வி நேரம் ஆகியவற்றுக்கு தலா 1 மணி நேரம் வழங்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பாதியில் மாநிலங்களவையின் செயல்திறன் 101.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 



Read in source website

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் சுமாா் 8 லட்சம் போ் நோட்டாவுக்கு (எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) வாக்களித்துள்ளனா்.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இதில் பஞ்சாபை தவிர இதர மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்தத் தோ்தலில் 5 மாநிலங்களில் மொத்தம் 7,99,302 போ் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா்.

உத்தர பிரதேசத்தில் 6,21,186 பேரும் (0.7%), பஞ்சாபில் 1,10,308 பேரும் (0.9%), உத்தரகண்டில் 46,830 பேரும் (0.9%), கோவாவில் 10,629 பேரும் (1.1%), மணிப்பூரில் 10,349 பேரும் (0.6%) நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா்.



Read in source website

சிறை நிா்வாக சீா்திருத்தங்கள் தொடா்பாக 6 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

நாடு முழுவதும் உள்ள 1,341 சிறைகளில் அதிகபட்சமாக 3.83 லட்சம் பேரை அடைத்து வைக்கலாம். ஆனால், கடந்த 2018-ஆம் ஆண்டு நிலவரப்படி, 4.68 லட்சம் போ் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனா். சிறைகளில் விலங்குகளைப் போல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

சிறை நிா்வாகத்தில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அமிதவா ராய் தலைமையிலான குழுவை அந்த நீதிமன்றம் நியமித்தது. சிறை நிா்வாக சீா்திருத்தம் தொடா்பான பரிந்துகளை ஓராண்டுக்குள் சமா்ப்பிக்குமாறு அந்தக் குழுவை உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் கேட்டுக் கொண்டது. ஆனால், ஓராண்டாகியும் அந்தக் குழு தனது பரிந்துரை அறிக்கையை சமா்ப்பிக்காததால், மத்திய அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆா்.கவாய் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சாா்பில் அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, 3 மாதங்களில் அறிக்கை சமா்ப்பிக்குமாறு சிறை நிா்வாக சீா்திருத்தக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

அதைத் தொடா்ந்து, சட்ட ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள வழக்குரைஞா் கௌரவ் அகா்வாலிடம் நீதிபதிகள் கருத்துக் கேட்டனா். அதற்கு அவா், ‘சிறை நிா்வாகக் குழு தனது அறிக்கையைத் தயாா் செய்து வருகிறது. முழுமையான இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்கு 6 மாதங்கள் அவகாசம் அளிப்பது சரியாக இருக்கும்’ என்றாா்.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 6 மாதங்களில் இறுதி பரிந்துரை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு அந்தக் குழுவைக் கேட்டுக் கொண்டனா்.



Read in source website

 

கரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் சீனாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளில் 45 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் 60 லட்சம் பேர் தொற்றின் தீவிரத்தால் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக  சீனாவின் 90 லட்சம் மக்கள் வசிக்கும்   வடகிழக்கு தொழில்துறை மையமான சாங்சுனில் அந்நாட்டு அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, அந்நகரில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறவும் போக்குவரத்து மற்றும் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



Read in source website

கோவை : உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர் சாய் நிகேஷ், நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் அருகேயுள்ள சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்- ஜான்சி லட்சுமி தம்பதியர். இவர்களுக்கு சாய் நிகேஷ் (21), சாய் ரோகித் ஆகிய மகன்கள் உள்ளனர். இதில் சாய் நிகேஷ், கடந்த 2018-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரில் உள்ள நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில், ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார். இறுதியாண்டில் படித்து வந்தார்.

இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் அண்டை நாடுகள் வழியாக தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

இதற்கிடையே, உக்ரைன் நாட்டில் வசிக்கும் மக்கள் விருப்பம் இருந்தால், உக்ரைன் ராணுவத்தில் இணைந்து பணியாற்றலாம் என அந்தநாட்டு அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து சாய்நிகேஷ் உக்ரைன் ராணுவத்தின், ‘ஜார்ஜியன் நேஷனல் லிஜியன்’ என்ற துணை ராணுவப் படையில் கடந்த மாதம் இணைந்தார்.

பெற்றோர் அதிர்ச்சி: இந்த தகவலை அவர் கோவையில் வசிக்கும் பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், இந்திய ராணுவத்தில் சேர விரும்பிய சாய் நிகேஷ், போதிய உயரம் இல்லாததால் நிராரிக்கப்பட்டார். இதனால், உயர் கல்விக்காக உக்ரைன் சென்றிருந்த சமயத்தில், அங்கு போர் ஏற்பட்டு அந்நாட்டு ராணுவத்தில் இணைய வாய்ப்பு வந்ததால், பின் விளைவுகளை அறியாமல் அவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்தார் என அந்த சமயத்தில் கோவையில் உள்ள அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த சாய் நிகேஷை, அந்த பணியினை விட்டு விட்டு மீண்டும் கோவைக்கு திரும்பி வரும்படி அவரது பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். முதலில் அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

நாடு திரும்ப விருப்பம்: பின்னர், பெற்றோர் தங்களது உடல்நிலைக் காரணங்களை கூறி, கண்டிப்பாக திரும்பி வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியதால், சாய் நிகேஷ் உக்ரைன் ராணுவத்தில் இருந்து விலகி மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக கோவையில் உள்ள அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், சாய் நிகேஷ் குறித்த இத்தகவல் உளவுத் துறை அதிகாரிகள் மூலம் மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சாய் நிகேஷின் தந்தை ரவிச்சந்திரனிடம் கேட்டபோது,‘‘ மகனை மீட்டுத் தர அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். மகன் நல்லபடியாக வர வேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுங்கள். மற்ற விஷயங்கள் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை’’ என்றனர்.



Read in source website

மதுரை: சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் 20 இடங்களில் திமுகவினர் மேயர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கும்பகோணத்தில் மட்டும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மேயராக உள்ளார். இவர்களில் 11 பெண்கள் மேயர்களாக உள்ளனர்.

மேயர்களுக்கு கடந்த காலங்களில் மாநகராட்சி சார்பில் ஒருநேர்முக உதவியாளர், உதவியாளர், ஓட்டுநர், டபேதார் ஆகியோர் நியமிக்கப்படுவது வழக்கம். தற்போதும் புதிதாக தேர்வான அனைத்து மேயர்களுக்கும் பணியாளர்கள் மாநகராட்சி சார்பில் நியமிக்கப்பட்டுவிட்டனர்.

நேர்முக உதவியாளர் மேயர்களுக்கு வரும் கோப்புகளை படித்து சிறு குறிப்பாகத் தொகுத்துமேயருக்கு வழங்குவார். மேலும்அதில்ஏ ற்படும் சந்தேகங்களை விளக்குவார். இந்நிலையில் தமிழகஅரசு சார்பிலும் மற்றொரு நேர்முக உதவியாளரை நியமிக்கும் திட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மேயருக்கு மாநகராட்சி சார்பில் நேர்முக உதவியாளர் நியமித்துவிட்டோம். தமிழக அரசே நேரடியாக நேர்முக உதவியாளர்களை நியமிப்பது பற்றி இதுவரை எங்களுக்கு தகவல் இல்லை என்றனர்.

ஆனால், மேயர் தரப்பிலோ அரசு சார்பிலும் நேர்முக உதவியாளர் நியமிக்கப்படுவது பற்றிஆலோசனை நடப்பது உண்மைதான் என்றனர்.



Read in source website

சென்னை: அரசு மருத்துவமனையில் இனி ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல், நிரந்தர அடிப்படையில்தான் பணி நியமனம் இருக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.14.5 கோடியில் தொடங்கப்பட்ட ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம்,ரூ.2.44 கோடியில் ‘வாழ்வூட்டும்மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிதுறை’யாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த துறையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். புதுப்பிக்கப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அரங்கத்தையும் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

பழைய சோறு பற்றி ஆய்வு

ஸ்டான்லி மருத்துவமனையில் அதிநவீன வசதிகளுடன் வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி துறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த துறை சார்பாக ஏற்கெனவே 7 ஆராய்ச்சி கட்டுரைகள் உலகப்புகழ்பெற்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் பழைய சோறின் மகத்துவம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியில், பழைய சோறு சாப்பிடுவதின் மூலம் குடல் அழற்சி போன்ற பல்வேறு நோய்கள் குணமடைந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அரங்கத்தில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சைஅளிக்கப்படும்.

மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பணிகள், தற்காலிக அடிப்படையில்தான் நிரப்பி இருக்கிறார்கள். இனி நியமிக்கப்படும் பணிகள் எல்லாம், ஒப்பந்த முறையில் இல்லாமல், நிரந்தர அடிப்படையில்தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி, எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.



Read in source website

அழியும் நிலையிலுள்ள பறவை இனம் என, பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அரியவகை வெண்கழுத்து நாரை (Woolly necked stork) பறவைகள் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி ஐஎஸ்ஆர்ஓ வளாகத்தில் காணப்படுகிறது.

இதுகுறித்து திருநெல்வேலி உதவி வனபாதுகாவலர் ஹேமலதா கூறியதாவது:

பணகுடி அருகே மகேந்திரகிரி யிலுள்ள ஐஎஸ்ஆர்ஓ மையத்தின் உள்ளே காட்டுப்பகுதியில் அரிய வகை பறவை இனமான வெண்கழுத்து நாரையை பார்த்து ஆச்சரியமடைந்தேன். வெகுதூரத்திலிருந்து அவற்றை புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இந்த வெண்கழுத்து நாரை பறவையினம், பன்னாட்டு அளவில் அழிந்து வரும் விளிம்பு நிலையில் இருப்பதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் அறிவித்திருக்கிறது.

வெளி நாடுகளிலும், இந்தியாவில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களிலும் காடுகளில் மிகக்குறைந்த அளவில் இவை காணப்படுகின்றன. தமிழகத்தில் அரியலூர் மாவட்ட பகுதிகளில் தென்பட்டிருக்கிறது. சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த பறவைகள் தென்பட்டன. தற்போது இஸ்ரோ வளாகத்தினுள் உள்ள காட்டுப்பகுதியில் காண முடிந்தது.

இவை அடர்ந்த காடுகளில் மிகவும் உட்பகுதிகளில் காணப்படும். மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து வெகு தொலைவில் தள்ளியே இவைகள் வசிக்கும். பெரும்பாலும் புல்வெளி பகுதிகள் மற்றும் ஈரநிலம் நெல்வயல் பகுதிகளில் இவைகள் இரைகளை தேடும். கடற்கரை மற்றும் உவர் நிலங்களில் அதிகம் தென்படுவதில்லை. ஆனால் இஸ்ரோ பகுதியில் காய்ந்த முள்காடு பகுதிகளில் தென்படுவது ஆச்சரியமாக இருக்கிறது . இப்பகுதியில் இவை கூடு கட்டி வாழக்கூடும் என்று தெரிவித்தார்.



Read in source website

விமானிகள் பயிற்சி பெறுவதற்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஹன்சா-என்.ஜி நவீன பயிற்சி விமானத்தின் கடல் மட்ட சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் (சிஎஸ்ஐஆர்) ஆய்வுக்கூடங்களில் ஒன்று பெங்களூருவிலுள்ள தேசிய விமானவியல் ஆய்வகம் (என்ஏஎல்). இந்த ஆய்வகம், விமானி பயிற்சிக்காக ஹன்சா என்ற இரு நபர் விமானத்தை 1993-ல் உருவாக்கியது.

மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டபுதிய தலைமுறை ஹன்சா - என்.ஜி (New Generation) என்ற அடையாளத்தோடு செப்.2021-ல் முதன்முதலாக பறக்க விடப்பட்டது. ஆராய்ச்சி நிலையிலிருந்து உற்பத்தி நிலைக்குச் செல்ல பல விதமான விமான சோதனைகள் செய்யப்படும். சமீபத்தில் நடந்த கடல் மட்ட சோதனைகளில் ஹன்சா-என்.ஜி வெற்றி பெற்றுள் ளது. இதுகுறித்து அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஹன்சா-என்.ஜி விமானத்தின் கடல்மட்ட சோதனைகள் புதுச்சேரியில் நடைபெற்றன. மணிக்கு 155 கி.மீ வேகத்தில் பறந்த விமானம் பெங்களூருவிலிருந்து புதுச்சேரி வரை உள்ள 140 கடல் மைல் தூரத்தை ஒன்றரை மணி நேரத்தில் அடைந்தது.

இதுவரை 37 முறை சோதனை

பிப்.19 முதல் மார்ச் 5 வரை கடல் மட்ட சோதனைகளில் இந்த விமானம் 18 மணி நேரம்ஈடுபடுத்தப்பட்டது. விமானத்தின் பல்வேறுசெயல்பாடுகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன. இந்த சோதனைகளுடன் இதுவரை விமானம் 37 முறை பறக்க விடப்பட்டு 50 மணி நேரம் சோதிக்கப்பட்டது. இன்னும் சில சோதனைகளுக்கு பிறகு சிவில் விமான போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் அனுமதி பெறப்படும். விமானம் உற்பத்தி நிலைக்குச் செல்ல கடல்மட்ட சோதனையின் வெற்றி ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.

ஹன்சா-என்.ஜி விமானத்தில் பல புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு தயாரிப்பாகவும் எரிபொருள் சிக்கனமும் உள்ளதால் விமான பயிற்சி பள்ளிகளுக்கு ஏற்ற விமானமாக இது இருக்கும். இந்த விமானத்தை வாங்குவதற்கு இதுவரை 80 விமான பயிற்சி பள்ளிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

விஞ்ஞானி வி.டில்லிபாபு கருத்து

இதுகுறித்து விஞ்ஞானி வி.டில்லிபாபு கூறும்போது, ‘‘இந்த விமானம் உற்பத்தி நிலைக்கு வரும்போது புதிய வாய்ப்புகளை தொழில்துறையிலும், பொறியியல், தொழில்நுட்பக் கல்வி மாணவர்களுக்கும் உருவாக்கும். பிற துறைகளைவிட அதிக வடிவமைப்பு மற்றும் உருவாக்க சவால்கள் நிறைந்த விமானத் துறையில், ஹன்சாவின் இறுதிக்கட்ட வெற்றி மிக முக்கியமானது. பிற விமானவியல் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வரும் ஆராய்ச்சி யாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இது நிச்சயம் உற்சாகம் அளிக்கும். விமானத் துறையில் புதிய ஆராய்ச்சிகளை உள்நாட்டில் துளிர்க்கச் செய்யும்’’ என்றார்.



Read in source website

ஹாமில்டன்: நியூசிலாந்து நாட்டில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய வீராங்கனைகள் மிதாலி ராஜ் மற்றும் ஜூலன் கோஸ்வாமி இருவரும் புதிய உலக சாதனைகளை படைத்துள்ளனர்.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 155 ரன்கள் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் தற்போது புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இதேப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்தப் போட்டிக்கு தலைமை தாங்கியதன் மூலமாக உலகக் கோப்பை தொடர்களில் அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் மிதாலி. முன்னதாக, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பெலின்டா கிளார்க் 23 உலகக் கோப்பை போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டதே சாதனையாக இருந்தது.

மிதாலி இன்றைய ஆட்டத்தின் மூலம் 24 உலகக் கோப்பை போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு பெலின்டா கிளார்க் சாதனையை முறியடித்துள்ளார். ஏற்கெனவே, ஆறு உலகக் கோப்பை தொடர்களில் விளையாடிய முதல் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற சிறப்பையும் மிதாலி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 63.63 என்ற வெற்றி சதவீதத்துடன், இதுவரை பெண்கள் உலகக் கோப்பையில் 24 போட்டிகளில் விளையாடி அதில் 15 வெற்றிகளை கேப்டனாக பெற்றுக்கொடுத்துள்ளார். அதேநேரம் பெலின்டா கிளார்க் உலகக் கோப்பையில் 23 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி அதில், 21-ல் வெற்றியை ஈட்டிக்கொடுத்துள்ளார்.

மகளிர் உலகக்கோப்பை தொடர்களில் அதிக போட்டிகளில் விளையாடிய டாப்-5 கேப்டன்கள்

மிதாலி ராஜ் (இந்தியா): 24*
பெலிண்டா கிளார்க் (ஆஸ்திரேலியா) - 23
சூசன் கோட்மேன் (இங்கிலாந்து) - 19
டிரிஷ் மெக்கெல்வி (நியூசிலாந்து) - 15
மேரி-பாட் மூர் (அயர்லாந்து) - 15

இவர்களில் மிதாலி மட்டுமே இன்னும் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். மற்றவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலன் கோஸ்வாமி சாதனை: மிதாலியை போல இந்திய அணியின் மற்றொரு சீனியர் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இன்று நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் அனிஷா முகம்மது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை என்ற சாதனையை கோஸ்வாமி படைத்தார். 39 வயதாகும் அவர், இதுவரை ஐந்து உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார்.

ஐந்து உலகக் கோப்பை தொடர்களிலும் சேர்த்து மொத்தம் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை லின் புல்ஸ்டன் 39 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்தது. அவர் 34 ஆண்டுகள் முன்பே அந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். அதற்கடுத்து யாரும் அதை நெருங்க முடியாமல் இருந்த நிலையில் 34 ஆண்டுகள் கழித்து அதனை ஜூலன் கோஸ்வாமி முறியடித்துள்ளார்.

மிதாலி மற்றும் ஜூலன் கோஸ்வாமி இருவரும் ஒரே போட்டியில் நிகழ்த்திய அடுத்தடுத்து சாதனைகள் நிகழ்த்தியதால், இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



Read in source website

மாஸ்கோ: ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடை தொடர்ந்தால், அது சர்வதேச விண்வெளி நிலையம் ஆபத்துக்குள்ளாக வழிவகுக்கும் என ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய விண்வெளி நிறுவனத்தின் இயக்குநர் டிமிட்ரி ரோகோசின், "உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு முந்தைய பொருளாதாரத் தடைகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் செயல்பட்டு வரும் ரஷ்ய விண்வெளி சார்ந்த செயல்பாடுகளை பாதிக்கலாம். இதனால் விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து நேரிடலாம்.

விண்வெளி குப்பைகளைத் தவிர்ப்பது உள்பட சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பதையை சரி செய்து நிலைநிறுத்தி, அதனை உறுதிப்படுத்தும் பணிகளை, அங்கு செயல்பட்டு வரும் ரஷ்ய பிரிவு செய்து வருகிறது. தற்போது ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளால் அந்தப் பணிகள் பாதிக்கப்படலாம். இதனால், 500 டன் விண்வெளி நிலைய கட்டமைப்புகள் கடலிலோ அல்லது நிலத்திலோ விழ வாய்ப்பிருக்கிறது.

எங்கள் மீதான சட்டவிரோதனமான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என நாசா, கனடா விண்வெளி நிறுவனம், ஐரோப்பிய விண்வெளி கழகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

மேலும், சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) கீழே இறங்கக் கூடிய இடங்களின் வரைபடங்களை வெளியிட்டுள்ள அவர், ”அவை ரஷ்யாவில் இருக்க வாய்ப்பில்லை. மற்ற நாடுகளின் மக்கள் மற்றும் போரைக் கண்காணித்து வருபவர்கள் இந்தப் பொருளாதாரத் தடைகளின் விலைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும்" என்றார்.

பனிப்போருக்கு பின்னர் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து சர்வதேச விண்வெளி நிறுவனத்தில் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.

முன்னதாக, கடந்த மார்ச் 1-ம் தேதி, ரஷ்யாவின் உதவியின்றி சர்வதேச விண்வெளி நிறுவனத்தை நிலைநிறுத்துவது குறித்து தீர்வு காணப்படும் என நாசா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

மும்பை: புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க பேடிஎம் நிறுவனத்துக்கு ஆர்பிஐ தடை விதித்துள்ளது. ஆன்லைன் நிதி பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம்,புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தடை விதித்துள்ளது. 1949-ம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறை சட்டம் விதி 35-ஏ பிரிவின்கீழ் இந்தநடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் நிர்வாகம் தொடர்பான ஐயப்பாடு காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக ஆர்பிஐ கூறியுள்ளது.

நிறுவனத்தின் ஐடி செயல்பாடுகளை தணிக்கை செய்ய தகவல் தொழில்நுட்ப (ஐடி) தணிக்கைக் குழுவை அமைக்குமாறு பேடிஎம் நிறுவனத்தை ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது. ஐடி தணிக்கை நிறுவனம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் புதிய வாடிக்கையாளர்களை அனுமதிப்பதற்கு சிறப்பு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என ஆர்பிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் சிறிய நிதி வங்கி தொடங்குவது தொடர்பாக ரிசர்வ் வங்கியை இரு தினங்களுக்கு முன் பேடிஎம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் நிறுவன செயல்பாடு குறித்த புகார் எழுந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை ஆர்பிஐ எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.



Read in source website