DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 12-01-2022

சென்னை: தமிழகத்தில் 3 அமைச்சர்கள் வசம் இருந்த சில துறைகளை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், இயற்கை வளத்துறை என்ற புதிய துறையை உருவாக்கியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தொழில்துறை அமைச்சரிடமிருந்த சர்க்கரை ஆலைகள் துறையானது உழவர் நலத்துறை அமைச்சகத்துக்கும், போக்குவரத்துத் துறை அமைச்சரிடமிருந்த விமானப் போக்குவரத்து துறையானது தொழில்துறை அமைச்சகத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சிறுபான்மை நலத்துறையிடம் இருந்த அயலக பணியாளர் கழகமானது தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில், தமிழகத்தில் இயற்கை வளத்துறை என்ற புதிய துறையை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தொழில் துறையில் இருந்து சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் துறை பிரிக்கப்பட்டு, இயற்கை வளத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறையை நீர் வளத்துறை அமைச்சரான துரை முருகன் கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் வருவாயைப் பெருக்கும் வகையில் இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளது. புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநகரகம், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகிய 3 துறைகள் இந்த புதிய இயற்கை வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகிறது. இந்தத் துறைக்கு தேவையான விதிகள் மற்றும் அறிவுறுத்தல்கள் மனித வளத்துறை உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுச்சேரி: புதுச்சேரியில் நடப்பதாக இருந்த தேசிய இளையோர் விழாவை, கரோனா பரவலால் காணொலியில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அத்துடன் ரூ.23 கோடியில் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு மற்றும் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி 25-வது தேசிய இளையோர் விழா, அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா புதுவையில் கொண்டாடப்படுகிறது. இன்று தொடங்கி வரும்16-ம் தேதி வரை நடத்தவிருந்த இந்த தேசிய இளையோர் விழாவில் நாடு முழுவதும் இருந்து 7,500 மாணவர்கள் பங்கேற்பதாக இருந்தது.

விழாவை தொடங்கி வைக்க பிரதமர் மோடி புதுவைக்கு வருகை தர இருந்தார். மீண்டும் கரோனா பரவல் அதிகரித்ததால் பிரதமர் வருகை ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் தேசிய இளையோர் விழாவை காணொலியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் காணொலி வாயிலாக விழாவில் பங்கேற்கின்றனர்.

பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு தேசிய இளையோர் விழாவை காணொலி வாயிலாக டெல்லியில் இருந்தபடி தொடங்கி வைக்கிறார். இந்த விழாவை இணையத்தில் காணலாம்.புதுச்சேரியில் நிகழ்வு நடைபெறும் தனியார் ஹோட்டலிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அங்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய் சரவணன்குமார், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர்.

மேலும், இவ்விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம் சார்பில் புதுவையில் ரூ.122 கோடி முதலீட்டில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுஉள்ள தொழில்நுட்ப மையத்தையும், கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.23 கோடியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இதுதொடர்பாக ஆளுநர் தமிழிசை கூறியதாவது: தேசிய இளையோர் விழாவை பிரதமர் நேரில் வந்து தொடங்கி வைப்பதாக இருந்தது. இப்போது காணொலி காட்சி மூலம் விழாவை தொடங்கி வைக்கிறார். இணைய நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும். இதற்காக பிரதமர், மத்திய விளையாட்டு அமைச்சர் மற்றும் எனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள விழா இணைய இணைப்பில் பதிவு செய்து கொள்ளுங்கள் என்றார்.



Read in source website

சிறைச்சாலைகளில் திருநர்களுக்கு தனி அறையை உறுதி செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சிறைச்சாலைகளில் திருநர்களுக்கென உறுதிப்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்த கடிதத்தை அனைத்து மாநில தலைமை செயலர்கள், யூனியன் பிரதேச ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறை தலைவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை எழுதியுள்ளது.

அதில் சிறைச்சாலைகளில் திருநர்களுக்கென அமைக்கப்படும் அறைகள் மூலம் அவர்கள் முழுவதுமாக தனிமைப்படுத்தப்படக் கூடாது எனவும், அவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதற்காகவே தனி அறைகள் மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தித் தருவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.

தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் திருநர்களின் கண்ணியத்தைக் காப்பது ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கென தங்கும் அறை, கழிப்பறை மற்றும் குளியலறை ஆகியவற்றை உறுதிப்படுத்த மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம் சிறைச்சாலைகளில் அவர்கள் சேர்க்கை. மருத்துவப் பரிசோதனை, வசிப்பிடம், உடை உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

திருநர்களின் பாலினத்தின் அடிப்படையில் அவர்கள் ஒடுக்கப்படக்கூடாது எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Read in source website


பெர்லின்: ஜெர்மனியில் தொழிலாளர் பற்றாக்குறையால் ஏற்படும் உள்நாட்டுத் தயாரிப்பில் தொய்வு, வெற்றிகரமான ஆற்றல் மாற்றத்துக்கு ஆபத்து போன்றவற்றைத் தவிர்க்க அதிக குடியேற்றம் தேவைப்படுவதாக அந்நாட்டு பொருளாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் நாடு தற்போது தொழிலாளர்கள் பற்றாக்குறையால் அவதிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் தற்போது சுமார் 3 லட்சம் வேலை வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறோம், இது மேலும் பல லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அமைச்சர் ராபெர்ட் ஹாபெக். செய்தியாளர் சந்திப்பின் போது, க்ரீன்ஸ் கட்சியின் தலைவருமான ராபெர்ட் ஹாபெக் கூறுகையில், தொழிலாளர் தேவையை ஈடுசெய்யாவிட்டால் உண்மையிலேயே நாம் உற்பத்தி பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

மேலும், இயற்கையாகவே, தகுதி, பயிற்சி மற்றும் குடும்பங்கள் மற்றும் வேலை போன்றவை ஒன்றோடு ஒன்று மிகச் சிறப்பாக இணைந்திருக்கும், ஆனால் ஜெர்மனியில், குடியேற்றம் அதிகரித்து, அனைத்துப் பகுதிகளிலும், பொறியாளர்கள், கைத்தொழில் செய்வோர் உள்ளிட்டோர் அதிகரிப்பார்கள். அனைத்தையும் நாம் ஒருங்கிணைக்க வேண்டும் என்றார்.

ஜெர்மன் பொருளாதார நிறுவனம் கணித்திருப்பது என்னவென்றால், ஜெர்மனியில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குறைவாக இருக்கிறார்கள். அதாவது, வயதான தொழிலாளர்கள் அதிகளவில் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நிலையில், இளம் தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வருவது குறைவாக இருக்கிறது. இந்த இடைவெளி 2029ஆம் ஆண்டுக்குள் சுமார் 6,50,000 ஆக அதிகரித்து, மிகப்பெரிய தொழிலாளர் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும். இது 2030ஆம் ஆண்டில், தோராயமாக பணியாற்றுவோர் எண்ணிக்கையை வெறும் 50 லட்சமாகக் குறைத்துவிடும். 

பல காலமாகக் குறைந்துவரும் குழந்தைப் பிறப்புகள், சீரான குடியேற்றமின்மை போன்றவை, தொழிலாளர்கள் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் குறைத்துவிடுவதாகவும், இதனால், நாட்டில் மிகப்பெரிய எண்ணிக்கையிலானோர் ஓய்வூதியம் பெறும்போது, அதனை ஈட்டுவதற்கு, மிகக் குறைவான நபர்களே பணியாற்றி, கூடுதல் சுமையை சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை குறித்து நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஆளும் கூட்டணி கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.

தகுதி வாய்ந்த, வெளிநாட்டு தொழிலாளர்கள் ஜெர்மனி வந்து பணியாற்றுவதற்கு தற்போதிருக்கும் தடைக்கற்களை அகற்றி, தினக் கூலியை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன.
 



Read in source website

 

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கான சிகிச்சையில் மால்னுபிராவிா் மாத்திரையைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தேசிய செயற்குழு முடிவெடுத்துள்ளது.

மால்னுபிராவிா் மாத்திரையின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) கடந்த மாதம் ஒப்புதல் அளித்திருந்தது. கரோனா தொற்று பாதிப்பின் தீவிரம் குறைவாக உள்ளவா்கள் அந்த மாத்திரையை மருத்துவா்களின் பரிந்துரையுடன் எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மால்னுபிராவிா் மாத்திரை பாதுகாப்பு சாா்ந்த குறைபாடுகளைக் கொண்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) இயக்குநா் பல்ராம் பாா்கவா அண்மையில் தெரிவித்திருந்தாா். உலக சுகாதார அமைப்பும், பிரிட்டனும் மால்னுபிராவிா் மாத்திரையை கரோனா சிகிச்சையில் இணைத்துக் கொள்ளவில்லை எனவும் அவா் தெரிவித்திருந்தாா்.

அதன் காரணமாக, கரோனா சிகிச்சைக்கான தேசிய வழிகாட்டு விதிமுறைகளில் மால்னுபிராவிா் சோ்க்கப்படவில்லை. இந்நிலையில், ஐசிஎம்ஆா் அதிகாரி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கரோனாவுக்கான தேசிய செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் மால்னுபிராவிா் மாத்திரை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

கரோனா தொற்று பாதிப்புக்கான சிகிச்சையில் அந்த மாத்திரை பெரிய அளவிலான பலனை அளிக்கவில்லை. மேலும், அந்த மாத்திரையில் சில பாதுகாப்பு குறைபாடுகளும் உள்ளன. எனவே, மால்னுபிராவிா் மாத்திரையை தேசிய சிகிச்சைக்கான விதிமுறைகளில் இணைக்க அக்குழு ஆதரவு தெரிவிக்கவில்லை’’ என்றாா்.

மால்னுபிராவிா் மாத்திரை முற்றிலும் பாதுகாப்பானது என அதன் தயாரிப்பு நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான அவசியமும் உயிரிழப்பும் பெருமளவில் குறைவது 3-ஆம் கட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

பாதுகாப்பு வீரா்கள் கையில் எடுத்துச் செல்லக் கூடிய பீரங்கி தாக்குதல் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெற்றிகரமாக பரிசோதித்தது.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் விவரம்:

பாதுகாப்பு வீரா்கள் கையில் எடுத்துச் செல்லக் கூடிய எடைக் குறைவான பீரங்கி தாக்குதல் ஏவுகணை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த ஏவுகணைக்கு சுயமாக இலக்கை நோக்கிச் சென்று தாக்கும் திறன் உள்ளது. 2.5 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை இந்த ஏவுகணையால் துல்லியமாகத் தாக்க முடியும்.

அதிகபட்ச தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்குவதில் அந்த ஏவுகணையின் செயல்திறன் ஏற்கெனவே வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில், குறைந்தபட்ச தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிப்பதில் அந்த ஏவுகணைக்குள்ள நிலையான செயல்திறனை டிஆா்டிஓ செவ்வாய்க்கிழமை பரிசோதித்தது. இதில் அந்த ஏவுகணை இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்தது என்று தெரிவிக்கப்பட்டது.



Read in source website

புதிய பருவ காலத்தில் இந்திய மாம்பழங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்காவின் வேளாண் துறை ஒப்புதலை மத்திய அரசு பெற்றுள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கரோனா பெருந்தொற்று காரணமாக சா்வதேச பயணங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், அமெரிக்கப் பரிசோதகா்கள் கதிா்வீச்சு தன்மை குறித்து ஆய்வு செய்ய இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இயலாமல் போனது. மேலும், பயணக் கட்டுப்பாடுகளினால், 2020-ஆம் ஆண்டிலிருந்து இந்திய மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்க கட்டுப்பாடு விதித்தது.

2021 நவம்பா் 23 அன்று நடைபெற்ற இந்தியா-அமெரிக்கா இடையேயான வா்த்தக கொள்கை அமைப்பின் 12-வது கூட்டத்தைத் தொடா்ந்து, திருத்தி அமைக்கப்பட்ட வேளாண் சந்தை திட்டம் செயல்படத் தொடங்கியது. பின்னா் பரஸ்பர உடன்பாட்டின் ஒரு பகுதியாக மாா்ச் மாதத்தில் இருந்து அல்ஃபோன்சோ ரகம் உள்ளிட்ட மாம்பழங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான அனுமதியை தற்போது அமெரிக்க வேளாண் துறையிடமிருந்து இந்தியா பெற்றுள்ளது.

2019-20 பருவத்தில் அமெரிக்காவுக்கு 43.5 லட்சம் அமெரிக்க டாலா் மதிப்புள்ள 1,095 டன் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஏற்றுமதியாளா்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற மதிப்பீடுகளின் படி 2022-இல் மாம்பழங்களின் ஏற்றுமதி 2019-20-ஆம் ஆண்டின் அளவை விஞ்சக் கூடும்.

அமெரிக்காவின் ஒப்புதலை அடுத்து பாரம்பரியமாக மாம்பழம் சாகுபடி செய்யும் மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா பகுதிகளிலிருந்து ஏற்றுமதிக்கு வாய்ப்பு ஏற்படும்.

இதே போல் 2022 ஏப்ரல் முதல் அமெரிக்காவுக்கு மாதுளை ஏற்றுமதியும் தொடங்கவுள்ளது. இதே காலத்தில் அமெரிக்காவிலிருந்து சொ்ரி பழங்களும் கால்நடை தீவனங்களும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.



Read in source website

நாட்டின் கொள்கை உருவாக்கம் இலக்குகளை அடையும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என நீதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமிதாப் இதுகுறித்து மேலும் பேசியது:

நாட்டில் கொள்கை உருவாக்கம் என்பது புதுமை கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவாகவும், அதேநேரம் இலக்குகளை அடையக்கூடியதாகவும், முன்னேற்றமான வகையிலும் இருக்க வேண்டும். உலகின் சிறந்தவற்றுக்கு மாற்றாகவும், சிறப்பானதை விட மிகச் சிறந்ததாகவும் அவை அமைய வேண்டும்.

இந்தியா வளா்ந்து வரும் அதே வேளையில், இணையப் பாதுகாப்பு என்பது மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனை சமாளிக்க நாடு தன்னை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.



Read in source website

நமது அறையின் கதவைத் தட்டாமலே கொஞ்சம்கூட நாகரிகம் இல்லாமல் நுழைந்துவிடுவதால் எலிகளின்மீது நமக்கு எப்போதுமே ஒரு கோபம் உண்டு. ஆனால், அந்த எலியும் மனிதர்களுக்கு நண்பனாக இருக்கமுடியும், தனது உயிரைப் பணயம் வைத்தாவது நாட்டுக்கு சேவை செய்யமுடியும் என்பதை மகத்தான மகாவா நிரூபித்து மறைந்துசென்றுவிட்டது. அளப்பரிய சேவைகளை செய்து மறைந்த மகாவாவுக்கு வயது 8.

'தனது உயிரை பணயம் வைத்து' என்ற சொல்லாடலுக்கு என்ன காரணம் என்றால், கண்ணிவெடி அகற்றுவது, கள்ளிச்செடி அகற்றுவது போலல்ல... ஒரே வெட்டாய் வெட்டி தூக்கியெறிய... கொஞ்சம் பிசகினாலும் பூமியிலிருந்து கண்ணிவெடி சிதறி ஆளை துண்டுதுண்டாக தூக்கியடித்துவிடும். ஆனால் இதில் ஆறுதல் என்னவென்றால், மகாவா தனது பணிகளில் ஈடுபடும்போது முன்னதான வரிகளில் சொன்னதுபோல வெடிவிபத்தில் பலியாகவில்லை என்பதுதான். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மகாவா நேற்று உயிர் துறந்தது.

'மவுஸ் ஹன்ட்' திரைப்படம் வந்தபோது பழங்கால வீடு ஒன்றில் சிக்கி வெளியே செல்லாமல் சுற்றிவரும் ஓர் எலியை வைத்து இவ்வளவு காமெடியா என்றெல்லாம் நமக்கு அப்போது தோன்றியது. ஆனால், நுண்ணறிவும் மோப்ப சக்தியும் கொண்டு கம்போடியா நாட்டில் கண்ணிவெடிகளை கண்டறிவதில் ஒரு எலி திறம்பட செயல்பட்டது. அதன் பெயர் 'மகாவா' என்பதை அறிந்ததும் நமது ஏளனங்கள் எல்லாம் காற்றில் பறந்தன.

தனது பணிக்காலத்தில் 100 கண்ணிவெடிகளை கண்டறிந்துள்ளதும், அதற்காக அந்த மகாவா எலி தங்கப்பதக்கம் பெற்றதும் உலகின் முக்கியமான செய்தி என்று நினைக்கிறேன். ஏன் முக்கியமான செய்தி என்றால், கண்ணிவெடி அகற்றுதல் ஒரு நாட்டின் சர்வதேச அரசியலோடு சம்பந்தப்பட்டது என்பதுதான்.

இதுகுறித்து நாம் அவசியம் காணவேண்டிய திரைப்படம் 'தி லேன்ட் ஆஃப் மைன்' என்ற டென்மார்க் திரைப்படம். இப்படம் எலி சம்பந்தப்பட்டது அல்ல, கண்ணிவெடி சம்பந்தப்பட்டது. கண்ணிவெடி எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்ந்தால்தான் மகாவாவின் பணி எவ்வளவு தீரமிக்கது என்பதையும் உணரமுடியும்.

இரண்டாம் உலகப் போர் தொடர்பான நூற்றுக்கணக்கான படங்கள் வந்துள்ளன. ஐரோப்பாவில் நடந்த நாஜிக்களின் அட்டூழியத்தை ரத்தம் சொட்ட சொட்ட நம் கண்முன் நிறுத்திய படங்கள் ஏராளம். இதனால் ஹிட்லர் காலத்து ஜெர்மானிய நாஜி வீரர்கள் மீது ஏற்பட்ட நிரந்தர வெறுப்பு இந்த நிமிடம் வரை தீர்ந்தபாடில்லை.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு டென்மார்க்கில் நடைபெறும் இத்திரைப்படத்தின் கதைக்களம் மிகவும் வித்தியாசமானது. ஜெர்மன் படை போரில் சரணடைந்த பிறகு, மே 1945-இல் போர் முடிவடைந்த நிலையில், 2,000-க்கும் மேற்பட்ட ஜெர்மன் போர்க் கைதிகளை தங்கள் நாடுகளை விட்டு வெளியேறாமல் தடுத்தன. அதற்குக் காரணம் அந்த நாட்டின் கடற்கரையெங்கும் புதையுண்டிருந்த கண்ணி வெடிகளையெல்லாம் அகற்றிவிட்டுத்தான் அவர்கள் செல்ல வேண்டும் என்பது.

உண்மையில், ஐரோப்பாவைக் கைப்பற்றிய ஜெர்மானிய படைவீரர்கள் அதன் பல்வேறு நாடுகளிலும் மில்லியன் கணக்கான கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருந்தனர். போர் முடிந்தபிறகு உயிர்களைப் பணயம் வைத்து கண்ணிவெடிகளை அகற்ற வேண்டிய கட்டாயத்திற்கு அந்நாடுகள் தள்ளப்பட்டன. இதற்காகவே போர் முடிந்தபின்னும் பல நாடுகள் ஜெர்மானிய போர்க் கைதிகளை அவர்களது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பாமல் தடுத்து நிறுத்தின.

ஜெர்மானிய இளம் போர்க் கைதிகள் சிலர், இயற்கையெழில் மிக்க டேனிஷ் நிலப்பரப்புகளில் நிறைந்த மேற்கு கடற்கரை வெளிகளில் ஜெர்மானியர்கள் புதைத்து வைத்த கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்காக டென்மார்க் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.

போரின்போது நாஜிக்கள் புதைத்துவைத்த கண்ணி வெடிகளைச் செயலிழக்க வைக்கும் பணிக்காக அவர்கள் நியமிக்கப்பட்டனர். கண்ணிவெடிகள் பூமிக்கடியில் எங்கேயுள்ளன என்பதை எந்தவித அசம்பாவிதமும் நேராமல் முதலில் எச்சரிக்கையுடன் கண்டறிய வேண்டும். பின்னரே கண்ணிவெடி உள்ளடக்கிய சிலிண்டரிலிருந்து டெட்டனேட்டரைத் தனியே பிரித்தெடுக்க வேண்டும். திரைப்படத்தின் கதையை இங்கு நான் சொல்லப்போவதில்லை. ஓரிரு முக்கிய அம்சங்களைப் பேசலாம் என்ற தோன்றுகிறது.

கண்ணிவெடிகளை அகற்றும் பயிற்சியின்போதே வட்டமான கண்ணிவெடி சிலிண்டரிலிருந்து டெட்டனரேட்டரைத் திருகி செயலிழக்க வைக்க முற்படும்போது சிலரின் விரல்கள் நடுங்குகின்றன. இதனால் நமக்கு பதற்றம் கூடிவிடுகிறது. ஒரு டீன்ஏஜ் இளைஞன் கண்ணிவெடியைத் தவறுதலாகக் கைவைத்து கையாண்டபோது வெடித்துச் சிதறுகிறான். இக்காட்சிக்குப் பிறகான முழுப் படமும் நம்மை இருக்கையின் நுனிக்குக் கொண்டுவந்துவிடுகிறது.

கடற்கரை அருகே தனது அணியை குன்றுகள் மீது அணிவகுத்து அழைத்துச் செல்லும் சார்ஜென்ட், ''மேற்கு டேனிஷ் கடற்கரையில் இருந்து மொத்தம் 45,000 கண்ணிவெடிகள் உள்ளன. ஒரு மணி நேரத்திற்கு ஆறு கண்ணிவெடிகளை செயலிழக்கவைக்க முடிந்தால், மூன்று மாதங்களில் உங்களை வீட்டுக்கு அனுப்பிவைக்கிறேன்'' என உறுதியளிக்கிறார். இப்படியாக செல்லும் திரைக்களத்தின் காட்சிகள் முழுவதும் கண்ணிவெடி அகற்றும் பதறவைக்கும் சம்பவங்கள்தான்.

இயக்குநர் மார்ட்டின் ஜான்ட்வ்லீட் இப்படத்தை எந்தவித மிகை நவிற்சியும் இன்றி இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் கமிலா ஹெல்ம் நுட்சனின் மிகச்சிறந்த கேமரா காட்சிகளின் மூலம் கதைப்போக்கில் நுட்பமான திரைக்கதைக் காட்சிகளைக் கையாண்டுள்ளார். மார்ட்டின் ஜான்ட்வ்லீட்டின் குறிப்பிடும்படியான இயக்கத்தைப் பறைசாற்றும் காட்சிகள் நிறைய வருகின்றன. அதில் முக்கியமானது இப்படத்தில் வரும் ஒரு சிறுமியைப் பற்றிய கதையாகும்.

கடற்கரை அருகே யாருமற்ற வனாந்தர சமவெளிகளில் இனனொரு மரத்தடுப்பு வீட்டில் தன் குழந்தையுடன் தனியே வசித்துவரும் பெண்மணியின் சிறுமி கடற்கரையில் விளையாடச் சென்று கண்ணிவெடிகளுக்கிடையில் சிக்கிக் கொள்கிறது. எர்னஸ்ட் எனும் இளம் ஜெர்மானிய வீரன் அக்குழந்தையின் உயிரைக் காப்பாற்றும் ஒரு கட்டமும் வருகிறது. டீன்ஏஜ் போர்க்கைதிகள் அப்பெண்மணியிடம் தகவல் சொல்லி அழைத்துச் செல்வர். ஆனால் அச்சிறுமியைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைக்கவேண்டும். ஆனால், அதற்கும் அவர்கள் தயாராகின்றனர். அப்பெண்மணி மனம் கசிந்து கதறும் இடம் அது.

அச்சிறுமியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என சிறுவர்கள் தவிக்கிறார்கள். கண்ணிவெடி அகற்றுதலின்போது தன்னைப் போலவே இருக்கும் தனது சகோதரன் உயிரிழந்துவிட அதிலிருந்து சித்தபிரமை பிடித்தவன் போல இருக்கும் எர்ன்ஸ்ட்தான் அச்சிறுமியைக் காப்பாற்ற கண்ணிவெடியிலிருந்து ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடுகிறான். எல்லோரும் பதறிக் கொண்டிருக்கும்போதே துணிச்சலாகச் சென்று அவன் சிறுமியைக் காப்பாற்றி அனுப்பி விடுகிறான்.

ஆனால், குழந்தையைக் காப்பாற்றும் வேலைமுடிந்தபிறகு அவனும் அவர்களுடன் திரும்பியிருக்க வேண்டும். ஒருமுறை கண்ணிவெடி அகற்றுதலின்போது உயிரிழந்த தனது சகோதரனையே நினைத்து வாடும் எர்னஸ்ட், அந்தத் தெளிவற்ற கடற்கரை மணலில் வேண்டுமென்றே நடந்து செல்கிறான். அப்போது எதிர்பாராமல் ஒரு கண்ணிவெடி அவனைச் சிதறடிக்கிறது. அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். ஊருக்கு திரும்பும்போது எத்தனை பேர் எஞ்சுகிறார்கள் என்பதை நினைக்கும்போது வாழ்வின் நிச்சயமின்மை இத்திரைப்படம் எவ்வளவு வலியோடு பேசியுள்ளது என்பதை புரிந்துகொள்ளமுடியும்.

இப்படத்தில் காட்டப்பட்ட இடங்கள் அனைத்தும் இரண்டாம் போருக்குப் பிறகு கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட ஓக்ஸ்பெல்லெஜிரென் மற்றும் வர்டே பகுதிகள் உள்ளிட்ட உண்மையான மேற்கு கடற்கரை பகுதிகளே ஆகும்.

2014 ஜூலையில் தொடங்கிய படப்பிடிப்பு இரண்டே மாதங்களில் நடைபெற்று ஆகஸ்ட் 2014-ல் முடிவடைகிறது. மேலும் ஒரு தகவல், 'அண்டர் சான்டெட்' (லேண்ட் ஆஃப் மைன்) படப்பிடிப்பின் போது பூமிக்கடியில் இருந்து அகற்றப்படாத மேலும் ஒரு கண்ணிவெடியை கவனமாக அகற்றியிருக்கிறார்கள்.

இப்போது உங்களுக்கும் மகாவா எலியின் மகத்துவம் புரிந்திருக்கும் என நம்புகிறேன். மகாவா எலி ஆப்பிரிக்காவின் டான்சானியா நாட்டில் பிறந்தது. அங்கு வளர்க்கப்பட்டது. அங்கிருந்து கம்போடியாவுக்கு கொண்டுவரப்பட்டு கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் பணிக்காகவே பிரத்யேகமாக பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டது.

கம்போடியா நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு பகுதிகளில் சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. இந்த வெடிகளில் சிக்கி சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததால், அவற்றை அகற்றுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இந்தப் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பணிகள் மிகவும் தாமதமாகும் என்பதால், விலங்குகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி எலிகளைக் கொண்டு கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. அந்தப் பணியில் தன்னை சிறப்பாக இணைத்துக் கொண்டது மகாவா என்ற எலி. இதன் மிகச் சிறப்பான பணியை அங்கீகரிக்கும் விதமாக இங்கிலாந்து விலங்குகள் நல அமைப்பு, எலி மகாவாவுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கவுரவப்படுத்தியது. அந்த அமைப்பின் 77 ஆண்டுகால வரலாற்றில் எலி ஒன்று தங்கப்பதக்கம் பெற்றது இதுவே முதன்முறையாகும்.

கண்ணிவெடிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் பயிற்சியை எலிகளுக்கு அபோபா என்ற தொண்டு நிறுவனம் வழங்கி வருகிறது. எலிகள் மோப்ப சக்தி மூலம் கண்ணிவெடிகளை அடையாளம் காண்கின்றன. மகாவா மறைவு குறித்து, அபோபா தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், அபோபாவில் அனைவருமே மகாவா இழப்பால் வாடுகிறோம். அதன் சேவைக்கு நன்றியைத் தெரிவிக்கிறோம். மகாவா வியத்தகு பணியை செய்து சென்றுள்ளது. மகாவாவின் வியக்கவைக்கும் மோப்ப சக்தி கம்போடிய மக்கள் நிம்மதியாக, கை, கால் இழக்கும் அச்சமின்றி வேலை செய்ய, விளையாட வழிவகை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

RIP மகாவா



Read in source website

புதுடெல்லி: கரோனா தொற்றினால் ஏற்பட்டபாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை காக்கும் வகையில் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் (2021-22) முதல் 9 மாதங்களில் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 30 ஆயிரம் கோடி டாலரை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் எட்டியதைவிட 22 சதவீதம் அதிகமாகும். நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தபோதிலும் ஒட்டுமொத்தமாக ஏற்றுமதி அதிகரித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 40,000 கோடி டாலர் என ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை எளிதில் எட்டிவிட முடியும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

2020-21-ம் நிதிஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் 35,400 கோடி டாலராகும். முந்தைய நிதி ஆண்டை விட 5,700 கோடி டாலர் கூடுதலாக வர்த்தகமானது. இறக்குமதி 51,300 கோடி டாலராக இருந்தது.

நடப்பு ஆண்டில் அமெரிக்காவுக்கான வர்த்தகம் அதிகரித்துள்ளது. 5,870 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சீனாவுக்கான ஏற்றுமதி வர்த்தகம் 42 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியா அதிகஅளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் வங்கதேசமும் இடம்பெற்றுள்ளது. வங்கதேசத்துக்கான இந்திய ஏற்றுமதி 67% அதிகரித்துள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதற்கு பல நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) போடப்பட்டதும் முக்கிய காரணமாகும். இந்தியா முதலில் தாராள வர்த்தக ஒப்பந்தம் ஐக்கிய அரபு அமீரகத்துடன்தான் போட்டது. ஆனால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்ததைத் தொடர்ந்து அமீரகத்துடனான வர்த்தக அளவு கடந்த சில ஆண்டுகளாக குறைந்துவிட்டது. இங்கிலாந்துடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறியதால் ஏற்பட்டுள்ள வர்த்தக பாதிப்பைஈடுகட்டுவதற்காக இங்கிலாந்துடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுகிறது. ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

டிசம்பர் மாதத்தில் மட்டும் 3,700 கோடி அளவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். முந்தைய ஆண்டு இதே காலத்தில் எட்டப்பட்ட ஏற்றுமதி அளவைக் காட்டிலும் 37 சதவீதம் அதிகமாகும்.

நடப்பு நிதி ஆண்டு முடிவடைய 3 மாதங்கள் உள்ள நிலையில் இத்தகைய ஏற்றுமதி வருமானத்தை இந்தியா இதுவரை எட்டியது இல்லை.

மின்னுற்பத்தி

2015-ம் ஆண்டில் பாரீஸில் நடைபெற்ற மாநாட்டில் மரபு சாரா எரிசக்தி இலக்கை எட்ட இந்தியா கையெழுத்திட்டது. இதன்படி 2030-ம் ஆண்டு எட்ட வேண்டிய இலக்கு 8 ஆண்டுகளுக்கு முன்ன தாகவே 2021-ம் ஆண்டிலேயே இந்தியா எட்டிவிட்டது குறிப்பிடத் தக்க சாதனையாகும். 40 சதவீதமின்னுற்பத்தியை மரபுசாரா மின்னுற்பத்தி மூலம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காற்றாலை, சூரிய மின்னுற்பத்தி மற்றும் அணு மின்னுற்பத்தி மூலம் இதை எட்ட முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவின் மொத்த மின்னுற் பத்தி 392 கிகாவாட் ஆகும். மரபுசாரா உற்பத்தி மூலமாக உற்பத்தி செய்ய வேண்டிய மின்னுற்பத்தி 157 கிகாவாட்டாகும். அரசு தனியார் பங்கேற்பு மூலம் இந்த இலக்கை எட்டப்பட்டுள்ளது. மரபு சாரா எரிசக்தித் துறையில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடு (2014-19) 6,400 கோடி டாலராகும்.

வேலைவாய்ப்பு

ஐஐடி உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களில் அதிக அளவில் அதிக சம்பளத்துக்கு இந்திய மாணவர்கள் முன்னணி நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மும்பை ஐஐடி-யில் மட்டும் 1,400 மாணவர் களுக்கு வளாகத் தேர்வில் வேலை கிடைத்துள்ளது. ஐஐடி-டெல்லி கல்வி மையத்தில் 1,250 மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.

இதேபோல சென்னை ஐஐடி-யில் கடந்த ஆண்டை விட 73 சதவீதம் கூடுதலான எண்ணிக்கையில் மாணவர்களுக்கு வேலை கிடைத் துள்ளது. அத்துடன் ஊதியமும் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகமாகும்.

கரோனா காலகட்டத்தில் வேலையிழந்தவர்களில் 60 சதவீதம் பேருக்கு மீண்டும் வேலை கிடைத்துள்ளது. தொழில்நுட்பப் பொறியாளர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனை

இந்தியாவின் டிஜிட்டல் மூலமான வர்த்தக பரிவர்த்தனை கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. 30,000 கோடி டாலர் அளவுக்கு வர்த்தக பரிவர்த்தனை நடைபெற் றுள்ளது. இது சீனாவை விட 60 சதவீதம் அதிகமாகும்.



Read in source website

 ஜனவரி 1-ஆம் தேதி முதல், வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகத்துக்கான புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. 2021 பிப்ரவரி 19-ஆம் தேதி, அமித்தவா தாஸ்குப்தா எதிர் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்று இந்திய ரிசர்வ் வங்கி எடுத்திருக்கும் முடிவு இது.விதிகளை மாற்றியது சரி, ஆனால், ரிசர்வ் வங்கி காட்டியிருக்கும் அதிகப்படியான முனைப்புதான் சரியானதாகத் தெரியவில்லை.
 யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாவில் அமித்தவா தாஸ்குப்தா பெற்றிருந்த பாதுகாப்புப் பெட்டக வசதிக்கு வாடகையே தரவில்லை. அதனால் அந்தப் பெட்டகத்தை உடைக்க வேண்டிய நிர்ப்பந்தம் வங்கிக்கு ஏற்பட்டது. அதற்கு எதிராக அமித்தவா தாஸ் குப்தா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பாதுகாப்புப் பெட்டக வசதிகள் குறித்தும், அது தொடர்பான வங்கியின் பொறுப்புகள் குறித்தும் ஆறு மாதத்தில் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
 பாதுகாப்புப் பெட்டக வசதியைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் வங்கியில் வைப்புத் தொகை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதில் தவறொன்றும் இல்லை. வைப்புத் தொகை வைத்திருந்தால் மட்டும் போதுமானது என்கிற பாதுகாப்புப் பெட்டக வசதிக்கான நிபந்தனையில் மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி. இந்தப் புதிய நிபந்தனைகள் எரிச்சலூட்டுபவையாகவும், வாடிக்கையாளர் நலனுக்கு விரோதமாகவும் இருக்கின்றன.
 புதிய விதிமுறைகளின்படி, பாதுகாப்புப் பெட்டக வசதி பெறுவதற்கு மூன்று ஆண்டு வாடகையை முன்கூட்டியே வழங்குவதுடன், ஏதாவது ஒரு காரணத்திற்காக பெட்டகத்தை உடைக்க நேர்ந்தால் அதற்கு செலவாகும் கட்டணத்தையும் முன்கூட்டியே வசூலித்துக் கொள்ள வங்கிகளுக்கு அனுமதி வழங்கியிருப்பது விசித்திரமாக இருக்கிறது. பாதுகாப்புப் பெட்டக வசதி பெறும் வாடிக்கையாளர்கள், அதன் சாவியையும் எடுத்துக்கொண்டு காணாமல் போய்விடுவார்கள் என்கிற அனுமானத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனை இது. அமித்தவா தாஸ் குப்தா பிரச்னையில் அப்படி நிகழ்ந்தது என்பதற்காக எல்லா வாடிக்கையாளர்களும் தண்டிக்கப்படுவது தவறான கொள்கை என்பதை இந்திய ரிசர்வ் வங்கி ஏன் உணரவில்லை?
 பாதுகாப்புப் பெட்டகத்தைப் பயன்படுத்தாமலோ திருப்பி ஒப்படைக்காமலோ அதன் சாவியுடன் வாடிக்கையாளர் சென்றுவிடாமல் இருப்பதற்கு, வைப்புத் தொகைபோல சில விதிமுறைகள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் பாதுகாப்புப் பெட்டகம் பயன்படுத்தப்படாமல் இருந்தால், வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அனுப்புவதும், அபராதக் கட்டணம் விதிப்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை.
 வைப்புத் தொகையைவிட கட்டண பாக்கி அதிகரிக்குமானால், பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்துத் திறக்கும் உரிமையும், வைப்புத் தொகையை கட்டணமாக எடுத்துக்கொள்ளும் உரிமையும் வங்கிகளுக்குத் தரப்படுவது நியாயமான விதிமுறைகள். அதற்காக எல்லா வாடிக்கையாளர்களிடமிருந்தும் வைப்புத் தொகையும், மூன்று ஆண்டுகளுக்கான கட்டணமும், பெட்டகத்தை உடைத்துத் திறப்பதற்கான செலவும் முன்கூட்டியே வசூலிக்கப்படுவது இதுவரை உலகில் வேறெங்கும் இல்லாத நிபந்தனைகள். வங்கிக் கணக்குகளுடன் வருமான வரி கணக்கு எண்ணும், ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு சிலர் மாயமாய் மறைந்துவிடுகிறார்கள் என்பதற்காக அனைவரையும் தண்டிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
 வாடிக்கையாளர்களிடமிருந்து மூன்று ஆண்டு கட்டணத்தை முன்கூட்டியே வசூலிப்பது என்பது, அதுவும் வட்டியில்லாத முன்பணமாகப் பெறுவது இதுவரை வேறு எங்கும் இல்லாத புதிய அணுகுமுறை. சேவையைப் பெறுவதற்கு முன்னாலேயே வாடிக்கையாளர்கள் வாடகை தர வேண்டிய அவசியம்தான் என்ன?
 வட்டியின் முக்கியத்துவமும், முதலீடு முடக்கப்படும் காலமும், வங்கிச் சேவை வழங்குபவர்களுக்குத் தெரியாததல்ல. வங்கியின் பணம் கடனாக வழங்கப்படும்போது, ஒவ்வொரு நாளுக்கும் வட்டி கோரும் வங்கிகள், வாடிக்கையாளர்களின் பணத்தை வட்டியில்லாமல் வாங்கி வைத்துக்கொள்வது அவர்களை வஞ்சிப்பதாக இல்லையா?
 அடுத்ததாக, பாதுகாப்புப் பெட்டகத்தை உடைப்பதற்கான கட்டணம் குறித்தும் கேள்வி எழுகிறது. என்ன அடிப்படையில் அந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்பது முதலில் தெரிய வேண்டும். முன்கூட்டிப் பெறும் வாடகைபோல, பாதுகாப்புப் பெட்டக உடைப்புக் கட்டணத்தையும் பாதுகாப்புப் பெட்டக வசதியை வாடிக்கையாளர்கள் தொடரும் வரை வட்டியில்லாமல் வங்கி வைத்துக்கொள்ளப் போகிறது. வங்கியின் மீது நம்பிக்கை வைத்து, வங்கி வழங்கும் குறைந்த வட்டிக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புகளை வழங்கும்போது, அவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் பெட்டகத்தை உடைக்க நேர்ந்தால் வங்கிக்கு ஏற்படும் இழப்பை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்வது தர்க்க ரீதியாகப் பார்த்தாலும், தார்மிக ரீதியாகப் பார்த்தாலும் மிகப் பெரிய அநீதி.
 இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த வாடிக்கையாளர் விரோத விதிமுறைகள், வாடிக்கையாளர்களை தனியார் பாதுகாப்புப் பெட்டக நிறுவனங்களை நாட வழிகோலும். அதன் மூலம் வங்கிச் சேவையில் இருந்து பாதுகாப்புப் பெட்டக வசதியைப் பிரித்து தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க இந்திய ரிசர்வ் வங்கி நினைக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.
 புதிய விதிமுறைகளில் காணப்படும் ஒருசில நல்ல அம்சங்கள் மிகவும் சாதாரணமானவை. எளிதில் வாடிக்கையாளருக்கு நன்மை பயக்காதவை. வாடிக்கையாளர் நலனை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்படாதவை.



Read in source website

மின்னும் மின்னும் விண்மீனே

விண்மீன்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியில்  மையத்தில் உள்ள ஹைட்ரஜன் கருக்களை இணைத்து ஹீலியத்தை உருவாககுகின்றன. இந்த வேதி செயல்பாட்டால்தான், வெப்பமும், வெளிச்சமும் உருவாகின்றன. நம் சூரியனும் ஒரு விண்மீனே. இதன் இறுதி நிலை சிவப்பு ராட்சதனாகவும், வேல்லைக்குள்ளனாகவும் மாறும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

சிவப்பு ராட்சத விண்மீனாய்

ஒரு விண்மீனில் மையத்தில் உள்ள ஹைட்ரஜன் தீர்ந்துவிட்டால்,  ஹைட்ரஜன் இணைவு மையத்திற்கு வெளியே தொடர்கிறது. ஒரு விண்மீன் தன்னிடமுள்ள அனைத்து ஹைடிரஜனையும் எரித்து ஹீலியம் ஆக்கிய பின்னர், அதற்கும் இனிமேல் எரிபொருள் இல்லை எனும்போதுசிவப்பு விண்மீன் /சிவப்பு பூதம் ஆகிறது. இதனால் விண்மீனின் வெளிப்புற அடுக்குகள் விரிவடைந்து குளிர்ச்சியடைகின்றன. அதாவது விண்மீனை வியத்தகு முறையில் விரிவடையச் செய்து, அதை ஒரு மாபெரும் சிவப்பு பூதம் ஆக்குகிறது. விரிவாக்கம் விண்மீனின் மேற்பரப்பையும் குளிர்விக்கிறது, இது சிவப்பு நிறத்தில் தோன்றும். இவற்றை சிவப்பு ராட்சத விண்மீன்கள்/சிவப்பு பூதம் என்று அழைக்கப்படும். இப்படிப்பட்ட விண்மீன்கள் எல்லாம்  தங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் உள்ளன, என்று பொருள். மேலும் அவை ஒரு சூப்பர்நோவா வெடிப்பில் அல்லது மிகவும் அமைதியாக கோளின் நெபுலாவாக இறக்கின்றன.

விண்மீனின் இறுதி சிவப்பு ராட்சத விண்மீன்கள்

சிவப்பு ராட்சத விண்மீன் என்பது, விண்மீனின்  பரிணாம வளர்ச்சியின் பிற்பகுதியில் குறைந்த அல்லது இடைநிலை நிறை (தோராயமாக 0.3–8 சூரிய நிறை (M☉)) கொண்ட ஒரு ஒளிரும் மாபெரும் விண்மீன்தான். இதன்  வெளிப்புற வளிமண்டலம் காற்றோட்டமாகவும் மெல்லியதாகவும் உள்ளது, ஆரம் பெரியதாகவும் மேற்பரப்பு வெப்பநிலை 5,000 K (4,700 °C; 8,500 °F) அல்லது குறைவாகவும் இருக்கும். சிவப்பு ராட்சதத்தின் தோற்றம் மஞ்சள்-ஆரஞ்சு நிறத்தில் இருந்து சிவப்பு நிறத்தில் உள்ளது, இதில் நிறமாலை வகைகள் K மற்றும் M, ஆனால் வகுப்பு S நட்சத்திரங்கள் மற்றும் பெரும்பாலான கார்பன் நட்சத்திரங்களும் அடங்கும்.

ராட்சத சிவப்பு பூதங்கள்

சிவப்பு பூதங்கள் ஆற்றலை உருவாக்கும் விதத்தில் வேறுபடுகின்றன:

நன்கு அறியப்பட்ட பிரகாசமான விண்மீன்கள் பல சிவப்பு ராட்சதர்கள், ஏனெனில் அவை ஒளிரும் மற்றும் மிதமான பொதுவானவை. ஒரு சிவப்பு ராட்சத விண்மீன் இறந்துவிட்டதா?  மற்ற எல்லா விண்மீனைப் போலவே போலவே, ஒரு சிவப்பு ராட்சதமும் அதன் அனைத்து எரிபொருளையும் எரித்தவுடன் இறந்துவிடுகிறது, மேலும் ஈர்ப்பு விசையை மையத்தை நோக்கித் தள்ளுவதற்கு எந்த அழுத்தமும் இல்லை. நமது சூரியனைப் போன்ற ஒரு விண்மீன் அதன் அனைத்து ஹைட்ரஜனையும் ஹீலியமாக எரித்து பின்னர் தன்னை மறுசீரமைக்கும்போது அடிப்படையில் ஒரு சிவப்பு ராட்சத உருவாகிறது. இந்த செயல்முறை நடந்து முடிக்க சுமார் 10 பில்லியன் ஆண்டுகள் ஆகும்.

ஒரு சூப்பர்நோவா எவ்வளவு காலம் நீடிக்கும்?

ஒரு சூப்பர்நோவாவின் வெடிப்பு நிகழ்வு என்பது ஒரு விண்மீனில் சுமார் 100 வினாடிக்கும் மிகக் குறுகிய காலத்தில் நிகழ்கிறது. ஒரு விண்மீன்  ஒரு சூப்பர்நோவா வெடிப்புக்கு உட்படும்போது, ​​​​அது ஒரு எச்சத்தை விட்டுவிட்டு இறந்துவிடுகிறது. நியூட்ரான் நட்சத்திரம் அல்லது கருந்துளை.

சிவப்பு ராட்சத கட்டத்தின் முடிவில்

சிவப்பு-ராட்சத கிளையின் ஏறுவரிசை முடிவடையும் போது, ​​அவை அறிகுறியற்ற-இராட்சத-கிளை வின்மீனைப்போல அவற்றின் வெளிப்புற அடுக்குகளை உமிழ்கின்றன, பின்னர் அவை வெள்ளை குள்ளனாக மாறுகின்றது. இறுதியில் இறந்து போகிறது.

ஏன் வெடிப்பு விண்மீனில்

அப்படி ஒரு இராட்சத சிவப்பு பூதம் வெடிப்பதை எதிர்பாராவிதமாக நம் விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.

வானியல் வல்லுநர்கள் சிவப்பு பூதத்தின் மரணத் துடிப்பை படம்பிடித்து உள்ளனர்.  ‘முதல் முறையாக, ஒரு சிவப்பு சூப்பர்ஜெயண்ட் விண்மீன் வெடிப்பதை நாங்கள் பார்த்தோம்,’ என்று வடமேற்கு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்  தாங்கள் பார்த்ததை பதிவு செய்ததுடன் அதனை அதற்கான ஒரு பத்திரிக்கையிலும், 2022, ஜனவரி 6-ஆம் நாள் வெளியிட்டுள்ளனர்.  

பழைய கருத்தை மாற்றும் புதிய எதிர்பாரா கண்டுபிடிப்பு

வானியலாளர்கள் முன்பு சிவப்பு சூப்பர்ஜெயண்ட் விண்மீன்கள் தங்கள் வாழ்க்கையின் முடிவில், இறக்கும்போது  செயலற்ற நிலையில் இருப்பதாக நம்பினர். சிவப்பு சூப்பர்ஜெயண்ட் விண்மீன்கள் சூப்பர்நோவாக்களாக மாறுவதற்கு முன்பு, வெகு வேகமாக எதிர்பாரா விதத்தில் பயங்கரமாக வெடிக்கும் எனபதை ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது.

சிவப்பு ராட்சதனின் வியத்தகு முடிவு

முதன்முறையாக, வானியலாளர்கள் ஒரு சிவப்பு சூப்பர்ஜெயண்டின் வாழ்க்கையின் வியத்தகு முடிவை அதன் நிகழ்நேரத்தில் படம்பிடித்துள்ளனர் . அந்நிகழ்வு எனபது 100 நொடிகளுக்கும் குறைவே. அந்த கண நேரத்தில், அதனை விஞ்ஞானிகள் தொலைநோக்கி மூலம் படம் எடுத்துள்ளனர்.  ஒரு வகை II சூப்பர்நோவாவில் சரிவதற்கு முன்பு பாரிய நட்சத்திரத்தின் விரைவான சுய அழிவு மற்றும் இறுதி மரணத் துயரங்களைப் பார்த்து.

சூப்பர் நோவா வெடிப்பை படம் பிடித்த விஞ்ஞானிகள்

வடமேற்கு பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி (யுசி பெர்க்லி) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களின் தலைமையில் இயங்கும் குழு, அதன் கடைசி இறுதி நாட்களை தொடர்ந்து கண்காணித்தனர். பின்னர் 130 நாட்களில் சிவப்பு சூப்பர்ஜெயண்ட்டை அதன் பெரு வெடிப்புக்கு ஆயத்தமாகி, வெடித்தது. இந்த கண்டுபிடிப்பு சிவப்பு சூப்பர்ஜெயண்ட் விண்மீன்கள் வெடிப்பதற்கு முன்பே எவ்வாறு உருவாகின்றன என்பதற்கான முந்தைய யோசனைகளை மீறுகிறது. முந்தைய அவதானிப்புகள் சிவப்பு சூப்பர்ஜெயண்ட்கள் தங்கள் இறப்பிற்கு முன் ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்தன. இப்படிப்பட்ட வெகுவேகமான பயங்கரமான வெடிப்புகள் அல்லது ஒளிரும் உமிழ்வுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. எவ்வாறாயினும், புதிய அவதானிப்புகள், வெடிப்பதற்கு முன் இறுதி ஆண்டில் சிவப்பு சூப்பர்ஜெயண்டிலிருந்து பிரகாசமான கதிர்வீச்சைக் கண்டறிந்தன. இந்த விண்மீன்களில் குறைந்தபட்சம் சில அவற்றின் உள் அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும் என்பதை  இது தெரிவிக்கிறது.  பின்னர் அவை வீழ்ச்சியடைவதற்கு முன் வாயு தருணங்களை கொந்தளிப்புடன் வெளியேற்றும்.

காணக் கிடைக்காத விண்மீன் வெடிப்பு காட்சி

"பெரிய விண்மீன்கள் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு என்ன செய்கின்றன, என்ன ஆகின்றன  என்பதைப் பற்றிய நமது புரிதலில் இது ஒரு திருப்புமுனையாகும்" என்று ஆய்வின் முதன்மை ஆசிரியரான வின் ஜேக்கப்சன்-காலன் தெரிவிக்கிறார்.  "சிவப்பு சூப்பர்ஜெயண்ட்விண்மீனில், சூப்பர்நோவாவுக்கு முந்தைய செயல்பாட்டை நேரடியாகக் கண்டறிவது ஒரு சாதாரண வகை. இதற்கு முன்னர்  II சூப்பர்நோவாவில் இப்படி காணப்படவில்லை. முதல் முறையாக, ஒரு சிவப்பு சூப்பர்ஜெயண்ட் விண்மீன் வெடிப்பதை நாங்கள் பார்த்தோம்."

இந்த கண்டுபிடிப்புதான் 2022, ஜனவரி 6 ம் நாள்,  வான்-இயற்பியல் பத்திரிகையில் வெளிஹிடப்பட்டது.

ஜேக்கப்சன்-கலான் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (NSF) பட்டதாரி ஆராய்ச்சி உறுப்பினராக இருந்த வடமேற்கில் பணி நடத்தப்பட்டாலும், பின்னர் அவர் பெர்க்லிக்கு மாற்றப்பட்டார். வடமேற்கு இணை ஆசிரியர்களில் டீன் கோப்பேஜான்ஸ், சார்லி கில்பாட்ரிக், கியாகோமோ டெர்ரெரன், பீட்டர் பிளான்சார்ட் மற்றும் லிண்ட்சே டிமார்ச்சி ஆகியோர் அடங்குவர், இவர்கள் அனைவரும் வடமேற்கு வானியற்பியல் மற்றும் ஆய்வு ஆராய்ச்சிக்கான வடமேற்கு மையத்தின் (CIERA) உறுப்பினர்களாக உள்ளனர்.

வானில் ஒளிர்ந்த சூப்பர் நோவா

'இதுபோன்ற பயங்கர வெடிப்பை, நாங்கள் ஒருபோது பார்த்தது இல்லை. செயல்பாட்டை நாங்கள் ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை'

ஹலேக்கலில் உள்ள ஹவாய் பல்கலைக்கழகம் வானியல்பேன்-ஸ்டார்ஸ் நிறுவனம், 2020 கோடையில், சிவப்பு சூப்பர்ஜெயண்டிலிருந்து வெளிவரும் பெரிய அளவிலான ஒளியின் மூலம் அழிவடைந்த முதன்முதலில் கண்டறிந்தது. சில மாதங்களுக்குப் பிறகு, 2020 இலையுதிர்காலத்தில், ஒரு சூப்பர்நோவா வானத்தை ஒளிரச் செய்தது.

நிறமாலைப் பதிவு

குழு சக்தி வாய்ந்த ஃபிளாஷை விரைவாகக் கைப்பற்றியது மற்றும் W.M ஐப் பயன்படுத்தி சூப்பர்நோவா 2020tlf (SN 2020tlf) என பெயரிடப்பட்ட ஆற்றல்மிக்க வெடிப்பின் முதல் நிறமாலையைப் பெற்றது. மௌனகேயா, ஹவாய்?i இல் உள்ள கெக் அப்சர்வேட்டரியின் லோ ரெசல்யூஷன் இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர் மூலம் . வெடித்த நேரத்தில் நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள அடர்த்தியான சூழ்நிலைப் பொருட்களின் நேரடி ஆதாரங்களை தரவு காட்டியது, கோடையின் தொடக்கத்தில் சிவப்பு சூப்பர்ஜெயண்ட் நட்சத்திரத்தை வன்முறையாக வெளியேற்றும் அதே வாயுவை Pan-STARRS படம்பிடித்திருக்கலாம்.

அற்புதமாக டைம் பாம் போல வெடித்த சூப்பர்நோவா

"இது ஒரு டைம் பாம் வெடிப்பதை பார்ப்பது போன்றது. என்று CIERA இன் இணைப் பேராசிரியரும், அந்த பத்திரிக்கையின் மூத்த ஆசிரியருமான ரஃபேல்லா மார்குட்டி கூறினார். "இறந்து கொண்டிருக்கும் சிவப்பு சூப்பர்ஜெயண்ட் விண்மீனில்  இதுபோன்ற  பயங்கரமான கொடூர செயல்பாட்டை நாங்கள் ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை, அங்கு அது ஒரு ஒளிரும் உமிழ்வை உருவாக்குகிறது, பின்னர் சரிந்து எரிகிறது, இப்போது வரை."

வெடிப்புக்குப் பிறகு SN 2020tlf ஐ குழு, தொடர்ந்து கண்காணித்தது. கெக் வான் நோக்ககத்தின் ஸ்பெக்ட்ரோகிராஃப் மற்றும் அருகிலுள்ள அகச்சிவப்பு எச்செல்லெட் ஸ்பெக்ட்ரோகிராஃப் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், ஆராய்ச்சியாளர்கள் SN 2020tlf இன் முன்னோடி சிவப்பு சூப்பர்ஜெயண்ட்விண்மீன்  -- NGC 5731 விண்மீன் -- பூமியில் இருந்து 120 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதுஎன்றும் சூரியனை விட 10 மடங்கு பெரியது என்றும் தெரிவிக்கின்றனர்.

தொலைதூர சாத்தியங்கள்

விஞ்ஞானிகள் வடமேற்கில் இருந்த காலத்தில் பெரும்பாலான ஆய்வுகளை மேற்கொண்டனர், மார்குட்டி இயற்பியல் மற்றும் வானியல் இணைப் பேராசிரியராகவும் CIERA உறுப்பினராகவும் உள்ளார். . மார்குட்டி இப்போது பெர்க்லியில் வானியல் மற்றும் வானியல் இயற்பியலின் இணைப் பேராசிரியராக உள்ளார்.

கெக் வானோக்கக தொலைநோக்கிகளுக்கு வடமேற்கின் தொலை தூர அணுகல் அவர்களின் ஆராய்ச்சிக்கு ஒருங்கிணைந்ததாக இருந்தது. பல்கலைக்கழகத்தின் எவன்ஸ்டன் வளாகத்தில் இருந்து, வானியலாளர்கள் ஹவாயில் உள்ள தொலைநோக்கி ஆபரேட்டருடன் தொடர்பு கொள்ளலாம் மற்றும் தொலைநோக்கியை எங்கு நிலைநிறுத்துவது என்பதைத் தேர்வுசெய்யலாம். ஹவாய்க்கு நீண்ட தூரப் பயணத்தைத் தவிர்ப்பதன் மூலம், வானியலாளர்கள் விலைமதிப்பற்ற கண்காணிப்பு நேரத்தை மிச்சப்படுத்துகிறார்கள் . சூப்பர்நோவாக்கள் போன்ற நிலையற்ற நிகழ்வுகளைப் படம் பிடிக்கிறார்கள், சூப்பர் நோவா வெடிப்பும், எரிதலும், விரைவாக எரிந்து பின்னர் விரைவாக மறைந்துவிடும்.

"சிவப்பு சூப்பர்ஜெயண்ட் சூப்பர்நோவாவின் இந்த குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு, கெக் அவான் நோக்ககம் உட்பட உயர்மட்ட தனியார் தொலைநோக்கி வசதிகளை அணுகுவதில் வடமேற்கு நாட்டின் முதலீட்டின் முக்கியத்துவத்தை இன்னும் ஒரு வலுவான அறிகுறியாகும்," என்று டேனியல் I. லின்சர் புகழ்பெற்ற பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் விக்கி கலோகேரா கூறினார். வடமேற்கு வெயின்பெர்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வானியல் மற்றும் CIERA இயக்குனர். "கெக் தொலைநோக்கிகள், தற்போது நமது பூமிக்கோளில் சிறந்தவை இன்னும் சில சாதனைகள் செய்யும்.



Read in source website

அடுத்து வரும் நிதிநிலை அறிக்கைக்கு முன்பாக நடத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சில மாநிலங்கள் எழுப்பியுள்ளன. மாநிலங்கள் தங்களது மறைமுக வரிகளை விட்டுக்கொடுத்து, ஜிஎஸ்டி என்ற ஒற்றைக் குடையின் கீழ் வர ஒப்புதல் தெரிவித்தபோது, அவர்களது வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் ஐந்தாண்டு காலத்துக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதற்கு முடிவானது. இழப்பீட்டுக் காலம் வருகின்ற ஜூன் 2022 வரையில் முடியவிருக்கும் நிலையில், பெருந்தொற்றின் காரணமான பொருளாதார நெருக்கடிகளையும் வருவாய் இழப்பையும் காரணம் காட்டி, இந்த இழப்பீடு மேலும் தொடர வேண்டும் என்ற கோரிக்கையைச் சில மாநிலங்கள் வலியுறுத்தியுள்ளன.

இழப்பீட்டை நீட்டிக்கும் கோரிக்கையை விடுத்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் உள்ளடங்கும். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மட்டுமின்றி, ஆளுநர் உரையிலும் இந்தக் கோரிக்கை எதிரொலித்துள்ளது. முந்தைய மதிப்புக் கூட்டு வரி முறையில், வரி வருவாய் வளர்ச்சிநிலையில் இருந்த தமிழ்நாடு ஜிஎஸ்டி நடைமுறைக்குப் பிறகு, அந்நிலையை மீண்டும் எட்ட இயலவில்லை என்பது ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கேனும் ஜிஎஸ்டி இழப்பீட்டைத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தவிர கேரளம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் இழப்பீடு நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஐந்தாண்டுகளுக்கு இழப்பீட்டை நீட்டிக்க வேண்டுகின்றன. பாஜக அல்லாத மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களிலிருந்து இந்தக் கோரிக்கை எழுந்தாலும், அக்கட்சி ஆளும் மாநிலங்களும்கூட இதே வருவாய் நெருக்கடி என்கிற சவாலை எதிர்கொண்டுள்ளன. அனைத்து மாநிலங்களுமே தங்களது அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதோடு, பொதுச் சுகாதாரம் தொடர்பில் புதிதாக எழுந்துள்ள சிக்கல்களையும் சமாளிக்கக் கூடுதலாகச் செலவிட வேண்டியுள்ளது.

மாநில அரசுகள் எதிர்கொள்ளும் அதே வரிவருவாய்ப் பற்றாக்குறையை மத்திய அரசுமே எதிர்கொண்டுள்ளது. எனினும், வரியல்லாத இதர வருவாய்கள் மத்திய அரசுக்கு மிக அதிக அளவில் உள்ளன. பெருந்தொற்று காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறையையும் சமாளிப்பதற்குத் தேசிய பணமாக்கல் திட்டம் (என்எம்பி) செயல்படுத்தப்பட்டது. அரசுக்குச் சொந்தமான சொத்துகளை நீண்ட காலக் குத்தகைக்கு விட்டு, அதிலிருந்து வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி திரட்டும் அந்தத் திட்டத்தைக் குறிப்பிட்ட சில முதலாளிகளுக்கு அனுகூலமாக நடந்துகொள்ளும் திட்டம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

ஜிஎஸ்டி இழப்பீட்டுக்குப் பதிலாக மத்திய அரசே மாநில அரசுகளுக்குக் கடன்களைத் திரட்டித் தந்தபோதும் விமர்சனங்கள் எழுந்தன. இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான சிறப்புத் தீர்வை மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஏற்கெனவே நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, ஜிஎஸ்டி இழப்பீட்டுக் காலத்தையும் நீட்டிப்பதற்தான சட்டத்திருத்தம் குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய இழப்பீட்டு நிலுவைகள் தாமதமாவதும் தவிர்க்கப்பட வேண்டும்.



Read in source website

மைசூரில் இருக்கும் தமிழ்க் கல்வெட்டுகள் சென்னைக்கு வர உள்ளதாக இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் (ஏஎஸ்ஐ) அறிவிப்பு, தமிழக மக்களையும் உலகமெங்கும் உள்ள தமிழ் ஆர்வலர்களையும் பெருத்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1984-ல் சென்னை பல்கலைக்கழகத் தொல்லியல் துறையில் நான் எம்.ஃபில்., பயின்ற காலம். பதிக்கப்பட்ட கல்வெட்டுகள் கிடைக்காமல், அவற்றின் படிகளைத் தேடி மைசூரில் உள்ள ஏஎஸ்ஐயின் கல்வெட்டுப் பிரிவின் அலுவலகம் எனக்கு முதலில் அறிமுகமானது. 60 ஆண்டுகளுக்கு முன் படி எடுக்கப்பட்ட கல்வெட்டுகள் இன்னமும் பதிப்பிக்கப்படவில்லை என நான் உணர்ந்த முதல் புள்ளி அது. கால தாமதம், இடையூறுகள் போன்றவற்றைக் கடந்து மைசூரில் தங்கி, கல்வெட்டுகளைப் படித்து எழுதி எடுத்து வந்தேன்.

தமிழில் உள்ள கல்வெட்டுகள் ஏன் தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை, எல்லா மாணவர்களாலும் மைசூருக்கு வருவது எப்படி முடியும் போன்ற கேள்விகள் என் மனதில் எழுந்தன. எனது முனைவர் பட்ட ஆய்வுக் காலத்திலும் இந்த நிலையே நீடித்தது. எனது முனைவர் பட்ட ஆய்வேட்டை 2005-ல் நூலாக வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே கல்வெட்டுகள் 80 ஆண்டுகளைக் கடந்தும் பதிப்பிக்கப்படாததை அறிந்துகொண்டேன்.

எடுத்துக்காட்டாக, தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி எண் 26, 1976-78-ல் வெளியானது. இதன் அடுத்த தொகுதி எண் 27, 2001-ல்தான் வெளியானது. இடையில் 23 ஆண்டுகள் தமிழ்க் கல்வெட்டுப் படிகள் படிக்கப்படவில்லையா? பதிப்பிக்கப்படவில்லையா? தெரியவில்லை. இதுதான், ஜூன் 6, 2006-ல் ஜூனியர் விகடன் எடுத்த ஒரு முன்னெடுப்பு. ‘காவிரியும் போச்சு... கல்வெட்டும் போச்சு!’ என்ற செய்திக் கட்டுரையாக முதல் வடிவம் கொண்டது. பொதுவெளியில் இத்தகவல் முதன்முறையாகப் பரவியது. எனக்கு ஒரு ஆசுவாசம்.

இந்த விஷயம் அப்போதைய முதல்வரான கருணாநிதி கவனத்துக்குச் செல்ல, நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். மைசூர் அலுவலகத் தமிழ்க் கல்வெட்டுகளைத் தமிழகம் கொண்டுவரும் முயற்சியாகத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கி, பிறகு ரூ.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. நிதி, முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் அரசிடமே திரும்பியது. அப்போது மற்றொரு தகவலும் பரவியிருந்தது. திமுக இடம்பெற்ற ஐ.மு. கூட்டணி ஆட்சியின் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனிக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டதாகவும், முதல்வர் கருணாநிதி மைசூரின் கல்வெட்டுப் பிரிவை மீண்டும் தமிழ்நாட்டுக்கு மாற்றக் கோரியது ஏற்கப்படவில்லை என்றும் தெரிந்தது.

ஜனவரி 2013-ல் இப்பிரச்சினை ஜூனியர் விகடனில் மீண்டும் ஒரு கட்டுரையானது. இதே காலகட்டத்தில் தனிநபர்களுக்கும் மாணவர்களுக்கும் ஓய்வுபெற்ற கல்வெட்டியல் வரலாற்று ஆர்வலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு அலைபோல் தமிழ்நாட்டைப் பற்றிய வரலாற்று ஆர்வம் மேலோங்கியது. இக்காலத்தில் மரபு நடைப் பயணங்கள், வரலாற்றுச் சுற்றுலாக்கள் உருக்கொண்டன. பல உள்ளூர் வரலாற்று அமைப்புகள் தோன்றி, தினந்தோறும் தங்களது கண்டுபிடிப்புகளைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டன.

இதை ஊக்குவிக்கும் வகையில், கீழடியில் ஏஎஸ்ஐயின் அகழாய்வு தொடங்கியது. அங்கே ஒரு வரமாக வந்த அமர்நாத் ராமகிருஷ்ணன், வைகை நதிக்கரையில் அகழாய்வுக்கு உரிய இடங்களாக 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கண்டறிந்தார். இந்த அகழாய்வுக்கும் தடை ஏற்பட்டதால், நீதிமன்றம் வாயிலாகத் தடை நீக்கப்பட்டு, தமிழ்நாடு அரசே கீழடி அகழாய்வை மேற்கொள்ள வழி ஏற்பட்டது.

இதனிடையே, ஜனவரி 7, 2015-ல் ‘இந்து தமிழ்’ நாளேட்டில் கல்வெட்டுகளைப் பற்றி நான் அளித்த செய்தி வெளியானது. மேலும், கல்வெட்டுகளைத் தமிழகத்துக்குக் கொண்டுவர நீதிமன்றத்தின் வாசல் தட்டப்பட்டது. வழக்கறிஞர் மணிமாறன் தாக்கல்செய்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.துரைசாமி ஆகியோர் விசாரித்தனர். இவ்வழக்கில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ வாதிட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19-ல் மதுரையில் உள்ள சென்னை உயர் நீதிமன்றக் கிளையின் அமர்வு அளித்த தீர்ப்பு, மத்திய அரசின் கீழ் செயல்படும் ஏஎஸ்ஐயின் கல்வெட்டியல் பிரிவின் மைசூர் அலுவலக இயக்குநருக்கு இட்ட கட்டளையாக அமைந்தது.

இனிதான் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏஎஸ்ஐ தனது உத்தரவில் சொல்லியிருக்கும் இரண்டு செய்தியும் ஆழ்ந்து படிக்க வேண்டியவை. ஒன்று, ஏற்கெனவே சென்னையில் இயங்கிவரும் கிளை அலுவலகத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக, மைசூர் அலுவலகத்தில் இருக்கும் இயக்குநர் தமிழ்க் கல்வெட்டு மைப் படிவங்களையும் அதைச் சார்ந்த ஆவணங்களையும் சென்னை ஏஎஸ்ஐ கிளைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்பதாகும்.

கல்வெட்டியல் பிரிவு முதன்முதலாக பெங்களூரூவில் 1886-ல் தொடங்கப்பட்டது. பிறகு, கல்வெட்டுப் படிகளின் பாதுகாப்பு கருதி 1903-ல் ஊட்டிக்கு மாற்றப்பட்டது. பிறகு, 1966-ல் மீண்டும் மைசூருக்கு இப்பிரிவு சென்றது. இதற்கு இரண்டு கிளைகள் 1990-ல் உத்தர பிரதேசம் ஜான்சியிலும் சென்னையிலும் அமைக்கப்பட்டன. இதில், ஜான்சியின் கிளை தற்போது உபியின் தலைநகரான லக்னோவில் செயல்படுகிறது. கடந்த 2008-ல் மைசூரிலேயே புதிய கட்டிடத்துக்குக் கல்வெட்டுப் பிரிவு மாற்றப்பட்டது. அப்போது தமிழ்க் கல்வெட்டுகளின் பல படிகள் சேதமாகித் தூக்கி எறியப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. எனவே, தற்போது மைசூரிலிருந்து சென்னைக்கு வரும் படிகளைப் பத்திரமாக சென்னைக்குக் கொண்டுவருவதை உறுதிப்படுத்துவது அவசியம்.

சென்னையில் இயங்கும் தொல்லியல் துறை கிளை நிறுவனத்துக்கும் தமிழ்நாடு அரசிற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. மைசூரில் இருந்தாலும் சென்னையில் இருந்தாலும் மத்திய அரசின் கீழ் இயங்கும் அதே ஏஎஸ்ஐயின் கைவசம்தான் இருக்கும். இந்தச் செய்தியை நாம் ஆழமாக மனதில் பதித்து வைத்துக்கொள்ள வேண்டும். உயர் நீதிமன்றத் தீர்ப்பால் நிச்சயிக்கப்பட்ட பலன் என்னவென்றால், கல்வெட்டுகளைத் தேடி மைசூர் செல்லத் தேவையில்லை, சென்னைக்குச் சென்றால் போதும் என்பதே.

ஆகவே, இதில் நாம் பெரிதும் மகிழ்வதற்குப் போதுமான வெற்றி இருப்பதாக எனது பார்வையில் தெரியவில்லை. வெற்று இடமாற்றம் மட்டுமே இதில் குறிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்க் கல்வெட்டுகளைப் படிக்கக் கல்வெட்டியலர்களை அமர்த்துதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளையும் மேற்கொள்வது அவசியம். அப்படி நடவடிக்கைகள் மேற்கொண்டு அனைத்துத் தமிழ்க் கல்வெட்டுகளும் பதிப்பிக்கப்பட்டால், அதன் பின் செய்யப்படும் ஆய்வுகளால் சர்வதேச அளவில் தமிழர்களின் வரலாறு அதிக முக்கியத்துவம் பெறுவது நமக்குப் பெருமை அல்லவா?

- எஸ்.சாந்தினிபீ, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர், ‘கல்வெட்டுகளில் தேவதாசி’ நூலாசிரியர். தொடர்புக்கு: chandnibi@gmail.com



Read in source website

அண்மையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் மயக்கமாகிவிட்டதாக என்னிடம் அழைத்துவரப்பட்டான். விசாரணையில், அவன் ஒருவித போதைப் பாக்குக்கு அடிமையாகியிருப்பது தெரிந்தது. அடுத்ததாக, பத்தாம் வகுப்பு வரை படிப்பில் படுசுட்டியாக இருந்த மாணவி, பதினொன்றாம் வகுப்புத் தேர்வுகளில் பின்தங்கிவிட்டாள் என்ற புகாரோடு வந்தபோது, அவளுக்கும் போதைப் பழக்கம் இருப்பது தெரியவந்தது. இவ்விரு களநிலவரங்களையும் உறுதிசெய்கின்றன தேசிய ஆய்வுகள்.

‘தேசிய போதைப் பழக்க உளவியல் கழகம்’ (Addiction Psychiatry Society of India) புதுடெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையோடு இணைந்து, டிசம்பர் 10, 11 தேதிகளில், ‘போதைப் பழக்கம் – 2021’ எனும் தேசிய மாநாட்டை நடத்தியது. அப்போது விவாதிக்கப்பட்ட களநிலவரங்களில், 2020-ம் ஆண்டு பொதுமுடக்கக் காலத்தில் ஏற்பட்ட தனிமை, வறுமை, குடும்ப வன்முறை, பாலியல் தொந்தரவு போன்றவற்றால், போதைப்பொருள் நுகர்வோர் பதிவுகள் 2021-ல் கூடுதலாகியுள்ளன என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட மற்றோர் ஆய்வில், கடந்த 20 ஆண்டுகளில் போதைக்கு அடிமையாகும் இந்தியச் சிறாரின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் மதுவாலும் அது தொடர்பான பிரச்சினைகளாலும் ஆண்டுக்கு 30 லட்சம் பேரும் நிமிடத்துக்கு 6 பேரும் இறப்பைச் சந்திக்கின்றனர். தமிழ்நாட்டில் 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்கள். இவர்களில் 75% பேர் ஆண்கள்; 25% பேர் பெண்கள். சென்னை உள்ளிட்ட 3 மாவட்ட பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட மற்றொரு களஆய்வில் 9% பேருக்கு மது, கஞ்சா, போதைப் பாக்கு போன்றவற்றின் பழக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.

சமூக ஆர்வலர்களின் கவலை

ஆண், பெண், சிறார், பெரியோர் எனப் பாகுபாடில்லாமல் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிப்போனவர்கள் தங்கள் உடல்நலனைக் கெடுத்துக்கொள்வதோடு, மனநலனையும் தொலைத்து, நிரந்த நோயாளிகளாகிவிடுவதை நடைமுறையில் காண்கிறோம். மேலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையைச் சீரழித்துக்கொள்வதோடு, குடும்பத்தில் அனைவரின் மகிழ்ச்சியையும் சூறையாடிவிடுகின்றனர்; குடும்பத்தின் பொருளாதாரம் கரைந்து கடனாளியாகிவிடுகின்றனர்.

இந்தப் பழக்கம் நீடிக்கும்போது அவர்கள் உயிருக்கும் உத்தரவாதமில்லை. தற்கொலைக்கான காரணங்களில் போதைப் பழக்கம் முக்கியமானது. அதிலும் பள்ளிப் பருவத்திலேயே தொடங்கிவிடும் இந்தப் பழக்கம், அவர்களோடு இணைந்த இளைய சமூகத்தையும் நாசமாக்கிவிடுகிறது; வருங்கால இந்தியாவின் மனித வளம் விரயமாகிவிடுகிறது. ஏதோ ஓர் ஆர்வக் கோளாறாலும், சேரக்கூடாத நண்பர்களின் சேர்க்கையாலும், சில இச்சைகளாலும் தூண்டப்பட்டு இந்தக் கொடூரப் பழக்கத்திலிருந்து மீள முடியாமல் ஆயிரக்கணக்கான சிறார் திணறுகின்றனர். அவர்களை மீட்டெடுக்கும் வழி தெரியாமல் நிறைய பெற்றோர் பரிதவிக்கின்றனர். இந்தக் கொடுமைக்கு எப்போது தீர்வு என்பதுதான் சமூக ஆர்வலர்களின் பெருங்கவலை.

சமூகத்தின் குறைபாடுகள்

போதைப் பழக்கத்துக்குப் பொதுச்சமூகம்தான் இடம் கொடுக்கிறது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு சிகரெட், மது, புகையிலை எல்லாமே எல்லா வயதினருக்கும் எளிதாகக் கிடைத்துவிடுகின்றன. அரசின் சட்டவிதிகளின்படி சில கட்டுப்பாடுகள் இருந்தாலும், அவை முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. பொதுஇடத்தில் சிகரெட் பிடிக்கக் கூடாது என்கிறது சட்டம். ஆனால், நாட்டில் தெருவுக்குத் தெரு சிகரெட் புகைப்பவர்களை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 18 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்குப் புகையிலைப் பொருட்களை விற்கக் கூடாது.

இதுவும் சட்டவிதிதான். ஆனால், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் சிறார் கஞ்சா புகைப்பதைக் கேள்விப்படுகிறோம். சட்டப்படி, போதைப்பொருட்களை விளம்பரப்படுத்தக் கூடாது. ஆனால், அது ஏட்டளவில்தான் உள்ளது. தவிரவும், திருமணம், மரணம், பிறந்தநாள், பிரிவு உபசாரம், வார இறுதிச் சந்திப்பு என எல்லா கூடுகைகளிலும் மது உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது இப்போது இயல்பாகிவிட்டது. கரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைத் திறம்படச் சமாளித்த தற்போதைய மாநில அரசுகூட ‘மது விற்பனையைத் தடை செய்தால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்’ என்ற கருத்தில் மதுக் கடைகளை மூட யோசிக்கிறது. இம்மாதிரியான சமூகக் குறைபாடுகள் போதைப் பழக்கத்துக்குப் பாதை காட்டுகின்றன என்பதுதான் எதார்த்தம்.

பெற்றோர் கடமை

போதைப் பழக்கத்தால் ஏற்படும் கெடுதல்கள் சிறாருக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை; பெற்றோர்தான் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். பெற்றோர்தான் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு முன்பாக சிகரெட் புகைப்பதையும் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் எதிரில் பெற்றோர் சண்டை போடக் கூடாது. போதைப் பழக்கம் உள்ள பிள்ளைகளைத் திட்டுவது, அடிப்பது, குற்றம்சாட்டுவது, மற்றவர்களோடு ஒப்பிடுவது போன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கு வெறுப்புணர்வைத் தூண்டுமே தவிர, மனம் திருந்த உதவாது. வீட்டிலும் சமூகத்திலும் புறக்கணிக்கப்படும் பிள்ளைகள்தான் எளிதில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதோடு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற வன்முறைகளில் ஈடுபடவும் துணிகின்றனர்.

ஆகவே, பிள்ளைகளைப் புறக்கணிக்கக் கூடாது. மாறாக, மனம்விட்டுப் பேச வேண்டும். அவர்களுடன் போதிய நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதும், வீட்டில் அவர்களைக் கண்காணிக்க வேண்டியதும் மிக அவசியம். அவர்கள் ஆர்வம் காட்டும் திறமைகளை வளர்த்தால் போதைமனம் திசை மாறும். அவர்களைப் போதைக் குழிக்குள் தள்ளிய ‘சூத்திரதாரி’யைக் களைந்தால் திருந்தும் வாய்ப்பு கைகூடும். கடைசி இரண்டு நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பாலமாக இருந்து உதவ வேண்டியது முக்கியம். சிறாரிடம் போதைப் பழக்கம் இருப்பது தெரிந்தால், உடனடியாக மனநல மருத்துவரின் ஆலோசனையைப் பெறவேண்டியது மிக முக்கியம்.

அரசு என்ன செய்யலாம்?

மாநிலத்தில் போதைப்பொருட்கள் விற்பனை, கடத்தல், பதுக்கல் போன்றவற்றைக் கண்டறிந்தாலும், பெரும்பாலான மேல்நடவடிக்கைகள் கண்துடைப்பாகத்தான் இருக்கின்றன. சமூகத்தின் இந்தப் பொதுவான கண்ணோட்டத்தை மாற்ற வேண்டிய கடமை காவல் துறையினருக்கு இருக்கிறது. அவர்கள் சமூகப் பொறுப்புடன் சரியான நடவடிக்கைகளைக் காலத்தோடு மேற்கொண்டால், நம் இளைய தலைமுறையை நிச்சயம் காப்பாற்றலாம்.

“சிறாரின் போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த போதைத் தடுப்பு மையங்கள் அமைக்கப்படும்” என்ற மாநில அரசின் அறிவிப்பை மாவட்ட அளவில் உடனடியாக அமல்படுத்துவதும், அங்கு போதிய மனநல மருத்துவர்களை நியமிப்பதும் அவசரமான அவசியம். உயர்நிலைப் பள்ளிகளில் வருகைதரு மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்படுவதைக் கட்டாயமாக்கினால், மாணவர்கள் போதையின் பிடியில் சிக்குவதை ஆரம்பத்திலேயே தடுக்கலாம். அரசு பொருளாதார வல்லுநர்களிடம் ஆலோசித்து, மாநிலத்தில் மது விற்பனைக்கு மூடுவிழா நடத்த முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லாவிட்டால், பல்லாயிரக்கணக்கான சிறாரின் எதிர்காலம் சிதைந்துவிடும்.

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com



Read in source website