DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 10-11-2022

ஆதிதிராவிடா் நலத் திட்டங்களைச் செயல்படுத்த ரூ. 20 கோடிக்கான அரசு உத்தரவாதத்தை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை வெளியிட்ட அறிவிப்பு:

ஆதிதிராவிடா் மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்த தேசிய ஆதிதிராவிடா் நிதி, மேம்பாட்டு நிறுவனத்தின் கடன் திட்டங்கள் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த ஏதுவாக கூடுதல் அரசு உத்தரவாதமாக ரூ. 20 கோடி வழங்கப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச மின்சாரக் கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. இதற்கான உரிய வழிகாட்டுதல்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதுகுறித்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் செயலாளா் அருண்ராய், புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது உயா்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைக்கும்படி, பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சாா்பில் அரசுக்குக் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

இதனை ஏற்று, குறைந்த அழுத்த மின் இணைப்பு கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச நேரத்தில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கலாம் என்று முடிவு செய்து, உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.



Read in source website

அரசுப் பணிகளில் வெளி நபா்களை நியமிப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவின் ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும், அவா்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைக்கவும் மனிதவள சீா்திருத்தக் குழு அமைக்கப்பட்டு, இதற்கான உத்தரவு (உத்தரவு எண் -115) கடந்த அக். 18-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், சீா்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகளில் குறுகிய காலப் பணியிடங்களை வெளிமுகமை மூலமாக நிரப்புவது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் உள்ளிட்ட அரசுப் பணியாளா் சங்கங்கள் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுக்கள் புதன்கிழமை அளிக்கப்பட்டன.

இந்தக் கோரிக்கையை ஆராய்ந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், எந்தவொரு குழு அமைப்பினும், அதன் பரிந்துரைகள் அரசு அலுவலா்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளா் சங்கங்களின் கருத்துகளைக் கேட்ட பிறகே அரசு முடிவெடுக்கும் எனத் தெரிவித்தாா். மேலும், குழுவின் இப்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் எனவும் அவா் உறுதி அளித்துள்ளாா் என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தான ஆய்வு வரம்புகள்: அரசின் பல்வேறு நிலைப் பணியிடங்கள், பதவிகள், பணிகள் ஆகியவற்றை திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்வது, பரந்துபட்ட முறையில் பிரிவு சி மற்றும் டி பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு வரம்புகளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு வரம்புகளுக்கு பணியாளா் சங்கங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், அவற்றை ரத்து செய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.



Read in source website


புது தில்லி: ஆதார் அட்டைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, அதனை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆதார் அட்டை வைத்திருப்போர், அதனை பதிவு செய்த நாளிலிருந்து சரியாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, அடையாள சான்றிதழ்களை அளித்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையில் மோசடிகள் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், ஆதார் அட்டை பெறும்போது அளித்த அடையாள சான்றிதழ்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அளித்து புதுப்பித்துக் கொள்வதன் மூலம், ஆதார் அட்டையின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள், அதனை பதிவு செய்து 10 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால், ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை, பயனாளர்கள் தங்களது அடையாள சான்றிதழ், முகவரிச் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பித்து, ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

எனவே, ஆதார் அட்டை தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், மாறும் தகவல்களும் புதுப்பிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை விவரங்களை உறுதி செய்யும் ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கான வசதியை யுஐடிஏஐ மேற்கொண்டுள்ளது.

இந்த வசதி, மை ஆதார் இணையதளம், மை ஆதார் செயலி மூலமாக பயனாளர்களே செய்து கொள்ளலாம் என்றும், ஆதார் சேவை மையங்களில் நேரடியாகச் சென்றும் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.

இதன்படி, ஆதார் அட்டை வைத்திருப்போர், அவர்களது பெயரில் இருக்கும் பிழைகள், புகைப்படங்களை பதிவேற்றுதல், முகவரி மாற்றுதல் உள்ளிட்ட விவரங்களை செய்து கொள்ளலாம்.

இந்த நாள் வரை, 134 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 
 



Read in source website


கரோனா நோய்த்தொற்றுக்குப் பின்னர், தேசிய தலைநகர் தில்லியில் வசிக்கும் ஆண்களை விட பெண்களிடையே அதிக அளவில் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக என்ஜிஓ அமைப்பின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான தன்னார்வ தொண்டு நிறுவனமான என்ஜிஓ, தொற்றுநோய்க்குப் பிறகு, தேசிய தலைநகர் தில்லியில் வசிக்கும் பெண்களிடையே மது குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதா? அல்லது குறைந்துள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தியது. இதற்காக ஐந்தாயிரம் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டது. 

ஆய்வின் முடிவில், தொற்றுநோய்க்குப் பின்னர் தில்லியில் வசிக்கும் ஆண்களை விட பெண்களிடையே அதிக அளவில் மது குடிக்கும் பழக்கம் 37.6 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்கள் மத்தியில் குடிப்பழக்கத்தை அதிகரித்தற்கு அடுத்தடுத்த பொது முடக்கம், அதிகரிக்கப்பட்ட மது விற்பனை மற்றும் வாழ்வியல், செலவின முறைகளை மாற்றம் போன்ற காரணமாக  கூறியுள்ளனர்.

மேலும், சிறந்த சில்லறை மது விற்பனை கடைகள் வழங்கும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற சலுகைகள் மற்றும் தள்ளுபடி விலைகளே தில்லியில் அதிக மது விற்பனைக்கு வழிவகுத்ததாகவும், இதுவே பெண்களிடையே மதுபானம் வாங்குவதை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றியது என்று 77 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மன அழுத்தம் மற்றும் குடிப்பழக்கம்: "தொற்றுநோயின் போது பெண்கள் வழக்கத்தை விட அதிக அளவில் குடிப்பதாகவும், இது ஆண்களை விட அதிகம் என தரவுகள் தெரிவிக்கின்றன.  

மேலும், தொற்றுநோய்க்கு முன் அதிக குடிப்பழக்கம் உள்ளவர்கள் தொற்றுநோய் காலகட்டத்தில் தங்கள் குடி பழக்கத்தை அதிகரிக்க முனைந்தனர். மேலும், 'குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் ஒருவரின் கவலைகளை மறக்க செய்து விடுகிறது' என்பது பெண்களிடையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இது ஆண்கள் அனுபவிக்கும் துயரத்திற்கு சமமானதாக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன."

தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட மன அழுத்தமே பெண்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்தற்குக் காரணம் என்றும்,   மன அழுத்தம் காரணமாக 45.7 சதவீதம் பேரும், தனிமை, கவலை, தொழில்முறை பொறுப்புகள் காரணமாக 34.4 சதவீதம் பேரும்,  சலிப்பு காரணமாக 30.1 சதவீதம் பேர் மது பழக்கத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மன அழுத்தம், தனிமை, கவலை, தொழில்முறை பொறுப்புகள், சலிப்பை மறப்பதற்காக மது குடிக்கும் ஆண்களுடன் ஒப்பிடுகையில், பொதுவாக குறைவான எண்ணிக்கையிலான பெண்கள் மது அருந்துகின்றனர், ஆனால் சுமார் 7 சதவீதம் பெண்கள் தீங்கு தரும் அளவில் குடிக்கு அடிமையாகி உள்ளனர். 

37.6 சதவீத பெண்கள் தங்கள் மது அருந்துவது அதிகரித்துள்ளதை ஒப்புக் கொண்டாலும், 42.3 சதவீத பெண்கள் தங்கள் அவ்வப்போது மற்றும் சந்தர்ப்பத்தின் அடிப்படையிலேயே அதிகரிப்பதாக கருதுகின்றனர்.

மன அழுத்தம், தனிமை, கவலை, தொழில்முறை பொறுப்புகள், சலிப்பு மற்றும் பலவற்றிலிருந்து தொடங்கி,  தொற்றுநோயின் போது வேலை இழப்பு மற்றும் உடல் மற்றும் மனரீதியான துஷ்பிரயோகம் ஆகியவை பெண்கள் அதிகயளவில் மது குடிக்கும் பழக்கத்திற்கான காரணங்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன. 



Read in source website

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: தேசிய நெடுஞ்சாலைகள் மீதான உரிமை (நிலம் மற்றும் போக்குவரத்து) சட்டம்- 2002, நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

இருப்பினும், தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலங்களில் அதிக அளவிலான ஆக்கிரமிப்புகள் காணப்படுகின்றன. சாலை உணவகங்கள், காய்கறி கடைகள் உள்ளிட்டவை நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருப்பது அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கண்காணிப்புப் பிரிவுகள் ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்தப்படுவதைத் தடுக்க போதிய நடவடிக்கைகளையும், தொடா்ச்சியான ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும். நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ அமைக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகள் போக்குவரத்து மேலாண்மைக்கும், எதிா்கால சாலைத் திட்டங்கள் மற்றும் புதுப்பிப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் சவாலாக உள்ளது என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

எம்பிபிஎஸ் (இளநிலை மருத்துவப் படிப்பு) இறுதி ஆண்டு மாணவா்களுக்கு 2023-ஆம் ஆண்டு டிசம்பா் முதல் ‘நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் (நெக்ஸ்ட்)’ என்ற பெயரிலான தேசிய அளவிலான இறுதி பொது தகுதித் தோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதால், முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்-பிஜி’ நுழைவுத் தோ்வு அடுத்த கல்வியாண்டுக்குப் பிறகு நடத்தப்படாது என்பது தெரியவந்துள்ளது.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய மருத்துவ ஆணைய (என்எம்சி) உயா்நிலைக் கூட்டத்தில் ‘நெக்ஸ்ட்’ தோ்வை 2023 டிசம்பரில் நடத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடமும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

‘திட்டமிட்டபடி 2023 டிசம்பரில் ‘நெக்ஸ்ட்’ தோ்வு நடத்தப்பட்டால், 2019-20 எம்பிபிஎஸ் மாணவா்கள் அந்தத் தோ்வை எழுத நேரிடும். இந்த தோ்வு முடிவின் அடிப்படையில் 2024-25 முதுநிலை மருத்துவப் படிப்பை மாணவா் சோ்க்கை நடத்தப்படும்’ என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சட்டப்படி, ‘நெக்ஸ்ட்’ தோ்வு வழிகாட்டுதல்கள் அறிவிக்கை செய்யப்பட்ட 3 ஆண்டுகளுக்குள் இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவா்களுக்கு அந்தத் தோ்வை நடத்தத் தொடங்க வேண்டும். அந்த வகையில், இந்த சட்டம் கடந்த 2020 செப்டம்பரில் நடைமுறைக்கு வந்த நிலையில், அந்தத் தோ்வை 2023 டிசம்பரில் நடத்த என்எம்சி முடிவு செய்துள்ளது.

என்எம்சி விதிப்படி, இந்தியாவில் நவீன மருத்துவராகப் பணியாற்றுவதற்கான உரிமம் பெறவும், முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தகுதி பெறவும், வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவில் பணியாற்ற விரும்பும் மாணவா்கள் தகுதி பெறுவதற்குமான பொதுவான தகுதித் தோ்வாக ‘நெக்ஸ்ட்’ தோ்வு கருதப்பட உள்ளது.

தோ்வு வாரியம் மாற்றம்? இதுவரை ‘நீட்-பிஜி’ மற்றும் ‘நீட்-சிறப்பு மருத்துப் படிப்பு’ நுழைவுத் தோ்வுகளை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (எம்பிஇஎம்எஸ்) நடத்தி வந்த நிலையில், அவற்றுக்கு மாற்றாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘நெக்ஸ்ட்’ தோ்வை நடத்தும் பொறுப்பை எம்பிஇஎம்எஸ்-க்கு மாற்றாக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும். அதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.



Read in source website

இந்தியாவில் 100 வயதைக் கடந்த வாக்காளா்கள் 2.49 லட்சம் பேரும், 80 வயதைக் கடந்த வாக்காளா்கள் 1.80 கோடி பேரும் உள்ளதாக தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தெரிவித்தாா்.

வாக்காளா் பட்டியல் திருத்தங்களுக்கான தேசிய சிறப்பு முகாம் தொடக்கத்தின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை ராஜீவ் குமாா் புதன்கிழமை தொடக்கிவைத்தாா். பின்னா், அவா் பேசியதாவது:

இந்திய வாக்காளா் பட்டியலில் 100 வயதைக் கடந்த வாக்காளா்கள் 2.49 லட்சம் போ் உள்ளனா். அவா்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வந்துள்ளதைக் கேட்டறியும்போது மகிழ்ச்சியும் உத்வேகமும் ஏற்படுகிறது.

80 வயதைக் கடந்த வாக்காளா்கள் 1.80 கோடி போ் இருக்கின்றனா். நாட்டின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகி, ஹிமாசல பிரதேசத்தில் அண்மையில் காலமானாா். 106 வயதான அவா், தனது இறப்புக்கு 3 நாள்களுக்கு முன்னதாக தபால் வழியில் வாக்களித்திருந்தாா். இது நமக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது.

வாக்காளா் பட்டியலில் திருத்த நடவடிக்கை ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், நகா்ப்புறங்களில் வாக்காளா்கள் பதிவை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஆண்டு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மலைப் பகுதிகளோ, கடலோரங்களோ, பாலைவனங்களோ எங்கிருந்தாலும் தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் வாக்காளா் பட்டியலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி, தோ்தலின்போது தங்களது வாக்கை செலுத்தி, ஜனநாயகத்துக்கு வலுசோ்க்க வேண்டும் என்றாா் ராஜீவ் குமாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘சில பெருநகரங்களில் உள்ள வாக்காளா்கள் இடையே ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் அக்கறையின்மை காணப்படுகிறது. அவா்கள் முழு மனதுடன் தோ்தல் நடைமுறையில் பங்கேற்று, ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமென எதிா்பாா்க்கிறோம். இது இளைஞா்களுக்கும் பொருந்தும். சமூக ஊடகங்களில் ஆா்வமாக கருத்து பதிவிடும் இளைஞா்களால், தோ்தலில் வாக்களித்து தங்களது கருத்துகளைப் பிரதிபலிக்கச் செய்ய முடியும்’ என்றாா்.



Read in source website

சக கட்சியினா் மற்றும் அரசு ஊழியா்களிடம் கடுமையாக நடந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் பிரிட்டன் அமைச்சா் சா் கெவின் வில்லியம்சன் ராஜிநாமா செய்ததையடுத்து, புதிதாக பதவியேற்றுள்ள பிரதமா் ரிஷி சுனக்குக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரிஷி சுனக்கின் அமைச்சரவையில் கெவின் வில்லியம்சனுக்கு துறை ஒதுக்கப்படாமல் இணையமைச்சா் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவா் சக கட்சி எம்.பி.க்களிடமும் அரசு ஊழியா்களிடமும் மிகக் கடுமையான முறையில் நடந்து கொள்வதாக தொடா்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.

அதையடுத்து, ரிஷி சுனக்குக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படும் கெவின் வில்லியம்சன் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தாா். அவரது ராஜிநாமாவை ரிஷி சுனக்கும் ஏற்றுக்கொண்டாா்.

எனினும், கெவின் வில்லியம்சனை அமைச்சரவையில் இணைத்ததன் மூலம், சரியான முடிவுகளை எடுக்கும் திறன் ரிஷி சுனக்குக்கு இல்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சியினா் விமா்சிக்கத் தொடங்கியுள்ளனா்.

மேலும், நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரத்தை எதிா்க்கட்சித் தலைவா் சா் கெயிா் ஸ்டாா்மா் எழுப்பி, ரிஷி சுனக்குக்கு நெருக்கடி கொடுப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, கரோனா விதிமுறைகளை மீறியது, பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளானவரை பொறுப்பான பதவியில் நியமித்தது போன்ற முறைகேடு குற்றச்சாட்டுகள் காரணமாக முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் அரசிலிருந்து அமைச்சா்கள் பதவி விலகியதால், அவரும் ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவருக்கு அடுத்தபடியாக பிரதமா் பொறுப்பை ஏற்ற லிஸ் டிரஸ், பொருளாதார விவகாரத்தை சரியாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் அவரது அமைச்சரவையிலிருந்தும் பலா் விலகியதால், அவரும் பதவி விலக நோ்ந்தது.

இந்த நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரிட்டனின் முதல் வெள்ளையா் அல்லாத, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் அமைச்சரவையிலிருந்தும் முறைகேடு புகாா் காரணமாக ஒருவா் முதல்முறையாக வெளியேறியிருப்பது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.

 



Read in source website

கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவுடனான உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்தியா-ரஷியா இடையிலான உறவு பல பத்தாண்டுகளுக்கு முன் உருவாகி வலுப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த உறவு அமெரிக்கா-ரஷியா இடையே பனிப் போா் நிலவியபோது ஏற்பட்டது. அப்போது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் ராணுவ ரீதியாக இந்தியாவுடன் நட்பு பாராட்ட முடியாத நிலையில் அமெரிக்கா இருந்தது.

ஆனால், கடந்த 25 ஆண்டுகளில் அந்த நிலை மாறியுள்ளது. அந்த மாற்றத்துக்கு முதல் அடியெடுத்து வைத்தவா் அமெரிக்க முன்னாள் அதிபா் ஜாா்ஜ் டபிள்யூ.புஷ். தற்போது பொருளாதாரம், பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு உள்பட அனைத்துத் துறைகளிலும் இந்தியாவுடனான உறவை ஆழமாக்க அமெரிக்கா முயற்சிக்கிறது.

அதேவேளையில், ஓா் இரவில் இந்தியாவுடனான உறவில் முழுமையாக மாற்றம் ஏற்பட்டுவிடாது என்பதை அமெரிக்கா அறியும். இந்தியாவிடம் அமெரிக்கா எதிா்பாா்க்கும் மாற்றத்துக்கு அந்நாட்டுடன் இணைந்து அதிபா் பைடன் நிா்வாகம் பணியாற்றும். ஆனால், இது தற்போதுள்ள அமெரிக்க அரசின் பணியாக மட்டும் இருக்காது. வருங்காலத்தில் அமையும் அரசுகளின் பணியாகவும் இருக்கும் என்று தெரிவித்தாா்.



Read in source website

 

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைக்கான இடைக்கால தோ்தலில் ஆளும் ஜனநாயக கட்சியைச் சோ்ந்த ஐந்து இந்திய வம்சாவழியினர் வெற்றி பெற்றனா்.

நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைக்கான இடைக்கால செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.

தொழிலதிபா் ஸ்ரீ தனேதா் (67), மிசிகன் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளாா். அந்தத் தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெறும் இந்திய அமெரிக்கா் இவராவாா்.

இலினாய்ஸில் ராஜா கிருஷ்ணமூா்த்தி (49), சிலிகான் வேலியில் ரோ கன்னா (46), வாஷிங்டனில் பிரமீளா ஜெயபால் (57), கலிஃபோர்னியாவில் அமி பெரா ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

இவா்களில் ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூா்த்தி, பிரமீளா ஜெயபால் ஆகியோா் தொடா்ந்து நான்காவது முறையாக அதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனா். 6-ஆவது முறையாக கலிஃபோர்னியா தொகுதியில் அமி பெரா போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

பிரமீளா ஜெயபால் சென்னையில் பிறந்தவராவாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளா் கிளிஃப் மூனை வென்ற முதல் இந்திய அமெரிக்க பெண் வேட்பாளா் என்ற பெருமையை இவா் பெற்றுள்ளாா்.

மேரிலேண்ட் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக இந்திய அமெரிக்கா் அருணா மில்லா் (58) முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளாா்.

அதேநேரத்தில் டெக்ஸாஸில் இந்திய-அமெரிக்கரான சந்திப் ஸ்ரீவஸ்தவா தோல்வியை தழுவினாா். பல்வேறு மாகாண அவைகளிலும் இந்தியா்கள் அமெரிக்கர்கள் வெற்றி பெற்றுள்ளனா்.

அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையான 33.19 கோடியில் ஒரு சதவீதம் மட்டுமே இருக்கும் இந்தியா்களில், ஏராளமான இந்திய அமெரிக்கா்கள், இளைஞா்கள் இந்தத் தோ்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

இதேபோல், மாகாண அவைகளிலும் இந்திய அமெரிக்கா்கள் இடங்களைப் பிடித்துள்ளனா்.



Read in source website

 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் பிரபல வீரர் விராட் கோலி.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதில் தோல்வியடைந்துள்ளது இந்திய அணி. இப்போட்டியில் சிறப்பாக விளையாடினார் விராட் கோலி. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அவர் 4 அரை சதங்கள் எடுத்துள்ளார். 

இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்கிற சாதனையை இன்று படைத்தார் கோலி. 115 ஆட்டங்களில் 4008 ரன்கள் எடுத்துள்ளார். 1 சதம், 37 அரை சதங்கள். கோலியை விடவும் அதிக டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள (148) ரோஹித் சர்மா, 3853 ரன்களுடன் 2-ம் இடத்தில் உள்ளார். 

சர்வதேச டி20: அதிக ரன்கள்

கோலி - 4008 ரன்கள்
ரோஹித் சர்மா - 3853 ரன்கள்
மார்டின் கப்தில் - 3531 ரன்கள்
பாபர் ஆஸம் - 3323 ரன்கள்



Read in source website

மகளிா் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் அடுத்த ஆண்டு மாா்ச்சில் தில்லியில் நடைபெறவுள்ளது என சா்வதேச குத்துச்சண்டை சங்கம் புதன்கிழமை அறிவித்தது.

இந்த சாம்பியன்ஷிப்பை இந்தியா நடத்துவது இது 3-ஆவது முறையாகும். ஏற்கெனவே 2006, 2018 ஆகிய ஆண்டுகளில் தில்லியில் இப்போட்டி நடைபெற்றிருப்பது நினைவுகூரத்தக்கது. இது தவிர 2017-இல் மகளிா் இளையோா் உலக சாம்பியன்ஷிப்பும் இந்தியாவில் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 2021-இல் ஆடவா் உலக சாம்பியன்ஷிப்பை இந்தியா நடத்த இருந்த நிலையில், அதற்கான கட்டணத்தை சா்வதேச சங்கத்துக்கு செலுத்தத் தவறியதால் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவிடம் இருந்து பறிக்கப்பட்டது. தற்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சா்வதேச சங்கத்துக்கும், இந்திய குத்துச்சண்டை சங்கத்துக்கும் இடையே புதன்கிழமை கையெழுத்தானது.

இப்போட்டியில் 75 முதல் 100 நாடுகளைச் சோ்ந்த, போட்டியாளா்கள், பயிற்சியாளா்கள் என 1,500 போ் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. சாம்பியன்ஷிப் வரலாற்றிலேயே முதல் முறையாக, தில்லியில் நடைபெற இருக்கும் போட்டியில் நடுவா் முடிவை தொழில்நுட்ப அடிப்படையில் மறு ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு அமல்படுத்தப்படவுள்ளதாக இந்திய குத்துச்சண்டை சங்கத் தலைவா் அஜய் சிங் கூறினாா்.

போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வோருக்கு ரூ.81 லட்சம் என்ற வகையில், பரிசுத் தொகையாக மொத்தம் ரூ.19.50 கோடி வழங்கப்பட இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா். கடந்த முறை துருக்கியில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவுக்கு 1 தங்கம் உள்பட 3 பதக்கங்கள் கிடைத்தன.



Read in source website

ஸ்பெயினில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் எஃப்ஐஹெச் நேஷன்ஸ் கோப்பை மகளிா் ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி சவிதா தலைமையில் 20 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் சாம்பியனாகும் அணி, 2023-24 சீசன் எஃப்ஐஹெச் புரோ லீக் போட்டிக்குத் தகுதிபெறும். நேஷன்ஸ் கோப்பை போட்டியில் இது முதல் சீசன் ஆகும். இதில் இந்தியா குரூப் ‘பி’-யில் சிலி, ஜப்பான், தென்னாப்பிரிக்கா அணிகளுடன் இணைந்திருக்கிறது. குரூப் ‘ஏ’-வில் அயா்லாந்து, இத்தாலி, தென் கொரியா, ஸ்பெயின் அணிகள் உள்ளன.

ஸ்பெயினின் வாலென்சியா நகரில் டிசம்பா் 11 முதல் 17 வரை நடைபெற இருக்கும் இப்போட்டியில், இந்தியா முதல் ஆட்டத்தில் சிலியை சந்திக்கிறது.

அணி விவரம்:

சவிதா, பிஷு தேவி காரிபம் (கோல்கீப்பா்கள்); தீப் கிரேஸ் எகா, குா்ஜித் கௌா், நிக்கி பிரதான், உதிதா, இஷிகா சௌதரி (டிஃபெண்டா்கள்); நிஷா, சலிமா டெடெ, சுஷிலா சானு புக்ரம்பம், மோனிகா, நேஹா, சோனிகா, ஜோதி, நவ்ஜோத் கௌா் (மிட்ஃபீல்டா்கள்); வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, நவ்னீத் கௌா், சங்கீதா குமாரி, பியூட்டி டங்டங் (ஃபாா்வா்டுகள்).



Read in source website

சென்னை: சென்னை - பெங்களூரு - மைசூரு வந்தே பாரத் ரயில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்படவுள்ள நிலையில், அதன் வேகம் மற்றும் பாதுகாப்பு அம்சம் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலின் முதல் சேவை டெல்லி - வாரணாசி வழித்தடத்திலும், 2-வது சேவை டெல்லி - காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-வது சேவை மும்பை - காந்தி நகர் வழித்தடத்திலும், 4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதன் 5-வது சேவை சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்த சேவையை நாளை (நவ.11) பிரதமர் மோடி கே.எஸ்ஆர்.பெங்களூரு ரயில் நிலையத்தில் தொடங்கி வைக்கிறார்.

தற்போது இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் 4 வந்தே பராத் ரயில்கள் கடந்த மாதம் மட்டும் 4 முறை விபத்தில் சிக்கின. குறிப்பாக, கால்நடைகள் மீது வந்தே பாரத் ரயிலின் முன்பகுதிகள் சேதம் அடைந்தன. சில நாட்களுக்கு முன்பு காந்திநகரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில், குஜராத்தின் ஆனந்த் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 54 வயது பெண் மீது மோதியது. இதில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் குறித்து ரயில்வே துறையின் உயர் அதிகாரிகளிடம் கேட்டோம். இதற்கு அவர்கள் கூறுகையில், "வந்தே பாரத் ரயிலை அதிபட்சமாக 180 கி.மீ வரை இயக்க முடியும். இந்த வேகத்திற்கு ரயில்களை இயக்க வேண்டும் என்றால் தண்டாவளத்தில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இந்தியாவில் ரயில் தண்டாவளங்கள் சுற்றி முழுமையாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பபடவில்லை.

குறிப்பாக, கூற வேண்டும் என்றால், இந்தியாவில் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு ரயில் தண்டவாளங்கள் நகரங்களுக்கு உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. பெருநகரங்களில் ரயில் தண்டாவளத்திற்கு அருகில் மக்கள் வசிக்கும் நிலை கூட உள்ளது. இதன் காரணமாக வந்தே பாரத் ரயில் அதிக வேகமாக செல்லும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

ஆனால், சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் தற்போது மணிக்கு 75.60 கி. மீ வேகத்தில்தான் இயக்கப்படுகிறது. சதாப்தி ரயிலை விட மணிக்கு 5 கிலோ மீட்டர் மட்டுமே அதிக வேகமாக இயக்கப்படுகிறது. இதன் காரணமாக விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு குறைவுதான். இந்த ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டால் தடுப்பு வேலிகள் இல்லாத இடத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்று அவர்கள் கூறினர்..



Read in source website

திருச்சி: "தமிழகத்தின் தனிக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை வரும் டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

கடந்தாண்டு தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் வினாடி- வினா போட்டி நடைபெற்றது. இதில் தேர்வாகும் மாணவர்கள் துபாய்க்கு அழைத்து செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட 67 அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று திருச்சி விமான நிலையத்தில் துபாய்க்கு புறப்பட்டு சென்றனர். அங்கு செல்லும் மாணவர்கள் சார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தகத் திருவிழா மற்றும் கல்வித் தொடர்பான முக்கிய இடங்களை நேரில் கண்டு களிக்க உள்ளனர். பின்னர் வரும், 14-ம் தேதி அதிகாலை மீண்டும் திருச்சி விமான நிலையம் வந்தடைகின்றனர்.

முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழகம், தேசியக் கல்வி கொள்கையை பின்பற்றுவதாக அண்ணாமலை மட்டுமல்ல, தற்போது தமிழகம் வந்து சென்ற மத்திய கல்வி அமைச்சரும் கூறினார். தேசியக் கல்விக் கொள்கையை ஆரம்ப நிலையிலிருந்தே முதல்வர் எதிர்த்து வருகிறார். அதற்காக தான் தமிழகத்திற்கென மாநிலக் கல்வி கொள்கை வகுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதையெல்லாம் அவர்கள் தெரிந்து கொண்டு பேச வேண்டும். மேலும் மாநிலக் கல்விக் கொள்கை தயாரிப்பு குழுவின் வரைவு அறிக்கை வரும் டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்படுகிறது. அது வந்த பின்பு நாங்கள் எந்த கொள்கையை பின்பற்றுகிறோம் என்பது தெரியும்.

பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீடு காரணமாக பள்ளி கல்வித்துறை மட்டுமல்லாது, பல துறையிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். எனவே இதை தடுப்பதற்காக தமிழக முதல்வர் தனியாக ஒரு குழு அமைத்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்து நம்மை காக்கின்ற முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்" என்றார்.

- ஜி.செல்லமுத்து



Read in source website

சென்னை: மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் தபால்காரர் மூலம் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் நவ.1-ம் தேதி முதல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும்படி அரசு ஆணையிட்டுள்ளது.

ரூ.70 கட்டணம்: ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று தங்களது உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க சிரமப்படுகின்றனர். இந்நிலையில், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சார்பில், ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே பயோமெட்ரிக் முறையில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சேவைக் கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களைத் தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒருசில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க முடியும்.

இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையைப் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதள முகவரி மூலம் அல்லது ‘Postinfo’ என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து சேவை கோரிக்கையைப் பதிவு செய்யலாம் என்று முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.



Read in source website

சென்னை: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீட்டால் தமிழகத்தில் முஸ்லிம், கிறிஸ்தவர் உட்பட 79 பிரிவினர் பயனடைவார்கள். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், ‘மத்திய அரசின் வேலைவாய்ப்பு, கல்விக்காக’ என்று குறிப்பிட்டு இதற்கான சான்றுகள் வழங்கப்படுகின்றன.

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கடந்த 2019 மே மாதம் நிறைவேற்றியது. அதே ஆண்டில் தமிழகத்திலும் அந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், தகுதியானவர்களுக்கு மத்திய அரசு விதிகளின்படி சான்று வழங்குவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்களை வருவாய் நிர்வாக ஆணையர் வழங்கினார்.

அதேநேரம், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதால், மாநில அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் இந்த 10 சதவீத இடஒதுக்கீடு இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், ஓபிசி பிரிவினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நீங்கலாக, பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இந்த சட்டத்தின்படி சான்று வழங்கப்படுகிறது. குறிப்பாக, ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 5 ஏக்கர் அல்லது அதற்கு மேல் விவசாய நிலம் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட விதிகளை பின்பற்றி இந்த சான்று வழங்கப்படுகிறது.

இடையில் சான்று வழங்குவதில் சிக்கல்கள் எழுந்ததால், நிறுத்தி வைக்கப்பட்டு, கடந்த 2020-ம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ‘மத்திய அரசின் வேலைவாய்ப்பு, கல்விக்காக’ என்று குறிப்பிடப்பட்டு சான்று வழங்கப்படுகிறது. குறிப்பாக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், நீட், ஜேஇஇ தேர்வுகளுக்காக மாணவர்கள் இந்த சான்றை பெறுகின்றனர்.

இந்நிலையில், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளதாகவும், அதில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வருவாய் துறை தரப்பில் கூறப்படுகிறது.

யாருக்கு ஒதுக்கீடு?: தமிழகத்தைப் பொருத்தவரை, கடந்த 1985-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் 79 பிரிவினர் பொதுப் பிரிவினராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். தாவூத், மீர், மைமன், நவாப், லெப்பை உள்ளிட்ட 10 வகை முஸ்லிம் வகுப்பினர், ஆங்கிலோ இந்தியன், ஜனோலா சால்வேஷன் சர்ச், லண்டன் மிஷன் கிறிஸ்தவர், மலங்கரா சிரியன் கிறிஸ்தவர், ரோமன் கத்தோலிக்க மலங்கரா, பொதுப் பிரிவில் இருந்து மதம் மாறிய கிறிஸ்தவர், ஆதிசைவரில் பல பிரிவுகள், ஆற்காட்டு வெள்ளாளர், கார்காத்தார், சைவ வெள்ளாளர் உட்பட வெள்ளாளரில் பலபிரிவுகள், ஆரிய வைசிய செட்டியார் உட்பட செட்டியாரில் பல பிரிவுகள், பிராமணர், எழுத்தச்சர், ஜைனர், கம்மவார் நாயுடு, மேனன், நம்பியார் உள்ளிட்ட நாயர் சமூகத்தினர், பிராமணர் தவிர்த்த காஷ்மீரி,பஞ்சாபி, குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி, மராத்தி, பணிக்கர், சைவசிவாச்சாரியார்கள், வாரியர் உள்ளிட்ட 79 பிரிவினர் இடம்பெற்றுள்ளனர். 10 சதவீத இடஒதுக்கீடு மூலம் இவர்கள் பயன்பெறுவார்கள்.



Read in source website

சென்னை: தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஏறத்தாழ 6.18 கோடி வாக்காளர்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நேற்று முதல் தொடங்கின. இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியலை சென்னையில் மாநகராட்சி ஆணையரும், இதர மாவட்டங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் வெளியிட்டனர்.

இதையொட்டி, மக்களின் தேர்தல் பங்களிப்பு தொடர்பான விழிப்புணர்வு மிதிவண்டிப் பேரணியை, சென்னை சாந்தோமில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நவ. 9-ல் (நேற்று) தொடங்கி டிச. 8-ம் தேதி வரை நடைபெறுகின்றன.

தமிழகத்தில் தற்போது, 6,18,26,182 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 3,03,95,103 பேர், பெண்கள் 3,14,23,321 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,758 பேர்.

அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6,66,464 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக சென்னை துறைமுகத்தில் 1,72,211 வாக்காளர்களும் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் வரும் 12 ,13, 26, 27-ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவற்றில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், இடமாற்றம், ஆதார் எண் இணைப்பு ஆகியவற்றுக்கான படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம். இதுதவிர, அலுவலக நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் படிவங்களை அளிக்கலாம்.

பெயர் சேர்ப்பதற்கு முகவரி மற்றும் வயதுக்கான சான்றாக ஆதார் அளிக்கலாம். ஆதார் இல்லாவிட்டால், முகவரி, வயதுக்கான உறுதி ஆவணமாக 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம். வரும் ஜனவரி 1-ம் தேதி 18 வயது நிறைவடைந்தவர்கள் பெயர் சேர்க்கலாம் என்றிருந்த நிலையில், தற்போது 17 வயது பூர்த்தியானவர்கள் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம். ஆனால், 18 வயது பூர்த்தி அடைந்ததும்தான் பெயர் சேர்க்கப்படும். மேலும், 25 வயதுக்கு குறைந்த வாக்காளர்கள், வயதுச் சான்றிதழை அளிக்க வேண்டும்.

படிவங்கள் என்ன?

இதுதவிர, www.nvsp.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் “VOTER HELP LINE" கைபேசி செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பெயர் சேர்க்க படிவம் 6, வெளிநாட்டவர் பெயர் சேர்க்க 6-ஏ, ஆதார் இணைக்க 6-பி, பெயர் நீக்கம் செய்ய படிவம்-7 சமர்ப்பிக்க வேண்டும். விலாசம் மாறுதல் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள படிவம் 8-ல் விண்ணப்பிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வாக்காளர் பட்டியலுடன் இதுவரை 56.19 சதவீதம், அதாவது 3.46 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 83 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 20.42 சதவீதத்தினர் மட்டுமே விவரங்களை அளித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது 6.28 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன. அப்போது, பெயர் சேர்த்தலுக்கு 9.44 லட்சம் விண்ணப்பங்கள் உள்பட 14.27 லட்சம் விண்ணப்பங்கள் பெறப் பட்டு, பரிசீலிக்கப்பட்டன.

இந்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இடைப்பட்ட காலத்தில், பட்டியலில் இரட்டைப் பதிவுகள் நீக்கம் உள்ளிட்டவை காரணமாக, தற்போது வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் எண்ணிக்கை 18 லட்சம் குறைந்துள்ளது குறிப் பிடத்தக்கது.



Read in source website

புதுடெல்லி: அன்றாடம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தொடர்பாக 30 நிமிட நிகழ்ச்சியாவது தனியார் டிவி சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியில் நேற்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக செயலர் அபூர்வ சந்திரா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "தொலைக்காட்சி சேனல்களை அப்லிங்க், டவுன்லிங்க் செய்வதற்கான 2022ம் ஆண்டுகான வழிகாட்டு நெறிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய திருத்தங்களால் பூட்டான், வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாள நாட்டு சேனல்கள் இனி இந்தியாவிலிருந்து அப்லிங்க் செய்யலாம். இதுவரை அவர் சிங்கப்பூரில் இருந்து அப்லிங் செய்து கொண்டிருந்தன. புதிய திருத்தங்கள் இந்தியாவை உலக அரங்கில் ஒரு விரும்பத்தக்க அப்லிங் சேவைதளமாக முன்னிறுத்தும்" என்றார்.

சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி: புதிய சட்டத்திருத்தங்களின்படி இந்தியாவில் இருந்து அப்லிங், டவுன்லிங் செய்ய விரும்பும் சேனல்கள் இனி அன்றாடம் 30 நிமிடங்களாவது தேசிய முக்கியத்துவம், சமூக பிரச்சினைகள் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும். இது பொழுதுபோக்கு சேனல்களுக்கும் பொருந்தும். விளையாட்டு சேனல்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியார் சேனல்கள் சரியான ஸ்லாட்டை தேர்வு செய்து அதற்கேற்ப நேரத்தை, நிகழ்ச்சியை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய ஒருங்கிணைப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, கல்வியறிவு பரவல், நலிந்தோருக்கு அதிகாரமளித்தல், தேசிய ஒருங்கிணைப்பு, கலாசாரம், பாரம்பரியம் என 8 முக்கிய பகுதிகள் சார்ந்து நிகழ்ச்சிகளை வழங்கலாம் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

வெளிநாட்டு சேனல்களுக்கு சலுகை: இதுவரை வெளிநாட்டுச் சேனல்கள் இந்தியாவில் இருந்து அப்லிங் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இப்போது புதிய விதிகளின்படி வெளிநாட்டுச் சேனல்கள் இந்தியாவில் டெலிபோர்ட்களை நிறுவ அப்லிங் செய்து இந்தியாவுக்கு வெளியே அதனை டவுன்லோடு செய்யலாம். இதன் மூலம் இந்தியாவுக்கு அந்நியச் செலாவணி கிடைப்பது அதிகரிக்கும். புதிய திருத்தங்கள் இந்தியாவை உலக அரங்கில் ஒரு விரும்பத்தக்க அப்லிங் சேவைதளமாக முன்னிறுத்தும்.

அதேபோல் சேனல்களுக்கு ஒரே ஒரு டெலிபோர்ட் தான் என்ற கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது. இனி ஒரு சேனல் ஒன்றுக்கும் மேற்பட்ட டெலிபோர்ட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். தனியார் சேனல்கள் தங்களின் சிக்னல்களை என்க்ரிப்ட் செய்து கொள்வது கட்டாயமாக்கப்படுகிறது. செய்தி சேனல்கள் அல்லாத பிற சேனல்கள் நேரலையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய முன்பதிவு செய்து கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு பல்வேறு திருத்தங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.



Read in source website

புதுடெல்லி: இந்தோனேசிய பாலி தீவில் ஜி20 மாநாடு வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு, இமாச்சலில் தயாராகும் கலை, கைவினைப் பொருட்களை பிரதமர் மோடி பரிசாக வழங்க உள்ளார். குறிப்பாக சம்பா கைக்குட்டை, கங்க்ரா மினியேச்சர் பெயின்ட்டிங், கின்னவுரி ஷால், குல்லு ஷால் மற்றும் கனால் பிராஸ் செட் உள் ளிட்டவற்றை பரிசளிக்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இமாச்சலில் 12-ம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இம்மாநிலத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தை உலகளவில் பிரபலப்படுத்தும் இந்த நடவடிக்கையால் பாஜகவுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி20 அமைப்புக்கு டிசம்பர் 1-ம் தேதி இந்தியா தலைமை ஏற்க உள்ளது. இதையொட்டி 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருள், இலச்சினை மற்றும் இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

புதுடெல்லி: கடந்த 2009-ம் ஆண்டு டென்மார்க் தலைநகர்கோபன்ஹேகனில் நடந்த ஐ.நா. பருவநிலை மாற்றத்துக்கான மாநாட்டில் (சிஓபி) பருவநிலை மாற்ற பாதிப்புகளை சமாளிப்பதற்கு உதவ, 2020-ம் ஆண்டுக்குள், ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடி நிதி திரட்ட வளர்ந்த நாடுகள் ஒன்றாக இணைந்து உறுதியளித்தன. ஆனால் இந்த நிதியை வளர்ந்த நாடுகள் தொடர்ந்து தரவில்லை.

உலகளாவிய பருவநிலை நிதிக்கான புதிய நிதி இலக்கை அடைய வளர்ந்த நாடுகளை, இந்தியா உட்பட வளரும் நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்தாண்டு சிஓபி27 மாநாடு எகிப்து நாட்டின் ஷாம் எல்-ஷேக் நகரில் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. வரும் 18-ம் தேதி வரை நடைபெறும் இதில் இந்திய குழு நேற்று முன்தினம் கூறியதாவது:

பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வளர்ந்த நாடுகளிடம் இருந்து நிதி, தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவு தேவை என்பதை மக்கள் நன்கு அறிவர். வளர்ந்த நாடுகள் உருவாக்கிய இலக்குகளை அடைய, பருவநிலை மாற்றத்துக்கான நிதியை ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடியிலிருந்து அதிகரிக்க வேண்டும். இந்த நிதி ஆதாரங்களை திரட்ட வளர்ந்த நாடுகள் முன்னணி வகிக்க வேண்டும். பருவநிலை மாற்ற பாதிப்புகளை தணிப்பதற்கான திட்டங்களுக்கு வளர்ந்த நாடுகளின் ஆதரவு நீண்ட காலத்துக்கு இருக்க வேண்டும். இவ்வாறு இந்தியா கூறியது.



Read in source website

கீவ்: உக்ரைனின் கேர்சான் பகுதியில் இருந்து ரஷ்யப் படைகளை திரும்புமாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கோ உத்தரவிட்டார். இது ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவு என்று கூறப்படுகிறது.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் கீவ் நகர் வரை வெகு வேகமாக முன்னேறிய ரஷ்யப் படைகள் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் உக்ரைன் கொடுத்த பதிலடியால் பின்வாங்கியது.

இதனிடையே, போர் மூலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டது.

இந்நிலையில் நேற்று உக்ரைனின் கேர்சான் பகுதியில் இருந்து ரஷ்யப் படைகளை திரும்புமாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கோ உத்தரவிட்டார். இது ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவு என்று கூறப்பட்டது.

ஆனால், உக்ரைன் தரப்போ இதை தாங்கள் பெரிதாகக் கருதவில்லை என்று கூறியுள்ளது. உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கியின் மூத்த ஆலோசகர் கூறுகையில், "உக்ரைன் கொடி கேர்சானில் பறக்கும் வரை ரஷ்யா பின்வாங்கியது என்றெல்லாம் மகிழ்ச்சி கொள்ள முடியாது. கேர்சானில் இன்னும் ரஷ்யப் படைகள் இருக்கின்றன. புதிய படைகளை அனுப்ப அந்நாடு திட்டமிட்டுள்ளதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது" என்றார்.

கடந்த பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கிய பின்னர் கெர்சான் தான் அதன் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிராந்திய தலைநகர். இது க்ரிமீயா தீபகற்பத்துக்குச் செல்லுவதற்கான ஒரே தரைவழி என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிந்து 2 ஆண்டுக்குப் பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட் உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும். இது இடைக்கால தேர்தல் எனப்படுகிறது.

அதன்படி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் (கீழவை) பெரும்பான்மைக்கு 218 உறுப்பினர்கள் தேவை. ஆனால் நேற்று மாலை வரை அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 178 உறுப்பினர்களும், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த 198 உறுப்பினர்களும் வெற்றி பெற்றிருந்தனர்.

அதேபோல் 100 உறுப்பினர்கள் கொண்ட மேலவையில் (சென்ட்) இரு கட்சிகளுக்கும் தலா 48 உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். இதனால் அமெரிக்க நாடாளுமன்றம் எந்த கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதில் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இருந்து முதல் முறையாக இந்திய அமெரிக்கர் ஸ்ரீ தானேதர் (67) எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் 84,096 ஒட்டுகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் மார்டெல் பிவிங்ஸ் 27,366 வாக்குகள் பெற்றார்.

அமெரிக்காவில் தொழிலதி பராக இருந்து அரசியல்வாதியான ஸ்ரீ தானேதர், அமெரிக்க நாடாளு மன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட நான்காவது இந்திய அமெரிக்கர். இவர் தவிர ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா மற்றும் பிரமிளா ஜெயபால் ஆகிய மூன்று இந்திய அமெரிக்கர்களும் அமெரிக்க எம்.பி.யாகியுள்ளனர்.

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ தானேதர், கர்நாடாகாவின் பெல்காம் மாவட் டத்தில் வளர்ந்தவர். அவர் கூறும்போது, ‘‘அமெரிக்க கனவு நனவாகியுள்ளது. நான் குடியேறிய இந்தநாடு, எனக்கு அதிக செல்வத்தை கொடுத்துள்ளது. தொடர்ந்து பணம் சேர்க்க விரும்பவில்லை தொழிலை கைவிட்டு, சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது’’ என்றார்.



Read in source website

புதுடெல்லி: கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதங்களில் சூரிய மின் உற்பத்தி காரணமாக இந்தியா தனது எரிபொருள் செலவில் ரூ.34,328 கோடியை மிச்சப்படுத்தி இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

எரிசக்தி மற்றும் தூய காற்று குறித்த ஆய்வு மையமான எம்பெர்-கிளைமெட் எனும் அமைப்பு, இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சூரிய மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. சூரிய மின் உற்பத்தியில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளில் 5 நாடுகள் ஆசிய கண்டத்தில் உள்ளன.

சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளே அந்த 5 நாடுகள். இவை மட்டுமின்றி, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளும் சூரிய மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாத காலத்தில் இந்த 7 நாடுகளும் சேர்த்து ரூ. 2.79 லட்சம் கோடிக்கு எரிபொருள் இறக்குமதியை தவிர்த்துள்ளன. மொத்த எரிபொருள் இறக்குமதியில் இது 9 சதவீதம்.

இந்த 6 மாத காலத்தில் எரிபொருளுக்கான செலவில் ரூ. 34,328 கோடியை இந்தியா மிச்சப்படுத்தி உள்ளது. 1.94 கோடி டன் நிலக்கரி, மின்உற்பத்திக்காக பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. சூரிய மின் உற்பத்தி காரணமாக எரிபொருள் செலவை அதிக அளவில் மிச்சப்படுத்தி உள்ள நாடு சீனா. இது தனது மொத்த மின் உற்பத்தியில் 5 சதவீதம் அளவுக்கு சூரிய மின் உற்பத்தியை கொண்டுள்ளது. இதன்மூலம் $21 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அது தவிர்த்துள்ளது.

சீனாவுக்கு அடுத்த இடத்தில் சூரிய மின் உற்பத்தியில் ஜப்பான் சிறந்து விளங்குகிறது. இது இந்த 6 மாதத்தில், $21 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அது தவிர்த்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: இந்தியா 2027-ல் பொருளாதார ரீதியாக 3-வது பெரிய நாடாக உருவாகும் என்று அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.

முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருளாதாரக் கொள்கைகள், மக்கள் தொகை எண்ணிக்கை, டிஜிட்டல் கட்டமைப்பு ஆகியவை இந்தியாவை பொருளாதார ரீதியாக 3-வது பெரிய நாடாக மாற்றும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அந்நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் 2030-ல் இந்தியா 3-வது பெரிய நாடாக மாறும் என்று குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வளர்ச்சியை 2027-ம் ஆண்டிலேயே இந்தியா எட்டும் என்று புதிய கணிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் ஜிடிபி தற்போது 3.4 டிரில்லியன் டாலராக உள்ளது. இது அடுத்த 10 ஆண்டுகளில் 8.5 டிரில்லியன் டாலராக உயரும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து மோர்கன் ஸ்டான்லியின் ஆசியப் பிரிவின் தலைமை பொருளாதார நிபுணர் சேத்தன் அஹ்யா கூறியதாவது:

ஜிஎஸ்டி, நிறுவன வரி குறைப்பு, உற்பத்தி சார் ஊக்கத்தொகை திட்டம் ஆகியவை இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையில் கொண்டுவரப்பட்ட முக்கியமான மாற்றங்கள். இந்தியாவின் வளர்ச்சியில் அதன் டிஜிட்டல் கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய டிஜிட்டல் கட்டமைப்பானது ஆதாரை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மற்ற நாடுகளில் அது தனியார் தளங்களை அடிப்படை யாகக் கொண்டுள்ளது.

டிஜிட்டல் கட்டமைப்பை மேலும் விரிவாக்குவதற்கான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்து வருகிறது. அது நுகர்வோருக்கும் தொழில்களுக்கும் இடையிலான தூரத்தைக் குறைக்கும். இ-காமர்ஸில் இந்தியாவின் புதிய முன்னெடுப்பான ஓஎன்டிசி கட்டமைப்பு ஒரு முக்கிய உதாரணமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்போது உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டி யலில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

புதுடெல்லி: விருந்தோம்பல் துறையில் ஈடுபட்டுள்ள ‘ஓயோ’ நிறுவனம் இந்தியாவுக்கு தனியாக சுற்றுலா வரும் பெண்களுக்கு உதவிடும் விதமாக அட்வென்சர் விமன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஓயோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உலகம் முழுவதும் பெண்கள் தனியாக சுற்றுலா செல்லும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2018-ஐ காட்டிலும் 2019-ம் ஆண்டில் பெண்களால் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகள் 63 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், தனியாக சுற்றுலா செல்லும் பெண்களுக்கு உதவிடும் வகையில் ஓயோ பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அட்வென்சர் விமன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் வகையில் அந்த நிறுவனத்துடன் ஓயோ நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

‘அட்வென்சர் விமன் இந்தியா’வில் 25 முதல் 45 வயது வரையிலான 1.5 லட்சம் பெண் உறுப்பினர்கள் உள்ளனர்.இவர்கள் இந்தியாவில் 21 நகரங்களிலும், மொரீஷியஸ் மற்றும் பூட்டான் நாடுகளிலும் தனியாக சுற்றுலா செல்லும் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உதவிகளை உடனிருந்து செய்து தருவர். ஓயோவின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு தனியாக வரும் பெண் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.



Read in source website

 உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக தனஞ்சய் யஷ்வந்த் சந்திரசூட் பதவியேற்றிருக்கிறார். நேற்று பதவியேற்றுக்கொண்ட நீதிபதி சந்திரசூட், 2024 நவம்பர் 10-ஆம் தேதி வரை 2 ஆண்டுகள் 2 நாள்கள் தலைமை நீதிபதியாகப் பதவி வகிப்பார். கடந்த 10 ஆண்டுகளில் அதிக காலம் பதவி வகிக்க இருப்பது இவராகத்தான் இருக்கும்.
 1959 நவம்பர் 11-ஆம் தேதி மும்பையில் பிறந்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பட்டம் பெற்றது தில்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில். தில்லி பல்கலை.யில் சட்டப்படிப்பும், ஹார்வர்டு சட்டப் பள்ளியில் முனைவர் பட்டமும் பெற்றவர் அவர். 1998-இல் தனது 39 வயதில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக அவர் அங்கீகாரம் பெற்றபோது, இந்தியாவிலேயே அதுவொரு சாதனையாகக் கருதப்பட்டது.
 1998 முதல் இரண்டாண்டுகள் அன்றைய வாஜ்பாய் தலைமையிலான அரசில் இந்தியாவின் கூடுதல் தலைமை வழக்குரைஞராகவும், அதைத்தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், 2013-இல் அலாகாபாத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றிய அனுபவத்துடன் உச்சநீதிமன்றத்தில் நுழைந்தவர் நீதிபதி சந்திரசூட்.
 தொழில்துறை, கலைத்துறை, அரசியல் போல நீதித்துறையும் வாரிசு கலாசாரத்துக்கு அப்பாற்பட்டதல்ல. தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் டி.ஒய். சந்திரசூட்டின் தந்தை நீதிபதி ஒய்.வி. சந்திரசூட் மிக அதிக காலம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்த பெருமைக்குரியவர். 1978 முதல் 1985 வரை, 7 ஆண்டுகள் 4 மாதங்கள் 19 நாள்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த அவரது சாதனை இன்று வரை எவராலும் முறியடிக்கப்படவில்லை.
 எதிர்வரும் பத்தாண்டுகளில், உச்சநீதிமன்றத் தலைமைப் பொறுப்பை வகிக்க இருப்பவர்களில் இருவர் வாரிசுகள். டி.ஒய்.சந்திரசூட், ஒய்.வி.சந்திரசூட்டின் புதல்வர் என்றால், 2027-இல் முதலாவது பெண் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க இருக்கும் நாகரத்னா முன்னாள் தலைமை நீதிபதி வெங்கட்ராமய்யாவின் புதல்வி. பெரும்பாலான உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது வாரிசுகளும் நீதிபதிகளாக நியமனம் பெற முனைப்புக் காட்டுவது ரகசியம் ஒன்றுமல்ல.
 முதன்முறையாக உச்சநீதிமன்றத்தில் தந்தை வகித்த பதவியில் அமரும் புதல்வர் டி.ஒய்.சந்திரசூட். தற்போதைய தலைமை நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட் உச்சநீதிமன்றத்தில் வழங்கியிருக்கும் சில தீர்ப்புகள் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கின்றன. தனி மனித உரிமை, பெண் உரிமை உள்ளிட்ட பிரச்னைகளில் நீதிபதியாக மட்டுமல்லாமல், ஒருவகையில் போராளியாகவும் இருப்பவர் என்பது தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்த பரவலான கருத்து.
 உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக 2016-இல் நியமனம் பெற்ற அடுத்த இரண்டாண்டுகளில் தனது தந்தை வழங்கிய தீர்ப்புகளை திருத்தி எழுதியவர் அவர். அவசரநிலையின்போது, அரசியல் சாசனம் வழங்கும் ஒருவரது அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்படுவதை தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.வி.சந்திரசூட் அங்கீகரித்திருந்தார். 2017-இல் நீதிபதிகள் கேகர், அகர்வால், அப்துல் நசீர் ஆகியோருடன் இணைந்து நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வழங்கிய தீர்ப்பில் ஒருவரது தன்மறைப்பு நிலையும், தனி உரிமையும் அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையில் அடங்கியது என்று தீர்ப்பு வழங்கி அவரது தந்தை வழங்கிய தீர்ப்பு நிராகரிக்கப்பட்டது.
 கணவன்-மனைவி இருவரில் ஒருவர் ரகசிய உறவு வைத்திருப்பது கிரிமினல் குற்றமல்ல என்றும், தன் தந்தை வழங்கிய தீர்ப்பு அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் சுதந்திரம், சமத்துவத்துக்கு எதிரானது என்றும் கூறி, தனது தந்தையின் முந்தைய தீர்ப்பை 2018-இல் நிராகரித்தார் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட். நிதி மசோதாவாக ஆதார் அறிமுகப்படுத்தப்பட்டது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்பது அவரது தீர்ப்பு. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377-இல் கூறப்பட்ட ஓரினச் சேர்க்கை மீதான கிரிமினல் குற்றத்தை அகற்றியதும் அவரது முக்கியமான தீர்ப்புகளில் ஒன்று.
 திருமணமாகாத பெண்கள் கருக்கலைப்பை மேற்கொள்ளலாம் என்பதும் அவரது சமீபத்திய தீர்ப்பு. அயோத்தி, சபரிமலை கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் நுழைவதை அனுமதித்த வழக்குகளை விசாரித்த 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் மட்டுமே தேங்கிக் கிடக்கின்றன. அவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை 10 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணையில் இருப்பவை. நீதிபதிகள் பற்றாக்குறை, கட்டமைப்பு வசதி இல்லாமை, தேவையற்ற சட்டங்கள், விரைந்து தீர்ப்பு வழங்குவதற்குத் தடையாக இருக்கும் நடைமுறைகள் என்று பல்வேறு பிரச்னைகளை தலைமை நீதிபதியாகப் பதவியேற்றிருக்கும் டி.ஒய்.சந்திரசூட் எதிர்கொள்ள இருக்கிறார்.
 உச்சநீதிமன்றத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் 5 நீதிபதிகள், உயர்நீதிமன்றங்களில் 336 நீதிபதிகள் இடங்களை நிரப்புவது எளிதாக இருக்கப்போவதில்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பணி ஓய்வு வயதை உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு நிகராக 62-இலிருந்து 65-ஆக உயர்த்துவதன் மூலம் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். அதற்கு மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கையாளாமல் இணைந்து செயல்படுவது அவசியம்.
 இரண்டாண்டு கால அவகாசம், அவருக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு. அதைத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மாற்றங்களை ஏற்படுத்துவார் என்பது எதிர்பார்ப்பு. மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவாரா, எதிர்த்து செயல்படுவாரா என்பதில் அடங்கியிருக்கிறது அவரது வெற்றியும் தோல்வியும்.
 



Read in source website

 அண்மையில், தமிழக முதல்வர், அரசுப் பள்ளிகள் தரமான கல்வியை வழங்கி வருவதால் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர் என்றும், அதிகரித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.1,050 கோடியில் 7,200 வகுப்பறைகள் கூடுதலாகக் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
 அரசுப்பள்ளிகளை நாடி மாணவர்கள் வருவதும் அதனடிப்படையில் அரசு அதிகப்படியான வகுப்பறைகள் கட்டுவதும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும். அதே வேளையில் பராமரிப்பின்மையால் இடிந்து விழும் நிலையிலுள்ள வகுப்பறையின் மேற்கூரை, போதிய காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வகுப்பறைகள், கழிப்பிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளற்ற அரசுப் பள்ளிகள் இன்னமும் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
 சமீபத்தில் பெய்த மழையால் பள்ளி வளாகங்களில் நீர் தேங்கியதால் பள்ளிகளுக்கு விடுமுறை, பாதுகாப்பற்ற பள்ளிக் கட்டடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாமென்ற பள்ளி கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்துதல் ஆகியவற்றை நோக்கும்போது அரசுப் பள்ளிகள் அடிப்படை கட்டமைப்பு தேவைப்படும் நிலையில் உள்ளதை உணர முடிகிறது.
 கடந்த பதினைந்து ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் 22 தொடக்கப் பள்ளிகள்,18 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டு விட்டதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாததால்தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்ப தயங்குகின்றனர்.
 பெற்றோரின் தயக்கத்தால் தற்போது 669 தொடக்கப் பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் எண்ணிக்கை உள்ளது. இப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கப்படாவிடில் விரைவில் இப்பள்ளிகளும் மூடப்படும் நிலை ஏற்படலாம்.
 அடிப்படை வசதியின்மையால் பள்ளிகள் மூடப்படுதைத் தவிர்க்க, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்திட நிகழாண்டில் அரசுப்பள்ளிகளின் பராமரிப்பிற்கு ரூ.150 கோடி ஒதுக்கியுள்ள தமிழக அரசு, தற்போது மேலும் 115 கோடி ரூபாயைக் கூடுதலாக ஒதுக்கியுள்ளது.
 தமிழகத்தில், இலவச நோட்டு புத்தகங்கள், சீருடை, மதிய உணவு, காலை சிற்றுண்டி இவை அனைத்திற்கும் மேலாக உயர்ந்து வரும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியருக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு, தனியார் பள்ளிகளின் அதிகப்படியான கல்விக் கட்டணம் போன்றவற்றால் தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 "யுனெஸ்கோ' வெளியிட்டுள்ள சர்வதேச கல்வி கண்காணிப்பு அறிக்கையின்படி நம் நாட்டில் 2018-இல் 33% ஆக இருந்த தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை விகிதம் 2021-ஆம் ஆண்டில் 24% ஆகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் "அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறைவாக இருக்கும்', "மாணவர்களிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு இருக்காது' போன்ற பொதுமக்களிடையே ஆண்டாண்டு காலமாக இருந்த மாயத்திரை சமீப ஆண்டுகளில் விலக ஆரம்பித்து விட்டதுதான்.
 இதனை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாண்டு நடைபெற்ற பள்ளி இறுதி தேர்வில் 246 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமீபத்தில் சென்னை, அதனை சுற்றியுள்ள 58 அரசு, மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டதன் விளைவாக 87 மாணவர்கள் சென்னை ஐஐடி யில் சேரும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
 இவ்வாறு அரசுப் பள்ளி மாணவர்களின் தரம் உயர்வதற்கு அரசின் நிதி ஒதுக்கீடு, சட்ட திட்டங்களோடு முழு ஈடுபாட்டுடன் கடமையாற்றும் ஆசிரியப் பெருமக்களும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல. உதாரணமாக தமிழகத்தில் தற்போது 2,631 ஓராசிரியர் தொடக்கப் பள்ளிகள் உள்ளன.
 இப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான வெவ்வேறு பாடங்களை கற்பித்தல் அந்த ஒரே ஆசிரியருக்கு மிகப்பெரிய சவால்.அதோடு தமது அவசரத் தேவைக்கு கூட விடுப்பு எடுக்க இயலாத சூழலில்தான் இவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
 அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
 ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
 பின்னருள்ள தருமங்கள் யாவும்
 பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
 அன்னயாவினும் புண்ணியம் கோடி
 ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
 என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளுக்கொப்ப இன்றும் அரசுப்பள்ளி மாணவர்களின் மேம்பாட்டிற்கு அர்ப்பணித்து கொண்டுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பல உண்டு.
 தொண்டுள்ளத்தோடு கொடையுள்ளம் கொண்டு அரசுப் பள்ளிகளுக்கு உதவும் தனி மனிதர்களும் பலர் உண்டு. தாங்கள் பணியாற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை தங்கள் பிள்ளைகளாகவே கருதி அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் ஆசிரியப் பெருமக்கள் பலர் உண்டு.
 அரசுப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான பிள்ளைகள் கிராமப்புறங்களில் கல்வியறிவு அற்ற, ஏழ்மை நிலையில் உள்ள குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள். அப்பிள்ளைகளின் முன்னேற்றம், அவர்களின் குடும்பத்தின் முன்னேற்றம் மட்டுமின்றி நாட்டின் முன்னேற்றத்தையும் உள்ளடக்கியது.
 அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளுக்காக, கட்டமைப்பிற்காக போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்வது, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், ஓராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும் வகையில் புதிதாக அப்பள்ளிகளில் மாணவர்களை சேர்த்தல், மாணவர்கள் இடை நிற்றலுக்கான காரணங்களைக் கண்டறிந்து மாணவர்கள் தொடர்ந்து பயில ஏற்பாடு செய்தல் போன்ற அரசின் நடவடிக்கைகளில் பொது மக்களின் பங்களிப்பும் இருக்கும் பட்சத்தில் அரசுப்பள்ளிகளின் தரம் மேலும் உயரும் என்பதில் ஐயமில்லை.



Read in source website

 அண்மைக்காலமாக நாளிதழ்களைத் திறப்பதற்குக் கரங்கள் நடுங்குகின்றன. காரணம், முதல் பக்கத்திலேயே இரயிலிலிருந்து தள்ளப்பட்ட பெண்ணின் இரத்தமும், இரயிலடியில் கழுத்தறுக்கப்பட்ட பெண்ணின் இரத்தமும், படிக்கின்ற கண்களை இரத்தம் கசிய வைக்கின்றன.
 பட்டாம்பூச்சிகளையும் வண்ணத்துப் பூச்சிகளையும் வெட்டரிவாள் கொண்டு வெட்டுவதுபோல், பெண் பிள்ளைகள் வெட்டிப் போடப்படுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
 ஒரு காலத்தில் பிள்ளைகள் குருகுலவாசத்தில் விடப்பட்டார்கள். குருகுலத்தில் ஆசான்கள், பாடம் போதிப்பதோடு மட்டுமின்றி, தாங்கள் வாழும் வாழ்க்கையாலும் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் போதித்தார்கள்.
 இன்றைக்கும்கூட திருப்பராய்த்துறை தபோவனத்திலோ, இராமகிருஷ்ண மடத்து உறைவிடப் பள்ளியிலோ படிக்கச் செல்லும் பிள்ளைகள் படிப்பு முடிந்து "ஒளி படைத்த கண்ணினர்' களாகவே திரும்புகின்றனர்.
 இன்றைக்குப் பல குடும்பங்களில் பிள்ளைகள் வளர்கிறார்களே தவிர, வளர்க்கப்படுவதில்லை. இரண்டு கால்களும் வளர்வதற்கு முன்னர், இரண்டுச் சக்கர வாகனங்களை வாங்கிக் கொடுத்துவிடுகின்றனர் பெற்றோர். விளையாடுவதற்கு கைப்பந்து வாங்கிக் கொடுப்பதற்குப் பதிலாக, கைப்பேசியை வாங்கிக் கொடுத்து விடுகின்றனர்.
 ஒரு நல்ல தாயால்தான், நல்ல பிள்ளைகளை உருவாக்க முடியும் என்பதை பாவேந்தர் பாரதிதாசன்,
 பாடம் சொல்லப் பாவை தொடங்கினாள்
 அவள் வாத்திச்சி; அறைவீடு கழகம்
 தவழ்ந்தது சங்கத் தமிழ்ச்சுவை; அள்ளி
 விழுங்கினர் பிள்ளைகள்
 என "குடும்ப விளக்'கில் விளக்கியிருக்கிறார்.
 பெரியபுராணத்தில் அப்பூதியடிகளின் இல்லத்திற்கு அப்பரடிகள் எழுந்தருளுகின்றார். அவருக்கு உணவு படைப்பதற்காகத் தம் மகன் மூத்த திருநாவுக்கரசை, வாழையிலை அறுத்து வரும்படியாக அப்பூதியடிகள் பணிக்கின்றார். அப்போது அந்த நன்மகன் "நல்ல தாய் தந்தை ஏவ, நான் இது செய்யப் பேற்றேன்' என்று விரைந்து செல்கின்றார். வாழ்வியலில் பெற்றோர்கள்தாம் தம் பிள்ளைகளில் இது நல்லபிள்ளை, அது கெட்டபிள்ளை எனச் சொல்லக் கேட்டு வருகிறோம். ஆனால், முதன்முதலாக ஒரு பிள்ளை, தம் பெற்றோரை, "நல்ல தாய் தந்தை' என்று சொல்வதை "பெரிய புராண'த்தில்தான் கேட்க முடிகிறது.
 அப்பூதியடிகளும் அவருடைய மனைவியும் போன்ற பெற்றோர் அமைந்தால், பிறக்கின்ற பிள்ளைகள், பெண்களைக் கொலை செய்வார்களா? போதைப் பொருளுக்கு அடிமையாவார்களா?
 தெய்வப்புலவர் திருவள்ளுவர், "பெறுமவற்றுள் யாமறிவது இல்லை, அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற' எனப் பாடியது, அறிவறிந்த பெற்றோர்களால் தாம் அறிவார்ந்த மக்களைப் பெற முடியும்; பொறுப்பற்ற பெற்றோர்களுக்கு அது வாய்க்காது என்பதை உணர்த்துவதற்கே ஆகும்.
 குடும்பத்தில் பூகம்பத்தை உருவாக்காத, முதிர்ச்சி பெற்ற காதல் என்றால், அதனைப் பெற்றோர் ஆதரிக்க வேண்டும் என்பதை பாவேந்தர் பாரதிதாசன்,
 "மாவடு நிகர்விழிச்
 சின்னஞ் சிறுமியே நீ,
 மங்கை எனும் பருவம் கொண்டு,
 வாழ்வுக்கோர் மாப்பிள்ளையைக் கண்டு,
 "தேவை இவன் எனவே செப்பும் மொழி
 எனக்குத் தேன்கனித் தித்திக்கும் கற்கண்டு'
 என, ஒரு தந்தை மகளுக்குச் சொல்வதாக அமைந்த பாடல், வெற்றி பெற்றால், பட்டாம்பூச்சிகள் வெட்டுக்கத்தியால் வெட்டப்பட மாட்டா.
 மராட்டிய மாநிலத்தின் காண்டேகர், நாடறிந்த நாவலாசிரியர். என்றாலும், அவருக்கு "காதல்' என்ற கோட்பாட்டில் நம்பிக்கைக் கிடையாது. தமிழ்நாட்டுச் சூழல் அவருக்கு முற்றாகத் தெரியாது. என்றாலும், காதல் பற்றி அவர் தம் நாவல்களில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், தற்காலத் தமிழர் வாழ்வுக்குக் கலங்கரை விளக்குகளாக உள்ளன.
 ஒரு நாவலில் "காதல் என்பது கானல் நீர் போன்றது. அதை நோக்கி ஓடுகின்ற மான்கள், வயிறு வெடித்துச் சாகின்றன' என்றெழுதுகிறார்.
 "புயலும் படகும்' எனும் நாவலில், "கடலில் வெவ்வேறு திசைகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் படகுகள், கடுமையான புயல் வீசும்போது ஓரிடத்தில் வந்து கூடுகின்றன. புயல் தணிந்தவுடன் அந்தந்த படகுகள் எந்தெந்த திசையை நோக்கிப் பயணிக்க வேண்டுமோ, அந்தந்த திசைக்குச் சென்றுவிடுகின்றன. அதுபோலத்தான் காதலும். வெவ்வேறு நோக்கில் பயணிக்கின்ற ஆடவரும் பெண்டிரும் காதல் எனும் புயல் வீசும்போது சந்திக்கின்றனர். வேகமும் தாகமும் தணிந்த பின்னர் அவரவர் செல்ல வேண்டிய திசைக்குச் சென்று விடுகின்றனர்' என்கிறார்.
 "யயாதி' எனும் நாவலில், "எப்படி கத்தியும் கத்தரிக்கோலும் சிறுபிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்கள் அல்லவோ, அது போன்றுதான் காதலும் ஆண் - பெண்களின் விளையாட்டுப் பொருளல்ல' என்றெழுதுகிறார். நம் நாட்டு இளைஞர்கள் காண்டேகரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, சில நிமிடங்கள் அவற்றைச் சீர்தூக்கிப் பார்ப்பது நன்று.
 "பெற்றோர்கள்தாம் பிள்ளைகளின் முதல் ஆசிரியர்கள்; ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு இரண்டாவது பெற்றோர்' என ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு. இராமாயணத்தில் இராமனை "நடையில் நின்றுயர் நாயகன்' என்பார் கம்பர். அதற்குக் காரணம், அந்த இராமனுக்குக் கற்பித்த குரு வசிட்டர். இராமன் எப்படிப்பட்ட மாப்பிள்ளை என்பதை ஜனகனுக்குச் சொல்ல வந்த விசுவாமித்திரர், "உபநயன விதி முடித்து, மறை ஓதுவித்து, இவனை வளர்த்தானும் வசிட்டன் காண்' எனக் கற்பித்த ஆசாரியரின் பெருமையைக் கூறி, மாணவனின் நடத்தைக்குச் சான்று பகருகிறார்.
 கடந்த நாற்பதாண்டுகளாகவே புனிதமான ஆசிரியப் பணியில் சில காமுகர்களும் நுழைந்ததனால், கன்னிப்பெண்கள் எமன் வாய்க்குள் வலிந்து தள்ளப்படுகின்றனர். பாவேந்தர் பாரதிதாசனே இதனைக் கண்டு குமுறி, "கல்லாரைக் காணுங்கால், கல்வி நல்காக் கசடர்க்கும் தூக்குமரம் அங்கே உண்டாம்' எனப் பாடியிருக்கிறார்.
 பெண்கொலை என்பது காலம் காலமாகவே நடந்து வருகிறது. அன்று இரயிலில் இருந்து தள்ளுவதற்குப் பதிலாக, ஆற்றிலும் குளத்திலும் தள்ளியிருக்கிறார்கள். சங்க காலத்தில் நன்னன் என்றொரு குறுநில மன்னன் இருந்தான். அவன் தோட்டத்தில் இருந்து விழுந்த ஒரு மாங்கனியை, ஒரு பெண் தின்றதற்காக அவளைக் கொலை செய்துவிட்டான், அந்தக் கொடுங்கோலன். ஊர் மக்கள் எல்லாம் கூடி, அவள் எடைக்கு எடை தங்கமும், 81 யானைகளும் தருவதாகக் கூறியும், அக்கொடுங்கோலன் அவற்றைக் கேட்க மறுத்து, அவளைக் கொலை செய்துவிட்டான். அதனை சங்கப்புலவர் பரணர் "பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான், பெண்கொலை புரிந்த நன்னன்' என அகநானூற்றில் பாடி வைத்துள்ளார். அக்கொலைக்குப் பிறகு அவனை "பெண்கொலை புரிந்த நன்னன்' எனத் தூற்றத் தொடங்கினர். மேலும், அக்கொலைக்குப் பிறகு அவன் வம்சமே அழிந்துவிட்டதாம்.
 மகாகவி பாரதியார், "பாஞ்சாலி சபத'த்தைப் பாடியது, அன்றைய பாஞ்சாலிக்காக மட்டுமன்று; அவன் காலத்துப் பாஞ்சாலிகளுக்கும் சேர்த்துத்தான்! "பாஞ்சாலி சபத'த்தில் துச்சாதனன் ஒற்றை ஆடையில் இருக்கும் பாஞ்சாலியை அவைக்கு இழுத்து வந்து துகிலுரிவதை,
 ஆடை குலைவுற்று நிற்கிறாள் - அவள்
 ஆவென்று அழுது துடிக்கிறாள் - வெறும்
 மாடு நிகர்த்த துச்சாதனன் - அவள்
 மைக்குழல் பற்றி இழுக்கின்றான் ......
 கக்கக் கவென்று கனைத்தே பெருமூடன்
 பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி
 கூந்தலினைக் கையினாற் பற்றிக்
 கரகரெனத் தானிழுத்தான்!
 ஐயகோ வென்றே அலறி உணர்வற்றுப்
 பாண்டவர்தம் தேவியவள், பாதியுயிர்
 கொண்டுவர, நீண்ட
 கருங்குழலை நீசன் கரம்பற்றி
 முன்னிழுத்துச் சென்றான்
 என வருணிக்கிறார்.
 அன்றைய பாஞ்சாலிக்கு ஏற்பட்டதுதான், இன்றைய நிர்பயாவுக்கும் சுவாதிக்கும் நிகழ்ந்தது. அன்றைக்கு அஸ்தினாபுரத்து மக்கள் பாஞ்சாலியின் துயரத்தை எண்ணி நெட்டை மரங்கள் என நின்று புலம்பினார்களாம். இன்றைக்கிருக்கின்ற நெட்டை மரங்களும் நின்று புலம்புவதற்குப் பதிலாகச் கைப்பேசியில் தற்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 யாவரும் கைவிட்ட நிலையில் பாஞ்சாலி, கதறி அழுததை பாரதியார்,
 "பெண்டீர் தமையுடையீர்! பெண்களுடனே பிறந்தீர்!
 பெண்பாவம் அன்றோ! பெரியவசை கொள்வீரோ?
 கண்பார்க்க வேண்டும் என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
 அம்புபட்ட மான்போல் அழுது துடிதுடித்தாள்
 என ஒரு பெண்ணுக்கு மட்டுமன்று; பெண்ணினத்திற்காகவும் பாடியிருக்கிறார்.
 காலம் காலமாகப் பெண் இனத்திற்கு நிகழ்ந்த வன்கொடுமைகளை நினைத்து, பாரதியின் இதயமும் எழுதுகோலும் கலங்கியமைக்கு ஒரு சான்று போதும். இங்கிலாந்திலிருந்து வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு வருவதை காங்கிரஸ் மகாசபை விரும்பவில்லை; அவரை யாரும் வரவேற்கக்கூடாது என்று தீர்மானமும் போட்டது. ஆனால், பாரதியார் ஒருவர் மட்டும் துணிந்து வரவேற்றார். காரணம் என்ன தெரியுமா? அவர்கள் ஆட்சிக்கு வந்து சட்டம் இயற்றியதால்தான், பெண்களை உடன்கட்டை ஏற்றலும், பால்ய விவாகமும் தடை செய்யப்பட்டன.
 ஆங்கிலேயர் ஆட்சியிலும் சில நன்மைகள் ஏற்பட்டிருப்பதை எண்ணிப் பார்க்கிறார், அந்த மகாகவி.
 "மற்றும் உன் நாட்டினோர்வந்ததன் பின்னர்,
 அகத்தினில் சிலபுண் ஆறுதல் எய்தின! .....
 கொடுமதப் பாவிகள் குறும்பெல்லாம் அகன்றன
 ஆற்றினில் பெண்களை எறிவதூஉம், இரதத்து
 உருளையில் பாலரை உயிருடன் மாய்த்தலும்
 பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்
 எனப் பல தீமைகள் இறந்து பட்டனவால்
 என பாரதியார் பாடியது, பெண்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கொடுமைகளை ஒழிப்பதற்குத்தான்!
 என்னதான் அன்று பாரதி பாடியிருந்தாலும், இன்றுவரை பாலியல் கொடுமைகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. காரணம், காமுகர்களை இன்றைய சட்டத்தால் தண்டிக்க முடியவில்லை. காரணம், சாட்சிகளை இல்லாமல் செய்து விடுவதால். என்றாலும் வெட்டப்படும் பெண்களின் சாபம், வம்சத்தையே இல்லாமல் செய்துவிடும்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).
 



Read in source website

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பரவலாகப் பெய்துவருகிறது. இதனால் மழைக்கால நோய்கள் பரவும் அபாயமும் இருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவிவருவது கவனத்துக்குரியது. ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் வரை 3,396 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. செப்டம்பரில் 572 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபரில் பாதிப்பு 616 ஆக அதிகரித்துள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தில் டெங்குவால் ஏற்படும் இறப்பு அதிகரித்துவரும் நிலையில், அதற்கு அருகே இருக்கும் இந்திய மாநிலமான மேற்கு வங்கத்திலும் அக்டோபரில் மட்டும் 800 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இந்தியாவில் 2021இல் சுமார் இரண்டு லட்சம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர்; 2017-க்குப் பிறகு, இதற்குப் பலியானோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 300ஐக் கடந்தது. இந்த ஆண்டு செப்டம்பர் 31 வரையிலான புள்ளிவிவரங்களின்படி, இந்திய அளவில் 63,280 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10,000-க்கும் அதிகமான பாதிப்புகளுடன் தெலங்கானா முதலிடத்தில் உள்ளது; அதற்கு அடுத்தபடியாக கர்நாடகம் உள்ளது. 4,000-க்கும் அதிகமான பாதிப்புகளுடன் தமிழ்நாடு, மகாராஷ்டிரம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 4,000-க்கும் குறைவான பாதிப்புகள் இருந்தபோதும் இறப்பில் கேரளம் (20 பேர்) முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் இறப்பு விகிதத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளன; இது நல்ல அறிகுறி இல்லை.



Read in source website

அந்தக் குழந்தை ஒரு சிறப்புக் குழந்தை. எவரேனும் கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கக்கூட அதனால் இயலாது. மழலையர் வகுப்பு மாண்டிசோரி ஆசிரியை ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லி நம்பிக்கையுடன் குழந்தையை வகுப்புக்கு அழைத்துச் சென்றார். சில நாட்களிலேயே நல்ல முன்னேற்றம். மற்ற குழந்தைகளைப் பார்த்து தானும் சில செயல்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தது அந்தக் குழந்தை. ஏற்கெனவே அந்த வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் ஆசிரியையை அழைத்தான். ‘மிஸ், இவனைப் பாருங்க. இப்பெல்லாம் கூப்பிட்டா திரும்பிப் பாக்கறான். அவன் சீக்கிரமே நல்லா ஆகிடுவான் மிஸ்’ என்று கரிசனத்துடன் சொன்னபோது, நெகிழ்ந்து போனார் அந்த ஆசிரியை. இப்படித்தான் இருப்பார்கள் மாண்டிசோரிக் குழந்தைகள். அவர்கள் பயன்படுத்தும் கருவிகள் என்ன மாயமந்திரம் செய்யுமோ தெரியாது. பயன்படுத்தப் பயன்படுத்த அவர்களுக்குள் சகமனித உணர்வு ஊற்றெடுக்கும்.

இன்னொரு உதாரணம்: சிறுமி ஒருத்திக்குச் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத பிரச்சினை. டயாபர் அணிந்து வருவாள். அது உறுத்தும்போதெல்லாம் சட்டையைத் தூக்கிவிட்டுச் சரிசெய்துகொள்வாள். புதிதாக அந்த வகுப்பில் சேர்ந்திருந்த சிறுவன் ஒருவன், சிறுமியின் செயலைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தான். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த மாண்டிசோரிச் சிறுவன் ‘சிரிக்கக் கூடாது. அது நம்ம பாப்பா. அதைப் பார்த்துச் சிரிக்கலாமா?’ என்று மென்மையாகக் கண்டித்தான். சிறுமியின் பக்கம் திரும்பி, ‘பாப்பா, நீயும் சட்டையெல்லாம் தூக்கக் கூடாது’ என்று அறிவுரை சொன்னான்.

மாண்டிசோரி ஆசிரியர்கள் வியப்புடன் பகிர்ந்துகொள்ளும் எத்தனையோ அனுபவங்களில் மேலும் ஒன்று. பூங்காவுக்கு நடைப்பயிற்சிக்கு வந்திருந்த பெற்றோர், தங்கள் மகனை ஓரிடத்தில் உட்காரச் சொல்லிவிட்டுத் தாங்கள் மட்டும் நடக்கத் தொடங்கினார்கள். உட்கார்ந்திருந்த அந்தச் சிறுவன் சும்மா இல்லை. அங்கு கீழே இருந்த குப்பைகளை எடுத்துப் பக்கத்திலிருந்த குப்பைத்தொட்டியில் போட ஆரம்பித்தான். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த வயதான பெரியவர், ‘தம்பி, இந்த இடத்தைப் பெருக்க ஒரு ஆயா இருக்காங்க. அவங்க செய்வாங்க.. இந்த வேலையெல்லாம் நீ செய்யாதே’ என்றார்.

சிறுவன் அவரைத் திரும்பிப் பார்த்தான். ‘இது யாருடைய பார்க்?’ என்று கேட்டான். ‘நம் எல்லோருடைய பார்க்தான்’ என்று பதில் சொன்னார் பெரியவர். ‘அப்போ இந்த இடத்தை நாமதானே சுத்தமா வெச்சுக்கணும்’ என்று சர்வசாதாரணமாகக் கேட்டுவிட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தான் சிறுவன். பெரியவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ‘நீ இதையெல்லாம் எங்கே கத்துக்கிட்டே?’ என்று கேட்டார்.

‘ஸ்கூல்லதான் சொல்லித் தந்தாங்க.’

‘எந்த ஸ்கூல்?’

‘கார்பரேஷன் ஸ்கூல்’ என்று பளிச்செனப் பதில் சொன்னான் சிறுவன்.

வியப்பில் ஆழ்ந்த பெரியவர் அப்படி என்னதான் அந்தப் பள்ளிக்கூடத்தில் விசேஷம் என்று தெரிந்துகொள்ள மறுநாள் அங்கே சென்றார். மாண்டிசோரி வகுப்பைப் பார்த்து மேலும் வியந்தார். இப்படி நாளுக்கொரு அனுபவமாகப் பகிர்ந்துகொள்ளும் ஆசிரியர்கள் மாண்டிசோரிக் கல்வியில் பயிற்சி பெற்றவர்கள். தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து சுமார் 15 பள்ளிகளில் 50 வகுப்புகளை ஏற்கெனவே வெற்றிகரமாக சென்னை மாநகராட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. இவை தவிர, தற்போது 30 பள்ளிகளுக்கும் மேலாக இந்தக் கல்வி முறை பரவலாக்கப்பட்டுள்ளது.

நேர்த்தியும் சமூக உணர்வும்: மழலையர் வகுப்பு என்றால் குழந்தைகள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு, ஆரவாரம் செய்துகொண்டு இருப்பார்கள் என்று நாம் கற்பனை செய்தால் ஏமாந்து போவோம். சிறுவர்களின் உயரத்துக்கு ஏற்பச் சின்னச்சின்ன அலமாரிகளில் கல்விக் கருவிகள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதை அவர்களே தேர்வுசெய்து செயல்பாடுகளைச் செய்வார்கள். கல்விக் கருவிகளைக் கையாளும்போது பிழைகள் செய்வது குழந்தைகளின் இயல்பு. பிழையிலிருந்து அவர்கள் தாங்களாகவே நேர்த்தியைக் கற்றுக்கொள்வார்கள். சரியாகச் செய்துமுடித்தவுடன் வரக்கூடிய வெற்றிப் பெருமிதத்தைக் குதித்துக் கொண்டாடுவார்கள். அதனால்தான் எவருடைய அங்கீகாரமும் அவர்களுக்குத் தேவைப்படுவதில்லை. உள்ளார்ந்த மனநிறைவை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

வீடுகளில் குழந்தைகள் எதைச் செய்தாலுமே அதில் தலையிடுவதும், திருத்துவதும்தான் குழந்தை வளர்ப்பு என்று நாம் புரிந்துவைத்திருக்கிறோமே, அது எவ்வளவு பெரிய தவறு என்பதை மாண்டிசோரிக் கல்விமுறையைப் பார்த்தால்தான் நமக்குப் புரியும். இந்தக் குழந்தைகள் தங்கள் செயல்பாட்டைத் தொடங்கும் முன்பு தங்களுக்கென்று வைக்கப்பட்டிருக்கும் சிறிய பாயை விரித்துப்போட்டு உட்காருவார்கள். அந்தப் பாயின் எல்லைக்குள் அவர்களின் செயல்பாடுகள் அடங்கிவிடும். கல்விக் கருவிகளை எடுக்கப் போகும்போது தங்கள் பாயையும் மிதிக்க மாட்டார்கள், மற்றவர்கள் பாயையும் மிதிக்க மாட்டார்கள். இது உனக்கான இடம். மற்றவர்களுக்கும் அதுபோல் இங்கே இடம் இருக்கிறது. அதனை நீ மதித்து நடக்க வேண்டும் என்கிற சமூக உணர்வு குழந்தைகளுக்கு இந்தச் செயல்பாட்டின் மூலம் கிடைக்கிறது.

மேதை உருவாக்கிய கல்வி முறை: மரியா மாண்டிசோரி என்ற மேதை குழந்தைகளின் இயல்பை நன்கு கவனித்து உருவாக்கிய கல்விமுறை இது. இரண்டு வயதிலிருந்து ஆறு வயதுக்குள் ஒரு குழந்தைக்கு இந்தக் கல்வியை கொடுத்தோமேயானால், அந்தக் குழந்தைக்குக் கல்வி என்பது மிக எளிதான ஒரு விஷயமாகி விடுகிறது. இந்த மாண்டிசோரிக் குழந்தைகளில் சிலர் முதலாம் வகுப்புக்குப் போகும்போதே நான்கு இலக்கங்களில் கூட்டல், கழித்தல், வகுத்தல் என்று செய்துகாட்டி அசத்துவார்கள். கணிதமும், மொழிப்பயிற்சியும் எளிதாக அவர்களின் மூளைக்குள் செலுத்தப்படுகிறது. வெறும் கல்வி மட்டுமில்லை. ஏற்கெனவே குறிப்பிட்டபடி சகமனித உணர்வு, சமூக அக்கறை, சுயமதிப்பு என்று அத்தனையும் அவர்களுக்குள் தூண்டப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் பெருமுயற்சி ஒரு புதிய வெளிச்சத்தைப் பரப்பிக்கொண்டிருக்கிறது. - கே.பாரதி பேராசிரியர்,
தொடர்புக்கு: bharathichandru14@gmail.com



Read in source website