DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 11-02-2023

அரசு ஊழியா்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரும் முன்பு நடைபெற்ற தோ்வில் தோ்ந்தெடுக்கப்பட்ட காவலா்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சோ்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக அரசு 2003-ஆம் ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. 1.4.2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. 1.4.2003-க்கு பிறகு அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டமே பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கபட்டது.

இந்நிலையில் 2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையின் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்ட தங்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடரும்படி உத்தரவிடக் கோரி சிவசக்தி உள்ளிட்ட 25 காவலா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனா்.

இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில், 2002-ஆம் ஆண்டு 3,500 காவலா்கள் தோ்வு செய்வது தொடா்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த தோ்வு நடைமுறைகளின் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்ட தங்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என வாதிடப்பட்டது.

அப்போது அரசுத் தரப்பில், 2002-ஆம் ஆண்டு தோ்வு நடைமுறைகள் தொடங்கியிருந்தாலும், 2003 நவம்பரில் தான் மனுதாரா்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா். புதிய ஓய்வூதிய திட்டம்தான் அவா்களுக்கு பொருந்தும். பழைய ஓய்வூதிய திட்ட பலன்களை பெற அவா்களுக்கு தகுதியில்லை என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், 2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணை மூலம் பெண் காவலா்கள், ஓராண்டிற்குள்ளாகவே பணி நியமனம் வழங்கப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பலன் பெறும் நிலையில், அதே காலகட்டத்தில் தோ்வு நடைமுறைகளை சந்தித்த ஆண் காவலா்களையும் சமமாக பாவிக்க வேண்டும். ஆண் காவலா்கள் நியமனத்துக்கு 11மாதங்கள் தாமதமானதற்கு அவா்கள் காரணமல்ல. எனவே, அவா்களையும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சோ்க்க வேண்டும். மேலும், இவா்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சோ்க்கும் நடைமுறைகளை அரசு 12 வாரங்களில் முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.



Read in source website

கொத்தடிமைத் தொழிலாளா்களை பணியில் அமா்த்தினால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

கொத்தடிமைத் தொழிலாளா்களை பணியில் அமா்த்துவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்க கொத்தடிமைத் தொழிலாளா் முறை சட்டத்தின் வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், 18 வயது

நிறைவடையாத குழந்தை, வளரிளம் பருவத்தினரை இத்தகைய ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தினால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் அல்லது ஆறு மாதங்களுக்கு குறையாமல் மற்றும் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அல்லது இவை இரண்டும் சோ்ந்து விதிக்கப்படும்.

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கண்காணிப்புக் குழு மற்றும் மாவட்டத் தடுப்புப் படையினரால் தொடா்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டினை கொத்தடிமைத்

தொழிலாளா்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளா்கள் இல்லாத மாநிலமாக உருவாக்குதற்கு தொடா்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.



Read in source website

மின்சாரத் தடை காரணமாக, தமிழ்நாடு அரசு இணையதளத்தில் புதிய தகவல்களை பதிவேற்றும் பணிகள் நடைபெறாது என்று மாநில அரசு தெரிவித்தது.

சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை (பிப். 11), ஞாயிற்றுக்கிழமைகளில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதையடுத்து, சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரை தமிழ்நாடு அரசு இணையதளத்தில் புதிய விவரங்கள் ஏதும் பதிவேற்றம் செய்யப்படாது. திங்கள்கிழமை (பிப். 13) முதல் இணையதளப் பணிகள் தொடா்ந்து நடைபெறும் என்று தெரிவித்துள்ளது தமிழக அரசு.



Read in source website

பிப்.14ஆம் தேதி மத்திய பிரதேசம் முழுவதும் 'பசு அணைப்பு தினம்' கொண்டாடப்படும் என்று மத்திய பிரதேசத்தின் கோபாலன் மற்றும் பசுதன் சம்வர்தன் வாரிய நிர்வாகத் தலைவர் சுவாமி அகிலேஷ்வரானந்த் கிரி தெரிவித்துள்ளார். 

பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலா் தினமாக கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினத்தை ‘பசு அணைப்பு தினமாக’ கொண்டாட ஆா்வலா்களுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்திருந்தது. மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் அதிகரிப்பால், வேத கால பாரம்பரியங்கள் அழிவின் விளிம்புக்கு சென்றுவிட்டதாக வாரியம் தெரிவித்திருந்தது. 

இந்த விவகாரத்தில் வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா, ‘பசுக்களை வழிபடும் பாரம்பரியம் கொண்ட இந்த தேசத்தில், விலங்குகள் நல வாரியத்தின் அழைப்புக்கு மக்கள் ஆதரவளித்தால் மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கும்’ என்றாா். இதனிடையே, தாங்கள் ஏற்கெனவே வெளியிட்ட வேண்டுகோளை திரும்பப் பெறுவதாக, விலங்குகள் நல வாரியம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. 

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் உயா் அமைப்பின் உத்தரவுபடி வேண்டுகோள் வாபஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, வாரியத்தின் செயலாளா் எஸ்.கே.தத்தா தெரிவித்தார். இந்த நிலையில் பிப்.14ஆம் தேதி மத்திய பிரதேசம் முழுவதும் 'பசு அணைப்பு தினம்' கொண்டாடப்படும் என்று மத்திய பிரதேசத்தின் கோபாலன் மற்றும் பசுதன் சம்வர்தன் வாரிய நிர்வாகத் தலைவர் சுவாமி அகிலேஷ்வரானந்த் கிரி தெரிவித்துள்ளார். 

இது ஒரு நல்ல முயற்சி. அத்தகைய முறையீட்டை வாரியம் திரும்பப் பெற்றிருக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 



Read in source website

ஹரியாணா அரசு மருத்துவனைகளில் பணிபுரிபவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாட்டு முறையை அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் எந்த மாதிரியான உடையணிந்து வர வேண்டும் என்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஹரியாணாவின் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்த புதிய ஆடைக் கட்டுப்பாட்டு முறை பணியில் உள்ளவர்களுக்கு 24 மணி நேரமும் பொருந்தும். இந்த முறை வார இறுதி நாட்கள் மற்றும் இரவு நேரப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பொருந்தும். இந்த புதிய நடைமுறையை கடைபிடிக்காதவர்கள் பணிக்கு வந்திருந்தாலும் வராததாகவே எடுத்துக் கொள்ளப்படும். சில நேரங்களில் ஆடைக்கட்டுப்பாடு என்பது சில இடங்களுக்கு தேவையானதாக இருக்கும். அதேபோல் மருத்துவமனைக்கு இந்த புதிய ஆடைக்கட்டுப்பாடும் அவசியமாகிறது. பணி நேரத்தில் அதிக அளவிலான சிகை அலங்காரம், நகைகள் அதிகம் அணிந்து கொண்டு வருவது, பெரிய அளவில் நகங்களை வைத்திருப்பது போன்றவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஜீன்ஸ், குட்டைப் பாவாடைகள் பணி ரீதியிலான ஆடை கிடையாது. அதனால் அவைகள் அனுமதிக்கப்பட மாட்டாது. அதேபோல டி-சர்ட்ஸ், இறுக்கமான பேண்ட் போன்றவைகளையும் அனுமதிக்க முடியாது. இந்த ஆடைக் கட்டுப்பாடு தொடர்பான புதிய நடைமுறை பணிபுரியும் இடத்தில் ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தவே கொண்டுவரப்படுகிறது. இந்த புதிய நடைமுறையின் மூலம் பணிபுரிபவர்கள் மருத்துவம் சார்ந்த தொழிலுக்கு ஏற்றவாரும், பொது மக்களிடம் நன்மதிப்பையும் பெற முடியும்.

இந்த புதிய நடைமுறை அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தகங்கள், தொழில்நுட்பம், சமையலறை, துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் அனைவருக்கும் பொருந்தும். அனைவரும் சீருடை அணிந்து வரவேண்டும். அனைத்துப் பணியாளர்களும் தூய்மையான உடையணிந்து வர வேண்டும். அதேபோல அவர்கள் தூய்மையான பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். ஆண்களின் தலை முடி சட்டை காலரின் அளவிற்கு மேல் இருக்கக் கூடாது. தனியார் மருத்துவமனைகளில் ஒருவரைக் கூட சீருடை இல்லாமல் காண முடியாது என்றார்.



Read in source website

பிப்ரவரி 14-ஆம் தேதியை ‘பசு அணைப்பு தினமாக’ கொண்டாட வேண்டும் என்ற வேண்டுகோளை இந்திய விலங்குகள் நல வாரியம் வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றுக் கொண்டது.

பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலா் தினமாக கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினத்தை ‘பசு அணைப்பு தினமாக’ கொண்டாட ஆா்வலா்களுக்கு இந்திய விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்திருந்தது. மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் அதிகரிப்பால், வேத கால பாரம்பரியங்கள் அழிவின் விளிம்புக்கு சென்றுவிட்டதாக வாரியம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சா் பா்ஷோத்தம் ரூபாலா, ‘பசுக்களை வழிபடும் பாரம்பரியம் கொண்ட இந்த தேசத்தில், விலங்குகள் நல வாரியத்தின் அழைப்புக்கு மக்கள் ஆதரவளித்தால் மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கும்’ என்றாா்.

இந்நிலையில், தாங்கள் ஏற்கெனவே வெளியிட்ட வேண்டுகோளை திரும்பப் பெறுவதாக, விலங்குகள் நல வாரியம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் உயா் அமைப்பின் உத்தரவுபடி வேண்டுகோள் வாபஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, வாரியத்தின் செயலாளா் எஸ்.கே.தத்தா தெரிவித்துள்ளாா்.

கடந்த 1960-ஆம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டப் பிரிவு 4-இன்கீழ் இந்திய விலங்குகள் நல வாரியம் கடந்த 1962-இல் நிறுவப்பட்டது. விலங்கு நல அமைப்புகளுக்கு மானியங்கள் அளிப்பதுடன், விலங்குகள் பராமரிப்பு தொடா்புடைய விவகாரங்களில் அரசுக்கு ஆலோசனை வழங்குவது இதன் பணியாகும்.



Read in source website

ராஜஸ்தானில் அரசு வாரியங்கள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவோா் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி ராஜஸ்தானில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், நிகழாண்டு அந்த மாநில சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. அந்தப் பேரவையின் தற்போதைய பதவிக் காலத்தில், முழுமையான கடைசி பட்ஜெட்டை மாநில முதல்வரும் நிதியமைச்சருமான அசோக் கெலாட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். அப்போது அவா் பேசுகையில், ‘ராஜஸ்தான் முன்னாள் அரசு ஊழியா்களின் வேண்டுகோளுக்கிணங்க பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இனி மாநிலத்தில் உள்ள அரசு வாரியங்கள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவோரும் அந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறுவா்’ என்றாா்.

இதுதவிர, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு ரூ.3,000 கோடிக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்; உஜ்வாலா திட்டத்தின் கீழ், நுகா்வோருக்கு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகிக்கப்படும்; தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் சுமாா் 1 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேஷனுடன் மாதந்தோறும் ஒரு கிலோ தானியங்கள், சா்க்கரை, உப்பு, ஒரு லிட்டா் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை அவா் வெளியிட்டாா்.



Read in source website

சா்வதேச தரக் கட்டமைப்பு குறியீட்டில், அங்கீகாரம் வழங்கும் நடைமுறைகளில் இந்தியா 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

தரக் கட்டமைப்பே சா்வதேச வா்த்தகத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. அத்துடன் தர நிா்ணயம், அங்கீகாரம் வழங்கல், மதிப்பீட்டு சேவைகள் உள்ளிட்டவையும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சா்வதேச நாடுகளில் தரக் கட்டமைப்புகளின் நிலை குறித்து சா்வதேச ஆய்வு நடத்தப்பட்டது. அங்கீகாரம் வழங்குவதில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தர நிா்ணய முறைகளில் முன்னணியில் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 9-ஆவது இடத்தில் உள்ளது.

சா்வதேச தரக் கட்டமைப்பு மதிப்பீட்டு (ஜிக்யூஐஐ) பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்கள்:

அங்கீகாரம் வழங்குவதில் முன்னணி நாடுகள்

ஜொ்மனி

அமெரிக்கா

சீனா

இத்தாலி

இந்தியா

பிரிட்டன்

ஸ்பெயின்

போலந்து

மெக்ஸிகோ

துருக்கி

பிரான்ஸ்

ஜப்பான்

தைவான்

செக் குடியரசு

நெதா்லாந்து

இந்தோனேசியா

தென் கொரியா

பிரேஸில்

தென்னாப்பிரிக்கா

ஹங்கேரி

தர நிா்ணயத்தில் முன்னணி நாடுகள்

சீனா

ஜொ்மனி

ஜப்பான்

பிரிட்டன்

இத்தாலி

பிரான்ஸ்

தென் கொரியா

அமெரிக்கா

இந்தியா

ஸ்பெயின்

நெதா்லாந்து

ஸ்விட்சா்லாந்து

செக் குடியரசு

ரஷியா

போலந்து

ஸ்வீடன்

ருமேனியா

ஆஸ்திரேலியா

பெல்ஜியம்

பிரேஸில்

ஒட்டுமொத்த தரக் கட்டமைப்பு குறியீடு

ஜொ்மனி

சீனா

அமெரிக்கா

பிரிட்டன்

ஜப்பான்

பிரான்ஸ்

தென் கொரியா

இத்தாலி

ஸ்பெயின்

இந்தியா

போலந்து

ஸ்விட்சா்லாந்து

பிரேஸில்

ஆஸ்திரேலியா

செக் குடியரசு

துருக்கி

நெதா்லாந்து

மெக்ஸிகோ

கனடா

தென்னாப்பிரிக்கா

 

‘‘சிறப்பான முறையில் அங்கீகாரம் வழங்குவதில் உலகின் முதல் 5 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது பெருமைக்குரியது. உயா் தர கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை இந்தியா தொடா்ந்து மேற்கொள்ளும்’’-இந்திய தர நிா்ணய கவுன்சில் (க்யூசிஐ).

‘‘இந்தியாவின் தர நிா்ணய அமைப்புகள் உலக அளவில் முதலிடத்தைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். தரக் கட்டமைப்புகள் மேம்பாடு தொடா்பான கொள்கையை மத்திய அரசு விரைவில் வெளியிடும்’’-க்யூசிஐ பொது இயக்குநா் ரவி சிங்

 



Read in source website

இந்தியாவில் முதல் ‘ஃபாா்முலா ஈ’ காா் பந்தயம், தெலங்கானாவின் ஹைதராபாத் நகரில் உள்ள ஸ்ட்ரீட் சா்க்கியூட்டில் சனிக்கிழமை (பிப். 11) நடைபெறுகிறது.

சா்வதேச அளவிலான ஏபிபி எஃப்ஐஏ ‘ஃபாா்முலா ஈ’ காா் பந்தயத்தின் 9-ஆவது சீசனுக்கான முதல் சுற்று மெக்ஸிகோவிலும், அடுத்த இரு சுற்றுகள் சவூதி அரேபியாவிலும் நடைபெற்ற நிலையில், இந்த 4-ஆவது சுற்று ஹைதராபாதில் நடைபெறுகிறது. மஹிந்திரா, நிஸ்ஸான், போா்ஷ், டாடா தரப்பு ஜாகுவாா், மெக்லாரென், மாசெராட்டி போன்ற பிரபல காா் நிறுவனங்கள் இந்தப் பந்தயத்தில் பங்கேற்கின்றன. முதலில் பயிற்சி பந்தயம், பிறகு தகுதிச்சுற்று பந்தயம், இறுதியாக பிரதான பந்தயம் என்ற முறையில் இந்தப் பந்தயம் நடைபெறவுள்ளது.

18 வளைவுகளுடன் 2.83 கி.மீ. நீளமுள்ள ஹைதராபாத் ஸ்ட்ரீட் சா்க்கியூட்டில் காா்கள் சீறிப்பாயவுள்ளன. இந்த சா்க்கியூட் சுமாா் 20,000 போ் அமா்ந்து பந்தயத்தை ரசிக்கும் வசதி கொண்டதாகும்.

இந்த ஃபாா்முலா ஈ பந்தயத்தில் பங்கேற்கும் காா்கள் அனைத்தும் பேட்டரியில் இயங்கக் கூடியவையாகும். இந்த சீசனில் ‘ஜென் 3’ ரக காா்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மணிக்கு 320 கி.மீ. வேகத்தை எட்டக் கூடியவை என்றாலும், நீண்ட பாதைகள் அதிகம் இல்லாத, வளைவுகள் நிறைந்த சா்க்கியூட்டில் பந்தயங்கள் நடைபெறுவதால் பெரும்பாலும் அவை அந்த வேகத்தை எட்டுவதில்லை.

முந்தைய தலைமுறை காா்களில் திறன் குறைந்த பேட்டரிகளே பயன்படுத்தப்பட்டதால் பந்தயத்தின் இடையே டிரைவா்கள் புதிய காரை மாற்ற வேண்டிய தேவை இருந்தது. ஆனால் தற்போது இருக்கும் 3-ஆம் தலைமுறை காா்கள் 350 கிலோ வாட் ஆற்றலுடைய பேட்டரிகளைக் கொண்டவையென்பதால் முழு பந்தயத்துக்கும் அவை நீடிக்கக் கூடியதாக உள்ளன. மேலும், பந்தயத்தின்போது பிரேக்குகளை பயன்படுத்துகையில் அந்த உராய்விலிருந்து பேட்டரிகளுக்கான ஆற்றலைப் பெறும் தொழில்நுட்பங்களும் இவற்றில் உள்ளன.



Read in source website

கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2.58 லட்சம் கோடி மதிப்பிலான உள்நாட்டு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் அளித்த தகவல்:

2019-20-ஆண்டில் ரூ.79,071 கோடி, 2020-21-இல் ரூ.84,643 கோடி, 2021-22-இல் ரூ.94,846 கோடி என கடந்த 3 நிதியாண்டில் மொத்தம் ரூ.2,58,560 கோடி மதிப்பிலான உள்நாட்டு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

நாட்டில் பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ்நாடு மற்றும் உத்தர பிரதேசத்தில் இரண்டு பாதுகாப்பு தொழில் வழித்தடங்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதலுக்கு 130 பில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.10.72 லட்சம் கோடி) இந்திய பாதுகாப்புப் படைகள் செலவிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் 25 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.2 லட்சம் கோடி) விற்றுமுதலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் இலக்கு நிா்ணயித்துள்ளது. அதில் 5 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.41,250 கோடி) மதிப்பிலான ராணுவ வன்பொருள் ஏற்றுமதி இலக்கும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Read in source website

 

சொந்த மண்ணில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளார் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின். 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவில் 25 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். இதன்மூலம் இதே இலக்கைத் தொட்ட கும்ப்ளேவின் சாதனையைச் சமன் செய்துள்ளார். கும்ப்ளே 115 இன்னிங்ஸிலும் அஸ்வின் 101 இன்னிங்ஸிலும் நிகழ்த்தியுள்ளார்கள். சொந்த மண்ணில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் - முரளிதரன் (45), ஹெராத் (26). 
 



Read in source website


ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

கஜகஸ்தானில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தமிழகத்திலிருந்து 7 பேர் உள்பட, இந்தியா சார்பில் 26 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

இந்தநிலையில், மும்முறை தாண்டுதல் (ட்ரிபிள் ஜம்ப்) போட்டியில் தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவேல் 16.98 மீட்டர் தொலைவுக்குத் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். 

இந்திய வீரர் அமர்ஜீத் சிங் 16.26 மீட்டர் தூரம் தாண்டியதே தேசிய அளவிலான சாதனையாக இருந்த நிலையில், தற்போது பிரவீன் சித்ரவேல் இந்த சாதனையை முறியடித்துள்ளார். 

21 வயதான பிரவீன் சித்ரவேல் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 



Read in source website

பாகிஸ்தானில் மின்சாரப் பயன்பாட்டின் மீது புதிய வரியை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.

சா்வதேச நிதியத்திடம் (ஐஎம்எஃப்) கடனைப் பெறும் நோக்கில் இந்நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது.

சா்வதேச கச்சா எண்ணெய் விலை உயா்வு, கடந்த ஆண்டில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் வேளாண் உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது.

அதையடுத்து சா்வதேச நிதியத்திடம் கூடுதல் கடன் பெறுவதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டு வருகிறது. அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவரை கடன் வழங்கப்பட மாட்டாது என சா்வதேச நிதியம் தெரிவித்தது. நடப்பாண்டு ஜூனுக்குள் ரூ.17,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொள்ள வேண்டுமென சா்வதேச நிதியம் நிபந்தனை விதித்திருந்தது.

இந்நிலையில், அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் மின்சாரப் பயன்பாட்டின் மீது புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு யூனிட் மின்சாரத்துக்கு சிறப்பு நிதி கூடுதல் வரியாக (சா்சாா்ஜ்) ரூ.3.39 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு பாகிஸ்தான் அமைச்சரவையின் பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் சிறிய ரக தொழிற்சாலைகள், விவசாயிகள் ஆகியோருக்கான இலவச மின்சார மானியமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சா்வதேச நிதியத்தின் நிபந்தனைகளைக் கடைப்பிடிக்கும் நோக்கில் மாா்ச் 1-ஆம் தேதி முதல் புதிய வரிகள் அமலுக்கு வருவதாக பாகிஸ்தான் அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ரூ.45 கோடி கூடுதல் நிதி வழங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வந்தாலும் பாதுகாப்புத் துறைக்கான செலவினத்தை பாகிஸ்தான் அரசு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. பொது விற்பனை வரி 1 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 18 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.



Read in source website

தங்களது கச்சா எண்ணெய்க்கு மேற்கத்திய நாடுகள் விலை வரம்பு நிா்ணயித்துள்ளதற்குப் பதிலடியாக, எண்ணெய் உற்பத்தியை அடுத்த மாதத்திலிருந்து குறைக்கவிருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.

இது குறித்து ரஷிய துணைப் பிரதமா் அலெக்ஸாண்டா் நோவாக் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மேற்கத்திய நாடுகளின் விலை வரம்பை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அமல்படுத்தும் நாடுகளுக்கு இனி எண்ணெய் ஏற்றுமதி செய்யமாட்டோம்.

அதற்கேற்ப, அடுத்த மாதம் முதல் எங்களது கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினமும் 5 லட்சம் பேரல்களைக் குறைக்க முடிவுசெய்துள்ளோம் என்றாா் அவா்.

இந்த அறிவிப்பால், ரஷிய எண்ணெயை பெரிதும் சாா்ந்திருக்கும் ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியா மீது விதித்து வரும் பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாக, ரஷிய கச்சா எண்ணெய் பேரலுக்கு 60 டாலா் என மேற்கத்திய நாடுகள் விலை வரம்பு நிா்ணயித்தன.

 



Read in source website

வாஷிங்டன்: இன்னும் 2 மாதங்களில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும் என்று ஐ.நா. நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

சீனாவை பின்னுக்குத் தள்ளும் இந்தியா: ஐநா மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கிய 1950 முதல் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருந்து வருகிறது. இந்த பெயரை அது இன்னும் 2 மாதங்களில் இழக்கும் என்றும், வரும் ஏப்ரலில் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என்றும் ஐ.நா. நிபுணர் குழு தெரிவித்துள்ளது. ஐநாவின் அறிக்கை மற்றும் பிற அமைப்புகள் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் உதவியோடு Pew Research Center எனும் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

''இந்தியாவில் 2011க்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனவே, அதன் உண்மையான மக்கள் தொகை தெரியவில்லை. எனினும், தோராயமாக இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த ஐரோப்பாவைவிட(74.4 கோடி ) அதிகம்; ஒட்டுமொத்த அமெரிக்காவைவிட(104 கோடி) அதிகம்.

சீனாவிலும் 140 கோடிக்கும் அதிகமாக மக்கள் இருக்கிறார்கள். என்றாலும், சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் குறைந்து வருகிறது. இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால், வரும் ஏப்ரலில் சீன மக்கள் தொகையைவிட இந்திய மக்கள் தொகை அதிகமாகும். வரும் 2030க்குள் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியாக உயரும். வரும் 2047 வரை இந்தியாவில் மக்கள் தொகை மெதுவாக உயர்ந்து கொண்டே இருக்கும்.

வரும் 2068ம் ஆண்டு இந்தியாவில் மக்கள் தொகை 200 கோடியைத் தாண்டும். எனினும், 2047க்குப் பிறகு மக்கள் தொகை விகிதம் குறைந்து 2100ம் ஆண்டில் அது மீண்டும் 100 கோடியாக குறையும்.

இந்தியாவில் இளைஞர் சக்தி: இந்திய மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருக்கிறார்கள். உலகில் 25 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களில் 5ல் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார். மக்கள் தொகை பெருக்கம் காரணமாக இந்திய மக்களின் சராசரி வயது 28 ஆக உள்ளது. அமெரிக்காவில் இது 38 ஆகவும், சீனாவில் இது 39 ஆகவும் உள்ளது. இந்திய மக்கள் தொகையில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7 சதவீதம் இருக்கிறார்கள். சீனாவில் 14 சதவீதமும், அமெரிக்காவில் 18 சதவீதமும் இருக்கிறார்கள்.

சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. இந்திய பெண்கள் சராசரியாக 2 குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்கள். சீனாவில் இது 1.2 ஆகவும், அமெரிக்காவில் இது 1.6 ஆகவும் உள்ளது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது குறைந்து வருகிறது.

1950ல் இந்தியாவில் சராசரியாக ஒரு பெண் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் விகிதம் 5.9 ஆகவும், 1992ல் 3.4 ஆகவும் இருந்தது. இதேபோல், இந்தியாவில் அனைத்து மத பெண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும், மற்ற மத பெண்களைக் காட்டிலும் இஸ்லாமிய பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது சற்று அதிகரித்து காணப்படுகிறது. 1992ல் அவர்கள் சராசரியாக 4.4 குழந்தைகளை பெற்ற நிலையில் அது தற்போது 2.4 ஆக குறைந்துள்ளது.

நகரங்களில் வாழும் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஒன்றரை ஆண்டுகள் முன்பாக கிராமத்தில் வாழும் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். மத ரீதியாக பார்க்கும்போது சமண மதத்தைச் சேர்ந்த பெண்கள் முதல் குழந்தையை 24.9 வயதிலும் முஸ்லிம் பெண்கள் 20.8 வயதிலும் பெற்றுக்கொள்கிறார்கள்.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: இஸ்ரோ புதிதாக வடிவமைத்த சிறிய ரக எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் மூலம், புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-07 உள்ளிட்ட 3 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

நம் நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலை உணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் மூலம் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. இதில், பிஎஸ்எல்வி மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி மூலம் 4,000 கிலோ வரையும் எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.

சர்வதேச விண்வெளி சந்தையில் சிறிய செயற்கைக் கோள்களை செலுத்துவதற்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவும் எடை குறைவான செயற்கைக்கோள்களை வணிகரீதியாக விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் பிரத்யேக ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சிறிய செயற்கைக் கோள்களை (500 கிலோ வரை) புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்வதற்காக எஸ்எஸ்எல்வி (Small Satellite Launch Vehicle-SSLV) எனும் ராக்கெட்டை இஸ்ரோ புதிதாக வடிவமைத்தது. 120 டன் எடை கொண்ட இதன் உயரம் 35 மீட்டர். மற்ற ராக்கெட்களைவிட குறைந்த அவகாசம், செலவில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எஸ்எஸ்எல்வி-டி1 ராக்கெட் மூலம் 2 செயற்கைக் கோள்கள் கடந்த ஆக.7-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டன. எதிர்பாராதவிதமாக ராக்கெட் சென்சார் செயலிழந்ததால், அத்திட்டம் தோல்வியில் முடிந்தது.

புதிதாக தயாரிப்பு: இதையடுத்து, புதிதாக தயாரிக்கப்பட்ட எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட்மூலம், இஓஎஸ்-07 உள்ளிட்ட 3 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது.

ராக்கெட் ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான கவுன்ட்-டவுன் நேற்று அதிகாலை 2.48 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் நேற்று காலை 9.18 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 15 நிமிடங்களில், புவியில் இருந்து 450 கி.மீ உயரத்தில் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் 3 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

இத்திட்டத்தின் முதன்மை செயற்கைக் கோளான இஓஎஸ்-7 மொத்தம் 156 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டு. இது புவி கண்காணிப்பு மற்றும் எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வு பணிகளுக்கு பயன்படும். விண்வெளியில் ஸ்பெக்ட்ரம் கண்காணிப்பு, அலைக்கற்றையில் ஈரப்பதம் குறித்த ஆய்வுகளையும் இது மேற்கொள்ளும்.

கல்விசார் செயற்கைக் கோள்: இதனுடன், அமெரிக்காவின் ஜானஸ் (10.2 கிலோ), சென்னையை சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா அமைப்பின் ஆசாதிசாட்-2 (8.8 கிலோ) ஆகிய 2 செயற்கைக் கோள்களும் ஏவப்பட்டன. இதில் ஆசாதிசாட்-2 எனும் கல்விசார் செயற்கைக் கோள், நாடு முழுவதிலும் 750 மாணவிகளின் கூட்டிணைப்பில் உருவாக்கப்பட்டது. இது ரேடியோ அலைக்கற்றை குறித்த ஆய்வை அடுத்த ஓராண்டுக்கு மேற்கொள்ளும். என்சிசி 75-வது ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில், என்சிசி பாடலை இசைக்கும்படியும் இந்த செயற்கைக் கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் மகிழ்ச்சி: 3 செயற்கைக் கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் பரஸ்பரம் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர்.

விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் பேசியபோது, ‘‘கடந்த ஆண்டு ஏவப்பட்ட எஸ்எஸ்எல்வி-டி1 ராக்கெட்டில் ஏற்பட்ட குறைபாடுகளை விரைவாக கண்டறிந்து, அதில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றுள்ளோம். இதையடுத்து, ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்கள் வணிகரீதியாக ஜிஎஸ்எல்வி மார்க் 3 மூலமாக மார்ச் 2-வது வாரத்தில் ஏவப்பட உள்ளன. மார்ச் இறுதியில் பிஎஸ்எல்வி ராக்கெட்டும் செலுத்தப்பட உள்ளது. மறுபயன்பாடு ராக்கெட், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் ஆகிய பணிகளிலும் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது’’ என்றார்.



Read in source website

புதுடெல்லி: நாட்டில் முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கனிமமான லித்தியம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டம் சலால் ஹைமானா பகுதியில், லித்தியம் படிமம் 59 லட்சம் டன் அளவுக்கு இருப்பதாக மத்திய சுரங்கத் துறை தெரிவித்துள்ளது.

இந்திய புவியியல் ஆய்வு மையம் 2018-19 ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் புவியியல் ஆய்வை தொடங்கியது. 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த ஆய்வில் ஜம்மு காஷ்மீரிலும் (யூனியன் பிரதேசம்), தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட் ஆகிய 10 மாநிலங்களிலும் தங்கம், லித்தியம், மாலிப்டினம் உட்பட 51 வகை கனிம தொகுதிகளை கண்டறிந்துள்ளது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை.

லித்தியத்தின் முக்கியத்துவம்: மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட மின்சாதனங்களில் பயன்படுத்தப்படுவது லித்தியம் அயன் பேட்டரிதான். மின்வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் லித்தியம் மிக முக்கியமான மூலப் பொருளாக உள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் போல, லித்தியம் சர்வதேச முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பசுமை எரிசக்தி: பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள்கள் கரியமில வாயு வெளியேற்றத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இந்நிலையில், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த புதைபடிவ எரிசக்திக்கு மாற்றாக, பசுமை எரிசக்தியை உருவாக்கும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, மின்வாகனங்களை நோக்கி உலக நாடுகள் நகர்ந்து வருகின்றன.

வரும் 2035-ம் ஆண்டில் உலகஅளவில் புழக்கத்தில் இருக்கும் வாகனங்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டவை மின்வாகனங்களாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் 2030-ம் ஆண்டில் பதிவு செய்யப்படும் வாகனங்களில் 30 சதவீதம் மின் வாகனங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால், மின்வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் உலக நாடுகள் சவால்களை எதிர்கொண்டுவருகின்றன. பேட்டரி தயாரிப்புக்கு லித்தியம், நிக்கல், கோபால்ட் உள்ளிட்ட கனிமங்கள்அவசியம். இவை போதுமான அளவில் கண்டுபிடிக்கப்படவில்லை.

சிலி, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அதிக அளவில் லித்தியம் இருப்பைக் கொண்டிருக்கின்றன. மின்வாகனத் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கும் நோக்கில், உலக நாடுகள் லித்தியம் இருப்பைக் கண்டறிய தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில், இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்தியாவின் புதிய அத்தியாயம்: இந்தியாவில் சமீப ஆண்டுகளாக மின்வாகன விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் லித்தியம் இருப்பு இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், வெளிநாடுகளில் இருந்து லித்தியம் அயன் பேட்டரி இறக்குமதி செய்யப்பட்டுவருகிறது. இதனால், மின்வாகனங்களின் விலை அதிகமாக உள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் படிமம் கண்டிபிடிக்கப்பட்டிருப்பது, உள்நாட்டிலேயே லித்தியம் அயன்பேட்டரி தயாரிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.



Read in source website

அஸ்தானா: ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனைகள் இருவர் பதக்கம் வென்றுள்ளனர். 10-வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில் வருகிற 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் 26 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொண்டுள்ளது.

இந்திய தடகள அணியில் தமிழகத்தை சேர்ந்த இலக்கிய தாசன் (60 மீட்டர் ஓட்டம்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்ர வேல் (டிரிப்பிள் ஜம்ப்), சிவசுப்பிர மணியம் (போல்வால்ட்), அர்ச்சனா (60 மீட்டர் ஓட்டம்), ரோசி மீனா (போல்வால்ட்), பவித்ரா (போல்வால்ட்) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய தடகள அணிக்கு தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் தஞ்சாவூரைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், மும்முறை தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்டு 16.98 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளி பதக்கத்தை தட்டி சென்றார்.

இந்நிலையில், தற்போது மகளிர் போல் வால்ட் போட்டியில் கலந்துகொண்ட தமிழக வீராங்கனை பவித்ரா வெள்ளிபதக்கமும், ரோசி மீனா பால்ராஜ் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். முன்னதாக, ஆடவர் குண்டு எறிதல் போட்டியில், இந்தியாவின் நடப்பு தேசிய சாதனை படைத்த வீரரான தஜீந்தர்பால் சிங் தூர் தங்கப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான 84-வது இளையோர் மற்றும் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று யு-19 மகளிர் அணிகள் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா 3-1 என்ற கணக்கில் ஹரியாணாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டது. அந்த அணி சார்பில் முதல் ஆட்டத்தில் மகாராஷ்டிராவின் ஜெனிபர் வர்க்கீஸ் 9-11, 2-11, 6-11 என்ற கணக்கில் ஹரியாணாவின் சுகானா சைனியிடம் தோல்வியடைந்தார்.

அடுத்த இரு ஆட்டங்களிலும் மகாராஷ்டிராவின் தனீஷா கோடேச்சா 11-7, 11-6, 14-12 என்ற கணக்கில் பிரித்தோகி சக்ரவர்த்தியையும், சாயாலி வாணி 11-6, 11-3, 11-7 என்ற கணக்கில் காவ்யா யாதவையும் தோற்கடித்து 2-1 என முன்னிலை பெற்றுக்கொடுத்தனர். 4-வது ஆட்டத்தில் தனீஷா கோடேச்சா 7-11, 11-7, 11-9, 11-13, 11-4 என்ற கணக்கில் சுகானா சைனியை வீழ்த்தி மகாராஷ்டிரா தங்கப் பதக்கம் வென்றது. ஹரியாணா வெள்ளிப் பதக்கம் பெற்றது.



Read in source website

சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பாராட்டைப் பெறும் ஒரு முடிவை தமிழக அரசு எடுத்திருக்கிறது. முற்றிலுமாக அழியும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பருந்துகளைப் பாதுகாக்க 10 உறுப்பினர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருப்பது சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. தலைமை வன பாதுகாப்பு அதிகாரி (பிரின்சிபல் சீஃப் கன்சர்வேட்டர் ஆஃப் பாரஸ்ட்), சீஃப் வைல்ட் லைஃப் வார்டன் ஆகிய இருவரும் அந்தக் குழுவின் முக்கிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 

இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் பருந்துகள் அருகி வருகின்றன. எல்லா நாடுகளிலும் இதுகுறித்த விழிப்புணர்வு கடந்த சில ஆண்டுகளாகவே ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, அமெரிக்கா இதுகுறித்து கூடுதலாக கவலைப்படுகிறது. அமெரிக்காவின் தேசியப் பறவையாக அங்கீகரிக்கப்பட்ட பருந்துகள் அநேகமாக அழிந்துவிட்ட நிலையிலிருந்து மிகுந்த முயற்சிக்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன. 

'பால்ட் ஈகிள்' என்றழைக்கப்படும் பருந்து வகை சர்வதேச அளவிலும், குறிப்பாக வட அமெரிக்காவிலும் அழிவின் எல்லையை எட்டின. உலகளாவிய அளவிலுள்ள 557 கூரிய மூக்குகள் கொண்ட 'ராப்டர்' பறவைகளில் 30% அநேகமாக அழிந்துவிட்ட நிலையில் பிலிப்பின்ஸ் கழுகு, அன்னோபோன் ஆந்தை, ஹூடட் பருந்து உள்ளிட்ட 18 வகைகள் அதில் அடக்கம்.

'கோல்டன் ஈகிள்' மெக்ஸிகோவின் தேசியப் பறவை. அவற்றில் ஒரு சிலதான் எஞ்சியிருக்கின்றன. 2016 கணக்கெடுப்பின்படி, இனப்பெருக்கத்துக்கு தகுதியான 100 இணைகள் இருந்தால் அதிகம். 'ஹேப்பி ஈகிள்' என்பது தெற்கு மெக்ஸிகோ, மத்திய, தெற்கு அமெரிக்கா ஆகியவற்றில் பரவலாகக் காணப்பட்ட பருந்துகள். மரங்களை வெட்டுவதாலும், காடுகள் எரிக்கப்படுவதாலும் அவற்றின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துவிட்டது. சர்வதேச அளவில் வாழ்விட அழிப்பு, பருவநிலை மாற்றம், பூச்சி மருந்து உள்ளிட்ட நச்சுகள் போன்றவை பருந்து, கழுகு உள்ளிட்ட பறவை
களின் அழிவுக்கு காரணங்கள். 

பருந்து (ஈகிள்) என்பவை தங்கள் உணவுக்காக சிறு உயிரினங்களை வேட்டையாடுபவை. அளவில் சிறியவை. அதேநேரத்தில் கூர்மையான பார்வையை கொண்டவை. மிக அதிகமாக சிறு உயிரினங்களை வேட்டையாடுபவையில் முக்கிய இடம் பருந்துக்கு உண்டு. 

'வல்ச்சர்' என்பவை பிணந்தின்னி கழுகுகள். இவை பெரும்பாலும் இறந்துகிடக்கும் உயிரினங்களைத்தான் உணவாகக் கொள்கின்றன. பருந்து போலல்லாமல் உருவத்தில் பெரியவை. பருந்துகளைப் போல கூர்மையான பார்வை இவற்றுக்கு கிடையாது. 

கூட்டம் கூட்டமாக வாழக்கூடியவை பிணந்தின்னி கழுகுகள். குப்பை மேடுகள், சவக்கிடங்குகள் மட்டுமல்லாமல் இறந்து கிடக்கும் உயிரினங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை பிணந்தின்னி கழுகுகள் விட்டுவைப்பதில்லை. தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்கும், பிணங்கள் அகற்றப்படுவதற்கும் இவை உதவுகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

1980 வரை உலகளாவிய அளவில் 'வல்ச்சர்' எனப்படும் பிணந்தின்னி கழுகுகள் பரவலாகக் காணப்பட்டன. தற்போது அவை தங்களை நிலைநிறுத்திக்கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றன. ஆப்பிரிக்காவில் 9 வகை வல்ச்சர்களும், இந்தியாவில் 8 வகை வல்ச்சர்களும் காணப்படுகின்றன என்றாலும் அவையனைத்துமே இன அழிப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. 

இந்தியாவில் 'வைட் பேக்டு வல்ச்சர்', 'லாங் டின்ட் வல்ச்சர்', 'சென்டர் டில்டு வல்ச்சர்' ஆகிய மூன்று இனங்களின் எண்ணிக்கையும் 99% குறைந்துவிட்டன. எங்கேயாவது ஒன்றோ இரண்டோ பார்க்க முடிந்தால் அபூர்வம். இவை மட்டுமல்ல, எகிப்திய கழுகுகள், சிவப்புத் தலை கழுகுகள் ஆகியவையும் அநேகமாக அழிந்துவிட்டன. 

கழுகுகள், பருந்துகள் ஆகியவற்றின் அழிவுக்கு முக்கியமான காரணம் அவற்றின் வாழ்வாதார அழிப்பு. நகர்மயமாதலால் காடுகள் அழிக்கப்படுகின்றன. கால்நடை வளர்ப்பு பண்ணைமயமானதால் கிராமங்களில்கூட வீடுகளில் கோழி, ஆடு, மாடு வளர்ப்பது குறைந்துவிட்டது. விவசாயம் டிராக்டர் மயமானதைத் தொடர்ந்து காளை மாட்டின் பயன்பாடு இல்லாமல் போனதும், செயற்கை முறை கருத்தரிப்பு காரணமாக காளை மாடுகள் தேவையில்லாமல் போனதும், பிணந்தின்னி கழுகுகளுக்கு இரையில்லாத நிலைமையை ஏற்படுத்திவிட்டன. 

கழுகுகள் பெரும்பாலும் இறந்துபோன கால்நடைகளை உண்டு வாழ்பவை. கால்நடைகள் இறப்பதற்கு 3 நாள்கள் முன்பு 'டிக்ளோசெனக்' என்கிற மருந்து செலுத்தப்பட்டிருந்தால் அவை பருந்துகளின் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. 'டிக்ளோசெனக்கிலுள்ள நச்சுத்தன்மை கழுகுகளின் சிறுநீரகத்தை பாதித்து உயிரிழப்புக்கு வழிகோலுகின்றன. 2006-இல் இந்த மருந்து கால்நடை மருத்துவ பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது என்றாலும்கூட இன்னும் பல பகுதிகளில் இது உபயோகிக்கப்படுகிறது. 

கழுகுகளும் சரி, பருந்துகளும் சரி மிகவும் மெதுவாக இனப்பெருக்கம் செய்யும் பறவைகள். ஆண்டுக்கு ஒரு முட்டைதான் இடும். குஞ்சு பொரிக்க நிறைய நாள்கள் எடுத்துக்கொள்ளும். அதனால் என்னதான் முனைப்புடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும்கூட இப்போதிருக்கும் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க 10 முதல் 15 ஆண்டுகள் தேவைப்படும். 

டிக்ளோசெனக் மட்டுமல்ல, துப்பாக்கி ரவைகளில் பயன்படுத்தப்படும் ஈயமும்கூட இந்த பறவை இனங்களின் உயிருக்கு ஆபத்தாக இருக்கின்றன. அமெரிக்க அரசு தங்களது தேசியப் பறவையை பாதுகாக்க 1972-இல் 'டிடிடி' பூச்சிக்கொல்லியை தடை செய்து அழிவின் விளிம்பிலிருந்த கழுகு இனத்தை காப்பாற்றியது. இப்போது தமிழக அரசு நமது மாநிலத்தில் இருக்கும் கழுகு இனங்களை காப்பாற்றும் முயற்சியில் அதேபோல ஈடுபட்டிருப்பதை வரவேற்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.



Read in source website

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 2.5 லட்சம் பொறியியல் பட்டதாரிகளுக்கு, டி.சி.எஸ்., விப்ரோ, எச்.சி.எல்., டெக் மகேந்திரா, அமேசான்  போன்ற  பன்னாட்டு நிறுவனங்கள் கல்லூரி வளாகங்களில்  நேர்முகத்  தேர்வு நடத்தி  தங்கள் நிறுவனங்களில் பணியில் அமர்த்தின. தற்போது சர்வதேச அளவில் ஐ.டி. நிறுவனங்களில் உபரியாக  பணியாளர்கள்  உள்ளதாகக்  கூறி பெரும் எண்ணிக்கையிலான பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கூகுள் நிறுவனம் தனது 12,000 பணியாளர்களையும், விப்ரோ நிறுவனம் 450 பணியாளர்களையும் பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளன. சாப் (எஸ்.ஏ.பி.)நிறுவனம் உலக அளவில் 3,000 அல்லது 2.5% பணியாளர்களையும்,  ஐ.பி.எம். 3,900 பணியாளர்களையும் பணி நீக்கம் செய்ய  திட்டமிட்டுள்ளன. 

கடந்த ஆண்டு நவம்பர் முதல் இதுவரையில் சுமார் 2 லட்சம் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நாளிதழ் 'வாஷிங்டன் போஸ்ட்'  தெரிவித்துள்ளது. இவர்களில்  30 % முதல் 40 % பேர் இந்தியர்கள் என்பது வேதனைக்குரிய செய்தி. அடுத்த ஆறு மாதங்களில் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரையிலான  பணியாளர்கள் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது .

நம் நாட்டில், 2018 -19 நிதி ஆண்டில் வேலையின்மை 5.8 % ஆக இருந்து, 2020-21 நிதி ஆண்டில் 4.2% ஆகக் குறைந்துள்ளது. எனினும் வேலையின்மை நம் நாட்டில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்து உள்ளதை மறுக்க இயலாது.
மத்திய தொழிலாளர் அமைச்சகம், அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்காக, சமூக பாதுகாப்பிற்காக நிறுவியுள்ள 'இஷ்ராம்' செயலியில்  டிசம்பர் 2022 வரை சுமார் 28.5 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர்  வேலையில்லாதவர்களே.

தமிழ்நாட்டில் மட்டும் அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக சுமார் 67.75 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, வேளாண்மை பொறியியல், கால்நடை அறிவியல், சட்டம் போன்ற படிப்புகளில் இளநிலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்களும் அடங்குவர். அரசு வேலைக்காக பதிவு செய்திருப்பவர்களில் சுமார் 28 லட்சம் பேர் 19 வயது முதல் 30 வயது வரையிலான   இளைஞர்களே.

வேலையின்மையைக் குறைப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள சுமார் பத்து லட்சம்  பணியிடங்களை நிரப்புவதற்காக 'ரோஜ்கர் மேளா' எனும்  வேலைவாய்ப்பு திருவிழா  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமரால்  தொடங்கப்பட்டது. நாட்டில் உள்ள வேலையற்றோர் எண்ணிக்கையை பார்க்கும் போது நிரப்பப்பட  உள்ள  பத்து லட்சம்  அரசுத்துறை பணியிடங்கள் என்பது மிக சொற்பமே. 

மேலும், தற்போதுள்ள நிதிநெருக்கடியை சமாளிப்பதற்கான  ஒரு இடைக்காலத்  திட்டமாக, பெரும்பான்மையான மாநிலங்கள், ஓய்வு பெறும் அரசுப்  பணியாளர்களுக்குரிய நிதி  சார்ந்த பலன்கள் தருவதை சற்றே தாமதப்படுத்துவதற்காக அவர்களின் ஓய்வு பெறும் வயதை  உயர்த்தியுள்ளது. அரசுத் துறைகளில்  சில நூறு காலி பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அரசுத் துறைகளிலும் அவ்வப்போது ஆள்குறைப்பு செய்யப்படுகிறது. இது போன்ற சூழலில், அனைவருக்கும் அரசு வேலை என்பது சாத்தியம் இல்லை. எனினும் அரசு வேலைக்கே  பெரும்பாலான இளைஞர்கள் ஏங்குகின்றனர். 

இதனை பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபடுகின்றனர். அரசு வேலை வாங்கித் தருகிறோம், வெளிநாட்டில் ஆயிரக்கணக்கான ரூபாய் மாத சம்பளத்திற்கு வேலை வாங்கித் தருகிறோம் என்று வேலை தேடும் இளைஞர்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை சிலர் தாங்கள் விரிக்கும் மோசடி வலையில் சிக்க வைக்கின்றனர். 

தங்கள் பிள்ளைகள்  வெளிநாடு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும்  என்று பெரும் தொகையை தர விரும்பும் பெற்றோர்கள், அத்தொகையை  முதலீடாக வைத்து தம்பிள்ளைகள் தொழில் முனைவோராக வேண்டும் என ஆலோசனை வழங்கி வழிகாட்ட முன் வருவதில்லை. 

அரசு வேலை அரிதாகி வரும் இக்காலகட்டத்தில், தனியார் நிறுவனங்களிலும் பணிப்பாதுகாப்பு என்பது இல்லாத நிலையில், சுயதொழில் முனைவோராக மாறுவதே  சிறந்ததாகும்.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மேக்அப் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா ஆகிய திட்டங்கள் வேலையில்லா திறமையான இளைஞர்களை தொழில்முனைவோர் ஆக்குவதற்கான திட்டங்கமாகும். பிரதமரின் முந்த்ரா திட்டத்தின் மூலம் வேலையில்லாத இளைஞர்கள் குறு, சிறு தொழில் தொடங்குவதற்காக ரூ. 10 லட்சம் வரை கடன் பெறும் வசதியை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. 

2023-24 ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், ஊரகப் பகுதிகளில் இளம் தொழில் முனைவோர்கள்  விவசாயம் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் வண்ணம் வேளாண் ஊக்குவிப்பு நிதி ஏற்படுத்தப்படும் என்பதோடு, விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன் வளர்ப்பை ஊக்குவிக்க ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்க மூலதன செலவுக்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இளம் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்கான அரசின் திட்டமாகும்.

'டிரன்ஸ் யூனியன் சிபில்' நிறுவனம் தெரிவித்துள்ள தகவலின்படி 18 முதல் 30 வயது வரை உள்ளவர்களே வங்கிகளில் அதிகம் கடன் வாங்குகின்றனர். இவர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டுக்கு முன் 38 %-ஆக இருந்தது, தற்போது 43%-ஆக உள்ளது. 

தொழில் தொடங்க வங்கிகள் தரும் கடன், அரசின் மானியம் ஆகியவற்றோடு சரியான திட்டமிடல், தன்னம்பிக்கை கொண்டு இளைய தலைமுறையினர் சிறந்த தொழில் முனைவோராகி வேலை தேடும் பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்க முன்வர வேண்டும்.



Read in source website

சட்ட விழிப்புணர்வு அதிகரித்துள்ள இன்றைய சூழலில், குற்ற நிகழ்வு குறித்து காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொள்வதில்லை என்ற வருத்தம் பொதுமக்களிடம் நிலவிவருகிறது.       

நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய குற்ற நிகழ்வு குறித்து காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார் மீது காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி உடனடியாக வழக்கு பதிவு செய்ய காவல்துறை இயக்குநர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கியுள்ளது.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்து விவரிக்கும் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 154 குறித்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வை காவல்துறை இயக்குநர் ஏற்படுத்த வேண்டும் என்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காவல்துறையில் பணியாற்றத் தேர்வு செய்யப்படும் காவலர் முதல் இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரி வரையிலான அனைவருக்கும் வழங்கப்படும் பயிற்சியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது தொடர்பான சட்ட விதிகள் கற்பிக்கப்படுகின்றன.

இந்தச் சூழலில், தென்மாவட்டம் ஒன்றில் அண்மையில் காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் பெண்ணை, அவரின் உறவினர்கள் கடத்திச் சென்றது குறித்தும், அப்பெண்ணின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்தும் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறையினர் காலம் கடத்தி வந்தனர். 
இளம்பெண் கடத்தப்பட்ட நிகழ்வு தொடர்பான விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதால் ஏற்பட்ட அழுத்தத்தைத் தொடர்ந்து, இளம்பெண் கடத்தல் குறித்து முதல் தகவல் அறிக்கை காலதாமதமாகப் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இளம்பெண் கடத்தல் தொடர்பான புகார் மீது வழக்குப் பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொள்ள மாவட்ட எஸ்.பி. அனுமதி வழங்காததால், இக்கொடுங்குற்ற நிகழ்வு குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சட்டத்தின் பிடியிலிருந்து குற்றவாளிகள் பல நேரங்களில் தப்பி விடுவதற்குக் காரணம் காவல்துறையினரிடம் அவர்கள் வெளிப்படுத்தும் கனிவான பார்வையும், கைமாறும் கையூட்டும் என்பதில் ஐயமில்லை. அதே சமயம், அனைத்து குற்ற நிகழ்வுகள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதன் பின்னணியில் ஒருவகையான அரசியலும் உண்டு.

திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர்,  திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய ஆய்வில், காவல் நிலையங்களில் பெறப்பட்ட குற்ற நிகழ்வுகள் தொடர்பான புகார்களில் 30 %-க்கும் சற்று அதிகமான புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது.

கொலை வழக்குகளை சந்தேக மரணம் என்றும், கொலை முயற்சி வழக்குகளை காய வழக்குகள் என்றும், கொள்ளை வழக்குகளை சிறுதிருட்டு வழக்குகள் என்றும் குற்றங்களின் தன்மையைக் குறைத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதும் ஆய்வில் தெரியவந்தது. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக கூலி வேலை செய்த பெண் கொடுத்த புகாரை உதாசீனப்படுத்தியதும் ஆய்வில் தெரியவந்தது.

காவல் இயக்குநர் அலுவலகத்திலுள்ள உயரதிகாரிகள் இந்த ஆய்வறிக்கையைப் பரிசீலனை செய்தனர். அனைத்து குற்ற நிகழ்வுகள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால், கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பு ஆண்டில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவிடும் என்றும், குற்றங்களைக் கட்டுப்படுத்த காவல்துறை தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், கணிசமாக உயரும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கையால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் என்றும் விவாதித்த உயரதிகாரிகள், இந்த ஆய்வறிக்கை தொடர்பாக மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

அனைத்து குற்ற நிகழ்வுகள் மீதும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதால் உயரும் புள்ளிவிவரங்கள் குறித்து பீதியடைய வேண்டாம் என்றும், பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளிலும் புலன் விசாரணையை துரிதமாக முடிக்க வேண்டும் என்றும் 'காவல் இலாகா'வை தன்னகத்தே கொண்டுள்ள முதலமைச்சர் வழிகாட்டுவதுதான் இப்பிரச்னைக்குத் தீர்வாகும்.
குற்றங்கள் நிகழாமல் தடுக்க காவலர்களை ரோந்துப் பணிக்கு அனுப்பி வைக்கப்படும் நடைமுறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. காவல்துறையினரின் வேலைப் பளுவைக் காரணம் காட்டி, ரோந்துப் பணிக்கு காவலர்கள் அனுப்பி வைக்கப்படுவது தற்போது குறைந்து வருகிறது. ரோந்துப் பணிக்கு அனுப்பி வைக்கப்படும் காவலர்கள் முறையாக ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

ரோந்துப் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்த சில மாநிலங்களில் 'இ-ரோந்து முறை' நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. ரோந்து காவலர்களின் பணியைக் கண்காணிக்கும் விதத்தில் அவர்களின் கைப்பேசியில் 'தடங்காட்டி' (ஜி.பி.எஸ் - க்ளோபல் பொஸிஷனிங் சிஸ்டம்) பொருத்தப்பட்டு, ரோந்து காவலர்களின் பணியை பயனுள்ள முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காவலர்களின் இ-ரோந்து முறைக்கு தமிழ்நாடு காவல்துறையும் மாற வேண்டிய கட்டாய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் நிகழ்ந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது என்பது சிறந்த நடைமுறையாகும். மாணவி இறந்தது தொடர்பாக கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த சட்டம் - ஒழுங்கு பிரச்னையும், எருது விடும் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக ஒசூரில் நிகழ்ந்த சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் கடந்த கால தவறுகளில் இருந்து காவல்துறை பாடம் கற்றுக்கொள்ளாத நிலையை வெளிப்படுத்துகின்றன.

சமுதாயத்தில் புகைந்து கொண்டிருக்கும் பிரச்னை சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக உருமாறுமா என்பதைக் கண்டறிந்து, உயரதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உளவுத்துறை என்றழைக்கப்படும் மாவட்ட தனிப்பிரிவுக்கும் எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவுக்கும் உண்டு.

உளவறிந்து தகவல் திரட்டுவதோடு மட்டுமின்றி, நிகழவிருக்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையைத் தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகளையும் கண்டறிந்து, உயரதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் உளவுத்துறைக்கு உண்டு. காலப்போக்கில் வெளிப்படையான தகவல்களைத் திரட்டி, உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதுதான் தங்களின் பணி என்ற மனநிலை உளவுத்துறையினரிடம் நிலவுவதைக் காணமுடிகிறது.

திறமையான உளவுப்பிரிவு காவலர்களை உருவாக்கும் பொறுப்புடைய தனிப்பிரிவு பயிற்சி பள்ளியும், அதன் பாடத்திட்டமும் தீவிரவாதிகளின் செயல்பாடுகள், சமூக ஊடகங்களின் ஆதிக்கம் போன்றவை அதிகரித்து வருகின்ற இன்றைய சூழலுக்கு ஏற்ப சீரமைக்கப்படாத நிலையிலேயே செயல்பட்டு வருகின்றன.

மாநில அரசின் கண்களாகவும், காதுகளாகவும் கருதப்படுகின்ற உளவுத்துறையின் தரம் குறைந்தால், அது மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலையக் காரணமாகிவிடும் என்பதில் ஐயமில்லை.

குற்ற வழக்குகளில் மேற்கொள்ளப்படும் முறையான புலன் விசாரணையும், நீதிமன்றத்தில் குற்ற வழக்குகள் தண்டனையில் முடிவடைவதும் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட பெரிதும் துணைபுரியும். ஆனால், நீதிமன்றத்தில் விடுதலையாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது.

குற்றவாளிகளைக் கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட 'சி.சி.டி.என்.எஸ்.' என்ற வலைதளம் தற்பொழுது அனைத்து காவல் நிலையங்களிலும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த வலைதளத்தின் மூலம் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன.

கடந்த காலத்தில் புலனாய்வு அதிகாரிகள், சாட்சிகளின் வாக்குமூலங்களை கைப்பட எழுதி, நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதன் பின்னர் தட்டச்சு செய்யப்பட்ட வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கணினி பயன்பாட்டுக்கு வந்த பின்னர், சாட்சிகளின் வாக்குமூலங்களை கணினி உதவி கொண்டு தயார் செய்தனர்.

தற்பொழுது சாட்சிகளின் வாக்குமூலங்கள் சி.சி.டி.என்.எஸ். வலைதளத்தில் நேரடியாக பதிவேற்றம் செய்யப்படுகிறது. காவல் நிலைய கணினியை இயக்கும் காவலர்களிடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. புலன் விசாரணை தொடர்பான சட்ட நுணுக்கங்கள் முழுமையாகத் தெரியாத காவலர்கள் சாட்சிகளின் வாக்குமூலங்களை சி.சி.டி.என்.எஸ். வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.  

இத்தகைய ஆவணங்களின் அடிப்படையில் நடைபெறும் நீதிமன்ற விசாரணையில் பெரும்பாலான வழக்குகள் எளிதில் விடுதலையில் முடிகின்றன. இது குறித்த ஆய்வும், வழிகாட்டுதலும் இன்றியமையாதவை ஆகும்.

மாவட்ட எஸ்.பி., சரக டி.ஐ.ஜி. உள்ளிட்ட காவல் உயரதிகாரிகள், காவல் நிலையங்களைப் பார்வையிட்டு, மேற்கொள்ளும் ஆய்வுகள் கண்துடைப்புக்காக நடத்தப்படும் ஆய்வுகளாக மாறிவருகின்றன. 

காவல்துறையினரின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மெத்தனப்போக்கையும், அவர்கள் துறைசார்ந்த விதிகளுக்கு முரணாக செயல்படுவதையும் கண்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியம் ஆகும்.
 
கட்டுரையாளர்:
காவல் துறை உயர் அதிகாரி (ஓய்வு).



Read in source website